திறக்காத ஆண்டிராய்டு பூட்டு

ஆண்டிராய்டு 16 இயங்குதளத்தில், திறன்பேசிகளின் பூட்டுத்திரையில் யூஎஸ்பி வழியாகப் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் அம்சம் கொண்டுவரப்படவுள்ளது.

ஆண்டிராய்டு 16 இயங்குதளம் வருகின்ற ஜூன் 3 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இதற்கான முன்னோட்டம் வெளியானதிலிருந்தே பயனர்கள் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இதன் பீட்டா 4 இயங்குதளம், பயனர்களின் கருத்துகளைப் பெறுவதற்காகக் கூகுள் பிக்சல் திறன்பேசிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் தங்கள் பலதரப்பட்ட கருத்துகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருகின்றனர். இவற்றையெல்லாம் கொண்டு மேம்படுத்தப்பட்ட வடிவமே அதிகாரப்பூர்வ வெளியீட்டின்போது வெளியாகும்.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், முன்னோட்டத்தில் வெளியான அம்சங்கள் பலவும் பயனர்களுக்குக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் பூட்டுத்திரையில் யூஎஸ்பி மூலம் தரவுகளைப் பரிமாற்றுவதைத் தடுக்கும் அம்சம். இது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழ வாய்ப்புள்ளது. பொதுவாகப் பலர் தங்கள் கருவிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தெரியாதவர்கள் வழங்கும் யூஎஸ்பிக்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர்.
ஏனெனில் அதில் ஏதேனும் துணைபொருள்கள் இருந்தால் உங்கள் கருவியின் தரவுகள் திருடப்படும் வாய்ப்புள்ளது. ஆண்டிராய்டு திறன்பேசிகளைப் பொறுத்தவரை, பூட்டுத்திரையிலும் அதனோடு யூஎஸ்பி இணைத்துப் பயன்படுத்த முடியும். ஒருவேளை உங்கள் திறன்பேசி திருடப்பட்டாலோ அல்லது காணாமல்போனாலோ கூட யூஎஸ்பியோடு இணைக்க முடியும்.
அவ்வாறு செய்தால் உங்கள் ஆண்டிராய்டு திறன்பேசியைத் திறக்காமலே அதன் தரவுகளை வேறொரு கருவிக்குப் பரிமாற்றம் செய்து அதனைப் பயன்படுத்த முடியும். இதனைத் தடுக்க முக்கியமான வழிகள் விரலியின் (Pen Drive) தரவு அலைகளை நிறுத்துவதும், பூட்டுத்திரையில் அதனை இணைக்க முடியாதவாறு தடுப்பதுமே ஆகும். இதற்காகத்தான் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது செயல்படுத்தப்பட்டால் பூட்டுத்திரையில் யூஎஸ்பியோடு இணைக்க முடியாது. இணைக்கப்பட்ட பிறகு திரை அணைக்கப்பட்டாலும் பரிமாற்றம் தடுக்கப்படும்.
இதற்கு முன்னர் ஆண்டிராய்டு 12 இயங்குதளத்தில், யூஎஸ்பி தரவு அலைகளை முடக்கும் வகையிலான அம்சம் ஒன்று கொண்டுவரப்பட்டது. ஆனால் அது பயனர்களின் கரங்களை நேரடியாகச் சென்று சேரவில்லை. அதன்பின்னர் ஆண்டிராய்டு 15 இயங்குதளத்திலும் கூட அதன் நிலை மேம்படவில்லை. இப்போது இந்த மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை அனைத்து பயனர்களும் பயன்படுத்த முடியும். இதனைச் செயல்படுத்தினால் அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க முடியும். தரவுகளைப் பரிமாற்றம் செய்யும்பொழுது அதன் இயங்குநிலை தரவுகளைப் பாதுகாக்கும் நினைவக குறியிடல் நீட்டிப்பு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இவை சிறிய மாற்றங்களாக இருந்தாலும் பயனர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.
- மு. இசக்கிமுத்து.
The post திறக்காத ஆண்டிராய்டு பூட்டு appeared first on செல்லினம்.