Reading view

மகாத்மா காந்தி சிகரெட்

Pa Raghavan

ஒருவர் பிரபலமாக இருந்தால் அவரை விளம்பரப் படங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். இக்காலத்தில் பெரும்பாலும் திரைப்படத் துறையினர். அல்லது கிரிக்கெட் வீரர்கள். வேறு துறைப் பிரபலங்கள் வருவதை அபூர்வமாகவே பார்க்கிறோம்.

ஆனால் யோக்கியமாக ஒப்பந்தம் செய்து, உரிய தொகை கொடுத்தே விளம்பரங்களில் நடிக்கச் சொல்கிறார்கள். அத்துமீறல்கள் இதில் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இது விஷயத்தில் முன்னொரு காலத்தில் அநியாய அழிச்சாட்டியமெல்லாம் நடந்திருக்கும் போலிருக்கிறது.

பெயர் தெரியாத ஒரு சிகரெட் கம்பெனி, ‘மகாத்மா காந்தி சிகரெட்’ என்றொரு பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எந்த வருடத்திலிருந்து எப்போது வரை அது இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான யங் இந்தியாவில் காந்தி இது குறித்து ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். மது, சிகரெட் இரண்டின் மீதும் தனக்குள்ள ஒவ்வாமையை விரிவாக எடுத்துச் சொல்லி, சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த பிராண்டை நிறுத்திக்கொள்ளவோ, மக்கள் அதைப் புறக்கணிக்கவோ செய்தால் மிகுந்த நன்றி சொல்வேன் என்று பணிவுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் குறிப்பில் இருந்து நான் எடுத்துக்கொண்ட விஷயங்கள் இரண்டு.

1. 1921லேயே காந்தி, மகாத்மா என்று அறியப்பட்டிருக்கிறார்.

2. காந்தியை விளம்பர மாடலாகக் கொண்டால் பொருள் விற்கும் என்று அப்போதே வியாபாரக் கணக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காந்தியின் மறுப்பைப் பாருங்கள். மறுப்பு-எதிர்ப்பு-கண்டனம்தான் சாரம். ஆனால் சற்றும் பதறாத இயல்பும் நிதானம் தவறாத மொழியும் நிச்சயமாகத் திகைப்பூட்டும்.

யங் இந்தியா, ஜனவரி 12, 1921 இல் வெளியானது.

நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பில் வெற்றிமாறன் ஒரு படம் எடுக்கிறார் என்று தெரிய வந்தபோது எவ்வளவு எரிச்சலடைந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். வெட்கத்துடன் இம்மனிதரின் தாள் பணிவதல்லாமல் செய்வதற்கு வேறொன்றுமில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •