Reading view

செல்வி கவிதைகள்: நிலத்தின் நினைவுகள் மீது பீரங்கி வண்டிகள்

மரபான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, புதுக்கவிதைச் செயல்பாடே ஒரு இயக்கமாகத் தமிழில் முன்னெடுக்கப்பட்டது. தனிமனித இருப்பு, சூழலின் அரசியல் என எந்த வகைப் பொருளையும் மறைமுகமாகச் சித்தரிப்பது ஒரு பாணியாகத் தமிழகத்தில் வலுப்பெற்றது. ஆனால், இலங்கையில் இதற்கு எதிராக வெளிப்படையாகச் சித்தரிப்பதே பெரும்போக்காக இருந்தது.

தமிழகத்திலும் அம்மாதிரியான கவிதைகள் எழுதப்பட்டன; அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மார்க்சிய இயக்கங்களின் பாதிப்பு, மொழிப் போராட்டம் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், இவை இலங்கையில் நடந்த இன விடுதலைப் போராட்டத்தைப் போல் காத்திரமானவையல்ல.

இலங்கையின் இன வெறுப்பு அவர்களின் இயல்பான வாழ்க்கையையே அச்சுறுத்தும் வகையில் சிதைத்துவிட்டது. இந்த அளவு தீவிரம் மிக்க சூழலைப் பிரதிபலிக்கும் மொழி தன்னளவில் வெளிப்படையாக ரெளத்திரமாகத்தான் வெளிப்படும். இந்தப் பின்னணியில்தான் இலங்கைக் கவிதைகளை அணுக வேண்டும். அப்படியான கவிதைகள் எழுதியவர்களில் கவிஞர் செல்வியும் ஒருவர்.

செல்வி, கவிஞர் சிவரமணியின் நெருங்கிய தோழி. இவர்கள் இருவரது கவிதைகளும் செல்வி-சிவரமணி கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சிவரமணியைப் போலான எண்ணிக்கையில்தாம் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், அந்தக் கவிதைகளுக்குள் அன்றைய வட இலங்கையின் அரசியல் சூழலைப் பதிவுசெய்துள்ளார். சிவரமணியின் கவிதைகளைப் போல் செல்வியின் கவிதைகளும் வெளிப்படையானவை.

ஆனால், செல்வியின் கவிதையில் ரம்மியமான கிராமம் வருகிறது. அதுவும் நினைவில் பசுமையுடன் இருக்கும் ஒரு கிராமம். நிஜத்தில் சிதைந்து கொண்டிருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் வரப்போரம் சிறு பறவையைப் போல் அமர்ந்து ஒட்டுமொத்த இலங்கைப் போராட்டத்தையும் சித்தரிக்க அவர் முயல்கிறார்.

‘மீளாத பொழுதுகள்’ என்ற கவிதையில் ஒரு அழகான கிராமத்தை அவர் விவரிக்கிறார். சேரனின் ‘எனது நிலம், எனது நிலம்’ என்ற கூக்குரலைப் போல் இந்தக் கவிதையில் செல்வி தன் நிலத்தை விருப்பத்துடன் சொல்கிறார். சாதாரணமான காலைப் பொழுது அவர்களது கிராமத்தில் வசீகரிக்கும் காட்சியாக விரிகிறது. காகம் கரையும் ஓசையும் இனிமையான பாடலாக ஒலிக்கிறது. அந்தக் கிராமத்தின் தோட்ட வெளிகளில் தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவுகிறது.

இந்த இடத்தில் ‘எங்கும் அமைதி! எதிலும் இனிமை!’ எனச் சொல்கிறார். தேய்வழக்காகிவிட்ட இந்தச் சொற்களைத் தன் கவிதைக்குள் பிரயோகிப்பதன் மூலம் கவிதைக்குப் புது அர்த்தம் தருகிறார். துப்பாக்கிக் குண்டுகளின் முழுக்கம், ஹெலிகாப்டர்கள் பறக்கும் ஓசை, பூட்ஸ் கால்களின் அணிவகுப்பு, ராணுவ வாகனங்களின் இரைச்சல் என வட இலங்கையின் இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது இந்தச் சொற்பிரயோகத்தின் பிரயாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

கிராமத்தின் இந்தக் காட்சிகள் சட்டென ஒருநாள் மாறிவிட்டன. பொழுது புலராக் கருமை வேளையில் வண்டிகள் தடதடத்து உறுமியபடி நுழைந்தன. வெளியே அதிர்ந்து நடுங்கின. அங்கே அவலக் குரல்கள் கேட்டன என்கிறார் செல்வி. அவை தாய்மையின் அழுகையும் தங்கையின் விம்மலும் எனச் சொல்கிறார். இந்தப் பிரச்சினையையும் பெண்கள் பக்கம் நின்று பார்க்கிறார். ‘நேற்றுவரை அந்தக் காலைப்பொழுது அமைதியாக இருந்தது’ எனக் கவிதையை முடிக்கிறார். கடந்து சென்றுவிட்ட இறந்த காலத்தை செல்வி தனது கவிதைகள் வழியே கைகாட்டித் திரும்பத் திரும்ப அழைக்கிறார். அதற்கும் நிகழ்காலத்துக்குமான வேறுபாட்டைத் துயரம் மிக்கப் பாடலாகக் கவிதையாக்குகிறார்.

இலங்கைப் போராட்டத்தில் போராளி இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் செல்வி தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். ‘விடைபெற்ற நண்பனுக்கு’ என்ற கவிதையில் இனப் போராட்டத்துக்குச் சென்றுவிட்ட, முகவரி அறியாத பால்ய சிநேகிதனுக்கான மடலாக அது விரிகிறது. இந்தக் கவிதையிலும் அவரது நிலத்தின் தேமாவும் கொண்டைகட்டிய குரக்கன்களும் (சோளக் கதிர்) வருகின்றன. இவற்றினூடே போராளி இயக்கங்கள் மீதான தனது புகார்களை உவமையாகச் சொல்லியுள்ளார்.

செல்விக்கும் தீர்க்கமான அரசியல் பிடிபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவை வன்முறையிலானவை அல்ல. அமைதியின் மூலம் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என நம்பியுள்ளார் என்பதை அவரது கவிதைகள் மூலம் அறிய முடிகிறது. அந்த முறைப்பாட்டில் அவருக்குச் சில தடைகள் இருந்தன என்பதையும் கவிதைக்குள் சொல்கிறார். ‘மானுட நேயம் நோக்கிய பாதை’யைக் கவிதைக்குள் அவர் சுட்டுகிறார். செல்வியும் சிவரமணியும் சில காலம் சென்னையில் இருந்துள்ளனர். தனது சென்னை அனுபவத்தை ஒரு வரியில் அவர் பதிவுசெய்திருக்கிறார்.

செல்வியின் கவிதைகளில் ஒரு கதைத் தன்மை உண்டு. அவை கவிதைக்கான திறப்பைத் தன்னகத்தே கொண்டவையல்ல. ஒரு கடிதத்தின் தொடக்கத்தைப் போலவே பெரும்பாலான கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. கவிதை எழுதுவதற்கான முன் பிரயத்தனங்கள், திணறல்கள் அற்ற மொழி அவருடையது.

தனது நெருக்கடியை, தனது நிலத்தின் அரசியல் சூழலைப் பகிர்வதே அதன் தொழில் என்பதில் அவர் தெளிவாக இருந்துள்ளார். அதே நேரம் தனது சமகாலக் கவிஞர்களின் கவிதைகள் தந்த வெளிப்பாட்டு மொழியையும் அவர் கவனத்துடன் பார்த்து உள்வாங்கிக்கொண்டுள்ளார். அந்த விதத்தில் சேரனின் தொடக்க காலக் கவிதைகளுடன் பொருத்தப்பாடுகள் கொண்டவையாகவும் செல்வியின் கவிதைகள் இருக்கின்றன.

செல்வியின் கவிதைகளில் நிலமும் காலமும் திரும்பத் திரும்ப அதன் அழகின் நினைவுகளுடன் படைக்கப்படுகின்றன. காலைப்பொழுதைப் போல அந்தியையும் அதன் அழகுடன் இன்னொரு கவிதையில் விவரிக்கிறார். அதிலும் குளம், குளத்தோரப் புல், மதகு, மதகினிடையே பாயும் நீர், வயல்வெளிகள், மாமரம், அதன் கிளையிலிருக்கும் சிறு பறவை, கூழா மரம், அதன் பசுமை என அந்தக் கிராமத்தின் காட்சிகளைத் திருத்தமாகச் சித்தரிக்கிறார்.

இந்தக் காட்சியும் இறந்த காலத்தின் நினைவுகள்தாம். நிகழ்காலத்தில் இந்தக் காட்சிகளின் மீது போர் நடந்துசெல்கிறது. ஆனால், இந்தப் போரின் பாதிப்புகளை மிஞ்சிய வன்முறையுடன் சொல்ல செல்வி விரும்பவில்லை. குளத்தோரப் புல்லின் கருகிய நுனி கொண்டு இலங்கை இன விடுதலைப் போராட்டத்தின் மோசமான வன்முறையைச் சொல்ல அவர் முயல்கிறார்.

 ....

பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூச்சிழுப்புப் போல
இந்த வாழ்க்கையும்
நாய்களின் ஊளையும்
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்கும்
வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன.
இரவின் தனிமையில்
என்னைத் தூங்கவிடாது துரத்துகின்ற நினைவுகள்
குழந்தையொன்று வீறிட்டழுகின்றது
போர்வை விலகிப்போய் குளிர் உறுத்துகிறதோ
அறையிலே,
தூங்கும் எனது தோழியின் கனவிலே
சூரியத் தேரேறி கந்தர்வன் ஒருவன் வரக்கூடும்.
இப்போது,
தூரத்தே கேட்கும் துவக்குச் சன்னங்கள் பட்டு
பரிச்சைக்காய்
புத்தகங்களை முத்தமிட்டபடி
முதிரா இளைஞனொருவன் இறக்கவும் கூடும்.

...

கவிஞர் செல்வியின் இயற்பெயர் செல்வநிதி தியாகராசா. இலங்கையின் வட மாகாண நகரான வவுனியா அருகிலுள்ள சேமமடு கிராமத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நாடகத் துறை மாணவி. அரசியல் செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார். சிவரமணியின் கவிதைகளுடன் சேர்ந்து இவரது கவிதைகளை ‘செல்வி-சிவரமணி கவிதைகள்’ என்ற பெயரில் தாமரைச்செல்வி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1991-ல் அவர் இறுதியாண்டு மாணவியாக இருந்தபோது கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்றுவரை வீடு திரும்பவில்லை.
-மண்குதிரை

  •  

வெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்




சீரும் தளையும் அறுக்கப்பட்ட வடிவம்தான் புதுக்கவிதைக்கான முதன்மையான இலக்கணம் என அதன் முன்னோடியான க.நா.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். ஆனால் பாரதிக்குப் பிறகான புதுக்கவிதையின் மற்றொரு கிளையாக இருந்த ந.பிச்சமூர்த்தியின் அபிப்ராயம் மாறுபட்டு இருந்தது. அவர் மரபின் அலங்காரங்களைத் தக்கவைக்க விரும்பினார். க.நா.சு. முன்மொழிந்த மரபற்ற தன்மையைத்தான் இன்று புதுக்கவிதை தன் இலக்கணமாகச் சுவீகரித்துக்கொண்டுள்ளது. ஆனால் இன்றைய நவீன கவிதையின் முகம் மாறியிருக்கிறது. பிச்சமூர்த்தியும்  க.நா.சு.வும் முரண்பட்ட மையத்திலிருந்து அது முளைத்தெழுந்திருக்கிறது. இந்த இடத்தில் வெயிலின் கவிதைகளை வைத்துப் பார்க்கலாம்.
வெயிலின் கவிதைகளுக்கு பிச்சமூர்த்தி முன்மொழிந்த மரபின் ஓர்மை உண்டு. அதன் சந்தங்களை நாட்டார்வழக்கின் சந்நதமாக அவர் கவிதையில் நிகழ்த்திக் காட்டுகிறார். நிகழ்வதற்கு வாய்ப்பற்ற ஒன்றைக் கவிதைக்குள் சிருஷ்டிப்பதன் மூலம் அவர் க.நா.சு.வின் விநோதத்தையும் கொண்டுவர முயல்கிறார். அவரது கவிதைகளுள் சில அலங்காரம், அசாதாரணம் ஆகிய இந்த இரு அம்சங்களையும் களைந்துவிட்டுப் பூரண சுதந்திரத்தையும் எய்திருக்கின்றன. வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் கொண்டுள்ள இந்த அம்சத்தால், அவை வரையறைக் கோட்பாட்டுக்குள்ளிருந்து திமிறுகின்றன.

தொண்ணுறுகள் வரை பெரும்பாலான கவிதைகளை இம்மாதிரியான கோட்பாட்டுக்குள் வரையறுக்க முடியும். தொண்ணுகளின் தொடக்கத்தில்தான் இந்தியா உலகமயமாக்கலுக்குள் நுழைகிறது. இந்தச் சமூக நிகழ்வு, தமிழ்க் கவிதையை வெகுவாகப் பாதித்தது. உலகமயமாக்கலால் நெருக்கடிக்குள்ளான வாழ்க்கையை வெவ்வேறுவிதமான வெளிப்படுத்தும் களமாகக் கவிதைகள் பயன்பட்டன. உலகமயமாக்கலாலின் பாதிப்பு நூதனமானதாக இருந்தது. தீர்மானிக்க முடியாததாகவும் இருந்தன. அதுவரை காத்துவந்த ஒழுக்க நெறிகள், பண்பாடு எல்லாம் கேள்விக்குள்ளாயின. இந்த இடத்தில்தான் கவிதைகளுக்கு ஒரு மூர்க்கம் தேவைப்பட்டது. அதனால் கவிதை எஞ்சிய கட்டுப்பாட்டுகளையும் தகர்த்து எறிந்தது. அதற்காக அவை எல்லாம் உலகமயாக்கலுக்கு, நகரமயமாக்கலுக்கு எதிரான கவிதைகள் எனக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் நிமித்தமாகச் செயல்பட்டது என்பதைத் திடமாகச் சொல்ல முடியும். அதன் வழியே பலதரப்பட்ட மக்களின் குரல் கவிதைக்குள் ஒலிக்கத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில்தான் அதற்கு முன்பு வரை கவிதைகளில் ஆதிக்கம் செலுத்திவந்த தனி மன வெளிப்பாடு குறைந்து சமூக மனம் வெளிப்படத் தொடங்கியது. வடிவ ரீதியில் கவிதை தனது அசாதாரணத்தைத் தளர்த்திக்கொண்டது. மாறாக மூர்க்கம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக வெயிலின் கவிதைச் செயல்பாட்டை அணுக வேண்டும்.

தொண்ணுறுகளில் தொடங்கிவிட்ட உலகமயமாக்கல் என்ற சமூக நிகழ்வின் பாதிப்பு இரண்டாயிரத்திற்குப் பிறகு தீவிரமடைகிறது. வெய்யிலும் அப்போதுதான் கவிதைகள் எழுதத் தொடங்குகிறார். அதன் விநோதமான பாதிப்புகள்தாம் அவரது கவிதையின் பாடுபொருள்களாக ஆகின்றன. குடிநீர் விற்பனைக்கு வந்துவிட்டதைச் சொல்லி வெய்யிலின் கவிதை ஒன்று விசனப்படுகிறது. தூக்க மாத்திரைகள், பொக்லைன் எந்திரங்கள், வற்றும் ஜீவ நதி ஆகியவை எல்லாம் இந்தச் சமூக நிகழ்வின் பாதிப்புகளாகக் கவிதைக்குள் வருகின்றன. மருத்துவம் ஒரு தொழிலாக வளம் பெற்றிப்பதையும் வெய்யிலின் கவிதைகளில் காண முடிகிறது. சம்சாரியின் வீடு மாத்திரை, மருந்துகளால் நிறைந்துகிடக்கிறது.

இந்த அம்சத்தில் லஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரை வெய்யிலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். யவனிகாவின் அந்நியத்தன்மை இன்றைக்குப் பெரும்பாலான கவிஞர்களைப் பாதித்திருக்கிறது. அந்தளவுக்கு மணிவண்ணனின் கூர்மையும் அசாதாரணமும் இன்றைய கவிஞர்களைப் பாதிக்கவில்லை. இன்றைக்குள்ள கவிதைகள் பெரும்பாலானவை யவனிகாவிலிருந்து வேர் பிடித்துள்ளன. அவற்றுக்கு தமிழ்ப் புதுக்கவிதை மரபுடன்கூடத் தொடர்பில்லை. ஆனால் வெய்யில் கவிதைக்கான மையமாக இந்த மூன்று அம்சங்களும் உள்ளன. பாடுபொருளின் தீவிரம் கூடியிருக்கும் கவிதைகளுக்குள் வெய்யில் அசாதாரணத்தைத் திணிப்பதில்லை. அதன் போக்கில் சுதந்திரத்தைத் தருகிறார். ஆனால் கூர்மை, அவரது கவிதைகளில் திடமாகத் தொழிற்படுகிறது.

°

அரசியல் தொடக்க காலத்திலிருந்தே கவிதையில் தொழிற்பட்டுவந்துள்ளது. ஆனால் தொடக்கத்தில் கவிதைகள் அரசியலின் பாகமாகத் தங்களைக் கருதிக்கொண்டதில்லை. இதை ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாரதியின் வரிகளுடன் ஒப்பிடலாம். அல்லது இயக்கம் சார்ந்த கூக்குரலாக வெளிப்பட்டன. ஆனால் நிலத்தை, மரங்களை, கால்நடைகளை இழந்த சம்சாரியின் குரல்கள் அதற்குப் பிறகுதான் நேரடியாக வெளிப்பட்டன. அப்படியான குரல்களுள் ஒன்று வெய்யிலினுடையது.

தொழிற்சாலை கன்வெயர் பெல்ட்டில் காத்திருக்கும் தொழிலாளியாக, நிலத்தை இழந்த சம்சாரியாக, வாழ்க்கைப்பாட்டை இழந்த ஒரு நாட்டார் கதை சொல்லியாக எனப் பல நிலைகளில் கவிதைக்குள் ஓர் அங்கமாக வெய்யில் வருகிறார். அதனால் இயல்பாக அவருக்கும் வெளிப்பாட்டுக்குமான இடைவெளி கவிதைகளில் இல்லை. இந்த இடத்தில்தான் கவிதைக்குரிய லட்சணங்களாக முன்னிறுத்தப்பட்ட சில அம்சங்களை வெய்யிலின் கவிதைகள் புறக்கணிக்கின்றன. அல்லது திட்டமிட்டு உருவாக்கவில்லை எனலாம். மறைபொருளையோ அசாதாரணத்தையோ வாசக அனுபவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வெய்யில் உருவாக்கவில்லை. ஆனால் திறந்த சொற்களுடன் முன்னேறும் கவிதையில்  கூர்மையான உருவகத்தை உருவாக்கிக் காட்டுகிறார். அதிலே கவிதை பிரம்மாண்டமாக எழுந்துவிடும் அனுபவம், வாசகனுக்குக் கிடைக்கிறது. ஆனால் தன் தொழில் அதுவல்ல எனக் கவிதையைத் தொடர்கிறார்.

‘பாட்டாளிகளின் சூதாட்டம்’ என்ற கவிதையில் கன்வெயர் பெல்ட்டுடன் காலத்தைக் கழிக்கும் ஒரு தொழிலாளியாகக் கவிதையைச் சொல்கிறார். கன்வெயர் பெல்ட்டுகள் வல்லமையுடன் அவனை இயக்கின்றன. அவற்றிடமிருந்து விடுதலைபெற்று வீடு திரும்பும் அவன், தார்ச்சாலையை நீண்ட கன்வெயர் பெல்ட்காகக் கற்பனைசெய்கிறான். அதில் ஒரு சாதனமாக அவன் நடந்துபோகிறான். கன்வெயர் பெல்ட், ஆலை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு வீட்டுக்கு வந்து உறங்குகிறான். இந்த இடத்தில் வெய்யில், ‘ஒரு கடல் நாகம் எல்லையின்மையின் அமைதியில் நீந்துகிறது’ என்ற ஒரு உருவகத்தை எழுப்பிக் காட்டுகிறார்.

வெய்யிலின் மொழிப் பிரயோகம் சுயம்புலிங்கம், என்.டி.ராஜ்குமார் ஆகியோரின் கவிதைகளில் வெளிப்பாட்டு மொழியுடன் ஒப்பிடத்தகுந்தவை. சுயம்புலிங்கத்தின் வெள்ளந்தித்தனமும் ராஜ்குமாரின் சந்நதமும் இவரது கவிதைக்குள் விநோதமாகச் சுருண்டு கிடக்கின்றன.

அப்பா தற்கொலை செய்துகொள்ள வாங்கிய பூச்சிமருந்து பாட்டிலில் சாக்குத் தைக்கும் ஊசியால் மூடியில் துளையிட்டு கோடித்துணித் திரியும் மண்ணெண்ணெயும் கொண்டு அம்மா ஒரு விளக்கை உருவாக்குகிறார். அதுபோல் பதின் மூன்று விளக்குகள். பதின் மூன்று தற்கொலைகள் (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி). ஒரு சம்சாரியின் தற்கொலையைச் சொல்லும் இந்தக் கவிதை தாழ்ந்த குரலில் ஒரு முனகலாக வெளிப்பட்டுள்ளது. அதேசமயம் ‘என் மூதாதையின்/ திரமான முதுகெலும்பால் செய்யப்பட்ட/ கூடிய அம்பு / பெருந்தாகம் கொண்டிருக்கிறது/ …மண்டியிடு/ என் வரண்ட பூமியில் ரத்தம் சிந்து’ (குற்றத்தின் நறுமணம்)’ என்ற கவிதையில் குரலை இறுக்கிக் கட்டியிருக்கிறார். இந்தக் கவிதையின் வடிவமும் பனையேறி உடலைப் போல் முறுக்கேறியிருக்கிறது. அற்புத விளக்குகள் கவிதை, நோய்மையின் தளர்வுடன் இருக்கிறது.

இந்த இரு கவிதைகளுமே சம்சாரியிடமிருந்துதான் வெளிப்படுகிறது. ஒன்று யாதார்த்தத்துக்குச் சிரம் கொடுத்துச் சாய்கிறது. மற்றொன்று யாதார்த்துக்கு மாறாகச் சிரமெடுக்கத் துணிகிறது. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் வெய்யிலின் கவிதைகள் இந்த முரண்பாட்டில் இயங்குபவைதாம்.

அவரது கவனம்பெற்ற கவிதைத் தொகுப்பான ‘குற்றத்தின் நறுமணம்’ என்னும் தலைப்பே ஒருவிதத்தில் அவரது கவிதைகளின் ஆதாரம் எனலாம். குற்றத்தின்பால் அவரது கவிதைகளுக்கு அளவில்லாத ஈர்ப்பிருக்கிறது. குற்ற உணர்வைத் தரக்கூடிய அறத்தின் கழுத்தை ஒரு கவிதையில் அறுத்துவிடுகிறார். கை, கால்கள், அடிவயிறு, தசை, இருதயம் என உடலின் மற்ற பாகங்களும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவையெல்லாம் குற்றத்தின் பொருட்டு கவிதைக்குள் நடக்கின்றன. ஆனால் இவை சமூகப் பின்புலத்துடன் ஆராயப்பட வேண்டியவை என்பதைத் தன் கவிதைகள் மூலம் சொல்கிறார் வெய்யில்.

காமமும் குற்றத்தின் அம்சமாக வருகிறது. சேரனின் கவிதைகளின் காமத்தைப் போல் வன்முறையாக, வாதை தருவதாக வெளிப்பட்டுள்ளது. கைக்கிளை, பெருந்தினை, காரைக்கால் அம்மையார், கண்ணகி எனக் காமத்தைப் பிரயாசையுடன் பலவிதமாக அடையாளப்படுத்த முயல்கிறார் வெய்யில். அதுபோலக் காமத்தை வெய்யிலின் கவிதைகள் புனிதமானதாக, வேதாந்த ரகசியமாகப் பார்க்கவில்லை. ‘கஞ்சா புகைக்கும்போது ஏற்படும் மூளைச் சுர்’ எனத் தன் உசரத்துக்கு அதை வளைத்துப் பார்க்கிறது. அவரது இந்தக் காமத்திற்குக் குற்றவுணர்வும் கள்ளத்தனமும் உண்டு.

ஒருவிதத்தில் பார்த்தால் பாவமான யதார்த்தைக் கவிதைக்குள் மீண்டும் மீண்டும் நிகழ்த்துவதை வெய்யிலின் கவிதைகள் விரும்பவில்லை. ஒரு மந்திரவாதியைப் போல் யதார்த்திற்கு மாறான குரூரமான அபூர்வங்களைக் கவிதையின் மூலம் நிகழ்த்த முயல்கிறார். கவிதைக்குள்ளிருக்கும் ஈர்ப்பூட்டும் கொலைகள், குருதி சொட்டும் ஒரு புரட்சி, கைகூடாக் காமங்கள் என எல்லாம் அந்தப் பிரயாசைகளின் வெளிப்பாடுகள் எனலாம்.

- மண்குதிரை                                                                                                                                                  

                                                                                                                                                                         அம்ருதா, செப்டம்பர், 2018

  •  

யாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்



இலங்கையைப் பொறுத்தவரை 80-கள் முக்கியமான காலகட்டம். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தக் காலகட்டத்திலதான் வலுப்பெற்றது. திருநெல்வேலித் தாக்குதல்களைத் தொடர்ந்து கறுப்பு ஜூலைச் சம்பவமும் நடந்தது. கொழும்பில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்திய அமைதிப்படையும் அப்போதுதான் இலங்கைக்குள் நுழைந்தது. இவற்றுக்கெல்லாம் முன்பு பழமையான யாழ்ப்பாணம் நூலகம் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டது. வட இலங்கையின் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் கவிதைகள் எழுதியவர் சிவரமணி. இந்த அரசியல் சூழலே அவரது கவிதைக்கான ஆதாரமாகவும் இருந்தது.
இலங்கைத் தமிழ்ப் புதுக்கவிதை, இந்தியத் தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுப்பட்டவை. ஆனால், தமிழ் மரபுக் கவிதையுடன் தொடர்புடையவை. உணர்ச்சியை அணுகும் விதத்திலும் விவரிப்பு மொழியின் ஓசை வெளிப்பாட்டிலும் மரபின் தன்மையை இலங்கைப் புதுக் கவிதைகள் இப்போதும் கைக்கொண்டுள்ளன. ஆனால், சிவரமணியின் கவிதைகள் அழகுணர்வுக்கு அப்பாற்பட்டுப் பாடுபொருளில் வேரூன்றியவை. அவரே தனது ஒரு கவிதையில் ‘கவிதை வெறிமுட்டி / நான் கவிஞன் ஆகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் வசந்த தென்றல் அல்ல நான்’ என்கிறார்.
சிவரமணி மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகக் குறைந்த கவிதைகளே எழுதியிருக்கிறார். 30-க்கும் குறைவான கவிதைகள்தாம் இதுவரை பிரசுரிக்கப்பட்டுள்ளன. 23 கவிதைகள் மட்டுமே வெளியாகியுள்ளதாக சிவரமணி குறித்த கட்டுரை ஒன்றில் இலங்கை எழுத்தாளர் சித்திரலேகா குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கவிதைகளின் காத்திரம் தமிழ்க் கவிதை வரலாற்றில் அவரைத் தவிர்க்க முடியாத ஆளுமையாக ஆக்கியுள்ளது.
அவரது ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ என்ற கவிதை, போர் எப்படித் தலைமுறைகளைப் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது. உளவியல்ரீதியிலான அதன் பாதிப்புகள் எப்படிக் குழந்தைகள் மனத்தைச் சிதைக்கின்றன என்பதையும் திருத்தமாகச் சித்தரிக்கிறது. போர்க் கால இரவில் திடீரெனத் துப்பாக்கிக் குண்டின் சப்தம் வந்து விழுகிறது. நுங்கு எடுத்த பனங்காயில் வண்டி செய்வது, கிளித்தட்டு விளையாடுவது, சதா கேள்வி கேட்பது எனக் குழந்தைகள் தங்கள் இயல்புகளை மறந்துபோகின்றனர்.
கிடைக்கும் மரக் குச்சிகளைத் துப்பாக்கியாகப் பாவித்து எதிரிகளைச் சுட்டு விளையாடும் புதுக் களியைக் கற்கிறார்கள். ‘எங்கள் குழந்தைகள் வளர்ந்தவர்கள் ஆயினர்’ என இந்தக் கவிதையை சிவரமணி முடிக்கிறார். ‘ஒரு சிறிய குருவினுடையதைப் போன்ற அவர்களின் அழகிய காலையின்’ மீது வீசப்படும் குருதி தோய்ந்த முகமற்ற மனித உடல்களால் ‘எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களாயில்லாது போயினர்’ என மற்றொரு கவிதையிலும் சொல்கிறார்.
அகவயமான கவிதைகளும் சிவரமணி எழுதியிருக்கிறார். அந்தக் கவிதைகளில் அவரது ஆளுமை தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளது. தனது இருப்பைக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப வலியுறுத்திவந்துள்ளார். ஆனால், அந்தக் கவிதையின் உட்பொருள் அதற்கு மாறான தனி மனித இருப்பு சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகிறது. இந்த இடத்தில் தனி மனித இருப்பு குறித்த ஆங்கில, 70 காலகட்ட இந்தியத் தமிழ்க் கவிதையுடன் இவரது கவிதைகளை ஒப்பிடலாம்.
‘கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்’
என்கிறது அவரது ஒரு கவிதை.
இலங்கையின் இந்தப் போர், அந்த மக்களின் அன்றாடங்களை அசாதாரணமானவையாக ஆக்கிவிட்டது. இதைத் தனது சில கவிதைகளில் திரும்பத் திரும்பச் சித்தரிக்கிறார். ‘எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண முயற்சி’ எனத் தன் கவிதையில் சொல்கிறார். ‘எனக்கு உண்மைகள் தெரியவில்லை. பொய்களைக் கண்டுபிடிப்பதும் இந்த இருட்டில் இலகுவான காரியமில்லை’ என மனிதர்களுக்குள் நிலவிய நம்பகமில்லாத் தன்மையைச் சொல்கிறார்.
இன வெறுப்பால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரலாக ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். ஆனால், ‘இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக’ அவள் வாழ்கிறாள் என்பதில் சிறு நம்பிக்கையை விதைக்கக் கவிதை முயல்கிறது. ஆனால், ‘கூனல் விழுந்த எம் பொழுதுகளை நிமிர்த்தத் தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை’ என்றும் தன் கவிதையில் விசனப்படுகிறார்.
1991-ல் தற்கொலை செய்துகொண்ட சிவரமணியின் கவிதைகள் பல, தற்கொலைக்கு முன்பு அவரால் கொளுத்தப்பட்டுவிட்டன எனச் சொல்லப்படுகிறது. ‘எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்’ என எழுதியிருக்கிறார் அவர். அவற்றுள் எஞ்சிய கவிதைகளுள் சில பின்னாளில் பிரசுரம் கண்டன. இப்போது நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கவிதைகள் 1985-1989 கால இடைவெளியில் எழுதப்பட்டவை. ஆனால், அவற்றுள் பெரும்பாலானவை 1985-1986 கால இடைவெளியில் அவரது 17-வது வயதில் எழுதப்பட்டவை என சித்திரலேகா குறிப்பிடுகிறார். இந்த 23 கவிதைகளுக்குள் இன விடுதலை குறித்த தன் லட்சியத்தை சிவரமணி வெளிப்படுத்தியிருக்கிறார்.
தன் இருப்பு நிலை குறித்த மனப் பிரயாசத்தைச் சொல்லியிருக்கிறார். ‘என் இனிய தோழிகளே/இன்னுமா தலைவார/கண்ணாடி தேடுகிறீர்?’ எனப் பெண்களைப் போராட அழைத்துள்ளார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன விடுதலை குறித்த யதார்த்த முகத்தையும் சித்தரித்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்துத் தனக்கு இருந்த கருத்து வேறுபாடுகளையும் துணிச்சலுடன் முன்வைத்திருக்கிறார். அவரது தற்கொலை ஒருவகையில் அவரது நம்பிக்கைகளின் தோல்வி எனலாம். ‘நான் எனது நம்பிக்கைகளை தோற்றுக் கொண்டிருக்கிறேன்.’ என ஒரு கவிதையில் சொல்லியுள்ளார். இந்தத் தோல்வி இலங்கை விடுதலைப் போராட்டத் தோல்வியுடன் ஒப்பிடத் தகுந்தது.
...
என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?

சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.

ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.

வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
வாருங்கள் தோழிகளே

நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
வாருங்கள் தோழிகளே.

சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.
சிவரமணி, யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி யிலும் வேம்படி மகளிர் கல்லூரியிலும் படித்தவர். சிவரமணியின் கவிதைகளும் அவரது தோழியான கவிஞர் செல்வியின் கவிதைகளும் சேர்த்து ‘செல்வி சிவரமணி கவிதைகள்’ என்ற பெயரில் சென்னை தாமரைச்செல்விப் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சிவரமணி, 1991 மே 19-ல் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, பெண் இன்று, 03.06.18)

  •  

எழுத்தாளர் குந்தவை கதைகள்: போருக்கு இடையே பெண்கள்


இந்தியத் தமிழ் இலக்கியங்களிலிருந்து ஊக்கம் பெற்றது இலங்கைத் தமிழ் நவீன இலக்கியம். ஆனாலும் இங்குள்ள இலக்கியத்தின் தொடர்ச்சி என்று அதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. தங்களுக்கெனத் தனித்த மொழியை இலங்கைத் தமிழ் இலக்கியம் சுவீகரித்துக்கொண்டிருக்கிறது. வேதனை நிரம்பிய அவர்களது வாழ்க்கையைச் சித்திரிக்க உணர்ச்சிகரமான மொழியே அந்த இலக்கியத்தை முதன்மையாக இயக்கியது. கவிதைகள், பாடல்களுக்கு அருகில் இருந்தன. ஆனால், சில அபூர்வமான விதிவிலக்குகள் உண்டு. புதிய சொல்லில், புதிய சுவையில் தமிழின் மிகச் சிறந்த கதைகள், இலங்கையிலிருந்து வந்துள்ளன. அம்மாதிரியான கதைகளை எழுதியவர்களுள் ஒருவர் எழுத்தாளர் குந்தவை.
குந்தவையின் முதல் கதை ‘ஆனந்த விகடன்’ இதழில் 1963-ல் வெளிவந்தது. தொடர்ந்து ‘கணையாழி’, ‘சக்தி’ போன்ற தமிழக இதழ்களில் எழுதியிருக்கிறார். தமிழின் முன்னோடிப் பெண் எழுத்தாளர் என அவரை முன்னிறுத்தலாம்.
இந்தியத் தமிழ் வாழ்க்கைமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இலங்கை வாழ்க்கை. அசெளகரியங்கள் நிறைந்தது. அந்த வாழ்க்கை முறையிலிருந்து கதைகள் துளிர்ப்பது எளிது. ஆனால், அந்தத் துயரம் கதை சொல்லும் பாங்கில் ஒரு முடுக்கத்தைத் தந்துவிட அதிக வாய்ப்பிருக்கிறது. உணர்ச்சி வேகமும் மூர்க்கமும் கூடிவிடும். இந்த இடத்தில் குந்தவை விலகி நின்று பார்க்கிறார். ஒரே ஒரு கதாபாத்திரத்தைக்கொண்டு நம் காலத்தின் மிகக் கொடிய சண்டையைச் சித்திரித்துவிடுகிறார். இன உணர்வுக்கு அப்பாற்பட்டு சாமானிய மனுஷியைக் கொண்டு இதைச் சித்திரிக்க முயல்கிறார். 
அவரது ‘பெயர்வு’ கதையில் போரால் ஒரு ஜனக் கூட்டம் ஒற்றைப் படகில் இரவில் சிக்கிக்கொள்கிறது. யாழ்குடா பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து கிளிநொச்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் சிவரஞ்சனி தன் மகனுடன் இருக்கிறாள். படகிலிருந்தவர்கள் மீது அலை நீரை வாரி இரைத்துக்கொண்டிருக்கிறது. முதலில் விளையாட்டாக இருந்த அது, அவளது சிறு பையனுக்குச் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்தப் படகுப் பயணத்துக்குச் சில நாட்கள் முன்பு சாம்பார் சமைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களது சகஜமான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
அவளது கணவன் ராணுவம் நெருங்கிவிட்டதாகச் சொல்கிறான். பிறகு ஒரே ஓட்டம்தான். நின்ற இடத்தில் உறங்கி, பறக்கும் ஹெலிகாப்டருக்குக் கீழே பதற்றத்துடன் உறங்கி, இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இடையில் இரு சிறு பிள்ளைகளின் உடல்களை வேறு இவள் பார்த்திருக்கிறாள். அவளால் கண்களை மூட முடியவில்லை. மூடும் அவள் கண்கள் வழிக் காட்சிகள்மூலம் இலங்கைப் போரின் பாதிப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் குந்தவை.
குண்டுகள், கண்ணிவெடிகள் எதுவும் இல்லை. காவியத்தன்மையான விவரிப்புகளும் இல்லை. மக்களின் புழங்குமொழியில்தான் கதைகளைச் சொல்கிறார். கனமான சொற்களின் பயன்பாட்டால் வாசகனுக்குச் சுமை ஏற்ற அவர் விரும்பவில்லை. அதுபோல அவர் தேர்ந்தெடுக்கும் கதையில் அவருக்கு நல்ல பிடிபாடு இருக்கிறது. அதனால் கதையைப் பிரயாசம் இல்லாமல் சட்டெனச் சொல்லிவிடுகிறார். 
ராணுவச் சோதனைச் சாவடி அருகே பேருந்துக்காகக் காத்திருக்கும் இளம் பெண்ணின் மனத் திட்டுகளை ‘இறுக்கம்’ கதை சொல்கிறது. பதற்றம் மிக்க சூழலுக்கு இடையே இருக்கும் ஒரு சகஜமான வாழ்க்கையைச் சித்திரிக்க முயல்கிறது கதை. பேருந்து வரவே இல்லை. அவள் தனியாகச் சோதனைச் சாவடிக்கு அருகில் நிற்கிறாள். ராணுவத்தினரின் சோதனையைத் தனக்குள் கேலிசெய்து சிரித்துக்கொள்கிறாள். கோயிலடிவரை நடந்தால் அங்குப் பேருந்துகள் கிடைக்கும் என நடக்கிறாள். அங்கு நடக்கும்போது எல்லாவற்றையும் கேலியாகப் பார்க்கும் அந்தச் சின்னக் குமரிக்கு பதற்றம் வந்துவிடுகிறது. இதற்கு முன்பு அங்கு நடந்த சம்பவங்களின் நினைவு தரும் பதற்றம் அது. போரும் அதன் வன்முறைகளையும் இம்மாதிரி நினைவுகளாகவே பெரும்பாலான கதைகளில் வெளிப்படுகிறது. குருதிக் கரை படிந்த குழந்தைளின், பெண்களின் ஆடையை மட்டும் ஒரு போரின் குரூரத்தைச் சொல்ல விளையும் காணொளிக் காட்சிக்கு இணையாக குந்தவை கதைகளின் இந்த அம்சத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இலங்கை இலக்கியத்தைப் பொறுத்தவரை புலம்பெயர் இலக்கியம் என்ற தனிக் களமும் அதற்கு உண்டு. புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கையைப் பார்ப்பது, புறச் சூழலின் பண்பாட்டு முரண்களை எழுதுவது என அதையும் இரு வகைப்படுத்தலாம். இவற்றுக்கு முறையே எழுத்தாளர்கள் ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம். குந்தவை, புலம்பெயரவில்லை என்றாலும் புலம்பெயர் கதாப்பாத்திரங்களைக் கொண்டு அந்தப் பண்பாட்டு முரண்களையும் தன் கதைகளில் சித்திரிக்கிறார்.
‘திருவோடு’ கதையில் ஒரு பூப்புனித நீராட்டு விழா காணொளிமூலம், புலம்பெயர் வாழ்க்கையை விவரிக்கிறார். கனடாவில் நடந்த விழா அது. கதை சொல்லியின் சித்தியினுடைய பேத்திக்குத்தான் சடங்கு. அவர்கள் ‘வீடியோ பிளேயர்’ வழி அதைப் பார்க்கிறார்கள். பேத்தியான சிறுமி கட்டியிருக்கும் பட்டுச் சேலையை எடுக்க கனடாவில் தாங்கள் பட்ட பாட்டை சித்தி பெருமையாகச் சொல்கிறார். புலம்பெயர்ந்துவிட்டாலும் ‘பண்பாட்டைக் காக்க’ அவர்கள் படும் பாட்டை அவல நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார். காஸெட்டில் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் கதைசொல்லி சொல்கிறாள், ‘விட்டுவிடு, ஸ்கிப்பிங் விளையாடப் போக வேண்டும் என்பது போன்ற பார்வை’ என்று. குந்தவையின் எல்லாக் கதைகளுக்குள்ளும் இம்மாதிரியான கேலிப் பேச்சுகள் உண்டு. வாழ்க்கையின் அபத்தங்களை ஒரு மேலான எள்ளல் வழியாகப் பார்க்கிறார். இதை அவரது விசேஷமான பண்பு என முன்மொழியலாம்.
இலங்கையின் போர் தந்த துயரம், புலம்பெயர் வாழ்க்கையின் பண்பாட்டுச் சிக்கல் என எல்லாவற்றையும் இந்தக் கதைகள் வழியாகப் பெண்கள் பக்கம் நின்று குந்தவை பார்க்கிறார். ஆனால், இதையெல்லாம் பெருங்கோபத்துடன் வெளிப்படுத்தவில்லை. மேலும் ஒருசார்பாகப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. பெண்களின் அன்றாடச் செயல்களுக்குள் புகுந்து அது நிகழ்த்திய மாற்றம் என்ற ரீதியில், அதை அவர்களின் பார்வையில் சொல்ல முயல்கிறார். விசேஷமான இந்த அம்சம் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து அவரை தனித்துவப்படுத்துகிறது.
...
யாழ்ப்பாணம் மாவட்டம் தொண்டைமானாறு கிராமத்தில் பிறந்தவர் குந்தவை. அவரது இயற்பெயர் சடாட்சரதேவி. ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய ‘யோகம் இருக்கிறது’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, சென்னை எழுத்தாளார் சண்முகம் பொன்னுதரையின் (எஸ்.பொ.) முயற்சியால் அவரது ‘மித்ர பதிப்பக’ வெளியீடாக வந்துள்ளது. இவரது எழுத்து முயற்சிகளுக்கு லண்டன் பத்மநாப ஜயரும் ஊக்கியாக இருந்திருக்கிறார்.
                                                                                        (மே 06 2018, தி இந்து, பெண் இன்று)

  •  

பசி பசி என்கிற மானுடக் கதைகள்

ண்ணநிலவனின் முதல் சிறுகதை 1970-ம் ஆண்டு ‘தாமரை’இதழில் வெளிவந்தது. அவரது சமீபத்திய சிறுகதை 2011-ல் ‘ஆனந்த விகட’னில் வெளிவந்தது. இந்த இடைவெளிக்குள் அவர் தொண்ணூற்றிரண்டு கதைகளை எழுதியிருக்கிறார். சில கதைகள் தொகுக்கப்படாமலிருக்கக்கூடும். அவரது முதல் கதையான ‘யுகதர்ம’த்துக்கும் சமீபத்தியான கதையான ‘மழைப் பயண’த்துக்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுக் காலகட்டத்தில் வெளியேயும் உள்ளேயும் நிகழ்ந்த மனப் பிரயாசங்களின் வெளிப்பாடுதான் அவரது கதைகளுக்கான ஆதாரம் எனலாம். இந்த இரு கதைகளுக்கும் இடையில் பல்வேறு விதமான பரந்துபட்ட வாழ்க்கை முறைகளையும் மனிதப் பாங்குகளையும் வண்ணநிலவனின் கதைகள் சொல்லிச் செல்கின்றன. இந்தச் சித்திரிப்பு மொழி வழியாக வறுமை கோடைக்காலச் சூரியனைப் போல் பிரம்மாண்டமாக எழுகிறது. பல கதைகளில் சோறு அரிய பண்டமாக வருகிறது. அதற்காக மனிதர்கள் பெரும்பாடுபடுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குக் கோதுமைக் கஞ்சியும், கேப்பைக் கூழும்தான் உண்ணக் கிடைக்கின்றன.
1970-களில் 80-களில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தின் மனக் கிலேசத்தை இவரது பல கதைகள் நேடியாகவும் மறைமுகமாகவும் சித்திரிக்கின்றன. இந்த வேலையில்லாத் திண்டாட்டம், ஜவுளிக் கடைகள் ஊழியர்கள் போன்ற உதிரித் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மோசமான விளைவுகளையும் சில கதைகள் உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கின்றன. மேலும் இந்த வறுமையான காலகட்டத்தில் தென்பகுதியில் கிறிஸ்துவ சமயம் வேர் பிடித்ததும், அதனால் குடும்பங்களில் நடந்த சச்சரவுகளும் சில கதைகளில் உபதொழிலாக வெளிப்பட்டிருக்கின்றன.
தொழிலற்றுப் போன வெட்டியான், பனையேறும் தொழிலாளி, சாராயம் கடத்துபவர்கள், தலைமறைவுப் போராளி, சர்க்கஸ் போடுபவன் எனப் பலதரப்பட்ட மனிதர்களை வண்ணநிலவன் கதைகள் சித்தரித்தாலும் அவரது கதைகளின் பிரதான பாத்திரங்கள் மூன்று பத்தி வாடகை வீடுகளின் வசிக்கும் கீழ் நடுத்தர வீட்டு மக்கள்தான். தார்சாவிலிருந்து (வரவேற்பறை) காண முடியாத அவர்களின் பட்டாளைகளின் (நடுப்பகுதி) சங்கதிகளை, மனக் கிலேசங்களை விவரிப்பின் வழியே இந்தக் கதைகள் மூலம் அவர் அம்பலப்படுத்துகிறார்.
குறிப்பாகத் திருநெல்வேலியில் வாழும் சைவப்பிள்ளைமார் சமூகத்தினர் குறித்த சித்திரிப்புகளே இந்தக் கதைகளில் அதிகம். திருநெல்வேலி டவுன் பகுதியின் ஒடுங்கிய தெருக்களைப் போன்ற அவர்களின் வாழ்க்கையையும் இந்தக் கதைகளில் காணலாம். வாழ்க்கை குறித்து அவர்களுக்குள்ளே இருக்கும் மதிப்பீடுகள், வெளியே நிகழும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நிகழ்வுகளால் சிதறடிக்கப்படுகின்றன. அவர்களின் வரட்டு ஐதீகங்களும் இந்தப் பெருவெள்ளத்தில் ஒன்றுமில்லாமல் போகின்றன. தலைமுறை தலைமுறைகளாக இருக்கும் குடும்பப் பெருமையும் கேலிக்குரிய ஒன்றாகிறது. இவற்றை எந்தச் சார்புமின்றிக் காட்சிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். வக்கீல் குமஸ்தாவாக இருக்கும் ஒரு பிள்ளைவாளின் பாடுதான் அவரது முதல் கதையான ‘யுகதர்மம்’. தினக் கூலியாக இருபது ரூபாய் சம்பாதிக்கும் குமஸ்தாவுக்கு மூன்று பிள்ளைகள். கல்யாண வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அன்றைக்குள்ள கூலியில் மூத்தவளுக்கு ரிப்பனும் இளையவளுக்குக் கண்ணாடிக்கல் மாலையும் சின்னவனுக்கு பென்சிலும் வாங்கிப் போகிறார். அதனால் அரிசி வாங்குவதில் பாதி மண். ‘இந்த நிலையில் மூத்தவளுக்குக் கல்யாணம் எங்கு பண்ணிவைப்பது? உடனொத்த பிள்ளைகள் எல்லாம் காதலித்துக்கொண்டு ஓடிப் போகின்றன. இவளுக்கும் அப்படி ஒரு காதல் வந்து ஓடிப் போகமாட்டாளா?’ எனப் பிரயாசைப்படுகிறார். இன்னும் பல கதைகள் இம்மாதிரியான குடும்பங்களைச் சித்திரிக்கின்றன. இக்கதைகளின் தொகுப்பு என இவரது ‘கம்பா நதி’ நாவலைச் சொல்லலாம்.
ஞ்சம் பிழைக்கப் போவது’ என்பது சில பத்தாண்டுகள் முன்பு இங்கு நடந்த ஒரு துயரமான சமூக நிகழ்வு. அடுத்த மழைக்காலம்வரை சாகாமல் உயிரைப் பிடித்துக்கொள்வதற்கான இடப்பெயர்வு. சோறுதான் இதன் பிரதான நோக்கம். இதுபோல் பஞ்சம் பிழைக்கப்போகும் குடும்பம் ஒன்றை வண்ணநிலவன் ‘எஸ்த’ரில் விவரிக்கிறார். எல்லோரும் பஞ்சம் பிழைக்கப்போய்விட்ட ஊரில் தனியாக இருக்கிறது அந்தக் குடும்பம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு ஓட மரமாக இருக்கிறாள் எஸ்தர். அவள் அவர்களுக்குச் சித்தி. படுத்த படுக்கையாக இருக்கும் பாட்டியைத் தனியே விட்டுவிட்டுப் போக முடியாததால் அவர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் கம்பும் கேப்பையும் ஒரு தீப்பெட்டியும்தான் சேமிப்பில் இருக்கின்றன. தினமும் எல்லோருக்கும் அரை வயிற்றுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறாள். கால்நடைகளை அழித்துவிடுகிறார்கள். கடைசித் தீக்குச்சியும் தீர்ந்த பிறகு சுள்ளிகளைக் கொண்டு தீயைக் காப்பாற்றி வருகிறாள். நாளுக்குநாள் வெயில் கூடுகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு. இரவில் இருட்டு அடர்த்தியாகிறது. இனியும் இங்கு இருப்பது நல்லதல்ல என நினைக்கிறாள். பாட்டியும் வேண்டும். பிள்ளைகளும் முக்கியம். இறுதியில் எஸ்தர் என்னதான் செய்வாள்? அவள் தைரியமான முடிவை எடுப்பதுடன் முடிகிறது கதை. மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்தக் கதை, உணர்ச்சிகரமான குடும்ப உறவுகள், அதற்கான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் வறுமை பாளம் பாளமாகச் சிதறடிப்பதை அப்பட்டமாகச் சித்திரிக்கிறது.
ண், பெண் உறவுகளின் முரண்களைச் சொல்லும் கதைகளையும் வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். அவரது தொடக்ககாலக் கதையான ‘அயோத்தி’யை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். வாழ்க்கைத் துணை குறித்து பரஸ்பரம் இருக்கும் புகார்களைக் குறித்த கதை இது. காதல் திருமணங்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எல்லாவற்றிலும் இந்தச் சலிப்பைப் பார்க்க முடியும். வறுமையிலிருக்கும் மனைவி, கைகூடாமல் போன வேறொரு வாழ்க்கையைப் பற்றி நொந்து கணவனைக் கரித்துக்கொட்டுகிறாள். இதன் மற்றொரு பக்கமாக ‘பலாப்பழம்’ கதையையும் சொல்லியிருக்கிறார். இவை அல்லாமல் அசோகமித்திரனைப் போல் சினிமா பின்புலத்தில் சில கதைகளையும் சமீபத்தில் எழுதியிருக்கிறார்.
ண்ணநிலவனின் கதைகள் பெரும் பாலும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டவை; தீப்பந்தம்போல் வெயில டிக்கும் தெருக்களையும் தாமிபரணியின் படித்துறைகளையும் சித்திரம்போல் எழுப்பிக் காட்டும் ஆற்றல் பெற்றவை.
வண்ணநிலவனின் மொழி அலங்காரங்கள் அற்றது; அப்பட்டமானது. அளந்து வைத்தாற்போல் கதைகளில் சொற்களைப் பயன்படுத்துகிறார். வாசகனை மிரட்டும் பிரயோகங்கள் இல்லை. கதைகளைத் திருத்தமான சம்பவங்களைக்கொண்டு சிருஷ்டிக்கிறார். விவரிப்பு மொழியிலேயே கதைகள் சொல்லப்படும் இந்தக் காலகட்டத்திலிருக்கும் பார்க்கும்போது, இது அரிய குணாம்சம். பெரும்பாலான கதைகள் போதுமான உரையாடல்களால் ஆனவையாக இருக்கின்றன.
இவை அல்லாமல் பாம்பும் பிடாரனும், காட்டில் ஒருவன் போன்ற சில கதைகள் அவரது கதை சொல்லும் முறையிலிருந்து வேறுபட்டவை. உரையாடலின்றி முற்றிலும் கதை சொல்லியின் விவரிப்பிலேயே இந்தக் கதைகளை உருவாக்கியிருப்பார். மேலும் இவை ஒன்றுக்கு மேற்பட்ட கதைப் பொருளை யும் கொண்டவையாகவும் இருக்கின்றன.
மேலும் கதாபாத்திரங்களின் மனநிலைக்கு, கற்பனாசக்திக்கு உள்பட்டு சிந்திக்கும்படியே எழுதியுள்ளார். கதைசொல்லியின் குரல் உயர அவர் அனுமதிக்கவில்லை. உதாரணமாக ‘மயான கண்டம்’ கதையின் வெட்டியான், சுடலை மாடசாமி சிலையின் அழகை வியக்கும்போது, “என்னமா துடிப்போட செஞ்சிருக்கான்” என அவனுடைய எல்லைக்குள் நின்றுதான் வண்ணநிலவன் விவரிக்கிறார்.
மிழ்ச் சிறுகதையின் வரலாறு இருபதாம் நூற்றாண்டில் சுப்பிரமணிய பாரதியிலிருந்தே தொடங்கிவிட்டது. ஆனால், சிறுகதை ஆற்றல் மிக்க வடிவமாக அந்த நூற்றாண்டின் மத்தியில்தான் வலுப்பெற்றது. தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன்தான் அதைச் சாத்தியப்படுத்தினார். திருத்தமான வடிவம், திடகாத்திரமான உள்ளடக்கம், அலங்காரமற்ற விவரிப்பு மொழி எனத் தமிழின் முன்மாதிரியான நவீனச் சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தார். புதுமைப்பித்தனுக்குப் பிறகு அந்த மரபில் தமிழின் முன்னுதாரணக் கதைகளை உருவாக்கி வருபவர் வண்ணநிலவன்.
(தலைப்பு, விக்கிரமாதித்யன் கவிதையின் ஒரு வரியிலிருந்து பெறப்பட்டது)
( நற்றிணை வெளியிட்ட வண்ணநிலவன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு) தொகுப்புக்காக எழுதிய மதிப்பீடு) 
தி இந்து, 13, நவம்பர், 2016


  •  

அம்பை கதைகள்: ஒழுக்கங்களுக்கு இடையிலான குறுக்கீடுகள்


தமிழ்ச் சிறுகதைக்கு நூறு வயதாகிவிட்டது. இந்த நூறாண்டு காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால், பெண்ணியம் என்ற லட்சிய நோக்கமெல்லாம் தொடக்கத்தில் பெண் எழுத்துகளில் தீவிரம் பெறவில்லை. அனுபவங்களை எழுதினார்கள். இன்றைக்கு விருட்சமாகியிருக்கும் பெண்ணிய எழுத்துகள், பிற்காலத்தில் வேர்பிடித்தவைதாம். அப்படியான எழுத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர்களுள் ஒருவர் எழுத்தாளர் அம்பை.
அம்பை, 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தவர். பதின்ம வயதில் எழுதத் தொடங்கினார். தன் எழுத்துகளைத் தானே மதிப்பிட்டுத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். ஆடுகளும் மாடுகளும் லட்சக்கணக்கான சிற்றுயிர்களும் ஆண்களும் வாழும் இந்தச் சமூகத்தில் பெண்களின் இடம் என்ன என்ற கேள்வியை அவர் தன் கதைகளின் மையமாகக் கொண்டார். ஆனால், அந்தக் கேள்விகளை தீப்பந்தம்போல் தன் தொடக்க கால கதைகளுக்குள் உரத்துத் தூக்கிப் பிடிப்பதில்லை. பாட்டியால் வளர்க்கப்பட்ட அம்பை, அந்தப் பெரிய மனுஷியின் பழைய நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் சிறு பெண்ணாகத் தன் கதைகளில் குரலை உயர்த்துகிறார். அம்பை எழுதுவதற்கு முன்பே பெண் சுதந்திரம், புரட்சி போன்றவை வெகுஜனத் தளத்தில் பேசப்பட்டாலும் அதற்கும் சில எல்லைகள் இருந்தன. அம்பை அந்த எல்லைகளைத் தாண்டினார்.
“அன்றைய வெகுஜன வாசிப்பின் வழியாகவே கதை சொல்வதற்கான ஒரு மொழியையும் வடிவையும் எடுத்துக்கொண்டேன்” என ஒரு நேர்காணலில் அம்பை சொல்கிறார். இதன் மூலம் மொழியை ஒரு உன்னத வடிவமாகத் தூக்கிக் கொண்டாடவில்லை எனத் தெளிவாகிறது. கதையைச் சொல்வதற்கு ஒரு மொழி, அவ்வளவுதான் அவரது லட்சியம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஏனெனில் அம்பை எழுதவந்த காலகட்டக் கதைகளில் மொழிக்கு அழகியல் முக்கியத்துவம் இருந்தது. அம்பை அதைத் தவிர்த்தார். ஒரு கற்பனையாளராகத் தன் கதைகளுக்குள் அழகியல் விவரிப்புகளைச் சொல்வதைவிட, ஒரு பெண்ணாக அவர்களின் பிரச்சினைகளைச் சொல்வதில்தான் அம்பைக்கு விருப்பம் அதிகம். ஒரு பெண்ணின் நிலையைச் சொல்லும் கதைகளில் சொற்கள், எல்லைகளை மீறித் திரண்டுவருகின்றன.

வெகுஜன பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன. அவரது ‘காட்டில் ஒரு மான்’ கதை, தங்கம் அத்தை என்ற பாத்திரத்தை உதாரணப் பெண்ணாகக் கொண்டது. இதில் கதை சொல்லி, குட்டிப் பெண்ணாக வருகிறாள். அத்தை ஒரு பூக்காத பெண். அவளுக்கு மாதச் சுழற்சி வரவே இல்லை. கதை சொல்லியைப் போன்ற குட்டிப் பெண்களுக்கு இது விளங்கவே இல்லை. வயதுக்கு வந்த ஒரு மூத்த குட்டிப் பெண், வெட்டிக் கீழே விழுந்த பட்டுப்போன மரத்தைக் காட்டி விளக்க முயல்கிறாள். அந்த மரம் உள்ளீடற்று இருக்கிறது. “அதுதான் பொக்கை” என்கிறாள் அவள். ஆனால், அத்தையின் மினுக்கு மேனியை இந்தப் பொக்கை மரத்துடன் அவளால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘எந்த ரகசியத்தை அந்த மேனி ஒளித்திருந்தது, அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது?’ எனக் கதையின் இடத்தில் கேட்கிறாள். பருவமெய்தாத பெண்கள், சமூகத்தில் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்வார்களோ அதைவிட அதிகமான பிரச்சினைகள் தங்கத்துக்கு. ஒரு கட்டத்தில்தான் இவையெல்லாம் தங்கம் என்ற தனி மனுஷியின் பிரச்சினைகள் அல்ல. சமூகத்தின் பிரச்சினைகள் எனக் கதை சித்தரிக்கிறது. ஆனால், இது எதையும் பிரச்சாரமாகச் சொல்லவில்லை. தன் கூட்டத்தைவிட்டு வந்த மான், ஒரு புது காட்டில் முதலில் பயந்து பிறகு அதிலேயே வாழப் பழகிக்கொள்ளும் கதையைச் சொல்லி கதை முடிகிறது. ஆனால், தங்கம் அழுதுகொண்டிருக்கிறாள்.

அவரது ‘வெளிப்பாடு’ சிறுகதையில் ‘வெகுஜனப் பெண்’ணிலிருந்து வெளியேறிவிட்ட டெல்லிவாசிப் பெண் வழியாகக் கதை சொல்லப்படுகிறது. இந்தக் கதைக்குள் பெண்கள் இருவர் வருகிறார்கள். இருவரும் கதை சொல்லிக்குத் தோசை சுட்டுப் போடுகிறார்கள். ஒருத்தி, திருமணம் முடிந்து, தோசைகள் சுட்டு, கணவனிடம் அடிகள் வாங்கி, குழந்தைகள் பெற்று, பேரன் பேத்தி எடுத்துத் தன் வாழ்க்கையைச் சமையலறைக்குள் ஒடுக்கிக்கொண்ட மனுஷி. அவள், நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள் சுட்டிருக்கிறாள். இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள், சோறு எல்லாம் தனிக் கணக்கு என்கிறார் கதை சொல்லி. இன்னொருத்தி கைநீட்டாத, கடை கண்ணிக்குக் கூட்டிப் போகும் கணவனைக் கனவு காணும் இளம் பெண்.
மூத்த மனுஷிக்கு பிள்ளைபெறுவதற்கும் சமைப்பதற்கும் அப்பால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. சமுத்திரம் மீது தீரா ப்ரியம் இருக்கிறது. கண்ணாடி மாதிரி கிடக்கும் ஒரு சமுத்திரத்தைச் சின்ன வயதில் பார்த்திருக்கிறாள். அதைச் சமுத்திர சாபம் என்கிறாள் அவள். அதனால் கணவரிடம் அடியும் வாங்கியிருக்கிறாள். இளம் பெண்ணுக்கு எல்லாவற்றையும் சுயமாகச் செய்ய விருப்பம். தனியாகக் கடைக்குப் போகவும் ஆசை. ஆனால், கதவு வரைதான் அவள் எல்லை. இந்த இரு பெண்களும் குடும்ப அமைப்புக்குள் எப்படித் தொலைந்துபோயிருக்கிறார்கள் என்பதை, டெல்லிவாசியான கதைசொல்லி அவர்களின் ஒரு நாளுக்குள் நிகழ்த்தும் குறுக்கீடு மூலம் இந்தக் கதை நமக்குச் சொல்கிறது.
அம்பையின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சினிமாக்களில், கதைகளில் இதுவரை பார்த்துப் பழக்கப்பட்ட காவிய நாயகிகள் அல்ல. அவர்கள் மதிப்பீடுகளுக்குள் வாழ்கிறார்கள். அதைக் காக்க முனைப்புக் காட்டுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையிலும் எந்த அதிசயமும் நிகழவில்லை. ஆனால் அம்பை கதைகள் வழியாக ஒரு குறுக்கீட்டை நிகழ்த்துகிறார். அம்பையின் மொத்தக் கதைகளும் பெண்களுக்கென உருவாக்கப்பட்ட ஒழுக்க விதிகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்படும் குறுக்கீடுகள் என வரையறுப்பது பொருத்தமாக இருக்கும்.
...
அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. ஆங்கிலத்தில் இதே பெயரில் கட்டுரைகள் எழுதிவருகிறார். மும்பையில் வசிக்கிறார். ‘அம்பை சிறுகதைகள்’ முழுத் தொகுப்பும் ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ குறுநாவலும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. ‘காட்டில் ஒரு மான்’ கதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஆங்கில இலக்கியத்தின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘க்ராஸ் வேர்டு’ விருதைப் பெற்றுள்ளார்.
(ஏப்ரல் 22, 2018, தி இந்து, பெண் இன்று)

  •  

தனியறைக்கு வெளியே - சுகந்தி சுப்ரமண்யம் கவிதைகள்


தமிழில் பாரதி காலத்திலிருந்தே வசனக் கவிதை முயற்சிகள் தொடங்கின. அதற்குப் புதுக் கவிதை எனப் பெயரிட்டவர் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியன். அதற்கான உத்தேசமான இலக்கணங்களும் இந்தக் காலக்கட்டத்தில் முன்மொழியப்பட்டன. இதே காலகட்டத்தில் பெண்களும் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டனர். பூரணி, மீனாட்சி, திரிசடை என அந்தத் தொடர்ச்சி வரிசை இன்றுவரை நீண்டுவருகிறது. இவர்களுள் விசேஷமான கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்.
புதுக் கவிதை தொடங்கிய காலத்தில் அதன் வடிவமைப்பு குறித்துத் தீவிரமான விழிப்புணர்வு இருந்தது. கவிதைக்குள் என்னவெல்லாம் சொல்ல முடியும், அதைச் சொல்வதற்கான மொழி, ஓசை போன்றவை எல்லாம் விவாதிக்கப்பட்டன. அதனால் கவிதைக்குள் ஒரு வெகுளியான தன்மை இல்லாமல் ஆனது. கவிதையை விழிப்புணர்வுடன் எழுதுவதால் அதன் உண்மை ஒளி குன்றிப்போனது.
இந்தப் பின்ணியில் அணுகும்போது சுகந்தியின் கவிதைகள் பறவையின் சுதந்திரத்தையும் குழந்தைகளின் வெகுளித்தன்மையையும் ஆதாரமாகக் கொண்டவை. அவர் தன் வீட்டு ஜன்னல் வழியாகக் காணும் காட்சிகளை எல்லாம் கவிதைக்குள் ஆவலுடன் சொல்ல முயன்றிருக்கிறார். 
சுகந்தி, கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஆலந்துறையில் பிறந்தவர். அங்கு உயர்நிலைக் கல்வி பயின்றுகொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது. கணவருக்கு, செகந்திராபாத்தில் வேலை. பள்ளிக் கல்விகூட முடித்திராத ஒரு சின்னஞ்சிறு கிராமத்துப் பெண், மொழியறியாத ஒரு பிரதேசத்துக்குப் புலம்பெயர்கிறார். புது இடத்தை அணுகுவதில் உள்ள சுவாரசியம், பதற்றம் இரண்டும் இவரது கவிதைகளில் இருக்கின்றன.
மொழியறியாத அந்த ஊரில் அவருக்கு சிநேகிதிகள் கிடைத்ததை, சந்தோஷத்துடன் அவரது கவிதையில் சொல்கிறார். ‘பச்சை மிளகாய் இல்லாத எதிர் வீட்டுக்காரி அவளின் பாஷையுடன் அறிமுகமானாள்’ எனத் தொடங்கும் அந்தக் கவிதையில், சர்க்கரை, காபித் தூள், தக்காளி என ஒவ்வொரு பொருளையும் கேட்டுத் தோழிகள் பெருகுகிறார்கள். ‘பாஷைகளை மீறி பேச நிறைய இருக்கிறது’ என முடிகிறது அந்தக் கவிதை. இதில் பெண்களுக்குள் எனச் சேர்த்து வாசித்துப் பார்த்தால் அவரது உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.
சுகந்தியின் கவிதைகளின் தனித்துவம், ஒரு மாபெரும் புரட்சியைக்கூட தாழ்ந்த தொனியில் சொல்வது. ஒரு சாதாரண பெண் காய்கறி நறுக்கும்போது பகிரும் விஷயத்தைப் போல் சுகந்தி தன் கவிதைகள் வழியாக பெண்ணின் பிரச்சினைகளைப் பகிர்ந்திருக்கிறார். பெண்களுக்கு இயற்கையாக வரும் மாதவிடாய் காலத்தில் அவள் நடத்தப்படும் விதத்தை, ‘தனியிடம் உருவானது இங்கே, நீ புதிதாய் வயதுக்கு வந்ததற்கு. குறைந்தபட்சம் நீ ஒரு குட்டிப் பிச்சைக்காரி ஆகிவிடுகிறாய்’ என்ற அவரது ஒரு கவிதை, அதனால் ஏற்படும் நிவாரணமில்லாத வயிற்றுவலியையும் கால்குடைச்சலையும் அவல நகைச்சுவையுடன் சொல்கிறது.
கணவர், பாட்டி, தோழிகள் என அவரது கவிதைக்குள் மனிதர்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் அல்லாமல் பிச்சைக்காரி, பெரியம்மா போன்ற சில கவிதை மாந்தர்களும் வருகிறார்கள். நிஜமான மனிதர்களைக் கவிதைக்குள் சுகந்தி அழைத்துவந்திருப்பது வாசகர்களுக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. கவிதைக்கும் உண்மை ஒளியை ஏற்றுகிறது. பொதுவாகக் கவிதைகள் என்றவுடன் அந்நியமான கற்பனைகளை வார்த்தைகளாகத் தொடுக்காமல் தன்னையும் தன் சுற்றத்தையும் எளிய மொழியில் சுகந்தி சொல்லியிருக்கிறார். கவிதையை ஒரு குரோட்டன்ஸ் செடியைப் போல் தன் அறைக்குள்ளேயே வளர்த்திருக்கிறார்.
பெண்களின் உலகைச் சொல்லும் ஒரு கவிதையில், அவரது ஊரின் ஆறு எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனக் கேட்கிறார். அவரது பாட்டி ஆற்றங்கரைக்குக் கூட்டிப் போயிருக்கிறார். ஆனால் பெரிய பெண்ணானதும் சுவருக்குள் மட்டும் என்றாகிவிடுகிறது வாழ்க்கை. ஆற்றை வேடிக்கைகூடப் பார்க்க முடிவதில்லை. திருமணம் ஆனவுடன் சிறு சுதந்திரம் கிடைக்கிறது. ஆறு எதுவரை போகிறது எனக் கணவரிடம் கேட்கிறார். அவரும் ஒரு 50 மைல் தள்ளி ஆற்றின் அணையைக் காட்டுகிறார். ஆறு அதுவரை மட்டுமா போகிறது? ‘ஆனாலும் ஆறு போய்க்கொண்டிருக்கிறது’ என்கிறார். சுகந்தியின் கவிதைகள் பெண் என்ற தன்னியல்பை மீறியும் சில இடங்களில் பாய்ந்திருக்கின்றன. பொதுவாக அவரது கவிதைகளில் காணப்படும் கதைத்தன்மை, அவரது இம்மாதிரியான கவிதைகளில் இல்லை. அவை முழு வீச்சுடனும் திடகாத்திரமான மொழியுடனும் வெளிப்பட்டுள்ளன. சுகந்தியின் இந்த வகைக் கவிதைகள் தம் இருப்பையே கேள்வி கேட்பவை.
எழுதுவது அவருக்கு மாபெரும் சுதந்திரத்தை அளித்திருக்கிறது என்பதை அவரது கவிதைகள் மூலம் உணர முடிகிறது. அவரது அறையைத் தாண்டி, கவிதையின் வழியாகப் பயணிக்க முடிந்திருக்கிறது. ‘சுதந்திரம் என்பது கலை, கவிதைகளை உருவாக்கும்’ என்கிறது அவரது ஒரு கவிதை.
இருத்தல் குறித்த கேள்விகளை எழுப்பிய அவரது கவிதைகளுக்கு, அதற்கு ஏதுவாக மரணத்தைக் குறித்த ஆவலும் இருந்திருக்கிறது. ‘சுத்தமான மனசுக்குள் சங்கல்பமாகும் சுதந்திரம் நம்மை நம்மிடமிருந்து விடுவிக்கும்’ என்கிற அவரது கவிதைபோல் 2009-ல் ஒரு மனநல விடுதியில் இந்த உலக இருப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் சுகந்தி.
...
ஒரு கவிதை முழுக்க ஒரே விஷயம்
எத்தனை வீர சாகசம் பெண்ணே!
முதல் வரியில் வந்தது
குழந்தைச் சிரிப்பு மனதில்
இரண்டாவதில் தண்ணீர் பிடிச் சண்டைகள்
மூன்றாம் வரியில் குளிரில் விறைத்துச்
செத்த லட்சுமி கிழவி
நான்காவதில் கேஸ் தீர்த்த அலுப்பில்
ஸ்டவ்வின் உதவியான இம்சைகள்
ஐந்தாம் வரியில்
ஓசியில் டிவி சினிமாவுக்கு
அலைந்து கதவு தட்டும் குழந்தைகள்
ஆறாவதாய் சின்னம்மாவின்
மெனோபாஸ் கஷ்ட அழுகைகள்
ஏழாவது வரியில்...
இன்னும் சமையல் ஆகவில்லை
இன்னொரு கடைசி வரியாய்
கவிதையை முடிக்க ஒரு வரி
சொல்லேன் பெண்ணே!
...
(புதையுண்ட வாழ்க்கை (அன்னம்), மீண்டெழுதலின் ரகசியம் (தமிழினி) ஆகிய இரு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. அவரது வெளிவராத கவிதைகள், சிறுகதைகள், டைரிக் குறிப்புகளை ஆகியவற்றைச் சேர்த்து மொத்த தொகுப்பாக சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற பெயரில் டிஸ்வரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.)
- மண்குதிரை
(தி இந்து, 15, ஏப்ரல், 2018)

  •  

மஞ்சள் வருத்தம், மஞ்சள் சந்தோஷம்


உலகத்து இருளையெல்லாம் ஒன்று திரட்டிய பேரிருள் போன்றது மனத்தின் இருட்டு. அதன் சஞ்சலங்கள், தாபங்கள் போன்ற வெளிப்பாட்டு உணர்ச்சிகள் எல்லாம் மின்னல் கீற்றுகள். இந்த இருளிலிருந்து விடைபெற்று விடியலில் சாசுவதம் கொள்ளத் துடிக்கும் மன எழுச்சியை மெளனியின் கதைகள் எனலாம்.
தமிழில் உரைநடை பதமாகிவந்த காலகட்டத்தில் கதைகள் எழுதத் தொடங்கியவர் மெளனி. 1936-ல் அவரது முதல் கதை வெளிவந்தது. அவரது கடைசிக் கதை 1971-ம் ஆண்டு வெளிவந்தது. சில காலம் மெளனி எழுதாமலும் இருந்திருக்கிறார். மொத்தம் 24 கதைகளே அவரது இலக்கியப் பங்களிப்பு. ஆனால் அவற்றுக்குள் தன் புழங்கு மொழியை நெருப்பிலிட்ட பொன்னைப் போல் பொலிவேற்றியிருக்கிறார். கதை வடிவத்தையும் புடம்போட்டிருக்கிறார். நேராகக் கதை சொல்லும் பாங்கிலிருந்து விலகி ஒரு அரூபத்தை விதைத்துப் பார்த்திருக்கிறார். இந்தத் தன்மைகள் அவரது கதைகளுக்கு விநோதத்தை அளித்திருக்கின்றன. இந்த விநோதம் வாசகனை விலகச் செய்வதல்ல; உள் நோக்கி ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
மெளனியின் கதைகள் பெரும்பாலானவை மனத்திற்குள்ளேயே நிகழ்பவை; ஒற்றைத்தன்மையிலானவை. ஆனால் படர்க்கையில் மொழியப்பட்டிருக்கும் கதைகளும் தன்னிலை விவரிப்பாக மாறக்கூடிய விசேஷ குணம் கொண்டவை. உதாரணமாக ‘காதல் சாலை’, ‘ஏன்’, ‘பிரபஞ்ச கானம்’ ஆகிய கதைகள் வேறு ஒருவரின் கதையைச் சொல்வதுபோலத்தான் தொடங்குகின்றன. ஆனால் கதையோட்டத்தில் கதைசொல்லிக்கும் கதைமாந்தருக்குமான இடைவெளி குறைந்து, படர்க்கை, தன்னிலையாக ஆகிவிடுகிறது.
மெளனிக்குக் கதைகளை உரையாடல் மிக்கதாக உருவாக்க விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் தாக்கத்தால் பரவலான இந்த மாற்றத்தை மெளனி முன்பே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். உரையாடல்களால் ஆன கதைகளையும் மெளனி எழுதியிருக்கிறார். ஆனால் அதன் வெளிப்பாடு பலவீனமானது. மன எழுச்சியை விவரிப்புகளுடன் சித்திரிப்பதில்தான் மெளனி சுதந்திரமாக உணர்கிறார் எனலாம். அதில்தான் அவரது ஆற்றலும் வெளிப்படுகிறது.
மெளனியின் கதைகள் நடுத்தரவர்க்கக் குடும்பச் சூழலைப் பின்னணியாகக் கொண்டவை. ஆனால் ஜீவிதக் கவலைகள் எல்லாம் அவற்றுக்குப் பெரிதாக இல்லை. அந்தக் காலகட்டத்தின் சமூக நிலை சார்ந்த கதைகளையும் மெளனி எழுதியிருக்கிறார். ஆனால் அவரது கதைகள் அகப் பாய்ச்சலுக்கானவை என்பது என் துணிபு. காக்கை கரைவது, மரங்களின் நிழல்கள் நீரில் ஆடுவது போன்ற வெளியுலகச் சூழலைத் தன் மனநிலையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் விதத்தில் மெளனியின் கதைகள் தமிழ்ச் சங்க இலக்கியக் காட்சிகளுடன் ஒப்பிடத்தகுந்தவை. அக்ரஹார இருட்டில் உள்ள பெண்களை, ஜன்னல்வெளி ஒளியைப் போல் சித்திரிக்கிறார். பெண்கள், நோவு தரும் அழகுப் பதுமைகள் மட்டும்தானா? என இந்த நூற்றாண்டில் கேள்வி எழுப்பினால், அவர்களின் பாடுகளையும் மெளனி விவரித்திருக்கிறார். ‘சாவில் பிறந்த சிருஷ்டி’ அதற்கு ஓர் உதாரணம்.
மெளனியின் ‘பிரபஞ்சகானம்’ அவரது சிறந்த கதைகளுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. மனப் பிரவாகத்தின் ஆவேசமான வெளிப்பாட்டைக் கொண்டது இக்கதை. அவள் எதிர் வீட்டிலிருக்கிறாள். நன்றாகப் பாடக்கூடியவள். வீணையும் வாசிப்பாள். இவன் இங்கு இருக்கிறான். அவளைப் பார்க்கிறாள். அவள் எப்போதாவது இவனைப் பார்த்தாளா?
பிரபஞ்சத்தின் கானமான அவள் பாடக் கூடாது என டாக்டர் சொல்லிவிடுகிறார். அவள் பாடாமல் இயற்கையே குறைவுபட்டதுபோல் ஆகிவிடுகிறது என்கிறார் மெளனி. இங்கே மனத்தின் குறை இயற்கையின் குறையாக ஆகிறது. பாடினால் இறந்துபோய்விடுவாள் என்றாலும் இயற்கை சாசுவதம் கொள்ள அவள் பாட வேண்டும். இயற்கையின், மனத்தின் சாசுவதத்துக்காக அவள் பாடத் தொடங்குகிறாள். அவளது சங்கீதம், பிரபஞ்சம் கானமாக எங்கும் வியாபகம் கொள்கிறது. இந்தக் கதையின் காட்சிகள் செவ்வியல் தன்மை கொண்டவை. அவள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆடைகளை நனைத்துக் கொண்டிருக்கும்போது இவன் செல்கிறான். ஒரு குடியானவள் சாணி தட்டிக்கொண்டிருக்கிறாள். இவன் தலைக்கு மேலாகப் பறக்கும் மீன்கொத்தியொன்று, மீனைக் கொத்தி எழுகிறது. மறு கரையில் நாரைகள் நீரில் தங்கள் உருவம் பார்த்துக்கொண் டிருக்கின்றன. இந்தப் புறக் காட்சிகளை மெளனி தன் மன எழுச்சியின் ஸ்தூல வடிவாகக் கதையில் பிரதிஷ்டை செய்கிறார்.
‘ஏன்’ கதையிலும் ஒரு எதிர் வீட்டுப் பெண் வருகிறாள். அவள் மீதும் இவன் காதல் கொள்கிறான். காலங்கள் கடக்கின்றன. அவன் மேற்படிப்புக்காக வெளியூர் போய்விடுகிறான். அவளுக்குக் கல்யாணமும் ஆகிவிடுகிறது. ஒரு விடுமுறைக் காலத்தில், திண்ணையில் அவள் குழந்தையுடன் அவளைப் பார்க்கிறான். அவளும் புருவம் உயர்த்திப் பார்க்கிறாள். அவன் குழம்பிப் போகிறான். அவனது சந்தோஷம் போய்விடுகிறது. அவன் ஜுரம் கொண்டு படுக்கையில் விழுகிறான். அவன் பிரேதத்தைக் கொண்டுபோகும்போது அவள் அதே திண்ணையில் அதேபோல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கவிதைக்குரிய விநோதங்களைக் கொண்டவை இந்தக் கதைகள்.
இறுக்கமும் உவமைக் கட்டுகளும் நிறைந்த மொழிநடை மெளனியுடையது. மரபிலிருந்து விலகிய கவிதைகளை முன்மொழிந்த க.நா.சுவையும் மரபின் பாதிப்பை ஆழமாகப் பிரதிபலித்த பிரமிளையும் கவர்ந்தவராக மெளனி இருந்திருக்கிறார். இது கவனிக்கதக்கது. மெளனியின் மொழிக்கு அந்த ஆற்றல் இருந்திருக்கிறது. பிரபஞ்சப் பூவைப் போல உதயத்தையும் அந்தியையும் விவரிக்கிறார். இது பிரமிளைக் கவரக்கூடியது. சொல் வண்ணத்தில் புதுமையைப் புகுத்திப் பார்க்கிறார். இது, க.நா.சு.வை அபிப்ராயப்படவைப்பது.
மெளனியின் கதைகளில் சித்திரிக்கப்படும் இயற்கை விவரிப்புகள் விஷேசமானவை. மேகங்களைக் கூட்டி வைத்த தீ என அந்தியைச் சொல்கிறார். காட்சி மயக்கம் கொண்ட அந்தியும் புலரியும் அவருக்கு ஒன்றுதான். அவற்றை அவர் பாணியில் மஞ்சள் வருத்தம், மஞ்சள் சந்தோஷம் எனலாம். அவற்றைத் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்துகிறார். அந்தியின், புலரியின் காட்சி மயக்கத்துடன் மெளனியின் மொத்த கதைகளின் விநோதத்தையும் ஒப்பிடலாம். அவரது கதைகளின் இந்தச் சூழ்ச்சி வாசகனை வசீகரிக்கக்கூடியது.
இந்த மேகக் குவியல்கள் போன்ற மனத் திணறல்களிலிருந்து சூரியனைப் போல் வெளிப்படுவதுதான் மெளனி என்னும் கதை மனத்தின் பிரயாசம். ஆனால் அந்த மனத்தின் நோக்கம், சூரியோதயம் என்னும் சாசுவதம் அல்ல; மேக மூட்டத்திலேயே உழலும் அசாசுவதம்தான்.
- மண்குதிரை (ஜூன் 12, 2016)

  •