Reading view

எஞ்சுவதே கலை – டி. எம். கிருஷ்ணா

புழல் சிறைவாசிகளுக்கு கலை வடிவங்களைக் கொண்டு செல்லும் திட்டம் ஒன்றினை, பாடகர் டி.எம். கிருஷ்ணாவும், சில தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து கடந்த ஆண்டில் நடத்தியுள்ளனர். எட்டு மாத காலம் நடந்த இவர்களின் ’சிறைகளில் கலை’ எனும் திட்டத்தின் விளைவாக அங்கு சிலபல கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த முயற்சிகளைப் பற்றிய பகிர்வுகள் இம்மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிக் கல்வி இயக்குனரக வளாகத்தில் உள்ள மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி அரங்கில் நடைபெற உள்ளது. அதன் முதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறையினுள் நடைபெற்ற பயிற்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சியோடு இத்திட்டம் குறித்த ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. இத்திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய பாடகர் டி.எம்.கிருஷ்ணாவும், பிராஜக்ட் 39 ஏ அமைப்பைச் சேர்ந்த மைத்ரேயி மிஸ்ராவும் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினர். அதன் இறுதியில் கேள்விபதில் பகுதியும் இருந்தது.

சிறைவாசிகளை குணப்படுத்தும் அல்லது மேம்படுத்தும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே கிருஷ்ணா தெளிவுபடுத்திவிட்டார். சிறைவாசிகள் என்றோ குற்றவாளிகள் என்றோ அங்கிருப்பவர்களை வரையறுப்பது தவறு என்ற கிருஷ்ணா, இல்லத்துவாசிகள் என்றே அவர்கள் தங்களவரைக் குறிப்பிடுவதாகவும், அதையொட்டி தாங்களும் இன்மேட்ஸ்(In mate) எனும் வார்த்தையையே அவர்களோடு தொடர்புபடுத்துவதாகவும் தெரிவித்தார். வாழ்வின் ஒரு கட்டத்தில், அவர்களின் செயல்கள் சட்டத்திற்கு புறம்பானவையாக அமைந்திருக்கலாம். அதற்காக அவர்கள் சட்டபூர்வமாக தண்டிக்கப்படுவதும் இயல்பே. அதைத்தாண்டி அவர்கள் மனிதர்களே அல்ல என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. அவர்களும் மனிதர்களே என்று உணர்ந்தால், கலையை அணுக அவர்களுக்கும் உரிமை உண்டுதானே என்ற எண்ணத்தில் எழுந்தது இத்திட்டம் என்று குறிப்பிட்டனர். நாகஸ்வரம், தவில், பறையாட்டம், கீபோர்ட், வாய்ப்பாட்டு, நாடகம், ஓவியம், சுடுமண் உருவங்கள் வனைதல் என பலவகைக் கலைகளையும் கற்பித்த ஆசிரியர்களில் சிலரும் அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். கற்பித்த ஆசிரியர்களில் பெண்களும் உண்டு என்பதும், ஆரம்பத்தில் ஆண்களின் சிறைப்பகுதிக்குள் செல்ல இருந்த சிறு மனத்தடைகள் நாளடைவில் எப்படி கரைந்தன என்பதை அவர்களே சொன்னதும் நெகிழ்வாக இருந்தது. நாகஸ்வரம் பயிற்றுவித்தவரோ தனது அனுபவத்தில் இத்தனை விரைவாகக் கற்றுக் கொண்டவர்களை பார்த்ததில்லை என்றார். பெரும்பாலானவர்களுக்கு அக்கருவியில் ஒலியை எழுப்பவே சில மாதங்கள் எடுக்கும் நிலையில் இவர்கள் ஆறு மாத கால பயிற்சியில் ஓரளவு பாடல்களை வாசிக்கும் திறன் பெற்றிருப்பது குறித்த தனது வியப்பையும், மகிழ்வையும் பகிர்ந்து கொண்டார்.

பிறகு கிருஷ்ணா பக்க வாத்தியங்களின் குறுக்கீடுகளற்ற ஒரு இசை விருந்தினைப் படைத்தார். நாம் அவன் இவன் உவன் எனத்தொடங்கும் நம்மாழ்வார் பாசுரம், பெருமாள் முருகன் எழுதிய அன்பு பற்றிய குறுங்கவிதை ஒன்று, இறுதியில் அசோகரின் தம்மம் பற்றிய கூற்றுகள் சில என மூன்று பாடல்களை எடுத்துக் கொண்ட கிருஷ்ணா, அவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கிவிட்டு, மரபிசைக்கே உரிய மிக விரிவான வடிவில் பாடினார். ஒவ்வொரு பாடலுக்குப் பிறகும் அங்கிருந்த அனைவரையும் அது குறித்து உரையாடவும் அழைத்தார். மிகுந்த நட்பார்ந்த தொனியில், மற்றவர்களின் கருத்துக்களை ஒட்டி தனது பார்வையையும் விவரித்தபடியே அவர் பாடியது மிக மிகப் புதுமையான ஒரு வடிவமாக இருந்தது. இப்படியானதொரு இசை நிகழ்விற்கு முன்மாதிரிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பெருந்தொற்றுக்கால தனிமைச் சூழலில் இவ்வகை வடிவத்தை தான் கண்டடைந்ததாகச் சொன்னார் கிருஷ்ணா.
நிகழ்வு முடிந்ததும் அவரிடம் எழுதாப் பயணம் நூலை அளித்தேன். நிகழ்வு தொடங்கும் முன்னரே கனியை அவருக்கு அறிமுகம் செய்வித்திருந்தேன். கிளம்பும் முன் அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிறைவாசிகளுக்கு நூல்கள் சேகரித்துத் தருவதையும் இக்குழுவினர் செய்கிறார்கள். எனவே விரும்புவோர் மீதமுள்ள 3 சனிக்கிழமைகளில் மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டிக்கு சென்று புத்தகங்களை கொடுக்கலாம்.

பேச்சின் நடுவில் கலை என்பது என்ன என்று விவரிக்க முற்பட்ட கிருஷ்ணா “மனிதர்கள் தான் உணரும் ஒன்றை பிரதி செய்ய முயல்கின்றனர். ஆனால் ஒருபோதும் அசலை முழுமையாக பிரதி செய்ய முடியாது என்பது நம் அனைவருக்குமே தெரியும். நாம் உணர்ந்த ஒன்றின் சாரத்தை நாம் புரிந்து கொண்ட வகையில் வெளிப்படுத்துவதே கலை” என்றார். அந்த வரையரையின் ஆழத்தை வியந்தபடியே வெளியே வந்தோம்.

  •  

கவலைக் கடலைக் கடியும் வடிவேல்

வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘நான் கண்ட நால்வர்’ எனும் நூலில் மகா கவியைப் பற்றி ‘கவிக்குலக் கோன்’ எனும் தலைப்பில் தான் கண்டும், கேட்டும் அறிந்த நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து ஒரு நிகழ்ச்சி…

*********
பாரதியார், இனிமையான சாரீரம் படைத்தவரல்லர்; ஆனால் உணர்ச்சியோடு பாடுவார்; கேட்டுக் கொண்டிருக்கிறவர்களையும் உணர்ச்சி வசப்படுத்திவிடுவார். காரணம், அவர் உணர்ச்சிமயமாய் இருந்தார்.

பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீஸ் ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாண சுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தை பெரிதும் கவர்ந்துவிட்டது. “முருகா, முருகா, முருகா” என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின் மீது லேசாகப் படிந்து, முருகனுடைய திருவுருவத்திற்குத் தனிச் சோபை கொடுத்தது. “வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்” என்ற சரணத்தை அவர் பாடி, அதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவது போலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்களானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார்.
*******
நாளை திருக்கார்த்திகைத் திருநாளில், குமரனின் புகழ்பாடும் பாடலைக் கேட்டு மகிழ, கனியின் குரலில் அப்பாடலை இன்றே கனி மியூசிக் வோர்ல்ட் சேனலில் ஏற்றியுள்ளோம்.

  •