Reading view

தலை துண்டிக்கப்பட்ட கோழி

      – ஹொரேஷியோ குய்ரோகா ( உருகுவே)

மாஸினி பெராஸ் குடும்பத்தின் மூளை வளர்ச்சி குன்றிய நான்கு பையன்களும் உள்முற்றத்தில் அடைந்து கிடந்த பெஞ்சிலேயே நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அவர்களின் நாக்குகள் எப்போதும் உதடுகளுக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கும். கண்கள் கலங்கியும் தலையைத் திருப்பும்போது வாய்கள் பிளந்து கொண்டும் இருக்கும்.

    மண்தரை,  மேற்புறம் செங்கற் சுவரால் மூடப்பட்டு இருந்தது அந்த உள் முற்றம். சுவருக்கு இணையாக  ஐந்து அடி தள்ளி இருந்த அந்தப் பெஞ்சில்தான் நான்கு பேரும் அமர்ந்து சலனம் இல்லாமல் சுவரையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சுவருக்குப் பின்னால் சூரியன் மறைந்த பிறகு அவர்களுக்கு உற்சாகமாகிவிடும். மங்கிய விளக்கு ஒன்றுதான் அவர்களின் கவனத்தை முதலில் ஈர்க்கக் கூடியது. அப்போது அவர்களின் கண்களில் மெலிதாக ஓர் ஒளி தோன்றும்‌. இறுதியில் எல்லாரும் சேர்ந்து பெருங்குரலுடன் உரத்துச் சிரிப்பார்கள். நால்வருக்கும் உவகை தொற்றிக் கொள்ளும். உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் அப்போது ஓர் உணவுப் பண்டமாக தோன்றும் அவர்களுக்கு.

    சில நேரங்களில் பெஞ்சில் வரிசையாக அமர்ந்து கொண்டு மணிக் கணக்கில் தள்ளு வண்டியின் ஓசையை நகலாக்கி முணுமுணுத்துக் கொண்டு இருப்பார்கள். பிறகு சத்தத்தை உயர்த்திக்கொண்டே நாக்கைக் கடித்துக் கொண்டும் பூனைக் குரலெடுத்தும் முற்றத்தைச் சுற்றி சுற்றிச் சுற்றி ஓடுவார்கள். ஆயினும் முட்டாள்களுக்கே உரிய மந்தத்தன்மை மேலிட அந்த நாளின் மீதத்தைப் பெஞ்சில் அமர்ந்தே கழிப்பார்கள். கால்கள் அசையாமல் இருக்கும்.கோழை வழிந்து கால் சட்டைகளையும் நனைக்கும்.

     மூத்தவனின் வயது 12. இளையவனுக்கு 8.  அழுக்கும் அருவருப்பும் கொண்ட அவர்களின் தோற்றமே அவர்களது தாயின் அலட்சியத்திற்குச் சான்று தருவதாக இருக்கும்.

     ஆனாலும் ஒரு காலத்தில் பெற்றோருக்கு அவர்கள் மகிழ்வைத் தந்தவர்கள் தான். மாஸினி – பெர்த்தா தம்பதிக்கு ஆண் பெண் மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான தன்னலம் மேலிடும் எதிர்பார்ப்பு ஒன்றும் இருந்தது : மகன்.

நோக்கம் எதுவும் இல்லாத, இழிந்த தன்னலத்தில் இருந்து விடுபட்ட பாசத்தை விட அன்பு கொண்ட இருவருக்குப் பெரும் மகிழ்ச்சியை எது தந்துவிடும். காதலை விடத் தீதானது எது.? அதிலும் புதுப்பிக்க வாய்ப்பு இல்லாத காதலை விட..?

     பதினான்கு மாதங்களில் மகன் வந்தடைந்தான். மகிழ்ச்சியின் எல்லையை அடைந்ததாக அவர்கள் நினைத்தார்கள். ஒன்றரை ஆண்டுகளில் அழகும் வளமும் பெற்று விளங்கியது குழந்தை. ஆனால் இருபதாவது மாதத்தின் இரவொன்றில் பயங்கரமான நடுக்கத்துடன் அதன் உடல் சீர்குலைந்தது. காலையில் தனது பெற்றோரைக் கூட அதனால் அடையாளம் காண இயலவில்லை. டாக்டர் தனது மருத்துவ அறிவைக் கொண்டு, பெற்றோரின் உடல் வலிமையில் உள்ள சமநிலைக் குலைவு காரணமாய் இருக்கலாம் எனக் கண்டு கொண்டார்.

     சில நாட்களில், சூம்பிக் கிடந்த பையனின் கைகள் இயல்புக்குத் திரும்பின. ஆனால் அந்தக் குழந்தையின் அறிவுத்திறன், ஆன்மநலம், அகத் தூண்டுதல் எல்லாம் நிரந்தரமாகக் காணாமல் போனது. அவன் எப்போதும் தனது தாயின் மடியில் கிடந்தான். பிதற்றிக் கொண்டிருந்தான். நொண்டி நடந்தான். குணமாகும் எல்லா வாய்ப்புகளும் வீணாயின.

     ‘என் மகனே.. என் அன்புச் செல்வமே..’ என்று தனது முதல் குழந்தையின் பரிதாப நிலை குறித்துத் தேம்பிக் கொண்டிருந்தாள் அவனது தாய்.

     வெளியே தனித்திருந்த தகப்பனிடம் மருத்துவர் சொன்னார் : ‘உங்களுக்கு மட்டுமே நான் சொல்ல முடியும். இதைக் குணப்படுத்துவது சிரமம். குழந்தையின் அறிவு மட்டும் உதவினால் கொஞ்சம் முயன்று பார்க்கலாம். அவ்வளவுதான்.’

     ‘சரி. சரி.. ‘ மாஸினி இணங்கினான். ‘எனக்கு ஒன்றைத் தெளிவு படுத்துங்கள்.  இது பரம்பரை வியாதியா.. அல்லது..?’

     ‘இது பற்றி உங்கள் குழந்தையைப் பார்த்த போது நான் நினைத்ததை உங்களிடம் கூறி விட்டேன். தந்தை வழியில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ‌தாயைப் பொறுத்தவரை அவளது நுரையீரலில் இருந்து ஒலி சீராக வெளிப்படுவதில்லை. வேறொன்றுமில்லை. ஆனால் அவளின் சுவாசம் ஏறுக்கு மாறாக இருக்கிறது. அதையும் சரியாகப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.’

     மன உறுத்தல் தந்த தொந்தரவால் மாஸினி தன் மகன் மீதான பாசத்தைப் பெருக்கிக் கொண்டான். அந்த மூடக்குழந்தை தனது மூத்தோரின் அறிவுத் திறனைத் திருப்பித் தந்து விடுகிறது. அதே நேரம் மனைவி பெர்த்தாவின் இளம் தாய்மையின் தோல்வி குறித்து ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் அவன் இருந்தான்.

     இயல்புக்கு ஏற்றவாறே, தமது அடுத்த குழந்தை மீதான எல்லா நம்பிக்கைகளையும் திரட்டி வைத்துக் கொண்டனர் அந்தத் தம்பதியினர். இன்னொரு மகன் பிறந்தான். அவனது மழலைச் சிரிப்பும் ஆரோக்கியமும் அவர்களது துயரைத் துடைத்து மகிழ்ச்சியை மீளக் கொண்டு வந்தது.  ஆனால் 18 மாதங்களில் முதல் குழந்தையின் நிலையே திரும்பியது. தொடர்ந்து விடிந்த காலையில் அதுவும் முட்டாளாகவே விழித்தது.

     பெற்றோர் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களின் இரத்தம், அன்பு எல்லாம் பழிக்கு ஆளானதே. குறிப்பாக அவர்களின் காதல்..! அவனுக்கு வயது இருபத்தெட்டு. அவளுக்கு இருபத்திரண்டு. இளமையும் பேரார்வமும் இயல்பான வாழ்வுக்குரிய ஓர் உயிர் அணுவை உற்பத்தி செய்ய முடியவில்லையே. அழகோ அறிவோ கொண்டிருந்தாக வேண்டுமென்று தமது முதல் மகனையே நினைக்கவில்லையே. இப்போதோ அதைப்போலவே இன்னொன்று.

இரண்டாவது பேரிழப்புக்குப் பின்னர் அவர்களின் காதல் இன்னும் ஒரு பைத்தியக்காரத்தனத்தை மீளக்கொணர்ந்தது. தம் இளமை மீதான புனிதமான நம்பிக்கை அது. அதன் பயனாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.‌ ஆனால் முந்தைய பிள்ளைகளுக்கு நேர்ந்த கதிதான் அவற்றிற்கும்.

     தொடர்ந்த தோல்விகள் தந்த கசப்பினால் பெற்றோரின் இரக்க சிந்தை மீண்டது. நான்கு பிள்ளைகளின் காவல் விலங்குக்குரிய தன்மையைத் தம் உள்ளுணர்வால் எதிர்கொண்டனர். பையன்களால் உணவை விழுங்கத் தெரியாது. நகரவோ உட்காரவோ கூட முடியாது. இறுதியில் எழுந்து நடக்கத் தொடங்கினர். தம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் இருப்பதைத் தெரியாமல் அவற்றைத் தாக்கினர். குளிக்க வைக்கும் போது முகத்தைக் கழுவி விடும் வரை கோழையை உமிழ்ந்து கொண்டும், குரல் எழுப்பிக் கொண்டும் இருந்தனர். உணவோ, கண்ணைப் பறிக்கும் நிறமோ, இடிச் சத்தமோ மட்டுமே அவர்களை கிளர்வுறச் செய்தன. பிறகு அவர்கள் உரத்துச் சிரிப்பார்கள். ஏதோ கோளாறில் கொந்தளிப்பார்கள். நாக்கைத் துருத்திக் கொண்டு உமிழ்நீரைக் கடலாய்க் கொட்டுவார்கள். அதே நேரம் சிலவற்றைப் போலச் செய்யும் திறமையையும் அவர்கள் ஈட்டிக் கொண்டனர். அதைத்தவிர வேறொன்றுமில்லை.

     மரபு வழியிலான அச்சுறுத்தல் எல்லாம் அந்த இரட்டையரோடு முடிந்துவிட்டது என எண்ணினர். ஆனால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தணிக்க அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே இன்னொரு குழந்தையைப் பெற விருப்பம் வந்து விட்டது அவர்களுக்கு.

     நம்பிக்கைகள் திருப்தி தரவில்லை. அதன் காரணமாக நிராசையும் எரிச்சலும் தோன்றி கணவன் மனைவிக்குள் தீராக் கசப்பை ஏற்படுத்தி விட்டது. அதற்குள் தமது குழந்தைகளின் அப்போதைய நிலைமைக்கான பொறுப்பை யார் பகிர்ந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்து விட்டது. தாம் பெற்றுவிட்ட நான்கு விலங்குகளுக்கும் செய்ய வேண்டிய பரிகாரம் ஏதுமில்லை எனத் தெரிந்தவுடன் ஒருவருக்கொருவர் பழி சுமத்தத் தொடங்கிவிட்டனர்.

     அந்த மாற்றம் இப்படித் தொடங்கியது : ‘உனது பிள்ளைகள்..’ அதனாலேயே தம்மில் ஒருவரை விழ வைத்தும் பழிதூற்றியும் குற்றம் சுமத்திக் கொண்டனர்.

     ‘எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்..’

  அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த மாஸினி கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டு பெர்த்தாவிடம் சொன்னான் ‘நீ குழந்தைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..’

     அவன் சொன்னதைக் கேட்காமல், எதையோ படித்துக் கொண்டிருந்தாள் அவள்.

     ‘இதுதான் முதல் தடவை..’  சிறு மௌனத்திற்குப் பிறகு சொன்னாள் ‘நீ உன் பிள்ளைகள் நிலை பற்றிய அக்கறையைச் சொல்கிறாய்.’

     தலையை அவன் பக்கம் திருப்பி, வலிந்து வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் மாஸினி சொன்னான் : ‘நம்முடைய பிள்ளைகள் என்று நினைக்கிறேன்..’

     ‘சரிதான். அவை நமது பிள்ளைகள் தான். இதைச் சொல்லத்தான் நீ விரும்புகிறாயா?.’ கண்களை உயர்த்திக் கொண்டே கேட்டாள்  அவள்.

     மாஸினி தெளிவாகச் சொன்னான் : ‘நிச்சயமாக நான் தான் இதற்குக் காரணம் என்று நீ சொல்ல மாட்டாய் இல்லையா.?’

     வெளுத்த புன்னகையுடன் ‘இல்லை.. ஆனால் நானும் இல்லை என்று தான் நினைக்கிறேன். அது தான் எனக்குத் தேவை’ என்று முணுமுணுத்தாள் பெர்த்தா.

     ‘என்னது. என்ன தேவை உனக்கு..?’

      ‘குற்றத்தை என் மீது மட்டும் சுமத்த முடியாது என்பதை நினைத்துப் பாருங்கள். அதைத்தான் சொன்னேன்.’

     ஒரு கணம் அவளைப்  பார்த்தான். காயப்படுத்தும் விருப்பம் கூட தோன்றியது.

     ‘சரி. விட்டுவிடலாம்..’ இறுதியாகச் சொல்லிவிட்டுக் கைகளைத் துடைத்துக் கொண்டான்.

    ‘உன் விருப்பப்படியே. ஆனால் நீ சொல்வது..?’

    ‘பெர்த்தா..’

    ‘உன் விருப்பம் தான்..’ இதுதான் அவர்களின் முதல் மோதல். பிறகு அதைத் தொடர்ந்து கொண்டார்கள். தவிர்க்க முடியாத சமரசத் தீர்வை நோக்கி அவர்கள் திரும்பும் போது இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆர்வம் இருவருக்கும் ஏற்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வருடத் துயர்மிகு நாட்களுக்குப்பிறகு இன்னொரு பேரிடருக்கு அவர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை. நன்றாகவே பிறந்தது குழந்தை. தமது ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் புதிய மகளின் மீது செலுத்தினர். அவர்களின் தொல்லையைச் சாதகமாக எடுத்துக்கொண்டு அது மோசமாக நடந்து கொள்ளத் தொடங்கியது. அதன் பிறகான ஆண்டுகளிலும் தனது நான்கு பையன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆயினும் பெர்டிடா (மகள்) பிறந்தபின் அது குறையத் தொடங்கியது என்றானது. அவர்களைப் பற்றிய நினைவே அவளை அச்சமடையச் செய்தது. கட்டாயமாகச் செய்ய வேண்டிய சில காரியங்கள் கொடுங்கனவாய் ஆயின. மாஸினிக்கும் இதே நிலைதான். ஆனால் சிறிய அளவில்.

     இருவர் மனதிலும் நிம்மதி இல்லை. மகளின் முரண்டு, பிடிவாதம் இப்போது கட்டவிழும் நிலைக்கு வந்துவிட்டது. அவளை இழந்து விடுவோம் என என்று நினைவே அவர்களுக்குப் பயங்கரத்தைத் தந்தது.  திடமற்ற தமது மரபுக் கோளாறு ஏற்படுத்திய கசப்பு அவர்களைச் சுட்டது. மகளின் குடற்கொடி வீங்கியும், பித்தநீர் அதிகமாகத் தேங்கியும் காணப் பட்டது. மெதுவாக தொட்டாலே அது நஞ்சு போல் வழிந்து சிதறியது.

     அன்றைக்குத் தோன்றிய மோசமான கருத்து வேறுபாடு ஒருவரை ஒருவர் அவமதித்துக்கொள்ளும் நிலைக்குப் போனது. இதயங்களைக் குரூரத்தால் நிறைத்துத் துன்புறுத்திக் கொண்டனர். அதன் முன்னர் தமது தோல்விகளால் கட்டுண்டு கிடந்தவர்களிடம் குடிகொண்டு இருந்த தனிக் குணம் வெற்றிகரமாக வெளிவந்துவிட்டது. இயல்பு பிசகிப் பிறந்த நான்கு பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு வெறுப்பை உருவாக்கி அடுத்தவரைத் துன்புறுத்தியது.

     இந்த உணர்வினாலேயே அந்த நான்கு பையன்கள் மீதும் அவர்களுக்குப் பாசம் தோன்றும் வாய்ப்பு ஏற்படவில்லை. வேலைக்காரிதான் அவர்களைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, உணவு ஊட்டி, உறங்கச் செய்தாள். எல்லா முரட்டுத்தனங்களையும் சகித்துக் கொண்டு தாய் அவர்களை ஒருநாளும் குளிப்பாட்டியது இல்லை. ஒரு நாளின் பெரும் பகுதியை அவர்கள் சுவர்களைப் பார்த்தே கழித்தார்கள். பெற்றோரின் அன்பும் சீராட்டும் அறவே கிட்டவில்லை அவர்களுக்கு.

     மகள் பெர்டிடாவுக்கு நான்காவது பிறந்தநாள். அவளுக்குக் கொடுத்த  ஏராளமான இனிப்பு வகைகளை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவற்றை உண்ட மகள் குளிர் காய்ச்சலால் அவதிப்பட்டாள். குழந்தை இறந்து விடுவாளோ அல்லது அவளின் நான்கு சகோதரர்களைப் போல புத்தி பேதலித்துத் திரிவாளோ என்ற அச்சம் தோன்றிக் கவலையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு

     மூன்று மணி நேரமாக அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. பிறகு மாஸினியின் வழக்கமான அவசரமே ஓர் உரையாடலுக்கு உந்திச் செலுத்தியது.

     ‘ஓ.. கடவுளே. இதைவிட உன்னால் மெதுவாகக் கால் வைத்து நடக்க முடியாதா..?  எத்தனை தடவை உனக்கு..?

      ‘சரி.  மறந்து விட்டேன். திருத்திக் கொள்கிறேன். வேண்டுமென்றே நான் அதைச் செய்யவில்லை’

       ஏளனமாகப் புன்னகைத்தாள்.

      ‘இல்லை. இல்லை.. நானும் உன்னை நினைத்துச் சொல்லவில்லை..’ என்றாள்.

       ‘உன்னைப்போல நானும் அதை நம்ப மாட்டேன். உனக்கு அழிவு காத்திருக்கிறது..’

    ‘என்ன.. என்ன சொன்னாய்..?

     ‘ஒன்றுமில்லை..’

      ‘அப்படியா..?  எதையோ நீ சொல்வதை நான் கேட்டேன். அது என்ன என்பது எனக்குத் தெரியாது. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். உனக்குப் போலவே இன்னொரு தந்தையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.’

     வெளிறிப் போனான் மாஸினி.

     ‘கடைசியாக..’ பற்களை இறுகக் கடித்துக் கொண்டே சொன்னான். கடைசியில் நீ ஒரு வஞ்சகியாகி விட்டாய். செய்ய விரும்புவதை நீயே சொல்லிவிட்டாய்..’

     ‘ஆம். நான் வஞ்சகிதான். ஆனால் எனக்கு ஆரோக்கியமான பெற்றோர் இருக்கிறார்கள். என்ன கேட்கிறதா.. ஆரோக்கியமான பெற்றோர். என் தந்தை பைத்தியமாகிச் சாகவில்லை. மற்றவர்களைப் போலவே எத்தனையோ பிள்ளைகளை நான் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். இதோ இவர்கள் எல்லாம் உன்னுடைய பிள்ளைகள். அதாவது அந்த நான்கு பேர்.’

     திரும்பிப் பார்த்து வெடித்தான் மாஸினி. ‘பேரழிவுக்குரியவளே. இப்படித்தான் உன்னை அழைக்க நினைத்தேன். அதையே சொல்கிறேன். நீ போய் மருத்துவரைக் கேள் – நான்கு பையன்கள் இப்படி இருக்க யார் காரணம் என்று. மூளைக் கோளாறு யாருக்கு..? என் தந்தைக்கா அல்லது உன் அழுகிப்போன நுரையீரலுக்கா..? சொல் பார்ப்போம்.’

     வன் சொற்கள் உயர்ந்தன. பெட்ரிடா விடமிருந்து வெளிப்பட்ட ஒரு முனகல் ஒலி அவர்களின் வாயை அடைத்தது. அதிகாலையில் மகளின் அஜீரணக் கோளாறு சரியாகிவிட்டது. புதிதாக மணமான தம்பதிகளுக்கு இதுபோன்ற சண்டை சச்சரவுகளும் சமாதானமும் தவிர்க்க இயலாதே, அதைப்போல.

     ஆரவாரமான நாள் ஒன்று விடிந்தது. பெர்த்தா படுக்கையில் இருந்து எழுந்த போதே இரத்த வாந்தி எடுத்தாள். அவளது உணர்ச்சிப் போக்கும், பயங்கரமான முந்தைய இரவும் தான் சந்தேகத்துக்கு இடமில்லாத காரணம். மாஸினி அவளை நெடுநேரம் தழுவி அணைத்துக் கொண்டான். அவள் தேம்பிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

     பத்து மணிக்கு, மதிய உணவுக்கும் பிறகு வெளியே சென்று வர முடிவு செய்தார்கள். ஒரு கோழியை அடித்துச் சமைக்கவும் வேலைக்காரிக்கு உத்தரவிட்டனர்.

     அந்த ஒளி மிகுந்த நாள் நான்கு பையன்களையும் ஒருசேர பெஞ்சுக்கு வரவழைத்துவிட்டது. சமையலறையில் வேலைக்காரி கோழியின் கழுத்தை வெட்டும்போது இரத்தம் சிறிதளவே வெளியேறச் செய்து கொண்டிருந்தாள். ( இது பெர்த்தா தனது அம்மாவிடம் கற்றுக் கொண்டது. பயனுள்ள வழிமுறை. கறி வாடாமலே இருக்கும் ). வேலைக்காரி தனக்குப் பின்னால் ஏதோ மூச்சு விடுகிற ஒலியைப் போல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அந்த நான்கு பையன்களும் தோள் மீது தோள் வைத்துச் சாய்ந்து வியப்புக்குரிய அந்த செயலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிவப்பு.. சிவப்பு நிறம்..

      ‘அம்மையீர். பையன்கள் இங்கே சமையலறைக்குள் வந்து விட்டார்கள்.’

       உடனடியாக அங்கே வந்தாள் பெர்த்தா. உணவுத் தயாரிப்பை அவர்கள் பார்ப்பதை அவள் விரும்புவதில்லை. மறதி, மன்னிப்பு, மற்றும் மகிழ்ச்சியை மீட்க எனத் தொடர்ந்த அந்தச் சில மணி நேரத்தில் இதுபோன்ற பயங்கரக் காட்சியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இயல்பாகவே கணவன், மகள் மீதான அன்பின் உச்சம், அந்த நான்கு ராட்சசர்களின் மீதான வெறுப்பு ஆகியவை இதற்குக் காரணம்.

     ‘அவர்களை வெளியே அனுப்பு மரியா.. துரத்தி விடு..’

      நெருக்கிக் கொண்டும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் போய்த் தமது பெஞ்சில் அமர்ந்தனர். விலங்குகள் போன்ற அந்த நான்கு பேரும்.

     மதிய உணவுக்குப் பிறகு அனைவரும் வெளியே சென்று விட்டார்கள். வேலைக்காரி பியூனஸ் அயர்சுக்குப் போயிருந்தாள். தம்பதியினரும் குழந்தையும் அண்மையில் இருந்த கிராமத்து வீடுகள் வழியாக நடந்து கொண்டிருந்தனர். சூரியன் மறையும் நேரம் திரும்பினர். எதிர்ப்படும் அயலாரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு வர பெர்த்தாவுக்கு விருப்பம். அவளது மகளோ வேகமாக ஓடி வீட்டிற்குப் போனாள்.

     இதற்கிடையில் அந்த நான்கு பையன்களும் நாள் முழுவதும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார்கள். சூரியன் இப்போது சுவர்களுக்கு அப்பால் மறையத் தொடங்கியது. வழக்கத்தை விடவும் நெடுநேரம் அவர்கள் சுவரையே தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களது பார்வைக் கோட்டிற்கும் சுவருக்கும் இடையில் ஏதோ ஒன்று வந்துவிட்டதைக் கண்டனர். அவர்களது சகோதரி. ஐந்து மணி நேரம் பெற்றோருடன் நடந்து சோர்ந்து போனவள் அந்த இடத்தையே சுற்றுமுற்றும் பார்ப்பது தெரிந்தது. சுவருக்குக் கீழ் நின்று கொண்டு யோசித்தவாறு அதன் உச்சியை பார்த்தாள் அவள். அதன் மேல் ஏறிவிட ஆசை தோன்றியது. இறுதியாக அங்கே கிடந்த ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு ஏற முயன்றாள். ஆனாலும் அதன் உச்சியை அவளால் அடைய முடியவில்லை. பிறகு ஒரு மண்ணெண்ணெய் டப்பாவை எடுத்து வந்து நாற்காலியின் மேல் செங்குத்தாக வைத்து ஏறினாள். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று விட்டாள்.

     நான்கு பையன்களும் தமது சகோதரி எப்படிப் பொறுமையாகக் காலூன்றி, சமநிலை குறையாமல் சுவர் மீது ஏறி, அதன் உச்சியில் கழுத்தைத் தனது சோர்ந்து கைகளால் தாங்கிக் கொண்டு நிற்கிறாள் என்பதைப் பார்த்தார்கள். அவள் கால் விரல்களை ஊன்றிக்கொண்டு இன்னும் மேலேற முயல்வதும் அவர்களுக்குத் தெரிந்தது.

     அவர்களின் வெறித்த பார்வைகள் கிளர்வு கொண்டன. அத்தனைக் கண்களும் பளிச்சிட்டன. முன்னே இருக்கும் சகோதரி ஒரு பேருணவாகத் தெரிந்தாள் அவர்களுக்கு. மெதுவாகச் சுவரை நெருங்கினர். அந்தச் சிறு பெண் சுவரின் மேல் இருபுறமும் கால்களை அகட்டிப் போட்டுக் கொண்டு இருந்தாள். எந்நேரமும் அடுத்த பக்கத்தில் அவளால் விழுந்து விட முடியும். ஆனால் ஒரு காலை யாரோ இழுத்துப் பிடிப்பதை உணர்ந்தாள். கீழே இருந்து உறுத்துப் பார்க்கும் எட்டுக்கண்களும் அவளைப் பயமுறுத்தின.

     ‘விடுங்கள்.. நான் போக வேண்டும்..’ கால்களை உதறிக் கொண்டு கதறினாள். ஆனால் ஒரு கணத்தில் முழுமையாக பிடிபட்டு விட்டாள்.

     ‘அம்மா..ஆ.. அம்மா..  அப்பா..’ உரக்கக் கத்தினாள். இன்னும் அவள் சுவரின் உச்சியைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் மெல்ல மெல்லப் பிடி விலகிக் கீழே இழுக்கப்பட்டுத் தரையில் விழுந்தாள்.

      ‘அம்மா.. ஓ. அம்..’ தொடர்ந்து குரல் எழுப்ப முடியவில்லை. அவர்களில் ஒருவன் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இறக்கை போல் இருந்த காது முடிச்சுருளை விலக்கி விட்டான்.  மற்ற மூவரும் அவளது ஒரு காலைப் பிடித்து இழுத்துக் கொண்டே சமையலறை நோக்கிப் போயினர். காலையில் அங்கு தான் ஒரு கோழி தன் இரத்தத்தைச் சிந்தியிருந்தது. இறுகப் பிடிக்கப்பட்ட அவளது உடலில் இருந்து உயிர் நொடிக்கு நொடி பிரிந்து கொண்டிருந்தது.

     திரும்பும் வழியில் மாஸினிக்குத் தன் மகளின் குரலை தூரத்திலிருந்து கேட்டது போல் தோன்றியது.

     ‘உன்னைக் கூப்பிடுகிறாள் என்று நினைக்கிறேன்..’ பெர்த்தாவிடம் சொன்னான்.

     கவனித்தார்கள். அசௌகரியமாக உணர்ந்தார்கள். குரல் ஏதும் கேட்கவில்லை. உடன் உரையாடிக் கொண்டிருந்தவர்களிடம் குட் பை சொல்லிவிட்டுத் தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டாள் பெர்த்தா. மாஸினி வேகமாக வீட்டுக்குள் போய் உள் முற்றத்தை அடைந்தான்.

     ‘பெர்டிடா..!’

     பதில் இல்லை.

     ‘பெர்டிடா..!’  குரலை உயர்த்திக் கூப்பிட்டான்.

     அந்த மௌனம் ஏதோ ஒரு கெட்ட நிமித்தமாக நெஞ்சில் நுழைந்து ஓடி முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தது.

     ‘மகளே. என் மகளே..!’ வெறிபிடித்தாற்போல் வீட்டின் பின்பக்கமாக ஓடினான். சமையலறையைக் கடக்கும் போது தரை முழுவதும் இரத்தம் கொட்டியிருப்பதைப் பார்த்தான்‌. பாதி மூடியிருந்த கதவை ஓங்கித் தள்ளினான். பயங்கரமான குரல் அவனிடமிருந்து எழுந்தது.

      ஏற்கனவே ஓடத் தொடங்கி விட்ட பெர்த்தா தனது கணவனின் அபயக் குரலை கேட்டுக் கதறிக்கொண்டே வீட்டில் நுழைந்தாள். சமையலறையை நெருங்கும் போது மரணத்தில் வெளிறிக் கொண்டிருந்த உடலுடன் மாஸினி வழியை மறித்துக் கொண்டு நின்றான். நெருங்கிய அவளைப் பின்னுக்கு இழுத்தபடியே ‘உள்ளே போகாதே. போகாதே..!’ என்று கூச்சலிட்டான்.

     இரத்தச் சகதி கொண்ட தரையைப் பார்த்தாள் பெர்த்தா. கம்மிய குரல் ஒன்று மட்டுமே அவளிடம் இருந்து வெளிப்பட்டது. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கணவன் மீது சாய்ந்தபடியே மெதுவாக தரையில் வீழ்ந்தாள்.

000

ஹொராசியோ சில்வஸ்தர் குயிரோகா போர்தஸா*

( 1978 – 1937 )

உருகுவேயில் பிறந்து அர்ஜென்டினாவிற்குக் குடி பெயர்ந்தவர்.

இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளுக்கேயுரிய பூடக, மாயத் தோற்ற வகை எழுத்துகளின் முன்னேர் இவர்.

முதல் புதினம் எழுதிய எட்கர் அலன் போ-வின் பாதிப்பில் தொடங்கி சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் எனப் பயணித்தவர்.

இயற்கை – மனித முரண் மீது தன் படைப்பு மனத்தைத் திருப்பியவர். அடர் வனங்களில் வாழ முயன்றவர்

திகில், நோய், மனப்பிறழ்வு எனப் பல இயல்புகளை எழுத்தாக்கினார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள் :

Feather Pillow

The Wild

The Slaughtered

Anaconda

Exiles

Drifting

000

அவைநாயகன்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சூழலியல் செயல்பாட்டாளர்.

சூரியச் செதில்கள், காடுறை உலகம் இவரது கவிதை நூல்கள். ஞானப் பறவை (ரிச்சர்ட் பாக்) கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது (மாயா ஏஞ்சலோ) இந்தியா அழைக்கிறது (ஆனந்த் கிரிதர் தாஸ்) டெர்க் உஸாலா (விளாதிமிர் கே ஆர்சென்யேவ்) ரஷோமோன் திரைக்கதை (அகிரா குரஸாவா ஷினோபு ஹஷிமோட்டோ) ஆகியவை மொழிபெயர்ப்புகள்.

The post தலை துண்டிக்கப்பட்ட கோழி first appeared on Nadukal.

  •  

‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதை மஞ்சும்மல் பாய்ஸ்

‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல். 

இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.


இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம். 

இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன.  சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 

‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட. 

உண்மை நாயகர்கள் சிஜூ, சுபாஷ்

  •  

அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’

‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

  •