Reading view

நிரலி


மூன்று அறைகள். மூன்றே மூன்று மனிதர்கள்; மேலும் திரையில் தோன்றிப் பேசும் ஒரு சிறுமி. இவ்வளவு மினிமலான செட் பீஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு, நம்மை சிந்திக்கத் தூண்டும் அளவிற்கு ஒரு அறிவியல் புனைவுக் கதையை சுவாரசியமாகத் தந்துவிட முடியுமா? 

டீனா மற்றும் ஏமஸ் எனும் ஸ்பெஷல் ஏஜெண்ட்கள் கேரத் எனும் ஒரு டெக்கியை விசாரிப்பதில் துவங்குகிறது கதை. அவர்கள் ஆன்லைனில் குழந்தைகளைக் குறிவைக்கிற பீடஃபைல்களைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தந்து டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள். தற்சமயம் கேரத் அவர்களது விசாரணை வளையத்தில் அகப்பட்டிருப்பதன் பின்னணி, அவர்களுக்கு எவராலோ அனுப்பி வைக்கப்பட்ட ஒரு ஹார்ட் டிரைவும் அதில் இருந்த செர்ரி (Cherry) எனும் சிறுமியின் படங்களும். அதனை கேரத் சாட் அறைகளில் பேசுகிற பீடஃபைல்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. அவனது பின்புலம் குறித்த சகலமும் அதிகாரிகளின் விரல்நுனியில். ஆனால் தொடர்ந்து தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார் கேரத்.

ஒரு கட்டத்தில் அந்த சன்னல்களற்ற அறையில் அதிகாரிகளின் கிடுக்குப்பிடி கேள்விகளில் இருந்து தப்ப வழியின்றி பெரியதொரு ரகசியத்தை அவர்கள் இருவரிடம் மட்டும் – கசியாமல் அது பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கிற பட்சத்தில் – பகிர்ந்து கொள்ள முன்வருகிறார். வழியின்றி ஒப்புக் கொள்ளும் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. 

செர்ரி ரத்தமும் சதையுமான ஒரு சிறுமி அல்ல என்பதும் சிறுமியின் வடிவில் இருக்கிற செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு நிரல் மட்டுமே என்பதே அந்த ரகசியம். ஆன்லைனில் பீடஃபைல்களை கண்டுபிடித்து அவர்களது நிஜமான தகவல்களை செர்ரியின் உதவியுடன் தரவுகளாக்கி அவற்றை டீனா மற்றும் ஏமஸுக்கு அனுப்பி வைப்பதே அவன் தான் என்று புரிந்து கொண்டு அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். அடையாளமின்மையே தனது செயல்பாட்டிற்கான அடிப்படை பலம் எனவும் அதனை முன்னிட்டே இப்படை செயபடுவதாகவும் பகிர்கிறார். மேற்கொண்டு கேரத் சொல்கிற எதையுமே துவக்கத்தில் நம்ப மறுக்கிற ஏமஸ் பிற்பாடு செர்ரியின் உருவாக்கம் குறித்து கேரத் விரிவாக விவரிக்கவும் நம்பத் துவங்குகிறார். அது 3-டி மாடலாக உருவம் வார்க்கப்பட்டடையும், ஒரு சாட் பாட்டாக வடிவமைக்கப்பட நினைத்துத் துவக்கப்பட்டதையும் பின்னர் இயந்திரக் கற்றலின் (machine learning) விளைவாக செரி தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்ட செயற்கை நுண்ணறிவில் அடுத்த கட்டத்திற்கு (super intelligence) மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதைக் குறித்தும் அறிய வருகிறார். மூவருடைய குறிக்கோளும் ஒன்றென்பதால் கரம் கோர்க்கிறார்கள். 

ஆனால் கதையின் துவங்கும் விதம்தான் இதுவே ஒழிய அதன் போக்கு இது பற்றியது அல்ல. செயற்கை நுண்ணறிவு கொண்ட மீஅறிவு கொண்ட உயிரியான (!) செர்ரியின் பரிணாமம் குறித்த கற்பனையாக கதை விரிகிறது. இதிலுள்ள தத்துவார்ந்த கேள்விகளையும், இது சார்ந்த சிக்கல்களையும் முன்வைக்க முயலுகிறது. செயற்கை நுண்ணறிவுத் திறன் நிஜ மனிதர்களுக்கும் நிரல்வடிவிலுள்ள ஏ.ஐ களுக்குமுள்ள வேறுபாடு நாளடைவில் நீர்த்துப் போகச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கதை தன் இயல்பான போக்கில் எடுத்துக் காட்டுகிறது. 

மனிதர்களுக்கே சுதந்திர விருப்பம் (free will) இருக்கிறதா இல்லையா என்பது ஒரு தத்துவ விவாதத்திற்கு உட்பட்ட கருத்து என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏ.ஐ களுக்கு இத்தகைய விருப்பங்கள் வரும்பட்சத்தில் நமக்கும் அவற்றிற்குமான வேறுபடுத்தும் கோடு முற்றிலும் அழிந்து போகக்கூடும். மானுட வாழ்வில் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்துகிற நம்முடைய எல்லா டிஜிட்டல் தகவல்களையும் தரவுகளாக்கி உண்டு செரித்தே தனது நுண்ணறிவைப் பெருக்கிக் கொள்கிற ஒரு நிரல் மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, உணர்வுப்பூர்வமாக சிந்திக்கிற ஆற்றலைப் இந்த மீப்பெரும் டேட்டா குவியல்களில் இருந்து கிரகித்துக் கொள்வதன் வாயிலாக எட்டவே முடியாது என நாம் எதை முன்னிட்டும் உறுதிபடச் சொல்ல இயலாது. இது நம் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான, நம்மிடம் பதிலேயில்லாத, ஒரு கேள்வியின் முன்னே நம்மை நிறுத்துகிறது.

******* 

ருடங்கள் ஓடுகின்றன. கேரத்தைத் தவிர்த்து குழுவின் மீதமிருவரும் மாண்டு போகின்றனர். அரை நூற்றாண்டு கால வளர்ச்சியில் செர்ரி தன்னை ஒரு ஹியுமனாய்ட் இயந்திர மனுஷியாக வனைந்து கொள்கிறாள். அவளுக்கும் கேரத்துக்கும் இடையில் நடைபெறுகிற அந்த இறுதி உரையாடல் மிக முக்கியமானது. வெறும் அறிவியல் சுவாரசியம் என்பதோடு நில்லாமல் செர்ரியின் உருவாக்கத்தில் கேரத் மறைக்கிற ஒரு ரகசியத்தையும் அவள் தானாகவே கண்டடைகிறதும், அதனையொட்டி உருவாகிற டிராமாவும், அதுவுமே மையக்கதையின் அறிவியல் தன்மைக்கு இயைந்து போவதும் அழகாய் பொருந்துகிறது. படமாக அது பார்வையாளருக்கு சுவாரசியம் கூட்டுகிறது. (முதன்முதலில் கேரத் விசாரணையில் சிக்குவதன் பின்னணியே சுவாரசிய அம்சம்தான்.) 

அறிவியல் புனைவு என்பதை விஷுவல் பகட்டுகளோடு மட்டும்தான் சொல்ல முடியும் என்பதல்ல. மாறாக அது முன்வைக்கிற மையக்கருத்து காத்திரமாக இருந்து, அதனை ஒரு திரைக்கதையின் வாயிலாக தெளிவுற எடுத்துச் சொன்னாலே போதுமானது என்று எண்ணச் செய்கிற படைப்பு இது. பலருடைய விருப்பப் படங்களுள் ஒன்றென விளங்கும் Alex Garland எழுதி இயக்கிய Ex Machina (2014) அறிபுனை படத்தின் களத்தை, அது பேச முனைகிற விடயத்தை – Franklin Ritch எழுதி, இயக்கி, நடித்தும் இருக்கும் (கேரத் பாத்திரத்தில் நடித்திருப்பது அவர்தான்) – இப்படம் வேறு ஒரு தளத்தில் இருந்து அணுகுகிறது. உரையாடல்களே இப்படத்தின் உயிர்நாடி. இரு வருடங்களுக்கு முன்பாக VoD முறையில் வெளியான இண்டி சினிமாவான இப்படம் நிச்சயமாக சிந்திக்கத் தீனியிடுகிற ஒரு சுவாரசியமான படம். 

எனக்கு தனிப்பட்ட விதத்தில் Shene Carruth எழுதி இயக்கிய Primer (2004) படத்தைப் பார்த்து (தோராயமாக வெறும் 7000 டாலர்களுக்குள் மொத்தமாக எடுத்து முடிக்கப்பட்ட படம் இது) வியந்து போன பார்வை அனுபவத்தை நினைவூட்டியது இப்படத்தின் பார்வையனுபவம். காட்சி பிரம்மாண்டங்களாக அல்லாமல் சிந்தனைப்பூர்வமாக நம்மை ஆட்கொள்கிற வகைப் அறிபுனை படங்களை நீங்கள் ரசிப்பீர்களெனில் இது நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.  


 

The post நிரலி appeared first on Vimarsanam Web.

  •  

இணை பிரதிகள்

(தங்கலான் திரைப்படத்தை முன்வைத்து)


பொழுதுபோக்கை முன்னிறுத்துகிற வணிகத் திரைப்படங்கள் ஒரு வகை. இதில் கேளிக்கையே பிரதானம். முழுக்க முழுக்க கலையை கைக்கொள்கிற வகைப் படங்கள் இன்னொரு வகை. இவ்வகைப் படங்கள் பார்வையாளர்களின் விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்து உருவாக்கப்படாதவை. சொல்ல விரும்புவதை, சொல்ல விரும்புகிற விதத்தில்/வடிவத்தில் சொல்பவை. இவ்வகைப் படங்களுக்கான பார்வையாளர்கள் எப்போதும் குறைவானவர்களே. இந்த இரண்டிற்கும் இடையில் இன்னொரு வகை உண்டு. அது வணிக எல்லைக்குள் நின்று கொண்டு, கலைப்பூர்வத்தையும் அதில் கலப்பவை. இவற்றை Middle Cinema என்று சொல்லலாம். தங்கலான் வணிக சினிமா மற்றும் மிடில் சினிமா என இரண்டின் சாயல்களையும் எடுத்துக் கொள்கிறது. 

கதை முன்வைக்கிற நேரடி மையம் ‘தேடல்’. அது தங்கலான் தலைமையில் வட ஆற்காடு மாவட்டத்தின் வெப்பூரின் பண்ணை அடிமைகளின் துணைகொண்டு ஆங்கில துரை கிளமெண்ட் குழுவினர் தேடுகிற தங்கம். இது ஒரு புறம் இருக்க அசரீரிகளால் அலைக்கழிக்கப்படுகிற, நாகர் குலத்தவளான ஆரத்தி எனும் சூனியக்காரியை (அப்படித்தான் தங்கலான் நம்புகிறான்) முன்வைத்து அவனைச் சுற்றி நிகழுகிற/நிகழ்த்தப்படுகிற, அவனாலேயே விளங்கிக் கொள்ள இயலாத குழப்பங்களுக்கு விடை தேடி முனைகிற தங்கலானின் தனிப்பட்ட தேடல். 

இந்த இரண்டு வகையான தேடல் கதைகளும் நமக்கு மாறி மாறி சொல்லப்படுகிறது. படம் பார்த்த பலரும் தங்களது பார்வையை எழுதி வருகின்றனர். கணிசமானோர் படம் புரியவில்லை என்று பகிர்வதை வாசிக்க முடிகிறது. நமது கதை கேட்கிற மரபு முழுமையான/ திருப்தியளிக்கிற முடிவை நோக்கி நகர்வது. மேலும் கிளைக்கதைகள் என பலவாறாக பிரிந்தாலும், முழுமையான கதையின் ஓர்மையைப் பிடித்தே பின்தொடர்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். வாசகராகவும்/ பார்வையாளர்களாகவும் பெரும்பான்மையோர் நம்மில் இதையே எதிர்பார்க்கிறோம். சிதறடிக்கப்பட்ட கதைசொல்லல் நமக்கு கொஞ்சம் அந்நியமானது. தங்கலானின் இரண்டு விதமான தேடல்களையும் ஒரு புள்ளியில் பின்னிப் பிணைந்து ஒற்றை முடிவை நோக்கி நகர வேண்டுமென்ற நமக்குள் இருக்கிற கதை கேட்பவரின் எதிர்பார்ப்பை படத்தின் கதையாடல் முழுமையாக திருப்தியுறச் செய்யாததையே தங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று சொல்வதாக நினைக்கிறேன். 

மேலும் இக்கதையின் மாய யதார்த்தக் கூறுமுறை நமக்கு முற்றிலும் அந்நியமானது. மாய யதார்த்த கதை சொல்லலின் பெரிய வசதி அதன் நெகிழ்ச்சித்தன்மை. பார்வையாளர்கள் கதையை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு அது பல வாய்ப்புகளை வழங்குகிறது. இது அதன் பார்வை அனுபவத்தை முற்றிலுமாக தனிமனித அனுபவமாக (subjective experience) மாற்றும் திறனுடையது. கதையை அணுகுவதற்கு பல சாத்தியங்களை அது வழங்குவதால், நாம் எவ்விதமாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ அதைப் பொருத்து அது நல்ல/மோசமான பார்வை அனுபவமாக இருக்கும். இதுவே இவ்வகை கதைசொல்லலின் பலமும் பலவீனமும். 

குறியீடுகள் மூலமாக கதையை வளர்ப்பது, இயல்பிலேயே குறியீடுகளுக்கான அர்த்தமாக ஒருவர் எதனை எடுத்துக் கொள்கிறாரோ அதுவே ‘கதையின் அர்த்தமாக’ ஆகிப்போகும் சாத்தியத்தை உருவாக்குகிறது. அந்த அர்த்தப்படுத்தலுக்கு ஒரு தர்க்கரீதியான நியாயமும், தொடர்ச்சியும் இருக்கின்றபட்சத்தில் அந்த கதையின் பதிப்பு (that version of the story) அவருடைய கதையாக ஆகும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரே கதை பல்வேறு கதைப்பிரதிகளாகும் சுவாரசியமான வாய்ப்புண்டு. 

தொன்மக் கதைகளும், வரலாற்றுத் தரவுகளும், மாய யதார்த்தங்களும் பிசைந்து புனையப்பட்டிருக்கும் தங்கலான் கதையின் ‘எனது பிரதி’ இதுதான். 

நிலமும், வளங்களும் இயற்கையின் மூலக் கொடைகளாக இருப்பினும் அவை வெறும் மூலாதாரங்கள் மட்டுமே. அதில் மனித உழைப்பென்பது கலக்காதை வரை அது வெறுமனே கல்லும் மண்ணும். இவ்வளங்களை பயன்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் உருவாக இதனோடு சேர்கிற மனித வளமே (அதாவது அதன் உழைப்பே) அடித்தளம். எல்லோரும் பங்களிக்க வேண்டிய இந்த மனித உழைப்பை, இந்திய சமூகத்தின் வர்ணக் கோட்பாட்டின் திணிப்பான படிநிலை உருவாக்கம், ஒட்டு மொத்தமாக குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமேயானது என்று முழுச்சுமையையும் அவர்களின் மீதே சுமத்துகிறது. 

நிலத்தின் ஆதிக்குடிகளான அவர்களது நிலங்களை இதனை முன்வைத்தே அபகரித்துக் கொண்டு அவர்களது கரங்களில் ‘உழைக்கிற கடமையை’ மட்டும் திணிக்கிறது. இதில் உழைப்பென்பது கூட ஒட்டு மொத்த சமூகக் கடமையில் அவர்களது தரப்புப் பங்களிப்பாகவே இருப்பதனால், அதற்கான கூலி என்பதை உரிமையாகக் கோருவதையும் அது தந்திரமாக மறுக்கிறது. அவர்களிடமிருந்து உழைப்பை மட்டும் உறிஞ்சிக் கொண்டு அதனால் விளைந்த பலனை அவர்கள் அனுபவிப்பதற்கான நியாயமான உரிமை கூட மறுக்கப்படுகிறது. 

ஆரத்தி ‘என் கதையில்’ இந்த ஆதிக்குடியினரின் வளங்களின் ‘காப்பாள்’ மட்டுமல்ல அவள் அவர்களின் மூதாய். அதோடு மட்டுமல்லாமல் அவள் அக்குடியின் ஒட்டுமொத்த வரலாற்று இருப்பின் பிரதிநிதி. துவக்க காட்சிகளில் தங்கலான் தனது மகள்களுக்குச் சொல்கிற கதைகளில் அவனது மூத்தோன் காடையன் சந்திக்கிற ஆரத்தியின் இரத்தம் நிலத்தை நனைத்து பின்புதான் நிலம் தனக்குள் ஒளித்து வைத்திருந்த பெரும் வளத்தை எல்லோர் கண்களுக்கும் புலப்படுத்துகிறது. ‘தங்கம்’ இக்குடிகளின் அயராத உழைப்பால் விளைந்த பலன்களென்பதற்கான குறியீடு.  சுருங்கச் சொன்னால் உழைப்புச் சுரண்டலால் அவளின் குடிகள் ஒடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட கதையே ஆரத்தியின் கதையாக தங்கலான் வழியாக நமக்குச் சொல்லப்படுகிறது. உழைப்பைப் பங்களித்து வளங்களின் மதிப்பைக் கூட்டியவர்கள் ஒரு குழுவினராய் இருக்க அதன் பலன்களை மட்டும் ஆண்டு அனுபவிப்பவர்கள் வேறுவேறு குழுவினராய் இருக்கின்றனர். அடக்கியாள்பவர்கள் காலத்திற்கேற்றார்ப் போல ஆண்டைகளாகவும் ஆங்கிலேயத் துரைமாராகவும் இருக்க அடக்கப்படுபவரின் நிலை வரலாற்றின் காலக் கோடெங்கிலும் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருக்கிறது. 

திரைக்கதையில் மாய யதார்த்த அம்சத்தின் பயன்பாடு கொஞ்சம் மிகையாகப் போய்விட்டதாகத் தோன்றியது. இருந்தபோதிலும் இவ்வித கதைசொல்லும் உத்தி தமிழுக்கு ரொம்பவே புதியது. இதற்கு முன்னர் ‘குதிரைவால் (2021)’ திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு அணுகுமுறை கையாளப்பட்டு இருப்பினும், அது ஒரு தனிமனிதனின் மன உலகத்தை பிரதிபலிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருந்தது. இங்கோ அது ஒரு சமூகத்தின் வலியைப் பேச முற்படுகிறது. மேலும் இது வரலாற்றுப் பூர்வமாகவும் மிக அதிகமான விசயங்களை கதையோட்டத்திற்குள் தொட்டிருப்பதால், கொஞ்சமாக வாங்கி வருவோம் எனும் எண்ணத்தில் கடைவீதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட துணிப்பை, மிக அதிகமாக வாங்கிவிட்டதால் பிதுங்கிக் கிழியும் அளவிற்கு எடை தாளாமல் தோய்ந்து விடுவது போல திரைக்கதை முன்வைக்கிற எல்லாவற்றையும் பார்வையாளரின் மனதில் பதித்துக் கொள்ள திணறும் விதத்தில் இருக்கிறது. 

நடிகர்களின் பங்களிப்பு நீண்ட காலம் நினைவுகூரத்தக்க ஒரு இறுக்கமான டிராமாவாக இப்படைப்பை மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. முதன்மைப் பாத்திரம் ஏற்றிருக்கும் விக்ரம் அவர்களின் பாத்திரம் கதையின் போக்கில் பெருகிப் பெரிதாகிவிடுவதால், அவருடையதற்கு  அடுத்தபடியான பார்வதி அவர்களின் பாத்திரத்தைத் தவிர்த்து ஏனைய பாத்திரங்கள் சுருங்கிப் போய்விட்டது போன்ற உணர்வைத் தந்து விடுகிறது. 

வணிகத் திரைப்பட எல்லைக்குள் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய பொருட்செலவில், ஒரு படத்தை இயக்குவதற்கான துணிவு பா.ரஞ்சித் அவர்களுக்கு இருக்கிற அதே அளவிற்கு, படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இருந்திருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். ஏனேனில் தொழில்முறை சினிமாவைப் பொருத்தவரை இது மிகப் பெரிய அகலக்கால். 

நவீன நாடகங்களைப் பார்க்கிற பார்வை அனுபவத்திற்கு நிகரானதொரு திரையனுபவத்தை பெரிய திரையில் தங்கலான் நிகழ்த்திக் காட்டியிருப்பது புதிதாய் இருந்தது. படம் எல்லாத் தரப்பினருக்குமானதல்ல என்பது நிச்சயம் படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கிற கலைஞர்களுக்கே தெரிந்திருக்கும். இருப்பினும் இதில் புழங்கியிருக்கிற பெரும் பொருட்செலவு, அவர்களை அது குறித்து வெளிப்படையாகப் பேசிட அனுமதித்திருக்காது என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. 

திரைப்படத்தில் நிறைவளிக்கக் கூடிய முடிவுகளையும், முழுமை எய்திய உணர்வைத் தருகிற கதைகளையும் விரும்புகிற ரசிகர்களுக்கு ஏமாற்றைத்தையும், கதை தரத்தக்க நிறைவைத் தாண்டி அது தருகிற பார்வை அனுபவத்திற்காகவும் படம் பார்க்க விரும்புகிற தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராத ஒரு அனுபவமாகவும் இப்படம் இருக்கும். இந்த இரண்டு தரப்பில் உசத்தி தாழ்ந்தது என்று எதுவுமில்லை. ஒரு பார்வையாளராக நம் தரப்பு எதுவென்று ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் அதுவே போதுமானது. சொல்லவந்த கதை திரைக்கதையாக கலைமுழுமையை ஏய்த முடியாமற் போயிருப்பினும், தங்கலான் ஒரு மெச்சத்தக்க முயற்சி. 


 

The post இணை பிரதிகள் appeared first on Vimarsanam Web.

  •  

விடுதலை 1 & 2 – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தேன். பொதுவுடைமைக் கட்சியின் சித்தாந்தப் பிடிப்பையும் தமிழர் விடுதலைப் படையைப் பற்றியும் அதை நடத்திய விஜய் சேதுபதி உள்ளிட்ட தோழர்களைப் பற்றியும் அழித்தொழிப்பு வரலாற்றையும் தெரிந்துகொள்ள முடிந்தது. இவற்றை விட, காவல் துறையில் உள்ளே போட்டி, பொறாமை, அதிகார அடுக்குகள், விசாரணை என்ற பெயரில் நிகழ்த்திய கொடூரங்கள், போராளிகளுடன் சண்டையிடும்போது சகோதரக் காவலர்களையே இரகசியமாகக் கொன்றது, தனக்குப் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சரணடைய வந்தவரையே சுட்டுக் கொன்றது, மனிதர்களைக் கொன்றதை விட அறம் கொன்ற நிகழ்வுகளை அதிகமாக அறிய முடிந்தது.

சூரியின் காதலியாக நடித்த பவானி ஸ்ரீ (தமிழரசி), முதல் பாகத்தின் இறுதியில், காவல் துறையின் நிர்வாண விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என இரண்டாம் பாகத்தில் எங்கும் காட்டவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட சூரி, நான் தமிழரசியுடன் எங்காவது போய் வாழ்ந்துக்கிறேன் என்கிறார். அப்படியானால், அவரைக் காவல் துறை விடுவித்துவிட்டதா?

சுயநலத் தலைவர்கள், அவர்களின் நலனுக்காக உழைக்கும் அதிகாரிகள், இவர்கள் இணைந்து சுரங்கத் திட்டத்துக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி, இதை எதிர்க்கும் அனைவரையும் கொன்று சாய்க்கிறார்கள். இந்தத் தலைவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றுவதே நியாயமான காவலர்களுக்கும் கடமை ஆகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் அற வீழ்ச்சியின், அதிகார துஷ்பிரயோகத்தின், அரச பயங்கரவாதத்தின் களமாக மாறி நிற்பதைக் கனத்த நெஞ்சத்துடன் காண்கின்றோம்.

சூரி, விஜய் சேதுபதி, கிஷோர், ராஜிவ் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பு மிகச் சிறப்பு. முக்கியமாக, விஜய் சேதுபதியின் உடல்மொழியும் துணிச்சலும் தலைமைத்துவமும் அபாரம். இந்தப் படத்துக்காக அவரைத் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன். இளையராஜாவின் இசை சிறப்பு. இயக்குநர் வெற்றி மாறன், தனது அறச்சீற்றத்தைக் கலாப்பூர்வமாகத் தொடர்ந்து முன்வைக்கிறார். போராடியவர்களின் நியாயத்தைக் காட்டுவதோடு, அநியாயம் செய்தவர்களுக்கு என்ன ஆகிறது என்பதையும் அடுத்தடுத்த படங்களில் அவர் காட்ட வேண்டும்.

#viduthalai #viduthalai1 #viduthalai2 #soori #vijaysethupathi #vetrimaaran

  •  

டிரான்ஸ் – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

மிகத் துணிச்சலான படம், டிரான்ஸ் (மலையாளம்). கிறித்துவ மதப் பிரசாரகர்களின் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களின் பின்னணியை, உண்மை நிலையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

நாயகன் பஹத் பாசில், அபாரமாக நடித்திருக்கிறார். சுய முன்னேற்றப் பயிற்சியாளரான அவர், கிறித்துவ மத போதகராக எப்படி மாற்றப்படுகிறார், எப்படியெல்லாம் பயிற்சி அளிக்கப்படுகிறது, மக்கள் எப்படி நம்ப வைக்கப்படுகிறார்கள் எனத் தத்ரூபமாகச் சொல்கிறார்கள். உச்சஸ்தாயியில் அல்லேலுயா எனக் கத்துவது, முடவர்களை நடக்க வைப்பது, பார்வையிழந்தவர்களைப் பார்க்க வைப்பது, மக்களை எழுச்சி கொள்ள வைப்பது என ஒவ்வொன்றிலும் பஹத் பாசில் கலக்கியிருக்கிறார்.

இந்தக் கூட்டங்களை நடத்துவோர், கார்ப்பரேட் பாணியில் எப்படி நடத்துகிறார்கள் என்பதை, நன்கொடை திரட்டுவதை, புனித நீர் என்று புட்டியில் அடைத்து விற்பதைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார்கள். மதம் மிகப் பெரிய வணிகப் பொருளாக மாறியிருப்பதை, மத நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைத் துணிச்சலாக முன்வைத்திருக்கிறார்கள். அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் படம் செல்கிறது.

கதை எழுதிய வின்சென்ட் வடக்கன், தயாரித்து இயக்கிய அன்வர் ரஷீத் இருவரின் துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்கள், விழிப்புணர்வு பெற வேண்டும்.

  •  

புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

அண்ணாகண்ணன்

புஷ்பா படத்தில் நாயகன், செம்மரங்களை வெட்டிக் கடத்திக் கோடிகளைக் குவிக்கிறான். மட்கா படத்தில் நாயகன், சூதாட்டத்தின் மூலம் பெரும் பணம் குவித்து, துபாய்க்குத் தப்பிச் செல்கிறான். லக்கி பாஸ்கரில் நாயகன், பங்குச் சந்தையில் பணம் குவித்து, அமெரிக்காவில் செட்டில் ஆகிறான்.

இவை மூன்றும் தெலுங்குப் படங்கள். ஒரே காலத்தில் வெளிவந்தவை. இவற்றில் குற்றவாளிகளே நாயகர்கள். குற்றங்களில் படிப்படியாக முன்னேறி, கோடிகளைக் குவிக்கிறார்கள். தந்திரமாகத் தப்பிச் செல்கிறார்கள். இவர்களுடன் ஒத்துழைத்தவர்களும் பணம் குவிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள். குறுக்குவழியில் வேகமாக ஜெயிக்கலாம். தண்டனையிலிருந்து தப்பித்தும் விடலாம் என அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.

இவை இந்திய மொழிகள் பலவற்றில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் பார்த்துள்ளார்கள். இவற்றைப் பார்ப்பவர்கள் மனத்தில் இவை என்ன சிந்தனையை விதைக்கும்?

#pushpa #pushpa2 #luckybaskhar #matka

  •  

நந்தன் திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

நந்தன் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன். வணங்கான்குடி என்ற ஊராட்சியின் தலைவர் பதவியை மேல்சாதித் தலைவர் ஒருவரே மீண்டும் மீண்டும் வகிக்கிறார். அந்தத் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்த பிறகு, தாழ்த்தப்பட்ட ஒருவரே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற நிலை உருவாகிறது. தன் தீவிர விசுவாசியை அந்தப் பதவியில் நிறுத்தி ஜெயிக்க வைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படம் துணிவாக முன்வைக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அவலங்களை, அவர்கள் சந்திக்கும் கொடுமைகளை, தனித் தனிச் சுடுகாடு இருப்பதை, அடிமைகளாக நடத்தப்படுவதை நெஞ்சை அறுக்கும் வகையில் காட்டியிருக்கிறார்கள். இன்னும் இப்படியெல்லாம் நடக்கிறதா எனக் கேட்பவர்களின் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று காட்டத் தயார் என அவர் திரையில் காட்டியது, வலிமையான வாக்கியம்.

திரைப்படம் முடிந்த பிறகு, ஊராட்சித் தலைவர்கள் பலரும் திரையில் தோன்றி, தங்கள் அனுபவத்தைச் சொல்வது, அழுத்தமாக உள்ளது. இந்தப் படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று வெளிக்கொணர்ந்த இரா.சரவணன், பெரும் பாராட்டு உரியவர்.

காலத்துக்கும் நீங்க எங்க காலுக்குக் கீழ தான்டா என்ற ஆதிக்கவாதிகளின் குரல் ஒலிக்கும்போது, (தாழ்த்தப்பட்ட) நாயகர்களின் செருப்பின் அடிப்பாகம், திரை முழுவதும் வருமாறு காட்டியிருப்பது, இயக்குநரின் முத்திரை.

அதிகாரத்துக்கு வா. அதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதிகாரத்துக்கு வந்தாலும் இங்கே பல பேரால நிமிரக் கூட முடியலை.

இது, படத்தில் இடம்பெறும் ஒரு வசனம். இதுவே படத்தின் சாரமாகவும் இருக்கிறது.

ஆதிக்க சாதித் தலைவராக நடித்துள்ள பாலாஜி சக்திவேலும் அவரது விசுவாசியாக அம்பேத்குமார் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமாரும் வட்டார வளர்ச்சி அலுவலராக நடித்துள்ள சமுத்திரக்கனியும் தத்ரூபமாக நடித்துள்ளார்கள்.

சசிகுமாரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்துவிட்டு வரும் பாலாஜி சக்திவேலை அவர் அம்மா ஒரு கேள்வி கேட்கிறார். அவன் பலத்துக்கு உன்னை அடிக்கிறதுக்கு என்னேரம் ஆகும்? என்ற அவரது கேள்வி, முக்கியமானது. உடல் வலிமையை முன்னிறுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் படத்தைக் கொண்டு செல்லாமல், ஜனநாயக ரீதியில் படத்தை நகர்த்திய இயக்குநருக்குப் பாராட்டுகள். மகாத்மா காந்தி, இந்த வழிமுறையையே பின்பற்றினார்.

அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதையே மிகப் பெரிய இலக்காகக் கட்டமைக்கிறார்கள். அதுவே எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்பது எத்தகைய மாயை என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். அப்படியானால் எது தீர்வு என்பதை இன்னும் வெளிப்படையாக, தெளிவாக, அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.

ஊரை விட்டு விரட்டப்பட்ட பிறகு, மகனுடைய கேள்விக்கு, சசிகுமாரின் மனைவி பதில் சொல்கிறார். நமக்குன்னு ஒரு வீடு இருந்திருந்தா யார் நம்மைத் துரத்தியிருக்க முடியும்? ஒரு குழி இடத்தைச் சம்பாரிக்கலேன்னா இப்படி ஊர் ஊரா ஓடிக்கிட்டே தான் இருக்கணும்.

நிலத்துக்கு, வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆனால், நம்மைத் துரத்த முடியாது என்பது ஒரு தெளிவான செய்தி. தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதார வலிமை அடைந்து, நில உரிமை பெற வேண்டும். அத்துடன், கூட்டாக நின்று அரசியல் வலிமை பெற வேண்டும்.

ஆனால், எதிர்த்துக் கேள்வி கேட்பவனை லாரியை ஏற்றிக் கொல்லும்போது என்ன செய்வது? சமூக மதிப்பைப் பெறுவதற்கு என்ன செய்வது? உரிமை மறுக்கப்படும்போது என்ன செய்வது? அச்சுறுத்தப்படும்போது என்ன செய்வது? ஏமாற்றப்படும்போது என்ன செய்வது? ஒரே சமுதாய மக்களிடம் பிளவு ஏற்படுத்தி, அவர்களின் வாக்கு வலிமையைப் பிரிக்கும்போது என்ன செய்வது? யாரின் பின்னால் அணி திரள்வது? எந்தக் கூட்டணியில் நிற்பது? எந்தக் கோரிக்கைகளை முன்வைப்பது? யார் நமக்கு நன்மை செய்வார்? இந்தக் கேள்விகள் ஓயப் போவதில்லை. நம் தேடலும் தான்.

  •  

ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

அண்ணாகண்ணன்

ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்ற வலைத்தொடரை, அமேசான் பிரைமில் பார்த்தேன். இது சிறுவர்களை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட வலைத்தொடர். சிறுவர்களுக்கான வலைத்தொடர் எனச் சொல்ல முடியாது.

பள்ளிச் சிறுவர்கள், துப்பாக்கியால் சுடுவதும் பிணத்தை மறைத்து வைப்பதும் சாட்சியங்களை அழிப்பதும் பிணத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும் சொந்த அப்பாவையே தலையில் அடித்து அறையில் கட்டிப் போட்டு அடைத்து வைப்பதும் கார் ஓட்டுவதும் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரிய குற்றங்கள்.

பள்ளி ஆய்வகத்திலிருந்து குளோரோபார்ம் எடுத்து வந்து, மயங்க வைப்பது ஓரளவு லாஜிக்குடன் இருக்கிறது. ஆனால், திருடனிடம் கைப்பற்றிய நகைகளைக் காவல் துறை மூலம் உரியவர்களிடம் கொண்டு சேர்க்காமல், வெள்ள நிவாரணத்துக்குச் சேர்ப்பது தவறு.

ஒரு தவறு நடந்தால், உரிய வழியில் தீர்க்க வேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் தீர்க்க முயலக் கூடாது. அப்படி முயன்றால் அதற்கு உரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றாவது காட்டியிருக்கலாம். இதில் இறுதியில் பிள்ளைகள் எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் அவரவர் இயல்பாகப் படிக்கிறார்கள்.

இதைப் பார்க்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு தவறுகள் செய்தாலும் இறுதியில் எதுவுமே நடவாதது போல் தப்பிவிடலாம் என நினைப்பார்களா? மாட்டார்களா?

சிறுவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். சாகசங்கள் கூடச் செய்யலாம். ஆனால், அறத்தோடு கூடிய நெறிமுறைகளுடன் வளர வேண்டும். தவறுகளைக் காணும்போது முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிக்க வைக்கலாம். அதே நேரம் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாங்களே தவறு செய்யும் பட்சத்தில் அதை ஒப்புக்கொண்டு தண்டனைகளை ஏற்க வேண்டும். அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் திருந்த வேண்டும். இந்த அடிப்படையோடு எடுத்திருந்தால், படம் வலிமையாக இருந்திருக்கும்.

காட்சி ஊடகங்கள் அதிகத் தாக்கம் உள்ளவை. அவ்வாறே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை. அதிலும் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள், வலைத்தொடர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் இவ்வாறு செய்வது தவறில்லை என நினைத்தால், இதே போல் எங்காவது செய்து பார்க்க நினைத்தால், செய்தாலும் தப்பிவிடலாம் என நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். வலைத்தொடரை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜ், இவற்றை யோசிக்கவில்லையா?

சிறுவர்கள் ஐவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் இரட்டை முகத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார். காவல் துறை உதவி ஆய்வாளராக வரும் நந்தா துரைராஜ், சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சிறப்பாகக் காட்டுகிறார். கதை நேர்த்தியாக அமைந்திருந்தால், வலைத்தொடர் இன்னும் வலிமையாக, வசீகரமாக இருந்திருக்கும்.

  •  

லப்பர் பந்து – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

லப்பர் பந்து, ஒரு நல்ல முயற்சி. ஆனால், இன்னும் சிறந்த முயற்சியாக வந்திருக்கலாம்.

விளையாட்டுத் துறைகளில் ஆர்வமாக ஈடுபடுவோர் பலரும் அதில் வெற்றி பெற்று, விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற வேண்டும் என்பதைத் துணை இலக்காக இல்லாமல், முதல் இலக்காகவே வைத்திருப்பர். ஆனால், வேறு பொருளாதார இலக்குகள் ஏதுமின்றி, நடுத்தர வயதினை எட்டிய பிறகும் விளையாடும் ஆர்வத்துக்காகவே விளையாடுவோர் பலர். இதற்காக, ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, அணி நடத்துவோரும் போட்டி நடத்துவோரும் பற்பல ஊர்களில் உண்டு. இந்த உள்ளூர்க் கிரிக்கெட்டை விறுவிறுப்பாகக் காட்டுவதில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெற்றி அடைந்திருக்கிறார்.

இத்தகைய போட்டிகளில் ஒரு சிக்கல் இருக்கிறது. விளையாட்டுத் திறமையும் இருக்க வேண்டும், அதை நேசிக்கவும் வேண்டும். இதையும் தாண்டி, விளையாட்டு உணர்வு என்பது அடிப்படையாக இருக்க வேண்டும். அடுத்தவர் திறமையை மதிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாராட்டி, ஊக்கம் கொடுத்து, தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் இது குறைவாகவே இருக்கிறது.

விளையாட்டு மைதானம், கெத்து காட்டுகின்ற இடமில்லை. திறமையைக் காட்டுகின்ற களம். இங்கே நான் பெரியவனா, நீ பெரியவனா என ஈகோ காட்ட வேண்டிய தேவையில்லை. இதில் நான், என் அணி, என் கிரிக்கெட் கிளப் என வீரர்களின் அகந்தையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி, கேலி செய்து, சீண்டி, வம்பிழுத்து, சண்டை போடுவது தேவையே இல்லாதது. அப்படியே நடந்தாலும் இயக்குநர் அதற்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை.

கெத்து தினேஷ், உள்ளூர் அணிகளில் பெரிய கிரிக்கெட் வீரர். லப்பர் பந்துக் களங்களில் வாகை சூடுகிறார். ஆனால், கார்க் பந்து வைத்து விளையாடும் போது, அவரால் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் இறுதிப் போட்டியில் குறிமூடி, கால்மட்டை, கையுறை போன்ற முறையான பாதுகாப்பு ஏதுமின்றி, கார்க் பந்தினை எதிர்கொண்டு விளையாடி 94 ஓட்டங்கள் எடுக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் கிரிக்கெட் ஆடும் தினேஷ், இத்தகைய தொழில்முறை விளையாட்டுக் களத்துக்கு ஏன் தயாராகவில்லை? அவருக்கு அதன் மீது அச்சமா? அவரிடம் இதற்கான திறமை இல்லையா? அப்படி விளையாடி அடிபட்டால் என்னாகும் என்று அவருக்குத் தெரியாதா? இதைப் பற்றிய எந்த எச்சரிக்கையும் இல்லாமல், வெறும் கெத்துக்காக ஆடலாமா? தினேஷ் உடன் விளையாடுபவர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி, பயிற்சி அளித்திருக்கலாம். நவீன விளையாட்டுக்கு இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் அரிய வாய்ப்பினை இயக்குநர் இங்கே தவறவிட்டிருக்கிறார்.

ஓட்டப் பந்தயங்களில் ஆப்பிரிக்க வீரர்கள் முன்னர் வெறுங்காலில் விரைவாக ஓடி எளிதாக வென்றனர். ஆனால், புதையணி அணிந்து வெற்றி பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது. வெறுங்காலில் களிமண் தரையில் விளையாடியவர்கள், புதையணி அணிந்து உள்ளரங்கக் களத்தில் ஆடுவதற்குக் கடும் பயிற்சி தேவைப்பட்டது. உள்ளூர் அணி வீரர்களை இப்படியாக ஆற்றுப்படுத்தி, ஊக்குவித்திருக்கலாம்.

அடுத்து, உள்ளூர் அணிகளுக்கு ஆடும் பலரும், நாள்முழுவதும் அதே கதி எனக் கிடப்பர். வேலைக்குச் செல்வதையோ தொழில் நடத்துவதையோ செய்யாமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பொறுப்புகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் குடும்பத்தினர், விளையாடப் போகக் கூடாது என எதிர்ப்பார்கள். அவர்களை ஏமாற்றி இவர்கள் விளையாடச் செல்வார்கள். இந்தப் பகுதியை இயக்குநர் நன்றாகக் காட்டியிருக்கிறார்.

தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா, பிரமாதமாகச் செய்திருக்கிறார். சிறுவர்களிடமிருந்து தவறி வந்த லப்பர் பந்தினை அரிவாள் மணையில் இரண்டாக நறுக்கி எறிவது, அவரது கோபத்தை நன்றாகக் காட்டுகிறது. தினேஷின் மகளாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அழகாக, அருமையாக நடித்திருக்கிறார். அவரது காதலனாக வரும் ஹரிஷ் கல்யாண், கவனமாக நடித்திருக்கிறார். இவர் சற்றே அடக்கி வாசித்தது போல் இருக்கிறது. ஆண்கள் அணியில் ஒற்றைப் பெண்ணாக அகிலாவை விளையாட வைத்த இயக்குநருக்குப் பாராட்டு. அட்டகத்தி தினேஷ், இதில் கெத்து தினேஷாக ஜமாய்த்திருக்கிறார். பிரிந்து சென்ற மனைவியின் சேலையில் அவர் படுத்துத் தூங்கும் காட்சி மிக அழகு. நண்பர்களாக வரும் பால சரவணனும் காளி வெங்கட்டும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்டக் காட்சி, மிகுந்த ஏமாற்றம் அளித்தது. விளையாட்டை முதன்மையாக வைத்துள்ள படத்தில், ஜாதியைப் புகுத்தியது முதல் தவறு. எதிரணியில் பாலய்யா என்ற பட்டியலின வீரர் ஆடுவதற்காக, அந்த அணியே ஜெயிக்கட்டும் என விட்டுத் தருவது போல் காட்டியது மிகத் தவறு. அவர் ஜெயித்ததால், அவர் ஜாதியில் அவர் போல் இன்னும் சிலர் அணியில் இடம் பிடித்துள்ளனர் எனக் காட்டியது, ஜாதியை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. விட்டுத் தந்துதான் அவர்கள் ஜெயிக்க வேண்டும் எனக் காட்டியது, அவர்களின் திறமையை மட்டம் தட்டியதாகவும் அமைந்துவிட்டது. இயக்குநர் சறுக்கிய இடம், இதுதான்.

வெட்டி வீறாப்பு, வாய்ச்சவடால், கெத்து – இவற்றையெல்லாம் விளையாட்டுத் துறையில் அகற்ற வேண்டும். மாறாக, விளையாட்டு நுணுக்கம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நம் உள்ளூர் அணிகள், சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களைத் தயார் செய்யும் களங்களாக இருக்க வேண்டும். சாதிக்கும் ஊக்கத்தைத் தருபவையாக இருக்க வேண்டும். நம் துரதிருஷ்டம், குடும்ப உணர்வுகளில், ஈகோ மோதல்களில் சிக்கி, படம் எங்கோ வழி தவறிச் சென்றுவிட்டது.

தொலைந்து போன அந்த லப்பர் பந்தினை யாராவது தேடிக் கண்டுபிடியுங்கள். அடுத்த பந்தினை வீச்சுடன் வீசுவோம்.

  •  

வேட்டையன் – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

வேட்டையன் படத்தில் ரஜினியின் செயல் வேகம் சிறப்பாக உள்ளது. 73 வயதுள்ள அவர், 58 வயது காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரவுடிகளையும் போக்கிரிகளையும் சுட்டுத் தள்ளி, என்கவுன்டர் புலியாகப் புகழ் பெறுகிறார். அவரது உடல்வாகுக்கு ஏற்ப, சண்டைக் காட்சிகளையும் நடனக் காட்சிகளையும் அமைத்துள்ளது நன்று. முதிய வயதிலும் துடிப்பாக இயங்க முடியும் எனக் காட்டிய வகையில், ரஜினி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தளர்ந்திருக்கும் முதியவர்கள், இவரிடமிருந்து உத்வேகம் பெற முடியும்.

படத்தின் முதல் சிக்கல், நீட்டுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வலுவாக இல்லை என்பதே. எந்தப் பயிற்சி நிறுவனமும் உன்னைத் தேர்வில் வெற்றி பெற வைக்கிறேன், மருத்துவர் ஆக்கிக் காட்டுகிறேன், வேலை வாங்கித் தருகிறேன் என்று எல்லாம் சொல்வதில்லை. தேர்வில் வெற்றி பெறப் பயிற்சி அளிப்பதும் திறன்களை வளர்க்க உதவுவதும் மட்டுமே அவர்கள் பணி. மற்றபடி படித்துத் தேர்வில் பெறுவது, மாணவர்களின் கடமை. இதை விதிமுறைகளில் தெளிவாக எழுதியிருப்பார்கள். இதற்கென்றே சட்ட நிபுணர் குழுவை வைத்திருப்பார்கள்.

மாணவர்களிடமிருந்து அவர்கள் பெறும் கட்டணம், பயிற்சி அளிப்பதற்கே. மாணவர்களுக்கு ஆசை காட்டுவது எல்லாம் வாய்மொழியாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் எத்தனைப் பேர் புகார் அளித்தாலும் சட்டரீதியாக அதை அந்த நிறுவனம் எளிதாகக் கடந்துவிடும். இந்த இடத்தில் BUDS Act (The Banning of Unregulated Deposit Schemes Act, 2019) செல்லுபடி ஆகாது. இதை வைத்து, நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடியாது. அப்படிச் செய்வதானால், தங்கள் சாதனைகளை விளம்பரப்படுத்தும் எல்லாப் பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் இத்தகைய வழக்குகளைத் தொடுக்க முடியும்.

பயிற்சி நிறுவனம் கொடுத்த கைக்கணினிகள் வேலை செய்யவில்லை என்றால், அது வேறு வகையான புகார். அதை நிறுவனம், வேறு விதமாகச் சமாளிக்க வாய்ப்பு உண்டு.

தங்கள் மீது புகார் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபாசமாகப் படம் எடுப்பதையும் கஞ்சா புகைப்பதையும் வீடியோ எடுத்து ஒரு நிறுவனம் பரப்பும் என்பது மிகையான கற்பனை. இதை வைரலாகப் பரவச் செய்தாலும் அந்த நிறுவனம் மீது புகார் கொடுப்பதை இவை எப்படித் தடுக்கும் என்பது புரியவில்லை.

அரசுப் பள்ளி ஆசிரியையாக வரும் துஷாரா விஜயனைக் கொன்றது பயிற்சி நிறுவனத் தலைவர் ராணா டகுபதி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. பிறகு எப்படி அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தார்கள்? நீதிமன்றம் எந்த அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கிறது என்பதும் புரியவில்லை.

துஷாரா விஜயன், குணா உடன் சேர்ந்து சேகரித்த ஆதாரங்களை உடனே இணையத்தில் ஏற்றி, ரஜினியின் மின்னஞ்சலுக்கு அடுத்த நிமிடமே கிடைக்கச் செய்திருக்கலாம். அந்த வன்தட்டை எதற்காகப் பார்சலாக அனுப்ப வேண்டும்? இத்தனைக்கும் குணா, கணிப்பொறி படித்தவர்.

படத்தில் பலரைச் சுட்டுக் கொன்ற ரஜினி, ராணா டகுபதியை மட்டும் சிறையில் தள்ளுகிறார். உன்னைப் போன்ற பணக்காரர்களையும் சிறையில் தள்ள முடியும் என்று மக்களுக்குக் காட்டவே இப்படிச் செய்தேன் என்கிறார். இதற்கான காரணம், வலுவாக இல்லை.

கடைசியில் ராணா டகுபதி தப்பித்துச் செல்லும் இடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் ரஜினி. எப்படி? எந்தத் துப்பினைக் கொண்டு அவர் சரியாக அங்கே வந்து இறங்கினார் என்று காட்டவில்லை. கீழே அத்தனை அடியாட்கள் துப்பாக்கியுடன் காத்திருக்கும்போது, மேலிருந்து இறங்கும் ரஜினியின் ஹெலிகாப்டரை மேலேயே சுட்டு வீழ்த்தியிருக்கலாமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் உள்ளன. இன்னும் கச்சிதமாகச் செய்திருக்க வேண்டும்.

அமிதாப் பச்சன், மனித உரிமை காக்கும் நீதிபதியாக இருந்தாலும் என்கவுன்டர் நிபுணர் ரஜினியிடம் மென்மையாக நடந்துகொள்கிறார். அவருக்கு ரகசியமாக உதவுகிறார். கடைசியாக, ரஜினியை என்கவுன்டருக்கு எதிராகப் பேச வைக்கிறார்.

யூடியூபராக வரும் மஞ்சு வாரியர், கவர்கிறார். பகத் பாசில், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். காவல் துறைக்கு உதவத் தொடங்கிய பிறகும் கடைகளின் கியூ ஆர் கோடினை மாற்றி, அவர்களை ஏமாற்றும் விதமாகக் காட்டியிருக்க வேண்டாம். ரித்திகா சிங்கின் நடிப்பு நன்று.

எல்லோருக்கும் சமமான கல்வி, சமமான சட்டம் என்ற நிலையை மெக்காலே கொண்டு வந்தார் எனச் சொல்கிறார். மெக்காலேவுக்குப் பிறகு தான் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடக்கிறது. அதை நிகழ்த்திய ரெஜினால்டு டையர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஆயினும் ஆங்கிலேய அரசு அவரை ஆதரித்ததுடன், அவருக்கு எந்தத் தண்டனையும் விதிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது, ரெஜினால்டு டையருக்குப் பொருந்தாதா? அவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர்களுக்குப் பொருந்தாதா? சட்டம் ஆளுக்கு ஏற்றபடி வளையும் என்பதற்குப் படத்தில் வரும் ராணா டகுபதியே சான்று இல்லையா?

இயக்குநர் த.செ.ஞானவேல், நீட்டுக்கு எதிராகப் படம் எடுத்ததாகச் சொன்னால், அது தவறு. படம் மொத்தமும் ஒரு பயிற்சி நிறுவனத்துக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. மேலும், பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற வாதமே பலவீனமானது. இதை மீண்டும் மீண்டும் சொல்லி, மாணவர்களை நம்ப வைப்பது, மாணவர்களுக்குச் செய்யும் தீங்கு ஆகும். அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள் என்பதே உண்மை.

நீட் எதிர்ப்புக் குழுக்களைக் குளிர்விக்க வேண்டும், அவர்களின் அரசியலை ஆதரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வசனங்களும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. பகடையை உருட்ட வேண்டிய ரஜினி, தானே ஒரு பகடைக் காயாக உருண்டுகொண்டிருக்கிறார்.

  •  

கொட்டுக்காளி – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

கொட்டுக்காளி – இந்த ஒன்றரை மணிநேரப் படத்தில் கடைசி 13 நிமிடங்கள் மட்டுமே கதை. இதற்கு முந்தைய 76 நிமிடங்களும் இந்த இடத்திற்கு வந்து சேருவதற்கான நீண்ட பயணத்தைச் சலிக்கச் சலிக்கக் காட்டியிருக்கிறார்கள்.

பெண் வேற்றார் ஒருவரைக் காதலிக்கிறார் என்றால், அந்த வேற்றார் ஏதோ மருந்து மாயம் செய்து பெண்ணை வசப்படுத்தியுள்ளனர். அதனால் தான் அவள் நம் பேச்சைக் கேட்கவில்லை என அவள் குடும்பத்தினர் நினைக்கின்றனர்.

மருந்து மாயத்தால் விளைந்த காதலைச் சாமியார் அழிக்கிறாராம். அந்த நினைவுகளே இல்லாமல் செய்துவிடுவாராம். அதன் பிறகு அவள் குடும்பத்தினர் சொல்லும் ஆணை விரும்பத் தொடங்கிவிடுவாளாம். இதற்காக வேறு ஒருவரை விரும்பும் அன்னா பென்னை இந்தச் சாமியாரிடம் அழைத்து வருகிறார்கள். அவளுக்குச் சூரியைத் திருமணம் முடிக்க வேண்டும் என்பது குடும்பத்தினர் விருப்பம்.

இதை அந்தச் சாமியார் எப்படிச் செய்கிறார் என்று காட்டுகிறார்கள். பெண்ணின் முன்கழுத்து, பின்கழுத்து, வயிறு, அடிவயிறு, பின்னிடுப்பு என உடல் முழுவதும் அழுத்திப் பிடிக்கிறார். திருநீறு பூசித் தடவுகிறார். எலுமிச்சம் பழத்தை உச்சந்தலையில், கழுத்தில், தொப்புளில் வைக்கிறார். வாயில் குழல் வைத்து ஊதுகிறார். உச்சந்தலையில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேய்க்கிறார். கடைசியாக, சேவலைப் பலி கொடுக்கிறார். உங்கள் பெண்ணிடத்தில் இருந்த மருந்தை அகற்றிவிட்டேன். இனி நீங்கள் அடித்து விரட்டினாலும், இவள் உங்கள் காலடியில் கிடப்பாள் என்கிறார்.

இவர் செய்வதைப் பார்த்தாலே இவர் போலி சாமியார் என்று தெரிகிறது. இதைப் பார்க்கும் சூரி, அன்னா பென்னை இவரிடத்தில் காட்ட வேண்டுமா என யோசிக்கும் இடத்தில் படம் நிறைவடைகிறது.

போலி சாமியார் எனத் தலைப்பு வைத்து, இந்தப் படத்தை வேறு கோணத்தில் எடுத்திருக்கலாம். இவர் மருந்தை எடுத்த பெண்கள், உண்மையிலேயே தங்கள் காதலை மறந்துவிட்டார்களா என ஆராய்ந்திருக்கலாம். போலி சாமியாரின் தந்திரங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கலாம். காவல் துறையில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கலாம். இப்படியெல்லாம் செய்திருந்தால், சமூகத்துக்கும் இவற்றை நம்பும் மக்களுக்கும் எத்தகைய பயன் விளைந்திருக்கும் என யோசித்துப் பார்க்கலாம்.

இவற்றையெல்லாம் செய்யாமல், முதல் 76 நிமிடங்கள் ஷேர் ஆட்டோவிலும் இருசக்கர வாகனங்களிலும் வளைந்து வளைந்து சென்றுகொண்டே இருப்பதைக் காட்டுகிறார்கள். இது சுவாரசியமாகவும் இல்லை. சமூகத்திற்குப் பயன் உள்ளதாகவும் இல்லை. வாழ்வியலைக் காட்டுகிறோம் என்றாலும் திரும்பத் திரும்ப ஒரே விதமான காட்சிகளை நீண்ட நேரம் காட்டுவது, நேயர்களுக்குச் சலிப்பையே தரும். இதன் மூலம் பல்லாயிரம் பேரின் நேரத்தை வீணடித்துவிட்டார், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்.

கொட்டுக்காளி என்ற பெயர், நன்றாக இருக்கிறது. சேவல், இதில் ஒரு பாத்திரமாகவே உடன் வருகிறது. அன்னா பென், வெறித்த பார்வையோடு உணர்வுகளை அலட்டாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி இயல்பாக நடத்திருக்கிறார். ஆனால், காதல் பாடலை முணுமுணுத்த காரணத்துக்காக, அன்னா பென்னையும் உடன் வந்தவர்களையும் அவர் அடித்து வெளுப்பது, பலவீனமான காட்சி. அதற்கு உரிய காரண வலு, அதில் இல்லை.

இதைக் கலைப் படம் என்பதைவிட, ஆர்வக் கோளாறு எனலாம்.

  •  

ஹடினெலன்டு – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

ஹடினெலன்டு (Hadinelentu / Seventeeners) என்ற கன்னடப் படத்தைப் பார்த்தேன். 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவனும் மாணவியும் பள்ளி வகுப்பறையிலேயே உறவு கொண்டு, அதை அவர்களே நிகழ்படமாக எடுக்கிறார்கள். பிறகு அது இணையத்தில் கசிந்து பரவுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளியிலும் நீதிமன்றத்திலும் நடைபெறும் பரபரப்பான விசாரணைகளும் திருப்பங்களுமாகப் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

இதில் சாதி, வயது, சட்டங்கள், அணுகுமுறைகள் உள்ளிட்ட பலவும் ஒரு சம்பவத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை இயல்பாகக் காட்டியுள்ளார்கள்.

படத்தின் தொடக்கத்தில் பள்ளி முடிந்ததும் ஒருவர் எல்லா வகுப்பறைகளையும் பூட்டுகிறார். பெண்மணி, வகுப்பறை வராண்டாக்களைப் பெருக்கித் தூண்மை செய்கிறார். மாணவனை அழைத்துக்கொண்டு மாணவி, ஒரு வகுப்பறையின் உள்ளே நுழைகிறார். புகுந்து கதவையும் ஜன்னலையும் மாணவியே உள்புறமாகச் சாத்துகிறார். தங்கள் பைகளை இறக்கி வைக்கிறார்கள். மாணவன், ஐ லவ் யூ என எழுதிய சங்கிலியை மாணவிக்குப் பரிசளிக்கிறார். அடுத்து, மாணவன் தன் ஆடைகளைக் களைய முயல்கிறார். அதை அந்தப் பெண்ணே தன் செல்பேசியில் வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். மாணவன் அந்தச் செல்பேசியைப் பறித்து, நீ முதலில் என்று அந்தப் பெண் உடை களைவதை வீடியோ எடுக்கிறார்.

இப்போது இந்தக் காட்சியை நாம் ஆராயலாம்.

படத்தின் பெரும்பகுதி நம்பகத்தன்மையுடனும் லாஜிக் எனப்படும் தருக்கத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் ஆதாரமான இந்தக் காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.

மாணவி, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு செல்வது ஏன்? உறவு கொள்ளும் முயற்சியை மாணவி முன்னெடுக்கிறாரா? அவ்வளவு சகஜமாக, சாதாரணமாக வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடுவது எனில், இது பழகிய இடமா? சிறிய அச்சமோ தயக்கமோ இல்லையே. ஏற்கெனவே இவ்வாறு செய்துள்ளார்களா? இதை மாணவி ஏன் வீடியோ எடுக்க வேண்டும்? இது திட்டமிட்ட செயலா? இந்த அறையை ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த அறையைப் பணியாளர்கள் பூட்டாதது ஏன்? மாணவர்கள் வெளியேறிச் செல்லும்போதும் பள்ளியில் யார் கண்ணிலும் படவில்லையா?

இதில் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேடினால், படத்தின் பலவீனம் புரியும். இந்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிறது. பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், யாரும் இதைப் பற்றிக் கேட்கவில்லை. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், காவல் துறை, நீதிமன்றம் உள்ளிட்டவை, இந்தக் கேள்விகளை நுணுக்கமாக எழுப்பவில்லை.

தாங்கள் செய்யும் விளைவுகள் குறித்து, இதில் ஈடுபட்ட மாணவர்களுக்குத் தெரியாதா? இதை வீடியோ எடுப்பதும் பகிர்வதும் எத்தகைய சிக்கல்களைக் கொண்டு வரும் என்று அவர்களுக்குத் தெரியாதா? வீடியோ கசிந்தது ஒரு விபத்தாக இருக்கலாம். ஆனால், பெண் இயல்பிலேயே விழிப்புணர்வுடன் இருப்பவள். பட்டப் பகலில் உறவு கொள்வதை அவரே வீடியோ எடுக்கிறார். அல்லது அப்படி கேமரா எதிரில் உறவு கொள்ளச் சம்மதிக்கிறார் எனில் இது நம்பும்படியாகவா இருக்கிறது?

படத்தின் முடிவிலும் ஒரு லாஜிக் சிக்கல் இருக்கிறது. மாணவன், தானே அதை ஒரு பேஸ்புக் நண்பருடன் பகிர்ந்ததாகச் சொல்லிவிட்டுப் பிறகு மறுக்கிறான். மாணவியின் வழக்கறிஞர், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுகிறார். மாணவனின் பேஸ்புக் கணக்கை ஆராய்ந்தால் (அது நீக்கப்பட்டிருந்தாலும்) பகிர்ந்தாரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இதை ஏன் அவர் செய்யவில்லை?

படத்தின் மையச் சிக்கல், பதின் பருவத்தினர் உறவுகொள்வதையும் அதை வீடியோ எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதில் ஈடுபடுவோரின் வயதே பிரதான சிக்கல் என்பதாகப் போய் முடிகிறது. கதை, வசனம் எழுதி இயக்கிய பிரித்வி கோனனூர், இந்தச் சிக்கல்களைத் தவிர்த்திருந்தால், வேறு வகையில் கையாண்டிருந்தால், இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும்.

எனினும், இது தரமான படம். பதின்ம வயது இளைஞர்களுக்கு இந்தப் படம், நல்ல பாடம் புகட்டும். ஷெர்லின், நீரஜ் மேத்யூ, ரேகா குட்லிகி, பவானி பிரகாஷ் உள்பட நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். எனவே தமிழிலும் இதர மொழிகளிலும் மொழிமாற்றி வெளியிடலாம்.

முழுப் படமும் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இடைவெளியிலும் இறுதியிலும் கியூ ஆர் குறியீடுகள் காட்டப்படுகின்றன. வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளிக்கலாம்.

  •  

போட்டோகிராப் – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

போட்டோகிராப் (Photograph) என்ற இந்திப் படத்தைப் பார்த்தேன். இப்படி ஒரு கவித்துவமான படத்தை, அண்மையில் நான் பார்க்கவில்லை. மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுலாப் பயணிகளைப் படமெடுத்துத் தரும் நிழற்படக் கலைஞர், நவாசுதீன் சித்திக். படமெடுத்து அங்கேயே அச்சிட்டுக் கொடுக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.30 வாங்குகிறார்.

கேட் வே ஆப் இந்தியாவில் சான்யா மல்ஹோத்ரா நடக்கும்போது, அவரை உடனடிப் படம் எடுத்துத் தருகிறேன் என நவாசுதீன் சித்திக் பின்தொடர்ந்து கேட்கிறார். வேண்டாம் என்று சான்யா சொல்ல, இன்று நீங்கள் என்னிடம் படம் எடுத்தால், உங்கள் முகத்தில் விழும் சூரிய ஒளியையும் உங்கள் கூந்தலை இந்தக் காற்று கலைப்பதையும் பின்னொரு நாள் பார்க்கும்போது காண்பீர்கள் என்பார். இங்கே கேட்கும் அனைத்துக் குரல்களையும் அப்போது கேட்பீர்கள் என்பார். உடனே சான்யா சம்மதிக்கிறார். அவர் சி.ஏ. படிக்கும் மாணவி. சற்றே வசதியானவர். அவசரத்தில் நிழற்படத்துக்கு அந்த 30 ரூபாய் கொடுக்காமல் சென்றுவிடுகிறார்.

நவாசுதீன் சித்திக்கின் பாட்டி, இவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி நச்சரிக்கிறார். மருந்து சாப்பிடவும் மறுக்கிறார். அவரைச் சமாதானம் செய்ய, பாட்டிக்கு இவர் ஒரு பொய்க் கடிதம் எழுதுகிறார். இங்கே நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். எனக்காக அவளை நீயே தேர்ந்தெடுத்தது போல் உணர்ந்தேன். அவள் கண்கள், கேள்விகளால் நிரம்பியிருந்தன. ஆனால், பதில்களாலும் நிரம்பியிருந்தன. அவள் புன்னகையைக் கண்டால், எல்லாத் துக்கமும் துயரமும் பறந்தோடிவிடும். நமது நிலத்தில் விழுந்த முதல் மழை, உனக்கு நினைவிருக்கிறதா? அதே போல் இருந்தது அவளது சிரிப்பு. அவளது பெயரும் அழகானது என எழுதுகிறார். அந்த நேரத்தில் தொலைவில் ஓ நூரி நூரி என ஒரு திரைப்படப் பாடல் ஒலிக்கிறது. எனவே, நூரி என்றே அவளுக்குப் பெயர் சூட்டிவிடுகிறார். பாட்டி, இவர்களைப் பார்க்க ஊரிலிருந்து வருகிறார்.

பணம் கொடுக்காமல் சென்ற சான்யாவை நவாசுதீன் சித்திக் மீண்டும் சந்திக்கிறார். பாட்டிக்காக, தன் காதலியாக நடிக்க முடியுமா எனக் கேட்கிறார். சான்யா அதற்குச் சம்மதிக்கிறார். இவர்களை ஒருசேரப் படம் எடுக்குமாறு பாட்டி கேட்கிறார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரே தட்டில் ரசகுல்லாவும் குலாப் ஜாமூனும் இருப்பது போல் இருக்கிறது எனச் சொல்வது ருசிகரம். பாட்டி ஊரிலிருந்து வரும்போது உடன் வரும் கர்ப்பிணிப் பெண், ரயிலில் குழந்தை பெறுகிறாள். அவளுக்கு ரயில் மலர் எனப் பெயர் சூட்டினார்களாம். பாட்டி இரவெல்லாம் கண்விழித்திருந்து கோமதி நதி வரும்போது அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வீசி எறிந்தாளாம். இதையெல்லாம் பாட்டியே சொல்கிறார்.

சான்யா இளம் வயதில் கெம்ப கோலா குடித்தது பிடிக்கும் என்கிறார். இப்போது உற்பத்தியை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது என்றாலும் நவாசுதீன் சித்திக், அந்த உற்பத்தியாளரைத் தேடிச் செல்கிறார். உன்னைப் போல் முன்னர் ஒருவர் தேடி வந்தார். அவருக்கு இந்த பார்முலாவை நான் கொடுத்தேன். அவர் வீட்டில் அதை இன்றும் தயாரிக்கிறார் என நினைக்கிறேன் என்கிறார். அந்த இன்னொருவரைத் தேடிச் சென்று ஒரு புட்டி கெம்ப கோலாவை வாங்கி வருகிறார். இது உன் சிறப்பு நண்பருக்காக எனச் சொல்லிக் கொடுக்கிறார்.

நடிக்க வந்த சான்யா, உண்மையிலேயே நவாசுதீன் மீது காதல் வயப்படுகிறார். தன் வீட்டில் பார்க்கும் அமெரிக்க மாப்பிள்ளையை மறுத்துவிட்டு, இவருடன் பழகுகிறார். படத்தின் முடிவை வெளிப்படையாகச் சொல்லாமல், பார்ப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். பாட்டியாக நடித்திருக்கும் பரூக் ஜாபர் கலக்கியிருக்கிறார்.

படத்தில் ஆங்காங்கே கவித்துவமான காட்சிகள் வருகின்றன. ஆனால், இது கலைப்படம் போன்று மெதுவாக நகர்கிறது. உரையாடல், ஒளிப்பதிவு, பின்னணி ஒலிகள், நடிப்பு அனைத்தும் இயல்பாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. ஆனால், நிறையப் படங்களைப் பரபரப்பாகவே பார்த்துப் பழகிவிட்டதால், இயல்பாகச் செல்லும் இந்தப் படம், மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.

இயக்குநர் ரிதேஷ் பாத்ராவின் திரைமொழி, மேம்பட்ட ரசனை உள்ளவர்களுக்கானது. வணிகத் திரைப்படமாக எடுத்து வருவாயை வாரிக் குவிக்க நினைக்காமல், தரமான படத்தினை அளித்துள்ளார். இயல்பான திரைப்படங்களை விரும்புவோர், இதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.

  •  

விசேஷம் – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

விசேஷம் (Vishesham) என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். இரண்டாம் திருமணத்தில் இணையும் இருவர், ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதும் அந்தக் கருவுறுதலுக்கான போராட்டங்களுமே கரு. படம் நெடுக எதார்த்தமான நகைச்சுவை மிளிர்கிறது. சிரிப்புடன் சேர்த்துச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் மதுசூதனன், அப்பாவியாக, வழுக்கைத் தலையுடன், ரகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அடிபொலியாக ஈர்க்கிறார். கழுகு சிறகடிப்பது போல் கைவீசி, இன்னும் இன்னும் உயரப் பற எனத் தன்முனைப்பு வகுப்பு நடத்துகிறார். இயற்கை விவசாயியாகக் களத்திலும் உழைக்கிறார். இவரது முதல் திருமணத்தில், தாலி கட்டிய அடுத்த நிமிடம், இவர் கண்ணெதிரே மனைவி தன் காதலனுடன் ஓடிப் போகிறார். மனம் தளராமல் ஆனந்த், அடுத்த திருமணத்திற்குத் தயாராகிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, போராட்டக்காரர்கள் மீது விழ வேண்டிய அடி, ஒதுங்கி, ஒளிந்து நின்ற இவருக்கும் விழுகிறது. அடித்து விளாசிய காவல் துறை அம்மணியே இவருக்கு இரண்டாவது மனைவியாக வருகிறார்.

ஆனந்தின் இரண்டாவது மனைவியாக வரும் சின்னு சாந்தினி நாயர், படத்தின் மிகப் பெரிய சுவாரசியம். பெண் காவலராக லத்தியைச் சுழற்றுவது ஆகட்டும், ஏதும் விசேஷம் உண்டா என நச்சரிக்கும் பாட்டியிடம் சிங்கமெனச் சிலிர்த்துச் சண்டைக்குப் போவது ஆகட்டும், காதல் காட்சிகளில் குழைவது ஆகட்டும், குழந்தைக்காக ஏங்கிச் சோகத்தில் ஆழ்வது ஆகட்டும்… நவரசங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். காவல் உடுப்பில் நீ செக்சியாக இருக்கிறாய் என ஆனந்த் உணர்ந்து சொல்கிறார். இப்படி புஷ்டியாக இருப்பதும் சிலருக்கு அழகைத் தருகிறது. நடிப்பிலும் மிரட்டுகின்ற சின்னு சாந்தினி நாயருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.

கருவாக்க மருத்துவமனைகளின் வேறு முகத்தைப் படத்தில் காட்டுகிறார்கள். பணமே குறியாக இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் குறித்துப் படம் விழிப்புணர்வு ஊட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய முதல் கணவரைப் பழிதீர்க்கவே காவல் துறையில் இணைந்ததாக, சின்னு சாந்தினி நாயர் கூறுகிறார். ஆனால், காவலர் ஆன பிறகும் தானாகவே அவர் மீது புகார் கொடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. ஏதோ ஒரு வழக்கில் அந்த முதல் கணவர் சிக்கி, இவரது காவல் நிலையத்துக்கு வரும் வரைக்கும் காத்திருக்கிறார். இது சற்றே இடிக்கிறது. மற்றபடி, சிறப்பான படம். அத்புதமே அத்புதமே என்ற பாட்டு, மிக அருமை (ஆனந்த் மதுசூதனன், இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் கூட).

புதுமணத் தம்பதிகளிடம் ஏதும் விசேஷம் உண்டா என்றும் தம்பதிகளிடம் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் கேட்பதைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் படத்தின் விசேஷம்.

  •  

ஜமா – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

ஜமா திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். பாரி இளவழகன், சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பு நன்று. நீயிருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா என்ற பாடல், மிக அருமை.

இந்தப் படம், கூத்துக் கலையை உயர்த்திப் பிடிப்பதாக, அந்தக் கலைக்கு வலிமை சேர்ப்பதாகப் பலரும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். கூத்துக் கலையை விட, அந்தக் கலைக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே இந்தப் படத்தில் அதிகம் வெளிப்படுகிறது. கூத்துக் கலையை முழுமையாக நேசிப்பதை விட, அதில் அர்ஜுனன் வேடம் கட்டுவதையே இலக்காக நாயகனும் எதிர் நாயகனும் நினைக்கிறார்கள். தாங்கள் ராஜாவாக, கதாநாயகனாக மக்கள் முன் நிற்க வேண்டும் என்ற வேட்கையே இதன் முக்கிய நடிகர்களுக்கு இருக்கிறது. அந்த வேடத்தைக் கட்டிய பிறகு அதைத் தக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். வாத்தியார் ஆக வேண்டும், ஜமா நடத்த வேண்டும் என்ற விருப்பங்கள் அனைத்தும் அதிகார மையம் என்ற புள்ளியை நோக்கியே செல்கின்றன.

இதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்யக் கல்யாணம் என்ற நாயகன் தயார் ஆகிவிடுகிறான். தன்னை நாடி வந்து காதலிக்கும், அரவணைக்கும் பெண்ணை உதறுகிறான். அம்மாவிடம் இருக்கும் ஒரே நிலத்தை அவளிடம் பொய்சொல்லி அவள் கையொப்பத்தைப் பெற்று விற்று, ஜமாவில் பங்கேற்பவர்களுக்கு முன்பணம் கொடுக்கிறான். அப்படிப் பணம் பெற்றவர்கள் வராமல் போய்விடுகிறார்கள். ஒரே ஆதாரமான நிலத்தை இழந்தது அறிந்த அம்மாவும் இறந்துவிடுகிறார். முட்டாள்தனமாகக் கல்யாணம் அலைகிறான்.

நிலத்தையும் அம்மாவையும் அடுத்தடுத்து இழந்த கல்யாணத்தின் மீது எனக்குக் கோபமே ஏற்பட்டது. அப்பாவைப் போல ஜமா நடத்த வேண்டும், அப்பாவைப் போல அர்ஜுனன் வேடம் கட்ட வேண்டும் என நினைப்பவன், அப்பாவைப் போன்ற தோற்றப் பொலிவையும் கம்பீரத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பணிந்து, வளைந்து நிற்கிறானே தவிர நிமிர்ந்து நிற்கவில்லை. பெண்வேடம் போடுவதை ஒரு காரணமாகக் கூறினாலும் உள்ளுக்குள் ஒரு தழல் எரியவில்லை. அதற்காகக் கடுமையாக உழைக்கவில்லை. இலக்கிற்கு ஏற்ப, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அந்த வாய்ப்பு எப்படி அமையும்?

கடைசிக் காட்சியில் குந்திதேவியின் வேடத்தில் கல்யாணத்தின் நடிப்பு, தாண்டம் என்ற எதிர்நாயகன் காலில் விழுந்து சாகும் அளவுக்கு எல்லாம் இல்லை. குந்தியே வந்து அந்த இடத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? கல்யாணமே அங்கே நின்றுகொண்டிருந்தான். அதன் பிறகு அர்ஜுனன் வேடத்திற்காக, தீப்பந்தங்களுக்கு நடுவில் ஆடுவது நன்று. ஆனால், இங்கும் அர்ஜுனனின் தரிசனம் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே, இதை கூத்துக் கலை பற்றிய படம் எனச் சொல்வது பொருத்தமற்றது. வளரும் கலைஞனின் மனோரதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  •