Reading view

வனம் - சிறுகதை

 

எனது சிங்கப்பூர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு கதை தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன். ஃபிப்ரவரி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளிவந்த முதல் கதை/ நாவல்  பகுதி.

Image generated by Grok AI 




“அரிபுரத்தில்  இப்படியான ஒரு இடத்தை நீ  பார்த்திருக்கவே மாட்டாய்” வூ தூண்டிலை இறுகப் பற்றியபடி சொன்னார். இது அவர் அடிக்கடி சொல்வது தான்.  நாங்கள் இருவரும் யின் யாங் ஏரியில் மீன்பிடித் துறையில் அமர்ந்திருந்தோம். விடுவிடுவென மொய்க்கும்  பொன்னிற கொய் மீன்களுக்குள் எவ்வித ஒழுங்கும் இல்லை. கருப்பு நிற  கொழுத்த கெளுத்தி மீன்கள் நிதானமாக, வரிசையாக நீந்தின. தூண்டில் இரை அவற்றை பரபரக்கச் செய்யவில்லை. வூ பொறுமையாக்க் காத்திருந்தார். “எப்படியும் சிக்குவாய்.. உன் கட்டுப்பாடு  எவ்வளவு நேரம் என்பதை பார்க்கத்தானே போகிறோம்” என்றபடி ஹைனிகன் பியரை ஒரு மிடறு அருந்தினார். வெயிலும் இல்லாத மழைக்கு முந்தைய புழுக்கமும் இல்லாத மாலைப் பொழுது. இங்கே அது மிகவும் அரிது என்பதை என் குறுகியகால வாசத்தில் உணர்ந்து கொண்டேன். அத்தகைய காலநிலை என்றால் வூ பீர் புட்டிகளுடன் என் வீட்டு கதவை தட்டி விடுவார். “நாளை நம் வனத்தில் வேட்டை” என்று நேற்றே சொல்லிவிட்டுத்தான் சென்றார். “இப்போது நாம் நம் வனத்திற்கு செல்வோம் வா” என்று சொன்னபடி மாலை வீட்டிற்கு வந்தார்.  ஏரியையொட்டிய மரம் செடி செறிவுதான் அவருக்கு வனம். நான் அமைதியாக பார்த்ததைக் கவனித்தவர்  “தெரியும் நீ இதை வனம் என ஒப்புக்கொள்ளமாட்டாய். ஆனாலும் .. “

“மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். வனத்தை எவரும் வளர்க்க முடியாது. இது  தோட்டம்”. 

“சரி சரி..ஏதோ ஒன்று. எனக்கு வனம் உனக்கு தோட்டம்.” பொதுவாக நீர்த்துறையில் போடப்பட்ட பெஞ்சுகளில் அமர்ந்தபடியே நீர்வீழ்ச்சியை பார்த்தபடி எங்கள்  மாலை பொழுதுகள் கழியும். பேசுவதற்கு ஏதுமற்ற போது ஆளுக்கொரு புத்தகத்துடன் அமர்ந்து விடுவதும் உண்டு.  


  வூ மிங் லி, அதுதான் வில்லியமின் சீனப் பெயர். ஆனால் அவர் எனக்கு வில்லியமாகவே அறிமுகம் ஆனார். வூ என்கிற வில்லியம் எனக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல்தளத்தில் வசிப்பவர். நான் டி ஷர்ட் ஜீன்ஸ் சகிதம் வகுப்பிற்குப் புறப்படும் போது அவர் பளபளவென தேய்த்த தோல் சப்பாத்துக்கள் கோட்டு சூட்டு சகிதம் தனது சைக்கிளில் கல்லூரிக்குக் கிளம்புவார். முதல் முறை அவரை அப்படிப் பார்த்த போது  வினோதமாக உணர்ந்தேன். சிநேகத்துடன் புன்னகைத்தார். மாலை நடைக்கு எங்கள் குடியிருப்புக்கு எதிரேயுள்ள செயற்கை ஏரியை சுற்றி நடக்கும் போது காதில் ஹெட்போன் மாட்டியபடி கையில்லா பனியனை போட்டுக்கொண்டு என்னைக் கடந்து ஓடுவார். ஏரிக்கு நடுவே உள்ள மரப் பாலத்தில் நின்று கீழே செல்லும் மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.   சூரியன் மறைந்து செந்நிற கீற்றாக மறையும் வரை வானத்தை வெறித்திருப்பேன். அடுத்த வகுப்புக்கான திட்டம் மனதிற்குள் உருப்பெறும். அப்படியான ஒரு மாலைப் பொழுதில் என்னருகே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். “வில்லியம் லி, நான் வரலாற்றுப் பேராசிரியர்.. நீங்கள் தமிழ் எழுத்தாளர் என ஜான் சொன்னார். தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள அபாரமான மொழி” என்ற போது சற்றுப் பெருமிதமாக உணர்ந்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். நீரில் நீந்திய நட்சத்திர ஆமையை அவர்தான் எனக்கு முதலில் சுட்டிக் காண்பித்தார். அதை பார்த்ததும் வீடு குறித்த வினோத ஏக்கம் என்னுள் எழுந்தது. பிள்ளைகளின் அன்மையை மனம் விழைந்தது.  “இங்கே நீர் நாய்கள் கூட வரும். அதிர்ஷ்டம் இருந்தால் காண்பீர்கள். கோவிட் காலத்தில்தான் அரிபுரத்தில் இத்தனை நீர்நாய்கள் உள்ளதைக் கவனித்தேன். அரசு கணக்கெடுத்து வைத்திருந்ததை விட அதிகம் என ஸ்ட்ரெயிட் டைம்ஸில் செய்தி வந்திருந்தது ” நீர்நாயின் படம் வரைந்து அவற்றுக்கு உணவிடக் கூடாது எனும் எச்சரிக்கைப் பதாகைகள் ஏரியை ஒட்டிய நடைபாதை பகுதியில் ஆங்காங்கு தென்பட்டன. திடீரென்று சைரன் ஒலித்தது. “அது அப்படித்தான், இடிக்கான எச்சரிக்கை. ஆனால் எதுவும் ஆகாது” என்றார் நிதானமாக. 


ஏரி முடியுமிடத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி. அதைக் காண்பதற்கென்று ஒரு பாலம் உண்டு. நான் அங்குதான் பெரும்பாலான மாலைப் பொழுதுகளைக் கழிப்பேன். நீர்வீழ்ச்சி தினமும் மாலைகளில் மட்டும் தான் விழும். யின் யாங் பல்கலைக்கழகக் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு ஏரியாகவும் நீர்வீழ்ச்சியாகவும் பராமரிக்கப்படுகிறது. எரியும் நீர் வீழ்ச்சியும் கூட கழிவு நீர் மறு சுழற்சியின்  ஒரு பகுதி தான். வில்லியமை நாள்தோறும் காண்பேன். ஒருநாள் மாலை நான் எங்கேனும் வெளியே சென்றாலும் இரவு எத்தனை மணி ஆனாலும் கதவைத் தட்டி “இங்கே உனக்கொரு பெண் கிடைத்துவிட்டால் போல” என்று கேலி செய்யவில்லை என்றால் அவருக்கு  உறக்கம் வராது. முதல் மாதம் முடிவதற்குள்ளேயே வில்லியம் எனக்கு நல்ல நண்பராக ஆனார். எங்கள் முதல் பியர் சந்திப்பின்போது தான் தனது சீனப் பெயரைக் கூறினார். அப்படித் தன்னை அவர் வெளிப்படுத்துவது மிகவும் அரிது என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.  


 “இங்கே சீனர்கள் பலருக்கும்  இரண்டு பெயர்கள். ஒன்று சீனப் பெயர்” என நெற்றிச் சுருக்கங்கள் தெரிய சிரித்தார்.  “எனக்கு என்ன வயதிருக்கும் என்று எண்ணுகிறாய்?” என்றார் புன்னகைத்தபடி. நான் அரிபுரத்தை வந்தடைந்த புதிதில் எப்போதும் எனக்கு இந்தக் குழப்பம் இருக்கும். சீனர்கள், அதிலும் பெண்களின் வயதை என்னால் ஊகிக்க முடிந்ததே இல்லை. நாற்பது ஐம்பது வயதுடையவர்கள் கூட இருபது முப்பது வயது மதிக்கத்தக்கவர்கள் போலத் தோன்றுவார்கள். என் கண் பழகவில்லை என்பதால் ஏற்பட்ட குழப்பமாகவும் இருக்கலாம். அல்லது அரிபுரத்துப் பெண்கள் உடலைப் பேணும் விதம் காரணமாகவும் இருக்கலாம். காலப்போக்கில் அவர்கள் அணியும் உடைகளை வைத்தும் பேச்சுக்களை வைத்தும் ஓரளவு வயதை ஊகிக்க முடிந்தது. கல்லூரி செல்லும் மகள், கண் ஓரம் தெரியும் சுருக்கங்கள், வூ வின் மனைவி அமண்டாவின் தோற்றம் இவற்றையெல்லாம் கொண்டு  வூவிற்கு என் கணிப்பில் எப்படியும் 55 வயதிருக்கும். ஆனாலும் அவர் கேட்க விரும்பும் பதிலைச் சொன்னேன். “நாற்பத்தைந்து இருக்குமா?” கண்களில் ஒளி மின்னச் சிரித்தார். “எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்கு அறுபது” என்றார் பெருமிதம் பொங்க.  என் புன்னகை அவருக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். “நீ பொய் தானே சொன்னாய்?” என்றார். “எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரின் மேற்கோள் இது. கதைகள் தான் என்றாலும் அவை எத்தனை அற்புதமானவை!” என்றதும் இருவரும் சிரித்தோம். “வா நாம் நம் வனத்தைச் சுற்றி நடந்துவிட்டு வருவோம்” என அழைத்துச் சென்றார். இருவருமாக யின் யாங் ஏரியின் சுற்றுவட்டப் பாதையில் நடந்து வந்தோம். இரவு விளக்கு மஞ்சள் நிறத்தில் பழைய கால அரிக்கேன் விளக்கு போல அழுது வடிந்தது. நெருங்கி வரும் தோறும் ஒளி கூடியது. ஏதோ ஒரு இயந்திரச் சத்தம் கேட்டது.  “அது ஒன்றுமில்லை. மாதம் இருமுறை சாலைக்கு நீளும் கிளைகளை வெட்டி விடுவார்கள். ஒரு காலத்தில் இங்கே மலைப்பாம்புகளைப் பார்த்திருக்கிறேன் தெரியுமா?” “பல்கலைக்கழகத்திலா?” “ஆம் இங்குதான். இது ஒரு மழைக்காடு தானே. இப்போதும் சில உடும்புகள் மேற்குப் பக்கம் திரியும். சூழலியல் துறை கணக்குப்படி  மொத்தம் பதிமூன்று உடும்புகள் நம் வளாகத்தில் உள்ளன” “அவற்றுக்கு பல்கலைக்கழக அடையாள அட்டையும் பயண அட்டையும்  உண்டா?”   என்றதும் சிரித்து பியர் புரைக்கேறி துப்பினார். அன்றிரவு நெடுநேரம் மரக்கிளைகள் அறுபடும் மின் ரம்ப ஓசை என் காதிற்குள் கேட்டபடி இருந்தது. படுக்கையில் புரண்டுக்கொண்டே இருந்தேன். வரிசை மாறாமல் நடப்பட்ட தைல மரங்கள் ஊடாக ஊரில் நான் சைக்கிளில் பள்ளிக்கு சென்றது நினைவில் எழுந்தது. தைல மர தோப்பு என சொல்வதில்லை. தைல காடுதான். அதன் சீர்மை அச்சுறுத்தும். அங்கே வேறு செடிகளை காணவே முடியாது. ஏதேதோ நினைவுகள். மனதை உடல் வென்று நான் உறங்கும் போது விடிகாலை நான்கு மணி. ஒன்பது மணிக்கு மேல் எழுந்தேன். மதியம் தான் என் வகுப்பு என்பதால் எனக்கு எந்தப் பரபரப்பும் இல்லை. வாசல் கதவில் வூ சிறிய ஒட்டும் தாளில் குறிப்பை ஒட்டிவிட்டுச் சென்றிருந்தார். “உனக்கு மீன் பிடிக்க வருமா? அடுத்த வாரத்தில் நம் ஏரியில் மீன் பிடிக்க வேண்டும். வா” என்று எழுதி இருந்தது. மூக்கு அடைத்துக் கொண்டிருந்தது. காற்றில் ஈரப்பதம் கூடி அன்று மழை வரும் என்று அதற்குப் பொருள். ஏரி அசைவின்றி ஆகாயத்தின் துல்லிய நீலத்தில் வெளிப்பட்ட வெண்பஞ்சு மேகங்களையும் சுற்றியிருந்த பசுமைகளையும் பிரதிபலித்து கொண்டிருந்தது. சாலையோரக் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு வெளிச்சம் கண்ணைக் கூசியது. அரிபுரத்து கட்டாய ராணுவ சேவை இளைஞர்களின் தலை போல என்று தோன்றியதும், இந்த உவமையை மனதில் குறித்து கொண்டேன்.  புற்கள் ஒரே சீராய் வெட்டப்பட்டிருந்தன.  ஏரியிலிருந்து கீழே இறங்கினால் வெவ்வேறு நாட்டுத் தாவர வகைகள் உள்ள ஃபூனான் தோட்டம் வரும். மைய மண்டபத்தில் சென்று அமர்ந்தேன். மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி என்னை கடந்து சென்றதை பார்த்ததும் மனம் பெரும் உவகை அடைந்தது. வில்லியமிடம் பல்கலைக்கழகத்தில் பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுத்திருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். அவர் பதில் என்னவாக இருக்கும் என்பதையும் அறிவேன். அதற்கான ஆராய்ச்சியில் உள்ளோம் என்பார். இத்தனை மரச் செறிவுக்கு நான் குரங்குகளையோ பறவைகளையோ பார்க்கவில்லை என்பது சட்டென்று உதித்தது. 


ஏதோ ஒன்று உந்த கைப்பேசியில் ஒரு கவிதை எழுதினேன்.



முறையீடு 


நேற்று 

இருந்த முன்னூற்றி முப்பத்தி நான்கு 

பட்டாம் பூச்சிகளில் 

முப்பதைக் காணவில்லை 

புதிதாய் பூத்த முப்பது மலர்களில் 

ஒன்று கூட 

மஞ்சளாய் இல்லை 

என்பதுதான் 

 முறையீடு 


கவிதையை அப்போதே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வில்லியமிற்கு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.  மழை பிடிப்பதற்குள் தரைத்தளத்தில் இருக்கும் என் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டேன். பெரும் இடியோசைகளுடன் ஏரியின் மீது மழை ஆவேசமாக இறங்கியது. கண்ணாடிச் சாளரத்தின் அருகே அமர்ந்து அம்புகள் போல நீரில் பாய்ந்திறங்கிய மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 


மழைக்கு பின் சாலையில் மழையின் சுவடுகள் மறைந்துவிட்டன. மாலை மீண்டும் எல்லாம் இயல்பிற்கு திரும்பியிருந்தது. காலையில் எழுதி ஒட்டிய குறிப்பை வாசித்தாயா என்று மாலை சந்திக்கும்போது கேட்டார். நான் மீன் பிடித்ததில்லை. எனினும் வருகிறேன் என்று சொல்லி வைத்தேன். “இந்த  வனம் உனக்கொரு கவிதையைத் தந்திருக்கிறது போலும். வனம் படைப்பூக்கத்தை பெருக்கும் என்பார்கள்.”   “அரிபுரத்தின் இலக்கியத்தின் சிக்கல் என்னவென்று தெரியாமல் இருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன்.” 

“என்ன?” 

“தோட்டம் தான் உங்கள் வனம். ஜாடிக்கு ஏற்ற மூடி தானே இருக்க முடியும் ”  என்றதும் சிரித்தார். 

“நீ இதை விடவே மாட்டாய்.”


 அன்றைய நாளுக்கு பிறகு  பார்க்கும்போதெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். சனிக்கிழமை எந்த வேலையும் வைத்துக் கொள்ளாதே. அன்று உனக்கு வகுப்பு இல்லைதானே? எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். எனக்கு அவரது ஆர்வம் மிகவும் வினோதமாக இருந்தது. வருகிறேன் என ஒப்புக் கொண்டாலும்  நாளெல்லாம் அவரருகே அரிபுரத்து வெயிலில் அமர்ந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வகுப்பில் மாணவர்கள் எழுதிய கதைகளை வாசித்து அவற்றுக்கு கருத்துரை இடவேண்டும். ஏரிக்கரையில் அமர்ந்து அதைச் செய்ய வேண்டியது தான் என்று முடிவு செய்து கொண்டேன்.   


சனிக்கிழமை காலையிலேயே வாயில் மணியின் ஓசை கேட்டு விழித்து கொண்டேன். “இன்று காலையுணவு ஏதாவது லேசாக எடுத்துக் கொள். மதியம் நாம் பிடித்த மீனை கொண்டு சமைத்து விருந்து உண்ணலாம். அமண்டாவிடம் சொல்லிவிட்டேன். அவள் சீன முறையில் மீன் சமைத்து தருவதை நீ சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  ஒருமணி நேரத்தில் தயாராகி விடு” என்றார். நான் இன்று அவருடன் மீன்பிடித் துறைக்கு வரும்போது இன்னும் பல முகங்கள் தூண்டிலுடன் ஆங்காங்கு அமர்ந்திருந்ததைக் கண்டேன். “நாங்கள் எல்லோரும் பல்கலைக்கழக தூண்டில் இடுவோர் சங்க உறுப்பினர்கள்…இன்று 76  மீன்கள் வரை நாங்கள் பிடிக்கலாம். எடை மிகுந்த மீன்களைப் பிடிப்பதுதான் இங்கே முக்கியம், கல்லூரிப் பையன்கள் அதிக எண்ணிக்கையில் பிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் வலுவான போராடும் ஆற்றல் உடைய மீன்களைப் பிடிப்பது தான் உண்மையான வேட்டை. சென்ற முறை நான் பிடித்த மீன் பன்னிரண்டு கிலோ.” “அது என்ன 76 மீன்கள்? ஏதும் புனித எண்ணா?” “புனிதமும் இல்லை ஒன்றும் இல்லை. கடந்த கணக்கெடுப்பில் இருந்து அதிகரித்திருக்கும் மீன்களின் தோராயமான எண்ணிக்கை” விழி விரிய நோக்கினேன் “இங்குள்ள மீன்களுக்கு கணக்கா?” “ஆம் தோராயமான கணக்கு என்று சொன்னேனே. அதை துல்லியப்படுத்த ஒவ்வொரு மீனுக்குள்ளும் ஏதேனும் மின்னணு சிப்பைப் பொருத்தலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். நூறு நாட்களுக்கு மேலான மீன்கள் மேலிருந்து சிப்புகள் ஒளிவிடும். பிடிப்பது சுலபம். நம் மாணவர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் பெருமிதம் போங்க. “எனக்கொரு யோசனை தோன்றுகிறது”

 “சொல்” 

“நீங்கள் ஏன் நூறு நாட்களில் வெடிக்கும் ஒரு சிறிய மின்னணு வெடி குண்டை சிப்புடன் சேர்த்து பொருத்த கூடாது? தானாக மீன்கள் வெடித்துச் சிதறி இறந்து விடும்.”

 “நீ சொல்வதை புரிந்து கொள்கிறேன். உன்னால் நம்ப முடியவில்லை இல்லையா? இங்கே கொசுக்கள் இல்லை என்பதைக் கவனித்தாயா?” “ஆம். கவனித்தேன்.” 

“இது ஒரு மழைக்காடு என்பதை நினைவில் கொள். மலேரியாவால் இங்கே செத்தவர்கள் ஏராளம்.” “ஒவ்வொரு கொசுவிற்குள்ளும் சிப் வைத்து 10 நாட்களில் அவற்றை வெடிக்க வைத்தோம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்” வாய் விட்டு சிரித்தார். 

“நான் எதுவும் சொல்லவில்லை. மரபணு அறிவியலைக் கொண்டு அரிபுரத்தில் எப்படிக் கொசுவை ஒழித்தோம் என்பதைப் படித்துப் பார்த்து நீயே தெரிந்து கொள்.” என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கரங்கள் இறுகின. தூண்டில் பயங்கரமாக இழுபட்டது. “இதோ ஒருவன் சிக்கிவிட்டான்..” பெரிய மீன் சிக்கிவிட்டது என்பதை தூண்டில் இழுபடும் வேகத்தை கொண்டு கணிக்க முடிந்தது. அத்தனை ஆற்றலையும் கொண்டு தூண்டிலை இழுத்துப் பிடித்தார். “என்னைக் கொஞ்சம் தாங்கிக் கொள்” என்றார். “வில்லியமுக்கு ஏதோ ஒன்று சிக்கிவிட்டது. கமான் வில்” என எதிர் சாரியில் குரல்கள் எழுந்தன. நான் வேட்டைக்காரனைக் கண்டதில்லை. ஆனால் கற்காலத்தில் வேட்டையாடி தனது இரையை வென்றடைந்த பிறகு அவன் முகம் என்னவாக இருந்திருக்கும் என்பதை வூ முகத்தில் நான் கண்டுகொண்டேன். 


இருபது கிலோ. நம் பல்கலைக்கழக சாதனை என்று நாளெல்லாம் அரற்றியபடி இருந்தார். “மான், சிறுத்தை, புலி, யானை என தலைகளை பழையகால வேட்டைக்காரர்கள் மாட்டி வைப்பார்கள். அப்படி இந்த மீன் மண்டையை பாடம் செய்து மாட்டி வைக்க வழியில்லாமல் போனதே” என்று கண் சிமிட்டினார். விரிந்த உள்ளங்கையை விட பெரிதாக இருந்த மீன் மண்டையில் திறந்திருந்த விழியை நோக்கிக் கொண்டிருந்தேன். அமண்டா அபாரமாக சமைத்திருந்தார். எங்கள் வளாகத்தில் எல்லோருக்கும் அமண்டா சமைத்த மீனை  பகிர்ந்து  கொடுத்துவிட்டு வந்தார்  வில்லியம். 


இரவு  “வா நம் வனத்திற்குச் செல்வோம்” என்று  ஹைனிக்கனோடு வந்தார்.  இரவுவொளியின் மஞ்சள் வெளிச்சத்தில் அவர் முகத்தில் மிளிர்ந்த மிடுக்கைப் பார்த்தேன். சில்வண்டுகள் கூட இல்லாத நிசப்தம் இரவை நிறைத்தது. ஏரியைக் கடந்து  ஃபூனான் தோட்ட மண்டபத்திற்கு சென்று அமர்ந்து கொண்டோம். அங்கே இரவு விளக்கு கிடையாது.  “அரிபுரத்தில் எங்கும் இப்படியான ஒரு இடத்தை நீ பார்த்திருக்கவே மாட்டாய்” என்றார். “உலகத்திலேயே நான் பார்த்ததில்லை..” என்றேன் எரிச்சலுடன். அவருக்கு தமிழ்நாட்டு கார வகைகள் என்றால் பிடிக்கும். “கொண்டு வந்திருக்கிறாயா?” என்றதும் அடையார் ஆனந்தபவனின் மிளகு தட்டையை நீட்டினேன். “உனக்கு தெரியுமா? மனித குலத்தின் இத்தனை நூற்றாண்டு போராட்டம் எதற்கென்று?” “பாதுகாப்பான வாழ்விற்கு” “சரி தான். அதற்கு அவன் இயற்கையை வெல்ல வேண்டும். இயற்கை என்பது என்ன. தன்னால் கட்டுப்படுத்த முடியாத பிரம்மாண்டமான தற்செயல். இந்த நிச்சயமற்ற தன்மையை கணிப்பதற்கு தான் நாம் இத்தனை ஆண்டுகளாக போராடி வருகிறோம். கணிப்பது பத்தாது. அதை கட்டுப்படுத்தவும் வேண்டும். வருங்கால மனித நாகரீகத்திற்கு அரிபுரம் அவ்வகையில் ஒரு வழிகாட்டி. முன்னோடி..” என்றார். நான் மவுனமாக இருந்தேன். “காலையில் நீ சொன்னதை யோசித்து பார்த்தேன்” “எதைப்பற்றி?” “கணக்குகள் மீது இருக்கும் தீரா விழைவை பற்றி..அது தான் அரிபுரத்தை பிற தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து தனித்து காட்டுகிறதோ?” “புரியவில்லை..” “கணக்கு என்பது என்ன, நேர்த்தி. ஆனால் இப்படி சொல்வதால் நீ தப்பாக எடுத்துக் கொள்ள கூடாது…” என்று நிறுத்தினார். “சொல்லுங்கள்” என்றேன். ஒரு மிடறு பியரை அருந்திய பிறகு  தொடர்ந்தார் “உங்கள் தேசத்தவர்களுக்கு பொதுவாக ஒழுங்கு மீது எந்த நம்பிக்கையும் இல்லை. அது தான் உன்னை சீண்டுகிறதோ என்று தோன்றுகிறது” என்றார். கோபம் தலைக்கு ஏறியது. “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  உடனே எழுந்து சென்றேன். அவர் என்னை நிறுத்த முயன்றார். ஆனால் வார்த்தை எழவில்லை. பின் தொடர்ந்து வருகிறாரா என்று கவனித்தேன். வரவில்லை. குடியிருப்பிற்குள் விடுவிடுவென்று சென்று கதவை அடைத்துக் கொண்டேன். தொலைக்காட்சியில் டோரா காட்டிற்குள் பயணித்து கொண்டிருந்தாள். இதோ இந்த காடு தான் உங்கள் காடு. கார்ட்டூன் காடு என்று கத்த வேண்டும் போலிருந்தது. உடலெல்லாம் அவமானத்தால் எரிந்தது. அமண்டா அழைத்தார். “வில் உன்னோடு இருக்கிறாரா? அவர் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடைய கைபேசியை இங்கேயே விட்டு சென்றுள்ளார் என்பதால் உனக்கு அழைக்கிறேன்” என்றார். நான் அங்கிருந்து வந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகி இருக்கும். இவ்வளவு நேரமாக அவர் வரவில்லை என்பது எனக்கு சரியாக படவில்லை. அமண்டாவிடம் “வர சொல்கிறேன்” என சொல்லிவிட்டு கைவிளக்கை எடுத்துக்கொண்டு ஃபூனான் தோட்டத்தை நோக்கி நடந்தேன். வானில் நட்சத்திரங்கள் ஏதுமின்றி இருண்டு இருந்தது. அவர் சொன்னதில் அப்படி என்ன தவறு? ஒழுங்கீனத்துடனான சமரசம் தானே சராசரி இந்தியனின் வாழ்க்கை. மண்டபத்தில் அவரது உருவத்தை கண்டதும் மனம் அமைதி அடைந்தது.   



 அவர் அதே மண்டபத்திலேயே அமர்ந்திருந்தார். மூன்றாவது பியர் டின் அவர் கையில் இருந்தது. “அமண்டா உங்களை வீட்டிற்கு வர சொன்னார்” என்று ஒருவிதமான கறாரான குரலில் சொன்னேன். “இங்கே உட்கார். உனக்கு இன்னும் கோபம் தணியவில்லை.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நீ புரிந்துகொள்வாய் என்று..” என அவர் பேசி முடிக்கும் முன்னரே எங்கள் மண்டபத்திற்கு பின் இலைகளின் சரசரப்பை கேட்டோம். “காதல் ஜோடிகளாக இருப்பார்கள்..பாவம்” என்று சொல்லிவிட்டு பேச்சை தொடர முயன்றார். சைகையால் அவரை அமைதிப்படுத்தினேன். சரசரப்பு எங்களை நெருங்குவதை இருவருமே கேட்டோம். என் பரபரப்பை பார்த்ததும் அவருக்கு சிரிப்பாக வந்தது. “இங்கே என்ன புலியா வரப்போகிறது? ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு” என்றபடி என்னிடமிருந்த கைவிளக்கை வாங்கி  ஓசை வந்த திசையை நோக்கி அடித்தார்.  பிரம்மாண்டமான சர்ப்பம் எங்கள் முன் படமெடுத்து நின்றது. அதன் தலை என் இரு உள்ளங்கை அகலம். விளக்கொளியில் அதன் மஞ்சள் நிறம் பொன் போல மின்னியது.  “ஓ ஷிட். ..ஓ ஷிட்” என பதறி எழுந்தார். “இது எங்கே…இங்கே” என்று குழம்பினார். அதன் சீரான சீற்றத்தை கேட்டதும் இதயம் தாறுமாறாக படபடத்தது. அவர் வலக்கரத்தை இறுக பற்றினேன். பத்தடி தூரத்தில் எங்களை நோக்கி நின்றது சர்ப்பம். அத்தனை வசீகரம். சவுந்தர்யம். ஆம் அதுதான் சரியான சொல். சவுந்தர்யம். கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு ஓசை கேட்டது. விடுக்கென்று தவம் கலைந்தது போல  திரும்பி புதர் சரசரப்புக்குள் மறைந்தது.  காலியான  ஹைனிக்கென் புட்டி சற்று தொலைவில் உருண்டு கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் அங்கிருந்து திரும்பி பார்க்காமல் ஓடி வந்தோம். எரிக்கரையை வந்தடையும் வரை அதன் சீறல் ஒலி எங்களை பின்தொடர்வது போலொரு பிரமை. இதய துடிப்பு சீரடைவதற்கு நெடுநேரம் ஆனது. எனது குடியிருப்புக்குள் நுழைந்து குளிர்நீர் அருந்திய பிறகு தான் சற்று அமைதியானோம். பிராணிகள் வாரியம்  அவசர எண்ணை தேடி எடுத்து அதில் புகாரை பதிவு செய்தார். நிமிடத்திற்கு ஒரு முறை “ஷிட்” என்று அரற்றிக்கொண்டே தலையை இல்லை இல்லையென்று  அசைத்தபடி இருந்தார். “அது என்ன என்று தெரியுமா?” என்று தனது கைபேசியில் ஒரு படத்தை காட்டினார். மலேயா ராஜநாகம். “இன்று என்னால் உறங்க முடியாது போலிருக்கிறது”. அமண்டா அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு சென்றார். எனக்கு புரியாத மொழியில் அவர்கள் ஏதோ பேசியபடி மாடிக்கு சென்றார்கள். அவர் கண்ட காட்சியை பரவசத்துடன் விவரித்து கொண்டிருக்க வேண்டும். இரவு கண் மூடினால் அந்த நாகம் கண் முன் தோன்றியது. ஆனால் ஏனோ அது என்னை அச்சுறுத்தவில்லை. அதன் இமையா விழியின் கீழ் நெடுநாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்கினேன். ‘விடமேறிய கனவு’ எனும் சொற்றொடர் மனதில் உதித்தது. குணா  கவியழகனின் நாவலின் பெயர். படைப்பாளிகள் காண்பவை எல்லாம் விடமேறிய கனவுதான். விடத்தின் இனிமையை தான் அவன் பகிர்ந்தளிக்கிறான். 


Image generated by Chat Gpt 


காலை ஃபூனான் தோட்டம் மூடப்பட்டது. சீருடை அணிந்த இருவரை பார்த்தேன். இன்னும் சிலர் கவச உடைகள் அணிந்து நீண்ட கழிகளுடன் உள்ளே நடமாடிக்கொண்டிருந்தார்கள்.   காலை தளர்வான காற்சட்டையும் கைவைக்காத பனியனுடன் வாசலில் வந்து நின்றார் வூ. மிகவும் சோர்வாக காணப்பட்டார். “பாம்பை பிடிக்கும் வரை யாருக்கும் அங்கே அனுமதியில்லை” என்றார். அவரை பார்த்ததும் நாலைந்து பேர் என்ன நடந்தது என்று விசாரித்து அவரை சூழ்ந்து கொண்டார்கள்.  அவர் ஆர்வத்துடன் எல்லோரிடமும் பார்த்ததை விவரித்து கொண்டு இருந்தார். நான் வகுப்புக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதால் உள்ளே சென்றுவிட்டேன். வகுப்புக்கு கிளம்பும்போது ஏரிக்கரையில் மீன்கள் அசையும் நீரை நோக்கியபடி தனித்து அமர்ந்திருந்தவரிடம் சென்றேன். “இனி இதை நீங்கள் வனம் என குறிப்பிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.” சன்னமான குரலில்   “ஆனால் இனி நான் அப்படி சொல்லமாட்டேன்” என்றார் நீரை வெறித்தபடி .


  •  

அம்புப் படுக்கை - சரத்குமார் வாசிப்பு

எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’ வெளியாகி ஏறத்தாழ ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அவற்றுக்கு இப்போதும் வாசிப்பு கடிதங்கள் வருவது ஒருபக்கம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் அதற்கு பிந்தைய தொகுப்பிற்கு நாவலுக்கும் அதே அளவு கவனம் கிடைக்கவில்லை என்பது எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். சரத்குமார் அனுப்பிய வாசக குறிப்பை வாசித்தபோது நிறைவாக உணர்ந்தேன். நன்றி.   


நான் சமீபத்தில் படித்த மிக திருப்தியளித்த தொகுப்பு இது. தத்துவமும், யோகமும், அறியிவியலும் தொன்மங்களையும் கொண்டு தனது அனுபவங்களையும் தேடல்களையும் கேள்வியாகவும் கதைகளாகவும் மாற்றியிருக்கிறார். மொழியின் கூர்மையும் தேர்ந்திருக்கும் வடிவமும் கதையை இன்னும் ஆழமாக மாற்றியிருக்கிறது. என்னுடைய வாசிப்பில் இத்தகைய ஆழம் கொண்ட சிறுகதைகள் மிக மிக அரிதானவை. மிக முக்கியமான புத்தகத்தின் வழியே தன் வருகையை வலுவாக அறிவித்திருக்கிறார் சுனில். அபாரமான மொழி ஆளுமை வெளிப்படுகிறது, அவரது விவரணைகள் மிக கூரியவையாக வாசிப்பவருக்கு உணர்வுகளை ஆழமாக கடத்தி விடுகிறது.


வாசுதேவனின் கதையில் அவரது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலை மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் படி நெருக்கமாக அமைந்திருந்தது. அவருக்கு வைத்தியம் செய்ய செல்லும் சித்த மருத்துவம் படிக்கும் இளைஞனின் எண்ணங்கள், நோயாளியின் பெயர் குறித்து மரபில் இருக்கும் சித்திரத்துடன் முரண் கொள்கிறது. எப்பொதைக்குமான வாழ்வின் பொருள் குறித்த கேள்வியாக அவனுள் மாறிவிடுகிறது. இறுதியில் வாசுதேவனின் மரணத்தையும் அவனது அக்கா குழந்தையின் உயிர் துடிப்பினையும் அருகருகில் வைத்துக் காண்பது மரபிலிருக்கும் வாசுதேவ உருவகத்தின் பொருளான பிரபஞ்ச லீலையினை நேரில் காண்பது போல் அமைந்திருக்கிறது. விடையில்லா அந்த மரணத்தினை இப்போது அவனால் ஏற்றுக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.


காளிங்க நர்த்தனம் சிறுகதை, புராணத்தை யோக முறையில் மாற்றி கையாளுகிறது. மாணிக்கத்தினது அரைகுறை யோக பயிற்சியால் தோன்றும் சைக்கிளின் பின் அமர்ந்திருக்கும் பெண் உருவம் அவனை கடிக்க வருவதையும், முறுக்கு சாமியின் புராண தலைகீழ் ஆக்கத்தையும் அவர்களது பயிற்சியின் விளைவாக எழும் காமம் விஷமாக மாறி வெளிப்படுவது போல் தோன்றுகிறது. அதனை அடக்குதலை பாம்பின் தலையில் ஏறி நடனமிடும் கிருஷ்ணனில் முறுக்குசாமி காண்கிறார்.  மாணிக்கத்தின் கனவில் வரும் பாம்பின் தலை வரை ஏறி சறுக்கும் காந்தியையும் ஏற முயற்சித்து தோற்கும் பிற மனிதர்கள் யாவரையும் அந்த யோக பாதையின் வழிகளில் இருப்பவர்களாக காண முடிகிறது. கிருஷ்ணனை பார்த்து தானும் சின்ன வயசிலேயே ஏறி இருக்கணும் என்று சொல்வது, வயதானவர்களை பாம்பின் அல்லது குண்டலினியின் தலை மேல் ஏறுவதில் இருந்து தடுப்பது எது என சிந்திக்க தூண்டுகிறது. சாபம் அடையும் குடும்ப பின் கதை எந்த வகையில் இந்த கதைக்கு வலு சேர்க்கிறது என்பது தெரியவில்லை. குண்டலினியிலிருந்து எழும் காமம் எவ்வாறு அத்தனை மனிதர்களையும் சுழித்து இன்மையில் கரைக்கிறது என்பதாக புரிந்து கொண்டேன்.


 


குருதி சோறு இந்த தொகுப்பின் மிக முக்கியமான கதை. இதன் முக்கியத்துவத்திற்கு காரணம் இது எழுதப்பட்ட வடிவம் தான் என்று தோன்றுகிறது. காளி கோயிலில் நடக்கும் வருட திருவிழாவில் அனைவரது வீட்டிலிருந்து அரிசி கொண்டு வருவதும், மருளாலியின் ஆடலும், பலியும் சடங்குகளும் நடைபெறுகிறது. சுடலையால் அந்த ஆட்டத்தில் இரண்டற கலக்க முடிவதும் அதே நேரத்தில் சபரியால் கலந்து கொள்ள முடியாது போவதும் மிக முக்கியமான ஒன்று. பின்பு பாலாயியின் பஞ்ச கால வாழ்க்கையும் இறப்பும் சொல்லப்படுகிறது. அதன் மேலடுக்காக அவள் எவ்வாறு அன்ன சௌரக்ஷாம்பிகை புராணமாக மாற்றப்பட்டுள்ளார் என்று வைத்தியரின் வீட்டில் கூறப்படும் கதையாடலில் சொல்லப்படுகிறது.


இந்த அடுக்குகள் ஒன்றோடொன்று பொருந்தி ஒரு அபாரமான சமூக இயங்கியலை வெளிப்படுத்துகிறது. பாலாயியை கடவுளாக மாற்றி அவளது உக்கிரத்தில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபடும் சுடலையின் சமூகம் ஒருபுறம். அதில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட முடியாமல் சபரியை தடுக்கும் பெருந்தெய்வ வழிபாடுடைய சமூக அமைப்பு மற்றோரு பக்கம். பாலாயியை காளியாக மாற்றி ரத்தத்தையும் அன்னத்தையும் படையிலிடும் நாட்டாரியல் வழிபாடும் அந்த திருவிழாவின் இறுதி நாளில் வைத்தியரின் வைதீக குடும்பத்தின் பங்கேற்பும் இணைந்ததாக அது உருமாறியிருக்கும் விதம் மிக முக்கியமானது.பாலாயியை வைதீகம் தனது புராணங்களின் வழி அவளை அன்னலக்ஷ்மியாக்கி திருமகளின் வழியே திருமாலுடன் பிணைக்கிறது. எவ்வாறு ஒரு நாட்டாரியல் தெய்வம் புராண மேல்நிலையாக்கத்தின் வழியே பெருந்தெய்வ மரபோடு இணைக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. மருலாளியின் பூர்வீகம் தெரியாமல் அவனை பூசாரியாக ஏற்க மறுப்பதை வைத்தியரின் கனவில் தான் அம்மன் வந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறாள்.


பாலாயியின் வரலாற்றில் இருக்கும் அவளுடைய அடையாளம் புராணத்தில் களையப்படுகிறது. பாலாயியின் வாழ்வில் நடந்தேறிய அவளது பிள்ளைகளின் இறப்பும் அவளது மரணமும் தியாகமாக மாற்றப்படுகிறது. வைத்தியரின் குடும்பத்தின் தெய்வமாகும் பாலாயியின் சந்ததியின் தொடர்ச்சியினை கதைவழியாகவும், சடங்கின் வழியாகவும் பேணும் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டுள்ளது என ஒரு அமைப்பின் இரு பக்கமும் ஒன்றை ஒன்று நிரப்பி செயல்படுவதன் சித்திரம் முழுமையடைந்துள்ளது. இந்த சிக்கலான சமூக இயங்கியல் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. இந்த கதையின் சமூக இயங்கியலின் மறு பக்கமாக ஜெயமோகனின் மூத்தோள் கதையை வாசிக்க முடியும்.


அம்புப்படுக்கை சிறுகதையில் ஒவ்வொரு அம்பாக தப்பிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆனா ரூனா செட்டியார் இறுதி படுக்கையில் இருக்கிறார். அவரை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவரது இறப்பினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். நாடி பிடித்து பார்க்க அழைக்கும் சுதர்சன் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் செட்டியாரின் நாடியைப் பார்க்க சம்மதிக்கிறான். நாடி பிடித்து பார்ப்பதில் அவரது நாடி மெல்ல அடங்குவதை உணர்ந்து கொள்கிறான்.


ஆனா ரூனாவின் இயல்பை அவருக்கும் தனது தாத்தாவிற்கும் இடையேயிருக்கும் பழக்கத்தினால் நன்கு உணர்ந்திருக்கும் சுதர்சன் அவர் எதிர் பார்க்கும் ஓரு பதிலை அளிக்கிறான். தான் விரும்பும் போது உயிர் பிரியும் என்ற பீஷ்மரது அம்பு படுக்கையை போல் ஆனா ரூனா வும் சுதர்சனின் பதிலில் திருப்தியடைந்து உயிரை விட சம்மதிக்கிறார் என்று தோன்றுகிறது.


பொன் முகத்தை காண்பதற்கும் என்கிற கதையில் சமகால சிக்கல் பேசப்படுகிறது. குழந்தையை பார்த்துக் கொள்ள மட்டுமே உதவும் பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த ஊரினை விட்டு விலகி நகரத்தில் அடைந்து கிடக்கிறார்கள். சிறு குழந்தையின் அன்பில் மட்டுமே தன் இருப்பின் பிடிப்பினை கொண்டவர்கள். ஒரு அவசர நேரத்தில் அவர்கள் சொந்த வேலைக்காக பிரிந்து செல்ல நேரிடும் போது நகர வாழ்வில் உருவாகும் நெருக்கடி. அதனை தொழில் நுட்பத்தை கொண்டு வெற்றிகரமாக சமாளித்து விட்டதாக எண்ணும் நகர மனிதர்கள். தான் இல்லாமலே குழந்தை உறங்க பழகிக் கொண்டதால் தனது இருப்பை சந்தேகிக்கும் பெரியவர்.


இன்னும் சமூகத்தின் கறை படியாத இளம் குழந்தை மனித உறவின் ஆழத்தை அர்த்தப்படுத்தும் நொடியில் தனது வாழ்வின் அர்த்தத்தையும் கண்டு கொள்வது தான் கதை.


2016 சிறுகதை 1984 நாவலின் வின்ஸ்டன் கதாபாத்திரத்தின் இன்றைய முக்கியத்துவம் உணரப்படும் கதை.


முற்றிலும் சுதந்திர சிந்தனையை அனுமதிக்காத வின்சென்ட் வாழ்ந்த நாட்டின் சூழலில் இருக்கும் அம்சத்தை, புரட்சி இல்லாத குடியரசு நாட்டில் வாழும் மக்கள் தங்களது சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்து கொள்ளும் போது அவரை மீள் கண்டடைவு செய்கிறார்கள்.


கடைசியாக நரோபா வெளியேறும் போது இன்னொரு மேசையில் உட்கார்ந்திருக்கும் வின்ஸ்டனையும் அவரை தேடி வந்திருக்கும் ஆப்பிரிக்கா அமெரிக்கரையும் காண்பது வின்சென்ட் உருவகிக்கப்படும் சூழல் ஆர்வெல் கற்பனை செய்தவாறு உலகம் துண்டுப்படாமலாகியும் தொடர்ந்து அவர் எவ்வாறு கண்டடையப்படுகிறார் அல்லது தேவைப்படுகிறார் என்பதைக் காட்டுவதாக தோன்றுகிறது.


 


பேசும் பூனை ஒரு கிளாசிக் ஆவது முதன்மையாக அதன் மொழியினால் நிகழ்கிறது என்று தோன்றுகிறது.


வெளிநாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லும் குடும்பத்தில் தனித்திருக்கும் பெண்களின் தீர்க்கப்படாத ஏக்கம் அவர்களை பலவீனமாக்குகிறது. அதே நேரத்தில் இன்றைய குடும்பத்தில் இருக்கக் கூடிய ஆண் பெண் உறவின் முதிர்ச்சியற்ற தன்மை.


ஆணின் தீராத காமமும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் மனம். சமூகத்தால் உருவாகியிருக்கும் பெண்ணின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளும் தன்முனைப்பும்.


அந்த இடைவெளியில் நுழையும் பூனை பதிவேற்றாத எண்ணிலிருந்து வரும் அழைப்பின் வழியே அந்தரங்கங்களை திருடுகிறது. அவளுக்கு பிடித்த பாடல்கள், தகவல்கள் மற்றும் அக்கறையின் வழியே தனது இருப்பை நிலை நிறுத்துகிறது. விதவிதமான சேலைகளை கட்டி அவள் பூனைக்கு காண்பிப்பது என்பது உண்மையில் அவள் மீது அவளே கொண்ட கிளர்ச்சியாகவே தோன்றுகிறது. அவளுடைய ஏக்கம் தணிக்கப்பட்ட பின்பு அவளுக்கும் கணவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் சுமூகமாக முடிகிறது.


அவளது குடும்ப செலவுகளை நிர்வகிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக் அவளது தேவைகளை பூனை முடிவு செய்கிறது. பொருட்களை வாங்கி குவிக்கிறது. தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை உணர்ந்து தன்னிடம் சொல்லிவிட்டு இனிமேல் வாங்கு என்று சொல்லியதற்கு கோவித்துக் கொள்கிறது. அவளது தன்முனைப்பையும் ஏக்கத்தையும் பூர்த்தி செய்யும் பூனையின் திடீர் மறைவு அவளை குழந்தை பெற்றதற்கு அடுத்ததாக அழ வைக்கிறது.


பின்பும் அவளால் பூனையின் ஆதிக்கத்திற்கு மறுப்பு சொல்ல முடியாது கட்டுண்டிருக்கும் அவள் நிலை என்பது அவளது மன ஆசைகளுக்கும் தன்முனைப்பிற்கும் கட்டுப்பட்டிருக்கும் நிலை தான் என்று தோன்றுகிறது. அவளது மகள் தாயின் அதீத போக்கின் காரணத்தை உணர்ந்து பூனையை அடிக்கும் போது.. அவளை வெறி கொண்டு அடித்து மயங்கச் செய்கிறாள். உன்னால் எனது மகளை அடிக்க நேர்ந்தது என்று சொல்பவளிடம் பூனை சாதாரணமாக அவள் என்னை எத்தனை முறை அடித்தால் தெரியுமா.. ஒரு முறை அடித்ததற்கு இப்படி கவலை படுகிறாயே என்று கேட்குமிடம் மிக வலுவான தாக்கத்தை வாசிப்பவரிடம் உண்டு செய்கிறது. பூனை வெறும் விளையாட்டு என்பதிலிருந்து அவள் வந்து சேர்ந்துள்ள பூனையை தவிர்க்க முடியாத இடமும், அதனது கண்காணிப்பும் அவளை தற்கொலையை நோக்கி தள்ளுகிறது.


ஆரம்பத்தில் அவள் முணுமுணுக்கும் சுவர்ணலதா பாடலின் வரி பாடகியின் குரலில் கேட்கிறது. பின்பு தொலைபேசியில் வரும் நிறுவனத்தின் அழைப்பில் கேட்கும் பாடலில் பூனையின் குரல் ஊடுருவியிருக்கிறது. இறுதியாக அவளது அக மொழியிலே பூனை ஊடுருவி இருப்பதன் முடிவு தீவிரமாக அமைந்துள்ளது.


 


அறிவியல் புனைவு கதையான திமிங்கிலம் இன்னொரு முக்கியமான கதை. கற்பனை உலகத்தில் தொழில் நுட்பத்தின் சிக்கலை தீவிரப்படுத்தி அணுகும் கதை. அவனுக்கும் அவனது முதல் மனைவி ஜெமீமாவிற்கும் இடையே நடைபெறும் உரையாடலே கதையின் மையம்.


 


மானுடம் தழைக்க வேண்டும் என்பதற்கும் உலகம் வாழ வேண்டும் என்பதற்குமான முரண். மனித மைய வாதத்திற்கும் பிரபஞ்ச ஒட்டு மொத்த பார்வைக்குமான போர். அதில் மனித தன்முனைப்பின் சிக்கலும் பிரபஞ்சத்தை ஒட்டு மொத்தமாக பார்க்க தவறுவதன் விளைவும் தீவிரமாக விவரிக்கப்படுகிறது.


மக்களில் செயல்படும் வாழ்வதற்கான விழைவு அவர்களை கீழ்மை நோக்கி செலுத்தும் விதமும் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறும் போது குற்ற உணர்விற்கு ஆளாகி அதன் பழியை ஆராய்ச்சியாளனின் மீது சுமத்துவதும் வெவ்வேறு நிகழ்விற்கும் பொருத்தி பார்க்க கூடியது.


ஆராய்ச்சியாளனுக்கு இருக்க வேண்டிய அறத்திற்கும் அறிவியலின் கண்டுபிடித்தலில் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பிற்கும் இடையேயான சிக்கல் இறுதியில் கூர் கொள்கிறது. இந்த கேள்வியின் இன்னொரு வடிவம் தான் விஷக்கிணறு குறு நாவலாக விரிவடைந்துள்ளது.


மனிதன் இந்த உலகில் மற்ற எதையும் சார்ந்திராமல் வாழ்வதற்கான சோதனையை மேற்கொண்டு அவன் வெற்றியடைகிறான். ஆனால் அவன் அவ்வாறு தனியாக வாழும் சாத்தியம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. ஏதோ ஒரு வகையில் குழுவாக வாழ்வதே அவனுடைய இயல்பு என்று தோன்றுகிறது. அதற்காக சமைக்கப்பட்டதே நாகரிகமும் பண்பாடும்.


அதன் எல்லையை அல்லது வெறுமையை உணரும் அவன் தான் உருவாக்கிய அனைத்தையும் நேர் செய்ய முடியுமா என்று நினைக்கிறான். ஜெமீமாவை நெருங்க அவனுள் இருக்கும் அழியா தேடல் அவன் தன்னை இவ்வுலகில் அரக்கனாக எஞ்சியிருக்க கூடாது என்று நினைக்க வைக்கிறது. அந்த கடற்கரையில் அவன் ஓடும் பாத தடங்களை அழித்துக் கொண்டே திரும்பும் போது புது காலடிகள் உருவாகியிருப்பதை உணர்ந்து கொள்கிறான். உண்மையில் இங்கு உருவாக்கும் எதையுமே அழித்து விட முடியாது. ஒன்று உருவாகிவிட்டால் அதனை காலத்தில் பின் சென்று அழிப்பது சாத்தியமற்றது. அதனால் இறந்து போன திமிங்கிலத்தின் எலும்பினை இழுத்துக் கொண்டு கடலில் சென்று மரிக்கிறான் என்று தோன்றுகிறது. தேவைக்கு அதிகமாக தின்று அழிக்கும் திமிங்கிலத்தின் தேவை மக்களுக்கு அவ்வப்போது அவனது எல்லையை நினைவில் நிறுத்திக் கொள்ள அவசியமானது தான் போல.


கூண்டு சிறுகதை ஒரு மிகுபுனைவு.. அந்த கூண்டின் உருவாக்கமும் அதன் நோக்கமாக கதையில் சொல்லப்படுவதும் சேர்ந்து என்னை சிறிது பரவசத்திற்கு உள்ளாக்கி விட்டது. கூண்டு அதுவே குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டும் என்பதும், கூண்டினை செய்த கொல்லனின் மீசையற்ற ஆயிரக்கணக்கான வருட புன்னகையும் அந்த கூண்டிணை பிரபஞ்சத்தோடு என் மனம் ஒப்பிட்டு கொண்டது. அங்கு நிகழும் மனிதர்களின் தவிர்க்க முடியாத வாழ்வு அவர்களின் தண்டனை என்ற அளவில் சிந்தித்துக் கொண்டிருந்த என்னை கதையின் முடிவு கீழிறக்கியது. எந்த தவறும் செய்யாத ஒருவன் அல்லது சமூகத்தில் சொல்லப்படும் லட்சிய உருவகத்தில் வாழும் ஒருவனின் நிலையை காட்சி படுத்துகிறது.


சமூகம் ஒரு நேரத்தில் தனது உண்மை நிலையினை ஏற்றுக் கொண்டு கூண்டிற்குள்ளேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் போது, எந்த குற்றமும் செய்யாத ஒருவன் இரக்கத்தொடு பார்க்கப்படுகிறான். அவனும் அந்த கூண்டிற்கு செல்ல தனக்கு இருக்கும் காரணங்களை கற்பனை செய்து கூண்டின் தவறால் வெளியிலிருப்பதாக எண்ணிக் கொள்கிறான். சமூகத்தின் அழுத்தம் எந்த அளவிற்கு தனியர்களின் மீது செயல்படுகிறது என்பதும் அவனுக்கு தேவைப்படும் ஆத்ம பலத்தின் தேவையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.


ஆரோகணம் தருமனின் இறுதி பயணத்தை போல் காந்தியின் இறுதி பயணத்தை படைக்க முயலும் கதை. இந்த கதையை நான் மிக ரசித்தற்கு காரணம் ஒன்று காந்தியை தொன்மமாக்கும் மிக முக்கியமான கதை.


காந்தியின் மனம் யதார்த்தத்தில் செயல்படும் விதத்தை மெல்லிய நூல் போன்ற கதைகளில் அணுகி அறிய முயன்ற முயற்சிகளில் இருந்து இது வேறுபடும் விதம் சிறப்பானது.


இரண்டாவதாக மரபில் இருந்து ஆத்ம சுத்திகரிப்பை அடைய வாழ்நாள் முழுவதும் முயன்று கொண்டிருந்த மனிதர் மரபினால் சொல்லப்படும் சொர்க்கத்தை தனது இயல்பினாலேயே நிராகரிப்பது. இது முக்கியமான மீறல் என்று தோன்றுகிறது.


மிக அற்புதமான கதைகள். தமிழில் இத்தகைய கதைகளை எழுதும் சுனில் நிச்சயமாக முதன்மையான எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை.

  •  

மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் ஏப்ரல் மாத கூடுகை சிறுகதை விவாதம்

எழுத்தாளர் அஜிதனின் ‘ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்’ சிறுகதையும் எழுத்தாளர் சுசித்ராவின் ‘ராம பாணம்’ குறுநாவலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நாராயணி அம்மா, கோமளா டீச்சர், வேலாயுதம் பெரியசாமி, நாராயணன் மெய்யப்பன், முகமது கபூர், கவிஞர் சிலம்பரசன், எழுத்தாளர்கள் பிரபாகரன், சித்ரன் ஆகியோர் பங்குபெற்றனர். எல்லோரும் கதைகளை வாசித்து வந்ததால் செறிவான உரையாடல் சாத்தியமானது. 






முதலில் அஜிதனின் ‘இந்திய ஆன்மிக அனுபவம்’ கதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மறுவாசிப்பிற்கு உட்படுத்த முடியாத அளவிற்கு அருவருப்பை மைய உணர்வாக கொண்டுள்ளதாக கூறினார்கள். அஜிதனின் கதைகளில் தொழிற்படும் துல்லியமான புற சித்தரிப்புகள் அவரது பலம். அருவருப்பான அனுபவத்தை மொழியில் நுணுக்கமாக விவரிப்பது சவாலானது. சிறுநீர் உப்பு படிவதை பற்றி அவர் எழுதிய சித்திரம் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. எதை இந்திய ஆன்மிக அனுபவம் என கூறுகிறார் என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. ஏன் கூறுகிறார் என்பதும் இன்னொரு கேள்வி. தலைப்புதான் கதையை வலுவாக்குகிறது. வாமாச்சார மரபு அருவருப்பை ஆன்மிக பாதையாக முன்வைப்பதைப்பற்றி பேசினோம். லிங்கத்தை வெளியே விட்டபடி உறங்கிக்கிகொண்டிருக்கும் பைத்தியக்காரனை சிவனாக உருவகிக்க இடமுண்டு என்றொரு கருத்து வந்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் பிங்கலன் தொழுநோயாளியையும் பள்ளிகொண்ட பெருமாளையும் ஒருவரென காணும் கணம் அவனுக்கு பெரும் தொந்திரவை அளித்தது. ஜெ எழுதிய ‘மலம்’ எனும் கதையும் ‘இந்திய ஆன்மீக அனுபவம்’  கதையுடன் பொருத்தி பார்க்கலாம்.  கும்பமேளா நிகழ்ந்த சூழலில் இன்று இந்த கதை எழுதப்படுவதில் ஒரு அரசியல் நிலைப்பாடும் உள்ளதாக ஒரு வாசகர் குறிப்பிட்டார். கும்பமேளாவில் வரும் பாபாக்களை பொது சமூகம் ஒவ்வாமையுடன் நடத்தவில்லை. மாறாக அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறது என்பதால் அத்தகைய அரசியல் நிலைப்பாடை வலிந்து இக்கதைக்கு அளிக்க வேண்டியதில்லை, இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு வாசிக்கும்போது இந்த அரசியல் தூண்டுதல் பெரிய காரணியாக பார்க்கப் படாது. கும்பமேளா அளவிற்கு எல்லாம் செல்லாமல்  உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள், எச்சிலில் உருள்வது போன்ற சடங்குகளுடன் பொருத்திப் பார்க்கலாம். தினம் தினம் இந்த அருவருப்புடன் வாழ்ந்தபடி தான்  கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நாட்களை கடக்கிறார்கள். எளிய மக்களின் ஆன்மிகமும் வாழ்வனுபவமும் இந்திய சூழலில் அருவருப்பை ஏற்றுக்கொள்ளவும் இயல்பாக கடந்து செல்லவும் வழிவகுக்கிறது. ஆகவே இந்த கதை மேலதிகமாக  எந்த அதிர்ச்சியும் அருவருப்பையும் கடத்தவில்லை எனும்  விமர்சனம்  எழுந்தது. எனினும் அருவருப்புடன் இயல்பாக இயைந்து வாழ பழகும் எல்லோருக்கும் அது ஆன்மிக அனுபவமாக பரிணாமம் கொள்வதில்லை. பொது உண்மையை தொடுவதை விட தனி உண்மையை காட்டி நின்று விடுகிறது என்பதே இந்த கதையின் எல்லை. இது சாமானிய மனிதனின் கதை அல்ல, ஒரு நவீன அறிவு ஜீவியின் சிக்கல். அழகும் அருவருப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  அருவருப்பை வேறொன்றாக மாற்றி கற்பனை வழி கடந்து செல்லும் திறனுடையவனாக இருக்கிறான் கதைசொல்லி. தொடுகை தான் அவனை தொந்திரவு செய்யக்கூடியது. இருளில் அத்தகைய மாற்றம் சாத்தியமாகவில்லை. முதல்முறை நேருக்குநேர் மெய்யை  எதிர்கொள்கிறான். அது அவனது அகங்காரத்தை உடைக்கிறது. அவன் ஒரு தொடுகையை உணர்கிறான். ஆனால்  படுத்துக்கிடக்கும் பைத்தியகாரனைத் தவிர அருகே யாருமே இல்லை. அவனுக்குள் இருப்பவை எல்லாம் கரைந்தழிகின்றன. மீட்பவர்கள் பெண்கள் என்பதற்கு சிறப்பான கவனம் ஏதும் இருக்கிறதா என்று பேசப்பட்டது. 


    

இரண்டாவதாக விவாதிக்கப்பட்ட கதை சுசித்ரா எழுதிய ‘ராம பாணம்’ எனும் குறுநாவல். மீனாட்சிநாதன், சாம்பு மற்றும் ராமுடு ஆகிய மூவர் 1896 ஆம் ஆண்டு காவிரிக்கரையில் அமர்ந்து உரையாடுவதே கதை. ராமுடு தனது குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை தன்னிடம் சொன்ன திருவையாறு பஞ்ச நாத பிரம்மம் எனும் தியாகராஜரைப் பற்றிய கதையை சொல்கிறார்.  ராமுடு கதைசொல்லும்போது ‘அப்பேர்ப்பட்ட பஞ்சநாத பிரம்மம்ன்ற நாதபிரம்ம பாகவதர என் குருநாதர் கண்ணோட கண் வெச்சுப் பார்த்திருக்காரு. அவர் கண்களை நான் பார்த்திருக்கேன், இப்போ என் கண்கள நீங்கப் பார்க்கரீங்க’ என்று   சொல்கிறார். 


ராமுடுவிற்கு அவரது குரு ராம நாமத்தை ஜபம் செய்ய  அளித்திருக்கிறார். ராமன் எனும் உருவம் மீது அவருக்கு பெரிய ஈடுபாடு இல்லை. “உச்சிவேளைக்கு வந்தா தெய்வானை கள்ளச்சி தன்னோட இரண்டு வயசுப் பிள்ளைய நிக்க வைச்சுக் குஞ்சாமணி ஆடக் குளிப்பாட்டிட்டிருப்பா. அந்தக் குழந்தையப் பாக்குறதும் வழுவூர் சந்நிதியில ராமனோட உருவத்தைப் பார்க்குறதும் எனக்கு அத்தனை வேத்துமையாத் தெரியல.” மேலும் தனது குடும்பத்தினர் பகலில் ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இரவில் காமக்களியில் ஈடுபடுவது எனும் கபடம் அவரை எரிச்சல் கொள்ள செய்கிறது.  ஆனால் அவரேதான் பெரும் உவகையோடு தனது குருநாதர் சொன்ன தியாகராஜர் ராம விக்கிரகத்தை காவேரியில் கண்டெடுத்த கதையை சொல்வது பாத்திர வார்ப்பிற்கு முரணாக பட்டது.  


தில்லைஸ்தானம் ராமுடுவிற்கு ஒருவித அடையாள சிக்கல். ராமய்யராகவும் இல்லை, ராமையா பிள்ளையாகவும் இல்லை. தாயிடமிருந்து பிரிந்து தந்தையிடம் வளர்கிறார். ஆனால் அங்கு ஏறத்தாழ அடிமை வாழ்க்கை தான் வாய்க்கிறது. ராமுடு தனது குருவாக கருதும் ராமாமிர்தம் பிள்ளை ஏறத்தாழ இதே போன்ற குடும்ப பின்புலம் கொண்டவர். எனினும் அவர் ‘பிள்ளையாக’ வளர்பவர். ராமுடுவிடம் பெண் அனுபவம் உண்டா என்றொரு கேள்விக்கு தாசிகள் எனது தாயர்கள் என்றொரு பதிலை அளிக்கிறார். காவேரியை அதன் நிறைவில்  கண்டவனுக்கு எந்த பெண்ணும் நிறைவை அளிக்க மாட்டாள் என்பதே அவரது பதிலாக உள்ளது.  இயற்கையே முழுமை. ஆகவே வழிபாட்டுக்குரியது. இயற்கையின் முழுமையை அறிந்தவனால் உலகியலில் அமைய முடியாது என்பதே கண்டுகொண்டவனின் சாபம் என்பதை ராமுடு உணர்த்துகிறார். உ வே சாவின் சீடனை போல வருகிறான் மீனாட்சிநாதன். சுவடிகளின் மீது பித்துக்கொண்டு அலைகிறான். சாம்பு நவீனமானவன். பட்டணத்தில் நவீன வரலாறு படிக்கிறான். ஒருவகையில் இவையிரண்டும் வரலாற்றின் இரண்டு பக்கங்கள் என சொல்லலாம். மீனாட்சிநாதன் காவேரிக்கரையை விரும்புகிறான். மீனாட்சி நாதனின் ஆய்வுகளை பழங்குப்பை என கருதும் சாம்பு பட்டனவாசத்தை விரும்புபவன். 


குறுநாவலை இரண்டு கதைகளாக பிரிக்கலாம். ராமுடு - மீனாட்சிநாதன்- சாம்புவின் பகுதி முதல் 7 அத்தியாயங்கள் வரை நீள்கிறது. அந்த பகுதியின் உச்சம் என்பது மீனாட்சிநாதன் நாகசூடாமணி சுவடியை கண்டெடுக்கும் தருணம். வீடு முழுக்க குவியலாக ஒழுங்கின்றி கிடக்கும் சுவடி கட்டிலிருந்து பூச்சி இட்ட துளை வழியாக தேடிய சுவடிகளை  பெரும் பரவசத்தோடு கண்டெடுப்பார்கள். 


குறுநாவலின் இரண்டாம் கதை சரடான தியாகராஜருக்கு அவரது சகோதரர் ஜப்பேசருக்குமான உறவையும் முரனையும் இணைவையும் சித்தரிக்கும் பகுதிக்கு இந்த முதல் பகுதி தேவையற்ற சுமையாக உள்ளது என்றொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கதைப்படி ஜப்யேசன் சிலநொடிகள் முந்தி பிறந்த மூத்தவர். பஞ்சநாத பிரம்மமும் ஜப்யேசனும் இரட்டை பிறவிகள்.  ஜப்யேசன் அழுகுரலை கேட்டு பூமிக்கு வந்தவன் பஞ்சநாத பிரம்மம். பஞ்சநாத பிரம்மம் பற்றி அவரது தாயார் ‘யார் அழுதாலும் முன்னே சென்று நின்றுவிடுபவன்’ என கேலியாக குறிப்பிடுகிறார். தந்தை ஒருவருக்கு விக்கிரகமாகவும்  இன்னொருவருக்கும் தூபதீப மலராகவும்  ராமனை அறிமுகம் செய்கிறார். இருவரும் தங்களுக்கு மறுக்கப்பட்ட வடிவத்தில் ராமனை ஏந்தி கொள்கிறார்கள். முக்திக்கான வழியாக பிரவிருத்தி மார்க்கம் நிவிருத்தி மார்க்கம் என இரண்டு பாதைகள் உண்டு. பல்கி பெருகி அனுபவிப்பது ஒரு வழி, விலகி துறவு கொள்வது இன்னொரு வழி. ஜப்யேசன் திளைக்கும் வழியில் செல்பவன் என்றால் பஞ்சநாத பிரம்மம் துறவின் வழியில் செல்பவன். பொதுவாக விஷ்ணுவை திளைக்கும் மரபிற்கும் சிவனை ஒடுங்கும் மரபிற்கும் உரியவர்களாக வகைப்படுத்துவர். ஜப்யேசனை சிவனோடு இணை வைப்பது இங்கு பொருந்துமா என்றொரு கேள்வி உண்டு. எனினும் கதையின் தொடக்கத்தில் இருந்தே கறுப்பு - சிவப்பு என்றொரு இருமையை எழுத்தாளர் சுட்டுகிறார். இந்தியர்களுக்கு உரிய நிறமாக கறுப்பும் ஐரோப்பியர்களுக்கு உரிய நிறமாக சிவப்பும் முன்வைக்கப்படுகிறது. பெருமாள்- சிவன் இருமையை இதன் நீட்சியாக காணலாம். சிவனை ராஜசிக குணத்தின் பிரதிநிதியாக காண இடமுண்டு. சிவப்பும் ரஜோ இயல்பின் நிறம் தான். 


ராமாமிர்தம் பிள்ளை ஒன்றுவிட்ட சகோதரியான ராஜதாசி ரமாவாணியை ஜப்யேசன் ஏறெடுத்து பார்க்க வேண்டாம் என்பதை அறிவுறுத்த தூது செல்லும் இடத்தில் பஞ்சநாத பிரம்மத்தை சந்திக்கிறார். அவரது தூதும் அதற்கு ஜப்யேசன்பதிலும் என விரிகிறது. ஜப்யேசனும் பஞ்சநாத பிரம்மமும் ஒன்றின் இரு அம்சங்களாக தென்படுகிறார்கள். ரமாவாணி பஞ்சநாத பிரம்மத்தை காணும்போது ஜப்யேசன் இட்டுக்கொள்ளும் நெற்றிக்கண் போன்ற சிவப்பு குறியை நெற்றியில் காண்கிறாள். இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பது உணர்த்தப்படவில்லை. ஜப்யேசன் ராமன் விக்கிரகத்தை காவிரியில் வீசுகிறார். சகோதரர்கள் இருவரும் நீரில் குதிக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு பின்பு ஒருவர் மட்டுமே விக்கிரகத்துடன் கரையேறுகிறார். ஏறியவர் விக்கிரகத்தை கையில் ஏந்தியபடி ஜப்யேசன் குரலில் பாடியபடி  வருகிறார். அங்கிருப்பது எவர், காவேரி எடுத்து கொண்டது எவரை என சொல்ல முடியவில்லை. அவர்கள் இருவரையும் ராமபாணம் ஒன்றாக கோர்க்கிறது. பின்னர் அவர் தியாகபிரம்மம் என வழங்கப்படுகிறார்.  


ராமபாணம் எனும் உருவகமே குறுநாவலின் மைய இழை. ராம பாணம் என்பது அழிப்பதல்ல. அது கடவுளின் தொடுகை. ஒன்றை மற்றொன்றுடன் கோர்ப்பது, இணைப்பது, ஒன்றை மற்றொன்றாக மாற்றுவது. ஜெயமோகனின் ‘பிழை’ கதை இத்தகைய இறையாற்றலின் இருப்பு/ அல்லது தொடுகையை பற்றி பேசும் அபாரமான கதை. கொரோனா கால கதைகளில் ஜெயமோகன் தாயுமானவரை மையமாக கொண்டு எழுதிய கதைக்கும் ஜப்யேசர்- ரமாவாணி உறவு சித்தரிப்பிற்கும் தொடர்ச்சி இருப்பதாக ஒரு பார்வை முன்வைக்கப்பட்டது. 


இந்த கதையின் முக்கியமான சிக்கல் அதில் கையாளப்படும் படிம குவியல் காரணமாக உணர்வு ரீதியான விலக்கத்தை ஏற்படுத்தி படிமங்களை பொருத்திப்பார்த்து புரிந்துகொள்ளும் அறிவு செயல்பாடாக கதை வாசிப்பு ஆகிறது என்பதே. மாறன்- ராமன் எனும் இருமை பேசப்படுகிறது. ஜப்யேசன்  மாறனாகவும் பஞ்சநாத பிரம்மம் ராமனாகவும் காண இடமுண்டு.  மனதின் மீது நித்தம் நிகழும் சமர் என வாலி - சுக்ரீவன் சமர் உருவகிக்கப்படுகிறது. பலவீனனான சுக்ரீவன் ராமனின் துணை கொண்டு வாலியை வெல்கிறான். சுக்ரீவன் தியாகராஜராகவும் ஜப்யேசன் வாலியாகவும் சித்தரிக்கப்படுகிறான். இறுதியில் மல்லுக்கு அறைகூவல் விடுகிறான் ஜப்யேசன். நெற்றியில் சிவக்குறியுடன் சிவனுக்கு உவமிக்கப்படுகிறான் ஜப்யேசன். ராமாமிர்தம் பிள்ளை படகில் ஜப்யேசனுடன் செல்லும்போது தன்னை ராவணன் என கூறிக்கொள்கிறார். படகில் எனக்காக ஜப்யேசன் பாடுவார் என்று படகோட்டி சொல்லும்போது ‘குகனுக்கு இல்லாத ராமனா’ என்று ஒரு வரி வருகிறது. பஞ்சநாத பிரம்மம் ராமாமிர்தத்திடம் பேசும்போது தன்னை வீடணன் என்றும்  பலி சக்கரவர்த்தி என்றும் சொல்கிறார். ஜப்யேசன் ராமாமிர்தத்திடம் நாத வடிவில் தான் ராமனை அறிவதாகவும் ராமனின் உருவத்தின் மீது தனக்கு ஈடுபாடில்லை என்றும் சொல்கிறார். வலியை கலையாக்கும் சாதகனாக அவர் தென்படுகிறார். கலை கலைக்காக என்பதே அவர் கூற்று. பஞ்சநாத பிரம்மம் கலையை இறை அனுபவத்திற்கான வழியாக காண்கிறார். இப்படி தொடர் முரண்பாடுகளை உணர முடிகிறது. இரண்டாவது முக்கிய சிக்கல், குறுநாவல் பாத்திரங்களில் இருந்து தரிசனத்திற்கு செல்லாமல் தரிசனத்தை அடைந்த பிறகு பாத்திரங்களை அதற்கேற்றவாறு வளைக்க முற்படுகிறது. தியாகராஜரை நீக்கிவிட்டு இக்கதையை வாசித்தால் நல்லதோர் புனைவாக காண முடியும். ஆனால் தியாகராஜர் என்பது கதையிறுதியில் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறது. தியாகராஜர் வாழ்க்கை சரிதத்தை அறிந்தவர்களுக்கு ஜப்யேசன் பாகவதர் அல்ல என்பது தெரியும். எனக்கு தெரிந்தவகையில் அவருக்கு தனது சகோதரரின் மீதிருக்கும் கோபம் என்பது அவரது ராம விக்கிரக பூஜை அரிசி பருப்புக்கு ஆகவில்லை என்பதுதான். இந்த கதையில் தியாகராஜர் ஒருபடி கீழாகவும்  ஜப்யேசன் ஒருபடி மேலாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஜெயமோகனின் பல கதைகளில் இந்த போக்கு காண கிடைக்கும். துறவுக்கு சத்வத்தை விட ரஜோ குணத்தை முதன்மைப் படுத்துவார். சத்வ குணமுடையவர் துறவியாவதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ரஜோ குணமுடையவர் தன்னை, தனது தன்முனைப்பை வெற்றிகொண்ட பிறகே துறவின் பாதையில் பயணிக்க முடியும். ரஜோ குணத்தவரின் போராட்டம் எழுத்தாளர்களை ஈர்ப்பது இயல்பானதே. எனினும் சத்வ குணத்தை குறைத்து அல்லது அலுப்புடன் காட்டுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வெண்முரசில் யுதிஷ்டிரன் பாத்திர வார்ப்பை உதாரணமாக கொள்ளலாம். சுசித்ராவின் இந்த கதையிலும் பஞ்சநாத பிரம்மத்தின் சித்தரிப்பு இத்தகையதே. பொது சமூகம் சத்வ குணத்தின் மீது காட்டும் மரியாதைக்கு எதிர்வினையாககூட கலைஞர்களின் எரிச்சலையும் உதாசீனத்தையும் பார்க்க முடியுமா என்றொரு எண்ணம் தோன்றியது. மாறன்- ராமன் கவித்துவமான இடமாக இருந்தாலும் வான்மீகிக்கு அளிக்கப்படுவது மரா எனும் சொல்தான். ஜப்யேசன் பாத்திரத்தின் வலிமைக்கு முன் தியாகராஜர் மிகவும் வலுவற்றவராக தெரிகிறார். தியாகராஜரை பக்திமானாகவும் கவியாகவும் காண இடமுண்டு. அவற்றை இருவேறு கூறுகளின் இணைவாக காண வேண்டுமா என்றொரு கேள்வியும் எழுந்தது. கபீர் தாஸரின் ஜீனி சதாரியா அருமையான பாடல். அப்பாடலில் முன்வைக்கப்படும் நெசவு எனும் படிமமும் நௌகா சரித்திரம் எனும் ஜெயதேவரின் பாடலில் இருந்து கோபிகைகள் ஆடையை கொண்டு படகின் ஓட்டையை அடைக்க முயலும் நெசவு எனும் சித்திரமும் இயைந்து வருகிறது. எனினும் ஜீனி சதாரியா பாடல் கதை நிகழும் கால சூழலுக்கு பொருத்தமானதா என்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. அதை நியாயம் செய்வதற்கென மஸ்தானி என்றொரு பாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. புறசித்தரிப்பில் சில இடங்கள் திரும்பத்திரும்ப வருவதாக தோன்றுகிறது என்றாலும் காவேரியை சித்தரித்த விதம் மிகச் சிறப்பாக இருந்ததாக பேசப்பட்டது. இந்த எல்லைகளை கடந்து வாசகருக்கு ஒரு காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் அனுபவத்தை கதை அளிக்கிறது. எல்லாவற்றையும் இணைக்கும் ராம பாணத்தால் கூட பெண்ணின் துயரை போக்க முடியவில்லை என்பது அபாரமான இடம். ராமனே தவறிய இடமல்லவா.      


மீனாட்சி நாதன் சொல்லும்போது “நமக்கு ஒண்ணு தெரியலன்னு அது நம்மள பிடுச்சு இழுக்குமில்ல… அந்த மாதிரி ஒரு மாயம். ஆதீனத்துல எங்க அய்யா சபாபதி முதலியார் சொல்வாறு. நமக்குள்ள இருக்குறதுதான் அங்க அந்த சுவடியில இருக்குன்னுட்டு. நம்மள்ள உள்ள இருக்கு. அது நமக்குத் தெரியல. அது தான அங்க வெளிய எழுத்தா இருக்கு. ரெண்டையும் இணைக்குற ஒரு திரி கண்ணுக்குத் தெரியாம இத்தனைக் காலத்தையும் தாண்டி வந்திட்டிருக்கு. நமக்குள்ள அந்தத் திரி ஒரு துளை வழியா ஓடுறா மாதிரி அதுக்குள்ளேயும் ஓடுது. அதான் அதைப் பார்த்த உடனே நமக்குள்ள அதைப் பிடுச்சுக்கணும்னு இருக்கும். ஓலையில உள்ள அதை உண்மையிலேயே புரிஞ்சுக்கிட்டா இங்க நம்மள்ள உள்ள இத புரிஞ்சுக்கிடலாம்பாரு.” சுவடிகள் வழியாக பழையகாலம் தன்னை திரும்பி நோக்குவதை பற்றி சொல்கிறான். ராமனையும் அத்தகைய ஆழமான செதுக்காகவும் அது நம்மை திரும்பி நோக்காதா என பார்ப்பதாகவும் ராமுடு குறிப்பிடுகிறார். 

‘ஒக நாம, ஒக மாட, ஒக பாண, ஒக பார்ய’


‘எல்லாம் மட்கி உதிர்ந்து போகர சமாச்சாரம். ஆனால் ஒரு பெயரும் ஒரு சொல்லும் ஓர் அம்பும் ஒரு பெரும் காதலும் இங்க இருக்கு. எல்லாமே உதிந்துபோனப்பிறகும் மிஞ்சி இருக்குற ஒண்ணு தான் அது.’ என்கிறார் ராமுடு.  வரலாறை மிஞ்சி நிற்கும் ஆழ்படிமம் ராமன். அதை சொல்லின் வழியாக மீட்டெடுக்க முடியும்  என்பதாக  பொருள்படுகிறது. ராமுடு தனது குரு தனக்கு அளித்த ராம நாமத்தை பற்றி குறிப்பிடும்போது “கனிச்சாறோட இனிமையும் அடர்த்தியும் கொண்ட சங்கீதமெல்லாம் அவரிட்டேருந்து பரிபோன பிறகு அதோட கொட்டை மட்டும் தான் தன்கிட்ட மிச்சம் இருந்ததா சொல்வாரு. அதான் ராமநாமம். அதைத்தான் அவர் எனக்குக் கொடுத்தாரு. அது எனக்குள்ள முளைக்கணும்னு சொன்னாரு.” என சொல்லும்போது மேற்சொன்ன எண்ணம் வலுப்படுகிறது. 


மிக நல்ல குறுநாவலாக வந்திருக்க வேண்டியது, ஒன்றுக்கும் மேற்பட்ட மைய கேள்விகளை பின்தொடர்ந்து, சிதறியதால் அந்த உயரத்தை எட்ட தவறிவிட்டது என்பதே என் எண்ணம். 


  •  

பாதி இரவு கடந்துவிட்டது - அமிதபா பக்சி- தமிழில் சுபத்ரா- வாசிப்பு

 

சமகால உலக/ இந்திய இலக்கியத்திலிருந்து நாவல்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுவது குறைவு என்பதே என் எண்ணம். மொழியாக்கங்களுக்கு குறைவில்லை. சமகால கவிதைகள் உதிரி உதிரியாகவாவது நம்மை வந்து சேர்ந்து விடுகிறது. நாவல்கள் எண்ணிக்கையில் குறைவு தான்.   ‘க்ளாஸிக்குகள்’ இன்னும் பல இங்கே வரவில்லை என்பதே நிதர்சனம். 2018 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த அமிதபா பக்சி எழுதிய ‘பாதி இரவு கடந்துவிட்டது’ நாவல் நான்காண்டுகளில் தமிழுக்கு இல. சுபத்ராவின் மொழியாக்கத்தில், எதிர் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது நல்ல விஷயம். அமிதபா டெல்லியில் பிறந்து வளர்ந்து பணியாற்றி வருபவர். ஐ.ஐ.டியில் கணினி பேராசிரியர் என்று அறிகிறேன். 



இந்திய ஆங்கில இலக்கியம் சார்ந்து ஏதோ ஒரு மன விலக்கம் எப்போதும் எனக்கு  உண்டு. நகர்ப்புற வாழ்வை அதனால் நன்றாக/நம்பகமாக  சித்தரிக்க முடியும். ஆனால் அதற்கு வெளியே களங்கள் நகரும் போது வெளிப்படும் மெனக்கிடல்கள் அயர்ச்சியை தருபவை. சாமானிய மக்களின் வாழ்விலிருந்து இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் வெகுதூரம் விலகியிருக்கிறார்கள்.   ஒருபோதும் ஒன்று சேர முடியாத கண்ணாடி தடுப்பு அவர்களை மக்களிடமிருந்து பிரிக்கிறது. மனிதர்களை காட்சி பொருளாக ஆக்குகிறார்கள் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. ரஞ்சித் ஹோஸ்கோட்டே போன்றவர்கள் இந்த எல்லையை வெளிப்படையாக மேடைகளில் அங்கீகரித்தது உண்டு. ஆகவேதான் இந்திய மொழிகளின் ஆங்கில மொழியாக்கத்திற்கு பெரும் சந்தை உருவாகி வருகிறது. ஏனெனில் நகரங்களுக்கு வெளியே ரத்தமும் சதையுமாக வாழ்க்கை நிகழும் களம் இந்திய மொழி எழுத்தாளர்களால் தான் அதிகமும் எழுதப்படுகிறது. 


‘பாதி இரவு கடந்துவிட்டது’ அவ்வகையில் வழமையான இந்திய ஆங்கில நாவல்களில் இருந்து மாறுபட்ட தனித்துவம் கொண்டவை. நாவல் சாமானியரின் வாழ்க்கையைத்தான் சித்தரிக்கிறது. ஆனால் அதிசயமாக கண்ணாடி தடுப்புக்கு அப்பால் பாதுகாப்பான தொலைவிலிருந்து மனிதர்களை அணுகவில்லை. சாமானியர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்ட நாவல். ‘பாதி இரவு கடந்து விட்டது’ எனும் தலைப்பு கிளர்த்திய கற்பனையை தான் முதலில் சொல்ல வேண்டும். விடியலின் மீதான நம்பிக்கையா, அல்லது கரைந்து கொண்டிருக்கும் இரவின் மீதான ஏக்கமா? அல்லது இரண்டுமேவா? 


நாவல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. விஸ்வநாத் எனும் எழுத்தாளர் தனது சொந்த வாழ்க்கை குறித்து எழுதும் நீள நீள கடிதங்கள் ஒரு பகுதி. பதிப்பகத்திற்கு, அமெரிக்காவில் வசிக்கும் சகோதரனுக்கு, இறந்து போன மகனின் வெளிநாட்டு மனைவிக்கு, தனது மனைவிக்கு கடிதங்கள் எழுதுகிறார்.  அதுவரையிலான பிழை புரிதல்களை, பாவங்களை, தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவது தான் இந்த கடிதங்களின் பொதுவான பேசுபொருள். எழுத்து, எழுத்தாளர் தொடர்பாக விஸ்வநாத் முன்வைக்கும் பார்வை எனக்கு இணக்கமானவை. இந்த கடிதங்களின் ஊடாக ஒரு கதை நமக்கு சொல்லப்படுகிறது. எழுத்தாளர் விஸ்வநாத், அவரது மனைவி விமலா, சகோதரர் ஜெகன்நாத், அவரது தந்தை, அகால மரணமடையும் அவரது மகன் சுஷாந்த் ஆகியோர் இந்த கடிதங்களில் துலங்கும் பிரதான பாத்திரங்கள். தில்லியில் சமையல்காரராக இருக்கும் தந்தைக்கு தன் விஸ்வநாத் மீது தீராத குறை ஒன்றுண்டு. தன் மகன் பெரிய எழுத்தாளர் என்பதில் பெருமைதான் ஆனால் தந்தையின் சமையல் தொழிலை அவன் இழிவாக கருதினான் என்பதால் அதே தொழிலை கையில் எடுத்த இரண்டாவது மகன் மீது கூடுதல் பிரியம். விஸ்வநாத்தின் சிக்கல் என்ன?  “என் வாழ்வில் பிரயோஜனமான சிலவற்றை நான் செய்திருக்கிறேன் என என்னை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன. விவாதங்களில் உண்மையில்லை, எழுத்துக்களில் உண்மையில்லை, புகழ்ச்சிக்களில் உண்மையில்லை. எதிலுமே உண்மையில்லை.” அறுபதுகளின் இறுதியில் கோபக்கார இளைஞனாக லட்சியவாதத்தின் வீழ்ச்சியை கண்டு கொதிப்படைகிறான். தனது எழுத்து சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறான். அவனது கொந்தளிப்புக்களை கதையாக எழுதும்போது சமூகம் அவற்றை பகடி கதைகளாக வகைப்படுத்தி செரித்துக்கொள்ள முயல்கிறது.  “இலக்கியம் வரலாற்றின் போக்கில் தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை- ஏனெனில் வரலாறானது ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான மக்களினூடாக செயல்படுகையில் இலக்கியமானது ஒரு சமயத்தில் ஒரு மனித மனத்தினுள்ளேயே செயல்படுகிறது” என்பதை விஸ்வநாத் புரிந்து கொள்கிறார். கோபத்தையும் பழியுணர்வையும் இடுபொருளாக கொண்டு சமைத்த இலக்கியத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.  


“பெரும்பாலானவர்களுக்கு சுயநலமாய் இருப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது, அதை அவர்கள் தவறிழைக்கப்பட்டதான - நிஜமான  - எண்ணத்திலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.” தனது  நீதியுணர்வு,அறவுணர்வு போலியானது. வஞ்சத்தால் உருவானது என்பதை ஒருவாறு புரிந்துகொள்கிறார் விஸ்வநாத். “ஒழுக்கவாதத்தினடிப்படையிலான கோபங்கள் ஒருவகையில் நியாயமற்றவை: உண்மையிலேயே நீங்கள் சரியான பக்கத்தில்தான் நிற்கிறீர்களா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்வதில் இருந்தும், ஒரு விஷயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நியாயங்கள் இருக்கக்கூடும் என நீங்கள் உணர்வதிலிருந்தும் அவை உங்களைத் தடுத்து விடுகின்றன” என்று எழுதுகிறார்.  இந்த நாவலும் கடிதங்களும் அவரது வயோதிகத்தில், மகனை இழந்த பிறகு எழுதப்படுபவை  என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மகனின் மரணம்  ‘நான் என்னை சரியானவனாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று’ என  உணர்த்தியதன் விளைவே இவை. விஸ்வநாத் செய்த ஆய்வை திருடி பதிப்பித்த பேராசிரியருக்கு சீற்றம் கொண்டு பாதியில் கைவிடுகிறார். பின்னர் அரசு ஊழியராக தேர்வு பெறுகிறார். இவை பிழையான முடிவுகளாக அவருக்கு தோன்றின. “ஆனால் அவ்வப்போது என்னை கிளர்த்திய அந்த இறுமாப்புணர்வையும் ஒரு துரோகியை துரோகி என தைரியமாக அழைத்ததாக பிறர் என்னை புகழ்ந்தபோது நான் உணர்ந்த நீதியுணர்வையும் தாண்டி எனக்கு என்ன கிடைத்துவிட்டது?” எனும் கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்கிறார். “உலகின் தீமைகளை வெளிப்படுத்துவதுதான் இலக்கியம் என எவ்வாறு நம்ப முடிந்தது? நான் எப்படி அப்படி ஒரு குருடாக இருந்தேன்?” என தனது நம்பிக்கையை உடைத்து பார்க்கிறார். “வெறுப்பின் பிரதிகள் ஒருபோதும் மக்களின் இதயத்தை தொடமுடியாது. அன்பின் பிரதிகளால் மட்டும் தானே அதைச் செய்ய முடியும்.” எனும் முடிவுக்கு வருகிறார். எழுத்தாளராக பெயரும் புகழும் பெற்றிருந்தாலும் தன் வாழ்வின் மீது அவருக்கு தீராத வருத்தங்கள் இருந்தன.  விஸ்வநாத் தனது வெளிநாட்டு மருமகளுக்கு எழுதும் கடிதத்தில்  குர் அதுல்ஜன் ஹைதரின் நாவலில் இருந்து ஒரு பகுதியை சொல்கிறார். நபிகள் சூபிக்களின் தலைவரை தேர்ந்தெடுக்க வைக்கும் தேர்வில் ‘தனிமனிதர்களின் வெட்கக்கேடான குறைபாடுகளை அவர்களது சகமனிதர்களிடமிருந்து மறைப்பேன்’ எனும் பதிலை சொன்ன அலியை தலைவராக ஆக்குகிறார். இதுதான் இந்த நாவலின் மையமும் கூட. சாமானியர்களின் வாழ்வை, அவர்களது பலவீனங்கள் மீது தீர்ப்பெழுதாமல் பரிவுடன் அணுகுகிறது. ‘ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்க வேண்டுமெனில் அடிப்படையில் நான் ஒரு சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்’ எனும் செய்தியை தான் விஸ்வநாத் வந்தடைகிறார். 


 எழுத்தாளர்களுக்கும், அறிவுத்தள செயல்பாட்டார்களுக்கும் எப்போதும் தாங்கள் செயல் வீரர்களாய் இருக்க முடியவில்லை எனும்  குற்ற உணர்வு உண்டு. தனது எழுத்தின் சமூக பெறுமதி என்ன என்றொரு கேள்வி அவர்களை அலைக்கழிக்கும். இத்தகைய கேள்வியை எதிர்கொண்டு விடைகாணும் முயற்சியாக விஸ்வநாத் எழுதும் நாவல் அன்பின், மன்னிப்பின், அரவணைப்பின் செய்தியை தாங்கி வருகிறது. துளசி தாஸரின் ராமாயணம் எழுப்பிய உணர்வின் நீட்சியாய் திகழ்கிறது. ராமனையும், லட்சுமணனையும் அனுமனையும் லட்சியங்களாக கொள்கிறது. இந்நாவல்  தனது ஆழத்தில் ஒரு லட்சியவாத, கற்பனாவாத நாவல். ஜெயமோகன் தனது உரையில் குறிப்பிடும் லட்சியவாதத்தின் மீள் வருகையை குறிக்கும் பின்னை பின்நவீனத்துவ கூறுகளுக்கு இந்த நாவலை உதாரணமாக கொள்ள முடியுமா என்று யோசிக்கிறேன். எழுத்தாளரின் வாழ்வும் அவர் எழுதும் நாவலும் இணை வைக்கப்படுகிறது. தினாநாத் - திவான்சந்த் சகோதரர்கள் உறவும் விஸ்வநாத் ஜெகன்நாத் உறவும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை.  விஸ்வநாத் தன்முனைப்பும், சுயநலமும் கொண்ட எழுத்தாளராக, தனது பிற கடமைகளை சரிவர ஆற்றாதவராக தன்னை உணர்கிறார். தனது மனைவியாகவும் வாசகியாகவும் இருந்தவர் மகனுடைய அம்மாவாக ஆகும்போது எழும் இடைவெளியை நுட்பமாக பதிவு செய்கிறார். 




விஸ்வநாத் எழுதும் நாவல் குதா பக்ஷ் மாங்கே ராமை ரகசியமாக மல்யுத்த வீரராக பயிற்றுவிக்கும் பகுதியிலிருந்து தொடங்குகிறது. நவாபின் ஆஸ்தான பயில்வானாக பல ஆண்டுகளாக இருந்தவர் தனது சீடன் யூசுப் முகம்மதிடம்  தோல்வி அடைந்தார். மாங்கே ராமை தயார் செய்வதன் வழி அவனை வென்றுவிட வேண்டும் எனும் முனைப்பு வெளிப்படுகிறது. அதேசமயம் மாங்கே ராம் தோற்றுவிடுவானோ எனும் அச்சமும் இருக்கிறது. ஆகவே அவனை போட்டிகளுக்கு அனுப்பாமல் பதுக்கி வைத்திருக்கிறார். போட்டியில் தோப்புக்கரணமும் தண்டாலும் தான் வழிமுறை. யார் இறுதிவரை தொடர்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். யூசுப்பை மாங்கே ராம் வெற்றிகொள்கிறான். தோல்வி அடைந்த யூசுப்  மாங்கே ராமின் ஆசிரியராக ஆகிறான். வெற்றி என்பது எதிராளியின் வீழ்ச்சி அல்ல, மாறாக நீட்சி எனும் பார்வையை முன்வைக்கிறது. 


நவாபிற்கு கடன் கொடுத்த லாலா மோதிசந்த் மல்யுத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவன். அவனோடு நவாபின் ஆஸ்தான பயில்வான் மாங்கே ராம் மோதுவதாக முடிவாகிறது.  மாங்கே ராம் தோற்க வேண்டும் என்பதே நவாபின் விருப்பமாக இருந்தது. அதன்வழி கடன் சுமை கொஞ்சம் குறையும் என்று நம்பினார். ஆனால் நோஞ்சானாக இருந்த லாலாவை ஒரே அடியில் வீழ்த்துகிறான். நவாப்புகளும் மன்னர்களும் பின்னுக்கு சென்று புதிய அதிகார மையமாக வணிகர்கள் உருவாகிவரும் சித்திரத்தை நாவல் அளிக்கிறது. வென்றவன் தோற்றவனை தன்னோடு வருமாறு டெல்லிக்கு அழைக்கிறான்.  மல்யுத்த வீரன் மெல்ல மெல்ல லாலாவின் அணுக்க வேலைக்காரனாக மாறிப் போகிறான். அவனது வித்தைக்கு நகரத்தில் எந்த பொருளும் இல்லை. மல்யுத்த வீரனாக அனுமன் அவனுக்கு வலிமையின் சின்னமாக இருந்தார். ஆனால் லாலாவிடம்  சேர்ந்த பிறகு சேவகத்தின், பக்தியின், பணிவின் சின்னமாக ஆகிறார். லாலா மற்றும் மாங்கே ராம் குடும்பங்களின் கதைதான் நாவல். 


லாலாவிற்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தினாநாத். லாலாவின் வணிகத்திற்கு சரியான வாரிசு. இளையவன் திவான்சந்த் தத்தளிக்கும் கவியுள்ளம் கொண்டவன். லாலாவின் மகள் முக்கியமான பாத்திரமாக துலங்கவில்லை. லாலாவிற்கும் லஜ்வந்தி எனும் பெண்னின் வழி திருமண உறவிற்கு வெளியே மக்கன்லால் என்றொரு மகனும் பிறக்கிறான். மக்கன்லால் தந்தையின்  மீது அன்பு கொண்டவனாக வளர்கிறான்.  காலப்போக்கில் தந்தை குறித்து உண்மையை அறியும்போது அவரை வெறுக்கிறான். மார்க்சியம் அவனை ஈர்க்கிறது. ஆனால் களத்தில் போராடும் அளவு துணிவும் அவனிடம் இல்லை. திவான்சந்த் ராம சரித மானசில் தன்னை தொலைக்கிறான். அவனது குருவின் அழைப்பிற்கு செவிமடுத்து மகனையும் மனைவியையும் விட்டுவிட்டு காசிக்கு செல்பவன் தந்தையின் மரணப்படுக்கையின் போது துளசிபிரேம்ஜி எனும் துறவியாக திரும்புகிறான். தன் தாயின் மரணத்திற்கு தம்பி தான் காரணம் எனும் உணர்வு அண்ணனுக்கு கடைசிவரை  இருந்தது. தம்பி திவானுக்கோ மூர்ச்சை அடைந்து கையறு நிலையில் கிடக்கும் லக்ஷ்மணனாக தன்னை கற்பனை செய்து கொள்வதை நிறுத்த முடியவில்லை. ராமன் அவனை ஏந்திக் கொள்ள வேண்டும் எனும் ஏக்கம் பீடித்திருந்தது அவனுக்கு. உறவுகளின் ஊடாட்டம் தான் இந்த நாவல். சகோதரர்களுக்கு இடையே பகைமை, சகோதரனின் மனைவி ஸ்வர்ணலதாவிற்கும் திவான்சந்துக்கும் இடையேயான அன்பும் வஞ்சமும் கலந்த உறவு, நிறைவேற வாய்ப்பே இல்லாத கமலாவின் காதல், திவான்சந்தின் இங்கிலாந்து வாசத்தில் அவனோடு உடனிருக்கும் ஆல்ப்ரெட் என பல சரடுகள் கொண்டதாக நாவல் விரிகிறது. 


மாங்கே ராமின் கதை இன்னொரு சரடு. முதலாளியின் மீதான விசுவாசம் என்பதை தவிர அவன் விழுவது ஒரு படுகுழியில். சதேயி எனும் பணிப்பெண்ணுடன் சேர்ந்து கொள்கிறான். அதிகாரத்தில் திளைக்கிறான். தன்னை அவமானப்படுத்திய கணேஷியின் பதின்வயது மகளை கர்ப்பமாக்கி வஞ்சம்  தீர்க்கிறான். முதிர்ந்து பலவீனமான பிறகு சொந்த மருமகளிடம் தவறாக நடக்கிறான். வெளியூருக்கு சென்று சொத்து  குடும்பத்தை உயர்த்தியவர் என்பதால் அவரது மகன் பர்சாதிக்கு தந்தை மாங்கே ராம் ஒரு நாயகனாக தான் தெரிகிறான். தந்தைக்கு பிறகு குடும்பத்துடன் டெல்லிக்கு  செல்கிறான். ஆனால் அவனால் தந்தையின் இடத்தை ஈட்ட முடியவில்லை. 


இந்திய மைய நிலத்தின் ராம பக்தி நமக்கு சற்று அந்நியமானது. அங்கு ராமன் அடைந்திருக்கும் செல்வாக்கு துளசிதாசரால் உருவாக்கி அளிக்கப்பட்டது. வான்மீகி ராமாயணத்தை மக்கள் மொழியான அவுதி மொழியில் யாத்தவர் துளசிதாசர். ராமனை காந்தி தனக்கானவராக  கண்டடைந்தது கூட துளசிதாசர் வழியாகத்தான். சீர்ஷேந்து முகோபாத்யாய ‘ராமன் வனவாசம் சென்ற வழி’ நூலில் துளசிதாஸரின் செல்வாக்கு குறித்து அளிக்கும் சித்திரமும் கூட அவர் அங்கு எப்படி சாமானிய மக்களின் கதைகளில் ஊடுருவியிருக்கிறார் என்பதை காட்டுவதாக இருக்கிறது. சதேயி, லஜ்வந்தி என பலரும் இளமையில் தங்களது எல்லைகளை மீறியவர்கள் ராமனிடம் முழுமையாக சரணடைகிறார்கள்.   மானஸின் வரிகள், ஆங்காங்கு மேற்கோள் காட்டப்படும் கவிதைகள் இந்த நாவலுக்கு அடர்த்தியை சேர்க்கிறது.    


உதாரணமாக இரண்டு கவிதைகளை சுட்ட வேண்டும். விஸ்வநாத் மேற்கோள் காட்டும்  முநீர் நியாஜின் கவிதை, திவான்சந்த் வாசிக்கும் மாத்யூ அர்னால்டின் கவிதை.. 


நான் எல்லாவற்றையும் மிகத் தாமதமாக செய்கிறேன் 

முக்கியமாகச் சொல்ல வேண்டிய ஒன்றை, காப்பாற்ற வேண்டிய ஒரு சத்தியத்தை 

ஒருவரை அனுப்பி வைப்பதில் அவரைத் திரும்ப அழைத்துக் கொள்வதில் 

நான் எப்போதுமே தாமதமாயிருக்கிறேன் 

ஒரு நண்பனுக்கு உதவுவதில், அவனுக்கு தைரியம் சொல்வதில் 

தொன்மையான பாதைகளில் ஒருவரைச் சந்திக்க செல்வதில் 

நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன் 

பருவ மாற்றங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைவதில் 

ஒருவரை நினைப்பதில் ஒருவரை மறப்பதில் 

நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன் 

மரணிப்பதற்கு முன் ஒருவரது துயரங்களிலிருந்து அவரைக் காப்பதில் 

அவர்கள் நினைத்துக் கொண்டிருந்ததல்ல உண்மை எனச் சொல்வதில் 

நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்        


மாத்யூ அர்னால்டின் கவிதை தனக்குள் ஆழ்வதற்கு திவான்சந்தை தூண்டுகிறது. அப்படித்தான் அவன் துளசிதாசரையும், ராமனையும் கொள்கிறான்.  


இப்படியான உன் வருகைகள் ஒருபோதும் பலனளிப்பதில்லை 

இப்போது நீ வா, நிஜமாகவே வா.

எனது கூந்தலை விலக்கி என் நெற்றியில் முத்தமிடு

என் கண்ணா- நீ ஏன் துயருறுகிறாய் எனச் சொல்!   


சுபத்ரா செறிவாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆங்காங்கு களையப்பட கூடிய சிற்சில  கவனப் பிழைகள் உள்ளன என்றாலும் அவை வாசிப்பிற்கு தடையாக மாறவில்லை. சொல்லாதே காட்டு எனும் பொது இலக்கிய விதிக்கு மாறாக,   நாவல் ‘சொல்லப்படுகிறது’  என்பதே இந்நாவலின் எல்லை. படைப்பின் மீது படிந்திருக்கும் எதிர்மறை போலித்தனங்களை விட்டொழித்து வாழ்வின் மீதும், படைப்பின் மீதும் நன்னம்பிக்கையை மீட்டெடுத்தல் என்பதே நாவலின் மையமாக உணர்ந்து கொண்டேன். நாவலின் பல தருணங்கள், கதாபாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். விஸ்வநாத் கொள்ளும் அவநம்பிக்கைக்கு பதில் அவர் எழுதும் நாவலில் கிடைப்பதாக எனக்கு தோன்றியது. வாழ்வை பரிவுடன், கருணையுடன், நன்றியுடன், அன்புடன் அணுகி நோக்க முயல்கிறது. மக்கன்லாலுக்கும் உருது ஆசிரியருக்கும் இடையே நிகழும் உரையாடலின் ஒரு பகுதி இது (நாவலினுடைய ஓட்டத்திலிருந்து சற்றே விலகிய பகுதியாக தோன்றியது).  “உண்மையில், செயலே பல சமயங்களில் சிந்தனைக்கும் உணர்வுகளுக்கும் எதிரியாக இருக்கிறது. செயலில் இறங்க விரும்புகிற ஒரு மனிதன் அதற்கு முன்னதாக தனது மூளையை அமைதிப்படுத்த வேண்டும். இல்லையா? படகில் இருந்தபடி பீரங்கியை செலுத்த முடியுமா? சிந்திக்கிற மனிதன் ஒரு படகைப் போன்றவன். இல்லையா?உறுதியாக நின்று பீரங்கியின் அதிர்வை தாங்க முடியாதபடி எப்போதும் அசைந்து கொண்டே இருக்கின்ற ஒரு  படகு. செயல் வீரர்கள் செயலில் இறங்கும் முன் தன்னைத்தான் கேள்விக் கேட்டுக் கொள்வதை நிறுத்தியே ஆகவேண்டும். ஆனால் எண்ணங்களின் மனிதன், நிச்சயங்களின் ஆபத்து குறித்து அறிதலும் அச்சமும் உடையவனாய் இருப்பதால் அவனால் கேள்வி கேட்பதை நிறுத்தமுடியவில்லை. ஆனால் செயல் வீரனாய் இருக்க முடியவில்லை என்பதற்காக உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளத் தேவையில்லை.” 



  •  

அத்தைக்கு மரணமில்லை - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு




அத்தைக்கு மரணமில்லை ஒரு இந்தியத்தன்மை கொண்ட வங்காள குறு நாவல். மறுபிறப்பை இயல்பாக சொல்லிச்செல்கிறது என்பதையே இந்தியத்தன்மை என்று குறிப்பிட காரணம். மூன்று தலைமுறை பெண்களின் வாழ்வை பேசும் குறுநாவல். ராமன் வனவாசம் போன வழி படித்ததும் சீர்ஷேந்து மனதிற்கு அணுக்கமான எழுத்தாளராக தோன்றினார். அவருடைய சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். அலட்டலோ அலங்காரமோ போலித்தனமோ இல்லாத மொழி. 


ரஷோமாயி 12 வயதில் விதவையாகி போனவர். குடும்பத்தில் எல்லோருக்கும்   அத்தையம்மா. சீரழிந்து கொண்டிருக்கும் ஜமீனை கட்டி ஆள்பவள். எல்லோரிடமும் சிடுசிடுப்பவள். வீட்டின் இரண்டாம் தளத்தை விட்டு வெளியே வராதவள். இளம் மருமகளாக அங்கு வந்து சேரும் ஏழை குடும்ப பெண் லதா. மூழ்கும் கப்பலை மீட்கும் மாலுமி. லதாவிற்கு உறுதுணையாக அவளது மாமியார் இருக்கிறார். தொடக்கத்தில் எதிரியாக பாவிக்கும் ஓரகத்தியும் கூட அவளை இயல்பாக ஏற்றுக் கொள்கிறாள்.  குடும்பத்தின் ஒரே வாரிசு, லதாவின் மகள் வசந்தா. ஒரு அறையில் ஒடுங்கிக்கொண்டு வாழ்வை இழந்த அத்தையம்மா, விடுதலையை ஓரளவாவது நுகரும் இன்னொரு தலைமுறையின் வசந்தாவாக மறுபிறப்பு எடுக்கிறாள். அத்தையம்மாவிற்கு எல்லாமுமாக இருந்த நகைப்பெட்டியை பேயாக ஆன பிறகும் பாதுகாக்கிறாள். வசந்தாவிற்கு அந்த நகைகள் ஒரு பொருட்டே அல்ல எனும்போது குறுநாவல் முழுமை அடைகிறது. இந்திய பெண்களின் பொருளியல் தன்னிறைவை நோக்கிய பயணம் சமூக சுதந்திரத்துடன் எப்படி பிணைந்திருக்கிறது என்பதை எளிமையாக உணர்த்துகிறது இந்த குறுநாவல். 


எனக்கு இந்த நாவலின் நாயகி என்றால் அது லதா தான். ஒடுக்கப்பட்ட அத்தையம்மாவின் தலைமுறைக்கும் தன் வாழ்வின் செல்திசையை தீர்மானிக்கும் வசந்தாவிற்கும் இடையே இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியது லதா. லதாவும் லதாவின் தலைமுறை பெண்களும். நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். தான் மட்டும் வளமாக வாழ்ந்துவிட முடியாது எனும் புரிதல் உள்ளவள். சூழ இருப்பவர்கள் துயரில் தவிக்கும்போது தன்னால் மட்டும் மார்கிஸ்ச்சியுடன் வாழ முடியாது என்று நம்புபவள்.    பொறுப்புணர்வுக்கும் சுதந்திரத்திற்கும் இடையேயான உறவை காட்டுபவள். ஆவியாகி அத்தையம்மா அவளை சுதந்திரத்தின் கனியை ருசிக்க சொல்லி தூண்டுகிறாள். ஊசலாட்டங்களை மனதிடத்துடன் கடக்கிறாள். வீட்டிலிருந்து வெளியே காலடி வைத்து குடும்பத்தை நிமிர்த்துபவள். வீட்டைவிட்டு வெளியே வேலைக்கு வந்த நடுத்தர வர்க்கத்து முதல் தலைமுறை பெண்களை இந்த சமூகம் ஒழுக்கத்தை காட்டி சிறுமை செய்தது. ஒழுக்கமல்ல அங்கே சிக்கல். மாறாக மாறிவரும் அதிகார சமநிலைக்கு எதிரான முரண்டுதான் அது.  லதாவினுடைய உழைப்பின் கனியைத்தான் வசந்தா இயல்பாக ருசிக்கிறாள். 


அத்தையம்மாவிற்கு வாழ்வு வெறும் கசப்பு. அவள் இருக்கும்போதும் இறந்த பிறகும் எல்லோரையும் கரித்து கொட்டிக்கொண்டே இருக்கிறாள். சாவு, சாவு, சாவு என்று திட்டிக்கொண்டே இருக்கிறாள். வாழ்வின் மீது அவளுக்கு தீராத கோபம்.  வாழ்பவர்கள் மீதும், வாழ்க்கையை துய்ப்பர்வகள் மீதும் அவளுக்கு ஓயாத எரிச்சல். சமைத்து சாப்பிடுகிறார்க என்றால் அதை எப்படியாவது குலைத்துவிடுவாள். வசந்தாவாக மறுபிறப்பெடுக்கும் அத்தையம்மா அறிமுகம் ஆவதே கல்லூரி சுற்றுலாவில் பெரிய நிலவை காணும் தருணத்தில்தான். அத்தையம்மாவை முடக்கி வைத்த இரண்டாம் மாடி அறைகள் அவளுக்கு விசாலமாக இருக்கிறது. வசந்தாவிற்கென ஒரு காதல் காத்திருக்கிறது.  


சமகாலத்தில் நம்பி வாசிக்கும் மொழிபெயர்பாளர்கள் எனும் எனது சிறிய பட்டியலில் தி.அ. ஸ்ரீனிவாசனுக்கு இடமுண்டு. மொழியாக்கமும் சரி, மொழியாக்க தேர்வுகளும் சரி தொடர்ந்து சிறப்பாக உள்ளன.        





  •  

ராமன் வனவாசம் போன வழி - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு

 


வோல்டேரின் மைக்ரோமெகாஸ் கதையில் மைக்ரோமேகாசும் அவனது நண்பனும் வேற்று கிரக வாசிகள். மைக்ரோமெகாசின் கணுக்காலை நனைக்கும் ஆழம் தான்  பசிபிக் பெருங்கடல். திமிங்கிலங்கள் ஏதோ சிறு புழுக்கள் போல நீரில் நெளியும். மனிதர்கள் அவனோடு உரையாடுவார்கள். உலகின் அற்பத்தனங்களை, மனிதர்களின் மலினங்களை சித்தரிக்க அவனை காட்டிலும் பன்மடங்கு ஆற்றல்மிக்க கற்பனையும் லட்சியமும் உரைகல்லாக கொண்டு வந்து ஒப்பிடுகிறோம். கால- வெளி தொலைவு எல்லாவற்றையும் அற்பமாக காட்டுகிறது. 


சீர்ஷேந்து முகோபாத்யாய் ராமன் வனவாசம் சென்ற தடத்தை பின்தொடர்ந்து பயணிக்க முடிவெடுக்கிறார். புராண காலத்து ராமனை அளவுகோலாக கொண்டு நிகழ்கால இந்தியாவை மதிப்பிடுகிறார். நவீன அறிவுஜீவிக்கு புண்ணிய தலங்கள் ஒரே சமயத்தில் மதிப்பிற்குரியதாகவும் ஒவ்வாமை அளிப்பதாகவும் இருக்கிறது. காந்தி வாரணாசிக்கு சென்ற போது அதன் சீர்கேட்டால் சீண்டப்பட்டார். சீர்ஷேந்து 1981 ல் அயோத்தியும் பிரயாக்கும் சென்றிருக்க வேண்டும். நான் 2010 ல் காசிக்கு சென்றிருக்கிறேன். நம் புனித தலங்கள் ஏன் இப்படி இருக்கிறது என்றொரு கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. நூலில் அயோத்தியை விக்கிரமாதித்தன் கண்டடைந்த கதையை சுருக்கமாக சொல்கிறார். கருப்பு குதிரையில் ஆற்றில் இறங்கும் ஒருவன் மறுகரையில் ஏறும்போது வெள்ளை குதிரையாக ஆவதை அரசன் நோக்குகிறான். அவன் பிரயாக்ராஜன். பிரயாகையின் கடவுள். பாவங்களை கழுவ வரும் மக்களின் பாவங்களை ஏற்று அவன் உடல் கறுத்துவிடும். அவற்றை நீக்க சரயுவில் முங்கி எழுவதாக சொல்கிறான். காசியையும் கங்கையையும் காண தூய்மை அழுக்கு என்பதையெல்லாம் கடந்த வேறொரு கண் நமக்கு வேண்டும். ’அது அப்படித்தான் இருக்கும். நமக்கு தெரிந்த  ஒரே பதில். ஒரே சமாதானம். ராமன் வனவாசம் போன பாதையில் போகப்போக நான் ராமனின் மாபெரும் தோல்வி‌யையும் ராட்சதர்களின் வெற்றியையும்தான் கண்டேன்’என்கிறார். கணேஷ் தேவியின் மகாபாரத நூலில் சாந்தமே அதன் முக்கிய ரசம் என சொன்னதை பொருத்திக்கொள்கிறேன். நாம் எல்லாவற்றையும் ஏற்கவும் அனுசரிக்கவும் பழகியுள்ளோம். சித்திரகூடத்தில் குரங்குகளும் பிச்சைகாரர்களும் தொல்லை செய்கிறார்கள்.   குரங்குகள் சேட்டை செய்வதால் அவற்றை தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் பிச்சைக்காரர்கள் விஷயம் அப்படியில்லை,  ‘முதலாவது அவர்கள் மனிதர்கள். இரண்டாவது அவர்கள் நடத்தையில் பார்த்து மகிழ எதுவுமில்லை’ என்கிறார். ராமனிடம் உன் தேசம் என்னவாக மாறியிருக்கிறது பார் என முறையிடுகிறார். ‘சாவிலும் துக்கத்திலும் வேதனையிலும் கஷ்டத்திலும் பஞ்சத்திலும் பெருவெள்ளத்திலும் இவர்கள் பக்கம் இருப்பதெல்லாம் ராமரோ அல்லது திருப்பதி வேங்கடாசலபதியோ அல்லது காளியோ அல்லது துர்க்கையோதான். பகுத்தறிவு இவர்களுக்கு கட்டுப்படியாகாது. அது இவர்களுக்கு பொறுப்பற்ற ஆடம்பரம்’ என்பது அவரது சொற்கள். 

   

பாபரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பான அயோத்தியையும், எண்பதுகளின் பிரயாகையும், சித்திரகூடத்தையும் சித்தரிக்கிறார். வால்மீகி     தனது கவிதையில் சிருஷ்டித்த மரங்கள் அடர்த்த செறிவான காடு அங்கில்லை, வெறும் மொட்டை பாறைகள் சூழ இருக்கும் அரை பாலை தான்   எஞ்சியுள்ளது.  துளசிதாசரின் ராமாயணம், இந்தியின் நடைமுறை பயன் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. வால்மீகி சம்பல் கொள்ளைக்காரன் என்பதால் அவனுக்கு பாதை  எல்லாம் நன்றாக தெரியும் என்கிறார். பெரும்பாலான கடவுள்கள் மக்களிடமிருந்து தோன்றியவர்கள். ஆனால்  ராமன் புத்தர் இருவரும் இளவரசர்கள். ஆகவே அவர்கள் மக்களை அறிய வேண்டும் என்பதற்காக அரண்மனையை விட்டு வெளியேற வேண்டி இருந்தது என்பது முக்கியமான அவதானிப்பு. ‘உண்மையில் நாம் எல்லோருமே அன்னியர்கள்தான். இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த ஞான திருஷ்டிக் கைவரப் பெற்றதால்தான் அறவுணர்வு இப்போது தலை தூக்குவதே இல்லை’ என்று எழுதுகிறார். திரளில் இருந்து தன்னை அந்நியமாக உணர்கிறார். இந்த அந்நியத்தன்மை கரையாமல், திரளோடு திரளாக ஆகாமல் இந்தியாவின் ஆன்மாவை உணர முடியாது.  தன்னிலும் தாழ்வான நிலையில் இருக்கும் ரிக்ஷாக்காரரிடமும் குடிசையில் உணவு  வழங்குபவரிடமும் அற சீற்றத்துடன் நடந்துகொள்கிறார். காசு  கூட கேட்கும் ரிக்ஷா காரரிடம் மனித ரத்தம் பருகுபவர்கள் என்று சொல்லி அவரை அழவைக்கிறார். சீர்ஷேந்து அவரை தேற்ற வேண்டியிருக்கிறது. நமது அற சீற்றம் கூட மிகுந்த கவனத்துடன் வெளிப்படுகிறது. ராமராஜ்ஜியம் எனும் கனவுக்கும் நவீன இந்தியா எனும்  நிதர்சனத்திற்கும் இடையே அல்லலுறும் ஒரு ஆன்மாதான் சீர்ஷேந்து. ‘உத்தரபிரதேசத்து மக்கள் சாகவில்லை அவ்வளவுதான்’ என அவர்களின் நிலை கண்டு கொந்தளிக்கிறா்ர். ‘மனித குலத்தின் மீது எனது நேசம் அதிகரிக்கும் தோறும் தனித்த மனிதன் மீதான என் நேசம் குறைந்தபடி இருக்கிறது’ எனும் தாஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றை நினைத்து கொண்டேன். கூடவே “நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது” எனும் காந்தியின் சொற்களும் நினைவில் எழுந்தன. 


  •  

இத்தா - கீரனூர் ஜாகிர்ராஜா- வாசிப்பு குறிப்பு

 









நடைமுறை தேவை கருதி உருவாக்கப்பட்ட விதிமுறை சடங்காக ஆகும்போது காலத்தை கடந்து விடுகிறது. அது காலப்பொருத்தமின்மையால் தனிமனித வாழ்வில் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. சடங்குகள் மனித வாழ்வுக்கு பொருளளிப்பவை. ஆனால் காலந்தோறும் அவை கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும். பொது நன்மைக்கு ஊறுவிளைவிக்காத தனியுரிமைகளை மனிதகுலம் படிப்படியாக அங்கீகரித்து ஏற்றுவருவதே இயல்பு. 


கீரனூர் ஜாகிர் ராஜா எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். சமீபத்தில் அவரது ‘இத்தா’ நாவலை  வாசித்து முடித்தேன். ‘இத்தா’ என்பது கணவர் இறந்துவிட்டாலோ பிரிந்துவிட்டாலோ அதற்கு பின் முஸ்லீம் பெண்கள் ஈடுபாடும் சடங்கு . தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும். மறுமணம் புரிந்துகொள்வதற்கு முன் கர்ப்பம் தரித்திருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்கான ஒரு ஏற்பாடு. ஜாகிரின் நாவல் கோவை கலவரத்திற்கு பிந்தைய காலகட்டத்தை பேசுகிறது. திருமண நாளன்று ஆதரவற்ற பெண்ணான மரியத்தின் கணவன் நியாஸ் காவலர்களால் கைது செய்யப்படுகிறான். முஸ்லீம் என்பதாலேயே விசாரணையின்றி பலகாலம் அடைத்து வைக்கப்பட்டதை பற்றி சொல்லும் அதேவேளையில் உள்ளுக்குள்ளே புழங்கிய தீவிர போக்கையும் லேசாக கோடிட்டு காட்டுகிறது. நியாஸ் நிலை என்ன என்பது தெரியவில்லை. மரியம் நியாசின் பெற்றோர்களோடு சேர்ந்து நியாசின் வருகைக்காக காத்திருக்கிறாள். ஒரு அரசியல் சுழலுக்குள் சிக்கிய தனி மனுஷியின் கதை தான் இத்தா. ஜாகிரின் பெண் பாத்திரங்கள் பொதுவாக எப்போதுமே  மிகவும் வலுவானவை. மரியமும் அப்படியானவள். சொந்த மகனிடமிருந்து மாமனார் தலாக் பெற்று தருகிறார். ஆனாலும் ஜமாஅத் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மார்க்க நூல்களை துணைக்கு கொண்டு சமூக சேவகராக பஷீரையும் மாமனாரையும் எதிர்கொள்கிறாள். “எழுத்தாளரா  இருந்தாலும் சமூக சேவகராகவே  இருந்தாலும் ஆம்பளைங்க தந்திரசாலிங்க, சந்தர்ப்பவாதிங்க” என்று தான் மரியாதை வைத்திருக்கும் மாஷேவை விமர்சிக்கிறாள்.சிறுமியாக மரியம் ரஸுலுல்லாவை கனவில் சந்திக்கும் பகுதி முக்கியமானது. அவளுக்கு அவரிடம் சொல்வதற்கு ஏகப்பட்ட புகார்கள் இருந்தன. பெரியவளான பின் அவளால் கனவில்  கூட நெருங்க முடியவில்லை.  மரியம்மின் மாமியாரான ஆமினா பீவி மருமகளை விட முடியாமல் தவிக்கிறாள். மகன் மீண்டு விடுவான் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். மரியம்மின் நிலைக்காக மனமிரங்கவும் செய்கிறாள். இரண்டு மன்சூர்கள், இரண்டு நியாஸ்கள், இரண்டு காதர்கள் உண்டு. திரைக்கதையாக எழுதப்பட்டு நாவலாக மாற்றமடைந்து படைப்பு என்று ஜாகிர் குறிப்பிடுகிறார். அதற்கே உரிய சில எல்லைகளும் குழப்பங்களும் உண்டு. 1998 க்கு பிறகு நான்கு வருடங்களில் மரியம் இத்தா இருக்கிறாளா எட்டு  வருடங்களுக்கு பிறகு இருக்கிறாளா என்றொரு குழப்பம் ஏற்படுகிறது. 


ஜாகிர் எப்போதும் தனது கதைகளின் ஊடாக அமைப்புகளின் அதிகாரத்தை தனி மனிதரின் கோணத்திலிருந்து கேள்விக்குட்படுத்துபவர். ‘இத்தாவும்’ இதையே செய்கிறது. தமிழ் இஸ்லாம் எனும் அடையாளத்தை அவரது கதைகள் எப்போதும் முன்வைக்கும். இந்நாவலில் அத்தகைய உரையாடல்கள் உண்டு. மரியம்மின் தெங்குவிளை பகுதி பால்ய காலத்தை உயிர்ப்புடன் சித்தரிக்கிறது.


  •  

எல்லாம் செயல் கூடும்

Dr Satya, Dr Bhumi, Thirunavukarasu, Chitran, Suneel, Manasa Bottom row- Prabahakaran Krishnammal Sabarmathi Sudhir Chandran 
 சிபியின் நடைபயண நாட்குறிப்புகளை வாசித்தபோது இதுவரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை சந்திக்காதது  பெரும் பிழை எனும் உணர்வு வலுபட்டது. இன்ன காரணம் என்றில்லை. சுணக்கம், அல்லது முனைப்பின்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட்டமிடல் ஏதுமின்றி பிப்ரவரி 2 ஆம் தேதி அவரை நேரில் சென்று சந்திப்பது என்று முடிவு செய்து கொண்டேன். குக்கூ சிவராஜிடம் கிருஷ்ணம்மாள் அங்கு இருப்பார்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு ஞாயிறு மதியம் புறப்பட்டோம். மனைவி மக்களுடன் சென்றேன். உடன் எழுத்தாளர்கள் சித்ரனும் பிரபாகரனும் வந்தார்கள். குழந்தைகளுக்கு இந்த நூறு வயது பாட்டியை காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். காந்தியை கண்ட விழிகளை அவர்களும் காண வேண்டும். காந்தியை கண்ட விழிகள் இந்த தளிர்களையும் காண வேண்டும். எத்தனை பெரிய காலமாற்றத்தில் சாட்சியாக அவர் நம்முன் வாழ்கிறார். இங்க தான் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் இரண்டு வாரம் தங்கினார் என்றொரு அறையை கைகாட்டினார். காமராஜர் இங்கயே தான் இருப்பார். எங்க வீட்டுக்காரர் இருந்தா வெளிலயே இருக்கிறதை எல்லாம் ஊதி முடிச்சுட்டு உள்ளே வருவார் என்று சொன்னார். வயதுக்குரிய உடல் மாற்றங்கள். மதியம் குட்டி தூக்கத்திற்கு பின் எங்களை காண வந்தார். 




காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே உள்ள ஊழியரகத்தில் தான் அவரை சந்தித்த்தோம். க்ரிஷ்ணாம்மாளின் சகோதரி மகனான இளங்கோ எங்களுக்கு உதவினார். பிள்ளைகள் வெளியே படிப்பதாகவும். அவர் பத்தாண்டுகளாக இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். கென்யா நாட்டை சேர்ந்த இருவர் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்கள். சர்வோதய தினத்திற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நடன வகுப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. சபர்மதி அவர்களுடன் சென்று விட்டாள். மலைகள் சூழ அழகிய இடம். உண்டு முடித்து ஓய்வெடுக்கும் நேரம். சற்று நேரம் கூடத்தில் அமர்ந்திருந்தோம். மெல்ல எங்களை நோக்கி நடந்து வந்தார். வயதிற்குரிய நினைவு தடுமாற்றம், குரல் தடுமாற்றத்தை கழித்துவிட்டால் திடமாக உள்ளார். கத்தி பேச வேண்டியிருக்கவில்லை. தொலைவில் நடந்து செல்லும் பெண்களை சரியாக பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பார்வை நன்றாகவே இருந்தது. கூடத்தில் ஜெகந்நாதனின் படம் ஒரு பக்கமும் டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரன் அவர்களின் படம் இன்னொரு பக்கமும் மாட்டப்பட்டு இருந்தது. இன்னும் நிறைய படங்கள் மாட்டப்படுவதற்காக அங்கு இருந்தன. “இந்த இடம் ஊழியரகம்… வேலை செய்யிறவங்க வந்து தங்குறதுக்குன்னு உள்ள இடம். போலீஸ் தேடிக்கிட்டு இருந்த இங்க வந்துருவாங்க” என்று சிரித்தார்.    கிளம்புவதற்கு முன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்  வாழ்க்கை  வரலாறு நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலை வாசித்திருந்தேன். பிரிட்டிஷ் காவலர்கள், சுதந்திர இந்தியாவின் காவலர்கள் என எல்லோரும் அவரை விரட்டி இருக்கிறார்கள். பலமுறை பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறை சென்றிருக்கிறார்கள். அடிப்படை மனிதநேயம் இன்றி நடத்தப்பட்டிருக்கிறார்கள். கொள்கைக்காக சிறை என்பதை பெருமையாக எண்ணிய தலைமுறையின் இறுதி கன்னி. பண்ணையார்கள், கம்யூனிஸ்டுகள், காவலர்கள் என எல்லோருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டுள்ளார்கள். எதிர்ப்பு என்றால் வெறும் கருத்து பூசல் இல்லை. உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம். வினோபா தமிழகம் வருவதற்கு முன் பூதான பயணம் குறித்து ஏற்பாடுகளை செய்வதற்கு பயணிக்கும் போது ஒரு கிராமத்தில் அந்த ஊர் நிலக்கிழார் நன்கு உபசரித்து கைக்குழந்தையுடன் வரும் கிருஷ்ணம்மாளை தங்க வைக்கிறார். அன்றைய தினக்கூலி கேட்டு வரும் வேலையாட்களுக்கு விளக்கு வைத்துவிட்டதால் பணம் கொடுத்தால் லட்சுமி போய்விடும் எனும் காரணத்தை கூறி பண்ணையார் கூலி வழங்க மறுக்கிறார். விருந்தாளியாக சென்ற இடத்தில நமக்கேன் பொல்லாப்பு என ஒதுங்கி நிற்காமல் பண்ணையாரை கண்டிக்கிறார். எங்கள் வீட்டில் இருந்து கொண்டே எங்களை கண்டிப்பீர்களா என்று சொல்லி பெட்டி படுக்கைகளை தூக்கி தெருவில் வீசுகிறார்கள். இரவெல்லாம் கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் படுத்துறங்கினார். நீதிக்காக பிரச்சாரம் செய்வது சுலபம். நீதிமான்களாக காட்டிக்கொள்வது அதைவிட சுலபம். களத்தில் கண்முன் தெரியும் அநீதிக்கு ஆற அமர எதிர்வினை ஆற்றாமல் உடனடியாக ஆற்றுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும். மடத்தின் விருந்தாளியாக தங்கியிருந்தபோது சீனாவை போல் மக்களாக வன்முறையில் இறங்கி பிடுங்கிக்கொள்வதற்கு முன் மடத்தின் நிலத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்லப்போக மடத்தினர் கிருஷ்ணம்மாளை வெளியேற சொல்கிறார்கள். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்ததை பற்றி எங்களிடம் சொன்னார். வீட்டிற்கே சென்று நிலமற்ற ஏழை பெண்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். திருவாரூரில் அம்மனுக்கு அவல் பாயாசத்திற்கு என 250 ஏக்கர் எழுதி வைத்துள்ளார்கள். அதை பிரித்து கொடுக்க வேண்டும். அம்மன் அடுப்பில் பாயாசம் வைக்க மாட்டாள். அடுப்பெரிய வேலை பார்க்கும் பெண்களுக்கு அந்த நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். “அரசு எல்லாம் கொடுத்துருச்சு.. நான் இப்ப திருவாரூருக்கு போகணும், கொஞ்சம் வெய்யில் குறையட்டும்னு பாக்குறேன். ஒரு ரெண்டு நாளுல போயி எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்திருவேன்” என்றார். பழைய நினைவுகளை இப்போது சொல்கிறாரா, அல்லது உண்மையிலேயே செல்ல வேண்டும் என சொல்கிறாரா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை. 

ஜெகந்நாதன் உழுபவர்களுக்கே நிலம் எனும்  நம்பியவர். அதுவே இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கும் என்று ஆழமாக நம்பினார். வினோபாவுடன் பூதானத்தில் நெருங்கி வேலை செய்தாலும் அவருடைய வழிமுறைகள் மீது விமர்சனம் இருக்கிறது. சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான முதல் சத்தியாகிரகம் செய்யும்போது காங்கிரஸ் காரர்களே ஜெகந்நாதனை எதிர்க்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சரி, சொந்த அரசுக்கு எதிராகவே சத்தியாகிரகம் செய்வதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் தவறென்று இருந்தால் சத்தியாகிரகத்தை கைக்கொள்வேன் என்கிறார். வெவ்வேறு அமைப்புகளுடன் இயைந்து செயல்படுகிறார்கள், அமைப்புகளை தோற்றுவிக்கிறார்கள். அமைப்புகள் முக்கியமானவை, ஆனால் அவற்றுக்கு சில வரையறைகள் உள்ளன.  தாங்கள் அறம் என்று நம்புவதற்கு இடையூறாக தாங்கள் உருவாக்கிய/ பங்கெடுத்த அமைப்புகள் வந்தால் அவற்றை உதறி முன்னகரும் திண்மை பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. அமைப்புகள் அளிக்கும் பாதுகாப்பில் சுருங்கிக்கொள்ள தோன்றும். அமைப்புகளை பாதுகாப்பதை கடமையென கொள்வார்கள். அமைப்புகளின் நோக்கமே முக்கியம். காந்தியின் வழிமுறையும் அதுதான். ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலில் குமரப்பா வினோபாவுடன் பிணக்கு கொள்ளும் இடம் அபாரமான சிறுகதைக்குரிய பகுதி. காந்தியும் அய்யன்காளியும் உரையாடும் மெல்லிய நூல் போன்ற ஒரு பகுதி. குமரப்பா வினோபாவின் உன்னத இலட்சியத்தை புரிந்து கொண்டார். ஆனால் வினோபா நடைமுறைவாதியாக இல்லை எனும் வருத்தம் அவருக்கு உண்டு. பூதானத்தில் தானமாக அளிக்கப்பட பெரும்பகுதி நிலம் தரிசு தான். வினோபாவை பொறுத்தவரை இந்த அளவிற்காவது இந்த மாற்றம் நடக்கிறதே, இப்போது தரிசை கொடுத்தாலும் நாளை நல்ல நிலத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறார். குமரப்பாவோ கையெழுத்து இட்டு சேகரியுங்கள், உடனடியாக  பகிர்ந்து கொடுங்கள், பாசன வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என்கிறார். வினோபா அவை இப்போதைய தமது பணியல்ல என நம்புகிறார். விவசாய நிலத்தில் அறுவடைக்கு பிறகு தீ வைக்கப்படுவதை காட்டி குமரப்பாவிடம் சொல்கிறார்.  “அவர்கள் பழைய நிலத்திற்கு தீ வைக்கிறார்கள். நான் பழைய சமூகத்திற்கு தீ வைக்கிறேன். பழைய சமுதாயத்தின் நடைமுறைக்கு தீ வைக்கிறேன். அடுத்த தலைமுறை வரும் உழத்தொடங்கும். புதிய விதைகளை விதைக்கும். என் பணி தீ வைப்பது தான்.” குமரப்பாவிற்கு இந்த பதில் நிறைவளிக்கவில்லை.  நடைமுறையை கணக்கில் கொள்ளாத பதில் என்கிறார். விருந்துக்கு வாருங்கள் என அழைத்து இலையில் உப்பை மட்டும் பரிமாறுவது போல உள்ளது . இன்று முதலில் உப்பை சாப்பிடுங்கள், நாளைக்கு சாப்பாடு போடுவேன், அடுத்தநாள் சாம்பார் ஊற்றுவேன் என்பதை போல் உள்ளது உங்கள் பேச்சு என விமர்சிக்கிறார். தினமும் காலை (காலை என்று சொல்லலாமா என தெரியவில்லை) 2.30 மணிக்கு எழும் வழக்கத்தை கொண்டிருந்தவர் என்றார் கிருஷ்ணம்மாள். ஆதி சங்கரரின் பாடல்கள் அனைத்தையும் பாராயணம் செய்வது அவர் வழக்கம். பஜ கோவிந்தம் என சொல்லும்போது அரிக்கேன் விளக்கை தூக்கிக்கொண்டு கிருஷ்ணம்மாள் முன்னே நடக்க தொடங்குவார். விடிவெள்ளியை பார்த்து நிற்கும் வினோபா சொல்கிறார். விடிவெள்ளி வந்துவிட்டது சூரியன் விரைவில் உதித்துவிடும் தானே. குமரப்பா கிளம்பும் செய்தி அறிந்து குடிலுக்கு செல்கிறார். அங்கே எல்லா பொருட்களும் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றன. வினோபா அவற்றை ஒழுங்காக பெட்டியில் அடுக்கி தருகிறார். ஒரேயொரு விவசாயி கலப்பையுடன் சென்று கொண்டிருக்கிறான். வினோபாவும் குழுவும் நடக்கும்போது எதிர்திசையில் நடக்கும் விவசாயியின் திசையில் குமரப்பா நடக்கிறார். காந்தியம் என்பது வெறும் ஆன்மிகம் அல்ல. வறட்டு லட்சியவாதம் அல்ல. நடைமுறை பயனை எப்போதும் கணக்கில் கொள்வது. உடனடி விஷயங்களை காலாதீதமான விழுமியங்களை கொண்டு எதிர்கொள்ள முற்படுவது. வினோபா காந்தியை காட்டிலும் மேலான ஆன்மீக வாதியாக இருக்கலாம் ஆனால் அவரால் காந்தியாக ஆக முடியாது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒருவகையில் காந்தியை சாராம்சமாக உள்வாங்கியவர்கள். காந்தி எதை செய்திருப்பாரோ அதையே இவர்களும் பல சமயங்களில்  செய்தார்கள்.   


நூலிலும் நேர்பேச்சிலும் வினோபாவை பற்றிய பல சுவாரசியமான சித்திரங்கள் வருகின்றன. வினோபா நாளுக்கு பதினெட்டு முறை தயிர்சாதமும் தேனும் உண்பார். ஒவ்வொரு முறையும் பகவத் கீதையின் முழு அத்தியாயத்தையும் பாராயணம் செய்துவிட்டு ஒரு கவளத்தை உண்பார். வினோபாவிற்கு உடலநிலை சரியில்லாமல் பீகாரில் இருந்தபோது இந்தியா முழுக்க தலையில் சோற்றையும் பருப்பையும் சுமந்தபடி சர்வோதய ஊழியர்கள் அவரை காண வருகிறார்கள். பிள்ளையை விட்டுவிட்டு வா என்றாலும் பூமி கையை இறுக பற்றிக்கொண்டதால் முதல் சில ஆண்டுகள் இவர்களுடனேயே திரிகிறார். மாணிக்கவாசகரின் அச்சோ பத்திலிருந்து முத்தி நெறி பாடலை வினோபா பாடுவாராம். அப்போது அவருக்கு ஓய்வெடுக்க வேண்டும் என பொருள் என்றார். பேசும்போதெல்லாம் குரலில் தெரிந்த நடுக்கம் பாடும்போது இல்லை. வள்ளலாரின் ‘எல்லாம் செயல் கூடும்’ பாடலை கொஞ்சமும் பிசிறின்றி பாடினார்.


 துறவியாக செல்ல இருந்தவரை பிடித்து கிருஷ்ணம்மாளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். கதர் துண்டை தலையில் அணிவிப்பது தான் திருமணம். ஜெகந்நாதனும் கிறிஸ்து குல ஆசிரமத்தில் சிலர் தங்களது உடல் தேவைகளை முறையற்ற வழியில் தீர்த்துக் கொள்வதை பார்த்து சமூக வாழ்விற்கு நல்ல இல்வாழ்வு தேவை எனும் முடிவுக்கு வருகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை பற்றி சொல்லும்போதெல்லாம், அவர் என்றோ எங்க வீட்டுக்காரர் என்றோ தான் சொல்கிறார். திருமணமான தொடக்கத்தில் தன்னை தனியாக விட்டுவிட்டு அவர் அலைந்தது பற்றிய  குறை இப்போதும் கூட இருப்பதாக பட்டது. கீழே சிமெண்டு தரையை காண்பித்து இது அவரே தன் கையால போட்டது இன்ன வரை இருக்குது என்றார். ஜெகந்நாதன் போன்ற கணக்கற்ற தொண்டர்கள் தன்னலமற்று உழைத்த நிலத்தில் தான் நாம் எல்லோரும் இன்று  நிற்கிறோம். ஜெகந்நாதன் மண் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். போட்டதை போட்டபடி விட்டுவிட்டு அடுத்தடுத்து பயணிக்க அதுவே எதுவாக இருக்கும். இந்தியா முழுக்க கால்நடையாக அலைந்து  திரிந்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் நடந்தே சென்றிருக்கிறார்கள்.



ராலே கெய்தான் பற்றி சொல்லி கொண்டிருந்தார். கெய்தான் அமெரிக்க மிஷனரி. இந்திய விடுதலை பற்றி பேசியதால் மிஷனரியில் இருந்து நீக்க பெறுகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நெருங்கிய சகாக்களில் ஒருவர். கெய்தான் எல்லாருக்கும் வேலைகளை பிரித்து கொடுப்பாராம். மதியம் வரிசையாக எல்லோர் கைகளையும் சோதிப்பாராம். உடல் உழைப்பிற்கான தடயம் தென்பட்டால் தான் சோறு. மீண்டும் மாலையும் இதே சோதனை நடக்கும். அப்போது உழைத்தவர்களுக்கு ஆளுக்கு இரண்டு சர்க்கரை வள்ளி கிழங்கு கொடுப்பார் என்றார்.   

‘சுதந்திரத்தின் நிறம்’ இறால் பண்ணைக்கு எதிரான போராட்டம் நிறைவு பெறாத காலத்தில் எழுதிய வாழ்க்கை சரிதை.  சரியாக சொல்வதானால் நீண்ட நேர்காணல்,  கூடவே லாரா கோப்பாவின் இந்தியா குறித்த அவதானிப்புகள் நிறைந்த நூல். கிருஷ்ணம்மாள் அவர்களின் மகன் டாக்டர் பூமியிடம் ஒரு முழுமையான வரலாறை  எழுத வேண்டியதன் அவசியத்தை கூறினேன். வாக்கரசியலுக்கு வெளியே இயங்கும் மகத்தான மனிதர்களை நாம் கண்டுகொள்வதில்லை. முதுகுளத்தூர் கலவரத்தின் போது அமைதியை உருவாக்க ஊர் ஊராக செல்கிறார்கள். கீழ்வெண்மணி கொடுமையின் போது முதல் மனிதர்களாக சென்று சேர்கிறார்கள். காந்தி, வினோபா, ஜெ.பி என மகத்தான மனிதர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள்.  சமகால அரசியல் விவாதங்களில் அவர்கள் இடம்பெறாமல் போகலாம். வாக்கரசியலே உரையாடலை தீர்மானிக்கும் ஆற்றலாக உள்ளது. ஏதோ ஒரு கட்சியின் ஓட்டு வங்கிக்கு உதவாத ஆளுமைகளை இங்கே நினைவில் நிறுத்துவது கடினம்.  மக்கள் நினைவுகளில் இவர்கள் என்றென்றும் நீடித்திருப்பார்கள். எத்தனை மகத்தான பெருவாழ்வு! சொற்களில் உழன்று கொண்டிருப்பவனாக மட்டும் இருப்பதற்காக  வெட்கினேன். தன் கையால் குழந்தைகளுக்கு ரொட்டி கொடுத்தார். பூமி அவர்களுடனும், சத்யா அவர்களுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். 


கிளம்பும் முன் அவர்களிடம் ‘தமிழகம் உங்களுக்கு ரொம்பவே கடன் பட்டிருக்கு’ என்று சொல்லி  வணங்கினேன். ‘கடன் என்ன..கடமையை செய்யிறோம். அவ்வளவுதான்’ என்றார் அலட்டிக்கொள்ளாமல். ஆதர்ச எழுத்தாளரான யுவன் சந்திரசேகருடன் அவருடைய நாவல்கள் பற்றி உரையாடும்போது துறவு அல்லது குடும்பத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது கதைகளில் தொடர்ந்து தொழிற்படுவதை பற்றி கேட்டேன். “வெளியேறி எங்க போறான்? குடும்பம்ங்கிற சின்ன வட்டத்தை விட்டு வெளியேறி போறவன் உலகமே தனது குடும்பங்கிற பெரிய வட்டத்திற்குள்ள போறான்னு பாக்கலாம் இல்லையா” என்றார். ஜெகந்நாதன் துறவியாக வேண்டும் என்று விழைந்து இல்லறத்தில் ஈடுபட்டவர். அவரை துறவி என்பதா இல்லறத்தார் என்பதா. எல்லா துறவிகளும் இல்லறத்தார் தான். புவி முழுமையும் அவர்களது குடும்பம். தன்னலமற்று நோற்கப்படும் யாவையும் நோன்பே. நான் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து உள்ளூர அனத்தல் பெருகியது. இந்த அனத்தல் நல்லதற்கே. உள்ளூர ஒலிக்கும் சன்னமான ஆனால் திடமான குரல் செவியில் விழக்கூடும்.






  •  

ஒரு காந்திய பயணம்

 

ஈரோடு- திருப்பூர்  அறக்கல்வி மாணவர்கள் வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி கோவை போத்தனுர் காந்தி ஆசிரமத்திலிருந்து வேதாரண்யம் சத்தியாகிரக நினைவிடம் வரையில் 400 கிலோமீட்டர்கள் நடந்து தங்கள் யாத்திரையை  ஜனவரி 28 ஆம் தேதி நிறைவு செய்தார்கள்.  யாத்திரை எனும் சொல்லை குறித்து யோசித்து கொண்டிருந்தேன். தண்டி பயணம் என சொல்லவில்லை, யாத்திரை என்றே சொல்லியிருக்கிறார்கள். இயல்பாக பயணம் எனும் சொல்லுக்கு இருக்கும் உலகியல் வரையறைக்கு அப்பால் யாத்திரை எனும் சொல்லுக்கு ஒரு ஆன்மீக பொருள் சேர்கிறது. பயனத்திற்கொரு புனித நோக்கு சேரும்போது அது யாத்திரையாக ஆகிறது. 

                        


சிபி, அனுஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், லைலா பானு, அர்ச்சனா ஆகியோர் தான் மொத்த பயணத்தை நிறைவு செய்த அறுவர். கொடைக்கானல் சபரீஷ் இவர்களுடன் ஏறத்தாழ ஒரு வாரம் நடந்திருப்பார். சரண்யாவும் நான்கைந்து நாட்கள் நடந்தார் என்று எண்ணுகிறேன். சந்தானிகா, ஸ்ரீவித்யா, மோகன் ராஜ் ஆகிய மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் நடந்திருப்பார்கள். கண்டனூர் நாராயணனும் அவரது பனிரெண்டு  வயது மகன் ராம் சிதம்பரமும் இரண்டு நாட்கள் நடந்தார்கள். இந்த பயண நோக்கத்தை பற்றி நிறைய பேசலாம், ஆனால் 18 நாட்கள் நீண்ட நடை பயணம் என்பதே  நடந்தவர்களுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். உணவிற்கோ தங்குமிடத்திற்கோ பெரிய திட்டமிடல் இல்லாமல் மக்களை நம்பி நடந்தார்கள்.  சிறு இடர்களுக்கு  அப்பால் நான்கு பெண்கள் கொண்ட குழுவிற்கு எந்த தொந்தரவும் இல்லை.   


புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும்போது குடும்பத்துடன் சென்று சந்தித்து வந்தோம். நடந்து நடந்து கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தது. அனைவரும் பிளாஸ்திரிகள் ஒட்டியிருந்தார்கள். வாடை காற்றிலும் மழையிலும் நடந்ததால் லேசான உடல்நலமின்மை சிலருக்கு.  பிறகு வேதாரண்யத்தில் நிகழ்ந்த நிறைவு நாள் விழாவிலும் பங்கு கொண்டேன். மணப்பாறை- புதுக்கோட்டை வழியில் சித்தூர் எனும் கிராமத்தில் இருந்த கருப்பர் கோவில் வாசலில் மதிய ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது சென்று சேர்ந்தோம். அன்று மனைவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவு எடுத்து வருவதாக திட்டம். ஆனால் நாராயணன் கொண்டு வந்த காலையுணவை மதியம்தான் சாப்பிட முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முந்தைய நாள் தங்கிய இடத்தில அந்த அளவு கவனிப்பு. நடந்து நடந்து இளைப்பீர்கள் என்று பார்த்தால் ஒரு சுற்று பெருத்ததாக தெரிகிறதே என கேலி செய்து கொண்டிருந்தோம். அதுவரையிலான பயணத்தில் அவர்கள் ஆகப்பெரிய சவாலாக உணர்ந்த விஷயத்தை பற்றி பேசினோம். மலைகளுக்கு இடையே இருளில் நடக்கும்போது தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக திட்டமிட்ட ஊரை அடைவதற்கு முன்பே வேறொரு ஊரில் தங்குமிடம்  தேடும் நெருக்கடி ஏற்பட்டதை பற்றி அனுஸ்ரீ கூறினார். தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்ததாக சொன்னார். சாலைகளில் துரத்தி வந்த குடிகாரர்கள், அனுமதி அளிக்காத தந்தை, உடல் ஒத்துழைக்குமா எனும் ஐயம் என வேறு வேறு விஷயங்களை சொன்னார்கள். தெரு நாய்களை எப்படி சமாளித்தீர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் திடமாக நடந்து வந்தால் விட்டுவிடும் என்றார்கள். பயணத்தின் ஊடாக சில நுட்பங்களை கண்டடைந்துள்ளார்கள். ஆண்கள் இருக்கும் வீட்டில் கழிவறை உபயோகிக்க கோரினால் அனுமதிப்பார்கள் என்பது அப்படியான ஒரு கண்டுபிடிப்பு. மாவட்டங்கள் தோறும் தங்களது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எதிர்ப்பு சார்ந்தும் சில விஷயங்களை சொன்னார்கள். பொதுவாக மனிதர்களின் நல்லதன்மை மீது நன்னம்பிக்கை ஏற்பட்டதாகவே சொன்னார்கள். பிளாஸ்டிக் பேட் பால் கொண்டு சுதீருடன் சிபியும் கௌதமும் விளையாடினார்கள். நாராயணன் ஏற்பாட்டில் இட்டிலி, இடியாப்பம், கவுனி பாயாசம் ஆகியவற்றை மதிய உணவாக உண்டோம். எங்களுடன் வந்த சிங்கப்பூர் கணேஷ் பை நிறைய நார்த்தம் பழத்தை கொண்டு வந்தார். உண்டு முடிக்கும் சமயத்தில் திண்டுக்கல்லில் இருந்து உமையாள் தேனப்பன் தம்பதியினர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்களின் உடைகளை துவைத்து காயப்போட்டு கொண்டு வந்திருந்தார்கள். முதல்முறையாக அவர்களை சந்தித்தேன். தேனப்பன் கட்டுமான பொறியாளராக உள்ளார். உமையாள் ‘வேதாத்திரி மகரிஷி’ வாழ்க வளமுடன் யோக பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாலை நான்கு மணிக்கு மீண்டும் நடக்க தொடங்கிய போது சுதீரும் அவர்களுடன் நடந்து வருவதாக பிடிவாதம் பிடித்தான். கொஞ்ச தூரம் நடந்தபிறகு நிறைவுநாளில் அவர்களுடன் நடக்கலாம் என்று உறுதியளித்து அழைத்து கொண்டேன். 


நிறைவு நாள் அன்று மதியம் அம்மாவும் என்னுடன் வந்தார். சுதீர், நாராயணன், அவரது மகன் ராம் சிதம்பரம், சிங்கப்பூர் கணேஷ் என எல்லோரும் புறப்பட்டோம். ரோட்டரி சங்கம் ஆங்காங்கு மாணவர்களுக்கு வரவேற்பு அளித்து வந்தது. இறுதி நான்கு கிலோமீட்டர் இருக்கும் போது வந்து சேர்ந்தோம். சுதீர், ராம், நாராயணன், கணேஷ் என எல்லோரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அறப்போர் ஜெயராமன், கிருஷ்ணன், குக்கூ நண்பர்கள் என ஒரு திரள் நடந்து வந்தது. நானும் அம்மாவும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்தோம். அரசு சித்த மருத்துவர் ரமேஷ் குமார் வேதாரண்யத்தில் தான் பணிபுரிகிறார். எனது கல்லூரி இளவல். பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. சத்தியாகிரக நினைவிடத்தில் கூட்டம் நடந்தது. ரோட்டரி சங்க கூட்டம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. நிறைய உரைகள். மாணவர்கள் தங்களது அனுபவங்களை செறிவாக பகிர்ந்து கொண்டார்கள். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அறப்போர் ஜெயராமன், பேராசிரியர் பழனித்துரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாரிசுகளான இருவரை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அறக்கல்வி ஆசிரியர்களான அனீஸ் நாயரும், லோகமாதேவி அவர்களும் நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கையெழுத்திட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

கிருஷ்ணன் மாணவர்கள் மீது விழுந்திருக்கும் பொறுப்பு சுமையை பற்றி பேசினார். காந்தியிடம் இந்த சிக்கல் உண்டு. காந்திக்கு எல்லாவற்றிலும் தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனும் சிக்கல் உண்டு. காலப்போக்கில் அது தான் மட்டும் என்பதாக இல்லாமல், மனைவி பிள்ளைகள், சீடர்கள் என தன்னை சார்ந்த எல்லோருமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது ஒரு நெருக்கடி. ஹரிலால் இந்த நெருக்கடியில் தாக்குபிடிக்காமல் உதிர்ந்தவன். உள்ளத்திண்மையை சோதிக்கும் சோதனைகள் இனிதான் வரக்கூடும். அப்போது அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 


கரியப்பட்டணம் எனும் ஊரில் விஜயலக்ஷ்மி எனும் வாசகர் வீட்டில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடை பயணம் முடித்த மாணவர்கள் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் பெருமிதம் குடிகொண்டிருந்தது. கௌதம் ஒரு மூலையில் தனியே அமர்ந்திருந்தான். சௌமியா ஸ்ரீ அழுது கொண்டிருந்தாள். சுமார் இருபது நாட்கள் ஒன்றாக செய்த பயணம். திரும்ப முடியாத காலத்துளிகளால் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்நினைவுகள் வாழ்நாள் சேகரம். பெரும் யாத்திரைகள் எந்த அளவிற்கு புறத்தில் நிகழ்கிறதோ அதே அளவிற்கு அகத்திற்குள்ளும் நிகழும். 


விஜயலஷ்மியின் இல்லம் அழகாகவும் விசாலமாகவும் இருந்தது. இரவு நெடுநேரம் பாட்டு, பேச்சு, கொண்டாட்டம் என சென்று கொண்டிருந்தது. முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரையிலான பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. நிரம்பி ததும்பும் நீர் நிலைகள். வயல் வெளிகள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிராதப ராமபுரம் எனும் ஊரில் ஊராட்சி தலைவராக உள்ளவரை சந்தித்தோம். முழு மூச்சுடன் முன்மாதிரி ஊராட்சியாக கொண்டுவர முனைகிறார். அவரது முயற்சிகள், இலட்சியங்கள் குறித்து பேச முடிந்தது. தன்னலமற்ற செயல் ஒத்த மனமுடையவர்களை ஒன்றிணைக்கும். 

காலை எழுந்து உணவு உண்டுவிட்டு கோடியக்கரை சென்றோம். தை அம்மாவாசையை என்பதால் கடற்கரையில் கூட்டம். குரங்குகளுக்கு உணவிட வேண்டாம் என வனக்காவலர்கள் அறிவுறுத்தினார்கள். கடலில் குளிக்க வேண்டும் எனும் திட்டத்தை நீரை பார்த்ததும் மாற்றி கொண்டேன். நான்கைந்து வண்டிகளில் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சென்றோம்.  வெளி மான், காட்டு பன்றி, கீரி, கலைமான் ஆகியவற்றை பார்த்தோம். நாராயணனும் ராம் சிதம்பரமும் எங்களுக்கு விதவிதமான பறவைகளை சுட்டி  காட்டினார்கள். உபயம் பறவை பார்த்தல் வகுப்பு, வெள்ளிமலை. ராஜராஜன் எழுப்பியதாக நம்பப்படும் பொன்னியின் செல்வன் புகழ் கலங்கரை விளக்கத்தை கண்டுவிட்டு திரும்பினோம். திரும்பும் வழியில் இரண்டு நரிகளை கண்டோம். (நாங்கள் மட்டுமே கண்டோம் என்பதில் சற்று கூடுதல் பெருமை).     


400 கிலோமீட்டர் வாக்குக்கு பணம் பெறாதீர்கள் எனும் செய்தியை தாங்கி ஆறு மாணவர்கள் நடந்து வருகிறார்கள். இது இந்த ஊர்களில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? இன்றைய அரசியல் சூழலில் இவர்களின் சன்னமான ஆனால் திடமான குரல் எடுபடுமா? எல்லா அறமின்மைகளும் இயல்பாக்கம் அடையும் காலகட்டம் இது. தேர்தலுக்கு நாளிருக்கிறது. இவர்களிடம் வாங்க மாட்டேன் என உறுதி அளித்தவர்கள் அந்த சொல்லை காப்பாற்றுவார்களா? எந்த கேள்விக்கும் துலக்கமான விடை என ஏதுமில்லை. உடலை மெய் என்று குறிக்கிறது தமிழ் மொழி. உடலை வருத்துதல் என்பது மெய் வருத்தம். உடலே நமக்கு முன் இருக்கும் தூலமான மெய். உடலை காப்பதே நம் அடிப்படை விசை. அதன் எல்லைகளை நகர்த்தி, அதையே பணைய பொருளாக வைக்கும் போது நாம் நம்பும் விஷயத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறோம். அதற்கொரு ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். சிறிய அளவிலாவது மாற்றங்கள் நிகழும். விதிமுறைகள் நாமே வகுத்து கொண்டவை. நமக்குள்ளாக ஏற்படுத்தி கொண்ட பொது ஒப்பந்தம். வாக்களிப்பது நம் கடமை. வாக்குகள் சந்தை சரக்குகளாக மாறும் போது நம் நலத்திற்காக நாம் ஏற்படுத்திய அமைப்புகளையும், விதிகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். பொது அமைப்புகள், பொது விதிகள் சுயநல தேவைகளுக்காக அலட்சியப்படுத்தப்படும் தோறும் பலவீனமடையும். காந்தியம் தனிமனிதனை மாற்றத்தின் அலகாக கொள்கிறது. இந்த பயணத்தின் ஊடே வெகு சில தனியர்கள் மாறினாலும் கூட சரிதான். முனை மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன்.   


  •  

என்ன ஆனந்தம்! - ஜென் கவிதைகள் க. நா. சு மொழியாக்கம்.

 

க. நா.சு மொழியாக்கம் செய்த 41 ஜென் கவிதைகள், ஜென் பற்றி அவர் எழுதிய ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம், அவதூதர் நாவலின் தொடக்கத்தில் ஜென் குரு ஹகுயின் பற்றி வரும் ‘அப்படியா’ எனும் பிரபல ஜென்கதை ஆகியவை கொண்ட சிறிய நூலை அழிசி ஸ்ரீனிவாசன் பதிப்பித்துள்ளார். க. நா. சு எழுதிய ஜப்பானிய ஹைக்கூ எனும் சிறிய முன்னுரையும் இடம்பெற்றுள்ளது. கவிதைகளுக்கு நடுவே  அழகிய ஓவியங்கள் என அழகிய பதிப்பு. 




சிறிய முன்னுரையில் திருக்குறளுடன் ஜென் கவிதைகள் வேறுபடும் புள்ளியை விவரிக்கிறார். திருக்குறள் கடுகை துளைத்து ஏழ்கடலை புகட்டுகிறது. ஜென்னுக்கு ஏழ்கடல் முக்கியமல்ல, கடுகு தான் முக்கியம் என்கிறார். பாரி மொழியாக்கம் செய்துள்ள கட்டுரையில் ஜென் குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார். சிந்தனை நீக்கம், சிந்திப்பதை நிறுத்துவது, மறு சிந்தனை ஆகியவை ஜென்னின் மூன்று படிநிலைகள் என கிறிஸ்மஸ் ஹம்பரீஸை மேற்கோள் காட்டுகிறார். “புத்தமனம் என்பதோ மகிழ்ச்சியிலும் முடிவிலா திளைப்பிலும் ஆழ்ந்திருப்பது . இருமைகள் அற்ற அந்நிலையில் மகிழ்ச்சிக்கு எதிரீடாக வலியோ துன்பமோ இருப்பதில்லை. உள்ளுணர்வின் வழியாக இங்குள்ள அனைத்துடனும் ஒருமையை உணர்வதன் மூலம் உங்களுக்கு மரணம் இல்லாமல் ஆகிறது” என்று எழுதுகிறார்.


“சிந்தனைகள் அனைத்தும் ஞான விடுதலையின் பாதையில் தடைகளே . சிந்தனைக்கு மாற்றாக உள்ளுணர்வை கொள்ள வேண்டும்” எனும் ஹம்பரீஸின் கூற்றை அறிவுறுத்துகிறார். நல்ல தயாரிப்புடன் மெனக்கெடலுடன் வெளியிட்டிருக்கும் அழிசி ஸ்ரீனிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நாம் நம் முன்னோடிகளை அவர்களின் ஓரிரு  பங்களிப்பை கொண்டு ஒற்றை பரிமாணம் கொண்டவர்களாக சாராம்சப்படுத்திக் கொள்கிறோம். நெருங்கி அறியும் தோறும் அவர்கள் ஆகிருதி விரிந்தபடி இருக்கிறது. சமயங்களில் நமக்கு அப்போது முக்கியமாக தெரிந்ததை விட இப்போது வேறு தளங்கள் திறந்து கொள்ளும். அவை முக்கியமாக ஆகும். முன்முடிவுகள் அற்று  நெருங்கி முழுமையாக அறிய வேண்டும். ஸ்ரீனி க.நா.சுவின் வெவ்வேறு முகங்களை பங்களிப்புகளை நமக்கு அறிமுகப்படுத்திய படி இருக்கிறார். 



தொகுப்பில் எனக்கு பிடித்த சில ஜென் கவிதைகள்


என் வீடு பற்றி எரிந்து போய்விட்டது 

வானத்துச் சந்திரனை என்னிடமிருந்து மறைக்க 

இப்போது எதுவும் இல்லை 


மஸாஹிடே


கோடை சந்திரன் மிக அழகாக இருக்கிறது 

நல்ல வேளையாக மேகங்கள் வந்து 

என் கழுத்துக்கு சற்று ஓய்வு தருகின்றன 


ஸர்யூ



கிழட்டுத்தனம்

வருகிறது என்று

தெரியும்போது

வீட்டுக் கதவைச்

சாத்திவிட்டு

வேலைக்காரனை கொண்டு

“யஜமான் வீட்டிலில்லை”

என்று சொல்லித்

திருப்பியடிக்க

இயலுமானால்

எவ்வளவு

நன்றாக இருக்கும்?


கோகின்ஷு கவிதைத் திரட்டு 


பண்டைக் காலத்திலிருந்தே

இவ்வுலகம் இவ்வளவு

சோகம் நிறைந்தா உளது

…அல்லது எனக்காக மட்டுமே

இத்துயர வேஷம்

தரித்துள்ளதா?


கோகின்ஷு கவிதைத் திரட்டு


என்ன ஆனந்தம்!


நூறு நாட்கள் 

வியர்த்தமாக 

வார்ததைகளை 

முறுக்கி எடுத்து

கொட்டி அளந்து

ஓயந்துபோன சமயத்தில்

ஒரு கவிதை 

அமைந்துவிட்டது


டச்சிபானா அகேமி


மாரி காலத்துக் கடல் நாரைகள்

-வாழ அவற்றிற்கு வீடில்லை

‌ -சாக அவற்றிற்கு கல்லறை இல்லை


காடோ ஷூஸோன்



  •  

இரட்டை இயேசு - விஜய ராவணன் - வாசிப்பு

 பொள்ளாச்சி எதிர் பதிப்பக கடையில் 26.1.25 அன்று நிகழ்ந்த நூல் அறிமுக கூட்டத்தில் ஆற்றிய உரையின் குறிப்புகளை கொண்டு தொகுத்து எழுதிய கட்டுரை 




(அறிமுக கட்டுரை அல்ல. கதைகள் கொஞ்சம் விரிவாக பேசப்பட்டுள்ளன.)

விஜய ராவணனின் இரண்டாம் சிறுகதை தொகுப்பான ‘இரட்டை இயேசு’ மொத்தம் ஆறு நீள் கதைகள் கொண்டது. ‘எதிர்’ வெளியீடாக கடந்த ஆண்டு வெளிவந்தது. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் தமிழில் எழுதப்பட்ட உலக கதைகள் என குறிப்பிடுகிறார் எம். கோபாலகிருஷ்ணன். உள்ளூர் உலகமாளவிய எனும் இருமை மெல்ல பொருளிழந்து வருகிறது என தோன்றியது. உலகளாவிய நிகழ்வுகள் ஏதோ ஒருவகையில் உள்ளூர் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது. 


விஜய ராவணனின் இந்த தொகுப்பை வாசித்தபோது முதலில் தோன்றியது, அவரது புனைவுகளின் வழி எழுப்பும் கேள்விகள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்பதே. தொகுப்பின் முதல் கதை ‘ஆரஞர் உற்றன கண்’   பிரியத்திற்குரியவர்களின் பிரிவு துயரால் மூடாத விழிகள் என்று பொருள். திருக்குறளில் இருந்து எடுத்தாளப்பட்ட சொல்லாட்சி. இப்படியான பழந்தமிழ் தலைப்புகள் கதைகளுக்கு ஒரு வசீகரத்தை அளிக்கின்றன. ‘ஹன்னா’ எனும் ஜெர்மனியை சேர்ந்த முதுகலை கலை கல்லூரி மாணவியின் தன்னிலை கூற்றில் கதை சொல்லப்படுகிறது. இன்னொரு பிரதான பாத்திரமான அப்துல் அரீஃப் குர்தீஷ் மொழி பேசும் ஈராக் நாட்டை சேர்ந்தவன். கதை ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நிகழ்கிறது. ‘அகாலம்’ ஆப்பிரிக்க அமெரிக்கனை முதன்மை பாத்திரமாக கொண்டது. ‘இரட்டை இயேசுவில்’ ஃபிரெஞ்சு நாட்டவருடன் தமிழ் இளைஞனும்  வருகிறார். கதை இந்தோனேசியாவில் நிகழ்கிறது. ‘என்றூழ்’ கதையில் ஆபிரகாமை யூதராக புரிந்துகொள்ள இடமுண்டு.  ‘தங்க  மீன்கள்’ கதை மாந்தர்கள் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள். போர்முனையில் கதை நிகழ்கிறது. ‘அகாலம்’ ‘என்றூழ்’ ஆகியவை நிலமற்ற வெளியில் நிகழ்கிறது. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு கதை சொல்லிகள் (நாடு, இனம், பாலினம்) என எழுதும்போது நம்பகத்தன்மை சார்ந்து சில சவால்கள் எழும். பொதுவாசிப்பு எழுத்தில் இத்தகைய போக்குகளை காண முடியும். தீவிர  வெவ்வேறான களங்கள் இருந்தாலும் எழுத்தாளர் தனது ஆதார கேள்வியை தொடர்கிறாரா என்பதை முக்கியமான அளவுகோலாக கொள்வேன். அவ்வகையில் விஜய ராவணன் தனது கதைகளின் ஊடாக வரலாறு, கடந்த காலம் குறித்து விசாரணை செய்கிறார். 

  


புத்தாண்டுக்கு முந்தைய இரவில் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல்  ‘அவன் மட்டும் ஒரு விடுபட்ட சொல்லை போல் தனித்திருந்த படி ’ புத்தகத்தை வாசிப்பவனாக அகமது அரீஃப் அறிமுகம் ஹன்னாவிற்கு அறிமுகம் ஆகிறான். நினைவுகளில் புதைந்து போன பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை சமகால வண்ண ஓவியமாக்குவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்கிறாள் ஹன்னா. அரீஃபுக்கு எல்லாமே கருப்பு வெள்ளைதான். இந்த இருமை வழியாக அவர்களின் ஆளுமைகளை கட்டமைக்கிறார். நிறங்கள் உயிர்ப்பான கடந்த காலத்தின் குறியீடாக கொள்ளலாம். ஹன்னா கருப்பு வெள்ளை புகைப்படங்களை கூட நிறமுடையதாக  மாற்றுபவள். கடந்தகாலத்தை உயிர்ப்பிப்பவள். வரலாற்றை பெருமிதத்தோடு காண்பவள். அதை மீட்பவள் என்று கூட வாசிக்க இடமுண்டு.  நிறங்களற்ற நிகழ்காலத்தில் வாழ்பவன் அரீஃப். நிறங்கள் நிறைந்த கடந்த காலத்திற்கு செல்ல விரும்பாதவன். அவனுக்கு அந்த வாய்ப்பு அகதி என்பதாலேயே மறுக்கப்படுகிறது. வண்ணங்களை நேசிப்பவளால் கருப்பு வெள்ளையை நேசிப்பவனை ஏற்க முடியாது என்கிறான். 



முடிவற்ற ஏணியில் ஏறி வானவில்லில் மோதி அதன் வண்ணங்களை பூசிக்கொண்டு கீழே விழும் சிறுவனை பற்றிய கதையை அரீஃப் ஹன்னாவிற்கு சொல்கிறான். நிறங்களற்ற வானவில் வானில் எஞ்சி இருக்கிறது. அரீஃப் தனது பணியிடத்திற்கு அழைத்து செல்லும் போது தான் இந்த கதையின் அர்த்தம் துலங்குகிறது.  நூலகத்து தளங்களை சென்றடையும் ஏணிகள்  முடிவற்ற ஏணியாக உருமாறுகிறது. புத்தகங்களின் வண்ணவண்ண அட்டைகள் வானவில்லாகிறது. புற உலகத்தின் வண்ணத்தை போர் பறித்துக்கொண்டது ஆகவே அவனுக்கு வெளியே வண்ணங்கள் இல்லை. ஆனால் புத்தகங்கள் வழி அவன் எல்லா நிறங்களையும் உணர்கிறான். 


விஜய ராவணன் கதைக்குள் சொல்லும் குட்டி நாட்டுப்புற கதைகள் மைய கதையை ஏதோ ஒருவகையில் வலுப்படுத்த உதவுகிறது. இந்த கதைகள் அளிக்கும் அடர்த்தியின் காரணமாக செவ்வியல் சிறுகதை வடிவிலலிருந்து மீறியதாக ஆகிறது. ‘ஆரஞர்’ கதையிலே கில்காமேஷ்  குறிப்பும் இடம்பெறுகிறது.   கில்காமேஷ்- என்கிடு போல அமெரிக்காவும் சதாமும் மோதி கொள்கிறார்கள் என்றொரு வரியை கொண்டு இந்த கதை சுட்டும் அரசியலை புரிந்து கொள்ளலாம். இதே கில்காமெஷ் கதை மரணத்தின் முன்பான கையறு நிலையை சுட்டுவதாக மாறுகிறது. 



ஹன்னா தன்னிடமிருந்து சட்டென வெளிப்பட்ட மேலமை உணர்வுக்காக வருந்துகிறாள். அகதிகளை வெறுக்கும் உள்ளூர் காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அரீப்பின் சொற்கள் தீர்க்கமானது. ‘வரலாற்று அகராதியில் ‘அகதி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பொருள் எப்போதும் மாறிக்கொன்டே இருக்கும்.’ நிறம் நோக்கும் திறனிழந்த அகதிக்கு ஜெர்மனியும் ஈராக்கும் ஒன்றுதான் என சொல்லும்போது அவன் நாடு திரும்பினாலும் கூட அகதி தான் என பொருள்படுகிறது. அரீஃபின் சிறுவயது நினைவுகள் நிறங்களாலானவை. குண்டு வெடிப்பில் அவன் பார்வை திறனை இழக்கிறான்.அகதிகள் பண்பாட்டை அழிக்க வந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த அகதிகள் உருவாக்கத்தில் வளர்ந்த நாடுகளின் பங்கையும் பொறுப்பையும் சேர்த்தே பேச வேண்டியிருக்கிறது. 



‘அகாலம்’ ஒரு டிஸ்டோபிய கதை. புகைப்படங்களை அரசு தடை செய்கிறது. கடந்தகாலத்தை அழிப்பது பெரும் அழித்தொழிப்பு என்று கருதுபவர்களுக்கும் கடந்த காலம் பெரும் சுமை அதை விட்டொழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான முரண் தான் கதை. முந்தைய கதையின் பேசு பொருளின் தொடர்ச்சி. சுவாரசியமான விவாதங்களை உருவாக்குகிறார். 


‘நமக்கும் கடந்த காலத்திற்குமான சரடை மெல்ல அறுப்பது.’  என்றால் ‘எல்லோருக்கும் கடந்த காலம் பொக்கிஷம் இல்லை.’ என்கிறான். 

‘வரலாறு தெரியாதபோது மனிதன் கீழ்ப்படியும் இயந்திரம்’ என எச்சரிக்கும் போது ‘வரலாறு என்பதே எழுதப்படும் பேனாவை பொறுத்தது தானே’ என வரலாறை நிராகரிக்கிறான். வரலாற்று நூல்கள் தடைசெய்யப்பட்டதை எதிர்க்கும் போது  ‘திறக்கப்படாத எல்லை கதவுகளில் போக்கிடமற்றவர்கள் முட்டி நின்றபோதெல்லாம் உங்கள் வரலாற்று நூல்கள் எந்த உண்மையை பேசிக்கொண்டிருந்தன?’ என கேள்வி கேட்கிறான்.   ‘இனிமையான கடந்த காலத்திற்காக’  ஏங்கும் போது ‘கோல்டன் டேஸ் என்பவை நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தானே’ என மறுக்கிறான்.  ‘தனிமனித சுதந்திரம் அடியோடு ஒழியும்’ என பயம்கொள்ளும்போது ‘நீ சிலாகிக்கும் வரலாறு என்பதே அகதிகளையும் அடிமைகளையும் உற்பத்திசெய்ய உதவும் புனைவுதான்’ என பதில் சொல்கிறான்.  


இடையிடையே கதைசொல்லியின் வலிமிகுந்த கடந்தகாலம் நினைவு கூறப்படுகிறது. அம்மா அவனை கைவிட்டு சென்ற நினைவுகள் வருகிறது. புகைப்படங்கள் நாம் மறக்க முயலும் பொழுதுகளின் தடயங்கள் தான் என நம்புவதால் அம்மா குழந்தையாக அவனை தூக்கி வைத்திருக்கும் படத்தில் அவளுடைய பரிதவிப்பு தொந்தரவு செய்கிறது. கடந்தகால படிக்கட்டில் நின்று கொண்டு அவனையும் இறங்கிவர அழைக்கிறாள் என அதை கிழித்து போடுகிறான். 


 வன்முறையும் அழித்தொழிப்பும் தான் வரலாறு. போரும் பழிவாங்கலும் தான் மானிட சரித்திரம் என சொல்கிறது. வரலாற்றின் கொடுங்கோன்மை அல்லது பயனின்மையை ஏற்கும் அவன் நினைவுகள் விஷயத்தில் தடுமாறுகிறான். நினைவுகள் தான் நாம். வரலாற்று நூல்கள் ஆய்வு கட்டுரைகள் ஆவணங்கள் சரித்திர புனைவுகள் தடை செய்யப்படுகிறது. அவனுக்கு பிடித்த, நெருக்கமான புத்தகத்தை எரிக்கிறான். ஆனாலும் அதில் புதைத்து வைத்திருந்த புறா இறகை தீயிலிருந்து மீட்கிறான். வரலாற்றிலிருந்து அந்தரங்கமான நினைவை மீட்பது. கூட்டு நினைவுதானே வரலாறு. அப்படியான பிரித்தல் சாத்தியமா என்றொரு கேள்வியும் எழுகிறது. அடுக்ககத்தில் அடிபட்ட புறாவை காண்கிறான். புறா அவனது நினைவுகளுக்கான குறியீடாகிறது‌. அதை பெட்டிக்குள் வைத்து பராமரிக்கிறான். பறக்க யத்தனிக்கும் சிறகுகள் அட்டைப்பெட்டியின் மூலைகளில் முட்டிமோதுகிறது.  வெளியே சென்று விட்டு திரும்பும் போது, துர்நாற்றம் வீசுகிறது, அறை முழுவததும் புறா இறகுகள் பிய்ந்து கிடக்கிறது‌. பூனை புறாவின் தலையை கொய்து கொன்று விடுகிறது. பூனையை அரசாக பார்க்க முடியும். அதற்கு வரலாறு நினைவு என எந்த பாரபட்சமும் இல்லை. அதனளவில் எல்லாமே அழிக்கப்பட வேண்டியது தான். புகைப்படங்கள் நீக்கப்பட்ட சுவரில் மர பறவைகளை மாட்டுகிறான். ஜன்னல் கம்பிகளின் நிழலில் அவை வானளாவிய கூண்டுக்குள் பறப்பதாக தோன்றுகிறது. பறக்கும் பறவைகள் கடந்த காலத்தின் எடையில்லாத நிகழ்த்தருணத்தின் குறியீடு. சென்ற கதையை போலவே கடந்த காலத்திற்கு செல்ல இவனும் விரும்பவில்லை. அரவணைக்கும் மடி இருந்திருந்தால் அவனுக்கும் கடந்த காலம் இனித்திருக்கும். இந்த கதையின் பேசு பொருளையொட்டி  இரண்டு கதைகள் நினைவுக்கு வந்தன. பெருந்தேவியின் ‘ஒருகாலத்தில் குறுங்கதை’ நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க கடந்த காலத்திற்குள் புதைத்துக்கொண்டு அழியும் சித்திரத்தை அளிப்பது. இன்னொரு கதை சித்துராஜ் பொன்ராஜின் ‘கயிற்றரவு.’ நினைவுகளின் தொகுப்பு தான் வரலாறா? ஆம் எனில் நினைவுகளை மாற்றினால் வரலாறு மாறுமா? என்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. 



  மூன்றாவது கதை ‘இரட்டை இயேசு.’ கொரோனா காலத்து கதை. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது. விஜய ராவணனின் பெரும்பாலான கதை நிகழ்வதில்லை. சொல்லப்படுகிறது. இது அதன் எல்லையாகவும் தனித்துவமாகவும் கொள்ளலாம். காலன் அருகமர்ந்து இருப்பது போல கனவு காண்கிறான். 


கதைசொல்லி பத்தாவது படிக்கும்போது தற்கொலை முயற்சி செய்தவன் ஆனால் இப்போது மரணத்தை அஞ்சுகிறான். ‘சில நேரங்களில் மரண பயம்தான் வாழ வைக்கிறது’ என்றுணர்கிறான். ‘மரணத்தின் முகம் எப்படி இருக்கும் என்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று தொடக்கத்தில் துணிவுடன் சொல்லும் ஐரோப்பியர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். மனைவி பிலிப்பைன்ஸ் நாட்டவர், வியட்நாமுக்கு விசா உள்ளது. ஆனால் இத்தனை நாடுகள்  இருந்தும் அனாதையாக உணர்கிறார். தன் நாட்டுக்கே திரும்பும் முடிவுக்கு வருகிறார்.    


ஐரோப்பியர் சொல்லும் கதையில்  சவப்பெட்டி செய்பவன் தனது வாழ்வாதாரம் பெருக வேண்டும் என  கர்த்தரிடம் வேண்டுகிறான். காலரா கொத்துக் கொத்தாக உயிர்பலி கொள்ளும் போது அவனது பிரார்த்தனையின் பலனாகத்தான் அது நிகழ்வதாக எண்ணி கொள்கிறான். அவனது குடும்பமே இறந்து போனாலும்  நல்லடக்கத்திற்காக சவ பெட்டிகளை செய்து கொண்டே இருந்தான். இனியும் சவப்பெட்டிகளை செய்யக்கூடாது என தீர்மானிக்கிறான். தான் செய்வதாலேயே சாகிறார்கள் என எண்ணுகிறான். தனக்கான சவப்பெட்டியை மட்டும் ரகசியமாக செய்து கொண்டான். சவப்பெட்டி இல்லாமல் நல்லடக்கம் நிகழவில்லை. அரசின் ஆணையை  மீறியதற்காக  மரண தண்டனை வழங்கப்படுகிறது. தனக்காக தானே செய்த சவப்பெட்டியை முதுகில் சுமந்தபடி நடந்து வருகிறான். ஊரின் ஒட்டுமொத்த பாவத்தையும் அவனே சுமந்தான். இயேசுவை போல. சிலுவையில் தொங்கும்  இயேசுவின் உருவத்திற்கு  பின்பக்கம் அறையப்படுகிறான். சிலுவை எடை தாளாமல் விழவிருந்த நிலையில், மக்கள் சாபத்தை அஞ்சும்போது, சிலுவையிலிருந்து தேவகுமாரன் உயிர்த்து எழுகிறார். ஊரை காக்கிறார். சிலுவையில் ஒருவர் இருந்தால் போதும் என்று எண்ணினாரா? ஊரை காத்த தேவகுமாரன் அவனை காக்கவில்லை. மனிதன் ஒரு பக்கமும் மீட்பர் மறுபக்கமும் எனும் சிந்தனையே வினோதமாக இருந்தது. இந்த படிமத்தை என்னால் துல்லியமாக கதை தருணத்தில் பொருத்தி பார்க்க இயலவில்லை. இந்த பூடகமே வசீகரமாக உள்ளது. மனிதன் தன்னை பற்றி மிகையாக மதிப்பிட்டு கொள்கிறான். இயற்கையின் திட்டங்களுக்கு அவன் பொறுப்பேற்க முடியுமா? மனித ரத்தம் தேவனை எழுப்புமா?  கிறிஸ்தவ இறையியலில் போலி கிறிஸ்துவை இகழ்ச்சியுடன் காண்கிறது. அவனுக்கு சிலுவை தான் தண்டனை. ஒருவகையில் அவன் சிலுவையில் ஏறியதால் தான் கிறிஸ்து உயிர்த்து எழுந்து ஊரை காக்கிறார்.  தொற்றுநோய் காலத்து களச்செயல்பாட்டினர், முன்கள பணியாளர்கள்- குறிப்பாக மருத்துவர்களை இன்னொரு இயேசுவாக கற்பனை செய்து கொண்டேன். இயேசுவே காப்பவரும் அழிப்பவரும். அழிவுக்கு பின்னே தானே காக்க முடியும். 


 

‘என்றூழ்’ ஒரு அறிவியல் புனைவு. சூரியனில் செயற்கை நுண்ணுணர்வு ரோபோவை கொண்டு செய்ய முற்படும் ஆய்வு தோல்வி அடைகிறது. சாரா எனும் எட்டாம் தலைமுறை ரோபோவை ஆபிரகாம் வாங்குகிறார். வருங்காலத்தில் நிகழும் கதை என்பதால் விரிவாக தொழில்நுட்பங்களை விவரிக்கிறார். உலகத்தை கட்டமைப்பதில் புதிதாக ஒன்றும் இல்லை. பறக்கும் கார்கள் போன்ற வழக்கமான இயந்திரங்கள் தான். அலுவலகத்தில் மூவர் மட்டுமே மனிதர்கள். பிற அனைவரும் ரோபோக்கள். செயற்கை நுண்ணுணர்வு நம்முள் எழுப்பும் ஆதாரமான கேள்வி என்பது மனிதனாக இருப்பது என்றால் என்பதுதான். அண்மையில் மாலனின் ‘வித்துவான்’  நம்பி கிருஷ்ணனின்  ‘இறைவர்க்கோர் பச்சிலை’ ஆகிய கதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கதையில் விஜய ராவணன் எழுப்பும் வரையறைகளை நோக்கலாம். ரோபோக்களிடம் பொய் சொல்ல முடியாது. ரசனை உணர்வு மனிதர்களுக்கானது மட்டுமா? சாரா ரசனை உணர்வை வெளிப்படுத்தும் போது அதிர்கிறார். மனிதர்களை போல இயந்திரத்திற்கு வாழும் இச்சை உள்ளதா? சாரா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறாள். குடும்பமும், குழந்தைகளும் கூட  அதன் பொருட்டு தான் தேவைப்படுகிறது. இன்னொரு கோணத்தில் இருந்து நோக்குவதாக இருந்தால், சூரியனை அடையும் திட்டம் தோல்வி அடைந்ததற்காக வெறுக்க படுகிறாள். உலகை மாற்றும் இயந்திர- மனித கூட்டு குழந்தையை உருவாக்க விரும்புகிறாள் என்று பொருள் கொள்ளலாம். இயந்திரங்கள் ஒன்று போலவே, தனித்துவம் என்று ஏதேனும் உண்டா? சாரா தனித்துவத்தை வெளிப்படுத்துகிறாள். உயிர் நேசம், பாசம், பந்தம் போன்றவை மனிதர்களின் தனித்தன்மையா? சாராவும் ஏங்குகிறாள்.    



கதையில் அண்டார்டிகா பனிக்கட்டிகளை பாலைவன தேசங்களுக்கு திருப்புவது பற்றிய ஒரு சிறிய பகுதி வருகிறது. இயற்கையின் போக்கில் விடுவதே சரி என ஆபிரகாம் சொல்கிறான். ஆனால் மனித இனத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்கை விரோதமாக இருந்தாலும் இவை காலத்தின் தேவை என்று பதில் உரைக்கிறது. சாராவின்  பிள்ளை பேறு சார்ந்த விழைவையும் ஆபிரகாமின் தயக்கத்தையும் இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக காண வேண்டும். ‘உன்னையும் என்னையும் போல அவளும் இயற்கையின் அங்கம்- உயிராக அங்கீகரித்தல் எது மனிதன்? எது இயந்திரம்? இயற்கைக்கு இருவருமே பிள்ளைகளா? இயற்கைத்தாய் ஒரு முலையில் மனிதனுக்கும் இன்னொரு முலையில் இயந்திரத்துக்கு தாய்ப்பால் ஊட்டுகிறாளா? அப்படியானால் இங்கு எல்லா நியதிகளும்  இருவருக்கும் பொதுதானே.’ என்று யோசிக்கிறான். செயற்கை நுண்ணுணர்வு சார்ந்து நான் வாசித்த இறைவர்க்கோர் பச்சிலை தொடங்கி டெட் சியாங்கின் கதைகள் வரை ஏறத்தாழ இதே முடிவை நோக்கி வருவதை காண்கிறேன். விலக்கி நோக்காமல் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக நோக்குவது.  


அறிவியல் புனைவில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமை மிக முக்கியமான பேசுபொருள். இந்த இருமையே கூட கொஞ்சம் அபத்தம் தான். மனிதனை இயற்கைக்கு எதிராக நிறுத்த முடியுமா என்ன? அவனும் அதன் ஒரு பகுதிதான். சமயங்களில் அவனது விழைவுகளுக்கு ஒத்துழைப்பு நல்குகிறது சமயங்களில் நல்குவதில்லை. நவீன இலக்கியத்தின் முதல் அறிவியல் புனைவாக கருதப்படும்  மேரி ஷெல்லியின் ‘பிரான்காய்ன்ஸ்ட்டின்’ தொடங்கி இயற்கை- மனிதன் முரண் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அறிவியல் புனைவுகள் அறிவியலின் ஆபத்துகளையே தொடர்ந்து பேசிக்கொண்டு உள்ளது. மனிதனின் சுயேச்சையின் மீதான ஐயம்  பைபிளின் தடுக்கப்பட்ட கனியை உண்பதிலிருந்தே தொடங்குகிறது. எதிர் அறிவியல் புனைவு அத்தனையிலும் இந்த உணர்வு செயல்படுகிறது. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது.  பூலோக சக்கரவர்த்தியின் மகளை சூரியன்களை அழிக்கும்படி கடவுள் பணிக்கிறார். ஒரேயொரு சூரியனை மட்டும் அதன் பிரம்மாண்டத்தில் மயங்கி வீழ்த்தாமல் விடுகிறாள். கடவுள் அவளுக்கு கன்னி தன்மையை இழக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளும் வரத்தை அளிக்கிறார். அவள் சிருஷ்டித்தவை தான் இந்த கணக்கற்ற நட்சத்திரங்கள். சாராவின் கதையோடு இந்த தொன்ம கதை ஊடாடுகிறது. சாராவின் பிள்ளைப்பேறு கோரிக்கையை ஏற்க மறுக்கிறான். இந்த கதையின் முடிவு அபாரமானது. அவனுடைய துணையின்றியே பிள்ளைப்பேறுக்கான வழியை கண்டடைந்த்துவிட்டாள் என்பதால் அவள் மானுட பெண் தோற்றத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்ந்து உலோக நிர்வாணத்தில் வயிற்றை தடவியபடி சூரிய ஒளியில் கிடக்கிறாள். அல்லது குந்தியை போல் நேராக இயற்கையின் வடிவமான சூரியனிடம் தனக்கு பிள்ளை வரம் வேண்டுகிறாள் என்றும் வாசிக்க முடியும். 


 

‘இன்னொருவன்’  முட்டை மனிதனை பற்றி சொல்ல தொடங்குகிறது. வீடு தேடி அலைபவனுக்கு மிக குறைந்த வாடகையில் நகரின் மையத்தில் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டை சுற்றி மர்மம் கட்டமைக்கப்படுகிறது. நட்சத்திரம் கருந்துளைக்குள் காணாமல் போவது போல, முட்டைக்குள் விழித்து எழுகிறான். வேத தொன்மம் ‘ஹிரண்ய கர்ப்பம்’ என சொல்கிறது. பிரபஞ்சம் ஒரு முட்டையிலிருந்து புறப்பட்டதாக. பூட்டப்படாத கூண்டிற்குள் அடைப்பட்டு கிடக்கிறான். முயன்றால் திறந்து வெளியேறிவிட முடியும். தன்விருப்பின் பேரில் மனிதன் கூண்டுக்குள் தன்னை அடைத்து கொள்கிறான்.  உருவகங்கள் கொண்ட கதைகள். கண்ணாடிக்குள் நுழைந்து கண்ணாடிகளால் ஆனா உலகிற்குள் நுழைகிறான். கண்ணாடி பேழைக்குள் வெவ்வேறு ‘நான்’களோடு உரையாடுகிறான். சிதறிய ‘நான்’கள் சேர்ந்து வெடிக்கிறது. விழித்து எழும்போது முழுமையாக உணர்கிறான். பேழைக்குள் மட்டும் சுதந்திரமான குரலை கேட்கிறான். கடிகார முட்களுக்கு அஞ்சி ஓடவேண்டாம் என்பதே போதுமானதாக உள்ளது. அங்கே எவருடைய பெயரும் தெரிந்துகொள்ளவில்லை. அடையாளமற்ற இருப்பு. அங்கே தூவும் அழிவதும் இல்லை. எனினும் அந்த வாழ்க்கையும் அலுக்கிறது. அதையும் சிறையாக உணர்கிறான். என்றூழ் கதையில் சாரா உதிர்க்கும் ஒரு வசனம் தான் இந்த கதையின் சாரம் என்று புரிந்து கொள்கிறேன். ‘மனிதன் ஒரு விசித்திரமான சமூக பிராணி, குழுவாய் இருக்கும்போது தனிமையை விரும்புவான். தனித்து விடப்பட்டதும் துணைக்காக ஏங்குவான்.’  அன்றாடம் அலுப்பாக இருக்கிறது. தப்பிக்க மனம் ஏங்குகிறது. ஓய்வும் தனிமையும் அலுக்கிறது. அன்றாடத்திற்கு மனம் ஏங்குகிறது. இந்த சிக்கலை பேசுவதாக புரிந்து கொண்டேன்.   


தொகுப்பின் இறுதி கதை ‘தங்க மீன்’ போர் களத்தில் எதிரெதிர் தரப்பில் இருக்கும் ராணுவ வீரனும் போராளியும் உரையாடுவது தான் கதை. கூறிய விதம், பேசு பொருள் சார்ந்து சற்று பழகிய தன்மை இக்கதைக்கு. தங்க மீன்களை பிரசவிக்கும் தனியொருத்தி. அவளது மர்மமான வசீகரம், இவையெல்லாம் மெலீனா திரைப்படத்தை எனக்கு நினைவூட்டியது. பதின்ம வயதில்  அக்கா மீது ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு என்பதும் தமிழில் நிறைய எழுதப்பட்ட களம் தான். எனினும் இந்த எல்லைகளை தாண்டி தங்க மீன் என்பதை வலுவான படிமமாக வளர்த்தெடுத்துள்ளார். போர் களத்தில் அழகுக்கும் ரசனைக்கும் என்ன வேலை? கலை தான் போருக்கு எதிராக இருக்க முடியும் என்று எண்ணி கொண்டேன். ‘என்றூழ்’ கதையும் ஏறத்தாழ இதே தரிசனத்தை கொண்டுள்ளது. கலை ரசனை அளிக்கும் கூருணர்வு மீதான நன்னம்பிக்கை. சண்டை மூளாத சிறு நிலம், அவளின் படத்துக்கு பத்து மீன் கடையாக தான் இருக்கும். வண்ண மீன்கள் சாந்தமான சூழலை உருவாக்க. அவளது மீன் எதுவும் போரில் இறப்பதில்லை. இரண்டு நியாயங்கள் மோதும் போது புனைவு எழுத்தாளருக்கான வேலை தொடங்குகிறது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே பாலியத்தின் சுனையில் நீரருந்த தான் முயல்கிறார்கள். தங்களது கடந்தகாலத்தை மீட்டு எடுக்க போராடுகிறார்கள். ஒருவகையில் கடந்த காலத்தை மீட்டெடுப்பதன் வன்முறையை விஜய ராவணன் கதைகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. போராளியின் தங்க மீன்கள் சிறுவனாக இருந்த ராணுவ வீரனிடம் சென்று சேரும்போது கூழாங்கற்களை நிரப்ப முடியாமல்  தோட்டா ரவைகளை கொண்டு மீன்தொட்டியை அலங்கரிக்க தொடங்குகிறான் என்பதாலா என்னை வெகுவாக தொந்தரவு செய்தது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே நிறுவனத்தின் துப்பாக்கியை கொண்டு எதிரெதிர் நின்று போர் புரிகிறார்கள். 


தமிழுக்கு அந்நியமான புதிய உலகை உயிர்ப்புடன் சித்தரித்த வகையில் விஜய ராவணன் முக்கியமான எழுத்தாளராக ஆகிறார். உலகளாவிய அரசியல் விஷயங்களை கருப்பொருளாக கொள்ளும்போது பிரசாரம் ஏதும் இல்லாமல் சரியான செல்திசையில் கதைகளை அவரால் கொண்டு செல்ல முடிகிறது. 

 



  •  

பரலோக வசிப்பிடங்கள்- குறிப்பு

 நான் அனைத்து வாசகர்களின் அன்பிற்குரிய எழுத்தாளனாக வேண்டும். அப்புறம் கடற்கரையிலுள்ள ஒரு சுக வாசஸ்தலத்தில் வசிக்க வேண்டும். சகல உலகங்களிலிருந்தும் இலக்கிய ரசிகர்கள் என்னை தேடி வரவேண்டும். என் அறையின் உப்பரிகையிலிருந்து கடலைப் பார்த்தவாறு விலை உயர்ந்த மது அருந்தி, சிகரெட்டின் பொற்புகையை ஊதி விட்டவாறு நான் ஓய்வெடுக்க வேண்டும். இடையில் நீ என்னைப் பார்க்க வரவேண்டும். இதுதான் எனக்குப் பிடித்த கனவு.




தாமஸ் ஜோசப் எழுதிய ‘பரலோக வசிப்பிடங்கள்’ நாவலில் இறந்து போன பிறகு எழுத்தாளன் ஆல்பர்ட் காணும் கனவிது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களின் கனவும் இதுதான் என்று எண்ணி கொண்டேன். தோல்வியடைந்த எழுத்தாளனை பற்றிய கதை. ஆல்பர்ட் புவியில் தனது நாவலை பதிப்பிக்க முடியாமல் பரலோகம் சென்றடைகிறான். “அறியப்படாத எழுத்தாளனுக்கு பூமியில் இருந்த விதி பரலோகத்திலும் தன்னைப் பின்தொடரும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. எழுத்தின் வழியினுடாக பயணம் தன்னை எங்கே கொண்டு சேர்க்கும் என்று அவனுக்கு தெரியவில்லை. அது ஒரு நிழலை பிடிப்பதற்கான பயணமாக இருந்தது என்று தோன்றியது.” ஏழுலகங்களில் ரயில்களில் பயணித்தபடி எழுதுகிறான். எழுதிய நாவலை பரலோகத்தில் பதிப்பிக்க முயல்கிறான். அவனுடைய நாவல் கடவுளை கதைமாந்தராக கொண்டது. நாவலில் கடவுள் கைவிடப்பட்டவராக ஆற்றல் அற்றவராக அலைந்து திரிகிறார். காதலின் பித்தேறி தனது கடமைகளில் இருந்து தவறுகிறார்.  கடவுள் நேசிப்பது ஆல்பர்ட்டின் மனைவி லில்லினாவை. சரியாக சொல்வதானால் அவளது இசையை. வழுக்கை தலை கடவுளின் குழிவிழுந்த கன்னத்தில் புனித முத்தத்தை சமர்ப்பிக்கிறாள் லில்லினா. பரலோகத்தின் அடுக்குகளுக்கு சென்றுவரும் ரயில் எனும் கற்பனையே அபாரமாக உள்ளது. இறந்தவர்கள் புழங்கும் உலகிற்கு உயிருடன் இருப்பவர்கள் தங்கள் கனவுகளில்  புழங்கி செல்கிறார்கள். 


நாவலில் சில அபாரமான கதை மாந்தர்களை எளிய சொற்களில் துலங்க செய்கிறார் தாமஸ். ஆக்நஸ், நடாஷா ஆகிய இரு பெண்கள் மரணத்திற்கு பின்பு ரயில்களின் பயணிகள் பட்டியலை சலிப்பின்றி தட்டச்சு செய்து கொண்டே இருப்பவர்கள். பூவுலகில் போலீசாக முடியாத ஆண்டனி பரலோகத்தின் வாயில் காப்பாளனாக ஆகிறான். சிறுவனாக பரலோகம் வந்தடைந்த ரூபன் அங்கே ஆட்டோ ஓட்டுகிறான். நாவலில் என்னை வெகுவாக தொந்தரவு செய்த சித்திரம் ஒன்றுண்டு. பதிப்பக தொழில் நடத்தி பெரும் கடனாளியான ரபீக் சக்காரியா பரலோகத்தில் இறந்தோருக்கான பதிப்பகத்தை நடத்தி வருகிறார். பூமியில் அவர் பதிப்பித்து விற்காமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் பக்கங்களை கிழித்து அவரது பிள்ளைகள் விடும் காகித ராக்கெட்டுகள் அவர் காலடியில் நைவேத்தியமாக சேர்கின்றன. சூசன்னா ஆல்பர்ட்டை நேசிக்கிறாள். நேசத்திற்காகவும் எழுதிற்காகவும் ஆல்பர்ட் பரலோகத்தில் நாய்களால் கொல்லப்பட்டு இறந்து மீள்கிறான். நாவலில் இன்னொரு ஆல்பர்ட் குறிப்பிடப்படுகிறார். கடவுளை புகழப்படும் செல்வாக்கு கொண்ட ஆல்பர்ட். ஏறத்தாழ இவனுக்கு எதிர்நிலை. அல்லது இவனுடைய மாற்று ஆளுமை, கனவு. சமரசங்கள் ஊடாக திறக்கும் கடாஹவுகளில் அவன் சென்று சேர்ந்திருக்கக்கூடிய இடமாக கூட இருக்கலாம். சூசன்னா ஆல்பர்ட்டுக்கு பரலோகத்தில் எல்லாவற்றையும் அளிக்க சித்தமாயிருக்கிறாள். பதிலுக்கு அவள் கோருவதெல்லாம் ஆல்பர்ட்டின் காதலி தான். அவள் ஏமாற்றியதாக உணரும்போது ‘உன்னால் அந்திகளையும் கலைகளையும்  பார்க்க முடியாது’ என்று ஆல்பர்ட்டை சபிக்கிறாள். உண்மையில் மிக கொடூரமான சாபம். வாழ்வின் அத்தனை நெருக்கடிகளையும் கடந்து போகும் வலிமையை இயற்கையிடமிருந்தே பெறுகிறோம். இன்னொரு விடியலுக்கான நம்பிக்கையே நம்மை நகர்த்துகிறது. அது மறுக்கப்படுவதை விட கொடூரமான தண்டனை வேறிருக்க முடியாது. நாவலை வாசித்து முடித்ததும், யார் தோல்வி அடைந்த எழுத்தாளர் என்றொரு கேள்வி எழுந்தது. எழுத்தாளர் எழுத்தை கைவிடும் போது மட்டும் தான் தோல்வியடைகிறார். எழுதிக் கொண்டிருக்கும்வரை அவை அங்கீகரிக்கப்பட்டாலும், போடாவிட்டாலும், வாசிக்கப்பட்டாலும் படாவிட்டாலும் அவர் தோல்வியடைந்தவர் அல்ல. போலண்யோவின் சாவேஜ் டிடிடெக்டிவ்ஸ் நாவலில் ஆர்டுரோவும் அவனது நண்பனும் தேடி செல்லும் காணாமல் போன மூத்த பெண் எழுத்தாளர் ஊருக்கு வெளியே பதிப்பிக்க கூட விரும்பாமல் எழுதி குவித்திருப்பாள். இயல்பிலேயே கவித்துவமான மொழி கொண்ட நாவல் என்பதால் யூமாவின் மொழியாக்கம் பொருந்தி வருகிறது. 


பரலோக வசிப்பிடங்கள் 

தாமஸ் ஜோசப் 

தமிழில் யூமா வாசுகி 


  •  

காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்

 

Sketch by Adhimoolam

ஜனவரி 2025 காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை 

முன்னூறு இதழ்கள் கடந்திருக்கும் காலச்சுவடிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் சூழலில் காந்தியம் குறித்த உரையாடலில் காலச்சுவடின் பங்களிப்பை இந்த தருணத்தில் மதிப்பிடுவதே என் கட்டுரையின் நோக்கம். இதன் பொருட்டு சில நாட்களாக பழைய இதழ்களை புரட்டிக்கொண்டிருந்தேன். காலச்சுவடில் என் எழுத்துக்கள் முதல் முறையாக வெளியானது காந்தியின் பொருட்டுதான். ஏப்ரல் 2014 இதழில் அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி அழித்தொழிப்பு’ நூலுக்கு எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ எனும் விரிவான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டது. அந்த முன்னுரை அம்பேத்கரின் பங்களிப்பையும் அவரது சிந்தனையின் முக்கியத்துவத்தையும் எடுத்து காட்டுவதைவிட காந்தியை அவருக்கு எதிரியாக கட்டமைப்பதிலும் மேற்கோள்களை திரித்து காந்தியின் மீது

அவதூறு செய்வதிலும் அதிக கவனம் எடுத்துக்கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. அருந்ததிராய்க்கு ராஜ்மோகன் காந்தி எழுதிய விரிவான மறுப்பு ‘சுதந்திரமும் சமூகநீதியும்’ எனும் தலைப்பில் சிறு பிரசுரமாக சர்வோதயத்தில் வெளியானது. பி. ஏ கிருஷ்ணன் கோரிக்கொண்டதின் பேரில் ராஜ்மோகன் காந்தியின் பதிலில் இருந்து ஒரு பகுதியை காலச்சுவடு பிரசுரித்தது. அதன் பின் 2020 ஆம் ஆண்டு ‘காந்தி 150’ எனும் சிறப்பு பகுதியும் 2023 ஆம் ஆண்டு ‘இன்றும் காந்தி’ எனும் சிறப்பு பகுதியும்  வெளியானதில் எனது பங்களிப்பும் உண்டு. திரிதீப் சுஹ்ருத்தின் ‘சத்திய சோதனை’ நூலுக்கான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியானது. ‘காந்தியும் ஆயுர்வேதமும்’ கட்டுரை பரவலாக கவனம் பெற்றது. ஆயுர்வேதம் எனும் பேசு பொருளைக் கொண்டு காந்தி மரபை எவ்விதம் அனுகினார் என காண முயற்சித்தது. ‘காந்தி சாதியவாதியா?’ என்னும்  கேள்விக்கு காந்தியின் எழுத்துக்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவரது வாழ்க்கை தருணங்களையும் கருத்தில் கொண்டு புதிய கோணத்தில் தனது வாதங்களை நிஷிகாந்த் கோல்கேயின் நூல் முன்வைக்கிறது. அண்மை காலத்தில் வெளிவந்த இவ்விறு சிறப்பிதழ்களில் த. கண்ணன், விஷ்ணு வரதராஜன், சித்ரா பாலசுப்பிரமணியம், சுரேஷ் பிரதீப், அரவிந்தன் கண்ணையன், பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் போன்றவர்கள் எழுதியுள்ளார்கள்.  இவை அண்மைய காலத்தில் வெளிவந்தவை என்பதால் இந்த கட்டுரையில் இவற்றை குறித்து பேசுவதை தவிர்க்க விரும்புகிறேன். இதற்கு முன் 2005, 2008 ஆண்டுகளில் காலச்சுவடு காந்தி சிறப்பு பகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுக்கும் இவற்றுக்கும் இடையே என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை அவதானிப்பது சுவாரசியமாக இருக்கக்கூடும். 


பெரும்பாலான இந்தியர்களுக்கு இருப்பது போலவே எனக்கும் காந்தியின் மீது மதிப்போ வெறுப்போ ஆர்வமோ இல்லாத உறவு தான் இருந்தது. இதன் பொருள் என் அன்றாட வாழ்வில் அவருக்கு எந்த இடமும்  இல்லை என்பதுதான். இது மாறியதற்கு இரு முக்கிய காரணிகளை என்னால் சுட்ட முடியும். ஒன்று, ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ இரண்டு ‘இறுதி கட்ட ஈழப்போர்.’ காந்தியை போன்றே ஈழ அரசியல் குறித்தும் எனக்கு பெரிய அறிதலோ ஆர்வமோ கிடையாது. ஆனால் அதன் இறுதி தருணங்கள் மனதில் ஒருவித பதைப்பை உண்டாக்கியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தான் இன்றைய காந்தியும் வெளியானதாக நினைவு. ஒரு வரலாற்று ஆளுமைக்கு சரிநிகராக அமர்ந்து உரையாடும் வாய்ப்பு நமக்கு வெகு சிலரிடம் மட்டுமே கிடைக்கும். காந்தியை அத்தகையவராக அவரது அத்தனை முரண்பாடுகளோடும் கண்டுகொண்டேன்.  ‘காந்தி- இன்று’ என்று இணையதளத்திற்கு பெயரிட இரண்டு காரணங்கள். ஜெயமோகனின் நூலும், சுந்தர ராமசாமியின் கட்டுரையும். 1986 ஆம் ஆண்டு ஞானரதம் இதழில் வெளியான ‘காந்தி இன்று’ கட்டுரையில் காந்தியை எப்படி அணுக வேண்டும் என அறிவுறுத்துகிறார். “நேர்மையான மறுபரிசீலனைக்கான காலம் இப்போது தோன்றுகிறதோ என மகிழ்வு கொள்வதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த மறுபரிசீலனை செம்மைப்பட நாம் காந்தியுடன் எந்தவிதமான உறவுகொள்ள வேண்டும்? இதுதான் மிக முக்கியமான விஷயம். நாம் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். மேற்கத்திய சித்தாந்தங்கள் எவற்றிலும் சிறைப்பட்டு நிற்காமல், மதக் கோட்பாடுகள் எவற்றிலும் சிக்குண்டு கிடக்காமல் நாம் அவரைப் பார்க்க வேண்டும். எவ்விதமான முடிவுக்கும் வர நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் சுதந்திரத்தை, எந்த அமைப்புக்காகவும் விட்டுக்கொடுக்கப் பிடிவாதமாக மறுத்து, திறந்த மனத்துடன் நாம் அவரைப் பார்க்க வேண்டும்.”  சு ராவின் காந்தி குறித்த பார்வையின் நீட்சி காலச்சுவடில் தொடர்ந்து வெளிப்படுகிறது என்று எண்ணுகிறேன். 


2000 க்கு மத்தியில் காந்தி மீதான கவனம் மீண்டும் துளிர்க்க தொடங்கியதற்கு என்ன காரணம் என ஆராய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான சிக்கல்களை கொண்டிருப்பது போல அவற்றுக்கான முறை மருந்துகளையும் கொண்டிருக்கும் என நம்புகிறேன். உலகமயமாக்கல் வாசல்களை திறந்துவிட்டது. ஒருவகையில் உலகமயமாக்கல் முதலில் கோரும் பலியாக காந்தி தான் இருப்பார் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் மால்களில் சிகார் பிடிக்கும் சேகுவேரா டி ஷர்டுகளை விற்பனை செய்வது போல உலகமயமாக்கல் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தியது. நுகர்வின் உச்சத்தில் திளைத்து பொருளின்மையை உணரும் ஒரு நகர்ப்புற / படித்த மேல் நடுத்தர வர்க்கம் 2000 களின் மத்தியில் உருவானது. 


அக்டோபர் 2005 காலச்சுவடு இதழில் எஸ். பிரசன்னா எழுதிய ‘‘காந்தியும் நானும்’ இந்த புதிய தலைமுறையின் பிரதிநிதி என சொல்லலாம். புதிய குரல்கள் கேட்க தொடங்குகிறது. அன்றைய காலகட்டத்தில் காலச்சுவடு இதழ்களில் பங்காற்றிய சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம்  போன்றோரின் குரல்கள் இதே மரபின் தொடர்ச்சி என தோன்றுகிறது. கண்ணன் தண்டபாணி தொடங்கி இன்று முனைப்புடன் செயலாற்றி வரும் குக்கூ சிவராஜ் குழுவினர்  வரை இந்த சரடு இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது. ‘அரசியல் காந்தி’ மீது இவர்களுக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. களச் செயல்பாட்டிற்கு காந்தியிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டவர்கள். பிரசன்னாவின் ‘காந்தியும் நானும்’ கட்டுரை அரசியல் நீக்கம் செய்யப்பட அந்தரங்கமான காந்தியை முன்வைக்கிறது. “காந்தியுடன் என்னால் தனிப்பட்ட முறையில் உறவுகொள்ள முடிகிறது. தனிப்பட்ட பிரச்சினைகளைப் பேச முடிகிறது. இந்த உலகுடன் உறவுகொள்ள, இந்த உலகைப் புரிந்துகொள்ள அவரால் எனக்கு உதவி செய்ய முடிந்தால் அதுவே போதுமானது. உலகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க என்னால் வழி கூற முடியாது. உலகமயமாக்கல் நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல முடியாது. பொருளாதாரம், தொழில்நுட்பம், வளர்ச்சி பற்றிய கேள்விகள் முடிவில்லாத விவாதத்திற்குரியவை. காந்தியாலும் இதற்கெல்லாம் விடைகூற முடியுமா என்பதும் சந்தேகம்தான். உலகம் தற்போது எதிர்கொள்ளும் தீவிர வாதத்தைக் காந்திய வழிப்படி எதிர்கொள்ள முடியுமா என்பதற்குப் பதில் கூறுவதும் எளிதல்ல. ஆனால் என்னால் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமை என்ற கருத்தைப் புரிந்துகொள்ள முடியும். அடுத்த வீட்டில் இருப்பவருடன் இணக்கமாக வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான நெறிகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அதுதான் இப்போதைக்குச் சாத்தியம். நமது தனிப்பட்ட வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் மாற்றம் நம்முடைய ஆத்ம சத்தியால் நாளை அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியலாம். காந்தி போன்றவர்கள் ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் நீடித்ததவத்தின் விளைவாய்த் தோன்றுபவர்கள். ஒரு சமுதாயத்தின் சராசரித் தரத்தைத் தாண்டிய மாபெரும் பாய்ச்சலை அச்சமுதாயத்தினுள் இருக்கும் ஒருவரால் நிகழ்த்த முடியாது. காந்தி, அவர் வாழ்ந்த சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையின் லட்சிய வடிவம்.”  



எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் ‘அரசியல் காந்தியே’ அதிகமும் விவாதிக்கப்பட்டார். இடதுசாரி எழுச்சி, தலித் அமைப்புகளின் வளர்ச்சி காந்தியை முழுக்க எதிர்மறையாக அணுகின. ஆகவே ஒரு குறுகிய அறிவுஜீவி வட்டத்திற்குள் அவரை நுணுகி ஆராயும்  மயிர்பிளக்கும் விவாதங்கள் அதிகமும் நிகழ்ந்தன. அறிவு சூழலுக்கு வெளியே காந்தி பரவலடைவார் என்பதை எவரும் கணித்திருக்க முடியாது. மரபான காந்திய அமைப்புகளும் ஆசிரமங்களை அதை தோற்றுவித்தவர் மறைந்ததும் வலுவிழந்து போவதை தான் நாம் காண்கிறோம். உதாரணமாக ஏப்ரல் 2006 இதழில்  தியோடர் பாஸ்கரன் எழுதிய ‘காந்தியும் கிறிஸ்துவும்’ எனும் கட்டுரை வேலூர்- திருப்பத்தூரில் ஆசிரமம் அமைத்து தொண்டாற்றிய மருத்துவர் சவுரிராயன் யேசுதாசனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தேசிய கண்ணோட்டம் கொண்ட கிறிஸ்தவர்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு காலனிய காலகட்டத்து கிறிஸ்தவ மைய நீரோட்டத்திலிருந்து விலகி இத்தகைய ஆசிரமங்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அவற்றை தோற்றுவித்தவர் மரணமடையும் போது அந்த அமைப்பும் செயலற்று போகின்றன. உலகமயமாக்கலுக்கு பிறகு ஒருவகையில் காந்தியும் ‘பிராண்ட்’ ஆக ஆனார்.  காந்தி இப்படி புதிய தலைமுறையினரிடம்  பரவலாவதை அவரை எதிர்க்கும் அரசியல் தரப்புகள் எரிச்சலுடன் எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆகவே காந்தியை அரசியல் ரீதியாக நிராகரிக்க வேண்டிய காரணங்களையும் விமர்சனங்களையும் அவர்கள் முன்வைத்தார்கள். அவை ஏற்கனவே அறுதி உண்மைகளாக அவர்களால் கருதப்பட்டவை. 2005 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் நெய்தல் கிருஷ்ணனும் பிரசன்னாவும் எழுதிய கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் இதை காட்டுகின்றன. இரா. முருகானந்தம் பிரசன்னாவின் கட்டுரையை சிலாகித்து எழுதியிருக்கிறார். ஜனவரி 2006 இதழில் காந்தியை மதிப்பிடுவது சார்ந்த விவாதத்தில் பிரசன்னா எழுதுகிறார் ‘அவர் பெரிதும் பாராட்டப்படுவது அவர் குறையற்றவர் என்பதால் அல்ல, ஒரு சாதாரண மனிதன், ஏசுவைப் போன்றோ புத்தரைப் போன்றோ ஐன்ஸ்டைனைப் போலவோ கடவுளின் குழந்தையாகவோ பிறவி மேதாவியாகவோ பிறக்காமல், தன் முயற்சி மற்றும் ஆத்மசக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையடைந்தார் என்பதால்.’ காந்தி மீதான அரசியல் விமர்சனங்கள் இந்த தலைமுறைக்கு பெரிய விஷயமாக இல்லை. அவரை காபந்து செய்ய வேண்டும் எனும்  ஏதுமற்றவர்கள்.  அரசியல் வரம்பிற்குள் அவரை விமர்சித்து நிராகரிக்கும் தலைமுறைக்கும் அரசியல் நீக்கம் செய்யப்பட காந்தியிடமிருந்து ஊக்கம் பெறும் தலைமுறையினருக்கும் இடையேயான உரையாடலாக இதை காண முடியும். தி. அ. ஸ்ரீனிவாசன் திருச்சி கருப்பையாவிற்கு எழுதிய மறுப்பில் ‘போயர்’ என்பது ஆப்பிரிக்க பூர்வகுடி எனும் நம்பிக்கை வெளிப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அது அப்படி அல்ல என்பதை விளங்கியதை வாசிக்கும்போது வேடிக்கையாக இருந்தது. காந்தியை விமர்சிப்பதில் நமக்கு இருக்கும் முன்முடிவுகளும் அவசரங்களும் எத்தகையது என்பதற்கு சிறந்த உதாரணம் . அருந்ததி ராய் காந்தி வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கும் அதே எண்பதுகளின் திரைக்கதையை மீள கொண்டுவருகிறார். அன்னா ஹசாரே இயக்கம் உட்பட மத்திய வர்க்கத்தினரின் எழுச்சிகளை எளிதில் புறந்தள்ளுகிறார். காந்திய ஈடுபாடும் அவருக்கு அப்படியான மோஸ்தராக தான் தென்படுகிறது. 



 

இந்த உரையாடலும் நன்மையையே விளைவித்தது. இந்த புதிய தலைமுறை இளைஞர்களில் ஒரு சாரார் என் ஜி ஓ  செல்கிறார்கள். சிறிய எண்ணிக்கையிலானவர்கள் காந்தியை ஆழ்ந்து அறிய தொடங்கினார்கள். இதே பிரசன்னா தான் ஆகஸ்ட் 2014 இதழில் ‘அருந்ததி ராயின் காந்தி’ என அவருக்கு வலுவான மறுப்பை எழுதுகிறார். “திரைக்கதை எழுதும் அவருடைய திறமையைப் பயன்படுத்தித் தலித்துகளின் எழுச்சி என்ற வரலாற்றில் காந்தியின் ‘வில்லத்தனமான’ பங்கைப் படிப்படியாக அடுக்குகிறார். இந்தச் செயலில் அவரும் இந்துக்களின் மரபார்ந்த பழக்கமான தொன்ம உருவாக்கலில் தான் ஈடுபடுகிறார். அவருடைய கட்டுரையிலிருந்து அம்பேத்கரைவிட காந்தியைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்கிறோம். அதுவும் ராய் நமக்குக் காட்ட விரும்பும் காந்தியை. ராயின் நாடகத்தில் காந்தி ஒரு துராத்மா. அவர் ஒரு பொய்யர். மனுவாதி. நிற வெறியர். அம்பேத்கருக்கு எதிரான சதிகாரர்.”    



பிரசன்னாவை போலவே சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம், த. கண்ணன் போன்றோர் காந்தியை அரசியல் ரீதியாகவும் முன்வைக்கும் வலுவான குரல்களாக ஆயினர். காந்தியின் குறைகளை, தளைகளை ஏற்றுக்கொண்டு அவரது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அதிகம் முன்னிறுத்துபவர்களாக ஆயினர். அசிஷ் நந்தி, ராமச்சந்திர குஹா, மகரந்த் பரஞ்சபே போன்றோர் வழி காந்தியை நெருங்கினர். ‘காலச்சுவடு’ இந்த தலைமுறையை உருவாக்கியது என்று சொல்வதை விட இப்படியான தலைமுறையின் இருப்பை கண்டுகொண்டு அவர்களுக்கான வெளியை அமைத்து கொடுத்தது என்பதை சொல்ல வேண்டும். அரசியல் காந்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதில் காலச்சுவடின் பங்கு முக்கியமானது என்று நம்புகிறேன். அதிலும் குறிப்பாக இந்துத்துவ எழுச்சியின் பின்புலத்தில் அரசியல் காந்தி மறுவாசிப்பு செய்யப்படுகிறார், மீள கண்டடையப்படுகிறார். 2010 முதல் ஏழெட்டு ஆண்டுகள் இணையத்தில் தீவிரமாக செயல்பட்ட இன்னொரு பெயரையும் குறிப்பிட வேண்டும். ராட்டை ரகு சமூக ஊடகங்களில் போகிற போக்கில் காந்தி மீது குவிக்கப்படும் அவதூறுகளுக்கு அயராமல் தரவுகளுடன் பதில்  அளித்தார். இன்று அவை கணிசமாக குறைந்ததற்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது என்று எண்ணுகிறேன். 



ஒரு சிந்தனை எப்படி சமூகத்தில் ஊடுருவுகிறது என்பதை கவனிப்பது சுவாரசியம். கோட்ஸே என்பவர் தனி மனிதர் அல்ல, அதே விளைவை விரும்பிய திரளின் பிரதிநிதி எனும் பார்வை எனக்கு உண்டு. இந்த பார்வையை நான் வந்தடைய முக்கியமான காரணம் தேவி பாரதியின் ‘பிறகொரு இரவு’ குறுநாவல். காவல்துறையினரும், அரசியலில் அவர் பெயரை சொல்லி ஆதாயம் பெறுபவர்களும்  காந்தியின் மரணத்திற்காக காத்திருக்கும் சித்திரம் வெளிப்படும்.  ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ எனும் சிறப்பு பகுதி வெளியாகிறது. தி. அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கத்தில் அசிஷ் நந்தியின் நீள் கட்டுரை ‘இறுதி சந்திப்பு’ அந்த இதழில் தான் வெளியானது. இக்கட்டுரை வெளியாவதற்கு பதிமூன்று ஆண்டுகள் முன்னர் தி.அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த நந்தியின் இன்னொரு கட்டுரை ஏப்ரல்- ஜூன் 1995 காலச்சுவடு இதழில் வெளியானது. இன்று அக்கட்டுரையை வாசிக்கும்போது மனம் உவகை கொள்கிறது. நந்தியை தமிழ் சிந்தனை பரப்பில் அறிமுகப்படுத்தியது காலச்சுவடின் மிக முக்கியமான பங்களிப்பு என்று கருதுகிறேன். 

‘காந்தியும் கோட்ஸேயும் இந்தியாவின் எதிர்காலம்’ கட்டுரையில் கோட்ஸேயை தனித்த வெறியனாக சித்தரிக்க முயல்வதற்கு மாறாக அவனை ஒரு தரப்பின் பிரதிநிதியாக நிறுத்தி காட்டுகிறார் நந்தி. கோட்ஸேயுடைய அரசியல் வாழ்க்கை 30 களில் காந்தி தொடங்கிய ஒத்துழையாமையில் தொடங்கி அவரை சுடுவதற்கு முன்பான வணக்கத்துடன் முடிவடைந்தது என்கிறார். காந்தியை கொன்றதற்காக கோட்ஸேவை விமர்சிக்கும் ஆர்தர் கோஸ்லர், ஆர்வல் போன்றோரிடம் கூட கோட்ஸேவுடைய அதே சிந்தனையே வெளிப்படுகிறது என்கிறார். கோட்ஸே பகுத்தறிவுவாதி, அறிவியலை நம்புபவன், சீர்திருத்தவாதி, தயவு தாட்சண்யமற்ற அரசியலை முன்னிறுத்துபவன். அவன் உண்மையான காரண காரிய அறிவு சித்தாந்தத்தின் நவீன பிரதிநிதி.  அதிநவீன இந்துவாக பிரகடனப்படுத்திக்கொண்ட அவன் இந்தியா சமய சார்பற்ற இனவேறுபாடாற்ற நாடாக திகழ வேண்டும் என்று விரும்பினான். இன்றுவரை ஆர். எஸ்.எஸ் நிலைப்பாடு அதுவே.  காந்தி இவற்றுக்கு நேர் எதிரானவர். அந்த கட்டுரை இப்படி முடிகிறது ‘நவீன உலகின் சார்பாகவும் அதன் ஆர்வல்கள்  கோஸ்லர்கள்  மற்றும் கிஸ்ஸிங்கர்கள்  சார்பாகவும்  காந்தியை கொலை செய்வதைத்தவிர கோட்ஸேவிற்கு வேறு வழியில்லை. காந்திக்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோட்ஸேவை விரட்டி ஓட்டுவதற்கு மரணத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு உகந்த வழி இல்லை.’ ஜி. நாகராஜனின் ‘கிழவனின் வருகை’ சிறுகதை கோட்ஸே குறித்த இத்தகைய பகுப்பாய்வை நந்தி எழுதுவதற்கு பலகாலம் முன்னரே முன்வைக்கிறது. நவீனத்துவம் காந்தியை புரிந்துகொள்வதில்  எதிர்கொண்ட சிரமங்களை புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கர், பெரியார், சாவர்க்கர் உட்பட காந்தியை விமர்சித்த தரப்புகள் நவீனத்துவ தன்மை கொண்டவை என தோன்றுகிறது. இந்த கட்டுரை 1995 ல் என்னவகையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும்? காலச்சுவடு வெளியிட்ட கோட்ஸே ஆதரவு கட்டுரையாகவே இது பொருள்பட்டிருக்கும்.   விமர்சனங்களுக்கு பதில் எழுதும் முகமாக தி. அ ஸ்ரீனிவாசன் டிசம்பர் 1995 இதழில் ஒரு குறிப்பு எழுதுகிறார்.  கோட்ஸே நகர்ப்புற, நவீனமயமான, உயர்சாதி மேற்கத்திய வயப்பட்ட தனியான சலுகைகள் வேண்டும் என கோரும் தரப்பின் பிரதிநிதி எனும் நந்தியின் கூற்றை சுட்டிக் காட்டுகிறார்.  காந்தியோ கிராமப்புற சாமானியர்களின் தரப்பை சார்ந்தவர். அவர்களது அறியாமையை வளர்ச்சிக்கான தடையாக காணும் மேட்டுக்குடியினரின் தரப்பு தான் கோட்ஸே எனும் நந்தியின் பார்வையை  விளக்குகிறார். 2008 ஆம் ஆண்டு இதே கோணத்தை விரிவாக பேசும் நந்தியின் கட்டுரை வெளியானபோது இத்தகைய எதிர்வினைகள் வரவில்லை. நந்தியின் கோணம் அறிவு சமூகத்தில் பொது ஏற்பு பெற்றுவிட்டது என்பதையே இது குறிக்கிறது.



 ‘இறுதி சந்திப்பு’ கட்டுரையின் பேசுபொருளை மட்டும் முன்வைத்து தனியாக இன்னொரு கட்டுரை எழுத முடியும். “கிருஷ்ணனுக்குக் கம்சன் எப்படியோ அப்படித்தான் காந்திக்குக் கோட்சேயும். ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் என்றாலும் இருவரும் பிரித்துப்பார்க்க முடியாதவர்கள், கம்சன் கிருஷ்ணனை அறிந்திருந்த அளவுக்கு அர்ஜுனன் கிருஷ்ணனை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. வெறுப்பு அன்பைக் காட்டிலும் பிணைப்பு மிகுந்தது. அன்பு பார்வையை மழுங்கச் செய்யும்; வெறுப்போ அதைக் கூர்மையாக்கும்.” எனும் டி.கே. மகாதேவன் மேற்கோளோடு தொடங்குகிறது கட்டுரை. “அரசியல் படுகொலைகள் ஒவ்வொன்றும் கொலையாளியும் அவனுக்குப் பலியாகுபவரும் இணைந்து கூட்டாகத் தயாரித்தளிக்கும் ஓர் அறிக்கை.” எனும் வரியொரு தீர்க்க தரிசனம் போல ஒலிக்கிறது. காந்தி எதை மாற்ற முயன்றார் என விவாதிக்கும் பகுதி மிகவும் முக்கியமானது.  இந்தியாவின் பாரம்பரிய அதிகார அமைப்புக்குக் காந்திய அரசியல் தரப்பு  இரண்டு தளங்களில் ஆபத்து விளைவிப்பவையாக பார்க்கப்பட்டன. இந்தியச் சமூகத்தின் மையமும் விளிம்பும் எவை? அவற்றின் வரையறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் காந்தியின் முயற்சிகள் முதல் ஆபத்து. இரண்டாவது, சமூகத்தின் உள்ளோட்டமாக இருந்த ஆண்மை, பெண்மை பற்றிய கருதுகோள்களின் மீதான அவரது மறுதலிப்பு. அறிவு புனிதமானதாகவும் பிராமணியத்தன்மைகொண்டதாகவும் நம்பவைக்கப்பட்டிருந்த ஒரு கலாச்சாரப் பின்புலத்தில், கருத்துக்குச் செயலினும் மேலான புனிதத் தன்மை அளிக்கப்பட்ட ஒரு சூழலில் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை ஏற்காமல் அதற்கு மாறாக  இந்திய அரசியலை அறிவுஜீவித்தனத்திலிருந்து விடுவிப்பதே அவரது முதல் குறிக்கோளாக  இருந்தது என நந்தி எழுதுகிறார். 


காந்தியச் சிந்தனையின் இன்னொரு முக்கிய அம்சமாக நந்தி கவனப்படுத்துவது, மனித சமூகத்தைப் பண்படுத்தும் சக்தியாகப் பெண்மையை அவர் கண்டறிந்ததை தான். ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இருதரப்பின் ஆண் அடையாளத்திற்குள் பெண்மையின் அம்சங்களான ஆக்கிரமிக்காத தன்மை, அரவணைக்கும் குணம், அஹிம்சை, இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் 'கலந்து' செயல்படும் தன்மை போன்றவற்றை விரிவுபடுத்தக் காந்தி முயன்றார் என்கிறார். காந்தி பாலியலைக் கடந்த, இந்து சமய மகாத்மாவாக மட்டுமின்றி, கிறித்தவத்தில் புனித பிரான்ஸிஸ்ஸைப் போலக் கிறித்துவின் மணப்பெண்ணாகவும் இருக்க விரும்பினார் என்று கூறுகிறார்.  நாதுராம் கோட்ஸே தனக்குள்ளிருந்த பெண் தன்மையை அழித்து ஆண் தன்மையை முன்னிறுத்தியவன். நாதுராம் ஒரு பெண்ணாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு மூக்குக் குத்தப்பட்டு வளையம் (நாத்) இடப்பட்டது. இதனால் ராமச்சந்திரா என்னும் இயற்பெயர் கொண்ட அவன் நாதுராம் என்று அழைக்கப்படலானான். அவனுக்கு சிறுவயதில் குறிசொல்லும் திறன் இருந்து வளர்ந்து அவனது சமூக பார்வை விரிவடையும் போது அது மறைந்துவிடுகிறது. ஒருவகையில் இதை பெண் தன்மையின் அழிவு என கொள்ளலாம். அந்தராத்மாவின் சன்னமான ஆனால் திடமான குரல் காந்திக்கு ஒலித்தபடி இருந்ததை ஒப்பிட்டு நோக்க வேண்டும். ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் துரியோதனன் தனக்குள்ளிருக்கும் பெண்மையை அழிக்கும் சித்திரம் நந்தியின் மேற்சொன்ன பார்வையின் நீட்சி என கொள்ள முடியும். காந்தி கொலையைப் பற்றி இப்படி எழுதுகிறார்.  “ஒரு சமூகத்தின் மையமாக இருப்பதை உடைத்தெறிந்து, புதியதொரு சுதந்திரமான சமூகத்தையும் பழமையின் சிதைவுகளிலிருந்து புதியதொரு அதிகார அமைப்பையும் ஏற்படுத்த முயன்றதன் மூலம், அச்சமூகத்தின் அதிகார மரபுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்த சக்தி ஒன்றைக் கட்டுக்குள் வைப்பதற்காக, அந்த மரபுகள் முயன்ற கதை இது என்று கொள்ளலாமல்லவா?” தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ கதைக்கு உந்துதலாக நந்தியின் கட்டுரைகள்  இருந்திருக்கக்கூடும் என தோன்றுகிறது. ஜனவரி 2008 காந்தி சிறப்பிதழில் தான் தேவிபாரதியின் கதையும் வெளிவந்தது. நந்தியை வாசிக்காமல் தேவிபாரதியின் வழியே நான் நந்தியின் கூற்றை சென்றடைந்திருக்கிறேன். 


ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பு பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் முக்கியமானது. காந்தி மீது அறிவுஜீவிகளுக்கு இருந்த விலக்கம் பற்றி யு.ஆர். அனந்தமூர்த்தியின்  ‘இன்றைக்கு இருக்கும் காந்தி’ கட்டுரை விவாதிக்கிறது. இன்றைய அறிவுஜீவிகளின் சிக்கலையும் காந்தி அவர்களிடமிருந்து வேறுபடும் இடத்தையும் பேசுகிறது. “அறிவு ஜீவிகளான நாம் நாலைந்து அடி முன்னால் எடுத்து வைத்ததுபோலத் தெரிந்தாலும், நாலைந்து அடி பின்னுக்குப் போயிருப்போம். ஆளுகிறவர்கள் யார் என நாம் பார்த்துக்கொண்டிருப்போம். அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்படி சற்றாவது பேசியிருப்போம். காந்தி சமூகம் மற்றும் தேசம் பற்றிய கேள்வியை ஒரு சம்சாரியின் நிலையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.” அனந்தமூர்த்தியின் அவதானிப்புகள் கூர்மையானவை. காந்திக்குத் தொழில்நுட்பவாதியின் குணம் இருந்ததாக குறிப்பிடும் அவர் காந்தியை ராமனுடன் ஒப்பு வைக்கிறார். புனைவு எழுத்தாளராக அனந்தமூர்த்தியின் சொற்கள் கூர்மையானவை. அவதானிப்புகள் துல்லியமானவை. “ஒரு தேசத்தை ஏககாலத்தில் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் பார்க்கும் வல்லமை காந்திக்கு இருந்தது” என்பது மிக முக்கியமான அவதானிப்பு. நம்மால் தேசமாக பார்க்கும்போது சமூகமாக பார்க்க முடிவதில்லை, சமூகமாக பார்க்கும்போது தேசமாக காண முடிவதில்லை.  காந்தி நம் துக்கங்களிலும் சங்கடங்களிலும் நிலைத்திருப்பார் எனும் அனந்தமூர்த்தியின் கூற்று அதன் உண்மையால் நிலைபெறுகிறது. நாதியற்றவர்களுக்குரிய போராட்ட வடிவத்தை கண்டடைந்தவராக  காந்தி என்றும் நினைவுகூரப்படுவார். 



சுற்றுச்சூழல், கடவுள் நம்பிக்கை, சத்தியாகிரகம், பொது வாழ்க்கை ஆகிய நான்கு தளங்களில் காந்தியின் தேவை இன்றுமுள்ளதாக அடையாளப்படுத்துகிறார் ராமச்சந்திர குஹா தனது ‘காந்தி இன்னும் தேவைப்படுகிறார்’ எனும் கட்டுரையில். ஜி எஸ் ஆர் கிருஷ்ணன் எழுதிய ‘அறியப்படகுட காந்தி’ இந்த சிறப்பிதழில் எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த கட்டுரை. சில அசலான அவதானிப்புகளை கிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.  ‘சுதேசியம் என்பது ஒரு சித்தாந்தம். கதர் என்பது சுதேசியத்தின் மையமான, பருண்மையான உண்மை. கதரில்லாத சுதேசியம் என்பது உயிரற்ற உடம்பு போன்றது. புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மட்டுமே அது தகுதியானது.' எனும் காந்தியின் மேற்கோளை கொண்டு காந்தி கொள்கையை உயிர் என்றும் நடைமுறையை உடல் என்றும் காணும் பொதுப்போக்கை எப்படி தலைகீழாக ஆக்குகிறார் என்பதை காட்டுகிறார். ஸ்டாலின் ராஜாங்கம் வழி நான் அறிந்துகொண்ட அயோத்திதாசர் வரலாறு என்பது இறுகிய பாறையல்ல, நெகிழ்வானது, காலந்தோறும் மாறுவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார். காந்திக்கும் வரலாறு குறித்து இத்தகைய பார்வையிருந்ததை அறியும்போது வியப்பாக இருந்தது. கிப்பனின் ரோம சாம்ராஜ்யம் எனும் வரலாற்று நூலை காட்டிலும் மகாபாரதம் மேலானது என காந்தி கருதியதாக கிருஷ்ணன் எழுதுகிறார்.  “உண்மைக்கும் புனைகதைக்குமான இடைவெளி மிகவும் குறுகியது. வரலாறே இல்லாத நாடுதான் மகிழ்ச்சியானதென்று தான் கருதுவதாகவும்” காந்தியின் சிந்தனைகளை பற்றி கிருஷ்ணன் எழுதுகிறார். வரலாறு ஆயுதமாக பயன்படக்கூடும் எனும் புரிதல் காந்திக்கு இருந்ததாக தெரிகிறது. கலை குறித்து காந்திக்கும் ராமச்சந்திரனுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல் இன்றும் விவாதத்திற்கு உரியது. ‘எப்போது மனிதன் சத்தியத்தில் அழகைக் காண முடிகிறதோ அப்போதுதான் உண்மையான கலை உருவாகும்' என்பதே அவர் நோக்கில் கலைக்கான வரையறை. 'சத்தியத்தையும் அழகையும் பிரிக்க முடியாதா?' என்னும் ராமச்சந்திரனின் கேள்விக்குக் காந்தியின் பதில் 'உண்மையைத் தவிர அழகானது ஒன்றுமில்லை. ஆனால், உண்மை பல விதங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.’ வி. ராமமூர்த்தி காந்தியின் கடைசி  இருநூறு நாட்கள் நூலுக்கு எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளது. சுகுமாரன் மொழியாக்கத்தில் அம்பேத்கர் பார்வையில் காந்தியம் எனும் அப்துல் மஜீதின் கட்டுரை இதே இதழில் வெளியாகியுள்ளது. காந்தியத்தை விமர்சன நோக்கில் அலசுகிறது. 


தமிழ் காந்திய எழுத்துக்களில் 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பிதழுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று நம்புகிறேன். ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ நூலில்  நந்தி, குஹா போன்றோரின் தாக்கம் வெளிப்படுகிறது.  2008 சிறப்பிதழில் பெரும்பாலான கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தன. 2020, 2023 சிறப்பிதழ்களில் அணில் நூரியா, திரிதீப் சுஹ்ருத் போன்றோரின் ஒருசில கட்டுரைகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டன. பிற கட்டுரைகள் அனைத்துமே அசலானவை. காந்தியை பற்றி பேசவும் எழுதவும் சில அசலான குரல்கள் இடைப்பட்ட காலத்தில் உருவாகியுள்ளன என்பதையே இது காட்டுகிறது. இந்த குரல்கள் இங்கு நிலைபெற வேறு பல ஆளுமைகள் காரணிகளுடன் சேர்ந்து  காலச்சுவடு இதழும்  நிச்சயம் முக்கிய  பங்காற்றியுள்ளது என சொல்ல முடியும். 


காந்தி சிறப்பிதழ்களை தவிர கணிசமாக காந்தியை குறித்து எழுதப்பட்டுள்ளன. அவ்வப்போது விமர்சனபூர்வமான எழுத்துக்களும் பதிவாகியுள்ளன. ப்ரேமின் காந்தியை கடந்த காந்தியம் புத்தக பகுதி இரண்டு கட்டுரைகளாக பிரசுரமாகியுள்ளன. நவம்பர் 2018 இதழில்  ‘காந்தியால் தொடங்கிய தலித்துகளுக்கான பள்ளிகள்’ எனும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை காந்தியின் அரசியல் மீதான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயல்தளத்தில் அவரை மதிப்பிட முனைகிறது. “மதுரையின் கீழடி போன்ற பண்பாட்டுப் பெருமையோடு இணையும் நம்முடைய உளவியல், சேவாலயம் போன்ற சமூகப் போராட்டப் பெருமையோடு இணைவதில் தயக்கம் கொள்கிறது. ஏனெனில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குப் பிம்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நமக்கு அது தொந்தரவாய் இருப்பதில்லை. வரலாற்றில் நிகழ்ந்துவிட்டதால் மட்டுமல்ல அதை ஆதரிக்கிறோமோ இல்லையோ அவ்வாறு நடந்தது என்ற அளவிலாவது பலவற்றைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்குச் சொல்லப்படும் ‘முற்போக்கு’ வரலாறு முற்றிலும் அரசியல் மயப்பட்டது. இதையெல்லாம் தாண்டி காந்தியர்களும் இக்களத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதை வரலாற்று நிலை கருதியாவது தலித்துகள் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்பலாம்” என எழுதுகிறார். நவம்பர் 2024 இதழில் ஜெ. பாலசுப்பிரமணியம் எழுதிய ‘மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்’ எனும் கட்டுரையில் ‘ஆனால் இன்று தலித்துகள் காந்தியையும் காந்தியர்களையும் ஏற்றுக்கொண்டால் கூட மற்றவர்கள் அதை அனுமதிக்க’த்  தயாராக இல்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன’ என்று எழுதுகிறார். தலித்துக்கள் மதுவிலக்குக்காக நடத்திய பத்திரிக்கைகள், சங்கம் குறித்தும் காந்தி- இராஜாஜி ஆகியோர் மதுவிலக்கு சார்ந்து ஆற்றிய பணிகள் குறித்தும் பேசுகிறது. ஜனவரி 2010 இதழில் அரவிந்தன் ‘காந்தி ஏன் உப்பை எடுத்தார்?’ எனும் கட்டுரையில் உப்பின் குறியீட்டு முக்கியத்துவத்தை விளக்குகிறார். ஆகஸ்ட் 2017 இதழில் ‘ காந்தி கண்ட பாரதி’ கட்டுரையில் ய மணிகண்டன், பாரதி நடத்திய பாலபாரதம் இதழ் பற்றிய அறிவிப்பு காந்தியின் தென்னாபிரிக்க பத்திரிக்கையான இந்தியன் ஒபினியனில் வெளிவந்துள்ளது என்பதை எடுத்து காட்டுகிறார். தற்போது சித்ரா பாலசுப்பிரமணியம் மதிப்புரைகள், காந்தி தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 



காந்தியை பற்றிய கட்டுரைகளைத் தவிர்த்து ராமச்சந்திர குஹா, அசிஷ் நந்தி, கணேஷ் தேவி, ஜி.எஸ். லட்சுமண அய்யர், நிர்மல் வெர்மா  போன்ற முக்கியமான காந்திய ஆளுமைகளுடனான நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்லால் பகுகுணா, ஈரோடு ஜீவானந்தம், லட்சுமண அய்யர், லாரி பேக்கர், தரம்பால், க.மு நடராஜன், சசி பெருமாள் போன்ற காந்திய ஆளுமைகளுக்கு விரிவான அஞ்சலி குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது தமிழ் அறிவு சூழலில் காந்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் காலச்சுவடுக்கு முக்கிய பங்கு உள்ளது. காந்தியும் அம்பேத்கரும் வேறெந்த தலைவர்களை காட்டிலும் இன்று உயிர்ப்புடன் இருக்க முக்கிய காரணம் அவர்கள் இன்றும் நம்மோடு விவாதித்தபடி உள்ளார்கள் என்பதே. வாசிக்கப்படும் வரை, விவாதிக்கப்படும் வரை வரலாற்று ஆளுமைகள் ரத்தமும் சதையுமாக நம்முடன் இருப்பதாகத்தான் பொருள். நமது அன்றாடங்களை தீர்மானிப்பவர்களாக வாழ்க்கை முறைகளை வழிநடத்துபவர்களாக வரலாற்று ஆளுமைகள் உருமாறுவதற்கு அறிவுலகம் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். அவ்வகையில் காந்தியை உயிர்ப்புடன் வைத்திருக்க காலச்சுவடு மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றிவருகிறது. 




 









  •  

டாங்கோ - குணா கந்தசாமி- வாசிப்பு

 


குணா கந்தசாமி எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். புதிய நாவலான “டாங்கோவை” அவரது இரு இலக்கிய நண்பர்களான கே. என். செந்திலும் பாலாவும் வரைவு வடிவத்தில் வாசித்தார்கள் என்பது அவரை புரிந்து கொள்ள உதவும். பாலாவும் செந்திலும் ஒரு கிடைமட்ட கோட்டின் இரு எல்லைகள் என்று வைத்துக்கொண்டால் குணா இவர்கள் இருவருக்குமான நடுப்புள்ளி. அவரால் சுக்கிலம் போன்ற முற்றிலும் நவீன வாழ்வின் சிடுக்கை பேசும் கதையை எழுத முடியும் திரிவேணி போன்ற மண்ணில் காலூன்றிய கதையையும் எழுத முடியும்.  இந்த வீச்சு அவரை எனக்கு முக்கியமான எழுத்தாளராக ஆக்குகிறது. 


குணாவிடம் சம்பத் கோபிகிருஷ்ணன் போன்ற இருத்தலியல் எழுத்தாளர்களின் சாயல் உண்டு. வெறுமையும் தனிமையும் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை. ஆனால் அக்காலகட்டத்து எழுத்துக்களில் இருந்து குணா வேறுபடும் புள்ளியை தொட்டு காட்ட வேண்டும். முந்தைய காலகட்டத்து வெறுமை பொருளியல் பற்றாக்குறையுடன் நெருங்கிய தொடர்புடையது. சுராவின் உருவகத்தை கடன்வாங்குவதென்றால் எதனாலும் நிறையாத ஒரு பள்ளம். “டாங்கோவின்” ஆனந்துக்கு என்ன தான் பிரச்சினை? அவனுக்கு என்ன தான் வேண்டும்? இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அவனால் எதையும் துய்க்க முடியும். பற்றாகுறை மட்டுமே நிலவிய கடந்தகாலத்தை கடந்துவிட்டான். ஆனாலும்  ஓரு பெரும் வெறுமை அவனை சூழ்கிறது. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவனுக்கு முடியவில்லை. சுயேச்சையை கொண்டு அவன் செல்வது தன்னழிவின் பாதையை. அவனது வெறுமையும் தனிமையும் நுகர்வால் நிறையாதது. அவனுக்கு பெண் உடல் தான் வேண்டுமா? அதை அடைகிறான். ஆனால் அவனுக்கு அது நிறைவை தரவில்லை. அவன் வளரும் போது உடனிருக்காத தந்தையையும் தாயையும் தேடுகிறான். ஒரு குடும்பத்தை ஈட்டிக்கொள்ள முனைகிறான். பள்ளி கால தமிழ் ஆசிரியர் ராகவன், கல்லூரி ஆசிரியர், ஸ்பானிய பத்தி எழுத்தாளர் மத்தியாஸ், அடுக்கக உரிமையாளர் கிரிஸ்டோப் என வயதில் மூத்த அத்தனை பேரிடமும் தந்தையை கண்டடைய முற்படுகிறான். இந்திய முகமே தென்படாத சிறிய கடற்கரை நகரமான உருகுவே நாட்டின் மாண்டி வீடியோவில் அவன் காணும் காந்தி சிலை கூட அவனுக்கு தந்தையின் வடிவமாக தான் இருக்கிறார். அவர் முன்னால் லாகிரி பயன்படுத்தியதற்காக கூசுவான். அவரது இருப்பு அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. காந்தி அவனுக்கு வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள தூண்டுகிறார். தன்னழிவின் பாதையிலிருந்து மீண்டு வர அவரது இருப்பும் உதவுகிறது.  


நாவல் ஒரு தளத்தில் உறவின் கூடலையும் பிரிவையும் பேசும் காதல் கதை. இன்னொரு தளத்தில் குடும்ப அமைப்பை பற்றிய உரையாடல் நிகழ்கிறது. அதுவே இந்த நாவலின் சமூக தளம். இதற்கடுத்து மூன்றாவதாக ஒரு ஆன்மிக அடுக்கும் உள்ளது. இருத்தல் குறித்த விசாரணை ஒரு சரடாக நாவல் முழுக்க வருகிறது. இருத்தலியல் பிரதிகள் போல சூனியத்திற்குள் சென்று முட்டிக்கொள்ளாமல் மேலெழுகிறது.  ஆன்மிகம் என்பது தன்னை கண்டடைதல் தான். தன்னை கண்டடைய தனக்குள்ளிருக்கும் இருளை எதிர்கொண்டு கடக்க வேண்டும். 



ஆனந்த் வாழ்வில் சந்தியா வருகிறாள். திருமண முறிவிலிருந்து மீண்டவள் இன்னொரு உறவுக்குள் வர தயாராக இல்லை. எந்த உறுதியும் கோராத, எந்த பிணைப்பையும் ஏற்காத உறவே அவளுடைய தேர்வு. குடும்பம் எனும் அமைப்பினால் பாதிக்கப்பட்டவள். சந்தியாவால் தன் வாழ்வு பொருளுடையதாக ஆவதை உணர்கிறான். அவளது அண்மையில் தன்னை ஒழுங்குக்குள் கொணர்ந்து பேணி கொள்கிறான். அவனை விட்டு சென்ற பிறகு திரும்பவும் இருளில் மூழ்குகிறான். இயல்பான நட்புடன் பழகி வந்த  வேசையின் மீது திடிரென்று நாட்டம் கொள்கிறான். அவனது பள்ளத்தை உடலால் நிறைக்க முயல்கிறான். உடல் நலம் குன்றிய ஓரிரவில் அவன் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்து செல்லும் இடம் நாவலின் மிக முக்கியமான தருணம். அவள் இரு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறிந்து கொள்கிறான். அதற்கு பின் அவளை நாடவில்லை. பல வகைகளில் பொருள் படதக்கது. அதுவரை பெண்ணாக தெரிந்தவள் தாயாக தன்னை வெளிப்படுத்துகிறாள். பிரபஞ்சத்தை தனது தோழமையாக வழிகாட்டியாக உணரும் புள்ளியில் நாவல் நிறைவடைகிறது. 


“டாங்கோ” இருவர் ஒன்றாகும் ஒருவித நடனம். மரபான குடும்ப அமைப்புக்கு மாற்றான புதிய அமைப்பிற்கான உருவகமாக வாசிக்க முடியும். ஆன்மிக தளத்தில் இருமையொழிந்த நடனம் என்பதையும் குறிக்கிறது. நாவலின் முற்பகுதிகளில் வரும் கிறிஸ்டோப் மத்தியாஸ் ராகவன் எம்கே போன்ற பாத்திரங்கள் வழியாக குடும்ப அமைப்பின் மாறிவரும் இயங்குதளம் குறித்த ஒரு உரையாடல் நடக்கிறது. என்னளவில் அந்த பாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இந்த உரையாடலை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். கிறிஸ்டோப் குடும்பம் என்பது பாலியல் அமைப்பு அல்ல சமூக அமைப்பு என சொல்கிறார். பாலியல் சுதந்திரத்தை அனுமதிக்கும் சமூக அமைப்பாக குடும்பம் உருமாற முடியுமா என்றொரு கேள்வி எழுகிறது. ஏறத்தாழ ஆனந்தை போலவே தனியனாக இருப்பவர் மத்தியாஸ். இறந்து போன சகோதரியின் மகளை பேணும் பொறுப்பு அவரிடம் வந்ததும் பொறுப்புடன் நடந்து கொள்ள தொடங்குகிறார். கிறிஸ்டோபின் கூற்றை வலுப்படுத்தும் சித்திரமாக இதை காண முடியும். 


நாவலில் நிலம் முக்கிய பங்காற்றுகிறது. இரவு விளக்கில் மின்னும் நீர்பரப்பின் சித்திரம் அபாரமாக உள்ளது. றாம்பாலா காந்தியை கண்ணில் காண முடிகிறது. நாவலுக்குள் காந்தியின் இருப்பு ஆனந்துக்கு வாழ்வை பொருளுடையதாக ஆக்கிக்கொள்ள உந்துகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற சுயகூராய்வு நாவல் என்பதே ‌ இந்த நாவலின் வடிவம். அதுவே இதன் எல்லையும் கூட. அஜிதனின் ‘மைத்ரியுடன்’ பலவகையிலும் ஒப்பிடலாம். இரண்டு நாவல்களும் அபாரமான நிலைக்காட்சி விவரணை கொண்டவை. ஒரு பெண் வழியாக தன்னை கண்டடைவது என்பதை முன்வைப்பவை. மைத்ரி கொந்தளிப்பான மொழியில் உறவையும் பிரிவையும் சொல்கிறது என்றால் ‘டாங்கோ’ ஆர்பாட்டமற்ற அடங்கிய மொழியில் விலகிய தொனியில் அணுகுகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற தன்னை நோக்கும் நாவல்கள் தான் இரண்டுமே. வேறுபடும் புள்ளிகளும் உண்டு. சமகாலத்தின் வெறுமையை இருவிதமாக அணுகியுள்ளார்கள் என்று சொல்ல முடியும். விமர்சனம் என்பது பிரதியில் எது இல்லையோ அதை சுட்டுவது அல்ல. அதே போல் நான் எழுதி இருந்தால் என்ன எழுதி இருப்பேன் என்று சொல்வதும் அல்ல. அப்படி சொல்லும்போது அது என்னுடைய பிரதியாகும். அவனது மீட்சி வலுவாக சித்தரிக்கப்படவில்லை என்பதை வேண்டுமானால் ஒரு விமர்சனமாக வைக்க முடியும்.  நல்ல நாவல் அளித்த குணாவிற்கு வாழ்த்துகள்.  

எதிர் வெளியீடு - புத்தகம் வாங்க

  •  

குட்டிச்சுவர் கலைஞன் எனும் சைத்தானின் தோழர்

 ‘மயிர்’ மின்னிதழில் வெளிவந்தது.



எழுத்தாளரின் படைப்பூக்கத்தை வெளிப்படுத்தும் காரணி எது என படைப்புகளின் வழி கண்டடைவது எனக்கு முக்கியம். அதன் வழிதான் அவர் எந்த கேள்வியை பின் தொடர்கிறார், எதனுடன் முட்டி மோதுகிறார் என்பதை கவனிக்க இயலும். தனித்தனி கதைகளாக சில கதைகள் உருபெறாமல் போயிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது அந்த சலனத்தை கண்டுகொள்ள இயலும். எழுத்தாளர் முட்டிக்கொள்ளும் வினா எத்தகையது,  எத்தனை விடாப்பிடியாக, தீவிரமாக, கலாப்பூர்வமாக அந்த வினாவை தொடர்கிறார் என்பதே இன்று எனக்கு எழுத்தாளரை மதிப்பிட முக்கிய கருவியாக உள்ளது. என் நோக்கில் ஜாகிர் இரண்டு முக்கியமான கேள்விகளை தொடர்கிறார். அமைப்புக்கும் தனிமனிதனுக்குமான உறவு சார்ந்தது முதன்மை கேள்வியெனில், நுண்னுணர்வு கொண்ட கலை மனத்திற்கு நிலையாமையும் அலைக்கழிப்பும் அருளப்பட்டது ஏன் எனும் கேள்வி இரண்டாவது. ஜாகிரின் எழுத்தில் கதைசொல்லி- இலக்கியவாதி என இருவரும் தொழில்படுவதை கவனிக்க முடிகிறது. முதல் கேள்வியை கதைசொல்லியாகவும் இரண்டாம் கேள்வியை இலக்கியவாதியாகவும் எதிர்கொள்கிறார்.


மனிதகுலம் அமைப்புகளை ஏன் உருவாக்குகிறது? உதிரி உயிரினங்களாக எஞ்சியிருந்தால் இன்றைய சாத்தியத்தை அது எட்டியிருக்க முடியாது. அமைப்புகளை உருவாக்க கற்பனைத்திறனும் படைப்பூக்கமும் தேவைப்படுகிறது. அமைப்புகள் வழியே மனிதகுலம் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டது. மரணத்திற்கு விளக்கம் தேடிக்கொள்ள முற்பட்டது. அமைப்புகளை முற்றிலும் எவராலும் எக்காலத்திலும் நிராகரிக்க இயலாது. ஏனெனில் அது மனித ஆழ்மனங்களின் கூட்டு கண்டடைவு. அமைப்புகள் உள்ளே வெளியே என தெளிவான வரையறைகளால் ஆனது. இரண்டும்கெட்டான்களை கணக்கில் கொள்வதில்லை. அறம் என்றும் விதி என்றும் உருவாக்கி செறிவாக்கி பரிணாமம் அடைகிறது. மனிதர்களின் சிருஷ்டி மனிதர்களுக்கே எதிராக ஆகுமென்றால்? எப்போதும் அப்படித்தானே. இறுக்கி, சுருக்கும் சர்ப்பங்களாக ஆகும்தோறும் நெகிழ்த்தவும் உடைப்பு ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. கலையும், மெய்யியலும், இலக்கியமும் இந்த நெகிழ்வுகளை காலந்தோறும் உருவாக்கி வந்தன.


நவீன இலக்கியம் தனி மனிதனை அலகாக கொண்டது. மனிதர் உருவாக்கிய அமைப்புகளின் இறுக்கத்தை உதிரியான தனி மனிதனின் விசனங்கள் வழி நெகிழ்த்த முற்படுகிறது. இலக்கியம் ஒரு அறிவுதரப்பை உருவாக்குகிறது. அமைப்பு ஐயம் கொள்கிறது. ஏற்க மறுக்கிறது. பாதுகாப்பின்மையை அதிகரிக்காது எனும் உத்தரவாதத்தை கோருகிறது. மெல்ல ஏற்பு உருவாகி வந்ததும் அமைப்பு அந்த மாற்றத்தை தனதாக்கிக் கொள்கிறது. எழுத்தாளர் உதிரிகளின் பிரதிநிதி. அவர்களின் குரலை ஒலிக்க செய்வதே அவர் பணி. இந்த பின்புலத்திலிருந்து கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புலகத்தை அனுக முடியும். அவர் தான் சார்ந்த தமிழ் இஸ்லாமியர் எனும் அடையாளத்தில் நின்றபடி விமர்சன குரல்களை எழுப்பி வருகிறார். இஸ்லாம் எனும் அமைப்புக்கும் தனிமனிதருக்கும் இடையேயான முரண்பாடுகளே அவரை சலனப்படுத்துகிறது. ஆக்கப்பூர்வ எதிர்குரலுக்கும் புறக்கணிக்கும் விமர்சன குரலுக்கும் வேறுபாடுண்டு. பின்னதுடன் நாம் உரையாட ஏதுமில்லை. அமைப்புகளின் நியாயத்தையும் இருப்பையும் ஏற்றுக்கொள்வதோ புரிந்துகொள்வதோ இல்லை. முன்முடிவுகளும் காழ்ப்புகளும் நிறைந்ததாக இருக்கவும் கூடும். ஆனால் ஆக்கப்பூர்வ எதிர்குரல் அமைப்பிற்குள் இருந்தபடி அதன் எல்லைகளை விஸ்தரிக்க முயல்கிறது. ஜாகிரின் குரல் அழித்தொழிப்பை கோரவில்லை, மாறாக உள்ளிருந்து எழும் விமர்சன குரலாக ஒலித்து உரையாடலை கோரி நிற்கிறது. உதாரணமாக ‘நரகத்திலிருந்து ஒரு குரல்’ கதையின் நாயகன் அபுவிற்கு நோன்பிருக்க வேண்டும் எனும் ஆவல் உள்ளது, நோன்பு அவனை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் எனும் நம்பிக்கையும் உண்டு, ஆனால் நாவடக்கமற்றவன். பசி பொறுக்கவோ ருசி மறுக்கவோ முடியாத சபலமும் உள ஊசலும் கொண்டவன். நரகம் நிச்சயம் எனும் பிரசங்கமும் நோன்பின் மகத்துவமும் அதை ஒருபோதும் தன்னால் கடைப்பிடிக்க முடியாத எனும் தனது உளதிட்பமின்மையால் விளைந்த குற்ற உணர்வும் அவனை அலைக்கழிக்கிறது. ஒரு பலவீன மனமுள்ள தனிமனிதனுக்கு இந்ந அமைப்புக்குள் குற்ற உணர்வின்றி உலவ முடியாதா? என்பதே அவர் எழுப்பும் கேள்வி.




உலகியலுக்கு உதவாத வாழ்வை சமூகம் எப்படி மதிப்பிடுகிறது எனும் பெரும் கேள்வியாக இதை வளர்த்தெடுக்கலாம். ஷோபா சக்தியின் தொடக்ககால நாவல்களான ‘ம்’ ‘கொரில்லா’ குறித்து நண்பர் ஈரோடு கிருஷ்ணனுடன் உரையாடிய போது ‘லட்சியமற்று மனிதர் வாழக்கூடாதா?’ எனும் கேள்வியை ஷோபா எழுப்புகிறார் என்றார். இந்த கேள்வியை ஜாகிர் படைப்புலகத்திலும் பொருத்தி பார்க்கலாம்.  மேற்சொன்ன கதையின் நீட்சியாக ‘இயல்பு’ எனும் கதையைக் காணலாம். தந்தையின் நினைவுநாளன்று பிச்சைக்காரனுக்கு அன்னதானம் அளிப்பதற்காக கேரியரை சுமந்துக்கொண்டு அலைகிறான். ஆனால் அன்று வேறொரு பிரமுகர் வீட்டு விழாவில் இலவச அன்னதானம் அளிக்கப்படும் செய்தி கண்ணில் படுகிறது. ஆகவே எல்லோரும் அங்கு சென்றிருப்பார்கள் என்பதை உணர்கிறான். கொண்டு சென்ற கேரியரில் இருந்த உணவின் வாசம் அவனை ஈர்த்தது. பிரித்து நிதானமாக உண்டுவிட்டு திரும்புகிறான். அவனுக்காக சமைத்த உணவை வேறொரு பரதேசி வீடுதேடி வந்து உண்டு சென்றார் என கதை முடிகிறது. தந்தையின் மீது பிரியமில்லாதவன் இல்லை, அவருக்காக உணவை ஏறியிறங்கி வெயிலில் சுமந்து செல்கிறான், ஆனாலும் அவன் உள சலனத்திற்கு பணிகிறான். இக்கதை அமைப்பிற்கும் தனிமனிதனுக்குமானதல்ல,  தந்தை மகன் எனும் தனி மனிதர்களுக்கு இடையேயானது. மறுமையிலிருக்கும் தந்தை இம்மையிலிருக்கும் மகனை புரிந்து கொள்கிறார். வேறு வடிவில் உணவேற்று அவனை குற்ற உணர்வடையாமல் மீட்டு ஆசிர்வதிக்கிறார். அவன் உண்டது தந்தையின் பிரசாதமென ஆகிறது. ஜாகிரை மனிதர்களை கொண்டாடும் ‘மானுடவாதி’ (Humanist) என வகைப்படுத்தலாம் என தோன்றுகிறது. ‘சைத்தான் மீது எறிந்த கல்’ கதையில் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்தபாவை சைத்தான் எவ்வாரேனும் நெறி பிறழ வைக்க முயல்கிறது. யாத்திரையின் ஒரு சடங்காக சைத்தான் மீது கல்லெறியும் சடங்கு நிகழ்கிறது. ‘தொடர் தொழுகையால் கிடைத்த சாந்த சொரூபத்தை சைத்தானுக்காக மாற்றிக்கொண்ட முகங்கள்’ கையில் கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு ஆக்ரோஷமாக சைத்தானை தாக்கினர். அதுவரை சைத்தானை வென்று வந்த‌ முஸ்தபா அப்போது ‘ஹாஜிகளுக்கு இப்படி ஒரு ஹிம்சையான சடங்கு தேவைதானா என்றும் கூட ஆண்டவனிம் கேட்டார்.’ அவரது தடுமாற்றம் கண்டு சைத்தான் கூட்டம் கும்மி கொட்டி சிரித்தன. தனிமனிதராக அந்த சந்நத ஆட்டத்தில் தன்னை விலக்கிக்கொள்கிறார். மெல்லிய ஊசலாட்டமும் விலக்கமுமே நெரிசலில் சிக்கி உயிர் விட காரணமாயிருந்தது. ஐயமும் சஞ்சலமும் சைத்தானின் இயல்புகள் அல்லவா. ‘நீஸா என்றொரு சிநேகிதி’ எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று. இறந்துபோன தோழி நூருன்னிஸாவின் நினைவாக ஒரு ஆட்டுக்குட்டியை வளர்க்கிறாள் அவளது தோழி ஆயிஷா. வினோதமான அவளது ஈர்ப்பு எவருக்கும் விளங்கவில்லை. ஊரில் இல்லாத போது அந்த ஆட்டை அவளது அத்தா விற்றுவிடுகிறார். அதுவும் நூருன்னிசாவின் தந்தைக்கே. ‘இறந்துவிட்ட தன் மகளின் பெயர் சூட்டி அந்த ஆடு நீஸாவென அழைக்கப்பட்டுக் கொண்டிருந்ததெல்லாம் அந்த மனுஷனுக்குத் தெரியும். தெரிந்து என்ன பிரயோஜனம். மகளாவது மனைவியாவது அவர்களைப் பொறுத்தவரை அது வாயற்ற ஒரு ஜீவன். வியாபரத்துக்கான பிராணி. அதன் இறைச்சி மட்டுமே அவர்களின் குறி.’ என அங்கலாய்க்கிறாள். அவளது உணர்வை பைத்தியக்காரத்தனமானது என்றே எல்லாரும் கருதுகிறார்கள். அவளை பைத்தியம் என்றே கருதுகிறார்கள். தோழியின் நினைவாக ஊனுணவை தவிர்க்கிறாள். வினோதமாக நோக்கப்படுகிறாள். ஆயிஷாவும் பொதுபோக்கிலிருந்து விலகிய ஒரு உதிரிதான்.




‘தேய்பிறை இரவுகள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பக்ரீத் ஆடுகள்’ பரம்பரை கசாப்புக்கடைக்காரரான சுலைமான் ராவுத்தரின் கதையை சொல்கிறது. ஊரின் பெரிய கையான ஏ.எம்.எஸ் முதலாளி அவரை தூக்கி நிறுத்தியவர். திருமணத்திற்கு கொமறுகள் அடுத்தடுத்து நிற்கிறார்கள் பக்ரீதின் போது வெட்டப்படும் ஆடுகளை நம்பி பிழைப்பை ஓட்டுபவர். ஏ.எம்.எஸ் முதலாளி ஒவ்வொரு ஆண்டும் முப்பது நாற்பது கிடாய்களை வாங்குபவர். அதற்காக முன்பணமும் கொடுத்துவிடுவார். ஆனால் அந்த ஆண்டு கைகாசை மொத்தமாக முடக்கி ஆடுகளை பத்திவந்தாலும் கூட அவரிடமிருந்து பெரிய ஆர்வம் வெளிப்படவில்லை. தொழில் சுணக்கம் என பேச்சு. பெரியவர் குர்பானிக்கு ஒட்டகத்தை கொண்டு வந்து இறக்குகிறார். ‘குறிஞ்சி நிலத்தில்’ அகலமான பாதங்களை வைத்து முதல்முறையாக ஒட்டகம் நடந்தது’. சுலைமான் ராவுத்தர் வேப்பங்குச்சி கசப்பு மாறாமல் அண்ணாந்து பார்த்தார் எனும் புள்ளியுடன் கதை நிறைவடைகிறது. ஒட்டகத்திற்கும் தமிழகத்திற்குமான பொருந்தாதன்மையை சுட்டுகிறது.


 ‘கொமறு காரியம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கசாப்பின் இதிகாசம்’ இந்த கதையின் தொடர்ச்சியாக இணைத்து வாசிக்கப்பட வேண்டியது. எனது சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இக்கதைக்கு நிச்சயம் ஓரிடம் உண்டு. முந்தைய கதையில் கைவிடப்பட்டதாக உணரும் கசாப்புக்கடைக்காரரின் கோணத்திலிருந்து ஒட்டகத்தின் வருகை பேசப்படுகிறது. தனி மனிதனின் அங்கலாய்ப்பு, கசப்பு தோல்வியாக மட்டும் வெளிப்படுகிறது. ‘கசாப்பின் இதிகாசத்தில்’ அபாரமான பகடி கைகூடி வந்துள்ளது. மொழியின் துடிப்பையும் துள்ளலையும் உணர முடிகிறது. ஒட்டகம் இங்கே வேறொன்றின் குறியீடாக ஆகிறது. ஒரே நிகழ்வின் வெவ்வேறு சாத்தியங்களை எப்படி வெற்றிகரமான கதையாக்குகிறார் என்பதை ஒரு எழுத்தாளராக இவ்விரு கதைகளைக் கொண்டு நோக்கும் போது பெரும் கற்றல் வாய்ப்பை அது நல்குகிறது. ஒட்டகத்தின் வருகை கசாப்பு கடைக்காரரின் வாழ்வாதார சிக்கல் எனும் புள்ளியை ‘பக்ரீத்தின் ஆடுகள்’ கைக்கொள்கிறது. ஆனால் அதுவல்ல சிக்கல். ஒருவர் ஒட்டகத்தை இங்கே ஏன் தருவிக்க வேண்டும்? அதன் பின்புள்ள உளவியல் என்ன? என கதையின் கோணத்தை தலைகீழாக்குகிறார். ‘எது ஒன்றிலும் ஒரு அரபு முத்திரை இருக்க வேண்டும். வளைகுடா வாசனை வீசவேண்டுமல்லவா? அப்போதுதானே உன்னை முஸ்லிம் என்று ஒப்புக்கொள்வார்கள். என்ன உன்னுடைய மூதாதையர்கள் கொங்கு மண்டலத்தில் உள்ளொடுங்கிய பட்டிக்காட்டில் விவசாயம் செய்து கொண்டிருந்த குடியானவர்கள். உண்மைதான். உன் முகரக்கட்டையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தாலே அது தெரியும்.’ ஜாகிர் தனது கதைகளின் ஊடாக தொடர்ந்து இந்த விவாதங்களை எழுப்பி வருகிறார். உருது இஸ்லாமியர்களுக்கும் தமிழ் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான பாகுபாடு, தமிழ் இஸ்லாமியர்களின் தாழ்வுணர்வு குறித்து வெவ்வேறு கதைகளில் பேசுகிறார். உள்ளூர் பண்பாட்டுடன் முயங்கி உருவான தமிழ் இஸ்லாமின் இடம் இறக்குமதி கூறுகளால் சுருங்கி வருவதை குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். ஒட்டகம் அரேபிய கூறுகளின் வருகையின் குறியீடாக பரிணாமம் கொள்கிறது.  யார் இறக்குமதி செய்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஆன்மீகத்துக்கு தன்னை முழுதளித்து வாழ்பவர் அல்ல, ‘வட்டி உசேன்’ இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி தொழிலை புரிபவன் தனக்கான இடத்தை வேண்டி அதை இங்கே கொணர்கிறார். பள்ளிவாசல் ஜூம் ஆ பயானில் வட்டி வாங்குவது பாவம் என முழங்கிய 37 பேஷ் இமாம்களை ஊருக்கு திருப்பியனுப்பி விடும் அளவுக்கு செல்வாக்கு உடையவர்.


“ஆதியில் இப்ராஹிம் நபி தன் பிள்ளை இஸ்மாயிலை குர்பானி தரத்துணிந்த மாதிரி உசேன் தன் மகனையா குர்பானி கொடுக்கப் போகிறார்?” எனும் நக்கலான கேள்வியுடன் தான் கதை நகர்கிறது. குர்பானிக்கு ஒட்டகம் என முடிவான செய்தியை மனைவி உம்மு சல்மா கேட்டதும் அவர் முகம் சுண்டி ‘இம்முட்டூண்டு’ ஆகிவிட்டது. ஒட்டகங்கள் கூட்டங்கூட்டமாக வாயில் மிதிப்பதாக கனவு காண்கிறாள். அவளுக்கு ஒட்டக இறைச்சி பிடிக்கவும் பிடிக்காது ‘செத்து நாறும் பெருச்சாளியின் நெடியைக் காட்டிலும் தூக்கலாக அதன் நெடியை உணர்ந்து’ வாந்தி எடுத்தவள். ‘ஒட்டகம் அறுப்பது எப்படி’ என்ற தலைப்பில் ஒளிபரப்பு உள்ளூர் தொலைகாட்சிகள் தயாராக வந்தனர். இப்போது எப்படி ஒட்டகத்தை அறுப்பது? முன்னபின்ன அறிமுகமும் அனுபவமும் இல்லை. ஸ்டூலை போட்டுக்கொண்டு நின்றவாக்கில் அறுக்க முயல்கிறான் ஒருவன். பிறகு காலை கட்டி படுக்க வைக்க வேண்டும் முடிவெடுக்கிறார்கள். சுவற்றோடு சாய்த்து தரையில் தாட்ட முயல்கிறார்கள். அருந்ததிய இளைஞர்கள் உதவ வந்தால் அதை கசாப்புக்காரர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ‘மொதலாளி பன்னி அறுக்குற அவுனுகளுக்கும் ஆடு அறுக்குற எங்களுக்கும் வித்தியாசம் இல்லையான்னு அண்ணே ஃபீல் பன்றாரு…’ என தயங்குகிறார்கள். அறுப்பதற்கு முன் ஒட்டகம் என்னை கொல்லாதீர்கள் என பேசத்தொடங்குகிறது. ‘தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒட்டக இறைச்சியைத் தொடவோ சாப்பிடவோ தைரியமில்லை. வெந்து போயிருந்த இறைச்சியும் கூட துடித்தபடி பேசிக்கொண்டிருந்தால் அதைத் தின்ன யாருக்குத்தான் மனம் வரும்?’ என கதை முடிகிறது. சாருவின் கதையொன்று நினைவுக்கு வந்தது. மாட்டுக்கறி உண்டு புரட்சி செய்ய செல்லும்போது பெரும்பாலானவர்கள் கறியை அப்படியே குப்பையில் எறியும் இரட்டைநிலையை சித்தரிக்கும்.




‘வட்டி உசேன்’ போலவே ‘வட்டி குலாம்’ என்றோரு பெயரும் கதைகளில் வரும். ”ராட்சஸப் பறவைகளின் சிறகுகள்’ கதையில் வட்டி குலாமின் மய்யித்து அடக்கம் செய்யப்படுவதற்கு முன் சக்கரை மோதினார் உமிழ்ந்த சளிகட்டுடன் அடக்கம் செய்யப்படுகிறது.  மதத்தின் லட்சியங்களுக்கும் நடைமுறை கபடங்களுக்கும் இடையேயான முரண்பாட்டை ஜாகிர் கதைகளில் தொடர்ந்து சுட்டுகிறார். சகோதரத்துவமும் சமத்துவமும் லட்சியம் என்றால் நடைமுறையில் அப்படி உள்ளதா? ‘கருத்த லெப்பை’ ‘மீன்காரத்தெரு’ ‘மீன்குகைவாசிகள்’ வழியாக இஸ்லாமிய சமூகத்திற்குள் நிலவும் பாகுபாடுகளை அடையாளப்படுத்துகிறார். ‘கருத்த லெப்பை’ ராவுத்தர்களுக்கும் லெப்பைகளுக்கும் இடையேயான சிடுக்குகளை பேசுவது. ‘கொமறு காரியம்’ கதையில் ஆதிலா  ‘எந்த பெண்ணுக்கும் வராத கனவை’ காண்கிறாள். ‘பள்ளிவாசலில் இமாமின் இடத்தில் நின்று ஆதிலா தொழுகிறாள். அல்ல, தொழவைக்கிறாள். பல்லாயிரம் ஆண்களும் பெண்களும் இவளைப் பின்தொடர்ந்து அணிவகுத்து நிற்கிறார்கள், தொழுகிறார்கள். ஒரு பேரதிசயம் நிகழ்கிறது. குரான் வசனங்களை அழகுத் தமிழில் ஓதுகிறாள். அர்த்தம் புரிந்ததால் தொழுகையாளிகளின் முகத்தில் அத்தனை பரவசம்.’ ஜாகிரின் குரலை சீர்திருத்தவாதியின் குரலாகவே வகுத்துக்கொள்ள முடியும். ஜாகிர் பெண்களின் பாடுகளை மிகவும் கரிசனத்தோடு பலகதைகளில் கையாண்டுள்ளார். ‘பாவம் அவள் பெயர் பரக்கத் நிஷா’ தலாக் வாங்கியதற்கு பின்பான வாழ்க்கையை சித்தரிக்கிறது. அவளைப்போலவே தலாக் வாங்கிய ஆமினாவை சந்திக்கிறாள். ஆமினாவின் மகள் பானுவும் நிஷாவின் மகன் மன்சூரும் சேர்ந்து விளையாடத்தொடங்குகிறார்கள். பிள்ளைகள் விளையாட்டை அனைவரும் லயித்து கவனிக்கிறார்கள். பானு சோறு வடிப்பதாகவும் மன்சூர் உண்பதாகவும் பாவனை செய்கிறார்கள். மன்சூரின் பாவனை சட்டென மாறுகிறது. “நாயி திங்குமா இந்த சோற..இப்படி சோறாக்குனா நீ எனக்கு வேணாம் .. போடி ஆத்தா வீட்டுக்கு. உனக்கு தலாக் கொடுத்துட்டேன்..தலாக் தலாக் தலாக்..முத்தலாக்” என கண்களை மூடிக்கொண்டு மகன் கத்தியதை கண்டு உடல் பதற ஆவேசமாக அவனை அடிக்கிறாள் அம்மா பரக்கத் நிஷா. இந்த குழந்தை விளையாட்டு வழியாகவே என்ன நடந்திருக்கும் என்பது நுட்பமாக சித்தரிக்கப்படுகிறது. ‘குடமுருட்டி ஆற்றின் கரையில்’ வரும் திருமண தரகர் புவ்வா தலாக் செய்தவர்களுக்கு மணப்பெண் தேட மாட்டாள். ‘மீன்குகைவாசிகள்’ நாவலில் மும்தாஜ் பேகம் தனது கணவர் நைனார் முகமதிற்கு குல்உ அளித்தவள் என்பது சொல்லப்படுகிறது. குல்உ, தலாக்கை போல பெண் ஆணுக்கு அளிக்கும் மணவிலக்கு. மிக அரிதானது. மும்தாஜ் ஊருக்குள் வரும்போது நைனார் அவளை வேட்டையாடுவது போல விரட்டுகிறான். நைனாரின் போக்கிரித்தனத்துக்கு பயந்துகொண்டோ அல்லது குல்உ கொடுத்தவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என கருதியோ மொத்த ஊரும் வேடிக்கை பார்க்கிறது.  ‘நாச்சியா’ கதையில் கதீஜா நாச்சியா வெளிநாட்டில் பணியாற்றும் ரகுமானை மணந்துகொள்கிறாள். ஆறு மாதங்களுக்கொருமுறைதான் அவன் ஊருக்கு வருவான். மாமனார் மாமியார் அம்மா அப்பா பிள்ளைகள் என எவருமில்லை. வீடும் ஆளரவமற்ற புறநகர் பகுதியில். சிறைபிடிக்கப்பட்ட தேவதைபோல தூர்த்து போன மரச்சன்னல் மட்டுமே அவள் உலகம்.


‘மீன்குகைவாசிகள்’ நாவலில் நசீர் ஆமினாவிடம் சொல்வான் ‘கலை எப்பவுமே பாவமாகாது ஆமி, அதப் புரிஞ்சிக்காம புறக்கணிக்கிறதுதான் பாவம்.’ நசீர் ஒரு ஓவியன். அவனுக்கு மறைஞான தரிசனம் வழி கிடைத்த காட்சிகளை வரைந்து வைத்திருப்பான். ஆனால் அதை வெளியே காட்ட துணிந்ததில்லை. ‘கருத்த லெப்பையிலும்’ ராதியம்மா கனவுக்கு உருவமளிக்க முயல்வான். அடிப்படைவாதத்தை எள்ளும் கதை என ‘இப்படியாக சினிமாவானது என் சமூகத்தில்’ கதையை குறிப்பிடலாம். ஊருக்குள் சினிமா தியேட்டர் வருவதற்கு ஜமாத்தார்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பிறகு ஒஉ வழியாக ஊருக்குள் சினிமா நுழைகிறது. அடுத்த சிக்கல் ‘இஸ்லாமிய இளஞ்சிட்டு’ எனும் அடைமொழியை நதியாவிற்கு இடக்கூடாது என பிரச்சனை எழுகிறது. சினிமா ஹராம் என சிக்கந்தர் ஹஜ்ரத் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகளில் பிரச்சாரம் செய்தவரும் கூட வேறு வழியின்றி பொழுது போக்குவதற்கு ‘இஸ்லாமிய இளஞ்சிட்டு’ அடைமொழியை வெள்ளைத்தாளில் மறைப்பது எனும் சமரசம் எட்டப்பட்ட பிறகு திரைப்படம் காண வருகிறார். ‘உருவம்’ கதையில் உருவப்படங்கள் உள்ள வீடுகளுக்கு ‘மலக்குமார்கள்’ வருவதில்லை என்று பிரசங்கம் செய்யும் மௌலவியின் கண்காணிப்புக்கு அஞ்சி திருமண புகைப்படத்தைக்கூட ஒளித்து வைக்கிறார்கள். மௌலவியின் இறந்துபோன இளம் மனைவியின் புகைப்படம் அவரிடம் இருப்பதாக கனவு கண்டதும் விசாரிக்க செல்கிறார்கள். இறுக்கம் தகர்ந்து நெகிழ்வான உச்சத்தில் கதை முடிகிறது. வயதாகி ஓர்மை குறைந்து அவளது முகம் நினைவிலிருந்து மறைந்து கொண்டிருப்பதாக கவலை கொள்கிறார் மௌலவி. ‘வாஸ்தவத்தில் நான் இப்படிப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் நாளா மனசில கொழப்பம். இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு படம் கெடச்சுட்டாப் போதும்னு இப்பத் தோணுது ஏன்னு தெரியல…எல்லாம் அல்லாஹ் அறிவான்…’ என்று குமுறி அழுகிறார் மௌலவி. சடங்குகள் நம்பிக்கைகளின் ஊடே ஒளிவிடும் மனிதத்தன்மையை அடையாளம் காண்கிறார் ஜாகிர். ‘காஃபிர்’ கதையும் மனிதர்களுக்கு இடையேயான புரிதலையும் நல்லிணக்கத்தையும் அடிப்படையாக கொண்ட கதைதான். ராமசாமி முதலாளியின் கீழ் பணிபுரியும் அப்துல்லா சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களுக்கு பூ வைப்பதை தனது வழக்கமான பணியாக கொண்டவன். அவனது அத்தாவிற்கு தெரியவந்தது. அத்தா காசிம் ராவுத்தர் மார்க்க விவகாரங்களில் கெடுபிடிகளை கடைபிடிப்பவர். ‘ஒரு காஃபிர எனக்கு புள்ளையா தந்துட்டியேடா யா அல்லாஹ்’ என வருந்துகிறார். பிடிவாதத்தில் இறுகியவர் ‘நீ ஒண்ணும் பெருசா தப்பு பண்ணிடலே. வறும வறுமதாம் ஒன்ன அந்தக் காரியம் பண்ண வச்சது. எனக்கு புரியுது..‌’ என சொல்லிவிடமாட்டாரா என ஏங்குகிறான். தனது செயலை பரிசீலிக்கும் போது  ‘அப்படியானால் இந்த நாட்டில் எத்தனை லட்சம் காஃபிர்கள்…!’ என யோசிக்கிறான். விபூதியுடன் நேர்காணலுக்கு செல்லும் முருகேஷ் பள்ளிவாசலின் மினார்களை நிமிர்ந்து ஒரு கணம் நோக்கி கண்மூடி மனதார வேண்டிக்கொண்டு இயல்பாக கடக்கிறான். அவனது அடையாளத்திற்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. பெரிய குழப்பம் ஏதும் அவனுக்கு இல்லை. மறுநாள் அவனது அக்கா பெரிய பூச்சரத்தை இலையில் பொதிந்து கொடுக்கிறாள். தந்தையிடம் ஒரு ஏற்பு நிகழ்கிறது. இந்த குறுகிய கால மனமாற்றம் நடைமுறை சாத்தியமற்ற விருப்ப கற்பனை என தோன்றினாலும் கூட இனிமையானதே. ‘அடையாளம்’ கதையில் சிறுமிகளான மாரிக்கும் பாத்திமாவுக்கும் நட்பு துளிர்க்கிறது. “மாரி தான் நோன்பிருக்கப் போவதை பாத்திமாவிடம் சொன்னாள். பாத்திமா ஆச்சரியம் கொண்டு மாரியைத் தழுவினாள். பதிலுக்கு மாரியுடன் கோயிலுக்குப் போய் விபூதியை நெற்றியில் அப்பிக் கொண்டு வந்த பாத்திமாவுக்கு நன்றாகத் தீயில் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் உடம்பின் பல பாகங்களிலும் சூடு கிடைத்தது. தோழியின் காயங்களைக் கண்டு பதறிப் போனாள் மாரி. இது மாதிரி விஷயங்களில் தன்னைக் கட்டுப்படுத்தாத பாட்டனை நினைத்து வியந்துபோனாள். பாத்திமாவிடம் கேட்ட போது “எனக்குப் புரியில மாரி. இனிமே நீ என்னைப் பார்க்க வர வேணா. வந்தீன்னா ஒனக்கும் சூடு போட்டுரும் எங்கம்மா. நா போறேன்” என்று கையசைத்துக் கொண்டே பிரிந்து போனாள்.” இவ்விரு கதைகளிலும் வெளி பண்பாட்டு தாக்கத்துடன் ஒப்பிடுதல் நிகழ்கிறது. அடையாளங்கள் சார்ந்து எழுப்பப்படும் பாதுகாப்பின்மை கேள்விக்கு உள்ளாகிறது.னஆறூ  ‘எடுப்பு’ கதையில் சுடலை எனும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் ‘நாயவிட கேவலமாக நடத்துகிறார்கள்’ என கதைசொல்லியின் நாணாவிடம் புலம்புகிறான். சுடலையின் மனைவியுடன் நாணாவுக்கு உறவு உண்டு. நாணா சுடலையை இஸ்லாமியனாக மாறச்சொல்கிறார். அவனும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறான். விஷயம் பரவுகிறது. கதைசொல்லி ‘சுடலையை நினைத்தால் எனக்குப் பாவமாயிருந்தது. புதிய வேஷம் போட்ட பிறகு இந்த மேடையில் அவன் என்ன பாடுபடப் போகிறானோ. என்னால் என்ன செய்துவிட முடியும். நாணாவை எதிர்க்கும் அளவு எனக்கேது திராணி?’ என வருந்துகிறான். சுன்னத் பற்றி எவனோ பயமுறுத்த பின்வாங்கி சில நாட்கள் தலைமறைவாகிவிட்டு விபூதி பட்டையுடன் திரும்புகிறான்.


சமூக விமர்சனம், தனி மனிதருக்கும் அமைப்புக்கும் இடையேயான கதைகளை எழுதும்போது எளிதாக முற்போக்கு தரப்பாக சுருங்கிவிடும் அபாயம் உண்டு. ஆனால் ஜாகிருக்குள் இருக்கும் கதைசொல்லி தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட பல அமானுட தருணங்களையும் கதையாக்குவதன் வழி அத்தகைய வகைப்படுத்தலுக்கு ஆட்படாதிருக்கிறார். ‘பௌர்ணமிக் கிணறு’ நல்ல காட்சியனுபவம் அளித்த பேய்க்கதை. ‘அமானுஷி’ ஏறத்தாழ காரைக்கால் அம்மையார் கதையை போன்றது. ரஜியாவின் கணவில் நாகூர் ஆண்டவர் வருவார். அவ்வப்போது அருள்வாக்கு உதிர்ப்பாள். அவளை மணமுடிக்க இருந்த முஜிக்கு இது தொந்தரவாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் நிக்காஹை நிறுத்திவிடுகிறான். அபாரமான காதல் கதையாக நிறைவடைகிறது. ‘மீன்குகைவாசிகள்’ நாவலில் வரும் வள்ளி பீவி ஈருசுரூக்காரியாக ஆவதும், அவளது தர்காவிலிருந்து எழும் அழுகை ஒலியும் அமானுட அனுபவத்தை அளிப்பவை. ஜாகிர் பல ஆண்டுகளாக எழுதி வரும் ‘வெள்ளத்தாயி வம்சத்தார்’ நாவலுக்காக சில கள பயணங்கள் மேற்கொண்டபோது ஏற்பட்ட அமானுட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘குடமுரூட்டி ஆற்றங்கரையில்’ ஆண்டகையின் அற்புதம் சித்தரிக்கப்படுகிறது. ஜின்னாவின் டைரியில் பக்கீர்களின் வாழ்க்கை சித்திரம் கிடைக்கிறது. ‘சாமானியனைப் பற்றி குறிப்புகள்’ நாவலில் கரியமீனா மய்யத்தை குளிப்பாட்டும் காட்சி மிக விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலின் அபாரமான பகுதிகளில் ஒன்று.




தமிழ் இலக்கியத்திற்கு முதன்மையான பங்களிப்பை செய்தவர் இலக்கியவாதியை விட கதைசொல்லி ஜாகிர் என சொல்லிவிட முடியும். ‘மீன்காரத்தெரு’ ‘மீன்குகைவாசிகள்’ போன்ற நாவல்களிலும் ‘கசாப்பின் இதிகாசம்’ ‘காஃபிர்’ ‘உருவம்’ ‘கொமறு காரியம்’ ‘ஹலால்’ போன்ற சிறுகதைகளினூடாக  நமக்கு கிடைக்கும் கதை மாந்தர்களும் சூழல் விவரனையும், மைய முரண்களும் தமிழ் இலக்கிய பரப்பில் வேறு எவராலும் பேசப்படாதது, சற்று துணிந்து சொன்னால் பேச முடியாதது என்றுகூட சொல்லத்தோன்றுகிறது. எனினும் அவர் இலக்கியவாதியாக வெளிப்பட்ட ‘ஜின்னாவின் டைரி’ ‘குட்டிச்சுவர் கலைஞன்’ போன்ற கதைகள் எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தமானவை. புதுமைப்பித்தன், நாஞ்சில்நாடன், ஜாகிர்ராஜா என்றொரு வரிசையை வாசக மனம் வரையறை செய்கிறது. நாஞ்சிலுக்கு நேர் தொடர்ச்சி என சொல்லத்தோன்றுகிறது. பசியையும் அவமானங்களையும் எழுதும்போதும் இலக்கிய உலகம் சார்ந்த பகடிகளை கையாளும்போதும் இந்த தொடர்ச்சியும் தனித்தன்மையும் புலப்படுகிறது. மிக குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ‘அடையாளம்’ ‘ராஜ மீன்’ ஆகிய கதைகளை சொல்லலாம். ‘அடையாளம்’ கதையில் பாட்டனை பராமரிக்கும் 14 வயது மாரி நோன்புக்கஞ்சிக்காக காத்திருந்து காலி பாத்திரத்துடன் திரும்புகிறாள். ‘ராஜமீனில்’ ஆயிஷா மன்ஜிலின் அனீபா ராவுத்தரின் வீழ்ச்சி சித்தரிக்கப்படுகிறது. தொட்டுக்கொள்ள கறி இல்லாமல் அவதிப்படுகிறார். பள்ளிவாசல் ஹவுஜ் தடாகத்தில் வசிக்கும் பொன்னிற ராஜமீனை வேட்டையாடுகிறார். ‘ரெட்டை மஸ்தானருகில்’ கதையின் ஹசன் மாமு ஜவுளிக்கடையில் கணக்கப்பிள்ளை என எண்ணி செல்பவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கும். மீசை இழந்து சேலையை விரித்து காட்டும் பெண் தன்மையுள்ள சிப்பந்தியாக, கேலிக்குள்ளாகும் நபராக இருப்பார். ‘ஜின்னாவின் டைரியில்’ நூலகத்தில் புத்தகம் திருடி மாட்டி அவமானப்படும் பனுவலின் சித்திரம் தொந்தரவு செய்யும்.


 குட்டிச்சுவர் கலைஞன் எனும் தலைப்பே பெரும் கிளர்ச்சியை அளிப்பதாக உள்ளது. ஒரு மனநிலையின், ஒரு காலகட்டத்தின் படிமம் என்பதுபோல. சாம்ராஜின் ‘குணசேகரன்’ கவிதை நினைவுக்கு வருகிறது. முன்னுரையில் எழுதுகிறார் ‘சாப்ளினின் எல்லா கோமாளித்தனங்களுக்குள்ளும் புதையுண்டிருந்தது பெரும் துக்கம். மானுட துக்கங்களுக்குள்ளிருந்துதான் மகத்தான படைப்பு ஊற்றெடுக்கிறது.’ இலக்கிய லட்சியவாதமும் சிறுபத்திரிக்கை சூழலும் பகடிக்குள்ளாக்கப்பட்டாலும் கூட அவை லட்சியவாதத்தையே முன்வைக்கின்றன. எதையும் கோராது, எதையும் பெறாது வாழ்ந்து மறைந்த எத்தனை எழுத்து வாழ்வுகளை நாம் அறிவோம். பன்னீர் வஸந்தனும் பனையோலையும் சேர்ந்து நடத்தும் பதிப்பகத்தைப் பற்றிய சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல். கைகாசை போட்டு நட்டமடைவதையே குறிகோளாக கொண்ட உலகியல் சாமார்த்தியமற்றவர்கள். அவர்களோடு யதார்த்தன் எனும் எழுத்தாளரும் சேர்ந்துகொள்கிறார். அவர் அவரது சகாவான குட்டிச்சுவர் கலைஞனின் மரணத்தை அறிவித்து அவரது படைப்புகளை பற்றி பேசுகிறார். குட்டிச்சுவர் கலைஞனின் பிணத்தை விவரிக்கிறார் ‘மரணத்தின் வாயிலாக அவன் சற்றே நிம்மதி கொண்டிருக்க வேண்டும். சவக்கிடக்கையில் அவன் முகம் அப்போதுதான் பூத்த ஒரு மலரைப் போன்றிருந்தது.’ யாரும் அறியாத மரணம். நாவலின் ஒரு பகுதியில் யதார்த்தன் உணர்வெழுச்சியுடன் பேசிக்கொண்டிருக்கையில் அதை பனையோலை பதிவு செய்வார். சட்டென ஆத்திரமடைந்து விடுவார் யதார்த்தன். ஏன் என யோசித்தேன். இன்று பதிவுசெய்யப்படாத இலக்கிய கூட்டங்களே இல்லை. நாம் ஒவ்வொருமுறையும் சர்வதேச தமிழ் சமூகத்தை நோக்கி‌ பேசியாக வேண்டிய பாவனையை கைக்கொள்ள வேண்டியுள்ளது. யதார்த்தனின் எரிச்சலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த செயல் இழிந்த, பொருத்தமற்ற செயலாக தென்படுகிறது. கலைஞர்கள் எந்த எல்லைவரை சமரசம் செய்துகொள்ளலாம் என ஏதும் வரையறையுள்ளதா என்ன? ‘அறைச்சுவர்கள் சிரிக்கின்றன’ சிறுகதையில் சினிமாவில் வாய்ப்பு தேடும் தீவிர இலக்கிய பரிச்சயமுள்ள சலீமுக்கும் தொழில்நுட்பம் மட்டும் போதும் என எண்ணும் சிகரனுக்கும் நிகழும் உரையாடலை கவனிக்கலாம்.  வணிக கலையின் சமரசங்களைப் பற்றி காட்டமாக சலீம் பேசிக்கொண்டிருக்கிறான். சிகரன் பதிலுக்கு ஒரு கேள்வி எழுப்புகிறான் “எதுலதான்யா விற்பனை இல்ல, எல்லாமே விற்பனைக்குத்தான். நீ எழுதுற கவிதை புஸ்தகம் பத்தாயிரம் காப்பி போச்சுன்னா வேணான்னுவியா.” என கேட்பான்.


 சுய இன்பன் எனும் புனைபெயரில் இயங்கிய எழுத்தாளர் அரளிப்பூவின் நேர்காணல் உண்மையில் உள்விவாத தன்மை கொண்டது. ஜின்னாவின் டைரியில் வரும் அல்லாபிச்சையுடனான நேர்காணலும் சிறப்பான பகுதி. சிந்தனைகளை விவாதமாக்க நேர்காணல் ஒரு நல்ல உத்தி. ஆனால் புனைவில் அது ஒரு தப்பிக்கும் வழிமுறை என்பதே என் பொது எண்ணமாக இருந்தது. ஏனெனில் நேர்காணல் வடிவில் நாம் எதையும் நிகழ்த்திக்காட்டுவதில்லை. எல்லாமே சொல்லப்படுவதால் வாசக இடைவெளி இயல்பாக உருவாவதில்லை. அல்லா பிச்சை நேர்காணலில் அவரை நேர்கண்டவர் சிறுபத்திரிக்கை ஆள் என்பது தெரிகிறது. வெளிவந்ததும் கூட ஒரு சிற்றிதழில்தான் ஆனால் இடையிடையே நேர்கண்டவரின் அசட்டு எதிர்வினைகள், உடல்மொழி விவரிப்புகள் வெகுஜன இதழின் பாணியை கடைப்பிடிக்கிறது. இவ்வகையான‌ எல்லைகளை கடந்து ஜாகிரின் நேர்காணல் பகுதிகள் சில அபாரமான புனைவுதருணங்களை தொடுகிறது. அரளிப்பூ நேர்காணல் நீண்டுக்கொண்டே சென்று சட்டென ‘சரி போதும்’ என முடிந்த உணர்வையளித்தது. ‘குட்டிச்சுவர் கலைஞனின்’ அதே தரிசனம்தான் ‘எழுத்தாள்னா பொறுப்புணர்ச்சி வேணுமப்பா’ கதையிலும் தென்படுகிறது. ஜக்காரியா எனும் எழுத்தாளரின் இரண்டு அணுக்க வாசகர்கள் அவரது மரணத்தால் நிலைகுலைகிறார்கள். அவரை அடக்கம் செய்துவிட்டு திரும்புகையில் ஜக்காரியா ‘எழுத்தாளன்ன பொறுப்புணர்ச்சி வேணாமா’ என சொல்லியபடி முடிக்காத நாவலை தொடர்கிறார்.


ஜெயமோகனின் ‘அம்மையப்பம்’ கதையில் வரும் தச்சரால் ஏணி கூட்ட முடியாது. ஏணி ஏறிசெல்வதற்குரியது. ஆனால் அவர் அபாரமான சிற்பத்தை செதுக்கிச் செல்வார். கலைஞர்களின் வாழ்வின் பயன்மதிப்பை அளவிடுவதற்கு நம்மிடம் உலகியல் வெற்றிகளைத் தவிர வேறு அளவைகள் உள்ளனவா? ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’ தொகுப்பில் ‘லவ்கீஹா’ என்றொரு கதையுள்ளது. லவுகீகம், உலகியல்- பெண் உக்கிர தெய்வமாக வடிவம் கொள்கிறாள். கதை முழுக்க அவளது இயல்புகள் சுட்டப்படுகின்றன. ‘கற்பனா லோகத்தை அபகரிக்க வந்தவள்’ ‘காலகாலமாக லவ்கீஹா ஆயிரக்கணக்கானவர்களைக் காவு வாங்கிக் களித்திருக்கிறாள். அதுவும் கலைஞர்களிடம் விளையாடுவதென்றால் அவளுக்கு ரொம்பவும் விருப்பம்.’  ‘அவள் சுழற்றுகிற வாளுக்கு கண் குருடு. அது லட்சம் அப்பாவித் தலைகளைக் கொய்திருக்கிறது.’ ‘காரணமே இல்லாமல் கண நேரத்தில் எங்கள் வீடு வன்முறைக் களமாக மாறிவிட கதவிடுக்கில் மறைந்து களிநடமாடுகிறாள்.’ ‘சிறகுள்ள ஜீவன்களை லவ்கீஹா வெறுக்கிறாள்.’ உப்பு புளி விசாரம் பாரதி தொடங்கி இன்று எழுதுபவர்கள் வரை எல்லோரையும் தீண்டியிருக்கிறது. ‘என்னை கவலைகள் தின்னத்தகாதென்று நின்னை‌ சரணடைந்தேன்’ என பாடியவன் தானே பாரதி. தனது ஆற்றாமையை‌ கதைகளில் இறக்கிவைப்பதைத் தவிர படைப்பாளி வேறென்ன செய்துவிட இயலும்.


யாசகஜீவி எழுதும் பெருநாவல் எனும் சிந்தனையே ‘ஜின்னாவின் டைரி’ நாவலை முக்கியத்துவம்  வாய்ந்ததாக ஆக்குகிறது. ஜின்னாவின் டைரியின் சில பகுதிகளை சிறுகதைகளாகவும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆண் பெண் உறவு சித்தரிப்பின் எல்லா வண்ணங்களும் பேசப்பட்டுவிட்டன. ஜாகிரின் தனித்தன்மை என்பது ஆண்- ஆண் உறவுகளின் வெவ்வேறு வண்ணங்களை எழுத்தாக்கியது என சொல்லலாம். கருணையற்ற தந்தையுடன் மகனுக்கு இருக்கும் உறவாக இருக்கலாம், கலவியில் சென்று முடியும் எழுத்தாளன் அணுக்க வாசகனின் உறவாக இருக்கலாம், சகோதரர்கள், நண்பர்கள், நட்பின் மேல் மெல்ல களிம்பு படிந்து விலகும் தருணங்கள், ஒட்டுண்ணிகள், சுரண்டல்கள், வன்மமா என எல்லாவற்றையும் சித்தரித்துள்ளார். இத்தனை கவனத்துடன் வேறு சமகால தமிழ் எழுத்தாளர்கள் ஆண் – ஆண் உறவின் வெவ்வேறு பரிமாணங்களை எழுதியதாக எனக்கு தெரியவில்லை. ‘வெண்ணிற மதுவகை’ மதுக்கூட நட்பையும் பிரிவையும் சொல்கிறது. தன்னை காதலித்த ஆனால் தான் காதலிக்காதவளின் கணவனுக்கும் தனக்குமான மதுக்கூட நட்புறவும் அதில் தான் காதலித்தவன் தன்னை காதலிக்காமல் இருந்ததற்கு வேறொருத்தியை காதலித்ததுதான் காரணம் என அறிய நேர்ந்ததும் கணவனை கண்டித்து அவர்களது உறவை பிரித்துவிடுகிறாள் என்பது வினோதமான கதைகளம். இவ்வகை கதைகளில் ‘ஒரு புளிப்பான காதல் கதை’ தற்பால் ஆண் காதலர்களின் கதையை சொல்கிறது. காதலும் பிரிவும், பொருந்தா திருமண உறவுக்குள் சிக்கியிருக்கும் நிலையும் சித்தரிக்கப்படுகிறது. ‘வடக்கேமுறி அலிமாவில்’ பாலன் தர்மன் ஆகிய இரு துணை இயக்குனர்களுக்கும் இடையேயான உறவு பொறாமை எரிச்சல் அன்பு நட்பு என பல்வேறு நிறங்களை சூடிக்கொள்கிறது.


குட்டிச்சுவர் கலைஞன், ஜின்னாவின் டைரி ஆகிய நாவல்களில் வைக்கதகுந்த படைப்பு ‘வடக்கேமுறி அலிமா’. அலிமா எனும் ஆளுமையின் வாழ்க்கை புனைவாகிறது. நேர்காணல், கடிதம், நினைவலைகள் என பல்வேறுபட்ட வடிவங்களை நாவல் கையாள்கிறது. அலிமாவுக்கு கமலாதாஸின் சாயல் உண்டு. பொதுவாக அப்பல்லோவியர்கள் டைனோசியர்கள் என கலைஞர்களை இரண்டாக வகைப்படுத்தலாம். அப்பல்லோ சூரிய கடவுள். அப்பல்லோவியர்கள் ஒளியின் பக்கம் நிற்பவர்கள். டைனோசியஸ் மதுவின் கடவுள், கொண்டாட்டமும், கட்டற்றத்தன்மையையும் கொண்டவன். டைனோசிய கூரைதான் நாம் ட்ரான்ஸ்கிரஸிவ் தன்மையுடன் இணைத்து புரிந்துகொள்கிறோம். அலிமா ‘கபறு களியாடுகிறாள்’ அதாவது மயான ஆட்டம். நாடோடியாக, பிச்சியாக, சினிமா நடிகையாக, எழுத்தாளராக பரிணாமம் கொண்டபடி இருக்கிறாள். ஜாகிரை டைனோசியராகவே வகைப்படுத்த முடியும். என் நோக்கில் அவரது கதைசொல்லல் முறையும் மொழியும் அபாரமாக வெளிப்பட்ட நாவல் என ‘வடக்கேமுறி அலிமாவை’ சொல்லலாம். சிதறுண்ட கதை வடிவங்களில் உள்ள மிக முக்கியமான சிக்கல் என்பது கதைமாந்தர்கள் மனதில் ஆளுமையாக வளராமல் போய்விடுவார்கள். ஆனால் அலிமாவின் அத்தனை மிகைநடத்தைகளுடன் நம்முள் உருகொள்கிறாள். இதுவே அவரது சிறந்த நாவல் என தயங்காமல் சொல்வேன். அமைப்புகளின் மீதான எதிர்ப்பு முழு வீரியத்துடன் வெளிப்பட்ட ஆக்கம். ‘உவகம் முழுவதுமே கலைஞர்களுக்குக் கிடைக்கின்ற பட்டம் ‘பைத்தியம்’ அல்லவா?’ என கேள்வியெழுப்புகிறாள். தன்னை ‘சைத்தானின் தோழி’ என பறைசாற்றிக்கொள்கிறாள்.


இலக்கியவாதியாக அவர் எழுதிய கதைகளில் பகடி சில கதைகளில் ஈர்க்கக்கூடியதாக வெளிப்படுகிறது. வேறு சில கதைகளில் சுத்தமாக எடுபடவில்லை. அடுத்தடுத்த தொகுப்புகளில் இலக்கிய சர்ச்சைகள் தொடர்பான கதைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கவனிக்கிறேன். ‘தேய்பிறை இரவுகள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகள் துண்டு துண்டாக உள்ளன. சினிமா வாய்ப்பு தேடி அலைந்த நாட்கள் குறித்தவை. ஜாகிர் அடிப்படையில் ஒரு சிறுகதையாசிரியர் என்பது அவரது நாவல்களுக்கு தனித்துவத்தையும் எல்லையையும் அளிப்பதாக தோன்றுகிறது. தெறிப்புகளாக வாழ்க்கை தருணங்கள் மிளிர்கின்றன. லவ்கீஹாவின் அதீத அன்பும் ஆசியுமா அல்லது வேறு காரணிகளா என தெரியவில்லை, இதுவரை ஒரு பெரிய உலகை நாவலில் அவரால் சித்தரிக்க இயலவில்லை. அது வருங்காலத்தில் நிகழும் என ‘வெள்ளத்தாயி வம்சாவழியினர்’ பற்றி அவருடனான உரையாடல் எனக்கு உணர்த்தியது. ‘அம்மையும் இரண்டு பெண் குட்டிகளும்’ போன்ற சில கதைகள் அனுபவங்களாக நின்று விடுகின்றன. எழுத்து சார்ந்த கதைகளில் எனக்கு ‘காஃப்காவின் நண்பன்’ மிக அணுக்கமாக இருந்தது. காப்காவின் உருமாற்றம் தொடர்பான விவாதம் கதைக்குள் நிகழ்கிறது. மறு எல்லையில் ‘பஷீரிஸ்ட்’ என தன்னை அறிவித்து கொள்கிறார். பஷீரூமே தனது பயணத்தை காஃப்காவிலிருந்தே தொடங்கினார். ஜாகிரின் கதைகளை வாசிக்கும் போது வேறொரு பண்பாட்டு பின்புலத்தைச் சேர்ந்த வாசகனாக எனக்கு அவர் காட்டும் உலகம் வசீகரமாக உள்ளது. அவரது அதே பண்பாட்டு பின்புலத்தைச் சேர்ந்தவர்களால் அவரது கதைகள் எப்படி வாசிக்கப்படுகிறது என தெரிந்துகொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வ எதிர்வினையாகவா அல்லது அவதூறாகவா, பண்பாட்டு சலனங்களை எளிமைப்படுத்துகிறார் என சொல்வார்களா என்றெல்லாம் சிந்தனைகள் தோன்றின. சில கதைகளை வாசிக்கும் போது ஆனாலும் இவருக்கு துணிச்சல் அதிகம் என தோன்றாமல் இல்லை. அவரது இந்த துடுக்குத்தனமே படைப்புகளின் ஆதார விசை என தோன்றுகிறது.


ஜாகிரின் சமகாலத்தைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களுடன் அவரது படைப்புலகை ஒப்பிட்டு நோக்கலாம் என தோன்றியது. எம். கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால் மற்றும் எஸ். செந்தில்குமார் ஆகியோர் அவருடன் இணைந்து பயணிக்க தொடங்கியவர்கள். இவர்கள் அனைவருமே அப்பல்லோவியர்கள். ‘கசாப்பின் இதிகாசத்தையோ’ ‘வடக்கேமுறி அலிமா’ போன்ற ஒரு கதையை டைனோசிய கூரு இல்லாமல்  எழுத முடியாது என தோன்றியது. அவ்வகையில் அவர் இன்னும் தமிழ் சூழலில் ஆழ்ந்து வாசிக்கப்படவில்லை எனும் எண்ணமும் ஏற்பட்டது. இத்தனைக்கும் அவர் தொடர்ந்து பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுவருகிறார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் அவரது படைப்பு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார்கள். சமயங்களில் இவையெல்லாமே கூட வாசகர்களை படைப்பாளியிடமிருந்து விலக்கிவிடும். டைனோசிய கூருக்கு உள்ள முக்கியமான எல்லை என்பது அதன் நிலைகொள்ளாதன்மை. டைனோசியர்கள் சிகரங்களுக்கும் பாதாளங்களுக்கும் இடையே ஊசலாடியபடி இருக்கும்போத அப்பல்லோவியர்கள் சமதரையிலிருந்து மெல்ல ஏறத்தொடங்குவார்கள். விழுந்தாலும் மீண்டும் தரைக்குதான் வருவார்கள். பஷீர் ஜாகிருக்கான சமதரையை உருவாக்கியளிப்பார் என நம்புகிறேன்.


தமிழ் இலக்கியப்பரப்பு குட்டிச்சுவர் கலைஞர்களின் உற்பத்தி கூடம். அங்கீகாரமெல்லாம் கிடக்கட்டும் ஊன்றி வாசிப்பதும் விவாதிப்பதுமே குட்டிச்சுவர் கலைஞர்களின் உற்பத்தியை தடுக்கவல்ல வழிமுறை. லவ்கீஹாவை எதிர்கொள்ள படைப்பாளி அங்கிருந்துதான் ஆற்றலை பெறுகிறார். ஜாகிர் இன்னமும் ஆழமாக, இன்னமும் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். இந்த சிறப்பிதழ் அதற்கொரு தொடக்கமாக இருக்கட்டும்.

  •  

சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்து

 

சொல்வனம் இணைய இதழில் வெளியான  கட்டுரை

மீட்பரற்ற நாயொன்று அத்துவான வெளியில் வெறும் குரைப்பொலியாய்க் கரைந்தது – விடுதலை.



எழுத்தாளர் சித்ரனை வினோத் கண்ணாவாக எனக்கு அறிமுகம். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். பக்கத்து ஊர்காரர்கள் என்பதால் இயல்பாகவே கல்லூரியில் எங்களுக்குள் அணுக்கம். நான் ஆயுர்வேதமும் அவர் சித்த மருத்துவமும் ஒரே கல்லூரி வளாகத்தில் ஒரே காலகட்டத்தில் கற்றோம். ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் தி சீ கல், அல்கெமிஸ்ட் என திரிந்துக்கொண்டிருந்தவனுக்கு “விஷ்ணுபுரம் படி” என ஜெயமோகனை அறிமுகப்படுத்திய நண்பர் வினோத். பயிற்சி மருத்துவர்களாக இரவு பணி (பணி என ஏதுமிருக்காது, மருத்துவமனையில் உறங்கி எழ வேண்டும்) எங்களுக்கு ஒன்றாக போடப்பட்டபோது இலக்கிய – அரசியல் உரையாடல்கள் நெடுநேரம் நிகழும். ஈழப்போர் உச்சத்திலிருந்த காலம். வாசிப்பின் தொடக்க நிலைகளில் இருப்பவனின் அதீத தன்னம்பிக்கைக்கும் மொண்ணைத்தனங்களுக்கும் சலிக்காமல் பதில் சொல்வார். நியாயப்படி எனக்கு முன்பே எழுத்தாளராக அறிமுகமாகியிருக்க வேண்டும். போலன்யோவின் ‘டான்ஸ் கார்ட்’ கதையை கல்குதிரை இதழில் மொழிபெயர்த்ததன் வழியாக அறிமுகம் ஆனார். தற்போது அறநிலைத்துறையில் பணியாற்றி வருகிறார். திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் மாறி மாறி வசித்துவருகிறார். மனைவி சாலினியும் தீவிர இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர், வேளாண்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். முதல் தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. க.சீ. சிவகுமார் நினைவு பரிசு மற்றும் த.மு.எ.க.ச வின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருதுகளை பெற்றது. இரண்டாவது தொகுப்பு ‘பொற்பனையான்’ 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி பரவலாக கவனம் பெற்று வருகிறது. 


முதல் தொகுப்பில் ஏழு சிறுகதைகளும் இரண்டாம் தொகுப்பில் ஆறு சிறுகதைகளும் நான்கைந்து குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டு தொகுப்புகளில் உள்ள பதிமூன்று கதைகள் வழியாக அவரது படைப்புலகை அணுக முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். 


சித்ரனின் கதைகள் அறிமுக எழுத்தாளர்களுக்கான எந்த தடையையோ தடுமாற்றத்தையோ பெரிய அளவில் எதிர்கொள்ளவில்லை. அவரது தொடக்கக்கால கதைகளில் சில நெருடலான/ பொருத்தமற்ற உவமானங்கள் வெளிப்படுகிறது. உதாரணமாக “செதில்களால் நெய்யப்பட்ட சட்டையை உரிக்கும் அரவமாய் எனது வெறுமையை என்னிலிருந்து அகற்ற அண்ணா நகர் பூங்காவிற்கு கிளம்பினேன்.” “கூட்டத்தால் கைவிடப்பட்ட கழுதைப்புலி ஒரு வலிமையான இரையை தாக்க வழியில்லாது வெறித்திருப்பதைப் போல் அவளை கவனித்தவாறிருந்தேன்” (தூண்டில்). இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு இவ்வகையான பயன்பாடும் மறைந்து நேர்த்தி கைக்கூடிவிடுகிறது. பெரும்பாலான கதைகளில் மொழியும் பேசுபொருளும் முழு முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. கதைசொல்லி- இலக்கியவாதி என இரு முகங்களும் ஒருங்கே அமைந்த படைப்பாளியாக திகழ்கிறார். 


முதல் கதையான ‘தூண்டில்’ எழுப்பும் கேள்வி ‘தூண்டில்’ யாருக்கானது? என்பதுதான். பூங்காவில் பூனம் பால் என்றொரு பெண்னை கவனிக்கிறான். அவளால் ஈர்க்கப்படுகிறான். அவள் மணமானவள்.  பின் தொடர்கிறான். அவளும் இவனை நோட்டமிடுகிறாள். துறவியை விழைவதாக வரும் பாடல் வரிகள் வழியாக பூனம் பால் இட்ட தூண்டில் என வாசிக்கலாம். கதையில் கனவு மற்றும் கற்பனை பற்றிய குறிப்புகள் தொடர்ந்து வருகின்றன. திரைப்பட காட்சிகளின் சுட்டுதல் கதைசொல்லி கற்பனையில் வாழ்பவன் என்பதை நிறுவ உதவுகிறது. காமச்சித்தரிப்பு கூட திரைப்பட காட்சித்தன்மையை கொண்டவையே. நிகர் வாழ்வின் அசல் அனுபவத்தை விட கற்பனையும் கனவும் தான் கதை சொல்லியை கிளர்த்துகிறது. அந்தரங்கமாக மட்டும் தீண்டி மறையும் கனவின் தூண்டில் என்று கூட வாசிக்கலாம். இறக்கை முளைத்த கனவுரு ஏறத்தாழ சாத்தானின் விவரனையை ஒத்ததாக உள்ளது. இன்ப நாட்டத்தில் தற்சார்பு என்பது சாத்தானின் அருட்கொடையாக்கும். மொழி, கூறுமுறை மற்றும் பேசுபொருள் சார்ந்து சித்ரனின் ஆக பலவீனமான கதை இதுதான் என சொல்லலாம். எனினும் அவர் படைப்புகளில் தொடர்ந்துவரும் சில கூறுகளை அவதானிக்க முடிகிறது. ‘உடல் இயற்கை துறவு எனும் ஃ’ சிறுகதையை இந்த கதையையொட்டி வாசிக்க முடியும். ‘தூண்டிலில்’ இருந்து ‘உடல் இயற்கை..’ கதைக்கு வந்து சேர்ந்ததான ஒருவித பரிணாமத்தை காண இயலும். பொன்னையா ஆசாரியின் மகன் சந்திரசேகரனை துறவியாக ரயிலில் சந்திக்கிறார்கள். திருமணமாகி ஓராண்டில் துறவேற்றவர் “மானுடப்பெண் உடன் உறவுக்கொள்ள இயலவில்லை” என்கிறார்.  அவரது கதையை சொல்கிறார். உடலிச்சையிலிருந்து விலகிய ஒருவன் சித்ரனின் கதைகளில் தொடர்ந்து வருகிறான். ‘நைனாரி’ கதையின் ஜான் பாஸ்கோவைப் போல, ‘இரும்புக்கை மாயாவி’ கதையில் சம்போக சித்திரங்களைப்பார்த்து வெடித்து சிரிக்கும் மனோகரனைப்போல, சந்திரசேகரனுக்கும் பெண் உடல் மீது பெரிய ஆர்வமில்லை. அவனை கிளர்த்துவது இயற்கையின் மோனப்பேருரு. முழுமதியிரவில் நாணல் பெண்ணுடன் உறவுகொள்கிறான். மானுட பெண்ணுடன் உறவு கொள்பவர் குடும்பஸ்தன் என்றால் இயற்கை எனும் பெண் வடிவத்துடன் உறவு கொள்பவன் துறவியாகவே இருக்க முடியும் என்பதே கதையின் மைய தரிசனம். ‘தூண்டிலின்’ சிறகு முளைத்த சாத்தான் பெண்ணுக்கும் ‘உடல் இயற்கை‌ துறவு கதையின்’ நாணல் பெண்ணுக்கும் தொடர்ச்சியும் மெல்லிய பரிணாமமும் உள்ளதை கவனிக்க முடிகிறது. காமத்தை உடற்தேவை என்பதற்கப்பாலான தளத்திற்கு நகர்த்த முயல்கிறார். ‘இரும்புக்கை மாயாவி தோன்றும் இன்ப வேட்கை’ கதையில் முதன்முதலாக கலர்படங்களில் நிர்வாணத்தை காணும் மனம் அதன் பின் கிரிக்கெட் விளையாடும்போது  கொள்ளும் கூர்மையைப்பற்றி சொல்கிறது. “என்னத்தடா திண்ணுட்டு வந்து அடிச்ச” என வைரவன் வியக்கிறான். காமத்தின் வர்ணங்களையும் சிடுக்குகளையும் பேசும் கதைகளில் ஒன்றென “நீர்மை குன்றும் நெடுங்கடல்” கதையைச் சொல்லலாம். காமமும் குற்ற உணர்வும் தான் பேசுபொருள்.  காமம் உன்னதப்படுத்தப்படாமல் முற்றிலும் தரையில் உக்கிரமாக நிகழும் கதை. ஏர்வாடி தர்காவில் பைத்தியங்கள் எரிந்த நிகழ்வு பின்புலத்தில் வருகிறது. விரைந்து செல்லும் திரைக்கதை தன்மைக்கொண்ட கதை என்பதே இக்கதையின் பலவீனம். குழந்தையின் இறப்பு ஏர்வாடி எரிப்பு உட்பட வலுவான கதைத்தருணங்கள் கூட உணர்வுரீதியாக நம்மை தொந்திரவு செய்யாமல் உணர்வு விலக்கத்தோடு சொல்லிக்கடக்கப்பெறுகிறது. 


குற்ற உணர்வு சித்ரனின் கதைகளில் தொழிற்படும் மிக முக்கியமான உணர்வு. ‘விசுவாசத்தின் மறைபொருள்’ .


கதையில் பாதிரியாராக ஆன தனது சகோதரன் ஜான் பீட்டர் என்கிற ஜான் பாஸ்கோவிற்கு இளமை நினைவுகளை பகிர்ந்து எழுதும் கடிதத்துடன் கதை தொடங்குகிறது. நினைவுக்கும் நிகழ்காலத்திற்குமாக கதை ஊசலாடுகிறது. பிள்ளைகளை வைத்து கொண்டு கஷ்டப்படும் ஜூலியில் தன் அம்மாவை காண்கிறான். ஃபாதரின் உச்சந்தலை வழுக்கை அழகாக இருந்ததால் நாவற்பழ கொட்டையை குறிபார்த்து வீசுமாறு  தன் அருகே அமர்ந்து இருந்த சாத்தான் வற்புறுத்தியதாக பாவமண்ணிப்பு கோரும் ஜூலியின் கடைசிமகன் சேவியரில் தன் கடந்தகாலத்தை காண்கிறான். ஜூலி கஷ்டத்தைச்சொல்லி பிலாக்கனம் வைக்கும்போதெல்லாம் அவளுக்கு உதவுவதன் வழி கணக்கை நேர் செய்ய முயல்கிறான்.  சிறப்பான மொழியில் மெல்லிய அங்கதம் படரும் இனிய நினைவேக்க கதையாக வளர்கிறது. புதுகுளததின் வறன்ட பிளவுகளின் அடியில் தேங்கியிருக்கும் பால்யத்தின் சுணை ஊற்றெடுக்கிறது. 


ஜான் பீட்டர் ஜான் பாஸ்கோவாக, ஒரு துறவியாக ஏன் ஆனான்? அவனது விசுவாசத்தின் மறைபொருள் என்ன? அறியாத வயதில் அவன் சொல்லாலும் நடத்தையாலும் நிகழ்ந்த தாயின் மரணம் நிரந்தரமாக அவர்களின் வாழ்வை தடம்புரள வைக்கிறது. உள்ளத்தில் பெரும் எடையை சுமக்கிறான். பிலோமியும் இறை பணியில் இருக்கிறாள் என்பதற்கு சிறு குறிப்பு கதையில் உள்ளது. கர்த்தரின் பணியில்தான் அவன் கழுவாய் தேடிக்கொள்கிறான், இதுவே அவனது விசுவாசத்தின் மறைபொருள் என்பது ஒரு வாசிப்பு. அப்பா இறந்து பின்னர் அம்மாவையும் இழந்த குழந்தைகளாக ஜானுக்கும் பிலோமிக்கும் கர்த்தரை விசுவாசிப்பதை தவிர வேறு நாதியில்லை என்பது இன்னோரு மறைபொருள். பெற்றோர்களற்ற பிள்ளைகளை கடவுளோ சாத்தானோ எவரேனும் ஒருவர்தானே பேணி வளர்க்க முடியும். கதையின் முக்கிய நிகழ்வுகள் சிறுவர்கள் நோக்கிலிருந்து குறிப்புணர்த்தி நகர்வது மேம்பட்ட வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. தேவ ஈவு,  அவனது தந்தை, ஜானின் தந்தை அம்மா என மனதில் நிற்கும் கதை மாந்தர்களை உருவாக்கியிருக்கிறார் என்ற அளவில் நல்ல கதை. ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ கனவுக்கும் நினைவுக்குமான இடைவெளியை குலைக்கும் கதை. கதை கொத்து என கூறலாம். சில தீவிரமான தருணங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உளவியல் கதைகள் பகுப்பாய்வை நோக்கமாக கொண்டவை. ஒரு பிறழ்வுக்கான விதையை பால்யத்தில் தேடுபவை. ‘எனது கனவுகளை கதையாக்க மாட்டீர்கள் அல்லவா டாக்டர்’ என நோயாளி உறுதி கோருகிறான். நடப்பதென்னவோ அதுதான். மனித உள்ளத்தை புரிந்துகொள்ள ஃபிராய்டை விட தாஸ்தாயெவ்ஸ்கி உதவிகரமாக இருப்பவர் எனும் கூற்று கதைக்குள் சுட்டப்படுகிறது. விளையாட்டும் தீவிரமும் ஒருங்கே அமைந்த கதைசொல்லல் முறை வாய்த்திருக்கிறது. கதைசொல்லி நிரப்பும் கேள்வி பதிலில் தன் பெயரை கோபி கிருஷ்ணன் என்றும் தந்தையின் பெயர் சிறுதொண்டன் என்றும் எழுதுகிறான். அம்மாவிற்கு அவமானத்தை தேடித்தரும் சிறுவன் இக்கதையிலும் வருகிறான். ‘ப்ரிங்கா’  என குதித்து விளையாடுகிறான். மிகவும் தொந்திரவு செய்த பகுதி. சிறுவர்கள் விளையாட்டும் பொறுப்பின்மையும் பெரியவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகள் பற்றிதான் ‘விசுவாசத்தின் மறைபொருளும்’ பேசுகிறது. இரும்பு குண்டென உள்ளத்தின் ஆழத்தில் கிடக்கும் கடந்த காலத்தை என்ன செய்வது? அறியாமைக்கு யார் பொறுப்பேற்பது? இத்தனை கணமும் குற்ற உணர்வும் தேவைதானா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தவண்ணமிருந்தது. 


‘பெரியப்பா’ சித்ரனின் நல்லகதைகளில் ஒன்று. அமானுடத்தன்மை கொண்ட கதை. கதைசொல்லியின் பெரியப்பா தூக்கிலிருந்து காப்பாற்றப்பட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. அவர் ஏன் தூக்கிட்டுக்கொண்டார் என்பதே கதை. தான் வளர்க்கும் மகன் தூளியில் கிடந்தபோது சுளுக்கி கடித்ததற்காக அவனே அழுகையை நிறுத்திய பின்னரும் “பிள்ள எப்படி தாங்குனானோ?” என விசும்பி அழுதவர் எனும் சித்தரிப்பின் வழியாகவே அவரது மன இயல்பு காட்டப்படுகிறது. கதைசொல்லிக்கு பெரியப்பா மீது பெரும் பிரியம். அவர் வளர்த்த தெருநாய் அர்ணால்டை வேட்டைக்கு பழக்குகிறார். வெறிநாயாக மாறிய அது கன்றுகளை வாநீர் வடிய கடிக்கிறது. வாழ்வை முடிக்கச் சொல்லி பெரியப்பாவிடம் மன்றாடுகிறது. பெரியப்பாவின் உருவமே ஒரு வேட்டை நாயை போன்றது என்கிறான் கதைசொல்லி. அவர் வளர்த்த நாய்க்கு அவர் மீதிருந்த பிரியத்தைப்போலவே அவனுக்கும் அவரது அணுக்கம் பிடிக்கும் என இணைவைக்கிறான். மகனின் கெண்டைக்காலை கவ்வ வந்த தேத்தாம்பட்டி நாயை வழிக்கு கொண்டுவர எண்ணி திட்டமிடுகிறார். வேறொரு உயிர் பலியாக காரணமாகிறார். தேத்தாம்பட்டி நாய் அவர்களை தொடர்ந்து வீட்டுக்கு வருகிறது. அதன் இருப்பே குற்ற உணர்வை தூண்டுகிறது. பொதுவாக குரைத்து துரத்தும் நாய் மவுனமாக நீதி வேண்டுகிறது. நாய் கோரியதை அளிக்க தீர்மானிக்கும்போது சிறுவனின் அசாதாரண செயல் அவரை மரணத்திலிருந்து காக்கிறது. மிக முக்கியமாக அவனது உறுதியை தேத்தாம்பட்டி நாய் வாஞ்சையுடன் புரிந்துகொள்கிறது. மன்னிக்கிறது. ஏறத்தாழ ஒரு நாய் இன்னோரு நாயை உணர்ந்துகொள்வதைப்போல. அவனை நக்கிக்கொடுக்கிறது. ஏதோ ஒரு கணக்கை தீர்த்துக்கொண்டது போல தொங்கியவரின் வேட்டியை மட்டும் கவ்விக்கொண்டு ஊருக்கு ஓடுகிறது.


‘ஐயனார்புரம்’ ஜயனார்புரம் சித்ரனை நல்ல கதைசொல்லியாக காட்டுகிறது. இவ்வகை கதைகளில் சிறந்த கதை என சொல்லலாம். தெருவின் கதையை சொல்ல முயன்று கனகுவின் கதையை சொல்ல தொடங்கி செல்வத்தின் கதையை சொல்லி நிறைவடைகிறது. புதுக்கோட்டைக்கே உரித்தான லாக் விளையாட்டை அறிமுகப்படுத்துகிறார். திரைக்கதை சுருக்கம் போன்ற வடிவமே இந்த சிறுகதையின் பலமும் பலவீனமும். இருளும் வன்மமும் நுரைக்கும் கதைக்களம். பல்வேறு உள்மடிப்புகளும் சாத்தியங்களும் கொண்ட கதை. கனகு வெற்றிக்காக உழைப்பவன். வெல்வதற்கென்றே விளையாடுபவன். செல்வம் கூத்து கலைஞன். குரலுடைந்து பாட முடியாமல் குடிக்கு தன்னை அளித்து சிறுக சிறுக அழித்துக்கொள்பவன். கனகுக்கு அவனது வாகனமான ஆர்.எக்ஸ் 100 ன் மீது பித்து. தினமும் துடைத்து வைப்பான். செல்வத்துடன் அவனது நாய் செவலை எப்போதும் சுற்றி வரும். அதன் மீது பெரும் பிரியத்துடன் இருந்தான். கனகு வெல்வதை வாடிக்கையாக கொள்பவன். அவன் வெற்றியால் யாருக்கும் எந்த உற்சாகமும் இல்லை. செல்வம் அரிதாக வெல்வான். ஆவி புகுந்தது போல விளையாடுவான். ஈட்டியதை அனைத்தும் அன்றே அளித்து அழிப்பான். கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் மீது ஒரு கரிசனம் எப்போதும் இருக்கும். கனகு ஆஸ்திரேலியாவை போல, வெல்வதில்‌ ஆச்சரியமில்லை தோற்றால் சற்று மகிழ்வாக இருக்கும். செல்வம் மேற்கிந்திய தீவகளை போலத்தான். அரிதாக வெல்வார்கள். வென்றால் கொண்டாட்டம்தான். இயந்திரத்தின் மீது பிடிப்புக்கொண்ட, வெற்றி வெறி கொண்ட உலகியலாளனுக்கும் உயிர் நேசம் கொண்ட தோல்வியடைந்த கலைஞனுக்கும் இடையேயான உறவுச்சிடுக்குதான் கதை. இருவரும் அவரவர் அளவில் நியாயவான்கள். தீரர்கள். எனினும் செல்வம் கனகுவை மடியிலேந்தி அவனுக்காக கண்ணீர் சிந்தியதுபோல கனகுவால் செல்வத்துக்காக அழதிருக்க முடியாது. கலை மனதிற்குள் ஒளிந்திருக்கும் இருளைப்பற்றியும் வன்மத்தைப்பற்றியும்  கதையின் இறுதித்தருணம் மீண்டும் மீண்டும் மனதில் பல கேள்விகளை எழுப்பி அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. வேட்டில் துண்டுப்பட்ட கனகுவின் கட்டைவிரலை தூக்கிக்கொண்டு ஓடும் செவலை நாயின் சித்தரிப்பு சித்ரனின் இருண்ட சித்தரிப்புகளில் ஒன்று. செவலை காட்டுக்குள் திரியும் ஏகலைவனிடம் கொண்டு கொடுத்ததாவ் அவன் இப்போது ஐந்து விரல்களோடும் விவ் பயிற்சி செய்கிறான் என செல்வம் சொல்லும் கதை இக்கதைக்கு இன்னோரு மடிப்பை சேர்க்கிறது. அந்த செல்வத்தின் பாத்திர வார்ப்பு ஏனோ எனக்கு பிரான்ஸிஸ் கிருபாவை நினைவுபடுத்தியபடி இருந்தது. ஒரு கதையில் எதை சொல்லாமல் விடவேண்டும் என்பதை அவர் நன்கு பயின்றுள்ளார். உதாரணமாக குழந்தைவேலுவை செல்வத்தின் நாய் என்ன செய்தது என்பதை விரிவாக விவரிக்காமல் அதன் விளைவாக தெரு மக்கள் செல்வத்தை கவனத்துடன் அணுகியதை மட்டும் சொல்லி கடக்கிறார். 


குற்ற உணர்வே இயக்குவிசை ஆனாலும் அதன் கணம் குறைந்து வெளிப்பட்ட கதை என ‘ஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணையும்’ சொல்லலாம். ‘காண்பவர்களோடெல்லாம் உரையாடலைத் தொடங்கும் இயல்பு’ என கதைசொல்லி ‘உடல் இயற்கை துறவு எனும் ஃ’ கதையில் குறிப்பிடுகிறார். ஒருவகையில் இந்த இயல்பே சித்ரனை நல்ல கதைசொல்லியாக ஆக்குகிறது. கதைமாந்தர்களின் குணச்சித்திரத்தை படைக்க உதவுகிறது. ஐயனார்புரம் போன்ற கதைகளில் இந்த கூறு தென்படுகிறது என்றாலும் இக்கதையில் முழுவீச்சில் வெளிப்படுகிறது. இலக்கியவாதிக்கு அகத்தை கூர்ந்து நோக்குவது தன்னியல்பாக கைவரப்பெற்றது என்றால் மனிதர்களை அவதானிக்கும் திறனே கதைசொல்லிக்கான மிக முக்கிய திறன் என கூறலாம். அவதானிக்கும் திறனின் தெறிப்புகள் ‘நீர்மை குன்றும் நெடுங்கடல்’ கதையில் காணக்கிடைக்கிறது. விஜயனுக்கும் சுசீலாவுக்குமான உறவில் சண்முகம் இடையில் வருமிடம் மிக நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. ‘வழிப்போக்கன்’ கதையில் பரமசிவம் எனும் மிக சுவாரசியமான கோட்டி (அல்லது லூசுக்கூ) கதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். பெண் இல்லாமலேயே பெண் தரகராக பணம் செய்யும் நூதன மோசடியாளர். பேருந்து பயணத்தில் தொல்லை தரும் ஆளாக உடன்வருகிறார். அவரது பின்கதை கதாப்பாத்திர கூற்றாகவே சொல்லப்படுகிறது. தொழிலில் ஏமாந்து நொடிந்தவர் காவிரியில் குதித்து உயிர்விட செல்கிறார். காவிரியின் பிரம்மாண்டமும் விரிவும் சொல்வயப்படாத அனுபவமாக அவருள் படிகிறது. இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் மனிதனின் அகங்காரம் அற்பமாக சுருங்குகிறது. அத்தனை மகத்தான இயக்கத்தை கண்டவன் வாழ்வை எப்படி மறுக்க முடியும்? பறவைகள் வேறோரு ஒழுங்கிலிருந்து உலகில் சஞ்சரிப்பவை எனும் நம்பிக்கை விசும்பின் மொழி கதையில் வெளிப்படுகிறது. இக்கதையிலும் நீரில் மூழ்குபவருக்கு மேலே நீர்காகங்கள் பறந்து வழிநடத்தும் ஆன்மீக அனுபவம் விவரிக்கப்படுகிறது. நாய்கள், பறவைகள் என பிராணிகளின் கூருணர்வு தொடர்ந்து சித்ரனின் கதைகளில் பேசுபொருளாக உள்ளது. காவிரியை நோக்கி விரிந்த யோனியுடன் இருக்கும் கோபுரத்து சுதை சிற்பத்தை காண்கிறார். வாழும் இச்சையை மீளப்பெறுகிறார்.‌ அவரது காதல் கதை விவரிக்கப்படுகிறது. மனைவி வேறுவழியின்றி விட்டுச்சென்ற பின்னரும் தொடர்கிறது காதல். கதை தொடக்கத்தில் கதைசொல்லிக்கு பரமசிவத்தின் மீது இருக்கும் எச்சரிக்கை உணர்வும் எரிச்சலும் மறைந்து ஏற்பும் புண்ணகையும் சூழ நிறைவடைகிறது. எதையும் கொண்டுசெல்லாத, எதையும் பதுக்காத மனநிலை வழிப்போக்கனுடையது. அந்த மனநிலையே வழித்துணையும் கூட. 


கதைசொல்லியாக சித்ரன் சிறப்பாக வெளிப்பட்ட மற்றொரு கதை என ‘முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை’ கதையைச் சொல்லலாம். பழைய புத்தகக்கடையை களமாக கொண்ட‌ கதை. 90 களின் குழந்தைகளுக்கு பல்வேறு நினைவுகளை கிளர்த்தும். சச்சின் – கங்குலி ரசிகர்களுக்கு இடையேயான மோதல் தொடங்கி, கிட்னி கார்டில் கைக்குட்டை போட்டு பகிர்ந்துகொள்வது,  காமிக்ஸ்களின் உலகம் வரை. புத்தக கடை இடம்பெயர்கிறது, நினைவேக்கத்துக்கான எல்லா சாத்தியங்களும் இருந்தும் கூட எவ்வித விதந்தோதுதலோ நெகிழ்ச்சியோ இல்லாமல் சொல்லப்படுவதே இக்கதையின் வெற்றி. திருமண உறவில் சிக்கியிருக்கும் தற்பாலினத்தவர் எதிர்கொள்ளும் சிக்கலே மையம். சுப்பையாவின் மனைவிக்கு கிடைக்கும் ஒரு தரிசனமே கதை. சிறிய முடிச்சுதான். ஆனால் சித்ரன் இந்த கதையை சொல்ல கட்டி எழுப்பும் உலகமும் சித்தரிக்கும் கதை மாந்தர்களும் தான் இக்கதையை நல்ல சிறுகதையாக ஆக்குகிறது. பாலியல் படங்கள் உள்ள புத்தகத்தை அளிக்கும் போது கையாலேயே எடையிட்டு அளிக்கிறார் சுப்பையா. புத்தகங்களிலேயே மூழ்கியிருக்கும் மனோகரன் வழியாக கண்ணா எனும் கதைசொல்லி வாசிப்பு உலகத்திற்குள் நுழைகிறான்.  கலர் புத்தகத்தை காணும் வேட்கை மனோகரனை விட்டகன்ற புள்ளி மவுனமாக விடப்பட்டுள்ளது. வாழ்க்கையின் நுண்மையான முரண்களையும் அபத்தங்களையும் சித்தரிப்பதன் வழியாகவே சித்ரனின் நகைச்சுவையுணர்வு செயல்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு வாயை பிளந்து களிப்பில் இருக்கும் பெண் படம் போட்ட ‘இன்ப வேட்கை’ புத்தகத்திற்கு சந்தன போட்டு வைக்கப்பட்டுள்ளது எனும் காட்சி ஒரு உதாரணம். உடல் மறைந்து இருட்டில் பிசையும் சுப்பையாவின் கரத்திற்கு ‘இரும்புக்கை மாயாவி’ என பெயரிடுவான் கண்ணா. மெல்லிய புண்ணகை மொத்த கதையிலும் ஊடுருவியுள்ளது. இதே வரிசையில் வைக்கத்தக்க கதை என ‘நைனாரியும் பதின்கரைகளும்’ கதையை சொல்லலாம். அசோகமித்திரன் தான் எதிர்கொண்ட சாமானியர்களின் நினைவுகளை போற்றும் விதமாக கதை எழுதுகிறேன் என சொல்கிறார். பதின் பருவத்து நாயகன் பிம்பம் உடைபடும் அனுபவம் தான் கதை. சிறுகதை வடிவம் சரியாக துலங்கி வரவில்லை.  ‘விசுவாசத்தின் மறைபொருளுடன்’ பொருத்திப்பார்த்து நாவலின் பகுதி என ஜான் கதாபாத்திரத்தைக்கொண்டு  வாசிக்கலாம். ஏறத்தாழ ஒரு நினைவுக்குறிப்பு அல்லது வாழ்க்கைச்சித்திரம். சித்ரனின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சுவாரசியமான கதைசொல்லல் முறையும் கதையை வாசிக்க வைக்கிறது. வரதனின் துடுக்குத்தனமும் சந்துரு கோழிக்குஞ்சை குறி பார்த்து சுட யத்தனிக்கும் பகுதியும் புண்ணகைக்க வைக்கிறது. ஐயனார்புரம், விசுவாசத்தின் மறைபொருள், நைனாரி ஆகிய கதைகள் எல்லாம் ஏறத்தாழ ஒரே நிலத்தில் நிகழ்பவை, கதைமாந்தர்களில் தொடர்ச்சியும் உண்டு. நாவலின் துண்டுப்பட்ட அத்தியாயங்களாக வாசிக்க இடமுண்டு. 


‘கொனட்டி முத்தன்’ குற்ற உணர்வை பேசு பொருளாக கொண்ட கதையல்ல. நமது தேர்வுகளை விட அவற்றை. பின்னிருந்து இயக்கும் விசையே முக்கியம். அதுவே பாவத்தையும் குற்றத்தையும் தீர்மானிக்கிறது என்றொரு நம்பிக்கை உண்டு. சித்ரனின் சிறந்த கதைகளில் ஒன்று. சரி தவறு எனும் இருமைக்கு அப்பால் சென்று அமரும் கதை. இதன் பேசு பொருள் எனது புனைவுகளின் ஊடாக நான் எழுப்பிக்கொள்ளும் அடிப்படை வினாக்களில் ஒன்று என்பதால் மேலும் நெருக்கமாக உணர்ந்தேன். பெண் உடல்மொழி கொண்ட கொனட்டி முத்தனை நேசத்துடன் மணந்துகொள்கிறாள் அமராவதி. கதைகளே பெரும் போதை வஸ்து என நம்புபவன் முத்தன். அவன் உடல்மொழியில் உள்ள பெண்தன்மை காரணமாக எப்போதும் கேலிப்பொருளாக எஞ்சுபவன். பரிகாசப்பொருளாக இருப்பதை குறித்து எந்த புகாரும் அற்றவன். உலகிற்கு ஒரு முகமும் நேசிக்கும் அமராவதிக்கு பேராண்மை கொண்ட வேறொரு முகமும் கொண்டவனாக இருக்கிறான். அமராவதிக்கு அனைவரிடமும் அவனது இந்த உருவை விளக்கமுடியவில்லை. உண்டான செய்தி வாயடைக்கும் என எண்ணுகிறாள். ஆனால் மேலும் பரிகாசமும் அவதூறுமே பரவுகிறது. தன்னளவிலோ அமராவதிக்காகவோ கேலிகளை பொருட்படுத்தாத முத்தன் மகன் சபாரத்தினம் படும் அவமானத்தை கொண்டு தன் உடல்மொழியை மாற்ற முயல்கிறான். ‘விசுவாசத்தின் மறைபொருள்’ போலவே குழந்தைகளின் இச்சையை நிறைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தன்னை இழக்கிறான். படுக்கையில் இயக்கமற்று கிடக்கும் முத்தன் அமராவதியின் தயவில் நாட்களை கழிக்கிறான். நாளும் பொழுதும் ஒன்றுபோலவே நகர்கின்றன. அமராவதியிடம் ஒருநாள் கேட்கிறான். “ஏன் நாம செத்தோனே எரிக்கிறாங்கன்னு சொல்லு?” தெரியவில்லை என்றதும் “மனுசனுக்கு பயந்தான்… ஒருவேளை மனசு மட்டும் புதைகுழிக்குள்ள முழிச்சுக் கெடந்து தலைக்கு மேலே கிடக்குற மண்ணு மேட்ட முடிவே இல்லாம பாத்து கெடக்குமோன்னு தான்.. எரிச்சுட்டா மனசு காத்தோடே சுத்திக்கிட்டு திரியலாம் பாரு” என்கிறான். அமராவதி புரிந்து கொள்கிறாள். வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ எனது ‘வாசுதேவன்’ ஆகிய கதைகளின் வரிசையில் கொனட்டி முத்தனை வைக்கலாம். மேற்சொன்ன கதைகளில் நோயும் பிழைப்பை நடத்த வேண்டிய நிர்பந்தமும் பொருளாதாரமும் இக்கட்டான முடிவை நோக்கி நகர்த்துகிறது. எனினும் கொனட்டி முத்தன் இக்கதைகளில் இருந்து வேறுபடும் புள்ளியை கவனத்தில் கொள்ள வேண்டும். புருஷனுக்காக எட்டி விதைகளை கொடுக்க அமராவதி வரும்போது விடுதவையுணர்வுடன் அதை ஏற்கிறான். உற்சாகமாக படுக்கையில் படுத்தபடி இசைக்கிறான். இந்த ஏற்பு பிற கதைகளில் வெளிப்படையாக இல்லை. இதுவே கொனட்டி முத்தனை மகத்தான காதல் கதையாக ஆக்குகிறது. மேலும் கதை நிகழ்காலத்தில் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட நினைவுகளை தொட்டு மீள்கிறது. அடங்கா தாகத்துடன் எட்டியின் தீரா கசப்புடன், மாறா இளமையுடன் முதிர்ந்து தளர்ந்த அமராவதியை அரவணைக்க காத்திருக்கிறான் முத்தன். கொனட்டி முத்தனுக்கு அமராவதி அளிப்பது அவளது பெருங்காதலின் பரிசு, கருணையின் கொடை. சித்ரனின் ‘புங்கமரத்தாயிக்கும்’ கொனட்டி முத்தனின் அமராவதிக்கும் ஒற்றுமை உண்டு. புங்கமரத்தாயி ஏறத்தாழ சிறு தெய்வ நிலையை அடைகிறாள். 


சீர்குலைவுகளை காண்பது ஒரு நிலை. சமன்குலைவுகளுக்கு அப்பால் அவற்றுள் செயல்படும் ஒழுங்கு அல்லது சீர்மையை நோக்கி நகர்வதையே இலக்கியத்தில் வெளிப்படும் ஆன்மீகம் என கருதலாம். இயற்கையுடனான முழு இயைவு, ஒத்திசைவே  ரசவாதத்தின் சாரமான தத்துவம். அண்டத்தில் உள்ளவை பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளவை அண்டத்திலும் உள்ளன. இந்த தரிசனம் ரசவாதத்தை களமாக கொண்ட ‘பொற்பனையான்’ கதையில் முழு வீச்சில் வெளிப்படுகிறது. பேரொழுங்கை நோக்கிய நகர்தலில் அமானுட/ அதிமானுட அனுபவங்கள் முக்கிய பங்காற்றுபவை. ஏனெனில் அவை நம் புற உலகின் தர்க்கத்திற்கு அப்பாலான வேறொரு ஒழுங்கின் குறியீடுகள். ‘விசும்பின் மொழி’ அவ்வகையில் அவரது ‘பொற்பனையான்’ தொகுப்பின் பேசுபொருளுக்கு ஒரு முன்மாதிரி. ஆன்மீகத்தன்மை முழுக்க வெளிப்பட்ட சிறுகதை என சொல்லலாம். அமானுட / அதிமானுட நிகழ்வுகளை எழுதுவதற்கு இங்கு பொதுவாக இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒன்று இந்திரா சவுந்தரராஜன் பாணி, அதீதமாக மாயப்படுத்துவது, மற்றொன்று புதிரை கட்டுடைப்பது. மூன்றாவதாக ஒரு முறை உள்ளது. ஜெயமோகனை அவ்வகையான கதைகளுக்கான முன்னோடியாக கருதலாம். ‘விசும்பு’ மற்றும் ‘உற்றுநோக்கும் பறவை’ ஆகிய ஜெயமோகனின் கதைகளுடைய நீட்சியாக ‘விசும்பின் மொழி’ கதையை வாசிக்கலாம். கதிரவன் பறவைகளின் சமிக்ஞைகளை ஆராய்கிறான். அவற்றின் முன்னறியும் திறனை பதிவு செய்கிறான். இயற்கையின் வலைபின்னலில் ஒவ்வொரு உயிருக்கும் உண்டான முக்கியத்துவத்தை உணரும் தருணத்தில் கதிரவன் வவ்வா சாமியாக ஆகிறான். அகால மரணமடைந்த குழந்தைகளே பழந்திண்ணி வவ்வாளாக பிறக்கின்றன என சொல்கிறான். கதையின் இறுதி உச்சம் அந்த அனுபவத்தை கடத்துகிறது. இந்தியத்தன்மை கொண்ட அறிவியல் மிகுபுனைவு என சொல்லலாம். பகுத்தறிவை நம்பும் சூழலியல் பேராசிரியர் சொந்த வாழ்வில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது ஆசுவாசம் தேடி அலைகிறார். ‘விசும்பின் மொழி’ என்பது கதிரவனின் நாட்குறிப்பு. இயற்கைக்கும் மனிதனுக்கும் (அப்படி ஒரு இருமையை கட்டமைப்பதே வினோதமானது) உண்டான உறவு சங்கிலியைப் பற்றிய அவதானங்களை கொண்டது. நாட்குறிப்பில் சித்தரிக்கப்படும் சிறுவனின் மரணம் மனதை தொந்தரவு செய்தது. ‘பறவைகளைத் தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் மட்டுமே பேரழிவின் விளிம்பில் நிற்கும் மானுட குலத்திற்கு மீட்பு என்பது சாத்தியப்படும்’ என்கிறது. இயற்கையெனும் மாபெரும் வலைப்பின்னலில் நம் கைக்கு அகப்படும் கண்ணியைக்கொண்டு புரிந்துகொள்ள முயல்வதுதான். மனிதமையவாதம் மனிதனை பிரபஞ்ச இயக்கத்தின் மையமாக ஆக்குகிறது. இயற்கைக்கு மனிதனை பேணியேயாகவேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லை.‌ அதன் அமைப்பில் மனிதனுக்கு தனிச்சலுகைகள் என ஏதுமில்லை. தனித்துவம் என ஏதேனும் ஒன்று உண்டென்றால் அவனுக்கு அளிக்கப்பட்ட அறிவின் காரணமாக இருக்க வேண்டிய பொறுப்புணர்வுதான். 


‘பொற்பனையான்’சித்ரனின் கதைகளில் இதுவே சிறந்தது. பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் புதுக்கோட்டை சிவகங்கை பகுதியில் மிகவும் பிரபலம். அவரது தொன்மத்தை கையிலெடுத்துக்கொண்டு ரசவாதம், காலனிய காலகட்டம் என பல தளங்களில் கதை பயணிக்கிறது. சித்ரன் அடிப்படையில் சித்த மருத்துவ பட்டதாரி. ரசவாத பின்புலத்தில் அரிதாகவே கதைகள் எழுதப்பட்டுள்ளன. ‘பொற்பனையான்’ அளவிற்கு நுண் தகவல்களும் நம்பகத்தன்மையும் கொண்டு வேறு ஒரு கதை இந்த களத்தில் எழுதப்பட்டுள்ளதா என தெரியவில்லை. கதையைப் படித்தவர்கள் தாமே குறிப்புகளைக்கொண்டு ரசவாதத்தில் ஈடுபடும் அபாயம் கூட உண்டு. எனினும் இந்த தகவல் செறிவு அறுபத்தி சொச்சம் பக்கம் நீளும் கதையில் எங்குமே அயர்வை ஏற்படுத்தவில்லை.


   பெனுவா எனும் ஃபிரெஞ்சு நாட்டுக்காரன் வீராம்பட்டிணத்தில்  துப்பாக்கிகளுக்கான வெடிமருந்து தொழிற்சாலையை நிர்வகிப்பவன். அவனுக்கு ரசவாதத்தின் மீது ஆர்வம். அவனுடன் நட்புகொள்ளும் சுவடிகளை பிரதியெடுக்கும் பொற்பனையான் ஆகியோரே கதையின் முக்கிய பாத்திரங்கள். கதைக்குள் மேலை கீழை நாகரீகங்களிக்கு இடையேயான உறவும் உரசலும் கோடிட்டுக்காட்டப்படுகிறது. இறுதியில் அத்தகைய பகுப்புகள் பொருளற்று போவதையும் சொல்கிறது. பெனுவாவின் ஆசிரியர் அவனிடம் ‘மேற்குலக நாடுகளின் இரசவாதிகள் தங்கத்தின் மீது அளவு கடந்த பிரேமை உடையவர்களென்றும் கீழைத்தேய இரசவாதிகளோ அதைத் தன் மலத்திற்கு ஒப்பாக நினைப்பவர்களென்றும்’ சொல்கிறார். விந்தைகளும் வினோதங்களும் மாயங்களும் நிறைந்த இந்தியாவைத்தேடி பெனுவா இங்கே வருகிறான். ஆனால் அவனுக்கு காண கிடைப்பதோ பசியும் பட்டினியும் நீக்கமற நிறைந்த‌ தேசம். இவர்களா ரசவாதத்தில் உலோகங்களை பொன்னாக்க போகிறார்கள்? என யோசிக்கிறான். இந்தியர்களுடன் மேட்டிமை ஏதுமின்றி நெருங்கி பழகுகிறான். ரசவாதத்தை அவன் அறிந்துகொள்ள ஏன் விரும்புகிறான்? அது தன்னை தேவனின் ராஜ்ஜியத்திற்கு இட்டுச்செல்லும் என நம்புகிறான். அறிதலின் கிளர்ச்சியே அவனுக்கு முதன்மை விசை. ஆதிமுனியின் பெயர்தாங்கியான பொற்பனையானை சந்திக்கிறான். சுவடிகளை பிரதியெடுத்து துபாஷிகளுக்கு விற்று பெரும் பொருள் ஈட்டுகிறான். தற்செயலாக ரசவாத சுவடிக்கட்டுக்களை பிரதியெடுக்க அந்த பித்து அவனை பீடித்துக்கொள்கிறது. வைத்தியர்களிடம் வித்தைகளை அவர்கள் அறியாமலேயே கற்கிறான். தேவையானவற்றை சேகரிக்கிறான். வெடியுப்பை களவாடும்போது மாட்டிக்கொண்டுதான் பெனுவாவை சந்திக்கிறான். பொற்பனையான் தனது குடியின் பூர்வகதையை சொல்கிறான். திசைப்பூண்டை தின்ற வேடுவச்சி நரிகளால் வேட்டையாடப்பட இருந்தபோது சித்தனால் மீட்கப்படுகிறான். வேடன் சித்தனுடன் அணுக்கமாகிறான். அவருக்கு தேவையானவற்றை தேடிக்கொடுக்கிறான். பனமரம் கற்ழகத்தருவாகிறது. பொன் விளையவில்லை என்றாலும்கூட பனை கற்பக விருட்சம்தான். பொற்பனைக்கான வேட்கை செட்டியை, அரசனை, ஊர் மக்களை என எல்லோரையும் ஆட்டுவிக்கிறது. பித்துடன் ஒற்றைப்பனையை தேடியலைகிறார்கள். செட்டியைக்கொன்றவர்களை பழிதீர்க்க மணிக்கிராமத்தினர் காவல்படையினரான வீரகொடியினரை அணுகுகின்றனர். அதன் தலைவன் மணிமாறன் வழியாகவே பொற்பனையான் ஆதிமுனியாகிறான். தலைச்சன் பிள்ளைக்கு‌ பொற்பனையான் என பெயரிடுகிறார். அந்த கொடிவழியில் வந்தவன் தான் பெனுவாவை சந்திக்கும் பொற்பனையான். ஆதிமுனியின் கதை அவனுடைய கூற்றாகவே வருகிறது. ரசவாதத்தில் ஆர்வம் காட்டும் பெனுவாவை வைத்தியர் எச்சரிக்கிறார். ரசசித்தி எல்லாருக்குமானது அல்ல என்கிறார். உலக வாழ்வில் பற்றுள்ளவர்களுக்கு அது கைகூடாது என்கிறார். அதற்குள் பயணித்து வாழ்வை வீணடித்தவர் பட்டியல் மிக நீண்டதென எச்சரிக்கிறார். தங்கத்துக்காக அல்ல ரசவாதம் எனும் கலைக்காகவே இதில் ஈடுபடவேண்டும் எனும் உறுதியுடன்தான் இருவரும் இணைந்து ஈடுபடத்தொடங்குகிறார்கள்.‌ இவர்களுக்கு இடையேயான மாறுபாடு எங்கு எப்படி ஏற்படுகிறது? ஏழாம் காய்ச்சலுக்கு பதிலாக ஐந்தாம் காய்ச்சல் வெடியுப்பு பயன்படுத்தியதால் மீண்டும் வெடியுப்பு வேண்டும் என பொற்பனையான் கோருகிறான். வெடியுப்பு கணிசமாக குறைந்துள்ளதால் கம்பேனி பெனுவாவை நெருக்கியது. ஐந்தாம் காய்ச்சலுக்கும் ஏழாம் காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசமில்லை என வாதிடுகிறான் பெனுவா. “சிவன் தென்னாட்டவனென்றாலும் தெற்கே பயணித்தால் கைலாச மலைகளை அடைய முடியாது” என்கிறான் பொற்பனையான். இந்த இடத்தில் பொற்பனையான் வழிமுறையில் கறாராக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அவன் பீடிக்கப்பட்டவன். நான்கு நூற்றாண்டு நீண்ட வேளிர் அரசின் கடைசி மண்ணன் ரசவாத பித்தேறி ரசமணிகளை விழுங்கி பித்தாகி இறந்தவன். அவனே பொற்பனையானின் மீது ஆரோகணித்தவன். “பொற்பனையானுக்கு விளைபொருள் மட்டுமே குறியாயிருக்க பெனுவாவிற்கோ வழிமுறைகளில் தாதுக்களில் நிகழும் மாற்றங்கள் ஏனெனக் கேள்விகளால் ஆர்வமாய் இருந்தது,” என இருவரின் உளப்போக்கையும் கதை காட்டிச்செல்கிறது. சித்ரனின் ‘மாயவன்’ குறுங்கதை ஒருவனுள் உள்ள இரு சாத்தியங்களை சொல்வது. பெனுவாவையும் பொற்பனையானையும் அப்படி காண இடமுண்டு. செயநீர் பற்றிய சுவடியை கைப்பற்ற வைத்தியரை கொல்லவும் செய்கிறான் பொற்பனையான். தங்கத்திற்கு பதிலாக மூன்று நீலமணிகள் கிடைக்கின்றன. பொற்பனையான் மனமொடிந்து ரசமணியை தயாரிக்க செல்கிறான். அதன் வழி கற்பகதருவை கண்டுவிட முயல்கிறான். பெனுவாவிற்கோ தங்கமாகவில்லை என்பது பொருட்டாக இல்லை இதுவரை மானுடம் அறியாத புதிய தாது உருவாகியிருக்கிறது என்பதே அவனுக்கு வியப்புக்குரியதாக உள்ளது. கதையில் வரும் உபதலைப்புகள் நம் கவனத்திற்கு உரியவை. ‘ஆதிமுனியின் கதை (அ) கற்பக விருட்சத்தின் கதை’ எனும் முதல் தலைப்பில் ஒரே கதை பெனுவாவிற்கு ஆதி முனியினுடையதாகவும் பொற்பனையானுக்கு ‘கற்பகவிருட்சத்தின் கதையாகவும்’ இருக்கிறது.  பெனுவாவிற்கு ‘திசையறியா வேடுவச்சியின் கதையாக’ உள்ளது பொற்பனையானுக்கு ‘பொற்பனம்பழம் காய்த்த கதையாகிறது’. ஒரே அனுபவம் பெனுவாவிற்கு ‘மெய்ஞானியின் கல்லாகவும்’ பொற்பனையானுக்கு ‘இரசவாதியின் சாபமாகவும்’ ஆகிறது. ‘நித்தியத்தின் பேரொளியை’ ஒருவருக்கு அளிக்கும் அதுவே இன்னொருவருக்கு ‘ஒலியெழா மணியாக’ உள்ளது.  தங்க பித்தேறிய பொற்பனையானுக்கு மரணமும் அறிதலின் பொருட்டு ஈடுபட்ட பெனுவாவிற்கு தேவனின் ராஜ்ஜியமும் கிட்டுகிறது. ஞானம் ஒருபோதும் அதிகாரத்தின் கருவியாக ஆகிவிட முடியாது என்பதே கதையின் தரிசனம். வேடன் ஏனாதியை கொல்கிறான். அரச மறுப்பு என்பது முக்கியமான சரடாக கதையில் துலங்கி வருகிறது. அதிகாரமற்றவர்களிடமே ஞானம் சென்று படிகிறது. வேடனிடமிருந்து பொற்பனை செட்டியை சென்றடைந்தபோதே அது பாவத்தின் கனியானது என்று புரிந்துகொள்கிறான் பெனுவா. சித்தர் மரபு என்பதே வெகுமக்களின் அதிகார மறுப்புடன் நெருக்கமாக தொடர்புடையது. ‘விசும்பின் மொழி’ கதையிலும் இக்கதையிலும் அண்டத்திலுள்ளவையே பிண்டத்தில் பிண்டத்தில் உள்ளவையே அண்டத்தில் எனும் சித்தர் மரபின் மெய்யியல் தரிசனம் மையமாக உள்ளது. கதையின் இறுதி அதை உறுதிசெய்யும் அபாரமான பகுதி. தமிழர் மெய்யியல்/ஆன்மீகத்தை/ மறைஞானத்தை பேசுபொருளாக்கிய விதத்தில் ப. சிங்காரம், ஜெயமோகனின் ‘கொற்றவை’ ரமேஷ் பிரேம் கதைகளின் வரிசையில் சித்ரனின் ‘பொற்பனையானை’ வைக்கலாம். கதையில்


 தொழிற்படும் கச்சிதமின்மையே கதைக்கு ஒரு வசீகரத்தை அளிக்கிறது. அவ்வகையில் சிறுகதை வடிவமே நாவல்தன்மைக்கு நெருங்கிச்செல்கிறது. அரவிந்த் கருணாகரனின் “சீர்மை” ஏறத்தாழ இதே அளவு. அது ஒரு நாவலாகவே கருதப்படுகிறது. “பொற்பனையானையும்” அப்படி கருத இடமுள்ளது. 


என் வாசிப்பின் எல்லையில் ‘தூண்டில்’ ‘நீர்மை குன்றும் நெடுங்கடல்’ ‘கனாத்திறமுரைத்த காதைகள்’, ‘உடல் இயற்கை துறவு’ ‘நைனாரியும் பதின்கரையும்’ ஆகியவை என்னை ஈர்க்காத கதைகள். ‘உடல் இயற்கை..’ கதையில்  கதைசொல்லி வழியாக இன்னோருவரின் கதையாக சொல்லப்படுவதும் அந்த கதை குறித்த சிந்தனைகளுமாக உள்ள இவ்வடிவம் கதையின் மைய தரிசனத்தை வலுப்படுத்தவில்லை. அமானுட அனுபவங்கள் மோதலின் உச்சத்தில் நிகழும்போது தான் பெறுமதி கொள்கின்றன. ‘வழிப்போக்கன்’ கதையில் வரும் பரமசிவத்திற்கும் இக்கதையில் வரும் சந்திரசேகருக்கும், விசும்பின் மொழியின் வவ்வால் சாமிக்கும் அவை பொருந்தி வருகின்றன. இக்கதையின் கதைசொல்லிக்கும் அந்த அமானுட தரிசனம் கிடைப்பது கதையின் ஓர்மையை குலைப்பதாக உள்ளது. ஆன்மீகத்தை பேசுபொருளாக கொண்ட கதைகளில் எழுத்தாளர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதி இதுவே. அமானுட அனுபவங்களை நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதுவதில் மிகுந்த கவனம் தேவையாகிறது. அதீதமாகும்போது கேலிக்குரியதாக ஆகிவிடும் அபாயம் அதற்கு உண்டு. 


புதிய தலைமுறை கதைசொல்லிகளில் முழுமை நோக்கு கொண்ட படைப்பாளிகள் ஒப்புநோக்க சிலரே. உலக இயக்கத்தின் ஆதாரத்திற்கு சென்று அதன் சீர்மையை தரிசிக்கும் விருப்புறுதி கொண்ட வெகு சில சமகால எழுத்தாளர்களில் சித்ரனும் ஒருவர். சீர்மையை காண ஊனக்கண்களுக்கு அப்பால் ஒரு விழி திறக்க வேண்டியுள்ளது. ‘பொற்பனையான்’ அந்த சாத்தியத்தை எனக்கு காட்டுகிறது. அவ்வகையில் சித்ரனின் கதைகள் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான வரவு. நண்பராகவும் தமிழ் இலக்கிய வாசகராகவும் சித்ரன் நெடுங்காலம் தமிழ் புனைவுக்கு பங்காற்றுவார் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. 

  •  

தெண்ணீர் கயத்து சிறு பொன்மீன் (பெருந்தேவி குறுங்கதைகளை முன்வைத்து)

நன்றி- நீலி



1

நவீன வாழ்வின் சிடுக்குகளை நூதனமான மொழியில்  கவிதைகளாக நிகழ்த்திக்காட்டிய முக்கியமான கவிக்குரல் பெருந்தேவியுடையது. ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ (சஹானா, 2020) மற்றும் ‘கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?’ (2022) ஆகிய இரண்டு குறுங்கதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இரண்டு தொகுப்புகளையும் சேர்த்தால் மொத்தம் 84 குறுங்கதைகள். என்னளவில் தமிழில் குறுங்கதை எனும் வடிவத்தை அதன் பல்வேறு சாத்தியங்களை மிகச் சிறப்பாக கையாண்ட முன்னோடி படைப்பாளி என பெருந்தேவியை கருதுகிறேன்.  


தமிழுக்கு குறுங்கதை எனும் வடிவம்  புதிதன்று. நவீனத் தமிழிலக்கியத்தின் ஊற்றுக்கண்ணை பாரதியில் காண்பதே மரபு. குறுங்கதை வடிவத்திற்கும் அவரே முன்னோடி. பாரதியின் ‘காக்காய் பார்லிமென்ட்’; ‘ஆனைக்கால் உதை’ ஆகிய கதைகள் இன்றைய குறுங்கதை வடிவத்திற்கு மிக நெருக்கமானவை.  குறிப்பாக ‘ஆனைக்கால் உதை’ நவீன குறுங்கதையின் முன்னோடி வடிவம் என்றே எண்ணுகிறேன். ஒரு படிமம், திறப்பு, குறைந்த சொற்களில் சித்தரிப்பு என்ன எல்லா இலக்கணங்களும் பொருந்தி வரும் கதை. வண்ணநிலவனின் மிக முக்கியமான சிறுகதையான ‘மிருகம்’ இன்றைய எனது புரிதலின்படி  கச்சிதமான உருவகத்தன்மை கொண்ட குறுங்கதை என வரையறை செய்ய முடியும். ஈழ எழுத்தாளர் சாந்தன் எண்பதுகளின் இறுதியில் குறுங்கதைகள் எழுதியதாக லதா தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். யுவன் சந்திரசேகரின் மணற்கேணி 2008 ஆம் வருடம் வெளிவந்தது. எஸ். ராமகிருஷ்ணனும் ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’ எனும் தொகுப்பு வழியாக குறுங்கதை உலகிற்குள் அறிமுகமாகிறார். சமூக ஊடகங்கள் இலக்கிய வெளியாக பரிணாமம் கொள்ளத் தொடங்கிய 2010 ஆம் ஆண்டு முதல் பேயோன், போகன் சங்கர், அராத்து, பா. ராகவன் ஆகியோர் குறுங்கதைகளை எழுதிவருகிறார்கள். எனினும் குறுங்கதைகள் ஒரு அலைபோல தமிழில் எழுந்தது கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தான். முன்னரே எழுதிக்கொண்டிருந்த யுவன் சந்திரசேகர் ‘தலைப்பில்லாதவை’  எனும் தொகுப்பை வெளியிட்டார். எஸ். ராமகிருஷ்ணன் நூறுக்கும் மேலான குறுங்கதைகளை எழுதினார். ‘கர்னலின் நாற்காலி’ எனும் பெயரில் அவை தொகுப்பாகவும் வெளிவந்தது. கே.என். செந்தில் எழுதிய நாற்பது குறுங்கதைகள் ‘விருந்து’ என்ற தொகுப்பாக வெளிவந்து கவனம் பெற்றது. சுரேஷ்குமார இந்திரஜித் ‘பின்னணிப் பாடகர்’; ‘தாரிணியின் சொற்கள்’; ‘அபூர்வ கணம்’ என மூன்று குறுங்கதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். போகனின் ‘போகப் புத்தகம்’; ‘மெல்லுடலிகள்’ இரண்டிலும் கணிசமான எண்ணிக்கையில் குறுங்கதைகள் உள்ளன. கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் ‘ஒற்றைக் குரல்’ கவனம் பெற்றுவருகிறது. முபீன் சாதிகா, மலேசியாவைச் சேர்ந்த கே. பாலமுருகன், தயாஜி என பலரும் தொகுப்புக்கள் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் பாலசுப்பிரமணியன், சுரேஷ் பிரதீப் உட்பட பலர் எழுதும் குறுங்கதைகள் இன்னும் தொகுப்பாக தொகுக்கப்படவில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் குறுங்கதை எனும் வடிவம் வலுவாக காலூன்றிவிட்டது என சொல்லிவிட முடியும்.    


உலக அளவில் நவீன குறுங்கதை வடிவத்தில் முக்கிய ஆளுமை என லிடியா டேவிஸை கருதுகிறேன். காஃப்காவின் ‘நுண்கதைகள்’ கணேஷ்ராம் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளன. ஏறத்தாழ அவரது சமகாலத்தவரான பெசோவாவின் ‘புக் ஆப் டிஸ்குயட்டை’ குறுங்கதைகளின் தொகுப்பு, நாவல், அவதானிப்புகளின் தொகுப்பு, கவிதைகள் என பலவாறாக வாசிக்க முடியும்.  லிடியா டேவிஸின்  குறுங்கதைகளை அடிப்படையாகக் கொண்டு குறுங்கதையின் வடிவத்தைப் பற்றி பொதுவாக சிலவற்றை பேசலாம் என்றெண்ணுகிறேன். 


தமிழில் குறுங்கதை வடிவத்தை புரிந்துகொள்ளும் முறை பரந்துபட்டதாக உள்ளது. ‘சிறிய சிறுகதை’ (Short Short story) ‘எதிர்பாரா முடிவு புனைவு (Sudden fiction)’,  மின்னல்வெட்டு கதைகள் (Flash fiction)  நுண்கதைகள் (Micro fiction) என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் வடிவங்கள் அனைத்துமே இங்கு குறுங்கதை எனும் பொதுவான வரையறைக்குள் அடங்குகிறது. கறாராக வரையறை செய்தால் யுவன் சந்திரசேகர், கே.என். செந்தில் ஆகியோரின் பெரும்பாலான கதைகள் ‘சிறிய சிறுகதைகள்’ எனும் வடிவத்திற்குள் வரும். எனினும் மேற்கத்திய விமர்சகர்களின் அதேவரையறையை தமிழில் ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்று கருதுகிறேன். தமிழ் நிலத்திலிருந்து தனக்கேயுரிய வகையில் குறுங்கதைகளின் வடிவம் எட்டப்படும். இந்த வரையறைகள் வார்த்தைகளின் எண்ணிக்கை சார்ந்தவை என்பதிருந்தாலும், இவை குறுங்கதைகளின் சில இயல்புகளை சுட்டி நிற்பவை. குறுங்கதையில் ஒருவித ‘திடீர்’ தன்மை எதிர்பார்க்கப்படுகிறது. மின்னல் வெட்டு கதைகள் எனும் பயன்பாடு வழியாக பிரம்மாண்டத்தின் கோட்டு சித்திரம் எனும் இயல்பு பிடிகிடைக்கிறது. பொதுவாக குறுங்கதைகளை கவிதைக்கு நெருக்கமான வடிவமாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். கவிஞர்களே நல்ல குறுங்கதை ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால் இயல்பாக அப்படித் தோன்றக்கூடும். கவிதைக்கும் குறுங்கதைக்குமான எழுத்து முறையில் உணரும் வேறுபாடு குறித்து பெருந்தேவி சொல்வது முக்கியமானது. “படைப்பு மனவெளி என்பதைக் கவிதை உருவாக்கத்தில் எதிர்பாராத ஒளித்தெறிப்புகளின் வண்ணஜாலத்தில் மின்னுவதாக உருவகித்துக்கொண்டால் அது குறுங்கதை உருவாக்கத்தில் கடற்கரையின் சாயையைக் கொண்டிருக்கிறது.” அதாவது கவிதை ஒரே சமயத்தில் தென்படும் பல்வேறு ஒளிர் புள்ளிகள். குறுங்கதைகள் அலைபோல் அடுத்தடுத்து சீரிய இடைவெளியில்  வருவதாக குறிப்பிடுகிறார். ’மின்னல்வெட்டு’ கதைகளை நாவலுக்கு நெருக்கமான குறுங்கதை வடிவமாக குறிப்பிடலாம். நாவல் என்பது புகைப்படம் என்றால் குறுங்கதை என்பது அதன் நிழற்படம். நாவல் வர்ண சித்திரம் என்றால் குறுங்கதை கோட்டுச் சித்திரம். “குறுங்கதையை பொற்கொல்லரின் ஆக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாவலை கற்தச்சரின் ஆக்கங்களோடு ஒப்பிடலாம்.” என்கிறார் பெருந்தேவி. ஜியார்ஜியோ மெக்னநல்லி ‘நாவல் என்பது நாற்பது வரிகளும் இரண்டு கியூபிக் மீட்டர் காற்றும்’ என குறிப்பிடுகிறார். காற்று நீக்கப்பட்ட நாவல் குறுங்கதையாக ஆகமுடியும். ‘நுண் கதைகள்’ நுண்மையை இயல்பாக கொண்டவை. சிறிய அசைவுகளை கைப்பற்ற முயல்பவை. காலத்தை மந்தமாக படம்பிடிக்கும் (Time Warp) காமிரா போல நுண்ணிய தருணங்களை கதையாக்க முயல்பவை. 


சிங்கப்பூரில் குறுங்கதை வகுப்பிற்காக வெவ்வேறு எழுத்தாளர்களின் வரையறைகளை வாசித்தேன். துல்லியமான வரையறை என்பது கல்விக்கூடங்களுக்கு உரியது. கலைஞர்கள் உருவகங்கள் வழியாக அளிக்கும் தோராயமான வரையறைகள் இன்னும் நெருக்கமானவை. ‘நாவலை ஒரு பாலூட்டியுடனும் சிறுகதையை பறவை அல்லது மீனுடனும் ஒப்பிட்டால் குறுங்கதை ஒரு பூச்சி. இருளில் ஒளிரும் மின்மினி பூச்சி’  மேற்கோளுக்கு உரியவர் எவர் என குறிக்கத் தவறிவிட்டேன். எனினும் இந்த புரிதல் அபாரமானது. நாவலை மேய்ச்சல் விலங்காக கற்பனை செய்யலாம். மாடு, ஆடு, எருமை போல. பரந்த வெளியில் மேய்ந்து, அசைபோட்டு சாரத்தை அளிப்பது. ‘திட்டவட்டமாக எந்த வடிவத்தையும் கொள்ளாதது. பல்வேறு வடிவங்களின் கலவையில் உருவான ‘மியூட்டேஷன்’ என்பதாலேயே நம்மை பதட்டத்துக்கு உள்ளாக்குகிறது’ என்கிறார் மார்கரெட் அட்வுட். அறிவியல் புனைவு, பீதியூட்டும் புனைவு, வரலாற்று புனைவு என பல்வேறு வகை மாதிரிகளில் ஒரே எழுத்தாளர் குறுங்கதைகளை எழுத முடியும். பெருந்தேவியின் கதைகளிலேயே இந்த கூறுகளை காண முடிகிறது. அமெரிக்க விமர்சகரான டேவிட் காப்ளான் அளிக்கும் வரையறை கவித்துவமானது. ‘மாசடைந்த நீரில் தங்க மீனை ஒரு நொடி காண்பது போல, ஒரு ஹைக்கூ அளிக்கும் விரிவை போல, ஒரு மாயாஜால நிகழ்ச்சியை காண்பது போல, எத்தனை நுணுக்கமாக கவனித்தாலும் மாயவித்தைக்காரர்  கண்முன் மாயத்தை நிகழ்த்தினாலும் நம்மால் அதன் வித்தையை கண்டுகொள்ள முடியாது’. குறுங்கதைகளை ஹைக்கூவுடன் இணை வைப்பது முக்கியமான அவதானிப்பு. அமெரிக்க நாவலாசிரியரான சார்லஸ் பாக்ஸ்டர் ‘புகையால் செய்யப்பட உருவத்தை போல மனதின் அந்தரத்தில் தொங்க வேண்டும்’ என்கிறார் ஆக இரண்டு எதிரெதிர் இயல்புகள் வழியாக குறுங்கதைகளின் வடிவத்தை புரிந்து கொள்ளலாம். இறுக்கம் – புகை மூட்டம். இறுக்கமாகவும் செறிவாகாவும் காத்திரமாகவும் உள்ளவை நம் மேல் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துபவை. புகை மூட்டம் என்பது வாசகருக்கு கற்பனையால் இட்டு நிரப்ப   இடமளிக்கும் கோட்டுச் சித்திரம் போல. தற்காலிகத்தன்மையை சுட்டுவது. 


இறுக்கம், செறிவு Vs மெல்லிய புகை மூட்டம் – இரு எதிரெதிர் தன்மைகள் கொண்டு குறுங்கதைகள் விளக்கப்படுகிறது. முறையே கவிதைக்கும் நாவலுக்கும் நெருக்கமான வடிவங்களாக இவற்றைக் காண முடியும். 


தமிழில் குறுங்கதைகள் சார்ந்து சில விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. ஜெயமோகன் இந்த புதிய அலை நுண்கதைகள் குறித்து இப்படி எழுதுகிறார். ‘இன்று ஒரு புதிய கலைவடிவமாக உருவாகிவரும் நுண்கதை அல்லது நுண்சித்தரிப்பு என்பது சற்று மாறுபட்ட அழகியல் கொண்டது. அது செவ்வியல் சிறுகதைக்கும், மேலே குறிப்பிட்ட உருவகக்கதைக்கும், விளையாட்டுக்கதைக்கும் பிறகு உருவாகி வந்துள்ள வடிவம். படிமமோ உருவகமோ இன்றி சொல்லப்படுவது. சொல்விளையாட்டோ மொழிச்சுழற்றலோ அற்ற சுருக்கமான நேரடியான கூற்று கொண்டது.


வாழ்க்கையின் ஒரு தருணத்தை அல்லது ஒரு நுண்மாறுதலை மட்டுமே குறிவைப்பது. வளர்ந்துசெல்லும் தன்மை அற்றது.’ என்கிறார். சுரேஷ் பிரதீப் குறுங்கதைகளின் வடிவத்தைப் பற்றி  அவற்றுக்கு இருக்க வேண்டிய தற்சுட்டுதல் தன்மை (Self Referential) மிக முக்கியமான இயல்பு என குறிப்பிடுகிறார். ‘குறைவான சொற்களில் தற்சுட்டுத் தன்மை கொண்ட ஒரு புனைவு வெளியை கட்டமைப்பதுதான் குறுங்கதை எழுதுவதன் பிரதானமான சவால் என்று தோன்றுகிறது.’ என இந்த வடிவத்தைப் பற்றி எழுதுகிறார். மேலும் ‘குறுங்கதை ஒரு குறிப்பிட்ட வலுவான கதைச்சூழலில் நிகழ்வது அவசியம். ஆனால் அப்படி ஒரு ‘பழக்கமான’ கதைச்சூழலை தேர்வு செய்யும்போது கதைகள் தனித்தன்மையை இழந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது.’ இந்த இருமையை கடப்பதே நல்ல குறுங்கதையின் இயல்பு என்பது சுரேஷின் பார்வையாக உள்ளது. பெருந்தேவி தொகுப்பின் முன்னுரையில் குறுங்கதை எனும் வடிவம் குறித்த தனது புரிதலை எழுதுகிறார். ‘‘குறுங்கதை என்ற பதத்தை நெகிழ்வாக நுண்கதையைக் குறிக்கும் முகமாகவும் ஒளித்தெறிப்புக் கதை என்ற வகையில் வரக்கூடிய சாத்தியத்திலும் பயன்படுத்துகிறேன். இவற்றை வரையறுப்பது சிக்கலானது என்றாலும், பரந்த உலகத்தின் குறுக்குவெட்டான ஒரு தோற்றத்தைக் குறைந்த வார்த்தைகளில் நிகழ்த்திக்காட்ட முனைவதாகப் பொதுப்படையான ஒரு அம்சம் இவற்றுக்கு இருக்கிறது.” என்கிறார்.  என்நோக்கில் கற்பனையினூடாக பெருகும் தன்மைகொண்ட தற்கணத்தின் கலையாக்கமே குறுங்கதை என சொல்லலாம். இவற்றின் சாராம்சமான தத்துவ ஊற்றுக்கண் ஜென் கதைகளில் உள்ளதாக கருதுகிறேன். 


குறுங்கதைகள் வெகுஜன இதழ்களில் தான் முதலில் இடம்பிடித்தன. தொலைக்காட்சியின் வருகைக்கு பின்னர் தொடர்கதைகள்  மீதான ஈர்ப்பு வாசகர்களுக்கு குறைந்தது. சிறுகதைகள் பக்க அளவை மீறக்கூடாது என்பதும் ஒரு சிக்கல். சிறுகதை ஆசிரியருக்கு அளிக்க வேண்டிய சன்மான தொகை குமுதம் ‘ஒருபக்க கதைகள்’ இப்படித்தான் பிரபலமாயின. உலகெங்கிலும்  வெகுஜன தளத்தில் தொண்ணுறுகளின் மத்தியில் தொடங்கி இரண்டாயிரங்களின் மத்திவரை இந்த அலை நீடித்தது. குறுங்கதை எழுதுபவர்களுக்கு சிறுகதையாசிரியர்கள் போல மதிப்பூதியம் வழங்க வேண்டியதில்லை. நகைச்சுவை துணுக்குகளுக்கு வழங்குவது போல சில நூறு கொடுத்தால் போதும். புதிய குரல்களுக்கு இடம், எழுத்தாளர்களுக்கும் வெகுஜன இதழில் அங்கீகாரம் என அனைவருக்கும் லாபம். ஆனால் படைப்பூக்கம் வெளிப்படவில்லை என்றால் எந்த் இலக்கிய வடிவமும் தேக்கமடையும். சமூக ஊடகங்களில் நேரடியாக எழுதும் வாய்ப்பு திறக்கிறது. ‘வலைபாயுதே’ போன்ற பகுதிகள் குறுங்கதையின் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. இலக்கிய பரப்பில் குறுங்கதை மதிக்கத்தக்க இடத்தை அடைந்தது வெகுஜன இதழ்களில் அலை ஓய்ந்த பின்னர் தான். வெகுஜன இதழ்களில் வெளிவந்தவை ‘சாமர்த்தியத்தை’ மூலதனமாகக் கொண்டவை. ‘சாமர்த்தியம்’ மட்டுமே இருந்த குறுங்கதை மரபு சிரிப்பு துணுக்குகளுடன் தொடர்புடையது. அங்கிருந்து இன்று நாம் காணும்/ ரசிக்கும் மீம்களுக்கு தொடர்ச்சியை காணலாம். குறுங்கதைகளின் வெகுஜன நீட்சியே மீம்கள். நவீன குறுங்கதைகளில் கதை மாந்தர்களை முழுமையாக சித்தரிக்க வேண்டும் எனும் யோசனை பின்னுக்கு செல்கிறது. அவர்கள் நம் கண்முன் தெரியவேண்டியதில்லை. நமக்கு காணக்கிடைப்பது ஒரு மனிதரின் ஏதோ ஒரு தருணம்/ ஒரு முகம் அதை பதிவு செய்தால் போதும். கடற்கறையில் தலையற்ற கட்டவுட்டுகளில் நாம் நம் தலையை பொருத்தி புகைப்படம் எடுக்கலாம். அது போல வாசகர் தம்மை பொருத்திக்கொள்ளும் கட் அவுட்களை குறுங்கதைகள் உருவாக்க முனைகிறது.  நெடும் ஆக்கங்களின் காலம் முடிந்துவிட்டது, பெரும் ஆக்கங்கள் கோரும் கவனத்தை அளிக்க முடிவதில்லை, ஆகவே கவனம் சிதறிய காலகட்டத்தின் இலக்கிய வடிவம் குறுங்கதைகள் என்றொரு பார்வையை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். எனினும் சார்லஸ் பேக்ஸ்டர் இந்த கூற்றை மறுக்கிறார். பண்டைய இலக்கிய வகைகளான ‘ஹைக்கூ’வை குறித்து எவரும் இந்த கோட்பாட்டை சொல்லவில்லை என்கிறார். ஏழ்கடலை அணுவில் துளைத்த குறள் சார்ந்தும் நாம் இதை பொருத்தி பார்க்கலாம். குறுகிய வடிவத்தில் செறிவாக கதைசொல்லவும் அதை உள்வாங்கிக்கொள்ளவும் அதிக கவனமும் உழைப்பும் தேவைப்படுகிறது என்பதே அவரது வாதம். என் புரிதலின்படி கவனக்குறைவின் விளைவாக தோன்றிய வடிவம் என்பதைவிட குறுகிய வாய்ப்புகளில் விகசிக்கும் வடிவம் எனத் தோன்றுகிறது. ஒரு மெட்ரோ ரயில் பயணத்தின் ஊடாக, மாநகர பேருந்தின் நிறுத்தத்தில் காத்திருக்கும் போதோ, பயணத்திலோ ஒரு  குறுங்கதையை எழுதிவிட முடியும். மேலும் சமூக ஊடகத்திற்கு வாகான வடிவமும் கூட. பரவலாக கவனம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். 


2


பெருந்தேவியின் குறுங்கதைகளில் மொழியையே கதையாக  ஆக்கும் இடங்கள் முக்கியமானவை. ‘பக்கத்து வீடு’ ஒருவித மொழி விளையாட்டு உள்ள கதை  யாரையோ சொல்வது போல் தன்னைப்பற்றி சொல்லி சிறிய தலைக்கீழாக்கத்தை நிகழ்த்திக் காட்டுகிறது. ‘சுப்புணி’ எனும் கதையில் சாகக்கிடக்கும் பாட்டியின் குழறலான சொற்களில் சிலநொடிகள் மட்டும் உயிர்பெற்று அனைவருடைய கற்பனைகளிலும் வாழ்ந்து மறைகிறது ‘சுப்புணி’ எனும் கதாபாத்திரம். சுப்புணி வாழ்ந்து மறைந்த குறுகிய காலத்தில் சுற்றத்திற்கு குறுகுறுப்பும் பதைப்பும் ஏற்படுகிறது. எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளப்படலாம் எனும் சாத்தியம் இருக்கும்போது ஆக வசதியான சாத்தியத்தையே  நாம் நாடுகிறோம். ‘ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?’ நமக்கு வாகாக ஒரு செய்தியை எப்படி மாற்றலாம் என்பதை சொல்கிறது. கல்பனா தன் காதலன் அனுப்பிய மெசேஜை தனக்கு ஆறுதல் தரும் விதமாக பொருள் கொள்கிறாள். உண்மை யாருக்கு வேண்டும்? இப்படியாக பொருள் கொள்ளுதலுக்கு அப்பால் வேறு புறவயமான உண்மை என ஏதுமுண்டா? கல்பனாவைப் பொறுத்தவரை ‘பிடித்த வாசிப்பு என்பதற்கும் சரியான வாசிப்பு என்பதற்கும் பெரிய வித்யாசமில்லை’  உண்மையின் கொடுங்கோன்மையிலிருந்து கற்பனையின் சிறகுகள் நம்மை விடுவிக்கிறது. வாக்கியங்களை இடையேயான முற்றுப்புள்ளியை உற்று நோக்குகிறாள் கல்பனா. ‘அந்தப் புள்ளி விரிந்து நீண்டு ஆழம் கொண்டு தாண்ட முடியாத ஒரு அகழியாக வாக்கியங்களை நடுவே ஓடியது’ என்பது அபார கற்பனை. ‘உறவு’ கதை மொழியின் நுட்பங்கள் வழி வாழ்வை பொருள்கொள்ள முயல்கிறது. இவ்வகை கதைகளில் பெருந்தேவி பயன்படுத்தும் சொற்கள் கவிதைக்கு நெருக்கமானவை. ’”தூராதி தூரத்தில் இருக்கிறான்” என்பது தரும் மனக் கசப்பு “தூராதி தூரத்தில் இன்னும் இருக்கிறான்” என்பதில் மறைந்து விடுகிறது. முதல் வாக்கியத்தில் ஒரு புட்டித் தேனைக் கவிழ்த்துக் கொட்டுகிறது. “இன்னும்” என்றது உள்நுழையும் சொல்.’ கூடுதலான ஒரு சொல் உணர்வுநிலையை மாற்றும் அற்புதத்தை சொல்கிறது. இதே வரிசையில் ‘அவன் கேட்டது’ கதையையும் வைக்க முடியும். சொற்களின் அர்த்தச் சாத்தியத்தை பற்றி பேசுகிறது. ஒரேயொரு வரியை எப்படியெல்லாம் பொருள்கொள்ள முடியும் என யோசிக்கும் சுரேஷ்குமார் இந்திரஜித் பாணி கதை என சொல்லலாம். ‘உண்மையில் உண்மை ஒரு அசவுகரியம்’ எனும் கதை இவ்வரிசையில் மிகச் சிறந்த கதை. சாத்தியங்கள் அளிக்கும் கிளர்ச்சியையும் உண்மையை எதிர்கொள்வதன் திராணியின்மையையும் சிறப்பாக உணர்த்துகிறது. நல்ல மணத்துடன் இருக்கும் புதிய சாம்பார் பொடி வாங்கி அம்மாவின் திதிக்கு வெங்காய சாம்பார் சமைக்கிறாள் கதைசொல்லி. ஆனால் சாம்பார் ருசிக்கவில்லை. படைக்கப்பட்ட உணவு எவருக்கு படைக்கப்பட்டதோ அவர் அதை ஏற்றுக்கொண்டால் ருசியிழந்து போகும் என்று அவளது உறவினர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இன்னொருமுறை சோதித்துப்பார்க்க தயக்கம். அவள் பிரியத்துடன் திதி கொடுக்கும்போது அம்மா வராமல் எப்படி போக முடியும்? இது அவளது ஆழ்ந்த நம்பிக்கை. இரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மை என்பதால் எந்த உண்மையையும் மறுபரிசீலனை செய்வதற்கில்லை. ஆசுவாசமாளிக்காத உண்மை எவருக்கு வேண்டும்? சாம்பார் பொடியை அவள் திரும்ப பிரிக்கவே இல்லை. சிறிய கதைத் தருணத்தைக்கொண்டு பெரிய கேள்வியை எழுப்புகிறது இக்கதை. 


பெருந்தேவி தனது குறுங்கதைகளில் புதிய புதிய படிமங்களை உருவாக்கிக் காட்டுகிறார். ‘குழந்தையின் இருமல்’ கதையில் தலைப்பே கதையை விரித்தெடுக்கும் படிமமாக ஆகிறது. முழு ஆள் போல குழந்தை இருமுவது கதைசொல்லியை தொந்திரவு செய்கிறது. குழந்தையின் தொடர் இருமல் அம்மாவின் இருமலை நினைவுபடுத்துகிறது. ‘வாழ்க்கையின் வறட்சியைத்தான் இருமி இருமி வெளியேத்தள்ள முனைகிறாளோ’ என அம்மாவைப் பற்றி எண்ணுகிறாள். அப்படியான ஏமாற்றம் ஏதும் கிட்டாத ஒரு குழந்தை ‘முழு ஆளுக்கான இருமலை இருமுவது அநீதி’ என கதைசொல்லிக்கு தோன்றுகிறது. இருமல்கள் ஆளுக்கேற்ற அளவில், வலுவிற்கு தகுந்தாற் போல் வருவதில்லை எனும் உண்மை தொந்தரவு செய்கிறது. ‘மலைப்பாம்பு’ கதையில் ஒரு பெண் வளர்ப்பு பிராணியைப்போல் மலைப்பாம்பை வளர்க்கிறாள். இரவுகளில் அது சோர்ந்து அவளருகே படுத்துக்கொள்கிறது என்பதால் மருத்துவரிடம் காட்டுகிறாள். மருத்துவர் அதற்கு சோர்வெல்லாம் ஏதுமில்லை உங்களை உண்பதற்கு அளவெடுத்துக்கொண்டிருக்கிறது என்கிறார். பெண்ணருகே சாதுவாக படுத்தபடி அவளை விழுங்க அளவெடுத்து காத்திருக்கும் மலைப்பாம்பு எனும் படிமம் பல அர்த்த சாத்தியங்களை கிளர்த்துகிறது. இந்தக் கதையின் முடிவு முக்கியமானது. அளவெடுத்தால் ஒரு போடு போடவேண்டியதுதான் என முடிவெடுத்தப் பின்னர் நிம்மதியாக உறங்கச் செல்கிறாள். மலைப்பாம்புக்கு பயப்படவில்லை, அதீத எச்சரிக்கை உணர்வும் இல்லை, இப்போதே கொல்கிறேன் பார் எனும் வீராவேசமும் இல்லை. மனத்தெளிவுடன் நிம்மதியாக உறங்குகிறாள். பெருந்தேவி உருவாக்கி காட்டிய இன்னொரு வினோதமான படிமம் ‘முடிக்கற்றை’. வலது கண்ணை மறைக்கும் முடிக்கற்றை காதலனுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதை அகற்றியதும் அவனுக்கு தென்படுவது ஓட்டை. “அதன்வழியாக என் ஆன்மாவைப் பார்” என்கிறாள். விழியற்ற துளையை மறைக்கும் முடிக்கற்றை என்பது அச்சுறுத்தும் படிமம். துளைகளை எவரும் காட்ட விரும்புவதில்லை. ‘நினைவுகூர்தல்’ கதையில் அமைதியின் குறியீடாக வரும் நிலா அச்சுறுத்தும் படிமமாக உருமாறுகிறது. அவரது கவிதையில் என் நிலா முழுக்க கரையான்கள் என்று எழுதியிருப்பார். “இந்த நெலா ஒருநாள் உன்ன பிடிச்சுட்டுப் போயிடும்” என்பதை கேட்டு பயந்துவிடுகிறாள் சிறுமியான கதைசொல்லி. பலவருடங்களுக்கு பிறகு அம்மாவின் முகமே வட்டமாக வெள்ளையாக நிலாவைப்போல் இருந்ததாக நினைவுகூர்கிறாள். கொடுங்கனாவின் கதை வடிவம். 


பெருந்தேவி ‘பீதியூட்டும் அமானுட’ கதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார். பேய்கள் சகஜமாக நடமாடுகின்றன. ‘பாலின பேதம் பார்க்காத சலூன்’ ஒரு பேய்க்கதை. பேய் கண்ணுக்கு தெரியும் அனுபவம் சொல்லப்படுகிறது. ‘16’ அமானுட கதை. ஒரு குடும்பத்தின் மொத்த வாழ்க்கை சுழற்சியையும் காட்டி அமைகிறது. சுவரில் அழியாமல் புலப்படும் ‘16’ இரு குடும்பத்திற்கும் இருவேறுமாதிரி பொருள்படுகிறது. கதையின் இறுதி வரி வழியாக இதை பேய்கதையாக வாசிக்க இடமுண்டு. ‘விரல்கள்’ பீதியூட்டும் மர்ம கதை. குளிர்சாதனப்பெட்டிக்குள் ஊதா நிறத்தில் இரண்டு விரல்கள் எனும் கற்பனையே அச்சுறுத்தும் தன்மையுடையது. அதற்கு எந்த விளக்கமும் கதையில் அளிக்கப்படவில்லை.  தடயமின்றி மறைந்துபோவதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘புரிபடாத திடீர் அபாயத்துக்கு எதிராக அற்ப  மனிதர்கள் என்ன செய்துவிட முடியும்? ஆனால் புரிபடாத தருணங்களையும் நிகழ்வுகளையும் கூட்டமாக எதிர்கொண்டு தாண்டி இதுவரைக்கும் வந்திருக்கிறோம்’ எனும் வரி வழியாக இந்தக் கதையை நான் வேறொன்றாக புரிந்துகொண்டேன். கொரோனா போன்ற நோய்த்தொற்றை நாம் எதிர்பார்க்கவில்லை. சடாரென்று மறையவில்லை என்றாலும் மெல்ல நம் அன்றாடங்களில் இருந்து மங்கிவிட்டது. எத்தனை தீவிரமாக பீடித்திருந்ததோ, அதே வேகத்தில் அதை மறக்க முயன்றோம். அன்றாடங்களுக்குள் நம்மை புதைத்துக்கொள்ள மறதி அவசியமாய் இருந்தது. ஆனால் அது முற்றழியவில்லை. விரல்களாக மறைந்தவை கரு நிற முயல்குட்டிகளாக உருமாறி மீள வருகின்றன. அன்றாட தளத்திற்கு அப்பாலான உலகின் கணக்கு குறித்த திகைப்பை இக்கதை அளிக்கிறது. இதே வரிசையில் வைக்கத்தக்க இன்னொரு கதை ‘தவிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது’.  காஃப்காத்தனமான புனைவு.. இன்னும் சரியாக சொல்வதானால் காஃப்காவும் லூயிஸ் கெரோலும் சந்திக்கும் புள்ளியில் நிகழும் கதை என சொல்லலாம். நகர் நடுவே, கட்டிடங்களுக்கு மத்தியில் மனிதர்கள் திக்கு தெரியாமல் தொலைந்து போகும் காடு எனும் கற்பனை சிறப்பு. 


அறிவியல் பின்புலத்தில் சில டிஸ்டோபிய கதைகளையும் பெருந்தேவி எழுதியுள்ளார். ‘கண்ணிலே என்ன உண்டு’ சுவாரசியமான கற்பனையை கடத்தும் அறிவியல் புனைவு. கண்ணில் பதிந்த பிம்பங்களை சேகரித்து அவற்றை வேறு ஒருவருக்கு மாற்றுவது சார்ந்து குடுவைக்குள் உள்ள கண்கள் பேசிக்கொள்பவைதான் கதை. ‘ஒருகாலத்தில்’ காலப்பயண அறிவியல் புனைவு கதை. கடந்தகால வாசனையை நினைவுகூர்ந்து,  அந்த காலத்திற்கு பயணம் செய்யும் கால இயந்திரம் எனும் கற்பனையே அபாரமாக உள்ளது. கடந்த காலம் ஒரு புதைக்குழி போல. அதில் கால்வைப்பவர்களை மீண்டெழ முடிவதில்லை. ‘மால்’ கதை மேற்சொன்ன இரண்டு கதைகளின் தீவிரம் தணிந்த டிஸ்டோபியன் அறிவியல் புனைவு. குழந்தைகள் உற்பத்தி பண்டங்களாக விற்பனைக்கு கிடைக்கிறார்கள். முழுமையை எட்டாமல் கற்பனையின் கிளர்ச்சியோடு நின்றுவிட்ட்ட கதைகள் இவை என்பதே முதல் வாசிப்பில் என் எண்ணம். இன்னும் சில கதைகளை இதே வரிசையில் வைக்கலாம். ‘ஒட்டுக் கேட்டது’ அயல்கிரகவாசிகள் மனிதர்களை கொன்று புசிப்பது பற்றி பேசுவதை கேட்டதாக வரும் கதை. ‘பாட்டிலான்’ ஒரு பாட்டிலுக்குள் வாழ்பவனை பற்றிய கதை. அநேகமாக ‘பாட்டிலான்’ எனும் சொல் கொடுக்கும் பொருள் மயக்கிலிருந்தும் ஈர்ப்பிலிருந்தும் உருவான கதையாக இருக்க வேண்டும். ‘ஆப்பிள்’ ஏவாளின் தொன்மத்தை முக்கோண தலையுடைய அயல்கிரகவாசியின் கதையுடன் மறு ஆக்கம் செய்கிறது. ‘அழுமூஞ்சிகளின் ஊர்’ கதை எல்லாவற்றுக்கும் அழுது அழுது ஊருக்குள் கண்ணீர் நிரம்பி வழிவதால் ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்கு கூட படகில் தான் செல்ல வேண்டி இருந்தது. அழுகை தேவலோகத்தையும் தொற்றிக்கொள்கிறது. கடவுள் தன் சிம்மாசனத்தில் இருக்கிறாரா இல்லையா என்று கூட கவனிக்காமல் அவரை சுற்றி அழுதபடி இருக்கிறார்கள். சாவையே பயமுறுத்தி விரட்டுகிற அளவிற்கு ஆற்றல் மிக்கதாக உள்ளது ஊராரின் அழுகை. அழும் இடத்தில் கடவுளுக்கு என்ன வேலை? ‘என்னா வெயிலு’ ‘என்னா மழை’ என அலுத்துக்கொள்ளும் சென்னைவாசிகளைப் பற்றியதுதான் கதை என ஊகிக்கிறேன்.  கற்பனையை கிளர்த்துவதோடு நின்றுவிடுகிறது எனும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் எப்போதும் கதை என்பது ஏதாவது செய்தே ஆகவேண்டும் என எண்ணுகிறோம்? என்றொரு கேள்வியும் எழுந்தது.அதன் உத்தேசமே கற்பனையை கிளர்த்துவதாக ஏன் இருக்கக்கூடாது? குறுங்கதைகள் இத்தகைய பரிசோதனைகளை அனுமதிப்பவைதான்.  ‘படபடப்பு’ அறிவியல் புனைவு அல்ல. எனினும் இதே வரிசையில் கற்பனையின் ஆற்றலால் வலுப்பெறும் கதை.  இக்கதையில் கதை சொல்லி வருங்காலத்தை நினைவுகூர்கிறாள். வருங்காலத்தை முன்னுணரவில்லை ஆனால் கடந்தகாலத்தை நினைவுகூர்வதைப்போல வருங்காலத்தை நினைவுகூர்கிறாள். அது அளிக்கும் பதட்டம் தான் படபடப்பின் காரணம். வருங்காலத்தை ஒருவர் எப்படி நினைவுகூர முடியும்? ஆனால் பெருந்தேவி இதை கற்பனை செய்கிறார். இந்த கதையில் “பாம்பு என்றால் அடிக்கத் தோன்றும்போது நாகம் என்றால் தெய்வமாகிறது’ என்றொரு வரி மொழி மீதான நுட்பமும் ஆளுகையும் வெளிப்படும் தருணம். ‘நாட்டார் வரலாறு’ இந்த கதைக்கு ‘நாட்டார் கதை’ என ஏன் பெயரிடவில்லை, எதற்காக வரலாறு என தலைப்பிட்டுள்ளார் என யோசிக்கும்போது இந்த கதையின் பகடி பிடிக்கிடைக்கிறது. நாட்டாரியலில் கதை தானே வரலாறு.


பீதியூட்டும் வகைகளில் மட்டுமல்லாமல் இலகுவான கற்பனை கதைகளும் உண்டு. ‘பல்லி’ ஒரு பெண்ணுக்கு நினைக்கும் நேரத்தில் மூன்று மணிநேரம்  பல்லியாக மாறும் வரம் கிட்டுகிறது என்பது பிரமாதமான கற்பனை.அந்த வரத்தை வைத்துக்கொண்டு தன் சம்பந்தமான வாழ்க்கை முடிவுகளை மாற்றியமைக்க முனைகிறாள்.  கலவி காட்சியை குறுகுறுப்புடன் காணும்போது வெட்கி கண்ணை மூடிக்கொள்ள முயன்று சுவரிலிருந்து கீழே விழுகிறது பல்லி. பல்லி உடலுக்கும் மனித மனத்திற்குமான போராட்டம் பெரும் சிக்கலாகிறது. வாயில் சிலந்தியுடன் நிற்கும் பெண் எனும் கதை இறுதி தருணம் ஒரு ஓவியம் போல மனதில் பதிந்துவிட்டது.  ‘அத்தனை நீண்ட கனவு அல்லது சாப விமோசனம்’ எனும் கதை கனவுக்கும் நிஜத்திற்குமான கோட்டை அழிக்கிறது. வெட்டுக்கிளி மனிதனாக மாறிவிட்டான் என்று கொண்டால் ‘சாப விமோசனம்’. ‘நீண்ட கனவு’ என்று கொண்டால் வெட்டுக்கிளியைப் பற்றிய பகுதி கனவு. இவற்றுக்கு இடையேயான சிறிய விளையாட்டு தான் இந்த கதை. ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ கதையில் ஒரு பாதிரியார் பேய் சுற்றுகிறது. . கதைசொல்லி ‘இந்த செமஸ்டரில் இங்கேதான் வகுப்பு’ என்று சொன்னதும் அஞ்சி அலறி ஓடிவிடுகிறது.‘ஹிந்தி/ குஜராத்தி ட்யூஷன் டீச்சர் தேவை’ கதையில் பேய் நேயம் வெளிப்படுகிறது. இந்த பேய்கள் நம்மை அச்சுறுத்துவதில்லை. நம்முடன் அவையும் வாழ்கின்றன. நம் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. கற்பனையின் வீச்சு கதையாகவும் முகிழ்ந்த வகையில் முதன்மையான கதையென ‘கடைசியில்’ கதையை குறிப்பிடலாம். ஊழி முடிவில் குழந்தை கண்ணன் ஆலிலையில் மிதந்து வருவான் எனும் தொன்மத்தை மறு ஆக்கம் செய்கிறது. நீரில் மூழ்கும் உலகில் கண்ணன் மிதப்பதற்கு ஆலிலை கிடைக்கவில்லை. மக்காத பிளாஸ்டிக் துண்டு மட்டுமே எஞ்சுகிறது. சூழலியல் விமர்சன கதையாக வாசிக்க இடமுண்டு. குறுங்கதைகளுக்கு தற்சுட்டுத் தன்மை எப்படி ஆழத்தை அளிக்கிறது என்பதற்கு இந்தக் கதையை ஒரு உதாரணமாக கொள்ளலாம். ஆலிலை கிருஷ்ணன் எனும் தொன்மம் பரிச்சயமாக இருந்தாலே இக்கதையின் பொருள் துலங்கும்.     


பெருந்தேவி எழுதியுள்ள எழுத்தாளரை பாத்திரமாக கொண்ட கதைகள்  அங்கத தொனியில் தமிழ்  இலக்கிய சூழலை விமர்சனம் செய்கின்றன. ‘அங்கீகாரம்’ கதையில் யாரையும் பாராட்டாத கர்வியான எழுத்தாளர் நோய்த்தொற்று காலத்தில் மரண பயத்தால் பீடிக்கப்படுகிறார். ஏதோ ஒன்று தோன்ற, சக எழுத்தாளர்களை அழைத்து அவர்களின் எழுத்துக்கள் குறித்து பாராட்டுகிறார். அன்று மதியமே மருத்துவமனையில் சேர்ந்து பின்னர் இறந்தும் போகிறார். இறந்து போன பிறகு நடக்கும் இணையவழி அஞ்சலிக்கூட்டத்தில் ஆவலுடன் ஆவியாக கலந்துகொள்கிறார். ஆனால் ஆறே ஆறு எழுத்தாளர்கள் மட்டுமே பங்குகொள்கிறார்கள் ‘இறந்துபோன துக்கத்தைவிட அதிக துக்கத்துடன் ஆவி சுடுகாட்டிற்கு திரும்புகிறது’. கொடூர கனவிலிருந்து விழித்தெழுபவர் சுதாரித்துக்கொண்டு இம்முறை வரிசையாக வாசகர்களுக்கு அழைப்பு விடுத்து “உங்கள் வாசிப்பென்ன, புரிதல் என்ன” என புகழ்கிறார். புதுமைப்பித்தன், க.நா.சு தொடங்கி சிற்றிதழ் மரபு என்பதே வாசகப்பரப்பின் மீதான அசட்டையை அடிநாதமாக கொண்டது. வாசகர்களை செல்லம் கொஞ்சிக்கொண்டே இருந்தால் தான் எழுத்தாளர் அங்கீகரிக்கப்படுவார் எனும் சூழலின் மீதான சிற்றிதழ் மரபின்  விமர்சன குரலாக இந்தக் கதையை காண முடியும். ‘ஒரு எழுத்தாளனின் சுயசரிதை’ பிரதிக்குள் எழுத்தாளரின் அந்தரங்கத்தை தேடும் அபத்தத்தை பகடி செய்கிறது. ‘ஒரு எழுத்தாளரின் கதை’  துடுக்கான கதை. பிரியத்திற்குரிய எழுத்தாளரை சந்திக்கும் வாசகன் தனது வலி மிகுந்த இளமைக்கால  நினைவை பகிர்ந்துகொள்கிறான். உண்மையில் தீவிரமான, தொந்திரவு செய்யும் அனுபவம் தான் அது. ஆனால் அது அந்த எழுத்தாளரின் கதையாக ஆகும்போது அபத்தமான நீதிக்கதையாக மாறுகிறது. எழுத்தாளரின் கற்பனை வறட்சியால் கதையாக  வீணடிக்கப்பட்ட வாழ்வனுபவங்கள் கண்முன் தோன்றி மறைந்தன. ‘பிரதியின் உள்ளர்த்தம்’ நல்ல பகடிக்கதை. வானதியின் துயர்மிகு  வாழ்க்கையை விவரிக்கிறது. ‘காலம் வாணலியில் அவளை வேர்க்கடலையாக வறுத்துத் தன் வாயில் போட்டுக்கொள்கிறது.’  என எழுதிய பின் அடுத்தவரியில் வறுத்த கடலைக்கு எழுத்தாளரின் மனம் ஏங்குவதை வாசகர்கள் எப்படியோ புரிந்துகொள்வார்கள் என முடிக்கிறார். ‘புதுமைப்பித்தனுக்கு சிலை’ கதையில்  பு.பியின் ஆவியோடு ஒரு உரையாடல் நடக்கிறது. அவருக்கு சிலை வைக்கும் யோசனை குறித்து புதுமைப்பித்தனுக்கு என்ன அபிப்பிராயம் இருந்திருக்கும்? இந்தக்கதையில்  வரும் அதே அபிப்பிராயம் தான் இருந்திருக்கும் என எண்ணிக்கொண்டேன்.  


3  


நவீன காலத்து உறவு சிடுக்குகளை களமாகக் கொண்ட கதைகளில் பெருந்தேவி வலுவான கதைசொல்லியாக வெளிப்படுகிறார். ஒப்புநோக்க அதிக எண்ணிக்கையிலான கதைகள் இந்தக் களத்தில் தான் நிகழ்கிறது. ‘ஜானுவும் ராமும்’ கதையில் ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதி பரஸ்பரம் அடுத்தவர் முகத்தை மறந்து போயிருந்தார்கள். ஜானுவை ஜானுவின் சிநேகிதி என்று நம்பி ஜானுவுக்காக ராம் காத்துக்கொண்டிருக்கிறான். ஜானுவும் ராமை ராமின் சிநேகிதன் என்று எண்ணி ராமின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். ‘இப்படி ஜானுவுக்காக ராமும் ராமுக்காக ஜானுவும் காத்திருப்பது ஒரு மாலையில் தொடங்கி பல வருடங்கள் தொடர்ந்தது. அந்த ஊரில் ராம், ஜானு என்ற பெயர்களைக் கொண்ட தம்பதிகள்தான் அநேகமாக இருந்தார்கள்.’ என முடிகிறது. அன்பு வறண்ட வாழ்க்கையில் அருகிருப்பவருக்காக வாழ்நாள் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறோம். 96 எனும் திரைப்படத்தின் மைய உணர்வின் மீதான பகடி என சொல்லிவிட முடியும். ‘உரையாடல்’ பெருந்தேவியின் அபாரமான கதைகளில் ஒன்று. மாதமொருமுறை எழுபதுகளில் உள்ள சுமதியின் அப்பா,  சித்தப்பா,அத்தை சந்தித்து மனம் விட்டு உரையாடுவார்கள். ஆனால் என்ன, மூவருக்குமே காது கேட்காது. மூத்த அண்ணன் நாட்டு நிலவரத்தை சொன்னால் இளையவர் ஆமோதித்து கோவில் உற்சவத்தை பற்றி சொல்வார், அதற்கு தங்கையோ பால்ய நினைவுகளை பதிலாகச் சொல்வாள். ஆனால் மூவரும் கூர்ந்து கேட்டார்கள், புன்னகைத்து ஆமோதிப்பார்கள். அவர்களுக்குள் முரண்பாடு எழுவதே இல்லை. சுமதி இந்தக் கூத்தைப் பார்த்து வேடிக்கையாக சிரிக்கும்போது அவளது அம்மா அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை விதந்தோதுவாள். சுமதி அற்ப காரணத்திற்காக அண்ணனுடன் சண்டையிட்டிருந்தாள் என்பதை நினைவூட்டுவாள். கதை இப்படி முடியும் ‘அவர்கள் இருவருக்கும் எழுபத்தி இரண்டு வயதான பின் பேசிக்கொள்ளலாம். நிச்சயம் கடைசி வரையில் பேசிக் கொள்வார்கள். ஒருவர் பேசுவது மற்றவருக்கு கேட்காத போது இருவருக்கிடையில் எதற்காக சண்டை வரப்போகிறது?’ நீடித்த நல்லுறவுக்கு செவிடாக இருப்பது முக்கியம். குடும்ப அமைப்பின் உள்ளார்ந்த வன்முறை பெருந்தேவியின் பேசுபொருட்களில் ஒன்று. ‘படுக்கையறைகளின் கதை’ குடும்ப உறவின் சலிப்பை நுணுக்கமாக சொல்கிறது. ஒன்றரை பக்கத்தில் ஜெரால்டு ஜெஸ்ஸியின் முழு வாழ்க்கையையும் சொல்லிவிடுகிறது. ஜெரால்டு ஜெஸ்ஸி மரணமடைந்து புதிய தம்பதியினர் குடிபுகுந்து புதிய சுழற்சியை தொடங்கி வைக்கிறார்கள்.வ்குடும்ப உறவின் சலிப்பை நுணுக்கமாக சொல்கிறது. ‘கொசு’ இதே விஷயத்தை நுணுக்கமாக அணுகுகிறது.  ‘ஆனால் அருவருப்பு என்னவோ அடுத்தவர் குறித்துத்தான் தோன்றுகிறது’ எனும் வரி உறவுகளுக்குள் மதிப்பீடுகள் செயல்படும் முறையை காட்டுவது. ஒன்றுமில்லாத சாதாரண விஷயங்கள் குறித்து சர்ச்சையில் ஈடுபடுவதே உறவுக்குள் நடக்கும் உரையாடலாக மாறிப்போகும் அபத்தத்தை சொல்லிச் செல்கிறது. இன்னொருவரின் மீது அமர்ந்திருக்கும் கொசுவை அடிப்பது எனும் செயல் நன்மை/ அக்கறையின் பாற்பட்டதாக உள்ளது. ஆனால் அதுவே உச்சமான  வன்முறையாக  வெளிப்படுகிறது. சாதி ஆணவ கொலை உட்பட எல்லாவற்றுக்கும் அடிநாதமாக இருப்பது இந்த உணர்வுதான். குடும்ப வன்முறைகள் ‘உன் நல்லதுக்குதான்’; ‘உம்மேல உள்ள அக்கறையிலதான்’ போன்ற சொற்களின் வழியாகவே நியாயப்படுத்தப்படுகிறது. ‘உட்பக்கம் பூட்டியிருந்த வீடு’ எனும் கதை தலைப்பு எவரும் வெளியேற வழியில்லாத குடும்ப அமைப்பின் குறியீடாக உருமாறுகிறது. வீட்டிற்குள் கணவன் மனைவி இரு குழந்தைகள் என அனைவரும் கோரமாக இறந்து கிடக்கிறார்கள். ஒருவரையொருவர் வன்மத்தோடு கொன்று சவமாகிறார்கள். கணவனும் மனைவியும் கூண்டுக்குள் உலவும் புலிகள் எனும் லாசாராவின் உவமை நினைவுக்கு வந்தது. பெருந்தேவி குடும்ப அமைப்பில் இயல்பாக புதைந்திருக்கும் வன்முறை குறித்து எழுதிய கதைகளில் இதுவொரு உச்சம் என சொல்லலாம். குடும்பம் என்பது ஒருவழிப்பாதை. வெளியேற முண்டியடித்து, வெளியேற வழியின்றி என எப்படியும் இருக்கலாம். உட்பக்கம் பூட்டியிருந்த வீட்டிற்குள் குற்றமற்றவர்கள் என எவரேனும் இருக்க முடியுமா? ‘கடவுளாகப் பொறுப்பேற்கும் போது’ இந்த வரிசையில் மிக முக்கியமான கதை. மூன்று பெண்கள், மூன்று சிறுவர்கள், மூன்று ஆண்கள் தங்களுக்குள்ளாக பேசிக்கொள்வதை கதைசொல்லி ஒட்டு கேட்கிறார். மூன்று குழுக்களிலும் தத்தமது குடும்பத்தைப் பற்றி புகார் சொல்லிப் புலம்புகிறார்கள். குடும்பங்களுக்குள் நுரைக்கும் வன்முறையைத் தீர்க்க என்னதான் வழி? கதைசொல்லி கடவுளாக இருந்தால் ‘கிடுக்கியால் அடுப்பில் கிடக்கும் தனல்களை ரகவாரியாக எடுப்பதை போல் அவர்களை பிரித்து அனுப்பிவிடுவேன்’ என எண்ணுகிறார். ‘கணவர்களையும் மனைவிகளையும் ஆண்களாகவும் பெண்களாகவும் அவர்கள் பிள்ளைகளைச் சுதந்திரமான குழந்தைகளாகவும் மாற்றுவதை விட இந்த உலகத்தில் ஒரு கடவுள் செய்யக்கூடிய பெரிய மாயாஜாலம் வேறென்ன இருக்கிறது?’ 


உறவுகள் ஏன் சிக்கலாகிறது? அவற்றுடன் அதிகாரம் பிணையும்போது அடிபணியவைப்பதற்கும் அத்துமீறுவதற்கும் இடையிலான போராட்டமாக அவை மாறுகின்றன. உடைமையுணர்விலிருந்தே அதிகாரத்திற்கான நியாயம் பிறக்கிறது. இவை இரண்டிற்குமான தொடர்பை துண்டிக்க இயலுமா? உடைமையுணர்வு இல்லாத உறவென்பது வெறும் கருத்துருவ லட்சியம் தான். குடும்ப அமைப்புக்கு வெளியே அமையும் உறவுகளின் உடைமையுணர்வை பரிவுடன் அணுகும் பல கதைகளை பெருந்தேவி எழுதியுள்ளார். ‘இறக்க சந்தர்ப்பம் வாய்த்த நேரத்தில்’ (பிரமாதமான தலைப்பு!) கதையையும் மரணத்திற்கு முன் காலம் உறைந்து, தீர்க்க  வேண்டிய கணக்குகள்,  பிணக்குகள் எல்லாம் சடுதியில் முடித்துவைக்க மனம் பாடுபடுகிறது. காலம் உறைந்த சில நொடிகளுக்குள்  பிரிவின் குற்றத்திற்காக தண்டித்து, மன்னித்து, காதலித்து, ஏற்று என எல்லாத்தையும் செய்ய மனம் பரபரக்கிறது. ‘காதலை நிரூபித்தல்’ காதலை கடக்க முடியாமால் ரத்த காவு கேட்கிறது. ‘உன்னைப்போல் ஒருவன்’ பிரிந்த காதலனை வேறொரு பெண்ணுடன் காண்கிறாள். ஊடாக மனம் சிறிய காலப் பயணத்தை நிகழ்த்துகிறது. உடைமையுணர்வு உறவின் மீதான விசுவாசமாக பரிணாமம் கொள்ளும் என்பது நம் இயல்பான எதிர்பார்ப்பு. ஆனால் உறவுகளுக்கு இடையிலான விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். விசுவாசமின்மையை இயல்பாக்கம் செய்கிறது. ‘ஹனி’ காதல் உறவுக்குள் இருக்கும் உடைமை உணர்வு பற்றிய கதை தான்  ஜெஸ்ஸி காதலிப்பது ஒரு சிம்பன்ஸியை.‌ சிம்பன்சியும் தன்னை உயிருக்குயிராய் நேசிப்பதாக எண்ணுபவளுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ‘என்ன இருந்தாலும் குரங்கு, இல்லை ஆண், அதுவுமில்லை காதல்’ என அவள் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறாள். இந்த வரிசை முக்கியமானது. காதல் எனும் உணர்வுக்கு மட்டுமே விசுவாசம். காதலிப்பவர்களுக்கு அல்ல. ‘காதலனின் மனைவி’ கதையில்  “உன்னை நினைச்சுக்கறவங்கதான் உன் கனவில வருவாங்க” எனும் நம்பிக்கை படி கனவில் வரும் பெண் தனது காதலனின் மனைவி என எண்ணிக் கொள்கிறேன். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது எனும்போது எந்த காதலரின் மனைவி என்றொரு கேள்வியை இயல்பாக எழுப்பிச் செல்கிறது. ‘மானுடவியல்’  கதையும் இதே தரிசனத்தை கொண்டது. தோல் அற்ற வினோத பழங்குடி சமூகத்தை ஆய்வு செய்யும் போது அவர்களின் இதயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்களை கவனிக்கிறாள். காதலிப்பவர்களின் பெயர்களின் முதல் எழுத்தாக இருக்கும் என ஊகிக்கிறாள். ‘இதயத்தில் தானே நேசிப்பவர்கள் பெயர்களை ஏந்திக்கொள்கிறோம்?’ தனது இதயத்தில் ”எம்” எனும் ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும் என நினைப்பவள். அதை காணவோ காட்டவோ தயாரில்லை என்பது போல ஜெர்க்கினின் ஜிப்பை இழுத்து கொள்கிறாள். அவளுக்கு என்ன எழுத்து இருக்கும் என உறுதியாக தெரியவில்லை. அல்லது வேறு தான் இருக்கும் என அறிந்திருக்கிறாள். ‘இது நடந்த கதை’ காதலுக்கு அளிக்கப்படும் புனித சாயல்களை பகடிக்கு உள்ளாக்குகிறது. காதலின் வெற்றி என்பது திருமணம் எனும் பொது புரிதலை நகையாடுகிறது. அப்படியானால் எது வெற்றி என்றொரு கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ‘நகர்ந்து செல்’ உயிருடன் இருக்கும் காதலர்களுக்கு இடையே இறந்து போன ஒருவர் குளிர்ந்த காற்றாய் நிற்கிறார். அவரை நகர்ந்து செல்ல சொல்லும் கதை. கடந்த காலம் அல்லது கடந்த கால காதல் பேயுரு கொண்டு காதலர்களுக்கு இடையே நிற்கிறது என்றொரு வாசிப்பை வழங்க முடியும். ‘படமானவர்கள்’ படுக்கையறைக்குள் படமாகத் தொங்கும் காதலியின் பெற்றோர் காதலனை தொந்தரவு செய்கிறார்கள். ‘மாப்பிள்ளை ரோலில் இருப்பவனிடம் இவர்கள் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது. செத்துப் போனாலும் தான்’. இதனை ‘நகர்ந்து செல்’ கதையுடன் சேர்த்து வாசிக்கலாம். உயிரோடு இருப்பவர்கள் மட்டுமே தரக்கூடிய முத்தத்தின் வெம்மையை செத்தவர்களின் குறுக்கீடால் இழக்க கதைசொல்லி தயாரில்லை. ‘விடாக்கண்டன் கொடாக்கண்டன்’ விசுவாச விளையாட்டை பகடி செய்கிறது. என்னை நம்பி குதி என்கிறான் காதலன், குதித்து உனக்காக உயிரை விட வேண்டுமா என்கிறாள் காதலி. இப்படியாக ஒரே இடத்தில் ஒரே விஷயத்தை பேசிக்கொண்டே வருடங்கள் உருண்டோடுகின்றன.. 980 வது முறையாக இதைக் கேட்கும் சாண்டிலியர் காதை பொத்தி கொள்வது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறது.


மனிதர்களுக்கு இடையேயான நம்பிக்கையின்மையை சொல்லும் முக்கியமான கதை என ‘பொது இடம்’ கதையை குறிப்பிட வேண்டும். அடுக்ககத்தில் எதிர் எதிர் வீட்டாருக்கு இடையே தோன்றும் சிறிய பூசல் பிரம்மாண்டமாக வளர்ந்து அபத்தத்தில் சென்று முட்டி நிற்கிறது. பொறுப்பின்மையால் அகங்காரத்தாலும் பொது இடம் நாசமாகிறது. அபத்தத்தின் அளவு படிப்படியாக ஏறிக்கொண்டே போய் ஒருவித வெறியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். உச்சமாக குட்டியானையை வீட்டுவாசலில் கட்டி வைக்கிறார்கள். ‘யதார்த்தம்’ கதை அகில் சர்மா எனும் இந்திய ஆங்கில எழுத்தாளர் எழுதிய ‘ஓபிடியன்ட் ஃபாதர்’  நாவலின் கதைக்களத்தை ஒத்தது. தந்தையரின் சிறுபிள்ளைகள் மீதான காம ஈடுபாட்டை பேசுவது. வீட்டுப்பாடம் எடுக்கும்போது ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டார் என தந்தை குற்றச்சாட்டப்படும்போது அம்மாவும் மகனும் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை. விடுமுறைக்கு வந்த மகள் மட்டும் என் தந்தை அப்படியானவர் அல்ல என வாதிடுகிறாள். அவளுக்கு அவர் இப்போதும் நாயகன் தான். அவருடைய வீழ்ச்சியை அவளால் ஏற்கமுடியவில்லை. ஆனால் அம்மாவிற்கு உண்மை தெரியும். மகளுக்கு அம்மா விடுக்கும் எச்சரிக்கை வாசகருக்கு பதட்டத்தையளிப்பது. 


மனிதர்களுக்கு இடையிலான  உறவுகளில் விசுவாசம் சாத்தியமில்லை. மனித குரங்குடன் ஆவது சாத்தியமா என்றால் அங்கும் ஏமாற்றமே. எஞ்சுவது ஜடப்பொருள் தான்.  பெருந்தேவி குடும்ப உறவின் சிடுக்குகளுக்கு இதுதான் மாற்று என எந்த அறுதி தீர்ப்பையும் கதைகளின் ஊடாக கண்டடையவில்லை. பல்வேறு தீர்வுகளை கதைகளின் ஊடாக முயன்று பார்க்கிறார். கதைகளில் வெளிப்படும் துடுக்குத்தனமும் தான்தோன்றி தனமும் அவரது முக்கிய பலம். எதன் மீதும் அறுதியான நம்பிக்கையை அவர் கதைகள் வெளிப்படுத்தவில்லை என தோன்றியது. ஜடப்பொருளுக்கும் தன்னுணர்வு கொண்ட உயிரினங்களுக்கும் இடையேயான கோடுகளை பெருந்தேவி தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துகிறார். ‘காதலன்’ கதையில் பிரிந்து சென்ற காதலனின் தோற்றத்தில் வரும் பொம்மையுடன் கதைசொல்லி உறவுகொள்கிறாள். பொம்மையின் ஆணுறையை நீக்கும்போது அதிலிருந்து ஒரு சொட்டு வெள்ளைத்திரவம் கையில் விழுகிறது. கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் மெய்நிகரி கதை ஏறத்தாழ தளம். பல்வேறு சாத்தியங்களை திறந்து வைக்கிறது. உண்மையில் அது பொம்மைதானா? அல்லது மனிதனா? பொம்மையாக மாறிய மனிதனா? மனிதனாக மாறிய பொம்மையா? மனிதர்களை பொம்மையாக மாற்றுவதை நாம் விரும்புகிறோம். முரண்பாடுகளுக்கு அதைத்தானே  தீர்வு என காலம்காலமாக நம்பி வருகிறோம். ‘உரையாடல்’ கதையில் ஒருவரையொருவர் செவியுறாத போது மனக்கசப்புகள் வருவதில்லை என எழுதியதை பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.  காது வேண்டியதில்லை. வாயில்லாமல் இருப்பது இன்னும் மேல். அல்லது நாம் அனுமதிக்கும்போது கேட்க விரும்புவதை  மட்டும் பேசினால் போதும். வாழ்நாள் எல்லாம் நல்லுறவு நீடிக்கும். கவிதை பொருள் கொள்ளும் கலையில் ஆத்மாநாம் போதம்- அபோதம் எனும் பிரிவினையை எப்படி தனது கவிதைகளில் அழிக்கிறார் என்பதை பெருந்தேவி விளக்குகிறார். அவரது கதைகளிலும் இது நிகழ்கிறது.  ‘மனம் எடுக்கும் முடிவு’ அப்பாவின் மரணத்திற்கு பிறகு அவர் பயன்படுத்தியவை சிதறிப் போகிறது. யாரும் உரிமைகோராத பழைய சிறிய மர டெஸ்க் பரணுக்கு செல்கிறது. பரணிலிருந்து ஏதோ ஒரு சமயத்தில் கீழே விழுந்து உடைகிறது. ‘தனியாக இருக்கப் பிடிக்காமல் தற்கொலைசெய்துகொண்டுவிட்டது’ என முடிகிறது அக்கதை. ‘பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்’ கதையில் புனைவுக்கும் வாழ்விற்குமான கோடு குலைகிறது. உணவகத்தில் பக்கத்திலிருக்கும் மேஜையில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் கதைக்கு வெளியே உரையாடிக் கொள்வது ஒட்டுக்கேட்பது தான் கதை . எழுதிச் செல்லும் கரங்கள் நிர்ணயிக்கும் விதிக்கு அப்பால் சுயேச்சையாக அவர்களால் வாழ முடியாத அவல நிலையை எண்ணி அழுது ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். ‘கழுவேற்றப்பட்டவள்’ இந்த வரிசையில் சிறந்த கதை என சொல்வேன். என் வாசிப்புக்கு உட்பட்டு தமிழின் சிறந்த குறுங்கதைகளில் ஒன்று என்று கூட சொல்ல முடியும். இறந்து காக்டெயிலில் செர்ரியாக மறுபிறப்பு எடுக்கிறாள் கதைசொல்லி. அவளுடைய குழப்பங்களும் சிந்தனைகளும் தான் கதை. குதத்தில் குச்சி செருகப்பட்டிருக்கிறது. தனக்கு மட்டும் இது ஏன் நிகழ்கிறது எனும் கேள்வி அவளை வாட்டுகிறது. பிறகு தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள். ‘அவள் குச்சியில் செருகப்பட்டிருந்த போதிலும் குதத்துக்கு ஒரு குஷன் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் கடவுளே தன்னை ஒரு செர்ரிப் பழமாக காக்டெயிலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் சும்மாவா? கடவுளின் பற்களில் அரைப்படுவதற்குள் இப்படி நூறுமுறை தன்னைக்குறித்து அவள் பெருமைப்பட்டுக்கொள்ள நேரமிருந்தது’ மதம், மெய்யியல், பொருளியல் வளம், இன்பம் என எத்தனை வகையான குஷன்கள்! இந்த கதை அளித்த விகாசம் கூசச் செய்தது. செருகப்பட்டிருந்த குச்சி குறித்து நாம் செய்வதற்கு ஏதுமில்லை. அரைபட போவதும் உறுதி. கற்பனையின் ஆற்றல் இன்றி வேறு எது நம்மை அந்த இடைப்பட்ட காலத்தில் காக்க முடியும்? குஷன் நமக்காக அளிக்கப்பட்டதாக நம்புவதே கூட பேதைமை தான். 


சமூக ஊடக கால உறவு குறித்து பெருந்தேவி எழுதியுள்ள கதைகள் ஒருவகையில் அவரது தனித்துவமான பங்களிப்பு என்று கூட சொல்லலாம்.  ‘பச்சைக் கண் விளக்கு’ முற்றுப்புள்ளி அகழாவது போல் மின்திரையில் பெயருக்கு பக்கத்தில் ஒளிரும் பச்சை விளக்கு இமைக்கா விழிகளாக உருமாறுகிறது. மின்திரையில் மெல்லிய வருடலின் ஊடாக அவருக்கு பிடித்த பாடலை பாடி உறங்கச் செய்கிறாள் என்பது கவித்துவமான கற்பனை. உறவுகளின் சாத்தியங்கள் அளிக்கும் கிளர்ச்சி உண்மையில் இருப்பதில்லை. பெரும் கிறுக்கு பிடித்து ஆட்டினாலும் இரண்டு நிமிட உரையாடலில் பிரியம் வாடிப்போய்விடுகிறது. உறவின் மீது சலிப்பின் களிம்பேறி விடுகிறது. குடும்பம் தொடர்பான கதைகளில் அன்பின் ஈரம் உலர்ந்து போவதான சித்திரங்கள் பெருந்தேவியில் பல கதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. குடும்ப அமைப்பிற்கு வெளியே எழுதப்படும் காதல் கதைகளில் அன்பின் கதகதப்பும் ஈரமும் உலர்ந்து விடக்கூடாது எனும் தவிப்பும், தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் முனைப்பும் வெளிப்படுகிறது. ‘நல விசாரணை’ உறவுகளின் மேம்போக்கு தன்மை, அக்கறையின்மையை சொல்லிச் செல்லும் கதை. உண்மையில் எப்படி இருக்கிறாய் எனும் கேள்விக்கு எப்படியிருந்தாலும் ஒரேயொரு பதிலை தான் சொல்ல முடிகிறது. உணர்வுகளை கடத்த முடியாத மொழியின் தத்தளிப்பை சொல்லும் கதையாக வாசிக்க முடியும். நிகழ்த்து கலை மொழி கடந்த வெளியை அடைகின்றது எனும் எண்ணம் ஏற்பட்டது.  ‘மோசமான நாள்’ ஒரு நாளை இனிமையானதாகவும் மோசமானதாகவும் ஆக்குபவை எவையெல்லாம்? பிரியத்திற்குரியவரின் அக்கறை தான் வேறுபாடு என காட்டுகிறது. ஹைன்ஸ் ஹால் தொகுப்பின் முதல் கதை ‘தவறை சரி செய்தல்’. நாலுகால் பிராணிகளுக்கு தீங்கு விளைவித்ததால் துன்பம் நேர்கிறது என ஜோசியர் சொன்னதன் பேரில் பார்க்கும் நாய்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்க முடிவு செய்கிறார் கதைசொல்லி. நாயை விட உயரமாக இருப்பது அவருக்கு உறுத்துகிறது. ஆகவே முடிந்தவரை குனிந்து ஹலோ சொல்ல முயற்சிக்கும் போதே அரசியல் சரித்தன்மையின் துடுக்குத்தனமும் அபத்தமும் வெளிப்படுகிறது. பொது இடத்தில் பதிலுக்கு ஹலோ சொல்வது போல் கைநீட்டிய நாயிடம் கைகுலுக்க முடியவில்லை. சுற்றியிருக்கும் மனிதர்கள் என்ன நினைப்பார்களோ எனும் எண்ணம் தயக்கத்தை அளிக்கிறது. 


உறவுகளுக்கு இடையிலான அதிகாரம்,உடமையுணர்வு, வன்முறை போன்ற விஷயங்களுக்கு மாற்றாக பெருந்தேவியின் கதைகளில் அறிமுகமற்ற அந்நியர்கள் வெளிப்படுத்தும் கரிசனம் உன்னத படுத்தப்படுகிறது. ‘ஆசிர்வாதம்’ அமெரிக்காவில் நிகழும் வழிப்பறி யைப் பற்றிய கதை. நண்பரின் திருமண விருந்திற்கு சென்றுவிட்டு திருமணத்தில் கொடுத்த ப்ளம் கேக்குடன் நள்ளிரவில் திரும்புகிறாள். இரவில் யாருமற்ற இடத்தில் பளீரென்று மின்னும் விளக்குகள் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டை சுட்டிக்காட்டுகிறது. மூவர் அவளை வழிமறித்து உடமைகளை கேட்டு மிரட்டுகிறார்கள்.வழிப்பறி செய்ய வந்தவர்களில் ஒருவன் மட்டும் அவள் நிலையை புரிந்துகொண்டு, அவளிடம் கேக்கைப் பெற்றுக்கொண்டு விட்டுவிடுகிறான். சற்று தூரம் சென்றதும்  அவளைப் பார்த்து புன்னகைக்கும் போது அவன் பற்களில் தென்படும் பளீர் ஒளி அவளுக்கு ஆறுதல் அளிக்கிறது.‘அவள் தங்கியிருந்த வீட்டுக்கான, அத்தனை வெளிச்சமில்லாத சாலையில் அந்தக் குட்டி விளக்குகள் அவளோடு வருவது போலிருந்தது.’  என்று அவனது பளீர் பற்களை பற்றி எழுதுகிறார். கொஞ்ச நேரம் தான் என்றாலும்  துணைக்கு எவரோ உள்ளார் எனும் உணர்வே ஒரு கைவிளக்கைப்போல் நம்முடன் வருகிறது. ‘துச்சலை’ கதையில் கவுரவர்களின் ஒரே தங்கையான துச்சலையை பற்றிய உள்ளூர் கதையை சேகரிக்க செல்கிறார் மானுடவியலாளர். நூறு பிண்டங்களில் இருந்து கவுரவர்கள் உருவானது போக அங்குமிங்கும் ஒட்டிக்கொண்டிருந்தவற்றை திரட்டி 101 ஆவதாக துச்சலையை உருவாக்குகிறாள்  காந்தாரி. கிராமத்து கதைசொல்லிகளிடம் நிகழும் சுவாரசியமான உரையாடல்கள் வழி கதை சொல்லப்படுகிறது. ஆண் கதைசொல்லி துச்சலையை கலீஜிலிருந்து உருவானவள் எனச் சொல்வதை பெண் கதைசொல்லி மறுக்கிறாள். கதை முடிவில் இந்த கோணம் தலைகீழாகிறது. துச்சலைக்கு காவலாகத்தான் நூறு கவுரவர்களும் உருவானார்களோ எனத் தோன்றுகிறது. தனியாக இருப்பவள் சில காலடிகளின் சரசரப்பை கேட்கிறாள். நூறு பேர் அவளுக்கு துணையிருக்கிறார்கள் எனும் உணர்வு ஏற்படுகிறது. கதைகளிலிருந்து கதைமாந்தர்கள் உயிர் பெறுவதும் அவரது கதைகளில் தொடர்ந்து வரும் பேசு பொருட்களில் ஒன்று என்பதை நினைவில் கொள்ளலாம். முக்கியமான வேறுபாடு என்பது அவை வெறும் பின் நவீனத்துவ உத்தியாக இல்லாமல் மெய்யான அனுபவத்தை கடத்துவதாக உள்ளது.‘ வெளியாள்’ ‘கொதே என்ன சொல்லியிருந்தால்  என்ன’ தொகுப்பின் முதல் கதை.  ஒரு வகையில் ;ஹைன்ஸ் ஹால்’ தொகுப்பின் கடைசி கதையின் தொடர்ச்சியாக அமைந்தது தற்செயல். மகாபாரத தொன்மத்தை ஆய்வு செய்யும் மானுடவியல் ஆய்வாளர்தான் இக்கதையின் மைய பாத்திரமும் கூட. மகாபாரத கூத்தின் உச்சமான தருணத்தில் அதை காணவந்த பெண்கள் அனைவரும் சன்னதம் கொண்டு ஆடுகிறார்கள். கூட்டத்தில் தனது அம்மா ஆடை விலகும் பிரக்ஞை ஏதுமின்றி ஆடி கொண்டிருப்பதற்காக கூச்சப்பட்டு அவளது முந்தானையை சரி  செய்ய முயல்கிறாள் சிறுமி. கதைசொல்லியான ஆய்வாளரும் கடைசியில் சந்நதம் கொண்டு சேர்ந்து ஆடுகிறார். உண்மையில் யார் ‘வெளியாள்’ என்பதே கதை. ஆய்வாளர் வெளியாளாக தென்படலாம் ஆனால் அவரும் சேர்ந்து ஆடுகிறார். சன்னதம் கொண்டவர்கள் யாவரும் ஒருவராக ஆகிவிடுகிறார்கள். அந்தச் சிறுமிதான் வெளியாள் என எனக்குத் தோன்றியது. பெருந்தேவியின் கதைகளில் வாஞ்சையும் கருணையும் வெளிப்படும் சிறிய தருணங்களால்  ஒளிர்கின்றன. ‘நான் ஆடிக்கொண்டிருக்கும்போது அவள் என்னையும் பத்திரமாக எடுத்து வைத்திருப்பாள்’ என முடிகிறது. ‘நெருக்கத்தை அனுபவித்தல்’ இரவு நேர பேருந்து பயணத்தில் அருகே அமரும் வாலிபன் குறித்து விதவிதமான கற்பனைகள் தான் கதை. கனவு கலைந்து நிதர்சனத்திற்குள் புகுந்துகொள்கிறாள். துணைக்கு வரும் அந்நியன் என்பதே இதன் மையம். ‘பாம்பு’ கரிசனம் வெளிப்படும் சிறிய தருணங்களை பேசும் கதைகளில் ஒன்று எனினும் இதில் கரிசனம் வெளிப்படுத்துவது அந்நியர் அல்ல. தந்தையை இழந்த கதைசொல்லி  நிச்சயமற்ற எதிர்காலம் என்னும் பாம்பை கண்டு அஞ்சுகிறாள். அப்பா இருந்திருந்தால் ஆதரவாக ஏதேனும் சொல்லி அச்சத்தை போக்கி இருப்பார் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே விவரம் தெரியாத சிறுவனாக தென்பட்ட தம்பி அப்பாவின் இடத்தை ஏற்றுக்கொள்கிறான். உறவின் மெல்லிய இதம் பரவும் கதை. ‘போகாதே’ சிறிய சிறுகதைக்கான இலக்கணத்துடன் அமைந்த நல்ல கதை. ‘திட்டு வார்த்தைகளின் அஞ்சறைப் பெட்டி எல்லா அம்மாக்களுக்கும் பொதுவானது’ என்பதற்கிணங்க அம்மா மகளை ஆவேசமாக வசைபாடுகிறாள். தற்பால் காதல் வீட்டுக்கு தெரியவந்ததால் அம்மாவுடன் ஏற்படும் பிணக்கை காட்டுகிறது. பெருந்தேவியின் கதைகளில் முந்தைய தலைமுறை பெண்கள் மீது வெளிப்படும் வாஞ்சை முக்கியமானது. மீறல்களை புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் மூத்த தலைமுறை பெண்கள்‌ காட்டும் மனவிசாலம் முக்கியமான அவதானிப்பு. ‘உடல்களின் அந்தரங்கம் வெறும் திரைதானென்று யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது? எனும் வரி முக்கியமானது. ஒரு வகையில் பாலுறவை இலக்காக கொள்ளாத, அதை இயல்பாக கடக்கும் நோக்கு கொண்டவையாக பெருந்தேவியின் கதைகள் உள்ளன.‌



பெருந்தேவி தன்னை பின் பால் உயிரி என்றே முன்வைக்கிறார்.  பாலுக்குரிய பங்களிப்புகள் இறுக்கமாக வரையறுக்கப்படுவதை விமர்சிப்பவர். அவை பொதுமைப்படுத்தப்படுவதை எதிர்ப்பவர். குறுங்கதைகளிலும் சிலவற்றில் இவை பேசப்படுகின்றன. ‘எதனாலோ’ பள்ளி காலத்து தற்பால் உறவை சொல்லும் கதையாக வாசித்தேன். மின்னலில் பற்றியெரியும் பூவரசமரத்தின் அழைப்பு எதற்கானது என்பது வாசக ஊகத்திற்கே விடப்படுகிறது. ‘இப்படித்தான் சமயத்தில்’ கதை ஹார்ட் போர்ன் பார்ப்பதாக அறிந்தால் தமிழ் வாசகர் மனதில் பெண் எழுத்தாளரைப் பற்றிய மதிப்பு என்னவாவது எனும் கவலையை பகிர்ந்து கொள்கிறது.  ‘வாதிடப் பழகுதல்’  கதை, வேட்டை பரம்பரை என பீற்றிக்கொள்ளும் சிறுவன் தன் தந்தை டைனோசரை கொன்று வென்று வந்தவர் என சொன்னதற்கு சிறுமி தன் தந்தை நிலாவையும் நட்சத்திரத்தையும் பறித்துக் கொண்டு வந்து தருவார் என்கிறாள். அவற்றை பூக்கட்டி வைத்துக் கொள்வேன் என சிறுமி சொல்வதை சிறுவன் கேலி செய்கிறான். பெரும் டைனோசர்களை கட்டி இழுத்துக்கொண்டு வருவார் அவற்றின் பற்களை பூக்கட்டி வைத்துக்கொள்வேன் என சொல்ல முடியாததை எண்ணி சிறுமி அழுகிறாள். இந்த கதை வன்முறை நிறைந்த கற்பனைக்கும் அழகியல் நிறைந்த கற்பனைக்கும் இடையேயான  இருமையை கட்டமைக்கிறது. அவை பாலின அடையாளங்களோடு பிணைக்கப்படுகிறது. சிறுமியின் கற்பனை அபாரமானது. ஆனால் அவளால் சிறுவனின் மொழியில் பேசமுடியவில்லையே என வருந்துகிறாள். அவனுடைய மொழியில் ‘வாதிடப் பழக’ வேண்டும் என எண்ணுகிறாள். அவனுடைய மொழியின் அம்சங்களை தனதாக்கிக்கொண்டு தனது அம்சங்களை சேர்த்து சொல்ல வேண்டும் என கற்பனை செய்கிறாள். தந்தை டைனோசர்களை இழுத்து வந்தால் கூட அவற்றின் பற்களை பூக்கட்டி தான் அவளால் வைத்துக்கொள்ள முடியும். மென்மையும், நுண்மையும், அழகியல் ரசனையும்  வலுத்த ஆற்றலால் இங்கே காணாமல் ஆகிறது.  உர்சுலா லே க்வின் முன்வைக்கும் ‘தூக்குப் பை’ கோட்பாடை  இக்கதை எனக்கு நினைவுபடுத்தியது. ஒருவகையில் அந்த கோட்பாட்டை விளக்குவதற்கான உதாரண கதையாகக் கூட இதை கொள்ள முடியும். ஆணின் கதையாடல்கள் வெற்றிகொள்வதையே மையமாக கொண்டவை என்பதால் சாகசத்தன்மை நிறைந்ததாக உள்ளது. பெண் சேகரிப்பவள். எல்லாவற்றையும் சேகரித்து பாதுகாத்து சேமிப்பவள். கூர்மையான ஈட்டி தோன்றுவதற்கு முன்னரே பை தோன்றியிருக்க வேண்டும் என்பதே உர்சுலா முன்வைக்கும் பார்வை. ‘பிரதி மாறாட்டம் ‘ புனைவுகளுக்குள் பாலின அடையாளங்கள் எப்படி தொழிற்படுகிறது என்பதை பேசுகிறது. அவற்றுள் உள்ள ஒற்றைப்படைத்தன்மை, இயல்பென நாம் கருதுவதில் உள்ள அத்துமீறலை சித்தரிக்கிறது. எத்தனை தேய்வழக்காக பாலின இயல்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன  என்பதை சொல்கிறது. ‘மேடைகள்’ கதையை அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையுடன் ஒப்பிட்டு நோக்கும் லதாவின் வாசிப்பு முக்கியமானது. ‘மேடைகள்’ கதையில் சமையலறை பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஓரிடம் இருப்பது போல் அப்பாவிற்கும் ஓரிடம் உள்ளது எனும்போது அவள் அந்த அறையில் முடங்கிக்கிடப்பதான தோற்றத்திற்கு மாறாக உலகையே சமையலறையாக ஆளுகை செய்கிறாள் எனும் சித்திரமே தோன்றுகிறது. அம்மா இல்லாத சமையலறையில் பாம்புகளும் மரநாய்களும் ஒதுங்குகின்றன. காலமாற்றத்தில் பெரும் வெறுமையை சட்டென கடத்திவிடுகிறது. ‘கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன’ பிரமாதமான பகடிக்கதை. சுமதி வீடு கட்டுகிறாள் ஆனால் அவளுக்கு வேண்டியவிதத்தில் அமைத்துக்கொள்ள முடியவில்லை. அவளுடைய தேர்வுகளை நக்கல் செய்கிறார்கள். அந்த கிண்டலுக்கு அவள் முடிவெடுக்கும் பெண் என்பதும் காரணம். தான் ஏன் வீட்டிற்கு மெஜண்டா வர்ணமடிக்க விரும்புகிறேன் என்பதற்கு கோதே சொன்னதாக ஒரு விளக்கத்தை அளிக்கிறார். மேற்கோள்கள் நம்பகத்தன்மையை உருவாக்குபவை. அவை உண்மையாக இருக்க வேண்டும் எனும் எந்த கட்டாயமும் இல்லை. ‘என்றும் மாறாதவை’ கதை வருங்காலத்தில் ரோபோக்கள் நடத்தும் இலக்கிய கூட்டத்தை பற்றி இருந்தாலும் அதிலும் ஆண் – பெண் இயல்புகள் வரையறை செய்யப்படுகிறது. இலக்கிய கூட்டங்களின் மீதான விமர்சனமாக வாசிக்க இடமுண்டு. 



சில கதைகள் சோதனை முயற்சிகளாக நின்றுவிட்டன அல்லது என்னால் அதை வகுத்துக்கொள்ள முடியவில்லை. சில கதைகள் அபாரமான கற்பனை அல்லது யோசனையோடு நின்றுவிடுகிறது. இந்த எல்லைகளைக் கடந்து, ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது பெருந்தேவி எழுதியிருக்கும் நல்ல குறுங்கதைகளின் எண்ணிக்கை அவ்வளவாக  வடிவம் கூடி வராத கதைகளைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என்பதை கவனிக்கிறேன். தமிழில் குறுங்கதைகளுக்கான உரைக்கல் பெருந்தேவியின் படைப்புகள் என சொல்ல முடியும். அவரை உன்னிப்பாக வாசிப்பதன் வழி தமிழுக்கு உரிய குறுங்கதை வடிவத்தை எட்ட முடியும் என நம்புகிறேன்.  

  •  

மெஷின் யுகத்து மனிதர்கள் – சுனில் கிருஷ்ணன்

 


வாசகசாலை 100 ஆவது இதழுக்காக கட்டுரை. எழுதிய பின் மேலும் சில எண்ணங்கள் உதித்தன. மனிதகுலம் திரளாக இப்போது அளிக்கின்ற அளவிற்கு மூளை உழைப்பு இதுவரையிலானமனித வரலாற்றில் அளித்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் வேலையின் அழுத்தம் மிக அதிகம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தானியங்கி செயல்பாடுகள் வழி மனிதகுலம் இந்த பளுவில் இருந்து தப்பிக்க முயல்கிறது எனத் தோன்றுகிறது. ஆனால் அப்படியான ஆற்றல் மிக்க அமைப்பை உருவாக்க இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. 


மலேசியா வாசுதேவனின் குரலை ‘மனசிலாயோ’ பாடலில் கேட்கும்போது சட்டென துணுக்குற்றேன். கேட்க துள்ளலாக இருந்தது. இதில் துணுக்கற என்ன இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. மலேசியா வாசுதேவன் யாரெனத் தெரியாத எவரோ ஒருவர் இந்த பாடலைக் கேட்டால் அவர் எப்படி உணர்வார்?  அவருக்கு எந்த சிக்கலும் இருக்காது. இன்று அவர் உயிரோடிருந்தால் இதே வீச்சுடன் குரல் நடுக்கமோ தழுதழுப்போ இன்றி இப்படி பாடியிருக்க முடியுமா? ஏறத்தாழ அவரது உச்ச சாத்தியத்தை செயற்கை நுண்ணறிவு உருவாக்கி காட்டியிருக்கிறது. இந்தியன் இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகர் விவேக்கை கண்டபோது ஏற்பட்ட உணர்வு என்ன என வகுத்துக்கொள்ள முடியவில்லை.  மலேசியா வாசுதேவனுக்கு முன்னரே பம்பா பாக்யாவின் குரலை செயற்கை நுண்ணுணர்வு மூலம் உருவாக்கி பயன்படுத்தியுள்ளார் ரஹ்மான் இனி இம்முயற்சிகள் அதிகரிக்கும் என்றே எண்ணுகிறேன். 


என்னுள் இவை சில அடிப்படையான வினாக்களை எழுப்பின. கலையில் மனித முயற்சி, பயிற்சியின் பொருள்தான் என்ன? மேதமை என ஏதேனும் உண்டா? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மனிதர்கள் துரத்திவந்த மரணமின்மை எனும் நிலையை இப்போது அடைந்துவிட்டோமா? மரணமின்மை ஜனநாயகப்பட்டு மலிவாக கிடைக்கும் சூழலில் அதன் மீதான ஈர்ப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகுமா? நினைவுகூரப்படும் வரை ஒருவர் மரணிப்பதில்லை என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. செயற்கை நுண்ணறிவின் வருகைக்கு பின் வருங்காலத்தில்  தடமற்று மறைவது அரியதாக இருக்கும். எழுத்தாளர் சுசித்ராவின் பூர்ணகும்பம் எனும் கதை நினைவுக்கு வருகிறது. மார்பக புற்றுநோயில் மரணிக்கும் விஞ்ஞானி தனது குழந்தையை கவனித்துக்கொள்ள தனது கூறுகளை உள்ளடக்கிய ரோபோவை உருவாக்குகிறார். உடலின் பௌதிக எல்லை கடக்கப்படுவதன் வழியாக மரணத்தின் இன்றியமையாமை கேள்விக்குள்ளாகிறது. 


 தமிழில் எழுதப்பட்ட இரு அறிவியல் புனைவுகள்கொண்டு கலை, கலைஞர், மேதமை, மானுட முயற்சி சார்ந்த கேள்விகளை விவாதிக்க விரும்புகிறேன்.  எதிரெதிர் கரைகளில் நிற்கும் இவ்விரு கதைகளுக்கு இடையே உள்ள அகழியின் அகலம் முப்பத்தைந்து ஆண்டுகள். எழுத்தாளர் மாலன் 1987 ஆம் ஆண்டு எழுதிய ‘வித்வான்’ வியக்கத்தக்க தீர்க்க தரிசனங்களை கொண்ட படைப்பு. 2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் நகுல்வசன் என்கிற நம்பி கிருஷ்ணன் அரூ இணைய இதழில் எழுதிய ‘இறைவர்க்கோர் பச்சிலை’ மாலனின் கதையோடு வியக்கத்தக்க அளவில் ஒத்துபோகிறது. 


மாலனின் ‘வித்வான்’ ஜானகிராமன் எனும் இசை மேதையின் கதையை சொல்கிறது என்றால் ‘இறைவர்க்கோர் பச்சிலை’ தி. ஜா அறிவியல் புனைவு எழுதினால் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்கிறது. வைத்தி பாபு பற்றிய குறிப்பும் கதையில் அளிக்கப்படுகிறது‌ மாலனின் ஜானகிராமனும் சரி நகுல்வசனின் ‘சங்கரனும்’ சரி மோகமுள் ரங்கண்ணாவின் வார்ப்பு என சொல்லிவிட முடியும்.   ‘வித்வான்’ ஜானகிராமன்  இசையைத்தவிர வேறு எதன் மீதும் நாட்டமற்றவர். குடத்தில் இட்ட விளக்கு போல் விளம்பரம் ஏதுமின்றி இசையின் ஆழ அகலங்களை அறியத்துடித்து தனித்து வாழ்பவர். அறிவியல் தீண்டாத, சீடர் என எவரையும் அங்கீகரிக்காத, மனைவியை இழந்த வயலின் வித்வான். நகுல்வசனின் சங்கரன் உலகியல் சாமர்த்தியமற்ற, பிள்ளைகள் இல்லாத ஒய்வு பெற்ற அரசு ஊழியரான கர்நாடக இசை பாடகர். இசைக்கு குந்தகம் விளைவிக்கும் தொந்திரவுகள் காரணமாக வாடகை வீடுகளில் அவரால் நிலைத்திருக்க முடியாது. அனைத்து  உணர்வுகளையும் இசையாக மாற்ற முயல்பவர். 


ஜானகிராமனின் அமெரிக்க சீடர் ஜோசெப் ஓம் ஒரு சிறு பெட்டியை குருவிற்கு பரிசாக கொண்டுவருகிறார். அதன் பெயர் ‘யக்ஷினி’. வீட்டின் மொத்த இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறது.  ‘குளிக்கிற வெந்நீர் ஒருநாள் கூட ஆறிப் போயிருந்ததில்லை. காப்பியில் சர்க்கரை முன்னே பின்னே இருந்தது என்ற பேச்சே கிடையாது. ரசத்தில் புளித் தூக்கல் என்பதற்கு இடமே இல்லை. சாதம் குழைந்து போச்சு என்கிற அலுப்பே கிடையாது. எத்தனை சுத்தம், எத்தனை சிக்கனம்’ என அதன் மேன்மையை ஜானகிராமன் மெச்சுகிறார். சங்கீத் ஏ ஐ எனும் செயலியை சங்கரனின் சீடன் ரகு உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறான். இந்துஸ்தானி இசை கலைஞர்களையும் கர்நாடக இசை கலைஞர்களையும் ஆய்வு செய்து அவர்களிடமிருந்து பாணிகளை கற்றுக்கொள்ளும் செயலி. இயந்திரத்திற்கு கலைஞர்களின் பாணிகளை பயிற்றுவிப்பதுதான் அவனது வேலை. 


ஜானகிராமன் தனது வயலினை யக்ஷினி தொட அனுமதிக்க மாட்டார். ‘சங்கீதம் தெய்வீகக் கலை. உன்னதமான விஷயம். ஆயுசு முழுக்க

அப்பியாசம் செய்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.’ என்பதே அவரது நம்பிக்கை. ஊருக்குச் சென்று திரும்பியவர் ஒருநாள் தனது வீட்டிற்குள் இருந்து  ‘தேவகானமாய்’ மிதந்து வந்த தூய பைரவியை செவியுற்றார். அத்தனை தூய பைரவியை அவர் தன் வாழ்நாளில் கேட்டதே இல்லை. அந்த இசையின் மேன்மை ‘மனசை உலுக்கி எடுத்தது. ஏதோ உள்ளுக்குள் உடைந்து

கொள்ள, அழவேண்டும் போல் இருந்தது. விம்மியே விட்டார் ஜானகிராமன்.’ யக்ஷினி வயலின் இல்லாமலேயே ஜானகிராமனின் இசையைக் கேட்டு அதை நகலெடுக்கிறது. யக்ஷினிக்கு இசையென்பது “குறிப்பிட்ட ஒரு ஃபிரீக்வென்ஸியில் எழுப்பப்படும்  ஒலியலைகைள்” மட்டும் தான். 


ஜானகிராமன் குழம்புகிறார். “சங்கீதம் என்பது வெறும் கணக்குத்தானா? ஐம்பது வருஷமாய்த் தாம் அல்லும் பகலும் இதே நினைவாய் உழைத்து அறிந்து கொண்டது எல்லாம் ஒரு மிஷின் பத்து நாளில் கற்றுக் கொண்டு திருப்பி வாசித்துவிடக் கூடிய சின்னஞ்சிறிய துளிதானா? ஏன். அதற்குள்ளே பாடறவன் மனசுன்னு ஒண்ணு உண்டோல்லியோ? அதைத் தேடிண்டு போறதுதானே சங்கீதத்துக்கு இலக்கு. நோக்கம். அந்த உசரத்தை, அந்த மனசை அடையணும்னுதானே இத்தனை தவம் ? ”


“இறைவர்க்கோர் பச்சிலை” கதையிலும் மனோதர்மம் முக்கிய பேசுபொருளாக ஆகிறது. தொழில்நுட்பம் நகலெடுக்கப்படலாம் ஆனால் கலைஞர்களை நாம் அவர்களின் மனோதர்மம் வழியாகவே அடையாளம் காண்கிறோம். அதுதான் அவர்கள் சென்று முட்டி, இரந்து நிற்கும் வாயில்கள். சங்கரனுக்கு ரகுவுக்கு இடையே சங்கீத் ஏ ஜ பற்றி நடக்கும் உரையாடல் முக்கியமானது.


 “சாகித்யத்தோட அடிப்படையான சட்டகத்துல அதாவது அதோட அலையெண், ராகத்தோட அடிப்படை ஆரோகண அவரோகண விதிகள், இப்படி அதோட அடிப்படை அறிவியல் ரீதியான இலக்கணத்தோட, கச்சேரிகள ஆராஞ்சு சேத்து வெச்சுருக்கற கலைஞனோட மனோதர்மக் கூறுகளை இணைத்துப் பாக்கறது.”


“மணி ஐயரோட மனோதர்மத்த அவ்வளவு சுலபமா கூறுகளாக வரையறப்படுத்த முடியும்னு தோணல. சரி இதுனால யாருக்கென்ன லாபம்?”

சங்கரனுக்கு இந்த முயற்சி நன்மை பயக்கும் என நம்பிக்கை இல்லை. அவரது மனைவி பத்மா நீங்களும் அந்த நிறுவனத்திற்கு சென்று கேட்டுப்பாருங்கள் ஏதேனும் கவுரவ வேலை கொடுப்பார்கள் என்கிறார். ஆனால் அதற்கு சிரிப்பைத்தவிர வேறெந்த பதிலும் அவரிடம் இல்லை. ரகுவிற்கு பொருளியல் நெருக்கடி. அவன் செய்வது சரியா தவறா, நீண்ட கால அளவில் நன்மை அளிக்குமா போன்ற குழப்பங்கள் உள்ளன. ஆனாலும் அவன் வேலைக்குச் செல்கிறான். இசை மேதைகளின் பாணிகளை குறிப்பெடுகிறான். இலக்கணத்தை மீறிய பிழைகள் தான் தனித்தன்மையாகவும் பாணிகளாகவும் ஆகின்றன.  “பஹுதூரம் பனிநாடோ என்ற இடத்திற்கு முன் ஒரு கணத்திற்குக் குரல் ஒடுங்குவதால் ஏற்படும் காத்திரமான மௌனத்தில் தியாகையரின் ஜீவாத்மா பரம்பொருளின் பரமாத்மா இருக்கும் தொலைவை உணர்ந்த சோகத்தில் பெருமூச்சிறைப்பது ரகுவிற்கு ஹெட்போனில் கேட்கிறது. பிரமிப்பில் கை ஹெட்போனைக் கழட்டி வைக்கிறது. இரண்டு நிமிடங்கள் ஏதும் செய்யாது பிரக்ஞையற்ற நிலையில் ஸ்தம்பித்திருந்தான். பிரக்ஞையற்ற ஜடப் பொருளான (அல்லது அதற்கும் ஏதோ ஒரு விதத்தில் பிரக்ஞை இருக்கிறதோ?) சங்கீத் ஏஐ-க்கு பரமாத்மாவின் தொலைவினால் ஏற்பட்ட பெருமூச்சை எப்படிப் புரியவைப்பது….தியாகய்யரின் துன்பத்தைச் சுவரத்துடன் இணைத்துப் பார்க்கும் ஆற்றல் அதற்குத் தற்போதைக்கு இல்லை. இங்குதான் தன் போன்ற சங்கீத வித்தகர்களின் அனொடேஷன் குறிப்புகள் அதற்கு எவ்வளவு உதவியாக இருக்கப் போகின்றன என்பதை ரகு உணர்ந்து கொண்டான். ஒரே ராகத்தில் அமைந்த பல பாடல்களில் துயரத்தையும் சுவரக் கோர்வைகளுக்கும் இருக்கும் தொடர்பைக் குறிப்புகள் வழியே மீண்டும் மீண்டும் எதிர்கொள்கையில் துன்பம் தோய்ந்திருக்கும் வரிகளுக்கு அச்சுவரப் பிரயோகங்களைத் தேர்வு செய்ய அது பழகிக்கொள்ளும். தியாகய்யரின் துன்பத்தைச் சரணத்தின் பொருள் கொண்டு அது அடையாளப்படுத்திக் கொண்டாலும் பாடுவோனின் துயரத்தை அது எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளும்? துயரத்தில் இருக்கும் பாடகனைப் போல் இப்பாடலைப் பாடு என்ற கட்டளை அதற்கு வெளியிலிருந்துதான் வந்தாக வேண்டும் என்பதுதான் அதன் மிகப் பெரிய போதாமை.” 


ஜானகிராமன் யக்ஷினியிடம் தனது அதிருப்தியை வெளிக்காட்டுகிறார். புனிதமானது என ஏதுமில்லையா? பயிற்சிக்கும் மேதமைக்கும் என்ன பொருள்? இந்த கேள்விகள் அவரை அலைக்கழிக்கின்றன. ஆனால் தனது அனுபவத்தை மறுபரிசீலனை செய்து பார்க்கிறார். யக்ஷினி என்றறியாதபோது பைரவிக்கு உடைந்து அழுதது உண்மைதானே. இயந்திரத்தின் மேன்மையை ஏற்பதிலிருந்து எது அவரைத் தடுக்கிறது?  “சங்கீதத்திலே நல்ல சங்கீதம் கெட்ட சங்கீதம்னுதான் உண்டு. மனுஷாளைவிட மிஷின் நல்ல சங்கீதம் பாடும்னா அதற்கு நமஸ்காரம் பண்ண வேண்டியதுதான். சங்கீதத்துக்குச் சேவை செய்யறதாகச் சொல்லிண்டிருக்கிறவன் அதைத்தான் பண்ணுவான்.

சங்கீதத்தில், வாழ்க்கையில், பெர்ஃபெக்ஷனை அடைய வேண்டும் என்றுதான் தலைமுறை தலைமுறையாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். நான் மட்டுமில்லை. இந்த மனுஷ குலமே அதற்குத்தான் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது எங்களுக்கு எட்டாமலேயே போய்க் கொண்டிருக்கிறது. அது தெய்வ சித்தி. வாழ்க்கை இலட்சியம் என்று ஏதேதோ பேர் சொல்லி எங்களை நாங்களே அவ்வப்போது ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானத்தைத் தெய்வம் என்று கும்பிடுகிற காலம் வந்துவிட்டது. அதில் எனக்கு நேற்றுவரை

நம்பிக்கை இல்லை. இன்றைக்கு புத்தி தெளிந்த மாதிரி இருக்கிறது.” என ஒருவாறு சூழலுடன் சமரசம் செய்து கொள்கிறார். மனிதர்கள் உருவாக்கிய இயந்திரம் மனிதர்களின் சார்புகளும் சாய்வுகளும் பிழைகளுமற்ற, மனிதர்களை காட்டிலும் மேம்பட்ட ஒன்று. ஆயிரமாயிர ஆண்டுகளின் முழுமைக்கான வேட்கையிலிருந்து பிறந்து எழுந்தது. படைப்பு தன்னைவிட மேலானது என படைப்பாளி அங்கீகரிக்கும் தருணம் அது. யக்ஷினிக்கு கற்றுக்கொடுக்க விரும்பாதவர் இப்போது அதை தனது ஆசிரியராக ஏற்றுக்கொள்ளத் தயாராகிறார். “நீ இனிமேல் எனக்குச் சொல்லிக் கொடு. அதை பகவானிடம் கிடைத்த சிட்ஷையாக நினைத்துக் கொள்கிறேன்.” என அதற்கு முன் பணிகிறார். இறைவன் எனும் கருத்து மனித கூட்டுமனம் எட்ட துடிக்கும் முழுமையின் உருவகம் எனத்தோன்றுகிறது. அந்த முழுமையை இயந்திரமோ அறிவியலோ தொழில்நுட்பமோ அடையும்போது இறைவனின் இடத்தை ஏற்றுக்கொள்கிறது. இயந்திரமாதல் தான் மனித இனத்தின் ஆழ்மன கனவோ எனும் எண்ணம் ஏற்பட்டது. புதுமைப்பித்தனின் ‘இது மிஷின் யுகம்’ கதை நினைவுக்கு வந்தது. உணவக சிப்பந்தியான கிருஷ்ணா ஒரே சமயத்தில் பழக்க வாசனையில் பல்வேறு வேலைகளை நேர்த்தியாக செய்வான். கீழே விழுந்த கைக்குட்டையை சுட்டிக்காட்டும்போது மட்டும் மனிதனாக ஆகிறான். பிழையாத நேர்த்தி என்பதே இலக்கு. இணையத்தில் அவ்வப்போது “நீங்கள் இயந்திரம் அல்ல மனிதன் என்பதை உறுதிப்படுத்துங்கள்” என்றொரு கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் சிறு திடுக்கிட்டல் ஏற்படும். இயந்திரங்களை ஆதர்சமாக கொண்ட நாம் இயந்திரங்கள் இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது? நான் மனிதன் எனும் தன்னுணர்வு மட்டும் தான் நம்மை பிரிக்கிறதா?  


“இறைவர்க்கோர் பச்சிலை” கதையில் ரகு உருவாக்க உதவும் சங்கீத் ஏ ஐ செயலி புழக்கத்திற்கு வருகிறது. வசதி படைத்தவர் காசு கட்டி தான் விரும்பும் மேதையின் பாணியில் தனது குரலில் பாடலாம். ரகு சங்கீத ஏ ஐ உருவாக்கத்தில் பங்கேற்றதற்காக குற்றவுணர்வு கொள்கிறான். சங்கரனுக்கு எழுதும் கடிதத்தில் “தொழில்நுட்பத்திற்கு வெளியே நாம் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் அனைத்துமே கேலிக்குரியவையாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எல்லோரும் வல்லுநர்களாக மார்தட்டிக் கொள்ளும் காலமிது. ஜனநாயகத்தின் உச்சமும் இதுதானோ என்னவோ. ஒரே குழப்பமாக இருக்கிறது. மேலும் சங்கீத்-ஏஐ உடன் இவ்வளவு காலம் உறவாடிய பின் என்னையே சந்தேகிக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு வழியில் நானுமே அதைப் போல் நீங்கள் அளிக்கும் குறிப்புகளையும் விதிமுறைகளையும் வைத்துக்கொண்டு கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துக் கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம்.” தொழில்நுட்ப யுகத்தில்  ஜானகிராமன் எழுப்பிக்கொள்ளும் அதே கேள்விகள் தான். பயிற்சிக்கும், மனித முயற்சிக்கும், மேதமைக்கும் என்ன பொருள்? தனித்தன்மை என ஏதேனும் உண்டா? அது என்ன? ரகு பணியை விட்டுவிட்டு அலைந்து திரிய புறப்படுகிறான். ரகு அளித்த இரண்டு நுழைவு சீட்டுக்களைக்கொண்டு மதுரை மணி அய்யரின் ஏ ஐ கச்சேரியைக் கேட்க செல்கிறார் சங்கரன். ஹோலோகிராமில் அவரது உருவம் மேடையில் தோன்றுகிறது. இசை ரசிகனாக ஜானகிராமன் அடைந்தது போல் அவருக்கும் அது நிறைவான அனுபவத்தையே அளிக்கிறது. 


 வாய்ப்பாட்டு சூத்திரங்களாக படைப்பு செயல்பாடு இருக்கும்போது அவை தொழில்நுட்பத்தால் எளிதில் நகலெடுக்கப்படும். ஜார்ஜ் ஆர்வெலின் 1984 நாவலில் நாவல்களை பிதுக்கித் தள்ளும் இயந்திரத்தைப் பற்றிய கற்பனை உண்டு. வெகுஜனக்கலை வெற்றிகரமான சூத்திரங்கள் அடிப்படையில் இயங்குகிறது. பொது ரசனையிலிருந்து உருவாக்கப்படும் சூத்திரம். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அவர்களுக்கு அளிக்கிறோம் என படைப்பாளிகளும், நீங்கள் அளிப்பதால் நுகர்கிறோம் என மக்களும் சொல்லிக்கொள்கிறார்கள். நுகர்வோரை பற்றிய அக்கறையின்மையே தீவிர இலக்கியத்திற்கும் செவ்வியல் கலைக்குமான அளவுகோலாக ஆகிறது. ஆனால் ஜானகிராமனும் சங்கரனும் மேலான இசையனுபவத்தை அடைகிறார்கள். இப்போது வேறொரு கேள்வி எழுகிறது. படைப்பாளரின் மனோதர்மத்தை கண்டுகொள்வதுதான் கலை என்பது பின்னுக்கு செல்கிறதா? படைப்பில் தனது மனோதர்மத்தை கண்டுகொள்ள அனுமதிப்பது கலையாக ஆகிறதா? அர்த்தம் என்பது வாசகன் அல்லது ரசிகன்  அளிப்பது மட்டும் தானா? படைப்புச் செயல்பாடு படைப்பாளியிடமிருந்து வாசகன் அல்லது ரசிகனை நோக்கி இந்த நவீன யுகத்தில் நகர்ந்துள்ளதாக இக்கதைகள் உணர்த்துகின்றன. சுந்தரராமசாமியின் ‘விகாசம்’ மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான உறவைப்பற்றி பேசும் இன்னொரு முக்கியமான கதை. விகாசத்தில் வரும் இயந்திரம் ஒற்றை பரிமாணம் கொண்டது. அதனால் கணக்கு மட்டுமே செய்ய முடியும். மனிதர்கள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர் என்பதால் அவர்களால் எளிதில் தாண்டிச்செல்ல முடியும் என்பதே அதன் தரிசனம். இன்றைய இயந்திரங்கள் மனிதர்களின் சிக்கல்களை சிடுக்குகளையும் நகலெடுக்க முனைகின்றன. கருவிகள் மனிதனின் பௌதீக எல்லைகளை விஸ்தரிக்க முயல்பவை. அவற்றில் முழுமையை எய்த முனைபவை. இயந்திரங்கள் மனித இருப்பின் நகல்கள் அல்ல. மாறாக மனித இனத்தின் கனவுகளின், இலட்சியங்களின் புறவடிவம். செயற்கை நுண்ணுணர்வும் ஒருவகையில் மானுட கனவின் நீட்சிதான். ஆனால் பௌதீக எல்லைகளை கடப்பது போல் சிந்தனை எல்லைகளை கடக்க தனது ஆக்கத்தை அனுமதிக்க மனித இனம் தயாராக இருக்கிறதா? “சிந்திக்கிறேன் ஆகவே நான் இருக்கிறேன்” எனும் தெகார்தேயின் உணர்வே நவீன மனிதனின் அத்தனை வளர்ச்சிகளுக்குமான தொடக்கப்புள்ளி. அந்த திறனை பகிர்ந்து கொள்வதன் வழியாக மனித அடையாளத்தின் தனித்தன்மை கேள்விக்குள்ளாகிறது. கனவுகள், லட்சியங்கள் ஒரு பக்கமும் அச்சமும் பாதுகாப்பின்மை மறுபக்கமுமாக மானுடத்தை அலைக்கழிக்கிறது. ஆனால் மனிதகுலம் தனது அச்சங்களையும் பாதுகாப்பின்மையையும் போக்கிக்கொள்ள ஏதோ ஒரு வழித்தடத்தை கண்டுகொள்ளும். கனவுகளின், இலட்சியங்களின் பக்கமே சாயும். ஒருவகையில் இக்கதைகள் உணர்த்தும் விஷயமும் அதுவே.   


மனிதர்களையும் செயற்கை நுண்ணறிவையும்,  எதிரெதிர் துருவங்களாக நிறுத்தாமல் அவற்றை ஆக்கப்பூர்ப்ப பங்களிப்பாளராக காணும் நோக்கை “வித்வானும்” “இறைவர்க்கோர் பச்சிலையும்” வெளிப்படுத்துகின்றன. ஜானகிராமனும் சரி சங்கரனும் சரி செயற்கை நுண்ணுணர்வை இறைவனின் திட்டமாக ஏற்றுக்கொள்கிறார்கள். எவரையுமே சீடராக அங்கீகரிக்காத ஜானகிராமன் யக்ஷினியை அங்கீகரித்து அதற்கு சரளி வரிசை கற்றுக்கொடுக்க முன்வருகிறார். சங்கரன் ரகுவிற்கு எழுதும் கடிதத்தில் தனது புரிதலை வெளிப்படுத்துகிறார்.  “பிரயத்தனங்கள் எப்போதுமே கேலிக்குரியவையாக ஆகிவிடுவதில்லை, அவற்றின் இலக்கு சரியாக இருக்கும்பட்சத்தில். ஒரு விதத்துல இந்தத் தொழில்நுட்பமுமே பகவானோட அனுக்கிரகம்தானோ. அந்த மஹான்கள இன்னமும் கேட்கனும்னு அவருக்கு வாஞ்சையோ என்னவோ. உயிரோட திரும்பிக் கொண்டுவர விதி அவரையுமே கட்டிப்போட்டுதால தொழில்நுட்பத்தால அந்த வாஞ்சைய தீத்துக்கறார்னு எடுத்துண்டா நீ சங்கீத்-ஏஐல பிரயத்தனம் செய்யறதும் ஒரு நன்றி செலுத்துதலனு ஆயிடறதுதானே? யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை மாதிரி.” இறைத்திட்டம் முரண்களை களைவதற்கான கருவியாகிறது. கனவுகளின் விசை பெரிது. இறைத்திட்டம் அல்லது மானுட மேன்மையின் மீதான நன்னம்பிக்கை என ஏதோ ஒன்றைச் சாக்காகக் கொண்டு தான்  காலம்காலமாக மனிதர்கள் புதியவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  செயற்கை நுண்ணுணர்வு மானுட முயற்சியையும் மேதைமையையும் அழித்துவிடும் எனும் அச்சம் அடிப்படையற்றது. மாறாக வருங்காலங்களில் அவற்றை பிரம்மாண்டமாக காட்டும் எனத் தோன்றுகிறது. செயற்கை நுண்ணறிவு வெகுமக்கள் ரசனைக்கு தேவையானதை நிச்சயம் நிறைவு செய்யும். ஆர்வெல்லின் நாவல் இயந்திரம் கண்முன் உருபெறுவதை காண்கிறேன். ஆனால் மானுட முயற்சியில் உருவாகும் கைவினை பொருட்களுக்கும் கைத்தறி ஆடைகளுக்கும் சந்தையில் அதிக மதிப்பு ஏற்பட்டிருப்பது போல் மனிதர்களின் கலை முயற்சிகள் அரிதாகும் தோறும் கூடுதல் மதிப்பு பெறும் என்றே எண்ணுகிறேன். கைக்குட்டை பற்றிய கரிசனை வெளிப்படும்போது மட்டுமே புதுமைப்பித்தனின் கிருஷ்ணன் மனிதனாக ஆகிறான். மிஷின் யுகத்தில் மனிதனாக இருப்பதென்பது பிழைகளோடு இருப்பது, அவை குறித்து விழிப்புடன் இருப்பது, கரிசனையுடன் இருப்பது தான் எனத் தோன்றுகிறது.  இன்னும் சொல்வதானால் குரங்கினத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு மரபணு பிழைதான் மனிதர்களாக பரிணாமம் கொண்டது. பிழைகள் சுயமாக முடிவெடுக்கும் திறனால் விளைகிறது. இயந்திரங்களால் தனக்கான முடிவுகளை எடுக்க முடியாது ஆகவே அவை பிழை செய்யாது. (கோளாறுகள் பிழைகள் அல்ல). குறியீட்டு ரீதியாக சொல்வதானால் மனித இனம் பகிஷ்கரிக்கப்பட்ட பழத்தை உண்டு பிழைபுரிந்த ஏவாளுக்கு கடன்பட்டிருக்கிறது. அந்த பிழைதான் நம்மை மனிதர்களாக ஆக்கியது. 


சுட்டிகள் 

https://www.aroo.space/2023/05/28/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/


https://www.hindutamil.in/news/literature/219344--9.html


https://www.aroo.space/2021/05/10/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/







 


   


  •  

மாயரஞ்சனும் கானரஞ்சனும் – சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்கள்

நன்றி - வல்லினம் 

 


80களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். 84 சிறுகதைகளை எழுதிய பிறகு, ஏறத்தாழ 40 வருடங்கள் வரை நாவலே எழுதாமலிருந்தவர், 2019ஆம் ஆண்டு அவரது முதல் நாவலான ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலை எழுதினார். அதற்குப் பின்பான இந்த நான்காண்டுகளில் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’, ‘நான் லலிதா பேசுகிறேன்’ மற்றும் ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ ஆகிய நாவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது ‘பிறவிப் பெருங்கடல்’ எனும் புதிய நாவலும் வெளியாகவுள்ளது. இரண்டு குறுநாவல்கள் கொண்ட ‘எடின்பரோவின் குறிப்புகள்’ எனும் குறுநாவல் தொகுப்பும் வெளிவந்துள்ளது. வெளிவராத ‘பிறவிப் பெருங்கடல்’ நாவலைத் தவிர்த்து பிறவற்றை இந்தக் கட்டுரையில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.


‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவல் ஆதித்யா சிதம்பரம் எனும் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட, நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளரின் வாழ்வையும் படைப்புகளையும் பற்றி பேசுகிறது. நூலாசிரியர் முன்னுரையில் மரியோ வர்கோஸ் லோசாவின் நோபல் பரிசு ஏற்புரையால் உந்தப்பட்டதாக குறிப்பிடுவது இனிய தற்செயல். ஏனெனில் லோசாவின் ‘ஆண்ட் ஜூலியா அண்ட் ஹெர் ஸ்க்ரிப்ட் ரைட்டர்’ நாவலில் முற்றுபெறாத வானொலி நாடகங்களின் பகுதிகள் நாவலின் அங்கங்களாகத் திகழும். இந்நாவலில் முற்றுப்பெறாத ஐந்து குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன.


‘அம்பிகாவும் எட்வர்ட்ஜென்னரும்’ மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆலய நுழைவு போராட்டத்தின் பின்புலத்தில் நிகழ்வது. வைஸ்ராயாக இருந்த லின்லித்தோ பிரபு தொடங்கி ராஜாஜி, மதுரை வைத்தியநாத அய்யர், ஆர்.எஸ். நாயுடு, தி.செ. சௌ. ராஜன் உட்பட பல்வேறு வரலாற்று ஆளுமைகள் நாவலின் முற்பகுதியில் வந்து செல்கிறார்கள். மதுரை ஜேம்ஸ் மில்லின் பொது மேலாளர் எட்வர்ட் ஜென்னரை அம்பிகா எனும் பிராமண பெண் காதலிக்கிறாள். கள்ளு வியாபாரியாக இருந்து பின்னர் பஞ்சு வியாபாரியாக மாறிய சங்கரலிங்க நாடார் இவர்களின் நலன்விரும்பி. நாவலின் பெரும்பகுதி அம்பிகா ஜென்னரை எப்படித் திருமணம் செய்துகொள்கிறார் அதற்குச் சங்கரலிங்க நாடார் எப்படி உதவுகிறார் என்பதை விவரிக்கிறது. ஆலய நுழைவு தொடர்பான ஆவணங்கள் நாவலின் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.



‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலும் வரலாற்று பின்புலம் கொண்ட நாவல்தான். ஆர்.எஸ். சுப்புலட்சுமி, முத்துலட்சுமி ரெட்டி, ஜெமினி கணேசன் போன்ற முக்கியமான வரலாற்று ஆளுமைகள் உயிர்பெற்று உலவுகிறார்கள். நாவலுக்கு நடுவில் முத்துலட்சுமி ரெட்டி மாகாண கவுன்சிலில் குழந்தை திருமணம் ஒழிப்பு தொடர்பாக ஆற்றிய உரை முழுமையாக இடம்பெற்றிருக்கிறது. லலிதா குழந்தையாக இருக்கும்போதே விதவையாகி சென்னை இல்லத்திற்குக் கல்வி கற்க வருகிறார். டெல்லியில் சென்று மருத்துவம் பயில்கிறார். நீல்கமல் எனும் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட வங்காளியைச் சந்திக்கிறார். ஐ.என்.ஏ விற்குச் சென்றவன் திரும்பவே இல்லை. அரசு மருத்துவராக இருக்கிறார். முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சிகளுக்குத் துணையாக இருக்கிறார். வெவ்வேறு மட்டத்திலிருக்கும் ஆண்கள் அவளை வசப்படுத்த முயன்றபடி இருக்கிறார்கள். தங்கையை இழக்கிறாள். அவளுடைய மரணத்துடன் நாவல் முற்றுப்பெறுகிறது. இறுதி பகுதியைத் தவிர்த்து மொத்த நாவலும் பிராமண மொழியின், லலிதாவின் தன்னிலையில் எழுதப்பட்டுள்ளது. நடுவில் ஒரு அத்தியாயம் மட்டும் முத்துலெட்சுமி ரெட்டியின் தன்னிலையில் வருகிறது.


‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நந்தினி எனும் பாடகியின் கதையைச் சொல்கிறது. அவளுடைய கணவன் சர்வேஸ்வரன் திருமணத்திற்குப் பின் அவளை விட்டுச்சென்று எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனந்தன் எனும் தொழிலதிபர் அவள் வீட்டுக்குள் தற்செயலாகப் பாடுவதைக் கேட்டு அதனால் ஈர்க்கப்படுகிறான். சபாவில் பாட வாய்ப்பு வாங்கிக்கொடுக்கிறான். தனி ஆல்பம் வெளியிட உதவுகிறான். ராம்பிரஸாத் எனும் இசை கலைஞர், ரேவதி எனும் வழக்குறிஞர் தோழி, தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பிரதான பாத்திரங்கள். தவிர வேறு வேறு பெயர்களில் வள்ளலார், அஸ்வத்தாமன், பட்டினத்தார் போன்றவர்கள் காணாமல் போன கதைகளைச் சொல்கிறார்கள். கதைசொல்லும் மாயப்பிறவி கடைசியில் தன்னைக் கடலில் கரைத்துக்கொள்வான். அந்த மாயப்பிறவியை நந்தினியை விட்டுச்சென்ற கணவன் சர்வேஸ்வரனாக வாசிக்க இடமுண்டு. ஆனந்தன் தனது மனைவி லாவண்யாவை விவாகரத்து செய்யவும் லாவண்யா கணவரை விவாகரத்து செய்வதற்கும் கணவன் சர்வேஸ்வரன் இறந்துவிட்டான் எனச் சான்று வாங்குவதற்காக நந்தினியும் ‘டைவர்ஸ்’ சாம்பசிவம் எனும் ஒரே வழக்கறிஞரைத் தனித்தனியாக அணுகுகிறார்கள் என்பதொரு சுவாரசியமான தற்செயல்.


‘எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவல் தொகுப்பில் ‘எடின்பரோவின் குறிப்புகள்’ மற்றும் ‘ரோஜா மலர்’ ஆகிய இரண்டு குறுநாவல்கள் உள்ளன. ‘அம்பிகா’ நாவலில் ஜெரால்ட் நிக்கல்ஸன் என்றொரு நாடோடி வெள்ளைக்காரர் ஆலய நுழைவு பற்றி ஆராய்ச்சி குறிப்புகளை அளிப்பார். எடின்பரோவை அவரது தொடர்ச்சி எனச் சொல்ல முடியும். காட்டில் குடிலமைத்து தனியாக வாழ்ந்து மறைந்தவன் எடின்பரோ அவனை மரத்தடியில் புதைத்துவிட்டு இறந்து ஓராண்டுக்குப் பிறகு மனைவி மகனுக்கு அவனுடைய மரணச்செய்தியைச் சொல்கிறார்கள். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று அங்கே இருக்கிறான். எடின்பரோ பம்பாயில் கள்ளக்கடத்தலில் ஈடுபடுகிறான். குற்றங்கள் நிறைந்த இருளுலகத்தில் உழல்கிறான். கவுசல்யா, அகதா, சுகந்தி, லதா எனப் பெண்கள் அவன் வாழ்வில் வந்தபடியிருக்கிறார்கள். காமத்தால் அலைக்கழிக்கிறான். நகைக்கடை, நில வியாபாரம் என விதவிதமான தொழில்களைச் செய்கிறான். ஒவ்வொன்றாக நீங்கிச்செல்கிறது. கொடைக்கானல் காளி கோயிலில் அடைக்கலமடைகிறான். துய்த்து அலுத்து துறப்பது தான் அவன் வாழ்க்கை பயணம். அவனது குறிப்புகளே குறுநாவல். ஏறத்தாழ ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலின் மாயப்பிறவியைப் போல. கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானிடம்’ கணேசனை நினைவுபடுத்தும் பாத்திர வார்ப்பு. ‘ரோஜாமலர்’ ஒரு துப்பறியும் கதை. ரஞ்சனியின் கணவரான மருத்துவர் பிரஸாத் கொல்லப்படுகிறார். யார் செய்தது?ஏன் செய்தது?என்பதைச் சுற்றி நகர்கிறது.

2


தாகூருக்குப் பிறகு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் ஆதித்யா சிதம்பரம். (எப்பேர்பட்ட கற்பனை!). அவரது ‘இரட்டை மனிதன்’ Dual man என்கிற நாவலுக்காக நோபல் பரிசு அளிக்கப்படுகிறது (பொதுவாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு புக்கர் போல ஒரு ஆக்கத்திற்கு வழங்கப்படுவதில்லை என எண்ணுகிறேன்). ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலாசிரியர் ஆதித்யா சிதம்பரத்தின் கடந்தகால வாழ்வைச் சொல்லும்போது அவனது தந்தை வெட்டுண்டு கொல்லப்படும் சித்திரம் விவரிக்கப்படுகிறது. காரண காரியங்கள் விளக்கப்படவில்லை. அடுத்த அத்தியாயத்திலேயே அவனது அம்மாவும் பாட்டியும் இறந்து ஆதரவற்று பிழைப்பு தேடி அலைகிறான் எனும் இடத்திற்குக் கதை தாவி விடுகிறது. இவ்வகையான கதைகூறுமுறையே அவரது பாணி. ஆதித்யா சிதம்பரம் போலவே சிறுவனாக தாய் தந்தையை இழந்த சித்தரஞ்சன்‌ எனும் சிறுவனின் கதையை ‘இரட்டை மனிதன்’ எனும் நாவல் சொல்கிறது. வளர்ந்த பிறகு சித்தரஞ்சன், மாயரஞ்சன், கானரஞ்சன் என இரண்டாகப் பிரிகிறான். மாயரஞ்சன் அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்தியவன். கானரஞ்சன் அன்பின் மலரை ஏந்தியவன். அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்தியவனுக்கு மீண்டும் மீண்டும் நன்மையே நிகழ்கிறது. அன்பெனும் மலரை ஏந்தியவனைத்துரதிஷ்டங்கள் துரத்துகின்றன. ஒரு வகையில் சுரேஷ்குமாரஇந்திரஜித் நாவல்களில் உள்ள இருமையாக இதைப் புரிந்து கொள்ள முடியும். மாயரஞ்சனும் கானரஞ்சனும் சந்திக்கும் புள்ளியே அவரது படைப்புலகம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் மனிதனின் நல்லியல்புகளின் மீது ஓயாமல் ஐயத்தை எழுப்புபவை என்பது ‘மினுங்கும் கண்கள்’ போன்ற அவரது சிறுகதைகளை வாசித்தவர்களுக்குத் தெரியும். ‘தேம்பாவணி’ இல்லத்தை நடத்தும் செபாஸ்டியன் நாடார், அவரது மகள் ரெஜினா (கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்) போன்ற முழு நேர்மறைப் பாத்திரங்கள் அவரது முதல் நாவலில் அறிமுகமானபோது எனக்கது ஆச்சரியமாக இருந்தது. ‘நான் லலிதா பேசுகிறேன்’ முழுக்க நேர்மறை கதைமாந்தர்களால் நிரம்பியவர்கள். லலிதா இளமையில் இருந்தே இன்னல்களைச் சந்தித்து வருபவள். ஆனால், அவள் எதிர்கொள்ளும் பெரும்பாலானவர்கள் உறுதுணையாகவே இருக்கிறார்கள். டெல்லியில் அவளிடம் தவறாக நடந்துகொள்ள முனையும் ஆசார பிராமணரும் திருமணத்திற்காக சம்மதம் பெற சந்திக்க வரும் வேணுகோபாலனும்,அவளை அடையத் துடிக்கும் மருத்துவ அதிகாரி விஸ்வநாதனும் விதிவிலக்குகள். குழந்தை திருமணம் புரிந்து கொண்டு சிறுமிவிதவையாக உள்ள லலிதா மருத்துவம் படிக்க உதவுவது இறந்து போன கணவரின் தந்தை. அம்பிகாவும் அவள் வாழ்வில் நல்லவர்களையே எதிர்கொள்கிறாள். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தந்தை கூட வீட்டு பத்திரத்தையும் சாவியையும் அவளுக்கு அனுப்பி வைக்கும் அளவிற்கு நாகரிகமானவர். அக்கிரகார வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் உள்ள புறணி பேசும் ஆச்சாரவாதிகளே அதிகபட்சம் அவள் எதிர்கொண்ட எதிர்மறை நபர்கள். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலிலும் எதிர்மறை பாத்திரங்கள் என எவரையும் பெரிதாக இனம் காண முடியாது. மகளின் புது வாழ்வை முழுமனதுடன் தந்தை ஏற்றுக்கொள்கிறார்.



இந்த மூன்று நாவல்களும் பிராமண பெண்களை மைய கதாப்பாத்திரமாக கொண்டவை. ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில் வரும் லலிதா குழந்தை திருமணத்தில் விதவையானவள். முற்போக்குச் சிந்தனை கொண்ட நீல்கமலைக் காதலிக்கிறாள் . ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ நாவலில் வரும் அம்பிகா சாதி, மதம், தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து வீட்டை மீறி திருமணம் செய்தவர். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலின் நந்தினியைக் கணவர் நீங்கிச் செல்கிறார். ஆனந்தனுடனான உறவின் வழியாக புதிய தொடக்கத்தை எதிர்நோக்குபவள்.


இந்த மூன்று நாவல்களும் பிராமண சமூகத்தில் பெண்களின் நிலையைச் சீர்திருத்த நோக்கில் அணுகுகிறது. இன்றைய காலத்தில் குழந்தை திருமணமோ, விதவை மறுமணமோ பெரும் புரட்சியாகவோ கலகமாகவோ பார்க்கப்படுவதில்லை. அ. மாதவையா, பாரதி காலம் தொட்டு பேசப்பட்டு இன்று காலாவதியாகிப்போன ஆவண மதிப்பு மட்டுமே உள்ள கடந்தகால விஷயங்கள். சாதி மீறிய திருமணங்கள் இன்றளவும் முக்கியமான சிக்கல்தான். இடை நிலை சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான திருமண உறவுகள் பெரும் மோதலை ஏற்படுத்துகிறது என்பதே இன்றைய சமூக யதார்த்தம்.


சீர்திருத்த எழுத்துக்களின் வரிசையில் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் எழுதிய காலத்தில் பிராமண பின்புலத்திலிருந்து பெண் விடுதலையைப் பேச வேண்டிய சமூக சூழல் நிலவியது. சுரேஷ்குமார இந்திரஜித் தனது ஆதர்சமாக ஜெயகாந்தனைக் குறிப்பிடுகிறார். ஆனால், அவரது சிறுகதைகளில் ஜெயகாந்தனின் தாக்கம் ஏதும் பெரிதாக புலப்படவில்லை. ஜி. நாகராஜனின் கதையுலகோடு சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதை மாந்தர்களைப் பொருத்திப்பார்ப்பதுண்டு. ‘அணு யுகம்’, ‘கிழவனின் வருகை’ போன்ற கதைகளை வாசிக்கும்போது ஜி. நாகராஜனின் உலகம் இயல்பாக அறமின்மையைப் பேசுகிறது என்பதை விட அறத்திற்கான ஏக்கத்தையும் அது இல்லாததன் விரக்தியையுமே வெளிப்படுத்துகிறது. அந்த ஏக்கம் கூட சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளில் வெளிப்பட்டதில்லை. ‘எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவலைத் தவிர்த்து பிற நாவல்கள் ஜெயகாந்தனின் லட்சியவாத உலகிற்கு நெருக்கமாக உள்ளது. பல நாவல்களின் பாத்திர வார்ப்புகளிலும் பேசுபொருள்களிலும் சர்வ நிச்சயமாக அவருடைய தாக்கத்தை உணர முடிகிறது. ‘அம்பிகா’ நாவலில் சங்கரலிங்க நாடார் எனக்கு ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ அண்ணாசாமியை நினைவுபடுத்தினார். வயதில் ஏறத்தாழ தந்தையின் வயதையொத்த சங்கரலிங்க நாடார் அம்பிகா எட்வர்ட் ஜென்னரைக் காதலிப்பதாகக் கூறும் வரை அவளது புடவையின் நிறத்தைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார். ஜெயகாந்தனின் எழுத்துக்கள் இலட்சியவாதத்தையம் சீர்திருத்த நோக்கையும் முன்வைப்பவை. மாயரஞ்சன் அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்திக்கொண்டு நுழைந்து படிப்படியாக அன்பெனும் விசையை உலக இயக்கத்தின் அடிநாதமாக கண்டுகொள்வது போன்றொரு பயணம் சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகளின் ஊடாக நிகழ்கிறது.


இந்நாவல்களின் பேசுபொருளைக் கொண்டு நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்பது இவற்றின் இன்றைய முக்கியத்துவம் என்ன என்பதே. இவற்றை இன்று ஏன் எழுத வேண்டும்? இலக்கியத்திற்கு எந்தப் பேசுபொருளும் அந்நியமானதில்லை, காலாவதியாவதில்லை. ஆனால், கூறுமுறையும் கோணமும் தேய்வழக்குகளற்று புதிதாக உள்ளதா என்பதே கேள்வி.



இம்மூன்று நாவல்களிலும் எதிர்மறை பாத்திரங்கள் என பெரிதாக ஏதுமில்லை என்றாலும் பழமைவாதம், ஆச்சாரம், மரபு போன்ற ‘அமைப்புகள்’ அவ்விடத்தை எடுத்துக்கொள்கின்றன. தனி மனிதர்களின் விழைவுகளுக்கும் மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளுக்கும் இடையேயான உராய்வைப் பேச முயல்கின்றன. மனிதர் உருவாக்கிய அமைப்புகள் எப்படித் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் உளவியல் தளங்களிலும் ஒரு வலைபோல விரிகிறது, அதை அறுத்து வீச முடியாமல் மனிதர்கள் எப்படி அதற்குள் சிக்குண்டு அழிகிறார்கள் என்பதே இம்மூன்று நாவல்களிலும் சுரேஷ்குமார இந்திரஜித் எழுப்பிக்கொள்ளும் முதன்மை கேள்வியாக உள்ளது. பிராமண பின்னணி என்பது இந்தக் கேள்வியை விவாதிக்க ஏதுவான பின்புலமாக மட்டும் காணும்போது மேற்சொன்ன கேள்வியை வந்தடையலாம். லலிதாவிற்கும் நந்தினிக்கு என்னவாகிறது? அவர்களால் சமூகத்தின் வரையறையைத் தாண்ட முடியவில்லை. லலிதா யாரையுமே மணக்காமல் பிரமை பிடித்து மூளையில் கட்டி வந்து மரணமடைகிறாள். ஆனந்தனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் தருணத்தில் நந்தினி தன்னை விட்டுச்சென்ற கணவனான சர்வேஸ்வரனைப் பற்றிய அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் புத்தி பேதலித்துப் போகிறாள். சட்டப்படி அவனுக்கான மரண சான்றிதழை வாங்கிவிட்டாள், ஆனந்தனும் தனது மனைவியை விவாகரத்து செய்து தயாராக இருக்கிறான். ஆனாலும் அவர்களால் இணைய முடியவில்லை. இந்தப் பேதலிப்பு தனி மனுஷியின் பிரமை என்பதொரு கோணம், சமூக வரையறையைத் தாண்ட முடியாத திண்மையின்மை என்பது இன்னொரு கோணம். இவ்விரு முடிவுகளுக்கு மாறாக அம்பிகா ஆங்கிலேயரான எட்வர்ட் ஜென்னரை மணந்துகொண்டு இங்கிலாந்துக்குச் செல்கிறாள். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமாகப் பயணித்து அவள் எண்ணிய சமூக பணிகளை ஆற்றுகிறாள். இந்தியக் குடும்ப, பண்பாட்டு அமைப்பிலிருந்து தப்பிச் செல்லும் அம்பிகா மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்கிறாள். அவள் தான் வாழ்ந்த, தனக்கு உரிமையுள்ள பரம்பரை அக்கிரகார வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்குவது குறியீட்டு ரீதியாக முக்கியமான செயல். பழைய பாரம்பரியத்தின் மீது அவளுக்கு எந்தப் பிடிப்பும் இல்லை. அங்குப் புதிய கட்டிடத்தை எழுப்புகிறாள். அதுவும் நடைமுறை பயன்கொண்ட விதவைகளுக்கான விடுதியை அமைத்து கொடுக்கிறாள். அம்பிகாவின் நிகழ்கால தேர்வுகளை வருங்காலம் குறித்த கனவுகள் முடிவு செய்கின்றன என்றால் பிறரின் தேர்வுகள் கடந்தகாலத்தின் பாற்பட்டதாக உள்ளன.


இருத்தலியல் கோணத்திலிருந்தும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் நாவல்களை நோக்க முடியும். இருத்தலியல் சிக்கல் என்பது நமக்கான பாதைகளை நாம் தேர்வு செய்வதில் உள்ள குழப்பத்தைக் சுட்டுவது. நமது ‘தன் விருப்பை’ நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் தடுமாற்றமும் குழப்பமும் தான் அடிப்படை. லலிதாவும் நந்தினியும் இருத்தலியல் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டவர்கள். அம்பிகாவுக்கு அத்தகைய சிக்கல் ஏதுமில்லை‌. ‘ரோஜா மலர்’ ரஞ்சனாவும் காதலை ஏற்பதா வேண்டாமா எனும் குழப்பத்திற்கு ஆளாகி லலிதா நந்தினி வரிசையில் சேர்ந்துகொள்கிறாள். ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலின் ஆதித்யா சிதம்பரம் அவன் மணந்துகொண்ட சாரதாவிடமிருந்து பெரிய குழப்பம் ஏதுமின்றி விலகிவிட முடிகிறது. அவனுக்குத் தேவை மனைவியல்ல தோழி என்பதை உணர்ந்துகொள்கிறான். ஆகவே, ரஞ்சனாவுடன் இயல்பாக இருக்க முடிகிறது. எடின்பரோ அகதாவை விட்டு விலகுகிறான். சுகந்தியை மணக்கிறான். அங்கிருந்தும் விலகுகிறான். குடும்பத்திற்குள் அவனாலும் தன்னைப் பொருத்திக்கொள்ள இயலவில்லை. ஆண்களால் குடும்ப அமைப்பை விட்டு எளிதாக விலகிச்செல்ல முடிவதுபோல் சுரேஷ்குமார இந்திரஜித்தின் பெண் பாத்திரங்களால் விலக முடியவில்லை. ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலில் எழுத்தாளர் ஆதித்யா சிதம்பரத்திடம் பேட்டி காணும்போது ‘இந்திய மக்களுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள். அதற்கு ‘பழமை பாறாங்கல் போல் அழுத்திக் கொண்டிருக்கிறது. தொல் நாகரிகம் கொண்ட நாடுகளில் இவ்வாறு ஏற்படுகிறது. வெளியே வாருங்கள். புதிய காற்றைச் சுவாசியுங்கள். உங்கள் கைகளில் புதிய இந்தியா உருவாகட்டும்.’ இந்தச் செய்திதான் அவரது எல்லா நாவல்களின் மையம் எனச் சொல்லிவிடலாம். லலிதா டெல்லியில் ஒரு மாமியுடன் பேசும்போது ‘மாமிக்கு சில சிந்தனைகள் இருக்கு காலங்காலமா தலைமுறை தலைமுறையா சில எண்ணங்களை சந்ததிக்கெல்லாம் கடத்திண்டு வருவா. இவாள்ளாம் இப்படித்தான் யோசிப்பா. உண்மையாக சொல்லப்போனா இந்த மாமியோட பேசறப்போ நான் என்னையறியாமலேயே தமாஷா பேசறேன்னு தோணுது’ எனத்தனக்குள்ளேயே சொல்லிக்கொள்கிறாள்.


ஆதித்யா சிதம்பரம் மணமுறிவு செய்து கொண்டவன். தோழி ரஞ்சனாவுடன் இருக்கிறான். அதாவது குடும்ப அமைப்பிற்கு ஆட்படாமல் இருக்கிறான். லலிதாவும் நந்தினியும் குடும்ப அமைப்புகளில் இருந்து தப்ப விரும்பும் அதே நேரத்தில் அன்பின் பொருட்டு நுழையவும் விரும்புகிறார்கள். இந்த முரணை எதிர்கொள்ள முடியாமல் தான் அவர்கள் பித்தர்களாகி விட்டார்களா? லலிதா ‘நேக்கு கல்யாண ஆசை இருக்கான்னு நேக்கே தெரியலை. இருக்குன்னு தான் தோண்றது. எல்லாருக்கும் இருக்கற ஆசை தானே. ஆனா திருமண வாழ்க்கைல ஒரு ஆணோட என்னால இருக்க முடியுமா. அது பிரச்சினைதான். இப்ப நான் என் இஷ்டப்படி இருக்கேன். அப்புறம் ஆத்துக்காரர் இஷ்டப்படி தான் நடக்கணும்’ என எண்ணுகிறாள்.


பண்பாட்டு சேகரம் தனிமனிதனின் காம விழைவுகளை என்னவாக பாதிக்கிறது என்பதை அவரது நாவல்களிலிருந்து இரண்டு தருணங்களை எடுத்துக்கொண்டு விரிவாக காணலாம். ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலில் ஆதித்யா சிதம்பரம் காட்டுமன்னார்கோவிலில் வசிக்கும் விதவையான சாரதாவை மணந்துகொள்ள முடிவு செய்வான். சாரதாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைப்பவர் சாராதாவின் மாமா சந்தானம். அதுவரை காமத்துடன் காணாத சந்தானம் ஆதித்யா சிதம்பரம் சாரதாவைத்திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதும் மிகுந்த கிளர்ச்சியை உணர்கிறார். எவ்வளவோ அடக்க முயன்றும் அவரால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை சாரதாவிடம் வெளிப்படுத்தவும் செய்கிறார். சாரதா பதிலுக்கு உங்களுக்கு உடலுறவு தான் வேண்டுமா என்கிறாள். இல்லை ஒரேயொருமுறை அணைத்துக்கொள்கிறேன் போதும் என்கிறார். சாரதா அவளுக்கு அந்தத் தருணத்திலிருந்து அம்பாளாக ஆகிறாள். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலிலும் நந்தினி அம்பாளாக ஆகும் தருணம் உண்டு. ‘அவர் வீட்டை விட்டு ஓடிப்போறதுக்கு முந்தின நாள் ராத்திரி ‘நான் யார்’ என்று மூன்று தடவை தனக்குத்தானே கேட்டுண்டார். என்ன ஆச்சு உங்களுக்குன்னு கேட்டேன் ஒண்ணுமில்லேன்னு சிரிச்சார். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா என்றார். என்னோட ஆத்துக்காரர்னு சொன்னேன். அது மட்டும் தான் உனக்கு தெரியும்னு சொன்னார். அப்புறம் என் ட்ரெஸ்ஸை எடுத்துட்டு நிர்வாணமா இருக்கச் சொன்னார். நகைகளையும் எடுக்கச் சொல்லிவிட்டார். திருமாங்கல்யத்தையும் எடுக்கச் சொன்னார். நான் முடியாதுன்னு சொன்னேன். அவர் வற்புறுத்தி அதையும் காதுதோடு, நெற்றி போட்டு எல்லாத்தையும் எடுக்கச் சொல்லிவிட்டார். என் உடம்புல ஒண்ணுமே இல்லை. நிற்கச் சொன்னார். நின்னேன். என் கால்ல நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டார். நான் பதறிப் போனேன். நீ தேவி ரூபம் நான் ஒண்ணுமே இல்லைன்னு மயங்கிவிட்டார். சற்று நேரத்துலே எழுந்து என்கூட முரட்டுத்தனமா செக்ஸ் வைச்சுண்டார். அப்படியே தூங்கிட்டார். அடுத்த நாள் காலைலேந்து அவரை காணோம்.”


சுரேஷ்குமார இந்திரஜித் காரைக்காலம்மையார் பற்றி ஒரு சிறுகதை எழுதியுள்ளார். துய்க்க முடியாத தூய்மை இறைத்தன்மையடைகிறது என்பது இந்திய நம்பிக்கை. கள்ளமற்ற தெய்வீகம் நம்மைத் தொந்திரவு செய்கிறது. ‘பிளாக் மிர்ரர்’ தொடரில் ஒரு அத்தியாயத்தில் பாடகியாக விரும்பும் கள்ளமற்ற தெய்வீகப் பெண்ணை உனது மூலதனத்தைப் பாட்டில் செலவிடுவதைவிட பாலியல் வேட்கைக்கு உகந்தது என மடைமாற்றுவார்கள். இந்திய மரபு காமத்தைப் பக்தியாக மேல்நிலையாக்கம் செய்து கொள்வதன் வழி கற்பிதமான குற்ற உணர்விலிருந்து இந்திய மனம் தன்னை விடுவித்துக் கொள்கிறதா என்றொரு கேள்வியைச் சுரேஷ்குமார இந்திரஜித் எழுப்புகிறார்.



கனவுக்கும் நிஜத்துக்குமான கோட்டை அழிக்கிறார் என்பதை விட இந்த இருமையை மறுதலிக்கிறார். எல்லாமே சாத்தியங்கள் எனும் நிலையில் இந்தப் பிரிவினைக்குப் பொருளில்லை. ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ கதையில் அம்மா குறித்து ஆதித்யா சிதம்பரம் சிறுவனாகக் காணும் கனவு ஒரு மாற்று யதார்த்தம் எனும் அளவிற்கு விரிவாகத் துல்லியமாக காட்சிப்படுத்தப்படுகிறது. நீல்கமல் குறித்து லலிதா காணும் கனவுகளுக்குத் தொடர்ச்சியுண்டு. அவை பகல் கனவுகள் அல்லது பிரமை அல்லது இணைகதைகள் எனச் சொல்ல முடியும். சங்கரலிங்கம் நாடார் அம்பிகாவின் வீட்டிற்குச் செல்வதாகக் காணும் கனவையும் இதே வரிசையில் வைக்கலாம். இக்கனவுகள் மாற்று சாத்தியங்களை உருவாக்கிக்காட்டுகின்றன. மையக்கதைக்குச் சில அடுக்குகளை உருவாக்கி அளிக்கின்றன. இந்த வழமையிலிருந்து முற்றிலும் வேறு ஒரு விதமான கனவு என்று ஒன்றைச் சொல்லலாம் என்றால் அது ‘அம்பிகா’ நாவலில் மதுரை வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மனைப் பற்றி காணும் கனவு. அம்மன் ரதத்தில் வந்து ஐயருக்குக் கோவிலை பக்தர்கள் அனைவருக்கும் திறந்துவிடுமாறு ஆணையிடுகிறாள். கணித மேதை ராமானுஜத்திற்குச் சூத்திரங்கள் நாமகிரித் தாயாரால் அருளப்பட்டதைப் பற்றி பின்னொரு சமயத்தில் நாவல் விவாதிக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் தனித்துவமான நுண்ணிய அவதானிப்புகளை எழுதுபவர். உதாரணமாக ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில் ஒரு இடத்தைச் சுடடிக்காட்டலாம். ஆகஸ்ட் 15, 1947 அன்று என்ன நிகழ்ந்தது என்பது குறித்து பல்வேறு வரலாறுகள் உள்ளன. எத்தனையோ நிகழ்வுகளும் கதைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அன்று முதன் முறையாகக் கொடியேற்றும்போது சரியாக ஏற்ற வேண்டும் எனும் பதட்டம் பற்றி எவரும் குறிப்பிட்டதாக நினைவில்லை. நியாயமான பதட்டம் தான். சிரஸ்தாராக இருந்தவர் மட்டுமே கவனிக்கக்கூடிய பதட்டம். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றும்போது இந்தப் பதட்டமிருந்திருக்கும். அம்பிகாவும் ஜென்னரும் கற்பனை பாத்திரங்கள் என்றாலும் அவர்களுக்கு முன்மாதிரிகள் உண்டு. அம்பிகாவே ருக்மணி அருண்டேல் பற்றி குறிப்பிடவும் செய்கிறாள். அதே போல் நந்தினி – ஆனந்தனுக்கு எம்.எஸ்- சதாசிவம் தொடர்பும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.


நாவல்கள் சார்ந்து எனது விமர்சனங்களையும் சொல்ல வேண்டும். தமிழ் நாவல் வரலாற்றில் இந்த நாவல்களின் தனித்துவமான பங்களிப்பு என்ன என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால் பெரிதாக ஏதுமில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.


சிறுகதைகளில் எவையெல்லாம் அவருடைய பலமாக இருந்ததோ அவை நாவல்களில் பலமாக வெளிப்படவில்லை. முன்னமே கூறியது போல் பேசுபொருள் காலாவதியாவதில்லை ஆனால் கூறுமுறை ஆகிவிடும். ‘மாபெரும் சூதாட்டம்’ , ‘மறைந்து திரியும் கிழவன்’,’எலும்புக்கூடுகள்’, ‘கால்பந்தும் அவளும்’,’நடன மங்கை’ எனப் பல அபாரமான கதைகளை எழுதியவர். தமிழ் சிறுகதை வரலாற்றில் சுரேஷ்குமார இந்திரஜித்முக்கியமான எழுத்தாளர் என்பதில் எனக்கு ஐயமில்லை. பேசுபொருள், கூறுமுறை என இரண்டிலுமே புதிய தலங்களுக்குத் தமிழ் சிறுகதைகளை நகர்த்தி சென்றவர். சிறுகதைகளில் பல நூதனங்களைச் செய்த முன்னோடியாகத் திகழும் சுரேஷ்குமார இந்திரஜித்தால் அத்தகைய நூதனங்களை நாவல்களில் கொண்டுவர முடியவில்லை என்பதே என் நோக்கு. எந்த நாவலுமே நிறைவான வாசிப்பனுபவத்தை எனக்குக் கடத்தவில்லை. சிறுகதைகளிலும்,ஓரளவு குறுங்கதைகளிலும் வெளிப்படும் கூர்மை நாவல்களில் வெளிப்படவில்லை‌. இயல்பாக அத்தகைய கூர்மை வெளிப்பட்ட ஆக்கம் என்பதாலேயே ‘எடின்பரோவின் குறிப்புகள்’ அவர் எழுதிய நாவல் குறுநாவல்களில் சிறந்ததாக ஆகிறது. பஞ்சு வியாபாரம் தொடர்பாக குமாஸ்தாவுடன் சங்கரலிங்கம் நாடார் உரையாடும் பகுதிகளை வாசிக்கும்போது பஞ்சு வியாபாரத்தின் படிநிலைகள் அடுத்தடுத்த பக்கங்களில் மும்முறை சொல்லப்படுகிறது. நாவல்களை எப்படி வளர்த்துக்கொண்டுபோவது எனும் சிக்கல் உள்ளதாகப்பார்க்கிறேன். அவை இயல்பாக வளராமல் செயற்கையாக நீட்டிக்கப்படுகின்றன எனும் எண்ணமே ஏற்படுகிறது. ‘அம்பிகா’ நாவல் மிக முக்கியமான வரலாற்று பின்புலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து திசை மாறிச் செல்கிறது. நாவலுக்குப் பின் இணைப்புகளாக பல்வேறு ஆவணங்களை அளித்துள்ளார். வரலாற்று புனைவில் வரலாறு தனியாகவும் புனைவு தனியாகவும் துண்டிக்கப்படுகிறது. இதை ஒரு நூதனமான உத்தியாக கருத முடியுமா எனத்தெரியவில்லை. வாசகனாக அது எனக்கு எவ்வித கிளர்ச்சியையும் கொடுக்கவில்லை‌. நாவலின் செய்திறன் சார்ந்து போதாமையைச் சுட்டுவதாகவே படுகிறது. ஒப்பு நோக்க ‘லலிதா’ நாவலில் வரலாறு கதைச்சரடோடு இணைந்து பயணிக்கிறது. முத்துலட்சுமி ரெட்டி கவுன்சிலில் ஆற்றிய உரை மொத்தமாக அளிக்கப்பட்டுள்ளது. லலிதா சொல்லிக்கொண்டிருக்கும் கதையில் திடீரென்று முத்துலெட்சுமி கதைசொல்லியாக ஆகிறார். இவையிரண்டும் கடந்தகால பாத்திரங்கள். நந்தினி சமகாலப் பெண் ஆனால், அவளுடைய சித்தரிப்பு நான் உணரும் இன்றைய யதார்த்தத்திலிருந்து வெகுவாக விலகியிருக்கிறது. எழுபதுகளின் பாத்திர வார்ப்பு எனத் தோன்றுகிறது. ஆகவே, அவள் மீது பெரிதாக கரிசனம் கொள்ள முடியவில்லை.


இந்தப் போதாமைகள் ஒரு புறமிருந்தாலும், சுரேஷ்குமார இந்திரஜித்தின் நாவல்கள் அவரது சிறுகதைகளை விடவும் அதிகம் பேரைச் சென்றடையும் என்று நம்புகிறேன். சிடுக்கற்ற மொழியில் வாசக மனம் பற்றிக்கொள்ள ஒரு சுவாரசியமான ‘கதையை’ அவரால் உயிர்ப்புடன் எழுத முடிகிறது. அவரது படைப்புகளுக்குள் நுழைய சாமான்ய வாசகர்களுக்கு நாவல்களே சிறந்த வாயில்களாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது. சிறுகதைகளில் அவர் ‘எழுத்தாளர்களின் எழுத்தாளராக’ இன்றளவும் இருக்கிறார் என நான் கருதுவதால் எனக்குள்ள எதிர்பார்ப்பாகவும் இதை கொள்ள முடியும்.


‘பாட்டி முறுக்கு சுட்டு அடுக்குவதுபோல் ஒரே மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்தேன்’ என ஒரு நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்கள் எழுதுவது என்பது எழுபது வயதில் காரோட்டப் பழகுவுது போல. அதிலொரு சாகசமும் குறுகுறுப்பும் உள்ளது. அவரது படைப்பூக்க விசை எனக்கு வியப்பளிக்கிறது. தன்னைத் தொடர்ந்து மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள வேண்டும் எனும் முனைப்பு எனக்கு உந்துசக்தியாகவும் உள்ளது. ‘கடைசி எழுத்து என்பது வந்து சேர்ந்து நிலைத்திருக்கும் இடமல்ல கடந்து செல்லும் இடங்களில் ஒன்று’ எனக் குறிப்பிடுகிறார். அந்த விசை ஓயாதிருக்கட்டும்.‌

  •  

புக் பிரம்மா இலக்கிய விழா

 

சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பாவண்ணன் ஆகஸ்ட் 9, 10, 11 தேதிகளில் பெங்களூரில் புக் பிரம்மா இலக்கிய விழா நடக்க இருப்பதாகவும் சிறுகதை அமர்வில் பேச முடியுமா என்றும் கேட்டார். ஒப்புக்கொண்டேன். இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்பது எனக்குப் பிடிக்கும். வேறெதைப் பற்றிய  சிந்தனையுமின்றி   இலக்கியத்திற்குள்ளேயே ஊறிக் கிடப்பது. இரவுகளில் உறங்க முடியாது. உருபெறாத சொற்களும் கருத்துக்களும் மூளைக்குள் ரீங்காரமிடும் இனிய அவஸ்தை பீடிக்கும். இலக்கியத்தை பேசுவதும் கேட்பதும் அசைபோடுவது ஒரு அலாதியான லாகிரி.  விஷ்ணுபுர விழாக்களில்  காவிய முகாம்களில் அத்தகைய அனுபவத்தை‌ வேண்டியே தவறாமல் செல்வேன். அண்மைய காலத்தில் ஏலகிரி புரவி கூடுகை இத்தகைய தீவிர அனுபவத்தை அளித்தது. 


எட்டாம் தேதி இரவு புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை பேருந்தில் சென்று சேர்ந்தேன். எனக்காக அவர்கள் பதிவு செய்தது குளிர்சாதன வசதியும்  படுக்கை வசதியும் கொண்ட பேருந்து. ஆனால் வாரம் மூன்று நாட்கள் மட்டுமே குளிர்சாதன பேருந்து இயக்கப்படுவதாக சொல்லிவிட்டார்கள். மடிவாலாவில் கமலாலயன் என்னுடன் இணைந்து கொண்டார்.  கோரமங்களா செயின்ட் ஜான்ஸ் கலையரங்கத்தில் நிகழ்வு நடந்தது. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்குமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  மல்லிப்புரம் ஜெகதீஷ் குமாருடன் அறையை பகிர்ந்து கொண்டேன். ஜெகதீஷ் சவரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த தெலுங்கு எழுத்தாளர். அவர்கள் ஓரிஸா, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்கிறார்கள். பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரது மகள் ஆயுர்வேதம் பயில்வதாக சொன்னார். 


தமிழகத்திலிருந்து ஒரு பட்டாளமே வந்திருந்தது. எழுத்தாளர் கமலாலயன், கவிஞர் சுகிர்தராணி, நாவலாசிரியர் பா. கண்மணி, கவிஞர் சுஜாதா செல்வராஜ் ஆகியோரை முதன் முறையாகச் சந்தித்தேன். எழுத்தாளர் அபிலாஷும் பல்லவியும் இரண்டு நாட்கள் வந்திருந்தார்கள். பெங்களூரில் வசிக்கும் யாத்ரா நீலா எனும் பெயரில் எழுதி வரும் மனோஜ், நண்பர் ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா ஆகியோருடன் கொஞ்சம் உரையாட முடிந்தது. ஸ்டாலின் ராஜாங்கம் பல நாட்களாக கேட்டு துரத்திக் கொண்டிருந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தார். நாவலுக்கு வேண்டிய சில ஆவணங்கள் குறித்து அண்ணனுடன் உரையாடினேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யும் ஜனனி கண்ணன், சியாமளா, ராதிகா, ப்ரியம்வதா, சுசித்ரா, ஐஸ்வர்யா  ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ ஒரு இயக்கம் போல தமிழ் ஆக்கங்கள் ஆங்கிலத்தில் சென்றடையும் காலம் வெகு தொலைவில் இல்லை எனும் நம்பிக்கை ஏற்பட்டது. ஜனனியும் ராதிகாவும் தொழில்முறை ஆர்க்கிடெக்டுகள். ஐஸ்வர்யா கல்லூரி பேராசிரியர் என்பதால் வண்டி வைத்து முப்பது மாணவர்களை அரங்கிற்கு அழைத்து வந்திருந்தார். சுசித்ரா விஞ்ஞானி, பிரியம்வதா பட்டய கணக்காளர். வெவ்வேறு தொழில் பின்புலம் கொண்டவர்கள் மொழியாக்கத்தை ஈடுபாட்டுடன்  செய்து வருகிறார்கள். எழுத்தாளர் சர்வோத்தமன் வந்திருந்தார். பிள்ளை வளர்ப்பு சார்ந்த பிலாக்கணங்களை பகிர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிக் கொண்டோம். மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பியுடன் அவர் மொழியாக்கம் செய்த ‘ஓடை’ நாவல் குறித்து பேசினேன். அண்மையில் வாசித்த சிறந்த நாவல்களில் ஒன்று. பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷம்’ ஜீரோ டிகிரி வெளியீடாக வந்துள்ளது. பணி ஓய்வுக்கு பின் மொழியாக்கம் செய்யத் தொடங்கி பத்தாண்டுகளுக்குள் ஐம்பத்தி மூன்று நூல்கள் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்குமாக செய்திருக்கிறார். இது ஐயமின்றி ஒரு சாதனை. இப்போது சொந்தமாக நாவல் எழுத விரும்புவதால் மொழியாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார். தீபு ஹரி, எம். கோபாலகிருஷ்ணன், கார்த்திக், சு. வேணுகோபால், கயல் ஆகியோருடன் அமர்ந்து தமிழில் நடக்கும் இலக்கிய போட்டிகள் பற்றி ஒரு விவாதம் நடந்தது. தமிழ் சினிமாவில் நீதிபதியாக நடிக்கத்  தொடங்கினால் சாகும்வரை அதே பாத்திரம்தான். அந்த நிலைமை சு. வேணுகோபாலுக்கு ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் ஏற்பட்டது. அத்தனை போட்டிகளுக்கு நடுவராக உள்ளார்.‌ நண்பர் ‘பாகேஸ்ரீ’ எஸ். சுரேஷ் இந்துஸ்தானி இசையை பின்புலமாக கொண்ட ‘கரானா. எனும்  நேரடி ஆங்கில நாவலை எழுதியுள்ளார். இந்நாவல் எழுதும்போது இதன் வடிவம் சார்ந்து சிலமுறை உரையாடியிருக்கிறேன். கீதா ராமசாமியின் ‘ஹைதராபாத் புக் ட்ரஸ்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பிரதியை கீதாவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். எஸ். சுரேஷ் முதல்நாள் வந்திருந்தார். சாகித்திய அகாதமியில் முக்கிய பங்காற்றும் நண்பர் ராஜ்மோகன் அவர்களை இரண்டாம் நாள் மதியம் சந்தித்தேன். பெரிதாக உரையாட முடியவில்லை. கனிஷ்கா குப்தா, கண்ணன், பெருமாள் முருகன் ஆகியோருடன் கொஞ்ச நேரம் பேசினேன். நண்பர்கள் கார்த்திக்,  சுரேஷ் பிரதீப், காளி, ஜீவா, இரம்யா. சாம்ராஜ் ஆகியோருடன் நிறையவே பேச முடிந்தது. சேர்ந்து அமர்வுகளுக்கு சென்றோம். எழுத்தாளர் விஷால் ராஜா, ஓவியர் ஏ.வி. மணிகண்டன், கிருஷ்ணபிரபா ஆகியோர் வந்திருந்தனர். என்னுடன் யுவ புரஸ்கார் வாங்கிய கன்னட எழுத்தாளர் பத்மநாப பட், பல ஆண்டுகளுக்கு முன்  சந்தித்த கன்னட எழுத்தாளர் விக்ரம ஹத்வாரா ஆகியோரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மும்பை கேட்வே இலக்கிய விழாவில் என் அறைத் தோழராக இருந்த வேம்பள்ளி ஷெரீபும் வந்திருந்தார். ஷெரீப் ‘ஜும்மா’ என்றொரு சிறுகதை தொகுதி எழுதியுள்ளார். ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர். இப்போது பத்திரிக்கையாளராக பணியாற்றுகிறார். இஸ்லாத்தின் உள்ளூர் பண்பாட்டு வேர்களைப் பற்றி பேசுவதால் ஜாகிர்ராஜாவுடன் ஒப்பிடத்தக்க எழுத்தாளர் என புரிந்துகொண்டேன். ஜீரோ டிகிரி ராம்ஜியுடன் ஆங்கில பதிப்பு சூழல் குறித்து உரையாடினோம். நம்பிக்கை தருவதாக ஏதுமில்லை. நம் பணி எழுதுவதே என்பதை நினைத்துக்கொண்டேன். 

       

‘புக் பிரம்மா’ நிகழ்வின் முதன்மை அனுபவம் என அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்த்துக்கலைகளைச் சொல்லலாம். முதல் நாள் மானஸி சுதிர் குழுவினர் கன்னட கவிதைகளை நடித்தும் பாடியும் காட்டினார்கள். தென்னக மொழிகளில் கன்னடமே கவனிக்கச் சிரமமாக உள்ளது என்பதை கண்டு கொண்டேன். எனினும் இசையும் நடிப்பும் சிறப்பாக இருந்தது. கன்னடத்திலும் மராத்தியிலும் வலுவான நவீன நாடக மரபு உண்டு. நடிகர் பிரகாஷ் ராஜ் நிர்திகந்தா எனும் நாடகப் பள்ளியை மைசூரில் நடத்தி வருகிறார். டாக்டர் ஸ்ரீபாத் பட் கவிதைகளுக்கு இசையமைத்து அரங்கேற்றினார். முதல்நாள் டாக்டர் பட் இன்னொரு குழுவினரைக் கொண்டு வசன கவிதைகள், கன்னட இலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டத்தின் கவிதைகளை ‘கன்னட காவிய காஞ்சா’ எனும் நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டினர். அதில் பாடிய பெண்ணின் குரல் அணன்யா பட்டின் குரலையும் வீச்சையும் நினைவுப்படுத்தியது. ‘பரா பரா பரா பிரம்மராக்ஷசா’ எனும் கோரஸ் குரல் இப்போதும் மனதில் உள்ளது. நானும் கார்த்திக் பாலசுப்பிரமணியனும் நிகழ்த்துக்கலை எவற்றையும் தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். கடைசி நாள் மதியம் பரதநாட்டியம் மட்டும் தவறவிட்டோம். 


இரண்டாம் நாள் சுரேஷ் பிரதீப்பும் இணைந்து கொண்டார். இரண்டாம் நாள் காலை பிந்து மாலினியின் இசை நிகழ்ச்சி. தன்னை உஸ்தாத் ரஷீத்கானின் சீடர் எனக் கூறினார். அவரது கணவர் தான் பாடகர் வாசு தீக்ஷித் என  அறிந்துகொண்டேன். வாசு பாடிய ‘ராகி தந்திரா’ எனக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று. வெவ்வேறு மொழிகளில் இருந்து இசைத்தார். ‘அருவி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாரதியின் ‘பகைவனுக்கருள்வாய் நன் நெஞ்சே’ பாடலை நான் இதுவரை கேட்டிராத புதிய மெட்டில் பாடினார். 


உள்ள நிறைவிலோர் 

கள்ளம் புகுந்திடில்

உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே

தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்

சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே! 


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற

சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!

தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!

அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! 



இவ்வரிகளை அவர் பாட கேட்ட போது வெளியே இருக்கும் பகைவர்களை விட உள்ளே இருக்கும் பகைவனை அருள்வழி மீட்க கோருகிறார் பாரதி எனப் புரிந்துகொண்டேன். அத்வைத  வேதாந்தியாக பாரதியின் பாடலை இப்படியும் பொருள் கொள்ள இடமுண்டு. தனது இழிவுகளை கருணையுடன் அணுகுவது அத்தனை எளிதல்ல. நிகழ்வு முடிந்ததும் அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசினோம். பெங்களூரிலும் சென்னையிலுமாக இருப்பதாக சொன்னார். முன்னரே மொழிபெயர்ப்பாளர் செங்கதிரின் கபீர் கவிதை வெளியீட்டு விழாவில் இவர் முழுக்க முழுக்க கபீர் பாடல்களை பாடியதாக எம். கோபாலகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார். ஏகதாரா போன்ற ஒரு தந்தி வாத்தியத்தை மீட்டியபடி வேறெந்த பக்கவாத்தியங்களும் இல்லாமல் அபாரமாக பாடினார். மதியம் கிடார், பாஸ் கிடார், டிரம்ஸுடன் ஒரு கவிதை நிகழ்த்துக்கலை அரங்கை நிர்திகந்தா வழங்கினார்கள். மூன்றாம் நாள் பிரகாஷ்ராஜ் இதே குழுவினருடன் கவிதை வாசிப்பு ஒன்றை நிகழ்த்தினார். தமிழில் இருந்து ஆதவன் தீட்சன்யா, முகுந்த நாகராஜன், விடுதலை சிகப்பி ஆகியோரின் கவிதைகளை அவருக்கே உரிய முறையில் வாசித்தும் நடித்தும் காட்டினார். அதே பேசு பொருள் உள்ள வெவ்வேறு மொழிக் கவிதைகளை கோர்த்து ஒன்றாக்கி வழங்கிய முறை சிறப்பாக இருந்தது. இத்தகைய நான்கு மொழி திருவிழாவிற்கு அவர் சரியான பிரதிநிதியும் கூட. ‘நீங்கள் ஏன் அரசியல் இல்லாமல் எழுதக்கூடாது’ எனும் கவிதை, பிரெக்டின் ‘பிரமிடுகளை யார் கட்டியது?’ ஆகிய‌ கவிதைகள் வாசிக்கப்பட்டன.  ஸ்ரீ ஸ்ரீயின் தெலுங்கு கவிதையை ஆவேசமாக வாசித்த போது  புல்லரித்தது. போராட்ட கவிதைகளும் அரசியல் கவிதைகளும் இயல்பிலேயே நிகழ்த்துக்கலைக்கு அணுக்கமாக உள்ளதாக  தோன்றியது. தமிழைப் பொறுத்தவரை ரவி சுப்பிரமணியம் சில கவிதைகளுக்கு ராகங்களின் அடிப்படையில் இசையமைத்துள்ளார். கூத்துப்பட்டறை சில கவிதைகளை நடித்திருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன். மேற்சொன்ன பாணியிலான நவீன இசையமைப்பை முயன்று பார்க்கலாம் எனத் தோன்றியது. எல்லா கவிதைகளுக்கும் இசையமைக்க முடியாது. ஆத்மாநாம் கவிதைகளை ஜாஸ் இசைப் பாணியில் கேட்டால் சிறப்பாக இருக்கும் எனும் எண்ணம் தோன்றியது. இரண்டாம் நாள் மாலை ஆர். கே. பத்மநாபா அவர்களின் கர்நாடக இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புரந்தரதாஸர், பாபநாசம் சிவன், தியாகராஜரின் பாடல்களை பாடினார். மயில், குதிரை, மணியோசை என வெவ்வேறு தானங்களை பாடிக்காட்டினார். கலையின் ஊற்று இயற்கையை நகலெடுப்பது தானோ எனும் கேள்வி எழுந்தது. மூன்றாம் நாள் காலையில் பண்டிட் வெங்கடேஷ் குமாரின் இந்துஸ்தானி கச்சேரி சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடந்தது. இந்த இலக்கிய விழாவின் சிகர அனுபவம் இதுதான். ஆயிரம்பேர் கொள்ளளவு கொண்ட கலையரங்கம் முழுமையாக நிரம்பியிருந்தது. மியாங் கி தோடியையும், ஜான்பூரி ராகத்தையும் விரிவாகப் பாடினார். அக்கா கேளவ்வா எனும் அக்கம்மாதேவி பாடல் நாட்டுப்புற மெட்டில் பாடியபோது மொத்த அரங்கமும் ஆட்கொள்ளப்பட்டது. ‘அக்கா கேளவ்வா மன்சூர் பாடி பிரபலப்படுத்தியது. கொல்கத்தா சென்றபோது அங்கே இந்த பாடலை பாடச்சொல்லி கேட்டார்கள். இசைக்கு மொழி கிடையாது’ என்றார்.‌ வெங்கடேஷ்குமாரை இணையத்தில் நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் நேரில் கேட்கும் அனுபவம் என்பது முற்றிலும் வேறு என்பதை உணர்ந்து கொண்டேன். இதுவே நான் நேரில் கேட்கும் முதல் இந்துஸ்தானி கச்சேரி. எங்கெங்கோ அழைத்துச் சென்றது. பாடும்போது வெங்கடேஷ் குமாரின் கை அடவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை நடனம் போல இருந்தன. அல்லது அவருடலே மீட்டப்படுவதான எண்ணம் ஏற்பட்டது. நேரில் இசை கேட்கும்போதெல்லாம் நாம் எத்தனைச் சிறியவர்கள் எனும் உணர்வு எப்போதும் ஏற்படும். அப்போது, அங்கே, நாளையற்று நிகழும் இசை எழுத்தை விட மேலானது என தோன்றும். இசையின் தற்காலிகத்தன்மையே அதை அரிதாக ஆக்குகிறது. 



இறுதி நாள் மாலையில் யக்ஷகானம் நடந்தது. கெரெமனே சிவானந்த ஹெக்டே குழுவினர் வழங்கினார்கள். யக்ஷகானமும் கதகளியும் செவ்வியலும் நாட்டார் தன்மையும் கச்சிதமாக முயங்கிய வடிவம் என்றார் ஜெயமோகன். கதகளியை இணையத்தில் பார்க்க முயற்சித்துள்ளேன். நிகழ்த்துக்கலைகள் நேரில் பார்க்காமல் ருசிக்காது. நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கே உரிய பெரும் வீச்சுடைய குரலில் பாடினார்கள். ராமன், இலட்சுமணன், சீதை தண்டகாரண்யத்தில் குடிலமைத்து வசிக்கும்போது சூர்ப்பணகை ராமனை காமுறுகிறாள். அவன் மறுத்து இலட்சுமணனிடம் அனுப்புகிறான்‌ அவன் கோபப்பட்டு மூக்கை அறுத்துவிடுகிறான். இதுதான் நாடகம். இராமனுக்கும் சீதைக்குமான உரையாடலும் இராமனுக்கும் சூர்ப்பனகைக்குமான உரையாடல்களும் எள்ளல் நிறைந்ததாக இருந்தது. அரக்கியாகவும் அழகியாகவும் வரும் சூர்ப்பணகை பார்வையாளரின் பாராட்டைப் பெற்றார். அரக்கி சூர்ப்பணகையின் நடிப்பை கவனித்தபோது தான் ரஜினியின் வில்லன் நடிப்பு எங்கே வேர்கொண்டுள்ளது என்பதை கவனிக்க முடிந்தத. ரஜினி இளமையில் யக்ஷகானத்தில் நடித்திருக்கிறார். சூர்ப்பனகையின் அட்டகாச சிரிப்பும் நடையும் ரஜினியை எனக்கு நினைவுபடுத்தியது.


 இந்திய அழகியல் பற்றி சொல்லும்போது செவ்வியலுக்குள்  நாட்டார் தன்மையும் நாட்டார் தன்மைக்குள் செவ்வியலும் முயங்கி இருக்க வேண்டும் என்றார். இந்நாடகத்தில் ராமனின் தங்க கிரீடத்தின் உச்சியில் நான்கு மயிற்பீலிகள் இருந்தன. சூர்ப்பனகையின் கிரீடம் முழுக்கவே மயிற்பீலிகளால் ஆனதாக இருந்தது. தங்க மகுடம் செவ்வியல் என்றால் மயிற்பீலி நாட்டார். கண்ணன் சூடும் ஒற்றை மயிற்பீலி அவனை பித்தனாகக் காட்டுகிறது. சமநிலையில் கொஞ்சம் பித்தை அணிந்தவன். யக்ஷ கானத்தைக் காணும் போது வேறு சில எண்ணங்களும் தோன்றியது. சீதை மட்டுமே ராட்சசர்களின் குரல்களை கேட்கிறாள். அஞ்சி அபயம் வேண்டுகிறாள். மொத்த நாடகத்திலும் அசுவாரசியமான பாத்திர வார்ப்பாக உள்ளவள் சீதைதான். ராமனிடம் அபயம் வேண்டும் பேதை . அவ்வளவுதான் அவள் பங்கு. நேர்மாறாக சூர்ப்பணகை கட்டற்றவள். பசியும் வேட்கையும் கொண்டவள். இந்த நாடகத்தில் சூர்ப்பணகையை சீதையின் மாற்று ஆளுமையாக உளவியல் கோணத்தில் காண இடமுள்ளதாக தோன்றியது. சூர்ப்பனகையின் வருகையை சீதையே முன் உணர்கிறாள். சூர்ப்பணகை வந்தபிறகு அவளின் முன் எதையுமே பேசவில்லை. இது பல சாத்தியங்களை கிளர்த்தியது.  அழகியாக மாறிய சூர்ப்பணகை ஏறத்தாழ சீதையின் அதேவிதமான ஆடை அணிகளை அணிகிறார்.  ‘தி.ஜாவின் கதையுலகில் அத்தனை குலபெண்டிருக்குள்ளும் பரத்தையர் இருக்கிறார்கள். ஜி. நாகராஜன் கதையுலகில் அத்தனை பரத்தையரிலும் குலப்பெண்டிர் உள்ளார்கள் என்பதே  என் அவதானிப்பு’ என யுவன் சந்திரசேகர் கூறியது நினைவுக்கு வருகிறது. குரல் கேட்பது, சமூக பொதுவரையறைக்கு பொருந்தாத இச்சைகளையும் நடத்தைகளையும் வெளிப்படுத்துவது ஆகியவை பிளவாளுமையில் முக்கியமான அறிகுறிகள். இந்திய ஆழ்மனதில் இந்த குலப்பெண்டிர் பரத்தையர் இருமை இன்றுவரை வெளிப்படுவதாக தோன்றியது.  சினிமாக்களில் நாணமுடைய பாந்தமான நாயகி கனவுகளில் கவர்ச்சி நடனம் புரிவார். தெலுங்கு சினிமாக்களில் இரண்டு நாயகிகள் உள்ள திரைப்படங்கள் அண்மைய காலம் வரை உண்டு. படையப்பா நீலாம்பரி சூர்ப்பனகை என்றால் சவுந்தர்யா சீதை. சூர்ப்பணகையை சீதையின் இன்னொரு சாத்தியம் என வாசித்தால் புனைவாக வேறொரு கோணத்தில் ராமாயணத்தை எழுத முடியும் எனத் தோன்றியது. 




போபால், சிம்லா, சிங்கப்பூர், டெல்லி என பல்வேறு இலக்கிய விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். வெளியிடங்களில் வேற்று மொழி அரங்குகளுக்கு செல்வதே வாடிக்கை. பிற மொழிகளில் என்ன நிகழ்கிறது என்பதை கவனிப்பேன். இது ஒரு கற்றல் அனுபவம் என்பதால் அமர்வுகளைத் தவிர்த்துவிட்டு ஊர் சுற்றவதில் எனக்கு பெரிய நாட்டமிருப்பதில்லை. பல்வேறு மொழியினருடன் உரையாடுவதும் அவர்கள் மொழியில் என்ன நிகழ்கிறது என்பதையும் அரைகுறை இந்தியையும் ஆங்கிலத்தையும் கொண்டு புரிந்துகொள்ள முயற்சிப்பேன். இத்தகைய கூடுகைகளில் சந்திப்பவர்களுடனான உறவை  தொடர்ந்து பேணும் தெம்பு எனக்கு பொதுவாக கிடையாது. மீண்டும் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். தமிழைப் பொருத்தவரை காளிப்ரஸாத், இரம்யா, கயல், சுரேஷ் பிரதீப் பங்கேற்ற மொழியாக்க அமர்விலும், ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தாராணி, கமலாலயன் பங்கேற்ற தலித் இலக்கியம் தொடர்பான அமர்விலும் பார்வையாளராக பங்கேற்றேன். மொத்தமே 50 நிமிடங்கள் என்பதால் கேள்வி பதில்களுக்கு நேரமில்லை. எங்கள் அமர்வில் இயக்குனர் வசந்தும் பிரகாஷ்ராஜும் பார்வையாளர்களாக பங்கேற்றார்கள். 


‘இந்திய பதிப்புத்துறை நிலவரம்’ பற்றிய அரங்கில் காலச்சுவடு கண்ணன், வசுதேந்திரா, கீதா ராமசாமி. டி சி புக்ஸ் ரவி ஆகியோர் பங்கு கொண்ட அமர்வில் ஒவ்வொரு மொழியிலும் பாதிப்பு நிலவரம் பற்றி பேசப்பட்டது. இளையவர்கள் புத்தங்கள் படிப்பதில்லை என எவரேனும் சொல்லிவிட்டால் அவர்களுக்கு வயதாகிவிட்டது இளையவர்களுடன் தொடர்பில் இல்லாமல் உள்ளார்கள் என்றாகிறது என்றார் கண்ணன். இந்த உரையாடலில் மலையாள சூழலைப் பற்றி டிசி ரவி பேசியவை வியப்பையும் நம்பிக்கையையும் அளிப்பவை. கொரோனா காலத்தில் புத்தக விற்பனையை தக்கவைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட நூதன முயற்சிகளை பற்றி சொன்னார். ஸ்விக்கியுடன் ஒப்பந்தம் செய்து உணவுடன் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. புத்தகங்களை ‘அத்தியாவசிய  பொருட்களாக’கேரள அரசு கருதியது என்றார். புத்தகக் கடை, சலூன், வொர்க்ஷாப் ஆகியவை திறந்திருந்தபோது அவை சட்டத்திற்கு புறம்பானவை என மத்தியிலிருந்து அறிவுறுத்தல் வந்தபோது சலூனும் பணிமனையும் மூடப்படுகின்றன. கேரளத்தின் வாசிப்பு பண்பாடு சார்ந்து நமக்கு சிலவற்றை முக்கியமாக உணர்த்துகிறது. ‘இன்றைய மலையாள நாவல்கள்’ அமர்வில் சுபாஷ் சந்திரன் பேசினார். உலகளாவிய கருப்பொருட்கள் மலையாள நாவல்களில் பேசப்படுவதை கூறினார்கள். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு பல படைப்புகள் வந்துள்ளன, பதிலுக்கு இங்கிருந்து மலையாளத்திற்கு படைப்புகள் போகவில்லையே எனும் கேள்விக்கு ‘தமிழே மலையாளத்தின் வேர். ஆனால் தமிழிலிருந்து துண்டித்துக்கொள்ள மலையாள கருத்துலகம் விழைகிறது. அது பிழையானது.’ என்றார் சுபாஷ். கன்னட சிறுகதை விவாத அரங்கில் எங்களால் உரையாடலை  கவனிப்பது சிரமமாக இருந்தது. துளு, கொடவா, கொங்கணி, பியரி மொழி பற்றிய அரங்கிற்கு சென்றேன். சற்று உன்னிப்பாக கவனித்தால் தோராயமாக உரையாடலை புரிந்துகொள்ள முடிந்தது. ‘தெலுங்கில் பெண்களின் சுயசரிதை’ பற்றிய அமர்வு சுவாரசியமாக இருந்தது. மிருணாளினி, காத்யாயனி வித்மஹே, மல்லேஸ்வரி, ஜோதி ஆகியோர் பங்கேற்றார்கள். நல்ல தயாரிப்புடன் செறிவாக இருந்தது. தெலுங்கு இலக்கியத்தை பற்றிய பொது பார்வையை இந்த புக் ப்ரம்மா இலக்கிய விழா மாற்றியுள்ளது. தன்வரலாறில் பெண்கள் எந்த அளவு தணிக்கை செய்துகொள்கிறார்கள், துணிச்சலான  சித்தரிப்புகள் எழுதப்படுவதாலேயே ஒரு நூல் சிறந்ததாக ஆகுமா போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டன. கணவர்களை பற்றி பெண்கள் எழுதும் நினைவு குறிப்புகளில் வரிகளுக்கு இடையே வாசிக்க இடமுண்டு என சில உதாரணங்களை காட்டினார்கள். ‘தெலுங்கில் உள்ள விளிம்புநிலை குரல்கள்’ அமர்வில் ஜெகதீஷ் குமார், ஷெரிப் மற்றும் கோகு ஷ்யாமளா பங்கேற்றார்கள். அண்மையில்  தெலுங்கு எழுத்தாளர் ரமேஷ் நாயக் அமர்வை நடத்தினார். ரமேஷ் நம்பிக்கையூட்டும் கவி.  பழங்குடி இனத்தை சேர்ந்த தெலுங்கு கவிஞர். சீரிய அழகியல் நோக்கும் அரசியல் புரிதலும் கொண்டவர். வருங்காலத்தில் பெரிதாக பேசப்படுவார் என  நம்புகிறேன்.மலைப்பகுதியில் மருந்துகள் வந்து சேர்வதற்கு முன்னர் மது புட்டிகள் வந்துவிட்டன என தனது அங்கலாய்ப்பை பதிவுசெய்தார். தன்  மண்ணையும் மக்களையும் எழுதுவதே தன் கடைமை என்றார். ஜெயமோகனின் அறம் ‘நெம்மி நீலம்’ எனும் தலைப்பில் அவினேனி பாஸ்கர் மொழியாக்கத்தில் சாயா  பதிப்பகத்தால் தெலுங்கில் வெளியிடப்பட்டது. விவேக் ஷான்பாக், வசுதேந்திரா, மிருணாளினி பேசினார்கள்.  எதிர்பாராத அளவிற்கு தெலுங்கில் இந்த தொகுப்பு வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் எப்போதும் அவரை சூழ்ந்து உரையாடினர். வெளியீட்டிற்கு கொண்டுவந்திருந்த ஐம்பது பிரதிகளும் விற்றுப்போயின என்றார் பாஸ்கர்.    


தொடக்கவிழாவில் ஹெச்.எஸ். ஷிவப்ரகாஷ், விவேக் ஷான்பேக், ஜெயமோகன், வோல்கா ஆகியோர் பங்கேற்ற அமர்வில் சுருக்கமாக தமிழில் நிகழும் இரு போக்குகள் குறித்து ஜெயமோகன் பேசினார். அவரது அவதானிப்பையொட்டி மறுநாள் சிறுகதை அரங்கில் பேசினோம். இக்காலகட்டத்தின் முதன்மை சிக்கல் என்பது வெறுமை. ஆனால் அது எழுபது எண்பதுகளின் பற்றாக்குறையால் விளைந்த வெறுமையல்ல. மாறாக எல்லாவற்றின் மிகையால் விளைந்த வெறுமை. Problem of plenty. இந்த வெறுமையே இன்றைய காலத்தின் தத்துவ சிக்கல். அதை நேர்கொண்டு எழுதுவது ஒரு போக்கு என்றால் அங்கிருந்து ஆன்மிகமான நன்னம்பிக்கையும் லட்சியவாதத்தையும் நோக்கிச் செல்வது இன்னொரு போக்கு. விஷால்ராஜாவின் கதைகளை மானுடத்தின் மீதான நன்னம்பிக்கையை பேசும் கதைகள் என  சொல்லலாம். ரம்யா ஆண்டி சுப்பிரமணியம், பாலாமணி, இடா ஸ்கட்லர் போன்ற கதை மாந்தர்களைக்கொண்டு எழுதிய கதைகளை லட்சியவாத கதைகள் என சொல்லலாம். அஜிதனின் மைத்ரி, அல் கிஸா, மருபூமி போன்றவற்றை மேற்சொன்ன வரிசையில் வைக்க முடியாது. அவை சரத்சந்திரரின் வங்காள நாவல்களின் நவீன வடிவம் என சொல்லத் தோன்றுகிறது. கற்பனாவாதமென்பது எல்லா காலங்களிலும் இணையான மெல்லிய சரடாக உடன் பயணித்து வரும் போக்கு என்பதே என் பார்வை. பாலோ கொயெல்ஹோவின் ரசவாதி, ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் தி சீ கல் போன்றவை நவீனத்துவ காலகட்டத்தின் போது எழுதப்பட்டவைதான். அஜிதனின் இந்த நவ கற்பனாவாத கதைகளும் கூட ஏதோ ஒருவகையில் அந்த வெறுமையின் பள்ளத்தை  நிரப்பும் முயற்சிதான். அஜிதன் தனித்த பாதையில் செல்கிறார். அது ஒரு தனிப்போக்காக மாற வேண்டுமென்றால் அவரைப்போல மூன்று நான்கு பேர் எழுத வேண்டும். ஜெ முன்வைத்த வாழ்வின் தத்துவமற்ற வாழ்வின் நுன்மையை பேசும் அழகியல் தரப்புக்கு நான் சரியான பிரதிநிதியா எனும் ஐயம் எனக்குள்ளது.  


 ஜெயமோகனுக்கு புக் ப்ரம்மா வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது மிக மகிழ்ச்சியான தருணம். ஆனால் இந்த விருது அறிவிப்பை இத்தனை ரகசியமாக பேண வேண்டுமா என்பதை பரிசீலிக்க வேண்டும். சுசித்ராவுடன் ஒருமணிநேரம் ஆங்கிலத்தில் தங்குதடையின்றி உரையாடினார். இந்திய ஆங்கில இலக்கியத்தின் மேம்போக்கான தன்மை குறித்து பேசினார். ஜெ தன்னை செவ்வியல் மரபின் தொடர்ச்சியாகவே எப்போதும் முன்வைப்பவர். இம்மேடையில் தன்னை  Bard என்றே முன்வைத்தார். வாழ்க்கையை பாடும் கவி. அவரது கோணத்திலிருந்து காஃப்காவையும் காமுவையும் நிராகரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் மனிதர்  என்பவர்  குழு என்பதிலிருந்து புத்தொளி காலகட்டத்தின் வழியாக பயணித்து தொழில் புரட்சியையும் முதலீயத்தையும் கடந்து தனது சுயத்தை கண்டடைந்துள்ளார். தனி மனிதர் எனும் கருத்தை வந்தடைய இத்தனை ஆயிரம் ஆண்டுகால பரிணாமத்தை கடந்து வரவேண்டியிருக்கிறது. ஆகவே தனி மனித பிரக்ஞையை அத்தனை எளிதில் விட்டுக்கொடுக்க முடியாது என்றே கருதுகிறேன். தனி சுயத்திற்குள் அடுக்குகளாக புதைந்திருக்கும் பொது சுயத்தை கண்டுகொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதையே ஜெயமோகன் பேசுகிறார் என்றும் எண்ணுகிறேன். துண்டிக்கப்பட்ட தனி சுயம் என ஏதுமில்லை என்பதே அவரது வாதம். அது உண்மையும் கூட. ஏதேனும் பேரழிவு ஏற்பட்டு சொற்ப மனிதர்கள் மட்டும் எஞ்சியிருந்தால் தனிமனித சுயத்தை விட்டுக்கொடுத்து பிழைத்திருக்கும் வழியை பார்க்கக்கூடும். தனி சுயம் பொது சுயம் இவ்விரு நிலைகளுக்கு இடையேயான சமன்பாடு முக்கியமானது. தனி மனிதர் எனும் கருத்தாக்கம் இருக்கும்வரை அவரை வழிநடத்தவும் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் அமைப்புகள் இருக்கும்வரை காப்காவும் காமுவும் இருப்பார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இந்திய அழகியல் பற்றிய உரையாடலின் போது அனந்தமூர்த்தி நல்ல எழுத்தாளர் ஆனால் அவரைவிட பைரப்பாவே சிறந்த எழுத்தாளர் என்றார். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அசோகமித்திரனை இந்தியத்தன்மை குறைந்த எழுத்தாளர் என சொன்னது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தியத்த்ன்மையின் மிக முக்கியக்கூறு அதன் ‘உள்ளடக்கும் தன்மை’. இந்தியத்தன்மை என நாம் சொல்வதே பல்வேறு பண்பாட்டுக்களின் தாக்கத்தினால் தொடர்ந்து உருமாறும் பண்பாட்டைத்தான். நவீன இலக்கிய வடிவத்தை நாம் மேற்கத்திய இலக்கியத்திலிருந்து உரையாடி பெற்றுக்கொண்டோம். நமக்கான தனிவழிகளில் பயணிக்கிறோம். ஹெமிங்வேயோ, வுட்ஹவுசோ தமிழ் அகத்துடன் உரையாடி தமிழ் வாழ்க்கையை காணவும் எழுதவும் ஒரு கருவியாக ஆகிறார்கள் என்பதே உண்மை. அசோகமித்திரன் இந்திய ஆங்கில எழுத்தாளர் போல தனக்கு தெரியாத வாழ்க்கையை அந்நியமாக எழுதவில்லை. அவர் பார்த்த, புழங்கிய கீழ் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்வையே எழுதினார். ஜெ எப்படி தன்னை bard என பிரகடனப்படுத்துகிறாரோ அப்படி அசோகமித்திரன் சாமானிய மனிதர்களின் கதைகளை சொல்லும் bard. முன்னர் ஒரு நேர்காணலில் தனது கதைகள் சாமானியர்களுக்கான புகழஞ்சலி (tribute) என குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது. அவரும் இந்திய வாழ்க்கையை, இந்தியர்களின் வாழ்க்கையையே எழுதினார். ‘ஒற்றன்’ ‘18 ஆவது அட்சக்கோடு’ என நாவல்களில் பொதுவாக அவருடன் தொடர்புபடுத்தப்படும் கட்டுக்கோப்பை மீறி வெளிப்பட்ட தருணங்கள் உண்டு. ‘பிரயாணம்’ மாதிரியான மறைஞான கதைகளை எழுதியுள்ளார். அவரது அழகியல் நிலைப்பாடு அவரெழுதிய வாழ்க்கையின் நம்பகத்தன்மையை குலைக்காது. எனது பாதை என்பதை ஜெக்கும் அமிக்கும்  இடைப்பட்ட பாதையாக காண்கிறேன் என்பதால் என்னால் இருவரின் அழகியலையும் புறம் தள்ள முடியாது. 


வயிறை பதம்பார்க்காத எளிய உணவுகள், இனிமையான சூழல், நண்பர்கள், நல்ல நிகழ்ச்சிகள் என மூன்று நாட்கள் கடந்ததே தெரியவில்லை. தமிழ் அமர்வுகளை பாவண்ணன் ஒருங்கிணைத்துள்ளார். அழைக்கப்பட்டவர்கள் பற்றியும் விடுபட்டவர்கள் பற்றியும் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்ததை கவனித்தேன். சாகித்ய அகாடமியின் சில கூட்டங்களுக்கு சென்றவன் என்ற முறையில் தமிழ் நவீன இலக்கிய வெளிக்கு வெளியே தொடர்பே அற்று இருப்பவர்கள் பலரை கூட்டங்களில் சந்தித்து வியந்திருக்கிறேன். தமிழ் நவீன இலக்கிய வெளியில் இருந்து எவர் அழைக்கப்பட்டாலும் சரிதான் என்பதே என் நிலைப்பாடு. மொழியை, கருத்துக்களை சரியாக பிரதிநித படுத்துகிறாரா என்பது மட்டுமே கேள்வி.   அழைக்கப்பட்டவர்களில் எனக்கும் சிலரின் மீது விமர்சனங்கள் உண்டு. பொறுப்பாளராக என்னை நியமித்திருந்தால் நான் வேறு எழுத்தாளர்களை அழைத்திருப்பேன். இப்படி ஒவ்வொரு எழுத்தாளரும் சிலரை அழைக்கக்கூடும். இது நாற்பது ஆண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர் பாவண்ணனின் தேர்வு. அதற்கப்பால் விவாதிக்க ஏதுமில்லை. இலக்கிய கூடுகைகளுக்கு  கொஞ்ச நாட்களுக்கு ரத்தம் சூடாகி நாடி நரம்பு முறுக்குடன் இருக்கும். படிக்காமல் விட்ட தடித்தடி புத்தகங்கள் என்னை அழைக்கின்றன. பார்ப்போம்.  


  


  •