தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பன்மைத்துவத்தை (Pluralism) எளிமையாக விளக்குகிறது.
“நீ யானை…நான் மனுசன்…ஆனால் பூமியில் நாம் ஓர் உயிர்”; “கிளி..குருவி..காக்கா..மயில்.. எல்லாம் வேறே வேறே தான். ஆனா..எல்லாமே பறவைகள் தானே?” “மதங்கள் வேறு வேறு ஆனாலும் நாம மனுசங்க தானே?” என்ற கேள்விகள் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாக வேற்றுமையில் ஒற்றுமை காண வலியுறுத்தும் புத்தகம்.
வழ வழ தாளில் வார்த்தைகள் மிகவும் குறைவாகவும், அழகான வண்ணப் படங்கள் நிறைந்தும் உள்ள இப்புத்தகம் 5-8 வயது குழந்தைகளுக்கானது.
வகை
வண்ணப்படப் புத்தகம்
ஆசிரியர்
ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு:-
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பல இசைக் கருவிகளை அறிமுகம் செய்கிறது.
இசைக்கருவிகளில் தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், துளைக்கருவிகள் எனப் பலவகை உள்ளன. நாகஸ்வரம், வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளின் வண்ணப்படங்கள் இதில் உள்ளன. அந்தக் கருவிகளை வாசிக்கும் போது அதிலிருந்து என்ன மாதிரியான ஒலி வெளிவரும் என்பதை இந்நூலில் கொடுத்துள்ளனர்.
எடுத்துக்காட்டுக்கு நாகஸ்வரம் வாசிக்கும் பெண் குழந்தைப் படம் உள்ள பக்கத்தில் பீ.பீ.டும்..டும் என்ற வார்த்தைகள் மட்டும் உள்ளன.
வழ வழ தாளில்வார்த்தைகள் இல்லாமல், அழகான வண்ணப் படங்கள் நிறைந்திருக்கும் இந்த நூல் 5-8 வயது குழந்தைகளுக்கானது.
வகை
வண்ணப்படப் புத்தகம்
ஆசிரியர்
யெஸ்.பாலபாரதி
வெளியீடு:-
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
‘குழந்தை இலக்கியத்தின் பிதாமகன்’ என்றழைக்கப்படும் அழ.வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் காலம் தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. இவரது பாடல்கள் குழந்தைகள் பாடுவதற்கேற்ற இனிய ஓசையும், சந்தமும் கொண்டவை. குழந்தைகள் எளிதாக உச்சரித்து பாடுவதற்கேற்ற எளிய மொழியில் அமைந்தவை.
இவரது பாடல்களிலிருந்து குழந்தைகள் பாடி மகழ்வதற்கு, 15 சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்ற தலைப்பில், பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ‘பஞ்சுமிட்டாய்- ஓங்கில் கூட்டம்- வெளியிட்டுள்ளது.
“அ,ஆ என்றேனே” என்ற முதல் பாடல், குழந்தைகள் விளையாட்டாய் அரிச்சுவடியைக் கற்க உதவும். ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்பது வேடிக்கையும், நகைச்சுவையும் நிறைந்து குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் பாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதே சமயம் 7+7=14 என்ற கணக்கையும், குழந்தைகள் விளையாட்டாய்த் தெரிந்து கொள்வார்கள்.
“ஏழும் ஏழும் பதினாலாம்
எலியா ருக்கு முழம் வாலாம்.
அறைக்குள் எலியார் புகுந்தாராம்
அங்கும் இங்கும் பார்த்தாராம்.
இரண்டு தட்டில் பணியாரம்
இருந்தது கண்டு மகிழ்ந்தாராம்
கடித்து கடித்துத் தின்றாராம்
கணக்கைக் கூட்டிப் பார்த்தாராம்.
ஏழும் ஏழும் பதினாலாம்.
எலியார் ஏப்பம் விட்டாராம்!”
நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். குழந்தைகள் இப்பாடல்களைப் பாடுவதன் மூலம் புதிய சொற்களைக் தெரிந்து கொள்வதோடு, அவர்கள் தமிழ் உச்சரிப்பும் மேம்படும்.
வகை
குழந்தைப் பாடல்கள்
ஆசிரியர்
அழ.வள்ளியப்பா
வெளியீடு:-
பஞ்சுமிட்டாய் & ஓங்கில் கூட்டம் தஞ்சாவூர். செல் +91 9731736363