Reading view

முதலீட்டு முதல்வன் வாரன் பஃபெட்

Tim-Cook-and-Warren-Buffett

வாரன் பஃபெட் பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, பங்குதாரர்களையும் பொருளாதார உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த முக்கியமான அறிவிப்பு, ஒமாஹாவில் நடந்த வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் வளர்ச்சியை வழிநடத்தி வந்த பஃபெட், தனது வாரிசுக்காக இப்பதவியை விட்டுவிலக்கினார்.

Tim-Cook-and-Warren-Buffett

2026 முதல், துணைத் தலைவர் கிரெக் ஏபல் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கிறார். 94வது வயதிலும் பஃபெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் தொடர, ஏபல் நிர்வாகத் திறமையால் பஃபெட்டின் நம்பிக்கையையும், டிம் குக்கின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

பஃபெட் ஒரு காங்கிரஸ் மன்ற உறுப்பினரின் மகனாக 1930-இல் பிறந்தவர். ‘ஓமாஹாவின் தீர்க்கதரிசி’ என அழைக்கப்படும் இவர், பெஞ்சமின் கிராஹாமின் வழிகாட்டலில் முதலீட்டு கொள்கைகளைப் படித்து, ஒரு நிதி நெருக்கடியில் இருந்த ஆடை நிறுவனத்தை மிகப்பெரிய முதலீட்டு வல்லரசாக மாற்றினார்.

பஃபெட் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டை தவிர்த்து வந்தாலும், 2016-இல் ஆப்பிளில் முதலீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆப்பிளை ஒரு வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் கூடிய நுகர்வோர் நிறுவனமாகக் கண்டு முதலீடு செய்த பஃபெட், பெர்க்ஷைருக்கே மிகப்பெரிய லாபத்தை பெற்றுத்தந்தார். ஆனால் 2023-24 காலப்பகுதியில் 515 மில்லியன் பங்குகளை விற்றது பலரிடத்தில் கேள்விகளை எழுப்பியது. இதை அவர் வரி திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்தை குழப்பங்களை எதிர்நோக்கிய நடவடிக்கையாக விளக்கியுள்ளார்.

நன்றாக நிர்வாகிக்கப்படும், மதிப்பை விட குறைவான விலையில் உள்ள பங்குகளை நீண்டகாலத்திற்கு வாங்கி வைத்திருப்பதே பஃபெட்டின் முதலீட்டு தத்துவம். கோகா-கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள், அவரது கோட்பாடுகளுக்கு ஏற்ப, பெர்க்ஷைர் போர்ட்ஃபோலியோவில் நீண்ட காலமாக உள்ளன. ஸீஸ் காம்பனி, ஃப்ரூட் ஆஃப் த லூம், டெய்ரி க்வீன் போன்ற நிறுவனங்களை முழுமையாக வாங்கினாலும், அவற்றின் நிர்வாகத்தை தொடர அனுமதித்துள்ளார்

பஃபெட் முதலீட்டாளராக மட்டுமல்ல, மாபெரும் நன்கொடை வழங்குபவராகவும் உலகத்தை ஈர்த்தவர். 2006 ஜூனில், தனது பெரும்பாலான செல்வத்தை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்தது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அறக்கட்டளை உலக சுகாதாரம், நூலகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் கவனம் செலுத்துகிறது. இது உலகின் மிகப்பெரிய வெளிப்படையான நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. பதவியில் இருந்து விலகினார் என்றாலும், பஃபெட்டின் சிந்தனையும் செயல்முறையும் உலகின் மிக முக்கிய முதலீட்டுத் துறையிலேயே தொடர்ந்து ஒளிவீசும்.

  • நவீனா

The post முதலீட்டு முதல்வன் வாரன் பஃபெட் appeared first on செல்லினம்.

  •  

யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி

Apple Emoji

ஆப்பிளின் ஐஓஎஸ் 18.4 இயங்கு தளத்தில், தெறிக்கும் ஊதா வண்ணம், யாழ், காய்ந்த மரம் என எட்டு புதிய உணர்ச்சிக்குறி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Apple Emoji

உணர்ச்சிக்குறி என்பவை மின்னணு தகவல் தொடர்பில் உணர்வுகளை, கருத்துக்களை அல்லது பொருள்களை வெளிப்படுத்தப் பயன்படும் சிறிய சின்னங்கள் ஆகும். இவை உரை அடிப்படையிலான செய்திகளை மேம்படுத்தக்கூடிய காட்சி வழித் தகவல் தொடர்பு முறையாகும். ஆரம்பக்காலத்தில் எளிமையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகத் தோன்றி, தற்போது பல்வேறு கருத்துக்களை அடையாளப்படுத்தும் வகையில் பரிணமித்துள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் நமது உணர்வுகளுக்கு வண்ணம் பூசும் தூரிகைகள்தாம் உணர்ச்சிக்குறிகள்.

இப்போது ஐஓஎஸ்18.4 இயங்குதளத்தில் புதிதாக எட்டு உணர்ச்சிக்குறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்களுக்குக் கீழே பைகள் கொண்ட முகம், கைரேகை, தெறிக்கும் ஊதா வண்ணம், வேர் காய்கறி, இலையற்ற மரம், யாழ், மண்வெட்டி, சார்க் கொடி என நீள்கிறது இந்த வரிசை. முதல் உணர்ச்சிக்குறி உங்கள் சோகத்தையும், சோர்வையும் உங்கள் நண்பர்களுக்குப் பகிர நிச்சயம் உதவும்.

பட்டியலில், இறுதியாக உள்ள உணர்ச்சிக்குறி சார்க் நாட்டின் தேசியக்கொடியாகும். சார்க் என்பது ஒரு தீவு நாடு. இது பிரான்ஸிற்கு அருகே அமைந்துள்ளது. வெறும் ஐந்நூறு மக்கள் மட்டுமே வசிக்கும் இந்நாட்டில் பல்வேறு வித்தியாசமான விதிகள் இருக்கின்றனவாம்.‌ இன்றுவரை இந்நாட்டில் மகிழுந்து ஓட்டுவதற்கு அனுமதி இல்லையாம். மாறாக இந்நாட்டு மக்கள் மிதிவண்டி, குதிரை வண்டியையே போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த புதிய உணர்ச்சிக்குறிகள் யூனிகோடின் செப்டம்பர் 2024 பரிந்துரைகளின் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர சில உணர்ச்சிக்குறிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நாம் அறிந்ததுதான். புதிய அரசாங்கம் பழைய தேசியக்கொடியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதைப் பின்பற்றிய ஆப்பிளும் புதிய அரசாங்கம் வெளியிட்டுள்ள கொடியைக் கொண்டுவந்துள்ளது.

பழைய கொடியில் மூன்று நிறப்பட்டைகள் இருந்தன. அவை முறையே சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகும். நடுவிலிருந்த வெள்ளை நிறப் பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தன. இப்போது உள்ள புதிய கொடியில் சிவப்பு நிறம் பச்சை நிறமாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள புதிய உணர்ச்சிக்குறிகள் பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

  • மு.‌இசக்கிமுத்து

The post யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி appeared first on செல்லினம்.

  •  

உலகின் லேசான ஐபோன்

apple air

உலகின் மிக மெல்லிய திறன்பேசியாக ஐபோன் 17 ஏர் உருவாக இருப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும், தொழில்நுட்ப ஆர்வலர்களும் விமர்சகர்களும் அதுகுறித்த பல்வேறு ஆரூடங்களைக் கூறி வருகின்றனர். 

apple air

ஆப்பிள் தங்கள் திறன்பேசிகளில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு புதுமையை, மேம்படுத்தலை, அறிமுகத்தைச் செய்துகொண்டே வருகிறது. செப்டம்பர் வந்தாலே புது ஐபோன் வெளியாகும் என்ற வழக்கத்திற்கு மக்கள் பழகிவிட்டார்கள். இதுவே ஆண்டுதோறும் ஆப்பிளின் அடுத்த அறிமுகம் என்ன என்று சந்தைக்குள் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் 2025-ம் ஆண்டுக்கான ஐபோன் எது என்ற விவாதத்தில் ஆர்வத்தைத் தூண்டும் பல வதந்திகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

மிக மெல்லிய ஐபோன் 

ஆப்பிள் நிறுவனம் 2025-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் போகும் திறன்பேசி வரிசை ஐபோன் 17. அது மிக மெல்லிய திறன்பேசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இதுவரை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்.ஈ (Iphone SE) ரகங்களை விட மெல்லியதாக இருக்கும் எனப் பேசப்படுகிறது. ‘ஐபோன் 17 ஏர்’ (Iphone 17 Air) என்று அந்த மாதிரிக்கு பெயர் வைக்க வாய்ப்புள்ளதாம். வெறும் 5.5 மில்லிமீட்டர் தடிமன் மட்டுமே கொண்ட லேசான திறன்பேசியாக அதை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருகிறதாம். 

புதிய, பலமான வடிவமைப்பு 

ஐபோன் 17 ஏர் மாதிரியில் யுஎஸ்பி சி (USB C) வசதியுடன் மின்னேற்றி வழங்கப்படுகிறது என்றும், நீடித்து உழைக்கும் மின்கலம் இதில் பொருத்தப்படும் என்றும் சொல்கிறார்கள். அதனால் ஐபோன் 16 வரை உள்ள மாடல்களின் அதே திறன் மற்றும் அதிகப்படியான மின்கல ஆயுளுடன் ஐபோன் 17 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லிய கணிப்பொறிகளின் புதிய அத்தியாயம்

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் மடிக்கணினி உலகில் மிக மெல்லியதான மேக்புக் ஏரை அறிமுகப்படுத்தி தனியிடம் பிடித்திருக்கிறது. இப்போது திறன்பேசியிலும் மெல்லிய மாதிரியைக் கொண்டு வந்து புதிய அத்தியாயத்துக்கு வித்திடும் என்கிறார்கள் தொழில்நுட்ப ஆர்வலர்கள். இந்த ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 மேக்ஸ் என 3 விதமாகஅறிமுகமாகும் என்பது வரைக்கும் இவர்கள் அடித்துக் கூறுகிறார்கள். மேலும் தற்போதுள்ள தகவல்கள்படி இதன் விலை 900 யூரோ முதல் 1,300 யூரோ வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். அந்த உலகளவையும் கைப்பிடிக்கும் மெல்லியதாய்ச் சுருக்கப் போகும் ஐபோனின் அடுத்த படைப்புக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

  • விவேக்பாரதி

மெல்லிய ஐபோன் – தொழில்நுட்ப ஆர்வலர்களின் விமர்சனங்கள்

The post உலகின் லேசான ஐபோன் appeared first on செல்லினம்.

  •  

ஐபோன் திரைப்படம்

iPhone movie

ஐபோன்16 புரோ மாக்ஸ் பயன்படுத்தி. நான்கு மும்பை இயக்குநர்கள் தங்கள் குறும்படங்களை எளிதாகவும், தரமாகவும் உருவாக்கி உள்ளனர்.

iPhone movie

மும்பை அகாடமி ஆஃப் மூவிங் இமேஜ் (MAMI) – மமி அமைப்பின் ‘ஷாட் ஆன் ஐபோன்’ (MAMI Select: Shot on iPhone) என்ற திட்டத்தின் கீழ் இது நடந்திருக்கிறது. தற்போது இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த திட்டம், கொங்கனா சென் சர்மா, விக்ரமாதித்ய மோத்வானே, லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைத்துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறுகிறது. மமி அமைப்பு மும்பைத் திரைப்பட விழாக்களை நடத்தும் ஒரு பொதுவான அமைப்பாகும்.

திரைப்பட உருவாக்கத்தில் திறன்பேசி படக்கருவிகள், குறிப்பாக ஐபோன் படக்கருவியின் பயன்பாடு, உலகளாவிய சினிமா துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முதல் முக்கியமான முயற்சி 2011ஆம் ஆண்டு வந்த நைட் பிஷிங் (Night Fishing) என்ற கொரிய குறும்படமாகும். இதை இயக்கியவர் பாக் சான்-வுக். ஐபோன் 4ல் எடுக்கப்பட்ட படம் இது.

அதன்பின் 2015ஆம் ஆண்டு டான்ஜெரின் (Tangerine) என்ற அமெரிக்க திரைப்படம் முழுவதுமாக ஐபோன் 5S-ல் எடுக்கப்பட்டது. இது சண்டான்ஸ் திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது. இதன்பிறகு, திறன்பேசியில் திரைப்படம் எடுக்கும் வழக்கம் பரவலானது.

இந்த வரிசையில், பெரும் தயாரிப்பு செலவுகள் இல்லாமல், கதையை மையமாகக் கொண்டு, தொழில்நுட்பத்தை துணையாகக் கொண்டு ஐபோனை மட்டுமே பயன்படுத்தி குறும்படங்களை உருவாக்க திரைப்படக்கல்வியைக் கற்றுத்தரும் நிறுவனங்களே ஊக்குவிக்கின்றனர். தற்போதைய மமி மும்பைத் திரைப்படவிழாவில் நான்கு இயக்குநர்கள் ஐபோனில் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டன.

அம்ரிதா பக்சி இயக்கியுள்ள ‘டின்க்டோரியா’ (Tinctoria) என்ற உளவியல் துப்பறியும் படமானது 1859ல் வங்காளத்தில் நடந்த இண்டிகோ கிளர்ச்சியை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரோஹின் ரவீந்திரன் நாயர் உருவாக்கிய ‘கொவர்ட்டி’ (Kovarty) என்பது ஒரு தட்டச்சுப்பொறிக்கும் தட்டச்சாளருக்கும் இடையேயான உறவைக்கூறும் கற்பனை நிறைந்த காதல் கதை. ஐபோனின் சிறிய வடிவமைப்பினால், அதை தட்டச்சுப்பொறிக்குள்ளேயே வைத்து படம் பிடித்து, சிறந்த கோணங்களில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரோஹின்.

சாணக்ய வியாஸ் இயக்கிய ‘மங்யா’ (Mangya) என்பது ஒரு சிறுவனையும் அவன் வளர்க்கும் சேவலையும் குறித்த வாழ்வியல் கதை. இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில், கதிரவன் உதயமாகும் முன் 1,000 அடி தூரம் நடிகரைத் தொடர்ந்து சென்று படம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கமான படத்தூக்கிக் கருவிகளை அமைக்க நேரமில்லை. ஐபோன் ஆக்சன் மோட் பயன்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். மேலும், காணொளி எடுக்கும் போது காட்சியில் ஏற்படும் அதிர்வுகளை குறைத்து, ஒழுங்காக நிலைத்த காட்சியை உருவாக்குவது  (Stabilisation) சவாலாக இருந்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய தமிழ் குடும்பத்தில் உள்ள பெண்களின் அடக்கப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது  சீயிங் ரெட் (Seeing Red). இதில் தமிழ் சினிமாவில் காலம் காலமாக கதாநாயகன் மெதுவான நடையில் அறிமுகமாகும் (slow motion) காட்சிகளை தனது படத்தில் கதாநாயகிக்கு வைத்திருப்பதாக கூறியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் சாலினி விஜயகுமார்.

ஐபோன்16 புரோ-வின் 120மிமீ லென்ஸை பயன்படுத்தி கதை, அமைப்பு மற்றும் கருப்பொருளை ஒரே ஷாட்டில் ஒருங்கிணைக்க முடியும் என்று இந்த நவீன இயக்குநர்கள் கூறுகின்றனர்.

இந்த நான்கு குறும்படங்களையும் முழுமையாக எம்ஏஎம்ஐ(MAMI) மும்பை திரைப்பட விழா யூட்யூப் பக்கத்தில் காணலாம். இன்றைய இயக்குநர்கள், விலையுயர்ந்த படக்கருவி, ஒளி உமிழும் கருவிகள் இல்லாமலேயே உண்மையான கதை சொல்லல் மீது கவனம் செலுத்துகிறார்கள். ஐபோன் போன்ற கருவிகள், சிறு படைப்பாளிகளுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் கலை மற்றும் ஊடகத்துறையில் எளிய மக்களின் பங்கேற்பையும் இடத்தையும் இவை எளிதாக்குகின்றன. தொழில்நுட்பத்தின் உதவியால், கலை, காலத்தையும், எல்லைகளையும் கடந்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.

தொடர்புடைய இணைப்பு

ஆப்பிள் செய்தி
மமி யூட்யூப் பக்கம்

The post ஐபோன் திரைப்படம் appeared first on செல்லினம்.

  •  

பதிப்புரிமையில் விலக்கு கோரும் ஓப்பன்ஏஐ

OpenAI

பதிப்புரிமையாளர்களின் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் விலக்கு கோரி கடிதம் எழுதியுள்ளது ஓப்பன்ஏஐ. அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள இக்கடிதத்தில் சீனா நம்மை இத்துறையில் முந்தாமல் இருக்க இந்த அனுமதி தேவை என்கிறது.

OpenAI

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மொழிமாதிரி, நாம் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பளிச் பளிச்சென்று பதில் தருகிறது. தொடக்க காலத்தில் முன்பே தரவுகள் அளித்துப் பயிற்சி கொடுக்கப்பட்ட மொழிமாதிரியாகத்தான் அறிமுகமானது. மக்கள் கொடுத்த பேராதரவினால் மேம்பாடு கண்டது. தான் கொடுக்கும் பதில்களுக்கான தரவுகளை இணையம் முழுவதில் இருந்தும் சேகரிக்கிறது. அதை அப்படியே மானே, தேனே சேர்த்து நமக்கேற்றவாறு கொடுக்கிறது.

அண்மையில் ஜிப்லி வகை ஓவியம் போலவே வரைந்து கொடுத்துப் பரவலாக கண்டனம் எழுந்ததும் நினைவிருக்கும். நாங்கள் எழுதிப்போட்டிருக்கும் செய்திகளை எடுக்கிறது என்று செய்தி நிறுவனங்கள் சிலவற்றின் வழக்குகளையும் எதிர்கொள்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தளவில் காப்புரிமை, பதிப்புரிமை விதிகள் ஓரளவுக்கு வலுவாகவும் தெளிவாகவும் உள்ளன. இதை எல்லாம் தளர்த்த வேண்டும் என்கிறது ஓப்பன்ஏஐ.

இதற்குத் தலையாய காரணமாக ஓப்பன்ஏஐ சுட்டுவது சீனாவை. அவர்களுடைய செயற்கை நுண்ணறிவு மொழிமாதிரிகள் எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் எல்லாத் தரவுகளையும் எடுத்துப் பயனர்களுக்குக் கொடுக்கின்றனவாம். அது தவறென்பது போலத்தான் கடிதம் இருக்கிறது. ஆனால் அந்தத் தவறை நாங்களும் செய்ய அனுமதி வேண்டும் என்கிறார்கள். இல்லாவிட்டால் இத்துறையில் அமெரிக்காவை சீனா முந்திவிடும் என்றும் எச்சரிக்கிறது ஓப்பன்ஏஐ. இதைத் தடுக்க எழுநூற்றுச் சொச்சம் பதிப்புரிமைச் சட்டங்களில் இருந்து உடனே விலக்கு கொடுங்கள் என்கிறது கடிதம்.

போகிற போக்கில் ஆப்பிள் நிறுவனத்தையும் வம்புக்கு இழுத்துள்ளார்கள். மக்களாட்சிக்கும் விதிகளுக்கும் மதிப்பு கொடுக்காத சீனா போன்ற நாடுகளில் இயங்கும் நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்பைத் துண்டிக்கவேண்டுமாம். ஆப்பிள், அலிபாபா கூட்டினை முறிக்க இந்தப் பரிந்துரை. ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. அவர்கள் கவனம் எல்லாம் ஆப்பிள் நுண்ணறிவு மேம்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதுதான் தங்கள் களம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

நாட்டுப்பற்றையும் வியாபாரத்தையும் ஒன்றாக இணைத்து ஓப்பன்ஏஐ எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தரவுகளையும் தனியாருக்குத் திறந்துவிட்டு செயற்கை நுண்ணறிவைப் புகுத்த வேண்டும் என்பதுதான். அரசாங்கத் தரவுகளை எண்ணிமத் தரவுகளாக (Digital Data) மாற்ற தனியார் நிறுவனங்களைத் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக இதுபற்றி பேச்சுகள் எழுந்துள்ளன.

தரவுகளின் முக்கியத்துவம் அறிந்து இரு நாடுகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கையில் இந்தியாவும் இதுபற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, ராகுல் காந்தி, “இந்தியாவிடம் உற்பத்தித் தரவும் இல்லை, நுகர்வுத் தரவும் இல்லை” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். ஓப்பன்ஏஐ எழுதியுள்ள கடிதம் தரவுகளின் உலகில் ஒவ்வொரு நாடும் மேம்படவேண்டியதை உணர்த்துவதாக இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்
1) கிப்லி – ஜிப்லி – ஜிபுரி – ஜிப்டி
2) ஆப்பிள் நுண்ணறிவு
3) ராகுல் காந்தி பேச்சு
4) ஓப்பன்ஏஐ கடிதம்

The post பதிப்புரிமையில் விலக்கு கோரும் ஓப்பன்ஏஐ appeared first on செல்லினம்.

  •  

இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி

Iphone-Tata-India

அமெரிக்காவின் புதிய வரித் திட்டத்தால் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிலிருந்து அதிகமான ஐபோன்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

Iphone-Tata-India

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54% முதல் 108% வரையில் வரி விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரித் திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு, ஆப்பிள் நிறுவனத்தை அதன் உற்பத்தி மற்றும் விநியோகத் திட்டங்களை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதனால் ஐபோன்களின் விலை உயரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. 

ஆப்பிளுக்கு என்ன நெருக்கடி? 

உலக திறன்பேசிச் சந்தையில் தனியிடம் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் சீனா மட்டும் 80-90% திறன்பேசிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இந்த இறக்குமதிகளுக்கு 108% வரை வரி விதிக்கும் புதிய சட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது. இந்த வரி விகிப்பு, ஆப்பிள் நிறுவனத்தை நேரடியாக பாதித்துள்ளது. இதனால் ஐபோன் விலை உயரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள திறன்பேசி வகைகளின் விலையை விட 46% விலை உயரலாம் எனக் கணிக்கப்படுகிறது. இதையடுத்து அமெரிக்காவில் பலர் ஐபோன்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறைந்த விலையில் இருக்கும்போதே அதிக திறன்பேசிகளை வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் நினைப்பதாக அவை தெரிவிக்கின்றன. இதுவும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆப்பிள் நிறுவனத்தைத் தள்ளியுள்ளது. 

ஆப்பிளுக்கு இந்தியா உதவிக்கரம்

ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த உற்பத்தியில் இந்தியாவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 10% முதல் 15% உற்பத்தியைச் செய்து வந்தது. டாடா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களின் உதவியுடன் உற்பத்தியாகும் ஐபோன்கள், பல நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் இந்திய உற்பத்தி ஐபோன்களுக்கு 26% மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புதிய வரித் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. இந்தாண்டு இந்திய உற்பத்தியை 20% -க்கு உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய அரசுடன் இணைந்து உற்பத்தி வசதி மற்றும் மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை கோருதல் உள்ளிட்ட முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் உற்பத்தியை அதிகரித்து, சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலியை முழுவதுமாக விலக்கிக் கொள்ளும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன்மூலம் வரி தாக்கங்களிலிருந்து தப்பி, உலகளாவிய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வழி வகைகளைச் செய்து வருகிறது. 

இந்தியாவுக்கு என்ன பயன்? 

ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிப்பதன் மூலம், தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது. இந்திய அரசின் வருவாய் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. இந்தியாவிலிருந்து அதிகமான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, இந்தியா உற்பத்தி மூலம் உலகளாவிய சந்தையில் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும். இதனால், இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தி திறன் உலகளாவிய சந்தையில் உயர்ந்ததாக மதிக்கப்படும். மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தித் தொழில்நுட்பம் அத்துறையில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

The post இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி appeared first on செல்லினம்.

  •  

இணையப் போலிகள்

phishing

இணையத்தில் போலிகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் மிகச் சில தற்காப்பு வழிகளையேனும் தெரிந்து கொள்ளும் தேவை உள்ளது.

phishing

உலக அளவில் இணையதளங்களின் நுகர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. 1996-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் வெறும் 0.85% மக்களே இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் 2024-ம் ஆண்டு கணக்கின்படி 68% மக்கள் இணையப் பயன்பாடு இருக்கிறது. இந்தப் பெரும் வளர்ச்சி, போலிகளின் கூடாரத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சரியமில்லை. 

பிஷிங் (Phishing) என்பது நம்பகமான நிறுவனம் அல்லது நபரைப் போலவே போலி கணக்குகள் உருவாக்கி, மோசடியில் ஈடுபடுவதாகும். போலி மின்னஞ்சல், செய்திகளைத் தூண்டில் போல் போட்டு, ஆசைகாட்டி நம்மைச் சிக்க வைப்பதால் இப்பெயர் வந்தது. சமூக வலைதளங்களில் நமக்குத் தெரிந்தவர் பெயரிலோ, நமது பெயரிலோ கணக்கு தொடங்கி, பணப் பறிப்பில் ஈடுபடுவது பற்றி நாம் அறிவோம். அதுவும் இணையப் போலி மோசடிகளின் ஒரு வகையே. இந்தியாவில் அன்றாடம் நம் தொலைப்பேசி அழைப்பின்போது ஒலிக்கும் அறிவிப்புகூட இத்தகைய போலிகளைப் பற்றிய எச்சரிக்கைச் செய்திதான். தொடக்க காலத்திலிருந்தே மின்னஞ்சல் மூலம் நுழையும் இணையப் போலிகள், தற்போது மிகத் தெளிவாகவும், மிகுதியாகவும் வளர்ந்திருக்கின்றன. 

முன்னர் எழுத்துப் பிழைகளுடன் வரும் மின்னஞ்சல்களைப் பார்த்தாலே நமக்குச் சந்தேகம் எழும். அலுவல் ரீதியான மின்னஞ்சல் இப்படித் தப்பும் தவறுமாக இருக்காதே எனத் தோன்றினாலே நாம் மோசடியில் இருந்து தப்பிக்க வழி இருந்தது. தற்காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் மின்னஞ்சல்கள் அசலைப் போலவே அலுவல் ரீதியிலான சொற்களைப் பயன்படுத்திப் பிழைகள் இன்றி வருகிறன்றன. இதில் போலிகள் வந்தால் கண்டறிவது கடினமாக இருக்கிறது.

எழுத்துப் பிழைகள் இன்றி வரும் போலிகளைக் கண்டறிய நமக்கு வரும் மின்னஞ்சல்களை தொடர்ந்து கண்காணிக்கும் பழக்கம் முக்கியமானது. எதிர்பாராத நிறுவனங்களிலிருந்து வரும் விளம்பர மின்னஞ்சல்களை சந்தேகத்துடன் அணுகுதல் வேண்டும்.

கடவுச் சொல், கடன் அட்டை விவரங்களைக் கோரும் மின்னஞ்சல்களைத் தவிர்த்தல் நல்லது. நம்பகத்தன்மை அற்ற இணையதள முகவரிக்குள் நுழையாமல் இருந்தால் போலிகளின் மோசடிகளைத் தவிர்க்கலாம். 

மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் வரும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் முன், அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்யுங்கள். இரண்டு நிலை அங்கீகாரத்தை (Two-Factor Authentication) செயல்படுத்துதல் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

மின்னஞ்சல் அனுப்புநர் முகவரி உண்மையான நிறுவனத்தின் முகவரியுடன் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்கவும். வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தி, அவற்றை முறையாக நிர்வகிக்கவும். இவற்றின் மூலம் போலி மோசடிகளிடமிருந்து தப்பிக்கலாம். கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றுவதும் சிறப்பானது.

போலிகளின் மோசடியில் சிக்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்தால், வேறு யோசனையே வேண்டாம், உடனடியாக கடவுச்சொற்களை மாற்றிவிடுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள். ஆப்பிள் போன்ற சில நிறுவனங்கள் தனித்துவமாக இதற்கென்றே புகார் பெட்டிகளைக் கொண்டுள்ளன. இவற்றில் புகாரளிக்கலாம்.

  • விவேக்பாரதி

The post இணையப் போலிகள் appeared first on செல்லினம்.

  •  

ஆப்பிள் விஷன் புரோ கருவிகளில் சிறப்புச் செயலி

Apple Vision Pro

ஆப்பிள் விஷன் புரோ கருவிகளில் பயன்படுத்தப்படும் உள்ளார்ந்த காணொளிகளைக் (Immersive Video) கையாளும் வகையிலான புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Apple Vision Pro

உள்ளார்ந்த காணொளிகள் தனித்துவமான 360 பாகை ரக படக்கருவிகளைப் பயன்படுத்தி எடுக்கப்படுகின்றன. இது ஒரே நேரத்தில் பல திசைகளில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்யும் திறன் கொண்டவை. படக்கருவிக்குள்ளேயே அனைத்துக் காட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இது அனைத்தையும் ஒருங்கிணைத்து உள்ளார்ந்த காணொளியைத் தந்துவிடுகிறது. இது பொதுவாக மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

மெய்நிகர் கருவிகளைப் பயன்படுத்தி இந்த காணொளிகளைப் பார்க்கும்போது, பார்வையாளர்களுக்கு இது காட்சிக்குள் இருப்பதைப் போன்ற மாயையை உருவாக்குகிறது. உள்ளார்ந்த காணொளிகள் வழக்கமான காணொளிகளிலிருந்து மாறுபட்ட புதுவித அனுபவத்தை வழங்குகின்றன. திரையில் நடக்கும் ஒவ்வொன்றும், தங்கள் அருகிலேயே இருப்பது போன்ற தோற்றம் உருவாகிறது. இது புதிய கதை சொல்லும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதன் முப்பரிமாண விளைவே இவை அனைத்திற்கும் காரணமாக உள்ளது.

இத்தகைய காணொளிகளை கையாள்வதற்காக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த செயலியைப் பயன்படுத்தி உள்ளார்ந்த காணொளிகளைக் உள்ளீடு செய்து, அவற்றை பல்வேறு தொகுப்புகளாக உருவாக்க முடியும். அதோடு முக்கியமான ஒன்றாக இவற்றின் இயங்குநிலை தரவுகளை (Meta data) பார்க்கவும், திருத்தியமைக்கவும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காணொளிக் கோப்புகளை வரிசைப்படுத்துதல், மாற்றியமைத்தல் போன்ற பணிகளைச் செய்ய முடியும்.

இந்த செயலியின் முக்கியமான நோக்கம் ஆப்பிள் விஷன் புரோ கருவிகளை அனைவரும் பயன்படுத்துவதை எளிமையாக்குவதாகும். ஏற்கனவே விஷன் புரோவைப் பயன்படுத்த விஷன்ஓஎஸ் செயலி இருக்கும்போது இன்னொன்று எதற்கு என்ற சந்தேகம் எழும் வாய்ப்புள்ளது. விஷன்ஓஎஸ் செயலி விஷன் புரோவைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மட்டுமே. அதில் பயன்படுத்தப்படும் உள்ளார்ந்த காணொளிகளைக் கையாள்வதுதான், உள்ளார்ந்த காணொளி பயன்பாட்டு செயலியின் வேலை. இதனை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விஷன் புரோ கருவிகளோடு இணைத்துப் பயன்படுத்த முடியும்.

இந்த செயலி ஆப்பிள் மேக் கணிணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் மேக் கணிணி M1 ரக நுண்சில்லைக் கொண்டிருக்க வேண்டும். இந்த புதிய செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து

The post ஆப்பிள் விஷன் புரோ கருவிகளில் சிறப்புச் செயலி appeared first on செல்லினம்.

  •  

ஆப்பிள் 16e : நாமே பழுதுபார்க்கலாம்

apple 16e self repair

புதிதாக அறிமுகமாகியுள்ள ஆப்பிள் 16இ திறன்பேசி, ஆப்பிள் நிறுவனத்தின் நாமே பழுதுபார்க்கும் திட்டத்தில் இணைகிறது.

தேவைக்கு அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட திறன்கருவிகளை வாங்கும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. சில திறன்பேசிகள் ஓர் ஆண்டுக்கு மேல் சரியாக வேலை செய்வதில்லை. நீடித்து உழைக்கும் தரமான திறன்பேசிகள் என்றாலும் பலர் புதுப்புது வசதிகளைப் பயன்படுத்த ஆசைப்பட்டு புதுமாதிரி திறன்பேசி சந்தைக்கு வந்தவுடன் மாற்றிவிடுகிறார்கள். கை தவறி கீழே போடுவது, தண்ணீரில் போடுவது என்று புதுத் திறன்பேசியை உடைத்துவிட்டுப் புதிதாக வாங்குவோரும் உண்டு. இதன் காரணமாக மின்னணுக் குப்பைகள் பெருகுகின்றன. இக்குப்பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

apple 16e self repair

திறன்பேசிகள் பழுதானால் அதைப் பழுது பார்த்துப் பயன்படுத்துவதை சூழலியலாளர்கள் ஊக்குவிக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனம் இதில் தனித்துவமான கட்டுப்பாடுகள் கொண்டிருந்தது. தங்கள் அங்கீகாரம் பெற்ற இடங்களைத் தவிர வேறெங்கும் ஆப்பிள் திறன்கருவிகளைப் பழுதுபார்ப்பது சாத்தியம் இல்லாது இருந்தது. ஆப்பிள் பழுதுபார்ப்பு வலையமைப்புக்கு வெளியே பழுதுபார்த்தால் வாடிக்கையாளர்கள் அந்தத் திறன்பேசியைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. இது குறித்த விமர்சனங்களையும் எதிர்கொண்டது ஆப்பிள்.

இதன் விளைவாக சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில் தங்கள் நிறுவனத்தையும் இணைக்கும் விதத்தில் நாமே பழுதுபார்க்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.  2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம் 2022ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதில் முதலில் ஐபோன்கள் மட்டுமே நாமே பழுதுபார்க்கும் வகையில் இருந்தது. பின்னர் மேக் கணினிகளும் இணைந்தன. ஆப்பிள் திறன்கடிகாரம், ஏர்பாட் என ஒவ்வொன்றாக இதை விரிவுபடுத்தினார்கள்.

இவ்வரிசையில் தற்போது ஆப்பிள் 16இ திறன்பேசிகளும் இணைந்துள்ளன. இந்த நமக்கு நாமே திட்டத்தில் பழுதுநீக்கத் தேவைப்படும் கருவிகளை (tool kit) ஆப்பிள் நிறுவனமே வழங்கும். திருகு, திருகாணி, திறன்பேசியின் வரைபடம், எங்கெங்கே எந்தெந்த பாகங்கள் உள்ளன என்கிற விளக்கப்படம் எல்லாமே ஆப்பிள் கொடுத்துவிடும். திரை, மின்கலம் போன்றவற்றையும் ஆப்பிள் தளத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். இவை அனைத்தும் ஆப்பிள் அங்கீகாரம் பெற்றவை என்பதால் பழுது நீக்கிய பிறகு உங்கள் ஆப்பிள் அடையாளத்துடன் உள்நுழைவதற்கு ஆப்பிள் எந்தத் தடையும் சொல்லாது.

அடேங்கப்பா என்று வாழ்த்துவதற்கு முன்பு விலையையும் தெரிந்துகொள்வது நல்லது. அறுநூறு டாலர் மதிப்புள்ள ஐபோன் 16இ திறன்பேசியைப் பழுதுபார்க்கும் கருவிகள் அடங்கிய தொகுப்பை வாடகைக்குத் தருகிறது. ஒரு வார காலத்துக்கு வாடகை சுமார் ஐம்பது டாலர். திரையைச் சரிசெய்வதென்றால் அதைத் தனியாகப் பணம் செலுத்தி வாங்கவேண்டும். ஒட்டுவதற்கான பொருளும் வாங்கவேண்டும். எல்லாம் தோராயமாக முந்நூறு டாலர்கள் கணக்கு வருகிறது. திறன்பேசியின் விலையில் பாதி செலவாகிறதே என்றும் சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஒழுங்காகச் செய்யத் தெரியாமல் உடைத்தால் முந்நூறும் அறுநூறும் சேர்ந்து மொத்தமாகப் போய்விடும் என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள்.

நீண்ட கால நோக்கில் பார்த்தால் இம்மாதிரி முயற்சிகள் வரவேற்கத் தக்கதே. பழுதுநீக்கத் தெரியாது எனில் அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் கொடுப்பதே சிறந்தது. தெரியும் எனில் நாமே செய்து கொள்ளலாம். புதிதாக வாங்குவதைவிட இது நிச்சயம் மேலானது. சுற்றுச்சூழல் கேடுகளைக் குறைக்க நம்மால் இயன்றதைச் செய்த திருப்தியும் கிட்டும். ஆப்பிள் திறன்பேசிகளில் விலை குறைவானது என்பதால் ஆப்பிள் 16இ பழுதுநீக்கும் பணத்துக்கும் புதிதாக வாங்கும் பணத்துக்கும் இடைவெளி குறைவாக உள்ளது. மற்ற ஆப்பிள் திறன்கருவிகளில் நாமே பழுதுநீக்கும் திட்டம் இன்னும் கூடுதல் பலன் உள்ளதாகவே இருக்கும். 

2030ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு கார்பன் நடுநிலைமை (Carbon Neutrality) என்பதை இலக்காக வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். உற்பத்தி, போக்குவரத்து அனைத்திலும் தான் வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல். காடு வளர்ப்பு, கார்பன் பிடிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தல். மறுசுழற்சி, பழுதுநீக்கும் திட்டங்களை ஊக்குவித்தல். இப்படிப் பல முயற்சிகளை முன்னெடுத்து சுழிய நிகரக் கரியமில உமிழ்வை (net-zero carbon emissions) சாத்தியப்படுத்த முயல்கிறது ஆப்பிள்.

The post ஆப்பிள் 16e : நாமே பழுதுபார்க்கலாம் appeared first on செல்லினம்.

  •  

ஐபோனில் இயல்பாகும் வாட்சாப்

whatsapp iphone

ஐபோன் பயனர்கள் இனி இயல்புநிலைச் செயலியாக வாட்சாப் மூலம் அழைப்பு விடுக்கலாம், தகவல் அனுப்பலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சில பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வசதி விரைவில் அனைத்து பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

whatsapp iphone

உலகம் முழுவதிலும் சுமார் நூறு கோடிக்கும் அதிகமானோர் ஐபோன் பயன்படுத்தி வருகின்றனர். திறன்பேசி சந்தையில் ஐபோன்கள் உச்சத்தில் உள்ள நிலையில், நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளைச் சீர்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் புதிய தொழில்நுட்பச் சந்தைச் சட்டத்தை (Digital Markets Act) கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் சுதந்திரத்தோடு சந்தைப் போட்டியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமே, ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய நெருக்கடியைக் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. 

ஆப்பிள் ஐபோனில் இதுவரை அழைப்பு மற்றும் தகவல் பகிர்வுகளுக்கு தன் சொந்த செயலியையே இயல்புநிலைச் செயலியாக (Default Apps) பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் மாற்றம் கொண்டு வரும் வகையில், திறன்பேசிகளில் இயல்புநிலை செயலிகளைப் பயனர்கள் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பச் சட்டம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இதனால் வாட்சாப் செயலியையும் இயல்புநிலைக்குத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வாட்சாப்பின் புதுப்பிப்பு அம்சங்களில் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் ஐஓஎஸ் 18.2 பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்த, வாட்சாப் செயலியை 25.8.74 பதிப்புக்குப் புதுப்பிக்க வேண்டும். பின்னர் ஐபோனின் கட்டமைப்புக்குள் நுழைந்து, இயல்புநிலை செயலியில் வாட்சாப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன்மூலம் ஐபோனில் உள்ள தொடர்புகளில், யாருக்கு அழைப்பு விடுத்தாலும் அது தானாகவே வாட்சாப் அழைப்பாக நிகழும். தகவல்களைப் பகிரும்போதும் இயல்பாகவே வாட்சாப் செய்தியாக அனுப்பப்படும். 

இந்த வசதி பயனர்களுக்கு தேர்வுகளும் சுதந்திரமும் வழங்குகிறது என்று கூறப்படும் நிலையில், கலவையான எதிர்வினைகளையும் பெற்றுள்ளது. பல பயனர்கள் ஐபோனின் இயல்புநிலைச் செயலியைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். வாட்சாப்பை இயல்புநிலைக்கு மாற்றுவதில் வெகுசிலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கிடையில் சிலர், வாட்சாப்பை இயல்பு நிலைக்கு மாற்றுவதால் வரும் அழைப்புகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படுவதாகவும் பதிவு செய்துள்ளனர். 

மொத்தத்தில், இந்த புதுப்பிப்பு ஐபோன் பயனர்களுக்கு அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதலில் அதிக சலுகையை வழங்குகிறது, மேலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயலிகளை அமைக்க உதவுகிறது.​

இந்த அம்சம் முதற்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளின் பயனர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுக்கும் விரிவாக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

The post ஐபோனில் இயல்பாகும் வாட்சாப் appeared first on செல்லினம்.

  •  

ஐஓஎஸ் 18.4 தமிழ் பயனர் இடைமுகம்

iOS18.4

ஆப்பிள் தனது ஐஓஎஸ் 18.4 புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பயனர் இடைமுக மொழியாகத் தமிழும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு ஆப்பிள் நுண்ணறிவில் மாற்றங்கள், ஆப்பிள் விஷன் புரோவிற்கு புதிய செயலி, கார் பிளே மென்பொருளில் மாற்றங்கள் எனப் பல புதிய அம்சங்கள் வெளிவந்துள்ளன.

iOS18.4

ஆப்பிள் விஷன் புரோ போன்ற ஒரு கருவியை வெறும் காகித வழிகாட்டிகளைப் பயன்படுத்தி இயக்குவது கடினமான விஷயம்தான். இந்த புதிய பதிப்பில் ஆப்பிள் விஷன் புரோ கருவிக்கு புதிய செயலி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இது விஷன் புரோவை எளிதாகவும், அதே நேரத்தில் பல்வேறு விதமாகவும் பயன்படுத்த வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வழிமுறைகளும் எளிதாக விளக்கப்பட்டுள்ளன. அதோடு காட்சி நுண்ணறிவு அம்சம் ஐபோன் 15 புரோ, ஐபோன் 15 புரோ மேக்ஸ் ரக திறன்பேசிகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆப்பிள் நுண்ணறிவு முக்கியமான அறிவிப்புகளை மட்டும் பூட்டுத்திரையில் காட்டும் அம்சம் ஒன்றை வழங்கி வருகிறது. ஆனால் நமக்கு எது முக்கியம் என்பதை நாம்தானே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஆப்பிள் நுண்ணறிவு அதனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தது. இப்போதைய புதிய பதிப்பில் நீங்களே தேவையான செயலிகளிலிருந்து மட்டும், அறிவிப்புகளைப் பூட்டுத்திரையில் பெற முடியும்.

அதோடு ஆப்பிள் நுண்ணறிவின் ஒவ்வொரு முக்கியமான அம்சத்தையும் இனிமேல் தனியாகச் சென்று பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சிரியோடு பேசு, காட்சி நுண்ணறிவைத் திற போன்றவற்றை உள்ளடக்கிய, கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இன்னும் பல அம்சங்களுக்கான கட்டளைகள் இதில் உள்ளன. ஆப் ஸ்டோர் விமர்சனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு சுருக்கக்குறிப்பு, சிரி-க்கான புதிய இயங்கு படங்கள் என ஆப்பிள் நுண்ணறிவின் புதிய மாற்றங்கள் நீள்கின்றன.

ஆப்பிளின் மகிழுந்துகளில் தகவல்களை வழங்கும் மென்பொருளான கார் பிளேவிலும் (car play) புதிய மாற்றங்கள் வந்துள்ளன. பெரிய திரைகளைக்கொண்ட மகிழுந்துகளில், திரையில் மூன்று வரிசைகளாக உள்ளீட்டிற்கான குறியீடுகளைக் காண்பிக்க உள்ளது. முன்பு இது இரண்டாக இருந்தது. அதோடு மின்சார வாகனங்களில், மின்னேற்ற நிலையங்களை எளிதில் கண்டறியும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் கடந்து ஆப்பிளில் பயனர் இடைமுக மொழியாகத் தமிழ் உள்பட பத்து இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது‌. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்ட்ட அம்சம் இது. உள்ளூர் மொழிகளில் தங்கள் திறன்கருவிகளைப் பயன்படுத்தக் காத்திருந்தோருக்கு நல்வாய்ப்பு. ஆனால் இந்த மாற்றத்தில் தமிழ் எழுத்துரு வடிவம் அழகாக இல்லை என்ற சிலர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் எழுத்துகளின் இயல்பான வளைவு நெளிவுகள், ஆப்பிளின் புதிய தமிழ் எழுத்துருவில் இல்லை. தூ, நூ போன்ற எழுத்துகள் மிகவும் நீளமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு எழுத்துகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாததும் குறையாகவே உள்ளது. துணைக்கால், புள்ளி போன்றவற்றின் அளவு மிகவும் சிறிதாக இருக்கின்றன. எழுத்துகள் சேரும்போது வடமொழி போலத் தெரிகிறது. இதையெல்லாம் குறிப்பிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலைவர் சுந்தர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

எழுத்தாளர் பா.ராகவன் அவ்வப்போது ஆப்பிள் மேக் கணினியை அதன் எழுத்துரு அழகுக்காகவே பயன்படுத்துவதாகக் குறிப்பிடுவார். அவரும் தன்னுடைய அதிருப்தியை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். எழுத்துருக்கலைஞர் தாரிஸ் அஸிஸ் கூட இதுபற்றி தன்னுடைய கருத்தை ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பியிருக்கிறேன் என பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இன்னும் சிலரும் சமூக ஊடகங்களில் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு முக்கியமான வரவேற்கத்தக்க முன்னேற்றம். குறிப்பாக இந்தியாவில் மொழி தொடர்பான பேச்சுகள் அதிகம் நடக்கும் காலகட்டம் இது. செய்தித்தாளைத் திறந்தால் மொழி பற்றிய செய்தி இல்லாத நாளே இல்லை என்றாகிவிட்டது. பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக்காக்க மொழியைக் காப்பது அவசியம் என்கிற விழிப்புணர்வு ஓங்கி இருக்கும்போது பத்து இந்திய மொழிகளில் பயனர் இடைமுகத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மற்ற மொழி எழுத்துருக்களில் கவனம் செலுத்தியது போல், தமிழ் எழுத்துருவில் கவனம் காட்டாமல் இருப்பது ஒரு குறையே. இருப்பினும் பயனர்களின் விருப்பத்தை கேட்டறிந்து செயல்படுவதில் ஆப்பிள் அக்கறை காட்டும் நிறுவனம். apple.com/feedback தளத்தின் வழி அவர்கள் பயனரின் குறைகளை பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். இந்தக் குறையை விரைவில் சரிசெய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

  • மு. இசக்கிமுத்து

The post ஐஓஎஸ் 18.4 தமிழ் பயனர் இடைமுகம் appeared first on செல்லினம்.

  •  

நீங்களும் இசையமைப்பாளர் ஆகலாம்

Apple Music DJ

விருந்துக் கொண்டாட்டங்களில் நேரடிப் பார்வையாளர்களுக்காக இசையைத் தேர்ந்தெடுத்து இயக்குவோர் (Disk Jackie) பயன்படுத்தும் வன்பொருள், மென்பொருள்களை ஆப்பிள் இசை செயலியோடு இணைத்து, புது இசைகளை உருவாக்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Apple Music DJ

ஆப்பிள் தன் பயனர்களுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான இசைக் கோவைகளை வழங்கிவருகிறது. இசையமைப்பாளர்களுக்கு அதிகமான உரிமைத்தொகை வழங்கும் செயலி ஆப்பிள் மியூசிக் என்கிறார்கள். இவ்வாறு இசையமைப்பாளர்களை தன் பக்கம் வைத்திருக்கிறது ஆப்பிள்.

இதே போல டிஸ்க் ஜாக்கிகளையும், ஆப்பிளைப் பயன்படுத்தவைக்க வேண்டுமென 2022 முதலே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்காக 2022 ஆம் ஆண்டில், டிஜே மிக்ஸ் எனும் அம்சம் கொண்டுவரப்பட்டது. மேலும் பிரபல ஜெஃப் மில்ஸுடன் இணைந்து ஒன் மிக்ஸ் என்ற நிகழ்ச்சியைச் செய்தது ஆப்பிள். இவற்றின் தொடர்ச்சியாகப் பயனர்களையும், டிஸ்க் ஜாக்கிகளையும் இணைக்கும் வகையில் டிஜே கருவிகளை ஆப்பிள் இசையோடு இணைத்துப் பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் இசை செயலியின் நடனம், டிஜே பிரிவின் உலகளாவிய தலைவர் ஸ்டீபன் கேம்ப்பெல். அவர், இந்த அம்சத்தைப் பற்றிய அறிக்கையில் “இந்த புதிய ஒருங்கிணைப்பின் மூலம், பயனர்களின் மகிழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம். ஆப்பிள் இசை செயலியை முன்னணி டிஸ்க் ஜாக்கி மென்பொருள், வன்பொருள்களுடன் தடையின்றி இணைத்துள்ளோம். இந்த புதிய அம்சம் ஆப்பிள் இசை செயலியின் முழு ஆற்றலையும் பயனர்களுக்குக் கொண்டு சேர்க்க உள்ளது. இதன்மூலம் டிஸ்க் ஜாக்கிகள், சாதாரண பயனர்கள் யாராக இருந்தாலும் புது வித இசையை உருவாக்க முடியும்.” எனக் கூறியுள்ளார்.

இப்புதிய அம்சம், நீண்ட காலமாகப் பயன்பாட்டிலிருந்த டிஜே புரோ (Djay Pro) செயலியின் கொஞ்சம் மேம்பட்ட வடிவமாகும். ஆப்பிளின் மெய்நிகர் கருவியான விஷன் புரோவிலும் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவர்கள் மத்தியிலும் விஷன் புரோ பயனுள்ளதாக மாறிவரும் நிலையில், தற்போது டிஸ்க் ஜாக்கிகளையும் கவர உள்ளது.

ஆப்பிள் இசை செயலியானது முதற்கட்டமாகக் கீழ்க்கண்ட டிஸ்க் ஜாக்கி மென்பொருள் மற்றும் வன்பொருளுடன் தன் ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. ஆல்பா தீட்டா, செராடோ, இன் மியூசிக் இன்ஜின் டி.ஜே, டெனான் டி.ஜே, நுமார்க், ரானே டி.ஜே. இவைதான் அந்த வன்பொருள்கள். இந்த தொழில்முறை அமைப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், ஆப்பிள் இசையின் சந்தாதாரர்கள் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் இசைகளைக் கேட்டு மகிழலாம்.

இதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் அல்காரிதம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரிம் மார்சி. “திறன்பேசி, கணினி, விஷன் புரோ போன்ற கருவிகளில், ஆப்பிள் இசையுடனான டிஜேவின் ஒருங்கிணைப்பு புதிய உலகை உருவாக்கியுள்ளது. இனிமேல் எந்த நேரத்திலும், எங்கும் வேண்டுமென்றாலும் புது இசையை உருவாக்கலாம். தங்களுக்குப் பிடித்த இசைகளைக் கலந்து புது விதமாக உருவாக்கிக்கொள்ளலாம்.‌ தானாக புது இசையை உருவாக்கும் தானியங்கி அம்சத்தைப் பயன்படுத்தினாலும் சரி. அல்லது டிஸ்க் ஜாக்கிகளின் சக்திவாய்ந்த கருவிகள் மூலம் தங்களின் தனித்துவமான இசையை வடிவமைத்தாலும் சரி. இசையின் உருவாக்கத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் இந்த ஒருங்கிணைப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கிறது.” என உற்சாகமாகப் பேசியிருக்கிறார் மார்சி.

ஒவ்வொரு நண்பர் குழுவிற்கும் ஒரு குட்டி டிஸ்க் ஜாக்கி நிச்சயம் இருப்பார். அவரிடம் இதைப் பற்றிக் கூறி அவரின் பணியை எளிமையாக்குங்கள்.

  • மு.‌இசக்கிமுத்து

The post நீங்களும் இசையமைப்பாளர் ஆகலாம் appeared first on செல்லினம்.

  •  

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!

Sellinam-Eid-2025
Sellinam-Eid-2025

ஈகைத் திருநாளைக் கொண்டாடும் உலகளாவிய செல்லினம் செயலியின் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம்! உங்கள் அன்புக்குரியவரோடு இத்திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!

– செல்லினம்

The post ஈகைத் திருநாள் வாழ்த்துகள்! appeared first on செல்லினம்.

  •  

செல்லினம் செயலி பதிப்பு 5.5

SELLINAM

செல்லினம் செயலியில் தொழில்நுட்பக் கட்டுரைகளை வாசிக்கும் பயனர்களின், வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்த புதிய பதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

SELLINAM

அஞ்சல் மொபைல் என்ற பெயரோடு அறிமுகமாகி பின்னர் செல்லினம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்று, இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து வருகிறது செல்லினம். தமிழில் தட்டச்சு செய்வது கடினமாக இருந்த காலத்திலேயே செல்பேசிகளில் பயனர்கள் தமிழில் தட்டெழுதும் அனுபவத்தை எளிமைப்படுத்தியது செல்லினம். அதன் பிறகும் தொடர்ந்து ஐஓஎஸ், ஆண்டிராய்டு என எல்லா இயங்குதளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு தமிழில் தட்டெழுத உதவுகிறது..

தமிழ் தட்டெழுத்துடன் நின்றுவிடாமல், உலக அரங்கில் தொழில்நுட்ப உலகில் நடக்கும் செய்திகளை பயனர்களுக்குத் தருவதையும் நோக்கமாகக் கொண்டது செல்லினம். பொதுவாகத் தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கென தனியாக தளங்களைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றுதான். அதனைக் கருத்தில் கொண்டும், பயனர்கள் பிற தொழில்நுட்பங்களை எளிதில் பயன்படுத்த உதவும் வகையிலும் செல்லினம் செயலியில் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதற்குப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். உங்களுடைய ஒவ்வொரு கருத்துகளும் செல்லினம் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்நிலையில் கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாகவும், அதனால் வாசிக்கச் சிரமமாக இருப்பதாகவும் பயனர்கள் தங்கள் சிக்கலைப் பகிர்ந்துள்ளனர். அதனைச் சரி செய்வதற்காக, முதற்கட்டமாக ஐபோன் மற்றும் ஐபேடில் செல்லினம் 5.5 என்ற புதிய பதிப்பைக் கொண்டுவந்துள்ளோம்.

இனிமேல் நீங்கள் கட்டுரைகளை உற்றுநோக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிளின் பிஞ்ச் சைகையைப் பயன்படுத்தி பயனர்கள் உரை அளவை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ மாற்றிக்கொள்ளும் அம்சம் புதிய பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களின் அளவைப் பெரிதாக்கிப் பார்ப்பதைப் போலவே கட்டுரைகளையும் பார்க்கலாம். நீங்கள் ஒரு முறை விரும்பிப் பயன்படுத்திய அளவை நினைவில் வைத்து, அதே அளவில் அடுத்தடுத்த கட்டுரைகளைக் காண்பிக்கும். சிறந்த வாசிப்பு அனுபவத்திற்காக முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள தலைப்புகளின் அளவையும் அதிகரித்துள்ளோம்.

செல்லினம் செயலியின் பயனர்கள், தொழில்நுட்பக் கட்டுரைகளைத் தமிழில் படிப்பது குறித்து நேர்மறையான கருத்துக்களை வழங்கியுள்ளனர். இக்கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றிய உள்ளடக்கங்களை தரத்துடன் வழங்குவதென உறுதிபூண்டுள்ளோம். குறிப்பாக நம் அன்றாட வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் செய்திகளை உடனுக்குடன் தர முயல்கிறோம்.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள இந்தப் புதிய அம்சம் அனைவருக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என நம்புகிறோம்.

The post செல்லினம் செயலி பதிப்பு 5.5 appeared first on செல்லினம்.

  •  

ஆப்பிள் பழமல்ல, பணம்

Apple Pay

மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு உதவும் செயலியான ஆப்பிள் பே, அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Apple Pay

கடந்த பத்து ஆண்டுகளாக மின்னணு பணப் பரிவர்த்தனை, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கைகளிலும் இருக்கிறது. மீதி சில்லறைக்கு மிட்டாய் வாங்கியதெல்லாம் பலருக்கு மறந்தேவிட்டது எனலாம். அந்த அளவுக்கு மின்னணு பணப்பரிவர்த்தனை நம்மோடு இரண்டறக் கலந்துவிட்டது. பல்வேறு நிறுவனங்களும் பணப்பரிவர்த்தனைக்காகச் செயலிகளைப் பயனர்களுக்கு வழங்கி வருகின்றன.

ஆப்பிள் நிறுவனமும் தன் பங்குக்கு ஆப்பிள் பே (apple pay) செயலியை 2015ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல்வேறு நாடுகளில் இச்செயலி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆப்பிள் நிறுவனமும் பல்வேறு வங்கி நிர்வாகங்களுடனும் தொடர்ச்சியாக உரையாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2024ல் ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் வாலட்டின் துணைத் தலைவர் ஜெனிபர் பெய்லி அளித்த பேட்டியொன்றில், “ஆப்பிள் நிறுவனம் சிறந்த பயனர் அனுபவத்தைத் தர, மிகவும் ஆர்வமாக உழைத்துவருகிறது. ஆப்பிள் பே அறிமுகப்படுத்தப்பட்டபோது, சுமார் 3% வங்கி நிர்வாகங்கள் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டன. அந்த எண்ணிக்கை இப்போது 90% ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு சந்தைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் ஆப்பிள் பே-ன் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புகிறோம்” எனக் கூறியிருந்தார்.

ஆப்பிள் பே ஏறக்குறைய 90 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. பயன்பாட்டில் உள்ள நாடுகளில் சிலவற்றில், உள்ளூர் வங்கிகள் இச்செயலியில் தங்கள் வங்கிகளை இணைப்பதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன. ஆப்பிள் பே அமெரிக்காவில் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டிலிருந்தாலும், போர்ட்டோ ரிக்கோவில் உள்ள மக்கள், பெரிய அமெரிக்க வங்கிகளின் கணக்குகள் மூலம் மட்டுமே ஆப்பிள் பேவை அணுகும் நிலை இருந்தது. இதுவரை எந்த உள்ளூர் வங்கியும் இந்தச் சேவைக்கான ஆதரவை வழங்கவில்லை.

அமெரிக்காவின் புகழ் பெற்ற உள்ளூர் வங்கிகளுள் ஒன்றான பாங்கோ பாப்புலர் வங்கி இப்போது ஆப்பிள் பே செயலிக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன்மூலம் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் பணப்பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இனிமேல் அம்மக்கள் ஆப்பிள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

அதோடு ஆப்பிள் பே செயலியின் “டேப் டு புரோவிஷன்” அம்சமும் ஹாங்காங், மக்காவ் மற்றும் மங்கோலியாவில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் வாலட் பயன்பாட்டில் தேவையான கடன் அட்டைகளைச் சேர்த்துக்கொள்ள முடியும்.

ஆப்பிள் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மதிப்புள்ள செய்தியைத்தான் கொடுத்திருக்கிறது ஆப்பிள்.

  • மு.‌இசக்கிமுத்து

The post ஆப்பிள் பழமல்ல, பணம் appeared first on செல்லினம்.

  •  

தூங்கவைக்கும் ஒலிப்பெட்டி

sleeping

தூக்கமின்றி அவதிப்படுவோர், சிறிய அளவு ஒலிபெட்டிகள் (Speakers) மூலம் உதவி பெற முடியும். தூக்கம் ஓரளவுக்கு சீரடைந்துள்ளதாகப் பயன்படுத்தியோர் தெரிவிக்கின்றனர்.

மார்ச் ஒன்பதாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை தூக்க விழிப்புணர்வு வாரம் என்பதைச் செய்திகளில் பார்த்திருப்போம். உடலும், மூளையும் சோர்வடைந்தால், சரியாக வேலை செய்வதில்லை. தேவையான அளவு ஓய்வு கொடுத்துக் கிடைக்கும் புத்துணர்ச்சியால் மட்டுமே நம்மால் கவனத்துடன் பணியாற்ற முடியும்.

sleeping

தூக்கமின்மை மிகச் சிலருக்கே உரிய சிக்கலாக இருந்தது ஒருகாலம். தற்காலத்தில் திறன்கருவிகள் வருகை கூடியிருப்பதால் கிட்டத்தட்ட அனைவருமே தூக்கமின்மையை எதிர்கொள்கிறோம். கையடக்கக் கருவியாக இருப்பதால் படுக்கையில் படுத்துக்கொண்டே திறன்பேசியைப் பார்க்கும் வழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. வெளிச்சம் குறைவாக வைத்துக் காட்சிகளைப் பார்த்தாலும் கூட தூக்கம் தடைபடும். தூங்கினால் அடிக்கடி விழிப்புத்தட்டும். 68 விழுக்காடு மக்கள் போதுமான அளவுக்குக்குத் தூங்குவதில்லை என்கிறது ஓர் ஆய்வு.

திறன்பேசி உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் படுக்கை அறைக்கு வெளியே வைப்பதன் மூலம் மட்டுமே பலருடைய தூக்கச் சிக்கல் சரியாகிவிட வாய்ப்புள்ளது. எனினும் சிலருக்கு அதைவிடக் கூடுதலாக உதவி தேவைப்படும். சிறு ஒலி கேட்டாலும் விழிக்கச் சொல்லும் மூளை வாய்த்தவர்களும் இருக்கிறார்கள். அறையில் மின்விசிறி, குளிர்சாதனக் கருவியை ஓடவிட்டுத் தூக்குவதன் மூலம் உருவாகும் குறைந்த அளவு ஒலியானது இந்தச் சிக்கலைத் தீர்க்கச் சிலருக்குப் பயன்படும். அறையில் மின்விசிறியின் ஒலி இருந்துகொண்டே இருந்தால் அதைவிடப் பெரிய ஒலி கேட்டால் மட்டுமே விழிப்புதட்டும்.

கண்களை உறுத்தும் காட்சிகளை இரவில் பார்ப்பதற்குப் பதில், வலைபரப்பு (Podcast) கேட்கும் வழக்கத்தையும் சிலர் வைத்திருக்கிறார்கள். புத்தகங்களைப் படித்துக்காட்டுதல், கதை சொல்லுதல், தகவல்களை, ஆய்வுகளைப் பேசுதல் எனப் பலவகை வலைபரப்பு சேவைகள் உள்ளன. அவற்றைக் கேட்டுக்கொண்டே கண்ணைமூடிப் படுத்திருந்தால் இவர்களுக்குத் தூக்கம் வரும். சில மணிநேரத்தில் விழிப்பு வந்தால் மீண்டும் ஒலிக்கவிட்டுத் தூங்க முயலலாம். ஆனால் இப்படி எழுந்து திறன்பேசித் திரையைப் பார்த்து ஒலிக்கவிட்டுத் தூங்க முயன்றால் அந்த வேலையை செய்து முடிப்பதற்குள் அரைகுறையாக வந்த விழிப்புநிலை முற்றிலும் விழித்துக்கொள்ளும்படியாகும்.

இதைத் தவிர்க்கவும் கருவிகள் உள்ளன. ஆப்பிள் இன்சைடர் தளத்தில் பயனர் ஒருவர் குறிப்பிட்ட ஒலிப்பெட்டியைப் பற்றிய தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். குட்டி ஒலிப்பெட்டி அது. ஜாபிஸ் பீஸ் ஸ்பீக்கர் எனும் அக்கருவியை ஐபோன் உடன் இணைக்க முடியும். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று தானாகவே நின்றுபோக வேண்டிய நேரத்தையும் முன்கூட்டியே அமைத்துவிடலாம். இதெல்லாமே அரைத்தூக்கத்தில் சில பொத்தான்களை அழுத்துவதன் மூலமே செய்யலாம் என்பதே இதன் சிறப்பு. இதன் மூலம் நீண்ட நேரத் தூக்கம் கிடைப்பதுடன், தகவல்களை மூளைக்குள் ஏற்றிவிடும் நல்லதும் நடக்கிறது.

சந்தையில் இதுபோன்ற நிறைய ஒலிப்பெட்டிகள் உள்ளன. தலையணை உடன் இணைந்த ஒலிப்பெட்டிகள், மேசையில் வைக்கும் சிறிய அளவிலான ஒலிப்பெட்டிகள் எனப் பலத் தீர்வுகள் உள்ளன. தூக்கமின்மை என்ற நிலைக்குச் சென்றுவிடாமல் இருக்க, திறன்கருவிகளின் பயன்பாட்டைக் குறைப்பதும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதும் அவசியமானது. எளிய உடற்பயிற்சிகள், மனத்தை ஒருநிலைப்படுத்தும் முயற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் போன்றவையும் உதவும். தூக்கமின்மை வந்துவிட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று முடிவெடுப்பதும் செயல்படுத்துவதும் நல்லது.

The post தூங்கவைக்கும் ஒலிப்பெட்டி appeared first on செல்லினம்.

  •