Reading view

‘அகாலம்’தொகுப்பிலுள்ள இருகவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்           …

அகாலம்தொகுப்பிலுள்ள இருகவிதைகள் குறித்து 

வான்மதி செந்தில்வாணன்

                   கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சமயவேல் அவர்களின் அகாலம்” எனும் கவிதைத் தொகுப்பை இரண்டாம் முறையாக வாசிக்க நேர்கையில் தொகுப்பின் முதல் கவிதையான வயலின் மனிதன்” ஐ சட்டென கடக்க இயலவில்லை.’’வயலின் மனிதன்‘ தலைப்பின்கீழ் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளனஇரண்டுமே இசை சம்பந்தமான கவிதைகள்இக்கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் மனதிற்குப் பிரியமான இசையினை இன்னும் நெருக்கமாய்க் கேட்கத் தோன்றியதுமட்டுமன்றி கவிதை வாசித்தல்இசை கேட்டல் எனும் இரு நிகழ்வுகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென இரட்டை மகிழ்வினை ஒருசேர அனுபவிக்க வாய்த்தது மனதிற்கு அலாதியான ஒரு உணர்வினை அளித்ததுஅத்தகையதொரு மனநிலையில்தான் மெல்லமெல்ல இக்கட்டுரை உருவாக்கம் பெற்றது.

வயலின் மனிதன்


வயலின்களும் இசைப்பர்களும் மறைந்துவிட
இசை என்னைச் சுருட்டி எறிகிறது
பூமிக்கு வெளியே

குரல்களின் அடுக்குகளுக்குள்
பதுங்கியிருக்கும் வண்டுகள்
பாய்ந்து வெளியேறி
என் தலையை மூடுகின்றன

எந்த வடிவத்திற்குள்ளும் அடங்கமுடியாத
உயிரின் துக்கம்
ஒரு ஒற்றை வயலினிலிருந்து
கறுப்பு வானமாய் பெருகுகிறது.

இன்னொரு உடுமண்டலத்தில்
நானும் பியானோவும் தொங்குகிறோம்
ஒரு புல் நுனியில்
தினசரி வாழ்விலிருந்து
மில்லியன் மைல்களுக்கு அப்பால்
ஓர் அமானுஷ்யப் பரப்பில்
தாளங்களின் காலக்கணக்கு
சிம்பனியின் அடியாழத்தில்ந
ஒரு தனிமனிதனின் விம்மல்

நடத்துனனின் ஒரு சிறு தவறில்
முழு ஆர்க்கெஸ்ட்ராவும்
என்மேல் பாய்கிறது.
ஒவ்வொரு உறுப்பாய் என்னைக் கழற்றி எறிந்துவிட்டு
ஓய்கிறது இசை.


(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)


                   ஒரு ஆர்கெஸ்ட்ராவின் அற்புதமான நிகழ்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. டேப்ரிக்கார்டரில் பாடல் கேட்கையில் ஒலிநாடாவில் ஏற்படும் குறைபாடுகளாலோ, பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் மைக் முன் அரங்கேறும் நிகழ்வுகளை மனமொன்றிக் கவனிக்கையில் திடீரென ஏற்படும் உச்சஸ்தாயிலான கீச்சொலியிலோ அல்லது மனதிற்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கையில் வானொலியில் ஏற்படும் கரகர அதிர்விலோ இப்படி ஏதேனுமொரு நிகழ்வில் இம்மாதிரி மனம் கூசும்படியான அதிர்வினை அனைவரும் சந்தித்திருக்க அநேக வாய்ப்புகளுண்டு. இசையில் இன்புற்றிருக்கும் மனமானது திடுமென இரைச்சலுக்கு உட்படுத்தப்படுகையில் அதுவரை தான் அனுபவித்த, தனக்குப் பிடித்தமான ஸ்பரிசத்தினை முழுமையாக இழந்துவிடும் நிகழ்வே இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, கிட்டத்தட்ட காற்றிற்கு அசைந்து இசையெழுப்பும் மரமொன்றை வேரோடு பிடுங்கி எறிவது போலத்தானென எண்ணத் தோன்றுகிறது. கவிஞர்களின் இருப்பானது பூலோகமாக இருப்பினும் அவர்களின் அகவெளியானது அவ்வப்போது பூமிக்கு வெளியிலான சஞ்சரிப்புகளில் திளைத்தூறி தனது விருப்பங்களுக்கும் , அறிவுத் தேடல்களுக்கும் தீனியிட்டுக் கொள்கின்றன என்பதற்கு முதற்பத்தி சான்றாக அமைகிறது. கண்கள் மூடியபடி நாம் ரசிக்கும் இசையானது நம்மைச் சுருட்டி பூமிக்கு வெளியே வீசவேண்டுமாயின் அது மனதிற்கு இசைவானதாகவோ அல்லது ஏற்புடையதாகவோ இருக்க வேண்டும்.் இசையின் மீது அனைத்து உயிர்களுக்கும் மயக்கமுண்டு எனும் நிதர்சனத்தை எண்ணுகையில், ‘இசையால் வசமாகா இதயம் எது?’ எனும் பாடல் வரியானது நினைவில் ஊர்கிறது. இசையும், குரலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று தழுவி நம் மனதின் ஆழத்தை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. உயிரின் துக்கமென வயலினிருந்து கசியும் இசை அரூபமானது. கறுப்பு வானம் என்பது காட்சிப்படிமம். எனவே கறுப்பு வானமாகப் பெருகும் உள்ளுணர் வரிகள் வாசகருக்கு ஒரு அழுத்தமான புறவெளிக்காட்சியை அகத்துள் தோற்றுவிக்கிறது. மனித அறிவானது தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கி நகர்வது போல மூன்றாம் பத்தியின் வரிகள் அரூபத்திலிருந்து மெல்ல ரூபம் நோக்கி நகர்கின்றன.


சில பாடல்கள் சுமையான மனதை சட்டென இலகுவாக்கும் தன்மை வாய்ந்தவை. ஒரு பருப்பொருளோ அல்லது மனிதனோ சிறு புல்நுனியில் தொங்கவியலாதுதான். மனமானது இலேசாகிப் பறக்கும் தருணத்தில் அப்படியொரு அரிதான வாய்ப்பு அவருக்கு கிட்டியதை அறிவதோடு குரலின் ரிதம் குறித்த அவரின் புரிந்துணர்வையும் நாம் அறியப்பெறுகிறோம். எந்தவொரு மனமும் இரைச்சலை விரும்புவதில்லை. ஆர்க்கெஸ்ட்ரா நடத்துனனின் சிறு தவறால் சட்டென தன்னுணர்வு நிலைக்குத் திரும்புவதைத்தான் இறுதிப்பத்தி சுட்டுகிறது. இசை இரைச்சலாக மாறும் தருணம் மனம் சந்திக்கும் அதிர்வில் அவர் ஏதுமற்ற ஒன்றாகி எதுவுமே இல்லாமல் ஆகிறார். The Pianist திரைப்படத்தில் இசையைத் தொடர்ந்துவரும் இரைச்சலும், இரைச்சலினூடான இசையுமென சற்று கனத்த மனஅதிர்வினை உண்டாக்கிய காட்சிகளை அசைபோடுகிறது மனம்.

 

அரங்கை விட்டு வெளியேறுகிறேன்


ஒரு பிரும்மாண்டப் பியானோவின் இசை நகர்மேல் பொழிந்து கொண்டிருக்கிறது.
பஸ் ஸ்டாப், கடக்கும் வாகனங்கள்,
விருட்டென்று வந்து எனை ஏற்றிக்கொண்ட சிட்டிபஸ்; வெளியில் விடைதரும் சிநேகிதி
ஓரத்தில் ஒளி கசியும் கட்டிடங்கள்
வேப்பமரங்கள், கறுப்புச் சாலை, கடைகள்,
வேதக்கோயில், த்யேட்டர், ரிக் ஷா வரிசைகள்
எல்லாவற்றுக்குள்ளும் இருந்து
எட்டிப்பார்க்கிறது ஒரு வயலின்.

எந்த ஸ்டாப்பிலோ இறங்குகிறேன்
எந்தத் தெருவிலோ நடக்கிறேன்
எந்த வீட்டையோ தட்டுகிறேன்
ஓர் உயிருள்ள வயலினாக நான்
எப்பொழுதோ மாறிவிட்டிருந்தேன்.


(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra






                  கவிதை என்பதை மௌனம் மலர்த்தும் அலாதியான இசை எனவும் குறிப்பிடலாம். இசையானது எல்லோர் வீட்டின் கதவுகளையும் தட்டக்கூடியது. நாம்தான் செவிமடுக்க மறுத்து அலட்சியமாய் அவைகளைக் காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இசையானது ஒலியுணர்திறன் கொண்டது மட்டுமன்றி காட்சி மயக்கத்தினையும் உணரப்பெறுவதுமாகும். இக்கவிதையைப் பொறுத்தமட்டில் ஓரத்தில் ஒலி கசியும் கட்டிடங்கள், ரிக் ஷா வரிசை போன்ற காட்சி பிம்பங்களிலிருந்து ஒரு வயலின் எட்டிப்பார்க்கிறது எனும் நேர்த்தியான வரியானது காட்சிமயக்கத்தின் அற்புதத்தை மனதினுள் நிகழ்த்திக் காட்டுகிறது. மிகுந்த மெல்லதிர்வை உண்டுசெய்யும் இக்காட்சியானது ஒரு சிலிர்ப்பான நுண்ணிசையைக் கசிந்து கொண்டே மனம் முழுக்க அடர்வாக விஸ்தரிக்கிறது. ஓரான் பாமுக்ன் பனிநாவல் முழுக்க விசித்திர நிலமான துருக்கியின் கார்ஸ்நகரக் கட்டிடங்கள் பனியினூடாக இப்படியொரு நுண்ணிசையைக் கசிந்துகொண்டே இருக்கும்.


                பொதுவாக மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நேர்மறையானாலும் சரி, எதிர்மறையானாலும் சரி சில பொழுதோ, காலமோ தொடர்ந்து அதன் நிழல்களில் சஞ்சரித்தவாறு மற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிடுகிறது. இங்கு நேர்மறை உணர்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. சில நிகழ்வுகளின் பொருட்டு ஒரு புள்ளியில் குவிந்து அங்கேயே நிலைபெறுகிற நம் கவனமானது அதன்பிறகான எவ்வித பிரம்மாண்டங்களின் லயிப்பிலும் ஈர்ப்பு பெறுவதில்லை அல்லது அவ்வாறு இயங்கவென மனம் நம்மை அனுமதிப்பதில்லை. மழை நனைப்பதுபோல் ஒரு நகரை இசை நனைப்பதை உணர்வதென்பதே பேரின்பம். அம்மாதிரியான மனோநிலையில் தன்னைச் சூழ்ந்துள்ள உயர்திணை, அஃறிணை யாவற்றிலும் வயலின் இசை கசிந்துகொண்டிருப்பதை உணர்வதென்பது பேரின்பத்தினூடான மற்றுமொரு பேரின்பம். இசையில் மயங்கிய ஒரு மனமானது இந்த உலகத்தை இசையாகவே காணும் அறிவுமயக்கத்தில் சஞ்சரிப்பதுடன் அதை கொண்டாடிக் களிக்கிறது. ஒரு மனிதனின் இசைவயப்பட்ட மனப்பிரியத்தை வெளிப்படுத்தும் பெருங்கடத்தியாக தன்னை நிறுவிக்கொண்டுள்ளது இக்கவிதை.


               உயிரின் வேர்வரை ஊடுருவி ஒரு உணர்வினை முழுமையாய் கவித்துவமாக்க வேண்டுமெனில் தான் அதுவாகவே மாறுவதன்றி வேறெப்படி இயலும்? எந்த ஸ்டாப்பிலோ இறங்கி, எந்தத் தெருவிலோ நடந்து, எந்த வீட்டையோ தட்டினாலும் திறந்துகொள்ளும் எல்லாக் கதவுகளும் அவருடையதாகவே இருக்கிறது என்பதாக விரிகிறது எனது சிந்தனை.

மேற்கூறிய இரு கவிதைகளிலும் வயலின் மற்றும் பியானோ ஆகிய இரு இசைக்கருவிகளின் தாக்கம் தெளிவாகிறது. முதற்கவிதையானது பாழ்பட்ட இசை குறித்த உணர்வையும், மற்றது ஒரு இசையூறிய மனதின் உணர்வுப் பிரவாகத்தினையும் நயமாக எடுத்துரைக்கிறது. முதற்கவிதையில் மன அடுக்குகளைச் சீர்குலைத்தபடி தன்னிலிருந்து விடுபட்டுச் சுழன்றோடி மறையும் இசையானது மற்றதில் அதே வேகத்தில் அவ்வளவையும் சீர் செய்வதெனும் கருத்தானது உணரக் கிடைக்கிறது. வாழ்வின் உன்னத தருணங்களை உயிர்ப்போடு மலர்த்துகிற இதுபோன்ற கவிதைகளை அவ்வளவு எளிதில் கடக்க முடிவதில்லை. சில சமயங்களில், அண்டை வீட்டில் கமழும் தாளிப்பு மணமானது நம் வயிற்றுப்பசியைக் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதுபோல, கவிஞரின் இவ்விதமான இசைத்தாளிப்பானது மனத்தின் இசைப்பசியைத் தூண்டும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொகுப்பு _ அகாலம்
ஆசிரியர் _ சமயவேல்
வெளியீடு _ சவுத் ஏசியன் புக்ஸ்
முதல் பதிப்பு _ 1995

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி: இணைய இதழ் பதாகை, மே-2019

  •  

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - சமயவேல் விக்ரமாதி…



அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - சமயவேல்


விக்ரமாதித்தன் நம்பி



அசலானதும் உண்மையானதுமான கவிதை - தானப்பர் தெரு


தேடிச் சென்ற நண்பரின்
மூடிய கடைப் படிகளில்ஓய்ந்து உட்கார்ந்தோம்மனைவி பற்றிய புகார்களைபுதைக்கத் தொடங்கினான் நண்பன்உறவுகளின் கசப்பு எங்கள்கண்களில் கசிந்து கொண்டிருக்ககுறுக்கிட்டது ஒரு குழந்தைக்குரல்ராணி பேக்கரி அய்யா வீடுஎங்க சார்?


பார்வையற்ற அப்பா, அப்பாவின் கையில்
பார்வையற்ற அம்மா, அம்மாவின் கையில்
ஒரு துறுதுறு சிறுமி


வாங்கப்பா அங்க கேட்கலாம்
நகர்ந்தது குடும்பம்
கைகளாலும் குரல்களாலும் இணைந்த
அந்த சிறு குடும்பம்
ஒரு பேரதிசயமாய் மிதந்து கொண்டிருந்தது
தானப்பர் தெருவில்


ஒரு சிறுவன், அவன் கையைப் பிடித்தபடி
சார் உங்களுக்குத் தெரியாதா

சமயவேல்
(மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பு பக் 36)


"சோற்றுக்கும் தண்ணிக்கும் புணர்ச்சிக்கும் தூக்கத்துக்கும் அல்லாடுகிற எளிய மனிதர்களின் வாழ்க்கைதான் என்னைப் பெரிதும் ஈர்த்து எழுதத் தூண்டுகிறது. தத்துவக் குழப்பங்களுக்கும், கண்டுபிடிக்கிற மாயப்பயணத்துக்கும் சத்தியமாய் நான் தயாரில்லை. நிலவு கேட்டு அழுகிற குழந்தை இல்லை நான். தெருவில் விற்கிற ஐந்து காசு முறுக்கு போதும்.
படைப்பு, படைப்பு மனம், அதைத்தாங்கி இருக்கும் ஆள் எல்லம் ஒரே ஒரு நேர்கோட்டின் விரிவே. அல்லது ஒரு ஒற்றைப் பாத்தியில் முளைத்த ஒரே ஒரே செடிதான்.


செடிகளைப் பற்றியோ, கவிதையைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ எந்தவிதமான கோட்பாடுகளையும், தீர்மானமான முடிவுகளையும் கொள்ள முடியாத ஒரு அருமையான சுதந்திரம் கிட்டியிருக்கிறது. இந்த சுதந்திரமான வெறுமையே எச்சார்பு கொண்டு பார்த்தாலும் தவறுகளற்ற காரியங்களை விடாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.


மனிதனே போல் வாழ்வு, வாழ்வே போல் கவிதை.

இப்படியெல்லாம் இந்த வாழ்வு பெருங்கசப்பு அடிப்பதனால்தான் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிற மனோபாவத்துடன் நான் நடந்து கொள்ள முயற்சி செய்கிறேன். கவிதைகள் கூட அந்தத் திசையில்தான் எழுத ஆசைப்படுகிறேன்.


சமூகம் சூழல் அவன் இவன் உவன் அது இது உது எல்லாம் சரியில்லை என்று எத்தனை நாள்தான் நாம் புலம்பித் தவிப்பது. புனுகுப்பூனையைப் பிதுக்கிப் புனுகு எடுக்கும் வேலையா நாம் பார்ப்பது......"


(சமயவேலின் கடிதங்களிலிருந்து)


இப்பொழுது புரிந்திருக்கும். சமயவேல் என்கிற கவிஞனை.


சமயவேலின் கவிதைகள் நவீன கவிதையிலேயே தனியானவை. எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவை. பருத்திப்பூக்கள் போல். அதேசமயம். வாழ்வின் சாரம் செறிந்தவையும் மனசின் நுட்பம் கூடியவையும் ஆகும். வெள்ளைக்கவிதைகளொப்ப. எதிர்கவிதைகள். மாதிரி இருப்பவை. எனில் அசலானவை. உண்மையானவை.


நவீன வாழ்வில் நேரிடும் நிலைகொள்ளாமை குறித்து சமயவேல் அளவுக்கு வேறு யாரும் எழுதவில்லை. இயல்பாக. மேலும் பிறத்தியார் (அதர்ஸ்) பற்றி அக்கறைகொண்ட கவிதைகளை அதிகமும் அவரிடம் காணமுடியும். இந்த அம்சம் நவீன கவிதைக்கு வலுவூட்டக்கூடியது.


தொடக்க காலத்திலிருந்தே தனிமனிதன் என்பதே பெரிதும் அமைந்துவிட்ட நம் கவிதை சமன் பெறுவதற்காகவாவது அடுத்தவர்கள் பற்றிய கவிதைகள் வேண்டியதாக இருக்கின்றன. பிறகும். கவிதை பொதுவெனில் கவிதைப்பொருளும் பொதுவாக இருக்க வேண்டாமா. தன்னுள்ளேயே குமைந்து கொண்டிருப்பது தகுமோ கவிஞனுக்கு. அவன் காற்றுப்போல ஆக வேண்டாமோ. எவ்வளவு காலம் இப்படியே (தனிமனித நிலையில்) இருப்பது.

நாடகம் எதார்த்தமாக தொடர்ச்சி ஒரு கேள்வியில் மையம். காட்சி அனுபவம். முடிவு. கவிக்கூற்று.


அபூர்வமான விஷயம். சுருங்கச்சொல்லல், எழுதிப் பழகிய மொழி, தேர்ந்த கூறல், அத்தனையும் சேர அசலான கவிதை.


கவிதையின் ஊற்றுக்கண் கவிஞனின் மனசில்தான் இருக்கிறது. வெள்ளத்தனைய மலர்நீட்டம்.


நல்மனத்தின் விகசிப்பில். அனைத்தின் மேலுமான காதலில், பூமியின் எல்லா வகை விசாரங்களும் கோபங்களும் வேதனைகளும் சிக்கல்களும் சிடுக்குகளும் தீர்க்கப்படுவதற்கான சாத்தயங்களை அடையாளம் காட்டுபவை இவரது கவிதைகள். என்று இந்தத் தொகுப்பின் பின்னட்டையில் குறிப்பிட்டிருப்பது, ஒப்புக்கல்ல, உண்மைதான். தானப்பர் தெரு கவிதை ஓர் எடுத்துக்காட்டு,


இடைநிலை இதழ்கள் எல்லாவற்றிலும் எண்ணற்ற கவிதைகள் இடம்பெறுகின்றன. எப்பொழுதாவதுதான் உருப்படியான கவிதைகள் காணக்கிடைக்கின்றன.


குறிஞ்சி, பன்னிரெண்டாண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும்.



நன்றி: கூடு மின்னிதழ்


  •  

பகிர்வு: கனியமுது கவிஞர் சமயவேலின் இப்போது நீங்கள் என்ன செய்து …

பகிர்வு: கனியமுது



கவிஞர் சமயவேலின்

இப்போது நீங்கள்
என்ன செய்து 
கொண்டிருக்கிறீர்கள்? 



கவிஞர் சமயவேலின் 'மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்', 
'பறவைகள் நிரம்பிய முன்னிரவு' ஆகிய கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வாசித்த ஆவலுடன் இத்தொகுப்பினை வாசிக்க எடுத்ததும், வாசித்ததும் முடித்ததும் எப்படி நிகழ்ந்தது என்பது அறியாத நிலையில் அட்டைப்பக்கத்தை அதில் இருக்கும் வாசகங்களை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
“ இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று நம்மைப் பார்த்து பரிவாக\ சட்டமாக\ பகடியாக விசாரணை செய்கிறது ( பழம் ) பெரும் கவிஞர் சமயவேலின் இக்கவிதைத் தொகுப்பு.
எக்காலத்திற்கும் பொருந்தும் பேருண்மைகளை பிரகடனபடுத்துபவை கவிதைகள் மட்டுமே என்பதற்கு இவரது கவிதைகளே மிகச் சிறந்த சான்று.
காலம் நிலம் வெளி இவைகளின் சுவாசத்தை எளிய மொழியில் கவிஞர் இசையென பெருக்கெடுத்து ஓட விடுகிறார் இத்தொகுப்பில் உள்ள தன் கவிதைகளில் மார்கழி மாதத்தில் காலம் கருக்கிய மனிதர்கள்
நிரந்தரமாக விடைபெறும் நிகழ்வுகள் ஏற்படுத்தும் பெருந்துன்ப உணர்வுகளும்....
குளிரும் வெய்யிலும் ஒன்றாக பரவும் தை மாதத்தின் கொண்டாட்ட உணர்வுகளும் நிறைந்தவை இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் என்று சொல்லத்தோன்றுகிறது.

பூசணிப்பூவை உச்சியில் சூடிக்கொண்ட சாணிப்பிள்ளையாரை
லேவண்டர் நிறத்தில் கொத்தாகப் பூக்கும் அவரைப்பூக்களை
தித்திக்கும் கரும்பை
பசும் மஞ்சளை
கூம்பு வடிவ வெள்ளை நிறப் பன்னைப்பூக்களைமாக்கோலம் வரைந்த பொங்கல் பானைகளை
வாசல் வண்ண கோலங்களை.......
எல்லாம் பார்த்ததும் ஏற்படும் பரவசத்தில் ததும்பி வழிகிறது இவரது கவிதைகளை வாசித்த மனம்.
அதே சமயம் கருப்பு ஒரு நிழலாக தொகுப்பில் உள்ள பல கவிதைகளில் ஊடுருவி பாய்கிறது. அம்மனை மறத்தல் இயலுமா என்ற கவிதையில் “ வாஞ்சையுடன் தழுவுகிறது ஒரு சிற்றிருட்டு ” என்ற வரிகளை வாசிக்கும்பொழுதே யாருடைய அன்பின் பிடியிலோ நம் உயிர் ஆதுரத்துடன் அணைக்கப்பட்டு விடுவதை உணர்கிறோம்.

காலம் அசைக்க முடியாத ஒரு ஸ்தூல பிம்பமாக நிலைத்துவிட்டது போன்ற பிரமையை பல கவிதைகளில் உணரமுடிகிறது.

கருந்தொப்பி முதியவர் என்ற முதல் கவிதையில் வரும் முதியவர் அழுதுகொண்டிருக்கிறார் . அவரைப் பார்த்து யாரிவர் என்று கேட்டு தெரியாது என்று கூறியதும் புரியாமையின் அதிகாலைத்தெருவில் கவிஞன் நடந்து போய்விடுகிறான். நாம்தான் மலைத்து நின்று விடுகிறோம். நம் மனம் இப்போது எல்லோரது வீட்டு ( இல்லாத ) திண்ணையிலும் காணக்கிடைக்கும் முதியவர்களை அவர்களுடன் யாராவது ஆதரவாக பேசும் சந்தர்ப்பங்கள் அரிதாகி வருவதை எல்லாம் நினைத்துப் பதறி விடுகிறோம். அவரை நானாகவும் நீங்களாகவும் அனைத்து முதியவர்களின் குறியீடாகவும் தான் கசியும் கண்ணீருடன் பார்க்க முடிகிறது .
நுரையீரல் பூக்கள் பூத்தகவிதையின் நறுமணம் வீசும் வெளியில் வாசகன் மிதக்கிறான்.
“ ...... ரஸனைக் குலைவை உண்டாக்கும் நுரையீரல் பூ கவிதையில் வரலாமா?
ஆனால் மரத்தில் பூத்திருக்கிறதே!
ஒரு கவி எந்த மரத்தையும் வணங்கி 
அண்ணாந்து உச்சி துழாவி 
வானம் பார்க்க வேண்டும் என்று 
நமது பட்சிகளே அழைக்கின்றன “

அழகு என்பது காணும் பொருளில் இல்லை காண்பவர் கண்களில் உள்ளது
கவியின் கண்கள் நுண்மையானது
கவியின் மனமோ விசாலமானது
“பட்சிகளே அழைக்கின்றன” என்று இரண்டு சொற்களில் இறைவனை வானத்திலிருந்து பூமிக்கு கட்டி இழுத்து வந்து விடும் கவியாற்றலை மெச்சியபடி
கழுதையின் மீது பயணித்த மீட்பவன், மனதில் நிழலாட மேலே வாசிக்கிறோம்.

“அம்மாவின் யானைகள் தேசம்”

“அவள் இறந்து போன
அதே முப்பத்தைந்து வயது இளமையில் இருந்தாள் அம்மா
அறுபது வயது நிரம்பிய என்னை
ஆரத்தழுவிக் கொண்டாள் அம்மா “

கவிதை என் அப்பாவின் மடியில் என்னைக் கிடத்தி விடுகிறது. நான் கேவி கேவி அழுதுக்கொண்டிருக்கிறேன். எத்தனை வயதானால்தான் என்ன அப்பா அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது. எல்லோரது மனதிலும் இருக்கும் ஏக்கத்தின் சாயலை பொதுமைப்படுத்தி விடும் கவிதை இது.
இவரது வாழ்க்கையைக் கட்டமைப்பதில் இரண்டு பெண்மணிகள் (இவரது அம்மா இவரது அம்மாயி ) அசைக்க முடியாத ஆளுமைகளாக நிலைத்து நிற்பதை 'அம்மாவின் யானைகள் தேசம்' இவரது 'அம்மாயி ஒரு தூதுவளைச் செடியை வளர்த்தாள்' ஆகிய கவிதைகள் அறியத்தருகின்றன.

“அப்பத்தாவின் அடுக்குப்பானைகள் “ ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதைகளும் நிறைந்த ஒரு விதைப்பெட்டகம் என்பதை வாசிக்கும் பொழுது ஏற்படும் நெகிழ்ச்சியில் தத்தளிக்கும் மனதின் சிந்தனை உடனடியாக வேறு திசையில் பாய்கிறது.
வீட்டிற்கு ஒரு விதைக் காத்த அம்மன் வாழ்ந்த காலங்கள் அருகி உலகுக்கே விதையற்ற பயிர்களை சாகுபடி செய்ய அரசே விதையழிக்கும் அம்மனாக தலை விரித்தாடும் கலிகாலத்தின் அவலத்திற்கு சாட்சியாக இக்கவிதை நின்று கேள்வி கேட்பது விழ வேண்டிய காதுகளில் விழவேண்டுமே என்ற கவலை பற்றிக்கொள்கிறது.

எல்லோருக்குள்ளுமே ஒரு குட்டிப்பையனின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஓராயிரம் கவிதைகள் வாழ்வின் அந்தகாரத்தை கிழித்துத் தோரணம் கட்டி விளையாட்டுக் காட்டுகிறது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே முடிந்தது வாழ்க்கை என்று முடிந்து விட வேண்டும் நம் வாழ்வும் என்ற பேராசை எழுப்பும் கவிதை ஒரு குட்டிப்பையனாக இருந்தபொழுது என்ற கவிதை
“ஆமைகளும் குருவிகளும் ஒரு குடும்பம்
நான்
நானும் அந்தக்குடும்பம்தான் “ 
அவ்வளவுதான் முடிந்து விட்டது கவிதை
ஆஹா யாருக்குத்தான் இப்படி இயற்கையோடு தன்னை அடையாளப்படுத்தி இணைத்துக்கொள்ள ஆசை இருக்காது. நானும் அந்தக் குடும்பம்தான் என்று கை உயர்த்தி சொல்லத் தூண்டும் கவிதையின் அழகில் சொக்கிப்போகிறோம்.
வாசிப்பவருக்குப் புரிதலில் சிக்கலைத்தராத......
தன்னை புறக்கணிக்கும் கவிதைக்குள் பிரவேசிக்கத் துடிக்கும் வாசகனின் ஆர்பாட்டங்கள் எதுவும் வேண்டாத கவிதைகள் சமயவேலின் கவிதைகள் .
வாசகனால் கவிமொழியோடு பயணித்து அவர் கவிதைகளை அவர் படைத்த அழகியலோடு அவைகளை புரிந்துகொள்ள முடிவது என்னைப்போன்றவரகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்வேன் .
கவிதை மொழி இயல்பில் கைவரப்பெற்ற கவிதைக்காரனின் உணர்வுகள் கவிதைகளில் பிடிபட்டுள்ளதை இரசித்து இரசித்து வாசிக்க வாசிக்க திகட்டினாலும் விடாமல் வாசிக்க தொடரச்சொல்லி தூண்டும் கவிதைகள் இவை.
ஆங்கில இலக்கிய வரலாற்றில் ரொமாண்டிசிசம் என்ற இயக்கத்தை முன்மொழிந்த மகா கவி வோர்ட்ஸ்வொர்த் ஒரு இயற்கை உபாசகன். கவிஞர் சமயவேலும் மீண்டும்மீண்டும் தன்னை இயற்கையின் உபாசகன்/காதலன் என்று பிரகடனப்படுத்திகொள்ளும் இன்னுமொரு தொகுப்பு .
“ .......ஆமாம் நாங்கள்,
நானும் பழமும் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் ?”
இந்த வரிகளை கவனியுங்கள்
ஞானத்தின் திறவுகோள் அனுபவமா அனுபவத்தில் எழும் கேள்வியா என்றால் நான் இரண்டும் என்பேன் . சமயவேலும் “ இப்போது நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் “ என்று கேட்கிறார் . இந்த கேள்வி உலக மாந்தரை நோக்கி போகிற போக்கில் வீசி விட்டுப் போகும் கேள்வி இல்லை .
பழச்சாறாக அவரது நாவின் ஆயிரம் ருசியரும்புகளை ஊடுறுவுவது
பேரிக்காயின் சுவை மட்டுமா ?

“எந்த நீரோ எந்தப் பனியோ எந்த மேகமோ
எந்த மழையோ எந்த மரமோ “
என்ற கேள்விகளுக்கு பதிலாக
பிரபஞ்சத்தை நோக்கி கை உயர்த்தி வணங்கி அதன் காருண்யத்தை அனைவரின் மீதும் பொழியச்செய்யும் கவியின் நற்கருணையை அல்லாமல் நீங்கள் எதைச்சொல்ல முடியும்?
கவிதைகளை வாசிக்காத கவிதைள் பற்றிய பெரிய அளவிலான மதிப்பீடுகள் இல்லாத நான் கவிதைகள் பக்கம் எப்படித் திரும்பினேன் என்பது மிகுந்த ஆச்சர்யத்தை எனக்குள் விதைக்கிறது .
******

  •  

சமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பை முன்வைத்து: இளங்கோ…

சமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பை முன்வைத்து: இளங்கோ கிருஷ்ணன்    


                                                               



மனிதன், தன்னைப் படைத்த சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்
                                                                                 – ழான் பால் சார்த்தர்
எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன
போதிசத்துவர்களே காண்பவையும் காண்பவனும்
எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன
                                                                                -  தம்மபதம்
i)

Existentialism எனப்படும் இருத்தலியம் சார்ந்த உரையாடல்களின் போதெல்லாம் தமிழில் தவறாது குறிப்பிடப்படும் படைப்பாளிகளில் சமயவேலும் ஒருவர். பத்தொன்பதாம்  நூற்றாண்டில் துவங்கி உலகப் போர்கள் வரை ஒரு பேரலையென மேற்கின் அறிவுலகை ஆதிக்கம் செலுத்திய இந்தக் கருத்தியலானது தமிழில் 1970களில்தான் ஒரு தத்துவ சொல்லாடலாக பிரபலமடைந்தது. ஆனால் எந்தவொரு நவீன சிந்தனையாயினும் அதன் எதாவது ஒரு சாரம்சமோ அல்லது முழுதுமோ எல்லாப் பண்பாடுகளிலும் வரலாற்றின் ஏதாவது ஒரு தருணதில் இருந்தே வந்திருக்கிறது என்பதற்கேற்ப தமிழிலும் இருத்தலியத்தின் சிந்தனைக் கூறுகளை நாம் சங்க இலக்கியங்களில் கூட காண முடியும்.

இருத்தலியம் என்ற நவீன கோட்பாட்டிற்கான இலக்கணத்தை மேற்கின் வரையறைகளில் வைத்து பேசுவோம் எனில் தமிழில் தனிப்பாடல் திரட்டுகளில் இருந்தே இருத்தலிய சிக்கல்களால் ஆன கவிதைகள் எழுதப்படத் துவங்கின எனலாம்.    வரலாற்றுரீதியாக தமிழில் தனிப்பாடல்களின் காலம் என்பது நவீனத்துவம் அறிமுகமாகத் துவங்கிய காலம். அதாவது ஆங்கிலேய அரசின் வழியாக இந்தியச் சமூகம் மேற்கின் நவீன சிந்தனைகளுக்குள் ஆற்றுப்படத்துவங்கிய காலம். இதை தமிழ் இருத்தலியத்தின் துவக்ககாலம் என்றே சொல்ல முடியும். இந்திய குடிமைச் சமூகம் நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு மாற்றாக முதலாளித்துவ விழுமியகளுக்குள் பயணப்படத் துவங்கிய இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் கவிஞனின் ஆற்றாமையையும், வறுமையையும், சமூக ஒறுப்பையும் தங்கள் காலகட்டத்திற்குள் இருந்தே பேசின எனவே இதில் மேற்கின் இருத்தலியதின் அடிப்படைகூறுகளான  நவீன விஞ்ஞானவாதம் உருவாக்கிய இருப்பு குறித்த அபத்தம், அந்நியமாதல் போன்ற சொல்லாடல்கள் இடம் பெற சாத்தியமில்லை. தனிப்பாடல் திரட்டுகள் முதல் பாரதிக்கு சற்று பிந்தைய காலக்கட்டம் வரை தமிழ் இருத்தலியமானது இவ்வாறே இருந்து வந்தது. 

விடுதலைக்கு பிறகான புதிய குடிமைச் சமூகதில் பிறந்த படைப்பாளிகள் எழுத வந்த போது இங்கு முதலாளித்துவம் நன்கு வேரூன்றியிருந்தது. ஒரு தலைமுறைக்கும் மேலாக இங்கு நடைபெற்ற முதலாளித்துவ-ஜனநாயகம் அறிவுச் சூழலில் ஆழமான அவநம்பிக்கைகளையும், மாற்றுச் சமூகத்திற்கான தேடலையும் உருவாக்கியது.  தமிழில் மட்டுமல்ல இந்தியாவெங்குமே 70 மற்றும் 80 களின் தசமம் என்பது இலட்சியவாதங்களாலும், புதிய சமூக உருவாக்திற்கான கனவுகளாலும் நிறைந்திருந்தது. மறுபுறம் நவீன விஞ்ஞானம் உருவாக்கிய காலம் வெளி குறித்த கருத்துகள், பிரபஞ்சம் பற்றிய உண்மைகள் போன்றவை நவீன தமிழ் மனதை தனது இருப்பு குறித்த விசாரனைகளுக்குள் தள்ளியது. இதனால் நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற உணர்வுகளில் சிக்கித் தவித்த இளம்படைப்பாளிகள் மேற்கின் இருத்தலிய சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். உண்மையில் இந்தக் காலக்கட்டத்தையே தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலம் என நாம் குறிப்பிட இயலும்.

இவ்விடத்தில் தமிழ் இருத்தலியம் எனும் போது அது தமிழ் சூழலில் குறிப்பாக இலக்கியத்தில் எப்படி உள்வாங்கப்பட்டது என நாம் பார்க்க வேண்டும். மேற்கை போலவே இங்கும் இருத்தலியம் என்பது  நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற விஷயங்களை பேசினாலும் தமிழில் அது அரசியல் நீக்கம் உடையதாகவே இருந்தது. மேற்கில் சாத்தர் போன்றவர்கள் மனிதன் தன் இருப்புக்கும் செயலுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி நேரடி அரசியலோடு தங்களை இணைத்துக் கொண்ட போது தமிழில் நேரடி அரசியலோடு தொடர்பற்ற இருத்தலியமே இயங்கியது. விதிவிலக்காக ஆத்மாநாமின் சில கவிதைகளையும் சமயவேலின் சில கவிதைகளையும் சொல்லலாம்.

தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலக்கட்டத்தை சேர்ந்த படைப்பாளியான சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று நான் சொல்வேன். அதாவது இப்படிச் சொல்லலாம் தமிழ் இருத்தலியமானது சமயவேலால் தனது உலகளாவிய செவ்வியல் பண்பை கவிதைகளில் எட்டியது.

காலம் மற்றும் வெளி பற்றிய பிரக்ஞையே துவக்க கால சமயவேல் கவிதைகளின் அடிப்படையாக இருக்கின்றன. அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கே “அகாலம்” என்றுதான் பெயர். மனிதனின் அறிவின் முன் முடிவற்ற நேற்றும் முடிவற்ற நாளையுமாய் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சம், விரிந்து கொண்டே போகும் அதன் வெளி, அவ்வளவு பெரிய பிரமாண்டத்தின் முன் இவ்வளவு சிறிதாய் இருக்கும் தனது இருப்பு, ஒரு எலுமிச்சை பழ அளவே இவ்வளவு பெரிய பிரபஞ்சம் ஒரு காலத்தில் இருந்தது.. ஒரு அரைகண நேர பெருவெடிப்பில் அது உருவானது என்ற உண்மை, இன்னொரு அரைக்கண நேரத்தில் அது இல்லாமல் போகவும் சாத்தியமுள்ளது என்ற தர்க்கம் ஏற்படுத்தும் பிரமிப்பு, அச்சம், அபத்தம்,  இது எதையும் உணராது இங்கு நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியனவே சமயவேலுக்கு எழுதுவதற்கான மன உந்தத்தை கொடுக்கின்றன.

இவரது துவக்ககால கவிதைகளில் இருக்கும் இன்னொரு பண்பு நிலமின்மை. அதாவது சமயவேல் கவிதைகள் எந்தவொரு குறிப்பிட்ட பண்பாட்டு வெளிக்குள்ளும் கால வெளிக்குள்ளும் நின்று பேசுவன அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கவிதையாக காலமற்ற காலத்தில் நின்று நிலமற்ற நிலத்தில் எல்லாக் காலத்துக்குமான எல்லா மனிதர்களுக்குமான ஒட்டுமொத்த இருத்தல் குறித்த உணர்வை நேரடியான மொழியில் பேசுபவை. உதாரணமாக ஒரு கவிதை   
  
                                 
                                                  இளங்கோ கிருஷ்ணன் 
என் பெயர் 

பூமியின் கோடிக் கணக்கான
ஜீவன்களில் நானும் ஒன்று என்
துக்கம் தாகம் சந்தோஷமென
நானொரு பெரும் சமுத்திரம்

என் அலைகளுக்குள்
நானே மூழ்கும் சந்தோஷம்
என் சிகரங்களை நானே
படைக்கும் பரிதாபம்

என்னில் நானும் நானில் என்னும்
எரிந்து கலந்து கிளம்புகையில்
வேரில் சுண்டும் பூமி
உயிரில் குறி வைத்து அடிக்கும்
பேருயிர்

நானொரு
இறந்து/வாழ்ந்து கொண்டிருப்பவன்
என் பெயர் மியாக்கண்ணு

இந்தக் கவிதையில் எந்தவொரு நிலமோ பண்பாடோ காலச்சூழலோ இல்லை. இது காலமற்ற காலத்தில் எல்லா மனிதனுக்குமான இன்னும் சொல்லப்போனால் எல்லா
உயிருள்ள உயிரற்ற ஜடப் பொருட்களுக்குமான கவிதையாக எல்லாக் காலத்திலும் பொருளாகிறது.

காற்றின் பாடல், அகாலம் ஆகிய இரு தொகுப்பிலும் இவ்வகை நிலமற்ற கவிதைகளே அதிகமாக உள்ளன. ஒரு சில கவிதைகளில் நிலமும் பண்பாட்டுச்சூழலும் இருக்கிறது ஆனால் அவைகளும் கூட கவிதையின் மையப் படிமத்துக்கு துணை செய்யும் அசைக்க இயலா சொற்களாக இல்லை உதரணமாக சமயவேலின் இன்னொரு புகழ் பெற்ற கவிதையைப் பார்க்கலாம்:

அவன் பாடல் 

ஆறுமுகக் கிழவன் பாடிக் கொண்டிருக்கிறான்
ராத்திரி முழுதும் விடிய விடிய

பிள்ளைகள் இழந்தான் கிழவியும் இறந்தாள்
சொத்தும் அற்றான் இரத்தம் உலர்ந்து
தசைகள் கரைந்து எண்ண முடியாக்
கோடுகளாகத் தோலும் சுருங்க
மீதி உயிரையும் பாடலாக்கி
இரவை நிரப்புகிறான்

கைத்தடிச் சப்தம் தெருக்களில் எழுப்பி
தட்டு நிரப்பி நாட்களைத் தொடர்கின்றான்

கூடை பின்னலில் விறகு கீறலில்
ஒயில் கும்மியில் சிலம்பக் கழிகளில்
வாடிக் கள்ளில் கறுப்புப் பெண்களில்
கடந்து முடிந்த வாழ்வு முழுதும்
பாடலாகி வெளியை நிரப்ப
காலியான நெஞ்சினோடு
காற்றில் தூங்குகிறான்
ஆறுமுகக் கிழவன் அனாதைதான்
உலகு போல வானம் போல.

இந்தக் கவிதையில் ஆறுமுகக் கிழவன் எனும் ஒரு பெயர் உள்ளது மேலும் ஒயில் கும்மியில், சிலம்பக் கழிகளில், வாடிக் கள்ளில் போன்ற சொற்கள் வழியாக ஒரு பண்பாட்டு காலச்சூழல் சுட்டப்படுகிறது. ஆனால் //ஆறுமுகக் கிழவன் அநாதைதான்/ உலகு போல வானம் போல// எனும் கவிதையின் இறுதி இரு வரிகள் வழியாக இந்தக் கவிதையின் மையம் கொடுக்கும் மன உணர்வு எந்த பண்பாட்டோடும், காலச்சூழலோடும்  தொடர்புடையதல்ல. அது ஒட்டு மொத்த மானுடகுலத்தன்மை உடையது. இந்த வகைக் கவிதைகளே சமயவேலின் உச்சபட்ச சாதனை என்று நான் சொல்வேன். இந்த வகைக் கவிதைகள் வழியாகவே சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் முதன்மையான கவியாக ஆகிறார்.

ii)
தமிழில் இருத்தலியத்தின் செல்வாக்கு 90களின் பிற்பகுதியில் மெல்ல மங்கத் துவங்கியது. இந்தக் காலக்கட்டத்தை நாம் தமிழ் இருத்தலியத்தின் மூன்றாவது காலக்கட்டம் எனலாம்.    இன்றும் கூட எழுதப்படும் கவிதைகளில் இருத்தலியச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் 1970 அல்லது 80 களில் இருந்ததை போன்ற தத்துவார்த்தமான இருத்தலியல் மோகம் இப்போது இல்லை என்பதே உண்மை. மேற்கில் பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ கோட்பாடுகள் இருத்தலியத்தை அப்புறப்படுத்திய சூழலில்தான் இங்கு இருத்தலியம் செல்வாக்கோடு இருந்தது.  தமிழிலும் அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் தொடர்பான உரையாடல்கள் நிகழத்துவங்கிய காலத்தில் எழுத வந்த புதிய தலைமுறை ஒன்று தங்கள் இருத்தலிய அகமனச் சிக்கல்களை கடந்து அரசியல் பிரக்ஞையோடு எழுதத் துவங்கின. மேலும் பெண்ணியம் மற்றும் தலித்தியம் போன்ற எழுச்சியோடு கிளம்பிய விளிம்பு நிலை உரையாடல்களும் இருத்தலிய உரையாடல்களை சற்றுப்  பின் நோக்கித் தள்ளின.

இந்த மூன்றாவது காலகட்டத்தில் தமிழ் இருத்தலியமானது இரண்டாவது காலக்கட்டத்தை விடவும் அதிகமாக சமகால அரசியலை பேசுவதாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்தக் காலக்கட்டத்தை சேர்ந்த சமயவேலின் கவிதைகள் அவரின் முந்தைய கவிதைகளில் இருந்து சற்று மாறுபட்டவையாகவே இருக்கின்றன. காலம் மற்றும் வெளி உருவாக்கும் அபத்த உணர்விலிருந்து சற்று விடுபட்டதாக இருக்கின்றன. ”மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும்” என்ற தொகுப்பில் ஒரு கவிதை


நானும் என் நிழலும் 

எந்த இடமென்று இல்லை
என்னிலிருந்து
என் நிழலை உருவி
வீழ்த்துகின்றன ஒளிக்கற்றைகள்
சாக்கடையிலும் குப்பைமேட்டிலும் கூட
விழுகின்றன
என் நிழல்கள்
..........................
.........................

என் நிழல்தான்
ஆனால் என் விருப்பம்
என் சம்மதம் என்று
எதையும் அது கேட்பதில்லை

..........................
.........................
........................

பெளதிக உலகில்
ஒரு பெளதிகப் பண்டம் நீ
நிழல் சொல்கிறது
ஒளி சொல்கிறது
ஏன் சுவரே சொல்கிறது

பெளதிக உலகில்
ஒரு பெளதிகப் பண்டம் நீ

இல்லை இல்லை என
அலறுகிறது
எனக்குள் ஏதோ ஒன்று


இவ்வாறு முடியும் இக்கவிதை இருத்தலிய அபத்தத்தை நம்ப மறுக்கிறது. அதைக் கடந்து போக விழைகிறது. மேலும் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் இவரது முந்தைய கவிதைகளை விடவும் நிலம் சார்ந்து இயங்குகின்றன. மின்னிப்புற்கள், மிதுக்கம் பழங்கள், முசுமுசுக்கைச் செடி, நுணாமரப்புதர், மயில் கழுத்து நீலம், மந்தைக் கருப்புசாமியின் ஆங்காரம் என மண்வாசம் நிறைந்த கவிதைகளாக இந்தத் தொகுப்பில் உள்ளன. அகாலம் என்று ஒரு தொகுப்புக்கு பெயரிட்டு காலமற்ற நிலமற்ற வெளியில் இயங்கும் கவிதைகளை எழுதிய கவிஞர் ”மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்”  என்ற தொகுப்பின் வழியாக மண் சார்ந்த படிமங்களை பேசுபவராக மாறி இருக்கிறார்.
இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றான “இரவின் தீராப்பகை”  எனும் நெடுங்கவிதை நம் கைவிட்டு போய்க்கொண்டிருக்கும் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் பற்றி கருப்பின் ஆங்காரமான குரலில் பேசுகிறது. சமயவேலின் கவிதைகள் அவரது முந்தைய கவிதைகளை விடவும் அரசியலாக்கம் பெற்றிருப்பதற்கு இந்த கவிதை ஒரு சான்று.

iii)

பிளைன் பொயட்டிரி எனப்படும் நேரடிக் கவிதைகள் அல்லது ஓருடல் கவிதைகளில் சமயவேல் ஒரு சாதனையாளர். தமிழில் இன்றும் சிறந்த முறையில் எழுதப்படும் நேரடி கவிதைகளுக்கான முன்னோடிகளில் சமயவேலும் ஆத்மாநாமும் சுகுமாரனும் முக்கியமானவர்கள். நேரடிக் கவிதைகள் எழுதும் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு பாணி உள்ளது. பாசாங்கற்ற எளிய மொழியில் உள்ளார்ந்த இசைமையோடு நெஞ்சு கொப்பளித்து பெருகி வரும் இவரின் சொற்கள் வாசகனை முதல் வாசிப்பிலேயே சொக்க வைத்து விடும் வலிமை கொண்டவை. இந்தத் தொகுப்பில் நேரடிக் கவிதைகளைக் தவிரவும் ”குற்ற நிலவறை” “முள்ளில்” போன்ற உரைநடைத் தன்மை மிக்க கவிதைகளும் பார்மலஸ் பொயட்டிரி எனப்படும் உருவுமைகடந்த கவிதைகளும் சோதனை முயற்சியாக எழுதப்பட்டிருக்கிறது.   

இறுதியாக சொல்வதெனின், இவ்வளவுக்கும் பிறகும் இப்பூமியில் நான் இருக்க விரும்புகிறேன் அதுதான் என் சாரம்சம் என்று  சொல்லும் சமயவேலின் கவிதைகள் மனித வாழ்வின் சாரம்சத்தை தத்துவங்களின் வியாக்கானங்கள் வாயிலாகவும் கவிதையின் உணர்வுபோதத்தின் வாயிலாகவும் புரிந்து கொள்ள முயல்பவை. புரிய இயலா சந்தர்பங்களில் சற்று அவநம்பிக்கை கொண்டாலும் புரிந்து கொள்வதற்கான முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பவை.   

(28.08.2011 கோவையில் நடந்த “அகத்துறவு” இலக்கிய நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
ooooooo

  •  

சிறுகதை: சமயவேல்                                                          …

சிறுகதை: சமயவேல்

                                                                                               
                        360 பாகையில் சுழலும்               இளவரசி இனிப்பக சந்திப்பு

                    பஸ் வந்தபாடில்லை. ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாகவே நிற்கிறேன். முதலில் வந்த பஸ்களைத் தவறவிட்டது சரியல்ல என்று தோன்றியது. கடந்த பதினேழு ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது. இளவரசி இனிப்பக நிறுத்தத்திற்கு எப்பொழுது வந்தாலும் இப்படித்தான் நின்று கொண்டே இருக்கிறேன். பேருந்து நிறுத்தத்திற்கு துணைக்கு நிற்பது போல. உட்கார பெஞ்ச் எதுவும் இல்லாத மொட்டை நிறுத்தம்தான் எனினும் இந்த இடத்தில் ஏதோ ஒரு வசீகரம் அல்லது மாயம் இருக்கிறது.  நிறைய பஸ்கள் வரத்தான் செய்கின்றன. நான் தான் ஏறுவதில்லை. கூட்டம் அதிகம், நெளிந்த பழைய பஸ், தள்ளிப்போய் நின்ற பஸ், கர்ண கொடூர ஹார்ன் அடித்த பஸ் என்று தர்க்க ரீதியான காரணங்களுடன் நின்று கொண்டே இருக்கிறேன். ஒரு பத்து பஸ்களைத் தவறவிட்ட பிறகுதான், நான் அதர்க்க வெளியில் மிதப்பது புரிகிறது. அப்படி என்ன பேரழகு இந்த நிறுத்தத்தில் இருக்கிறது?

          நான்கு சிறிய சாலைகள் சந்திக்கிற இடத்தில் வடக்குப்புற சாலையில்தான் இந்த நிறுத்தம் இருக்கிறது. நிற்கிற இடத்திற்கு 60 பாகைக் கோணத்தில் இளவரசி இனிப்பகம் இருக்கிறது. புகழ்பெற்ற அந்த இனிப்பகத்தில் மனிதர்கள் எப்பொழுதும் மொய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ணிப் பார்த்தால் மொத்தம் எட்டுப் பேர் நிற்கிறார்கள். எட்டுப்பேர்களுமே குண்டுகுண்டாக இருக்கிறார்கள். கல்லாவோரம் நிற்கிற சுடிதார் அணிந்த பெண் ரொம்ப குண்டாக இருந்தாள். டீக்குடித்துக் கொண்டிருந்தவர்கள் பரவாயில்லை. அல்வாவை வெட்டிக் கொண்டிருக்கும் கடைப்பையனும் நல்ல குண்டுதான். ரேக்குகளில் அடுக்கிய பிரட்களை நோக்கி கை நீட்டியபடி இருக்கும் பெரியவர் கூட குண்டாகத் தெரிந்தார். விஷயங்கள் இப்படித்தான் இருக்கின்றன. தர்க்கம் அதர்க்கம் இரண்டும் ஒரு பெருங்கோணமாய் எங்கிருந்தோ கிளம்பி வந்து இந்தப் பேருந்து நிறுத்தப் புள்ளியில் குவிக்கும் அர்த்தமின்மையின் மேல் நான் நிற்கிறேன் போலும். 

                   இடதுபுற மூலையில் லட்சுமி மருத்துவமனை இருக்கிறது. டாக்டர் சந்தானலட்சுமி அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியை. ஆனால் ஒரு நாளின் பெரும்பகுதி நேரமும் இங்குதான் இருக்கிறார். அதுவும் அவரது அறுவைக்கூடத்தில். கால்வலி, கைவலி, வயிறுவலி, இடுப்புவலி என எந்தப் பெண்மணி வந்தாலும் உடனே இது முற்றிய கர்ப்பப்பைக் கோளாறு என்றும், ஸ்கேன், குருதிப் பரிசோதனை என்று தொடங்கி அறுவைச் சிகிச்சையில் போய் முடிப்பார். நகரின் வடபகுதியில் வசிக்கிற 40 வயசுக்கு மேற்பட்ட எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பைகளை அகற்றிவிட்டதாக பெருமைப்பட்டுக் கொள்வார். கர்ப்பப்பைகளோடு கருமுட்டைகளையும் இழந்த பெண்களும் ஏராளம். ஆனால் உள் ஊனம் அடைந்திருக்கும் இந்தப் பெண்கள் எல்லோரும் பலவகையான உடற்கோளாறுகளால் பீடிக்கப்பெற்று குறைந்த வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருப்பது எவருக்கும் தெரியாது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் சுமக்க விரும்பாத கர்ப்பப்பை இருந்தாலென்ன போனாலென்ன என்பது டாக்டர் சந்தானலட்சுமியின் வாதம். டாக்டர் தம்பதிகளில் கணவர் மயக்கமருந்து மருத்துவர். அவருக்கு மருத்துவ மனையில் எந்த வேலையும் கிடையாது. வலது ஓரம் உள்ள லட்சுமி மருந்தகத்தில் ஒரு ஸ்டூலில் சும்மா உட்கார்ந்திருப்பார். மருந்துக்கடைப் பெண்களிடம் அரட்டை அடிப்பது அல்லது செய்தித்தாள் படிப்பது என எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே சாலைகளின் சந்திப்பைப் பார்த்தபடியே உட்கார்ந்திருகிறார். மயக்கமற்ற மயக்க நிலை அல்லது மருந்தின்றியே மயக்கமூட்டும் ஆய்வுகளில் அவர் ஈடுபட்டிருக்கிறாரா என்று நிச்சயமாகக் கூறமுடியவில்லை. எனக்கென்னவோ அவரை ஒரு அசேதனப் பொருளாக ஆக்கியிருக்கும் சூட்சுமம் அந்த நான்கு சாலைகள் சந்திக்கிற நடுப்புள்ளியில்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லையென்றால் எதற்காக அந்தப் புள்ளியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?

                   நான் நிற்கும் இடத்திற்கு நேர் எதிரே டாஸ்மாக்கின் எட்டாம் எண் கடை இருக்கிறது. வழுக்கைத் தலையர்கள் இருவர் அட்டைப் பெட்டியில் இருந்து பாட்டில்களை எடுத்து ஷெல்பில் அடுக்குகிறார்கள். சுமோவிலிருந்து ஐந்தாறு பேர் கூட்டமாக இறங்கி  ஓடுகிறார்கள். என் கண்களுக்கு 90 பாகை நேர்ச்சந்தின் முடிவில் ஒரு பார் இருப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். சந்தோஷத்தின் கூச்சலும் கலவையான பித்தமொழிச் சொற்களும் பாரை நிரப்பி வெளியேறி எல்லாச் சாலைகளிலும் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. டீ ஷர்ட் அணிந்த இளைஞர்களின் கூட்டம் ஒன்று ஆனந்தமாக உரையாடியபடி கடைமுன்பு நிற்கும் இருசக்கர வாகனங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி டீ ஷர்ட் அணிந்த இளைஞர்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் வாசலில் இருசக்கர வாகனங்களில் சாய்ந்தபடி அமர்ந்தபடி மச்சி மச்சி என்று ஆனந்தமாக உரையாடும் அற்புதக்காட்சி ஒன்று எனது கண்முன் தோன்றி மறைந்தது.

                  என் முதுகுக்குப் பின்னாலிருந்து, நகர்ப்புறம் கிராமப்புறம் என்ற பேதமின்றி நவீன தமிழகம் முழுவதும் முன்னிரவிலிருந்து நள்ளிரவு வரை கேட்கும் அந்த ஆனந்தப் பேரோசை, கொத்துப்புரோட்டா போடும் டங் டங் என்ற இன்னிசை வந்துகொண்டிருந்தது. பல்லாரி வெங்காயத்தோடு முட்டைகள் பொரிபடும் வாசனையொடு புரோட்டாவின் வாசமும் கலப்பது பற்றி ஒரு கவிதையே எழுதலாம். சிங்கம் புரோட்டாக்கடை என்றால் சாதாரணமில்லை. உரித்து மசாலா முக்கிய கோழிகள் கடையைச் சுற்றிலும் தொங்க, நூறு பேருக்குமேல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ இலவசம் போல பார்சல் வாங்குபவர்கள் கூட்டம் ஒருபுறம் முண்டியடித்து நிற்கிறது. இளவரசி இனிப்பகத்தில் நிற்பவர்களைவிட கனத்த ஆட்கள் பெரிய பெரிய பைக்குகளில் வந்து இறங்குகிறார்கள், ஏறுகிறார்கள். சிங்கம் புரோட்டாக்கடை ஓனர் சிங்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோரிப்பாளையமே கண்டு நடுங்குகிற பெருவீரன். செல்லூருக்கும் வயல்காட்டுத் தெருவுக்கும் ஏழு நாட்கள் நடந்த கடும்போரின் இறுதியில் சிங்கத்தின் தலையற்ற உடல் இந்த நான்கு சாலைகளும் சந்திக்கிற நடுப்புள்ளியில் கிடந்தது. சிங்கத்தின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், மதுரை மாவட்ட ஏழாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கொலைவழக்கு நிலுவையில் இருக்கிறது. கடையின் கூரையில் மேல் கக்-கக்-கக் என்று கத்தியபடி சுற்றிக் கொண்டிருக்கும், இன்று மாலை தோலுரித்து மசாலா தடவி தொங்கவிடப்பட்ட கோழிகளின் ஆத்மாக்கள் சிங்கத்தின் ஆத்மாவைச் சந்தித்து அவரது தலை என்ன ஆனது என்று கேட்டுச் சொன்னால் ஒருவேளை நாம் இந்தச் சாலைச்சந்திப்பின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளமுடியலாம். இந்தக் கோழிகளின் தலைகள் செல்லூர்க் கால்வாயில் அப்பொழுதே கொட்டப்பட்டுவிட்டது வேறு விஷயம்.

            இந்த நகருக்குக் குடியேறிய கடந்த பதினேழு ஆண்டுகளாக ஏராளமான முறைகள் இப்படித்தான் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டே இருக்கிறேன். ஒரு சில ஆண்டுகள் இந்த நிறுத்ததின் இடதுபுறம் இருக்கிற மகாத்மா பள்ளிக்கு எதிரில் இருக்கிற தெருவின் கடைசி வீட்டுக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். தொடர்ந்து வெறுமையில் மூழ்கி சஞ்சலத்தில் மிதக்கும்
மனநிலையை மாற்றி ஆனந்தத்தின் விளிம்புகளைத் தொட வைக்கிற வசீகரம் ஒரு தோழியின் ரூபத்தில் அந்த வீட்டில் இருந்தது. உரையாடலுடன் தோசை சாப்பிடுவது, மசாலாக் கடலை கொறிப்பது, காபி குடிப்பது என்பவையெல்லாம் முக்கியமான விஷயங்கள் அல்ல. உடலுறவும் பணமும் சம்பந்தப்படாத அற்புதமான புல்வெளிகளில் மட்டுமே நாங்கள் முத்தமிட்டுக் கொண்டோம். எதார்த்தத்திலிருந்து விலகிய அறைகளில் நாங்கள் தழுவிக் கொண்டோம். மனம் நிரம்பிவிடுகிற மணித்துளி ஒன்றில், 'சரி வரட்டுமா?' என்று கிளம்பி இந்தப் பேருந்து நிறுத்தத்தை அடைவதுதான் மிக முக்கியமான விஷயம். ஒரு சராசரி மனநிலையை அடைகிறவரை அந்த நிறுத்தத்திலேயே நின்றுவிடுகிறேன் போலும். ஆனால் ஏதோ ஒரு காரணமாக அந்தப்பெண் ஒரு பெருநகரத்துக்குச் சென்றுவிட்ட பிறகும் அப்படித்தான் நடந்தது. இந்த நான்கு சாலைகளும் சந்திக்கிற, சிங்கத்தின் உடல் கிடந்த நடுப்புள்ளிதான் ஒரு சூட்சுமத்தளத்தில் என்னை நிறுத்திவிடுவதாக சமாதானம் செய்துகொண்டேன்.

             பிறகு சில காலமாக இந்த நிறுத்தத்திற்கு வலதுபுறம் இருக்கிற சாலையில் சந்தையைத் தாண்டி இருக்கிற சந்தில் ஒரு நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி போய்க்கொண்டிருந்தேன். அந்த வீட்டில் எல்லா உயிர்களிலும் எனக்கான ஆனந்தம் ஒரு துளி இருந்தது. குறிப்பாக அங்கு இருந்த செம்மஞ்சள் நிற நாய்க்குட்டி உடனே ஓடிவந்து என் பாதங்களை ஒட்டிப் படுத்துக் கொள்ளும். நண்பரின் மூத்த பையன் நான் கிளம்புகிற என் கூடவே சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பான். நண்பருக்கும் அவரது மனைவிக்கும் நடக்கிற சச்சரவுகளைத் தீர்ப்பதாகவே என் பொழுதுகள் கழியும். அந்தத் தெருவிலிருக்கிற எல்லா வீட்டினருமே ஒருவகை ஆனந்ததோடு என்னை வரவேற்பதும் உள்ளே வாங்க என்று கூப்பிடுவதும், காபி குடிக்கச் சொல்வதும் ஏனென்றே புரியாத ஒரு பரவச மன நிலையை வெகு வேகமாக உருவாக்கிவிடுகிறது. எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளிடமும் சமதையாக பேசிச் சிரிப்பதும் விளையாடுவதும் எனது இயல்பென அந்தத் தெரு உணர்த்தியது. ஆனால் ஒரு தினம் நண்பரின் வீடு பூட்டிக் கிடக்கவே எதிர்வீட்டு சுனன்யா என்னை வீட்டுக்குள் வருமாறு அழைத்தாள். நானும் ஒன்றும் யோசியாமல் வீட்டுக்குள் நுழைந்து ஷோபாவில் உட்கார்ந்து கொண்டேன். காபி போடட்டுமா என்று கேட்டபடியே சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள். நான் கூடத்தில் இருந்த டிவியில் ஓடிக்கொண்டிருந்த சன் மியூசிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென வீட்டுக்குள் நுழைந்த அவளது கணவன் என்னைக் கண்டதும் திகைத்தவனாக, ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் நுழைந்தான். உள்ளிருந்தபடியே கண்ட நாய்களையும் யார் வீட்டுக்குள் விட்டா என்று சுனன்யாவிடம் கத்தினான். இதை எதிர்பாராத சுனன்யா நடுங்கிப் போனாள். பரவாயில்லை சுனா வருகிறேன் என்று கிளம்பிவிட்டேன். அன்று மூன்று மணி நேரம் இந்த நிறுத்ததிலேயே நின்று கொண்டிருந்தேன். 360 பாகையும் சுழல முடிகிற மனநிலை ஒரு பைத்ய மனநிலை அல்லது பூரண மனநிலை என்பதை அன்று கண்டு கொண்டேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு இளவரசி இனிப்பக நிறுத்தத்திற்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன்.
     

ooo ooo ooo                   
                   

               


       
   

          

               


       
   

  •  

நூல் மதிப்புரை: சமயவேல் சுனில் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை” எனது மனத…




நூல் மதிப்புரை: சமயவேல்


சுனில் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை”

எனது மனதைத் தொடுகிற, எனது அகவுலகுக்கு நெருக்கமான கதைகளையே நான் விரும்பி வாசிக்கிறேன். ஒரு இதழாசிரியர் அல்லது விமர்சகர் அல்லது மதிப்புரையாளர் என்ற தோரணையில் நான் கதைகளை வாசிப்பதில்லை. அதே போல ஒரு “கற்றல்” ஆகவும் கதைகளை வாசிக்க முடியாது. சில கதைகளில் அது தானாக நிகழும். அது ஒருவகை மன வேதியியல். தற்செயலாக சுனில் கிருஷ்ணனின் “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” என்னும் சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. கதைத் தலைப்பைப் பற்றிய கவனமின்றியே வாசிக்க ஆரம்பித்தேன். கதை எனது மனதைத் தொட்டது.


நாவன்னா லேனா என்னும் வாழ்வின் இறுதிப் பகுதியில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனிடம் கருணையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதை இது. சின்னஞ்சிறிய திறப்புகளைக் கொண்ட ஒரு பூட்டுதலுக்குள் இருப்பது தான், மனிதர்களுக்கு பாதுகாப்புணர்வைத் தருகிறது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதற்குள் நம்மையும் நமது மனிதர்களையும் பொருள்களையும் போட்டு பூட்டிக் கொள்வதைப் போலவே பல காரியங்களை நாம் செய்கிறோம். வாழ்வுச் சூழல் நாவன்னா லேனாவையும் இவ்வாறு பூட்டி வைக்கிறது. மனைவி இல்லை. வேலையும் இல்லை. மேற்கு மாம்பலத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அவர் மகன் மருமகள் பேத்தியோடு ‘ஒண்டிக் கொள்வதில் பெரிய வருத்தமோ கஷ்டமோ இல்லை’. குழந்தையை இவரிடம் ஒப்படைத்துவிட்டு மகனும் மருமகளும் வேலைக்குப் போய்விடுவார்கள். தாத்தா தூளியை ஆட்டிக் கொண்டே “ஆயர்பாடும் மாளிகையில்...” பாட்டின் கடைசிக் கண்ணியான “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்..போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ” பாடினால்தான் பேத்திக்குத் தூக்கம் வரும். தாத்தாவையும் பேத்தியையும் இணைக்கும் இந்தப் பாட்டும் அதன் கடைசி வரியுமே, பூட்டிய வாழ்விற்குள் மனிதர்கள் பெறுகின்ற ஆசுவாசம். மனதின் ஈரத்தைத் தக்க வைத்து வாழ்வைத் தொடரச் செய்யும் தருணங்களும் இவைகளே. இந்தியாவில், முதியவர்களைப் பொறுத்தவரை, வாழ்வில் மேற்கொண்டு திறப்புகள் என்பது சாத்தியமில்லை என்பதால், இத்தகைய ஆசுவாசங்களையேனும் அவர்களுக்கு அளியுங்கள். இந்த ஆசுவாசத்தை, ஈரத்தை வாசகனுக்கும் கடத்துவதில் இந்தக் கதை வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, இந்த ‘அம்புப் படுக்கை’ சிறுகதைத் தொகுப்பின் இதர கதைகளையும் வாசித்தேன்.


அடுத்ததாக நான் வாசித்த கதை வாசுதேவன். மனசாட்சியுள்ள மருத்துவரும் எழுத்தாளரும் ஒரே இனம் தான். ஆனால் எழுத்தாளரை விட பொறுப்புடனும் உடனடியாகவும் இயங்க வேண்டியவர்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஓர் ஆயுர்வேத, பயிற்சி மருத்துவரின் பார்வையில் பதைபதைப்புடன் சொல்லப்பட்டிருக்கும் இக்கதை, வாசிப்பவர்களுக்கு பெருந்துயரை உண்டாக்குவது. "ஒகட்டிலேதுப்பா ஒகட்டிலேது..." (ஒன்னும் இல்லப்பா ஒன்னும் இல்லை) என்னும் அப்பாவின் ஆறுதற்சொற்களைக் கேட்டவாறே இறந்து கொண்டிருக்கும் இளைஞன் வாசுதேவன். பயிற்சி மருத்துவர்கள் அவனைப் பிணம் என்றே அழைக்கிறார்கள். பிரபல பெரிய மருத்துவரின் பேராசை காரணமாக பயிற்சி மருத்துவர்கள் வாசுதேவனுக்கு அபியங்கம்,கிழி போன்ற சிகிச்சைகளைத் தொடங்குகிறார்கள். உயிர் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் எலும்புக்கூடும் வாசுதேவன் என்னும் மனிதனாக, பயிற்சி மருத்துவர்கள் மனதில் ஒரு சிறிய இடம் பிடிக்கிறான். ரொம்ப நாள் பழகிய மாதிரியான ஒரு உணர்வு கூட அவர்களுக்கு வருகிறது. ஒரு குழந்தையென நியமப்படி. வாசுவைக் கவனித்துக் கொள்ளும் அவனது அப்பா, இவர்களிடம் வாய் திறந்து கேட்டு விடுகிறார். இவர்கள் உண்மையைக் கூற முடியாமல் ஆகிறது. ஆனால் அவனது அம்மா ஒருநாள் வாசுவைப் பற்றி நெஞ்சுருகப் பேசுகிறார். "...... உங்களையும் எங்க பிள்ளையா நெனச்சு கேக்குறோம்" என்று அந்த அம்மா தழுதழுத்த போது கதைசொல்லியான மருத்தவர், "...சக்சன் போட கொஞ்சம் லேட்டானாக் கூட மூச்சு நின்னுடும். அதான் அவர் நிலைமை" என்று உடைத்துவிடுகிறார். இந்த இடத்தில் ஒரு திகைப்பின் புள்ளியில் கதை சுழன்று நிற்கிறது. அடுத்து என்ன நடக்கும்? கதை எப்படி முடியும்? என வாசகனை யோசிக்க விடுகிறார் கதைசொல்லி.


ஒரு கதையின் முடிவை பெரும்பாலும் கதாசிரியர்கள் எழுதுவதில்லை. இது வரையிலும் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கதை தான் அதன் முடிவையும் தீர்மானிக்கிறது. ஆனால் கதையோ கதாசிரியர் எழுதியது தானே. பிறகு ஏன் முடிவைக் கதாசிரியர்கள் எழுதுவதில்லை என்று கூற வேண்டும்? இங்கே ஒரு கதாசிரியன் அவன் இதுகாறும் எழுதிய கதைக்கு வெளியே நின்று, வலிய “சிந்தித்து” ஒரு முடிவை எழுத முடியாது. அந்தக் கதை எழுதப்பட்ட அதன் போக்கிலேயே அதன் முடிவும் இருக்கும். கதை நெடுக, நிகழ்வின் பல்வேறு மடிப்புகளையும் அவசியமான அனைத்துக் குரல்களையும் காணல்களையும் நுட்பமாகக் கையாளும் படைப்பு மனம், சரியான முடிவை எட்டுகிறது.


ஆயுர்வேத சிகிச்சை நிறுத்தப்படுகிறது. ஏதோ ஒரு ஊரில் வங்கியில் பணிபுரியும் வாசுதேவனின் அக்கா வசுமதி (கணவனை இழந்தவள்) மாறுதலில் தனது குழந்தையுடன் அந்த வீட்டை  அடைகிறாள். வாசுதேவன் இறந்து போகிறான். மரண வீட்டில் சோஃபாவுக்கருகில்  அந்தக் குட்டிப் பெண் குழந்தை “தனக்குள் சிரித்துத் திளைத்தபடி தன்போக்கில்” விளையாடுகிறது. ஆனால் கதையின் கடைசிப் பக்கத்திற்கு முந்தைய பக்கத்தில் “ பிரபஞ்ச நியதிகள் எல்லாம் இதுதான் என்று  தெளிவாகத் துலக்கமடைந்துவிட்டது போல் தோன்றியது” எனவும் “நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதியாகத் உறங்கினேன்” என்றும் சுனில் கிருஷ்ணன் எழுதும்போதே கதை முடிந்துவிடுகிறது. கதையை வாசித்த நாமும் நிம்மதியாக உறங்கலாமா? இந்தக் கதையின் நெருக்கடியைப் போன்ற ஒரு சூழலில், வண்ணநிலவன், அவரது எஸ்தர் கதையின் இறுதியில் எழுதுகிறார்: “எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலை குத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. வெகு காலம் வரை அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள்.” அந்தக் கதையையும், பாட்டி இறப்பு நிகழும் இரவில், மாடுகள் விட்ட பெருமூச்சையும் வேகமாக வீசிய காற்றையும் பல காலம் மறக்க முடியாமல் இருந்தேன். ‘கருணைக் கொலை’ என்பதின் பொருள், கொலையின் கருணையில் நாம் வாழ்கிறோம் என்பதை இந்த இரண்டு கதைகளும் நிரூபிக்கின்றன. இருவருமே உண்மையில் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை வாசகனின் யூகத்திற்கே விடுகிறார்கள்.

இறந்து கொண்டிருப்பவரைப் பற்றிய இன்னொரு கதையும் இத்தொகுப்பில் உள்ளது. அதற்கு அவர் நேரடியாக ‘அம்புப் படுக்கை’ என்றே பெயர் வைத்துவிட்டார். ஒவ்வொரு மரணப் படுக்கையுமே அம்புப் படுக்கை என்பதை ஒரு மருத்துவராக இருக்கும் சுனில் கிருஷ்ணன் மிக நன்றாகவே அறிந்திருக்கிறார். ஆனால் அவரது தாத்தா இன்னும் ஒரு படி மேலேறிச் சொல்கிறார்: “....குத்துமதிப்பா மொத்தமா அம்பு மாரி தான்...அதிஷ்டம் இருந்தா பொழச்சிக்கலாம்...ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் இதே கதைதான்...” 

இந்தக் கதை நாயகர் ஆனாரூனா என்னும் வெள்ளந்தியான மனுஷர் இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து தப்பி ஓடிவந்தவர். அவருக்கு மரணம் தன்னைத் தொடர்ந்து வேட்டையாடுவதாக ஒரு பயம். ஒவ்வொரு முறையும் தான் தப்பித்துவிடும் சாகசத்தை கதாரூபங்களில் உலவ விடுகிறார். பாவனை மனிதர்களுக்கு கதைகளின் கதகதப்பு எப்போதுமே தேவையிருக்கிறது. இறப்பு வீடுகள் போன்ற பாவனை செய்ய வேண்டிய தருணங்களிலும் இடங்களிலும், மனிதர்கள் தங்களது ஞாபகங்களின் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் எல்லாக் கதைகளையும் அடுக்கடுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். இதைத் தடுப்பதற்காகவே சில சமூகங்களில் இறப்பின் இரவுகளில் கதைகளை வாசிப்பதற்கென்றே ஒருவர் இருப்பார். அவரோ இறப்பின் இரவை கதைகளின் மூலமான ஆற்றுப்படுத்தலாக, பிறிதொரு தளத்துக்கு மாற்றிவிடுவார்.


அந்த ஆனாரூனா இரும்புக் கட்டிலில் தனது இறுதிப் பயணத்தில் இருக்கிறார். மரணக் குறிகளில் தேர்ந்த வைத்தியர் தாத்தா தண்டுவட டி.பி.யில்  இறந்து விட்டதால் அவரது பேரன் சுதர்சன், வைத்தியக் கல்லூரியில் அண்மையில் தான் அடியெடுத்து வைத்திருப்பவன், நாடி பார்க்க அழைத்து வரப்படுகிறான். தாத்தாவின் கட்டாயத்தின் பேரில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் சுதர்சன் “நாடியில் என்ன இழவைப் பார்த்துவிட முடியும்?” என எரிச்சலடைகிறான். மிகக் கொடூரமான வலியைக் கொடுக்கும் தண்டுவட டி.பி. நோயோடு தாத்தா தனது மரணத்தை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்கிறான். “இன்னும் சக்கரவட்டம் வரல” என்று அவர் மரணக்குறிகளை மட்டும் நினைவு கொள்ளும் அவரது கடைசி நாட்கள் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன. “மெதுவாக இடக்கரம் தொட்டு நாடியை நோக்கினான்....நாடி ஒரு அலை போல எழுந்தது...மீண்டும் பேரலை விரல்களைத் தொட்டுச் சென்றது” (பக்கம் 73) என்னும் பத்தியை ஒரு மருத்துவரும் கலைஞனும் சேர்ந்து எழுதுகிறார்கள். இறப்பவர்களை மரணத்திற்கு தயார்ப்படுத்தும் கடைசிப் பொழுதுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அமையும். அந்த சமயத்தில், மனிதர்கள் குடும்பமாகவும் தெருவாகவும் கிராமமாகவும் சேர்ந்து வாழ்தலின் அருமை புரியும். நான் மருத்துவமனையில் சாக மாட்டேன், வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என எதற்காக அடம் பிடிக்கிறார்கள் என்பதுவும் புரியும். குடும்பத்திலும் நட்பிலும் ஆட்கள் மாறி மாறி அவருக்குத் தேறுதலான சொற்களைக் கூறுதல், தலையைப் பிடித்துக் கொள்ளுதல், நெஞ்சை நீவிவீடுதல், முதுகோடு தன்மேல் சாய்த்துக் கொள்தல் என அவரை நிம்மதியாக வழியனுப்ப முயலும் இறுதிக் காட்சிகள் மிகக் கனத்தவை. உலகின் பல சமயங்களிலும் இதற்கான விரிவான சடங்குகள் இருக்கின்றன. மரணக் குறிகள் பற்றியும் மரணத்திற்குப் பின்னும் 49 நாட்கள், தான் வாழ்ந்த இடத்தையே சுற்றியலையும் ஆன்மாக்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும் விவரிக்கும் “திபெத்திய மரண நூல்” மிக முக்கியமானது.

மொத்தம் பத்துக் கதைகள் இருக்கும் இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் வாசித்துவிட்டேன். ஆனால் அவைகள் பற்றி எழுதும் அளவுக்கு, எதுவும் எனது மனதைத் தொடவில்லை. ஒரு எழுத்தாளனுக்கு முதலில் எதையெல்லாம் எழுத வேண்டும் எதையெல்லாம் எழுதக்கூடாது எனத் தெரிய வேண்டும். இரண்டாவதாக எழுத வேண்டிய கதைகள் எவ்வாறான வடிவத்தில், சொல்முறையில் அதிகபட்சம் துலக்கம் பெறும் என்பதை தனது வித்வம்,கற்பனாயூகம் வழியாக செயல்படுத்துவதற்கான திறம் வேண்டும். எடுத்துக்காட்டாக  சொர்க்கம்-நரகம் என்னும் கருத்தாக்கத்தின் மேல் அக்கறை இல்லாத ஒருவர் ‘ஆரோகணம்’ என்ற கதையை வாசிக்கவே முடியாது. அந்தக் கருத்தாக்கத்தின் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவர், காந்தியின் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவராகக் கூட இருக்கலாம்.  



மரணத்தின் அருகில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கனத்த சவாலான கதைகளை எழுதியிருக்கும் சுனில் கிருஷ்ணன் மேலும் சிறந்த கதைகளை எழுத முடியும் என்று நான் நம்புகிறேன்.



மதுரை 19.௦2.2018     


 





            


  •  

யதார்த்தம் என்பது சகிக்க முடியாத பொதுமனச் சிதைவு கவிஞர் சமயவேலுடன் ஒரு உ…


யதார்த்தம் என்பது சகிக்க முடியாத பொதுமனச் சிதைவு

கவிஞர் சமயவேலுடன் ஒரு உரையாடல்
உரையாடுபவர்: எஸ்.செந்தில்குமார்.
---------------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி 1

70, 80களில் சத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக் கடக் ஆகியோரின் படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவான சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது எழுதுகிறவர்களில் பெரும்பாலும் தென் கொரியப் படத்தின் இயக்குநர் கிம்கிடுக்கின் படங்களைப் பார்ப்பதும் அதன் பாதிப்பில் தங்களது படைப்புகளை உருவாக்குவதிலும் முனைந்திருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து மாற்று மொழி சினிமாவின் பார்வையாளராக இருக்கிறீர்கள். சமகாலப் படைப்பாளிகளை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள இது தலைமுறை இடைவெளி என்ற போதிலும் கிம்கிடுக்கின் பாதிப்பின் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

பதில்:


70, 80களின் படைப்பாளிகளில் சிலர்மட்டுமே சத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக்கடக், மற்றும் இன்னும் பல உலக இயக்குனர்களின் படங்களைப் பார்த்தார்கள். சென்னை, திருச்சி, மதுரை என பல நகரங்களிலும் திரைபடக் கழகங்கள் அமைத்து உலகத் திரைப்படங்களைப் பார்த்தார்கள். தங்களது வாசிப்பு அனுபவங்களோடு அதையும் இணைத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். படங்களின் தாக்கத்தில் யாரும் எழுதவில்லை.  இப்பொழுது உலகப்படங்கள், குறுவட்டுக்களாகவும் எண்வட்டுக்களாகவும் டோர்ரன்ட், யூ ட்யூப் என எளிதாகக் கிடைத்தாலும் யாரும் அவைகளின் தாக்கத்தில் கதையோ கவிதையோ எழுதுவதாக சட்டென்று கூறிவிட முடியாது. தென்கொரிய இயக்குனர் கிம்கிடுக் எனக்கும் மிகப்பிடித்த இயக்குனர்.  சமகால இளையவர்களின்  சமூக-உளவியல் மற்றும் பாலியல் சிக்கல்கள், வித்தியாசமான இசைவுடன் கூடிய அழகியல் காட்சிக் கோர்வைகளாக பார்வையாளர்களை அலைக்கழிக்கின்றன. சம்மர்,வின்டர்படம் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா நாவலைப் போல ஆன்மீகத் தேடலை, பாலியல் ரீதியாக அணுகும் அற்புதமான படம்.          3-ஐர்ன், டைம், தி போ, ப்ரீத், ட்ரீம் என பல படங்கள் எனக்குப் பிடித்தவைஉலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான இயக்குனராக அங்கீகரிக்கப்பட்டாலும் கொரியாவில் சர்ச்சைக்குரியவராகவும், பெண்ணிய இயக்கங்களின் கண்டனத்துக்கு உரியவராகவும் கிம்கிடுக் இருந்திருக்கிறார். கிம்மின் 2013 படமான 'மொய்பியஸ்' படத்தில் ஆணுறுப்பைக் கடித்துத் துப்புகிற காட்சிகளைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எனது  ண்பர் லஷ்மிசரவணக்குமார் ஒரு முழு நாவலையும் அந்தப்படம் மாதிரியே எழுத முயன்றிருக்கிறார். அந்த நாவல் களமான சென்னை மாநகரின் அடியுலகம், கிம்கிடுக் படத்தின் அடிஉலகத்தோடு ஒத்துப்போகிறது. மற்றபடி வேறுயாரும், இப்படி எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.


கேள்வி 2


தொடர்ந்து இன்றைய நவீன கவிஞர்களுடன் நேரடியான உரையாடலும் அவர்களது தொகுப்புக்களை உடனுக்குடன் வாசிக்கவுமாக இருக்கிறீர்கள். தற்போதைய நவீன தமிழ் கவிதையின் இருப்பிடம் என்னவாக உள்ளது?


பதில்: 70, 80களின் இளம்படைப்பாளிகள் பலரும் தங்களது மூத்த படைப்பாளிகளோடு நேரடியான உரையாடலில் இருந்தார்கள். கவிதை, நாவல், சிறுகதைகள், அரசியல் சித்தாந்தங்கள், தத்துவம், வரலாறு, உளவியல் என்று எல்லாவற்றையும் வாசித்தார்கள். உலகத் திரைப்படங்களைப் பார்த்தார்கள். பல நாடகக் குழுக்களும், உலக அளவிலான நாடகவியல் பற்றிய உரையாடலும் இருந்தன. சென்னைக் கலைக்கல்லூரி ஓவியர்களோடு சேர்ந்து, ஓவியக் கண்காட்சிகளை எழுத்தாளர்கள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கவிதை எழுதுபவர்கள் நாவல் வாசிப்பதில்லை. கதைக்காரர்கள் கவிஞர்களை இளக்காரமாகப் பேசுகிறார்கள். உலக அரசியல் மற்றும் தத்துவம்பற்றிய ஆழமான புரிதல்கள் இல்லை. தீவிரமான தளங்களுக்கு நகர முடியவில்லை.

புத்தாயிரத்தில் சுகிர்தராணி, இசை, இளங்கோ கிருஷ்ணன், கண்டராதித்தன், ராணிதிலக்ஸ்ரீநேசன்லீனா மணிமேகலை என ஒரு பெரிய பட்டாளமே தமிழ் கவிதையுலகைக் கலக்கியது. ஆனால் அவர்களது தொடக்கத் தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு நகர முடியாத ஒரு தேக்கம் வந்துவிட்டது. இவர்களுக்குப் பிறகு வந்த இளம் கவிகளின் பட்டியல் இன்னும் பெரியது. பெரிதும் சமூக வலைத்தளங்கள் சார்ந்து இயங்கும் இந்தக் கவிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லைசிறந்த கவிதைகளை அடையாளம் காண்பது, கவிதைகளை வகைமைப் படுத்துவது, கோட்பாடுகளின் வழியாக கவிதைகளை அணுகுவது போன்ற விமர்சனப் பாங்குகள் தமிழில் மிகக் குறைவாக இருப்பதும் ஒரு காரணம் எனலாம். பின் நவீனத்துவம், அமைப்பியல், பின்-அமைப்பியல் சார்ந்த கோட்பாட்டாளர்கள் எழுதுவதை படித்துப் புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருப்பது ஏன்கார்களையும் கணினிகளையும் இறக்குமதி செய்வது போல, ஏன் கோட்பாடுகளை எளிதாக இறக்குமதி செய்து பயன்படுத்த முடிவதில்லை?. மொழி சார்ந்த செயல்பாடுகள் அனைத்துமே அந்த மொழிபேசும் இனக்குழுவின் தொன்மத்திலிருந்து இன்று வரையிலான ஆழ்ந்த வாழ்வியல் சார்ந்தவைவாழ்வியல் உறிஞ்சிக் கொள்ள முடிவதை மட்டுமே நாம் அதற்கு வழங்க இயலும். விமர்சகர்கள் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் பயின்று நமது வாழ்வியலின் அடிப்படை அலகுகளுடன் பொருந்தக்கூடியவைகளை எழுத வேண்டும்அமைப்பியல் என்ற கோட்பாட்டை  ஐரோப்பியர்கள் வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். தமிழில், இலக்கிய உலகில் மட்டுமே இயங்கும் கோட்பாடுகள், ஒரு சமூக ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முடியாததின் காரணம் பிறதுறைகள் ஏதொன்றிலும் இல்லாத சிந்தனா வறட்சியும், முற்றான ஒருங்கிணைவு இன்மையுமே. மொழி மற்றும் இலக்கிய உலகக் கோட்பாட்டு அறிவுஜீவிகள் தமிழ் வாழ்வின் அடிப்படைகளுக்குள் ஊடுருவ முடியாத ஒரு துயர காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.


கேள்வி 3

தமிழ் கவிதையைத் தவிர நீங்கள் பிற மொழி கவிதைகள் அதிகமாக வாசிக்கிறீர்கள். அதனதன் உலகம் என்னவாகவுள்ளது?. குறிப்பாக இந்தியாவில் நாம் அதிகமும் அறியாத அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு பகுதிகளின் கவிஞரின் உலகம்?


பதில்:
தமிழும் ஆங்கிலமும் மட்டுமே எனக்கு வாசிக்கத் தெரிந்த மொழிகள். எனவே எனக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் படைப்புகளையே வாசிக்கிறேன். அஸ்ஸாமிய
இளம் கவிஞர் பிஜோய் சங்கர் பர்மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் சந்தித்தேன். தன்னுடையஅசோகாஷ்டமிதொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். குறுந்தொகையை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்து  வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகளில் நமது சங்கப் பாடல்களின் கூறுகள் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. சாகித்ய அகடமியின்  ‘இந்தியன் லிடெரச்சர்வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய அளவில் இன்று தமிழ் கவிதைகள், முன்னனியில் இருப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். 
பிஜோய் சங்கர் பர்மன் கவிதை:

பட்டம்

ஒரு நுண்ணிய இழையினால்

என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாய் நீ

ஆலய மணியுடன்

தனித்த குன்றில்

மற்றும்  நீ

பறந்து  கொண்டிருக்கிறாய்  மேலே


மணி அசைகிறது

மேற்கிலிருந்து வீசும் காற்றில்

கோடையின் முதல் மழை போல

நான் விழுந்துவிட்டேன்

புல்லின் இதயத்தின் மேல்


எங்கிருக்கிறாய் நீ


நிர்வாண  மரங்களுக்குப்  பின்னால்

குன்றின்  உச்சியில்

சூரியன் கீழே போகிறது

அவனது இதயம் பெண்-ஓக்கு மரங்களின் மேல் மேய்கிறது

இரவு காத்துக் கொண்டிருக்கிறது


நீயும் உன்  வழியைத்  தொலைத்துவிட்டாய்

வெகுதூரம் பறந்தபடி

அல்லது  வீழ்ந்து

மூங்கில்  புதர்களின்  மேல்


கவனிக்கப்படாமல்.

அஸ்ஸாமியக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில்: சமயவேல். 


கேள்வி 4

தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்த நீங்கள் தீடீரென சிறுகதை எழுதத்தொடங்கி ஒரு தொகுப்பு கொண்டுவந்தீர்கள். பிறகு சிறுகதை எழுதவில்லை. தொடர்ச்சியாக நீங்கள் சிறுகதையில் கவனம் செலுத்தாதற்கு உங்களது சிறுகதைகளை சரியாக வாசகர்கள் வாசிக்கவில்லையென்ற ஆதங்கம்தானா?


பதில்:
நான் கவிதைகள் எழுதத் தொடங்குவதற்கு முன்பு சிறுகதைகள் தான் எழுதிக் கொண்டிருந்தேன். கு.அழகிரிசாமி, கு.ப.ரா., கி.ராஜநாராயணன், வண்ணநிலவன், சா.கந்தசாமி, வண்ணதாசன் கதைகளின் தீவிர வாசகனாய் இருந்தேன். வாழ்வின் அலைக்கழிப்புகளால்  எழுதிய கதைகள் பல தொலைந்து போயின. சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்த பிறகு திருமணம் குடும்பம் என முற்றிலுமாக பிறிதொரு வாழ்வைத் தேர்ந்து கொண்டேன். முக்கியமாக எனது அரசியல் சார்புகளிலிருந்து மொத்தமாக என்னைத் துண்டித்துக் கொண்டேன். அந்த சமயத்தில் நண்பன் கோணங்கி, சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தார். நான் எழுதாமல் போன பல கதைகளையும் அவர் சிறப்பாக எழுதிக் கொண்டிருந்ததால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொண்டேன். எனது மகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது டைரியில் அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகளையே கவிதைகளாக்கி, உருவானதே எனது முதல் தொகுப்பு ‘காற்றின் பாடல்’. அந்த சமயத்தில் தேவதச்சனோடு ஒரு தீவிரமான உரையாடலில் இருந்தேன். கவிதையில் தத்துவத்தின் பங்கு குறித்த எங்கள் உரையாடலில் உறைந்த மௌனங்களே, எனது கவிதைகளை எழுதின. தத்துவம் vs கவிதை உரையாடல், பல கிளைகளாகப் பிரிந்து எங்கள் கவிதைகளை அவரவர் பாணியில் புதியதாக்கியது. எனது நண்பர்களிலேயே, ஏன் தமிழகத்திலேயே, மிக அற்புதமான உரையாடுபவராக தேவதச்சன் இன்றும் இருந்து வருகிறார். அவரது தோழமையின் பாதிப்பால் தான், நான் முழுக்க கவிதை சார்ந்து இயங்கத் தொடங்கினேன். தனிமனிதன் அல்லது சமூகத்தின் உள்ளார்ந்த தவிப்புகளின் ஆன்மீகத்தை பலநூற்றாண்டுகளாக தொடர்ந்து கவிதைகள் சுமந்துகொண்டு அலைவதைப் புரிந்து கொண்டதால், கவிதை சார்ந்தே இயங்கிவருகிறேன். ஆனால் கதைகள் வழங்கியிருந்த மயக்கமும் கதகதப்பும் தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருப்பதால் எப்பொழுதும் போல கதைகளையும் தேடித் தேடி வாசிக்கிறேன். அவ்வப்பொழுது ஓரிரு கதைகளையும் பரிசோதனை முறையில் எழுதிப் பார்க்கிறேன். வாசிக்கிறார்களா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்தினால் தமிழில் ஒரு படைப்பாளியும் இருக்க மாட்டார்கள். கவிதை தோழி என்றால், கதை காதலியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுவேன். இப்பொழுது ஒரு மெகா நாவலையும், ஒரு சிறுவர் நாவலையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். 
        

கேள்வி 5

சமகால நவீன இலக்கிய சூழலில் கவிதை எழுதத்தொடங்கி சிறுகதை நாவல் என பயணிக்கும் இலக்கியவாதிகளை நாம் பார்க்கிறோம். இச்சூழலில் உங்களது மாயஏதார்த்த பாணியிலான மற்றும் பின் நவீனத்துவ பாணியிலான கதை கதையற்ற கதைக்கான எதிர்வினைகளும் வரவேற்பும் சரியாக அமைந்ததா?

பதில்:
கவிதை அனைத்து வகையான படைப்பு வடிவங்களிலும் மையச் சரடாக இருக்கிறது. சிற்பம், இசை, ஓவியம், மட்பாண்டங்கள், ஓலை விசிறிகள், பரதம், கதகளி, சிறுகதை, நாவல் எல்லாவற்றிலும் கவிதையின் தடங்களைப் பார்க்க முடியும். எனவே ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கான பயணம் அவரவர் வாழ்வின் ஒழுங்கோடு மிக இயற்கையாகவே நடக்கிறது. என்னுடைய கதைகளுக்கான எதிர்வினைகள் அல்லது வரவேற்பு பற்றி நான் ஒருபோதும் யோசிக்கவில்லை. ஆகச் சிறந்த படைப்பாளிகள் எவரும் வாசகர்கள் விருப்பங்கள் பற்றி தனியாகக் கவலைப்படுவதில்லை. அவர்களைக் கலங்கடிக்கும் மொத்த சமூகத்தின் ஒரு பகுதியாகத்தானே வாசகர்களும் இருக்கிறார்கள். மொத்த வாழ்வும் குறித்த எழுத்தாளனின் கவனம் எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொள்கிறது.


அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் தமிழில் ஒரு மிகச் சிறிய குழுவாக இயங்குகிறார்கள். கோட்பாட்டாளர்களே படைப்பாளிகளாகவும் இருப்பதால், அவர்களது சொந்தப் படைப்புகளை முன்னிறுத்தும் பணிகளே இன்னும் நிறைவேறாத சூழலில் இருக்கிறோம். தலித்தியக் கோட்பாட்டாளர்கள் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமநிலையில் ஒரு சிறிய துண்டு கூட இன்னும் கிடைத்தபாடில்லை. அண்மையில் வலதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் புத்துயிர்ப்பு பெற்று ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார்கள். கார்ப்பரேட்டியம் சகல சிந்தனைப் பிரிவுகளையும் சிதறடித்திருக்கிறது. கிரிமானலிட்டி, ஊடகங்களில், அரசியலில், சமூகங்களில், குடும்பங்களிலும் கூட புற்றாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் நிலம், நீர், காற்று என சகலமும் மாசடைந்து அழிந்து வருகின்றன. எனவே இலக்கிய விமர்சனம் நோஞ்சான் பிள்ளையாகத் தானே இருக்கும். ஒரு திசையற்ற சுழற்காற்றுக்குள் தமிழ் இலக்கிய மையம் சிக்கிக் கொண்டதால், இளம் படைப்பாளிகள் விளிம்புகளில் எழும்பி வருகிறார்கள். விளிம்புகளே புதிய மையங்களாக மாறும் மாயமும் நடக்கும்.


பரிசோதனைப் படைப்புகளைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கூடிவராத சூழலில்தான்   நாம் பலகாலமாக வாழ்கிறோம். பிரேம்-ரமேஷ் கவிதைகளும் கதைகளும் உச்சபட்ச பரிசோதனைப் படைப்புகள். ஜி.முருகனின் ‘மின்மினிகளின் கனவுக்காலம்’ நாவல் 1993ல் எழுதப்பட்டது. முற்றிலும் புதிய வகைமையினால் ஆன இந்த நாவலை கோட்பாட்டாளர்கள் பலரும் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் ஜி.முருகன் எந்தக் குழுவிலும் இல்லாமல் இருந்தார். அதே போல் கௌதம சித்தார்த்தனின் மாய யதார்த்த சிறுகதைகள் குறித்து எவரும் பேசவில்லை. ஆர்.சிவகுமார், கால சுப்ரமண்யம் போன்றவர்களது மொழிபெயர்ப்புகள் பரவலாக வாசிக்கப்படவில்லை. கோணங்கி ஒருவர்தான் தனது கல்குதிரை மூலம் எல்லாவகையான தீவிரப் படைப்பாளிகளையும் ஒருக்கூட்டுகிற பெரும் சக்தியாக இயங்கிவருகிறார்.   


கேள்வி 6

உங்களது கவிதை அழகியலும் நுட்பமான அரசியலும் கொண்டது. காண் உலகின் காட்சிகளையும் எதார்த்தமான நிகழ்ச்சிகளையும் எளிமையான அதேநேரத்தில் பொயட்டிக்கான வரிகளில் சிக்கனமாக கவிதை எழுதுவதில் பெயர்பெற்றவர்கள் நீங்கள். இதற்கு நேர் மாறாக ஃபேண்டஸி உலகின் தோற்றத்தை உங்களது கதைக்குள் கொண்டுவர காரணமாக அமைந்தது என்ன? ஏற்கனவே தமிழில் நிறைய ஃபேண்டஸி மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவர்களுடன் இணைந்து கொள்ளும் முயற்சிதானா?


பதில்:
கவிதையே ஒரு ஃபேண்டஸி தான். யதார்த்தம் என்பது சகிக்க முடியாத வகையில் பொதுமனச் சிதைவை, சமூக சித்தப்பிரமைகளை உருவாக்கியதால்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்சிகோவிலும் மாய யதார்த்த எழுத்துகள் தோன்றின. இங்கும் அப்படியான ஒரு சூழல் இன்று உருவாகிவிட்டது. ஜனத்திரளில் எத்தகைய சூழலிலும் புதிய தளங்களை அமைத்துக் கொள்ள முடிபவர்களாக கலைஞர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு இதயத் தாக்கிலிருந்து மீண்டு ஓய்வில் இருந்த ஒரு அதிகாலையில் கண்ட கனவை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எழுதினேன். அதுதான் என்னுடைய  “மன்னார் வளைகுடாவில் ஒரு நன்னீரோட்டம்” சிறுகதை. அந்த ஆண்டு நான் எழுதிய சில கதைகளுக்கு கனவுகளே தூண்டலாக இருந்தன. தினசரி வாழ்வின் சலிப்பிலிருந்தே ஃபேண்டஸி உருவாகிறது. ஃபேண்டஸி வகை வாசிப்பு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. கதையற்ற கதைகள் என்பதெல்லாம் எனது வாசிப்பிலிருந்து கிடைத்தவைதாம். ஒரு கதை எழுதுவதில் உள்ள பலவகையான திறப்புகள், சுதந்திரங்கள், மாய நகர்வுகள் எல்லாம் என்னைப் பெரிதும் கிளர்ச்சியூட்டுகின்றன. ஒரு பத்தியை நாம் எழுதுவதும், அடுத்த பத்தியை கதையே எழுதுவதும் செம த்ரில்லிங். உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்குமல்லவா? கதைப்பிரிவில் மிகக் குறைவாக எழுதியிருக்கும் என்னை அந்த மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இணைத்துக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. சா.தேவதாஸ் ஒருவர் தான் எனது கதைகளைப் பற்றிய ஒரு மதிப்புரையை தமிழ் இந்தியா டுடேயில் எழுதியிருந்தார். கால்வினோ போன்ற எழுத்தாளர்களை மொழிபெயர்த்திருக்கும் அவரது மதிப்புரையும், நான் பெரிதும் மதிக்கிற எழுத்தாளர் மா.அரங்கநாதன் தொகுப்பைப் படித்துவிட்டு தொலைபேசியில் பேசியதும் எனக்குப் போதுமானதாக இருக்கிறது. சில நண்பர்கள் என்னய்யா எழுதியிருக்க என ஏசியதையும் மதிக்கிறேன்.
               

கேள்வி 7

சமகால சிறுகதைகளையும் நாவல்களையும் உடனுக்குடன் வாசித்துவிடுவிதை நான் அறிவேன். தற்போது இவ்வடிவத்தில் இயங்கும் எழுத்தாளர்களைப் பற்றியும் அதன் உலகத்தையும் நீங்கள் என்னமாதிரியான அபிப்ராயத்தை வைத்துள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?


பதில்:
இளம் எழுத்தாளர்கள் திசைகளற்ற விளிம்புகளில் இயங்குவது பற்றியும், புதிய மையங்களை அவர்கள் உருவாக்க இருப்பதையும் ஏற்கனவே கூறினேன். சந்திரா, எஸ்.செந்தில்குமார், திருச்செந்தாழை, கால பைரவன் ஆகிய சிறுகதையாளர்கள் இப்பொழுது ஒரு தேக்க நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன். கார்ல் மார்க்ஸ் ஜி என்பவரது சில கதைகளை விரும்பிப் படித்தேன். ஆனால் அவரது ஆசானின் கதையுலகம் அவரைப் பாதிக்காமல் இருக்க ஆசைப்படுகிறேன்.  சமீபத்தில் கவிஞர் நரன் எழுதிவரும் சிறுகதைகள் கவனிக்க வைக்கின்றன. அண்மையில் நிறைய நாவல்கள் வந்துவிட்டன. குறிப்பிட்டுச் சொல்வது மாதிரி ஒரு நாவலும் இல்லை. ஜோஸ் சரமாஹோ, மிலன் குந்த்ரே, ஓரன் பாமுக், கால்வினோ, ருல்ஃபோ(ஒரே நாவல்), மிஷிமா, கவாபட்டா, முரகாமி, மியா கூட்டோ, அடிச்சி போன்றவர்களது நாவல்களை வாசித்தபிறகு ஒரு வாசகர், தமிழில் இன்றைய நாவல்களை எப்படி எதிர்கொள்வார் எனத் தெரியவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவிதையில் ஒரு பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதைப் போல கதைப் பரப்பிலும் நடக்கும்.   
      

கேள்வி 8

கோணங்கி. பா.வெங்கடேசன் இருவரின் நாவல்களுக்கான இடம் அதாவது பொதுநீரோடையில் இல்லை. அதற்கான வாசகர்கள் கவிஞர்கள் மட்டுமே என்பதும் சாமன்யாமான வாசகர்கள் அப்பிரதியை எளிதில் அணுகமுடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது. கோணங்கியும் பா.வெங்கடேசனும் உங்களது நெருங்கிய நண்பர்கள். அவர்களது எழுத்துக்களை விவாதித்து வருகிறிர்கள். அதுகுறித்து கட்டுரை எழுதியும் இருக்கிறிர்கள். அவர்களது மொழிகுறித்தும் அவர்களது உலகம் குறித்தும் சாமன்யவாசகனும் புரிந்து கொள்ளவேண்டுமெனில் என்ன செய்யவேண்டுமென நீங்கள் குறிப்பிடுவீர்கள்?


பதில்:
கொஞ்சம் வாசிக்க வாசிக்கப் பழகிவிடும். கோணங்கியை வாசித்துக் கொண்டே இருக்கலாம். எல்லாம் புரிய வேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை. வாசிப்பதே பெரிய அனுபவம் அவ்வளவுதான் என நண்பர்கள் கூறுகிறார்கள். உலக இலக்கிய இதிகாசங்களை ஊடிழைப் பிரதிகளாக அவர் கொட்டுவதைப் பலரும் வியக்கிறார்கள். எனக்கு அவரது அண்மை எழுத்துக்களில் ‘வெள்ளரிப் பெண்’ தவிர வேறு எதுவும் பிடிக்கவில்லை. அவரது ஊருக்கருகில் உள்ள நென்மேனி (இருக்கண்குடி அருகில்) என்ற ஊரில் உள்ள வெள்ளரித் தோட்டத்திலிருந்து அவரது தாத்தா ஊரான நாகலாபுரம் வரை உள்ள நிலப்பகுதியும், அதன் மரம் செடி கொடி என சகல உயிர்களும் மனிதர்களும் மூச்சுவிடும் அந்த மகத்தான கதையை பல முறை வாசித்தேன். அவரது ‘கல்குதிரை’ ஒரு அசாதரணமான முக்கிய பணி என்றும், அது எதிர்காலத் தமிழ் இலக்கியத்தை வெகுவாக மாற்றும் என்றும் நம்புகிறேன். அவர் ஏற்கனவே ஏராளமான அற்புதச் சிறுகதைகளை எழுதிவிட்டார். ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ என்னும் அவரது மொத்த சிறுகதைகளின் தொகுப்பு, தமிழின் சிகரம் தொட்ட தொகுப்பு. பா.வெங்கடேசனையும் ‘ராஜா மகள்’ வெங்கடேசனாக மட்டுமே பார்க்கிறேன். அவரது இரு மெகா நாவல்களிலும் சில பகுதிகள் மட்டுமே எனக்குப் பிடித்திருந்தன. ‘தாண்டவராயன் கதை’ நாவலில் முதல் பகுதிகள் கவித்துவமாக வந்துள்ளது. ஆனால் வரலாற்றுக்குள் நாவல் புகுந்ததும் மூடி வைத்துவிட்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் வரலாற்று நாவல்கள் என்னும் வகைமையின் மீதே ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. நேரடியாக வரலாற்றை வாசித்து விடுகிறேன். தொன்மங்களும் இதிகாசங்களும்  அதே போல புராண இதிகாசங்களை நாவல்களாக எழுதுவதிலும் எனக்கு உவப்பில்லை. ஜேம்ஸ் ஜாய்சின் “யுலிசஸ்" போன்ற இதிகாச ரேகைகளைக் கொண்ட சமகால நாவல்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட விருப்பம். இதன் மீதான விவாதங்களில் எனக்கு விருப்பமில்லை.


கேள்வி 9

ரஷ்ய இலக்கியம், வங்கமொழி இலக்கியம், லத்தீன்அமெரிக்க இலக்கியம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேசத்தின் எழுத்துக்கள் நம்தமிழகத்தை கவர்ந்துள்ளது. அதன் பாதிப்பில் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சிலர் அதன் தொடர்ச்சியாக எழுதியும் இருக்கிறார்கள். நீங்கள் சமீபத்தில் நைஜீரியாவை சேர்ந்த சீமண்டாஅடிச்சியின் எழுத்து குறித்து கட்டுரை எழுதியிருந்தீர்கள். பிறகு ஐப்பானிய நாட்டு எழுத்தாளர் முராகாமியின் எழுத்தை குறிப்பிட்டீர்கள். இவர்களது எழுத்துலகத்தை ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறிர்கள். உங்களது அனுபவத்தை சொல்லுங்கள்.


பதில்:
வாசிப்பது என்பதே வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டதால் நிறைய வாசிக்கிறேன். சிமமந்தா அடிச்சி இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கும் தொடக்க நிலை எழுத்தாளர். அவரது ‘ஊதா நிற செம்பருத்தி’ நாவல் அதன் இறுதிப்பகுதியில் விபத்துக்குள்ளானது போல் மோதி நொறுங்கிவிடுகிறது. அதைவிட பன்மடங்கு சிறந்த நாவல்கள் தமிழில் இருக்கின்றன. பூமணியின் வெக்கை, பிறகு, பா.சிவகாமியின் ஆனந்தாயி, இமயத்தின் கோவேறு கழுதைகள் என நம்மிடம் பல சிறந்த நாவல்கள் இருக்கின்றன. ஆனால் பின்காலனியம் பற்றிய சரியான அரசியல் பார்வை கொண்ட நாவல்கள் நம்மிடம் இல்லை. எனவே தான் சிமமந்தா அடிச்சியை நாம் வாசிக்க வேண்டியதாக இருக்கிறது. அண்மையில் பிரேம் இந்த நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். நைஜீரியா உட்பட்ட ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பலரும் காலனிய, பின்காலனிய வாழ்க்கை பற்றி நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக பூர்வீக கலாச்சார அழித்தொழிப்பு பற்றிய அக்கறை இவர்களது பொதுப்பண்பாக இருக்கிறது. மொசாம்பிக் எழுத்தாளர் மியா கூட்டோ (Mia Couto) என்பவரது ‘தூக்கத்தில் நடக்கும் நாடு’ ‘பெண் சிங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலம்’ ‘அரளிமரத்தடியில்’ ஆகிய நாவல்களை சென்ற ஆண்டு நான் விரும்பி வாசித்தேன். சரமாஹோ, மிலன் குந்த்ரே, பாமுக், முரகாமி வகை நாவல்கள் நம்மிடம் இல்லை. எஸ்.வி.ராஜதுரை ஜோஸ் சரமாஹோவின் நாவல்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். முரகாமி, பாமுக் ஆகியோரது நாவல்கள் தமிழில் வந்துவிட்டன. எனவே ஒரு புதுவகையான நாவல் எழுத்துக்கு தமிழ் நிலம் தயாராகி வருகிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

      

கேள்வி 10

நாவல் எழுதிக் கொண்டிருந்தீர்கள் என்ன ஆனது?


பதில்:
நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் நாவலின் வடிவம் புலப்படவில்லை. அண்மையில் எனக்கு மூளையில் கொஞ்சம் செல்கள் அழிந்துவிட்டன. ஞாபகத்திலிருந்து எழுதுவதைவிட மறதியிலிருந்து எழுதுவது எளிதாக இருக்கிறது. நாவல் கட்டுப்பாடில்லாமல் போகிறது. என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆட்டோ ரைட்டிங் போன்ற உத்திகளைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். மெட்டா வகை நாவலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியும் வரும் மதுரை புத்தகக் காட்சிக்குள் நாவலைக் கொண்டு வந்துவிடுவேன். ஒரு  சிறுவர் நாவலையும் ஓரத்தில் எழுதுவதால் ஒரு சமநிலை கிடைக்கிறது.


ooo  

இந்த நேர்காணல், "பேசும் புதிய சக்தி" ஏப்ரல் 2017 இதழில் வெளியாகியுள்ளது.
நண்பர் எஸ்.செந்தில்குமாருக்கும், பேசும் புதிய சக்தி இதழுக்கும் எனது நன்றிகள்.

  •  

நூல் மதிப்புரை: சமயவேல் ஃப்ராய்டின் குடலை பசியால் குடையும் தோழர் வெய்யில்…




நூல் மதிப்புரை: சமயவேல்

ஃப்ராய்டின் குடலை பசியால் குடையும்

தோழர் வெய்யில் என்னும் தற்காலப் பாணனின் வண்டுகள்


தமிழில்புதுக்கவிதைஎன்னும் இயக்கம் தொடங்கி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பிறகே, 90களில், ஐந்திணைகளிலும் அகம் புறம் என செழித்த தமிழ்க் கவிதையியலின் தொடர்ச்சியை முற்றிலும் புதிய இளம் கவிகளிடமும் பெண் கவிகளிடமும் காண முடிந்தது. ஊர் பேர் இன்றி காடோ மலையோ கடலோ என அலைந்து பண்களோடுபாடல்களை இசைத்த பாணர்களின் மரபு வெய்யிலின் இந்தப் புதிய தொகுப்பில் சமகாலக் கவிச்சியுடன் வழிந்தோடுவது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். கவித்துவக் கிளர்வை ஒவ்வொரு வரியிலும் எழுப்ப முடிகிற இத்தொகுப்பின் எனது வாசிப்பின் அனுபவத்தை பகிர்வதே இந்த கட்டுரை. விமர்சனம் தமிழில் இல்லை என்னும் கோட்பாட்டாளர்களின் சமீபத்திய குற்றச்சாட்டோடு நானும் உடன்படுகிறேன்.

கவிஞர் வெய்யில் இந்தத் தொகுப்புக்கு சூட்டியிருக்கும் பெயரைக் கேட்டதும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. உளவியல் மாணவனான எனக்கு பழங்கிழவர் ஃப்ராய்டைப் போய் எதற்காக இவர் வம்பிழுக்கிறார் என யோசனையாக இருந்தது. தொகுப்பை வாசித்த பிறகு, ஃப்ராய்டின் ஆழ்மனக் கனவுலக இழைகளில்  சிக்காமல், பசிக்குடல்களின் சமகாலத்துயர், இப்பாணனின் பாடல்களுக்குள் துடிப்பதைக் கண்டேன். நமது கிராமங்களில் இளந்தாரிகளை  காமவம்பிக்கிழுக்கும் கிழடுகளின் பட்டியலில் ஃப்ராய்டையும் சேர்க்கின்றன இந்தக் கவிதைகள்.

தோழர் வெய்யில்

தொகுப்பின் இரண்டாம் கவிதையே, பசிக்குடல்களின் மிக அற்புதமான கவிதையாக இருக்கிறது. ‘நிலக்கரி படிந்த ஒரு நுரையீரலின்/பாடலை நீங்கள் கேட்கத்தான் வேண்டுமா?....../அதோ மேகத்திற்கு அருகே பறந்து திரியும் காக்கைகள்/ சுதந்திரமான நம் நுரையீரல்கள்தானா? நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் பாடல் இது. ‘அதன் மையத்திலிருக்கிறது என் கூலிஎன்பது சமகாலக் கவித் தெறிப்பு. ‘பாட்டாளிகளின் சூதாட்டம்என்னும் கவிதை ஆலையின் கன்வேயர் பெல்ட்டில் நிகழ்கிறது. பெரும் இயந்திரங்களில், தலைக்கவசம் அணிந்து வேலை செய்யும் ஒரு தொழிலாளி தான் இக்கவிதையின் கதாநாயகன். மார்க்சின் 1844 கையெழுத்துப்பிரதியில் விவரிக்கப்படும் அன்னியமாதல் இதுதான். ‘துள்ளலான ட்ரம்ஸ் இசை எங்கிருந்தோ அதிர்ந்து எழுகிறதுஎன்று நம்பிக்கையோடு முடியும் இந்தக் கவிதைக்காரர் காம்ரேட் முனியாண்டியை/வெயிலை ஒரு முறை தோழரே என்று அழைக்க ஆசையாக இருக்கிறது

தோழர்  vs  ஃப்ராய்ட்

ஃப்ராய்டுடன் உரையாடும் மூன்று கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்கவிதையில்

                          என்னிடம் இருப்பதிலேயே

                      பெரும் பிரச்னைக்குரிய உறுப்பபென்றால் அது

                      எனது இரைப்பைதான்

                      அரசு எங்களுக்கு பிரம்மாண்டக் கனவுகளைத் தந்திருக்கிறதுதான்

                      அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டுத் தின்ன இயலாது


இது கவிஞரது தெளிவான வாதம். நிஜத்தில் நடப்பதைப் பற்றி பேசவே முடியாமல் இருக்குபோது கனவுகளின் வழியாக ஒரு மனிதனை ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? கவி, அதே கனவுகளைக் கொண்டே ஃப்ராய்டை வீழ்த்திவிடுகிறார். ஃப்ராய்ட்-2 கவிதையில் மார்க்சுக்கு ஆதரவாக  பாலுக்குப் போராடும் அவரது சிசுவையும் மனைவி ஜென்னியையும் ஃப்ராய்ட் முன் நிறுத்துகிறார். கவிதை சரியாக இருந்தாலும், இப்படி ஒரு கவிதை தேவைதானா?. மேலும் ஃப்ராய்டைத் தாண்டி உளவியல் வெகுதூரம் வந்துவிட்டது வெய்யிலுக்கு தெரியும்தானே.

ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்னும் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஃப்ராய்ட் எட்டிக்கூடப் பார்க்க முடியாத ஒரு அம்மா கவிதையும் இத்தொகுப்பில் இருக்கிறது. 68ம் பக்கத்தில் இருக்கிறமின்மினி விளையாட்டுஎன்னும் கவிதை. ‘பயத்தில் ஈரமாகிவிட்ட கால்சட்டையோடு அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதுவெய்யில், நீங்கள் மட்டுமல்ல. தமிழகத்தில், ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. தத்துவத்திற்கும் கவிதைக்குமான போருக்குப் பதிலாக, உளவியலுக்கும் கவிதைக்குமான போரை வெய்யில் நிகழ்த்திப் பார்க்கிறார். கவிஞர்கள் உளவியல் நோயாளிகளாக இருக்கும் ஒரு சமூகத்தில் கவிதை எழுதுவதே அவர்களைக் குணப்படுத்தும் என்று எனது உளவியல் மருத்துவர் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதை இளம் கவிகளுடன் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.


காமாதீதம்

வேட்டையாடித் திரிந்த இனக்குழுக்கள், காமாதீதம் தனது குழுவையே அழித்துவிடும் என்பதை உணர்ந்து ஆண்பெண் உறவில் சில ஏற்பாடுகளையும் விதிகளையும் ஏற்படுத்தின. நதிப்படுகை சமவெளிகளில் குடியேறி வேளாண்மை, நெசவு மற்றும் இன்னபிற தொழில்களையும் கலைகளையும் கண்டுபிடித்த பிறகு நாகரிகங்களும் பண்பாடுகளும் தோன்றின. இறுகிய சமூகங்களின் இனக்குழுக்களின் காமவிதிகள் கடுமையடைந்தன. பெருநகரில் இருந்தாலும் கவிஞன் எல்லாக் காலங்களிலும் காமாதீதத்தின் காடுகளிலேயே தொடர்ந்து வசிப்பதால், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண்பெண் விளையாட்டின் விதிகளை மறுபரிசீலனை  செய்பவனாகவும், கடுமையான விதிகளை அசைத்துப் பிடுங்கி எறிபவனாகவும் கவிஞனே இருக்கிறான். இது பெண்கவிகளுக்கும் பொருந்தும். கவிஞர் வெய்யிலும் காமாதீதத்தின் பிடியில் சிக்கி உழல்பவராகவும், இந்தக் காலகட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்பவராகவும் இருக்கிறார்.  இவரது கைக்கிளை காமாதீதத்தின் அமுது மசானத்தீயில் கொதித்துக் கொண்டிருப்பதை வலியுடன் பதிவு செய்கிறது இவரதுகள்ளக் காதலின் அமுதுஎன்னும் கவிதை. கைக்கிளைக் காமாதீதங்கள் தற்கொலைகளிலும் சிதைவுகளிலும், கொலைகளிலும் முடிவதை  இக்கவிதை மூலம் உணர்பவர்களால், இக் கொதிப்புகளின் மனிதாய எல்லைகளை அறிய முடியும்.  ‘இறைஞ்சி மலர்என்னும் கவிதை,, மிக அழகிய திணைச் சொற்களால் எழுதப்பட்ட ஒரு சிறிய பாடல். ‘ராச்சடங்குஎன்னும் கவிதையும் காமம் அழகியலாகும் சிறிய அகப்பாடல். ‘புத்தனின் கர்ப்பக் குடத்துள் சில கருஞ்சிவப்பு மீன்கள் உறங்குகின்றனஎன்னும் கிம்-கி-துக்கிறகு எழுதப்பட்ட கவிதை, காமத்தின் தூய அழகியற் சொற்களால் ஞானபோதம் வரை நம்மை அழைத்துப் போகிறது.

காலத்தின் கருணையால் காமாதீதப் புயலிலிருந்து மீண்ட ஒருவரை மீ எனும் பனந் தீம்பிழிகவிதையில் சந்திக்கிறோம்.’குற்றத்தின் கூர்மையைச் செறித்து மயக்குஞ் சுவையாய் திரளும்காலத்திடம் இந்தக் கவிதையைக் கூறுகிறார்.

              ‘ஓர் இசைத்தட்டாக

               சுழல்கிறாள் நினைவில்

               இசைச் சுழி ரேகைகளில்

               ஊறும் முள் நீ

               ஒலிக்கையில்

               நானவளின் கருக்குடுவையுள்

               நீ என் விந்து திரளாத காலத்துள்.’


இந்தப் பத்தியின் கடைசி இரண்டு வரிகளின் பிறழ்வுக்குள் எங்கோ நின்றபடி அந்த ஈடிபஸ் கிழவர் ஃப்ராய்ட் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. ஆனால் வெய்யில், மேலும் ஒரு பத்தி எழுதி அதை ஒரு ஓவியமாக்கி வெறித்து நிற்கிறார். இந்தக் குற்றத்தின் நறுமணத்திலிருந்து வெய்யில் விடுபடுவதற்கான ஒரு சிறிய நம்பிக்கையை இந்தக் கவிதை அளிக்கிறது. ‘உங்க பேர் என்ன சார்கவிதையில் வரும்சிறிதும் பெரிதுமாய் இரு பெயர்களை இணைத்து வைத்திருப்பவர்ஓரளவு சமன் அடைந்திருப்பதைப் பார்க்கிறோம். 70-71ம் பக்கங்களில் இருக்கும்பற்றி எரியும் இரவுகவிதையில் கைக்கிளையின் சுவடே இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் தங்களது உடல்களைக் கொண்டு சூதாட எத்தனிக்கும்  விளையாட்டு, இன்றைய இளைய தலைமுறையின் வன்முறை மிக்க காதலாய் இருக்கிறது. ‘சிறிய பிளேடுத் துண்டால் உள்ளங்கையில் மருதாணியிட்டுக் கொள்வது குறித்துஎன்று எழுதுகிறார்.

        ‘தயக்கமின்றி நாணயத்தைச் சுண்டுங்கள்

        ஒருபுறம் காமம் மறுபுறம் சாவு

        அவ்வளவுதானே

என்னும் அற்புதமான வரிகள் இந்தக் கவிதையில் வீணாகியதோ என்றும் தோன்றுகிறது. (கிம்-கி-துக் மன்னிப்பாராக).


உற்பத்தி பெருகி வினியோகம் விரிவடைந்த காலத்தில் பண்டமாற்றுத் தொழில் புரிந்தோர் வியாபாரத்தைக் கண்டுபிடித்த பிறகு, பின்காலனியம், உலகமயமாதல், முதலீட்டியம், என்று மெல்ல மெல்ல நாம் இன்று ஒரு சந்தைசமூகத்தை வந்தடைந்தோம். சந்தைசமூகத்தில்  இந்தக் காமாதீதத்தின் அல்லது காதலின் விதிகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டின. ‘உண்மையின் மீது பெப்பர் தூவுதல்என்னும் கவிதையில் இந்தப் புதிய பரிமாணம் வெளிப்படுகிறது. ஆதிச் சந்தையைத் தொடங்கி வைத்த அதே பெப்பர். ‘நம் தேச வரலாறு/சற்று தூக்கலான மிளகு வாசனை கொண்டதுதான்என சரியாக முடிகிறது இந்த துரோகத்தின் பாடல்.

உடைபடும் ஆதித் தொன்மம்

பலியானவளின் சரித்திரம்கவிதையில் தென்தமிழகக் கிராமங்களின் ஆதித் தொன்மம் உக்கிரமாக வெளிப்படுகிறது. முழுக்க வட்டார பேச்சு மொழியிலேயே எழுதப்பட்டிருப்பது உக்கிரத்திற்கு வலுக்கூட்டுகிறது. கரிசல் கிராமங்களில் விடிய விடிய வில்லுப்பாட்டுகள் கேட்ட பால்யம் என்னுடையது.

                  ‘ஏழேழு ஊழியிலயும் யாரும் காங்காத சிரிப்பு

               அறிஞ்சிக்கிட ஏலாத சிரிப்பு

               நாக்க கடிக்கா பெருமூச்சு விடுதா

               சிரிக்கா சிரிக்கா

               கடக்கண்ணுல தண்ணி ஆறா ஓடுது

மந்திரவாதி பெரும்புலையன் நிறைசூலியாய் இருக்கும் தன் செல்லமகள் இசக்கியின் நெஞ்சுக்கொலையைப் பிடுங்கி தலைவாழை இலையில் சுடலைக்குப் படைக்கும் கதையை பாடுகிறாள் வில்லுப் பாட்டுக்காரி. கேட்டுக் கொண்டிருந்த எசக்கி சன்னதமாகி சுடலைமாடனின் பீடத்தைப் பார்த்து சிரித்த சிரிப்பில்இடியாட்டம் மடார்னு விழுந்துச்சி கீறல்விழுகிறது பீடத்தில். வில்லுப்பாட்டுக்காரியைப் பார்த்து                         

                      “ஈரக்கொலைய எப்படி அறுத்தான்?

                  திரும்பப்பாடு”-ங்றா

                  அவளும் எசக்கில்லா

                  வீசுகோல சொழட்டிப்போட்டு

                  அடிச்சா பாரு வில்லு


தொன்ம நாடகம் புதிய இசக்கியால்  உடைபடுவதை அற்புதமாகப் பதிவு செய்கிறது கவிதை. எசக்கிகளின் உலகில் சிக்கியிருக்கும் வெயிலுக்கு இப்படி ஒரு நிகழ்வைப் பதிவிடுதல் ஒரு பெரிய காரியமா என்ன? .முத்துசாமியின்தொறச்சிசிறுகதையை ஞாபகப்படுத்திய கவிதை இது. 

பாணர் பாடல்கள்


இத்தொகுப்பில் இருக்கும் மூன்று சமகால பாணர் வகைப் பாடல்களைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. ‘தன்னையறியாமல் பாடும் நாஒரு முழுமையான பாடலாகவே இருக்கிறது. ‘அது தோற்றுப் போகிறவர்களின் பாடலா அப்பா?’ என கவிதை முடியும் போது, சென்ற  தலைமுறையின் வீழ்ச்சி இந்தத் தலைமுறையின் மேல் பெருந்துயருடன் கவிகிறது. ‘சூல் வயிற்றுச் சித்திரம்அந்தக் குழந்தை வளர்வதைப் போலவே வரிவரியாக வளர்ந்து ஒரு அற்புதமான கவிதையாகிவிடுகிறது. ‘நாட்டுப்புறப் பாடல்என்னும் கவிதை ஒரு கச்சிதமான கலித்தொகைப் பாடலாக இருக்கிறது. இளையராஜாவின் ரசிகரான இவர் ஒரு பிசுபிசுக்கும் மெட்டையும் இக்கவிதைக்குள் மறைத்து வைக்கிறார்.


அழிவில் பிறக்கும் சூழலியல்


கவி எப்பொழுதுமே, புழு பூச்சி புல் விருட்சம் சிங்கம் புலி போன்ற ஒரு பூமிவுயிரியே. பூமியையும் தாண்டி, விண்வெளிகளையும் தாண்டி அகண்ட பிரபஞ்சத்தின் வெடிப்புகளில்  பிறந்த புதிய கோளான கவி ஒரு பிரபஞ்சவுயிரியாகவும் இருக்கிறான். காற்று, மழை, நதி, கடல், காடு, மலை என்னும் பூமியின் உயிர் ஸ்தலங்கள் மாசுபடிவதையும் அழிக்கப்படுவதையும் கண்டு மிரண்டு குரல் எழுப்பும் சூழலியல்காரனாகவும் கவிஞன் இருந்து வருகிறான். வெய்யிலின் இந்தத் தொகுப்பிலும் பல சூழலியல் கவிதைகள் இருப்பதில் வியப்பில்லை. வெறும் பிரச்சாரமாக இல்லாமல் அவை கவிதையாகவும் இருக்கின்றன. ‘எங்களிடம் இருநூறு பனை மரங்கள் இருந்தனஎனத் தொடங்கும்பனைகளின் பிள்ளைகவிதையில் தனது பனங்காடு அழிந்து விளையாட்டுத் திடலாக மாறியிருக்கும் பெருந்துயரைப் பதிவு செய்கிறார். அழிந்த பனைகளில் தங்கள் வீடுகளை இழந்த முதிய கிளிகளை இவர் சந்திக்கிறார்.

                       ‘மூச்சிரைத்து திரும்பும் வழியில்

                        மூன்று முதிய கிளிகளைப் பார்த்தேன்

                        அவை என் தோள்களில் இறங்கின

                        நிமித்தமாய் கடலில் சூறை எழுந்து தணிந்தது

                        நான் பனைகளின் பிள்ளையானேன்

கவித்துவம் கள்ளாய்ப் பொங்கும் கவிதையாகவும் இது இருக்கிறது. பனைகளின் அழிவு தேசத்தின் அழிவு என்று சூழலியல் இன்று எச்சரித்துக் கொண்டிருக்கிறது.


 ‘அறத்தடி நீர்என்னும் கவிதை இன்று நீராதாரங்கள் அழியும் துயரை நீர்க்காகங்களோடும்பொருள்மிக்கதோர் தற்கொலையை நிகழ்த்தியஅப்பாவோடும் இணைத்து அற்புதமான கவிதையாக்கிவிடுகிறார். ‘தன்னையறியாமல் பாடும் நாகவிதையிலும் வேளாண்மை அழியும் சோகம் அப்பாவின்/பட்டுக்கோட்டையின் பாடலோடு இணைகிறது. ஊழி கடந்துவரும்பிரெட் பாக்கெட்” 2015ன் சென்னைப் பெருவெள்ளத் துயரைப் பதிவு செய்கிறது. ‘கடன்வாங்கிக் கழித்தல்கவிதையில் விவசாயிகளின் தற்கொலைகள் பேசப்படுகிறது. ‘பூச்சிகளின் உபரி வரலாறுஎன்னும் நீள் கவிதையில் கற்காலத்திலிருந்து தொடங்கும் மனிதனின் வரலாறு பல்கோணங்களில் பத்திபத்தியாகப் பதிவு செய்யப்படுகிறது. மரத்துப்போனஅறவுணர்ச்சியை நான் கல்லின் கூர்மையாலேயே கீறினேன்/ கல் மிகுந்த பயன்பாடுள்ளது நண்பர்களே என்று முடிக்கிறார். (நீள் கவிதைகள் தமிழில் ஏன் வெற்றியடைவதில்லை.? நெடுநல்வாடை எழுதிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரை வேண்டிக் கொள்வோம்).

அந்த வண்டு
               

                ‘சிரமமாயிருக்கிறது….

              புர்ர்ர்ரென்று உங்கள் கவிதைக்குள் சுற்றித் திரியும்

              அந்த வண்டைக் கொல்லுங்கள்


              நண்பரே

              அந்த வண்டு சுற்றித் திரியத்தான் கவிதையே.’

அந்த வண்டு வெய்யிலின் கவிதைக்குள் தொடர்ந்து சுற்றித் திரியட்டும். வாழ்த்துக்கள்.


--------------------------------------------------------------------------------------------------------------------------

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்

கவிதைத் தொகுப்பு 80 பக்கங்கள்.

ஆசிரியர்: வெய்யில்

மணல்வீடு பதிப்பகம்

விலை ரூ.80.

 -------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: புத்தகம் பேசுகிறது, டிசம்பர்,2016 

  •  

கவிதை மொழிபெயர்ப்பு: நாம் ஏன் புத்தனைத் தனியே விடக் கூடாது? புத்தனை ஒரு ய…

கவிதை மொழிபெயர்ப்பு:
நாம் ஏன் புத்தனைத்

தனியே விடக் கூடாது? புத்தனை ஒரு யானைச் சவாரி செய்ய வைக்கிறோம்,

ஒரு கிராமச் சிறுவன் ஒரு மனிதனின் தோளில் சவாரி செய்வது போல, மற்றும் நாம் புத்தனை ஓடவும் விளையாடவும் விடுகிறோம், பிறகு அவரை அழச் செய்கிறோம், மற்றும் நாம் அவரை ஒரு தயிர்க்காரப் பெண்ணுடன் ஆனந்தத்துடன் இணைய விடுகிறோம் மற்றும் அதைத் தந்திரா என்று அழைக்கிறோம், ஆனால் பிறகு நாம் அவரை வெறுமைக்குள் தானாக புன்னகை செய்யவிடுகிறோம், உட்காரச் செய்கிறோம், கீழே படுக்க, அவரை இடுப்பிலிருந்து பிறக்க வைக்கிறோம், பிறகு உடனடியாக நடப்பது எப்படி எனக் கற்பிக்கிறோம் மற்றும் அவர் தூங்குவதற்காக கீழே படுத்தவுடன் நாம் அவரைக் கேள்விகள் கேட்கிறோம் நீங்கள் இதையும் அதையும் கூறினீர்களா இல்லையா?. மற்றும் நாம் அவரது விரல்களைப் பின்னலிட்டோம். அவரது மூக்கை வெட்டினோம் மற்றும் அதைத் தண்ணீரில் நனைத்து விழுங்கினோம், பிறகு அவரைத் தங்கத்தால் அலங்கரித்தோம், ஆனால் பிறகு அவரது தொண்டையை வெட்டினோம் மற்றும் அவரது தலையை இன்சாடாங்கில் உள்ள ஒரு கடையில் விற்றோம், மற்றும் ஒரு மலையுச்சியிலிருந்த ஒரு குகைக்குள் அவரை அடைத்தோம், மற்றும் அது போதாமையால் ஒரு பாறையின் உட்புறம் வைத்தோம், அவரைப் பட்டினியிட்டோம், அவரால் மூச்சுவிட முடியாதபடி அவரது தோலில் தங்கத்தைப் பூசினோம், ஒரு தொலைதூர மலையுச்சியில் அவரை நிற்க வைத்தோம் மற்றும் படகில் அவரை அடைந்தபோது அவரை சீராட்டினோம், மற்றும் அவரது காலடியில் நின்று எங்களை உதைக்குமாறு கெஞ்சினோம். நாம் அவரைத் தனியேவிட முடியாதா? ஒரு நீல நதியைப் பார்த்தவாறு ஒரு மலைச்சிகரத்தில் ஒரு வீடு கட்டி அதற்குள் அவரை அடைத்தோம், மற்றும் நாங்கள் ஒரு கூட்டமாக்ச் சேர்ந்து அவரைக் கேவலப்படுத்த சென்றோம். நாங்கள் அவரை கும்மாங்குத்து குத்தினோம், அவரை நசுக்கினோம், அவரைத் தள்ளிவிட்டோம், பிறகு நாம் வீட்டுக்கு வந்து துளைக்கப்பட்ட விரல்களின் ரத்தத்தால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதினோம், மற்றும் நாம் அவரது பற்களைப் பிடுங்கினோம் மற்றும் அவற்றை எண்ண முடியாத பைகளில் பகிர்ந்து முழு உலகுக்கே கொடுத்தோம், மற்றும் அதற்காக அவர் அருகில் சென்று குனிந்து முழந்தாளிட்டு ஒருமுறை அவரது கண்களுக்குள் பார்த்துவிட்டு பிறகு நமது தாழ்த்திய முகங்களோடு வீடு திரும்ப வேண்டுமா ?


தென் கொரிய மூலம்: Kim Hyesoon 

மொழிபெயர்ப்பு:ஆங்கிலம்: டன் மீ சோய். தமிழ்: சமயவேல்.



  •  

தி.க.சி. என்னும் இடதுசாரி இலக்கிய விமர்சகர்.

நெல்லையப்பர்- காந்திமதியம்மன் ஆலயத்தின் மேற்குரத வீதி தொடங்கியவுடனேயே வரும் சிறிய பீடக்கோவிலாகத்தான் சுடலைமாடன் கோவில் இருந்தது. இப்பொழுது கொஞ்சம் பெரிய கோவிலாகக் கட்டி இருக்கிறார்கள். சமீபங்களில் இறப்பு வீடுகளுக்குச் சென்றால் கதறலுடன் கூடிய அழுகை ஒன்று என்னைத் தொற்றிக் கொள்கிறது. முன்பெல்லாம் அழுவது என்ற பழக்கமே கிடையாது. அலுவலகம் செல்ல பஸ்-ஸ்டாப்பில் நின்ற எனது தோழி ஒருவர், பிரேக் பிடிக்காத பஸ் மோதி தலை நசுங்கி இறந்து போனார். அடக்கமெல்லாம் முடிந்த பிறகு, மறுதினம் தான் தகவல் அறிந்து, அவரது வீட்டுக்கு நானும் என் மனைவியும் சென்றோம். தோழியின் பிள்ளைகளைப் பார்த்தவுடன் ஏனோ கதறிக் கதறி அழ ஆரம்பித்துவிட்டேன். அவர் இறந்த முதல்நாள் கூட, அவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறேன். மரணத்தின் எதிர்பாராமை என்னைப் பலமாகத் தாக்கிவிட்டது. அன்று சுடலை மாடன் தெருவுக்குள் நுழைந்தவுடனேயே விசும்பல் வந்துவிட்டது. கண்ணாடிப் பெட்டிக்கருகில் கல்யாண்ஜியைப் பார்த்ததும், அப்பா, என்று கதறி அழத் தொடங்கிவிட்டேன். வேலை என்று எதுவும் பார்க்காமல் சென்னையில் அனாதையாய் அலைந்த நாட்கள் ஞாபகம் வந்துவிட்டன.


                       வல்லிக்கண்ணன் அவர்களது சகோதரர் வீட்டில்தான் தி.க.சி.யை சந்தித்தேன். அழைத்துச் சென்றது வண்ணநிலவன். பிறகு பல முறை சந்தித்திருக்கிறேன். தூத்துக்குடியில் கல்யாண்ஜி இருந்தபோது இருமுறை சந்தித்திருக்கிறேன். தொடர்ந்து அஞ்சல் அட்டை அனுப்பி வந்தார். எனது கவிதை/கட்டுரை/கதை எந்த இதழில் வந்தாலும் படித்துவிட்டு கடிதம் போடுவார். அனேகமாக தமிழில் எழுதுகிற பலருக்கும் முதல் ரெஸ்பான்ஸ், எழுத்தில், தி.க.சி.யிடமிருந்து மட்டுமே வந்து கொண்டிருந்தது. இனி யாரிடமிருந்து வரும் என்பது தெரியவில்லை.


                       பல நண்பர்களை அன்று சந்திக்க முடிந்தது. நான் அண்ணன் கலாப்ரியாவை ஒட்டிக்கொண்டேன். தாய்க் கோழியும் குஞ்சுகளும் போல, நாங்கள் ஒரு குழு அந்த சந்துகளைச் சுற்றி அங்கும்  இங்குமாக நின்று பேசிக் கொண்டே இருந்தோம். சாம்ராஜ் பல விஷயங்களை அண்ணனிடம் துருவித் துருவிக் கேட்டுக்கொண்டே வந்தார். சுந்தர்ஜியும் அதிகம் பேசிக் கொண்டிருந்தார். போகன் சங்கர் வந்ததும் ஒரு இலக்கிய உரையாடல் தொடங்கியது. தமிழ்செல்வன் ஒரு பட்டாளத்துடன் வந்தார். ராமகிருஷ்ணன் சார்வாள் அவரது சேக்காளிகளுடன் வந்திருந்தார். எனது ஆசிரியர் சிவசு ஒரு தனித்த குழுவுடன் இருந்தார். ஏனோ ஜோதிவிநாயகம் ஞாபகமும் வந்து போய்க்கொண்டிருந்தது.

                       நீர்மாலை எடுத்தபிறகு இறுதி ஊர்வலம் செங்கொடி வணக்கத்துடன் தொடங்கியது ஒரு நிறைவாக இருந்தது. ஒரு மனிதன் இந்தியாவில் கடைசிவரை இடதுசாரியாக வாழமுடிந்தது, அந்த இறுதி நேரத்தில், மரித்துப்போன ஆத்மாவைக் கொண்டாடுவதற்கான ஒரு வலுவான காரணமாக அமைந்தது. கட்சிவேலைகளில் ஈடுபட்டு அலைந்த எனது இளம்பருவம் ஞாபகம் வந்தது. மூத்த கலை இலக்கியப்பெருமன்றத் தோழர்களின் துயரம், தோழர் நல்லகண்ணுவுடன் வந்த தோழர்கள் அந்த ஊர்வலத்தை முன்னெடுத்தவிதம், அதில் பழ.நெடுமாறனின் இயக்கத் தோழர்களும் இணைந்து கொண்ட உணர்வு எல்லாம் பார்த்து எனக்குப் பெருமையாக இருந்தது. எனது அப்பாவைக் குறித்த பெருமையாக அந்தக் கணங்கள் நிரம்பித் ததும்பின.


                சோவியத் நாடு, தாமரை இதழ்களில் பணியாற்றிய நாட்களிலிருந்து கடைசிவரை இடதுசாரி இயக்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள், பரந்துபட்ட ஊடகச் செயலர்கள் என எல்லோருடனும் ஒரு இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார் தி.க.சி. தனக்கு சரி எனத் தெரிவதை யார் செய்தாலும் பாராட்டுகிற பண்பு அவரிடம் இருந்தது. மனசுக்குள் பாராட்டிக் கொண்டிருக்காமல் சமபந்தப்பட்டவர்களுக்கும் ஏதேனும் ஒரு வழியில் அதைத் தெரிவித்துவிடவும் செய்வார்.


                தி.க.சி.யின் மூன்று பிள்ளைகளும் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். கணபதி அண்ணன் நினைவும் வந்துகொண்டே இருந்தது. சேதுத் தம்பி வந்து கையைப் பிடித்துக் கொண்டார். பெண்கள் எல்லோரையும் மறந்துவிட்டது. காலம் என்னவெல்லாமோ செய்துவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை நினைவுகள். ஞாபகங்கள், வருத்தங்கள். ஆறாத்துயரம் எனினும், குடும்பங்களில் மரணம் என்பது பல சிக்கல்களுக்கு முடிவு தந்து விடுகிறது.



வியாழக்கிழமை முழு நாளும் நெல்லையிலேயே இருந்துவிட்டு கருப்பந்துறை  மயானம் சென்றோம். கருப்பந்துறை பராமரிப்பின்றி அதன் இயல்பில் அதன் அழகுகளோடு இருந்தது. பின்புறம் படித்துறையிலிருந்து நேர்கீழே ஆற்றுக்குள் இறங்குகிற பாதை அடைபட்டுக் கிடந்தது வருத்தமாக இருந்தது. மயானத்திலேயே திரு.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் ஒரு திடீர் இரங்கல் கூட்டமும்  நடந்தது. கூச்சமாக இருந்தது. தள்ளித் தூரத்தில் நின்றபடி புகையத் தொடங்கிய சிதையையும்  நண்பர்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு நடந்து கொண்டிருப்பது  எல்லாவற்றிற்கும் நானும் சாட்சியாக இருந்தேன். தி.க,சி. இறந்துவிட்டார் என்பது மெல்லப் புரியத் தொடங்கியது.

இத்துடன் எனது கவிதை:
(மின்னிப் புற்கள் தொகுப்பு பக்கம் 13)

சாம்பல்
உயர்ந்த மருத மரங்கள் நடுவில்
அகன்ற சாலையில்
ஓட்டமும் நடையுமாக
பூ வண்டியின் பின்னால்
எங்கிருக்கிறது கருப்பந்துறை
ரொம்பத் தூரமா?
கருப்பந்துறை தெரியாதா
வெளியூரா, ஆமாம்
கொஞ்ச தூரம்தான் கருப்பந்துறை
அடர்ந்த மரங்கள் செடிகொடிகள் நடுவில்
சங்கின் ஊதலோடு
கிளம்பியது புகை
வாருங்கள் குளிக்கலாம் என
இறங்கினோம் நதிக்குள்
தாமிரபரணியின்
நீர் நடு மேடொன்றில்
ரம்மியம் அடர்ந்த மஞ்சள் வெயிலில்
பொருத்தமற்று நின்றிருந்தது
ஒரு
சாம்பல்
கொக்கு.
(நன்றி: தீராநதி)

  •  

எனது சிறுகதைத் தொகுப்பு "இனி நான் டைகர் இல்லை" ...முன்னுரை

முன்னுரை: சமயவேல்.


                                                                       தொலைந்த கதைகள்


               1970களில் வாழ்க்கையோடு சேர்த்து கதைகளையும் தொலைத்துக் கொண்டிருந்த இளைஞனாக நான் இருந்தேன். எனது முதல் சிறுகதை தாமரையில் இளமதி என்ற புனைபெயருடன் வெளிவந்தது. அந்தத் தாமரை இதழைக்கூட நான் பார்த்ததில்லை. ஆண்டும் மறந்துவிட்டது. பள்ளிக்குச் செல்லும் வழியில் பறக்கும் தட்டானைப் பிடிக்கச் செல்லும் சிறுமியின் சட்டை முள்ளில்பட்டுக் கிழிந்துவிட, அவள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கிறாள். அவளது பாவாடை நூலில் கட்டப்பட்ட தட்டான் பட பட என்று றெக்கைகளை அடித்தபடி தவிக்கிறது. அப்பாவுக்குத் தெரிந்தால் அவளுக்கும் அடி விழும் அவளது அம்மாவுக்கும் அடி விழும். அந்தச் சிறுமி நூலை அவிழ்த்து தட்டானை விடுவிக்கிறாள். இப்படித்தான் அந்தக் கதையை எழுதியிருந்ததாக ஞாபகம். அந்தக் கதையைத் தேடியும் கிடைக்கவில்லை. பாளையங்கோட்டையில் படித்துக் கொண்டிருந்த போது நண்பரும் ஆசிரியருமான சிவசு நடத்திய ஒரு பத்திரிகையில் ஒரு கதை எழுதியிருந்தேன். ஒரு நண்பனைத் தேடி பசியோடு திசை தெரியாமல் நடந்து கொண்டே இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை அது. ஒரு இடத்தில் மீன்பிணங்கள் என்று எழுதியிருந்ததை நண்பன் ந.முருகேசபாண்டியன் ஆட்சேபம் தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது. அந்தக் கதையும் தொலைந்துவிட்டது. அந்தக் கதையைப் பாராட்டி உற்சாகம் அளித்த நண்பர் ஜோதிவிநாயகமும் தொலைந்துவிட்டார்.


              சென்னை வாழ்க்கையின் போது நம்பி அண்ணாச்சி (விக்கிரமாதித்யன்) தந்த உற்சாகத்தில் ஒரே மாதத்தில் நான்கு கதைகள் எழுதினேன். ஒரு கதையின் தலைப்பை ஆங்கிலத்தில் என்கவுண்டர் என்று யோசித்து தமிழில் 'சந்திப்பு' என்று வைத்தேன். 'கபிலா' என்ற புனைபெயருடன் அந்தக் கதை வலம்புரிஜான் நடத்திய 'தாய்' இதழில் வெளியாகியது. வலம்புரிஜான் என்னை நேரில் வரவழைத்து பாராட்டி ஒரு புதிய 100 ரூபாய்த்தாளைக் கொடுத்தார். அது ஒரு மறக்கவே முடியாத நாள். ஏனெனில் அந்த நாளுக்கு முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். நம்பி என்னை சத்தம் போட்டு சும்மா வாடா என்று நெல்சன்மாணிக்கம் சாலையில் இருந்த தாய் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். நாயர்கடை டீயிலும் பன்னிலும் கழிந்த நாட்கள் அவை. 33, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலத்தில் இருந்தபோது ஒரு நேரம் காலையில் குழாய்ப்புட்டை சைனா டீயில் பிசைந்து சாப்பிட்டு (அதுவும் அக்கவுண்டில்) ஒரு முழு மாதத்தையும் கழித்திருக்கிறேன். இந்த 'சந்திப்பு' கதையை இயக்குனர் சேரன் தனது ஆட்டோகிராப் படத்தில் முதல் அத்தியாயமாக வரிக்குவரி  மாற்றாமல் அப்படியே அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார். அந்த சமயத்தில் எழுதிய மூன்று கதைகளை இளவேனில் நடத்திய கார்க்கி இதழுக்குக் கொடுத்திருந்தேன். கார்க்கி இதழும் வரவில்லை. அந்தக் கதைகளும் தொலைந்து போயின. ஒரு கதை இந்துமதி நடத்திய 'அஸ்வினி' என்ற இதழில் வந்தது. முன்றிலில் வெளியாகிய கதை கிடைத்துவிட்டது. எனது அன்புக்குரிய நன்பர் மா.அரங்கநாதன் கேட்ட மறுநாளே அனுப்பிக் கொடுத்தார். 'மன ஓசை'யில் வெளியாகிய கதை அண்மையில் வெளியாகியிருக்கும் 'மன ஓசை' கதைத் தொகுப்பில் இருக்கிறது. பல கதைகள் எழுதப்பட்டும், கிழிக்கப்பட்டும் தொலைக்கப்பட்டும் போயே போயின.  
           

             2007ல் எனக்கு ஒரு இதயத்தாக்கு ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் எல்லாம் செய்து ஒரு நான்கு மாத விடுப்பில் வீட்டில் இருந்தேன். கல்லூரிப்படிப்பை முடித்ததும் ஆறு மாதங்கள் எந்த வேலையும் செய்யாமல் கிராமத்தில் இருந்த அந்த அற்புத நாட்களை இந்த நான்கு மாதங்களில் மீண்டும் அடைந்தேன். இதயத்தாக்கின் போது மூளையிலும் கொஞ்சம் செல்கள் அழிந்துவிட்டன. ஞாபகங்கள் பல அழிந்த நிலையில் ஒரு குழந்தையின் குதூகலம் எனக்குக் கிட்டியது. நிறைய இசை கேட்டேன். நிறையப் படித்தேன். நிறைய சினிமாக்கள் பார்த்தேன். என் வாழ்வில் நடந்த எல்லாக் கசப்புகளும் மறந்துபோயின அந்த அற்புத நாட்களில் நான் கண்ட ஒரு கனவை அப்படியே ஒரு கதையாக எழுதினேன். 'மன்னார் வளைகுடாவில் ஒரு நன்னீரோட்டம்' என்ற அந்தக் கதை 'உயிர் எழுத்து' இதழில் பிரசுரமாகியது. நண்பர் தேவதச்சன் அந்தக் கதையை வெகுவாகப் பாராட்டினார். சிதறடிக்கப்பட்ட ஞாபகங்களின் கோர்க்கப்படாத இசையொன்று அந்தக் கதைக்குள் நுழைந்திருப்பதை இப்பொழுது அவதானிக்க முடிகிறது. டோரிஸ் லெஸ்ஸிங்கின் 'புல் பாடிக் கொண்டிருக்கிறது' புதினத்தைப் படித்ததும் அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். புல் பாடும் ரொடீசியாவின் நிலக்காட்சி மூலம் எனது கிராமத்தின் நிலக்காட்சிகளை நான் மீட்டுக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கதைகள் எழுதத் தொடங்கினேன். ஓரன் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' நாவலை ஆங்கிலத்தில் படித்ததும் அதன் கட்டமைப்பில் மயங்கி 'பச்சை மரகதக் கல்கிளி' கதையை எழுதினேன். 'உயிர்மை'யில் வெளியாகியது. ஒரு புதினத்தின் கட்டமைப்பை, ஒரு சிறுகதைக்குள் சுருட்ட எத்தனிப்பது பேராசை எனினும் அந்தக் கதை எனக்குப் பிடித்தமான கதையாகவே இருக்கிறது.


             குழந்தை மனநிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே மனிதர்களாகிய நாம் கதை கேட்கும் ஆசையைத் தொடர்ந்து அணையாமல் காப்பாற்றி வருகிறோம். மேலும் நாம் நமக்கு விதிக்கப்பட்ட தனிமையை எதிர்கொள்ள முடியாமல் பொய்யும் மெய்யும் கலந்த கதையுலகிற்குள் ஒளிந்து கொள்கிறோம். கனவாற்றின் கரைகளில் உள்ள சில கதகதப்பான குடிசைகளில், துயரத்தின் மடியிலும் நம்மால் கொஞ்சம் சொகுசாகப் படுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் கதை சொல்வது என்பது அந்தக் கதையை அப்படியே வாழ்வதற்கு ஒப்பானது. படைப்பாளி மொழியின் கையைப் பிடித்துக் கொண்டு மேகங்களில் மிதக்கத் தொடங்குகிறான். தேவதைகளோடும் பூதங்களோடும் ஒரு ஆடலை நிகழ்த்தும் வாய்ப்பை அவன் பெறுகிறான். ஒரு போதையூட்டும் இனிய சுழலில் சிக்கிக் கொள்ளும் அவனது பயணம் சில சமயங்களில் நிம்மதியிலும் பல சமயங்களில் பெரும் வாதையிலும் முடிகிறது. ஆனால் தன் கதையை யாரெல்லாம் வாசிக்கிறார்கள் என்று கவனிக்கத் தொடங்கும் அங்கீகாரக் கவலைகளில் கதைக்காரன், தான் ஒரு படைப்பாளி என்கிற உண்மையைத் தொலைக்க ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு நொடியும் தன்னை ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் அந்தரங்கசுத்தி உள்ள கதைக்காரனே பெரும் படைப்பாளியாகவும் மாற முடியும். சமூக அக்கறை, அரசியல் பொறுப்பு, கலாச்சாரப் பொறுப்பு, மொழி அக்கறை, வடிவ நேர்த்தி என்னும் எல்லா அலகுகளையும் உள்ளடக்கிவிடும் ஆற்றலை கலைஞன் இப்படித்தான் பெறுகிறான்.
   

              நானும் இப்படி ஒரு சுழலில் சமீபத்தில்தான் சிக்கி இருக்கிறேன். தொடர்ந்து கதை எழுதும் ஆசையில் விதம் விதமாக எழுத ஆசைப்படுகிறேன். தனது முதல் கதைத் தொகுப்பை வெளியிடும் இளைஞனின் குதூகலம் எனக்கும் கிடைத்திருக்கிறது. இன்னும் எழுதுவேன்.


                                                          சமயவேல்               27-10-2011                                                  [email protected]                                                     மதுரை                                                



  •  

பால்கேயைக் கொண்டாடுவோம்


சமயவேல்: பால்கேயைக் கொண்டாடுவோம்


 


                                           

         
 
 தாதாசேகிப் பால்கேயின் நன்கொடை:

       நூறு வயது இந்தியத் திரைப்படம்

 


                              
 
 
 
 
 
 
20.04.2013 மாலை, மதுரை எட்வர்டு ஹால் திறந்த வெளி அரங்கில்  இந்தியத் திரைப்படத்தின் நூறாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக,  தாதாசாகேப் பால்கேயின்/இந்தியாவின் முதல்த் திரைப்படம் ‘ராஜா ஹரிச்சந்திரா(1913)’வின் சில பகுதிகளும், அவரது ‘காளியா மர்தன்(1919)’ முழுத் திரைப்படமும், பால்கேயின் முதல்த் திரைப்பட முயற்சியின் போராட்டம்  பற்றிய  “ஹரிச்சந்திராச்சி  ஃபேக்டரி” என்னும் திரைப்படமும் மதுரை யதார்த்தா திரைப்படக் குழுமம் சார்பில் நடைபெறுகிறது என்று நண்பர் ‘யதார்த்தா ராஜன்’ அழைத்திருந்தார். எட்வர்டு ஹால் திறந்தவெளி அரங்கில் நண்பர் ராஜன் படம் போடுகிறார் என்றாலே அன்று எப்படியும் மதுரையை நோக்கி மழை வந்துவிடும். அன்றைக்கும் நாலாபுறமும் மேகங்கள் சூழ்ந்து நின்றன.  6.15க்கு சில துளிகளும் தூரலும் கூட விழுந்தன. அப்போதும் ராஜன் மனம் தளராமல் படவீழ்த்தி/ஒலிப்பெட்டிகள் எல்லாவற்றையும் கொஞ்சம் நனையாமல் உள் நகர்த்திக் கொள்ளச் சொன்னார். பெரிய மழை வந்தாலும் பரவாயில்லை உள்ளே போய்க்கொள்ளலாம் என்றும் கூறிக் கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வைக் காண அப்பொழுது ஒன்பது பேர் மட்டும் (யதார்த்தா நண்பர்களையும் சேர்த்து) இருந்தோம். மேலும் ஓரிருவர் வந்து சேர்ந்ததும் ராஜன் மைக்கைப் பிடித்து நிகழ்வைத் தொடங்கினார்.


 


                       1870ல் நாசிக் அருகில் உள்ள  ‘த்ரியம்பகேஷ்வர்’ என்னும் ஊரில் பிறந்த பால்கே, 1885 முதல் 1890 வரை மும்பை ஜே.ஜே. கலைப்பள்ளியில் பயின்றவர். கோத்ரா நகரில் சிறிய புகைப்படக் கலைஞராக இருந்தார். அப்பொழுது பரவிய ப்ளேக் நோயில் அவரது மனைவியும் குழந்தையும் இறந்த பிறகு, லூமியர் சகோதரர்களிடம் பனியாற்றிய ஜெர்மன் மாயஜால வித்தைக்காரர் கார்ல் ஹெர்ட்ஸைச் சந்தித்தார். பிறகு இந்தியத் தொல்பொருள்த் துறையில் வரைவாளராகப் பனிபுரிந்தார். அந்த வேலையும் பிடிக்காமல் அச்சுத் தொழிலைத் தொடங்கினார். ‘செதுக்குக்கலையச்சு’ மற்றும் ‘தைலவண்ண அச்சியல்’ துறைகளில் சிறந்து விளங்கினார்.  தைல வர்ண அச்சுக்கலை நிபுணரான பால்கே, பிரபல இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை அச்சிடும் வேலையச் செய்தார். பின்னாளில் அவரது திரைப்படங்களில், ராஜா ரவிவர்மா ஓவியங்களின் பாதிப்பை நாம் நிறையவே காணலாம். குறிப்பாக அரச உடைகள், ராணி தோன்றும் காட்சிகளின் படமாக்கல் முறை, ஓவியங்கள் போலவே இருப்பதைக் காணலாம். அவரது சொந்த அச்சகத்தைத் தொடங்கினார். ஜெர்மனி சென்று அச்சுக்கலையின் புதிய தொழில் நுட்பங்களையும் எந்திரவியலையும் பயின்று வந்தார். புகைப்படக் கலைஞராகவும் அச்சுக்கலை வல்லுனராகவும் வாழ்வை அமைத்துக் கொண்டார்.  செவ்வியல் புகைப்படக் கலையின் அம்சங்களையும் திரைச் சட்டகங்களில் மிக அற்புதமாகப் படமாக்கியிருப்பதைக் காண முடிகிறது. குறைந்த தொழில் நுட்பங்களுடன் கூடிய அந்தக் காலத்திலேயே அவர் மாய யதார்த்தக்  காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம்  பெரும் வியப்புக்குரியது.


                           அச்சகத்தை நடத்துவதில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட சிறிய பிணக்கு காரணமாக சலனப் படங்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். ‘கிறிஸ்துவின் வாழ்க்கை’ என்ற மௌனப்படம் ஒரு பெரிய தூண்டுதலாக இருந்தது. இந்தியக் கடவுள்களையும் திரையில் பிடித்துவிட ஆசைப்பட்டார். லண்டன் நகரம் சென்று இந்தப் புதிய கலைபற்றிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு வந்தார்.


                         1912ல் உருவாக்கப்பட்ட ‘ராஜா ஹரிச்சந்திரா’ படம் 1913 மே மூன்றாம் நாள் மும்பை காரனேசன் சினிமாவில் திரையிடப்பட்டது. ஒரு அசல் கலைஞனான பால்கே, இந்தத் திரைப்படத்தை எடுப்பதற்காக அடைந்த துயரமும், இழப்பும், வலியும் (இன்றும் எனது கோடம்பாக்கம் இயக்குனர் நண்பர்கள் இதே சொற்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.) மிக அதிகம். காலத்தின் மேல் ஒரு அழியாத தடத்தை ஏற்படுத்தும் எல்லா முதல் முயற்சிகளிலும் இவ்வாறே நிகழ்கிறது. தனது குடும்பம் முழுவதையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தும் விதம் நம்மைத் திகைக்க வைக்கிறது. மனைவியின் நகைகளைப் பயன்படுத்துகிறார். பால்கேயின் மனைவி சரஸ்வதிபாய் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பல முக்கிய பனிகளை ஏற்றுக் கொள்கிறார். படத்தயாரிப்பு நிர்வாகியாகவும், திரைச்சுருளை பதப்படுத்தும் லேப் அஸிஸ்டன்டாகவும் இருந்ததோடல்லாமல் மொத்தக் குழுவிற்கும் சமைத்துப் போடவும் செய்திருக்கிறார். இந்தியத் திரைபட  நூற்றாண்டு விழாக்களில் திருமதி.சரஸ்வதிபாய் பால்கேயும் கௌரவிக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக இந்தத் திரைப்படத்தை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கிறார். ஒரு கேமிராவை இறக்குமதி செய்வது தவிர மற்ற எல்லா வேலைகளையும் இவரது வீட்டிலேயே செய்கிறார். திரைப்படத்தின் இயக்குனராக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, கலை, உடைத்தயாரிப்பு, எடிட்டிங், டெவெலப்பிங், பிரிண்டிங் என்று எல்லா வேலைகளையும் செய்கிறார். வருங்காலத்தை உலுக்கி எடுக்கப் போகும் திரைப்படக்கலையை ஒரு விளையாட்டைப் போல மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து விடுகிறார். ஒரு திரைப்படத் தயாரிப்பின் எல்லாப் பிரிவுகளுக்குமான அடிக்கட்டுமானம் அன்றே பால்கேயினால் நிறுவப்பட்டுவிட்டது.


 


                        முதலில் எந்தக் கதையை எடுக்கலாம் என்னும் ‘ஸ்டோரி டிஸ்கசன்’ இவர் வீட்டிலேயே நடக்கிறது. உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்னும் ஹரிச்சந்திரனின் கதையைத் தேர்ந்தெடுத்ததின் மூலம்  பால்கே தன்னை ஒரு சமூகக் கலைஞனாக நிறுவிக் கொண்டார். 1919ல் எடுக்கப்பட்ட ‘காளிய மர்தன்’ படத்தில் தனது மகளையே கண்ணனாக நடிக்க வைத்தார். அதை ஒரு கொண்டாட்டம் மிக்க அற்புதமான குழந்தைகள் படமாகவே எடுத்திருப்பது அவரது கலாமேதைமைக்குச் சான்று. புராண, மத ரீதியான படம் என்று ஒரு இடத்தைக்கூட சொல்ல முடியாது. யதார்த்தா ராஜன் பேசும் பொழுது,  இந்தப்படத்தில் கண்ணனின் தோழர்கள் அணிந்திருக்கும் தொப்பிதான் பின்னால் காந்திக்குல்லாயாக மறியிருக்கக் கூடுமோ என்று தன் ஐயத்தை வெளிப்படுத்தினார். ‘காளிய மர்தன்’ படம் மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு வியப்பாக இருந்தது. இந்தப் படத்தில்  ‘காளியா’ என்னும் பல்தலை அரக்கப் பாம்பு குழந்தைக் கண்ணனைச் சுருட்டிக் கொள்ளும் காட்சிகள் மிக அற்புதமான அண்மைக் (குலோஸப்) காட்சிகளாக, கலாபூர்வமான திரைச்சட்டகங்களாக இருக்கின்றன. பால்கேயை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்த குதூகலம் மிக்க  குழந்தை மனத்தை இந்தப் படத்தில் எளிதில் அடையாளம் காணலாம். 


                           பரேஸ் மொகாஷியின் இயக்கத்தில் 2009ல் வெளிவந்த ‘ஹரிச்சந்திராச்சி பேக்டரி’ என்னும் மராத்திப் படத்தைத் திரையிட்டதின் மூலம் ‘யதார்த்தா’ இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை  முழுமைப்படுத்திவிட்டது. பால்கேயை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் பெரும் ‘முதல் முயற்சி’ ஒன்றைத் தொடங்கவிருக்கும் எவரும் காண வேண்டிய படம்.



சமயவேல்  03.05.2013


 

  •  

எங்க ஊர் வெம்பூர்




              எங்கள் ஊர் பற்றிய ஞாபகங்கள், மன்னார் வளைகுடாவின் பவளப் பாறைத்திட்டுகளாக எனக்குள் எனது ஆழ்மனம் மேல்மனம் 
எல்லாவற்றிலும் நிறைந்து கிடக்கின்றன. சதா எனக்குள் குமிழியிட்டுக் கொண்டிருக்கும் எங்களூர், நான் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருநகரங்களின் பேரிரைச்சலில் அழிந்துவிடாமல், தொடர்ந்து ஒரு ஈர மனிதம் நிரம்பியவனாக என்னை நிலைநிறுத்திக் கொள்வதில் முக்கியப் பங்குகொள்கிறது. எனது ஒவ்வொரு கவிதையும் ஊரின் ஏதோ ஒரு புள்ளியைத் தொட்டுக் கொண்டிருப்பது என்னை அறியாமலே நடக்கிறது எனினும் அதை நான் விரும்பவே செய்கிறேன்.


                 ஊரின் கண்மாய், புறப்படத் தயாராக நிற்கும் புளியமர ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, ஊருணிகள், கிணறுகள், ஆலமரங்கள், பழந்திண்ணி வவ்வால்கள் நிரம்பிய அத்தி,அரசமரங்கள், பால் வடியும் முதிர் வேப்பங்கன்னிகள், பாம்புகள் நெளியும் கோவில்கள், பேய்கள் தெலாப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள், மூக்கையாரெட்டியார் போன்ற நூறு வயதை எட்டிய எனது மூத்த நணபர்கள்நெஞ்சுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரியகார்த்திகை, ஊர் முழுதும் கூடி ஆலமரங்களின் அடியில் அமர்ந்து பலவகைக் கஞ்சிகளைக் குடிக்கும் வடக்கத்தியம்மன் கஞ்சி, சேத்தாண்டி வேஷம் போட்டு ஆகோ அய்யகோ போகும் உத்தண்டசாமிகோவில் பங்குனிப் பொங்கல் போன்ற எங்கள் எளிய திருவிழாக்கள் என்று பக்கம் பக்கமாக ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு எழுத வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. இருபது வயது வரையிலான எனது பால்யம் மற்றும் இளம்பருவம் முழுவதையும் கட்டமைப்பதில் எனது ஊருக்கு பெரும்பங்கு இருந்திருக்கிறது. வாழ்வின் வசீகரம் மீதான பெருவிருப்பம், பொருளாதாரம் மற்றும் சாதியம் முதலான எல்லாவகை ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற லட்சியம், புத்தகங்களைத் தேடித் தேடி வெறிபிடித்து அலைந்த இனம்புரியாத அகத்தாகம், சொந்தக் குடும்பத்தின் கடைசி உத்திரங்களும் கரையான் அரித்துக் கொண்டிருந்த சோகம் என பெரும்கொந்தளிப்பு மிக்க எனது இளமையை ஊர்தான் தாங்கிக்கொண்டது. எனவேதான் ஊரின் மீதான மாயக்காதல் இன்றும் முடிந்தபாடில்லை. இப்படி இதுவரை எங்கள் ஊரை உணர்வுப்பூர்வமாகவே அணுகியிருக்கும் நான் இந்தக் கட்டுரையில் கொஞ்சம் புறவயமாக ஊரை அணுகலாம் என்று நினைக்கிறேன்.


                எங்கள் வெம்பூர் சுமார் 600 வீடுகளும் 2000 ஜனத்தொகையும் கொண்ட பெரிய கிராமம். எங்கள் ஊரின் வரைபடத்தைப் பார்த்தாலே எங்கள் ஊர் பற்றிய சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளலாம். எங்கள் ஊரைப் புரிந்து கொண்டாலே, கிராமப்புறங்களில்தான் இருக்கிறது என்று கூறப்படுகிற நமது இந்தியாவையும் புரிந்து கொண்டுவிட முடியும் அல்லவா?


                எங்கள் வெம்பூர், எட்டையபுரம் வட்டத்தில், மதுரை-தூத்துக்குடி  நால்வழிச்சாலையிலிருந்து இடதுபுறம் உள்ளே ஒரு அரை கிலோமீட்டர் ஒதுங்கியிருக்கிறது. இதனாலேயே தங்க நாற்கரம் எனப்படும் இராட்சஸ அனகொண்டாப் பாம்பிடம் சிக்கி தரைமட்டமாகிவிடாமல், ஊர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டது. தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்ட கிராமம் என்று பெருசுகள் பெருமையடித்துக் கொள்கின்றன. நெடுஞ்சாலையிலிருந்து ஊர் செல்லும் ஓடைப்பதை இப்பொழுது நகர்ப்பேருந்துகள் செல்கிற சிறுதார்ச்சாலை ஆகிவிட்டது. இருபுறமும் ரயில்கள்ளிகள் பேய்களைப்போல நிற்கிற, பகலிலும் சிள்வண்டுகள் கத்துகிற பீதியூட்டுகிற அந்தப் பழைய ஓடைப்பாதையை எல்லோரும் மறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஓடைப்பாதையின் இடதுபுறம், தனியாகப் பெண்கள் செல்கையில் தொம்தொம்மென்று பேய்கள் குதிக்கிற பாழுங்கிணற்றின் கரையில் ஒரு பெரிய செல்கோபுரம் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறது. ஓடைக்கு வலதுபுறம் இருந்த கொட்டாரம் இப்பொழுது இல்லை. கொட்டாரம் என்பது மாடுகளுக்கான தீவனமான சோளநாற்றை (சோளம் விதைக்கும்போதே விதைச்சோளத்தை நெருக்கி ஊற்றிவிடுவார்கள். ஒட்டி ஒட்டிப் பிறந்து நெருக்கமாக வளரும் சோளம் முழுக்கதிர்விட முடியாமல் சிறுசிறு கதிர்களோடு நாற்றாகவே நின்றுவிடும். ஆண்டு முழுவதும் மாடுகள் விரும்பி உண்கிற உணவு இது.) கூரை வேயப் பயன்படும் முற்றிய சோளத்தட்டைகளை கம்மந்தட்டைகளை மழைவெயிலால் பாதிக்கப்படாதபடி பக்குவமாக சேமிக்கப்பட்டிருக்கும் செவ்வகக் கோபுர வடிவிலான படப்புகள் நிறைந்ததுதான் கொட்டாரம். இப்பொழுது ஊரில் கொட்டாரமும் இல்லை மாடுகளும் இல்லை. முன்பு கேரளாவுக்கு மெலிந்த வெட்டுமாடுகளை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்த அதே லொரிகளில் இப்பொழுது இந்த சோளத் தட்டைகளையும் அனுப்பிவிடுகிறார்கள். முழுச் சாலையையும் மறித்தபடி வரும் இந்த லொரிகளை நீங்கள் செங்கோட்டை கொல்லம் சாலைகளில் அடிக்கடி பார்க்க நேரிடலாம்.


               ஊரின் அமைப்பைப் பார்த்தாலே, எப்படி நாம் மிக மிக வெளிப்படையாக ஒரு சாதிவாரியான சமூகமாக  இருக்கிறோம் என்பது நமக்கு மிக எளிதாகப் புரிந்துவிடும். இணைப்புச் சாலை முடிந்தவுடன் முதலில் வருவது உத்தண்டசாமி கோவில், இதன் மூலக்கோவில் மதுரை விமான நிலையத்தை அடுத்து இருக்கிற வலையங்குளம் கருப்பசாமி கோவில்தான். அங்கிருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்துவந்து எங்களூர் உத்தண்டசாமி கோவில் நிறுவப்பட்டது. இந்தக் கோவிலை நிறுவியவர்கள் ஊரின் பெரும்பான்மை சாதியரான கவுண்டர்கள் என்பதால் அந்தக் கோவில் சார்ந்த திருவிழாக்கள், பூசாரியை நியமிப்பது முதலான எல்லா நடவடிக்கைகளிலும் கவுண்டர்களின் ஆதிக்கம் இருந்ததில் தவறில்லை என்பதில் ஊருக்கு ஆக்கபூர்வமானதொரு மொத்தக் கருத்து இருந்துவருகிறது. ஊருக்குள் நுழைகிற/வெளிவருகிற அனைத்துச் சாதியினரும் அவசர அவசரமாகத் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு ஒரு கும்பிடு போட்டுச் செல்வது பழகிப்போன பழக்கமாகியிருந்தது. பெரிய மீசையோடும் திறந்த உருண்டைக் கண்களோடும் இருக்கிற உத்தண்டசாமியைப் பார்த்தாலே பயமாக இருக்கும். இதில் வேறு அவர் ராத்திரிகளில் குதிரையில் சாட்டையைச் சுழற்றியபடி ஊரைச் சுற்றி வருகையில் எதிர்ப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து நிறைந்த கதைகள் நிறையக் கேள்விப்பட்டிருப்பதால் இரவு நேரங்களில் அந்தக் கோவிலை நெருங்குகையில் திக்திக்கென இருக்கும். தனிமனிதர்களின் குற்ற நடவடிக்கைகளைக் குறைக்கும் நோக்கில் இப்படிப்பட்ட கதைகளையும் பெருசுகள் உலவவிட்டிருக்கக் கூடும். இத்தகைய பூடகமான அதீதக் கலாச்சாரக் கட்டமைப்புகள் மூலம் ஓர் உளவியல் சிகிச்சை ஆதி சமூகங்களில் வெகு இயல்பாக நடந்திருக்கிறது. ஆனால் கோவிலை ஒட்டிக் குடிசை அமைத்துத் தங்கியிருந்த நொண்டிக் கோடாங்கியின் அட்டூழியங்களைத்தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது உடுக்கு இசைக்கு யாராவது ஒரு பெண் தினமும் பேயாடிக் கொண்டு இருப்பார். நொண்டிக் கோடாங்கிக்கு உதவியாக உத்தண்டசாமியின் பெரிய மீசையோடு ஒரு துணைக் கோடாங்கி இருப்பார். அவரைப் பார்த்தாலே பெண்கள் பயப்படுவார்கள். புரியாமையின் கரைகளில் துவண்டு நிற்கும் குழம்பிய பச்சை மனங்களில் வெகு எளிதாக நோய்க்கூறை இவர்களே முளைக்கவிட்டு வளர்க்கவும் செய்வார்கள்பேயோட்டிகள் பெண்களிடம் நிகழ்த்தும் எல்லாவகையான வன்முறைகளையும் அறிந்த மக்கள் ஒரு சமயம் அவர்களை  ஊரைவிட்டே விரட்டிவிட்டார்கள். கொஞ்சம் வளர்ந்த பிறகு பூசாரிக் கவுண்டர் எனக்கு நண்பர் ஆகிவிட்டதால் அந்தப் பகுதியில் பயமின்றி நடமாடத் தொடங்கினேன். நிலவுடைமை சமூகத்தின் ஆதிக்க சாதிகளின் செயலகங்களில் ஒன்றான பீதியூட்டும் பேயோட்டியின் வீட்டை ஊரின் தலைமாட்டில் வைத்திருக்கிறார்கள். நல்ல வேளையாக பக்கத்திலேயே உத்தண்டசாமியும் இருந்ததால் பல பெண்கள் அவரைக் கும்பிட்டு, வெள்ளி செவ்வாய்களுக்கு விளக்குகள் போட்டு (இதுவும் கூட ஒரு கூட்டு மனநோய் அல்லவா?) மன நோயாளிகளாக மாறாமல் தற்காத்துக் கொண்டார்கள். அண்மையில் ஊருக்குச் சென்றிருந்தபோது கோவிலுக்குப் பக்கத்திலிருந்த நிலங்கள் பிளாட்டுகளாகி இரண்டு மூன்று வீடுகள் கூட முளைத்திருந்தன. அந்தக் கோடாங்கி இருந்த பகுதியில் சிறுவர்கள் மும்மரமாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். கோவிலைச் சுற்றி இருந்த மாயத்திரை எப்பொழுதோ விலகியோடிவிட்டது.


               கோவிலின் வாசலில் ஊர்ப்பாதை இரண்டாகப் பிரிகிறது. இடதுபுறம் மேல்சாதியினர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் வலதுபுறச் சாலை ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து கண்மாயின் வால்ப்பகுதியைத் தொட்டு பின் ஊர் சுடுகாட்டையும் கடந்து புதூருக்குச் செல்கிறது. முற்பகுதியில் ரெட்டியார், செட்டியார் கோனார் மற்றும் நாயக்கர் வீடுகள் இருக்கின்றன. வடமேற்குப் பகுதி நாடார்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததுகோனார்-செட்டியார்-தெலுங்கு ஆசாரி வீடுகளின் நடு நாயகமாக ஊரின் கணக்குப் பிள்ளை எனப்படும் கர்ணம் அவர்களின் வீடு இருந்தது. பிள்ளைவாள் ஒற்றை வீட்டில் வாழ்ந்தபடி ஊர் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்த முடிந்திருக்கிறது. சாதியம் பற்றிய பல புதிய புரிதல்களை நாம் தொடங்க வேண்டி இருந்ததைச் சுட்டும் விஷயம் அது. அசலாக அரசு என்ற ஒன்று, பெரும் அதிகாரங்களோடு, இருப்பதை அவ்வப்பொழுது ஞாபகப்படுத்துபவர்களாக  கிராமமுன்சீப், கணக்குப்பிள்ளை, தலையாரி என்னும் மூவர் குழு இருந்தது. நான் கல்லூரியில் சேர்ந்தபோது கிராமமுன்சீப்பிடம் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு நான் அடைந்த சிரமங்கள் கொஞ்சமில்லை, அழ அழ வைத்துத்தான் கொடுப்பார். மகாக் கேவலமாக இருக்கும். இதைவிட இவருக்கு அடுத்தபடியாக ஆர்.. பிறகு தாசில்தார். விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தில் பழியாய்க் கிடந்துதான் ஒவ்வொரு முறையும் சர்டிபிகேட் மற்றும் ஸ்காலர்ஷிப் பாரத்திலேயே கையெழுத்து எல்லாம் வாங்க வேண்டும். எஞ்சினீரிங் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட முடியவே முடியாது என்று முன்சீப் மறுத்துவிட்டார். ஒரு கூலிக்காரப் பயலோட மகன் எஞ்சினீர் ஆவதா என்று உறுமினார். பின் எனது பள்ளியின் தையல் ஆசிரியர், மற்றும் ஊரின் மைனர்கோனார் போன்றவர்களின் தலையீட்டால் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதிக்கு முதல் நாள் கையொப்பம் இட்டார். அன்று அந்தப் பெரிய காரவீட்டின் வெளிச்சந்தில் காத்துக் கிடந்த கணங்களில் அதிகாரத்தின், சாதியத்தின் கோரமுகங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். இப்பொழுது முன்சீப், கர்ணம் இரண்டு பதவிகளும் இணைக்கப்பட்டு வி... என்னும் பதவி உருவாக்கப்பட்டு அவர்களுக்குத் தனி அலுவலகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வடிவம் மாறியிருப்பினும் இளைஞர்கள் இப்பதவிகளில் இருந்தபோதிலும் நிலைமை ஓரளவுக்கு மட்டும் தான் சீரடைந்திருக்கிறது. அதே சாதியமும் அதிகாரப்போக்கும் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. கம்ப்யூட்டர் பட்டா வழங்குதல், மனுக்களின் மேல் 15 நாட்களுக்குள் தீர்வு காணுதல் போன்ற எப்பேர்ப்பட்ட நவீன ஏற்பாடுகளையும் இவர்கள் எளிதாக மீறிவிடுகிறார்கள். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் கையூட்டு கொடுக்க வேண்டியிருக்கும் வழக்கம் ஒழியவே ஒழியாது என்பதை அண்மையில் எங்கள் நிலங்களை அளவீடு செய்வதற்காக ஊருக்குச் சென்றபோது நானே அனுபவித்தேன்.


              இதையடுத்து  வலதுபுறம் முழுவதும் சுமார் 200 வீடுகள் கொண்ட கவுண்டர்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. ஏதோ ஒரு சமயத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து வந்து தங்களது கடுமையான உழைப்பின் மூலம் இந்த ஊரை நிர்மாணித்து இதர சாதியனரையும் குடியேற அனுமதித்து ஓர் இணக்கமான பொதுவாழ்வை உண்டாக்கியிருப்பது பெரும் சாதனை என்றுதான் கூற வேண்டும். வேலமரக் காடுகளை அழித்து, வறண்ட நிலங்களை சீர்திருத்தி விளைநிலங்களாக மாற்றி தங்களது சொந்தத் தொழிலான ஆடுவளர்ப்பை கோனார்களுடன் சேர்ந்து சுமார் இரண்டாயிரம் ஆடுகளுடன் கூடிய பெரிய கிடையை உருவாக்கி, கீதாரி முறையையும் இணைத்து, பசியற்ற அன்றாட வாழ்வை ஊர் முழுதுக்கும் சாத்தியப்படுத்தியிருக்கும் கவுண்டர் இனப் பெருமக்களுக்குத் தலை வணங்குகிறேன். கவுண்டர்களின் குடியிருப்புப் பகுதி ஊருக்குள்ளேயே இன்னொரு ஊர் என அவர்களுக்கெனெத் தனிக்கிணறு, தனிக்கோவில் என்று இருக்கும். வீடுகளின் கட்டமைப்புகள் கூட மிக வித்தியாசமாக இருக்கும். ஆடுமாடுகள், கோழிகள், வான்கோழிகள், நாய்கள் சூழ மிக இயல்பாகக் பெண்களும் குழந்தைகளும் குழுமியிருப்பார்கள். உரலில் ஏதாவது இடித்தபடி, ஆட்டுரலில் பெரிய குழவிகளை இருவர் சேர்ந்து தள்ளி மாவாட்டியபடி, தவசத்தை அம்பாரமாகக் குவித்து புடைத்தபடி, கன்னடத்தில் எதையாவது உரக்கப் பேசியபடி ஒரு ஜீவன்மிக்க கதகதப்பான தெருக்களாக அவை இருந்தன. எனக்கு அந்தத் தெருக்களுக்குள் செல்வதற்கு மிகக் கூச்சமாக இருக்கும். எல்லா வீட்டிலிருந்தும் கூப்பிடுவார்கள். மருமகனே வாங்க, தம்பி வாங்க, மாப்ள வாங்க என அவர்கள் காட்டும் பிரியம் அளவிடமுடியாதது. நான் குட்டிப்பையனாக இருந்தபொழுது வடகத்தியம்மன் சாமியின் வாரிசாக இருந்த வெயிலுகந்தம்மன் வீட்டுக்கு அடிக்கடி செல்ல நேரிடும். விளக்கேற்றும் மாலைப் பொழுதுகளில் அவர் எல்லாவகையான நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு வேப்பங்குழை கொண்டு மந்தரித்தே சரிசெய்துவிடுவார். ஒரு சிறுதும்மல் போட்டாலும், காய்ச்சல் அடித்தாலும் முதல் வைத்தியம் அந்த அம்மாவிடம் மந்திரிப்பதுதான். சாணம் பூசிய ஒட்டு மண்திருணையில் உட்கார்ந்தபடி வேப்பிலைக் கொத்தால் தலையையும் முகத்தையும் பின் மார்பையும் வயிறையும் கால்களையும் வருடியபடி உஸ் உஸ்ஸுஸ் என்று எதையோ முணுமுணுத்தபடி மந்திரிப்பார். மந்திரிப்பு முடிந்ததும் தயாராக வைத்திருக்கும் செம்பிலிருந்து கொஞ்சம் குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்து திருநீறு பூசிஒன்னும் செய்யாது போகலாம்என்று கூறிவிடுவார். எப்படியும் வாரம் ஒருமுறையாவது அந்த சாமியார் எவ்வாவைப் பார்த்துவிடுவேன். அந்த வேப்பிலைக் கொத்திலிருந்து வீசும் ஈரச்சிறுகாற்றில் மெய்மறந்து நின்ற மாயக்கணங்கள் இனி ஒருபோதும் எனக்குக் கிட்டப்போவதில்லை. அதே தெருவில் அதிகாலைகளில் பார்வதியம்மா என்பவர் சுடுகிற ஆமைவடைகள் பழைய சோற்றுக்கென்றே பிறந்தவைகள் எனலாம். அந்த சுவைக்கு ஈடான ஒரு ஆமைவடையை நான் இன்று வரை சாப்பிட்டதில்லை. அதே கடையில் மதிய வேளைகளில் கிடைக்கிற ஓமப்பொடியும் மிக முக்கியமான தின்பண்டம். ஓமப்பொடி என்ற பெயரில் இன்று நகரங்களில் விற்கிற ஓமப்பொடிகளுக்கும் கவுண்டர்தெரு பார்வதியம்மா சுடுகிற ஓமப்பொடிக்கும் ஏணி வைத்தாலும் எல்லாது. பருத்தி, உளுந்து எல்லாம் கொடுத்து வாங்குகிற மிகமுக்கியமான வாடிக்கையாளராக நான் இருந்தேன். வழியில் யாராவது கூப்பிட்டால் ஒரே ஓட்டமாக ஓடி வந்துவிடுவேன். வளர்ந்தபிறகு, மிகச்சிறிய வயதிலேயே வான்படையில் சேர்ந்துவிட்ட எனது மிக நெருங்கிய உயர்நிலைப்பள்ளித் தோழன் ஒருவனின் வீட்டிற்கு செல்லத் தொடங்கி, முழுத் தெருவுடனும் நட்பு கொள்கிறவனாகிவிட்டேன். கவுண்டர் பகுதியின் நடு நாயகமாக இருந்த பொதுக்குளுமை ஒரு பெரிய ஆச்சர்யம். எல்லாக் குடுபங்களும் தங்களது தானியங்களை அளந்து ஒன்றாகக் கொட்டி சேமித்து வைக்கும் அதிசயம் ஓர் இனம் முழுவதிற்கான திடமான ஒட்டுறவை வளர்த்திருந்த அந்த இனப்பெரியவர்களின் நோக்கம் மிகப்பெரியது. ஒரு தேசம் முழுவதற்கும் தேவையான ஒற்றுமையின் நுண்விதைகளை அந்தச் சிறிய கிராமமே வழங்கிவிட முடியும்.


                 கவுண்டர்கள் கிராமமாகவே அறியபட்ட வெம்பூருக்கு பஞ்சாயத்துத் தலைவர் பதவியை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரிய கவுண்டர் குடும்பமேஅன்னபோஸ்டாகவைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீடே பிரசண்டுக் கவுண்டர் வீடு என்றே அறியப்பட்டது. உடல் முழுவதும் வெள்ளை முடியோடு கடுக்கன் அணிந்த சதா சிரித்தன முகத்துடன் கூடிய பெரிய கவுண்டரை மிகச் சிறிய வயதில் பார்த்திருக்கிறேன். ஊரின் மனிதர்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், செடிகொடிகள், தெருக்கள், வீடுகள், மரங்கள், கிணறுகள் என எல்லாவற்றின் மேலும் அன்பு கொண்ட அவ்வளவு நியாயமும் தர்மமும் நிறைந்த மனிதரை இனி நாம் ஒரு போதும் எந்தக் கிராமத்திலும் காணவே முடியாது. எனவேதான் மிக வெளிப்படையான சாதிவாரியான குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்தாலும் எல்லா சாதியினரும் ஒருவருக்கொருவர் இணங்கிப்போகிற பகையுணர்வற்ற ஒரு பொதுவாழ்வை எட்ட முடிந்தது. அவர்கள் காலத்திய நியாயத்திலிருந்து அவர்கள் வழுவாமல் வாழ்ந்ததே சாதனைதான். நம் காலத்து நியாயங்களை கடந்த காலத்தில் தேடுவதில் அர்த்தமில்லை. பெரிய கவுண்டர் தனது 102வது வயதில் இறந்ததை ஏற்றுக் கொள்ளவே ஊருக்குப் பல காலம் ஆகியது. அனைத்து சாதியனரின் அன்பிற்கும் உரியவராக அவர் நடமாடித் திரிந்தது இன்று யோசிக்கையில் ஒரு பேரதிசயம் போலவே இருக்கிறது.


                 இந்த மேல் சாதியினரின் குடியிருப்புப் பகுதிகளுடன் சம்பந்தமில்லாதவாறு மிகக் கவனமாக தேவர்களின் குடியிருப்புகளும் ஆதி திராவிடர்களின் குடியிருப்புகளும் ஊரின் கடைசியில் கண்மாயின் ஓரம் இரு எதிரெதிர் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டன. தேவர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் நடுவிலான பகைவிசையை சரியானபடி பராமரிக்கும் விதத்தில் இருபகுதிகளுக்கும் மத்தியப் பகுதி ஊர் அம்பலகாரர் குடும்பத்தினருக்கும், நால்வகை ஆசாரி ( தச்சர், கொல்லர், பொற்கொல்லர், வேளாண்கருவிகள்) வீடுகளுக்கும் ஒதுக்கப்பட்டது. அம்பலகாரர் வீட்டைத் தாண்டி ஆதிதிராவிடர்கள் ஒருபோதும் தேவர் பகுதிகளுக்குச் செல்ல முடியாது. ஆசாரி வீடுகளிடம் மட்டும் தாயாதி உறவுகள் இருந்தது. ஆசாரி வீட்டில் யாராவது இறந்துவிட்டால் ஆதிதிராவிடர்கள் பகுதியிலிருந்து பச்சை (கோடித்துணி) தரும் வழக்கம் இருந்தது. தேவேந்திர குலத்தார், முக்குலத்தார், நாடார்கள், ஆசாரிகள், பிள்ளைமார்கள், தமிழ் செட்டியார்கள் முதலிய, முழுக்க முழுக்க தமிழ் பேசுகிற சாதியினர் எல்லோரையுமேஆதிதிராவிடர்கள்என்றே அழைக்கலாம். வெம்பூர் கிராம அமைப்பின் மூலமே, ஊரை நிர்மானித்த கவுண்டர்கள் மிகக் கவனமாக தேவர்-ஆதிதிராவிடர் உறவில் எந்த வெடிப்பும் நேர்ந்துவிடாதவாறு பார்த்துக் கொண்டார்கள். எந்த ஒரு பொதுத்தேவைக்கும் இருபிரிவினரும் சந்தித்துக் கொள்ளவே தேவையில்லாத அற்புதமான அமைப்பியல்என்றும் கூடக் கருதலாம். நிலத்தில் இறங்கி வேலைபார்க்கும் கூலிகளாக ஆதிதிராவிடர்களையும் பயிர்க்காவல், ஊர்க்காவல், தலையாரி வேலைகளுக்கு தேவரினத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.  


              முதலில் தேவர் பகுதிக்குள் நுழையலாம். சுமார் 30 வீடுகள் கொண்ட இந்தப் பகுதியின் தலைவராக அதிகாரித் தேவரின் வீடு இருந்தது. நல்ல பெரிய கார வீட்டில் இருந்தார்கள். ஏழு ஜோடி மாடுகள் கட்டுகிற பெரிய தொழு இருந்தது. பெரிய விவசாயி. கழுத்து வழியாக அணிகிற பட்டன் இல்லாத ஒரு நீலக்கலர் சட்டையை அணிந்தபடி தனுஷ்கோடி விலாஸ் சுருட்டைப் பிடித்தவாறு உண்மையில் ஒரு படையதிகாரி போலவே இருந்தார். காட்டு வேலைகளையெல்லாம் அவரது தம்பிகள் பார்த்துக் கொள்வார்கள். சமூகப் பிரச்னைகள், வீட்டுப் பிரச்னைகள் எதிலும் தலையிட்டுக் கொள்ளாமல் அலட்டிக் கொள்ளாமல் வழ்ந்தார். வீட்டை விட்டு அதிகம் வெளியே வருவதில்லை. ஆனால் பெரிய கவுண்டர் இடுகிற கட்டளைகளை சப்தமில்லாமல் செயலாக்கம் செய்கிற அறிவிக்கப்படாத தளபதியாக இவர் இருந்திருக்கிறார். மற்ற குடும்பங்களில் ஒரு நான்கைந்து குடும்பங்களுக்கு மட்டுமே நிலம் இருந்தது. மற்ற எல்லோருமே கடினமான உடலுழைப்பைத் தரவேண்டிய கூலிவேலைகள் செய்துவந்தார்கள். சிலர் கவுண்டர்களைப் பார்த்து ஆடுகள் வளர்க்கவும் செய்தார்கள். எனது நண்பன் பாண்டியின் குடும்பம் முழுவதுமே ஆடுவளர்ப்பில் ஈடுபட்டிருந்தது. ‘இதென்னப்பா தேவமார் வீடு போலவா இருக்கு?’ என்று பலரும் பேசுவதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இந்தஅவமானம்தாங்க முடியாமல் பாண்டியின் மூத்த அண்ணன் மட்டும் தனிக்குடித்தனம் போய் தொடர்ந்து கிணறு வெட்டுகிற வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்தார். எல்லா சாதிகளிலும் இப்படி ஆடு வளர்ப்பில் கலந்து கொண்ட குடும்பங்கள் ஒரு ஸ்திரத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமாக்களில் நாம் பார்க்கிற தேவர்கள் மாதிரி எங்கள் ஊரில் ஒருவர்கூடக் கிடையாது. சண்டியர் என்று எங்கள் ஊரில் ஒருவரும் இல்லை. இன்று வரை ஒரு கொலைகூட நடக்காத சாத்வீகமான கிராமம் என்று மார்தட்டிக் கொள்வார்களே தவிர பெரிய பட்டாக் கத்தியை சட்டைக்குள்ளிருந்து உருவுவதை நான் பார்த்த்தில்லை. பஞ்சாயத்துக்களில் வம்புவழக்குகளில் ஓங்கிப்பேசுகிற ஒரு சித்தப்பா இருந்தார். அவர் கூட முழுநேர மாட்டுத் தரகராகத்தான் இருந்தார். தலையாரிக் குடும்பம் ஒன்றும் இருந்தது. தலையாரி மாமா மாதிரி ஒரு மென்மையான மனிதர் ஊருக்குள் வேறு யாரும் கிடையாது. ஆனால் அவர் சொல்வதைக் கேட்காதவர்கள் என்று ஊரில் யாரும் கிடையாது. மர்மம் என்ன என்பதை நாம் ஊகிக்கவே முடியாது. காவல்காரச் சித்தப்பாக்கள் இருவர் இருந்தார்கள். பயிர்கள் முளைத்து, விளைந்து அறுவடைக்கு வருகிற ஐப்பசி முதல் தை வரைக்கும் விளைச்சல்கள் வீடு வந்து சேர்கிறவரை மட்டுமே அவர்கள் காவல்காரர்களாக வேல்கம்பைத் தூக்கிக் கொண்டு அலைவார்கள். மற்ற நாட்களில் பஞ்சாயத்துக்குக் குற்றவாளிகளை அழைத்துவருதல் போன்ற சிறுசிறு வேலைகளை மட்டும் செய்வார்கள். எனக்குத் தெரிய சாதிய மோதல்கள் எதுவும் இதுவரை நடந்ததில்லை. ஆதிதிராவிடர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் ஒருபோதும் பகையுணர்வு தோன்றியதில்லை. இணக்கமான வாழ்வு எங்கள் வெம்பூரில் எப்படியோ சாத்தியப்பட்டிருக்கிறது

                 அடுத்ததாக ஆதிதிராவிடர்கள் பகுதிக்கு வருவோம். அனேகமாக இந்தப் பகுதியில் சாதியம் பற்றிய ஒரு முழுமையான புரிதலை நாம் அடைய முடியலாம். ஆதிதிராவிடர்களில் மொத்தம் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. முக்கிய கிராமத்தின் தென்கிழக்கில் தமிழ் பேசும் பள்ளர்கள். சுமார் முப்பது குடும்பங்கள் மட்டுமே உண்டு. குட்டிக் குட்டி இத்தினியூண்டு வீடுகளில் ஒரு பெரிய குடும்பமே இருக்கும். பெரும்பாலும் மண்ணால் அவர்களே கட்டிய குடிசைகள் தான். ஓலைக்கூரை அல்லது கம்பந்தட்டைக் கூரையாக இருக்கும். கம்பந்தட்டை வீடுகளில் ஒரு அற்புதமான குளிர்ச்சி இருக்கும். இந்த வீடுகளில் மூலைப்பகுதியை, மழை நீர் ஒழுகாமல் இருப்பதற்காக தட்டைகளைக் கொண்டே ஒரு ஜடைப்பின்னல் அமைப்பால் வேய்ந்திருப்பார்கள். எங்கள் தோட்டத்துக்கு பங்குக்காராக (பங்குக்காரர் என்றால் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு விளைச்சலில் ஏழரைப் பங்கைப் பெற்றுக் கொள்வார்கள்) இருந்த ஊர்காலன் அய்யா வீட்டுக்குள் போய் இருக்கிறேன். முதலில் கவனித்தது தலையைக் குனிந்து செல்ல வேண்டிய தாழ்வான வாசல்தான். குனிந்தபடியே உள் நுழைந்தால் சாணி மெழுகிய ஒரு திண்ணையுடன் கூடிய ஒரே அறை. அதற்குள்ளும் ஒரு சிறிய மச்சு. ஒன்றிரண்டு நார்ப்பெட்டிகள். ஒரு சுவரோரம் முழுவதும் அடுக்குப் பானைகள். ஓரத்தில் திறந்த வெளியுடன் கூடிய அடுப்பங்கரை. அப்புச்சிய ஏன்யா கூட்டீட்டு வந்தீங்க என்று ஊர்காவலனின் மனைவி பதறிப் போனார். அடப்போடீ என்று அதட்டிவிட்டார். சொம்ப விளக்கி தண்ணி குடுடி என்றார். இதென்ன அக்குரமமா இருக்கு. பெரியாத்தாவுக்குத் தெரிஞ்சா ஓம் முதுகுத்தோல உரிச்சிடுவாங்க என்றார். அடப் போடி சின்னப்புள்ளையப் பயப்பட வச்சிடாத, நீங்க வாங்க அப்புச்சி என்று என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்துவிட்டார். ஊர்க்காவலனும் அவரது மனைவியும் பெரும்பாலும் எங்க தோட்டத்திலேயே உழைத்தார்கள். கொஞ்சங்கூட விவசாயம் இல்லாத வறண்ட காலங்களில் கல்லுடைப்பது போன்ற துட்டு கிடைக்கிற வேலைகளுக்குப் போவார்கள்கௌரவமானதொரு  பண்ணையடிமை அமைப்பு தான், வேறென்ன?


              எதற்காக இவர்கள் இப்படி பயப்படுகிறார்கள் என்று கொஞ்சம் பெரிய பையனாக ஆகியபிறகு பலரிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டது: வன்முறை, அளவே இல்லாத விதம்விதமான வன்முறை. பல ராஜாக்களின் படை வீரார்களாக பலியிடப்பட்ட பிறகு, சிறுபான்மையினராக மறிவிட்ட இவர்கள் மீது பெரும்பான்மையினராக மாறிவிட்ட மேல்சாதியினர் செலுத்திய வரைமுறையில்லாத வன்முறைதான் காரணம் என்கிறார்கள். வீடுகளை மொத்தமாகத் தீயிட்டுக் கொளுத்துவது, பொது இடங்களில் தூணில் கட்டி வைத்து அடிப்பது, உயிருடனேயே ஆட்டுக்குத் தோலை உரிப்பது போல தோலை உரித்து சாகவிடுவது, தலை மட்டும் தெரிவது போல புதைத்து வைப்பது, குதம் வழியே வேல்கம்பை ஏற்றும் கழுவேற்றம் என்று அளவற்ற வன்முறையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அப்படியே கூனிக் குறுகிப் போய்விட்டார்கள். ஏதோ ஒரு தலைமுறையில் உண்டாகிய இந்த பயம் பல தலைமுறைகளையும் கடந்து, 65 ஆண்டுகள் சுதந்திர மக்களாட்சி நடந்து முடிந்திருக்கும் இன்றும் தொடர்கிறது.


               எங்கள் ஊர்காவலருடையதைப் போன்ற ஒன்றிரண்டு பங்குக்குப் பார்க்கிற குடும்பங்கள் தவிர, மற்ற எல்லாருமே தினசரிக் கூலிகளாகத்தான் இருந்தார்கள். சொந்த நிலங்கள் கொண்ட வசதியான குடும்பங்கள் இரண்டே இரண்டு இருந்தன. ஒன்று அந்தப்பகுதியின் தலைவரது வீடு. இன்னொன்று கொழும்புகாரவுக வீடு. அந்தப்பகுதியின் பல கிராமங்களின் தேவேந்திர குலத்தார்களுக்கு தலைவராகவும் வெம்பூர் பஞ்சாயத்து போர்டு நிரந்தர உறுப்பினராகவும் பலமுறை துணைத்தலைவராகவும் இருந்தவரின் குடும்பம் எனக்கு மிக நெருங்கிய குடும்பமாக இருந்தது. ‘சமையலுவாய்யா என்று சதா வெற்றிலை மெல்லும் வாய் நிறைய்யக் கூப்பிடுவார். இவரது பிள்ளைகள் எனது மிக நெருங்கிய நண்பர்களாக இன்றுவரை இருந்து வருகிறார்கள். அது போலவே எல்லோருடனும் அன்பு கொள்வதைத் தவிர வேறு உறவே தெரியாத கொழும்புக்காரவுக குடும்பம். அய்யா வாங்க அம்மா வாங்க என்று வாய் நிறைய அழைக்கும் அந்தத் தம்பதிகளின் வீடு, கவுண்டர் பகுதியை இணைக்க முடியாதபடி வைக்கப்பட்ட தடுப்புச்சுவருக்குள் பத்திரமாக இருந்தது. யாரும் எட்டிக்கூடப்பார்க்க முடியாத உயர்ந்த அந்தச் சுவரை தீண்டாமைச் சுவர் என்று சந்தேகம்கூடக் கொள்ள முடியாதவர்கள். இவர்களது பிள்ளைகள், எனது மிக நெருங்கிய நண்பர்கள்எல்லோரும் படித்து இன்று பெரிய பெரிய உத்தியோகங்களுக்குச் சென்றுவிட்டார்கள்.


             இது போக ஊர்க்குடும்பர் அல்லது மடைக்குடும்பர் என்று அழைக்கப்படும் வயல்பகுதிக்கு தண்ணி பாச்சுகிற ஒரு முக்கியமான குடும்பமும் இருந்தது. கண்மாய் நிரம்பியிருக்கிற நாட்களில் வெறும் 24.5 ஏக்கர் ஆயக்கட்டு கொண்ட எங்கள் சிறிய வயற்பகுதி முழுமைக்கும் இந்தக் குடும்பத்தாரே மடை திறந்து நீர் பாய்ச்சுவார்கள். அது போக மொட்டையிருளப்பர் கோவில் பூசாரியாகவும் இவர்களது குடும்பத்தார்களே இருப்பார்கள். மொட்டையிருளப்பர்  எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற கண்மாய்க்கரைக்குள் பெரிய புளியமரத்தோரம் வட்டக் கல்வளையத்துக்குள் நிற்கிறார். இவருக்கு வேண்டுதல்கள் என்று எல்லா சாதியனருமே மட்டுமே பொங்கலிடுவார்கள். மடைக்குடும்பர் அவரே தனியாக ஒரு பொங்கலிட்டு வாயில் வெள்ளைத்துணியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்து திருநீறு பூசிவிடுவார். நாங்கள் பொங்கல் எங்கே கிடைக்கும் என்பதிலேயே கவனமாக இருப்போம். திருவிழா என்று எதுவும் கிடையாது என்பதால் சாதியப் பொருமல்களுக்கு வழியில்லை. இருளப்பருக்கு முன்பு இருக்கிற கழுகுமரத்தைக் கண்டால் தான் பயமாக இருக்கும். சமயங்களில் அதில் சேவல் ஒன்றைப் பலியிடுவதைப் பார்க்க எப்படியோ இருக்கும். இதுவே ஆளுகள் என்றால் எப்படி இருக்கும் என்று நாங்கள் மெல்ல சப்தம் போடாமல் பேசிக்கொள்வோம்.


               ஊரை கீழ்-மேலாகப் பிரிக்கிற புதூர் சாலைக்கு தென்புறம் மிக ஒதுக்கி வைக்கப்பட்ட பகுதிகளாக தமிழ் பேசுகிறபறையர்பகுதியும் தெலுங்கு பேசுகிறசக்கிலியர்பகுதியும் இருக்கிறது. இருபகுதிக்கும் நடுவில் ஒரு மண்சுவரால் ஆகிய சர்ச் இருந்தது. இந்தச் பிறகு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட, பல அற்புத சிற்பங்களுடன் கூடிய ஒரு புதிய காங்கிரீட் கட்டிடத்திற்கு மாறிவிட்டது. அதன் திறப்புவிழாவில் எனது நாடகம் ஒன்று கலந்து கொண்டது. சுமார் பத்தே கிறிஸ்துவக் குடும்பங்கள். இவர்கள் பெரும்பாலும் நாடார் தோட்டங்களில் வேலை பார்த்தார்கள். அவர்களது வீட்டில் மரணச் சடங்குகள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள். பிறகு ஊரில் யார் கூப்பிட்டாலும் உழவு அடித்த புத்தம்புது  நிலத்தில் பாத்தி கட்டுவது, காலாங்கரை கட்டுவது போன்ற மண் சம்பந்தமான கூலி வேலைகள், ஊரில் புதிதாகத் தோன்றிய கல்வெட்டாங்குழிகளில் கல்லுடைத்தல் போன்ற வேலைகளையும் செய்தார்கள். இவர்கள் வீட்டுப் பெண்கள் பனையோலை, பனமட்டை, கீற்றுகளைக் கொண்டு அழகழகான சுளகுகள், கொட்டான்கள், பெட்டிகள், கடகாப்பெட்டிகள், விசிறிகள் செய்வதில் மிகத் திறமையானவர்களாக இருந்தார்கள். அந்தப் பனைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. தங்களது கலைத்திறன் காரணமாக ஊரின் எல்லாப் பெண்களும் விரும்புகிற மகாமனுஷிகளாக அவர்கள் இருந்தார்கள். ஒருவகையில் அந்தப்பகுதி ஆண்கள் வேலை செய்வது என்பது அவ்வளவு முக்கியமில்லாத விஷயமாக இருந்தது.


                  வலதுபுறம் உள்ள சுமார் இருபது சக்கிலியர்கள்வீடுகள் ஊரின் இயங்குதலில் மிக முக்கிய பங்கு கொண்டிருந்ததை எவரும் அறிய மாட்டார்கள். தோட்டக் காடுகளில் கமலை இறைக்கிற கூனியைத் தைத்துக் கொடுப்பவர்கள் இவர்கள் தான். பலருக்கும் செருப்பு தைத்துக் கொடுப்பார்கள். பிணம் வேகும் போது வெட்டியான்களாக செயல்படுவார்கள். அறுவடை முடிந்து களத்துக்கு வரும் கருதுகள், பயறுகள் எல்லாவற்றையும் அடித்துத் தூற்றி வீடு கொண்டுவந்து சேர்ப்பவர்கள் இவர்கள்தான். ஊருக்கே பெருமை சேர்க்கிற வெம்பூர் மேளக்குழுவினரும் இவர்கள் தான். வேலுவின் பெரிய தவிலும் அழகிரியின் நாதஸ்வரமும் அந்தப் பகுதிக் கிராமங்களில் மிகப் பிரபலம். அழகிரி அவர்கள் தருகிற தேதிக்குத் தக்கபடி கல்யாணத் தேதியைக் குறிப்பது அந்தப்பகுதியில் பழகிப் போனது. ‘சிங்கார வேலனே’ பாட்டும் ரெட்டியார் காவடிச் சிந்தும், சாமி ஊர்வல மல்லாரியும் வாசிக்காத நிகழ்ச்சி இருக்காது. இருக்கன்குடி மாரியம்மன் ஆடிக் கடைசி வெள்ளித் திருவிழாவில் அழகிரி-வேலு நையாண்டி மேளத்திற்கு ஆடாத கரகங்கள் அந்தப் பகுதியில் எங்கும் இல்லை.  

                      எனது கல்லூரி நாட்களில் விடுமுறை தினங்களின் மாலைப்பொழுதுகளில் பெரும்பான்மையை இந்தப் பகுதிகளில் தான் கழித்தேன். அவர்கள் படிக்க வேண்டியதிருப்பதின் அவசியத்தையும் சாதியம் பற்றிய உரையாடலையும், கொஞ்சம் இடதுசாரி மனோபாவத்தையும் பல இளைஞர்களிடம் என்னால் உருவாக்க முடிந்தது. மாலை நேர வகுப்புகளை ஏற்பாடு செய்தோம். எல்லா சாதியினரிடமிருந்தும் ஒன்றிரண்டு நட்பு இளைஞர்களைப் பழக்கப் படுத்திக் கொண்டு ‘பாரதி இளைஞர் மன்றம்’ ஆரம்பித்தோம். வீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூல் செய்து ஒரு சிறிய படிப்பகத்தையும் ஆரம்பித்தோம். எல்லாத் தினசரிகளையும் வார மாத இதழ்களையும் வாங்கிப்போட்டோம். மெல்ல மெல்ல ஊரில் ஒரு புதிய கூடுதலை எங்களால் உருவாக்க முடிந்தது. நாங்களே கல் மண் எல்லாம் கொண்டு வந்து, மேல ஊருணியில் இருந்து மரம் வெட்டிக் கொண்டுவந்து படிப்பகம் கட்டி எங்கள் பள்ளி ஆசிரியரைக் கொண்டு திறப்பு விழா நடத்தினோம். அங்கேயே மாலை நேர இரவு வகுப்புகளையும் ஆரம்பித்தோம். ஏதோ எல்லோரும் படிக்க வேண்டும் அது ஒன்று மட்டும்தான் ஒட்டுமொத்த கிராமத்தின் வளர்ச்சியையும் சாதியம் ஒழிவதற்கான வாய்ப்புகளை, சூழலை உருவாக்கும் என்று  நம்பினோம்.


                     எங்கள் ஊரிலும் இரட்டைத் தம்ளர் விவகாரம் இருந்தது. நல்ல வேளையாக சிரட்டையில் தண்ணீர் ஊற்றுவது, மேல்சாதியினர் தெருக்களில் செருப்புப் போடக்கூடாது போன்ற காட்டுமிராண்டிக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் இந்த இரட்டைத் தம்ளர் விவகாரம் எங்களைக் கொஞ்சம் உறுத்தத் தொடங்கியபோது ஒரு நாள் துணிந்து ஒரு காரியம் செய்தேன். ஒரு தலித் தோழரை அழைத்துக்கொண்டு அந்த டீக்கடைக்கு டீ அருந்தச் சென்றேன். வழக்கம் போல அவருக்கு அந்தக் கண்ணாடித் தம்ளரிலும் எனக்கு எவர்சில்வர் தம்ளரிலும் டீ வழங்கப்பட்டது. நாங்கள் இருவரும் டம்ளர்களை மாற்றிக் கொண்டோம். அண்ணே வேண்டாம்னே என்று பயந்தார் அந்தத் தம்பி. நான் பேசாம இருப்பா என்று கூறிவிட்டு மடக்மடக்கென்று டீயை அருந்த ஆரம்பித்தேன், கடைக்காரர் எப்படியோ பார்த்துவிட்டார். என்மேல் நன்மதிப்பும் அன்பும் கொண்ட அவர், ‘தம்பீ’ நீங்க செய்றது நல்லால்ல. ஊர்ல யாராச்சும் கேட்டா நான் உங்க மேலதான் தப்புன்னு சொல்லிடுவேன் என்றார். பரவால்ல எல்லாம் நான் பாத்துகுறேன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினேன். எனக்கு முன்னாலேயே அந்த இரண்டு தம்ளர்களையும் தூக்கி வெளியே வீசி எறிந்துவிட்டார். மெல்ல செய்தி ஊருக்குள் பரவியது. நிறையப் பேர் . தம்பி என்னப்பா நடந்துச்சுன்னு கேட்டுவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போனார்கள். எனக்கு உள்ளுக்குள் ஒரு சிறிய பயம் இருந்தது. இரவில்  நடந்த ‘பாரதி மன்றக் கூட்டம், நான் செய்ததில் தவறில்லை என்பதையும் இன்று முதல் இரட்டைத் தம்ளர் முறை நம் ஊரில் கிடையாது என்றும், ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. இரவு கூட்டம் முடிந்த பிறகு எனது வீட்டிற்குச் செல்லாமல்  கண்மாய்க் கரைக்குப் போனேன். எனக்குத் துக்கம், சந்தோஷம் எது நடந்தாலும் கண்மாய்க்கரையில் அதன் கடைசி கரைப் பத்திரகாளியம்மன் கோவில்வரை நடந்து திரும்பி, புதிய மடைப் புளியமரத்தடியில் ஒரு அரைமணி நேரம் உட்காரும் வழக்கத்தை வைத்திருந்தேன். முழுக்கண்மாய் நீரையும் சிலுப்பியபடி வரும் ஈரக் காற்று எல்லாவற்றையும் போக்கி மனசை அமைதிப்படுத்திவிடும். ஆலமரங்களைக் கடந்தபோது யாரோ கூப்பிடுவது போல இருந்தது. திரும்பியபோது ஒரு பெரிய கருங்கல் என்னை நோக்கி முழுவேகத்தில் வந்தது. நல்ல வேளையாக என் கணுக்காலை மட்டுமே அதனால் உடைக்க முடிந்த்து. அம்மா என்று கத்தியபடி உட்கார்ந்துவிட்டேன்.


                 இப்படி வெளிப்படையான சாதியம் சார்ந்த ஊர்களில் தான்       நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமத்துவபுரங்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. எல்லா ஊர்களிலும் அரசே காலனி வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. காலனி வீட்டு ஆட்கள் என்பதற்கு, தமிழ் அகராதியில் தலித் குடியிருப்பு என்று பொருள் எழுதவேண்டி இருக்கிறது. சமீபத்தில் மதுரை நகரில்  முதல்நிலை தலித் அதிகாரி நண்பர் ஒருவர் தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, என்ன செய்தாலும் நான் எஸ்.சி என்னும் இந்தக் காம்ளக்ஸ்  போகவில்லையே என்றார். என்னை ஒரு எஸ்.சி.யாகத் தானே என்னப் பார்க்கிறார்கள் என்று வேதனைப்பட்டார். இவ்வளவு பெரிய கட்டுரை எழுதிய பிறகும் இந்த சாதியத்தை முற்றிலும் அழிப்பதற்கான வழிகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. எங்கள் வெம்பூரின் பழங்காலப் பெரியவர்களின் அளவற்ற அன்பும், எங்கள் பாரதி மன்றம் போன்றதொரு அமைப்பும் சேர்ந்தால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். நம்பத்தானே வேண்டும்?


19.11.2012

  •  

நூல் மதிப்புரை: இளங்கோ கிருஷ்ணனின் பட்சியின் சரிதம்

நூல்-மதிப்புரை: சமயவேல் 

                           

                                                          ஜடாயுவைப் போன்று கதறும்

                                                                            ஒரு பட்சியின் சரிதம்                      

 

                                    ஒரு கவிதையை  வெறும் உள்ளடக்க ரீதியாக அணுக எத்தனிப்பது அந்தக் கவிதைக்கு ஆபத்தை உண்டாக்குகிற காரியம் என்று எண்ணுகிறேன். வெறும் உள்ளடக்க ரீதியான அணுகல்களை அனுமதிக்கும் ஒரு கவிதையை தோல்வியுற்ற கவிதை என்று கூறினால் இந்த அரங்கில் இருப்பவர்களில் எத்தனை பேர் அதை சம்மதப்பீர்கள் என்று தெரியவில்லை. கவிதையைப் பற்றி பேசுவதே கூட ஒரு பெரிய அபத்தம் என்று ஒருமுறை எண்ணியிருக்கிறேன். எத்தனையோ பேர் எத்தனையோ காலம் பேசினாலும் ஒரு சிறந்த கவிதையில்  இன்னும் கூறப்பட முடியாத, அணுகப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத ஒருபுதிர்த்துகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தக் துகள்தான் அந்தக் கவிதைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாயலைக் கொடுத்து வருகிறது. இப்படியெல்லாம் நான் கூறுவது ஒரு முழு முற்றான முடிவு அல்ல. ஏனெனில் இன்று எதைப்பற்றியும் ஒரு முழுமுற்றான முடிவுக்கு வரமுடியவில்லை. முழுவதுமாக நம்மை ஒப்படைப்பதற்கான வெளியோ, இயக்கமோ, மனிதர்களோகூட நம்மிடம் இல்லை. எனவேதான் 2000க்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்களின் கவிதைகளில் உள்ளடக்கமே இல்லை என்னும் குற்றச்சாட்டுகளையும் மீறி இன்றைய இளம் கவிஞர்களின் கவிதைகளை விரும்பி வாசித்து வருகிறேன். இந்த விஷச் சூழலில் என்ன உள்ளடக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு இளம்கவி எதிர்த்துக் கேட்டால் கூறுவதற்கு என்னிடம் பதிலேதும் இல்லை. எனக்கான கருத்துருவங்களை உருவாக்கி அதைத் தலையில் தூக்கிக்கொண்டு அலையும் திராணியும் எனக்கில்லை.

                                  இளங்கோ கிருஷ்ணனின் பட்சியின் சரிதம் தொகுப்பில் மூன்று வகையான கவிதைகளைப் பார்க்கிறோம்.

                 1) பெருங்கதறல், ஓலம், ரணத்தில் புரளும் வலியின் கூச்சல்,  சகிக்க முடியாத தோல்வி, கோபம், பெருங்கோபம், அவமானம், கேவலம், தனிமை, முழுத்தனிமை, ஏமாற்றம், ஏக்கம், முழுமுற்றான நெருக்கடியில் நசுங்கும் முகம், என்று மனித மொழியிலிருக்கிற அத்தனை எதிர்மறைச் சொற்களையும் ஒன்று திரட்டி நமக்குள் பாய்ச்சி நம்மையும் துடிக்க வைக்கும் 'துயரி' ஒருவரால் எழுதப்பட்ட கவிதைகள்.

 

                 2) மெல்லிய நம்பிக்கைகளுடன் கூடிய யௌவனச் சொற்களால் நிரம்பிய கவிமொழிச்சித்திரங்கள்.

 

                 3) இருப்பின் முழுமுற்றான நெருக்கடிகளின் விளிம்பில், தத்துவக் குளத்தில் விழுந்து விடாமல், வெறும் மனித எத்தனத்தில் எல்லை தாண்டி துள்ளிக் குதிக்கும் தற்பகடிக் கவிதைகள்

 

                 முதல் வகைப்பட்ட, துயரி ஒருவரால் எழுதப்பட்ட கவிதைகளே இந்தத் தொகுப்பு முழுவதும் நிரம்பியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளையும் ஒரு சேரப் படித்துவிட முயன்றால், நீங்கள் ஒரு பெருந்துக்கத்தில் ஆழ்வதைத்தவிர வேறு வழியில்லை


                      கொட்டும் மழையில்/எங்கொதுங்கி தப்பிக்க/எங்கொதுங்கி தப்பிக்க/ஓடும் ஒரு லாரியின்/ சக்கரத்தினடியில்என்று ஒரு சிறிய கவிதை. கொட்டும் மழை ஒரு எதார்த்தம் எனில் கவிஞனுக்குக் கிடைக்கும் மாற்று எதார்த்தம் ஓடும் ஒரு லாரியின் சக்கரத்தினடியில் இருக்கிறது. நித்ய முரண்களின் கருப்பு இடைவெளிகளில் அலையும் சீரிய கவிகளின் வரிசையில் இளங்கோ கிருஷ்ணனும் இடம் பிடித்துவிட்டார்.

           இன்னொரு கவிதையில்இதயம் பிளக்கும் காதலின் துயரத்தைச் சொல்ல உடலெங்கும் குருதி வழிய மலை ஏறிப் போய் ஒரு பாறாங்கல்லின் முன் நிற்கிறார். ‘அதன் காலடியில் சரிந்து குமுறுகிறீர்கள்/ வாஞ்ஞையாய் முதுகு வருடி அணைத்துக் கொள்ளவா போகிறது/ பாறாங்கல் அது வெறும் பாறாங்கல்என்று கவிதை முடிகிறது. மக்கள் மொழியில் துயர்ச்சொல்லாக வழங்கும் பாறாங்கல்லை கவிதைக்குக் கடத்தி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்.

 

           ஒரு மரத்தை நம் வழிக்குக் கொண்டு வரஎன்னும் கவிதையில் அதிகாரத்தின் கொடூரமான சொற்களால் அந்த மரத்தைக் கொலை செய்கிறார். பிறகுகதவுகள்/ நாற்காலிகள்/ மேசைகள் அல்லது சவப்பெட்டிகள்/ என்ன வேண்டுமானாலும் செய்வோம்அதிகாரம் பற்றிய உலக மொழிகளில் இருக்கிற பல கொடுமையான கவிதைகளோடு இந்தக் கவிதையும் சேர்ந்து கொள்கிறது. இன்னொரு கவிதையில்சுகவீனமாய் இருந்த என் குழந்தை/ மரணித்த செய்தி கிடைத்துப் பல நாட்கள் ஆயிற்று/ நான் போக வேண்டும்/ என்னை விட்டுவிடுங்கள் நண்பர்களேஎன்று கதறிஎனக்கு இப்பொழுது தேவை/ ஒரு நிம்மதியின் சிகரெட்என்கிறார். நிம்மதியின் சிகரெட் எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

           நகரத்தின் அடர்த்தியில் வழி தவறிய இசைத்துணுக்கொன்று…………………… நம்பிக்கைகள் மெல்லச் சரிந்துகொண்டிருக்கும் நாளில் பலத்த குண்டு வெடிப்பின் ஓசையில் உடல் சிதறிப் போகிறது.இந்த நாள் என்னும் கவிதையில்நம்பிக்கை/ ஒரு புளுகனின் சொற்கள்/ ஆசையோ/ கிழட்டுத் தேவடியாளின் சுருக்குப் பை சபித்திலின் சூறை/ நாறிக்கொண்டிருக்கும் சாக்கடையோர/ புதர் மேட்டில் அரும்புகிறது/ என் ஆசுவாசத்தின் புல்/” என்றெல்லாம் எழுதுகிறார்.

            இது போல் பட்சியின் சரிதம் கவிதையும் ஒரு துயரக் கதைதான். பீடிகை-காதைகள்-அந்தம் என்று வரிகளுக்கு நடுவில் துணைத் தலைப்புகளிட்டு வாசிப்பவர்களை கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளச் செய்கிறார். ஆனால் பட்சியின்கரும்பழுப்புச் சிறகுகள்/ நிலமுரசிக் கிழிகின்றன/ ரணம் பொறுக்காமல் மீண்டும் சடசடக்கிறதென் சிறகுகள்இத் தொகுப்பின் மையமாகவும் தலைப்பாகவும் பட்சியின் சரிதம்கவிதை அமைந்துவிடுகிறது. இந்தக் கவிதையை அமைப்பதில் கவிஞன் தனது பாரம்பர்யத்தின் சுதந்திரங்களை பயன்படுத்தியிருப்பது புதிய முயற்சியாக வெற்றியடைந்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

            வாழ்வின்ஓசைகளைச் சகிக்கவியலாமல்/ ஒரு கத்தியை எடுத்து காதின் மேல் வைக்கிறார்.” எனும் வரிகளுடன் கூடிய வான்காவின் காது கவிதையும் நவீன வாழ்வின் பெரும்பரப்பு முற்றிலுமாக சகிக்கமுடியாதபடி இருப்பதை இந்தக் கவிதை அதன் மொத்த வலியுடனும் சொல்லிவிடுகிறது.

 

 

                                   இதே வரிசையில் தீக்குச்சி என்று ஒரு கவிதை இருக்கிறது. இளங்கோ கிருஷ்ணன் கவிதை என்னும் பிரத்யேகமான அடையாளத்துடன் கூடிய கவிதை இது. தீக்குச்சிக் கவிஞர்கள் ஒரு குப்பைத்தொட்டிக்குள் விழுந்து கிடக்கிறார்கள். ஒரு தீக்குச்சிதன்னை ஒருத்தி தொட்டு/ மெழுகுவர்த்தி கொழுத்தினாள் என/ பெருமை பீற்றிக் கொண்டது.” ஒரு மனிதனைக் கொழுத்த வல்ல தீக்குச்சிகள் இவையாம். ஆனால் தானே நகரத் தெரியாமல் இதவிடப் பெரிய நாற்றத்திற்கு இடம் பெயர்கின்றன தீக்குச்சிகள். இந்தக் கவிதையின் தொடர்ச்சியாக இத் தொகுப்பிலுள்ள பகடிக் கவிதைகளைக் குறிப்பிடலாம். ஈழப்பெருங்கொலை நிகழ்வுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஒரு சீரிய கவிஞனின் வெளி இப்படியானதாகத்தான்  இருக்க முடியும் என்றும் கருதுகிறேன். அல்லது இன்றைய இந்திய வாழ்வே இப்படித்தான் இருக்கிறதென்றும் கொள்ளலாம்.

 

             கவிஞனுக்கு இருக்கும் தார்மீக உரிமையில் அவன் எதையும் குரலுயர்த்திக் கேள்வி கேட்க முடியும். பூட்ஸ் அணிந்த சிறுமி என்னும் கவிதை பெருங்குரலெடுத்து ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறது. “எவ்வளவு போராட்டம்/ எவ்வளவு சிரமம்/ யாராலும் கழட்ட இயலாத/ ஒரு பூட்ஸை யார் அவளுக்கு மாட்டிவிட்டது/ முடிவற்ற இந்தச் சாலையில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது அவள் வீடு.”  யாராலும் கழற்ற முடியாத பல பூட்ஸ்களை தினம் தினம் நம் வீடுகளில் நமது குழந்தைகளுக்கும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கும் நம்மை சாட்டையால் விளாசுகிறது இந்தக் கேள்வி.

 

                            உருளைக்கிழங்கு பொடிமாஸ், அதற்கே, அகவன் குறிப்புகள், கிரகர் சோம்சா எனும் கரப்பான் பூச்சி, காப்பி நதி, ஞாயிறு போற்றுதும், பெப்பரேக்கள் கதை முதலிய கவிதைகளைப் தற்பகடி அல்லது சுயஎள்ளல் கவிதைகள் எனலாம். இந்தத் தொகுப்பிலேயே எனக்குப் பிடித்த கவிதை இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ். புயலில் சிக்கியிருக்கும் கப்பலை மனநோயாளிக்கடவுள் வழங்கிய இரண்டு உருளைக்கிழங்குகள் மூலம் எப்படிக் காப்பாற்றுவீர்கள்? மிகுந்த படைப்பூக்கம் கொண்ட சொற்களுடன் கூடிய இந்தக் கவிதையை முழுவதும் வெற்றியடைந்த கவிதையாகக் கொள்ளலாம். புயலில் சிக்கியிருக்கும் வாழ்வை உருளைக்கிழங்குகளையொத்த எக்ஸ் எக்ஸ் எக்ஸ்களைக் கொண்டு எப்படிக் கரை சேர்க்க முடியும்?

                           மெல்லிய நம்பிக்கைகளுடன் கூடிய யௌவனச் சொற்களால் நிரம்பிய மூன்றாம் வகைக் கவிதைகள் இத் தொகுப்பில் இரண்டோ மூன்றோதான் இருக்கின்றன.

            தாண்டவம் என்று ஒரு எளிய சித்திரம்.

                வெயிலில்

                புரண்டு

                புரண்டு 

                பின்னிக்கிடக்கிறார்கள்

போதும். நடப்பட்ட இரண்டு வேல்கள். ஒன்று சக்தி அடுத்தது சிவம்.  நிழல்கள்

மட்டும்தான் பின்னிப் புரள முடியும் அல்லது இருளில் மறைய முடியும். நிஜமான சக்தியும் சிவனும் அல்ல. இப்படி ஒரு அற்பமான எளிய கவிதையில் இரண்டு மூன்று பரிமாணங்கள் எப்படி வந்தன? கவிதையின் புதிர்ப்பாதையை நாம் விளக்கத் தேவையில்லை.      

 

               பாதானி என்னும் கவிதை ஒரு அற்புதமான சின்னஞ்சிறு சித்திரம்.              

                அழகான பாதானி மரத்தினடியில்

                நின்று கொண்டிருந்தவளுக்குப்

                பாதானி என்று பெயரிட்டேன்

                பக்கம் சென்ற போது

                அவள் பார்வையிலிருந்த அந்நியம்

                மனதைக் கீறியது

                என்னைத் தெரியவில்லையா பாதானி

                என்று அடிமனம் கத்தியது

                திடீரெனத் திரும்பிப் பார்க்கிறாள்

                கலகலவெனச் சிரித்தன பாதானி இலைகள்

 

பாதானி என்ற ஒரு சொல்லே போதும். ஆனால் அந்தச் சொல்லுடன் இலைகள் என்னும் சொல். பிறகு கலகலவெனச் சிரித்தன. கலகலவெனச் சிரித்தன பாதானி இலைகள். இந்தக் கடைசி வரி முந்தைய எல்லா வரிகளையும் விழுங்கிவிடுகிறது. கவிதை இந்த ஒரு வரியைத் தொட்டுத் தொட்டு எல்லா வரிகளுக்கும் பரவுகிறது. அல்லது எல்லா வரிகளிலும் திரள்கிற கவிதையைக் கடைசிவரி தாங்கி நிற்கிறது. இது ஒரு உளடக்கமற்ற கவிதைதான். ஆனால் இது சிறந்த கவிதை ஆகிவிட்டது. 2005க்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்கள் என்று நிலாரசிகன் குறிப்பிடுகிற இளம் கவிஞர்களில் பலர் இது மாதிரியான உள்ளடக்கமற்ற கவிதைகளைத்தான் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இது பற்றி இன்னும் விரிவாகப் பேச இடமிருக்கிறது என்று கருதுகிறேன்.

 

             

 

 

      

 

               

  •  

எனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை

எனது சிறுகதைத் தொகுப்பு 'இனி நான் டைகர் இல்லை'
உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அதில் உள்ள எனது முன்னுரை:




தொலைந்த கதைகள்



1970களில் வாழ்க்கையோடு சேர்த்து கதைகளையும் தொலைத்துக் கொண்டிருந்த இளைஞனாக நான் இருந்தேன். எனது முதல் சிறுகதை தாமரையில் இளமதி என்ற புனைபெயருடன் வெளிவந்தது. அந்தத் தாமரை இதழைக்கூட நான் பார்த்ததில்லை. ஆண்டும் மறந்துவிட்டது. பள்ளிக்குச் செல்லும் வழியில் பறக்கும் தட்டானைப் பிடிக்கச் செல்லும் சிறுமியின் சட்டை முள்ளில்பட்டுக் கிழிந்துவிட, அவள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கிறாள். அவளது பாவாடை நூலில் கட்டப்பட்ட தட்டான் பட பட என்று றெக்கைகளை அடித்தபடி தவிக்கிறது. அப்பாவுக்குத் தெரிந்தால் அவளுக்கும் அடி விழும் அவளது அம்மாவுக்கும் அடி விழும். அந்தச் சிறுமி நூலை அவிழ்த்து தட்டானை விடுவிக்கிறாள். இப்படித்தான் அந்தக் கதையை எழுதியிருந்ததாக ஞாபகம். அந்தக் கதையைத் தேடியும் கிடைக்கவில்லை. பாளையங்கோட்டையில் படித்துக் கொண்டிருந்த போது நண்பரும் ஆசிரியருமான சிவசு நடத்திய ஒரு பத்திரிகையில் ஒரு கதை எழுதியிருந்தேன். ஒரு நண்பனைத் தேடி பசியோடு திசை தெரியாமல் நடந்து கொண்டே இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை அது. ஒரு இடத்தில் மீன்பிணங்கள் என்று எழுதியிருந்ததை நண்பன் ந.முருகேசபாண்டியன் ஆட்சேபம் தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது. அந்தக் கதையும் தொலைந்துவிட்டது. அந்தக் கதையைப் பாராட்டி உற்சாகம் அளித்த நண்பர் ஜோதிவிநாயகமும் தொலைந்துவிட்டார்.


சென்னை வாழ்க்கையின் போது நம்பி அண்ணாச்சி தந்த உற்சாகத்தில் ஒரே மாதத்தில் நான்கு கதைகள் எழுதினேன். ஒரு கதையின் தலைப்பை ஆங்கிலத்தில் என்கவுண்டர் என்று யோசித்து தமிழில் 'சந்திப்பு' என்று வைத்தேன். 'கபிலா' என்ற புனைபெயருடன் அந்தக் கதை வலம்புரிஜான் நடத்திய 'தாய்' இதழில் வெளியாகியது. வலம்புரிஜான் என்னை நேரில் வரவழைத்து பாராட்டி ஒரு புதிய 100 ரூபாய்த்தாளைக் கொடுத்தார். அது ஒரு மறக்கவே முடியாத நாள். ஏனெனில் அந்த நாளுக்கு முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். நம்பி என்னை சத்தம் போட்டு சும்மா வாடா என்று நெல்சன்மாணிக்கம் சாலையில் இருந்த தாய் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். நாயர்கடை டீயிலும் பன்னிலும் கழிந்த நாட்கள் அவை. 33, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலத்தில் இருந்தபோது ஒரு நேரம் காலையில் குழாய்ப்புட்டை சைனா டீயில் பிசைந்து சாப்பிட்டு (அதுவும் அக்கவுண்டில்) ஒரு முழு மாதத்தையும் கழித்திருக்கிறேன். இந்த 'சந்திப்பு' கதையை இயக்குனர் சேரன் தனது ஆட்டோகிராப் படத்தில் முதல் அத்தியாயமாக வரிக்குவரி மாற்றாமல் அப்படியே அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார். அந்த சமயத்தில் எழுதிய மூன்று கதைகளை இளவேனில் நடத்திய கார்க்கி இதழுக்குக் கொடுத்திருந்தேன். கார்க்கி இதழும் வரவில்லை. அந்தக் கதைகளும் தொலைந்து போயின. ஒரு கதை இந்துமதி நடத்திய 'அஸ்வினி' என்ற இதழில் வந்தது. முன்றிலில் வெளியாகிய கதை கிடைத்துவிட்டது. எனது அன்புக்குரிய நன்பர் மா.அரங்கநாதன் கேட்ட மறுநாளே அனுப்பிக் கொடுத்தார். 'மன ஓசை'யில் வெளியாகிய கதை அண்மையில் வெளியாகியிருக்கும் 'மன ஓசை' கதைத் தொகுப்பில் இருக்கிறது. பல கதைகள் எழுதப்பட்டும், கிழிக்கப்பட்டும் தொலைக்கப்பட்டும் போயே போயின.


2007ல் எனக்கு ஒரு இதயத்தாக்கு ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் எல்லாம் செய்து ஒரு நான்கு மாத விடுப்பில் வீட்டில் இருந்தேன். கல்லூரிப்படிப்பை முடித்ததும் ஆறு மாதங்கள் எந்த வேலையும் செய்யாமல் கிராமத்தில் இருந்த அந்த அற்புத நாட்களை இந்த நான்கு மாதங்களில் மீண்டும் அடைந்தேன். இதயத்தாக்கின் போது மூளையிலும் கொஞ்சம் செல்கள் அழிந்துவிட்டன. ஞாபகங்கள் பல அழிந்த நிலையில் ஒரு குழந்தையின் குதூகலம் எனக்குக் கிட்டியது. நிறைய இசை கேட்டேன். நிறையப் படித்தேன். நிறைய சினிமாக்கள் பார்த்தேன். என் வாழ்வில் நடந்த எல்லாக் கசப்புகளும் மறந்துபோயின அந்த அற்புத நாட்களில் நான் கண்ட ஒரு கனவை அப்படியே ஒரு கதையாக எழுதினேன். 'மன்னார் வளைகுடாவில் ஒரு நன்னீரோட்டம்' என்ற அந்தக் கதை 'உயிர் எழுத்து' இதழில் பிரசுரமாகியது. நண்பர் தேவதச்சன் அந்தக் கதையை வெகுவாகப் பாராட்டினார். சிதறடிக்கப்பட்ட ஞாபகங்களின் கோர்க்கப்படாத இசையொன்று அந்தக் கதைக்குள் நுழைந்திருப்பதை இப்பொழுது அவதானிக்க முடிகிறது. டோரிஸ் லெஸ்ஸிங்கின் 'புல் பாடிக் கொண்டிருக்கிறது' புதினத்தைப் படித்ததும் அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். புல் பாடும் ரொடீசியாவின் நிலக்காட்சி மூலம் எனது கிராமத்தின் நிலக்காட்சிகளை நான் மீட்டுக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கதைகள் எழுதத் தொடங்கினேன். ஓரன் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' நாவலை ஆங்கிலத்தில் படித்ததும் அதன் கட்டமைப்பில் மயங்கி 'பச்சை மரகதக் கல்கிளி' கதையை எழுதினேன். 'உயிர்மை'யில் வெளியாகியது. ஒரு புதினத்தின் கட்டமைப்பை, ஒரு சிறுகதைக்குள் சுருட்ட எத்தனிப்பது பேராசை எனினும் அந்தக் கதை எனக்குப் பிடித்தமான கதையாகவே இருக்கிறது.


குழந்தை மனநிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே மனிதர்களாகிய நாம் கதை கேட்கும் ஆசையைத் தொடர்ந்து அணையாமல் காப்பாற்றி வருகிறோம். மேலும் நாம் நமக்கு விதிக்கப்பட்ட தனிமையை எதிர்கொள்ள முடியாமல் பொய்யும் மெய்யும் கலந்த கதையுலகிற்குள் ஒளிந்து கொள்கிறோம். கனவாற்றின் கரைகளில் உள்ள சில கதகதப்பான குடிசைகளில், துயரத்தின் மடியிலும் நம்மால் கொஞ்சம் சொகுசாகப் படுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் கதை சொல்வது என்பது அந்தக் கதையை அப்படியே வாழ்வதற்கு ஒப்பானது. படைப்பாளி மொழியின் கையைப் பிடித்துக் கொண்டு மேகங்களில் மிதக்கத் தொடங்குகிறான். தேவதைகளோடும் பூதங்களோடும் ஒரு ஆடலை நிகழ்த்தும் வாய்ப்பை அவன் பெறுகிறான். ஒரு போதையூட்டும் இனிய சுழலில் சிக்கிக் கொள்ளும் அவனது பயணம் சில சமயங்களில் நிம்மதியிலும் பல சமயங்களில் பெரும் வாதையிலும் முடிகிறது. ஆனால் தன் கதையை யாரெல்லாம் வாசிக்கிறார்கள் என்று கவனிக்கத் தொடங்கும் அங்கீகாரக் கவலைகளில் கதைக்காரன், தான் ஒரு படைப்பாளி என்கிற உண்மையைத் தொலைக்க ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு நொடியும் தன்னை ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் அந்தரங்கசுத்தி உள்ள கதைக்காரனே பெரும் படைப்பாளியாகவும் மாற முடியும். சமூக அக்கறை, அரசியல் பொறுப்பு, கலாச்சாரப் பொறுப்பு, மொழி அக்கறை, வடிவ நேர்த்தி என்னும் எல்லா அலகுகளையும் உள்ளடக்கிவிடும் ஆற்றலை கலைஞன் இப்படித்தான் பெறுகிறான்.


நானும் இப்படி ஒரு சுழலில் சமீபத்தில்தான் சிக்கி இருக்கிறேன். தொடர்ந்து கதை எழுதும் ஆசையில் விதம் விதமாக எழுத ஆசைப்படுகிறேன். தனது முதல் கதைத் தொகுப்பை வெளியிடும் இளைஞனின் குதூகலம் எனக்கும் கிடைத்திருக்கிறது. இன்னும் எழுதுவேன்.



சமயவேல் 27-10-2011 [email protected] மதுரை
  •  

எனது சமீபத்திய கவிதைகள்

1.நெற்றிக்கண் தொலைத்த கவிதை

சிறு தூறலாகப் பெய்யும் மழையால்

கரும் கழிவுகளில் எழும் குமட்டும் நாற்றம்

அசுர ஆட்டோக்கள் கக்கிய

கேஸோலின் வாசம்

நான் ஒரு காலைப் பொழுதில்

வைகைக் கரையில் நிற்கிறேன்.





கரை இருமருங்கிலும் தொடர்ச்சியாய்

ஒலிக்கும் பட்டறைச் சம்மட்டிகளின்

சப்தத்தில் என் செவிப்பறை அதிர்கிறது

ஆயில் சிந்திய கால் சராய்களுக்குள்

மஹால் தூண்களைவிட உறுதியாய் நிற்கும்

பதின்பருவ பையன்களின் கால்கள்;

உயரும் கைகளில் பிதுங்கும் புஜங்களில்

பாண்டிய நாட்டின் வியர்வை வழிகிறது





பன்றிகள் அலையும் கரும்புனல் மேல்

முச்சக்கர சைக்கிளிலிருந்து மருத்துவமனைக்

கழிவுகளைக் கொட்டுகிறான்

குழந்தைத் தொழிலாளி நெடுஞ்செழியன்





கள்ளத்தனமாய் கேஸ் ஏற்றும் வரிசையில்

ஒரு பள்ளிச் சிறுமியர் வண்டியும் நிற்கிறது

கழுத்தில் டைகள் ஆடும்

கருஞ்சிவப்புச் சீருடை மீனாட்சிகள்

ஸ்கேல் யுத்தம் நடத்துகிறார்கள்





மாநகராட்சியின் ஒற்றை மாட்டு வண்டியில்

மூக்கணாங் கயிற்றை சுழற்றியபடி வருகிறார்

குட்கா மெல்லும் கள்ளழகர்





புட்டு வாங்கக் காசில்லாத கந்தலாடைச் சிவனார்

கோப்பெருந்தேவியின் இட்லிக் கடையில் விழும்

எச்சில் இலைகளைக் கவனித்தபடி

தியானத்தில் இருக்கிறார்





நமக்கென்ன என்னும் பாவனையோடு

காறித் துப்புகிறான்

நெற்றிக்கண் தொலைத்த நவீனக் கவிஞன்.


2.மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்


மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்

ஆயினும் நன்றி நன்றி என்கிறார்

யன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்தமைக்காக

மற்றும் மற்றும் என்று இருமினார்

ஒலித்த அலைபேசியைத் திறக்கிறார்

லட்சுமி லட்சுமி

லட்சுமி பஸ் ஏறிட்டேன்டா காலை பத்து பத்தரைக்கு

வந்திருவேன்டா... இருமுகிறார்

அலைபேசியை அணைத்து பைக்குள் போடுகிறார்

முழுப் பேருந்தும் கவனிக்கிற மாதிரி தொடர் இருமல்

ஏதேனும் சிரப், மருந்து எடுத்துக்கக் கூடாதா என்றேன்

மருந்தென்ன, பெரிய மருந்தே சாப்பிட்டுட்டேன்

மூணு நாளா சாப்டுட்டே இருக்கேன்
சரி டிபன் எதுவும் சாப்பிட்டாச்சா

கையிலிருந்த மில்க்பிகீஸ் பாக்கெட்டைக் காண்பித்தார்

இது தான் சோறு இட்லி தோசை பூரி பொங்கல் எல்லாம்

பிஸ்கட் தவிர வேற எதுவும் ஆகாது

எல்லாமே டாக்டர்கள் உலகம்

இவ்வளவு கனிவு காட்டும் நீங்கள் ஒரு பிஸ்கட்

எடுத்துக் கொள்ளுங்களேன் என்று பாக்கெட்டை எறிந்தார்

மீண்டும் அலைபேசி அழைப்பு

ஆமாமா டாக்டர் இனிமே வரவேண்டாம்னுட்டார்

சவத்த விடு

அழைப்பைத் துண்டித்து பேசியை பைக்குள் எறிந்தார்

சார் என்ன பிஸ்கட் பிடிக்காதா என்றவர்
இருமத் தொடங்கினார்

தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறார் மணிவண்ணன்.



3.பொட்டலம் பற்றிய யோசனைகள்

இரவின் அந்திமத்தில்

அதிகக் குளிரெடுத்து

போர்வையை மேலும்

இறுக்கிக் கொள்கிறபோது

உணர்கிறேன்

நான் ஒரு

துணிப்பொட்டலம் என்று.





மருத்துவச்சி ஏந்திக் காட்டிய

நிர்வாணப் பொட்டலம் கண்டு

வலியுடனும் குதூகலித்த

அம்மா

இன்றில்லை.





இது பற்றி மேலும்

யோசிக்க முடியாமல்

உருண்டு புரண்டு

தூங்கிப் போனேன்.




காலையில் எழுந்து குளித்து

ஷேவ் செய்து தலைவாரி

பவ்டர் பூசி

ஒரு சிறந்த உடைப் பொட்டலமாய்

தெருவில் நடந்தேன்.


4. மலையை விழுங்கும் மலைகள்

நண்பன் வீட்டு மாடியிலிருந்தபடி

இரவுப் பயணத்திற்குப் பிறகான அதிகாலையில்

வெண் பனிக்குள் மூழ்கிய மலையைப்

பார்த்துக் கொண்டே இருந்தேன்

நிம்மதியின் நிலம் அது என்று உணர்ந்த என்னை

மலை பருகிக் கொண்டே இருந்தது





ஆனால் இரவில் கனவுக்குள் நுழைந்த

ஒரு பெரும் மலைப் பிரதேசம்

பயங்கரம் பூசிய வெயிலில் தகதகத்தது

செம்பழுப்புப் பாறைகள் செதிள் செதிளாக வெடித்து

உயர உயரப் போய்க்கொண்டே இருந்தது

தலை சுழற்றும் பள்ளத்தாக்குகளில்

வீழ்த்திவிடும் அபாயச் சரிவுகளில்

நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தேன்





ஒரு மலை முடிந்ததும் பல மலைகள்

அடுக்கடுக்காய் முளைத்துக்கொண்டே வந்தன

எனக்குக் கீழே பாளம் பாளமாய் மின்னிய

ஈட்டிப் பாறைகளைக் கண்டு நடுக்கமுற்றேன்





பெரும் மலைகளுக்கு நடுவில் இருந்த

பள்ளத்தாக்கில் நீரும் இல்லை நிலமும் இல்லை

மேலும் கீழும் ஆகயமொவென அச்சமுற்றேன்

எதன் மேல் எது நிற்கிறது என வியந்தபோது

எல்லா மலைகளும் மறைந்து போயின





இப்பொழுது நான்

அந்த அதிகாலைப் பனிமலையின்

கதகதப்பினுள் நுழைந்து கொண்டிருக்கிறேன்.




5.நீலப் பெருவெள்ளம் 


இன்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நீல நிலத்தில்

சிக்கிக் கொண்டு 

எத்திசையில் செல்வதெனத் தெரியாமல் 

திகைத்துப் போய் நிற்கிறேன் 

வெள்ளம் பெருகிக் கொண்டே இருக்கிறது

இந்தப் பக்கம் ஆழமில்லை என்று சொன்னார்களே

இந்தப் பக்கம் நடந்தால் பாறைகள் வருமென்றும்

மெல்ல நடந்து கரையேறிவிடலாம் என்றார்களே 

எங்கிருக்கிறது கரை

எந்தப் பக்கம் இருக்கிறது பாறைப் பாதை?

அடிவானம் வரை வெள்ளம் தானே தெரிகிறது

நீச்சல் தெரியும் எனக்கு

கிணற்றில்,குளத்தில்,கண்மாயில்

நீந்தியிருக்கிறேன் 

கடல் நீச்சல் கூட கொஞ்சம் தெரியும்

வேம்பார் கடலில் கரையோரம் நின்ற படகு வரை

நீந்தியிருக்கிறேன்.

ஊழிப் பெருவெள்ளத்தில் தினசரி சிக்கிக் கொள்ளும்

முதல் மனிதன் நான் தான்

வெள்ளம் பெருகிக் கொண்டே இருக்கிறது





இந்த நீலப் பெருவெள்ளம் என்னை ஒன்றும் செய்யாது

என்னும் சிறிய எண்ணம்

எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது

காலடியை மட்டும் விட்டுவிடாமல் நிற்கிறேன் 

பெருகிக் கொண்டே இருக்கிறது வெள்ளம்.






6. அச்சு அசல்


மறைந்த அப்பாவின் மறைந்த காதலியின்

பேத்தியும் அவள் காதலனும்

என் எதிரில் உட்கார்ந்து

கோல்டு காப்பி அருந்துகிறார்கள்





ஆண்டாள் என்ற பெயரில்

அப்பாவுக்கு மூன்று காதலிகள்

இவளது பாட்டி மாவில்பட்டி ஆண்டாள்





அப்படியா ஓ அப்படியா நைஸ்

நெடு நாட்களாக எங்கள் வீட்டிலிருந்த

அமேஸான் கிளி போலவே
தலை சாய்த்து அல்ரைட் என்கிறாள்





பை அங்கிள் சொல்லிவிட்டுக்

கிளம்பிய அவள்

இடப்புறம் திரும்பிய போது

அச்சு அசல்

என் அம்மாவைப் போலவே இருந்தாள்.


7. இரவு மழை


இந்த இசை

வானத்திலிருந்து அல்லது சொர்க்கத்திலிருந்து

இந்தத் துளி, சிறுதுளிகள், துளிகள்

கோர்க்கப்பட்ட துளிகள்

மழை

இரவு மழை

முழு இரவும் மழை

முழு இரவும் குளிர்

முழு இரவும் மின்னல்

முழு இரவும் குமுறும் இடிகள்

முழு இரவும் கறுப்பிருட்டு

முழு இரவும் கோர்க்கப்படாத இசை

முழு இரவும் வெதுவெதுப்பு

முழு இரவும் கோதுமை நிறக் காதல்

  •  

எனது புதிய கவிதைத் தொகுப்பு

நண்பர்களே,
எனது புதிய கவிதைத் தொகுப்பு "மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்"
ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. முகவரி:


ஆழி பப்ளிஷர்ஸ்,
12, முதல் பிரதான சாலை,
யுனைட்ட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600 024

044-23722939
9940147473 விலை: ரூ.50/-
  •  

ஹெய்டி: ஆல்ப்ஸ் மலையின் அதிசய மலர்


கட்டுரை:சமயவேல்


ஹெய்டி: ஆல்ப்ஸ் மலையின் அதிசய மலர்
நல்லுணர்வு என்னும் சுவாசம், மனித மனத்தின் பல அடுக்குகளையும் கோர்த்தபடி, சகல நிகழ்வுகளையும் உறிஞ்சியபடி, சதா தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. நல்மனம் என்பது புத்தம் புதியதாக எல்லாக் குழந்தைகளுக்குள்ளும் பூத்து நிற்பதை அறியவும் அவர்களோடு சிரித்து விளையாடவும் முடியாத பெரியவர்களாக நாம் எப்பொழுது வளர்ந்தோம்? வாழ்வின் கொடுமையான பற்ச்சக்கரத்தில் சிக்காமலும்,எந்தத் துயரமான அனுபவத்தாலும் தீண்டப்பட முடியாமலும், நமது பால்யம் மட்டும் நமக்குள் என்றும் இனித்துக் கொண்டே இருக்கிறதே, எப்படி? உயிர்த்திருப்பதற்கான எல்லாவகைப் போராட்டங்களிலும், ஒரு விதை நெல் அளவுக்காவது நம் நல்மனத்தைத் தக்க வைத்துக் கொண்டே வருகிறோம். ஏனென்றால் இந்த நல்மனம் வேறு யாருக்காகவும் இல்லை நமக்கே நமக்குத் தேவைப்படுகிறது. தற்கொலையைத் தேர்வு செய்ய முடியாத ஒவ்வொரு மனிதனும், தன்னை அங்கீகரித்தபடி, தனது ஜீவிதத்தைத் தொடர இந்த நல்மனத்தையே நம்பியிருக்கிறான்.

ஹெய்டி என்ற புதினத்தில், ஐந்து வயதில் அனாதையாகிவிட்ட ஹெய்டி எனும் சிறுமி, தனது நல்மனத்தை அவள் சந்திக்கிற எல்லாருக்கும் , எல்லாவற்றிற்கும் பகிர்ந்தளித்தபடி அவளுக்கு நேர்கிற எல்லாத் துயரங்களையும் நீந்திக் கடந்துவிடுகிறாள். டெடி என்னும் அவளது சித்தி ஆல்ப்ஸ் மலையுச்சியில் 'கடவுளுடனும் மனிதனுடனும் ஏற்பட்ட சச்சரவினால்' தனித்து வாழும் ஆல்ப்ஸ் தாத்தாவிடம் கொண்டுவிடச் செல்கிற காட்சியோடு புதினம் தொடங்குகிறது. இந்தச் சிறுமி எப்படி அங்கு மலையுச்சியில் தனித்து வாழ்ந்திடுவாளோ என்று எல்லோரும் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் ஹெய்டியோ வழியிலேயே ஆடு மேய்க்கும் பீட்டர் பையனோடு சிநேகிதமாகி தாத்தாவை நோக்கி ஓட ஆரம்பிக்கிறாள். அடர்ந்த புருவமும் நீண்ட தாடியுமாக விசித்திரத்துடன் தெரிந்த தாத்தாவை ஹெய்டிக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவள் பார்க்கிற சந்திக்கிற எல்லோருடனும், எல்லாவற்றினுடனும் உடனே சிநேகிதமாகிவிடுகிறாள்.

ஹெய்டி தனது புது வசிப்பிடத்தை மகிழ்ச்சியுடன் சுற்றிப் பார்க்கத் தொடங்குகிறாள். ஃபிர் மரத்தின் கிளைகள் காற்றில் அசையும்போது ஏற்படும் இனிய ஓசையைக் கேட்டபடி நிற்கிறாள். தாத்தாவின் மரவீடு, ரம்மியமான வாசனையுடைய புதிய வைக்கோல் பரப்பிய பரணில் அமைந்த படுக்கை, தேவதாரு மரங்களுள் நுழைந்து காற்று எழுப்பும் சங்கீதம், ஆடுகளின் தொழுவம், டெய்ஸி என்னும் வெள்ளை ஆடு, டஸ்கி என்னும் பழுப்பு நிற ஆடு, அவைகளின் பாடல், பாலடைக்கட்டி என எல்லாமே அவளுக்குப் பிடித்துப் போகின்றன. அந்த மரவீட்டில், உலகிலேயே மிகச் சிறந்த படுக்கையில் இனிமையான கனவுகளில் மூழ்கியபடி தூங்கிப்போகிறாள்.

ஹெய்டியின் இதயத்தில் ஊற்றெடுக்கும் நல்லுணர்வு, ஆல்ப்ஸ் மலையின், அந்தப் பள்ளத்தாக்கின் சரிவுகள், பலவகைப் பூக்கள் மணக்கும் மேய்ச்சல் நிலங்கள், மஞ்சள் ரோஜாக்கள் மண்டிய பாறைகள் என்று, இயற்கையின் பேருணர்வோடு வெகு இயல்பாகக் கலந்து அப்பழுக்கற்ற தூய ஆனந்தம் கொண்ட பெண்ணாக இருக்கிறாள் ஹெய்டி. இந்தப் புதினத்தில் ஆல்ப்ஸ் மலையும் ஒரு கதாபாத்திரமாகக் கரைந்து நிற்பதால்தான் இது ஒரு நூற்றாண்டையும் தாண்டிய புதினமாக இருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் பலகாலமாகப் படிக்கப்பட்டு வருகிறது. ஹெய்டி, ஆடுகளுடன் மேய்ச்சல் நிலத்திற்குச் செல்லும் "ஆடுகளுடன் ஒருநாள்" என்ற அத்தியாயத்தை பலமுறை படித்துவிட்டேன். ஸ்நோஃபிளேக் என்னும் ஆட்டுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஹெய்டி கொஞ்சுவதும் அது அவளது தலையைத் தேய்ப்பதும் என்று ஒரு வினோத அன்பு மிதக்கும் இந்தப் பக்கங்களில் தான் பீட்டரும், ஹெய்டியை விரும்பத் தொடங்குகிறான். ஹெய்டி பழுப்பு நிற பெர்ரிப் பழம்போல் வளர்ந்து தன் புதுவாழ்வில் ஒரு பறவையைப் போல மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறாள், 'அனாதை' என்ற சொல்லை ஆல்ப்ஸ் மலை அழித்துவிடுகிறது.

குளிர்காலம் வருகிறது. எங்கும் பனிப்பொழிவு. மின்னும் வெள்ளை உலகத்தில் பனி அடர்ந்த தேவதாரு மரங்கள் சூரிய ஒளியில மின்னிப் பிரகாசிக்கின்றன. இந்த தேவதாரு மரங்கள் புதினத்தின் பல இடங்களில் தலை நீட்டி புதினத்தின் அழகியல் கட்டமைப்பையும், ஹெய்டியின் துள்ளும் மனவுலகையும் நீட்டித்தபடியே இருக்கின்றன. சுவிட்சர்லாந்து சென்று ஆல்ப்ஸ் மலைகளில் ஏறி இந்தத் தேவதாரு மரங்களை இப்பொழுதே பார்க்க வேண்டும் என்று நம்மைப் பித்தம் கொள்ளச் செய்கிறார் ஜோஹானா ஸ்பைரி; இந்த நாவலை எழுதிய பெண்மணி. சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் உள்ள ஹிர்சல் என்னும் கிராமத்தில் பிறந்த இவர், ஒரு சிறுமியாக ஜுரிச் ஏரிக்கு அருகில் உள்ள, மலர்கள் நிரம்பிய பள்ளத்தாக்கைப் பார்த்தபடி வளர்ந்த அனுபவத்தை புதினம் முழுவதும் எழுதிச் செல்கிறார். 1880ல் அச்சாகிய இந்தப் புதினத்தின் ஒரு சிறு பகுதியை சமீபத்தில் தொலைக்காட்சியில் தற்செயலாக ஒரு உயிரோட்டப் படமாகப் (ANIMATION) பார்த்தேன். துள்ளிக் குதித்து ஆடுகளோடு ஓடும் ஹெய்டியின் சிரிப்பு எங்கள் வீடு முழுவதும் பல நாட்கள் மிதந்து கொண்டிருந்தது. இந்தப் பனிப்பொழிவுக் காலத்தில்தான் ஹெய்டி பீட்டர் வீட்டிற்கு அவனது பாட்டியைப் பார்க்கச் செல்கிறாள். ஏழ்மையான, குறுகிய பீட்டரின் வீட்டில் ஒரு மூலையில் ஒரு கூனல் பாட்டி நுல் நுற்றுக் கொண்டிருக்கிறாள். பீட்டரின் பாட்டிக்குப் பார்வை கிடையாது. பாட்டியால் எப்போதுமே எதையுமே பார்க்க முடியாது என்பதை ஹெய்டியால் தாங்கவே முடியவில்லை. 'யாராலும் உங்களுக்குப் பார்வை தரமுடியாதா?' என விம்மி அழுகிறாள் ஹெய்டி.பீட்டரின் பாட்டியிடமும் அவனது அம்மா பிரிட்கட்டிடமும் ஹெய்டி காட்டும் நேசம் அளவிட முடியாதது. அவளது முரட்டுத் தாத்தாவைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பீட்டரின் முழு வீட்டையும் பழுது நீக்கித் தருகிறாள். ஒரு சிறிய பெண்ணால் எவ்வளவு பெரிய உதவி?

தாத்தாவின் வீட்டிற்கு ஒருநாள் இரண்டு விருந்தினர்கள் வருகிறார்கள். ஒருவர் மலையடிவார கிராமம் டர்ஃபிளியின் பாதிரியார். தாத்தாவை டர்ஃபிளிக்கு திரும்பிக் குடிவருமாறும் ஹெய்டியை பள்ளிக்கு அனுப்புமாறும் கோருகிறார். "அங்கு இருக்கும் மக்கள் என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களை வெறுக்கிறேன். எனவே விளகியிருப்பதுதான் எல்லோருக்குமே நல்லது" எனத் தெளிவாகக் கூறி அவரைத் திருப்பி அனுப்பிவிடுகிறார். இன்னொரு விருந்தாளி டெடி. ஹெய்டியின் சித்தி. பிராங்க்ஃபர்ட்டில் ஒரு செல்வச்சீமான் மகளான கிளாரா என்னும், நடக்க முடியாத, சக்கர நாற்காலிச் சிறுமிக்குத் துணையாகவும் தோழியாகவும் இருக்க ஹெய்டியை டெடி அழைத்துப் போவதிலிருந்து புதினம் தன கதைப்பாதையை வெகு எளிதாகத் திருப்பிக் கொள்கிறது.

பிராங்க்பர்ட்டில் ஹெய்டியின் வாழ்க்கை துயரங்கள் நிரம்பியதாக மட்டுமல்ல பல விசித்திர விநோதங்களுடனும் கழிகிறது. ஆல்ப்ஸ் மலை ஆட்டுக்குட்டி பிராங்க்ஃபர்ட்டின் உயர் சமூக வாழ்வோடு பொருந்திப் போக முடியாமல் தத்தளிக்கிறது. "நான் இங்கே இருந்தால் ஸ்நோஃபிளேக் அழும். என்னைப் பார்க்காமல் பாட்டியும் வருத்தப்படுவாள். மலைகளுக்கு சூரியன் இரவு வணக்கம் சொல்வதை என்னால் இங்கே பார்க்க முடியவில்லை." என்று அழுகிறாள் ஹெய்டி. "பிராங்க்ஃபர்ட்டின் அருகே பறக்கும் பருந்து கூட மூர்க்கமாக சப்தமிடுகிறது. ஏனென்றால் இங்குள்ள மக்கள் கோபக்காரர்களாகவும் வெறுப்பூட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்." என்று வெளிப்படையாகப் பேசுகிறாள். ‘இந்தக் குழந்தை சிந்தை தவறியிருக்கிறாள்’ என்று ரொட்டன்மேயர் கருதுகிறார். உண்மையில் சிந்தை தவறியிருப்பது ஹெய்டி இல்லை. பிராங்க்பர்ட் நகரம்தான் சிந்தை தவறியிருக்கிறது. 1880ல் பிராங்க்பர்ட் நகரம் மட்டும்தான். ஆனால் இன்று
முழு உலகமே சிந்தை தவறி நிற்கிறது. ஆல்ப்ஸ்மலைப் பள்ளத்தாக்கைப் பார்த்தபடி, பரண் வீட்டில் வைக்கோல் மணக்கும் படுக்கையில் படுத்தபடி வாழ்வின் ஆதி எளிமையை தேவதாரு மரங்களுக்குள் புகுந்து காற்று எழுப்பும் இசையின் மூலம் வாழ்வின் இசையையே கேட்டுவிடுகிறாள் ஹெய்டி. அவளது அனைத்தின் மேலான நல்லுணர்வும் பரிசுத்தமான அந்த மலையழகும் சேர்ந்து கிளாராவை நடக்க வைக்கும் அற்புதத்தைச் சாதித்து விடுகின்றன. ஆனால்.

ஆனால் இந்தப் புதினத்தில் அதன் இயல்பான ஓட்டத்திற்குள் வெகு இயல்பாக கடவுள் நுழைந்து கொள்கிறார். பிராங்க்பர்ட்டை விட்டு ஊருக்குப் போக வேண்டும் என்று ஹெய்டி அழுதபடி பெருந்துயரில் இருக்கும்பொழுது, கிளாராவின் பாட்டி (இவரும் ஒரு உன்னதமான பாட்டியாக சித்தரிக்கப்படுகிறார்) ‘உனது துயரங்களைக் கடவுளிடம் கூறு’ என்று ஹெய்டியைப் பிரார்த்தனை செய்யுமாறு தூண்டுகிறாள். மறைமுகமான கிறிஸ்துவப் பிரச்சார நாவல் போல ஒரு தோற்றம் எழத்தான் செய்கிறது. எல்லா அதிசயங்களுக்கும் பிறகு முரட்டு ஆல்ப்ஸ் தாத்தா திருந்தி தேவாலயத்திற்குச் செல்லத் தொடங்குகிறார். இறுதி அத்தியாயத்தில், இரவில் நட்சத்திரங்களைப் பார்த்தபடி படுத்திருக்கும் ஹெய்டியும் கிளாராவும் பேசிக் கொள்கிற உரையாடல்களில் ஹெய்டி வெளிப்படையாகவே கடவுளைப் பற்றிப் பேசுகிறாள். போயும் போயும் ஒரு வெளிப்படையான கிறிஸ்துவப் பிரச்சார நாவலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

1880ல் எல்லா மனித சமூகங்களிலும், மேன்மையான வாழ்வையும் பண்பாட்டையும் கட்டமைப்பதில் ஒரு மையமாக இருந்த கடவுள், இன்று இந்த 2010ல் என்ன ஆனார், அவருக்கு நவீன சமூகத்திலும் இலக்கியத்திலும் என்ன வகையான இடம் இருக்கிறது என்பதை ஆய்வதாக அல்லது கட்டுடைப்பதாகத்தான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.
தமிழில் செவ்வியற் படைப்புகளைக் கட்டுடைத்த பல ஆய்வாளர்களும் செய்த பெருந்தவறுகளை நானும் செய்வதற்கில்லை. படைப்புகளின் ஆத்மாவை, மொழியின் சொற்களின் மேலே பற்றிப் பரவுகிற அதன் சூட்சும இயக்கத்தைக் கண்டடைய முடியாத எந்தக் கட்டுரையாலும் அந்த மொழியின் படைப்புத் தளத்திற்கோ வாசகத் தளத்திற்கோ எந்தப் பயனும் இல்லை. இன்று உலகம் முழுவதிலும் படைப்புகளிலிருந்து கடவுள் நீக்கப்பட்டுவிட்டார். ஆனால், மதம் சாராத கடவுளைச் சாராத ஆன்மீகம் ஒன்று பல படைப்புகளில் பொதிந்திருப்பதை நாம் காண முடிகிறது. தத்துவ உலகத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் பெரிய வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பப் போகிறோம் என்று தெரியவில்லை. கவிதையும் கலைகளும், தத்துவத்தை அழித்து மேலெழும்பிவிடும் என்னும் அதீத எதிர்பார்ப்பு இன்றளவும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. மரணத்தின், கொலையின், அழிப்பின் பெருமுகத்தை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் நாம், அரசியல் பொய்த்துப் போன இந்தப் பேருலகில் என்ன செய்யப் போகிறோம்?

ஹெய்டி, ஒரு புதினம் என்ற அளவிலேயே இயற்கையோடு இணைந்த ஒரு பேருணர்வை நமக்குத் தந்துவிடுகிறது. நல்லுணர்வில் லயிக்கும் நம் மனம் மதம் சாராத, கடவுள் சாராத ஆன்மீகம் பற்றிய ஒரு புரிதலையும் நமக்குத் தந்துவிட்டது. இப்போதைக்கு இது போதும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வாசித்த இந்தப்
புதினத்தை தமிழில் இப்பொழுது படிக்கும்பொழுது, மொழிபெயர்ப்பில் அதன்
கவித்துவம் காணாமல் போயிருந்ததைக் கவனிக்க முடிந்தது. எனினும் மொழிபெயர்ப்பாளர்கள் ஸ்ரீமதி, கயல்விழி மற்றும் புதினத்தை வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்திற்கும் எனது நன்றிகள்.

00000 0000 0000 நன்றி: உயிர் எழுத்து

  •  

கட்டுரை

உலகின் அழகிய முதல் பெண்:லீனா மணிமேகலையின் கவிதை முகம்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஒரு பள்ளத்தாக்கின் சரிவில் பார்த்த ஆதி மனிதர்களின் குடியிருப்பில் அந்தப் பாறைகளைப் போன்றே, அந்த மரங்களைப் போன்றே வெகு இயற்கையான அந்த மனிதர்களின் அ-கலாச்சார வாழ்முறையைக் கண்டு, அது ஓர் அதிசயம் என நினைத்தேன். இயற்கையிலிருந்து ஒரு சிறிதும் பிரியாத அவர்களை, தொல்குடியினர் என்றும் பழங்குடியினர் என்றும் நாம் எழுப்பும் சொல்லாடல்களில் ஒரு அர்த்தமும் இல்லை. நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களை பழங்குடியினர் என்று ஏன் அழைக்க வேண்டும்? ஆதி மனிதர்களின் மனசாட்சியாக வாழ்ந்தும் எழுதியும் வந்த லெவி ஸ்ட்ராஸ் கலாச்சாரத்தை இயற்கைக்கு எதிரிடையாக வைத்தார். ஒரு நொடியில் ஒரு நாட்டையே அழித்துவிட எத்தனித்திருக்கும் அணுக்கால மனிதர்களாகிய நாம், குகை வாழ்வைத் தாண்டி பல நூற்றாண்டுகளாக பூமி முழுதும் திரண்டிருக்கிற பல்வகை பண்பாட்டுச் சமூகங்களும் குறுக்கு மறுக்காக கட்டி எழுப்பியிருக்கும்
கலாச்சாரச் சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு, ஆதிவாழ்வின் அ-கலாச்சார மெய்மைகளை எப்படி மீட்கப் போகிறோம்?

லீனா மணிமேகலை, குகை ஓவியத்தையும் கவிதையையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்த்திருப்பது அவரது அ-கலாச்சாரத்தை அடைவதற்கான பெருவிருப்பத்தின் அடையாளமாகவே இருக்கிறது. இயல்புகளின் இயல்புகளுக்குள் பொதிந்த ஆதிப் பெண்ணின் குரல், லீனாவின் கவிதைகளில் பெரும் உக்கிரத்துடனும் கொண்டாட்டத்துடனும் பதிவு செய்யப்படிருப்பதை முதலில் நாம் அவதானிக்கிறோம். எல்லாவிதமான சுதந்திரங்களையும் சுவீகரித்துக் கொள்கிற கவிமனத்தின் கட்டற்ற போக்கில், கவிதையின் வழியாக பெரும் கலாச்சாரத்தின், பாலியல் முகத்தின் கரும் புள்ளிகளை, வெடிவைத்துத் தகர்த்துவிடுகிறார். பலரது கண்டனங்களையும், முகச் சுழிப்புகளையும் கிளப்பிய இவரது தூமத்திக் கவிதைகளை பெரும் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு சொல்லியல் நிகழ்த்துப் போராட்டமாகக்
கருதிவிட்டு இவரது கொந்தளிப்பு மிக்க கவிதைகளுக்குள் நுழைந்துவிடலாம். சமீபத்தில் ந.முத்துசாமியின் 'பாஞ்சாலி' என்ற சிறுகதையைப் படித்த பொழுது
இன்று வரையிலும் பாரத கண்டமே பாஞ்சாலியின் தூமையில் நனைந்து கொண்டிருப்பதையும், அவள் துகிலுரியப்பட்ட நிகழ்வு இந்தியர்களின் கூட்டு நனவிலியில் ஆறாத புண்ணாகப் புரையோடியிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. லீனாவின் கவிதையிலோ தூமை, ஒரு எதிர்-அழகியல், தகர்ப்பு-மொழிப்பாடாக இயங்குவதை எவரும் வெகு எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.

கட்டற்ற காமத்தின் களிப்பைக் கொண்டாடும் லீனாவின் கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் புதுமொழியில், விதம் விதமான பாலியல் பித்தத்தையும், கொதிப்புகளையும் பெரும் உக்கிரத்துடன் வீசி எறிகின்றன. சங்ககால அகப் பாடல்களில் உள்ளுறையாகவும், திருக்குறளின் காமத்துப்பாலில் மெல்லிய கீற்றுகளாகவும், ஆண்டாளில் உடலை ஆன்மீக வெளிக்குக் கடத்தும் ஏக்கங்களாகவும் தொடரும் தமிழ்ப்பாலியல் கவிதைகளின் தொடர்ச்சியாக லீனா மணிமேகலையின் கவிதைகளும் அமைகின்றன. என் கள்வனின் நாக்கில்/ ஊறுகிறது/ விநோதத்தின் சாவிகள் என்ற வரிகளில் பெண் உச்சமடைகிற ரகசியத்தை, மிக அழகாக, சற்று சாய்ந்திருக்கும் மச்சத்தையும் சேர்த்து என்று கோர்க்கிறார். இந்தக் கடைசி மூன்று வரிகள் என்றைக்குமான அழகியலோடு இருக்க, முந்தைய வரிகள் இன்றைய அழகியலோடு இன்றைய மொழிப்புதுமையோடு ஒரு பின்னலான பாலியல் கவிதை ஆகிவிடுகிறது. இதே போல சாம்பன் கவிதையிலும் கலவியின் பிறிதொரு சித்திரம். "தொய்கிற வேளையெல்லம்/ காம்புகளில் ஏவுகிறது" என பாலியலின் நுண்ணிய அலகுகள் வழியாக, உச்சத்தில் பெண் அடையும் "கலவிகூர்புனல்" என வெளிப்படையான உரத்ததொரு பாலியல் மொழித்தொடரை உருவாக்குகிறார். கடைசி ஆறு வரிகளில் கவிதை திரள்கிறது. உடல்களை புராணிகத்துக்குக் கடத்தும் ரகசியத்தை இக் கவிதை மெல்ல அம்பலப்படுத்திவிடுகிறது. நா மீறிய கடல் கவிதையிலும் "ஈரத்தால் தீ மூட்டியவன்/ தன்/ நாக்கையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்/..". என்று விளையாட்டு தொடர்கிறது. வேட்டை மறந்தவன் கவிதையில் யோனிக்காட்டில் புதுக்குகையைக் கட்டிக் கொண்டிருக்கும் ஆதிப் பெண்ணின் தங்கக் கிளிஞ்சல்கள் புதிய ரொமாண்டிசிச சொல்லடுக்குகளை உருவாக்குகிறது. ஒரு நீலப் பரவசக் கவிதையில் "கருவுறுகிறேன் தீவை" என்று இரண்டு சொற்களில் கவிதையை நட்டு வைக்கிறார். நிலவின் துரு, உனக்கு என்ன வேண்டும், மிதக்கும் பாடல், நீ பரப்பு நான் துண்டு ஆகிய கவிதைகள், காதலும் காமமும் மயங்கிய அழகியல் சொல்லாடல்களால் புதிய அகப்பாடல்களாகி விடுகின்றன. "நம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது" என கொடூரமான பிரிவையும் ஒரு கவிதை பதிவு செய்கிறது. "அன்பொழிந்தவுடன்/ தலைகளைக் கொய்துவிடும் திடம்/ வாய்க்கப் பெறுவதில்லை/" என உறவுகள் அறுந்த கவிதையில் வெண்ணிப்பறந்தலை ஆக முயல்கிறார்

"ஒரு குவளைக் கள்" கவிதையில் "இடுப்பின் கீழ் இறுக்கிக் கட்டப்பட்ட/ என்/ கன்னிமையின் வெற்றிடம்/ யாரும் அறிய முடியாதது/" என்று எழுதுகிறார். கன்னிமை என்பது உடலின் வரலாற்றில் ஒரு கால் புள்ளி. அவ்வளவு தான். ஒவ்வொரு கலவிக்கு முன்பும் பின்பும் எல்லாப் பெண்களுமே கன்னிகள் தான். பெண்களின் இடுப்புகளில் பூட்டு மாட்டும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் பொய்ப் புனிதங்களில் ஒன்றுதான் கன்னிமை. எனவே தான் "என் கற்பின் கட்டியங்காரி/ நான்/" என திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறார். "கசியும் சொல்" கவிதையில் துர்வாடையைப் பரப்பும் துரோகத்தின் ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட இவரது பறவைகளின் அலகுகளில் ஒரு புதிய சொல் தொற்றிக் கொள்கிறது. புதிய சொல் உள்ளவரை லீனா மணிமேகலை புதிய பெண்தான். "நாடோடி" கவிதையில் யாதொருவரும் தங்கள் தடையங்களைக் களைந்துவிட்டு புத்துயிர் பெறும் வழியை சொல்லித் தருகிறார். நாம் நமது கலாச்சாரத்தின் எல்லாத் தடையங்களையும் அழித்துவிட்டு நிர்வாணிகளாக மட்டுமே காம வெளிக்குள் நுழைய முடியும். கலவியின் ஒற்றைக் கணத்தில் ஆணும் பெண்ணும் அடைகிற மெய்மையை, ஆன்மீகத்தை, பிரக்ஞைக்குள் செலுத்தி, சமூகவெளி முழுமைக்கும் நாம் வழங்க முடியுமா? உலகின் பாலியல் இலக்கியங்கள் எல்லாம் இந்தப் புள்ளியில்தான், வியப்பின் வினாக்களோடு நிற்கின்றன.

இவரது இன்னொரு முக்கிய முகம் தன்னைத் தானே கொண்டாடிக் கொள்கிறது. பெண்ணிய உடல் மொழியின் முக்கியத்துவத்தை முற்றிலும் புதிய கோணத்தில் பேசும் இந்தக் கவிதைகளை ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றிய கவிதைகளாக எடுத்துக் கொள்ளலாம். ஆண் கவிகள் கூட இந்த அளவுக்கு பெண்ணுடலைக் கொண்டாடியதில்லை. "உடல்=பிரதி=உடல்" கவிதையில் ஒரு வசீகரமான மொழியில் உடலைப் பிரதியாக்கி விடுகிறார். "கனவு நினைவு கனவு" என்ற கவிதையில் ஒரு வெகு விநோதமான கொஞ்சுதலைக் காண்கிறோம். "குலவையிட்ட" என்ற ஒரே சொல் மூலம் இந்தக் கவிதை தன் நடனத்தை நிறைவேற்றி விடுகிறது. இந்தக் கொண்டாட்டம் தவளையின் பாடல் கவிதையில் வேறு வேறு வகையான அழிப்புகளோடு உள்-இணைப் பிரதியாக பெரும் அதிர்ச்சியூட்டும் கவிதையாகிவிடுகிறது.

இந்தத் தொகுப்பில் சாம்பல் மரம் என்ற கவிதை ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. கூடு திரும்ப முடியாத பறவையின் இந்தப் பாடலை வாசிக்கிற எல்லாத் தந்தையரின் கணுக்களிலும் பதித்து விடுகிறார். தந்தையரைக் கொல்ல வேண்டும் என்ற குரல்களின் மத்தியில் இந்தக் கவிதை தனித்து நிற்கிறது. என் மகளே எழுதிய கவிதை போல உணர்ந்தேன்.

ஆனால் லீனா மணிமேகலையின் பிரதான கவிதைமுகம் விலக்கப்பட்ட குருதியில் நனைந்த ஆதிமுகமாக இருக்கிறது. புத்தகம் முழுதும் குருதி கொட்டி சிவப்பேறிக் கிடக்கிறது. இந்தக் கவிதைகள் ஒரு பழைய நிகழ்வை ஞாபகமூட்டியது. எனது கல்லூரி நாட்களில் ஒரு விடுமுறை சமயத்தில் வீட்டில் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன். ஏதோ வாசலில் நிழலாடியது. இரண்டு பள்ளிச் சிறுமிகள் தயங்கியபடி நின்றிருந்தார்கள். ஒருத்தி ஜோதி. உறவுக்காரப் பெண். இன்னொருவள் அவளது தோழி. "அண்ணே ஜோதியைக் கொண்டு போய் அவங்க வீட்ல விட்ருங்கண்ணே, மேத்ஸ் மிஸ் சொல்லிவிட்டாங்க." என்றாள். ஜோதி அழுதபடி கன்னமெல்லாம் உப்பிப் போய் இருந்தது. ஜோதியின் வீடு எங்களூர் கண்மாயின் அக்கரையில் உள்ள முள்காடுகளைத் தாண்டி பனைமரக் கூட்டங்களுக்குள் இருந்தது. அந்தப் பெண் எனக்குப் பக்கத்தில் வந்து மெதுவாக "ஜோதி சடங்காயிட்டாண்ணே அதான்". என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள். எனக்கும் திகைப்பாகிவிட்டது. சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன். கதவைப் பூட்டப் போனபோது "இருங்க" என்று என்னைத் தாண்டி கதவைத் தள்ளிக்கொண்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள். அடுப்பங்கரையில்தான் அங்கணம் இருக்கிறது. அங்கணத்தில் அவள் கழுவுக்கொள்கிற சப்தம் கேட்டது. அவளைக் கூட்டிக் கொண்டு வற்றிய கண்மாய் வழியாக நடந்தபொழுது அவளது உடையில் படிந்திருந்த இரத்தத்தைப் பார்த்ததும் எனக்கும் அழுகை வந்தது. பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு துயரம் வர வேண்டும் என்று பலவாறாக யோசித்தபடி நடந்துகொண்டிருந்தேன். இயற்கையின் புரியாத புதிர், அன்றே என்னை ஒரு பெண்ணியப் பிரக்ஞை உள்ளவனாக மாற்றி இருந்தது. காலத்தின் சுழற்சியோடு உடல்ரீதியாக பெண் ஒவ்வொரு மாதமும் இயற்கையைத் தொட்டுக் கழுவுகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனியான காலச்சுழற்சி இருப்பதால் அவள் ஒரு விண்கோளுக்கு ஒப்பாகிவிடுகிறாள். தான் ஒரு விண்மீன் என்றும் பெருஞ்சக்தியைக் கொண்டவள் என்றும் விலக்கப்பட்ட குருதிமூலம் அவள் உணர்ந்துவிடுகிறாள்.
லீனா மணிமேகலையும் விலக்கப்பட்ட குருதியால் ஒரு பிரளயத்தையே உண்டாக்கிவிடுகிறார். வாழ்த்துக்கள்.


Samayavel 13.12.2009



.
  •  

மொழிபெயர்ப்பு


ஜேன் ஹிர்ஷ்பீல்டு கவிதைகள்
தமிழில்: சமயவேல்




1. கடிகாரம்


இரவுக் குளம்
அதன் சில இலைகள்
மிதக்கின்றன:
இல்லாத நட்சத்திரங்கள்
மேற்பரப்பில் துள்ளுகின்றன

ஆனாலும்கூட
விழும் பொருட்கள்
உடைக்கின்றன ஒவ்வொன்றும் அடுத்ததை
அழகு, ஆழ்துயர்கள் புரள்வது
இலைகளின் நகர்வு
முழு இரவும், மெதுவாக,
மீண்டும் அவை சிவப்பாகும் வரை.




2. பொய் கூறல்

அவன் தூரிகையால் கித்தானைத் தொடுகிறான்
ஒரு வேகமான இழுப்பில்
திறந்துவிடுகிறான் ஒரு பறவையை ஆகாயத்தில்
பின், நகர்ந்து யோசிக்கிறான்
இரக்கம் கொள்கிறான்
திறந்துவிடுகிறான் இன்னொன்றை.


3. தாடியுள்ள பெண்

ஒவ்வொரு முறையும் அவள் கவனித்தாள்
அவள் எண்ணியது
மூன்று கருப்பு முடிகளையும் பிடுங்கிவிட,
நாட்கள் குறைவாக இருந்தன;
அவளது விரல்கள் தாடையைத் தொட்டன
பிறகு மறந்துவிட்டது
இவ்வாறு சோர்வு வளர்ந்து சுருள்கிறது ஞானமாக.


4. இதயத்திற்கு ஒன்று வரை தான் எண்ணத் தெரியும்

சங் சீனத்தில்
இரு துறவி நண்பர்கள் அறுபது ஆண்டுகளாக
கவனித்தார்கள் வாத்துகள் கடப்பதை
அவை எங்கே செல்கின்றன?
ஒருவர் மற்றவரை சீண்ட, அவரால் கூற முடியவில்லை

அந்தக் கணத்தின் மௌனம் தொடர்கிறது

அவர்களது நட்பை கற்கப் போவதில்லை எவரும்
தரிசனங்களின் கோவன் நூற்களில்.
ஒருவருக்கும் அவர்களது பெயர்கள் ஞாபகத்தில் இருக்காது.

சில சமயங்களில் நான் அவர்களை நினைக்கிறேன்
துயரத்தால் கலக்கமுற்று நின்றுவிடுகிறேன்
அவர்களது இறகுகள் நிரம்பிய இலையுதிர்கால அங்கிகளுக்குள்
வாத்து மட்டத்த்திற்கு மடித்துத் தைக்கப்பட்டு

மலைகளின் பிரம்மாண்டத்தால் அகேகமாய் விழுங்கப்பட்டு
ஆனால் இல்லை இன்னும்.

சற்றுக் குறைவாகவே சப்தமிடும்
இன்னும் விழுங்கப்படாத வாத்துகள் போல;
நாம் கூட, என் காதல் கூட, முற்றிலுமாகத் தொலைக்க முடியாதது
போல.



5.எடைபோடுதல்

இதயத்தின் காரணங்கள்
தெளிவாகத் தெரிகிறது,
மிகக் கடினமானவைகள் கூட
பதிந்திருக்கும்
அதன் சவுக்குத் தடங்களும் துயரங்களும்
மற்றும் மன்னிக்கப்பட வேண்டும்.

வறட்சியில் பசித்திருக்கும் புள்ளிமான்
இறுதியில் தன்னை விழுங்கிவிட்ட
வறட்சியில் பசித்திருக்கும் சிங்கத்தை
மன்னித்துவிடுவது போல
பிறகு விருப்பத்துடன் நுழைகிறது
அவள் மறுக்க முடியாத வாழ்வுக்குள்,
சிங்கம், உண்ட பிறகு
அதை நினைக்கப் போவதில்லை

ஆனந்தத்தின் வெகு சில தானியங்கள்
எல்லா இருளுக்கும் எதிராக அளக்கப்படுகிறது
இன்னும் தராசு சமநிலையில் இருக்கிறது

உலகம் நம்மிடம் கேட்கிறது
நாம் கொண்டிருக்கும் பலத்தை மட்டும் நாமும் கொடுக்கிறோம்
பிறகு அது மேலும் கேட்கிறது, நாம் அதைக் கொடுக்கிறோம்.


000


6. இரண்டு முடிவுகள் கொண்ட கவிதை


சொல்லுங்கள் மரணம் என்றதும் முழு அறையும் உறைகிறது
படுக்கைகள் நகர்ந்துகொண்டிருப்பது நின்றுவிட்டது
விளக்குகள்கூட எரியவில்லை
தான் கவனிக்கப்படுகிறோம் என எச்சரிக்கை அடைந்த ஓர் அணில் திடீரென
உணர்வதுபோல

அந்தச் சொல்லை தொடர்ந்து கூறும்போது
பொருள்கள் முன் செல்லத் தொடங்குகின்றன
சட்டென அறுபடும் நூலென துண்டாடிய ஒரு திரைப்படச் சுருள்மேல்
எழும்புகிறது உங்கள் வாழ்க்கை.

இதைத் தொடர்ந்து கூறிக்கொண்டேயிருங்கள்
இதை கணத்துக்குக் கணம் உங்கள் வாயில் பிடித்து வைத்திருங்கள்
அது வேறொரு அசைகொண்ட சொல்லாகிறது.
குவிந்திருக்கும் பிணங்களைச் சுற்றுகிறது ஒரு பெருவணிகக் கூடம்.

மரணம் பெரும்பசியோடு இருக்கிறது அது விழுங்குகிறது வாழ்பவை
எல்லாவற்றையும்
வாழ்க்கை பெரும்பசியோடு இருக்கிறது அது விழுங்குகிறது இறந்தவை
எல்லாவற்றையும்
இரண்டுமே ஒருபோதும் திருப்தி அடைவதுமில்லை ஒருபோதும் நிறைவு
கொள்வதுமில்லை
ஒவ்வொன்றும் விழுங்குகிறது விழுங்குகிறது இந்த உலகை.

வாழ்வின் பிடியைப் போலவே சாவின் பிடியும் வலிமையோடு இருக்கிறது.

(ஆனால் மறைந்தவர்கள், பிரியமுள்ள மறைந்தவர்கள், ஓ... எங்கே?)

000


7. விடிவதற்குள் சீனக் கவிதையை வாசித்தல்


தூக்கமின்மை மீண்டும்,
நான் விழித்துக் கொள்கிறேன்.
ஒரு குளிர்ந்த மழை
ஜன்னலில் துடிக்கிறது
எனது காஃபியைப் பிடித்தபடி
நான் ஆழ்ந்து சிந்திக்கிறேன் டூ பூவின்
கவிழ்க்கப்பட்ட ஒயின் கோப்பையை
அவரது ஜன்னலில், பனி,
பன்னிரண்டு நூற்றாண்டுகள் விழுந்திருக்கிறது,
அவரது கைக்கடியில்,
கறுப்பு மை இன்னும் உலரவில்லை
"அட்ச்சரங்கள் பயனற்றவை"
வயதான கவிஞன், தனித்திருக்கிறான்
அவனது கரியடுப்பு காலியாக இருக்கிறது
நூற்றாண்டுகளின் புகழ்
வெப்பம் உமிழவில்லை
அவரது கவிதைகளில், நான் அறிவேன்,
ஒரு துறை
மொழிபெயர்ப்பில் தொலைந்திருப்பதை,
இங்கே, மீந்திருப்பது உறைபனிப்புயல் மட்டுமே.


00000

  •