Reading view

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #11 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 4

தெய்வங்கள் வாழும் நீதி மரம்

பேராசிரியர் வில்சன் துல்லியமாகப் பேசக்கூடியவர்; நடுநிலையான நபர். இவருடைய படைப்புகளைவிடவும் இந்தியர்களின் குண நலன்கள் தொடர்பான கர்னல் ஸ்லீமனின் படைப்பை நம்பகமானதாகவும் ஆதாரப்பூர்வமானதாகவும் ஏன் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்கக்கூடும். காரணம் மிகவும் எளியது. பேராசிரியர் வில்சன் பெரிதும் கல்கத்தாவில் மட்டுமே வசித்தார். மாறாக கர்னல் ஸ்லீமன் ஒட்டுமொத்த இந்தியாவையும் பார்த்திருக்கிறார். குறிப்பாக உண்மையான இந்தியர்கள் வாழும் உண்மையான இந்தியாவான கிராமப்புற சமூகங்களை அவர் நேரில் பார்த்திருக்கிறார். ‘தக்கி’ கொள்ளையர்களை அடக்கும் பொறுப்பில் பல ஆண்டுகள் காவல்துறை ஆணையராகப் பணிபுரிந்திருக்கிறார்.

‘தக்கி’கள் கொலை, கொள்ளையைத் தொழிலாகக் கொண்டவர்கள். அந்தக் கொலைகளையெல்லாம் மதக் கடமையாகப் பாவித்துச் செய்தனர். தொடக்கத்தில் அவர்கள் குழுவில் இருந்த அனைவரும் முஸ்லிம்களே. ஆனால் பின்னாளில் ஹிந்துக்களும் அவர்கள் குழுவில் இடம்பெற்றனர். என்றாலும் முஸ்லிம்களே இப்போதும் அந்த தக் கொள்ளையர் குழுவில் பிரதானமாக இருக்கிறார்கள் (கிறிஸ்தவமும் ஹிந்துயிசமும் என்ற நூலில் சர் ட்ரவெல்லியன் (1882, பக் 42).

இந்தக் கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்து அழிக்கும் நோக்கில் கர்னல் ஸ்லீமன் கிராமப்புறங்களில் வசித்திருக்கிறார். கிராம மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். அவர்களுடைய நல்ல மற்றும் கெட்ட குணங்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறார்.

‘இந்திய கிராமப்புறச் சமூகங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இந்தியர்களைப் பற்றி எதுவும் தெரியாது’ என்று கர்னல் ஸ்லீமன் அடிக்கடி அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவந்திருக்கிறார். இந்த கிராம சமூகங்களை நாம் குலங்கள் என்று சொல்லலாம். இந்த கிராமப்புற குலங்களின் வாழ்க்கையே உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத விசேஷத் தன்மையை இந்தியாவுக்குத் தந்திருக்கின்றன. இந்திய வரலாறாக நாம் பார்ப்பவையெல்லாம் ராஜாக்கள், மஹாராஜாக்கள், சுல்தான்கள் இவர்களின் வரலாறாகவே இருக்கிறது. அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா என்பது ஒரு கீழைத்தேய சாம்ராஜ்ஜியம் என்பதுபோன்ற தோற்றம் ஏற்படும். மையத்தில் அதிகாரம் குவிந்த அரசு இருப்பதுபோலவும் இங்கிலாந்தின் பெருமிதமாகச் சொல்வதுபோன்ற எந்தவொரு சுய ஆட்சி உரிமை உணர்வோ அமைப்புகளோ இல்லை என்பதுபோலவும் தோன்றும். ஆனால் இந்தியாவின் அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்திருக்கும் எவருமே உண்மை நிலவரம் இதற்கு முற்றிலும் மாறானது என்றே சொல்வார்கள்.

எத்தனையோ தொடர்ச்சியான அந்நியப் படையெடுப்புகள் நடந்திருக்கும் போதிலும் இந்தியாவின் அடிப்படையான அரசியல் அலகு அல்லது சமூகக் கட்டமைப்பானது இன்றும் அதன் கிராமப்புற சமூகமாகவே இருந்துவருகிறது. இந்த அரசியல் அல்லது சமூகக் குழுக்கள் சில நேரங்கள் ஏதேனும் பொது இலக்கின் அடிப்படையில் ஒன்று சேரும். எனினும் இவை தத்தமது தனித்தன்மையுடன் முழுமையான ஓர் அமைப்பாகவே இருக்கவும் செய்யும்.

மனுஸ்மிருதியில் பத்து, இருபது, நூறு அல்லது ஆயிரம் கிராமங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்படுபவருக்கு அந்தப் பகுதிகளின் வரி வசூலிக்கும் உரிமையும் கிராமங்களில் பொதுவான அமைதியையும் நன்னடத்தையையும் மட்டும் கவனித்துக்கொள்ளும் உரிமை மட்டுமே உண்டு என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பின்னாளில் உருவான 84 கிராமங்கள் செளராசி அமைப்புகள், 360 கிராமங்கள் சேர்ந்த அமைப்புகள் எல்லாமே நிதி, வரி வசூல் ஏற்பாட்டுக்கானவையாக மட்டுமே இருப்பதையும் பார்க்கமுடிகிறது.

ஓர் எளிய ஹிந்துவுக்கு அதாவது பெரும்பாலான 99% ஹிந்துக்களுக்குக் கிராமமே அவர்களுடைய முழு உலகம். அதுவே அவர்களுக்கான ஒரே பொதுவெளி. அதன் தாக்கமே அவர்கள் மீது முழுமையாக இருக்கும். ஒரு ஹிந்துவுக்கு அவருடைய கிராமத்துக்கு வெளியே இருக்கும் எந்தவொன்றின் தாக்கமும் இருக்காது.

இந்தியாவில் இருக்கும் கிராமங்கள், நகரங்கள் பற்றி டாக்டர் ஹண்டர் 14, ஆகஸ்ட், 1882-ல் குறிப்பிட்டிருக்கும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். பிரிட்டிஷ் இந்தியாவில் மொத்தம் 4,93,429 கிராம, நகரங்கள் இருக்கின்றன. இவற்றில் 4,48,320 இடங்களில் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் வசிக்கிறார்கள். இவற்றை நாம் கிராமங்கள் என்று வகைப்படுத்தலாம்.

வங்காளத்தில் பிரிட்டிஷ் அரசு நிறுவனங்களின் உருவாக்கப்பட்டு நகர வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அங்கு 1,17,042 குடியிருப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் சுமார் 200க்கும் குறைவானவர்களே வசிக்கிறார்கள். வங்காளத்தில் இருக்கும் 10,007 குடியிருப்புகளில் சுமார் 1000க்கு அதிக மக்கள்தொகை இருக்கின்றன. அதாவது 70-ல் ஒரு பங்குதான் நகரம். மற்றவையெல்லாம் தற்சார்பு கொண்ட கிராமப்பகுதிகளே. வட மேற்கு பிராந்தியங்களில் 1,05,124 கிராமங்கள் இருக்கிறன. ஆனால், 297 நகரங்கள் மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவில் இருக்கும் இப்படியான கிராமப்புறங்கள் பற்றி நம் கவனத்தைக் குவிக்கச் சொன்ன முதல் நபர்களில் முக்கியமானவர் கர்னல் ஸ்லீமன். பழங்காலத்திலும் நவீன காலத்திலும் இந்தியாவின் சமூக கட்டமைப்பில் இந்த கிராமங்களின் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சொன்னவர் அவர். சர் ஹென்றி மைன் இந்த கிராமப்புறங்கள் பற்றி நிறையக் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும் கர்னல் ஸ்லீமனின் குறிப்புகள் சுவாரசியமானவை. அதிக விஷயங்களை உள்ளடக்கியவை. அவர் ஆரிய ஜனபதங்களில் எப்படியான சமூக, அரசியல் அமைப்புகள் உருவாகின என்பது தொடர்பான எந்தவொரு கோட்பாடுகளின் சாய்பும் சார்பும் இன்றி ஒரு பார்வையாளராக இருந்துகொண்டு இந்திய கிராமப்புறங்களைப் பார்த்து எழுதியிருக்கிறார்.

‘இந்தியா முழுவதுமே எண்ணற்ற கிராமப்புற சமூகக் கட்டமைப்புகளாகப் பொதிந்து காணப்படுகிறது’ என்ற கூற்றை முதன்முதலில் சொன்னது கர்னல் ஸ்லீமன் தான் என்று நான் சொல்லவரவில்லை. மெகஸ்தனிஸ்போன்ற ஆரம்பக்கட்டப் பயணிகூட ‘இந்தியாவில் வசிக்கும் விவசாயிகள் தமது மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் கிராமங்களிலேயே வசிக்கிறார். நகப்புறங்களுக்கு அவர் பெரிதும் போவதே இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஹிந்துக்களின் மரபான குண நலன்கள் எல்லாம் அவர்களுடைய கிராமப்புற வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை என்பதை முதலில் சொன்னவர் கர்னல் ஸ்லீமன்தான்.

ஆங்கிலேய அதிகாரிகளுக்குக் கிராமப்புற வாழ்க்கையோடு பரிச்சயம் மிக மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு பிரிட்டிஷ் இந்திய அதிகாரி கிராமத்துக்குச் செல்கிறார் என்றால் அந்த கிராமத்தின் இயல்பான அம்சங்கள் எல்லாமும் அந்த நொடியிலேயே மறைந்துபோய்விடும்.

‘அடிமட்டத்தில் இருப்பவர்கள் பொய் சாட்சிகள் சொல்வார்கள். ஹிந்து முஸல்மான்களில் இருக்கும் மேட்டுக்குடியினருடைய ஆதரவுடன் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இன்றி ஏதோ அது சாமர்த்தியம் போலவும் திறமை போலவும் மேற்கொள்ளப்படும்’ என்று சர் வில்லியம் ஜோன்ஸ் கலகத்தா நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாக இந்திய வரலாறு நூலில் பக் 324-ல் ஜேம்ஸ் மில் எழுதியிருக்கிறார்.

‘ஒரு பிராந்தியம் நம்முடைய ஆட்சியின் கீழ் எவ்வளவு காலம் இருக்கிறதோ அவ்வளவுக்கு அதிகமாகப் பொய் சாட்சிகள் பெருகுகின்றன’ என்று சர் ஜி.கேம்பல் சொன்னதாக, கீழைத்தேய மதங்கள் நூலில் எஸ்.ஜான்சன் மேற்கோள் காட்டியிருக்கிறார் (பக் 288).

ஓர் இந்தியரை அவருடைய கிராம சமூகத்திலிருந்து பிரித்துவிட்டால் சமூகத்தின் அத்தனை கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்கியதாக அர்த்தம். அப்படியான நிலையில் அவர் தனது உள்ளார்ந்த தன்மையிலிருந்து வெளியேறிவிடுவார். ஆசைகாட்டல்களின் விளைவாக மரபான வாழ்க்கை மற்றும் மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்வதிலிருந்து விலகி தவறுகள் செய்ய ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு கிராமங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களில் கூட வழக்கமான பொதுவான தார்மிக ஒழுங்குகள், கட்டுப்பாடுகள் முறையான அங்கீகாரம் பெறுவதில்லை.

ஒரு கிராமத்தில் கொள்ளையாக, திருட்டாகக் கருதப்படுவது தூர கிராமங்களில் செய்யப்படும்போது அருமையான சூறையாடலாக, போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. சொந்த, கிராம வாழ்க்கையில் ஏமாற்றாகக் கருதப்படும் ஒரு விஷயம் அந்நியரிடம் செய்யப்படும்போது ராஜ தந்திரமாகவும் அரசியல் சாமர்த்தியமாகவும் பார்க்கப்படுகிறது. விருந்தினருக்கான மரியாதை என்பது வேறு கிராமத்தைச் சேர்ந்தவருக்குத்தான் தரப்படும். சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விருந்தினராக அதிதியாகக் கருதப்படவேமாட்டார்.

கிராம சமூகத்தினரின் ஒழுக்கப் பண்புகள் பற்றி கர்னல் ஸ்லீமென் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இந்தியர்களின் பிரகாசமான மற்றும் இருட்டான குண நலன்கள் அனைத்தையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு தக்கி கொள்ளையர்களை அடக்கும் பொறுப்பில் இருந்த காவல் ஆணையரான கர்னல் ஸ்லீமனுக்கு மிக அதிக அளவில் இருந்தது என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்தவிரும்புகிறேன்.

‘ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களிடையேயான வழக்குகளில், பேச்சுகளில் இந்தியர்கள் பொய் சொல்வதில்லை’ என்று கர்னல் ஸ்லீமன் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். உதாரணமாக, ‘மிகவும் பழமையான வனவாசிகளான கோண்டுகள், அண்டை கிராமத்தின் கிடையிலிருந்து எந்தத் தயக்கமும் இன்றி ஆடு மாடுகளைக் கவர்ந்துசெல்வார்களே தவிர என்ன மிரட்டினாலும் பொய் சொல்லவே மாட்டார்கள்’ என்று கர்னல் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வனவாசிகளுக்குப் பொய் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எதுவும் தெரிந்திருக்காது என்று சொல்லலாம். இருந்தும் இப்படியான ஆசிர்வதிக்கப்பட்ட அறியாமையையும் தேசத்தின் குண நலனின் ஓர் அம்சம் என்பதையும் கணக்கில் கொண்டாகவேண்டும். நான் கோண்டுகளுக்காகவோ பில்களுக்காகவோ சந்தால்களுக்காகவோ பிற ஆரியரல்லாத வனவாசிகளுக்காகவோ வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். ஆரிய குலங்கள் மற்றும் ஏகதேசம் அவர்கள் அளவுக்குப் பண்பட்டிருக்கும் இந்தியாவின் பிற குலங்கள் பற்றிய உண்மை விவரங்களைப் பேசுகிறேன்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களிடையே உரிமை, கடமை, நலன்கள் சார்ந்து மோதல்கள், வழக்குகள் ஏற்பட்டால், மிகவும் தீய குணம் கொண்டவர்கூட பொய் சொல்லமாட்டார். கடவுள் மீதான நம்பிக்கையும் பயமும் இன்னும் இவர்கள் மனதிலிருந்து அகலவில்லை.

பெரும்பாலான கிராமங்களில் அரச மரம் கட்டாயம் இருக்கும். அது அவர்களுக்குப் புனிதமானது. அந்த மரத்தின் இலைகளில் தெய்வங்கள் வசிப்பதாகவும் அதன் சல சல ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் நம்புகிறார்கள். சாட்சி சொல்பவர் ஓர் இலையைக் கையில் எடுத்துக்கொண்டு தெய்வத்தை மனதுக்குள் தியானிப்பார். ‘நான் சொல்வது பொய்யாக இருந்தால் என்னையோ என்னைச் சார்ந்தவர்களையோ நான் இந்த இலையைக் கசக்கிப் போடுவதுபோல் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடு’ என்று வேண்டிக் கொண்டு அந்த இலையைக் கசக்கிப் போடுவார். அதன் பின் தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்வார்.

அரச மரத்தில் ஹிந்து தெய்வம் உறைவதாக நம்பிக்கை. பிரமாண்ட இலவம் பஞ்சு மரம் பல பயங்கரமான தேவதைகள் வசிக்கும் மரம் என்றும் நம்பப்படுகிறது.

‘கிராமப் பஞ்சாயத்துகளில் சாட்சி சொல்பவர்கள் உண்மையே பேசுவார்கள். நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பார்த்திருக்கிறேன்; பல மனிதர்களின் சொத்து, சுதந்தரம் (சிறை போகும் வாய்ப்பு), உயிர் என எந்தவொன்றுக்குப் பாதிப்பு வருவதாக இருந்தபோதிலும் பொய்யை ஒருவர் கூடச் சொன்னதில்லை’ என்று கர்னல் ஸ்லீமன் குறிப்பிட்டிருக்கிறார்..

எந்தவொரு ஆங்கிலேய நீதிபதியும் இதுபோல் ஆங்கிலேயர் பற்றிச் சொல்லமுடியுமா?

அரச மரம் அல்லது இலவம் பஞ்சு மரத்தினடியில் நடக்கும் இந்தப் பஞ்சாயத்து வழக்குகளில் அந்த மரத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தின் பங்கு என்னவாக இருந்திருக்கும்? சாட்சி சொல்பவர் பொய் சொன்னால் அந்த மரத்தில் தனது மாய மர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வத்துக்குத் தெரிந்துவிடும். அவருக்குத் தெரிந்துவிட்டால் அதன் பின் பொய் சொன்னவருக்கு நிம்மதி தொலைந்துவிடும். அவருக்கோ அவருடைய உறவினருக்கோ ஏதேனும் விபத்தோ கஷ்டமோ வந்தால் அந்த தெய்வத்தின் கோபமே அதற்குக் காரணம் என்று நம்புவார்கள். எந்தத் தீங்கும் இழப்பும் நடக்காவிட்டாலும் இவருடைய கற்பனை மற்றும் பயத்தினாலேயே ஏதேனும் கெடுதல் நடந்துவிடும்.

இது ஓர் அற்புதமான மூல நம்பிக்கை. மரபான நூல்களில் இது அழகாக இடம்பெற்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சாட்சிகளின் முன்னோர்கள் மேலிருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். கேட்டுக்கொண்டிருப்பார்கள். இவர் சொல்வது உண்மையாக இருந்தால் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள். பொய்யாக இருந்தால் நரகத்தில் தள்ளிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #11 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 4 appeared first on கிழக்கு டுடே.

  •  

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #10 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 3

ஒரு பரிந்துரை… ஓர் எச்சரிக்கை

கேம்பிரிட்ஜ் பல்கலையில் பிரிட்டிஷ் இந்தியக் குடிமையியல் பணிக்குத் தம்மைத் தயார்செய்துகொண்டுவரும் ஐரோப்பியர்களுக்கு, ‘இந்தியர்களைப் பற்றிய ஒரு முக்கியமான புத்தகம் இருக்கிறது. அதைப் படியுங்கள்’ என்று நான் தொடர்ந்து பரிந்துரை செய்து வந்திருக்கிறேன். இன்னொரு புத்தகம் இருக்கிறது. ‘அதைப் படிக்காதீர்கள்’ என்று எச்சரித்தும் வந்திருக்கிறேன். எனது பரிந்துரையும் எச்சரிக்கையும் சில நேரங்களில் நல்ல பலனைத் தந்துள்ளன.

மிகவும் மோசமான புத்தகமாக நான் கருதும் புத்தகம், இந்தியாவுக்கு நேர்ந்த மிக மிக மோசமான தீமைகள் சிலவற்றுக்கு முக்கிய காரணமாகியிருக்கிறது. ‘பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு’ என்ற ஜேம்ஸ் மில்லின் புத்தகம்தான் அது. பேராசிரியர் வில்சன் அந்த நூலின் விஷத்தை முறிக்கும் விஷ முறிவு மருந்தைக் கொடுத்திருந்தபோதிலும் ஜேம்ஸ் மில்லின் நூல் மிக மிக விஷமத்தனமானது.

நான் பரிந்துரைக்கும் புத்தகம் கர்னல் ஸ்லீமன் எழுதிய ‘ராம்பிள்ஸ் அண்ட் ரீகலெக்‌ஷன்ஸ் ஆஃப் அன் இந்தியன் அஃபிஷியல்’. இது 1835-1836-ல் எழுதப்பட்டு 1844-ல் வெளியானது. இந்தப் புத்தகத்தின் மலிவுப் பதிவு மீண்டும் வெளியிடப்பட்டு அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.

மில் எழுதிய பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு பற்றிய நூல் பிரிட்டிஷ் இந்தியக் குடிமைப் பணிக்குத் தயாராகும் உங்களுக்கு மிக மிக நன்றாகத் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த நூல் நீங்கள் படிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக ஆய்வுகளும் வைக்கப்படுகின்றன. இதை வருத்தத்துடனே சொல்கிறேன். அந்த நூலை நான் ஏன் ஏன் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதற்குச் சில உதாரணங்கள் தருகிறேன்:

ஹிந்துக்களின் குண நலன்கள் பற்றிய மில்லின் பார்வை, ஃபிரெஞ்சு மிஷனரி துபோய்ஸ் மற்றும் ஓர்ம், புக்கனன், டென்னட் மற்றும் வார்ட் ஆகியோர் எழுதியதையே பெரிதும் அடிப்படையாகக் கொண்டது. இவர்களில் எவருமே இதற்கான தகுதியுடையவர்களோ ஒரு விஷயத்தை நடுநிலையோடு அணுகுபவர்களோ அல்ல. இவர்கள் எழுதியவற்றில் இந்துக்களைப் பற்றி மிகவும் பாதகமாகச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை மட்டுமே மில் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். இந்துக்களை முழுவதுமாக விமர்சித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்ட இவர்கள்கூட இந்துக்களிடம் இருக்கும் சில குணங்களைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். மில்லோ அவற்றையும் ஒதுக்கிவைத்துவிடுகிறார்.

‘ஒரு பிராமணர் என்பவர் பொய்கள் மற்றும் புரட்டுகளின் மர்மச் சுரங்கம்’ என்று வேடிக்கையாகச் சொன்னதை மில் உண்மைபோலவே நம்பி மேற்கோள் காட்டுகிறார். அடுத்ததாக இந்துக்களின் நம்பகத்தன்மை பற்றிப் பேசும்போது ‘அவர்கள் எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுக்கும் வம்புக்குணம் கொண்டவர்கள்’ என்று விமர்சிக்கிறார். அவர் எழுதுகிறார்: ‘இந்துக்களுடைய வன்மமும் பழிவாங்கும் குணமும் மிக அதிகமாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் வழக்குத் தொடுத்து அந்தக் கோபங்களுக்கு வடிகால் தேடிக் கொள்கிறார்கள்’.

இதே விஷயத்தை எந்தவித அவமானப்படுத்தும் உள்நோக்கமும் இல்லாமல் வேறு கோணத்தில் சொல்லவும் முடியும். ‘தமது கோபம் அல்லது வெறுப்பைக் கொலை செய்தோ விஷம் வைத்தோ வெளிப்படுத்தாமல் ஆங்கிலேய நீதிமன்றத்தை நம்பி அதன் சட்ட திட்டங்களை மதித்து அதன் முன்னால் வழக்குத் தொடுக்கிறார்கள்’ என்றும் இதைச் சொல்லமுடியும்.

‘இந்தியா பற்றிய வரலாற்று ஆய்வேடு’ என்ற தலைப்பில் டாக்டர் ராபர்ட்ஸன் எழுதிய நூலில் இந்துக்களின் வழக்கு தொடுக்கும் மனநிலையைக் காட்டுமிராண்டித்தனமாக அல்லாமல் அதி உயர்ந்த நாகரிகத்தின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டிருக்கிறார். இதையும் விமர்சிக்கும் மில், ‘மூர்க்கத்தனமான அயர்லாந்தில்கூட இப்படியான நிலை இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முஹமதியர்களின் நீதிமன்றங்கள், அரசபைகளில் லஞ்சமும் ஊழலுமே தீர்ப்புகளைத் தீர்மானித்துவந்தன. அப்படியான நிலையில் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய சட்ட திட்டங்கள், நீதியமைப்பு எல்லாம் ஹிந்துக்களுக்கு மிகவும் உவப்பானவையாக இருந்திருக்கும். இதில் நாம் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஆனால் ஹிந்துக்கள் பிற தேசத்தினரைவிட வழக்கு விவகாரங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பது உண்மையா?

மதராஸின் புகழ்பெற்ற கவர்னரான சர் தாமஸ் மன்ரோ என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ரயத்வாரி கணக்கு வழக்குகளை அவர் முழுமையாக ஆதரிக்கக்கூடியவர். அவற்றைப் பெருமளவில் கையாண்டவர். ‘ஹிந்துக்களை அத்தனை சந்தர்ப்பங்களிலும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் வம்பு வழக்கு விவகார எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்று உறுதியாகச் சொல்லமுடியும்’ என்றுதான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மனுஸ்மிருதி 8:43-ல், ‘மன்னரோ அவருடைய அரசவையினரோ தாங்களாகவே ஒரு வழக்கைத் தொடங்கவோ வேறொருவர் தங்கள் முன் கொண்டுவந்த வழக்கை முடக்கவோ கூடாது’ என்று சொல்கிறது.

‘பிராமணர் தன்னிடம் விசாரணைக்கு வரும் நபருக்கு மரண தண்டனை விதிப்பார்’ என்று ஓர் இடத்தில் மில் குறிப்பிடுகிறார். ஹிந்துக்களை மிக மோசமான குணங்கள் கொண்டவர்கள் என்று சுட்டிக்காட்டும் நோக்கில் மில் இதைச் சொல்கிறார். கர்னல் வான்ஸ் கென்னடி இதுபற்றி என்ன சொல்கிறாரென்றால் ‘ஒரு சமூகத்தில் இப்படியானவர்கள் (நீதி வழங்குபவர்களாக) இருந்தால் அந்தச் சமூகம் நிலைத்து நிற்கமுடியாது’.

இங்கிலாந்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 232 வழக்குகளில் 64-ல் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், வங்காளத்தில் 59 மரண தண்டனைத் தீர்ப்புகளில் 50 பேருமே தூக்கிலிடப்பட்டனர் என்று எல்ஃபின்ஸ்டன் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் இந்தியா பக் 219-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜேம்ஸ் மில், கர்னல் வான்ஸ் கென்னடி ஆகியோர் தமது கூற்றின் முழுப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

ஒருவேளை ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும் அதிகாரம் பிராமணர்களுக்கு இருந்தது என்பதை உண்மையென்றே எடுத்துக்கொண்டாலும் அது அவர்களுடைய நல்லம்சத்துக்கான வலுவான சான்றாகவே கருதப்படவேண்டும். இங்கிலாந்தில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. வங்காளத்திலோ பத்து லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. பிராமணர்கள் தம்மிடம் இருந்த நீதி வழங்கும் அதிகாரத்தை வைத்து மிகக் குறைவான மரண தண்டனையே தந்திருக்கின்றனர் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.

கர்னல் ஸ்லீமனின் ராம்பிள்ஸ் படைப்பு உரிய கவனத்தைப் பெறவே இல்லை. அவருடைய நூலிலிருந்து சில வரிகளை இங்கு தருகிறேன். அவருடைய பார்வைகள் எல்லாம் அவருடைய சகோதரிக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருக்கின்றன.

‘அன்புள்ள சகோதரி,

இந்தியாவில் இருந்தபோது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த விஷயம் எது என்று ஆங்கிலேயரிடம் யாரேனும் கேட்டால், இங்கிலாந்திலிருந்து தமது சகோதரிகள் அவர்களுக்கு அனுப்பிய கடிதமே மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்று பத்தில் ஒன்பதுபேர் பதில் சொல்வார்கள். அந்தக் கடிதங்கள் இப்படி எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு நில்லாமல் எங்களை இந்த மனித குலத்தின் நல்ல குடிமகன்களாக இந்த அரசாங்கத்தின் நல்ல பணியாளர்களாக ஆக்கவும் செய்கிறது. அவை இல்லாவிட்டால் நாங்கள் வேறு நபராகிவிட்டிருப்போம்.

இந்தியாவில் இருக்கும்போது நாங்கள் செய்பவையெல்லாவற்றையும் எங்கள் அன்பான சகோதரிகள் பாராட்டி வரவேற்பார்களா என்று மனதில் நினைத்தபடியே செய்துவருகிறோம். அப்படியாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் ‘சம்பளம் பெறாத நீதிநிர்வாக அமைப்பாக’ அவர்களே இருக்கிறார்கள்.’

பழங்கால இங்கிலாந்தின் வீர தீர நாயக மரபில் சகோதரியின் வார்த்தைகளுக்குத் தரும் முக்கியத்துவம் இந்தக் கடிதங்களில் வெளிப்படுகின்றன. அந்த இனிய சகோதரிகளுடன்தான் குளிர்காலங்களைக் கழிக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். கடிதங்களுக்குப் பதில் எழுதச் சோம்பலாக இருக்கிறது. நீண்ட கடிதங்கள் எழுத நேரமும் கிடைப்பதில்லை என்றெல்லாம் குறிப்பிடுபவர் இப்படியான சூழலில் வலிந்து எடுத்துக்கொண்ட ஓய்வில், நெர்பூதா (நர்மதா) நதிப்படுகையிலிருந்து இமய மலைச்சாரல் நோக்கிய பயண நேரத்தில் ஓய்வெடுத்தபடி இந்தியாவில் தனது அனுபவங்கள், செயல்பாடுகளைச் சகோதரிக்கு விவரித்து எழுதியிருக்கிறார்.

பிரதானமாகத் தன் சகோதரியையும் கூடவே குடும்ப உறுப்பினர்களையும் ஆச்சரியமும் ஆர்வமும் கொள்ளவைக்கும் நோக்கில்தான் இந்தியா பற்றிய விஷயங்களை எழுதியிருக்கிறார். என்றாலும் கொஞ்சம் முக்கியமான நோக்கமும் இதன் பின்னே உண்டு:

‘விவரணையிலும் நினைவுகூரல்களிலும் உரையாடல்களிலும் எதிலுமே நான் இதில் எதையும் கற்பனை கலந்து எழுதவே இல்லை. மற்றவர்கள் சொன்னதாக நான் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் உண்மையே. நானாகச் சொல்லியிருப்பவையும் அப்படியானவையே’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

1844-ல் தன் படைப்பை வெளியிட்டபோது ‘தனது நாட்டினர் (ஆங்கிலேயர்) இந்தியர்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கை அந்த தேசத்தில்தான் வாழப்படவிருக்கிறது. அவர்களைப் பாதிக்கப்போகிறது. அந்த இந்தியர்கள் மீது இவர்களுக்கு இதமான எண்ணங்களை உருவாக்குவதே இந்த நூலின் நோக்கம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

படம்: W.H. Sleeman

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #10 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 3 appeared first on கிழக்கு டுடே.

  •  

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

Horace Hayman Wilson

கனவான் ஹிந்துக்கள்

இமயம் தொடங்கி இலங்கைவரை வாழும் இந்தியர்கள் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளை மறுதலிக்க விரும்புகிறேன் என்பதால், இந்தியா குறித்த புனிதமான, லட்சிய தேசம் என்றொரு சித்திரத்தை நான் தீட்ட விரும்புவதாகவோ அதன் குறைகளையெல்லாம் மறைக்க விரும்புவதாகவோ நினைக்கவேண்டாம். அங்கு இருளே இல்லை; எங்கும் இனிமையும் ஒளியும் மட்டுமே நிறைந்திருப்பதாகச் சொல்ல முன்வரவில்லை.

இந்தியாவுக்கு நான் ஒரு நாளும் சென்றதில்லை. எனவே வரலாற்று ஆய்வு மற்றும் விமர்சனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பேசுவதற்கு எந்தவொரு வரலாற்று ஆசிரியருக்கும் உள்ள கடமை மற்றும் உரிமைகளின் அடிப்படையிலேயே என் கூற்றுகளை முன்வைக்கிறேன்.

பழங்கால இந்தியர்களின் தேசிய அடையாளம் மற்றும் உணர்வுகள் தொடர்பாக கிரேக்க எழுத்தாளர்கள், பழங்கால இந்திய இலக்கியங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருப்பவற்றையே என்னுடைய ஆய்வின் பிரதான சான்றுகளாக, தகவல் மூலங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அதற்குப் பிந்தைய காலகட்டம் தொடர்பான தகவல்களுக்கு இந்தியாவைப் படையெடுத்து ஆக்கிரமித்த பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் எழுதியவற்றை எடுத்துக்கொண்டிருக்கிறேன். வெல்வது எளிதாகவும் ஆள்வது கடினமாகவும் இருந்த இந்தியர்கள் பற்றி இவர்கள் பரிவுடன் எல்லாம் எதையும் எழுதியிருக்கவில்லை.

கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தியா எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தியாவிலும் இந்தியர்கள் மத்தியிலும் தமது வாழ்வின் துடிப்பான காலத்தைக் கழித்தவர்கள் தமது அனுபவங்களின் அடிப்படையில் எழுதி அச்சிட்டிருப்பவற்றை ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நான் சந்தித்துப் பேசிய மதிப்புக்குரிய குடிமைப் பணி அதிகாரிகள், இந்திய கனவான்கள் ஆகியோர் சொன்ன வாக்குமூலங்களையும் என் ஆய்வின் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

வருங்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்யவும் நிர்வகிக்கவும் போகிறவர்களான உங்கள் மத்தியில்தான் இதைப் பேசுகிறேன் என்பதால் இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் மத்தியில் இந்தியா மற்றும் இந்தியர் தொடர்பாக அழுத்தமாக நிலைபெற்றிருக்கக்கூடிய வெளிப்படையாக அதிகம் பேசப்பட்டிருக்கக்கூடிய முக்கிய விஷயம் பற்றி முதலில் பேசுகிறேன். அதாவது இந்துக்களின் உண்மைத்தன்மை (நம்பகத்தன்மை) அல்லது இந்துக்களுக்குத் தேவைப்படக்கூடிய உண்மைத்தன்மை பற்றி முதலில் பேசுகிறேன்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்குச் சென்ற குடிமையியல் பணி அதிகாரிகள், பழைய கிழக்கு இந்திய கம்பெனியின் சார்பில் பணிபுரிந்தவர்கள் ஆகியோர் இந்தியா பற்றிச் சொன்னதிலிருந்து ஆரம்பிக்கிறேன். அந்த ஐரோப்பியர்களை நான் இங்கிலாந்துக்கு முதலில் வந்தபோது பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவர்கள் இந்தியர்களின் வாழ்க்கை, உள்ளூர் நடைமுறைகள், உள்ளூர் மக்களின் குண நலன்கள் ஆகியவை குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று சிறப்பாகப் பணிபுரிந்துவிட்டு இங்கிலாந்து திரும்பியவர்களைவிட அதிகம் தெரிந்துவைத்திருந்தார்கள்.

முன்பைப் போல் இந்தியா, இப்போது சென்றடைய முடியாத தொலைவில் இருக்கும் தேசம் அல்ல. முன்பென்றால் அங்கு செல்லும் ஐரோப்பியர்கள் தனித்தீவில் தமக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்வதுபோல் (ராபின்சன் க்ரூஸோ போல்) கஷ்டப்படவேண்டியிருந்தது. இப்போது அப்படி அல்ல. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறுகிய காலத்துக்குள் எளிதாகக் கடல் வழிப் பயணம் செய்ய வழி பிறந்துவிட்டிருக்கிறது. கடிதப் போக்குவரத்து, தந்தி வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. எனவே மிகச் சிறிய புலம் பெயர்தல் என்பதாக இன்று இந்தியப் பயணமும் பணிகளும் ஆகிவிட்டன. இங்கிலாந்து பெண்கள்கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பைவிட அதிக எண்ணிக்கையில் எளிதில் சென்றுவர முடிகிறது. எனினும் புதிய நாட்டில் சென்று வாழ்வது தொடர்பான அடிப்படை சிக்கல்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றைத் தவிர்க்கவே முடியாது. அவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இந்தியாவில் பணிபுரியப் போகும் புதிய குடிமைப் பணி அதிகாரிகளுக்கு உண்மை விஷயங்களை எடுத்துச் சொல்லி உற்சாகமூட்டுவதன் மூலம் அந்த நெருக்கடிகளை அவர்கள் எளிதில் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்.

ஆக்ஸ்ஃபோர்டில் சமஸ்கிருதத்துறை பேராசிரியராக இருந்த மறைந்த திரு பேரா.வில்சனை எனக்கு நன்கு தெரியும். இந்தியா குறித்த அவருடைய நினைவுகூரல்களை மிகுந்த ஆர்வத்துடன் பலமுறை கேட்டிருக்கிறேன்.

இந்தியாவில் அவர் சந்தித்த உள்ளூர் நண்பர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் பற்றி பேராசிரியர் வில்சன் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோள்காட்டுகிறேன்:

‘கட்டாயம் மற்றும் விருப்பம் என இரண்டின் பேரிலுமாக இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். பிற ஐரோப்பியர்களுக்கு எந்த அளவுக்கு அவர்களுடன் பரிச்சயம் ஏற்படுமோ அதைவிடப் பல மடங்குப் பரிச்சயமும் பழகும் சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தன. கல்கத்தா சுங்கச் சாவடியில் ஏராளமான கைவினைக் கலைஞர்கள், எந்திர, வாகனத் தொழிலாளிகள், கூலிப் பணியாளர்கள் ஆகியோருடன் தினமும் நேரடியாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் மிகவும் உற்சாகமாகச் சளைக்காமல் கடின உழைப்பில் ஈடுபடுவார்கள். தமது மேலதிகாரிகளுடன் நல்லவிதமாக நடந்துகொள்வார்கள். கூடுதல் நேரம் பணி செய்யும்படியோ வேறு என்ன விஷயங்கள் கேட்டுக்கொண்டாலும் அதை உடனடியாக உற்சாகமாகச் செய்ய முன்வருவதைப் பார்த்திருக்கிறேன்.

வேலைக்கு வருபவர்களில் ஒருவர் கூடக் குடித்துவிட்டு வந்ததை நான் பார்த்ததே இல்லை. ஒருவர் கூட மேலதிகாரியை எதிர்த்து எதுவும் பேசியதில்லை. முறையற்று நடந்துகொண்டதில்லை. நம்பிக்கை துரோகம் செய்யவில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் மிக மிகச் சொற்பமாகவே அப்படி நடந்துகொண்டனர். பிற நாட்டுச் சுங்கச் சாவடிகளில் இருக்கும் அளவுக்குக் கறாராக, கண்காணிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய அளவுக்கெல்லாம் இருந்திருக்கவில்லை. மிகவும் சொற்பமாகவே அற்ப விஷயங்களில் மட்டுமே அப்படி இருந்திருக்கின்றன.

இந்தியர்கள் திறமைசாலிகளாகவும் எளிதில் பணிந்து நடப்பவர்களாகவும் இருந்தனர். எந்தவிதமான அடிமைத்தனமும் இருந்திருக்கவில்லை. மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பணிபுரிகின்றனர். எந்தவித பயமுறுத்தலும் இன்றி நம்பிக்கையுடன் பணி புரியும் இடங்களில் வெளிப்படைத்தன்மை மிகுதியாக இருக்கும். அந்த வெளிப்படைத்தன்மையை இந்தியர் அனைவரிடமும் கண்டிருக்கிறேன்.

தமது மேலதிகாரிகளின் நல்லெண்ணம் மற்றும் நற்குணம் பற்றி அவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வழிசெய்யுங்கள். மரியாதையை எந்தவகையிலும் இழக்காமல் நன்கு கலந்து பழகுங்கள்’.

அதன் பின்னர் மிக அதிக அளவுக்கு அவதூறு செய்யப்பட்டிருக்கும் இந்து பண்டிட்கள் பற்றி அவர் சொல்கிறார்:

‘ஓய்வு நேரங்களில் நான் படித்த புத்தகங்கள் இந்தியர்களில் கல்வி அறிவு பெற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தது. அவர்களும் சோம்பலற்று உழைக்கும் குணம், புத்திக் கூர்மை, உற்சாகம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இந்த பண்டிதர்கள் மற்றும் பொதுவாகவே ஹிந்துக்கள் எல்லாரும் குழந்தைத்தனமான எளிமை கொண்டவர்கள். அன்றாட வாழ்க்கையின் லெளகிக, பிற செயல்பாடுகள் குறித்து துளியும் பரிச்சயம் அற்றவர்கள். ஐரோப்பியர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடம் மட்டுமே இந்தக் குணங்கள் மறைந்துபோயிருப்பதைப் பார்க்கமுடியும்.

இந்த பண்டிதர்கள் அல்லது ஹிந்து ஞானவான்களுக்கு ஐரோப்பியர்கள் பற்றி எதுவுமே தெரியாது. ஐரோப்பியர் மீது மிகுந்த பயமும் கொண்டிருக்கிறார்கள். ஹிந்து மற்றும் ஐரோப்பிய அறிஞர்களிடையே எந்தவிதக் கருத்துப் பரிமாற்றமும் இதுவரை நடக்கவில்லை. எனவே இரு தரப்பினரிடையேயும் தவறான புரிதல் நீடித்துவருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை’.

இறுதியாக, கல்கத்தாவிலும் பிற பகுதிகளிலும் இருக்கும் உயர் வர்க்கத்தினர் பற்றிச் சொல்லும்போது பேராசிரியர் வில்சன் சொல்கிறார்:

‘பண்பான நடவடிக்கைகள், தெளிவு, புரிதல், சுதந்தர மனோபாவம், சுதந்தரமான கொள்கை சித்தாந்தங்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். எந்தவொரு தேசத்தில் இவர்களைப் பார்த்தாலும் கண்ணியமான கனவான்கள் என்று அங்கீகரிக்கவேபடுவார்கள்’. மேலும் சொல்லும்போது, ‘இப்படியான கனவான்கள் சிலருடன் எனக்கு நல்ல நட்பு உருவானது. அது என் வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக நீடிக்கும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் இருந்த தன்னுடைய நண்பர்கள் குறித்து பேராசிரியர் வில்சன் இதுபோலவே, சில நேரங்களில் இதைவிட அழுத்தமாக, புகழ்ந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். கேசவ் சந்திர சென்னின் தாத்தாவான ராம் கமல் சென் இந்து பாரம்பரிய சம்பிரதாயங்களில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டவர் (நிச்சயம் மத வெறி கிடையாது). பேராசிரியருக்கும் இவருக்கும் இடையிலான கடிதத் தொடர்புகள் சமீபத்தில் வெளியானது. அதில் என்னதான் ஆங்கிலேயரும் ஹிந்துக்களும் நெருங்கிய நட்புடன் இருந்தாலும் தேடிப் போய் நட்புறவை உருவாக்கியதும் பலப்படுத்திக் கொண்டதும் எல்லாம் ஆங்கிலேயராகவே இருந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை பெருமைப்படக்கூடிய இன்னொரு சம்ஸ்கிருதப் பேராசிரியர் இருக்கிறார். என்னைவிடவும் இந்த விஷயம் சார்ந்து மிகவும் அழுத்தமாகப் பேசமுடிந்தவர். ஹிந்துக்களிடையே நீங்கள் நண்பர்களைத் தேடிச் சென்றால் நிச்சயம் கிடைப்பார்கள். அவர்களை நீங்கள் நிச்சயம் நம்பலாம் என்று அவரைக் கேட்டால் நிச்சயம் சொல்வார். அநேகமாக உங்களிடம் பலமுறை இதற்கு முன்பும் அவர் சொல்லியிருக்கவும் கூடும்.

படம்: H.H. Wilson – first Boden Professor of Sanskrit at Oxford University.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2 appeared first on கிழக்கு டுடே.

  •  

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #7 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 7

இந்தியாவை நோக்கிப் புறப்படுங்கள் இன்றைய இளம் அலெக்சாண்டர்களே…

நமக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது. நம் முன்னோர்களை, அவர்களுடைய கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் திடீர் பூகம்பத்தைப்போல் நிலைகுலையச் செய்த விஷயங்கள் எல்லாம் நம்மை இன்று ஒன்றுமே செய்வதில்லை. ஆங்கிலம் ஒரு ஆரிய மொழி; அல்லது இந்தோ ஐரோப்பிய மொழி; ட்யூடானிக் கிளை மொழி. அதேபோன்ற இத்தாலி, கிரேக்கம், செல்டிக், ஸ்லோவேனிய, இரானிய மற்றும் இந்திய கிளை மொழிகள் எல்லாம் மகத்தான ஆரிய அல்லது இந்தோ ஐரோப்பிய ஒரே மூல மூதாதை மொழியில் இருந்து கிளை பிரிந்தவையே என்று நம் குழந்தைகள் சர்வ சாதாரணமாகப் படிக்கின்றன.

இன்று நம் ஆரம்பப் பள்ளிகளில் கற்றுத்தரப்படும் இந்த சாதாரண விஷயமானது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக உலக அறிவுப் புலத்தில் புதியதொரு விடியலாக இருந்திருக்கிறது. நாம் அந்நியர்களாக உணரப்பட்ட பகுதிகளுடன் சகோதரத்துவ உனர்வைப் பெறும் அளவுக்கு நெருக்கத்தைத் தந்திருந்தது. அங்கு வசித்த, காட்டுமிராண்டிகள் என்று நாம் கருதியவர்களையெல்லாம் நம் ரத்த உறவுகளாகப் பந்த பாசம் கொள்ள வைத்தது. ஒரு தாயின் பால் அருந்தியவர்கள் என்பதைவிட ஒரு மொழியைப் பேசுபவர்கள் என்ற உணர்வு கூடுதல் நெருக்கத்தைக் கொண்டுவரும்.

இந்தியாவின் பழம் பெரும் மொழியான சம்ஸ்கிருதம் கிரேக்கம், லத்தீன், ஆங்கிலோ சாக்ஸன் போலவே நமது மொழியேதான். இந்திய மொழிகளையும் இந்திய இலக்கியங்களையும் படிக்காமல் நாம் இந்த உணர்வை, பந்தத்தைப் பெறவே முடியாது. இந்தியா நமக்கு எதையுமே கற்றுக் கொடுக்கவில்லை என்று ஒருவர் சொன்னாலும் பிற எந்த மொழியைவிடவும் நமக்கு மிக அதிகம் கற்றுத் தந்திருக்கிறது என்பதைமட்டும் மறுக்கவே முடியாது.

இந்தப் புதிய ஞான ஒளி பாய்ந்தபோது உலகின் மாபெரும் அறிஞர்களும் தத்துவவாதிகளும் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்பது அறிவார்ந்தவையாக இருக்கும் அதேநேரம் ஒருவகையில் வேடிக்கையாகவும் இருக்கின்றன. இந்திய நிகர்கள் (நீக்ரோக்கள்) என்று அழைக்கப்பட்ட இந்தியர்களுக்கும் ஏதென்ஸ், ரோமானிய மக்களுக்கும் இடையில் மூல மூதாதைத் தொடர்பு இருக்கும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ முதலில் முடியவே இல்லை. நவீன கால ஆய்வாளர்கள் முதலில் இந்த புரிதலை (கோட்பாடை) முன்வைத்தனர். அவர்கள் சம்ஸ்கிருதம் மீது என்னவிதமான தவறான (இழிவான) அபிப்ராயம் கொண்டிருந்தார்களோ அதே விதமாகவே காட்ஃப்ரைட் ஹெர்மன், ஹெளபட், வெஸ்டர்மன், ஸ்டால்பம் போன்ற என் ஆசிரியர்களும் எனக்கு நான் லேப்ஸிக்கில் பள்ளி மாணவனாக இருந்தபோது கற்பித்தார்கள்.

சமஸ்கிருதம், அவெஸ்தா, கிரேக்கம், லத்தீன், கோதிக் மொழிகளின் ஒப்பீட்டிலக்கணம் என்ற நூல் எழுதிய பேராசிரியர் பாப் அளவுக்கு கேலி செய்யப்பட்டவர் வேறு யாரும் இருக்கமுடியாது. ஒட்டு மொத்த அறிவுலகமும் அவரை எதிர்த்தது. கிரேக்க லத்தீன் பதங்களை சமஸ்கிருதம், கோதிக், செல்டிக், ஸ்லோவேனிக், பாரசீக மொழிப் பதங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதில் ஒரு சிறிய தவறு செய்தாலும் கிரேக்கம், லத்தீன் தவிர வேறு எந்த மொழியும் தெரிந்திருக்காதவர்கள், அதிலும் கிரேக்க லத்தீனிய அகராதிகளை எடுத்துப் பார்த்துத்தான் தமது உச்சரிப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தவர்கள்கூட மிக மிக கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர்.

ஹிந்துக்களுக்கும் ஸ்காட்லாந்தியர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஒப்புக்கொள்வதைவிட, டுகால்ட் ஸ்டூவர்ட் போன்றவர்கள், ஒட்டு மொத்த சமஸ்கிருத மொழியும் அதன் இலக்கியமும் தீய புத்தி கொண்ட பிராமணர்களின் பித்தலாட்ட புனைந்துருவாக்கம் மட்டுமே என்று நம்பத் தயாராக இருந்தார்கள். இத்தனைக்கும் சமஸ்கிருத இலக்கியம் என்பது கிரேக்க அல்லது ரோமானிய பழம்பெரும் இலக்கியத்தைவிட பிரமாண்டமானது. மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்தது. அப்படி இருந்தும் அவற்றை பிராமணர்களின் கட்டுக்கதை என்றே கருதினார்கள்.

லெய்ப்ஸிகில் நாம் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு விஷயம் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. நோபி, ஃபார்பிகர், ஃபக்னெல், பாம் போன்ற மேதைகள் ஆசிரியர்களாக இருந்த பள்ளி. பழம் பெரும் பாரம்பரியம் மிகுந்த பள்ளியும் கூட. வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. உருப்படியாக எதையும் செய்யத்தோன்றாத தருணம்… பள்ளியில் ஒரு நாள் அந்த மதிய வகுப்பில் டாக்டர் க்லீ சொன்னார்: கிரேக்கம், லத்தீன் போலவே அல்லது ஜெர்மனிய ரஷ்ய மொழி போலவே இந்தியாவில் ஒரு மொழி பேசப்படுகிறது.

முதலில் இதைக் கேட்டதும் ஏதோ வேடிக்கையாகச் சொல்கிறார் என்றுதான் நினைத்தோம். ஆனால் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் மொழிகளின் எண்கள், வினைச் சொற்கள், பிரதி பெயர்ச்சொற்கள் ஆகியவற்றின் பட்டியலை கரும்பலகையில் அவர் எழுதியபோது அந்த ஒப்புமையைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. ஆதாம் ஏவாள் கதைகள், விண்ணுலக சொர்க்கம், பேபிள் கோபுரம், ஷேம், ஹம், ஜாபெட் மற்றும் ஹோமெர், ஏய்னியஸ், விர்ஜில் என அனைத்தும் புயல் காற்றில் சிக்கிய காகிதம் போல் நிலை தடுமாறிச் சுழல ஆரம்பித்தன. சிந்தனையில் எழுந்த அந்தப் புயலுக்குப் பின், உடைந்து நொறுங்கி விழுந்தவற்றையெல்லாம் ஒன்று கூட்டி, புதிய உலகம் ஒன்றை சிருஷ்டித்து புதிய வரலாற்றுப் புரிதலுடன் வாழத் தொடங்கினோம்.

இந்தியா பற்றி குறைந்தபட்ச அறிவு நம்முடைய தாராளமய வரலாற்றுக் கல்வியில் இருப்பது மிக மிக அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டவே இதை நான் சொல்லியிருக்கிறேன். இந்தியாவுடனான பரிச்சயத்துக்குப் பின் ஐரோப்பிய மனிதர் என்ற கருத்தாக்கம் முற்றிலும் மாறிவிட்டது. மிகப் பரந்த அளவில் விரிவடைந்துவிட்டது. நாம் யார் என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ அதிலிருந்து நாம் உண்மையில் முற்றிலும் வேறானவர்கள் என்பது நமக்கு இப்போது தெரியவந்திருக்கிறது.

ஒருவேளை ஏதோவொரு விபரீத நிகழ்வினால் அமெரிக்கர்களுக்கு தம்முடைய ஆங்கிலேயே வேர்கள் மறந்துவிட்டதென்று வைத்துக்கொள்வோம். 2000 – 3000 ஆண்டுகள் கழித்து ஆங்கிலம் பற்றித் தெரியவருவதாக வைத்துக்கொள்வோம். வானத்தில் இருந்து திடீரென்று பொத்துக்கொண்டு விழுந்ததுபோல் ஆங்கில இலக்கியங்களும் மொழியும் இலக்கணமும் திடீரென்று அவர்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? எங்கிருந்து வந்தன… எப்படியெல்லாம் பரிணமித்து வளர்ந்தன என்பதெல்லாம் தெரியாமல் 18-ம் நூற்றாண்டில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவையெல்லாம் திடீரென்று 2000-3000 ஆண்டுகள் கழித்து அவர்களுக்குத் தெரியவந்தால் எப்படி இருக்கும்? புரியாத புதிராக இருந்த அனைத்துக்கும் தீர்வுகளைத் தரும்வகையில் அந்த மொழி அவர்கள் கைக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?

சம்ஸ்கிருத மொழியின் கண்டுபிடிப்பும் நமக்கு அப்படியானதொரு மகத்தான விஷயத்தையே செய்திருக்கிறது. நமது வரலாற்று அறிவில் புதியதொரு காலகட்டத்தை அது கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. என்றென்றைக்கும் மறைந்துவிட்டதாக நாம் நம்பிய நமது பால்யத்தின் நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது.

எது எப்படியானாலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, ஆங்கிலேயர்களாக, சாக்ஸனியர்களாக, கிரேக்கர்களாக, ஏன் ஹிந்துக்களாக நாம் ஆவதற்கு முன்பாகவே இந்த அனைத்தின் விதையம்சங்களைக் கொண்டதொரு மூதாதை இனமாக இருந்திருக்கிறோம். அந்த மூதாதை மிகவும் விசித்திரமானவராக இருக்கக்கூடும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அப்படியான மூல மூதாதை இருந்தது நிஜம். நம் நவீன முன்னோர்களான நார்மனியர்கள், சாக்ஸன்கள், செல்டிக்குகளையும்விடத் தொன்மையான அந்த மூதாதையிடமிருந்து வந்தர்கள் என்பதில் நாம் நிச்சயம் பெருமிதம் கொள்ளவேண்டும்.

சமஸ்கிருதப் படிப்பும் பிற ஆரிய மொழிகளின் படிப்பும் நமக்கு வேறு பல விஷயங்களையும் புரியவைத்துள்ளன. மனித குலம் தொடர்பான நம் பார்வையை விரிவடையச் செய்திருக்கின்றன. கோடிக்கணக்கான அந்நியர்களை, பழங்குடிகளை நமது குடும்பத்தின் உறவினர்களாக சொந்தம் கொண்டாடி அரவணைக்கக் கற்றுத் தந்திருக்கிறது. மனித குலத்துக்கு இதற்கு முன்புவரை இருந்திராத ஒரு தொல் பழங்கால வரலாற்றை கைமாற்றிக் கொடுத்திருக்கிறது.

நாம் பழம் பெருமைகள் பற்றி ஏராளம் பேசுகிறோம்; எழுதுகிறோம். ஏதேனும் கிரேக்க சிலை அல்லது எகிப்திய ஸ்பின்க்ஸ் அல்லது பாபிலோனிய காளைச் சிலையைத் தொடும்போது நம் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதயம் களி நடனம் புரிகிறது. எந்தவொரு அரசரின் அரண்மனைகளையும்விட பிரமாண்ட அருங்காட்சியகங்களைக் கட்டிக் கடந்த காலத்தின் பொக்கிஷங்களை அவற்றில் காட்சிக்கு வைத்து அழகுபார்க்கிறோம். இது மிகவும் சரியான செயல்தான். ஆனால், ஒவ்வொரு ஐரோப்பியரிடமும் உலகின் மகத்தான பொக்கிஷங்களைப் பொதிந்துவைத்திருக்கும் அருங்காட்சியம் ஒன்று இருக்கிறது… ஸ்பின்க்ஸ் சிலைகளைவிட காளைச் சிலைகளைவிட தொன்மைவாய்ந்த பொக்கிஷங்கள் நம்மிடம் இருப்பது என்பது நமக்குத் தெரியுமா? அவற்றை எங்கே காட்சிப்படுத்துகிறோம் என்பது தெரியுமா..? நம் மொழியில்தான்.

அப்பா, அம்மா, இதயம், கண்ணீர், ஒன்று, இரண்டு, மூன்று, இங்கு, அங்கு என பயன்படுத்தும் சொற்கள் எல்லாம் ஒற்றை கிரேக்க சிலையும் பாபிலோனிய காளைச் சிலையும் எகிப்திய ஸ்பின்க்ஸ் சிலையும் செதுக்கப்படுவதற்கு முன்பே உருவானவை. ஆம்… நாம் அனைவருமே மகத்தான தொன்மையும் பெருமையும் வாய்ந்த கலைப்பொருட்களை தாங்கி நிற்கும் அருங்காட்சியகங்களே. இந்தக் கலைப் பொக்கிஷங்களை எப்படிப் பயன்படுத்துவதென்று ஒருவருக்குத் தெரிந்திருந்தால் இந்த பொக்கிஷங்களை எப்படித் துடைத்துப் பளபளபாக்குவது… எப்படி அலங்கரிப்பது… எப்படி அழகுற அடுக்கிவைப்பது… எப்படி வாசித்துப் புரிந்துகொள்வது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டுவிட்டால் உலகின் மாபெரும் களிமண் சித்திர எழுத்துகளும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் அனைத்தையும் ஒன்றுகூட்டினால் கிடைப்பதைவிட ஆயிரம் விஷயங்களை இந்த மொழி நமக்குக் கற்றுத் தரும்.

அவை கற்றுத் தந்தவையெல்லாம் இன்று பழங்கதைகளாகிவருகின்றன. உங்களில் பலர் அதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவற்றின் மகத்துவங்களை கை நழுவவிட்டுவிடாதீர்கள். அனுதினம் நடக்கும் விஷயங்களாகிவிட்டதால் அவை அவற்றின் அதிசயத்தன்மையை இழந்துவிட்டன. அவற்றில் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் புதிதாக இல்லை என்று நினைக்காதீர்கள். மொழியியலை எடுத்துக்கொண்டு பார்த்தால் அவற்றில் இருந்து நாம் கற்றுக் கொண்டிருக்கும் அற்புதங்களைவிட இன்னும் அதிக அற்புதங்களைக் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது.

எவ்வளவு சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தையாக இருந்தாலும் அதன் ஒவ்வொரு அசைகளையும் பதங்களையும் பிரித்தறிய உங்களுக்குத் தெரிந்திருந்தால் அந்த வார்த்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக மகத்தான மனித மனதால் எப்படி கலையம்சத்துடன் செதுக்கப்பட்டிருக்கிறது… எப்படி இலக்கிய நயத்துடன் கோர்க்கப்பட்டிருக்கிறது… எப்படி வார்க்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். அரேபிய இரவுகள் நாவலின் எந்தவொரு அத்தியாயத்தைவிடவும் அது உங்களைக் கூர்ந்து கவனிக்க வைக்கும். அதி ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

எடுத்துக்கொண்ட தலைப்பிலிருந்து நான் விலகிச் சென்றுவிடக்கூடாது. விஷயத்துக்கு வருகிறேன். மொழியியல் அறிவு என்பது தொடர்பான இந்த முன்னுரையில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், சமஸ்கிருதம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்த மொழியியல் ஞானத்தை நம்மால் நிச்சயம் பெற்றிருக்கவே முடியாது. தாராளமயமான வரலாற்று கல்வியை நம்மால் வடிவமைக்கவே முடியாது. ஃப்ரெஞ்சு மொழியில் சொல்வார்களே ‘ஸோ ஓரியன்டர்’ அதாவது ஒரு நபர் தன்னுடைய இடம் எது என்பதைப் புரிந்துகொள்வதுபோல் உலக வரலாற்றில் மனிதன் தன் இடத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள இந்த சமஸ்கிருதப் படிப்பு பெரிதும் உதவும். மனித இனப் படகு எந்த இடத்திலிருந்து தன் பயணத்தை ஆரம்பித்தது; எந்தத் துறைமுகங்கள் வழியாகப் பயணம் செய்துவந்திருக்கிறது. எந்தத் துறைமுகம் நோக்கி இனி பயணம் செய்யவேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள அது மிகவும் அவசியம்.

நாம் அனைவரும் கிழக்கிலிருந்து வந்தவர்கள். நாம் மதிக்கும் பெரும்பாலானவை கிழக்கில் இருந்து வந்தவையே. கீழைத்தேயவியலில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமல்ல; தாராளமய வரலாற்றுக் கல்வியைப் பெற்று கிழக்கு நோக்கிச் செல்பவர் அனைவருமே தமது ‘பழைய பூமி’க்குச் செல்கிறோம் என்ற உணர்வைப் பெறவேண்டும். சரியாகப் புரிந்துகொண்டிருந்தாரென்றால் பழைய வீட்டின் நினைவுகளால் அவர் ததும்பிக் கொண்டிருப்பார். மேலோட்டமான மனது சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்காமல் ஆழ் மனதுக்குள் பாய்ந்து செல்லுங்கள்; அடுத்தமுறை இந்தியாவுக்குச் செல்லும்போது 100 ஆண்டுகளுக்கு முன்பாக சர் வில்லியம் ஜோன்ஸ் எப்படி இங்கிலாந்தில் இருந்து நீண்ட நெடிய பயணம் செய்து இந்தியக் கரையை முதன் முதலாகப் பார்த்தபோது என்ன உணர்வெழுச்சியால் ததும்பிக் கொண்டிருந்தாரோ அதுபோல் நீங்களும் உணரவேண்டும். அன்றெல்லாம் இந்தியா எனும் அதிசய தேசத்துக்குச் சென்றவர்கள் பெரும் கனவுகள் கொண்டவர்களாக மாபெரும் லட்சியங்கள் கொண்டவர்களாக அதைப் பற்றி எந்த வெட்கமும் அடையாதவர்களாக இருந்தனர். அன்று வெறும் திரு ஜோன்ஸாக இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் தான் கண்ட கனவு பற்றிச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்:

‘கடந்த ஆகஸ்டில் (1783 ஆகஸ்டில்) நான் இந்தியா நோக்கிய கடல் பயணத்தில் இருந்தபோது, இந்தியாவைப் பார்ப்பது தொடர்பாக மிகப் பெரிய ஏக்கத்துடன் இருந்தேன். ஒரு நாள் எங்கள் கப்பல் இருக்கும் இடத்தை ஆராய்ந்தபோது இந்தியா எங்களுக்கு முன்பாக வரவிருந்தது. இடதுபக்கம் பாரசீகம் இருந்தது. அரேபியக் காற்று எங்கள் கப்பலை வருடிச் சென்றவண்ணம் இருந்தது. அந்தத் தருணம் மிகவும் இதமானதாக இருந்தது. என் மனதில் ஏராளமான எண்ணங்கள் அலைமோதின. கீழைத்தேய உலகம் தொடர்பான பேருவகை தரும் சாகசக் கதைகள், ஏற்க முடிந்த கற்பனைக் கதைகள் எல்லாம் ஏற்கெனவே எனக்கு விளங்க ஆரம்பித்திருந்தன.

ஆசியாவின் மகத்தான பிரமாண்ட பகுதிகளால் சூழப்பட்டிருந்தேன். பல்வேறு அறிவுத் துறைகளின் தொட்டில்; கேளிக்கையும் பயன்பாடும் நிறைந்த கலைகளின் பிறப்பிடம்… மகத்தான சாகசச் செயல்களின் விளைநிலம்… மாபெரும் மேதைகளை உருவாக்கிய பூமி, எண்ணற்ற சட்டதிட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், மொழிகள், மதங்கள், அரசுகள் நிறைந்த பூமி. அதுமட்டுமா பல்வேறு நிறமும் உடலமைப்பும் கொண்ட மனிதர்கள் நிரம்பியிருக்கும் பகுதி. உலகின் இந்தப் பகுதி இதுவரையும் யாராலும் ஆய்ந்தறிப்படாததாக இருக்கிறது… எண்ணற்ற சாதக அம்சங்கள் இன்னும் மேம்படுத்தப்படாத நிலையில் இருக்கின்றன’.

கப்பலின் விளிம்பில் நின்றுகொண்டு கதிரவன் கடலுக்குள் அஸ்தமிப்பதைப் பார்த்தபடி, இங்கிலாந்து நினைவுகள் பின்னால் இருந்து உந்தித் தள்ள இந்தியா தொடர்பான நினைவுகள் முன்னால் இருந்து இழுத்துச் செல்ல… பாரசீக பழம்பெரும் சாம்ராஜ்ஜியங்களின் அதிர்வுகளை உணர்ந்தபடி… அரேபியத் தென்றலையும் அதன் ஒளிரும் கவிதைகளையும் சுவாசித்தபடி நின்றுகொண்டிருக்கும் அந்த இளம் ஜோன்ஸ் போன்ற எண்ணற்ற லட்சிய இளைஞர்கள் இந்தியாவுக்கு இன்னும் இன்னும் அதிகம் செல்ல வேண்டும். இவர்களுக்கே தமது லட்சியக் கனவுகளை எப்படி நனவாக்கிக் கொள்ளவேண்டும் என்பது தெரியும். தமது தீர்க்க தரிசனங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது தெரியும்.

100 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அதுவே இன்றும் இருக்கிறது. அல்லது இப்போது அப்படி ஆக்கிக்கொள்ளப்படலாம். இந்தியா தொடர்பாக ஏராளமான ஒளிமயமான கனவுகள் காணப்படவேண்டியிருக்கின்றன. ஒளிமயமான பல செயல்கள் செய்யப்படவேண்டியிருக்கின்றன. நீங்கள் நினைத்தாலே அவையெல்லாம் நடந்தேறும். சர் வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தாவில் கால் வைத்த தருணம் தொடங்கி கீழைத்தேய உலகின் வரலாற்றிலும் இலக்கியங்களிலும் மகத்தான பல விஷயங்கள், வெற்றிகள் சாதிக்கப்பட்டுள்ளன. வெற்றிபெற சிந்து கங்கை நதிகளின் தொல் பெரும் தீரங்களில் இனி எந்தவொரு சாம்ராஜ்ஜியமும் விட்டுவைக்கப்படவில்லையே என்று எந்தவொரு இன்றைய இளம் அலெக்சாண்டரும் கவலைப்படத் தேவையில்லை.

இந்தியா உங்களை வரவேற்கிறது.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #7 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 7 appeared first on கிழக்கு டுடே.

  •  

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #6 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 6

ஆதி மூல ஆரிய மொழியைத் தேடி…

வரலாற்றின் மிகப் பழமையான அத்தியாயம் மிக எளிதில் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆரியக் குடும்பத்து மொழிகள் ஏழிலும் ஒரே வடிவில் ஒரே அர்த்தத்துடன் இருக்கும் சொற்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். ஹிந்துக்கள், பாரசீர்கர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், செல்டிக்கள், ட்யூடன்கள், ஸ்லாவ்கள் என பிரிவதற்கு முன்பாக இருந்த நம்முடைய உண்மையான மூதாதைகளின் சிந்தனை ஓட்டத்தின் மிகத் துல்லியமான, அழுத்தமான ஆவணமாக அந்தச் சொற்கள் திகழ்வதைப் பார்க்கமுடியும்.

இந்தப் பழம் பெரும் அத்தியாயத்தில் சில பக்கங்கள் இந்த ஆரியக் கிளை மொழிகள் ஏதேனும் ஒன்றில் அல்லது பலவற்றில் காணாமல் போயிருக்கலாம். அந்த வார்த்தைகள் அல்லது அத்தியாயங்கள் ஆறில் இருந்தாலோ ஐந்தில் அல்லது நான்கில் அல்லது மூன்றில் அல்லது இந்த கிளை மொழிகளில் இரண்டில் மட்டுமே இருந்தாலோ ஆரிய மொழிக் குடும்பப் பிரிவு நடப்பதற்கு முன்பான மூல மூதாதை மொழியில் அவை இருந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு நாம் எளிதில் வந்துவிட முடியும். ஒருவேளை இந்த மொழிக் கலப்பு பிற்காலத்தில் நடந்ததற்குத் தெளிவான வரலாற்றுச் சான்று கிடைத்திராத பட்சத்தில் மூல மொழியில் இருந்து கிளை பிரிந்ததாகவே ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.

சம்ஸ்கிருத மொழியில் நெருப்பைக் குறிக்கும் ‘அக்னி’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். லத்தீனில் இக்னிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து நெருப்பு பற்றி, பிளவுபட்டிராத மூல ஆரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கும் நாம் நிச்சயம் வரலாம். வேறு எந்த இடத்திலுமே நெருப்பைக் குறிக்கும் இந்த வார்த்தை இடம்பெறாதிருந்தாலும் இந்த முடிவுக்கு நாம் வரமுடியும். ஏன், எப்படி என்கிறீர்களா? ஏனென்றால் பிற ஆரிய மொழிகளைவிடவும் லத்தீனே சமஸ்கிருதத்துடன் மிக அதிக காலம் தொடர்பில் இருந்திருக்கிறது. மேலும் சமஸ்கிருதமும் லத்தீனும் தனித்தனி மொழியாகப் பிரிந்த பின்னர் சமஸ்கிருதத்தில் இருந்து லத்தீன் இந்த வார்த்தையைக் கடனாகப் பெற்றிருக்கக்கூடும்.

லிதுவேனிய மொழியில் அக்னிஸ் என்றும் ஸ்காலாந்து மொழியில் அங்க்லே என்றும் இருப்பதிலிருந்து ஸ்லோவேனிய மற்றும் ட்யூடானிக் மொழிகள் கூட நெருப்பைக் குறிக்கும் ‘அக்னி’ என்ற வார்த்தையை அறிந்திருப்பார்கள் என்று சொல்ல இடம் இருக்கிறது. நெருப்பைக் குறிக்கும் வேறு சொற்கள் பின்னாளில் அந்த மொழிகளில் உருவான பின்னரும் இந்தத் தொடர்பு அக்னி என்ற சொல் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

பிற விஷயங்களைப் போலவே சொற்களும் அழிவுபடும். ஒரு மொழியில் மட்டும் உயிர்ப்புடன் இருக்கும். இன்னொன்றில் சிதைந்தோ அழிந்தோ மாறியோ போகும். எதனால் இப்படி நடக்கிறது என்பதைச் சொல்வது எளிதல்ல. ரோமானிய மொழிகளில் இக்னிஸ் என்பது என்னவாக ஆகியிருக்கிறது? அது சிதைந்து அழிந்துபோய்விட்டது. ஒருவேளை உச்சரிக்கப்படாத (முக்கியத்துவம் இழந்த) கடைசி பதம் மறைந்ததைத் தொடர்ந்து அந்தச் சொல்லை உச்சரிப்பது நிரடலானதாக இருந்திருக்கலாம். அதனால் அந்த சொல் அழிந்திருக்கலாம். லத்தீன் மொழியில் அடுப்பு, பலிபீடம் என்ற அர்த்தத்தைத் தரும் லத்தீன் வார்த்தையான ஃபோகஸ் அந்த இடத்தைப் பெற்றிருக்கலாம்.

மூல ஆரியக் குடும்பம் கிளை பிரிவதற்கு முன்பாக இருந்த முதல் மூதாதைகளுக்கு எலி – மெளஸ் என்ற சொல் தெரியுமா என்று பார்ப்போம். மூல ஆரிய மொழி அகராதிகளில் ‘மூஷிக’ என்ற சமஸ்கிருதச் சொல் இருப்பதைப் பார்க்க முடியும். கிரேக்க மொழியில் ‘ம்யூஸ்’ என்றும் லத்தீனில் ‘முஸ்’ என்றும் பழைய ஸ்லோவேனிய மொழியில் ‘ம்யூஸே’ என்றும் பழைய ஜெர்மானிய மொழியில் ‘மூஸ்’ என்றும் அது அறியப்பட்டிருக்கிறது. இதனால் மிக மிகப் பழங்காலத்தில் பிற சிறிய விலங்குகளிடமிருந்து எலியைத் தனித்து அடையளம் காணவும் இந்தப் பெயரில் அழைக்கவும் தெரிந்திருக்கிறது என்ற முடிவுக்கு உறுதியாக வந்துவிடலாம். இந்தச் சொல் தொடர்பான இந்தியா காலக் கணக்கை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மிக மிகப் பழங்காலத்திலேயே நமக்கு அந்தப் பெயரில் அது தெரியவந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

எலியின் பகைவனான பூனையை எடுத்துக்கொள்வோம். இதே தொல் பழங்காலத்தில் பூனையைப் பற்றித் தெரிந்திருந்ததா… பூனையைக் குறிக்கும் சொல் என்ன… அதில் ஆரிய மொழிகளுக்கு இடையே ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா என்று பார்த்தால் எதுவும் இல்லை. சமஸ்கிருதத்தில் பூனை மார்ஜாரா மற்றும் விதாலா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யாஹேன், ஐயோபஸ், மஸ்டெல்லா, ஃபெலாஸ் என்று கிரேக்க, லத்தீன் மொழிகளில் வேறு வேறு பெயர்களில் அறியப்பட்டிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் வளர்ப்புப் பூனையை அல்ல; மரநாய் மற்றும் மலை வாழ் வெருகு பூனையைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கிரேக்க மொழியில் கார்ரா என்ற பெயரில் வளர்ப்பு பூனை அறியப்பட்டிருக்கிறது. லத்தீன் மொழியில் கேட்டஸ் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சொற்களே ட்யூடானிக், ஸ்லோவேனிக் மற்றும் செல்டிக் மொழிகளில் பூனையின் வேர்ச் சொல்லாக இருக்கின்றன. இன்று நாம் பூனை என்று அழைக்கும் விலங்கு எகிப்திலிருந்துதான் ஐரோப்பாவுக்கு வந்திருக்கிறது. எகிப்தில் அது வளர்ப்பு மிருகமாக்கப்பட்டு வழிபடப்பட்டும் வந்திருக்கிறது.

அநேகமாக, கி.பி. நான்காம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். எனவே மூல ஆரிய இனம் பல கிளைகளாகப் பிரிவதற்கு முந்தைய காலகட்டத்தில் பூனைக்குப் பொதுவான சொல் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதை இதிலிருந்து நாம் நன்கு புரிந்துகொள்ளமுடியும்.

ஆரிய இனக்குழு கிளை பிரிவதற்கு முன்பாக உலக மனித இனம், நாகரிகம் என்னவாக இருந்தது என்பது தொடர்பாக இதிலிருந்து ஒரு முழுமையான சித்திரத்தை நாம் தெரிந்துகொள்ளமுடியும். பழங்காலக் கற்களை பூசி மொழுகி ஒரு பொதுவான கட்டுமானத்தை மீள் உருவாக்கம் செய்வதுபோல் ஒன்றை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். மனித குலத்தின் வரலாறைத் தெரிந்துகொள்ளும் நம் இந்த நீண்ட நெடிய பயணத்தில் பல்வேறு ஆரியக் கிளை மொழிகளின் ஒத்திசைவின் மூலம் தெரியவரும் காலகட்டத்தையும்விட பழமையான ஒன்றை நம்மால் கண்டடைய முடியாது என்றே தோன்றுகிறது.

இந்தியா, கிரேக்கம், இத்தாலி, ஜெர்மனி ஆகிய தேசங்களில் கிடைத்திருக்கும் சிதிலங்கள், பிற குறிப்புகள் ஆகியவற்றில் இருந்து நாம் மீளுருவாக்கம் செய்யும் மூல ஆரிய மொழி என்பது நீண்ட நெடிய தொல் பழங்காலச் சிந்தனைப்போக்கின் விளைவாக பல காலங்களுக்குப் பின் உருவானதுவே. அந்த ஆதி தொல் பழங்காலம் தொடர்பான நம்மால் எதையும் தெரிந்துகொள்ளவே முடியாது. சம்ஸ்கிருதம் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு செவ்வியல் மொழி என்பதும் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதும் நமக்குத் தெரியவந்திருக்கிறது. அப்படியானால், இவற்றின் மூலாதார மொழி எது என்ற தேடலை நாம் மேற்கொள்ளும்போது சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகள் எப்போது முதலில் தொடர்பில் வந்தன என்ற கேள்வி எழுகிறது.

இந்த மூன்று தேசிய மொழிப் பிரவாகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில் வந்த காலகட்டத்தைச் சென்றடைந்தால்கூட அந்த மூல மொழி பிரவாகம்கூட கால காலமான சிந்தனைப் பிரவாகத்துக்குப் பின்னே அந்த மூல வடிவத்துக்கு வந்து சேர்ந்திருக்கும். ஒரு கல் நீரோட்டத்தின் தொடர் பிரவாகத்தால் கூழாங்கல்லாக ஆக்கப்படுவதுபோல் நீண்ட நெடிய கால சிந்தனைகளின் விளைவினாலே இந்த மொழியும் வார்த்தைகளும் உருவாகியிருக்கும்.

ஆதி மொழிகளில் மிகவும் சிக்கலான நுட்பமான பதங்கள் இருப்பதைப் பார்க்கமுடியும். உதாரணத்துக்கு சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அஸ்மி என்ற சொல்; கிரேக்கத்தில் இருக்கும் அஸ்யு போன்ற பதங்கள். பிற மொழிகளில் ஐ ஆம் (I am) என்ற இந்தப் பதத்துக்கு இணையாக என்ன இருக்கின்றன? நான் இருக்கிறேன்; நான் வளர்கிறேன்; நான் மாறுகிறேன் என்றெல்லாம் பல பதங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் ‘அஸ்மி’ என்பதன் நுட்பமான அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள் வெகு சொற்பமான மொழிகளில் மட்டுமே இருக்கின்றன.

ஐரோப்பியருக்கு ‘ஐ ஆம்’ என்ற துணை வினைச்சொல் மிகவும் எளியதொரு பத உருவாக்கமாகவே தோன்றுகிறது. ஆனால் இந்த ‘அஸ்மி’ என்ற மிகச் சிறிய பதமே மனித உருவாக்கத்தில் மிக அதிக உழைப்பைக் கோரிய ஆழமான சொல் என்பதே உண்மை. இந்த மேதமையானது ஆரிய ஆதி மூலப் பேச்சு வழக்கில் வேர்கொண்டிருக்கிறது. ‘அஸ்மி என்ற பதத்தின் நுட்பமான அர்த்தத்தைக் கொடுக்கும்படியாக பல்வேறு வழிகளில் முயற்சி செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் அது எதுவும் எந்த பலனையும் தரவில்லை என்று முயற்சிகளைக் கைவிட்டுவிட்டோம்.

ஆரிய மொழிக் குடும்பத்து கிளைகள் அனைத்திலும் இந்தப் பதம் பாதுகாக்கப்பட்டுவந்திருக்கிறது. அஸ்-மி என்ற சொல்லில் அஸ் என்பது வேர். அஸ் என்பதற்கு இருத்தல் – ‘இருப்பது’ (to be) என்று அர்த்தம். வேறு எந்த மொழியிலும் இப்படியான அர்த்தம் கொண்ட வேர்ச் சொல்லை உருவாக்கவே முடியவில்லை. இருத்தல் – சுவாசித்தல் என்ற அர்த்தம் தர ‘அஸு’ என்ற பதம் இருக்கிறது. உயிர்ப்பு, உயிர்மை, சுவாசிப்பு ஆகியவற்றைக் குறிக்க லத்தீனில் அஸ் ஓரிஸ் என்ற பதம் இருக்கிறது.

அஸ் என்ற வேர்ப்பதம் காலப்போக்கில் சிதைந்தும் மாறியும் தன்னுடைய அதி நுட்பமான, புதிரான மூல அர்த்தத்தில் இருந்து விலகிவிட்டது. அதற்கு முன்பான நிலையில், கணிதத்துக்கு பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது எந்த அளவுக்கு மகத்தான மேதமையாக இருக்கிறதோ அதுபோலவே இந்த அஸ்மி என்ற பதம் இருக்கிறது. ‘அஸ்’ என்ற இருத்தல் என்ற அர்த்த நிலை எத்தனை கால உரசல்கள், மாற்றங்களுக்குப் பின்னர் உயிர் வாழ்தல், சுவாசித்தல் என்பதிலிருந்து மாறியது என்பது யாருக்குத் தெரியும். அஸ் என்பதற்கு சுவாசித்தல் என்ற அர்த்தம் இருப்பதுகூட செமிட்டிக் அல்லது துரானிய மரபின் உருவாக்கம் அல்ல; ஆரிய வேர்களே அதற்கும் இருக்கிறது.

அஸ்மி என்பது ஒரு வரலாற்றுத் தனித்தன்மை கொண்ட சொல் அது. நம் ஆதி முன்னோர்களின் உருவாக்கம். நமது சிந்தனை, சொற்கள் ஆகியவற்றை நம்முடைய ஆதி சிந்தனைகளுடன் இணைக்கும் சரடு. அந்த மூல மொழிச் சரடைக் கொண்டே மனித குலம் ஆதியில் சிந்தித்திருக்கிறது. பேசியிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஏன் நூற்றாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையதாக இருந்திருக்கக்கூடிய அந்த ஆதி மொழியின் கண்ணியிலேயே நாம் சிந்தித்திக்கிறோம். பேசுகிறோம்.

இப்படியானவற்றைத் தெரிந்துகொள்வதே உண்மையான வரலாறு. அதுவே நாம் தெரிந்துகொண்டாகவேண்டியது; அரசவைகளின் சதிகள், தேசங்களின் ரத்தக் களறிகள் என நம் வரலாற்று நூல்களின் பக்கங்களை நிரப்பியிருப்பவை அல்ல. இந்த உண்மையான வரலாற்றுத் தேடல் ஆய்வுகள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பயணத்தில் நாம் கண்டடையப் போகிறவை அபாரமாக, அமோகமாக இருக்கப் போகின்றன. இருந்தும் சமஸ்கிருதத்தைப் படிப்பதால் என்ன பலன் என்றே நம்மில் பலர் கேட்கிறார்கள்.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #6 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 6 appeared first on கிழக்கு டுடே.

  •  

அபினுக்கு அப்பால்

Pa Raghavan

கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற பொதுத் தலைப்பில் சீனி விசுவநாதன் பாகம் பாகமாக பாரதியின் படைப்புகளைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளியான காலத்தில் உடனுக்குடன் ஒவ்வொரு பாகத்தையும் ஆர்வமுடன் வாங்கினேன். ஆயினும் எப்படியோ சில பகுதிகள் விடுபட்டுவிட்டன. இந்தக் காலவரிசைப்படுத்தலின் முக்கியத்துவம் என நான் கருதுவது, ஒரு கலைஞனின் சிந்தனை காலக்கட்டம் தோறும் எப்படி வளர்ந்து, இறுதியில் என்னவாக மலர்ந்து நிறைந்திருக்கிறது அல்லது வாடிச் சுருங்கியிருக்கிறது என்பதை அறிய முடிவதுதான்.

நேற்று, என்னுடைய புத்தக அடுக்குகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சீனி விசுவநாதன் பதிப்புகளை எடுத்துச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். தனது வாழ்வில் மூன்று சித்தர்களை பாரதி நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அவருக்கு உண்மை ஞானம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பாதையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தத் தருணங்களுக்குப் பிறகு பாரதி எழுதிய பாடல்களில் மட்டுமே ‘ஆன்மிகம்’ வருகிறது. அதற்கு முன்பு அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் வெறும் துதியாக உள்ளன. கண்ணன் மீது, விநாயகர் மீது, முருகன் மீது, இதர பல தெய்வங்களின்மீது அவர் பாடிய எதுவும் ‘தேறித் தெளிந்தவனின்’ சொற்களாக அல்லாமல் உணர்ச்சிமயத்துக்கு அப்பால் வேறெதையும் அறியாத வேறொரு கவிஞனையே சுட்டிக்காட்டுகின்றன.

பாரதி சந்தித்த மூன்று சித்தர்களைப் பற்றிய குறிப்புகள் அவரது சுய சரிதையில் வருகின்றன. குள்ளச்சாமி என்றொரு சித்தர். கோவிந்தசாமி என்றொரு சித்தர். பிறகு யாழ்ப்பாணச் சாமி என்பவர்.

இதில் குள்ளச்சாமி, பாரதியை மிகவும் பாதித்தவர் என்று எண்ண முடிகிற விதமாக அவரைக் குறித்துச் சற்று நிறையவே எழுதியிருக்கிறார்.

‘சாமி, நீங்க யாருன்னு எனக்குப் புரியல. ஒரு பார்வைல பரமசிவனா தெரியறிங்க. இன்னொரு பார்வைல பைத்தியக்காரனாட்டம் தெரியறிங்க. சின்னப் பசங்களோட ரோட்ல திரியறிங்க. சொறிநாய்ங்க கூடல்லாம் விளையாடிட்டிருக்கிங்க. உங்கள கேடகரைஸ் பண்ண முடியல. நீங்களே சொல்லிடுங்க, யார் நீங்க?’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கேட்கிறார்.

சித்தர் அப்போது நல்ல மூடில் இருந்திருக்கிறார். சரி, வா என்று ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். புராதனமான, இடிபாடுகள் மிகுந்த, யாரும் வசிக்காத இடம். அங்கே ஒரு கிணறு இருந்திருக்கிறது. அதனருகே பாரதியை அழைத்து வரும் குள்ளச்சாமி, ‘மேல பாரு’ என்று சொல்லவும் பாரதி அண்ணாந்து பார்த்திருக்கிறார்.

‘என்னா தெரியுது?’

‘சூரியன்.’

‘குனி. அப்புடியே கிணத்துத் தண்ணியப் பாரு.’

பாரதி பார்க்கிறார்.

‘இப்ப என்னா தெரியுது?’

‘அதே சூரிய வெளிச்சம்தான் தண்ணில விழுது.’

‘அவ்ளதான் மேட்டர். போ.’

சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி எழுதுகிறார்:

தேசுடைய பரிதிஉருக் கிணற்றினுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தச் சித்தர் எப்போதும் சுமந்து வரும் அழுக்கு மூட்டை குறித்து பாரதி அவரிடம் கேட்டிருக்கிறார்.

‘எதுக்குங்க இந்த கப்படிக்கற மூட்டைய எப்பம்பாரு தூக்கிட்டுத் திரியறிங்க? சித்தர்னா இப்படித்தான் இருந்தாகணும்னு எதாச்சும் ரூல் இருக்குதா?’

அதற்குக் குள்ளச்சாமி சொல்கிறார், ‘டேய் நானாச்சும் வெளிய, முதுகுல தூக்கிட்டு சுத்தறேன். நீ உள்ளார இல்ல குவிச்சி வெச்சிருக்கற?’

புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தினுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ

– என்பது பாரதியின் விவரிப்பு. சம்பவங்களை, அவை நடந்த விதத்திலேயே கவிதையில் அவர் விவரிப்பதைப் படிப்பது பேரனுபவமாக இருக்கிறது.

பாரதி சந்தித்த இன்னொரு சித்தர், கோவிந்த சாமி. இவர் சற்று வேறு மாதிரி போலிருக்கிறது. கவிஞரை முதலில் திகைக்க அடித்துவிட்டு, அதன் பிறகுதான் உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதாவது, பாரதியின் (மறைந்த) தாய் தந்தையின் உருவத்தைத் தான் ஏந்தி அவர்முன் காட்சியளித்திருக்கிறார்.

‘செத்துப் போன உன் அப்பன் ஆத்தாள பாத்துக்க.’

இது எப்படி சாத்தியம்? பாரதியின் பெற்றோரை சித்தருக்குத் தெரியாது. அவர்கள் வாழ்ந்தது வேறு காலம். இறந்தவர்களின் உருவைத் தன் முகத்தில் ஏந்தி, அவர்களது பிள்ளைக்கு ஒரு மனிதன் காட்டினால் அவன் சுருண்டு காலில் விழுந்துவிட மாட்டானா?

அதுதான் நடந்திருக்கிறது.

… இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான் பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி உடையனென்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குருவென நான் சரணடைந்தேன்
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.

இதில் ‘மரணபயம் நீங்கினேன்’ என்கிற சொற்கள்தாம் சாரம். எதுவும் அழிவதில்லை; உடலைத் தவிர என்கிறது கீதை. இந்த சாமி அதை பாரதிக்குப் புரிய வைத்த விதத்தில் சிறிது மேஜிக் கலந்திருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாகச் சென்று சேர்ந்துவிட்டதுதான் முக்கியம்.

யாழ்ப்பாணச் சாமி என்ற மூன்றாவது சித்தரைக் குறித்து எழுதும்போது, தங்கத்தால் இழைத்துக் கோயில் கட்டி, லிங்கப் பிரதிஷ்டை செய்து நீங்கள் கும்பிடுகிறீர்கள். எனக்கு இவன் கண்கள் போதும். இவனைப் பார்ப்பதும் சிவனைப் பார்ப்பதும் எனக்கு ஒன்றுதான் என்று சொல்லிவிடுகிறார்.

பாரதியின் சித்தர் தொடர்புகளைத் தொட்டால் உடனே நம் நினைவுக்கு வருவது குள்ளச்சாமி அவருக்கு அபின் கொடுத்தார் என்கிற விவரம்தான். அதைத்தான் பல ஆய்வறிஞர்கள் விரித்து விவரித்துக் களித்திருக்கிறார்கள். வ.உ. சிதம்பரம் பிள்ளைகூடத் தனது புத்தகம் ஒன்றில் இது குறித்து மிக விரிவாகச் சொல்லி, அந்தக் கருமத்தை விட்டுத் தொலையப்பா என்று நண்பருக்கு அக்கறையுடன் அறிவுரை சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

குள்ளச்சாமியிடம் பாரதி பெற்றது அபின் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக பாரதியின் வாழ்வில் அந்தக் கட்டத்தைத் தோண்டி எடுத்து நாம் பெறுவது அது ஒன்றைத்தான்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #5 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 5

உலக மொழிகளின் சக உதர மொழி : சம்ஸ்கிருதம்

ஐரோப்பியரான நாம் பாரசீகர்களுக்கு எதிலெல்லாம் கடன்பட்டிருக்கிறோம்? அவர்கள் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் திறமைகள் கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்குத் தெரிந்தவை எல்லாம் பெரும்பாலும் அண்டையில் இருந்த பாபிலோனியர்கள் மற்றும் அஸிரியர்களிடமிருந்து கற்றுக் கொண்டவையே. இருந்தும் பாரசீகர்களுக்கும் நாம் சில விஷயங்களில் கடமைப்பட்டிருக்கிறோம். முதலாவதாக, கிரேக்கர்களால் தோற்கடிக்கப்பட அவர்கள் தம்மை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை மாராதானில் கிரேக்கர்களை பாரசீகர்கள் தோற்கடித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்… அவர்கள் கிரேக்கர்களை அடிமைப்படுத்தியிருந்தால் பழம் பெரும் கிரேக்க பாரம்பரியம் அழிக்கப்பட்டிருக்கும். எனினும் மனித குல வளர்ச்சியில் இந்தப் பங்களிப்பென்பது தன் விருப்பமற்ற மறைமுகப் பங்களிப்பு என்றே சொல்லப்படும். ஆனால், கிரேக்கர்கள், ரோமானியர்கள் மட்டுமல்ல; சாக்ஸன்கள், ஆங்கிலோ சாக்ஸன்கள் ஆகியோர் கூட பார்ஸிகளாக, நெருப்பை வழிபடுபவர்களாக ஆகியிருப்பார்கள். மயிரிழையில் அப்படி நடக்காமல் தப்பியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன்.

பாரசீகர்கள் சுயமாக நமக்களித்த பரிசு ஒன்று உண்டு. வெள்ளி – தங்கம் என இரட்டை உலோகம் சார்ந்த நமது நாணயச் செலாவணியில் அந்த இரண்டு உலோகங்களுக்கிடையிலான பண மதிப்பு சார்ந்த கணிப்புகளுக்கு நாம் பாரசீகர்களுக்கே நன்றி சொல்லவேண்டும். உண்மையில் பாபிலோனியாவில்தான் அந்த இரண்டுக்குமிடையிலான தொடர்பு நிர்ணயமானது என்றாலும் நடைமுறை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அந்தக் கணக்கீடு, பாரசீகப் பேரரசில்தான் எட்டியது. அங்கிருந்துதான் ஆசியாவில் இருந்த கிரேக்க குடியேற்றப் பகுதிகளுக்குப் பரவியது. அதன் பின் ஐரோப்பாவுக்குப் பரவியது. லேசான மாறுதலுடன் அந்த மதிப்பீடுதான் இன்றும் நம்மால் பின்பற்றப்பட்டுவருகிறது.

ஒரு தோலண்ட் அறுபது மின்களாகவும் ஒரு மினா அறுபது ஷீகல்களாகவும் பகுக்கப்பட்டன. இந்த இடத்திலும் அறுபதை அடிப்படையாகக் கொண்ட பாபிலோனியக் கணக்கீடுதான் இதற்கு ஆதாரமாக இருப்பதைக் காண்கிறோம். அறுபது என்ற எண் பல எண்களால் வகுபடக்கூடியது. ஷீகல் என்பதை கிரேக்கத்தில் ஸ்டேடர் என்று அழைத்தனர். பாரசீக தங்க நாணயம் போலவே ஏதெனிய தங்க நாணயமும் குரோசஸ், அலெக்சாண்டர் ஆகியோரின் காலகட்டம் வரையிலும் செல்வாக்குடன் இருந்தது. ஸ்டேடர் என்பது தங்க மினாவின் 60-ல் ஒரு பங்கு மதிப்பு கொண்டதாக இருந்தது. நமது சாம்ராஜ்ஜியத்திலும் கிட்டத்தட்ட இதற்கு இணையான மதிப்பீடே இருந்தது. வெள்ளிக்கும் தங்கத்துக்கும் இடையிலான விகிதம் I3 அல்லது I3.33 க்கு I. வெள்ளி ஷீகலை I3 க்கு I0 என்று ஆக்கினால் நம்முடைய ஃப்ளோரினுக்கு ஏகதேசம் சமமாக இருக்கும். பாதி வெள்ளி ஷீகல் என்பது ட்ரச்மாவுக்கு சமம். இந்த அடிப்படையில் பார்த்தால் நமது ஷில்லிங்கின் மூல ஆதாரம் இதுவே.

வெள்ளி, தங்கம் இவற்றின் மதிப்பை இரண்டுக்கும் இடையிலான தொடர்பின் அடிப்படையில் நிர்ணயிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் மிகப் பெரிய தவறான செயல் என்று ஒருவர் சொல்லக்கூடும். எனினும் உலகம் எந்த அளவுக்கு ஒன்றை ஒன்று சார்ந்ததாக இருந்திருக்கிறது. நல்லதோ கெட்டதோ… நாம் யாராக இருக்கிறோமே அது நம்முடைய கடின உழைப்பினால் மட்டுமே அல்ல; எந்த ரத்தம் ஓடிய நாளங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் என்னவிதமான எலும்புகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் நம்முடன் தொடர்பில் வந்த மற்றவர்களாலுமேதான் நம்முடையதாக இருப்பவையெல்லாம் உருவாகிவந்திருக்கின்றன என்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு மதத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் அதைப் பற்றிய முழுமையான அறிவை ஒருவர் ஒருபோதும் பெறவே முடியாது. அதுபோலவே மெசபடோமியர்களின் க்யூனிஃபார்ம் எழுத்துகள், எகிப்தின் ஹியரோக்லிஃபிக் மற்றும் ஹியராட்டிக் படைப்புகள், பாரசீக மற்றும் ஃபொனீஷியர்களின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் இவையெல்லாம் பற்றித் தெரிந்துகொள்ளாமல் நமது அறிவார்ந்த சிந்தனைப் புலங்களையும் வாழ்க்கையையும் பற்றி எதையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளமுடியாது.

மத அடிப்படையில் நாம் யூத அல்லது செமிட்டிக் வேர்கள் கொண்டவர்கள். தத்துவ அடிப்படையில் கிரேக்க வேர்கள் கொண்டவர்கள். நம் அரசியலின் வேர்கள் ரோமானிய சாம்ராஜியத்தில் ஊன்றியிருக்கின்றன. நமது தார்மிக ஒழுக்க ஒழுங்குகள் சாக்ஸனிய வேர்கள் கொண்டவை. இந்த அடிப்படையில் பார்த்தால் கிரேக்க, ரோமானிய, சாக்ஸனியர்களின் வரலாறு பற்றிய நம் அறிவு அல்லது கிரேக்கத்தில் இருந்து இத்தாலிக்கும் ஜெர்மனியில் இருந்து பிற பகுதிகளுக்கும் பாய்ந்திருக்கும் நாகரிகத்தின் போக்கு பற்றிய நம் அறிவுதான் தாராளமான, நவீன, விஞ்ஞான பார்வை கொண்ட நம்முடைய வரலாற்றுக் கல்வியின் அடிப்படையாகத் திகழ்கிறது.

இந்த அளவுக்குத்தான் இவை பற்றிச் சொல்லமுடியும் என்று ஒருவர் சொல்லக்கூடும். உலகின் மகத்தான வரலாற்று சாம்ராஜ்ஜியங்களில் வாழ்ந்த நமது உண்மையான ஆன்மிக முன்னோர்கள் பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடிந்த அனைத்தையும் நாம் தெரிந்துகொண்டாகவேண்டும். எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ஃபொனீஷியர்கள், யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாக்ஸன்கள் ஆகியோரிடம் நாம் கடன்பட்ட அனைத்துக்கும் நாம் நன்றி உணர்வுடன் இருந்தாகவேண்டும். ஆனால், இந்தியாவை எதற்காக இங்கு கொண்டுவரவேண்டும்?

நல்ல கல்வி பெற்றதாகச் சொல்லிக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் ஏற்கெனவே கற்றுத் தேறவேண்டியவை ஏராளம் இருக்கும் நிலையில் கூடுதல் சுமையாக இந்தியாவைப் பற்றியும் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? சிந்து மற்றும் கங்கை நதி தீரங்களில் வாழ்ந்த பூடகமான நபர்களிடமிருந்து நாம் எதைக் கடனாகப் பெற்றிருக்கிறோம். அவர்களுடைய மன்னர்கள், அவர்களின் காலகட்டங்கள், அவர்கள் செய்தவை பற்றியெல்லாம் ஏற்கெனவே அதிக சுமையாகிவிட்டிருக்கும் நம் நினைவுகளில் மேலும் திணித்துக்கொள்ள என்ன அவசியம் இருக்கிறது?

இந்தக் கேள்வியில், புகாரில் ஓரளவு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாக்ஸன்கள் எந்த அளவுக்கு நாம் ஐரோப்பியர்களுக்கு அறிவார்ந்த மூதாதைகளாக இருக்கிறார்களோ அதுபோல் பழங்கால இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நம்முடன் தொடர்புடையவர்கள் அல்ல. எனினும் அவர்கள், நாம் எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அதனுடன் தொடர்புடையவர்கள். அவர்களுடைய சிந்தனை, வரலாற்று நிகழ்வுகள் (பதிவுகள்) எல்லாம் பிற அனைத்து வரலாற்று ஆவணங்களைவிடவும் மிக மிகப் பழமையானவை. அவையெல்லாம் மிக அற்புதமான முறையில் நாம் படித்துப் புரிந்துகொள்ளும்வகையில் நம் கைகளுக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றன. வேறு எதிலிருந்தும் தெரிந்துகொள்ளமுடியாத பாடங்களை இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளமுடியும்.

நமது அறிவார்ந்த மூதாதை மரபில் விடுபட்டிருக்கும் கண்ணிகளையும் இடைவெளிகளையும்விட மிக முக்கியமான மனிதக் குரங்குக்கும் மனிதருக்கும் இடையிலான பரிணாமத் தொடர்பில் விடுபட்டிருக்கும் பல முக்கியமான இணைப்புகளையும் நாம் பூர்த்திசெய்துகொள்ளமுடியும்.

பழம்பெரும் இந்திய இலக்கியங்கள் பற்றி மட்டுமே இங்கு பேசவில்லை. அதையும்விட மிகப் பழமையான சம்ஸ்கிருதம் என்ற இந்தியாவின் மொழியைப் பற்றிப் பேசுகிறேன். கிரேக்கம், லத்தீன், ஆங்கிலோ சாக்ஸன் மொழிகளின் மூல மொழி சம்ஸ்கிருதம் என்று இன்று யாரும் சொல்வதில்லை. முன்பு அப்படிச் சொல்லப்பட்டது. ஆனால், கிரேக்கம், லத்தீன், ஆங்கிலோ சாக்ஸன் மொழிகள் எந்த மூல மொழியில் இருந்து கிளை பிரிந்தனவோ அதிலிருந்து உருவான ஒரு கிளை மொழிதான் சம்ஸ்கிருதம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்த மொழிகள் மட்டுமல்ல; ட்யூடானிக், செல்டிக், ஸ்லோவேனிக் மட்டுமல்ல பாரசீகம் மற்றும் அர்மீனிய மொழிகள் அனைத்துமே அப்படியாகக் கிளைபிரிந்தவையே.

இப்படியான நிலையில் ஒரு வரலாற்று ஆசிரியரின் பார்வையில் சம்ஸ்கிருதத்துக்கு மிக அதிக முக்கியத்துவத்தையும் அக்கறையையும் தாக்கூடியதாக இருக்கும் விஷயம் என்ன?

முதலாவதாக அதன் தொல் பழமை. அது கிரேக்க மொழியையும்விடத் தொன்மையானது என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த கால அடிப்படையிலான வெறும் தொன்மையைவிடவும் அதி தொன்மையான வழிமுறையில் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டு நம் கைகளில் தரப்பட்டிருக்கிறது. கிரேக்கம், லத்தீன் பற்றி பல நூற்றாண்டுகளாக உலகோருக்குத் தெரியும். அவை இரண்டுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதும் தெரியும். ஆனால் இந்த ஒற்றுமை எப்படி ஏற்பட்டது? இதை எப்படி விளக்குவது? சில நேரங்களில் கிரேக்கச் சொல் ஒன்றின் புரியாத அர்த்தத்தை லத்தீன் சொல் ஒன்று புரியவைக்கும். சில நேரங்களில் லத்தின் வார்த்தையின் வேர்ச்சொல் குறித்து கிரேக்கம் புதிய பார்வையை முன்வைக்கும்.

கோதிக் மற்றும் ஆங்கிலோ சாக்ஸன் போன்ற ட்யூடானிக் மொழிகள், பழங்கால செல்டிக், ஸ்லோவேனிக் மொழிகள் பற்றிப் பின்னர் படித்துத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தோம். இவை அனைத்தும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது புரியவந்தது. ஆனால் இந்த ஒற்றுமையும் தொடர்பும் எப்படி ஏற்பட்டன… அதோடு இந்த மொழிகளுக்கிடையே எப்படி மிக மிகத் தீவிரமான வேறுபாடுகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் விளக்கவே முடியவில்லை. மிகவும் புதிராகவே இருக்கும் இந்த விஷயங்கள், பல்வேறு அறிவியல் அடிப்படையற்ற, துளியும் பொருத்தமற்ற யூகங்களுக்கு வழிவகுத்தன.

இந்த நேரத்தில்தான் சம்ஸ்கிருதம் களத்தில் புகுந்தது. இந்தப் புதிரான ஒற்றுமைகள், வேற்றுமைகள் அனைத்தின் மீதும் ஒளியைப் பாய்ச்சியது. இவையெல்லாம் அந்நிய மொழிகள் அல்ல என்பது தெளிவானது. ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் கிளை இடம் உறுதிப்படுத்தப்பட்டது. சம்ஸ்கிருதமே இந்த மொழிகள் அனைத்தின் சக உதர கிளை மொழி. இந்த மொழிக் குடும்பத்தின் பல மொழிகள் மறந்துவிட்ட விஷயங்கள் பலவற்றை சம்ஸ்கிருதம் விளக்கியது. பிற மொழிகள் அனைத்துக்கும் தமக்கென்று சொல்ல தனி வரலாறு இருக்கவே செய்கின்றன. இந்த வரலாறுகள் எல்லாம் சேர்ந்தே மனித சிந்தனையின் ஒரு அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் யூத, கிரேக்க, லத்தீனிய, சாக்ஸனிய அத்தியாயங்களைவிடவும் சில அம்சங்களில் மிக மிக முக்கியமானது.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #5 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 5 appeared first on கிழக்கு டுடே.

  •  

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #4 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 4

வரலாறை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

இந்தியாவுக்குச் சென்று பணிபுரியவிருப்பவர்களுக்கு உலக வரலாற்றில் அற்புதமான இந்தியாவின் இடம் என்ன… எந்த முக்கியமான இடத்தை அது பெற்றிருக்கவேண்டும் என்பதை நான் விளக்கிச் சொல்லவிரும்புகிறேன். மேலும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு இன்னொன்றைச் சொல்லவிரும்புகிறேன். கிரேக்கர், ரோமானியர், சாக்ஸன்கள், செல்டிக்கள் ஆகியோரின் வரலாறு கொஞ்சம் போல் பாலஸ்தீனியர், எகிப்தியர், பாபிலோனியர் ஆகியவர்களின் வரலாறை மட்டுமே நாம் உலக வரலாறாகப் படித்துவிட்டு, நமக்கு மிகவும் நெருங்கிய அறிவார்ந்த உறவுகளான இந்திய ஆரியர்கள் பற்றிப் படிக்காமல் விட்டால் நம் உலக வரலாற்று அறிவு முழுமையற்றதாகவே ஆகிப் போகும்.

அற்புதமான மொழியான சமஸ்கிருதத்தை வடிவமைத்தவர்கள் ஆரியர்கள். நமது அடிப்படைக் கோட்பாடுகளின் உருவாக்கத்தில் சக பயணிகளாக இருப்பவர்கள். இயல்பாக உருவாகி வந்திருக்கும் பல மதங்களின் பிதாமகர்கள் (தந்தை); புராண, ஐதீக மரபுகளில் அதி சிறப்பான திறப்புகளை வெளிப்படுத்தியவர்கள்; அதி நுட்பமான தத்துவங்களை முன்மொழிந்தவர்கள்; மிக மிக விரிவான சட்ட திட்டங்களை வகுத்தளித்தவர்கள் இந்த ஆரியர்கள். இவர்களைப் பற்றிப் படிக்காவிட்டால் நம் உலக அறிவு குறைவுடையதாகவே ஆகிவிடும்.

குறுகலான சிந்தைகள் இல்லாத, தாராளமான கல்வியில் பல விஷயங்கள் இருந்தாகவேண்டும். நாம் நமது பள்ளிகள், கல்லூரிகளில் கற்றுத் தரும் ஒட்டுமொத்த வரலாறும் இந்தியா பற்றிய ஒரே ஒரு அத்தியாயத்துக்குக் கூட ஈடாகமுடியாது. அதாவது, இந்திய வரலாறை முறையாகப் புரிந்துகொண்டு, விளக்கிச் சொன்னால் அதற்கு இணையாக நம்மிடம் இருக்கும் எதுவுமே ஈடாகாது.

வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்து நம் முன் கொட்டும் மலைபோன்ற தகவல்கள் எல்லாம் வரலாற்றுப் படிப்பு என்பதை மிகவும் சிரமமானதாக சாத்தியமற்றதாக ஆக்கிவருகின்றன. எனவே உண்மையான வரலாற்றாசிரியர் என்பவர், சரியான விகிதத்திலான தகவல்களைக் கண்டடையவேண்டும். அவற்றை கலை நயத்துடன் தொகுக்கவேண்டும். வரலாற்றில் நாம் கடந்துவந்திருக்கும் இடத்தின் அடிப்படையில் ஒதுக்கவேண்டியவற்றை மிகவும் கறாராக ஒதுக்கிவிடவேண்டும். வெறுமனே வரலாற்றுத் தகவல்களைப் பட்டியலிடும் ஒருவரையும் எது சரியான வரலாற்றுத் தகவல் என்பதை மிகச் சரியான இனம் காணும் உண்மையான வரலாற்று ஆசிரியரையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் விஷயம் அதுவே. வெறுமனே பட்டியலிடும் நபருக்கு எல்லா தகவல்களுமே – அதிலும் அவரே அவற்றைக் கண்டடைந்திருந்தால் – எல்லாமே முக்கியமானதாகவே தோன்றும்.

புருஷ்யாவின் வரலாற்றை எழுதியவர்கள் எல்லாம் மாமன்னர் ஃப்ரெடரிக்கின் சட்டையில் இருந்த பொத்தான்களைப் பற்றி மறக்காமல் எழுதியதைப் பார்த்து மனம் சலித்த அவர் அவருடைய காலத்தில் உண்மையான வரலாற்று ஆசிரியர் எப்போது உருவாவார் என்று கசந்த மனதுடன் வருந்திச் சொன்னது இதைத்தான். ‘வரலாற்று ஆவணங்கள் முழுவதையும் அலசிச் சலித்துப் பார்த்துவிட்டேன். எந்தவொரு தகவலும் எந்த மன்னரின் பெயரையும் பட்டங்களையும் சொல்லி வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு முக்கியமானதாகவே இல்லை’ என்று கார்லைல் இப்படியான பட்டியலிடும் வரலாறுகளைப் படித்துச் சலித்துப் போய் சொன்னதும் அதுவே. அவருக்கு அப்படியான பார்வை இருந்த பின்னரும் அவர் எழுதிய வரலாறுகளிலுமேகூட பெரும்பாலானவற்றை மறைத்து ஒதுக்கிவிடலாம் என்ற வகையிலேயே இருக்கவும் செய்கின்றன!

நாம் ஏன் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்?

நவீன தாராளக் கல்வியில் வரலாற்றுப் படிப்புக்கு முக்கியமான இடம் ஏன் தரவேண்டும்?

ஏனென்றால் நாம் அனைவரும், ஒவ்வொருவரும் இப்போது யாராக இருக்கிறோமோ அந்த இடத்துக்கு எப்படி வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை நிச்சயம் தெரிந்துகொண்டாகவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காலகட்ட மனிதரும் ஒரே தொடக்கப் புள்ளியில் இருந்து அனைத்தையும் மீண்டும் மீண்டும் சிரமப்பட்டுத் தெரிந்துகொண்டாகவேண்டிய கஷ்டம் இல்லாமல் ஆகும். மேலான, உன்னதமான இலக்குகளை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல அதுவே உதவும்.

ஒரு குழந்தை வளர்ந்து வரும்போது தன் தந்தை அல்லது தாத்தாவிடம் தாம் வசிக்கும் வீட்டைக் கட்டியது யார்..? காட்டைச் சீர்திருத்தி உணவு தரும் வயலாக்கியது யார்? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வதுண்டு. நாமும் அதுபோலவே, எப்போது இங்கு வந்தோம்… நம்முடையவை என்று நாம் சொல்பவையெல்லாம் நமக்கு எப்படி வந்து சேர்ந்தன என்று வரலாற்று ஆசிரியர்களிடம், கேட்டுத் தெரிந்துகொள்கிறோம்.

பயனுள்ள, வியக்கவைக்கும் பல விஷயங்களை வரலாறு நமக்குச் சொல்லித்தரும். பாட்டிகள் மற்றும் அம்மாக்களிடமிருந்து குழந்தைகள் தெரிந்துகொள்வதுபோன்ற பல்வேறு வம்பு வழக்குகளைச் சொல்லித் தரும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு முன்னே நடந்தவை என்ன… நம் முன்னோர்கள் யார்… நமது வம்ச வழி எப்படியெல்லாம் வந்திருக்கிறது என்பவற்றை வரலாறு முக்கியமாகக் கற்றுத் தந்தாகவேண்டும்.

நமது (ஐரோப்பியர்களுடைய) அறிவுத்துறை சார்ந்த முன்னோர்கள் என்று பார்த்தால் யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாக்ஸன்களே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாலஸ்தீன, கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய பகுதிகளில் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு நாம் பட்டிருக்கும் நன்றிக்கடனைப் பற்றி ஐரோப்பாவில் இருக்கும் ஒருவருக்குத் தெரியவில்லையென்றால் அந்த நபரை நாம் கற்றறிந்தவராக மதிக்கவே மாட்டோம். அப்படியான நபருக்கு உலகின் கடந்த கால வரலாறென்பது மிகப் பெரிய அறியாமையாக இருளாகவே இருக்கும். அவருக்கு முன்பாக இருந்தவர்கள் பற்றியும் அவர்கள் உருவாக்கித் தந்திருப்பவை பற்றியும் எதுவும் தெரிந்திருக்காது. எனவே அவருக்குப் பிந்தைய சந்ததிகளாக வரப்போகிறவர்களுக்கு அவரால் எதையும் உருவாக்கித் தரவும் முடியாமலேயே இருக்கும். அவருக்கு வாழ்க்கை என்பது மணல் கயிறு போன்றதாகவே இருக்கும். உண்மையில் அந்தக் கயிறு கடந்த காலச் சிந்தனைகளுடன் இதயங்களைத் துடிக்கவும் அதிரவும் வைக்கும் மின் ஆற்றல் மிகுந்த சரடாக இருந்திருக்கவேண்டியது. வருங்காலத்தை நம்பிக்கை மிகுந்ததாக ஆக்கியிருக்கவேண்டியதும் கூட.

மதம் பற்றிய பார்வையில் இருந்து ஆரம்பிப்போம்.

யூத இனம் பற்றி எதுவும் தெரியாமல் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு பற்றி எதையுமே ஒருவர் தெரிந்துகொள்ளவே முடியாது. யூத இனம் பற்றித் தெரிந்துகொள்ள பழைய ஏற்பாட்டை ஒருவர் பிரதானமாகப் படித்தாகவேண்டும். யூதர்களுக்கும் பழைய உலகின் பிற பகுதியினருக்கும் இடையிலான உண்மையான தொடர்பைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் யூதர்களின் தனிப்பட்ட விசேஷ சிந்தனைகள் என்ன… பிற செமிட்டிய இனங்களுடன் (குலங்களுடன்) என்னென்ன சிந்தனைகள் அவர்களுக்கு பொதுவாக இருந்தன… பழம் பெரும் நகரங்களுடனான வரலாற்றுத் தொடர்புகளின் மூலம் என்னவிதமான மதம் சார்ந்து என்னென்ன சிந்தனைத் தூண்டல்களைப் பெற்றிருக்கிறார்கள்… என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள பாபிலோன், நினேவா, ஃபொனீஷியா, பாரசீகம் ஆகிய பகுதிகளின் வரலாறு பற்றியும் போதிய கவனம் செலுத்தியாகவேண்டும்.

இவையெல்லாம் தூர தூர தேசங்களாகவும் மறைந்து மறக்கப்பட்ட மக்களாகவும் தோன்றலாம். ‘புதைந்து அழிந்துபோனவர்கள் தமது வரலாற்றை புதைத்து அழித்துக் கொள்ளட்டும். இந்த மம்மிகள் (மறைந்துபோனவை) நமக்கு கற்றுத் தர என்ன இருக்கின்றன’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் எதுவும் மறையவில்லை. பல விஷயங்கள் வரலாற்றில் தொடர்ந்து அற்புதமாக நீடித்துவருகின்றன. இங்கு இந்தப் பல்கலை அரங்கில் கூடியிருக்கும் நம்மிடையேகூட பாலிலோனியா, நினேவா, எகிப்து, ஃபொனீஷியா, பாரசீகம் ஆகியவற்றிலிருந்து நாம் பெற்ற பல விஷயங்கள் இருக்கின்றன.

நாம் அனைவரும் கைக்கடிகாரம் அணிந்திருக்கிறோம். அதற்கு, ஒரு மணி நேரத்தை 60 நிமிடங்களாகப் பகுத்துச் சொன்ன பாபிலோனியர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அவர்களுடைய அந்தப் பகுப்பு, குறைகள் உடையதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் அது கிரேக்கர்கள் வழியாகவும் ரோமானியர்கள் வழியாகவும் நமக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அவர்களுக்கு பாபிலோனில் இருந்தே கிடைத்திருக்கிறது. அறுபதை அடிப்படையாகக் கொண்ட கணிதப் பகுப்பு பாபிலோனியர்களுக்கே உரித்தானது. பாபிலோனில் இருந்து ஹிப்பார்கஸ் அதை கி.மு.150 வாக்கில் பயன்படுத்த ஆரம்பித்தார். தாலமி கி.பி.150-ல் அதை மேலும் பெருமளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். மற்ற அனைத்தையும் அழித்த ஃபிரெஞ்சுக்காரர்கள் நமது கடிகாரங்களின் முள் தகடை ஒன்றும் செய்யவில்லை. பாபிலோனிய அறுபது நிமிடப் பகுப்பையும் ஒன்றும் செய்யவில்லை.

கடிதம் எழுதுபவர்கள் எல்லாருமே ரோமானியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் கடன்பட்டவர்களே. ஃபொனீஷியர்களிடமிருந்து கிரேக்கர்கள் தமது எழுத்துகளை வடிவமைத்துக் கொண்டனர். ஃபொனீஷியர்கள் அதை எகிப்திலிருந்து கற்றுக் கொண்டனர். அந்த எழுத்து வடிவம் முழுமையடையாததாக இருக்கலாம். அந்த எழுத்துகளை ஆராயும் அனைவரும் அதைச் சொல்வார்கள். இருந்தும் நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் பழங்கால ஃபொனீஷியர்கள், எகிப்தியர்கள் ஆகியோருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தின் பின்னாலும் எகிப்திய பழங்கால வரிவடிவ மூலாதாரம் மறைந்துநிற்கிறது.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #4 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 4 appeared first on கிழக்கு டுடே.

  •  

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #3 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 3

மொழியியல், மத ஆய்வுகள், மனித சிந்தனைகளின் கருவூலம்

இந்தியாவுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் செங்கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் இடையில் வணிகப் பரிமாற்றங்கள் விவிலிக ராஜாக்கள் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் தடைபட்டு இருந்தன என்று தவறாகக் கருத முடியுமா?

யூதர்களிடையே மகத்தான நீதி ஞானம் இருந்ததாகச் சொல்வதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் சாலமன் ராஜாவின் நியாயத் தீர்ப்பை நினைவுபடுத்திப் பாருங்கள். எனக்கு சட்ட ஞானமெல்லாம் அதிகம் கிடையாது. எனினும் ‘உயிருடன் இருக்கும் குழந்தையை இரண்டாக வகுந்து ஒருத்திக்கு ஒரு பாதியைக் கொடுங்கள். மறு பாதியை இன்னொருத்திக்குக் கொடுங்கள்’ என்ற அந்தத் தீர்ப்பைப் படித்தபோது அதிர்ந்துபோனேன்.

இப்போது புத்த ஜாதகக் கதையில் இந்தக் கதை எப்படி இடம்பெற்றிருக்கிறது என்று விரிவாகச் சொல்கிறேன். பெளத்த திரிபீடகத்தின் திபெத்திய மொழிபெயர்ப்பான கங்க்யூர் என்ற நூலில் இதுபோலவே இரண்டு பெண்கள் ஒரு குழந்தையைத் தமது குழந்தை என்று சொந்தம் கொண்டாடும் கதை இடம்பெற்றிருக்கிறது. இருவர் தரப்பு வாதங்களையும் பொறுமையாகக் கேட்ட அரசர், யார் உண்மையான தாய் என்று தீர்மானிக்க முடியாமல் தவிக்கிறார். இந்த நேரத்தில் புத்தரின் சிஷ்யையான விசாகா முன்னால் வந்து சொல்கிறார்: ‘இந்தப் பெண்களைக் குறுக்கு விசாரணை செய்து என்ன பலன் கிடைக்கப் போகிறது. அந்தக் குழந்தையை அவர்களிடமே கொடுத்துவிடுங்கள். அவர்களே சண்டையிட்டு ஒரு முடிவை எட்டிக் கொள்ளட்டும்’.

இதைக் கேட்டதும் இரண்டு பெண்களும் பாய்ந்து குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு தமக்குள் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள். சண்டை மூர்க்கத்தனமாக ஆகத் தொடங்கியதும் குழந்தைக்கு அடிபட்டு அழத் தொடங்குகிறது. அதைத் தாங்க முடியாத ஒருத்தி, சண்டையை நிறுத்திவிட்டு மற்றவளே குழந்தையை எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறாள்.

பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாதவரே உண்மையான தாய் என்று மன்னர் தீர்ப்பு வழங்கி குழந்தையை அவரிடம் தந்தார். மற்ற பெண்ணுக்கு பிரம்படி கொடுத்தார்.

இந்தக் கதை சாலமன் மன்னரின் ஞானத்தையும் விட மேலான ஞானத்தைக் கொண்டதாகவும் மனித இயல்பு குறித்த ஆழமான புரிதலைக் கொண்டிருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது.

உங்களில் பலர் பல மொழிகளை படித்ததோடு அல்லாமல் மொழிகளின் அறிவியல் (மொழியியல்) பற்றியும் படித்திருப்பீர்கள். இந்தியர்கள் எல்லாம் கிரேக்க, அரேபிய, பாரசீக, மொகலாய இறுதியாக ஆங்கிலேயர் என பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களுடைய மொழிகளுடன் தொடர்புகொள்ள நேர்ந்திருக்கிறது. வட்டார மொழிகளின் வளர்ச்சி, சிதைவு, வார்த்தைகள் சார்ந்து மட்டுமல்ல, இலக்கணம் சார்ந்தும் மொழிகளின் கலப்பு ஆகியவை பற்றியெல்லாம் இந்தியாவில் வசிக்கும் அந்த ஆரிய, திராவிட மொழிக் குடும்பத்தினர் மற்றும் முண்டா பழங்குடியினர் போன்றவர்களிடமல்லாமல் உலகில் வேறு எங்கு விரிவாக ஆராய்ந்து பார்க்க முடியும்?

சட்ட திட்டங்கள், நீதி நெறிமுறைகள் பற்றியெல்லாம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? கிரேக்கம், ரோமாபுரி, ஜெர்மனி என பிற இடங்களில் சட்ட திட்டங்கள் தொடர்பாக நீங்கள் படித்திருக்கும் வரலாற்றுத் தகவல்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட சட்ட வரலாறை நீங்கள் இந்தியாவில் ஆராய்ந்து தெரிந்துகொள்ளமுடியும். உலக சட்ட திட்டங்கள் பற்றி ஒப்பிட்டு ஆய்வு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இந்திய சட்ட திட்டங்களுடன் உலக சட்ட திட்டங்களில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகள் எல்லாம் மிக மிக அரியதோர் அறிவுத் திறப்பாக அமையும்.

ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகப் பல நூல்கள் கண்டடைப்பட்டுவருகின்றன. உதாரணமாக புகழ் பெற்ற மனுஸ்மிருதி போன்று பின்னாளில் உருவான பல சட்ட நூல்களின் மூல நூலான தர்ம சூத்ரங்கள் அல்லது சமயாகாரிக சூத்ரங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

மனுவின் சட்ட விதிகள் என்று அழைக்கப்பட்ட நூல் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய அல்லது கி.மு.500களில் எழுதப்பட்டது என்று உறுதியாகச் சொல்லப்பட்டது. இப்போது அது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று சற்று தயக்கத்துடன் சொல்லப்படுகிறது. அது சட்ட விதிகள் என்றோ சட்ட விதிகளின் தொகுப்பு என்றோ அல்லது மனுவின் சட்ட விதிகள் என்றோ கூட அழைக்கப்பட்டக்கூடியது அல்ல என்றும் சொல்லப்படுகிறது.

சட்ட திட்டங்களின் முன்னோடியான அரசியல் சமூகங்கள் பற்றிய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டிருந்தால் (அந்தப் புரிதல் இந்த கேம்பிரிட்ஜ் பல்கலை அல்லாமல் வேறு எங்கு உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது) இந்தியாவில் இப்போதும் நீடித்து நிலைபெற்று இருந்துவரும் கிராம சமுதாயங்களே அது தொடர்பான ஆய்வுகளுக்கெல்லாம் உரிய பலனை உங்களுக்குத் தரமுடியும்.

நாம் ஏற்கிறோமோ மறுக்கிறோமோ… எந்தவொன்றையும்விட நாம் மிக அதிகமாக மதிக்கும் விஷயம் ஒன்று உண்டு. ஏற்பவர்களைவிட மறுப்பவர்கள் மிக அதிக அக்கறையுடன் பேசிவரும் விஷயம் அது. நமது எண்ணங்கள், நம்பிக்கைகள், செயல்கள் அனைத்துக்கும் வழிகாட்டுவதாகவும் ஆதரவு தருவதாகவும் அனைத்திலும் நிரம்பி வழிவதாகவும் அனைத்தையும் முழுவதுமாக ஆக்கிரமிப்பதாகவும் இருக்கும் விஷயம் அது. அது இல்லாமல் கிராம சமூகம் இல்லை…. சாம்ராஜ்ஜியங்கள் இல்லை. மரபுகள் இல்லை; சட்டங்கள் இல்லை. சரிகள் இல்லை.. தவறுகள் இல்லை. மொழிக்கு அடுத்ததாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான நிரந்தரமான, மிகத் தெளிவான வேறுபாட்டை அடையாளப்படுத்தக்கூடியது. இந்த உலக வாழ்க்கையைச் சாத்தியமாகவும் சகிக்க முடிவதாகவும் ஆக்கும் விஷயம் அது. அனைத்து தேசியங்களின் ஆதார ஊற்று அது. அனைத்து வரலாறுகளின் வரலாறு… அனைத்து புதிர்களின் புதிர்… ஆம்… மதம் பற்றித்தான் சொல்கிறேன். மதங்களின் தோற்றுவாய், இயல்பான வளர்ச்சி, தவிர்க்க முடியாத வீழ்ச்சி இவை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள இந்தியாவைவிட மிகப் பொருத்தமான தேசம் எதுவாக இருக்கமுடியும்? பிராமண மதத்தின் தாய்வீடு… பெளத்தத்தின் பிறப்பிடம்… ஜெராஷ்டிர மதத்தின் புகலிடம்… பல்வேறு புதிய கற்பிதங்களின் தாயாகத் திகழும் தேசம்… 19-ம் நூற்றாண்டின் புழுதிப் படலத்தில் இருந்து மீட்டுத் தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டால் அதி தூய மத நம்பிக்கையின் புதிய பிறப்பாக வருங்காலத்தில் ஜனிக்கப் போகிற மதம். அதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள இந்த உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கு செல்லவேண்டியிருக்கும்?

அதி தொல் பழங்காலம் ஒரு பக்கம்… அதி நவீன எதிர்காலம் மறுபக்கம் என இந்தியாவில் எங்கு சென்றாலும் காணக்கிடைக்கும். இன்றைய நிலையில் பற்றியெரியும் எந்தவொரு பிரச்னையையோ கேள்வியையோ வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்… அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், சட்டங்களின் வரையறைகள், நிதி, புலம் பெயர்தல், நலிவடைந்த சமூகத்தின் நல உதவித் திட்டங்கள் என எதைப் பற்றி வேண்டுமானாலும் கற்றுக் கொடுக்கவோ அமல்படுத்தவோ விரும்பினாலும் கற்றுக் கொள்ளவோ கவனித்துப் புரிந்துகொள்ளவோ விரும்பினாலும் உலகில் எங்குமே இல்லாத அளவுக்கான சோதனைச்சாலையாக இந்தியாவே திகழ்கிறது.

சமஸ்கிருதம் கற்றுக் கொள்வது ஆரம்பத்தில் சிரமமானதாகவும் பயனற்றதாகவும் தோன்றக்கூடும். ஆனால் நீங்கள் முறையாகப் படித்தால் (லண்டனில் அதற்கு கேம்பிரிட்ஜ் போல் சிறந்த ஸ்தாபனம் வேறு எதுவும் இருக்கமுடியாது) உங்கள் முன்னால் எண்ணற்ற சமஸ்கிருத இலக்கியங்கள் அணிவகுத்து நிற்கும். பெரும்பாலானவை உலகுக்குத் தெரிந்திராதவையாக இருக்கும். யாரும் படித்திராதவையாக இருக்கும். உங்களுக்கு இதற்கு முன் இருந்திராத உள்ளொளியை அது தரும். மாபெரும் பாடங்களைக் கற்றுத் தரும். மனித மனங்களின் ஆழங்களை அறியத் தரும்.

இந்தியாவுக்குச் சென்றால் இன்னும் ஏராளமான சமஸ்கிருத நூல்களை நீங்கள் படிக்க முடியும்.

நீங்கள் நினைப்பதுபோல் வெகு தூரத்தில் இருக்கும் விசித்திரமான அல்லது புதிரான ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தேசம் அல்ல இந்தியா. அதன் வருங்காலம் ஐரோப்பாவுக்கு சொந்தமானது. இந்திய ஐரோப்பிய உலகில் அதற்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. நமது வரலாற்றில் அதற்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. மனித குல வரலாற்றில், மனித சிந்தனைகளின் வரலாற்றில் அதற்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது.

உலகின் பரிணாம வளர்ச்சி, முதல் செல் தோன்றியது எப்போது, செல்களின் கலப்பு மற்றும் பிரிதல்கள் எப்படி நடந்தன, உயிர்கள் எப்படித் தோன்றின, தாழ்நிலை உயிர்களில் தொடங்கி உயர் நிலை உயிரிகள் வரை எப்படி எல்லாம் பரிணமித்திருக்கின்றன என்பவை சார்ந்த புற உலகம் அல்லது லெளகிகத் தேவைகள் சார்ந்த உலகின் வளர்ச்சி பற்றி இன்றைய உலகின் மகத்தான ஆளுமைகள், மேதைகள் விரிவாக ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். உள்முகமான உலகம், அக உலகத்தின் படிப்படியான மாற்றங்கள், வளர்ச்சிகள் பற்றி இப்படியான ஓர் ஆய்வும் உலகில் நடக்கத்தானே செய்கின்றன.

முதன் முதலாக மனித சிந்தனை துளிர்விட்டது எப்போது…. மனித பகுத்தறிவானது மிகச் சிறிய சிந்தனையில் ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து சிக்கலான, உயரிய நிலையை எட்டியது எப்படி? மனித சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியில் நம்மைப் பற்றி (உண்மையான நம்மைப் பற்றி) நாம் ஆராய்ந்துவருகிறோம். அந்த அக உலக சிந்தனை வளர்ச்சி பற்றிய ஆய்வுகளில் உலகில் இந்தியா மற்ற எந்த நாடுகளையும் போலவே அதி முக்கியமான இடத்தை வகிக்கிறது.

மொழி, மதம், புராணம், தத்துவம், சட்ட திட்டங்கள், சடங்கு ஆசாரங்கள், தொல் கலை, தொல் விஞ்ஞானம் என மனித மனது தொடர்பான எந்தத் துறையாக இருந்தாலும் அவை பற்றி ஆழமான புரிதல் கிடைக்க, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தியாவுக்குச் சென்றாகவேண்டும். . ஏனென்றால் அந்த ஆய்வுகள் தொடர்பான அதி முக்கியமான அம்சங்கள், நூல்கள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன. இந்தியாவில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #3 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 3 appeared first on கிழக்கு டுடே.

  •  

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #2 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 2

நான் கிரேக்க இலக்கியம்போலவே சம்ஸ்கிருந்த இலக்கியமும் சிறந்தது என்று ஒப்பிட்டு நிறுவப்போவதில்லை. எதற்காக இவை இரண்டையும் ஒப்பிடவேண்டும்? கிரேக்க இலக்கியம் படிப்பதென்றால் அதற்கென்று தனியான காரணம் இருக்கிறது. சமஸ்கிருத இலக்கியம் படிப்பதென்றால் அதற்கென தனி நியாயம் இருக்கிறது.

சமஸ்கிருத இலக்கியத்தைச் சரியான வகையில் படித்தால் அதில் கிரேக்க இலக்கியம்கூட கற்றுத் தரமுடியாத அளவிலான மனித குலம் பற்றிய விஷயங்களும் பாடங்களும் நிறைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதை நான் புரிந்துகொண்டும் இருக்கிறேன். உங்களுக்குப் புரியவைக்கவும் விரும்புகிறேன். இந்திய குடிமைப் பணியாளர்கள் தமது ஓய்வு நேரத்தை மட்டுமல்ல; அதற்கும் மேலான தருணங்களிலும் படிக்க அதில் ஏராள விஷயங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் 25 ஆண்டுகள் வேலை பார்த்தாக வேண்டியிருக்கும் ஒருவருக்கு இந்தியர்களிடமிருந்து அந்நியராகத் தன்னை உணராமல் இருக்கவும் சக பணியாளராக நெருக்கமாக உணரப்படவும் அது பெருமளவுக்கு உதவும். அதைக் கற்றுக் கொள்வதால் நிறைய பலன்கள் கிடைக்கும். எந்தவொரு வேலையையும் விருப்பத்துடன் செய்தாலே பலன் கிடைக்கும்.. இல்லையென்றால் இத்தாலியிலா கிரேக்கத்திலா எகிப்தில் பிரமிடுகளிடையேவா பாபிலோனின் அரண்மனைத் தோட்டங்களிலா எங்கு பணி புரிந்தாலும் மனம் ஒப்பிச் செய்யாவிட்டால் அது வீணாகவே முடியும்.

இந்தியா என்னவெல்லாம் (உலகுக்கு) கற்றுத் தரமுடியும் என்று இந்தத் தொடர் விரிவுரைகளுக்கு நான் ஏன் தலைப்பு வைத்தேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியா நம்மிடமிருந்து (ஐரோப்பியரிடமிருந்து) நிறைய கற்றுக் கொள்ளவேண்டியிருப்பது உண்மைதான்… ஆனால் இந்தியாவிடமிருந்து நாமும் பல விஷயங்களை, குறிப்பாக பல முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

இயற்கை இந்த உலகில் தன் முழு செல்வமும் முழு பலமும் முழு அழகும் தந்து சொர்க்கமாக ஆக்கியிருக்கும் ஓர் இடத்தைக் காட்டு என்று என்னிடம் கேட்டால் என் கைகள் இந்தியாவையே சுட்டிக் காட்டும்.

மனித மனம் இந்தப் பரந்து விரிந்த வானத்துக்குக் கீழே எந்த தேசத்தில் அதி மகத்தான விஷயங்களை உருவாக்கியிருக்கிறது என்று கேட்டால் என் பதில் அது இந்தியா என்பதே. உயிர் வாழ்க்கையின் ஆகக் கடுமையான சிக்கல்களை அதி ஆழமாக சிந்தித்த தேசம் எது என்று கேட்டால் என் பதில் அது இந்தியா என்பதே.

பிளேட்டோவையும் காண்டையும் கற்றறிந்தவர்கள்கூட கவனம் கொடுத்துக் கேட்கவேண்டிய தீர்வுகளைச் சொன்ன தேசம் எது என்று கேட்டால் என் கைவிரல்கள் இந்தியாவையே சுட்டிக் காட்டும்.

கிரேக்கர்கள், ரோமானியர்கள், யூதர்கள் ஆகியோரின் சிந்தனைகளால் மட்டுமே அதி சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் ஐரோப்பியரான நம்முடைய அக உலக வாழ்க்கையை மேலும் முழுமையடைவும் மேலும் விரிவாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால் முழு மனிதத்துவம் நிறைந்த வாழ்க்கையாக ஆக்கவேண்டுமா… இந்த வாழ்க்கை மட்டுமல்ல… முழுவதுமாக மாறிய நித்திய ஜீவனை வாழ வேண்டுமென்றால் எந்த தேசத்தை நோக்கித் திரும்பவேண்டும் என்று என்னிடம் கேட்டால் என் கைகள் இந்தியாவையே சுட்டிக் காட்டும்.

நான் இப்படிச் சொல்வதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியமடைவீர்கள் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக கல்கத்தா, பம்பாய் அல்லது மதராஸில் அதிக காலத்தைக் கழித்தவர்கள் அங்கு சந்தித்த மனிதர்கள் சந்தைக் கடையானாலும் நீதிமன்றங்களானாலும் பூர்விக சமூதாயத்தினரானாலும் அங்கெல்லாம் இருப்பவர்கள் நமக்கு ஏதேனும் கற்றுத் தரமுடியுமா என்ன என்று அதிர்ச்சியில் உறைந்துபோவார்கள்.

ஆரியவர்த்தத்தில் கால் பதித்திராதவர்களைவிட குடிமைப் பணியாளர்களாக, அதிகாரிகளாக, மிஷனரிகளாக, வணிகர்களாக இந்தியாவில் பல காலம் வாழ்ந்த என் அருமை நண்பர்களுக்கு அந்த தேசம் பற்றி மிக அதிக அளவுக்குத் தெரிந்திருக்கும். எனவே நான் முதலில் அவர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக விளக்கிவிட விரும்புகிறேன். ஆயிரம், இரண்டாயிரம் ஒருவேளை மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவைப் பற்றியே நான் பேசுகிறேன். அவர்களோ இன்றைய இந்தியாவைப் பற்றிச் சொல்கிறார்கள். அதிலும் கூட அவர்கள் கல்கத்தா, பம்பாய், அல்லது மதராஸ் போன்ற நகரங்களைப் பற்றியே பேசுகிறார்கள். நானோ கிராமப்புற சமுதாயங்களை அதாவது உண்மையான இந்தியர்கள் வாழும் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறேன்.

நான் இந்திய குடிமைப் பணியாளர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஏன் மூவாயிரம் ஆண்டு பழமையான இந்தியாவைப் பற்றிமட்டுமல்ல; இன்றைய இந்தியாவையும் பற்றிய ஒரு சித்திரத்தையே உருவாக்கிக் காட்ட விரும்புகிறேன். இன்றைய இந்தியாவோ 19-ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் இருக்கும் நம்மைக்கூடக் கவலை கொள்ளவைக்கும்படியான பிரச்னைகளுடன் இருந்துவருகிறது.

இங்கிலாந்தில் உங்களுக்கு விசேஷ விருப்பங்கள் ஏதேனும் இருந்தால் இந்தியாவில் அவற்றை நீங்கள் பெரிய அளவில் பூர்த்திசெய்துகொள்ளமுடியும். பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து மாபெரும் தேடல்கள், தீர்வுகள், பிரச்னைகள் ஆகியவற்றைத் தீர்க்க விரும்பும் மாபெரும் சிந்தனையாளர்கள், நிபுணர்கள், பணியாளர்கள் இந்தியாவில் சென்று வசித்தால் அறிவார்ந்த விஷயங்களிலிருந்து அந்நியப்பட்டுப் போய்விடுவோமோ என்றெல்லாம் அஞ்சத் தேவையே இல்லை.

நீங்கள் ஒரு விலங்கியலாளரா… ஒளி மிகுந்ததோர் லட்சிய தொழில் வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா… இந்தியா உங்களை இனிதே வரவேற்கிறது. ஹெக்கலை நினைத்துப் பாருங்கள். அவர் இப்போது இந்தியக் காடுகளில் கடல்களில் புகுந்து புறப்பட்டு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அவருடைய மகத்தான கனவுகள், தேடல்கள் எல்லாம் அங்கு பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் புவியியலாளரா… இமய மலை தொடங்கி இலங்கை வரை உங்களுக்காக எண்ணற்ற பொக்கிஷங்களுடன் காத்திருக்கிறது.

நீங்கள் தாவரவியலாளரா… எல்லையற்ற தாவர உலகம் உங்களுக்காக அங்கு ஏக்கத்துடன் காத்திருக்கிறது.

நீங்கள் இனவரைவியலாளரா… இந்தியாவில் இனவரைவியல் அருங்காட்சியகம் ஒன்று, உயிருடன் உங்கள் கண் முன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்டவரா… இங்கிலாந்தில் ஏதேனும் சிறு மணல் மேட்டை அகழ்ந்தாராய உதவி செய்திருக்கிறீர்களா… ஏதேனும் தொன்மைக்கால எலும்புத்துண்டு, பழங்கால சிறு கத்தி, அல்லது சிக்கி முக்கிக் கல் போன்றவற்றை மணல் குவியலிலிருந்து கண்டெடுப்பதில் கிடைக்கும் சுகத்தை அனுபவித்திருக்கிறீர்களா… ஜெனரல் கன்னிங்ஹாமின் இந்திய அகழ்வாராய்ச்சி ஆண்டு அறிக்கைகளைப் படித்துப் பார்க்க மட்டுமே செய்திருக்கிறீர்களா… நீங்களே ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு இந்திய பெளத்த மன்னர்கள் கட்டிய பழங்கால விஹாரைகள், பல்கலைக்கழகங்களைத் தோண்டி எடுத்து உலகின் பார்வைக்குக் கொண்டுவரும் ஆர்வத்தை இந்தியாவுக்குச் சென்றால் உங்களால் தள்ளிப் போடவே முடியாது.

பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவரா… பாரசீக, கேரிய, திரேசிய, பார்த்திய, கிரேக்க, மேசிடோனிய, சித்திய, ரோமானிய, மொஹமதிய உலகின் அத்தனை பழங்கால நாணயங்களையும் ஒரே இடத்தில் கண்டெக்க வேண்டுமா… இந்தியாவுக்குச் செல்லுங்கள். பிளினி தனது காலத்தில் இந்தியாவில் இருந்து கிடைத்த விலைமதிப்பு மிக்க பொருட்களுக்காக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தொகை ஐநூற்று ஐம்பது மில்லியன் செஸ்டர்டியர் நாணயங்கள் அளவுக்கு இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் (தொகுதி ஆறு: 26). மேலும் பார்க்க ஈ.தாமஸ், தி இந்தியன் பலாரா பக் 13.

வாரன் ஹேஸ்டிங்கஸ் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது ஒரு மண் பானையை காசி நகர் கங்கை நதிக்கரையோரம் கண்டெடுத்தார். அதில் 172 தங்க தாரிக்ஸ் பாரசீக நாணயங்கள் இருந்தன. வாரன்ஹேஸ்டிங் தன் லண்டன் எஜமானர்களுக்கு ஆகப் பெரிய பரிசாக இந்த அரிய நாணயக் குவியலை அனுப்பினார். அவர்கள் அதை அவர் இங்கிலாந்துக்கு வந்து சேர்வதற்குள் உருக்கி விட்டனர். நீங்கள் அப்படியான நாசவேலைகளைத் தடுக்க முடியும்.

ஆசியாட்டிக் ஜர்னல் ஆஃப் பெங்கால் பத்திரிகையின் சமீபத்திய இதழில் மைசீனிய பகுதிகளில் டாக்டர் ஷெலிமன் தோண்டி எடுத்தது போன்ற புதையல் பற்றி எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மைசீனிய கல்லறைகளில் கிடைத்தவற்றுக்கும் வங்காளத்தில் கிடைத்தவற்றுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லவும் முடியாது. இருந்தும் இங்கிலாந்தில் இந்த இந்தியப் புதையல் பற்றி எந்த அக்கறையும் காணப்படவே இல்லை.

வெகு பழங்கால இந்திய வேத புராணவியல் என்பது புராணவியல் ஆய்வுகளில் மாபெரும் ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது. புராணவியல் தொடர்பான தெளிவான ஆய்வுப்புல அஸ்திவாரம் இப்போது போடப்பட்டுவிட்டிருக்கிறது. எனினும் இன்னும் நுட்பமான பல விஷயங்கள் வடிவமைக்கப்படவேண்டியிருக்கிறது. இந்தியாவைத் தவிர (இந்தியப் புராணங்களின் ஆய்வுகளைத் தவிர) வேறு எங்கு அந்தப் பணியைத் திறம்படச் செய்துமுடிக்க முடியும்..

நீதிக்கதைகள்/தேவதைக் கதைகளின் மூலத்தைத் தேடிச் சென்றால் கிழக்கிலிருந்து அவை மேற்குக்குப் பயணமான பாதை புரியவரும். பௌத்தமே நமது நீதிக்கதைகள், மரபு வழிக் கதைகள் ஆகியவற்றின் மூலாதாரமாகத் திகழ்கிறது. ஆனால், இந்த விஷயத்திலும் பல விடை தெரியாத கேள்விகள் நீடிக்கவே செய்கின்றன.

உதாரணமாக பிளேட்டோவின் க்ரேடிலஸ் படைப்பில் இடம்பெறும் சிங்கத் தோல் போர்த்திய கழுதை என்ற நீதிக் கதையை எடுத்துக் கொள்வோம். அது கீழை நாடுகளிலிருந்து இரவலாகப் பெறப்பட்டதா? மர நாய் ஒன்று பெண்ணாக அஃபோரோடைட்டினால் மாற்றப்பட்ட கதையை எடுத்துக் கொள்வோம். ஒரு எலியைப் பார்த்ததும் அவள் பாய்ந்து அதைப் பிடிக்கவும் செய்கிறாள். இதுவும் ஒரு சமஸ்கிருத நீதிக் கதை போலவே இருக்கிறது. ஆனால் கி.மு.400 வாக்கிலேயே எழுதப்பட்ட கிரேக்க ஸ்ட்ராட்டிஸ் போன்ற ஆதிகாலப் படைப்பில் இது எப்படி இடம்பெற்றிருக்கமுடியும்? இந்த இடத்திலும் நாம் நிறைய ஆராய்ந்து பார்க்கவேண்டியிருக்கிறது.

நாம் இன்னும் பழம் பெரும் காலத்துக்கு ஆய்வுகளைப் பின்னோக்கிக் கொண்டு சென்றால் இந்தியாவில் உள்ள நீதிக் கதைகளுக்கும் மேற்குலக மரபு வழிக் கதைகளுக்கும் இடையில் மிகுந்த விசித்திரமான ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்கமுடியும். கிழக்கிலிருந்து மேற்குக்கு வந்தனவா… மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றனவா என்பதை இன்னும் நம்மால் உறுதி செய்யமுடியவில்லை.

ஆனால், சாலமனின் காலத்தில் இந்தியாவுக்கும் சிரியாவுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்புகள் இருந்திருப்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது.

பைபிளில் ஓபிர் பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. அதுபோல் அதில் இடம்பெற்றிருக்கும் தந்தங்கள், குரங்குகள், மயில், சந்தனக் கட்டைகள் போன்றவை இந்தியா அல்லாமல் வேறெங்கிருந்து வந்திருக்க முடியும்?

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #2 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 2 appeared first on கிழக்கு டுடே.

  •