சமைக்கக் கற்ற குரங்குகள்
ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் எப்போதும் வலியுறுத்திச் சொல்வாரே, இந்தக் கட்டுரை அது பற்றியது அல்ல என்ற மறுப்புரையோடு இதை ஆரம்பிக்கிறேன்.

தீ எரிக. அதனிடத்தே தசை பொழின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. தீயே நீ எது உயிரின் தோழன். உ்னனை வாழ்த்துகின்றோம்… என்று பாரதி பாடியது நமக்குத் தெரியும். ஆனால் அதில் தசை பொழியவும், செந்நீர் பொழியவும் மனித சமூகம் எப்போது கற்றது? மனித குல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமான உணவை சமைத்து உண்பது எப்போது ஆரம்பித்தது? அது ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை. ரிச்சர்ட் வ்ராங்கம் எழுதிய Catching Fire – How Cooking Made Us Human என்ற புத்தகத்தைப் படித்த போது, பாரதி போல் தீயை வணங்குவதோடு சமைக்கப்பட்ட உணவையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று தெரிந்தது. சமைத்த உணவு என்ற மாபெரும் மாற்றம் மட்டும் ஏற்படாவிட்டால், நாம் இப்போதும் குரங்குகளாகத் தான் இருந்திருப்போம் என்று சொல்லும் வ்ராங்கம் புகழ்பெற்ற மானுடவியலாளர். சிம்பன்ஸி போன்ற மனிதக் குரங்குகளிடம் காணப்படும் மனிதன் போன்ற குணாம்சங்களை ஆராய்ந்து ஏராளமான நூல்கள் எழுதியவர். மனிதக் குரங்குகள் இனத்தை அழிவிலிருந்து காக்க பாடுபட்டு வருபவர்.

மனிதன் தான் உண்ணும் உணவினால் வாழவில்லை. தான் செரிமானம் செய்யும் உணவால் தான் வாழ்கிறான் என்பது அறிவியலாளர்களிடையே புழங்கும் பழமொழி. உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் அவற்றின் மூளைத் திறனைப் பொறுத்தது. அந்த மூளையின் திறன் அவை உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது. பொதுவாக உயிரினங்களுக்கு உணவு, நீர், உறைவிடம் வேண்டும். அதோடு நின்றுவிடாமல் தீயைக் கண்டுபிடித்து, பயன்படுத்தி, உணவின் தன்மையை மாற்றி, அது இன்றி வாழ முடியாது என்ற நிலையை ஆதிமனிதன் அடைந்த போது இன்றைய நவீன் மனிதன் தோன்றினான். மனிதனுக்கும், விலங்குக்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் கூற முடியும் என்றாலும், சமைத்த உணவைச் சாப்பிடுவது தான் மிகப் பெரிய வேறுபாடு. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வேறுபாடு என்கிறார் அவர்.
19ம் நூற்றாண்டில் இது போன்ற கருத்து அறிவியலாளர்களிடம் நிலவியது. 1825ல் புகழ்பெற்ற பிரெஞ்சு உணவியல் அறிவியலாளரான சாவரின் தீயின் மூலம் தான் மனிதன் இயற்கையை வென்றான் என்றார். தீயின் மூலமாகத் தான் மனிதன் இறைச்சியை எளிதாக உண்ண முடிந்தது. மனிதன் சமைக்க ஆரம்பித்த பிறகு தான் இறைச்சி விரும்பிச் சாப்பிடக் கூடியதாக ஆனது. இதனால் தான் வேட்டைக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது. வேட்டை பொதுவாக ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. பெண்கள் சமைக்கப் போனார்கள். இன்றைய குடும்பம் என்ற அமைப்பு, பால்ரீதியான வீட்டு வேலைப் பிரிவினைகள் எல்லாவற்றிற்கும் சமையல் தான் ஆரம்பப் புள்ளி என்றார் அவர். அவரது கருத்துகள் தொடர்பாக, விரிவான அய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. சாவரின் இந்தக் கருத்தைச் சொன்ன காலத்தில் டார்வின் பள்ளிச் சிறுவன். டார்வின் தனது பரிணாமக் கொள்கையைக் கூறிய போதும் கூட, மொழிக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த மாபெரும் விஷயம் சமையல் என்று சொல்வதோடு நிறுததிக் கொண்டார். சமூகப் போட்டியில், வாழ்க்கைப் போராட்டத்தில், அறிவாற்றல் மனிதனுக்கு ஒரு கூடுதல் சாதகச் சூழலைத் தந்திருக்கலாம் என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொண்டார். மற்ற உயிரினங்களை விட அதிக அறிவாற்றல் மனித இனத்திற்கு மட்டும் வந்ததற்கான காரணம் என்ன, எது அதை சாத்தியமாக்கியது என்பது பற்றி அவருக்குத் தெளிவு பிறக்கவில்லை. சமைத்த உணவுதான் அந்த கூடுதல் அறிவாற்றலை மனித இனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார் வ்ராங்கம்.
சமைத்த உணவை உண்பது தான் மனித இனத்தை இன்றைய மனித இனமாக மாற்றியது என்பதை மானுடவியலாளா்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அது எப்போது, ஏன், எப்படி நடந்தது என்று அவர்களால் விளக்க முடியவில்லை.
சமையலின் தோற்றம் பற்றியே அறிவியலாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின. பழைய கற்காலத்தின் இறுதிக் கட்டம் வரை, அதாவது சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலுக்காக தீயைப் பயன்படுத்துவது அன்றாட நிகழ்வாக இல்லை என்று சிலர் கருதினார்கள். ஆனால் அந்தக் காலத்தில் குகை ஓவியங்கள் வரையும்அளவிற்கு மனிதன் நாகரீகம் அடைந்திருந்தான். மற்றொரு சாரார், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான். உணவை சமைத்துச் சாப்பிடுவதும் ஏறக்குறைய அதே சமயத்தில் ஆரம்பித்து விட்டது என்று கருதினார்கள். வ்ராங்கம் தொல்லியல் எச்சங்களை ஆராயாமல் உயிரியல் சான்றுகளை ஆராய ஆரம்பித்தார். நமது மூதாதையரின் பற்கள், எலும்புகளின் அமைப்பு அவர்கள் எவ்வகையான உணவை உட்கொண்டார்கள், அது எவ்விதமாக பதப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டின. ஹோமோ செப்பியன்கள் காலத்திலேயே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பதை அந்த ஆதாரங்கள் காட்டின. அது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் மனிதன் கதகதப்பிற்காக, வெளிச்சத்திற்காக, மற்ற கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நெருப்பைப் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.
சரி, அறத்தீ, உயிர்த்தீ, வேள்வித்தீ, தீயே நீ எமது உயிரின் தோழன் என்றெல்லாம் பாரதி உணர்ச்சிவசப்படும் அளவு தீ என்ன செய்தது? அவர் உணர்ச்சிவசப்பட்டது சரிதானா? என்றால் வ்ராங்கம் சரிதான் என்கிறார். சமையல் உணவின் மதிப்பைக் கூட்டியது. அது நமது உடலமைப்பை, மூளையை, நமது நேர நிர்வாகத்தை, நமது சமூக உறவுகளை மாற்றியது என்கிறார். மிக முக்கியமாக, ஒரு வெளிப்புற சக்தியை நுகர்வோராக நம்மை மாற்றியது, எரிசக்தியை நம்பி இருத்தல் என்ற இயற்கையுடனான ஒரு புதிய சமூக உறவை அது ஏற்படுத்தியது என்கிறார்.
இறைச்சி உணவு உட்கொள்ள ஆரம்பித்தது நீண்ட தூரம் பயணிக்கும் பலம், வலுவான உடல், அதிகரித்து வந்த அறிவாற்றல், அதிகரித்து வந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்கனவே உருவாக்கியிருந்தது. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனிதனிடம் பல்வேறு மாறுதல்கள் உருவாகின. ஏனைய விலங்குளிடமிருந்து தப்பிக் கொள்ள மரத்தில் ஏறி உறங்க வேண்டிய அவசியம் இன்றி, மனிதன் தைரியமாக தரையில் தூங்க ஆரம்பித்தான். தீயை வைத்து பிற விலங்குகளை அச்சுறுத்தி விரட்டினான். மெல்ல மெல்ல மரமேறும் திறனை இழந்தான் என்பது வேறு விஷயம்.
சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்காக அவன் மாறியதும், இன்னும் இன்னும் அவனிடம் மாற்றங்கள். சமைத்த, பக்குவப்படுத்தப்பட்ட உணவை எளிதாக செரிமானம் செய்ய முடிந்தது. அதுவரை உடலின் சக்தி முழுவதும் செரிமானத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது பற்களின் அமைப்பு மாறியது. செரிமான உறுப்புகளின் அளவு குறைந்தது. உடல் அவற்றிற்காக செலவிட்ட சக்தி இப்போது மூளைக்குச் சென்றது. மனிதனின் மூளை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றது. அளவிலும், சிந்தனைத் திறத்திலும். மற்றொரு முக்கிய மாற்றம் நேரம். கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற உடல் அமைப்பு உள்ள சிம்பன்ஸிகள் தம் உணவைக் கடித்து, மென்று தின்பதற்கு தினமும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டன. ஒரு பகல் பொழுதின் 42 சதவிகித நேரம். அதாவது இன்று நாம் டீ, காப்பி, சிகரெட், அரட்டை, கடலை போடும் நேரம் போக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரம். வேறுவிதமாகச் சொன்னால், ஒரு வேலை நாள். சமைக்கப்பட்ட உணவு இந்த நேரத்தை மிச்சப்படுத்தின. தீயினால் பக்குவப்பட்ட உணவு எளிதில் செரிமானமானது. உடலின் சக்தி மிச்சப்பட்டது. இப்போதும் கூட உடல் எடை குறைய பலரும் முயல் போல் கேரட், முட்டைக்கோஸ் என்று பச்சையாகச் சாப்பிடுவது, பேலியோ டயட் போன்றவற்றிற்கெல்லாம் இதுதான் காரணம். தெரு நாய், பூனைகளை விட வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள் குண்டாக இருக்கவும் இதுவே காரணம். கோவில் யானைகளுக்கு முகாம் நடத்தவும் இதுதான் காரணம். நாம் அவற்றிற்கு பக்குவப்படுத்தப்பட்ட, சமைத்த உணவைத்தானே தருகிறோம்.
உணவிற்கு ருசி கூடியது ஒரு கூடுதல் சாதகம். அந்தக் காலத்துக் காக்கை பாட்டியின் வடை திருடியதற்கும், இந்தக் கால காக்கைகள் காலையில் டீக்கடைக்காரர்கள் கடை வாசலில் சிதறிவிடும் மிக்சரைச் சாப்பிடுவதற்கும் இதுதான் காரணம். நிற்க, சாப்பிடும் நேரம் கணிசமாகக் குறைந்ததால், மனிதன் வேறு பல உபயோகமான வேலைகளைச் செய்தான். குகை ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது என்ற உபயோகமற்ற வேலைகளையும் செய்ய ஆரம்பித்து சந்தோஷமாகவும் இருக்க ஆரம்பித்தான். ஆனாலும் கூட, தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்று எழுதுவதற்கு எத்தனையோ யுகங்கள் ஆகியிருக்கிறது ! உணவை நேரடியாக தீயில் போட்டு வாட்டியவன் தீயை வைத்து பானை சுட அறிந்தான். சமையல்கலை மேலும் முன்னேறியது. சமைத்த உணவில் சத்துகள் அதிகரித்தன. கிருமிகள் அழிந்தன. உணவை எளிதாக கடித்துத் தின்ன முடிந்தது. உணவை அடுத்த வேளைக்கு மிச்சம் வைத்துக் கொள்ள முடிந்தது. உப்புக்கண்டம், கருவாடு எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது. புதிய சுவையான சமைக்கப்பட்ட உணவின் காரணமாக மனிதனின் அறிவாற்றல் வளர்ந்ததோடு மட்டுமன்றி, அவனால் அதிக நேரம் ஓட முடிந்தது. அதிக நேரம் வேட்டையாட முடிந்தது. ஆயுள் அதிகரித்தது. உடல் முழுவதுமிருந்த ரோமம் உதிர்ந்து அழகாகவும் ஆனான். சமூக உறவுகள், குறிப்பாக ஆண், பெண் இடையிலான பந்தம் எல்லாம் அதிகரித்தன. அவன் வேட்டையாடிக் கொண்டு வந்ததை, அவள் சமைத்து வைக்க குடும்பம் என்ற அமைப்பும் மெல்ல மெல்லத் தோன்றியது. வெறும் மாமிசப் பட்சிணியாக இல்லாமல் மனிதன் சமைத்துச் சாப்பிடும் உயிரினமாக பரிணமித்தான். தீயின் குழந்தையான அவன் சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்கினமாக இருந்து மெல்ல, மெல்ல இன்றைய நவீன மனிதனானான்.
267 பக்க புத்தகம். அதில் 38 பக்கங்களுக்கு உதவிய நூல்களின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த போது, உணவில் மாற்றம் ஏற்படுத்திய தீ மனிதனின் வழிபாட்டு முறைகளில் எப்படியோ முக்கிய இடம் பிடித்தது நம் நாட்டிற்கே உரிய ஒரு தனித்துவம். அது குறித்த ஆய்வுகள் ஏதேனும் உண்டா என்று தேடி வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உயிர்த்தீ என்று சொன்ன பாரதியை அறிவுத் தீ என்றும் சொல்ல வைத்தது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.
ஆர்வமுள்ளோர் வாசிக்க – Catching Fire – How Cooking Made Us Human by Richard Wrangham
நன்றி – உயிர்மை மார்ச் 2025