Reading view

Makizhilvitthu Makizhilnthiruppom|Dr.J.Jesi

 Abstract                    

The creature can live on the ground only if it is associated with each other.  Each of the creatures is looking for a situation and set up a habitat accordingly.  Not only lives, but all the fifties are dependent on. Water, land, air, air polluting is only because man is only looking for self -interest.  That is why the toxins are mixed in the resulting products. Our ancestors planted trees in the fields. When small birds sit in trees, they use small insects that are harmful to crops. The diet of the food chain is also excellent.


“மகிழ்வித்து மகிழ்ந்திருப்போம்”
 

      (நிலம்-பூமி, விசும்பு-ஆகாயம், வளி-காற்று, தீ-நெருப்பு, நீர்-தண்ணீர்) மண்ணை நிறைந்து வைத்திருக்கும் நிலமும், நிலத்தை ஏந்துகின்ற ஆகாயமும், ஆகாயத்தை வருடும் காற்றும், காற்றினால் மேலெழும் நெருப்பும், நெருப்பை அணைக்கும் நீர் என இயற்கையின் தன்மையை


மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு வைதரு வளியும்

வளி தரைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல (புறம் 2,16)

அறிவியலோடு எடுத்தியம்பியுள்ள புறநானூற்றுப்பாடல் சிறப்பிற்குரியது.


தனித்து வாழ இயலாது
 

       ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே நிலத்தில் உயிரினம் வாழ முடியும்.  உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனக்கேற்ற சூழ்நிலையை தேடி, அதற்கு தகுந்தாற்போல வாழ்விடத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றன.  உயிர்கள் மட்டுமல்லாது ஐம்பூதங்கள் அனைத்தும் சார்ந்து இயங்கக் கூடியதாகவே உள்ளன.


      இதில் மனிதன் மட்டும் சுய நலத்தை தேடியதால் தான் நீர், நிலம், ஆகாயம், காற்று மாசடைகின்றன.அதனாலேயே விளைப்பொருட்களிலும் நச்சு கலக்கின்றன.  விவசாயம் தமிழகத்தில் முதன்மை ஆதாரம். விவசாயம் செய்யும் பகுதிகளை வயக்காடு என்பர்.  ஏனெனில் வயலும், ஆங்காங்கே சிறு காடுகளும் இருக்கும்.  இப்பொழுது காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு வெறும் வயல்கள் மட்டுமே காணப்படுகின்றன.
         

          நம் முன்னோர்கள் வயல்வரப்புகளில் மரங்களை  நட்டு வைத்திருந்தனர். சிறு பறவைகள் மரங்களில் அமர வரும்போது பயிர்களுக்குத் தீமை விளைவிக்கும்  சிறு பூச்சிகளை தனக்கு உணவாக பயன்படுத்தி கொள்ளும்.  இதனால் பயிர்கள் சேதமின்றி, தானியங்கள் நல்ல விளைச்சல் கிடைத்தன.
 தற்போது மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் பறவைகள் தங்குவதற்கு ஆன சூழ்நிலை இல்லை.  இதனால் பயிர்களை சேதப்படுத்தும் புழுக்கள் மட்டுமின்றி, பல வகையான பூச்சிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்கின்றன.  இதற்கு தீர்வாக (செயற்கை) இரசாயன மருந்து தெளித்து வருகின்றனர்.   இதனால் மண்வளம் கேள்வி குறியாகின்றது.
          இன்றைய சூழல் மாசுபாட்டினால் நன்மை தரும் புழுக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக மண்புழு இனம் அழிந்து வருகின்றது.  மண்ணிற்குள் நண்டு, எலி, தேள், பூரான் ஆகியவை ஏற்படுத்தும் வளையின் வழியாக தண்ணீர் உள் இறங்கும்.  நுண்ணுயிர் பெருகும்.
         

       ஒரு கைப்பிடி மண்ணில் பல லட்சத்திற்கு மேல் நுண்ணுயிர்கள் இருக்கின்றன.  இந்த நுண்ணுயிர்கள் இருக்கும் மண்ணில்தான் மண்புழு இருக்கும். மண்புழு எப்போதும் மண் சுரங்கம் தோண்டி கொண்டிருக்கும். நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் மண் சுரங்கமும், மண்புழுக்களினால் மண்வளம் மேம்பட்டு சிறப்பாக  இருந்துள்ளன.  உணவுச் சங்கிலி முறையிலுள்ள உயிரினங்களின் உணவு முறையும் சிறந்தோங்கிய நிலையில் இருந்துள்ளன.

உணவு முறைகள்
         

       கோழியின் உணவு குப்பையிலுள்ள புழுக்கள். கொக்கு, வாத்துகளின் உணவு மீன்களும் மீன்முட்டைகளும்.  பயிர்கள், விலங்கு மற்றும் தாவரங்களின் மட்கிய   கழிவுகனை  உள்வாங்கி வளர்ந்தன.  மாட்டின் சாணியைக் கோழி கொத்தித் தின்றன, கோழி எச்சத்தை மண்புழு உண்பதற்கு முன்பாக நுண்ணுயிர்கள் பல உண்ணும்.
 மண்புழுவின் எச்சத்தைப் பயிர்கள் தின்னும்.  பயிர்களின் விளைச்சலை மனிதர்கள், விலங்குகள் உண்டு வாழ்வதை உணவு வளையம் அல்லது உணவு சங்கிலி என்று கூறுவர்.  இதில் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மனித இனம் வாழத் தடுமாறும் என நம்மாழ்வாரின் கூற்று சிந்தனைக்குரியது.


        பொதுவாக மண்ணில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வேறொரு உயிர்களை சார்ந்தே வாழ்கின்றன.   ஓரறிவு புல்பூண்டு முதல் ஆறறிவு மனிதன் வரை  இயற்கையோடு இணைந்து சார்ந்து வாழும் வாழ்க்கையே சிறப்பானது.  எந்திரங்களை சார்ந்து எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதை மனித இனம் புரிந்து கொண்டால் மனித வாழ்வு சிறப்படைய முடியும்.


காட்டு விலங்குகளின் உணவு

       விலங்குகளின் வாழ்வின் முக்கிய ஆதாரமாக யானை இருந்துள்ளது.   யானையின் செயல்பாடுகளாக மரக்கிளையை ஒடித்தல் பற்றி சங்க இலக்கியங்களில் பரவலாக பாடல்கள் பாடப் பெற்றுள்ளது. காடுகளில் யானைகள் பெரிய படர்ந்த மரங்களின் கைக்கெட்டும் மரக்கிளைகளை ஒடித்துப் போடுவதும், முறித்துப்போடுவதும் உண்டு.  மூங்கில் காடுகளுக்குள் நுழைந்து மூங்கில் கிளைகளை யானைகள் முறித்து தான் உண்பதுமுண்டு.  ஆனால் இவ்வாறு செய்வது நமக்கு பாதிப்பாக இருந்தாலும் அதில் பல உயிரினங்களின் வாழ்வதாரம் அடங்கியுள்ளன.


    யானை இப்படி செய்யும்போது கீழே விழும் ஒடிந்த கிளையின் இலைதழைகளை உண்பதற்கு மான்கள், கரடி, காட்டுப்பன்றி, முயல், காட்டு எருது ஆகியன காத்திருப்பதையும் மற்ற உயிரினங்கள் உணவாக்கி கொள்வதையும் அறிய முடிகின்றது. மேலும் அடர்ந்திருந்த படர் இலைகளை யானைகள் முறிப்பதால் சூரிய ஒளி அடர்ந்த காட்டிற்குள் புகுந்து வளர்ச்சியை உண்டாக்கும.  மற்ற உயிர்களுக்கு இரையாக கிடைக்கின்றது. இந்நிகழ்வானது, தாவர உண்ணி அதிகரிக்கும்போது அவை ஊன்உண்ணிகளுக்கு போதுமான உணவாகின்றது.


      யானைகள் மரக்கிளைகளை முறித்து போட்டும் புதர்களை மிதித்துப் போட்டும் சில இடங்களைப் புல்வெளிகளாக மாற்றுகின்றன.  இதனால் பல உயிரினங்களுக்கு வாழிடமாக மாறுகின்றன. காடுகளில் இறந்துபோகும் உயிரினங்களின் சடலங்களை பிணந்தின்னி கழுகு, நரி, கழுதைப்புலி மற்றும் பூச்சிகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகும் மறுசுழற்சி ஏற்படுகின்றது.
          பொதுவாக பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் செயல்பாடுகளால் மற்றொரு உயிரினத்தின் வாழ்வதாரம் ஆகின்றது.  சில  நேரங்களில் பிற உயிரினத்தின் வாழ்வதாரம் ஆகின்றது.  சில நேரங்களில் பிற உயிரினத்தால் தீங்கு நிகழும்போது அவ்வுயிரினத்தையே அழிக்க எண்ணுவது தவறானது.  அவ்வாறு செய்வதன் விளைவாக பெரும் பாதிப்புக்குள்ளாவது மனித இனமேயாகும்.


காடு வளர்ப்பின் பயன்

🌴இயற்கையான நல்ல காற்றை சுவாசிக்க முடியும்


🌴பிராண சக்தி அதிகரிக்கச் செய்யும்


🌴நோய்கள் நீங்கும்


🌴நலமாய் வாழ வழிவகுக்கும்

🌴வெப்பநிலை குறையும்


🌴மழை பொழியும்


🌴நிலத்தடி நீர்மட்டம் உயரும்


🌴பல்லுயிர் வாழும் இடமாகி, விலங்கு பறவைகள் சரணாலயங்களாகும்.


        என்ற உயர்ந்த சிந்தனையோடு  காடுகள் வளர்ப்போம்.  காடுகளை வளர்த்து காற்றையும், மழையையும் உணவையும், தந்து மனிதர்களை வாழவைக்கும்  பிற உயிர்களையும் பாதுகாப்போம்.


பறவைகளின் முக்கியத்துவம்

     இயற்கைச்சூழலைப் பாதுகாப்பதிலும், வேளாண் தொழிலுக்கும் உற்றத்தோழனாக இருப்பதிலும் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.   பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.  இப்பூமியானது  உலகளாவிய பறவை இனங்களைக் கொண்டு, பல்லுயிர்த் தன்மையை காத்து வருகின்றது.  மனிதனின் வாழ்வின் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றி பறவை இனங்கள் வாழ்வது மிக முக்கியம்.
         

        பறவைகள் எளிதில் இடம் பெயரக் கூடியவை.  சதுப்புநிலங்கள், பெரும்பாலும் பறவைகள் வாழ்வதற்குரிய சூழலைத் தருகின்றன.  வானிலையை முன்கூட்டியே அறியும் ஆற்றலுடையது.  தாங்கள் செல்லும் வழியில் அபாயம் இல்லை எனத் தெரிந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளும்.  பகலில் சூரியன் திசையைக் கொண்டும், இரவில் நட்சத்திரங்களை அடையாளமாக கொண்டும், பூமியின் காந்த அலைகள், மற்றும் தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளை வைத்து பாதையை அமைத்துக் கொள்ளும் தன்மையுள்ளது.
         

     பறவைகள் இனப்பெருக்கமும், இடம் பெயர்தல் இல்லையெனில், பூமியில் தாவரங்கள் பொய்த்து போய்விடும்.  தாவரங்கள் நன்கு வளர்வதற்கு முதல் ஆதராமே பூச்சிகளும், பட்சி இனங்களுமே.


கற்பிக்கும் பறவையினங்கள்
         

      பல வண்ண பறவைகளைக் காண்பது கண்களுக்கு இனிமை. பறவைகளின் குரலொலி கேட்பது காதுகளுக்கு இன்னிசை. பறவைகளின் குரலோசையை நாம் எழுப்பினால் நமது குரல் வளம் இனிமையாகும்.
          பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், அவை தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன.
         

      பறவைகளோ  விலங்குகளோ அல்லது புழு பூச்சிகளோ இல்லையென்றால் மனிதர்கள் சிறப்பாக பூமியில் வாழ்வதற்கு வழியில்லை.  வேம்பு, அத்தி, அரசமரம், ஆலமரம், புளிய மரம் போன்ற பல தலைமுறைகள் தாண்டி வளரும் மரங்கள் பறவைகளின் எச்சங்களால் தானாக வளர்கின்றன.
 உழவுத்தொழிலை மனிதன் பறவைகளின் வாயிலாக கற்றுக்கொண்டான்.  பறவைகள் வயல்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழ்வதன் மூலம் பயிர்களுக்கு தீமைகள் விளைவிப்பது குறைவே.  செடிகளுக்கு இடையே மகரந்தச் சேர்க்கைக்கு  உதவும். பறவைகளின் எச்சங்கள் உரமாகின்றன.  இறந்த விலங்குளை உண்பதால் சுற்றச்சூழலைத் தூய்மையாக்குகின்றன.


என் தனிமைக்கு துணையானாய்

உன் மெல்லிசையால் மகிழ்வித்தாய்

தானுண்ட மீதியால் பசியாற்றினாய்

இந்த கிளை முறிந்தாலென்ன

வேறொரு கிளை
         

       காலுண்டு கையிண்டு பிழைக்க வழியுண்டு என வழிகாட்டுவது பறவையினம்


பறவைகளுக்காகப் பயிரிடுதல்
         

      உயர்ந்த குணமுடைய பறவைக்கென சோளம், கம்பு, கேழ்வரகு என பலவகை தானியங்களை பறவைகள் உண்பதற்காகவே பயிரிடலாம்.  வானில் பறந்து செல்லும் பறவைகளே தோட்டத்திற்கு வந்து செல்.  உனக்கு பிடித்ததை உண்டு மகிழ், காலார உட்கார்ந்து கவிதை பாடிவிட்டு போ என்று கூறுவதைப் போலவும், உன் எச்சங்கள் என் பயிர்களுக்கு உரம். என் தலைமுறை வாழ நல்ல விதைகளை வித்திட்டு போ என்ற நோக்கில் பறவைகளுக்கென கொட்டாச்சியில் உணவு, தண்ணீர் என மரங்களிடையே சிறுசிறு  ஊஞ்சல் என ஏற்பாடு செய்து அதில் பறவைகள் வந்தமர்ந்து  பயன்பெறுவதைப் பார்க்கும்போது மனதிற்கு இன்பமும் உற்சாகம் கிடைக்கின்றது. இக்காட்சியானது பல மனநோய்களுக்கு மருந்தாகும்.
          பறவைகளுக்கும் பிற உயிர்களுக்கும் உணவிடுதால் மனித இனம் தழைத்தோங்கும்.  ஒவ்வொரு உயிரினங்களும் தன்னால் இயன்ற நன்மையை மனித இனத்திற்கு செய்து விட்டு செல்கின்றது.  இதனால் சூழல் மாறுபாட்டிற்கு தீர்வுகாண முடியும்.  வனங்கள் பெருகும் வாய்ப்பு உண்டாகின்றது.  நல்ல மழை பொழியும்.


விழிப்புணர்வுச் செய்திகள்

🌴இன்றைய வாழ்வில் சூழலோடு, பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பறவைகள் பாதுகாப்புக்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


🌴மாசுக்கட்டுப்பாடு, நீர்சேமிப்பு, சுகாதாரம் பற்றி குழந்தைகளின் பாட நூல்களில் விழிப்புணர்வு செய்திகள் இடம்பெறுவது போன்று பறவைகள் பாதுகாப்பு பற்றிய  விழிப்புணர்வு செய்திகள் இடம் பெற வேண்டும்


🌴பறவைகள் அதிகம் நிறைந்து காணப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள பொதுமக்களுக்கு பறவைகளின் இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு வாழும் நிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்த்த வேண்டும்.


🌴வலசைக்காக வந்து செல்லும் பறவைகள் அதிகமுள்ள ப குதியைக் கண்டறிந்து, அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்க வேண்டும்.


🌴வேட்டையாடுதல், நீர் நிலைகளில் எண்ணெய் கழிவுகளை ஏற்படாதிருத்தல், விளைநிலங்களில் உயரக பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தாதிருத்தல் வேண்டும்.


🌴உயர்கோபுர விளக்குகள், தகவல் தொடர்பு கோபுரங்கள் பறவைகளை அச்சுறுத்தாத வகையில் அமைக்கப்பெற வேண்டும்

🌴பனை, வேம்பு, ஆலமரம், அரசமரம், போன்ற மரங்களை  வளர்க்க வேண்டும். இம்மரங்களில் அமரும்போது எழும்பும் ஓலிகள் நம் மனதிலுள்ள கவலைகளை மறக்கச் செய்யும்.  பறவைக் கூட்டங்களைக் காணும்போது புத்துணர்வு பெறுவோம். 


🌴இம்மரங்களின் கனிகளை உண்ண வரும் பலவகை பறவைகளுக்கு தங்க இடமும் உணவும் கிடைக்கும்.


🌴தோட்டங்களில், வயல்வெளிகளில் வளரும் களைகளுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் செயற்கை உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.


🌴பலவகையான கனிதரும் மரங்களை வளர்க்க வேண்டும். தானிய பயிர்களை வளர்க்கும் போது பறவைளுக்கும்  உணவாகும்.


🌴பறவைகள் கூடு கட்டி வாழும் தன்மைக்கேற்ப மனித சமூகம் தங்கள் வாழ்விடங்களை அமைக்க வேண்டும். நம்மால் இயன்றவரை தொந்தரவு கொடுக்காமல் அன்பு செய்யும் பழக்கத்தையும், தண்ணீர் உணவு கொடுக்கும் வழக்கமும் வேண்டும்.


🌴தன் அன்றாட பணிகளை செய்யும்போது, பறவைகளுக்குத் தொல்லை கொடுக்கும் செயல்களைத் தவிர்க்கலாம்.


🌴காடுகளை அழிப்பதைத் தவிர்க்கலாம்.    மனிதர்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்து, பல தலைமுறைகளைக் கடந்து  வாழ்வதுபோல, விலங்குகளும்,  பறவைகளும், தாவரங்களும் பல தலைமுறைகளைக் கடந்து  வாழ  படைக்கப்பட்டவை  என்பதை உணர வேண்டும்


🌴அமாவாசை நாளில் மட்டும் காக்கைக்கு உணவிடுவதைத் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் வீட்டினருகே வரும் பறவைகளுக்கு உணவிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.


🌴முந்தைய நாட்களில் வாசலின் முற்றத்தில் அரிசி மாவில் கோலம் போடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.  அதனால் பல நுண்ணுயிர்கள் வாழும்.
பறவைகளைக் கூண்டுக்குள் வளர்ப்பதை தவிர்த்தல் நல்லது. வெட்டவெளியில் தனித்து இயங்கினால் சமூகத்திற்கு நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும்.


🌴வீட்டினருகே பெருமரங்கள் வளர்க்க முடியாவிட்டாலும், சிறு தானிய பயிர்களை வளர்த்தால் பறவைகளுக்கு உணவாகும்.


🌴வீட்டு மாடிகளில் சிறு வேர்களையுடைய சிறுதானிய பயிர்களை வளர்க்கலாம்.  பறவைகளுக்கென்று குடிநீர் வசதியை ஏற்படுத்தலாம்.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிகள்( பிளாஸ்டிக ஒழிப்பு)
         

🌴நமது வாழ்க்கை முறையை மாற்றிப்போட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
         

🌴பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதில் கண்ணாடிப் பொருட்களோ, எவர்சில்வர் பாத்திரங்களையோ பயன்படுத்த வேண்டும்.
 

🌴துணிக்கடை, உணவகங்கள், மளிகை கடை, மாமிச விற்பனை கடைகள், வீட்டு விசேஷங்கள் பழச்சாறு மற்றும் இனிப்பகங்கள், பூக்கடைகள், தேநீர்கடைகள் போன்ற நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் கடைகளில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடுகளைக் குறைத்து, பேப்பர் கவர், துணிப்பைகள், பேப்பர் கப், பேப்பர் தட்டுகள், சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
         

🌴விளம்பர பேனர்களுக்கு மாற்றாக துணி, மரப்பலகை, தகரம் சுவர்கள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.


பள்ளிக்குழந்தைகள்
         

     பள்ளிக்குழந்தைகளுக்கு, பிளாஸ்டிக் பொருட்களில் உணவு, தண்ணீர் கொடுக்காமல், பாதிப்புகளைக் கூறி சில்வர் பொருட்களில் உணவு, தண்ணீர் கொடுத்தனுப்ப வேண்டும்.
  விளையாட்டுப்பொருட்கள்  பனை, தென்னை,மரம், மண் ஆகியவற்றில் ஆன விளையாட்டுப் பொருட்களைக் கொடுக்கலாம்.  மின்சாதன பொருட்களோடு அல்லது தனியாக விளையாடாமல் இயற்கையோடும், பலரோடுக் கூடி விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

கோவில்
         

    வழிபாட்டிற்கு செல்லும்போது வழிபாட்டிற்குரிய பொருட்களை துணிப்பையில் கொண்டு செல்லலாம்.  வாழை இலையிலோ, பேப்பர் கவரிலோ, பாத்திரங்களில் கொண்டு செல்ல வேண்டும்.


பயணங்கள்
         

      பேருந்து மற்றும் இரயில் வண்டிகளில் பயணம் மேற்கொள்வோர் தங்களுக்குரிய உணவை எடுத்துச்செல்லவோ, அல்லது பெறவோ சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.  தனிநபர் தங்களுக்குரிய பாத்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
         

சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் நம் பாவங்களில் ஒன்று

இயற்கையைப் பாதுகாப்பது புண்ணியங்களில் ஒன்று


     ஏனென்றால் நம் தலைமுகைளுக்கு பாதுகாப்பான வாழ்க்கைச்சூழலை உண்டாக்கி கொடுப்பது நம் கடமையென அனைவரும் உணர வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்

🌴பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வெளியேறும் நச்சுப்புகையால் ஒவ்வாமை நோய்கள் மற்றும் காற்று மாசுபாட்டை தவிர்ப்போம்


🌴வாய்க்கால் போன்ற நீர் வழிகளை அடைப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயங்கள், நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


🌴பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதித்து மரணிக்கின்றன.


🌴வேளாண் நிலங்கள் பாதிக்கின்றது


🌴கடலில் எறியப்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களினால் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் தடுக்கப்படுகின்றது.


🌴பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களினால் உடலுக்கு கேடு விளைவிக்கின்றது
         

🌴பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுகக்கேடுகள், நோய்கள், நீர்நிலைகள் பாதிப்பு, காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு என நம்மைச் சார்ந்த உயிரினங்கள் (விலங்கு, பறவை, நுண்ணுயிரிகள்) அனைத்தும் பாதிக்கப் படுவதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.


மாற்று வழிகள்

🌴திரவப்பொருட்கள் வாங்க பாட்டில்களோ பாத்திரங்களோ பயன்படுத்தலாம்
எங்கு போனாலும், துணிப்பை எடுத்துச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.


🌴பிளாஸ்டிக் உறைகளில் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்ப்போம்.


நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வழிகள்
         

       நன்னீரில் வாழக்கூடிய கொசு இனங்களைஅழிக்க இரசாயனம் கலந்த கொசு மருந்துகள் பயன்படுத்தும்போது, நீர் வாழ் பிற உயிர்கள் அழிந்துவிடுகின்றன. நன்னீரில் உள்ள சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை முறையில் கொசுக்கள் உற்பத்தியைக் குறைக்கலாம்

மீன் வளர்ப்பு
         

      மீன்களின் முட்டை உணவு கொசுக்களின் முட்டைகள். மீன்கள் மீன் முட்டைகளை உண்பதால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லை. கொசுக்களை அழிக்க அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குளம், குட்டைகளில் கம்பூசியா அஃபினிஸ் மீன் வளர்க்கப்படுகின்றது.(கு.கணேஷ் 2017 அக்18 கொசுக்களுடன் ஒரு பனிப்போர் கட்டுரை தி இந்து இதழ்)


தவளை வளர்ப்பு

     
குளிக்கும் நீர் முழுவதும் மரஞ்செடிகளுக்கு பயன்படும்.  சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதால் தண்ணீர் முழுவதும் கழிவுநீர் ஆகின்றது.  துணி துவைக்க வேப்பங்கொட்டையால் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள், தவளைகள் வந்து அழுக்கை உண்ண வரும்.
  சீயக்காய், அரப்பு போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தலைக்குக் குளிக்கும் போது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.  பாத்திரங்கள் கழுவ சாம்பல்தூள், இலும்பைத்தூள் பயன்படுத்தும்போது சாக்கடையில் வாழும் தவளைகள் ஆயிரக்கணக்கில் உருவாகும். கொசுக்களை உண்டு வாழ்ந்தன.
           மனிதனை காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றின.  தவளைகள், கொசுக்களின் பெருக்கத்தினையும், கொசுமுட்டைகளையும், முட்டைப்புழுக்களையும், தலைப்பிரட்டைகளையும் உட்கொள்வதால் கொசுக்களின் பெருக்கம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம்.


தட்டான்பூச்சி
         

       தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம்  கொசுக்களைத் தின்று விடும்.  இப்பொழுது தட்டான் இனமே அழிந்து விடும் சூழலில் உள்ளது. இது பறக்கும் நிலையியேயே தன் உணவை வீழ்த்தும் தன்மையுடையது.  பிற சிறு பூச்சிகளையும் உண்டு வாழ்வதால் கொன்றுண்ணி பூச்சி என்ற அழைக்கப்படுகின்றது.
   பொதுவாக மனிதன் பெருந்தொற்று நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ரசாயனங்கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.  இயற்கையை மீட்டெடுப்போமானால் மட்டுமே மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியும்.


முடிவாக
 

நல்ல இயற்கையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டுமெனில்
  

1.பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து பிணமாவதைத் தடுப்போம்.
         

2.நீர்நிலைகளைச் சேமித்து நிம்மதி அடைவோம்.
         

3.காடுகளை வளர்த்து மனக்காயங்களைப் போக்குவோம்.


4.இயற்கையை நேசித்து இன்பமாய் வாழ்வோம்.
         

5.பறவைகளைப் பராமரித்துப் பாராளுவோம்.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஜெ.ஜெஸி,

உதவிப்பேராசிரியர்,

எம் .ஏ. எம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்,

சிறுகனூர், திருச்சி.

 

The post Makizhilvitthu Makizhilnthiruppom|Dr.J.Jesi appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

  •  

JAPAN NAATU SIRUKATHAIKAGAL – KULANTHAIKALUKKANA NEETHIGAL|Dr.N.PARAMASIVAM

Abstract


        Storytelling has long been a fundamental aspect of classical literature, serving as a powerful medium to impart discipline, moral values, respect for humanity, and the significance of hard work. It is not limited to the educated but also serves as a guiding tool for those with limited knowledge. By narrating stories to children, we can effectively instil essential virtues and ethical principles that shape human life. This research explores key moral values such as the importance of work, respect for nature, and the consequences of arrogance, as depicted in Japan Naatu Siru Kadhaigal (Short Stories from Japan). Through an analysis of these narratives, this study highlights how storytelling remains a timeless and impactful means of moral education.

ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள்- குழந்தைகளுக்கான நீதிகள்

ஆய்வுச்சுருக்கம்

       காலம் காலமாகச் செவிவழியாகக் கடத்தப்படும் இலக்கியமே கதை இலக்கியம். இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாது அறத்தை, அன்பை, பிறருக்குக் கொடுக்கப்படும் மரியாதையை, உழைப்பின் மேன்மையை என வாழ்வியலில் உள்ள அனைத்து அறங்களையும் கதை வடிவில் படைத்துக் கற்றவர், கல்லாதவர் என அனைவருக்குமான இலக்கியமாக,பொது இலக்கியமாகக் கதைகள் அமைந்துள்ளன.
‘அனைவருக்குமான’ என்ற பொதுத்தளத்தில் கதைகள் இயங்கினாலும் வரும்காலத்தை இயக்கும் குழந்தைகளுக்கு அறத்தை வலியுறுத்தும் பொழுதுதான் கதைகள் முழுமை பெறுகின்றன. அவ்வகையில் ஆய்வுக்குக் களமாய் உள்ள “ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் – குழந்தைகளுக்கான  நீதிகள்” என்னும் தலைப்பின்கீழ் ‘வேலையே தெய்வம்’,’இயற்கையை மதித்தல்’,’தான் என்ற அகம்பாவம்’ என்னும் பொருண்மையில் இவ்வாய்வு அமைகின்றன.


முகவுரை

      அன்றிலிருந்து இன்று வரை மனிதன் நாடோடியாகத்தான் திரிந்து கொண்டிருக்கிறான்.  அன்று வயிறும் வயிற்றை நிரப்புவதற்கான உணவுமே முதன்மையாக இருந்தன.  அதனாலேயே வேட்டைச் சமூகமாக இருந்து வந்தது.  இன்றும் அதே நிலைதான்.  ஆனால் அதில் சிறு மாற்றம். என்னவெனில் உணவே முக்கியமென்றாலும் அதைப் பெறுவதற்கான வளர்ச்சி அதுவும் அறிவு வளர்ச்சி என்ற நிலையை எட்டியபின் பணம் என்பது இங்கு அனைவருக்குமான பொதுத்தேவையாக மாறிவிட்டது.  எனவே இடம் விட்டு இடம்தேடி ஓடிய கால்கள் பணம் ஈட்ட, இன்று இருந்த இடத்திலேயே அமர்ந்து அறிவால் ஈட்டுகின்றனர்.  இப்படி ஒளிபடைத்த கண், உழைத்த உடல், சப்தமிட்டு ஒரு செய்தியை தன் இனக்குழுக்களுக்கு அறிவித்த வாய், வாசனை அறிந்தே அது விலங்கா? விலங்கின் எச்சமா? என உணர்ந்த மூக்கு எனும் ஐம்பொறிகள் ஒரு கட்டத்தில் இயல்பான நுண்ணறிவால் தன் நுண் உணர்வை இழந்து இன்று சற்று மங்கியுள்ளன.

        இதற்குத் தொழில் வளர்ச்சியும் அதனோடு இணைந்த பாதுகாப்பும் என்ற காரணங்களால் எச்சரிக்கை என்னும் உணர்வு, குறிப்பாக விலங்குகளால் அச்சுறுத்தல் இல்லை என்ற உணர்வால் அதன் பயன்பாடு குறைந்துள்ளதை அறிவோம். ஆனால் காது எனும் உறுப்பை எடுத்துக் கொள்ளின் “செவிச்செல்வம’’ “கேட்டல்  இனிது” எனும் இலக்கிய வரிகள் ஐம்புலன்களுள் காதுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. காரணம், காதுகளின் வழியேதான் உலக உயிர்களின் இயல்புகளை நம் முன்னோர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர்.  தான் கண்டு, உற்று, உணர்ந்த செய்திகளை அனுபவ வெளிப்பாடாக, சொற்களின் பிறப்பிடமான வாய் கூறினும் அதனை உள்வாங்கி தன் கற்பனைத்திறன், அறிவாற்றல், அறிவின் வழியில் செயல்படல் என்ற மூன்று நிகழ்வை ஒருங்கே இணைக்கும் மையப்புள்ளியாகக் காதுகள் செயல்படுகின்றன.  அதனால்தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் வளரும் குழந்தைப் பருவத்தில் இருந்து நமக்குக் கதைகள் கூறித் தன் கற்பனைத் திறத்தை வளர்த்துக் கொண்டதுடன் நிறைவேறா ஆசைகள், நிறைவேற்றத் துடிக்கும் லட்சியங்கள், வாழ்ந்த வாழ நினைக்கின்ற நிகழ்வுக் கதைகள், தனக்கான உலகம் மற்றும் தன்னைச் சுற்றி உலகம் எவ்வாறு சுழல வேண்டும் என எண்ணிலடங்கா வண்ணங்களை எண்ணிலடங்காகக் கதைகளால் கூறி கேட்போரின் உணர்வுகளை ஆட்கொள்வதுடன் கேட்போரையும் அவர்கள் அறியாமல் அவர்களுக்கான கற்பனைகளைத் தூண்டுகின்றனர். 
         

        ஆக, கதை கூறலும் கேட்டலும் என்பது நம் நாட்டிற்கு மட்டுமல்ல.  மொழிபேசும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.  இக்கதைகளின் ஊடாக பொழுதுபோக்கின் கூறுகளை மட்டுமல்ல ஒவ்வொரு நிலத்திலும் வாழும் சூழல்சார் அறிவினையும் அவ்வறிவினால் அவர்களின் மேம்பட்ட சிந்தனைகளையும் அறிவதற்குக் கதைகள் துணை புரியும்.  அவ்வகையில் ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் குறித்து இனிக் காணலாம். 


வேலையே தெய்வம்
         

        சின்டோ, பௌத்தம் ஆகிய மதங்களை ஜப்பானியர்கள் பின்பற்றி வரினும் அவர்கள் தாம் மேற்கொள்ளும் பணிகளையே தெய்வமாகக் கருதிவருகின்றனர்.  அதைத்தான் அவர்களுடைய மதங்களும் மதகுருமார்களும் வலியுறுத்தியுள்ளனர்.  இதை அடிப்படையாகக் கொண்டே “வெட்டி வேலை’ என்னும் சிறுகதையில் ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஜங் என்னும் விறகுவெட்டி நாள்தோறும் தன் கடமையைச் செய்ய, ஒருநாள் அவ்வழியாக வந்த ஒரு முனிவர் இறைவனை நினையாது அவர் குறித்துப் பாடாது வேலை மட்டுமே செய்தால் அடுத்த பிறவியில் புழுவாகப் பிறப்பாய் என்கிறார். 
          இதைக்கேட்டுத் திடுக்கிட்ட அவன் தன் தொழில், குடும்பத்தை மறந்து இறைவனின் புகழ்பாடித் திரிகிறான்.  ஒருநாள் தன் தாகம் தீர்க்க குளத்து நீரைக் குடிக்க முயல்கையில் தெளிந்த நீரில் தன் உருவத்தைக் காண்கிறான்.  அதில் தன் மெலிந்த உருவத்தைக் கண்டு இறையை விட உழைப்பே உடலை உறுதி செய்யும் என உணர்ந்து தன் இல்லம் திரும்புகிறான்.  இல்லத்தில் யாரும் இல்லாததைக் கண்டு அங்கிருந்த பெண்மணியிடம் வெறும் பிரார்த்தனை வேண்டாம். அது உடல், குடும்பம் என அனைத்தையும் அழிக்கும். 

          நாம் மேற்கொள்ளும் வேலையை முழுமனதுடன் செய்தால் இறையருள் கிடைக்கும் எனக் கூற அங்கிருந்த பெண் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறாள் எனக் கதை முடியும். எனவேதான் ஜப்பானியர்கள் வேலைப்பளுவால் சோர்வு சூழும்போதெல்லாம், இரண்டாம் உலகப் போரில் இறந்து போன தன் தம்பியைச் சுமந்த ஜப்பானியச் சிறுவனின் புகைப்படத்தை அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் ஜோ ஓ டோனல் என்பவர் வெளியிட அதை இன்றளவும் ஒவ்வொரு முறையும் காணுகிற ஜப்பானியர்கள் அப்புகைப்படத்தை வலிமையின் அடையாளமாகக் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகக் கதை என்பது வெறும் கதை அல்ல. அது உணர்வு சார்ந்தது.  எனவே, தான் மேற்கொள்ளும் செயலை, பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் என்பதே அவர்கள் நமக்குச் சொல்லும் நீதியாகும்.  எனவே ‘சிறுகதை என்பது எளிமை சான்ற படைப்பாக இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தெளிவான பயனை மட்டும் கொடுக்க முயல்கிறது’ என்பர்( 1 )


பணமா? நற்காரியமா?
         

        ‘இரண்டும் ஒன்றுதான்’ எனும் கதையில் ஒரு வயதான பெரியவரிடம் ஒரு கூஜா இருந்தது. அதில் நீரூற்றினால் குறையாத சூட்டுடன் இருந்தது.  ஒருநாள் அதில்  துளைவிழ அதைப் பெட்டியில் போட்டு விடுகிறார்.  அட்டைப் பெட்டியில் இருந்த அது தானூகிப் பறவையாய் மாறியது.  பின்னர் காலையில் பழைய கூஜாவாக உருமாற்றம் அடைந்தது.  இதைக் கண்ட அப்பெரியவர் இது நம்முடன் இருந்தால் குழப்பமே மிஞ்சும் என்று வேறொரு வியாபாரியிடம் விற்று புதிய கூஜா வாங்கிக் கொள்கிறார்.  அதை வாங்கிய வியாபாரி தன் இல்லம் கொண்டு செல்கிறார்.  அது மீண்டும் தானூகிப் பறவையாகிறது.  அதைக் கண்ட வியாபாரி உன்னை வைத்து நான் என்ன செய்வது எனக் கேட்க, என்னை வைத்து கூஜாவாகவும் பறவையாகவும் மாற்றிக் காட்டுகிறேன் என மக்களிடத்தில் கூறி வித்தை செய்து பிழைத்துக் கொள் எனக் கூறுகிறது. 

         அவ்வாறே வியாபாரியும் வித்தை செய்து பெரும் பணக்காரன் ஆகிறான்.  நன்றி மறவாத வியாபாரி இதை விற்ற பெரியவரைக் கண்டுபிடித்து தான் சம்பாதித்த பத்தில் ஒரு தொகையை அவரிடம் கொடுக்கிறான்.  அந்த முதியவரோ அந்தப் பழைய கூஜாவும் நீ தரும் பணமும் எனக்கு ஒன்று தான்.  இந்த இரண்டையும் பெற்றுக் கொண்டால் எனக்குக் குழப்பமும் துன்பமும் ஏற்படும் எனக் கூறி அதை மறுத்து விடுகிறார்.  இறுதியாக, அவனிடம் நீ எனக்குக் கொடுக்கும் பணத்தை மக்கள் நல்வாழ்விற்குப் பயன்படுத்து என்கிறார்.  ஸ்டெவன்சன் காட்டும் மூன்று வகையான சிறுகதைகளாக கருவால் வந்த கதை, குணச்சித்திரத்தால் வந்த கதை, உணர்ச்சிப் பதிவால் வந்த கதை. மேற்கண்டவை குணச்சித்திரத்தால் வந்த கதை ஆகும் (2).
         

        பணத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்கண்ட கதையைப் போலவே ‘யாருகிட்ட’ எனும் கதையும் அமைந்துள்ளது. க்யோடோ எனும் ஊரில் மியாட்சுகோ என்ற ஏழையும் அதே ஊரில் சானுகி எனும் பணக்காரனும் வாழ்ந்து வருகின்றனர்.  சானூகியிடம் மியாட்சுகோ கடன் வாங்கி முறையாக வட்டியும் செலுத்தி வருகிறான்.  ஒருநாள் தான் கொடுத்த தொகையை மியாட்டிடம் கேட்க அவன் பணம் தரமுடியாத சூழலை விளக்குகிறான்.  அதனை ஏற்காத சானூகி நீ இறந்தாலும் உன் ஆவியிடமிருந்தாவது பெற்றுக் கொள்வேன். உனை விடமாட்டேன் என்கிறான். 
         

        மனம் வெறுத்த மியாட்சுகோ  மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.  இதை அறிந்த காவலர் பிரேத பரிசோதனை முற்பட அன்றைய நாள் விடுமுறை என்பதால் அந்த மரத்திலேயே விடப்படுகிறான்.  நாளைதானே சடலம் எடுப்போம் என நினைத்த காவலர் மது அருந்திக் காவல் காக்க. அவ்வழியாக வந்த சானூகி தன்னால்தான் அவன் இறந்தான் என நினைத்து அவனைக் கண்டு பயந்து ஓடுகிறான்.  போதையில் இருந்த காவலர்கள் இறந்தவனின் ஆவிதான் ஓடுகிறது என நினைத்து அந்தச் சானூகியைப் பிடித்து மியாட்சுகோ இறந்த பக்கத்து மரக்கிளையில் சுருக்கிட்டுக் கொல்கின்றனர் எனக் கதை நிறைவடைகின்றது.  ‘இரண்டும் ஒன்றுதான்’ எனும் கதையும் ‘யாருகிட்ட’ எனும் கதையும் மையப் பொருண்மையில் பணம் தான் என்றாலும் இரண்டிலும் இமயம் அளவு வேறுபட்டுள்ளது. 
முதல் கதையில் மதியை மயக்கச் செய்யும் பொருளை வைத்து இருப்பதும் தவறு.  அதனால் எண்ணற்ற செல்வங்ளைப் பெறுதலும் தவறு. காரணம் உழைப்பில்லாச் செல்வம் சோம்பேறியாக்கும். உழைப்பில்லா வருமானம் தீது என்பதுடன் அவற்றைத் தனக்காகப் பயன்படுத்தாது மக்களுக்காகப் பயன்படுத்துவதே சாலப் பொறுத்தமாகும் என்கின்றது கதை.  இரண்டாம் கதையில் தான் கொடுத்த பணமட்டுமல்லாது அதோடு வட்டியையும் பெறத்துடித்தால் அதனை அனுபவிக்க இப்புவியில் இருக்காது இறப்போம் எனப் பணத்தின் இயல்பை விவரித்துள்ளது.  அதுமட்டுமின்றி பேராசைக்காரனோடும் எதையும் வியாபார நோக்கோடு பார்ப்பவனோடும் மது அருந்துபவனோடும் இணக்கம் வைத்தால் புகழும் உயிரும் அழியும் எனும் நீதியை குழந்தைகளுக்கு உணர்த்துகிறார் அரு.வி.சிவபாரதி.


இயற்கையை மதித்தல்
         

          ‘அதிசயக் கண்ணாடி’  எனும் கதையில் ஜப்பான் நாட்டு அரசர் தற்பொழுது இருக்கும் சிறிய மாளிகையைவிட்டு பெரிய மாளிகைக்குச் செல்ல நினைக்கிறார்.  ஆனால் தன் பழைய மாளிகையில் உள்ள எட்டு முகம் கொண்ட கண்ணாடியில் வாழும் சூரிய அரசி உத்தரவு தராமல் இருக்கிறாள்.  அவளை மீறி புதிய மாளிகைக்குச் சென்றால் சூரிய அரசி துன்பம் தருவாள் என நினைக்கிறார்.  அதனால் உண்டான வருத்தத்தைத் தன் மகளான இளவரசியிடம் கூற சூரிய அரசி எட்டுமுகக் கண்ணாடிக்குள் வந்த கதையைக் கூறுமாறு சொல்கிறாள்.  சூரிய அரசியின் தம்பி சோமாஹங் தீயவன். ஒருநாள் கடவுளுக்கு சூரிய அரசி உள்ளிட்டவர்கள் ஆடை நெய்து கொண்டிருக்கும் பொழுது இறந்த குதிரையின் உடலை மேற்கூரையிலிருந்து தள்ளிவிட அதனால் ஒரு நெசவாளி இறந்து விடுகிறான்.  இதைக்கண்டு பயந்து போன சூரிய இளவரசி பாறை ஒன்றில் மறைந்து கொள்கிறாள்.
 இதனால் உலகம் பனியால் உறைகிறது.  உயிர்கள் இறக்கின்றன.  இதனை உணர்ந்த சிந்தனைக் கடவுள்,’ சேவல்கள் கூவட்டும் அவள் இருக்கும் இடத்தில் எட்டுமுகக் கண்ணாடியை வையுங்கள்’ எனக் கட்டளையிட, சேவல் ஒலி கேட்டு அவள் வெளிவந்தவுடன் எட்டுமுகக் கண்ணாடி பட்டு பளபளக்கிறாள். இவளைக் கண்ட ஆற்றல் கடவுள் உடனே அவளை பாறையில் இருந்து இழுத்து உலகிற்கு ஒளிதந்து நெல்லை விளைவிக்கிறாள்.  இன்று வயதான அவள் இக்கண்ணாடியில் வாசம் செய்து நெற்கதிர்களை வாழவைக்கிறாள் என்று முடிகின்றது. இதைத்தான் பேட்சு எனும் ஆசிரியர் நினைக்கும் வண்ணம் சிறுகதை எவ்வாறு வேண்டுமானாலும் அமையலாம் என்கிறார். 
         

         ‘மந்திரமும் கழுதையும்’ எனும் கதையில் மந்திரக் கோலை வைத்திருந்த தேவதை பூங்காவில் ஓய்வெடுக்கிறாள். மறதியில் மந்திரக் கோலை விட்டுவிட்டு வீடு வந்தடைகிறாள்.  பின்னர்தான் மந்திரக் கோலை விட்டு வந்ததை உணர்ந்து மீண்டும் பூங்காவை அடைகிறாள்.  அந்தக் கோல் காணாமையினால் பத்திரிகையில் விளம்பரம் தர பத்திரிகை ஆசிரியரை அணுகுகிறாள்.  இவள் கூறியதைக் கேட்ட ஆசிரியர் இதுபோன்ற மூடத்தனத்தை என் பத்திரிகையில் விளம்பரமாகத் தர இயலாது என மறுத்து விடுகிறார்.  வேறு வழியில்லாத தேவதை மீண்டும் பூங்காவுக்கே வர அங்கே மந்திரக்கோலை வைத்திருக்கிறாள் ஒரு சிறுமி.  அப்போது அவள் ஒரு  மாமரத்திடம் பலாப்பழம் தருமாறு வேண்டுகிறாள்.  இதைக் கண்ணுற்ற தேவதை அச்சிறுமியிடம், மாமரத்திடம் இப்படித் தவறாகக் கேட்பது இயற்கையை அவமதித்தல் ஆகும் எனக் கூறி அவளைச் சினந்து மந்திரக் கோலைப் பெற்று மாம்பழத்தை வேண்டி அச்சிறுமியிடம் கொடுத்து அனுப்புகிறாள். 
         

       ஜப்பானியர்கள் தொலைந்த ஒரு பொருள் குறித்துப் பத்திரிகையில் செய்தி வெளியிட வேண்டும் எனும் அறிவினைக் குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் பெற்றிருத்தல் வேண்டும் என்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றனர்.  அத்துடன் மூடத்தனத்திற்கு எதிராகவும் பத்திரிகைகள் உள்ளன என நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என இக்கதை உணர்த்துகிறது. ‘மந்திரமும் கழுதையும், அதிசயக் கண்ணாடி’ எனும் இரு சிறுகதைகளும் இயற்கையை மதித்தல் வேண்டும் எனும் அடிப்படைப் பண்பினை வலியுறுத்தியிருப்பதைக் காண முடிவதுடன் சிந்தனை, ஆற்றல் என அனைத்தையும் கடவுளாகப் படைக்கப்பட்டதையும் உணர முடிகின்றன.   

       நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமையும் சிறுகதை, ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டிய சிறுகதை, பொருந்தாத வேண்டாத வலிந்து வராத சிறுகதை, வாழ்க்கையின் பல கோணங்களை உணர்த்தும் சிறுகதை, நீதி மற்றும் அறத்தின் காரணமாக அமையும் சிறுகதை என மேற்கண்ட ஐவகை உணர்ச்சிகளுடைய சிறுகதை இலக்கியம் நெடிது வாழும் என்பார் மு.வ. 


ஆணவம் கூடாது

     புத்தமதத்தில் ‘ஜென்கதைகள்’ உலகம் முழுக்கப் புகழ் பெற்றவையாகும்.  அதுவும் ‘ஒருசொல்’ என்பது மிகவும் பிரபலமானது.  ஞானநூலையும் உலகு இயல்பையும் ஒருங்கே குறைவறக் கற்ற ஞானகுரு இறந்து போகும் தருவாயில் இருக்கும்பொழுது அவரிடம் பயிற்சி பெற்ற சீடர்கள் ஒரு சொல் கேட்பது பெருவழக்கு.  அந்த குரு வாய் திறந்து ‘ஆ. ..‘என்று காட்டி மூடிய பின்னர் என்ன தெரிந்தது எனக் கேட்பார். நல்லறிவு வாய்ந்த சீடர்கள் குருவே! நா தெரிகிறது என்பர். அவ்வளவுதான் என்பார் குரு.  இதன் உட்பொருள் யாதெனில் பல் குறிப்பிட்ட வயதில் முளைத்து ஒரு குறிப்பிட்ட வயதில் விழுந்து விடும். ஆனால் ‘நா’ என்பது நாம் இருக்கும் வரையில் அதுவும் இருக்கும்.  எனவே சொல்லைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.  நா வளைகிறது என்பதற்காக ஆணவத்தில் பேசுவது தவறு என்பது ஞானி உணர்த்தும் கருத்தாகும்.  இதை உணர்ந்தவரே ஞானநிலையை அடைந்தவர் ஆவர். 

       அவ்வாறு இல்லையெனில் அவர் அஞ்ஞானிகளே என்கிறது ஜென்.
டாங் பரம்பரையைச் சேர்ந்தவன் லீ ஜில் மன்னன். கர்வம் மிக்கவன்.  இவன் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் உரோசிமா ‘தாரோ’ என்ற அறிஞர் இருந்தார்.  தான் மட்டுமே அறிவில் சிறந்தவன் என நினைத்துக் கொண்டிருந்த லீ ஜில் ஒரு நாள் உரோசிமா தாரோவின் திறமையை உணர்ந்து அவர் இருக்குமிடம் சென்று சேர்ந்தான்.  உம்முடன் நான் வாதப்போர் புரியவே வந்தேன். எனை யாரும் ஏமாற்ற முடியாது. உடனே வாதப்போருக்கு வருக என வம்பிழுத்தான்.  உடனே உரோசிமா உங்களோடு வாதப் போர் புரிய வேண்டுமானால் என் மந்திரப் பையை எடுத்துவரவேண்டும்.  அதைக் கொண்டே உமை வெல்வேன். எனவே, என் வீட்டிற்குச் செல்ல உம் குதிரை வேண்டும் என லீ ஜில்லின் குதிரையைப் பெற்றுக் கொண்டு பறந்து விட்டார். அதென்ன மந்திரப்பை என்ற யோசனையில் ஆழ்ந்து மதியம், மாலை, இரவு என நெடுநேரம் காத்திருந்த பின்னரே தன்குதிரையைக் கொண்டு சென்றதன் மூலம் தன்னை ஏமாற்றி முட்டாளாக்கி விட்டார் என்று உணர்ந்து தோல்வியை ஏற்று அரண்மனை திரும்பியவன் கடைசிவரை தன் வாயைத் திறக்கவில்லை.
‘கூடைநிறையப்பொய்’ எனும் சிறுகதையில் செல்வந்தன் ஒருவனுக்கு ஏழைப்பணியாளர் தான் சமைத்த கோழியையும் திராட்சை ரசத்தையும் கூடையில் வைத்துப் பரிசாகக் கொடுத்தான். உடனே அங்கிருந்த வேலைக்கார ஏழைச்சிறுவனிடம், ‘இதை என்வீட்டில் கொடு இக்கூடையில் உயிருள்ள வாத்தும் பாட்டிலில் விசமும் உள்ளன’ எனப்பொய் கூறினார். திறந்தால் பறந்து விடும் குடித்தால் இறந்து விடுவாய் என புத்திசாலித்தனமாகக் கூறுவதாக நினைத்து அச்சிறுவனை அனுப்பினார். தன் வேலையை முடித்துவிட்டு தன் இல்லம் வந்த செல்வந்தன் இரவாகியும் அச்சிறுவன் வராததைக்கண்டு அவன் வரும் பாதையின் எதிரே சென்றார். அச்சிறுவன் மரத்தடியில் உறங்குவதைப் பார்த்து கோபத்தில் உதைத்து உன்னிடம் கொடுத்த கூடை என்னவானது என வினவ, புத்திசாலிச்சிறுவன் அய்யா நீங்கள் கூறியது போல நடந்துவிட்டது. ஆர்வத்தில் நான் கூடையைத் திறந்தவுடன் வாத்து பறந்து விட்டது. என்னைத் தண்டிப்பீர்கள் எனப்பயந்து உயிர்துறக்க விசத்தைக்குடித்தேன். உயிர் பிழைத்ததை என்னால் நம்பமுடியவில்லை என்றதும் உண்மையை மறைத்ததால் தான் ஏமாற்றப்பட்டது மட்டுமல்லாமல் எதுவும் கேள்வி கேட்கமுடியாதபடி தன்வாயாலேயே தான் ஏமாறியதை உணர்ந்தான் செல்வந்தன்.


முடிவுரை

     கதைகள் அனைத்தும் அறத்தை வலியுறுத்துவனவாகவே இருக்கும். காரணம் இதன் அடிப்படைப்பண்பு அறம் என்னும் அடிநாதம் என்பதாலேயே அவ்வாறு அமைகின்றன. எனவே நாடும் மொழியும் இயற்கைச் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும் எனப் பல்வகையான கூறுகள் ஒரு கதை அமைவதற்கான காரணிகள் இருக்கின்றன.
ஜப்பானியச் சிறுகதைகளில் அறத்தை, அது கூறுகின்ற விதத்தை நுணுகி ஆராயும்பொழுது அந்நாட்டு மண்ணுக்கே உரிய தன்மையான பிரார்த்தனையை விட வேலைதான் முக்கியம் என உணர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இயற்கையை மதித்தலும், சிந்தனையையும் ஆற்றலையும் கடவுளாக்குவதும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஒப்பற்ற பொருள் காணாது போய்விடின் அதுகுறித்துப் பத்திரிகையில் செய்தி வெளியிடவேண்டும் என்ற அறிவார்ந்த பண்பை ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் உணர்த்தியுள்ளன. 


பார்வை நூல்

1.ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள் – அரு.வி.சிவபார்வதி,  ஜீவா பதிப்பகம்,  முதல் பதிப்பு – 2021.


2.இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு. பாலச்சந்திரன், ப.209.


3.மேலது, ப.217.


4.மேலது, ப.209.


5.இலக்கியத் திறன், டாக்டர் மு.வ. ப.71.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப்பேராசிரியர்

விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி

திண்டல், ஈரோடு – 638 012.

 

The post JAPAN NAATU SIRUKATHAIKAGAL – KULANTHAIKALUKKANA NEETHIGAL|Dr.N.PARAMASIVAM appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

  •  

அலைபேசியின் வாக்குமூலம்|சி.தெய்வானை  சிவகுமார்

📞 அலைபேசியின் வாக்குமூலம்

 

📞கண்களால் பார்த்து! ரசித்து,


கைகளால் தொட்டு! வருடி!


மார்போடு அனைத்து!


உன் மூச்சுக்காற்று


என் மீது பட


உன் இரு கைளால்


என்னை அணைத்தபடி


எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்..!


 

📞 நீ கேட்கும் ஒவ்வொன்றும்


என்னிலிருந்து நான் தருகிறேன்!


அது நன்மையாக இருக்கலாம்!

தீமையாக இருக்கலாம்!


 

📞 ஏனென்றால்!


கேட்பது நீயல்லவா!


நான் உன் கையில்


தவழும் போது


இந்த உலகமே  நான்தான்..!


 

📞 என்னுடன் பல விளையாட்டுகளை


விளையாடுகிறாய் – அவற்றில்


தோற்றும் போகிறாய் !


ஆனாலும் மீண்டும் மீண்டும்


தோற்றுப் போக ஆசைப்படுகிறாய்!


ஏன்! ஏனென்றால்


என்னில் உன்னை


மூழ்கடித்து விட்டதால்,


 

📞 இப்படி மூழ்கடித்து விட்டதால்


எத்தனையோ,

உயிர்களை  
குடித்திருக்கிறேன்.


 

📞 ஆனாலும்! உன் கைகளால்


இறுக்கிப் பிடித்து


என்னை  இறக்கி விட


முயற்சி செய்வதே இல்லை,.!


 

📞 உன்  தேவைக்கு ஏற்ப


என்னைப் பயன்படுத்தினால்


நான் உனக்கு சொர்க்கம்!


உன் ஆசைக்கு


என்னை பயன்படுத்தினால்


நானே உனக்கு நரகம்! 


 

கவிதையின் ஆசிரியர்

சி. தெய்வானை  சிவகுமார்


உதவி பேராசிரியர் 

தமிழ்த்துறை


ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி


பர்கூர்

கிருஷ்ணகிரி

 

The post அலைபேசியின் வாக்குமூலம்|சி.தெய்வானை  சிவகுமார் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

  •