Reading view

இங்கிருந்துதான் வந்தான் - 3ம் அத்தியாயம்

 

”முத்தையாண்ணன் பொண்ணு கண்மணி அந்த ஆட்டோக்காரனோட போய்ட்டாளாம்” சண்முகம் வந்து படுத்திருந்த சுப்புத்தாயிடம் சொன்னான்.

”அடப் பாவமே” என்று எழுந்து தலையை முடிந்து கொண்டவர் வேறு எதுவும் பேசாமல் கிழக்கு திசை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். சண்முகமும் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தான்.  

”இப்ப எங்கே இருக்காங்களாம்?” மெல்ல வாயில் வழிந்த எச்சலை துடைத்துக்கொண்டு கேட்டார்.  

“அதெல்லாம் யாருக்குத் தெரியும்? கேள்விப்பட்டேன். வந்து சொன்னேன்.” என்றான். குரலில் கவலையோ, கோபமோ காணவில்லை. ஒரு மாதிரி சலிப்புத்தான் தெரிந்தது.  

“முத்தையாவுக்குத் தெரியுமா?”  

“அண்ணந்தான் சொல்லிச்சு…” என்றான்.  

”இப்ப அவன் எங்க இருக்கான்?”  

“செல்விய நாமக்கல் ஸ்கூல்ல சேக்க பஸ்ஸில் போகும்போது பேசினான்” என்றவன் “சரி நா வர்றேன்.” எழுந்து சென்றான். அதற்கு மேல் அவனுக்கு பேசப் பிடிக்கவில்லை என நினைத்துக் கொண்டார். அந்த ஓட்டு வீட்டின் அறைக்குள்ளேயே மேலும் அடைந்து கிடக்க விரும்பாமல் வெளியே வந்து நின்றார். சண்முகம் தெற்குரத வீதியில் திரும்பிக் கொண்டிருந்தான்.  

முச்சந்தி முனை அது. அங்கிருந்து தெற்கு பக்கம் தெற்கு ரத வீதியையும், வடக்குப் பக்கம் மார்க்கெட்டையும், நேர் எதிரே மேற்கு பக்கம் செல்லும் சந்தின் வழியாக மெயின் ரோட்டையும் பார்க்க முடியும். மார்க்கெட்டை ஒட்டி தனலட்சுமி தியேட்டர் இருந்தது. எதிரே சுவரோடு சுவராக சின்னஞ்சிறிய இடத்தில் வடக்குப் பக்கம் பார்த்த வண்ணம் இருந்த வடக்கத்தியம்மன்னால் சந்துக்கு வடக்கத்தியம்மன் கோவில் தெருவென்றும் பேர்.  பங்குனி மாசத்தின் குறித்த நாளில் ’மாரியாத்தா’ வந்து சுப்புத்தாய்க்குள் இறங்கிவிடுவாள். ஓங்காரக் குரலெடுத்து வெண்கலத் தீச்சட்டியெடுத்து சாமியாடுவார். “ஏ, மாரியாத்தா” பயபக்தியோடு சொல்லிக்கொண்டே குனிந்து முட்டியில் கைவைத்து வாசலுக்கு வெளியே திண்டில் சுப்புத்தாய் உட்கார்ந்து கொண்டார்.  

ஊருக்குள் இங்கு வந்த பிறகு டிரைவருக்கு ஆளே கிடைக்காவிட்டால் யாராவது எப்போதாவது செல்லச்சாமியை விசாரித்து கூப்பிட வருவார்கள். மற்றபடி காலையில் கஞ்சி குடித்தாரென்றால் வெள்ளக்கரை ரோட்டில் வைப்பாற்று ஓரம் அடர்ந்திருக்கும் புளியமரம், வேப்ப மரத்தடிகளில் உட்கார்ந்து தாயம் விளையாடவோ, படுத்துக் கிடக்கவோ போய் விடுவார். சுப்புத்தாயோ வீட்டின் வெளியே சுவற்றில் சாய்ந்து, கால்களை நீட்டி, கண்களை வடக்கத்தியம்மன் கோவில் தெரு தாண்டி மெயின் ரோட்டில் போகிற வருகிற மனிதர்கள், வாகனங்கள் மீது வைத்துக்கொண்டு கடந்த காலங்களை அசை போட்டுக் கொண்டிருப்பார். வைப்பாற்றிலிருந்து வண்டிகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு மெயின் ரோட்டில் அசைந்து அசைந்து செல்லும் மாடுகள் வாழ்வின் துயரங்களை வழியெல்லாம் சொல்லிக்கொண்டே போவது போலிருக்கும்.  

முன்னைப் போல தீப்பெட்டி வேலைகள் இல்லை. பெரிய முதலாளிகள் மெஷின்களை கம்பெனிக்குள் இறக்கி விட்டார்கள். கட்டை அடுக்குவது, மருந்தில் முக்குவது, தீப்பெட்டி ஒட்டுவது, அதற்குள் குச்சிகளை அடுக்குவது என எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கின்றன. மெஷின் வாங்க முடியாதவர்களும் தங்கள் சக்திக்கு சாத்தூரில் தீப்பெட்டி பண்டல்கள் பண்ணிக் கொண்டுதான் இருந்தார்கள். சுப்புத்தாய் போன்றவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள் வேலை கிடைப்பதே சிரமமாய் இருந்தது. தெரு முழுக்க   வரிசையாக வீட்டு வாசல்களில் ஜனங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் கட்டையடுக்கியது, தீப்பெட்டி ஒட்டியது  எல்லாம் காட்டு புதுத்தெருவில் இருந்த காலத்தோடு முடிந்து விட்டது.  

எழுபத்து நான்கு வயதுக்குள் சுப்புத்தாய் நிறைய ’ஓடிப்போனவர்களை’ பார்த்திருந்தார். கிளுகிளுப்பாகவும், சுவாரசியமாகவும் சில நேரங்களில் அதிர்ச்சியாகவும் இருந்த பேச்சுக்கள் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டிருந்தன. தீப்பெட்டி ஆபிஸில், தெருவில், சொந்தங்களில் என்று விதம் விதமாக கதைகளை பார்த்தும் கேட்டும் இருந்தார்.  நினைவுகளில் இருந்து நிறைய உதிர்ந்தும் கூட போய் விட்டிருந்தன. தன் வீட்டில் அவை நிகழ்ந்தபோது கொஞ்ச நாள் முறுக்கிக் கொண்டு நின்ற மனிதர்கள் மீண்டும் பழையபடி ஆனதையும் பார்த்திருந்தார்.  

காலேஜ் முடித்ததும் மூத்தவன் முருகனுக்கு சொந்தக்காரர் ஒருவர் மூலம் சாத்தூர் தொலைபேசித் துறையில் அத்தக் கூலிக்கு வாட்டர்பாய் வேலை கிடைத்தது, ஆபிஸை பெருக்கி சுத்தம் செய்து குடிக்க தண்ணீர் எடுத்து வைக்க வேண்டும். டிகிரி படித்துவிட்டு இந்த வேலையா பார்க்க வேண்டும் என்று உள்ளுக்குள் குமைந்தாலும் வேறு வழி எதுவும் தெரியவில்லை. கவர்ன்மெண்ட் உத்தியோகம் என்று வெளியில் சொல்லிக்கொள்ள முடிந்தது. அப்போது சாயங்காலங்களில் டைப்ரைட்டிங் படிக்கப் போன இடத்தில் முருகனுக்கும் ஈஸ்வரிக்கும் லவ்வாகி விட்டது.  அந்த பெண் தங்கள் ஜாதிதான் என்பதிலும் தங்களை விட வசதியான குடும்பம் என்பதிலும் சுப்புத்தாய்க்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். ஈஸ்வரியின் அம்மா சாத்தூர் அண்ணா திமுக மளிரணித் தலைவராயிருந்தார், முடியவே முடியாது என கல்யாணத்துக்கு மறுத்தார். ‘கவர்ன்மெண்ட் உத்தியோகந்தான். கொஞ்ச நாளில் பர்மெனெண்ட் ஆகிரும்’ என்று ஜாதியில் முக்கியமானவர்கள் எடுத்துச் சொன்ன பிறகு மனமேயில்லாமல் சம்மதித்தார்.  தன் பங்குக்கு செல்லச்சாமிதான் குடித்துவிட்டு கொஞ்சநாள் அனத்திக் கொண்டிருந்தார். ஈ காக்காய் கூட அவரை சமாதானம் செய்ய முன்வரவில்லை. இந்திரா காந்தி இறந்த நான்காம் நாள் நடந்த கல்யாணத்தில் செல்லச்சாமி மட்டும்தான் இல்லை. அந்த கல்யாணம் நடக்கவில்லையென்றால் அன்றைக்கு முருகனும் ஈஸ்வரியும் ஓடிப் போயிருப்பார்கள்.  

அதிலிருந்து மூன்றாவது வருடம் இளைய மகள் லட்சுமியை சிவகாசியில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்கள். ஒரு வாரத்தில் பக்கத்து வீட்டில் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த குமாரோடு லட்சுமி ஓடிப் போய்விட்டாள். சிவகாசியிலிருந்து பத்து இருபது பேர் வந்து, இன்ன பேச்சுதான் என்றில்லை, வாய்க்கு வந்தபடி பேசிச் சென்றார்கள். சுப்புத்தாய்க்கு திருப்பி பேசுவதற்கு வாய் இல்லாமல் போனது. மாரியாத்தாவின் பேரைத்தான் மனசுக்குள் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நாள் வெளியே தலை காட்ட முடியவில்லை. காட்டு புதுத்தெருவில் இருந்து இங்கு குடி பெயர்ந்தார்கள். ஓடிப் போனவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து அடுத்த வருசம் குழந்தையும் கையுமாய் வந்து நின்றபோது வடக்கத்தியம்மன் கோவில் திருநீற்றையும், குங்குமத்தையும் அவர்கள் நெற்றியில் வைத்து சுப்புத்தாய் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டார்.  

எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் போயிருந்த அப்போதெல்லாம் முத்தையா சென்னையில் மளிகைக் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். “ஏ… மாரியாத்தா” என்னும் பெருமூச்சோடு சுப்புத்தாயால் அந்தக் கல்யாணங்களை ஜீரணிக்க முடிந்தது. கண்மணி விஷயம் முள்ளாய் உறுத்தியது. அந்த கிறுக்குப் பயல் முத்தையா எப்படித் தாங்கிக் கொள்வான் என மருகினார்.  ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் அப்போதுதான் வயதுக்கு வந்தவர்களிடம் இருக்கும் பிடித்தம் பேய்த்தனமாத்தான் இருக்கிறது. ’எந்த ஆத்தா அப்படி பொம்பளைக்குள்ள எறங்கிர்றாளோ’ என நாடியில் கைவைத்து  முன்னெல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறார். அதிலும் கண்மணி இருக்காளே! எவ்வளவு பாசக்காரியோ அதை விட அதிகமாய் பிடிவாதக்காரியுங்கூட. நடக்க ஆரம்பித்த நாட்களிலேயே ஒன்றைச் செய்யாதே என்றால் அதைத்தான் உடனே செய்வாள். தடுத்தால் கையை காலை உதைத்து தரையில் விழுந்து அழுவாள்.  

வெளியிலும் கவனம் தங்கவில்லை. செல்லச்சாமி வந்ததும் விருதுநகருக்கு போக வேண்டும் என்றிருந்தது. தன் பிள்ளைகளை எல்லாம் படிக்க வைத்துவிட வேண்டும் என கிறுக்குப்பயலுக்குள் இருந்த ஆசையைப் பார்த்திருந்தார்.  ஒருமுறை விருதுநகரில் அவன் வீட்டில் தங்கியிருந்தபோது கண்மணி, செந்தில், செல்வி மூன்று பேரும் யூனிபார்ம் போட்டு பைக்கட்டுகளை சுமந்து சென்ற காலையில் முத்தையாவின் கண்களில் பூரிப்பு அப்படித்தான் மின்னிக் கிடந்தது. அவனது நெஞ்சு விம்மிக் கொண்டிருந்தது. பெற்ற தாய் அதற்கு முன்பு  தன் மகனை அப்படி கண்டது இல்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாள் கண்மணி என்பதை எவ்வளவு ஆசையாய் கருப்பட்டி மிட்டாயும், மிளகுச் சேவும் வாங்கி வந்து இதோ இந்த வீட்டில் வைத்து தன்னிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்தானே என கலங்கினார். இப்போது கூட விருதுநகருக்குத் திரும்பாமல் செல்வியை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறதுதானே முக்கியமானதாய் இருக்கிறது அவனுக்கு.  

அவருக்கோ, செல்லச்சாமிக்கோ முருகன், லட்சுமி, முத்தையா, சண்முகத்தையெல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்று அப்படியெல்லாம்  ஆசை இருந்ததில்லை. அவர்கள் என்ன படித்தார்கள் என்று கூட தெரியாது. காலை ஆறரை மணிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு முருகன் கிளம்புவான். பாண்டியன் சோடாக் கம்பெனியில் இரண்டு பிளாஸ்டிக் பெட்டிகளில்  சோடா பாட்டில்களை எடுத்துக்கொண்டு மூச்சிரைக்க பெடலை மிதித்து வரிசையாய் கடைகளில் போட்டபடி ஏழாயிரம்பண்ணை வரைக்கும் போவான். திரும்பும் வழியில் தண்ணி கண்ட இடத்தில் குளித்து, சைக்கிளில் சுருட்டி வைத்திருக்கும் பேண்ட் சட்டையை போட்டுக்கொண்டு காலேஜ்க்கு போவான். அவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமா என்றுதான் அப்போது தோன்றியது. அவனை விட எட்டு வயதுக் குறைவான முத்தையா ராஜாமணி நாடார் நினைவு துவக்கப்பள்ளியில் ஐந்து வரை படித்துவிட்டு ஆரிய வைஸ்ய பள்ளியில் ஆறாவது படிக்கும் போது ஒருநாள் “நான் இனி படிக்கப் போகவில்லை” என்று  காட்டுப் புதுத்தெருவில் பழனிச்சாமித்தேவர் ரொட்டிக்கடைக்கு வேலைக்குப் போனான். அந்த முத்தையாவுக்கு படிப்பின் மீது இவ்வளவு ஆசை எங்கிருந்து வந்தது என்பதை சுப்புத்தாய் பிறகு போகப் போகத்தான் அறிந்திருந்தார்.   

முத்தையா வேலைக்குப் போனதும் சின்ன வயதிலேயே எம்மகனுக்கு பொறுப்பு வந்துவிட்டது என்று அக்கம் பக்கத்தில் பெருமையாய் சொல்லிக்கொண்டார். சென்னையில் மளிகைக் கடைக்கு வேலைக்குச் சென்ற பிறகு அவன் இல்லாத வீடு பாடாய் படுத்தியது.  எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முருகனும், சண்முகமும் வீட்டில் தன் கையால் சாப்பிடுகிறார்கள், முத்தையாவோ எங்கேயோக் கிடந்து, யாரையோ எதிர்பார்த்து கஷ்டப்படுகிறானே என்று புலம்புவார். இரவில் சோடியம் விளக்கின் மஞ்சள் வெளிச்சம் நிறைந்த மெயின் ரோட்டில் வந்து அசையாமல் அப்படியே நிற்கும் கழுதைகள் போல வாழ்க்கை நினைவுகளைக் கொண்டிருந்தன.  

சுப்புத்தாய் கல்யாணமாகி வேறு ஊருக்குப் போய்விடக் கூடாதே என்று பெற்றவர்களும், கூடப் பிறந்தவர்களும் வருச நாட்டிலிருந்து செல்லச்சாமியைக் கல்யாணம் செய்து சாத்தூரிலேயே வைத்துக்  கொண்டார்கள். அம்மா சிறு வயசிலேயே இறந்து விட, இன்னொரு அம்மாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுக்கத்தில் வளர்ந்த செல்லச்சாமிக்கு சாத்தூருக்குப் போவது கஷ்டமாய் இல்லை. மனைவி, குழந்தைகள் என தனக்கென்று குடும்பமாய் இருந்தாலும் தனித்து விடப்பட்ட மனநிலையில், எதையோ இழந்தவராய்த்தான் செல்லச்சாமி இருந்தார். குடித்து விட்டு சரியாய் வேலைக்கு வருவதில்லையென்று அவரை  டிவிஎல்லெஸ் கம்பெனியில் டிரைவர் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். மார்க்கெட்டை ஒட்டிய தனலட்சுமி தியேட்டர் பக்கம் இருந்த வீடும், படந்தாலில் இருந்த கொஞ்ச நிலமும் கைவிட்டுப் போன பிறகுதான் முத்தையா பிறந்தான். தரையில் பரப்பப்பட்ட தீக்குச்சிகளாகவும், தீப்பெட்டிகளாகவும்தான் நாட்கள் காய்ந்து கொண்டிருந்தன. நாள் கணக்கில் லாரி ஒட்டிவிட்டு, வீடு வந்து குடித்துக் கிடக்கும் செல்லச்சாமியின் உடல் அனலாக கொதித்தது. வேர்க்க விறுவிறுக்க மகன்கள் எல்லாம் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தனர். நாளை என்பது மட்டுமே நினைவில் தகித்துக் கொண்டிருந்தது. சுப்புத்தாய் சாத்தூரிலேயே இருக்க, அவரது குழந்தைகள் ஒவ்வொருவராய் சாத்தூரை விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.  

கல்யாணமான கொஞ்ச நாளில் முருகன் வாட்டர் பாயிலிருந்து மஸ்தூர் ஆனான். நிரந்தர வேலை இல்லை என்றாலும், நிரந்தர ஊழியருக்கான ஊதியம் கிடைத்தது. விருதுநகருக்கு மாற்றலாகிப் போய்விட்டான். அங்கு யூனியனில் சேர்ந்து கொடி பிடித்து ரோட்டில் நின்று கோஷம் போடுவதாக  முருகனைப் பற்றி பேச்சுக்கள் வந்தன. கறிக்கடை மாயாண்டி மெனக்கெட்டு வீட்டுக்கு வந்து “சித்தி, நீங்க சொன்னீங்கன்னுதான் முருகனை டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல எங்கப்பா சேத்து விட்டாங்க. இப்ப பாருங்க.  கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க கூட சேந்துட்டு திரிறான். இதெல்லாம் உருப்படுறதுக்கா?” கேட்டான். சுப்புத்தாய்க்கு திகைப்பாய் இருந்தது. ’கஷ்டப்பட்டு படிச்சதுக்கு இப்பத்தான் ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதயும் தொலைச்சிட்டு நிப்பானோ’ என திகைத்தார்.    

சாத்தூரில் வீட்டு நிலைமையும் மோசமாகிக் கொண்டிருந்தது. தெற்குரத வீதியில் இருந்த பாபு பிரதர்ஸ் ஆபிஸில் சண்முகம் காலையில் போய் பெருக்கி தண்ணீர் எடுத்து வைத்து விட்டு ஏவிஎஸ் ஸ்கூலில் படிக்கச் சென்றான். மார்க்கெட்டிலும், மெயின் ரோட்டுக் கடைகளிலும் சில்லறையாய் வாங்கும் எண்ணெய்க்கும், காய்கறிகளுக்கும்  ’மாரியாத்தாவிடம்’ துட்டு வாங்க மாட்டார்கள். அதுவே பெரிய உபகாரமாக இருந்தது.  

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பனிரெண்டு வருடங்கள் கழித்து மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்த சமயத்தில் முத்தையா சென்னையிலிருந்து வந்து தன் அண்ணன் முருகன் ஏற்கனவே பார்த்த வேலையை எடுத்துக் கொண்டான். பாண்டியன் சோடா கம்பெனிக்கு காலையில் சைக்கிள் பெடலை அழுத்திப் புறப்பட்டான். சத்திரப்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, சூரங்குடி, லஷ்மியாபுரம், சங்குரெட்டியாபட்டி, ஏழாயிரம்பண்ணை சென்று திரும்புவான். கிறுக்குப்பயல் மீண்டும் தன் அருகிலேயே வந்தது சுப்புத்தாய்க்கு ஆறுதலாய் இருந்தது. முத்தையா சென்னைக்குப் போனதற்கும், எட்டு வருசம் கழித்து திரும்பி வந்ததுக்கும் இருந்த காரணம் ஒன்றுதான் என்பதை பெத்த வயிறு அறிந்து கொண்டது. வீடு தடுமாறிய போதெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு தாங்கிக் கொள்ள அவனாகவே முன்வந்தவன். அவனைப் பற்றி அவருக்குத்தான்  தெரியும். சின்னப் பெண் கண்மணிக்கு என்ன தெரியும்?  

திரும்பி வந்த முத்தையாவிடம் புதுசாய் ஒரு பழக்கத்தை சுப்புத்தாய் கண்டார். கையில் புத்தகங்களைக் கொண்டு வருவதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவைகளைப் படிப்பதும் ஆச்சரியமாய் இருந்தது. கேட்டதற்கு கதைப்புத்தகம் என்றான். மேற்கு ரத வீதியில் மார்க்கெட்டுக்கு அருகில் இருந்த சிவந்தி சைக்கிள் கடையில் வேலை பார்த்த கண்ணன், அப்புறம் ஆதி, இன்னும் சில பையன்கள் வடக்கத்தியம்மன் தெருவில் ராத்திரியில் மணிக்கணக்கில்  உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். ’ராஜேஷ்குமார் பேரவை’ என்று அவர்கள் ஆரம்பித்தபோது சுப்புத்தாய்க்கு வேடிக்கையாய் இருந்தது.  ஒருநாள்  சாயங்காலம் சுப்புத்தாயை வந்து பார்த்த முருகன் “நீ சொல்ற மாதிரி முத்தையா சரியான கிறுக்குப்பயதான் போலுக்கு” நக்கலாகச் சொன்னான். அவரோ புத்தகங்களை இப்படி கூடவே வைத்திருக்கிற ஒருவன் எப்படி படிப்பை விட்டு வேலைக்குப் போனான் என்று யோசிக்க ஆரம்பித்தார்.  

சுப்புத்தாய்க்கு வாழ்க்கை கொஞ்சம் நிதானமானது அந்த நாட்களில்தான். முத்தையாவுக்கு ஒரு பெண் பார்த்து கல்யாணம் முடித்து விட்டால், பிறகு சண்முகம் மட்டும்தான், தங்கள் கடன் முடிந்தது என்னும் நினைப்பே நிம்மதி தந்தது.  சாயங்காலங்களில் தெருவிளக்குகள் போட்டதும் மனம் ஆசுவாசமடைந்தது.  

ராஜா எலக்டிரிக்கல்ஸில் நடந்த அந்தக் கொலை எல்லாவற்றையும் சிதைத்துப் போட்டது. அடுத்து அடுத்து என சில நாட்களில் பரவிய செய்திகளில் மனித ரத்தத்தின் வாடையடித்தன. சாத்தூரில் தொடங்கிய ஜாதிக் கலவரம் அங்கங்கு தொட்டு சுற்றிலும் பரவியது. பகல் மட்டுமே மனிதர்கள் நடமாட்டங்களுடன் இருந்தது. மாலையிலேயே வைப்பாற்றங்கரை இருளடைந்தது. இரவு யாருமற்று நின்றது. மனிதர்களோடு ஜொலித்துக் கொண்டிருந்த முக்கனாந்தல் வெட்ட வெளியாகிப் போனது. ஊரின் கனத்த அமைதியைக் கிழிக்க முடியாமல் நடுநிசியில் திருவள்ளுவர் பஸ்கள் மெயின் ரோட்டில் தடதடத்து ஓடி மறைந்தன. . வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என்று ஜாதி சங்கத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் சுப்புத்தாய்க்கு பதறியது. விருதுநகர் ஆனைக்குட்டத்தில் மூத்த மகள் சொர்ணத்தின் வீட்டுக்கு முத்தையா அனுப்பி வைக்கப்பட்டான்.  

தாய்மாமா குருசாமி புண்ணியத்தில் ரேஷன் கடையில் அவன் வேலைக்குச் சேர்ந்ததும்  இருக்கன்குடிக்கு நடந்தே சென்று மாரியாத்தாவை பார்த்து வந்தார். ரேஷன் கடையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் அதுகுறித்து  முத்தையாவிடம் ஒருநாளும் சுப்புத்தாய் கேட்டதில்லை.  வீட்டில் அரிசிக்கும், சீனிக்கும், மண்ணென்ணெய்க்கும் குறைவில்லாமல் போனது. விருதுநகரில் முருகன் வீட்டுக்கும் ரேஷன் கடையிலிருந்து முத்தையா கொடுத்து அனுப்புவான். பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்த சண்முகத்திற்கு அவ்வப்போது செலவுக்கு கொடுத்து உதவினான். அதிமுக வென்று ஜெயலலிதா அப்போது முதல் முறையாய் முதலமைச்சராகியிருந்தார்.  

முத்தையாவின் போக்கும் நடவடிக்கைகளும்தான் பயமுறுத்த ஆரம்பித்தன. தினமும் தண்ணியடிக்கிறான், சமாதியில் போய் உட்கார்ந்து குறி சொல்கிறான் என்பது வதைத்தது. இன்னொரு செல்லச்சாமியாகி விடுவானோ என்றிருந்தது. தூக்கம் வராமல் தனலட்சுமி தியேட்டரின் ஓடும் சினிமாச் சத்தத்தோடு  புரண்டு புரண்டு படுத்தார். வடக்கத்தியம்மன் கோவில் திருநீற்றை எடுத்து தனது நெற்றியெல்லாம் பூசிக்கொண்டார். பெரிய கொல்லப்பட்டியில் சீனியம்மாவைக் கண்டு அவசரம் அவசரமாக முத்தையாவுக்கு கல்யாணம் செய்து வைத்தார். வருசம் ஒரு குழந்தை என வரிசையாக பெற்றாலும், குடியும் சீனியம்மாவுக்கு அடியும் குறைந்த பாடில்லை. மூன்று பிள்ளைகளோடு சீனியம்மா பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா? சாத்தூரிலிருந்து பதைபதைப்போடு டவுண்பஸ்ஸில் விருதுநகர் சென்று முத்தையாவை சத்தம் போட்டு சீனியம்மாவுக்கு ஆறுதலாய் இருப்பார். தனலட்சுமி தியேட்டரில் சின்னக்கவுண்டர் படம் பார்த்த அன்று வழியில் தன் கண்ணில் படாமல் சீனியம்மா இருந்திருக்கலாம் என்றெல்லாம் நினைத்திருக்கிறார். “உலகந் தெரியாம பாவம் போல இருந்த ஒரு பொண்ணோட  வாழ்க்கைய அநியாயமா நீதான்  நாசமாக்கிட்ட.” முருகன் பல தடவை குத்திக்காட்டியிருக்கிறான்.  

டிப்ளமோ படித்து முடித்த சண்முகம் மஸ்கட்டில் வேலை கிடைத்து சென்றான்.  சுப்புத்தாய்க்கு மாதா மாதம் இருநூறு ருபாய் முருகனின் பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தான். முருகனும், சண்முகமும் எப்படியோ படித்து எதோ ஒரு வேலையில் சேர்ந்து தங்கள் காலத்தை நல்லபடியாய் தள்ளி விடுவார்கள் என்ற நம்பிக்கை வந்தது. முத்தையா மட்டும் பொறுப்பில்லாமல் இருக்கிறானே என கவலைப்பட்டார்.  

”ஓங் கிறுக்குப்பய இப்ப ரவுடிப்பய ஆய்ட்டாம் போலுக்கு” வெறுத்துப் போய் முருகன் சுப்புத்தாயிடம் சொன்னான். குடிப்பவர்களைக் கண்டால் அவனுக்கு ஆகவே ஆகாது. செல்லச்சாமியைப் பார்த்து வளர்ந்த வெறுப்பு அது. அப்போது முருகன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரு சாயங்காலம் நடராஜா தியேட்டரில் படம் பார்க்க அப்போதுதான் கல்யாணமாகியிருந்த மூத்த அக்கா சொர்ணமும் அவளது மாப்பிள்ளையும் புறப்பட்டு வெளியே சென்றார்கள். அந்தத் தெருவில் இருந்த கவர்ன்மெண்ட் டாக்டர் சொர்ணத்தை பார்த்த பார்வை சரியில்லையென்று தண்ணியில் இருந்த செல்லச்சாமி சண்டைக்குப் போய் அசிங்கமாய் பேசி விட்டார்.  குடித்துவிட்டு ரகளை செய்கிறார் என்று டாக்டர் புகார் அளித்ததும், செல்லச்சாமியை போலீஸார் பிடித்து சென்று விட்டார்கள். பக்கத்தில் தங்கள் ஜாதியில் தெரிந்த பெரிய மனிதர் ஒருவரை அழைத்துக் கொண்டு பதிமூன்று வயது முருகன் ஸ்டேஷனுக்குச் சென்றான். ஸ்டேஷனில் கூனிக் குறுகி நின்ற செல்லச்சாமியையும், கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசிய போலீஸையும் பார்த்து அவமானத்தில் உறைந்து போனான். அன்றிலிருந்து அப்பாவிடம் அவன் பேசுவதே இல்லை. முத்தையாவிடம் பேசுவதையும் இப்போது குறைத்துக் கொண்டான்.  

தாமாகாவோடு இணைந்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முத்தையாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிகழ்வும் அப்போதுதான் நடந்தது. ரேஷன் கடைக்கு வழக்கமாய் வந்து அரிசியும், சீனியும் வாங்கிச் சென்று கொண்டிருந்த பால்ராஜ் ஒருநாள் “ஏன் தம்பி, நீங்க எட்டாம் வகுப்பு டைரக்டா எழுதக் கூடாது?” என்று கேட்டார். விருதுநகர் கலெக்டர் ஆபிஸில் கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் அவர். சிரித்துக் கொண்டு, “நா எப்படி இனும..” என தயங்கியவனை, “நானுந்தான் பாக்குறேன். புத்தகங்கள் படிக்கிறீங்க. சின்ஸியரா இருக்கீங்க. ஒங்களால முடியும். எழுதிப் பாருங்க..” என்று மேலும் சொல்லவும் யோசிக்க ஆரம்பித்தான். அடுத்த நாள் ஆபிஸிலிருந்து வரும்போது எட்டாம் வகுப்பு பரிட்சை நேரடியாக எழுதுவதற்குரிய விண்ணப்பங்களை கொடுத்து அதை நிரப்புவதற்கு உதவி செய்தார்.  

படிக்கிற காலத்தில் படிக்காமல், கல்யாணம் பண்ணி, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு எட்டாம் வகுப்பு எழுதுவதை அறிந்தவர்கள் பலரும் முதலில் கிண்டல் செய்தார்கள். ‘அட கிறுக்குப் பயலே, இது என்ன கூத்து’ என்றுதான் சுப்புத்தாய்க்கும் இருந்தது. சரியாக அந்த நேரத்தில்தான் ‘ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சாலைப் பணியாளர்கள் வேலை’ என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். விருதுநகர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராயிருந்த பாட்சா ஆறுமுகம், வேலைக்கு நான் கேரண்டி என்று சொல்லி முத்தையாவை விண்ணப்பிக்கச் சொன்னார். ரேஷன் கடையில் தினமும் முன்னூறு நானூறு வரும்படி கிடைத்தது. சாலைப் பணியாளார்களுக்கு ஒரு மாசத்துக்கே அறுநூறு ருபாய் போலத்தான். முத்தையா யோசித்தாலும், ‘கவர்ன்மெண்ட் வேலை’ என்பதே பெரிதாய் தெரிந்தது. முன்பணம் கட்டுவதற்கு மஸ்கட்டிலிருந்து சண்முகம் இருபதாயிரம் ருபாய் அனுப்பினான்.  

ஃபேனுக்கடியில் உட்கார்ந்து ரேஷன் கடையில் வேலை பார்த்த தன் மகன் திரும்பவும் ரோட்டில் வெயிலில் கிடந்து கஷ்டப்படுகிறானே என சுப்புத்தாய் தவித்தார். ஒரு வகையில் அதுவும் நல்லதாகவேப் பட்டது. பணம் கையில் புரளாததால் குடியும் அவனிடம் குறைந்து போயிருந்தது. இரண்டு முறை பெயிலானாலும் தக்கி முக்கி முத்தையா எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணிய நேரத்தில்தான் கண்மணியும் ஸ்கூலுக்கு போக ஆரம்பித்திருந்தாள்.  

சின்னவன் சண்முகத்திற்கு தன் மூத்த மகள் சொர்ணத்தின் மகள் கனகத்தை திருமணம் செய்து வைத்து, தனக்கு இருந்த எல்லாக் கடன்களையும் அடைத்த நிம்மதி கொஞ்ச நாள் கூட சுப்புத்தாய்க்கு நிலைக்கவில்லை. இரண்டாவது தடவையாக முதலமைச்சராக வந்த ஜெயலலிதா ஒரே நாளில் சாலைப் பணியாளர்கள் அனைவரையும் வேலையை விட்டு வெளியே அனுப்பினார். பத்தாயிரம் குடும்பங்கள் செய்வதறியாமல் நிலைகுலைந்து போயின. சாலைப் பணியாளர்கள் தெருவில் இறங்கிப் போராடினர். அந்த சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவன் முத்தையா என்றும் அவன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டதாகவும் கேள்விப்பட்டார். தண்ணியடிப்பதை முழுசாக நிறுத்திவிட்டு ஊர் ஊராகச் சென்று கொடி பிடித்து  போராட்டங்களில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தான். பேப்பர்களிலும், டிவிகளிலும் வரும் செய்திகளைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள்.  கிறுக்குப் பயலை பார்ப்பதே சுப்புத்தாய்க்கு அபூர்வமானது.  

மூன்றரை வருட போராட்டங்களின் முடிவில் சாலைப் பணியாளர்களை ஜெயலலிதா மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டதாக அறிவித்தார். அத்தனைக்கும் மத்தியிலும் முத்தையா பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியிருந்தான்.  தொடர்ந்து ப்ளஸ் டூ, பி.காம், எம்.காம், என்சீனியரிங் டிப்ளமா என வாயில் நுழையாத படிப்பையெல்லாம் முத்தையா படித்து முடித்ததும் மகனுக்கு என்ன கிறுக்கு என்பது தெரிந்தது. உள்ளுக்குள் இத்தனை ஆசையை வைத்துக்கொண்டுதான் அந்த சின்ன வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றானா என குற்ற உணர்வு வந்தது. ரோடு இன்ஸ்பெக்டராகி இன்று ஜூனியர் எஞ்சீனியராக பேண்ட் சட்டை போட்டு, சட்டைப்பையில் பேனா குத்தி நடந்து வரும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஏங்கிறுக்குப் பயலே, கிறுக்குப்பயலே’ என கட்டிப் பிடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. படிப்பு ஒரு மனிதனை எப்படி உயர்த்துகிறது என்பதை அவருக்கு முத்தையா காட்டி விட்டான்.  

முருகன் தன் தம்பியைப் பற்றி என்ன சொல்வான் என்று அறிய ஆசையாய் இருந்தது. சண்முகம் கல்யாணத்தோடு இந்த குடும்பத்திலிருந்து ஒதுங்கி விட்டான். சென்னைக்குச் சென்று ஆறு வருடங்களாகிவிட்டன. அம்மா என்று ஒருத்தி இருப்பதையே அவன் மறந்து விட்டான் போல. தான் படிக்கவில்லை, தன் அண்ணன் முருகனைப் போல ஒரு மரியாதையுடன் தன்னை யாரும் பார்க்கவில்லை என்ற புழுக்கத்தில்தான் முத்தையா அப்படி குடித்துத் திரிந்தானோ என்றெல்லாம் கூட தனலட்சுமி தியேட்டரின் சினிமா சத்தத்தோடு படுக்கையில் கிடந்து யோசித்திருந்தார். ஒரு இரவில் எழுந்து “ஏ மாரியாத்தா” என பெரிதாய் குரலெடுத்து அழுதார். பதறி எழுந்த செல்லச்சாமிக்கு அவரது அழுகை வித்தியாசமாயிருந்தது. இப்போதும் சுப்புத்தாய்க்கு அப்படி அழத்தான் தோன்றியது.  

சட்டென்று கோபத்தில் கை நீட்டுகிற முத்தையா இப்போது எவ்வளவு பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்கிறான். ஒருநாளும் கண்மணியைக் கடிந்து கூட பேசவில்லையே. ”நீ மொதல்ல படிச்சு முடிம்மா. அப்பாவே உனக்கு அந்தப் பையன கல்யாணம் பண்ணி வைக்கேன்” என்றுதானே சொன்னான்.  

“ஏஞ்செல்லம் கண்மணி! ஏம்மா இப்படி பண்ணிட்டே..”  

செல்லச்சாமி தெற்குரத வீதியில் இருந்து திரும்பி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.  

(தொடரும்)  

1ம் அத்தியாயம்      2ம் அத்தியாயம்



  •  

இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்


முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்குவதைப் பார்த்து அதை நோக்கி கண்மணியை அழைத்துச் சென்றான் முத்தையா. ரெயிலில் ஏறி அப்பாவைப் பார்த்தாள். முத்தையாவோ  ஜன்னல்களை ஒட்டி பிளாட்பாரத்தில் வேகமாய் நடந்து “கண்மணி இங்க ஒரு இடமிருக்கு” ஒரு ஜன்னல் பகுதியைக் காட்டியவாறு வெளியிலிருந்து கத்தினான். அவள் அதை நோக்கி உள்ளே சென்றாள். உறங்கிக் கொண்டிருந்த வயதான அம்மா பக்கத்தில் ஒண்டிக்கொண்டாள். முத்தையாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. ஒரு வெட்டு வெட்டி ரயில் புறப்படவும் “பாப்போம் கண்மணி, நல்லாப் படிம்மா” முத்தையா கையசைத்தான். ரெயில் வேகமெடுத்துக் கடந்தது. பிளாட்பாரம் பின்னால் சென்று கொண்டிருந்தது. தனியே நின்றிருந்த முத்தையா சின்ன உருவமாகிக் கொண்டிருந்தான். வெளி இருட்டு ரெயிலைச் சூழ்ந்தது. கண்மண் தெரியாமல் ரெயில் ஓட்டம் பிடிக்க தூரத்து வெளிச்சப் புள்ளிகளோடு இரவு சரசரவென பின்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. அவள் மீது அப்பா காட்டிய அக்கறையும், வைத்திருந்த நம்பிக்கையும் கூடவே வந்தது.  

கண்மணியும் முத்தையாவும் அப்படியே ’அபியும்.நானும்’ படத்தில் வரும் மகளும் அப்பாவுமாக இருக்கிறார்கள் என்று சாத்தூரில் லாரி ஷெட்டில் வேலை பார்க்கும் சீனியம்மாவின் தம்பி பாண்டி சொல்வான். முத்தையாவோடு கூடவே இருக்கும் தோழர் கோட்டைராஜும் படம் பார்த்து சொல்லியிருந்தான். அமிர்தராஜ் தியேட்டரில் அப்பாவின் அருகில் உட்கார்ந்து குடும்பத்தோடு அந்த படம் பார்த்ததை கண்மணியால் மறக்க முடியாது. அபியையும் அவள் அப்பாவையும் போல அப்படியே தாங்கள் இல்லை என்றாலும் அப்படி பார்க்கப்படுவதிலும் பேசப்படுவதிலும் முத்தையாவுக்கும் கண்மணிக்கும் ஒரு மகிழ்ச்சி இருந்தது.  

கேட்கிற மகள் அவள் இல்லை. கேட்டதையெல்லாம் வாங்கித் தருகிற அப்பா அவன் இல்லை. மிஞ்சிப் போனால் சென்னையில் பாண்டிபஜாரில் பத்து ருபாய் இருபது ருபாய்க்குள் கம்மல், கிளிப் போன்று சின்னச் சின்னதாய் வாங்கித் தருவான். அவளும் ஆசையோடு போட்டுக் கொள்வாள். நம் சக்திக்கு மீறி ஆசைப்பட்டு அவமானங்களை சந்திக்கக் கூடாது, சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று அடிக்கடி முத்தையா சொல்வான். அப்பத்தா சுப்புத்தாய் ‘அந்தக் கிறுக்குப்பய’ என ஆரம்பித்து அப்பாவைப் பற்றி சொல்லியிருந்த பழைய கதைகளிலிருந்து ஹார்லிக்ஸ் மேலெழுந்து வரும். கண்கலங்கிப் போவாள்.  

சாத்தூரில் காட்டு புதுத்தெருவில் இருக்கும்போது வீட்டில் ஒரே கஷ்டம். முத்தையாவின் அப்பா செல்லச்சாமிக்கு வருமானம் பெரிதாய் ஒன்றும் இல்லை. குடிக்க மட்டும் செய்வார். வீட்டில் மூத்தவன் முருகன், முத்தையா, இளையவன் சண்முகமும் படித்துக்கொண்டு இருந்தார்கள். அக்கா லட்சுமி தீப்பெட்டி அட்டை ஒட்டினாள். ஆரிய வைஷ்யா பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்த முத்தையா தானும் ஒரு பாரமாய் இருக்க விரும்பாமல் படிப்பை நிறுத்திவிட்டு பழனிச்சாமியின் ரொட்டிக்கடைக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். அங்கிருந்து நிப்புக்கம்பெனி, ஐஸ் கடை என்று மாறி மாறி இரண்டு வருடம் வேலை பார்த்தான். சென்னையில் பின்னி மில் பக்கத்தில் மேட்டுப் பாளையத்தில் பலசரக்குக் கடைக்கு வேலைக்குப் போனான். சாப்பாடு போக மாதம் முப்பது ருபாய். வீட்டுக்கு அனுப்பி விடுவான். சுப்புத்தாய்க்கு அந்த பணம் பக்க பலமாய் இருந்தது. பிறகு அகரத்தில் ஒரு கடையில் வேலை. அங்கிருந்து ஆத்தியப்பனின் ஸ்டேஷனரிக் கடையில் வேலைக்கு சேர்ந்தான்.  

முத்தையாவோடு சேர்ந்து அந்தக் கடையில் மேலும் இரண்டு பையன்கள் வேலை பார்த்தார்கள். ஆத்தியப்பன் வீட்டு மாடியில் போட்டிருந்த குடிசையில் தங்கியிருந்தார்கள். மூன்று வேளை சாப்பாடும் வீட்டில்தான். மதியம் மட்டும் கேரியரில் கடைக்கு வந்துவிடும். முத்தையாவின் சுறுசுறுப்பும், கடைக்கு வருகிறவர்களிடம் பொறுப்பாய் பேசும் விதமும் ஆத்தியப்பனுக்கு பிடித்திருக்கிறது. அவனுக்கும் மற்ற இடங்களை விட அங்கு வசதியாகத் தெரிந்தது.   

கடையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து  ஒருநாள் ஹார்லிக்ஸ் டப்பா ஒன்றைத் திறந்து கையில் அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டு அவ்வளவு ருசியாய் இருந்தது. திரும்பவும் ஒரு கை எடுத்துத் தின்றான். ஹார்லிக்ஸ் டப்பாவை மூடி வைத்து விட்டு பிசுபிசுப்பாய் இருந்த வாயையும் கையையும் துடைத்துக் கொண்டான். மூன்று நாள் கழித்து ஹார்லிக்ஸ் வாங்கிய ஒருவர், டப்பா திறக்கப்பட்டு இருப்பதையும், ஹார்லிக்ஸ் கொஞ்சம் குறைந்திருப்பதையும் ஆத்தியப்பனிடம் காட்டினார். அதற்கு பதிலாக இன்னொரு ஹார்லிக்ஸ் பாட்டிலைக் கொடுத்தனுப்பிவிட்டு வேலைக்கு இருந்த  மூன்று பேரிடமும் ஆத்தியப்பன் விசாரித்தார். தாங்கள் எடுக்கவில்லை என்றனர். யோசனை செய்தவாறு கேட்டுக் கொண்டார்.  

அடுத்த நாள் ராத்திரி மாடிக்கு வந்த ஆத்தியப்பன் முத்தையாவை மட்டும் கீழே வீட்டுக்கு அழைத்துச் சென்றார். டிவியில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் செங்கோல் கொடுத்துக் கொண்டிருந்த காட்சியும் செய்தியும் ஓடிக்கொண்டு இருந்தது. உட்காரச் சொன்னார். தரையில் உட்கார்ந்தான். ஒன்றும் புரியாமல் முதலாளியைப் பார்த்தான். உள்ளே சென்று சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தார். “முதலாளி நா மேலேயே சாப்பிட்டுக்கிறேன்” எழுந்தான். ”அட உக்காருப்பா” என்றவர் கொஞ்சம் தள்ளி மேஜையில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்துத் திறந்தார். முத்தையாவுக்கு கைகால்கள் எல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தன. அவன் முன்  இருந்த தட்டிலில் அப்படியே தலைகீழாய் கொட்டினார். அவன் முகம் பார்த்து, ”ம்… ஆசை தீரச் சாப்பிடு” என்றார்.  

முத்தையாவுக்கு அழுகையாய் வந்தது. கையெடுத்துக் கும்பிட்டு, “முதலாளி…. தெரியாமச் செஞ்சிட்டேன். இனும இப்படி செய்ய மாட்டேன்” கெஞ்சினான்.  

“சாப்பிடுன்னு சொன்னேன்….” அதட்டினார். தட்டிலிருந்து எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். ”ம்” என்று சொல்லவும் பயத்தில் இன்னொரு கையள்ளி வாயில் போட்டுக் கொண்டு அவரை பரிதாபமாகப் பார்த்தான்.  

”அவசரப்படாத. மெல்ல சாப்பிடு. எல்லாம் உனக்குத்தான். சாப்பிடாம எந்திக்கக் கூடாது.” சோபாவில் உட்கார்ந்து கைகளைக் கட்டிக் கொண்டார். அவரது மனைவி உள்ளேயிருந்து வந்து எட்டிப் பார்த்தார்.  

“முடில முதலாளி… என்ன விட்டிருங்க… இனும ஒருநாளும் செய்ய மாட்டேன்.” ஹார்லிக்ஸ் அடைத்திருந்த வாயைத் திறக்க முடியாமல் அழுதான் நெஞ்சையடைத்தது முத்தைய்யாவுக்கு.  

அவரது மனைவி வேகமாகத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, “என்னங்க இது? எதோ ஆசையில் ஒரு வாய் எடுத்ததுக்கு இப்படி பாடாய் படுத்துறீங்க.” என்றாள்.  

”பாடாய் படுத்தலடி. பாடம் எடுக்குறேன்.” சொல்லிவிட்டு முத்தையாவிடம், ”உனக்கு உரிமையில்லாத ஒரு பொருள் வேணும்னா கேக்கணும். எடுக்கக் கூடாது” எச்சரிப்பதைப் போல கைகளைக் காட்டி, “எந்திச்சுப் போ” என்றார்.  

சொல்லிக்கொண்டு வந்த  அப்பத்தா சுப்புத்தாய். கண்களை மூடி ”முத்தையா” என்றார். கண்களைத் திறந்தபோது கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது. தோல் சுருங்கிய அப்பத்தாவின் கைகளை எடுத்து வைத்துக் கொண்டு கண்மணி வருடிக் கொடுத்தாள். தழும்பேறிய அந்த கடந்தகால வாழ்க்கையின் காயங்களை சுமந்த நினைவுகளே அப்பாவின் வாசமாய் இருந்தது. வயிற்றுப் பிழைப்புக்குக் கிடந்து அவதிப்படுகிற மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் கவனிக்கவும், நேசம் கொள்ளவும் செய்தது.  

வீட்டை விட்டு புறப்பட்டபோது மேற்குப் பக்கம் கண்ட நிலா அடிவானத்தில் இறங்கியிருந்தது. கொஞ்ச நேரத்தில் சாத்தூர் வந்துவிடும். வழக்கமாய் சுப்பையா இன்னேரம் அங்கு காத்திருப்பான். மதுரையிலிருந்து திருநெல்வேலி போகும் பஸ்கள் இரவில் ஊருக்குள் வராமல் பைபாஸில் சென்றுவிடும் என்பதால் விடிகாலை மூன்று மணிக்கு விருதுநகர் கலெக்டர் ஆபிஸ் சென்று பஸ் ஏறுவான். மூன்றரை, மூன்றே முக்காலுக்கு சாத்தூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விடுவான்.  ரெயில்  நிற்கும் அந்த இரண்டு மூன்று நிமிடங்கள் தன்னைப் பார்க்கவும் சில வார்த்தைகள் பேசவும் அப்படி வந்து நிற்பது கஷ்டமாயிருந்தாலும் கண்மணிக்குப் பிடித்து இருந்தது. இதமான காற்று முடியை பறக்க விட,  மெல்ல மெல்ல வெளியெல்லாம் பார்வையில் பிடிபட, பொழுது புலரும் ரெயில் பயணத்தின் அழகிய நினைவாக அன்று முழுவதும் அவளுக்கு சுகமாயிருக்கும்.  

சுப்பையா இன்று வருவானா என்று சந்தேகமாயிருந்தது. முந்தாநாள் கோபத்தில் சென்றிருந்தான். ”இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன…… ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே” தெப்பக்குளம் அருகே ஜெராக்ஸ் கடைப்பக்கத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது கேட்ட பாட்டும் சுப்பையாவின் வாடிய முகமும் ஒருபுறம் வதைத்துக் கொண்டிருந்தது. தன்னால்தான் எல்லாம் என்று இரண்டு நாளாய் வருந்திக் கொண்டிருந்தாள். அவனோடு இருந்த கொஞ்ச நேரத்தில் தன்னை அப்படியே வெளிக்காட்டுவதாய் நினைத்து பேசியதுதான் வினையாகி விட்டது. தனிமையில் தலையிலடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.  

கடையின் இடது பக்கம் அடைப்பு வைத்து மறைவாய் இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில் டீக்கடையில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ”எனக்கு இந்த திங்கட்கிழமை காலேஜ்க்கே போகவேப் பிடிக்கல. இன்னும் ரெண்டு நாள் இருக்கணும்னு தோணுது. அப்பாக்கிட்ட சொல்ல முடியாது, படிக்குறதுக்கு மட்டம் போடுறதாய் நினைப்பாங்க.” என்றாள்.  

சுப்பையா உற்சாகமானான். “அப்போ ஒன்னு செய்யலாம். திங்கக்கிழமை காலைல நா சாத்தூர் வந்துர்றேன். நீ அங்க இறங்கிரு. நாம ஒன்பது மணிக்குள்ள குத்தாலத்துக்குப் போயிரலாம். கொஞ்ச நேரம் ஜாலியா சுத்திப் பாத்துட்டு மதியத்துக்கு மேல அங்கயிருந்து நீ திருச்செந்தூருக்குப் போயிரு. நா விருதுநகருக்கு வந்துர்றேன்.”  

“அய்யய்யோ…முடியாது” சட்டென்று மறுத்தாள் கண்மணி.  

“ப்ளீஸ் கண்மணி. நாம இது வரைக்கும் தனியா எங்கயும் போனதில்ல. அடடா மழைடா அடை மழைடா…. அழகா சிரிச்சா….. புயல் மழைடா…… பாட்டுப் பிடிக்கும்னு சொல்லிட்டு, அத மாரி யாருமில்லாத இடத்துக்குப் போயி மழைல ஆட்டம் போடணும்னு சொல்வேல்ல… ஆட்டமெல்லாம் வேண்டாம். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம்னு இப்படி பயந்து பயந்து பாத்துட்டு பேசிட்டு இருக்குறதுக்கு உங்கூட ரொம்ப நேரம் இருக்கலாம். நிறையா பேசலாம்” இழுத்தான்.  

“ஐடியால்லாம் நல்லா இருக்கு. எனக்கும் ஆசைதான். ஆனா வேண்டாம். வீட்டுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான். உடைஞ்சு போவாங்க.” கொஞ்சிக் கொண்டே மறுத்தாள்.  

“வீட்டுக்குத் தெரியாது கண்மணி. பாத்துக்கலாம்”  

“இல்ல. அப்பாவுக்கு எல்லா ஊர்லயும் யாராவது தோழர்கள் இருப்பாங்க.”  

“அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க இருப்பாங்க. நீதான் முத்தையாவோட பொண்ணுன்னு யாருக்குத் தெரியும்? உன்னயும் என்னயும் தெரிஞ்சவங்க யார் இருப்பா?”  

கைகளைக் கட்டியபடி யோசித்தவள், “சரிதான். ஆனா வேண்டாம்ப்பா. பயம்மா இருக்கு.” தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு சொன்னாள். அவன் பேசவில்லை. முகம் வாட்டமடைந்தது. தெப்பக்குளத்தையும், சுற்றியிருந்த கடை வீதியில் சந்தடியாயிருந்த மனிதர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.  

“கோபமா..” கேட்டாள்.  

பதில் சொல்லாமல் அவளை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, திரும்பவும் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.  

அவளும் அமைதியானாள்.  

“வர்றேன்…” கிளம்பினான்.  

“ஏம்ப்பா இப்படி பண்றீங்க, நல்லால்ல. நாள கழிச்சு காலேஜ்க்கு போயிருவேன். அப்புறம் ஒரு வாரம் நாம பாக்க முடியாது.” சோகத்தோடு சொன்னாள்.  

“உனக்கும் உங்க அப்பாவுக்கும் படிப்புத்தான் முக்கியம். எனக்கு அப்படியில்ல. நீ மட்டுந்தா முக்கியம். ஏன்னா நா ஒரு முட்டாள்.”  

“எனக்கு படிப்பும் முக்கியம். நீங்களும் முக்கியம். படிப்பு முடிஞ்சதும்  கல்யாணம்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏம்ப்பா இப்டி. ப்ளீஸ்… என்னை வருத்தப்பட வைக்காதீங்க.”  

“படிப்பு முடிஞ்சதும் உங்கப்பா இந்த ஆட்டோக்காரனுக்கு உன்ன கல்யாணம் பண்னி வைப்பாராக்கும்?  எனக்கு அந்த நம்பிக்கைலாம் இல்ல.”  

“அப்பா பண்ணி வைக்கலண்ணா, உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காதா?”  

“அதெல்லாம் பேசலாம் கண்மணி. படிச்சு முடிச்சதும் நீ எங்கயோ போயிருவே. நா இப்படி ரோடு ரோடா அலைஞ்சுக்கிட்டு கிடக்க வேண்டியதுதான்..”  

அவர்களது பேச்சை பக்கத்தில் இரண்டு பேர் டீ குடித்துக்கொண்டே கவனித்துக் கொண்டிருப்பது போல கண்மணிக்குத் தோன்றியது. அமைதியானாள்.  

“நீ என்ன விட்டுப் போயிருவியோன்னு பயம்மா இருக்கு. உன்னப் பாக்காம இருக்கவே முடில. கண்டதையும் நெனைச்சு நெனச்சு இப்பவே பைத்தியமாய்ட்டு இருக்கேன். நீ இல்லன்னா அவ்ளோதான். பேசாம செத்துத் தொலைச்சிரலாம்னு தோணுது”  

கண்மணியால் தாங்க முடியவில்லை. பக்கத்தில் நெருங்கி அவன் கையைப் பிடித்து, ”ப்ளீஸ்பா. எல்லாரும் பாக்குற மாரி இருக்கு. என்ன நம்புங்க. அவ்ளோதான் சொல்ல முடியும்.” மெல்லிய குரலில், அதே நேரம் அழுத்தமாய் சொன்னாள். அவளது கையை உதறியபடி சுப்பையா வேகமாய் போய்விட்டான்.  

சாத்தூர் நெருங்கிக்கொண்டு இருந்தது. ரெயிலின் வேகம் குறைந்தது. தான் உட்கார்ந்திருந்த இடத்தில் பையை வைத்துவிட்டு எழுந்து செல்லப் போனவள், நின்று பையை எடுத்து முதுகில் மாட்டிக் கொண்டு முன்னால் கதவுப்பக்கம்  சென்றாள். ஒருவேளை சுப்பையா வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும் போலிருந்தது. அவனைத் தேடிப் பார்த்துவிட்டு, இல்லையென்றால், திரும்ப உள்ளே வந்து பையை எடுத்துக் கொண்டு இறங்குவதற்கு நேரமிருக்காது. சுப்பையாவைப் பார்க்காமல் காலேஜ் போனாலும் நிம்மதியாய் இருக்காது. பேசிக்கொண்டு கதவருகில் நின்ற இரண்டு ஆண்கள் அவளுக்கு வழிவிட்டு உள்ளே நகர்ந்து கொண்டார்கள். அந்த இடத்தில் மூத்திர வாடை பொறுக்க முடியாமல் இருந்தது.  

ரெயில் நின்றதும் கண்மணி வெளியே தலையை எட்டிப் பார்த்தாள். அடுத்து இருந்த பெட்டியின் உள்ளே ஜன்னல் வழியாய் சுப்பையா அவளைத் தேடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.  ரெயிலில் ஏறுவதற்காக கீழே நின்றிருந்தவர்களில் ஒருவன், “ஹலோ, இறங்குறதுன்னா இறங்குங்க. வழிய மறிச்சுட்டு நிக்காதீங்க” அவசரப்பட்டான்.  

சுப்பையாவை பார்த்து விட வேண்டும், சமாதானமாய் இரண்டு வார்த்தை பேசிவிட வேண்டும் என்றிருந்தது. இறங்கினாள். சுப்பையா அவளைப் பார்த்து, “கண்மணி!” என பொங்கிக்கொண்டு அருகில் வந்தான். ஷேவ் செய்யாமல் இருந்தான். பையோடு அவளைப் பார்த்ததும் வேகமாய் வந்து கைகளைப் பிடித்துக் கொண்டு “ஏந்தங்கம்” என்றான்.  

திரும்பவும் ஏமாறக் கூடாதே என்று இருந்தது. “ஸ்டேஷனுக்கு நீங்க வரலண்ணா விருதுநகருக்குத் திரும்பிரணும்னு பையோட எறங்கினேன். நீங்கதான் வந்தாச்சே. காலேஜ்க்கு போறேன்” சொல்ல நினைத்து நிதானித்தாள்,  

”இது போதும் கண்மணி. உன்ன முழுசா நம்புறேன். இனும அப்படியெல்லாம் பேச மாட்டேன் மன்னிச்சுரு.” நெஞ்சில் கை வைத்துச் சொன்னான்.  

”இப்பவாது புரிஞ்சுக்கிட்டீங்களே. அப்பாடி. காலேஜ்க்கு போலாமா?” கெஞ்சலாய் கேட்டாள்.  

“விளையாடுறியா…” பையை எடுத்து தன் முதுகில் போட்டுக் கொண்டு “வா…வா” நடக்க ஆரம்பித்தான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள். விசில் சத்தம் கேட்க, வெட்டு வெட்டி ரயில் நகர ஆரம்பித்தது. அவளும் அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். ஸ்டேஷனுக்கு வெளியே ஆட்டோக்காரர் ஒருவர் நெருங்கி, “எங்க போகணும்” கேட்டார். ”பஸ் ஸ்டாண்ட்தான்” சொன்னதும் விலகிக் கொண்டார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில்தான் இருந்தது.  

காலேஜ்க்குப் போய்க்கொண்டிருப்பதாய் மொத்த வீடும் நம்பிக்கொண்டிருக்கும். சற்று முன்னால் அப்பாவின் கையைப் பிடித்து அழுததில் அவர் சமாதானமாகித் தெரிந்தார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி சுப்பையாவின் பின்னால் இப்படி நடந்து கொண்டிருப்பது தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று உறுத்தியது. அடுத்த கணமே தெரிந்தால்தானே, நாம்தான் சாயங்காலம் காலேஜ்க்கு போய்விடலாமே என்று நம்பிக்கையும் வந்தது. பஸ் ஸ்டாண்டில் அங்கங்கு சில பேர் நின்றிருந்தார்கள். அன்றைக்கு வந்த பேப்பர்களை இரண்டு  பேர் சைக்கிளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். டீக்கடையில் ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார். ராஜபாளையம் பஸ் புறப்பட நின்றிருந்தது. போய் ஏறிக் கொண்டார்கள். நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பையை உடலிலிருந்து கழற்றி உட்கார்ந்ததும் சுப்பையா கண்மணியைப் பார்த்து சிரித்தான்.  

“ம்… ஒருவழியா நினைச்சத சாதிச்சிட்டீங்க” கண்களை உருட்டி பெரிய ஆளுதான் என்பது போல காட்டினாள்.  

“ஆமாம், இதுக்கே இவ்வளவு அடிச்சிக்கிட வேண்டியிருக்கு” பெருமூச்சு விட்டான். 

 “சரி. உங்க வீட்டுல என்ன சொல்வீங்க?” கேட்டாள்.  

“ஆட்டோ ரிப்பேர். ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க மதுரைக்கு வந்திருக்கேன்.” யோசிக்கமல் சொன்னான்.  

“சரியான களவாணி..” அவனை அடிப்பது போல பாவனை செய்தாள்.  

அவன் அருகில் குனிந்து ”நீ இவ்வளவு பக்கத்துல இருக்க. தெரிஞ்சவங்க யாரும் இல்ல. எந்த அவசரமும் இல்ல. நா ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். இப்படி ஒரு நாள் அமையணும்னு எவ்வளவு நாள் ஏங்கியிருப்பேன் தெரிமா?” ரகசியம் போல மிக மெல்லிய குரலில் சொன்னான்.  

கண்மணி அவன் கைகளை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். இருவரும் பேசாமல் இருந்தார்கள். காலேஜ்க்குப் போகாமல் இறங்கியதும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டாள். டிரைவர் ஏறவும் பஸ் புறப்பட்டது. காதல் படத்தில் அந்த இருவரும் இப்படித்தானே பஸ்ஸில் போனார்கள் என்றிருந்தது.  

‘உனக்கென இருப்பேன்…. உயிரையும் கொடுப்பேன்…. உன்னை நான் பிரிந்தால்….. உனக்கு முன்னே இறப்பேன்…… கண்மணியே….” பத்தாவது வயதில் உட்கார்ந்த இடம், நின்ற இடம், போன இடமெல்லாம் அவள் பேரைச் சொல்லி வலியோடு அழைத்துக் கிடந்தது அந்தக் குரலும் இசையும்.  நடுரோட்டில் தாடி முடியோடு பைத்தியமாய் சுற்றிக்கொண்டிருந்த பரத்தின் நெஞ்சில் பச்சைக்குத்தியிருந்ததை தன் பேராகவே உணர வைத்தது. எப்போது கேட்டாலும் அந்த பாட்டு உயிரைப் பிசைவது போலிருக்கும்.  

முத்தையா அப்போது வீட்டில் இருந்ததே குறைச்சல்தான். இரண்டாயிரத்து இரண்டு செப்டம்பரில் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை ஜெயலலிதாவின் அரசு பணிநீக்கம் செய்தது. ஐந்து வரைப் படித்தவர்களுக்கு ஒரு அரசு வேலை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. தங்களுக்கு நிச்சயமான ஒரு எதிர்காலம் இருக்கும் என அவர்கள் கண்டிருந்த கனவில் மண்ணள்ளிப் போட்டது. சிலருக்குப் பைத்தியம் பிடித்து தெருவில் அலைந்தார்கள். அறுபது பேருக்கும் மேலே தற்கொலை செய்து கொண்டார்கள். மூன்றரை வருடங்கள் தமிழ்நாடு முழுவதும் சாலைப் பணியாளர்கள் திரும்பவும் வேலை கேட்டு போராடினார்கள். அதற்குத் தலைமை தாங்கி நடத்தியதில் முத்தையாவின் பங்கு முக்கியமானது. அதிகாலையில்  புறப்பட்டுப் போவான். எல்லோரும் தூங்கிய பின்னிரவில் வருவான். பல நாட்கள் வீட்டில் தங்குவதும் இல்லை. ஒரு தடவை சென்னைக்குப் போனவன் ஒரு வாரத்துக்கும் மேலாய் வரவில்லை. ஆனைக்குழாய் பகுதியில் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து அவதிப்பட்டார்கள். சாலைப்பணியாளர் சங்கத் தோழர்கள்தான் வந்து உதவிகள் செய்தார்கள். இரண்டாயிரத்து ஆறு பிப்ரவரியில் மீண்டும் சாலைப் பணியாளர்கள் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். வீடும் சூழலும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தாலும் அப்போது கண்மணிக்குள் எழுந்திருந்த குழப்பங்களை, சந்தேகங்களை வீட்டில் யாரும் அறிந்திருக்கவில்லை.  

வளரும் பெண்ணின் மாற்றங்களை தன்னில் பார்க்க ஆரம்பித்ததும் கண்மணிக்கு மின்சாரக் கம்பிகளில் மைனாக்கள் கூடு கட்ட ஆரம்பித்தன. எட்டாவது படிக்கும்போது வயதுக்கு மீறி பெரிய பெண்ணாய் கண்மணி தெரிவதாய் அடுத்த தெருவிலிருக்கும் ராணியக்கா சீனியம்மாவிடம் ஒருநாள் வீட்டு வாசலில் வைத்துச் சொன்னதைக் கேட்டதும் புத்தகத்தை கீழே வைத்து விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள். அங்குமட்டும்தான் கதவை மூடிக்கொள்ள முடியும். அந்தச் சின்ன வீட்டில் அவள் தன்னை அறிந்து கொள்ள இடமில்லை. எல்லோருக்கும் நேர்வதுதான் அவளுக்கும் நேர்கிறது என்பதைச் சொல்லி இயல்பாக்கும் மனிதர்கள் இல்லை. விரிந்திருந்த பள்ளிதான் அடைக்கலமாயிருந்தது. கூட படிக்கும் தோழிகளோடு பேசுவது சுவாரசியமாகவும்,  நன்றாக படிப்பதாக டீச்சர்கள் பாராட்டுவது உற்சாகமாகவும் இருந்தது.  

பள்ளிக்குப் போகும் வழியில் புதிதாய் கட்டிக்கொண்டிருந்த வீட்டில்  உடலெல்லாம் புழுதியும் சிமெண்ட்டுமாய் சித்தாள் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவனின் அசைவுகளும் சுறுசுறுப்பும் கவனிக்க வைத்தது. தினமும் போகும்போதும் வரும்போதும் அந்த இடத்தைக் கடக்கும்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்தான் அவன். காணாத போது கண்கள் தேட ஆரம்பித்தன. கண்டதும் சந்தோஷம் வந்தது. பாதியளவுக்கு சுவர் உயர்ந்த நேரத்தில் அவள் தன்னைப் பார்ப்பதை அறிந்து கொண்டான் அவன். தன்னை சரிசெய்து கொண்டு எனக்கும் உன்னைத் தெரியும்  என்பது போல் நின்று பார்க்க ஆரம்பித்தான். மாடிச்சுவர் கட்டி முடியும்போது இருவரும் ஒருவரையொருவர் எந்நேரமும் தேடிக்கொண்டு இருந்தார்கள். கட்டிய வீட்டிற்கு பால் காய்ச்சி,  யாரோ குடிவந்த பிறகு கண்மணிக்கு அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் வெறிச்சென்று இருந்தது. அவளது பாதையில் வேறொரு இடத்தில் அவன் வந்து நிற்க ஆரம்பித்தான். ஒருநாள் எதிரே வந்தவன் அவளைக் கடக்கும்போது, ”கண்மணி” என்று எங்கோ பார்த்து சொல்லிக்கொண்டு போனான். அடுத்தநாள் ”சுப்பையா” என தன் பெயரைச் சொல்லிக்கொண்டு போனான். பெயரை அறிந்தவர்களுக்கு மேலும் தங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது.  

படித்துக்கொண்டிருந்த சத்திரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளி முன்பு ஒருநாள் சுப்பையா ஆட்டோவுடன் வந்து நின்றான். அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. பிறகெல்லாம் அவனை ஆட்டோவில்தான் பார்க்க முடிந்தது. சித்தாள் வேலையை விட்டு அவனும் தன்னை வளர்த்துக் கொள்கிறான் என்பது சந்தோஷமாயிருந்தது. அந்த வருடம் ஊர்ப் பொங்கலின்போது   கூட்டத்தில் தனியே நின்ற சமயம் அவளருகே வந்து, “கண்மணி, அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” சொல்லிக்கொண்டே ஒரு காகிதத்தைக் கொடுத்து சென்றான். பத்திரமாய் அதை வீட்டில் வந்து நெஞ்செல்லாம் துடிதுடிக்க பிரித்தாள். ஒன்றும் எழுதியிருக்கவில்லை. வெறும் காகிதம். அடுத்த நாள் அவளே அவனிடம் போய்க் காகிதத்தை காண்பித்து “என்ன இது?” கேட்டாள். அவனும் அதை வாங்கிப் பார்த்து, ”என்ன, ஒன்னும் எழுதல” திருப்பிக் கேட்டான். “என்ன விளையாடுறியா?” அவள் கோபமாய் கேட்க, ”எனக்கு எழுத வராது. நாஞ் சொல்ல சொல்ல நீதான எழுதணும். கண்மணி அன்புடன் காதலன் நான் எழுதும் கடிதம்” சொல்லி சிரித்தான். அவளுக்கும் சிரிப்பு வந்தது. தெப்பக்குளம் அருகில் சந்தித்ததெல்லாம் அதன் பிறகுதான். நாட்களெல்லாம் பாடங்களோடும், கனவுகளோடும் அழகாய் வந்தன. 

நன்றாக படித்தால்தான் இந்தக் காதலும், திருமணமும் சாத்தியமாகும் என்பதில் கண்மணி உறுதியாய் இருந்தாள். தன் அப்பா பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். பெண்களைப் பற்றி பெரியார் எழுதியிருப்பதையெல்லாம் வீட்டில் முத்தையா சொல்வதை கேட்டிருந்தாள். தன் பெண் நன்றாக படிக்க வேண்டும், தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும், தன் காலில் நிற்க வேண்டும் என்றுதான் அவளிடமும் சொல்லியிருந்தான். பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்று எழுபத்தெட்டு மார்க்குகள் வாங்கினாள்.  

ப்ளஸ்டூவுக்கு நாமக்கல்லில் சேர்த்ததுதான் கஷ்டமாய் போய்விட்டது. காலை நான்கு மணிக்கே எழுந்திரிக்க வைத்து, ஓய்வு, பேச்சு, சிரிப்பு எதுவுமின்றி சதாநேரமும் மெஷின் போல படிக்க கட்டாயப்படுத்தியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்  விருப்பத்தோடு புத்தகங்களை கையிலெடுத்தவளுக்கு, தன்னுடைய நேரத்தைத் தானே தீர்மானித்து விருப்பத்தோடு படித்தவளுக்கு நாமக்கல் பள்ளியும் கல்வியும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அப்பாவிடம் சொல்லவும் முடியாமல், படிக்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்ட அந்த இரண்டு வருடங்களும் நரகம் போல்தான் கழிந்தன. சுப்பையாவிடம் புலம்புவாள். அந்த சமயங்களில் ஆறுதலாய் இருந்தவனும் அவளைத் தேற்றியவனும் அவன்தான். அவளது உலகத்தில் முத்தையா வீட்டிலும், சுப்பையா வெளியிலும் தெரிந்தார்கள்.  

“கண்மணி தூக்கம் வருதா.” சுப்பையா அவள் தலையைத் தடவி விட்டான். நேற்றிரவு சரியாகத் தூங்காதது, மூன்று மணிக்கு எழுந்தது அவளை அசத்தியது. அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். பரட்டைத் தலையோடு பைத்தியமாகி விடாமல் சுப்பையா நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு தூக்கத்திற்குள் நுழைந்து கொண்டாள்.  

ராஜபாளையம் இறங்கும்போது மணி ஆறு நாற்பதுதான் ஆகியிருந்தது. ரெஸ்ட் ரூம் போய் விட்டு இருவரும் காபி குடித்தார்கள். போனில் பேசிக்கொண்டே தென்காசி போகும் பஸ்ஸைத் தேடினான் சுப்பையா. ஒரு மணி நேரம் போலத் தூங்கியது புத்துணர்ச்சியாய் இருந்து அவளுக்கு.  

ராஜபாளையத்திலிருந்து தென்காசி போகும் வழியில் மலைகள் கூடவே வந்தன. இருவரும்  விடாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வந்தார்கள். தென்காசியில் இறங்கி ஒரு கடையில் ஆவி பறக்க இட்லி சாப்பிட்டார்கள். ஒரு ஆட்டோவில் பழைய குற்றாலம் சென்றார்கள்.  மலைத்திரட்சியையும், அருவியையும் ரசித்தார்கள். ஆடை மாற்றிக்கொண்டு அவள் ஆசை தீரக் குளித்தாள். தன்மீது கொட்டிய வெள்ளத்தை குழந்தை போல கொண்டாடினாள். ரொம்ப நாள் இருந்த ஏக்கமெல்லாம் கரைந்து கொண்டிருந்தது. அவன் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டும் போனில் பேசிக்கொண்டு இருந்தான்.  

அருவியை விட்டு வெளியே வந்து உடைமாற்றி வெயிலில் நடந்த போது “தென்காசிக்கு வந்ததிலிருந்து பாக்குறேன். போனோடுதான் இருக்கீங்க...” என்றாள். 

”ஒன்னுமில்ல. “ஃபிரண்ட்ஸ்தான்” சொல்லி அமைதியானான். இருவரும் மீண்டும் தென்காசிக்கு வந்தபோது மணி மதியம் ஒன்றைத் தாண்டியிருந்தது. 

ஓட்டலில் சாப்பிட்டு கை கழுவும்போது கண்மணி அருகே வந்த சுப்பையா, “நீ காலேஜ்க்கு போகலங்குறதும், நாம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கோம்கிறதும் உங்க வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு.” என்றான்  

(தொடரும்) 

1ம் அத்தியாயம் 


  •  

இங்கிருந்துதான் வந்தான் - 1ம் அத்தியாயம்


( ஒரு மனிதனின் கதை இது. ஒரு தோழரின் கதை இது. அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். அது முக்கியமல்ல இப்போது. அவர் எங்கிருந்து, எப்படி வந்தார் என்பதுதான் முக்கியமானது.  இருட்டையும் வெளிச்சத்தையும் அடைகாத்திருக்கும் வாழ்வனுபவம் இது. )

”அவக்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க” முகத்தைக் கழுவி பாத்ரூமில் இருந்து வெளியே வந்த முத்தையாவிடம் அவனுக்கு மட்டும் கேட்கும்படியாய் சொன்னாள் சீனியம்மா. கண்மணி இருந்த அறையையும் ஒரு பார்வை எட்டிப் பார்த்துக் கொண்டாள்.  புரிந்து கொண்டதைப் போல கண்களை மெல்ல மூடித் திறந்து ’பொறு.. பொறு’ என்பதாய் சைகை செய்தான் அவன்.  

அதிகாலை மூன்று மணிக்கு விழித்துக் கொண்ட ஒரு வீட்டில் மனிதர்கள் சத்தமில்லாமல்தான் நடமாடுகிறார்கள். பேசுகிறார்கள். உறங்கிக் கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்னும் உணர்வு மனிதர்களுக்கு தன்னியல்பாகவே இருக்கிறது. என்றாலும் சாதாரணமாகவே ரகசியம் பேசிக்கொள்ள முடியாத சின்ன வீடுதான் அது. முன்னறை. அதைத் தாண்டி சமையலறை. பக்கவாட்டில் இரண்டு சின்ன அறைகள். நானூறு சதுர அடிகளுக்குள்தான் மொத்த வீடும். ஜே.இ சி.எம் சார் (ஜூனியர் எஞ்சினியர்.  செல்லச்சாமி மகன் முத்தையா) வீடு என்று சமீபமாய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  

பிறந்ததும், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி என எல்லோரோடும் முத்தையா வளர்ந்ததும் சாத்தூரில்தான்.  சாதிக் கலவரமாய்க் கிடந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறில் ஆனைக்குட்டத்துக்கு ஒருநாள் அழைத்துச் செல்லப்பட்டான். அப்போது அவனுக்கு பத்தொன்பது வயது.  தாய்மாமா குருசாமியின் பார்வையில் இருக்கட்டும் என்பது அம்மா சுப்புத்தாயின் யோசனைதான். கழுத்தில் சேலையைத் தொட்டிலாகக் கட்டி அதில் குழந்தையாய் இருந்தவனைப் போட்டு இருக்கன்குடி மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி எடுத்து வைத்த பேர்தான் முத்தையா. ஜாதித்திமிரும், சட்டென கைநீட்டும் கோபமும் கொண்ட அவனின்  சேர்க்கைகள் சுப்புத்தாயை பயமுறுத்தின. வேறு வழி தெரியவில்லை. குருசாமிக்கு  இருந்த அரசியல் செல்வாக்கில் விருதுநகர் ரேஷன் கடையொன்றில் தினக்கூலியாய் வேலை கிடைத்தது. ஆறு வரைக்கும் படித்தவனுக்கு அது ரொம்பப் பெரிய விஷயம். தில்லுமுல்லுகளுக்கு பழகியதும் தினமும் நானூறு ஐநூறு என்று ருபாய் நோட்டுகள் பங்காய் கிடைத்தது. பாட்ஷா ஆறுமுகத்தோடு எல்லாம் பழக்கம் உண்டானது. அமிர்தம் ஒயின்ஷாப்பில் சாயங்காலத்துக்கு மேல் குரூப்பாக உட்கார்ந்து தண்ணியடித்து வம்பு தும்பென்று இஷ்டத்துக்கு இருந்தான். ’கல்யாணம் பண்ணாத்தான் உருப்படுவான்’ என பெரியகொல்லப்பட்டி சீனியம்மாவுக்கு முத்தையாவைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவளது  கையைப் பிடித்துக் கொண்டு  விருதுநகரில் ஆனைக்குழாய் பகுதியில் குடிவந்தவன்தான். இருபது வருடங்கள் ஓடிவிட்டன. மகள், மகன், மகள் என அடுத்தடுத்த வருடங்களில் பெற்றது,  இந்த இடத்தை வாங்கியது, ஒரு அறையும் சமையலறையுமாய் இருந்ததை மேலும் இரண்டு அறைகளோடு விரித்துக் கொண்டதை எல்லாம் நினைவுபடுத்தி நிற்கிறது இந்த வீடு.  

சீனியம்மா எட்டிப்பார்த்த பக்கத்து அறையில் உடைகளையும் புத்தகங்களையும் பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டு இருப்பவள்தான் பெரியவள் கண்மணி. பத்தாம் வகுப்புத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்ற மாணவி. ப்ளஸ்டூ படிக்க அவளை நாமக்கல்லில் சேர்த்தார்கள். தங்கள் வீடுகளுக்கு மாணவிகள் போன் பண்ணிப் பேச மாதத்துக்கு ஐந்து ஒரு ருபாய் நாணயங்களை ஹாஸ்டலில் கொடுப்பார்கள். அங்கிருக்கும் போனில் நாணயத்தைப் போட்டு பேசிக்கொள்ள வேண்டும். வீட்டின் நம்பர் இல்லாமல் இன்னொரு நம்பருக்கும் கண்மணி பேசுவதை கவனித்து அங்குள்ள டீச்சர் முத்தையாவை வரவழைத்துச் சொல்லியிருக்கிறார். விசாரிக்கும்போதுதான் விருதுநகரில் ஆட்டோ ஒட்டும் சுப்பையா என்னும் பையனோடு பழக்கம் இருப்பது தெரிந்தது. கண்மணிக்கு புத்திமதிகள் சொல்லிவிட்டு வந்தான். ப்ளஸ்டூவில் ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்து எழுபது போலத்தான் மார்க்குகள் வாங்கினாள். இப்போது திருச்செந்தூர் ஆதித்தனார் எஞ்சீனியரிங் கல்லூரியில் முதல் வருடம்  இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்துக்கொண்டிருக்கிறாள். சனி ஞாயிறுக்கு  வந்தவள் இன்று திங்கட்கிழமை கல்லூரிக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். காலை மூன்றே முக்காலுக்கு விருதுநகர் ஸ்டேஷனில் செந்தூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க வேண்டும்.  

இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டு இருப்பவன் செந்தில். இரண்டாவது மகன். கேவிஎஸ் ஹையர் செகண்டரி பள்ளியில் ப்ளஸ்டூ படிக்கிறான். சனிக்கிழமை  சாயங்காலம் எதோ ஜெராக்ஸ் எடுக்கப் போவதாக வெளியே சென்ற கண்மணியை தெப்பக்குளம் அருகே அந்த சுப்பையாவோடு பார்த்திருக்கிறான். அம்மாவும் அப்பாவும் கவலைப்படுவதை உணர்ந்தவன். சீனியம்மாவிடம் வந்து சொன்னான். பெற்ற தாய்க்கு தவிப்பாய் வந்தது. அன்றிரவு முத்தையா சாப்பிட்டு முடித்ததும் வீட்டுக்கு வெளியே அவனை அழைத்து,  அடங்கியிருந்த அந்த குறுகலான  தெருவில் ஒரு ஓரமாய் நின்று குரல் உடைந்து போனாள். முத்தையா சமாதானப்படுத்தினான். தான் பேசினால் சரியா வராது என்று அவனை கண்மணியிடம் பேசச் சொன்னாள். சரியென்று சொல்லியிருந்தான்.  

கண்மணி  புறப்பட்டுக் கொண்டிருக்கும் அறையில் தூங்கிக் கொண்டு இருக்கும் இன்னொருத்தி சின்னவள் செல்வி. பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறாள். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாள். நாமக்கல்லில் ப்ளஸ் டூவில் சேர அவளுக்கு இன்று இண்டர்வ்யூ.  கண்மணியை செந்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் அனுப்பி் வைத்துவிட்டு, வீட்டுக்கு வந்து செல்வியை அழைத்துக்கொண்டு முத்தையா புறப்பட வேண்டும். மரியான் படத்தின் ”இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன…… ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே” வரியை சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து திரும்பத் திரும்ப கண்மணி பாடிக்கொண்டிருந்தது அவளை விட இரண்டு வயது குறைவான செல்விக்கு புரியாமல் இல்லை. “என்னக்கா அந்த பாட்டையே பாடிட்டு இருக்க…” கொஞ்சம் கிண்டலாய்த்தான் கேட்டாள். தங்கையைக் அப்படியே பார்த்திருந்துவிட்டு, ”எனக்குப் பிடிச்சிருக்கு. அதுக்கு என்ன?” கண்மணி கேட்டிருக்கிறாள். நேற்று இரவு பேச்சோடு பேச்சாக செல்வி அதை அம்மாவின் காதில் ஒரு ஒரமாய் போட்டு வைத்தாள். ‘அதுக்கு என்ன?’ வார்த்தையில் இருந்த பிடிவாதம் உறுத்தியது.  

அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்து படுக்கவே முத்தையாவுக்கு பனிரெண்டு மணி ஆகிவிட்டது. கண்மணியிடம் அன்று அவன் எதுவும் பேசவில்லை என்பது சீனியம்மாவுக்கு கலக்கம் தந்தது. காலையில் மூன்று மணிக்கு எழுந்ததும் ”கண்மணி எந்திச்சிட்டாளா” என்றுதான் கேட்டான்.  

“அவ தூங்கினாத்தான எந்திரிக்க…”  சீனியம்மா முணுமுணுத்தாள்.  

அப்போதிலிருந்து மனைவியின் பரிதவிப்பை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். யோசனையாய் இருந்தது, தொழிற்சங்க அரங்கில் பெரும் கூட்டத்திற்கே நம்பிக்கையளித்து பேச முடிந்திருக்கிறது. கோரிக்கைகள் மீதான அவனது பேச்சின் சாதுரியத்தால் அரசு அதிகாரிகள் வார்த்தைகளின்றி போயிருக்கிறார்கள். தனி அறையில் அழைத்து மிரட்டிய தமிழ்நாட்டின் உளவுத்துறை அதிகாரியை சமாளித்த அவனது உரையாடல்கள் ஏழு வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் தோழர்களிடையே பிரபலமான சம்பவம். அப்பேர்ப்பட்டவனுக்கு இன்று பெரியவளாகி நிற்கும் தன் குழந்தையிடம்  என்ன பேசுவது,  எப்படி புரிய வைப்பது என்று குழப்பமாயிருந்தது.  

ரேஷன் கடையில் இருந்த இளமையின் ஆரம்ப காலங்களில் பெண்களை எப்படியெல்லாமோ பார்க்கத் தூண்டிய தன் கண்களை அவனுக்குத் தெரியும். அந்தக் கண்கள்தானே ஆட்டோ ஓட்டும் அந்த ஆண் பையனுக்கும் இருக்கும் என்ற உணர்வுதான் ’அட என் மகளே” என தலையில் அடித்துக் கொள்ள வைத்தது. ஆசையோடு ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்த அனுபவங்கள் அவனுக்கும் சில பெண்களிடம் அப்போதெல்லாம் இருக்கத்தான் செய்தன. அவை வெறும் ஆசைகள்தான். அதற்கும்  மேலே நகர்ந்து எந்தப் பெண்ணையும் அவன் காதலிப்பதாகக் கருதியதோ, கல்யாணம் செய்து கொள்ளத் தோன்றியதோ இல்லை. எந்தப் பெண்ணுக்காவது தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்குமா என்றும் தெரியாது. சினிமாத் தியேட்டர்களின் திரைகளில் பல கதாநாயகிகளை அவன் காதலித்துக் கொண்டு இருந்தான். கனவில் வந்து அவர்களும் அவனை காதலித்தார்கள். காதல், காமம் எல்லாம் பெரும்பாலும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தனிமையிலேயே வந்து சென்றன. இந்த ஆட்டோக்காரப் பையன் அப்படித் தெரியவில்லை.  

ஆரம்பத்தில் பட்டும் படாமல் மகளுக்கு பொதுவாக புத்திமதி சொன்னான். ‘நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்னு ரஜினி ஆடுனா ரசிக்கிறதோட நிறுத்திக்கணும்” என  சாதாரணமாகக் கிண்டல் கூட செய்தான். ப்ளஸ் டூவில் மதிப்பெண்கள் குறைந்ததும்தான் தாங்க முடியவில்லை. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு,  கண்மணியை அருகில் உட்காரவைத்து, ”மார்க்கெல்லாம் ஏன் குறைஞ்சுதுன்னு புரியுதா” அமைதியாகக் கேட்டான். ”உன்னோட கவனம் பாடத்தில இல்ல. அதனால குறையுது” அவனே பதிலும் சொன்னான். இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வுகள்தான் என்பதையும் நமக்குப் படிப்புதான் முக்கியம் என்பதையும்  திரும்பத் திரும்ப வலியுறுத்தினான். இதைக் கடந்து செல்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது, பார்த்துக்கொள் என எச்சரித்தான். அவள் கண்ணீர் வடியக் கேட்டுக் கொண்டிருந்தாள். இங்கிருந்தால் நினைப்பை பறிகொடுத்து விடுவாள் என்று திருச்செந்தூரில் போய் எஞ்சீனியரிங்கில் சேர்த்திருந்தான்.  

முத்தையாவுக்கு ஒரு விஷயம் உறுதியாய்த் தெரிந்தது. ஆட்டோ ஓட்டும் அந்த பையன் ஒருநாளும் இன்னொரு முத்தையாவாக முடியாது. தன் மகள் கண்மணி ஒருநாளும் இன்னொரு சீனியம்மாவாகி விடக் கூடாது. படிப்பு என்பது மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வாழ்க்கைதான் அவனுக்கு ஊட்டியிருந்தது.  

திருமணம் நடந்து சீனியம்மாவோடு குடும்பம் நடத்த ஆரம்பித்த பிறகு,  எத்தனையோ நாட்கள் அவளை இதே வீட்டில், தெருவில் போட்டு அடித்திருக்கிறான்.  பெண்ணைப் பற்றி எந்த மதிப்பும் அப்போது கிடையாது. கோபம் வந்தால் பேச்சே கிடையாது. அடிதான். நடுங்கித்தான் சாவாள் சீனியம்மா. வீட்டு வேலை செய்து கொண்டும், பிள்ளைகளை அணைத்துக் கொண்டும் புழுவைப் போல இந்த வீட்டில் துடித்து அழுத கோலங்கள் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன.  “ஏ… என்ன பெத்த அம்மா” நெஞ்சில் அடித்துக் கொண்டு ஓலமிட்டதை தெருவே கேட்டிருக்கிறது.  காட்டுப் பாதையில் கொளுத்தும் வெயிலில் எந்த பேச்சுமில்லாமல் தன் கல்யாணத்தை நிச்சயம் செய்தவள் அம்மாதானே.  

சாத்தூர் தனலட்சுமி தியேட்டரில் சின்னக் கவுண்டர் பகல் காட்சி பார்த்துவிட்டு குமரம்மாவும்  அவள் மகள் சீனியம்மாவும் பெரியகொல்லப்பட்டிக்கு வெயிலோடு திரும்பிக்  கொண்டிருந்தார்கள். தன் உறவுக்காரர்களை பார்க்க சுப்புத்தாய் பெரிய கொல்லப்பட்டிக்குச் சென்றுவிட்டு சாத்தூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  குமரம்மாவும் சுப்புத்தாய்யும் சின்ன வயதுத் தோழிகள். எதிர் எதிரே பார்த்து விசாரித்துக் கொண்டார்கள். தன் தோழியின் அருகில் நின்ற சீனியம்மாவை யாரென்று கேட்டிருக்கிறார் சுப்புத்தாய். ”தெரியலயா… உங்க மருமகா” என கிராமத்து வழக்கில் சொந்தம் வைத்து குமரம்மா சொல்லவும், ”எம் பையன் முத்தையாவுக்குத் தர்றியா” என சுப்புத்தாய் கேட்டிருக்கிறார். அங்கேயே நிச்சயமாகி இருக்கிறது. பெத்த கடனுக்கு மூன்று பவுண் நகை போட்டு சாத்தூர் பெருமாள் கோவிலில் கல்யாணத்தை நடத்தி குமரம்மா   தன் மகளை முத்தையாவோடு அனுப்பி வைத்தாள்.  

சீனியம்மாவையும் அவளது உலகையும் தெரிந்து கொள்ள முத்தையாவுக்கு பத்து வருடங்களுக்கும் மேல் வேண்டியிருந்தது. சங்கமும் கட்சியும்தான் அந்த அறிவைத் தந்திருந்தன. தன் வாழ்வில் சந்தித்த மேடுகளும் பள்ளங்களும், இருட்டும் வெளிச்சமும் அப்படியே யாருக்கும் வாய்க்காது எனத் தோன்றியது. அவனுக்கே சில நேரங்களில் அதிசயம் போலத் தோன்றும். வடமலைக்குறிச்சி பழனி ஒயின்ஸில் சரக்கு அடித்து விட்டு நட்ட நடு ராத்திரியில் மூப்பர் சமாதி மேல் உட்கார்ந்து சுருட்டு புகைத்துக் கொண்டு குறி சொன்ன அந்த சின்ன முத்தையா இந்த பெரிய முத்தையா எப்படி இருப்பான் என்று அறிந்திருந்தானா?  

கண்மணி காலேஜ்க்கு சென்ற பிறகும் சுப்பையாவோடு சேர்த்து பேச்சுக்கள் வந்தன. சொந்தக்கார மனிதர் ஒருவர் “விடுங்க முத்தையா. இன்னிக்கு உலகம் ரொம்பக் கெட்டுக் கிடக்கு. யாரையோ அவ லவ் பண்ணலயே. நம்ம இனத்துக்காரப் பையந்தானே” என்றபோது அப்படியே அந்தாளு செவிட்டில் ஓங்கி அறைய வேண்டும்போல் இருந்தது. கச்சேரி ரோட்டில் இருக்கும் சிபிஎம் ஆபிஸுக்குச் சென்றான்.  

கட்சித்தோழர் சீனிவாசன் ஆட்டோ ஒட்டும் சுப்பையாவை அழைத்து, “காதலுக்கு முத்தையாவும் சரி, நாங்களும் சரி, எதிரில்லாம் இல்ல. எத்தனையோ கல்யாணங்கள எங்க ஆபிஸ்லயே வச்சி நடத்தி இருக்கோம். பொண்ணு படிச்சு முடிக்கட்டும்னுதான் அவங்க அப்பா சொல்றாரு. முடிக்கட்டும். அப்ப முத்தையான்னு இல்ல, யாரு மறுத்தாலும் எங்கக் கிட்ட வா. பாத்துக்காலம்.” என தெளிவாகச் சொல்லியிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து பார்த்த போது ”பையங்கிட்ட பேசிட்டேன் தோழா. சரியாயிரும்னு நினைக்கேன்.” என்று சொல்லியிருந்தார். அதற்குப் பிறகு ஒரு மாதமாய் எந்தப் பேச்சும் வரவில்லை. இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது.  

பையைத் தூக்கிக் கொண்டு முன்னறைக்கு வந்த கண்மணி கட்டிலில் உட்கார்ந்தாள். தலைசீவிக் கொண்டிருந்த முத்தையா கவனித்தான். மகள் அப்படி இருப்பது என்னவோ போலிருந்தது.  அவளாக பேசுவதில்லை. கேட்டால் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் வரும். கொஞ்ச நாளாகவே அப்படித்தான் இருக்கிறாள். முன்பெல்லாம்  பார்வையும் பேச்சும் எவ்வளவு துடிப்பாகவும், பிரியமாகவும் இருக்கும். பார்த்ததும் “அப்பா”வென குழந்தையாய் ஓட்டிக் கொள்வாள்.  

மணி மூன்று பதினெட்டு காட்டியது. “எல்லாம் எடுத்து வச்சிட்டியாம்மா. கிளம்பலாமா?” அவள் பக்கம் திரும்பினான்.   

“ஆமாம்ப்பா… போலாம்.”  

”இருக்கங்குடி மாரியாத்தா, புள்ளைக்கு நல்ல புத்தி குடும்மா” பயபக்தியோடு குங்குமத்தை கண்மணியின்  நெற்றியில் வைத்துவிட்டு சீனியம்மா வாசல் கதவைத் திறந்தாள். திறந்ததும் தெருதான். முன்னால் கொஞ்சம் இடமோ, அடைப்போ கிடையாது. வெளியே இருட்டாய் இருந்தது. வாசல் விளக்கை போட்டாள்.  வீட்டுச் சுவரையொட்டி நிறுத்தியிருந்த சைக்கிளை தெருவில் கொண்டு வந்து நிறுத்தினான் முத்தையா. பையை முதுகில் போட்டுக் கொண்டு சைக்கிள் பின்னால் ஒரு பக்கமாய் கண்மணி உட்கார்ந்தாள்.  

“சீனி! சின்னவள எழுப்பி புறப்பட வை. திரும்பி வந்ததும் குளிச்சிட்டு அவளை கூட்டிட்டு நாமக்கல் போகணும்” சொல்லி சைக்கிளை அழுத்த ஆரம்பித்தான்.  

தெருமுனையில் திரும்பும் வரைக்கும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அம்மாவின் உருவம் தெரிந்தது. கண்மணி பார்த்துக்கொண்டே சென்றாள். போகும் வழியெல்லாம் சைக்கிளின் கிறீச் கிறீச் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. சாலைப்பணியாளராய் வேலைப் பார்த்த காலத்தில் வாங்கிய சைக்கிள் இது. பத்துப் பனிரெண்டு வருஷமிருக்கும். ரோடு இன்ஸ்பெக்டராகி, இந்த வருடம் ஜூனியர் எஞ்சீனியரானாலும் அப்பா அதே சைக்கிளைத்தான்  வைத்திருக்கிறார் என்பது அவ்வப்போது அவள் நினைவில் வந்து போகும்.  உன்னி உன்னி கால்கள் பெடலை அழுத்துவதை உணர முடிந்தது. “வேற வண்டி எதாவது வாங்குனா என்னப்பா?” கேட்க நினைத்து முடியாமல் போனது.  கண்கள் கலங்க ஆரம்பித்தன.  

டிடிகே சாலையில் ஏறியதும் முழுசாய் ஓளியோடு இருந்த நிலாவை மேற்குப் பக்கம் முத்தையா கவனித்தான். முன்னொரு காலத்தில் வெள்ளம் நிறைந்து ஒடிய கவுசிகா நதியின் மீதும் இந்த நிலா தெரிந்திருக்கும். இப்போது அந்தப் பகுதியெல்லாம் வேலிக்கருவேல மரங்களும், சாக்கடையும், இருட்டும் அடர்ந்திருந்தன. தண்டி தண்டியாய் யானை மாதிரியாய் குழாய்கள் தெரிந்தன. வானம் மட்டும் எப்போதும்  போல அழகாயிருந்தது. நிலா அந்த நேரத்தில் அபூர்வமாய்த் தெரிந்தது.  

‘அதிகாலை நிலா’ என்று  ராஜேஷ்குமார் ஒரு நாவல் எழுதியிருப்பதை முத்தையா கேள்விப்பட்டிருந்தான். படித்திருக்கவில்லை. வீட்டின் நிலைமையைப் பார்த்து ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு  ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குச் சென்ற போது அங்கிருந்த பழைய பேப்பர்களில் ராஜேஷ்குமாரின் கதையை முதன்முதலாக படிக்க ஆரம்பித்தான். பிடித்துப்போய் அவரது கதைகளை தேடித் தேடி படித்தான். சாத்தூரில் ராஜேஷ்குமாரின் பேரவை என்று சில நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பித்தான். அப்படி ஒரு காலமும் கதையும் உண்டு.  

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆள் நடமாட்டங்கள் இருந்தன. வெளிச்சமாகவும் இருந்தது. இங்கு எத்தனையோ இரவுகளில் பஸ்களுக்காக காத்திருந்திருக்கிறான். பஸ்களிலிருந்து இறங்கி ஊருக்குள் தனியே  நடந்திருக்கிறான். சாலைப்பணியாளர் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறான்.  அதிரும்படி பெரும் முழக்கங்களை எழுப்பியிருக்கிறான். தோழர்களோடு டீக்களாய் குடித்து பேசியிருக்கிறான். நேற்று கூட கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், “எல்லா மீடியாக்களும் மோடி மோடின்னுதான் காட்டுறாங்க. கார்ப்பரேட்களோடு  ஆர்.எஸ்.எஸும், பிஜேபியும் கூட்டு வச்சுக்கிட்டு அத்வானிய ஒரங்கட்டிட்டாங்க” என்று இங்கேதான் டீ குடித்தபடி சொல்லிக் கொண்டிருந்தார்.  

ரெயில்வே பீடர் ரோட்டில் போகும்போது அப்பாவின் கழுத்துப் பக்கம் அந்த நேரத்திலும் வேர்த்திருந்ததை கண்மணி கவனித்தாள். ஸ்டேஷனை அவர்கள் அடைந்த போது மணி சரியாக மூன்று முப்பத்தைந்து.  எப்படியும் டிரெயின் கால்மணி நேரம் லேட்டாகத்தான் பெரும்பாலும் வரும். டியூப் லைட்களோடு சிமெண்ட் தளமாய் நீண்டிருந்த பிளாட்பாரத்தில் அவர்கள் இருவர் மட்டுமே மெல்ல நடந்தனர். பக்கத்தில் தண்டவாளங்கள் மின்னிக்கிடந்தன. ஒன்றிரண்டு பேர் பெஞ்ச்களில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. சூட்கேஸைத் தலைக்கு வைத்து ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். ரெயில் வரும் திசையில் ஒரு வயதானவர் ஆழ்ந்திருந்தார். தூரத்துக் கம்பங்களில் சிவப்புப் புள்ளிகளாய் விளக்கு வெளிச்சம் ரெயில்வே ஸ்டேஷன் என்று சொல்லிக்கொண்டு இருந்தது.  

அப்பாவும் மகளும் ஒரு பெஞ்ச்சில் உட்கார்ந்தார்கள். சில வினாடிகள் அமைதியாய் இருந்த முத்தையா, “படிப்புல கவனம் செலுத்தும்மா. அந்தப் பையன நெனச்சிக்கிட்டு படிப்பு தொலைச்சிராத” என்றான்.  எத்தனையோ முறை அவளிடம் சொன்னதுதான். அதையேத்தான் திரும்பவும் சொல்லத் தோன்றியது.  

கண்மணி ஒன்றும் பேசவில்லை.  

“அந்தப் பையனப் பாத்து எதும் பேசினியா?”  

இல்லையென்பதாய் தலையாட்டினாள்.  

“பொய் சொல்ல வேண்டாம்மா. அப்பாவுக்கு கஷ்டமா இருக்கு. முந்தாநாள் உன்னையும், அந்தப் பையனையும் தெப்பக்குளம் பக்கம் பாத்துட்டு எங்க தோழங்க ரெண்டு பேர் சொன்னாங்க. வீட்டுல வச்சி பேசுறது சரியாத் தெரில. அதான் இங்க வச்சு கேட்டேன்.”  

கண்மணி தண்டவாளங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.  

“அப்பா அம்மாக் கிட்ட நீ சகஜமா பேசி ரொம்ப நாளாச்சு தெரியுமா?“  

அவள் தலைகுனிந்து கொண்டாள்.  

“தப்புச் செய்றவங்கதான் தலை குனிவாங்க. எம் பொண்ணு தலை குனியுறது  நல்லால்ல கண்மணி!”  

நிமிர்ந்து “அப்படில்லாம் இல்லப்பா. திரும்பத் திரும்ப அதப்பத்தி பேச வேணாமேன்னு பாத்தேன்…” இழுத்தாள். பத்தொன்பது வருஷமாய் அவளது ஒவ்வொரு அசைவையும் அறிந்தவனுக்கு அந்த முகத்தில் பிடிபடாமல் எதோ வேதனை அடைந்திருப்பது தெரிந்தது.  

”எம் பொண்ணு எனக்கு முக்கியம். அவ படிப்பு எனக்கு முக்கியம். நீ நல்லா படிக்குறவ. அதக் கெடுத்துக்காத. இந்த நாலு வருஷம் படிச்சு ஒரு டிகிரிய மட்டும் வாங்கிட்டு யாரை வேண்ணாலும் கல்யாணம் பண்ணிக்க.” தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டது போலிருந்தது முத்தையாவுக்கு.  

கண்மணி பையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தூரத்து சிவப்புப் புள்ளிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.  

செந்தூர் எக்ஸ்பிரஸ் அடுத்த சில வினாடிகளில் வரும் என்று அறிவிப்பு ஒலித்தது.  

“நாஞ் சொன்னது கேட்டுச்சா. படிச்சு முடிக்கிற வரைக்கும் காத்திருப்பியா?” கேட்டான்.  

அவளது கண்கள் கலங்கத் தொடங்கின. எழுந்து தன் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். முத்தையாவின் கண்களிலும் நீர் நிறைந்தது.  

டிரெயின் வரும் சத்தம் பக்கத்தில் கேட்டது.

*** 

முத்தையாவும் செல்வியும் பஸ்ஸில் துரையை நெருங்கி  போய்க்கொண்டு இருந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பி, “போன் அடிக்குதுப்பா” என்றாள் செல்வி.  

பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து பார்த்தான். அரசு ஊழியர் சங்கத் தோழர் சதாசிவம் அழைத்துக் கொண்டிருந்தார்.  

“வணக்கம் தோழர்..” என்று உற்சாகமாக சொன்னான்.  

வாக்கிங் போகும்போது சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் காலை ஐந்து மணிக்கு கண்மணியையும், இன்னொரு பையனையும் பார்த்ததாகவும், ராஜபாளையம் போகிற முதல் பஸ்ஸில் இருவரும் ஏறியதாகவும் சதாசிவம் சொல்லச் சொல்ல  விக்கித்துப் போனான். அப்போது தன் கையில் போன் இல்லையென்றும். வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சந்தேகத்தில் பேசுவதாகவும் சதாசிவம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் முத்தையா காதில் வாங்கவே இல்லை. முகத்தில்  அருளே இல்லாமல் போனது.  

‘அப்பாவ விட்டுட்டுப் போகப் போறோம்னுதான் என் கையப் பிடிச்சு அப்படி அழுதியா மகளே’ என்பதுதான் சிந்தனையாய் வந்தது.  

”என்னப்பா ஆச்சு. ஒரு மாரியா இருக்கீங்க…” கேட்டாள் செல்வி.  

“ஒன்னுமில்லம்மா. இது வேற..” என அவளது தலையை வருடினான் முத்தையா. 

திரும்பி ஜன்னல் வழியே வெளியுலகை பார்க்க ஆரம்பித்தாள் செல்வி.  

(தொடரும்)


  •  

சார்ஜ் ஷீட் 42/2021- 8ம் அத்தியாயம்

30.04.2021 அன்று மாலை 5 மணிக்கு பணி ஓய்வுக்கான கடிதத்தை நான் மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் கொடுத்துவிட்டு  கிளையிலிருந்து வெளிவந்த பிறகு மாலை 7.10 மணிக்கு மேல் என் மெயிலுக்கு ‘பணி ஓய்வை நிறுத்தம்’  (cessation) செய்து கடிதம் அனுப்பி இருந்தது. அந்தக் கடிதம் செல்லாது என்றுதான் அட்வகேட் கீதா அவர்கள் மூலம் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி சுந்தர் அவர்கள் 24.6.2021 அன்று அந்த செஷேஷன் ஆர்டருக்கு இடைக்காலத் தடை உத்தரவு (stay order) பிறப்பித்தார். ஆசுவாசமாய் இருந்து.  

பணி ஓய்வை நிறுத்தம் செய்த உத்தரவுக்கு தடை என்றால் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் தடை என்றே அர்த்தம். மிஸ்டர் ஜெயக்குமார் 7.6.2021 தேதியிட்டு அனுப்பிய விசாரணக்கான உத்தரவுக்கும் ( Enquiry Order ) தடையாகி விடும். மேற்கொண்டு விசாரணை நடத்தக் கூடாது. நாமக்கல் மேலாளர் மிஸ்டர் சந்திரனிடமிருந்து இனி கடிதம் வராது. அடுத்ததாக எனது ஓய்வு காலச் சலுகைகள் வழங்கப்படாது என்று செஷேஷன் ஆர்டரில் சொல்லப்பட்டதற்கும் தடை விதிக்கப்பட்டதாகவே அர்த்தம்.  பென்ஷன், கிராஜுவிட்டி உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.  

”இனி என் மீது விசாரணை நடத்தக் கூடாது என்றும், ”எனக்குரிய ஓய்வுகாலச் சலுகைகளை வழங்க வேண்டும்” எனவும் ஹைகோர்ட் ஆர்டரை இணைத்து நிர்வாகத்திற்கு 30.6.2021 அன்று கடிதம் எழுதினேன்.   

தொடர்ந்து சங்கத்தின் நடவடிக்கைகள் இருந்து கொண்டிருந்தன. கிராம வங்கியின் பங்குகளில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், ஸ்பான்ஸர் வங்கிகள் 35 சதவீதத்தையும், மாநில அரசுகள் 15 சதவீதத்தையும் வைத்திருந்தன. ஸ்பான்ஸர் வங்கிகள், மாநில அரசுகளின்  பங்குகளை மத்திய அரசே ஏற்றுக்கொண்டு, அனைத்து கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து தேசீய கிராமப்புற வங்கி அமைக்க வேண்டும் என்பதே அகில இந்திய சங்கம் ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏவின் கோரிக்கையாய் இருந்தது. மத்திய அரசோ தன்னிடமிருக்கும் 50 சதவீத பங்குகளையும் ஸ்பான்ஸர் வங்கிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஜூலை 9ம் தேதி சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கி தலைமையலுவலகத்தின் முன்பு தர்ணா நடத்த திட்டமிடப்பட்டது.  

அன்று காலை 6 மணிக்கு சாத்தூரிலிருந்து  நானும் சங்கரும் காரில் புறப்பட்டோம். ஓய்வுபெற்று 70 நாட்கள் கழித்து மீண்டும் சேலத்திற்கு பயணம். வலதுபுறத்தில் மரங்கள், கட்டிடங்களுக்கு மேல் சூரியன் வந்து கொண்டிருந்தது. சில பறவைகள் ஒன்று போல் வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அத்தனை நாளும் வீட்டில் அடைந்து கிடந்தவனுக்கு  விரிந்து பரந்த வெளி பேரனுபவமாய் இருந்தது. இளகிப் போனது மனமும் உடலும். வழியில் தோழர்கள் இம்ரான், அருண்பாண்டியன், ராஜராஜன், ஆறுமுகப்பெருமாள், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சேர்ந்து கொண்டனர். மாறி மாறிப் பேசி கலகலப்பாயிருந்தது. போகும் வழியில் கோவிட் தொற்றையொட்டி அங்கங்கு காவல்துறை தடுப்புகள் இருந்தன. கெடுபிடிகள் அவ்வளவாக இல்லை.  

சங்கங்களின் மீது நிர்வாகத்திற்கு இருந்த வன்மத்தையும் வெறித்தனத்தையும் பற்றி பேச்சு வந்தது. சங்கங்களுக்கு உறுப்பினர்கள் சந்தா செலுத்தும்  செக்-ஆப் முறையை ரத்து செய்ததையும், ஊழியர்களிடையே பயத்தை விதைத்து இருப்பதையும் பற்றி அவர்களின் கவலையும் கோபமும் வெளிப்பட்டது.   

எப்போதெல்லாம் சங்கங்களின் மீது நிர்வாகத்திற்கு பயம் வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடும் என்பதை விளக்கினேன். 2009ம் ஆண்டில் பாண்டியன் கிராம வங்கியில் மிஸ்டர் சுந்தர்ராஜ் சேர்மனாய் இருக்கும்போதும் இதுபோல் செக்-ஆப் ரத்து செய்யப்பட்டதையும், நீதிமன்றம் சென்று அதற்கு சங்கம் தடையுத்தரவு வாங்கியதையும் குறிப்பிட்டேன். ’நிர்வாகம் தாக்குதல் நடத்தும்போது, நாம் அதைத் தாங்கிக்கொண்டு நம் போராட்டக் குணத்தை இழந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதையும், எதிர்த்து நிற்பதையும் செய்து கொண்டே இருக்க வேண்டும். நிர்வாகம் ஒரு கொடிய மிருகம். அடங்கிப் போகாத நம் சிந்தனைகளாலும் தளராத நம் நடவடிக்கைகளாலும் அதனை நம் வழிக்கு பழக்க வேண்டும். அநீதியை எதிர்க்கும் நம் போக்கை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்’ என்றேன்.  

ஏ.ஐ.பி.ஓ.சி ( AIBOC )  சங்கத்துக்கு மிஸ்டர் செல்வராஜும், மிஸ்டர் ஜெயக்குமாரும் ஆதரவளித்துக் கொண்டிருப்பதையும் தோழர்கள் பேச்சில் புரிந்து கொண்டேன். போர்க்குணம் அற்ற, எப்படியாவது காரியம் சாதித்தால் போதும் என கொள்கையற்ற தலைவர்களை நிர்வாகத்துக்கு எப்போதுமே பிடிக்கும். அவர்கள் மீது மோசமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் நிர்வாகம் கண்டு கொள்ளாது. நம்மைப் போன்ற போர்க்குணமிக்க சங்கங்களின் வளர்ச்சியைத் தடுக்க அந்த சங்கத்தை பயன்படுத்தும். அவர்களும் அதில் குளிர் காய்வார்கள். ஒரு தொழிற்சங்கத்தின் இயல்பு கொஞ்சம் கூட ஏ.ஐ.ஓ.பி.சிக்கு கிடையாது என்றேன். சக தொழிற்சங்கத்துடன் கொள்கையில், நடைமுறைகளில் அதற்கு கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சக தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நிர்வாகம் தாக்குதல் நடத்தும்போது குறைந்த பட்சம் கண்டிக்கவாவது செய்ய வேண்டும். அதுதான் வர்க்க குணம். இங்கே நம்மீது நிர்வாகம் தொடுக்கும் தாக்குதல்களை அந்த சங்கம் கொண்டாடுவதைப் போல அவமானகரமானது இல்லை என்றேன்.  

பேச்சின் ஊடேயும், பேசாமல் இருந்த சமயங்களிலும் போகும் வழியில் பார்வை சென்று கொண்டிருந்தது. ஒன்றரை வருடங்களாய் இதே வழியில் எத்தனையோ முறை பயணம் செய்திருந்தேன். இதே போல் காலைகளில் இருட்டு விலகி, பொழுது ஆரம்பிக்கும் நேரங்களில் வண்டியோட்டி இருக்கிறேன். பழக்கமான, கவனத்தில் பதிந்த இடங்களைப் பார்க்கும்போது மனம் புன்னகை பூத்தது. நாமக்கல்லைத் தாண்டியதும் நினைவுகள் அடர்ந்தன. காலை பத்து மணிக்கு எதிரே உயரத்தில் பாலம் தெரியும் ஜனநடமாட்டம் அடர்ந்த சீலநாயக்கன்பட்டியை நெருங்கினோம். இடதுபக்கம் உயர்ந்திருக்கும் அந்த மலையைப் பார்த்தேன். சேலத்தின் வாழ்ந்த நாட்களை அதுதான் அடைகாத்துக் கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த சங்க அலுவலகத்திலிருந்தும் அந்த மலையைப் பார்க்க முடியும். கூடவே இருந்த மலை.  


நேரே அஸ்தம்பட்டியில் இருக்கும் தலைமையலுவலகம் சென்றோம். அந்த வளாகத்தின் முன்பகுதியில் அடர்ந்து இருந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாய் நின்றன. எதையோ இழந்தது போலிருந்தது.  வெயில் பளீரென்று அடித்துக் கிடந்தது. தோழர்கள் அறிவுடைநம்பி, அஸ்வத், பரிதிராஜா, அண்டோ, தங்கமாரியப்பன், லஷ்மி நாராயணன் மற்றும் பெஃபி தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.ராஜேந்திரன் போன்ற தோழர்கள் ஏற்கனவே வந்து இருந்தார்கள். உற்சாகத்துடன் வரவேற்று நலம் விசாரித்தார்கள். ”நீ எதுக்கு வந்தே மாது?  இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே” என காரைக்குடியில் இருந்து வந்திருந்த தோழர் சோலைமாணிக்கம் அக்கறையினால் கடிந்து கொண்டார்.  

முற்றிலும் புதிய தலைமையும், புதிய தோழர்களும் சங்கமாய்  திரண்டிருக்கும் அந்த காலக்கட்டத்தில், முன்வந்திருக்கும் கோரிக்கை குறித்த வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் தர்ணாவில் சொல்ல வேண்டும் என்றுதான் கலந்து கொண்டேன். அதுவரை ஸ்பான்ஸர் வங்கியின் எதேச்சதிகாரத்தை, அத்துமீறல்களை, அடாவடித்தனத்தையெல்லாம் சங்கம்  பேசியிருந்தாலும் முதன் முதலாக ’கிராம வங்கிகளை ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து துண்டிக்க வேண்டும்’ என ஒரு கோரிக்கை அப்போதுதான் எழுந்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நூறு தோழர்கள் போல கலந்து கொண்டனர்.  

1975ல் ஆரம்பிக்கப்பட்ட கிராம வங்கிகள் குறித்து ஒரு தெளிவான திட்டமும் வரையறையும் எப்போதும் மத்திய அரசுக்கு இருந்ததில்லை. 1981ல் அமைக்கப்பட்ட சிவராமன் கமிட்டியின் அறிக்கை, ‘வணிக வங்கியின் கிராமப்புற கிளைகளை கிராம வங்கிகளோடு இணைக்க வேண்டும்’ என்றது. வணிக வங்கி சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் அது நடைமுறைப்படுத்த முடியவில்லை. 1985ல் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி, ‘ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கிராம வங்கி’ என பரிந்துரை செய்தது. அதனை அமல்படுத்தும் விதமாக மே.வங்கத்தின் கௌர் கிராம வங்கியை இரண்டாக பிரிக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கௌர் கிராம வங்கியில்தான் ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ பொதுச்செயலாளர் தோழர் திலீப்குமார் முகர்ஜி ஏரியா மேலாளராக இருந்தார். சங்கத்தின் கடுமையான எதிர்ப்பினால் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு கமிட்டி அறிக்கைகள் வெளிவந்தன. 2005ல் ஒரு மாநிலத்தில் இருக்கும் ஒரே ஸ்பான்ஸர் வங்கியைக் கொண்டிருந்த கிராம வங்கிகள் இணைக்கப்படும் என அரசு அறிவித்தது. அப்படித்தான் தமிழ்நாட்டில் வள்ளலார் கிராம வங்கியும் , அதியமான் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியாக ஒன்றிணைக்கப்பட்டன.  2014க்குப் பிறகு ஒரு மாநிலத்தில் உள்ள கிராம வங்கிகள் ஒன்றிணைக்கப்படும் என அறிவிப்பு வந்தது. அதன்படிதான் 2019ல் பாண்டியன் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியும் தமிழ்நாடு கிராம வங்கியாக ஒன்றிணைக்கப்பட்டன. இனி அனைத்து மாநில கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து ‘தேசீய கிராமப்புற வங்கி’ அமைக்க வேண்டும் எனஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. மத்திய அரசின் பங்குகளையும் ஸ்பான்ஸர் வங்கிகளுக்கும் கொடுப்பது என்பது கிராமப்புற மக்களுக்கும், கிராம வங்கி ஊழியர்களுக்கும் முற்றிலும் எதிர்மறையான நடவடிக்கையாக இருக்கும் என்பதை எல்லாம் விவரித்தேன்.


இறுதியாக 35 சதவீத பங்குகள் இருக்கும்போதே ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து சேர்மனாய் வந்திருக்கும் செல்வராஜ் போன்றவர்கள் அதிகாரத்திமிர் கொண்டு நடத்தும் அராஜகங்களை பார்க்கிறோம். பங்குகள் 85 சதவீதமானால் என்னவாகும் என்பதை உணர்த்தி உரையை முடித்தேன்.  

”ரொம்ப அவசியமான, தெளிவான வரலாற்றைச் சொல்லியிருக்கீங்க  அண்ணே” என்று அண்டோ கால்பர்ட் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.  

தர்ணா முடிந்ததும் தோழர்கள் அறிவுடைநம்பி, அஸ்வத், அண்டோ கால்பர்ட், பரிதிராஜா ஆகியோர் தலைமையலுவலகத்திற்குள் சென்றனர். சேர்மன் செல்வராஜிடம் மெமொரெண்டத்தை கொடுத்திருக்கின்றனர். அவரும் அமைதியாக வாங்கிக் கொண்டு இரண்டு வார்த்தை பேசி அனுப்பி இருக்கிறார். இதுபோல் 1.3.2021 அன்றும் மிஸ்டர் செல்வராஜ் நடந்துகொண்டிருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. உள்ளே சென்ற ஓய்வு பெற்ற தோழர்களை மரியாதையில்லாமல் நடத்தியதில்தானே எல்லாப் பிரச்சினையும் என்று  பேசிக்கொண்டோம்.  

மதிய உணவு முடித்துவிட்டு சங்க அலுவலகம் சென்று பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சங்கத்தின் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். 2021 ஜனவரி 7ம் தேதி சேலத்தில் நடந்த மாநாட்டில் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி உதவித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஓய்வு பெறும் வரை சங்கப் பொறுப்பில் இருக்கலாம் என்பதை ஒரு விதியாகக் கொண்டிருந்தோம். அதையே நடைமுறையாகத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வந்தோம். ஓய்வு பெற்ற பிறகும் ஒருவர் சங்கப் பொறுப்பில் இருப்பது  அடுத்த தலைமையை வளர்க்காது. பணி ஓய்வு பெற்று இரண்டு மாதங்களாகி விட்டன. அதற்கு மேலும் பொறுப்பில் இருப்பது சரியல்ல என்றேன்.  

சார்ஜ் ஷீட் விவகாரம் முடிந்து, ஓய்வுகாலச் சலுகைகளை பெறுகிற வரை சங்கப் பொறுப்பில் இருக்க வேண்டுமென தோழர்கள் வலியுறுத்தினர்.  

“அப்படியானால் நிர்வாகத்தின் ‘பணி ஓய்வு நிறுத்தம்’ ( Cessation ) ஆர்டரை நாம் ஒத்துக் கொள்கிறோமா?” என்று சிரித்தேன். தோழர்களும் சிரித்தனர்.  

சிரித்துக் கடந்தாலும், சீக்கிரம் சங்கப் பொறுப்பில் இருந்து விடுபட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன். தேவைப்பட்டால் ஆலோசனைகள் சொல்வது வேறு, கூடவே இருந்து ஒவ்வொன்றிலும் தலையிடுவது வேறு.  

ஜூலை 14ம் தேதி சென்னை சென்று இரண்டு நாட்கள் தங்கி பெஃபி தலைவர்கள் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், ராஜகோபால் தோழர்களோடு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து நம் கோரிக்கைகளை கொடுத்து பேசுவது என்று திட்டமிடப்பட்டது. தோழர்கள் என்னையும் அழைத்தனர். ஒப்புக்கொண்டேன்.  

சேலத்திலிருந்து சாத்தூருக்குத் திரும்பும்போது சீலநாயக்கன்பட்டியில் அந்த மலையைப் பார்த்தேன். ‘மீண்டும் வருவேன்..” என சொல்லிக் கொண்டேன். நிர்வாகத்திற்கு நான் எழுதிய கடிதமும் நிர்வாகத்தின் மௌனமும் மனதிற்குள் ஒடியது. இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த சென்னை ஹைகோர்ட் வழக்கை எப்போது விசாரிக்கும் என்று தெரியவில்லை. வருடக்கணக்கில் இழுத்தடித்தால்… என யோசனையாய் இருந்தது. சென்னைக்குச் செல்லும்போது அட்வகேட் கீதா மேடம், தோழர்கள் சி.பி.கே,  ராஜகோபால் ஆகியோரிடம் ஆலோசிக்க வேண்டும்.  

(தொடரும்)  

1ம் அத்தியாயம்    2ம் அத்தியாயம்    3ம் அத்தியாயம்    

4ம் அத்தியாயம்    5ம் அத்தியாயம்    6ம் அத்தியாயம் 

7ம் அத்தியாயம்

  •  

டிராகன் - தமிழ் சினிமா


நிஜம் போலவும், அடுத்த நிமிடத்தில் காத்திருக்கும் ஆச்சரியங்களைக் கொண்டது வாழ்க்கை எனவும் சிலர் ’டிராகன்’ சினிமாவைப் பாராட்டி எழுதுவதை பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது.  

லவ் டுடே போல டிராகனும் 2கே கிட்ஸுக்கான படம் என்று வகைப்படுத்துவதும், டிரெண்ட் செய்வதும் ஒரு  விளம்பர யுத்தியாக மட்டும் தெரியவில்லை. ஆபத்தின் அறிகுறியாகவும் படுகிறது.  

ஒருவேளை தற்கொலை செய்ய முனையும் அந்த மாணவனைப் பற்றி ராகவன் அறிய நேராமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும்.? அப்படி என்ன தவறு செய்துவிட்டதாய் ராகவனின் கல்லூரிக் காதலிக்கு குற்ற உணர்ச்சி வருகிறது? என நியாயமான கேள்விகளாய் கேட்க ஆரம்பித்தால் – பிரின்ஸ்பாலாய் வரும் மிஸ்கின் சொல்வது போல அஸ்திவாரம் இல்லாமல் அடுக்கப்பட்ட கதை என்பது புலனாகும்.  

படிப்புதான் வாழ்க்கை என ப்ளஸ் டூ வரைக்கும் இருந்தவன் ஒரு பெண்ணால் பாதை மாறுகிறான்.  எல்லா பாடங்களிலும் அரியர்ஸாய் குவித்து  கெத்தாய் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடித்து காலேஜை விட்டு வெளியேறுகிறான். வேலைக்குப் போவதாய் வீட்டை ஏமாற்றி சிகரெட், மது, காதல் என மிதந்து கொண்டு இருந்தவனை தரையில் இறக்கிவிட்டு காதலி பிரிகிறாள். காதலி முன்பு வாழ்ந்து காட்ட மோசடி செய்து டிகிரி வாங்கி ஐ.டி கம்பெனியில் மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கிறான். பெரும் தொழிலதிபரின் மகளுக்கு நிச்சயம் ஆகிறது. போலி டிகிரியை தெரிந்து கொண்ட காலேஜ் பிரின்ஸ்பால் அவனை மீண்டும் காலேஜில் சேர்ந்து முந்தைய அரியர்ஸை கிளியர் செய்யுமாறு, செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய வழி சொல்கிறார். காதலியே அவனுக்கு லெக்சரராக வந்து காதலனை ஏமாற்றிய தனது முந்தைய பாவத்தை கிளியர் செய்ய அவனுக்கு உதவுகிறாள். அப்படியும் அவனால் முடியாமல் மீண்டும் மோசடி செய்கிறான். பரீட்சை பேப்பர் மாற்றப்பட்டு அவனால் ஒருவன் தற்கொலைக்குத் துணிகிறான். குற்றவுணர்ச்சி வாட்ட எல்லோர் முன்பும் தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்கிறான். ’முன்னேற ஆசைப்பட்டது உண்மை. இன்னொருவன் வாழ்க்கையை கெடுத்து விட்டு அல்ல” என்ற பஞ்ச் வசனம் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது.  

இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் குப்பையாய் கொட்டிவிட்டு, கடைசி 15 நிமிடங்கள் அந்த குப்பைகளை ஒதுக்கி அல்லது ஒளித்து வைத்து ’சுத்தமே சுகம்’ என நீதி சொல்லி முடித்திருக்கிறார்கள்.  

அறமற்ற, தார்மீக நெறியற்ற, மனிதாபிமானமற்ற, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது அன்பும் மரியாதையுமற்ற அருவருப்பான அலட்சியமான ஒருவனது நடவடிக்கைகளை  எந்நேரமும் காட்டி இயல்பாக்கி விட்டு, திடீரென உதயமாகும் ஞானத்தை அற்புதம் போலக் காட்டுகிறார்கள். குப்பையை கொட்டியதற்கும் மக்கள் குதூகலிக்கிறார்கள். சுத்தம் செய்வதையும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.  

ராகவனைப் பற்றிய உண்மை வெளியே தெரிந்துவிடக் கூடாது என பார்வையாளர்களின் மனநிலை உருவாக்கப்படுவதில் ’டிராகனின்’ ஆபத்து இருக்கிறது.

சின்ன பட்ஜெட்டில் உருவான ஒரு குட்டி டிராகன். 

  •  

சித்தி பெற்ற ஞானச் சுடர்!


அம்மா என்றால் அன்பு என்று ஒரு வரியில் அடக்கி விட முடியாத விஸ்வரூபம் திருமதி.ஞானாம்பிகை.  

அற்ப விஷயங்களில் ஈடுபாடு கொள்ளும், பிரச்சினைகளைக் கண்டு மிரளும் சாதாரண மனுஷியல்ல. நிதானம், நிதானம், அதன் பேர்தான் ஞானமோ என நினைக்கத் தோன்றுகிறது.  

என் சிறு வயதில் மற்ற பெண்களின் உரையாடல்களை கேட்கும்போது மிக இயல்பாகவும், எளிமையாகவும் குறிப்பாக சுவாரசியம் மிக்கதாகவும் இருப்பதாக எண்ணுவேன். அப்போதெல்லாம் நம் அம்மா ஏன் இது போன்ற உரையாடலை கையாளாமல் உளவியல் பூர்வமாகவும், காரண காரியங்களை ஆராய்ந்தும் பேசுகிறார் என ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. ஏன் அதில் ஒரு ஏக்கம் கூட உண்டு என்பேன். எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடாமல், எவராக இருந்தாலும் தன் மனதில் பட்டதை சொல்வதும், எதிர்வாதம் செய்வதும் அவரது இயல்பு. அம்மாவின் மேல் அப்பாவுக்கு ஈர்ப்பு ஏற்பட அம்மாவின் குணமே காரணமாக இருந்திருக்கும் என பின்னாளில் உணர்ந்தேன்.  

நான் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அம்மா பணியாற்றிய புரசைவாக்கம் - தற்போதைய அழகப்பா - ஸ்கூலில் படித்தேன். வீட்டுப்பாடம் எழுத வைக்க அம்மா என்னுடன் ஒரே போராட்டம்தான். வாய் மட்டும் நல்லா பேசுவேன். அம்மாவுக்கு திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் கழித்துதான் நான் பிறந்தேன். வடிவேலு டயலாக் மாதிரி ”அம்மா நான் குழந்தையாக உருவாவதற்கு எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா, அதனால் எனக்கு எதுவும் மெதுவாகத்தான் வரும்” என்றேன். எதையும் நகைச்சுவையாக எடுக்கத் தெரியாத அம்மா அதை மிகவும் ரசித்துவிட்டார்கள் போலும். நான் மறந்து போனாலும் சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தார்கள்.  

அம்மா ஒரு செகண்ட் கிரேட் டீச்சர் என்பதால் நான் பி.எட் முடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டார்கள் பி எட் முடிக்கவில்லை என்றால் நானே உனது திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று ஒரே போடாய் போட்டார்கள். வீட்டு அருகில் ஸ்டெல்லா மேரிஸில் சீட் கிடைத்தது. படித்து முடித்த பின்னரே திருமணம் நடந்தது.  

சில ஆண்டுகள் கழித்து அம்மா கண்டிப்பாக கரஸ்பாண்டன்ஸில் எம்.ஏ படிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்கள் ஒரு வழியாய்  எம்.ஏ முதலாம் ஆண்டு முடித்து விட்டேன். எனக்கு குழந்தை உண்டானதால் இரண்டாம் வருட தேர்வு எழுதாமல் விட்டுவிட்டேன். ”தற்காலத்தில் பெண்கள் பரிட்சை ஹாலின் வெளியே குழந்தையை படுக்க வைத்து விட்டு தேர்வு எழுத செல்கிறார்கள் நீ இதற்கு போய் எழுதாமல் விடுவாயா” என்று அம்மா கடிந்து கொண்டார்கள். எனக்கும் ரோசம் வந்து எம்.ஏ முடித்தேன். அதன் பயனை  விரைவில் உணர்ந்தேன். சாத்தூர் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1997லிருந்து 1999வரை  இரண்டு வருடங்கள் முதுகலை பட்டதாரி லீவு போஸ்ட்டுக்கு வேலை கிடைத்தது.  

அதே பள்ளியில் 2009ல் காலி இடம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு   வேலை கிடைக்க அதுவே உதவியாய் இருந்தது. இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை வழிநடத்தியது அம்மா!  

இன்று நான் யாருக்காவது அறிவுரை வழங்கும்போது என் அம்மா உள்ளிருந்து பேசுவதை உணர்கிறேன் படிப்பின் வாசனையை அறியாத, கல்வியின் பின்புலம் இல்லாத மாணவிகளின் தாயாய் என்னை ஆக்கிய பெருமை என் அம்மாவையேச் சேரும்.  அம்மாவை போன்ற ஒரு ஆளுமையை நான் இதுவரை பார்த்ததில்லை. மனதளவில் ஊறு விளைவிக்காத, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள். மனதில் பட்டதை போட்டு உடைப்பார்கள். தான் ஒரு வளைக்க முடியாத இரும்பு என்று எல்லோருக்கும் உணர்த்தியவர்கள்.  

அபசகுனமான மொழியில் பேசக்கூடாது என்பதில் அம்மா எப்போதும் கறாராக இருப்பார்கள். அம்மா வேலைக்குச் சென்று தன் காலில் நின்றாலும் தன் தேவைக்கு அதிகமாக வாங்கி குவித்ததில்லை. கஞ்சத்தனமாக இருந்ததும் இல்லை.  வீட்டில் வேலை செய்பவருக்கு அம்மாவின் மேல் அவ்வளவு பிரியம். எப்படி பிறரை கஷ்டப்படுத்தாமல் வேலை வாங்குவது என்பதை அம்மாவிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.  

எந்த வேலையையும் அலுப்புடனும் சலிப்புடனும் அம்மா செய்து நான் பார்த்ததில்லை. வீட்டில் அவ்வளவு பேருக்குமான சமையலை சுவையாகவும் நேர்த்தியாகவும் செய்ததை தினமும் எண்ணிப் பார்க்கிறேன். தன் உடல் வலிகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் எந்தவொரு வேலையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்.  

அம்மாவுக்கு கவிதை எழுதுவதிலும், வரலாற்று நாடகங்கள் எழுதுவதிலும் தனி ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய சில பாடல்களுக்கு அவரே மெட்டமைத்து பாடிக் காட்டுவார்கள். மிகவும் உயிரோட்டமாக இருக்கும். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாடகம் நடத்தினார்கள். அலெக்சாண்டருக்கும் போரசுக்கும் இடையே நடைபெறும் உரையாடல். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், ஜாக்சன் துரைக்கும் இடையே உள்ள அனல் பறக்கும் காட்சி போன்று அமைத்திருந்தார்கள். அதே போல் கொலம்பசின் கடற்பயணம் குறித்த நாடகம். அதில் பெரிய கப்பல் ஒன்றினை செய்து மேடையில் வைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக உள்ளது.  

சுயமரியாதையின் சொரூபம் எனலாம் அம்மாவை. பல பெரிய தலைவர்கள் மற்றும் அவர்களின் சுயசரிதைகளை படித்தவர்கள். கதைகளை விட  அறிவியல் சார்ந்த, உணர்வு பூர்வமான கட்டுரைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். படிப்பது,  அது குறித்து பேசுவது என்றுதான் அம்மாவின் உரையாடல் அமைந்திருக்கும். தனது நேரத்தை அவ்வளவு பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டவர்கள்.  

சுய பச்சாதாபம் அல்லது தற்பெருமை பேசும் பெண்களுக்கிடையில் அவர் ஒரு சித்தி பெற்ற ஞானச் சுடர்.

( மணிவிழா மலரில் தன் அம்மாவைப் பற்றி இணையர் காதம்பரி எழுதியது )

  •  

சார்ஜ் ஷீட் 42/2021- 7ம் அத்தியாயம்


மிஸ்டர் செல்வராஜ் தலைமையிலான தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் அடுத்து என்ன செய்யும் என்பதை அறிந்தே இருந்தோம். அப்படியே நடந்தது. ஜூன் 10ம் தேதி ஒரு பதிவு தபால் சாத்தூர் குயில் தோப்பிற்கு வந்தது. ஹெச்.ஆர்.டிபார்ட்மெண்ட் முதன்மை மேலாளர் மிஸ்டர் ஜெயக்குமார் கையெழுத்திட்டிருந்தார்.  அவர்தான் ஒழுங்கு அதிகாரி! (Disciplinary Authority) ஜூன் 7ம் தேதியிட்ட கடிதம் அது. அதாவது நான் சார்ஜ் ஷீட்டிற்கு பதிலளித்த பின்னர் ஏறத்தாழ இரண்டு மாதம் கழித்து என் பதில் மீதான நிர்வாகத்தின் கடிதம்.  

“30.3.2021 தேதியிட்ட சார்ஜ் ஷீட்டிற்கு மிஸ்டர் மாதவராஜ் அனுப்பிய கடிதம் என் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. சார்ஜ் ஷீட்டில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளையும், அந்த குற்றச்சாட்டிற்கு அடிப்படையான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படித்தேன். குற்றச்சாட்டுகளையும் அதற்குரிய பதிலையும் ஆராய்ந்து பார்த்ததில், அந்த பதில் ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை. எனவே தமிழ்நாடு கிராம வங்கி பணியாளர் விதிகளின்படி, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்.”  


அதற்கு மேல் கடிதத்தைப் படிக்காமல் எழுந்து உட்கார்ந்தேன்.  கொரோனா வைரஸிலிருந்து மீண்டு, உடல் மெலிந்து, அசதியில் துவண்டு போயிருந்ததை எல்லாம் மீறிய வீம்பு ஜிவ்வென்றிருந்தது.  

முதலில் குற்றச்சாட்டுகளே ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லையே. சார்ஜ் ஷீட் என்பது குழப்பமில்லாமல் தெளிவாகவும், தேவையான விபரங்களோடு இருக்க வேண்டும் என்பதுதான் விதி. (In Disciplinary proceedings, a charge sheet should not be vague. It should be clear and specific with all relevant details.) அப்படி எந்த விபரங்களும் சார்ஜ் ஷீட்டில் இல்லை.  

முதலாவதாக, 1.3.2021 அன்று ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சிலரோடு நான் தலைமையலுவலகத்தில் முரட்டுத்தனமாகவும் அநாகரீகமாகவும் நுழைந்ததாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் நுழைந்தார்கள் என்ற விபரம் இல்லை. யார் யார் என்று பெயர்கள் இல்லை. முரட்டுத்தனமாக என்றால் எப்படி? யாரையாவது தள்ளிவிட்டு அல்லது எதையாவது போட்டு உடைத்துவிட்டு நுழைந்தோமா? அது குறித்த விபரம் இல்லை. அப்புறம்  அநாகரீகமாக என்றால்?  சட்டை கிட்டை போடாமலா உள்ளே நுழைந்தோம்? குழப்பமாக இருக்கிறதா இல்லையா?  

இரண்டாவதாக, அலுவலகத்திற்குரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் நிறுவனத்தின் கண்ணியத்தை சீரழித்து விட்டீர்கள் என்று  குற்றச்சாட்டு. என்னய்யா அந்த அலுவலகத்திற்குரிய ஒழுக்கம்? அதை முதலில் சொல்ல வேண்டாமா? அதில் எதை கடைப்பிடிக்கவில்லை, எப்படி மீறினார்கள் என்று சொல்ல வேண்டாமா? ஒரு மண்ணாங்கட்டியும் சொல்லாமல் நிறுவனத்தின் கண்ணியத்தை குலைத்து விட்டீர்கள் என்றால் எப்படி புரிந்து கொள்வது?  

மூன்றாவது தலைமையலுவலகதிற்குள் சத்தம் போட்டு, சேர்மன் கேபின் முன்னால் சலசலப்பை ஏற்படுத்தினோம் என்று குற்றச்சாட்டு.  என்ன சொல்லி சத்தம் போட்டார்கள், என்ன வார்த்தைகளை உபயோகித்தார்கள் என்று சொல்லப்பட வேண்டாமா? அந்த விபரங்களைச் சொன்னால்தான் மனிதர்களைக் குறிப்பதாக அர்த்தம். வெறுமனே சத்தம் போட்டார்கள், சலசலப்பை ஏற்படுத்தினார்கள் என்றால் உள்ளே சென்றவர்கள் எல்லாம் ஆடு மாடுகளா?  

கடைசியாக தலைமையலுவலகத்தில் சேர்மன் வெளியே செல்லும்போது  வழி விடாமல் தடுத்தீர்கள் என்றும் தலைமையலுவலக ஊழியர்களின் நடமாட்டங்களுக்கு இடையூறு செய்தீர்கள் என்றும் குற்றச்சாட்டு.  வழி விடவில்லை என்றால் எந்த வழி என்று குறிப்பிட வேண்டும். யார் யாரெல்லாம்  வழிவிடவில்லை என பெயர்களை தெரிவிக்க வேண்டும். எந்த தலைமையலுவலக ஊழியர்கள் நடமாடமுடியாமல் இடையூறு செய்யப்பட்டார்கள் என்று அவர்களது பெயர்களையும் தெரிவிக்க வேண்டும். எல்லோரும் பெயரற்ற அநாமதேயங்களா?  

இதையெல்லாம் விட மிகப் பெரிய கூத்து ஒன்றும் நடந்திருந்தது. ’கீழ்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவைகளை இங்கே இணைத்திருக்கிறோம்’ என்று சார்ஜ் ஷீட்டோடு இரண்டு ஆவணங்களை இணைத்திருந்தார்கள். ஒன்று, இதே குற்றச்சாட்டுகளோடு நிர்வாகத்திலிருந்து 10.3.2021 அன்று எனக்கு விளக்கம் கேட்டு பொதுமேலாளரிடம் இருந்து வந்த கடிதம்! இரண்டாவது, அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து 16.3.2021 அன்று நான் எழுதிய பதில் கடிதம்!  அவைகளா அடிப்படை ஆவணங்கள் (basic documents)? எதாவது அடிப்படை அறிவு இருக்கிறதா இதில்?  

1.3.2021 அன்று தலைமையலுவலகத்தில் நடந்த விஷயங்கள் குறித்து யாராவது புகார் அளித்திருந்தால் அந்த ஆவணத்தை இணைக்கலாம். அல்லது எதாவது விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அப்படியொரு விசாரணை நடந்திருந்தால் அதன் அறிக்கையை  ஒரு அடிப்படை ஆவணமாக இணைக்கலாம். அதை விட்டு விட்டு ஏற்கனவே விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பிய கடிதத்தையும், அதற்கு நான் கொடுத்த பதிலையுமே அடிப்படை ஆவணங்களாக தாக்கல் செய்வதெல்லாம் ’செக்குன்னு தெரியாம, சிவலிங்கம்னு தெரியாம நக்குன நாய்’ கதைதான்.  

இப்படியெல்லாம் சட்ட விதிகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கை நெறிமுறைகளுக்கும் முற்றிலும் விரோதமாக குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு, ’கவனமாக படித்தேன்’, ’எல்லாவற்றையும் ஆராய்ந்தேன்’, ‘பதில் ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லை’ என்று யோக்கிய சிகாமணியாய் எழுதுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். நாடி நரம்பெல்லாம் பொய்யும் பித்தாலாட்டமும் நிறைந்தவர்களால்தான் அது முடியும்.  

நான் ரிடையர் ஆவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் தலைமையலுவலகத்தில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிந்த தோழர்கள் வரதராஜப் பெருமாளும், சௌந்திர நாகேஸ்வரனும் பணி ஓய்வு பெற்றார்கள். மார்ச் 28, ஞாயிறு  அன்று அவர்கள் இருவரும் தலைமையலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மதிய விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பாண்டியன் கிராம வங்கியிலிருந்தே நல்ல பழக்கம் என்பதால் என்னையும் அழைத்து இருந்தார்கள். இருவரின் அன்பிற்காக கலந்து கொண்டேன். சேர்மன் உட்பட அனைவரும் வந்திருந்தனர். நம் சங்கத் தோழர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது மிஸ்டர் ஜெயக்குமார் என்னருகில் வந்து ”அடுத்த மாதம் உங்கள் பணி ஓய்வையும் கொண்டாடிவிடுவோம்” என்று சிரித்தார். அதற்கு இரண்டு நாள் கழித்து 30.3.2021 அன்று எனக்கு சார்ஜ் ஷீட் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார். அப்பேர்ப்பட்டவர் அவர்!  

மீண்டும் கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். என் மீது விசாரணை நடத்த, அப்போதைய நாமக்கல் மண்டல மேலாளர் மிஸ்டர் சந்திரனை விசாரணை அதிகாரியாக (Enquiry Officer) நியமித்திருந்தார். நிர்வாகத்தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கும் அதிகாரியாக (Presenting Officer) மிஸ்டர் திருமூர்த்தியை நியமித்திருந்தார்.  

இனி மிஸ்டர் சந்திரனிடமிருந்து விரைவில் ஒரு கடிதம் வரும். எந்த தேதியில் எங்கு வைத்து விசாரணை என்பதைக் குறிப்பிட்டு அதில் அழைப்பு விடுக்கப்படும்.  

நமது இரு சங்கத் தலைமைக்கும், பெஃபி தமிழ்நாடு தலைவர்கள் தோழர் சி.பி.கிருஷ்ணன், தோழர் ராஜகோபால் ஆகியோருக்கும் தெரிவித்தேன். அட்வகேட் கீதா அவர்களுக்கு மெயில் அனுப்பினேன். சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுக்க  அஃபிடவேட் நகலை கீதா மேடம் மெயிலில் அனுப்பி்யிருந்தார்கள். அதை இறுதிப்படுத்தியாகி விட்டது. ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்திருந்தார்கள்.  ஆன்-லைனில்தான் ஹியரிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  

விரைவில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றொரு பேச்சு எழுந்து கொண்டிருந்தது. அப்போது ஆன்–லைனில் வழக்கு நடைபெறுமா எனத் தெரியவில்லை.  2020ல் இருந்ததை விடவும் 2021ல் தொற்று தீவீரமாக இருப்பதாக டிவிகளில் கவலையோடு பகிர்ந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட்ட தெரிந்தவர்கள் அனைவருக்கும் தொற்றின் பாதிப்பு வந்து போய்க்கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள், நம்மோடு பணிபுரிந்த தோழர் வேதமுத்து, தோழர் அந்தோணி மரியராஜ், தற்காலிக ஊழியர் பிரசாத், ஆகியோரின் உயிரிழப்புகள் சூழலின் தீவீரத்தை உணர்த்தின. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் லீவு கிடைக்காமல் வேலை பார்த்து இறந்து போன புதுவை பாரதியார் கிராம வங்கி ஆபிஸர் சங்கத்தைச் சேர்ந்த 37 வயதனான தோழர் நாகலிங்கத்தின் சிரித்த முகம் இன்னும் எதையோ சொல்லிக்கொண்டே இருக்கிறது. துயரங்களைக் கூட வெளிப்படுத்த முடியாமல் முடங்கிப் போயிருந்த காலம். எப்போது மனிதர்களின் முகங்களை மீண்டும் புன்னகையோடு பார்க்கப் போகிறோம் என ஏக்கங்கள் அடர்ந்தன.  

நிர்வாகம் வழக்கம் போல் ஈவிரக்கமில்லாமல் இருந்தது. ஊழியர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தாமல் பழிவாங்கும் போக்கை தீவீரப்படுத்திக் கொண்டிருந்தது. 1.3.2021 அன்றைய சம்பவத்திற்காக நிர்வாகம் ஓய்வு பெற்ற தோழர்கள் மீதும் பாய்ந்திருந்தது. சோலைமாணிக்கம், கிருஷ்ணன், சுப்பாராமன் ஆகியோருக்கும் குற்றச்சாட்டுகளை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. பென்ஷனை நிறுத்த வேண்டும் என்ற வெறி சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்துக்கு இருந்திருக்க வேண்டும். தோழர்கள் சோலைமாணிக்கமும், கிருஷ்ணனும் அதற்கு பதில் கொடுத்து விட்டனர். உடல்நலம் இல்லாத உறவினரைக் கவனித்துக் கொண்டிருந்த தோழர் சுப்பாராமன் உரிய நேரத்தில் பதில் அளிக்கவில்லை. அவருக்கு மாறி மாறி கடிதங்களை நிர்வாகம் அனுப்பிக் கொண்டிருந்தது. தங்கள் பாதுகாப்பு கருதி கிளைகளில் இருந்து ஊழியர்கள் அனுப்பும் கடிதங்களின் மீது உரிய நேரத்தில் பதில் அளிக்காத நிர்வாகம், பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டும் வேகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.  

கணுவாய் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த தற்காலிக ஊழியர் முத்து லட்சுமியின் மரணம் தாங்க முடியாத துயரத்தைத் தந்தது. கோவிட் தொற்று தீவீரமாய் இருந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி அவரை வேலைக்கு வர வேண்டாம் என அந்தக் கிளையின் மேலாளர் வெளியே அனுப்பி விட்டார். சங்கத்திலிருந்து மிஸ்டர் ஜெயக்குமாரிடம் பேசினோம். கண்டு கொள்ளவே இல்லை. நாம் ரீஜினல் லேபர் கமிஷனரிடம் முறையிட்டோம். சேலத்தில் ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. நானும் தோழர் அறிவுடைநம்பியும் சங்கத்தரப்பில் சென்றோம். மிஸ்டர் ஜெயக்குமார் நிர்வாகத்தரப்பில் வந்தார். ”இந்த கொரோனா நேரத்தில் வெளியே அனுப்பினால் அந்த ஊழியர் என்ன செய்வார், அவரை பணிக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்” என ரீஜினல் லேபர் கமிஷனர் சொல்லிப் பார்த்தார். மிஸ்டர் ஜெயக்குமார் கேட்கவே இல்லை.  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதன் மீது மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்து லேபர் கோர்ட்டில் விசாரணை ஆரம்பிக்க சாதாரண காலங்களிலேயே நான்கைந்து மாதங்கள் ஆகும். கொரோனா நேரத்தில் கேட்கவா வேண்டும்?  தோழர் முத்து லட்சுமி அவ்வப்போது போன் செய்து கேட்பார்கள். நான் எதாவது நம்பிக்கையளித்து பொறுமையாய் இருக்கும்படிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். நெஞ்சடைத்துப் போய் ஒருநாள் அவரும் காலமானார். ”மாதவராஜ் சார்” என அழைக்கும் அந்தக் குரல் நினைவிலேயே இருந்தது. நம்பிக்கையான செய்தி என்னிடம் இருந்து வரும் என காத்திருந்து காத்திருந்து காணாமலேயே போய்விட்டது. நிர்வாகத்துக்கும், மிஸ்டர் ஜெயக்குமாருக்கும் அந்த வலி என்னவென்று தெரியுமா?  


பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர் என்பதால் மாதவராஜால் கேள்வி கேட்க முடிகிறது. சட்டப்படி நிர்வாகத்தை எதிர்த்து நிற்க முடிகிறது. தோழர் முத்து லட்சுமியின் நிலைமை? ’அடித்தால் கேள்வி கேட்க ஆள் இல்லாத அனாதையே’ என்ற விதத்தில்தானே அந்த கிளை மேலாளர்  அவரை வேலையிலிருந்து ஒரே நாளில் வாய்மொழி உத்தரவு மூலம் வெளியேற்றினார்? அப்படித்தானே அவரை மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ள மிஸ்டர் ஜெயக்குமார் இரக்கமே இல்லாமல் மறுத்தார்? தற்காலிக ஊழியர்களுக்கு இந்த வாழ்க்கை கொடுமையானதாகவும், நரகமாகவும் இருக்கிறது. வாழ்வில் என்றேனும் ஒரு நல்ல நாள் வருமென எல்லாரையும் போல் அவர்கள் காத்திருக்கிறார்கள்.  

யோசித்துப் பார்க்கும்போது உலகில் எல்லோருமே தங்களுக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பது போலவே தெரிந்தது.  

எனக்கு அந்த நாள் 2021 ஜூன் 24ம் தேதியாக வந்தது போலிருந்தது.  

(தொடரும்) 

1ம் அத்தியாயம்    2ம் அத்தியாயம்    3ம் அத்தியாயம்    

4ம் அத்தியாயம்    5ம் அத்தியாயம்    6ம் அத்தியாயம்

  •  

சார்ஜ் ஷீட் 42/2021- 6ம் அத்தியாயம்


கொரோனாத் தொற்று ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலும் வெளியே அலைந்து கொண்டுதான் இருந்தேன். வாரா வாரம் சாத்தூரிலிருந்து சேலத்திற்கு, அங்கிருந்து தினமும் மின்னம்பள்ளி கிளைக்கு, அப்புறம் சேலத்தில் கடைவீதிகளில் என  பயணங்களும் நடமாட்டங்களுமாய்த்தான் இருந்தன. மாதத்திற்கு ஒருமுறையாவது இருபது பேருக்கு மேல் தோழர்கள் சங்க அலுவலகத்தில் கூடி விவாதித்தோம்.  அப்போதெல்லாம் எட்டிப் பார்க்காத வைரஸ், பணி  ஓய்வு பெற்று வீட்டில் இருந்த இரண்டு வாரங்களுக்குள் நுழைந்து விட்டது. சுறுசுறுப்பாய் தன்னை மறந்து வேலைகளில் கவனம் செலுத்தும்போது கிருமிகள் நெருங்குவதில்லை. சும்மா இருக்கும்போதுதான் அவைகளுக்கு தொக்காகி விடுகிறோம்.  

அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் அப்படியொரு அசதி. கணகணவென்றிருந்தது. இட்லியைக் கூட சாப்பிட முடியவில்லை. ஒரு வேகத்தோடு  திமிறி உட்கார்ந்து அட்வகேட் கீதா கேட்டிருந்த ஆவணங்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.  

1.3.2021 தர்ணாவுக்கு நான் அனுப்பிய லீவு லெட்டர், 10.3.2021 அன்று பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பிய கடிதம், 16.3.2021 அன்று நான் விளக்கம் அளித்து அனுப்பிய பதில் கடிதம், 30.3.2021 அன்று ’எனது பதில் திருப்திகரமாக இல்ல என்று நிர்வாகம் அனுப்பிய சார்ஜ் ஷீட், 12.4.2021 அன்று நான் அனுப்பிய சார்ஜ் ஷீட்டிற்கான பதில், 30.4.2021 அன்று மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் மாலை 5 மணிக்கு “ஓய்வு பெறுவதாக’ நான் கொடுத்த  கடிதம், 30.4.2021 அன்று அதே நாள் மாலை 7.36 மணிக்கு நிர்வாகம் அனுப்பிய மெயில், 3.5.2021 அன்று ஓய்வுகாலச் சலுகைகள் கேட்டு பொது மேலாளருக்கு நான் எழுதிய கடிதம், 15.5.2021 அன்று செஷேஷன் செல்லும் என்றும் விரைவில் என்கொயரி நடக்கும் என்றும் பொது மேலாளரிடம் இருந்து வந்த கடிதம், தமிழ்நாடு கிராம வங்கி ஸ்டாஃப் ரெகுலேஷன்ஸ் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

நிர்வாகத்தின் பொய்களும், பித்தலாட்டமும் அந்த ஆவணங்களில் இருந்து கீழே உதிர்ந்து கொண்டிருந்தன.  

9.3.2021 அன்று நாமக்கல் ரீஜினல் மேனேஜர் சந்திரன் மின்னம்பள்ளி கிளை மேலாளருக்கு  ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ‘1.3.2021 அன்று ஓய்வு பெற்றோர் சங்கம் நடத்திய தர்ணாவில் நான் கலந்து கொண்டதாகவும் அதனால் ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ (No work, No Pay)  என்னும் விதியின் அடிப்படையில் 1.3.2021 அன்று என் லீவு மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். சார்ஜ் ஷீட் அனுப்பப்பட்ட ஆறு தோழர்களுக்கும்  இதுபோல தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் மாத ஊதியத்தில் பிடிக்கவும் செய்திருந்தார்கள். அப்படிச் செய்தது முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் முதல் கோணல் அதுதான்.  

ஒரு ஊழியருக்கு ஊதிய வெட்டு அல்லது சம்பளப்பிடித்தம் செய்ய வேண்டுமென்றால், முதலில் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் எழுத்து பூர்வமாக  தகுதி வாய்ந்த அதிகாரி (competent authority) விளக்கம் கேட்க வேண்டும். அவர் பதில் அளித்த பின்பு, தகுந்த காரணங்களோடு அதை மறுத்து, ஊதிய வெட்டு செய்யப்போவதை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.   நிர்வாகம் அப்படிச் செய்யவில்லை. செய்தது எல்லாம் சட்டத்துக்கு புறம்பானது.  

முதலில் ரீஜினல் மேனேஜர் அந்த ‘தகுதி வாய்ந்த அதிகாரி’ இல்லை. ஹெச்.ஆர் துறையின்  முதன்மை மேலாளர் மிஸ்டர் ஜெயக்குமார்தான் ‘தகுதி வாய்ந்த அதிகாரி’.  

இரண்டாவது சம்பந்தப்பட்ட ஊழியருக்கு தெரிவிக்கவே இல்லை. கிளை மேலாளருக்குத்தான் தெரிவிக்கப்பட்டிருந்தது.    

மூன்றாவது, ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்னும் விதியின் கீழ் ஊதிய வெட்டு அமல்படுத்துவதாய் இருந்தால், ’1.3.2021 தர்ணா சட்டவிரோதமானது, அதில் ஊழியர்கள் கலந்து கொண்டால் ஊதிய வெட்டு அமல்படுத்தப்படும் ‘ என தொழில் தகராறு சட்டத்தின்படி முன்கூட்டியே நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தர்ணாவை அப்படி வகைப்படுத்தவும் முடியாது.  

செய்ததையெல்லாம் குளறுபடியாகவும், தான்தோன்றித்தனமாகவும் செய்து விட்டு சார்ஜ் ஷீட்டில் முழுப் பூசணிக்காயை நிர்வாகம் மறைத்திருந்தது.  

’1.3.2021 அன்றைய லீவு என்பதை ‘தகுதி வாய்ந்த அதிகாரியிடம்’ முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, முறைப்படி அவரிடம் அனுமதி பெறவில்லை. அதிகார பூர்வமற்ற முறையில் தர்ணாவில் கலந்து கொண்டீர்கள்’ என்றுதான் முதல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது!  

No work No Pay,  மண்டல மேலாளரின் கடிதம், ஊதிய வெட்டு என்று நடந்த நிகழ்வுகளுக்கு முற்றிலும் மாறாக வேறு ஒரு கதையை ஜோடித்திருந்தது. அதாவது சொல்லாமல் கொள்ளாமல் சங்கத் தலைவர்கள் 1.3.2021 தர்ணாவில் கலந்து கொண்டார்களாம்.  

’No work No Pay’ என்று தாங்கள் முதலில் ஜோடித்த கதையைச் சொன்னால், தங்கள் செவிட்டிலேயே ஹைகோர்ட் ஓங்கி அடிக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சேர்மன் ரூமில் உட்கார்ந்து ’திட்டம் இரண்டை’ கையிலெடுத்திருக்க வேண்டும். முதன்மை மேலாளர்  ( Chief Manager)  ஜெயக்குமாரின் மூளை அபாரமான ஆற்றல் கொண்டது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அவர்.  

அந்த பித்தலாட்டமும் செல்லாமல் போயிருந்ததுதான் சுவாரசியம்.  

தர்ணா நடந்த 1.3.2021 அன்றைக்கு மட்டும் ஒருநாள் லீவு என நான் கேட்டிருக்கவில்லை. அடுத்தநாள் 2.3.2021க்கும் சேர்த்து இரண்டுநாள் கேஷுவல் லீவு கேட்டிருந்தேன். 2.3.2021 அன்று சென்னையில் ரீஜினல் லேபர் கமிஷனர் முன்பு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை  இருந்தது.  

ஆனால் 1.3.2021க்கு மட்டும்தான் மார்ச் மாதத்தில் எனக்கு சம்பளவெட்டு செய்யப்பட்டு இருந்தது. 2.3.2021க்கு ஊதியம் கொடுக்கப்பட்டு விட்டது. சார்ஜ் ஷீட்டில் கூறியுள்ளபடி முன்கூட்டி லீவு தெரிவிக்கப்படவில்லை, உரிய அனுமதி பெறவில்லை என்றால், நான் அனுப்பிய ஒரே கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும்  இரண்டு நாட்களுக்கும்  லீவு மறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் ஒருநாளுக்கு ஊதிய வெட்டும், இன்னொரு நாளுக்கு ஊதியமும் எப்படி கொடுக்க முடியும்? ஒரே கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் லீவில் ஒருநாள் அதிகாரபூர்வமற்றதாகவும் அடுத்தநாள் அதிகாரபூர்வமானதாகவும் எப்படி கருத முடியும்?  

அந்த காய்ச்சல் நேரத்திலும் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. ஒருவேளை என்கொயரி நடந்தால் நம் கேள்விகளுக்கு எங்கு போய் முகத்தை வைத்துக் கொள்வார்கள் என நினைத்துப் பார்த்தேன். அட்வகேட் கீதா அவர்களிடம் என் லீவு லெட்டர் பற்றி குறிப்பிட்டேன். அவர்களும் சிரித்துக் கொண்டே, “சட்டத்தைப் பத்தியெல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல மாது. எதாவது செஞ்சு உங்களை தண்டிக்கணும், உங்களுக்கு வலிக்கணும். ஆனா நீங்க இப்படி சிரிக்கிறீங்க. என்றார். அந்த லீவு லெட்டர் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் அனுப்பி வைக்கச் சொன்னார். எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து மெயில் பண்ணிவிட்டுத்தான் எழுந்தேன்.  

டாக்டரைப் போய் பார்க்கச் சொன்னாள் அம்மு. பிரியா கார்த்தியிடம் போனில்  சொன்னேன். அப்போதுதான் கொரோனாவில் அவதிப்பட்டு அவனும் சரியாகி இருந்தான். ஆனாலும் வீட்டுக்கு வந்து விட்டான்.  ”இரண்டு வேள பாரசிட்டாமல் மாத்திரயப் போட்டு பாருங்க, அப்படியும் காய்ச்சல் இறங்கலன்னா,  டாக்டரைப் பாத்துருங்க” என்று மாத்திரைகளை வாங்கித் தந்து விட்டுப் போனான். மாடியில் இருந்த அறையில் போய் படுத்துக் கொண்டேன். அந்த இரவே கடும் பாடு பட்டேன்.  

அடுத்த நாள் காலையில் அம்முவுக்கும் காய்ச்சல் வந்திருந்தது. மறைந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் மகன் டாக்டர் அறத்தை பார்க்க இருவரும் சென்றோம். ஆஸ்பத்திரியில் மனிதர்கள் கசங்கிப் போய் நிறைந்திருந்தார்கள். எல்லோரும் முகக் கவசம் மாட்டிக் கொண்டு இருந்தார்கள். மனிதர்களின் கண்கள் கதிகலங்கிப் போயிருந்தன. நர்ஸ்களும், டாக்டர்களும் உடல் முழுக்க பிளாஸ்டிக் கவுன் மாதிரி ஒன்று மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்கள். யாரிடமும் புன்னகையைக் காண முடியவில்லை.  

சோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு, ‘கொரோனாதான்’ என்பதை டாக்டர் உறுதி செய்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா எனக் கேட்டார். நான் போடவில்லை. அம்மு போட்டிருந்தாள். ’அண்ணே, நீங்களும் போட்டிருக்கலாமே” என்ற வார்த்தையில் அக்கறையும், ‘ஏன் இந்த அலட்சியம்’ என்ற தொனியும் இருந்தது. மாத்திரைகள் எழுதித் தந்தார். எதையெல்லாம் சாப்பிடலாம் என அறிவுறுத்தினார்.  

வீட்டின் கதவைத் திறந்த போது, இந்த வீட்டை இனி மனிதர்கள் பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். நானும் அம்முவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டோம். அத்திப்பழம், பிஸ்கட், வால் நட் போன்றவற்றை வாங்கித் தருமாறு தோழர் சங்கரிடம் போனில் சொன்னேன். சங்கத்தின் உதவித் தலைவராயிருந்தான். பக்கத்தில் படந்தால் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தான்.  வாங்கி வந்து பூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியே இருந்து போன் செய்தான். சுவற்றில் வைத்து விட்டு போகுமாறு சொன்னேன். ’சும்மா வெளியே வாங்கண்ணா’ என்றான்.  எப்போது பார்த்தாலும் அவனை ’வாப்பா’ ஆரத்தழுவிக் கொள்வேன். அன்று தள்ளி நின்று அவனை வைத்து விட்டு போகச் சொன்னேன். அவன் என்னைப் பார்த்த விதம் கலங்க வைத்தது.  

இப்படி ஒரு காலம் வரும் என ஒரு வருடத்திற்கு முன்னால் அறிந்திருக்கவே இல்லை. இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் இடைவெளிகளை மனிதர்களிடையே இருந்து அகற்றுவது, அவர்களை ஒன்றுபடுத்துவது , போர்க்குணத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பது என்று இயங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் சமூக இடைவெளியே அப்போது ஒரு ஒழுங்காகி விட்டிருந்தது.  

டிவி, ஃபேஸ்புக் எங்கு சென்றாலும் தொற்று குறித்தும், நோய்கள் குறித்துமே செய்திகளாய் இருந்தன. வெறுமையும், அவநம்பிக்கையும்  சூழ்ந்த நாட்கள்.  தெருக்களில் அமானுஷ்ய அமைதி நிறைந்திருந்தது. பறவைகள், நாய்களின் சத்தங்கள் கூட விநோதமாய் கேட்டன. எதுவும் பிடிக்காமல் போயிருந்தது.  

இரண்டு மூன்று நாட்களில் அம்முவுக்கு தொற்று குறைந்து, உடல்நலம் திரும்ப ஆரம்பித்திருந்தது. ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. “நீங்களும் தடுப்பூசி போட்டிருக்கலாம்” என்று சொன்னாள்.  

அடுத்தமுறை ஆஸ்பத்திரி சென்றபோதும் தொற்று குறையவில்லை என்றே ரிப்போர்ட்டும் டெஸ்ட்டும் காட்டின. சங்கரையும், அவன் மனைவியையும்  அங்கே பார்த்தேன். சங்கர் பேசும்போது மூச்சிறைத்தது. டாக்டரிடம் அவனைப் பற்றி விசாரித்தேன். தொற்று அதிகமாய் இருக்கிறது. அட்மிட் ஆக வேண்டும் என்றார். சங்கரிடம் சொன்னபோது மறுத்தான். ‘இரண்டு நாள்ள சரியாயிரும்’ என்றான். சத்தம் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது தலையெல்லாம் விண் என்று இருந்தது.  

அட்வகேட் கீதா போன் செய்தார்கள். அஃபிடவேட் தயார் செய்து விட்டதாகவும், மெயிலில் அனுப்புவதாகவும் சொன்னார்கள். நாம் எப்போது ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வோம் என கேட்டேன். ”கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டும்.  இந்த நிலமையில் கோர்ட் நடக்குமா எனத் தெரியவில்லை. ஒருவேளை ஆன்லைனில் ஹியரிங் நடக்கலாம்” என்றார்கள்.  

உடல் மீதான பிரக்ஞை, நோய் குறித்த பதற்றம், சுற்றிலும் செய்திகள் தந்த துயரம் எல்லாவற்றையும் மீறி, நிர்வாகம் தோற்று நிற்கும் காட்சியை எப்படியும்  காண வேண்டும் என்பது மட்டும் அந்த நேரத்தில் வைராக்கியமாய் இருந்தது.  

(தொடரும்)

1ம் அத்தியாயம்    2ம் அத்தியாயம்    3ம் அத்தியாயம்    

4ம் அத்தியாயம்    5ம் அத்தியாயம்    


  •  

குடும்பஸ்தன் - தமிழ் சினிமா


பல கோடி குடும்பங்களின் கதை இது.  

சர்வ வல்லமை படைத்த பணம்தான் இந்த சமூக அமைப்பையே ஆட்டுவிக்கிறது. பணம்தான்  குடும்ப உறவுகளை தீர்மானிக்கிறது. மனிதனின் மதிப்பை மட்டும் அல்ல, இருப்பையும் கூட பணமே  முடிவு செய்கிறது. அனுபவங்களில் அதைக் கண்டு வெறுத்துப் போகிற  மனிதர்களின் கதை இது.  

நம்ம சொந்த பந்தம் என்ன பேசும், நாலு பேர் என்ன நினைப்பாங்க, ஊர் எப்படி பார்க்கும் என்று கடிகார முள் ஒன்று உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கும்.  கிழிந்து கிடக்கும் உண்மை நிலைமையை தனக்குள் மறைத்துக் கொண்டு மற்றவர்கள் முன்னால் சிரிக்கவும் தலைநிமிர்ந்து நடக்கவும் மெனக்கெடுவதே வாழ்க்கையாகிப் போகும் மனிதர்களின் கதை இது.  

தனக்கு பிடித்தமானது எது, தன்னால் இயன்றது எது எனத் தெரிந்திருந்தாலும், அதை விட்டு விட்டு சம்பந்தமில்லாத வழிகளில் எல்லாம் சென்று ஒவ்வொருமுறையும் அடிபட்டு, காயங்களோடு திரும்புகிற மனிதர்களின் கதை இது.  

எப்படியாவது பிழைத்துக் கொள்ள முயன்று, தோற்று, தோற்று, கடைசியில் எதாவது ஒருநாளில் நடந்து விடாதா என மூளையில் பதற்றம் தொற்றி அலைபாயும் மனிதர்களின்  கதை இது.  

நாம் அன்றாடம் பயணிக்கும் வழியெல்லாம், பார்க்கும் இடமெல்லாம்  நடமாடும் எத்தனையோ மனிதர்களின் கதை இது.  

தன் உழைப்பிலிருந்து தானே அந்நியமாகும் மனிதர்களின் கதை இது.

அந்த மனிதர்கள் எல்லோருக்குமான உதாரணம்தான் குடும்பஸ்தனாக வரும் நவீன். இயல்பான தோற்றத்தில், சாதாரண உடையில், சின்னச் சின்னக் கனவுகளோடு இருக்கும் அவன் காதல் திருமணத்தில் துவங்குகிறது படம். அவர்கள் இருவருக்கும் ஒழு பெண் குழந்தை பிறப்பதோடு படம் முடிவடைகிறது. அதற்குள் அவன் படும் பாடுதான் குடும்பஸ்தன். 

இடைவேளை வரை வலி, கோபம், சந்தோஷம் எல்லாவற்றையுமே நகைச்சுவை துணுக்குகள் போலாக்கி அதைக் கோர்த்திருக்கிறார்கள். உணர்வுகள் மேலோங்காமல் அங்கங்கு அலுப்பும் கூட தட்டுகிறது. பல இடங்களில் தர்க்கங்கள் இடறுகின்றன. இடைவேளைக்குப் பிறகு காட்சிகளின் ஊடாகவும், மேலோங்கியும் மனிதத்தின் வண்ணங்கள் தெரிகின்றன. பணத்தை மீறி நிற்கும் மனித அழகுகள் பிடிபட படத்தின் இறுதி நெகிழ்ச்சியடைய வைக்கிறது.  

இந்தப் படத்தில் பணம் சம்பாதிப்பவர்களாகவும், குடிகாரர்களாகவும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாகவும்,  ஆண்கள் கிடந்து அல்லோலப்படுகிறார்கள். குழந்தை சுமப்பவராக, தனக்குள் பொருமுகிறவர்களாக,  புரணி பேசுகிறவர்களாக துணை பாத்திரங்களாய் பெண்கள் இருக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் ஒரே பெண், ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு யூடியுபராக  இருக்கிறார். நடுத்தர, எளிய குடும்பங்களில் பெண்களின் நிலைமையும், பங்களிப்பும்  இன்று முக்கியம் பெற்றிருக்கிறது. அவர்களுக்குரிய இடம் இந்தப் படத்தின் கதையிலும், காட்சிகளிலும் இல்லை.  

நவீனின் மாமாவாக வரும் குருசோமசுந்தரமும், நவீனின் மனைவியாக வரும் மேகன்னாவும் சிறப்பாக நடித்திருந்தாலும் மொத்தப் படத்தையும் சுமந்து நிற்கிறார் நவீனாக வரும் நடிகர் மணிகண்டன். அவரது உடல் மொழியும், குரல் தொனியும் அவ்வளவு இயல்பாய் கதாபாத்திரத்தோடு இணைந்து விடுகிறது. தமிழுக்கு கிடைத்த இன்னொரு நல்ல திரைக்கலைஞர் அவர். மனைவியின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையோடு அவர் பேசும் காட்சிகள் கவிதைகளாய் இருக்கின்றன. இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதும் அதுதான். 

எதையெல்லாம் நக்கலடித்துக் கொண்டு கடக்க முடியும். எதையெல்லாம் அப்படி கடக்க முடியாது என்பதையும் ‘குடும்பஸ்தன்’ காட்டுகிறது. படத்தின் பலவீனம் அது. இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி அதை அறிந்து கொண்டால் மேலும் நல்ல படங்களைத் தரமுடியும்.


  •  

நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 4



”நான் என்ன செய்கிறேன் தெரியுமா?”
மனைவியிடம் கேட்டான்
அந்த மகா புருஷன்
 
புரியாமல் நின்றவளிடம்
புத்தன் நான் என்று
வீட்டை விட்டு வெளியேறினான்
 
ஐம்பத்தாறு ஆண்டுகளாய்
சொல்லத் துணியாத அவளிடம்
பத்திரமாய் இருக்கிறது
பதில் ஒன்று
 
“ஆசையைத் துறந்தவன்
அன்புக்காக அதிகாரத்தையே
விட்டுக் கொடுத்தவன்
புத்தன்
பேராசைக்காரன்
அதிகாரத்துக்காக
எதையும் விட்டுக் கொடுப்பவன்
என் புருஷன்”
 
நரைமுடி காற்றில் அலைய
வெறுமை கொண்ட கண்கள்
எங்கோ நிலைத்திருக்க
தனக்குள் சொல்லிக்கொள்ள
முடிந்ததெல்லாம் ஒன்றுதான்
அது-
”நான் யசோதாதான்”

  •  

பைத்தியங்களின் நாடு



முன்பும் ஒரு நாடு இருந்தது.
பைத்தியமே அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தது.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்களை பைத்தியங்கள் என அழைத்தார்கள்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை பைத்தியங்கள் என அழைத்தால் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்கள் மீது கல்லெறிந்தனர்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை திருப்பித் தாக்கினால் அரசால் கொலை செய்யப்பட்டார்கள்.
பைத்தியங்களின் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
பைத்தியமற்றவர்களுக்கு ஒரே ஒருநாள் மொத்தமாய் பைத்தியம் பிடித்தது.
பிறகு அந்த நாட்டில் பைத்தியங்களே இல்லாமல் போனார்கள்

  •  

சார்ஜ் ஷீட் 42/2021- 5ம் அத்தியாயம்


இன்ட்ராநெட்டில் எனக்கு செஷேஷன் என்பதை அறிவித்த நிர்வாகத்தைக் கண்டித்து சங்கத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் தோழர்கள் தொடர்ந்து கண்டனத்தைத் தெரிவித்தபடி இருந்தார்கள்.  

”காலச் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆட்டம் ஆடுகிறார்கள்” என்று நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தோழர் ரவீந்தரன் அந்த நேரத்தில் விமர்சித்து  பதிவு செய்திருந்தார். அப்போதைய புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அவர். அந்த வார்த்தைகளின் பின்னணியில் ஒரு வரலாறே இருந்தது.   

பாண்டியன் கிராம வங்கியில் 1988ம் ஆண்டு நடத்திய 44 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தை ஒரு இதிகாசம் போல சென்ற தலைமுறைத் தோழர்கள் கிளைகளில் இன்றைய தலைமுறைக்கு கடத்தி இருந்தனர்.  

2009ல் தோழர்கள் அண்டோவையும், காமராஜையும் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்த போது பெரும் எண்ணிக்கையில் தோழர்கள் தலைமையலுவலகத்தில் திரண்டு சேர்மனை முற்றுகையிட்டனர். ஆறு மணி நேரத்துக்கு சேர்மன் எங்கும் செல்ல முடியாத, சேர்மனை யாரும் சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறை வந்து சங்கத் தலைவர்களிடம் சமாதானம் பேசிய பிறகே சேர்மன் வீட்டுக்குச் செல்ல முடிந்தது.  

2010ம் ஆண்டில் நிர்வாகத்தின் புகாரின் பேரில் சங்கத் தலைவர்கள் சோலைமாணிக்கத்தையும், செல்வகுமார் திலகராஜையும் காவல்துறை கைது செய்தபோது அதை எதிர்த்து அடுத்தநாளே மின்னல் வேகத்தில் (Lightning Strike)  வேலைநிறுத்தம் நடந்தது.  

அந்தப் போர்க்குணம் தமிழ்நாடு கிராம வங்கியிலும் படர ஆரம்பித்திருந்தது. அதே தலைமையலுவலக வளாகத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு, நடத்திய தர்ணாப் போராட்டம் அவ்வளவு எழுச்சியோடும், பெரும் திரளோடு நடந்திருந்தது.  

எங்கே தலைமையலுவலகம் இருக்கிறதோ அங்கே சங்கத்தின்  தலைவர்கள் இருந்து சங்கப் பணி ஆற்றுவதுதான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்து வந்தது. பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் இணைந்து தமிழ்நாடு கிராம வங்கியாக உருவெடுத்தவுடனே, நமது இரண்டு சங்கங்களிலிருந்தும் பொதுச்செயலாளர்களுக்கு சேலத்துக்கு டிரான்ஸ்பர்கள் கேட்கப்பட்டன. டிரான்ஸ்பர்கள் போடாமல் நிர்வாகம் இழுத்தடித்தது. முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து 2019 ஆகஸ்ட் 8ம் தேதி தர்ணாப் போராட்டத்தை அறிவித்தது.  தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலிருந்து தர்ணாவுக்கு தோழர்கள் தயாராக ஆரம்பித்தனர். தர்ணாப் போராட்டத்திற்கு கலந்து கொள்ள லீவு மறுக்கப்பட்டது. மண்டல மேலாளர்கள் மூலம் ஊழியர்கள் பயமுறுத்தப்பட்டனர். தர்ணாவுக்கு முந்தைய நாள் அங்கங்கு கிளைகளிலேயே உடல்நலம் சரியில்லை என சில தோழர்கள் சுருண்டு கொண்டனர். அதுவே ஒரு போராட்ட வடிவமாக மாறியது. பின்னர் அந்தத் தோழர்கள் மெடிக்கல் லீவில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  அடுத்தநாள் அறுநூறுக்கும் மேலான தோழர்களின் உரத்த கோஷங்கள் தலைமையலுவலகத்தை அதிரச் செய்தன. நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றியது   ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்சயலாளராக  நானும்  ஆபிஸர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராக அறிவுடைநம்பியும் அப்படித்தான் சேலத்திற்கு சென்றிருந்தோம்.  

அந்தப் போர்க்குணம் தமிழ்நாடு கிராம வங்கியிலிருந்து புதுவை கிராம வங்கிக்கும் பரவ ஆரம்பித்தது. சேலத்தில் தர்ணா நடந்த இரண்டு வாரங்களுக்குள் 2019 ஆகஸ்ட் 23ம் தேதி புதுவையில் கிராம வங்கித் தலைமையலுவலகம் முன்பு ஆவேசத்துடன் அடுத்த போராட்டம் நடைபெற்றது. எந்த வங்கியிலும் நடைபெறாத கொடுமை அங்கு நடந்து கொண்டிருந்தது.  கிளைகளில் உள்ள பணம் , நகைகள் வைத்திருக்கும் பெட்டகத்தின் சாவிகளில் ஒன்றை ஆபிஸரும் இன்னொன்றை கேஷியரும் வைத்திருப்பதுதான் நடைமுறை. தேவையான ஆட்களை பணிக்கு எடுக்காததால், ஐந்து கிளைகளில் ஆபிஸர்களே கிளர்க்குகளின் வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. ஒரே ஆபிஸரே பெட்டகத்தின் இரண்டு சாவிகளையும் கையாள வேண்டி இருந்தது. அதுமட்டுமல்ல, இல்லாத கேஷியருக்கு பொய்யாக ஒரு பாஸ்வேர்டு உருவாக்கி அதை ஆபிஸர்களே கம்ப்யூட்டரில் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் செய்ய நிர்வாகமே  ஏற்பாடு செய்து கொடுத்தது. மிக மோசமான, ஆபத்தான பணிச்சூழல் அங்கு இருந்தது. அதனை எதிர்த்து புதுவை பாரதியார் கிராம வங்கி சங்கத் தோழர்களுடன் தமிழ்நாடு கிராம வங்கி சங்கத் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உடனடியாக கிளர்க்குகளுக்குரிய சாவியையும் பாஸ்வேர்டையும்  கிளர்க்குகளே வைத்திருக்கும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும், இல்லையென்றால் கிளர்க்குகளின் சாவிகளைக் கொண்டு வந்து தலைமையலுலகத்தில் சேர்மனிடம்  ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம் என  அந்த தர்ணாவில் அறைகூவல் விடுக்கப்பட்டது. இரண்டே நாட்களில் சங்கத்தின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றியது.  

தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி இரண்டிற்கும் ஸ்பான்ஸர் வங்கியாக இருந்த இந்தியன் வங்கி நிர்வாகத்திற்கும் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தின் மீது வன்மம்  இருந்திருக்க வேண்டும். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் ரவீந்திரன் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.  

உண்மைதான். போக்குவரத்து தடைசெய்யப்பட்ட, சமூக இடைவெளி என்பது விதியாக்கப்பட்ட கொரோனா காலத்தில் தோழர்களைத் திரட்டி நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஜனநாயகச் சூழல் இல்லை. வீரம் செறிந்த போராட்டங்களே வரலாறாகவும், போர்க்குணமே இயல்பாகவும் கொண்டிருந்த மகத்தான தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு சோதனையான காலச்சூழல்தான் அது.  

தேசம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் 2020 மார்ச் 23ம் தேதி இரவு 6 மணிக்கு தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள முன்னணித் தோழர்களுக்கு மட்டும் கீழ்கண்ட எச்சரிக்கையை வாட்ஸ்-அப் மூலம் தெரிவித்திருந்தேன்.  

“வரும் நாட்கள் நம் வாழ்நாளில் மிகவும் நிதானத்துடனும், உறுதியுடனும் கடக்க வேண்டியவை என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். சாதாரண காலங்களில் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்வதைப் போல இப்போது முடியாது, கூடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  

ஒரு குழப்பமான சூழல் இது. முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்களும், ஸ்தம்பிப்புகளும் ஏற்படலாம். அவரவர் நிலைகளில் கொந்தளிப்புதான் நிலவும். அதே மனநிலையோடு நாம் பிரச்சினைகளை அணுக முடியாது.  

நாம் சமூகத்தில் பொறுப்பு மிக்கவர்களாக சிந்திக்கவும், செயல்படவும் பக்குவம் பெற்றாக வேண்டும்.  

சங்கத்தின் முன்னணித் தோழரான உங்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். சொல்லலாம்தானே?”  

பொறுப்பு மிக்க ஒரு சங்கத்திற்கு இருந்த இந்த பிரக்ஞையும், நிதானமும் துளி கூட  நிர்வாகத்திடம் இல்லை. தொழிற்சங்க இயக்கத்தை ஒடுக்குவதற்கும், முடக்குவதற்கும்  உற்ற நேரம் அதுவென வெறி கொண்டிருந்தது.  

3.5.2021 அன்று ஓய்வுகாலச் சலுகைகள் கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு நிர்வாகத்திடம் இருந்து பதில்  ஒரு வாரத்திற்கு மேலாகியும் வரவில்லை. சங்கத் தோழர்கள் தொடர்ந்து என்னிடம் தகவல் வந்ததா என  கேட்டுக் கொண்டு இருந்தனர்.  

2020 நவம்பரில் கொஞ்சம் குறைந்திருந்த கொரோனா தொற்று 2021 மே மாதத்தில் மீண்டும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அம்முவுக்கு மீண்டும் பள்ளி விடுமுறை விட்டிருந்தார்கள். டி.வி செய்திகள் பதற்றத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தன. தெரிந்தவர்களின் உயிரிழப்புகளும், யாருமற்று அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதும் தாங்க முடியாததாய் நினைவுகளில் பாரமாகி கனத்தது. ஒரு கொடுங்காலத்தின் வெறுமையும், வேதனையும் எங்கும் சூழ்ந்திருந்தது.  

10.5.2021 தேதியிட்ட நிர்வாகத்தின் கடிதம் 14.5.2021 அன்றுதான் வந்தது. முழுக்க முழுக்க செஷேஷனை (பணி ஓய்வு நிறுத்தம் ) உறுதி செய்து வந்த கடிதம்.  

நான் பணி ஓய்வு பெற்ற 30.4.2021 அன்று நாமக்கல் மண்டல் மேலாளர் மூலம்  செஷேஷன் குறித்த தகவலைப் பெற்று மின்னம்பள்ளி கிளை மேலாளர் என்னிடம் அதை தெரிவித்து விட்டதாக கடிதத்தின் முதல் பாரா. நாமக்கல் மண்டல மேலாளர் மின்னம்பள்ளி கிளை மேலாரிடம் செஷேஷன் பற்றி கூறியதும் வாய்மொழிதான் போல.  மிகப் பெரிய வேடிக்கை இது.  செஷேஷன் பற்றி முடிவெடுத்து அறிவிக்க வேண்டியவர் அதற்கென அதிகாரத் தகுதி  (competent authority) பெற்றவர்தான்.  கிளர்க்குகளுக்கு அந்த தகுதி படைத்தவர் பொதுமேலாளர் (General Manager). எதுக்கு குறுக்கே நாமக்கல் மண்டல் மேலாளரை சைக்கிள் ஓட்ட விட்டிருக்கிறார்கள் என்று சிரிப்புத்தான் வந்தது.  

வங்கியிலிருந்து முறையான கடிதம் பெற்ற பிறகுதான் நான் பணி ஓய்வு பெற முடியும் என இரண்டாவது இரண்டாவது பாரா. நிர்வாகம் முறையான கடிதம் கொடுக்காததுதானே மொத்தப் பிரச்சினையும்!  

தமிழ்நாடு கிராம வங்கி ஸ்டாஃப் சர்வீஸ் ரெகுலேஷன்ஸ் பிரகாரம் – ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டால், அவரது பணி ஓய்வு நாளன்று அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்படும் என மூன்றாவது பாரா. யார் இல்லையென்றது? சார்ஜ் ஷீட்டிற்கு கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை, எனவே உங்களது பணி ஓய்வை நிறுத்தி வைத்து ஒழுங்கு நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட இருக்கிறது என முறையான கடிதம் நிர்வாகம் கொடுக்காத போது எப்படி ஓய்வு நிறுத்தம் செல்லும் என்பதுதானே நமது கேள்வி?  

எனவே, என் மீது விரைவில் தொடங்க இருக்கும் என்கொயரியில் பங்கு கொள்ள வேண்டும் என கடைசி பாரா. எவ்வளவு தெனாவெட்டு. அதிகாரத் திமிர்!  

சங்கத் தோழர்களுக்கும், பெஃபி தலைவர்களுக்கும், அட்வகேட் கீதா அவர்களுக்கும் தகவல் தெரிவித்தேன். கூகுள் மீட்டில் கலந்தாலோசித்தோம்.  

நிர்வாகம் எப்படியாவது என்கொயரி நடத்தி, காலத்தை இழுத்தடிக்க துடிப்பதை எல்லோரும் அறிந்திருந்தோம்.  சட்டத்திற்கு புறம்பாக 5 மணிக்குப் பிறகு செசேஷன் கொடுத்தது  தவறு என சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு கேட்பது என முடிவு செய்தோம்.  

அதற்கான பேப்பர்கள் தயார் செய்து அட்வகேட் கீதா அனுப்பச் சொன்னார்கள். நான் அந்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.  

சரியாக அடுத்த இரண்டாவது நாள், மே 16ம் தேதி மதியம் அசதியும் காய்ச்சலும் என்னை படுத்த ஆரம்பித்து. வைரஸ் என்னையும்  கவ்விக் கொண்டு விட்டது என்பதை அன்று இரவு உணர்ந்து கொண்டேன். 

(தொடரும்)

1ம் அத்தியாயம்    2ம் அத்தியாயம்    3ம் அத்தியாயம்    

4ம் அத்தியாயம்


  •  

நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 3


எதிர் பாராமல்
மன்னரின் ரதம்
பழுதடைந்து நின்றது
 
சுற்றி வளைத்து
நின்ற குதிரைகளில்
மெய்க்காப்பாளர்கள் வீற்றிருந்தனர் 
 
அவர்களை அடுத்து
அணி வகுத்த படை வீரர்கள்
அரணாக நின்றனர்
 
அதற்கும் அப்பால் மக்கள்
மக்களைத் தவிர யாருமில்லை
 
இன்னொரு ரதத்துக்கு  
ஏற்பாடு செய்து
அங்கேயே காத்திருந்தார்கள்
 
இருந்த ரதத்தை விட்டு
மன்னர் இறங்கவே இல்லை
 
திரைச்சீலைகளை இறக்கி விட்டு
நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தார்
 
”நான் என்ன செய்கிறேன் என்று  தெரியுமா?”
மெல்ல தனக்குள் முணுமுணுத்தார்.

  •  

சார்ஜ் ஷீட் 42/2021- 4ம் அத்தியாயம்


”நான் எங்க போகப் போகிறேன். உங்களோடுதான் இருப்பேன். வருவேன் தோழர்” அறிவுடைநம்பியிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.  

 “நீங்க விட்டாலும் மேனேஜ்மெண்ட் உங்கள விடாது போல…” என்று சொல்லி அவரும் சிரித்தார்.  

சன்னல் வழியாக தெருவிளக்கின் வெளிச்சம் அறைக்குள் கசிந்திருந்தது. முதன்முதலாய் சாத்தூரில் வேலைக்குச் சேர்ந்து மணி சங்கர் லாட்ஜில் தங்கியிருந்தபோது இப்படியொரு  தெரு விளக்கின் வெளிச்சம் அந்த அறைக்குள்ளும் இருந்தது. தூங்கும் வரை கூடவே ஒரு துணை போல இருக்கும். தூங்கி கண் விழித்த மாதிரிதான் இருக்கிறது. முப்பத்தேழு வருடங்கள் ஓடி சேலத்தில் இருந்தேன். எவ்வளவு எவ்வளவோ நடந்து முடிந்து விட்டிருந்தன.  

தொழிற்சங்கம், அதன் லட்சியங்கள்,  நடவடிக்கைகள் எல்லாம் பிடித்திருந்தாலும், மிக நெருக்கமாய் உணர்ந்தது இலக்கியம்தான். புத்தகங்கள் வாசிப்பதிலும், எழுதுவதிலும்  அவை குறித்து நண்பர்களோடு உரையாடுவதிலும் கிடைக்கும் அனுபவமும் சுகமும் தனி. சில கவிதைகளும், கதைகளும் எழுதி அந்த ருசியில் லயித்திருந்தேன். மணிசங்கர் லாட்ஜில் ஒருநாள் வந்து தங்கிய தோழர் சோமசுந்தரம் நான் எழுதி வைத்திருந்த கவிதைகளைப் படித்து பேசியதிலிருந்துதான் அவரோடு பழக்கமானேன். கிருஷ்ணகுமாரின் பேச்சிலும் எழுத்திலும் தென்பட்ட இலக்கியம்தான் என்னை வசீகரித்து அவரிடம் பழக வைத்தது. சங்கத்திற்கு ’அக்கினிக்குஞ்சு’ என்று பத்திரிகை ஆரம்பிக்கும்போது அதன் ஆசிரியராய் கிருஷ்ணகுமார் என்னை முன்மொழிந்ததற்கு முக்கிய காரணம்  என்னிடம் தென்பட்ட இலக்கிய ஈடுபாடாகவே இருந்திருக்க வேண்டும். அப்படி ஆரம்பித்த உறவுகளோடு தொழிற்சங்கப் பணிகள் காலப்போக்கிலும், சூழல்களாலும் ஒட்டிக்கொண்டன.  

1986ல் தோழர் கிருஷ்ணகுமார் தனக்கு உடல்நலம் இல்லையென்று, காரைக்குடிப் பக்கம் டிரான்ஸ்பர் கேட்டு தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அனுபவம் வாய்ந்த சோமசுந்தரம் பரமசிவம், கணேசன், போன்ற தோழர்களும் பொறுப்பில் இல்லை. நெருக்கடியான சூழலில் பெரும்பாலும் புதிய தோழர்கள் அடங்கிய ஒரு செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. பொதுச் செயலாளராய் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகுமார் என்பவர் சில மாதங்களிலேயே காணாமல் போய் விட்டார். தோழர் சோலைமாணிக்கம், சங்கரலிங்கம் போன்றவர்கள் உதவிப் பொதுச்செயலாளர்களாய் இருந்தனர்.  நானும் காமராஜும் முதன்முதலாய்  செயற்குழு உறுப்பினராயிருந்தோம். பெஃபி  ( BEFI )   சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கோதண்டராமன் வழிகாட்டினார். திருச்செந்தூர் அருகில் உள்ள பூச்சிக்காட்டு கிளைக்கும் சாத்தூருக்குமாய் பயணங்கள், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள், எழுதி அனுப்பும் சர்க்குலர்கள்,  உறுப்பினர்கள்  சந்திப்புகள் என சதா நேரமும் தொழிற்சங்கப் பணிகளால் நிறைந்தன. நிர்வாகத்துக்கு எதிராய்  ஊழியர்களைத் திரட்டி 1987 டிசம்பர் மாதம் முடிக்க வேண்டிய ஆண்டுக்கணக்கையே முடிக்காமல் நிறுத்தி வைத்ததெல்லாம் நடந்தது. (1987 வரை டிசம்பர் மாதத்தில்தான் ஆண்டுக்கணக்கு முடிக்கும் வழக்கம் இருந்தது.)  

1988ல் கிருஷ்ணகுமார் மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார்.  1990ல் மீண்டும் தன் குடும்பச் சூழல்கள் காரணமாக பொதுச்செயலாளர் பொறுப்பில் தொடர முடியாது என்றார். ஒருநாள் விடிகாலையில் அவரும் தோழர் செல்வகுமார் திலகராஜும் காரில் பூச்சிக்காடு வந்தனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பு மனுவில் என்னைக் கையெழுத்திடும்படி கேட்டுக் கொண்டார். அனுபவம் குறைந்த நான்  தயங்கினேன். அப்போதுதான் திருமணமாயிருந்தது. அம்மா வருத்தப்பட்டார்கள். நான் சங்கத்தின் பொதுச்செயலாளராகி  சாத்தூருக்கு வந்தேன்.  

இரண்டு வருடங்களில் மீண்டும் கிருஷ்ணகுமார் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார். பிறகு சில வருடங்களில் திரைப்படத்துறை மீது அவரின் கவனம் சென்றது. இயக்குனர் பாரதிராஜாவோடு நெருக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கிராம வங்கியின் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாரதிராஜாவின் இணை இயக்குனரானார்.  சங்கப் பணியில் தோழர்கள் முழுமையாக ஈடுபட வேண்டியிருந்தது. 2001ல் தோழர் சோலை மாணிக்கம் பொதுச்செயலாளரானார். நான் சங்கத்தின் செயற்குழுவில் துணைத்தலைவராக இருந்து கொண்டு மீண்டும் இலக்கியத்தின் பக்கம் சென்றேன். . 1993க்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தேன். ஆறு புத்தகங்கள் வெளிவந்தன. இரண்டு முக்கிய ஆவணப்படங்கள் எடுத்தேன். தீராத பக்கங்கள் என்னும் வலைத்தளம் உருவாக்கி தொடர்ந்து எழுதி வந்தேன். தோழர் சோலைமாணிக்கத்தால் அவை சாத்தியமாயின என்று நினைத்துக் கொள்வேன்.  

2013ல் தோழர் சோலைமாணிக்கம் பணி ஓய்வு பெற்றார். நான் மீண்டும் சங்கத்தின் பொதுச்செயலாளரானேன். அதற்கு முன்னர் நான் பொறுப்புக்கு வந்த சூழலுக்கும் அப்போது இருந்த சூழலுக்கும் இருந்த வித்தியாசம் முக்கியமானது. முன்னர் அனுபவம் பெற்ற சக தோழர்களின் கூட்டுத்தலைமையில் சங்கம் செயல்பட்டது. 2013ல் பெரும்பாலும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வேகமாக பணி ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தனர்.  

அந்த நேரங்களில் எனது சிந்தனையிலும் துடிப்பிலும் இருந்தது ஒன்றே ஒன்றுதான்.  பணி ஓய்வு பெறுவதற்கு இருந்த எட்டு ஆண்டுகளுக்குள் சங்கத் தலைமைக்கு இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான் அது. எனக்கு நானே விதித்துக் கொண்டது. இந்தக் காரியத்தில்  எனக்கு உறுதுணையாக இருந்ததும், வழிகாட்டியதும் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், தோழர் போஸ்பாண்டியன்,  சோமசுந்தரம் ஆகியோர்.  

2021ல் பணி ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் இலக்கியத்தின் பக்கம் முழுசாகச் செல்லலாம் என்றிருந்தேன். நிர்வாகம் அதை விரும்பவில்லை போல. விடாது கருப்பு என சார்ஜ் ஷீட் கொடுத்து பிடித்து வைத்திருந்தது.  

காலையில் தோழர்கள் அண்டோ கால்பர்ட், சங்கர், காமராஜ், தங்க மாரியப்பன், லஷ்மிநாராயணன் ஆகியோருடன் புறப்பட்டு  சேலத்திலிருந்து சாத்தூர் வரை நினைவுகளோடுதான் பயணம் செய்து வந்தேன்.  அம்மு சிரித்துக் கொண்டே வாசலில் ஆரத்தியோடு தயாராய் இருந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு தோழர்கள் விடைபெற்று அவர்கள் வீடுகளுக்கு சென்றனர்.  

வீடு அமைதி கொண்டிருந்தது. ”அப்புறம்..” என அம்மு சிரித்துக் கொண்டே என் தோளைத் தட்டியபடி அருகில் உட்கார்ந்தாள். ஆசுவாசமாய் இருந்தது.  

*

1.5.2021 மற்றும் 2.5.2021 இரண்டு நாட்களும் சனி ஞாயிறு. தோழர்களிடமும் அட்வகேட் கீதா அவர்களிடமும் நான் அடுத்து கொடுக்க வேண்டிய கடிதம்  குறித்து கலந்தாலோசித்தோம்.  

30.4.2021 அன்று 7.36 மணிக்கு நிர்வாகம் அனுப்பிய மெயிலில் இரண்டு முக்கிய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.  

முதலாவது, 4.30 மணிக்கு மேலாளர் என்னிடம் செஷேஷன் குறித்து தகவல் (intimation) சொன்னதாக மட்டும் கூறப்பட்டு இருந்தது. அந்தத் தகவல் எழுத்துபூர்வமானதா, வாய்மொழியானதா என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வாய்மொழித் தகவல்கள் சட்டப்படி செல்லாது.  

இரண்டாவது, செஷேஷன் ஆர்டரில்  ஓய்வு கால சலுகைகள் என்கொயரி முடிந்த பிறகு கொடுக்கப்படும் என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது. செஷேஷன் கொடுப்பதாய் இருந்ததால், பென்ஷன் விதிகளின்படி என்கொயரி நடைபெறும் காலத்தில் தற்காலிக ஓய்வூதியம் (provisional Pension )  வழங்கப்படும் என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும்.  

நிர்வாகத்தின் ஒவ்வொரு அசைவும், சொல்லும் சட்டத்திற்கு புறம்பானது என்பதை புரிந்து கொள்வதறாகத்தான் இதனைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி, செஷேஷனே செல்லாது என்பதே நமது நிலைபாடாய் இருக்கிறபோது, அனைத்து ஓய்வுகாலச் சலுகைகளையும் கேட்க வேண்டுமே தவிர, ஏன் தற்காலிக ஊதியம் தருவதாய் சொல்லவில்லை என கேட்பது சரியாய் இருக்காது. அதன் அடிப்படையில் நிர்வாகத்துக்கு கீழ்கண்டவாறு  கடிதம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.  

30.4.2021 அன்று 5 மணி வரை நிர்வாகத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. எனவே, மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் எனது பணி ஓய்வுக்கான கடிதத்தைக் கொடுத்தேன். அவரும் அதனை பெற்றுக்கொண்டதை உறுதி செய்து கடிதம் கொடுத்தார்.  

பின்னர் நிர்வாகத்திலிருந்து அனுப்பப்பட்ட மெயில் கிடைத்தது.  அதில் கிளையின் மேலாளர் என்னிடம் செஷேஷன் ( cessation) குறித்து தெரிவித்ததாகச் சொல்லப்பட்டு இருந்தது. அத்தோடு செஷேஷனுக்கான கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி எந்த தகவலையும் மேலாளர் எழுத்துபூர்வமாக என்னிடம் தெரிவிக்கவில்லை.  

மேலும் 30.4.2021 அன்று 5 மணியோடு நிர்வாகத்துக்கும் எனக்குமான முதலாளி – தொழிலாளி உறவு முடிந்து விட்டது. அதன் பின்னர் நிர்வாகம் எனக்கு அனுப்பிய செஷேஷன்னுக்கான கடிதம் சட்டப்படி செல்லாது.  

எனவே எனக்கு ஓய்வுகாலச் சலுகைகளான கிராஜுவிட்டி, லீவு சரண்டர், பென்ஷன், கம்யூட்டேஷன் அனைத்தையும் உடனடியாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

3.5.2021 அன்று கடிதத்தை மெயிலிலும், பதிவுத் தபாலிலும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துக்கு அனுப்பினேன்.   

சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்தின் இயல்பை கடந்த கால அனுபவம்  தெளிவாய் காட்டியிருந்தது.

தோழர் அண்டோ கால்பர்ட்டை சஸ்பெண்ட் செய்த போது அதனை எதிர்த்து சங்கம்  ஹைகோர்ட்டில் தடையுத்தரவு பெற்றது. அதை சேர்மன் செல்வராஜ் மதிக்கவில்லை. பின்னர் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ( contempt petition)  தொடுத்தோம். ”முதலில் கோர்ட் உத்தரவை மதித்து அண்டோ கால்பர்ட்டை  உள்ளே எடு” என்று சொன்ன பிறகே அவரை நிர்வாகம் பணிக்கு அமர்த்தியது.  

செல்வராஜ் சட்டத்தை முடிந்தவரை மதிக்க மாட்டார். நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதை அமல்படுத்தாமல் இழுத்தடிப்பார். நிச்சயமாய் நிர்வாகம் நான் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஓய்வுகாலச் சலுகைகளைத் தந்துவிடும் என்று நம்பிக்கையெல்லாம் இல்லை.  

நினைத்தது போலவே அடுத்த நாள் நிர்வாகத்தின் முடிவு தெரிந்தது, 4.5.2021 அன்று வங்கியின் இண்ட்ரா நெட்டில் எனக்கு செஷேஷன் வழங்கப்பட்டு உள்ளது என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

எப்படி செஷேஷன் செல்லும் என்பதற்கும் ஏன் ஓய்வுகால சலுகைகள் கொடுக்கப்பட வேண்டியதில்லை என்பதற்கும் ஒரு காரணம் சொல்ல வேண்டுமே. அது என்னவாயிருக்கும் என்பது நிர்வாகத்திடமிருந்து கடிதம் வந்த பிறகுதான் தெரியும்.  

(தொடரும்)  

1ம் அத்தியாயம்    2ம் அத்தியாயம்    3ம் அத்தியாயம்

  •  

”அவ்வளவுதான்!”


’முடி வெட்டணும்” என்று இரண்டு மூன்று நாட்களாய் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேற்று அழைத்துச் சென்றேன். 91 வயது நடந்து கொண்டிருக்கும் அப்பாவின் கைகளைப் பிடித்து கடைக்குள்ளே செல்லும்போது சிலிர்ப்பாய் இருந்தது.  

ஐந்தோ ஆறோ வயது இருக்கும் போது என்னை கைப்பிடித்து சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு சலூனுக்கு அப்பா அழைத்துச் சென்றது மங்கலாய்த் தெரிந்தது. மெஷின் போட்டு பின் மண்டையில் இழுக்கவும் கதறி அழுதேன். அப்பா என்னருகில் இருந்து சமாதானப்படுத்தியது அவ்வளவு ஆதரவாக இருந்தது.  

இருவரின் உள்ளங்கைகளுக்குள் காலம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. முதன்முதலாய் அப்பாவின் கைப்பிடித்து உலகம் அறிந்த தருணங்கள் எல்லாம் மிதக்க ஆரம்பித்தன.  

”வாங்க புதுக்குளத்துக்கு குளிக்கப் போவோம்“ அப்பா ஒருநாள் காலையில் எங்களை அழைத்துப் போனார்கள். வியாபாரம் எல்லாம் நொடித்துப் போக சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பியிருந்தோம். அப்போது எனக்கு பத்து வயது போலிருக்கும். அந்த நாளை மறக்கவே முடியாது. “அப்பாவக் கெட்டியாப் பிடிச்சுக்குங்கப்பா” அம்மா அனுப்பி வைத்தார்கள்.  

வீடுகள், தெருவைத் தாண்டி மண் பாதை வந்தது. பிறகு வயல் வழியாக நடந்தோம். புற்கள் வளர்ந்த அந்தச் சின்ன வரப்பில் தனித்தனியாகத்தான் நடக்க முடியும். ஸ்கூலில் டிரில் பிரியடில் நடப்பதைப் போல வரிசையானோம். ”பாத்து, பாத்து” என அப்பா குரல் கொடுத்துக்கொண்டே முன்னால் சென்றார்கள். அவ்வப்போது திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டார்கள். அது ஒரு சாகசம் போலிருந்தது. ஜாலியாகவும் இருந்தது.  

வரப்புகளுக்கு நடுவில் ஓடிய தண்ணீரில் சின்னச் சின்ன மீன்கள் வளைந்து வளைந்து சென்றன. உட்கார்ந்து குனிந்து பார்த்தோம். நத்தைகள் மெல்ல அசைந்தன. “என்ன உக்காந்துட்டீங்க..” அப்பா திரும்பிப் பார்த்து கூப்பிட்டார்கள். “நேரமாகுது. ஸ்கூலுக்கு போணும்லா. வாங்க”.  

“மீன் போகுதுப்பா” ஆச்சரியமாய் சத்தம் போட்டோம். ”இன்னொரு நா வந்து நிதானமா பாப்போம்” அவசரப்படுத்தினார்கள். “இன்னும் எவ்வளவு தூரம்ப்பா” என கேட்டோம். ”இதோ வந்துட்டு” என்றார்கள். ஆனால் வரவில்லை.  

’இதுதான் நெல்லா, இதத்தான் நாம சாப்பிடுறோமா?’ கேள்விகளும், சட்டெனப் பறந்த வெள்ளைக் கொக்குகளைப் பார்த்த லயிப்புகளுமாய் அப்பாவைத் தொடர்ந்தோம்.  

சிறிது நேரத்தில் வரப்புப் பாதை முடிந்து எதிரே கொஞ்சம் மேடாய்த் தெரிந்தது. அதில் சில பேர் அந்தப் பக்கம் பார்த்தபடி நின்றிருந்தார்கள். சிலர் தலைகளைத் துவட்டிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று நாங்களும் மேட்டில் ஏறினோம்.  

பார்த்தால், விரிந்து பரந்து எங்கும் தண்ணீராய் இருந்தது. இதுதான் புதுக்குளமா! அதற்கு முன்னால் மெரீனா பீச்சுக்கு அப்பாவோடும் அம்மாவோடும் சில தடவை சென்றிருந்தோம். ஒரு பெரிய கப்பல் எதோ புயலில் மாட்டி கரையொதுங்கி நின்றிருந்ததை பார்த்திருந்தோம். அலைகளில் காலை நனைத்திருந்தோம். அப்பாவும் அம்மாவும் ஜாக்கிரதையாய் எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டே இருந்தார்கள். அங்கே தண்ணீரில் யாரும் உள்ளே சென்று குளிப்பதைப் பார்த்ததில்லை.  

இங்கேயோ நிறைய பேர் தண்ணீருக்குள் இருந்தார்கள். கை கால்களை அடித்து மிதந்தார்கள். கரையேறி ஒருவன் தண்ணீருக்குள் குதித்தான். உற்சாகமாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. குளித்துக் கரையேறும் தாழ்வான பகுதியின் வழியாக அப்பா தண்ணீருக்குள் நடந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அப்பாவின் உடல் தண்ணீருக்குள் மறைந்து கொண்டே போனது. தலை மட்டும் தெரிந்தது. பின்னர் தலையையும் தண்ணீருக்குள் முழுசாய் விட்டுக் கொண்டர்கள். அப்பாவின் தலை எப்போது வெளியே தெரியும் என துடிப்பாய் இருந்து. இரண்டு மூன்று தடவை அப்படி முங்கி எழுந்தார்கள். தலையை சிலுப்பிக் கொண்டு எங்களைப் பார்த்தார்கள்.  

நாங்களும் மெல்ல இறங்கி தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டிருந்தோம். அப்பா எங்கள் அருகே வந்து “வாங்க, என்னை பிடிச்சுக்குங்க” தங்கையை தூக்கிக் கொண்டார்கள். அவள் நடுங்கிக் கத்தினாள். இரண்டு கைகளிலும் தாங்கியவாறு தண்ணீருக்குள் கொஞ்ச தூரம் கொண்டு சென்று, “பயப்படாத, இங்க ஆழம் கிடையாது” என்று நிற்க வைத்தார்கள். நின்றாள். கால் தரையில் பட்டதும் முகம் நிம்மதியானது. நடுங்கிக் கொண்டே சிரித்தாள். எனக்கு உள்ளே செல்ல தைரியம் கூடவில்லை. “பயப்படாத மாதண்ணா, அப்பா பிடிச்சுக்குவாங்க, வாண்ணா” அழைத்தாள். ஆசையாக இருந்தது. பயமாகவும் இருந்து. மெல்ல மெல்ல தரையில் காலை நகர்த்தி நகர்த்தி சோதித்துப் பார்த்தவாறே உள்ளே சென்றேன். நெஞ்சுக்கும் கீழேதான் தண்ணீர் இருந்தது. குளிர்ந்து உடல் உஸ்ஸென்று ஆடியது.  

மூத்த அண்ணன் “ஏங்கையப் பிடிச்சக்க அப்பு” என்று பெரிய மனிதனாய் கூப்பிட்டான். அருகில் சென்றதும் ஒரே தாவாய் அப்பாவை கெட்டியாய் பிடித்துக் கொண்டேன். அப்பாவின் வாசனை இதமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.  

‘அவ்வளவுதான்’ என்றார்கள் அப்பா. “ஓ, நாம் சரியாய் செய்து விட்டோம் போலிருக்கு. இனி கரைக்கு போயிர வேண்டியதுதான்” கரையைப் பார்த்து தவிக்க ஆரம்பித்தேன். “ம்.. அப்பாவைச் சுத்தி நில்லுங்க. ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சுக்குங்க. இத மாரிச் செய்யணும்.” மூக்கைப் பிடித்துக் கொண்டு நிதானமாய் குனிந்து தண்ணீருக்குள் தலையை முழுவதுமாய் நுழைத்துக் கொண்டார்கள். பார்த்ததும் தண்ணீருக்குள்ளேயே எனக்குச் சில்லிட்டது. கொஞ்ச நேரத்தில் தலையைத் தூக்கி ‘ம் .. முங்கி எந்திரிங்க” என்றார்கள். நாங்கள் பயந்து பயந்து மூக்கைப் பொத்தி தண்ணீர் அருகே குனிந்து, தலையை நனைக்காமலே குதித்துக் கொண்டு இருந்தோம். அப்பா, “அவ்வளவுதான், அவ்வளவுதான்” என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு நேரத்தில் தலையை தண்ணீருக்குள் விட்டு சட்டெனத் தூக்கினோம். ‘அவ்வளவுதான்’ என அப்பாவின் குரல் கேட்டது. உற்சாகமானோம். வீட்டுக்கு வந்ததும் ஒவொருவரும் தண்ணீரில் முங்கி எழுந்ததை சாகசமாய் பேசிக்கொண்டோம். அம்மா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே, “சரி சரி, பாத்து” என்றார்கள். இப்படியாக முதல் நாள் புதுக்குளத்துக் குளியல் சிலிர்ப்போடும், நடுக்கத்தோடும் முடிந்தது.  

தொடர்ந்து அப்பா புதுக்குளத்திற்கு அழைத்துச் சென்றார்கள். கொஞ்ச நாட்களில், யார் முதலில் நனைவது என்று தண்ணீரைப் பார்த்ததும் பாய ஆரம்பித்தோம். நீச்சல் அடிக்க ஆரம்பித்தோம். அப்பா இல்லாமலேயே புதுக்குளம் குளிக்கச் சென்றோம். வரப்புகளில் நடக்கும்போது மீன்களையும், நத்தைகளையும் மட்டுமல்ல, பாம்புகளையும் பார்த்தோம். இரண்டாவது அண்ணன் அவைகளைக் கையில் பிடித்து ஓங்கி தரையில் அடிப்பதை ஒரு விளையாட்டாகவே வைத்திருந்தான். லீவு நாட்களில் நான்கைந்து மணி நேரம் விளையாடிக் களைத்து உள்ளங்கை தோலெல்லாம் சுருங்கி வெளிறிப் போகும். அம்மா சத்தம் போடுவார்கள்.  

ரைஸ்மில், வயல்காடு என்று அலைந்து அப்பா வாரத்தில் சில நாட்கள்தான் வீட்டுக்கு இரவில் வருவார்கள். படுக்கையில் அப்பாவின் மீது காலைப் போட்டுக்கொண்டு, கைகளை போட்டுக்கொண்டு அண்ணன் தம்பிகள் சுற்றி படுத்துக் கிடப்போம். அப்பாவின் வாசனை அப்படியே மாறாமல் இருந்தது.  

ஆறுமுகநேரியில் இருந்த பதினோரு வருடங்களும் பெரும்பாலும் புதுக்குளத்தில்தான். பிறகு ஒவ்வொருவரும் புதுப் புது ஊர்களுக்குச் சென்று விட்டோம். முப்பத்தோரு வருடங்களாக நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறோம். முதல் நாள் புதுக்குளத்துக்கு சென்ற நினைவு மட்டும் கனவு போல அவ்வப்போது மலர்ந்து கொண்டே இருக்கிறது. அம்மாவின் குரல் இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. “அப்பாவை கெட்டியாப் பிடிச்சுக்குங்கப்பா”  

லேசாய் தடுமாறிய அப்பாவின் கைகளைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்து ”அவ்வளவுதான்” என்றேன்.  

“அப்பாவுக்கு உங்களை விட முடி நிறைய இருக்கு.” முடி வெட்டுகிறவர் சிரித்தார். நான் சிரித்தேன். அப்பாவும் சிரித்தார்கள். 

குழந்தை போலிருந்தார்கள்.

(சென்ற வருடம் எழுதியது. தீராத பக்கங்களில் சேமித்துக் கொள்கிறேன்.)


  •  

சார்ஜ் ஷீட் 42/2021 – 3ம் அத்தியாயம்



”அஞ்சு மணிக்குள்ள கொடுக்காம இப்ப அனுப்புறாங்க?” 

“நாலு முப்பதுக்கே மேனேஜர் மூலமா செஷேசன்னு தகவல் கொடுத்ததா கூசாமச் சொல்றாங்க. எங்க கொடுத்தாங்க. நாம எல்லாரும் அங்கத்தானே இருந்தோம்”  

“அப்ப அஞ்சு மணி வரைக்கும் நிர்வாகத்துட்டயிருந்து எந்தக் கடிதமும் வரலன்னு நாமக் கொடுத்த கடிதத்தை வாங்கி எதுக்கு மேனேஜர் அஞ்சு பத்துக்கு அக்னாலட்ஜ் பண்ணாரு?”  

“அடேங்கப்பா என்னா உருட்டு உருட்டுறாங்க?’  

கோபமாய், கிண்டலாய் தோழர்கள் பேசிக்கொண்டாலும், நிர்வாகம் பிரச்சினையை முடிக்காமல் தொடர முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் புரிந்தது.  

நிர்வாகத்திடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்றதும், சங்கத்திலிருந்து தலைமையலுவலகத்தில் சேர்மனிடம் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள் என நிர்வாகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்களிடம் 1.3.2021 அன்று தர்ணாவின்போது தலைமையலுவலகத்தில் அத்து மீறி நடந்து கொண்டதற்கு  மாதவராஜை வருத்தம் தெரிவித்து எழுதித் தரச் சொல்லுங்கள், சில இன்கிரிமெண்ட்களை குறைத்து ஆர்டர் கொடுக்கிறோம், பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் எனச் சொல்வதற்கு தயாராய் இருந்திருக்க வேண்டும்.  எனது பணி ஓய்வை நானே அறிவித்து கடிதம் கொடுத்துவிட்டு சென்று விடுவேன் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.  

அப்படி ஒரு முடிவு எடுத்து வைத்திருந்தது அங்கிருந்த சில தோழர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கடிதம் கொடுத்ததை மேலாளரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிர்வாகத்திடம் கேட்டுவிட்டு கையெழுத்திடலாம் என்ற யோசனையும்கூட அவருக்கு அந்த நேரத்தில்  வந்த மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை மறுத்திருந்தால் என்ன செய்வது என்பது வரைக்கும் திட்டமிட்டிருந்தோம்.  

திட்டமிடுவதும், அதை நிர்வாகத்துக்கு தெரியாமல் வைத்திருப்பதும் ஒரு அமைப்புக்கு மிக முக்கியம்.  சங்கத்திற்குள் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள நிர்வாகம் மெனக்கெடுவதும், நிர்வாகம் என்ன செய்கிறது எனத் தெரிந்து கொள்ள சங்கத்தரப்பில் முயற்சிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நிர்வாகம் ஊழியர்களைத் தாக்குவதற்கும், சங்கம் ஊழியர்களை தற்காத்துக் கொள்வதற்கும்  தகவல்களை சேகரிக்கின்றன. கிடைக்கும் சின்னச் சின்னத் தகவல்களில் இருந்து அடுத்து என்ன அசைவு என்பதை ஊகித்தறிய முடியும். அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்காமல் இருப்பது முக்கியமானது. எனவேதான் தொழிற்சங்கத்தின் பொறுப்புக்கு வருகிறவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாய் இருப்பது முதன்மையான தகுதியாகிறது.  

ஆக, நிர்வாகம் தகவல் கிடைக்காமல் இந்தச் சுற்றில் நிலைதடுமாறிப் போயிருப்பதை, அந்த மெயில் உணர்த்தியது. தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், ராஜகோபாலன், அட்வகேட் கீதா ஆகியோருக்குத் தெரிவித்தோம்.  

மாறி மாறி தோழர்களிடமிருந்து போனில் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. சாத்தூரிலிருந்து தோழர் காமராஜ் பஸ்ஸில் பயணம் செய்து களைப்போடு வந்து சேர்ந்தார். முந்தினநாள் தங்கமாரியப்பன், லஷ்மிநாராயனன், சங்கரோடு வருவதாக இருந்தவர். அடுத்த மாதம் பணி ஓய்வு பெற இருந்தார். அன்றிரவே சாத்தூருக்குக் கிளம்பாமல், அடுத்த நாள் விடிகாலையில் கிளம்பிச் செல்வதாக முடிவு செய்தோம்.  

வீட்டில் அம்முவுக்குப் போன் செய்து எல்லாவற்றையும் சொன்னேன். ”இருக்கட்டும் வாங்க. பாத்துக்கலாம்” அவளுக்கே உரிய சிரிப்போடு சாதரணமாகச் சொல்லிவிட்டு ”காலைலயா வர்றீங்க. பாத்து நல்லபடியாய் வாங்க” என முடித்துக் கொண்டாள்.  எப்பேர்ப்பட்ட பெண் அவள்! முழு விவரங்கள் தெரியா விட்டாலும், பணி ஓய்வு பெறப்போகும் நேரத்தில் என்னைப் பழிவாங்குவதற்கு வேண்டுமென்றே நிர்வாகம் சார்ஜ் ஷீட் கொடுத்திருக்கிறது என்று தெரிந்திருந்தாள். “நீங்களும் உங்க சங்கமும் அவங்கள விடவாப் போறீங்க” என்பதுதான் அவளிடமிருந்து முதலில் வந்த வார்த்தைகள். இந்த தொழிற்சங்கத்தின் மீது அவளுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை.  

இரவில் எல்லோரும் சங்க அலுவலகத்தின் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சேலத்திலிருந்த பத்தொன்பது மாதங்களில் ஆறு மாதங்கள் போலத்தான் இயல்பான வாழ்வு காலம். மீதி பதிமூன்று மாதங்களும் கொரோனாக் காலம்தான்.  

நிர்வாகம் அதுதான் சமயம் என்று தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது. நோய் குறித்த அச்சமும், போக்குவரத்து அற்ற சூழலும் அப்பியிருந்த நாட்களில் கூட நிர்வாகம் ஊழியர்கள் பக்கம் நின்று யோசிக்கவில்லை. ”லீவுக்கு ஊருக்கு வந்தோம், இப்போது லாக் டவுன் அறிவித்து விட்டார்கள். நாங்கள் எப்படி கிளைக்குச் செல்வது” என பெண் ஊழியர்கள் பதறினார்கள். தினமும் இருநூறு கி.மீக்கும் மேலே பல ஆண் ஊழியர்கள் பைக்கில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. ”பேங்க்கில் வேல செய்றீங்க, கொரோனாவை கூட்டிட்டு வந்துராதீங்க” என்று வேலை பார்த்த இடங்களில் வாடகைக்கு இருந்த ஊழியர்களை வீட்டின் சொந்தக்காரர்கள் காலி செய்யச் சொன்னார்கள். ஊழியர்களின் போன் அழைப்புகளில் வலியும் வேதனையுமே இருந்தது. நிர்வாகத்திடமிருந்து எந்த அசைவும் ஆதரவும் தென்படவில்லை. அப்போது நான் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராய் இருந்தேன். சங்கத்திலிருந்து பெரும்பாலும் ஹெச்.ஆர்.எம்முக்கோ, ஜி.எம்முக்கோதான் பேசுவோம். ரொம்ப அவசியமாக இருந்தால் மட்டும் சேர்மனுக்கு போன் செய்வோம். ஒரு பெண் ஊழியர் ஸ்கூட்டியில் வங்கிக்கு வரும்போது, அந்தப் பகுதியை ’கண்டெய்ன்மெண்ட் ஜோன்’ என அறிவிக்கப்பட்டதாகக் கூறி அவரை போலீஸார் திருப்பி அனுப்பி் இருக்கிறார்கள். அந்த பெண் ஊழியர் சம்பந்தப்பட்ட மண்டல மேலாளருக்குத் தெரிவித்திருக்கிறார். மண்டல மேலாளரோ ”அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்கள் பிராஞ்ச்சுக்கு போயாக வேண்டும்” என சொல்லியிருக்கிறார். அந்தப் பெண் ஊழியர் அழுதுகொண்டே எனக்கு போன் செய்தார். மிஸ்டர் செல்வராஜ் தமிழ்நாடு கிராம வங்கியின் சேர்மனாக வந்தபிறகு அன்றைக்குத்தான் முதல் முறையாக போன் செய்து பேசினேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரச்சினையைச் சொன்னேன். ”அதுக்கு உடனே எங்கிட்ட பேசணுமா சார்? நா  என்ன சும்மாவா இருக்கேன்?” என எடுத்தவுடன் எரிச்சல் பட்டார். நான் நிதானமாக “இந்த மூன்று மாதங்களில் ஒருதடவை கூட உங்களிடம் நான் போனில் பேசியதில்லை. இப்போது அவசரம் என்பதால் பேசுகிறேன்” என்று சொன்னேன். ”சரி, பார்க்கிறேன்” என்று வேண்டா வெறுப்பாய்ச் சொல்லி போனை வைத்துவிட்டார்.  

சேர்மன் செல்வராஜின் குரலும், தொனியும் வித்தியாசமாய்ப் பட்டது. முதன்முறையாக பேசும் ஒருவரிடம் எதற்கு இத்தனை வெறுப்பும் அலட்சியமும்? எனது தொழிற்சங்க வாழ்வில் நான் பார்க்கும் பதினேழாவது சேர்மன் அவர். யாரிடமும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை.  

அதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு தோழர், “நம் சங்கத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும் முன்கூட்டியே நிறைய ஏத்திவிட்டுத்தான் செல்வராஜை இந்தியன் பேங்க்லயிருந்து இங்கு சேர்மனாக அனுப்பியிருக்காங்கன்னு பேசிக்கிறாங்க. முந்தைய சேர்மன் தன்ராஜ் நம்ம சங்கத்துக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டாராம். இந்த பேங்க்ல நம்ம ரெண்டு சங்கமும் வச்சதுதான் சட்டமாயிருக்காம். நம்ம சொல்றதத்தான் மெம்பர்கள் கேக்காங்களாம். ரீஜினல் மேனேஜர்லாம் நம்மைப் பாத்து பயப்படுறாங்களாம். பழைய அதியமான் பேங்க் கேங் ஒன்னு லாபி பண்ணிட்டு இருக்காங்க. அந்த லாபில வந்தவர்தான் இப்போ ஹெச்.ஆர். எம்மா இருக்கும் ஜெயக்குமார். அவருக்கு நம்ம யூனியன்னாலே ஆகாது.” என்று அவருக்கு கிடைத்த தகவல்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.  

கொரொனாக் காலங்களில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் அவர் சொன்னதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தன. கூட்டமாய்ச் சேருவதும், இயக்கம் நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழலில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டவையாகவேத் தெரிந்தன.  

அண்டோ கால்பர்ட்டை சஸ்பெண்ட் செய்ததில் நிர்வாகத்தின் தாக்குதல் படலம் ஆரம்பித்தது. கோவிட் தொற்று காலத்தில் ஊழியர்களின் நலனில் நிர்வாகத்தின் அலட்சியத்தை சங்கம் அம்பலப்படுத்தியது. தோழர் ஸ்ரீனிவாசனின் மரணம் வங்கியையே உலுக்கியது.  வங்கிக்கு வருவதும் செல்வதுமே பெரும் நெருக்கடியாக இருந்த அந்த நேரத்தில் காலை 10 மணிக்கு சரியாக கம்ப்யூட்டரில் வருகையைப் பதிவு செய்யும் முறையை நிர்வாகம் அமல்படுத்தியது. சங்கம் விமர்சனம் செய்தது. சேர்மன் செல்வராஜ்க்கு பொத்துக்கொண்டு வந்துவிட்டது. சங்கத்தோடு பேச மாட்டேன் என்று அடம்பிடித்தார். 21.7.2020 அன்று சங்கத்திலிருந்து ஜி.எம்மை சந்தித்துப் பேசினோம். பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது. அந்த நேரத்தில் வெளியே நின்றிருந்த தோழர்கள் அண்டோ கால்பர்ட், சந்தான செல்வம் போன்றவர்கள் கைகளை தூக்கியபடி ஒரு செல்பி எடுத்து சங்கத்தின் பிரத்யேக வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டிருந்தனர். அதை எடுத்து வைத்துக் கொண்டு தோழர் அண்டோ கால்பர்ட் தலைமையலுவலகத்திற்குள் ஆரப்பாட்டம் செய்ததாகவும், வங்கியின் ஒழுக்க நெறிகளை மீறி விட்டதாகவும் சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம்.   கோவிட் நேரத்திலும் நம் சங்கங்கள் தலைமையலுவலகத்தின் முன்பும், மண்டல அலுவலகங்களின் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்து, அண்டோவின் சஸ்பென்ஷனை எதிர்த்து தடையுத்தரவு பெற்றது. மூக்குடைபட்ட நிர்வாகம் அண்டோவை தூத்துக்குடியிலிருந்து கடலூர் அருகில் டிரான்ஸ்பர் போட்டு தன் ஆத்திரத்தை விடாமல் காட்டியது.  

யோசித்துப் பார்க்கும்போது தலைமையலுவலகத்தில் சங்கத்தின் தலைவர்கள் நடமாடுவதே நிர்வாகத்துக்கு பொறுக்க முடியாமல் இருந்திருக்கிறது. இப்போது எங்கள் ஆறு பேருக்கு கொடுத்த  சார்ஜ் ஷீட்டிலும் தலைமையலகத்தில் நுழைந்து வன்முறையாக நடந்து கொண்டதாகத்தான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. எப்போது ஒரு நிர்வாகம் ஒரு சங்கத்தின் மீது வன்மமும், வெறுப்பும் கொண்டிருக்கிறதோ, அப்போது இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடும். தன்பயத்தில் இருந்து உருவாகும் நடவடிக்கைகளாகவும் இருக்கும்.  

1984ம் ஆண்டு பாண்டியன் கிராம வங்கியில் கிருஷ்ணகுமார், சோலைமாணிக்கம், சோமசுந்தரம் போன்ற தோழர்கள் தலைமையில் போராட்டக்குணம் கொண்ட சங்கம் உருவெடுத்தபோதும் இதே நிலைமை இருந்தது. தலைமையலுவலகத்தில் சங்கத்தலைவர்கள் காலடி எடுத்து வைத்தாலே சூழல்கள் இறுக்கமாகும். சேர்மனின் அறைக்குள் ரெட் லைட் எரிந்து விடும். தோழர் கிருஷ்ணகுமாரோடு மெம்பர்கள் தலைமையலுவலகத்தில் வைத்து பேசவே  பயந்தார்கள். தலைமையலுவலகச் சுவரில் சங்கம்  ஒட்டிய போஸ்டரை ஒரு சூப்பிரண்டட்டே ( டிபார்ட்மெண்ட் ஹெட்) வெளியே வந்து கிழித்தார். அதையெல்லாம் மீறித்தான் சங்கம் வளர்ந்தது.  

அந்தக் கதைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். சுற்றிலும் மலைகள் நிழல் உருவங்களாய் நின்றிருந்தன. மெல்லிய காற்று வீசியது. தேய்பிறை ஆரம்பித்து மூன்று நாட்களே ஆகியிருந்தன. முழு நிலவின் மேலே கொஞ்சம் காணாமல் போயிருந்தது. அடுத்து வளர்பிறை வரத்தானே செய்யும்.  

எல்லோரும் கீழே வந்து படுக்க ஆரம்பித்தோம். இந்த கொரோனாக் காலத்திலும்  குறைந்தது பத்து முறைக்கும் மேலாக இந்த சங்க அலுவலகத்தில் இருபது இருபத்தைந்து பேர் வந்து தங்கி இப்படியெல்லாம் பேசியிருந்தோம். முக்கிய காரியங்களில் ஈடுபட்டிருந்தோம்., நடு இரவில் எழுந்து பார்த்தால் அறைகளெங்கும் இளம் தோழர்கள் அசையாமல் மூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள்.  

இந்த சங்கத்தின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கை தந்த நாட்கள் அவை. நிர்வாகத்தின் அடிமடியில் வெடி வைத்த நாட்களும்தான்.  கொஞ்ச காலம் எடுக்கலாம். ஒவ்வொன்றாக நிச்சயம் வெடிக்க ஆரம்பிக்கும்.  

அருகில் படுத்திருந்த தோழர் அறிவுடைநம்பி, “அடுத்து நீங்க லெட்டர் கொடுக்கணும்ல” என்று கேட்டார்.  

“ஆமா தோழர். ஞாயித்துக்கிழமைக்குள்ள நாம் முடிவு பண்ணிருவோம். திங்கக் கிழமை கொடுத்துருவோம்” என்றேன்.  

“ம்… இனும எப்போ வருவீங்க தோழர்?” என்றார். அந்தக் குரலில் அன்பும், பிரிவும் அடர்ந்திருந்தது.  

(தொடரும் )

1ம் அத்தியாயம்   2ம் அத்தியாயம்

  •  

Girls will be Girls - ஆங்கிலப் படம்


இமயமலை அடிவாரத்தில் உள்ள கட்டுப்பாடு மிக்க ஒரு பள்ளி. ”பழமையான இந்திய கலாச்சாரத்தை மதிப்பதாக” மீரா சொல்ல  மற்ற மாணவர்களும் அதையே பின்சொல்ல, உறுதிமொழி எடுக்கும் காட்சியோடு படம் ஆரம்பிக்கிறது.  

நன்றாக படிக்கிற, கீழ்ப்படிதல் மிக்க பெண்ணாய் மீரா அறிமுகம் ஆகிறாள். பதின்ம வயதின் உடல் மாற்றங்களை அறியவும், ரசிக்கவும், ஆராயவும் செய்கிறாள்.  நேர்மையான, வெளிப்படையான பெண்ணான அவள் அந்தத் தருணங்களை எதிர்கொள்ளும் விதமும், அதில் பெறுகிற அனுபவமும்தான் கதை.  

ஸ்ரீ என்னும் புது மாணவன் மீது அவளுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒருவரையொருவர் உடல் ரீதியாகவும் அறிந்து கொள்ள முனைகிறார்கள். ’நட்பைத் தாண்டி விடக் கூடாது’ என்னும் மீராவின் தாய் அனிலா  அந்த இருவரின் உறவுக்கு இடையே  தன்னை நுழைத்துக் கொள்கிறாள். அம்மாவின் நடவடிக்கைகள் மீராவுக்கு எரிச்சலாக மட்டுமல்ல, பொறாமையாகவும் இருக்கிறது. அவர்கள் மூவரும் ஆடும் நடனமும் அசைவுகளும்தான் பார்வையாளர்களுக்கு எவ்வளவு சொல்கின்றன!  

உடல் ரீதியாகவும், உணர்வின் கிளர்ச்சியாகவும் செக்ஸை அணுகாமல், அதனை அறிவு பூர்வமாக தெரிந்து கொள்ளும் நிதானத்தை படம் முன்மொழிகிறது. அந்த உலகத்திற்குள் தன்னை மறந்து மௌனத்தோடு நுழையாமல் மீரா அந்த சமயங்களில் பிரக்ஞையோடும்,  உரையாடுபவளுமாய் இருக்கிறாள்.  

அவளுக்கும் ஸ்ரீக்கும் இருக்கும் உறவை வைத்து பள்ளியில் மற்ற ஆண் பையன்கள் மீராவை அவமானம் செய்யும் ஒரு நாள் வருகிறது. யாருமற்றவளாய் மீரா நிற்க நேர்கிறது. அம்மா வந்து அவளை அரவணைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள்.  

அம்மாவைப் பற்றிய பிரக்ஞை மீராவுக்கு தட்டுப்பட ஆரம்பிக்கிறது. எப்போதாவது வரும் அவளுடைய கணவன் - தனது தந்தை -இல்லாத அந்த வீட்டில் எப்போதும் சமையல் செய்து கொண்டும், வீட்டு வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் அம்மாவின் உலகத்தை எட்டிப் பார்க்கிறாள்.  

மிக மெல்லிய சத்தங்கள், பார்வையாளர்களை யோசிக்கவும், புரிந்து கொள்ளவும் வைக்கிற காமிரா கோணங்கள், கதாபாத்திரங்களின் உடல் அசைவுகள், மிக முக்கியமாய் கண்கள், இந்தப் படத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்க வைக்கின்றன. ஒரு கவிதையின் வரிகளைப் போல காட்சிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. மீராவாக பிரீத்தியும், அனிலாவாக கனியும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். நம் நினைவில் நடமாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டு இருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் ஒரு பெண். சுசி தலாதி. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தவர்.  

அம்மாவுக்குத் தலையில் எண்ணெய் வைத்து, அந்த முடிகளுக்குள் அளைந்து, அப்படியே அதில் தன் முகத்தை மீரா வைக்கும் காட்சியில் நாம் விம்மிப் போகிறோம்.  

‘பழமையான இந்தியக் கலாச்சாரத்தை’ மதிக்கும் எந்த தலைமுறைக்கும் இந்தப் படம் அருவருப்பாகவே இருக்கும்.  

ஆண் பெண் உறவு குறித்து சில முக்கிய உரையாடல்களை இந்தத் தலைமுறைக்கு கவனப்படுத்தும் சினிமா இது என வரவேற்கலாம்.  என்ன, நமக்கு சம்பந்தமில்லாத இடத்தில் எங்கோ இந்தக் கதை நிகழ்வதாய் தோன்றுவதைத்தான் தவிர்க்க முடியவில்லை.  

அமேசன் பிரைமில் Girls will be Girls இருக்கிறது.

  •  

சார்ஜ் ஷீட் 42/2021 – 2ம் அத்தியாயம்


நிர்வாகத் தரப்பில் இருந்து எழுத்துபூர்வமாக எந்தத்  தகவலும் வரவில்லை. 
ஒருவேளை நிர்வாகம் பணி ஓய்வு குறித்து எந்தத் தகவலையும் எழுத்து பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட்டு இருந்தோம். அட்வகேட் கீதா, பெஃபி (BEFI)  மாநிலத் தலைவர்களில் முக்கியத் தோழர் சி.பி.கிருஷ்ணனையும்   கலந்தாலோசித்து முடிவெடுத்திருந்தோம்.  

”எனது வங்கிப்பணி இன்று 5 மணியோடு நிறைவடைகிறது. பணியிலிருந்து விடையனுப்புவது குறித்து  எந்தத் தகவலும்  நிர்வாகத்திடமிருந்து 5 மணி வரைக்கும் வரவில்லை. எனவே, நான் வங்கிப்பணியிலிருந்து 5 மணிக்கு நான் விடுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது” என ஆங்கிலத்தில் டைப் செய்து தயாராக வைத்திருந்த கடிதத்தின் இரண்டு நகல்களை கிளையின் மேலாளர் கதிர்வேலுவிடம் கொடுத்தேன்.  

தோழர்கள் அண்டோ, அறிவுடைநம்பி, அஸ்வத், சங்கர் போன்ற தோழர்கள் எங்கள் அருகில் வந்து நின்றார்கள். மற்றவர்கள் கவுண்டருக்கு அந்தப் பக்கம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். கனத்த அமைதி.
 
மேலாளர் படித்துவிட்டு இரண்டு நகல்கள் எதற்கு என்பது போல என்னைப் பார்த்தார்.
 
“ஒரு காப்பி உங்களுக்கு. இன்னொரு காப்பில நீங்க எனக்கு (acknowledge) அக்னால்ட்ஜ் செஞ்சு தரணும்” என்றேன்.
 
திரும்பவும் கடிதத்தை ஒருமுறை படித்தார்.  வங்கியின் கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தார். எதுவும் சொல்லாமல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக எழுதி, கையெழுத்திட்டு கீழே 5.10 என்று நேரத்தையும் குறிப்பிட்டுத் தந்தார்.
 
என் கையில் அவர் தந்த கடிதம் எவ்வளவு மதிப்பு மிக்கது. அந்த காகிதம் பேசும் வார்த்தைகளை நீதிமன்றங்கள் புறந்தள்ளவே முடியாது. அதையெல்லாம் கதிர்வேலு அறிந்திருந்தாரா என்று தெரியாது. நேர்மையாக பாரபட்சமில்லாமல் நடந்து கொண்டார் என்பது தெரிந்தது.
 
எனக்காகவோ அல்லது நிர்வாகத்துக்காகவோ அவர் செயல்படவில்லை. எது உண்மையோ அதை எழுதியிருந்தார். பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்த நேர்மை மிக முக்கியமானது.  உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டால், இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் வாய்ப்புண்டு. உண்மைகள் பதிவு செய்யப்படாமல் போகும்போது நீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும்.
 
”மிக்க நன்றி” அவரது கைகளைப் பற்றிச் சொன்னேன். மேலாளரும், கிளர்க்கும், அங்கிருந்த அப்ரைசர், தற்காலிக ஊழியரும் சேர்ந்து ஒரு நினைவுப்பரிசை வழங்கினர். தோழர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.
 
விடைபெறும்போது, “சார் உங்களோடு இந்த பிராஞ்ச்சில் வேல பாத்தத மறக்க மாட்டேன். நீங்களும் நினைவில் வச்சுக்கங்க” என்றார் சிரித்துக் கொண்டே.
 
”எப்படி உங்கள மறப்பேன்” என்று ஆரத் தழுவிக் கொண்டேன்.
 
சேலத்தில் இருக்கும் சங்க அலுவலகத்திற்குத் திரும்பினோம். பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் தமிழ்நாடு கிராம வங்கியாக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு 2019 அக்டோபரில் இருந்து இந்த கிளையில் பணியாற்றி வந்தேன். இதே சாலையில் தினமும் பைக்கில் வந்து போய் இருந்தேன். சங்கக் கூட்டங்கள் இல்லாத சனி ஞாயிறு கிழமைகளில் சாத்தூருக்கு ரெயிலில் போய் வந்தேன். 2020 மார்ச்சில் கொரோனா பரவிய பிறகு, போக்குவரத்து  வசதிகள் இல்லாமல் போயின. நிர்வாகத்திடம் சாத்தூர் அருகில் பணியாற்ற சங்கத்தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. அப்படியொரு ஏற்பாட்டை அந்த நெருக்கடியான தருணத்தில் செய்து கொடுக்கும்படி அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
 
சேர்மன் செல்வராஜ் மறுத்துவிட்டதாக ஹெச்.ஆர்.எம் ஜெயக்குமார் சொன்னார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதிகாலை ஐந்தரை மணிக்கு சாத்தூரில் இருந்து தனியாகக் காரில் கிளம்பி 320 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளி கிளைக்கு சரியாக 10 மணிக்கு வருவேன்.  கோயம்புத்தூரிலிருந்து ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி சேலம் வருவார். நாங்கள் சமைக்க ஆரம்பித்தோம். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். எவ்வளவோ பேசியிருந்தோம். பெரும்பாலும் சமூகம், அரசியல், தொழிற்சங்கம்தான். பத்தொன்பது  மாதங்கள் நினைவுகளாகி ஓடிக்கொண்டு இருந்தன.
 
இடப்பக்கம் மலைக்குன்றுகளும், அதற்கு ஊடே ஓடிய பாதைகளும் மங்கிய சாயங்கால வெயிலில் ’அப்பாடா’ எனத் தெரிந்தன. அடிவாரத்தில் சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கொய்யா, ஏழலைக் கிழங்கு விற்கும் வயதான அம்மா அப்போதும் அந்த மரத்தடியில் தனியாக உட்கார்ந்திருந்தார். ஒவ்வொரு இடமும் பழக்கமானவை. எல்லாம் பின்னால் போய்க்கொண்டு இருந்தன.
 
“அண்ணே, மேலாளர் கையெழுத்து போட்டுட்டாரே. இன்னேரம் மேனேஜ்மெண்ட் அவரப் படுத்தி எடுத்திருப்பாங்களே” என்றான் அண்டோ. ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் செயல் தலைவராய் இருந்தான் அண்டோ. ’அண்ணே” என்று அழைத்து நெருக்கமாக பழகுகிறவர்களை தம்பி என்று  அழைக்கத் தொடங்கி அது நாளடைவில் ’அவன்’ , ‘இவன்’ என்று தன்னிச்சையாக அழைக்கும்படி ஆகிறது. தோழர் என அழைக்கப்படும்போது ‘அவன்’, ‘இவன்’ என்று பெரும்பாலும் வருவதில்லை.
 
”மேனேஜர் சாயங்காலம் நாலு மணியிலயிருந்து யார்ட்டயோ மாறி மாறி போன் செஞ்சுக்கிட்டு இருந்தார். நாமக்கல் ரீஜினல் மேனேஜர்ட்ட பேசியிருக்கணும். இல்ல, ஹெச்.ஆர்.ல ஜெயக்குமார்ட்ட பேசியிருக்கணும். அவங்க சேர்மன்ட்ட கேட்டிருப்பாங்க. எல்லாம் அவர்தான. என்ன சொன்னாரோ?” என்றான் ஒர்க்கர்ஸ் யூனியன்  உதவித் தலைவராயிருந்த சங்கர்.
 
”ரெண்டு நாளைக்கு முன்னால ஏப்ரல் 28ம் தேதி யூனியனுக்கு மெம்பர்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்க விடாம செக் ஆப் வசதியை நிறுத்துறாங்க. நம்ம சங்கத்து மேல மேனேஜ்மெண்ட வச்சிருக்கிற வன்மம் அப்பட்டமாத் தெரியுது.  அதனால நாங் கூட நெனைச்சேன். இன்னிக்கு காலையிலேயே உங்களுக்கு ரிடையர்மெண்ட் கொடுக்காம நிறுத்தி செஷேஷன் (cessation) ஆர்டர் கொடுத்துவாங்கன்னு. ஆனா எதுவும் கொடுக்கல?” அண்டோ கேட்டுக்கொண்டே யோசித்தது தெரிந்தது.
 
அவன் கேட்டது சரிதான். சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகம் கடுமையான வன்மத்தோடு மூர்க்கத்தனமாக கடந்த இரண்டு மாத காலமாக தாக்குதல்கள் நடத்தி கொண்டு இருந்தது. ஆறு தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுத்தது. ரிடையர் ஆன தோழர்கள் சோலைமாணிக்கம், கிருஷ்ணனுக்கு பென்ஷனை நிறுத்தப் போவதாக மிரட்டல் கடிதம் அனுப்பியது. சேர்மன் செல்வராஜே தரம் இறங்கி  சங்க நடவடிக்கைகளை சிறுமை படுத்தி, ”இவர்களிடம் எந்த மொழியில் பேசுவது என்று தெரியும்.” என 20.4.2021 அன்று இண்ட்ராநெட்  சர்க்குலரில் ஊழியர்களிடம் தொடைதட்டி கொக்கரித்திருந்தார். அந்த சர்க்குலர் முழுவதும் பொய்யும், அவதூறுகளும்தான். எந்த வங்கியின் உயரதிகாரியும் அப்படி ஒரு தொனியை பயன்படுத்தி இருக்க மாட்டர்கள். அந்த சர்க்குலர் வெளியிட்ட சில நாட்களில் சங்கத்தின் செக்-ஆப் நிறுத்தப்பட்டது.  
 
அப்படி இருக்கும்போது ஏன் இன்று எனக்கு செஷேஷன் ஆர்டர் கொடுக்கவில்லை?  நிர்வாகத்தின் முன்பு இரண்டு ஆப்ஷன்கள்தான் இருந்தன. அதை சங்கமே தெளிவாகவே முன்வைத்திருந்தது.
 
மொத்தம் ஆறு தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டதும் சங்கத்திலிருந்து அட்வகேட் கீதா, பெஃபி சங்கத் தலைவர்களோடு விவாதித்தோம். சார்ஜ் ஷீட்டிற்கு  சென்னை ஹைகோர்ட்டில் தடையுத்தரவு வாங்குவது என யோசனை வந்தது.
 
அப்போது நான் என் கருத்தை முன்வைத்தேன். மற்ற ஐந்து தோழர்களும் இளம் தோழர்கள். அவர்களுக்கு பணிக்காலம் நிறைய இருக்கிறது. ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்து, அது எவ்வளவு காலம் இழுத்தடித்தாலும் பிரச்சினை இலை. ஆனால் எனக்கு ஒரு மாத காலமே பணிக்காலம் இருக்கிறது. ஹைகோர்ட்டில் வழக்கு வருடக் கணக்கில் நடந்தால், அதுவரைக்கும் ஓய்வுகாலச் சலுகைகளும் நிறுத்தப்பட்டிருக்கும்.  எனவே நான் மட்டும் சார்ஜ் ஷீட்டிற்கு பதில் கொடுக்கிறேன். ஹைகோர்ட்டில்  எனக்காக வழக்கு தொடர வேண்டாம். அப்போது நிர்வாகத்துக்கு இரண்டு ஆப்ஷன்கள்தான் இருக்கும். ஒன்று என் சார்ஜ் ஷீட் பதிலை ஏற்றுக்கொண்டோ அல்லது ஏற்றுக்கொள்ளாமலோ ஒரு தண்டனை கொடுத்து பணி ஓய்வுக் கடிதம் கொடுக்கும். அந்த தண்டனை ஏற்புடையதாக இல்லையென்றால் அப்போது நாம் கோர்ட்டுக்குச் செல்லலாம். இரண்டாவது ஆப்ஷன், நிர்வாகம் என் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் என்கொயரி நடத்தலாம். அப்படி நடத்தினால் அதை எதிர்கொண்டு நிர்வாகத்தை அம்பலப்படுத்தலாம். அத்தனையும் பொய்கள். அதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் கிடையாது. நிர்வாகம் அதனை நிரூபிக்க முடியாது.” என்றேன்.
 
அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என அன்புக்குரிய தோழர்கள் தயங்கினார்கள். அட்வகேட் கீதா அவர்களும், தோழர் சி.பி.கிருஷ்ணனும் அப்படியேச் செய்யலாம் என்றார்கள். அதன் அடிப்படையில் மற்ற தோழர்களுக்கு ஹைகோர்ட் சென்று சார்ஜ் ஷீட்டிற்கு அட்வகேட் கீதா தடையுத்தரவைப் பெற்றார்கள்.
 
நான் சார்ஜ் ஷீட்டிற்கு12.4.2021 அன்றே பதில் அளித்துவிட்டேன்.  அதன் மேல் முடிவெடுக்க நிர்வாகத்துக்கு பதினெட்டு நாட்கள் அவகாசமிருந்தது. ஒன்று எதாவது தண்டனை அளித்து என் ஃபைலை முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் என்கொயரி நடத்தப் போவதாகக் கூறி செஷேஷன் ஆர்டர் தந்திருக்க வேண்டும்.
 
ஆனால் நிர்வாகம் இரண்டையுமே செய்யவில்லை. அதைத்தான் தோழர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
 
சங்க அலுவலகம் வந்ததும் இறங்கினோம். அருகில் உள்ள கிளைகளில் இருந்து சங்க உறுப்பினர்கள் வந்திருந்தனர். பணி ஓய்வுக்கு வாழ்த்தினாலும் உள்ளுக்குள் அவர்களிடம் எதோ வாட்டம் இருப்பதை உணர்ந்தேன். தோழர்கள் அறிவுடைநம்பி, அண்டோ, அஸ்வத், பரிதிராஜா எல்லாம் அவர்களுக்கு நம்பிக்கையளித்துப் பேசினர்.
 
“எனக்கு பணி ஓய்வு நிர்வாகம் கொடுத்திருக்க வேண்டும். தரவில்லை. நாமே பணி ஓய்வுக்கான கடிதம் கொடுத்து நாமே அறிவித்துக் கொண்டோம். அதுபோல நாமே பணி ஓய்வு சலுகைகளையும் எடுத்துக் கொள்ளும் நாள் வரும். எல்லாவற்றையும் நமது சங்கம் எனக்கு பெற்றுத் தரும்” என அந்தக் கூட்டத்தில் பேசினேன். என் தைரியமும் தெம்பும்  அவர்களுக்கு நம்பிக்கையளித்திருக்க வேண்டும்.
 
கேக் வெட்டியதும் அந்தச் சூழல் கலகலப்பானது.
 
உள்ளுக்குள் ஒரு சந்தேகம் வரவும் என் லேப்டாப்பில் மெயிலைப் பார்த்தேன். ஹெச்.ஆரிலிருந்து மெயில் வந்திருந்தது.
 
”இன்று மாலை 4.30 மணிக்கு உங்கள் கிளை மேலாளர் மூலம் உங்கள் பணி குறித்து செஷேஷன் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 30.4.2021 அன்றிருந்து உங்கள் பணி செஷேஷன் ஆகிறது. 30.4.2021 முதல் உங்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. என்கொயரிக்கு பிறகு ஓய்வுகால சலுகைகள் எதேனும் இருந்தால் பின்னர் வழங்கப்படும்” என்று பொதுமேலாளர்  மெயில் அனுப்பி இருந்தார்.
 
மெயில் அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்த்தேன்.  7.36 என்று காட்டியது.
 
(தொடரும்) 

  •  

பணி (Pani) - மலையாள சினிமா


ஜோஜூ  ஜார்ஜ் நடித்த படங்கள் எதாவது ஒரு வகையில் கவனத்தில் பதியக் கூடியவையாய் இருக்கும். ’சோழா’, ’ரெட்ட’, ’நாயட்டு’, ’பட’ எல்லாம் நுட்பமாக சித்தரிக்கப்பட்ட திரில்லர் படங்கள். புலிமாடா அங்கங்கு எரிச்சல் பட வைத்தாலும் புதுசாய் இருந்தது. அவர் இயக்கியிருக்கிறாரே என்று ‘பணி’ ( Pani -  மலையாளம்)  பார்த்தாகி விட்டது. 
 

மிகச் சாதாரணமாக ஆரம்பித்த படம் அடுத்தடுத்த காட்சிகளில் மிரட்ட ஆரம்பித்தது. அவ்வளவு சந்தடி  மிக்க பஜாரில் சத்தமில்லாமல் நடக்கும் கொலை பதற வைக்கிறது. எதோ விளையாட்டுப் பையன்கள் போலிருந்தவர்கள்தான் படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாய் உருவெடுத்து நின்றார்கள். அந்த முதல் அரை மணி நேரம்  இருந்த பிடிமானம் எல்லாம் போகப் போக  இழந்து, தர்க்கங்கள் வடிந்து போய்,  கடைசியில் வழக்கமான சினிமாவாகி முடிகிறது.  

மொத்த ஊரையும் ஆட்டிப் படைக்கும் தாதாக்களின் குடும்பம், அவர்கள் எழுப்பி வைத்திருக்கும் ராஜ்ஜியம், அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க நாதியற்ற நிலைமை எல்லாவற்றிலும் பலத்த அடி விழுகிறது. எதற்கும் துணிந்த இரண்டு பொடிப் பையன்கள் அவர்கள் அனைவரையும் நடுங்க வைக்கிறார்கள். ஊர் அதை உள்ளுக்குள் ரசிக்கிறது. இதை மட்டிலும் கதையாக எடுத்துக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருந்தால் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றிருக்கும்.  

லும்பன்களாய் இருந்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் வசதிகளாலும் அவர்கள் ரசனை மிக்கவர்களாக இருக்கிறார்கள். தெருவில் பசியோடு அலையும் லும்பனிடம் என்ன ரசனை இருக்கும்? இந்த முரண்பாட்டை பெண்ணோடு உறவு கொள்வதில்தான் காட்சிப்படுத்த வேண்டுமா?  

பகைமையையும், பழிவாங்கும் வேகத்தையும் வேறு புள்ளியிலிருந்து தொடர்ந்திருந்தால் பார்வையாளர்கள் இந்த சினிமாவை சரியான கோணத்தில் பார்த்திருக்கக் கூடும்.  

அந்த இரண்டு இளைஞர்களின் கொட்டங்களை ஊர் உள்ளுக்குள் ரசிக்கிறது. அவர்கள் ஜோஜூ ஜார்ஜ்  பக்கம் இல்லை. ஆனால் பார்வையாளர்களால் அந்த இளைஞர்களை ரசிக்க முடியவில்லை. அவர்கள் ஜோஜூ ஜார்ஜ் பக்கம் இருக்கிறார்கள். அந்த இரண்டு பேரும்  அவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்படுவதை நியாயம் என உணர்கிறார்கள். இந்த சினிமா தோல்வி அடைந்த இடம் அதுதான்.  

Pani மலையாளப்படம். சோனி லைவில் இருக்கிறது.

  •