Reading view

பூச்சிகளின் தேசம்

பூச்சி இனங்கள் குறித்துத் தெரியாத பல தகவல்களைச் சொல்லும் இந்நூலுக்குச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அதில் “இவ்வுலகில் அதிக எண்ணிக்கையில் வாழும் உயிரினம் பூச்சியினம் தான்.  ஒரு தோராயமான கணக்கில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சுமார் 10 லட்சம் பூச்சிகள் இருக்கின்றன. பூச்சிகளைத் தோழமையோடு பார்க்கச் சொல்லித் தரும் ஒரு தனி நூலைப் ‘பூச்சிகளின் தேசம்’ என்ற தலைப்பில் தந்திருக்கிறார் கோவை சதாசிவம்.  தமிழின் பசுமை இலக்கியத்தில், இது ஒரு முதன்மை முயற்சியாகும்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

உலக வனப்பாதுகாப்பு ஆண்டையொட்டி மாணவிகள் சிறப்பு கானுலா செல்வது போலவும், பயண வழியில் உரையாடல் வழியே பூச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்வது போலவும் இந்நூல் அமைந்துள்ளது. கட்டுரையாக இல்லாமல் கேள்வி பதிலாகவும், உரையாடலாகவும் இந்நூல் அமைந்திருப்பதால் வாசிக்க எளிதாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. கானுலா குழுவினரோடு வேட்டை தடுப்புக் காவலராகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மான்பன் என்பவரும் இணைந்து கொள்கிறார். இடையிடையே பூச்சிகள் பற்றிய பழங்குடி மக்களின் அனுபவ அறிவை அவர் பகிர்ந்து கொள்வது சிறப்பு.

கரையான் பற்றிய கட்டுரையில், மலைவாழ் மக்களின் வீடுகட்டும் முறையைப் பற்றி இவர் விளக்குவது ஓர் எடுத்துக்காட்டு:-

“மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் கட்டும் வீடுகளில் மூங்கில் தப்பைகள் தான் சுவர்.  மூங்கில் தப்பைகளின் மீது கரையான் புற்றிலிருந்து எடுத்து வரும் மண்ணைத் தப்பைகள் மறைய பூசி விடுவார்கள். சின்ன சந்து கூட இருக்காது. ஆனால் காற்றோட்டமும் மித வெப்பமும் சமச் சீராக இருக்கும்..”

17ஆம் நூற்றாண்டில் டார்வினுக்கு முன்பாகவே பூச்சிகள் பற்றியறிய தென்னமெரிக்காவுக்குப் கப்பல் பயணம் மேற்கொண்ட ‘மரியா சிபெல்லா மேரியான்’(Maria Sibylla Merian) என்ற பெண்மணி தாம் ‘பூச்சியியலின் மூதாய்’ என்று கருதப்படுகிறார்.

கரையான் புற்று பற்றியும், கரையான்களின் வாழ்வியல் பற்றியும் மழைக்காலத்தில் கரையான் புற்றைச் சுற்றிக் காளான் முளைப்பதற்கான காரணம் பற்றியும் பல வியப்பான செய்திகள் இந்நூலில் உள்ளன.   கரையான்கள் காய்ந்த புற்களைத் துண்டுகளாக்கிப் புற்றிலுள்ள சுரங்கத்தில் அடுக்குமாம். அப்புற்கள் சில நாட்களில் பூஞ்சையடைந்து, கரையானின் விருப்ப உணவான காளானாய் மாறிவிடுமாம். இந்த நிகழ்வை ஆசிரியர் ‘பூஞ்சைத் தோட்டமாகவும், எறும்புகள் நேராக ஊர்ந்து போவதை உயிருள்ள வாக்கியமாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்.

கரையான் கட்டிடக்கலையின் தொழில்நுட்பத்தை நம்மிடையே புழங்கும் நாட்டுப்புறக்கதையோடு இணைத்துச் சொன்னது ரசிக்க வைக்கிறது. பணிக் கரையான்கள் மிதமான வெப்பம், மிதமான குளிர் நிலவும் சூழலைக் கண்டறிந்து தம் வாழ்விடங்களைத் தீர்மானிக்கும் என்பதும், 4000 ஆண்டுகளாக ஓரு கரையான் புற்று நீடித்து நிலைத்திருக்கிறது என்பதும் இயற்கையின் அதிசயங்கள்.    

மழை, வெள்ளம் வரப்போவதை எறும்புகள் முன்பே அறிந்து தற்காத்துக் கொள்ளும் என்பதும், எறும்புகள் மண்ணிலுள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற மணற்சத்துக்களைச் சிதைத்துப் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் ஆற்றல் பெற்றவை என்பதும், உலகில் கிட்டத்தட்ட 22000 எறும்பு இனங்கள் இருக்கின்றன என்பதும் வியப்பான அறிவியல் உண்மைகள். “பூமியில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களின் எண்ணிக்கையை விடக் கரையான்களின், எறும்புகளின் எண்ணிக்கை இருபது விழுக்காடு அதிகம்” என்கிறது ஓர் அறிவியல் உண்மை.  

நத்தை பற்றிய கட்டுரையில் நத்தைகள் உடல் பருமனுக்கேற்ப ஓடுகளைப் பெரிதாக்கி கொள்வதால் மேல் ஓட்டில் வளையங்கள் தோன்றுகின்றன; வெள்ளை மற்றும் மரப்பட்டை நிறத்தில் இருக்கும் ஓட்டின் மேல் வரிகள் நம் உள்ளங்கை ரேகை போல ஒவ்வொரு நத்தைக்கும் வேறுபடும் என்பவை பலருக்கும் தெரியாத செய்திகள்.

கண் கொத்திப்பாம்பு என்று சொல்லப்படும் பச்சைப் பாம்பு பற்றி மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் விளக்கத்தை ஓர் அத்தியாயம் பேசுகிறது. எல்லாப் பாம்புகளைப் போலவே பச்சைப் பாம்புக்கும் காதுகளில்லை என்கிறார் ஆசிரியர். மகுடி இசைக்குப் பாம்பு ஆடுவதாகப்  பாம்பாட்டிகள் காட்டும் பித்தலாட்ட வித்தைக்கும் வேட்டு வைத்துள்ளார். பாம்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர்க்கு உதவும் விதமாக ‘ரோமுலஸ் விட்டேகர்’ எழுதிய ‘இந்தியப் பாம்புகள்’ புத்தகத்தை ஆசிரியர் பரிந்துரை செய்துள்ளது சிறப்பு! 

தொட்டாச்சுருங்கி செடியை அடிப்படையாகக் கொண்டு எந்திர மனிதர்களின் தொடுதிறனை அதிகப்படுத்த மேலை நாடுகளில் நடக்கும் அறிவியல் ஆய்வு பற்றிய சிறு குறிப்பையும் ஆசிரியர் ஒரு கட்டுரையில் குறிப்பிடத் தவறவில்லை.

உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் முதன் முதலாகப் பறந்த பூச்சியினங்களில் தும்பியும் ஒன்று. சுமார் 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற படிநிலை வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தும்பி என்ற வியத்தகு செய்திகளைத் தும்பி பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

“தும்பியின் தலைமுழுதும் அதன் கண்கள் பரவியுள்ளன; பறக்கும் போது பல திசைகளிலும் பார்வையைச் செலுத்த முடியும்; பூச்சி இனங்களில் தும்பிக்குத் தான் கூர்மையான பார்வை; அதன் இரண்டு பெரிய கண்ணுக்குள் 30000 சிறிய கண்கள் உள்ளன” என்ற அறிவியல் தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவை.

‘அடர்வனமும் ஒளிரும் பூச்சிகளும்’ என்ற அத்தியாயத்தில் மின்மினியை ‘வன நட்சத்திரம்’ என்று ஆசிரியர் சிலாகித்துச் சொல்வது, அழகான பொருத்தமான உவமை! இப்பூச்சிகள் பற்றிப் பல தெரியாத செய்திகள்  இக்கட்டுரையில் உள்ளன. மின்மினிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் தன்மை கொண்டவை; மண்புழுவும் நத்தையும் வளர்ந்த மின்மினியின் விருப்ப உணவு; மின்மினி அரிவாள் போன்ற கொடுக்கால் குத்தி இரையை மயக்கமடையச் செய்து செரிமான நொதிகளைச் சேர்த்துக் கூழாக மாற்றி ஜூஸ் குடிப்பது போலக் குடிக்கும்; மின்மினி உடல் நச்சுத்தன்மை வாய்ந்தது போன்ற பல தகவல்கள் வாசிக்க மிகவும் சுவாரசியமாகவும், வியப்பாகவும் இருந்தன.

அது போல ‘உயிருடன் ஓர் வானவில்!’ என்ற பொருத்தமான தலைப்பில் அறிமுகம் செய்யப்படும் வண்ணத்துப்பூச்சி குறித்த அத்தியாயத்தில்    

“உதிர்ந்த இலை

கிளைக்குத் திரும்புகிறதோ

வண்ணத்துப்பூச்சி”

என்ற அருமையான ஜப்பானிய ஹைக்கூ கவிதையும் இடம்பெற்று, வாசிப்பை ரசிக்க வைக்கிறது.   

மருத்துவத் துறையில் மிக நுண்ணிய பகுதியில் போடும் தையலுக்கும் பேண்டேஜ் துணி தயாரிப்புக்கும் சிலந்தியின் நூலிழை பயன்படுத்தப்படுகின்றது; நவீன தொழில் நுட்பத்தில் சிலந்தியின் நூலிழையைக் கொண்டு செயற்கைத் தோல் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது என்ற அறிவியல் செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக உள்ளன. தேனியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் சொன்னதை ஆசிரியர் தேனீக்கள் பற்றிய கட்டுரையில் கொடுத்திருக்கிறார்:-

“உலகில் தேனீக்கள் மறைந்துவிட்டால் மனித குலத்தின் ஆயுட்காலம் வெறும் நான்காண்டுகளில் முடிந்துவிடும். தேனீக்கள் மறைந்தால் மகரந்த சேர்க்கை மறையும்; செடி,கொடிகள் மறையும்; மனிதனும் மறைந்து விடுவான்.”

இன்னும் 86 விழுக்காடு உயிரினங்கள் உலகில் கண்டறியாமல் இருக்கின்றன என்கிறார்கள் உயிரியியலாளர்கள்.  இவைகளைக் கண்டறிந்து பெயரிட பல ஆண்டுகள் ஆகும்….அடர்ந்த காடுகள், ஆழ்கடல் போன்ற இடங்களில் என்னென்ன விலங்குகள், பறவைகள், தாவரங்கள் கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத ஒரு வியப்பூட்டும் ரகசியம்” என்கிறார் ஆசிரியர். அப்படியென்றால் வெறும் 14% உயிரினம் மட்டுமே இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் உண்மை!

வண்ணத்துப்பூச்சி முதல் கரப்பான் பூச்சி வரை பூச்சிகளைப் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகள் இந்நூலில் உள்ளன. உயிரியல் மாணவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்க்கும், சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவர்க்கும் பெரிதும் பயன்படும் நூல்.

வகைசூழலியல் கட்டுரைகள்
ஆசிரியர்கோவை சதாசிவம்
வெளியீடு:-குறிஞ்சி பதிப்பகம், திருப்பூர். +91 99650 75221
விலை:-ரூ 120/-.

The post பூச்சிகளின் தேசம் first appeared on சுட்டி உலகம்.

  •  

சின்னஞ்சிறு பெண்

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில்  வெளிவந்துள்ளது. மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன் இதனைச் சிறார் வாசிக்கக் கூடிய எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார்.

சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் வரும்  பெண்கள் பதின் பருவத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இதை ‘யங் அடல்ட்’ என்ற சொல்லப்படும் இளையோர் நாவல் வகையில் சேர்க்கலாம்.

இந்த நாவலில் நான்கு சகோதரிகள் இருக்கின்றார்கள். கதாசிரியர் லூயிசாவின் சொந்த வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டிருப்பதால் இந்நாவலின் 50 சதவீதம் லூயிசாவின் சுயசரிதை என்று கூறப்படுகிறது. ஏனெனில் லூயிசா வீட்டிலும் நான்கு பெண்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான இரண்டாவது பெண் ஜோ எழுத்தாளர். கோபம், துடுக்குத்தனம், முரட்டுத்தனம் ஆகிய குணங்களைக் கொண்டவர், புத்தகம் வாசிப்பதில் அதிகம் நாட்டமுள்ளவர். கதாசிரியர் லூயிசாவின் மறு வார்ப்பாகத் தான் இந்த ஜோ கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.   

150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலில் ஆசிரியர் பாரம்பரியமான பிற்போக்கான பெண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக காத்திரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை வாசிக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் ஜோ கேரக்டர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேசனாக இருக்கும்.

கதையில் பெண்களின் அப்பா போர் முனையில் இருக்கிறார். அப்பா வீட்டில் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவுடன் நாவல் துவங்குகிறது. ஏழ்மையான குடும்பம். “அன்பளிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் அல்ல” என்று முணுமுணுத்தாள் ஜோ என்று இந்தக் கதை துவங்குகிறது. பதின்வயது பெண்களுக்குப் புதிய உடைகளோ அன்பளிப்புகளோ இல்லாத கிறிஸ்துமஸ் பண்டிகை.

சகோதரிகள் நால்வரும் தங்களுக்குப் பரிசு ஏதும் வாங்காமல் தங்களது சேமிப்பில் அம்மாவுக்காக ரகசியமாகப் பரிசு வாங்குகிறார்கள். அம்மா மீது அவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள். அப்பா தங்கள் கூட இல்லையே என்று ஏங்குகிறார்கள். பாசமான குடும்பம்.  

அம்மாவும் மிகவும் நல்ல பெண்மணி. கிறிஸ்துமஸ் காலை உணவை ஆறு குழந்தைகள் உள்ள ஒரு ஏழை குடும்பத்துக்குக் கொடுக்கச் சொல்கிறார். சகோதரிகளுக்குப் பசி. ஆனாலும் அம்மாவின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறார்கள். காலை உணவை அந்த ஏழை தாய்க்குக் கொடுத்து விட்டு ரொட்டியும் பாலும் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்பதை வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இவர்கள் இப்படி கொடுத்ததை அறிந்த பக்கத்து வீட்டு பணக்கார முதியவர் மனம் நெகிழ்கிறார். அன்று மாலை இவர்களுக்கு விதவிதமான கேக் வகைகள், ஐஸ்கிரீம், பூங்கொத்துகளை அனுப்புகிறார். இந்த நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்; மற்றவர்க்குப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை அவர்கள் அறியாமலே அறிந்து கொள்வார்கள்.

சகோதரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் பிறகு ராசியாகிப் போவதும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான். அதனால் தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளாகியும் இன்றும் வாசிக்கப்படுகிறது. கடைசிப் பெண் ஆமி. வெளியே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அக்கா ஜோ மேல் கோபப்படுகிறாள். அதற்குப் பழிவாங்க எண்ணி ஜோ கதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை எரித்துவிடுகிறாள். செய்தியறிந்து ஜோ ரொம்பவும் கோபப்படுகிறாள். “உன்னை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்” என்கிறாள். ஆனால் பனிச்சறுக்கு விளையாட்டின் போது உருகிய பனியில் மூழ்கிவிட்ட ஆமியைக் காப்பாற்றப் போராடுகிறாள். இதைப் போன்ற செவ்வியல் நாவல்கள் வாசிக்கும் குழந்தைகளின் மனம் பண்படும்; விசாலமாகும்.

மேலும் பெத் என்ற மூன்றாவது சகோதரிக்கு ஏற்படும் பரிதாபமான முடிவையும் வாசிக்கும் சிறுவர்க்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு இதில் மாற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.  இந்தக் கதாபாத்திரங்கள் அமெரிக்கப் பெண்களாக இருந்தாலும், கதையை வாசிக்கும் போது நம்மூரில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரிகள் கதையிது என்ற உணர்வு ஏற்படுகிறது.

சிறுவர்களைக் கவரும் விதமாக மிக அழகான அட்டைப் படத்துடனும் சிறப்பான வடிவமைப்புடனும் சென்னை வானம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 13+ வாசிக்க ஏற்ற நாவல்.

வகை – மொழி பெயர்ப்புஇளையோர் நாவல்
ஆசிரியர் – ஆங்கிலம் –
தமிழாக்கம் –
லூயிசா மே ஆல்காட்
சுகுமாரன்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89. +91 91765 49991.
விலைரூ 100/-

The post சின்னஞ்சிறு பெண் first appeared on சுட்டி உலகம்.

  •  

தலையங்கம் – மே 2025

சுட்டி உலகத்துக்கு இன்று நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள்! சுட்டி உலகம் துவங்கி நேற்றுடன் நான்காண்டு நிறைவு பெற்று, இன்று ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது.

2021ஆம் ஆண்டில் இந்த வலைத்தளத்தைத் துவங்குவதற்கு முன், தமிழில் என்னென்ன தலைப்புகளில் சிறுவர் நூல்கள் கிடைக்கின்றன? தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் யார் யார்? எந்தெந்தப் பதிப்பகங்கள் தமிழில் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? தமிழில் குழந்தைகள் படிக்க வேண்டிய சிறந்த சிறுவர் நூல்கள் என்னென்ன? என்று இணையத்தில் தேடிய போது விபரம் எதுவும் கிடைக்கவில்லை.  ஆனால் ஆங்கில நூல்களைப் பரிந்துரை செய்யும் வலைத்தளங்கள் பல இருந்தன.

எனவே நம் தாய்மொழித் தமிழில் வெளியாகும் நூல்களை வாசித்துப் பரிந்துரை செய்து, குழந்தைகளின் வாசிப்புக்கு வழிகாட்ட வேண்டும் என்று தோன்றிய எண்ணமே, ‘சுட்டி உலகம்’ துவங்க வழிவகுத்தது. அதற்குப் பிறகு பல சிறார் நூல்களை வாங்கி, அவற்றை வாசித்து நூல் அறிமுகம் செய்யத் துவங்கினோம். இன்று நூற்றுக்கு மேற்பட்ட நூல் அறிமுகங்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. மேலும் இந்நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் பற்றிய விபரங்களுடன், தற்கால எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்த, அவர்களின் வயதுக்கேற்ற நூல்களை வாசிக்கக் கொடுக்க வேண்டும்; இல்லையேல் குழந்தை வாசிப்பை வெறுக்கத் துவங்கிவிடும். புத்தகத்தைக் கண்டாலே ஓடத் துவங்கிவிடும். எனவே தான் இந்தத் தளத்தில் குழந்தைகளின் வயது வாரியாக புத்தக அறிமுகம் உள்ளது.

ஸீரோவில் ஆரம்பித்த இந்த வலைத்தளப் பார்வையின் (Views)எண்ணிக்கை, இன்று 80000ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்குத் தமிழைத் திருத்தமாக உச்சரிக்கச் ‘சுட்டி உலகம்’ காணொளியும் துவங்கி, அதில் பாடல்களை ஒலிபரப்புகிறோம்.

இவை குழந்தைகளைக் கவரக்கூடிய சந்தமும், இசையும், அனிமேஷனும் கொண்ட பாடல்கள். இந்தப் பாடல்களுள் ‘யானை வருது’ என்ற பாடல், ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் பார்வையைப் பெற்றிருக்கிறது என்பது வியப்பூட்டும் மகிழ்ச்சியான செய்தி! குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த பாடலிது!

வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுட்டி உலகத்துக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்னும் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் பிறந்த நாட்களைச் ‘சுட்டி உலகம்’ கொண்டாட இனிய வாழ்த்துகள்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post தலையங்கம் – மே 2025 first appeared on சுட்டி உலகம்.

  •  

சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து!

சுட்டி உலகத்துக்கு நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று ‘சுட்டி உலகம்’ வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் வாசிப்புக்கு வழிகாட்டவேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட சுட்டி உலகத்தில், குழந்தைகளின் வயதுக்கேற்ற நூற்றுக்கு மேற்பட்ட சிறார் நூல்களின் பரிந்துரைகள் உள்ளன. எனவே பெற்றோர் தம் குழந்தைகளின் விருப்பம் ரசனைக்கேற்ப நூல்களைத் தேர்வு செய்து வாங்க முடியும்.

‘சுட்டி உலகம்’ காணொளியில் சிறந்த குழந்தைப் பாடல்கள் உள்ளன. குழந்தைகள் தமிழை எளிதாக உச்சரித்துப் பழக, இந்தப் பாடல்கள் உதவும்.

நான்காம் ஆண்டை வெற்றிகரமாக முடித்து, ஐந்தாம் ஆண்டில் நுழையும் சுட்டி உலகத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம். 

The post சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து! first appeared on சுட்டி உலகம்.

  •  

உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும்  பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கங்கள்.

ஏழைமை, பசி, பட்டினி, சமத்துவமின்மை போன்று உலகளவில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டவும், அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கவும் இலக்கியம் சிறந்த பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக, “The role of literature in achieving the Sustainable Development Goals (SDGs)” என்பதை இந்த 2025ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாகத் (Theme) தேர்ந்தெடுத்துள்ளனர். இப்பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண்பதிலும், குறிக்கோள்களை அடைவதிலும் இலக்கியம் சிறப்பான பங்காற்ற முடியும் என்பதை இந்தக் கருப்பொருள் உறுதி செய்கிறது.    

ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், காதலர் தினத்தைப் போல ரோஜா மலர்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

துவக்கத்தில் ஆண்கள் பெண்களுக்கு ரோஜா பூக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளித்தனர். நாளடைவில் பெண்களுக்கு ரோஜா பூக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்காலத்திலும் அது தொடர்கிறது.

1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் ஒரு காரணம். புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.

“அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.

உலகப் புத்தக நாளைக் கொண்டாட இன்று பதிப்பகங்கள் புத்தக விலையில் சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளன. இந்த உலகப் புத்தக நாளில் புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; செல்போன்களில் மூழ்கியுள்ள குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்புச் சுவையை அறிமுகப் படுத்துவோம்! வாசிப்பை நேசிப்போம்! வாசிப்பைச் சுவாசிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்.

The post உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025 first appeared on சுட்டி உலகம்.

  •  

நாம எல்லாம் ஒன்னு

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பன்மைத்துவத்தை (Pluralism) எளிமையாக விளக்குகிறது.  

“நீ யானை…நான் மனுசன்…ஆனால் பூமியில் நாம் ஓர் உயிர்”; “கிளி..குருவி..காக்கா..மயில்.. எல்லாம் வேறே வேறே தான். ஆனா..எல்லாமே பறவைகள் தானே?” “மதங்கள் வேறு வேறு ஆனாலும் நாம மனுசங்க தானே?” என்ற கேள்விகள் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாக வேற்றுமையில் ஒற்றுமை காண வலியுறுத்தும் புத்தகம்.

வழ வழ தாளில் வார்த்தைகள் மிகவும் குறைவாகவும், அழகான வண்ணப் படங்கள் நிறைந்தும் உள்ள இப்புத்தகம் 5-8 வயது குழந்தைகளுக்கானது.

 வகைவண்ணப்படப் புத்தகம்
ஆசிரியர்ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 75/-

The post நாம எல்லாம் ஒன்னு first appeared on சுட்டி உலகம்.

  •  

பீ…பீ..டும்..டும்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பல இசைக் கருவிகளை அறிமுகம் செய்கிறது.

இசைக்கருவிகளில் தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், துளைக்கருவிகள் எனப் பலவகை உள்ளன. நாகஸ்வரம், வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளின் வண்ணப்படங்கள் இதில் உள்ளன. அந்தக் கருவிகளை வாசிக்கும் போது அதிலிருந்து என்ன மாதிரியான ஒலி வெளிவரும் என்பதை இந்நூலில் கொடுத்துள்ளனர்.   

எடுத்துக்காட்டுக்கு நாகஸ்வரம் வாசிக்கும் பெண் குழந்தைப் படம் உள்ள பக்கத்தில் பீ.பீ.டும்..டும் என்ற வார்த்தைகள் மட்டும் உள்ளன.

வழ வழ தாளில் வார்த்தைகள் இல்லாமல், அழகான வண்ணப் படங்கள் நிறைந்திருக்கும் இந்த நூல் 5-8 வயது குழந்தைகளுக்கானது.

 வகைவண்ணப்படப் புத்தகம்
ஆசிரியர்யெஸ்.பாலபாரதி
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 75/-

The post பீ…பீ..டும்..டும் first appeared on சுட்டி உலகம்.

  •  

தலையங்கம் – ஏப்ரல்-2025

எல்லோருக்கும் அன்பு வணக்கம்.

சிறார் வாசிப்பை ஊக்குவிக்க ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 10/05/2021 அன்று துவங்கிய இத்தளத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய அறிமுகத்தை வெளியிட்டிருக்கிறோம்.

‘சுட்டி உலகம்’ துவங்குமுன் இணையத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய விபரம் தெரிவிக்கும் தளம் ஏதுமில்லை. ஆனால் ஆங்கில நூல்கள் பரிந்துரைக்குப் பல்வேறு வலைத்தளங்கள் இணையத்தில் இருந்தன;இருக்கின்றன.

எனவே தற்காலத்தில் தமிழில் என்னென்ன தலைப்புகளில் சிறார் நூல்கள் கிடைக்கின்றன? எந்தெந்தப் பதிப்பகங்கள் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? இப்போது குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்கள் யார்? என்ற விபரம் எதுவும் அன்று கிடைக்கவில்லை. எனவே முதல் முயற்சியாகப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க வழிகாட்ட வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் ஆரம்பித்த இந்த வலைத்தளம் நான்காண்டுகளை வெற்றிகரமாக முடித்து அடுத்த மாதம் 10/05/2025 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

குழந்தைகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை துவங்க இருக்கின்றது. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். கைபேசி, இணையம் போன்றவற்றிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கப் புத்தக வாசிப்பு ஒன்றே சிறந்த வழி!

இந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகக் குழந்தைகள் புத்தக நாள் உலகமுழுதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதைக் கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதை குழந்தைகளிடையே மிகவும் பிரபலம்.

இவருடைய இன்னொரு பிரபலமான நூல் ‘லிட்டில் மெர்மெய்டு’ (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை. தமிழிலும் இதன் மொழிபெயர்ப்பு கிடைக்கின்றது. வானம் பதிப்பகம், சென்னை இதை வெளியிட்டுள்ளது.

சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாகத் (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser)  என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.

“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”

“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”

குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகம் செய்ய வேண்டும்; அவர்கள் வாசிப்பின் அருமையை உணர வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கம்.

எனவே பெற்றோரே! உங்கள் குழந்தை வருங்காலத்தில் பன்முகத் திறமை பெற்றுச் சிறந்த ஆளுமையாகத் திகழ வேண்டும் என்பது உங்கள் கனவா? இன்றே குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுங்கள்; வாசிப்பின் அருமையை அவர்கள் உணரச் செய்யுங்கள்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post தலையங்கம் – ஏப்ரல்-2025 first appeared on சுட்டி உலகம்.

  •  

எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூலில் பழைய தமிழ்நாட்டு விளையாட்டுகளைக் கதை மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். டிஜிட்டல் மீடியாவிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடக்கும் இந்நாளைய சிறுவர்க்குக் கைபேசி இல்லாமல் மட்டுமல்ல, எந்த வித எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் இல்லாமலே கூட விளையாட முடியும் என்பதை இந்நூல் சொல்கிறது. 

எனக்கு ஃபோன் தர மாட்டேங்கிறான்” என்று அண்ணன் மீது புகார் சொல்லும் தமிழினிக்கு, அவள் அம்மா புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் ஒத்தையா?ரெட்டையா? என்ற விளையாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார். தமிழ் மொழியுடன் நெருக்கமான இவ்விளையாட்டுகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும் என்று விளக்குகிறார் தமிழினியின் அப்பா.

தமிழினிக்கு ஆர்வம் அதிகமாக, கில்லா பிறாண்டி, எலி-பூனை விளையாட்டு போன்ற மற்ற விளையாட்டுகளையும் அம்மா கற்றுக் கொடுக்கிறார். கில்லா பிறாண்டி விளையாட்டின் போது பாடப்படும் பாட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்குப் பழைய பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யும் இந்நூல் 12-14 வயது சிறார்க்கானது.

 வகைசிறார் கதை
ஆசிரியர்‘பஞ்சு மிட்டாய்’ பிரபு
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 50/-

The post எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் first appeared on சுட்டி உலகம்.

  •  

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமுழுதும் கொண்டாடப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதை கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதையை நாமெல்லாருமே படித்திருப்போம். இவருடைய நூல்களில் லிட்டில் மெர்மெய்டு (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை மிகவும் பிரபலமானது. இது தமிழில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மொழிபெயர்த்து வானம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

இதன் கதைச் சுருக்கம்:- கடற்கன்னி ஒருத்தி இளவரசன் மீது காதல் கொள்கிறாள். கடலில் இருந்தால் அவளுக்கு 300 ஆண்டுகள் மரணமில்லை. ஆனால் அவள் தனது களங்கமில்லாத அன்புக்காக மரணமில்லா வாழ்வைத் துறந்து கரையேறத் துணிகிறாள். அவள் மீன் உடலில் இருக்கும் வாலுக்குப் பதிலாக. கரையில் நடக்க அவளுக்குக் கால்கள்  தேவைப்படுகின்றன. மந்திரவாதியிடம் தன் இனிமையான குரலைப் பறிகொடுத்து அதற்குப் பதிலாகக் கால்களைப் பெறுகின்றாள். எனவே அவளால் பேசவோ பாடவோ முடியாது. இளவரசன் அவள் காதலை ஏற்றுக் கொண்டானா? அவளைத் திருமணம் செய்தானா? என்பது மீதிக் கதை. மிகவும் நெகிழ்ச்சியான கதையிது.

இந்தக் குட்டி கடற்கன்னிக்காக டென்மார்க் கோபன்ஹேக் துறைமுகத்தில் ஒரு பாறையின் மீது கடற்கன்னி உட்கார்ந்திருப்பது போல் சிலை செய்து வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து இந்தக் கதாபாத்திரத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கு இருக்கும் அன்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

‘சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கங்கள்:

குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;

உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;

தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);

குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;

சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியன.     

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாக (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser)  என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.

“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”

“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”

இந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்?

குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் போல வேடம் அணிந்து பள்ளிக்கு வருதல்; ஒருவருக்கொருவர் புத்தகங்களை மாற்றிக் கொண்டு புது வகை புத்தகங்கள் வாசிப்பது; புதிய எழுத்தாளர்களை வாசிப்பது;

வகுப்பில் பிடித்த புத்தகத்தைக் குறித்து விநாடி வினா நடத்துவது; சிறந்த புத்தகங்களை வகுப்பு சுவரில் பரிந்துரை செய்வது;

கதை மூலம் கிடைக்கும் வெவ்வேறு செய்திகளைக் குழந்தைகளைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்; குழந்தகளுக்குப் பிடித்த புத்தகங்கள், அவற்றின் வகை, எழுத்தாளர்கள், அதன் கருப்பொருள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடுவது;

இது வரை வாசிக்காத நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் குறித்தும், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுதல்;

இப்படிப் பல்வேறு விதமாக இந்தக் கொண்டாட்டம் அமையலாம். குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதாகவும், வாசிப்பின் அருமையை உணர்த்துவதாகவும் இந்நாள் அமைய வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025 first appeared on சுட்டி உலகம்.

  •  

ஏழும் ஏழும் பதினாலாம்

‘குழந்தை இலக்கியத்தின் பிதாமகன்’ என்றழைக்கப்படும் அழ.வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் காலம் தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. இவரது பாடல்கள் குழந்தைகள் பாடுவதற்கேற்ற இனிய ஓசையும், சந்தமும் கொண்டவை. குழந்தைகள் எளிதாக உச்சரித்து பாடுவதற்கேற்ற எளிய மொழியில் அமைந்தவை.  

இவரது பாடல்களிலிருந்து குழந்தைகள் பாடி மகழ்வதற்கு, 15 சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்ற தலைப்பில், பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ‘பஞ்சுமிட்டாய்- ஓங்கில் கூட்டம்- வெளியிட்டுள்ளது.

“அ,ஆ என்றேனே” என்ற முதல் பாடல், குழந்தைகள் விளையாட்டாய் அரிச்சுவடியைக் கற்க உதவும். ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்பது வேடிக்கையும், நகைச்சுவையும் நிறைந்து குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் பாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதே சமயம் 7+7=14 என்ற கணக்கையும், குழந்தைகள் விளையாட்டாய்த் தெரிந்து கொள்வார்கள்.

“ஏழும் ஏழும் பதினாலாம்

எலியா ருக்கு முழம் வாலாம்.

அறைக்குள் எலியார் புகுந்தாராம்

அங்கும் இங்கும் பார்த்தாராம்.

இரண்டு தட்டில் பணியாரம்

இருந்தது கண்டு மகிழ்ந்தாராம்

கடித்து கடித்துத் தின்றாராம்

கணக்கைக் கூட்டிப் பார்த்தாராம்.

ஏழும் ஏழும் பதினாலாம்.

எலியார் ஏப்பம் விட்டாராம்!”

நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  வாங்கிக் கொடுக்கலாம். குழந்தைகள் இப்பாடல்களைப் பாடுவதன் மூலம் புதிய சொற்களைக் தெரிந்து கொள்வதோடு, அவர்கள் தமிழ் உச்சரிப்பும் மேம்படும்.

வகைகுழந்தைப் பாடல்கள்
ஆசிரியர்அழ.வள்ளியப்பா
வெளியீடு:-பஞ்சுமிட்டாய் & ஓங்கில் கூட்டம் தஞ்சாவூர். செல் +91 9731736363  
விலைரூ 40/-.

The post ஏழும் ஏழும் பதினாலாம் first appeared on சுட்டி உலகம்.

  •  

தலையங்கம்-மார்ச் 2025

அன்புடையீர்!

வணக்கம். 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! தேர்வை நல்லவிதமாக எழுதி முடித்து எதிர்காலத்தில் உங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்!

இந்தாண்டு மார்ச் 8ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுப் பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டன. வாட்சப்பில் மகளிர் நாளுக்கான வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன.

பெண்கள் புதுப்புடைவை, நகைகள் வாங்கி இந்நாளைக் கொண்டாடினர். ஆனால் அடிப்படையில் இது வெறும் கொண்டாட்ட நாள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் இன்றைய தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை, இந்நாள் வலியுறுத்துகிறது. மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான வரலாற்றை, அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

1910இல் சர்வ தேச மகளிர் தினத்தை முதன்முதலில் கிளாரா ஜெட்கின் என்பவர் அறிவித்தார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. பெண்கள் போராடி போராடித் தான் வாக்குரிமை பெற்றனர். ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் கல்வி கற்கத் தடையிருந்தது. பெண் கல்விக்காகப்  போராடிய சாவித்திரி பாய் பூலே தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அதற்காக அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போன்று பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் போராடிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்ணியம் பேசுவோர் ஆண்களுக்கு எதிரிகள் அல்ல. பெண்களையும் தங்களுக்குச் சமமாக நடத்த வேண்டுமென்பதே பெண்ணியவாதிகளின் அடிப்படை கோரிக்கை.

பெற்றோர் பெண் என்பவள் போகப் பொருள் அல்ல என்பதை, ஆண் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே சொல்லி வளர்ப்பது அவசியம். பெண்ணைச் சக உயிராய்ப் பாவித்து, அவர்களின் உணர்வுகளை மதித்துத் தோழமையுடன் நடத்த வேண்டும் என்பதை, ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டியது, இக்காலத்தின் கட்டாயம்.

20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இயற்பியல் மேதையாகக் கொண்டாடப்படும் ஐன்ஸ்டீன் மார்ச் மாதம் பிறந்தவர். ஒளி மின் விளைவைக் (Law of the Photoelectric effect) கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், குவாண்டம் எந்திரவியல்(Quantum Mechanics) சார்பு கோட்பாடு (special theory of relativity)ஆகியவற்றில் இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காகவும் 1921இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மகாத்மா காந்தியை இவருக்கு மிகவும் பிடிக்கும். “வருங்காலத் தலைமுறைக்கு இவர் தாம் ரோல் மாடல்’ என்று காந்தியைப் புகழ்ந்தவர் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே மாணவர்களின் அறிவியல் சிந்தனையைத் தூண்டி அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். குழந்தைகள் எதிர்காலத்தில் பன்முகத்திறமை உள்ள ஆளுமைகளாகத் திகழ இளம்வயது முதலே வாசிப்பைத் துவங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற நூல்கள் சுட்டி உலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பல்வேறு புத்தகங்களை வாங்கி வாசிக்கக் கொடுத்து அவர்கள் படைப்புத் திறமையை வெளிக்கொணர வேண்டும்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post தலையங்கம்-மார்ச் 2025 first appeared on சுட்டி உலகம்.

  •  

வைக்கம் வீரர் பெரியார்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.

குழந்தை வாசிக்கக் கூடிய எளிய மொழி, சிறு சிறு வாக்கியம், படங்கள் ஆகியவை, இந்த வாசிப்பு இயக்கச் சிறு புத்தகத்தின் வேர்கள். இது வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.

வைக்கம் எங்கே உள்ளது? அங்கே என்ன போராட்டம்? அதில் பெரியாரின் பங்கு என்ன?  பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்!’ என்று பட்டம் கொடுத்தவர் யார்? பெரியார் சிறையில் அனுபவித்த கொடுமைகள் யாவை? என்றெல்லாம் தெரிந்து கொள்ள, இந்தப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் வாங்கி வாசிக்கக் கொடுங்கள். இதில் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்த நான்கு கருப்பு வெள்ளை படங்கள் உள்ளன.

வகை – சிறார் வாசிப்பு நூல்சிறுவர் கட்டுரை
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-

The post வைக்கம் வீரர் பெரியார் first appeared on சுட்டி உலகம்.

  •  

சிவி கேட்ட வரம்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.

குழந்தை வாசிக்கக் கூடிய எளிய மொழி, சிறு சிறு வாக்கியம், படங்கள் ஆகியவை, இந்த வாசிப்பு இயக்கச் சிறு புத்தகத்தின் வேர்கள். இது வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. இதில் நான்கு கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு குறுங்கதைகள் உள்ளன.

சிவி என்ற ஒட்டகச்சிவிங்கி வனதேவதையிடம் என்ன வரம் கேட்டது? வரம் கிடைத்த பின், சிவியின் கவலை தீர்ந்ததா? பழ விதையை விழுங்கினால், வயிற்றில் செடி முளைக்குமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

வகை – சிறார் வாசிப்பு நூல்சிறுவர் கதை
ஆசிரியர்பூர்ணிமா கார்த்திக்
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-

The post சிவி கேட்ட வரம் first appeared on சுட்டி உலகம்.

  •