Reading view

எதிர்பாராதது

எதிர்பாராதது 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சரவணபவ யூனிட்டி பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு, ஸ்ரீதர் கதை வசனம் எழுதியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படம் 1954ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான...

The post எதிர்பாராதது first appeared on Her Stories.

  •  

சினிமாவில் சலனிப்பது அகவெளியா? புறவெளியா? - பகுதி-1

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை பிடித்துவிட்டார்கள். வினை விதைத்தவன் வினையறுப்பான் என்று முதுமொழியாகவோ அல்லது உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்று பழமொழியாகவோ அல்லது எந்த ஒரு வினையும் அதற்கு சமமான எதிர்வினையைக் கொண்டிருக்கும் என்ற நியூட்டனின் விதியையோ காரணமாக்கிக் கொள்ளலாம். சுவாதி கொலை செய்யப்பட்டது கொடுரமானதும், கொரூரமானதும்கூட. அதன் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டியதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒருவாரக்காலமாக தொலைக்காட்சி, சமூகவலைத்தளம், பத்திரிக்கைகள் முன் உட்கார்ந்து அதனைக் கண்ட சமூகமனம் ஒரு ஆறுதலை அடையும். காவல்துறையோடு துப்பறிய பயணித்த சமூகமனம் இப்போது வெற்றியை அனுபவித்து ஆசவாசம் கொள்ளும். நாளை முகநூலில் தனது ரகசிய காதல் உணர்வை முகந்தெறியா யாரிடமாவது நுழைத்து நிலைத்தகவல் போட்டு ரகசிய இன்பம் கொள்ளும். மற்றொரு நிகழ்வுவரை சமூகமனம் தனது சுயத்தின் இன்பத்தில் சாய்ந்துகொண்டு சல்லாபிக்கும். அதன் கண்கள் கட்டப்பட்டு பகல் கனவில் திளைக்கும்.


ஆக, ஊடகங்களின் ஒரு சுவராஸ்யமான சினிமா முடிவிற்கு வந்தவிட்டது. இதை சினிமா என்றவுடன் வாசிப்பவர் கொள்ளும் எரிச்சல், கோபம் நியாயமானதே. காரணம் சினிமா என்றால் பொய், புனைவு, கதை என்பதான கருத்தாக்கத்தின் அடிப்படையில் வரும் கோபமே. ஒருவேளை இந்த கொலை நிகழ்வை ஒருவர் சினிமாவாக எடுக்கக்கூடும். அதில் உண்மைக்கதை என்று துணைத்தலைப்பும் இடக்கூடும். 


வாழ்க்கையிலிருந்து சினிமா என்ற ஒரு கோட்பாட்டை நிலைநிறுத்த முயல சினிமா ஆய்வறிஞர்கள், திறனாய்வாளர்கள், விமர்சகர்கள் முயலலாம். சினிமாதான் உலகை கெடுத்தது என்றோ, உலகை உய்வித்தது என்றோ லாவணிக் கச்சேரிகள் நடத்தலாம்.


சினிமா வாழ்க்கையல்ல. ஆனால் வாழ்க்கை ஒரு சினிமாவாக மாறிவிட்டது என்பதைதான் இத்தகைய சம்பவங்கள் வழிப் பெருக்கப்படும் ஊடகங்கள் உணர்த்துகின்றன. சினிமா வாழ்வின் பாதிப்பு அல்ல. வாழ்வுதான் சினிமாவின் பாதிப்பாகியுள்ளது. வாழ்வில் மறுக்கப்பட்ட (எம்ஜியாராதல் = ரட்சகனாதல்), மறைக்கப்பட்ட (கமலஹாசனாதல் = காதல், காமம்), மறக்கப்பட்ட (ரஜனியாதல் = எதிர்நாயகன்/இரட்சக ரௌடி) (இவை உதாரணங்கள்தான் விரிவாக ஆராயப்பட வேண்டிய தமிழ் சமூக-உளவியல் தளம் இது என்பதை மட்டும் சொல்லிவைப்போம்) இடைவெளிகளை சினிமா இட்டு நிரப்புகிறது.


சுவாதியின் கொலை நிகழ்வு இட்டு நிரப்பியிருப்பது பெண், பெண்மை, பெண் உடல் அதை எதிர்கொள்ளும் ஆண், ஆண்மை, ஆணுடல் மற்றும் அதுசார்ந்த அதிகாரக் கருத்தாக்கமே. சுவாதியின் கொலையை கண்டித்து கண்ணீர் சிந்தி, காய்தல் உவத்தல் இன்றி கடுமையாக எதிர்த்த எல்லா ஆண்மனங்களும், தனக்கு சொந்தமான பெண் உடல்மீது இது நிகழ்ந்துவிடக்கூடாது என்ற பயத்தில் பிதற்றியவையே. தன் வாழ்வு சினிமா அல்ல என்று கொள்ளும் ஆறுதலில் தனது சினிமாவை நிகழ்த்தியதே. இது ஒரு மாய்மாலமான சமூகமனம். தன்முனைப்பும், தன்குடும்ப முனைப்பும் மட்டுமே தானா”-க் கொண்ட சமூகமனம். இடிபலைசேஷன் என்ற குடும்பவயமாதல் என்பதில் உள்ளது இதன் அரசியல். காதலும், காமமும் குடும்பம் என்ற அமைப்பின் உற்பத்திச்சக்தி. அது சமூகத்தில் பாயும்போது கொலையாகவும், தற்கொலையாகவும், ஆசிட் வீச்சுகளாகவும், மார்ப்பிங் ஆபாசப்பட விநியோகங்களாகவும் மாறுகிறது.  


பிரச்சனை சினிமா மட்டுமல்ல. குடும்பம் பழக்கிய நற்குடிகளின் மனத்தளத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட வன்மமே. இந்த வன்மம் மனத்தளத்தில் உறைய காரணமாக அமையும், மத, சாதிய, கல்விக்கூட, வேலைதடதள, நட்பவட்ட, காதல்வட்ட சூழல்கள் முக்கியமானவை. உண்மையில் சினிமாவைப் பார்த்து மக்கள் இதற்குப் பழகவில்லை. மக்களைப் பார்த்தே சினிமா பழகிக்கொண்டுள்ளது. சினிமா என்பது மக்கள் புழங்கும் மற்றொரு வெளி.


சுவாதியின் கொலைநிகழ்வில் காட்டப்பட்ட தீவிரம் எல்லா உடல்களுக்கும், உயிர்களுக்கும் அரசு மற்றும் பொதுமக்கள் நலம் சார்ந்த அமைப்புகளால் தீவிரமாக செய்யப்பட வேண்டும். ஆனாலும். அப்படி நடப்பதில்லை என்பதுதான் அரசின் தேர்ந்தெடுப்புகள் பற்றியும், அதன் அரசியல் பற்றியும் சிந்திக்க வைக்கிறது. குறைந்தபட்சம் ஒரு நிருபயாவும், சுவாதியமாவது சமூக மனசாட்சியை தட்டி எழுப்ப பயன்பட்டிருக்கிறார்கள் என்று ஆறுதலடைந்துக் கொள்ளலாம். இந்த மனசாட்சிக்கு தெரிந்தது எல்லாம் தான் மற்றும் தன் குடும்பம் என்பது மட்டுமே.


சுவாதி கொலையை சாதி, மத சாயம்பூசி சாதிக்க நினைத்த துவேசிகள்? இவ்வளவு தீவிரமாக 10 தனிப்படைகள் அமைத்து ஒருவாரத்தில் கொலையாளியை பிடித்து காவல்துறையின் செயல்பாட்டிற்கு இப்பொழுது என்ன சொல்வார்கள்? கொல்லப்பட்டவர் பெண். கொன்றவன் ஆண். இதுமட்டுமே இதில் தீர்மானகரமானது. இருவருக்கிடையிலான சிக்கல், கொலைக்கான காரணம் இனிதான் வெளிவரும். இப்போது சுவாதிக்கு துடித்தவர்கள் இதுவரை எந்த கொலைகளுக்கு துடித்து எழுந்தார்கள் என்ற கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்வதில்லை. கொலை உடலில் சாதியம், மதம் துவேஷம் பார்க்கும் இந்த பிணந்தின்னிகள்தான் பிற சமூகத்தை, ஒடுக்கப்பட்டவர்களை. சிறுபான்மையினரை பலியிடுவது பற்றி வாய் திற்ககாதவர்கள். இதுதான் சமூக மனசாட்சி. சாதியும் மதமும் நிரம்பிய வன்மம் மிக்க மனசாட்சி.   


இனி சமூகமனசாட்சிப்படி அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும். தீர்ப்பிற்கு பிறகு சினிமாவின் பாகம் இரண்டு வெளிவரும். ஊடகங்கள் வண்ணவணணமாக விவாதம், உரையாடல், பேட்டிகள் என அதை மறுபடியும் காட்சிக்காண் விழாவாக மாற்றும். இடையில் கபாலியின் களேபரம் வேறு உள்ளது. அதை நினைத்தால் இப்பவே வயிற்றை கலக்குகிறது. இனி அவன் சுவாதி ஜீன்ஸ் போட்டிருந்தார் அதனால் கொன்றேன் என்பதுபோன்ற கருத்துக்களை சொல்லி இந்திய பழங்கலாச்சாரத்தை காப்பாற்றாமல் இருந்தால் ஆறுதல்தான். நல்லவேளையாக அவனுக்கு தாடி முளைக்கவில்லை. முளைத்திருந்தால் அவன் இந்தியக் கலாச்சார எதிரியாக சித்தரிக்கப் பட்டிருக்கலாம். 

  

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சுவாதி கொலை எழுப்பிய ஆர்வம் ஊட்டும் உரையாடல்கள்தான். பெண்கள் செல்போனை எப்படி பயன்படுத்துவது துவங்கி காதல், கள்ளக்காதல், பெண்களின் தனிப்பட்ட எழுச்சி என பல உரையாடல்கள். கொலைகாரன், கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், எல்லாவற்றிற்கும் சினிமாவே காரணம் அல்லது சினிமா ஒரு காரணம் என்பதும் இதில் தீவிரமாக உரையாடப்பட்ட கருத்தாக்கங்கள். இது சமூகம்-சினிமா அல்லது அகம்-புறம் அல்லது யதார்தத்திற்கும் சினிமாவிற்கும் உள்ள உறவு என்ன என்பதாக ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதையும், சினிமா குறித்து ஆய்வாளர்கள் இந்த புள்ளியை கவனம் கொல்வதும் முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளது.


சினிமா விமர்சனம், திறணாய்வு என்ற பெயரில் பார்த்த படத்தின் கதையை எழுதி கடைசி பாராவில் தனது கருத்தை எழுதிச் செல்லும் முறையை கைவிட்டு, சினிமா கொள்ளும் சமூக உறவு என்பதிலிருந்தும், சினிமா என்பது ஒரு ஊடகமல்ல அது மற்ற ஊடகங்களிலிருந்து மாறுபடும் முக்கியமான இடம் என்ன என்பது குறித்து கோட்பாடு சார்ந்த விமர்சனங்கள் திறனாய்வுகள் அவசியமானவை. சினிமா குறித்து விவரிக்கப்பட வேண்டிய கோட்பாட்டுத் திறானாய்வுகளின் முக்கியத்துவத்தையே இவை வெளிப்படுத்துகின்றன.


காட்சிகள் ஒரு சட்டகத்திற்குள் துண்டாடப்பட்டு அடக்கப்பட்டு கதையாடப்படுவதே சினிமா. அது திரை அரங்கில் நிகழலாம், தொலைக்காட்சியில் நிகழலாம் அல்லது பார்வையாளனின் மனப்பிறழ்ச்சியில் (பரொனியாவக்கப்பட்ட மனத்தளத்தில்) நிகழலாம். சுவாதி கொலை கொலைகாரனின் மனத்தளத்தில் நிகழ்ந்த சினிமா. உச்சக்காட்சி எக்மோர் கொலை. அது பொதுத்தளத்தில் நடத்திக் காட்டப்பட்டது. பார்வயைாளரான சமூகத்தில் தொடரும் அச்சினிமாவின் உச்சக்காட்சிகள் இனிதான் நிகழும். அதற்காக காத்திருக்கலாம்.


- ஜமாலன் (02-07-2016)

  •