இந்தியக் கவிதையியல் - 5: குறிப்பை மறுப்பவர்களும், வேறு பிரிவில் உட்படுத்துபவர்களும், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா
ஒரு புதிய கவிதைக் கொள்கையை ஆனந்தவர்தனர் த்வன்யாலோகத்தில் அறிவித்த அளவில் எல்லோரும் அதனை ஏற்றுக்கொண்டு விடவில்லை. மாற்றுக் கொள்கைகள் எழுந்தன. மறுப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. குணம், அணி தவிர எவை கவிதையை அழகுபடுத்துகின்றன? அழகுபடுத்தும் கவிதைக்கூறுகள் தொடர்பான எல்லாவற்றையும் முன்னோர்கள் கூறிவிடவில்லையா? குணம், அணி இவற்றை விடவும் குறிப்பு வேறுபட்டதாக வாதிட்டாலும் அது மட்டும்தான் கவிதையை அழகுபடுத்துவதாக எப்படி ஏற்றுக்கொள்வது? புதிதாக சில அணிகளை வகுப்பது போன்று ஒருசில அழகுக்கூறுகளை குறிப்புக் கொள்கையாளர்களும் முன்வைத்திருக்கலாம். தாங்கள்தான் இணைமனம் கொண்டவர்கள் என்னும் போலி இறுமாப்பில் பூரித்தவாறு இதற்கே அவர்கள் “த்வனி த்வனி” எனக் கத்தியபடி கண்மூடிக் கூத்தாடலாமா? சில பெயர்களைப் புதிதாகச் சூட்டிவிட அதுவே பெரும்புலமை என்று ஆகிவிடுமா என்ன? இப்படி எல்லாம் கூட சிலர் கூறியிருக்கிறார்கள்.[1]