மெட்ராஸ் பேப்பரும் நானும்
நாளை, ஜூன் 1, மெட்ராஸ் பேப்பரின் நான்காம் ஆண்டு விழா. இது மெட்ராஸ் பேப்பருக்கு மட்டுமில்லை, அதனுடன் பயணம் செய்து வந்த, வருகின்ற ஒவ்வொரு மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளருக்கும் முக்கியமான நாள். என் மனத்துக்கு மிக நெருக்கமான நாள்.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த எனது ப்ரைனோ கிட் நிறுவனம் கோவிட்டுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வந்து கொண்டிருந்தது. அதற்கு முன் வரை அவ்வப்போது கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி இருக்கிறேன். கவிதைகள் கூட வந்ததுண்டு. இரண்டு குறுநாவலும் முடித்திருந்தேன். எல்லாமுமாக இருந்த ப்ரைனோ கிட் ஒரு கட்டத்தில், இல்லை என்றானது. சரியான நேரத்தில் ஜீரோ டிகிரி காயத்ரி பா.ராவின் வகுப்புகளைப் பற்றிச் சொன்னார்.
2021 ஆம் ஆண்டு வகுப்பில் சேர்ந்தேன். கோவிட் நேரத்தில் பலர் வகுப்பெடுத்தார்கள். ஆனால் அது குறிப்பிட்ட நாள்கள் அல்லது மணிநேரங்கள் மட்டுமே இருக்கும். அதற்குப் பின் அதற்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாகிவிடும். ஆனால் பா ராவின் வகுப்புகள் அப்படி முடியவில்லை. வீட்டுப்பாடம் தந்தார். எனக்கு மட்டுமில்லை, அனைவருக்கும். எப்போது எழுத உட்கார்ந்தாலும் , எந்தச் சந்தேகம் வந்தாலும், கேட்கும் தூரத்தில் இருந்தார். பொறுமையாகச் சந்தேகங்களைச் சரி செய்தார். எழுத்தில் ஆர்வம் கூடியது. இன்னொரு தொழில் ஆரம்பிக்கும் இலக்கிலிருந்து ஒரு வருடம் என்னை விடுவித்துக் கொண்டு முழு நேரமும் மனத்தை எழுத்தில் உரு போட ஆரம்பித்தேன். நாவல் வகுப்பு முடிந்த சமையம், ஜீரோ டிகிரியின் போட்டி அறிவிப்பு வந்தது. நாவல் எழுத முயற்சி செய்யலாம் என்று யோசித்து பா ராவிடம் சொன்னேன். அவர் ஒரு கெடு கொடுத்தார். அவர் சொன்ன நாளுக்கு முன் நாவலை முடித்து அவருக்கு அனுப்பினால், அதை அவர் படிப்பார் என்பது தான் ஒப்பந்தம். ஜீரோ டிகிரிக்காக எழுத ஆரம்பித்தேன் என்றாலும், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பா ரா சொன்ன தேதியில் நாவலை முடித்தேன். அவருக்கு அனுப்பினேன். ஒரு மாதம் இடைவெளியில் இன்னொரு வேலை கொடுத்தார். அதையும் முடித்தேன். இரண்டு புத்தகங்கள் வெளிவந்தன.
மாணவர்கள் யார் தயாராக இருந்தாலும் இந்த மாயாஜாலம் நடக்கும். அது அவருக்கு கை வந்த கலை என்பது மருதன், முகில், சொக்கன் போன்றோரைப் பற்றிக் கேட்கும் போது புரிந்து கொண்டேன்.
நான் சொல்லவந்தது மெட்ராஸ் பேப்பரைப் பற்றி. வகுப்புகள் முடிந்து எழுத ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே மெட்ராஸ் பேப்பரை ஒரு பயிற்சித் தளமாக ஆரம்பித்தார். அவரிடம் வந்து சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களில் இருபத்தைந்து பேர் அன்று முதல் இன்று வரை எழுதி வருகிறோம். நான், பத்மா, ஸாஃபர், பிரபு பாலா, ராஜஶ்ரீ போன்றோர் முதல் இதழிலிருந்து எழுதி வருகிறோம். இதழ் ஆரம்பித்து சில நாள்களில் உதவி ஆசிரியராக என்னை மாற்றினார். கண்டிப்பான, கறாரான ஆசிரியர் தான் அதில் கிஞ்சித்தேனும் சந்தேகம் வேண்டாம். ஆனால் வேறு யாரும் செய்யாத விஷயத்தைத் தன் மாணவர்களுக்காகத் தொடர்ந்து செய்து வருகிறார். இன்று வரை எழுத்தில் என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு வழி நடத்தி வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன் மெட்ராஸ் பேப்பரில் கத்து குட்டியாக எழுத ஆரம்பித்த பலர் இன்று பல புத்தகங்களை வெளியிட்டு கவனம் பெறும் எழுத்தாளர்களாக வளர்ந்து வருகிறார்கள்.
மெட்ராஸ் பேப்பர் இந்த மூன்று ஆண்டுகளில் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் வளர்ந்து நிற்கிறது. இனியும் வளரும். இதற்கு வாசகர்களாகிய நீங்கள் தரும் ஆதரவு முக்கியம். மெட்ராஸ் பேப்பரில் நானும் ஒரு சின்ன அங்கமாக இருப்பதும் என் அடையாளமாகிவிட்டது என்பது நிறைவே. நாளை மாலை ஆறு மணிக்கு கூகிள் மீட்டில் சந்திக்கலாம்.
The post மெட்ராஸ் பேப்பரும் நானும் appeared first on Naseema Razak.