கி.ரா அவர்களின் தீவிர வாசகி என்ற முறையில் கி.ரா.வுக்கு ஞானபீடம் என்று தாங்கள் விடுத்த அறைகூவல் நிறைவாக இருந்தாலும், இதைக் கூடச் சொல்லிச் செயலாற்றவேண்டிய சூழலில் இருக்கிறோமே என்ற கசப்புணர்வும் சேர்ந்தபடி தான் உள்ளது.
ஒரு மாபெபரும் எழுத்தாளரைரக் கொண்டுசென்று சேர்க்கவேண்டிய நிலை என்பதே சற்று அருவருக்கத்தக்க செயலாக எனக்குத் தோன்றுகிறது என்று முதலில் சொல்லிவிடுகிறேன் - தவறென்றால் மன்னிக்கவும். நாடெங்கிலும் இருந்து வாசிப்புப் பசியும் நுண்ணுணர்வும் உள்ளவர்கள் தானே கூட்டம்கூட்டமாக அவரைத் தேடிவரும் நிலை இருக்கவேண்டும்! கி.ரா.வின் படைப்பாற்றலும் மேதமையும் சொல்லித்தான் புரியவைக்கப்படவேண்டும் என்றால், அப்படிப்பட்ட வாசகப்பரப்புக்கு மூன்றாம் தரக் கவிஞர்களும் அசட்டு எழுத்தாளர்களுமே நாயகர்களாக இருக்கட்டுமே. கி.ரா.வை அவரது வாசகர்கள் நாம் கொண்டாடிவிட்டுப் போகிறோம். அது நமக்குக் கிடைத்த பெரும் பேர். ஏன் அவரது அருமை புரியாதோர் முன்னிலையில் அவர் ஆக்கங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்று உணர்வதாக முதலில் பதிவுசெய்கிறேன்.
அதே நேரத்தில், நீங்கள் சொல்ல வருவதும் நன்கு புரிகிறது. தேசிய அளவில் தமிழ் மொழி மீதுள்ள இளக்காரமும் தவறான பார்வையும் களைய வேண்டும் என்றால் நம்முடைய மூத்தோரை நாம் முன்னிறுத்திப் பேசி, ஞானபீடம் போன்ற தரமான விருதுகள் நியாயமாக அவர்களுக்கு வர வழிவகுக்கவேண்டும். இப்படிப்பட்ட செயல்பாடுகளும் இம்மொழியில் நிகழ்கின்றன என்று உலகம் காணவேண்டும். அதைத் தவிர, முக்கியமாக, இந்திய வாசகர் பரப்புக்கு இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட வேண்டும். நாடு முழுவதும் உள்ள தேர்ந்த வாசகர்கள் அவரை வாிக்கவேண்டும். அந்தவகையில், இது தேவைக்குரிய செயல்தான் என்று ஒப்புக்கொள்கிறேன்.
மொழிபெயர்ப்புகள், ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரவேண்டும் என்று சொல்லியிருந்ததைக் கவனித்தேன். இது தொடர்பாக ஒரு பதிவு, இந்திய - ஆங்கிலச் சூழல் மீது அசூயை உருவாவதற்கும், நான் தீவிரமாக தமிழில் வாசிக்க, எழுதத் தொடங்கியதற்கும் ஒரு காரணம் இது. இந்திய மொழிகளிலிருந்து, குறிப்பாகக் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு நடப்பதில் உள்ள அரசியலைப் பற்றி நீங்கள் அறியாததை நான் புதிதாக ஒன்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் அரசியலையும் தாண்டி, மொழியாக்கங்களை வாசிப்பவர்கள் பலரது மனநிலையையும் உளவியலையும் இங்குப் பதிவுசெய்ய நினைக்கிறேன்.
இந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை, குறிப்பாகத் தமிழில் எழுதும் எழுத்தாளர்களை, தலையில் தட்டிக்கொடுத்துப் 'பரவாயில்லை, நீயும் நன்றாக எழுதுகிறாய்' என்ற கேவலமான பாவனை ஒரு புறம். வட்டார மொழியில் எழுதப்படுகிறது என்ற காரணத்தினாலேயே ஓர் ஆக்கத்தைத் தூக்கி நிறுத்தி, தங்களை இலக்கிய சிர்திருத்தவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் வாசகர்கள் இன்னொரு புறம். ஒடிசாவில் நாற்பது பேர் மட்டுமே பேசும் ஒரு வட்டார வழக்கில் முழுக்க முழுக்க ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கு தெரியுமா? அதைப் படிக்காதவனெல்லாம் ஒரு வாசகனா? போன்ற பாவனைகள். இத்தனைக்கும் இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தாய்மொழியில் ஒரு வரி கூட வாசிக்காதவர்கள். அத்தனைக்கும் ஆங்கிலம் தான் பாலம். இவர்கள் வட்டாரங்களை ரட்சிக்க வந்துவிட்டார்கள். இன்னும் சிலர் பெரிய பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது என்பதாலேயே ஒரு ஆக்கம் அம்மொழியின் சிறந்த நூல் என்று நம்புகிறார்கள். பெருமாள் முருகன்தான் இவர்களது கணிப்பில் சமகாலத் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்.
இவர்கள் யாரென்றால் ஆங்கில ஊடகங்களில் இதழாளர்களாகவும் கட்டுரையாளர்களாகவும் இலக்கியப் பக்கங்களை வடிவமைப்பவர்களாகவும் பதிப்பகங்களில் ஆசிரியர்களாகவும் பணி செய்பவர்கள். இவர்களில் ஓரிருவர் மட்டுமே தாய்மொழியில் வாசிக்கப்பயின்றவர்கள். எனக்கு யாதோரு தொடர்பும் இல்லாத கன்னடமொழியை ஒரு ஆர்வத்தின்பால் மட்டும் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். தீவிரமாகத் தொடர்ந்தால் இரண்டாண்டுகளில் கன்னடத்தில் நாவல்கள் வாசிக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இத்தனைக்கும் இலக்கியமோ இதழியலோ என் தொழில் அல்ல. இவர்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை? இது ஒரு வித அலட்சியப் போக்கு மட்டுமே. இந்த மனநிலையுடனும் கூடத்தான் நாம் போராடவேண்டும்.
பத்து வருடங்களுக்கு முன்னால் கி.ரா.வின் நாட்டார்கதைகளின் தொகுப்பொன்று ஆங்கிலத்தில் வெளிவந்தது. நானும் கி.ரா.வின் உலககிற்குள் இந்த நூல் மூலமாகவே வந்தேன். ஆனால் அதன் பின் நான் கி.ரா.வை வாசித்தது முழுக்கத் தமிழில். கோபல்ல கிராமம் வாசித்தேன். அவரது சிறுகதைகளை ரசிக்கத் தொடங்கினேன். குறிப்பாக 'பேதை', 'கோமதி', 'கனிவு' போன்றவை ஒரே நேரத்தில் நாட்டார் வாழ்வியலையும் அழகியலையும் பேசி, அதற்கு மேல் ஒரு தளத்தில் மனித மனத்தின், வாழ்வின் பிணைப்புகளும் துக்கங்களும் விடுபட்ட கணங்களையும் காட்டும் முறை என்னை உள்ளிழுத்தது. சாளரத்துக்கு வெளியில் பனிபொழிகையில் அவர் கதைகளின் மூலம் கரிசல் நிலத்தின் மண்ணையும் மணத்தையும் வெப்பத்தையும் விரிவையும் மீண்டும் மீண்டும் உணர்ந்திருக்கிறேன்.
ஆனால் இந்திய-ஆங்கில வாசகர்கள் பலர் மத்தியில் கி.ரா இன்னமும் கூட சுவாரஸ்யமான, கொஞ்சம் விரசமான நாட்டார்கதைகளைச் சேகரித்து எழுதிய ஒரு கிராமியத் தாத்தா, அவ்வளவுதான். அவர்களையும் சொல்லிக் குற்றம் இல்லை. மொழியாக்கங்களை மட்டுமே நம்பி இருப்போருக்கு எது மொழியாக்கம் செய்யப்படுகிறதோ அதுவே அந்தப் பானை சோற்றின் பதமாக ஆகிறது. மொழியாக்கம் செய்தவரையும் பதிப்பாளரையும் கூடக் குற்றம் சொல்ல முடியாது. இவை சுவாரசியமான கதைகள். நல்ல மொழியாக்கம். முன்னுரை தெளிவாகத்தான் இருக்கிறது. நாட்டாரரியலில் ஆர்வம் உள்ள யார்வேண்டுமானாலும் படிக்கும்பாடியான நூல், ஆனால் கி.ரா.வின் வேறு நூல்கள் மொழியாக்கத்தில் இல்லாதவரையில் அவரைப் பற்றிய இச்சித்திரத்தை எளிதில் மாற்ற முடியாது (கோபல்ல கிராமம் கூட மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றிய விமர்சனங்கள் ஆங்கிலத்தில் நான் படித்ததாக நினைவே இல்லை. தேடிப் பார்த்ததிலும் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை). இச்சூழலில் அலட்சியத்தைத் தாண்டி கி.ரா.வுக்கு ஞானபீடம் கிடைத்தால் மிகப்பெரிய விஷயம் அது. அதுவே ஒரு வெற்றி.
இந்தப் பின்னணியில் நீங்கள் முன்வைக்கும் அறைகூவல் மிக முக்கியமானது. இந்தக் குரலின் முக்கியத்துவம் இன்று பரவலாக கவனிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. என்வரையில் நான் செய்யக்கூடியது கி.ரா.வைப் பற்றிப் பேசுவது, எழுதுவது. அதைச் செய்கிறேன்.
சில தனிப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்துள்ளேன். ஆகவே என் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
எஸ்
அன்புள்ள எஸ்,
தி.ரா.வுக்கு ஞானபீடம் பற்றி ஏன் எழுதினேன் என்றால், ஞானபீடம் தமிழுக்கு தவறிப்போகும் போதெல்லாம் அதையும் 'தமிழன் மீதான புறக்கணிப்பு' என ஆக்கிக்கொள்ளும் குரல்கள் எழுவதனால்தான். எங்கே சிக்கல் இருக்கிறது, என்ன செய்யவேண்டும் எனச் சுட்டிக்காட்ட, எனக்கு அக்கட்டுரை குறித்து வந்த ஒரே நல்ல கடிதம் இது. பிற அனைத்துமே 'பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிறீர்கள்', 'கி.ரா தமிழரே அல்ல', 'தமிழ் ரசனையைக் குற்றம் சொல்ல என்ன தகுதி உனக்கு? எது மக்களால் ரசிக்கப்படுகிறதோ அதுவே மக்களுக்கான இலக்கியம்' என்னும் வகையான எதிர்வினைகள் மட்டுமே.
கடிதம் வந்தது. இப்படி அவ்வப்போது தொடர்பு கொள்ளுங்கள். நனவில் உயிர்த்தெழுதல் நிகழும்.
அந்தக் கதை நீண்டதாக இருந்ததால், படைப்பாளிக்கு எல்லாமே முக்கியம் தானே, வாசிப்பில் விடுபட்டுத் தெரிகிற இடங்களை வெட்டுங்கள் என்று சொல்ல, ஏகத்துக்கும் வெட்டி, இஷ்டத்துக்கு பகுதி பிரித்து என்னென்னமோ செய்து விட்டார்கள். அதனால் ஒரு எழவும் புரியாது. புரியாததுக்கு எல்லாம் இருக்கறதே ஒரு பெயர் “பின் நவீனத்துவம்”!
30-03-2003-ல் கல்கி இதழில் சாகித்ய அகாதமி பற்றி எனது நேர்காணல் வருகிறது. சாகித்ய அகாதமியை எப்படி இந்துத்வா ஆக்கரமித்துவிட்டது என்று விளக்கியுள்ளேன்.
எனக்கென்னமோ பிரகாஷை ஒன்றுக்கும் ஆகாமல் செய்துவிட்டது போல் தோன்றுகிறது. அவனுக்குள் எப்பேர்ப்பட்ட கலைஞன் இருக்கிறான். வீர.வேலுச்சாமி என்ற ஆகாயமார்க்க நிழல்பட்டதால் அவனுக்குள் கருவுற்றது படைப்பாற்றல். வந்தது வரட்டும் என்று ஒரு நாவல் எழுதச் சொல்லுங்கள் - வளமாய் வெளிப்படும்.
அப்பா காலமாகிவிட்டார் என கி.ரா சொல்லித்தான் தெரிந்தது. நான்கு நாட்களாய் தொலைபேசியில் முயற்சி செய்தேன். “எல்லா வழித்தடங்களும் சுறுசுறுப்பாக இருக்கின்றன” என்ற பதிலே வந்தது. தொயந்தடியாய் என்ன கோளாறு என்று தெரியவில்லை.
பிறகுதான் “நீத்தார் நினைவு' பத்திரிகை கிடைத்தது.
கி.ரா கடிதத்தில் எழுதியிருந்தார், “கிட்டத்தட்ட எல்லாமே உதிர்ந்துகொண்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாமும் எப்போ “பொத்”தென்று உதிர்ந்து விழப் போகிறோமோ தெரியல”
நேற்று கந்தர்வன்; கொஞ்சம் முன்னால் கவிஞர் மீரா, இன்று அப்பா.
இப்போதுதான் எழுதியது போலிருக்கிறது கந்தர்வனைப் பற்றி. மரணக் குறிப்பு எழுதி கணையாழி இதழில் வெளியாகி, முழுசாய் ஒரு மாசம் கூட முடியவில்லை.
“வீர, வேலுச்சாமியை வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான கலைஞன். யதார்த்தம்னா என்னாங்கறத அவர்ட்டதான் தெரிஞ்சிக்கிறனும்” என்றார் கந்தர்வன். அவர்தான் அப்பாவைப் பற்றி முதலில் என்னிடம் சொன்னவர். பிறகு தான் வீர.வேலுச்சாமியை தாமரை இதழ் மூலம் கிரகிக்க ஆரம்பித்தேன்.
எழுதிய எழுத்தின் பச்சை காயாமலிருக்கிறபோதே, இன்னொரு விடைபெறலா? மாயம் போல் இருக்கிறது.
இப்போது இரத்தக் காட்டேரி “டிராகுலா” இரு கடைவாய்ப் பற்களிலும் இரத்தம் வழிய, சுற்றிச் சுற்றி வேட்டையாடுகிறது. ஆகாய மார்க்கமாய் பறந்து போகும் பறவையாய் அமைதியாய் நடந்து போகும் மக்களை ஒரு அக்னிக் கணை இரண்டு துண்டமாக்கப் பிளந்து வீசுகிறது. சித்திரபுத்திரன் எமலோகத்தில் கணக்குப் புத்தகம் எடுத்து வராமலே - பாவ புண்ணியப் பட்டியல் வாசிக்காமலே - கழுவிலேற்றி, தீக்குண்டத்தில் தள்ளுகிற குரூரம் அரங்கேறுகிறது.
இப்போது நமது கனவுகள் குளிர்ச்சியாக இல்லை.
ஒரு கட்டத்தில், புதிது புதிதாய் என்ன வருமென்று அறிய முடியாத குரூரங்கள் கொண்ட நவீன உலகில் வாழ்ந்தவர் அப்பா. விடுதிக் காப்பாளராகப் பணியாற்றிய காலம் அது. அப்போது சேர்த்துக் கொண்டவைதாம் நிம்மதியற்ற பகலும், வெக்கையடிக்கும் கனவுகளுடனான இரவும்; அப்போது சேர்த்துக் கொண்டவைதான் இந்த நோயும் நொம்பலமும். கி.ரா பரிந்துரை செய்து மருத்துவர் கதிரேசன் ஆலோசனையின் பேரில் சென்னை வந்து, ஓட்டேரி சானட்டோரியத்தில் காசநோய் மருத்துவமனையில் அப்பா சேர்ந்திருந்தார். பூமணியும் நானும் போய்ப்பார்த்துப் பேசிக் கொண்டிருந்தோம். பூமணியும் நானும் அப்போது சென்னைவாசிகள் ஆகிவிட்டோம்.
நோய் அப்படியே தங்கிக்கொண்டு, அப்பாவின் எழுத்தை துரத்திவிட்டது.
எழுதுவது லேசுப்பட்ட காரியமல்ல. எந்த நேரத்தில் எந்தக்கனி கையில் வந்து விழும், எது கை நழுவிப் போகும் என்று சொல்ல முடியாது. தூக்கத்தில்கூட அதே சிந்தனையாய்ப் புரள வேண்டியிருக்கும். திடீரென்று மின்னல் மாதிரி ஒரு நல்ல குறிப்புத் தோன்றும். சங்கடம் பாராமல் எழுந்து குறித்துக் கொள்ள வேண்டியிருக்கும். “என்ன சித்தப்பிரமை பிடிச்சமாதிரி” என்று பக்கத்திலுள்ளவர்கள் பார்ப்பார்கள். நினைவில் வைத்திருப்பது தவறி, மறதிக் கடலின் ஆழத்தில் மூழ்கி, மூழ்கி அது தேடினாலும் கிடைக்காது.
ஒரு கணத்தில் நமக்குள் வெடித்து நம்மை உலுக்கிய ஒரு சொல், ஒரு உவமை, ஒரு விவரணை, ஒரு காட்சி கை வசப்பட்டது போல் ஒரு செண்டிப்பு அடித்து, பிறகு எங்கேயோ போய் ஒளிந்து கொள்ளும். ரத்தினக்கல் கிடைத்து தொலைத்து விட்டதுக்குச் சமமாய் இழப்பின் வலி அமுக்கும்; இந்த வலியோடுதான் அப்பாவின் எழுத்துப் பயணமும் நடந்திருக்கும். ஏழெட்டு வருசங்களுக்குள் மளமளவென்று எழுதி, வெற்றியின் உயரத்தில் ஏறி ஏறிப் போனார். தமிழுக்கு அப்போதுதான் புதிதாய் அறிமுகப்பட்டிருந்த யதார்த்தச் சித்தரிப்புக் கலையின் மர்மத்தைப் புரிந்து கையிலெடுத்தார். கலைத்துவம் கெடாமல் அதில் பல வர்மப்பிடிகள் போடத் தெரிந்திருந்தது அப்பாவுக்கு.
நிறங்கள் சிறுகதைத் தொகுதி எழுபதில் வந்தது. அத்தோடு தமிழ்நாட்டு கிராமியக் கதைகள் அகரம் வெளியீடாக வந்தது.
நிறங்கள் தொகுப்பு உன்னிப்பாய் கவனம் பெற்றது. இப்போது இலக்கிய வட்டாரத்தின் கவனம் வேறொரு தசையில் திரும்பிவிட்டது.
மெளனி கதைகள் ஒரு தொகுதிதான் காணக் கிடைத்தது. அவர் ஆயுளில் எழுதியது அவ்வளவுதான். கதைகளாக ஆக்கித் தராமல் வாழ்வை அவருடைய பார்வையில் தத்துவ விசாரணை செய்த மெளனி ஜெபம் எழுத்துலகில் இன்னும் ஓய்ந்த பாடில்லை.
அகமனக் குதறல்களை கொட்டிய எழுத்துக்கள் போற்றப்படுகின்றன. இம்மாதிரியே இலக்கிய உலகில் அதற்கொரு மறுவாசனை தந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் இலக்கிய வனாந்தரம். எந்தக் கருத்தியலையும் கைப்படுத்தாமல், கலைத்துவ உச்சாடனை செய்யும் இலக்கிய முனிகளின் வனாந்தரம் அது. திட்டமிட்ட மெளனம் என்பது புறக்கணிப்பு.
சுத்தமான ஆளாய், பிரியமும் பாசமும் கொண்ட மனிதராய் பின்னணியில் அப்பா சேர்த்துக் கொண்ட பிரபல்யங்கள் நிறைய.
உங்களுக்கு, வசந்தாவுக்கு, கல்பனாவுக்கு ஒரு நல்ல அப்பா.
அம்மாவுக்குப் பிரியமுள்ள கணவர்.
எங்களுக்கு அறிவார்த்தமான, ஈரமான நண்பர்.
எல்லோரும் இழந்துவிட்டோம்.
யதார்த்தவியல் என்ற இலக்கிய நவீனப் பிரிவுக்கு கை நிறைய அன்னமிட்ட ஒருவரை சிறுகதை உலகம் இழந்துவிட்டது.
குடும்பத்தைச் சுமந்து செல்வது - ஒழுங்கமைவு செய்வது - உறவுகளை, நட்பைக் காப்பது - அப்பா கவனமாக இருந்தார்; அந்தக் கவனத்தை நீங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு இன்னொரு அபூர்வமான பொருள் உங்கள் கைவசமிருக்கிறது. உங்களிடம் இலக்கியம் செய்வதற்கான நல்ல தெறிப்பு இருக்கிறது. சிறு கங்கு. ஊதி, ஊதி கனலாக்குங்கள்.
சரியான தொலைபேசி எண்ணை எழுதுங்கள். அவசியம் ஊர் வருவேன். உங்களை, வசந்தாவை, கல்பனாவை, அம்மாவைப் பார்த்துப் போக.
ஆறு, ஆறு என்று சொன்னால், ஆறுமா உங்கள் அனைவரின் மனசும்?
நான் வாசு. ஆம்ஸ்டர்டாமில் வசிக்கிறேன். இன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் புனைவு களியாட்டு கதைகளில் ஒன்றான ‘கோட்டை‘ பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அதையொட்டி என் வாசக அனுபவத்தை பற்றி எழுதிய சிறு குறிப்பு.
இந்திய மரபில் காமம் என்ற சொல் ஐம்புலன்களின் விழைவுகளை மொத்தமாக சுட்டுகிறது. உயிர்கள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆதி விசை. நாவின் சுவையும் காமமே. மூங்கிலை நக்கும் காளை கன்று ( பலத்த இந்திரியம் மழலையில் நாவே என்ற அணைஞ்சியின் கூற்று). பசுவிடம் பால் பருக ஓடும் கன்று, சாந்தாவின் மூன்று வயது மகன் இருவருமே எதிர்கால நாணப்பன் ஆக இருப்பவர்கள் தான். தாயின் அணுக்கதில் இருந்து பிரிக்கப்பட கசப்பால் இளமையில் பெண் உடலை வென்று கசப்பை களைய முயல்பவர்கள். காமத்தை புனிதப்படுத்தாமல் அதன் உள்ளுறையும் வன்முறை பற்றிபேசும் கதை. அதே சமயம் அந்த ஆதி விசையை புரிந்து அதே கடக்க முயல் பவர்களுக்கு மீட்பாகவும் அமைகிறது(குருசாமியில்லா அது– வாமசார தந்த்ரா மார்கம்). கதை முடிவில்கதை சொல்லி சிறுவன் ஆணாக மாறும் தருணம் சுட்ட படுவது அழகு.
மறைமுகம் கதையை அது யாவரும்-ல் வெளிவந்தபோதே வாசித்திருந்தேன். நண்பர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்தும் இருக்கிறேன். ஆனால் பதிவாகாத உரையாடல் என்பது பதிவுச் செய்யப்படாத மேடைப் பேச்சு போல காற்றில் கரைந்து விடுகிறது. மறைமுகம் குறித்து என் பார்வையை இங்குப் பகிர்கிறேன்.
அவனுக்கே வயது இருபத்தைந்துக்குள்தான் இருந்திருக்க வேண்டும். வனத்துறையில் பணிக் கிடைந்திருக்கிறது. முதற்குழந்தை என்பதால் அவளுக்கு பதினாறு/பதினேழை தாண்டியிருந்தால் அதிகம். சம்பாத்தியம் ஈட்ட வேண்டியவனின் மனமோ அதில் இலயிக்கவில்லை. எதை அவனுள்ளம் நாடுகிறது என்பது இங்கு முக்கியமல்ல. ஆண்களுக்கு எதை செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும், பொறுப்புடன்/பொறுப்பற்று, உள்ளேயிருந்துக் கொண்டோ அல்லது ஒரேடியாக வெளியேறி சென்றோ மனம் வேண்டுவனவற்றை வேண்டியபடி செய்வதற்கு சமுதாய அமைப்பிலும் புறவுலகிலும் இடங்களுண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியானதொன்றை சிந்திக்கும் (அசாதாரணர்கள் நீங்கலாக) சிந்தனைப் போக்குக்கான ஏது ஏதும் அப்போதில்லை.
அது ஆயிரத்துத் தொள்ளாயிரங்களின் முற்பகுதி. பொதுவாக தலைக்கு மேல் தொங்கும் மரணத்தின் தேதியுடன் தான் மனிதர்களின் நாட்கள் கழிகிறதென்றாலும் இப்போதைக்கு போல அப்போது நீண்ட ஆயுளில்லை. சிறு வயிற்றுப்போக்கு, டைஃபாயிடால் கூட ஒரு பெண்ணின் வாழ்வை அஸ்தமனம் செய்து விட முடியும். ஆம்.. பெண்ணின் வாழ்வு ஆணோடு பிணைந்திருக்கிறது. (இப்போதைக்கும் அத்தனை பெரிய மாற்றமில்லை என்பது ஒருபுறமிருக்க…). அதிலும் குறிப்பிட்ட குலம் சார்ந்த பெண்கள் கணவனின் மரணத்துக்கு பின் உயிருடன் மரணித்தவர்கள். இருந்தும் இல்லாதவர்கள். (சதி என்ற கொடுமை நிகழ்ந்த நாடும் நம் நாடே) ஆக, ஒரு பெண் தொங்க தொங்க வாழ்வதென்பது பூர்வஜென்ம பிராப்தம். இந்த பெண்ணுக்கு அந்த பிராப்தம் இல்லாமல் போகிறது, அதுவும் அசாதாரணமான காரணத்தால். வீட்டிலுமே அசாதாரண சூழ்நிலைதான். காணாமல் போனவனின் நாள்கணக்கே வயதிருந்த பெண்மகவு இறந்துப் போயிருந்தது. பிள்ளைப் பிறந்து அதை காண்பதற்கு கூட வராத கணவன், அவன் முகத்தைக் கூட சரியாக கண்டிராத அவள். சொல்லியழத் தாயில்லை. பெரிதாக பணமில்லை. எதுவுமே ஸ்திரமற்ற நிலை. ஆனால் அவை எதும் சலுகைகள் அல்ல. வீட்டில் போலீஸ் நுழைகிறது. அவள் கணவனின் மரணத்தை, அதற்கு முன் அவன் செய்த பெருங்குற்றத்தை கூறுகிறது. வீட்டை சோதனையிடுகிறது. எதையெதையோ எடுத்துச் செல்கிறது.
அந்த பெண்ணின் அகத்துக்குள்ளிருந்து கதை எழுகிறது. ஒரே மூச்சில் எழுதி விட்டு பின் ஆசிரியர் ஆங்காங்கே சில கூர்மைப்படுத்தல்களும் நீவல்களும் செய்திருக்க வேண்டும். அப்படிதான் தோன்றுகிறது. குழந்தை மரணித்திருந்தது, அதை கதை எடுத்து வைப்பதே காமாட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னை அது விடுவித்துக் கொண்டது என்றுதான். விடுவித்துக் கொள்ளல் என்பது எதிலிருந்து? பிறவியிலிருந்தா, பாவப்பட்ட பெண் ஜென்மம் என்ற நிலையிலிருந்தா? அதற்கென்ன அத்தனை அவசரம்? தன்னை இந்த பூலோகத்தில் பார்த்தறியாத தந்தையை மேலோகத்தில் வரவேற்க செல்லும் வேகமா? காமாட்சி பால் புகட்டுவதற்கு குழந்தையை(?) மாருக்கு எடுத்துச் செல்கிறாள். இனிமே அதை தெய்வம் பார்த்துக்கும் என்கிறாள் சீதா. எடுத்துக் கொள்ளும் பூமி திரும்பக் கொடுக்குமா…? என்கிறாள் இவள் தவிப்போடு. தைத்து வைத்தது போன்ற வார்த்தை பிரயோகம். தைலா பாட்டி பாலகனகனுக்கு என்ன வயசு அறுபதா? என்கிறாள். ஆனால் மரணத்துக்கு வயது அளவுக்கோலா என்ன?
அளவுக்கோல்கள் எல்லாம் பெண்களுக்குதான். தைலா பாட்டி தலையணை வைக்க மாட்டாள். கையை தலைக்கு வைத்துப் படுத்துக் கொள்கிறாள். வயதாகி விட்டதால் கொஞ்சம் கால்களை நீட்டி நீக்குபோக்காக அமர்ந்துக் கொள்ளலாம். சீதை நடுத்தர வயதுகாரராக இருக்க வேண்டும். மூலையில் சுருண்டுக் கொள்கிறாள். தவிரவும், அவள் ஆண் அல்லவே, நீட்டியும் நிமிர்த்தியும் படுத்துக் கொள்ள. பிள்ளைப் பெற்றவள் அமர்ந்திருக்கும் இடம் துணியால் மறைக்கப்பட்டிருக்க, காதுகள் கணவனுக்கு தாக்கல் சொல்லப் போன இடத்தில் கிடைத்த தகவலென்ன? என்பதை கூர்ந்துக் கொண்டிருந்தது போன்ற விவேரணைகள் காலத்தைச் சொல்வன. பாலகனகன் இறப்பை சொல்வதாக வருமிடத்தில், ‘அவனது தந்தை பயந்துப் போயிருந்தார். அத்தனை நெருக்கத்தில் அவர் தெய்வதத்தைதான் கண்டிருக்கிறார், போலீஸை அல்ல…’ என்ற வாக்கியம் வெறும் வாக்கியம் மட்டுமல்ல.
தனக்கும் கணவனுக்குமான பாலம் தன்னை விட்டு சிறிதுசிறிதாக தகர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணருகிறாள் அவள். மகளின் ஸ்பரிசம் கொடுத்த உணர்வை அதனை கொடுத்த கணவனிடம் சொல்ல எண்ணும் அவளின் தவிப்பு. கணவன் காணாமலேயே, கணவனை காணாமலேயே மகள் சென்று விட அதன் உடற்சூடு முழுவதும் தணிவதற்குள் கணவன் ஏதோ ஆங்கிலேயனைச் சுட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு.. எத்தனையை கிரகிக்க வேண்டும் அவள்? கிராமத்திலிருந்து இருபது மைல் என்ற ‘நீண்ட’ தொலைவை அவள் அப்போதுதான் பயணிக்கிறாள். கணவனின் சடலத்தை அடையாளம் காண. நேரில் இன்னுமும் கூட சரிவர பார்த்திராத கணவனின் முகத்தை வைத்து சடலத்தை அடையாளம் காண வேண்டும். ஆனால் அங்கும் அவளால் முகத்தை காண முடியாது. சுடப்பட்ட சிதைந்த முகம் அது. ஊரும் உறவும் சொன்னதை வைத்து மகள் தகப்பனையொத்திருக்கிறாள் என்று கணவனை மகள் முகத்தில் பார்த்தவள், இப்போது அவன் தான் இவன் என சொல்ல வேண்டி செல்கிறாள்.
தேடி தேடி பார்க்கிறாள். அவனை அவளுக்குத் ‘தெரியவேயில்லை’. அவள் பெண். தகப்பன், சகோதரன், கணவன், மகன் என கைமாறும் வஸ்து. அதோடு பலகாரத்துக்கு மாவரைப்பது, சகடம் ஒலிக்க நீர் இறைப்பது, நிறைப்பது, சமைப்பது, துவைப்பது, இருளில்-இரவில் எதுவென்றே அறியாத ஒன்றை எதுவும் அறிவதற்குள் அனுபவித்து அதனை வயிற்றிலும் நெஞ்சிலும் சுமப்பது. இதில் விடுதலை, அதற்கான உணர்வு, ஆங்கிலேயன், அடக்குமுறை என்பதெல்லாம் தெரிய நியாயமில்லை. (காந்தி வந்த பிறகு பெண்கள் ஓரளவு மனதளவிலும் சிறிதளவு உடலளவிலும் குறைந்தபட்சம் நகைகளை ஹரிஜன நிதிக்காக உவந்தளிப்பு செய்த வகையில் பங்கீட்டளவிலும் உள்ளே வந்திருந்தனர்).
அவளுக்கும் அவனுக்குமான இணைப்பு இங்கு அறுப்பட்டு ‘அங்கு’ செல்ல அவர்கள் மூவரில் இவள் ‘இங்கிருக்க’ பார்த்துக் கொள்ளாத இருவரும் அங்கு பார்த்துக் கொள்ளப் போகும் தருணத்தை எண்ணி இவள் இனி வாழ்வை சுமக்க வேண்டும். உணர்வின் உச்சமென முடிவு. நுட்பமாக என்பதை விட தெளிவாக கதை செல்வதாக கூறலாம், அதீத திணிப்புகளற்று. ஆழம் சொல்லப்படும் விதத்தில் மட்டுமல்ல, கதையிலும் என்பதால் நம்மை அதில் அமிழ்த்தி ஆழ்த்தி விடுகிறது.
அன்புடன்,
கலைச்செல்வி
அன்புள்ள கலைச்செல்வி,
ஜா. தீபாவின் ‘மறைமுகம்‘ கதை சார்ந்து உங்கள் வாசிப்பு மற்றும் சென்ற இதழில் வெளியான தாராவின் விமர்சனம் சார்ந்து சில எண்ணங்கள் தோன்றின. ஒன்று, முகமே அற்ற பாலகனகனின் முகம் என்ற படிமம் வழியாக ஆசிரியர் மிக வலுவான ஒரு விமர்சனத்தை வைக்கிறார். பெண்ணுக்கு ஆண் ஒரு non-person என்று சொல்ல வருகிறாரோ என்று தோன்றுகிறது. அவன் முகத்தை அவள் காணவில்லை, அவன் உலகத்தை அவள் காணவில்லை என்ற நிதர்சனங்களைத் தாண்டி, ‘கண்டாலும் என்ன’ என்ற இடத்துக்குச் செல்கிறதோ என்று தோன்றுகிறது.
இந்தக் கதையை வாசித்தப் பலரும் காமாட்சியால் பாலகனகனின் உலகுக்குள் நுழையமுடியாததை குறிப்பிட்டார்கள். ஆனால் அதுபோலவே பாலகனகனாலும் காமாட்சியின் உலகுக்குள் ‘உண்மையில்’ நுழைய முடியவில்லை, இல்லையா? பாலகனகனின் மூர்க்கம் அந்த பிளவுக்கான ஓர் குறியாட இக்கதையில் நிலைபெறுகிறது. அரசியலிலும் ஆண்மயமான மூர்க்கத்தின் இடத்தை இந்தக்கதை விமர்சிப்பதாகக் கூட வாசிக்க இடம் உள்ளது.
மேலும் ஆடு-புலி-புல்லுக்கட்டு என்பது போல் ஆண்-பெண்-குழந்தை மூவரும் இக்கதையில் மாறி மாறி இணைகிறார்கள். முதலில் ஆணும் பெண்ணும். அடுத்து பெண்ணும் குழந்தையும். இறுதியில், ஆணும் குழந்தையும். ஆனால் அந்தப் பெண் மகவு அங்கேயும் தந்தையை ஒரு முகமற்றவனாகவே அறிய நேரிடும். குழந்தைக்கு அவனைத் தெரியாது. அவனாலும் குழந்தையைப் பார்க்க முடியாது. ஆண் தன் மூர்க்கத்தினால் தானே தனிமைப்பட்டு, குடும்பமற்று, அடையாளமற்றுப் போகும் ஒரு சித்திரமாகவும் இக்கதையை வாசிக்க இடம் உள்ளது.
இந்த எண்ணங்களைத் தூண்டிய உங்கள் கடிதத்துக்கு நன்றி.
சுரபி மூன்றாம் இதழில் வெளியான தன்யாவின் அந்தி சிறுகதையை வாசித்தேன். முதல் கதை எனும் வகையில் ஓ.கேதான். என்றாலும், சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
”மருதாணியை அள்ளி உடல் முழுக்க பூசிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது” எனும் வாக்கியம் கதைக்கான சாரமாய் அமைந்ததைப் போல் இருந்தது.
”வீட்டின் உள்ளே பார்த்து முடித்து திரும்பும் போது அந்தி நெருங்கிக்கொண்டிருந்தது. வானம் முழுவதும் சிவந்திருந்தது.” எனும் வரிகளில் கதைக்கான நுண்ணுணர்வு மினுங்கிக் கொண்டு இருந்தது.
”கைகளைத் தொட வந்த தம்பியை கடிந்துகொண்டவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.” என்ற வாக்கியம் கதையைத் தட்டையாக்கியது போல் இருந்தது; அவ்வாக்கியத்தை வெட்டி இருக்கலாம் அல்லது அப்பத்தியைச் செப்பனிட்டு வெளியிட்டிருக்கலாம்.
எது எப்படியோ, தன்யாவின் அந்தி ஓரளவு சிவந்து என்னை ஈர்த்தே இருந்தது.
சக்திவேல்
கோபிசெட்டிபாளையம்.
அன்புள்ள சக்திவேல் அவர்களுக்கு,
‘அந்தி’ கதை மீதான உங்கள் வாசிப்புக்கு நன்றி.
“கைகளைத் தொட வந்த தம்பியை கடிந்துகொண்டவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்” என்ற வரி கதையை தட்டையாக்கியதாக எனக்குத் தோன்றவில்லை. மாறாக அந்தக் கதையின் சாராம்சம் அதில் உள்ளது. அம்மாவுக்கும் மகளுக்குமான ரகசிய உடன்படிக்கை ஒன்று அந்த புன்னகையில் பரிமாறப்படுகிறது. தம்பி அங்கே இயல்பாக வெளியே இருத்தப்படுகிறான். கதைக்குள் இந்த நிகழ்வு வலிந்து நுழைக்கப்படவில்லை. இயல்பான ஒன்றை ஆசிரியர் அவதானித்துப் போகிர போக்கில் சொல்கிறார். இது நல்ல கதை ஆவதற்கு இந்த அவதானமும் கூற்றும் ஒரு காரணம் என்பது என் எண்ணம்.
அன்புடன்,
சுசித்ரா
~
கடலூர் சீனு இக்கதை குறித்து தன்யாவுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இங்கே அனுமதியுடன் வெளியிடப்படுகிறது:
நான் சிறு வயது முதற்கொண்டு கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவன். அதன் இயல்பின் படி, எனக்கு யார் யாரோ உணவிடுவார்கள் யார் யாரோ என்னை பராமரிப்பாளர்கள். என் அண்ணா மூத்த பிள்ளை. என்னை விடவும் சவலை பிள்ளை என்பதால் அம்மாவுக்கு அவன் மேல் பிரியம் அதிகம். இறுதி தங்கை எங்கள் குல தெய்வத்தின் வடிவம். குல தெய்வத்தின் பெயரை இட்டு சீராட்டுவார்கள். இரண்டுபேரும் அம்மாவிடம் கொண்ட நெருக்கத்தை, எனக்கு தேவை என்ன என்று சொல்ல தெரியாமல் பார்த்திருப்பேன்.
தங்கை ருது ஆனபோது அன்று அவளுக்கு சிருஷைகள் செய்த அம்மாவை கண்டேன். அது அதுவரை நானறிந்த பாசமோ வெரோன்றோ அல்ல… ஒரு அம்மா பிறர் எவருக்கும் அல்லாது மகளுக்கு மட்டுமே அளிக்க இயன்ற ஏதோ ஒன்றை அளித்துக் கொண்டிருந்தார். அன்று பாதி அனாதை ஆனேன். மிக பின்னர் என் தங்கை தனது முதல் மகளை பெற்ற போது அம்மா உடன் இருந்தார்கள். என் தங்கை அவள் மகளை தூக்கி என் அம்மாவின் கையில் கொடுத்த போது ஒன்றை கண்டேன். எவராலும் அன்றி மகளால் மட்டுமே அன்னைக்கு தர முடிந்த ஒன்றை அன்று என் தங்கை அம்மாவுக்கு தந்து கொண்டு இருந்தார். அன்று முழு அனாதை ஆனேன்.
வாழ்வு என்பது இப்படி “வகுத்து சொல்ல இயலாத” ஆனால் “அங்கே இருந்து இயக்கும்” பல நூறு தனித்துவமான நுண் விசைகளால் ஆனது.
சிறந்த எழுத்துக் கலைஞன் இந்த நுண் விசைகளிலேயே தனது முதன்மை கவனத்தை கொண்டிருப்பான்.
‘அந்தி’ சிறுகதையும் எந்த நல்ல சிறுகதையையும் போலவே பிரிதொன்று இல்லாத தனித்துவமான நுண் விசை கொண்ட உணர்வு களத்தை சித்தரிக்கிறது.
மொழியாலும் நடையாலும் உள்ள பெண்தன்மை இந்த சிறுகதையின் ஆதார பலங்களில் ஒன்று.
மருதாணி சார்ந்த அனைத்தும் எந்த மேலதிக யத்தனமும் இன்றி கலாபூர்வம் எதுவோ அது தன் அடிப்படையில் கொண்ட இயல்பாக, கதை பேசும் மையம் எதுவோ அதன் குறியீடாக மாறி விடுகிறது. இதில் இருக்கும் ஒவ்வொரு படிமங்களும் அவ்வளவு அழகு. குறிப்பாக இவள் அத்தனை கொசு கடியிலும் பல் கடித்து சகித்துக் காப்பாற்றும் மருதாணி. பிறர் பாதியில் அதை உதருவது (அதன் பின்னுள்ள வயது வாழ்வு) மருதாணியை கை கழுவும் போது அது பொருக்குகளாக உதிர்ந்து நீரில் கரைந்து மறையும் சித்திரம்.
மூக்கு குத்தி கொள்ள அவள் கொள்ளும் விழைவு, கொசு கடிகளை அதன் தினவை தாங்கும் அவளது அந்த வயதுக்கே உரிய அந்த தன்மை. ஊசிகள் போல மழை தாரைகள் குளத்தின் உடலை தைப்பதாக வரும் சித்திரம்…
தனது பரிசுத்தம் மிகுந்த, மீண்டு மறுபடியும் நிகழ வகை இல்லாத, தான் கண்டு கடந்த வாழ்வின் உணர்வு தளம் ஒன்றை, அதே களதுக்குள் அவளது மகள் நுழையும் சித்திரம். அவள் முன்பு மருதாணி உதிர்ந்து வெளியே தெரியும் முதல் சிகப்பில் முத்தமிடும் தருணம் இங்கே இப்போது இயல்பாக பொருந்தி இதற்கு வேறு அர்த்தம் தந்து விடுகிறது.
எந்த நல்ல கதையும் அதை நல்ல கதை என்றாக்கும் இரண்டு கூறுகள் இந்த கதையில் மிக இயல்பாக நிகழ்ந்திருக்கிறது.
முதலாவது அது கையாளும் தனித்துவமான வாழ்க்கை தருணம்.
இரண்டாவது அது சொல்லப்பட்ட விதம்.
இத்தனை துல்லியமான, தேவை எவ்வளவோ அவ்வளவு மட்டுமே சொல்லும் புற வயமான சித்தரிப்புகள் வழியே, முற்றிலும் abstract ஆன ஒன்றை மிக லாவகமாக sub text இல் விரிய வைத்து விடுகிறது கதை.
சின்ன சின்ன சித்தரிப்புகள் வழியே நகரும் கதை, பற்றி எரியும் வண்ணம் நிற்கும் மருதாணி செடியில் கவித்துவ உச்சத்தை எட்டி விடுகிறது. மொத்த கதையும் அங்கே அனைத்தையும் விட்டு உதறி எழுத்து பறக்க தவிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல் தனது கால்களை கழுவிவிடும் அப்பாவின் தோள்களை பற்றியபடி அவள் வானத்தில் காணும் நகரும் நட்சத்திரங்கள்… உலகின் எந்த மொழிக்கு இக்கதை சென்றாலும் அங்கே இதன் வாசகன் இந்த இடத்தில் மனம் நெகிழாது இந்த சித்திரத்தை அவனால் கடக்க இயலாது.
கச்சிதமான Craft ஆகவும், உன்னதமான art ஆகவும் மிக சரியாக கலவையில் அமைந்த கதை இது.
கடலூர் சீனு
~
பொதுக்கேள்விகள்:
அன்புள்ள சுசித்ரா,
விவாதத்தளம் என்றால் என்ன? சுரபியை ஏன் விவாதத்தளம் என்று சொல்கிறாய்?
இந்துமதி
அன்புள்ள இந்து,
பொதுவாகவே இலக்கியச் சிற்றேடுகளில் கடிதப் பகுதிகள் முக்கியமானவை. ஏனென்றால் அங்கு தான் பிரசுரிக்கப்படும் படைப்புகள் மீது வாசகனின் எதிர்வினை வெளிப்படுகிறது. இதைத்தான் ஒரு படைப்பு வெளியான பின் அது சார்ந்து நடக்கும் விவாதம் எங்கிறேன். இத்தகைய எதிர்வினை எத்தகைய கருத்தாகவும் இருக்கலாம். கதை மீதான ஒரு வாசிப்பை முன்வைக்கலாம். கதையில் தான் ரசித்தப் புள்ளிகளை குறிப்பிடலாம். இன்னொரு கதையுடன் ஒப்பிட்டு எழுதலாம். அல்லது விமர்சனமாக இருக்கலாம். வாசகர்களின் எதிர்வினைகள் வழியாகத்தான் இலக்கியம் வளர்கிறது. இலக்கியம் நிகழும் களம் வாசகரின் அகமே.
இன்று பல இணைய இலக்கியச் சிற்றேடுகளிலும் கமெண்ட் பகுதியில் இத்தகைய விவாதங்கள் நிகழ்கின்றன. கமெண்டுகள் வாசக எதிர்வினைகள் தான். அவற்றில் நல்ல விவாதங்கள் நடந்தேறுகின்றன. நீலி இதழிலோ, வல்லினத்திலோ, அகழ் இதழிலோ இதைக் காணலாம்.
ஆனால் கமெண்டுகள் அந்தப் பதிவோடு நின்று விடுகின்றன. அந்தப் பதிவை வாசிப்பவர்கள் அதைப் படிக்கலாம். இருந்தாலும் அவை பதிவோடு இணைந்துள்ளன என்பதால், ஒரு பொது விவாதம் வழியாக பதிவுக்கு அதிகப்படியான கவனம் என்ற நிகழ்வு நடப்பதில்லை.
இது ஓரளவு முகநூலில் நிகழ்கிறது. ஆனால் அங்கு வரும் எதிர்வினைகள் வெறும் கமெண்டுகள் தான். ‘கமெண்ட்’ என்ற சொல்லும் எதிர்வினை என்ற சொல்லும் ஒன்றல்ல. எதிர்வினையில் வினைச்செயல் உள்ளது. ஓர் ஊக்கமிகுதி உள்ளது. கமெண்ட் என்ற சொல்லிலேயே ஒரு விட்டேத்தித்தனம் உள்ளது. இந்த விட்டேத்தித்தனம் இலக்கியத்துக்கு எதிரானது.
ஆகவே சுரபி இதழில் கமெண்டு பகுதி இல்லாமல், கடிதங்களாக வெளியிட்டால் என்ன என்று பரிசோதனையாகச் செய்து பார்க்கிறேன். ஆகவே இதை ‘விவாதத் தளம்’ என்கிறேன்.
இதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உண்டு. கமெண்ட் என்றால் வாசித்ததும் எழுத வசதியாக உள்ளது. கடிதம் என்றால் மின்னஞ்சலில் எழுத வேண்டும். கமெண்ட் என்றால் படைப்புடன், அல்லது அதன் ஆசிரியருடன் உரையாடுவது போல் வாசகருக்குத் தோன்றலாம். கடிதம் என்றால் இதழுடன், அல்லது இதழாசிரியரிடம் உரையாடுவது போல் தோன்றக்கூடும். அதைச் சிலர் விரும்பாமல் இருக்கலாம், தவிர்க்கலாம்.
இருந்தாலும் இதுவே வழி என்று தோன்றுகிறது. ஆகவே சுரபி இதழ் நீடிக்கும் வரை, இதழுக்கு வரும் கடிதங்கள் இதே வடிவத்தில் வெளிவரும். இவ்விதழின் வாசகர்கள் படைப்புகளை வாசித்து கடிதம் எழுதினால் மகிழ்வேன்.
அன்புடன்,
சுசித்ரா
~
பலர் கேட்ட ஒரு கேள்வி – ஏன் என் படைப்பு நிராகரிக்கப்பட்டது?
சுரபி இதழ் தொடங்கப்பட்ட இந்த ஒன்றரை மாதத்தில் இதுவரை ஒன்பது படைப்புகள் அனுப்பப்பட்டன. ஒன்று மட்டுமே பிரசுரமாகியுள்ளது. இந்த இதழில் என் கதையை பிரசுரித்துள்ளேன். பிரசுரத்துக்கு முன் நான் மதிக்கும் இரண்டு வாசகர்களின் எண்ணங்களை பெற்றே பிரசுரித்தேன்.
இன்று வெளிவரும் சிற்றிதழ்களில் ஒரு குறைப்பாடென எனக்குத் தோன்றுவது அவற்றில் ஆசிரியர் தேர்வும் மதிப்பீடும் தீவிரமாகக் கையாளப்படுவதில்லை என்பது. சுரபி இந்த போக்கிலிருந்து விலகி நிற்க முற்படுகிறது.
சுரபியில் ஓர் ஆசிரியரின் சிறந்த வெளிப்பாடுகளை மட்டுமே பிரசுரிப்பது என்ற கொள்கை கொண்டிருக்கிறேன். நீங்கள் மேலும் சிறந்த கதைகள் எழுதியிருக்கிறீர்கள். அவற்றை மீள் பிரசுரம் செய்து அவற்றின் மீது விவாதம் மேற்கொள்ளவுள்ளேன். இந்தக் கதையில் மேலதிகமாகத் திரண்டு வரும் கலைக்கணம் ஒன்று நிகழவில்லை என்பது என் அபிப்பிராயம். ஆகவே நிராகரிக்க நேரிட்டது. ஒரு நல்ல சிற்றிதழ்களின் நிராகரிப்பு விகிதம் எப்போதுமே அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இது முற்றிலும் அகவயமான ஒரு தேர்வு, உண்மை தான். ஆனால் இலக்கியம் என்பதே பெரும்பாலும் அகவயமாக நிகழும் ஒரு செயல்பாடு தான் அல்லவா? ‘இது என் ரசனை’ என்று சொல்வது முதல் படி. ‘ஏன் என் ரசனை இப்படி இருக்கிறது’ என்று சொல்வது இரண்டாவது படி. இவற்றை வாசகர்கள் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். சுரபி என்னுடைய தனிப்பட்டக் கருத்துக்களால் வழிநடத்தப்படுகிறது. அது போன்று ஒவ்வொரு வாசகரும் அவருடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்த ஒரு தளம் தொடங்கி அதில் பதிவு செய்யலாம் அல்லவா? இன்று தனி உரையாடல்களில் இந்த பேச்சுக்கள் நிகழ்கின்றன. அவை பொதுவில் நடந்தால் நம் சூழல் இன்னும் நேர்மையாக, இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கும் என்பது என் கருத்து.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டியே சுரபியைத் தொடங்கினேன். சுரபியில் வெளியாகும் படைப்புகள் மீது உங்களுக்குக் கருத்துகள், விமர்சனங்கள் இருந்தாலும் எழுதவும். இந்த உரையாடல் வழியாக நாம் மேலும் வளர்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பெண் எழுத்தின் ஆழ்விசைகள் என்ன, தொடர்ச்சிகள் என்ன, என்ற என் தேடலை முன்னிட்டு ‘சுரபி’ இதழ் தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக சென்றகால, சமகால பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் ஓர் அறிவுறுத்தும் தன்மை இருப்பதை கவனித்தேன். அதை புரிந்துகொள்ளும் நோக்குடன் ஆசிரியர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
அன்புள்ள ஜெ,
தமிழிலும் வேற்று மொழிகளிலும் சென்ற காலங்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடு பல வகைகளில் இருந்துள்ளது. ஆனால் ஒன்று குறிப்பாக வந்துகொண்டே இருக்குறது. எல்லா மொழிகளிலும் சில பெண் எழுத்தாளர்கள் அந்தந்த காலகட்டத்தின் ஒழுக்கக்காப்பாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து இல்லையென்றாலும் மிகப்பரவலாக வாசிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.
அவர்கள் நல்லுபதேசம் செய்கிறார்கள். குடிக்காதே என்கிறார்கள். அடிமை முறையை எதிர், பெண்களை ஒழுங்காக நடத்து, குழந்தைகளை அடிக்காதே என்றெல்லாம் கூறுகிறார்கள். அக்காத்தனமாகவும் அம்மாத்தனமாகவும் மாறி மாறி கொஞ்சியும் அதட்டியும் பேசுகிறார்கள்.
இவர்களில் சிலர் மரபுவாதிகள். சிலர் இலட்சியவாதிகள். பலர் நடைமுறைவாதிகள். மரபுவாதிகளாவது ஒரு மதிப்பீட்டின் பின்புலத்திலிருந்து பேசுகிறார்கள். நடைமுறைவாதிகள் சொல்வதெல்லாம் நடைமுறை சார்ந்து மட்டுமே. அத்தகைய அறிவுரைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுகிறது. எழுத்தாளர் அவ்வாறு அறிவுறுத்தத் தகுதி உள்ளவரா?
ஆனால் அத்தகைய அறிவுரை எழுத்துக்கு ஒரு இலட்சியத்தன்மை உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. “இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது,” என்று சிவசங்கரியைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
என் கேள்வி, ஒரு சூழலில் ஒரு வகையான எழுத்தாளராவது இப்படி ஓர் ஒழுக்கக்காப்பாளராக (moralist), அறிவுறுத்துபவராக இருக்க வேண்டும் என்று ஏதாவது தேவை இருக்கிறதா? சூழலுக்கு இவர்களது பங்களிப்பு என்ன?
அன்புடன்,
சுசித்ரா
எழுத்தின் ஆழ்விசைகளை, வரலாற்றுத் தொடர்ச்சிகளை பற்றி ஜெயமோகன் தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடன் விவாதித்தே இந்தக் கேள்விகளை ஒட்டி என் சிந்தனைகள் கூர்மையடைந்துள்ளன . அவருக்கு என் நன்றி.
என் கடிதத்துக்கு ஜெயமோகன் எழுதிய பதிலை இங்கே வாசிக்கலாம்:
ஆரம்பகால பெண் எழுத்தாளர்கள் பெண்களின் ஒழுக்கத்தை வலியுறுத்தி எழுதியதன் வரலாற்றுச், சமூகக் காரணிகளை அவதானித்துச் சொல்கிறது அவர் பதில். இந்தச் சுட்டியில் உள்ள பெண் எழுத்தாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளும் மிக முக்கியமான ஆவணம்.
அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாக நான் எழுதிய பதிலை இங்கே பிரசுரிக்கிறேன். இந்த விவாதம் வழியாக என் சிந்தனையில் இரண்டு புதிய திரிகள் கிளைத்துத் திரண்டு வந்துள்ளன. இவற்றை வரும் இதழ்களில் மேலும் விரித்து எழுத எண்ணம் உள்ளது.
~
அன்புள்ள ஜெ,
உங்கள் பதிலுக்கு நன்றி. எப்போதும் போல, தொடங்கிய இடத்திலிருந்து பிடித்து மேலேச் செல்ல சில சிந்தனைக் கயிறுகளை அடையாளம் காட்டியுள்ளீர்கள். இதை ஒட்டி என் சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளும் வகையில் சில குறிப்புகளை எழுதுகிறேன்.
தமிழில் இலக்கியம் படைத்தவர்களில் பெண்கள் ஏன் அதிக எண்ணிக்கையில் இல்லை என்ற கேள்வியிலிருந்தே இந்த விவாதம் எனக்குள் தொடங்கியது. அதிலிருந்து, சரி இலக்கியம் என்று வேண்டாம், பெண்களின் சுய வெளிப்பாடு எழுத்தில் எவ்வாறெல்லாம் நிகழ்ந்துள்ளது என்ற கேள்விக்குள் சென்றேன். நவீன யுகம் தொடங்கி இந்த நூற்றி இருபத்தைந்து வருடங்களில் பெண்கள் தங்களை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார்கள்? அதற்கான வரலாற்று, சமூகக் காரணங்கள் என்ன? அதை விட முக்கியமாக ஆன்மீகக் காரணங்கள் என்ன? இவ்வாறு என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் தங்களுடைய ‘ஆழ்நதியைத் தேடி’ என்ற நூல் ஒரு வகையில் துணையாக இருந்தது என்று இத்தருணத்தில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இதன் தொடர்ச்சியாகவே பெண்கள் ஒழுக்கம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதியதைப் பற்றிய கேள்வி எழுந்தது. உங்கள் பதிலில் நீங்கள் பெண்களுக்கான ஒழுக்கத்தைப் பற்றி எழுதிய ஆரம்பக்கால பெண் எழுத்தாளர்களைப் பற்றிக் கூறியிருந்தீர்கள். ஆம், அதுவே தொடக்கம். அதற்கான வரலாற்றுச், சமூகக் காரணிகளை நீங்கள் ஆராய்ந்து எழுதியிருந்தது பல திசைகளில் சிந்தனைகளை கிளர்த்தியது.
ஆனால் பல பெண் எழுத்தாளர்கள் அங்கிருந்து தொடங்கி, மொத்த சமூகத்துக்கும் ஒழுக்கங்களை கற்பிக்கும் இடத்தில் தங்களை வைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதையும் காண்கிறேன். அல்லது அவர்களுடைய செயல்பாடுகளால் அந்த அந்தஸ்தை அடைந்தார்கள். ஆங்கிலத்தில் ஹாரியெட் பீச்சர் ஸ்டோவ் போல. மலையாலத்தில் நீங்கள் குறிப்பிடும் சுகதகுமாரி போல. கன்னடத்தில் சரஸ்வதி பாய் ராஜ்வடே என்ற ஆரம்பக்கால பெண் எழுத்தாளர் உடுப்பி மடத்தின் தீர்த்தர்களை விமர்சித்து, அவர்கள் தங்கள் நடத்தையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி கதை எழுதியிருக்கிறார்.
இங்கே ‘ஒழுக்கம்’ என்பதை அதன் சாதாரண அர்த்தமான ‘morality’ என்பதைத்தாண்டி, ‘சமூகத்தில் தனிநபர் ஒழுகவேண்டியது எப்படி, சமூகம் தனிநபரை நோக்கி ஒழுகவேண்டியது எப்படி’ என்ற பொது அர்த்தம் நோக்கிக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன். சிவசங்கரி போன்றவர்கள் எழுதிய அன்றாட ஒழுக்க புகுட்டல்களிலிருந்து, அம்பை போன்றவர்கள் எழுதிய பெண்ணிய வலியுறுத்தல்களிலிருந்து, சுகதகுமாரி போன்றவர்கள் எழுதிய இலட்சியவாத அறிவுறுத்தல்கள் வரை இந்த நிறமாலையில் வெவ்வேறு வண்ணங்களை காண முடிகிறது.
பெண் எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் ஏன் இந்த நூறு வருட வரலாற்றில் ‘வெறும்’ எழுத்தாளர்களை விட ‘எழுத்தாளர் – சமூகசெயல்பாட்டாளர்’களே அதிகமாகக் காணப்படுகிறார்கள்? இது வரலாற்றின் பரிணாமமாக விளைந்த ஒரு நிகழ்வு மட்டும் தானா? இல்லை அதை விட ஆழமான காரணங்கள் ஏதும் உள்ளதா? இந்தக் கேள்வியை பரிசீலிக்கிறேன்.
ஒழுக்கம் வலியுறுத்தும் எழுத்து தமிழுக்குப் புதியது அல்ல. குறளை அதன் பறந்துபட்ட அர்த்தத்தில் ஓர் ஒழுக்கநூலாக வாசிக்கலாம். அவை ஒரு உலகுநோக்கின், மதிப்பீட்டின் பின்னணியில் விரிவாக தொகுக்கப்பட்டவை. ஆனால் அவ்வையாரின் தனிப்பாடல்களில் வெளிப்படும் இந்தச் ‘செயல்பாட்டு’ அம்சமும், விமர்சனமும், வேறுவகையாக உள்ளது.
“அற்றதலை போக அறாததலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ- வற்றன் மரமனையானுக்கு இந்த மானை வகுத்த பிரமனை யான் காணப்பெறின்”
இந்த ஆவேசத்தின் முகங்களென இந்நூறுவருடத்தில் வெளிப்பட்ட பெண் எழுத்தாளர்களை காணலாம் அல்லவா?
ஆகவே தான் இவர்களை மொத்தமாக ‘முற்போக்கு’ என்றோ, ஒரு கருத்தியல் சார்ந்து செயல்பட்டவர்கள் என்றோ வகுத்திவிட முடியாது என்று தான் நினைக்கிறேன். ஒன்று, இந்த குரலுக்கு ஓர் ஆழ்தொடர்ச்சி இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. மேலும், நீங்கள் சொல்வது போல், பொருட்படுத்தத் தக்க எழுத்தாளர்களை தனித்தனியாகத் தான் ஆராய வேண்டியுள்ளது. அவர்களை ‘அடுக்களை எழுத்தாளர்கள்’ என்றோ ‘பெண்ணிய எழுத்தாளர்கள்’ என்று வகுப்பது எளிமைப்படுத்தும் பிழை என்ற எண்ணமே இன்று உள்ளது.
இது முதல் சிந்தனைத் திரி.
*
இரண்டாவது திரி நீங்கள் குறிப்பிடும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்குகிறது. இந்தியச் சூழலில் பெண்கள் பொதுவெளிக்கு வந்து பேசவும் எழுதவும் முற்பட்டது 1900-ங்களின் தொடக்கத்தில்தான் என்ற உங்கள் அவதானிப்பிலிருந்து.
இந்த யுகமாற்றத்தின் தருணம் என் உள்ளத்துக்கு மிக அணுக்கமான ஒன்று. நினைக்க நினைக்கக் கிளர்ச்சியூட்டக்கூடியது. ஒரு மாபெரும் வெடிப்பின் கணம் அது. ஒரு வகையில் ஒரு பிக் பாங்க். இந்தியப் பெண்கள் வீட்டை விட்டுக் கிளம்பி வெளிக் உலகுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்த முதற்காலம். மானுட வரலாற்றில் இதற்கு முன் எந்த யுகத்திலாவது இந்த அளவுக்கு பெண்கள் புற உலகை அறிந்திருக்கிறார்களா?
சென்ற யுகங்களில் மனிதர்கள் அனைவருக்கும் எல்லைக்குட்பட்ட வாழ்க்கை தான், உண்மை. ஆனால் பெண்களின் வாழ்க்கை உடலை, உணவைத் தாண்டி வெளியேற வழியே இல்லாமல் இருந்தது. அந்த நிலை தீர்ந்தது. இங்கே அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நான் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தியம் இல்லை. அதைச் சாத்தியமாக்கியது வீட்டிலிருந்து வெளி நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த பெண் முன்னோடிகள் தான். அந்த முன்னோடிகள் வீட்டிலிருந்து வெளியில் அடி எடுத்து வைத்த நிகழ்வு சமீப வரலாற்றின் முக்கியமான படிமங்களில் ஒன்று என்ற எண்ணம் எனக்கு உள்ளது.
தாகூரின் புகழ்பெற்ற நாவல் ஒன்றின் பெயர் ‘வீடும் வெளியும்’. நவீன யுகத்தின் ஆதாரமான மோதலை இந்த நாவல் ஒரு படிமம் போல் சித்தரித்தது. கணவன் நிகிலுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் மனைவி விமலாவின் வாழ்க்கைக்குள் நிகிலின் நண்பன் சந்தீப் நுழைகிறான். நிகில், சந்தீப், இருவருமே சுதந்திரப்போராட்டத்தில் நாட்டம் உள்ளவர்கள். நிகில் மிதவாதி, மரபுவாதி. மாறாக சந்தீப் தீவிரமான, நேரடியான ஆக்கிரமிப்புகளில் நம்பிக்கை உள்ளவன். அவன் தீவிரத்துக்கு ஆட்பட்டு விமலா மெல்ல மெல்ல ‘வீட்டின்’ பாதுகாப்பிலிருந்து ‘வெளி’க்குச் செல்லத் தொடங்குகிறாள். சந்தீப்பின் செயல்பாடுகளுக்காக தன் வீட்டிலிருந்தே பணம் திருடிக் கொடுக்கிறாள். அந்தச் செயலின் கள்ளத்தனம் அவளை மிகுந்த குற்றவுணர்வுக்கும் அசௌகரியத்துக்கும் ஆளாக்குகிறது. வீட்டிலிருந்து விலகிவிட்டது போலத் தோன்றுகிரது. வெளியிலும் தனக்கு இடம் இல்லை என்று தெரிகிறது. இந்தியா நவீன யுகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் அதில் உண்டான குழப்பங்களை உணர்த்தும் வகையில் இந்த நாவலின் கதையை தாகூர் உத்தேசித்தார் என்று சொல்லப்படுவதுண்டு.
ஆனால் இது இந்தியப்பெண்ணின் கதையும் கூட அல்லவா? நவீன யுகத்தில் வெளியுலகம் பெண்ணை அழைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த அழைப்பு தன் பொறையின் இழப்பு என்ற உணர்வும் அவளை விட்டு அகலாது இருந்தது. இந்தியாவை பொறுத்தவரையிலாவது, இந்த நூறாண்டு வரலாற்றில் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட முதன்மையான சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது. பெண் எழுத்தில் ஒரு பெரும் பகுதியை, அது இந்த வீடு x வெளி முரணை எப்படிக் கையாண்டது என்பதைக் கொண்டு வகுத்துவிடலாம் என்று தோன்றுகிறது. எவ்வளவு தூரம் வெளியே செல்லலாம்? என்பதே ஆதாரக் கேள்வியாக இருந்தது. இந்த விவாதத்தில் வீடு, வெளி, இரண்டையும் நேரடியாக வீடும் வெளியும் என்று பொருள் எடுக்காமல் அதன் பறந்துபட்ட அர்த்தத்தில் அகம், புறம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வெளிக்குள், அல்லது புறத்துக்குள் நுழைந்த ஆரம்பகால பெண் எழுத்தாளர்கள் பெண் தன்னை புறத்துக்குத் தக்கவாறு எவ்வாறு வகுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ந்து வெளிப்படுத்தினார்கள். மெல்ல மெல்ல, இரண்டாம் கட்டமாக, புறம் தன்னை பெண்ணுக்கு ஏற்றவாறு எவ்வாறு மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள்.
இந்த இரண்டாம் நிலை மாற்றம் தான் இந்த யுகத்தின் தனித்தன்மை என்று நினைக்கிறேன். நம் மரபில் எழுதிய பெண் கவிஞர்களோ, காப்பிய கதாநாயகிகளோ, ‘புறத்துக்கு’ வந்த ‘அகப்படிமங்கள்’ தான். அவர்கள் தங்களுக்கேற்ப ‘புறம்’ மாறவேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைக்கவில்லை. காரைக்கால் அம்மைய்யார் அகத்தை விட்டு புறப்பட்ட போது தனக்கான இடத்தைச் சுடலையில் அமைத்துக்கொண்டார்கள். மணிமேகலையின் இடம் மகாயான பௌத்தத்தின் நகர்வுகள் வழியாக வெளிப்பாடு கண்டது. இவர்களை அசாதாரண தனி மனிதர்கள் என்று கொள்ளலாம். ஆனால் இன்று பெண்கள் ஒரு வகுப்பாக புறத்தின் பகுதியாகவும், புறத்தை தங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளவர்களாகவும் மாறிவிட்டனர். இந்த கொடுத்தல்வாங்கலையே தங்கள் எழுத்து மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
சமூக அளவில் மட்டும் அல்ல, உளவியல் ரீதியாகவும் புறத்தில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்ற வகையில் எழுதியுள்ளார்கள். தமிழில் சூடாமணி மற்றும் அம்பையின் கதைகள் நல்ல உதாரணம். சூடாமணியின் ‘செந்திரு ஆகிறாள்’ என்ற கதையோ, ‘நான்காவது ஆசிரமம்’ என்ற கதையோ, பெண்ணின் அகம் அடைய விரும்பும் நிலைகளைப் பற்றிப் பேசுபவை. ஆனால் மறைமுகமாக அதற்கு புறம் எவ்வாறு உருமாற வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துபவை.
ஒவ்வொரு தலைமுறையும், வீட்டை மேலும் சற்று துறந்து, வெளிக்குள் மேலும் சற்று சென்றார்கள். ஒவ்வொரு தலைமுறையும் வெளியை மேலும் சற்று வீடு போல் மாற்ற முயற்சித்தார்கள்.
இன்று பெண்ணுக்கு வெளியின் பல பகுதிகள் வீடு அளவுக்கே பாதுகாப்பாக உள்ளன. வீட்டுக்குள் வெளி வரத் தொடங்கிவிட்டது. வீடும் வெளியும் அத்தனை பிரிந்த நிலைகளாக இல்லை. இன்று பெண்ணெழுத்தில் வீடும் வெளியும் என்னவாக பொருள்படுகின்றன என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. இந்த கோணத்தில் இன்றைய எழுத்தை ஒட்டி ஒரு வாசிப்பை நிகழ்த்தலாம்.
*
இந்த விஷயங்களுக்கும் படைப்பிலக்கியத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். பெண்களை சமூகத்துக்கேற்ப தயர் படுத்துவதும் சரி, சமூகத்தை பெண்களுக்கு ஏற்ப மாற்றி வடிப்பதைப் பற்றியும் சரி – இந்த விஷயங்கள் தமிழைப் பொறுத்தவரையிலாவது மிகச் சாதாரணமான வெகுஜன எழுத்தின் பகுதியாகத் தான் எழுதப்பட்டுள்ளது.
இதன் உள்ளோட்டங்களை ஆராய்ந்த படைப்புகள் தமிழில் வெகு குறைவு – அதை எழுதியவர்களும் ஆண் எழுத்தாளர்களே. அதாவது, பெண்ணுக்குத், தன் ஆழ்மனதில், வீடும் வெளியும் என்னவென்று பொருள்படுகிறது? ஏன் வெளியை அடைய நினைக்கிறாள்? வெளியில் வீட்டின் எந்த அம்சத்தை விரும்புகிறாள்? வீடே அற்ற வெளியை பெண்ணால் எதிர்கொள்ள முடியுமா? வீடு, வெளி – இரண்டுக்குமான அல்டிமேட் மீனிங் என்பது என்ன? – இந்தக் கேள்விகளை ஒட்டி ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலையோ, உங்கள் ‘கன்யாகுமரி’ நாவலையோ வாசிக்கலாம்.
ஆனால் இந்த நகர்வின் வரலாறே ஒரு படைப்பிலக்கியவாதிக்கு நல்ல கச்சா பொருள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒரு யுகத்துப் பெண்களின் மனதுக்குள் புகுந்து பார்க்க ஒரு நல்ல வாசலாக அமைகிறது.
நவீனம் தோன்றியபோது ஒவ்வொரு இனக்குழுவும், மதக்குழுவும் தங்கள் இடத்துக்காகப் போறாடினர். புதிதாக உருவாகி வந்த நவீன புறவுலகில் தங்களுக்கான இடத்தை பெயர்த்து எடுத்துக் கொண்டனர். பெண்கள் அவ்வாறு செய்யவில்லை. ‘பெண்கள் கட்சி’ என்று ஒன்று இல்லை. தத்தம் ஆண்களின் உலகின் பகுதியாகவே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். நூறு வருடங்களில் இந்த நிலை மாறவில்லை. ‘பெண் விடுதலை’ என்பதே இங்கே அளவுக்குட்பட்ட ஒன்றாகத்தான் வகுக்கப்பட்டுள்ளது – அந்த அளவு என்ன, எதுவரை, என்பது தான் ஒவ்வொரு தலைமுறையும் விவாதிப்பது. அப்படியென்றால் பெண்களுக்கு உண்மையிலேயே சுதந்திர நாட்டம் உள்ளதா என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.
ஒருவேளை இன்றைக்கு எழுதும் ஒரு பெண் எழுத்தாளர் – அல்லது நாளைக்கு எழுதப்போகிறவர் – இந்தக் கேள்விகளை நேர்மையாக எழுப்பி ஆராய முடியும். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அதற்கு முன்னால் அவர் வீடு, வெளி – இரண்டிலிருந்துமே அந்தரங்கமாக விலக்கம்கொண்டிருக்க வேண்டும். அந்த விலக்கத்திலிருந்து தான் நல்ல இலக்கியம் உருவாகும் என்று நினைக்கிறேன்.