Reading view

நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள்– ஜமாலன்

இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக் கவிதைகளிலும், அவர்களது ஈழ நிலத்தை சொற்களால் தங்க்ள கவிதைகளில் பதியமிட்டார்கள். நிஜமான தனது மூதாதைக் குடிகள் வாழ்ந்த அதில் விளைந்த குருத்துக்களான நமது கண்முன், அந்நிலம் பறிக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்படும்போது, அந்நிலத்தை தனது படைப்புகள் வழியாக பிராதியாக்குதல் என்பது நிலத்தோடு பிணந்த ஒரு உடலின் கலகச் செயல்பாடு. அச்செயல்பாட்டை பாலஸ்தீனியக் கவிதைகளுக்குப்பின் தந்தவை ஈழக்கவிதைகள். தமிழில் அந்த தளத்தை, தனது நிலம் களவாடப்படுவதை, தான் துரத்தப்படுவதை, ஒரு அகதியாதல் மனநிலையில் பாடும் கவிதைகள் இல்லை என்றே சொல்லலாம்.
ஆய்வாளரும், ஆசிரியரும், கவிஞருமான நண்பர் ஏர். மகாராசன் அவர்களதுRelated image ”சொல் நிலம்” கவிதை நூலை அனுப்பியிருந்தார். அந்த தலைப்பு எனக்கு ஏற்படுத்திய பிம்பம், மேற்கண்ட, பாலஸ்தீன, ஈழக்கவிதைகளின் நினைவைக் கொண்டுவந்தன. தார்வீஸ் பற்றிய எனது கட்டுரை ஒன்றில் இதை விரிவாக விவரித்துள்ளேன். மகாராசனின் இக்கவிதைகள், நிலம் குறித்த ஏக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றாலும், அகதியாதல் என்ற விரட்டப்பட்ட மனநிலையில் தனது நிலத்தின் கனவுகளை, ஏக்கங்களை பதியவைக்கவில்லை. ஆனாலும், அதற்கான முதன் முயற்சியாக தன் நிலம், வயல், உழவு, மக்கள்நிலை, திணை என கவிதையாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சிறிய நூல் என்றாலும் எளிமையான மொழியில் இயற்கையைப் பாடும், நேசிக்கும், மனித நேயத்தையும், அதற்கான ஒடுக்கப்பட்ட அரசியல் குரலையும் முன்வைக்கும் கவிதைகள். கூடுதலான அரசியல் உணர்வால் எழுதப்பட்ட உணர்ச்சி சார்ந்த கவிதைகள் என்பதால் அழகியல் வாசிப்பில் ஏற்படும் உணர்ச்சியாக மாறி வெளிப்படுவதாக உள்ளது.
”எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.”
”நிழல் வனம்” என்ற தலைப்பில் இயற்கை, காடுகள் பற்றி எழுதப்பட்ட கவிதையில்..
“மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.
எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.”
தற்போதைய குரங்கணி நிகழ்வோடு இதனை ஒப்பிட்டு பார்க்கிறது வாசிப்பு. காடு நம்மை பார்த்து சிரிக்கிறது போலிருக்கிறது ”மரங்களோடு எரிந்தார்கள் மனிதர்களும்” என்று.
இவரது கவிதைகளில் சிலவரிகள் இயற்கை என்ற புலத்தை, தமிழ் என்ற திணைக்குடி நிலத்தோடு இணைத்து ஏங்கும் ஒரு தவிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இயற்கை அழிவால் கூடுகள் சிதைந்த பறவைகளின் ஒப்பாரிக் குரல் கேட்பாரற்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒப்பாரி ஒலி காட்சியாக மனதில் பதிகிறது இவரது கவிதை வரிகளில். ”ஒப்பாரி மகரந்தம்” என்ற ஒரு சொல்லாட்சி சுணாமி எனப்படும் ஆழிப்பேரலை பற்றிய கவிதை ஒன்றில். சூழ்கொண்டு துக்கத்தை பிரசவிக்கும் ஒரு மகரந்தப்பொடியாக மாறிய துயரத்தின் ஓலக்குரலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
”உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.”
என்று ஆழிப்பேரலை என்ற இயற்கை பேரிடருடன், சமூகப் பேரிடராக உள்ள சாதியத்தை இணைப்படுத்தி வாசிக்கிறார். இயற்கையும், சமூகமும் இல்லாதவனுக்கு பெருந்துயராக மாற்றப்பட்டுவிட்ட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது இவரது கவிதைகள்.
”வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்”
உடல் நிலமாகவும், நிலம் உடலாகவும் மாறுவதிலும், மாற்றுவதிலும் அதிகாரத்தின் ஆதிக்க வெறி எப்படி செயல்படுகிறது என்பதை இவரது பெரும்பாலான கவிதைகள் உணர்த்துவதாக உள்ளது. ”கூதிர் காலம்” என்ற கவிதை ஒரு சங்ககப்பாடல் காட்சியின் அக ஏக்கத்தை சொல்கிறது. ஒருவித பழமை ஏக்கம் என்பதுடன் இணைந்து இயற்கை நோக்கி திரும்புதலும், இழந்த நிலத்தை மீட்கும் திணைக்குடி மனமும் கவிதைகள் நெடுகிலும் ஒழுகியோடுகின்றன.
”செல்லாக்காசுகளின் ஒப்பாரி” என்ற கவிதை. பணமதிப்பிழப்பு என்ற மோடியின் செல்லாக்காசுத்திட்டத்தின் விளைவை சொல்லும் கவிதை.
”செல்லாமல் போனது
இழந்துபோன வாழ்வைப்
போர்த்திக் கிடக்கும்
சீவன்களும்தான்.”
என்று மனிதனே செல்லாக்காசாக மாற்றப்பட்டுவிட்ட அரசியல் அவலம் பற்றிய பதிவாக உள்ளது.
ராம்குமார் படுகொலையை சாதிய ஆணவப் படுகொலையாகவும், அதில் பார்ப்பனர், காவிகள், காவல்துறை உள்ளிட்டவற்றின் கூட்டதிகாரம் சாதிய முகத்தில் எப்படி ஒரு சாமாநியனைக் கொன்றது என்ற கருத்தை கவிதையாக முயன்றிருக்கிறார். கவிதையைவிட கருத்து ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல; ”அறத்தீ மனிதர்கள்” என்ற கவிதையும் முல்லிவாய்க்கால் படுகொலையினால் சிதறுண்ட மனதின் வெளிப்பாடாக அரசியல் மீது காறி உமிழும் சொற்கோவையாக வெளிப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நீர்-அரசியல் குறித்து பேசும் ”நீரின்றி அமையாது தமிழகம்” என்ற கவிதையின் இறுதிவரிகள் இன்றைய தமிழின அரசியலின் புள்ளியை சுட்டிச் சொல்கிறது இப்படி,
பூநூலால் கோா்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.”
புரட்சிகரக் கவிமரபான இன்குலாப் கவிதைகளின உணர்ச்சிமிக்க சில வரிகளைப்போன்ற வரிகள், சொல்முறை சில கவிதைகளில் வெளிப்பாடு கொண்டுள்ளது. பழந்தமிழ் அறிவுடன், தமிழ் மரபிலும், தமிழின் அணியிலக்கன மறைபொருள் விளக்க உத்திமுறைகளான உள்ளுரை, உவமம், உருவகம், இறைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி, கவிதை மொழியை ஒரு இணைமொழியாக்க உத்தியாக வெளிப்படுத்துவதற்கான மொழிப்புலம் கொண்ட மகராசன், மென்மேலம் சிறந்த கவிதைகளை எழுதமுடியும் என்பதை, கவிதை குறித்த அவரது அறிதலாக வெளிப்படும் கீழ்கண்ட வரிகள் சொல்லிச் செல்கின்றன.
”கவிதைகளில் இளைப்பாறுகின்றன
சுமைத்தாங்கிச் சொற்கள்”
”கவித்தனம் காட்டவே
எழுதி எழுதித் தீர்கின்றன
சொற்கள்.”
”ஈரம் கோதிய சொற்கள் தான்
வாழ்வின் தாகத்தை
இப்போது தணிக்கின்றன”
உணர்வுகள் கவிதைகளில் சொற்களாக மட்டுமே மிஞ்சாமல், அழகியல் சார்ந்த காட்சிகளாக எடுத்துரைக்கப்படும்போது வாசிப்பில் நினைவற்ற நிலையில் மொழித்துகளாக சேர்ந்துவிடும். கவிதையில் சொற்கள் இசைத்தன்மையுடன் இருக்க எதகைமோனை போன்ற உத்திகளை உருவாக்கியதன் பின்னணி என்பது இத்தகைய அழகுணர்ச்சியை இசைத்தலாக கவிதை வெளிப்படுத்தவும், வாசப்பில் அது இசைாயக மனதில் படியவுமே. மகராசனின் இகக்விதைகளில் அழகியல் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், செய்நேர்த்திமிக்க கவிதைகளாக அவை வெளிப்படும் என்ற நம்பிக்கையை தரும் கவிதை தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
- ஜமாலன் 15-03-2018
நூல் குறிப்பு: ”சொல் நிலம்” – ஆசிரியர்: கவிஞர். மகாராசன் – டிச. 2017- பக். 88- ஆதி பதிப்பகம் – திருவண்ணாமலை - விலை: ரூ 100

  •  

“மேலும்” விருதிற்கான ஏற்புரை.

நண்பர்களுக்கு வணக்கம்.

“மேலும்”-இதழ் வழங்கும் இவ்விருதைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்விருதை வழங்கிய “மேலும்” அறக்கட்டளைக்கும், அதனை நடத்திவரும் மதிப்பிற்குரிய “மேலும்” ஆசிரியர் சிவசு மற்றும் மதிப்பிற்குரிய தமிழவன் அவர்களுக்கும் நன்றி. விருதுகள் நபர்களை அங்கீகரிப்பதில்லை அவர்களது பணியை மற்றும் எழுத்தை அங்கீகரிப்பவை. அந்தவகையில் எனது எழுத்திற்கும் விமர்சனமுறைமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இது.

இச்சந்தர்ப்பத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் சார்த்தர் தனக்கு வழுங்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விருதான நோபலை நிராகரிக்கும்போது கூறிய வாசகமே நினைவிற்கு வருகிறது. நோபல் பரிசை எனக்கு தந்து என்னை நிறுவனமாக்க முயல்கிறார்கள் என்பதே அது. இக்கருத்தில் அவர் பரிசு என்பதன் வழியாக நிறுவன மயப்படுத்தம் போக்கை நிராகரிப்பது முக்கியமானது. பெரும்பாலான பரிசுகள், விருதுகள் நிறுவனமயப்படுத்தும் தன்மையிலேயே தரப்படுகிறது. பரிசு யாரால் யாருக்கு தரப்படுகிறது அதன் நோக்கம் என்ன என்பதே முக்கியம். அவ்வகையில் நிறுவனமாக தன்னை ஆக்கிக் கொள்ளாத ”மேலும்” இதழின் பெயரில் நிறுவனங்களில் பங்களிக்காத பேரா. சிவசு அவர்களால் இவ்விருது வழுங்கப்படுகிறது. இவ்விருது நிறுவனங்களுக்கும், நிறுவன முறைமைகளுக்கும் எதிராக உள்ளவர்களையும், அதனை சாராதவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது முக்கியம். சென்ற ஆண்டு விருதை அருமை நண்பர் எஸ். சண்முகம் பெற்றார். இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது எனது திறனாய்வுக்கும், விமர்சனத்திற்கும் கிடைத்திருக்கும் ஒரு மதிப்பீடு மற்றும் அங்கீகாரம்.

படைப்பாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் விருதுகளிலிருந்து விலக்காகி, திறனாய்வு மற்றும் விமர்சனத் துறையாளருக்கு வழங்கப்படுவதே இவ்விருதின் சிறப்பு எனலாம். திறனாய்வாளன் எத்தனை சமூகம் முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை எனது சிற்றேடு இதழ் நேர்காணலில் விளக்கி உள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் அதை வாசித்தறியலாம். குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். திறனாய்வாளன் என்பவன் சமுகத்தையும் படைப்பையும் இணைக்கவும், இணக்கவும் செய்பவன். பிரதிக்கும் வாசகனுக்கும் இடையில் பிரதியை சமூகவயப்படுத்துவதுடன் வாசகனையும் சமூகவயப்படுத்துகிறான். திறனாய்வு அற்ற சமூகம் இலக்கியத்தை எப்படி பண்டமாகவும், சுவைஞர்களை உட்கார வைக்கும் உணவு மேசையாகவும் மாற்றும் என்பதற்கு ஒரு உதாரணமே தற்போதைய தமிழ் சூழல் இலக்கிய நிலை என்றால் மிகையாகாது. திறனாய்வு இன்றி ஒரு சமூகம் தன்போக்கை உணரமுடியாது. அவ்வகையில் திறனாய்வாளனின், விமர்சகரின் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லி என் பற்றியும் எனது எழுத்து பற்றியும் ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். 

“மேலும்” இதழில்தான் எனது எழுத்துப்பணியின் விமர்சன மற்றும் கோட்பாடு சார்ந்த எழுத்துமுறை துவங்கியது. எனது ”கவிதையும் சிதைவாக்கமும்” என்ற கட்டுரை “மேலும்” இதழில் வெளிவந்தபோது எனது எழுத்திற்கான அங்கீகாரமாகவும், எழுதுவதற்கான நம்பிக்கையாகவும் எனக்குள் உருவாகியது. காரணம் “மேலும்” இதழ் தமிழக அறிவார்ந்த சிந்தனை தளத்தில் ஒரு முக்கியமான நவீனமான சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்திய இதழ். தமிழ் சிந்தனையை அடுத்த தளத்திற்கு நகர்த்திய ஒரு போக்கே ”மேலும்” இதழ். தமிழில் 80-களுக்கு பிறகு அறிமுகமான புதிய விமர்சனமுறையை, சிந்தனை முறையை அதாவது அமைப்பியல் துவங்கிய பின் அமைப்பியல்வரையான சிந்தனைமுறையை தமிழில் நிகழ்த்திப் பார்த்த ஒரு ஆடுகளமே, ஒரு தளமே ”மேலும்” இதழ். அதில் எழுதிய சிந்தனையாளர்கள் குறிப்பாக தமிழவன், சிவசு, நாகார்ஜீனன், அ. மார்க்ஸ், எம்டிஎம், பிரேம் மற்றும் எஸ். சண்முகம் உள்ளிட்ட சிறுபத்திரிக்கை தொடர்புடைய சிந்தனைாளர்களும், பல்கலைக்கழகம் சார்ந்த அறிவுப்புலப் பேராசிரியர்களும்தான் இன்று தமிழ் சிந்தனையின் விமர்சன மரபை, கோட்பாட்டு சிந்தனை தளத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக உள்ளனர்.

ஒரு சமூகத்தின் அறிவுப்புலத்தை, சிந்திக்கும் முறைமையை, உலகப்பார்வையை கட்டமைப்பது இத்தகைய சிறு சூழலைச் சார்ந்த சிந்தனைகளும், அதில் புழங்கும் அறிவுவுஜீவிகளுமே. உதாரணமாக சொல்லாடல், பணுவல், கட்டுடைப்பு, சிதைவாக்கம் உள்ளிட்ட பல வார்த்தைகள் இன்று வெகுசன ஊடகங்களில் மிகச்சாதரணமாக புழங்குவதைக் காணலாம். இத்தகைய புழக்கத்திற்கான இச்சொற்களை அன்று உருவாக்கிய ஒரு அறிவுத்தளமே “மேலும்” இதழ். ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கான ஒரு சொல்லாடல் புலத்தை வடிவமைப்பதும் அதை இயக்கத்திலும், ஆட்டத்திலும் வைப்பதே இலக்கியத்தின் பணி. அதாவது முந்தைய சொல்லாடலை இன்றைக்கான தகவமைப்பாக்கி இயல்பாக்கம் செய்வதே இலக்கியத்தின் பணி. பல்வேறு உலகை படைத்தளிப்பதன் மூலம், வாழ்வதற்கான பல திறப்புகளை, சாத்தியங்களை உருவாக்குவதே இலக்கியத்தின் பணி. அத்தகைய பணியை தமிழில் முன்னின்று நடத்திய ஒரு இயக்கமே “மேலும்” என்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்பு மிக்க ஒரு இயக்கம் வழங்கும் இந்த விருது என்னை இன்னும் பொறுப்பு மிக்க விமர்சகனாக மாற்றும். அந்தவகையில் இவ்விருதை ஏற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மௌனியின் செம்மங்குடி ஊர்தேடல் போல என்னைப்பற்றிய சிறு அறிமுகக்குறிப்பு. நான் தஞ்சைப்பகுதியில் உள்ள பாடல்பெற்ற சைவத்தலமான குடந்தை எனப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் ஊர் ஒருவகையான புராணங்கள், பழங்கதைகளில் நிரம்பிய ஊர் என்பதே எனது முதல் இலக்கிய ஆர்வத்திற்கான அடிப்படை. புகழ்பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றான ராகுஸ்தலமே எங்கள் ஊர். அதேபோல் பிரபலமான வைணவத்தலமான தென்திருப்பதி எனப்படும் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளதும் எங்கள் ஊரே. இவற்றை எல்லாம்விட சுந்தர காளியம்மன் வருட உலா மற்றும் எங்கள் ஊரின் ஐதீகமும். பழங்கதையுடன் உறவும் கொண்ட ஜெம்புமாலிராஜன் கதை நாடகமும் கொண்ட ஊர்.

நாடோடியாக முடியாதவகையில் தேசங்களில் கட்டுண்டுவிட்ட நாம், நாட்டில், மண்ணில் அடையாளம் காணப்படும் இடமான ஊர் என்பதே எழுத்தாளனின் கற்பனைக்கும், இலக்கிய உணர்விற்கும் அடிப்படையாக அமைந்து உள்ளது. ஒரு உடலின் முதல் நிலமயமாதல் அதாவது தெல்யுஸ் வார்த்தைகளில் சொன்னால் “டெர்ரிட்டேரியலைசேஷன்” என்பது ஊரே. அதனால்தான் தொல்காப்பியம் அய்ந்திணைகளின் வாழிடங்களை வெவ்வேறு பெயரில் அடையாளப்படுத்துகிறது. நெய்தல் நிலம் பட்டினம் என்றும், குறிஞ்சி நிலம் காடு என்றும், மருதநிலம் ஊர் என்றும். ஆக, மருதமயமாகிவட்ட மனித வாழிடங்கள் இன்று ஊர் என் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆக ஒரு உடலின் நிலமயமாதலான ஊர் என்பது மனித உடலின் முதல் நினைவாக உள்ளது.

இந்த அடிப்படையில் ஒருவகை ஊர்தேடல் நினைவு என்பதில் பழமைவாத ஏக்கம் இருப்பதை உணரலாம். இத்தகைய ஏக்கத்தை ஒருவகையான பின்நவீன உணர்வு சார்ந்ததாக சொல்லலாம். காரணம் பின்நவீனம் நவீனத்திற்கு முந்தையதைப்பற்றிய ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் நவீனத்தில் பழமையை மறு உருவாக்கம் செய்வதன் வழியாக நவீனத்துவத்தின் உண்மையை புனைவாக்கி காட்டிவிடுகிறது. இத்தகைய பழமையின் நவீன உருவாக்கம்தான் நவீன மனிதனை நவீனத்தின் அழுத்தத்தத்திலிருந்து விடுவிப்பதாக உள்ளது. நவீனத்துவத்தின் உணர்வடிப்படைகளாக பதற்றம், அந்நியமாதல், நிலைகொள்ளாமை, பேரெந்திர அச்சம், உயிர்நிலைக்கான ஏக்கம் எனலாம். இந்த உணர்வெல்லைகள்தான் நவீனத்துவம் பேசும் “பகுத்தறிவு” என்ற ஆன்மீகத்திற்கான அடிப்படையாக மாறி உள்ளது. நவீனத்துவ இலக்கியத்தின் தேடலும் கட்டமைப்பும் இதனை சுற்றியே பின்னப்பட்டு உள்ளன என்பது மிகைக் கூற்றாகாது. இந்த மன அழுத்தம் ஏற்படுத்தி உள்ள இலக்கிய உணர்வை ஒரு விளைாயட்டாக, ஆட்டமாக மாற்றிவைத்ததே பின்நவீன உணர்வு எனலாம்.

இப்பின்நவீன உணர்வின் ஒரு புற அடையாளமே சமீபத்தில் உருவாகிவரும் பல ‘மால்கள்’ மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள். இவற்றை கவனித்தால் இவை பழமையை மறுஉருவாக்கம் செய்வதை அறியலாம். இவற்றின் பின்னணி இத்தகைய ஒரு உணர்வாக்கத்தின் வெளிப்பாடே. நட்சத்திர ஓட்டல்களில் ஆர்கானிக் உணவும், சராசரி உணவைவிட ஆர்கானிக் உணவு அணுகுமுடியாத விலையில் நிலையில் இருப்பதும் இதன் பின்னணி எனலாம். ஆக தன்னுருவாக்கமாக எனது ஊர் அமைந்த கதை என்பது சுயவிமர்சனமாக எனது பழமை ஏக்கத்தின் வெளிப்பாடே என்பதை பதியவைக்க விரும்புகிறேன்.

நான் எழுதத் துவங்கியது என்பது எனது சிறுவயதில் இருந்தே உருவான ஒன்று. சிறுவர் கதைகளில் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் எனது அய்ந்தாம் வகுப்பில் துவங்கியது வாசிப்பும், நூலக பழக்கமும். நானே சிறுவர் இதழ்கள், கதைகள் கொண்ட ஒரு வாடகை நூலகம் வைத்து நடத்தினேன். அந்த காலத்தில் 75-களில் 5 காசுகள் துவங்கி 15 காசுகள் வரை உள்ள சிறுவர் கதைகள் வாங்கி அதை வாசிக்க 5 காசுகளுக்கு 3 புத்தகங்கள் என வாடகைக்கு விட்டு சிறநூலகம் நடத்தினேன். புத்தகங்கள் வாசிப்பதைவிட வாங்கி சேகரித்து அதை அடுக்கி பார்ப்பதே ஒரு ஆனந்தம் என்பதாக உருவாகிவிட்டது. இன்றுவரை வாசிக்க என வாங்கி சேர்த்த புத்தகங்கள் வாசித்ததைவிட அதிகமாகிவிட்டது.

எழுத்து என்பதற்கான அடிப்படை வாசிப்பும், வாசித்தவற்றைப்பற்றிய கற்பனைத்திறனும், சிந்திக்கும் பழக்கமும்தான். அதை தொடர்ந்து காப்பாற்றி வந்து உள்ளேன் என்பதே எனது இந்த ஐம்பது ஆண்டுகால வாழ்வில் மாறாத பழக்கமாகிவிட்டது. எனது ஒன்பதாம் வகுப்பில் வெகுசன வாசிப்பிலிருந்தும், வெகுசனபாணி கவிதை எழுத்துக்களிலிருந்தும் ஒரு பாயச்சலை உருவாக்கியது தமிழவனின் புதுக்கவிதை நாலு கட்டுரைகள் என்ற நூல்தான். அதன்பின் சீரிய இலக்கியத்திற்கு திரும்பி, தமிழவன் வழியாக அமைப்பியல் மற்றும் நாகார்ஜீனன், எம்டிஎம், பிரேம் வழியாக பின்நவீனம் அறிமுகமாகி, சக பயணியாக நண்பர் எஸ். சண்முகத்துடன் இந்த இலக்கியப் பயணம் தொடர்கிறது. நண்பர் ராமானுஜத்தின் தொடர்ந்த உரையாடல்கள் எனது எழுத்தை செழுமைப்படுத்தி வருபவை. தீராநதியில் தொடர்ந்து எழுத வாய்ப்பு தந்து எனது எழுத்தை பரவலாக்கியதில் நண்பர் கடற்கரய் பங்கு முக்கியமானது. எனது கல்லூரிக்கால நண்பர்கள் அரசு, ரவி சுப்ரமணியன், அமானுஷ்யன், கோமகன் மற்றும் என்னோடு சிறுபத்திரிக்கை நடத்திய நண்பர் ஆறுமுகம் மற்றும் பால்ய நண்பர்கள் மகேந்திரன், சிற்றரசு என அனைவருக்கும் எனது எழுத்து வளர்ச்சியில் ஒரு பங்கு உள்ளது என்பதை நன்றியோடு நினவு கூருகிறேன்.

எனது சிறுவயது எழுத்து இலக்கியத்தை கட்டமைத்ததில் சிறுவயது நண்பனாக இன்றுவரை என்னோடு உற்ற தோழமையாக இருந்து வரும் நண்பன் காலக்குறி ஆசிரியர் அ. ஜ. கான். எனது எழுத்திற்காகவே வறண்ட பாலைவனத்தில் காலக்குறி என்ற இதழை துவங்கி தொடர்ந்து எனது எழுத்தை அறிமுகப்படுத்தி வந்தான். எனது விமர்சன எழுத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரத்தை உருவாக்கி தந்து, எனது எழுத்தை முழுமையாக வெளியிடுவதும், அதனால் கட்டுப்பாடின்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் வாய்பை உருவாக்கி தந்து உள்ளான். இந்த வாய்ப்புதான் எனது எழுத்தின் ஒரு சுதந்திரபலமாக, சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவசியமற்றதாக உள்ளது. தனிப்பட்ட முறையில் கானிற்கு நான் நிறைய கடப்பாடு உள்ளவன் என்பதை நன்றியோடு பதிய விரும்புகிறேன்.

எனது எழுத்திற்கான வாய்ப்பையும், வளர்ச்சியையும் தந்த தமிழ்ச்சூழல் சிற்றிலக்கியங்கள், சிறு சூழல் அமைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

எனது இரண்டு நூல்கள் வெளிவந்து உள்ளது. மொழியும் நிலமும் என்ற தலைப்பிலும், நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள் என்ற தலைப்பிலும். 90கள் தொடங்கி 2010 வரையிலான 20 ஆண்டு விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தொடர்ந்து இலக்கிய அரசியல் மற்றும் கோட்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் குறித்த எனது எழுத்து குறித்த விபரங்கள் சிற்றிதழில் வெளிவந்த எனது நேர்காணலில் விளக்கப்பட்டு உள்ளது. அதனால் கூறியது கூறலாக வேண்டாம் என அதை தவிர்க்கிறேன்.

இவ்விருதை பெறுவதற்கான எனது தகுதியைவிட எனது எழுத்தின் தகுதியை குறித்த எனது பார்வையை உங்களோடு இந்த ஏற்புரையில் பகிர்கிறேன். இலக்கியம், சமூகம், அரசியல் என்கிற ஒரு முப்பரிமாண அளவுகோலே எனது விமர்சனமுறையாக உருவாகி வந்து உள்ளது. நவீனத்துவம் மற்றும் பழமைவாதம் இரண்டிற்கும் எதிரான ஒரு விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருவது அவசியம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவின் வளர்ச்சி என்ற பெயரிலான நவீனத்துவவாதத்திற்கும், கற்பணார்த்த பழமைவாதத்திற்கும். ரசனைசார்ந்த நுகர்வு வாதத்திற்கும் எதிரானதாக எனது விமர்சனமுறையை அமைத்துக் கொண்டு உள்ளேன். சமூக விஞ்ஞானப்பார்வையான மார்க்சிய துவங்கி அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்தவம், பெண்ணியம், புதிய வரலாற்றுவாதம், சிதைவாக்கம் என் பல கோட்பாடுகளின் உள்ளோட்டத்தை விமர்சனமுறையில் அணுகி உருவாகி வந்ததே எனது பார்வை.

தற்போது எனது இலக்கிய அரசியல் என்றால் சிறபான்மையாதல் என்பதே. எப்பொழுதும் சிறுபான்மையாதல் என்பது ஒருவகையான ஜனநாயக இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கான வெகுமக்கள் அரசியல் எனலாம். சிறுபான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது அல்ல. பன்மைத்துவம் சார்ந்தது. பெரும்பான்மை என்பதே ஓருமையானது. ஒற்றை சிந்தனையைக் கொண்டது. வன்முறையானது. யதார்த்தத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையில் சிறுபான்மையானது. சிறுபான்மை எண்ணிக்கையில் பெரும்பான்மையானது. காரணம் சிறுபான்மை என்பது பன்மை. அதனால் சிறுபான்மைகள் உண்டு. பெரும்பான்மைகள் கிடையாது. காரணம் பெரும்பான்மை என்பது ஒன்றுதான். பெரும்பான்மையை எதிர்ப்பதும் சூழலை உயிர்ப்புடன் வைப்பதும் சிறுபான்மைகளே.

சிறுபான்மையாக உள்ளவையே வளரும் தன்மைக் கொண்டது. பெரும்பான்மை என்பது வளர்ந்து தெவிட்டிய நிலையை அடைந்துவிட்ட ஒன்று. சிறுபான்மை பெரும்பான்மையாக வளர்வதற்கான இயக்க நிலையில் இருப்பது. அதுதான் சமூகபொதுபுத்திக்கு எதிரான பொராட்டத்தைக் கொண்டது. சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. இத்தகைய சிறசூழல் அமைப்புகளே நுண் அளவிலான சமூக இயக்கத்தை நகர்த்துபவை. சமூக எந்திரத்தின் பற்சக்கரமாக இயங்குபவை. இவ்வமைப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் நுண் அளவிலான மாற்றமே அடுத்துவரும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. அதனால் எப்போதும் சிறுசூழலுடன், சிறுபான்மைகளுடன் இருப்பதும் சிறுபான்மையாக உருவாகிக் கொண்டு இருப்பதுமே உயிர்ப்புடன் வாழவைப்பது.

அவ்வகையில் “மேலும்” உள்ளிட்ட சிறுபத்திரிக்கை மற்றும் சிறசூழல் அமைப்புகள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை. சமூகத்தின் கலாச்சார அரசியலில் நுண்அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்கால சமூகத்தின் போக்கை நிர்ணயிப்பவை. அவற்றில் பங்கேற்பதும், அதன் கொளவரமும் முக்கியமானது என்பதே இந்த விருதை ஏற்பதற்கான எனது மனநிலை.

உலக வரலாற்றில் இலக்கியம் எப்போதம் சிறுபான்மையாக இருப்பதால்தான் அது உயிர்ப்புடன் உள்ளது. இந்த சமூகத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இலக்கியம் இல்லாமல் சமூகம் சாத்தியமில்லை. இலக்கியத்தை சமூகம் ஒதுக்கலாம். மதிப்பற்றதாக மாற்றி வைக்கலாம். ஆனால் இலக்கியம்தான் சமூகத்தை மதிப்புள்ளதாக மாற்றுகிறது. ஒரு இலக்கியம் சரியான சமூகத்தை கடடமைப்பதை கண்காணிப்பதும், அதை சரி செய்வதும் அதன் போக்கை மாற்றியமைப்பதும் அதை வாசிப்பாளனான மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமான பெரும்பணியே திறனாய்வாளர்களின் பணி. அவ்வகையில் திறனாய்வாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் விருது வழுங்கி சமூகத்தின் சரியான போக்கை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் “மேலும்” அறக்கட்டளை ஈடுபட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூகச்செயல்பாடு என்று கூறி நன்றியோடு எனது ஏற்புரையை முடிக்கிறேன்.

ஜமாலன் - 12-10-2014 (சிற்றேடு ஜனவரி-மார்ச்.2015)
  •  

ஒளிரும் கல்லால் இருளும் வாழ்வு – “மிளிர் கல்” ஒரு அரசியல் வாசிப்பு

நண்பர் இரா. முருகவேல் அவர்களின் ”மிளிர்கல்” என்ற நாவலுக்கு அந்நாவல் வெளிவந்த புதிதில் அதன் பிடிஎப் வடிவை படித்தவிட்டு எழுதிய திறனாய்வு. நிழல் இதழில் வெளிவந்தது. இதனை புத்தகச் சந்தையை ஒட்டி பதிவில் வெளியிடலாம் என்ற எண்ணியபோது அந்நாவலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அதனால் வெளியிடுவதை தவிர்த்தேன். தற்போது நண்பர்களின் வாசிப்பிற்காக வெளியிடுகிறேன். 

மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் மனிதகுல வரலாற்றை அதன் சமூக உருவாக்கத்தை ஒரு புனைவுக் கதையாடலாக உருவாக்கிய ராகுல சாங்கிருத்யாயனின் ”வால்கா முதல் கங்கை வரை” புனைகதையாகவும் அதேநேரத்தில் மார்க்சிய பொருள்முதல்வாத அடிப்படையில் வரலாற்றை விவரிப்பதாகவும் எழுதப்பட்ட நாவல். அந்நாவலைப்போன்று சமணத் தத்துவத்தையும் வணிக வர்க்க பின்னணியின் எழுச்சியையும் அடிப்படையாகக் கொண்டு தமிழக நிலப்பரப்பை ஒரு வரலாற்றை கதையாக கட்டமைத்த சிலப்பதிகாரத்தையும், அதன் பாட்டுடைத் தலைவியான கண்ணகி என்ற பத்தினி தெய்வ பிம்பத்தையும் ஒரு ஆய்வுப் புனைவாக முன்வைப்பதே இரா. முருகவேல் எழுதியுள்ள ”மிளிர் கல்” என்கிற நாவல்.

சாங்கிருத்யாயன் நாவல் முற்றிலும் புனைகதையாக கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்நாவலோ கண்ணகியின் புகார் துவங்கி மதுரை வழியாக கொடுங்காலூர் போய் கடவுளாக மாறிய பயணத் தடத்தை ஆவணப்படமாக எடுக்க முனையும் ஜேஎன்யு (JNU) மாணவியான முல்லை என்கிற பத்திரிக்கையாளரையும், அவளது நண்பனான நவீன் என்கிற மூன்றாவது அணி எனப்படும் மார்க்சிய லெனினிய இயக்க செயல்பாட்டாளனது பயணத்தையும் புனைவாக சொல்லும் நாவல். அவர்களோடு இணைந்து செல்லும் வரலாற்று ஆய்வாளரான ஸ்ரீகுமார் என்பவரோடு நடைபெறும் உரையாடல்கள் வழியாக கண்ணகி கதை மீள்கட்டமைப்பு செய்யப்படுகிறது.

சங்க இலக்கியத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட சிலப்பதிகாரம் தமிழ் இனக்கருத்தியல் வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்தது என்பதே இன்றைய தமிழ் அரசியல் வரலாறு. இந்த வரலாற்றுப் பின்னணியில் முகிழ்த்த பெண்ணிய சிந்தனையில் கண்ணகி என்பவள், அதீத சக்திகொண்ட அதிகார எதிர்ப்பு பெண்ணாக பிம்பப் படுத்தப்பட்டதும் இந்நாவலுக்கான பின்புலமாக அமைகிறது. பாண்டிய அரசாட்சியை வீழ்த்தி மதுரையை எரித்து தனது அதிகாரத்தை நிறுவிய கண்ணகியின் கால் சிலம்பின் மாணிக்கப் பரல்கள் ரோம-கிரேக்க வணிகத்தை தமிழகத்தில் பரப்பியதையும், அந்த கற்களுக்காக மூவேந்தரிடம் நிகழ்ந்த போரும் போட்டியும் இக்கதையாடலின் உள்சரடாக நாவலில் வாசிக்கப்பட்டு உள்ளது.

சிலப்பதிகாரம் என்பது தமிழ் பண்பாட்டோடும் நிகழ்கால தமிழ் தேசிய அரசியலோடும் கொண்டு உள்ள உறவை ஆராயும் முகமாக கண்ணகியின் கால்தடத்தோடு நடந்து செல்கிறது இந்நாவல். சிலப்பதிகாரம் பற்றிய எத்தனையோ தொன்மங்கள், கதைகள், ஆராய்ச்சிகள், அரசியல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை எல்லாம் உள்வாங்கி இந்நாவல் சிலப்பதிகாரம் ஏன் உருவாக்கப்பட்டது, கண்ணகி ஏன் தமிழ் பெண்மையின் குறியீட்டு பிம்பமாக மாறினால் என்பதை நுட்பமாக தனது உள்கட்டமைப்பில் வைத்து பேசுகிறது.

இந்நாவலில் மூன்று கதை அடுக்குகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து செல்கிறது. இப்பிணைப்பை ஒரு புனைவாக்காமல் உரையாடல்கள் வழியாக மட்டுமே கட்டியிருப்பது நாவலை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போன்ற வடிவத்திற்கு நகர்த்துகிறது. சிலப்பதிகாரம் உருவான ஒரு சமூக அடுக்கும், அதன்மேல் உருவாகி வந்து உள்ள இன்றைய நவீன சமூக அடுக்கும், அன்றும் இன்றும் மாறாமல் மக்களை, மூலவளங்களை கொள்ளையிடுவதற்காக பழங்குடிகளை ஒடுக்கி துரத்தியடிக்கும் அதிகார வேட்டையின் மாறாத அடுக்கும் என்ற இந்த மூன்று அடுக்குகளும் இந்நாவலின் பிணைந்தபடி செல்கிறது.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூலை வாசிப்பவர்கள் அது ஒரு சுய வாக்குமூலமாக வெளிப்பட்ட ஆய்வுநூல் என்றாலும் அது எப்படி உண்மைகள் புனையப்படும் அரசியலைப் பற்றிய ஒரு வாசிப்புணர்வை ஏற்படுத்துகிறதோ அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது இந்நாவல். அந்த நூலை தமிழ் சமூகத்தின் அதிகார அமைப்பிற்குள் வைத்து தளமாற்றம் செய்திருப்பதே இந்நாவல் என்றால் மிகையாகாது.

இயல்பானது, இயற்கையானது என பொதுபுத்தியில் உருவாக்கப்படும் “உண்மைகள்” எப்படி சமூக யதார்த்தம் மற்றும் புறநிலைகளால் கட்டமைக்கப்பட்டு ”உண்மையாக” தோற்றம் கொள்ளச் செய்யப்படுகிறது என்பதை ஒரு புனைவாக ஆக்க முனைகிறது இந்நாவல். அறிவு அதிகாரத்தோடு இணைவதன் வழியாக எப்படி இத்தகைய உண்மைகளை உற்பத்தி செய்கிறது என்பதே இந்நாவல் எடுத்துரைக்க முனையும் கதையாடலாகும்.

ஆனால் இதில் முழுவெற்றியை இந்நாவல் அடையமுடியாமல் ஆகியிருப்பது ஆசிரியரின் ”உண்மை” பற்றிய மரபான புரிதலடிப்படையில் தரவுகள், ஆதாரங்களை எடுத்துக் காட்டுதல் என்ற ரீதியில் பல இடங்களில் உருவாக்கப்பட்ட உரையாடல்களே. இத்தகைய உரையாடல்களை புனைவாக்க முனைவதில்தான் நாவலின் இலக்கியத்தரமும், புனைவாற்றலும் வெளிப்படும். அவற்றை நேரடி உரையாடலாக தருவதில் வாசிப்பவருக்கு அது புனைவின்பத்தை தருவதில்லை. முற்றிலுமாக இந்த நாவலை ஒரு புனைவாகவே மாற்றி எழுத முடியாதபடி இந்த உண்மைகள் பற்றிய அச்சமும், நிரூபணமும் ஆசிரியரை பல இடங்களில் புனைவிலிருந்து தடம் மாறச் செய்து உள்ளது.

உண்மைக்கான நிரூபணங்களை வேண்டி நிற்பது முதலாளித்துவ பகுத்தறிவு என்ற அறிவுசார் மரபின் ஒரு விளைவே. காரணம் நிரூபணம் என்பது முதலாளித்துவத்துடன் வளர்ந்த அறிவியல் என்கிற கருத்தாக்கத்துடன் உறவு கொண்டது. இது ஒருவகை காலனியத்தால் இங்கு கட்டமைக்கபட்ட பார்வை. இப்பார்வையே யதார்த்தவாத நேர்கோட்டு நாவலின் அடிப்படையை உருவாக்குவது. இதிலிருந்து விலகி முதலாளியம் உருவாக்கி உள்ள யதார்த்தத்தை, உண்மையை கட்டுடைத்து, சிதைத்து காட்டுவது இன்றைய புனைவிலக்கியத்தின் முக்கியச் செயல்பாடாகும்.

புனைவு என்பது உண்மையை தேடுவதோ, உண்மையை புனைந்துரைப்பதோ அல்ல. உண்மை என்கிற புனைவை, புனைவாக்கி காட்டுவதே. எழுத்துருக்களான பாத்திரங்கள் உண்மைகளாக அன்றி புனைவுகளாகவே நிற்பதன்வழி, ”உண்மைகள்” என்கிற அதிகாரத்தின் புனைவை அம்பலப்படுத்துவதும் சிதைத்து அழிப்பதுமே புனைவிலக்கியத்தின் குறிப்பாக ”முற்போக்காக” சொல்லப்படும் புனைவிலக்கியத்தின் அடிப்படை.

உலக நாவல் இலக்கியத்தை உருவாக்கிய மிகைல் செர்வாண்டிஸின் ’டான் குவிக்சோட்’ என்கிற புனைவிலக்கியம், 18-ஆம் நூற்றாண்டு நவீனத்துவ உருவாக்கம் எப்படி வரலாறு என்கிற ’உண்மை’யின்மீதும், அதன் உயர்குடி கதநாயக வழிபாட்டின் மீதும் கட்டப்படுகிறது என்பதை கிழித்துபோட்ட ஒரு பேரிலக்கியம். முதலாளியம் இப்படி பண்டைய வரலாற்றினை பகுத்தறிவு சொல்லாடலால் கட்டமைத்து நவினவரலாறாக்கி அதை ஒரு அறிவுசார் விஞ்ஞானமாக மாற்றி தன்னை கட்டமைத்துக் கொள்ளமுயல்வதை அந்த நாவல் தடம் கண்டு புனைவாக்கியது. வரலாற்றை அதி புனைவாகவும். அது எப்படி ஒரு கோமாளித்தனமான உருவாக்கமும் ஆன தன்னுருவாக்க புனைவு என்பதை வெளிப்படுத்தியது. முதுலாளியம் உருவாக்கிய இன்றைய இயல் உலகு பற்றிய பரோனியாவை தடம்காட்டிய முதல் நாவல் அது.

அதன்பின் உருவான யதார்த்தவாத நாவல் இலக்கியம் என்பது புனைவை உண்மையாக மாற்றியது. புறநிலையை துல்லியமாக்கிய புகைப்பட யதார்த்தவாதமாக புனைவிலக்கியத்தை மாற்றியது. இப்படியாக பல முதலாளியம் உருவாக்கிய புனைவு உலகை, உலக உண்மைகளை, பல உலக யதார்த்தங்களை நாவல்கள் உருவாக்கின. குடிகளை நாடாக்கியது காப்பியங்கள் குறிப்பாக சிலப்பதிகாரம் போன்றவை என்றால், நாடுகளை தேசியமாக்கியவை நாவல்களே. ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தைக் கட்டமைப்பதில் நாவல் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. நாவல் புனைவுகள் உண்மைகளை உருவாக்குபவை. அல்லது உண்மையை நோக்கியதான பாய்வைக் கொண்டவையாக காட்டப்படுபவை.

17-ஆம் நூற்றாணடிற்குப் பிறகான உலகம் முதலாளியம் கட்டமைத்த உலகம். அதை இயல்பாக ஏற்பது ஒருவகை முதலாளிய பரோனியா. அந்தப் பரோனியாவிலிருந்து விலகாமல் உலகை ஊடுறுவிப் புரிவது கடினம். இந்த ஊடுறுவலை உருவாக்குவதே நவீன நாவல்களின், புனைவிலக்கியங்களின் முக்கிய பணியாகும். அதனால் உண்மைகளாக ஏற்க்கப்பட்ட, இயல்பாக்கப்பட்ட யதார்த்ங்களை சிதைத்து ஊடுறுவிச் செல்லும் புனைவுகளே முற்போக்கான திசைவழிக் கொண்டவை. உண்மைக்கும், பொதுபுத்திக்கும் எதிரான கலகமாக, கட்டுடைப்பாக புனைவிலக்கியம் செயல்பட வேண்டும்.

உண்மை இல்லை, ஆனால் உண்மைகள் உண்டு. பல உண்மைகள் இருப்பதால் ஒன்று உண்மையாக மற்றதை பொய்யாக்கும், புனைவாக்கும், மறைக்கும் விளையாட்டு அதிகாரத்தால் இயக்கப்படுகிறது. இவ்வாறு பல உண்மைகளை மறைத்து ஒவ்வொரு சமூக அமைப்பும் ஒரு ஒற்றை உண்மையை நோக்கியதாகவும் அல்லது பேருண்மை ஒன்றை நோக்கியதாகவும் கட்டப்படுகிறது. இத்தகைய உண்மைகளை சிதைத்து அதன் புனைவுக் கட்டமைப்பை வெளிப்படுத்துவதே இலக்கியப் புனைவின் முக்கிய செயல்பாடாகும். அந்தவகையில் தமிழ் சமூகத்தை நம்ப வைக்கப்பட்டுள்ள சிலப்பதிகாரம் பற்றிய உண்மைகளை, அதன் ஆதாரங்களைத் தேடிப்போகும் பயணத்தின் வழி அது ஒரு அதிகாரவர்க்கப் புனைவு என்பதாக கட்டவிழ்க்க முயல்கிறது இந்நாவல்.

ஒரு உண்மையை வாசிப்பாளனிடம் அல்லது மக்களிடம் நேரடியாக எடுத்துரைப்பது என்பது அறிவு என்கிற மூளை சார்ந்த புலன் பதிவோடு முடிந்துவிடும் ஒன்று. ஆனால் அதே உண்மையை ஒரு புனைவாக்கி இலக்கியமாக்கினால், அது வாசிப்பாளனை அல்லது மக்களை ஐம்புலன்களின் பதிவால், மூளையில் ஊடாட்டமாகி, மூளையின் பல பொறியமைவு செயல்களால் உடலின் ஒரு தன்னுணர்வற்ற செயலாக வெளிப்படுகிறது. இலக்கியம் உணர்வை, பிரக்ஞையை. தன்னுணர்வை உணர்வற்றதாக மாற்றி உடற்செயலாக்கி விடுகிறது. உடலின் செயலில் மட்டுமே அதன் தடத்தை உணர முடியும். ஒரு உடலை கட்டமைப்பது என்ற இச்செயலை இலக்கியங்கள் காலங்காகலமாக இப்படித்தான் செய்துவருகின்றன. கண்ணகியின் உடலை தமிழ் சமூகத்தின் பெண் உடல்களில் மையமாக பதியவும், படியவும் வைக்கப்பட்டுள்ளது சிலப்பதிகாரத்தின் வழி. தமிழ் பெண் உடல் கட்டமைப்பை அகழ்ந்தாள் உள்ளே கண்ணகியின் பேருடல் இருப்பதை காண முடியும். அது கற்பாக, பத்தினியாக தமிழ்தன்மையாக ஒவ்வொரு பெண் உடலுக்குள்ளும் வடிவமைந்து உள்ளது.

இலக்கியம் எழுதப்பட்டதாக மட்டுமின்றி பேசப்பட்டதாகவும், நாட்டார் தொன்மங்களாகவும் இருந்து தொடர்ந்து மனித உடலை மறுகட்டமைப்பு செய்துவருகின்றன. அதனால்தான் புனைவுகள், புராணங்கள், தொன்மங்கள் வழி மதங்கள் மக்களிடம் பரவி அவர்களை பற்றிப் பிடித்து உள்ளது. புராணங்கள் கடவுளை தன்வயப்படுத்தும் கதையாடலாகவும், தொண்மங்கள் இயற்கையை தன்வயப்படுத்தும் கதையாடலாகவும் உருவாகி வந்தவையே. புற உலகை நேரடியாக எடுத்துரைப்பது “உண்மை” என்ற தோற்றத்தையும், புனைவாக எடுத்துரைப்பது ”கற்பனை” என்ற தோற்றத்தையும் தருவது இந்த தன்வயப்படுத்தலின் ஒருவினையே. மனித உடல் கடவுள், இயற்கை, பேரண்டம் என தனது புற உலகை தன்வயப்படுத்தி, தனது அதிகார எல்லைக்குள் சங்கேதப்படுத்திக் கொள்வதற்கான ஒரு செயல்பாடே புனைவுகள். இப்புனைவுகளின் உடல் பாதிக்கும் உணர்வுகள் அறிவால் வாக்கியங்களாக கட்டமைக்கப்படும்போது அது உண்மைகளாக வடிவம் கொள்கின்றன.

ஆக, நேர் எடுத்துரைப்பிற்கும் இலக்கிய புனைவு எடுத்துரைப்பிற்கும் உள்ள இந்த வேறுபாடு முக்கியமானது. இதை வேறுவிதமாக கூறினால் ஒவ்வொரு சமூகத்தையும் கட்டமைப்பது அந்த சமூகத்தின் முந்தைய இலக்கிய புனைவாக்கங்களே. அவை உருவாக்கும் உண்மைகளும், பேருண்மைகளுமே. எனவேதான் அதிகாரத்தின் ஒரு கட்டமைவாகவும், அதேசமயம் அதிகாரத்தை கட்டுடைப்பதாகவும் இலக்கியம் செயல்படுகிறது. இலக்கியம் உருவாக்கும் புனைவு புதிய அக, புற பரப்புகளை உருவாக்கும் வல்லமை கொண்டது. இதற்கு சிறந்த உதாரணம் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தை சொல்லலாம்.

சிலப்பதிகாரத்திற்கு தமிழில் அப்படி என்ன ஒரு முக்கியத்துவம் என்பதை புரிந்துகொள்ளாமல் இந்நாவலை அனுகமுடியாது என்பதால் அதைபற்றிய ஒரு சுருக்க விவரணையை கடந்தபின் நாவலுக்குள் செல்லலாம். சிலப்பதிகாரம் தமிழகம் என்கிற நிலப்பரப்பை இலக்கிய பிரதிக்குள் வரைந்து தந்த முதல் காப்பியம். மூவேந்தர்கள் ஆண்ட மூன்று நிலப்பரப்புகளையும், அதன் நகர்புற வரலாற்றின் வழி ஒருங்கிணைத்த ஒரு கதையாடல். ஒரு சமூகத்தை கட்டமைப்பதில் இலக்கியப் பிரதியின் பங்கை முதலில் செயல்படுத்திய ஒரு காப்பியம். மூவேந்தர்களின் தலைநகர்களில் பயணித்த இக்காப்பியம் அரசர், தெய்வம் போன்ற வழமையான காப்பிய நாயகர்களை விடுத்து ஒரு சராசரி குடிமகளை, குடிமகனை காப்பிய நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது உலகமயமாதலைப்போல நகர்மயமாதல் என்பதற்கான புனைவுப்பரப்பை உருவாக்கிய காப்பியம். அன்றைய பழங்குடிகள் நிறைந்த இன்றைய தமிழகத்தை, மூவேந்தர்கள் என்கிற பெருநில மன்னர்களின் ஒரு குடைக்கு கீழ் கொண்டுவந்த சமூக அசைவியக்கத்திற்கான ஒரு அறநெறியை உருவாக்கிய காப்பியம். அதாவது பழங்குடிகளை நகர்மய அரசுகள் தன்வயப்படுத்திய கதையே சிலப்பதிகாரம். பழங்குடிகளின் நாட்டார் தெய்வமான கண்ணகியை காளியாக்கி பெருமத அமைப்பிற்குள் உள்வயப்படுத்திய காப்பியம். இக்காப்பியத்தின் உருவாக்கம், உருவாக்கியவர் பற்றிய கதையாடல்கள் கூர்மையாக கவனிக்கப்பட வேண்டியவை.

தமிழ் என்கிற நவீன கருத்துருவாக்கத்தில் சிலப்பதிகாரம் ஒரு மையமான பிரதியாகும். தமிழ்நாடு என்கிற நிலலப்பரப்பை உருவாக்க மூவேந்தர்களின் நிலங்களை ஒருமித்த தமிழ் அடையாளத்திற்குள் கொண்டுவந்த ஒரு காப்பியம். இக்காப்பியம் மகாபாரதம் எப்படி இந்திய நிலப்பரப்பில் பல சிற்றினங்களை ஒருங்கிணைத்து ஒரு பேரரசு உருவாக்கத்தை நிகழ்த்தியதோ அதைப்போன்றதொரு தமிழக அரசு உருவாக்கத்திற்கான பழங்குடிகளை ஒருங்கிணைக்கும் கதையாடலே இக்காப்பியம். இக்காப்பியம் பற்றி பல நூறு ஆய்வுகள் வந்து உள்ளன. இதன் இலக்கியச் சிறப்பு, கவித்துவ மாண்பு மற்றும் அன்றைய தமிழர் வாழ்வியலைச் சொல்வது உள்ளிட்ட பலவும் இந்த காப்பியத்திற்கான ஆய்வுப்பொருளாக இருந்து வந்து உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கருத்தியலும் அதன் அரசியலும் எழுச்சி பெற்றபோது தமிழ் என்கிற கருத்துருவத்தை துலக்கப்படுத்திய ஒரு பண்பாட்டு ஆவணமாக மீள்கண்டு பிடிப்பு செய்யப்பட்டது இக்காப்பியம். கண்ணகி என்கிற காப்பியத்தின் பிம்பம் தமிழ்தாய் பிம்பத்திற்கான ஒரு அகவடிவமாக மாற்றப்பட்டது. கண்ணகியும் அவளது கற்பு நெறியும் தமிழ் பெண் உடல் கட்டமைவிற்கான மையமாக மாறியது.

பெரியாரால் விமர்சிக்கப்பட்ட இக்காப்பியம், ம.போ.சி போன்றவர்களால் தமிழ் தேசிய உருவாக்கத்திற்கான அடிப்படையாக முன்வைக்கப்பட்டது. கருணாநிதியால் திரைக்கதையாக்கப்பட்டு பூம்புகார் என்கிற திரைப்படமாக்கப்பட்டது. கண்ணகிக்கு சிலை வைப்பதும், அதை அப்புறப்படுத்துவதுமான ஒரு அரசியல் விளையாட்டும் நிகழ்த்தப்பட்டது. இப்படி பல அரசியல் சமூகவியல் கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக வாசிக்கப்பட்ட இக்காப்பியத்தை இந்நாவல் இடதுசாரி மார்க்சிய அடிப்படையில் வாசிக்க முயல்கிறது என்பதே இந்நாவலின் தனிச்சிறப்பு.

சமகால ஆய்வுகள், ஆய்வாளர்கள் பற்றிய குறிப்புடன் உருவாக்கப்பட்ட இந்நாவல், சமகால நபர்களையும் சந்திப்பதைப் பற்றி பேசுகிறது. இந்நாவலின் நாயகி முல்லை காஞ்சனை சீனிவாசன் என்கிற சமகால ஆவணப்பட இயக்குநர் பற்றியும், க. பஞ்சாங்கம் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் பற்றியும் பேசுகிறது. ஒருவகையான யதார்த்தவகை நாவல் போன்ற தோற்றத்தை தர முயன்றாலும் நாவலின் கதைவடிவம் ஒரு ஆய்வுக்கட்டுரைக்கான தன்மையிலேயே பல இடங்களில் நகர்கிறது. தான் சார்ந்த பழங்குடிகளின் அழிவுக்கு எதிராக நீதிகேட்டு நின்ற ஒரு பெண்வடிவை, வளர்ந்து வந்த வணிக சமூகமும், அதன் மதமான சமணமும் உள்வாங்கி இந்து பெருமத அமைப்பிற்குள்ளான கடவுளாக உருமாற்றிய கதையே சிலப்பதிகாரம்.

இலக்கியத்தின் அரசியலை வாசிப்பவருக்கு இந்நாவல் பல ஆழமான தகவல்களை ஆய்வுக்கான கூறுகளைத் தருகிறது என்றாலும், அரசியலை இலக்கியமாக வாசிக்கும் முயற்சியில் அரசியல் தூக்கலாகி இலக்கியம் உள்ளடக்கப்பட்டு உள்ளது. ஆனபோதிலும், அரசியலை இலக்கியமாக வாசிக்க முயன்ற இந்நாவல் இடதுசாரி இலக்கியத்தில் ஒரு முக்கியமான நாவலே. இன்றைய முதலாண்மை நிறுவனங்கள் எப்படி அறிவுத்துறையை பயன்படுத்தி தங்கள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன என்பதை சொல்லும் இந்நாவல், சிலப்பதிகாரம் என்ற பனுவலே அன்றைய தமிழக நகர்புற அரசதிகாரம் பழங்குடிகளை தனது அதிகார எல்லைக்குள் கொண்டுவர உருவாக்கப்பட்டது என்கிற வாசிப்பை முன்வைக்கிறது.

கண்ணகி என்கிற பழங்குடிகளிடம் உருவான ஒரு பெண் பிம்பம் நகர அரசு அதிகாரத்திற்கு எதிராக நகரை எரித்து அந்த அரசின் அதிகாரத்தை அழித்த கதையை, மேல்நிலையாக்கம் செய்து தமிழின் மேல்சாதி பாத்திரமாக்கி குறிப்பாக வணிக வர்க்கப் பாத்திரமாக்கி சிலப்பதிகாரம் என்கிற கதையாடல் கட்டமைக்கப்படுகிறது. அதாவது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கீழு்நிலையாக்கப்பட்ட பழங்குடிகளின் ஆற்றல்மிக்க பிம்பமாக, அவர்களின் நம்பிக்கையின் கடவுளாக, அதிகாரதிற்கு எதிரான ஒரு அழித்தொழிக்கும் பிம்பமாக இருந்த கண்ணகி ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்நதிலள்” என்ற பத்தினி தேவமங்கையாக மாற்றப்பட்டு சிலப்பதிகாரத்தில் மேல்நிலையாக்கம் செய்யப்படுவதை தனது பயணத்தின் வழியாக உரையாடல்களின் வழி வெளிப்படுத்துகிறது இந்நாவல். பல வரலாற்றுத் தரவுகள் மற்றும் ஆய்வுகள் வழி இந்த முடிவை வந்தடையும் இந்நாவல் புறவடிவமாக கண்ணகி பற்றிய ஒரு ஆவணப்படம் எடுப்பதாக முல்லை என்ற பெண்ணின் வழி துவங்குகிறது.

கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி பயணித்த பாதையில் ஆய்வாளர் ஸ்ரீகுமார், இடதுசாரி நக்சல்பாரி இயக்க ஆதரவாளன் நவீன் மற்றும் ஆவணப்படம் எடுக்க விரும்பும் பத்திரிக்கையாளரான முல்லை பயணிப்பதே இந்நாவல். இந்த மூன்றுபேர் தேர்வு என்பது ஒருவகையான நவீன சிலப்பதிகாரத்தின் வடிவத்தை தருவதாக உள்ளது. அல்லது ஆசிரியரின் படைப்புச் சட்டகத்தில் இந்த மேற்பொருந்துதல் நிகழ்ந்திருக்கிறது. பண்டைய தமிழகத்தில் நிலவிய மிளிர் கல் எனப்படும் ஒளிவீசும் தன்மைக்கொண்ட மாணிக்கம், மரகதம், பவளம் உள்ளிட்ட பல கற்களின் வியபாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் கம்பம் பகுதியில் இத்தகைய கல்கள் அதிகம் கிடைக்கலாம் என்ற ஆய்வின் அடிப்படையில், சிலப்பதிகார சிலம்பின் மாணிக்கப் பரல்கள் என்பது இந்நாவலின் மற்றொரு கதை உருவாக்க மையமாக உள்ளது.

இந்த மிளிர் கல்களுக்காவே அன்றைய மூவேந்தர்கள் போர் புரிந்தும், மதங்களை பரப்பியும் பழங்குடிகளை அழித்தும், அப்புறப்படுத்தியும் தங்கள் அரசதிகாரத்தை நிறுவியதைப்போல, இன்றைய பகாசுர பண்ணாட்டு முதலாண்மை நிறுவனங்கள் காடுகளை அழித்தும், பழங்குடிகளை அழித்தும் அப்புறப்படுத்தியும் நாட்டு வளத்தை சுரண்டுவதை வெளிப்படுத்துகிறது இந்நாவல். இந்த கல்களை தேடி அடைவதற்காக வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுகளை ஊக்குவிக்கவும் அவற்றிற்கு நிதி உதவி அளிப்பதும் அதற்காக பல அரசுசாரா தொண்டு நிறுவனங்களை, ஆய்வகங்களை, ஆய்வு அமைப்புகளை உருவாக்குவதும், உபயம் (ஸ்பான்ஸர்) செய்வதும் நடக்கிறது. பல்கலைக்கழகங்கள் வழியாக ஊக்குவிக்கப்படும், நிதி அளிக்கப்படும் இத்தகைய ஆய்வுகள் வழி பண்ணாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டின் மூலவளத்தை அறிந்து அவற்றை தனது முதலாண்மை நிறுவனங்கள் வழி சுரண்டிக் கொழிக்கின்றன. அறிவின் வழியாக அதிகாரம் கட்டமைவதை நிகழ்த்திக் காட்டகிறது.

இந்நாவலில் ஜே.கே. டைமண்ட்ஸ் என்ற நிறுவனம் இப்படி ஸ்ரீகுமார் என்கிற ஆய்வாளருக்கு உதவுவதாக கூறி அவரது அறிவை தனது கல்தேடும் செயலுக்கு பயன்படுத்துகிறது. உள்ளுரில் உள்ள முதலாளிகள் இதற்கு எதிராக அந்த குமாரை கடத்தி முதலாண்மை நிறுவனங்களிடம் பேரம் செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக ஒரு தரகு அதிகார வர்க்கம் தேசியமுதலாளித்துவத்தை ஒழித்து உருவாகுகிறது என்பதை சுட்டுகிறது இந்நாவல். நுண்ணளவில் சிறியதாக நிகழ்த்திக் காட்டப்படும் இப்புனைவு, பெரிய அளவில் நிகழும் உலகமயமாதலை, பண்டைய நகர்மயமாதல் என்கிற அரசு உருவாக்கத்துடன் இணைத்து விவரிக்கிறது.

கல்தேடும் பயணத்தில் ஆய்வுமுடிவுகள் கல் கிடைக்கும் இடத்தை ஊகித்தவுடன், அங்கிருக்கும் மூன்றாவது அணியான மா.லெ இயக்கத்தினர் வேட்டையாடப் படுகின்றனர். மக்களிடம் இயக்கங்களை கட்டி பண்ணாட்டு நிறுவனத்திற்கு எதிராக செயல்பட முடியாதவகையில் முதலில் சமூக உணர்வ கொண்ட புரட்சிகர இயக்கங்கள் அங்கு வேட்டையாடப்படுவதை நுட்பமாக வெளிப்படுத்திக் காட்டுகிறது இந்நாவல். அரசு திட்மிட்டு எப்படி தனது ஒடுக்குதல் வலையை விரிக்கிறது என்பதையும், அது எப்படி பண்ணாட்டு நிறுவனங்களுக்க சாதகமான சூழலை உருவாக்குகிறது என்பதையும் சொல்கிறது. அதிகாரத்தோடு அறிவுத்துறை இணைந்து இந்த திட்டமிடலின்வழி பண்ணாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மூலவளம் கொண்ட நாடுகளை மாற்றுவதை இநநாவலின் கதையாடல் விவரித்து செல்கிறது. ஒடிசாவில் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் எப்படி மூலவளக் கொள்ளைக்காக மாவோயிஸ்டுகளை அழிக்கிறதோ அப்படி கல் கிடைக்கலாம் என்கிற கம்பம் பகுதி ம.லே. இயக்கத்தினர் கைது செய்து இயக்கம் முடக்கப்படுகிறது.

பூம்புகாரில் துவங்கும் நாவல், அங்குள்ள மீனவர்கள் நிலை பற்றியும் தற்போதைய அரசியலில் அவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் சொல்கிறது. தமிழக அரசுகள் வரலாற்றின்மீது நின்று தங்கள் அரசியலை கட்டமைத்தாலும், வரலாற்றை பாதுகாக்க முடியாத தொல்பொருளியல் நிலையை விமர்சிக்கும் வண்ணம் காட்சிகள் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

பூம்புகாரில் விடுதியில் தங்கி உள்ள முல்லையிடம் பேசம் ஒரு பெண் பற்றிய மாயத்தன்மை புனைவின் ஒரு முக்கியமான இடம். அந்த பகுதியை வளர்த்து இறுதியில் கொடுங்கலூரில் முல்லையை காப்பாற்றும் பெண்வரை வளர்த்திருப்பதை நாவல் நெடுகிலும் ஒரு மாயத்தன்மைக் கொண்ட தொடரலாக வளர்த்திருந்தால் நாவல் செளுமையான புனைவாக மாறியிருக்கலாம். நாவலில் அகம் என்கிற ஒன்றே இல்லாமல் எல்லாம் புறவெளியில் நடக்கும் சித்தரிப்புகளாவே அமைக்கப்பட்டிருக்கிறது. நுன்னுணர்வுகள் விழிப்படையாத ஒருவகை புறவயமான எழுத்துருக்களாக பின்னப்பட்டுள்ள பாத்திரங்கள், புறநிலைபற்றிய உரையாடல்களில் செலுத்தும் கவனம் சிலப்பாதிகாரம் முன்வைக்கும் அகவெளி சித்தரிப்புகளை முற்றிலுமாக விலக்கிவிட்டது.

விளிம்பநிலை மக்களின் வாழ்வை மையத்தில் கொண்டு சேர்த்த ஒரு பிரதியியல் அரசியல் செயல்பாட்டையும், ஆய்வுகள் எப்படி அறிவுருவாக்கமாக மாறி உண்மைகளை உருவாக்குகிறது என்பதையும், அரசு என்கிற நிறுவனம் பண்ணாட்டு நிறுவனங்களின் ஏவலாளாக மாறி மக்களை எப்படி கொள்ளையிடுகிறது என்பதையும் விவரிக்கும் இந்நாவல் பாத்திரங்களோடு பயணிக்கும் உணர்வை வாசிப்பவரிடம் உருவாக்கிவிடுகிறது. ஒரு புனைவாக வாசிப்பின்பத்தை தவறவிட்டாலும் அறிவார்ந்த தளத்தில் புனைவாக கட்டப்பட்ட பல உண்மைகளை கட்டுடைத்து காட்டி உள்ளது என்றவகையில் இந்நாவல் இடதுசாரி முற்போக்கு இலக்கியத்தில் ஒரு முன்னகர்வை சாதித்து உள்ளது.

- ஜமாலன் – [email protected] (14-07-2014)

  •  

இலக்கியமும் எளக்கியமும் தமிழின் புதிய ”லாம்” களும் “ம்”களும் - புதிய அறிவுக்கட்டடடடப்பட்ட அஸ்திவாரங்கள்

imagesநண்பர் சுரேஷ் கண்ணன் அவர்கள் முகநூலில் கீழ்கண்ட நிலைத்தகவலை பதிவு செய்து உள்ளார். அது குறித்த எனது கருத்து கீழே...

”பின்நவீனத்துவ படைப்புகளுக்கென்று பிரத்யேகமான குணக்கூறுகள் உள்ளன. ஒரு நாவலில் ' ஒழி,பழி,குழி, மழி,கிழி' என்ற வார்த்தைகள் மாத்திரமே பத்து பக்கங்களுக்கு வந்தால் அந்த கலகத்தன்மைக்காகவே அதை பின்நவீனத்துவ நாவல் என வகைமைப்படுத்தலாம்' என்றார் நண்பரொருவர்...

உதாரணமாக...

குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி

என்று ஒரு நாவலில் வந்திருந்தால் சம்பளப் பாக்கிக்காக டிடிபி ஆப்பரேட்டர் பழிவாங்கியிருப்பாரோ என்று தவறான யூகம் கொள்ளாமல் அது பின்நவீனத்துவ நாவல் எனறு உறுதியாக சொல்லி விடலாம் என்கிறார்.
***
1941-ல் சபாபதி என்றொரு திரைப்படம் வந்தது. 'இருப்புப்பாதை வியாசம்' என்கிற கட்டுரையை குறும்புக்கார மாணவனான சபாபதி, ரயிலின் சப்தங்களையே தொடர்ச்சியாக 18 பக்கங்களுக்கு "குப் குப்..குப்..குப்... என்று எழுதியிருப்பான்.


ரயில் பாலத்தைக் கடக்கும் போது வரும் 'கடகடகட பட படபட' என்கிற நுண்ணிய வேறுபாடும் அந்த 18 பக்கங்களில் உண்டு.
***
எனக்கென்னமோ தமிழின் முதல் பின்நவீனத்துவப் பிரதி அந்த 18 பக்கங்களாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.
http://www.youtube.com/watch?v=Qxs94r_J7-U
அவரது நிலைத்தகவல்  https://www.facebook.com/suresh.kannan.1806
************************************

இப்படியெல்லாம் பின்நவீனத்துவத்தை சொல்லித் தந்த அந்த பேராசானின் காலை காட்ட சொல்லுங்கள். தொட்டு கும்பிடனும். எந்த ஒன்றையும் யாரும் ஒழுங்காக படிப்பதில்லை. வார்த்தைகளை வைத்து ஜல்லியடிப்பது என்பதுதான் பின்நவீனத்துவம் என்று 20 ஆண்டுகளாக தமிழில் புரிந்துகொண்டுள்ள அபத்தம் அபாரமானது. தமிழ் மூளையின் விசேஷ குணாம்சங்களில் ஒன்று புதுமைபித்தன் கூறியதைப்போல.. ”தமிழ் குரங்குதான் முதல் குரங்கு என்பது.”  இந்த பழம்பெருமை எந்த புதிய ஒன்றையும் மூளைக்குள் நுழையவிடாது.  வரலாற்று ஆலமரத்தை அணைத்துக் கொண்டு தூங்கிவிடுவதில் அளப்பறிய ஆனந்தத்தை அடையும் தமிழ் அரசியல். ஆதார் கார்டுகளையும், ரேஷன் கார்டுகளையும் உற்பத்தி செய்யும் தமிழ் மெகா நாவல் இலக்கியம்.  வாசகன் தங்கி கண்ணீர்விடவும், கட்டி அழவும், உணர்ச்சிப் பெருக்கில் நனையவும் ஆன வாசக குடியிருப்புகளை வரைந்து தள்ளும் ரியல்-எஸ்டேட் எளக்கிய எழுத்தாளர்கள் என நிரம்பி வழியும் தமிழ் இலக்கியச் சூழல்.


நகங்களை அழகாக வெட்டி வழவழப்பாக ஆக்கிக்கொள்வதை முதல் நிபந்தனையாகக் கொண்டு உருவாகி உள்ள பதிப்பக-எழுத்தாள-வாசக உறவு. சொறிந்துகொள்வதில் ஒரு போட்டி வைத்தால் அதில் இவர்களே பெரும் பரிசுகளை தட்டிச் செல்வார்கள். தமிழ் இலக்கியம் கட்டக்கடைசியில் சொறிதலிதம் என்கிற இஸத்தை கண்டடைந்து உள்ளது தனது எண்ணற்ற பண முதலீட்டு வியபாரத்தில் சிக்கி.


தமிழின் உயர்ந்தபட்ச இலக்கியத்தர அளவுகோல் கல்கி, சுஜாதா மற்றும் பாலகுமாரன் என்கிற நிலைக்கு இலக்கிய உலகம் இறக்கப்பட்டு உள்ளது. சுஜாதா, பாலகுமாரன் வெகுசன எழுத்துக்களை தமிழில் உருவாக்கிய இரண்டு இலக்கிய எந்திரங்கள்.  அவர்களது தேவை வெகுசனத் தளத்திலானது.  அதை இலக்கிய தளத்திற்கு நகர்த்திவிட்டனர். அதன் மெகா உற்பத்தி நிறைந்து வழியும் இடமாகிவிட்டது தற்போதைய இலக்கிய உலகம். பாலகுமாரனின் அவதாரமாகிப்போன இலக்கிய மம்ம நாயனார்கள் நிறைந்துவிட்டனர். எண்ணற்ற நாவல்கள் வெளிப்படுவது அதன் ஒரு விளைவுதான். பாலகுமாரனின் அறத்தை ஒருவரும், காமத்தை பிறிதொருவரும், நெகிழும் மனிதர்களை மற்றொருவரும்  தங்கள் எழுத்துக்களின் வழி உச்சநிலைக்கு கொண்டு சென்று உள்ளனர். கல்கியும், சாண்டியல்யனும் மீண்டும் பிறப்பது அவசியமாகி உள்ளது. அது வெகுசனதளத்தில் தேவையானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கிய உலகில் அதன் பணி என்ன? என்பதே கேள்வி. இலக்கியத்தின் சரிவு இங்குதான் துவங்கியது. இன்று அது எண்ணற்ற பாலகுமாரன், சுஜாதாக்கள், கல்கி, சாண்டில்யன்களை இணையவெளி எங்கும் இலக்கியவாதிகளாக அவதாரமெடுக்க செய்து உள்ளது. இவர்கள் சொம்புடன் அலைந்து திரியும் அவலம்தான் தாங்க முடியவில்லை.


தமிழ் மூளையின் விசேஷ அமைப்பு எந்த ஒன்றையும் தனது பழமைவாதத்தை தண்டி ஏற்காது என நினைக்கிறேன். அதனால்தான் பு.பி. கபாடபுரம் எழுதினார். தமிழின் முதல் பின்நவீன பாலிம்செஸ்ட் சிறுகதை அது. அந்த கதையை ஒரு பெரும் நாவலாக விரிக்க முடியும். அந்த கதையில் இன்று அரசியல் பண்ணும் தமிழ் தேசியர்கள் உட்பட வந்து போவார்கள்.  அந்த கதையின் விசேஷம் தமிழின் வரலாற்றை ஒரு அழித்தெழுதப்பட்ட புனைவாக எழுதி வைத்து உள்ளதுதான்.   கோணங்கி கூறியதைப்போல கபாடபுரத்தில் ஒருவன் நுழைந்து வெளிவந்தபின் அவன் முற்றிலும் வேறொரு மனிதனாக மாறிவிடுவான். இதைக்கூட சரியாக வாசிப்பதில்லை நம் ஆட்கள். சிற்பியின் நரகம், நாரத ராமாயணம், பிரம்ம ராஸஸ், கட்டிலை விட்டிறங்கா கதை, வேதாளம் சொன்ன கதை... (பெயர்கள் நினைவில் எழுதப்படுகிறது.) இப்படி பலவடிவங்களில் எழுதிப்பார்க்கப்பட்ட புதுமை பித்தன் கதைகள் எல்லாம் பின்நவீன எழுத்து சொல்லும் மொழிவிளையாட்டைக் கொண்டவைதான்.


இந்துத்துவாவை, ராமயாணத்தை காந்தியை இந்திய சுதந்திரப்போரை மணுதர்மத்தை சாதியத்தை தமிழில் புதமை பித்தனின் நாரதராமயணம் அளவிற்கு வலுவாக கிண்டலடித்த ஒரு அரசியல் பிரதி வேறொன்றில்லை. தமிழின் பழகிய உணர்வுநிலையின் போலித்தனத்தை நுட்பமாக கிழித்தெறியும் ஜி. நாகராஜன் போன்றவர்கள் எழுத்தெல்லாம்தான் நவீனத்துவ உணர்வை முன்வைத்தவை. பின் நவீனத்துவம் என்பது ஒரு பின்-மனித சிந்தனை (post-human thought). மனிதன் என்கிற நவீனத்துவ கண்டுபிடிப்பிலிருந்தும், அதனால் உருவாகி உள்ள அழிவுகள், வன்முறையிலிருந்து, மனித மையவாத சிந்தனையிலிருந்து விலகி செல்லும் சிந்தனை. அது ஏதோ கிலி, பலி.. என்ற வார்த்தைகளின் தொங்கி கொணடிருப்பதில்லை.


குழந்தையின் அழுகையை வெறும் சத்தமாக உணர்ந்து அர்த்தமற்றது என்று முடிவெடுத்தால், எல்லாக் குழந்தையும் பசியில் செத்த மடிவதை தவிர வேறு வழியில்லை. சத்தம் ஒழுங்குபடுத்தி அர்த்தமாகிறது என்பதால், அர்த்தமற்ற சத்தம் என்பதை அதாவது நமக்கு புரியாததை, வெறும் சத்தமாக ஒதுக்க முயல்கிறோம். அதன் உணர்வு புரிவதில்லை.  அர்த்தம் என்பது ஒரு சமூக ஒழுங்கு என்பதால், அந்த ஒழுங்கை அதிகாரத்தை ஏற்பதே இதன் அடிப்படை. இப்படி சொல்வதால் மேலே குறித்த உங்கள் நக்கலான சப்தங்களின் அடுக்கை ஏற்கிறென் என்பதல்ல பொருள். இப்படி பலரும் பின்நவீன எழுத்து போலியை உருவாக்குவதே பிரச்சனை. அதை வைத்து அந்த சிந்தனைமீது சேற்றை வாறியிறைப்பது என்பது இப்போது எல்லோருக்கும் வசதியாக உள்ளது.


காரணம் இன்று இலக்கியம் என்பது வெகுசன எழுத்திற்கான பத்திரிக்கை எழுத்திற்கான பயிற்சிக்கூடமாக சான்றிதழ் வழங்கும் பட்டறையாக மாற்றப்பட்டு உள்ளது. இதுதான் தமிழில் முகநூலின் நான்காண்டு கால சாதனை. இலக்கியவாதி குமுதம் விகடனில் இடம் பிடிப்பதே உயர் லட்சியமாக மாறிவிட்ட காலமிது. கேட்டால் இலக்கியத்தின் எல்லைக் கோட்டை பின்நவீனத்தவம் அழித்துவிட்டது என்பார்கள். அதற்கு மட்டும் பின்நவீனத்துவம் முட்டுக் கொடுத்துக் கொள்வார்கள். தமிழில் தனது திறமையற்ற எழுத்தை அடைப்பதற்கான ஒரு குமிழாக பின்நவீனத்துவம் பயன்படுகிறது என்பதே யதார்த்தம்.


உண்மையில் பின்நவீனம் முன்வைக்கும் எந்த இலக்கிய எழுத்தையும் யாரும் படிப்பதில்லை. ஏன் காப்காவின் நாயகன் பெயரற்ற ஆங்கில எழத்து K ஆக உள்ளான்? சில நேரங்களில் வெறும் சப்தங்களை வெளியிடும் மொழியற்றவனாக உள்ளான்? என்பதெல்லாம் வாசிக்கப்படுவதோ உள்வாங்கப்படுவதோ இல்லை. இலக்கியம் என்பது முன்னேறிச் செல்வதற்கான படிகட்டாக மாறிவிட்டது. அதன் அதிகபட்ச எல்லை பாப்பலராக மாறுவது. பெரும்பத்திரிக்கையில் எழுதுவது. 10000 பிரதிகள் விற்கும் குப்பையை இலக்கிய கோபரமாக கட்டமைப்பது. இதெற்கெல்லாம்தான் பின்நவீனத்துவம் முன்வைத்த மைய உடைப்பு, புனித உடைப்புதான் காரணம் எனக் கூறிக்கொள்வது.  இலக்கியத்திற்கான மதிப்பீட்டை மற்றைய சிந்தனைகளைவிட பின்நவீனத்துவம் மிகவும் கொதிநிலையான சமூக உணர்வு மற்றும் அறிவுத்தளத்தில் முன்வைக்கிறது.  வாசிப்பாளனை விழிப்புகொள்ள தன்னோடு சேர்ந்து எழுத சிந்திக்க வைக்கிறது. மனிதன் மனிதனாக மையம் கொண்ட அனைத்தையும் விமர்சிக்கிறது. ஒரு புதிய மொழி விளையாட்டை முன்வைக்கிறது. அதன் அரசியல் பற்றிய பல விமர்சனங்கள் உள்ளபோதும், இலக்கியத்தில் அதன் செயல்பாடு முக்கியமானதே. 


இங்கு பின்நவீனத்துவம் என்பது என்னவென்றே புரியாமல் வார்த்தைகளை வைத்து ஒரு புறம் மிரட்டுவதும், மற்றொரு புறம் அதை வைத்து நக்கலடிப்பதும்தான் நடக்கிறது. பின்நவீனத்துவம் என்ன என்பதை விளக்கவோ, விளங்கிக்கொள்ளவோ யாரும் முயற்சிப்பதில்லை. நவீனத்துவமே புரியாத தமிழ் உலகில் பின்நவீனத்துவம் புரிவதும் கஸ்டம்தான்.  தமிழ் இணையத்தில் குறிப்பாக முகநூலில் நீர்த்துப்போன வார்த்தை இலக்கியத்தைப் போல பின்நவீனத்துவமும் ஒன்று.


இந்த புத்தகச் சந்தையிலாவது வாங்கி நண்பர்கள் பின்நவீனத்தை புரிந்து கொள்ள குறைந்தபட்சம் தமிழில் வந்துள்ள இந்து புத்தகங்களையாவது படிப்பது நலம்.


1. கோபிசந்த நாரங் எழுதியுள்ள பின்நவினத்துவம், கீழைக்காவயியல் பற்றிய மொழிபெயர்ப்புநூல். (ஜெமோவால் பரிந்துரைக்கப்பட்ட நூலும் கூட.) - சாகித்ய அகாதமி வெளியிடு.


2. பின்நவீனத்துவம் - ஆக்ஸ்போர்ட் தத்துவநூல் வரிசை மொழிபெயர்ப்பு பிரேம். அடையாளம் பதிப்பகம்.


3. பின்அமைப்பியலும் குறியியலும் - எம. டி. முத்துக்குமாரசாமி - பதிப்பகம் நினைவில் இல்லை. அவுட் ஆஃப் ஸ்டாக் ஆக இருக்கலாம்.  (நூல் பெயர் நினைவில் எழுதப்படுகிறது. தவறு இருக்கலாம்.)


4. எம். ஜி சுரேஷின் - குறுநூல் அறிமுகவரிசை 6 சிறு புத்தகங்கள் - அடையாளம் பதிப்பகம்.

5. க. பூரணசந்திரன் எழுதிய பின்நவீனத்தவ அறிமுக நூல் - பதிப்பகம் நினைவில் இல்லை.


6. அமைப்பியலும் அதன் பிறகும் - தமிழவன் - அடையாளம் பதிப்பகம்.

 
இவற்றை படித்தால் பின்நவீனத்துவம் பற்றிய இப்படி ஒரு அடிப்படையற்ற கேலி வெளிப்படாது என நம்புகிறேன். :) :)


பின்குறிப்பு - மார்க்சிய தோழர்களோடு இது குறித்து உரையாடும் மனநிலையில் நான் இல்லை.  இது அவர்களுக்கான பதிவு இல்லை. பின்நவீனத்துவத்தை வைத்து ஜல்லியடிப்பவர்கள் உரையாடலாம்.

- ஜமாலன் 19-01-2014 [email protected]

  •  

நீளும் பிரார்த்தனைகள்

நூல்: இதோ நம் தாய்

ஆசிரியர்: வயலட்

பதிப்பகம்: சால்ட்

விலை:125/-

**********************

புத்தரின் சொற்களைத் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து, தம்ம பிடகத்தை கட்டமைத்த ஆனந்தரின் கதையிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றை துக்கத்தின் காரணிகளாகக் கண்டறிந்து, அவற்றிலிருந்து விடுபடுதலையே வீடு பேறென வகுத்த புத்தரின் உடற் பிணி குறித்து கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒருவராக அவர் அறிமுகம் ஆகிறார். நிகரற்ற நினைவாற்றல், அர்ப்பணிப்புணர்வு, கருணை என நற்குணங்களால் நிரம்பியிருந்தும் பரிநிர்வாண நிலையை அடைய முடியாது தவித்த ஆனந்தரின் தவிப்பு அன்பினால் விளைந்தது. அதே அன்புதான் ஆனந்தியையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.

ஆனந்தி, யசோதா, கௌதமி என சித்தார்த்தரின் வாழ்வில் தொடர்புடைய பெயர்களே சமகாலத்தில் நிகழும் கதையிலும் புழங்குகின்றன. மரபான கதை சொல்லலாக இல்லாமல் ஆனந்தியின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் நூலில் கடைபரப்பப் படுகிறது. மாற்றுப் பாலினத்தவரின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வான தருணங்கள், நொய்மையான தருணங்கள் என கலவையாகக் காட்சிகள் விரிகின்றன.

சித்தார்த்தரின் வாழ்வில் முக்கியப் பாத்திரம் வகித்த அவரது சிற்றன்னை கௌதமியின் பெயரைக் கொண்டவர்தான் ஆனந்தியின் தாய். இளம்பருவத்தில் கல்வியும், தோழமையும் மறுக்கப்பட்டதால் காயப்பட்ட கௌதமி, தனக்குப் பெண் குழந்தையே வேண்டாம் என்று நினைக்கிறார். அவர் விருப்பிற்கு ஏற்ப பிறந்த மகனே பின்னால் தன்னை ஒரு பெண்ணாக முன்வைக்கும்போது, அவ்வுறவு விருப்பும் வெறுப்பும் கலந்த கலவையாகிறது. பொதுவாகவே அம்மா மகன் உறவைப் போன்றதல்ல அம்மா மகள் உறவு. அது பெரும்பாலும் சேர்ந்திருக்கையில் வெறுப்பும், இழந்தபின் அன்புமாக விரிவடையும் வினோதமான ரசாயனம். அதிலும் மாற்றுப் பாலின அடையாளத்தை முன் வைக்கும் மகளோடு கௌதமி கொண்டிருக்கக்கூடிய உறவு மிகவும் நுட்பமான சிடுக்குகள் நிறைந்தது.

தாயுடன் மட்டுமல்லாது, துணையாக வரும் யசோதா, தோழர்களான யாஸ்மின், கவின்,சிவா என அனைவருடனுமே ஆனந்தி கொள்ளும் உறவின் சிடுக்குகளே கதையின் பேசுபொருள் எனலாம். எல்லா சிடுக்குகளும் சேர்ந்து ஆனந்தியின் மீது சுமத்தும் தனிமை மனச்சோர்வாக மாறுகிறது. மனச்சோர்வென்பது உற்சாகக் குறைவு, எதிலும் நாட்டமின்மை, குற்றவுணர்வைத் தூண்டுதல் என பல்முனைத் தாக்குதலை நம் மீது நடத்தக் கூடியது. அதே கோணங்களிலேயே கதை விரிகிறது.

நாவலில் எல்லா சம்பவங்களும் விரிவாக உரையாடலுடன் முன் வைக்கப்படுவதற்கு மாறாக, தீற்றல்களாக அங்கங்கு சிந்திச் செல்லும் முறை மிக லாகவமாகக் கைவந்திருக்கிறது வயலட்டிற்கு. கதையல்லாத கதை சொல்லல், நிகழ்காலத்திற்கு பின்னணியாக வரும் கடந்த கால விவரணைகள் என கரடுமுரடான பாதையில் மிக அனாயசமாக காற்றில் மிதப்பது போலச் செல்கிறது மொழிநடை.  வயலட் நேரடிப் புனைவுகளையும் தொடர்ந்து எழுத வேண்டும்.

வில்லியம் ரைஸ் டேவிஸ், ஹெர்மன் ஓல்டன்பெர்க் , எரியும் நூலகத்தைக் கனவில் கண்டலறும் புத்த பிக்கு,  கே.எஸ் என தொடரும் வரிசையில் ஆனந்தியும் தம்மபதத்தின் பிரதிக்குள் தொலைந்து போகிறாள். தம்மபதத்தின் தத்துவச் சுழல்களுக்குள் அமிழும் ஆனந்தியின் முன் கலங்கரை விளக்காகச் சுடர்வது சிறிய குருசடியில் கடல் பச்சை நிறச் சேலையில் ஒளிரும் மேரியின் முகம்தான். அந்த முகமே கௌதமியைப் புரிந்து கொள்ள ஆனந்திக்கு உதவுகிறது.

மனம் உருகிப் பிரார்த்தனை செய்ய முயற்சிக்கும் ஆனந்தியிடம் அவள் மனம் உன்னால் அது முடியாது என்று கெக்கலி கொட்டுவதை என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. என் தோழியர் சிலருக்கும் தெய்வ நம்பிக்கையென்பது மிக பலவீனமானதொரு சரடாகத் தொடர்வதால் பல சமயங்களில் கோவிலில் சுற்றியுள்ளோரின் பக்தி பாவத்தைக் கண்டு வியந்து, நாணியதை அவர்கள் விவரித்தது படிக்கையில் நினைவில் எழுந்தது.

வழக்கமான கதை, அதற்கொரு முடிவு என்றில்லாது ஆனந்தியின் நாட்குறிப்பை எட்டிப் பார்ப்பது போன்ற வாசிப்பனுபவத்தை தந்த நாவல் இது.

மனச் சோர்விலிருந்து மீண்டெழ உளவியலில் முன்வைக்கப்படும் வழிமுறைகள் செயல்படுவது என்பதுதான். சின்னச் சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுவது, முன்பு மனதிற்கு இன்பமளித்துக் கொண்டிருந்தவற்றை மீண்டும் கையிலெடுப்பது ஆகியவையே சிறிய அளவிலான மனச்சோர்விலிருந்து மீளும் வழிமுறைகள். எனவே ஆனந்தி யசோதாவிற்காக முன்வைத்த வேண்டுதலையே நானும் அவளுக்காக முன்வைக்கிறேன்.

அவள் மனதில் சொற்கள் தோன்றட்டும்.அவள் பாதை வெளிச்சம் அடையட்டும்.

  •  

இரட்டை இயேசு - விஜய ராவணன் - வாசிப்பு

 பொள்ளாச்சி எதிர் பதிப்பக கடையில் 26.1.25 அன்று நிகழ்ந்த நூல் அறிமுக கூட்டத்தில் ஆற்றிய உரையின் குறிப்புகளை கொண்டு தொகுத்து எழுதிய கட்டுரை 




(அறிமுக கட்டுரை அல்ல. கதைகள் கொஞ்சம் விரிவாக பேசப்பட்டுள்ளன.)

விஜய ராவணனின் இரண்டாம் சிறுகதை தொகுப்பான ‘இரட்டை இயேசு’ மொத்தம் ஆறு நீள் கதைகள் கொண்டது. ‘எதிர்’ வெளியீடாக கடந்த ஆண்டு வெளிவந்தது. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் தமிழில் எழுதப்பட்ட உலக கதைகள் என குறிப்பிடுகிறார் எம். கோபாலகிருஷ்ணன். உள்ளூர் உலகமாளவிய எனும் இருமை மெல்ல பொருளிழந்து வருகிறது என தோன்றியது. உலகளாவிய நிகழ்வுகள் ஏதோ ஒருவகையில் உள்ளூர் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது. 


விஜய ராவணனின் இந்த தொகுப்பை வாசித்தபோது முதலில் தோன்றியது, அவரது புனைவுகளின் வழி எழுப்பும் கேள்விகள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்பதே. தொகுப்பின் முதல் கதை ‘ஆரஞர் உற்றன கண்’   பிரியத்திற்குரியவர்களின் பிரிவு துயரால் மூடாத விழிகள் என்று பொருள். திருக்குறளில் இருந்து எடுத்தாளப்பட்ட சொல்லாட்சி. இப்படியான பழந்தமிழ் தலைப்புகள் கதைகளுக்கு ஒரு வசீகரத்தை அளிக்கின்றன. ‘ஹன்னா’ எனும் ஜெர்மனியை சேர்ந்த முதுகலை கலை கல்லூரி மாணவியின் தன்னிலை கூற்றில் கதை சொல்லப்படுகிறது. இன்னொரு பிரதான பாத்திரமான அப்துல் அரீஃப் குர்தீஷ் மொழி பேசும் ஈராக் நாட்டை சேர்ந்தவன். கதை ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நிகழ்கிறது. ‘அகாலம்’ ஆப்பிரிக்க அமெரிக்கனை முதன்மை பாத்திரமாக கொண்டது. ‘இரட்டை இயேசுவில்’ ஃபிரெஞ்சு நாட்டவருடன் தமிழ் இளைஞனும்  வருகிறார். கதை இந்தோனேசியாவில் நிகழ்கிறது. ‘என்றூழ்’ கதையில் ஆபிரகாமை யூதராக புரிந்துகொள்ள இடமுண்டு.  ‘தங்க  மீன்கள்’ கதை மாந்தர்கள் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள். போர்முனையில் கதை நிகழ்கிறது. ‘அகாலம்’ ‘என்றூழ்’ ஆகியவை நிலமற்ற வெளியில் நிகழ்கிறது. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு கதை சொல்லிகள் (நாடு, இனம், பாலினம்) என எழுதும்போது நம்பகத்தன்மை சார்ந்து சில சவால்கள் எழும். பொதுவாசிப்பு எழுத்தில் இத்தகைய போக்குகளை காண முடியும். தீவிர  வெவ்வேறான களங்கள் இருந்தாலும் எழுத்தாளர் தனது ஆதார கேள்வியை தொடர்கிறாரா என்பதை முக்கியமான அளவுகோலாக கொள்வேன். அவ்வகையில் விஜய ராவணன் தனது கதைகளின் ஊடாக வரலாறு, கடந்த காலம் குறித்து விசாரணை செய்கிறார். 

  


புத்தாண்டுக்கு முந்தைய இரவில் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல்  ‘அவன் மட்டும் ஒரு விடுபட்ட சொல்லை போல் தனித்திருந்த படி ’ புத்தகத்தை வாசிப்பவனாக அகமது அரீஃப் அறிமுகம் ஹன்னாவிற்கு அறிமுகம் ஆகிறான். நினைவுகளில் புதைந்து போன பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை சமகால வண்ண ஓவியமாக்குவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்கிறாள் ஹன்னா. அரீஃபுக்கு எல்லாமே கருப்பு வெள்ளைதான். இந்த இருமை வழியாக அவர்களின் ஆளுமைகளை கட்டமைக்கிறார். நிறங்கள் உயிர்ப்பான கடந்த காலத்தின் குறியீடாக கொள்ளலாம். ஹன்னா கருப்பு வெள்ளை புகைப்படங்களை கூட நிறமுடையதாக  மாற்றுபவள். கடந்தகாலத்தை உயிர்ப்பிப்பவள். வரலாற்றை பெருமிதத்தோடு காண்பவள். அதை மீட்பவள் என்று கூட வாசிக்க இடமுண்டு.  நிறங்களற்ற நிகழ்காலத்தில் வாழ்பவன் அரீஃப். நிறங்கள் நிறைந்த கடந்த காலத்திற்கு செல்ல விரும்பாதவன். அவனுக்கு அந்த வாய்ப்பு அகதி என்பதாலேயே மறுக்கப்படுகிறது. வண்ணங்களை நேசிப்பவளால் கருப்பு வெள்ளையை நேசிப்பவனை ஏற்க முடியாது என்கிறான். 



முடிவற்ற ஏணியில் ஏறி வானவில்லில் மோதி அதன் வண்ணங்களை பூசிக்கொண்டு கீழே விழும் சிறுவனை பற்றிய கதையை அரீஃப் ஹன்னாவிற்கு சொல்கிறான். நிறங்களற்ற வானவில் வானில் எஞ்சி இருக்கிறது. அரீஃப் தனது பணியிடத்திற்கு அழைத்து செல்லும் போது தான் இந்த கதையின் அர்த்தம் துலங்குகிறது.  நூலகத்து தளங்களை சென்றடையும் ஏணிகள்  முடிவற்ற ஏணியாக உருமாறுகிறது. புத்தகங்களின் வண்ணவண்ண அட்டைகள் வானவில்லாகிறது. புற உலகத்தின் வண்ணத்தை போர் பறித்துக்கொண்டது ஆகவே அவனுக்கு வெளியே வண்ணங்கள் இல்லை. ஆனால் புத்தகங்கள் வழி அவன் எல்லா நிறங்களையும் உணர்கிறான். 


விஜய ராவணன் கதைக்குள் சொல்லும் குட்டி நாட்டுப்புற கதைகள் மைய கதையை ஏதோ ஒருவகையில் வலுப்படுத்த உதவுகிறது. இந்த கதைகள் அளிக்கும் அடர்த்தியின் காரணமாக செவ்வியல் சிறுகதை வடிவிலலிருந்து மீறியதாக ஆகிறது. ‘ஆரஞர்’ கதையிலே கில்காமேஷ்  குறிப்பும் இடம்பெறுகிறது.   கில்காமேஷ்- என்கிடு போல அமெரிக்காவும் சதாமும் மோதி கொள்கிறார்கள் என்றொரு வரியை கொண்டு இந்த கதை சுட்டும் அரசியலை புரிந்து கொள்ளலாம். இதே கில்காமெஷ் கதை மரணத்தின் முன்பான கையறு நிலையை சுட்டுவதாக மாறுகிறது. 



ஹன்னா தன்னிடமிருந்து சட்டென வெளிப்பட்ட மேலமை உணர்வுக்காக வருந்துகிறாள். அகதிகளை வெறுக்கும் உள்ளூர் காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அரீப்பின் சொற்கள் தீர்க்கமானது. ‘வரலாற்று அகராதியில் ‘அகதி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பொருள் எப்போதும் மாறிக்கொன்டே இருக்கும்.’ நிறம் நோக்கும் திறனிழந்த அகதிக்கு ஜெர்மனியும் ஈராக்கும் ஒன்றுதான் என சொல்லும்போது அவன் நாடு திரும்பினாலும் கூட அகதி தான் என பொருள்படுகிறது. அரீஃபின் சிறுவயது நினைவுகள் நிறங்களாலானவை. குண்டு வெடிப்பில் அவன் பார்வை திறனை இழக்கிறான்.அகதிகள் பண்பாட்டை அழிக்க வந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த அகதிகள் உருவாக்கத்தில் வளர்ந்த நாடுகளின் பங்கையும் பொறுப்பையும் சேர்த்தே பேச வேண்டியிருக்கிறது. 



‘அகாலம்’ ஒரு டிஸ்டோபிய கதை. புகைப்படங்களை அரசு தடை செய்கிறது. கடந்தகாலத்தை அழிப்பது பெரும் அழித்தொழிப்பு என்று கருதுபவர்களுக்கும் கடந்த காலம் பெரும் சுமை அதை விட்டொழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான முரண் தான் கதை. முந்தைய கதையின் பேசு பொருளின் தொடர்ச்சி. சுவாரசியமான விவாதங்களை உருவாக்குகிறார். 


‘நமக்கும் கடந்த காலத்திற்குமான சரடை மெல்ல அறுப்பது.’  என்றால் ‘எல்லோருக்கும் கடந்த காலம் பொக்கிஷம் இல்லை.’ என்கிறான். 

‘வரலாறு தெரியாதபோது மனிதன் கீழ்ப்படியும் இயந்திரம்’ என எச்சரிக்கும் போது ‘வரலாறு என்பதே எழுதப்படும் பேனாவை பொறுத்தது தானே’ என வரலாறை நிராகரிக்கிறான். வரலாற்று நூல்கள் தடைசெய்யப்பட்டதை எதிர்க்கும் போது  ‘திறக்கப்படாத எல்லை கதவுகளில் போக்கிடமற்றவர்கள் முட்டி நின்றபோதெல்லாம் உங்கள் வரலாற்று நூல்கள் எந்த உண்மையை பேசிக்கொண்டிருந்தன?’ என கேள்வி கேட்கிறான்.   ‘இனிமையான கடந்த காலத்திற்காக’  ஏங்கும் போது ‘கோல்டன் டேஸ் என்பவை நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தானே’ என மறுக்கிறான்.  ‘தனிமனித சுதந்திரம் அடியோடு ஒழியும்’ என பயம்கொள்ளும்போது ‘நீ சிலாகிக்கும் வரலாறு என்பதே அகதிகளையும் அடிமைகளையும் உற்பத்திசெய்ய உதவும் புனைவுதான்’ என பதில் சொல்கிறான்.  


இடையிடையே கதைசொல்லியின் வலிமிகுந்த கடந்தகாலம் நினைவு கூறப்படுகிறது. அம்மா அவனை கைவிட்டு சென்ற நினைவுகள் வருகிறது. புகைப்படங்கள் நாம் மறக்க முயலும் பொழுதுகளின் தடயங்கள் தான் என நம்புவதால் அம்மா குழந்தையாக அவனை தூக்கி வைத்திருக்கும் படத்தில் அவளுடைய பரிதவிப்பு தொந்தரவு செய்கிறது. கடந்தகால படிக்கட்டில் நின்று கொண்டு அவனையும் இறங்கிவர அழைக்கிறாள் என அதை கிழித்து போடுகிறான். 


 வன்முறையும் அழித்தொழிப்பும் தான் வரலாறு. போரும் பழிவாங்கலும் தான் மானிட சரித்திரம் என சொல்கிறது. வரலாற்றின் கொடுங்கோன்மை அல்லது பயனின்மையை ஏற்கும் அவன் நினைவுகள் விஷயத்தில் தடுமாறுகிறான். நினைவுகள் தான் நாம். வரலாற்று நூல்கள் ஆய்வு கட்டுரைகள் ஆவணங்கள் சரித்திர புனைவுகள் தடை செய்யப்படுகிறது. அவனுக்கு பிடித்த, நெருக்கமான புத்தகத்தை எரிக்கிறான். ஆனாலும் அதில் புதைத்து வைத்திருந்த புறா இறகை தீயிலிருந்து மீட்கிறான். வரலாற்றிலிருந்து அந்தரங்கமான நினைவை மீட்பது. கூட்டு நினைவுதானே வரலாறு. அப்படியான பிரித்தல் சாத்தியமா என்றொரு கேள்வியும் எழுகிறது. அடுக்ககத்தில் அடிபட்ட புறாவை காண்கிறான். புறா அவனது நினைவுகளுக்கான குறியீடாகிறது‌. அதை பெட்டிக்குள் வைத்து பராமரிக்கிறான். பறக்க யத்தனிக்கும் சிறகுகள் அட்டைப்பெட்டியின் மூலைகளில் முட்டிமோதுகிறது.  வெளியே சென்று விட்டு திரும்பும் போது, துர்நாற்றம் வீசுகிறது, அறை முழுவததும் புறா இறகுகள் பிய்ந்து கிடக்கிறது‌. பூனை புறாவின் தலையை கொய்து கொன்று விடுகிறது. பூனையை அரசாக பார்க்க முடியும். அதற்கு வரலாறு நினைவு என எந்த பாரபட்சமும் இல்லை. அதனளவில் எல்லாமே அழிக்கப்பட வேண்டியது தான். புகைப்படங்கள் நீக்கப்பட்ட சுவரில் மர பறவைகளை மாட்டுகிறான். ஜன்னல் கம்பிகளின் நிழலில் அவை வானளாவிய கூண்டுக்குள் பறப்பதாக தோன்றுகிறது. பறக்கும் பறவைகள் கடந்த காலத்தின் எடையில்லாத நிகழ்த்தருணத்தின் குறியீடு. சென்ற கதையை போலவே கடந்த காலத்திற்கு செல்ல இவனும் விரும்பவில்லை. அரவணைக்கும் மடி இருந்திருந்தால் அவனுக்கும் கடந்த காலம் இனித்திருக்கும். இந்த கதையின் பேசு பொருளையொட்டி  இரண்டு கதைகள் நினைவுக்கு வந்தன. பெருந்தேவியின் ‘ஒருகாலத்தில் குறுங்கதை’ நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க கடந்த காலத்திற்குள் புதைத்துக்கொண்டு அழியும் சித்திரத்தை அளிப்பது. இன்னொரு கதை சித்துராஜ் பொன்ராஜின் ‘கயிற்றரவு.’ நினைவுகளின் தொகுப்பு தான் வரலாறா? ஆம் எனில் நினைவுகளை மாற்றினால் வரலாறு மாறுமா? என்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. 



  மூன்றாவது கதை ‘இரட்டை இயேசு.’ கொரோனா காலத்து கதை. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது. விஜய ராவணனின் பெரும்பாலான கதை நிகழ்வதில்லை. சொல்லப்படுகிறது. இது அதன் எல்லையாகவும் தனித்துவமாகவும் கொள்ளலாம். காலன் அருகமர்ந்து இருப்பது போல கனவு காண்கிறான். 


கதைசொல்லி பத்தாவது படிக்கும்போது தற்கொலை முயற்சி செய்தவன் ஆனால் இப்போது மரணத்தை அஞ்சுகிறான். ‘சில நேரங்களில் மரண பயம்தான் வாழ வைக்கிறது’ என்றுணர்கிறான். ‘மரணத்தின் முகம் எப்படி இருக்கும் என்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று தொடக்கத்தில் துணிவுடன் சொல்லும் ஐரோப்பியர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். மனைவி பிலிப்பைன்ஸ் நாட்டவர், வியட்நாமுக்கு விசா உள்ளது. ஆனால் இத்தனை நாடுகள்  இருந்தும் அனாதையாக உணர்கிறார். தன் நாட்டுக்கே திரும்பும் முடிவுக்கு வருகிறார்.    


ஐரோப்பியர் சொல்லும் கதையில்  சவப்பெட்டி செய்பவன் தனது வாழ்வாதாரம் பெருக வேண்டும் என  கர்த்தரிடம் வேண்டுகிறான். காலரா கொத்துக் கொத்தாக உயிர்பலி கொள்ளும் போது அவனது பிரார்த்தனையின் பலனாகத்தான் அது நிகழ்வதாக எண்ணி கொள்கிறான். அவனது குடும்பமே இறந்து போனாலும்  நல்லடக்கத்திற்காக சவ பெட்டிகளை செய்து கொண்டே இருந்தான். இனியும் சவப்பெட்டிகளை செய்யக்கூடாது என தீர்மானிக்கிறான். தான் செய்வதாலேயே சாகிறார்கள் என எண்ணுகிறான். தனக்கான சவப்பெட்டியை மட்டும் ரகசியமாக செய்து கொண்டான். சவப்பெட்டி இல்லாமல் நல்லடக்கம் நிகழவில்லை. அரசின் ஆணையை  மீறியதற்காக  மரண தண்டனை வழங்கப்படுகிறது. தனக்காக தானே செய்த சவப்பெட்டியை முதுகில் சுமந்தபடி நடந்து வருகிறான். ஊரின் ஒட்டுமொத்த பாவத்தையும் அவனே சுமந்தான். இயேசுவை போல. சிலுவையில் தொங்கும்  இயேசுவின் உருவத்திற்கு  பின்பக்கம் அறையப்படுகிறான். சிலுவை எடை தாளாமல் விழவிருந்த நிலையில், மக்கள் சாபத்தை அஞ்சும்போது, சிலுவையிலிருந்து தேவகுமாரன் உயிர்த்து எழுகிறார். ஊரை காக்கிறார். சிலுவையில் ஒருவர் இருந்தால் போதும் என்று எண்ணினாரா? ஊரை காத்த தேவகுமாரன் அவனை காக்கவில்லை. மனிதன் ஒரு பக்கமும் மீட்பர் மறுபக்கமும் எனும் சிந்தனையே வினோதமாக இருந்தது. இந்த படிமத்தை என்னால் துல்லியமாக கதை தருணத்தில் பொருத்தி பார்க்க இயலவில்லை. இந்த பூடகமே வசீகரமாக உள்ளது. மனிதன் தன்னை பற்றி மிகையாக மதிப்பிட்டு கொள்கிறான். இயற்கையின் திட்டங்களுக்கு அவன் பொறுப்பேற்க முடியுமா? மனித ரத்தம் தேவனை எழுப்புமா?  கிறிஸ்தவ இறையியலில் போலி கிறிஸ்துவை இகழ்ச்சியுடன் காண்கிறது. அவனுக்கு சிலுவை தான் தண்டனை. ஒருவகையில் அவன் சிலுவையில் ஏறியதால் தான் கிறிஸ்து உயிர்த்து எழுந்து ஊரை காக்கிறார்.  தொற்றுநோய் காலத்து களச்செயல்பாட்டினர், முன்கள பணியாளர்கள்- குறிப்பாக மருத்துவர்களை இன்னொரு இயேசுவாக கற்பனை செய்து கொண்டேன். இயேசுவே காப்பவரும் அழிப்பவரும். அழிவுக்கு பின்னே தானே காக்க முடியும். 


 

‘என்றூழ்’ ஒரு அறிவியல் புனைவு. சூரியனில் செயற்கை நுண்ணுணர்வு ரோபோவை கொண்டு செய்ய முற்படும் ஆய்வு தோல்வி அடைகிறது. சாரா எனும் எட்டாம் தலைமுறை ரோபோவை ஆபிரகாம் வாங்குகிறார். வருங்காலத்தில் நிகழும் கதை என்பதால் விரிவாக தொழில்நுட்பங்களை விவரிக்கிறார். உலகத்தை கட்டமைப்பதில் புதிதாக ஒன்றும் இல்லை. பறக்கும் கார்கள் போன்ற வழக்கமான இயந்திரங்கள் தான். அலுவலகத்தில் மூவர் மட்டுமே மனிதர்கள். பிற அனைவரும் ரோபோக்கள். செயற்கை நுண்ணுணர்வு நம்முள் எழுப்பும் ஆதாரமான கேள்வி என்பது மனிதனாக இருப்பது என்றால் என்பதுதான். அண்மையில் மாலனின் ‘வித்துவான்’  நம்பி கிருஷ்ணனின்  ‘இறைவர்க்கோர் பச்சிலை’ ஆகிய கதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கதையில் விஜய ராவணன் எழுப்பும் வரையறைகளை நோக்கலாம். ரோபோக்களிடம் பொய் சொல்ல முடியாது. ரசனை உணர்வு மனிதர்களுக்கானது மட்டுமா? சாரா ரசனை உணர்வை வெளிப்படுத்தும் போது அதிர்கிறார். மனிதர்களை போல இயந்திரத்திற்கு வாழும் இச்சை உள்ளதா? சாரா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறாள். குடும்பமும், குழந்தைகளும் கூட  அதன் பொருட்டு தான் தேவைப்படுகிறது. இன்னொரு கோணத்தில் இருந்து நோக்குவதாக இருந்தால், சூரியனை அடையும் திட்டம் தோல்வி அடைந்ததற்காக வெறுக்க படுகிறாள். உலகை மாற்றும் இயந்திர- மனித கூட்டு குழந்தையை உருவாக்க விரும்புகிறாள் என்று பொருள் கொள்ளலாம். இயந்திரங்கள் ஒன்று போலவே, தனித்துவம் என்று ஏதேனும் உண்டா? சாரா தனித்துவத்தை வெளிப்படுத்துகிறாள். உயிர் நேசம், பாசம், பந்தம் போன்றவை மனிதர்களின் தனித்தன்மையா? சாராவும் ஏங்குகிறாள்.    



கதையில் அண்டார்டிகா பனிக்கட்டிகளை பாலைவன தேசங்களுக்கு திருப்புவது பற்றிய ஒரு சிறிய பகுதி வருகிறது. இயற்கையின் போக்கில் விடுவதே சரி என ஆபிரகாம் சொல்கிறான். ஆனால் மனித இனத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்கை விரோதமாக இருந்தாலும் இவை காலத்தின் தேவை என்று பதில் உரைக்கிறது. சாராவின்  பிள்ளை பேறு சார்ந்த விழைவையும் ஆபிரகாமின் தயக்கத்தையும் இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக காண வேண்டும். ‘உன்னையும் என்னையும் போல அவளும் இயற்கையின் அங்கம்- உயிராக அங்கீகரித்தல் எது மனிதன்? எது இயந்திரம்? இயற்கைக்கு இருவருமே பிள்ளைகளா? இயற்கைத்தாய் ஒரு முலையில் மனிதனுக்கும் இன்னொரு முலையில் இயந்திரத்துக்கு தாய்ப்பால் ஊட்டுகிறாளா? அப்படியானால் இங்கு எல்லா நியதிகளும்  இருவருக்கும் பொதுதானே.’ என்று யோசிக்கிறான். செயற்கை நுண்ணுணர்வு சார்ந்து நான் வாசித்த இறைவர்க்கோர் பச்சிலை தொடங்கி டெட் சியாங்கின் கதைகள் வரை ஏறத்தாழ இதே முடிவை நோக்கி வருவதை காண்கிறேன். விலக்கி நோக்காமல் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக நோக்குவது.  


அறிவியல் புனைவில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமை மிக முக்கியமான பேசுபொருள். இந்த இருமையே கூட கொஞ்சம் அபத்தம் தான். மனிதனை இயற்கைக்கு எதிராக நிறுத்த முடியுமா என்ன? அவனும் அதன் ஒரு பகுதிதான். சமயங்களில் அவனது விழைவுகளுக்கு ஒத்துழைப்பு நல்குகிறது சமயங்களில் நல்குவதில்லை. நவீன இலக்கியத்தின் முதல் அறிவியல் புனைவாக கருதப்படும்  மேரி ஷெல்லியின் ‘பிரான்காய்ன்ஸ்ட்டின்’ தொடங்கி இயற்கை- மனிதன் முரண் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அறிவியல் புனைவுகள் அறிவியலின் ஆபத்துகளையே தொடர்ந்து பேசிக்கொண்டு உள்ளது. மனிதனின் சுயேச்சையின் மீதான ஐயம்  பைபிளின் தடுக்கப்பட்ட கனியை உண்பதிலிருந்தே தொடங்குகிறது. எதிர் அறிவியல் புனைவு அத்தனையிலும் இந்த உணர்வு செயல்படுகிறது. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது.  பூலோக சக்கரவர்த்தியின் மகளை சூரியன்களை அழிக்கும்படி கடவுள் பணிக்கிறார். ஒரேயொரு சூரியனை மட்டும் அதன் பிரம்மாண்டத்தில் மயங்கி வீழ்த்தாமல் விடுகிறாள். கடவுள் அவளுக்கு கன்னி தன்மையை இழக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளும் வரத்தை அளிக்கிறார். அவள் சிருஷ்டித்தவை தான் இந்த கணக்கற்ற நட்சத்திரங்கள். சாராவின் கதையோடு இந்த தொன்ம கதை ஊடாடுகிறது. சாராவின் பிள்ளைப்பேறு கோரிக்கையை ஏற்க மறுக்கிறான். இந்த கதையின் முடிவு அபாரமானது. அவனுடைய துணையின்றியே பிள்ளைப்பேறுக்கான வழியை கண்டடைந்த்துவிட்டாள் என்பதால் அவள் மானுட பெண் தோற்றத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்ந்து உலோக நிர்வாணத்தில் வயிற்றை தடவியபடி சூரிய ஒளியில் கிடக்கிறாள். அல்லது குந்தியை போல் நேராக இயற்கையின் வடிவமான சூரியனிடம் தனக்கு பிள்ளை வரம் வேண்டுகிறாள் என்றும் வாசிக்க முடியும். 


 

‘இன்னொருவன்’  முட்டை மனிதனை பற்றி சொல்ல தொடங்குகிறது. வீடு தேடி அலைபவனுக்கு மிக குறைந்த வாடகையில் நகரின் மையத்தில் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டை சுற்றி மர்மம் கட்டமைக்கப்படுகிறது. நட்சத்திரம் கருந்துளைக்குள் காணாமல் போவது போல, முட்டைக்குள் விழித்து எழுகிறான். வேத தொன்மம் ‘ஹிரண்ய கர்ப்பம்’ என சொல்கிறது. பிரபஞ்சம் ஒரு முட்டையிலிருந்து புறப்பட்டதாக. பூட்டப்படாத கூண்டிற்குள் அடைப்பட்டு கிடக்கிறான். முயன்றால் திறந்து வெளியேறிவிட முடியும். தன்விருப்பின் பேரில் மனிதன் கூண்டுக்குள் தன்னை அடைத்து கொள்கிறான்.  உருவகங்கள் கொண்ட கதைகள். கண்ணாடிக்குள் நுழைந்து கண்ணாடிகளால் ஆனா உலகிற்குள் நுழைகிறான். கண்ணாடி பேழைக்குள் வெவ்வேறு ‘நான்’களோடு உரையாடுகிறான். சிதறிய ‘நான்’கள் சேர்ந்து வெடிக்கிறது. விழித்து எழும்போது முழுமையாக உணர்கிறான். பேழைக்குள் மட்டும் சுதந்திரமான குரலை கேட்கிறான். கடிகார முட்களுக்கு அஞ்சி ஓடவேண்டாம் என்பதே போதுமானதாக உள்ளது. அங்கே எவருடைய பெயரும் தெரிந்துகொள்ளவில்லை. அடையாளமற்ற இருப்பு. அங்கே தூவும் அழிவதும் இல்லை. எனினும் அந்த வாழ்க்கையும் அலுக்கிறது. அதையும் சிறையாக உணர்கிறான். என்றூழ் கதையில் சாரா உதிர்க்கும் ஒரு வசனம் தான் இந்த கதையின் சாரம் என்று புரிந்து கொள்கிறேன். ‘மனிதன் ஒரு விசித்திரமான சமூக பிராணி, குழுவாய் இருக்கும்போது தனிமையை விரும்புவான். தனித்து விடப்பட்டதும் துணைக்காக ஏங்குவான்.’  அன்றாடம் அலுப்பாக இருக்கிறது. தப்பிக்க மனம் ஏங்குகிறது. ஓய்வும் தனிமையும் அலுக்கிறது. அன்றாடத்திற்கு மனம் ஏங்குகிறது. இந்த சிக்கலை பேசுவதாக புரிந்து கொண்டேன்.   


தொகுப்பின் இறுதி கதை ‘தங்க மீன்’ போர் களத்தில் எதிரெதிர் தரப்பில் இருக்கும் ராணுவ வீரனும் போராளியும் உரையாடுவது தான் கதை. கூறிய விதம், பேசு பொருள் சார்ந்து சற்று பழகிய தன்மை இக்கதைக்கு. தங்க மீன்களை பிரசவிக்கும் தனியொருத்தி. அவளது மர்மமான வசீகரம், இவையெல்லாம் மெலீனா திரைப்படத்தை எனக்கு நினைவூட்டியது. பதின்ம வயதில்  அக்கா மீது ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு என்பதும் தமிழில் நிறைய எழுதப்பட்ட களம் தான். எனினும் இந்த எல்லைகளை தாண்டி தங்க மீன் என்பதை வலுவான படிமமாக வளர்த்தெடுத்துள்ளார். போர் களத்தில் அழகுக்கும் ரசனைக்கும் என்ன வேலை? கலை தான் போருக்கு எதிராக இருக்க முடியும் என்று எண்ணி கொண்டேன். ‘என்றூழ்’ கதையும் ஏறத்தாழ இதே தரிசனத்தை கொண்டுள்ளது. கலை ரசனை அளிக்கும் கூருணர்வு மீதான நன்னம்பிக்கை. சண்டை மூளாத சிறு நிலம், அவளின் படத்துக்கு பத்து மீன் கடையாக தான் இருக்கும். வண்ண மீன்கள் சாந்தமான சூழலை உருவாக்க. அவளது மீன் எதுவும் போரில் இறப்பதில்லை. இரண்டு நியாயங்கள் மோதும் போது புனைவு எழுத்தாளருக்கான வேலை தொடங்குகிறது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே பாலியத்தின் சுனையில் நீரருந்த தான் முயல்கிறார்கள். தங்களது கடந்தகாலத்தை மீட்டு எடுக்க போராடுகிறார்கள். ஒருவகையில் கடந்த காலத்தை மீட்டெடுப்பதன் வன்முறையை விஜய ராவணன் கதைகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. போராளியின் தங்க மீன்கள் சிறுவனாக இருந்த ராணுவ வீரனிடம் சென்று சேரும்போது கூழாங்கற்களை நிரப்ப முடியாமல்  தோட்டா ரவைகளை கொண்டு மீன்தொட்டியை அலங்கரிக்க தொடங்குகிறான் என்பதாலா என்னை வெகுவாக தொந்தரவு செய்தது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே நிறுவனத்தின் துப்பாக்கியை கொண்டு எதிரெதிர் நின்று போர் புரிகிறார்கள். 


தமிழுக்கு அந்நியமான புதிய உலகை உயிர்ப்புடன் சித்தரித்த வகையில் விஜய ராவணன் முக்கியமான எழுத்தாளராக ஆகிறார். உலகளாவிய அரசியல் விஷயங்களை கருப்பொருளாக கொள்ளும்போது பிரசாரம் ஏதும் இல்லாமல் சரியான செல்திசையில் கதைகளை அவரால் கொண்டு செல்ல முடிகிறது. 

 



  •  

நாவல்: சில விவாதங்கள்

(24.2.2024 & 25.2.2024 ஆகிய தேதிகளில் எழுத்தாளர் பா. வெங்கடேசன் ஏலகிரியில் ஏற்பாடு செய்த ‘புரவி’ கூடுகையில் நாவல் அமர்வுக்காக எழுதிய கட்டுரை. இந்த கட்டுரை அகழ் இணைய இதழில் வெளியானது. மொழிபெயர்ப்பாளர் சுபத்ரா மெய்ப்பு நோக்கி அளித்தார். நன்றி. 'புரவி' கூடுகை சார்ந்து சில அவதானிப்புகளை எழுத வேண்டும். ஏலகிரியின் அரவமற்ற சுற்றத்தில் நல்லுணவுடன் நட்பார்ந்த சூழலில் இரண்டு நாட்கள் தீவிர விவாதங்கள் நடைபெற்றன. விஷ்ணுபுரம் காவிய முகாம்களில் கிடைக்கும் அதே விதமான தீவிர அனுபவம். உணவு இடைவேளைகளில், தேநீர் குடிக்க, காலை கடைகளில் என அலுக்காமல் உரையாடினோம். மயிலன், ஷஹிதா, தூயனுடன் ஊர் திரும்பும் பயணத்தின் போதும் பேச்சு தொடர்ந்தது.  சனிக்கிழமை இரவு உறங்கமுடியாமல் மண்டை முழுக்க சிந்தனைகள் முண்டிக்கொண்டிருந்தன.  மூளை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அமைதிப்படுத்தி வசத்திற்குள் கொண்டுவருவதற்குள் பெரும்பாடு ஆனது. பா.வெவுடன் நிறைய உரையாடும் வாய்ப்பு கிடைத்தது நல்ல கற்றல் அனுபவம். புனைவு குறித்தும் இலக்கியம் குறித்தும் அவர் கொண்டுள்ள பார்வைகளில் இருந்து என்னுடையவை வேறென்றாலும் எனக்குள் விவாதித்துக்கொள்ள, எனது புரிதல்களை பரிசீலினை செய்துகொள்ள, கூர்தீட்டி கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. அமர்வுகளில் 15 எழுத்தாளர்கள் பங்கேற்றார்கள் என்றால் பார்வையாளர்களில் அதே எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் பங்கு பெற்றார்கள். இலக்கியத்தின் மீதான நம்பிக்கையே ஒன்றிணைக்கும் ஆற்றல்.  வெகு மக்களுக்கான இலக்கிய விழாக்களின் நோக்கம் வேறு. அவற்றில் அரிதாகவே புதியவற்றை நாம் கண்டடைய முடியும். இத்தகைய கூடுகைகளே அடிக்கடி நிகழ வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் 'யாவரும்' ஜீவ கரிகாலன் இரண்டு 'ஐந்திணை' கூடுகைகளை ஒருங்கிணைத்தார். சமகால எழுத்தாளர்கள் கூடி சமகால தொகுப்புக்கள் குறித்து உரையாடினோம். இவை தொடர வேண்டும்.  )





நாவல் எனும் இலக்கிய வடிவத்தை எப்படிப் புரிந்துகொண்டுள்ளேன், நாவலின் தனித்தன்மை என எவற்றைச் சுட்ட முடியும், நாவல் எழுதுவதில் உள்ள சிக்கல்கள் அல்லது சவால்கள் எவை, எனது நாவலின் வடிவத்தை நான் எப்படி வந்தடைந்தேன்? இக்கேள்விகளை எதிர்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். 


நாவல் எனும் அடையாளம் மிகவும் பொதுப்படையானது. நாவல்கள் என நான் பள்ளிக் காலத்தில் வாசித்தவை தேவன், கல்கி மற்றும் சாவியின் படைப்புகள்தான். பி.வி. தம்பி எழுதிய ‘கிருஷ்ணப் பருந்து’ நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ ஆகியவற்றை வாசித்தேன். இதழ்களில் தொடர்களாக வந்தவை. ஓவியங்களும் இடம்பெறும். அவற்றை மொத்தமாக பைண்டு செய்து வைத்திருந்தார்கள். இந்திரா சௌந்தரராஜனை பாக்கெட் நாவலில் வாசித்திருக்கிறேன். தொடர்களாக இல்லாமல் மிகச் சுமாரான தாள்களில் மலிவான விலையில் ஒரு பயணத்தில் வாசிக்க ஏதுவான வடிவில் வெளிவந்த கதைகளை பாக்கெட் நாவல் என்றார்கள். இவற்றை வாசித்து வந்தவன் தற்செயலாக சுந்தர ராமசாமியின் ‘ஜெ. ஜெ. சில குறிப்புகளை’ வாசிக்க நேர்ந்த போது மிகுந்த குழப்பம் உண்டானது. ஏனெனில் அதையும் நாவல் என்றே குறிப்பிட்டார்கள். பதின்ம வயதில் முதல்முறை வாசித்த போது அந்நாவல் சுத்தமாகப் பிடிபடவில்லை. ஆனால் வாசிக்காமல் வீசிவிட முடியாத வசீகரமும் கொண்டதாக இருந்தது. 


அதற்கு முன் வாசித்தவற்றுக்கும் ஜெ ஜெ சில குறிப்புகளுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு என்பது ஜெ ஜெ பக்க எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எளிதாக வாசிக்க முடியாததாக இருந்தது. அடுத்து என்ன என ஏங்க வைக்கும் சுவாரசியமில்லை. இவையெல்லாவற்றையும் விட உலோகப் பரப்பை இரம்பம் அறுக்கும்போது ஏற்படும் கூச்சம்போல ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. அதன் பகடி என்னைச் சீண்டியது.     


 ஜெ. ஜெ. சில குறிப்புகள் வாசிப்பதற்கு முன் வாசித்தவற்றை நாவல்கள் எனச் சொல்ல முடியாது என்பதை இப்போது உணர்கிறேன்.  அவற்றைத் தொடர்கதைகள் எனச் சுட்ட இவை தொடர்களாக அக்கால இதழ்களில் வெளிவந்தன என்பது மட்டும் காரணம் அல்ல. தொடர்கதைகள் முதன்மையாக வாசகரை ‘அடுத்து என்ன’ எனும் ஊகத்தில் ஆழ்த்துவதை நோக்கமாகக் கொண்டவை. இன்றைய இணையத் தொடர்களின் முன்மாதிரி எனச் சொல்லலாம். சுவாரசியமே அதன் முக்கிய இயல்பும் நோக்கமும்.  நல்ல நேரக் கொல்லிகள் அல்லது சுய உய்வுக்கான புனைவு நூல்கள்- இவைதான் இளமைக் கால வாசிப்பை நிரப்பியவை. 


நான் வாசித்த தொடக்ககால நாவல்கள் அனைத்துமே என்னுள் ஆழ்ந்த அமைதியின்மையை, நிலைகுலைவை ஏற்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் வாசித்த ஒவ்வொரு பிரதியும் முதல் காதலின் கள்ளமின்மையுடனும் அதே படபடப்புடனும், வாசிக்க முடிந்தது. இது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டிய இயல்பு என்றே நம்புகிறேன். எனினும் ‘நிலைகுலைவு’ என்பது என்னுள் நேர்ந்த எதிர்வினை. முற்றிலும் அகவயமானது. அதை அளவுகோலாகவோ தகுதியாகவோ கொள்ள முடியாது. வேறு ஒருவருக்கு இந்த நிலைகுலைவு எளிய கதைகளின் வழியே சினிமாவின் உணர்ச்சிப்பூர்வமான ஏதோ ஒரு காட்சி வழியாகக் கூட ஏற்பட்டுவிட வாய்ப்பு உண்டு. மேலும், அதே நிலைகுலைவை இப்போது மீண்டும் அடைவேனா எனச் சொல்வதற்கில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லலாம்: இந்த நிலைகுலைவு ஏதும் அதிர்ச்சி மதிப்பீட்டினால் ஏற்பட்டதல்ல, மாறாக அறிதலால் நேர்ந்தது. நாம் நன்கறிந்த ஆனால் எதிர்கொள்ளத் தயங்கும் ஏதோ ஒரு பகுதியை நம்முள் அடையாளம் காண்பதால் நேர்வதாக இருந்தது என்பதே அதற்கு முந்தைய வெகுமக்கள் ரசனை வாசிப்பிலிருந்து முக்கியமான வேறுபாடாக இருந்தது. 


சுவாரசியமான நாவல்களை அல்ல, ‘ஈடுபடுத்தும்’ நாவல்களை வாசிக்க விரும்புகிறேன்.  சுவாரசியமான நாவலுக்கும் ஈடுபடுத்தும் நாவலுக்கும் இடையே வேறுபாடுள்ளதாக எண்ணுகிறேன். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளிவருவதையொட்டி அந்நாவல் குறித்துப் பேச முடியுமா என்றொரு நண்பர் கேட்டதன் பேரில் மறுவாசிப்பு செய்ய முயன்று தோற்றேன். பொன்னியின் செல்வன் எனும் சுவாரசியமான நாவல் எவ்விதத்திலும் என்னுள் ஈடுபாட்டை உருவாக்கவில்லை. தி.ஜாவின் ‘மோக முள்ளை’ சமீபத்தில் வாசிக்கும் போது பெரிதாகப் பேசப்பட்ட பாபு யமுனா உறவுச் சிடுக்குகள் மங்கி, கலைக்கும் கலைஞனுக்குமான உறவு குறித்து நாவல் எழுப்பும் விவாதங்கள் முக்கியமானதாகத் தென்பட்டது. மோகமுள் தொடராக வெளிவந்ததுதான், ஆனால் அது தொடர்கதையல்ல. ‘சுவாரசியமான’ நாவல்கள் திருப்பங்களை நம்பிச் செயல்படுபவை. வியப்புணர்வே அதன் மூலதனம். திருப்பங்களும் வியப்புணர்வும் முதல் வாசிப்பில் நமக்குப் புதிதாக இருக்கும். இவற்றை அறிந்தபிறகும் நாடிச்செல்வோமா? இவற்றைத் தாண்டி ஏதாவது கிடைக்குமா? சமீபத்திய உதாரணத்தைச் சொல்வதென்றால், எப்போதும் புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்கும் நூல்களில் ஒன்று கல்கியின் பொன்னியின் செல்வன். அத்தகைய ‘கல்ட்’ ஸ்டேட்டஸ் அதற்கு உண்டு. முதல் பாகம் வெளியாவதற்கு முன்னரும் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன்னரும் மிக அதிகமாக அச்சாகி விற்பனையானது. சுருக்கப் பதிப்புகள் வெளியாகின. இந்தாண்டு சுத்தமாக விற்பனையாகவில்லை எனும் செய்தி வருகிறது. ஏனெனில் அது புதிதாக இல்லை. ‘மோக முள்’ எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் திரைப்படமாக வந்துவிட்டது, ஆனால் அதன் முன்னும் பின்னும் விற்பனையைப் பாதிக்கவில்லை. அதற்கான வாசகர்களால் மீண்டும் மீண்டும் கண்டடையப்படுகிறது. எப்போதும் ‘புதிதாகவே’ இருக்கிறது.  இலக்கியம் காலாதீத கேள்விகளை சமகாலச் சட்டகத்திற்குள் பேச வேண்டும் என்பதே என் வரையறை. நடராஜரின் வடிவமான ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைக்கொண்டு இதை நான் விளக்கிக்கொள்வேன். ஒரு கால் அகாலத்தில் விண்ணைத் துளைத்திருக்க இன்னோரு கால் நிலையாகத் தரையில் படர்ந்திருக்க ஆடும் நடனத்தில் ஈசனின் உடலே காலங்களை இணைக்கும் ஊடகம். இரண்டு கால்களும் தரையில் பாவ ஆடுவது எவரும் செய்யக்கூடியதே, இரண்டு கால்களும் அந்தரத்தில் என்பது அறிவீனம். மேலும் ஒரு படைப்பு ‘தற்கால’த்திற்கு எதிர்வினை ஆற்றுகிறதா ‘நிகழ்கால’ப் பொருத்தப்பாடு கொண்டதா என்பதை கவனிக்க வேண்டும். Contemporary மற்றும் Present ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு முக்கியம். தற்காலச் சிக்கலை எழுதுவதாலேயே ஒரு நாவல் நிகழ்காலப் பொருத்தபாடு கொண்டதாக ஆக முடியாது. தற்காலச் சிக்கலிலிருந்து வாழ்க்கையின் அடிப்படை வினாக்களை நோக்கி நாவல் செல்கிறதா? தன்னுடைய சொந்த பதிலைத் தேட முடிகிறதா? தற்காலச் சிக்கல்கள் என்பது காலாதீத கேள்விகளை அணுகுவதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. கில்காமேஷும், சிலப்பதிகாரமும், மகாபாரதமும் தற்காலச் சிக்கல்களை நேரடியாகப் பேசுபவையல்ல, மரணம் குறித்தும் நீதி குறித்தும் அறம் குறித்தும் ஆதாரமான கேள்விகளைத் தொடுபவை என்பதாலேயே எப்போதும் நிகழ்காலப் பொருத்தபாடு கொண்டவையாகத் திகழ்கின்றன. 



யுவன் சந்திரசேகருடைய உருவகத்தைக் கடன் வாங்குவதாக இருந்தால், சுவாரசியமான நாவல் தொந்தரவற்ற பயணத்துணைவர் போல. இருட்டில் அவர் பாட்டுக்கும் தன் வழியில் செல்வார். அவரோடு நமக்கு எந்த உரையாடலும் இருக்காது. வேறொரு சமகால உதாரணம் சொல்லலாம் என்றால் திருப்பங்கள் நிறைந்த இணையத் தொடர்கள் போல. தொடர்ந்து பார்க்க இயலும். முடிந்ததும் மனதில் சிறு சலனம் கூட ஏற்படுத்தாமல் புகையுருபோல மறைந்துவிடும். ஆனால் ‘ஈடுபடுத்தும்’ படைப்பு வாசிப்பவரின் உள்ளத்தைக் கோருவது. ஒரு புதிய சிந்தனையைக் கிளர்த்துவதாக இருக்கலாம், உணர்வுத் தளத்தில் நம்மைப் பிணைப்பதாக இருக்கலாம், வாழ்வைப் பற்றி/ மனிதர்களைப் பற்றி ஏதோ ஒரு ஞானத்தை/ அறிதலை அளிப்பதாக இருக்கலாம். அக அடுக்குமானத்தில் சிறு குலைவையாவது ஏற்படுத்தும். திருப்பங்களும் திகில்களும் திரைக்கதைத்தன்மைகளும் கொண்ட விறுவிறுப்பான கதைகள்  சில வரையறைகளுக்குள் இயங்குபவை. எதை அழுத்தினால் எது வரும் என்பதில் வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடையே தெளிவான ஒப்பந்தம் உண்டு. ஜார்ஜ் ஆர்வெல் தனது 1984 நாவலில் பல்ப் நாவல்களை உருவாக்கும் இயந்திரத்தைப் பற்றி எழுதியிருப்பார். இன்றைய சூழலிலிருந்து சொல்வதானால், ஒரு ஏ.ஐ செயலியால் எளிதில் உருவாக்கத்தக்க கதைகள். இன்றைய எழுத்தாளருக்கு முன் இருக்கும் சவால்கள் என்பவை ஏ.ஜயால் எழுதத்தக்க கதையை எழதாமல் இருப்பது, உடனடியாக சினிமாவாக மாற்றமுடியாத வகையில் எழுதுவது, மேடையில் சுருக்கமாகச் சொல்ல இயலாத வகையில் எழுதுவது ஆகியவையே என எனக்கு தோன்றுகிறது.


‘ஈடுபடுத்துதல்’ நிகழ வேண்டுமென்றால் நாவலுக்கும் வாசகராக நமக்கும் பொதுவான சில கரிசனங்கள் இருக்க வேண்டும் அல்லது புதியதான ஏதோ ஒன்றை நமக்களிக்கப்போகிறது எனும் நம்பிக்கை வேண்டும். தொடக்கத்தில் ஏற்பும் எதிர்ப்புமாக இந்தக் கரிசனங்கள் சார்ந்து நம் பார்வைகளிருக்கும். ஆனால் காலப்போக்கில் இணக்கமும் ஏற்புமுடைய இலக்கிய ஆக்கங்களையே மனம் நாடும். கருத்துலகு உருவாவதற்கு முன்பான வாசிப்பிற்கும் பின்பான வாசிப்பிற்கும் இடையேயான வேறுபாடு என இதைச் சொல்லலாம். வாசிப்பின் தொடக்க நிலைகளில் பலவற்றையும் சென்று முட்டி மோதிப் பார்ப்போம். காலப்போக்கில் நுட்பங்களையும் ஆழங்களையும் தேடத் தொடங்குவோம். அத்தகைய பயணத்தில் புனைவு அலுக்கத்தொடங்கும். மேலும் மேலுமென செல்லுந்தோறும் நம்மை ஈடுபடுத்தி வாசிக்க வைக்கும் ஆக்கங்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஒரு கட்டத்தில் புனைவின் மீதான ஆர்வத்தை இழப்போம்‌. நம்மைத் தூண்டும், கிளர்த்தும் சிந்தனைகளை புனைவுக்கு வெளியே புனைவற்ற நூல்களில் தேடத் தொடங்குவோம். நம்மை அசைக்கும் வாழ்வுகளை வாழ்க்கை சரிதைகளில் கண்டெடுப்போம். ‘சத்திய சோதனை’ எந்த ஒரு நவீன நாவலுக்கும் குறைந்தது அல்ல. அபாரமான புனைவுத் தருணங்களால் நிரம்பியது. வாசிப்புக்கான நேரம் குறையக் குறைய மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து வாசிக்க தொடங்குவோம். முழு கவசவுடையுடன் இலக்கியப் பிரதிக்கு முன் சென்று நிற்றல் என்பது இதுதான். இது சரியா தவறா என்பது அல்ல, ஆனால் பெரும்பாலான படைப்பாளிகள்/ வாசகர்கள் இந்தச் சலிப்பை ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிர்கொள்வார்கள். அத்தகைய சூழலில்  நமக்குச் சவாலாக இருக்கும் ஆக்கங்களை வாசிக்கவே விரும்புவோம். அல்லது ஒரு சுற்று சுற்றிவிட்டு வெள்ளந்தி வாசிப்பிற்குத் திரும்ப முயற்சிப்போம்‌. ஆனால் அது அத்தனை சுலபமல்ல. கற்பதை விட கற்றதைக் கைவிடுவது மிகக் கடினம். சவாலான ஆக்கங்களைப் பற்றிச் சொல்லும் போது, என்னளவில் இந்தச் சவால் என்பது புழக்கத்திலிருக்கும் ஒன்றைச் சிக்கலான சுழல் மொழியில் எழுதுவது அல்ல. பேசுபொருளுக்கும் வடிவத்திற்கும் இணக்கமிருப்பதாக  நம்புகிறேன். எளிமையான பேசுபொருளை சிடுக்கான மொழியில் சொல்லும்போது கடும் ஏமாற்றத்தை உணர்கிறேன். எது எளிமை எது சிக்கலானது என்பது அகவயமானதுதான். சுருக்கி ஒற்றைத் தரப்பாகச் சொல்வது எளிமையானது, பல்வேறு குரல்களின் வழி வெவ்வேறு அடுக்குகளை உருவாக்குவதுதான் உண்மையில் சவாலானது. எஸ்.ரா நாவல் குறித்து எழுதிய ஒரு நூலுக்கு ‘நாவலெனும் சிம்பொனி’ எனப் பெயரிட்டிருந்தார். மிகப் பொருத்தமான சொல்.  சிம்பொனியில் பிரக்ஞைப்பூர்வமாக ‘ஒத்திசைவின்மையை’ உருவாக்கவும் செய்யலாம். அப்படி உருவாக்கும் போது அது வேறொரு ஒத்திசைவாக இருக்க முடியும். ஒத்திசைவின்மையாகத் தோன்றும் இசையை மீளுருவாக்கம் செய்ய முடிந்தால் அது நாமறியாத வேறொரு ஒத்திசைவுதான். பெருநாவல்களை மீள மீள வாசிக்கும்போது அவை நமக்கு ஒவ்வொரு முறையும் புதிய ஒன்றை எப்படி அளிக்கின்றன? இசைக்கோர்வையில் வெவ்வேறு தனிச்சரடுகளை மட்டும் கூர்ந்து கேட்பது போலத்தான். நாவலின் வடிவத்தைப் பற்றிப் பேசும்போது பிற உரைநடை புனைவு வடிவங்களுடன் ஒப்பிடாமல் பேச இயலாது. குறுங்கதையைப் பற்றிய வரையறையை வாசித்த போது ஒரு ஜியார்ஜியோ மேக்னனல்லி ‘நாவலென்பது நாற்பது வரிகளும் சில கியூபிக் மீட்டர் காற்றும். காற்று நீக்கப்பட்ட நாவலே குறுங்கதை’ என்றொரு சுவாரசியமான விளக்கத்தை அளித்தார். க.நா.சு சிறுகதை எனும் வடிவம் பற்றி எழுதும் போது கதை என்பதை ஒரு அடிப்படை அலகு என விளக்குகிறார். செங்கலைப் போல. கதையைக் கொண்டு செய்யுள் வனையலாம், கவிதை எழுதலாம், குறுங்கதை எழுதலாம், சிறுகதையாக்கலாம், நாவலாக வளர்க்கலாம். எந்தக் கதை சிறுகதையாகிறது, எது நாவலாகிறது? என்பது எனக்கொரு சுவாரசியமான கேள்வி. எந்தக் கதையும் நாவலாக முடியும் என்பதே மேலளிக்கப்பட்ட மேற்கோள்கள் வழி நான் புரிந்து கொள்வது‌. உதாரணமாக லிடியா டேவிஸின் ‘குழந்தை’ எனும் குறுங்கதையை எடுத்துக்கொள்ளலாம்.


 அவள் குழந்தையின் மீது குனிந்து படிந்திருந்தாள். அவளால் அவளை விட்டுச்செல்ல முடியாது. ஒரு மேசையின் மீது குழந்தை அசைவின்றி கிடத்திவைக்கப்பட்டிருந்தது. அவள்  குழந்தையை இன்னுமொரு புகைப்படம் எடுக்க விரும்பினாள், கடைசி புகைப்படமாக இருக்கக்கூடும். உயிருடனிருக்கும்போது,  புகைப்படத்திற்கு  அசையாமல் அமர்ந்திருக்க குழந்தையால் ஒருபோதும்  இயலாது. அவள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறாள் "நான் கேமராவை எடுத்து வருகிறேன்" குழந்தையிடம் "அசையாதே" என சொல்வது போல.   



குறுங்கதை தருணங்களை கைப்பற்ற முடிபவை. கதைமாந்தர்களோ அவர்களின் தனித்தன்மைகளோ முக்கியமல்ல. மேற்சொன்ன கதையில் அம்மா மரணமடைந்த குழந்தையை மேசையில் கிடத்துகிறாள் எனும் தருணம் மட்டுமே பதிவாகிறது. அந்த அம்மா யார், அவர் எப்படி பட்டவர், அந்தக் குழந்தை எப்படி இறந்தது இவை எதுவும் நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இவற்றைப் பேசும் போது சிறுகதையாக உருமாற்றமடைகிறது. சிறுகதைகளில் தருணங்களுக்கு இன்ன இயல்புடைய கதைமாந்தரின் எதிர்வினையும் பேசப்படுகிறது. நாவல்கள் தருணங்களின் காரண காரியத்தையும் கதைமாந்தரின் எதிர்வினையின் காரண காரியத்தையும் விரித்தெடுக்கத்தொடங்குகின்றன. 


ஒற்றைக் கதைமாந்தரை மையப்படுத்தி ஒரு காலகட்டத்தில் நிகழும் கதையை சிறுகதை எனப் பொதுவாகச் சொன்னால் பெரிய காலகட்டத்தில் பல்வேறு கதைமாந்தர்களின் ஊடாட்டத்துடன் நிகழ்வதை நாவல் எனச் சொல்லலாம். குறுங்கதைக்கு கவிதைக்குரிய கச்சிதம் முக்கியம். ஒரு சொல் மிகையாகக்கூடாது. சிறுகதையில் தேவையில்லாத வரிக்கு இடமில்லை. நாவலைப் பொருத்தவரை பெயருடன் ஒரு கதைமாந்தர் அறிமுகப்படுத்தப்பட்டால் அவர் வெறுமே வந்து செல்பவராக இருக்கக்கூடாது. ஆலய கும்பாபிஷேகங்களில் பிராண பிரதிஷ்டை எனும் சடங்கு உண்டு. வழிபாட்டுக்குரிய விக்கிரகங்களுக்கு உயிர்கொடுத்தல் எனச் சொல்லலாம். நாவலில் ஒருவருக்குப் பெயரிட்டுவிட்டோம் என்றால் அவருக்கு உயிர்கொடுத்துவிட்டோம் என்றே பொருள். இவையெல்லாம் பொதுப் புரிதல்கள் மட்டுமே. நாவலுக்குரிய விரிதலும் அடுக்குகளும் கொண்ட சிறுகதைகள் புதுமைப்பித்தன் தொடங்கி சுரேஷ் பிரதீப் வரை பலரால் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ ‘கரைந்த நிழல்கள்’ போன்ற நாவல்களில் ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைக்குரிய கச்சிதம் கொண்டவை. மரபுகளும் விதிகளும் மீறப்படுவதற்குதான். என்னளவில் நாவல் என்பது பிரம்மாண்ட வாழ்வின் நுண்மைகளை இலக்கியவாதி கைப்பிடி ஆற்று மணலைக்கொண்டு பிரதியெடுத்துக் கட்ட முயலும் சிற்றில். குறுங்கதை கோட்டுச்சித்திரமெனில் சிறுகதை தாளில் வரையப்படும் இருபரிமாண வர்ண சித்திரம் என்றால் நாவல் முப்பரிமாணம் கொண்டது. சிறுகதைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட குறுநாவல் என்றொரு வடிவம் உள்ளது. குறுநாவல் என்பது நாவல்தான், ஆனால் அளவில் சிறியது. நாவலுக்கான ஒப்பீட்டு அளவுகோல் என்பது வாழ்க்கைதான்.  இலக்கியத்தின் உண்மைத்தன்மைக்கும், நம்பகத்ன்மைக்குமான சான்று. இயற்கையின் சீர்மையைப் பிரதியெடுக்கலாம் அல்லது சீர்மையின்மையை பிரதியெடுக்க முயலலாம். 



குறுங்கதைகள் மின்னல் வெட்டில் ஒளி பாய்ச்சும் தன்மை கொண்டவை. அல்லது இருளில் சுடரும் மின்மினி. சிறுகதைகள் நீருக்கடியில் நீந்திக் கடக்கும் வண்ண மீன் எனில் நாவல் நிதானமாக அசைபோட்டபடி பால் கொடுக்கும் பசு எனச் சொல்லலாம்.  எத்தனைக்கு எத்தனை நாவலாசிரியர் வாழ்வனுபவங்களை மேய்ந்து அவற்றை அசைபோடுகிறாரோ அத்தனைக்கு அத்தனை அது பாலின் தரத்தில் வெளிப்படும். வாழ்வனுபவங்களை தத்துவமாக சாரப்படுத்தி கலையின் சட்டகத்திற்குள் அளிப்பதே நாவல் எனும் கலைவடிவம். ஜெயமோகன் நாவலை தத்துவத்தின் கலைவடிவம் எனக் குறிப்பிடுகிறார். எழுத்தாளருக்கு மெய்யியல் மரபுகளின் பரிச்சயம் கூடுதல் பலம்தான். அவற்றைக் கற்று நாவலில் எழுதிப் பரிசீலித்துப் பார்ப்பது என்பதொருவகை. ‘மெய்யியலிலிருந்து கலைக்கு’ என இதை சொல்லலாம். இதற்கு நேரெதிராக வாழ்வனுபவங்களின் ஊடாக, கற்பனையின் ஊடாக முறையான மெய்யியல் பயிற்சியின்றியே கூட எழுத்தாளர் தனக்குள் இயங்கும் மெய்யியல் தளத்தைக் கண்டுகொள்ள முடியும். உலகின் ஆக புராதனமான காவியமாகக் கருதப்படும் ‘கில்காமேஷை’ இன்று வாசித்தால் அங்கிருந்து கடந்தாண்டு தமிழில் வெளியான ‘பவதுக்கம்’ வரை ஒரு கோடு போட முடியும்‌ என தோன்றுகிறது. இருத்தலியல் பிரதியாக கில்காமேஷை வாசிக்க இடமுண்டு. கில்காமேஷை எழுதியவருக்கு இருத்தலியல் என்றால் என்ன எனத் தெரிய வேண்டியதில்லை. மெய்யியல் பரிச்சயம் விமர்சகருக்கும் வாசகருக்கும் சில கூடுதல் சாளரங்களை திறந்து வைக்கக்கூடும். கில்காமேஷ் தனது ஆடிப்பிம்பம் போலிருந்த உற்ற நண்பனை இழக்கிறான். அங்கிருந்து வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் மரணமற்ற பெருவாழ்வு குறித்தும் பதைப்புடன் சிந்திக்கிறான். அதுவே அந்தக் காப்பியத்தின் அடிநாதம். ‘ஏன்’ எனும் கேள்வியை எதிர்கொள்வதே மெய்யியலின் வேலை.  மெய்யியல் மரபுகள் ‘ஏன்களை’ முறைப்படுத்துகின்றன. அவற்றுக்கான விடைகளை தர்க்கப்பூர்வமாக முன்வைக்கின்றன. மெய்யியல் பரிச்சயம் ஏதுமற்ற நிலையில் கூட நாம் ‘ஏன்களை’ எதிர்கொள்கிறோம். அவற்றுக்கு நம்மால் முடிந்த வகையில் விடைகாண முயற்சிக்கிறோம். வாழ்வு குறித்தான மெய்யியல் நோக்கு  (Philosophical outlook) இல்லாத மனிதரே இருக்க முடியாது என நம்புகிறேன். ‘வாழ்க்கைன்னா.‘ ‘வாழ்க்கைங்கிறது..’ என அனுபவங்களின் ஊடாக வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு பருவத்தில் வெவ்வேறு நோக்குகள் புலப்படும். எழுத்தாளரால் அவற்றைத் தொகுத்து வெளிப்படுத்த முடியும். அதற்கான மொழியும் கற்பனையும் அவருக்கு இருக்கிறது. எழுத்தாளருக்கு முதன்மையாக இருக்க வேண்டியது வாழ்வனுபவ சேகரமா கற்பனைத் திறனா எனக்கேட்டால், கற்பனைத் திறனே எனச் சொல்வேன். அனுபவங்கள் பலருக்கும் சாத்தியமாகக்கூடியது. கற்பனைத் திறனே கலைஞர்களின் தனித்தன்மையை உருவாக்குகிறது. அனுபவங்களையும் கற்பனைகளின் வழி உருவாக்க முடியும். ‘பிறராதல்’ என்பதே இலக்கியத்தின் அடிப்படை. 


மெய்யியல் அடித்தளம் நாவலில் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஒரு உதாரணம் கொண்டு சொல்ல முடிகிறதா எனப் பார்க்கிறேன். என் நோக்கில் நான் வாசித்த மிகச் சிறந்த இந்திய மொழி நாவல்களில் ஒன்றென பைரப்பாவின் ‘குடும்பம் சிதைகிறது’ நாவலைச் சொல்வேன். தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ துறை சார்ந்த நாவல் எனும் வகையில் எனக்கு முன்னோடி ஆக்கமும் கூட. இத்தகைய இந்திய நாவல்களை வாசிக்கையில் முதன்மையாகத் தோன்றியது அவற்றின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திய மெய்யியல். க. நா.சு வின் ‘பொய் தேவு’ தொடங்கி மீறல் எழுத்து எனக் கொண்டாடப்படும் கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானுடம் , மகத்தான காதல் கதையாகக் கொண்டாடப்படும் தி.ஜாவின் ‘மோகமுள்’ ‘நளபாகம்’, நபகோவின் லோலிடாவின் சாயலில் முறையற்ற காமத்தைப் பேசத் தொடங்கி அதை உன்னதமாக்க முயலும் லாசராவின் ‘அபிதா’, எதிலும் பொருத்திக்கொள்ள முடியாத கணேசனின் வாழ்வைச் சொல்லும் காஷ்யபனின் ‘அசடு’ என முன்னோடிகள் பெரும்பாலானோரின் நாவல்களில் இந்திய மெய்யியல், அதிலும் குறிப்பாக அத்வைத வேதாந்தம் மிக முக்கியச் சரடாக உள்ளதை உணர முடிந்தது. உலகத்தில் உள்ள எதையும் அத்வைத வேதாந்தத்தில் விளக்கிவிடலாம் என்கிற அபாயமும் உண்டுதான். நவீனத்துவ அழகியலுக்கு மாற்றாக அத்வைத வேதாந்தத்திலிருந்துதான் நாம் முழுமை நோக்கு எனும் அழகியலை ஏற்றுக்கொள்கிறோம். காஃப்காவை விட தால்ஸ்தாயின் அழகியலே இந்திய மொழிகளிலில் செல்வாக்கு செலுத்தியது எனச் சொல்லலாம். ப. சிங்காரத்தின் நாவல்கள் ஏன் எழுதப்பட்ட காலத்தில் கவனிக்கப்படவில்லை என்பதை ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது. அது அன்றைய காலகட்டத்தில் பிரதான போக்காக இருந்த அத்வைத வேதாந்த அழகியல் முன்வைத்த கலையமைதி, முழுமை நோக்கு ஆகியவற்றுக்கு மாறான வேறொரு அழகியல் கொண்டது. க. நா. சு புதுமைப்பித்தனை எப்படி எதிர்கொண்டார் என்பதைக் கவனித்தால் இது விளங்கும்‌. ‘கபாடபுரம்’ போன்ற ஒரு கதை குறித்து அவருக்குப் பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை ‘அன்று இரவு’ கதையை காமா சோமாவென எழுதப்பட்டது என்கிறார். அத்வைத வேதாந்த அழகியல் உருவாக்கிய கோணமே தமிழ் நவீன இலக்கியத்தின் மைய அழகியலாக இருந்தது. வாழ்வின் பொருள், வாழ்வில் முழுமை மற்றும் ஒருமை சார்ந்த தேடல்கள் வழி அத்வைத வேதாந்தத்தை நோக்கிச் சென்றனர் எனச் சொல்ல முடியும். எண்பதுகளில் இந்தக் கோணம் சவாலுக்கு உள்ளாகிறது. ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற அதே கதைக்களத்தை எழுதிய எம். எஸ். கல்யாண சுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ நாவலை வாசித்தால் சிங்காரத்தின் நாவலைவிட ஒருமை கூடியது புலப்படும். புயலிலே ஒரு தோணியில் பாண்டியனின் சாகச அதி நாயகத்தனம் இன்று வாசிக்கும் போது பொருத்தமற்ற கற்பனையாகப் படுகிறது. அத்தகைய தொந்திரவு ஏதும் ‘இருபது வருடங்கள்’ வாசிக்கும்போது நமக்கு ஏற்படுவதில்லை. எண்பதுகளில் வேதாந்த அழகியலுக்கு வெளியே வேறுவிதமான‌ தேடல் நிகழத் தொடங்குகிறது. முழுமையும் கலையமைதியும் பின்னுக்குச் செல்கிறது. ஒழுங்குக்கு மாறாக பித்தும் சந்நதமும் இலக்கிய வெளிப்பாட்டின் அளவுகோலாக மாறுகிறது. தமிழ்க் கவிதைகளில் பிரமிளின் வருகையிலிருந்து ஏற்பட்ட மாற்றம் இது என யூகிக்கலாம். தமிழ் உரைநடை இலக்கியம் எப்போதும் கவிதையின் வால் பிடித்தே முன்நகர்கிறது என எனக்கு தோன்றுவதுண்டு. ஜெ ஜெ சில குறிப்புகள் அத்திசையில் நிகழ்ந்த மிக முக்கியமான முயற்சி. சிங்காரத்தின் நாவல்கள் அத்வைத வேதாந்த அழகியலுக்கு மாற்றாக தமிழ் சித்தர் மரபிலிருந்து வேரெடுப்பதாகச் சொல்ல முடியும்‌. புயலிலே ஒரு தோணியில் வரும் மதுக்கூட உரையாடலும் இருண்ட பகடிப் பகுதிகளுமே அதை முன்னோடிப் படைப்பாக ஆக்குகின்றன. புதிய அலையின் முகமாக அவரை ஆக்கின. நாட்டார் மரபைத் தமிழிலக்கியம் தனது அடித்தளமாகக் கொள்ளத் தொடங்கியதற்கான பாதையை முதலில் உருவாக்கியவர் கி.ரா. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பின் நவீனத்துவக் கோட்பாட்டு விவாதங்களும் தமிழிற்கு அறிமுகமாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்துகிறது. 90 களில் தொடங்கிய புதிய தமிழ் நாவல் மரபு ஒரு வகையில் சிங்காரத்திற்கும் கிராவிற்கும் கடன்பட்டுள்ளது எனச் சொல்லத் தோன்றுகிறது. இவர்கள் இருவரின் பாணிகளின் இடையீட்டில்தான் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டது எனச் சொல்லத் தோன்றுகிறது. எழுத்தாளர் சீரற்ற வாழ்விலிருந்து ஒருவித ஒழுங்கை கண்டடைந்து சொல்பவராக மட்டும் இருந்த ஒரு காலம் சென்று, எழுத்தாளர் என்பவர் தன் பிரக்ஞையை இழந்து தெய்வ நிலைக்குச் சென்று வாக்குகளை அருளி மீளும் ‘சாமி கொண்டாடியாகவும்’ இருக்க முடியும் என்பதை நவீன இலக்கியம் கண்டுகொண்டது. கவிதையில் பாரதி ஒரு சேர இவ்விரு தளங்களிலும் இயங்கியவன். ஆகவேதான் அவன் முன்னோடி.  மெய்யியல் அடித்தளத்திற்கும் நாவலுக்கும் இடையேயான உறவை இப்படியாகப் புரிந்து கொள்கிறேன். இலக்கியப் போக்குகள் காலாவதியாகும், இதுதான் இப்போது புதுப்போக்கு என்றெல்லாம் சொல்லப்படுவதில் எனக்குப் பெரிய ஏற்பும் நம்பிக்கையும் இல்லை. இலக்கியம் என்பது எந்த அளவிற்குத் தனது காலத்தின் போக்குகளைப் பிரதிபலிக்க முயல்கிறதோ அதேயளவு தனிமனிதனின் தேடலுக்கான கலை வடிவமாகவும் திகழ்கிறது. இந்தப் போக்குகள் குறித்த உரையாடல்கள் ஒருவித தொகுக்கும் முறை மட்டுமே. எழுதுவதற்கான ஆணையோ வழிகாட்டியோ அல்ல. எழுத்தாளராக நான் ஒரு‌ கதையை எழுத விரும்புகிறேன். எழுதும்போதே நான் நவீனத்துவ கதையை அல்லது பின்நவீனத்துவ கதையை எழுத‌போகிறேன் எனச் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. எந்தத் தொகுப்பு முறையும் முழுமையானதல்ல. விதிவிலக்குகளும் விடுபடல்களும் கொண்டதே.   


சோமு முதலியெனும் ஒருவனின் வாழ்வை முழுமையாகச் சொல்லும் ‘பொய் தேவு’ போலவும் இருக்கலாம் தலைமுறைகளின் கதையைச் சொல்லும் பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலி நகக்கொன்றை’ போலவும் இருக்கலாம் அல்லது ஒரு இனக்குழுவின் நூற்றாண்டு கால வரலாறை சொல்லும் கி.ராவின் ‘கோபல்ல கிராமமாகவும்’ இருக்கலாம். நாவல்களின் முதன்மைப் பாத்திரம் எவராகவும் இருக்கலாம். காப்பியங்களின் நாயகன் அறமெனில் நவீன நாவலின் நாயகன் காலம்தான் என எனக்குத் தோன்றுவதுண்டு. காலப்பேருருவைச் சென்று முட்டி நிற்பதே நாவலின் நோக்கம். குறுங்கதைகளிலும் சிறுகதைகளிலும் காலம் குறுகியதாக வெளிப்படுகிறது.‌ நாவலில் விளக்கிலிருந்து வெளிப்பட்ட பூதம் போல பிரம்மாண்டமாகத் தனது ஆகிருதியை வெளிப்படுத்துகிறது காலம். பெரு நாவல்கள் மட்டும் அல்ல, அளவில் சிறிய நாவல்களின் வழியேவும் இந்த தரிசனத்தை அடைய முடியும். உதாரணமாக அலெக்ஸாண்டர் பாரிக்கோஸின் ‘பட்டு’. அறுபது எழுபது பக்கங்கள் நீளும் நாவல். பெரிதாக நிகழ்வுகள் என ஏதுமற்ற, ஒரே மாதிரியான சொற்களே மீண்டும் மீண்டும் வரும்வகையிலான படைப்பு. எனக்கது நாவல்தான். இன்னொரு உதாரணம் சொல்லலாம் என்றால் க. அரவிந்தனின் “சீர்மை” 50 பக்கங்கள் கொண்ட ஆக்கம்தான். ஆனால் அதையும் நான் நாவல் என்றே கருதுகிறேன். 


     தகவல்களை அறிந்துகொள்ள நான் நாவல்களை வாசிப்பதில்லை. ஆவணப்படுத்துவது நாவல்களின் முதன்மை நோக்கமல்ல என்பதே என் நம்பிக்கை. அடிப்படையில் நாவலென்பது கதைதான். கதைகளுக்கு என்ன நோக்கமிருக்க முடியும்? படிப்பினைகள் என தான் நம்புபவற்றை சுவாரசியமாகப் பொதிந்து கொடுப்பதற்கு ஏதுவான வடிவம். நிகழ்காலத்திலிருந்தும் வாழும் உலகத்திலிருந்தும் தப்பித்து இளைப்பாற நிகருலக வாசம் வேண்டியே அநேகமாக கதைகள் வாசிக்கிறோம். மாற்றங்களைக் கனவு காணும் உரிமை மட்டுமே நாவலுக்கு உண்டு. இலக்கிய வடிவங்களில் நாவல்  பரவலாக வாசிக்கப்பட அதன் ஆழ்த்தும் தன்மையே முதன்மைக் காரணம். உரைநடை வடிவங்களில் சிறுகதை/ குறுங்கதைக்கும் நாவலுக்கும் வேறுவேறு இயல்புகள் தேவையாக உள்ளது. சிறுகதை/ குறுங்கதையில் தகிப்பை இறக்கிவைத்து அதைக் கடத்தும் முனைப்பே முதன்மையானது. நாவலில் உச்சத்தை ஒத்திப்போடுவதே முதன்மை உத்தி.  நாவலில் தகவல்களும் புற விவரணைகளும் இரண்டு விதமாகப் பயன்படலாம். ‘மோகமுள்ளில்’ பாயும் காவிரி நதி மட்டுமல்ல, பாபுவுக்குளோடும் காமமாக, பிரவாகிக்கும் சங்கீதமாக உருமாற்றம் அடைந்தபடியே உள்ளது. கதைக்குள் வரும் விவரணை எனக்கு மேலதிகமாக எதையோ அளிக்கிறது. அகத்தைச் சுட்டுவதற்கு புறத்தை விவரிப்பதற்கு நமக்கு ஈராயிர ஆண்டு மரபுள்ளது. இயல்புவாத எழுத்துக்களில் இன்னோரு வகையும் உண்டு. பூமணியின் ‘வெக்கை’  நாவலை வாசித்த போது அவர் சித்தரிக்கும் நிலப்பரப்பில் வாழ்ந்த அனுபவத்தை அளிக்கிறது. 


‘ஈடுபடுத்தும்’ நாவல்களின் மற்றுமொரு முக்கியமான இயல்பு அதில் நமக்குக் கிடைக்கும் ‘ஆழ்த்தும்’ அனுபவம். ‘‘ஆழ்த்தும் அனுபவம்’ அளவில் பெரிய நாவல்களில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அளவில் சிறிய நாவல்கள் ‘ஆழ்த்துதலை’ நிகழ்த்துவது சிரமம் ஆனால் ‘எஞ்சுதல்’ அவற்றில் நிகழ்வதை உணர்ந்திருக்கிறேன். ‘எஞ்சுதல்’ சிறுகதையின் இயல்பு எனச் சொல்லலாம். ஓரு அசவுகரியமான நினைவுகூரல் போல, காய்ச்சலில் படிந்திருக்கும் நா கசப்பு போல, வைரஸ் தாக்குதலுக்குப் பின்பான நோயெதிரணுக்கள் போல ஏதோ ஒன்று ‘எஞ்சுகிறது’. சிறுகதைத்தன்மை கொண்ட நாவலுக்கு மிகச்சிறந்த உதாரணம் தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’. 


சில சிறுகதைகள் எழுதி முடித்த பின் அவை தொகுப்பாக வெளிவருவதற்கு முன்னரே நாவல் எழுதத் தொடங்கினேன்.  என்னை இயக்கும் கேள்விகளில் ஒன்று, மனிதர்களை மதிப்பிட நமக்கு பயன்பாடு சாராது வேறு அளவுகோல் உண்டா?  தனது வளர்ப்பு மகனுக்கு ஆட்டிஸ நிலை என   குடும்ப நண்பர் மனம் நொந்திருந்த ஒரு தருணத்தில் சட்டென உடைந்து போய் ‘இதுக்கு இவன தத்தெடுத்திருக்காமலேயே  இருந்திருக்கலாம்’ என்றார். இந்த ஓருவரி என்னுள் எதையெதையோ கிளர்த்தியது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவு, அதிலும் ஏதோ ஒரு குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே எத்தகைய உறவு உள்ளது? நாவல் என்பது தூரத்துத் துளிவெளிச்சத்தை நோக்கிய பயணமாகவே எனக்கு அர்த்தப்படுகிறது. செல்திசை மட்டுமே தெரிந்த சாகசப் பயணம். இருட்டில் துழாவித் துழாவிச் செல்லும்போது எழுத்தாளரும் புதிது புதிதாக எதையோ கண்டடைகிறார். சிறுகதையில் வெளிச்சம் ஓரளவு துல்லியமாகப் புலப்பட்டுவிடும். ‘ஒற்றனில்’ மொத்த நாவலையும் வரைபடமாக வைத்திருக்கும் பிராவோ எனும் எழுத்தாளர் பற்றிய சித்திரத்தை அசோகமித்திரன் அளித்திருப்பார். பிராவோவின் திட்டமிடல் தியாகராஜனுக்கு மிரட்சியளிப்பதாக இருக்கும். தன்னம்பிக்கையை இழப்பார். பிராவோவை பிற்காலத்தில் சந்திக்கும்போது அவர் அந்த நாவலை முடிக்கவில்லை என்பதை அறிந்துகொள்வார். பிராவோவால் ஒருநாளும் அந்த நாவலை முடிக்க முடியாது. நாவல் எழுதுவதின் கிளர்ச்சி என்பதே அதிலுள்ள திட்டமற்ற தன்மைதான் என எனக்கு தோன்றுவதுண்டு. உள்ளுணர்வின் வழிதடத்தில் நடப்பது. நாவல் எழுதுவதை அதீதமாக மர்மப்படுத்துவதாக தோன்றக்கூடும். நாமறிந்த ஒருவரைப்பற்றி எழுத தொடங்கும்போது நாம் உத்தேசிக்காத வேறொருவரின் சாயல்களும் இயல்புகளும், தொடர்பேயற்ற வேறொருவரின் உருவமும் படிவதை எப்படி விளங்கிக்கொள்வது? இவை எல்லாவற்றுக்கும் மூளை நரம்பியலில் ஏதேனும் விளக்கங்கள் இருக்கலாம்‌. நாவல் எழுத மிகவும் தேவைப்படும் இயல்பு என்பது விடாமுயற்சி, பொறுமை, மிக முக்கியமாக ஒழுக்கம்‌. நாவல் எழுதுவது என்பது வேறொரு உலகத்தில் வாழ்வது. என்ன வேலையிலிருந்தாலும் உள்ளுக்குள் இன்னொரு சரடில் நாவல் குறித்தும் கதை மாந்தர்கள் குறித்தும் ஏதோ ஒரு சரடு அறுபடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். நாவல் எழுதும் காலகட்டத்தில் உறங்கும் முன்னர் கடைசி எண்ணமாகவும் எழும்போது தோன்றும் முதல் எண்ணமாகவும் நாவலே இருக்கும். நூறு சொற்களோ இருநூறு சொற்களோ எழுத அதற்கு முந்தி எழுதியவற்றை மீள வாசிக்க வேண்டும்.  நாவல் எழுதுவதென்பது எட்டு விக்கெட் இழந்தபின் ஐந்தாம் நாள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி ஆட்டத்தை சமன் செய்ய முயல்வது போல.  சிறுகதை அம்பு எய்தல் போல, இலக்கைத் துளைக்கும் துல்லியமே அதன் முக்கிய இயல்பு, நாவல் ஈட்டி எறிதல் போல. அம்புக்கு வில்லை விட்டு வெளியேறுவதற்கான விசையளித்தால் போதும். ஈட்டி எறிதலுக்கு நாமும் கூடவே ஓடிவரவேண்டும். எத்தனை தொலைவிலிருந்து, எத்தனை வேகமாக, எவ்வளவு விசையுடன் ஒடிவருகிறோம் என்பதைப் பொருத்து ஈட்டி எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பது முடிவாகிறது. எத்தனைக்கு எத்தனை நம்மால் நாம் எழுதும் நாவலுக்குள் ஆழ முடிகிறதோ, எத்தனைக்கு எத்தனை நமது நினைவுகள் கூர்மையடைகிறதோ அத்தனைக்கு அத்தனை நாவல் செம்மையடையும். 


நாவலின் முதல் வரி எழுதப்படும் முன்னரே அதன் தலைப்பு ‘நீலகண்டம்’ என தோன்றியது.  ‘நீலகண்டம்’ ஓரு பெரும் படிமமாக என்னுள் வளர்ந்தது. சமூகம், மானம், கவுரவம் என நாமாக உருவாக்கிக்கொண்ட வரையறைகள் ஒரு பக்கமும் நமது சுயமைய நோக்கு, ஆழ்மன இச்சைகள் மறுபக்கமும் நம்மை அழுத்துகின்றன. நீலகண்டம் நூலை உறவுச் சிக்கல்களைப் பேசும் நேர்கோட்டு கதையாகத்தான் நூறு பக்கங்கள் வரை எழுதியிருந்தேன். ஆனால் அதிலொரு போதாமையை உணர்ந்தேன். நாவலை மீண்டும் தொடர்வதற்கு முன் நான் வாசித்த சில நாவல்கள், வடிவம் குறித்த எனது பார்வையின் மீது தாக்கம் செலுத்தின. ஜஸ்டின் கார்டனரின் ‘சோஃபியின் உலகம்’ பதின்ம வயதினருக்கு மேற்கத்திய மெய்யியலை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். மரியா வர்க்கோஸ் லோஸாவின் ‘ஆண்ட் ஜீலியா அன்ட் ஹெர் ஸ்கிரிப்ட் ரைட்டர்’ வானொலி நாடக கதாசிரியரின் நாடகங்களையும் கதைசொல்லியின் காதல்கதையையும் பிணைந்து சொல்லும் கதை வடிவம் கொண்டது. மிக்கைல் புல்ககோவின் ‘மாஸ்டர் அன்ட் மார்க்கரீட்டா’ நாவலில் சாத்தானின் குழாம் ரஷ்ய இலக்கியச் சூழலை எதிர்கொள்வதைப் பற்றி இருண்ட நகைச்சுவைப் பகுதிகள் கொண்ட  நாவல். இம்மூன்று நாவல்களும் புனைவுக்குள் யதார்த்தத்துக்கும் மீயதார்த்தத் தளத்திற்குமிடையேயான கோட்டை‌ அழித்தன. ஒருவித மயக்கத்தை விளைவித்தன. தமிழில் சொல்வதானால், எம்‌. வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலையும் சொல்ல வேண்டும். காதுகள் உளவியல் நோய்நிலையின் வெளிப்பாடு என்பது ஒரு வாசிப்பு. ஆனால் மாற்று யதார்த்த தள நாவலாக வாசிக்க முடியும். குண்டலினி தியான பயிற்சியுள்ள வாசகராக இருந்தால் இந்த நாவலை குண்டலினி கோளாறின் விரும்பத்தகாத விளைவு என வாசிக்க இடமுண்டு. புனைவின் ஓரு துளி யதார்த்த வாழ்வில் சிந்தினால் எப்படியிருக்கும்? புனைவென்பது யதார்த்தம் அல்ல.‌ வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்து ஒருவித ஒழுங்கை கற்பனை செய்கிறது. பெரும்பாலும் நாம் வாழும் வாழ்வின் அதே தர்க்கங்களைப் பயன்படுத்தி கதைகளைக் கட்டமைக்கிறோம். வேறு தர்க்கங்களைக் கொண்டு கதை சமைத்தால் எப்படி இருக்கும்? அதி இயற்கை தர்க்கங்களை, அதிமானுட ஒழுங்கிலிருந்தும் கதைகளை உருவாக்க முடியும். அல்லது இவையாவும் முயங்கும் தளத்திலிருந்து கதைகளை எழுத முடியும். நீலகண்டம் ‘ஒரு’ சாதி மீறி திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் ‘ஒரு’ தத்தெடுக்கப்பட்டு ஆட்டிஸ நிலையில் உள்ள குழந்தையின் கதையைச் சொல்வதாகத்தான் இருந்தது. ஆனால் இலக்கியம் என்பது ‘குறிப்பிட்ட’ ஒன்றைப் பற்றி ஆராய்வதன் வழி மானுடப் பொதுத்தன்மையைக் குறித்து எதையோ கண்டடைய வேண்டும். வருவைப் பற்றிய கதை வரு எனும் தனியொரு ஜீவனின் கதையாக இருப்பது போலவே அவளைப் போன்ற பல ஜீவன்களின் பிரதிநிதிகளின் கதையாகவும் ஆகிறது.  என்னைத் தொந்திரவு செய்யும் கேள்வியை வெவ்வேறு தளங்களில் எதிர்கொள்ள முடியும் என மேற்சொன்ன மூன்று நாவல்கள் எனக்கு உணர்த்தியதாக தோன்றியது. நாவலை மீண்டும் தொடங்கும்போது வேறொரு இடத்திலிருந்து தொடங்கினேன். விக்கிரமாதித்தியன் வேதாளத்திற்கு இடையேயான உரையாடலாகப் பரிணாமம் கொண்டது. நாவல் என்ன விதமாக வாசிக்கப்பட்டது, வாசகரைச் சென்று சேர்ந்ததா என்பது குறித்தெல்லாம் சொல்வதற்கு ஏதுமில்லை. என்னை உந்திய ஒரு கேள்வியை எனக்குச் சரி எனப் பட்ட வடிவத்தில் நேர்மையாகப் பின்தொடர்ந்து எழுதிப்பார்த்த முயற்சியே நீலகண்டம்.   நாவலுக்கு ஆய்வு செய்வது பற்றி எனக்குச் சில கருத்துக்கள் உள்ளன. எழுத்தாளர் வரலாற்று அறிஞனாக ஆக வேண்டியதில்லை என்றே நம்புகிறேன். ஆய்வு செய்து விட்டுத்தான் நாவலை எழுதப்போகிறேன் என்றால் எழுதவே முடியாது. ஏனெனில் அறிதலுக்கு எல்லையில்லை. அப்படி தங்களையும் தங்கள் நாவல்களையும் தொலைத்த பலரை நான் அறிவேன். மேலும் இத்தகைய ஆய்வு வழி திரட்டப்பட்ட தகவல்களை எங்கே எந்த அளவு எவ்விதம் பயன்படுத்துவது எனும் போதத்தை நாவலாசிரியராக நாம் இழந்துவிடக்கூடாது.  வெளியுலகம் அறியாத தகவலை எப்படியாவது சொல்லியே ஆக வேண்டும் ‌எனும் துடிப்பை வெற்றி கொள்வது அத்தனை எளிதல்ல. ஆகவே ஆய்வென்பது இரண்டு விதமாக இருக்கலாம், ஒரு துறை சார்ந்து தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கலாம். எழுதும்போது நாவலுக்குத் தேவையான தகவல் உள்ளேயே ஒருங்கமைந்துவிடும். ஆயுர்வேதம் குறித்தோ காந்தி குறித்தோ என்னால் சட்டென ஒரு புனைவை பெரிய ஆய்வின்றி எழுதிவிட முடியும். ஏனெனில் ஆண்டுக்கணக்கான தொடர் வாசிப்பு இத்துறைகள் சார்ந்து எனக்கு உண்டு. இன்னொரு‌ வகையில், கதையை எழுதத் தொடங்கி அதற்கு என்ன தேவையோ அதை மட்டும் வாசித்து நம்பகமான உலகை உருவாக்க அத்தகவலைப் பயன்படுத்துவது. 


இந்தக் கட்டுரையை நாவல் குறித்து நான் கொண்டுள்ள அபிப்ராயங்களின் விவாதமாகக் காணலாம். வாசிக்க வேண்டிய நாவல்களின் பட்டியல் அல்ல. வாசித்த நாவல்களின் பட்டியலும் அல்ல. நல்ல நாவல்கள் என நான் கருதும் பட்டியலும் அல்ல. நாவல் குறித்த விவாதத்திற்கு ஏதுவான உதாரணங்கள் மட்டுமே. சிறுகதை ஒப்புநோக்க நாவலை விட எழுத சவாலான வடிவம் என்பதே என் எண்ணம். ஆனால் வாசகப் பங்கேற்புக்கு வழிவகுக்கக்கூடிய வடிவம் நாவலாகவே இருக்க முடியும். 



    



  •  

கிணற்றை மூழ்கடித்த வெள்ளம்: ஜே ஜே சில குறிப்புகள்

(சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் "நூல் வாசிப்பு முற்றம்" சார்பாக, "ஜே ஜே சில குறிப்புகள்" நூல் பற்றிய எனது கருத்துரை, 9 நவ 2023, வியாழனன்று ஒளிபரப்பாகியது. அதன் எழுத்து வடிவம்)



1978க்கு முன்னால் எழுதப்பட்ட இந்த நூலைப் பற்றி 2023ம் ஆண்டில் நாம் பேசுவதற்கான தேவை இந்த நாவலிலேயே இருக்கின்றது.  இந்த நாவலின் எழுத்தாளரும், அதில் படைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளரும், அவர்களின் தீர்க்கதரிசனமாக முன்வைப்பது, 90களுக்கு பிறகு, தமிழ் இலக்கியம் தன்னுடைய குறுகிய எல்லைகளை கடந்து பரந்த வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதுதான்.  '21ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டிற்குள், ஒரு தவளை கூட கிணற்றுக்குள் இருக்க முடியாது.  அப்படி பிடிவாதமாக வெளிவராதவை உயிர் மூச்சற்று அழிந்து போகும்" என்கிறார் எழுத்தாளர்.  அதாவது கிணற்றுத் தவளைகள் உலகளாவியத் தவளைகளாக ஆகிவிடும் என்பது எழுத்தாளர் மற்றும் ஜேஜே-வின் முடிபு.  

இந்திய பண்பாட்டு விசாரமும், மேற்கத்திய தர்க்க சிந்தையும் ஜேஜே-யின் எழுத்தின் சாரமாக, பாலுவால் அடையாளப்படுத்தப்படுகின்றன.  

கோபாலகிருஷ்ண அடிகா, குட்டிக்கிருஷ்ண மாரார், என்று, இந்திய பெருநிலத்தின் ஒரு பெரும் முன்னோடி எழுத்தாளர் பரிவாரத்தை , மொழிகளைக் கடந்து இந்த சிந்தனைப் பிரவாகத்தை எப்படி இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற ஆற்றாமையின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் இந்த நாவல் என்று குறிப்பிடுகிறார்.  



இந்த நாவலில் இடம்பெறும் உதாரண எழுத்தாளரான ஜேஜே-விலிருந்து ஏனைய பல எழுத்தாளுமைகளுக்கு ஒரு முன்மாதிரி நிஜங்கள் உண்டு.  முல்லைக்கல் மாதவன் நாயர்,  முளங்காடு கிருஷ்ண வைத்தியர் ஐயப்பன். திருச்சூர் கோபாலன் நாயர் எனப் பலரும் மலையாள எழுததுலகின் உண்மையான முகங்கள் என்று பல விமர்சனக் குறிப்புகளிலிருந்து நாம் அறிகிறோம்.  அந்தவகையில் இதன் கதைசொல்லி பாலுவின் எண்ணவோட்டங்களுக்கு ஒரு தீர்க்கமான பின்புலம் நமக்குப் புலனாகின்றது. ஒரு அனுபவக் குறிப்பு, அல்லது பத்திரிகை செய்தி என எடுத்துக் கொண்டு அதை ஜேஜே-வின் பார்வையில் விவரித்துக் கொண்டே, பாலுவின் பார்வையினூடே செல்கிறது நாவல்.  பாலுவின் ஆதர்சம் ஜேஜே என்றால், ஜேஜே-யின் நிர்தாட்சண்யமான எழுத்துத் தீவிரம் பாலுவிடம் படிந்திருக்க வேண்டும்.  ஆனால் எழுத்தாளரால் அந்த இடத்தை விலகியிருந்து ஆராதிக்க மட்டுமே முடியும் என்பதால், ஜேஜே-வும் பாலுவுமாக இணைகோடுகளுக்கிடையே ஒரு தர்க்கபூர்வ உணர்ச்சி தத்தளிப்பை நிகழ்த்துகிறார் நாவலாசிரியர்.  இந்த அனுபவக் குறிப்புகளின் மேல் நிகழ்த்தப்படும் தத்துவ விசாரணைகள்,  அவை நிகழ்ந்த பின்புலன்கள் பற்றிய மேலதிக தகவல்கள், அவற்றிடையேயான எழுத்தாளரின் அகப்பயணம், இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் அழகியல் என்று ஒரு கலாபூர்வ நிறைவைக் கொண்டிருக்கிறது இந்த நாவல். 

நோயுற்றிருந்த இளம்பருவத்தில், புனைவுலகை அடைக்கலமாகக் கொண்ட, கற்பனாவாத இளைஞனுக்கு, ஜேஜேயின் ஆண்-பெண் உறவுப் பற்றியக் கட்டுரை ஒன்று பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.  மாய்மாலங்களும், பொய்முகங்களும், எவ்வித சமரசங்களும் அற்ற, ஏளனங்களும் நுண் கேலிகளும் செறிந்த அப்பட்டமான எழுத்து. ஒருவகையில் ஜேஜே-வின் பரிச்சயம் பாலுவை கற்பனாவாதச் சூழலிலிருந்து தரைக்கு இழுத்து வருகிறது.  அதொரு கிராஷ் லேண்டிங் போன்ற நிலைகுலையவைக்கும் தரையிறக்கம். அதைத் தொடர்ந்து  பாலு தன்னுடைய சிறுவயதில், தன் சகோதரியுடனான பால்ய விளையாட்டை பகுத்தாராய முற்படுகிறார்.  ஒரு நெருக்கடி நிலை அளிக்கும் உந்துதலும், அதை சமாளிக்க முற்படும்போது உண்டாகும் தீவிரத்தின் பரவச நிலையும் ஒரு பகுதி.  அதன் வழியே அடையும் வெற்றியினால் உண்டாகும் மகிழ்ச்சி.  இடையே அந்த பாவனை உலகு விலகி, கனவுகள் பிடுங்கப்படும்போது உண்டாகும் அவஸ்தை.  இந்த மூன்று பகுப்புகளை நம் வாழ்வின் எந்தவித பகுதிகளுக்கும் நாம் பொருத்திக் கொள்ள முடியும்.  நாராயண குருவின் சீடரான சத்தியானந்தரின் ஆசிரமத்தில் பாலுவின் உடல் நோய்களுக்கு சிகிச்சைகள் நடக்கின்றன.  சத்தியானந்தரின் மானுட சேவையில் தன்னை கரைத்துக் கொள்ளும் உன்னத நோக்கம் எவ்வளவு தூரத்திற்கு பயன்தரும் பெறுமானத்தைக் கொண்டது என்ற நிதர்சனம் பாலுவிற்கு உறைக்கிறது.  சத்தியானந்தரின் தீர்க்கமான ஒருமுகப்பட்ட நோக்கிற்கு எதிர்மாறாக, அனைத்திலும் அலைக்கழிக்கப்படும், எதிலும் கொஞ்சம் நம்பிக்கையும், தொடர்ச்சியான தேடுதலையும் கொண்டவனாக, தன்னை உணர்கிறார் பாலு, முக்கியமாக தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜேஜே-வால், அவனுடனான சந்திப்புகளால், அவனுடனான கருத்து பரிமாற்றங்களால் தன்னை நிறைவு செய்து கொள்ள முடியும் என பாலு நம்புகிறார்.  பதிலுக்கு இவரால் தமிழிலக்கியத்தின் உச்சத்தை ஜேஜே-விற்கு கடத்தி விட வேண்டும் என்பது பாலுவின் விழைவு.  

ஜேஜே-வை சந்திக்கச் செல்லும் எழுத்தாளர் மாநாட்டில் திருச்சூர் கோபாலன் நாயரை சந்திக்கின்றார்.  பாலுவின் ஆதர்ச எழுத்தாளர்கள் தளத்தில் இருப்பவரல்ல கோபாலன்.  முற்போக்கு சரித்திர நாவல் என்ற பெயரில் பிற்போக்கான படைப்பை உருவாக்கியவர் என்பது பாலுவின் கணிப்பு.  அதற்கேற்றாற்ப் போல அவருடைய ஆதர்சமான ஜேஜேவின் எழுத்து, கோபாலன் நாயருக்கு அந்நியமாக இருக்கிறது.  அங்கே ஒரு புத்தகக் கடையில் வைத்து ஜேஜே-வை முதன்முதலாக பார்க்கிறார் பாலு.  சேர்த்தலை கிருஷ்ண ஐயர் மற்றும் முன்ஷி வேலுப் பிள்ளை போன்றோரின் பேச்சுக்களை விட ஜேஜே-வின் பேச்சு இளைஞர்களை ஈர்க்கிறது.  பாலுவும் அறிமுகப் படுத்தப் படுகிறார்.  அப்பொழுதுதான் ஜேஜே-யின் புகழ்பெற்ற வாசகமான 'சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?" கிண்டலை பாலு எதிர்கொள்கிறார்.  அது அன்றைய தீவிர இலக்கியச் சூழலில் எழுத்தாளர் கல்கியை கேலி செய்த போக்கின் எதிரொலி.  புதுமைப் பித்தனைப் பற்றி ஜேஜே-விடம் பாலு பிரஸ்தாபிக்க முற்படும்போது, முல்லைக்கல் மாதவன் நாயரின் வருகையோடு அந்த சந்திப்பு முடிந்து போகிறது.  

சூரியனை நோக்கி பறக்க முற்படுவதற்கும், கூரை மேலேறி கூவும் கோழியின் நிலைப் பற்றியுமான பாலுவின் விசாரம் தொடர்கிறது.  ஜேஜே தன்னுடைய நெருக்கடி காலத்தில் மிகுந்து உந்துதலோடு செயல்பட்டிருக்கிறான்.  ஆனால் வேதனைகளுக்கும், வறுமைக்கும் மத்தியில்தான் எழுத்து பரிமளிக்க வேண்டுமென்பதில்லை.  சிந்தனை பீறிடும் எழுத்தை படைப்பிலக்கியமாக ஏன் கொள்ள முடியாது என்பது பாலுவின் கேள்வி.  

ஜேஜேயின் எழுத்தில் எம் கே அய்யப்பனின் தாக்கத்தைப் பற்றி பாலு குறிப்பிடுகிறார்.  எம் கே மார்ச்கியவாதி.  இந்திய மரபு சிந்தனைக்கு மாறான போக்கைக் கொண்டவர்.  அதிர்ச்சி மதிப்பீடுகள் கொண்ட நிலைகுலைய வைக்கும் நோக்குடன் எழுதுவதை விட, ஒரு சமூக அமைப்பை மாற்றிப் போடும் விஞ்ஞான நோக்குடன் எழுதவேண்டிய அவசியத்தை பற்றி அவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்ததாக ஜேஜே-வின் நாட்குறிப்புகள் சொல்கின்றன என பாலு குறிப்பிடுகிறார்.  இந்த நாட்குறிப்புகள் பிற்பாடு பத்திரிகைக்கான எழுத்து பிரதிகளாக வடிவம் பெற்றிருக்கின்றன.  நேர் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட கேள்விகளின் மீது ஜேஜே-யின் எழுத்து விவாதங்களை கட்டியெழுப்புகின்றன.

வறுமையுற்ற சூழலில்தான் கலை படைப்பூக்கத்தின் உன்னதத்திற்கான வழி பிறக்குமென்றால், வறுமையும் வேண்டாம் கலையும் வேண்டாம் என்று ஆதுரத்துடன் சொல்லும் ஜேஜே கலையை காசாக்க மட்டுமே பயன்படுத்தும் வணிக மனநிலை மீது சிறிதும் மதிப்புக் கொள்வதில்லை.  இந்த சட்டகத்தை ஜேஜே வழியே பாலுவும், பாலுவின் வழியே கதாசிரியனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.  

கிருஷ்ண ஐயரின் ஒன்பது வயது பேத்தி, புல்வெட்ட வரும் கிழவன் ஒருவரின் சொந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே அவர் வேலையை முடித்துக் கொண்டு போகும்போது அவருடன் போய் விடுகிறாள். "அவர் ஒரு பாதி கதையை சொல்லி முடிப்பதற்குள் அவர் வேலை முடிந்து கிளம்பி விட்டார்.  மறுபாதியைக் கேட்க அவருடன் போய்விட்டு வந்தேன்" என்று அவள் விளக்குவதைக் கேட்காமல் வீட்டார் அந்த சிறுமியைப் போட்டு மொத்துகின்றனர்.  இந்த சம்பவத்தை ஜேஜேயின் நாட்குறிப்புகளிலிருந்து படிக்கிறார் பாலு.  கூடவே ஜேஜே-யின் மனைவி சரசம்மா "அந்தப் பெண் புத்திசாலி.  இன்னமும் கூட நேரம் கழித்து வந்திருக்க வேண்டும்" என்று சொல்கிறாள்.

ஏஜி சோமன் நாயரை சந்திக்க ஜேஜே வரும்போது பாலு வாசகநிலையிலிருந்து சற்று முன்னேறி சிறுகதைகள் எழுத்தாளனாகி விட்டார்.  இப்போது பாலுவிற்கு ஜேஜே-யுடன் முரண்படும் புள்ளிகளும், அப்படி முரண்படுவதற்கு அவருக்கான நியாயங்களும் தெரியத் தொடங்கிவிட்டன.  ஆனாலும் ஜேஜே-தான் தன்னை பழமைவாத வரம்புக்குள்ளிருந்து உந்தித் தள்ளி வெளிப்பட வைத்தது என்ற நம்பிக்கையில் மாற்றமில்லை.  அவர் உறக்கத்தைக் கலைத்து, சுரணைக் கெட்டத்தனத்தையும் தடித்தனத்தையும் குத்திக்காட்டி உணரச் செய்ததே ஜேஜே-வின் எழுத்துத்தான்.

அடுத்து ஓர் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி பாலு விவரிக்கும்போது, பாலுவும் ஓர் எழுத்தாளனாக அங்கீகாரம் பெற்று அந்த மாநாட்டின் விருந்தினராக கலந்து கொள்கிறார்.  அப்போது ஆல்பேர் காம்யு இறந்த செய்தி வருகிறது.  தொடர்ந்து ஜேஜே-வின் மரணச் செய்தியும்.  இந்துசூடன், கே பி கங்காதரன், தாமரைக்கனி, பசவப்பா என பல்வேறு எழுத்துலக தொடர்புகளிடையே தன் ஆதர்சத்தின் இறப்பை எழுத்தாளர் கடந்து செல்லும் காட்சி சுவைபட சொல்லப்பட்டிருக்கின்றது.  அதுவரை ஜேஜே-வை மையமாக கொண்டு பாலுவின் அகப்பயணமாக நகரும் நாவல், மெல்ல பாலுவின் புறவுலகை அவருடைய சுயபச்சாதாபமும், அங்கதமும் கலந்த விவரணையில் வாசகர்களுக்கு புலனப்படுத்துகிறது.  ஜேஜே-வின் மறைவிற்காக தன்னுடைய இரங்கலை இவ்வுலகிற்குத் தெரிவிக்க தத்தளிக்கும் ஓர் எழுத்தாளனாக பரிணாமம் அடைகிறார்.

ஜேஜே-வுடனான எழுத்தாளரின் நினைவோடை தொடர்கிறது.  நாம் ஒரு சம்பவத்தை நினைவடுக்குகளில் இருந்து மீட்டெடுக்கும்போது அதன் மீதான புதிய புரிதல்களும் திறப்புகளும் உண்டாகின்றன.  பாலுவிற்கும் அவர் தகப்பனார் எஸ். ஆர். எஸ்ஸுக்கும் அறிமுகமாகியிருந்த சம்பத்தின் நாட்டகத்திற்கு செல்லும்போது ஜேஜே-வை பாலுவின் அப்பா பார்த்தது பற்றி அடுத்த அத்தியாயம் பேசுகிறது.  காலத்தின் இடைவெளியிலோ, அல்லது தூரத்தின் இடைவெளியிலோ ஒரு காட்சி நமக்கு நன்றாக துலக்கமடைகின்றது என்று ஜேஜே சொல்வது அசோகமித்திரனின் நாவலில் வரும் கூற்றை ஒட்டி இருப்பதாகத் தெரிகின்றது.  நெருக்கத்தில் புலனாகாத பல நுணுக்கங்கள் அகல்கையில் உயிர்பெற்று நம்மை இழுத்துப் பிடிக்கின்றன.  ஜேஜே-வை ஓர் ஓவியனாக எழுத்தாளர் கண்டடையும் இடம் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது.  இத்தனைக்கும் அவர் அப்பாவுடனான அந்த பயணத்தில் ஜேஜே இடம்பெறவில்லை.  ஒரு அப்ஸ்ட்ராக்ட் (நுண்புல) வகை ஓவியத்தை  காட்சிபடுத்தும் அத்தியாயம் ஒரு சிறிய அப்ஸ்ட்ராக்ட் உத்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றது.  அது ஒரு சிறிய மறைமுக பொத்தான் (ஸ்விட்ச்) போல சரளமான விவரனைப் பகுதிக்கிடையே, அது மறைத்து பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றது எனலாம்.

பாலுவிற்கு ஜேஜே போல, ஜேஜேவிற்கு ஓர் பெரும் அகத்தூண்டுதலாக அரவிந்தாட்ச மேனன் நாவலில் சொல்லப்படுகிறார்.  இசை இலக்கியம் ஓவியம் என்ற கலைகளின் கூட்டுப் பரிமாணமாக அரவிந்தாட்சன் போன்ற ஆளுமைகள் பாலுவின் மனதில் எவ்வகை தாக்கம் செலுத்தினர் என்பதை இந்தப் பகுதி வழியே நாம் புரிந்து கொள்ளலாம்.   ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஜேஜே-விற்கு எதிரில் நின்றிருக்கும் தொழுநோய் பிச்சைக்காரனைப் பார்த்ததும், ஜேஜேவின் சிந்தைப் பிரவாகம் கட்டற்று ஓடுகின்றது.  பிச்சைக்காரன் மீது இரக்கப்படுவது என்பது இயல்பு.  ஆனால் அதில் நம்மை நாமே ஒரு படி மேலே ஏற்றிக் கொண்டு கொடையளிக்கும் பீடத்தில் நம்மை வைத்துக் கொள்ளும் ஒரு மறைமுக ஈகோ உணர்வும் எழுந்து விடுகிறது.  'தான் கொடையளிக்கிறோம்' என்ற உணர்வின்றி ஒருவருக்கு அவருடைய நிலைக்கு சமமாக, முடிந்தால் அதற்கும் கீழாக தன்னை வைத்துக் கொண்டு கொடயளிக்க இயலுமா என்ன?  அப்படி உதவி பெற்றுக் கொள்பவர் சற்றேனும் சிறுமை உணர்வு அடையாமல், அதை வேறு வக்கிர பிரயோகமாக கொள்ளாமல் அதைக் கடந்து போக முடியுமா? இது என்னைப் போன்ற சாமானியர்களின் சிந்தைப் போக்காக இருக்கலாம்.  ஜேஜேவிற்கு இந்த கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரனுக்கு உதவும் நிலை இன்னமும் பன்மடங்கு விரிவான பெரும் அகச்சிக்கலாக உருவெடுத்து நிற்கின்றது.  அந்த சிக்கலில் ஜேஜே உழன்று தவித்து, தெளியும்போது பல மணி நேரம் கடந்து விட்டிருக்கின்றது.  இப்போது உணர்ச்சி பிரவாகத்துடன் அந்த குஷ்டரோகி பிச்சைக்காரனைத் தேடி ஓடி வேறொரு குஷ்டரோகியைக் காண்கின்றான்.  அவனுக்கு முன்னால் ஒரு வெள்ளி நாணயத்தைப் போட்டுவிட்டு, அவனால் அந்த நாணயத்தை தரையிலிருந்து பற்றியெடுக்க முடியுமோ என்று உடனடி உந்துதலில் அந்த நாணயத்தை எடுத்துக் கொடுக்க குனிகிறான்.  அந்த இடைப்பட்ட பின்ன நொடியில் அந்தக் குஷ்டரோகி அந்த நாணயத்தை தன் காலால் அழுத்திக் காபந்து பண்ணிக் கொள்கிறான்.  இந்த சம்பவம் ஜேஜே-வை பெரும் அவமானத்திற்குள்ளாக்குகிறது.  'ஜென்மக் கணக்கு' எனும் சிறுகதையில் இப்படியானதொரு அனுபவச் சித்திரத்தை நானும் எழுதியிருக்கிறேன்.  பாலுவோ, ஜேஜே-வோ அடைந்த அனுபவம் போல் அந்த சித்திரமும் என் அனுபவத்தின்பால் உந்தப்பட்டு உருவானதுதான்.  தன்னுணர்வு அற்று பிச்சையளிப்பது பற்றிய அகக் கூச்சத்தில் தடுமாறும் ஒரு பாத்திரம்.  எதிரில் இருக்கும் பிச்சைக்காரி அவன் தடுமாற்றத்தை மறுதளிக்கும் அகந்தையாக புரிந்து கொண்டு அவளிடமிருந்த ஓர் இருபது பைசா நாணயத்தை இவனுக்கு கொடுத்துவிட்டு விலகிப் போவாள்.  அந்த சிறுமையை எப்படிக் கடப்பது என்று அவன் அல்லலுறுவான். 

தனிநபர் சுதந்திர சிந்தையின் அபத்த வெளிப்பாடுகள் இப்படியான நம்பமுடியாத முரண்களில் கொண்டு நிறுத்திவிடுகின்றன.  முல்லைக்கல் மாதவன் நாயர் போன்ற வெகுஜன வணிக படைப்பாளிகளின் சிந்தைக்கு அப்பாற்ப்பட்ட வெளியில் ஜேஜே நின்று கொண்டிருக்கிறான்.  சாமர்த்தியமான பெயர் உதிர்த்தல்கள், உலக இலக்கிய வாசிப்பனுபவம் என்கிற பீற்றல்கள், மைய நிரோட்ட இலக்கிய போக்கில் எதிராக தருக்கி நிற்கும் அகந்தை, இவையெல்லாம் முல்லைக்கல் மாதவன் நாயரை சீண்டுகிறது.  ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை.  அதனால் உண்டாகும் எரிச்சல்களும் கோபங்களும் கிளர்ந்தெழுகின்றன.  தங்கள் நிலையை காபந்து பண்ணிக் கொள்வதற்கென இலக்குகளை மாற்றியமைத்துக் கொண்டு சாமர்த்திய கேள்விகளை சாடிக் கொள்கின்றனர்.  இடையே ஜேஜே-வின் வாழ்க்கையின் காதல் பக்கம் ஒன்று வந்து போகின்றது.  ஜேஜே-யின் மனைவி சாராம்மாவின் பார்வையில் ஜேஜே மிகவும் திறமைசாலியான அரசியல்வாதியாக இருக்கிறார்.  

அரவிந்தாட்சனின் சொற்களில், பாலுவிற்கு தெரிவது ஜேஜே தன்னை ஒரு பெரும் இசையுலக பெர்ஃபெக்‌ஷனிஸ்டாக வைத்துக் கொண்டு, ஏனைய அபஸ்வரங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் வாழ்க்கை முழுவதும் கத்திக் கொண்டே இருந்திருக்கின்றான். ஜேஜே-வின் மீது தீவிர விமர்சனம் வைத்திருக்கும் பலருக்கும் அவன் மீதான அபிமானம் குன்றியதில்லை.  மாறாக ஜேஜே-விற்கு எதுவும் பிடிக்காமல் போய்க் கொண்டிருந்தன.   பாலு ஜேஜே-வின் பால்யக்காலம் பற்றி பிரஸ்தாபிக்க ஆரம்பிக்கின்றான்.  ஜேஜே-வின் எழுத்துலக பயணம் பற்றி விரிவான பல குறிப்புகள் சொல்லப்படுகின்றன.  அவனுடைய கால்பந்தாட்ட விளையாட்டு அனுபவங்கள் பற்றி அவ்விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி ஜேஜே எழுதிய கட்டுரைகள், அவனுடைய தொழிற்சங்க நல பங்களிப்புகள், அதனால் சிறை சென்றது, அவனுடைய இன்னபிற புத்தகங்கள் வெளியான ஆண்டு என்று அவனுடைய இறப்புவரை நுணுக்கமாக தொகுக்கப்பட்ட குறிப்புகளை நாம் காண முடிகின்றது.  இந்தக் குறிப்புகளின் தொகுப்பு இந்த நாவலுக்கு ஒரு வித்தியாசமான வடிவத்தை அளித்தாலும் ஜேஜே எனும் ஆளுமைப் பற்றியதொரு குறுக்குவெட்டுத் தோற்றம் அளிக்கப்படுகின்றது.  தன்னுடைய அன்றாட பணிகளுக்கென, தன் குடும்பத்திற்கு தேவையான இதர வேலைகளுக்கென ஒரு குற்றேவல் புரியும் தேவதையை அவன் மனம் நாடுகிறது.  அப்போதுதான் அவன் இந்த சமூகத்திற்கான மகத்தான பங்களிப்பை சுதந்திரமாகவும், தீர்க்கமாகவும் செய்ய முடியும்.  இதே போன்றதொரு பாதிப்பை பாரதியின் வாழ்க்கையிலும் நாம் காண முடிகின்றது.  எங்கோ இருக்கும் கரும்புத் தோட்ட ஊழியர்களுக்காக மனம் இரங்கி கவிபாடும் மனதை அன்றாடப் பசிப்பிணிக்கென அல்லாட வைப்பது நியாயமாகுமா.

ஜேஜே-வின் இறுதிக் காலங்களில் அவன் இந்த மனித சமூகம் மீது தொடர்ந்து நிராசைக்குட்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஓர் எழுத்தாளனை நேர்த்தியாக மதிப்பிடுவது போல், ஜேஜே-வின் மூன்று முக்கிய நூல்களைக் கொண்டு, ஓர் அனுபந்தமும் இந்த நாவலின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.  இந்த நாவலுக்கு பின்னர் தமிழ்வெளியில் இது போன்ற நவீன போக்குகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் பல வந்திருக்கின்றன.  அந்தவகையில் ஒரு முக்கியமான போக்கை ஜேஜே சில குறிப்புகள் தொடங்கி வைத்திருக்கின்றன.

ஜேஜே-வின் மீதான பாலுவின் பிரேமை, மெள்ள மெள்ள ஜேஜே-வின் ஆதர்சமான அரவிந்தாட்ச மேனன் மீது சென்றடைகிறது.  பித்தேறிய படைப்பூக்க மனநிலையிலிருந்து, ஒழுங்கமைதி கொண்ட தாள லயத்துடனான செய்நேர்த்தியின் அடர்த்தி நோக்கி ஜேஜே நகர்கிறான்.  அரவிந்தாட்ச மேனன் பேனாவில் மை நிரப்பும் அன்றாடச் செயலின் தாள லயத்துடனான இசைவில் மையம் கொள்ளும் ஜேஜேவின் குறிப்புடன் நாவல் நிறைவடைகிறது.  

பாலுவோ, அல்லது ஜேஜே-வோ தீர்க்கதரிசனத்துடன் சொல்லிய கிணற்றுத் தவளைகள் தங்கள் சுவர்களை தாண்டி வெளியே வந்து வெட்டவெளியில் இனிய சங்கீதம் பாட ஆரம்பித்து விட்டனவா என்றால் அதொரு நீண்ட விவாதத்திற்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது.  ஆனால் அந்த கிணற்றின் சுவர்களை அளந்து பார்க்க ஓர் அலகை இந்த நூல் நிச்சயமாக உருவாக்கித் தந்திருக்கின்றது.  இலக்கிய வெளி எனும் கிணற்றை மூழகடிக்கும் வெள்ளத்தின் தோற்றுவாய் என இந்த நூலைக் குறிப்பிட்டலாம்.



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

சஞ்சயனின் கண்கள்

பிரபல எழுத்தாளர் பானுமதி நடராஜன் அவர்கள், அம்மாவின் பதில்கள் சிறுகதை தொகுப்பிற்காக எழுதிய நூல் விமர்சனம்.  புனைவுகள் மட்டுமல்லாது, "வாசிப்போம், தமிழ் இலக்கியம் வளர்ப்போம் " என்ற ஃபேஸ்புக் குழுமத்திலும் தொடர்ந்து வாசித்து, நுட்பமான விமர்சனக் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பானுமதி அவர்களைப் போன்றோரின் வாசிப்பு வீச்சு எப்போதும் வியப்பளிப்பது.  இந்தக் கட்டுரையின் தலைப்பு அதற்கோர் உதாரணம்.  இன்னுமொரு கிளப்ஹவுஸ் நிகழ்ச்சியில், 'கத்திக்காரன்' கதைக்கென அவர் முன்வைத்த விமர்சனமும் அபாரமானது.  இது போன்ற கருத்து  பகிர்வுகளைப் பெறுமிடத்தில் இனி எப்போதும் நம் எழுத்து இருக்க வேண்டும் என மனவுறுதி கொள்ளும்படியான விமர்சனத்திற்கு நன்றி ]



அம்மாவின் பதில்கள் & பிற கதைகள்
ஆசிரியர்: ஸ்ரீதர் நாராயணன்
பதிப்பகம்: யாவரும்-பதாகை
விலை ரூபாய் 170/_

சஞ்சயனின் கண்கள்
எழுத்தாளரின் 13 சிறு கதைகளும் வாழ்வெனும் போர்க்களத்தில் நடக்கும் அனைத்தையும் சஞ்சயனின் கண்களால் பார்த்திருக்கின்றன. எந்தத் தரப்பையும் சாராமல், ஆனால், எதையும் விட்டுவிடாமல் பார்க்கவும், பேசவும், மௌனிக்கவும் செய்கின்றன. போரின் முன்னே தோன்றும் அசாதாரண அமைதி, அறத்துடன் தொடங்கி பின்னர் அனைத்தையும் விட்டுவிட்டு உக்கிரமாகும் போர், தளர்ந்து, ஒசைக் கேவலுடன், கதறலுடன், பின் எப்போதுமே மறக்க இயலாத வடுக்களுடன், சிறிய இனிமை காட்டி, அதனால் சிறிது நிம்மதியூட்டி அடங்கும் போர் என்று அனைத்தும் கதைகளில் காணக் கிடைக்கின்றன.
விடுதலைப் போரில் எம்டன் செல்வரத்தினத்தை காட்டும் கதை அவரது வரலாற்று அறிவைச் சொல்கிறது என்றால், ஜென்மக் கணக்கும், அம்மாவின் பதில்களும் குடும்ப நிகழ்வுகள். எம்டன் செல்வரத்தினம் ,கிழக்குப் பதிப்பகத்தின் சென்னை தின சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. அதில் நான் ஆறுதல் பரிசு அஸ்வதா மாவிற்காக பெற்றேன் (சந்தடி சாக்கில் சுயபுராணம்) தரகு, உடைநீர் ஓசை, கற்பகம் மூன்றும் மையமாக பெண்ணைச் சுற்றி வந்தாலும் மூவருமே ஒவ்வொரு விதத்தில் வஞ்சிக்கப்பட்டவர்கள். ஆரஞ்சு பொம்மை, பிரார்த்தனை, செந்தாழை மூன்றிலும் தாய்மை கொண்டாடப்படுகிறது. ஆனால், மாறுபட்ட விதங்களில்.
அம்மாவின் பதில்களில் மனோதத்துவம் இழைஇழையாகப் பின்னப்பட்டுள்ளது.'அம்மாவைப் பற்றி பேசும் போதெல்லாம், நந்தினியின் குரலில் ஆங்காரம் ஏறிக்கொண்டே போகும். அவள் கோபம் அம்மாவின் மேலா, அல்லது அம்மாவின் இடத்தில் அவள் இல்லாமல் போனதாலா என்று சமயத்தில் அவனுக்கு சந்தேகம் ஏற்படும்.'. அம்மா, பழைய சம்பவங்களை நினைப்பதில்லை. அப்பா, தேங்கிய குட்டையாகி விட, அவள் ஜீவ நதியாக ஓடுகிறாள்_அடுத்த மாநிலம் எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டில்லை. அவளது கம்பீரமே அவள் சொல்லிக் கொண்டே இருக்கும் பதில்; விமர்சனங்கள் அவளை பாதிப்பதில்லை. ஆனால், மகன்'திகில் உலகில்'காண திரை :நிகழ்ச்சியில் திடீரென கத்தியபடி வரும் குள்ளனை பார்த்து பயப்படுகிறான்.
ஜென்மக் கணக்கு அக்னி நட்சத்திரப் போர். இதில் மகனுக்கும் சிற்றப்பனுக்கும் இடையே நிலவும் வார்த்தைகள் இல்லா வஞ்சப்போர்.'புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்ட'தயாளன் சமநிலையைப் பேணச் சொல்லுவது அபாரம். கதையின் முடிவில் குமரம்பெருமாள் காரில் எப்படி ஏறுகிறார் என்பதை படியுங்கள்.
தரகில் என்னை கவர்ந்தது, குறைவாகப் பேசி தன்னை நிறைவாக ஒரு சாட்சியாக மட்டுமே நிறுவிக் கொண்ட கருணாகரன் முத்தாய்ப்பாக சொல்வது
அருமையாக
இருக்கிறது_'அதானே, தரத்துக்கு ஏத்த தரகு, வடியலுக்கு ஏத்த விறகு '
உடைநீர் ஓசையில், மாலினி, ரகுராமனை பார்த்து அவள் பேச நினைத்த சொற்கள் அத்தனையையும் அங்கேயே விட்டுவிட்டு அவள் மட்டும் வெளியே கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள்.
ஆரஞ்சு பொம்மை, வீடுகளில் நாம் காணும் யதார்த்தம். நண்பர் வருகையில் ஒரு முகம், அவர் குழந்தைக்காக தரும் பரிசை கொண்டாடும் அதே முகம், அவர் போன பிறகு அந்தப் பரிசைஅப்புறப்படுத்தும் உள் மனம் காட்டும் நிஜமுகம். ஸ்ரீதருக்கு பிடித்த நிறம் ஆரஞ்சோ? அம்மாவின் பதில்களில் ஆரஞ்சு வண்ண இனிப்பு பெட்டி, இதில் பொம்மை, கற்பகம் கதையில் ஆரஞ்சு வண்ண ஆர்கிட் பூக்கள்!
கற்பகம் கதை வண்ணதாசனை நினைவில் கொண்டு வந்தது-'இரவில் மலர்ந்த பன்னீர் மலர், பகலில் ஒளித்து வைத்தாலும் அதன் வாசம் காட்டிக் கொடுத்து விடும்.'மருதாணி வெளிறிய விரல்களுடன் கற்பகம் மறு வீட்டுக்கு வந்தது அவள் வாழ்வில் பளீரென்ற வண்ணத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது என்பதை அழகாகச் சொல்கிறது.
பிரார்த்தனை, அப்படி ஒரு நண்பனுக்காகவும் அவன் அன்னைக்காகவும் என்னை ஏங்க வைத்துவிட்டது.
சாமியும் கும்பிட வேண்டும் , மேனியும் நோகக்கூடாது என்பதைப் போன்ற கதை ஏ பி என் பெட்டிக்கடை சம்பவம். லைப்ரரி புத்தகத்தை அபேஸ் செய்யும் பலரை நான் அறிவேன்.
சவரம் செய்த முகம் உண்மையில் காட்டுமிராண்டியின் முகம். தோடி ராகத்தை அடமானம் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்த ஜமீன்தாரை நினைவு படுத்தும் கோர முகம்.
இளைப்பாறுதல் கதையின் நாயகி ஒரு நார்மடி பாட்டி. பேருறுவம் எடுத்துக் கொண்டு நிற்கிறாள். பேத்தியின் கணவனுக்கு மாப்பிள்ளை என்ற மரியாதை மட்டும்தான்-ஆனால் அழுத்தமாக பேசுகிறாள்-பேசிப் பார்த்து பிரச்சனையை தீர்க்க சொல்கிறாள்; வம்சத்தை வளர்க்கச் சொல்கிறாள்.'பூ தச்ச பின்னலோடு, தாழம் பூவில் மல்லிகை சரம் கோர்த்து, சந்திர சூரிய வில்லை எல்லாம் அலங்கரிக்க நீளமான பின்னலோடு'பார்த்த கொடும்பாளூர் அத்தை மகனின் உள்ளார்ந்த காதல்.; ஒரு சிலருக்கு நினைவில் மட்டுமே வாழ கொடுத்து வைத்திருக்கிறது.
கோடி டா மன அவஸ்தைகளைப் பற்றி, உடல் சார்ந்து சொல்கிறது. எவ்வளவு பிரியமான உயிர் துணையாக இருந்தாலும் அந்தத் துணை இறந்த பிறகு எதிர்பாலினத்தோழமை ஒன்றாவது வேண்டி இருக்கிறது. குள வரம்பினுள் ததும்பும் நீர்.
செந்தாழை எழுதப்பட்ட விதத்தாலும், உணர்வுகளின் ஓட்டத்தாலும், யார் பெற்ற பிள்ளையோ இப்படி அடையாளம் இல்லாமல் மார்ச்சுவரியில் கிடக்கிறதே என்று அலறும் தாய்மையின் இயல்பாலும், அவன் தன் பிள்ளை இல்லை என்றாலும், இனியும் தான் ஐட்டங்காரன் அன்னை என்றுதான் அழைக்கப்பட கூடுமோ என்ற பகீர் உணர்வாலும் சிறப்பாக வந்துள்ள கதை. என்னை மிகக் கவர்ந்த கதை
'ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்து போகும் பல கண ங்களையும், அவற்றில் தொக்கி இருக்கும் உறவுகளையும், அவற்றினுள் உள்ள ஒலிகளையும், மௌனங்களையும் சுமந்து கொண்டு இருக்கின்றன. படிக்க படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்ல மெல்ல செவியைத் துளைக்கும் கர்ண நாதம் போல் அதிர ஆரம்பிக்கின்றன.'எழுத்தாளர் அம்பை
எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஒன்றை மட்டும் சொல்கிறேன். கதை தரகு பக்கம் 39-சோகைய அன
மதுரை, திருநெல்வேலியின் தமிழும், அந்த வட்டாரத்தின் சொல் மொழிகளும் ஈர்க்கின்றன.


நூலினைப் பெற
Be4Books
#24, Shop No.B, First Floor,
S.G.P Naidu Complex,
Velachery main road,
Velachery, Chennai -600 042.

Conduct & watsup No.90424 61472
gpay:+91 99400 21472

(பிரதிகள் வேண்டுவோர் என்னுடைய தனிப்பட்ட வாட்சப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். +1 (630) 363-0673)


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை


நாம் பெரும்பாலும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகளுக்கு விடைச் சொல்லும் புத்தகம் தான் இது. உதாரணமாக, பேய் இருக்கா இல்லையா? சாதி என்றால் என்ன? மேல் சாதி, கீழ் சாதி என எதை வைத்துச் சொல்கிறார்கள்? மனசு எங்கே இருக்கு? என்பதைப் போல் அடிக்கடி நம் செவிகளும் கேட்ட கேள்விகளான உனக்கு மூளை இருக்கா? சமைப்பது யாருடைய வேலை?, நீங்க என்ன சாதி? என்ற கேள்விகளுக்குப் பதிலையும்;

கண்ணாடி முன்னால் நில்லுங்கள்!
கொஞ்சம் வரலாறு,
சாமி கண்ணைக் கெடுத்திடும்!
கொஞ்சம் புவியியல்,
இருட்டு எனக்குப் பிடிக்கும்
என்ற தலைப்புகளில் புதிய பல தகவல்களையும் சொல்லும் புத்தகமாய் எழுதப்பட்டுள்ளது.

யாராவது ஒரு வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், உனக்கு மூளை இருக்கா? இல்லையா? என்று கேட்போம். அதே அந்த வேலையை ஒருவர் திறம்படச் செய்து விட்டால், “என்ன மூளை அவனுக்கு!” என்று சொல்வோம். சிறு பிள்ளைகளைத் திட்டும் பொழுது ” மூளை இல்லாத முண்டம்” என்றெல்லாம் திட்டுவதும் உண்டு. அப்படிப்பட்ட மூளையின் பங்கு என்ன? மூளை எங்கு உள்ளது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் மூளை இருக்குமா? இல்லை… இல்லை… மூளையின் அளவு எல்லோருக்கும் 1 கிலோ முதல் 1.4 கிலோ எடை அளவு தான் இருக்கும். ஆனால், ஓர் உறுப்பை எந்த அளவிற்குப் பயன்படுத்துகின்றோமோ! அந்த அளவிற்கு அதனுடைய வளர்ச்சியும், அதைப் பயன்படுத்தாமல் விட்டால் நாளடைவில் அது அழிந்தும் விடும் என்பதற்குச் சான்றாகச் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணம் மூளை தான். அதனால், மனிதர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து மூளைகளும் “சமமாக நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்பட வேண்டும்.” பொது நன்மைக்காக நம்முடைய மூளைகள் யோசிக்க வேண்டும். புதிது புதிதாக நம் மூளை யோசிக்க வேண்டும். இல்லாவிடில் அது பழசாகிவிடும் என்பதை உணர்த்துகிறது.

சமைப்பது யாருடைய வேலை? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் முதலில் பெண்களைத் தான் சொல்வார்கள். ஆனால், சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் நன்றாகவே சமைக்கத் தெரியும். அப்படித் தெரியாவிடினும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். வளரும் போதே ஆண் பிள்ளைகளுக்கும் சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும். என்பதை ஒரு தெளிவான பார்வையுடன் சொல்லி, “நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்? நான் தான் சம்பாதிக்கிறேன்.” என்று இனி பெண்களைப் பார்த்து ஆண்கள் கேட்டால், அதற்கு ஒரு பதில் சொல்லப்பட்டுள்ளது. அது, அப்பா வாங்கும் சம்பளத்தில் 1 பங்கு அப்பாவுக்கும், +0.8 பங்கு அம்மாவுக்கும், +0.6 பங்கு ஒரு குழந்தைக்கும், +0.6 பங்கு இன்னொரு குழந்தைக்கும் உண்டாம். இனி சட்டம் தெரியாமல் எந்த ஆணாவது பேசினால் இதைச் சொல்லிவிடலாம் பதிலாக!

நாம் யாரிடமாவது கொஞ்சம் நன்றாகப் பேசி பழகி விட்டால் போதும், அடுத்து அவர்கள் தெரிந்து கொள்ள நினைப்பது என்ன சாதி? என்றுதான். அந்தச் சாதிக்கான விளக்கம், சாதி வந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு, இன்றைக்கு இரண்டு சாதி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவை மேல்சாதி, கீழ்சாதி என்பது சரிதான் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு சாதி. “முட்டாள் சாதி”.

சாதியாவது, கீதியாவது எல்லோருமே குரங்கின் பேரப்பிள்ளைகள் தான் என்பவர்கள் எல்லாம் ஒரு சாதி, மனிதச் சாதி அதாவது “அறிவாளி சாதி “.

இன்றைக்குத் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரக்கூடியதை நன்கு கவனித்தால்,
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா?
முகப்பரு போக வேண்டுமா? உடம்பில் நாற்றம் வருகிறதா?
பல் பளிச்சிட வேண்டுமா?
என ஏதோ நாமெல்லாம் ஒட்டுமொத்தக் குறையுடன் பிறந்ததைப் போல, ஒவ்வொன்றையும் குறையாகக் காட்டி விளம்பரப்படுத்தப்படுகிறது. விளம்பரப்படுத்தப்படும் அனைத்தையும் சாடியுள்ள புத்தகம்.

மேலும், நிறம் என்பது அழகு அல்ல; உழைப்பும், படிப்பும் நல்ல பேச்சும், நல்ல பழக்கமும் தான் அழகு; என “கண்ணாடி முன்னால் நில்லுங்கள்” என்ற கட்டுரை சொல்லியுள்ளது.

‘வரலாறு’ என்றாலே ஓர் அறுவை என்பதைப் போல பள்ளி நாட்களிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆம்! வரலாற்றில் ராஜா, ராணி, நாடு, போர், ஆட்சி மட்டும் இருந்தால் அறுவையாகத் தானே இருக்கும். ஒரு ராஜா நாட்டை ஆண்டு, அவன் ராஜபோக வாழ்க்கை வாழ அவன் உழைத்தானா? உழைத்தது மக்கள்; போரில் போராடி உயிரை விட்டது மக்கள்; அவர்கள்தான் வரலாறு. “ராஜாக்களை பேசுவது மட்டுமல்ல, மக்களைப் பேசுவதும் தான் வரலாறு” என்பதைச் சொல்லியவிதம் அருமை.

சிலர் சின்ன பிள்ளைகளிடம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். “அப்படியெல்லாம் பேசக்கூடாது… சாமி கண்ணைக் கொத்திவிடும்…” என்று! அப்படி மூடநம்பிக்கையான, பாம்பு பால் குடிக்குமா?, பாம்பு டான்ஸ் ஆடுமா?, கிழமைகளில் நல்ல கிழமை, கெட்ட கிழமை என்று உண்டா?, ஏன் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமைக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள்? என இந்தக் கேள்விகளுக்கான தக்க அறிவியல் விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும், ஜோசியம் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைத் தொடுத்து, “அறிவியல் தான் இனி வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

பூமி எவ்வாறு தோன்றியது? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கொதிக்கும் பாறைக் குழம்பாக இருந்தது பூமி. அங்கே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்ததால் பூமி நிரம்பிப் பல காலம் நீர்க்கோளமாகவே இருந்ததாகவும், பிறகு நீர் ஆவியாகி நிலப்பரப்பு வெளியில் தோன்ற ஆரம்பித்த பின்பு அதுதான் கண்டங்களாகவும், கடலாகவும் மாறியது என்பதையும், நிலப்பரப்பு தோன்றிய போது ஏழு கண்டங்களெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே கண்டம் தான், அது “பாங்கீ கண்டம்” அப்போது மனிதன் கிடையாது.

அதன் பிறகு இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. ஏனென்றால், பூமியின் மேற்பரப்பில் இருந்த “டெக்டோனியம் பிளேட்டுகள்” (பூமி முட்டை போல் இருக்க, அதன் ஓட்டின் மேல் தான் கடலும், கண்டமும் இருந்தது. அந்த ஓடு உடைந்து பத்துத் தட்டுகளாய் மிதந்தது. அதுதான் டெக்டோனியம் பிளேட்) நகர்ந்ததால் மேல் பகுதி “லாராஷிய கண்டமாகவும்”, கீழ்ப்பகுதி “கோண்ட் வானா” கண்டமாகவும் பிரிந்தது.

முன்பு இந்தியா நான்கு பக்கம் கடலாக இருந்ததையும், பிறகு மூன்று பக்கம் கடலைக் கொண்டதாக மாறிய நிகழ்வையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்தப் புத்தகம் அமைந்தது.

இப்படி உருவான இந்தப் பூமி எப்படியெல்லாம் கூறு போட்டு,
உன் நாடு, என் நாடு
உன் இனம், என் இனம்
உன் மொழி, என் மொழி
உன் சாதி, என் சாதி என்று மாற்றிய மனிதர்களுக்கு ஒன்று சொல்லியுள்ளார்.

“டெக்டோனியம் பிளேட் நகராத வரைக்கும் தான் இந்தியாவுல இருக்க முடியும். அதுவரைக்கும் வாய பொத்திக் கிட்டு இருக்கணும். வரலாறும் தெரியாம, புவியியலும் தெரியாம முட்டாள் தான் உன் நாடு, என் நாடு என்று சொல்லுவான்.” என்று இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் இந்த உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வாசகர்களாகிய நமக்கு வைத்துள்ளார். நிறைவாக “இருட்டை எனக்குப் பிடிக்கும்” என்ற கட்டுரையின் வாயிலாக நமக்கும் இருட்டைப் பிடிக்க வைத்துள்ளார். உங்களுக்கும் பிடிக்க வேண்டுமா? படித்துப் பாருங்கள் புத்தகத்தை…


நூல் தகவல்:

நூல் : இருட்டு எனக்குப் பிடிக்கும் 

ஆசிரியர் :  ச. தமிழ்ச்செல்வன்

வகை :   கட்டுரை 

வெளியீடு :  வாசல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2017

பக்கங்கள் : 80

விலை : ₹  70

 

The post இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

  •  

வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன்


பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவை ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தியனின் கதை. இரு நடு வயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேம்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீசுவரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குரியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுறும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்சை முறைகளை. புள்ளி விவரங்களை வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ் வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றைத் திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர் விழா பற்றிய நுண் விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஓர் அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமுகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீனத் தகவல்களும், இளந்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.


– மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.

நூல் தகவல்:

நூல் :  கர்ஜனை

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு :  முதல் பதிப்பு 2023

பக்கங்கள் : 160

விலை:  ₹ 300

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

The post வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன் appeared first on Vimarsanam Web.

  •  

பூனையே உன் கண்ணை மூடு

 நூல் விமர்சனம்


நூல் : பூனையே உன் கண்ணை மூடு 

நூலாசிரியர் :  மா.காளிதாஸ் 

வெளியீடு : மௌவல் பதிப்பகம்

பக்கம் : 74 

நூலின் விலை : 100


 

அவர் ஒரு ஆசிரியர் பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் .

இதற்கு முன் "சடவு" நூலை எனக்கு அனுப்பிவைத்திருந்தார் அதுவும் நல்ல கவிதை தொகுப்பாக இருந்தது.

அடுத்ததாக இந்த புத்தகத்தை கேட்டேன் கேட்டதும் அனுப்பிவைத்தார். 


தமிழ்பல்லவி இதழ் நடத்திய கவிதைப்போட்டியில் ஹைக்கூ வகைமையில் இவருடைய "பூனையே உன் கண்ணை மூடு " என்ற இந்த புத்தகம் மூன்றாம் பரிசு பெற்றது அதற்கு என் வாழ்த்துகள்  .


ஹைக்கூ என்பது  எப்போதும் நம்மை சுற்றியுள்ளவைகளை நாம் கண்டு உணர்ந்து கொள்வது 

இன்னொன்று நம்மை நாம் உணர்ந்து கொள்வது 

ஹைக்கூ அதன் பிறப்பு ஆழ்கடலின் அமைதியை போன்றது 

வெளியே சலனத்துடன் இருந்தாலும் உள்ளே சலனமற்ற ஒரு தியான நிலையையொத்தது .


   ஹைக்கூவிற்குள் நுழைவோம் 


        கண்ணாடியை கடக்கும் 

        துறவி முணுமுணுக்கிறார் 

        இது சுக்குநூறான பிம்பம்.


உடைந்த கண்ணாடியில் சுக்குநூறான பிம்பம் எத்தனை யதார்த்தை கொணர்கிறது இந்த கவிதை.


        துறவியின் மடியில் பூ விழுகிறது

        சீடன் குழம்புகிறான் 

       வரமா?  சாபமா?  


வரத்தையும் சாபத்தையும் ஒரு பூ தீர்மானிக்குமா?  

வரமென்பதையும் சாபமென்பதையும் அந்த ஒரு பூ அறிந்திருக்குமா?  

  யாருக்கு அது  வரம் யாருக்கு அது சாபம் யாருக்குதான் தெரியும் 

தெளிந்தோருக்கு ஞானம்.


           துறவியின் தாடியில் 

           அமர்ந்திருக்கிறது ஈ 

           தியானம் கலையும் வரை.  


இங்கே தியானம் என்பது எது 

யாருடைய தியானம் கலையும் வரை 

துறவியா?  ஈ யா?  அல்லது வாசிக்கும் நாம் ஆ ? 

முதலில் யாருடைய தியானம் கலையும் .


          வசந்தத்திலும் உதிர்கிறது 

          ஒரு பழுப்பிலை 

          புழுவை சுமந்துக்கொண்டு.


நம்மை நாம் சுமப்பதே பாரமாக நினைக்கின்ற இந்த உலகில் 

ஒரு பழுத்த இலை தான் உதிர்கிற நிலையிலும் 

ஒரு புழுவை சுமந்துக்கொண்டு உதிர்கிறதே ஆஹா என்ன ஒரு தியானத்தை கடந்த  ஞானம் .. உள்ளே சென்று ஆழ்ந்து சிந்தித்தால் இங்கே புழுவும் இலையும் ஒரு குறியீடு மட்டுமே நம்மை ஒரு ஜீவன் சுமக்கிறதே அதுதான் மெய்ஞானம்.


         பழைய கிராமம் 

         புதிய பாதையில் போய்த் 

         திரும்பிவிட்டது காற்று.


காற்றால் நிரம்பியது தான் உலகம் காற்றின் திசை யாரும் அறியாதது எங்கும் நிறைந்தது காற்று நம்முள்ளும் காற்று தான் நிரம்பியிருக்கின்றன. 


       தொடர் மழை 

       நனைந்த துறவி சொல்கிறார் 

      இன்னும் நான் நனையவே இல்லை .


ஆம் நான் எப்போது நனைந்தேன் உடல் தான் நனைந்தது மனம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

ஒரு வாசகனுக்கு ஹைக்கூவை கடத்துவதும் இப்படிதான் கடத்த வேண்டும் அதை கவிஞர் மா. காளிதாஸ் சிறப்பாக செய்கிறார்.


        அடைமழைக்குப் பின் 

       வானம் வெளுத்திருக்கிறது 

       குருவிகள் கரையான் தின்கின்றன. 


அடைமழைக்குப் பின் காலைபொழுதில் நிலங்களில் ஆங்காங்கே கரையான்களை குருவிகள் கொத்தி தின்பதை பார்க்க முடிகிறது அந்த அழகிய காட்சிகளை 

கண்முன்னே கொண்டுவருகிறார் கவிஞர்.


       யாருமற்ற அறை 

       சுழன்று சுழன்று 

      நின்றுவிட்டது காற்று.


ஏன் அந்த அறையில் யாருமில்லை எல்லோரும் எங்கு சென்றார்கள்

அறையின் கதவு திறந்திருக்கிறதா இல்லை மூடியிருக்கிறதா 

மூடிய அறையாக இருந்தால் எப்படி காற்று சூழலும் நிச்சயம் அறை திறந்துதான் இருக்க வேண்டும் 

யாருமற்ற அறையை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது காற்று என்பது  எவ்வளவு

உணர்ந்துகொள்ள வேண்டிய விசயம் ..

 

       புதர் மண்டிக் கிடக்கிறது

       பயனற்ற பாதை 

       பறக்கிறது வண்ணத்துப்பூச்சி.


பயனற்ற பாதையென்று எதுவும் கிடையாது 

பயணத்தின் பாதை முடிவற்றது 

பாதைகள் முடிவதில்லை பயணத்தின் பாதையில் 

முடிவிலியில் நாம் தான்  மடிந்துபோகிறோம் .

மலர்களை தேடும் வண்ணத்துப்பூச்சிக்கு தனித்த பாதையென்று எதுவும் கிடையாது திரும்பும் திசைகளெல்லாம் பாதைகளௌ தான்  அதுபோல தேடல்கள் உள்ள மனதிற்கு பாதைகள் தேவையேயில்லை என்பது என்னுடைய கருத்தாக கருதுகிறேன்.


      பதிலேதும் சொல்லாமல் 

      மாயமாகிறார் துறவி 

     அப்போதும் தொங்குகிறது புழு .


துறவி ஏன் சொல்லவேண்டும் அதற்கு புழுவின் தியானம் புழுவிற்கு 

யாருக்கும் யாரும் சொல்லித்தர தேவையில்லை அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள் அதுவே தியானத்தின் உச்ச நிலை.

இப்படியொரு தொகுப்பை கையில் கொடுத்ததற்கு கவிஞருக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும் ..


- ச. இராஜ்குமார் 

 

  •  

சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து

குறைந்தபட்சம் ஒரு முத்தத்தையாவது எதிர்பார்த்து ஏமாந்த கவிதை, உங்கள் அவசரத்தைக் கண்டு, தன்னை அடியாழத்தில் புதைத்துக் கொண்டதை அறிவீர்களா என்று நேரடியாகவே குற்றம் காட்டுகிறார். இந்தப் பொருண்மைக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பின்னட்டையில் போட்டிருப்பதிலேயே தெரிகிறது.
  •  

பசந்தி – கவிதைத் தொகுப்பு நூல் – ஒரு பார்வை

சொற்களுக்குள் இருக்கும் வானிலிருந்து பொழியும் மழை கடலைச் சேரும்வரை தாகத்துடன் கவனித்தல் நிகழ்கிறது. “உயரே வெளியின் கீதம் அந்தரத்தில் நீலத்தின் மந்திரம் தூர இருட்டில் மினுங்கும் கருப்புநெருப்பு நாமேவெனப் பறக்கும் குருட்டுப்பறவை ஓசையின்றி போகும் அதன் புதிர்சாலை வளராவெளியில் நகரும் இருட்டு ஓவியம் பள்ளத்தாக்கில் இருந்து வீசும் புதிய காற்று சொட்டச் சொட்ட நிறையும் கருப்புமை யாவும் இருட்டு மயம் கண்களுக்கு வெளியே விசேஷ இருட்டு அடி ஆழத்திலோ விபரீத நெருப்பு” ‘தாமே’ என்று தலைப்பிடப்பட்ட மேற்கண்ட […]

The post பசந்தி – கவிதைத் தொகுப்பு நூல் – ஒரு பார்வை appeared first on Nutpam.

  •  

தொகுதி 1, இதழ் 3 விமர்சனம் : ‘மறைமுகம்’, ஜா. தீபா தாரா 450 சொற்கள்…

தொகுதி 1, இதழ் 3

விமர்சனம் : ‘மறைமுகம்’, ஜா. தீபா

தாரா

450 சொற்கள் | வாசிக்க: 2 நிமிடங்கள்

இதழாசிரியர் குறிப்பு:

சமகால பெண் எழுத்தாளர்களில் நுண்ணுணர்வு கூடி சில கதைகளை படைத்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் ஜா. தீபா. தமிழ் இலக்கியச் சூழலில் அவருடைய ‘மறைமுகம்’ கதை அதிகம் பேசப்பட்டது. சுதந்திரப் போராளி வாஞ்சிநாதனின் மனைவியின் உலகத்துக்குள்ளிருந்து விரியும் இந்தக் கதை தமிழில் பெண் எழுதிய முதன்மையான கதைகளில் ஒன்று என்ற எண்ணம் எனக்கு உள்ளது. இந்தக் கதை குறித்தும், ஜா. தீபாவின் மற்ற படைப்புகள் குறித்தும், அடுத்த இதழில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளிவரும்.

மறைமுகம் சிறுகதை, மற்றும் ஜா. தீபாவின் கதையுலகத்தை பற்றிய நல்ல வாசிப்புக் குறிப்புகள் இங்கே காணலாம். சுட்டிகள் [1], [2], [3], [4]

ஆனால் இவ்விதழில், ‘மறைமுகம்’ கதையை ஒட்டி ஒரு விமர்சனப்பார்வை முன்வைக்கப்படுகிறது. எழுதுபவர் விமர்சகர் தாரா.

பாராட்டப்பட்ட ஒரு கதையை விமர்சித்தபடி உரையாடலைத் தொடங்குவதன் காரணம் என்ன? எதிர்மறைத்தன்மை, குதர்க்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். பல்வேறு வகையான வாசிப்புகள் ஒரு கதை மேல் படியும் போது அந்தக் கதை அந்தச் சூழலில் மேலும் முக்கியத்துவம் பெருகிறது என்பதே உண்மை. விமர்சனம் வந்தால் தான் எதிர்விமர்சனத்துக்கான சாத்தியம் உள்ளது. ஒரு கதை விவாதிக்கப்படுகிறது என்றால் அது பொருட்படுத்தத்தக்கக் கதை என்று அச்சூழல் நினைக்கிறது என்று அர்த்தம்.

ஒரு நல்ல விமர்சகர் சூழலுக்கும் வாசகருக்கும் ஒரு கதையை எப்படியெல்லாம் வாசிக்கலாம் என்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். கதையின் அழகியல் எங்கே கைக்கூடுகிறது, எங்கே தோல்வியடைகிறது என்று அவர் சுட்டிக்காட்டுவது வாசகர்களுக்கும், மற்ற எழுத்தாளர்களுக்கும் சில வாசல்களை திறக்கக் கூடியது. குறிப்பாக, நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்து அதன் பாதைகளை வெவ்வேறு வகைகலில் கண்டடைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இது போன்ற கூரிய விவாதங்கள் அவசியம் என்று நினைக்கிறேன்.

தாரா இந்தக் கட்டுரையில் ஜா.தீபாவின் எழுத்தோடு ஒப்பிடும் இரு படைப்புகள், Edith Wharton எழுதிய ‘The House of Mirth’ என்ற நாவலும், Kate Chopin எழுதிய ‘The Awakening’ என்ற நாவலும். ஒரு விமர்சகர் ஓர் எழுத்தாளரை வாசித்து, அவருடன் ஒப்பிடக்கூடிய, அவர் களத்தை மேலும் நுட்பமாக எழுதிய மற்ற எழுத்தாளர்களை கண்டடைந்து சொல்வது மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்று நினைக்கிறேன். மூலக் கதையின் ஆசிரியர் இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம், நிராகரிக்கலாம், அது அவர் தேர்வு. ஆனால் சூழலில் மற்றவர்கள் இந்தப் பரிந்துரைகளை வாசித்துச் சிந்தித்துப் பார்க்கலாம். இவ்விரு நூல்களும் இன்னும் தமிழில் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் முயன்று பார்க்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

ஜா. தீபாவின் மறைமுகம் என்னும் கதையை வாசிக்கும்போது இது வரலாற்றில் எங்கு நிகழ்கிறது என்னும் கேள்வியே முதலில் ஒரு வாசகனை வந்தடைகிறது. இது ஒரு உண்மை சம்பவத்தை சார்ந்து புனையப்பட்டது என்பதால் மட்டுமே அதன் காலம் கதையில் தெளிவாக புலப்படுகிறது. அதை தாண்டி இக்கதையின் விவரணைகள், கதை புலம் ஆகிய எதன் வழியாகவும் காலகட்டத்தை நிர்ணயிக்க முடியாது. இது எழுத்தாளர் வேண்டுமென்றே எடுத்த முடிவாக இருக்கலாம். ஆணின் ஒரு முகம் பெண்ணுக்கு நிரந்தரமாகவே மறைக்கப்பட்டுள்ளது அதன் மூலம் புற உலகும் மறைக்கப்படுகிறது. இவ்வாறு மறைவில் வாழும் பெண்களின் நித்தியமான நிலை குறித்து கூற முயல்வதாக எடுத்து கொள்ளலாம். ஆனால் அவ்வாசிப்பு என்னை பெரிதாக கவரவில்லை.

மறைமுகம் என்ற இக்கதை வரலாற்று சித்திரத்தை கோருகிறது என்றே உணர்கிறேன். அது கதையில் வரும் நிகழ்வை வரலாற்றில் நாம் பொறுத்தி பார்ப்பதற்காக மட்டுமல்ல. இந்திய சமூகத்தில் அவ்வரலாற்று காலம், அதாவது விடுதலைக்கு முந்தைய காலம், ஒட்டுமொத்தமாக எல்லோருக்குள்ளும் ஒரு பிளவாளுமையை உருவாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. லட்சியவாதத்திற்கும் தனிவாழ்க்கைக்கும் இடையில், சமூகத்திற்கும் குடும்ப அமைப்பிற்கும் இடையில், அதன் நீட்சியாக பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையில் ஏற்பட்ட பிளவு. அல்லது ஏற்கனவே இருந்த இடைவெளி பெரிதானதன் வரலாறு. இவ்வகையில் கதையை பார்க்கும்போது மேலும் விரிவடைகிறது.

கதையின் உணர்ச்சி மையமாக தன் கணவன் உண்மையில் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவனது உலகில் என்ன உள்ளது? எதை விரும்புகிறான்? எதன்மீது பற்று கொண்டுள்ளான்? என்று அறிந்துகொள்ள மட்டுமே விரும்பும் மனைவி காமாட்சி இருக்கிறாள். அவள் அவனது உலகத்திற்குள் நுழைய விரும்புகிறாள். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவனுக்கு கடிதங்கள் வந்து சேர்கின்றன. ஆனால் வாசிக்க தெரியாத அவளுக்கு அவை வெற்று தாள்களாக உள்ளன. அவனை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் சக்தியாக மட்டுமே சமூகத்தையும் அதன் பிரச்சனைகளையும் அவள் காண்கிறாள். அவளது வாழ்க்கை சிறு சிறு அன்றாட வலிகளால் ஆனது. அவள் அம்மா அவளுக்கு கையளித்து சென்றவை அவை. வலிகளை தாங்கிக் கொள்வது அன்றி அதிலிருந்து தறுக்கியெழுவது குறித்து அவள் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. கதையின் இறுதி தருணம் வரை.

குறைந்தபட்சம் அவள் கேட்பது தன் குழந்தை மூலமாகவாவது கணவனுடன் எதோ ஒரு உறவை. பிறந்து சில நாட்களே ஆன அவள் மகளிடம் இதையெல்லாம் கூறுகிறாள். குழந்தையை அவன் கையில் வாங்கிக் கொள்ளும் போது அவன் முகத்தை ஒரு முறை நல்ல வெளிச்சத்தில் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கும் தருணம் காமாட்சியின் கதாபாத்திரத்தை அணுக்கமாக்குகிறது.

இறுதி வரை குழந்தையை காண அவன் வருவதில்லை. முடிவில் காமாட்சியால் அவனது முகத்தை சடலத்தில் அடையாளம் காணமுடியாத இடத்தில் கதையின் உணர்ச்சி உச்சத்தை அடைகிறது. இந்த தருணத்தின் எடையை மறுக்க முடியாது, ஆனால் அது எந்த நுட்பமும் இல்லாமல் கையாளப்பட்டுள்ளது.

கதையின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று அதன் மிகையான நாடகத்தன்மை கொண்ட உரையாடல்கள். குறிப்பாக கதையின் இறுதியில் வரும் உரையாடல். கதாபாத்திரங்களின் வலி இயல்பாக வெளிப்பட அனுமதிப்பதற்கு பதிலாக, இவ்வுரையாடல்கள் இடைவிடாமல் ஆசிரியரின் கருத்தை நிலைநாட்ட முந்துகிறது.

நுட்பங்களுக்கு சிறிதும் இடமளிக்காத விவரணைகளும் கதையின் போதாமைகளில் ஒன்றாக கூறலாம். இறந்து போன தன் ஒரு மாத குழந்தையை கையில் வைத்திருக்கும் காமாட்சியில் இருந்து கதை துவங்குகிறது. இரவு முழுக்க அழுதுமுடித்து விடியல் நெருங்கும் நேரம். அந்த தருணத்தின் வெறுமையை நுட்பமான உடலுணர்வு, தொடுகை ஆகியவற்றால் மட்டுமே விவரித்து கொண்டுசெல்ல முடியும். அவ்வாறு தான் கதை தொடங்குகிறது. ஆனால் விரைவில் ஆசிரியர் இடைமறித்து வாசகன் அங்கு என்னென்ன உணரவேண்டும் என விளக்குகிறார்.

Kate Chopin-ன் The Awakening என்னும் நூலில் கதாநாயகி தன்னை அறிந்து கொள்ளும் தருணம், Edith Wharton எழுதிய House of Mirth என்னும் நாவலில் லில்லி அவளது பாதுகாக்கப்பட்ட சிறு உலகின் எல்லைகள் உடைவதை உணரும் தருணம் என பெண் கதாபாத்திரம் இயல்பென்று நம்பியிருந்த வாழ்க்கை சித்திரம் உடைபடும் இடங்கள் பல பெண்ணெழுத்தில் உள்ளன. இப்படி ஒரு பெரிய நிரையில் இக்கதையையும் பொறுத்தி பார்க்கலாம்.

ஆனால் இத்தருணங்களின் நுட்பம் அவை எந்த அளவிற்கு ஒரு தனிமனத்தின் அகத்திற்குள், ஆழத்திற்குள் செல்கிறது என்பதில் உள்ளது. அந்நாவல்களில் வரும் இது போன்ற தருணங்கள் அனைத்திலும் அந்த முதல் உலுக்கல் உடலில் நிகழ்ந்து பின் தர்க்கத்தில், அடியாழத்தில் நிகழ்கிறது. அகவயமான நுட்பமும் பின் புலத்தில் அதன் வரலாற்று சித்திரமும் இணைந்து வரும்பொழுதே இக்கதையில் நிகழ்ந்திருக்க வேண்டிய கலை உச்சம் உருவாகியிருக்கும்.

*

ஆசிரியர் குறிப்பு:

தாரா தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், விமர்சகர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், தொடர் பதிவுகள் மற்றும் பிரதிபலிப்புகள் எழுதி வெளியிடுவதற்காக பிரக்ஞாதாரா (pragnatara.com) என்னும் வலைப்பதிவு தளத்தை தொடங்கியுள்ளார். விரைவில் தொடர்ச்சியான பதிவுகள் இங்கு வலையேற்றப்படும்.

  •