கடல் நீர் எப்படி உப்பு நீராயிற்று? : ஷாராஜ்
தைவான் நாட்டுப்புறக்கதை மொழிபெயர்ப்பு
கடல் நீர் எப்படி உப்பு நீராயிற்று?
ஷாராஜ்
(தமிழாக்கம்)
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நதிக்கரை ஓரமாக லின் ஃபுஹாய் என்னும் படகோட்டி வசித்து வந்தார். இக்கரையிலிருந்து அக்கரைக்கு பயணிகளைக் கடத்திவிடுகிற வேலையில் அவருக்கு சிறிய தொகை கட்டணமாகக் கிடைக்கும். அதை வைத்து வாழ்ந்து வந்தார்.
பயணம் தொடங்குவதற்கு முன்பு அவர் தனக்கு எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று சொல்வதில்லை. பயணம் முடிந்த பிறகு வாடிக்கையாளர்கள் எவ்வளவு கொடுத்தாலும் நன்றியோடு ஏற்றுக்கொள்வார். அது சிறிய தொகையாக இருந்தாலும் சரி; பெரிய தொகையாக இருந்தாலும் சரி. கட்டணம் தராமல் போய்விட்டாலும் கோபித்துக்கொள்ளவோ, வருத்தப்படவோ மாட்டார். பயணிகளை ஆற்றைக் கடத்திவிடுவதை சேவையாகக் கருதி மகிழ்ச்சியோடு செய்துவந்தார்.
ஒரு நாள் படகில் அமைதியாக அமர்ந்து வாடிக்கையாளர் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது தாவோ துறவி ஒருவர் வேகமாக வந்தார். படகில் தாவி ஏறி, படகோட்டியை அவசரப்படுத்தினார்.
“மிக முக்கியமான வேலை. என்னை விரைவாக அக்கரைக்குக் கொண்டு செல்!”
லின் ஃபுஹாய் வேகமாகத் துடுப்பு வலித்து அக்கரையை நோக்கி படகைச் செலுத்தினார்.
ஆனால், மறு கரையை நெருங்கவிருக்கும்போது துறவி பதற்றத்தோடு சொன்னார்: “அடக் கடவுளே! அவசரமாகக் கிளம்பி வந்ததால் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். தயவுசெய்து திரும்பவும் அக்கரைக்குக் கொண்டு செல்!”
படகோட்டி படகைத் திருப்பி மறு கரையை நோக்கிச் செலுத்தினார்.
கரையை நெருங்க இருந்த சமயம் துறவி, “நான் மறந்துவிட்ட அந்தப் பொருள் அவ்வளவு முக்கியமானது ஒன்றும் அல்ல. ஆகவே, மீண்டும் அக்கரைக்கே செல்ல விரும்புகிறேன். படகைத் திருப்பு” என்றார்.
படகோட்டி அப்போதும் மறுப்போ, குறையோ சொல்லாமல் மீண்டும் படகைத் திருப்பி அக்கரையை நோக்கிச் செலுத்தினார்.
அக்கரையை அடைய இருக்கும்போது துறவி சொன்னார்: “இப்போது யோசித்துப் பார்த்தால், இன்று நான் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை என்று புரிகிறது. அந்தக் காரியத்தைப் பிறகு வந்து பார்த்துக்கொள்கிறேன். படகைத் திருப்பி, ஏறிய இடத்திலேயே என்னை விட்டுவிடு.”
அப்போதும் எதுவும் சொல்லாமல், சிறு முகச்சுளிப்பு கூட காட்டாமல், படகோட்டி மீண்டும் படகைத் திருப்பி இக்கரையை நோக்கி வந்தார்.
இக்கரையை அடைய இருக்கும்போது துறவி சொன்னார்: “இவ்வளவு தூரம் வந்தாயிற்று. வந்த காரியத்தை இன்றே முடித்துவிட்டுச் செல்வதுதான் சரியாகப் படுகிறது. எனவே, மீண்டும் அக்கரைக்குப் படகைச் செலுத்து.”
துறவி மீண்டும் மீண்டும் இப்படியே இக்கரைக்கும் அக்கரைக்குமாக படகோட்டியை அலைக்கழித்துக்கொண்டிருந்தார். பல முறை அவர் இவ்வாறு செய்தும் படகோட்டி அதில் சலிப்படையவோ, கோபம் கொள்ளவோ இல்லை. அவரது முகத்தில் எரிச்சல் அடைந்ததற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை.
முடிவில், படகு பயணம் தொடங்கிய இடத்திலேயே நிறுத்தப்பட்டது. கீழே இறங்கிய துறவி, படகோட்டிக்குக் கட்டணம் கொடுக்காமல், நன்றி கூட தெரிவிக்காமல், தனது வழியில் விரைந்து சென்றுவிட்டார்.
லின் ஃபுஹாய் அது பற்றியும் வருத்தப்படவில்லை. அவர் மீண்டும் தனது படகில் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தார்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அந்தத் துறவி திரும்பவும் வந்தார். படகோட்டியைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “நான் உன்னை பலத்த தொந்தரவுக்கு ஆட்படுத்திவிட்டேன். ஆனால, நீ நல்லிதயம் கொண்ட மனிதன். அதனால் எனது தொந்தரவுகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டாய்” என்றார்.
“பயணிகளை அக்கரைக்குக் கடத்திவிடுவது எனது கடமை. அதனால் உங்கள் செயல் எனக்கு எந்த விதத்திலும் தொல்லையாக இருக்கவில்லை.” படகோட்டி பணிவோடு சொன்னார்.
“நான் உனக்குக் கட்டணம் செலுத்தாமல் போய்விட்டேன். நன்றி கூட தெரிவிக்கவில்லை. அப்படியிருந்தும் நீ என்னை அழைத்து பணம் கேட்கவில்லை. அதில் உனக்கு வருத்தமோ, என் மீது கோபமோ இல்லையா?”
“இல்லை. பயணிகள் எனக்கு கட்டணம் கொடுத்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டாலும் அதற்காக வருந்துவதில்லை. ஒரு படகோட்டியாக எனது கடமையைச் செய்கிறேன்.”
“நீ மகத்தான மனிதன்!” பாராட்டிய துறவி, “நீ எனக்காகச் செய்த வேலைக்குக் கட்டணம் தர என்னிடம் பணம் இல்லை. ஆனால், உனது சேவையைப் பாராட்டும் வகையில் எனது எளிய அன்பளிப்பாக இந்த மாந்தரீகக் கல்லை வைத்துக்கொள்!” என்று ஒரு சிறிய மாவரைக்கும் கல்லைக் கொடுத்தார்.
அதைச் செயல்படுத்தும் விதத்தையும் கூறினார்.
அந்த மாந்தரீகக் கல், எதைக் கேட்டாலும் கொடுக்க கூடிய ஆற்றல் வாய்ந்தது. “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! 1-2-3-4-5!” என்ற மந்திரத்தை உச்சரித்தால் அந்தக் கல் தானாகத் திரும்பி, மாவரைப்பது போல முன்னோக்கி சுழலத் தொடங்கும். அப்போது நாம் எதைக் கேட்கிறோமோ, அதை இடையறாது கொடுத்துக்கொண்டே இருக்கும். போதும் என்று ஆனதும், “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! கிழக்கு – மேற்கு, இடது – வலது” என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். உடனே அதன் சுழற்சியும், பொருள் வருவதும் நின்றுவிடும்.
லின் ஃபுஹாய் துறவிக்கு நன்றி தெரிவித்து மாந்தரீகக் கல்லைப் பெற்றுக்கொண்டார்.
அன்று மாலை வீடு திரும்பிய அவர், தனது குடிசையில் மங்கலான லாந்தர் வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு அந்த மாந்திரீகக் கல்லின் முன்பாக துறவி சொன்ன முதல் மந்திரத்தை உச்சாடனம் செய்தார். அந்தச் சிறிய அரைக்கும் கல் தானாகத் திரும்பி மாவரைப்பது போல சுழலத் தொடங்கியது.
“காலை முதல் நான் எதுவும் சாப்பிடவே இல்லை. மிகவும் பசியாக இருக்கிறது. எனக்கு வயிறு நிறையுமளவு அரிசி உணவு கொடு!”
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லில் இருந்து அரிசி உணவு வரத் தொடங்கியது. போதிய அளவு உணவு வந்ததும் இரண்டாவது மந்திரத்தை உச்சாடனம் செய்தார். உணவு வருவது நின்றுவிட்டது. உணவை வயிறார உண்டு மகிழ்ந்தார்.
இந்த வகையில் அவருக்கு அந்த மந்திரக் கல்லிடம் கேட்டதெல்லாம் கிடைத்தது. அதன் மூலம் விரைவிவ் பணக்காரராகவும் ஆனார்.
எனினும் தனது படகோட்டும் தொழிலைக் கைவிடவில்லை. தொடர்ந்து மக்களுக்கு இலவசமாகப் படகோட்டி வந்தார். மந்திரக் கல் மூலமாகக் கிடைக்கும் செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு தானம் வழங்கவும் செய்தார்.
வருடங்கள் கழிந்தன. அவருக்கு வயோதிகம் ஆயிற்று. படகோட்டும் வேலையைச் செய்ய இயலவில்லை. எனவே, தக்க சம்பளம் கொடுத்து, வாங் என்னும் பெயருள்ள ஒருவனைப் படகோட்டியாக நியமித்தார்.
வாங் மந்த புத்திக்காரன். அவனுக்கு லின் ஃபுஹாய் போல பணக்காரராக ஆகவேண்டும் என்று ஆசை. அதனால் அவரிடமிருந்து மாந்தரீகக் கல்லைத் திருடிக்கொண்டு சென்றான்.
அந்தக் கல்லை வைத்து எப்படி பணக்காரனாக ஆவது என்று அவனுக்குத் தெரியவில்லை. படகில் வந்த பயணிகள் சிலர் இப்போது சந்தையில் உப்புக்கு அதிக விலை என்று பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. மந்திரக்கல் மூலம் உப்பு பெற்று, அதை விற்று பணக்காரனாக ஆகலாம் என எண்ணினான்.
படகில் அமர்ந்துகொண்டு மந்திரக் கல்லை எடுத்து, “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! 1-2-3-4-5!” என்ற மந்திரத்தை உச்சரித்தான்.
அந்தக் கல் திரும்பி, மாவரைப்பது போல சுழல ஆரம்பித்தது.
“எனக்கு உப்பைக் கொடு!” அதனிடம் கட்டளையிட்டான்.
மந்திரக் கல்லிலிருந்து தூய்மையான உப்புப் படிவங்கள் வெளி வரலாயிற்று. படகு நிறையட்டும் என்று காத்திருந்தான். படகு உப்பால் நிரம்பியது.
மந்திரக் கல்லின் செயல்பாட்டை நிறுத்துவதற்கான மந்திரத்தைச் சொல்ல முயற்சித்தான். அவனுக்கு அப்போது அந்த மந்திரம் மறந்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் ஞாபகத்துக்கு வரவே இல்லை.
மந்திரக் கல்லிலிருந்து உப்பு கொட்டிக்கொண்டே இருந்தது.
“மந்திர கல்லே…! உப்பைக் கொட்டுவதை நிறுத்து! நிறுத்து!!” கூச்சலிட்டான்.
அது நிறுத்தவில்லை. உப்பை வாரி வாரிக் கொட்டிக்கொண்டே இருந்தது.
இதனால் எடை கூடி, படகு நதியில் மூழ்கலாயிற்று. அதோடு சேர்ந்து அந்தப் படகோட்டியும் நீருக்குள் மூழ்கினான்.
அப்போதும் மந்திரக்கல் இடைவிடாமல் மேலும் மேலும் உப்பைக் கொட்டிக்கொண்டே இருந்தது. அந்த உப்புக் குவியலுக்கு இடையே அகப்பட்டு படகோட்டி வாங் இறந்துவிட்டான்.
அதன் பிறகும் மந்திரக் கல் உப்பை வெளியிடுவதை நிறுத்தவில்லை. ஓயாமல் அதிலிருந்து வந்துகொண்டிருக்கிற உப்பினால் அந்த நதி நீர் உப்பு நீராக ஆயிற்று.
அந்த நதி கடலில் சென்று கலப்பதாலும், தொடர்ந்து அந்த நதியிலிருந்து உப்பு நீர் வந்துகொண்டிருப்பதாலும்தான் கடல் நீர் உப்பு நீராக ஆகிவிட்டது.
*******