காதலர் கண்கள்
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடக பாத்திரங்கள் மகமது ஷா –...
The post காதலர் கண்கள் appeared first on சிறுகதைகள்.
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடக பாத்திரங்கள் மகமது ஷா –...
The post காதலர் கண்கள் appeared first on சிறுகதைகள்.
(1946ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடக பாத்திரங்கள் தாமோதர சாஸ்திரி – திருச்சிராப்பள்ளிக்...
The post மனை ஆட்சி appeared first on சிறுகதைகள்.
(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாத்திரங்கள் திருவிசாரம் பிள்ளை – சென்னையில்...
The post சார், நிச்சயமா நாளைக்கு! appeared first on சிறுகதைகள்.
(2024ம் ஆண்டு, ஆலன்டவுன் தமிழ்ச்சங்கம் சார்பாக நடந்த தமிழ்ப்புத்தாண்டு விழாவில் நடத்திய 'தமிழ் வாங்கிய தலை' என்ற தலைப்பில், சங்கப்பாடல்கள் வழியே வள்ளல் குமணனின் கதையை நாடகமாக நிகழ்த்தியதன் எழுத்து வடிவம்).
காட்சி 1:
(பாத்திரங்கள்: புலவர் பெருஞ்சித்திரனார், யானை பொறுப்பாளர், குதிரை பொறுப்பாளர், சிவிகைக்காரர், கருவூலத்தலைவர்)
குதிரைக்காரர்: யானைக் கொட்டடி எப்படி இருக்கிறது?
யானைக்காரர்: காலையில் இருந்து நான்கு யானைகளை அனுப்பியாகிவிட்டது. நீங்கள்?
குதிரைக்காரர்: ஏழு குதிரைகள். அதில் ஒரு புலவருக்கு செம்மண் நிறத்தில்தான் குதிரை வேண்டுமாம். அதுதான் அவர் ஊர் மண்ணின் நிறமாம்.
சிவிகைக்காரர்: சிவிகைகள் மட்டும் இன்று ஐந்து பரிசாக அனுப்பினேன்.
கருவூலத்தலைவர்: அத்தனை சிவிகைகளுக்கும் கூடவே தூக்கிச் செல்ல ஆட்களும், அவர்களுக்கான பொருளும் சேர்த்துத்தான் புலவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஹ்ம்ம்ம்….
பெருஞ்சித்திரனார்: குடிமக்களே! அதிகாரிகளே! வருத்தம் கொள்ளாதீர்கள். அரசன் பொருளை அள்ளிச் சேர்ப்பது வலிமையின் அடையாளம். அவற்றை ஓரிடத்திலேயே தேக்கி வைக்காமல், வாரி வழங்குவது அவனுடைய மாட்சிமைக்கு அடையாளம். புலவர்களுக்கு பரிசில் என்பது, அவர் வழியே எளிய மக்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
யானைக்காரர்: வணக்கம் பெருஞ்சித்திரனாரே! பாடுபட்டு படையும் அரசும் கொண்டு சேர்த்ததை எல்லாம் வள்ளலென இரவலர்க்கு அள்ளிக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?
பெருஞ்சித்திரனார்: முள்தோள் மூடிய பலாப்பழங்கள் நிறைந்த இந்த முதிர மலையைப் பாருங்கள். தோல் நீக்கி இனிய சுளைகளை சுவைக்கும் கடுவன் குரங்கு, அதனை தம் துணைக்கும் பகிர்ந்துண்ண அழைப்பது போலத்தான் இரவலர்க்கு புரவலராய் இருக்கும் வள்ளல்கள். இதோ கொடைவள்ளல் குமணன் அவைக்கு நானும் புறப்பட்டுவிட்டேன், தமிழ்ச்சுவையை பரப்புவதற்கு.
[திரை]
காட்சி 2:
(பாத்திரங்கள்: மன்னன் குமணன், இளவரசர் இளங்குமணன், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர்)
அமைச்சர்1: பறம்பு மலையின் கோமான் பாரி. கொல்லி மலை கோமான் ஓரி, மலையமான் திருமுடிக் காரி, தகடூர் தலைவன் அதியமான் அஞ்சி, பொதினி அரசன் பேகன், மோகிப் புலவர் பாடிய ஆய், வள்ளல் கோன் நள்ளி இவர்கள் வரிசையில் என்றும் இருக்கக் கூடிய முதிர மலை அரசன் குமணன் அவர்களுக்கு வணக்கம்.
குமணன்: தமிழுக்குத் தலை வணக்கம். நற்றமிழில் பாடினீர் அமைச்சரே. குடிகளும் மக்களும் சுற்றமும் உறவினரும் நலம்தானே.
இளங்குமணன்: (இடைபுகுந்து) புலவர்களின் கற்பனையை அமைச்சருமா பரப்புவது? அள்ளித் தரும் கைகள் என்றும், அரசைக் காத்திடுமா? வருவாயைத் தாண்டி பரிசுகள் என செலவிடும் வள்ளல்தன்மையைக் கொண்டு எப்படி அரசு புரிந்துவிட முடியும்?
குமணன்: இளையவனே. தமிழுக்கு தொண்டாற்றுபவர்கள் புலவர்கள். நாம் அவர்களுக்கு என்ன அளித்தாலும் அது மொழிக்கும், மொழி சார்ந்த மக்களுக்குமாக பரவிச் செல்லும். வெகுளாதே.
படைத்தலைவர்: இளவரசரின் கவலையிலும் பொருள் உள்ளது அரசே. கட்டுக்கோப்பான படைகளை உருவாக்கிவிட்டு, யானைகளையும் குதிரைகளையும் ஈகையென கொடுத்து விட்டால், நாளை அந்நிய படையெடுப்பை எப்படி தடுத்தாள்வது?
அமைச்சர்2: நம் அரசரின் வள்ளல் குணம் நம் நாட்டின் பெருமை. ஈகை குணத்தால் பயன் பெறும் மக்கள் நலன் உயர உயர அரசின் கோல் உயர்கிறது. நாடும் உயர்கிறது படைத்தலைவரே.
இளங்குமணன்: இது பொருளற்ற தர்க்கம். நிலத்தையும், அரசையும் காப்பதற்கு உரமான படைகள் தேவை. தமிழ் தனியே நின்று இந்த தரணியைக் காத்திடுமா.
குமணன்: அப்படியா எண்ணுகிறாய்? (யோசித்தவாறே நடந்து) கேள் தம்பி! இன்றிலிருந்து இந்நாட்டை நீ காப்பாயாக. எம் தமிழ்ப் பாசம் உன்னைத் தடைப்படுத்தாது. இதோ என் உடைவாள் இருக்கிறது. அதோ உறைந்து வாழ காடும் இருக்கிறது. இடறின்றி இந்நாட்டை நீயேக் காத்து இன்புற்றிரு.
(குமணன் உடைவாளை உயர்த்திக் காட்டிக் கொண்டு வெளியேறுதல்)
அமைச்சர்1: புதிய அரசர் இளங்குமணன் நீடுழி வாழ்க.
இளங்குமணன்: அண்ணனை திருத்தவே வாதிட்டேன். ஆனால் இந்த அரசினை இனி ஏற்று நடத்தும் பொறுப்பில் என்னை அர்பணிக்கின்றேன்.
படைத்தலைவர்: ஆனாலும், இன்றும் குடிமக்கள் அனைவரும் வள்ளல் குமணனையே அரசர் என பாராட்டுவர் இளவரசே. உங்கள் ஆட்சி பலவீனமாகவே இருக்கும்.
இளங்குமணன்: அதற்கு? (குழம்பியவாறு) என்ன செய்யலாம் என்கிறீர்கள்?
[திரை]
காட்சி 3:
(பாத்திரங்கள்: அறிவிப்பாளன், ஆவூர் பெருந்தலை சாத்தனார், வள்ளல் குமணன்)
அறிவிப்பாளன்: இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்… மன்னர் இளங்குமணனுக்கு எதிராக அவரது அண்ணன் குமணன் கலகம் செய்ய முற்படுவார் என்பதால், குமணனின் தலையைக் கொண்டு வருபவர்க்கு, நூறு இலட்சம் பொற்காசுகள் பரிசு. (இடைவெளி விட்டு) குமணனின் தலையை கொண்டு வருபவர்க்கு மன்னரின் பரிசு நூறு இலட்சம் பொற்காசுகள்.
(சொல்லிக் கொண்டே இம்முனையிலிருந்து அம்முனைக்கு செல்ல, எதிரே ஆவூர் பெருந்தலை சாத்தனார் வருகிறார்)
சாத்தனார்: ஆகா! இதென்ன துயரம். வள்ளல் குமணனின் புகழைக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்தால், அவர் நாடிழந்து காட்டில் உறைய, இப்போது அவர் தலைக்கு விலை வேறு அறிவிக்கின்றார்களே. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
(எதிரே வரும் குமணன், புலவரை நிறுத்தி)
குமணன்: தாங்கள் யார்? அறிவுசால் பெருமை கொண்ட புலவர் பெருமான் போலிருக்கிறதே.
சாத்தனார்: வள்ளல் குமணனைக் கண்டு எம் குறையைப் போக்கிக் கொள்ள வந்த அபாக்கியசாலி. ஆவூர் முலங்கிழாரின் மகன் பெருந்தலை சாத்தன்.
குமணன்: தமிழைக் கற்றுணர்ந்தவர் எவரும் துரதிர்ஷ்டசாலி இல்லை ஐயா. செல்லுமிடமெங்கும் சிறப்புதான். இதோ உங்கள் துயர் தீர, இந்த உடைவாளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
(குமணன் நீட்டிய உடைவாளைப் பெற்ற சாத்தனார், குழப்பமாகப் பார்க்கிறார்)
குமணன்: குழப்பம் வேண்டாம் புலவரே. இதோ என் தலை. வாளால் கொய்து எடுத்துக் கொண்டு எம் இளவலிடம் கொண்டு சேருங்கள். நூறு இலட்சம் பொற்காசுகளும் உங்களுக்கே.
(அவர் முன் மண்டியிட்டு அமர்கிறான்)
சாத்தனார்: (உடைவாளையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கின்றார்) இரந்தோர் அற்றம் தீர்க்கும் வள்ளல் குமணரே! நீர் வாழ்க! மன்னா! உம் ஈகைத்திறத்தை என்னவென சொல்ல. தமிழுக்கு தன் தலையை ஈந்த தன்னிகரில்லா கொடை வள்ளல் நீ. (ஒரு கையை நீட்டி அவன் தலையில் கைவைத்து) உன் பரிசினை ஏற்றுக் கொண்டேன். இதோ தமிழ், உன் தலையை வாங்கிக் கொண்டு விட்டது. இனி உன் தலை என் பொறுப்பு. (சிரிக்கிறார்)
[திரை]
காட்சி 4:
(பாத்திரங்கள்: இளங்குமணன், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர், ஆவூர் பெருந்தலை சாத்தனார்)
அமைச்சர்1: இளவர….. அரசே! இதோ ஒரு செய்தி. (துயரத்துடன் நிறுத்திக் கொள்கிறார்)
அமைச்சர்2: ஆமாம் அரசே. ஒரு துர் செய்தி (அவரும் மேலும் சொல்லாமல் நிறுத்திக் கொள்கிறார்)
(சாத்தனார் தன் கையில் துணியால் மூடிவைத்த தட்டுடன் வருகிறார்.)
படைத்தலைவர்: நம் அறிவிப்பிற்கு பதிலாக இந்தப் புலவர் வந்திருக்கிறார். (நிறுத்தி விட்டு) தங்கள் தமையனாரின் தலையை வாங்கி விட்டாராம். சாட்சியாக... (மேலே எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொள்கிறார்)
(உடனே பதறிய இளங்குமணன், முன்னே வந்து, தட்டை உற்றுப் பார்க்கிறான். ஓரிரெண்டு நொடிகளுக்குப் பிறகும் பதற்றம் விலகாமல் தட்டின் மேலிருந்த துணியை விலக்க, உள்ளே குமணனின் உடைவாள் வைக்கப்பட்டிருக்கிறது.)
இளங்குமணன்: ஐயோ! இது என் தமையனின் உடைவாள். இதை அவர் பிரிந்திருந்ததே கிடையாது. (சாத்தனாரை நிமிர்ந்து பார்த்து) யாரடா, நீ பரதேசி. அஞ்சா நெஞ்சனும், பெரும் வீரனுமான வள்ளல் குமணனின் உடைவாள் உன்னிடம் எப்படி வந்தது?
சாத்தனார்: அவரே இந்த வாளை என்னிடம் கொடுத்து தன் தலையை வாங்கிக் கொள்ளச் சொன்னார் இளவரசே
இளங்குமணன்: அப்படியானால்… அப்படியானால்… நீ அண்ணனைக் கொன்று விட்டாயா? (கோபமடைந்து) யாரங்கே… படைத்தலைவரே, இக்கொடுமையை நிகழ்த்திய இந்தப் பரதேசியை இப்போதே கைது செய்யுங்கள். இத்தகைய மாபாதகத்திற்கு உத்தரவிட்ட நானும் பெருங்குற்றவாளி. இக்கணமே நானும் அண்ணனைத் தேடிச் செல்கிறேன்.
(தன் இடையிலிருந்த வாளை உருவ முயல, சாத்தனார் முன்னே வந்து ஒரு கையால் அவனை ஆற்றுப்படுத்துகிறார்)
சாத்தனார்: இளவரசே! நான் பரதேசியல்ல. பல தேசமும் சுற்றி வரும் எளிய தமிழ்ப்புலவன். நான் மன்னரது தலையை கொய்யவுமில்லை. உங்கள் சகோதரப் பாசத்தை தொட்டெழுப்பும் திறவுகோலென இந்த உடைவாளை மட்டும் கொண்டு வந்தேன். நான் பயின்ற தமிழ் என்றும் தலையை காத்திருக்கிறதே அன்றி அழித்ததில்லை. இதோ மன்னர் வருகிறார்.
(வள்ளல் குமணன் உள்ளே வருதல்)
குமணன்: மன்னித்துக் கொள் இளையவனே. [சாத்தனாரைச் சுட்டிக் காட்டி] தமிழ் என் தலையை வாங்கிக் கொண்டு விட்டதால், அது அழைக்கும் இடந்தோறும் நான் செல்ல வேண்டியிருக்கின்றது. அதனால்தான் உன்னிடம் கொடுத்த வாக்கை மதிக்காமல் மீண்டும் நாட்டிற்கு வந்தேன். [சிரிக்கின்றான்]
இளங்குமணன்: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குமணன் அருகில் சென்று மண்டியிட்டு) உங்கள் மாட்சிமை புரியாமல் உங்களுக்கு எதிராக வாதிட்டேன். கொடும் உத்தரவு பிறப்பித்தேன். இப்போது அனைத்தும் புரிந்தது அண்ணா. தங்களுக்கு என்றும் நான் தொண்டன்.
(குமணன் குனிந்து இளங்குமணனை எழுப்பி அணைத்துக் கொள்ளுதல்)
குமணன்: வருந்தாதே! நாம் இருவரும் தமிழுக்குத் தொண்டர்கள். தமிழ் பயின்று அதன் வழி நிற்கும் சான்றோர்க்கும் தொண்டர்கள். அன்னை மொழி நம்மை என்றென்றும் வாழ்த்தி நிற்கும் தம்பி.
[திரை]
இறுதிக் காட்சி:
(பாத்திரங்கள்: குமணன், இளங்குமணன், பெருன்சித்திரனார், பெருந்தலை சாத்தனார், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர், யானை பொறுப்பாளர், குதிரை பொறுப்பாளர், சிவிகைக்காரர், கருவூலத்தலைவர், அறிவிப்பாளர்)
(அனைவரும் ஒன்று கூடி வந்து நிற்க. சாத்தனார் முன்னே வந்து)
சாத்தனார்: கார் கண்ட மயில் தோகை விரித்தது போல, நீர் பெற்று உயர்ந்து நிற்கும் நிறைவான நிலம் போல, முதிரமலை நாடு வள்ளல் குமணனைப் பெற்று வானுயர போற்றப்படும்.
உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.
(சிறார் இலக்கியம்: அமெரிக்காவில், ஆலன்டவுன் நகரில் உள்ள எங்கள் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கென, சங்கப் பாடல்களை மையம் வைத்து எழுதிய மூவங்க நாடகம். 23-ஏப்ரல்-2023ல் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.
அடுத்த ஆண்டிற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென ஒரு நாடகம் தயாரிக்கும் யோசனை இருக்கின்றது. இவ்வளவு ஆர்வமுள்ள அணி இருக்கும்போது நமக்கென்ன சுணக்கம்.)
(பாத்திரங்கள்: ஔவையார், வாயில்காப்போன்1, வாயில்காப்போன்2, வாயில்காப்போன்3, வாயில்காப்போன்4)
காவல்காரர்கள் 3 பேரும் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
குரல்: வாயிலோயே! வாயிலோயே!
வா.கா.1: யாரோ உம்மை அழைக்கிறார்கள் போல.
வா.கா.2: இருமுறை கூப்பிட்டுவது போலிருக்கிறதே. அப்படியானால் நம் இருவரையும்தான் அழைக்கிறார்கள் போல.
வா.கா.3: அப்படியானால் சரி. என்னை யாரும் அழைக்கவில்லை. (நிம்மதியென கைகளைத் தூக்கிக் காட்டுகிறார்)
வா.கா.4: நான் வேண்டுமானால் உங்களை அழைக்கட்டுமா?
குரல் (மீண்டும்): வாயிலோயே! வாயிலோயே!
வா.கா.1: ஏதோ பெண் குரல் போலிருக்கிறதே.
வா.கா.2: குரலில் ஒலிக்கும் உறுதியும், இறுமாப்பும், ஏதோ தமிழ்ப்புலவர் போலிருக்கிறது.
வா.கா.3: கதவைச் சாத்துங்கள்! கதவைச் சாத்துங்கள்! புலவர்கள் என்றாலே எனக்கு சற்று பதட்டமாக ஆகி விடுகிறது. நாம் இங்கே காய்ந்து கருகி காவல் காக்கிறோம் என்றால், இவர்கள் வெறும் வாயை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டி பிழைக்கிறார்கள்.
வா.கா.4: ஆமாம். ஆமாம்.
ஔவையார் அரங்கினுள் நுழைகிறார். காவல்காரகள் அமைதியாக இருக்கின்றார்.
ஔ: வாயிலோயே! வாயிலோயே! செவிக்கு இனிய செய்யுள்களை யாத்து, கவிபுனைந்து பரிசு பெறும் புலவர்க்கு, மூடாத கதவுகள் தகடூர் அரண்மனையின் கதவுகள் என்பார். ஆனால் எனக்கு இவை மூடியே இருக்கின்றனவே.
வா.கா.1: அது வந்து… அது வந்து….
வா.கா.2: அதுதான்…. அதுதான்…..
வா.கா.4: எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்.
வா.கா.3: உஷ்ஷ்ஷ்...! அரச உத்தரவு அன்னையே. உங்களுக்கு…. இன்னும் அரச அழைப்பு வரவில்லை.
ஔ: (புரிந்து கொண்டவர் போல் தலையை ஆட்டிக் கொண்டு) அதியமானுக்கு தன் திறன் தெரியவில்லையா. அல்லது என் திறம் தெரியவில்லையா.
வா.கா.3: அப்படியில்லை புலவரே. அது அதற்கென ஒரு நேரம் வரவேண்டுமில்லையா. நாட்டிற்கு முதன்மையாக படைகளும், பாதுகாப்பும் தேவை. கலை இலக்கியம் எல்லாம் பொழுது போக்கத்தானே. பொறுத்திருங்கள். பரிசில் கிடைக்காமலா போகும்
ஔ: (சிரிக்கிறார்). காடு திறந்திருக்கிறது காவலரே, தேடி வருபவர்க்கெல்லாம் மரம் ஒன்றைக் கொடுக்க. இதோ, எம் யாழினை தூக்கினோம். செல்வோம் இப்போதே. கற்றவர்க்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.
ஔவையார் அரங்கிலிருந்து வெளியேற முயல, அவரெதிரே அதியமான் வருதல்.
அதி: தவறு என்னுடையதுதான். தவறு என்னுடையதுதான். பரிசு பெற்றதும் தாங்கள் புறப்பட்டு விடுவீர்களே என, பொறுமைக் காத்தேன். தமிழ் இன்னமும் சிலகாலம் தகடூரில் தங்கியிருக்கட்டுமே அம்மா. அருள்கூர்ந்து நீங்கள் பொறுத்தருள வேண்டும்.
ஔ: (மீண்டும் சிரிக்கிறார்). நானறியாததா மன்னா. ஒரு நாளானாலும் சரி. இரு நாட்களானாலும் சரி. பலநாட்களுக்கு பலருடன் வந்தாலும் சரி. உன் விருந்தோம்பல் முதல் நாள் போல என்றுமே சிறந்ததாகவே இருக்குமல்லவா. காலம் தாழ்ந்தாலும், நீ கையளிக்கும் பரிசு எங்களுக்கு உறுதியானதுதானே. மற்றவரும் புரிந்து கொள்ளட்டும் எனப் பாடினேன்.
o0O0o
(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.
(பாத்திரங்கள்: அதியமான், அமைச்சர்1, துணையமைச்சர்1, கருவூலத்தலைவர், ஔவையார்)
அமை1: கருவூலத் தலைவர் காத்திருக்கிறார். நீங்கள் அதிகம் கவலை கொள்ளாமல் ஆணையிடுங்கள். ஔவயாருக்கு உகந்த பரிசினை இப்போதே அளித்துவிடுவோம்.
அதி: ஔவையாருக்கு உகந்த பரிசு…. (சற்று நிதானித்து கருவூலக்காரரைப் பார்க்க)
கரு: பொன்னும் மணியும் புரவியும் பல்லக்கும் நிலமும் வீடும் ஆடைகளும் அணிகலன்களும் படையும் ஆட்களும் அனைத்தும் இருக்கின்றன. உங்கள் உளவிருப்பத்தைச் சொன்னால் சித்தப்படுத்தி விடுகிறேன்.
அதி: ஓ! இதுதான் நீங்கள் ஔவையாருக்கு உகந்த பரிசென எண்ணியிருக்கிறீர்கள். இல்லையா.
ஔவையார் அரங்கினுள் நுழைகிறார்.
ஔ: வெற்றிகரமான வாளேந்தி, பகைவர்கள் அனைவரையும் போரில் வென்று, பொன் மாலை அணிந்து பொலிவுடன் திகழும் மன்னா, நீ வாழ்க!
அதி: (கையை முன்னால் நீட்டி) இந்த பரிசினை தமிழின் சார்பாக நீங்கள் ஏற்க வேண்டும்.
ஔவையார், அவன் கையிலிருந்த சிறிய நெல்லிக்கனியைப் பார்க்கிறார். சற்றும் தயங்காமல் அதைப் பெற்றுக் கொண்டு வாயில் போட்டுக் கொள்கிறார்.
ஔ: (மிகவும் மகிழ்ச்சியோடு) நீலநிற மணியை கழுத்தில் கொண்டது போலிருக்கும் அந்த சிவனைப் போல உன் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
அதியமான் கரம் கூப்பி வணங்குகிறார்.
துஅமை1: அன்னையே, உங்களுக்கும் தகடூர் அரசருக்கும் உள்ள நட்புறவானது எங்கள் எளிய சிந்தையை எல்லாம் கடந்தது. ஆனாலும் இப்போது…
அமை1: அட, அதிகப்பிரசங்கியே.
துஅமை1: இல்லை ஐயா. சற்றுமுன் கருவூலத் தலைவர் பட்டியலிட்டு சொன்ன பரிசில்கள் மதிப்பு அளப்பரியாதது. இந்த சிறிய நெல்லிக்கனியை அரசர் ஔவைக்கு அளிப்பதும் அவர் அதற்கு வாழ்த்துவதும்…
அமை1: நிறுத்தப்பா.
ஔ: ஐயங்களை தெளிவதுதானே அமைச்சுப் பணி. தடுக்காதீர்கள் ஐயா. (பிறகு துணையமைச்சரின் பக்கம் திரும்பி) இதோ சொல்கிறேன். இத்தனை விலைமதிப்பற்ற பொருட்களைக் காட்டிலும், இந்த கனியை எனக்கு அளித்ததிலிருந்து புரியவில்லையா, இது ஓர் அருங்கனியாகத்தான் இருக்க வேண்டுமென. பெறுவதற்கு அரியக் கனியை, பெருமுயற்சியுடன் பெற்ற அரசர், அதன் சிறப்பைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லாமலே, அன்னைத் தமிழுக்கே அது உகந்த பரிசென அளித்ததில் இருக்கிறது அவருடைய கொடை உள்ளத்தின் உச்சம்.
அதி: நாடும் நிலமும் கோலோச்சும் அரசனும் அவன் புகழும் காலத்தோடு மறைபவை. ஆனால் மொழியும், இலக்கியமும் காலம் கடந்து வாழ்பவை. அன்னைத் தமிழாகிய நீங்கள் நீண்டு வாழ்ந்தால், உங்கள் சொற்களில் நானும் நீண்டு வாழ்வேனம்மா.
ஔ: நன்று சொன்னீர்கள்! நன்று சொன்னீர்கள்! தமிழ் இனி ஓரிடம் தங்காமல் செல்லட்டும் எண் திசையும். தமிழுக்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.
o0O0o
(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.
o0O0o
(பாத்திரங்கள்: தொண்டைமான், ஔவையார், அமைச்சர்2, துணையமைச்சர்2)
தொ: புதிய படைக்கலன்கள் எல்லாம் வந்துவிட்டனவா அமைச்சரே? கூரிய வேல்கள், விரைவு அம்புகள், பொலிந்த வாட்கள்…
அமை2: ஆம். நன்கு பெரிய் பிடிகளுடன், எண்ணெய் பளபளப்புடன் படைக்கலன்கள் பொலிகின்றன.
துஅமை2: (சற்று முன்வந்து) இப்போது படைப்புக்கடவுள் ஒருவரும் உங்களைத் தேடி வந்திருக்கிறார். ஔவையார் எனும் தமிழ்ப்புலவர்.
தொ: ஓ! ஔவையாரா. அவர் அதியமானின் அவைக் கவிஞராயிற்றே.
அமை2: ஆமாம். தகடூர் மீது படையெடுக்க வேண்டாம் என சமாதான தூது செய்தியுடன் அனுப்பியிருக்கிறார்களோ.
துஅமை2: நாம் திரட்டியிருக்கும் படைபலத்தையும், கருவிகளையும் கண்டு பயந்துவிட்டிருப்பார்கள்.
தொ: ஆகா. அரசர் ஆணைகளுக்கு புலவர்கள் தூதா. புதியதாக இருக்கிறதே. அழைத்து வாருங்கள். என்ன சொல்கிறாரெனப் பார்ப்போம்.
ஔவையார் அரங்குள் நுழைகிறார்.
ஔ: வாழிய மன்னா! வாழ்க நின் கொற்றம்!
தொ: தமிழைப் போற்ற, இந்த தொண்டைமான் என்றும் தயங்கியதேயில்லை அம்மா. வணக்கம்!
ஔ: மகிழ்ச்சி. இப்போதுதான் உன் படைக்கல அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டே வந்தேன். அல்லது அப்படி நான் பார்க்க வேண்டுமென்பது உன் அமைச்சரின் எண்ணமாக இருக்கும். (சிரிக்கிறார்)
தொ: (புன்முறுவல் செய்தபடி) அப்படியெல்லாம் இல்லை. இன்று புதியதாக வந்தவை அவை. இன்னமும் முறையாக அடுக்கப்பட்டு படைவீடுகளுக்கு அனுப்பி, சிறப்பாக அணிவகுப்பில் சேர்க்க வேண்டும்.
ஔ: ஆமாம். மயிலிறகு சூட்டி, மெருகு குன்றாமல் ஒளிர்கின்றன அனைத்தும். கண்ணைப் பறிக்கின்றன.
தொ: (பெருமையுடன்) ஆமாம். நாங்கள் வெகு சிரத்தையுடன் படைக்கலங்களை பராமரிப்போம். உங்கள் தகடூரில் அப்படி செய்வதில்லைப் போல.
ஔ: அங்கே, இவ்வளவு பராமரிப்புகளுக்கு எங்கே நேரம்? எப்போதும் போரிலேயே இருந்து கொண்டிருக்கும் வீரர்களின் வேல்கள், பகைவர்களைக் குத்தி, நுனி சிதைந்தும் முறிந்து, கொல்லன் பட்டறைகளில் கிடக்கின்றன. சீர்படுத்தியதும் அடுத்த போருக்கு கிளம்பிவிடுவார்கள். எப்போதும் போர்களிலே நேரங்கழிக்கும் அவர்களுக்க், படைக்கலன்களை அழகுபடுத்தி, மாலை சூட்டி அணிவகுப்புகளில் வைத்துப் பார்க்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
அமை2: இதென்ன பேச்சு? போர்த்தொழிலில் சிறந்தவர் அதியமான் என்பது போலல்லவா சொல்கிறீர்கள்?
துஅமை2: நீங்கள் நின்று கொண்டிருப்பது தொண்டைமானின் அவை என்பது நினைவில் இருக்கட்டும் புலவரே.
ஔ: போரில் மட்டுமல்ல. தன்னிடம் பொருள் இருந்தால், மற்றவர்க்கு உணவளித்துவிட்டு தான் உண்பான். பொருள் இல்லையென்றல் தன் உணவையே பிறருக்கு அளித்துவிடும் ஈகைக் குணத்திலும் அதியமான் ஒப்புயர்வற்றவன்.
தொ: (பெரியதாக சிரித்து) கற்றோரின் சொற்திறம், எம் போர்த்திறம் விட சிறந்தது எனப் புரிந்து கொண்டேன். தமிழ் போற்றும், தமிழ்ப்புலவர் போற்றும் தகடூர் மன்னன் மீது போர்த்தொடுக்கும் எண்ணம் என் மனதை விட்டு நீங்கியது. கவிச்சொல்லை விட பெருஞ்சொல் வேறு உண்டா?
ஔ: இதோ என் யாழை தூக்கிக் கொண்டேன். தமிழை துணையாக்கிக் கொண்டேன். செல்வேன் எத்திசையும். எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே.
o0O0o
(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.
o0O0o
இறுதிக்காட்சி:
அனைவரும் திரண்டு வந்து நிற்க, அதியமான் கூற்றுடன் நிறைவடைகிறது)
அதி: தமிழுக்கென ஒரு கனி ஈந்தேன். தமிழ் எனக்கு மங்காப் புகழை பதில் அளித்தது. அன்னைத் தமிழுக்கு என்றென்றும் எம் வணக்கம்.
o0O0o
(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.
o0O0o
உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.
முதலில் தமிழ்க் கவிதை பற்றிப் பேரா. இராமசாமியின் உரை சிறப்புற அமைந்தது.
பிறகு இன்றைக்குத் தேவையான எழுத்து என்ற குழு விவாதம் நடைபெற்றது. இதில் திரு. கிராமியன், பிஎச்இஎல் பொறியாளர் திரு. விவேக், திரு. விக்டர் ஆல்பர்ட் மூவரும் பிறரும் சிறந்த முறையில் பங்கேற்றனர்.
பிறகு சமகாலத் திரைப்படம் பற்றியும் அதை நோக்கும் விதம் பற்றியும் திரு. இராமசாமி சுவையாக எடுத்துரைத்தார். இடையில் மாணவர்கள் நேற்று எழுதிவந்த கவிதைகளையும் மதிப்பீடு செய்தார்.
மதிய உணவுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரிப் பேராசிரியர் ராமராஜ் மாணவர்களைத் திறம்பட நடிக்க வைத்துத் தம் நாடகத் திறனை வெளிப் படுத்தினார். அகஸ்ட் போவாலின் கருத்துகள் அடிப்படையில் (இன்விசிபிள் தியேட்டர்) அந்த நாடக ஆக்கம் அமைந்தது சிறப்பாகும்.
தேநீருக்குப் பிறகு நிறைவு விழா. முதல்வர் வர இயலாததால் தமிழ்த்துறைத் தலைவர் திரு. இராஜ்குமாரே மாணவர்களுக்குப் பரிமாற்ற முறையில் சான்றிதழ்களை வழங்கினார். திரு. சிவசெல்வன் நன்றிகூற மூன்றுநாள் படைப்பாக்க நிகழ்ச்சி நன்கு நடந்தேறியது.
மூன்று நாள் அமர்வுகளையும் சிறப்புற ஏற்பாடு செய்தவர் பேரா. சாம் கிதியோன். உணவு உட்பட, உட்காரும் இடங்கள், அறைகள் உட்பட கவனித்துக் கொண்டார். அவருக்குத் துணையாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உதவி செய்தனர். திரு. சாம் கிதியோனுக்கும் அவருக்குத் துணையாக அமைந்த பேராசிரியர்களுக்கும் தனிப்பட நமது நன்றிகள் உரியன.
மாடன்மோட்சம் என் கதையின் நாடகவடிவம். இந்த நாடகம் கேரள பயில்முறை நாடகப் போட்டியில் சிறந்த நாடக ஆக்கம், சிறந்த நாடக இயக்கம் சிறந்த நடிப்பு ஆகியவற்றுக்கான மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறது. மாநில அளவில் தேர்வுசெய்யப்பட்ட நாடகங்களில் இறுதிப்போட்டிக்கு வந்த ஆறுநாடகங்களில் இருந்து இந்த தெரிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றுவிருதுகளையும் ஒரே நாடகம் பெறுவது மிக அரிதான ஒரு வெற்றி.
இந்த நாடகம் உருவான விதமும் கவனிக்கத்தக்கது. புகழ்பெற்ற ஓர் இலக்கிய படைப்பே நாடகத்துக்குத் தேர்வுசெய்யப்படுகிறது. பிறகு அது இன்னொரு தேர்ந்த நாடக ஆசிரியரால் நாடகமாக ஆக்கப்படுகிறது. இன்னொரு இயக்குநரால் இயக்கப்படுகிறது. ஒரு நாடகம் பார்க்க இரண்டாயிரம் பேர் ஏன் கூடுகிறார்கள் என்றால் அவை அரிதான காட்சி – கருத்து அனுபவங்கள் என்பதனால்தான்.
ஜெ
அன்புள்ள ஜெ,
இரண்டு நாள் முன்பு ஈரோடு கிருஷ்ணன் அழைத்து நாளை மதியம் ஈரோட்டில் கிளம்பி மாலை திருச்சூரில் மாடன் மோட்சம் நாடகம் பார்த்துவிட்டு நள்ளிரவே ஈரோடு திரும்பாலாம் என்கிற திட்டத்தை அவர் சொன்னபோது எனக்கு ஒரு படைப்புறப்பாட்டில் பங்கு கொள்வதான உணர்வே முதலில் எழுந்தது. பொதுவாக கிருஷ்ணன் சார் திட்டத்தை முன்வைக்கும் விதமும் அப்படித்தானிருக்கும், எந்தெந்த திசையிலிருந்து யார்யார் படைத்துணை வரக்கூடும், நமக்கு தேவையான அவரிடம் இருக்கும் படைக்கலம் என்ன, அவர் வராவிட்டால் இரண்டாம் மூன்றாம் கட்ட மாற்றுத் திட்டங்கள் என ஒரு வரைவாக அவர் மனதில் இருக்கும். இதுபோன்ற திட்டங்களை கூட தவிர்க்கலாம் ஆனால் அதன் உள்ளுறையாக அமைத்திருக்கும் ஒய் நாட்? என்ற கேள்வியை மறுதலிப்பது கடினம். எனவே ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனும் சிபியும் நானும் செல்வதாகவும் கோவையில் ‘சிண்டன்’ விக்ரம் வந்து படைத்துணையாக இணைந்துகொள்வார் என்றும் வகுக்கப்பட்டது.
திருச்சூர் சங்கீத மற்றும் நாடக அகாடெமி வளாகத்தில் நாடகம் துவங்கும் நேரம் மாலை ஏழு. நாங்கள் நாலரை மணிக்கெல்லாம் திருச்சூர் சென்றடையும் நிலைமை இருந்தது, அந்த இடைவெளியை ‘பயன்’படுத்தும் பொருட்டு திருச்சூரின் சில வாய்ப்புகளை விவாதித்துக் கொண்டே சென்றோம். கலைக்கூடம் செல்வதா, சினேகதீரம் கடற்கரை செல்வதா, வடக்குநாதன் கோயிலை சுற்றி அமைந்த பூங்காவில் நடைபயில்வதா அல்லது பழமையான தேவாலயம் (திருச்சூரில் அமைந்துள்ள நல்ல தேவாலயங்கள் குறித்து சென்றமுறை சொல்லியிருந்தீர்கள்) செல்வதா என அலசினோம். மாடன் மோட்சத்தின் நாடக வடிவை எழுதிய ராஜ்மோகன் நீலேஸ்வரத்துடன் கிருஷ்ணன் தொடர்பில் இருந்தார். அவர் அகாடெமி வளாகத்தில் இருப்பதாக சொன்னதால் முதலில் அவரை சந்திக்க அகாடெமிக்குள் சென்றோம். வளாகத்தின் உள்ளே கலைத்தன்மையின் தேஜஸ் பொருந்திய முகங்கள் தென்பட்டுக்ககொண்டே இருந்தன. ஒரு முகத்தில் தென்படும் பொலிவும் அறிவுத்தன்மையுமே அவரை கலைஞனாக காட்டிக் கொடுத்துவிடும் என்று விக்ரம் ஒரு கொள்கையை முன்வைத்தார். அக்கொள்கை தவறாக ஆவதற்கான உதாரணங்களை சுட்டிக்காட்டி கிருஷ்ணன் அதை நிராகரித்தார். கொஞ்ச நேரத்தில் தேனீர் விடுதியில் கிருஷ்ணனும் நீலேஸ்வரமும் முகத்தைக் கொண்டே ஒருவரையொருவர் எடைபோட்டு கண்டு கொண்டனர். நீலேஸ்வரம் மிகுந்த உவகையுடன் எங்களை அங்கிருப்பவர்களிடம் அறிமுகப்படுத்தினார். கோவை விக்ரம் அண்ணனை நாங்கள் அனைவரிடமும் மெய்க்களம் நடிகராகவே அறிமுகப்படுத்தினோம். அறிமுகங்கள் முடியும்போது அவர் ‘ஒரு பாடு நாடகங்கள் நடித்த’ நடிகராக வளர்ந்துவிட்டிருந்தார், அவருக்கும் முகத்தில் ஏற்புடன் அதற்கான தேஜஸ் வந்திருந்தது.
சிறந்த நடிகர்: பிரமோத் வெளியநாடு சிறந்த இயக்குநர்: ஜோப் மடத்தில்
ஏழு மணி நிகழ்வுக்கு ஐந்து மணி முதலே அகாடெமி வளாகம் அத்தனை உயிர்ப்புடன் இருந்தது எங்களுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. திருச்சூர் கலாச்சார மையமாக இருப்பது பற்றி கிருஷ்ணன் கேள்வி எழுப்ப நீலேஸ்வரம் விளக்கினார். இந்த அகாடெமி வளாகத்தில் இசையும் நாடக நிகழ்வுகளும் தொடர்ச்சியாக உண்டு, அருகில்தான் சாகித்ய அகாடெமி வளாகம், அதுபோக கலாமண்டலத்தில் இருந்து அடிக்கடி வருபவர்களும் உண்டு, எனவே கலா நிகழ்வுகளுக்கும் அதனுடன் உரையாடும் சுற்றமும் இங்கு எப்போதும் உயிர்ப்புடன் இருப்பதாகவே சொன்னார். நிகழ்வு நடக்கும் திறந்தவெளி மைதானத்திற்கு செல்லும் வழியில் வழக்கமாக நாடகங்கள் நடத்தப்படும் உள்ளரங்கம் ஒன்று இருந்தது. அங்கு அதிகபட்சம் ஐநூறு பேர் வரை நாடகம் பார்க்கலாம். நம் நாடகத்திற்கு இந்த அரங்கம் எல்லாம் காணாது என்றார் நீலேஸ்வரம். புகழ்பெற்ற நாடகங்கள் உள்ளரங்கில் நடத்தப்படுவதாக இருந்தால் இரண்டு மூன்று காட்சிகளாக அடுத்தடுத்த நாளில் நடத்தப்படுவதும் உண்டு என்றார். நாங்கள் எதையும் முழுதாக நம்பிவிடாமல் ‘தீர விசாரிப்பதே மெய்’ என்ற கொள்கைப்படி கவனமாக இருந்தோம்.
ஐந்தே முக்கால் மணிக்கெல்லாம் சிறிய பரபரப்புடன் சட்டென ஒரு வரிசை உருவானது. எதற்கென தெரியாவிட்டாலும் வரிசை என ஒன்று இருந்தால் அதில் நிற்கவேண்டியது தான் என நாங்களும் சென்று நின்றோம். அறிவுஜீவித் தன்மைக்கான விதவிதமான தோற்றங்களை பார்த்தபடி நின்றிருந்தோம். தாடியும் மீசையும் திருத்தப்பட்டு தலைமுடி பின்னால் முடிச்சிடப்பட்டவை. திருத்தப்படாமல் காற்றில் நீண்டு அலையும் தாடிகள், விரித்து பரந்திட்ட சுருள் முடிகள், உள்ளங்கி மட்டும் அணிந்து தோளில் சிறுபையுடன் நின்றிருந்த மினிமலிஸ்டுகள். ஊருக்கு சென்றவுடன் தாடியும் முடியும் வளர்த்தி இரண்டு பைகள் வாங்கி சீக்கிரம் கலைஞனாக ஆக வேண்டும் என சிபி ஆவேசப்பட்டான். வரிசை நீண்டு கொண்டே இருந்ததில் எங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் தலையெண்ண முடியவில்லை. சிபி தள்ளி சென்று வரிசையின் விஸ்தாரத்தை படம் பிடிக்க முயன்றான். ஆனால் வரிசை எங்கள் பார்வை வெளியை தாண்டி நீண்டு வளைந்திருந்தது. இனி ட்ரோன் கேமிராதான் வேண்டும். கூட்ட எண்ணிக்கையை மதிப்பிடும் உணர்வெல்லாம் எங்களிடம் மட்டும்தான் இருந்தது. அமைப்பாளர்கள், இயக்குனர் எல்லாம் அவரவர் உரையாடலில் இருந்தனர். விஷ்ணுபுரம் விழாவில் இப்போதெல்லாம் அரங்கு நிறையும் உறுதிப்பாடு இருந்தாலும் ஒருமுறை எண்ணிக்கையை மதிப்பாடாமல் இருக்கமுடிவதில்லை, சில பஞ்சகால வழக்கங்கள் அத்தனை எளிதில் மறைவதில்லை.
நாடக இயக்குனர், எழுத்தாளர் எல்லாம் இயல்பாக வரிசையில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். கலைஞர்கள் போக நாடகம் பார்ப்பதற்கெனவே வந்திருந்த பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தனர். குழந்தைகள், பாட்டிகள், குடும்ப பெண்கள், அலுவலகம் முடித்த கையுடன் வந்தவர்கள். அனைவரும் இயல்பான மகிழ்ச்சியுடன் இருப்பதையும், சந்தடிகள் இல்லாமல் வரிசை பேணுவதையும் கண்ட பின்பு ஐயங்களை கடந்து கேரளத்தின் அறிவார்ந்த முகத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. வாழ்வில் ஒரு வருடமேனும் கலாச்சார மையமாக அமைந்த சிறுநகர் ஒன்றில் குடிபெயர்ந்து வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. திருச்சூர் அதற்கு பலவகையிலும் உகந்த நகரமாகத் தோன்றியது.
திறந்தவெளி அரங்கிற்கான கதவு திறக்கப்பட்டு உள்ளே சென்றோம். நாங்கள் எதிர்நோக்கிய மேடைக்கான இடத்தில் கல்பாதைகளும், அதைச்சுற்றி புல் மண்டியது போலும் இருந்தது. நடுவில் ஒரு பீடமும் பின்னணியில் பனையோலைகள் நிறுத்தப்பட்டிருக்க, அதன் பின்பக்கம் இருந்த கருப்பு திரையும் சுற்றி உயரத்தில் இருந்த ஒளி விளக்குகளைக் கொண்டே அவ்விடம்தான் மேடை என்பதை ஒருவாறு யூகித்து அருகில் சென்று தரையில் அமர்ந்து கொண்டோம். இருபதடி தள்ளி பின்னிரையில் நாற்காலிகள்.மேடையை மையமாகக் கொண்டு ஒரு விசிறிபோல் அரைவட்ட வடிவில் பார்வையாளர் வெளி அமைந்திருந்தது. நாடகம் துவங்கும் முன் மேடையை பார்த்து அமர்ந்திருந்த நேரத்திலேயே நாடக அனுபவம் தொடங்கிவிட்டது. மேடை என்பது அங்கு நிகழப்போவதற்கான சாத்தியங்களை உள்ளடக்கியது. கதகளியில் திரைநோட்டம் அவ்வாறான அனுபவத்தை அளிக்கும். இங்கு மேடைக்கு பின் நிறுத்தப்பட்டிருந்த பனை ஓலைகளும் மாடன் வந்து வீற்றிருக்கப் போகும் காலியான பீடமும் அந்த எதிர்பார்ப்பை அளித்தது.
கொஞ்ச நேரத்தில் புலர்காலையின் பறவையொலிகள் கேட்கத் துவங்கின. இருட்டில் மாடன் வந்து அமர, அவரின் தலைக்கு மேல் பின்பக்கத்திலிருந்து ஒரு விளக்கு சூரியனின் பொற்கதிர்களை வீசி ஒளியூட்டியதில் மாடன் வீற்றிருந்த பனங்காட்டில், பக்கவாட்டில் அமைந்திருந்த சிறுவர்கள் விளையாடும் குளத்தில், அவ்வழகிய கிராமத்தில் பொழுது புலர்ந்தது. நாங்கள் புற உலகின் அந்தி சாய்விலிருந்து நாடக மேடையின் விடியலுக்குள் சென்றோம்.
நாங்கள் மாடன் ஒளிபெறுவதையே பார்த்துக் கொண்டிருக்க இந்தப்பக்கம் இரண்டு சிறுவர்கள் குளத்தில் விளையாடும் சத்தம் கேட்டது. அப்போதுதான் அந்த கல்பாதைகள் இடையே ஒரு குளம் இருப்பதே எங்களுக்கு உறைத்தது. இரு ‘நாடன்’ பையன்கள் உடல் வழுவழுக்க மெய்யாகவே நீரில் தள்ளியும் பிடித்தும் விளையாண்டனர். பின்னால் ஒருவர் மீன்பிடி கூடையுடன் கிளம்பி வந்து மீன்களுக்காக கவனத்துடன் தேடிக் கொண்டிருந்தார். முண்டு அணிந்த ஒரு அம்மாள் வந்து பையன்களை அதட்டிவிட்டுப் போக, மீன் பிடிப்பவர் சந்தோஷ கூச்சலுடன் பிடிபட்ட வல்லிய மீன் ஒன்றை தூக்கிக் காட்டினார். அது அவரின் கையில் இருந்தபடி துள்ளியது. மாடன் இவற்றை பார்த்தபடி நிறைவுடன் அமர்ந்திருக்க, பொழுது சாயும் நேரத்தில் ஒரு நடுவயதுக்காரர் பையன்களிடம் விளையாடினது போதும், இருட்டிய பின் மாடனின் பனங்காட்டில் இருந்தால் மாடன் அடித்துவிடும் என்று பயம்காட்டி விட்டு போனார். பையன்களில் ஒருவன் ‘மாடன குறிச்சு எங்களுக்கு ஒன்னும் பேடியில்லா’ என்று எகிறினான். ஆனால் அவனே கொஞ்ச நேரத்தில் நைஸாக கிளம்பிவிட மீதமிருந்த பையனுக்கு பீதி தொற்றிக் கொண்டது. பொறுமையிழந்து மாடனே அவனை ஆற்றுப்படுத்த எத்தனிக்க அதற்குள் அதைக் செவிகொள்ளாமல் அவன் ஓடிவிட்டான். பின்னால் மாடன் எழுந்து வந்து போக வேணாம், பேடிக்க வேணாம் மக்களே என ததும்பினார். நிங்கள் கிடந்து களிப்பதை நோக்கிக் கொண்டு இருப்பது தானே எனக்கு சந்தோஷம் என்றார். இந்த அப்பன்மார்களும் அம்மைமார்களும் தன்னைப் பற்றி வேண்டாத கதைகளை எல்லாம் கிளப்பிவிட்டு பயத்தை உண்டாக்குவதாக முறையிட்டார். ‘ஞான் ஒரு காவல் தெய்வமானு, காவல் தன்னே எண்ட பணி, பேடிப்பிக்குகது அல்லா’ என குழைந்தார். அங்கு தொடங்கி நாடகம் முடியும் வரை மாடனின் உணர்வுநிலைகளில் எல்லாம் மொத்த திரளும் உடன் பயணித்தது.
ஒரேசமயம் சீண்டலும் பிணைப்பும் அதட்டலும் குழைவும் கொண்டதுமான மாடனுக்கும் பூசாரிக்குமான உறவு அத்தனை உள்ளடுக்குகளுடன் கதையில் சொல்லப்பட்டிருக்கும். நாடகத்திலும் அது அவ்வாறே வெளிப்பட்டது. இந்த கூறுகெட்ட வெவரம் தெரியாத தெய்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வேன் என பூசாரி புலம்பும் இடங்கள், உலக நடப்புகளை வேதக்கார கடவுளை விவரிக்கும் இடங்கள் எல்லாம் உச்சக்கட்ட அங்கதம். ஒரு கட்டத்தில் பூசாரி கடுப்பாகி இனி மாடன் தன் வித்தைகளை இறக்கினால் தான் ஜீவிதம், வித்துக்களை வீசியெரிய வேண்டும் என்பார். பலகாலமாக கொடை பெறாத மாடன் ஒருமாதிரி அசமஞ்சமாக இருக்க ‘பட்டியெங்கில் கடிக்கணும், தெய்வமெங்கில் உபத்திரவிக்கணும்’ என அறிவுறுத்தினார். துளித்துளியாக பூசாரியின் ஆவேசத்திலிருந்து மாடன் தன் ஆவேசத்தைப் பெற்றுக் கொண்டது. அதன்பிறகே திங்கு திங்கென்று குதித்து அங்குமிங்கும் நடைபோட்டு ஆவேச கூச்சலிட்டது. கூப்பாடுகள், ஆவேச உணர்ச்சிகள், வெறியாட்டுகள் எல்லாம் தெய்வத்திலிருந்து மனிதனில் இறங்குவதா அல்லது இங்கிருந்து அங்கு செல்வதா என ஒருகணம் தோன்ற எப்போதும் அது பூசகனிலிருந்து தெய்வத்துக்கு செல்வதாகவேத் தோன்றியது.
கதையிலிருந்து நாடகத்தில் மேலெழுந்த சில தருணங்களும் உண்டு. மாடன் படுக்க வைக்கப்பட்டதும் பலகாலம் கழித்து முதன்முறையாக ஆகாயத்தை பார்ப்பார். அவர் இத்தனை காலமும் கிடைமட்டமாக மண்ணில் ஊன்றிய பிரஜைகளின் வாழ்வை மட்டுமே பார்த்துப் பழகியவர். ஆகாயத்தைப் பார்த்ததும் அதுவரை ஆலோசித்த திட்டங்களை மறந்து துள்ளி குதித்து ஓட ஆரம்பித்து விட்டார். இத்தனை நட்சத்திரங்களின் ஆச்சர்யத்தை அவரால் தாளவே முடியவில்லை. ஓடிப்போய் பனை மரத்தில் ஏறி ஆகாயத்தை இன்னும் அருகில் பார்க்க முயன்றார். மாடனின் துள்ளலைப் பார்த்து பூசாரியும் அவருடன் இணைந்து வானத்தை அவருக்கு காட்டித் தந்தார். மாடன் ஒவ்வோர் நட்சத்திரமும் ஒரு தெய்வமா என்று வினவ பூசாரி ‘ஆ முப்பத்தி முக்கோடி உண்டு’ என்றார். ஒரு காலி இடத்தை சுட்டிக்காட்டி மாடன் ஒத்துழைத்தால் தெய்வமாகி அங்கொரு நட்சத்திரமாய் இடப்பிடித்து விடலாம் என்றார். அதன்பின் பூசாரி ஒருகணம் ஏதோ நினைத்தவராய் விசும்பி இத்தனை தெய்வங்கள் இருந்தாலும் எனக்கான தெய்வம் அதில் ஒன்றுகூட இல்லை என விசும்பினார். மாடன் அவரை சமாதானப்படுத்தி ‘ஞான் உண்டடா உனக்கு, ஞான் ஆகாசத்தின் தெய்வம் அல்லா, உனக்க தெய்வம் மண்ணிண்ட தெய்வாமானு’ என்று சொல்லும் இடத்தில் மண்ணில் நிகழ சாத்தியமான ஓர் அற்புத உறவை நேரில் கண்டோம்.
மாடன் சாய்க்கப்பட்ட பின்பு அங்கு இந்துத்துவ பஜனை கோஷ்டிக்கும் கிறிஸ்துவ பஜனை கோஷ்டிக்குமான காட்சி அதகளமானது.ரார் ர ரார் ர ரார் ர.. என்று மெல்லிய மீட்டலாக இந்து தரப்பில் துவங்கும் ஓசை எதிரிலிருந்து லால்லா லால்லா என சற்று வேகத்துடன் எதிர்வினையை பெறும். ஒரு கட்டத்தில் ஒரு தரப்பின் எதிர்வினைகளை பிற தரப்பின் எதிர் வினைகளை விட மேலும் ஆவேசமாக, மேலும் மோசமாகிக் கொண்டே சென்று மனிதத்தன்மையற்ற விகாரத்தை அடைந்துவிடும். வசனங்கள் அற்று மனித உடல் வெளிப்பாடுகளின் அபத்தத்தைக் கொண்டே தொடர்புறுத்துவதாய் இக்காட்சி அமைந்திருந்தது.
நாடகம் முடிவதற்குள் மாடன் நமக்கு மிகவும் அணுக்கமாகிவிட்டிருந்தார், அருகில் சென்று மீசையை ஒருமுறை இழுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றும் அளவுக்கு. பூசாரியிடம் பேசுகையில் மாடன் தன் கட்டுகளை இழந்து வெளிப்பட்டார் என்றால் பீடத்தில் அமையும் போது சிலைத்த முகத்திலேயே அந்தந்த தருணத்திற்கான உணர்ச்சியை வெளிப்படுத்தினார். இறுதிக் காட்சியில் மாடனுக்கு பின்னால் புதிதாகக் கட்டப்பட்ட கோவிலின் பொற்சுவர்கள் உயர, அச்சுவர்கள் சிறையாக காட்சியளித்தன. எங்கிருந்தோ கிளம்பிய மூன்று வேட்டுகள் வானில் வெடித்து ஒளிப்பூக்களாய் சிதறி புதிதாக கட்டப்பட்ட கோயிலின் குடமுழுக்கு நடந்தேறியது. காருண்யமிக்க அருள்மிகு மாடன் தம்புரான் மந்திரத்தால் கட்டப்பட்ட தன் பீடத்தில் முடிவிலா காலத்தை நோக்கி பீதியுடன் அமர்ந்திருந்தார்.
நாடகம் முடிந்து கூட்டத்தில் வெளிவரும் சில நிமிடங்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. மதிப்பிடும் மனம் செயல்படாமல் புதியதொரு கலைவடிவை ஒன்றரை மணிநேரம் உள்வாங்க முடிந்ததன் ஆச்சர்யத்தை அப்போதுதான் உணர்ந்தேன். பின்னர் கதையுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சாரமான எதையும் மாற்றிவிடவில்லை என்பதும் மகிழ்ச்சியாக இருந்தது. திருச்சூர் திரள் கலைந்து செல்லும் போதும் ஒழுங்கை விடாப்பிடியாக கடைப்பிடித்தது. கலைஞர்களை கண்டு வாழ்த்து சொல்லும் வரிசையில் பெருங்கூட்டம் இருந்தது. நாங்கள் நீலேஸ்வரத்தை மட்டும் தேடிப்பிடித்து விடைபெற்று கிளம்பினோம்.
வெய்யோனில் இந்திரபிரஸ்தத்தின் கால்கோள் விழவின் போது ஓர் அங்கத நாடகம் நிகழும். அதில் நாடக மேடையின் பல்வேறு சாத்தியங்கள் வெளிப்பட்டிருக்கும். அடைமழை, மின்னல் வெட்டுகள், அலைகளில் அசைந்தாடி வரும் படகு, காண்டவ வன எரிப்பு என விரிவாக எல்லாம் மேடையிலேயே நிகழ்ந்து அதற்கான பின்னணி வேலைப்பாடுகளும் குறிப்புணர்த்தப்பட்டிருக்கும். வாசிக்கையில் அவற்றை காட்சிப்படுத்தி மனம் ஏற்றுக் கொண்டாலும் அரங்கு நாடகங்கள் வலுவாக இல்லாத தற்காலத்தில், இவ்வாறான நாடகங்களை நாம் காண்பது சாத்தியமேயில்லை என்றே நினைத்திருந்தேன். இதைச் சொல்லும் போது இங்கு நான் முதன்மைப்படுத்துவது பிரம்மாண்ட அரங்கு நிறையும் காட்சிகளையோ, அதற்கான ஏற்பாடுகளையோ அல்ல. அவ்வாறு சில அரங்கு நிறையும் காட்சிகள் இந்நாடகத்திலும் இருந்தன. ஆனால் அவை எவ்வகையிலும் முதன்மையானதாகவோ வியப்பையோ அளிக்கவில்லை. மாறாக எளிய அன்றாட பொருட்களின், பார்வை கோணங்களின் சாமர்த்தியமான பயன்பாடும், ஒளி ஒலி மாற்றங்களின் பயன்பாடும் வியப்பையும் ஆழ்ந்து செல்லும் உணர்வையும் அளித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக சாரமான கதையும் அதை உள்வாங்கிய நாடகக் குழுவும். விஷ்ணுபுரம் விழாவில் மெய்க்களம் நாடகங்களை அடுத்து மாடனம் மோட்சம் நாடகத்தின் வழி இன்று மேடையின் சாத்தியங்களை மெய்யென உணர்கிறேன். நாடக இயக்குனர் பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் வேறொரு ஊரில் இந்நாடகம் அரங்கேரலாம் என்றார். வாய்ப்பிருக்கும் தமிழ் வாசகர்கள், நண்பர்கள் நிச்சயம் காணலாம். அதுவொரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும்.
டி.ஏ.பாரி
இந்த பெருந்தொற்று அனைவரையும் வீட்டில் அடைத்து வைத்து இருக்கும் நேரத்தில் நமக்கு உதவுவது தொழில்நுட்பம். பிழைப்பிற்கும், பொழுதுபோக்கிற்கும். பொழுதுபோக்கு இன்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கையில் வேண்டிய திரைப்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள். தூங்கும் நேரம் தவிர பார்த்தால் கூட பல வருடங்கள் பார்த்து கொண்டே இருக்கலாம். கொஞ்சம் பின்னால் சென்றால் டீவி தொடர்கள், திரைப்படங்கள், நாடகங்கள், தெருக்கூத்து. இவற்றில் தெருக்கூத்து அழிவின் விளிம்பில் இருக்கின்றது. நாடகங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாடகங்களும் விதவிதமாக மாறியிருக்கின்றன. இன்று நாடகம் என்றவுடன் பட்டென்று நினைவிற்கு வருவது க்ரேஸி மோகனும், எஸ்.வி.சேகரும். துணுக்கு தோரணங்களால் கட்டப்பட்ட நாடகங்கள். பார்க்க கூட வேண்டாம். கேட்டாலே போதும். இன்னும் சில சீரியஸ் நாடகங்களும் நடக்கின்றன. பொன்னியின் செல்வன் எல்லாம் நாடகமாக வருகின்றது. பரிக்ஷா மாதிரியான குழுக்கள் வேறுவிதமான நாடகங்களை நடத்துகின்றன. பெங்களூரில் பலர் வீதி நாடகங்களை நடத்துவதுண்டு.
ஆரம்பத்தில் நாடகங்கள் எப்படி இருந்தன? நாடக நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படிப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன? எப்படி நாடகங்கள் வளர்ந்தன? சினிமா எந்தளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது? நாடக துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவ்வை சண்முகம் எழுதிய இந்த அனுபவ நூல், இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலை தருகின்றது.
அக்கால நாடகங்கள் முழுவதும் பாடல்களால் நிறைந்தவை, பாடல்கள் பாட தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. எம்.ஆர்.ராதாவே மிகச்சிறந்த பாடகர் என்றால் நம்புவது கடினம்தான். அந்த குரலில் பாடலை கேட்பதை நினைக்கவே முடியவில்லை. சண்முகம், மிகச்சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவரின் நாடக வாழ்க்கை, ஐம்பது வருடங்களுக்கு மேலாக போகின்றது. அவர் நாடகத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது அவரது இரண்டு மூத்த சகோதரர்களும் ஏற்கனவே நாடகத்தில் நடித்து கொண்டிருந்திருக்கின்றர். அவரின் தந்தை பாடகராக இருந்துள்ளார்.
நூலின் பெரும்பாலான பக்கங்களில் அவர்களின் நாடக குழு சென்ற ஊர்கள், அங்கு கிடைத்த வசூல், அங்கிருந்து சென்ற ஊர் என்றே போகின்றது, எப்படி சென்றார்கள், என்ன கஷ்டம் வந்தது, யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு நடுவேதான் நாடக உலகை பற்றிய பல தகவல்களை நாம் படிக்க முடிகின்றது.
நாடக நடிகர்களாக ஆரம்பித்து பிறகு சொந்தமாக நாடகங்கள் நடத்தி, சினிமாவிற்கு சென்று நடித்து, சினிமா தயாரித்து வெற்றி பெற்றவர்கள். முதல் பகுதிகளில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக குழுவில் அவர்களது அனுபவங்களை விவரித்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகின்றது. ஒரே இரவில் ஒரு நாடகம் முழுவதையும் எழுதும் திறன் படைத்தவராக இருந்திருக்கின்றார். 4 மணிநேரத்திற்கு மேலாக நடக்கும் நாடகம், அதற்கான காட்சிகள், பாடல்கள், வசனங்கள் அனைத்தையும் ஒரே இரவில் எழுதுவது அசாத்திய திறமைதான். பிற்பகுதிகளில் அவர்களது சொந்த நாடக குழுவைப் பற்றி விவரங்கள். அவர்கள் தயாரித்த நாடகங்கள் பற்றிய விவரணைகள்.
அனைத்து வியாபரங்களில் இருப்பது போலவே ஏமாற்றம், துரோகம், பண மோசடி, ஒரு குழுவை விட்டு இன்னொரு குழுவிற்கு ஓடுவது போன்றவை நாடக உலகிலும் மிக சகஜமானதாக இருந்திருக்கின்றது. காமேஸ்வய்யர் என்னும் சுவாரஸ்ய பாத்திரம், புத்தகம் நெடுக வருகின்றது. பண கையாடல், மோசடி என்று இருந்தாலும் அவரை விட முடிவதில்லை. மக்களிடையே ஒரு காலத்தில் அவ்வளவு வரவேற்பு இருந்த நாடக மோகம், சினிமா வந்தவுடன் மங்கலாகின்றது. ஆனால் அதுவே நாடகத்தை வேறு தளத்திற்கு நகர்த்துகின்றது.
டி.கே.எஸ் சகோதரர்கள் நாடக உலகில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி பார்த்திருக்கின்றனர்.ஒரே சமயம் வறுமையையும், செல்வத்தையும் கண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். மாத சம்பளம் என்று பார்த்தால் பெரிய பணம், ஆனால் சில சமயம் அது கைக்கு வராது. நஷ்டம் அதிகமாகி, குழுவையே மற்றொருவரிடம் ஒப்படைக்கும் நிலைக்கு சென்றிருக்கின்றனர், நாடக காட்சியமைப்பு பொருட்களை கொட்டைகையிலேயே விட்டுவிட்டு வந்திருக்கின்றனர். இருந்தாலும் நாடகத்தை விடவில்லை, சினிமாவில் கிடைத்த பணத்தையும் நாடகத்திலேயே முதலீடு செய்திருக்கின்றார்கள். அண்ணாத்துரை, ஈ.வெ.ரா, என்.எஸ்.கிருஷ்ணன், ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், எஸ்.ஜி.கிட்டப்பா, பாகவதர் போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களுடன் நல்ல தொடர்பு இருந்திருக்கின்றது.
சில தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை, நாவல்களை உரிமை பெற்று நாடகங்களாக்கி, நாடக ஆசிரியர்களுக்கு ராயல்டியும் வழங்கி கொண்டிருக்கின்றார்கள். பாவம் இன்றைய நாவலாசிரியர்கள். ஈ.வே.ரா , காசு விஷயத்தில் கறார் என்று பெயர் பெற்றவர், டி.கே.எஸ் குழுவினரிடம் தாரளமாக நடந்து கொண்டிருக்கின்றார், பாரதிதாசன் பாடல்களை பயன்படுத்த அனுமதி வேண்டி பல கடிதம் அனுப்பியும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். நடிக்க தெரியாத தியாகராஜ பாகவதர், குழுவை விட்டு ஓடுபவர்கள் மீது போலிஸ் கேஸ் கொடுக்கும் நாடக முதலாளி, நாடக கொட்டைகளில் கலட்டா செய்யும் உள்ளூர் ரவுடிகள், மகரக்கட்டால் பாதிக்கப்படும் நடிகர்கள், பெண் வேடத்தில் பிரமாதப்படுத்திய ஏ.பி.நாகராஜன், சண்முகம் மறுத்த வேடத்தில் நடித்து புகழ் பெற்ற கிட்டப்பா, என்.எஸ்.கே உடன் பல சம்பவங்கள், ராஜா சாண்டோவுடனான சினிமா அனுபவங்கள்.
இது மாதிரியான நூல்களால் என்ன பயன் என்றால், சில புதிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம், ஒரு காலகட்டத்தைப் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கின்றது. நம் தாத்தா பாட்டி எல்லாம் எப்படி இருந்தனர் என்று தெரிந்து கொண்டு கொஞ்சம் வயிறெரியலாம் இல்லை சந்தோஷப்படலாம்.