Reading view

உப்பு, புளி,மிளகாய்

உப்பு, புளி,மிளகாய்.  (கவிதை)

எஞ்சி நின்ற 

நாலு வார்த்தைகளும் 

வெளியேறிவிட்டன. 

கதவிடுக்கில் 

மாட்டிக்கொண்ட 

வாழ்க்கை 

உப்பு புளி மிளகாய் 

எதார்த்தத்தை 

பதார்த்த மொழியில் பேசின. 

காலாற 

நடந்து சென்று 

காட்டைக்காண முடியவில்லை. 

தொலைந்துப்போன 

வில்லைத்தேடி 

அர்ச்சுனர்களும் 

அழவில்லை. 

ஆகாயத்தை 

அண்ணாந்துப்பார்க்க 

அடுப்பங்கரை விடவில்லை. 

பெருங்காய டப்பாவில் 

எந்த கவிதையை தேட.

ஒளவைக்கு என்னமோ 

அதியமான் கிடைத்தான். 

நெல்லிக்கனி 

கொடுத்தவள் 

முருகனிடம் முறையிட்டாள் 

திரும்பி வா!

தமிழுக்கு உயிர் கொடு. 

கேட்டான் 

வேலவன் 

கிடைத்தது 

அருந்தமிழ் தவம். 

முருக்கப்ப செட்டியாரிடம் 

ஒரு மாத 

மளிகை பாக்கி 

முருகனை காண்பித்து 

சத்தியம் செய்தேன். 

அடுத்த மாதம் 

கதைக்காசு வருமென்று 

சொல்ல ஆரம்பித்தவுடன் 

போனவருடம் வந்த 

என் கதை 

கசங்கிய காகிதத்தில் 

மடித்துக்கொடுத்தார் 

மிளகாய் பொட்டலத்தை. 

குழம்பு 

மணக்க வில்லை. 

கட்டியவள் திட்டினாள் 

ஒன்னுக்கும் உதவா 

“எழுத்துக்காரன்”.

ஒளவையே 

இது தகுமா 

இது முறையா 

சொல் !சொல்!!

எந்த 

காற்சிலம்பை 

உடைப்பேன் 

கண்ணகியின் 

கோபம் தீர. 

  =ஜெயானந்தன்.

  •  

மக்களே! 

ஓடும் நதியில்தான் 

எல்லா அசடுகளும் ஓடுகின்றன.

கற்பை எண்ணி 

எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில். 

யோனிக்கழுவ 

ஒரு கை 

நீர் போதும் 

கண்ணகிக்கும், மாதவிக்கும் .

கோவலன்தான் 

யாழை வாசிக்கின்றான்

பெண்துணை தேட. 

பூத்துக் குலுங்கும் 

மலர்ச்சோலை 

வருணப்பாக்களில் 

கவிதை படுவதில்லை. 

பாடும் வண்டும் 

பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி விழும் 

அருவிகளும் 

காலடிச்சுவடுகளில் 

ஜாதகம் தேடுவதில்லை. 

ஆணோ பெண்ணோ 

அனைத்து மகிழ 

காமதேவன் பாடலில் 

கறுப்பு வெண்மை 

நிறங்கள் இல்லை. 

மனோரத தேரில் ஏறி 

பயணம் செய்ய 

விசாலமான சக்கரங்கள் தேவை. 

காடு எங்கும் 

காத்துக்கிடக்கின்றன 

வயோதிக்கத்தை தின்ன.

அதற்குள் வாழ்ந்து விடு 

பூமியெங்கும் 

உனக்கான 

பள்ளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பட்டினத்தார் 

அடுத்த சந்தில் 

சங்கை ஊதிவிட்டார். 

அரிச்சந்திரன் 

கங்கை அருகே 

காத்துள்ளான் 

மக்களே!

  •  

இதற்குத்தானா?

    ஜெயானந்தன்

ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி, 

ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின், 

காம சொருபத்தை காட்டும், ஒரு லேபிள். 

தி.ஜா.வும் இந்த லேபிளுக்குள் அடைப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுதான், இதை எழுதியிருக்க முடியும். ஒருவித, உடல் சார்ந்த எதிர்பார்ப்பு எப்பவும், தி.ஜா..எழுத்தில் வெளியே வர துடிக்கும் நப்பாசையின் உணர்ச்சிக்குரலகவே கேட்கின்றது .

ஆண் தேடும் பெண், கடைசியில் அடைவது பெண்ணைத்தானே. 

இதில், காமம் ஒருவித இலக்கிய நயத்தோடு நடந்து, ஒரே பெண்ணை அடைவது என்பதுதான் தி.ஜா.,வின் 

தார்மீக பொறுப்பாக முடிகின்றது. 

அதே நேரத்தில், பல ஆண்கள், பல பெண்கள் என்ற polygamy ஆட்டத்தையும் ஆடுகின்றார், இந்த இலக்கிய தாயக்கட்டை மன்னன். 

வாழ்க்கையை கட்டங்களில் அடுக்கி முறையாக வாழ்ந்த நாட்களில் பிறந்து, வளர்ந்த தி.ஜா.,விற்கு, டெல்லி வாழ்க்கையின் கலாச்சார சீரழிவும், சுதந்திரத்திற்கு பின், இந்திய உயர்மட்ட வாழ்வின் பித்தலாட்ட நாகரீக மோஸ்தரும் இவரது எண்ண ஓட்டத்தை புரட்டிப்போட்டதாக தெரிகின்றது. 

அலங்காரத்தம்மாள் ஒரு ஊறுகாய். 

ஒரு ஆண், ஒரு பெண்ணை அடைய, எடுத்துக்கொண்ட, வாழ்வின் பயணமாகவே மோகமுள்ளை நகர்த்தி செல்கின்றார். 

யமுனாவை, பெண் பார்க்க வருபவர்களை கேவலமாகவும், நையாண்டித்தனமாகவும், யமுனாவிடமே பேசி, பாபு தனது எண்ணத்தில் ஓடும் அவள் மீதான காதல் நதியின் அலையை, கர்நாடக சங்கீத மொழியில் சொல்வது, தி.ஜாவின் சிறப்பான பார்வை. 

அன்றைய தஞ்சை மராட்டிய ஆட்சிக்காலத்தில், பிராமண மிராசுதார்கள், நலிந்துப்போன, அழகில் கலைகளிலும் மிளிர்ந்த மராட்டிய பெண்களை இரண்டாம் தாரமாக வைத்துக்கொண்டு, குடும்பம் நடத்தியுள்ளனர். இது உண்மையான நடப்பியல்தான். அதே நேரத்தில், அந்த குடும்பத்தையும் கடைசிவரை காப்பாற்றியும் உள்ளனர். 

இந்த சரித்திர நிகழ்வை, ஒரு நாவலுக்குள் கொண்டுவந்து, அதனை கொச்சைப்படுத்தாமல், நாவலின் அழகியலை, சிதைத்து விடாமல், நாவல் சிற்பி கையாண்டவிதம், தஞ்சை கோயில்களில் காணப்படும் சிற்பங்களாக தெரிகின்றது. 

அதே நேரத்தில், அன்றைய கட்டுப்பெட்டியான, பிராமண கலாச்சாரத்தில் தேய்ந்த, பிராமண மனைவியானவள், தன் கணவனின் 

ஆசை நாயகி வேற்றின குலப்பெண் என்று தெரிந்தும் அவளையும் தன் குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொள்கின்ற மானோ பாவம், 

திஜாவின், முற்போக்கு எண்ணத்தைக்காட்டுகின்றது. 

இவரது எழுத்தில் பிராமண- மராட்டிய கலாச்சார வாடை வீசுவது, அவர் வாழ்ந்த நாட்களின் குறியீடு. இது ஒரு இலக்கிய சான்றாகவும், தமிழ் இலக்கிய த்தில், பதிவாகியுள்ளது. 

– ஜெயானந்தன்

  •  

இருட்டு 

இரா. ஜெயானந்தன்

அவள் 

அவனின் இருட்டை 

சுமந்து சென்றாள் 

பண்ணிரண்டு வயதில் .

சொல்ல முடியா 

வலி 

இதயம் முழுதும் 

ஊர்ந்து செல்ல 

நான்கு கால்கள் 

மிருகத்தை விட 

கேவலமாக 

பார்க்கப்பட்டாள் 

சமூகப்பார்வையில். 

இருட்டில் மறைந்த 

ஆணை பார்க்க 

மீண்டும் அவள் 

முயலவில்லை. 

ஏனோ எல்லா 

ஆண்களின் முகங்களிலும்

காம விலாசம் பார்த்து 

பயந்தாள் சிறுமி. 

இருட்டைக்கண்டு 

அலறினாள் அலறினாள். 

மசூதிக்கு சென்றார்கள். 

மாரியம்மன் கோயில் 

பேச்சி அம்மனிடம் வேண்டினார்கள்

பெண்ணை பெற்றவர்கள். 

சிறுமியின் கண்கள் 

இருட்டைக்கண்டால் 

கண்ணீர் வடித்தது. 

வீட்டின் மூலையில் 

அடைந்தவள் 

பிறகு 

வெளியே வரவே இல்லை. 

ஆண்களின் 

இருட்டு 

பெண்மையை விழுங்குமா!

இரா. ஜெயானந்தன் 

  •