Reading view

தலை துண்டிக்கப்பட்ட கோழி

      – ஹொரேஷியோ குய்ரோகா ( உருகுவே)

மாஸினி பெராஸ் குடும்பத்தின் மூளை வளர்ச்சி குன்றிய நான்கு பையன்களும் உள்முற்றத்தில் அடைந்து கிடந்த பெஞ்சிலேயே நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அவர்களின் நாக்குகள் எப்போதும் உதடுகளுக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கும். கண்கள் கலங்கியும் தலையைத் திருப்பும்போது வாய்கள் பிளந்து கொண்டும் இருக்கும்.

    மண்தரை,  மேற்புறம் செங்கற் சுவரால் மூடப்பட்டு இருந்தது அந்த உள் முற்றம். சுவருக்கு இணையாக  ஐந்து அடி தள்ளி இருந்த அந்தப் பெஞ்சில்தான் நான்கு பேரும் அமர்ந்து சலனம் இல்லாமல் சுவரையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சுவருக்குப் பின்னால் சூரியன் மறைந்த பிறகு அவர்களுக்கு உற்சாகமாகிவிடும். மங்கிய விளக்கு ஒன்றுதான் அவர்களின் கவனத்தை முதலில் ஈர்க்கக் கூடியது. அப்போது அவர்களின் கண்களில் மெலிதாக ஓர் ஒளி தோன்றும்‌. இறுதியில் எல்லாரும் சேர்ந்து பெருங்குரலுடன் உரத்துச் சிரிப்பார்கள். நால்வருக்கும் உவகை தொற்றிக் கொள்ளும். உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் அப்போது ஓர் உணவுப் பண்டமாக தோன்றும் அவர்களுக்கு.

    சில நேரங்களில் பெஞ்சில் வரிசையாக அமர்ந்து கொண்டு மணிக் கணக்கில் தள்ளு வண்டியின் ஓசையை நகலாக்கி முணுமுணுத்துக் கொண்டு இருப்பார்கள். பிறகு சத்தத்தை உயர்த்திக்கொண்டே நாக்கைக் கடித்துக் கொண்டும் பூனைக் குரலெடுத்தும் முற்றத்தைச் சுற்றி சுற்றிச் சுற்றி ஓடுவார்கள். ஆயினும் முட்டாள்களுக்கே உரிய மந்தத்தன்மை மேலிட அந்த நாளின் மீதத்தைப் பெஞ்சில் அமர்ந்தே கழிப்பார்கள். கால்கள் அசையாமல் இருக்கும்.கோழை வழிந்து கால் சட்டைகளையும் நனைக்கும்.

     மூத்தவனின் வயது 12. இளையவனுக்கு 8.  அழுக்கும் அருவருப்பும் கொண்ட அவர்களின் தோற்றமே அவர்களது தாயின் அலட்சியத்திற்குச் சான்று தருவதாக இருக்கும்.

     ஆனாலும் ஒரு காலத்தில் பெற்றோருக்கு அவர்கள் மகிழ்வைத் தந்தவர்கள் தான். மாஸினி – பெர்த்தா தம்பதிக்கு ஆண் பெண் மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான தன்னலம் மேலிடும் எதிர்பார்ப்பு ஒன்றும் இருந்தது : மகன்.

நோக்கம் எதுவும் இல்லாத, இழிந்த தன்னலத்தில் இருந்து விடுபட்ட பாசத்தை விட அன்பு கொண்ட இருவருக்குப் பெரும் மகிழ்ச்சியை எது தந்துவிடும். காதலை விடத் தீதானது எது.? அதிலும் புதுப்பிக்க வாய்ப்பு இல்லாத காதலை விட..?

     பதினான்கு மாதங்களில் மகன் வந்தடைந்தான். மகிழ்ச்சியின் எல்லையை அடைந்ததாக அவர்கள் நினைத்தார்கள். ஒன்றரை ஆண்டுகளில் அழகும் வளமும் பெற்று விளங்கியது குழந்தை. ஆனால் இருபதாவது மாதத்தின் இரவொன்றில் பயங்கரமான நடுக்கத்துடன் அதன் உடல் சீர்குலைந்தது. காலையில் தனது பெற்றோரைக் கூட அதனால் அடையாளம் காண இயலவில்லை. டாக்டர் தனது மருத்துவ அறிவைக் கொண்டு, பெற்றோரின் உடல் வலிமையில் உள்ள சமநிலைக் குலைவு காரணமாய் இருக்கலாம் எனக் கண்டு கொண்டார்.

     சில நாட்களில், சூம்பிக் கிடந்த பையனின் கைகள் இயல்புக்குத் திரும்பின. ஆனால் அந்தக் குழந்தையின் அறிவுத்திறன், ஆன்மநலம், அகத் தூண்டுதல் எல்லாம் நிரந்தரமாகக் காணாமல் போனது. அவன் எப்போதும் தனது தாயின் மடியில் கிடந்தான். பிதற்றிக் கொண்டிருந்தான். நொண்டி நடந்தான். குணமாகும் எல்லா வாய்ப்புகளும் வீணாயின.

     ‘என் மகனே.. என் அன்புச் செல்வமே..’ என்று தனது முதல் குழந்தையின் பரிதாப நிலை குறித்துத் தேம்பிக் கொண்டிருந்தாள் அவனது தாய்.

     வெளியே தனித்திருந்த தகப்பனிடம் மருத்துவர் சொன்னார் : ‘உங்களுக்கு மட்டுமே நான் சொல்ல முடியும். இதைக் குணப்படுத்துவது சிரமம். குழந்தையின் அறிவு மட்டும் உதவினால் கொஞ்சம் முயன்று பார்க்கலாம். அவ்வளவுதான்.’

     ‘சரி. சரி.. ‘ மாஸினி இணங்கினான். ‘எனக்கு ஒன்றைத் தெளிவு படுத்துங்கள்.  இது பரம்பரை வியாதியா.. அல்லது..?’

     ‘இது பற்றி உங்கள் குழந்தையைப் பார்த்த போது நான் நினைத்ததை உங்களிடம் கூறி விட்டேன். தந்தை வழியில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ‌தாயைப் பொறுத்தவரை அவளது நுரையீரலில் இருந்து ஒலி சீராக வெளிப்படுவதில்லை. வேறொன்றுமில்லை. ஆனால் அவளின் சுவாசம் ஏறுக்கு மாறாக இருக்கிறது. அதையும் சரியாகப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.’

     மன உறுத்தல் தந்த தொந்தரவால் மாஸினி தன் மகன் மீதான பாசத்தைப் பெருக்கிக் கொண்டான். அந்த மூடக்குழந்தை தனது மூத்தோரின் அறிவுத் திறனைத் திருப்பித் தந்து விடுகிறது. அதே நேரம் மனைவி பெர்த்தாவின் இளம் தாய்மையின் தோல்வி குறித்து ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் அவன் இருந்தான்.

     இயல்புக்கு ஏற்றவாறே, தமது அடுத்த குழந்தை மீதான எல்லா நம்பிக்கைகளையும் திரட்டி வைத்துக் கொண்டனர் அந்தத் தம்பதியினர். இன்னொரு மகன் பிறந்தான். அவனது மழலைச் சிரிப்பும் ஆரோக்கியமும் அவர்களது துயரைத் துடைத்து மகிழ்ச்சியை மீளக் கொண்டு வந்தது.  ஆனால் 18 மாதங்களில் முதல் குழந்தையின் நிலையே திரும்பியது. தொடர்ந்து விடிந்த காலையில் அதுவும் முட்டாளாகவே விழித்தது.

     பெற்றோர் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களின் இரத்தம், அன்பு எல்லாம் பழிக்கு ஆளானதே. குறிப்பாக அவர்களின் காதல்..! அவனுக்கு வயது இருபத்தெட்டு. அவளுக்கு இருபத்திரண்டு. இளமையும் பேரார்வமும் இயல்பான வாழ்வுக்குரிய ஓர் உயிர் அணுவை உற்பத்தி செய்ய முடியவில்லையே. அழகோ அறிவோ கொண்டிருந்தாக வேண்டுமென்று தமது முதல் மகனையே நினைக்கவில்லையே. இப்போதோ அதைப்போலவே இன்னொன்று.

இரண்டாவது பேரிழப்புக்குப் பின்னர் அவர்களின் காதல் இன்னும் ஒரு பைத்தியக்காரத்தனத்தை மீளக்கொணர்ந்தது. தம் இளமை மீதான புனிதமான நம்பிக்கை அது. அதன் பயனாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.‌ ஆனால் முந்தைய பிள்ளைகளுக்கு நேர்ந்த கதிதான் அவற்றிற்கும்.

     தொடர்ந்த தோல்விகள் தந்த கசப்பினால் பெற்றோரின் இரக்க சிந்தை மீண்டது. நான்கு பிள்ளைகளின் காவல் விலங்குக்குரிய தன்மையைத் தம் உள்ளுணர்வால் எதிர்கொண்டனர். பையன்களால் உணவை விழுங்கத் தெரியாது. நகரவோ உட்காரவோ கூட முடியாது. இறுதியில் எழுந்து நடக்கத் தொடங்கினர். தம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் இருப்பதைத் தெரியாமல் அவற்றைத் தாக்கினர். குளிக்க வைக்கும் போது முகத்தைக் கழுவி விடும் வரை கோழையை உமிழ்ந்து கொண்டும், குரல் எழுப்பிக் கொண்டும் இருந்தனர். உணவோ, கண்ணைப் பறிக்கும் நிறமோ, இடிச் சத்தமோ மட்டுமே அவர்களை கிளர்வுறச் செய்தன. பிறகு அவர்கள் உரத்துச் சிரிப்பார்கள். ஏதோ கோளாறில் கொந்தளிப்பார்கள். நாக்கைத் துருத்திக் கொண்டு உமிழ்நீரைக் கடலாய்க் கொட்டுவார்கள். அதே நேரம் சிலவற்றைப் போலச் செய்யும் திறமையையும் அவர்கள் ஈட்டிக் கொண்டனர். அதைத்தவிர வேறொன்றுமில்லை.

     மரபு வழியிலான அச்சுறுத்தல் எல்லாம் அந்த இரட்டையரோடு முடிந்துவிட்டது என எண்ணினர். ஆனால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தணிக்க அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே இன்னொரு குழந்தையைப் பெற விருப்பம் வந்து விட்டது அவர்களுக்கு.

     நம்பிக்கைகள் திருப்தி தரவில்லை. அதன் காரணமாக நிராசையும் எரிச்சலும் தோன்றி கணவன் மனைவிக்குள் தீராக் கசப்பை ஏற்படுத்தி விட்டது. அதற்குள் தமது குழந்தைகளின் அப்போதைய நிலைமைக்கான பொறுப்பை யார் பகிர்ந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்து விட்டது. தாம் பெற்றுவிட்ட நான்கு விலங்குகளுக்கும் செய்ய வேண்டிய பரிகாரம் ஏதுமில்லை எனத் தெரிந்தவுடன் ஒருவருக்கொருவர் பழி சுமத்தத் தொடங்கிவிட்டனர்.

     அந்த மாற்றம் இப்படித் தொடங்கியது : ‘உனது பிள்ளைகள்..’ அதனாலேயே தம்மில் ஒருவரை விழ வைத்தும் பழிதூற்றியும் குற்றம் சுமத்திக் கொண்டனர்.

     ‘எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்..’

  அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த மாஸினி கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டு பெர்த்தாவிடம் சொன்னான் ‘நீ குழந்தைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..’

     அவன் சொன்னதைக் கேட்காமல், எதையோ படித்துக் கொண்டிருந்தாள் அவள்.

     ‘இதுதான் முதல் தடவை..’  சிறு மௌனத்திற்குப் பிறகு சொன்னாள் ‘நீ உன் பிள்ளைகள் நிலை பற்றிய அக்கறையைச் சொல்கிறாய்.’

     தலையை அவன் பக்கம் திருப்பி, வலிந்து வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் மாஸினி சொன்னான் : ‘நம்முடைய பிள்ளைகள் என்று நினைக்கிறேன்..’

     ‘சரிதான். அவை நமது பிள்ளைகள் தான். இதைச் சொல்லத்தான் நீ விரும்புகிறாயா?.’ கண்களை உயர்த்திக் கொண்டே கேட்டாள்  அவள்.

     மாஸினி தெளிவாகச் சொன்னான் : ‘நிச்சயமாக நான் தான் இதற்குக் காரணம் என்று நீ சொல்ல மாட்டாய் இல்லையா.?’

     வெளுத்த புன்னகையுடன் ‘இல்லை.. ஆனால் நானும் இல்லை என்று தான் நினைக்கிறேன். அது தான் எனக்குத் தேவை’ என்று முணுமுணுத்தாள் பெர்த்தா.

     ‘என்னது. என்ன தேவை உனக்கு..?’

      ‘குற்றத்தை என் மீது மட்டும் சுமத்த முடியாது என்பதை நினைத்துப் பாருங்கள். அதைத்தான் சொன்னேன்.’

     ஒரு கணம் அவளைப்  பார்த்தான். காயப்படுத்தும் விருப்பம் கூட தோன்றியது.

     ‘சரி. விட்டுவிடலாம்..’ இறுதியாகச் சொல்லிவிட்டுக் கைகளைத் துடைத்துக் கொண்டான்.

    ‘உன் விருப்பப்படியே. ஆனால் நீ சொல்வது..?’

    ‘பெர்த்தா..’

    ‘உன் விருப்பம் தான்..’ இதுதான் அவர்களின் முதல் மோதல். பிறகு அதைத் தொடர்ந்து கொண்டார்கள். தவிர்க்க முடியாத சமரசத் தீர்வை நோக்கி அவர்கள் திரும்பும் போது இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆர்வம் இருவருக்கும் ஏற்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வருடத் துயர்மிகு நாட்களுக்குப்பிறகு இன்னொரு பேரிடருக்கு அவர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை. நன்றாகவே பிறந்தது குழந்தை. தமது ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் புதிய மகளின் மீது செலுத்தினர். அவர்களின் தொல்லையைச் சாதகமாக எடுத்துக்கொண்டு அது மோசமாக நடந்து கொள்ளத் தொடங்கியது. அதன் பிறகான ஆண்டுகளிலும் தனது நான்கு பையன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆயினும் பெர்டிடா (மகள்) பிறந்தபின் அது குறையத் தொடங்கியது என்றானது. அவர்களைப் பற்றிய நினைவே அவளை அச்சமடையச் செய்தது. கட்டாயமாகச் செய்ய வேண்டிய சில காரியங்கள் கொடுங்கனவாய் ஆயின. மாஸினிக்கும் இதே நிலைதான். ஆனால் சிறிய அளவில்.

     இருவர் மனதிலும் நிம்மதி இல்லை. மகளின் முரண்டு, பிடிவாதம் இப்போது கட்டவிழும் நிலைக்கு வந்துவிட்டது. அவளை இழந்து விடுவோம் என என்று நினைவே அவர்களுக்குப் பயங்கரத்தைத் தந்தது.  திடமற்ற தமது மரபுக் கோளாறு ஏற்படுத்திய கசப்பு அவர்களைச் சுட்டது. மகளின் குடற்கொடி வீங்கியும், பித்தநீர் அதிகமாகத் தேங்கியும் காணப் பட்டது. மெதுவாக தொட்டாலே அது நஞ்சு போல் வழிந்து சிதறியது.

     அன்றைக்குத் தோன்றிய மோசமான கருத்து வேறுபாடு ஒருவரை ஒருவர் அவமதித்துக்கொள்ளும் நிலைக்குப் போனது. இதயங்களைக் குரூரத்தால் நிறைத்துத் துன்புறுத்திக் கொண்டனர். அதன் முன்னர் தமது தோல்விகளால் கட்டுண்டு கிடந்தவர்களிடம் குடிகொண்டு இருந்த தனிக் குணம் வெற்றிகரமாக வெளிவந்துவிட்டது. இயல்பு பிசகிப் பிறந்த நான்கு பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு வெறுப்பை உருவாக்கி அடுத்தவரைத் துன்புறுத்தியது.

     இந்த உணர்வினாலேயே அந்த நான்கு பையன்கள் மீதும் அவர்களுக்குப் பாசம் தோன்றும் வாய்ப்பு ஏற்படவில்லை. வேலைக்காரிதான் அவர்களைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, உணவு ஊட்டி, உறங்கச் செய்தாள். எல்லா முரட்டுத்தனங்களையும் சகித்துக் கொண்டு தாய் அவர்களை ஒருநாளும் குளிப்பாட்டியது இல்லை. ஒரு நாளின் பெரும் பகுதியை அவர்கள் சுவர்களைப் பார்த்தே கழித்தார்கள். பெற்றோரின் அன்பும் சீராட்டும் அறவே கிட்டவில்லை அவர்களுக்கு.

     மகள் பெர்டிடாவுக்கு நான்காவது பிறந்தநாள். அவளுக்குக் கொடுத்த  ஏராளமான இனிப்பு வகைகளை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவற்றை உண்ட மகள் குளிர் காய்ச்சலால் அவதிப்பட்டாள். குழந்தை இறந்து விடுவாளோ அல்லது அவளின் நான்கு சகோதரர்களைப் போல புத்தி பேதலித்துத் திரிவாளோ என்ற அச்சம் தோன்றிக் கவலையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு

     மூன்று மணி நேரமாக அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. பிறகு மாஸினியின் வழக்கமான அவசரமே ஓர் உரையாடலுக்கு உந்திச் செலுத்தியது.

     ‘ஓ.. கடவுளே. இதைவிட உன்னால் மெதுவாகக் கால் வைத்து நடக்க முடியாதா..?  எத்தனை தடவை உனக்கு..?

      ‘சரி.  மறந்து விட்டேன். திருத்திக் கொள்கிறேன். வேண்டுமென்றே நான் அதைச் செய்யவில்லை’

       ஏளனமாகப் புன்னகைத்தாள்.

      ‘இல்லை. இல்லை.. நானும் உன்னை நினைத்துச் சொல்லவில்லை..’ என்றாள்.

       ‘உன்னைப்போல நானும் அதை நம்ப மாட்டேன். உனக்கு அழிவு காத்திருக்கிறது..’

    ‘என்ன.. என்ன சொன்னாய்..?

     ‘ஒன்றுமில்லை..’

      ‘அப்படியா..?  எதையோ நீ சொல்வதை நான் கேட்டேன். அது என்ன என்பது எனக்குத் தெரியாது. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். உனக்குப் போலவே இன்னொரு தந்தையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.’

     வெளிறிப் போனான் மாஸினி.

     ‘கடைசியாக..’ பற்களை இறுகக் கடித்துக் கொண்டே சொன்னான். கடைசியில் நீ ஒரு வஞ்சகியாகி விட்டாய். செய்ய விரும்புவதை நீயே சொல்லிவிட்டாய்..’

     ‘ஆம். நான் வஞ்சகிதான். ஆனால் எனக்கு ஆரோக்கியமான பெற்றோர் இருக்கிறார்கள். என்ன கேட்கிறதா.. ஆரோக்கியமான பெற்றோர். என் தந்தை பைத்தியமாகிச் சாகவில்லை. மற்றவர்களைப் போலவே எத்தனையோ பிள்ளைகளை நான் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். இதோ இவர்கள் எல்லாம் உன்னுடைய பிள்ளைகள். அதாவது அந்த நான்கு பேர்.’

     திரும்பிப் பார்த்து வெடித்தான் மாஸினி. ‘பேரழிவுக்குரியவளே. இப்படித்தான் உன்னை அழைக்க நினைத்தேன். அதையே சொல்கிறேன். நீ போய் மருத்துவரைக் கேள் – நான்கு பையன்கள் இப்படி இருக்க யார் காரணம் என்று. மூளைக் கோளாறு யாருக்கு..? என் தந்தைக்கா அல்லது உன் அழுகிப்போன நுரையீரலுக்கா..? சொல் பார்ப்போம்.’

     வன் சொற்கள் உயர்ந்தன. பெட்ரிடா விடமிருந்து வெளிப்பட்ட ஒரு முனகல் ஒலி அவர்களின் வாயை அடைத்தது. அதிகாலையில் மகளின் அஜீரணக் கோளாறு சரியாகிவிட்டது. புதிதாக மணமான தம்பதிகளுக்கு இதுபோன்ற சண்டை சச்சரவுகளும் சமாதானமும் தவிர்க்க இயலாதே, அதைப்போல.

     ஆரவாரமான நாள் ஒன்று விடிந்தது. பெர்த்தா படுக்கையில் இருந்து எழுந்த போதே இரத்த வாந்தி எடுத்தாள். அவளது உணர்ச்சிப் போக்கும், பயங்கரமான முந்தைய இரவும் தான் சந்தேகத்துக்கு இடமில்லாத காரணம். மாஸினி அவளை நெடுநேரம் தழுவி அணைத்துக் கொண்டான். அவள் தேம்பிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

     பத்து மணிக்கு, மதிய உணவுக்கும் பிறகு வெளியே சென்று வர முடிவு செய்தார்கள். ஒரு கோழியை அடித்துச் சமைக்கவும் வேலைக்காரிக்கு உத்தரவிட்டனர்.

     அந்த ஒளி மிகுந்த நாள் நான்கு பையன்களையும் ஒருசேர பெஞ்சுக்கு வரவழைத்துவிட்டது. சமையலறையில் வேலைக்காரி கோழியின் கழுத்தை வெட்டும்போது இரத்தம் சிறிதளவே வெளியேறச் செய்து கொண்டிருந்தாள். ( இது பெர்த்தா தனது அம்மாவிடம் கற்றுக் கொண்டது. பயனுள்ள வழிமுறை. கறி வாடாமலே இருக்கும் ). வேலைக்காரி தனக்குப் பின்னால் ஏதோ மூச்சு விடுகிற ஒலியைப் போல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அந்த நான்கு பையன்களும் தோள் மீது தோள் வைத்துச் சாய்ந்து வியப்புக்குரிய அந்த செயலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிவப்பு.. சிவப்பு நிறம்..

      ‘அம்மையீர். பையன்கள் இங்கே சமையலறைக்குள் வந்து விட்டார்கள்.’

       உடனடியாக அங்கே வந்தாள் பெர்த்தா. உணவுத் தயாரிப்பை அவர்கள் பார்ப்பதை அவள் விரும்புவதில்லை. மறதி, மன்னிப்பு, மற்றும் மகிழ்ச்சியை மீட்க எனத் தொடர்ந்த அந்தச் சில மணி நேரத்தில் இதுபோன்ற பயங்கரக் காட்சியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இயல்பாகவே கணவன், மகள் மீதான அன்பின் உச்சம், அந்த நான்கு ராட்சசர்களின் மீதான வெறுப்பு ஆகியவை இதற்குக் காரணம்.

     ‘அவர்களை வெளியே அனுப்பு மரியா.. துரத்தி விடு..’

      நெருக்கிக் கொண்டும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் போய்த் தமது பெஞ்சில் அமர்ந்தனர். விலங்குகள் போன்ற அந்த நான்கு பேரும்.

     மதிய உணவுக்குப் பிறகு அனைவரும் வெளியே சென்று விட்டார்கள். வேலைக்காரி பியூனஸ் அயர்சுக்குப் போயிருந்தாள். தம்பதியினரும் குழந்தையும் அண்மையில் இருந்த கிராமத்து வீடுகள் வழியாக நடந்து கொண்டிருந்தனர். சூரியன் மறையும் நேரம் திரும்பினர். எதிர்ப்படும் அயலாரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு வர பெர்த்தாவுக்கு விருப்பம். அவளது மகளோ வேகமாக ஓடி வீட்டிற்குப் போனாள்.

     இதற்கிடையில் அந்த நான்கு பையன்களும் நாள் முழுவதும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார்கள். சூரியன் இப்போது சுவர்களுக்கு அப்பால் மறையத் தொடங்கியது. வழக்கத்தை விடவும் நெடுநேரம் அவர்கள் சுவரையே தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களது பார்வைக் கோட்டிற்கும் சுவருக்கும் இடையில் ஏதோ ஒன்று வந்துவிட்டதைக் கண்டனர். அவர்களது சகோதரி. ஐந்து மணி நேரம் பெற்றோருடன் நடந்து சோர்ந்து போனவள் அந்த இடத்தையே சுற்றுமுற்றும் பார்ப்பது தெரிந்தது. சுவருக்குக் கீழ் நின்று கொண்டு யோசித்தவாறு அதன் உச்சியை பார்த்தாள் அவள். அதன் மேல் ஏறிவிட ஆசை தோன்றியது. இறுதியாக அங்கே கிடந்த ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு ஏற முயன்றாள். ஆனாலும் அதன் உச்சியை அவளால் அடைய முடியவில்லை. பிறகு ஒரு மண்ணெண்ணெய் டப்பாவை எடுத்து வந்து நாற்காலியின் மேல் செங்குத்தாக வைத்து ஏறினாள். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று விட்டாள்.

     நான்கு பையன்களும் தமது சகோதரி எப்படிப் பொறுமையாகக் காலூன்றி, சமநிலை குறையாமல் சுவர் மீது ஏறி, அதன் உச்சியில் கழுத்தைத் தனது சோர்ந்து கைகளால் தாங்கிக் கொண்டு நிற்கிறாள் என்பதைப் பார்த்தார்கள். அவள் கால் விரல்களை ஊன்றிக்கொண்டு இன்னும் மேலேற முயல்வதும் அவர்களுக்குத் தெரிந்தது.

     அவர்களின் வெறித்த பார்வைகள் கிளர்வு கொண்டன. அத்தனைக் கண்களும் பளிச்சிட்டன. முன்னே இருக்கும் சகோதரி ஒரு பேருணவாகத் தெரிந்தாள் அவர்களுக்கு. மெதுவாகச் சுவரை நெருங்கினர். அந்தச் சிறு பெண் சுவரின் மேல் இருபுறமும் கால்களை அகட்டிப் போட்டுக் கொண்டு இருந்தாள். எந்நேரமும் அடுத்த பக்கத்தில் அவளால் விழுந்து விட முடியும். ஆனால் ஒரு காலை யாரோ இழுத்துப் பிடிப்பதை உணர்ந்தாள். கீழே இருந்து உறுத்துப் பார்க்கும் எட்டுக்கண்களும் அவளைப் பயமுறுத்தின.

     ‘விடுங்கள்.. நான் போக வேண்டும்..’ கால்களை உதறிக் கொண்டு கதறினாள். ஆனால் ஒரு கணத்தில் முழுமையாக பிடிபட்டு விட்டாள்.

     ‘அம்மா..ஆ.. அம்மா..  அப்பா..’ உரக்கக் கத்தினாள். இன்னும் அவள் சுவரின் உச்சியைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் மெல்ல மெல்லப் பிடி விலகிக் கீழே இழுக்கப்பட்டுத் தரையில் விழுந்தாள்.

      ‘அம்மா.. ஓ. அம்..’ தொடர்ந்து குரல் எழுப்ப முடியவில்லை. அவர்களில் ஒருவன் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இறக்கை போல் இருந்த காது முடிச்சுருளை விலக்கி விட்டான்.  மற்ற மூவரும் அவளது ஒரு காலைப் பிடித்து இழுத்துக் கொண்டே சமையலறை நோக்கிப் போயினர். காலையில் அங்கு தான் ஒரு கோழி தன் இரத்தத்தைச் சிந்தியிருந்தது. இறுகப் பிடிக்கப்பட்ட அவளது உடலில் இருந்து உயிர் நொடிக்கு நொடி பிரிந்து கொண்டிருந்தது.

     திரும்பும் வழியில் மாஸினிக்குத் தன் மகளின் குரலை தூரத்திலிருந்து கேட்டது போல் தோன்றியது.

     ‘உன்னைக் கூப்பிடுகிறாள் என்று நினைக்கிறேன்..’ பெர்த்தாவிடம் சொன்னான்.

     கவனித்தார்கள். அசௌகரியமாக உணர்ந்தார்கள். குரல் ஏதும் கேட்கவில்லை. உடன் உரையாடிக் கொண்டிருந்தவர்களிடம் குட் பை சொல்லிவிட்டுத் தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டாள் பெர்த்தா. மாஸினி வேகமாக வீட்டுக்குள் போய் உள் முற்றத்தை அடைந்தான்.

     ‘பெர்டிடா..!’

     பதில் இல்லை.

     ‘பெர்டிடா..!’  குரலை உயர்த்திக் கூப்பிட்டான்.

     அந்த மௌனம் ஏதோ ஒரு கெட்ட நிமித்தமாக நெஞ்சில் நுழைந்து ஓடி முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தது.

     ‘மகளே. என் மகளே..!’ வெறிபிடித்தாற்போல் வீட்டின் பின்பக்கமாக ஓடினான். சமையலறையைக் கடக்கும் போது தரை முழுவதும் இரத்தம் கொட்டியிருப்பதைப் பார்த்தான்‌. பாதி மூடியிருந்த கதவை ஓங்கித் தள்ளினான். பயங்கரமான குரல் அவனிடமிருந்து எழுந்தது.

      ஏற்கனவே ஓடத் தொடங்கி விட்ட பெர்த்தா தனது கணவனின் அபயக் குரலை கேட்டுக் கதறிக்கொண்டே வீட்டில் நுழைந்தாள். சமையலறையை நெருங்கும் போது மரணத்தில் வெளிறிக் கொண்டிருந்த உடலுடன் மாஸினி வழியை மறித்துக் கொண்டு நின்றான். நெருங்கிய அவளைப் பின்னுக்கு இழுத்தபடியே ‘உள்ளே போகாதே. போகாதே..!’ என்று கூச்சலிட்டான்.

     இரத்தச் சகதி கொண்ட தரையைப் பார்த்தாள் பெர்த்தா. கம்மிய குரல் ஒன்று மட்டுமே அவளிடம் இருந்து வெளிப்பட்டது. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கணவன் மீது சாய்ந்தபடியே மெதுவாக தரையில் வீழ்ந்தாள்.

000

ஹொராசியோ சில்வஸ்தர் குயிரோகா போர்தஸா*

( 1978 – 1937 )

உருகுவேயில் பிறந்து அர்ஜென்டினாவிற்குக் குடி பெயர்ந்தவர்.

இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளுக்கேயுரிய பூடக, மாயத் தோற்ற வகை எழுத்துகளின் முன்னேர் இவர்.

முதல் புதினம் எழுதிய எட்கர் அலன் போ-வின் பாதிப்பில் தொடங்கி சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் எனப் பயணித்தவர்.

இயற்கை – மனித முரண் மீது தன் படைப்பு மனத்தைத் திருப்பியவர். அடர் வனங்களில் வாழ முயன்றவர்

திகில், நோய், மனப்பிறழ்வு எனப் பல இயல்புகளை எழுத்தாக்கினார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள் :

Feather Pillow

The Wild

The Slaughtered

Anaconda

Exiles

Drifting

000

அவைநாயகன்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சூழலியல் செயல்பாட்டாளர்.

சூரியச் செதில்கள், காடுறை உலகம் இவரது கவிதை நூல்கள். ஞானப் பறவை (ரிச்சர்ட் பாக்) கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது (மாயா ஏஞ்சலோ) இந்தியா அழைக்கிறது (ஆனந்த் கிரிதர் தாஸ்) டெர்க் உஸாலா (விளாதிமிர் கே ஆர்சென்யேவ்) ரஷோமோன் திரைக்கதை (அகிரா குரஸாவா ஷினோபு ஹஷிமோட்டோ) ஆகியவை மொழிபெயர்ப்புகள்.

The post தலை துண்டிக்கப்பட்ட கோழி first appeared on Nadukal.

  •  

பி ற் ப க ல்

சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான். மூடிக் கொண்டிருக்கும் கதவிடுக்கின் வழியே உள்ளே வராந்தாவில் இவன் வெளியே போகிறதைப் பார்த்தபடி சமையலுக்கு உதவி செய்யும் ரூப் தல்வார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பத்துவருடங்கள் பழகிய இடத்தைவிட்டுப் போகும்போது ஏற்படும் மனத்தவிப்பில் அவனால் எதையும் சரியாக யோசிக்க முடியவில்லை. மிக நெருங்கிய மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக வந்து நினைவைப் பின்னிழுத்தன. அவர்கள் உறவினர்கள் போலாகிவிட்டனர்.

கதவுகளுக்கு சற்றுத்தள்ளி வெளியே நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த சிறைக்காவலன் இளித்தான். “முபாரக் ஹோ”(வாழ்த்துக்கள்). பச்சன் சிங் கையில் வைத்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தான், இப்போது அவன் புன்னகைத்தான். பிச்சை எடுத்தே பழகிய கைகள். முன்னால் பரந்துகிடந்த வெட்டவெளிப் பொட்டலில் சூரிய ஒளி மிக அதிகமாக இருந்ததால் கண்கள் கூசின. நிறம் மங்கிய செம்மண் நிலத்தில் சிறிது தூரத்திற்கு புல் பூண்டு கூட இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. வெய்யிலின் சூடு முகத்தில் எரிந்தது. சற்றுத் தள்ளி நின்ற ஒரே வேப்ப மரத்தடிக்குச் சென்றான். ‘அப்பாட’ என்றிருந்தது. மரத்தடியில் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்த கிழவி அவனைப் பார்த்தாள். இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான்.

யாரையுமே காணவில்லை. பரோலில் வெளிவரும் நாட்களில் கூட்டமாக இருக்கும். கிழவி அவன் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் சொன்னாள் ”இன்னைக்கு மூணு மணிக்கு மேல்தான் ஆட்கள் வருவார்கள்”. பின்னர் சற்றுத் தயங்கியபடி குரலைத் தணித்துக் கொண்டு கேட்டாள் “இப்பத்தான் வெளியே விட்டாங்களா?” “ஹூம்” என்று தலையசைத்தான்.

என்ன செய்வது? தன்வீர் சிங் ஏன் வரவில்லை?. கிழவியைப் பார்த்துச் சொல்வதுபோல் “வர்ரேன்” என்று சொல்லிவிட்டு துணிப்பையை தோளில் போட்டு நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். மெயின்ரோடு சற்று தூரத்தில் தெரிந்தாலும் நடக்க நடக்க போய்க்கொண்டே இருந்தது.

அம்மா உயிரோடிருந்தால் இந்தக் கிழவிபோல் இருப்பாளோ? இவளைவிட வயது அதிகம். தன்வீர் சிங் எங்காவது கண்ணில் படுகிறானா என்று அவ்வப்போது சுற்றும்முற்றும் பார்த்தான். யாரையுமே காணவில்லை. வெய்யில் தலையிலும் முகத்திலும் உக்கிரமாக எரித்தது.

சிறைக்கூண்டுக்குள் வெக்கை அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் வெய்யில் முகத்திலோ உடம்பிலோ விழாது. வெகுதூரம் நடக்கக் கஷ்டமாக இருந்தது. நடக்கிற பழக்கம் விட்டு ரொம்ப வருஷங்களாகி விட்டது. ஆறு கிலோமீட்டர் நடந்து வாராவாரம் சினிமா பார்த்தவன். இப்போது சுத்தமாக நடக்கமுடியவில்லை. எங்கே போவது? என்று யோசித்தான். அம்மா போன வருடம் வரை இருநதாள். வீட்டிற்குப் போகலாம். அங்கிருந்து பல வருடங்களாகி விட்டன. அது யாரோ வேறொருவருடைய வீடுபோல் நினைவில் நின்றது. வேறு வழியில்லை. அங்கேதான் போகவேண்டும்.

சித்திமகன் தன்வீர் சிங் பக்கத்து வீடான இவன் வீட்டிலும் இருக்கிறான். சின்னதாக இரண்டு அறைகள்தான். “நீ வரும்வரை” என்று அவன் சொன்னது தெளிவாக நினைவு வந்தது. அவன் தன்னைக் கண்டு பயப்படக்கூடும். இருந்தாலும் பாசம் உள்ளவன். முடிந்தபோதெல்லாம் சிறைக்கு வந்து பார்ப்பான். கையைவிட்டுப் போகாதிருந்த மீதி நிலத்தில் விவசாயம் பார்த்தான். அது கட்டுபடியாகாததால் மற்ற நேரங்களில் டிரைவர் வேலை, சுண்ணாம்பு அடிப்பது, பைப் ரிப்பேர் என்று ஏதாவது செய்து பிழைத்துக் கொண்டிருந்தான்.

மெயின் ரோட்டில் இரைச்சல் காதை அடைத்தது. கார்களும் பஸ்களும், ஆட்டோக்களுமாக சாலையை நிறைத்து வழிந்து போய்க்கொண்டிருந்தன. உலகத்திலே தன்னந்தனியாக விட்டதுபோல் உணர்ந்தான். இடப்பக்கம் திரும்பி பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தான். எல்லோரும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தனர். பஸ் ஸ்டாண்டிலும் கூட்டமாக இருந்தது. நடக்க வலுவில்லையோ? எல்லோர் கைகளிலும் மினுங்கும் தோல்பைகள், சின்ன பிரிஃப்கேஸ்கள். இப்போது யாரும் துணிமூட்டையைத் தூக்குவதில்லையோ?. அது தோளை அழுத்தியது.

ஒரு வழியாக பஸ்பிடித்து கிராமத்திற்கு வர இரண்டு மணி நேரத்துக்கு மேலானது. தெருவுக்குள் ஒன்றிரண்டு பெண்கள் இவனைக் கண்டதும் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு பார்த்தார்கள். அடையாளம் தெரிந்ததோ இல்லையோ? அவனது வீட்டை தூரத்திலிருந்து கவனித்தான். மிக மோசமான நிலையில் இருந்தது. சுவர்களில் காரை பெயர்ந்தும் வெள்ளையடிக்காமலும், இது ஒரு வீடா? சிறையில் புதுசாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்கும். அரசாங்கச் செலவில் ரிப்பேர் பார்ப்பார்கள். வீட்டை நினைத்து வெறுப்பாக இருந்தது. இனி இதில்தான் இருக்கவேண்டும். யாராவது சிமெண்ட் பூசி ரிப்பேர் பார்க்கக்கூடாதா? தன்வீர் சிங் மேல் கோபம் வந்தது. அவனுக்கென்ன வருமானம் என்று யோசித்த போது அவனும் பாவம் என்ன செய்வான் என்று தோன்றியது.  நிலையான வருமானம் கிடையாது. அவன் வீடும் இடிந்து விழுவது மாதிரிதான் இருக்கிறது. அவன் ஒருவன் தான் நெருங்கிய சொந்தக்காரன்.

லொடலொட என்று ஆடிக் கிடந்த கதவைத்தள்ளித் திறந்து உள்ளெ நுழைந்தான். யாரும் வீட்டில் இல்லை. ஒரு தரைவிரிப்பும் கால் உடைந்து போன ஒரு நாற்காலியும் தண்ணீர்க் குடமொன்றும் இருந்தன. வெளியே வந்து குட்டித்திண்ணையில் உட்கார்ந்தான். வீட்டை ரிப்பேர் பார்ப்பது அப்புறம். அடுத்தவேளைச் சாப்பாடு? தன்வீர் சிங் எத்தனை நாளுக்குப் போடுவான். சிறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கொடுக்க வேண்டியதுதான். அது எத்தனை நாளுக்குத் தாங்குமோ? சிறையில் மணியடித்தால் தட்டைத்தூக்கிக் கொண்டு போகலாம். இப்போது எங்கே போவது?

படிப்பு மண்டையில் ஏறாததால் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்கூடம் போகவில்லை. வாடகைக்கு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தான். பிறகு கடனுக்கு டிராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.

வெளியில் போயிருந்த தன்வீர் சிங்கின் மனைவி அவசரம் அவசரமாக வந்தாள். அவனைப் பார்த்து திடுக்கிட்டு விருட்டென்று முந்தானையால் மூடிக் கொண்டாள். “நமஸ்தேஜி. அவங்க உங்களைப் பார்க்கத்தான் போனாங்க இன்னும் வரலை. உங்களைப் பார்க்கலையா?

“இல்லை” என்று தலையசைத்தான்.

“அப்ப திரும்பி வந்திட்ருப்பாங்க. நான் ‘சாய்’ போட்டு வரேன்” சொல்லிவிட்டு அடுத்திருந்த அறைக்குள் போனாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். அவன் தங்கை இப்படி பெரிய பெண்ணாக அழகாக இருந்திருக்கக் கூடும். சின்ன வயதில் கண்மண் தெரியாத கோபத்தில் அப்படிச் செய்துவிட்டான். அவர்களுக்குப் பதின்மூன்று வயதிருக்கும். இப்போது நினைத்தாலும் துக்கம் மனதைக் கவ்வியது. நினைந்து நினைந்து வருந்தி மனதில் கல்லில் செதுக்கியது போலாகி விட்டது.

சிறையில் அவனும் என்னென்னவொ செய்தான். அவனுக்கும் ஏதேதோ நிகழ்ந்தது. சட்டப்படி அதெற்கெல்லாம் தண்டனை கொடுத்தால் அவன் வெளியே வந்திருக்கவே முடியாது.

அசதியாகயிருந்தது. உள்ளே போய் விரிப்பில் படுத்துத் தலையை மடித்த வலது கையில் வைத்தபடி கண் அசந்தான். சோனம் ‘சாய் கொண்டுவந்து அவனைப் பார்த்துவிட்டு திரும்பிப் போனாள்.

தன்வீர் சிங் வந்திருக்க வேண்டும். “ப்ச்சன் சிங் வந்துவிட்டானா?” சோனத்திடம் அவன் கேட்டது இவன் காதிலும் விழுந்தது. அசந்து தூங்கியிருந்தான். மேலெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் வைத்திருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.

உள்ளே வந்த தன்வீர் வருத்த்ததுடன் களைத்துப் போன குரலில் சொன்னான் “நமஸ்தேஜி.. பஸ் கிடைக்காமல் போய்ச்சேர நேரமாகிவிட்டது. அதற்குள் நீங்க கிளம்பீட்டீங்க. சிறைக்காவலன் சொன்னான்” அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவனைத் தேடி வரவும் ஆள் இருக்கிறது. சீக்கிரம் வந்தும் என்ன செய்வது? ஒன்றுமில்லை” விரக்தியில் அவன் பேசுவதைப் புரிந்துகொண்டு தன்வீர் இதமாக தொடங்கினான் “இருந்தாலும்…..” தொடர முடியவில்லை. தன்வீர் சிங் சோனத்தைக் கூப்பிட்டுக் கேட்டான் “சாப்பாடு தயார் பண்ணிட்டியா? …. ஒன்றே முக்காலாகிவிட்டது. எனக்கும் பசிக்கிறது.”

“நீங்க குளிச்சிட்டு வந்திருங்க”என்று தன்வீர் சொன்னதும் பச்சன் சிங் குளிக்கப் போனான்.

சாப்பிடும் போது பச்சன் வீட்டைக் கவனித்தான். எளிமையாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. மனைவி நச்சரித்திருப்பாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். கைகளில் வளையல்கள் குலுங்கின. அவள் வரும்போதெல்லாம் ஏதோவொரு வாசனை வந்தது. சாப்பிடும் போது நடு நடுவில் பெருமூச்சு விட்டான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?”

“ஒரு பொண்ணு இரண்டு பையன்கள். மூத்தவன் ஏழாவது இன்னொரு பையனும் பொண்ணும் மூன்றாவது. இரட்டைப் பிள்ளைகள்”

“உன் அண்ணன் மான்சிங் எங்கே?”

“அவன் பாம்பே போய்ட்டான். அங்கெ நல்ல சம்பாத்தியம். ஆனா பிள்ளைகள் இல்ல” வருத்தப்பட்டான். பிள்ளைகள் பிறப்பது கடவுள் கொடுக்கும் வரம்… வச்சு வளக்றது ரொம்பக் கஷ்டம்.” சடக்கென்று. நிறுத்திக் கொண்டான்.

சற்று நேரம் அமைதி நிலவியது. பிறகு தன்வீர் சொன்னான் ”ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் கடைவரைக்கும் போய்ட்டு வர்ரென்”.

”கடைவேற வச்சிருக்கயா?” என்று ஆச்சரியத்துடன் பச்சன்சிங் பார்ப்பதைப் புரிந்து கொண்டு தொடர்ந்தான். “இந்தக் கிராமத்ல என்ன கடை. எல்லோரும் அப்படியே சொல்லி பழக்கம் ஆயிடிச்சு. தெருக்கடைசியில கூரை போட்டு டெய்லரிங் மெஷின் வச்சிருக்கேன். கூட ஒரு சின்னப் பையன் இருக்கான்…. ஹூம்”… பெருமூச்சுவிட்டுத்தொடர்ந்தான் “ பன்டி இறந்து போய்ட்டான்ல அவன் பையன்” ஏதோ அரைகுறையாய் கேள்விப்பட்டிருந்தான் .

“பன்டி எப்படி இறந்தான்?”

”யாரோட  பைக்கையோ எடுத்திட்டு மெயின் ரோட்ல போயிருக்கான். லாரிக்காரன் அடிச்சிட்டுப் போய்ட்டான். லைசென்ஸ் இல்லாததால கேஸும் ஒண்ணும் ஆகல. ஒரு பைசா கிடைக்கல”.

பச்சன்சிங்கிற்கு என்னவோ போலிருந்தது. சிறைக்குப் போவதற்கு முன்னால் இருவரும் ஒன்றாக அலைந்தவர்கள்.

“அவன் பெண்டாட்டி?”

“இன்னொருத்தன் கூட இருக்கா. எப்பவாவது இந்தப்பக்கம் வருவா. பன்டியப் பத்திப் பேச்செடுத்தாலே ஓ’ன்னு அழ ஆரம்பிச்சிருவா.”

“பையன் எங்க இருக்கான்?”

“அவகூடத்தான்”

ஜீரணிக்க முடியவில்லை எதையும். பன்டி பெண்களைப் பற்றிக் கறாறாக பேசுவான். ஆண்கள் எப்படியிருந்தலும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அவன் மனைவியும் பிள்ளையும் யார் வீட்டிலோ?” தலைவிதி. உலகமே தலைகீழாக மாறிவிட்டது. பத்துவருடத்துக்குள்.

தன்வீர் தொடர்ந்தான் “அவ பாவம் என்ன செய்வா? தனியா இருக்கிற பொம்பளைய யாரு விடுவா? சாப்பாட்டுக்கு…? சரி நான் இதோ வர்ரேன்” அவன் வெளியே போய்விட்டான்.

இரண்டு நாட்களுக்குள் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தெருவில் நடந்தால் எல்லோரும் அவனையே பார்த்தாலும் யாரும் பேசவில்லை. முகங்கள் தெரிந்த மாதிரியிருந்தாலும் சரியாக இனங்காண முடியவில்லை. மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. நான் ரொம்ப நல்லவன் என்று எல்லோரிடமும் சொல்லவேண்டும். ஆனால் சொல்லமுடியவில்லை.

தன்வீரின் குழந்தைகள் மூன்றும் அவனிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்களிடம் பேசும் போதும் விளையாடும் போதும் மனம் லேசானது. ஒன்றிரண்டு முறை தன்னை அறியாமலேயே புன்னகைத்தான். குழந்தைகளின் ஸ்பரிசம் இவ்வளவு மென்மையாக இருக்குமா? தங்கைகள் கையில் ராக்கி கட்டியது நினைவு வந்தது. கைகள் மிகமென்மையாக இருந்திருக்கும். இப்போதும். பெண்களின் கைகள் எப்பவும் மென்மையாக இருக்குமாம். இன்னும் தொட்டதில்லை. சிறையில் ‘ஆஸாராம்’ என்ற ஹரியானா பயில்வான் முதல்முறை அவன் கையைப்பிடித்து பெண்களின் கைபோல இருப்பதாகச் சொன்னான். பச்சன் சிங்குக்கு அப்போது வயது பதினெட்டு.

சிலநாட்கள் வீட்டை நினைத்து இவன் அழும்போது கன்னத்தையும் தலையையும் ஆஸாராம் வருடிக் கொடுத்தான். பச்சன் சிங்குக்கு இதமாக, ஆறுதலாக இருந்தது. கைதிகளை உலவவிடும் போது இவனை அழைத்து பிரியாணி கொடுத்தான். கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பலகாரம் கொடுத்தான். சில நாட்கள் கழித்து ஜெயிலரிடம் சொல்லி தன் கூண்டுக்குள்ளேயே பச்சன் சிங்கையும் வைத்துக் கொண்டான். ஆஸாராமை நினைத்தால் அழுகை வந்தது. அவனைப் போல் அமைதி கொடுத்தவன் யாருமில்லை. விடுதலையாகி வரும் போதும் அவ்வளவு பெரிய பயில்வான் சின்னக் குழந்தை போல அழுதான். சிறுவனுக்காக இவ்வளவு பெரிய ஆள் அழுவதை எல்லோரும் பார்த்தார்கள். சிலர் ஆறுதல் சொன்னார்கள் சிலர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தனர். இவனுக்கும் கண்ணீர் முட்டியது. அடக்கிக்கொண்டான். நடந்ததை எல்லாம் யாரிடமும் சொல்லமுடியாது. இன்பமும் துன்பமும் சேர்ந்தே வந்தன. சேர்ந்தே போய்விடுமா?

பதினைந்து வருடங்களுக்கு முன் இரு தங்கைகளும் குடும்பத்தின் மானத்தைக் கப்பலேற்றி விட்டார்கள். பதினெட்டு வயது கிஷனுடன் கோயிலுக்குப் போனவர்கள் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்கள். பையன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். இருவரையும் பார்க்கப் பார்க்க பச்சன் சிங்குக்குக் கோபம் ஏறிக் கொண்டே இருந்தது. ஒரு கிறுக்கனைப் போல் தலையில் கிர்ரென்று ஏதோ ஏறியது. சிறுவனாக இருந்தாலும் முடிந்தமட்டும் தங்கைகளைக் கன்னத்திலும் கைகளிலும் அடித்தான். அவ்வப்போது உதைத்தான். அப்பா வந்தபிறகு ரகளை அதிகமாகிவிட்டது. அப்பாவும் சித்தப்பாவும் தொடர்ந்து கத்திக் கூப்பாடு போட்டனர். அம்மாவையும் சித்தியையும் விட்டு விட்டு மாறி மாறி அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். வீட்டைச்சுற்றி ஓரே கூட்டம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன் காதில் எல்லாம் விழுந்தாலும் எதுவும் பதியவில்லை. அவனும் அப்பாவும் சித்தப்பாவும் கெட்ட வார்த்தைகளை கூவிக் கொண்டு, தங்கள் கோபத்தைக் கிளறிவிட்டு உள்ளே போய்த் தங்கைகளை உதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாமே கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருந்தது.

இரு தங்கைகளையும் அப்பா ஒரு சிறிய அறையில் பூட்டி வைத்துவிட்டார். இதே அறைதான். இப்போது வேறு அறையாகத் தோன்றியது. அன்று கலகலத்த வீடும் குடும்பமும் இன்று இல்லை. பெண்கள் ஒப்பாரி வைத்துபோல் அழுது கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு ஏற்பட்ட களங்கம் எப்படிப் போகும்? மற்றப் பெண்களுக்குத் திருமணம் வாய்க்குமா? யார்யாரோ என்னவெல்லாமோ கேட்டார்கள். இனிமேல் எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பார்களே? வன்மம் அவனுக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அது தணிய வழியில்லை. அப்பாவும் சித்தப்பாவுமே தங்கைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாட்களாக வீட்டில் யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. திடீரென்று அடிகளும் அழுகையும் ஓலமும் கேட்டன. மூன்றாம்நாள் ராத்திரி பதினொருமணிக்கு அப்பா அவனைக் கூப்பிட்டார். சித்தப்பாவையும் அவனையும் இரண்டு பெண் தங்கைகளின் கை கால்களைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி கயிறு வைத்துக் கட்டினார். இரண்டு பெண்களும் சாப்பாடு தண்ணீரில்லாமல் அழக்கூடச் சக்தியின்றி முனகினர். கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. பயத்திலும் வெட்கத்திலும் கூனிக் குறுகி முடிந்தமட்டும் அரைமயக்கத்தில் இரைஞ்சினர். “இனிமே பண்ணமாட்டோம்ப்பா…அப்பா ஒரு தடவை மன்னிச்சிடுங்க …சாச்சா இனிமே பண்ணமாட்டோம்.. வீட்டைவிட்டே வெளியே போமாட்டோம். பர்தா (முகத்திரை) போட்டுட்ருப்போம். கட்டிப் போட்டிருந்தாலும் துடித்துத் துள்ளின பிள்ளைகளை கட்டுப்படுத்த குடியவில்லை. அவனும் ஏதோ ஒரு வெறியில் அழுத்திப் பிடித்தான். சித்தப்பாவும் கால்களை அழுத்திப் பிடித்தார். அப்பா போய் அரிவாளை எடுத்து வந்தார். தங்கைகள் ஓ வென்று அலறினர். மூச்சிரைக்க அப்பாவும் இருவரைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவனிடம் சொன்னார் “கழுத்தை அறு” அவ்வளவு நேரம் அடக்கிப்பிடித்த் வெறியும் கோபமும் அவனிடம் ஜிவ்வென்று ஏறியது. அறுத்ததும் ரத்தம் கழுத்திலிருந்து சளசளவென்று கொப்பளித்து, உடல் துடிக்கத் துடிக்க வெளியேறியது.

அந்த நேரத்திலும் தங்கைகளின் கைகள் மிருதுவாகத்தான் இருந்திருக்கும். அப்போது அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து இற்று விழத்தயாராக இருக்கும் கரையான் அரித்துப் போட்ட இதே அறைதான். இப்போது ரத்தக்கறை இல்லை. ஆனால் மனதில் புழுவாக தான் செய்த குற்றம் அரித்துக் கொண்டிருந்தது.

பச்சன் சிங் பாயிலிருந்து எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். இந்த அறையும் அடுத்த அறையும் குடும்பத்துக்குள் இருக்கிறது. மற்றதெல்லாம் கேஸிலும் மற்றச் செலவுகளிலும் கரைந்து விற்றாகிவிட்டது.

பத்தாண்டுகளுக்கு மேல் ஆஸாராமும் போலிஸும், ஜெயிலர்களும் அவனை என்னென்னவோ பாடாய்ப் படுத்தினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.

இரண்டு வாரம் போயிருக்கும் பச்சன்சிங்கிற்கு காய்ச்சல் வந்தது விடவேயில்லை. இடைவிடாத வலி. நேராக உட்கார முடியவில்லை. ஆசனவாயில் புண். பரவிவிட்டிருந்தது. டாக்டர் சிறையில் நடந்ததைப் புரிந்து கொண்டிருந்தார். டாக்டர் வேறு ஏதோ கேட்க முனைந்தபோது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை.

இன்னொரு நாள் டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது டாக்டரின் வயதான உதவியாளன் இவன் முதுகுக்குப் பின்னால் அவரிடம் சொன்னது காதில் விழுந்தது. “குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றிவிட்டான். பூராப் பழியையும் தானே ஏற்றுக் கொண்டான். இப்போதுதான் விடுதலையாகி வந்திருக்கிறான்.

பச்சன் சிங்குக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. உடம்பு வலி, காய்ச்சல், நோய், தீராத மன உளைச்சல், சிதிலமடைந்த வீடு, நிம்மதியின்றிச் செத்துப் போன அம்மா, அப்பா, சித்தப்பா, தங்கைகள். சிறையில் தான் பட்ட அவமானங்கள், கொடுமைகள். மானம் என்றால் என்ன என்பது இப்போது அவனுக்குப் புரிவது மாதிரி இருந்தது. இத்தனைபேர் அனுபவித்த துயரங்களை தவிர்த்திருக்கலாமோ? டாக்டரின் உதவியாளனுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.

000

வேலு இராஜகோபால்

இதுவரை சுமார் பதினைந்து கதைகள் இணைய, அச்சுப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, நவீன விருட்சம், அம்ருதா, அமுத சுரபி, மயிர் இணைய இதழ் கல்கி ஆன்லைன்.

மற்ற பதிவுகள்

The post பி ற் ப க ல் first appeared on Nadukal.

  •  

வெக்கை தணிந்தது…

வெயிலின் கோரம் உச்சமடைந்துவிட்டுருந்தது. வெளியில் தலைக்காட்டினால் தலைமயிர்களைப்  பொசிக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னுமளவிற்கு வெப்பம். மயிரில்லா சொட்டையாகவோ, மொட்டையாகவோ இருக்குமாயின் மூளையைக் கரைத்து நீராவியாக்கி தன்வசம் உறிஞ்சிக்கொள்வது போல கதிரவன் அனல்களைக் கக்கிக்கொண்டிருந்தது. வேர்க்க விறுவிறுக்க அக்கம் பக்கம் பங்காளி முறைக்காரர்கள் எல்லாரது வீடுகளிலும் விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாமியானா பந்தல் போடுபவனுக்கு இந்தச் சமயத்தில் கிராய்க்கி ஜாஸ்த்தி. “கட்டுப்படி ஆகாதுங்கண்ணோவ், இந்த ரேட்டுனா பண்ணிக்கலாமுங்க” என்று கிராய்க்கு பண்ணுவார்கள். எப்படியும் முப்பதிற்கும்  மேற்பட்ட பங்காளி வகையராக்கள் வீடுகளிலும், காட்டு கொட்டாய்களிலும் சாமியானா பந்தல்களும் அதற்குப் போட்டியாக தென்னங்கீற்று பந்தல்களும், சீரியல் லைட்டுகளும் திருவிழாவின் பிரம்மாண்டத்தைக் கண்களுக்கு காட்டிக்கொண்டிருந்தன. ஆம்பளை ஆட்கள் தலையில் துண்டையும், பொம்பளை ஆட்கள் முந்தானையை முக்காடாகவும் வெயிலின் வெப்பத் ததும்பல்களைத் தாங்க முடியாமல் தலையில் போட்டுக்கொண்டு தார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர் சேந்தமங்கலத்தின்  ஒரு கிராமத்தை நோக்கி.

மொட்டை வெயிலென்றும் பார்க்காமல் உறவுக்காரர்களைப் பார்க்க, தனக்காக அவ்வளவு தூரம் வந்து அழைத்ததற்கு மரியாதை செலுத்த, பங்கு பங்காளிகளின் அழைப்பை ஏற்காமால் போனால் உறவில் பிசகு ஏற்படுவதைத் தடுக்க, மாமன் மச்சான்களின் அழைப்பை ஏற்று குடும்பத்தோடு வந்து அவர்களை கௌரவிக்க, பொண்ணுக் கொடுத்த வீட்டிற்கு சம்பந்திங்களும், தங்கையை அக்காளை கட்டிக் கொடுத்த வீட்டிற்கு அண்ணன்களும் தம்பிகளும் சீர் செய்ய, நண்பனின் அழைப்பை ஏற்காமல் போனால் தங்களுக்காக வாங்கி வைத்த குவாட்டர் வீணாகிவிடுமே என்ற கவலையின் காரணமாக, அத்தைப் பெண்ணை வம்பிழுக்க, எப்பொழுதோ பார்த்த மாமன் மகனை ஆசை ஆசையாய்ப் பார்க்க, கொழுந்தியாளின் அன்பான அழைப்பிற்காக, நங்கையா கூப்பிட்டுப் போகவில்லை என்றால் முகத்தினை சுழித்துக் கொள்வாள் என்பதற்காக, பேரன்களையும், பேத்திகளையும் கண்டு ஆரத் தழுவுவதற்காக முக்கு ரோட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கின்றனர் பலர்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை சாமி செய்து கல்யாணத்துக்கு அழைப்பு விடுக்கிற மாதிரி பஸ் ஏறி, பஸ் இல்லா ஊருக்கு நடையோ நடவென்று நடந்து ஒரு சொந்தக்காரர்கள் விடாமல் அனைவரிடமும்  “தெவத்துக்கு வந்தரணும் கண்டிப்பா, அல்லாரு வந்தரணு, நம்ம ஊட்டுக்குத்தான் மொதல்ல வரோணும்” என்று நான்கைந்து அழைப்புகள் ஒரு ஊரிலிருந்து வந்துவிடுவதன் பொருட்டு நம்ம வீட்டில்தான் முதலில் சாப்பிட வேண்டும் என்று வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்துவிட்டு வருவார்கள். கல்யாணவிழா தோற்றுப்போகும். சாமி செய்து கிடா விருந்து வைத்து, சம்பந்தி வீட்டாரிடம் சீர் வாங்குவதில் இருபத்தைந்து முதல் அறுபது வரை உள்ள மாப்பிள்ளைமார்களுக்கு அப்படி ஒரு பெருமிதம். சீர் செய்யவில்லை என்றாலும் என் மாமனார், என் மச்சான், என்று முன் வந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். குறைந்தபட்சம் தேங்காய் பழத்தடட்டாவது சீராக எடுத்துக்கொண்டு முன்வந்து நிற்கவேண்டும் மரியாதை செய்ய. அதற்கும் பங்கம் வந்துவிட்டால் பிணக்கு ஏற்பட்டுவிடும் உறவுகளில்.

சின்னசாமியும் அவரின் அண்ணன் பையனும்  நேற்று இரவு பஸ்ஸை பிடித்து வந்து சேருவதற்கும் பூஜை முடிந்து கிடா வெட்டுவதற்கும் சரியாக இருந்தது. அக்காள் கணவரின் குணம் தெரிந்தே சின்னசாமி “ராத்திரியே நாம போய்டலாம்” என்று கல்லூரி முடித்துவிட்டு வேலைத் தேடி கொண்டிருக்கும் தனது அண்ணன் மகன் ‘அருளை’ அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு வந்தார். ஒரு வெள்ளை வேட்டி,வெள்ளைத் துண்டு, தேங்காய் பழம் பூ என்று தாம்பூலத் தட்டில் வைத்துக் கொடுத்தார் சின்னசாமி. இரவின் சீரியல் செட் வெளிச்சத்திலும் அக்காள் கணவரின் முகம் கருத்தது. பணமில்லா இடத்தில் மனிதர்களின் பிரியம் வற்றி வரக் கிணறாகத்தான் இருக்கும் என்பதற்கு அவரது நடவடிக்கைகள் ஒரு சாட்சி. அங்குதான் அலட்சியம் அதிகமாகி குப்பைகள் மட்டுமே கொட்டப்படும். ‘வாங்க’ என்று  ஒரு வாய் கூப்பிடவில்லை அக்காள் கணவர். மாமான் ‘பொங்கப் பொங்க’ சீர்வரிசை கொண்டு வந்திருக்க வேண்டும், ஒரு நாள் முன்னாடி வந்து வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்பார். மனிதனின் எதிர்பார்புகளை, கிடாய்களைக் காணிக்கையாகப் பெறும் அந்தக் கடவுளாளையே சரிவர நிறைவேற்ற முடியாது. சாமாணியனால் எப்படி நிறைவேற்ற முடியும்?

“ஊட்டுல ரண்டு பேரும் வரலையா” மரகதம் அக்காள் கேட்க.

“எங்க கடைய எடுத்து வச்சிட்டு இந்நேரத்துக்கு பொறப்பட வச்சி கூட்டியார நேரமாயிடும், அதான் நானும் அருளும் ஓடியாந்தோம், காத்தால நேரமே வரச்சொல்லியிருக்கேன்” சின்னசாமி பதிலளித்து விட்டு அருளைப் பார்த்தார்.

“உங்கப்பன் என்ன பன்றான், வரமாட்டானே மினிஸ்டரு” என்றாள்.

அவ்வளவு நேரம் இருக்கமாக இருந்த அருளின் முகம் அத்தையின் முகத்தைப் பார்த்ததும், அவள் வாயில் இருந்து சொற்கள் உதிர்ந்ததும் கொஞ்சம் தளர்வு பெற்று சிரித்தது. மாமன் எவ்வளவு அலட்சியம் அவமரியாதை பண்ணினாலும் அத்தை தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று நினைத்தே எதையும் பெறுத்துக்கொள்வான். அத்தையிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது பற்றற்று பற்றுதலாய் இருப்பான்.

சின்னசாமியின் அண்ணன் பெரியசாமிக்கு மாமனை அறவே பிடிக்காது, இது போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்து விடுவார். தாமரை இலையும் தண்ணீருமாய் இருப்பார். அவரின் குணம் அறிந்தே அத்தை  பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. அவரைத் தெரிந்த யாருக்கும் தவறாக எடுத்துக்கெள்ள மனம் இராது. இப்படி சொந்தங்கள் கூடி கொண்டாடும் நிகழ்ச்சியை பெரியசாமி தவிர்ப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. பொருளாதார நிலையை வைத்து ஏளனங்கள் எக்காளமிடும். புத்திமதிகள் நாலாபுறமும் அம்புகளாய் வந்து குத்திக் கிழிக்கும். அலட்சியம், அசட்டை எலக்காரம் என எல்லா வகைகளிலும் தன்மானத்தை சீண்டிய வண்ணமே மாமன் மச்சினன் வீடுகளில் நடக்கும். பெரியசாமியைத் தவிர குடும்பத்தில் மற்றவர்கள் இவற்றை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் மரியாதை செலுத்தியவண்ணம் பொறுமையாக இருப்பார்கள்.

“இந்தா புடிங்க ஆளுக்கு அர பவுனு எடுத்து வைங்க, நல்ல நாளு அதுவுமா முனுமுனுத்துட்டே இருப்பான் அந்தாளு கருமம்” என்று சின்னசாமியிடம் பணத்தைத் திணித்தாள், மரகதம் போனமுறை வீட்டின் கிரகபிரவேஷம் விஷேசத்திற்கு சீர் செய்வதற்காக.

“மிச்ச காசுல ரெண்டு பேரையும் நல்ல சேலையா எடுத்துக்க சொல்லு” என்று தம்பி மனைவிகளின் மீது பச்சாதாபம் பட்டாள். அவ்வளவு நெருக்கம் காட்டுவாள் பெற்ற வீட்டாரிடம் மரகதம். அவளுக்காகவே அவமரியாதைகளைப்  பொறுத்துப் பொறுத்து அதுவே கட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் போலாயிற்று.

பெரியசாமி, சின்னசாமி மற்றும்  மரகதம் செங்கோட்டு வேலவர் குடியிருக்கும் ஊரில் பிறந்தவர்கள். மலை அடிவாரத்தில் சின்னசாமியும் அவரது மனைவியும் பூக்கடை நடத்தி வயிற்றைக் கழுவி வருகிறார்கள். பெரியசாமியின் மனைவி அடிவாரத்தில் பழக்கடை வைத்திருக்கிறாள். விஷேச நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாட்களில் வெறுங்கைதான் முழம் போடும். எல்லா நாட்களுமே விஷேச நாட்களாக இருந்துவிடாதா என்பது இவர்கள் போன்ற அடிமட்ட வியாபாரிகளின் ஏக்கம். பெரியசாமிக்கு டிரைவர் வேலை. தத்தளிக்கும் கடலில் மரக்கலம் அங்கலாடுவது போல இவர்களது வாழ்க்கையும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

“நானும் போய் பொண்ணெடுத்துருக்கறன் பாரு, எல்லாரு ஊட்டுலயும் பாரு சம்பந்தி ஊட்டாருங்க என்னென்ன மொற செய்யறாங்க, இங்க ஒரு சீலத்துணிக்குக் கூட நா காங்கமாட்டிக்கறன்” என்று கெடாவெட்டின் போது அவ்வளவு கூட்டத்திலும் பொறு பொறுவென்றிருந்தார் மாமன்காரன். மரகதம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டாள் “என்னத்தையாவது ஒளரிக்கிட்டு இரு” என்று அவரை அசட்டையாகக் கையாளுவாள்.

கிடா வெட்டு முடிந்து இரவு கூறுபோடும் வேலைகள் நடந்த வண்ணம் இருந்தது.

சின்னசாமியும் அருளும் அதில் பங்கு கொண்டனர். சின்னசாமி குடலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அலசோ அலசோவென அலசி சுத்தப்படுத்தி பாங்கு செய்து கொண்டிருந்தார். அருள், சித்தப்பா சொல்லும் வேலைகளைச் செய்த வண்ணம் உதவியாய் இருந்தான்.

“என்னா உந்தம்பி ஊட்டுகாரிகள காணம்”

“ஆமா காணம், வேல வெட்டி இல்ல பாரு, காத்தால வந்துருவாங்க”

“அதென்ன காத்தால, வந்து கூடமாட வேல செஞ்சாதான ஆவும் போவும்”

“சின்னசாமி புள்ளைக்கு தெரட்டி வச்சாங்களே, அப்ப என்ன பண்ண நீயி வேணும்னே லேட்டு பண்ணி லேட்டு பண்ணிதான கூட்டிப்போன, நீ போயி கூடமாட வேல செஞ்சியா இல்ல என்னதான் செய்யவுட்டியா”

“நானென்னத்துக்கு வேல செய்யோனு, மொய்யி மட்டு இருவதாயிரம் வச்சன், அவ்ளோ மொய்யி ஆரு வச்சாங்க”

“இருவதாயரம் மொய்ய வச்சிட்டு அத நாப்பதாயர தடவ சொல்லி காமிச்சுப்புட்ட, ஊரெல்லாம் சிரிக்குது”

“ஆமா சொல்லோணும், சேந்தமங்கலத்துக்காரனோட அரும தெரியவாண்டாமா?”

“சோத்தாங்கையி கொடுக்கறது நொட்டாங்கைக்கு தெரிய கூடாது, இப்படி நீயே போய் பீத்திகரத போய் அரும எருமனு பெனாத்திக்கிட்டு இரு”

“ஏ உங்கப்பன் செத்தப்ப காரிய செலவுக்கு தடுமாறிட்டு இருக்கும் போது, நாந்தான கொடுத்தேன், நா மட்டும் கொடுக்கலனா அன்னிக்கி பொணத்தோட சேந்து எழவு ஊடு நாறிப்போயிருக்கும்”

“எங்கடா இத சொல்லலியேனு பாத்தேன், இப்புடி கொடுத்துப்புட்டு அவிங்கள அசிங்கப்படுத்துறதுக்கு நீ கொடுக்காமலே இருந்திருக்கலாம், அப்படி எழவெடுக்க கூட நாதியில்லாம போய்டல அங்க, பெரும மசுருக்கு நீயே கொண்டோயி நீட்டிட்டு, வியாக்கானம் பேசுறியா, இந்த லச்சணத்துல ஊருல நியாயம் பேசுற பெரிய மனுசன். உன் நாயத்துல கொண்டோயி பொட்ட நாய உடு” என்றாள் மரகதம் கோவமாக.

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று, அவளின் பதில்களுக்குப் பதிலடி கொடுப்பது அவரது நோக்கமல்ல. அவள் வீட்டாரை மட்டம் தட்டியாயிற்று. மரகதத்தை வெறுப்பேற்றியாயிற்று. அது போதும் அவள் திரும்ப பேசியதைப் பற்றிக் கவலையேதும் இல்லை அவருக்கு. அவ்விடம் விட்டு நகர்ந்து சமையல் வேலைகளைப் பார்க்க சென்றார்.

இரவு முதல் இப்பொழுது விருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரை அனைவரிடமும் நன்றாக குசலம் விசாரித்தார். முகம் மலர்ந்து வரவேற்றார். விழுந்து விழுந்து உபசரித்தார் மச்சினனையும், மச்சினன் பையனையும் தவிர.

சின்னசாமியின் மனைவி மற்றும் மகளும், பெரியசாமியின் மனைவியும் வேகாத வெயிலில் செருப்பு தேயத் தேய நடந்து வந்து கொண்டிருந்தனர். பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீர் பத்தவில்லை. பேருந்தை உருட்டி எடுத்துவிட்டான். பேருந்து பாதி வழியில் வந்துகொண்டிருந்த போதே தண்ணீர் தீர்ந்துவிட்டது. தண்ணீர் தாகம், பாட்டிலில் உள்ள கடைசி சொட்டினை உறியும்படி இருந்தது.

வரும்பொழுதே ஊரின் அனைத்து வீட்டுக்கும் வரும் விருந்தினர்களைக் காண நேர்ந்தது. அவர்களுடன் ரெண்டு வார்த்தை கலந்துகொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் மேலும் இரண்டு வீடுகளில் அழைப்பு இருந்தது.

“வா செத்த நேரம் உக்கோரு” என்று பெரியசாமியின் மனைவி சொல்ல சாலையின் ஒரு வேப்பமர அடியில் சிறிய கல்லுக்கட்டு இருந்த இடத்தில் உட்கார்ந்தார்கள்.

“மதிய நேரத்துக்கு இங்கேயே அல்லாரும் சாப்புட்டுருவம். மரகதக்கா ஊட்டுக்காரரு அவ்வளவுதான் பேசியே கொன்னுருவாரு அல்லாரும் சாப்படாம போனா. இங்க தின்னுட்டு பொழுதோடயா போயி ஆளுக்கொரு ஊட்ல தலைய காட்டிட்டு கொஞ்சமா சாப்புட்டு  வந்துருவோம்” பெரியசாமியின் மனைவி அவரின் குணமறிந்து கூறினாள்.

அந்த வேப்பமரம் வெக்கையைக் கொஞ்சம் தணித்து, லேசாக காற்றினை கொடுக்க அது அவர்களின் வியர்வையை ஆவியாக்கி குளிர்காற்றாய் உடல்களைத் தழுவியது. சின்னசாமியின் பெண்  துவண்டு போய்விட்டாள். அங்கேயே அம்மாவின் மடியில் சாய்ந்துகொண்டாள். அவளின் விலகிய தாவணியைச் சரிசெய்துவிட்டாள் அவளின் அம்மா. மூவருக்கும் அங்கேயே அப்படியே தூங்கிவிடலாம் போலிருந்தது.

“என்னா பூக்காரமூடும், பழக்காரமூடும், களச்சி போயிட்டிங்களாட்டம். வாங்க வாங்க கறி தீந்துபோயிட போவுது, பந்திக்கு முந்தரதில்லியா” என்று அவர்களை ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு விருந்திற்கு மக்கள் நடந்து போய்கொண்டும், ஆங்காங்கே மரத்தடியில் நின்று கொண்டும் இருந்தனர்.

“இப்பவே லேட்டு, போனதுமே உங்கப்பன் சிடுசிடுங்கும், எந்திரி” என்று பிள்ளயை எழுப்பினாள்.

“புள்ளைக்கு பூவு வச்சூடலாம்ல, வெறுந்தலையா போட்டு கூட்டியார, நானும் இப்பதான் பார்க்கறேன்”

“ரெண்டா நேரமா இருக்குது, காத்துகீத்து அடிச்சிரும்னுதான் வைக்கல, ஆனா வூனா பொசுக்குனு காச்சல்ல உழுந்துருது, பையில வச்சிருக்கேன் அங்க போய்ட்டு வச்சூடறேன்”

“நல்லா சாப்புடு புள்ள, எலும்பா இருந்தீனா எப்புடி” என்று பெரியம்மாவின் புத்திமதிகளை கேட்டவாறு எழுந்து நடந்தாள். மீண்டும் வெயிலின் பிள்ளைகள் போல் நடக்க ஆரம்பித்தனர்.

மரகதத்தின் வீட்டை எட்டும் முன்னே ஐந்தாறு வீடுகள் கடந்து வருகையில் கறிக்குழம்பின் வாசம் மூக்கை துழைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் பசியை அதிகமாக்கிக் கொண்டே இருந்தது. என்னென்ன வகைகள் இருக்கும் என்று தங்களுக்குள் அவர்கள் யோசிக்காமல் இல்லை. தாகத்தின் நினைப்பு தப்பிப்போய் அசைவத்தின் நினைவலைகள் சூழ்ந்துகொண்டன. சுமார் இரண்டு கிலோ மீட்டர் பாதங்கள் நடந்து தேய்ந்த களைப்பு சட்டென கலைந்தது. அசைவத்தின் ருசியை ருசிக்க எண்ணங்கள் ஆர்பரித்துக்கொள்ள, வீட்டின் முன் போடப்பட்டுள்ள பந்தலின் உள் நுழைந்தனர்.

சின்னசாமியும், அருளும் பந்தி பரிமாறுவதில் மும்மரமாக இருந்தனர். முகம் வாட்டமுடையதாகவே இருந்தது இருவருக்கும். இரவு சரியாக தூங்கியிருக்கமாட்டார்கள் என்று நினைத்தார்கள். கண்கள் மரகதத்தைத் தேடின. நாத்தனார் மிடுக்கு சிடுக்கெல்லாம் இல்லாமல் கூடப் பிறந்தவள் போல் பாசம் காட்டுபவளைக் கண்கள் காண ஆவலுடன் இருந்தன. இருவரும் இயல்பாக அக்கா என்றே அழைக்க விருப்பப்பட்டனர் ஆரம்பத்திலிருந்தே.

இவர்களைக் கண்டதும் புன்னகை பொங்க ஓடோடி வாந்தாள் மரகதம். 

“வாங்க வாங்க நேத்தே வந்துருக்கலாம்ல, சரி வாங்க” என்று இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டாள்.

கொண்டுவந்த பூவையும் பழங்களையும் மரகத்திடம் கொடுத்தனர். மரகதம் ஆசை ஆசையாய் பொறந்த வீட்டு சீராக நினைத்து உரிமையோடு வாங்கிக்கொண்டாள்.

தாகத்தில் நாக்கு வறன்டவர்களுக்கு செம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஒரே மொடக்கில் தாகம் தீர தீர தண்ணீரைக் கண்டு பல நாள் ஆனது போல பருகினார்கள். ‘வெயில்ல வந்தது ரொம்ப தாகம் போல’ என்று திரும்பவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

இரண்டு பேரும் பசி மறந்து போய் சற்று முன் இருந்த அசைவத்தின் மீதான ஆர்ப்பரியம் மறந்தவர்களாக, தாகம் தீர்ந்தவர்களாகப் பந்தி பரிமாறுதலில் பங்கு கொள்ள எண்ணி  புது உற்சாகமுடன் ஈடுபட முற்பட்டனர்.

“அட உக்காருங்க செத்த நேரம், அதலாம் அவுங்க பாத்துக்குவாங்க, வெயில்ல களச்சி போய் வந்துருப்பிங்க” என்று தடுத்தாள் மரகதம்.

“இல்லக்கா சாப்புட்டுக்கலாம் பொறுமையா” என்று உற்றார் உறவினர் வீட்டு வேலைகளில் விஷேசங்களில் பங்குகொள்ளும் நாகரீகத்தினைப் பொருட்டு வேலையில் மும்மரமாகினர்.

பிள்ளை ச்சேரில் உட்கார்ந்து கொண்டாள். மிகவும் களைப்புற்று காணப்பட்டாள். ச்சேரில் தலையை ஒருபுறமாக சாய்ந்தவாறு அமர்ந்து இருந்தாள். 

வந்தவர்களை வா என்று ஒரு வார்த்தை கூப்பிடவில்லை மரகதத்தின் கணவர். முகத்தினைக் கூட அவர்கள் பக்கம் தப்பித் தவறி திருப்பிவிடக் கூடாது என்று கவனமாக இருந்தார். அதுவரை வந்திருந்த அனைவருக்கும் பார்த்து பார்த்து வரவேற்று சாப்பிட வைத்து, நல்லபடியாக பேசிக்கொண்டிருந்தவர், தேவையில்லாத, அநாவசியமான கோபத்தை வழியன தன்னுள் புகுத்திக் கொண்டவராகக் காணப்பட்டார். இவர்களுக்குத் தண்ணீர் தெளிக்காது வாடிப்போன பூ போன்று பொக்கென்று முகம் வாடிப்போயிற்று.

பந்தி  பரிமாறுவதில் மும்மரமாகத் தங்களை இணைத்துக்கொண்டனர். தண்ணீர் மட்டுமே போதுமென எண்ணிக் குடித்து குடித்து வியர்வையாய் வெளியேற்றிக் கொண்டிருந்தனர். கூட்டம் கனமென பெய்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வரும் தூறல் மழைப் போல ஒன்றிரண்டு பேராக வருவதும் போவதுமாக இருந்தனர்.

மரகதம் “சாப்புட சொன்னா  சாப்புட மாட்டனு பண்றிங்க” என்று மிகவும் சலித்துக்கொண்டாள். 

வேலை ஓரளவு முடிந்து மிகவும் சோர்வுடையவர்களாக ச்சேரினை பந்தலின் ஒரு பக்கமாக போட்டு உட்கார்ந்தனர். சின்னசாமிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. உட்கார்ந்தவாறே தூங்க ஆரம்பித்தார். மரகதம் மிகவும் கோபம் கொண்டவராகவும், தம்பிகள் வீட்டினை அவமானப்படுத்துவதை எண்ணி வருத்தமாகவும், விருந்தாளிகள் வந்து போகும் வேளையில் வெளிப்படையாக எதையும் பேசமுடியாமல் வாயைக் கட்டிக்கொண்டாள். ஊமையாகத் தோற்றமளித்தாள்.

இந்த இடம், பொருள், ஏவல் எல்லாம் அவளுக்குத்தான் அவளின் கணவருக்கு இல்லை. ஊர் நியாயம் பேசும் பெரிய மனுசன் என்றுதான் பெயர். வீட்டு காரியங்களில் சின்னப்பிள்ளைகள் தேவலாம் போல் இருக்கும். ஓலைக் கொட்டாயின் மீது விழுந்த மழையாய் பேச்சு படபடவென்று பேசுவார். அதனால் மற்றவர்களின் மனம் வாடுவதெல்லாம் நினைத்துப் பார்க்காத மண்ட கணம் உடையவராய் வாயிலே ஆட்டம் கட்டிக்கொண்டிருப்பார்.

பந்தியே முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு வார்த்தை அவர்களைச் சாப்பிட சொல்லவில்லை. சின்னசாமியும் அருளும் காலையிலிருந்தே சாப்பிடவில்லை. மரகதம் கேட்டதற்குச் சாப்பிட்டுவிட்டோம் என்று கூறிவிட்டனர். மிகவும் சோர்வடைந்தவர்களாய்க் காணப்பட்டனர். இன்னும் சிலபேர் சாப்பிட்டுக் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை மரகதம் கவனித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு மேல் பொறுக்கமாளாது என்பது போல, நியாயத்தை இப்பொழுதே கேட்டாங்க வேண்டும் என்னும் உத்வேகத்தில் அவர்கள் அருகே வந்து தனக்கென ஒரு சிம்மாசனமாக ஒரு ச்சேரை நகர்த்தி அமர்ந்தார் மரகத்தின் கணவர்.

“நேத்திக்கே வராம அப்புடி என்ன வேல,  நா நீங்க வருவிங்க வருவிங்கனு பாத்துக்கிட்டு கெடக்கேன், அவுங்களும் பூச முடிஞ்சதும்தான் வராங்க” என்று ஆரம்பித்தார்.

“அப்புடி என்னத்த சம்பாரிச்சு, என்னத்த நப்பி வச்சுட்டிங்க, இல்ல எங்களுக்குத்தான் சீரு செனத்தினு செஞ்சுபுட்டிங்களா” அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைக்க ஆயத்தமாகிவிட்டார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இவரின் பேச்சுக்கள் கேட்காமல் இல்லை. மரகதம் அவ்வப்போது மிதமான எதிர்வினையாற்றினாள். இருந்தும் நிறுத்தின பாடு இல்லை. நாமும் சத்தம் போட்டால் பெரிய சண்டையாகி விடும், அனைவரின் முன்பும் எதற்கு சங்கடம் என்று இதழ்களைப் பிரிக்காமல் இறுக்கமாக ஒட்டிக் கொண்டாள்.

‘ஊர் நாயம் பேசும் பெரிய மனுசன் அவரப்போயி நாம என்னனு பேசுறது. என்னதான் சொல்லி காமிச்சு அசிங்கப்படுத்தினாலும் ஆத்திர அவசரத்துக்குனா அக்காவிடம்தானே கையேந்துகிறோம். நம்ம நிலைமையைதான் நாம் நொந்துக்கனும்’ என்று அவமானங்களை அமைதியாய் கடப்பதே சாலச்சிறந்த செயல் என்னும் தோரணையில் அவரின் பேச்சுக்களுக்கு எதிர்வினையோ, பதில்களோ தரமால் அமைதி காத்தனர்.

வெற்றிலை இரண்டினை எடுத்தான் அருள். நன்றாக பாங்கு செய்து சுண்ணாம்பு தடவி பாக்கினை வைத்து நான்றாக சுருட்டி கடவாய் பல்லில் திணித்தான். சாப்பிடாமலே வெற்றிலைப் பாக்கு போடுவதன் அர்த்தம் அவனுக்குத் தவிர அங்கு யாருக்கும் விளங்கவில்லை. நன்றாக ருசித்தவாறு அவசரம் இல்லாமல் மதிய நேர பசுவின் அசைப் போல் நிதானமாக மென்றுகொண்டே அவரின் பேச்சுக்களுக்குச் செவிக்கொடுத்திருந்தான்.

“என்னத்த பொழப்பு நடத்துறிங்க. சொந்த ஊருலதான இருக்கறிங்க ஒரு சென்டு நெலமாவது இருக்குதா? இப்புடியே இருந்தா எப்புடி? நா என் மச்சினமூடுனு பெருமையா சொல்லிக்க வாண்டாமா? ஒரு நல்ல நாளு பெரிய நாளுனு எதுனா செஞ்சு சப நெறஞ்சால பரவால, நான்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். திரும்ப எதுவும் வரக்காணம்” இடைவிடாது அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் கேள்விகளை மட்டும் அவர்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தார் அந்த உத்தமர். அவர்களும் செக்கில் விழுந்த மழைநீராய் ‘சிவனேனு’ பதிலளிக்கும் எண்ணமே இல்லாமல் இருந்தனர்.

“உங்கூட்டுலையும் பொண்ணுருக்கு, எம்பையனுக்கு பொண்ணு கேக்க வரணும்னா நல்லா ஊடு கீடு கட்டி, பவுனலாம் சேத்தி வச்சி வசதி வாய்ப்பா இருந்தாதான பரவால” என்று கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் தன் மகனைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

சொன்னதுதான் தாமதம் வாயில் நிரம்பி இருந்த அடர் செந்நிற திரவத்தைப் பந்தலின் பந்தக்காலின் அடியில் ‘பொளிச்’ என்று  துப்பிவிட்டு, “அப்புடி வசதியா இருந்தாதான் பொண்ணெடுப்பனா, நீரு என்ன மசுருக்கு சொந்தக்காரனு இருக்கீரு, வசதியா இருக்கவங்கள மட்டும் விருந்துக்கு கூப்டவேண்டிதான, எங்கள என்ன வெளக்கெண்ணைய்க்கு கூப்டீங்க” என்று கோவமாகப் பேசி, இதுவரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இழிவுபடுத்தியமைக்குப் பழிவாங்கியவனாய் திருப்தி அடைந்தான்.

“இன்னும் என்னா உக்காந்துக்கிட்டு இருக்கிங்க, வாங்க போலாம், ஏய் எந்திரிப்புள்ள” என்று தங்கச்சியும் உசிப்பிவிட்டு யாரையும் எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான்.

மாமன்காரன் வாயடைத்துப் போய்விட்டார். முகத்தில் ஈ ஆடவில்லை. இப்படி ஒரு பதிலையும், அதுவும் ஊமை போல அமைதியின் சொரூபமாய் இருக்கும் அவன் வாயிலிருந்து உதிர்ந்ததை அவரால்  இன்னும்  நம்ப  முடியவில்லை. விருந்தினர்கள் முன்பு அவருக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. மரகதத்திற்கும் திடுக்கென இருந்தது, நெஞ்சு படபடத்தாள். இருந்தும் மனதிற்குள் கொஞ்சம் ஆனந்தம்தான் ஒரே பேச்சில் கணவரின் வாயைக் கட்டிவிட்டான் என்று. மருமவன் சாப்பிடாமலே போறானே என்னும் மனக்குறையுமாய் இருந்தாள். இதற்கு மேலும் அவர்களை வற்புறுத்தி சாப்பிட சொல்வதில் அர்த்தம் இல்லை என்று அமைதியானாள்.

சின்னசாமியும், சித்தியும் அவனின் அம்மாவும் ‘என்ன இந்தப் பையன் இப்புடி பேசிப்புடிச்சி’ என்று பதற்றமானார்கள். அவனை ஏதும் சொல்வதற்கு வாய்பளிக்காமல், இன்னும் அங்கு நின்றால் பாவம் தன்னைப் பிடித்துக்கொள்ளும் என எட்டு வைத்து எட்டிப்போனான். இருந்தாலும் நமக்கில்லா ரோசம் அவனுக்காவது இருக்கே என்று அவன் பின்னே அவன் பாதத் தடத்தினை தங்களுக்கான பாதையாகப் பாவித்து அமைதியாய் அனிச்சையாக எழுந்து சென்றனர். மரகதம் அவர்களைத் தடுக்கவில்லை.

வெக்கை இன்னும் தாழ்ந்தபாடில்லை, முன்பிருந்த அதே காந்தல் தான். ஆனால் இம்முறை வெப்பம் வெளி உடலுக்கு மட்டுமே. உள்ளூர இருந்த காந்தல் குறைந்திருந்தது. மனதிற்குள் ஈரக்காற்று வருடிக் கொண்டிருந்தது. எல்லாரது மனதும் லேசாக ஆனது. தெரிந்த, பழக்கப்பட்ட வழிதான் என்றாலும் அவன் பாதங்கள் வழிகாட்ட பின் சென்றார்கள்.

வெக்கை தணிந்தது.

000

சொந்த ஊர் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். 2019 ல் இருந்து புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டு புத்தகங்கள் வாசிக்கத் தெடங்கினேன். மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டம் 2022 முதல் நடத்தும் புத்தகத் திருவிழாவில் தன்னார்வளராக இணைந்து எனது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறேன். “புதுச் சட்டை” என்ற என் முதல் சிறுகதை திரு.பொன்குமார் அவர்கள் தொகுத்த நாமக்கல் மாவட்ட சிறுகதைகள் புத்தகத்தில் வெளியானது. 

The post வெக்கை தணிந்தது… first appeared on Nadukal.

  •  

செங்கொடி நிறத்தையொத்தது தக்காளியின் வண்ணம்

கிணற்றை மேலிருந்து எட்டிப்பார்த்து “இனிமே கெணத்துக்குள்ள இந்த சோப்பு, ஷாம்பு  போட்டு குளிக்கிற சோலிய விட்டுப்போடுங்க. அப்படி குளிக்கிறதா இருந்தா -இந்த கெணத்துப் பக்கம் வராதிங்க” என்று மூஞ்சில அடிச்சாப்புல பேசினான் பழனி. 

   கிணற்றுக்குள் குளித்துக்கொண்டிருந்தவர்களின் சிலபேர் மனதில்  ’சோப்புப்போடக்கூடாது,மயிறு போடக்கூடாதுன்னு பேசுறான் -என்னமோ சொந்த தோட்டங்கெணக்கா.. ‘என்று நினைப்போடியது.

      “செரி மாமா ,இனிமே கெணத்துக்குள்ள சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கமாட்டாங்கே” என்று வேகமாக சொன்னான் குளித்துக்கொண்டிருந்த பாண்டி.

      “ஆமா இதுமாதிரி முப்பத்துரெண்டு தடவை சொல்லிட்டிங்க. நீங்க இப்படி சொல்றத கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு..” என்று கோபமாக சொன்னான் பழனி.

சிறிதுநேர அமைதிக்குப்பிறகு..

    “பொழுதுபோகாம வெளையாட்டுக்கா சொல்றேன்….நீங்க கெணத்துக்குள்ள சோப்பு, ஷாம்பு போடுறத்தண்ணிய காய்கறிகளுக்கு மோட்டார் போட்டு பாய்ச்சினா காய்கறிக எல்லாம் ஏதோ ஒரு மாதிரி சூம்பி போயிதான் காய்க்கும். அதிகமா சூத்த உழுகும் – இதெல்லாம் ஒங்களுக்குத் தெரியுந்தானே…? நானே அடுத்தவங்க தோட்டத்தை சாவியத்துக்கு (குத்தகை) எடுத்து விவசாயம் பார்த்துக்கிட்டு இருக்கேன். அதப்புரிஞ்சுக்காம.. இப்படி பண்ணுறிங்களே” என்றான் எரிச்சலில் பழனி.

ஊரில் சாவியத்துக்கு வருகிற தோட்டங்கள் நாலஞ்சு இருந்தாலும்- இந்த தோட்டம்தான் பழனிக்கு கண்ணில்பட்டது. ஊரின் எதுப்பத்தில் இருப்பதால் நாலு எட்டில் வீட்டிலிருந்து வந்துவிடலாம். அதுவுமில்லாமல் கோடைகாலத்தில்கூட, இந்த தோட்டக்கிணற்றில் ஒரு குறுக்கமளவு பாய்ச்சுகிற தண்ணீர் ஊறும்.

இந்த தோட்டத்தை சாவியத்துக்கு(குத்தகை) எடுப்பவர்,வருஷத்துக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டணும் தோட்டத்து உரிமையாளருக்கு.

கட்டிட வேலைக்குப் போய்க்கொண்டிருந்த பழனி. ஒருநாள் வேலையின்போது சாரத்திலிருந்து விழுந்து காலில் வசமான அடிபட்டு ஆஸ்பத்திரிக்கும்,வீட்டுக்கும் அழைந்தபோதுதான் திடீரென்று பேசாம இனி கட்டிட வேலைக்குப் போறத விட்டுட்டு நாலு ஆட்டுக்குட்டி,ஒரு பசுமாடு வாங்கி -ஏதாவது தோட்டத்த சாவியத்துக்கு எடுத்து, காய்கறி,பயிர்,பருத்தி ஏதாவது போட்டு… ஆடுமாடுகளுக்கு எதாவது நாத்து, கீத்து விதைச்சு அப்படியே பொழப்ப ஓட்டவேண்டிதுதான் என்ற யோசனை வந்தது.

அவனுக்கு விவசாயத்தில் ஏற்கனவே கொஞ்சம் அனுபவமிருந்தது. அப்பா இருக்கும்வரை அவருடன் சேர்ந்து கரிசக்காட்டில் கூடமாட விவசாயம் பார்த்தான். படிக்கும்போது விடுமுறை நாட்களில் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க காட்டுக்கு போவான்.

பழனியுடைய மூன்று அக்காகளின் திருமண செலவுக்காக – அவனுடைய அப்பா இரண்டு கரிசக்காடுகளை விற்ற பிறகு பழனிக்கும் விவசாயத்திற்கும் இடைவெளி அதிகம் ஆகிப்போனது.

அதுவுமில்லாமல் பழனி சோட்டுடைய வயதுக்காரர்கள் பெரும்பாலும் கல்கிடங்கு, கட்டிட வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும்- இவனும் அந்த மாதிரி வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.

தோட்டத்தை சாவியத்திற்கு எடுக்கிற விஷயத்தை பழனி தன் மனைவியிடம் வந்து சொன்னபோது சந்தோஷப்பட்டு சரி என்றாள். அதற்குப்பிறகு அவள் ‘யாரு தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்துப் பார்க்கப்போறிங்க’ என்று கேட்டாள். அதற்கு ‘குருசாமி தோட்டத்த எடுத்துப் பார்க்கப்போறேன்’ என்று பழனி சொன்னதும்,அவளுக்கு அந்த நொடியே எரிச்சல் வந்தது.

அவள் அப்படி எரிச்சல் படுவதற்கு காரணம் இருந்தது.

பழனி சாவியத்துக்கு எடுத்திருக்கும் தோட்டத்தின் வடக்குப்புறம் ஒரு காட்டைத்தாண்டி சுப்புச்சாமி காடு இருந்தது. 

சுப்புச்சாமியுடைய அப்பா பல வருஷத்துக்கு முன்னால் பழனியோட அப்பாவிடம் வாங்கிய கடனை அடைக்க  முடியாததால் தனக்குச் சொந்தமான காட்டை வாங்கிய கடனுக்காக வச்சுக்கிறச்சொல்லி தந்தார் .

இப்போது மாதிரி அப்போ உடனுக்குடன் பத்திரப்பதிவு செய்யும் பழக்கம் இல்லை. வாங்குனு துட்டுக்கு இந்தா இந்த காட்ட வச்சுக்கோ என்று கடன் வாங்கியவர் சொன்னால் போதும்- அடுத்த நொடியே கடன் கொடுத்தவருக்கு சொந்தமாகிவிடும் நிலம். அப்போதிருந்த மனிதர்கள் சொன்ன சொல்லுக்கு உண்மையாக இருந்தார்கள்- அதனால் அப்போது பத்திரப்பதிவு எதுவும் செய்யாமல் காட்டை பயன்படுத்த ஆரம்பித்தார் பழனியுடைய அப்பா. அதுவே பின்னாளில் வினனையாகிப்போனது.

பழனி கொஞ்ச வருடம் கழித்து காட்டை தன் பெயரில் பத்திரப்பதிவு செய்ய சுப்புச்சாமியை அழைத்தபோது காட்டு விலையின் மதிப்பு கூடியிருந்தது. அதனால் சுப்புச்சாமி ஒன்னுக்கு ரெண்டா மண்டக்கனமா ஏதாவது சொல்ல ஆரம்பித்தான்

”அந்தக் காலத்தில் எங்கப்பாவ எப்படியோ ஏமாத்திதான

காட்ட வாங்குனிங்க.. அவர மாதிர நானு ஏமாற ஆளில்ல”னு சொல்லி,  காட்டை ஏழுதித்தர மறுத்தான்.

அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு பக்னு ஆகிப்போச்சு பழனிக்கு.  கோபத்தில் “ஏன்டா இப்படி மாத்திப் பேசுற. உங்கப்பா

எங்கப்பாகிட்ட அன்னைக்கு வாங்குன காசு மதிப்புக்கு இந்த காட்டை வச்சுக்கிற சொன்னார். இன்னைக்கு இந்த காட்டோட மதிப்பு கூடியதுமே நீ ஏன் இப்படி பேசுற” என்றான் கோபத்தில்.

”அதெல்லாம் தெரியாது, எனக்கு இந்த காடு இன்னைக்கு எவ்வளவு மதிப்புப்போதோ அதத்தந்தா எழுதித்தாரேன்” என்றான் திமிறாக சுப்புச்சாமி. அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு படக்குனு மல்லுக்குப் பாய்ந்தான் பழனி.

கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரைப்போயி இறுதியில் தீர்ப்பு சுப்புச்சாமிக்குதான் சாதகமாய் வந்தது.  

அதிலிருந்து பெரும் பகையாகிப்போனது.

பழனி மனைவி பெரும்பாலும் மற்றவர்களுடன் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ நினைப்பவள்- அதனால்தான் சுப்புச்சாமி காட்டுக்கு பக்கத்திலிருக்கிற அந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுக்க வேண்டாமென்றாள். அதையும் மீறித்தான் அந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்தான் பழனி.

மீண்டும் கிணற்றுக்குள் குளித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, திடீரென்று இனி இவெங்கள சொல்லி பயனில்லை.நாளைக்கு தக்காளிச் செடி காயெடுத்தப் பிறகு இவெங்க வாட்டுக்கு சோப்பு,ஷாம்பு போட்டு குளிப்பாங்கெ. அதுக்கு முன்னாடி நாம சுதாரிச்சு கெணத்துப் படியை வேலிமுள்ள வச்சு அடைச்சு வைத்துவிடுவதுதான் நல்லது. இல்லேனா நம்ம பொழப்பு கெட்டுப்பபோகும் என்று நினைத்துக்கொண்டே தக்காளி நட்டியிருந்த பாத்திகளைப் பார்த்தான் பழனி. அப்போது மூனு,நாளு ஆடுகள் தக்காளிச் செடிகளை கடித்துக்கொண்டிருந்தன.

 “ஏய்..ச்சூ ..”என்று அரட்டிக்கொண்டே கீழே கிடந்த கற்களை எடுத்து எறிந்தான் உச்ச கோபத்தில்.

ஆடுகள் களைந்து ஓடின.அதன் பின்னாடியே வெளமெடுத்து விரட்டிக்கொண்டே  ஓடினான். “ஆடுகள கட்டிப்போட்டு வளர்ப்பாங்கெளா… பெரிய மயிரு மாதிரி அவுத்துவிட்டு வளர்க்குறாங்கே..இன்னோரு தடவ வந்திச்சினா.. வசமா ஏதாவது செஞ்சு போடணும். அப்பதான் ஆடுகள அவுத்து விடமாட்டாங்கெ.. அவன் அவன் கடன்வாங்கி கப்பவாங்கி வெவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காங்கே” என்று ஏதேதோ புலம்பிக்கொண்டு ஓடி களைத்துப்போயி நின்றான். ஓடியாந்ததால் சாரத்திலிருந்து விழுந்து அடிபட்ட காலு சுருக்சுருக்னு குத்தியது .

திரும்பி வந்து பாத்திகளைப் பார்த்தான். ஆடுகள் கடித்ததால் தக்காளிச்செடிகள் மொட்டக்கட்டையாக இருந்தன.

இதை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று நினைத்ததுமே நினைவு

பின்னோக்கிப்போனது பழனிக்கு.

தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்ததுமே முதல்வேலையாக திக்கம்திக்கம் முளைத்திருக்கும் மஞ்சனத்தி செடிகளை வாச்சாத்தால் தூர்வரை வெட்டி எடுத்தான் பழனி. பிறகு ஆங்காங்கே முளைத்திருக்கும் அருகுகளை மம்பட்டியால் கொத்தினான். தண்ணி ஓடும் வாய்க்கால்களின் இருபுறமும் நல்ல மேடுபடுத்தினான்.

இந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்ததில் பழனி மனைவிக்கு ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், போகப்போக அவளும் பழனியோட சேர்ந்து தோட்டத்தில் வந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள் .

என்னதான் வேலை பார்த்தாலும் அவளுக்கு உள்ளூர ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது.

தோட்டத்தில் எப்பையாவது ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும்போது தற்செயலாக சுப்புச்சாமி காட்டை பார்க்கும்போதெல்லாம், படுபாவிப்பையன் வாங்குன காசுக்கு காட்டை எழுதித்தரமாட்டெனு சொல்லிட்டானே…என்று சுப்புச்சாமியை மனதுக்குள்ளே வைதாலும்-அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள்.

    இதேமாதிரி எதோ ஒரு நினைப்பில் பழனி, சுப்புச்சாமி காட்டைப் பார்த்து கோபப்படும்போதெல்லாம் “இதுக்குதேன் இந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுக்கவேண்டுமென்னு தலையில அடிச்சு அடிச்சுச் சொன்னேன். மண்ணோடு மனுஷன் மல்லுக்கட்டுன பெழைச்சுக்கலாம். மனுஷனோடு மனுஷன் மல்லுக்கட்டுனா பெழைக்கமுடியுமா..?” என்று கோபப்பட்டு சத்தமிடுவாள்.

    அப்படி ஒருநாள் அவள் வையும்போதுதான் பேச்சை மாற்றுவதற்காக “செரி செரி கொச்சுகொச்சுனு சொல்லாத தோட்டத்தில என்ன விதைக்கலாம்னு சொல்லு”என்றான் .

அவள் “தக்காளி நாத்து போடுவோம் ஒரு குறுக்கத்துக்கு.. மிச்ச ஒரு குறுக்கத்தில சோள நாத்து வெதைச்சிடுவோம் ஆடுமாடுளுக்கு”என்றாள் வேகமாக.

பழனி “தக்காளிக்குப் பதிலாக கத்தரி நாத்து இல்லேனா மிளாகச்செடி போடுவோமா..?”என்றான்.

அவள் விடாப்பிடியாக “தக்காளி நாத்தே போடுவோம்.. போனாவாட்டி இராமசாமி சின்னையா அவரு தோட்டத்துல தக்காளி நாத்து நட்டிதான் நல்ல விலைக்கு போட்டார்” என்றாள்

பிறகு என்ன நினைத்தானோ பழனி. அவள் சொல்வதற்கு சரி என்றான்

முதலில் தோட்டத்தை டிராக்டரின் சட்டிக் கலப்பை கொண்டு உழுதான். அதற்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா வந்தது. பிறகு ஒரு மழைக்குப்பிறகு டிராக்டரின் கொற்கழுப்பை (பல்லுக்கலப்பை) கொண்டு உழுதான்.

உழுத கரிசமண் பொறித்த ஆட்டு(ஆடு) இரத்தம்போல காட்சியளித்தது .

விருதுநகர் விதைக்கடைகளில் தக்காளி விதை வாங்கிவந்து தோட்டத்தின் ஈசான மூலையில் பன்னிரெண்டுக்கு பன்னிரெண்டு அளவை மூன்று பங்காக பிரித்திருந்த பாத்திகளில் தக்காளி விதையை பாவி, தண்ணியை விட்டான் பழனி.

பிறகு உழுது போட்டதை முழுவதும் பாத்தி கட்டுவதற்கு மூன்று வேலை ஆட்களை ஏற்பாடு செய்தான் பழனி. ஒரு குறுக்கத்தை முழுவதும் பாத்திகட்ட அந்த மூன்று ஆட்கள் நாலு நாட்கள் எடுத்துக்கொண்டனர்.

தக்காளி நாத்து பிடுங்கி நட்டும் அளவு வளர்ந்தபிறகு பத்து வேலை ஆட்களைக்கொண்டு ஒரே நாளில் ஒரு குறுக்கத்திற்கு முழுவதும் நட்டி முடித்தான்.

தக்காளி நாத்து நட்டிய ஆரம்பத்தில் ஐந்து ஆட்கள்வீதம் என ஒரு குறுக்க பாத்தி முழுவதும் களையெடுக்க ஒருவாரம் ஆனது.அந்த ஒரு வாரத்தில் களை எடுத்த கூலி ஆறாயிரம் வந்தது.

இப்போதே இப்படியின்ன.. செடி பூவெடுக்கேல இன்னொரு களை எடுக்கனும்.. பிறகு செடி காய்வைக்கேல ஒரு களை எடுக்கனும்.. யப்பா என்று மனதுக்குள்ளே ஒருவித அயற்சி வந்தது பழனிக்கு.

இதனால் என்னவோ தக்காளி எப்படியாவது நல்ல விலைக்குப்போகணும் என்று அப்பைக்கப்ப வேண்டாத தெய்வமில்லை.

நாளாகநாளாக பாத்திமுழுவதும் பசேரென்று தக்காளி நாத்து வளர்ந்து வருவதைப்பார்க்க அவ்வளவு சந்தோஷமாகியிருந்து பழனிக்கும்-அவனது மனைவிக்கும்.

இனி கொஞ்ச நாளில் செடி காய் வைத்துவிடும் என்ற நினைப்பே அவனுக்கு சந்தோஷத்தை தந்தது.

அப்படிப்பட்ட சந்தோஷதத்தை அழிக்க வந்த அந்த ஆடுகளை இபபோது நினைக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது.

 பையிலிருந்த பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டே ஆடுகளால் கடிபட்ட இலையை தடவிக்கொண்டு தற்செயலாக சுப்புச்சாமி காட்டைப்பார்த்தான் பழனி.

 சுப்புச்சாமி அவனது காட்டில் ஏதோ வேலையில் மும்மரமாக இருந்தான். அப்போது அவனருகே உள்ள வேப்பமர நிழலில் காலையிலிருந்து மஞ்சனத்தி செடியில் கட்டிப்போடப்பட்டிருந்த அவனது ஆடுகள் அசைபோட்டுக்கொண்டிருந்தன.

      **********************************

       “சொன்னா கேட்டயா..? மானாங்கணியா அவங்க தக்காளி போட்டு நல்ல வெலைக்கு போட்டாங்க… இவங்க தக்காளி போட்டு நல்ல வெலைக்கு போட்டாங்கன்னு சொல்லி இப்படி மண்ணாக்கிட்டயே பொழப்ப.. இப்ப தக்காளி கிலோ ரெண்டு ரூபாயக்குதான் அருப்புக்கோட்டை, விருதுநகர் சந்தையில வாங்குறாங்கே.. இந்த ரெண்டு ரூபாய் புளுத்திக்குதேன் இத்தன நாளு தக்காளி நாத்து நட்டி இருபதாயிரத்துக்கு மேல முதல்போட்டு இப்படி நாயா ஒழச்சம்மா..வக்காளி நெனச்சாலே எரிச்சக்கூதியாயிருக்கு.. ஏதோ சொல்லுவாங்களே உன்னி புடிச்ச மாட்டையே (மாடு)உன்னி புடிக்கும்னு.. அதுமாதிரிதான் நம்ம நெலம ஆகிப்போச்சு.. மூசாம கத்திரிக்கா, மெளகாய் போட்டிருந்தாகூட நல்ல விலைக்கு போயிருக்கும்..தேவையில்லாம ஓம்பேச்சைக்கேட்டு.. ச்சேய் தோட்டத்துபக்கம் போகவே எரிச்சலாயிருக்கு.. என்னத்தான் செருப்பால அடிச்சிக்கிறணும்.. வெவசாயம் பார்த்து பெழைக்கிறதுக்கு பதிலா.. நாலுசுன்னியப் பார்த்து ஊம்பிட்டுப் போயிறலாம்”என்றான் கோபமாக பழனி.

     “இப்படி நடக்கும்னு நம்மளுக்கின்னா தெரியுமா.. எல்லாம் நம்ம தலையெழுத்து..“ என்று புலம்பினாள் பழனியோட மனைவி.

அதற்கு பதில் பேசாமல் பீடியை எடுத்து பற்ற வைத்தான் பழனி.

  “நடந்தது.. நடந்திருச்சு.. இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். நாளைக்கு வெள்ளைனையா அருப்புக்கோட்டைக்குப்போயி தக்காளியை போட்டுவாங்க”என்றாள்.

“ஆமா கிலோ ரெண்டு ரூபா புளுத்திக்கு அத பஸ்ஸில ஏத்தி அதுக்கு லக்கேஜ் எடுத்து நொட்டுறாங்கே..”

 “ச்சீ அப்படி பேசாதிங்க.. ரொம்ப நாளைக்குப்பிறகு நாம வெவசாயம் பார்த்து மொதமொத வெளஞ்சத.. அதப்போயி இப்படி எகத்தாளமா பேசணும்னா.. சாமி நமமளப் பார்த்து சிரிச்சடப்போகுது”

“அதேன் சாமி ஏற்கனவே நம்ம பொழப்ப பார்த்து சிரிச்சிருச்சே.. இனி புதுசா சிரிக்கணுமாக்கும்”

“மொத மொத வெளஞ்சது.. அதுக்காகனாச்சும்.. போயி சந்தையில போட்டுட்டு வாங்க.. இல்லேனா நான் போயி போட்டுட்டு வாறேன்” என்றாள் வேகமாக பழனியோட மனைவி.

அவள் அப்படிச்சொன்னதுமோ அரைகுறைமனதோட “செரி நானே போயிட்டு வாரேன்” என்றான் மனது நொந்து பழனி.

மறுநாள் காலை அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் தக்காளியை கொண்டு செல்வதற்கு  ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஆயுத்தமாக நின்றான் பழனி. அவனருகே இரண்டு பெட்டிகளிலிருந்த தக்காளிகள் புரட்சிக்கு பேர்போன செங்கொடி நிறத்தில் இருந்தன.

அந்தப்பேருந்து சாத்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்,கோட்டூர் குருசாமி கோவில் வழியே கடந்து வருவதால் ஏற்கனவே கூட்டமாக வந்தது. பஸ் வந்து நின்றதுமே கூட்டத்தைப் பார்த்து மலைத்துப்போனான் பழனி.

பஸ்ஸின் சைடு டிக்கிகளில் ஏற்கனவே பூக்கள் மூடை காய்கறி மூடைகள் அடைத்துக்கிடந்தன. அதனால் அதுக்குள்ளே ஏற்றி அடைக்க முடியாது. ஏற்கனவே பஸ்ஸுக்குள் கூட்டமாக இருப்பதால் உள்ளேயும் ஏற்ற முடியாது. இந்த பஸ்ஸை விட்டால் இன்னும் ஒரு மணிநேரம் காத்துக்கிடக்கணும் என்று நினைக்கும்போது எரிச்சலாக வந்தது.அதனால் என்னவோ பழனி தக்கிமுக்கி தக்காளிப்பெட்டியை படியில் இருப்பவர்களை விலகச்சொல்லி உள்ளே ஏற்ற பார்த்தான்.

அதுக்குள்ள பஸ்ஸுன் நடத்துனர் எரிச்சல்பட்டு “ஏய் தக்காளிப்பெட்டியை உள்ள ஏத்தி எடஞ்சல் பண்ணாத..” என்றார்.

தக்காளிப்பெட்டியை சுமந்துகொண்டு வியர்த்து விறுவிறுக்க“பெறகு எங்க ஏத்த, ஒசக்கவா” என்றான் பதட்டத்தில்.

“ஆமய்யா..வேமா டாப்ல ஏத்துய்யா..” என்று எரிச்சல்பட்டு பேசினார் பஸ் நடத்துனர்.

பதினாலு கிலோ தக்காளிப்பெட்டியை தலையில் சுமந்து கொண்டே வேகமாக அரக்கப்பரக்க பஸ்ஸின் பின்புறமுள்ள ஏணிப்படிக்கட்டுகளில் ஏறி பஸ் மேற்கூரையில் போயி இறக்கி வைக்கும்போது கால் சுள்ளுனு வலித்தது பழனிக்கு. இந்த வலியில் இன்னொரு தக்காளிப்பெட்டியையும் பஸ்ஸின் உயரே ஏற்றினான்.

பஸ்ஸுக்குள் உள்ளவர்களுக்கு டிக்கெட் போட்டுவிட்டு மெட்டுக்குண்டு ஊர் வந்ததும் உள்ளிருந்து இறங்கி பஸ்ஸுன் மேற்கூரையில் உள்ளவர்களுக்கு டிக்கெட் போட ஏறினான் பஸ் நடத்துனர்.

  பழனி முப்பது ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட்கள் எடுத்தான். ஒன்று அவனுக்கு -மற்ற இரண்டு டிக்கெட் ,தக்காளிப்பெட்டி லக்கேஜ்களுக்கு.

எடுத்த டிக்கெட்டை சட்டையின் மேல்பையில் வைத்துவிட்டு, மனதுக்குள்ளே கணக்குப்போட ஆரம்பித்தான்

கொண்டுபோறது இருபத்தெட்டு கிலோ தக்காளி. ஒரு கிலோ ரெண்டு ரூபாய்க்குத்தன் போகுது.மொத்தமா போட்டாக்கூட அறுபது ரூபாய்கூட வராது.. இதுக்கு லக்கேஜ் டிக்கெட், எனக்கு டிக்கெட்டு, டீ செலவு …ச்சீ நெனச்சாலே எரிச்சலாத்தான் வருது என்று நினைத்துக்கொண்டே பீடியை பற்ற வைத்து ஊத ஆரம்பித்தான் பழனி.

பஸ் ஒவ்வொரு ஸ்டாப்பாக கடந்து பாலவநத்தம் ஸ்டாப் வந்து நின்றதும் திடீரென்று பஸ்ஸில் டிக்கெட் செக்கர் (பரிசோதகர்) ஏறினார்.

கொஞ்ச நேரத்தில் பஸ்ஸூக்குள் டிக்கெட் பரிசோதித்துவிட்டு, பஸ்ஸின் மேற்கூரையில் பரிசோதனை பண்ண ஏறினார் பரிசோதகர். ஒவ்வொரு ஆளாய் பரிசோதித்து வந்தவர், பழனியிடம் வந்ததும்,தக்காளிப்பெட்டி லக்கேஜ் எல்லாம் கணக்குப்பண்ணி மூன்று டிக்கெட்டை எடுத்து காண்பிக்கச் சொன்னார்.

    டிக்கெட் எடுத்தாச்சே என்ற மிதப்பில் மேல்சட்டைப்பையிலிருந்து  டிக்கெட்டை எடுத்தான்.ஒரு டிக்கெட் குறைந்தது. அப்போது திறுதிறுனு முழித்தான். பீடி எடுக்கேல டிக்கெட் விழுந்திருச்சுபோல என்ற யோசனை ஓடியது பழனிக்கு.

“என்னய்யா.. ஒரு டிக்கெட் குறையுது. இப்படி ஏச்சுதான் இந்த தக்காளிப்பெட்டியை ஏத்திட்டு வாரயா.. லக்கேஜ் எடுக்காம ஒன்னும் எடுக்காம வர- இதுன்ன ஒங்கொப்பன் வீட்டு பஸ்ஸா.. ஒன்னமாதிர நாலுபேரு இப்படி பண்ணுனா புளுபுளுப்புனு இருக்கும்…ஒனக்கெல்லாம் அறிவில்ல…கட்டுய்யா  பைன்ன (அபராதம்)என்றார் டிக்கெட் பரிசோதகர்.

“சார் லக்கேஜ் டிக்கெட்டெல்லாம் எடுத்துட்டேன் சார்.. எப்படியோ டிக்கெட் கீழே விழுந்திருச்சு.. வேணும்னா கண்டெக்டர கூப்பிட்டு கேளுங்க ” என்றான் அத்தனேபேர் முன்னிலையில் பதட்டப்பட்டுக்கொண்டே பழனி.

பரிசோதகர் விசில் அடித்தார். பஸ் நின்றது. சில அழைப்புகளுக்கு பிறகே பஸ் நடத்துனர் பஸ்ஸின் மேற்கூரைக்கு வந்தார்.

பஸ் நடத்துனரைப் பார்த்து பரிசோதகர் “இந்தாளு தக்காளிக்கு லக்கேஷ் டிக்கெட் எடுத்தானா..? ”என்றார்.

அத்தனை கூட்டத்திற்கு டிக்கெட் கொடுத்திட்டு வந்ததால் நடத்துனருக்கு சரியாக ஞாபகமில்லை -அதனால் பழனி டிக்கெட் எடுத்தானா என்ற சந்தேகத்தில் பதில் சொல்லமுடியாமல் திறுதிறுனு முழித்தார் நடத்துனர்.

“என்னய்யா இப்படி முழிக்கிற.. நீயெல்லாம் என்னத்ததேன் இத்தன வருஷம் கண்டெக்டரா இருந்தயோ..”, என்றார் பரிசோதகர்.

பிறகு பழனியைப்பார்த்து “நீ டிக்கெட்டா எடுத்தயோ.. இல்லையோ எனக்குத்தெரியாது- ஆனா இப்ப ஓங்கிட்ட லக்கேஜ் டிக்கெட் இல்லை.. அதனால இப்ப நீ பைன் கட்டித்தான் ஆகணும்”என்றார் பரிசோதகர்.

“நான் டிக்கெட் எடுத்தேன் சார்” என்றான் பழனி கெஞ்சிய குரலில்.அப்போது எல்லோரும் அவனை அனுதாபமாக பார்த்தனர்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது  அபராதத்தைக்கட்டு”என்றார் பரிசோதகர் மண்டக்கணமாக.

கெஞ்சிப்பார்த்தான் பழனி. பரிசோதகர் விடுவதுமாதிரி தெரியவில்லை.

அப்போது கோபத்தில் தக்காளிப்பெட்டியை ஒரு பார்வை,பரிசோதகரை ஒரு பார்வை பார்த்த பழனி.

இந்த தக்காளிப்பெட்டிக்குத்தான லக்கேஜ் எடுக்குல.. இது இருந்தாதான பிரச்சனை என்று சொல்லிக்கொண்டே  தக்காளிப்பெட்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வலிகடுக்கும் கால்களால் எத்தி பஸ்ஸின் மேற்கூரையிலிருந்து சரித்துவிட்டான் பழனி. அப்போது பதட்டத்தில் “ஏய் ஏய்”என்று கத்தம்போட்டார் பரிசோதகர்.

பஸ்ஸின் மேற்கூரையிலிருந்து சிவப்பு அருவிபோல கீழே கொட்டிய தக்காளிகள் சாலையெங்கும் உருண்டு பரவி திசைதிசைக்கு சிதறின. பரிசோதகர், கண்டெக்டர், பஸ்ஸில் இருந்தவர்கள் சாலையில் போவோர்  வருவோர் எல்லோருக்கும் அப்போது எப்படியோப்போனது.

சாலையில் சிதறிய தக்காளிகளைப் பார்த்ததும் ஆங்காங்கேயிருந்த பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன.

 கண்கலங்கிக்கொண்டே பஸ்ஸிலிருந்து படபடவெனு இறங்கி குதித்து  வெக்குவெக்குனு பஸ் போகிற எதிர்திசையில் நடையைக் கட்டினான் பழனி. அப்போது ரொம்பப்பேர் ஓடிப்போய் பழனி கையைப்பிடித்து இழுத்து தாஜா பண்ணினர். அவன் எல்லோர் கைகளையும் உதறிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

பழனி போவதையே  பார்த்துக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ‘ச்சே எல்லாம் என்னாலதான். ஒரு லக்கேஷ் எடுக்காததிற்குப்போயி இப்படி அவன பாடாய்படுத்திட்டமே..கொஞ்சம் பொறுத்துப்போயிருக்கலாமோ.. “ என்று தன்னையறியாமலே கண்கலங்கினார்.சிலநொடியில் விசில் சத்தம் கேடடதும் பஸ் நகர ஆரம்பித்தது. அப்போது டயர்களுக்கு அடியில் கிடந்த   தக்காளிகள் நசுங்கி தெரித்தன.

   வெறுப்பில் நடக்கநடக்க வியர்வை அதிகரித்தது பழனிக்கு. பீடியை எடுத்து பற்றவைத்தான். எப்போதாவது சரக்கு அடிக்கும் பழக்கம் கொண்டவன்- இன்று சாலையில் இடதுபுறம் ஒரு ஒயின்ஷாப் தட்டுப்பட்டதுமே ஒரு குவாட்டர் வாங்கப்போனான்.

   குவாட்டர் பாட்டிலில் போட்டிருந்த விலையைவிட, கமிஷனாக கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டான் ஒயின்ஷாப்பின் சேல்ஸ்மேன்.

தன் சட்டைப்பையிலிருந்து ஜந்து ரூபா எடுத்து சேல்ஸ்மேனுக்கு கமிஷனாக கொடுத்தபோது, திடீரென்று பழையது ஒன்று ஞாபகம் வந்தது பழனிக்கு.

 அப்போது பழனி பன்னிரென்டு படித்துட்டு ஆறேழு வருஷம் நிலையான வேலையில்லாமல் அழைந்தபோது, தமிழக அரசு ஒயின்ஷாப்பு வேலைக்கு சேல்ஸ்மேன், சூப்பர்வைசர் பிரிவுகளில் ஆள் எடுத்தது.

    இந்த விஷயத்தை தெரிந்த பழனியுடைய பெரியப்பா மகன்

சேல்ஸ்மேன் வேலைக்கு பழனிக்கும், தனக்கும் சேர்த்து விண்ணப்பம் வாங்கி வந்தான்.

விண்ணப்பத்தை நிரப்பிய பழனி- அப்பாகிட்ட போயி “ஒயின்ஷாப்பு வேலைக்கு ஆள் எடுக்குறாங்க கவர்மென்ட். அதுக்குதான் இந்த விண்ணப்பம்.வேலைக்கு சேரணும்னா முன்கூட்டியே ஐம்பாதயிரம் ரூபா கவர்மெண்டுக்கு கட்டணுமாம்” என்றான்.

    விஷயத்தை புரிந்துகொண்ட அவர் “ஏன்டா.. சம்சாரி வீட்ல பொறந்திட்டு போயும் போயும் சாராயக்கடையில வேலை பார்க்கப்போறிங்கிற..“ என்று சொல்லிக்கொண்டே கோபத்தில் விண்ணப்பத்தை சரட்டுசரட்டென்று கிழித்தெறிந்துவிட்டார்.

இதை இப்போது நினைக்கும்போது அப்பாமேல் அவ்வளவு கோபம் வந்தது பழனிக்கு.

இப்போது ஒயின்ஷாப்பில் வேலை பார்ப்பது எவ்வளவு பெரிய கௌரவம். ஒயின்ஷாப்பில மட்டும் இன்னியாரம் வேலைக்கு சேர்ந்திருந்தா சம்பளத்துக்கு சம்பளம்.. குவாட்டருக்கு அஞ்சு ரூபாய் கமிஷன்னு.. நல்லா வாழ்ந்திருக்கலாம்.

தேவையில்லாம அப்பா செஞ்ச வேலையால, இப்ப இரண்டு ரூபாய்க்கு விக்கிற தக்காளியை தூக்கிட்டு ஊரெல்லாம் அசிங்கப்பட்டு தெரிய வேண்டியாதிருக்கு.. எல்லாம் என் தலையெழுத்து என்று எண்ணிக்கொண்டே விரக்தியில் குவாட்டர் பாட்டிலை திறந்து அப்படியே ராவாக வாயில ஊத்தினான்.

தக்காளி விலை சரிவு, பஸ்ஸில் பரிசோதகர் நடத்திய விதம் ஆகியவற்றால் நெஞ்சு வயிறெல்லாம் பழனிக்கு ஏற்கனவே எரிந்துபோனதால் -இந்த ராவான குவாட்டரின் எரிச்சல் அவ்வளவாக தெரியவில்லை. போதை  ஏறியதும் எல்லாம் அந்த முண்டையால வந்தது என்று மனதுக்குள்ளே தன் மனைவியை வைதான் பழனி.

சிலநொடியில் தோட்டத்தில் காய்த்து நிற்கிற தக்காளிதான் கண்முன்னே வந்து வந்து எரிச்சலைத் தந்தது.

   கொஞ்ச நேரத்தில் தோட்டத்திற்கு வெக்வெக்னு வந்த பழனி கையில் ஒரு மூங்கில் கம்பை எடுத்துக்கொண்டு சிவிரென்று காய்த்து தொங்குகிற தக்காளியையெல்லாம் அடித்து சாய்க்க நெருங்கினான்.

இவனுக்கு முன்னாடியே நாலைந்து ஆடுகள் தக்காளிகளை கடித்து மேய்ந்து நாசம் பண்ணிக்கொண்டிருந்தன.

நாம பண்ண நினைத்ததை இந்த ஆடுகள் பண்ணிக்கொண்டிருக்கே என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டே, -அதற்கு உறுதுணையாக பழனியும் கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால் விளைந்து கொழுத்திருந்த தக்காளிகளை சராமாரியாக அடிக்க ஆரம்பித்தான். அவன் வெறுப்பில் அடிபட்டு விழுந்த தக்காளியிலிருந்து சாறுகள் வெதுவெதுப்பாக வடிந்தன-அவனின் கண்ணீரைப்போல..!

அப்பொழுது பக்கத்து காட்டிலிருந்த சுப்புச்சாமி கட்டிப்போட்டிருந்த தன்னுடைய ஆடுகளை காணோமே என்ற பதட்டத்தில் பழனி சாவியம் பார்க்கிற தோட்டத்தை  நோக்கி  ஓடி வந்துகொண்டிருந்தான். அப்போது பழனி பக்கத்தில் சுப்புச்சாமியுடைய ஆடுகள் தக்காளிகளை மேய்ந்துகொண்டிருந்தன.

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

The post செங்கொடி நிறத்தையொத்தது தக்காளியின் வண்ணம் first appeared on Nadukal.

  •  

காது குத்து

               மெத்தைக் கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்த மேனகாவை எழுப்ப அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் எழுப்பியே தீர வேண்டும். சின்னவன் சுகனை அவளுக்கு அண்டையில் படுக்க வைத்து அவள் தட்டிக் கொண்டிருக்கிறாள். அவன் தூங்கினாலும் கலைந்து நெளிந்தாலும் விளிம்பில் தவறிக் கீழே விழும் அபாயம் அதிகம். எழுப்பினால் இந்த இராத்திரியில் ஒரு போர்க்களம் நிச்சயம் என்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் குட்டி போட்டப் பூனையாக கட்டிலையே சுற்றி சுற்றி வந்தான்.

கால்மாட்டில் போய் கொஞ்ச நேரம் நின்று அவளையே பார்த்தான். சற்று தள்ளி நடுக்கட்டிலில் தாராளமாய் படுத்துறங்கும் பெரியவள் ஷாலினியைப் பார்த்தான். மேனகா மீது ஆத்திரமாக வந்தது. அவன் மீதான கோபத்தில் வேண்டுமென்றே செய்கிற இந்த வினையை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் முழித்தான். மெல்ல கொலுசின் மீது கை வைத்து காலை உலுக்கினான். கண்களைத் திறக்காமலேயே கணநேரத்தில் உதைப்பது போலத் தூக்கிச் சொண்டிய கால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.

‘அட சனியனே முழிச்சிட்டுதான் படுத்துருக்கியா?’

வெளியறைக்குச் செல்வது போல பாசாங்கு காட்டி

“இந்த வெளையாட்டுலாம் காலையில வச்சிக்க.. புள்ளைய தூக்கி நடுவாக்குல போட்டுப் படு” என்றான் சத்தமாக.

“எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. நீ போய் தூங்குற வேலையப் பாரு” என அவளிடமிருந்து சன்னமாக பதில் வந்தது. அதன் பொருள் ‘தூங்கித்தான் பாரேன்’ என்பதென அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இயலாமையில் காலை தரையில் உதைத்துக் கொண்டான்.

“இப்ப என்ன? உன் குடும்பத்தையே கூப்பிடணும். அவ்வளவு தானே? சரி காலைல போய் நேர்லயே சொல்லிட்டு வர்றேன் போதுமா?”

“ஒண்ணும் தேவையில்ல.. உனக்குத் தேவை மடியில உக்கார வைக்க ஒரு மாமன் தான? என் தம்பிய கூட வர வேணாம்னு சொல்லிடுறேன். உன் சொந்தத்துல ஒரு மாமன ரெடி பண்ணு” அவளிடமிருந்து அலட்சியமாக பதில் வந்தது.

மனதுக்குள் நினைத்துக் கொண்டான். தனது சொந்தத்தை இழுக்கத் தொடங்கி விட்டாள்.

‘ரைட்.. சாமி இப்போதைக்கு மலை ஏறாது’

எதுவும் பேசாமல் மீண்டும் வாசலில் நின்று எட்டிப் பார்த்தான். சுகனது வலது கால் கட்டிலை விட்டு வெளியே நீண்டிருந்தது. இந்தக் கிறுக்கியை நம்பவும் முடியாது. அப்படியே தூங்கிப்போய் விடுவாள்.

தலைமாட்டிலிருந்த இரண்டுத் தலையணைகளை எடுத்து சத்தம் காட்டாமல் குனிந்து சுகனுக்கு நேராக தரையில் வைத்தான். பிள்ளை தவறினால் கீழே விழும் கோணத்தை ஆராய்ந்து தலையணையை நகர்த்தி நகர்த்தி அவன் வைத்துக் கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தாள். சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். இன்னொரு பக்கம் பாவமாகவும் இருந்தது.

ஷாலினிக்கு முடி இறக்கும்போது அவன் தாத்தா தவறிவிட்டதால் விமரிசையாக செய்ய முடியவில்லை. சுகனுக்காவது விலாவாரியாக செய்யலாமென நினைத்தால் துட்டு தேறாதென தட்டிக் கழிக்கிறானென்ற எரிச்சல் அவளுக்கு.

உள்விளக்கை அணைத்துவிட்டு வெளியே வாசலுக்கு வந்து காற்றோட்டமாக அமர்ந்தவனின் முகத்துக்கு நேராக விட்டில்கள் பறந்தன. ச்சூ போ! எனத் தட்டிவிட்டான். ஒரு சுற்று அலைந்து வந்து மீண்டும் முகத்தை மேலும் கீழுமாய் அளவெடுத்துக் கொண்டிருந்தவற்றை விரட்டத் தோன்றாமல் விளக்கொளியிலிருந்து விலகிப்போய் அமர்ந்து மாமனார் வீட்டுக்கு செல்வது பற்றி யோசிக்கத்தொடங்கினான். பதினான்காம் நெம்பர் பஸ் தூரத்தில் செல்வது வெளிச்சப்புள்ளியாகத் தெரிந்தது.

அடுத்தநாள் மாமனார் வீட்டில் அவரது இரண்டு அண்ணன்களுக்கும் சொல்லியே ஆகவேண்டுமென கறாராக சொல்லிவிட்டார்கள். இவன் பாத்ரூம் போவது போல வெளியே வந்து மேனகாவை அழைத்தான்.

‘என்னடி இது? உங்க பெரியப்பாக்களுக்கும் சொல்ல சொல்றாங்க? இதுக்குத் தான் உன் தம்பி மட்டும் போதும்னு சொன்னேன். கேட்டியா நீ?’

மறுமுனையில் அவள் குரல் அலட்சியமாக ஒலித்தது.

‘நீதான் வெறும் சக்கரைப்பொங்கல்னு சொல்லிட்டியே? அப்புறம் என்ன வலிக்குது? நான் அரைப்படி சேத்துப்போட்டு பொங்க மாட்டனா?’

அவன் ஆபத்தான காலங்களில் பயன்படுத்தும் அஸ்திரத்தை எடுத்தான்.

‘பாப்பா… அங்கலாம் சொன்னா அப்புறம் எங்க சித்தப்பா வீட்டுக்கும் சொல்லணும். இல்லனா பாரு பொண்டாட்டி வூட்டு ஆளுங்கள மட்டும் கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டான்னு பேர் வச்சிடுவாங்க.. ப்ளீஸ் பாப்பா’

அவள் அதற்கும் அசரவில்லை. ‘பரவால்ல சொல்லு. நான்தான பொங்கப் போறேன்? நீயா செய்யப்போற? கூட மாட எங்க அம்மா இருக்குல்ல.. வெறும் சக்கர பொங்கலுக்கு எதுக்குடா இவ்வளவு பொலம்பல்?’

கிடா வெட்டாததை தெளிவாக குத்திக் காட்டுகிறாள். தாளமுடியாத எரிச்சலை அடக்கியபடிப் பேசினான்.

‘இப்ப என்ன சொல்ல வர்ற? நீ சொல்ற ஆளுங்கள எல்லாரையும் அழைச்சிடுறேன். ஆனா நானு எக்கேடு கெட்டா உனக்கு என்ன வலிக்குது? கடன் நான் தான கட்டணும்?’

‘என்ன கடன் பண்றாங்க உனக்கு? இதுக்கே இப்படி.. இன்னும் கெடா வெட்டி விருந்து வச்சா வயிறு பொங்கிடும் போல..’

மீண்டும் அதையே… எதுவும் பேசாமல் போனை அணைத்தான்.

மனதுக்குள் எதையோ முணுமுணுத்துக் கூட்டினான்.

‘ரெண்டு ,மூணு ஒரு ஏழு மொத்தமா இருவது டிக்கெட் வரும். அதுக்கு தனியா ஒரு டிராவல்ஸ் பேசணும். சாமி சோறுன்னாலும் அதுக்குன்னு வெறும் சக்கர பொங்கலையேவா போட்டு கூட்டி வர்றது? முடியெறக்க ஆளு வர்றதுக்குள்ள பசிக்கிதுனு கதறுங்க.. ஒரு நாலு கிலோ ரவையாச்சும் கிண்டிப் போடணும். அதுக்கூட பெரிய செலவு இல்ல. ரிட்டர்ன் வர்றப்ப கண்டிப்பா ஒரு ஓட்டல்ல இறக்கித்தான் ஆவணும். சைவம்னு வச்சாக்கூட எம்பது ஒரு இருவது எட்டு ரெண்டு பதினாறு.. அங்க ஒரு ஆயிரத்தி அறுனூறு. வண்டிக்காசு ஒரு எட்டு பூஜ சாமான் ரெண்டாயிரம் எப்படிப் பார்த்தாலும் பன்னெண்டு பதிமூணு ஆயிடும் போலருக்கே’

சேகர் போன வாரமே வந்து சலித்துக்கொண்டது ஞாபகம் வந்தது. போர் போட்டபோது வாங்கிய தொகையில் இன்னும் இருபதாயிரம் பாக்கி நிற்கிறது. வடுகத்தம்பட்டி கனகு மாமாவுக்கு வேறு மாடு பிடித்தக் காசு இன்னும் தராமல் இருக்கிறான். எதையும் புரிந்து கொள்ளாமல் மேனகா செலவு இழுத்து விடுவதாகத் தோன்றியது.

தட்டைக் கழுவி ஊற்ற வெளியே வந்த அத்தையிடம் மற்ற வீடுகளில் சொல்லிவிட்டு வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான்.

மறுநாள் காலை சித்தப்பா வீட்டுக்கு சொல்லப் போனபோது சித்தப்பா அவருடைய பங்கு நியாயத்தைச் சொன்னார்.

‘மொட்ட அடிக்கிற சரி.. உன் குடும்பத்தோட முடிஞ்சா பரவாயில்ல. பெரிய மாமனாருங்க வராங்க.. நான் வரேன்.. உன் மாமன் வேற வரான்னு சொல்ற.. இத்தன குடும்பத்த கூட்டிட்டு போயி வெறும் சக்கரப் பொங்கல போட்டு அனுப்புறது என்னா கதை?’

இவன் திக்கென நிமிர்ந்தான்.

‘அதுக்கு?’

‘அதுக்கு என்னானா என்ன சொல்றது? மேனகாவ பொண்ணு கேட்டுப் போனப்பவே கஞ்சப்பயகுடும்பம்னு உன் பெரிய மாமனாரு கேவலமா பேசுனாப்ல.. பாப்பாவுக்கு மொட்ட அடிச்சப்பவும் ஒண்ணும் செய்யல’

‘அது தாத்தா செத்ததால ஒண்ணும் செய்யாம வுட்டாச்சு’ என்றான் அவசரமாக.

‘ஆமாமா.. அதனால தான் சொல்றேன். இப்பவும் செய்யாம வுட்டா நல்லாருக்காதுல்ல. கோழியாவது புடிச்சிக்கலாம். ஒரு ரெண்டரை கிலோவுல நாலு நாட்டுச் சேவல் புடிச்சா போதும். நெறமா செஞ்சிப் போட்டுடலாம்’

‘அடச்சை..’ மனதுக்குள் சிரித்துக் கொண்டான். எருக்குழியை கிளறி நாசம் செய்கிறதென பக்கத்து காட்டுக்காரன் போட்ட சண்டையில் புரட்டாசி முடிந்த மறுநாளே இருபது உருப்படிகளை குஞ்சும் கோழியும் சேவல்களுமாக கொண்டு போய் டவுன் கடையில் விற்றுவிட்டு வந்திருந்தான்.

சித்தப்பா தன்மானத்தை வேறு தொட்டுக் காட்டிவிட்டார். இதற்கு மேல் மறுப்பு சொல்ல முடியாது. அவன் கடைக்குச் சென்றபோது மாலைக் கருக்கல் ஏறியிருந்தது. உள் நுழையும் முன்பே நிதானமாக கூண்டில் பார்வையை ஓட்டினான். பதினைந்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் கீழடுக்கிலும் ஐந்தாறு சேவல்கள் மேலடுக்கிலும் நின்றிருந்தன. அவற்றில் மூன்று சேவல்கள் தன்னுடையதைப் போலத் தோன்றியது. அவற்றையே பிடித்துக் கொள்ளலாமென விலை கேட்டான்.

‘உயிர் எடை கிலோ நானூறு வரும்ண்ணா..’

‘என்ன லோகு.. முந்நூத்தம்பதுக்கு தானே என்கிட்ட வாங்குன? அதுக்குள்ள விலை ஏறிடுச்சா? குறைச்சு சொல்லு’

‘கட்டுப்படியாவாதுண்ணா.. நோம்பி நேரம்.. இந்த வெலைக்கே கிடைக்கலண்ணு ஆளா பறக்குறாங்க’

‘கொடுமையா இருக்குது லோகு..’ தன் சேவல்கள் தன்னிடமே விலையேறி வருவதை நினைத்து சிரிப்பதா அழுவதா என யோசித்தான். காதுகுத்து முடித்து மொத்தமாக பார்த்துக் கொள்ளலாமென முடிவெடுத்துக் கொண்டு கோழிகளை வண்டியில் கட்டினான். மொத்தம் ஐந்து சேவல்கள். குடல், முடி நீங்கலாக பதிமூன்று கிலோ தேறுமென கணக்கு போட்டான். இது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லை. இவனுக்கே கொஞ்சம் பக்குவம் தெரியும். மேனகாவின் தாய்மாமா மனைவி நன்றாக சமைப்பாள். வேறு வழியில்லை. அவர்களிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டியது. வண்டியை கிழக்காக தலைச்சங்காடு பக்கம் திருப்பினான்.

வண்டியை வாசலில் நிறுத்தியதும் மேனகாவின் தாய்மாமா ஓடிவந்து வரவேற்றார். களத்தில் கட்டிலைப் போட்டு அமர்ந்தார்கள். உள்ளறையில் சின்னத்திரையில் மிளிர்ந்த இனிமே தான் ஆரம்பம் சீரியல் வெளியிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.

‘அதெல்லாம்  பிரச்சினையில்ல. ஒரு இருவது இருவத்தஞ்சு டிக்கெட்டுனா நாமளே சமாளிச்சிடலாம். நான் வந்துடுறேன்..’ என டீயை ஆற்றியபடியே மேனகாவின் அத்தை சொன்னதும் இவனுக்கு நிம்மதியாக இருந்தது. டீயை ஊதிக் குடித்து எழும்பவும் மேனகாவின் சின்ன தாத்தா மகன் வண்டியை வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது. இவன் அந்த அந்தியிலும் வியர்த்துப்போய் நின்றான். அவர்கள் குடும்பத்தில் மூன்று பேர் அண்ணன்தம்பிகள்.

‘யாரு மருமகப்பிள்ளையா? வாங்க வாங்க.. காதுகுத்தாமே.. கேள்விப்பட்டேன். என்னைக்கு?’

‘நாளாறன்னிக்கு மாமா.. நாளைக்குத்தான் வந்து சொல்லலாம்னு இருந்தேன்’ என வழிந்தான்.

‘அதுக்கென்ன மாப்ள.. அதான் குத்துக்கல்லாட்டம் இங்கேயே நிக்கிறனே.. இங்க சொன்னா போதும்’ என அவர் மீசையை நீவியபடி சிரித்தார்.

‘இல்ல மாமா.. மத்த ரெண்டு மாமாவுக்கும் சொல்லணும்ல.. ‘ என இழுத்தான்.

‘அட.. என்கிட்ட சொன்னா என்ன? எந்தம்பிகளுக்கு சொன்னா என்ன? நீங்க தனியாளா சின்னப்படுறது தெரியாதா எங்களுக்கு? இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. நீங்க மத்த வேலைய பாருங்க.. நாங்க கண்டிப்பா வந்துடுவோம்.. எனக்கும் டீ போடு கண்ணு’ என்றபடியே சேரில் அமர்ந்து கால்களை நீட்டி முறுக்கி கொட்டாவி விட்டவரை வெறித்துப் பார்த்தான். வரும் வழியில் எத்தனை பேரென எண்ணிக் கொண்டே வந்தான். இப்போது எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியிருந்தது.

நல்ல இருளில் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வாசல் விளக்கு வெளிச்சத்தில் மாட்டுக் கொட்டகை பைப்பில் யாரோ கிடாவை கட்டியிருந்தார்கள். அது புது இடத்தில் நிற்காமல் கத்திக் கொண்டே வட்டமாக மண் பறித்துக் கொண்டிருந்தது.

வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்த மேனகா அவனைக் கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டு களத்திலேயே நின்றாள். அந்த சிரிப்பில் விஷமத்தனம் இருப்பதாகப்பட்டது. கோழிகளை கீழே இறக்கி வைத்தபடி ‘யாருது ஆடு? அவுந்துக்கிட்டு வந்துடுச்சா?’ எனக் கேட்டவனை சிரிப்பை நிறுத்திவிட்டு பரிதாபமாகப் பார்த்தாள் அல்லது பரிதாபமாக பார்ப்பது போல நடித்தாளென்றும் சொல்லலாம். முகத்தை இயல்பாக வைக்க முயற்சித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பதை கவனிக்கையில் அவனுக்கு அப்படித்தான் தோன்றியது.

‘உன்னத்தான் கேட்குறேன்.. கெடா யாருது?’

‘நம்மளது தான்.. ‘ மீண்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டே.

‘மேனகா.. ஏற்கனவே செம்ம டென்ஷன்ல வந்துருக்கேன். வேணாம் ப்ளீஸ்’

‘தெரியும்.. இப்பதான் மாமா போன் பண்ணார். சின்ன தாத்தா வீட்ல வந்துருந்தாங்களாமே..’

அவள் சிரிப்புக்கான காரணம் புரிந்தது.

‘அத விடு. கெடா யாருது?’

‘நம்மளது தான்..’

அவன் நேராக தொட்டிக்குப் போய் வாளித் தண்ணீரை எடுத்து தலைக்கு ஊற்றிக்கொண்டான். சத்தம் கேட்டு அவன் அம்மாவும் வெளியே வந்தாள்.

‘இப்ப சொல்லப் போறியா இல்லையா?’

‘நான் என்னப்பா பண்ணேன். உங்க மாமா சொன்னாருனு வெடிமூக்கன் தான் வந்து கட்டிட்டுப் போனாரு’

அவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ‘அவன் எதுக்கு இத வந்து கட்டிட்டுப் போனான்?’ அவளை வேகமாக நெருங்கியவனை குறுக்கே புகுந்து அம்மா தடுத்தாள்.

‘அவக்கிட்ட எதுக்குடா எகிறுற? உன் மாமனுக்கு போன் பண்ணிக் கேளு’

மாமா போனை எடுத்ததும் அடக்கிக் கொண்டு கேட்டான்.

‘மாமா.. அவன் கெடா எதுக்கு இங்க நிக்கிது?’

‘அட நீ சொன்னனு தானப்பா அவன் சொன்னான்..’

‘என்னனு?’

‘காதுகுத்துக்கு கெடா வேணும்னு தம்பி சொன்னாப்ல.. நம்மகிட்ட பதமா இருக்கு.. என்ன பண்றதுன்னு கேட்டான். சரி போய் வீட்ல கட்டிட்டு போன்னு சொன்னேன்’

‘நான் எங்க மாமா கெடா கேட்டேன்? கோழி மட்டுந்தான் சொல்லிட்டு இருக்கேன்..’

‘அப்படியா? ஊருல நீ கோழினு யாருகிட்டயாவது சொல்லியிருப்ப.. அவங்க கெடாவும்னு நினைச்சிருப்பாங்க. அதனால என்னடா இப்ப? செய்யறதே செய்யுற? கிடா வெட்டாம என்ன காதுகுத்து?’

‘காசு இருந்தா செய்ய மாட்டனா மாமா? ஏற்கனவே ரொம்ப டைட்ல போகுது? ஒண்ணுமே புரியல’

‘அடப்போடா.. எவன் இப்ப கடன் வாங்காம விசேசம் பண்றான்? அப்புறம் உன் மாமனார் வீட்ல வெறும் கோழிக்கறிய மட்டும் போட்டு வரும்படி வாங்கிக்கிட்டான்னு சொல்ல மாட்டாங்களா? அதெல்லாம் சீர் வரும்ல? அதுல சமாளிச்சிக்கலாம்’

‘என்னவோ போங்க.. என்னை கேட்காமலேயே எல்லாம் நடக்குது. இப்ப வெடிமூக்கனுக்கு எப்படி காசு தர்றது?’

‘அட அவன் ஒரு ஆளு.. அதெல்லாம் சொல்லியாச்சு. உடனேலாம் காசு தர வேண்டியது இல்லடா.. குவாட்டருக்கு மட்டும் கொஞ்சம் கவனிச்சு விட்டுடு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குடுத்துக்கலாம்’

அவன் எதற்கும் சமாதானமடையாமல் முனகியபடியே போனை அணைத்தான். ஓடிப்போய் மீண்டும் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொண்டவன் தொட்டியின் மீதே அமர்ந்து கொண்டான்.

வெடிமூக்கனைப் பற்றி ஊருக்கே நன்றாகத் தெரியும். தண்ணி போடும் வரை குழைந்துப் பேசுவான். போதையேறியதும் நடு இரவில் வந்து நின்று கொண்டு சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவான்.

‘ஒரு குவாட்டர வாங்கி ஊத்திவுட்டு என் கிடாய லவட்டிக்கிட்ட பாத்தியா?’  என வில்லத்தனமாகச் சிரித்து மானத்தை வாங்கி விடுவான். இது போன்ற காட்சிகள் ஏற்கனவே ஊரில் நடந்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் அண்டா, மானிய விலையில் வாங்கிய சொட்டு நீர் பைப்புகள், ஊன்றுவதற்காக வைத்திருந்த ஒட்டுரகத் தென்னங்கன்று என பொருட்கள் வேறு வேறாக இருந்தாலும் சத்தம் அதுவாகத் தான் இருக்கும்.

திரும்பி கிடாவைப் பார்த்தான். எப்படியும் பன்னிரண்டு கிலோ தேறும். பதமான இளங்குட்டி. அடுத்த ஒரு நாளுக்குள் தேடியலைய முடியாது. எதுவும் பேசாமல் எழுந்து வீட்டுக்குள் போனான். சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் மேனகா சமாதானம் செய்வதுபோல பக்கத்திலேயே நின்றிருந்தாள்.

‘ஒண்ணும் வேணாம். எல்லாம் சமாதானம் ஆகிட்டேன்..’ என நிமிர்ந்துப் பார்த்து சிரித்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

‘என்ன சங்கதி? நம்பவே முடியல..’

‘பின்ன? சாமி காரியம்ல.. சலிச்சிக்கிட்டா செய்ய முடியும்? ‘

என்றவனின் தலையை பரிவாகக் கோதிவிட்டவளை ஏக்கமாகப் பார்த்தான்.

‘ஆனா இதோட போதும்ப்பா.. இதுக்கு மேல பாடி தாங்காது’

மேனகா கலகலவென சிரித்தாள். இவன் அதை பயன்படுத்திக் கொண்டான்.

‘எப்படியும் கிடா விருந்துனு ஆகிடுச்சு. பங்காளிங்க ஊர்ல முக்கியமான ஆளுங்ககிட்ட போய் சொல்லிட்டு வந்துடுறேன்’

‘ஆமா.. நானே சொல்லணும்னு நினைச்சேன். காலைல மொத வேலையா அதப் பாருங்க.. ‘ என்றபடி சுகனிடம் நகர்ந்தவளை நிறுத்தினான்.

‘அப்படியே…’

அவள் என்னவென்பது போலப் பார்த்தாள்.

‘இல்ல.. எல்லாருக்கும் சொல்றதுனு முடிவாகிடுச்சு. அப்படியே மதிவதனிகிட்டயும் சொல்லட்டுமா?’

‘அதான பாத்தேன்..’ இதற்காகத் தானா உன் கோபம் காணாமல் போனதென்பது போலப் பார்த்தாள்.

மதிவதனியை அவன் ஒரு காலத்தில் காதலித்தான். தூரத்து உறவு முறை. மதிவதனியின் குடும்பம் வசதியாக இருந்ததில் இவனுக்கு பெண் தர மறுத்தது. இருவரும் ஊரை விட்டுப் போய் திருமணம் செய்து கொள்ளுமளவுக்குச் சென்று அடிதடியாகி கண்ணீரோடு பிரிந்ததெல்லாம் தனிக்கதை. அதன்பிறகு மதிவதனி ஓமலூருக்கு மேற்கே ஒரு வி.ஏ.ஓ.வை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டாள். திருமணமானப் புதிதில் அனைத்தையும் மேனகாவிடம் சொல்லி அழுதிருக்கிறான். அவன் நேர்மையை மேனகா நிரம்ப நேசித்தாள்.

இளையராஜாவின் ‘மாலை கருக்கலில் சோலைக் கருங்குயில்..’ பாடலை அவன் கேட்கும்போதெல்லாம் ‘ஓ… மதிவதனி ஞாபகமோ…’ என கூடவே கேலியாகப் பாடுவாள். மதிவதனியும் ஊருக்கு வரும்போதெல்லாம் அவன் வீட்டுக்கு வந்து பேசிவிட்டுப் போவாள். என்ன பேசினாலும் இனிமேல் ஒன்றும் நடக்காதென்ற ஏக்கப் பார்வைகள் இருவரிடமுமே எழுவதை அவள் சென்றபிறகு மேனகா கிண்டல் செய்வாள். அவனை ஒன்றும் தெரியாதது போல பம்மவிட்டு இரசிப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.

‘ப்ளீஸ்ப்பா.. கூப்பிடுறேனே..’

ஏற்கனவே நொந்திருப்பவனை கெஞ்சவைக்க வேண்டாமென முதலிலேயே சம்மதம் தெரிவித்ததில் அவன் வெட்கம் கொண்டான்.

‘ஐயே.. வலியுது பாரு..’ என சிரித்தபடியே சுகனிடம் சென்று படுத்தாள்.

அவர்கள் அதிகாலையிலேயே கோயிலை அடைந்திருந்தார்கள். அவனது குலதெய்வம் திட்டக்குடிக்கு கிழக்கே அமைந்திருந்தது. எப்படியும் போய் வருவதற்குள் பொழுதாகிவிடுமென்பதால் இந்த அதிகாலை புறப்பாடு. சமையலுக்கு ஐந்தாயிரம் ரூபாயில் ஆள் பேசியிருந்தான். மாமாவிடம் வண்டி வாடகை இதர செலவுகளுக்கென கையிருப்பு போக இருபதாயிரம் கடன் வாங்கியாயிற்று. ஒரு மினி ஆட்டோ தனியாக தயார் செய்து கிடாவோடு சமையல் பாத்திரங்களை அதில் இட்டு நிரப்பியிருந்தார்கள். ஒரு டிராவல்ஸ் வாகனம் இரண்டாகியிருந்தது. அது மட்டுமின்றி பெரிய மாமனார் வகையறாக்கள் தனி வண்டி ஏற்பாடு செய்து வருவதாகச் சொன்னார்கள். அதற்கு தன்னிடம் காசு கேட்க மாட்டார்கள் என மேனகா உறுதியளித்தது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால் பிரச்சினை வேறு மாதிரியாக உருவெடுத்திருந்தது. பெரிய மாமனாரின் மகன்கள் வெடிமூக்கனோடு கூட்டு சேர்ந்திருந்தார்கள். ‘மாப்ள வீட்டு காதுகுத்துல கச்சேரி இல்லனா எப்படி? அதான் மாப்ளைக்கு சிரமம் வேணாம்னு நாங்களே செலவு பாத்துக்கிட்டோம். கடைசில கணக்கு சொல்றோம்’ என்பதை அவர்கள் ரொம்பவும் சீரியசான தொனியில் சொன்னார்கள்.  குவாட்டர் பாட்டில்கள் நிரம்பிய இரண்டு அட்டைப் பெட்டிகள் இறக்கப்பட்டு அருகிலிருந்த முள்காட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. அடிக்கடி கருப்பனாரை திரும்பிப் பார்த்து ‘அமைதி அமைதி’ என சொல்லிக் கொண்டான்.

பொங்கலிட்டு முடித்து கிடாய்க்கு மாலையிட்டு சாமி முன் நிறுத்தினார்கள். தீர்த்தம் விழுந்ததுமே துளிர்த்தல் நலம். ஆனால் உடனடியாக வாக்கு கிடைக்காதது கண்டு அனைவரும் பதட்டமடைந்தனர். மேனகா கீழே விழுந்து உருண்டு வேண்டினாள்.

‘சோதிக்காத சாமி.. எப்படியாவது என்னை காப்பாத்தி விடுப்பா..’ கொஞ்சம் விட்டால் அழுது விடுபவன் போல இவனும் மனமுறுகினான்.

கைமாற்றி தீர்த்தம் தெளித்தார்கள். மூன்றாவது முறையாக தெளிக்கச் சொன்னபோது பூசாரி மறுத்தார். ‘என்னமோ குறையிருக்கு.. பாத்து சரி பண்ணுங்க’ என்றார். அதற்குள் தகவல் பரவி கச்சேரியில் மையமிட்டிருந்தவர்கள் உட்பட கூட்டம் கூடிவிட்டது. ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். அவனது அம்மாவை வந்து வேண்டச் சொன்னார்கள். அவள் தெற்கு பார்த்து தூணில் பிடிவாதமாக அமர்ந்திருப்பதைக் கண்டு மாமா ஓடிப்போய் அழைத்தார்.

அவள் ஒரே திசையைப் பார்த்தபடி ‘அது எப்படிடா துளுக்கும்? நான் தான் ரெட்டக் கிடா வெட்டுறதா வேண்டியிருந்தேனே..’ என்றதும் கூட்டத்தில் சலசலப்பு பரவியது.

‘அடக் கொடுமையே.. இதென்னடா கூத்து?’ என்று யாரோ கூவினார்கள்.

இவன் முறைப்பதைப் பார்த்ததும் எழுந்து நின்று ‘இவன் தான் சக்கர பொங்கலோட போகட்டும் னு முனகிகிட்டே இருந்தான். அப்புறம் பொங்கல் கோழியாச்சு கோழி கிடாயாச்சு.. ரெட்டக் கிடானு சொல்லியிருந்தேன்னா என்னை ஒரு வழி பண்ணியிருக்க மாட்டான்? எப்படி முறைக்கிறான் பாரு..’ என கொண்டையை அவிழ்த்து முடிந்தாள்.

பூசாரி ஓடிவந்து ‘ஒண்ணும் தப்பில்ல.. நமக்கு தெரிஞ்ச இடத்துல பேசிட்டேன்.. இப்பவே போனீங்கன்னா இன்னொரு கிடா புடிச்சிட்டு வந்துடலாம்’ என்றார்.

அவன் கிடாவைத் திரும்பி பரிதாபமாகப் பார்த்தான். அது ஈரம் பரவிய சுகத்தில் நின்றபடியே கண்களை சொக்கியிருந்தது.

வெடிமூக்கனை அழைத்து தான் விசேஷங்களுக்கு மட்டும் அரிதாகப் போட்டுக்கொள்ளும் அரை பவுன் மோதிரத்தை கழட்டிக் கொடுத்தான். 

‘வடக்க போய் பாலம் ஏறி இறங்குனா டவுனு.. ஏதாவது ஒரு அடகுக்கடைய புடி. அப்புறம் வெரசா பூசாரி சொன்ன எடத்துக்கு போய்ட்டு வந்துடு’  எனக் கூறி உடன் ஒரு பங்காளியை வண்டியில் ஏற்றி அனுப்பினான். திரும்பி வந்து பெண்களோடு உற்சாகமாக நியாயம் பேசிக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தான்.

‘ரெண்டு கெடாவையும் ஜோடியா நிறுத்தி தீர்த்தம் போட்டும் துளுக்காம இருக்கட்டும்… அப்புறம் இருக்கு உனக்கு..’ என மனதுக்குள் பொருமிக் கொண்டான்.

சரியாக ஒரு மணிநேரம் கழித்து வெடி மூக்கனும் பங்காளியும் கிடாயோடு வந்து சேர்ந்தார்கள். அதற்கும் குளிப்பாட்டி திருநீறு வைத்து இரண்டையும் ஜோடியாக நிறுத்தினார்கள். பூசாரி ஆகாயத்தை நோக்கி நெடுநேரம் வேண்டிவிட்டு,

‘சோதிக்காம வாக்கு குடுடா கருப்பா..’ என்றபடி தீர்த்தம் தெளித்த மறுநொடியில் இரண்டும் சொல்லி வைத்தாற்போல் தலையாட்டின.

பூசாரி வீச்சரிவாளை ஓங்கியிறக்க அவன் அம்மா அருள் வந்து ஆடத் தொடங்கியிருந்தாள். இவன் மேனகாவைத் தேடினான். அவள் உதடுகளை மடக்கி மீண்டும் சிரிப்பை அடக்கியவாறு தூணோரம் ஒளிந்தபடி நின்றிருந்தாள். இவன் கவனத்தை சாமி பக்கம் திருப்பி மீண்டும் அமைதி அமைதியென சொல்லிக் கொண்டான். மீண்டும் மேனகாவை பார்க்கையில் அவள் மதிவதனியை வரவேற்றுக் கொண்டிருந்தாள். இவன் தலையை சரிசெய்தபடியே அனைத்தையும் மறந்து அவளருகில் ஓடினான்.

காதுகுத்து முடிந்து சீர் நடக்கையில் மாமனார் போட்ட ஒன்றரை பவுன் சங்கிலியை கவனித்தான். தோடு ஒரு இரண்டு கிராம். அடகுக்கு வைத்தால் இந்தக் கடனை அடைத்துவிடலாம். மொய்ப்பணமாக எப்படியும் பத்தாயிரம் தேறுமென்ற நம்பிக்கையோடு சபையில் அமர்ந்திருந்தவனை மாமா வலுக்கட்டாயமாக எழுப்பி தனியாக அழைத்துப் போனார்.

‘என்ன மாமா?’

‘கூட்டத்த பாத்தியா? ‘

அவன் அப்போது தான் கவனித்தான். நினைத்ததை விட கூட்டம் ஜோராக வந்திருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டிலிருந்து பிள்ளைகளோடு மூன்று நான்கு பேர் கூட வந்திருந்தனர்.

‘என்ன மாமா இது? நூத்தியம்பது இலைக்குத் தான் சொல்லியிருந்தேன். முந்நூறுக்கும் மேல வரும் போலருக்கே..’

‘உள்ளூர்ல மேற்க ஒரு கிடாவிருந்து திடீர்னு கேன்சலாகிடுச்சுடா. அது நடந்துருந்தா இங்க குறைஞ்சிருக்கும்’

உள்ளூர்வாசிகளைத் தாண்டியும் முகம் தெரியாத வெளியூர்காரர்கள் நிறைய பேர் நின்றிருந்தனர். உற்று கவனித்தபோது நிறைய கரைவேட்டிகள் தென்பட்டன. பெரிய மாமனார் கட்சிக்காரர். சரக்கு கச்சேரி என்றவுடன் நிறைய கட்சியாட்களையும் அழைத்து வந்துவிட்டதை புரிந்து கொண்டான். அவனுக்கு ஏற்கனவே மேனகாவின் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது.

‘இப்ப என்ன மாமா பண்றது?’

‘ஆளுக்கு நாலு துண்டு கூட வைக்கலன்னா மானக்கேடா போய்டும்டா’ மாமா கவலைப்பட்டார்.

‘அதுக்கு என்ன செய்றது? என்ன முடியுமோ அததான் செய்ய முடியும்..’

‘அதெல்லாம் சிறப்பா செஞ்சிடலாம். ஒண்ணும் கவலப்படாத..’ என்ற சித்தப்பா மகன் முத்துவின் குரல் கேட்டு பின்னால் திரும்பினான்.

‘எப்படி முத்து சரியாவும்?’

‘நம்ம மலையன் மவன் இப்பதான் ஊருல இருந்து கிளம்பியிருக்கான். என் கிடாய தூக்கி கார்ல போட்டுகிட்டு வரச் சொல்லியிருக்கேன்.. இந்த ரெண்டு கிடாயயும் துண்டு போடுறதுக்குள்ள அவன் வந்துடுவான். உடனே இதையும் உறிச்சு ரெடி பண்ணிடலாம். விடு’

அவன் எரிச்சலாக முத்துவைப் பார்த்தான். ‘எதுக்கு முத்து தேவையில்லாத வேல.. இருக்கிற செலவ எப்படி சமாளிக்கிறதுனே தெரியல.. என்கிட்ட சுத்தமா காசு இல்ல.. ‘ எனக் கத்தியவனை யாரோ ஓடிவந்து சமாதானம் செய்தார்கள்.

‘அட நீ ஒருத்தன்.. நான் காசா கேட்குறேன் உனக்கு. நான் உனக்கு தரவேண்டியது இருக்குல்ல. அந்த கணக்கு வழக்குல வச்சிக்கப்பா.. விசேசத்துல எது சரியில்லனாலும் சோறு தான் முக்கியம். அதுவும் கறி விருந்துனா சொல்லவே தேவையில்ல. நம்ம மாணிக்கம் மவன் வரதனுக்கு என்ன பேரு? துண்டுக்கறி வரதன்.. கிணறு வெட்டி தண்ணி வந்ததுக்கு கறிவிருந்து ஆக்கிப் போடுறேன்னு ஊரையே கூட்டிப்புட்டான். புடிச்சது ஒத்தக் கிடா. இலைக்கு ரெண்டு துண்டு கூட வைக்க முடியாம தடுமாறி தத்தளிச்சி பந்தியிலயே எனக்கு உனக்குனு பெரிய கைகலப்பாகிடுல..? அன்னைக்கு அமைஞ்ச பேரு துண்டுக்கறி வரதன்னு. அவன் பேரன் தலையெடுத்து வந்தும் இன்னும் அந்தப் பேரு போகல.. நீ பேசாம இரு. எல்லாம் நாங்க பாத்துக்கறோம்.’ என அலட்டிக் கொள்ளாமல் அவன் சொல்லிவிட்டுச் சென்றபிறகு இவனுக்கு எல்லாம் புரிந்தது.

இவனது பம்புசெட் மோட்டாரை மூன்று வருடங்களுக்கு முன்பு எடுத்துப் போனவன் அவன் கிணற்றிலேயே வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறான். இவன் இப்போது மேல் மோட்டாரை விற்றுவிட்டு தண்ணி மோட்டார் போட்டுக் கொள்ளும் முடிவிலிருக்க  அவனிடமிருக்கும் தனது பழைய மோட்டாரையும் கொடுத்துவிட்டு மாற்றினால் தொகை கணிசமாகக் குறையுமென்ற நினைப்பிலிருந்தான். இப்போது முத்து தனது கிடாயை வைத்து அந்த நினைப்பைத் தான் முட்டித்தள்ளிவிட்டுப் போகிறான்.

மூன்றாவது கிடாயும் வந்திறங்கிய போது இங்கு கறி பாதி வெந்திருந்தது. கோழிக்கறியும் இன்னொரு பாத்திரத்தில் வறுவலாகத் தயார் நிலையிலிருந்தது. மூன்றாவது கிடாயை அரக்கப் பரக்கத் துண்டாக்கி தனிப்பாத்திரத்திலிட்டு வேக வைத்தார்கள். சீக்கிரம் வேக செவன் அப் ஊற்றி கொட்டாங்குச்சிகளை போட்டார்கள். அனைத்தையும் கலந்து சாமிக்கு படையலிட்டபோது மணி நான்காகி இருந்தது. பந்தி விரித்து முதல் இலைக்கு சுகனின் கையால் பரிமாறினாள் மேனகா.

விருந்து முடித்து ஒவ்வொருவராக விடைபெற்றுப் போக பாத்திரங்களைக் கழுவி ஆட்டோவில் ஏற்றினார்கள். எல்லோரும் வண்டியில் ஏறியப்பின் அவன் கருப்பனாரிடம் சென்று கைகளைக் கூப்பினான். குலுங்கியழுதப்படி பேசத் தொடங்கினான்.

‘என்னமோ என் சூழ்நிலை சாமி.. எங்கப்பனும் ஊர் பூரா கடன் வாங்கித்தான் செத்தான். தனியா போராடி வந்தேன். எம்மவனுக்கும் அந்த நெலம வந்துடக்கூடாதுன்னு தான் கொஞ்சம் மனசு கூசிப் போச்சு. கொஞ்சம் யோசிச்சு யோசிச்சு செஞ்சிட்டேன். எதுவும் நினைச்சிக்காத சாமி.. நீ நினைக்க மாட்ட.. உனக்குத்தான் என் பொழப்பு என்னானு தெரியுமே..’ என்றபடி விழுந்து கும்பிட்டான்.

வண்டியிலேறி கோயிலைக் திரும்பிப் பார்த்தான். சாமியிடம் அழுதுவிட்டப் பிறகு அனைத்தும் கரைந்திருந்தது.

வீடு திரும்பியதும் மேனகாவிடம் கிண்டலாகக் கேட்டான்.

‘எப்படியோ சக்கரப் பொங்கல கறி விருந்தா மாத்திட்ட.. அதுவும் மூணு கிடா. இப்ப சந்தோசமா?’

அவள் எதுவும் பேசாமல் டீ கொதிப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

‘அம்முக்கல்லி வாயத் திறக்குறாளா பாரு? மாமியாரும் மருமவளும் சேர்ந்துக்கிட்டு நல்லா தலைல மொளகா அரைச்சிட்டீங்க இல்ல..?’

அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள். முறைத்தது போலிருந்தது. ‘இப்போது நம் கைதானே ஓங்கியிருக்கிறது.. முறைக்க வாய்ப்பில்லையே’ என அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் டீயை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டே கேட்டாள்.

‘அதெல்லாம் இருக்கட்டும்.. நான் கவனிக்கலன்னு நினைச்சியா? அதென்ன மதிவதனி இலைக்கு மட்டும் ரெண்டு மூணு தடவ கறி போகுது.. தலைக்கறி வேற தனியா போகுது.. என்ன விஷயம்?’

பதில் வராததால் டீயை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

ஆளைக் காணவில்லை.

000

ந.சிவநேசன்.

சேலம் மாவட்டம் ஆரியபாளையம் சிற்றூர். ஆசிரியர் பணி. கவிஞர் மற்ரும் சிறுகதை ஆசிரியர். கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதயங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை இவரது நூல்கள். தொடர்ந்து இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.

The post காது குத்து first appeared on Nadukal.

  •  

36 B 

சித்தார்த் தனது மனைவி வைஷ்ணவியிடம்  தான் தோற்றுவிடுவோம் என்கிற கட்டத்தை அடைந்திருந்தான். அவனால் முழுமையாக அவளோடு எந்த விதத்திலும் ஈடுபட முடியவில்லை. அது வைஷ்ணவிக்குத் தெரிந்து விடும் என்கிற அச்சம் அவனை மேலும் தொந்தரவுக்கு ஆளாக்கியது. அவனுடல் இப்படி ஒரு மரக்கட்டை போல் உணர்வற்றுக் கிடக்கும் என ஒருநாளும் அவன் நினைக்கவில்லை. வைஷ்ணவி எவ்வளவு முயன்றும் அவனால் இயல்புக்குத் திரும்பி கிளர்ச்சியுற முடியவில்லை. எத்தனை குரல்கள் அவனை ஆட்டுவித்து மகிழ்வித்திருக்கும், இன்று வைஷ்ணவி குரல் அவனுக்குக் காதுக்குள் நுழையவேயில்லை. சிறுநீர் கழித்து விட்டு வருகிறேன் எனும் சாக்கில் பாத்ரூமிற்கு சென்று  அவனது போனை எடுத்தான். கற்பனைக்கும் நிஜத்திற்குமான பெரிய நீண்ட இடைவெளி உடைய சுவரொன்று அவன் முன் தனது உயரத்தை அதிகப்படுத்தியபடியே வளர்ந்து கொண்டே சென்றது.

**********

சித்தார்த் உடல் நடுங்கியபடி இருந்தது. அவனது தொடைகள் நிற்காமல் ஆடியபடியே இருந்தன. அவள் அவன் நெற்றியில் முத்தமிட்டவாறு மூக்கில் இருந்து கீழிறங்கி உதடுகளை மாறிமாறி முத்தமிட்டு முன்னேறியபடியே இருந்தாள். காதோரங்களை தனது நாவால் ஈரப்படுத்தினாள். காது நரம்புகளை லேசாகக் கடித்தாள். அவன் காதுகளில் சுருள் முடிகளால் திரண்ட அவனது மார்பை வர்ணித்தபடி அவள் ஹஸ்கி குரலில் சொன்னவை அவன் உடலின் உள் நரம்புகளில் ஆளில்லாக் காட்டில் தீடீரெனப் பற்றியெரியும் தீப்போல சரசரவென வேகமாக மேலேறின. அவள் அடுத்தடுத்ததாக தீவிரத்தன்மையோடு இடுப்பு நோக்கி இறங்க ஆரம்பித்த நொடிகளில்

‘ஏய், ஏய் நோநோ ப்ளீஸ் அங்கே போகாத?’

‘டர்ட்டி ராஸ்கல் போகாதனா போடின்னுதான் அர்த்தம். குத்துனன்னா பாரு. செம ட்ரிக்கி ஆம்பளடா நீ…நான் அப்படித்தான் போவேன்’ தலைமுடிகள் அவள் இடுப்பு வரை தொங்க அதை இழுத்துக்கட்டியவள் மல்லார்ந்த நிலையில் தன் தலையை பின்புறமாக வளைத்து அவனது தொடைகள் நடுவே இரண்டு கைகளையும் ஊன்றினாள்.

‘அடிப்பாவி, என்ன வேலையெல்லாம் பண்ற?’

ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணா …உன்ன புரட்டிப் போட்டு ம்ம்ம் …ஓகேவா? என மெலிதான குரலில் சொல்லி ஹாஹாஹா எனச் சிரித்தவாறே  கீழிறங்கி இதெல்லாம் சித்துக்காத்தான் எனக் கண்ணடித்து அவனுடைய பேண்ட் சிப்பைக் கழட்டினாள். வெறிகொண்ட உடலின் கிளர்ச்சி அண்டசராசரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது போல பேரதிர்வாக  நடுங்கச் செய்ய அவனது மூளை வரை நரம்புகள் அதிர பேச்சற்று கண்கள் மேல்நோக்கிப்போக முனகியபடியே ‘ஏய், விட்றி விட்றி’ என செல்லமாகக் கத்திக் கொண்டிருந்தான். 

அவளின் கேசங்கள் அவன் மார்பு முழுவதும் பரவிக் கிடந்தன. மிகவும் மிருதுவாக முடிக்கற்றைகளை அவற்றிற்கு வலிக்காமல் ஒத்தியெடுத்தவாறு அவள் ரசனையோடு தன்னை ஆள்வதை நினைத்துப் பூரிப்பில் கிடந்தான். அவள் மிகத் தீவிரமாகவும், முரட்டுத் தன்மையோடும் நடந்து கொண்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் செல்லமாக அவளைக் கடிந்துகொண்டது அவளுக்கு மேலும் கிறக்கத்தை உண்டு செய்ய  முன்னிலும் தீவிரமாக அவன் மேல் முன்னும் பின்னுமாக வேகவேகமாக இயங்க ஆரம்பித்தாள். அனைத்தும் முடிந்த போது உஷ்ண மூச்சின் சப்தங்கள் அறையின் சுவர்களிலும் ஒலிக்க படுக்கையில் தளர்வான உடலோடு தனியே கிடந்தவன் சற்று நேரத்தில் எழுந்து கொண்டான். 

அவனுக்குக் கொஞ்ச நேரம் நன்கு கண்ணயர்ந்து தூங்க வேண்டும் போலிருந்தது. ஆனால் தூக்கம் வரவில்லை. பறவைகளின் க்ரீச் க்ரீச் குரல்களோடுமலைப் பிரதேசம் முழுவதும் மெல்ல மெல்ல விடிந்தது திரைச்சீலைகள் வழியாகத் தெரிந்ததும் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து சென்று பல்துலக்க ஆரம்பித்தான். அவன் காதுகளில் மட்டும் குறுகுறுவென

அவளின் குரல் ஒலித்தபடியே இருந்தது. அதை நினைத்தவுடன்  அவன் பற்கள் பிரஷ்ஷை வாயில் வைத்தவாறு கிட்டிக் கொண்டது. இது அவனுக்குப் புதிதல்ல என்றாலும் நிஜத்தில் எந்தச் செயல்களும் இல்லாமலேயே சாதாரணமாக பல் துலக்குகையில் நினைக்கும் போது கூட ஒரு குரலுக்கு கிளர்ச்சியின் பேரின்பத்தை, கலவியின் முழு உச்சத்தை, தளர்ந்து கிடந்த உடலுக்குள் மேலும் ஒரு உன்மத்தத்தை வழங்க முடிகிறதை எண்ணி சிரித்துக் கொண்டான். 

தனது காமத்தின் பெருந்தீயின் முன் அவன் உடல் எரிந்தபடியே இருந்தது. போதாமைகளால் நிரம்பியிருந்த உடலின் முன் அவன் மனம் ஒரு செல்லமான நாய்க்குட்டி போல வாலாட்டிக்கொண்டு விசுவாசமாக நின்றது. தனது சக்திக்கு அப்பாற்பட்ட தனது கற்பனைகளின் வேகம் தாண்டிய ஒரு கலவியைக் கண்டடைந்துவிடவேண்டும், ஒரு பெண்ணின் உடலுக்குள் முழுவதுமாக தன் உடல் புகுந்து வெளிவந்தால்தான் அது அடங்கும் 

என்கிற அவனது உடல் வேட்கையின் தீவிரம் நின்றெரியும் விளக்கினைப்போல பிரகாசமாகவும், நீண்ட வருடங்களாக தன்வயமற்றுப் பித்தேறிய சாத்தானைப் போலவும் தொடர்ந்து வந்ததை அவன் அறிந்திருந்தான். அது அவனை இரவும் பகலும் தூங்கவிடாமல் செய்தது. 

மறுநாள் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். நடுரோட்டில் நின்று கொண்டிருந்த வண்டிகளில் வரிசையாக ஹாரன்கள் அடித்தன. 

‘டேய் ஊட்ல சொல்ட்டு வந்துட்டியாடா மொள்ளமாரி. சாவகாசமா ஆட்டிக்கிட்டு வராம்பாரு ?’ என்று காரின் உள்ளிருந்து டிரைவர் ஒருவன் கத்தினான். டூவீலரில் வந்த ஒருவன் இறங்கி வந்து ‘என்ன ப்ரோ! கனவைக் கொஞ்சம் ஓரமாகப் போய் காணுங்க’ என்றவுடன் வெட்கமாகவும், அசிங்கமாகவும் போய்விட்டது அவனுக்கு.

முந்தைய இரவில் நடந்த கூடலில் தன்னுடலை அவள் கையாண்டது இன்னும் மிச்சமிருப்பது போல, அந்த ஸ்பரிசம் மேலே படர்ந்தும் அப்படித் தான் போவேன் என்று சொல்லும் அவள் குரலாக மாறியும் அதன் குறுகுறுத்த உணர்வு உடலில் இருந்து விலகாமல் ஒட்டியபடியே இருந்தது. காலையில் இருந்து எங்கே திரும்பினாலும் அதன் நினைவு வந்தவுடன் மனமே அந்தக்குரலை, அந்த நினைவைக்கிளறி உடலை ஒரு வித முறுக்கோடு சிலிர்க்கச்செய்தது. அந்த இடத்திலேயே நின்று சுற்றி நடக்கும் எதையும் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் வம்பு செய்தது.

அவனுக்குக் குரல்தான் எல்லாம். அவனுக்குக் குரல் ஒன்றே போதும். குரல்கள் தான் அவனுக்கு உடல். குரல்களே அவனுக்குக் கிளர்ச்சி. குரல்களோடு வாழ்வது அவனைப் பொறுத்தவரை ஓர் உடலின் மொத்த இன்பத்துக்குமான தொடக்கமும் முடிவும். இந்தக் குரல்கள் அவன் அன்றாடங்களில் கலந்தவை. குளிக்கும் போது கூட சில குரல்கள் அவனை ஆட்கொண்டு பல கரங்களாக உருவெடுத்து ஒரு பெண்ணாக இல்லாது பல பெண்களாக மாறி அங்கங்களை வருடும். தன்னை இத்தனை பெண்கள் ஒரு சேர அந்தக் குரல்கள் வழி ஆள்வதில் யாருக்கும் இல்லாத பெருமிதமும், கர்வமும் அவனுக்கு உண்டு. அந்த அளவுக்கு தன் உடல் மேல் அவனுக்கே முற்றிய நிலையிலான பிரேமை இருந்தது.

அவனுக்கு நிஜத்தில் ஒருத்தி தேவையே இல்லை. அப்படிப் போனாலும் இந்தச் சுகத்தின் அதே தன்மையோ, அதே அளவோ அதற்கு மிஞ்சிய ஒன்றோ அதில் கிடைக்காது என்று தீவிரமாக அவன் மனமே நம்பத்தொடங்கியிருந்தது. 

இந்தக் குரல்களால் அவற்றின் உலுக்கல்களால் ஒரு நிஜப் பெண்ணிடம் தான் தோற்றுவிடுவோமோ என்று கூட தோன்றி அது ஆழமாக மனதின் உட் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டது. அதுவுமன்றி சித்தார்த் தான் ஆள்வதைவிட பெண்கள் தன்னை ஆளவேண்டும் என்பதையே அதிகமாக விரும்பினான். ஒவ்வொரு பெண்ணும் தன் மீது இயங்கும் போது ஒரு மலை உச்சியின் உயரத்தில் நின்று அந்த உணர்வை ஆழமாக சுவாசித்து சந்தோஷமாக கத்திக் கொண்டாட வேண்டும் போலிருக்கும்.

கொடைக்கானலின் மலைக்கிராமமான பூம்பாறையில் வசித்து வந்த சித்தார்த் பூம்பாறையின் வ்யூ பாய்ண்ட்டிற்கு வந்து செல்லும் இடத்தில் கைப்பைகள், ஆண் பெண் இருபாலருக்குமான உள்ளாடைகள் என தனித்தனியே இரண்டு சிறிய கடைகளை வைத்திருந்தான். இரண்டு கடைகளுக்கும் நடுவே ஒரு சுவரைப் பிளந்து சந்து போல உருவாக்கிக் கண்ணாடி கதவு வைத்து அதன் வழியே அனைவரும் போய்க் கொள்ளும் வசதியும் இருந்தது. கைப்பைகள் வாங்க வரும் பெண்கள் அப்படியே இந்த கடையில் என்ன இருக்கிறது என்றும் பார்க்க வருவார்கள். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சித்தார்த்திற்கு அவளின் அங்க அளவுகள் துல்லியமாக புலப்பட்டு விடும். தனது கடைப் பணிப்பெண்ணை விட்டு சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு இந்த அளவில் காண்பிக்குமாறு சொல்வான். அவன் அதைத்தான் சொல்கிறான் என்பது வாடிக்கையாளருக்குப் புரியாதவாறு சொல்லி அனுப்புவான். அப்படி ஒரு பெண்ணின் அளவைச் சொல்வதிலும், அவள் உடைமாற்றும் அறையில் அந்த ஆடையுடன் எப்படி இருப்பாளெனக் கற்பனை செய்து பார்ப்பதும், பில் போட வரும் போது அதன் பிராண்டைச் சொல்லி, அவள் உள்ளாடையின் அளவை அவனே சொல்லும் போது சம்பந்தப்பட்ட பெண்ணின் நாணும் முகபாவத்தை அவளறியாது காண்பதுமென அவன் எந்தெந்த வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் தனது வேட்கையை மடைமாற்றித் தாகத்தைத் தணிக்க முயன்று கொண்டே இருந்தான்.

ஒருபோதும் தனக்கு இப்படி இதில் எல்லாம் ஒரு கிளர்ச்சி மனநிலை இருப்பதை காட்டிக்கொள்ளாமல் மிகச் சாதாரண மனநிலையோடு உரையாடசித்தார்த்தால் முடிந்தது. அப்படியான ஒன்றன் வசம் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தள்ளி நின்று தனக்கு நடப்பதை ரசிப்பது அவனுக்கு அவன் விரும்பிய இன்பமாக இருந்தது.

காலையில் தனது கடையைத் திறந்தவுடன் முதல் போன் காலாக அவள் அழைத்திருந்தாள். 

‘டேய், சித்து எங்கடா இருக்கே?’

‘கடைல தான். வேறெங்க இருப்பேன்?’

‘இன்னர் வேர் வாங்கக்கடைக்கு வரலாம்னு இருந்தேன். அப்டியே நீ இருந்தா உன்னப் பாத்துடலாம்னு கால் பண்ணேன் டா?’

‘ஒரு ஆம்பளகிட்ட போய் இன்னர் வேர் வாங்கறதப் பத்தி சொல்ற?’

‘அதனாலென்ன நீ என் பிரண்ட். இதெல்லாம் சொல்ற அளவுக்கு இவ்வளவு க்ளோசா பிஹேவ் பண்றேன்னா நீ எவ்வளவு நல்லவனா இருக்கணும்?’

‘நான் நல்லவன்னு நீயே நம்பிடுவியா?’

‘எத்தனையோ சந்தர்ப்பங்களில் நான் உன்னோட தனியா இருந்துருக்கேன். வண்டியில் வந்திருக்கேன். ஒரு முறை கூட நீ என்ன தப்பா பாத்ததில்ல. பேசியதில்ல. இதைவிட வேறென்ன வேணும். ஐ லவ் யுவர் ஆட்டிட்ட்யூட் சித்து.’

‘அப்படிப் பாத்திருந்தா என்ன பண்ணுவ?’

‘ஹே, உனக்கு என்னாச்சு காலைல இன்னிக்கு. உன்னால கனவுல கூட என்ன அப்படி நினைக்க முடியாது.

உன்னப் பத்தி உனக்கே தெரியாது. நீ அவ்ளோ நல்லவன். சரி வை. நான் வரேன்.’ பதிலுக்கு காத்திராமல் போனைத் துண்டித்தாள். தன் பற்றிய இப்படியான ஒரு நல்ல பிம்பமே அவனுக்கு கிறங்கும் மனநிலையை ஆரம்பமாக்கி அவனைத் தூண்டும்.

சித்தார்த்தின் மூளையில் இருக்கும் ஒரு பத்து நரம்புகள் தலையை விட்டு வெளியே வந்து பெண்களாக உருவெடுத்து, அந்தப்பெண்களின் குரலாக மாறி ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு தொங்குவது போல தரையைத் தொட்டு இழுத்துப் பிடித்தபடி நின்றன. சற்று நேரத்தில் 

அந்தக் கிளைகளில் இருந்து ஒவ்வொரு குரலாக தன்னை நோக்கி வந்து தன் உடல் அங்கங்களை நீவி வருடுவது போலவும் கட்டியணைத்து முத்தங்கள் தருவது போலும் இருந்தன. திடீரென அந்தக் குரல்களில் ஒரு வித குரூரமான ஒலி ஒட்டிக்கொண்டது. அவை அவனை கழுத்துப் பகுதியை நோக்கி நெருங்கி வந்து தங்கள் கரங்களால் குரல்வளையை நெறித்து மூச்சை நிறுத்துவது போலவும் தோன்றியது.

பின்னர் ஒவ்வொரு குரலாக தன்னை விட்டு நீங்கிச் செல்வது போலவும் மீண்டும் அவை ஒவ்வொன்றும் ஒரு திசையில் நின்று இழுத்து தன்னைக் கட்டியிருப்பது போலவும் மீண்டும் தன்னை நெருங்குவது போலவும் கொஞ்சுவது போலவும் குரல் வளையைக் கவ்விக்கடிப்பது மாதிரியும் அதேபோல் தோன்றியது.

சில நாட்களாகவே இது தொடர்ந்தது. முதலில் மிகச் சாதாரணமாக நினைத்தவனுக்கு பின்னர் எப்போது தூங்க நினைத்தாலும் இப்படி நிகழ்வது நடந்தது. உறக்கம் அற்ற விழிப்பு நிலையிலும், உறங்க முடியாத மாய நிலையிலும் மாறி மாறி அவதிக்குள்ளாகியிருந்தான்.

இப்படி உறக்கம் கெடுவதை யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்தான் சித்தார்த். தனக்கு மனப் பிறழ்வு இருக்குமோ என்கிற சந்தேகம் அவனுக்கு வந்தது. இந்த விஷயம் தவிர நாம் மற்ற நேரங்களில் சாதாரணமாகத்தானே இருக்கிறோம் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டான். ஏன் இப்படி முழு நேரமும் காமத்தால் துரத்தப்படுகிறோம், ஏன் இப்படி உணர்வுகள் கரைபுரண்டு ஓடுகின்றன? இந்த எண்ணங்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை இல்லையா? இந்தக் குரல்களின் விநோத ஒலிகளை நிறுத்தவே முடியாதா? தனது மனமும் உடலும் இந்தக் குரல்களின் நீரினால் ஊறிஊறி அதனுள் அமிழ்ந்து ஒரு பந்து போலக் கிடக்கிறது. பின் உடனே அதுவே  அசுரவேகமாக வெளிவந்து ஆட்டுவிக்கிறது. அதுவே தனது உடலை, மனதை சிதைத்து சிதைத்து பிய்த்துத் தூக்கி வெளியே போட்டுவிடுமா?

பத்து நரம்புகள் இப்போது எண்ணிக்கையில் அதிகமாகி தலையின் நரம்புகள் அனைத்தும் தலைக்கு வெளியே தொங்குவது போல் தோன்றியது அவனுக்கு. சடாரென்று அவனது மூளையில் இருந்த மரத்தின் கிளைகளில் ஒன்றாக அந்த முதல் நினைவு சுழன்று சுழன்று வெளியே கழண்டு வந்து விழுந்தது. சித்தார்த் ஆறாவது படிக்கும் போது ஒரு நாள் பக்கத்து வீட்டு சண்முகநாயகி அக்கா சில புத்தகங்களை பேப்பர் கடையில் வாங்கி வரச்சொன்னாள். 

வந்தவுடன் தன் குரலால் அந்த புத்தகத்தில் இருப்பதைப் படிக்கத் தொடங்குவாள். அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவற்றை அவள் படிக்கும் போது மிகவும் நீண்டு வளைந்து நெளிந்தபடி இருக்கும் பாம்பு ஒன்று விடும் மூச்சைப்போல சீறும் சப்தத்துடன் அவள் குரல் கேட்பது அவன் காதருகே கேட்கும். அது அவன் உடலின் உள்ளே இன்னதென்று சொல்லத் தெரியாத ஒரு புதுவித உணர்வைத் தோற்றுவிக்கும். அவள் அந்த புத்தகத்தை படித்துக் காண்பிப்பதோடு மட்டுமில்லாமல் 

அதன்படி தன்னிடம் நடந்து கொள்ளவும் கைகளால் கைகளை அழுந்திப் பிடித்துக் கட்டளை இடுவாள். கைகள் நடுங்க பயத்துடன் அவன் அவளைத் தொட்டவுடன் அவளிடம் இருந்து கிளம்பும் குரலின் ஒலியானது ஒற்றை சலங்கை வைத்துப் போட்டுக் கொள்ளும் கொலுசின் ஒலி போல மெதுமெதுவாகக் கிளம்பி முழுவதும் சலங்கை வைத்துப் போட்டுக் கொள்ளும் கொலுசென மாறி ஜலஜலஜலவென அதிகமான சப்தத்தோடு காதுகளில் ஒலிக்கும். அந்த தாளநயத்திற்கேற்ப அவனை இயங்கப் பழக்குவாள். நாயகி அக்காவிடம் தொடங்கியது இந்தக் குரல் மயக்கம். நாயகி அக்காவின் குரல் செல்லுமிடமெல்லாம் ஒலிக்க ஆரம்பித்தது. அந்தக் குரலை நினைத்துக் கண்களை மூடினால் மட்டும் போதும். வானின் உச்சியில் பறந்தபடி தனது உடல் புணரப்படுவது கண்களில் ஆடும். இன்று வரை எத்தனை குரல்கள். எத்தனை கிளைகள். மரம் முழுவதும் சிறியதும் பெரியதுமாய் நீண்டு வெளியேறி விரவிக் கிடந்த கிளைகள் போல இத்தனை வருடங்களாக அதன் பொந்துகளில் பதிந்து போன நினைவுகளாக, அதன் நீட்சிகளாகவே இந்தக் குரல்கள் அவனை ஒரே நேரத்தில் மகிழ்விக்கவும், துன்பிக்கவும் ஏதுவாகக் கட்டிப்போட்டு தங்கள் கோரப்பற்களால் சிரிக்கின்றன. 

எல்லாம் போகட்டும். இந்தத் தூக்கத்தை இனி எப்படி வரவழைப்பது. இந்தக் குரல்களில் இருந்து எப்படி தப்புவது என யோசிக்க யோசிக்க அவனுக்கு உடல் முறுக்கி கோபம் அடைபட்ட அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரின் பாய்ச்சலோடு பாய்ந்து வெகுண்டு கிளம்பியது. அதன் வேகம் தாங்காமல் ஒரு பிரச்சினையினை சரிசெய்ய மருந்து தேடாமல் அவன் மீண்டும் உள்ளே அதன் பாதையிலேயே நடந்து நடந்து அதைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருந்தான். மிகமிக ஆழமாக தோண்டப்பட்ட கிணற்றின் அடியில் தவறி விழுந்துவிடும் பொருட்களாக எண்ணங்கள் வெளிவராது அவனின் உள்ளேயே கிடந்தன. அவற்றை பாதாளக்கரண்டி விட்டு எடுப்பதாய் நினைத்து இன்னும் ஆழத்தில் தோண்டிப் போட்டவாறிருந்தான்.

கடைக்கு அவள் வந்துவிட்டிருந்தாள். 

‘ஹே, சித்தூ என்னடா பயங்கரமான யோசனை போல?’ 

‘ஒண்ணுமில்ல டி. லைட்டா தலைவலிச்சுது அதான்.’

தொப்புள் தெரியும் ஷார்ட்டான கறுப்பு நிற டாப்ஸில் இருந்தாள். அவளது நெக் செய்ன் க்ளீவேஜைத் தொட்டு ஆடியபடியிருந்தது. லேயர் கட் முடிகள் அலை அலையாக மார்பில் புரண்டபடி இருந்தன. யாருடனோ போனில் பேசியபடியே போனை கட் செய்தவாறு பணிப்பெண்ணிடம் அளவுகள் சொல்லப்போனாள். பின்புற ஜீன்ஸ்க்கு மேல் அவளது பேன்ட்டிஸ் காபி பிரவுன் நிறத்தில் தெரிந்தது.

அவளின் பளீரென்ற நிறத்தில் இருந்து முழுவதுமாக விலகிய ஜீன்ஸ் வழியே காபி பிரவுன் நிறம் பளிச்சென்று தெரிந்தது அவள் கவர்ச்சியை மேலும் எடுத்துக்காட்டியது. 

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்தவள் பையைக் கையில் வைத்தபடியே ‘ஊய், நாலு எடுத்துருக்கேன் பில் போடு.’

‘சைஸ் பொறுத்து விலை மாறும்  நீ எடுத்த சைஸ் சொல்லு.’ அவனும் பையைக் கேட்கவில்லை.

‘ஹே, மாடு மாடு! காதைக் கொண்டா  என்று அடிக்குரலில் அவளுடைய அளவைச் சொன்னவள் இப்ப டயட்லாம் இல்ல நல்ல சாப்டு சாப்டு ஏத்திட்டேன். எல்லாமே மாறிப்போச்சு…இன்னும் ஏதோ சொன்னவள்..ஷ்ஷ் பில்ல போடு போடு’ என்று அவசரப்படுத்தினாள்.

வேலை முடிந்து கடையைப் பூட்டி  வீட்டுக்குச் செல்ல இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. சாப்பிட்டு முடித்ததும் முன் கதவைப்பூட்டி படுக்கையறைக்குள் நுழைந்து செல்லைப் படுக்கையில் பக்கத்தில் வைத்துவிட்டு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம் போல அவனது உடல் விழிக்க ஆரம்பித்திருந்தது. கருநிற இரவில் விழித்த உடல் நாலாபுறமும் அதே இருளில் அதன் கருநிறத்திலேயே இருக்கும் பூனையின் கண்களின் மிளிர்வோடு பிரகாசித்தது. விகசித்துக் கிளம்பிய உடலுக்குள் பல்வேறு நரம்பின் முடிச்சுகள் அவிழ்த்தும் இறுக்கியும் சுருக்குப் பையினை இழுத்து இழுத்து மூடிமூடித் திறப்பது போல ஒரு விளையாட்டை நிகழ்த்த ஆரம்பித்தது.

ஒவ்வொரு கூடலிலும் அவன் தான் ஒரு வாளிப்பான அரசன் போல, மல்யுத்த வீரன் போல, இந்த உலகின் மிக கவர்ச்சியான ஆண் போல, திரட்சியான தோள்கள்,மார்பகங்கள் கொண்டவன் போல, அங்கம் எங்கும் முடிகள் திரண்டு கிடப்பவன் போல, வாளிப்பான பண்டைக்கால வீரன் போல, வெற்றிகளால் மிதந்து மமதையேறிய ஆண் போல இப்படி பலவாறான தோரணைகளில் தன்னை நினைத்துக் கொள்வான். தன் மமதைகளை, வீரத்தை வாளிப்பான உடலை தீவிரமாக அடக்கியாளும் பெண்கள், தன்னை வேட்டையாடி அவர்கள் முன் கிடத்தி தன் சதைகளை உண்ணும் மிருகத்தின் சாயலில் இருக்கும் பெண்களே அவனது தேர்வாக இருந்தது. அவர்களது குரலோடு, தனக்குத் தோன்றும் அத்தனை கற்பனைகளையும் ஒரு நேர்க்கோட்டில் நேர்த்தியாக இழுத்துக் கட்டிவிடுவான். கற்பனை வெளியின் கதவுகள் அவனுக்காக எப்போதும் திறந்தே இருந்தன.

வாசலில் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு குழைந்து கிடந்த உடலைத் தூக்கிக்கொண்டு எழுந்து சென்று திறந்தால் அவள் நின்றிருந்தாள். 

பாக்குக்கலரில் ‘ச்சியர்ஸ்’ என்று வாசகம் எழுதிய டி ஷர்ட் அணிந்திருந்தாள். அவள் நிறத்திற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. வெளிர் ஊதா நிற த்ரீஃபோர்த் ஜீன்ஸ் அவளின் அழகான வழுவழுப்பான கெண்டைக்கால்களைக் காட்டியது.

முடியை நன்கு மேலே தூக்கி குதிரை வால் போட்டிருந்தாள். அதனோடு சேராத சில முடிகள் முன்புறத்தில் சுருண்டும், குட்டியாகவும், நீளமாகவும் இருந்தன. கொஞ்சம் நீளமான ஒரு முடிக்கற்றையை காதோடு இழுத்து செருகியிருந்தாள்.

அது அவள் லேசாக தலையை அசைத்தவுடன் அந்த முடியும் கூடவே முன்புறம் வந்து ஆடியது. தன்னை மறந்து அவளை ரசித்தபடி நின்றவனிடம் கண்களுக்கு இடையே சொடுக்குப் போட்டபடி கேட்டாள்.

‘உள்ள கூப்டமாட்டியா?’

‘வா வா.’

‘சும்மா தான் வந்தேன். ம்ம், அவ இல்லனு தெரியும்’ என்றாள் அவளாகவே.

ஏற்கனவே நிறைய முறை வந்து பழக்கப்பட்ட இடத்தில் இருப்பது போல மிக இயல்பாக அவன் சொல்லாமலே சோஃபாவில் அமர்ந்தாள். பேச்சு நின்று என்ன செய்ய வேண்டும் என இருவருக்கும் தோன்றாத ஒரு சூழலில் இவனைக் கவனிக்காதது போல் டைட்டாக இருந்த அவள் டிஷர்ட்டை எந்தவொரு முன்யோசனையும் இல்லாமல் தற்செயலாக கழட்டுவது போல உட்கார்ந்தபடியே கழட்டினாள்.

‘ஏய், ஏய் என்ன பண்ற?’ என்று பதறினான் சித்தார்த்.

‘ஏன் கழட்டக்கூடாதா உன் முன்னாடி?’

‘காலைல என் இன்னர் சைஸ் தெரியாதுன்னல்ல இப்ப பாத்துக்க’  என்றாள்.

‘ஏய், சீரியசாவே என்ன பிராண்ட் வாங்குன அதைப்பொறுத்தும் சைஸ் மாறும்னுதான் கேட்டேன்.’

‘ஓ, உனக்கு பிராண்ட் சைஸ் எதுவுமே தெரியாது…நான் தான் உன் காதுல வந்து சொல்லணும், அப்பத்தான் தெரியும்’ என்றவாறே அவனை நெருங்கி வந்தாள்.

‘ஹேய், அப்படி லாம் இல்ல’எனச் சொல்லி முடிப்பதற்குள் அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு  உண்மையாகவே தெரியாதா என அவன் மேலுதட்டில் இருந்து கீழுதடு வரை ‘S’ வடிவத்தில் வரைந்த படி கேட்டாள். அவன் பதிலுக்குக் காத்திராமல் அவனைக் கட்டிலில் தள்ளியவள் ‘எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் சித்து. நீதான் கண்டுக்கவே மாட்ற.. நான் எப்படி உனக்கு புரியவைக்கறதுனு தெரியல..நீ எனக்கு வேணும் சித்து..அப்டியே அப்டியே வேணும்’ என்றாள்.

அவள் சொல்லச்சொல்ல அவனுக்குக் கண்கள் சுழன்று உடலின் நாளங்கள் இரத்தத்தை எல்லா இடங்களுக்கும் வேகவேகமாக அனுப்பின. அந்தக் குரலின் அதிர்வு உடல் முழுவதும் விறுவிறுவென பரவியது. குரல் அவன் உடல் முழுவதும் பரவியவுடன் ஆழமான மூச்சிழுத்துக் கஞ்சாவை உள்ளே விடுபவனின் போதையென நிலைகொள்ளாமல் தவித்தது. ஒவ்வொரு உறுப்பாக அதீதங்களால் திக்குமுக்காடி செயலற்றுப் போய் தண்ணீரின் மேல் மிதப்பது போல எடையற்றதாக மாறியது. 

தனது எடையற்ற உடலை அவள் தன் மேல் இயங்க வாகாகக் கொடுத்தான். பாக்கு நிற டி ஷர்ட் மூலையில் கிடக்க அவன் தேகத்திற்கு எரிபொருளை ஊற்றியபடியே இருந்தாள். அவளின் ஒவ்வொரு தொடுகைக்கும் இவன் உடல் துள்ளித்துடித்து துள்ளித்துடித்து நின்றது.

காலையில் அவள் கடைக்கு வந்ததும், ஆடை மாற்றுவது அவன் கேமராக் கண்களில் தெரிவதும், அவள் அளவைக் கொஞ்சிய படியே சொல்லியவுடன் அந்தக்குரலால் அவன் உடலுக்கு ஒரு கிறுகிறுப்பு தட்டியதும் மனதில் வந்தவுடன் அவனும் தீவிர இயக்கத்திற்கு தயாராக ஆரம்பித்தான். நடப்பதெல்லாம் உண்மையா பொய்யா மாயையா என அவனுக்கே குழப்பம் ஆகியிருந்தது. அதற்குள் அவள் முதுகில் கடிதடம் ஏற்படுத்தி இருந்தாள்.

சித்தார்த் கொஞ்சம் கொஞ்சமாக மெய் மறந்து அவளிடம் தன்னை இழந்து கொண்டிருந்தான். அவன் பிட்டத்தை ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு அவன் காதருகே வந்தவள் காது மடல்களின் நெருக்கத்தில் வந்து 

‘ஹே, மாடு மாடு நல்லா கேட்டுக்க, வேணும்னா பாத்துக்க’ என்று தன்னுடைய அளவை மீண்டும் ஒருமுறை கொஞ்சு குரலில் வெட்கம் மேலிடச் சொன்னாள்.  இப்ப டயட்லாம் இல்ல நல்ல சாப்டு சாப்டு ஏத்திட்டேன். எல்லாமே மாறிப்போச்சு…கிண்ணுனு இருக்கடா. ஆனால் ஒண்ணுந்தெரியல உனக்கு!’ என்றவள் தனது உள்ளாடையின் நெருக்கத்தோடு கழுத்துப்பகுதிகளை அமிழ்த்தியபடி இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள்.

சித்தார்த்திற்கு உடல் நடுங்கியபடி இருந்தது. அவனது தொடைகள் நிற்காமல் ஆடியபடியே இருந்தன. மெதுமெதுவாக நடுக்கம் குறைந்து தொடைகள் தளர்ந்து இயல்புக்குத் திரும்பி சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் படுக்கையில் பக்கத்தில் கிடந்த போனை எடுத்து அன்று காலையில் அவளின் குரலில் அவன் பதிவு செய்திருந்த ரெகார்டை ஆஃப் செய்தான்.

000

கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக  கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி. 

இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ்,

கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி‌, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ், தமிழ்ப்பல்லவி அச்சு இதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன.

The post 36 B  first appeared on Nadukal.

  •  

முகங்கள்

முகங்கள்-

நம்மைக் கடந்து செல்லும் அல்லது நாம் கடந்து போகும் மனிதர்களில் ஒரு சில முகங்கள் தனது செய்கையாலோ அல்லது வேறு ஏதோ ஒரு விதத்திலோ நம் மனதுக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும்; ஆனால் சில முகங்களோ நமக்கு வெறுப்பை மட்டுமே கொடுக்கும், இப்படிக் கடந்து வந்த முகங்களில் சில முகங்களை நம்மால் மறக்கவும் முடியாது, மனதில் இருந்து எளிதில் விலக்கி வைக்கவும் முடியாது.

கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி, நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள்; வாசித்திருப்போம். எனக்குத் தெரிந்த நண்பர் ‘முகங்கள்’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவர் சந்தித்த முகங்கள் குறித்த அருமையான சிறுகதை போன்றதொரு தொகுப்பு அது.

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில் சிலரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கும். யாரும் நமக்குப் படிப்பித்துக் கொடுப்பதில்லை என்றாலும் நாம் விருப்பப்பட்டதை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். நம்மிடம் இருந்து அவர்கள் எதைக் கற்றுக் கொண்டார்கள் என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. ஒருவேளை நமக்குத் தேவையானது அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்… அந்த இடத்தில் பெரியவன் சிறியவன் என்ற பேதமெல்லாம் தேவையில்லை என்பதே என் எண்ணம்.

வேலை நிமித்தம் தினமும் ஓடிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு வாழ்க்கையில் தினம் தினம் நிறைய முகத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதில் சில முகங்கள் அவர்களின் செய்கையால் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் நான் சந்திக்கும் முகங்களில் பல முகங்கள் பரிதாப முகங்களே. நம்ம நாட்டில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் மனிதர்களில் இந்த பரிதாப முகம் கண்டிப்பாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையின் சாராம்சம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இருவரின் மனைவியர் பற்றியதாய் இருந்தது என்றாலும், இரண்டு மனைவியரில் ஆரம்பிக்கும் கவிதை பயணித்துப் போய் இறுதியில் முடியும் போது அந்த மனிதர்களில் முடியும். அவர்கள் இருவரும் ஒரே கம்பெனியில்தான் வேலை செய்கிறார்கள்; கட்டிட வேலை. இவர் மனதை அவர் அறியாது அவர் மனதை இவர் அறியாது வேலை பார்ப்பதாய் கவிதை பேசிச் செல்லும். ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் வலிகள், கவலைகள் இருக்கும். அது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். மிகவும் நெருக்கமான நட்பாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு ஒருவர் தங்கள் கஷ்டங்களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அப்படியில்லை என்றால் வேலை நிமித்தம் பேசுவதுடன் சரி, வலிகளை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை.

சில வருடங்களுக்கு முன் நாங்கள் -நானும் இன்னொரு தமிழ் நண்பரும் -காலையில் பேருந்து ஏறும் இடத்தில் சற்றே கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும் என ஜன்னல் வழியாக துண்டு போடுதல், குழந்தையை வீசுதல் எல்லாம் இருக்காது; அதற்கான வாய்ப்பும் இல்லை. காரணம், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் என்பதால் சன்னல் எல்லாம் இருக்காது. கண்ணாடி அடைத்திருக்கும். அடித்துப் பிடித்து ஏறவும் தேவையில்லை; எல்லாரும் ஏறும் வரை பேருந்து நிற்கும் என்பதால் ஒவ்வொருவாராக இடிக்காமல், தள்ளாமல் ஏறுவார்கள். நாங்களும் அப்படித்தான் நமக்கு முன் நிற்பவர் ஏறட்டும் எனக் காத்திருப்போம்.

அப்படியான நாட்களில் இடையில் திடீரென ஒருத்தன் வர ஆரம்பித்தான். அவன் பாகிஸ்தானி, கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கில் மதிய சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஏறுவான்.  பேருந்து வந்ததும் ஓடிப் படிக்கு அருகில் நின்று கொள்வான். யாராவது அவனுக்கு முன்னே ஏற முனைந்தால் இடித்துத் தள்ளுவான். உள்ளிருந்து இறங்குபவர்களுக்கும் வழி விடமாட்டான்.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மொபைலில் முகம் பார்த்து, அதை அஷ்டகோணலாக்கி என்னென்னமோ செய்வான். அவன் இருக்குமிடத்துக்கு அருகில் அமர்பவர்கள் அவனுடன் உரசி விடாமல் இருக்க, ரோபோ போல் உட்கார்ந்து கொள்வான். அவனைப் பார்த்தாலே பேருந்தில் பயணிக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருநாள் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற போது அவன் கோபமாய் காலை உதறுகிறான்; வாய்க்குள் ஏதோ முணங்குகிறான். அதைப் பார்த்து மற்றவர்களுக்கு வந்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! எல்லோருக்கும் அத்தனை மகிழ்ச்சி.

இங்கு பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் இல்லை என்றாலும் ரோட்டைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட சுரங்க நடைபாதையில் எப்போதேனும் சிலர் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். இவர்களில் ஆண்களும் பெண்களும் அடக்கம். அப்படித்தான் ஒருமுறை ஒரு நடுத்தர வயது மனிதன் என்னமோ பைபாஸ் சர்ஜரி செய்தது போல் மிகப் பெரிய பேண்டேஜ் ஒட்டி அது தெரிய, சட்டையைக் கழட்டி விட்டு உட்கார்ந்திருந்தான். அது பார்ப்பவர்களை ஏமாற்றி, பரிதாபப்பட்டு கையில் இருப்பதைப் போட்டு விட்டுப் போவார்கள் என்ற எண்ணத்தில்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. கடந்து போனவர்கள் அவனைப் பார்த்தபடி பயணித்தார்கள். அவனைப் பார்க்கும் போதே கடுப்புத்தான் வந்தது. உழைக்கச் சோம்பேறிப்பட்டுக் கொண்டு இப்படி பிச்சை எடுப்பதில் என்ன கிடைத்துவிடும். இதற்கு ஊரில் இருந்திருக்கலாமே.

மற்றொரு முறை அலுவலகம் விட்டு பேருந்தில் வந்து இறங்கி, ரோட்டைக் கடப்பதற்காக சுரங்க நடைபாதை வழி  நடந்த போது ஒரு அரபிப் பெண்மணி, அரபி என்றாலும் உள்ளூர்க்காரி அல்ல வேறு நாட்டிலிருந்து வந்தவள்தான். ஓரு ஓரமாக உட்கார்ந்து, தனக்கு முன்னே ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார்; அதில் சில சில்லறைகளும் கிடந்தன. அவளருகே ரோஜா மலர் போல ஒரு பெண் குழந்தை, மூணு நாலு வயதிருக்கும்… அமர்ந்திருந்தது. அம்மா என்ன செய்கிறாள் என்பது தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணோ மகளுக்கு முத்தம் கொடுத்து அரபியில் ஏதோ சொன்னாள். உண்மையில் அவள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருக்கலாம் இருப்பினும் குழந்தையை அருகமர்த்தி பிச்சை எடுத்தது மனசுக்கு வருத்தத்தையே கொடுத்தது.

இதைவிட இன்னொரு விதமாய் பிச்சையெடுக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் வரும்போது காரில் வந்து, காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு இடத்துக்கு நடந்து போய் பிச்சை எடுப்பார்கள். கடை கடையாகவும் போவதுண்டு. ஒரு குறிப்பிட்ட நேரம் பிச்சை எடுத்தபின் மீண்டும் தங்கள் காருக்குப் போய் கிளம்பிப் போய்விடுவார்கள். பணக்காரப் பிச்சைக்காரர்களோ என்னவோ… யார் கண்டா.?

நண்பர்களுடன் பேசிச் கொண்டிருக்கும் போது ஒரு பெண் எங்களைக் கடந்து போனார். கொஞ்சத் தூரம் போனவர் திரும்பி வந்து ‘நீங்க தமிழா..?’ என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னதும் அவர் வேறொரு இடத்தில் இருந்து தோழியை நம்பி வந்து, அவரால் ஏமாற்றப்பட்டேன் என்று ஒரு கதையைச் சொன்னார். அதன்பின் பேசியதில் நிறையச் சொன்னார். பேருந்துக்குக் கூட கையில் பணமில்லை என்றார். நண்பர் பேருந்து நிலையத்தில் விடுகிறேன். அங்கிருந்து பஸ் ஏறிப் போங்க என்றதும் சரி என்றார். முன்னுக்குப் பின் முரணாகவே பேசினார். நாங்கள் விபரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் காரை எடுத்துக் கொண்டு வந்து கூட்டிச் சென்றார். காரில் போகும் போது என்னைக் காவல் நிலையத்திற்கு கூட்டிப் போங்க என்று சொல்லவும், இதென்னடா உதவி செய்ய வந்து உபத்திரவமாப் போச்சே என நினைத்த நண்பர், எனக்கு வேலை இருக்குங்க. இந்தா பேருந்து நிலையத்துக்குள்ளே காவல் நிலையம் இருக்கு. போய் பாருங்க… உங்க பிரச்சினையைச் சொல்லுங்க எனச் சொல்லிவிட்டு வந்தார். எங்களிடம் வந்து தேவையில்லாம மாட்டிக்கத் தெரிந்தேன் எனப் புலம்பினார்.

அதன்பின் டீ குடிக்கலாம் என ஒரு மலையாளி கடைக்குப் போனோம். டீயை வாங்கிக் கொண்டு காருக்கு அருகில் நின்று பேசிக் கொண்டே குடித்தோம். அப்போது ஒருவர் வந்தார், எங்களைப் பார்த்ததும் ஒரு பையைத் திறந்து மாத்திரைகளை எடுத்துக் காண்பித்து, உடம்புக்கு முடியலை, மாத்திரை சாப்பிடுறேன். தீர்ந்து போச்சு; இப்ப வாங்கணும் நூறு திர்ஹாம் வச்சிருந்தாக் கொடுங்க என இந்தியில் கேட்டார். அவரைப் பார்க்கும் போது உடம்பு முடியாதவரைப் போலெல்லாம் இல்லை. இப்படி பலரிடம் கேட்க, ஒரு சிலர் பணம் கொடுக்கலாம், அது அவருக்கு அன்றைய தினச் செலவுக்குப் போதுமானதாகவும் இருக்கலாம்.

நண்பர் அவரிடம் என்ன ஏது என விசாரிக்கும்போது அந்தக் கடையில் வேலை பார்க்கும் மலையாளிப் பையன் இவர் தினமும் மாத்திரை வாங்குறார் எனச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போனான். உடனே எங்களின் நண்பர் இப்பத்தான் ஒருவருக்கு உதவிட்டு வந்தோம். இன்னைக்கு இது போதும் என்று சொல்ல, அவர் ஏதோ திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

இங்கே எல்லாக் கட்டிடங்களிலும் – பெரும்பாலும் அலுவலகங்கள் இருக்கும் கட்டிடங்கள் – கழிப்பறைகளை அடிக்கொரு தரம் சுத்தம் செய்ய அதற்கென பணியாட்கள் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலும் இந்தியர்களும் (குறிப்பாக தமிழர்கள், தெலுங்கர்கள்) வங்கதேசத்தவர்களுமே இந்த வேலைக்கு வருவார்கள். பார்க்கும் வேலைக்கு வாங்கும் சம்பளம் ரொம்பக் குறைவுதான். அவன்தான் சுத்தம் செய்கிறானே என்ற நினைப்பில் பாத்ரூமைப் பயன்படுத்துபவர்கள் அலங்கோலம் செய்து விட்டுப் போவதைப் பார்க்க வேண்டுமே… சுத்தம் செய்பவனும் மனிதன் தானே என்ற எண்ணம் ஏற்படுவதேயில்லை.

அதுவும் சிலர் பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விடுவதே இல்லை. பாகிஸ்தானிகளோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலே ஏறிதான் இருப்பார்கள். சரி இருந்துட்டு சுத்தம் பண்ணிட்டு போவானுங்களான்னா அதுவும் இல்லை.வயல்ல நாத்துப் பறிச்ச மாதிரியே போட்டு வச்சிருப்பானுங்க… அதைச் சுத்தம் செய்பவர்கள் நம்மிடம் எப்படிப் போட்டிருக்காங்க பாருங்க எனச் சொன்னாலும் தனது பணி இதுதானே என்பதாய் சுத்தமாகத் துடைத்து எடுப்பார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்து பார்க்கும் போது மீண்டும் அதே போல் தொளி அடித்துப் போட்டு வைத்திருப்பார்கள்.

இங்கு எல்லா அலுவலகத்திலும் ஒரு சிறிய கிச்சம் – டீ, காபி போட, சாப்பாட்டை சூடு பண்ண – இருக்கும். நாங்க எல்லாருமே அதைப் பயன்படுத்துவோம். சாப்பிட்ட பாத்திரங்களை அங்குதான் கழுவுவோம். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு நண்பரும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரங்களை அங்குதான் கழுவுவார். அவர் அந்தச் சிறிய அறைக்குள் வந்து சென்றார் என்பதை அந்த அறையெங்கும் சிதறிக் கிடக்கும் தண்ணீர் சொல்லும். ஒவ்வொரு நாளும் ஆபீஸ் உதவியாளராய் இருக்கும் நம்ம ஊரு அண்ணன் ஒருவர், பாருங்க… அவனுங்கதானே சுத்தம் பண்ணுறானுங்கன்னு நினைப்பாரு போல எனப் புலம்புவார். சுத்தம் பண்ணுபவன் இருக்கானுல்ல பண்ணிக்கட்டும் என்ற மனநிலை இவரைப் போன்றோருக்கு. இவர்கள் தங்கள் வீடுகளில் இப்படிச் செய்வார்களா என்றால் சத்தியமாகச் செய்யமாட்டார். ஏன்னா அது அவர்களின் வீடு அல்லவா…!

இதேபோல் தற்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்திருக்கும் ஒரு பாலஸ்தீனி, மதியம் சாப்பிட்டு விட்டு கிச்சனில் வந்து வாய் கொப்பளிக்க ஆரம்பித்தான். அது காபி, டீ சாப்பிட்ட கோப்பைகள், தட்டுகள் கழுவ பயன்படுத்துவது அதில் வாய் கொப்பளித்துத் துப்பலாமா என்ற எண்ணம் துளி கூட அவருக்கு இல்லை. நாம சொன்னால் நீ யார் சொல்ல என்று சொல்லுவார்கள். இதே சில அரபி பெண்கள் சொன்னதும் இனி இங்க கழுவலை என்று சொன்னவன், இப்போதெல்லாம் சாப்பிட்ட பாத்திரத்தை ஆபீஸ் பாயிடம் கழுவக் கொடுத்து விடுகிறார். நாம் சாப்பிட்ட பாத்திரத்தைக் கழுவ அவர்கள் அங்கு வேலைக்கு வரவில்லையே, டீ, காபி கொடுக்க… பிரிண்ட் கொடுத்ததை எடுத்துக் கொடுக்க… சின்னச் சின்ன வேலைகள் பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்பது கூட தெரியாதவனல்ல அவன் என்றாலும் நான் இஞ்சினியர், இவர்கள் பாத்திரம் கழுவுபவர்கள் என்ற எண்ணம். இரு நாட்களுக்கு முன் ஒரு அரபி பெண் ஆபீஸ் பாய் இருவரிடம் அவன் கழுவ மாட்டானா..? அவன் தின்ன பாத்திரத்தை நீங்க ஏன் கழுவுறீங்க…? எனக் கத்திக் கொண்டிருந்தது என்றாலும் இன்று வரை சாப்பிட்ட கழிவுகளைக் கூட குப்பைக் கூடையில் போடாமல் அப்படியேதான் வைத்துச் செல்கிறான். அதைக் கழுவித் துடைத்து அவனிடம் கொண்டு போய்க் கொடுப்பவருக்கு அவனின் அப்பா வயது. நானுமே அவரைப் பல முறை திட்டியிருக்கிறேன் இந்த வேலைகள் எல்லாம் பார்க்க முடியாது எனச் சொல்லுங்கள் என.

நான் முன்பு தங்கியிருந்த அறை இருந்த கட்டிடத்தில் ஒரு மலையாளி ஹோட்டல். அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் அவரும் மலையாளி என்றுதான் நினைத்தேன். தினம் செல்வதால் அவருடன் பழக்கம் ஏற்பட, அவர் வேலூர்க்காரர் என்பதை அறிய முடிந்தது. ஒரு ஆள், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். மிகவும் சுறுசுறுப்பானவர். ஊருக்குப் பேத்தியைப் பார்க்கப் போறேன் என்று சொன்னபோது அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஊருக்குப் போய் திரும்பி வந்து விட்டார். இப்போதும் பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊர்ல போய் இருக்கலாமே என்று கேட்டால் அங்க இருந்து என்ன பண்ண… இன்னமும் கடனிருக்கு; ஏதாவது ஒரு செலவு வந்துருது என்று சொல்லிக் கொண்டே வேகவேகமாக சுத்தம் பண்ணி கொண்டு இருப்பார். அந்த ஹோட்டல் அவரால்தான் ஓரளவுக்கு ஓடியது என்றாலும் திடீரென அதை விட்டு விட்டு – கடன் அதிகமானதால் – ஊருக்கு ஓடிவிட்டான் மலையாளி. இவர் என்ன செய்வதெனத் தெரியாது நின்று நண்பர்கள் உதவியால் மற்றொரு கடையில் வேலைக்குப் போனார். இப்போது கனடாவில் இருக்கும் மகளுடன் மகிழ்வாக வாழ்வைக் கழிக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்னர்  பார்த்த நிகழ்வு இது. நானும் நண்பரும் பேருந்துக்கு நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு பிலிப்பைனி வந்து நிற்பதும், பெண்களுக்கான சிகரெட் இங்கு எல்லாக் கடைகளிலும் விற்பனையில் இருக்க, சில ஆண்களே பெண்கள் சிகரெட்டை வாங்கிப் பிடிக்கும் போது இந்தப் பெண்ணோ ஆண்கள் சிகரெட்டை வாயில் வைத்து ஊது ஊது என்று ஊதுவாள். தள்ளி வாங்க விட்டா புகையால நம்மளைக் குளிப்பாட்டிருவா போலன்னு நண்பர் சிரித்துக் கொண்டே சொல்வார். அதே இடத்தில் சற்று தள்ளி கையில் சிகரெட்டுடன் ஒரு பெண்ணும் (ஆந்திரா) மூணு பசங்களும் அடிக்கும் லூட்டி இருக்கே; அப்பப்பா எல்லாரும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். நம்ம ஊரா இருந்தா என்ன தங்கச்சி இந்த லாத்துதுன்னு கொமட்டுல ரெண்டு குத்துவிடுவாங்க… இங்க எல்லாம் சகஜம்தானே… அதனால் அவங்க ஆட்டம் நிற்பதே இல்லை.  இப்போது எல்லாரும் பல வகை நறுமணங்களுடன் விற்கும் மின்னணு சிகரெட்டுகளை வாங்கி, ஊத ஆரம்பித்துவிட்டார்கள்.

இங்கு மலையாளியுடன் வேலை பார்த்தாலும் எகிப்துக்காரனுடன் வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமம். அவர்கள் வேலையே பார்க்கமாட்டார்கள். வேலை பார்ப்பவனை ஏறி மேய்வதும், போட்டுக் கொடுத்தலுமே அவர்கள் வேலை. அப்படிப்பட்ட கூட்டத்தில் முன்பு ஒரு நண்பருடன் வேலை செய்தேன். அவன் வேலை செய்யமாட்டான் என்றாலும் நமக்கு மிகவும் நெருக்கமாய், புதிய வேலையைச் செய்யச் சொல்லி, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பான், மேலும் நமக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்பவனாகவும் இருந்தான். அதன் பின்னர் அதே போல் எகிப்து நண்பர் ஒருவருடன் வேலை பார்த்தேன். அவர் மிகவும் நல்லவர்… இவர் எகிப்துக்காரரா என்று நினைக்கத் தோன்றும். வேறு கம்பெனிக்குப் போனாலும் இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கிறார். இப்ப புதிதாய் ஒருத்தனும் எங்க புராஜெக்ட்டுக்கு வந்திருக்கான். இவன் நான் எகிப்துக்காரன்டா என வந்த உடனே நிரூபிச்சிட்டான்.

இப்படிப் பல முகங்களை – மனிதர்களை – சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். இப்படியான நிறைய முகங்களை நமது பயணங்களில் சந்திக்கலாம். நம்முடன் நிறைய விசயங்கள் பேசிக் கொண்டே வருவார்கள். அதன் பின் அவருக்கும் நமக்கும் தொடர்பே இருக்காது என்றாலும் அந்த முகம் மறக்கவே மறக்காது. அப்படித்தான் இங்கே நான் பேசிய மனிதர்களுடைய முகம் என்னால் இன்னமும் மறக்க முடியாத முகங்களாய்…

000

நான் பரிவை சே,குமார், நித்யா குமார் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம். இதுவரை எதிர்சேவை, வேரும்

விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு

என்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும்

எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன்

பொற்கிழி விருது பெற்றிருக்கிறேன்.

The post முகங்கள் first appeared on Nadukal.

  •  

நாம தான தைரியமா வளர்க்கணும்!

கோடை விடுமுறை! ஒரு மாதம் பள்ளி விடுமுறை. நண்பர்கள் சேது, கோபி மற்றும் சேகர் மூவருக்கும் பொழுது போவதே மிகக் கடினமாக இருந்தது.

அவர்களுடைய பாரதி தெருவில் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை கண்ணாம்பூச்சி அல்லது ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்.

மட்டையை எடுத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தான் அவர்களுக்கு ஆசை. ஆனால், ”தெருவில விளையாடதீங்க பசங்களா” என யாராவது கத்துவார்கள்.

உடனே சேதுவின் அம்மாவோ அல்லது சேகரின் அப்பாவோ வெளியே வந்து அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று விடுவார்கள்.

“நேத்திக்கி கடைத்தெருவில பாபுவைப் பாத்தேன்டா. அடுத்த வருஷம் அவன் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள்ல தான் வருவானாம்”என்றான் கோபி.

“அவன் தான் அரையாண்டு விடுமுறை சமயத்திலேயே சைக்கிள் கத்துகிட்டானே! அவங்க அக்கா கத்து கொடுத்தாங்களாம்” சேகர்.

“பசங்களா, உள்ள வாங்க! தெருவில வேலைக்கி போறவங்க வண்டில்லாம் வரும். உள்ள வந்து விளையாடுங்க” சேதுவின் அம்மா.

சேதுவின் வீட்டுத் தோட்டத்தில் சிறிது நேரம் பந்து விளையாடினர்.

“சரிடா!  நா வரேன். சாயந்திரம் எங்க சித்தி வீட்டுக்குப் போறேன். பத்து நாள் கழிச்சு தான் வருவேன்” என விடை பெற்றான் கோபி.

“தினமும் ஒரு பக்கம் கையெழுத்து பயிற்சி எழுதணும். ரெட்டை வரி நோட்டு வாங்கணும்” என்றான் சேது.

“ஆமா! நான் இப்போ போய் வாங்கிட்டு வரப் போறேன்” என்று சொல்லி பையில் இருந்த ஐம்பது ரூபாய் தாளைக் காட்டினான் சேகர்.

“இருடா! நானும் வரேன்” என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் கெஞ்சி பணம் வாங்கி வந்தான் சேது.

“ஜாக்கிரதையா ஓரமா போயிட்டு, ஓரமா வரணும்.”

“சரிம்மா! எப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போற பாதை தான! தைரியமா இரு! சேகரோடத் தான் போறேன்”.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் தெருவில் நல்ல இணைய வசதியும் கிடையாது. அவர்கள் வீடுகளிலும் நல்ல கைபேசியோ அல்லது நல்ல தொலைக்காட்சிப் பெட்டியோ கிடையாது. அந்தத் தெருவில் விளையாட ஒரு சிறு மைதானம் கூடக் கிடையாது.

வழக்கம் போல அவர்கள் தெரு முனை வரை கோலி விளையாடிக் கொண்டே சென்றார்கள்.

சைக்கிள் கடைக்கு அருகில் தான் நோட்டுபுத்தகம் வாங்கும் கடை!

அவர்கள் கால்கள் தாமாகவே சைக்கிள் கடை முன் நின்றன.

“பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சே! எங்கடா வந்தீங்க?” என்றார் சைக்கிள் கடைக்காரர்.

பதில் ஒன்றும் சொல்லாமல் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டு இருந்தனர் நண்பர்கள் இருவரும்.

”கடை முன்னாடி நிக்காதீங்க! போங்க போங்க!“ என விரட்டினார் கடைக்காரர்.

“அவர் சைக்கிள் வேணும்”சேகர்.

“ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூவா”

“அன்னிக்கி ஒரு ரூவான்னு சொன்னீங்க”

“அது அன்னிக்கி! இது இன்னிக்கி”

சேகர் தன் பையில் இருந்து ஐம்பது ரூபாயை எடுத்தான்.

“சைக்கிள் ஓட்டத் தெரியுமா?”

“தெரியும், தெரியாது” ஓரே நேரத்தில் இருவரும் பதிலளிக்க, ”சரி, இன்னொரு இரனூறு ரூவாயக் கொடுத்துட்டு எடுத்துட்டுப் போங்கடா” என்றார் கடைகாரர்.

”அங்கிள், நாங்க சைக்கிள் வாடகைக்குத் தான் கேக்குறோம். வாங்க இல்ல” என்றான் சேகர்.

“ஆஹா! வந்துட்டாங்கடா மைசூர் மஹாராஜா பேரங்க! இருநூத்து ஐம்பது ரூவாயில சைக்கிள் வாங்க! போங்கடா” என விரட்டினார் கடைக்காரர்.

அப்போது நளினமாகச் சிரித்தபடி ஒரு இளைஞன் கடைக்குள் நுழைந்தான்.

“என்ன மாமா! சின்ன பசங்களை விரட்டிகிட்டு இருக்கீங்க” எனக் கேட்டான்.

“வாப்பா பிரபு! இந்தப் பசங்களுக்கு சைக்கிள் கத்துக்கணும். அவர் சைக்கிள் கேக்குறாங்க!”

“ம்ம்… சரியான உயரம் தான்! கால் எட்டும்! கொடுக்கலாமே!”என்றான் பிரபு.

“நீ ஊருலேந்து வந்துருக்க. உனக்கு இதெல்லாம் புரியாது. இவனுக சைக்கிள அக்கு வேறா ஆணி வேறா ஆக்கிட்டா யாரு ரிப்பேருக்குக் காசு தருவா? இல்ல… இவனுகளே கீழே விழுந்து கால கையை உடைச்சுகிட்டா… யாரு பதில் சொல்றது. சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா குடுக்கலாம்”.

“சைக்கிள் குடுத்தா ஓட்டக் கத்துக்குவோம்” என சேகர் சொல்ல, பிரபு சிரித்துவிட்டான்.

“அப்போ கத்துக்கிறதுக்கு சைக்கிள் தர மாட்டீங்களா?” சேது.

“பெரியவங்க யாராவது சொன்னா தான் தருவேன்”

“மாமா, நான் சொல்றேன், தாங்க மாமா!”

“பிரபு, புரியலயா உனக்கு! சின்னப் பசங்கடா! தனியா எங்கனா போயி…”

“மாமா! நானும் லீவுல சும்மா தான இருக்கேன். நானே அவங்களோட போறேன். இந்தாங்க இருநூறு ரூவாய், வாடகை எவ்வளவு? தைரியமா குடுங்க நான் பாத்துக்கறேன்” என்றான் பிரபு.

இருநூறு ரூபாய் தாளும், பிரபுவின் நம்பிக்கையான பேச்சும் கடைக்காரரை சைக்கிள் தர முடிவு செய்ய வைத்தது.

“பாத்துப்பா! உனக்காகத் தான் குடுக்கறேன்”என்றார்.

“தேங்ஸ் அண்ணா!” என்றனர் சேதுவும் சேகரும்.

”வடக்குத் தெருவில ரெண்டு ஆலமரம் இருக்குல்ல அங்க போயிரலாம். வண்டி எதுவும் வராது. கல், மேடு பள்ளம் இருக்காது.” என்றபடி அவர்களை அழைத்துச் சென்றான் பிரபு.

“யார் கூப்பிட்டாலும் இப்படி வந்துடுவீங்களாடா!” பிரபு.

“உன்னத் தெரியுண்ணே! நல்லாவே தெரியும். மூணாம் வருஷம் நம்ம பள்ளியில பரிசு வாங்கினயே!” சேகர்.

படிப்பிலும் விளையாட்டிலும் படு கெட்டி பிரபு. சேதுவும் சேகரும் படிக்கும் பள்ளியின் முன்னாள் மாணவன்.

“ஒரு காலை அந்தப்பக்கம் போடு. பெடல்… பெடல்… காலை வை… அழுத்து! ஊம்! இன்னும் வேகமா! ஹேண்டில பிடி…”

பிரபுவின் கட்டளைகள் தெளிவாக இருந்தன. சிறுவர்கள் இருவரும் நன்றாகவே கற்றுக் கொண்டனர்.

சைக்கிள் கற்றுக் கொண்டு விட வேண்டும் அவர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

“முதுகை நிமித்தி உட்காரு!”

ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

“சரி! வாங்க போகலாம். சைக்கிள விட்டு இறங்கு சேகர்! நல்லா கத்துக்காம ரோட்ல ஓட்டக் கூடாது.”

இறங்கும் போது, சேகர் துள்ளிக் கொண்டு குதித்தான். சைக்கிளோடு சரிந்து விழுந்து, காலில் சில சிராய்ப்புகள்!

பிரபு பக்கத்தில் ஒரு கடையில் தண்ணீர் வாங்கி காயத்தை கழுவி விட்டான். இருவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தான்.

“தேங்ஸ் அண்ணா!” என சேதுவும் சேகரும் சொல்லிய போது தேநீரின் தெம்பும் அதில் தெரிந்தது.

“ஏண்டா! ஒரு ஒரு பைசாவையும் பாத்து பாத்து செலவு பண்ணிகிட்டு இருக்கேன். ஐம்பது ரூவா குடுத்து விட்டா, பத்து ரூவாய்க்கு சைக்கிள் விடுவியா? கீழே விழுந்து பெருசா அடி பட்டா… வரட்டும் உங்க அப்பா…“ சேகரின் அம்மா அடிக்காத குறைதான்.

மறுநாள் காலை .

“நா தர மாட்டேன் தான்யா சொன்னேன். கேளுங்க உங்க பசங்களையே! அந்த பிரபு தம்பி உறுதி குடுத்ததாலத் தான…” எனக் கடைகாரர் தன்னிலை விளக்கம் தந்து கொண்டு இருந்தார்.

“அது சரி, விழுந்து வாரி, அடிபட்டா… நீ தருவியா ஆஸ்பத்திரிக்குப் பணம்! இல்ல அந்த பிரபு வருவானா?” படபடத்தார் சேகரின் அப்பா.

”அண்ணா!” என சேகர் குரல் கொடுக்க, “அதோ வந்துட்டான் பிரபு! அவன்கிட்டயே பேசுங்க” என கடைக்காரர் சொல்ல, சேகரின் அப்பா ஆக்ரோஷமாகத்த்தான் திரும்பினார்.

ஆனால், பிரபுவின் புன்னகையும் வசீகரமும் கம்பீரமும் அவரை ஈர்த்தது.

குரலைத் தாழ்த்தி, “என்ன தம்பி!” என்றார்.

பிரபு அவர் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

“ஐயாம் பிரபு! சேகர் ரொம்ப சூட்டிகையான பையன் சார்! “

“சந்தோஷம் “ உண்மையில் பையனைப் பற்றிய பாராட்டு சந்தோஷத்தைக் கொடுத்தது., “நீ..ங்க என்ன படிக்கீறீங்களா?”

“ஆமாம் சார், சென்னையில எம்.ஐ.டி ல படிக்கிறேன்.”

“அப்பா! அண்ணன் எங்க ஸ்கூல்ல ஃபுட்பால் டீம் கேப்டனா இருந்தாரு!”

”சேகரும் பிரமாதமா வருவான். என்னமா சொல்றத டக்குன்னு புரிஞ்சுக்கிறான்.”

“ஆனா அவன் கொஞ்சம் பயந்த சுபாவக்காரன்” என்றார் சேகரின் அப்பா.

“யாருக்கு பயம்? அவனுக்கா? அப்படி பயப்படுறவன் மாதிரி தெரியல்லையே ! பெரியவங்க முன்னால கொஞ்சம் பயபக்தியா, அடக்க ஓடுக்கமா இருப்பானாருக்கும். நல்ல தைரியசாலி தான்” என்றான் பிரபு. 

“இப்பக் கூட பாருங்க! கீழே விழுந்து தான வாரியிருக்கான். ரோட்டில விழுந்துடுவான்னு பயம்….” சேகரின் அப்பாவை முடிக்கவிடவில்லை பிரபு.

“நாம தான தைரியமா வளர்க்கணும். பயப்படாம இருக்கக் கத்துத் தரணும்.”

பிரபுவின் புன்னகையும் நம்பிக்கையும் சேகரின் அப்பாவுக்குத் தொற்றிக் கொண்டது.

கடைக்காரரும் இணைந்து கொண்டார். ”இந்த வயசில சைக்கிள் கத்துக்கலேன்னா எப்படி? கால் நல்லா எட்டுது. அப்புறம் என்ன?” என்றார்.

“இல்லப்பா! யார் அவனோட தினம் ஓடறது?”

“அதான் நான் இருக்கேனே! இன்னும் இருபது நாள் இங்கதான் இருப்பேன்” பிரபு.

விடுமுறை முடிவதற்குள் சேது, சேகர் மட்டுமல்ல, அவனது பள்ளி மாணவர்கள் அநேகம் பேர் பிரபுவின் தயவில் சைக்கிள் கற்றுக் கொண்டார்கள். மாலை வேளைகளில் ஃபுட்பாலும் விளையாடினார்கள்.

தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்கள் கண்களில் மின்னின. 

000

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

The post நாம தான தைரியமா வளர்க்கணும்! first appeared on Nadukal.

  •  

கவிதைகளைக் குடிக்கும் காகம்

மழையில்லாக் கோடைகாலம். ஊர் கடும் வெப்பத்தில் வெந்து கொண்டிருந்தது. தூண்களின் நிழலுக்கும் ஒருவேளை இடமில்லை. அந்த வெப்பத்தில் ஒரு காகம், கருப்பும் சாம்பலுமாகக் கலந்த அதன் இறக்கைகள் வாடிய வண்ணம், தண்ணீருக்காக மயங்கிப் பறந்தது. வீடுகள் பலவற்றைச் சுற்றி வந்தது. ஒவ்வொன்றிலும் இருந்தது பூட்டிய கதவுகள். தண்ணீர் இல்லாத தொட்டிகள், வெற்றிடமான கரணிகள்.

அதற்குள் அது ஒரு குடத்தைப் பார்த்தது. பழைய மண் குடம். உள்ளே சிறிதளவு நீர். ஆனால் அதன் அலகு எட்டாமல் தூரத்தில். பழமையான காகம் அது. ‘கற்ற காகம்’ என்பதற்குச் சான்று.

அது வழக்கம்போல் கற்களைத் தேடவில்லை. அதை விட்டுவிட்டது. ஏனெனில் அது ஒரு மாறுபட்ட காகம். சின்ன வளைவுகள் நிறைந்த அதன் அலகில் வார்த்தைகள் இருந்தன. அது ஒரு கவிஞர்!

வீதிக்குத் தரையில் வீசியிருந்த ஒரு பழைய புத்தகத்திலிருந்து அதற்குத் தெரிந்திருந்தது “கவிதைகள் நம்மை உயிர்ப்பிக்க முடியும்.”

அதனால், தன்னிடம் இருந்த கவிதைகளைக் கொண்டு வந்து அந்த குடத்தில் போட்டுக் கொண்டது.

முதல் கவிதை:

“தூரத்து நீர் போலே நீ,

நெருக்கத்தில் குறைபடும் உன் நினைவுகள்…”

அது குடத்தில் விழுந்ததும், நீர் ஓரளவு உயர்ந்தது.

இரண்டாவது கவிதை:

“கண்களில் பசுமை வளர்க்கும் கனவுகள்,

கற்றைகளை மழையாக மாற்றும்…”

அப்படியே தொடர்ந்து காகம் தன்னுடைய எழுதிய ஏழு கவிதைகளை குடத்தில் போட்டது. ஒவ்வொன்றும் நீரை உயர்த்தியது. கடைசியில் நீர் அதன் அலகைத் தொட்டது. அது குடித்தது. அப்படியே உறிஞ்சிய கவிதைகள் தண்ணீருடன் கலந்து அதனுள் வந்தன. ஒவ்வொரு சொல்லும் அதன் இரத்தமாக மாறியது.

பின்னர் காகம் பறந்து சென்றது. ஆனால் அதுவே பழைய காகம் இல்லை. ஒரு புதிய பறவை. அதனுடைய இறக்கைகள் நூல்களால் பின்னப்பட்டிருந்தன. அது முகநூல் என்ற பறவைக் கூடத்தில் தங்கியது. அதன் ஒவ்வொரு சின்னமான பதிவும், அந்த குடத்தில் நீராக்கப்பட்ட கவிதைகளின் பிழிந்த சொற்கள்.

முகநூல் பக்கத்தில் தங்கிய பறவை, புதிய காகம் இல்லை. அது “நிகழ்காலக் கவிதை” என்ற ஒரு பக்கத்தின் நிர்வாகியாகத் தன்னை மாற்றிக்கொண்டது. அதன் முதல் பதிவில் எழுந்தது:

“நீர் இல்லா குடத்தில், நான் என் சொற்களைச் சிந்தினேன். நீர்த்துளிகள் கவிதையாய் பிறந்தன.”

வாசகர்கள் அதனை ‘பறவை?’ என்ற வியப்போடு எதிர்கொண்டார்கள். சிலர் ‘இது யாருடைய உருவகப்படுத்தல்?’ எனச் சந்தேகித்தனர். ஆனால் பக்கத்திற்கு ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொரு பதிவும், புதிய ஓர் உணர்வுப் பிழிந்து வாசகர்களிடம் வந்தது.

ஒரு பையன், அந்தக் கவிதைகளை படித்தவுடன் தனது வாடகை வீட்டுப் பாதியில் உட்கார்ந்து, தனது தந்தையின் நினைவுகளை எழுதத் தொடங்கினான்.

ஒரு பெண் கட்டிலில் படுத்தபடியே, அந்தக் கவிதைகளை சுடச்சுட மனதுள் படித்தபடி, கண்களில் சிறு நீர்த் துளிகள் போல கவிதையை உணர்ந்தாள்.

அந்தக் கவிதைகளைக் குடித்த வண்ணம், பலர் தங்களுக்குள்ளேயே ஒரு மொழியில்லாத தாகம் இருந்ததை உணர்ந்தனர்.

ஆனால், அந்தக் கவிதைகளை எழுதிய காகம், ஒரு வினாவுடன் தன்னை நோக்கி ஒவ்வொரு பதிவின் பின்னணியிலும் பார்த்தது.

“நான் எழுதியவை எனது தாகத்தைத் தீர்த்தனவா? அல்லது என் தாகம் மற்றவர்களின் விருப்பங்களில் கரைந்ததா?”

இந்நிலையில், ஒரு நாள் ஒரு காகம் மாதிரியான பறவை அந்த பக்கத்திற்கு உரையாடல் போக்கில் ஒரு மெசேஜ் அனுப்பியது:

“நீ குடத்தில் போட்டது உண்மையில் உன் கவிதைகளா?

உன் வாழ்வின் தடங்களா?”

அந்த வார்த்தைகள் சுருண்ட பனிப் போலக் கவிதைக் காகத்தின் உள்ளத்தில் விழுந்தன.

முகநூல் பக்கத்தில் வந்த அந்த ஒரு மின்னறிக்கேடு போன்ற மெசேஜ், காகத்தின் உள்ளத்தில் குந்தியிருந்த பசி தாகங்களை மீண்டும் எழச் செய்தது. “நீ குடத்தில் போட்டது உண்மையில் உன் கவிதைகளா? உன் வாழ்வின் தடங்களா?” என்ற கேள்வி, அவனது சொற்களில் இல்லாத வார்த்தைகளைத் தேடச் செய்தது.

அது திரும்பிப் பார்த்தது. தான் எழுதிய ஒவ்வொரு கவிதையிலும் யாரோ ஒருவர் இருந்தார்.

முதலாம் கவிதையில் மரணித்த தந்தை,

இரண்டாம் கவிதையில் ஒரு மெளனமான ஆசான்,

மூன்றாம் கவிதையில் தாயின் குரல்…

அந்தக் கவிதைகள் உண்மையில் “கவிதைகள்” இல்லை. அவனது நினைவுகளை மறைத்த பனி. குடத்தில் போடும்போது, அது ஒவ்வொன்றையும் பிழிந்து, வாசகர்கள் அனுபவிக்கக் கூடிய மொழிகளாக்கியிருந்தது.

“நான் கவிஞனாகி விட்டேன் என நினைத்தபோது, நான் என் வாழ்க்கையை மறைமுகமாகக் கூறிக் கொண்டே இருந்தேன்.”

அதோடு ஒரு புதிய புரிதல் பிறந்தது. கவிதை என்பது தாகத்தைத் தீர்க்கும் துளி மட்டும் அல்ல; தன் தனிமையின் உணர்வை மற்றவர்களிடம் பரிமாறும் ஊசி. வலியை கவிதை மூலம் புதிய வலிகளாக பிறப்பிக்கும் தன்மை.

அந்த நேரத்தில், அந்த முகநூல் பக்கத்திலிருந்து ஒரு வாசகன் பதிலளித்தார்:

“உங்கள் கவிதையைப் படிக்கும்போது என் சிறுவயதுப் பள்ளி நினைவுக்கு வந்தது. எங்கள் ஆசானும் ஏறாத பாடங்களும்… நன்றி.”

அந்தப் பதில் அந்தக் காகத்தின் தாகத்தைக் கொஞ்சம் குறைத்தது. தன்னுடைய சொற்கள் மற்றவர்களது நினைவுகளை ஊட்டுவதை உணர்ந்தது.

மறுநாளில், காகம் ஒரு புதிய முயற்சி செய்தது. அது ஒரு குடம் வைத்தது. வெறும் மண் குடம். அருகில் ஒரு சிறிய கல்லும் ஒரு பேனா போல நுனியும் வைத்தது. “நீயும் நீர் தேடிக்கொண்டிருப்பவனே! இதோ உன் சொற்களைக் குடத்தில் போடு. நீ உன் தாகத்திற்கான கவிதைகளை நீயே எழுதுக.”

இதுவே ஒரு கவிதை வேலைநிறுத்தம். வாசகர் பங்கேற்கும் மொழிவெழும் மேடை.

அந்த முகநூல் பக்கத்தில் அன்றிலிருந்து தினமும் ஒரு குடம் வைக்கப்படத் தொடங்கியது. ஒவ்வொரு குடமும் நீர் இல்லாது, ஆனால் வாசகர்களின் சொற்கள் நிரப்பும் வெறுமைக் குடங்கள்.

ஒருவர் ஒரு சின்னக் கதையைப் போட்டார்.

“தண்ணீரை இழந்த என் பாட்டி பூந்தொட்டியை, நான் என் கண்ணீரால் உயிர்ப்பித்த நாள்.”

மற்றொருவர் எழுதினார்.

“பள்ளிக்கூட விலக்கு நாளில் சோர்ந்த குடம் போல நான் வீணானேன்.”

அந்தக் கவிதைகள், அந்தக் கதைகள், அந்தச் சிறு புன்னகைகள் எல்லாம் ஒரே கண்ணாடிக்குப் பின்னால் ஒளிவைக்கும் போல… காகம் அவற்றைக் கவனித்தது.

அவைகளில் அவன் தான் இருந்தான். அவன் வாழ்ந்த நாட்கள், அவன் மீறிய மெளனங்கள், அவன் மழைக்காக் காத்திருக்க நேர்ந்த தாகங்கள்.

அதன் பக்கத்தின் பெயர் மாறியது.

“நீர் இல்லாத குடம் – வாசகர்கள் நிரப்பும் கவிதைமேடை”

அங்கே எல்லாம் வட்டமாய் அமர்ந்திருந்தனர். குடங்களும் வாசகர்களும். எதிலும் தொடக்கமில்லை. முடிவில்லை. ஒருவரின் வரி மற்றொருவரின் வரலாற்றைத் தொடும். வார்த்தைகள் குடத்தை நிரப்புவதில்லை; குடங்களைத் தாண்டி, ஒரு பெரும் களமாக விரிவடைகின்றன.

பின் ஒரு நாள், ஒரு சிறிய காகம், இன்னொரு பக்கத்திலிருந்து மெசேஜ் அனுப்பியது:

“நான் எழுதத் தொடங்கலாம் என்ற எண்ணம் உன் குடத்தில் பிறந்தது.

என் முதல் வரி:

‘என் காதலியின் சுவாசத்தை, நான் ஒரு காகத்தின் நிழலில் கேட்டேன்.'”

காகம் அதைப் படித்தபோது, ஒரு புதிதாக ஏறிக்கொண்ட வெப்பத்தில், தானும் ஒரு குடமாய் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தது. தான் எழுதவில்லை. வாசிக்கத்தான் வந்தது.

தான் குடமாக இல்லாமல் இருக்க முடியாது.

அந்தக் காகத்தின் பயணம் ஒரே ஒரு கவிதையில் முடியவில்லை. அது ஒரு அளவில்லா மேடையை உருவாக்கியது. நீரில்லாத நாட்களில் சொற்கள் மட்டுமே தாகத்தைத் தீர்க்கும்.

முகநூல் மேடையில் ஒரு நாள் முழு அமைதி. எதுவும் பதிவாகவில்லை. குடங்களும் வெறுமையாக இருந்தன. வாசகர்கள் காத்திருந்தார்கள்.

“இன்று யாராவது எழுதவில்லையா?”

“இன்று ஏதாவது சொற்கள் சோர்வடைந்துவிட்டதா?”

அப்போது, பக்கத்தின் நிர்வாகியாக இருந்த காகம், கடைசி ஒரு பதிவை இட்டது.

இது கவிதையல்ல. கதை அல்ல. ஒரு அஞ்சல் தாள் போல:

நான் எழுதியவை பிறரின் நிழல்களாக மாறின. எனது தாகம் தீர்ந்தது அல்ல.

ஆனால் அது மொழியாக பரிணமித்தது.

இப்போது, நான் ஒரு குடம் அல்ல, நான் ஒரு மேடை. எழுதி விட்டு விடுகிறேன்.

என் நிழலில் நீங்களும் எழுதுங்கள்.”

அந்தக் கதையின் பிறகு, பக்கம் மூடப்படவில்லை. ஆனால் நிர்வாகியின் பெயர் “கவிதைகள் குடித்த காகம்” என்பதிலிருந்து “மழை விழும் நிழல்” என்று மாறியது. புதிய நிர்வாகிகள் யாரென்று யாருக்கும் தெரியாது.

ஆனால் வட்டமேடையில் எழுதி விட்ட வாசகர்கள், தங்களது தாகங்களை எழுத்தில் மாற்றும் வழியைத் தெரிந்து கொண்டுவிட்டார்கள்.

அவர்கள் சொற்களில் இருந்த காகங்கள்,

வேறு வேறு முகநூல் பக்கங்களில் பறந்து கொண்டு சென்றன.

•••

டீன் கபூர்

ஓய்வு நிலை ஆசிரியர். இலங்கை கிழக்கு மாகாணம் மருதமுனை எனும் ஊரில் 1963 இல் பிறந்தேன். 1987 களில் இருந்து பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். குரோட்டான் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2019), வேரினிடை  (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூல் 2023). அத்துடன் எண்ணிம ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்.

The post கவிதைகளைக் குடிக்கும் காகம் first appeared on Nadukal.

  •  

பெஹல்காம் பயங்கரவாதக் குறுங்கதைகள்

தீவிரவாதத்துக்கு மதம் இல்லை…?

 அரவிந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டான்: 

// அரசியல் தீவிரவாதங்களுக்கு மதம் இல்லை. ஆனால், மதத் தீவிரவாதங்களுக்கு மதம் உண்டு. இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு சர்வ நிச்சயமாக மதம் உண்டு. பெஹல்காமில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கூட்டப் படுகொலை செய்யப்பட்ட 26 அப்பாவிகள்,  இந்துக்கள் என்பதால்தானே கொல்லப்பட்டார்கள்? //

அரவிந்த் மதச் சார்பற்றவன். எந்தக் கட்சியிலும், அரசியல் – சமூக அமைப்புகளிலும் அவனுக்குத் தொடர்பு கிடையாது; அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கவும் மாட்டான். வாட்ஸாப், முகநூல் போன்ற குழுக்களில் – நண்பர்களுக்கான குழுக்களில்கூட – சேர மாட்டான்.

சமூக ஊடக செயல்பாட்டாளன் அல்ல. ஆதார் அட்டைக்கு அடுத்தபடியாக இன்று ஏதாவது ஒரு சமூக ஊடகக் கணக்காவது அடிப்படைத் தேவையாக ஆகிவிட்டதால் முகநூல், இன்ஸ்டாக்ராம், எக்ஸ் தளம் ஆகியவற்றில் கணக்கு வைத்திருக்கிறான்.

செல்ஃபி போட்டோக்கள், குடும்பத்தார் போட்டோக்கள், சாயங்கால வானம் மாதிரி எந்தப் பதிவுகளும் வெளியிடுவது கிடையாது. எவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக் கூற மாட்டான்; அவனது பிறந்த நாளையும் மறைத்து வைத்திருப்பான். முக்கியமாக, உறவினர்கள் யாரையும் சமூக ஊடக நட்பில் சேர்த்துவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறான். சமூக ஊடகங்களை சமூகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அவனது தரப்பு. அதனால் சமூக விஷயங்களை மட்டுமே அதில் பதிவிடுவான். மற்றவர்களின் சமூகப் பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டமிடவும் செய்வான்.

நடுநிலை, நேர்மை, துணிச்சல், சொம்பு தூக்காமை, பட்டவர்த்தனம் ஆகிய கெட்ட குணங்கள் அவனுக்கு இருந்தன. அதனால், அவனுக்கு அங்கே நண்பர்கள் குறைவு, மறைமுக விரோதிகள் அதிகம்.

இதனால் வழக்கமாக அவனுக்கு 5 – 7 விருப்பங்கள்தான் வரும். எப்போதாவது 10 கிடைத்தால் வெற்றி விழா. 20 – 25 கிடைத்தால் சாதனை.

பெரும்பாலும் யாரும் பின்னூட்டம் இட மாட்டார்கள். அருமை, சிறப்பு, வாழ்த்துக்கள் போன்றவற்றை அவன் பின்னூட்டமாகக் கருதுவதில்லை.

முற்பகல் 11:30 வாக்கில்தான் சமூக ஊடகங்களில் பயனர்கள் அரிதிற் பெரும்பான்மையினரும் குழுமியிருப்பர். அப்போது பதிவு இட்டால்தான் அதிகமான மக்கள் பார்க்கவும், உடனடியாக எதிர்வினையாற்றவும் செய்கின்றனர். அதனால் அந்த ராவுகாலம், எமகண்டம் பார்த்துத்தான் இன்றும் அவன் பதிவை  வெளியிட்டிருந்தான். ஆயினும், மதிய உணவு நேரம் வரை ஒரு விருப்பக்குறியோ, பின்னூட்டமோ விழவில்லை.

சிறுபான்மைகளுக்கு ஆதரவு என்றால் விருப்பங்களும், இதயங்களும் குவியும். தோழர், சகோதரர் என்று பாசம் பொழிந்து பின்னூட்டங்கள் இடுவார்கள். சிறுபான்மைகள் செய்கிற அராஜகம், ஜாதி – மத வெறிச் செயல்கள், குற்றங்கள், கலவரங்கள், தீவிரவாதம் ஆகியவற்றைக் கண்டித்துப் பதிவு இட்டால் 97.68% பேர் கண்டுகொள்ள மாட்டார்கள். சில சமயம் ஒரே ஒரு லைக் வரும். சில சமயங்களில் அதுவும் இராது. இந்தப் பதிவும் அப்படித்தான் ஆகப்போகிறது என்று பட்டது. அலுவலகக் கணினி ஜன்னலைச் சாத்திவிட்டு தன் வேலையைத் தொடரலானான்.

இரவு வீடு திரும்பிய பின் அலைபேசியில் இன்ஸ்டாக்ராம் செயலியைத் திறந்து பார்த்தான். கணிசமான விருப்பக்குறிகளும், செவ்விதயங்களும் விழுந்திருந்தன. அதைக் காட்டிலும் பின்னூட்டங்கள் நிறைந்திருந்தது ஆச்சரியப்படுத்தியது. ஆவலோடு வாசிக்கலானான்.

ஃபைசல்தப்லீக்: சகோதரரே! இஸ்லாம் அமைதி மார்க்கம். இஸ்லாத்தின் பேரால் தீவிரவாதம் செய்பவர்கள், இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டவர்களாக, இஸ்லாத்துக்கு விரோதமானவர்களாக கருதபடுவார்கள்

ரஞ்சித்சிவம்: பாய்… அமைதி மார்க்கம் உருட்டை இன்னும் நீங்க விடலையா? கழிவி கழிவி ஊத்தறாங்களே சமூக ஊடக கமென்ட்டுல!

ப்ரியங்கா_திருச்சி: ஆமா அரவிந்த், எல்லாரும் மனுஷங்க தான். இதுல மதம் எதுக்கு?

தேசபக்தன்_143: ப்ரோ… நீங்கசொல்றது 200% உண்மை.ஆனா, முஸ்லீம்ல சிலநல்லவங்களும் இருக்காங்க

திராவிடசெழியன்: சங்கி மங்கி! உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?

அதிகைநேசன்_64: கவற்சிகரமான வாசகங்கள், சிந்திக்கவிடாமல் ஆமாம் போட வைத்துவிடும். தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்பதும் அப்படித்தான். இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றி பேச்சு எழும்போதுதான் இந்த வாசகம் முன்வைக்கப்படுகிறது என்பதும் கவனிக்க & சிந்திக்கத் தக்கது.

ஜனநாயகவாதி: இஸ்லாமிய வெறுப்பை பரப்பறதே சங்கிக வேலையா போச்சு

அண்ணன்அடிமை: பெஹல்காம் தாக்குதல் பிஜேபி அஜென்டா

பொன்.மாணிக்கம்: யூ ட்யூப் கமென்ட்லயும் “தீவிரவாதத்துக்கு மதம் உண்டு”ன்னு சிலர் பதிவிட்டிருந்தாங்க.

தளபதிசுரேஷ்: நண்பா, உங்க இஸ்லாமிய வெறுப்பு பேச்சு கண்டிக்க தக்கது. நீங்க சமூக நல்லிணக்கத்துக்கு எதிரா இருக்கீங்க.

சிறுபான்மை_குரல்: நீதான்டா சங்கி நாயே மதவெறியன். முஸ்லீம் பத்தி தப்பா பேசாதே

     பின்னூட்டங்களை வாசித்துப் பார்த்த அரவிந்திற்கு லேசான ஆறுதல் இருந்தாலும் கனத்த அதிர்ச்சி, சங்கடம், கடுப்பு, விரக்தி ஆகியவை உண்டாகின. இந்தப் பதிவை நீக்கிவிடலாமா, அல்லது தனது சமூக ஊடகக் கணக்குகள் யாவற்றையும் முடக்கிவிடலாமா, அல்லது உணவில் உப்பு சேர்ப்பதை விட்டுவிடலாமா  என யோசிக்கலானான். 

பின் குறிப்பு: 

இக் கதையில் இடம்பெறும் சமூக ஊடகப் பின்னூட்டங்களில் உள்ள எழுத்துப் பிழை, சொற் பிழை, இலக்கணப் பிழை, சொற்கள் ஒட்டியுள்ள பிழை ஆகியவை பின்னூட்டர்கள் வழக்கமாகச் செய்யும் பிழைகளை உள்ளது உள்ளபடி காட்டுவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டது. 

மேய்ப்பர்கள் ஜாக்கிரதை!

பெஹல்காம் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலின் ரத்தம் இன்னும் காய்ந்திருக்கவில்லை.

தமிழ் தேசியக் கட்சித் தலைவர், “இஸ்லாமியர்கள் என் தொப்புள்கொடி உறவுகள். இஸ்லாமியத் தீவிரவாதிகள்  என் சகோதரர்கள், என் அப்பாக்கள். அவர்கள் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் நான் அவர்களுக்கு வீரமரியாதை செலுத்துவேன்” என்றார். தலித் கட்சித் தலைவர், “அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல; போராளிகள்!” எனப் போற்றிப் புகழ்ந்தார். திராவிட சமூக ஆர்வல பீரங்கினி, “சுற்றுலாப் பயணிகளின் ஆடையைக் கழற்றிப் பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் இந்திய ராணுவ வீரர்கள்தான். ஒன்றிய சங்கி அரசு இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து இதைச் செய்திருக்கிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டாள்.

இவை  இந்து உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அவர்களின் இழிசெயல்கள் குறித்து காட்டமான விமர்சனங்கள் எழுந்தன. தேச துரோகிகள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்கள் எங்கும் பதிவுகள், பின்னூட்டங்கள் ஏராளமாக இடப்பட்டன. புழுத்த நாய் கேட்டால் தனது வாலிலேயே சுருக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு அவர்கள் கழிப்பிடக் கழுவு நீரில் கழுவி ஊற்றப்பட்டனர். இதற்கெல்லாம் அசரக்கூடியவர்களா அவர்கள்?!

யூட்யூபர் நெற்றிக்கண் துரைப்பாண்டிக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. தனது சேனலில் கண்டனக் காணொளியை வெளியிட்டார்.

     “பெஹல்காம் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது வரை இந்தியா அல்லது தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக எந்த ஒரு முக்கியமான இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்களும் பதிவாகவில்லை. ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஆதரவு என்ற பெயரில், நாடு முழுதும் தேச விரோத சக்திகள்  இந்தியாவுக்கு எதிராகவும் துரோகமாகவும் பேசிவருகின்றன. குறிப்பாக, பயங்கரவாத நாடும், நமது எதிரி நாடுமான பாகிஸ்தானுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிப்பது, இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகியவற்றை சில கட்சித் தலைவர்களும், சமூக – அரசியல் அமைப்புப் பிரமுகர்களும் செய்துள்ளனர். ‘பெஹல்காம் தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் ஆகியவை அரசு சதி’ என்று கூறிய அ.இ.ஐ.ஜ.மு. (AIUDF) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாமை அஸ்ஸாம் போலீசார் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் இத்தகைய தேச விரோதிகள்  சுதந்திரமாகத் திரிகின்றனர். காரணம், இந்த மாநில அரசு, ஓட்டு வங்கிக்காக இவர்களுக்குச் சாமரம் வீசுவதுதான்!” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

நூற்றுக்கணக்கான இந்துக்கள் அவரது கருத்தை ஆதரித்திருந்தனர். தேசத் துரோகிகளை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், இந்தியக் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும், பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என கோப வெளிப்பாடுகளோடு பின்னூட்டங்கள் வந்தன.

அடுத்த நாளே, சமூக அமைதியைக் குலைக்கும் விதமாக அந்தப் பதிவை இட்டதாக நெற்றிக்கண் துரைப்பாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

துரோகிகள்

கலைந்த தலைகள், ஆங்காங்கே கந்திய முகங்கள், காயம்பட்டுக் கிழிந்த உதடுகள், லத்தியடியின் ரத்த விளாறுகளும் வீக்கங்களும் கொண்ட முதுகுகள் – உடல்கள், கந்தலாகித் தொங்கும் சட்டைகளோடு, ஜின்னா நகர் தெருவில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது ஆண்களானஅந்த ஐந்து பேரும் விந்தியும், நொண்டியும் நடந்தனர். முழங்கால் மூட்டுகள் பெயர்ந்துவிடுகிற அளவுக்கும், உள்ளங்கால் தோல் பிய்ந்துபோகிற அளவுக்கும் போலீஸ் பாடம் புகட்டியிருந்தது. ஒவ்வொரு அடிவைப்பிலும் வலி உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெறித்தது. அவர்களின் கால்கள், ராஞ்சிக்கும் தன்பாத்துக்கும் மத்தியிலுள்ள நிலக்கரி நகரான ஹசாரிபாக்கின் பழக்கப்பட்ட தெருக்களில் ஊன்றி நடக்க சிரமப்பட்டன. 

மக்களுக்குக் காட்சிப்படுத்தி அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸார் அவர்களை ஊர்வலமாகத் தெருவில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். காஃபிர் குடியிருப்புவாசிகளின் கூட்டம் ஆவலோடு பக்கவாட்டுகளிலும் பின்னாலும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. நடந்தும் வாகனங்களிலும் செல்கிற வழிப்போக்கர்களும் நின்று வேடிக்கை பார்த்து, என்ன குற்றம் எனக் கேட்டறிந்து, “குண்டர் தடுப்பு சட்டத்துல அடைக்கணும்”, “என்கௌண்டர் பண்ணணும்”, “ஓட ஓட பாகிஸ்தானுக்கே அடிச்சு விரட்டணும்” என ஆவேசமாகச் சொல்லிவிட்டுச் சென்றனர்.

சுற்றியிருந்தவர்கள் – இந்துக்களும், சீக்கியர்களும், ஏன் சில முஸ்லிம்களும் கூட – இவர்களை வெறுப்புடன் பார்த்தனர். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொதுவாக இந்து – முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கமே நிலவுகிறது. இருப்பினும் சில சமயங்களில், குறிப்பாக பண்டிகை ஊர்வலங்களின்போது அல்லது அரசியல் ரீதியாகத் தூண்டப்படும்போது, மத மோதல்கள் எழுகின்றன. சமீப காலங்களில் ராம நவமி, ஹனுமான் ஜெயந்தி போன்ற இந்துப் பண்டிகைகளின்போது மத ஊர்வலங்கள் மசூதிகளுக்கு அருகிலோ, முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளிலோ செல்லும்போது பதற்றம் ஏற்படுகிறது.

இந்து – முஸ்லீம் கலவரம் என்கிற விஷயத்தில் இந்த மாநிலத்துக்கும் சில வரலாற்றுப்  பெருமைகள் இருக்கவே செய்கின்றன. 1967 ராஞ்சி – ஹாடியா கலவரத்தில், உருதுக்கு எதிரான மாணவர் ஊர்வலத்தின் மீது கல் வீசப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. 184 பேர் கொல்லப்பட்டனர், இதில் 164 முஸ்லிம்களும், 19 இந்துக்களும் அடங்குவர். 195 கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. அதுதான் மாநிலத்தின் மாபெரும் கலவரம். அப்போது இந்த வீரர்களின் தந்தையர்களில் ஓரிருவர் குழந்தைகள்; மற்றவர்கள் பிறந்திருக்கவில்லை.

2022 ராஞ்சி வன்முறை, இவர்கள் நன்கு அறிந்தது. அதன் காரண காரியமோ, இவர்களின் ரத்தத்தை அமிலமாகக் கொதிக்கச் செய்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே ஊரில்மகா சிவராத்திரி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை நிறுவுவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. கற்கள் வீசப்பட்டு வாகனங்கள் எரிக்கப்பட்டன. அதில் இவர்களில் கைசர், ஜவாஹிருல்லா, தாரிக் மூன்று பேருக்கும் பங்கு உண்டு.

அப்படிப்பட்ட நிலையில், பெஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்.

அதன் எதிர்வினையாக இந்தியா பாகிஸ்தான் மீது மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகள், பாகிஸ்தானிலும் காஷ்மீரிலும் நடத்திய பயங்கரவாதிகள் வேட்டை, பாகிஸ்தான் தொடர்ந்து செய்துவந்த அத்துமீறல் தாக்குதல்கள் யாவும் இந்தியாவில் உணர்ச்சிக் கொந்தளிப்பான அதிர்வலைகளை ஏற்படுத்தின. அரசியல், சமூகம், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் பலத்த பரபரப்பு.

போர் நடந்த நாட்களில் இந்து மக்கள் இரவு முழுக்க விழித்திருந்து யூ ட்யூபில் செய்திகளும், நேரலை செய்திகளும் பார்த்து, பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய அரசுக்கு ஆதரவாகவும் கமென்ட் இட்டுக்கொண்டிருந்தனர். முஸ்லீம்கள் ஒருவர் கூட கருத்துத் தெரிவிக்கவில்லை. இது பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது. இஸ்லாமியர்களின் தேசப் பற்றின்மை, தேசப் பற்றாளர்களான இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த ஜின்னா நகரில் சில  இந்துக்கள்,  “இஸ்லாமியர்களுக்கு மதப்பற்றும் மதவெறியும்தான் இருக்கும். தேசப் பற்று இருக்காது. முஸ்லீம் நாடா இருந்தா மட்டும்தான் தேசப்பற்று இருக்கும்” எனப் பேசியது இவர்களுக்குத் தெரியவந்தது.

பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியர்களான இந்த ஐவரும் டீக்கடை, சலூன், மற்றும் தெருவோரப் பகுதிகளில் இருந்தபடி பொதுவெளியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் இடுவது ஆகியவற்றைச் செய்யலாயினர். யாரோ போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து லாடம் கட்டி, முட்டி உடைத்து, உடலெங்கும் லத்தி ஒத்தடம் கொடுத்துவிட்டனர்.

 ஐந்து பேரில் குண்டானவனும், மூத்தவனுமான கைசர், வலியால் முனகியபடியே சொன்னான். “எந்தக் காஃபிர் பன்னிக போலீஸுக்குப் புகார் சொல்லுச்சுன்னு தெரியல. நாம திரும்பி வந்ததும் அவனுகள சும்மா விடக்கூடாது!”

தாரிக், குரலைத் தணித்துக்கொண்டு சொன்னான். “இந்துக்கள் யாருமல்ல, பாய்;  இப்ப நம்ம கூடவே வேடிக்கை பாத்துட்டு வந்துட்டிருக்கற நம்ம ஆளுகதான்!” 

ஜவாஹிருல்லாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. “அப்படியா? எதிரிகளைக் கூட மன்னிக்கலாம். துரோகிகளை உயிரோடவே விடக்கூடாது!” என்றான் கொலைவெறியோடு. 

எல்லை கடந்த மனிதாபிமானம்

இரு வாரங்களாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைச் சூழ்ந்திருந்த போர் மேகங்கள், பலத்த இடி மின்னல்களோடான கன மழை பொழிந்து, சூறாவளியைக் கிளப்பியிருந்தன. மே 7, 2025 அன்று இந்திய முப்படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலான ஆப்பரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய அதிர்வலைகள் இந்தியாவெங்கும் இன்னும் நீடித்திருந்தன. மறுபுறம், பாகிஸ்தான் ராணுவம் அதற்குப் பதிலடியாக இந்தியப் பக்கத்தில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ராஜோரி, குப்வாரா, பாரமுல்லா, ஊரி, அக்னூர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய ஷெல் மற்றும் மோட்டார் (Mortar) தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதில் 13 முதல் 16 இந்திய அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், சுமார் 40 முதல் 60 பேர் காயமடைந்தனர்.

இந்த முறையற்ற தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் உடனடியாகவும், வீரியமாகவும் பதிலடி கொடுத்தது. மே 9, 2025 அன்று இரவு சுமார் 9 மணிக்கு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய அனைத்து எதிரிப் படைகளின் நிலைகளையும் இந்திய ராணுவம் அழித்தது. இதில் எதிரிகள் தங்கள் நிலைகளை விட்டு ஓடியதாக இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய உள் கட்டமைப்புகளையும், பயங்கரவாத முகாம்களையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) லீபா பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ உள் கட்டமைப்புகளையும் தாக்கியது. சினார் கார்ப்ஸ் அதிகாரிகள் அளித்த தகவல்களின்படி, இந்தப் பதிலடித் தாக்குதல்களில் குறைந்தது 64 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 96 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய பதட்டமான சூழலில், இந்திய ராணுவ வீரனும்,  மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவனுமான  தௌஸீஃப், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில்ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தான். அடர் வனத்தின் காய்ந்த சருகுகள் காலடியில் நொறுங்கும் ஒலியையும், காட்டுப் பறவைகளின் பலவித கானங்களையும் தவிர வேறு சத்தமில்லை. திடீரென, ஒரு பெருத்த அடிமரத்தின் பின்னாலிருந்து பலவீனமான முனகல் ஒலி கேட்டது.

தௌஸீஃப் உஷாரானான். இயந்திரத் துப்பாக்கியைத் தயார் நிலையில் பிடித்தபடி, சருகோசை எழுப்பாமல் பதுங்கி முன்னேறினான். அங்கே, பாகிஸ்தான் ராணுவச் சீருடையில் ஒரு வீரன் அடிமரத்தில் சாய்ந்த வாக்கில், நிலத்தில் கால் நீட்டியபடி தளர்ந்து கிடந்தான். அவனது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பது, அங்கிருந்த காய்ந்த ரத்தக்களறியால் தெரிந்தது. அவனது ஆயுதம் கையருகிலேயே கிடந்தாலும், இப்போது அவனால் அதை எடுத்து சுட முடியாது என்பது உறுதி.

தௌஸீஃப் ஒரு கணம் தயங்கினான். எதிரி நாட்டவன், அத்து மீறி நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறான், என்றாலும் அந்த நொடியில், அவன் கண்களுக்கு அது தெரியவில்லை. வேதனையில் தவிக்கும் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே தெரிந்தது.

“அல்லாஹ்… யா அல்லாஹ்…” மெல்லிய முனகலோடு அந்த வீரனின் உதடுகள் அசைந்தன.

தௌஸீஃப் நெருங்கிச் சென்றான். தயக்கத்துடன், “உனக்கு அடி பலமா?” என்று உருதுவில்  கேட்டான். 

பாகிஸ்தானி வீரன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். இந்திய வீரனைக் கண்டதும் அவனது கண்களில் பதற்றமும், பயமும், ஆத்திரமும் ஒருசேர மின்னின. வலது கரம் துப்பாக்கியை எடுக்க முற்பட்டது.

தௌஸீஃப் பொறுமையாக, “பயப்படாதே! நான் உனக்கு உதவுகிறேன்” என்றான்.

“காஃபிர் நாய்களின் உதவி எனக்குத் தேவையில்லை. நாங்கள் சிங்கங்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத்!” துப்பாக்கியை இறுகப் பற்றிக்கொண்டு அவன் வலியிலும் ஆவேசமாகக் கத்தினான்.

தௌஸீஃப்பின் உதடுகளில் பரிகாசப் புன்னகை நெளிந்தது. “நீ எதிரி நாட்டவன் என்றாலும், நான் உன்னையும் என்னைப் போல ஒரு நாட்டின் ராணுவ வீரன் என்று மதிப்புடன் பார்க்கிறேன். ஆனால் நீயோ, என்னை மதவாதக் கண்களில் பார்க்கிறாய். இதுதான் இந்திய வீரர்களுக்கும், பாக் வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம்…”

“நாங்கள் ராணுவ வீரர்களோ, காய்கறி வியாபாரிகளோ, அரசு ஊழியர்களோ, உயர் அதிகாரிகளோ, தலைவர்களோ, சாமானிய மனிதர்களோ – யாராக இருந்தாலும் சரி; முதலில் நாங்கள் முஸ்லீம்கள். பிறகுதான் மற்றதெல்லாம்!” அவன் மூர்க்கமாக பதில் கொடுத்தான்.

தௌஸீஃப் அமைதியாகச் சொன்னான்: “நானும் முஸ்லீம்தான். ஆனால், அது எனக்கு இரண்டாம்பட்சம். எங்கள் நாட்டில் ராணுவச் சீருடைக்குத் தேச அடையாளம் மட்டுமே உண்டு. மதம் இல்லை.”

இப்போது பாக் வீரனின் வறண்ட உதடுகளில் இளக்காரச் சிரிப்பு.

“உனது வாய் அப்படிச் சொன்னாலும், இதயம் இஸ்லாமியன் என்பதால்தானே எனக்கு உதவ முன்வந்தது?”

“இதயத்துக்கு மதம் கிடையாது. இதயம் உள்ளவர்களுக்கு மதம் இருந்தாலும் மதவாதம், மத அடிப்படைவாதம், மதத் தீவிரவாதம் இருக்காது. நான் உனக்கு உதவ முன்வந்தது கருணை, மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில்தான். நான் ஒரு இந்தியன் என்பதால், மனிதாபிமானத்தோடு உதவுகிறேன். உனக்குத் தாகமாக இருக்கும், தண்ணீர் குடி!”

பாட்டிலை நீட்டினான். பாகிஸ்தானி சந்தேகத்துடன் அவனைப் பார்த்தான். பிறகு வாங்கிக்கொண்டு, காயத்தின் வேதனையோடு, தண்ணீரைப் பொறுமையற்று மடக் மடக்கெனப் பருகினான்.

இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில்  அவனது வலது காலில் காயம்பட்டு இரண்டு நாட்களாகின்றன. பலத்த காயம் என்பதால்  நடக்க இயலாத நிலை. தௌஸீஃப் அவனுக்குத் தன்னிடமிருந்த ரொட்டிகளை உண்ணக் கொடுத்தான். அவன் பசி வெகாறியோடு அதைத் தின்று, மீண்டும் தண்ணீர் குடித்தான்.

அடுத்த நாளும் தௌஸீஃப் ரகசியமாக அந்த இடத்திற்குச் சென்று அவனுக்கு உணவு கொடுத்தான். காயங்களுக்கு மருந்திட்டு, கட்டிவிட்டான்.

பாகிஸ்தான் வீரன் தெம்படைந்து, சற்றே குணமடைந்தான். எனினும் அவனுக்கு நடக்க சிரமமாக இருந்தது. தௌஸீஃப் அவனைத் தாங்கிப் பிடித்து மெதுவாக நடக்க உதவினான். அடர்ந்த மரங்கள், முட்கள் நிறைந்த புதர்கள், கரடுமுரடான பாறைகள் என அந்தக் காட்டுப் பகுதி அவர்களுக்குச் சவால்விட்டது. கஷ்டப்பட்டு பாகிஸ்தான் எல்லையை  அடைந்தனர். 

“நீ எனக்குச் செய்த உதவிக்கு என்னால் எந்தக் கைம்மாறும் செய்ய இயலாது. அல்லாஹ் உனக்கு உரிய கூலியைக் கொடுப்பான்!”

பாகிஸ்தானி வீரன் உணர்ச்சியற்ற குரலில் ஒப்புவித்துவிட்டு  தனது நாட்டின் எல்லைக்குள் விந்தி விந்தி நடக்கத் தொடங்கினான்.

தௌஸீஃப் சற்று நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். தான் செய்தது ராணுவ சட்டப்படியும், பொது நீதிப்படியும் குற்றம் என அவனுக்குத் தெரியும். எனினும், ஒரு சக மனித உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்தோடும், மனநிறைவோடும் அவன் கம்பீரமாக தனது படைத்தளத்தை நோக்கி நடக்கலானான். 

அப்போது, பின்னால் இயந்திரத் துப்பாக்கியின் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்ப்பதற்குள் பின்னந்தலையில் குண்டுகள் துளைத்து, தலை சிதறி, ரத்தம் தெறிக்க, நிலை குலைந்து தரையில் குப்புற வீழ்ந்தான். அவனது கண்கள் இருண்டன. பின்னந்தலைத் துளைகளிலிருந்து ரத்தம் பீறிட்டது. கவிழ்ந்து கிடக்கும் அவனது உதடுகள் தாய் மண்ணை அழுத்தி முத்தமிட்டன.

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

The post பெஹல்காம் பயங்கரவாதக் குறுங்கதைகள் first appeared on Nadukal.

  •  

உங்களோடு..

எல்லோருக்கும் வணக்கம்!

மாதத்தின் எல்லா நாட்களும் மெயிலில் ஒன்றிரண்டு படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. சில பி.டி.எப் என வருகின்றன. சில படைப்புகள் யார் எழுதியதென தெரிவிக்காமல் மொட்டைத்தாசன் குட்டையில் விழுந்தாப்லயும் வருகிறது. அனுப்பிய மெயிலில் ராமசாமி என்றிருப்பதாக வைத்துக்கொண்டால் அவர் புனைப்பெயரில்கூட எழுதலாம். அல்லது எனக்கு ‘ஜீம்பூம்பா’ மந்திரம் தெரியுமென அவர்கள் நினைத்திருக்கலாம். (ஏலே! கவிதையெ பாத்தாவெ தெரியாதாலே? நாமதா எழுதி அனுப்பியிருப்பம்னு? தமிழ்நாட்லெ என்னெத்தவுத்து யாருலே இப்புடி மணியாட்டம் கவிதெ எழுதிருவாய்ங்கெ?) இந்தமுறையும் படைப்பு நன்றாக இருந்தமையால் எடுத்து சேகரிப்பில் வைத்திருந்தேன். அவர்களிடம் புகைப்படமும், சுயவிபரக்குறிப்பும் கேட்டிருந்தேன். பத்து நாட்களுக்கும் மேலாகியும் எந்த பதிலுமில்லை. 

நடுகல் பதிப்பக வெளியீடாக ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களுடைய வெளியில் இதுவரை வராத, அதுவா? இதுவா?, காணாச்சுனை, புதுப்புனல் மூன்றையும் ஒரே புத்தகமாக வசதி கருதி கொண்டு வந்தோம். நிதானமான ஓட்டம் தான். சின்ன சோர்வு வந்ததென்னவோ நிஜம் தான் என்றாலும் மெதுவாய் செல்லும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அடுத்ததாக அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றும், மொழிபெயர்ப்பு கதைகள் அடங்கிய மற்றொரு தொகுப்பையும் ஒரே தொகுப்பாக நடுகல் இந்த மாதம் கொண்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவு வேண்டும் தான். சிக்காத பொருளுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. குறைவான வாசகர்கள் வாசித்தாலே போதுமானது தான். மற்றபடி அகலக்கால் வைக்கவும் விருப்பமில்லை.

சென்ற மாத இதழில் வெளிவந்த இவரது மொழிபெயர்ப்பில் ‘மிருகம்’ கதை பலராலும் பாராட்டப்பட்டது மகிழ்ச்சி. இந்த இதழிலும் அண்ணாரது மொழிபெயர்ப்பில் ‘போஸ்டாபீஸ்’ என்கிற குஜராத்தி கதை வெளியாகியிருக்கிறது. தொகுப்பாக வரவிருப்பதால் மேற்கொண்டு இவரது மொழிபெயர்ப்பு கதைகள் இனி நடுகல் இதழில் வெளிவராது.

நடுகல் புத்தகப்பதிப்பு மற்றும் nadukal.in இணையத்திலும் மாதா மாதம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதால் என் எழுத்துப்பணிகளும் சற்று தொய்வுதான். இருந்தும் களமாட வந்திருக்கிறோம். இதுவும் பணிதானே! கொங்கு மண்ணின் மூத்த கிராமிய எழுத்தாளருக்கு நடுகல் செலுத்தும் ராயல் சல்யூட்டாக வைத்துக்கொள்வோம்.

’எதற்காக எழுதுகிறேன்?’ என்கிற கேள்விக்கான பதிலாய் ஆர்.ஷண்முகசுந்தரம் கூறுகையில். “நான் பிறந்து வளர்ந்த கொங்கு நாட்டு கிராமத்தையும், அங்கு நான் பழகிய கிராம மக்களையும் உள்ளது உள்ளபடி எழுத்தில் சித்தரிப்பது என்ற பேரார்வம் எனக்குள் துளிர்த்தது. அந்த ஜனங்களின் விருப்பங்கள், துயர்கள், வேடிக்கை விமரிசைகளை வனப்புடன் தீட்டிவிட திட்டமிட்டேன். ஒவ்வொரு சிறிய காரியத்தையும் நுட்பமாக கவனித்தேன். கவனிப்பது என்ன? என் இதயத்தில் வீற்றிருந்த வடிவுகளுக்கு உயிர் கொடுத்தேன்” என்கிறார்.

மொழிபெயர்ப்புக் கலை குறித்து :

”என் அனுபவம் மட்டுமல்ல. மொழிபெயர்க்கும் ஒவ்வொருவரின் அனுபவமும் இந்தக் கலையில் சற்று சிரமம் மிக்கது தான். தமிழில் எழுதிவிட்டால் மட்டும் அது தமிழாகிவிடாது. மொழிபெயர்ப்பும் ஆகிவிடாது”

’’மூல ஆசிரியரின் உள்ளக் கிடக்கை இன்னதென இனம் காணும் பண்பு இன்றியமையாதது. மூல ஆசிரியரே மொழிபெயர்க்கப்படும் மொழியில் எழுதுவாரானால் எப்படி எழுதுவாரோ அப்படி எழுத வேண்டும். கூடிய அளவுக்கு இருமொழிப் பண்புகளையும், வாழ்க்கை, இலக்கிய மரபுகளையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு நம் மொழி இடம் கொடுக்குமோ அந்த அளவுக்கு எழுதும் பக்குவம் வரவேண்டும். முதலில் எழுதும்போதே தப்பும் தவறும் இல்லாமல், அடித்தல், திருத்தல் இன்றி எழுதும் பக்குவம் கைவரப் பெற்றால் தான் சிந்தனைப் போக்கில் ஒருமையும் ஒழுங்கும் உண்டாகும்”

முதலாக கதைகளை தேர்ந்தெடுப்பதில் கூட ஆர்.ஷண்முகசுந்தரத்திற்கு பக்குவம் இருந்திருக்கிறது என்பது இந்தத் தொகுப்பில் உள்ள குறைவான கதைகள் நிரூபணம் செய்கின்றன. உருது, வங்காளி, ஹிந்தி, குஜராத்தி என்று கதைகள் ஒவ்வொன்றை தேர்ந்தெடுத்தவர் வங்காளியில் மட்டும் மூன்று கதைகளை இணைத்திருக்கிறார்.

மீண்டும் சிரமத்திற்கிடையிலும் நடுகல் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது பயணிக்கிறது!

அன்போடே என்றும்

வா.மு.கோமு 1-5-2025

The post உங்களோடு.. first appeared on Nadukal.

  •  

ஜவான் ஒரு அசடு

ஒரு குடியானவனுக்கு சைமன், தாரஸ், ஜவான் என்ற மூன்று பிள்ளைகளும் மார்த்தா என்ற ஓர் ஊமைப் பெண்ணும் இருந்தனர். சைமன் பட்டாளத்தில் சேர்ந்தான். தாரஸ் பட்டணத்தில் வியாபாரம் துவக்கினான், ஐவானும், தங்கையும் நிலத்தில் உழைத்துப் பெற்றோருக்கு உதவியாக இருந்தனர்.

சைமன் ராணுவத்தில் பெரிய பதவிக்கு உயர்ந்தான்; ஒரு பிரபுவின் மகளை மணந்தான். கைநிறையச் சம்பாதித்தான், இருந்தாலும் அவனுக்குக் கடன் அதிகமாகியது. ஏனென்றால் அவனுடைய மனைவி வரவுக்கும் அதிகமாகச் செலவு செய்தாள். சைமனுக்கு அரசர் நிலங்களை மான்யமாக அளித்திருந்தார். அவற்றில் பயிர்த்தொழில் செய்ய அவனுக்கு முன் பணம் தேவைப்பட்டது.

சைமன் அப்பாவிடம் போய், ”அப்பா! உழவுக்கு ஏற்பாடு செய்ய அவசரமாக எனக்குப் பணம் தேவைப்படுகிறது. எனக்குச் சேர வேண்டிய பங்கைச் சொத்திலிருந்து பிரித்துக் கொடுங்கள்” என்று கேட்டான்.

”சைமன்! நீ சம்பாதித்த பிறகு வீட்டுக்கு ஒன்றுமே கொண்டு வரவில்லை. உனக்கு எதற்குப் பங்கு? ஜவானும் மார்த்தாவுமே உழைக்கின்றனர். நீ அவர்களுக்கு அநீதி இழைக்கலாமா? எதற்கும் அவனை ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன் என்று சொல்லி அவர் ஜவானை அணுகினார். “அப்பா! சைமனுக்கு என்ன வேண்டுமோ அவன் எடுத்துக் கொள்ளட்டுமே!” என்றான் ஜவான் தாராளமாக. தேவையான கருவிகளை எடுத்துக் கொண்டு சைமன் தன் நிலத்தில் உழவுக்கு ஏற்பாடு செய்தான்.

தாரசுக்கு வியாபாரத்தில் பெருத்த லாபம் கிடைத்தது. அவன் ஒரு வியாபாரியின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டான். வியாபாரத்தை வளர்க்க அவனுக்குப் பணம்’ தேவைப்பட்டது. அப்பாவிடம் போய்த் தன் பங்கைக் கேட்டான். அப்பா ஜவானிடம் கேட்டார். ஜவான் தாராளமாக ஒப்புக் கொண்டான். கிடங்கில் இருந்த தானியங்களையும், ஒரு நல்ல குதிரையையும் தாரஸ் எடுத்துக் கொண்டான். நிலமும் ஒரு கிழட்டுக் குதிரையும் மட்டுமே மிஞ்சின. ஜவானும், மார்த்தாவும் அவற்றை வைத்துக் கொண்டு உழவைக் கவனித்தனர். பெற்றோரையும் காப்பாற்றினர். ‘பிழைக்கத் தெரியாதவன்’, ‘அசடு’, ‘முட்டாள்’- போன்ற பட்டங்களையும் ஜவான் சம்பாதித்துக் கொண்டான்.

அந்த மூன்று பிள்ளைகளும் பாகப் பிரிவினையின் போது சண்டை போடுவார்கள் என ஒரு கிழட்டுப் பேய் எதிர்பார்த்தது. அதற்கு மாறாக அவர்கள் சந்தோஷமாகப் பிரிந்து போனதால், அது ஏமாற்றமடைந்தது. அவர்கள் மீது வஞ்சம்’ தீர்த்துக் கொள்ள எண்ணியது.

கிழட்டுப்பேய் தன் குழந்தைகளான மூன்று குட்டிப் பிசாசுகளையும் கூப்பிட்டு, “குழந்தைகளே! உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன். சைமன், தாரஸ், ஜவான் ஆகிய மூவரும் சகோதரர்கள். பாகப்பிரிவினை காரணமாக அவர்களுக்குள் சண்டை வந்திருக்க வேண்டும். ஆனால் ‘ஜவான் என்னும் முட்டாள் நல்ல மனத்தோடு விட்டுக்கொடுத்து என் திட்டங்களைக் கெடுத்து விட்டான். ஆகவே நீங்கள் உடனே அவர்களிடம் செல்லுங்கள். அவர்களுடைய அன்பையும், சந்தோசத்தையும் குலைத்து, விரோதத்தையும், துன்பத்தையும் வளர்க்க, வேண்டும். புறப்படுங்கள்!” என்று சொல்லி அனுப்பியது.

குட்டிப் பிசாசுகள் மூன்றும் கூடிப் பேசின. ஒவ்வொரு பிசாசும் ஒரு சகோதரனின் வாழ்வைக் குலைப்பது என்றும், முதலில் வேலையை முடிக்கும் பிசாசு மற்ற இரண்டுக்கும் உதவ வேண்டும் என்றும் தீர்மானித்தன.

குறிப்பிட்ட நாளில் மூன்று குட்டிப்பிசாசுகளும் கூடின. தங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டன. சைமனிடம். போன பிசாசு முதலில் தன் கதையைக் கூறியது “நான். சைமனைத் தைரியசாலி ஆக்கி அரசனிடம் போகச் செய்தேன். அரசருக்காக அவன் இந்த உலகத்தையே ஜெயிப்பதாக வீரம் பேசினான். அரசர் அவனை ஒரு பெரிய படைக்குத் தளபதி ஆக்கி இந்தியாவைப் பிடிக்குமாறு அனுப்பினார். போருக்கு முதல் நாள் மழையை வரவழைத்தேன். சைமனின் வெடிமருந்துகள் நனைந்தன. மேலும், இந்தியப் படையில் நான் ஆட்களை அதிகரித்தேன். இரு படைகளும் மோதின. சைமனின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இயங்கவில்லை. சைமனின் வீரர்கள் பயந்து ஓடினர். இந்தியப் படை அவர்களைச் சின்னாபின்னமாக்கியது. அரசர் கோபமடைந்து சைமனைச் சிறையில் அடைத்திருக்கிறார். விரைவில் நான் அவனை வெளியேற்றி அவனுடைய அப்பாவிடம் அனுப்பப் போகிறேன். என் வேலை அதோடு முடிகிறது.. உங்களுக்கும் விரைவில் உதவுவேன்.”

இரண்டாவது குட்டிப் பிசாசு பேசியது “நான் தாரசைத் தொடர்கிறேன். அவனுடைய மனத்தில் பேராசையை எழுப்பியிருக்கிறேன். எதைப் பார்த்தாலும் வாங்குகிறான். கையிலிருந்த ரொக்கத்தை எல்லாம் செலவழித்து விட்டான். ‘பணம், பணம்’ என்று அலைகிறான். நாலா பக்கங்களிலிருந்தும் அவனை அழுத்துகிறது. கடன் என்னும் பள்ளத்தில் கீழே கீழே போய்க் கொண்டே இருக்கிறான். அவன் கடன்களை அடைக்கத் துவங்குவதற்குள் நான் அவனுடைய சரக்குகளை அழித்து விடுவேன். இன்னும் ஒரே வாரத்தில் தாரஸ் வியாபாரத்தை விட்டுவிட்டு ஓடி விடுவான்.”

கடைசியில் மூன்றாவது குட்டிப் பிசாசு தன் கதையை மொழிந்தது- நான் அறிவில்லாத ஜவானிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன். முதலில் அவனுக்கு நான் வயிற்று வலியை உண்டாக்கினேன். அந்த முட்டாள் வலியை லட்சியம் செய்யாமல் வழக்கம்போல வழக்கம் போல் வேலைக்கு வந்து விட்டான். கலப்பையைப் பிடித்துக் கொண்டு உழுதான். நான் வயலின் மண்ணைக் கெட்டிப்படுத்தினேன். கலப்பையை ஒடித்தேன். பலவித தொல்லைகளை கொடுத்தேன். அவன் எதற்கும் மசியவில்லை. அவன் புதிய கலப்பையைக் கொண்டு வந்து, வெறி பிடித்தவன் போல உழுதான். ஜவான் மாடு போல உழைக்கிறான். அவனை முறியடிப்பது கடினமாக இருக்கிறது. நீங்களும் வந்து உதவினால்தான் முடியும்.”

கூட்டம் முடிந்ததும் குட்டிப்பிசாசுகள் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றன.

ஜவான் உழுவதற்கு இன்னும் ஒரு சின்னத் துண்டு நிலமே பாக்கி இருந்தது. அதில் ஏர் நகர மறுத்தது. ஏரின் அடிப்பாகத்தை யாரோ பிடித்து நிறுத்துவது போல இருந்தது. ஜவான் மண்ணுக்கு அடியில் கையை விட்டு ஏதோ ஒன்றைப் பிடித்து வெளியே இழுத்தான். சிறிய அளவில் கன்னங் கரேலென்று நீண்ட வாலுடன் குட்டிப்பிசாசு ஒன்று காட்சி அளித்தது.

தனக்குத் தொல்லை அளித்த பிசாசை ஜவான் கொல்லப் போனான். ”கொல்லாதே! என்னை விட்டுவிடு. செய் நீ கேட்கும் உதவியைச் செய்கிறேன்”, என்று பிசாசு கெஞ்சியது. ”என் வயிற்று வலி தீர வேண்டும்”, கேட்டான். என்று ஜவான்.

உடனே பிசாசு பூமிக்குள் சென்று மூன்று வேர்களை எடுத்து ஜவானிடம் கொடுத்தது. ‘”இதில் ஒன்றைச் சாப்பிட்டால் எல்லா வலிகளும் தீரும்” என்றது. ஐவான் ஒரு வேரைச் சாப்பிட்டான். வலி நீங்கியது. மற்ற இரண்டு வேர்களைப் பத்திரமாக வைத்துக்கொண்டான். குட்டி பிசாசு பூமிக்குள் பாய்ந்து மறைந்தது.

மாலையில் ஜவான் வயலிலிருந்து திரும்பினான். சிறையிலிருந்து தப்பித்த சைமன் தன் வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். சைமன் ஜவானிடம், ‘எனக்கு வேலை போய் விட்டது. மறுபடியும் வேலை கிடைக்கும் வரை நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கேட்டான். ஜவான் ஒப்புக் கொண்டான்.

சைமனின் குட்டிப் பிசாசு தன் வேலையை முடித்துக் கொண்டு ஜவானின் குட்டிப் பிசாசுக்கு உதவி செய்ய வந்தது. ஆனால், அதைக் காணவில்லை. ஏதோ ஆபத்து வந்து அது மறைந்திருக்க வேண்டும் என்று ஊகித்தது. ஜவானைத் துன்புறுத்தும் பணியை அது மேற்கொண்டது.

ஜவானுடைய வேறொரு நிலத்தில் பயிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஜவானும், தங்கையும் கதிர்களை அறுக்க ஆரம்பித்தனர். பயிரின் மறைவில் ஒளிந்து கொண்டு குட்டிப் பிசாசு அரிவாளை ஒழுங்காக நகர விடாமல் தொந்தரவு செய்தது. ஜவான் புதிய அரிவாளை எடுத்து ஒரே மூச்சில் அறுவடையை முடித்தான். வண்டியில் ஏற்றுவதற்காகக் கதிர்களைச் சிறுசிறு கட்டுகளாகச் செய்து அடுக்கினான்.

பிசாசு கட்டுகளின் இடையே புகுந்து கொண்டு அவற்றை அழுகச் செய்தது. ஜவான் ஒரு முள் கரண்டியால் அதைக் குத்தி வெளியே எடுத்தான். *மறுபடியும் வந்து விட்டாயா?” என்று கோபத்தோடு கேட்டுக் கொண்டே அதைக் கொல்லப் போனான். தன்னை விட்டுவிடும்படி பிசாசு கெஞ்சியது. பதில் உதவியாக அது வைக்கோல் கட்டுகளைப் போர் வீரர்களாகவும், வீரர்களைப் பழையபடி வைக்கோல் கட்டுகளாகவும் மாற்றச் செய்யும் இரு அரிய பாடல்களை ஜவானுக்குக் கற்பித்தது. பிறகு பூமிக்குள் ஓடி மறைந்தது. வீரர்கள் சேர்ந்து வழங்கும் வேடிக்கை யான இசையைக் கொண்டு தன் ஊர் மக்களை மகிழ்விக்கலாம் என்று ஜவான் எண்ணினான்.

களத்து மேட்டிலிருந்து ஜவான் வீடு திரும்பினான். கடன்களை அடைக்க முடியாத தாரஸ் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தான். ஜவான் இன்முகத்தோடு அவர்களை வரவேற்றுத் தன்னோடு தங்கும்படி கேட்டுக் கொண்டான்.

தாரசின் குட்டிப் பிசாசு தன் பணியை முடித்துக்கொண்டு ஜவானின் குட்டிப் பிசாசுகளைத் தேடியது. காணவில்லை. ஏதோ ஆபத்து வந்து மற்ற இரண்டு பிசாசுகளும் மறைந்திருக்க வேண்டும் என்று அது ஊகித்தது. ஆகவே ஜவானின் நலன்களைக் கெடுக்கும் பணியை அது மேற்கொண்டது.

சகோதரர்களுக்கு ஜவானின் வீட்டில் இடம் போதவில்லை. பட்டணத்து நாகரிகத்தில் முழுகியிருந்த அண்ணிகள் இருவருக்கும் பட்டிக் காட்டு ஐவானின் தோற்றமும், செய்கைகளும் அறவே பிடிக்கவில்லை. ஒரு புதிய இல்லம் கட்டும்படி அவர்கள் ஆலோசனை கூறினர். இல்லத்திற்கு மரம் கொண்டுவர ஜவான் காட்டிற்குப் போனான். உயரமான மரங்களின் கிளைகளை வெட்டினான். வெட்டப்பட்ட கிளைகள் கீழே விழவில்லை. மேலேயே சிக்கிக் கொண்டன. மரத்தின் உச்சியில் அந்தக் குட்டிப் பிசாசு அமர்ந்து கொண்டு பல விதங்களிலும் அவனுக்கு இடைஞ்சல் விளைவித்தது. களைப்பு மேலிட ஜவான் மரத்தடியில் உட்கார்ந்தான். அன்றைக்கு அவனுடைய வேலையைத் தடுத்து நிறுத்தி விட்டதாகக் குட்டிப் பிசாசு எண்ணிக் குதூகலித்தது.

ஜவான் திடீரென எழுந்தான். ஒரே மூச்சில் அநேக மரங்களை வரிசையாக வெட்டிக் கீழே சாய்த்தான். கீழே விழுந்த மரத்தின் அடியில் குட்டிப் பிசாசு சிக்கிக் கொண்டது. அதனால் எழுந்திருக்க முடியவில்லை. ஜவானின் பார்வை தற்செயலாக அதன் மீது விழுந்தது. பழைய குட்டிப் பிசாசு என்று நினைத்து அதைக் கொல்வதற்காகக் கோடரியை ஓங்கினான். ”என்னைக் கொல்லாதே! உனக்கு ஒரு உதவி செய்கிறேன்”, என்று சொல்லி, ஓக் மரத்தின் இலைகளைத் தேய்த்துப் பவுன் காசுகள் வரவழைக்கும் வித்தையை அது அவனுக்குக் கற்பித்தது. குழந்தைகள் உருட்டி விளையாடப் பொற்காசுகள் உதவும் என்று ஜவான் கருதினான். மூன்றாவது குட்டிப் பிசாசும் பூமிக்குள் பாய்ந்து மறைந்தது.

ஐவானும்,சகோதரர்களும் தனித் தனியே வீடு கட்டிக் கொண்டு வசித்தனர். அறுவடை முடிந்ததும் ஜவான் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான். தொழிலாளர்களின் விருந்து தங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லி மூத்த சகோதரர்கள் இருவரும் ஒதுங்கினர். ஊரார் அனைவரும் உற்சாகமாக அதில் கலந்து கொண்டனர். விருந்தில் உணவிற்குப் பிறகு பாட்டு, ஆட்டம் எல்லாம் நிறைய இருந்தன.

“என்னைப் பற்றி பாடுங்கள்; பரிசு தருகிறேன்”, என்று ஜவான் பெண்களிடம் கூறினான். அவர்கள் பாடினர். ஜவான் காட்டுக்குள் ஓடி ஒரு கூடை நிறைய பொற் காசுகளைக் கொண்டு வந்து இறைத்தான். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர்.

இன்னொரு அதிசயத்தையும் ஜவான் அவர்களுக்குச் செய்து காட்டினான். வைக்கோல் கட்டிலிருந்து வீரர்களை வரவழைத்தான். அவர்கள் இனிமை யாகப் பாடி இசைக் கருவிகளை வாசித்தனர். விருந்தினர் கேட்டு மனம் மகிழ்ந்தனர்.

அடுத்தநாள் ஜவானைத் தேடிக் கொண்டு சைமன் வந்தான்; ”உன்னிடம் நிறைய வீரர்கள் இருக்கிறார்களாமே? எனக்கு ஒரு படையைக் கொடுத்தால் நான் ஒரு நாட்டை வெல்லுவேன்” என்றான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஜவான் உடனே வைக்கோல் கட்டுகளை வீரர்களாக மாற்றிக் கொடுத்தான். சைமன் அவர்களுக்குத் தலைமை ஏற்று நடத்திச் சென்றான்.

சிறிது நேரங்கழித்து ஜவானைத் தேடித் தாரஸ் வந்தான்; “உன்னிடம் நிறையப் பொற்காசுகள் இருக்கிறதாமே? எனக்குக் கொஞ்சம் கொடுத்தால் நான் இந்த உலகத்தையே விலைக்கு வாங்குவேன்” அதைக் கேட்டு வியப்புற்ற ஜவான் ஒக் மரத்தின் இலைகளைக் காசுகளாக மாற்றிக் கொடுத்தான். தாரஸ் அவற்றைப் பெற்றுக்கொண்டு பட்டணத்தில் மறுபடியும் வியாபாரம் தொடங்கினான்.

சைமன் ஒரு நாட்டை வென்று அரசன் ஆனான். ஆனால் வீரர்களைக் காப்பாற்ற அவனிடம் போதிய பவுன் காசுகள் இருக்கவில்லை. வியாபாரம் செய்த தாரஸ் பொற்காசுகளைக் குவித்தான். ஆனால் அவற்றைப் பாதுகாக்க அவனிடம் போதிய வீரர்கள் இருக்கவில்லை. சைமனும் தாரசும் மேலும் பணத்தையும் படைகளையும், வாங்கி வர ஜவானிடம் போயினர். ”எனக்கு இன்னும் கொஞ்சம் வீரர்கள் வேண்டும்” – ஜவானிடம் சைமன் கேட்டான்.

“இனிமேல் உனக்கு வீரர்களைத் தர முடியாது”, என்று உறுதியாக ஜவான் மறுத்துவிட்டான்.

“எவ்வளவு பேர் வேண்டுமானாலும் தருகிறேன் என்று முன்பு சொன்னாய். இப்போது முட்டாள் தனமாக முடியாது என்று சொல்கிறாயே! என்ன காரணம், தம்பி!”என்று சைமன் கேட்டான்.

இந்த ஊர்ப் பெண்ணின் கணவனை உன் வீரர்கள் யுத்தத்தில் கொன்று விட்டனர். அவள் துக்கம் தாங்காது அழுது கொண்டிருக்கிறாள். வீரர்கள் என்றால் இனிய இசை வழங்கி மக்களை மகிழ்விப்பார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் இரக்கம் இல்லாமல் கொலை செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது. வீரர்கள் வேண்டும் என்று மறுபடியும் கேட்காதே!” என்று தீர்மானமாகச் சொன்னான் ஜவான்.

அடுத்து தனக்குப் பொற்காசுகள் வேண்டும் என்று தாரஸ் கேட்டான். அதற்கும் ஜவான் மறுத்து விட்டான். தாரஸ் காரணம் கேட்கவே,

“மைக்கேலின் பெண்ணிடம் ஒரு பசு இருந்தது. குழந்தைகள் அந்தப்பாலைப் பருகி வந்தனர். ஒருநாள் உன் கணக்குப் பிள்ளை சில பொற்காசுகளைக் கொடுத்து அந்தப் பசுவை ஓட்டிச் சென்று விட்டான். குழந்தைகள் பால் இல்லாமல் பசியால் தவிக்கின்றனர். பொற்காசுகளை வைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் விளையாடுவாய் என்று நினைத்தேன். ஆனால் அவர்களுடைய பசுவைப் பறித்துக்கொண்டு அவர்களைப் பட்டினி போட்டு விட்டாயே! இனிமேல் என்னிடம் காசு கேட்காதே!” என்று கோபத்தோடு கூறினான் ஜவான்.

சைமனும், தாரசும் தங்கள் உடைமைகளில் ஒரு பாதியை மற்றவருக்கு வழங்கி, இருவரும் அரசர் ஆயினர். இன்பமாக வாழ்ந்தனர். ஜவானும், அவன் ஊமைத் தங்கையும் வழக்கம் போல் வயலில் உழைத்துத் தங்கள் பெற்றோரை அன்போடு காத்தனர்.

ஒருசமயம் ஜவானின் நாய்க்கு நோய் கண்டது. அவனிடமிருந்த வேர்களில் ஒன்றைத் தற்செயலாக அது விழுங்கியது. உடனே அதற்கு நோய் தீர்ந்தது. அதேசமயம் அந்நாட்டு அரசகுமாரி நோயுற்றாள். மருந்துகள் பலிக்கவில்லை. திருமணம் ஆகாத ஆண்மகன் யாராவது அவளுடைய நோயைத் தீர்த்தால், அவனுக்கு அரசகுமாரியை மணம் செய்வதாக மன்னர் அறிவித்தார்.

பெற்றோர்கள் தூண்டவே, அபூர்வ வேரை எடுத்துக் கொண்டு அரசகுமாரியைக் குணப்படுத்த ஜவான் புறப்பட்டான். வழியில் நோயாளியான ஒரு பிச்சைக்காரியைக் கண்டான். அவள் மீது இரக்கப்பட்டுத் தன்னிடமிருந்த ஒரே வேரை அவளுக்குக் கொடுத்தான். பிச்சைக்காரி நோய் நீங்கி அவனை வாழ்த்திச் சென்றாள்.

அரசகுமாரிக்காகவும் ஜவான் இரங்கினான். தன்னிடம் வேர் இல்லாவிட்டாலும் அவளைக் காண்பதற்காக அரண்மனைக்குப் போனான். ஜவான் அவளுடைய அறையில் நுழைந்ததும் அவள் குணமடைந்தாள்! மன்னர் ஜவானைப் பாராட்டி, அரசகுமாரியை அவனுக்கு மணம் முடித்தார். சில தினங்களில் மன்னர் இறக்கவே. ஜவான் அந்த நாட்டு அரசன் ஆனான்.

மூன்று குட்டிப் பிசாசுகளிடமிருந்தும் செய்தி வராமல் போகவே, கிழட்டுப் பேய் அவற்றைத் தேடிப் போயிற்று. எங்கும் காணவில்லை. அவை மாயமாக மறைந்திருந்தன. சைமனும், மற்ற இரு சகோதரர்களும் அரசர்களாகி அன்போடு வாழ்ந்தனர். அதைக் காணச் சகிக்காத கிழட்டுப் பேய் தானே முன் நின்று சகோதரர்களுக்கிடையே விரோதத்தை உண்டாக்கி அவர்களை அழிக்கத் தீர்மானித்தது.

கிழட்டுப் பேய் ஒரு பெரிய ராணுவ அதிகாரியாக வேடமணிந்து கொண்டது. அந்த அதிகாரி சைமனிடம் வேலைக்கு அமர்ந்தார். அவருடைய ஆலோசனையைக்’ கேட்ட சைமன் இளைஞர்களுக்குக் கட்டாய ராணுவ சேவையைக் கொண்டு வந்தான். பயங்கரச் சேதத்தை விளைவிக்கும் குண்டுகளைத் தயாரித்தான். அண்டை நாடுகளைப் பிடிக்க ஆசைப்பட்டான்.

இந்திய அரசனைத் தாக்கும்படி சைமன் தளபதிக்குக் கட்டளையிட்டான். இந்திய அரசன் பெண்களையும் சேர்த்துப் பெரும் படை திரட்டியிருந்தான். அவனிடம் பறக்கும் குண்டுகள் இருந்தன. போரில் இந்திய அரசன் வென்றான். சைமன் தோல்வியுற்று நாட்டை விட்டு ஓடினான். கிழட்டுப் பேய் ஒரு வியாபாரியாக வேடத்தை மாற்றிக் கொண்டது. அந்த வியாபாரி தாரசின் நாட்டுக்குச் சென்று தொழிலைத் துவக்கினார். அவர் அகப்பட்ட பொருள்களை எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவற்றைப் பதுக்கி வைத்தார். நாட்டில் பணம் பெருகுகிறது. பொருள்கள் அரிதாயின. நாளடைவில் தாரஸ் அரசனின் தேவைக்குக் கூட எதுவும் கிடைக்கவில்லை. வரிகள் மட்டும்தான் கிடைத்தன. தாரஸ் கோபமடைந்து புதிய வியாபாரியை நாடு கடத்தினான். அவர் எல்லைக்கு வெளியே சென்று கடையைத்திறந்தார். வியாபாரத்தைத் தொடர்ந்தார். அவர் தந்த அதிக விலைக்கு ஆசைப்பட்ட மக்கள் உற்பத்தியை எல்லாம் வழக்கம் போல அவருக்கே விற்றனர். தன்னிடம் இருக்கும் அளவற்ற செல்வத்தால் அவர் தாரஸ் அரசனைக்கூட விலைக்கு வாங்க முடியும் என்று மக்கள் பேசினர்.

தாரஸ் அரசனுக்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. அவன் பசியால் தவித்தான். சைமன் அந்தச் சமயத்தில் தாரசிடம் ஓடிவந்து உதவி கேட்டான். தாரஸ் கையை விரித்தான்.

சைமனையும், தாரசையும் சீரழித்த கிழட்டுப் பேய் மறுபடியும் ஒரு ராணுவத் தளபதியாகத் தோற்றம் எடுத்தது. அந்தத் தளபதி ஜவானிடம் சென்று, ”அரசே! ராணுவமே இல்லாமல் இந்தப் பெரிய நாட்டை ஆளுகின்றீர்களே! அனுமதி கொடுத்தால் ஒரு பெரிய படையைத் திரட்டிப் பயிற்சி அளிக்கிறேன்” என்றான்.

“அப்படியே செய்.. ஆனால், போர் வீரர்கள் நன்றாகப் பாடவேண்டும்” என்று கட்டளையிட்டான் ஜவான்.

புதிய தளபதி ஊர் ஊராகச் சென்று கூட்டம் போட்டான்; பிரச்சாரம் செய்தான்; முதலில் நயமாகவும், பிறகு பயமாகவும் பேசி மக்களைப் படையில் சேரத் தூண்டினான். அவர்கள் உழைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வாக இருந்தது. அவர்கள் படையில் சேர மறுத்து விட்டனர். முயற்சிகளில் தோல்வியுற்ற தளபதி மக்களைப் பழிவாங்க விரும்பி அண்டை. நாட்டு மன்னனிடம் போனான்; ‘ஐவான் நாட்டில் படைகளோ, பாதுகாப்போ இல்லை. ஆடு மாடுகளும், தானியங்களும் ஏராளமாக இருக்கின்றன. நாம் படையெடுத்து, அவற்றை எளிதில் கைப்பற்றுவோம்” என்று கூறினான். மன்னன் இசைந்தான். போர் முரசு முழங்கியது. ஐவான் நாட்டில் அந்நியர் புகுந்தனர். கால்நடைகளையும், தானியங்களையும் அவர்கள் கவர்ந்து சென்றனர்.

எதிரிப் படைகள் கிராமம் கிராமமாகப் புகுந்தன. அவர்களை வேடிக்கை பார்க்க மக்கள் திரளாக வந்தனர். ஆனால் ஒருவராவது எதிர்க்கவில்லை. மாறாக இரக்கம் காட்டினர். “நீங்கள் மிகுந்த கஷ்ட நிலையில் இருப்பது போலத் தோன்றுகிறது. எங்கள் நாடு. வளமான நாடு. எங்களுடனேயே தங்கி விடுங்களேன்” என்று சொல்லி அன்பைப் பொழிந்தனர். எதிர்ப்பு இல்லாத ஊரில் வீரர்கள் போர் செய்ய விரும்பவில்லை. ‘முட்டாள்கள் ‘ என்று மக்களைத் திட்டிக் கொண்டே வீரர்கள் திரும்பிச் சென்றனர்.

படை பலத்தால், கிழட்டுப்பேய் ஐவானையும், அவனுடைய மக்களையும் அசைக்க முடியவில்லை. அடுத்து பண பலத்தால் அவர்களைச் சோதிக்க முயன்றது. அதற்காக அது ஒரு பணக்காரப் பிரபுவாக உருவெடுத்தது. ஐவானிடம் சென்று நவீன வியாபார முறைகளை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க அனுமதி பெற்றது.

அந்தப் பிரபுவிடம் ஏராளமான பொற்காசுகள் இருந்தன. அந்தக் காசுகளைத் தாராளமாகச் செலவழித்து அவர் ஒரு மாளிகை கட்டத் தொடங்கினார். அப்படியே ஜவானையும், அவனுடைய மக்களையும் தன் காசுக்கு அடிமையாக்கத் திட்டமிட்டார்.

ஜவானுடைய நாட்டில் பண்ட மாற்று முறைதான் இருந்தது. பணப்புழக்கம் இருக்கவில்லை. பிரபுவின் பொற்காசுகளை அவர்கள் அதிசயத்தோடு நோக்கினர். பிரபுவின் மாளிகைக்கு வேண்டிய பொருள்களையும், உழைப்பையும் கொடுத்துப் பதிலுக்கு அவருடைய பொற்காசுகளை முதலில் பெற்றனர். அவற்றை ஒரு நூலில் கோத்துப் பெண்கள் மாலையாக அணிந்தனர். அதைச் சக்கரமாகப் பாவித்துச் சிறுவர்கள் அதைத் தெருவில் உருட்டி விளையாடினர். அவர்களுக்குப் பொற்காசு அலுத்து விட்டது. பிரபுவிடமிருந்து அதை ஏற்க மறுத்தனர். பொற்காசுகளைத் தவிர, தங்களுக்குத் தேவையான வேறு ஏதாவது பொருளையோ அல்லது உழைப்பையோ அவர்கள் எதிர்பார்த்தனர்.

கையில் காசை வைத்துக்கொண்டு பிரபு வீடு வீடாகச் சென்று உணவு கேட்டார். அந்த நாட்டில் கடனும் இல்லை. வரியும் இல்லை. மக்கள் காசை லட்சியம் செய்யவில்லை. தங்கள் வழக்கப்படி பண்டமாற்று முறை அல்லது உழைப்புக்கு மட்டுமே உணவு கொடுக்கச் சம்மதித்தனர். பாவம், பிரபு பசியால் வாடினார்.

பிரபுவின் நிலைக்கு இரங்கிய மக்கள் ஜவான் அரசனிடம் சென்று அறிவுரை கேட்டனர். ”ஒவ்வொரு நாளும் பிரபு ஒரு வீட்டிற்குச் சென்று ஏதாவது ஒரு சிறிய வேலையைச் கழிந்தன. செய்ய வேண்டும். அந்த வீட்டார் உணவு அளிக்க வேண்டும்” என்று ஜவான் உத்தரவிட்டான். வேறு வழியில்லாமல் பிரபு வீடு வீடாகச் சென்றார். சிறு வேலைகளைச் செய்தார். அதே மாதிரி ஒருநாள் ஜவானின் மாளிகைக்கும் சென்றார். மாளிகையின் சாப்பாட்டு அறையை ஜவானின் ஊமைத் தங்கை நிர்வகித்து வந்தாள். அவள் உண்ண வருவோரை எல்லாம் முதலில் கைகளை நீட்டச் சொன்னாள். உழைத்து உரமேறிய கரங்களுக்கே முதலில் உணவிட்டாள். அவர்கள் உண்ட மிச்சம், மீதியை மற்றவர்களுக்குக் கொடுத்தாள். உழைப்பு விஷயத்தில் அவள் மிகவும் கண்டிப்பாக இருந்தாள்.

ஒருநாள் சாப்பிட வந்தவர்களின் கைகளை வழக்கம் போல் அவள் பார்வையிட்டாள். பிரபுவின் கைகள் மென்மையாகவும், சுத்தமாகவும் இருந்தன. உடனே, “உங்களுக்கு இந்தப் பந்தியில் உணவு கிடையாது. கடைசியில்தான்” என்று சைகை மூலம் அவள் தெரிவித்தாள், பிரபுவுக்குப் பசி ஒருபக்கம், கோபம் ஒரு பக்கம். “இதென்ன முட்டாள்தனமான சட்டமாக இருக்கிறதே! கைகளால்தான் ஒரு மனிதன் வேலை செய்ய முடியுமா என்ன? தலையினாலும் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியாதா? சொல்லப் போனால் தலையால் வேலை செய்வதுதான் ரொம்பக் கஷ்டம். சில சமயம் தலையே வெடித்து விடும்” என்று பிரபு ஆத்திரத்தோடு கூச்சலிட்டார்.

’’தலையால் வேலையைச் செய்யும் கலையை என் மக்களுக்குச் சொல்லிக் கொடுங்களேன். அது உபயோகமாக இருக்கும்”, என்று பணிவோடு ஜவான் வேண்டினான். பிரபு ஓர் உயர்ந்த கோபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதில் ‘அநேக படிக்கட்டுகள் இருந்தன. பிரபு அவற்றில் ஏறி உச்சியை அடைந்தார். அவர் செய்யப் போகும் புதுமையைக் காண மக்கள் கீழே திரளாகக் கூடினர்.

“உழைக்காமலே வாழ்வது எப்படி?” என்று பிரபு உரை ஆற்றினார். உழைப்பு ஒன்றையே உன்னதமாகக் கருதிய அந்த மக்களுக்கு அவருடைய வாய்ச் சொற்கள் புரியவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்தனர். அப்படி மக்கள் கூடுவதும், கலைவதுமாகச் சிலநாட்கள் கழிந்தன.  ஒருவராவது பிரபுவுக்கு உணவு அளிக்கவில்லை. தலையால் உழைக்கும் மனிதன் உணவையும் அப்படியே தயாரிக்க முடியும் என்று நம்பினர்.

பிரபுவுக்குப் பசி அதிகரித்தது. கண்கள் இருண்டன. தலைசுற்றியது. அவர் கீழே சரிந்தார். உச்சியிலிருந்து தரையை நோக்கி உருளத் தொடங்கினார். ஒவ்வொரு படியிலும் அவருடைய தலை ‘டங், டங்’ என்று இடித்துக் கொண்டு வந்தது.

அதைக் கண்ட மக்கள் ஜவானுக்குச் செய்தி அனுப்பினர். ஜவான் விரைந்தான். ஒவ்வொரு படிக்கட்டிலும் தலையை முட்டிக் கொண்டு உருண்டு வந்த பிரபு, கடைசியில் பூமியிலும் முட்டிக் கொண்டார். பூமி திடீரெனப் பிளந்தது. பிரபுவின் உருவில் இருந்த கிழட்டுப் பேய் அதற்குள் பாய்ந்து மறைந்தது. பெரிய ஒரு ஓட்டை மட்டும் காட்சி அளித்தது!

(Leo Tolstoy ரஷ்ய மொழியில் எழுதிய ‘The Story of Ivan The Fool)

சைகை என்ற கதையின் சுருக்கமே இது.)

000

The post ஜவான் ஒரு அசடு first appeared on Nadukal.

  •  

போஸ்டாபீஸ்

தூமகேது (குஜராத்தி)

பின்னிரவின் மங்கிய ஆகாயத்திலே மனித வாழ்க்கையின் இன்ப நினைவுகள் சுடர் விடுவது போல் நட்சத்திரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. குளிர் காலமானதால் பனிக்காற்றின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக ஒரு பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டு ஒரு கிழவன் நகரத்தின் மத்தியிலிருந்து வந்து கொண்டிருந்தான். சுதந்திர வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அநேக வீடுகளிலிருந்து மணியின் இனிய நாதத்துடன் பெண்களின் மெல்லிய குரலோசை கலந்து வருவது அந்த இரவில் அவனுக்குத் துணை செய்ய வருவது போலிருந்தது. நாய்கள் குரைப்பதும், அதிகாலையில் எழுந்து விட்டவர்களின் காலடி ஓசையும், அகாலத்தில் எழுந்துவிட்ட பறவையின் சிறகடிப்பும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தன. இவைகளைத் தவிர நகரத்தில் பூரண அமைதி குடிகொண்டிருந்தது. மக்கள் இன்ப நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். குளிர் கால இரவானதால் நேரம் வளர்ந்து கொண்டிருப்பது போலிருந்தது. சொல்லும் செயலும் வேறுபட்டிருக்கும் குணம் படைத்த மனிதனைப் போல குளிர்காலக் காற்றும் உடலைத் துளைத்துக் கொண்டிருந்தது. கிழவன் குளிரில் நடுங்கிக் கொண்டு அமைதியாக நடந்து நகரின் வெளிப்புற வாயிலை அடைந்தான். பிறகு தன் பழைய கைத்தடியை ஊன்றிக்கொண்டு பாதை வழியே நடந்தான். சாலையின் ஒரு புறத்தில் அடர்ந்த மரங்களிருந்தன. மறுபுறத்தில் நகரத்தின் பூங்கா அமைந்திருந்தது. இங்கு குளிர் அதிகமாக இருந்தது. இருளும் மைபோலப் படர்ந்திருந்தது. சுக்ர நட்சத்திர ஒளியும் பூமியில் பனிபோலப் படர்ந்திருந்தது. பூங்காவின் கடைசியில் ஒரு புது மாதிரியான கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. மூடியிருந்த ஜன்னல்கள் வழியாக வெளிச்சம் உள்ளிருந்து வந்து கொண்டிருந்தது.

பக்தன் கோபுரத்தின் சிகரத்தைக் கண்டதும் ஆனந்தம் அடைவதுபோல இந்தக் கிழவனும் அந்தக் கட்டிடத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். வெளிப்புறச் சுவரில் ’போஸ்ட் ஆபீசு’ என்ற போர்டு காணப்பட்டது.

கிழவன் போஸ்ட் ஆபீசின் வெளிப்புறத் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டான். உள்ளே வேலை செய்து கொண்டிருந்த நாலைந்து பேர்களுடைய சத்தம் தான் வெளிவந்து கொண்டிருந்தது. இதைத் தவிர வேறு எவ்வித சத்தமும் கிடையாது.

‘போலீஸ் சூபரின்டெண்ட்’ என்று உள்ளிருந்து குரல் கேட்டது. கிழவன் திடுக்கிட்டான். பிறகு அமைதியடைந்து உட்கார்ந்து கொண்டான். ஆசையும் அன்பும் இந்தக் குளிரில்கூட அவனுக்கு உஷ்ணத்தை அளித்து வந்தன.

உள்ளிருந்து குரலுக்கு மேல் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சார்ட்டர் விலாசத்தைப் படித்தபடி தபால்காரனிடம் கடிதங்களை வீசிக்கொண்டிருந்தார்.

கமிஷனர், சூபரின்டெண்ட், லைப்ரேரியன் என்று பல விலாசங்களைப் பார்த்து சார்ட்டர் கடிதங்களை வேகமாக வீசிக் கொண்டிருந்தார்.

இதற்குள் உள்ளேயிருந்து ஒரு விநோதமான குரல் கேட்டது.

”கோச்வான், அலிபாபா!”

கிழவன் எழுந்து நின்று கொண்டான். பக்தியுடன் ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தான். பிறகு முன்னே எழுந்து வந்து கதவின்மீது கையை வைத்தான்.

”கோகுல்!’’

“யார்?”

‘’எனக்குக் கடிதம் இருக்கிறதா?….நான் வந்திருக்கிறேன்.”

பதிலுக்கு கர்ண கடூரமான கேலிச் சிரிப்புத்தான் வெளிப்பட்டது.

“பாபுஜி! இவன் ஒரு பைத்தியக்காரக் கிழவன். இவன் எப்போதும் தன் தபாலைப் பெற்றுப் போக வந்து கொண்டிருக்கிறான்.”

இவ்விதம் சார்ட்டர் போஸ்ட் மாஸ்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்குள் கிழவன் தன் பழைய இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். ஐந்து வருஷமாக இந்த இடத்தில் உட்கார்ந்து கிழவனுக்குப் பழக்கமாகி விட்டது.

முதலில் அலி ஒரு வேட்டைக்காரனாக இருந்தான். அபினி சாப்பிடுபவன் அபினி இல்லாமல் வாழ முடியாததுபோல அலியும் வேட்டையாடாமல் இருக்க முடியாத நிலையை அடைந்து விட்டான். கௌதாரி போன்ற பறவைகளை அலி பார்த்து விட்டால் அடுத்த கணமே அவை அவன் கைக்கு வந்துவிடும். முயல் பதுங்கியிருக்கு மிடத்தைச் சுலபமாகக் கண்டு கொள்வான். வேட்டை நாய்களால் காதுகளை உயர்த்திக்கொண்டு அங்கு மிங்கும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் முயல்களைக் கண்டு கொள்ள முடியாது. ஆனால் அலி அவை இருக்குமிடம், போகும் வழி முதலியவைகளை எல்லாம் எளிதில் புரிந்துகொள்வான். சில சமயங்களில் மீன்களிடம்கூட உறவு வைத்துக் கொள்வான்.

ஆனால் வாழ்க்கையின் அந்திமப் பருவம் நெருங்க நெருங்க அவனுடைய வேட்டைத் தொழிலும் வேறு திசையில் திரும்பியது. அவனுடைய ஒரே ஒரு மகளான மரியமும் கலியாணம் ஆகிக் கணவன் வீடு சென்றுவிட்டாள். அவளுடைய கணவன் ராணுவத்தில் வேலை பாத்து வந்ததால் பஞ்சாபில் ஏதோ ஒரு இடத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டான். யாருக்காக வாழ்ந்து வந்தானோ அவளிடமிருந்து அலிக்கு இந்த ஐந்து வருடமாக ஒரு கடிதம்கூட வரவில்லை. அலிக்கு இப்போதுதான் அன்பு, பிரிவு என்பதெல்லாம் நன்கு புரிய ஆரம்பித்தன. முன்பெல்லாம் கௌதாரிக் குஞ்சுகள் பயத்துடன் வேகமாக ஓடுவதைப் பார்த்து அலி சிரிப்பான். இது வேட்டைக்காரனுடைய ஆனந்தம்.

வேட்டையில் உள்ள ஆனந்தம் அவனுடைய ஒவ்வொரு நரம்புகளிலும் நிறைந்திருந்தது. ஆனால் மரியம் அவனை விட்டுப் பிரிந்த உடனே வாழ்க்கையே அவனுக்கு சூன்யமாகப்பட்டது. அன்றிலிருந்து வேட்டைத் தொழிலை விட்டு விட்டு பயிர் பச்சைகள் நிறைந்த வயல் பக்கம் அவன் திருஷ்டியைச் செலுத்தினான். அலி வாழ்க்கையில் முதல் முறையாக அன்பின் சிருஷ்டி பிரிவு என்னும் கண்ணீர்தான் என்பதை உணர்ந்தான். அதற்கப்புறம் அலி ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு வாய் விட்டு அழுதான். அன்றிலிருந்து காலையில் நான்கு மணிக்கு எழுந்து இந்தப் போஸ்ட் ஆபீசுக்கு வருவான். அவன் பெயருக்குக் கடிதம் வருவதில்லை. ஆனால் மரியத்திடமிருந்து ஒரு நாளைக்குக் கடிதம் வரும் என்று பக்தனுடைய வைராக்ய சித்தத்துடன் தினமும் காலையில் வந்து கொண்டிருந்தான்.

போஸ்ட் ஆபீசு உலகத்திலே ஒரு சுவையற்ற இடம்தான். இருந்தாலும் அவனுக்கு அது தர்ம க்ஷேத்திரமாக இருந்தது. ஒரே இடத்தில் ஒரே மூலையில் அவன் வழக்கமாக உட்கார்ந்து கொள்வான். அவன் நிலையை அறிந்து கொண்டு அனைவரும் வேடிக்கை செய்தனர். சில சமயங்களில் அவன் பெயரைக் கூப்பிடுவார்கள். அதைக் கேட்டு அலி போஸ்ட் ஆபீசு கதவு வரையிலும் விரைந்து ஓடுவான். அதைக் கண்டு சிரித்து மகிழ்ந்தனர். எல்லையற்ற நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் தினமும் வருவான். வெறுங் கையுடன் திரும்பிப் போவான்.

அலி உட்கார்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொருவராகக் கடிதம் வாங்கிப் போக வந்து கொண்டிருந்தனர். அநேகமாக நகரத்திலுள்ள ஆபீசுகளிலிருந்துதான் கடிதம் வாங்கப் போக வேலைக்காரர்கள் வருவார்கள். சிலர் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். இன்னும் சிலர் பளபளக்கும் பூட்ஸ்கள் அணிந்திருப்பார்கள். இப்படிப் பலவிதமாகத் தங்கள் தோற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதற்குள் கதவு திறக்கப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் எதிரில் நாற்காலியில் சதா கவலை தோய்ந்த முகத்துடன் போஸ்ட் மாஸ்டர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் எந்தவிதமான களையும் தென்படவில்லை.

அலி தன் இடத்தை விட்டு நகராமலிருந்தான்.

“போலீஸ் கமிஷனர்” என்ற குரல் எழுந்தது. ஒரு வாலிபன் எழுந்து போய் தபாலை வாங்கினான்.

”சூபரின் டெண்ட்”

வேறொரு மனிதன் எழுந்து முன் சென்றான். இவ்விதம் எல்லாப் பெயர்களும் படிக்கப்பட்டன. விஷ்ணு பக்தன்போல அந்த சார்ட்டர் தினசரி இந்தப் பெயர்களைப் பாராயணம் செய்தாக வேண்டும்.

கடைசியாக அனைவரும் சென்று விட்டனர். அலியும் எழுந்து போஸ்டாபீசை வணங்கி விட்டுச் சென்று விட்டான். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த அப்பாவி பாவம்!?”

“அவன் பைத்தியக்காரனா?” என்று போஸ்ட் மாஸ்டர் கேட்டார்.

‘’யாருங்கோ? அலியா? ஆமாம். ஐந்து வருஷமாகத் தினமும் கடிதம் வாங்கிப்போக வருகிறான். மழை காற்று- குளிர் எக்காலமாக இருந்தாலும் சரி, இவனுக்கும் ஏதாவது கடிதம் வருமாம்’ என்று குமாஸ்தா சொன்னார்.

‘’சுத்த ஏமாளியாக இருக்கிறானே! யார் கடிதம் எழுதப் போகிறார்கள்?”

“பாபுஜி! இவன் மூளை கெட்டுவிட்டது. முதலில் பெரிய அக்ரமக்காரனாக இருந்தான். ஒரு சமயம் இவன் ஏதோ தெய்வக் குற்றம் செய்து விட்டான். அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்” என்று தபால்காரர் சொன்னார்.

”ரொம்ப விசித்திரமான பைத்தியமாக இருக்கிறதே!”

”ஆமாம். அகமதாபாத்தில் நான் ஒரு பைத்தியக்காரனைப் பார்த்தேன். அவன் நாள் முழுதும் புழுதிகளைக் குவித்துக் கொண்டிருப்பான். வேறு ஒன்றும் செய்ய மாட்டான்.

“இன்னொரு பைத்தியக்காரன் மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்குப் போய் கல்லின்மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பான்.”

”வேறொரு பைத்தியக்காரன் சதா இங்குமங்கும் சுற்றிக் கொண்டேயிருப்பான். இன்னொரு பைத்தியக்காரன் ஆனந்தமாகப் பாட்டுப் பாடிக்கொண்டிருப்பான்.  ஒரு பைத்தியக்காரனுடைய வேடிக்கையைக் கேளுங்கள். அவன் தன் உடலிலுள்ள தோலைத் தானே பிய்த்துக்கொண்டு வேறு யாரோ காயப்படுத்தி விட்டதாக அழுவான்.’’

இன்று தபாலாபீசில் பைத்தியங்களின் கதா காலட்சேபம் நடந்தது. எப்போதும் இப்படித்தான் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொஞ்ச நேரம் ஆனந்தம் அனுபவித்து வந்தார்கள். இது வேலை செய்பவர்களின் பழக்கம், குடிப்பழக்கம் போல. கடைசியாகப் போஸ்ட் மாஸ்டர் எழுந்து நின்று கொண்டு, “இந்தப் பைத்தியங்களுக்கும் ஒரு உலகம் உண்டு. நம்மை அவர்கள் பைத்தியம் என்று நினைப்பார்கள். இவர்களுடைய சிருஷ்டியும் கவியின் சிருஷ்டியைப் போலத்தானிருக்கும்” என்றார்.

கடைசி வார்த்தையைக் கூறிவிட்டுப் போஸ்ட் மாஸ்டர் சிரித்துக்கொண்டே போய்விட்டார். ஒரு குமாஸ்தா நேரம் கிடைக்கும்போது கவி எழுதுவது உண்டு. அவரை அனைவரும் கேலி செய்வார்கள். போஸ்ட் மாஸ்டரும் கடைசி வார்த்தைகளைச் சொல்லும்போது அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டுதான் சொன்னார். போஸ்டாபீஸ் முன்போல அமைதி அடைந்தது.

ஒரு தடவை அலி இரண்டு மூன்று நாள் வரையிலும்கூட வரவில்லை. அலியின் இதயத்தைப் புரிந்துகொள்ள அனுதாப மனம் படைத்தவர் யாரும் போஸ்டாபீசில் இல்லை. ஆனால் அவன் ஏன் வரவில்லை என்பதை அறிய அனைவரும் ஆவலுடனிருந்தார்கள். கடைசியில் அலியும் வந்தான். ஆனால் அன்று அவன் இருமிக் கொண்டிருந்தான். அவன் முகத்திலே வாழ்க்கையின் இறுதிக் குறிகள் தென்பட்டன.

இன்று அவன் பதட்டத்துடன் போஸ்ட் மாஸ்டரிடம், “பாபு சாகப்! என் மரியத்திடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.

போஸ்ட் மாஸ்டர் அன்று ஊருக்குப் போகும் அவசரத்திலிருந்தார். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுமை அவரிடத்திலில்லை.

“நீ யாரென்றே தெரியாதே!”

“என் பெயர் அலி” என்று பதிலளித்தான்.

”சரிதான். உன் மரியத்தின் பெயரை இங்கு யாராவது எழுதி வைத்திருக்கிறார்களா?”

”எழுதிக் கொள்ளவில்லையா? ஒருவேளை கடிதம் வந்து நான் வராமல் போனால் உங்களிடத்திலேயே வைத்திருங்கள்.”

வாழ்நாள் முழுதும் வேட்டையாடியே கழித்த ஒருவனுக்கு மரியத்தின் பெயர் அவளுடைய தந்தையைத் தவிர மற்றவர்களுக்குச் செல்லாக் காசு என்பது எப்படித் தெரியும்?

போஸ்ட் மாஸ்டர் கோபமடைந்தார். பைத்தியமா உனக்கு? வெளியில் போகமாட்டாய்? உனக்குக் கடிதம் வந்தால் யாரும் தின்றுவிட மாட்டார்கள்” என்றார்.

போஸ்ட் மாஸ்டர் அவசரமாக அங்கிருந்து போய்விட்டார். அலி மெதுவாக அங்கிருந்து வெளியேறினான். வெளியில் போகும்போது போஸ்டாபீசை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். இன்று அவன் அனாதையைப் போலக் கண்ணீர் வடித்தான். ஆவல் இருந்தது. ஆனால் நம்பிக்கை இழந்துவிட்டான். ஐயோ ! இனி மரியத்தின் கடிதம் எப்போது வரும்?

ஒரு குமாஸ்தா அவன் பின்னால் வருவது தெரிந்தது. அலி அவரைத் திரும்பிப் பார்த்தான்.

”ஐயா!”

குமாஸ்தா திடுக்கிட்டுப் போனான். ஆனால் அவன் நல்ல மனிதன்.

”ஏன்?”

“இதோ பாருங்கள். இவை தான் என்னிடமிருக்கின்றன” என்று கூறிவிட்டு ஒரு சிறிய தகர டப்பியைத் திறந்து ஐந்து தங்க நாணயங்களை எடுத்தான். குமாஸ்தா ஆச்சரியப்பட்டான்.

“ஆச்சரியப்பட வேண்டாம். இது உங்களுக்குப் பிரயோஜனப்படும். இனி எனக்கு இவைகளால் பிரயோஜனமில்லை. எனக்கு ஒரு காரியம் செய்வீர்களா?” என்றான்.

”என்ன?”

“மேலே என்ன தெரிகிறது?” என்று ஆகாயத்தைச் சுட்டிக் காட்டினான்.

”ஆகாயம்!”

“மேலே அல்லா இருக்கிறான். அவன் சாட்சியாக உனக்கு இந்தத் தங்க நாணயங்களைக் கொடுக்கிறேன். என் மரியத்திடமிருந்து கடிதம் வந்தால் என்னிடம் சேர்ப்பித்து விடுகிறாயா?”

குமாஸ்தா திகைத்துப் போய், “எங்கே? எங்கே சேர்ப்பிக்க வேண்டும்?” என்றான்.

“என் சமாதியில்.”

“சேச்சே!”

“உண்மையாகச் சொல்கிறேன். இதுதான் எனது கடைசி நாள். ஆமாம். அந்திம நாள்தான். மரியத்தையும் சந்திக்கவில்லை! கடிதத்தையும் பார்க்க வில்லை”.

அலியின் கண்களிலே ஒருவிதமான வெறி பளிச்சிட்டது. குமாஸ்தா மெதுவாக அங்கிருந்து போய் விட்டான். அவனுடைய ஜேபியில் தங்க நாணயங்கள் இருந்தன.

**

அலி அதற்கப்புறம் தென்படவேயில்லை. அவனைத் தேடுவார்களுமில்லை. ஒரு நாள் போஸ்ட் மாஸ்டர் கொஞ்சம் சோகத்துடனிருந்தார். அவருடைய மகள் உடல்நிலை சரியில்லாமல் ஊரிலிருந்தாள். அவளைப் பற்றித் தகவல் அறிய வேண்டி சோகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

தபால் பை வந்தது. கடிதங்கள் குவிந்து கிடந்தன. ஒரு கவரைத் தன்னுடையது என்று நினைத்துக் கொண்டு போஸ்ட் மாஸ்டர் அவசரமாக அதைக் கையிலெடுத்தார். ஆனால் அந்தக் கவரில் “கோச்வான் அலிபாபா” வினுடைய விலாசம் எழுதப் பட்டிருந்தது.

அவர் தீயை மிதித்தவர்போல் கோபமடைந்து கவரைக் கீழே வீசி எறிந்தார். கொஞ்ச நேரத்திற்குள் அவருடைய கடின சித்தம் மாறுதலடைந்தது. மனித குணம் தலையெடுத்தது. உடனே அவருக்கு இது அந்தக் கிழவனுடைய கடிதமல்லவா என்ற நினைவு வந்தது. ஒருவேளை அவனுடைய மகள் மரியம் எழுதியிருக்கலாம்.

”லட்சுமிதாஸ்!” என்று போஸ்ட் மாஸ்டர் அழைத்தார்.

அலி அன்று தங்க நாணயம் கொடுத்த மனிதனுடைய பெயர்தான் லட்சுமிதாஸ்.

”சொல்லுங்கள்.”

இது உங்களுடைய கோச்வான் அலியினுடைய கடிதம். இப்போது எங்கே அவனைக் காணோம்?”

“தேடிப் பார்க்கிறேன்.”

அன்று போஸ்ட் மாஸ்டர் மகளிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை. இரவு முழுவதும் தூக்கமின்றிக் கழித்தார். அடுத்த நாள் மூன்று மணிக்கு அவர் ஆபீசில் உட்கார்ந்து கொண்டிருந்தார். நான்கு மணிக்கு அலி வருவான். அவனிடம் கடிதத்தைக் கொடுத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

அலி பாபாவின் நிலையை இப்போது போஸ்ட் மாஸ்டர் புரிந்து கொண்டார். இன்று காலை தபாலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து வருஷம் வரையிலும் இம்மாதிரி விடியா இரவுகள் எத்தனையைக் கழித்திருக்கவேண்டும் என்று எண்ணிப் பார்க்கவே போஸ்ட் மாஸ்டர் மனத்திலே இரக்க உணர்ச்சி பிறந்தது. ஐந்து மணிக்கு யாரோ கதவைத் தட்டினார்கள். இன்னும் தபால்காரன் வரவில்லை. ஆனால் அலிதான் கதவைத் தட்டுகிறானோ என்ற பிரமை ஏற்பட்டது. போஸ்ட் மாஸ்டர் எழுந்தார். தந்தையின் மனோ வேதனையை உணர்ந்த அவர் வேகமாக எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

‘வாப்பா அலி! இந்தா உன்னுடைய கடிதம்.’

கதவோரத்தில் ஒரு கிழவன் தடியை ஊன்றிக் கொண்டு குனிந்தபடி நின்று கொண்டிருந்தான். கண்ணீர் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. முகத்திலுள்ள சுருக்கங்களில் உணர்ச்சியற்ற தன்மை வெளிப்பட்டது.

அவன் போஸ்ட் மாஸ்டரைப் பார்த்தான். ஆனால் போஸ்ட் மாஸ்டர் திடுக்கிட்டுப் போனார். கிழவனுடைய கண்களிலே மனித ஒளியில்லை.

”அது யார் பாபுஜி? அலியா?” என்று கேட்டுக் கொண்டு உள்ளேயிருந்து லட்சுமிதாஸ் அருகில் வந்து நின்று கொண்டார்.

போஸ்ட் மாஸ்டர் அதைக் கவனியாமல் வாயிற் பறமே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அங்கே யாரும் தென்படவில்லை. ஆச்சரியத்துடன் அவர் கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். வெளியில் யாருமில்லையே! இது என்ன ஆச்சரியம்? அவர் லட்சுமிதாஸ் பக்கம் திரும்பினார்.

”ஆமாம், அலிபாபாதான்….அடே! நீயா?’’

”அலிபாபா இறந்து விட்டான். ஆனால் அவனுடைய கடிதத்தை என்னிடம் கொடுங்கள்.”

”அடடா! எப்போது காலமானான்? உண்மையா, லட்சுமிதாஸ்?’’

”ஆமாம். அவன் இறந்துபோய் மூன்று மாதமாகிறது” என்று அங்கு வந்த தபால்காரன் சொன்னான்.

போஸ்ட் மாஸ்டர் திகைத்துப் போய்விட்டார். மரியத்தின் கடிதம் அங்கேயே கிடந்தது. அலிபாபா கடைசி நாளன்று சொன்ன விஷயத்தை லட்சுமிதாஸ் சொன்னான். அவருடைய கண்ணெதிரில் அலி நிற்பது போலிருந்தது. அவர் மனம் குழப்பமடைந்து விட்டது. ‘நான் அலியைப் பார்த்தேனா அல்லது பிரமையா?’

வழக்கம்போல வேலை ஆரம்பமாகியது. ‘போலீஸ் கமிஷனர்’, ‘சூபரின்டெண்ட்’ என்று சார்ட்டர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் போஸ்ட் மாஸ்டர் அந்த ஒரேயொரு கடிதத்தையே துடிக்கும் உள்ளத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். கவர் பதினைந்து பைசா, கார்டு ஐந்து பைசா என்ற எண்ணமே அவர் மனத்தில் எழவில்லை.

மனிதன் தன் கண்ணோட்டத்தை விட்டுவிட்டுப் பிறர் கண்ணோட்டத்தில் பார்த்தானானால் உலகில் அமைதி நிலவும்.

அன்று மாலை போஸ்ட் மாஸ்டரும் லட்சுமிதாசும் அலியின் சமாதிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். மரியத்தின் கடிதம் அவரிடம்தான் இருந்தது. சமாதி மீது கடிதத்தை வைத்து விட்டு போஸ்ட் மாஸ்டரும் லட்சுமிதாசும் திரும்பினார்கள்.

“லட்சுமிதாஸ்! இன்று காலை நீதான் எல்லோருக்கும் முன் வந்தாயா?”

”ஆமாம்.”

‘நீதான் அலிபாபா என்று சொன்னாயா?”

‘’ஆமாம்.”

ஆனால்.. ஒன்றுமே.. புரியவில்லையே….”

“என்ன?”

”சரிசரி! ஒன்றுமில்லை” என்று போஸ்ட் மாஸ்டர் பேச்சை மாற்றினார். போஸ்டாபீசுக்கு அருகில் வந்ததும் போஸ்ட் மாஸ்டர் தனியாகப் போய்விட்டார். அவருடைய தந்தை உள்ளத்தால் அலியைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற வேதனை அடைந்தார். இன்று வரையிலும் அவருடைய மகளைப்பற்றிய ஒரு தகவலும் தெரியவில்லை. இதே கவலையுடன் இரவைக் கழித்தார். பச்சாதாபம், கவலை, இரக்கம் முதலிய உணர்ச்சிகளுடன் அவர் ஆபீசில் உட்கார்ந்து கொண்டிருந்தார். . அருகிலிருந்த அடுப்பிலிருந்து புகையும் நெருப்பும் வெளி வந்து கொண்டிருந்தன.

000

The post போஸ்டாபீஸ் first appeared on Nadukal.

  •  

பொன்னாயா

‘’வா சாமி! தாரு கண்ணாயா புள்ளெ ரெச்சுமி தான நீயி! இந்தப்பேரெழவு புடிச்ச கண்ணு பொட்டக்கண்ணாப்போச்சு சாமி! எம்பட ஊட்டுக்குள்ளார தாரு வர்றாங்க.. தாரு போறாங்கன்னு ஒன்னும் நெகா சிக்கறதில்லயாயா! அப்புறம் உங்கோயா நல்லாயிருக்காள்ளோ? அவ ஊட்டுக்காரம் பொன்னுச்சாமி தான் பாவம் உங்களையெல்லாம் பொழைக்க வைக்க அம்புட்டு பாடு பட்டானாக்கும்! பீடியக் குடிக்காதடான்னு ஊரே சொல்லுச்சு! லொக்கு லொக்குனு விடியக்காத்தால மூனு மணிக்கி இரும ஆரம்பிச்சான்னா விடிஞ்சி மணி ஏழானாலும் இருமீட்டே ஊட்டுத்திண்ணையில உக்காந்திருப்பான். அப்பயும் பீடிக்குடியை உட்டானா அவன்? விடியறதுக்குள்ள பத்துப்பாஞ்சி பீடிகளை பத்தவெச்சு ஊதித்தள்ளிடுவான். ஆனா உங்கொப்பன் நல்ல பாட்டுக்காரனாயா! காத்தாலயும் பொழுதோடயும் பனெமரம் ஏறி தெளுவு எறக்கி கொண்டாருவான். அவனே பாவுகாச்சி, அவனே அச்சுல ஊத்தி கருப்பட்டி எடுப்பான். நாலு மரத்துல அவன் குடிக்கிறதுக்கு கள்ளு போட்டுக்குவான். ஆளு கரும்பூதமாட்டல்ல இருந்தான் அப்பொ! ஆனா இருமி இருமி ரத்தம் கக்கீட்டு செத்தான் சிவாசி கணேசன் எதோ சினிமாப்படத்துல கக்குனாப்புல! தே ரெச்சுமி.. உங்கோயா இப்ப நல்லாத்தான இருக்கா? தே ஒன்னும் பேசமாட்டீங்கறே?”

“ஏனாயா அழுவுறே? உங்கோயா கண்ணாயா செத்துப்போன விசயமே நீ சொல்லித்தான் எனக்குத் தெரியுது பாத்துக்குவே! நாந்தான் இந்த ஊட்டோடயே கெடக்குறேனே வருசக்கணக்கா! எத்தன வருசமாச்சுன்னே தெரியில! எம்புள்ளெ சீதாரெச்சுமியத்தான் காங்கேயத்துக்கு கட்டிக்குடுத்துட்டம்ல! உனக்குத்தெரியுமா தெரியாதா? ஆமாம் பாரு.. நீங்க ரெண்டுபேருந்தான புதூரு பள்ளிக்கோடத்துக்கு ஒட்டுக்கா சோடி போட்டுட்டு போயி அஞ்சாப்பு வரெக்கிம் படிச்சீங்க! என்னாயா பண்ணுறது.. வயசாவ வயசாவ ஒன்னும் நெனப்புல இருக்குறதேயில்ல!”

“எம்பட ஊட்டுக்காரரு தான் என்னேரமும் சொல்லீட்டே இருப்பாப்ல! ரெச்சுமியும் நம்ம புள்ள மாதிரித்தான்னு! உன்னைய எந்தூருக்கு உங்கோயா கட்டிக்குடுத்தா? தென்னமோ பாளையம்னு வருமேடி! சொல்லு! ஆங்.. செந்தாம்பாளையம். செந்தாம்பாளையத்துல எனக்கொரு சக்காளத்தி இருந்தா தெரியுமா? அந்தக்கதெ உனக்குத்தெரியாதே! எம்பட ஊட்டுக்காரரு தான் ஆட்டு ஏவாரியாச்சே! செந்தாம்பாளையத்துல பெரியூட்டுக்காரரு ஆடுக ஏவாரத்துக்கு வருதுன்னு போனவரு.. ஏவாரத்தை முடிச்சிக்குடுத்துட்டு பொட்டாட்ட வரனுமுல்ல! அங்க அந்த பெரிய ஊட்டுக்காரரு சம்சாரத்தோட என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது இந்த மனுசனுக்கு? அவ அதையும் இதையும் சொல்லி இந்த மனுசனுக்கு சிரிப்பாணியை கூட்டியிருக்கா! அப்புறம் சோறும் போட்டிருக்கா அவ! சோறுன்னா இந்தாளு எவத்திக்கி வேணாலும் சம்மணம் போட்டுருவாரு! அவ பேரு என்னமோ ஆயா.. எல்லாம் சடக்குனு நெனப்புல வருதா ஒன்னா! சோத்துல வசிய மருந்தை வச்சுட்டா அவ. அப்புறம் பாரேன்.. என்னேரமும் இந்த மனுசனுக்கு அவ நெனப்புத்தான். தொட்டதுக்கெல்லாம் ’செந்தாம்பாளையம் போறேன்.. செந்தாம்பாளையம் போறேன்’னு இந்த மனுசன் வெள்ளையுஞ் சொள்ளையுமா கிளம்பங்காட்டித்தான் ஆளு வெச்சு இந்தாளு வண்டவாளத்தை கண்டு புடிச்சனாக்கும்! அப்புறம் நெடச்சிலாபாளையம் மந்திரிக்கிறவரு ஊட்டுக்கு இந்த மனுசனை இழுத்துட்டு போயி தண்ணி மருந்து ஊத்தியுட்ட பின்னாடி தான செந்தாம்பாளையத்தையே மறந்து தொலைச்சாரு! அப்பேருப்பட்ட பூலவாக்குக்காரனாயா எம்பட ஊட்டுக்காரன்!”

“ஆமா உன்னையத்தான் கட்டிக்குடுத்தாச்சுல்லொ! அப்புறமும் ஏன் நீயி நம்மூருக்குள்ளயே சுத்தீட்டு இருக்குறே? குடும்பமுன்னு இருந்தா சண்டெ சச்சரவு வராமயா இருக்குமாயா? நாம தான் உட்டுக்குடுத்து காலத்தை ஓட்டோனும் பாத்துக்க! உங்கோயா உசுரோட இருந்திருந்தாலாச்சிம் உனக்கு நாலு புத்திமதி சொல்லி தாட்டி உடுவா! ஆமா உங்கோயா ஆஸ்பத்திரி போயா செத்தா? நீயி என்ன சொல்றேன்னு எம்பட காதுல உழுவலயாயா! செரி உடு எப்பிடியோ நேரம் வந்து போயிச்சேர்ந்துட்டா! இப்ப என்னையப்பாரு..நாலு சனம் வந்து பாக்கக்கூட நாதியில்லாம நடு ஊட்டுல கெடக்கேன்.

சுந்தராம் பொண்டாட்டி மயிலாத்தா இருக்காள்ல.. அவ தான் எனக்கு காத்தால போசீல கஞ்சி கொண்டாந்து குடுக்குறா! பொழுதோடவும் கஞ்சிதான். மகராசி.. எதோ ஊட்டுக்கும் பக்கத்துல இப்பிடி சாவ மாட்டாம ஒரு கெழவி கெடக்காளேன்னு துளி கஞ்சி ஊத்துறா! ஆமா உங்கூட்டுல இன்னிக்கி கறிச்சாறா ஆக்குனீங்க? முன்னெல்லாம் எம்பட ஊட்டுக்காரரு ஞாயித்துக்கிழமெயாச்சுன்னா ஓடிப்போயி வெள்ளாட்டுக்கறி எடுத்தாந்து குடுத்துடுவாப்ல! அதைய ஆக்கி குண்டால போட்டுக் குடுக்கறதுக்குள்ள பறவா பறப்பாரு! ’ஆச்சா? ஆச்சா?’ன்னு குட்டி போட்ட பூனையாட்டம் ஆசாரத்துக்கும், சோறாக்குற ஊட்டுக்கும் நடையா நடப்பாரு. ஆனாலும் புள்ளைய சாப்புடறப்ப கூப்புடுவாரு! ‘சீத்தாரெச்சுமி! வா சாமி சோறு உங்கலாம்! கையை வாசல்ல இருக்குற முட்டித்தண்ணியில கழுவீட்டு ஓடியா சாமி!’ அப்பிடின்னு கூப்புட்டு புள்ளைய பக்கத்துல சம்மணங்காலு போட வச்சி உக்காத்தி வச்சிக்குவாரு. கறியில ஈரலு இருந்துச்சுன்னா எடுத்து அவுளுக்கு ஊட்டி உடுவாரு! ஆமா உங்கூட்டுல இன்னிக்கி கறிச்சாறாரி? இருந்தா கிண்ணத்துல ஒருதுளி கொண்டாந்து குடு. உள்ளார கறித்துண்டு போட்டு எடுத்துட்டு வந்துறாதேடி.. அதைய எவொ சப்பீட்டே கெடக்குறது! வெறுங்கொழம்பு மட்டும் ஊத்தியா!”

“இப்பத்தான ஆயா வந்தே! அதுக்குள்ள போறேன் போறேங்குறியே! இந்தப்பொக்கவாயி கெழவிகூட என்ன நாயம் வேண்டிக்கெடக்குதுன்னு நினைச்சுட்டியாடி? சேரி நீ போ. போயி நேரங்காலமா சோறாக்கி புள்ளைங்களுக்கு குடு. ஆடுக வெச்சிருக்கிறியா? எத்தன உருப்படிக நிக்குது ஊட்டுல? போயிட்டியாடி.. கெரகம் இந்தக்கண்ணு நொள்ளக்கண்ணெ வெச்சுட்டு ஒரே சீரழிவு எனக்கு. பேழ மோள ஊட்டுக்கும் பொறவுக்கு போவக்கூட நெதானத்துல போவேண்டீதா இருக்குது. சீக்கிரமா போயித்தொலஞ்சா நல்லாயிருக்கும். ஆராயா? இப்பத்தான் ரெச்சுமி எம்பட வாசலைத்தாண்டிப்போயிருப்பா.. அதுக்குள்ள நீயி வந்திருக்கே! ஆமா என்ன கெழவி போயிட்டாளான்னு உங்கோயா பாத்துட்டு வரச்சொன்னாளா? அட என்னோட கட்டித்தங்கமே! எத்தனாப்பு சாமி படிக்கிறே நீயி? டவுனுக்கு போயி நீயெல்லாம் இங்கிலிபீச்சுல படிப்பே.. அட தே ஓடுறே? பாத்து மெதுவாப்போ சாமி! வாசல்ல கல்லுங்க கெடக்கும். எம்பட வாசலைக்கூட்டி எத்தனை வருசமாச்சுன்னே நெனப்பில்ல!”

“வரிசியா ஊருக்காரிங்க தெனமும் பவல்ல வந்துட்டே இருப்பாளுங்க.. இன்னிக்கி ஏனோ எவளையுங் காணோம். எல்லாரும் எங்க தெறிச்சுட்டாளுங்களோ.. நானும் வெகு நேரமா எவளாச்சிம் இந்த பொன்னாயா கெழவிகிட்ட சித்தநேரம் குக்கி நாலு பழமெ பேசீட்டு போவ எவளாச்சிம் வருவாளான்னு பாக்கேன்.. எல்லாருக்கும் சோலி இருக்குமாட்ட இருக்குது. உள்ளூருல மாரியம்மன் கோயல் விஷேசமோ என்னமோ தெரியிலயே! அப்பிடின்னா நம்ம புள்ள சீத்தா வந்திருப்பாளே! ஆமா அவளுக்கு என்னாச்சுன்னே தெரியில. அவளையும் இந்த ரெண்டு வருசமா ஊட்டுப்பக்கமே காணமே! சரி.. எப்பிடியோ புள்ளெ நல்லா இருந்தாச்செரி. நாலு சனம் ஊட்டுக்கு வந்தா உக்காத்தி வெச்சு ஆக்கிப்போட நமக்கு கையாலாகாமப் போயிருச்சு! யாரு வருவாங்க எம்பட ஊட்டுக்கு?”

”பொழுதாயிப்போச்சாட்ட இருக்குது! ஊட்டுல இருந்த கரெண்டயும் அத்து உட்டுட்டு போயிட்டானுங்க! வெளக்கு பத்தவெக்க கூட ஆளில்லெ! சுந்தராம் பொண்டாட்டி மயிலா வந்தாள்னா பொழுதோட சித்தங்கூரியம் வெளாக்காச்சிம் பத்தவச்சு உடுன்னு சொல்லோணும்! தாரோ வாறாங்களாட்ட அசம்பல் ஆகுது! யாரா இருந்தாலும் பேரைச்சொல்லுங்க சாமி! கொஞ்சம் சத்தமாச் சொல்லுங்க! ஒரு காலத்துல டம்ளரு உழுந்தாக்கூட அண்டா உழுந்தாப்புல கேட்டுத்தொலச்சிது! எம்பட வலதுபக்க காது சுத்தமாப்போச்சாட்ட இருக்குது. எடதுபக்க காது கொஞ்சமா கேக்குது. கேக்குற வரைக்கிம் கேக்கட்டும். இதுக்கெல்லாம் மிசினு இருக்குதாமா! குழிக்கு போற காலத்துல மிஷினு மாட்டீட்டு என்ன பண்ணுறது? அவ்வளவுதான். பொறந்து, வளர்ந்து, வாழ்க்கப்பட்டு இந்தூருக்கு வந்து, புள்ளையொன்னு பெத்து, புருசனை மண்ணுக்கு தின்னக்குடுத்துட்டு நாளை எண்ணீட்டு குக்கீட்டு இருக்கேன். யாரு..? சுந்தரானா? இப்பிடி எம் பக்கத்துல வந்து உக்கோருடா கட்டீத்தின்னி! ஏண்டா தெனமும் குடி என்னடா குடி உனக்கு? ரெண்டு புள்ளெக்காரன்னு நெனப்பு இருக்குதா? ஏண்டா சம்பாதிக்கிற காசைக்கொண்டி இந்த மல்லைக்குடிக்க செலவு பண்டீட்டா மயிலா ஒருத்தி என்னடா பண்டுவா? குடிச்சாப்போச்சாது.. மயிலாவை ஏண்டா அந்த மொத்து மொத்துறே? ஊருக்குள்ள நீயே பாரு.. குடிகாரன் இருந்த ஊடெல்லாம் இன்னிக்கி எந்த நெலமையில இருக்குதுன்னு! என்னது? நீயி சுந்தரானில்லியா! அதான பாத்தேன்.. அந்த கட்டியத்தின்னி எங்கடா அதிசீமா என்னைப் பாக்க வந்திருக்கானேன்னு. நானு உசுரோட இருக்கப்ப அவங்கீது என்னை பாக்க எம்பட ஊட்டுக்குள்ளார வந்துட்டான்னா அன்னிக்கே வெடிய வெடிய மழெ பெஞ்சு இந்த ஊரே வெள்ளத்துல அடிச்சுட்டுப் போயிடாது!”

“அட நீயி சின்னக்குண்டண்ணன் சம்சாரம் மணியாளா? நாங்கூட ஆம்புளையாக்கும்னு நெனச்சிட்டேன் போ! உம்பட பையனை எப்பிடியோ ஊருக்குள்ளயே கட்டிக்குடுத்துட்டே! இப்ப பேத்திக்கும் கலியாணம் பண்டி அவுளும் புள்ளை பெத்துட்டாளாமே! பாரு.. நீ கூட ஊருக்குள்ள கவ்வக்கோலு ஊனீட்டு நடமாட்டம் போடுறே! எனக்கு அதுக்கும் கையாலாகுல! மனுசன்னா உம்பட ஊட்டுக்காரந்தாண்டியேய்! ஊருல ஒரு ஊடு பாக்கியில்லாம பொழுதுக்கும் தண்ணி சொமந்து கொண்டி ஊத்தீட்டே இருந்தாப்புல! எம்பட ஊட்டுக்கும் வெளியில கெடக்குற ரெண்டு பெரிய தாழிகளையும் ரொப்பிடுவாப்ல! எந்த நேரத்துல வந்து ஊத்தி ரொப்பீட்டு போறாப்லைன்னே தெரியாது. அப்பத்தான் நாமெல்லாம் காட்டு வேலைக்கி மையம் பறந்துட்டு ஓடுனமே! கொத்து வேலையின்னா இங்கிருந்து நாலு மைலு தொட்டிபாளையம் வரைக்கிம் நடந்தே போயிட்டு வந்தோம். இன்னிக்கி அவ்ளோதூரம் யாரு நடக்குறாங்க? தொட்டதுக்கெல்லாம் புட்டுர் பைக்கில போயிடறாங்க! அப்பெல்லாம் சின்னக்குண்டண்ணன் ஊட்டுக்கு வாரத்துக்கு ஒருக்கா ரெண்டு ரூவா வாங்குவாப்ல! ஒரு பீடிக்குடியோ, வெத்தலபாக்கு மெல்லுறதோ, பொயிலக்குச்சி அதக்குறதோ.. ஒரு பழக்கமும் அண்ணனுக்கு இல்ல! அண்ணன் இருந்தப்ப அப்பிடி தப்பாம மழெ பெஞ்சுது! நல்ல மனுசங்க அல்லாரும் போனாப்புல புடிச்சு மே மாசம் கூட பேயுது. ஆனா வெதைக்கிற காலத்துல மழை இல்ல! எல்லாம் தலைகிழுதா மாறிப்போச்சு போ! ஆமா.. சோறு உனக்கு உம்பட மருமக ஊத்தீடறாளா? ஊத்தலீன்னா நீயி உடவா போறே? நேரா சோத்துச்சட்டியை போயி ஒதச்சே போடுவியே! சின்னப்பொன்னாம் பொண்டாட்டிய சண்டையப்ப கல்லெடுத்து வீசி மண்டையை ஒடச்சவதானே நீயி அந்தக்காலத்துலயே!  இதென்னுது? கையில என்னத்தையோ திணிக்கிறியே..இரு மோந்து பாக்குறேன்.. தூக்கருமம்! பொயிலக்குச்சியவா திணிச்சே? இந்தக்கெரகத்தை எவொ வாயில போட்டு அதக்குறது? சித்தங்கூரியத்துல தலை சுத்தி மல்லாந்துருவேன் நானு! நீயே புடி.. எங்கிட்ட பொயிலக்குச்சியை நீட்டுறா இவொ! நாங்கூட முட்டாயி கிட்டாயி குடுக்கறாள்னு நெனச்சிட்டேன். முட்டாயா இருந்தா சித்த நேரம் சப்பீட்டு இருப்பேன். ஆமா சின்னக்குண்டண்ணன் தூக்கு மாட்டீட்டு தான செத்தாரு?

என்னளே கேட்டுப்போட்டேன் நானு.. வர்ரு வர்ருன்னு கத்துறே? சீக்குப்படுத்து போனாரா? தெரியாமத்தான கேக்கேன். ஏளே.. செத்துச்சுண்ணாம்பாப்போன மனுசனை எப்பிடிப் போனான்னு கேக்கேன்.. பேசுறாளான்னு பாரு! எம்பட கூட சண்டெக்கட்டுறதுக்கு ஏறீட்டு வந்தியாளே நீயி! உங்கூட சண்டெக்கட்டுற நெலமையிலயா நாங்கிடக்கேன்? நீயே பாக்குறீல்லொ.. இங்க வந்து கத்தட்டம் போடாதேயாமா! போயி உங்கூட்டுல உக்கோந்துட்டு ஊரே கேக்குறமாதிரி கத்து! சித்த எந்திரிச்சு போ ஆயா நீயி! அப்புறம் இப்பச்சொல்றேன் கேட்டுக்கோ.. இங்கெங்காச்சிம் பொன்னாயா போயிட்டாள்னு சேதிகேட்டு குச்சி ஊனீட்டு வந்து எம்பட வாசல்ல வந்து எழவு காங்குறேன்னு நின்னுக்காதே! இத்தோட செரி.. போ இங்கிருந்து! ளேய்! இந்த கவ்வக்கோலை எடுத்துட்டு போயிருளே.. ரோசத்துக்கு ஒன்னுங்கொறச்சலே இல்ல போ உனக்கு! கவ்வக்கோலை இங்க போட்டுட்டு போறா திமுரு!”

“உசுரெ இன்னும் வெச்சிட்டிருக்கேன்னு கெழவி என்னேரமும் தன்னை யாரோ பாக்க வந்தாப்புல ’லொட லொட’ன்னு பேசீட்டே ஊட்டுக்குள்ளார கெடக்குமேடி மயிலா.. இன்னிக்கி காத்தால இருந்து கெழவி சத்தத்தவே காணமே.. ஒரெட்டு கெழவி போயிருச்சான்னு போயிப்பாரு.. இன்னிக்கி செவ்வாச்சந்தைக்கி வேற போவணும்.. ஊட்டுல ஒரு சாமானில்லே.. இது போயிருச்சுன்னா எங்கீம் போமுடியாதேடி!” என்று எதிர்வீட்டு செண்பகம் மயிலாத்தாள் வீட்டைப்பார்த்து பேசினாள்.

“அதெல்லாம் ஒம்போது மணிக்கி கஞ்சி கொண்டோயி குடுக்கலாம்னு போனப்பவே போயிடுச்சு கெழவி.. சாமத்துலயே போயிருச்சாட்ட.. சோறு உண்டுட்டு இருக்கேன்.. இனிமேத்தான் ஊருக்குள்ள போயிச்சொல்லோணும்டியேய்!” என்றாள் மயிலாத்தாள் வீட்டினுள்ளிருந்தபடி.

000

The post பொன்னாயா first appeared on Nadukal.

  •  

அருணகிரி

-என்னக்கா நைட்டுக்குள்ள முடிஞ்சுருமா,

-எனக்கு என்னடி தெரியும். ஆனா பாவம்டி அந்த பையன் வாழு வேண்டிய வயசு. என்ன பண்றது?

-சரி விடுக்கா நடக்கிறது தான் நடக்கும். விடிஞ்சா தெரிய போகுது.

-ஆமாடி அவங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க. அப்ப முடிஞ்சிருக்கும். பார்க்கலாம்.

-அந்த சர்வசக்தி மாரியம்மா எதுல கொற கண்டாளோ அவங்க கிட்ட?

அந்த வீட்டைச் சுற்றியும் கண்ணீர் துளிகள். வீட்டிலிருந்து கண்ணீர் தொடரோட்டம் ஒடியது. எவ்வளவு கொட்டினாலும் விழுங்குகின்ற கடல் போல தீராத கண்ணீருடன் அழுது கொண்டிருந்தாள் தனம். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ கண்களை நிரந்தரமாக மூடப் போகிறான் அருண் (எ) ஒன்ற (எ) அருணகிரி. புற்றுநோய் தன்னிருப்பை காட்டிக் கொள்ள அவன் உடம்பு முழுவதும் பரவியிருந்தது.

விடியல் இருளை விரட்டி கொண்டிருந்தது சேவலின் பொறுப்பை தனம் ஏற்றுக் கொண்டாள்.

-ஐயோ………..  அருணே…………. என்ன விட்டுட்டு போயிட்டியேடா உன்னை இப்படி தூக்கி கொடுக்கவாடா பெத்து போட்டு மணி மணியா வளத்தேன்.

எங்கவீட்டு குல சாமி போயிட்டியேடா.

என்று அவள் வயிற்றிலும் மாரிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுததை கண்டு இருள் எல்லா இடத்திலும் இருந்து ஓடி அவள் வீட்டை மட்டும் சூழ்ந்து விட்டது.

     பொழுது விடிய விடிய ஊர் முழுவதும் அருணகிரியின் மரண செய்தி தலைப்பு செய்தியானது. அனைவருடைய பரிதாபத்துக்கும் ஆளானான் அருணகிரி. புற்று நோயால் நீண்ட நாளாக அவதிப்பட்டு வந்த தன் மகன் எப்போது வேண்டுமாலும் நம்மை விட்டு பிரிந்து விடுவான் என்பதை நினைத்து நினைத்தே ராஜா மிகவும் மனதளவில் உடைந்து போயிருந்தார். இருந்த போதிலும் நடக்க போகும் துன்பத்தை எதிர் கொள்ள தயாராக இருந்தார். அவனின் இறுதி மூச்சு அவரின் கண் முன்னே நின்றதும் பின் மண்டையை சுவரில் முட்டி முட்டி அழுது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சிறு குழந்தையை போல தேம்பி தேம்பி அழுதார் .

பந்தல் போடும் “பிரபு”க்கு மாது செல்போனில் அழைத்து தகவலை சொன்னான். மிகவும் வருத்ததுடன் ’வருகிறேன்’ என கூறினார். பந்தல், அமரும் சேர் சகிதம் அருணகிரியின் வீட்டிற்கு வந்தடைந்தார். பந்தல் போடுவதை கண்ட பெண்கள் கூட்டம் கல்யாண பந்தல் போடற வயசுல சாவு பந்தல் போட வெச்சுடானேனு பேசி கொண்டார்கள்.

        ஊர் முழுவதும் அருணகிரியின் மரண செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் அவனுடைய வயது இருபத்தைந்து. திருமணம் ஆகாதவன். அவனுடைய திருமணமே பரபரப்புக்கு முக்கிய காரணமானது.

     அந்த ஊர் வழக்கு படி ஒரு ஆண் திருமணமாகாமல் இறந்தால், அவனுக்கு வாழை மரத்துடன் திருமணம் செய்து வைப்பது வழக்கம். அவ்வூரில் புதிதாக திருமணம் செய்து கொண்டு வந்த பெண்களும், புதிதாக குடி வந்தவர்களும் அத்திருமணத்தை நேரில் பார்க்க ஆர்வமுடன் இருந்தனர்.

    தனத்தின் அழுகையை காணும் ஒவ்வொரு கண்களும் களங்கும். அவளின் கதறலை பொறுக்க முடியாமல் நிறையபேர் வீட்டை விட்டு தள்ளி நின்றனர்.

-கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி தருவ அதுங்க பீ  மூத்தற துணிய தொவைப்பனு கனவு கோட்ட கட்டுனனேன். அத எட்டி ஓதச்சு இடிச்சு போட்டியேடா அருணகிரி……

-அருண கூப்பிடுங்க பெரியம்மா” அருண விளையாட வர சொல்லுங்கனு கேட்பானுகளே அவங்களுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன். டேய் பையா வந்துடுடா, அம்மாவால முடியலடா! நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.

-கயிறு மட்டும் போட்டுருக்க ஆறு பவுனில் கொடி எடுத்து தரமுன்னு சொன்னியேடா அருணகிரி. அருணகிரி… டேயப்பா எப்படிடா அம்மாவ விட்டுட்டு போக உனக்கு மனசு வந்துச்சு.

     தனத்தின் புலம்பல்களின் நடுவில் வீட்டின் முன்னே பந்தல் போடப்பட்டது. அருணகிரியின் அப்பா ராஜாவும் அருணகிரியின்  அண்ணன் மாதுவும் ஊர் பெரியவர்களுக்கு இறப்பு செய்தியை சொல்லிவிட்டு வீடு திரும்பினர்.

     பந்தலை பார்த்துவிட்டு பேப்பர் போடும் சிறுவன் சைக்கிளை தூரமாக நிறுத்திவிட்டு வந்து பேப்பரை அமர்வதற்க்கு போடப்பட்டிருந்த அடுக்கி வைத்திருந்த சேரில் வைத்துவிட்டு ராஜாவின் முகத்தை பார்க்க முடியாமல் பார்த்தான். மௌனமாக கண்களின் வழியே அஞ்சலி செய்து விட்டு சைக்கிளை அடுத்த வீட்டை நோக்கி உருட்டினான்.

     அருணனின் வீடு முதல் தெருவிலேயே தொடக்கத்திலே இருக்கும். ஆகையால் வியாபாரிகள் அனைவரும் தெருவில் நுழையும் போது விடும் வியாபாரக் கூவலை பந்தலை கண்டதும் நிறுத்தினார்கள். பின் அடுத்த தெருவில் இருந்து வியாபாரத்தை தொடங்கினர்.

     அருண் புதன்கிழமை இறந்தான். புதன்கிழமை தோரும் தேங்காய் புட்டு விற்றுக்கொண்டு ஒருவர் வருவார். அருணுக்கு மட்டும் அதிக தேங்காய்ப்பால் ஊற்றுவார். செய்தி தெரிந்ததும் கையில் ஒரு தேங்காய் புட்டை காகிதத்தில் சுருட்டி கொண்டு பந்தலை நோக்கி நடந்து வந்தார் . அருண் சாயலில் அவரின் மகன் இருப்பான். விளையாடும்போது கிணற்றில் விழுந்து இறந்துவிட்டான். அதனால் அவன் மேல் தனி கரிசனம். தனம் அவரை கண்டதும் போட்ட கூப்பாடு தெருவையே உலுக்கிவிட்டது.

     அருணின் முகம் காண முடியாமல் அவனை கும்பிட்டு விட்டு அருகே இருந்த மேஜை மேல் தேங்காய் புட்டை வைத்து விட்டு சென்று விட்டார்.

     தனத்தின் அண்ணன் வழக்கமாக பார்க்கும் ஜோசியரிடம் ஜோசியம் பார்க்கச் சென்றார்.

          “நல்ல நேரத்தில் இருந்திருக்கிறான்“

          “எல்லோருக்கும் நல்லா இருக்கு “

          “நல்ல சாவு தான்” ஆயுள் முடிந்துவிட்டது என ஒவ்வொன்றாக சொன்னார். பின் வாழை மரத்துக்கு திருமணம் செய்து குப்பற கிடத்தி புதைக்குமாறு சொன்னார்.

   கல்யாணம் ஆகாததால் கொட்டு மேளம் போடவில்லை. அதற்கு பதிலாக தனத்தின் அழுகையும் கத்தலும், ஊர் முழுதும் ஒட்டிருந்த போஸ்டர்களும் இறப்பை வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

     பந்தலில் ஊர் பெரியவர்களும் ஊர் நிர்வாகிகளும் கூடினார் .”மாமா மூன்றைக்கு மேல நாலரைக்குள்ள எடுக்கறது நல்லதுன்னு ஜோசியர் சொன்னார்” ஊர் நிர்வாகி ஒருவரிடம் மாது சொன்னான்.

‘குழி வெட்ட கூலி கொடுத்தாச்சா, சாங்கியம் செய்ய மதல வந்துட்டானா, சொந்தக்காரங்ககிட்ட  எல்லாம் சொல்லியாச்சா?’ என பல்வேறு கேள்விகளை ஊர் நிர்வாகிகள் ராஜாவிடமும் மாதுவிடமும் கேட்டனர்.

     சொந்தக்காரர்கள் மாலையோடு வரத் தொடங்கினர். அவனோடு விளையாட போகும் நண்பர்கள் பெரிய மாலையுடனும் அழுகையுடனும்  வந்தனர்.

   சொந்தக்காரர்கள் வருகை தனத்தின் கண்ணீரை சேந்தி சேந்தி ஊற்றிக் கொண்டே இருந்தது.

   தாளாத  வயதில் “அட அருணு  பையோனு” “என் சாமி“ என்றெல்லாம் கத்திக்கொண்டு இருவர் தாங்க தனத்தின் தாய் பாக்கியம் வந்தார்.

 “வரமாட்டேன் வரமாட்டேன்னு சொன்னியே அருணகிரி உன்ன எப்படிவர வச்சுட்டான் பாத்துட்டியாம்மா”  என்று வெடித்தாள் தனம். ’இதுக்கு தான் வரணும்னு எனக்கு எழுதி இருக்கா’ என அவரும் வெடித்த அழுத்தார்.

மணி இரண்டை நெருங்கியது. பந்தலின் நடுவே கவுத்து கட்டில் போட்டனர். அழுது கொண்டே மாது அருணை  தூக்கினான். உறவினர்களும் அருணை தூக்கிக் கொண்டு கட்டிலுக்கு சென்றனர்.

“இனி இந்த ஊட்டு வாசப்படிய மிதிக்க மாட்டியா”

                                                                        “சோறு போடுமான்னு கேக்க மாட்டியா”

                                                                                            “மருந்து மாத்திரை வாங்க போக மாட்டியா”

                                                                                    -ஐயோ ……. அருணே ……. ஊட்ட வுட்டு போறானே . மாது  உன் தம்பிய எங்கடா எடுத்துட்டு போற?. அவளின் அழுகையை கடக்க முடியாமல்  கடந்து சென்றனர்.

        பந்தல் முழுவதும் மனித தலைகளால் நிரம்பியது. அருணின் தாய்மாமன் அருணுக்கு பட்டு சட்டை பட்டு மற்றும் வேட்டி கட்டி விட்டார். நெற்றியில் செம்பு பட்டம் கட்டி விட்டு காலில் மெட்டி போடும்போது அவன் கால்களை முகத்தில் வைத்து வெடித்து அழுதுவிட்டார்.

        ஊரே ஆவலில் கூடியது. ஏனென்றால் இது போன்ற சடங்குகள் நடப்பது அரிது. திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்களையும் அருணுக்கு முறையாகின்ற முறை பெண்களையும் அவர்கள் அவரவர் வீட்டிற்கு போக சொன்னார்கள் ஊர் நிர்வாகிகள்.

      சடங்கு செய்யக்கூடிய “மதலைமுத்து” என்ற “முதல” இரண்டடி உயரம் உள்ள வாழை மரத்தை சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்தார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். அப்போது தனம் “டேய் அருணு பொண்ணு வந்துட்டாடா எப்பேர்பட்ட பொண்ணு பாருடா” என ஓங்கி அழுதாள்.

    பொண்ணு வீட்டாரராக இருக்க ஒரு நிபந்தனை உண்டு. அவர்கள்  வீட்டில் ஆண் பிள்ளைகள் மட்டுமே பிறந்து இருக்க வேண்டும். அருணுக்கு முறைமாமன் பெரியசாமி என்று ஒருவர்  இருந்தார். அவருக்கு நாலு பசங்க மட்டும் தான்.

     ஊர் பெரியவர்கள் பெரிய சாமியிடமும் பேசினர். அவர் ஒத்துக் கொண்டார். வாழை மரத்துக்கும் நெற்றியில் செம்பு பட்டம் கட்டி விட்டார்கள். புது மாப்பிள்ளை வேடத்தில் கிடக்கிறான் அருணகிரி. அப்போது தனத்தை அழுக வேண்டாம் என சொன்னார்கள். தனமும் ராஜாவும் பெண் கேட்டனர் பெரியசாமி – காவேரி தம்பதியினரிடம் .

அழுது கொண்டே இருவரும் ’எங்க பையனுக்கு உங்க பொண்ண தர சம்பந்தமா?’ என கேட்டனர்.

 “மனப்பூர்வ சம்மதம்ங்க”

   பெரியசாமியும் அவனின் மனைவியும் அழுது கொண்டு சம்மதம் சொன்னார்கள்.

       ஊர் நிர்வாகிகள், ’அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிடலாம்’ என சொன்னார்கள். அருளின் தாய் மாமன் தன் பேண்ட் பையிலிருந்து லட்சுமி ஜுவல்லர்ஸ் என்ற பர்சை எடுத்தார். அதில் நிஜ திருமணத்தில் கட்டுவது  போன்ற தாலி ஒன்று இருந்தது. அருணகிரிக்கு அக்கா முறை உள்ள ஒருவர் அவன் தலைமாட்டில் நின்று கொண்டாள். தாலி எடுத்து அருணகிரியில் கை விரல்களின் இடையே வைத்தனர். வாழை மரத்தை அவன் முன்னே காட்டினார்கள். தலைமாட்டில் இருந்த அக்கா ஒரு முடிச்சை அருணகிரியே போடுவது போல் போட வைத்தாள். பின் இரண்டு முடிச்சுகளை அவளே போட்டாள். தனத்தின் அழுகை சத்தம் பந்தலை பிரித்து எறிந்து விடுவது போல் இருந்தது. நீண்ட அழுகைக்கு பின் அருணின் கையில் அறிவாள் கொடுத்து வாழை மரத்தை வெட்ட வைக்கிறார் சடங்கு செய்பவர். சடங்கு முடிந்தது திருமணமும் முடிந்தது. இனி அருணகிரி திருமணம் ஆனவன் தான். ’மொய் எழுத எத்தனை தல வந்திருக்கு பாருடா அருணகிரி’ என்று ராஜாவும் கதறி அழுதார்.

    பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் “சொர்க்க ரதம்” தெருவுக்கு முன்னே வந்து நின்றது. அருணகிரியின் நண்பர்கள் மற்றும் அவன் வீட்டின் அருகே இருக்கும் சிறுவர்கள் அனைவரும் அவனுக்கு போடப்பட்டிருந்த மாலைகளை எல்லாம் பொறுக்கி எடுத்துக்கொண்டு சொர்க்க ரதத்தை நோக்கி நடந்தனர். ராஜா இறுதியில் என்ன நினைத்தார் என தெரியவில்லை “பையன கையிலே தூக்கிட்டு போலாம்” என சொன்னார். அனைவரும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு அருணகிரியை பாடையில் ஏற்றி தோள்களில் சுமந்து சொர்க்க ரதம் முன்னே செல்ல சுடுகாடு வரை நடந்தே சென்றார்கள்.

      பாடையில் பிணம் ஏற்ற மணப்பெண்ணான வாழை மரமும் உடன்கட்டை ஏறிக்கொண்டது. சுடுகாட்டு முனையில் பெண்கள் நிறுத்தப்பட்டனர். ஆண்கள் அருணகிரியை  மண்ணில் புதைக்க நடை போட்டனர்.

         “பட்டுத்துணி  நீயுடுத்தி பாடையில போகறயே”

         “வந்த சனம் வவுறு  நெறைய சோறு போடாம போகறயே”

         ”பொண்ணு வீடு பாக்கல

         மாப்பிள்ளை வீடு பாக்கல

         பத்திரிக்கை அடிக்கல

         பந்தக்கால் நடல

         அச்சத போடல

         கல்யாணம் மட்டும் முடிஞ்ச போச்சே!

         இப்பேர்ப்பட்ட கல்யாணம் செய்ய 

         நானென்ன புண்ணியம் செஞ்சன்னு தெரியலையே.!”

சுடுகாட்டு முனையில் முட்டி போட்டு தனம் அழுது கொண்டே ஒப்பாரி வைத்தாள். வெளியே அழுவதை தடுக்க முடியும். வேகும் வரை உள்ளே அழுவாளே அதை யார் தடுப்பார் என தன் மனைவி அழுவதை பார்த்துக்கொண்டே ராஜா சுடுகாட்டை அடைந்தார்.  

00

கார்த்திக் வாசன்.

சேலம் மாவட்டத்தில் GST Practitioner ஆக பணி புரிந்து கொண்டிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே வாசிப்பின் மேல் ஏற்பட்ட சிறு ஆர்வம் என்னை கடந்த 2016 – ல் இருந்து நிரந்தர வாசிப்பாளனாக மாற்றி இருக்கிறது. மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களிலும் நான் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகம் செய்யும் விதமாக அறிமுக கட்டுரைகளையும் பதிவு செய்து  கொண்டிருக்கிறேன். தீவிர வாசகனாக இயங்கி கொண்டே சிறுகதை, கவிதை, சிறார் கதைகள் போன்றவற்றை எழுதி கொண்டிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

The post அருணகிரி first appeared on Nadukal.

  •  

சன்னதித் தெரு கீழ வீதி!

இன்று சிதம்பரம் தெற்கு வீதி நுழைவாயில் வழியாக சென்று தாயுமான சுவாமியையும், மூலவரையும், பின்னர் ஊர்த்துவ தாண்டவரையும் தரிசித்து விட்டு இறுதியாக மடைப்பள்ளி அருகேயுள்ள அன்னபூரணியை வணங்கிவிட்டு நாலுகோபுமும் தரிசனம் செய்யும் இடத்திலிருந்து மீண்டும் தெற்கு வீதி வழியாக வெளியேறினேன்.

சிதம்பரம் வந்தபின் இந்த மூன்று ஆண்டுகளில் இதுநாள் வரை கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் போனதில்லை.

வெயில் மண்டை காயவைத்தது. என்ன செய்வது என சில நிமிடங்கள் நிழலோரம் நின்று இளைப்பாறிவிட்டு வாகனத்தை எடுத்தேன். இன்று மகாவீரர் ஜெயந்தி என்பதால் கீழவீதி செல்லும் வழியில் ஜெயின் சமூகத்தினர் நீர்மோர் பந்தல் அமைத்து எல்லோருடைய தாகத்தையும் தணித்து கொண்டிருந்தனர். நாவறட்சி அதிகரித்துக் கொண்டிருந்தது. ஜிலுஜிலு வென மோரும், வெள்ளரியும் சற்று தாக்கத்தை தணித்தது. அமிர்தம் என்பார்களே அப்படியொரு பதத்தில் நீர்மோர் இருந்தது. அங்கேயும் சில நிமிடங்கள் உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டு கீழவீதி வழியாக வண்டியை  மெல்ல செலுத்னேன்.

அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. கீழவீதி கோடியில் ஒரு பழைய புத்தகக் கடை ஒன்று உள்ளது போய் பாருங்கள் என்று ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். சரியாக கடைக்கு அருகில் போய் வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தேன்.

பிராமணர்கள் அதிகம் வசிக்கும் தெரு கீழவீதியில் நகைக் கடைகள், பேக்கரிகள், லாட்ஜுகள் என இருக்க ஒரு வீடு மட்டும் பாழடைந்த நிலையில் இருந்தது. அவ்வீட்டின் முன் கடைவீதியின் நடையிலிருந்து சாலையின் வாகன நிறுத்தம் வரை ஒரு பக்கமாக பழைய ஆன்மீக புத்தகங்கள் பைண்டிங் செய்யப்பட்டும், சில வெள்ளைத் தாள் ஒட்டப்பட்டுமேலே தலைப்புகள் எழுதப்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஊடுபாவாய் கண்களை ஓட்டினேன். பிள்ளையார் ஸ்லோகம், திருவாரூர் தல வரலாறு, என ஒருபகுதியும், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என சுஜாதாவும், நெற்றி நிறைய சந்தனமும் வெள்ளை தாடியுடன்  புன்னகையுடன் பாலகுமாரன் -ன் நூல்களும், தமிழ்வாணனின் மர்மநாவல்களும் என ஒரு பக்கமும், நடுப்பகுதியில் திருத்தி எழுதிய தீர்ப்புகள், இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் என வைரமுத்து ஈர்க்கும் கருவிழிகளோடு கையில் ஒரு ஃபெளன்டைன் பேனாவுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவைகளுக்கு மத்தில் ஏதாவது கிடைக்குமா என்று கண் பழைய நூல்களின் தூசிகளுக்கு இடைய நுழைந்து நுழைந்து புத்தகங்களைத் தேடி சிலவற்றை எடுத்து உள்ளே புரட்டிப்  பார்த்துக் கொண்டிருந்தது. க.நா.சு கவிதைகள், கி.ரா வின் கதவு, ஆகியவை நல்ல தரத்தில் கிடைத்தன.

நகுலனை தேடிய கண்கள் ஏமாந்து போயின. அப்போது மனதில் ஏனோ சுசீலா என்கிற பிம்பம் நடராஜன் கோவிலில் உள்ள மகிஷாசுரமர்த்தினி ரூபமாய் காட்சி கொடுத்து மறைந்தது. தொடர்ந்து டி.கே.துரைசாமி சந்திக்க வேண்டுமென மனம் சொல்லிக் கொண்டது. நகுலனுக்குப் பிறகு டி.கே.துரைசாமியை சந்தித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என தோன்றியது.

மெளனயின் இறுதிக்காலம் மனம்முழுவதும் தோன்றி மறைந்தது. மெளனியும் பிடிபடவும் இல்லை. கிடைக்கவும் இல்லை.

கடைக்காரர் மும்முரமாய் ஹிஜாப் அணிந்த தன் பீவியோடு முகப்பு அட்டை கிழிந்த புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் எடுத்த புத்தகங்களைக் காட்டி “விலை சொல்லுங்க” என்றேன். அவைகளை வாங்கி உள்ளும் புறமும் பார்த்து சற்று நிதானித்து ‘நூறு குடுங்க’ என்றார். நீங்க தான் முதல் ஆள் என லேசாக புன்னகைத்து விட்டு மீண்டும் தம் முகப்பு அட்டை ஒட்டும் பணியில் மூழ்கினார். சட்டைப் பயில் இருந்த நூறை தந்துவிட்டு கிளப்பபுகையில்

“இனி ரெகுலரா கடை போடுவீங்களா என்றேன்”.

“அப்பா இறந்து ரெண்டரை வருஷம் ஆச்சு. நானும் இரண்டு வருஷம் சவுதி அங்க இங்கனு வேலை பார்தேன். செரி அப்பாவோட பழைய புத்தக வியாபாரம் போதும்னு திரும்பவும் இப்போ நான் கடைய போடுறேன்.” என்றார்.

அப்போது தனது திரைச்சீலை சரிசெய்தபடி புத்தகங்களை துடைத்து பரப்பிக் கொண்டிருந்தாள் சிறுமி!. அவளது பதினாலு வயது தம்பி கலைந்து போன புத்தகங்களை வரிசையாக அடுக்கியபடி இருந்தான்.

இறுதியாக புறப்படும் முன் “உங்க பேரு” என்னான்னு கேட்டேன். ” சாகுல்” என்றார்.

என் உதடுகளில் இருந்து ஒரு நட்பார்ந்த புன்னகை வெளிப்பட்டிருக்க வேண்டும்.

திரும்பவும் அடிக்கடி வருவேன். வந்து பாக்குறேன். என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்தேன்.

எதிரில் நாலு வீதிகளையும் சுற்றிவிட்டு மூலவர் தேர் மல்லாரி நடையோடு நாயன ஓசையுடன் தெரு வாசலுக்கு வந்து நின்றது.!

யாரோ ஒரு யாத்ரீகன் கண்ணத்தில் போட்டுக் கொண்டு சன்னதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றியது.

00

இலட்சுமண பிரகாசம்

சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ‘மிருகத்தின் வாடை’ என்கிற கவிதைத்தொகுதி நடுகல் வெளியீடாக சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்துள்ளது.

2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

The post சன்னதித் தெரு கீழ வீதி! first appeared on Nadukal.

  •  

                      சீவகன் கவிதைகள்

1.  கடவுள்

வெட்கம் கெட்ட கடவுள்

எங்கும்

எதிலும் இருக்கிறார்

உடைகளைக் களைய

கொஞ்சம்

கூச்சமாகத்தான்  இருக்கிறது.

2. மரியாதைக்குரிய கடவுள்

எப்போதும் போல்

தியானத்தின் பெயரில் 

துயிலும் கடவுளார்

எதற்கும்

செவிக் கொடுக்கமாட்டார்

நீ தேவிடியா பயலே

என்றாலும்கூட.

3.  உரையாடல்

எம்பெருமான்

சக்தியுடன் கலவி கொண்டிருக்கிறார்

வேண்டிய வரத்தை என்னிடம் கேளும்

என்றான் கடவுளின் சீடன்

,

நான் சக்தியை

அடைய வேணும்

முதலில்

உண்ண சோறு போடுமய்யா.

4.  அவன் செயல்

எங்கு தேடியும்

அகப்படாத

சிவலிங்கம் பிள்ளை

வீணையின் நரம்பில்

மதுவோடு

அமர்ந்திருப்பதாகச்

சொன்னார்கள்

தெருவின் முச்சந்தி

குழாயடியில்

சக்காளத்தி சண்டையில்

தலைவிரித்து

ஆடிக் கொண்டிருந்தாள்

பராசக்தி

,

நாறின குடும்பத்தில்

பிறந்ததெண்ணி

நோஞ்சான் குமராண்டி

சில்வர் தட்டில்

தண்டோர

அடிக்கலானான்

யாமிருக்க பயமேன்.

00

The post                       சீவகன் கவிதைகள் first appeared on Nadukal.

  •  

சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள்

1) சிறுமலைப்பயணம்

———————————————-

நான் அத்தனை அசிங்கமாக

மண்ணில் வீழ்ந்தபோதும்

உன் கண்களில் துளி

வெறுப்புப் படரவில்லை

அதற்கு முதல் நாளைப் போலவே

நீ என்னை அம்மு என்றழைத்தாய்

என் குறை வயிறு குறித்துக்

கவலைப்பட்டாய்

நல்ல பதத்தில் வெந்த

ஊன்சோறு ஊட்டிவிட்டாய்

கன்னத்தில் படிந்திருந்த

தூசியைத் தட்டிவிட்டாய்

தோளில் இடமளித்தாய்

நீராவியில் வெந்த கப்பக்கிழங்கும்

பொடி உப்புடன் மிளகாய்த்தூள் சேர்த்த

மாங்காய்ப் பிஞ்சும் வாங்கித் தந்தாய்

எல்லாவற்றுக்கும் மேலாக

சிறிய பெட்டிக்குள் பொதியப்பட்ட

பொன்னைப் போல பதனமாக

என்னைப் பழனிக்கு அனுப்பி வைத்தாய்

மொத்த இயலாமையையும்

முழுதாகச் சுகித்து

தற்கொலை முனையில் நின்ற

முதல் கையாலாகாதவனின்

நீண்ட பெருமூச்சுடன்

பேருந்து நிலையத்தில் இறங்குகிறேன்

உன் வாட்டம் உணர்ந்தும்

நீர் வார்க்க இயலாத என் கைகளை

கொள்ளி வைத்துக் கருக்கத் துணியாத

சுயநலவாதி நான்

மன்னித்துவிடு என்று கேட்கமாட்டேன்

இனிமேல் நான் உன் கண்களை

சந்திக்கக் கூடாது அவ்வளவு தான்.

2) அடைமழை

——————————

தேயிலை கொதிக்கும்

டீக்கடை பாய்லரின்

பட்டறைக்கு அடியில்

கதகதப்பாகப் படுத்துக்கொண்டு காலையிலிருந்தே விடாது பெய்கிற

இந்த மழையை வெறித்துக்

குரைத்தபடி இருக்கிறது நாய்

தென்கிழக்கு மூலையில்

கும்மரிச்சம் போட்டிருக்கும் கருமேகங்கள்

என்னையும் நாயையும் பிறகு அந்த

டீக்கடை பாய்லரின் பட்டறையையும்

விழுங்கிவிடத் துடிக்கின்றன

இவற்றிற்கு அப்பால்

உலகம் மற்றுமொரு பொன்விடியலுக்கான

பணிகளுக்கு தங்களைத்

ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது.

3) ஒருத்தி

———————–

விட்டுப் பிரியும்போதெல்லாம்

கண்ணில் நீர் கோர்க்க

நெஞ்சோடு சேர்த்து

அணைத்துக் கொள்ளும்

அவளை உங்களுக்குத் தெரியுமா?

ஆம் எனக்கு அவள் நன்கு பரிச்சயம்

ஆலமரத்தைப் போல

மண்ணுக்கு மேலும் தன் வேரை

மனதாரப் பரப்பியிருப்பவள்

தண்டு முறிந்து வதங்கிப் போய்

வாழ்வின் அந்திமத்தில் இருக்கும்

சிறு தாவரத்தின் உயிருக்கு

உள்ளங்கையில் கொஞ்சம்

மழை கொண்டு வருபவள்

மேலும் உள்வாங்கிய போதும்

ஓயாத கடல் அலையைப் போல

அவள் மரணமில்லாதவள்!

4) பிரெட் ஆம்லெட்

———————————

மூணாறு மலைச்சாலையும்

மாட்டுப்பட்டி அணையும்

என் அடிவயிற்றுக் குமட்டலும்

நினைவுக்கு வருகின்றன

வழக்கம் போலவே

ஒன்றன்பின் ஒன்றாக

கும்பல் என்னை விட்டு

விலகிச் சென்றது அல்லது

நான் என்னைத் தனித்து

உருவிக் கொண்டேன்

பிரதமர் என் நண்பரென்று

பிதற்றிக் கொண்டிருக்கும்

முதியவரைச் சூழ்ந்து

அலைக்குமிழென சிரிப்புச் சப்தம்

பொங்கியெழுந்து கொண்டிருக்கிறது

கருத்த மேனியில்

அளவெடுத்தாற் போன்ற

காட்சிக்கு உகந்த

அங்கங்களோடு சிரிக்கும்

பிரெட் ஆம்லெட் கடைக்காரியின் மீது மேய்கின்றன

போதையில் மினுங்கும்

லாட்டரிச் சீட்டுக்காரனின் கண்கள்

சூடு குறைந்த எலுமிச்சைத் தேநீரை

என் கையளித்துவிட்டு உள்ளோடி

ஒளிந்து கொள்கிறாள்

கடைக்காரியின் மகள்

பிரதமரின் நண்பனாகும் சாத்தியம்

மிகுந்த தேசத்தில்

பிரெட் ஆம்லெட் கடைக்காரியின்

மகளாக வாழ்வது தான்

பெரும் சிரமம்.

5) ஆதுரமும் ஆண் மனமும்

—————————————————–

நீ அவன் நெஞ்சில் சாய்ந்து

ஆடியதை நான் பார்த்தேன்

பொய் சொல்லாதடி திருடி

முன்னெப்பொழுதோ நெஞ்சில் விழுந்த

நேசவிதை எத்தனை தான்

மண்ணைப் போட்டு மேவினாலும்

கிழித்துக்கொண்டு மேலெழும்பும் என்பதை

அறியாதவனா நான்?

ஆனால் ஒன்று

அந்தக் கணத்தில்

நான் ஆம்பளையாக இல்லை

என்பது பூரணமான உண்மை

ஒப்புக் கொள்கிறேன்.

( திண்டுக்கல் – கரூர் சாலையிலுள்ள

  கோவிலூர் மண்ணுக்கு)

00

சு. ராம்தாஸ்காந்தி

பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்

அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன

The post சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள் first appeared on Nadukal.

  •  

அமீபா (வடிவம் அற்றது)

தேசிய நெடுஞ்சாலையில் இடது பக்கம் வலது பக்கம் நடுவில்  சிமெண்டில் கட்டப்பட்டு இருக்கும் சென்டர் மீடியன் கட்டைகளுக்கு கருப்பு வெள்ளை பெயிண்டை அடித்துக் கொண்டிருந்தான் வேணு.

உச்சி வெயிலில் அவன் கட்டியிருந்த சரத்தில் உப்பு பூத்து வெள்ளை கோடுகளாக அங்க அங்கே இந்திய வரைபடத்தில் இருப்பது போல வரைந்திருந்தது. மேல் சட்டையும் வேர்வையில் ஊறி தோளோடு தோளாக ஒட்டிபோயிருந்தது. வேகமாக குனிந்து நிமிர்ந்தால் சட்டையின் முதுகுபகுதி நேராக கோடு விழுந்து கிழிந்து விடக்கூடும், நிதானத்தில் வேணு கவனமாக வேலை செய்து கொண்டிருந்தான். இந்த நிதானமும் இதுபோன்று இரண்டு சட்டைகள் கிழிந்த பின்பு தான் பெற்றிருந்தான்.

சாலையில் அவனை பொருட்படுத்தாத வாகனங்கள் இடது புறமும் வலது புறம் பறந்த வண்ணம் இருந்தது. குனிந்து பெயிண்ட் அடித்து அடித்து இடுப்பு கடுத்தது.  சிறுநீர் கழிப்பது போல சென்று ஏதாவது மரநிழலில் சில நிமிடங்கள் கழித்தால் நன்றாக இருக்கும் . சிறுநீர் கழிக்க சாலையை கடந்து தூரத்தில் இருக்கும் மரத்தை நோக்கி சென்றான்.  சிறுநீர் வெளியேற்ற முயற்சி செய்ய  சில வினாடிகள் வருவது போல் உணர்வில் காத்திருந்து சொட்டு சொட்டாக வடிய ஆரம்பித்தது.  சிவம்பும் மஞ்சளும் கலந்து வெளியேறியது. புங்க மரத்தின் நிழல் கடும் வெயிலுக்கு மாற்றாக குளிர்ச்சியை அளித்தது.

வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. நாளை மறுநாள் முதலமைச்சர் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் சாலையில் இருபுறம் கட்டையை ஓட்டி உள்ள மண்களை அள்ளுவதும் சாலையில் அங்கங்கு காணப்படும் பள்ளங்களை பஞ்சர் ஒட்டி  தற்காலத்திற்கு சரி செய்து கொண்டிருந்தனர்.

ஜட்டி பாக்கெட்டில் இருந்த ஹான்ஸை எடுத்து கையில் கொட்டி, கட்டை விரலை வைத்து நன்றாக கசக்கி, உருண்டையாக்கி உதட்டை திறந்து உள்ளே வைத்த ஆசுவாசபடுத்திக் கொண்டிருந்தான் வேணு. மரத்தின் நிழலும், ஹான்ஸின் மதமதப்பும் அந்த நேரத்தில் நிம்மதியை அளித்தது.

தூரத்தில் இருந்து சூப்பவைசர் கையால் சைகை காட்டி அழைப்பது தெரிந்தது. இன்றுடன் சாலைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை முடிந்துவிடும் என்பதால் எப்பொழுது மாலை ஆகும் என்று நினைத்து கட்டைகளுக்கு மீண்டும் பெயிண்ட் அடிக்கத் துவங்கினான்.

மாலை ஆறு மணிக்கு சம்பள பணத்தை வாங்கி அவனும் அவனின் நண்பனும் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த ஓயின் ஷாப்க்கு சென்று 135 ரூபாய் டைமண்ட் ரம் வாங்கி யாரோ குடித்து வைத்துவிட்டு போன பிளாஸ்டிக் கப் இரண்டை எடுத்து இருவருக்கும் சமளவில் பகிர்ந்தனர். இருவரின் நடவடிக்கைகளை கவனித்த மற்றொரு குடிகாரர் அவரிடம் மீதி இருந்த தண்ணீரை அவனிடம் கொடுத்தார்.  போலி புன்னைகையோடு வாங்கி கொண்டு தேவையான அளவு தண்ணிரை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தார்கள்.

பேருந்து நிலையத்தில் உள்ளிருந்த ஸ்வீட் கடையில் மனைவிக்கும் பிடித்த அசோகா 100கிராம் வாங்கி கொண்டு மூதாட்டியிடம் ஒரு முழம் முல்லை பூ வாங்கி ஊருக்கு செல்லும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தான் வேணு. அவன் கை விரல்களில் தொங்கிய கேரி பையில் இருந்த பூவும் அசோகவும் காற்றில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது. சாரத்தை மடித்து கட்டியிருந்த கால்களில் கொசு கடித்து கொண்டும் காதுகளின் பக்கத்தில் ரீங்காரம் பாடிக் கொண்டு இருப்பதை பெருட்படுத்தாமல் மரத்து போன கால்களில் நின்று பேருந்து வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.

என்றும் இல்லாத அளவுக்கு வேணுவின் வருகைக்கு காத்திருந்த புவனா அவன் மீது அளவு கடந்த அன்பை வெளிக்காட்டியபடி ஆச்சிர்யத்தை ஏற்படுத்தினாலும், வேணு வெளிகாட்டாமல் பூவையும் அசோகவையும் கொடுத்துவிட்டு குளிக்க சென்றான். திறந்த வெளியில் குளிக்க பெயிண்ட் வாளியில் இருந்து தண்ணீரை தலையில் ஊற்றும் போது புவனா இதற்கு முன் தன்னை கரப்பான் பூச்சியைபோல அணுகுவது ஞாபகத்திற்கு வந்து போனது. இன்றுமட்டும் அப்படி என்ன ஆகிவிட்டது. என்றும் போல மண் சுவரில் கட்டிய சுதை சுவர் அதிக மழைக்கு வீடே நனையும்.  பாதி கரையான் அரித்த கீற்று கல்யாணத்தின் போது வாங்கிய நனைந்து போன பாய்.  எண்ணெய் பிசுபிசுப்பு ஏறிய தலையணை. எதனால் புவனாவிடம் இன்று மட்டும் மாற்றம் என யோசித்தபடியே குளித்து முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்றான்.

நெத்திலி கருவாட்டு குழம்பு வாசனை குடிசையை நிரப்பி பசியை தூண்டியது. சுடச்சுட வடித்த சோற்றை தட்டில் போட்டு நெத்திலி குழம்பை ஊற்றி பரிமாறினாள்.  சோற்றில் இருந்து மேலே எழும் ஆவி மூக்கிற்கு இதமாக இருந்தது. ஆசையாக சில வார்த்தைகளை தொட்டு தொட்டு பேசி அந்த இரவு அவனது இளமை காலத்தை மீட்டுகொடுத்தது. கீரியும் பாம்புமாக இருந்த புவனாக்கு இன்று ஒரு நாளில் என்னதான் நடந்துவிட்டது.  பாயில் படுத்து கொண்டு நாளைய பொழுதை எதிர் கொள்ளுவதை யோசித்து அவன் அருகில் நெருங்கி படுத்திருந்தவள் வலது கையை மார்பு மீது போட்டுக் கொண்டு அவன் தலையை விரல்களால் வருடி விட்டு அவள் ஆழ்மனதில் உள்ள கோரிக்கைகளை முன் வைக்க தயார் ஆனாள்.

-யோ… வேணு

-என்ன…

-நா ஒன்னு சொல்லட்டுமா?

-என்னத சொல்ல போற,சொல்லு?

-வெளிநாட்டு வேலைக்கு போறியா?

-உங்க கொப்பன்னா வானு திறந்து வச்சியிருக்கான்

கெஞ்சும் குரலில், ’இல்ல சித்திரகுடில கட்டிகொடுத்த மாமா பொண்ணு வீட்டுகாரரு வெளிநாட்டுல வேலை செய்யுறாறம்.  நம்ப மாதிரி இருந்தவ இப்ப பார்க்குறேன் ஆளே அடையாளம் தெரியல. வீடு கட்டி நகையலாம் போட்டு ராணி மாதிரி இருக்கா’.

-வெளிநாட்டுக்கு வேலைக்கு போகுறது அவ்வளவு ஈசியா? பணம் கட்டி போகணும் . அவ்வளவு பணத்துக்கு எங்க போகுறது?

-இல்லயா அவள்ட்ட சும்மா பேச்சுவாக்குல கேட்டேன். டவுன்ல ஒரு ஏஜெண்ட் ஆபிஸ் இருக்காம் அங்க போய் விசாரிக்க சொன்னா. நாளைக்கு போயிட்டு பார்த்துட்டு விசாரிக்கலாம்.

-நா போயிட்ட நீ மட்டும் தனிய இருந்துப்பியா?

-எங்க அம்மா வீட்டுலயும், இங்கையும் மாறி மாறி இருந்துப்பேன். நீயும் ஒரு மூணு வருசத்துல சம்பாரிச்சிட்டு வந்த இங்கயே சுயமா ஒரு கடைய வச்சி வாழ்க்கைய ஓட்டிக்கலாம்.

-சரி. எனக்கு தூக்கம் வருது

-நாளைக்கு போயிட்டு வந்துருவோம் சரியா?

-பார்ப்போம்…

கண்களை இறுக மூடிக்கொண்டான்.

புவனா எதிர்நோக்கி இருந்த அந்த விடியல் விடிந்தது.

 இருவரும் முதல் வேலையாக டவுனுக்கு சென்று, ஏஜெண்ட் ஆபீஸ் காலை பத்து மணி கடந்தும் திறக்காமல் இருந்ததால் காத்துக் கிடந்தனர். அதற்கு இடையில் புவனா காவல் காத்த அய்யனாரை ஐம்பது முறையாவது வேண்டியிருப்பாள். வேணு ஹான்ஸை மூன்று முறை போட்டு துப்பியிருந்தான். ஆபிஸ்க்கு வெளியே ஒட்டிருக்கும் விளம்பர பலகையில் இருக்கும் விமானத்தை நிமிடத்திற்கு ஒரு முறையாவது புவனா பார்த்திருப்பாள்.

புவனாவின் மனதிற்குள் வேணு வெளிநாடு போயிவிட்டது போல் கை நிறைய சம்பாதிப்பது போல  கற்பனையை ஓடவிட்டுட்டு இருந்தாள். ஷட்டர்  திறக்கும் சத்தத்தை கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர். வெள்ளை சட்டை,  வெள்ளை பேண்ட் அணிந்த அந்த நபர் நெற்றியில் இருக்கும் சந்தனப்பொட்டு அவருக்கு எடுப்பாக இருந்தது. அவரின் முகம், தோற்றமும் பார்ப்பவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.

-உங்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பத்து நிமிடம் மட்டும் பொறுத்து கொள்ளுங்கள்.  ஆபீஸை கூட்டிவிட்டு சாமி கும்பிட்டுவிடுகிறேன்.

அவரின் தெய்விக அடக்கமான பேச்சு நம்பிக்கை இல்லாத வேணுக்கும் நம்பிக்கை விதைத்தது.

தயங்கி தயங்கி பேசிய புவனாவின் கோரிக்கையை புரிந்து கொண்ட ஏஜெண்ட் பெயிண்டர் வேலைக்கு துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும்,  விசா டிக்கெட் தனக்கான கமிஷன் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு லட்சத்து  ஐம்பது ஆயிரம் வரும் என்று தெளிவு படுத்தினார். பணத்தை தயார் செய்துவிட்டால் இரண்டு மாதத்தில் துபாய்க்கு அனுப்புகிறேன்.

-எதாவது குறைத்து கொள்ள முடியுமா? புவனா கேட்டாள்.

-என் கமிஷன்ல வேணும்னா  கொஞ்சம் குறைச்சிக்க முடியும்.  வேற ஒண்ணும் பண்ண முடியாது.

-சம்பளம் எவ்வளவு சார் வரும்?

-நாப்பது ஆயிரம் ரூபாய் வரும்.  போகப்போக சம்பளம் அதிகப்படுத்துவாங்க. முதல்ல பாஸ்போர்ட் அப்ளை செய்து வாங்குங்க. அதுக்கு அப்பறம் பணத்த ரெடி பண்ணிட்டு சொல்லுங்க.

வேணுக்கு பணத்தை தயார் செய்ய முடியும் நம்பிக்கை துளியும் இல்லாமல் வெளியே வந்தான்.  எப்படியும் தயார் செய்துவிட  முடியும் என்ற நம்பிக்கையில்  ஆபிஸில் இருந்து வெளியே வந்த புவனா மீண்டும் அய்யனாரை நினைத்தாள்.

முழு வீச்சில் இருந்த புவனா எல்லா உறவினர்களிடம் பணத்தை கடனாக கேட்டு பார்த்தாள். அவளுக்கு பதிலாக வந்தது எந்த உதவியாக இருந்தாலும் பணத்தை தவிர வேற உதவி வேண்டும் என்றால் கேளு, இந்த பதில் அவளுக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் கேட்டு வைப்போம் என்று கேட்டு வைத்தாள். இந்த காலத்துல பணம் உதவின்னா மட்டும் தான் மத்தவன தேடி வராங்க.  ஜாடைமடையாக சொல்லுவது அவள் காதில் விழவும் செய்தது.

வேணு கேட்டு பார்த்ததில் அந்த ஊரில் பணம் படைத்தவன் இதையே தொழிலாக கொண்டவன் வட்டிக்கு  பணம் தருவதாக சொன்னான்.

வேணுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, கடன் தருவதாக ஒப்புக் கொண்டவன் வேணுக்காக தரவில்லை. புவனாக்காக தருகிறான்.  அதும் ஐம்பது ஆயிரம் தருவதாக ஐந்து காசு வட்டி. சரியான நேரத்தில் வட்டியை கொடுக்கணும் அழுத்தமாக சொல்லியிருந்தான்.

புவனாவிடம் தெரிவித்தான். அவனை பற்றி அரசபுரசலாக புவனா கேள்விப்பட்டு இருந்தாலும் முதலில் பணத்தை வாங்கு, மீதி பணத்துக்கு என்ன செய்ய போகிறோம். கடைசி முடிவாக யோசித்து வைத்திருந்ததை புவனா சொன்னாள்.  மீதி பணதுக்கு வீட்டு பட்டாவை பேங்கில் அடகு வைத்துவிடலாம்.

முதலில் தயக்கியவன் புவனா தொடர்ந்து அழுத்தம் தந்ததில் சரி என ஒப்புக் கொண்டான்.

வேணு பாஸ்போர்ட் ஆபீஸ் சென்றிருந்த நேரத்தில் ஐம்பது ஆயிரம் பணத்தை எடுத்து வந்து வீட்டு வாசலில் வந்து நின்றான்.  வீட்டினுள் குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்தவள் வாசலில் அவன் நிற்பதை பார்த்து அவசர அவசரமாக புடவையை சுற்றி வெளியே வந்தாள். குளித்த தலை மூடியில் இருந்து சிந்திய நீர் பின் முதுகில் சொட்டு சொட்டாக வழிந்து ஜாக்கெட்டை நனைத்தது.

அவன்  மேனியின் மீது வந்த நறுமணம் புவனாவின் மூக்குக்கு இதத்தை கொடுத்,தாலும் அவனின் பார்வை புவனாவின் மார்பகத்தை,  இடையை உடல் முழுவதும் பரிசோதிப்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.

சிரித்த முகத்துடன், ’பணத்தை கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன்’. பணத்தை எடுத்து கொடுக்கும் போது அவனின் ஆள்காட்டி விரல் அவளின் சுண்டு விரலை தொட்டு பார்த்தான்.

ஏதோ பேச அவன் முற்பட பணத்தை வாங்கி கொண்டவள் நன்றியை தெரிவித்துவிட்டு வீட்டினுள் வேகமாக சென்றாள்.

அவனின் கூர்மையான பார்வை அவளின் மேனியை ஆராய்ந்ததை கை விரல் தன் விரலை தொட்டதையும் சில வினாடி மனதில் காட்சிகளாக வந்து போனது. பணத்தை பார்த்து எண்ணி பார்க்கையில் மனதில் ஓடிய காட்சிகள் கரைந்தது.

அடுத்த நாள் ஏஜெண்டை பார்த்து முன்பணமாக நாற்பது ஆயிரம் கொடுத்துவிட்டு துபாய் செல்லுவதற்கான வேலைகளை ஆரமிக்கும்படி சொல்லிவிட்டு வந்தார்கள். மீதி இருந்த பத்து ஆயிரம் ரூபாயில் கடனுக்கு வட்டியாக இரண்டு மாத பணம் ஐந்து ஆயிரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டு பட்டாவை  தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சத்து இருபது ஆயிரத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றனர்.

வேணு வெளிநாடு செல்லயிருக்கும் சேதியை உறவுகாரர்களுக்கும் நண்பர்களிடம்சொல்லி புவனா பெருமை அடைந்தாள்.

முதல் மாத வட்டி பணத்தை ஊர் கடன்காரனிடம் கொடுத்துவிட்டு வந்தான் வேணு.

ஏஜெண்டுக்கு  முழுமையான பணத்தை கொடுத்து பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். மருத்துவ பரிசோதனையும் முடிந்து பயணம் சொல்லுவதற்கான தேதி நிர்ணக்கபட்டது.

தினந்தோறும் டிக்கெட்டை பார்த்து மகிழ்ச்சி கொண்டிருந்தாள் புவனா.

வேணு பயணம் செய்யும் வரையிலும் வீட்டின் உள்கதவு பூட்டிய வண்ணமேயிருந்தது. வேணுவை வெளியே எங்கேயும் அனுப்பாமல் வீட்டுலே இருக்கும்படியும் அவனுக்கு பிடித்தமான உணவை தினந்தோறும் சமைத்து கொடுத்து ஒரு நாளுக்கான வேலையாக உணவு உண்ணுதல், கலவி கொள்ளுதலே வேலையாக மாற்றியிருந்தார்கள். தன் மனதிற்குள் முடங்கி கிடந்த வர்ணனை வார்த்தைகளை இருவரும் மாறி மாறிபேசி அன்பை வெளிபடுத்தி கவலையற்று துன்பங்கள் மறந்து இருவரும் ஒரு தொட்டிலில் பிறந்த குழந்தைகளாய் வீட்டின் பாயினில் கிடந்தனர்.

நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு துபாய் அடைந்தான்.  துபாய் நேரப்படி மாலை நான்கு ஆகியிருந்தது. ஜனவரி மாசம் என்பதால் குளிர் காற்று அளவுக்கு அதிகமாக இருந்தது. வேணுவை அழைத்து செல்ல கம்பெனி ஆள் காத்திருந்து வரவேற்று அறிமுகப்படுத்திக் கொண்டான். சொகுசாக இருந்த காரில் ஏறி  துபாயில் உள்ள தேரா பகுதிக்கு அழைத்து சென்று இருப்பிடத்தில் அறையில் இருந்த  பாகிஸ்தான் பங்களதேஷ் நேப்பாள் சேர்ந்தவர்களை அறிமுக செய்தான். ’நாளை காலை ஆறு மணிக்கு அழைத்து செல்ல வண்டி வரும் அதற்குள் சாப்பிட்டு தயார் நிலையில் இருக்கவும். ஜெபல் ஜெய்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.  இங்கிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்’ கேரளத்தான் சொல்லிவிட்டு போனான்.

பயண அசதியில் நல்ல உறக்கத்தில் இருந்தான். விடியகாலையில் ரூம் பரபரப்பாக காணப்பட்டது.  பாகிஸ்தானை சார்ந்த அந்த நபர் தட்டி எழுப்பினார்.  திடுக்கிட்டு எழுந்து பணிக்கு கிளம்ப வேண்டும் என கடிகாரத்தை காட்டி செய்கை செய்தான். அரை தூக்கத்தில் எழுப்பி வெளியில் காத்திருந்த வாகனத்தில் ஏறியதும் கடும் குளிரில் மங்கலாக இருந்த சாலையில் முகப்பு ஒளி வெளிச்சத்தில் வாகனம் இயங்கியது.

மலைகள் நிறைந்த பகுதியின் உச்சத்தை அடைந்ததும் வாகனத்தின் இயக்கம் நின்றது.  தூக்கத்தில் இருந்த அனைவரும் உடல் முறுவலுடன் கிழே இறங்கினார்கள். குளிரும் காற்றும் உடலை உலுக்கிய வண்ணமாயிருந்தது.

அங்கு இருந்த கேரளத்தை சார்ந்த மேல் அதிகாரி அவர்களுக்கான வேலைகளை பிரித்து கொடுத்து கொண்டிருந்தார். பெயிண்ட் அடிக்கும் வேலை என நினைத்தான். அங்கு பெய்ண்ட் அடிக்கும் சாத்திய கூறுகள் இல்லாத இடம். 

முழுவதும் மலைகளும் பள்ளதாக்குகளுமாக இருந்தது. சில மணி துளிகளிலே அவனால் என்ன வேலை என யுகிக்க முடிந்தது.  சாலை போடும் பணி நடைபெறப்போகிறது. அதில் அவனுக்கும் ஏர் கம்பெரேசர் கொடுத்து மண் தரையில் அடித்து புழுதிகளை வெளியேற்ற வேண்டும். மேல் அதிகாரியிடம் வேணு போய் எனக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு அனுப்புவதாக அங்கு இருக்கும் ஏஜெண்ட் சொல்லி அனுப்பினார் .

கேரளத்து அதிகாரி சிரித்து கொண்டு காண்ட்ராக்ட் வேலையில் எல்லா விதமான வேலைகளும் இருக்கும். பில்டிங் கட்டும் போது பெயிண்ட் அடிக்கும் வேலை இருக்கும். இப்ப நமக்கு ரோடு போடும் வேலை வந்திருக்கு. போன மாசம் பெயிண்ட் அடிக்கும் வேலை இருந்தது.

வேலைகள் வேகமாக நடைபெற தொடங்கியது.

வேணுக்கான வேலைகளை ஒருவன் முன்மாதிரியாக செய்து காட்டிவிட்டு வேலையை அவன் பொறுப்பில் ஒப்படைத்தான். மண் தரையில் ஏர் கம்பரேசரை வைத்து அடிக்கையில் தரையில் இருந்து  மேலே கிளம்பும் புழுதிகளும்,காற்றில் இருந்துஅடித்து கொண்டு வரப்படும் புழுதிகளும் உடல் முழுவதும் புழுதியாகி நாசியின் வழியாக நுரையிரலுக்குள் புழுதிகள் தஞ்சம் அடைய தொடங்கியது. அடையாளம் தெரியாத அளவுக்கு  தூசியில் மூழ்கியிருந்தான்.

நகர முடியாத அளவுக்கு வேலை கண்காணிப்புடன் நடைபெற்றது.  டீ குடிக்கும் இடைவெளியில் அருகில் இருந்த கார் கண்ணாடியில் முகத்தை பார்த்துபோது  யாரும் கண்டு பிடிக்காதபடி தோற்றம் மாறியிருந்தது

டீயை வேகமாக குடித்தான் மேலும் இன்னொரு டீ குடித்தால் நல்லா இருக்கும். கேட்க அவனுக்கு  தயக்கம். அவனின் ஆவலை உணர்ந்துக் கொண்ட கேரளத்து அதிகாரி மேலும் டீயை வாங்கிக் கொடுத்தான்.

வேலை இயந்திரம் போல் இயங்கியது. காலில் போட்டிருக்கும் செருப்பு உருககி போகும் அளவுக்கு மதிய வெயில் அடித்தாலும் ஹான்ஸ் இல்லாமல் வேலை செய்வது சலிப்பை ஏற்படுத்தி வேலையை செய்ய விடாமல் மண்டைக்குள் வலி கொடுத்தது.

கொதிக்கும் தார் தரையில் தெளித்து சுட சுட தாரை தரையில் பரப்பி வாகனத்தை ஓட்டி மட்டபடுத்தும் போது வீசும் அனல்காற்றின் வெக்கையில் நெஞ்சு முடியை பொசுங்கிவிடும் அளவுக்கு இருந்தது. இந்த நாளை கடந்துவிட்டால் போதும், அருகில் இருந்தவனிடம் நேரத்தை கேட்டு மீதி வேலை செய்யும் நேரத்தை கேட்டு கணக்கிட்டான்.

முதல் நாள் வேலை வெற்றிகரமாக முடித்து வாகனத்தின் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து காலணிகளை கழட்டி குதிங்காலை பார்த்தால் அடிபாதம் சிவந்து கொப்பளித்து எரிச்சலை கொடுத்தது. இந்த எரிச்சலோடு நாளைக்கு வேலை செய்தால் சதை பிஞ்சி காயம் பெரிதாகிவிடும். ரூமிற்கு போய் மஞ்சளில் பத்து போட்டு நாளை காலைக்கு கால்களை சரியாக்க வேண்டும் என்று நினைத்தான்.

மாலையில் கடும் குளிருக்கு இடையில் மலையில் இருந்து வாகனம் கீழே இறங்கி சமதள சாலையில் சென்று ரூமை அடைந்தது. முகங்கள் துவண்டு போயிருந்தது.  சுடுதண்ணீரில் குளித்துவிட்டு வந்து முதல் வேலையாக உறவினர்களுக்கு போன் பேசி சிரித்து மகிழ்ந்தனர். சாப்பாடு நேரம் வரும் வரைக்கும் அந்த  ரூமமே சிரிப்பு சத்ததோடும், பல மொழிகளில் பேசிக்  கலகலப்பாயிருந்தது.

கை வைத்தியம் செய்துவிட்டு படுத்தவனுக்கு, படுத்தவுடன் விடிந்து விட்டது போல் தூக்கம் கலையாமல் அசதியோடு விழித்தான். காலின் எரிச்சல் அதிகமாகயிருந்தது. தரையில் கால்களை கீழே ஊன முடியாதபடி வேதனையை அளித்தது. துணியை இரு கால்களிலும் சுற்றி அடுத்த நாள் வேலைக்கு தயார் ஆனான்.

நீண்ட நேரம் ஆகியும் அழைத்து செல்லும் வாகனம் வரவில்லை. காத்திருந்த சில பேர் உட்கார்ந்த வாக்கில் தூங்க செய்தனர். காரின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த கூட்டம். காரில் இருந்து இறங்கி கேரளாத்து அதிகாரி வெளியே வந்தான். பல மொழிகள் பேச கூடிய ஆளுமையும் அவர் பேசும் தமிழ் மொழி கேட்க இனிமையாகவும் இருக்கும்.

அதிர்ச்சியான தகவல் சொல்ல ஆரமித்தான்.  ’நம்ப கம்பெனி ஓனர்ங்ககுள்ள பிரச்சனை. அதுனால வேலைகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு. பிரச்சனை முடிவுக்கு வந்து மீண்டும் நிலைமை திரும்ப கொஞ்ச காலம் எடுக்கும். அது வரைக்கும் இங்கே வேலையும் இல்ல சம்பளமும் இல்ல. இருப்பவங்களுக்கு என்னால கம்பெனில பேசி மூன்று வேலை சாப்பாடு மட்டும் தர ஏற்பாடு செய்ய முடியும். அவங்க அவங்க நாட்டுக்கு போகணும் நினைச்சா போறதுக்கு டிக்கெட் போட்டு அனுப்புறேன். போனா திரும்ப வேலை ஆரமிக்கும் போதும் கூப்பிடுகிறேன்’.

சில நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வேலை நிரந்தரமாக இருக்காது ஊருக்கு போயி வேற வேலைக்கு தயார் செய்வதுதான் நல்லது என பலர் முடிவு எடுத்தனர். அவர்கள் நீண்ட காலமாக இந்த கம்பெனியில் வேலை செய்பவர்கள். ’திரும்ப வேலை ஆரம்பிக்க எவ்வளவு காலம் ஆகும்?’ என்று வேணு கேட்டான்.

கேரளாத்தான் உதட்டை பிதிக்கி தெரியாது என தெரிவித்தான்.

ஊருக்கு செல்ல முடிவு செய்தனர் வேணுவை தவிர.

சில நாட்கள் இங்கேயும் அம்மா வீட்டில் சில நாட்களும் இருந்து புவனா நாட்களை ஓட்டினாள். உறவுகள் ஊர்காரர்கள் முன்னே கணவர் வெளிநாட்டில் வேலை செய்வது பெருமையாக உணர்ந்தாலும். தானும் எதாவது துணி கடைக்கோ மளிகை கடைக்கோ வேலைக்கு  போனால் என்ன யோசித்து முடிவு செய்து நகரத்தில் உள்ள பெரிய துணிகடையில் வேலைக்கு கேட்டு சேர்ந்தாள்.

சில நாட்களாக சமாளிக்க முடிந்த வேணுக்கு அங்கு  உள்ள நிலைமையை புவனாவிடம் விவரித்தான். நீண்ட நாட்களாக வேலை இல்லை சம்பளம் இல்லாமல் உணவு மட்டும் மூன்று வேலை கிடைப்பதாக என்னோடு ரூமில் இருந்தவர்கள் ஊருக்கு போயிவிட்டர்கள். நான் மட்டுமே இருக்கிறேன். புவனாவிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகளுக்கு பதிலாக அழுத்தமான ம்ம்ம்… ஒலியை வெளிகாட்டி போனை வைத்தாள்.

வேலை முடிந்து இரவு பேருந்துக்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள். எண்ண ஓட்டம் முழுவதும் தன் சம்பளத்தை கடன்காரன்களுக்கு வகுத்து பார்த்தால் கடனை கட்டவே மேலும் சில ஆயிரங்கள் தேவைப்பட்டது. பேருந்தில் ஏறியவளுக்கு வீடு வந்தது தெரியாமல் யோசனையில் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடந்து வந்தாள். மனம்,கடனை எப்படி அடைப்பது பற்றியே இருந்தது.

இயலாமை அதிகம் ஆகும் போது கோபம் ஏற்படுகிறது. கோபத்தை வேணு மீது நூறு சதவிகிதம் கொட்டி அந்த நேரத்தில் பாரத்தை குறைத்தாலும்,மாதம் மாதம் கடன்காரன்களின் தொல்லையும் அதிகமாகியது.

ஒவ்வொரு நாளும் கடன்காரர்களின் பார்வையும் வார்த்தையின் வெளிப்பாடும் புவனாவை இழிவுபடுத்தி சிறைபடுத்தியது.

இரவில் தூக்கம் இழந்து விடியலுக்கு பயந்து வீட்டின் ஒரு மூலையில் குத்துகாலிட்டு உட்கார்ந்து இருப்பாள்.

உள்ளூர் கடன்காரன் தூரத்தில் வருவது அவன் மேனியில் இருந்து வரும் நறுமணத்தை வைத்து வீட்டின் உள்ளே இருந்து அறிந்து கொள்ளுவாள். சில நாட்கள் தள்ளி வட்டியை தருவதாக கூறினாள். அதை அவன் நீண்ட நேரம் பேசுவதற்கு வாய்ப்பாக எடுத்து இடை இடையில் கர்ச்சனையாக பேசுவதாக சில ரெட்டை அர்த்த வார்த்தைகள் பேசி அவள் செய்கைகாக கிளம்ப மனமில்லாமல் காத்திருந்து ஆமை போல் நகருவான்.

ஒருவரிடம் இருந்து வாங்கப்படும் பணம் தர முடியாத பட்சத்தில் அவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. சில நேரம் யோசித்தால் இதே பெண்களிடம் கடன் வாங்கியிருந்தால் அவர்கள் என்னலாம் செய்துயிருப்பார்கள். அவள் மானத்தையும் அவளின் அம்மாவின் மானத்தையும் ஊரு முழுக்க கூறு போட்டு விற்று வேசியாக்கி ஒழுக்கமற்ற குடும்ப வரலாறை உருவாக்கி சமுகத்தின் பார்வையை அவள் மீது செலுத்தி அருவருக்க செய்துயிருப்பார்கள். ஒரே பாலினம் என்ற இரக்கம் கூடயில்லாமல். அதற்கு ஆண்களே எவ்வளவோ மேல்.

கடன் தொல்லையால் வேணு மீது இருந்த ஈர்ப்பு குறைந்து அவன் செத்தால் கூட கவலையில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள்.

அவனிடம் இருந்து வரும் அழைப்பை எடுக்காமல் தவிர்த்தால் ஒருவேலை போனை எடுத்தால் -என் போனை எடுக்கமாட்டேன்குற -கடையில வேலை. -போனை எடுத்து பேசுனா ஓனர் சம்பளம் தருவானா? -கடன்ன கட்ட வேணா?

போனை கட் செய்தாள்.

வீட்டு பட்டாவை அடமானம் வைத்திருந்த ஃபைனாஸ்காரன் ஒருநாள் காலையில் வீட்டு வாசலில் உட்கார்ந்து கடனை கட்டினால் தான் நகர்வேன் என்று பைக்கை நடு ஸ்டாண்ட் போட்டு உட்கார்ந்தான். ஒரு வாரத்தில் கட்டிவிட்டுவதாக கெஞ்சியும்,காலில் விழுந்து சொல்லியும் எடுபடவில்லை. பிடிவாதமாக கடனை இன்னைக்கு கட்டினால் போவேன் என்று தீர்மனமாக சொல்லிவிட்டான்.

செய்வது அறியாது புவனா உள்ளுரில் கடன்கொடுத்தவனை தேடி செல்ல அவன் வயலில் இருந்தவனிடன் நிலையை எடுத்து கூறி பணத்தை பெற்று அன்றைய தவணையை கட்டினாள்.

உறவுகாரர்கள் ஊர்காரர்கள் இவள்படும் பாடுகளை அறிந்தும் உதவி செய்யவோ பேசவோ தவிர்த்தனர். இவளை எதேச்சையாக பார்த்தாலும் பணம் எதும் கேட்டுவிட போகிறாள் என்று முன்கூட்டியே அவர்களும் பணக்கஷ்டங்கள் அதிகமாக இருப்பது போல கட்டிக் கொண்டனர்.

பசி,அவமானம்,கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் மனம் உடைந்து ஒருநாள் இரவில் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து எறும்பு மருந்தை கலக்கி குடித்துவிட்டு படுத்தாள். கண்கள் சொக்குவதாக உணர கண்களை மூடினாள்.

வேணுவிற்கும் வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் வேலை மட்டுமே கிடைந்தது. கிடைக்கும் பணம் அங்க இருக்கும் செலவுக்கே சரியாகயிருந்தது.  நாட்கள் இப்படியே கடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.

ஓனரின் பிரச்சனைகள் ஒரு தீர்வுக்கும் வந்து இனி முப்பது நாட்களும் வேலை இருக்கும் என்று கேரளத்து மேல் அதிகாரி தெரிவித்தார். அந்த அதிகாரிக்கு வேணு எல்லா விதமான எடுபிடி வேலைகள் செய்து நற்பெயரை பெற்றான். அவர் அதிகமாக பெண்கள் போதை லாட்டரி விஷயங்களில் பணத்தை இழந்தார். அருகில் இருக்கும் மாசாஜ் செண்டரில் இருந்து இவரது வாட்ஸ் ஆப்க்கும் புகைபடங்கள் வரும் புகைபடத்தை பெரிதுபடுத்தி பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்வார். வேணுவிடமும் புகைபடத்தை காட்டி உனக்கு எது பிடித்திருக்குதுனு பாரு டா போனை கொடுப்பார்.போட்டோவை பார்த்துவிட்டுஆர்வம் இல்லாதவன் போல் கொடுப்பான். போதையில் இருக்கும் போது ஆன்லைனில் லாட்டரி வாங்குவார்.  அதிக அளவில் லாட்டரியில் இழந்த பணமே அதிகம்.

காலையில் புவனா வழக்கம் போல எழுந்தாள் .இரண்டு மூன்று முறை உடலை கிள்ளிபார்த்தாள். எறும்பு மருந்து குடித்து சாகவில்லையே யோசித்தாள். வயிறு கலக்குவது போல தெரிந்து கருவைகாட்டிற்கு சென்று உபதைகளை கழித்துவிட்டு வந்தாள் அன்று தொடந்து நான்கு ஐந்து முறை போயிருந்தாள். உடல் தளர்ந்து போய் வேலைக்கு லீவு சொல்லிவிட்டு வீட்டில் படுத்து இருந்தாள்.

தலைக்கு அருகில் இருந்த போன் கத்தும் சத்தம் கேட்டு போனை காதில் வைத்து ஹாலோ…தளர்ந்த குரலில் சொன்னாள். வேணுவிடம் வந்த அழைப்பு ,இனி மூப்பது நாட்களுக்கு வேலையிருக்கும் நம்ப கஷ்டங்கள் தீரப்போகிறது என்று சொன்னதை கேட்ட புவனாவுக்கு மேலும் ஒருமுறை அடிவயிற்றை கலக்கி எழுந்து மேட்டு கருவை காட்டுக்கு போக வேண்டியதாயிற்று.

தமிழ்நாட்டை விட இங்கே வேலை கஷ்டமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேணு பெற்றான். படிபடியாக தொடர்ந்து வேலைகள் தினந்தோறும் கிடைத்தது.  சம்பள நாளில் மொத்தமாக பணத்தை பார்த்த குஷியில் ஒரு நாள் மட்டும் கேரளத்தனாக தன்னை பாவித்து மாசாஜ் சென்டர்க்கு சென்று விருப்பப்பட்ட பெண்களோடு இருந்து முழு போதையில் ரூமிற்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தான். இன்றைய ஒருநாள் வாழ்க்கையில் இருந்த சுகம் பிடித்தது. பொறுப்புகள் இல்லாமல் யாருக்கும் பதில் சொல்லாமல் கேரளத்தான் எவ்வளவு பெரிய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கிறான்.

 அப்படியே சரிந்து விழுந்து தூங்கியவன் அரை போதை தெளிந்த விடியகாலையில் எழுந்து எல்லா பணத்தை செலவு செய்துவிட்டோமே என்று கதிகலங்கி புவனா பற்றிய கவலைகள் உள்ளுக்குள் காய்ச்சலாய் கொழுத்தியது. ஒருநாள் ஆசைக்கு புவனாவை கஷ்டத்தில் மூழ்க அடித்துவிட்டோமே என்று தன்னை தானே வெறுத்துக் கொண்டான்.

சம்பளத்தை கேட்ட புவனாவிடம்  இன்னம் போடல. கொஞ்சம் லேட் ஆகும் என்றான்.

உள்ளூர் கடன்காரன் புவனாவிடம் தினந்தோறும் தொந்தரவு செய்வது, புவனாக்கு அவன் கடனை கேட்டு தொந்தரவு செய்வதை விட அவன் அவள் மேனியை அங்குலம் அங்குலமாக பார்க்கும் பார்வை சேலைக்குள் ஊரும் அட்டை பூச்சியை போல் அருவருப்பாக உணர்ந்தாள். பேச்சுவாக்கில் கையை தொடுவதும் அவளுக்கும் இதில் இருந்து ஒவ்வொரு நாளும் சமாளித்து தப்பிப்பது பெரும்பாடாய் போயிற்று.

இரவு காலை சாப்பிடாத பசியில் கண்கள் பங்குவது போல கால்கள் வெட வெட என நடுங்க துணிகடையில் வாடிகையாளகளுக்கு சேலைகளை எடுத்து காண்பித்தாள்.  சற்று நேரம் உட்கார்ந்தால் தேவலை போல் இருந்தது.  இந்த வாடிக்கையாளரை முடித்துவிட்டு பாத்ரூம் போவதாக சொல்லிவிட்டு அங்க சிறிது நேரம் உட்கார முடிவு செய்திருந்தாள். அவளின் நிலைமையை அறியாத வாடிக்கையாளர்கள் அடுக்குகளில் இருந்த சேலைகளை ஒவ்வொன்றாக எடுக்க சொல்லி நிதானமாக பார்த்தார்கள். ஒரு சேலையை எடுத்தார்கள். சேலையை பில் போட அனுப்பி சேலைகளை அடுக்கி வைத்துவிட்டு தளர்ந்த உடலுடன் பாத்ரூம்மை நோக்கி சென்று அங்கு இருந்த படிகட்டின் சுவரில் சாய்ந்தவாரு உட்கார்ந்தாள்.

காலையில் வரும் டீக்கும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. சற்று நேரம் கண்ணை மூடி சாய்ந்து இருப்பது உடலுக்கு சமாதானத்தை அளித்தது.

அவள் மார்பில் வைத்திருந்த கைப்பேசி சைலன்டில் அதிர்ந்து கொண்டிருந்தது.  அந்த அதிர்வு மார்புக்கு சுகத்தை கொடுத்தது.

 மூன்று முறை முழுமையாக அடிக்கவிட்டு நான்காவது முறை அடிக்கும் போது மார்புக்குள் கையைவிட்டு போனை எடுத்தாள். அதிகமுறை போனை எடுக்காமல் இருந்தவள், கடன்காரனின் போன்களாக இருக்கும் என்று. அரை மயக்கநிலையில் ஆன் செய்து காதில் வைத்தாள்.

காதே கிழிந்து விடும் சத்ததில் வேணுவின் குரல். -இரண்டு கோடியே  மூப்பத்தி ஐந்து இலட்சம் லாட்டரியில் பரிசாக விழுந்து இருக்கு.

-இன்னோரு வாட்டி சொல்லு என்று நிதானமாக அவள் கேட்க அவனும் பொறுமையாக லாட்டரியில பரிசு விழுந்திருக்கு .

கேட்டவுடன் அவளுக்கும் பசி மயக்கம் எங்கே போனது என்று தெரியவில்லை.

 -எப்ப வாங்குன.

இவ்வளோ நாளாக சம்பளம் வரவில்லை என சமாளித்தவன் உண்மையே சொன்னான். ஒருநாள் வாங்கிய சம்பளத்தை குடித்து செலவு செய்தேன் அன்னக்கி இரவு போதையில ரூம்க்கு வந்து  நற்காலியில உட்கார்ந்து கேரளத்துகாரன் எப்பவும் லாட்டரி வாங்குவான். அவன் எப்படி வாங்குவானு பார்த்திருக்கேன். அதே மாதிரி போதையில போன் மூலமா லாட்டரி வாங்கியிருக்கேன். அன்னைக்கு எனக்கே தெரியல பரிசு விழுந்திருக்குனு மெசேஜ் வந்த போதுதான் தெரிந்தது.

-யோ… இனி நம்பளும் கோடீஸ்வரனா,எப்ப பணம் தருவாங்க?

-முப்பது நாளுக்குள்ள தருவாங்க.

யாரோ வருவது போல் தெரிந்து ’வீட்டுக்கு போயிட்டு பேசுறேன்’.

டீ ரெடியாக இருந்தது. இவள் மட்டும் தனியாக சிரித்தாள். வேற லோகத்தில் இருப்பதாக உடல்மொழியை காட்டினால் உடன் வேலை பார்பவர்களுக்கும் வித்தியாசம் தெரிந்தது.

 இன்றுடன் இந்த வேலைக்கு முடக்கு போட்டுவிட முடிவு செய்தாள்.வேலை மீது ஏரிச்சல் ஏற்பட்டது. இதலாம் ஒரு வேலையா காலைல இருந்து இரவு வரைக்கும் நின்னுகிட்டு இருக்கனு. மனதுக்குள் ஆதங்கப்பட்டு இனி இந்த சல்லி மக்களிடன் சவகாசம் வைக்கவே கூடாது.

அன்று முழுவதும் வேலையில் கவனம் செலுத்தாமல் கர்வத்தில் இருந்தாள். கூட வேலை செய்பவர்களும் இவளுக்கு ஏதோ பேய் எதும் பிடித்துவிட்டதா என்ற சந்தேகத்தில் புவனாவை அணுகினார்கள்.

அவளிடம் இருந்து ஒரு வார்த்தைகள் கூட வெளிவரவில்லை

பரிசு விழுந்த விஷயம் துபாய் நாளிதழில் செய்தியாக வந்தது

புகைப்படத்துடன் தகவலும் இடம் பெற்றிருந்தது.

செய்தியை பார்த்த கேரளத்தான் ஓடி வந்து வேணுவிடம் விசாரித்தான்.

வேணு இவனுக்கு தகவல் தெரிய கூடாது என்று எச்சரிகையாக இருந்தான். அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

 செய்தி நாளிதழில் தகவல் வந்திருப்பது பரிசு விழுந்ததாக பட்டும்படாமல்  தலையை ஆட்டி வைத்தான். அவன் வாயில் இருந்து வரும் பதிலை ஏற்று கொள்ள முடியாத கேரளாத்தான் இவனுக்கு போயி இவ்வளவு பணம் விழுந்துயிருக்கே எரிச்சலுடன் பரிசு வந்ததும் எனக்கு பத்து லட்சம் கொடு என்று அதிகாரமாக கட்டளையிட்டான்.

சமையலுக்கு காய்கறி வெட்டிட்டு இருந்த வேணு கோபத்துடன் ’அதல்லாம் ஒரு பைசா கூட தரமுடியாது’.

முதல் முறையாக எதிர்த்து பேசுவதை பார்த்த கேரளாத்தானுக்கு தலைக்கு மேல் கொம்பு வளர்ந்தது மாதிரி தோன்றி வேணுவை அடித்து கீழே தள்ளினார்.

பதிலுக்கு வேணுவும் அடித்து மல்லுகட்டிக் இருவரும் புரண்டனர். தெருவில் இரு வெறிபிடித்த நாய்கள் குலைத்து சண்டையிடுவதை போல அவன் மீது ஏறி நெஞ்சில் உட்கார்ந்த வேணு முகத்தை பார்த்து நான்கு குத்து விட்டான்.

 அதில் ஒரு குத்து தரையில் விழுந்து விரலுக்கு அதிக வலியை கொடுத்தது. சண்டையில் இருவரின் சட்டை கிழிந்து எழுந்து மாறி மாறி முறைத்து கொண்டு பணத்தை எப்படி எடுத்துட்டு போகுறனு பார்க்குறேன்டா என்றான் கேரளத்தான்.

அந்த நாளைக்கு பின் புவனா வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டாள். சில நாட்களில் ஊருக்குள் எப்படியோ தகவல் தெரிந்தது. அம்மா குடும்பம், உறவினர்கள்,ஊரில் உள்ளவர்கள் அனைவரும் தன் மீது அதீத அக்கரை காட்டுவதும் அவளை பார்த்தால் புன்சிரிப்பு வெளிகாட்டி கடந்து சென்று நலம் விசாரிப்பவர்களாகவும் இருந்தனர் . அவர்களின் எதிர்பார்ப்புக்கு பிடி கொடுக்காமல் விலகி செல்லவே முயன்றாள்.

புவனாவை பார்க்கும் பலர் அவர்களின் பணக்கஷ்டங்களை எவ்வளவு வலி மிகுந்த கதையாக சொல்லி எவ்வளவு சோகத்தை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு சொன்னார்கள்.

 எதற்கும் மசியாமல் தனக்கு கீழ் இருக்கும் அடிமைகளை போல் கடுமையான சொற்களை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் தன்னை அணுகமுடியாதபடி பார்த்துக் கொண்டாள்.

தினந்தோறும் உள்ளுக்குள்  பய உணர்வோடும் இரவில் தூங்கமால் யாராவது என்னை கொலை செய்ய போகுகிறார்கள் என்ற அச்சத்தில் தூங்கமே இல்லாத ஆந்தையாக மாறியிருந்தான்.

அவனை யார்வது சாதாரணமாக பார்த்தால் அவன் அந்த இடத்தில் நகர்ந்து புதிய இடத்தை நோக்கி செல்வான். எதிரே வரும் வாகனத்தை பார்த்தால் தன் மீது மோத வருவதாக நினைத்து பயத்தின் உச்சத்திற்கே போயிவிடுவான். ரூமில் தனியாக இருக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை ரூமமை நோட்டம் விட்டு கதவை பூட்டிவிட்டு எதோ யோசனையில் இருப்பான்.

மனம் மரண பயத்தில் எதை பார்த்தாலும் அதற்கு கதை உருவாக்கி மனநோயாளியாக மாற்றி அவன் இயல்பில் இருந்து விடுபட்டு போனான்.

அவனின் நம்பிக்கை பாத்திரமாக புவனாயிருந்தாள். அவளிடம் மட்டுமே பேசினான். லாட்டரி பணத்தில் யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க கூடாது நினைத்திருந்தான்.

 அதை உறுதி செய்வது போல புவனாவும் ஆதரித்தால்.அப்ப அப்ப ஒரு சந்தேகம் அவளுக்குள் தோன்றுவதை கேட்டாள்.

பரிசு பணத்தை ஏமாத்திர மாட்டங்களே?

இது இங்க உள்ள அரசாங்கம் நடத்துறாங்க அப்படியலாம் பண்ண மாட்டாங்க எனக்கு பரிசு விழுந்துயிருப்பத இங்க இருக்கும் நியூஸ்ல வெளி வந்துயிருக்கு.

இந்த லாட்டரில எப்படி பரிசு விழுந்தது தெரியும்?

அப்படிலாம இல்ல ஒரு லாட்டரி வாங்கணும்னா நம்ப ஊர் காசுக்கு 1600 ரூபாய் பரிசு விழும். அன்னக்கி ஒரு கண்ணாடி குடுவைல  பால் மாதிரி மாசத்திற்கு முப்பத்தி ஒரு நாள் இருக்க அதுல முப்பத்தி ஒரு நாளுக்கான முப்பத்து ஒண்ணு பால் இருக்கும் ஒன்னுல இருந்து மூப்பத்தி ஒன்று நம்பர் எழுதி.அந்த குடுவைல மெசின் மாதிரி இருக்குறதுல பால் எல்லாம் கொஞ்ச சுற்றும் அதுல இருந்து ஒரு பால் உள்ள நம்பர் மேலே தனியா தூக்கி வரும் .அது மாதிரி ஆறு தடவ சுற்றி ஆறு நாள்க்கான பாலுல உள்ள நம்பர் தெரியும். அப்பறம் மாசம் பனிரெண்டு ஒன்னுல இருந்து பனிரெண்டு நம்பர்ல இருக்குற பால்ல ஒரு நம்பர் பால் அது மாதிரி சுற்றி மேலே வரும்.

-மொத்தம் மேல வந்த ஏழு  பால்ல ஏழு நம்பர் இருக்கும் யார் சரியா அந்த நம்பர தேர்ந்து எடுத்திருக்கோ அவங்களுக்கு பரிசை அறிவிப்பாங்க.

-அப்ப அதே நம்பர் ரெண்டு பேர் எடுத்துயிருந்தா?

-பரிசு பணத்த ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுப்பாக.

பரிசுக்கான நிகழ்ச்சியில் கலந்துகிட்ட வேணுக்கு பணத்தை அவனது துபாயில் இருக்கும் பாங்க் அக்கவுண்டுக்கு வரவு வைக்கப்பட்டது. துபாய் அக்கவுண்டில் இருந்து இந்தியா பேங்க் அக்கவுண்டுக்கு வரவு வைக்க மூப்பது சதவிதம் வரி பிடித்தது போக வரவு வைக்கப்பட்டது.

வேணுவின் கைபேசிக்கு புது புது நம்பர்களில் இருந்து அழைப்பு வந்துக் கொண்டேயிருந்தது.

பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பண உதவி செய்யும்மாறு அவங்க கஷ்டங்களை சொல்லி வழியுறுத்தினார்கள்.

நண்பகள் உறவினர்கள் தொல்லை தாங்க முடியாமல் கொஞ்ச நாட்களில் நம்பரை மாற்றிவிட்டு ஊருக்கு கிளம்பினான்.

புவனாவையும் சென்னைக்கு வரும்படி சொல்லியிருந்தான்.

இருவரும் சென்னைக்கு வந்து அங்குள்ள லெமன் ட்ரீ ஹோட்டலில் ரூம் போட்டு இரண்டு நாட்கள் தங்கி அமைதியாக தூங்கி எக்மோர் இரயில் நிலையத்திற்கு சென்று அந்த நேரத்தில் வடக்கு நோக்கி செல்லும் ரயிலுக்கு டிக்கெட் வாங்கி கண்ணுக்கு தெரியாத அறிமுகம் இல்லாத மொழி தெரியாத ஊரில் குடியேறினார்கள்.

புவனாவின் கைபேசி சிம்கார்டும் எக்மோர் இரயில் நிலையத்தில் புதிய நம்பராக மாற்றபட்டிருந்தது…

                                                                      புது ஒளி

                                                      புது காற்று

                                                      புது நிலம்

                                                      புது சமூகம்

                                                      ********

தமிழ் கணேஷ்

தஞ்சையில் வகிக்கிறார். தொடர்ந்து சிறுகதை எழுதுகிறார். வாசக சாலை, சொல்வனம்,  நடுகல் இணைய இதழில் வெளிவந்த இருக்கின்றது.

மற்ற பதிவுகள்

The post அமீபா (வடிவம் அற்றது) first appeared on Nadukal.

  •  

மூன்று அரசியல் குறுங்கதைகள்

1. ஆட்சி சாதனைகள்

     தென்னிந்தியாவின் அனானிமஸ் மாநில முதலமைச்சர் பிரம்மாண்டமான மாநாட்டு மேடையில் பெருமிதம் பொங்க முழங்கிக்கொண்டிருந்தார்.

     “கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளோம். அவற்றை உங்கள் முன் பட்டியலிட்டு நினைவுபடுத்த விரும்புகிறேன்…”

     மக்கள் கூட்டத்தில் ஆவல் நிறைந்த அமைதி நிலவியது.

     முதலமைச்சர் கர்ஜித்தார்:

     “மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி; வேறெந்தக் கட்சிகளையும் விட ஊழல்களில் தலை சிறந்தவர்கள் நமது கட்சியினரே என்பதை நாம் தொடர்ந்து நிரூபித்துள்ளோம். அதோடு, நம் ஊழல்களை, அராஜகங்களை, அட்டூழியங்களை எதிர்ப்பவர்களை அதிகார துஷ்ப்ரயோகங்களால் அடக்கி ஒடுக்கி, ஒழித்துக் கட்டும் வல்லமை நம் அரசுக்கு உண்டு என்பதை நாடே அறியும். எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது, கை கால்களை முறிப்பது என்பதையெல்லாம் நாம் திறம்பட செய்திருக்கிறோம். நம் கட்சித் தலைவர்களைக் கண்டால் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள்; அரசியல் விமர்சகர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சமூக வலைத்தளங்களில் நம் ஆட்சிக்கு எதிராக எவரேனும் உண்மை பேசினால் குண்டர் தடுப்பு சட்டத்தோடு பாய்கிறோம்…”

     கட்சிக் கரைத் துண்டு – வேட்டி, சேலை – ரவிக்கைத் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

     “அரசுத் திட்டங்களில் உள்ள குறைகளைச் சொல்பவர்களை, இலவசப் பொருட்களின் தரமின்மை பற்றிக் கேள்வி கேட்பவர்களை நாம் சிறையில் அடைக்கிறோம்; சித்திரவதை செய்கிறோம். கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை பெருகியுள்ளது. கள்ளச் சாராயத்தால் சில நூறு ஆண்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துள்ளோம். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், கொடூரக் கொலைகளும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நம் மாநிலத்தில் 435% உயர்ந்துள்ளது. இவை யாவும் நமது மகத்தான சாதனைகள்…”

     இளைஞர் அணிகள் கரவொலியிலும், மகளிர் அணிகள் சீழ்க்கையிலும் ஆர்ப்பரித்தன.

     முதல்வர் கைகளை நீட்டி, பெருமையுடன் கூறினார், “வேறு எந்தக் கட்சியின் ஆட்சியிலாவது இவ்வளவு சாதனைகள் செய்ய இயலுமா? இதெல்லாம் அவர்களின் கனவிலும் நடக்காதே! ஆனால், நமது ஆட்சியில் இவை நிஜமாகியுள்ளன. இது வேறு எவராலும் ஒருபோதும் தொட இயலாத இமாலய சாதனை!” 

     ஜே – ஜே கோஷங்கள் மாநாட்டு மேடையையே குலுங்க வைத்துவிட்டன.

     முதலமைச்சர் கையை உயர்த்தி தொண்டர்களை அமைதிப்படுத்தினார்.

     “இன்னும் ஒரு விஷயம். அடுத்த முறையும் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த மாநிலத்தையே  சுடுகாடாக மாற்றிக் காட்டுவோம் என உறுதியளிக்கிறேன்…”

     மக்கள் கூட்டம் வெறித்தனமாகக் கை தட்டி ‘வாழ்க, வாழ்க’ கோஷமிட்டது.

2. அரசியல் பிரியாணி

தேவையான பொருட்கள்:

·    பாசுமதி அரிசி (வாக்குறுதிகள்) – 5 கிலோ: நைச்சியமானது, சுவை மிக்கது, தேர்தலின்போது மட்டும் காணப்படுவது.

·    மாட்டுக் கறி (சிறுபான்மை ஓட்டு வங்கி) – 3 கிலோ: ஜாதிய அடையாளமாக முன்னெடுக்கப்படும் புரட்சிகர இறைச்சி. 

·    ஆட்டுக்கறி (பெரும்பான்மை ஓட்டு வங்கி) – 1 கிலோ: மாட்டுக்கறியுடன் கலப்படம் செய்யப்படுவது.

·    வெங்காயம் (பொது மக்கள்) – 1/4 கிலோ: பல உள்ளடுக்குகள் கொண்டது, உரித்துக்கொண்டே இருந்தால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவது, கண்ணீர் வரவழைக்கக் கூடியது. 

·    தக்காளி (கட்சித் தொண்டர்கள்) – 1/2 கிலோ: கொழ கொழவென்று எந்த அழுக்கையும் தாங்கிக் கொள்ளும் குணம் கொண்டது. எளிதில் நசுக்கிப் பிழியலாம்.

·    பச்சை மிளகாய் (எதிர்க் கட்சிகள் மீதான தாக்குதல்) – 10 எண்ணிக்கை: காரம் ஏற்றக் கூடியது. தேர்தலுக்குத் தேர்தல் இதன் வீரியம் மாறும்.

·    இஞ்சி, பூண்டு விழுது (ஊழல்) – 200 கிராம்:  அரசியல் பிரியாணியின் மூலதனம்.

·    பிரியாணி மசாலா (கட்சிக் கொள்கைகள்) – 100 கிராம்:  அரசியல் பிரியாணியின் உயிர்நாடி. சிறுபான்மைக் கறிக்கு ஒரு மாதிரியும், பெரும்பான்மைக் கறிக்கு ஒரு மாதிரியும் பயன்படுத்தப்படுவது.

·    பட்டை, கிராம்பு (இன – மத – ஜாதிய வாதம்) – 50 கிராம்: சிறிது எனினும் காரம் மிக்கது. மெலிதான வாசனையும், வன் உணர்ச்சியைத் தூண்டுகிற தன்மையும் கொண்டது.

·    எண்ணெய் (பதவி) – 40 மில்லி: அரசியல்வாதிகளின் சகல கொழுப்புகளுக்கும் ஆதாரமாக இருப்பது.

·    நெய் (மாய்மாலப் பேச்சுகள்) – 80 கிராம்: நெஞ்சை உருக்கும் விதமான உறவு ரீதி அழைப்பு, பேச்சுகள் மூலம் மக்களை மயக்குவதும் மந்த புத்தி ஆக்குவதும்.

·    கொத்தமல்லி, புதினா (இலவசப் பொருட்கள், பணம்) – தலா 1 கட்டு: நாற்றத்தை மறைக்கப் பயன்படும் வாசனைப் பொருட்கள்.

·    உப்பு (கூட்டணிக் கட்சிகள்) – தேவையான அளவு: இது இருந்தால்தான் பிரியாணி மட்டுமன்றி எந்த அரசியல் சமையலும் ருசிக்கும்.

செய்முறை:

1. முதலில் வெங்காயத்தை (பொது மக்கள்) வாணலியில்  போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.  அவ்வப்போது நெய் (மாய்மாலப் பேச்சுகள்) சேர்க்கவும்.

2. பிறகு இஞ்சி – பூண்டு விழுதை (ஊழல்) கொட்டி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். ஊழல் நாற்றம் வெளியில் தெரியாத அளவுக்கு மசாலா சேர்த்துக் கிளறவும்.

3. தக்காளி (கட்சித் தொண்டர்கள்), பச்சை மிளகாய் (எதிர்க் கட்சிகள் மீதான தாக்குதல்) சேர்த்து வதக்கவும். தக்காளி மசிவது நாக்கில் எச்சில் ஊற வைக்கவும், மிளகாயின் கார நெடி மூக்கைத் துளைக்கவும் வேண்டும்.

4. பின்பு மாட்டுக்கறி (சிறுபான்மை ஓட்டு வங்கி), ஆட்டுக் கறி (பெரும்பான்மை ஓட்டு வங்கி) ஆகியவற்றைக் கொட்டிக் கலந்து வேகவைக்கவும்.

5. அரிசியை (வாக்குறுதிகள்) தனியாக வேக வைத்து எடுக்கவும். வதக்கிய மசாலாவில் அதை இட்டு, தேவையான அளவு உப்பு (கூட்டணிக் கட்சிகள்) சேர்த்து நன்றாகக் கிண்டவும்.

6. குறைந்த தீயில் வைத்து தம் போடவும். மேலே கொத்தமல்லி, புதினா (இலவசப் பொருட்கள், பணம்) தூவி அலங்கரிக்கவும்.

     சுவையான அரசியல் பிரியாணி தயார்.

     உண்பதற்கு முன் விருந்தாளிகளுக்கு மட்ட ரக குவாட்டரை (ஆபாசப் பேச்சாளர் – பேச்சாளினிகளின் சாக்கடைப் பேச்சுகள்)  குடிக்கக் கொடுக்கவும்.

     இந்த பிரியாணியை சாப்பிட்டு மயங்குபவர்கள் போடும் ஓட்டில், ஆட்டு மந்தை முன்னேற்றக் கழகம் ஆட்சியில் கொடி கட்டிப் பறக்கும்.

3. cuckold தங்கசிகாமணி கு.மு.க.

     கு.மு.க. எனப்படும் குடும்ப முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பிரமுகர்  தங்கசிகாமணிக்கு கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் கக்கோல்ட் சிகாமணி என்று காரணப் பெயர்.

cuckold என்ற சொல், மனைவி சோரம்போவதை ஏற்றுக்கொண்டு வாழும் கணவன் என்பதைக் குறிக்கும். இந்த இழிச் சொல்,  குயிலின் ஆங்கிலப் பெயரான cuckoo-விலிருந்து உருவானது. குயில்கள் தங்கள் முட்டைகளைப் பிற பறவைகளின் – குறிப்பாக, காக்கையின் – கூடுகளில் இட்டுவிட்டு விலகிவிடும். பிற பறவைகள் அல்லது காக்கைகள் அந்த முட்டைகளைத் தங்களுடையவையாகக் கருதி, குஞ்சு பொரித்து வளர்க்கும். இந்த அடிப்படையில், தனது மனைவி பிற ஆண்களுடன் சோரம் போய் அதன் மூலம் குழந்தைகள் பெற்றதை அறிந்தோ அறியாமலோ இருக்கிற கணவனுக்கும், மனைவி சோரம் போவதை அறிந்தும் அதற்கு ஆண்மையோடு எதிர்வினையாற்றாமல் ஏற்றுக்கொண்டிருக்கிற கணவனுக்கும் cuckold என்ற பெயராயிற்று.

சமூக, கலாச்சார நோக்கில் cuckold என்பது பேரவமானத்துக்குரியது. சில சமயங்களில் இது கணவனின் உடலியல் குறைபாடு, உளவியல் சிக்கல்கள் அல்லது விசித்திரமான பாலியல் ஆசைகளையும் வெளிப்படுத்தும். அதில் முக்கியமானது, மனைவியை இன்னொருவருடன் உடலுறவு கொள்ள வைத்து ரசிப்பது.

     கக்கோல்ட் தங்கசிகாமணியின் மனைவி பல ஆண்களுடன் தகாத உறவு கொண்டிருப்பவள். அவளது இரு மகன்களும் நிச்சயமாக தங்கசிகாமணிக்குப் பிறந்தவர்கள் அல்ல. எந்த ஆணுக்குப் பிறந்தவர்கள் என்பது அவளுக்கே தெரியாது. இதை தங்கசிகாமணியிடம் அவளே சொல்லியிருக்கிறாள். எனினும், தங்கசிகாமணி அந்தப் பையன்களைத் தனக்குப் பிறந்த பிள்ளைகள் என்பது போலவே வெளியுலகில் காட்டிக்கொண்டிருந்தார். புற உலகிற்கு இந்தக் கேவலம் தெரியாவிட்டாலும், வீட்டு வேலைக்காரர்கள், நெருங்கிய உற்றார் உறவினர்கள், நண்பர்களான கட்சிப் பிரமுகர்கள் ஆகியோருக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்குள் இது குறித்துப் பேசிச் சிரிக்கவும், அவரை இழிவுபடுத்திப் பேசவும் செய்வார்களே தவிர, அவரிடம் அது பற்றிப் பேசியதில்லை.

     தங்கசிகாமணிக்கு கட்சி செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டாடும் விதமாக நெருங்கிய கட்சிப் பிரமுக நண்பர்கள் ஐந்து பேருக்கு அன்று தனது சொகுசு பங்களாவில் மது விருந்து கொடுத்துக்கொண்டிருந்தார். விருந்துக்கூடத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. பிரமுகர்கள் மப்பும் மந்தாரமுமாக இருந்தனர்.

     முதியவர் கரு.எழில்குன்றம், “ஏப்பா,… உஞ் சம்சாரம் வேலி தாண்டி மேஞ்சு, பயிராகிட்டு* வந்து, ரெண்டு கெடேரிக் குட்டி போட்டுட்டா; ஒரு ஆம்பளையா இருந்துட்டு அதைய எப்புடியப்பா சகிச்சுட்டு இருக்கற?” எனப் பேச்செடுத்தார்.

     மற்ற நால்வரும் அவரைத் திகைத்துவிட்டு, சிகாமணியாரைப் பரிதாபித்தனர்.

     சிகாமணியார் அலட்டிக்கொள்ளவில்லை. மக்கள் அவரது முகத்தில் எருமைச் சாணியை  வீசி, அந்த ஒளிப்படமும், காணொளியும் வைரலானபோதே கிஞ்சித்தும் வெட்கப்படாதவர், பாதி ஊரறிந்த இந்த ரகசியம் பற்றியா அவமானப்படப் போகிறார்?

     “நம்மகிட்டயும் பல குத்தம் கொறைக இருக்கும். அதே மாற சம்சாரத்துகிட்டயும் இந்தக் கொறை இருக்குதுன்னு அனுசரிச்சுப் போயிட்டா, வாள்க்கை ஸ்மூத்தாப் போகும்ங்க…” அவர் சர்வ சாதாரணமாக சொன்னதைக் கேட்டு அனைவரும் துணுக்குற்றனர்.

“முளுக்க நனைஞ்சதுக்கப்பறம் முக்காடு எதுக்கு? உள்ளதைச் சொல்லீர்றனுங்க.  மேற்படி சமாச்சாரத்துல நான் கொஞ்சம் வீக்கு. சம்சாரத்துக்கோ அதுல அப்புடியொரு ஆசை, வெறி! 69, 77, 71-ன்னு வித விதமா அனுபவிக்க ஆசைப்படுவா. எனக்கு 69 மட்டும்தான் முடியும். மத்தது முடியாது…”

அதைக் கேட்டதும் எல்லோரும் கமுக்கமாக சிரித்துக்கொண்டனர்.

“அடப் பாவி…! இதனாலதான் உனக்கு அடிக்கடி நாக்கு உரிஞ்சுபோகுதா? நான் கூட, நாம கட்சி வளத்துன நாத்தம் புடிச்ச வரலாறையும், உன்னோட எச்சக்கலை நாயத்தையும் பேசிப் பேசித்தான் உனக்கு அப்புடி ஆகுதுன்னில்ல நெனைச்சேன்!” இராசஇராசசோழன் சொல்லவும் சிரிப்புகள் வெடித்தன.

“69 தெரியும். அது உலக ப்பேமஸாச்சே…! அதென்றா மாப்ள 77, 71 எல்லாம்?”  மு.சுடலையாண்டி வியப்போடு கேட்டார்.

“77-ங்கறது ஸ்பூனிங், மச்சா…! 71-ங்கறதும் ஸ்பூனிங்தான். அதுல எக்ஸ்ட்ராவா என்ன பண்ணணும்னா….” சிகாமணியார் விவரித்ததைக் கேட்டு கரு.எழில்குன்றத்துக்குக் குமட்டியது. எழுந்து ஓடிச் சென்று வாஷ் பேஷினில் வாந்தியெடுத்துவிட்டு வந்தார்.

ஆனால், அவர் வரும்போது மற்றவர்கள் அது குறித்து சிகாமணியாரைத் துருவித் துளைத்து விசாரித்துக்கொண்டிருந்தனர்.

“அட நாறப் பயலுகளா…! இப்புடியெல்லாமாடா பண்ணுவீங்க? இதுலயெல்லாமாடா சுகம் உங்குளுக்கு?”

எல்லோரும் ஆனந்தமாகச் சிரித்தனர்.

“பெருசு! நீங்க பளைய பஞ்சாங்கம். உங்குளுக்கு பஜனைல ஒரே பாட்டு, ஒரே ராகம்தான் தெரியும். எத்தனை ராகம் இருக்குது, எத்தனை தாளம் இருக்குதுன்னு தெரியுமா? டே, மாப்ள…! பெருசுக்கு சொல்லிக் குட்ரா…” என்றார் மு.சுடலையாண்டி.

சிகாமணியார் அதி உற்சாகத்தோடு மிஷனரி, டாகி, கௌகேர்ள் முதலான நிலைகளை விளக்கலானார்.

“இந்த மாற வித்தியாசமான பொசிஸனெல்லாம் எஞ் சம்சாரத்துக்கு நெம்பப் புடிக்கும். சும்மா சொல்லக் குடாதுங்க. இங்க்லீஷ் போர்னோக்காரிகளே அவகிட்டத் தோத்துத் தோப்புக்காரணம் போடோணும்…! அதுவும் கௌகேர்ள் பொசிஸன்ல பூந்து வெளையாடுவா! எனக்குத்தான் அந்தக் குடுப்பினை இல்லீன்னாலும், அவ கச்சேரிகள்ல ஒன் மேன் ஆடியன்ஸா பக்கத்துலயே இருந்து, கண் கொட்டாமப் பாத்து ரசிப்பேன்…”

அவர் புளகாங்கிதத்தோடு சொல்லிக்கொண்டிருக்க, கேட்டுக்கொண்டிருந்தவர்களில் மூவருக்கு ஏறியிருந்த போதை இறங்கிவிட்டது. இருவருக்கு, அரை பாட்டில் ப்ராந்தியை ராவாகக் குடித்த மாதிரி போதை ஏறியது.

“எஞ் சம்சாரம்கறதுக்காகப் பெருமையாச் சொல்லுலீங்க. பாலம், சேர் பொசிஸன், சிட்டிங், ஸ்டேன்டிங், நீலிங்னு பல வகைலயும் கலக்குவா…”

மற்றவர்கள் அது குறித்து ஆவலோடு விசாரிக்க, கரு.எழில்குன்றம் குறுக்கிட்டார்.

“கொஞ்சம் இரு, கொஞ்சம் இரு! ஆறு மாசம் முந்தி நீயி நம்ம பொதுக் கூட்டத்துல சொன்ன சிட்டிங் – ஸ்டேன்டிங் – நீலிங் கதை, அவுசாரி ஊட்ல நடந்ததில்லையா? உங்கூட்ல நடந்ததுதானா..???”

சிகாமணியிடமிருந்து உலக மகா கேவலமான இளிப்பு வெளிப்பட்டது.

*******

அடிக் குறிப்பு:

*பயிராகுதல் – கால்நடைகளின் சினைப்பிடித்தலுக்கு கொங்கு வழக்கு.


*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

The post மூன்று அரசியல் குறுங்கதைகள் first appeared on Nadukal.

  •