Reading view

மொழி ஒலிம்பிக்ஸ்

polyglot

மொழி மீது ஆர்வமுள்ளவர்களுக்காக பன்மொழி ஒலிம்பிக்ஸ் என்ற போட்டி நடத்தப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியும் அதிக ஊதியமும் வழங்கப்படுகிறது.  

polyglot

ஆங்கிலத்தில் பாலிகிளாட் (Polyglot) என்ற ஒரு சொல் உண்டு.  பன்மொழிகளை அறிந்தவர்கள் பாலிகிளாட் என அழைக்கப்படுகிறார்கள். பன்மொழி என்றால் பல மொழிகளைச் சரளமாகப் பேசவும், எழுதவும், புரிந்துகொள்ளவும் திறன் உடையவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் பன்மொழியாளர்களாக அறியப்படுகிறார்கள். இது ஒருவரின் மொழிக் கற்றல் திறன் மற்றும் மொழிப் புலமை ஆகியவற்றைக் குறிக்கிறது. எத்தனை மொழிகளை அறிந்தவரை பன்மொழியாளர் என்பது என்ற வரையறை ஏதும் இல்லை, பொதுவாக நான்கைந்து மொழிகளாவது தெரிந்திருக்க வேண்டும். 

அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர்கள்

அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர் என்பது மிக முக்கியமான பொறுப்பாகக் கருதப்படுகிறது. எதிரி அல்லது வெளிநாட்டு மக்கள் பேசும் மொழிகளைப் புரிந்து மொழிபெயர்த்தல், வெளிநாட்டுத் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், பேச்சுகள், செய்திகளைப் புரிந்து கொள்வது மற்றும் போரிலோ அல்லது அமைதி நடவடிக்கைகளிலோ பொதுமக்கள் பேசும் மொழியில் பேசி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இந்த பன்மொழியாளர்கள்  பயன்படுத்தப்படுகிறார்கள்.

ராணுவத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு மொழி நிறுவனம் என்னும் இடத்தில் பல்லாயிரம் ராணுவ வீரர்கள் வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெறுகிறார்கள். உலகிலேயே மிகப்பெரும் மொழிப் பயிற்சி மையமாக இது செயல்படுகிறது. அரபி, பாஷ்தோ, உருது, ரஷ்யம், சீனம், கொரியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கு அமெரிக்க ராணுவத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது தவிரப் பிற மொழிகளைக் கற்பது, கற்பவரின் விருப்பம். 

மொழி ஒலிம்பிக்ஸ்

பன்மொழியாளருக்கான ஒலிம்பிக்ஸ்ல் பங்கேற்பவர்கள் பல மொழிகளில் உள்ள பணிகளைச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக மொழிபெயர்ப்பு, கேட்பது, புரிந்துகொள்வது, வாசித்து விளக்கம் தருவது அல்லது உரையாடல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். பங்கேற்பாளர்களின் பன்மொழி திறமையைச் சோதிப்பதே இந்த போட்டியின் நோக்கம். 

இந்த போட்டியில் என்ன நடக்கும்?

ஒரு மொழியில் கொடுக்கப்பட்ட உரையை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும்.  ஒரு மொழியில் பேசும் ஒலி அமைவைக் கேட்டு அதைப் புரிந்து எழுத வேண்டும். பல மொழிகளில் உரையாடல் நடத்தும் திறன் சோதிக்கப்படும். பல மொழிகளில் உள்ள உரைகளை வாசித்து அதன் பொருளை விவரிக்க வேண்டும். 

பன்மொழி ஒலிம்பிக்ஸ் என்பது மொழி ஆர்வலர்கள், மொழியியல் மாணவர்கள், மொழி கற்க விருப்பமுள்ளவர்கள் இடையே புகழ் வாய்ந்தது. இதில் ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்பார்கள். 

வணிகத்திலும், கல்வியிலும், கலாச்சார பரிமாற்றத்திலும், பாதுகாப்பு அமைப்பிலும் மொழித் திறமையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாதிரியான போட்டிகள் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன.

The post மொழி ஒலிம்பிக்ஸ் appeared first on செல்லினம்.

  •  

அனுப்பினால் போகாத பணம்

UPI

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) கடந்த சில வாரங்களாக அவ்வப்போது செயல்படாமல் போகிறது. இதனால் நாடு முழுவதும் நிதிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஏப்ரல் 12-ம் தேதி ஏற்பட்ட செயலிழப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் நடந்த மிக நீண்ட நேரச் செயலிழப்பாகக் கருதப்படுகிறது. அன்று சுமார் ஐந்து மணி நேரம் வரை பாதிக்கப்பட்டிருந்தது. 

UPI

இதன் காரணமாக, இந்தியாவின் மென்பொருள் நிதி சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள பணப்பரிவர்த்தனை இடைமுகம் அடிக்கடி ஏன் செயலிழக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த குழப்பங்களுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். 

எப்படிச் செயல்படுகிறது?

இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India – NPCI) உருவாக்கிய பணப்பரிவர்த்தனை இடைமுகம், எளிய இரண்டு கட்ட அங்கீகார செயல்முறையின் மூலம், ஒரு நபருக்கும், வங்கிகளுக்கும் இடையே பணப் பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இந்த அமைப்பு செயல்பட முதலில் வங்கிகள் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதேபோல் வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்குகளை ஒரு பதிவு செய்யப்பட்ட திறன்பேசி எண்ணுடன் பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலி (PSP) உடன் இணைக்க வேண்டும். 

ஒவ்வொரு ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகமும் தேசிய கொடுப்பனவு கழகத்தால் வழிநடத்தப்படுகிறது. இது கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான வங்கி தகவல்களைக் குறியாக்கம் செய்து பாதுகாப்பாகப் பரிவர்த்தனை விவரங்களை வாடிக்கையாளரின் வங்கிக்கு அனுப்புகிறது. எனவே தேசிய கொடுப்பனவு கழகத்திடம் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த குறியாக்கத் தகவல்களை வங்கிகள் பெற முடியாது இதனால் பரிவர்த்தனைகள் தோல்வியடைகின்றன. 

நீண்ட நேரச் செயலிழப்புக்கான காரணம்

பொதுவாக ஒரு பரிவர்த்தனைக்குப் பின் பயனாளியின் வங்கியிலிருந்து உறுதிப்படுத்தல் வராதபட்சத்தில் வங்கிகள் பரிவர்த்தனை சரிபார்ப்புக் கோரிக்கையை அனுப்புகின்றன. இது பெரும்பாலும் பயனாளி வங்கியின் சேவையகம் செயல்படவில்லை என்றால் மட்டுமே ஏற்படும். தேசிய கொடுப்பனவு கழகத்தின் வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கையை அனுப்ப வேண்டும். 

ஆனால் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் நீண்ட நேரம் செயல்படாமல் இருந்ததற்கு இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கைகள் மிக அதிக அளவில் அனுப்பப்பட்டதே காரணமாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலி வங்கியின் பதில்கள் வருமுன் பலமுறை இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கைகளை அனுப்பி தேசிய கொடுப்பனவு கழகத்தின் சேவையகத்தில் அதிகமாய் சுமை ஏற்க வைத்தன. இந்த பெரிய அளவிலான சிக்கலே நீண்ட நேரச் செயலிழப்புக்கு வழிவகுத்தது. 

தேசிய கொடுப்பனவு கழகம் இந்த பிரச்சனையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலியின் உறுதிப்படுத்தல் அம்சத்தை உடனடியாக நிறுத்தச் சொல்லியது. அதைத்தொடர்ந்து பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் ஏற்பட்ட சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வு கொண்டுவரப்பட்டது. இந்த நடவடிக்கைகள் விரைவாகச் செய்யப்பட்டிருந்தாலும் அதற்குள் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம், உலகிலேயே மிக வலுவான மென்பொருள் பரிவர்த்தனை அமைப்பாக இருந்தாலும் சமீபத்திய செயலிழப்புகள்,  சேவை வழங்கும் வங்கிகள் விதிகளைக் கடைப்பிடிக்காததில் உள்ள பிழைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. வங்கிகள், சேவை வழங்கும் செயலிகள் மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் இடையே சிறந்த ஒத்துழைப்பு மற்றும் நேரடி கண்காணிப்பு அம்சங்களை உறுதி செய்தால்தான் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுக அமைப்பின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த முடியும்.

  • சத்யா கோபாலன்

The post அனுப்பினால் போகாத பணம் appeared first on செல்லினம்.

  •  

அன்னையர் நாள் பரிசுப் பரிந்துரைகள்

Mothers day

அன்னையர் நாளுக்கு, வீட்டு உபயோகப் பொருள்களை பரிசளிக்கும் வழக்கம் குறைந்திருக்கிறது. குடும்பத்துக்குத் தேவையானவற்றைக் கொடுக்காமல், புடைவை, ஆபரணங்கள் என்று அம்மா தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பரிசுகள் வழங்குவது நல்லதுதான். அதோடு காலத்துக்கு ஏற்ற வேறு சில பரிசுகளையும் தர முயற்சி செய்யலாம். அப்பரிசுகளால் உங்கள் இருவருடைய மகிழ்ச்சி, இரட்டிப்பாகும்தானே.

அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் பல விலை வரம்புகளில் இருக்கும் சில சுவாரஸ்யமான தொழில்நுட்பக் கருவிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். பரிசு கொடுக்க இந்தப் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.

Mothers day
  • தொலைக்காட்சித் திரையைவிடச் சிறியது, திறன்பேசித் திரையைவிடப் பெரியதுமான அமேசான் எகோ ஷோ 8, கூகுள் நெஸ்ட் ஹப் போன்றவை நல்ல தேர்வு. இச்சிறிய தொலைக்காட்சிகளை பல்வேறு விதமாகப் பயன்படுத்தலாம். தானியக்க தொழில்நுட்பக் கருவிகளை குரல் கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளப் பயன்படும். வலைபரப்பு, பிடித்த நிகழ்ச்சிகளை வீட்டுக் கூடத்தில் இருக்கும் தொலைக்காட்சியில்தான் பார்க்கவேண்டும் என்கிற அவசியமின்றி எங்குவேண்டுமானாலும் பார்க்க இக்கருவி உதவும். இரு கைகளும் வேலையாக இருக்கும்போது, தொடுதல் இல்லாமல் திறன்பேசி அழைப்புகளைப் பெறப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வானிலை முன்னறிவிப்புகளைக் கூடப் பார்க்க முடியும்.
  • உடல் நலனைப் பேணிக்காக்க உதவும் திறன்கடிகாரங்களைப் பரிசாகக் கொடுப்பதன் மூலம் அம்மாவின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வலியுறுத்தலாம். கார்மின் வெனு 3S, ஆப்பிள் கைக்கடிகாரம் 9 ஆகியவை பல புதிய பாணிகளில், பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணர்திறன்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக இவற்றின் மூலம் இரத்த ஆக்சிஜன் அளவையும், இதயத் துடிப்பு வீதத்தையும் கண்காணிக்கலாம். 10 நாள்கள் வரை மின்னேற்றம் செய்ய அவசியமின்றிப் பயன்படுத்த முடியும். மேலும் மிகுந்த பாதுகாப்பான கண்ணாடிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உடல்நலத்துடன் மன மகிழ்ச்சியும் முக்கியம். வாசிப்பு ஆர்வமுள்ள அம்மாக்களுக்கு அமேசான் கிண்டில், கோபோ மின்படிப்பான் சிறந்த பரிசுகளாக இருக்கும். இதில் வரம்பற்ற சந்தா மூலம் பல நூல்களை வாசிக்கலாம். அதன் 6 அங்குல திரை, வாசிப்பை மேலும் எளிமைக்கும். மேலும் மின்கல அடுக்கு 6 வாரங்கள் வரை நீடிக்கும். ஒலிப் புத்தகங்களாகக் கேட்கும் வாய்ப்பும் இருக்கிறது.
  • சாம்சங் கேலக்ஸி A55 5G, கூகுள் பிக்சல் 9a ஆகிய திறன்பேசிகள் சிறந்த திரையுடன் வருகின்றன. டென்சர் G4 மின்னணு கூறுகள், 8GB அளவு தரவு சேமிப்பு கொண்டது. இதன் மின்கலன் 2 நாள்கள் வரை நீடிக்கும். சிறந்த புகைப்படகருவி மூலம் வாழ்வில் முக்கியமான தருணங்களை சேமிக்கலாம். கூகுள் பிக்சல் 7 ஆண்டுகள் வரை மென்பொருள் புதுப்பிப்புகளை வழங்குகிறது. 

இந்த பரிசுகள் உங்கள் அம்மாவின் அன்றாட வாழ்க்கையைக் கொண்டாட்டமானதாக்கக் கூடும். அன்னையர் நாள் வாழ்த்துகள்.

  • சத்யா கோபாலன்

The post அன்னையர் நாள் பரிசுப் பரிந்துரைகள் appeared first on செல்லினம்.

  •  

வீட்டை இயக்கும் கூகுள் ஹோம் செயலி

Google home

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கப் பல கருவிகள் வந்துவிட்டன. ஆனால் அதற்கும் நேரமில்லாத மனிதர்களுக்காக அவர்களின் வேலையை இன்னும் எளிதாக்கியுள்ளது கூகுள். வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களையும் நிர்வகிக்கவும் தானியக்கமாக்கவும் கூகுள் ஹோம் உதவும். வீட்டில் பயன்படுத்தும் பொருள்கள் பலவற்றை இச்செயலி மூலம் கட்டுப்படுத்தலாம். சாவி தேவைப்படாத எண்ணிமப்பூட்டு, கூகுள் தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, வீட்டின் பாதுகாப்புக்காக வைக்கப்படும் படக்கருவி (CCTV) போன்ற பல திறன்கருவிகள் இதில் அடங்கும். இணையத்துடன் இணைந்து இயங்கும் திறனுள்ள எல்லா பொருள்களையும் இச்செயலி மூலம் கட்டுப்படுத்த இயலும்.

Google home

எப்படியெல்லாம் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தங்கள் நிறுவனத்தில் வேலைசெய்பவர்களிடமே கருத்து கேட்டுள்ளது கூகுள். அதைத் தங்கள் வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்கள். 

1. அன்பான வரவேற்பு

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் பணியைத் தலைமையேற்று நடத்துபவர் ஸ்பரதரா. அவர் வீட்டில் விருந்தினர்களை வரவேற்க கூகுள் ஹோம் செயலியைப் பயன்படுத்துவது தனக்கு விருப்பமானது என்கிறார். பொழுது விடிவதற்கு முன்போ, மாலை நேரத்தில் இருள் கவிந்த பிறகோ யாராவது அவர் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தால் உள் முற்றத்தில் உள்ள விளக்குகள் ஒளிரத் தொடங்கும். இதன் மூலம் விருந்தினர்கள் இருண்ட நடைபாதையில் தட்டுத்தடுமாறாமல் நடக்க முடியும்.

2. உடற்பயிற்சி நேரம் 

தயாரிப்பு மேலாளராக இருக்கிறார் கேத்ரின் மெக்கின்லி. திங்கட்கிழமைகளில் மாலை 6 மணிக்குத் தன் வீட்டு அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியின் உதவியால் ‘இது உடற்பயிற்சி நேரம்’ என்ற நினைவூட்டலைப் பெறுகிறார். அதுமட்டுமல்ல, இந்த நேரத்தில் தன் வீட்டு அலுவலகத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டு உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள விளக்குகள் தானாகவே எரியத் தொடங்கும்படி செயலி மூலம் கட்டுப்படுத்துகிறார். வேலையை நிறுத்திவிட்டுப் போய் உடற்பயிற்சி செய் என்பதை வலியுறுத்தும் இந்த விளக்கு மாற்றத்தால், தான் தவறாமல் உடற்பயிற்சி செய்வதாகத் தெரிவிக்கிறார். 

3. தாகமுள்ள தாவரங்கள்

மென்பொருள் பொறியாளர் கிறிஸ்டினா காங்கின், இச்செயலி மூலம் தான் செய்யும் பணியில் விருப்பமானது, வீட்டுச் செடிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதுதான் என்கிறார். நாள்தோறும் மாலை நேரத்தில் தானாகவே செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கும் திறன்மிக்கத் தெளிப்பான்களை வைத்திருக்கிறார் இவர். கூகுள் ஹோம் செயலி மூலம் இவர் குறிப்பிடும் நேரத்துக்குத் தாவரங்களுக்குத் தண்ணீர் கிடைத்து அவற்றை நன்கு வளர்க்க உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

4. பாதுகாப்பான வீடு

மென்பொருள் பொறியாளர் ஜிம் லியின் குழந்தைகள் அவ்வப்போது அவரது வீட்டின் பின் கதவுகளைத் திறந்துவிட்டு மூடாமல் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இதை கண்டுபிடித்த ஜிம், தானியக்கம் மூலம் இரவு 11 மணிக்கு மேல் அவரது வீட்டில் ஏதேனும் கதவு, ஜன்னல்கள் திறந்திருந்தால் அவரது திறன்பேசிக்குத் தகவல் வரும்படி செய்துள்ளார். அதிலிருந்து அவர் கதவுகளைப் பூட்டத் தவறவிட்டதே இல்லையாம்.

5. குழந்தைகளின் கண்காணிப்பு

பொறியியல் மேலாளர் காயத்ரி சுப்பிரமணியனின் குழந்தைகள் அவருக்கு முன்னதாகவே வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நினைத்த அவர், குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அறிமுகமில்லாத நபர்கள் அவரது வீட்டு அழைப்பு மணியை ஒலித்தால் உடனடியாக அந்தத் தகவல் தனக்குக் கிடைக்கும்படி செய்துள்ளார். இதனால் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறுகிறார். 

6. படுக்கைக்குச் செல்லுங்கள்

மென்பொருள் பொறியாளர் ஜேம்ஸ் வுட், இரவு 11:55 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் தொலைக்காட்சியையும் உடனடியாக அணைக்கும்படி செய்துள்ளார். இது அவருக்கு உறங்கும் நேரத்தை நினைவூட்டி அதிக நேரம் கணினித் திரையையோ, தொலைக்காட்சித் திரையையோ பார்ப்பதைத் தடுத்து தன்னை படுக்கைக்குச் செல்லக் கட்டாயப்படுத்துவதாகத் தெரிவிக்கிறார். 

  • சத்யா கோபாலன்

The post வீட்டை இயக்கும் கூகுள் ஹோம் செயலி appeared first on செல்லினம்.

  •  

பொன்மாலைப் பொழுது

Muthu Nedumaran talk

(இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது) முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன், மே 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரையாற்ற இருக்கிறார்.

Muthu Nedumaran talk

ஒன்பது தளங்களில் லட்சக்கணக்காக நூல்களுடன் சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் செயல்படுகிறது. தமிழ் நூல்கள், குழந்தைகள் நூல்கள், ஆங்கில நூல்கள் என அனைத்தும் தனித்தனிப் பிரிவுகளாக உள்ளன. சொந்தமாகத் தங்களுடைய நூல்களை எடுத்துவந்து படிப்பதற்கென்றும் இங்கே இடம் உள்ளது. பார்வைச் சவால் கொண்டோருக்கான பிரிவு இந்நூலகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. இவர்கள் பயன்படுத்தத்தக்க வகையில் பிரெய்லி நூல்களும், குறுந்தட்டுகளும் இப்பிரிவில் உள்ளன. மேலும் இந்நூலகம் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது.

நூலகத்துக்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும்பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நூலகம் நடத்துகிறது. வார இறுதி நாள்களில் நடத்தப்படும் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சி அதில் ஒன்று. துறைசார் வல்லுநர்கள், கலைஞர்கள் ஒரு தலைப்பில் உரையாற்றுவார்கள். மே 17 ஆம் தேதி, முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.

எழுத்துலா, எழுத்துருப் பயிலரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றின் வழியாக முத்து நெடுமாறன், இளம் தலைமுறையினர் எழுத்துருத் துறையில் அதிகம் பங்கெடுக்க ஊக்கமளித்து வருகிறார். எழுத்துருத் துறை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக எழுத்துருவின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “எழுத்துருவும் கதை சொல்லும்” என்கிற தலைப்பில் உரையாற்றப் போகிறார்.

மே 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கருத்தரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

The post பொன்மாலைப் பொழுது appeared first on செல்லினம்.

  •  

சென்னையில் எழுத்துருப் பயிலரங்கம்

Tamil Font Studio

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் முன்னெடுப்பில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மே 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழ் எழுத்துருப் பயிலரங்கமும் கருத்தரங்கமும் நடக்கவுள்ளன.

Tamil Font Studio

ரோஜா முத்தையா நூலகம், ஒண்மை அறவாரியத்தின் ஆதரவில், தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவதற்கென்றே கடந்தாண்டு ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. அதன் திறப்பு விழாவுடன் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்தியாவில் எழுத்துருத் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இயக்கமாக இத்துறை ஆர்வலர்களுடன் சேர்ந்து பயணம் செய்யும் வகையிலும் எழுத்துலா நடத்தப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு மீண்டும் ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இரு நாள் நிகழ்வில் ஒரு நாள் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் மறுநாள் எழுத்துரு பற்றிய கருத்தரங்கமும் திட்டமிடப்பட்டுள்ளன.

மே 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் பயிலரங்கில் தமிழ் எழுத்துரு உருவாக்கும் வழிகளைப் படிப்படியாகக் கற்பிக்க உள்ளனர் வல்லுநர்கள். தமிழ் எழுத்துரு வல்லுநரும், முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனருமான முத்து நெடுமாறன் இப்பயிற்சியை வழங்குகிறார். மேக் கணினியுடன் கொஞ்சம் படைப்பாற்றலும் இருந்தால் போதும். ஆர்வமும் இருப்போர் பதிவு செய்துகொள்ளலாம். தனிக் கவனம் எடுத்துச் சொல்லிக் கொடுக்கப்போவதால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே இடம். மேலும் அன்றைக்கு, “வாழும் வரிவடிவம் : எழுத்துருவியல் நுட்பத்தின் முன்னனியில் தமிழ்” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார்.

மே, 17ஆம் தேதி சனிக்கிழமை நிகழ்வு தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்குமானது. இத்துறையில் தற்போதுள்ள முன்னேற்றம், சவால்கள், எதிர்காலத் தேவைகள், வாய்ப்புகள் குறித்துப் பேசவிருக்கிறார்கள். “தமிழ் வரிவடிவம் : தொன்மையின் தொடர்ச்சி” என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற இந்தியக் குடிமைப்பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் தலைவர் சுந்தர் கணேசனும் உரையாற்றவுள்ளனர். காலிகிராபி பற்றி பேராசிரியர் ஜி.வி. ஸ்ரீகுமார் உரை வழங்கவுள்ளார்.

இதோடு முடியவில்லை. விருந்து முடியும்போது வழங்கும் பாயாசம் மாதிரி, இதே நாளில் “பொன்மாலைப் பொழுது” நிகழ்ச்சியை அண்ணா நூற்றாண்டு நூலகம் ஏற்பாடு செய்துள்ளது. நூலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் மே 17ஆம் தேதி, மாலை ஆறு மணியளவில் இந்நிகழ்ச்சி தொடங்கும். “எழுத்துருவும் கதை சொல்லும்” என்கிற தலைப்பில் முத்து நெடுமாறன் பேசவிருக்கிறார்.

16ஆம் தேதி பயிலரங்கத்துக்கு முன்பதிவு செய்வது அவசியம். 17ஆம் தேதி நிகழ்ச்சியில் அனைவரும் முன்பதிவின்றி கலந்துகொள்ளலாம்.

முன்பதிவுக்கு விரைக.

The post சென்னையில் எழுத்துருப் பயிலரங்கம் appeared first on செல்லினம்.

  •  

தமிழில் பெயர் வைப்போம்

Tamil name

மலேசியத் தமிழ்க் கணினி வல்லுநர் முகிலன் முருகன்,  மே முதல் தேதி அன்று தமிழ்ப்பெயர் இணையச்செயலியின் இலவச முன்னோட்டப் பதிப்பை வெளியிட்டுள்ளார். 

Tamil name

முகிலன், தமிழ்ச் கணினித் துறையில் இருபத்தைந்தாண்டுகள் அனுபவம் கொண்டவர். செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் மொழியியல் துறையிலும் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் வகையிலான தளங்களை உருவாக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மொழி தொடர்பான திட்டப்பணிகளைச் செயல்படுத்தியுள்ளார். மொழி என்கிற விளையாட்டு செயலிகள் தளத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன.

மலேசிய பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையுடன் இணைந்து இயங்கிவருகிறார். பல செயலிகள் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகின்றன. தற்போது அறிமுகமாகியுள்ள தமிழ்ப் பெயர்கள் செயலியும் மொழியியல் வல்லுநர்கள் ஆலோசனையுடனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடனும் உருவாகியுள்ளது.

அவரைத் தொடர்பு கொண்டு புதிய செயலி பற்றிப் பேசினோம். “நிறைய பேருக்குத் தமிழில் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் சுருக்கமான எளிமையான பெயர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை தாம் விரும்பும்படி நவீன காலத்துக்கு ஏற்றதாக இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் எண் கணிதம், ஜோதிடம் இவற்றில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். இப்படி எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.

நம்பிக்கை இருப்போர், குழந்தையின் பிறந்த தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்தால் நட்சத்திரம், ராசி உள்ளிட்ட தகவல்களுடன் எந்த முதல் எழுத்தில் தொடங்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடும். பெயர்களையும் பரிந்துரைக்கும். எண்கணித முறைப்படியும் பெயர்களை வழங்கும். இவற்றில் நம்பிக்கை இல்லாதோர் நேரடியாக உள்ளே சென்று பெயர்களைத் தேடலாம்.

தேர்ந்தெடுக்கும் பெயர்களுக்கு உரிய பொருளையும், சிறப்புக் கூறுகளையும் வரலாற்றில் பதிந்த பெயர் எனில் அந்தத் தகவலையும் கொடுக்கும். இச்செயலி, செயற்கை நுண்ணறிவு நுட்பத்திறன் மூலம் இயங்கும். தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் உள்ளது. எனவே இளைய தலைமுறையினரும் ஆர்வமாகப் பயன்படுத்துவர். 60,000க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெயர்கள் இத்தளத்தில் உள்ளன. ” என்று தெரிவித்தார்.

கீழே இணைப்பைக் கொடுத்திருக்கிறோம். பயன்படுத்திப் பாருங்கள்.

tamilname இணையத்தள முகவரி

மொழி விளையாட்டுகள்

The post தமிழில் பெயர் வைப்போம் appeared first on செல்லினம்.

  •  

சாட்ஜிபிடி மறக்காது

chatGPT

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி அரட்டைச் செயலி இனிமேல் நம்மைப் பற்றிய பயனுள்ள தகவல்களை நினைவில் வைத்திருக்குமாம்.

chatGPT

இந்த வசதி தற்போதைக்கு சாட்ஜிபிடி புரோ, பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் வந்திருக்கிறது. படிப்படியாக அனைவருக்கும் விரைவில் கிடைக்கும். என்ன சொல்றீங்க? இதற்கு முன்புகூட நான் பேசியவற்றை சாட்ஜிபிடி நினைவில் வைத்திருக்கிறதே, திரையின் இடது பக்கத்தில் நான் முன்னர் பேசிய தகவல்கள் எல்லாம் இருக்கின்றனவே என்கிறீர்களா? இப்படிப் பட்டியலிடப்பட்டவை வெவ்வேறு நேரத்தில் நீங்கள் சாட்ஜிபிடியுடன் நடத்திய உரையாடல்கள்தாம். இதைத் திரெட் என்கிறது சாட்ஜிபிடி. அந்த உரையாடலை மீண்டும் தொடர நினைத்தால் தொடரலாம்.

சொல்லப்போனால் நீங்கள் குறைவாக இச்செயலியுடன் பேசும் நபர் எனில் சில மாதங்களுக்கு முன்பு பேசிய உரையாடல் கூட அப்படியே ஓரமாக இருக்கும். அதைச் சொடுக்கி விட்ட இடத்தில் இருந்து மீண்டும் உரையாடலைத் தொடர இயலும். ஒரு புதிய உரையாடலில்போது இன்னொரு பழைய உரையாடலில் பேசிய தகவல்களைக் குறிப்பிட்டுப் பேசினால் சாட்ஜிபிடிக்குத் தெரியாது. ஒவ்வொரு புதிய உரையாடலும் தனித்தனியாகத்தான் புரிந்துகொள்ளும். புது அரட்டையில் பேசும் விஷயங்கள் மட்டுமே அதன் நினைவில் இருக்கும். இப்போது அதில்தான் மாற்றம் வந்துள்ளது.

இனிமேல் பயனுள்ள தகவல்களை நினைவில் வைத்திருக்கும் என்கிறார்கள். பயனுள்ள தகவல், பயனில்லாத தகவல் என்றால் என்னங்கய்யா? எனச் சந்தேகம் வந்தால் சாட்ஜிபிடியிடமே கேட்கலாம். உரையாடும் நபரைப் பற்றிய தேவையான தகவல்கள். அவருடைய வேலை, பிடித்த பொழுதுபோக்கு, கலையார்வம், தற்போது செய்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் போன்றவை. அடிக்கடி சாட்ஜிபிடியிடம் என்ன கேட்கிறீர்கள்? படம் வரையச் சொல்கிறீர்களா? கவிதை எழுதி தரச் சொல்லிக் கேட்கிறீர்களா? நிரல் எழுதித் தரப் பணிக்கிறீர்களா? இத்தகவல்களை நினைவில் வைத்திருக்கும்.

இதன் மூலம் நாம் மீண்டும், மீண்டும் தகவல்களைத் தருவதைத் தவிர்க்கலாம். வழக்கமாக பென்சில் கொண்டு வரையப்படும் கருப்பு வெள்ளைப் படங்களை மட்டும்தான் சாட்ஜிபிடியிடம் கேட்பீர்கள் எனில் எந்தப் படத்தைக் கேட்டாலும் நாம் சொல்லாமலே கருப்பு வெள்ளை பென்சில் கோட்டோவியமாகக் கொடுத்துவிடும். அல்லது நாமே குறிப்பிட்டு, எனக்கு எப்போதுமே பைத்தான் மென்பொருளில்தான் நிரல் வேண்டும், இதை நினைவில் வைத்துக்கொள் எனக் கூறினாலும் போதும். அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு செயல்படும்.

இந்தப் புதிய வசதி மூலம் பயனர்களுக்குத் தனிக்கவனம் எடுத்து பொருத்தமான பதில்களைச் சொல்ல இயலும். என்றாலும் சில பயனர்கள் இதை விரும்பவில்லை. கேட்ட கேள்விக்கு பதிலைச் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் எதை எதையோ நினைவில் வைத்திருந்தால் எனக்கு உவப்பில்லை என்போர் அதற்கேற்றவாறு செயலியை அமைத்துக் கொள்ளலாம். மருத்துவத் தகவல்கள், கடவுச்சொற்கள், அரசியல் நிலைப்பாடு, வீட்டு முகவரி போன்றவற்றையெல்லாம் பொதுவாகவே நினைவில் வைத்திருக்காது.

நினைவில் வைத்திருந்தால் சிறப்பான சேவை கிடைக்கும் என நினைப்போர் குறிப்பாக எந்தெந்த தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்வது நல்லது. அதற்கான வழிகாட்டுதல்களைக் கீழே கொடுத்துள்ளோம்.

சாட்ஜிபிடி நினைவகம் பற்றிய குறிப்புகள்.

The post சாட்ஜிபிடி மறக்காது appeared first on செல்லினம்.

  •  

விளம்பரமில்லா யூட்யூப் காணொளி இலவசம்

youtube

யூட்யூப் சேவையைப் பணம் செலுத்திப் பார்க்கும் முதன்மைப் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கும் விளம்பரம் இல்லா காணொளிகளைப் பகிர முடியும்.

youtube

இணையத்தில் இருப்பதெல்லாமே விலையில்லாப் பொருள் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம். இணையச் சேவைகளுக்குப் பணம் செலுத்துவதென்றாலே ஒவ்வாமை உண்டு. சமூகவலைத்தளங்கள் தங்கள் தளங்கள் இயங்குவதே பயனர்களால்தான் என்பதால் அவர்கள் நேரத்தையே தங்கள் வருமானத்துக்குப் பயன்படுத்துகின்றன. தங்கள் சேவையைப் பெறத் தாங்கள் காண்பிக்கும் விளம்பரங்களைப் பொறுமையாகப் பார்க்கவேண்டும் என்கின்றன.

கூகுள் நிறுவனத்தின் யூட்யூப் சேவையும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும் சில பயனர்கள் பணம் செலுத்தினால் விளம்பரம் இன்றிக் காணொளிகளைக் காண இயலும் எனில் அதை வரவேற்கிறார்கள். யூட்யூப், பணம் செலுத்திப் பயன்படுத்தும் முதன்மைக் கணக்குகளை அதனடிப்படையிலேயே அறிமுகப்படுத்தியது. சிலரோ, அதெல்லாம் பரவாயில்லை, நான் விளம்பரம் பார்த்துக்கொள்கிறேன், எக்காரணம் கொண்டும் பணம் கேட்காதே என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.

அநேகமாக அப்படிப்பட்ட பயனர்கள் எண்ணிக்கையே அதிகம். விளம்பரத்தைத் தடுக்கச் சில கணினி நிரல்களையும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இவற்றை யூட்யூப் கண்காணிக்கிறது. விளம்பரத் தடுப்பான் பயன்படுதுவதை அறிந்தால் யூட்யூப் தானே காணொளியை கடைசி நொடிக்கு எடுத்துச் சென்று முடித்துவைக்கிறது என்றும் சொல்கிறார்கள். விளம்பரத் தடுப்பானை எப்படித் தடுக்கிறோம் என்பது பற்றியெல்லாம் கூகுள் விவரமாகப் பேசுவதில்லை. எனினும் விளம்பரத் தடுப்பான்களைப் பயன்படுத்துவது யூட்யூப் சேவையைப் பயன்படுத்தும் கொள்கைகளுக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.

பணம் செலுத்திப் பார்க்க விரும்பாதவர்களைக் கவரும் வழியாகத்தான் கூகுள் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டணம் செலுத்தும் பயனர்கள், ஏதேனும் காணொளியை விளம்பரமின்றிப் பார்க்க, தன் நண்பருக்குப் பகிர நினைத்தால் அப்படிச் செய்ய வாய்ப்பு கொடுக்கிறது கூகுள். ஒன்றல்ல, பத்து காணொளிகளை இப்படிப் பகிரலாம்.

காணொளிக்குக் கீழே பகிரவும் என்பதை அழுத்தினால் அதற்கான வாய்ப்பினைக் காண்பிக்கும். ஒருவேளை ஏற்கெனவே பணம் செலுத்திப் பயன்படுத்தும் நண்பருக்கு இப்படி விளம்பரமில்லாக் காணொளியைத் தவறுதலாக அனுப்பினால் பரவாயில்லை. கூகுள் அதைக் கணக்கில் எடுக்காது. ஒவ்வொரு மாதமும் இதுபோலப் பத்து காணொளிகளைப் பகிரலாம். தற்போதைக்கு ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, துருக்கி, மெக்ஸிகோ உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே இது நடைமுறைக்கு வந்துள்ளது.

விளம்பரம் இன்றி பார்க்கும் அனுபத்தை விரும்பும் பயனர், பணம் செலுத்தி யூட்யூப் சேவையைப் பெற ஆர்வம் காட்டலாம். தற்போது கட்டணம் செலுத்தி முதன்மைக் கணக்கு வைத்திருக்கும் சிலரிடம் பேசினோம். கொடுக்கும் பணத்தின் மதிப்புக்கு ஏற்ற சேவை கிடைப்பதாகவே சொல்கிறார்கள். விளம்பரத் தொல்லை இல்லையென்பது மட்டுமின்றி திறன்கருவியின் திரை பூட்டியிருந்தாலும் காணொளி தொடரும். தரவிறக்கம் செய்து பின்னர் பார்க்கும் வசதியும் உள்ளது. யூட்யூப் இசையும் இலவசம்.

தொடர்புடைய இணையத்தளங்கள்

ஆண்டிராய்டுபோலிஸ் தளத்தின் செய்தி

விளம்பரத்தடுப்பான் பற்றிய செய்தி

The post விளம்பரமில்லா யூட்யூப் காணொளி இலவசம் appeared first on செல்லினம்.

  •  

பதிப்புரிமையில் விலக்கு கோரும் ஓப்பன்ஏஐ

OpenAI

பதிப்புரிமையாளர்களின் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் விலக்கு கோரி கடிதம் எழுதியுள்ளது ஓப்பன்ஏஐ. அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள இக்கடிதத்தில் சீனா நம்மை இத்துறையில் முந்தாமல் இருக்க இந்த அனுமதி தேவை என்கிறது.

OpenAI

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மொழிமாதிரி, நாம் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பளிச் பளிச்சென்று பதில் தருகிறது. தொடக்க காலத்தில் முன்பே தரவுகள் அளித்துப் பயிற்சி கொடுக்கப்பட்ட மொழிமாதிரியாகத்தான் அறிமுகமானது. மக்கள் கொடுத்த பேராதரவினால் மேம்பாடு கண்டது. தான் கொடுக்கும் பதில்களுக்கான தரவுகளை இணையம் முழுவதில் இருந்தும் சேகரிக்கிறது. அதை அப்படியே மானே, தேனே சேர்த்து நமக்கேற்றவாறு கொடுக்கிறது.

அண்மையில் ஜிப்லி வகை ஓவியம் போலவே வரைந்து கொடுத்துப் பரவலாக கண்டனம் எழுந்ததும் நினைவிருக்கும். நாங்கள் எழுதிப்போட்டிருக்கும் செய்திகளை எடுக்கிறது என்று செய்தி நிறுவனங்கள் சிலவற்றின் வழக்குகளையும் எதிர்கொள்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தளவில் காப்புரிமை, பதிப்புரிமை விதிகள் ஓரளவுக்கு வலுவாகவும் தெளிவாகவும் உள்ளன. இதை எல்லாம் தளர்த்த வேண்டும் என்கிறது ஓப்பன்ஏஐ.

இதற்குத் தலையாய காரணமாக ஓப்பன்ஏஐ சுட்டுவது சீனாவை. அவர்களுடைய செயற்கை நுண்ணறிவு மொழிமாதிரிகள் எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் எல்லாத் தரவுகளையும் எடுத்துப் பயனர்களுக்குக் கொடுக்கின்றனவாம். அது தவறென்பது போலத்தான் கடிதம் இருக்கிறது. ஆனால் அந்தத் தவறை நாங்களும் செய்ய அனுமதி வேண்டும் என்கிறார்கள். இல்லாவிட்டால் இத்துறையில் அமெரிக்காவை சீனா முந்திவிடும் என்றும் எச்சரிக்கிறது ஓப்பன்ஏஐ. இதைத் தடுக்க எழுநூற்றுச் சொச்சம் பதிப்புரிமைச் சட்டங்களில் இருந்து உடனே விலக்கு கொடுங்கள் என்கிறது கடிதம்.

போகிற போக்கில் ஆப்பிள் நிறுவனத்தையும் வம்புக்கு இழுத்துள்ளார்கள். மக்களாட்சிக்கும் விதிகளுக்கும் மதிப்பு கொடுக்காத சீனா போன்ற நாடுகளில் இயங்கும் நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்பைத் துண்டிக்கவேண்டுமாம். ஆப்பிள், அலிபாபா கூட்டினை முறிக்க இந்தப் பரிந்துரை. ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. அவர்கள் கவனம் எல்லாம் ஆப்பிள் நுண்ணறிவு மேம்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதுதான் தங்கள் களம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

நாட்டுப்பற்றையும் வியாபாரத்தையும் ஒன்றாக இணைத்து ஓப்பன்ஏஐ எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தரவுகளையும் தனியாருக்குத் திறந்துவிட்டு செயற்கை நுண்ணறிவைப் புகுத்த வேண்டும் என்பதுதான். அரசாங்கத் தரவுகளை எண்ணிமத் தரவுகளாக (Digital Data) மாற்ற தனியார் நிறுவனங்களைத் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக இதுபற்றி பேச்சுகள் எழுந்துள்ளன.

தரவுகளின் முக்கியத்துவம் அறிந்து இரு நாடுகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கையில் இந்தியாவும் இதுபற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, ராகுல் காந்தி, “இந்தியாவிடம் உற்பத்தித் தரவும் இல்லை, நுகர்வுத் தரவும் இல்லை” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். ஓப்பன்ஏஐ எழுதியுள்ள கடிதம் தரவுகளின் உலகில் ஒவ்வொரு நாடும் மேம்படவேண்டியதை உணர்த்துவதாக இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்
1) கிப்லி – ஜிப்லி – ஜிபுரி – ஜிப்டி
2) ஆப்பிள் நுண்ணறிவு
3) ராகுல் காந்தி பேச்சு
4) ஓப்பன்ஏஐ கடிதம்

The post பதிப்புரிமையில் விலக்கு கோரும் ஓப்பன்ஏஐ appeared first on செல்லினம்.

  •  

கைரேகைக் கடவுச்சொல்

SELLINAM

சில வங்கிச் செயலிகளில் செல்லினம் மூலம் கடவுச்சொல் அளித்து உள்நுழைய முடியவில்லை என்று ஒன்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு சிக்கல் எழுந்தது. இன்றைய நிலையை அறியச் செல்லினம் பயனர்கள் சிலரிடம் பேசினோம்.

SELLINAM

பணப் பரிவர்த்தனைக்குப் பெரும்பாலும் ஜிபே எனப்படும் கூகுளின் செயலியே பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் பயன்படுத்துகின்றனர். ஐந்து ரூபாய் என்றாலும், பணம் செலுத்த இச்செயலியே உதவுகிறது. ஐந்து ரூபாய்க்கு எதையாவது வாங்க முடியுமா என்பது தனிக்கதை. இதில் செல்லினம் விசைமுகத்தால் எந்தச் சிக்கலும் இல்லை. இச்செயலியைத் தவிர்த்துப் பார்த்தாலும் இதே வகையிலான இன்னும் பல செயலிகளைப் பயன்படுத்துவதாகவே நிறையப்பேர் தெரிவித்தனர்.

இந்தியாவில் தொலைப்பேசியில் யாரை அழைத்தாலும் இணைய மோசடி பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களைக் கடந்தே பேச வேண்டும் என்கிற அளவுக்குத் தீவிர பரப்புரை நடப்பதாலோ என்னவோ பலர் தங்கள் திறன்பேசியைத் தவிர்த்து மேசைக்கணினி, மடிக்கணினியில் மட்டுமே வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவோம் என்றனர்.

ஒரு சிலர் தங்கள் வங்கிச் செயலியானது, உள்ளே நுழையும்போதே வேறெந்த விசைப்பலகையையும் பயன்படுத்த இயலாதவாறு வைத்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்கிச்செயலி காட்டும் மெய்நிகர் விசைப்பலகையைக் கொண்டு கடவுச்சொல்லைத் தட்டெழுதி உள்ளே நுழைகிறோம் என்றனர்.

மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் சிவராமன், “நான் திறன்பேசியிலும் கூட வலைஉலாவி வழியாகத்தான் வங்கிச் சேவையைப் பயன்படுத்துவேன். செல்லினம் வழியாக கடவுச்சொல்லை உள்ளிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அரிதாகத்தான் பயன்படும் என்பதால் வங்கிச் செயலி இல்லை” என்றார். நமக்காக எச்டிஎப்சி வங்கிச் செயலியைத் தரவிறக்கி செல்லினம் வழியாகக் கடவுச்சொல்லைத் தந்து உள்நுழைய முடிகிறதா எனச் சோதித்துப் பார்த்தார். சரியாகவே வேலை செய்கிறது என்று நமக்கு வீடியோ பதிவும் அனுப்பி வைத்தார்.

ஊடகத்துறையில் பணியாற்றும் வித்யாவிடம் பேசினோம். “நான் ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிச் செயலிகள் பயன்படுத்துகிறேன். செல்லினம் பயன்படுத்தியே கடவுச்சொல்லை உள்ளிடுகிறேன். எப்போதும் சிக்கல் வந்ததில்லை” என உறுதியாகக் கூறினார்.

தமிழ்நாடு அரசு அதிகாரியான சிவ. தினகரனிடம் கருத்து கேட்டோம். “நான் இந்தியன் வங்கியின் செயலியைப் பயன்படுத்துகிறேன். செல்லினம் விசைப்பலகையில் கடவுச்சொல்லை உள்ளிட்டே நுழைகிறேன். ஜியோமி திறன்பேசிகளைப் பயன்படுத்திய என் நண்பர்கள் சரியாக வேலை செய்யவில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதில் செல்லினம் செயலின் தவறேதும் இல்லை என்றும் திறன்பேசியில் அடுத்த பதிப்பில் சரியாகிவிட்டது என்றும் கேள்விப்பட்டேன்” என்றார்.

விண்டோஸ், மேக் கணினி, ஐபோன், ஆண்டிராய்டு திறன்பேசிகள் எனப் பல விதப் பயனர்களில் பேசியதில் முரசு அஞ்சல், செல்லினம் வழியாக வங்கிச் செயலியில் கடவுச்சொல்லை உள்ளிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றே கூறினர். ஓரிரு வங்கிச் செயலிகளில் இது சாத்தியம் இன்றியும் இருக்கலாம். வங்கிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூன்றாம் தரப்புச் செயலியில் கடவுச்சொல்லை உள்ளிட அனுமதி மறுப்பதைக் குறைசொல்வதற்கில்லை. அவர்களே மெய்நிகர் விசைப்பலகையும் கொடுத்துவிட்டால் அதையே பயன்படுத்தலாம். இல்லையெனில் வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது மட்டும் செல்லினத்துக்குப் பதிலாக திறன்பேசியின் இயல்பு விசைமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழைத் தட்டெழுத உதவும் செல்லினம் செயலி, ஒரு நாளைக்குச் சில நூறு முறையேனும் பயன்படுகிறது. வங்கிச்செயலியை அப்படிச் சொல்ல இயலாது.

அதோடு, தற்போதைய வங்கிச் செயலிகள் பலவும் முகம், கைரேகையை கடவுச்சொல்லாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை வைத்துள்ளன. செல்லினம் வழியாகக் கடவுச்சொல் தட்டெழுத முடியாது என்பது ஓர் இடராக இருப்பதாகத் தோன்றவில்லை. நாம் கேட்டறிந்தவரையில் பயனர்களும் அதை உறுதி செய்கின்றனர். இந்தியா மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற பல நாடுகளில் வசிக்கும் செல்லினம் பயனர்கள் இச்சிக்கலை எதிர்கொள்கிறார்கள் எனில் எங்களுடைய உதவிப் பக்கத்துக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நன்றி.

***

கடவுச்சொல் உள்ளீடும் தரவுகள் பாதுகாப்பும்

The post கைரேகைக் கடவுச்சொல் appeared first on செல்லினம்.

  •  

ஆப்பிள் 16e : நாமே பழுதுபார்க்கலாம்

apple 16e self repair

புதிதாக அறிமுகமாகியுள்ள ஆப்பிள் 16இ திறன்பேசி, ஆப்பிள் நிறுவனத்தின் நாமே பழுதுபார்க்கும் திட்டத்தில் இணைகிறது.

தேவைக்கு அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட திறன்கருவிகளை வாங்கும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. சில திறன்பேசிகள் ஓர் ஆண்டுக்கு மேல் சரியாக வேலை செய்வதில்லை. நீடித்து உழைக்கும் தரமான திறன்பேசிகள் என்றாலும் பலர் புதுப்புது வசதிகளைப் பயன்படுத்த ஆசைப்பட்டு புதுமாதிரி திறன்பேசி சந்தைக்கு வந்தவுடன் மாற்றிவிடுகிறார்கள். கை தவறி கீழே போடுவது, தண்ணீரில் போடுவது என்று புதுத் திறன்பேசியை உடைத்துவிட்டுப் புதிதாக வாங்குவோரும் உண்டு. இதன் காரணமாக மின்னணுக் குப்பைகள் பெருகுகின்றன. இக்குப்பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

apple 16e self repair

திறன்பேசிகள் பழுதானால் அதைப் பழுது பார்த்துப் பயன்படுத்துவதை சூழலியலாளர்கள் ஊக்குவிக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனம் இதில் தனித்துவமான கட்டுப்பாடுகள் கொண்டிருந்தது. தங்கள் அங்கீகாரம் பெற்ற இடங்களைத் தவிர வேறெங்கும் ஆப்பிள் திறன்கருவிகளைப் பழுதுபார்ப்பது சாத்தியம் இல்லாது இருந்தது. ஆப்பிள் பழுதுபார்ப்பு வலையமைப்புக்கு வெளியே பழுதுபார்த்தால் வாடிக்கையாளர்கள் அந்தத் திறன்பேசியைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. இது குறித்த விமர்சனங்களையும் எதிர்கொண்டது ஆப்பிள்.

இதன் விளைவாக சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில் தங்கள் நிறுவனத்தையும் இணைக்கும் விதத்தில் நாமே பழுதுபார்க்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.  2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம் 2022ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதில் முதலில் ஐபோன்கள் மட்டுமே நாமே பழுதுபார்க்கும் வகையில் இருந்தது. பின்னர் மேக் கணினிகளும் இணைந்தன. ஆப்பிள் திறன்கடிகாரம், ஏர்பாட் என ஒவ்வொன்றாக இதை விரிவுபடுத்தினார்கள்.

இவ்வரிசையில் தற்போது ஆப்பிள் 16இ திறன்பேசிகளும் இணைந்துள்ளன. இந்த நமக்கு நாமே திட்டத்தில் பழுதுநீக்கத் தேவைப்படும் கருவிகளை (tool kit) ஆப்பிள் நிறுவனமே வழங்கும். திருகு, திருகாணி, திறன்பேசியின் வரைபடம், எங்கெங்கே எந்தெந்த பாகங்கள் உள்ளன என்கிற விளக்கப்படம் எல்லாமே ஆப்பிள் கொடுத்துவிடும். திரை, மின்கலம் போன்றவற்றையும் ஆப்பிள் தளத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். இவை அனைத்தும் ஆப்பிள் அங்கீகாரம் பெற்றவை என்பதால் பழுது நீக்கிய பிறகு உங்கள் ஆப்பிள் அடையாளத்துடன் உள்நுழைவதற்கு ஆப்பிள் எந்தத் தடையும் சொல்லாது.

அடேங்கப்பா என்று வாழ்த்துவதற்கு முன்பு விலையையும் தெரிந்துகொள்வது நல்லது. அறுநூறு டாலர் மதிப்புள்ள ஐபோன் 16இ திறன்பேசியைப் பழுதுபார்க்கும் கருவிகள் அடங்கிய தொகுப்பை வாடகைக்குத் தருகிறது. ஒரு வார காலத்துக்கு வாடகை சுமார் ஐம்பது டாலர். திரையைச் சரிசெய்வதென்றால் அதைத் தனியாகப் பணம் செலுத்தி வாங்கவேண்டும். ஒட்டுவதற்கான பொருளும் வாங்கவேண்டும். எல்லாம் தோராயமாக முந்நூறு டாலர்கள் கணக்கு வருகிறது. திறன்பேசியின் விலையில் பாதி செலவாகிறதே என்றும் சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஒழுங்காகச் செய்யத் தெரியாமல் உடைத்தால் முந்நூறும் அறுநூறும் சேர்ந்து மொத்தமாகப் போய்விடும் என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள்.

நீண்ட கால நோக்கில் பார்த்தால் இம்மாதிரி முயற்சிகள் வரவேற்கத் தக்கதே. பழுதுநீக்கத் தெரியாது எனில் அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் கொடுப்பதே சிறந்தது. தெரியும் எனில் நாமே செய்து கொள்ளலாம். புதிதாக வாங்குவதைவிட இது நிச்சயம் மேலானது. சுற்றுச்சூழல் கேடுகளைக் குறைக்க நம்மால் இயன்றதைச் செய்த திருப்தியும் கிட்டும். ஆப்பிள் திறன்பேசிகளில் விலை குறைவானது என்பதால் ஆப்பிள் 16இ பழுதுநீக்கும் பணத்துக்கும் புதிதாக வாங்கும் பணத்துக்கும் இடைவெளி குறைவாக உள்ளது. மற்ற ஆப்பிள் திறன்கருவிகளில் நாமே பழுதுநீக்கும் திட்டம் இன்னும் கூடுதல் பலன் உள்ளதாகவே இருக்கும். 

2030ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு கார்பன் நடுநிலைமை (Carbon Neutrality) என்பதை இலக்காக வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். உற்பத்தி, போக்குவரத்து அனைத்திலும் தான் வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல். காடு வளர்ப்பு, கார்பன் பிடிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தல். மறுசுழற்சி, பழுதுநீக்கும் திட்டங்களை ஊக்குவித்தல். இப்படிப் பல முயற்சிகளை முன்னெடுத்து சுழிய நிகரக் கரியமில உமிழ்வை (net-zero carbon emissions) சாத்தியப்படுத்த முயல்கிறது ஆப்பிள்.

The post ஆப்பிள் 16e : நாமே பழுதுபார்க்கலாம் appeared first on செல்லினம்.

  •  

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

Murasu Anjal Tamil99

இத்தொடரின் ஆதாரக் கேள்வி, எந்த உள்ளிடு முறை சிறந்தது என்பதே.  ஆரம்பத்திலேயே, தமிழின் இயல்பை உணர்ந்த நுண்ணறிவுடன், பிழைகள் தவிர்க்கும்படியாக இருப்பதையும் ஒரு கூறாகக் குறிப்பிட்டிருந்தோம்.

ஒன்றுக்கு மேற்பட்ட கொக்கிகள், உயிரெழுத்தின் மேல் புள்ளி (கிிி ஈ்) போன்ற பொருளற்ற சொற்களைத் தட்டெழுத அனுமதிக்காதவாறு உள்ளிடு முறையை அமைக்க முடியும். முரசு அஞ்சல், தமிழ்99 உள்ளிடு முறைகள் இம்மாதிரி தவறாகத் தட்டெழுத அனுமதிப்பதில்லை. தமிழுக்கான மென்பொருள் உருவாக்குவோர் தமிழராகவேதான் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் தமிழின் தனித்தன்மைகளையும் இயல்புகளையும் அறிந்தவராக இருத்தல் அவசியம். எழுத்துரு வல்லுநரும், செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனருமான முத்து நெடுமாறன், இதை இயற்கை நுண்ணறிவு, லேங்குவேஜ் அவேர்னஸ் என்று குறிப்பிடுகிறார். எழுத்துரு, உள்ளிடு முறை உருவாக்கிய பல்லாண்டு கால அனுபவம் மட்டுமின்றி தமிழை ஆழமாக ஆய்ந்து உள்வாங்கிக் கொள்வதால் ஒருவருக்குக் கிடைக்கும் அறிவு இது.

மேலே குறிப்பிட்டபடி வெளிப்படையாகத் தெரியும் தவறு கூடப் பரவாயில்லை. கண்ணில் பார்க்கும் போதும் சரி, தேடுபொறிக்கும் சரி, பொருளற்ற ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி அல்லாத பிழைகளையும் சில உள்ளிடு முறைகள் செய்கின்றன. கொற்றவை என்ற சொல்லின் முதல் எழுத்தை, பொதுவாக க ெ ா வரிசையில் தட்டெழுதுவோம். இவ்வரிசையை மாற்றி கா எழுதி ெ சேர்த்து கூகுள் உள்ளிடு முறையில் எழுதினாலும் திரையில் சரியாகக் காட்டும். இந்தத் திருத்தத்தால் பத்து காசுக்குப் பயன் இல்லை. ஏனெனில் ஆண்டிராய்டு கருவிகளில் சரியாக இருப்பது போலத் தோன்றும் இச்சொல், ஐஓஎஸ், மேக் கணினிகளில் தவறாகத்தான் காட்டும். அட, கூகுள் தேடுபொறியிலும் இது தவறான சொல்லாகவே கருதப்படும். ஆனால் பார்வைக்கு மட்டும் சரியாக இருக்கும். இதன் காரணமாகத் தரவுகளில் பெருமளவு பிழைகளை நமக்குத் தெரியாமலே செய்கிறோம். நாம் உருவாக்கும் தரவுகளைப் படித்து அறிவை வளர்க்கும் பெரிய மொழி மாதிரிகளுக்குச் சரியான தரவுகள் இருப்பது அவசியம். செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்குத் தவறாகப் பாடம் புகட்டுகிறோம்.

முரசு அஞ்சல், தமிழ்99 பயன்படுத்துவதில் உள்ள கூடுதல் அனுகூலம் என்னவெனில் இதற்காக, கணினியிலோ, திறன்பேசியிலோ எவ்வகையான டிஜிட்டல் கருவிகளிலோ எழுத எந்தச் செயலியையும் நாம் நிறுவவேண்டியதில்லை. மேக், விண்டோஸ், ஆண்டிராய்டு, ஐஓஎஸ், போன்ற அனைத்து இயங்குதளங்களிலும் இயல்புநிலையிலேயே இவ்விரண்டு உள்ளிடு முறையும் இருக்கின்றன. லினக்ஸிலும் இயங்கும். எனவே, இரண்டில் நமக்கு வசதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதும்.

அப்படி என்றால் அனைவரும் முரசு அஞ்சல் அல்லது தமிழ்99 கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டுமா? அவசியம் இல்லை. நெடுங்காலம் பழகிய ஒன்றில் இருந்து புதிதாக ஒன்றுக்கு மாறுவது நமது வேலையின் வேகத்தையும் தரத்தையும் குறைக்கும் எனில் அதைச் செய்ய வேண்டாம். புதிதாகக் கற்றுக்கொள்வோர், இருப்பது சரியாக இல்லை என்று உணர்வோர் மட்டும் எதைத் தேர்ந்தெடுப்பது எனச் சிந்தித்தால் போதும்.

இரண்டில் எது என்றால், தனிப்பட்ட நபர்களைப் பொறுத்து அது மாறும் என்கிறார் முத்து நெடுமாறன். 

“இரண்டு உள்ளிடு முறையும் வெவ்வேறு வகையான பயனர்களை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிகம் உள்ள அயல்நாடுவாழ் தமிழர்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் ஆங்கிலவழிக் கல்வியில் படித்தவர்கள், ஆங்கிலத்தோடு அதிகம் புழங்கும் வேலையில் இருப்பவர்கள், ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தித் தமிழில் எழுதுவதை எளிமையாகக் கருதுபவர்களுக்கு அஞ்சல் எளிதாக இருக்கிறது. எனவே விரைவாகவும் தட்டெழுத முடிகிறது. 

ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் படித்தாலும் தமிழில் அதிகம் பேசி தமிழிலேயே சிந்திக்கும் ஒருவருக்கு இம்முறை சவாலானதாக இருக்கும். சிக்கலானதும் கூட. அவர்களுக்கு தமிழ்99 உள்ளிடு முறையே சிறந்தது. எளிதாகவும் விரைவாகவும் இம்முறையில் அவர்களால் தட்டெழுத இயலும். ஒருவேளை தமிழ் தட்டச்சு முறையைப் பயின்று அதைப் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வருபவர் எனில் புதிதாக மாற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எதற்குப் பழகியிருந்தாலும் அதை அப்படியே தொடரலாம். ஆனால் புதிதாகக் கற்றுக்கொள்வோர், முரசு அஞ்சல் அல்லது தமிழ்99, இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்வதே நன்று.” என்பது அவர் கருத்து.

அவர் குறிப்பிட்டுள்ள இரண்டு மட்டுமின்றி, பிழைகள் தவிர்க்கும் நுண்ணறிவுடன் உருவாகும் எந்த உள்ளிடு முறையைப் பின்பற்றினாலும் வரவேற்கத்தக்கதே.

இறுதியாக ஒன்று. பெருநிறுவனங்கள், தங்கள் உள்ளிடு முறைகளில் இருக்கும் குறைகளை நீக்கி, தமிழ்99 அல்லது முரசு அஞ்சலில் இருக்கும் மாற்றங்களைப் பின்பற்றுவதும் அவசியம். அவர்களுக்குத் தெரியாது என்பதால்தான் பிழையுடன் வெளியிடுகிறார்களே ஒழியே வேண்டும் என்றே செய்வதில்லை. கூகுள், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்கள், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கின்றன. நாம் கேட்பதில்லை. திரளாக யாரும் கேட்கவில்லை என்றால் அந்தத் தவறுடனே அப்படியே இருக்கிறது. 

வல்லுநர்கள் இம்மாதிரி பிழைகளைச் சுட்டிக்காட்டிப் பெருநிறுவனங்களைத் திருத்திக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். ஆனால் பொதுமக்களும் விழிப்புணர்வு பெற்று உரக்கக் குரல் எழுப்பினால் ஒழிய பெருநிறுவனங்களில் காதுகளில் விழாது. தமிழ்ப்பற்றை சங்கப்பாடலோடு நிறுத்திக் கொள்ளலாகாது. நவீன தொழில்நுட்பங்களிலும் சரியாக வரும்படி கண்காணிப்பதும் நமது கடமையே.

(முற்றும்)

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6 appeared first on செல்லினம்.

  •  

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

Murasu Anjal Tamil99

எழுத்தைச் சேமிக்கும் விதத்துக்கு (encoding), யூனிகோடு தகுதரம் அறிவிப்பு வருவதற்கு முன்பே உள்ளிடு முறைக்கான தகுதரத்தை தமிழ்நாடு அரசு வகுத்துவிட்டது. தனக்கு வந்த கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து ஆய்வின் அடிப்படையில் உருவான தமிழ்99 விசைப்பலகையை அறிமுகப்படுத்தியது. இதுவே அனைவரும் பயன்படுத்தவேண்டிய விசைப்பலகைத் தகுதரம் என்று அறிவித்தது. ஆனால் சட்டமியற்றிக் கட்டாயமாகப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. இன்ஸ்கிரிப்ட் பயன்படுத்துவாரில்லை என்பதால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் தமிழ்99 உள்ளிடு முறையை தாமாகவே இணைத்துக் கொண்டன. சிக்கலானவை தாமாகவே வழக்கொழிந்து சில உள்ளிடு முறைகளே எஞ்சின.

தமிழ்99 விசைப்பலகை, உள்ளிடு முறையில் முக்கியமான சிறப்பு ஷிப்ட் விசை பயன்படுத்தாமல் பெரும்பாலான தமிழ்ச் சொற்களைத் தட்டெழுதிவிட முடியும். கிரந்த எழுத்துகள் போன்ற சிலவற்றுக்கே ஷிப்ட் விசையைத் தொடவேண்டி வரும். அது அரிதான பயன்பாடே.

உயிர் எழுத்துகள் ஒரு பக்கமும், மெய் எழுத்துகள் ஒரு பக்கமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் விதத்தில் அப்படியே தட்டெழுதிவிடலாம். க உடன் இ சேர்ந்தால் கி. வ உடன் உ சேர்ந்தால் வு. விரல்களுக்குப் பயிற்சி தேவையே தவிர மனத்துக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. இப்படி தனித்தனிப் பக்கத்தில் உயிர், மெய் எழுத்துகளைப் பிரித்து வைப்பது, வலது, இடது கைகளுக்குச் சமமான வேலை கொடுக்கும் தட்டெழுத்தின் அடிப்படைத் தத்துவத்திற்கும் இது பொருந்துகிறது.

இணைந்து வரும் எழுத்துகளை அருகருகே வைத்திருப்பது தமிழ்99 உள்ளிடு முறையின் மற்றொரு சிறப்பு. இந்த வரியின் கடைசிச் சொல்லில் ப்பு வருகிறதல்லவா. சிரிப்பு, துடிப்பு, காழ்ப்பு, செருப்பு, இனிப்பு. அனைத்திலும் ப்பு எழுத்துகள் அடுத்தடுத்து வருவதைப் பாருங்கள். மண்டபம், கண்டம், தண்டம். இவற்றில் ண்ட அடுத்தடுத்து வரும். ஞ்ச, ந்த, த்த என இப்படி அடிக்கடி அடுத்தடுத்து எழுத்துகள் வரும் சொற்களை ஆய்வு செய்து, பட்டியலிட்டு அவ்வெழுத்துகளை விசைப்பலகையிலும் அருகருகே இருக்கும்படி அமைத்தனர். இதனால் தட்டெழுதும்போது விரல்கள் எம்பிக் குதித்துத் துன்புறாமல் வேகமாகத் தட்டெழுத முடியும். 

தமிழ்99 கணினி மென்பொருள் அடிப்படையில் செயல்படும் விசைப்பலகை என்பதால் எளிமைப்படுத்துவதை இன்னும் சில படிகள் மேம்படுத்தினர். தங்கம் என்பதில் தஙக என்று புள்ளி வைக்காமல் அடித்தாலும் கூட பொட்டு வைத்த தங்கக் குடம்தானே நம் மரபு என்று மென்பொருளே புள்ளி வைத்து தங்க என மாற்றிக்கொள்ளும். இவ்வெழுத்துக்கள் இப்படித்தான் வரும் என்கிற இலக்கண விதிகளை மென்பொருளில் ஏற்றியிருப்பார்கள். க்க என்பதை கக எனத் தட்டினால் க்க எனத் தானாகேவே மாறிவிடும். லல, ல்ல என்றாகும். ஏனெனில் ல்ல என்பதுதான் நாம் தட்டெழுத விரும்புவது என மென்பொருளுக்குத் தெரியும். இப்படி நுட்பமாகப் பல ஆய்வுகள் மேற்கொண்டு பல சிறப்புகளை தமிழ்99 உள்ளிடு முறையில் சேர்துள்ளனர். 

இதன் மூலம் விரைவாகவும் எளிமையாகவும் தட்டெழுத முடிகிறது. இவை அனைத்தையும்விட, வேறொரு முக்கியமான பண்பும் தமிழ்99ல் உண்டு.

கால், கொம்பு, கொக்கி எல்லாம் எப்படி வேண்டுமாலும் அடிக்கலாம். கொாக்கிிி போன்று பொருளற்று எழுதவும் கூகுள் உள்ளிடு முறை அனுமதிக்கிறதல்லவா. தமிழ்99 இப்படிப் பொருளின்றி தட்டெழுதுவதை அனுமதிக்காது. தமிழுக்கென்று இருக்கும் சிறப்பு இலக்கண விதிகளைக் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்டது தமிழ்99. இதனால் தப்புத்தப்பாகத் தமிழை எழுதும் வாய்ப்பு குறைகிறது. 

கூகுள் நிறுவனம் தோன்றுவதற்கு முன்பு, 1993ல் வெளியான முரசு அஞ்சல் உள்ளிடு முறையும் தமிழ்99 போலவே மென்பொருளில் இலக்கண விதிகளைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. அ் -போன்ற தவறுகளைக்கூட அனுமதிக்காத, இன்னும் சில கூடுதல் விதிகளைத் தன் மென்பொருளில் வைத்துள்ளது.

எத்தனை வகை உள்ளிடு முறைகள் இருந்தாலும் இவை இரண்டு மட்டுமே இன்று பெரும்பான்மையினரால் பயன்படுத்தப்படுகின்றன. மலேசியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற உள்ளிடு முறையாக முரசு அஞ்சல் இருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அதிகம் ஆங்கிலத்துடனே புழங்குகின்றனர். எனவே அஞ்சல் உள்ளிடு முறை அவர்களுக்கு ஏற்றதாகிறது. தனிப்பட்ட பயிற்சி ஏதும் தேவையில்லை என்பதால் இளைய தலைமுறையின் தேர்வாக இதுவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் நகரவாசிகள் ஆங்கிலத்தோடு நெருக்கம் காட்டுவதால் அவர்களும் பெரும்பாலும் அஞ்சல் உள்ளிடு முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். அஞ்சல் அல்லாது, என்எச்எம் ரைட்டர், அழகி, கூகுள் உள்ளீட்டு முறை என எதைப் பயன்படுத்தினாலும் இதே வகைப்பாட்டில்தான் வரும். இதைத் தமிழில், ஒலிப்புமுறை உள்ளிடு முறை எனலாம். சென்னைத் தமிழில், தங்கிலிஷ் என்பர். தங்கிலிஷ் தமிழில் சொல்வதானால் டிரான்ஸ்லிட்ரேஷன், பொனடிக் டைப்பிங் எனலாம். எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் விஷயம் ஒன்றுதான். ஆங்கில ammaa, தமிழ் அம்மாவாகத் திரையில் தெரியும். 

இன்னமும் தமிழ்த் தட்டச்சு முறையில் தட்டெழுதும் அரிய வகைத் தமிழர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினரே.

தொடரும்

தமிழ்99 பயன்பாட்டு வழிமுறைகள்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5 appeared first on செல்லினம்.

  •  

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

Murasu Anjal Tamil99

கணினித் தட்டெழுத்து உள்ளிடு முறைக்கு வரும் முன்பு கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்துகொள்வோம். தட்டெழுதும் முறையின் வரலாற்றைச் சற்று புரட்டிப் பார்ப்பது நம் புரிதலைக்கூட்டும். கல்வெட்டு, பனையோலை என எதில் எழுதுகிறோமோ அதற்குத் தக்க, தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. தமிழி வடிவத்துக்கும் இப்போதுள்ள தமிழ் எழுத்து வடிவுக்கும் பல நூற்றாண்டு கால இடைவெளியிருக்கிறது. 

tamil typewriter

தமிழை அச்சிட ஆரம்பித்த பிறகு எழுத்து மாற்றத்துக்கான தேவை அதிகமானது. பதினைந்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்து, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிரமாக நடைபெற்ற எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றைய வடிவத்துக்கு முக்கியமான காரணமாகின்றன. வீரமாமுனிவர், சீகன்பால்கு, ஜி.பு.போப், மு.சாமிநாத மாதவராயர், குமரன் இதழின் ஆசிரியர் முருகப்பா, பெரியார் ஈ.வே.ரா. போன்ற பலர் இதற்குக் காரணமாக இருந்துள்ளனர்.

யானை தூக்கிவைத்திருக்கும் துதிக்கை மாதிரி வடிவத்தில் இருந்த ஐகார மெய்யெழுத்துகள் னை, லை என மாற வலியுறுத்தப்பட்டன. ரகர எழுத்தையும் நெடில் குறியாகிய துணைக்காலையும் வேறுபடுத்த, ரகரத்திற்குக் கீழே கோடிட்டனர். இப்படிப் பல மாற்றங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. பின்னர் தமிழ் தட்டச்சு இயந்திரத்துக்கான தேவையும் வந்தது. அதை உருவாக்கியவர் ஆர்.முத்தையா. இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். தன் பதின்ம வயதில் மலேசியா (மலாயா) சென்று பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றினார். 1930வரை அங்கே பணியில் இருந்த காலகட்டத்தில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். 

ஆங்கிலத்துக்காக உருவான தட்டச்சு இயந்திரத்தில் இருந்த குறைந்த எண்ணிக்கை விசைகளில், 247 தமிழ் எழுத்துகளைத் தட்டெழுதும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைத்து உருவாக்கினார். மெய்யெழுத்தின் புள்ளி, இகர, ஈகாரக் கொக்கி, ஐகாரத் துணை எழுத்து போன்றவற்றை பிரித்து அதற்கென ஓர் இடம் கொடுத்தாலே பாதி எழுத்துகள் குறைந்துவிடுமல்லவா. க, ங, ச வரிசை எழுத்துகள் உடன் தனியாக ஒரு விசையில் வைத்திருக்கும் புள்ளி, இகர, ஈகார விசையைச் சேர்த்து அடித்தால் க் வரிசை, கி வரிசை, கீ வரிசை எழுத்துகள் எல்லாமே அடித்துவிடலாம். அதில் இயந்திரத்தின் இயல்பை ஒட்டி ஒரு சிக்கல் எழுந்தது.

தட்டச்சு இயந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு விசையில் இருக்கும். ஒன்றைத் தட்டினால் அதைத் தாளில் அச்சடித்துவிட்டு தன் இடத்தில் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும். ஓர் எழுத்தைப் பதிந்துகொண்டு, காகிதத்தாள் கொஞ்சம் நகர்ந்து இன்னொரு எழுத்தை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும். எழுத்து வர, வர இப்படி நகர்ந்து கொண்டே போவதுதான் தட்டச்சு இயந்திரத்தின் அடிப்படை நுட்பம். க் எழுத்தில் க தனியாக ் புள்ளி தனியாக ஒவ்வொரு விசையில் வைத்து இடப் பிரச்சினையைத் தீர்த்தாயிற்று. ஆனால் ஒரு விசையை அடித்ததும் தாள் நகர்ந்துவிட்டால் க எழுத்துக்குப் பக்கத்தில் புள்ளி வரும். இந்தச் சிக்கல், நகரா விசை (dead key) என்றொரு நுட்பத்தை அறிமுகப்படுத்தித் தீர்த்துவைக்கப்பட்டது.

மெய் எழுத்தை அடிப்பதாக இருந்தால் க விசையை முதலில் தட்டக்கூடாது. அதைத் தட்டினால் தட்டச்சு இயந்திரம் அதை அச்சிட்டதும் அடுத்த இடத்துக்குப் போய்விடும். முதலில் மெய்யெழுத்துப் புள்ளியைத்தான் தட்ட வேண்டும். புள்ளி, நகரா விசை என்பதால் தாளில் உச்சிப் புள்ளி அச்சாகி, தாள் நகராமல் அங்கேயே இருக்கும். அடுத்து க விசையைத் தட்டினால் புள்ளிக்குக் கீழே போய் க உட்கார்ந்து கொள்ளும். கி, கீ, பு, பூ போன்ற எழுத்துகளும் இவ்விதமே. கூட்டத்தோடு சேராமல், கூ போல கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் எழுத்துகளைத் தனி விசையாகவே வைத்திருந்தனர். ஆங்கிலத்தைப் போலவே இரு கைகளையும் பயன்படுத்தித் தட்டெழுதும் வகையில் விசைகள் அமைந்திருந்தது தனிச்சிறப்பு. 

பதிப்பகங்கள்தாம் அச்சிடும் என்ற நிலையை தட்டச்சு இயந்திரம் மாற்றியது. சாதாரண மனிதர்களும் தட்டச்சு செய்து ஆவணங்கள் உருவாக்க முடிந்தது. தட்டச்சு செய்தே வெளியிடும்படியான செய்தி இதழ்களும், நூல்களும் உருவாயின. அடுத்தது கணினிக் காலம்.

தொடரும்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2 appeared first on செல்லினம்.

  •  

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

Murasu Anjal Tamil99

தட்டச்சுப் பயிலகங்கள் இனிமேல் தமிழ்99 விசைப்பலகையைத்தான் சொல்லித்தர வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்99 என்பது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை. இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை இன்ஸ்கிரிப்ட். மக்கள் இவை இரண்டையும் விடுத்து, முரசு அஞ்சல், அமுதம், அழகி, மயிலை, பாமினி எனப் பல விதங்களில் தமிழை உள்ளீடு செய்கிறார்கள்.

தமிழ்99 விசைப்பலகையில், 99 என்பது அது வெளியிடப்பட்ட ஆண்டைக்குறிக்கிறது. அறிவிப்பை வெளியிட்டுச் சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலமாக அதை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு எதுவும் செய்யாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இப்போது எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும் சிலருக்குச் சந்தேகம் வருகிறது. ஒன்றிய அரசின் இன்ஸ்கிரிப்டுக்கும் தமிழ99க்கும் என்ன வித்தியாசம் என்றொரு விவாதமும் தொடங்கியுள்ளது. எது சிறந்தது? எது எளிமையானது? கற்றுக்கொள்வதில் எளிமையாக இருக்கும் முறை, பயன்படுத்தும் போது விரைவாகத் தட்டெழுதவும் உதவுமா? இதுபோன்ற கருத்தாடல்கள் நடக்கின்றன.

இவை அனைத்தையும் அலசி விளக்கும் வகையில் செல்லினம் தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியிட உள்ளோம்.

தொடங்குவதற்கு முன்பு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். உள்ளீடு செய்யும் விதமும் (input method), அந்த எழுத்துகள் சேமிக்கப்படும் முறையும் (encoding) வெவ்வேறு விஷயங்கள்.

நீங்கள் எந்த உள்ளிடு முறையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அஞ்சல், தமிழ்99, பாமினி என எந்த வழியில் தட்டெழுதி உள்ளீடு செய்தாலும் அந்த எழுத்துகள் சேமிக்கப்படுவது யூனிகோடு ஆக இருக்கும்பட்சத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. நீங்கள் உள்ளீடு செய்த அதே வழியில்தான் அந்தக் கோப்பில் திருத்தம் மேற்கொள்ளமுடியும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் முரசு அஞ்சல் பயன்படுத்தி தட்டெழுதிய கோப்பினை மற்றொருவர் தமிழ்99 பயன்படுத்தி திருத்திக்கொள்ள முடியும். எழுத்து எவ்வகையில் சேமிக்கப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம். அது யூனிகோடு எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட குறியீட்டு முறைதான். 

பல ஆண்டுகளுக்கு முன்பு சில சிக்கல்கள் இருந்தன. அடோப் போட்டோஷாப் போன்ற பல செயலிகள் யூனிகோடு எழுத்துருவை ஆதரிக்காத நிலை எல்லாம் கூட ஒரு காலத்தில் இருந்தது. அம்மாதிரி சிக்கல்கள் படிப்படியாகக் களையப்பட்டு தற்போது யூனிகோடு எழுத்துருக்களே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாகத் திறன்பேசி பயன்படுத்துவோர் அனைவருமே அதில் உள்ள யூனிகோடு எழுத்துகளையே புழங்குகின்றனர். மற்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் யூனிகோடு பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது.

முரசு அஞ்சல், மருதம், தமிழ்99, என்எச்எம், கூகுள் உள்ளீட்டுக் கருவி போன்று பல ஆண்டுகளாகப் பயன்படுத்தும் முறையும் சரி, தற்போது புதிதாக அறிமுகமாகும் உள்ளிடு முறையும் சரி, எதைப் பயன்படுத்தினாலும் தவறில்லை. அந்த உள்ளிடு முறையினால் உருவாகும் எழுத்து யூனிகோடாக இருந்தால் போதும்.

தற்போது நாம் இத்தொடர் கட்டுரைகளில் படிக்கப்போவது உள்ளிடு முறைகளைப் பற்றித்தான். யூனிகோடு பற்றி அல்ல.

இத்தனை இருக்கிறதே, எது சிறந்தது என்றொரு கேள்வி எழுவது நியாயமே. தமிழின் இயல்பை உணர்ந்த நுண்ணறிவுடன், பிழைகள் தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பயன்படுத்த எளிதாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும் உள்ளிடு முறைகளில் நமது பழக்கம், சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம்.

அப்படித் தேர்ந்தெடுக்க இவற்றுக்குள் என்னென்ன வித்தியாசம் இருக்கிறது என்றறியவேண்டும். அச்சிடும் வழக்கம் தோன்றிய காலத்திலிருந்து என்னவாக பரிணமித்து எப்படியெல்லாம் மாறி இன்றைய நிலையை அடைந்துள்ளது என்று தெரிந்து கொள்வதும் பயனுள்ளதே. இத்தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் அவற்றைப் பார்ப்போம்.

தொடரும்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1 appeared first on செல்லினம்.

  •  

கிப்லி – ஜிப்லி – ஜிபுரி – ஜிப்டி

Ghibli studio

சாட்ஜிபிடி செயலியால் வரையப்பட்ட கிப்லி வகைப் படங்கள் பரவிய அதே வேகத்தில் கலையை அவமதிக்கிறார்கள் என்ற வாதமும் பரவியது. இதில் ஆளுக்கொரு கருத்திருப்பது போல, நிறுவனத்தின் உச்சரிப்பும் வெவ்வேறாக இருக்கிறது.

Ghibli studio

சாட்ஜிபிடி செயலி கதை, கவிதை, நிரல் கொடுப்பதோடு படங்களும் வரைகிறது. சாட்ஜிபிடி 4ஓ, அண்மையில் வெளியிட்ட புதிய அம்சத்தில் கிப்லி வகைப் படங்களை உருவாக்க ஆரம்பித்தனர் பயனர்கள். இதற்கு வரவேற்பு கூடி சாட்ஜிபிடியின் கணினி சேவையகமே திணறும் அளவுக்குப் போனது. ஜெமினி ஏஐ, பிங் போன்ற மற்ற உரையாடல் செயலிகளிலும் கூட பயனர்கள் இந்த வகைப் படங்களை உருவாக்கத் தொடங்கினர். இந்தக் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்களும் இருந்த காரணத்தால் இணையத்தளங்களில் சண்டை வலுத்தது.

கிப்லி ஸ்டுடியோ நிறுவனர் ஹயாயோ மியாசகி முன்பு எப்போதோ செயற்கை நுண்ணறிவு பற்றிப் பேசிய காணொளி அதிகளவில் பகிரப்பட்டது. மனித வாழ்வுக்கே அவமரியாதை, அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமோ, நம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோமோ என்று அச்சம் தெரிவித்த அவர் பேச்சைப் பகிர்ந்து அவர் ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். 

மனிதர்கள் கலைத் தன்மையோடு உருவாக்கும் ஒன்றை செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் நகலெடுப்பது அறமல்ல என்பது இவர்கள் வாதம். கலை என்ற பெயரில் மேல்தட்டு பணம் படைத்த மக்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தவற்றை நவீன கால தொழில்நுட்பம் பொதுச் சொத்தாக்குகிறது என்கிறது எதிர்த் தரப்பு. 

மியாசகிக்கு விமானங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். கிப்லி என்பது இத்தாலிய விமானம் ஒன்றின் பெயர்தான். ஆனால் இந்தச் சொல்லின் வேர் லிபிய அரபு மொழியில் இருக்கிறது. தெற்கில் இருந்து வரும் சூடான காற்றை, வெப்பத்தைக் குறிக்கும் சொல் இது. அவர்கள் கிப்லி (Ghibli) என்றே உச்சரிக்கிறார்கள். இத்தாலியிலும் அப்படியே உச்சரிக்கிறார்கள். மியாசகி அதைத் தன் நிறுவனத்துக்குப் பெயராகச் சூட்டினார். ஆனால் உச்சரிக்கும்போது ஜப்பான் மொழி உச்சரிப்பு வேறு மாதிரியாக இருக்கும். Jiburi என்று எழுத்துவடிவில் இருப்பதை ஜிபுடி என்பது போல உச்சரிக்கிறார்கள். காதில் விழுந்ததை வைத்து எழுதும் தோராயமான எழுத்துவடிவமே இது. 

மியாசகியின் கலைவடிவம் ஜப்பானோடு நின்றுவிடவில்லை. ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் இவருக்கு விசிறிகள் இருக்கிறார்கள். அங்கே ஜிபுடி என்பதைச் சற்றே மாற்றி ஜிப்லி என்று உச்சரிக்கிறார்கள். ஜப்பான் மொழி பேசும் அலுவல் ரீதியான மொழிபெயர்ப்பாளர்களும் ஜிப்லி என்றே சொல்கிறார்கள். ஆங்கிலச் செய்தி நிறுவனச் செய்தியாளர்கள் பலரும் ஜிப்லி என்றே கூறுகிறார்கள். மியாசகியைப் பொறுத்தவரை இது ஏதோ ஒரு சொல். பிடித்தது. எடுத்துக்கொண்டார். அவ்வளவுதான். ஆனால் தன்னுடைய கலை உருவாக்கத்தை அப்படி எளிதாகக் கடந்து போகும் நபர் அல்ல அவர். அதனால்தான் அவர் ரசிகர்களும் இம்மாதிரி செயற்கை நுண்ணறிவு நகல் படங்களை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்கள். உச்சரிப்பிலும் சரி, உரிமைக்குரல் எழுப்புவதிலும் சரி, நுட்பமாக நோக்கினால் கிழக்கு, மேற்கு போட்டி இருக்கத்தான் செய்கிறது.

ஹாலிவுட்டில் பிக்சர் ஸ்டுடியோஸ் போன்ற பல அசைவுப்பட நிறுவனங்கள் உள்ளன. கார்ஸ் அசைவுப்படத்திற்காக அந்தக் கதை நடக்கும் இடத்துக்குச் சென்று சாலையோரத்தில் இருக்கும் கற்களைப் பொறுக்கி வந்து படங்களை உருவாக்கியதாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு நுட்பமாக பார்த்துப் பார்த்துதான் இப்படங்களைத் தயாரிக்கிறார்கள். உலகம் முழுக்க வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள். ஜப்பானைச் சேர்ந்த கிப்லி ஸ்டுடியோவின் படங்களில் நிறங்களைக் கையாளும் விதமும், தனித்துவமான உலகத்தை உருவாக்குவதும் அதிகம் ரசிக்கப்படுகிறது. கிழக்கில் தயாராகும் படங்கள் அந்த நாட்டில் மட்டுமே ரசிக்கப்பட்ட நிலையைக் கடந்து தற்போது இவையும் உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகின்றன.

நம் வீட்டில் உள்ள ஈராயிரக் குழவிகள் கூட மியாசகியின் படங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பங்கள் மேற்குத் திரை உலகின் திரைப்படங்களுக்கு இணையாக கிழக்குத் திரைத்துறையும் போட்டியிட வாய்ப்புகளை உருவாக்குகின்றன. நம் வீட்டு வரவேற்பறையில் எல்லாமே கிடைக்கிறபோது இயல்பாகவே நமக்கு நெருக்கமான ஆசிய நாடுகளின் உள்ளடக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம்.

அண்மையில் கேப்டன் அமெரிக்கா படத்தொடரில் வெளியான நான்காவது படத்தைவிட அதிக வசூல் செய்தது சீன அசைவுப் படமான நீஜா2. கேப்டன் அமெரிக்காவுக்கு சீனாவில்தான் மரணம் என்று செய்தி சமூகவலைத்தளங்களில் பரவும் அளவுக்குப் போட்டி பலமாக இருந்தது. என்ன இருந்தாலும் கிழக்கில் உள்ள மக்கள் தொகையுடன் போட்டியிட மேற்கால் முடியாது. மக்கள் தொகை என்பது விற்பனைச் சந்தையும்கூட. இரு தரப்பில் உள்ள தொழில்நுட்ப பலமும் தற்போது டீப்சீக் போன்ற செயலிகள் வரவால் சமமாக இருப்பதாகவே தோற்றமளிக்கிறது. கிழக்கில் உள்ள பண்பாட்டு விழுமியங்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த இம்மாதிரி நிகழ்வுகளை ரசிகர்கள் பயன்படுத்துகிறார்கள். 

இதனால்தான், என்னமோ ஒரு செயலி வெளியானது, நமக்கென்ன என்று இருக்காமல் அனைவருமே கருத்துப் போரில் கலந்துகொள்கிறார்கள். ஜாக்கிசானின் சாகசங்கள் தொடரில் வரும் நிழல் அரக்கனை நினைவிருக்கிறதா? மீன் குஞ்சு அளவில் இருக்கும் அந்த நிழல் அரக்கன் மனிதரின் நிழலைத் தின்று வளரும். எத்தனை பேரின் நிழலைத் தின்கிறதோ அத்தனை பூதாகரமாக வளர்ந்து நிற்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் செயலிகள் கிட்டத்தட்ட அந்த நிழல் அரக்கனைப் போலத்தான். மனிதர்கள் இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் இச்செயலிகளின் பலம் கூடிக்கொண்டே போகிறது. அச்சம், ஆபத்து என்று சிந்திப்பதைவிட அதிக பலம் பெறும் ஒன்றை முறைப்படுத்துவதும், விதிகளை வகுத்துக் கட்டுக்குள் வைப்பதும் அவசியம் என்ற சிந்தனை முக்கியமானது. எது சரி, எது தவறு என்பதைத் தெளிவுபடுத்தி அரசாங்கங்கள் சட்ட விதிகளை வகுக்க வேண்டியதின் அவசியத்தையே இந்த இணையதளக் கருத்துப் போர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

  • கோகிலா

The post கிப்லி – ஜிப்லி – ஜிபுரி – ஜிப்டி appeared first on செல்லினம்.

  •  

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!

Sellinam-Eid-2025
Sellinam-Eid-2025

ஈகைத் திருநாளைக் கொண்டாடும் உலகளாவிய செல்லினம் செயலியின் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம்! உங்கள் அன்புக்குரியவரோடு இத்திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!

– செல்லினம்

The post ஈகைத் திருநாள் வாழ்த்துகள்! appeared first on செல்லினம்.

  •  

நீல பலூன்கள் விடுவிப்பு

Severance

செவ்ரன்ஸ் தொலைக்காட்சித் தொடரின் முடிவுப் பகுதியை முன்னிட்டு, இச்சொல்லை உள்ளிட்டுத் தேடினால் கூகுள், நீல பலூன்களைப் பறக்கவிடுகிறது. கூகுள் தேடுபொறி அவ்வப்போது ஈஸ்டர் முட்டைகளை வெளியிடுவதை நாம் அறிவோம். எதையோ தேடப்போனால் அது தொடர்புடைய குட்டிக் குட்டி அசைவுப்படம், விளையாட்டு என்று காண்பித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

Severance

சில விளையாட்டுகள் பயனர் இடையே பலத்த வரவேற்பைப் பெறுவதும் உண்டு. ஒரு சில நாள்களே இருக்கும் இவ்வகை ஈஸ்டர் முட்டைகளை மீண்டும் பார்க்க விரும்புவோருக்காகவும் ஒரு தளம் இருக்கிறது. புகழ் வீச்சுடைய தொலைக்காட்சித் தொடர்கள், வலைத்தளத் தொடர்கள், திரைப்படங்கள் பலவற்றுக்கும் கூகுள் ஈஸ்டர் முட்டைகளை வெளியிட்டிருக்கிறது. மார்வல் சினிமாட்டிக் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ் படத்தில் தானோஸ் கதாபாத்திரம் கைச்சொடுக்குப் போட்டதும் பூமியில் பாதி மக்கள் காணாமல் போய்விடுவார்கள். அந்தப் படம் வந்தபோது, தானோஸ் கைக் கவசம் போன்ற ஒரு கூகுள் ஈஸ்டர் முட்டையை வெளியிட்டது கூகுள். அதை அழுத்தினால் நம் திரையில் இருக்கும் தேடுபதில்களில் பாதி காணாமல் போய்விடும்.

இதைப்போலவே தற்போது ஆப்பிள் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான செவ்ரன்ஸ்க்கு ஓர் அசைவுப்படத்தை வெளியிட்டுள்ளது கூகுள். இச்சொல்லை இட்டதும் திரையின் கீழே, கொண்டாட்டத்தைக் குறிப்பிடும் பார்ட்டி உணர்ச்சிக்குறி காண்பிக்கும். அதைத் தொட்டதும் நீல நிறப் பலூன்கள் திரை முழுவதும் பறக்கத் தொடங்கும். இதை நிறுத்தவும் இந்த அனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் இன்னும் இரு வாய்ப்புகளைக் காண்பிக்கும் பொத்தான்களும் திரையில் தோன்றும்.

ஆப்பிள் தொலைக்காட்சியில் இத்தொடர் மக்கள் வரவேற்பைப் பலமாகப் பெற்றுள்ளது. அநேகம் பேர் பார்க்கும் தொடராகவும் இரு்கிறது. இயக்குனரின் முந்தைய பல சாதனைகளை முறியடித்துள்ளது. மற்ற தளங்களிலும் இத்தொடரைப் பார்க்க விரைவில் வாய்பபு ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். இத்தொடரின் இரண்டாவது பாகத்தின் அத்தியாயம் ஒன்றில் மார்க்கிடம் நீல நிறப் பலூன் வழங்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. மற்ற சில அத்தியாயங்களிலும் நீல நிறப் பலூன் ஒரு குறியீடாக வந்து போனது. எனவேதான் இப்படி பலூன்களை வைத்தே இரண்டாவது பாகத்தின் முடிவுப் பகுதியை விளம்பரப்படுத்தியுள்ளனர்.

கூகுளும் இதில் இணைந்து கொண்டுள்ளது தொடரின் விளம்பரத்துக்கு வலு சேர்க்கிறது. செவ்ரன்ஸ் பே என்றால் வேலையை விட்டு அனுப்பப்படும் ஊழியரின் துண்டிப்பு ஊதியம் என்று பொருள். என்னென்னவோ காரணங்களைச் சொல்லி நிறுவனம் ஊதியத்தில் பிடித்தம் செய்யும். வேலையை விட்டுப் போகப்போகும் ஒருவர் விவரத்தைத் தேடிப்பார்க்க கூகுளுக்குத்தான் போவார். செவ்ரன்ஸ் என்று மட்டும் இட்டுத் தேடினால் தனக்கு வேலை போவதை ஏன் கூகுள் பலூன் பறக்கவிட்டுக் கொண்டாட வேண்டும் எனக் குழம்பக்கூடும். முதல் பக்கம் மட்டுமின்றி அடுத்த பல பக்கங்களுக்கும் இந்தத் தொடர் பற்றிய தகல்வகளே இருக்கும். அந்தளவுக்கு இச்சொல்லைப் பயன்படுத்தித் தேடியுள்ளனர் என்பதே இதன் பொருள். அதை அங்கீகரிக்கும் விதமாகத்தான் கூகுள் பலூன்களை விடுவிக்கிறது.

The post நீல பலூன்கள் விடுவிப்பு appeared first on செல்லினம்.

  •  

மின்னேற்றியில் வேகம் வேண்டாம்

fast charging

விரைவான மின்கலமேற்றித் தொழில்நுட்பம் (fast charging) கடந்த பத்தாண்டுகளாக அதிவேக  வளர்ச்சி அடைந்துள்ளது. மேற்கத்திய நிறுவனங்களை விட சீன நிறுவன மின்சேமிப்புக் கலன்கள் இதில் முன்னணியில் உள்ளன. வாவேயின் சூப்பர் சார்ஜ் (SuperCharge) தொடங்கி, ஹைப்பர் சார்ஜ் (HyperCharge) வரையிலான தொழில்நுட்பங்கள் திறன்கருவிகளின் செயல்திறனை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. எனினும், இது மின்கலத்தில் ஆயுளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது

fast charging

அதிக மின்னோட்டம் உடனடி மின்னேற்றத்தை வழங்கினாலும், திறன்பேசியின் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. அதிக வெப்பம் மற்றும் மின்னழுத்தக் கட்டுப்பாடு மின்கலத்தின் ஆயுளை குறைக்கலாம். 

மின்கலத்தின் ஆயுள் பற்றிய கவலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, ஆப்பிள், கூகுள், போன்ற திறன்பேசி நிறுவனங்கள், இரவு நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மின்னேற்றம் (optimized overnight charging), மற்றும் மின்கலன் ஆரோக்கியக் கணிப்புகள் (battery health monitoring) ஆகிய அம்சங்களை வழங்கத் தொடங்கியுள்ளன. சில நிறுவனங்கள், வேகமான மின்னேற்றத்தைப் பயனர் விரும்பினால் மட்டுமே செயல்படுத்துகின்றன.

தொலைப்பேசி மின்னேற்றத்தின் போது வெப்பநிலை 40°C வரை இருப்பது  உகந்தது, அல்லது 35°C குறைவாக இருப்பது சிறந்தது. அதிக சக்தியுடன் குறைந்த வெப்பநிலையில் மின்னேற்றமாகும் திறன்பேசியாக ஒன்பிளஸ்13 இருக்கிறது. நீடித்த செயல் திறனும், வேகமான மின்னேற்றி திறனும் கொண்ட திறன்பேசியாக சாம்சங்  கலக்சி  எஸ் 25 அல்ட்ரா சுட்டப்படுகிறது. சமநிலையான மின்னேற்றும் திறனுடைய மின்கலம் கொண்ட ஆரோக்கியமான திறன்பேசியாக ஒப்போ  பைன்டு  ஏக்ஸ் 8 ப்ரோ உள்ளது. ஸியோமி  15 அல்ட்ரா மற்றும் ஹானர்  மாஜிக்  7 ப்ரோ போன்றவை 40°C வரை சூடாகியதால், மினகலத்தின் ஆயுட்காலம் குறைவாகலாம். கூகிள் பிக்சல் 9 ப்ரோ மற்றும் எக்ஸ் எல்  (XL) அதிக வெப்பத்துடன் செயல்பட்டு, மிகவும் மெதுவாக மின்னேற்றம் ஆகின்றன.

எனினும், வெப்பநிலை மட்டுமே மின்கலத்தின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்காது. மின்கலத்தின் உயர் மின்னோட்டம் கையாளும் திறனை குறிக்கும் அளவீடான சி- மதிப்பீடு (C-rating) மற்றும் சார்ஜிங் சுற்று கட்டமைப்பு (USB Charging Circuitry), ஆகிய காரணிகளையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. சில நிறுவனங்கள், சிலிக்கான் – கார்பன்  லித்தியம் -அயன்  மின்கலன்களை (silicon-carbon Li-ion batteries) பயன்படுத்துகின்றன. இது சிறப்பான வெப்பக் கட்டுப்பாட்டைக் கொடுக்கும்.

மின்கலத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பல நிறுவனங்கள்,   80% மின்னேற்ற வரம்பு  வைத்துள்ளன. அதோடு பயனர் கட்டுப்படுத்தும் வேகமான மின்னேற்றி அம்சத்தையும் வழங்குகின்றன.

  • நவீனா

The post மின்னேற்றியில் வேகம் வேண்டாம் appeared first on செல்லினம்.

  •