Reading view

பெங்களூர் புக் ப்ரம்மா: ஜெயமோகன் உரை

(ஆகஸ்ட் 9, 2024 - பெங்களூர் புக் பிரம்மா இலக்கிய நிகழ்வின் முதல் நாளில் ஜெயமோகன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம் (அவர் தளத்தில் தந்துள்ளபடி - https://www.jeyamohan.in/203929/)

*

அனைவருக்கும் வணக்கம். அமெரிக்காவில் ஒரு பேட்டியில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று. நான் இரண்டுமொழிகள் மிக நன்றாகத் தெரியும், ஆங்கிலத்தில் சமாளிப்பேன் என்று பதில் சொன்னேன். ஆச்சரியத்துடன் எவ்வாறு இரண்டுமொழிகள் தெரியும் என்று கேட்டனர். என் தாய்மொழி மலையாளம், எழுதும் மொழி தமிழ் என்று பதில் சொன்னேன். அது இன்னும் ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால் நமக்கு இது வியப்பூட்டுவது அல்ல. தென்னகத்தின் யதார்த்தம் இது. இந்த அரங்கில் இருப்பவர்களிலேயே எம்.கோபாலகிருஷ்ணனின் தாய்மொழி கன்னடம். இன்னொரு எழுத்தாளரான சு.வேணுகோபாலின் தாய்மொழியும் கன்னடம். இங்கிருக்கும் எங்கள் பெருங்கவிஞரான சுகுமாரனின் தாய்மொழி மலையாளம். நெடுங்கால இடப்பெயர்வுளால் நம் ஒவ்வொரு பகுதியும் பன்மொழித்தன்மை கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது.

இதுவே தென்னகப் பண்பாடு. தென்னகத்திற்கென ஒரு தனிப்பண்பாடு உண்டு. நாம் ஒரு தனிப் பண்பாட்டுத்தேசம். பெர்னாட் ஷா சொன்னார், அமெரிக்காவும் பிரிட்டனும் ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகள் என்று. நாம் ஐந்து மொழிகளால் இணைக்கப்பட்ட ஒரு தேசம். இந்த தென்னக இலக்கியவிழாவை முன்னெடுக்கும் புக்பிரம்மா அமைப்புக்கு என் வாழ்த்துக்கள்.

என் மொழியின் இலக்கியத்தின் போக்குகளைப்பற்றி சில சொற்கள் சொல்லும்படி சொன்னார்கள். தமிழில் இரண்டு போக்குகளின் கீழிறக்கமும், இரண்டு போக்குகளின் மேலெழலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்வேன். பின்நவீனத்துவம் கீழிறங்கிவிட்டது. இன்று எந்த குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளரும் தன்னை பின்நவீனத்துவர் என்று சொல்லிக்கொள்வதில்லை. தலித் இலக்கியம் பின்னகர்ந்து வருகிறது. தலித் இலக்கிய முன்னோடிகளான மூத்த படைப்பாளிகளே தங்களை அவ்வாறு அடையாளப்படுத்தலாகாது என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இரு போக்குகள் மேலெழுகின்றன. ஒன்று, மையப்போக்கு. அதை நான் நுண்மையின் அழகியல் என்பேன். இன்றைய இளையதலைமுறை நவீன உலகில் வாழ்கிறது. அதற்கு வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடில்லை. அரசியலார்வகங்ளும் பெரிதாக இல்லை. அதிநவீன நுகர்வுக்கலாச்சாரமும், பெருகிவரும் உயர்தொழில்நுட்ப உலகமும்தான் அதன் பிரச்சினை. அது உருவாக்கும் உறவுச்சிக்கல்கள், ஆளுமைச்சிக்கல்களே அவர்களின் பேசுபொருட்கள்.

அவர்கள் அதற்கான அழகியலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது பல அடுக்குகள் கொண்டது அல்ல. சிக்கலானதும் அல்ல. ஆனால் மிகமிக நுட்பமான கூறுமுறையும், பூடகமான சந்தர்ப்பங்களும் கொண்டது. மிக உள்ளடங்கியது. கடிகாரம் பழுதுபார்ப்பவரின் கருவி போல என்று உவமை சொல்லலாம். மிகச்சிறிய, மிகநுணுக்கமான ஒன்று. அந்த அழகியலை முன்வைக்கும் இளையபடைப்பாளிகள் என்று சுனீல்கிருஷ்ணன், சுரேஷ்பிரதீப், விஷால்ராஜா, கார்த்திக் பாலசுப்ரமணியன், சி.சரவணகார்த்திகேயன், அனோஜன் பாலகிருஷ்ணன், சுஷீல்குமார் என பலரை குறிப்பிடமுடியும்.

என் முன்னோடிகளான படைப்பாளிகளாகிய சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள்  கற்பனாவாதத்திற்கு நவீன இலக்கியத்தில் இடமில்லை என்னும் கொள்கை கொண்டிருந்தனர். கற்பனாவாதத்தின் அடிப்படையான உயர் இலட்சியவாதம் மீது கொண்ட அவநம்பிக்கையால்தான் நவீன இலக்கியம் உருவாகியது என்றனர். ஆனால் அவர்களின் சமகாலத்திலேயே மாபெரும் இலட்சியவாதியும் கற்பனாவாதியுமான வைக்கம் முகமது பஷீர் எழுதிக்கொண்டிருந்தார்.

இன்று சில படைப்பாளிகள் பஷீரை தங்கள் ஆதர்சமாகக் கொண்டிருக்கிறார்கள். உயர் இலட்சியவாதமின்றி உயர் இலக்கியம் இல்லை என நினைக்கிறார்கள். ஆன்மிகமான அடிப்படைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்குகிறார்கள். ஆகவே அவர்களின் அழகியல் கற்பனாவாதம் சார்ந்ததாக உள்ளது. அதை நவீன கற்பனாவாதம் என்பேன். இன்னும் குறிப்பாக ஆன்மிகக் கற்பனாவாதம் என்பேன். அந்த வகை எழுத்துக்களை அஜிதன் எழுதி வருகிறார். இன்னொருவகை கற்பனாவாதம் அகரமுதல்வன் எழுதுவது. அகரமுதல்வன் இந்தியாவில் குடியேறிய ஈழத்தவர். தன் நாட்டின், தன் பண்பாட்டின் எழுச்சியை அவர் கனவு காண்கிறார். ஆகவே இயல்பாகவே கற்பனாவாதம் அவரில் திரள்கிறது.

இந்த இரு போக்குகளையும் ஒன்றோடொன்று மோதி முன்னகரும் முரணியக்கமாகச் சொல்லலாமா என்று தெரியவில்லை. அதை எதிர்காலம்தான் சொல்லவேண்டும். நன்றி.

 ***

  •  

வீரனின் பாடல்கள்

பெருமாள்முருகன் தமிழ் இலக்கியத்தின் சமீபப் பரபரப்பு. அனேகமாக எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் மீது மெல்லிய பொறாமை உண்டு என்றுதான் சொல்வேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பு பெரும்பான்மை எழுத்தாளர்களின் ரகசியச் சொப்பனம். அவை கொணரும் உரிமப் பணமும் பெரும் புகழும் ஒரு பக்கம், அவை திறந்து விடும் பிரம்மாண்ட வாசல்கள் மறுபுறம் என வசீகரமான பக்க விளைவுகள் கொண்டவை. நேரடியாகச் சர்வதேசப் பதிப்பகங்கள் மூலம் நூல் வெளிவருதல் முதல் உலக இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்படுதல் வரை இதன் சாத்தியங்கள் அளப்பரியவை. தமிழில் அவ்வேலை செம்மையாக நடந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் பெருமாள்முருகன். அதன் பலனாக‌ அவரது பெயர் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்வதேசிய விருதுகளின் இறுதிப் பட்டியல்களிலும் இந்திய அளவிலான பெரும் பரிசுகளிலும் இடம் பெறுகிறது.

அதற்கு அவரது எழுத்துக்களின் தரம், தகுதி மட்டுமின்றி பதிப்பிக்கும் காலச்சுவடின் முன்னெடுப்புகளும் முக்கியக் காரணம். சமீப வெற்றி 25 லகரம் இந்திய ரூபாய்க‌ள் பரிசாகக் கொண்ட ஜேசிபி இலக்கிய‌ விருது - அனேகமாக இந்தியப் புத்தகங்களுக்கு அளிக்கப்படுகிற‌ பரிசுகளில் அதிகத் தொகை கொண்டது இதுதான். அவர் எழுதிய ‘ஆளண்டாப் பட்சி’ நாவல் ‘Fire Bird’ என்ற பெயரில் ஜனனி கண்ணனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரிசை வென்றிருக்கிறது. அவருக்கு வாழ்த்தும் வணக்கமும்.

*

பெருமாள்முருகன் பற்றிய என் தனிப்பட்ட வாசிப்பு அனுபவக் குறிப்பாகவும் அவரது எழுத்தாளுமை குறித்த குறுக்குவெட்டுப் பார்வையாகவும் இக்கட்டுரையை அமைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவரெழுத்தைப் பெருமளவு படித்தவன், கொஞ்சம் பழகியவன் என்கிற அடிப்படையில் அதுவே எனக்கு உவப்பான‌தும் வசதியானதும் கூட.

‘பீக்கதைகள்’ சிறுகதைத் தொகுதிதான் பெருமாள்முருகனை நான் முதலில் வாசித்தது. அப்படி ஒரு பொருளில் சுவாரஸ்யமாக‌வும் அனாவசியத் திணிப்பின்றியும் எழுதப்பட்ட சிறப்பான சிறுகதைகள். முகஞ்சுழிக்கும் ஒரு கருப்பொருள் கல்லூரி நாட்களில் என்னை முகம் மலர்த்தியது நினைவிருக்கிறது. அப்போதிருந்து கடந்த 17 ஆண்டுகளாக எனக்குப் பிடித்த சமகால எழுத்தாளர்களில் ஒருவராக‌ நீடிக்கிறார். இடையில் நிகழ்ந்த துன்பியல் நிகழ்விலிருந்து மீண்டெழுந்து மறுபடி தனது மார்க்கத்தைக் கண்டடைந்திருக்கிறார்.

அவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனச் சகல வடிவுகளிலும் வீரிய செல்வாக்கு செலுத்தும் அரிய எழுத்தாளர். அவற்றோடு பதிப்பு, தொகுப்பு, அகராதி என இன்ன பிற விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார். அவரது புனைவெழுத்துகள் அத்தனையும் கொங்கு வட்டார வழக்கில் அமைந்திருந்தாலும் அவை உலகளாவிய பொருத்தப்பாடு கொண்டவை என்பதையே அவர் பெறும் சர்வதேச அங்கீகாரங்கள் உணர்த்துகின்றன.

Think Local, Go Global என்பதற்கான சரியான உதாரணம் அவரது படைப்பிலக்கியங்கள்.

இடதுசாரி மனநிலை, கவிதை எழுதுதல், சிற்றிதழ் பங்களிப்பு என தமிழின் எந்தவொரு படைப்பாளியையும் போலவே எழுத்து வாழ்வைத் தொடங்கியவர் பெருமாள்முருகன். ஆனால் அவரை வித்தியாசப்படுத்தி மேலெழ வைத்தது அவர் மனித உறவுகள் மற்றும் மன உணர்வுகள் குறித்து புனைவுகளில் முன்வைக்கும் நுண்மையான அவதானிப்புகள்.

சாத்தியமான இலக்கிய வடிவங்களில் எல்லாம் அவர் பங்களிப்புகள் செய்திருந்தாலும் கூட‌ என் பார்வையில் பெருமாள்முருகன் பிரதானமாக ஒரு நாவலாசிரியர்தான். 1991ல் வெளியான ‘ஏறுவெயில்’ தொடங்கி தொற்று ஊரடங்கு காலத்தில் எழுதிய ‘நெடுநேரம்’ வரை மொத்தம் பன்னிரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். இப்போது பார்த்தால் இந்த வரிசைக்கும் அவரது வயதுக்கும் ஒரு விதத் தொடர்பு இருப்பது போல் தென்படுகிறது.

முதல் மூன்று நாவல்கள் (ஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதாரி) சிறுவர்கள் அல்லது பதின்மர்கள் பற்றியோ அல்லது அவர்கள் பார்வையிலோ அமைந்தவை. அடுத்த மூன்று நாவல்கள் (கங்கணம், மாதொருபாகன், பூக்குழி) காதல் அல்லது திருமணம் உள்ளிட்ட உறவுச் சிக்கல்கள் தொடர்புடையவை. அதன் பிந்தைய‌ மூன்று நாவல்கள் (ஆளண்டாப் பட்சி, ஆலவாயன், அர்த்தநாரி) பிள்ளைப்பேறு, வாழ்க்கையில் உழைத்து முன்னேறுதல் சம்மந்தப்பட்டவை. சமீப மூன்று நாவல்கள் (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, கழிமுகம், நெடுநேரம்) ஒரு தந்தையின் அல்லது தாயின் ஸ்தானத்திலிருந்து அடுத்த தலைமுறையைக் கவனிப்பவை, கவலைப்படுபவை, முரண்படுபவை, இணங்குபவை.

அதாவது ஒரு சிறுவன் வளர்ந்து, காதலித்து, கல்யாணம் செய்து. பிள்ளைக‌ள் பெற்று, உழைத்து முன்னேறி, தன் பிள்ளையின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுவது என்கிற ஒரு தலைமுறையின் நகர்ச்சியை இப்பன்னிரு நாவல்கள் வழியே உணர முடிகிறது.

இன்னொரு காலகட்ட அடிப்படையிலும் அவரது புனைவுகள் இரு வகையாகப் பிரிந்து கிடக்கின்றன. மாதொருபாகன் நாவலை ஒட்டி வலதுசாரி உதிரி அமைப்புகள் தந்த அழுத்தத்தால் ஜனவரி 2015ல் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளன் இறந்து விட்டான் என்று அவரே அறிவிக்கிறார். பிறகு 2016 மத்தியில் படைப்புச் சுதந்திரத்தை ஆதரித்து வந்த‌ உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மறுபடி எழுதத் தொடங்குகிறார். இந்த இருண்ட காலத்துக்கு முன் அவர் எழுதிய நாவல்கள் கொங்கு வட்டாரப் பகுதிகளில் நடப்பவை. அதன் பிறகு அவர் எழுதிய புனைவுகள் யாவும் கற்பனையான ஓர் அசுர லோகத்தில் நடப்பவை. அவர்களிடம் மனிதச் சாயலும், கொங்கு பாஷையும் பயின்று வந்தாலும் அவர்களின் நிலவியல் நமக்குப் பரிச்சயமான எதனோடும் தொடர்புடையவை அல்ல.

அவர் மறுபடி எழுத ஆரம்பித்ததை மீட்சி என்பதை விட எழுச்சி என்றே சொல்வேன். Blessing in disguise என்பார்கள் - அந்த‌த் துர்நிகழ்வுதான் சர்வதேச ஊடகக் கவனத்தை பெருமாள்முருகன் மீது திருப்பியது; அவருக்கு எதிராகக் கொதித்த அப்பிற்போக்கு அமைப்புகளுக்கு நன்றி நவில‌ வேண்டிய‌ அளவு அவர் மீது வெளிச்சம் பாய்ச்சியது. அதற்குரிய தகுதியைக் கொண்டவை அவரது எழுத்துக்கள் என்பதில் மறுப்பில்லை என்றாலும் இத்தனை துரித ஏற்றம் நிகழ அந்த‌ச் சம்பவம் மிக முக்கியமான‌ காரணி.

“தடைகளால் தழைத்தவர்” என அவரைப் பற்றிக் குறிப்பிடலாம் எனத் தோன்றுகிறது.

*

பெருமாள்முருகன் நாவல்களில் ஒட்டுமொத்தமாகக் கதையின் நகர்வு குறைவாகவே இருக்கும். மாறாக ஒரு சிக்கல் சூழலைச் சிறுசம்பவங்கள் வழி, உரையாடல்கள் வழி நிறுவி, அதன் பாதிப்புகள் அல்லது விளைவுகள் பற்றிய பல்வேறு சாத்தியங்களும் ஆராய்வதே அவரது பாணி. உதாரணமாக கங்கணம் நாவலில் திருமணம் ஆகாத ஓர் ஆண் எதிர்கொள்ளும் பலவித‌ அவமதிப்புகள் சொல்லப்படுகின்றன‌; மாதொருபாகன் நாவலில் குழந்தைப் பேறில்லாத தம்பதிகள் அதைக் கையாளச் செய்யும் முயற்சிகள் பேசப்படுகின்றன. அப்படிச் சின்னஞ்சிறுபொட்டலங்களின் தோரணமாக இருப்பதே அவரது ஆக்கங்களை வாசிப்பின்பம் மிக்க சுவாரஸ்யப் பிரதிகளாக‌ ஆக்குகின்றன.

பெருமாள்முருகன் ஆரம்ப காலம் முதல் தான் நம்பும் அரசியலைத் தன் படைப்புகளின் வழி பிரச்சார நெடியின்றி subtle-ஆகச் சொல்லி வருபவர். அதோடு சங்கடம் பாராமல் புனிதங்களை அடித்து நொறுக்கியவர். அவருக்கு வந்த இடர்பாடு கூட அதன் நேரடி விளைதான் - நம் சமூகத்துக்கு உண்மையை விட உண்மையைச் சொல்வது கசக்கும்.

அறிவித்துக் கொள்ளாவிட்டாலும் சுயசரிதைக்கூறுகள் இவரது புனைவுகளில் ஏராளம் உண்டு. தனது கிராமத்து அனுபவங்களையே கச்சாவாக்கி பெரும்பாலும் எழுதியவர். அதனாலேயே அவை வெறும் வட்டார வழக்கிலான கதைகளாக மட்டும் அமையாமல் அவ்வட்டாரத்தின் இயல்பைத் துல்லியமாக‌ப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளன‌. நீரும், நிலமும், பயிரும், கிணறும், ஆடும், மாடும் அவற்றில் மலர்ந்து மணக்கின்றன. உதாரணமாக‌ பெண்ணின் அல்குலை வர்ணிக்கும் போதும் “பூக்கட்டிய சோளக்கதிர்” என்கிறார். அவ்வளவு தூரம் விவசாயம் அவர் எழுத்துக்களில் வேர் பாய்ச்சியிருக்கிறது.

கொங்கு வட்டாரத்தை நிறைய‌ எழுதியவர் என்ற வகையில் பெருமாள்முருகன் ஆர். சண்முகசுந்தரத்தின் நேரடி நீட்சி. ஆனால் அப்படி எழுதிய‌ விஷயங்களின் விரிவின் அடிப்படையில் அவர் எப்போதோ ஆர். சண்முகசுந்தரத்தைக் கடந்து விட்டார். அவர் அசுர லோகத்தை வைத்து எழுத ஆரம்பிக்கும் வரை கொங்கு பகுதி மக்களின் உழவு முறைகள், தினசரிச் சிக்கல்கள், தனித்துவப் பழக்கங்கள், பேச்சு வழக்குகள் எனப் பல விஷயங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகி வந்திருக்கின்றன. மண்ணுக்கும் மனிதர்கள் மனவோட்டத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை அவற்றின் வழியே உணர முடிகிறது.

பெருமாள்முருகன் தன் புனைவுகளில் மிக வலுவான‌ பல‌ பெண் பாத்திரங்களை எழுதி இருக்கிறார். நாவல்கள் மட்டுமின்றி சிறுகதைகளில் கூட இத்தகு வல்லிய‌ வார்ப்புகள் கணிசமாக இருக்கின்றன. குறிப்பாகக் கணவனை இழந்து குழந்தையை வளர்க்கும் தாய் என்ற பிம்பம் தொடர்ச்சியாக அவரது புனைவுகளில் வருகிறது. அதன் பூரணமாக தன் தாய் பற்றிய அனுபவப் பதிவு நூலாக ‘தோன்றாத் துணை’யை எழுதினார் எனலாம்.

போலவே தலித்கள் பற்றிய நேர்மையான சித்திரங்களையும் அவரது எழுத்துக்களில் காண முடிகிறது. அவர் தலித் அல்லாதவர் என்ற அடிப்படையில் மேலிருந்து கொண்டு தலித்கள் மீது அதீத அன்பு காட்டும் பாவனை அவரது படைப்புகளில் அறவே இல்லை. சொல்லப் போனால் ஆதிக்க சாதி போல் மிக இயல்பாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் ‘மாதொருபாகன்’ Trilogy-யின் நாயகியான‌ பொன்னா எனக்குப் பிடித்தமான பாத்திரம். மாதொருபாகன், அர்த்தநாரி மற்றும் ஆலவாயன் என்ற மூன்று நாவல்களிலும் பேசப்படும் அவளது உளவியல் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் உரியது. ஒரு நாவலின் இறுதிப் பகுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் நாயகன் இறந்தால் என்ன ஆகியிருக்கும், பிழைத்தால் என்ன ஆகியிருக்கும் எனத் தொடர்ச்சியாக இரண்டு நாவல்கள் பெருமாள்முருகன் எழுதியிருப்பதும் தமிழில் முன்னுதாரணம் இல்லாதது.

பெருமாள்முருகன் கட்டுரைக‌ள் எழுதுகையில் ஓர் ஆய்வாளருக்குரிய ஆழ மொழியும் தரவுகளின் செறிவும் இயல்பாகவே வந்தமர்ந்து விடுகிறது. ஆனால் சற்றும் அலுப்பு தராமல் ஆர்வமாக வாசிக்க வைக்கும் சரளமும் அதோடு சேர்த்து வாய்த்திருக்கிறது.

பெருமாள்முருகனுக்கு இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. தமிழில் பிழையின்றி எழுதும் மூன்று புனைவெழுத்தாளர்களுள் அவரும் ஒருவர் (யுவன் சந்திரசேகரும் பா.ராகவனும் மற்றவர்கள்). அது அவரது பேராசிரியப் பின்புலத்திலிருந்து வந்ததாக எடுத்தாலும் கல்விப் புலத்திலிருந்து எழுதும் எல்லோருமா அதைச் செய்கிறார்கள்!

*

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார். வயதைக் கொண்டு அளந்தாலும் - இன்னும் மணி விழாவுக்கே காலமிருக்கிறது - பெருமாள்முருகனின் வீச்சு வியப்பானது. ஆங்கிலம் மட்டுமில்லாமல் ஜெர்மன், சீனம், இத்தாலி, போலிஷ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளுக்கும் அவர் படைப்புகள் போயிருக்கின்றன.

பேராசிரியர், கணவர், தந்தை என்ற லௌகீக வாழ்வின் பொறுப்புகளையும் ஏற்ற‌வ‌ர். பெருமாள்முருகனை நான் தனிப்பட்டு அறிந்த அளவில் எழுத்துக்களில் வெளிப்படும் முற்போக்குக் கருத்துக்களைத் தன் சொந்த வாழ்விலும் அமல்படுத்துகிறார். அப்படி எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி குறைக்கும் வீம்பு சாதரணமானதல்ல. அதுவும் அவரைத் தமிழின் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது என்பேன்.

விளக்கு, கதா, கனடா இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல‌ விருதுகள் பெற்றிருந்தாலும் வழக்கம் போல் தமிழின் சாஹித்ய அகாதமியால் பெருமாள்முருகன் இதுகாறும் கண்டு கொள்ளப்படவில்லை. (அவரது ‘மாதொருபாகன்’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘One Part Woman’ ஆங்கில மொழியாக்கத்துக்கான சாஹித்ய அகாதமி விருதினைப் பெற்றது.)

முன்பே சொன்னது போல் தேசிய, உலகளாவிய அங்கீகாரங்கள் அவருக்குப் புதிதல்ல. 2023க்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான நெடும்பட்டியலில் அவரது ‘பூக்குழி’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘Pyre’ இடம் பெற்றது. அதற்குப் போன முதல் தமிழ் நாவல் அதுவே. அந்நூல் தெற்காசிய இலக்கியங்களுக்கு வழங்கப்படும் DSC பரிசின் நெடும்பட்டியல் 2017ம் ஆண்டு இடம் பெற்றது. 2019ம் ஆண்டு அப்பரிசின் நெடும்பட்டியலில் அவரது ‘ஆலவாயன்’ நாவலின் மொழிபெயர்ப்பான‌ ‘A Lonely Harvest’ இடம் பெற்றது. இப்போது அவர் பெற்றிருக்கும் JCB பரிசின் கதவுகளையும் அவர் தட்டுவது முதல் முறை அல்ல. 2018ல் அவரது பூனாச்சி நாவலின் மொழிபெயர்ப்பான ‘Poonaachi or the story of a Black Goat’ம் 2019ல் அவரது ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ நாவல்களின் மொழியாக்கங்களான ‘A Lonely Harvest’ & ‘Trial by Silence’ இரண்டும் அப்பரிசின் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றன.

ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் அண்ணாந்து பார்த்த சில‌ சர்வதேச அங்கீகாரங்களை இன்று பெருமாள்முருகன் கைப்பற்றி இருக்கிறார், அல்லது அருகே போயிருக்கிறார். இன்னும் அப்படியான பற்பல விருதுகள், பரிசுகள் அவரை வந்தடையும் என்பதில் சந்தேகமில்லை. அது இறுதியில் இலக்கிய நொபேல் பரிசு வரையிலும் பாயக்கூடும்.

*

பெருமாள்முருகன் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓர் அரிய நிகழ்வு. தரமும் வெற்றியும் ஒருங்கே சேர்வது அதிகம் இங்கே நிகழ்ந்தது கிடையாது. ஜெயகாந்தன் ஓர் உதாரணம். சமகாலத்தில் ஜெயமோகனையும் பெருமாள்முருகனையும் சொல்லலாம். இந்த வெற்றி தொடர வேண்டும். அது தமிழின் பிற படைப்புகள் வெளியில் செல்லவும் வழிவகுக்கும். எனவே பெருமாள்முருகனை ஆதரிப்பதும் பாதுகாப்பதும் தமிழ் வாசகர்களின் கடமை.

அவரால் மலம் மணக்கும் ‘பீக்கதைகள்’ எழுத முடிகிறது, வசை வார்த்தைகளை ஆய்ந்து ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்று சொல்ல முடிகிறது, சமூகத்தில் நிலவிய, நிலவும் பாலியல் மீறல்களைச் சமரசமின்றியும் வக்கிரமின்றியும் வடித்துக் காட்ட முடிகிறது, தான் சார்ந்த சாதியின் ஆணவச் செயல்களைத் தயக்கமின்றி விமர்சனம் செய்ய முடிகிறது. அவர் புனைவுகளில் மனித மனதின் இருள் சூழ்ந்த இடுக்குகளில் கூசாமல், தயங்காமல் ஒளிக் கதிர் பாய்ச்சுகிறார். பேசாப் பொருளை மட்டுமின்றி, பேசக்கூடாப் பொருளையும் பேசுபவர் என்ற வகையில் அவரது எழுத்துக்கள் அவரை ஒரு மாபெரும் துணிச்சல்காரர் என்றே நிறுவுகிறது. அவ்வகையில் ‘கோழையின் பாடல்கள்’ எழுதிய‌ பெருமாள்முருகனின் படைப்புகளை வீரனின் பாடல்கள் என்றே வரையறுப்பேன்.

பெருமாள்முருகன் கருத்துரிமை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் இறுதி வரி: “Let the author be resurrected to what he is best at. Write.” அதையேதான் நானும் அடிக்கோடிடுகிறேன். இன்று அவர் வேகம் குறைத்திருக்கிறார். அளந்தே அடிகள் எடுத்து வைக்கிறார். அசுர லோக அரிதாரம் ஓர் உதாரணம். அவரது சாவுக்கும் உயிர்த்தெழலுக்கும் முன்பிருந்த தீவிரம் மறுபடி அவர் எழுத்தில் திரும்ப வேண்டும் என்றே அவரிடம் வாசகனாகவும் மாணவனாகவும் கோருவேன். ஒப்பீட்டளவில் அதுவே எனக்கு விருப்பம். இது பழைய சொலவடைதான்; ஆனால் இப்போது சொல்வது பொருத்தமானது - கப்பல் கரையில் நங்கூரமிட்டிருப்பது பாதுகாப்பானதே, ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்பட்டதல்ல.

***

(22 நவம்பர் 2023 அன்றைய மெட்ராஸ் பேப்பர் மின்னிதழில் 'பெருமாள் முருகன்: புனிதங்களை நொறுக்கும் கலைஞன்' என்ற தலைப்பில் வெளியானது.)

  •  

காலோஸ்மி [சிறுகதை]

இக்கதை எழுதப்படும் நாளிலிருந்து* ஓராண்டு, ஒரு மாதம், 25 நாட்கள் எதிர்காலத்தில்…

தீஸ் ஜனவரி மார்க்கிலிருந்த ‘காந்தி ஸ்மிருதி’ மாலை ஐந்து மணியின் குளிர்ச்சியில் சிலிர்த்திருந்தது. மஹாத்மா நினைவு நாள் என்பதையும் கடந்து ஜ‌னம் அதிகமில்லை.

மரணத்தை நோக்கி காந்தி இறுதியாக நடந்து சென்ற பாதையை அடையாளப்படுத்த‌ அவரது பாத ரட்சைகளின் வடிவை சிமெண்ட்டில் புல்வெளி நடுவே பதித்திருந்தனர்.

அங்கே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அருகருகே முகம் பார்த்துக் கைப் பிடித்தவாக்கில் நின்றிருக்க, மற்றொரு பெண்மணி சற்று விலகி நின்று அவர்களைப் பார்த்திருந்தார்.


த‌ன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஐஸ்க்ரீமைக் கண்ட குழந்தை கணக்காக தாராவின் கண்களில் வழியும் காதல் ஈஸ்வரனுக்குப் பிடித்தமானது, பெருமிதமானது. தனது அத்தனை வெற்றிகளையும் பிடித்த‌ பெண்ணின் பாதத்தில் சமர்ப்பித்து அவளது காதலை வென்றெடுப்பதையே ஓர் ஆண் ஆகச் சிறந்த பெருமையாகக் கருதுகிறான்!

முலைகள் அழுந்தும் கூச்சமின்றி ஈஸ்வரனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் தாரா. அவன் பக்கல் கொழுப்பு செழித்த அவளது கன்னத்தில் மென்முத்தமிட்டுச் சொன்னான் -

“பயப்படாதே! பத்திரமாப் போயிட்டு வா.”

தாரா தலையாட்டினாள். லேக்ரிமல் சுரந்த நீர் கண்களில் சூழ்ந்து நிற்கச் சொன்னாள் -

“ஐ லவ் யூ! வந்துடுவேன். வெய்ட் பண்ணு.”

“அதிகபட்சம் பத்து நிமிஷ வேலைதானே!”

“ம்.”

“அதுக்கு என்ன இத்தனை செண்டிமெண்ட்?”

“ஆனால் 77 வருடம் பின்னோக்கிய‌ பயணம்!”

“ஸோ வாட்? இன்று போய் நேற்று வா. ச்சியர்ஸ்!”

சட்டெனச் சுதாரித்துப் புன்னகை செய்தாள். ஈஸ்வரனிடமிருந்து விலகித் திரும்பினாள்.

பத்மஸ்ரீ பட்டம் பெற்றவரும், பழைய‌ ராஜ்ய சபா எம்பியும் (காங்கிரஸ்), ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் அதிபரும், ஜிடி பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்சஸ் நிறுவனத்தின் புரவலருமான ஷோபனா பார்தியா அவளது கரம் பற்றிக் குலுக்கினார்.

“வரலாற்றை எழுதியவர் உண்டு; அதைப் பார்க்கப் போகும் முதல் ஆள் நீ. அவ்வகையில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்மண்ட் ஹிலாரி வரிசையில் நிலைப்பாய். ஆல் த பெஸ்ட், தாரா!”

“நீங்களும் உங்கள் குடும்பமும் நம் நிறுவனமும் இல்லை எனில் இது சாத்தியமில்லை.”

“நாங்களும் நிறுவனமும் கருவிகள் ம‌ட்டுமே. உங்கள் மற்றும் அணியினரின் அறிவும் அர்ப்பணிப்பும் தோல்விகளில் துவளாத விடாமுயற்சியும்தாம் இந்த இடத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. நிறுவனம் உங்களால் பெருமை கொள்கிறது.”

“உங்கள் உற்சாகச் சொற்களுக்கு நன்றி!”

தாரா த‌ன் முதுகுப் பையிலிருந்து அதை எடுத்தாள். நான்கு டெமி சைஸ் புத்தகங்களை நெருக்கமாகப் பரப்பி வைத்த அளவில் கருப்பாகப் பளபளத்தது. சட்டெனப் பார்க்கும் எவருக்கும் இளைத்த இன்டக்ஷன் ஸ்டவ் என்று படும். அல்லது சிறிய எல்ஈடி டிவி என.

அதன் மேல் இடது ஓரத்தில் ஜிடி பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்சஸ் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. வலது ஓரத்தில் KALO’SMI என்று அச்சாகி இருந்தது. அதனருகே டிஜிடல் வெண் பொடி எழுத்துக்களில் Beta Version 1.25.786 என ஒளிர்ந்தது. பின்புறம் முழுக்க‌ ஆப்பிள் வெண்ணிறம். அதில் ‘RETURN’ என்ற பொத்தான் இருந்தது.

அது காலோஸ்மி என்ற பெயர் கொண்ட கால இயந்திரம். இப்போதைக்குக் காலத்தில் பின்னோக்கி மட்டும் போகலாம். அதிகபட்சம் 99 ஆண்டு. எந்நாளில் இருக்கிறோமோ அதே நாள், அதே நேரம் வேறு ஆண்டுக்கு நகரும். வேறு மாதம், வேறு தேதிக்குச் செல்ல முடியாது. புவி இடமும் மாறாது - காலம் மாறினாலும் எந்த இடத்தில் இருக்கிறோமோ அங்கேயேதான் இருக்கும். அதாவது காலம் (Time) மட்டும் நகரும், வெளி (Space) நகர்ச்சி இதில் சாத்தியமில்லை. அடுத்தடுத்த வெர்ஷன்களில் ஒவ்வொன்றாக‌ இவற்றை எல்லாம் சேர்க்க உத்தேசம். ஆனால் அதற்கு இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் தேவை.

ஏற்கெனவே முப்பத்து மூன்று ஆண்டுகளில் ஐயாயிரம் கோடி ரூபாய் விழுங்கி இருந்தது அப்பரிசோதனை. எனவே அடுத்தக‌ட்ட நிதியுதவிக்கு முன் காலோஸ்மி வெற்றிகரமாகச் செயல்படுகிறதா எனச் சோதித்துப் பார்த்து முடிவெடுக்க நினைத்தது நிர்வாகம். தவிர, அந்நாள் வரை அந்த ஆராய்ச்சியைப் பரம‌ ரகசியமாக வைத்திருந்தார்கள். இப்போது சோதனை முடிவுகளை ஊடகங்களில் அறிவிப்பதன் மூலம் சர்வதேசிய கவனத்தைக் குவிக்கலாம். எனவேதான் ஷோபனா பார்தியா அந்த‌ யோசனையை முன் வைத்தார்.

காலோஸ்மி பரிசோதனை பற்றி அவர்கள் மூவர் தவிர இன்னும் மூவருக்கு மட்டும்தான் மொத்த உலகிலும் தெரியும் - பாரதப் பிரதமர், மத்திய‌ உள்துறை அமைச்சர் மற்றும் அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர். அவர்களுக்குச் சொன்னது கூட சட்ட விதிகள் காரணமாகவே. அம்மாதிரி தீவிரமான அறிவியல் சோதனைகளை அரசாங்கத்துக்கு அறிவிக்காமல் செய்து விட‌ முடியாது. குறிப்பாக நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது அதன் எதிர்காலத்துக்குப் பாதகம் உண்டாக்கும் சாத்தியமுள்ள‌ பரிசோதனைகள். அது சட்ட விரோதம் என்பது ஒருபுறம், அதன் பக்க விளைவுகளைக் கையாள அரசு மாதிரியான ஒரு பிரம்மாண்ட இயந்திரம் கைக்கு அருகே இருப்பது முக்கியம். எனவே ஷோபனா அவர்களுக்கு முறைப்படி அதை அறிவித்து இருந்தார்.

முடிவுகள் ஊடகத்துக்குப் போகும் முன் தன் பார்வைக்கு வர வேண்டும் என்று பிரதமர் கறாராகச் சொல்லி இருந்தார். தனியார் ஆய்வு நிறுவனம், முழுக்க சொந்த முதலீடு என்றாலும் அரசு கேட்டால் வளைந்து ஆக வேண்டும். ஷோபனா ஒப்புக் கொண்டார்.

*

காலோஸ்மியின் ஆக்கத்தை க்ரோனோ-போர்டேஷன் என்பார்கள். அந்தத் திட்டத்தின் டைரக்டர் ஈஸ்வரன். நாற்பதைத் தொட்டு நிற்கிறான் என்பது கன்னங்களில் நரைக்க ஆரம்பித்திருக்கும் ரோமங்களில் மட்டுமே தெரியும். தினமும் முகச் சவரம் செய்பவன் என்பதால் அதை வெற்றிகரமாக மறைக்க முடிந்தது. அங்கே அவனுக்கு அடுத்தபடியாக‌ - ச‌மயங்களில் இணையாகக் கூட‌ - இருப்பவள் ப்ரொஜெக்டின் சீனியர் மேனேஜர் தாரா.

ஈஸ்வரனுக்கு ஐந்தாறு வருடம் பிந்திப் பிறந்தவள் தாரா. பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஹெச்டி எல்லாமும் இயற்பியலில். இருபத்து ஐந்து வயதில் அவள் டாக்ட்ரேட் வாங்கிய போது சுற்றமும் நட்பும் வாயைப் பிளந்து நின்றது. அம்மா திருஷ்டி கழித்து நெருப்பில் எறிந்த‌ போது படபடவென வெடித்தது. மறு வாரம் ஜிடி பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்சஸில் ரிஸ‌ர்ச் அசோஸியேட்டாகச் சேரச் சொல்லி அழைப்பு வந்தது. அவள் அங்கு வேலைக்கு வருவதற்கு ஈராண்டுகள் முன்பிலிருந்து ஈஸ்வரன் பணியில் இருக்கிறான்.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில் இருந்து ஈஸ்வரனைப் பார்க்கிறாள். அவனைத்தான் அவளுக்குப் பட்டியாக (Buddy) நியமித்திருந்தார்கள். அதாவது அவளுக்கு வேலை கற்றுக் கொடுத்து, சந்தேகங்கள் நிவர்த்தி செய்து, நிறுவன வழமைகள் பழக்கி முழுமையான ஊழியர் ஆக்க வேண்டியது அவன் பொறுப்பு. விஷயங்களை விளக்கிக் கற்பிப்பதில் அவன் விற்பன்னன், வித்தகன். விஞ்ஞான‌ம் என்றாலும், அதற்கு அப்பாலும் சரியான உதாரணங்கள் கொண்டு புரிய வைப்பான். தாராவுக்கு ஈஸ்வரனை ஐன்ஸ்டைனின் இரு மேற்கோள்களோடுதான் எப்போதும் பொருத்திக் கொள்ள முடியும் – “If you can't explain it simply, you don't understand it well enough.” மற்றும் “Example isn't another way to teach, it is the only way to teach.” முதல் நாளில் இருந்தே அவனை ஆவென்று பார்க்க ஆரம்பித்தவள் இன்னும் அதிலிருந்து இறங்கி வரவே இல்லை - இந்தப் பத்து ஆண்டுகளில் நட்பாகி, ஈர்ப்பாகி, காதலாகி என அவர்களின் உறவு என்ன‌ உருவெடுத்தாலும் கூடியபடிதான் இருக்கிறது.

தாராவும் சளைத்தவள் அல்ல. இரு கை தட்டினால்தான் ஓசை. காதலுக்கு மட்டுமல்ல; கற்பித்தலுக்கும் பரஸ்பரம் முக்கியம். என்னதான் நல்லாசிரியர் எனினும் மாணவன் சமர்த்துதான் அவன் பெற்றுக் கொள்ளும் அளவையும் வேகத்தையும் தீர்மானிக்கிறது. தாராவுக்குக் கற்பூர புத்தி என்பதால் எளிதில், விரைந்து எல்லாம் பழகிக் கொண்டாள். எனவே துரிதப் புரிதல், துல்லிய‌த் தீர்வு, புத்தாக்கச் சிந்தை என‌ ஈஸ்வரனுக்கும் அவள் மீது பிரமிப்பு இருந்தது. அந்த மரியாதை சீக்கிரத்திலேயே பிரியமாகப் பரிணமித்தது. சிஷ்யை என்பதில் இருந்து சக ஊழியை ஆக சில தினங்களிலேயே மாறிப் போனாள். அடுத்து வந்த ஆண்டுகளில் சில புள்ளிகளில் அதையும் தாண்டி குருவாகிப் போனாள்.

பல சமயம் இருவரும் பேசிக் கொள்ளாமலேயே மற்றவர் என்ன சொல்ல வருகிறார் என உணர்ந்து செயல்படுமளவு பரஸ்பரம் புரிதல் இருந்த‌து. காலப் பயணம் தொடர்பான‌ ஆராய்ச்சி வேலையில் எத்தனையோ கடுமையான விவாதங்களை எதிரெதிர் தரப்பில் நின்று நிகழ்த்தி இருக்கிறார்கள், ஆனால் எதிலும் தன்முனைப்பு எட்டிப் பார்த்ததில்லை. ஒருவரிடமிருந்து மற்றவர் எதைக் கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையே இருக்கும்.

அதனால்தான் மனக்கிலேசம் இல்லாத காதலர்களாக அவர்களால் பல்லாண்டுகளாக‌ இருக்க முடிந்தது. ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது மாதிரி அவர்களின் ஜோடி அமைந்தது.

அந்த அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி, ஈஸ்வரனை அடைய விரும்பிய‌ பெண்கள் உண்டு. தாராவிடம் காதலைச் சொல்லி மண்டியிட்ட ஆண்கள் உண்டு. ஆனால் வெகு சீக்கிரமே அவர்கள் எல்லோரும் தன்னை விடப் பொருத்தமான ஜோடியாக ஓர் ஆள் இருப்பதை உணர்ந்து கொண்டு வாழ்த்தி விட்டோ வசை பாடியோ தாமாக விலகினர்.

காலோஸ்மி திட்டத்தை வெற்றிகரமாக முடித்துச் சோதித்துப் பார்த்த பின் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தீர்மானித்திருந்தனர். (“உட்கார்ந்து ரிஸர்ச் செய்யறதுதான் வசதி; படுத்துட்டே பண்றது சரி வராது!” என்று தாரா சொல்லி விட்டாள். “நீ வேணும்னா மேல ஏறி உட்கார்ந்துக்க, தாரா. ஈஸி!” என ஈஸ்வரன் பேசிப் பார்த்தும் நடக்கவில்லை.)

ஈஸ்வரனுக்கு முப்பத்தைந்து, தாராவுக்கு முப்பது என்றிருந்த போது எடுத்த முடிவு அது. இன்று, நாளை என இழுத்து திட்டம் இந்நிலை அடைய ஐந்தாண்டு ஆகி விட்டது. இந்தப் பரிசோதனையை முடித்துத் திரும்பியதும் ஃபிப்ரவரியில் கல்யாணம். திருமணத்தில் சாதி வேறுபாட்டை பணமும் பெண்ணின் மனோபலமும் சரி கட்டும். இரு வீட்டாரும் பேசி, திருமணம் நிச்சயம் செய்து, வீடு, அலுவலகம், சொந்தம், பந்தம், சுற்றம், நட்பு என எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்தாயிற்று. கல்யாணத்துக்கு இன்னும் பதினைந்து நாட்களே இருந்தன. இன்னும் சொல்லப் போனால் காலோஸ்மி பரிசோதனை நாளின் அடிப்படையிலேயே இரு வார இடைவெளி விட்டுக் கல்யாணத் தேதி குறித்திருந்தார்கள்.

காலப் பயணத்துக்குப் பின் ஏதும் சிறு உபாதைகள் தாராவின் உடலில் இருந்தாலும் அவற்றைச் சரி செய்து கொள்ள நடுவிலுள்ள‌ நாட்கள் உதவும் என்பதுதான் கணக்கு.

*

ஜிடி பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்சஸ் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பத்து ஏக்கர் பரப்பில் அமைந்திருந்தது. வெளியிருந்து பார்ப்போருக்கு அது ஓர் ஆராய்ச்சிக்கூடம் என்பதே தெரியாது. சிறிய எழுத்துக்களில்தான் பெயர் பலகை இருக்கும். பலரும் அது ஏதோ ஒரு கறுப்புப் பணக்காரரின் பீச் கெஸ்ட் ஹவுஸ் என்றே எண்ணிக் கடப்பார்கள். அங்கே கிட்டத்தட்ட ஐம்பது பேர் பணியில் இருந்தார்கள். அதில் முப்பது பேருக்கு மேல் தேர்ந்த‌ இயற்பியல் விஞ்ஞானிகள். மீத ஆட்கள் பாதுகாப்புக்கு, பராமரிப்புக்கு, நிர்வாகத்துக்கு. காலோஸ்மி தவிர‌ மற்ற ஆய்வுகளும் அங்கு நடந்தன.

மாதம் ஒரு முறை ஷோபனா பார்தியா அங்கு வந்து போவார். ஆராய்ச்சி முன்னேற்றம் பற்றி ஈஸ்வரனும் தாராவும் விளக்குவார்கள். மேலோட்ட பவர்பாயிண்ட் ப்ரசன்டேஷன் அவருக்கு உவப்பில்லை. விரிவாக, விளக்கமாக எழுதப்பட்ட கோப்புகள் அவர் விருப்பம். அதையும் மீறினால் வீடியோக்கள், அனிமேஷன்கள் அல்லது நேரடிக் காட்சிகள். அப்படி இருந்தால்தான் என்ன நடக்கிறது என்பது துலக்கமாகப் புரிந்து துல்லியமான முடிவுகள் எடுக்க முடியும். அவருக்கென தனி அறை அங்கே இருந்தது. அதில் அவர் இருக்கைக்குப் பின் மூன்று படங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். இடப் புறம் ஷோபனாவின் தாத்தா ஜிடி பிர்லா, வலது பக்கம் அவரது தந்தை கேகே பிர்லா, நடுவில் மஹாத்மா காந்தி!

ஷோபனாவின் தந்தையார் காலத்தில் அந்த ஆராய்ச்சிக்கூடம் தொடங்கப்பட்ட போது அவரது அறையாக அது இருந்தது. அப்போது இரண்டு படங்கள் மட்டும் இருந்தன. அவர் எதுவென்றாலும் புகைப்படத்திலிருக்கும் காந்தி பாதம் பணிந்துதான் தொடங்குவார் என்பார்கள். அது த‌ன் தந்தையிடமிருந்து - அதாவது ஷோபனாவின் தாத்தாவிடமிருந்து - அவருக்கு வந்த பழக்கம். ஜிடி பிர்லா காந்தியோடு நேரடியாகப் பழகியவர். சொல்லப் போனால் காந்திக்கு நண்பராக‌ விளங்கியவர். காந்தி இறுதி நாட்களில் புது தில்லியில் இருந்த பிர்லா இல்லம் அவருக்குச் சொந்தமானதே. அதுதான் இப்போது காந்தி ஸ்மிருதி. அதனால்தான் தங்கு தடையின்றி உரிமையாக அங்கே சோதனைக்கு இறங்க முடிந்தது.

எட்டு மாதங்கள் முன் எல்லாம் தயார் என்று சொல்லி ஈஸ்வரனும், தாராவும் ஷோபனா பார்தியாவைச் சந்தித்துச் சொன்ன போது மிக‌ உற்சாகமாகி அதைப் பெரிய அளவில் பரிசோதனை செய்து பார்த்து விட்டு ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடலாம் என்றார்.

இப்போது உயிருடன் இல்லாத ஒரு பேராளுமையின் காலத்துக்குப் போய் அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துப் போடுவது என்பதுதான் அத்திட்டம். கேட்டதும் விஞ்ஞான மூளைக்கும் வியாபார மூளைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து வியந்தனர் ஈஸ்வரனும் தாராவும்.

மிக‌ இயல்பாகவே மஹாத்மா காந்தி பெயர்தான் முதலில் வந்தது. பிர்லா குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்ற வகையில் அது ஷோபனாவுக்கும் உவப்பான தேர்வாக இருந்தது. நேதாஜியின் மரண மர்மம் காரணமாக அவரையும் பரிசீலித்தார்கள். நேரு, அம்பேத்கர், பெரியார், அன்னை தெரசா, இந்திரா காந்தியின் பெயர்களும் விவாதத்தில் அடிபட்டன‌.

ஈஸ்வரன் ஐன்ஸ்டைனின் பெயர் சொன்னான். வீட்டில் தன் அறையில் அவன் மாட்டி வைத்திருக்கும் ஒரே படம் ஐன்ஸ்டைனுடையது. தன் இயலின் பிதாமகரைச் சந்திப்பது என்பது ஒரு கலவி உச்சத்தை விடவும் உற்சாகமானது. அதுவும் தான் கண்டு சொன்ன பொதுச் சார்பியல் தத்துவம் காலப் பயணத்தின் சாத்தியத்தைத் திறந்து வைத்திருப்பது குறித்து அவர் தன் வாழ்வின் பிற்பகுதியில் சங்கடமாகவே உணர்ந்தார். அவரது சிறப்புச் சார்பியல் தத்துவம் சில ஆண்டுக‌ளுக்கு முன் ஹிரோஷிமாவிலும் நாகாசாகியிலும் அணு குண்டுகளாக வெடித்துக் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றிருந்தன. அவர் மரிப்பதற்குச் சில மணி நேரம் முன் விட்டுச் சென்ற அலங்கோலமான அவரது பணி மேசையின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. தனது இறுதிக் கணங்களில் ஐன்ஸ்டைன் என்ன நினைத்தார், அவரது முகம் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும், அதைப் படமெடுக்க வேண்டும் என ஈஸ்வரன் விரும்பினான். அதிலிருந்தது நிறைவா, பெருமிதமா, குற்றவுணர்வா, அமைதியா என அறிய வேண்டும்.

சாவு பற்றிக் கேட்டதும் 99 ஆண்டு என்ற‌ வரையறையை விரிவாக்க‌ முடிந்தால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டதைப் பார்ப்பதே தனது தேர்வாக இருக்கும் என்றாள் தாரா.

ஆனால் காந்திதான் இறுதியில் ஜெயித்தார். ஈஸ்வரனின் முன்மொழிவிலிருந்து இறுதிக் கணம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு காந்தியின் மரணத்துக்கு முன் அவரோடு செல்ஃபி என்று தாரா யோசனை சொல்ல, ஷோபனாவுக்கும் அது பிடித்துப் போன‌து. டைம் இதழில் 20ம் நூற்றாண்டின் மனிதர் என்ற தேர்வில் ஐன்ஸ்டைனிடம் காந்தியார் தோற்றதற்குச் சிறந்த பழிவாங்கலாக அது அமையும் என்று அவருக்குத் தோன்றியது.

ஈஸ்வரனுக்கும் அத்தருணம் ஐன்ஸ்டைனின் இறுதி நிமிடங்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சமாதானம் ஆனான். தவிர‌ இரு பெண்கள் ஒரு மனதாக‌ முடிவெடுத்த பின் அதில் ஆண் மறுக்க ஏதுமில்லை. எனவே, அவனும் அதனை ஏற்றுக் கொண்டான்.

காந்திக்கு நேர் எதிர் அரசியல் செய்யும் இன்றைய பிரதமர் ஆட்சேபம் தெரிவிப்பாரோ எனத் தாரா கவலைப்பட்டாள். அந்தப் பிம்பத்தை மாற்றவே பரிசோதனை வென்றதும் இத்திட்டத்தில் தானும் பங்குதாரர் போல் காட்டிக் கொள்வார் பார் என்றான் ஈஸ்வரன்.

முயல் குட்டி போன்ற‌ தாரா அதற்குப் பரிசோதனை எலியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவள் காந்தி இறந்த நாளுக்குப் போய் அவர் கோட்ஸேவால் சுடப்படும் முன் காந்திக்கு அருகே நின்று ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதே இலக்கு.

ஷோபனாவுக்கு விஷயத்தைச் சொல்லும் முன்பே சிறிய அளவிலான சோதனைகளை காலோஸ்மியில் செய்து பார்த்திருந்தனர். முன்பெல்லாம் நாயையோ பூனையையோ இம்மாதிரி பரிசோதனைகளில் பயன்படுத்துவார்கள். இப்போது முன்னேறி விட்டோம்.

நாய் உருவம் கொண்ட‌ ஒரு சிறிய ரோபோவை அனுப்பி வைத்தனர். எளிய நடமாட்டம் கொண்டது அது. அதன் கண்களில் கேமெரா இருந்தது. காலோஸ்மியின் கருப்புப் புறம் நுழைந்து வெண் பக்கத்தில் வெளியேறும். அங்கே சில புகைப்படங்கள் எடுக்கும், பின் வெண் புறத்தில் நுழைந்து கருப்புப் பக்கத்தில் வெளியேறிடும். அதன் மெமரி கார்டில் சேகரமாகியிருந்த‌ புகைப்படங்கள் அந்த இடம் பழைய காலத்தில் இருந்த விதத்தைப் பிரதிபலித்தன. அதைப் பல இடங்களில், பல ஆண்டுகளுக்கு முன் போய் சோதித்தனர்.

பிறகு ஈஸ்வரனும் தாராவும் நேரடியாகத் தாமே சென்ற ஆண்டுக்குப் போவது, மூன்று வருடத்துக்கு முன் போவது எனச் சில முயற்சிகள் செய்து பார்த்தனர். நிரூபணத்துக்குச் செல்பேசியில் சில படங்கள் எடுத்தனர். எனவே இருவருக்கும் காலப் பயணம் புதிதல்ல.

ஆனால் 77 ஆண்டுகள் பின்னோக்கிப் போவது என்பது இதுவரை செய்ததில்லை. எனவே ஈஸ்வரனுக்கு அவளை அதில் ஈடுபடுத்தத் தயக்கம் இருந்தது. அதற்கு முன்பாகத் தானே அதைப் பிரதி செய்து முழுமையான‌ காலப் பயணம் செய்து பார்க்கத் தீர்மானித்தான்.

*

கேகே பிர்லா காலம் வரை அந்நிறுவனத்தில் காலப் பயண ஆராய்ச்சிக்கு ‘ப்ரொஜெக்ட் சிடிசி’ என்றுதான் பொதுவாகப் பெயரிட்டிருந்தார்கள். அதாவது CTC - Closed Timelike Curve.

காலம் - வெளி நாற்பரிமாணத்தில் CTC என்ற‌ மூடிய‌ சுழற்பாதைகளைக் கண்டறிவது அல்லது உருவாக்குவதே காலப் பயணம் மேற்கொள்ள வழி. ஷோபனா வந்த போது அத்தகு வறட்டுத் தொழில்நுட்பப் பெயர்களை விரும்பாமல் இந்திய அறிவியல் உலக வழக்கப்படி இந்து ஆன்மிகத் தளத்திலிருந்து அதற்கு ஒரு பெயர் வைக்க முற்பட்டார்.

அப்போது அவர் கண்ணில் சிக்கியதுதான் பகவத் கீதையின் 11வது அத்தியாயத்தின் 32ம் ஸ்லோகத்தில் வரும் “நானே காலம்” என்று கிருஷ்ணர் சொல்லும் காலோஸ்மி என்ற வரி. ஆனால் அவ்வரியில் அதற்கடுத்து வரும் சொற்களை ஷோபனா கவனிக்கவில்லை.

காலப் பயணம் நிகழ CTC-கள் அவசியம். கடக்கக்கூடிய புழுத்துளை (Traversable Wormhole) என்பது அதில் ஒன்று. டிப்லர் சிலிண்டர் இன்னொன்று. இப்படிப் பல சாத்தியங்களுண்டு.

காலோஸ்மி என்ற அந்த‌க் கருவி புழுத்துளை ஒன்றைச் செயற்கையாக‌, தற்காலிகமாக உருவாக்கி அதன் மூலம் செயல்படுகிறது. எந்த ஆண்டு என்று அதில் உள்ளீடு செய்ததும் அடுத்த சில நிமிடங்களில் அது ஒரு புழுத்துளையை உண்டாக்கும். அதன் ஒரு முனை நடப்புக் கணத்திலும் மறுமுனை உள்ளிடப்பட்ட அக்கடந்த கால‌ வருடத்திலும் இருக்கும்.

இப்போதைக்கு அந்த இயந்திரம் பூமியில் நூறு கிலோகிராம் எடை கொண்ட பொருளை நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்துக்கு எடுத்துப் போக வல்லது. எனவே உத்தேசமாக ஒரு மனிதனைக் காலப் பயணம் எடுத்துப் போக அதனால் முடியும். அதிகபட்சம் ஒரு மணி நேரம் அதன் ஆயுள். அதற்குள் இறந்த‌ காலத்தின் மறுமுனையில் நுழைந்து இந்த முனைக்கு வந்தால் நிகழ் காலம்! அவ்வளவுதான் அதன் மேலோட்டச் செயல்முறை.

அப்படி வருகையில், போக, வர ஆகும் பயண நேரம், கடந்த காலத்தில் தங்கிய‌ காலம் - இந்த அளவு மட்டுமே நிகழ்காலத்தில் நகர்ந்திருக்க வேண்டும். தவிர, புழுத் துளையில் போகும் போதும், திரும்பும் போதும், காலச் சுருக்கம் (Time Dilation) ஏதும் நிகழக்கூடாது. நிகழ்ந்தால் பயணியின் வயதில் குழப்பம் உண்டாகும். இதெல்லாம் சரியாக இருந்தது.

ஆனால் சூட்சமம் அதில் கடந்த காலத்திற்குப் போய் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதில் இருக்கிறது. முதலில் புழுத்துளை வழி பயணிப்பவர் பாதுகாப்பாகப் போய்ச் சேர முடிய வேண்டும். முடிந்தது. அப்புறம் போகிறவரின் சிந்தனை, ஞாபகம் எல்லாம் சிதைவுறாமல் இருக்க வேண்டும். இருந்தன. அடுத்து கடந்த காலத்தில் நடப்பனவற்றை பார்க்கவும், கேட்கவும், நுகரவும், ருசிக்கவும், உணரவும் இயல‌ வேண்டும். இயன்றன.

அதற்கு அடுத்து, போகிறவரைக் கடந்த காலத்தில் இருப்பவர்கள் பார்க்கவும், கேட்கவும் முடிய வேண்டும். அது நடக்கவில்லை. அப்படி ஒருவர் அந்தச் சூழலில் இருப்பதையே அவர்களால் உணர முடியவில்லை. அமானுஷ்யப் படங்களில் பேய் எவர் கண்களுக்கும் தெரியாமல் இருப்பது போல்தான் போய் வர‌ முடிந்தது. கடைசியாக, கடந்த காலத்தில் இருக்கும் பொருட்களை‍ நகர்த்துவது உள்ளிட்ட‌ விஷயங்களைக் காலப் பயணியால் செய்ய இயல வேண்டும். அதுவும் முடியவில்லை. சுருங்கச் சொன்னால் காலோஸ்மி வழியே இறந்த காலத்துக்கு சென்றால் அங்கே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

அவர்களுக்குக் காலப் பிரயாணத்தின் எல்லைகள் பிடிபடவே கொஞ்ச‌ காலம் பிடித்தது. கடந்த நான்காண்டுகள் இந்த விளிம்புகள் தொடர்பான ஆராய்ச்சியில்தான் கழிந்தன‌.

அவர்களின் ஆய்வுக்கூடத்தில் ஆறு மாதத்துக்கு முன் பழைய‌ சிசிடிவி கேமெராக்களை நீக்கி விட்டு சக்தி வாய்ந்த புதிய கேமெராக்கள் நிறுவி இருந்தார்கள். இரண்டாண்டுகள் சிசிடிவி பேக்கப் எடுப்பது அவர்கள் வழக்கம். காலோஸ்மியை சிசிடிவி கேமெரா இருந்த ஓர் இடத்தில் கொண்டு போய் வைத்து ஓராண்டு பின்னோக்கிப் போய் காலப் பயணம் செய்தனர். நாய் ரோபாவின் கேமெராவில் பழைய சிசிடிவி மாடல் பதிவாகி இருந்தது. ஆனால் ஓராண்டு முந்தைய அதே நாளின் சிசிடிவி பேக்கப்களை ஓட்டிப் பார்த்த போது அதில் ரோபோ நாய் வந்து போவது பற்றி ஒரு தடயமும் இருக்கவில்லை. எனவே கடந்த காலத்தில் இருப்பவர்கள் காலப் பயணிகளைப் பார்க்க முடியாது என்பது உறுதியானது.

காலப் பயணத்தில் இரண்டு விஷயங்கள் செய்யலாம். எதையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஒன்று. மற்றது கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை மாற்றுவது. முதலாவதில் அறிதல் மட்டுமே நோக்கம். அதாவது நாம் அறியாத ரகசியங்களை அந்தக் கணத்துக்கே போய் தெரிந்து தெளிந்து கொள்ளலாம். உதாரணமாக திருட்டு மாதிரி ஒரு குற்றத்தை யார் செய்தது எனக் கண்டுபிடிக்கலாம். இது சிக்கல் இல்லாதது. வரலாற்றை மாற்றாது. மாறாக‌, இரண்டாவது விஷயம் Causality என்ற‌ காரண காரியத் தொடர்பைக் குழப்பி விடும். அதனால் பார தூர விளைவுகள் உண்டாகும். வரலாற்றைக் குலைக்கும்.

உதாரணமாகச் சில மாதம் முன் கை தவறிக் கீழே விழுந்து உடைந்த‌ ஒரு கண்ணாடிப் பொருளைக் காலப் பயணத்தில் சம்பவம் நடந்த‌ நாளுக்குச் சென்று, கீழே விழும் முன்பு பிடித்துக் காப்பாற்றி விடலாம். சில வருடம் முன் நெடுஞ்சாலையில் இருந்த பெரிய கல் ஒன்றில் அதிவேகமாக வந்த கார் ஏறித் தூக்கி எறியப்பட்டுக் குட்டிக்கரணம் அடித்ததில் கால் முறிந்து ஆயுள் முழுக்கப் படுக்கையில் இருக்கும்படியாக ஆகி விட்ட ஒருவரைச் சரியாக அதே தேதிக்குப் போய்ச் சாலையில் இருந்த அக்கல்லை அப்புறப்படுத்துவதன் மூலம் காப்பாற்றி இப்போது உடலில் சிறிய கீறல் கூட இல்லாமல் நடமாட வைக்கலாம்.

இவற்றைப் பெரிய சம்பவங்களுக்கு நீட்டித்துப் பார்த்தால் தேசத்தின் அல்லது உலகின் சரித்திரத்தையே கூட மாற்றி விட முடியும். உதாரணமாக காலப் பயணம் செய்து போய் நாஜி முகாம்கள் அமைக்கும் முன், இரண்டாம் உலகப் போரைத் தொடங்குவதற்கு முன் ஹிட்லரைக் கொன்று விட்டால்? பல நாடுகளின் வரலாறே மாறிப் போய் விடுமல்லவா!

இப்படி ஒவ்வொருவரும் காலப் பயணம் செய்து வரலாற்றைச் சிதைக்க ஆரம்பித்தால்? எத்தனை வித மாற்று வரலாறுகள் கிளை பிரியும்! அவை ஒன்றுடன் ஒன்று முரண்படும்.

எல்லாவற்றையும் விட மோசமான சூழல் ஒருவர் காலத்தில் பின்னோக்கிப் போய் தனது சொந்தத் தாத்தாவைக் கொன்று விட்டால் அவருக்குப் பிள்ளை பிறக்காது, எனில் காலப் பயணம் செய்பவரே பிறக்க முடியாது, பிறகு எப்படி அவர் காலத்தில் பயணம் செய்து போய்த் தாத்தாவைக் கொல்ல முடியும்? குழப்பமான முரண்நிலை. Grandfather Paradox!

முப்பது ஆண்டுகள் முன்பு ஸ்டீஃபன் ஹாக்கிங் தன் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் காலப் பயணம் சாத்தியமில்லை என்று சொல்லி Chronology Protection Conjecture சித்தாந்தத்தை முன் வைத்தார். அதாவது இயற்பியல் விதிகள் காலப் பயணத்தைத் தடுக்கும். வரலாறு மாறி விடும் ஆபத்து இருப்பதால் காலப் பயணத்துக்கான சாத்தியம் கொண்ட‌ CTC-க‌ள் உருவாவதைப் பிரபஞ்சம் எப்படியேனும் தடுத்து விடும். வரலாறு ஒரு போதும் மாறாது. அதனை ஒட்டிக் கதை எழுதியவர்கள் காலப் பயணத்துக்கான வழிகளை நெருங்கும் விஞ்ஞானிகளைப் பிரபஞ்சம் கொல்லுமளவு போகும் என்றெல்லாம் புனைந்தார்கள்.

காலோஸ்மி வெற்றிகரமாக அதை உடைத்தது. ஈஸ்வரனும் தாராவும் வெற்றிகரமாகக் காலத்தில் பின்னோக்கிப் போய் விட்டு நிகழ் காலத்துக்கு முழுதாகத் திரும்ப முடிந்தது.

எனில் வரலாற்றை மாற்ற முடியுமா? இல்லை. இங்கு வேறொரு விதி வென்றது. இகோர் டிமிட்ரியெவிச் நோவிகோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி சொன்ன‌ Self-consistency Principle!

அதாவது கடந்த காலத்தை மாற்றக்கூடிய செயல் ஏதும் இருந்தால் அது நடப்பதற்குரிய நிகழ் தகவு பூஜ்யம் என்கிறது இந்தக் கருதுகோள். எனவே காலப் பயணம் செய்தாலும் ஒருவரால் வரலாற்றை மாற்றக்கூடிய எந்த வேலையையும் செய்ய முடியாது. பிரபஞ்சம் அந்தச் செயல்களை ஒடுக்கி விடும் - அதன் நோக்கம் வரலாறு சுத்தமாகக் குழப்பமற்று இருக்க வேண்டும் என்பதே. ஆனால் ஹாக்கிங் சொன்னது போல் காலப் பயணத்தைத் தடுப்பதன் மூலமாக அல்லாமல் காலப் பயணத்தை அனுமதித்து விட்டு, வரலாற்றைத் திருத்த வல்ல செயல்களை மட்டும் தடுத்து விடுகிறது என்பது நோவிகோவின் கட்சி.

ஈஸ்வரனுக்கும் தாராவுக்கும் கடந்த காலப் பயணத்தின் போது அங்கிருப்போர் தம்மை உணர முடியாது இருப்பதும், தாம் கடந்த காலத்தில் பொருட்களை அசைக்க முடியாமல் இருப்பதற்கும் காரணம் இதுதான் என்பது புரிந்தது. பிரபஞ்சத்தின் வடிவமைப்பு மற்றும் இயங்கு விதிகள் குறித்த வியப்பை இரவெல்லாம் விவாதித்தபடி இருந்திருக்கிறார்கள்!

காலோஸ்மி வழி கடந்த காலம் செல்லும் ஒரு பயணியால் அதிகபட்சம் செய்ய முடிந்தது செல்பேசிக் கேமெரா வழி அங்கு நடப்பனவற்றைத் தெளிவாகப் படமெடுக்க முடிந்தது.

அதைப் புரிந்து கொண்டதால்தான் ‘காந்தியுடன் ஒரு செல்ஃபி’ சேலஞ்ச் உருவானது!

*

ஆறு ஆண்டு முன் ஸ்டீஃபன் ஹாக்கிங் செத்துப் போனார். அன்றைய தேதியில் உலகின் முதன்மையான இயற்பியலாளர். அதிலிருந்து ஒன்பது வருடம் முன்பாக‌, ஜூன் 6, 2009 அன்று அவர் ஒரு பார்ட்டி நடத்தினார். காலப் பயணிகளுக்கான பிரத்யேக விருந்து அது. பலூன்கள், ஷாம்பெய்ன்க‌ள், சிற்றுண்டிக‌ள் என அமர்க்களப்பட்டது. ஆனால் விஷயம் என்னவெனில் அந்தப் பார்ட்டிக்கு அழைக்கும் அறிவிப்பை அந்நிகழ்வு நடந்து முடிந்த பிறகே வெளியிட்டார். நாள், நேரம், இடம் பற்றிய குறிப்புகள் அதில் இருந்தன. அந்த அழைப்பிதழ் பத்திரமாக‌ எதிர்காலத்தில் இருக்கும் எனக் கொண்டால் காலப் பயணம் சாத்தியமாகும் போது யாராவது அந்தப் பார்ட்டிக்கு வர‌ வேண்டும். அப்படி யாருமே வர வில்லை என்று சொல்லி அதனால் காலப் பயணம் சாத்தியம் இல்லை என அறிவித்தார்.

காலோஸ்மியில் தாராவை காந்தியைப் பார்க்க‌ அனுப்பும் முன் ஒரு பரிசோதனையாக ஹாக்கிங்கின் டைம் ட்ராவலர் பார்ட்டிக்குச் சென்று வர‌ முடிவு செய்தான் ஈஸ்வரன்.

அவன் அதைப் பற்றி முதல் முறை கேள்விப்பட்ட போதே பார்ட்டி நடந்து முடிந்திருந்தது. அப்போது விளையாட்டாக நினைத்துக் கொண்டான். என்றேனும் தான் காலப் பயணம் செய்வது சாத்தியப்பட்டால் நிச்சயம் அந்தப் பார்ட்டிக்குப் போக வேண்டும் என. ஆனால் அது இப்படி நிஜமாக நடந்தேறும் எனக் கனவிலும் எண்ணியது இல்லை. கணக்கிட்டான்.

அன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு முன் இங்கிலாந்து செல்ல வேண்டும். பார்ட்டி நடந்தது… இல்லை, நடக்கவிருப்பது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில். லண்டனிலிருந்து 55 மைல்கள் வடக்கே அமைந்திருக்கும் நகரம்.

உடன் வருவேன் என அடம் பிடித்த தாராவுக்கு நீண்ட உதட்டு முத்தம் தந்து சமாதானம் செய்து ஈஸ்வரன் விமானம் ஏறினான். சென்னையிலிருந்து லண்டனுக்கு ப்ரிட்டிஷ் ஏர்வேஸின் நான்-ஸ்டாப் ஃப்ளைட். அங்கிருந்து ரயிலில் கேம்ப்ரிட்ஜ். மஹா பிரயாணக் களைப்பில் முந்தைய நாள் இரவு விடுதியில் போய் விழுந்ததும் உறங்கிப் போனான்.

மறுநாள் காலை தாமதமாக எழுந்து அவசரமாகக் கிளம்பி ட்ரினிட்டி ஸ்ட்ரீட் அடைந்து, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் புகுந்தான். அங்கு கோன்வில் அண்ட் கேயஸ் காலேஜில் பார்ட்டி. அழைப்பிதழில் இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை விவரங்களும் ஹாக்கிங் குறிப்பிட்டிருந்ததால் கூகுள் மேப்ஸில் அதை உள்ளிட்டு அதன் வழிகாட்டலில் எளிதில் அவ்விடத்தை அடைந்தான் ஈஸ்வரன். அங்கே எதிர்பட்ட ஒரு முதிர்ந்த வெள்ளையரிடம் - அனேகமாக‌ அங்கே அவர் பேராசிரியராக இருக்க வேண்டும் - வாய் தவறி ஸ்டீப்ஃன் ஹாக்கிங் என்று விசாரிக்க, அவர் வினோதமாக அவனைப் பார்த்தார். ஆறு வருடங்கள் முன் செத்துப் போனவரைக் கேட்டதன் அதிர்ச்சி நீங்காமல் அவனுக்கு வழி காட்டினார்.

மேய்ச்சல் நிலங்கள் போன்ற பச்சைப் போர்வை படர்ந்த பல்கலைக்கழக வளாகத்தில் அவ்வளவு நேரம் நடந்ததில் மணி நண்பகலைக் கடந்திருந்தது. அழைப்பிதழின் படி பார்ட்டி 12 மணிக்குத் தொடங்கி இருக்கும். ஈஸ்வரன் அவசரமாக முதுகுப் பையில் இருந்த காலோஸ்மியை எடுத்துத் தரையில் நிறுத்தி இயக்கி, பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போகப் பணித்தான். கருவி தயாராகி அழைத்ததும் கருப்புப் புறமாக 2024ம் ஆண்டில் உள்ளே புகுந்தான். கால் நிமிடத்தில் வெண்பக்கமாக 2009ல் வெளியே வந்தான். பல்கலைக்கழகம் பதினைந்து ஆண்டு முன் இன்னும் பசுமை அடர்ந்திருந்தது.

பார்ட்டி ஹாலில் நுழைந்தான் ஈஸ்வரன். நீலச் சட்டை, கருப்பு கோட்டுடன் மோட்டரால் இயங்கும் தன் பிரத்யேக சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

உடனே அவரது பாதம் பணிய ஈஸ்வரனின் கிழக்கத்திய உடல் பரபரத்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவர் கழுத்தை வலது தோள்பட்டைப் பக்கம் சாய்த்தபடி இருந்தார், புகைப்படங்களில், அசைபடங்களில் காண்பதிலிருந்து பெரிய வித்தியாசம் இல்லை. அதே கோணல் உதடுகள், சற்றே துருத்திய கீழ் வரிசைப் பற்கள், நீலக் கண்கள், செவ்வகக் கண்ணாடி, அதன் வலது புறத்தில் அவரது கன்னத் தசை அசைவை உணரும் சென்ஸார் கொம்பு, படிய வாரப்பட்ட சிகை. அந்த எளிமையில் ஒரு தேஜஸ் மிளிர்ந்தது.

அவரது கால்கள் செயல்படாது, கைகள் செயல்படாது, வாய் பேச முடியாது. தன் கன்னத் தசை அசைவின் மூலமே தான் சொல்ல விரும்புவதை எழுத்தாக மாற்றுகிறார். ஒரு நிமிடத்துக்கு ஒரு வார்த்தை என்ற வேகம் இப்போதைக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது.

அவரது நோய்க்கு குழாய் போட்டு நேராக வயிற்றுக்குள்தான் திரவு உணவு செலுத்த வேண்டும். ஆனால் அவருக்கு மூன்று செவிலிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் உணவு ஊட்டினார்கள், நீர்மங்கள் பருகச் செய்தார்கள். என்ன ஒன்று அதைப் பார்க்க கொஞ்சம் வன்முறையாக இருக்கும். வாயில் வைத்துத் திணிக்க வேண்டியிருக்கும்.

ஈஸ்வரன் நிதானமாக அவரருகே வந்து வணங்கி நின்றான். பிறகு சுற்றிப் பார்த்தான்.

அந்த விஸ்தாரமான அறையில் காற்றைக் கர்ப்பம் தரித்த‌ ஏராள பலூன்கள் வெவ்வேறு நிறங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. நடுநாயகமாக இடப்பட்ட பெரிய மேசையில் சீல் உடைக்கப்படாத உயர் ரக ஷாம்பெய்ன் போத்தல்கள். அவற்றின் அருகே சுற்றளவு குறைந்த, உயரம் நீண்டிருந்த நிறைய காலிக் கண்ணாடிக் கோப்பைகள். சற்று தள்ளி மேசையின் மறுபுறத்தில் சைவம், அசைவம், இனிப்பு, காரம் என விதவித மேற்கத்தியச் சிற்றுண்டிகள். ஆங்காங்கே தள்ளித் தள்ளி சில நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.

ஈஸ்வரன் அறையில் ஓர் ஓரமாகப் போய் நின்று கொண்டான். ஹாக்கிங்கால் அவனது வருகையையோ இருப்பையோ உணர முடியவில்லை. மௌனமாகக் காத்திருந்தார். அவரிடம் பெரிய அசைவுக‌ள் இல்லை. பத்து நிமிடம், இருபது நிமிடம். அவரது செவிலி எட்டிப் பார்த்து ஏதும் உதவி வேண்டுமா என்றார். ஹாக்கிங் வேண்டாம் எனத் தலை ஆட்ட, வெளியேறினார். முப்பது நிமிடம், நாற்பது நிமிடம். அவர் சக்கர நாற்காலியில் அறையின் மறுகோடியில் இருந்த‌ கழிவறைக்குப் போய் வந்தார். ஐம்பது நிமிடம்…

எவரும் வரவில்லை. ஹாக்கிங் தன் சக்கர நாற்காலியை இயக்கி மேசையை நோக்கி மெல்ல‌ நகர்ந்தார். செவிலியை அழைத்தார். அவர் எழுதிய சொற்களை நாற்காலியுட‌ன் இணைந்த திரை குரல் கட்டளையாக மாற்றியது: “I like simple experiments and champagne.”

செவிலி புன்னகையுடன் ஒரு ஷாம்பெய்ன் பாட்டிலை எடுத்து உடைத்து கண்ணாடிக் கோப்பை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் வாயின் அருகே பட்டும் படாமல் வைத்துக் கவிழ்த்தாள். முக்கால்வாசி நிரம்பியதும் எடுத்து குழந்தைக்குப் புகட்டுவது போல் ஹாக்கிங்கின் வாய்க்கருகே கொண்டு போனார் செவிலி. கன்னத் தசை அசைந்தது.

“டூ ஆல் டைம் ட்ராவலர்ஸ் அவுட் தேர்… ச்சியர்ஸ்!”

“ச்சியர்ஸ், ஸார்.”

ஈஸ்வரன் உரத்துச் சொன்னான் உற்சாகமாக. ஆனால் அந்தக் குரல் ஹாக்கிங்குக்கு எட்டவில்லை. அவர் ஷாம்பெய்னை ஒரு மிடறு ரசித்துப் பருகினார். அவரது முகத்தில் மகத்தான நிம்மதி படர்ந்தது. ஈஸ்வரன் தன் இடத்திலிருந்தபடி அவரது முக பாவத்தைச் செல்பேசியில் சிறை பிடித்தான். ஸ்டீஃபன் ஹாக்கிங் தன் உதவியாளரை அழைத்தார்.

அவர் கன்னத் தசை கொண்டு உள்ளிட்டவை குரலாக உருமாறி அறையில் ஒலித்தது -

“இந்த டைம் ட்ராவலர் பார்ட்டிக்கு ஓர் அழைப்பிதழ் தயார் செய்ய வேண்டும். இன்றைய நாள், 12 மணி யுடி, கல்லூரி பெயர், லொகேஷன் கோ-ஆர்டினேட்ஸ் இருக்க வேண்டும். நாளை காலைக்குள் கிடைத்தால் நல்லது. அவற்றைக் கல்லூரியில் எல்லோருக்கும் விநியோகம் செய். அப்படியே செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகளுக்கு இது குறித்து செய்தி அனுப்ப வேண்டும். இச்சிறிய பரிசோதனை மூலம் காலப் பயணம் சாத்தியம் இல்லை என நிரூபணம் ஆகிறது என‌ ப்ரொஃபஸர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அறிவிப்பதாக.”

ஈஸ்வரன் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது. உதவியாளர் கிளம்பினார். ஹாக்கிங் சற்று நேரம் அமைதியாக அப்படியே தலை குனிந்து அமர்ந்திருந்தார். பிறகு மெல்லச் சக்கர நாற்காலியை இயக்கி அறையின் பிரதான வாயில் நோக்கி நகர ஆரம்பித்தார்.

ஈஸ்வரனை வெறுமை சூழ்ந்தது. அவன் நின்றிருந்த இடத்தின் பக்கவாட்டுச் சுவரில் சன்னல் வைக்கப்பட்டு அதில் உப்பிய வினோதக் கண்ணாடியைப் பதித்திருந்தார்கள். அதன் வழியே அறையில் கட்டப்பட்டிருந்த பலூன்கள் தெரிந்தன. அதிலொரு பலூனை வெறித்துப் பார்த்தான் ஈஸ்வரன். அவன் மனம் என்னன்னவோ யோசனைகள் செய்தது.

அப்போது அந்தப் பலூன் வெடித்தது. ஈஸ்வரன் திடுக்கிட்டான். ஹாக்கிங் ச‌ட்டென ஒரு கணம் தன் நாற்காலியை நிறுத்தி, அதைத் திருப்பி, பலூன் வெடித்த திசையை உற்றுப் பார்த்தார். “ஹூ இஸ் தட்?” என்றார். ஈஸ்வரன் கைக‌ள் கட்டி நின்றிருந்தான். ஹாக்கிங் பெருமூச்சு விட்டுச் சக்கர நாற்காலியை மறுபடி திருப்பி அங்கிருந்து வெளியேறினார்.

ஈஸ்வரன் தன் கைக்கடிகாரம் பார்த்தான். வந்த‌ புழுத் துளையின் ஆயுள் இன்னும் ஐந்து நிமிடங்கள்தாம். பலூன் வெடித்த இடத்திற்கு அவசரமாக நடந்து அதைப் பார்வையால் ஆராய்ந்தான். சூடு பட்டு வெடித்த தடம் தென்பட்டது. குழப்பமானான். திரும்பத் தான் நின்ற இடத்துக்கு வந்து அந்தக் கண்ணாடியை ஆராய்ந்தான். அது ஒரு குவி வில்லை.

யோசனையாக அங்கிருந்து வெளியேறி பையிலிருந்து காலோஸ்மியைத் தரையில் நிறுத்தி அதன் வெண் புறம் வழியே நுழைந்தான். கருப்புப் பக்கம் வெளியேறினான்.

2024ம் ஆண்டு அவனை வரவேற்றது. அங்கிருந்து நடந்து வெளியே வந்தான். முன்பு ஹாக்கிங் பற்றி அவன் விசாரித்த பேராசிரியர் எதிர்பட்டார். நக்கலாகக் கேட்டார் -

“ஹாக்கிங்கைச் சந்தித்தீர்களா?”

“ஆம்.”

“என்ன சொன்னார்?”

“God does play dice with the universe.”

அந்தப் பேராசிரியர் ஈஸ்வரனை ஆழமாகப் பார்த்தார். அவன் அவசரமாக நகர்ந்தான்.

*

காந்தி ஸ்மிருதியில் ஜனவரி இள‌மாலைக் குளிர் ஜிகிர்தண்டா இதத்துடன் இருந்தது.

தாரா தன் இடுப்பின் பின்புறம் கை வைத்து ஜீன்ஸ் பேண்ட்டை மேலிழுத்து விட்டாள். அது அவளது அநிச்சை உடல் மொழி! அவள் புடவை, சல்வாரை எல்லாம் கை விட்டுப் பல்லாண்டாகிறது. ஏதேனும் வீட்டு விசேஷங்கள் அல்லது நண்பர் திருமணங்களில் மட்டும் புடவை அணிவாள். அப்போதும் அதே அநிச்சையில் இடுப்பில் கை வைத்து கட்டிய‌ புடவையை மேலே இழுத்து விடுவாள். ஈஸ்வரன் கவனித்து கேலி செய்வான்.

கருவியைத் தரையில் செங்குத்தாக நிறுத்தி விட்டுத் தாரா குரலில் கட்டளை இட்டாள் –

“காலோஸ்மி, டேக் மீ செவன்டி செவன் இயர்ஸ் பேக்.”

சமீபத்தில்தான் குரல் வழி கட்டுப்படுத்தும் வசதியை காலோஸ்மியில் சேர்த்திருந்தனர். காலோஸ்மி என்பது அதன் துயில் எழுப்பிச் சொல். அதை அடுத்துப் பேசுவனவற்றைக் கிரகித்துக் கொள்ளும். இப்போதைக்கு ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு செயல்படும்.

ஆணுமற்ற பெண்ணுமற்ற ஓர் இயந்திரக் குரலைச் சன்னமாக‌ எழுப்பியது காலோஸ்மி –

“திஸ் ரெக்வஸ்ட் இஸ் ஃபார் இயர் 1948, மந்த் ஜனவரி, டே 30. கேன் யூ ப்ளீஸ் கன்ஃபர்ம்?”

“காலோஸ்மி, எஸ்.”

“ஃபைன். ந‌வ் ஐ வான்ட் டூ ஆதென்டிகேட் யூ. ப்ளீஸ் என்டர் யுவர் பயோ-மெட்ரிக்ஸ்.”

தாரா தன் வலது கைக் கட்டை விரலை கருவியின் பக்கவாட்டில் வைத்து அழுத்தினாள். அவளது கண்களின் ஐரிஸைக் காலோஸ்மி உமிழ்ந்த அகச் சிவப்புக் கதிர்கள் தடவின.

“ஆதென்டிகேஷன் சக்சஸ்ஃபுல். வெல்கம் பேக், மிஸ் தாரா! ஹவ் ஆர் யூ?”

“காலோஸ்மி, ஐயாம் டூயிங் க்ரேட்.”

“குட். ஆர் யூ ரெடி ஃபார் த ப்ராசஸ் ஆஃப் க்ரோனோ-போர்டேஷன்?”

“காலோஸ்மி, எஸ்.”

“ஓக்கே. க்ரியேட்டிங் ட்ராவெர்ஸபிள் வார்ம்ஹோல். திஸ் வில் டேக் ஃப்யூ மினிட்ஸ்.”

அலட்டலோ, சப்தமோ இன்றி சற்று நேரத்தில் புழுத் துளையை உண்டாக்கிச் சொன்னது:

“ப்ளீஸ் கெட் இன். யூ ஆர் கோயிங் டூ ட்ராவல் பேக் இன் டைம். ப்ளீஸ் என்ஷுயூர் தட் யூ டோன்ட் ஹேவ் எனி ஹார்ட் ப்ராப்ளம்ஸ் அண்ட் யூ ஆர் நாட் ஹேவிங் யுவர் பீரியட்ஸ்.”

ஈஸ்வரனுக்கும் ஷோபனாவுக்கும் கையசைத்து விட்டு கருப்புப் பக்கத்தில் புகுந்தாள். சரியாக ஒரு நிமிடப் பயணம். கருவியின் வெள்ளைப் புறத்தில் இருந்து வெளி வந்தாள்.

பிர்லா ஹவுஸ் கூட்டத்தால் நிறைந்திருந்தது. ஏழை, மத்திய தரம், பணக்காரர்கள் எனக் கலந்து நின்றனர். அங்கே ஒரு மறைமுகச் சமத்துவம் நிலவியது. எல்லோரும் காந்தியின் மாலைப் பிரார்த்தனைக்குத்தான் காத்திருந்தார்கள். பிரார்த்தனை என்றால் சில பல‌ பஜனைப் பாடல்கள். பிரார்த்தனை முடிந்ததும் காந்தி சின்னதாக உரையாற்றுவார். அன்று அவர் பிரச்சனை எனக் கருதும் விஷயம் பற்றி. கேட்டுக் கலைந்து விடுவார்கள். சிலர் பிரார்த்தனைக்கு முன்போ பின்போ காந்தியைச் சந்தித்து உரையாடுவார்கள்.

தாரா நிதானமானாள். தனது கடிகாரத்தைப் பார்த்தாள். 05:14 என்று காட்டியது. மாலை 05:17க்கு காந்தி சுடப்பட்டு இறந்தார். வழக்கமாக ஐந்து மணிக்கு அவரது பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பித்து விடும். இன்று கால் மணி நேரத் தாமதம். இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் படேல் காந்தியுடன் தேச எதிர்காலம் பற்றி மிக‌க் கவலையுடன் நீண்ட நேரம் உரையாடியதுதான் தாமதத்துக்குக் காரணம். படேல் கிளம்பியதும் தாம‌தம் ஆனதை உணர்ந்த காந்தி மநுவைக் கடிந்தபடி அவசரமாகத் தயாரானார். படேல் கிளம்பியதை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு கோட்ஸேவை அந்தக் கூட்டத்தில் தேடினாள் தாரா.

அவன் இங்கேதான் நிற்க வேண்டும். யோசனையுடன் கவனமாகத் தேடியதில் கிடைத்து விட்டான். கூட்டத்தில் நடுவரிசையில் வெகுஜனத் திரளுடன் அடையாளமற்று நின்றான். முகத்தில் பத‌ற்றம் இருந்தது. சினிமாக்களில் காட்டியதை விடச் சப்பையாக இருந்தான். இவனா காந்தியைக் கொன்று வரலாற்றில் இடம் பெற்றவன் என வியப்பாக இருந்தது.

மநு ஒரு புறம், ஆபா மறுபக்கம் என இருவர் தோளிலும் கை போட்டு வழிபாட்டு மேடை நோக்கி நடந்து கொண்டிருந்த காந்தியைச் சட்டென உள்ளே புகுந்து இடைமறித்த தாரா அவர் முகத்துக்கு முன் தன் செல்பேசியின் முன் கேமெராவை இயக்கி மூன்று செல்ஃபி எடுத்தாள். கண்களுக்கு அவள் புலப்படாததால் காந்தி பொருட்படுத்தாமல் கடந்தார்.

தாரா மநுவைக் கவனித்தாள். பூஞ்சையான உடல். ‘ஆப்பிளுக்கு முன்’ நினைவு வந்தது!

தாரா மறுபடி கடிகாரத்தைப் பார்த்தாள். 05:15. இன்னும் இரு நிமிடங்களில் கோட்ஸே காந்தியைச் சுட்டு விடுவான். அதையும் படம் எடுக்கலாம். அவ்வளவுதான். வந்த வேலை தீர்ந்தது. மறுபடி தனது காலத்துக்குத் திரும்ப வேண்டியது என எண்ணிக் கொண்டாள்.

சட்டென தாராவுக்கு 1993ல் தெற்கு சூடானின் பட்டினிக் கொடுமையைக் காட்டும் புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் புகைப்படம் நினைவுக்கு வந்தது. கொடும் பசியால் சுருண்டு கொண்டிருக்கும் எலும்பும் தோலுமான கருப்பினக் குழந்தையும் சற்று தள்ளி பின்புறம் அதன் மரணத்திற்குக் காத்திருப்பது போல் அமர்ந்திருக்கும் ஒரு வல்லூறும் இடம் பெற்ற படம் அது. அதை எடுத்த நிழற்படக்காரர் கெவின் கார்ட்டர் அதற்காகப் புலிட்சர் விருது பெற்றார். ஆனால் அவர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றாமல் படமெடுத்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. விருது பெற்ற‌ நான்கு மாதங்களில் அவர் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார். த‌ன் தற்கொலைக் குறிப்பில் பஞ்சம், காயம் எனத் துயருறும் குழந்தைகளை எண்ணி மன அழுத்தமாகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தாரா கெவினின் நிலைக்கும் தன் நிலைக்கும் என்ன வித்தியாசம் என யோசித்தாள்.

ஆனால் கெவினுக்குச் சுதந்திரம் இருந்தது. தன்னால் காந்தியின் மரணத்தைத் தடுக்க முடியுமா என்ன? வேடிக்கை பார்க்கும் வலு மட்டுமே தனக்குள்ளது. அதைத் தாண்டி இங்கே, இந்தக் கடந்த காலச் சூழலில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது தன்னால். அப்புறம் எப்படி மஹாத்மா காந்தியைக் கொலையுறாமல் காப்பது? அனாவசியாக நிலைமையைச் சிடுக்காக்கி யோசிக்கிறேன், அர்த்தமற்ற குற்றவுணர்வு கொள்கிறேன்.

வரலாற்றுப் புத்தகத்தைப் புரட்டுவதற்கும் இப்படி வந்து வரலாற்றையே பார்ப்பதற்கும் ஒரே வித்தியாசம் இது நேரடி அனுபவம் என்பது மட்டுமே. மற்றபடி, வாசிக்கும் நூலில் எப்படி எதையும் மாற்ற முடியாதோ அதே போல் இப்பயணத்திலும் ‘உச்’ கொட்டுவதும் கண்ணீர் சிந்துவதும் மட்டுமே தன்னால் செய்ய முடிந்த அதிகபட்ச சாத்தியங்கள். அந்த யதார்த்தத்தை முதலில் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

தாரா கைக்கடிகாரம் பார்த்தாள் - 05:16. இன்னும் ஒரே நிமிடம். அப்போது அவளுக்குச் சட்டென ஈஸ்வரனுடன் சில மாதங்கள் முன் கொண்ட உரையாடல் நினைவுக்கு வந்தது.

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் டைம் ட்ராவலர் பார்ட்டிக்கு அவன் போயிருந்த போது நடந்த அனுபவம் அது. குவி லென்ஸ் ஒன்றின் வழி அவன் உற்றுப் பார்க்கையில் ஊதப்பட்ட பலூன் ஒன்று தீச்சூடு பட்டது போல் கருகி வெடித்தது. அவனுக்கு அது புரியவில்லை.

ஏனெனில் காலப் பயணத்தில் எதையும் மாற்ற முடியாது என்பதுதான் அது நாள் வரை அவர்கள் கொண்டிருந்த புரிதல். அது இயற்கை தன்னைத் தானே காத்துக் கொள்ளச் செய்திருக்கும் ஏற்பாடு என நம்பினார்கள். அதுவே உண்மையும் கூட. எனில் எப்படி அது நிகழ்ந்தது என யோசித்தான் ஈஸ்வரன். அவனால் ஒரு தியரிக்கு வந்தடைய முடிந்தது.

புழுத் துளை வழியே கடந்த காலத்தை அடையும் ஒரு காலப் பயணி உண்மையில் மின் காந்த அலையின் வடிவை எய்துகிறான் - கண்ணால் காண முடிந்த அலை நீளத்துக்கு அப்பால், அதிக ஆற்றல் கொண்ட காமா கதிர்களுக்கும் வெளியே ஏதோ ஒரு குறுகிய‌ அலை நீளத்தில். எனவேதான் எவர் கண்களுக்கும் காலப் பயணியைத் தெரிவதில்லை. மனிதன் எனும் பருப்பொருள் மின் காந்த அலையாக மாற முடியுமா? ஒளியாகிய மின் காந்த அலை ஃபோட்டான் என்ற துகளாகும் சாத்தியம் இருக்கையில் இதுவும் முடியும்.

பலூன் வெடிப்பு? மேற்சொன்ன புள்ளிக்கு வந்து விட்ட பின் அது எளிதுதான். சிறுவர்கள் பூதக் கண்ணாடியை உச்சி வெயிலில் வைத்து சூரிய ஒளியைத் தாளில் விழச் செய்து தீப் பற்ற வைப்பார்களே அதே இயற்பியல்தான். பூதக் கண்ணாடியில் இருக்கும் லென்ஸ் குவி வில்லை. அது சூரிய ஒளியை ஒருமுகப்படுத்திக் குவிப்பதால் வெப்பம் அதிகரித்து தாளில் நெருப்பு பிடிக்கிறது. காலப் பயணத்தின் போது மின்காந்த அலையாக இருக்கும் ஆளின் கதிர்கள் ஏதேனும் குவி வில்லை வழியே மறுபுறம் ஏதேனும் இடத்தில் குவிந்தால் அங்கே வெப்பம் அதிகரித்து நெருப்பு பற்றுகிறது. அன்று ஹாக்கிங்கின் பார்ட்டியில் ஈஸ்வரன் பலூனை உற்றுப் பார்த்த போது நடந்தது அதுவே. விபத்தான கண்டுபிடிப்பு!

இங்கே இன்னொரு வினா எழுகிறது. ஒருவர் ஒரு பொருளைப் பார்க்கையில் ஒளியானது அந்தப் பொருளின் மீது பட்டுத் தெறிப்பதைக் கண் கிரகித்து மூளைக்கு அனுப்புகிறது. வெளிச்சத்தில் மட்டுமே தெளிவாகப் பார்க்க முடிவது என்பது அதுதான். எனவே காலப் பயணத்தில் இருந்த ஈஸ்வரன் குவி வில்லை வழியே பலூனை உற்றுப் பார்த்தால், அதில் பட்டுப் பிரதிபலிக்கும் ஒளியை அவன் கண்கள் உள்வாங்க முடியும். எப்படி நேர் மாறாக, அவனது உடலின் மின் காந்த அலைகள் குவி வில்லை வழி பலூனின் மீது விழ முடியும்? அங்கே அவனுக்கு எட்டாத‌ ஓர் இயற்பியல் செயல்படுகிறது என்பதே பதிலாக இருந்தது.

ஆனால் இந்த அவதானிப்பு நோவிகோவின் Self-consistency Principle-க்கு எதிராக உள்ள‌து! இதனால் காலப் பயணி கடந்த காலத்தில் சிறிய மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று ஆகிறது. அதனால் பட்டாம் பூச்சி விளைவாக பெரிய மாற்றமும் நேரும் சாத்தியமுண்டு.

இது பிரபஞ்சத்தின் சுயபாதுகாப்புத் திட்டத்தை மீறிய கசிவு என ஈஸ்வரன் சொன்னான். உதாரணமாக‌ செல்பேசியைப் பயன்படுத்துகையில் சூடாவது அதன் வடிவமைப்பின் உத்தேசத்தில் இல்லாதது; மாறாக, அது ஓர் எதிர்பாராத, விரும்பத் தகாத பக்க விளைவு. அதே போல் இயற்கையின் வடிவமைப்பில் விழுந்த சிறுஓட்டை இது என்பது அவனது புரிதலாக இருந்தது. ஆனால் அதே சமயம் இவ்விளைவு சுலபமாக நடந்து விடாது. இது நிகழ கடந்த காலச் சூழலில் ஒரு குவி வில்லை வேண்டும். காலப் பயணி அதன் வழியே தொடர்ந்து ஒரே பொருளை உற்றுப் பார்க்க வேண்டும். அதனால் அரிதாகவே நிகழும். Corner case! எனவே மிகப் பெரும்பான்மைச் சமயங்களில் Self-consistency Principle செல்லும்.

இதற்கு ‘ஈஸ்வரன் விளைவு’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தாரா சொன்னாள்.
இன்னும் நிறைய ஆய்வு செய்து இது முழுக்கப் புரிந்த பின் வெளியிடுவோம் என்றான்.

சில நொடிகளில் தாராவின் மனம் அத்தனையையும் அசை போட்டு விட்டது. இன்னும் அரை நிமிடம்தான் இருக்கிறது படுகொலை நிகழ‌. ஈஸ்வரன் விளைவு மட்டும்தான் கையிலிருக்கும் ஒரே ஆயுதம். ஆனால் அதற்குக் குவி வில்லை தேவை. மிஞ்சிய முப்பது விநாடியில் அதை எங்கே தேடுவது? அப்படியே சிக்கினாலும் அதைத் தான் தொடவோ நகர்த்தவோ முடியாது. இன்னும் கால் நிமிடம்தான் இருக்கிறது… தாரா பரபரத்தாள்.

சட்டென மநு காந்தியின் சோடாக் கண்ணாடியைக் கவனித்தாள். அது குவி வில்லை!

இப்போது கூட்டத்தை உடைத்துக் கொண்டு கோட்ஸே காந்தியின் முன் வந்து நின்றான். ஒளித்திருந்த கைத் துப்பாக்கியைக் காந்தியின் முன்பாக நீட்டினான். தாரா அவசரமாக மநுவுக்குப் பின் போய் நின்று அவளது கண்ணாடி வழியே துப்பாக்கி பிடித்த கையை உற்றுப் பார்க்க ஆரம்பித்தாள். காந்தி நிலைமையின் வீரியம் புரியாமல் “வழிபாட்டுக்கு நேரமாகிறது மகனே, வழி விடு. நாம் பிறகு சாவகாசமாக உரையாடுவோம்” என்றார்.

மணி 05:17. கோட்ஸேவின் துப்பாக்கி வெடித்தது. அவன் விசையை அழுத்துவதற்கு ஒரு கணம் முன் குவிந்த மின் காந்த அலைகளின் வீச்சு அவனது புறங்கையைச் சுட்டெரிக்க, அநிச்சையாக அவன் கையை உதறினான். திசை தவறிய‌ தோட்டா வானில் வெடித்தது.

அந்தப் பெருஞ்சப்தத்தினால் கூட்டம் சிதறி ஓடியது. உடனடியாகக் காந்தியைச் சுற்றி ஏழெட்டுப் பேர் பாதுகாப்பு வளையம் அமைத்தனர். வெள்ளைக்காரர் ஒருவர் திகைத்து நின்ற அவனது கையிலிருந்த துப்பாக்கியைக் கை பற்றினார். இல்லத் தோட்டக்காரன் அவனை நகர இயலாத‌படி முதுகுப்புறமாக இறுகப் பிடித்துக் கொண்டான். இப்போது மற்ற சிலரும் தைரியம் பெற்று அவனைச் சுற்றி வளைத்தனர். நிலைமை கட்டுக்குள் வந்தது போல் இருந்தது. காக்கி அரைக்கால் சட்டை அணிந்த போலீஸ்காரர்கள் சிலர் ஓடி வந்து கோட்ஸேயைக் கைது செய்தனர். தாரா நம்ப முடியாமல் பார்த்திருந்தாள்.

ஐன்ஸ்டைன், ஹாக்கிங், நோவிகோவ் எல்லோரும் இக்கணத்தில் பொய்த்து விட்டார்கள். சரித்திரத்தை மாற்றி விட்டேன். வரலாறு எழுதுவோர் உண்டு. வரலாறு படைப்போரும் உண்டு. நான்தான் உலகில் முதல் முறையாக வரலாற்றை மாற்றி இருக்கிறேன். பிரபஞ்ச விதிகளுக்குச் சவால் விட்டிருக்கிறேன். In a way, கடவுளுக்கு அருகில் போயிருக்கிறேன்!

தொண்டர்களும் இரு காவலர்களும் காந்தியைக் கிட்டத்தட்ட பிர்லா இல்லம் நோக்கி இழுத்துச் சென்றனர். மநுவும் ஆபாவும் மிகவும் பயந்து போயிருந்தனர். அவர்கள் அவர் பின்னால் ஓடினார்கள். அவர் கோட்ஸேவைத் திரும்பிப் பார்த்தபடி நடந்தார். முகத்தில் தன் உயிருக்கு ஆபத்து வந்தது பற்றிய பதற்றமோ, அது நீங்கியது குறித்த நிம்மதியோ இல்லை. ஆங்கிலத்தில் அவர் உதிர்த்த சொற்கள் தாராவின் காதுகளில் வந்து விழுந்தன:

“அந்த இளைஞனை ஒன்றும் செய்ய வேண்டாம். அவன் அறியாமல் செய்து விட்டான்.”

அப்போதுதான் தாரா அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள். முதுகுப் பை எடையற்றதாக இருந்தது. சட்டெனப் பதற்றமாகி பையை முதுகிலிருந்து விடுவித்துத் திறந்து பார்த்தாள்.

காலோஸ்மியைக் காணோம். வாழ்வின் உச்ச கட்ட அதிர்வுக்குப் போனாள். அட்ரினலின் தாறுமாறாக உடலில் பொங்கிப் பிரவாகித்தது. நீண்ட சம்போகத்தில் களைத்தது போல் வியர்வை உடம்பு முழுக்க‌வும் ஊற்றெடுத்தது. பேண்டீஸை ஒரு துளி சிறுநீர் நனைத்தது.

இந்தக் களேபரத்தில் யாராவது எடுத்து விட்டார்களா? சாத்தியமே இல்லையே! இந்தக் காலத்தில் எவர் கண்ணுக்கும் நான் தெரிய வாய்ப்பே இல்லை. எனவே காலோஸ்மியும் அவர்கள் எவருக்கும் தென்படாது, அகப்படாது. ஒருவேளை புழுத் துளையின் ஆயுள் தீர்ந்து விட்டதா? இல்லையே! அது ஒரு மணி நேரம் நீடிக்குமே, நான் வந்து பதினைந்து நிமிடம் கூட ஆகவில்லை. அப்படியே அதன் ஆயுள் தீர்ந்தாலும் அதற்கான‌ அறிகுறிகள் வேறு. காலோஸ்மி காணாமல் போவது நடக்காது. எனில் வேறு ஏதோ புதிய‌ கோளாறு!

தாராவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. கடவுளே! என மனதில் அரற்றினாள்.

எப்போது கடைசியாகக் கடவுளை நினைத்தோம்? ஈஸ்வரனைச் சந்தித்ததில் இருந்தே அவள் முழுமையான நாத்திகள். அதற்கு முன்பே அது பற்றிய குழப்பங்கள் இருந்தாலும் கடவுள் இயற்பியலுக்கு அவசியமில்லை என்று ஈஸ்வரன் கற்றுக் கொடுத்தான். அவள் அதிலிருந்து எந்த இக்கட்டிலும் கடவுளை அழைப்பதில்லை. ஈஸ்வரன் கேலி செய்தான்.

“அவ்வளவு ஆச்சாரமா, தாரா? கலவியின் போதாவது ஓ மை காட் என்று சொல்வாயா?”

“ம்ஹூம். மாட்டேன். நீ ஓ மை சாட்டான் என்றுதான் சொல்ல வைப்பாய் என அறிவேன்.”

ச்சை. புத்தி எங்கே போகிறது! இப்போது இருப்பது இணையற்ற உச்ச கட்ட இக்கட்டு. முன்னுதாரணம் அற்றது. விண்வெளி வீரருக்குத் தன் விண் கலத்துடனான தொடர்புக் கொடி அறுந்து வான் வெளியில் மிதக்க ஆரம்பித்து மெல்ல மெல்ல விண்கலத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தால் எப்படி இருக்கும்! அது போல்தான் தாராவுக்கு இருந்தது.

அவளால் சிந்திக்கவே இயலவில்லை. தலை சுற்றியது. உடல் நடுங்கத் தொடங்கியது.

*

சில நிமிடம், சில மணி, சில நாள், சில வாரம், சில மாதம், சில ஆண்டு காத்திருந்தாள் தாரா. எதுவும் நடக்கவில்லை. எப்படியும் ஈஸ்வரன் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையும் உடைய ஆரம்பித்தது. ஒரே ஆறுதல் அவளுக்குப் பசி எடுக்கவே இல்லை; தாகத்தை உணரவே இல்லை. நிகழ் காலத்தில் இருந்து அவளது உடல் எடுத்து வந்திருந்த மல, ஜலத்தை முதலிரு நாட்களில் கழித்த பின் அதுவும் நிகழவே இல்லை. தேக‌ வேர்வை இல்லை, உடம்பில் அழுக்குகள் இல்லை, குளியல் அவசியப்படவில்லை. அவள் உடலில் என்ன மாதிரி வளர்சிதை மாற்றம் நடக்கிறது என்றே புரியவில்லை. ஒருவேளை குளிர் சாதனப் பெட்டியில் வைத்த ஆப்பிள் போல் இந்தச் சூட்சம ரூபத்தில் தனக்கு வயதே ஆகாதோ எனத் தோன்றியது. ஆனால் சில ஆண்டுகளில் வயது ஆவதை உணர்ந்தாள். மாத விலக்கு மட்டுமே அலாரம் வைத்து எழுவது போல் மாதா மாதம் தவறாமல் வந்தது!

அந்தத் திரிசங்கு வாழ்வுக்கு எப்போது முடிவு என்பது தாராவுக்குத் தெரியவில்லை. அது அவளை அழுத்திக் கொண்டே இருந்தது. அதிலிருந்து முழுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடும் பாதை ஒன்று இருந்தது. அல்லது அதிலிருந்து மீண்டு இது இந்த விநோத‌ ஆட்டத்தின் விதி என்று புரிந்து ஏற்றுக் கொண்டு மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம் என்பது இன்னொரு பாதை. இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கும் தெளிவும் மனோபலமும் அவளுக்கு இருந்தது. முதலில் அவள் தானே காலோஸ்மியை மறுபடி உருவாக்க முடியுமா என யோசித்தாள். மூன்று தடைகள் இருந்தன. ஒன்று அதன் முழு செய்முறை அவளுக்குத் தெரியாது; அது ஈஸ்வரனுக்குத்தான் தெரியும். அடுத்து அதைச் செய்வதற்குரிய கச்சாப் பொருட்களோ நவீன பரிசோதனைக்கூடங்களோ அந்த 1948 காலகட்டத்தில் இல்லை. கடைசியாக அவை எல்லாம் ஒருவேளை இருந்தாலுமே கூட‌ அவளால் ஒரு குண்டூசியைக் கூட நகர்த்த முடியாது அந்தச் சூட்சம ரூபத்தில். பல்வேறு திசைகளில் நாட்கணக்காக யோசித்து வழியற்றுப் போன பின் அதைக் கை விட்டாள்.

ஒரு கட்டத்தில் தாரா காந்தியைச் சுற்றித் தன் வாழ்வை அமைக்க‌த் தீர்மானித்தாள். அவரது செயல்களை, அவர் தொடர்புடைய நிகழ்வுகளைக் கவனித்து ஞாபகத்தில் குறித்துக் கொள்ள ஆரம்பித்தாள். இது அவரது மறுஜென்மம். என்றேனும் தான் நிகழ் காலத்துக்குத் திரும்ப முடிந்தால் அல்லது இங்கேயே இயல்பு வாழ்வுக்குத் திரும்பி விட்டால் அவற்றைத் தொகுத்து நூலாக எழுத வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

காந்தியின் பாதுகாப்பு அவரது எதிர்ப்பைத் தாண்டி வலுப்படுத்தப்பட்டது. நாதுராம் கோட்ஸே விஷயத்தில் போலீஸ் துப்பு துலக்கி நாராயண் ஆப்தே, விஷ்ணு கார்கரே, தத்தாத்ரேயா பார்ச்சூர், மதன்லால் பாஹ்வா, கோபால் கோட்ஸே என அனைவரையும் கைது செய்தனர். அவர்களை எல்லாம் விடுதலை செய்யுமாறு நேருவிடமும் படேலிடமும் காந்தி கோரிக்கை வைத்து நடக்கவில்லை. காந்தி சிறையில் கோட்ஸேவைச் சந்தித்துப் பேசினார். சில ஆண்டுகள் கழித்து அவன் விடுதலை ஆனான். முதல் வேலையாகக் காந்தியைச் சந்தித்து மன்னிப்பு கேட்டான். தனது மத மாச்சரியங்களைக் கை விட்டு எங்கோ அடையாளமற்ற ஊரில் போய்த் தன் மிச்ச ஆயுளைக் கழித்தான் என்றார்கள்.

1950. தாராவின் வயது 37. காந்தியின் வயது 81. புதிய‌ அரசியல் சாசனத்துடன் இந்தியா குடியரசானது. காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும் சிறப்பு அழைப்பின் பேரில் வந்து உரையாற்றினார். கிளம்பும் போது அம்பேத்கரைக் கட்டி அணைத்து நன்றி சொன்னார். இந்து நாடாக இந்தியாவை முன் வைக்காததற்கு நேருவைப் பாராட்டினார். காந்தி போகுமிடத்துக்கு எல்லாம் தாரா அவர் பின்னாலே பைத்தியமாக‌ அலைந்தாள்.

1964. தாராவின் வயது 51. காந்தியின் வயது 95. நேரு மரித்தார். அஞ்சலி உரை ஆற்றிய போது காந்தி குரல் உடைந்தார். முதன் முறையாகப் பொதுவெளியில் அவர் அழுததைத் தேசம் கண்ணுற்றது. தாராவுக்கு மாத விலக்கு நின்றது. உடல் ஆரோக்கியம் நீடித்தது.

1975. தாராவின் வயது 62. காந்தியின் வயது 106. இந்திரா காந்தி கொண்டு வந்த‌ அவசர நிலைப் பிரகடனத்துக்கு எதிராகக் காந்தி தொடர் உண்ணா விரதங்கள் இருந்தார். அவர் கடைசியாக உண்ணாவிரதம் இருந்த போது சாகும் நிலைக்குப் போய் விட்டு சிகிச்சை தரப்பட்டு உயிர் பிழைத்தார். இந்திரா எமெர்ஜென்ஸியை விலக்குவதாக அறிவித்தார். காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். கட்சியைச் சுதந்திரம் கிடைத்த‌ போதே கலைத்திருக்க வேண்டும் என்றார். அதற்கு முன்பு இந்திராவின் ஆட்சியில் செய்யப்பட்ட ‘புன்னகைக்கும் புத்தர்’ அணு ஆயுதப் பரிசோதனையையும் கடுமையாகக் கண்டித்தார். தாராவின் உடல் மெல்லத் தளர்வு நோக்கி நகர்ந்தது. ஆனால் நோய்கள் அண்டவில்லை.

1987. தாராவின் வயது 74. காந்தியின் வயது 118. இந்திய அமைதிப் படை இலங்கையில் நிகழ்த்திய அட்டூழியங்களைக் கண்டித்து காந்தி மெட்ராஸ் துறைமுகத்தில் முற்றுகைப் போராட்டம் தொடங்கினார். அவரைக் கைது செய்து போராட்டத்தை முறித்தார்கள். சில ஆண்டுக‌ள் கழித்து அமைதிப் படை திரும்பும் வரை பதைபதைத்தபடியே இருந்தார். தாராவின் உடல் நிறைய ஓய்வை விரும்பியது. அவளது நடமாட்டம் மட்டுப்பட்டது.

1992. தாராவின் வயது 79. காந்தியின் வயது 123. அயோத்தி பிரச்சனையை ஒட்டி பாபர் மசூதி சென்றார் காந்தி. நூற்றுக்கும் மேற்பட்ட மத வெறியர்கள் கையில் சூலங்களும், கடப்பாரையும் எடுத்துக் கொண்டு வந்து மசூதியை இடிக்க முயற்சி செய்கையில் காந்தி எவரும் உள்ளே நுழையக்கூடாது என்று வாசலிலேயே அமர்ந்து கொண்டார். கையைப் பிசைந்த உத்தரப் பிரதேச முதல்வர் தனக்கு வந்த சேவக் அழுத்தங்களையும் மீறி அங்கே சூழந்திருந்த மத வெறியர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். பிரதமர் பதறி அன்று மாலையே நேரில் வந்து பாபர் மசூதி பாதுகாக்கப்படும் என உத்தரவாதம் தந்து, நல்ல ஆட்டுப்பால் கொடுத்து காந்தியின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

ஒரு காலத்தில் காந்தியின் விருப்பம் 125 வயது வரை வாழ்வது. அதை எட்டி விடுவார் எனத் தாராவுக்குத் தோன்றியது. அவளுக்குச் சின்ன சின்ன உபாதைகள் தோன்றின.

காந்தி புது தில்லி திரும்பினார். பிர்லா இல்லத்தில் தங்கி இருந்தார். கேகே பிர்லா வந்து காந்தியைச் சந்தித்தார். சென்னையிலுள்ள தங்களின் ஜிடி பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்சஸ் நிறுவனத்தில் Time Travel எனப்படும் காலப் பயண ஆராய்ச்சி தொடங்கப் போவதாகவும் அதற்கு காந்தியின் ஆசிக‌ள் வேண்டும் என்றும் கோரினார்.

அங்கே இருந்த தாரா பரபரப்படைந்தாள். காந்தி சற்று யோசித்து விட்டுச் சொன்னார்.

“நாம் விஞ்ஞானம் இல்லாமல் வாழ முடியாது என்பது நிஜம். ஆனால் என் தாழ்மையான கருத்து விஞ்ஞானத் தேடலுக்குச் சில வரம்புகள் இருக்கின்றன. அறிவியல் ஆய்வின் மீது நான் போடும் கட்டுப்பாடுகள் - மானுடம் நம் மீது போடும் அதே கட்டுப்பாடுகள்தாம்.”

“…”

“எளியோருக்குப் பயன் தராத விஞ்ஞானம் சாத்தானின் பரிசோதனைச் சாலை. ஒரு விஞ்ஞானி தன் கண்டுபிடிப்பின் பயன்பாட்டால் மட்டுமே உந்தப்பட்டவனாக இருக்க வேண்டும். என்னதான் உலகமயமாக்கல், தாராளமயவாதம் எல்லாம் நுழைந்தாலும் இந்தியாவின் ஆன்மா இன்னும் கிராமங்களில் இருக்கிறது. ஏழைகளிடம் இருக்கிறது. ஒடுக்கப்பட்டோரிடம் இருக்கிறது. இந்த அறிவியல் ஆய்வின் மூலம் நீங்கள் எப்படி இவர்களை எல்லாம் மேம்படுத்தப் போகிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா?”

“…”

“அப்படி எந்த மாற்றமும் நிகழாது எனில் என் வரையில் அது அர்த்தமற்ற விஞ்ஞானம். அப்படியான ஒன்றுக்கு நான் என் ஆசி தர முடியாது. என்னை மன்னித்து விடு, மகனே!”

“…”

“இந்திய அரசில் இன்று என் சொல்லுக்கு மதிப்பில்லை. என்ன என்னவோ அர்த்தமற்ற விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். குறிப்பாக அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள். நீயாவது என் கருத்து கேட்பது ஆறுதல் அளிக்கிறது.”

கேகே பிர்லா காலப் பயண‌ முயற்சியைக் கை விடுவதாகச் சொல்லி விடை பெற்றார்.

தாரா அதிர்ச்சியில் மூளையே உறைந்து போய் நின்றாள். இதுதான் அந்தப் புள்ளியா? காலோஸ்மி காணாமல் போனதன் ஆதி விதையா? காந்திதான் அதைக் கொன்றதா? காந்தி உயிர் பிழைத்ததால்தான் நான் என் காலத்துக்குத் திரும்ப முடியவில்லையா!

அமெரிக்க இயற்பியலாளர் கிப் தார்ன் சொன்னது நினைவுக்கு வந்தது தாராவுக்கு: “All time machines are likely to self-destruct the moment they are activated.” அதுதான் நடந்திருக்கிறது! எல்லாக் காலப் பிரயாண‌க் கதைகளும் அசம்பாவிதமாகவே முடிவது அதனால்தான்.

இந்த இடத்தில் கதையை முடிக்கலாம். ஆனால் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது.

*

1993. தாராவின் வயது 80. காந்தியின் வயது 124. ஜனவரி 30 அன்று புது தில்லியில் பிர்லா இல்லத்தில் நடந்த குண்டு வெடிப்பில் காந்தி செத்துப் போனார். 125 ஆண்டுகள் வாழ வேண்டியவர் ஓராண்டு முன்பே அகாலமாகப் போய்ச் சேர்ந்தார். “பாபர் மசூதி இடிப்பை யார் தடுத்தாலும் அவர்கள் கதியும் இதுவே!” என்று அறைகூவும் துண்டுப் பிரசுரங்களை விட்டுப் போயிருந்தார்கள். தாரா அந்த வாழ்வின் இறுதிப் பிடிப்பும் நெகிழ்ந்தது போல் உணர்ந்தாள். அதே ஆண்டின் டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பேருக்குப் போட்டிருந்த பாதுகாவல்களை மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. காந்தி மறுபடி ஒருமுறை செத்தார்.

கேகே பிர்லாவிடம் “காலோஸ்மி திட்டத்தை மறுபடி தொடங்கலாமா?” என்று ஜிடி பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்சஸ் இயக்குநர் தயக்கமாகக் கேட்டார். காந்தி உடனான தன் இறுதிச் சந்திப்பில் அவர் மறுத்தது, எனவே வேண்டாம் என்றார் பிர்லா. அவருக்குப் பிறகு பொறுப்புக்கு வந்த அவரது மகள் ஷோபனாவும் அதை மதித்தார்.

தாரா தமிழ் நாட்டுக்குத் திரும்பத் தீர்மானித்தாள். தனது மண்ணுக்கு; மெட்ராஸூக்கு. அசல் தாரா பிறந்து மூன்று வயதாகி இருந்தது; ஈஸ்வரன் எட்டு வயதைக் கடந்தான் - வெவ்வேறு இடங்களில் இருவரும் வளர்வதை பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சூட்சமத் தாரா. ஆனால் தனிமை அவளை வாட்டியது. பேசக் கூட ஆள் இன்றி இருப்பது ஆகக் குரூர நிலை. அதை எதிர்கொள்ள மனதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தாள்.

2009. தாராவின் வயது 96. தாரா கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றாள். ஸ்டீஃபன் ஹாக்கிங் அளித்த டைம் ட்ராவலர் பார்ட்டிக்கு. அங்கே ஈஸ்வரன் நின்றிருந்த இடம் எது ஊகித்து அங்கே போய் அதே போல் குவி வில்லை வழியே பலூனை உற்றுப் பார்த்தாள். அது வெடித்தது. காத்திருந்து விட்டு யாரும் வராததால் அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த‌ ஹாக்கிங் ச‌ட்டென ஒரு கணம் சக்கர‌ நாற்காலியை நிறுத்தி, அதைத் திருப்பி, பலூன் வெடித்த திசையை உற்றுப் பார்த்தார். “ஹூ இஸ் தட்?” என்றார். தாரா கைக‌ள் கட்டி நின்றிருந்தாள். ஹாக்கிங் பெருமூச்சு விட்டுச் சக்கர நாற்காலியை மறுபடி திருப்பி அங்கிருந்து வெளியேறினார். தாரா அதைக் கண்டு கண்ணீர் உகுக்கலானாள்.

2015. தாராவின் வயது 102. நாட்டில் ஆட்சி மாறி ஓராண்டு ஆகி இருந்தது. மக்களிடையே சகிப்புத்தன்மை அருகிய‌து. அசல் தாரா பிஹெச்டி முடித்து ஜிடி பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்சஸில் பணிக்குச் சேர்ந்தாள். அங்கு ஈஸ்வரனைச் சந்தித்தாள். அவர்கள் காதலிக்க ஆரம்பித்தார்கள். எதுவுமே மாறவில்லை. ஒரே முக்கிய‌ வித்தியாசம் அவர்கள் ஆய்வு காலப் பிரயாணம் பற்றியது அல்ல. சூட்சமத் தாரா பெருமூச்சு விட்டாள்.

2025. தாராவின் வயது 112. இரு வீட்டார் பேசி சுமூகமாக ஈஸ்வரன் - தாரா திருமணத்தை முடிவெடுத்திருந்தனர். ஃபிப்ரவரி மத்தியில் கல்யாணம். ஜனவரி மாதத்தின் இறுதியில் அவர்கள் இருவரும் இணைந்து கடந்த‌ பத்தாண்டுகளாக உழைந்த‌ ப்ரொஜெக்டில் ஒரு முக்கியப் பரிசோதனை இருந்தது. அதை முடித்த பிறகு கல்யாணம் என்பதே திட்டம்.

பரிசோதனை வெற்றிகரமாக நடந்த ஜனவரி 30ம் தேதி மாலை ஐந்து மணிக்கு அசல் தாரா காணாமல் போனாள். ஈஸ்வரன் பதறித் தேடினான். மறுநாள் காவல் துறையில் புகார் அளித்தார்கள். முன்பு ஈஸ்வரனை ஒரு தலையாக‌க் காதலித்த ஒருத்தி தாரா யாருடனோ ஓடி விட்டாள் என வதந்தி பரப்பிய‌ கையோடு அவ‌னுக்கு ஆறுதல் கூறினாள்.

அசல் தாராவுக்குப் பதிலாக சூட்சமத் தாரா காலப் பயண உலகிலிருந்து வெளிவந்தாள். இனி அசல் தாராவும் சூட்சமத் தாராவும் ஒன்றேதான். சரியாகப் காலப் பயணம் புகுந்த நாளில் அப்படி நடந்திருக்கிறது. இதுவும் காலோஸ்மி ப்ரொஜெக்டில் இப்போதைக்கு விளக்கமற்ற ஒரு நிகழ்வுதான். அவள் அதை எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னிருக்கும் இயற்பியல் விதி என்ன என்பதை இனிதான் ஆராய்ந்தறிய வேண்டும். தாரா விளைவு?

முதலில் ஆம்பூர் ஸ்டார் பிரியாணிக்குப் போய் மட்டன் பிரியாணி சாப்பிட்டாள். அம்மா! எத்தனை நெடிய‌ ஆண்டுகள்! புலன்கள் யாவும் முற்றிலும் புதைந்த ஓர் இருண்ட காலம்.

ஒரு சில நிமிட நகர்வில் கூடுதலாக 77 வருடங்கள் சுற்றி வந்திருப்பதை உணர்ந்தாள். அது போக ஏராளமாக வரலாற்றை வேறு மாற்றி விட்டாயிற்று. ஆயாசமாக இருந்தது.

இப்போது அவள் ஈஸ்வரனைச் சந்திக்கலாம், அளவளாவலாம். ஆனால் இத்தேதியில் 35 வயது இருக்க வேண்டியவள் 112 வயதோடு தளர்ந்து நடமாடவே சிரமப்பட்டிருந்தாள்.

தள்ளாடி வந்த தாரா, ஈஸ்வரனைத் தனிமையில் சந்தித்தாள். அவனிடம் பொறுமையாக யாவற்றையும் விளக்கினாள். அது தாராதான் என்பதை அவளது பேச்சு, தர்க்கம், சொல் உச்சரிப்பு, உடல் மொழி எல்லாவற்றிலும் கண்டு கொண்டான். அதை விட முக்கியமாக அவளது கண்களில் பொங்கி வழிந்த காதல் அத்தனை துல்லியமாகப் பொருந்தியது!

தன்னை விட 72 வருடங்கள் மூப்படைந்த கிழவியைச் சின்ன மனத் தொந்தரவும் இன்றி அத்தனை வாஞ்சையுடனும் பிரியத்துடனும் கட்டிக் கொண்டு முத்தமிட்டான் ஈஸ்வரன்.

பத்திரிக்கை அடிக்கப்பட்ட அதே முகூர்த்தம், அதே மண்டபத்தில் தாராவைத் திருமணம் செய்து கொண்டான் ஈஸ்வரன். ஊரே அவனைப் பைத்தியம் என்றது; அவன் வாழ்வைக் கெடுக்க வந்த சூனியக்காரி எனத் தாராவை வசை பாடியது. இரு வீட்டுப் பெற்றோருமே தலையில் அடித்துக் கொண்டு கல்யாணத்துக்கு வரவில்லை. நண்பர்கள் வந்தார்கள். கேலி செய்ய உள்ளடக்கம் கிட்டும் என நமுட்டுச் சிரிப்புடன் வந்தோர் சிலர். ஷோபனா பார்தியா அந்தக் கல்யாணத்துக்கு நேரில் வந்திருந்து அட்சதை தூவி ஆசி வழங்கினார்.

இங்கேயும் கூட‌ கதையை முடிக்கலாம்தான். ஆனால் இன்னும் சிறிது பாக்கியிருக்கிறது.

*

முதலிரவு அறையின் மலர் மஞ்சத்தில் தாராவும் ஈஸ்வரனும் அணைத்துக் கிட‌ந்தார்கள்.

“ஸாரிடா.”

“எதுக்குடி?”

“சூப்பர் ஃபிகரோடு இருந்திருக்க வேண்டியவன் இப்படிக் கிழவியக் கட்டிட்டு கிடக்கற.”

“அதாவது இந்த சோகத்தின் நடுவே சூப்பர் ஃபிகர்னு பீத்திக்கறது உன்னையேதானே?”

“ச்சீய், போடா.”

“லவ் யூ, தாரா.”

“ம். நானும்.”

“எனக்குப் புரியும் தாரா. உன் மனம் அதேதானே! உன்னைக் காதலிக்கறேன்னா என்ன அர்த்தம்? உன் மூளையைத்தானே காதலிக்கிறேன்! அது அப்படியே இருக்கு! உடலும் முக்கியம்தான். ஆனா அது ஒரு காலகட்டம் வரைக்கும்தான். எனக்கு அது முன்கூட்டியே வந்திடுச்சுனு நினைச்சுக்கறேன். அவ்ளோதான். இதில் நீ உன்னை வருத்திக்க ஏதுமில்ல.”

“என் இளமை திரும்ப ஒரு வழி இருக்கு.”

“என்ன?”

“காலோஸ்மி!”

“ஆனா அதுதான் இல்லையே இப்ப!”

“எனக்கு அதை உருவாக்கும் சூத்திரம் முக்கால்வாசி தெரியும். மீதிக்கு நீ உதவனும்.”

“நானா!”

“ஆமா. இப்ப நீ க்ரோனோ-போர்டேஷன் ஆசாமி இல்லதான். ஆனா உன்னால முடியும்.”

“சரி, செஞ்சு?”

“மறுபடி அதே 1948 ஜனவரி 30-க்குப் போகனும்.”

“…”

“அங்கே கோட்ஸேவைத் தடுக்கக்கூடாது. அவனைத் தடுக்கற தாராவைத் தடுக்கனும்.”

“…”

“அப்ப காந்தியின் படுகொலை தடுக்கப்படாது. எனவே பழையபடி பிர்லா நிறுவனம் காலப் பயண ஆராய்ச்சியில் ஈடுபடுவதைக் காந்தி தடுக்க மாட்டார். அவர்கள் மூலமே காலோஸ்மி இயந்திரம் உருவாக்கப்பட்டு விடும். தாராவாகிய நான் காந்தியோட எடுத்த செல்ஃபியோடு நிகழ்காலத்துக்குத் திரும்பி வந்துடுவேன் பத்திரமா. அப்ப என்ன ஆகும்? நான் கடந்த காலத்தில் 77 வருடம் சிக்கிக் கொள்ள‌ வேண்டி இராது. அப்புறம், இப்ப நாம இருக்கோமே இது போல் பொருந்தாத் திருமணம் நடக்காது. நாம இப்படிப் பேசிட்டிருக்க அவசியமில்ல. அப்புறம் இந்தக் காலோஸ்மிய நாம மறுஆக்கம் செய்ய வேண்டி இராது.”

“ப்ரில்லியண்ட். எப்ப‌ ஆரம்பிக்கலாம்.”

“நாளைக்கே. அதிகபட்சம் ஒரு வருஷம். அதுக்குள்ள முடிக்கனும். ஏன்னா இத்தனை வயசுக்குப் பிறகு நான் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு ஆண்டுமே அதிர்ஷ்டம்தான்.”

“ம்.”

“உடனே உம்முனு ஆகாதே! பார்த்துக்கலாம்.”

“ம்ம்ம்.”

“அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம்.”

“என்ன?”

“நான் அப்படி இளம் தாராவாத் திரும்பின பிறகு...”

“தெரியும். க‌ல்யாணம், ஃபர்ஸ்ட் நைட், கஜகஜா...”

“ச்சீய், அதில்ல. காலோஸ்மியை அழிச்சிடனும்.”

“என்ன!”

“வரலாறு மாறாம இருக்கறதுதான் நல்லது. இல்லனா குழப்பம்தான் மிஞ்சும். பிரபஞ்ச விதிகளில் ஓட்டை இருக்கலாம். ஆனா அதைப் பயன்படுத்தனும்னு கட்டாயம் இல்ல!”

“கடவுள் இல்லை என்பதோடு மனிதன் கடவுள் ஆகக்கூடாது என்பதையும் சேர்க்கனும்.”

காலோஸ்மி கண் விழிக்கத் தயாரானது. இங்கே கதையை முடித்துக் கொள்ளலாம். 😊

***

* - டிசம்பர் 6, 2023 அன்று எழுதப்பட்டது

  •  

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?

ஓர் எழுத்தாளனின் அரசியல் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்ச் சூழலில் எப்போதும் கலவையான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அவன் சமகால‌ அரசியலை நேரடியாகப் பேச வேண்டும் என்பது முதல் அரசியல் குறித்து ஏதும் பேசவே கூடாது என்பது வரை அவற்றிடையே பார தூர வித்தியாசங்கள் இருக்கின்றன‌.

இவற்றுக்கு உதாரணமாக உள்ள‌ எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். மனுஷ்ய புத்திரன், இமையம், சு. வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்றோர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கண்மணி குணசேகரன், ஜோ டி க்ரூஸ் போன்றோர் கட்சி உறுப்பினர் இல்லை என்றாலும் தீவிரமான சார்பெடுத்து அரசியல் பேசுகிறார்க‌ள். ஜெயமோகன் மீதும் அரசியல் சார்புள்ளவர் என்ற பார்வை இருக்கிறது. ஆனால் அவர் கிட்டத்தட்ட எல்லாத் தரப்பையும் கடுமையாக எதிர்த்தும் கொஞ்சம் ஆதரித்தும் எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா எல்லோரும் வியக்கும் வண்ணம் எப்போதாவது எதையாவது எதிர்த்தோ ஆதரித்தோ எழுதுவார். பெருமாள் முருகன் முற்போக்கு தரப்பு. எஸ். ராமகிருஷ்ணனோ, யுவன் சந்திரசேகரோ என்ன அரசியல் தரப்பென எவருக்கும் தெரியாது. அக்காலத்தில் ஜெயகாந்தன் வெளிப்படையான அரசியல் சார்பு கருத்துக்களைக் கொண்டிருந்தார். காலங்காலமாகவே இந்த வித்தியாசங்கள் எழுத்தாளர்களிடையே இருந்திருக்கின்றன.

தமிழ் தாண்டிப் பார்த்தாலும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்த எழுத்தாளர்கள் பலர் உண்டு. மலையாள எழுத்தாளர்கள் பலரும் இடதுசாரிச் சார்பு கொண்டவர்கள். கன்னட எழுத்தாளர்களான‌ யூஆர் அனந்த மூர்த்தி, கிரீஷ் கர்னாட் உள்ளிட்டோர் இந்தியாவில் இன்று நிலவும் மதச் சகிப்பின்மையைக் கண்டித்தவர்கள். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகிய‌ நால்வரும் முற்போக்கு அரசியலை எழுதியதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்.

இன்னொரு நுணுக்கம் (Nuance) இதில் உண்டு. எழுத்தாளன் என்று யாரைக் குறிக்கிறோம் என்பதைப் பொறுத்து. அரசியல் எழுத்தாளர்கள் (Political Writers) என்றே இருக்கிறார்கள் - ஆனந்த் டெல்டும்டே, ஆஷிஸ் நந்தி போன்றவர்களைச் சொல்கிறேன். அவர்கள் பிரதான இலக்கே சமகால அரசியலை விமர்சித்து எழுதுவதுதான். அவர்கள் இவ்விவாதத்துக்குள் வர மாட்டார்கள். அரசியல் வரலாறு எழுதும் அபுனைவு எழுத்தாளர்ளுக்கும் சமகால அரசியலை எழுதும் கடமை உண்டு. உதாரணமாக ராமச்சந்திர குஹாவோ மருதனோ ஆர். முத்துக்குமாரோ அரசியல் எழுதாமல் இருந்து விட முடியுமா! பத்திரிக்கையாளராக இருந்து எழுத்தாளராக மாறியவர்கள் (உதா: தருண் தேஜ்பால்), நேரடிக் களப் பணிகளில் இருக்கும் எழுத்தாளர்கள் (உதா: அருந்ததி ராய்) ஆகியோருக்கும் குழப்பமே கிடையாது அரசியல் எழுதுவது இயல்புதான். நாம் இந்தக் கட்டுரையில் யோசிப்பது அரசியலை நேரடியாக எழுதும் கட்டாயமற்ற புனைவு எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றியே.

*

“கலை மக்களுக்காகவே" என்ற கருத்து பரவலாக நம் சமூகத்தில் உண்டு. குறிப்பாக இடதுசாரி, திராவிட, தலித்திய‌ மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் இந்தக் கருத்துடன் இயங்குவதைக் காணலாம். அவர்களின் செயல்முறை (Modus Operandi) இரண்டு: ஒன்று அவர்களின் இலக்கியப் படைப்புகளில் உரத்த குரலில், நேரடியாக மக்களை நோக்கி கருத்துக்களும் நிலைப்பாடுகளும் பேசப்படும். அடுத்து அவர்கள் அரசியல் கட்டுரை எழுதுகையில் கருப்பு வெள்ளையாக ஒரு தரப்பை நிராகரித்தும் அதன் எதிர்தரப்பை ஆதரித்தும் எழுதுவார்கள். இந்த இரண்டுமே எளிய மக்களைச் சென்றடைய இலகுவான, குழப்பமற்ற‌ வழிகள் என்றாலும் அதனால் இரண்டு பக்க விளைவுகள் நிகழ்கின்றன: ஒன்று படைப்பில் கலை பின்னுக்குத் தள்ளப்படுகிறது - நேரடியாகப் பிரச்சாரம் செய்ய இலக்கியப் படைப்பு ஒன்றும் பிட் நோட்டீஸ் அல்ல. அடுத்து எழுத்தாளனுக்கு ஒரு நிறம் பூசப்பட்டு விடுகிறது - அவனுக்கு ஒரு வட்டம் வரையப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டு விடுகிறது. அது அவனைச் சுருக்கும் செயல்தான். ஆனால் அதை அந்த எழுத்தாளனே விரும்பி ஏற்றுக் கொண்டு விட்ட பின் மற்றவர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லைதான்.

எனில் கலை மக்களுக்காக இல்லையா? கலை கலைக்காகவேதானா? இல்லை, அப்படி வைத்தால் குடுமி, எடுத்தால் மொட்டை என‌ வறட்டுத்தனமாக மற்றோர் எல்லைக்கும் சென்று ஒட்டிக் கொள்ள அவசியமில்லை. “கலை மானுடத்துக்காக.” அதாவது காலம் கடந்து ஒட்டுமொத்த மனித குலத்துக்காகவே இலக்கியம் எழுதப்படுகிறது. அதாவது எழுதப்படும் காலத்தில் தொடங்கி இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வரும் மனிதனுக்குமானதாகவே நல்ல கலை வடிக்கப்படும். நேரடியான, உடனடியான மாற்றங்கள் அதன் உத்தேசம் அல்ல. காலப்போக்கில் மனிதர்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றுவதுதான் அதன் உத்தேசம். மாற்றுவது என்று சொல்வதைக் காட்டிலும் பாதிப்பது என்று சொல்வது துல்லியமாக இருக்கும். இந்த அடிப்படையில் பார்க்கையில் சமகால அரசியல் பிரச்சனைகள் கலையின் முன் சிறிய சிக்கல்கள், சில்லறைப் பிரச்சனைகள். எனவே அதற்கான தயார்நிலைத் தீர்வுகள் (Ready-made Solutions) இலக்கியப் பிரதிகளில் கிடைக்காது. அப்படியான தீர்வுகளை முன்வைக்கும் இலக்கியங்களின் ஆயுள் குறைவு. ஏனெனில் அப்பிரச்சனை தீர்ந்த பிறகு அப்படைப்பு மானுடத்துக்குத் தொடர்பற்றதாகி (irrelevant) விடுகிறது. இலக்கிய மதிப்பீட்டில் அறிவுரை சொல்லும் படைப்புகள் சிந்திக்கச் செய்யும் படைப்புகளைக் காட்டிலும் கீழாகப் பாவிக்கப்படுவது இக்காரணத்தால்தான்.

அரசியல் பற்றி முதலில் விஸ்தாரமாகச் சிந்தித்தவர் ப்ளாட்டோ. அதை நூல்களாகவும் எழுதி வைத்திருக்கிறார் (Republic). ஆனால் ப்ளாட்டோ எழுத்தாளர் அல்ல; தத்துவ ஞானி.

எழுத்தாளன் தத்துவ ஞானி அல்ல; எழுத்தாளன் இறைதூதரும் அல்ல. அவன் இவர்கள் இருவருக்கும் இடைப்பட்டவன். முன்னவர் குறைவானவர்களையே போய்ச் சேர்வார். அவர்கள் அறிவுஜீவிகள். பின்னவர் கோடிக்கணக்கான எளியவர்களைச் சென்றடைவார். எழுத்தாளன் இரண்டுக்கும் மத்தியிலான ஒரு கூட்டத்திடம் உரையாடி மாற்றங்களை உண்டாக்க வேண்டியிருக்கிறது. அவன் அரசியல் எழுதலாமா என்ற கேள்வியை இந்தக் கோணத்திலிருந்தே அணுகலாம். எழுத்தாளன் ஜாக்கிரதையாக அரசியல் எழுதலாம்!

*

எழுத்தாளன் அரசியலை எழுதுவதில் அப்படி என்ன ஜாக்கிரதை உணர்வு அவசியம்? வானின் கீழிருக்கும் ஏராள விஷயங்களைப் பற்றிப் பேசுவதைப் போல் அரசியலையும் பேசுகிறான். மற்ற விஷயங்களுக்கு இல்லாத எச்சரிக்கை இதில் மட்டும் ஏன்? காரணம் இருக்கிறது. வரலாறு, விஞ்ஞானம், சமூகம், தத்துவம் என எது குறித்தும் அவன் எழுதும் போது அவனுக்கு ஒரு சார்பு உருவாவது இல்லை. (அப்படியே உருவானாலும் அது ஓர் ஆபத்தற்ற சார்பாகவே பார்க்கப்படுகிறது.) ஆனால் எழுத்தாளன் அரசியலை எழுத ஆரம்பித்ததுமே அவனுக்கு ஒரு வலுவான சார்பு உண்டாகி விடுகிறது. தான் வாழும் காலத்தில் உள்ள யாரையோ எதிர்த்தோ அல்லது யாரையோ ஆதரித்தோதான் அவன் அரசியல் எழுத முடியும். எனவே அவன் தெளிவாக‌ ஒரு தரப்பின் பகுதியாகி விடுகிறான்.

எழுத்தாளன் நடுநிலையானவன். அவனுக்குச் சார்புகள், சாய்வுகள் கூடாது. அதனால் அவன் அரசியல் எழுதுவதில் உள்ள பிரதான பிரச்சனை அவன் ஒரு தரப்பை எடுக்க வேண்டி இருப்பதுதான். நடுநிலை என்பது நடுவே இருப்பதல்ல, நியாயத்தின் பக்கம் இருப்பதே என்றாலும் பொதுவாகக் கள எதார்த்தம் பூரண‌ நியாயம் கொண்ட அரசியல் தரப்புகள் இருப்பதில்லை என்பதே. எனவே எழுத்தாளனுக்கு இருக்கும் நடைமுறைச் சாத்தியம் மோசமான தரப்பை எதிர்த்து, இருப்பதில் மேலான தரப்பை ஆதரிப்பதே.

இங்கே ஒரு கேள்வி எழும். மோசமான தரப்பை எதிர்ப்பதோடு அவன் நிற்கக்கூடாதா, ஏதேனும் ஒரு தரப்பை அதன் போதாமைகள் தாண்டி ஆதரித்தே ஆக வேண்டுமா என.

ஆம், மக்களாட்சியில் வேறு வழியில்லை. அதுவும் இந்தியா போன்ற சிந்தனைத் திறனும் அறச் சார்பும் மலிந்த மக்களால் கட்டப்பட்ட‌ ஜனநாயக நாட்டில் எது கூடாது என்பதோடு எது வேண்டும் என்றும் அவன் கை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இல்லை எனில் அவன் தோற்க வேண்டும் என எண்ணும் தரப்புக்கு எதிரான வாக்குகள் சிதறி அது அத்தரப்பு வெல்லவே வழிகோலும். எனவே இங்கே எழுத்தாளன் வேறு வழியின்றி ஒரு தரப்பை ஆதரிக்க வேண்டியதாகிறது - அதுவும் எந்த‌ விமர்சனம் இல்லாமல். ஏன் எனில் விமர்சித்தால் நீ ஆதரிக்கும் தரப்பையே விமர்சித்துக் குழப்புகிறாயே என்ற கேள்வி எழும். இங்கே அரசியலில் கருப்பு - வெள்ளை மட்டுமே சாத்தியப்படுகிறது.

ஆக‌, எழுத்தாளன் அரசியல் எழுதுவதன் முதல் பக்க விளைவு அவன் மீது விழும் சார்பு முத்திரை. அது எத்தனை நல்ல தரப்பு என்றாலும் கூட அதற்கு எதிரான, குறைந்தபட்சம் மாற்றான தரப்புகள் இருக்கவே செய்யும். ஆக, இயல்பாகவே அவனை மறுப்போரும், எதிர்ப்போரும், விலகுவோரும், வெறுப்போரும் உருவாகிறார்கள். அதை விட ஆபத்து அவனது எழுத்தைத் தாண்டி இந்தச் சார்பின் அடிப்படையில் அவனை விரும்புவோரும், ஆதரிப்போரும், போற்றுவோரும், நெருங்குவோரும் உருவாகிறார்கள். ஒரு வகையில் அது தேவையற்ற சுமை. சரி, மற்றவர்களைப் பற்றி எழுத்தாளனுக்குக் கவலை இல்லை என்றே கொண்டாலும் அவனுக்குள்ளுமே கூட அது சிக்கல்களை உருவாக்குகிறது.

*

எழுத்தாளன் ஒரு கட்சி சார்பெடுப்பதில், அதன் விசுவாசியாக ஆவதில் நிச்சயம் சில சுதந்திரங்களை இழக்கிறான். சரி, எழுத்தாளனுக்கு ஏன் அந்தச் சுதந்திரம் வேண்டும்?

ஏனெனில் அவன் மானுடத்தின் பிரதிநிதி. எதற்குள்ளும் அவன் தன்னை அடைத்துக் கொள்ளக்கூடாது. எதுவொன்றில் அவன் ஒட்டிக் கொண்டாலும் அவனது சிந்தனை குறுக்குகிறது. உதாரணமாக அவன் ஓர் அரசியல் கட்சியை ஆதரிக்கும் சார்பை மேற்கொண்டால் கட்சி என்ன பிழை செய்தாலும் அவனால் விமர்சிக்க முடியாது. அல்லது த‌ன் நடுநிலையைக் காட்டிக் கொள்ள மயிலிறகால் வருடும் தொனியில் அக்குறைகளைச் சுட்டிக் கடக்க வேண்டி இருக்கும். கட்சியின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்குமளவு மோசமாக இல்லை என்றாலும் கள்ள மௌனத்தின் வழி அவற்றைக் கண்டும் காணாமல் கடக்க வேண்டியிருக்கும். மாற்றுக் கட்சிக‌ள் செய்யும் நல்ல விஷயங்களைப் பாராட்ட முடியாது. சுருக்கமாக அவன் தன் அசல் கருத்துக்களைக் கட்சியின் கொள்கை அல்லது செயல்கள் என்ற வடிகட்டி கொண்டு வடித்து மிஞ்சியதை மட்டுமே வெளிப்படுத்த முடியும். இது கையைக் கட்டிப் போட்டுக் கொள்வதுதான்.

இன்னொன்று எழுத்தாளன் அரசியல் எழுதுவது ஏராளப் பகை சம்பாதிக்க ஏதுவாகும். முதலில் அவன் எதிர்க்கும் தரப்பு அவனை எதிரியாக வரிக்கும். சரி, அது பரவாயில்லை. எதிர்பார்த்ததுதான். அடுத்து நடப்பதுதான் விநோத முரண். தோழமை சுட்டல் என்ற விஷயமே நம் சூழலில் சாத்தியமில்லை; சுட்டிய கணமே எதிரி! எழுத்தாளன் ஆதரிக்கும் தரப்பின் சிறிய குறைகளைச் சொன்னாலும் அவன் துரோகி என முத்திரை குத்தப்பட்டு அவர்களால் கடுமையாக‌ வசைபாடப்படுவான். ஏனெனில் அரசியலில் எத்தரப்பாகினும் அவர்களுக்குத் தேவை முழு விசுவாசி. மாறாக, சிறு விமர்சனம் வைத்த கணமே அதற்கு முன் ஆண்டுக்கணக்காக தந்த ஆதரவெல்லாம் ரத்து செய்யப்பட்டு வாளின் கூர்நுனி எதிரே அவன் நிறுத்தப்படுவான். எனவே அரசியலில் இரு தரப்புக்கும் எதிரியாவ‌து மட்டுமே மனசாட்சி கொண்ட எழுத்தாளன் இறுதியில் கண்டடைவதாக இருக்கும்.

இன்னொரு பிரச்சனை இருக்கிறது. எந்த அரசும் முழுமையாகச் சரியானதாக இருக்க முடியாது. அதன் குறைகளை விமர்சிப்பதே எழுத்தாளன் செய்ய வேண்டியது. அதுவே அந்த அரசுக்கும் நல்ல வழிகாட்டலாக அமையும். ஆனால் எழுத்தாளன் ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதன் குறைகளைச் சுட்டும் போது அவனுக்கு ஒரு சங்கடம் எழும். இத்தனை நாளும் அவன் ஆதரித்த தரப்பை அவனே குறை சொல்ல வேண்டி இருக்கும். மாறி மாறிப் பேசுவதான தோற்றம் எழும். ஆனால் அதை அவன் செய்யாவிடில் இரட்டை நிலைப்பாடு கொண்டவன் என்றாகிடும். எனவே விமர்சிப்பது கடமையாகி விடுகிறது.

எழுத்தாளன் அரசியல் விவகாரங்களில் உடனடி எதிர்வினை ஆற்றுவதைத் தவிர்ப்பதும் நல்ல உத்திதான். ஏனெனில் அவசரக் கருத்துகளில் தெளிவு, நிதானம் இராது என்பது ஒரு பக்கம். ஆரம்பத்தில் விஷயத்தின் முழு உண்மையும் தெரிந்திருக்காது என்பது இன்னொரு பக்கம். ஆக, எழுத்தாளன் அரசியல் நிகழ்வுகளில் கருத்துரைக்க‌ வேண்டும் என்றாலும் முதல் குரலாக ஒலிக்க‌ வேண்டும் என்பதை விட, சற்று பொறுத்து வந்தாலும் சரியான குரலாக ஒலிக்க வேண்டும் என்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சி என்றில்லை, அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும், அரசுகளுக்குமே கூட‌ இந்தச் சார்பு விவகாரம் பொருந்தும். எனவே எழுத்தாளன் முடிந்த அளவுக்கு எந்தக் கட்சி, அமைப்பு, நிறுவனம், அரசுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமலும், நிதி உள்ளிட்ட லௌகீக லாபங்களை வாங்காமலும் இருக்க வேண்டும். அதிகபட்சம் விருது போன்ற அங்கீகாரங்களை ஏற்கலாம். (ஜெயமோகனோ ஒரு படி மேலே போய் பாஜக ஆட்சியில் இருக்கையில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை நிராகரித்தார்.)

*

இங்கே என்னுடைய‌ தனிப்பட்ட அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து (சுமார் பதினைந்து ஆண்டுகளாக) பாஜகவை எதிர்த்து வந்திருக்கிறேன். அதன் நிமித்தம் பிரச்சனை அடிப்படையில் (Issue Based Support) அதற்கு எதிராக நிற்கும் காங்கிரஸையோ திமுகவையோ ஆதரித்து எழுதி வந்திருக்கிறேன். அவசியப்படுகையில் ஆதரித்த இந்தக் கட்சிகளையே மறுத்தும் எழுதி வந்திருக்கிறேன்.  அதனால் இழந்தவைதாம் அதிகம். என் பால் அக்கறை கொண்ட மூத்த எழுத்தாளர்கள் நான் அரசியல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் அவர்கள் சொல்வது சரியல்ல, எழுத்தாளன் தீவிரமாக அரசியல் எழுத வேண்டும், நாட்டைச் சீராக்குவதில் அவனுக்குப் பெரும் பங்கிருக்கிறது என்று எண்ணி வந்திருக்கிறேன். நம் எழுத்தாளர்கள் அரசியல் எழுதாததை ஒருவிதத் தப்பித்தலாகவே பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் சமீப ஆண்டுகளில் அதிலிருந்து மாறி அரசியல் எழுதாமல் தவிர்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய பாவமில்லை என்று உணர்கிறேன்.

சமீப ஆண்டுகளில் பா. ராகவன் இதில் ஓரளவு தெளிவாக இருக்கிறார் எனப் படுகிறது.

எழுத்தாளன் தான் பேச விரும்பும் அரசியலைப் படைப்பில் அமைதியாக‌, பூடகமாகச் சொன்னாலே போதுமானது. இன்னும் சொன்னால் அதுதான் சரியானதும், வலுவானதும் கூட. அதுவே நீண்ட கால நோக்கில் இன்னும் தீவிரமான விளைவுகளை உண்டாக்கும். அவன் தன் அரசியல் நிலைப்பாட்டை நேரடியாக எழுதியாக‌ வேண்டும் என எவரும் கட்டாயப்படுத்த முடியாது. எதைச் செய்யலாம் என்ற சுதந்திரம் அவனுக்கு அவசியம்.

அதே சமயம் எழுத்தாளன் அரசியல் சார்பெடுப்பதில் லாபங்களும் உண்டு. மரியாதை, அதிகாரம், செல்வாக்கு, பணம், பதவி, பரிசு, விருது, உதவி எனப் பல வழிகளில் அவன் பெற்றுக் கொள்ளச் சாத்தியம் இருக்கிறது. எழுத்தாளனை மதிக்காத நாட்டில் அவன் அதைப் பெற இரண்டு வழிகள்தாம். ஒன்று சினிமா, மற்றது அரசியல். அங்கீகாரங்கள் இல்லாமல் நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஒரு விரக்தியுற்ற எழுத்தாளன் தான் இழந்ததை எல்லாம் மீட்க‌ அரசியலைத் தன் மார்க்கமாகக் கொண்டால் அதை நாம் கேள்வி கேட்கவும் முடியாது. எனவே எழுத்தாளன் அரசியல் பேசுவதால் லாபமும் உண்டு, நஷ்டமும் உண்டு. எது வேண்டும் என அவன்தான் தீர்மானிக்க வேண்டும்.

சுதந்திரன் (Independant) என்ற அடையாளத்தில் எழுத்தாளன் கட்சியை ஆதரிப்பதை விட நேரடியாகக் கட்சி உறுப்பினரான பின் அக்கட்சிக்குச் சார்பு நிலை எடுப்பது உத்தமம். ஏனெனில் அதற்குப் பின் அவனது அரசியல் கருத்துக்கள் அக்கட்சி உறுப்பினன் என்ற அடிப்படையில்தான் பார்க்கப்படும், அவன் ஓர் எழுத்தாளன் என்பதோடு அவற்றைக் குழப்பிக் கொள்ள அவசியமிராது. அதுவே நேர்மையான முன்வைத்தலாக‌ இருக்கும்.

*

ஆக, இறுதிப் புரிதலாக இந்த இடத்துக்கு வந்தடைய வேண்டியிருக்கிறது. எழுத்தாளன் அரசியல் எழுதலாம். ஆனால் த‌ன் படைப்புகளின் கலைப்பெறுமதியில் சமரசம் செய்து கொள்ளலாகாது. போலவே எந்தத் தரப்புக்கும் தன்னை விசுவாசியாக அவன் கருதக் கூடாது - முக்கியமாக அரசுக்கு, ஆளும் தரப்புக்கு ஒருபோதும் அவன் ஆதரவாளனாக‌ இருக்கவே கூடாது. அதுவே அவனைச் சுதந்திரமாகவும் சரியாகவும் இயங்க வைக்கும். உடனடி, உணர்ச்சிகர எதிர்வினைகளையும் அரசியல் விவகாரங்களில் தவிர்க்கலாம்.

சமகால அரசியல் என்பது எழுத்தாளனுக்கு கட்டாயமற்ற கூடுதல் பொறுப்பு மட்டுமே. தன் பகுத்தறிவு, மனசாட்சி தவிர எதற்கும் அடிபணியாமல், நிதானமாக அவன் அதை எழுதி விட்டு நகரலாம். இல்லை எனில் அவன் நேரடியாகக் கட்சி உறுப்பினராவதே சரி.

***

(உயிர்மை - அக்டோபர் 2023 இதழில் வெளியானது)

  •  

கல்லளை [சிறுகதை]

(Disclaimer: இக்கதை நெடிய மானுட வரலாற்றில் எங்கேனும், எப்போதேனும் நட‌ந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எழுத்தாளச் சுதந்திரத்துடன் முழுக்கக் கற்பனைப் புனைவாகவே நான் இதை முன்வைக்கிறேன். வாசகர்களையும் அவ்வாறே அணுகக் கோருகிறேன்.)

“மிஸஸ். மிஷ்ரா, எல்லாம் நார்மல். இன்றிலிருந்து பன்னிரண்டாம் நாளில் பிரசவம்!”

மல்லாக்கப் படுத்திருந்த அஹிம்ஸாவின் அகட்டிய கால்களுக்கு இடையிலிருந்து தன் வலது கரத்தை வெளியே எடுத்து கையுறையைக் கழற்றியபடி மருத்துவ‌ர் சொன்னாள்.

அஹிம்ஸா புன்னகை செய்தாள். அவள் கொஞ்சம் கவலைகளுடன்தான் வந்திருந்தாள். சில நாட்களாக முதுகு வலி இருக்கிறது. வீங்கித் தொங்கும் வயிற்றின் அடியில் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அந்தப் புகார்களை எல்லாம் சொன்ன போது மருத்துவர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள். அது அவளது பாஷை - ஒன்றும் பிரச்சனை இல்லை, அவை இயல்பான அறிகுறிகள் என்று அதற்கு அர்த்தம். அவள் சற்று நெற்றி சுருக்கினால் வழமையிலிருந்து விலகி இருக்கிறது, ஆனாலும் சரி சீர் படுத்திடலாம் என்று அர்த்தம். அசலாகவே பிரச்சனை எனில் வாய் திறப்பாள். சிக்கலும் தீர்வும் சுருங்கச் சொல்வாள்.

மருத்துவரிடம் வந்து செல்லும் இந்த ஏழெட்டு மாதங்களில் இச்சங்கேதக் குறிப்புகளை வாசிக்கக் கற்றிருந்தாள் அஹிம்ஸா. தாய்க்கும் சேய்க்கும் சேதாரமின்றி பிரசவம் பார்த்துக் கொடுப்பதில் அத்தீவு தேசத் தலைந‌கரின் அதிகார மட்டத்திடையே அந்த அம்மாள் பெயர் போனவள் என்பதால் அதையெல்லாம் சகித்துக் கொள்ளலாம்தான். போக, துல்லியமாகக் குழந்தை பிறக்கும் தினம் கணிப்பாள் என்றும் பேச்சு இருந்தது.

“கணவர் வரவில்லையா?”

“இல்லை, டாக்டர். எங்கள் நாட்டின் ஹை கமிஷனர்தான் இன்று இந்நகரின் மோஸ்ட் வான்டட் ஆள். தெரியும்தானே? அவர் எனது கணவராகவும் இருப்பதை யாராவது அவருக்கு நினைவூட்ட வேண்டும். அவரை நான் வீட்டில் பார்ப்பதே அரிதாகி விட்டது. பின்னிரவில் வந்து விட்டு அதிகாலையில் கிளம்பிப் போய் விடுகிறார். என் அம்மா என்னைப் பார்த்துக் கொள்ள இங்கே வந்திருப்பதால் சமாளிக்க முடிகிறது. குழந்தை பிறக்கும் போதாவது இந்த மருத்துவமனைப் பக்கம் வந்து விடுவார் என நம்புகிறேன்.”

“சமாதானப் படை வந்து இறங்கியதில் இருந்தே பதற்றமாக இருக்கிறது என்கிறார்கள்.”

“ஆனால் அவர்கள் வந்திருப்பதே இழந்துள்ள‌ அமைதியை மீட்டுக் கொடுக்கத்தானே!”

மருத்துவர் பேசவில்லை. அவர் அரசியல் கதைக்க‌ விரும்பவில்லை எனத் தோன்றியது.

அஹிம்ஸாவின் அம்மா சில கூடுதல் விபரங்கள் கேட்டுக் கொண்டாள். கிளம்புகையில் மருத்துவமனைக்கு அவள் முன் கூட்டியே வர‌ வேண்டியதில்லை, ஆனால் வலி கண்டதும் தாமதிக்காமல் வந்து சேர்ந்திட‌ வேண்டும் என்று சொல்லி அனுப்பினாள் மருத்துவர்.

*

தூதரகக் காரில் அம்மாவுடன் வீடு வந்து சேர்ந்தாள். நிம்மதியாக இருந்தது. அப்பாவுக்கு அழைத்துச் சொன்னாள். அப்பா தாயகத்தில் சத்யாவின் வீட்டில் இருக்கிறார். சத்யாவும் வேலைக்குப் போவதால் அவளது குழந்தையைப் பார்க்க ஆள் வேண்டும். சத்யா அவளது அக்கா, பத்து நிமிடங்கள் மூத்தவள். அப்பாவுக்கு மஹாத்மாவை ரொம்பப் பிடிக்கும். அந்த வேகத்தில்தான் அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த போது சத்யா, அஹிம்சா எனப் பெயரிட்டார். அதை அக்குழந்தைகளே கேலிக்குரியதாகப் பார்த்த‌து அவருக்கு வருத்தம்தான். ஒருவேளை அம்மாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தால் மூன்றாவதற்கு ப்ரம்மச்சர்யா என்றுதான் பெயர் வைத்திருப்பார் அப்பா என்று பகடி செய்தார்கள். அவர்களுக்கு மஹாத்மா என்பவர் ஓர் அருங்காட்சியக வஸ்து மட்டுமே!

அப்பா மத்திய அரசின் நவரத்னா நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருந்தவர். அதன் வழியே கிடைத்த மேல்மட்டத் தொடர்புகள் மூலம் தன் மகள்கள் இருவருக்கும் அரசில் உயர் பதவி வகிக்கும் மாப்பிள்ளைகளைப் பேசி முடித்தார். அஹிம்ஸாவை அவளை விடப் பத்து வயது அதிகமான‌ மிஷ்ரா கல்யாணம் செய்த மறுவார‌மே அவனுக்கு ஹை கமிஷனராகப் பதவி உயர்வு கிடைத்து இத்தீவுக்குச் செல்லும் உத்தரவு வந்தது. மிகச் சிறிய‌ வயதில் அப்பதவியை அடைந்தவன் என்பதால் அது அஹிம்ஸாவின் அதிர்ஷ்டம் என்றே கொண்டாடினான். ஒவ்வொரு கலவி முடிவிலும் அதைச் சொல்லிக் காட்டினான்.

அவர்கள் இத்தீவில் வந்திறங்கிய போது பூட்டானில் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியுற்று மீண்டும் யுத்தம் வெடித்திருந்தது. அதனால் அருகிலுள்ள‌ பெரிய நாட்டின் தூதரான மிஷ்ராவுக்கு நிறையப் பணி இருந்தது. அதனூடேதான் தேனிலவு கண்டார்கள்.

அவனுக்கு அவனது அறிவும் அவளது அதிர்ஷ்டமும் கலந்த ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் வேட்கை இருந்தது. மணமாகி ஓராண்டு கழித்து அவள் கர்ப்பமுற்ற போது அவன் பெரிதாக மகிழ்ந்தான். இப்போது பிரசவத் தேதி துல்லியமாகத் தெரிந்துள்ளது.

இந்தத் தீவிலிருக்கும் தனது நாட்டின் தூதரகத்துக்குத் தொலைபேசினாள் அஹிம்ஸா. மிஷ்ராவைக் கேட்டாள். முக்கிய‌ வேலையில் இருக்கிறார், அவரே மறுபடி அழைப்பார், ஏதும் செய்தி இருக்கிறதா என்று அப்பெண் கேட்டாள். இல்லை என்று சொல்லி வைத்து விட்டாள். மறுபடி மிஷ்ரா அழைக்கவே இல்லை. அஹிம்ஸா தூங்கிப் போய் விட்டாள்.

*

அஹிம்ஸா மீண்டும் எழுந்த போது இருட்டி விட்டிருந்தது. மிஷ்ரா வீடு வந்திருந்தான்.

அம்மா அவனுக்கு உணவு பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கி இருந்தாள். அவசரமாக முகம் கழுவி வந்த‌வள், தான் உணவு பரிமாற எத்தனிக்க‌, அவன் அவளைத் தடுத்து தன்னுடன் சேர்ந்து சாப்பிடச் சொன்னான். புன்னகையுடன் அமர்ந்து கொண்டாள்.

“நல்ல தூக்கமோ?”

“ஆமா. அலைச்சல்.”

“டாக்டர் என்ன சொன்னார்?”

“செப்டெம்பர் 26 டெலிவரி.”

“ம்ம்ம். எல்லாம் நார்மலா?”

“அப்படித்தான் சொல்றார்.”

“சரி, பார்த்துக்கலாம்.”

“உங்களுக்கு லீவ் கிடைக்குமா?”

“இப்போதைக்குக் கஷ்டம்.”

“ம்.”

“புதுத் தலை வலி வேற ஆரம்பிச்சிருக்கு.”

“என்னது?”

“ஒரு சின்னப் பையன் தொந்தரவு கொடுக்கறான்.”

“போராளியா?”

“ஆமா. இருபத்து மூணு வயசுதான்.”

“போர் நிறுத்தம் அமலில் இருக்கே?”

“அவன் ஆரம்பித்திருப்பது பட்டினிப் போர்!”

“ஓ! முப்பது வருச அறவழிப் போராட்டம் வேலைக்காகலனுதானே ஆயுதம் ஏந்தினாங்க!”

“இப்ப மறுபடி ஏதோ ஞானோதயம்!”

“ஒருவேளை, இனி இப்படித்தானோ?”

“இல்ல‌ இல்ல‌. போரும் அமைதியும் மாறி மாறித்தான் வரும். அமைதி நிலவுகையில் போராட வேறு வழியில்லை, அஹிம்சை மார்க்கத்தைத்தான் தேர்ந்தெடுத்தாகனும்.”

“ம்ம்ம். அப்படியா சொல்றீங்க?”

“ஆமா. ஒரு முறை துப்பாக்கி பிடிச்ச கை, கடைசி வரை அதை விடாது, விட முடியாது.”

“விடக்கூடாதுன்னும் சொல்லிடுவீங்க‌ போல!”

மிஷ்ரா அடிபட்டவன் போல் அஹிம்ஸாவைப் பார்த்தான். அவள் கவனிக்கவில்லை.

“என்ன கோரிக்கையாம் அந்தப் பையனுக்கு?”

“என்னனவோ சொல்றான். சாத்தியமற்றவை.”

“என்னனுதான் சொல்லுங்களேன், கேட்போம்.”

“சிறையிலுள்ள போராளிகளை விடுவிக்க வேண்டும், அவர்கள் பிரதேசங்களில் அரசு புதிய காவல் நிலையங்களைத் திறக்கக் கூடாது, ஊர்க்காவல் படைக்குத் வழங்கப்பட்ட‌ ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும், அவர்களின் பகுதிகளில் நிகழும் பேரினக் குடியேற்றங்களை உடனே நிறுத்த வேண்டும், அவசர காலச் சட்டத்தை நீக்க வேண்டும்.”

“எல்லாம் தூரத்துச் சொப்பனங்கள் அல்லவா!”

“எல்லாவற்றையும் விட முக்கியமானது - இதை எல்லாம் சமாதானப் படை முன்னின்று உறுதி செய்யனும். அதுக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் நம் அரசு சார்பில் தரப்படனும்.”

“ஓ! போராட்டமே நம் அரசை நோக்கித்தானா? இந்த நாட்டு அரசுக்கானது இல்லையா?”

“ஆமா. போராளிகள் இதே கோரிக்கைகளை ரெண்டு நாள் முன் எனக்கு அனுப்பி வெச்சு, பதிலளிக்க 24 மணி நேர அவகாசம் கொடுத்தாங்க‌. நான் இன்னும் பதிலளிக்கல‌. இப்ப அதே கோரிக்கைகளை முன் வெச்சு சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்கான்.”

“அதாவது நம்ம அரசு சொன்னா இந்த அரசு தலையாட்டிக் கேட்கும்னு நம்பறாங்க?”

“ஆமா.”

“நியாயம்தான்.”

“என்ன நியாயம்? இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? நாம சொன்னா கேட்பாங்களா?”

“மாட்டாங்களா என்ன?”

“இப்பிரச்சனையில் நம் முதன்மை ஆர்வம் நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. பக்கத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரின் பக்கவிளைவு நம்மையும் பாதிக்கக்கூடும்.”

“அது மட்டும்தானா?”

“பிறகு? வேறென்ன?”

“இந்தப் பிராந்தியத்தில் பெரியண்ணன் வேடம் போடறோம். செஞ்சுதானே ஆகனும்!”

“அது வேற வழியில்ல. வல்லரசுக் கனவுகளின் பகுதி. ஆனா அதுக்கு எல்லை இருக்கு. இதெல்லாம் அவுங்க உள்நாட்டு விவகாரங்கள், நாம ரொம்பத் தலையிட முடியாது.”

“மூணு மாசம் முன்ன இங்கே ஆபரேஷன் பூமாலை நடத்தினப்ப இதை யோசிக்கலயா? ஒன்றரை மாசம் முன்ன சமாதானப் படையை இறக்கின போது? இப்ப என்ன புதுசா?”

“…”

“போராளிகளுக்கு ஆதரவா இந்தத் தீவின் அரசை எதிர்த்து வான் வழியா பாராசூட்ல உணவுப் பொட்டலம் வீசுனீங்களே, அதனால் அரசு போரை நிறுத்திப் பின்வாங்குச்சே, அப்ப‌ நம்மை நம்பத்தானே செய்வான்? பக்கத்தில் இருக்கும் பெரிய‌ நாட்டின் அழுத்தம் மாற்றம் ஏற்படுத்தும்ங்கற‌ ருசி காமிச்சாச்சு. மறுபடி எதிர்பார்க்கத்தானே செய்வான்?”

“இல்ல. அது ஹ்யூமானிடேரியன் க்ரவுண்ட்ஸ்ல செஞ்சது. சிவிலியன் பகுதிகளில் குண்டு வீசினாங்க. அது சர்வதேசிய‌ யுத்த‌ விதிகளுக்குப் புறம்பானது. அப்ப நாம தலையிட வேண்டியதாச்சு. அதுக்காக நிர்வாகத் தீர்மானங்களில் மூக்கை நுழைக்க முடியுமா?”

“அவ்வளவு நல்லவர்களா நாம்!”

“இதில் நல்லவர், கெட்டவர் என்பதெல்லாம் இல்லை. நாம் பொறுப்பு மிக்க, சக்தி மிக்க ஓர் அண்டை நாடாக இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியில் ஒப்பந்தம் போட்டு சண்டை நிறுத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு மேல் அவர்கள் தம்முள் பேசித் தீர்வு காண வேண்டும். அதை உறுதி செய்யும் பொருட்டே சமாதனப் படையை இத்தீவுக்குள் கொண்டு வந்தோம். இதுவே ஒருவகையில் அதிகப்பிரசங்கித்தனம்தான். ஆனால் நம் பிரதமர் இதில் ஆர்வம் காட்டுகிறார். இதைத் தீர்த்து வைக்க விரும்புகிறார். அவருக்கும் தன் தாத்தாவைப் போல், அம்மாவைப் போல் உலக வரலாற்றில் இடம் பெறும் ஆசை இருப்பதில் தவறில்லைதானே! எனவே உலக அமைதி என்ற லேபிளில் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். எல்லாப் பொது நலத்திலும் ஒரு சுயநலம் உண்டு, அஹிம்ஸா!”

“சமாதானப் படை வந்ததை இந்தத் தீவு விரும்புகிறதா? அதுக்கு எவ்ளோ எதிர்ப்புனு பார்த்தீங்கல்ல‌? முதல் நாளே ராணுவ அணிவகுப்புல வெச்சு நம் பிரதமரை ஒருத்தன் தலையில அடிச்சுக் கொல்லப் பார்த்தான். இன்னிக்கு என்னைப் பார்த்த டாக்டர் கூட சமாதானப் படை சம்மந்தமாத் தன் அதிருப்தியை அடிக்கோடிட்டாங்க. நாம இதில் இறங்கிக் கட்டப் பஞ்சாயத்து செய்வதை இவர்கள் விரும்பல. இதுதான் ரியாலிட்டி.”

“ஆனா போராளிகள் விரும்பறாங்க, நம்மை நம்பறாங்க.”

“எக்ஸாட்லி. தேர் யூ ஆர். அப்ப அந்தப் பையன் கோரிக்கைகளை நிறைவேத்த‌னும்ல!”

மிஷ்ரா பெருமூச்சு விட்டான். எழுந்து கை கழுவி விட்டு நிதானமாகச் சொன்னான்.

“அது அவ்ளோ ப்ளாக் அண்ட் வொய்ட் இல்ல. அப்படி எளிதா முடிவெடுக்க முடியாது.”

“என்னவோ செய்ங்க‌! ஆனா சீக்கிரம் அந்த உண்ணாவிரதத்தை முடிக்கப் பாருங்க.”

“ம்ம்ம்.”

மிஷ்ரா எழுந்து கொண்டான். கடைசிக் கவளத்தை வாயிலிட்டு அஹிம்ஸா கேட்டாள்.

“மஹாத்மாதான் இந்த ஹங்கர் ஃபாஸ்ட் என்ற போராட்ட முறையின் பயனீர். ரைட்?”

“ஆமா.”

“பதினெட்டு உண்ணா விரதங்கள். அதுல ஒண்ணு 21 நாள். அப்பா சொல்லி இருக்கார்.”

“ஆனா இது அதை விட மோசம்.”

“எந்த வகையில்?”

“இந்தப் பையன் தண்ணியும் குடிக்க மாட்டேங்கறான். பூரணமான உண்ணா விரதம்.”

“அப்படியா? அதாவது உணவு சுத்தமா கிடையாது, அதோடு தண்ணியும் கிடையாதா?”

“கரெக்ட். ஐரிஷ் போராளி பாபி சாண்ட்ஸ் அப்படிங்கற ஆள் சிறையில் உண்ணா விரதமிருந்தார். அவர் கடைசி வரை தண்ணீர் குடிச்சிட்டுதான் இருந்தார். அப்படி இருந்தும் உண்ணா விரதத்தால் செத்துப் போனார். இவன் வேற ரகமா இருக்கான்.”

அஹிம்ஸா திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை. மிஷ்ரா “குட்நைட்” சொல்லிப் படுக்கப் போய் விட்டான். காலை அவன் சீக்கிரம் எழுந்து கிளம்ப வேண்டும்.

அஹிம்ஸாவுக்குத் தானும் நீர் அருந்தாமல் இருந்து பார்க்கலாம் எனத் தோன்றியது.  உண்ட கரம் கழுவி விட்டு வந்து எப்போதும் தண்ணீர் குடிப்பாள். அன்று தவிர்த்தாள்.

சற்று நேரம் மொட்டை மாடியில் நடை பயின்றாள். வயிறு ரொம்பக் கனமாக இருந்தது. பிறகு கீழே இறங்கி வந்து மிஷ்ராவின் அருகில் படுத்தாள். தண்ணீர் தாகமாக இருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். பிற்பகலில் தூங்கியதால் உடனே உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டே இருந்தவள் பின் எப்போதென்றே அறியாமல் தூங்கிப் போனாள்.

மருத்துவர் வந்து அவளை எழுப்பி, "நீங்க‌ள் தண்ணீர் அருந்தாமல் இருந்ததால் சிசு கருப்பையிலேயே தாகமெடுத்து இறந்து விட்டது." என்கிறாள். திடுக்கிட்டு எழுந்தாள் அஹிம்ஸா. முகமெல்லாம் வியர்த்திருந்தது. கனவு. தொண்டை வறண்டு நீருக்குத் தவித்தது. எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு முழுச் சொம்பு தண்ணீரைக் குடித்து விட்டு வந்த போது பரம‌ நிம்மதியாக இருந்தது. படுத்து மறுபடியும் தூங்கிப் போனாள்.

*

காலையில் எழுந்து கண்ணாடி பார்க்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து பதினோராம் நாள் பிரசவம்!”

அன்று அவளுக்கு அஜீரணக் கோளாறு இருந்தது, புளிப்பு ஏப்பம் வந்தது, சப்தமாக வாயு பிரிந்தது, அதோடு மலச் சிக்கலும் சேர்ந்து கொண்டது. அஹிம்ஸா கர்ப்பம் ஆனதில் இருந்தே அவளது உடலில் ஏதாவது உபாதைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

அஹிம்ஸாவுக்கும் மிஷ்ராவுக்கும் இடையே வடக்கு - தெற்கு முரண்கள் பல தினசரி பழக்க வழக்கங்களில் வெளிப்பட்டன. குறிப்பாக‌ மொழி, உணவு என நா சம்பந்தப்பட்ட விஷயங்களில். குழந்தைக்குப் பெயர் வைக்கும் விஷயத்திலும் அப்பிரச்சனை எழுந்தது.

மிஷ்ரா ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவன். எனவே அஹிம்ஸாவின் கர்ப்பம் உறுதியான போதே ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். பெண் குழந்தை பிறந்தால் மிஷ்ராவின் விருப்பப்படி பெயர் வைப்பது, ஆண் குழந்தை எனில் அது அஹிம்ஸாவின் விருப்பம். ஏழு மாதமான போது அவள் வயிற்றின் அமைப்பைப் பார்த்து நிச்சயம் ஆண் குழந்தைதான் என அவளது அம்மா அடித்துச் சொன்னாள். அப்போதே அவள் பெயர் தேர்ந்திருந்தாள். கமல். அவளுக்கு மிகப் பிடித்த நடிகர். ‘பேர் சொல்லும் பிள்ளை’ வேறு. அது வடக்கத்திய ஆட்களுக்கும் தொந்தரவில்லாத பெயர். பெரிய சலசலப்பு இராது.

மிஷ்ரா என்ன பெயரை மனதில் வைத்திருக்கிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். நாட்டின் முன்னாள் பிரதமரின் பெயர். அவர் இன்றைய பிரதமரின் அன்னையும் கூட.

மிஷ்ரா பெண் குழந்தை பிடிக்கும் எனக் காட்டிக் கொண்டாலும் அவன் உள்ளூர ஆண் பிறப்பதையே விரும்புகிறான் என அஹிம்ஸாவுக்குத் தோன்றும். அவனைப் போல் தன் நாட்டுக்கு ஓய்வு ஒழிச்சலின்றிப் பணியாற்றும் ஒரு தேச பக்தனைப் பெறுவதையே விரும்புவான். திடீரென உண்ணா விரதம் இருக்கும் இளைஞன் நினைவுக்கு வந்தான்.

என்ன ஆயிற்று அவன் விஷயம்? அவசரமாக அன்றைய செய்தித்தாள்களை எடுத்துப் பிரித்தாள். ஆங்கில தினசரியில் கடைசிப் பக்கத்தில் சிறிய செய்தியாக வெளியாகி இருந்தது. தமிழ் நாளேட்டில் மூன்றாம் பக்கத்தில் கால் பக்கச் செய்தி வந்திருந்தது.

“ஒருவேளை, இந்தப் பட்டினிப் போரில் நான் இறக்க நேரிட்டால் எனது உடலை மருத்துவ‌ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தந்து விடுங்கள். தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணி மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். எனது மக்கள் விடுதலை அடைகின்ற‌ காட்சியை என் கண்கள் பாராது என்பதே ஒரே ஏக்கம்.” என்று உரையாற்றி இருந்தான்.

மாணவர்கள் அவனைச் சந்திக்கிறார்கள். தள்ளாத தாய்மார்கள் உச்சி முகர்கின்றனர். போராளி இயக்கத் தலைவரே நேரடியாக‌ அவனிடம் வாக்கி டாக்கியில் பேசுகிறார். எனில் இயக்கத்தில் அவ்வளவு பெரிய ஆளா என்ற கேள்வி அஹிம்ஸாவுக்கு எழுந்தது.

மருத்துவக் கல்லூரி மாணவன். தேசச்சூழல் உணர்ந்து படிப்பைக் கை விட்டுப் போராளி ஆனவன். இருபது வயதில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் கையிலிருந்த ஆயுதங்கள் தாங்கிய சூட்கேஸைத் தனி ஆளாகக் காப்பாற்றித் தப்பிக்கையில் கையில் துப்பாக்கிக் குண்டு வாங்கியிருக்கிறான். சில மாதங்கள் முன் நிகழ்ந்த சண்டையில் ராணுவத்தினர் பலரைச் சுட்டுக் கொன்றிருக்கிறான். அப்போது அவன் மேல் விழுந்த குண்டு உடலைச் சிதைத்தது. அவன் உயிரைக் காக்க, குடலின் 14 அங்குலத்தை அறுவை சிகிச்சை செய்து நீக்கி இருக்கிறார்கள். அந்த குடலுடன்தான் உண்ணா விரதத்துக்கு அமர்ந்திருக்கிறான்.

அவன் மீது மெல்லிய மதிப்பும் பிரியமும் அஹிம்ஸாவுக்கு எழுந்தது. எந்த‌ இடத்தில் அவன் உண்ணா விரதம் நடக்கிறது எனப் பார்த்தாள் - நல்லூர் கந்தசுவாமி கோயில்.

திடுக்கிட்டாள். அது அத்தீவின் பிரபலக் கோயில்களில் ஒன்று. முழுக்கப் போராளிகள் கட்டுப்பாட்டில் இருந்த வடக்குப் பிராந்தியத்தில் இருக்கிறது. தலைநகரிலிருந்து சுமார் இருநூற்று நாற்பது மைல் தொலைவு. அத்தீவுக்கு வந்ததிலிருந்து அக்கோயிலுக்குப் போக வேண்டும் என்பது அவளது விருப்பம். ஆனால் வெவ்வேறு தடைகள் உண்டாகித் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அவள் கருவுற்றது உறுதியான‌ முதல் நாளே தனக்கு நல்லபடியாகக் குழந்தை பிறந்தால் முதலில் அங்கே வருவதாக‌ வேண்டிக் கொண்டாள்.

மிஷ்ராவுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்பதால் அவனிடம் ஏதும் சொல்லவில்லை.

*

நுரை பொங்கப் பற்கள் துலக்கித் துப்புகையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து பத்தாம் நாள் பிரசவம்!”

அன்று அவளுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் இல்லை. படுக்கையிலிருந்து எழும் போதே வலது காலில் தசை பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் உயிர் போய் வந்தது.

பத்திரிக்கைகள் துணையோடு உண்ணா விரத நிகழ்வுகளைக் கண்காணித்தாள்.

அவன் உண்ணாவிரதப் போராட்ட மேடையிலிருந்தபடி பத்திரிக்கைகள், புத்தகங்கள் என‌ வாசிக்கிறான். போராட்டம் பற்றிய உணர்ச்சிகரக் கவிதைகள் வாசிக்கப்படுவதை ரசிக்கிறான். அவனும் உரை நிகழ்த்துகிறான். போராளி இயக்கத் தலைவர் அவனை வந்து நேரில் சந்திக்கிறார். இரவு வரை பேசிக் கொண்டிருக்கிறார். கிளம்புகையில் உண்ணா விரதத்தின் போது அதிகம் பேசினால் உடல் சோர்வுறும் எனத் தவிர்க்கச் சொல்கிறார். அவன் ஏற்கிறான். அவனைத் தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்புகிறார்.

அவனது கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று அன்றைய தினசரியில் வெளியாகி இருந்தது. மிக ஒல்லி. வசீகரமான முகம். அதில் கண்ணாடி போட்டிருந்தான். அளவான அடர்மீசை. இடக் கையில் கடிகாரம். முழுக்கை சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தான். அவனது உதடுகள் வெடித்து வெளிறிப் போயிருந்தன. கண்கள் உள்ளே போயிருந்தன. முகம் வற‌ண்டு, காய்ந்து கிடந்தது. தலை கலைந்திருந்தது.

அவன் உயிர் பிழைக்க வேண்டும். ஒரு வேளை செத்தாலும் துப்பாக்கியால் சுடப்பட்டோ, குண்டு வெடித்துச் சிதறியோ சாகட்டும். பசியால் கூடாது என நினைத்துக் கொண்டாள்.

*

கழிவறையில் முக்கிக் கொண்டிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து ஒன்பதாம் நாள் பிரசவம்!”

அன்று காலையிலிருந்து அவளுக்கு சோப்புத்துண்டோ சாக்கட்டியோ தின்ன வேண்டும் என்ற வேட்கை இருந்தது. வீட்டிலிருந்த‌ சகல வாசனைகளும் துல்லியமாகத் தெரிந்தன.

வானொலி மூலம் உண்ணா விரதச் செய்திகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் அஹிம்ஸா.

அவன் உண்ணாவிரதம் இருந்த‌ நல்லூர் ஆலயத்தின் முன்னிருந்த மைதானம் ஜனக் கூட்டத்தால் நிறைந்தது. முதலில் நூற்றுக்கணக்கிலும் அப்புறம் ஆயிரக்கணக்கிலும் இருந்த கூட்டம் இப்போது லட்சத்தைத் தொட்டு விட்டது. மழை பெய்ததையும் அவர்கள் பொருட்படுத்தாது நின்றனர். ஒலிபெருக்கி பிரபலக் கவியின் வரிகளை முழக்கமிட்டுக் கொண்டிருந்தது: ‘இவன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா?’

அவன் பற்றிக் கூடுதல் தகவல் சொன்னார்கள். ஈராண்டுகள் முன் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டதிலிருந்து சிக்கலான பொது மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்திருந்தான். பஸ் வழிமறிப்புப் போராட்டம், மீனவர்களிடையேயான கடல் எல்லைப் பூசல்கள், தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள், பல்கலைக்கழகத்தில் உண்டான‌ தகராறுகள், கடை முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இடையேயான‌ பிரச்சினைகள் – இப்படிப் பல விஷயங்களைப் பேசியே சமரசம் செய்திருக்கிறான்.

ஒரு முறை இரண்டு மதத்தினரிடையே நடந்த துப்பாக்கி, எறிகுண்டு பாவித்த கலவரச் சண்டையையே பேச்சுவார்த்தைக‌ள் மூலமே சரி செய்தான். எனவே அஹிம்சையின் மீது அடிப்படையிலேயே அசலாக நம்பிக்கை வைத்திருப்பவன். மிஷ்ரா சொன்னது போல் போர் நிறுத்த காலத்தில் கையாளும் தற்காலிக உத்தி அல்ல எனத் தோன்றியது.

அன்றைய மாலை செய்தித்தாள் அவன் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க இய‌லாமல் சிரமப்பட்டான் என்றது. அவன் நீர் அருந்தி ஐம்பது மணி நேரம் மேலாகி விட்டது. உடனிருந்த போராளிகள் தண்ணீர் எடுக்கச் சொல்லி அவனை வற்புறுத்த‌, அவன் சட்டென வெகுண்டான்: "பெயரைக் கவனியுங்கள். உண்ணா விரதம். அதன் அர்த்தம் என்ன? ஏதும் உண்ணாதிருப்பது. க்ளுக்கோஸ், இளநீர், தண்ணீர் எல்லாமே உணவுதாம். இவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். அது உண்ணாவிரதம் இல்லை. ஒரு புனித இலட்சியத்துக்காகவே நான் என்னை வருத்தி உண்ணாவிரதம் இருக்கிறேன். வெறும் அரசியல் லாபத்துக்காக அல்ல‌. வயிறு முட்டத் நீரருந்தி விட்டு என்னையும் ஏமாற்றிக் கொண்டு, மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது. இனி என்னை யாரும் தண்ணீர் குடிக்கச் சொல்லிக் கேட்க வேண்டாம். நேரடியாகச் சொன்னால் அது என்னை அவமானப்படுத்துவது போல இருக்கிறது.”

பெருமூச்செறிந்தாள். அப்பிடிவாதத்தின் மீது சினமெழுந்தது. தூங்க முயற்சி செய்தாள்.

*

குளியலறை நீர்ப் பொழிவில் நின்றிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து எட்டாம் நாள் பிரசவம்!”

முந்தைய இரவு தூக்கமே வரவில்லை. கண்கள் சிவந்திருந்தன. தலை வலி வந்தது.

இன்னும் வானொலியையும் பத்திரிக்கைகளையுமே தகவலுக்குச் சார்ந்திருந்தாள்.

உண்ணாவிரத மேடையில் முந்தைய இரவு அவ்விளைஞன் நன்றாக உறங்கி விட்டான். தாமதமாகக் கண் விழித்தவன் எழச் சத்தின்றி படுக்கையில் கிடந்தான். நாடித் துடிப்பு அதிகரித்திருக்கிறது. நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு செல்லும் இரத்தம் குறையத் தொடங்கி விட்டது. இன்னும் இரண்டு நாட்க‌ள் சிறுநீர் கழியவில்லை எனில் சிறுநீரகம் செயலிழக்கக்கூடும். அது இருதயத்தில் பாதிப்பை உண்டாக்கி ஆளைச் சாகடிக்கும்.

அன்று அவனுக்கு வைத்தியம் பார்க்க மருத்துவர் வரவழைக்கப்பட்ட போது குழறிய குரலில் அவன் சொன்னான்: “எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பலவந்தமாகவோ, சுயநினைவற்ற நிலையிலோ தர முயற்சி செய்ய‌க்கூடாது. என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறப்பது வரை எவ்விதப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யக் கூடாது. இதுக்குச் சம்மதிப்பதாகச் சத்தியம் செய்து தாருங்கள்.” போராளிகள் அவனது கை பிடித்தனர். மருத்துவர் வேறு வழியின்றி வெளியேறினார்.

தேவாலயப் பாதிரியார் ஒருவர் வந்து அவன் கிடந்த கோலம் கண்டு தான் உணர்ச்சி துறந்தவன் என்பதையும் மறந்து கதறி அழுதார். நல்லூர் கந்தசுவாமியிடம் அவனைக் காக்கும்படி மக்கள் மனமுருகப் பிரார்த்தனை செய்தனர். நாடெங்கும் ஆலயங்களில் அது நடந்தது. உண்ணாவிரதம் பற்றிய செய்தி சர்வதேச அளவில் பரவியது. ஐரோப்பிய‌, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் பலர் கவலையுடன் தொலைபேசி நிலைமையை விசாரிக்க ஆரம்பித்தனர். அது அவளது நாட்டின் தென்முனையிலும் கொந்தளிப்புகளை உண்டாக்கி இருப்பது தெரிந்தது. அன்றைய இரவில் அவளும் அவனுக்காக வழிபட்டாள்.

*

புடவை கட்டி மடிப்புகளைச் சரி செய்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து ஏழாம் நாள் பிரசவம்!”

காலையிலிருந்தே வாந்தி வருவது போல் உணர்வு. ஆனால் வரவில்லை. பெயர்தான் ‘மார்னிங் சிக்னஸ்’, ஆனால் நாளெல்லாம் இருக்கிறது என நொந்து கொண்டாள்.

போராளிகள் நடத்தும் தொலைக்காட்சிச் சேவையைக் கண்டுகொண்டாள். அதில் தினமும் அரை மணி உண்ணா விரதம் பற்றிய செய்தித் தொகுப்பு இடம் பெற்றது.

அன்று அவனால் பத்திரிக்கைகள் வாசிக்க முடியாத‌ அளவுக்குச் சோர்வும் மயக்கமும் ஆட்கொண்டு விட்டது. போர்வைக்குள்ளையே அடைந்திருந்தான். மின் விசிறியை மீறி உடல் வியர்த்தது. சிறுநீரகம் பாதிப்படைய ஆரம்பித்து விட்டதன் அறிகுறி அது. மக்கள் நாடெங்கிலும் இருந்து பேருந்துகள், மாட்டு வண்டிகள், மிதிவண்டிகள் என கிடைக்கும் வாகனங்களில் எல்லாம் ஏறிவந்து குவிய ஆரம்பித்தார்கள். சிலர் நடை பயணமாகவும்.

போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் வந்து அன்று அவனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் என்ற செய்தி மாலை வந்தது. ஆனால் பேசிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. நள்ளிரவில் மிஷ்ரா வந்த போது தவறாமல் அது பற்றி வசாரித்தாள்.

“ந‌ம் அரசிடமிருந்தோ, என்னிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றுதான் அவரால் அவனிடம் சொல்லியிருக்க முடியும். அவன் நம் அரசை நோக்கி சரியாக நமது அடையாளமான மஹாத்மாவின் ஆயுதம் ஏந்தி நிற்கிறான். அது நல்ல நகர்வு. இரு அரசுகளும் இந்தப் போராட்ட வடிவிற்குச் சங்கடம் கொள்கின்றன‌. இதை எப்படிக் கையாள்வது எனத் தடுமாறுகின்றன. ஒருவேளை அவன் வெல்லவும் கூடும்.”

அஹிம்ஸா மனம் நிறைந்து மிஷ்ராவை இறுக‌க் கட்டிக் கொண்டு தூங்கிப் போனாள்.

*

தலையில் மலர் சூடி நுதற்பொட்டு வைக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து ஆறாம் நாள் பிரசவம்!”

அன்று அவள் எழுந்த போதே லேசான தலை சுற்றல் இருந்தது. கால்களும் கைகளும் வீக்கம் கண்டிருந்தன. சிறுநீர் கழித்த போது ஒருவிதமான‌ எரிச்சலை உணர்ந்தாள்.

ஒரே செய்தியை தனியார் பத்திரிக்கை, அரசின் வானொலி, போராளி தொலைக்காட்சி என ஒவ்வோர் ஊடகமும் வெளியிடுகையில் அவற்றுக்கிடையே மெல்லிய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள். உண்மைச் செய்தி என ஒன்று இருக்கிறதா என்று வியந்தாள்.

அன்று அதிகாலையிலேயே எழுந்து அதிசயமாக அரை லிட்டர் சிறுநீர் கழித்தான். அதை ஒரு சாதனை போல் உற்சாமாக‌ச் சொல்லியிருக்கிறான். “விளக்கு அணையும் முன்பு பிரகாசமாக எரியும், அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன்” என்று சுயபகடியும் செய்திருக்கிறான். பின் மெல்லிய குரலில் ஓர் உரை ஆற்றியிருக்கிறான்.

“என் மண்ணின் மக்களே! என்னால் பேச முடியவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் தரும் உற்சாகம் என்னைப் பேச வைக்கிறது. நான் மீட்கப்பட முடியாத இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்தின் பிரஜைகளே, உங்களிடம் பெரிய‌ பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் யாவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். இந்நிலத்துக்காக உயிர் நீத்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக மேலிருந்து மலரும் தனி தேசத்தை மகிழ்ந்து பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.”

போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் அன்று அவள் நாட்டிற்குப் போயிருக்கிறார் எனச் செய்தி வந்தது. அது அவள் தேசப் பிரதமர் அழைப்பின் பேரில், உண்ணா விரதம் பற்றிப் பேசுவதற்காக இருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பி இருந்தன. இரவு மிஷ்ரா வருவதற்காகக் காத்திருந்து அது பற்றி விசாரித்தாள் அஹிம்ஸா. அங்கே அப்ப‌டி ஏதும் சந்திப்பு நிகழவில்லை, சாதாரணப் பயணம் அது என்று சொல்லி ஏமாற்றம் தந்தான்.

*

சமையல் அறையில் காஃபி போட்டிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து ஐந்தாம் நாள் பிரசவம்!”

அவளது வாய் ஈறுகளில் வீக்கமும் பற்களில் ரத்தக் கசிவும் உண்டாகின‌. சூல் கொண்ட‌ வயிற்றில் வீக்கம் அதிகரித்து பக்கவாட்டில் லேசாக‌ வலிக்கும் உணர்வு தோன்றியது.

அவனது இதயத் துடிப்பு 140 ஆக அதிகரிக்க, இரத்த அழுத்தம் 80/50 என்று விழுந்தது.

மக்கள் பெருக்கம் அதிகரிப்பதாலும், வெயிலும் மழையும் குளிரும் தாக்குவதாலும், பெண்களும், குழந்தைகளும் கூடுவதாலும் மைதானம் முழுக்கவும் உண்ணா விரத மேடையைச் சுற்றிக் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்தனர். அங்கேயே வேறு சிலரும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். நாட்டின் மற்ற பாகங்களிலும் தம் ஆதரவை வெளிப்படுத்த மக்கள் அடையாள உண்ணாவிரதங்கள் இருந்தனர். மெல்ல மெல்ல ஒரு மக்கள் எழுச்சி இயல்பாக உருவாகிக் கொண்டிருந்தது. அரசு கவலைப்பட்டது. நகரைச் சுற்றி சமாதானப் படையின் ஹெலிகாப்டர்கள் பறந்து அதை அளந்து கொண்டிருந்தன.

மிஷ்ரா இன்று போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தக்கூடும் என்று ஒரு செய்தி வந்தது. எப்போதும் மிஷ்ராவின் பெயர் அப்படி வானொலியிலோ செய்தித்தாளிலோ தொலைக்காட்சியிலோ கண்டால் அவளுக்குப் பெருமையாகவே இருக்கும். ஆனால் அன்று அதை மீறி உண்ணா விரத‌ விஷயத்தில் என்ன முடிவு எட்டப்படும் என்பதே அவளது ஆர்வமாக இருந்தது. அதன் மூலம் அவன் உணாவிரதத்தைக் கைவிட்டால் உடனடியாகப் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று தயார் நிலையில் இருக்கிறது. அங்கே அவசர சிகிச்சை அளித்தால் மூன்று நாட்களில் அவன் உயிர் பிழைத்துக் கொள்வான்.

அன்று சீக்கிரமே வீடு வந்த மிஷ்ராவுக்கு உணவு பரிமாறியபடி அதை விசாரித்தாள்.

“நான் பேச்சுவார்த்தைக்குச் செல்லவில்லை.”

“ஏன்?”

“அவன் உண்ணா விரதத்தைக் கை விடுவதாகச் சம்மதித்தால் மட்டுமே சந்திப்பு என நிபந்தனை விதித்திருந்தேன். ஆனால் அவர்கள் என் பேச்சுக்கு மதிப்பளிக்கவில்லை. உண்ணாவிரதம் தொடர்கிறது. எனவே நானும் அவர்களைச் சந்திக்கப் போக‌ல்லை.”

“ம்.”

“நத்திங் டூ ப்ளேம் ஆன் மீ. அவர்களே என்னை இந்த இடத்துக்கு உந்தினார்கள்.”

அவள் சட்டெனெ பரிமாறுவதை நிறுத்து விட்டு தலை வலிக்கிறது என்று சொல்லி விட்டு அவனையே போட்டுச் சாப்பிடச் சொல்லி படுக்கையறைக்குள் புகுந்து கொண்டாள்.

அந்த இளைஞனை மெல்ல நெருங்கும் சாவை விட அது தனக்கு அருகிலேயே தயாராகிக் கொண்டிருப்பதை அவளால் ஏற்கவே முடியவில்லை. எங்கே அழுது விடுவோமோ எனப் பயமாக இருந்தது. அறையின் விளக்கணைத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

*

காலை உணவில் விரல் வைத்து அளைகையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து நான்காம் நாள் பிரசவம்!”

அவளுக்குக் காலையில் இருந்து எரிச்சலாக இருந்தது. கர்ப்பமாகும் முன் மாதவிலக்கு நாட்களில்தான் அத்தகைய உணர்வை அடைந்திருக்கிறாள். எல்லோரிடமும் கத்தத் தோன்றும். மிஷ்ராவைத் தவிர எல்லோரிடமும் கத்தி இருக்கிறாள். இப்போது மறுபடி.

அவனது சகல உறுப்புகளும் செயலற்றுக் கொண்டிருந்தன‌. உதடுகள் அசைகின்றன. ஆனால் குரல் எழவில்லை. சாவை நோக்கித் துரிதமாக‌ நகர்ந்து கொண்டிருந்தான்.

மக்கள் தெருவில் அமைதிப் போராட்டங்களில் இறங்கினர். அதன் பகுதியாக நகரின் கோட்டையிலிருந்த சமாதானப் படையினரின் ராணுவ முகாம் முன் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அமர்ந்து, அவர்கள் வெளிவராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.

மிஷ்ரா போராளிகள் இயக்கத் தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினான். முடிவு ஏதும் எட்டப்படவில்லை. யாரும் எதையும் விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை. எழுத்தில் எந்த உறுதிமொழியும் தர முடியாது எனக் கறாராகச் சொன்னான் மிஷ்ரா. அவனும் அது வரும் வரை உண்ணா விரதத்தை விட‌ முடியாது என்று கூறி விட்டான்.

அஹிம்ஸா அச்செய்தியைக் கேட்டதிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

தூதரக நூலகத்தில் இல்லாத நூல்கள், பத்திரிக்கைகளே கிடையாது. சமீப நாட்களில் தீவுப் போராளிகளின் எத்தனையோ தியாகங்களைத் தேடித் தேடி வாசித்திருந்தாள்.

வெடி மருந்து நிரப்பிய லாரியை எடுத்துப் போய் ராணுவத்தின் ஆயுதக் கிடங்கை அழித்த தற்கொலைப் போராளி, ஆயுதங்களை ராணுவத்திடமிருந்து காப்பாற்ற காயப்பட்டு நடக்க முடியாத நிலையிலிருந்த தன்னைச் சுட்டு விட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட தளபதி, இயக்க இரகசியங்கள் கொண்ட கோப்புக்களைக் காப்பாற்றுவதற்காக கழுத்தில் தொங்கும் சயனைட் குப்பியைக் கடித்தவன், வெடிகுண்டின் க்ளிப் எதிர்பாராமல் விலக, உடனிருந்த போராளிகளைக் காப்பாற்ற அதைத் தன் வயிற்றுக்குள் அமுக்கிக் குப்புறப்படுத்து உடல் சிதறியவன் என இயக்கத்துக்காகத் தியாகம் செய்த போராளிகள் ஏராளம் பேர் உண்டுதான். ஆனால் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கப் போவது அவன்தான்.

தோட்டாவுக்கோ, வெடிகுண்டுக்கோ, கத்திக்கோ, சயனைடுக்கோ, சித்ரவதைக்கோ அன்றி பசி, தாகத்தால் குடல் சுருங்கி மரிக்கப் போகிற முதல் போராளி அவன்தான்.

இன்னொன்றும் தோன்றியது. எல்லாமே தற்கொலைதான் என்றாலும் மற்றவை கண நேரத்தில் நிகழ்ந்து விடக்கூடியவை; சொல்லப் போனால் வலியின் வீரியம் குறித்து மூளைக்கு முழுக்கத் தகவல் சென்று சேரும் முன்பே கூட இறப்பு நேரிட்டிருக்கும். ஆனால் உண்ணாதிருந்து சாவது ஒரு நெடிய போராட்டம்; ஒவ்வொரு கணமும் உடல் உணரும் வதை வரப்போகும் மரணத்தை சதா நினைவூட்டிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இல்லாமல் போவது என்பது சாதாரணமானது அல்ல. அப்படியிருந்தும் வெளியேறாமல் அதைத் தொடர மகத்தான மனோபலம் தேவை.

அதை நினைக்கும் போதே அஹிம்ஸாவுக்கு அடிவயிற்றில் கலங்கல் உண்டானது.

*

துணி மடித்து வைத்துக் கொண்டிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்றிலிருந்து முன்றாம் நாள் பிரசவம்!”

அன்று அவள் மார்புகளில் மெல்லிய வலி உண்டானது, வெளிறிய திரவம் வெளியானது. மருத்துவர் அது இயல்பு என்றே சொல்லி அனுப்பி இருந்தாள் என்பதால் அலட்டவில்லை.

அவனது உடல்நிலை மேலும் மோசமானது. சுவாசிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டான். கண்களைத் திறந்திருக்க‌ முடியவில்லை. மெல்ல‌ ப்ரக்ஞை இழந்து கொண்டிருந்தான். அவனது நாடித் துடிப்பு தலை கீழாக இறங்கி ஐம்பதைத் தொட்டது. அவனைக் கொல்ல இரண்டு அரசுகளும் முடிவு கட்டி விட்டன என்றே பேசினார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு வந்தனர். அந்த இடமே அழுகையாலும் சளியாலும் நிரம்பியது.

அவன் போட்ட விதையில் தேசமெங்கும் பல‌ உண்ணாவிரதப் பந்தல்கள் முளைத்தன. அந்தத் தீவிலிருந்த பல அமைப்புகள் சொந்த அரசுக்கும் அந்நிய அரசுக்கும் மகஜர்க‌ள் அனுப்பி உடனடியாக முடிவு செய்து அவன் உயிரைக் காக்குமாறு இறைஞ்சினார்கள்.

ஒரு சமாதானப் படை முகாமுக்கு முன், அவனுக்கு ஆதரவாக மனு கொடுப்பதற்காகப் பெருந்திரளாகப் பொது மக்கள் திரண்டு சென்ற போது சமாதானப் படையினர் அந்தக் கூட்டத்தைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் வானொலியில் சொன்னார்க‌ள்.

முதல் முறையாக அஹிம்சைக்கு எதிரான வன்முறை. அஹிம்சா முகம் சுருங்கினாள்.

அன்றிரவு மிஷ்ரா வீட்டுக்கு வந்ததும் அவள் கேட்காமல் தானாகவே சொன்னான்.

“அந்த இளைஞன் அவ்வளவுதான். ஒன்றோ இரண்டோ நாள்தான் ஆயுள் அவனுக்கு.”

“நோ...”

“இந்த மண் ஒரு வினோத வீரஞ்செறிந்தது. இந்தத் தியாகத்துக்கெல்லாம் இவர்கள் விரும்பும் தனி தேசம் இணையான மதிப்புடையதா என்றே தெளிவில்லை. ராணுவம் வீசிய வெடிகுண்டினால் போராளியான தன் மகன் ஒரு காலை இழந்து நின்ற‌ போது அவன் தாய் அவனிடம் இப்படிச் சொல்லி இருக்கிறாள் - ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு, இரண்டு கைகள் இருக்கின்றன‌. இறுதி வ‌ரை போராடு.”

“…”

“நீயும் இவர்கள் மொழிக்காரிதானே, இதை எப்படி விளக்குவாய்? எனிதிங் ரேஷனல்?”

“நீங்கள் அடிமையாக இருந்து பழகியதில்லை என்பதுதான் முக்கியமான‌ வித்தியாசம்.”

*

அன்று ஏனோ ‘உண்மைகளுடனான என் பரிசோதனைகள்’ நூலை வாசிக்க வேண்டும் போல் தோன்றியது. உத்தேசமாகப் புரட்டியபடி அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“நாளை பிரசவம்!”

அவளது பிறப்புறுப்பில் எரிச்சலும் அரிப்பும் உண்டாகி திரவம் வடிந்து பிசுபிசுத்தது.

அவனது உடல் பரக்ஞை இழந்தது. சகல உறுப்புகளும் உணர்ச்சி அறுத்துக் கொண்டன‌. கை, கால்கள் தாமாகவே அசைந்தன. உயிர் இருப்பதையே அவைதாம் உறுதி செய்தன.

அவனுடல் தன்னை அறியாமல் புரளத் தொடங்கியதால் சிறிய கட்டிலில் இருந்து பெரிய‌ கட்டிலுக்கு மாற்றப்பட்ட போது படுக்கையில் சிறுநீர் கழித்திருந்தது தெரிந்தது. அவனது ஆடைகளை அகற்றிப் புத்தாடை அணிவித்தனர். “சாகப் போகிறவனுக்கு எதற்குப் புது உடுப்பு?” என்று சில நாள் முன் அவன் சுயநினைவோடு இருந்த போது மறுத்த ஆடை.

அவனிடம் இருந்ததெல்லாம் ஒரு நீளக் கால் சராய், அதற்கு ஒரு சட்டை. பகலெல்லாம் சுற்றி விட்டு நள்ளிரவில் தலைமை அலுவலகம் வந்து அழுக்கேறிய தன் உடைகளைத் துவைத்துக் காயப் போட்டுவிட்டே படுக்கச் செல்வான். எனவே புதிதென்ப‌து சொகுசு.

அவன் உடல் நிலை மோசமாகிவிட்ட விஷயம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது போராளிகளும் பொது மக்களும் அந்த‌ மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்க‌ள் போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிவோர் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அன்றைய பிற்பகலில் கோமாவுக்குள் விழுந்தான். அவன் நினைவை மீட்க வேண்டி அவனால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை மேடையில் ஒலிபரப்பினார்கள்.
 
“ஓ! மரணித்த வீரனே!
உன் ஆயுதங்களை எனக்குத் தா!
உன் சீருடைகளை எனக்குத் தா!
உன் பாதணிகளை எனக்குத் தா!”

கூட்டத்தினர் அந்தப் பாடலைக் கேட்டதும் கேவி அழத் தொடங்கினர். போராளிகள் தொலைக்காட்சியில் அந்தப் பாடலைப் பார்த்த அஹிம்ஸாவும் வெடித்து அழுதாள்.

*

வலி கண்டு மருத்துவமனைக்குக் கிளம்பும் போது அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –

“இன்று பிரசவம்!”

டாக்ஸி வரத் தாமதமாகி மருத்துவமனை போகும் வழியில் பனிக்குடம் உடைந்தது.

அவளது உடலைப் பரிசோதித்த மருத்துவர் அவளது ரத்த அழுத்தம் அதிகரித்தும் அழுது கண்கள் வீங்கியிருப்பதையும் அவள் கடும் மன அழுத்தத்தில் இருப்பதையும் கண்டு கொண்டார். உடனடியாகச் சிகிச்சையை ஆரம்பித்தார். ஆச்சரியமாக பெரிய சிக்கல் ஏதுமின்றி குழந்தை பெற்றுப் போட்டாள். மூன்றரை கிலோக்ராமில் ஆரோக்கியமான ஆண் மகவு. அவளுக்கு வலி தெளிந்து, நினைவு சீரானதும் குழந்தையைக் கூட கையில் வாங்காமல் கேட்ட முதல் கேள்வி அந்த இளைஞனுக்கு என்ன ஆனது என்பதுதான்.

செவிலிகள் முணுமுணுத்தபடி வானொலியில் செய்தி கேட்டுத் தகவல் சொன்னார்கள்.

அவன் இறந்து விட்டான். சாகும் வரையிலான த‌ன் உண்ணாவிரதப் போராட்டத்தை 265 மணி நேரத்தில் முடித்துக் கொண்டான். அம்மரணத்தில் இரு தேச‌ மனசாட்சி எரிந்தது.

ஒரு பிணத்தைப் போல் அவள் தனது குழந்தையை வாங்கிப் பாலூட்ட ஆரம்பித்தாள்.

*

அஹிம்ஸாவின் நெற்றியில் அழுந்த‌ முத்தமிட்ட மிஷ்ரா புத்தம் புதிதாக இந்தப் பூமிக்கு வந்திருந்த அந்த ஆண் சிசுவைக் கையிலேந்திக் கொண்டு பெருமிதமாகப் பார்த்தான்.

அஹிம்ஸா அவனைப் பார்த்து சோகையான ஆனால் உறுதியான குரலில் சொன்னாள்.

“இவன் பெயரைத் தீர்மானித்து விட்டேன்.”

“ஆம். உன் உரிமை அது. என்ன பெயர்?

சொன்னாள். மிஷ்ரா திடுக்கிட்டான். தான் சரியாகக் காதில் வாங்கினோமா அல்லது ஓய்வு, உறக்கமற்ற வேலை அலைச்சலில் உண்டாகும் பிரமையா எனக் குழப்பமாக மறுபடி சொல்லக் கேட்டான். அவள் நிதானமாக மறுபடி அப்பெயரைச் சொன்னாள்.

“அவன் பெயரா? இறந்த அந்த இளைஞனின் பெயரா? உனக்கு என்ன பைத்தியமா?”

மிஷ்ரா சீற்றமாக அவளைப் பார்த்துக் கேட்டான். உடல் நடுங்கச் சொன்னான் -

“அஹிம்ஸா, எனக்கு இதில் விருப்பமில்லை. நான் இதை அனுமதிக்க மாட்டேன்.”

“இறந்த பிறகு லெஃப்டிண‌ன்ட் கர்னல் என்ற பட்டம் தரப்பட்டவன் பெயர் கசக்கிறதா! நாடே அவனுக்குக் கண்ணீர் உகுத்தது. அதன் தலைவன் நேரில் மரியாதை செய்தான்.”

அஹிம்ஸா புன்னகை செய்தாள். குழந்தை அழ, அதன் வாயில் முலை திணித்தாள்.

*

அஹிம்ஸா உடல் தேறி வீடு சேர்ந்தாள். மிஷ்ரா மறுபடி வேலைகளில் தீவிரமானான்.

ஓர் இரவு மிஷ்ராவுக்கு அஹிம்ஸா உணவு பரிமாறிக் கொண்டிருந்த போது கேட்டான்.

“பையன் சத்தமே காணோமே. தூங்கிட்டானா?”

“மிக நிம்மதியாக‌த் தூங்கியிருப்பான்.”

“நல்லது. பெயர் குறித்து யோசித்தாயா?”

“என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.”

“ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய் அஹிம்ஸா?”

“நீங்கள் செய்த பாவத்துக்கு உங்கள் மகன் பரிகாரம் தேடுகிறான். அவ்வளவுதான்.”

“நான் இதற்குச் சம்மதிக்க மாட்டேன்.”

“உங்கள் சம்மதம் அவசியமில்லை.”

“அவ்வளவு திமிர் வந்து விட்டதா?”

“இல்லை. யதார்த்தம் சொன்னேன்.”

“என்ன மாதிரியான‌ உளறல் இது?”

“உங்கள் மகன் இப்போது இங்கில்லை.”

“என்ன…?”

“பதற வேண்டாம். அவன் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டான். எந்த இடம் என நீங்கள் கண்டறிய முடியாது. என்ன ஆனாலும் நான் சொல்லவே மாட்டேன்.”

“…”

“அங்கே அவனுக்கு நான் விரும்பிய பெயரையே இடுவார்கள் என்றே ஊகிக்கிறேன்.”

“பாவி, ஏன் இப்படிச் செய்தாய்? நீயும் ஒரு தாயா?”

“நீங்கள் செய்தது அறமற்ற செயல். அதை நான் சரி செய்ய முனைந்திருக்கிறேன். என் நிலத்தில் அறம் ஏற்ற ஒரு தாய் என்ன செய்வாளோ அதையேதான் நான் செய்தேன்.”

“முட்டாள். பெற்ற வயிறு பற்றி எரியவில்லையா?”

“ரெண்டாயிரம் ஆண்டு முன் என் பாட்டி ஒருத்தி பாடி வைத்தாள்: புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”

“புல்ஷிட்! உன் மஹாத்மா என்ன ஆனார்? உன் அஹிம்சை என்ன ஆனது? எல்லாம் வெறும் வாய்ச்சொல்லா? கொலை, தற்கொலை செய்வது என்றைக்கு அறமானது?”

“அடடா! அஹிம்சை மீது என்னவோர் அக்கறை! நீவிர் வன்முறையைக் கையிலெடுக்க, எதிராளி மட்டும் அமைதி வழியில் நிற்க வேண்டும். அப்படித்தானே? சரி, சொல்கிறேன். மஹாத்மாவே சொல்லி இருக்கிறார். ஒரு பெண் பாலியல்ரீதியாக அவமதிக்கப்படும் போது ஹிம்சை, அஹிம்சை எல்லாம் பொருட்டில்லை. அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள எந்த முறைக‌ளையும் கையாளச் சுதந்திரம் உண்டு. தேசத்தைத் தாய் என்று போற்றும் உங்களுக்கு இந்தக் கொள்கையை நாட்டுக்கும் நீட்டிக்கத் தயக்கம் இராது.”

“உனக்குப் பேய் பிடித்து விட்டது. உன் குழந்தைக்கு ஆபத்து விளைவித்திருக்கிறாய்.”

“இல்லை. உண்மையில் நீங்கள் செய்ததுதான் கொடூரமான‌ பச்சைப் படுகொலை.”

“நான்-சென்ஸ். அபாண்டம். அவனாகப் பட்டினி கிடந்து இறந்தது கொலையா?”

“அவன் இறந்தது அவனது முடிவாக இருக்கலாம். ஆனால் அவன் முன்னெடுத்த அறப் போரைக் கொன்றது நீங்களே. அவர்கள் கையில் எந்திய அஹிம்சையைப் பிடுங்கி எறிந்து விட்டு பதிலாகத் துப்பாக்கியைத் திணித்திருக்கிறீர்கள். இனி அவர்களுக்கு ஒருபோதும் அமைதிப் போராட்டத்தின் மீது நம்பிக்கை வராது. நீங்கள் மஹா பாவி.”

“நான் பெரிய இயந்திரத்தின் சிறிய சக்கரம். நான் தீர்மானித்து ஆவதொன்றுமில்லை.”

“பல்லாண்டுகளாகக் கேட்டுப் புளித்த‌ வழக்கமான தப்பித்தல் வாதம். ஒருவேளை அது நிஜமென்றால் மாற்றம் இச்சிறிய சக்கரத்தில் இருந்தே உருவாகட்டும். உங்கள் முடிவின் முதல் பலி நீங்களே. நின்ற போர் நாளை மறுபடி ஆரம்பிக்கக்கூடும். அது நீங்கள் பற்ற வைத்த நெருப்பு. உங்கள் மகனும் அதில் சேர்ந்து எரிவான் என்பது நினைவிருக்கட்டும்.”

அவள் சொன்னதைக் காற்றில் கரைய விட்டு தொலைபேசி எடுத்து, மிஷ்ரா அதிகார வட்டத்தில் தன் குழந்தையைக் கண்டுபிடிக்கும் மார்க்கங்களை முடுக்கி விட்டான்.

*

வேல் வீற்றிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மூலஸ்தான‌க் கருவறை வாசலில் கிடத்தப்பட்டிருந்த ஆண் குழந்தையை வேங்கை ஒன்று கண்டெடுத்தது. அதை வாயில் கவ்வியபடி மெல்ல நடந்தது. அஹிம்ஸாவின் மார்பில் ஒரு துளி பூத்து உடை ஈரமானது.

***

  •  

தமிழ் நிலத்தின் ஆதி கொலை வழக்கு

பொ.ஊ. 969ம் ஆண்டு என்பது ஓர் உத்தேசக் கணக்கு. ஆதித்த கரிகாலன் என்ற சோழ இளவரசன் கொலை ஆகிறான். கொன்றது அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள். அனேகமாகத் தமிழ் வரலாற்றில் பதிவாகி இருக்கும் முதல் கொலை வழக்கு அதுவே.

எப்படி தஞ்சை பெரிய கோயில் என்பது ராஜராஜ சோழன் என்ற மாபெரும் த‌மிழரசன் கட்டினான் என்பதே பல்லாண்டுகளாக மக்களுக்குத் தெரியாமல் போய் இறுதியில் ஒரு ப்ரிட்டிஷ்காரர் வந்து மறுகண்டுபிடிப்பு செய்து மீள்அறிமுகப்படுத்த‌ வேண்டிய‌ நிலை இருந்ததோ அப்படி ஆதித்த கரிகாலன் கொலையும் பல காலம் மக்களால் மறக்கப்பட்டு பிறகு 1950-ல் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வாயிலாக நினைவூட்டப்பட்டது.

ஆனால் பொன்னியின் செல்வன் ஒரு புதினம். கற்பனைக் கதை. இந்தக் கொலை பற்றி இருக்கும் அசல் வரலாற்று ஆவணங்கள் என்னென்ன‌? சரித்திர ஆய்வாளர்கள் இது பற்றி அதிகாரப்பூர்வமாகச் சொல்வது என்ன? இது பற்றி முழு உண்மை வெளிவந்து விட்டதா?

*

ஆதித்த கரிகாலன் கொலை பற்றிப் பார்க்கும் முன் சோழ நாட்டில் அப்போது நிலவிய அரசியல் சூழல் சுருக்கமாக: சோழ மன்னர் கண்டராதித்தர் மறைய, அவரது மகனான மதுராந்தகன் சிறுவனாக இருக்க, கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயர் அரசனாகிறார். ஆனால் அவரும் ஓரிரு ஆண்டில் மறைய, அவரது மகன் சுந்தர சோழர் அரசனாகிறார். நியாயமாக அவர் அசல் உரிமை கொண்ட மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, தனக்கு அடுத்து அரசனாக்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யாது தன் மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகிறார். இந்தப் பதவிப் பிரச்சனை முதல் பகை. வரி கட்ட மறுத்து சண்டித்தனம் செய்து கொண்டிருந்த பாண்டிய நாட்டின் மீது ஆதித்த கரிகாலன் போர் தொடுத்த போது மன்னன் வீர பாண்டியனின் தலையைக் கொய்து தஞ்சைக் கோட்டை வாயிலில் குத்தி வைக்கிறான். அது பாண்டியர்களிடம் உண்டாக்கிய வன்மம் இரண்டாம் பகை. இச்சூழலில்தான் அவன் கொல்லப்படுகிறான்.

அதன் பிறகு உத்தம சோழன் என்ற பெயரில் மதுராந்தகன் அரசனாகிறான். அவனுக்குப் பிறகு ஆதித்த கரிகாலனின் தம்பியான (பிற்பாடு ராஜராஜ சோழனாகப் புகழ் பெற்ற‌) அருண்மொழி வர்மன் அரசனாகிறான். ஆதித்தன், அருண்மொழியின் சகோதரியான குந்தவை, வந்தியத்தேவன் என்ற சிற்றரசனை மணந்து செல்வாக்குடன் திகழ்கிறாள்.

ஆதித்த கரிகாலன் கொலை பற்றி நமக்கு இரண்டே ஆவணங்கள்தாம் கிடைக்கின்றன. ஒன்று உடையார்குடி கல்வெட்டு, மற்றொன்று திருவாலங்காட்டுச் செப்பேடுக‌ள். அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் தத்தம் நிலைப்பாட்டை இந்த விஷயத்தில் வந்தடைந்தார்கள். அந்தக் கருத்துக்களை ஒட்டியே பொன்னியின் செல்வன் முதல் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு வரை நூற்றுக்கும் மேற்பட்ட‌ வரலாற்று நாவல்கள் கடந்த முக்கால் நூற்றாண்டில் எழுதிக் குவிக்கப்பட்டன.

*

உடையார்குடி கல்வெட்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியிலுள்ள‌ அனந்தீசுவரம் ஆலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இடம்பெற்றுள்ள‌ ஒரு சாசனம். ராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில் பொறிக்கப் பெற்றது. அதாவது உத்தேசமாக பொ.ஊ. 987. பலரும் புரிந்து கொண்டிருப்பது போல் இது மன்னனின் சாசனமே அல்ல; மாறாக ஒரு தனி நபர் கோயிலுக்களித்த அறக்கொடை பற்றியும், அதற்காக வாங்கிய‌ நிலங்கள் பற்றியும்தான் பேசுகிறது. சரி, இதில் ஆதித்த கரிகாலன் எங்கே வருகிறான்?

வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோருக்கு குறிப்பிட்ட நிலம் தொடர்பாக மன்னன் அனுப்பிய‌ ஓர் அனுமதிக் கடிதம் இதில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அந்நிலம் முன்பு ஆதித்த கரிகாலன்  கொலையாளிகளுக்குச் சொந்தமாக இருந்தது. கொலைச்சதி தெரிந்ததும் தண்டனையாக அவர்களிடமிருந்த நிலம் பறிக்கப்பட்டது.

கல்வெட்டைப் பொறித்த ஆள் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையன். அவன் அனந்தீசுவரம் கோயிலில் தண்ணீர் பந்தலுக்காகவும் சிவனடியார்களின் உணவுக்காகவும் குறிப்பிட்ட நிலத்தைப் பொன் கொடுத்து வாங்கி நன்கொடையாக அளித்தான் என்பதைப் பதியவே இக்கல்வெட்டு. நிலத்தை அவனுக்கு விற்றது வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையினர். கல்வெட்டு அந்நிலத்தின் முன்கதையையும் பேசுகிறது. ஆதித்தனைக் கொன்ற ராஜ துரோகிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் நிலங்கள் முழுவதும் முன்பு அரசின் ஆணைக்கேற்ப வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையினரால் கையகப்படுத்தப்பட்டு, அவர்கள் பொறுப்பில் அந்நிலங்கள் முழுவதும் இருந்துள்ளன‌. அதன் ஒரு பகுதிதான் மேற்சொன்ன கோயில் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிலம்.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விற்பனை செய்ய கொட்டையூர் பிரம்மஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் என்ற இரு கண்காணிப்பாளர்களை நியமித்து ராஜராஜ சோழன் அனுப்பியிருந்த‌ ஆணைக் கடிதமே கல்வெட்டில் இருந்த மேற்கோள்.

கொலையாளிகள் யார் என இந்தக் கல்வெட்டு தெளிவாகவே சொல்கிறது. சோமன், அவன் தம்பி ரவிதாசன் என்ற‌ பஞ்சவன் பிரமாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் என்ற‌ இருமுடிச் சோழப் பிரமாதிராஜன் ஆகிய மூவரும் கொலை செய்த‌ துரோகிகள்.

பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் பிராமணர்களுக்கு வழங்கப்படுவது. பஞ்சவன் பிரமாதிராஜன் விருது பஞ்சவர் எனப்படும் பாண்டிய அரசர்கள் தரும் விருது. இருமுடிச் சோழ பிரமாதிராஜன் விருது சோழப் அரசர்கள் வழங்குவது. ஆக, ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டில் உருவானது என்பதும் பாண்டியர் சிலர் சோழ நாட்டில் ஊடுருவி அங்கே பதவிகள் பெற்று துரோகிகளாக நடந்து கொண்டனர் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

குறிப்பிட்ட நிலம் இவர்களின் தம்பி மலையனூரான் என்ற‌ பாப்பனச்சேரி ரேவதாச கிரம வித்தன், அவன் தாய் பெரிய நங்கைச்சாணி, அவனது மகன் என‌ மூவருக்குச் சொந்தமானது. நெருங்கிய உறவினர் நிலங்கள் யாவும் பறிக்கப்பட்டன என்பதால் இதையும் எடுத்திருக்கிறார்கள். இதுவே உடையார்குடி கல்வெட்டின் உள்ளடக்கம்.

ஆக, உடையார்குடி கல்வெட்டு ஆதித்த கரிகாலன் கொலைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிக்கும் சாசனமல்ல; மாறாக, ஒரு நில விற்பனை ஆவணம் மட்டுமே.

எனவே இக்கல்வெட்டின் மூலம் ராஜராஜன் காலத்தில்தான் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர் தண்டிக்கப்பட்டனர் என்று சொல்ல முடியாது, சுந்தர சோழர் அல்லது உத்தம சோழன் காலத்தில் அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என‌ ‘உடையார்குடி கல்வெட்டு: ஒரு மீள்பார்வை’ என்ற‌ கட்டுரையில் நிறுவுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

*

இரண்டாம் ஆதாரம் திருவாலங்காட்டுச் செப்பேடு. சோழ அரசின் இலச்சினை கொண்ட‌ பெரிய இணைப்பு வளையத்துடன் மொத்தம் 31 ஏடுகள் உள்ள தொகுதி இது. ராஜேந்திர சோழனின் ஆறாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இஃது பிற்கால சோழர் வரலாற்றினை விவரிக்கிறது. 10 ஏடுகள் சமஸ்கிருத ஸ்லோகமாகவும் மீதம் தமிழ் உரைநடையிலும் உள்ளன. அதில் மூன்று சமஸ்கிருத ஏடுகள் ஆதித்த கரிகாலன் பற்றிப் பேசுகின்றன.

ஆதித்த கரிகாலன் போரில் பாண்டிய இளவரசனைக் கொன்றவன்; அவன் தலையைத் தன் நகரில் உள்ள கம்பத்தில் தொங்க விட்டவன்; வானுலகைக் காணும் ஆசையோடு அஸ்மனமானான் என்கிறது. அதாவது உரிய காலத்துக்கு முன்பே செத்துப் போனான் என்றே அர்த்தம். கொலை செய்யப்பட்டான் என்று சூசகமாகச் சொல்கிறது. பாண்டியப் பகை குறிக்கப்படுவதால் செப்பேடு அவர்களையே கொலைகாரர்கள் ஆக்குகிறது. (எசாலம் செப்பேடுகளும் பாண்டிய மன்னனின் தலையை வெட்டி தஞ்சை வாயில் மரத்தில் தொங்க விட்டான் ஆதித்த கரிகாலன் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.)

இதன் அடுத்த பகுதியிலேயே ஆதித்தன் மறைந்த இருளைப் போக்க (அதாவது அரச பதவி ஏற்க) மக்கள் அருண்மொழியை வேண்டியதாகவும் ஆனால் தர்மத்தை அறிந்த அவனோ அதை ஏற்காது அரச பதவியில் ஆசை கொண்ட சிற்றப்பன் மதுராந்தகனிடம் பொறுப்பை ஒப்படைத்ததாகவும் சொல்கிறது. ஆக, மதுராந்தகன் சோழ அரியணைக்கு ஏங்கியதும் ஆதித்த கரிகாலன் அதற்குத் தடையாக இருந்ததும் இதன் மூலம் தெளிவு.

*

இவற்றைக் கொண்டு வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கும் முடிவுகளைப் பார்க்கலாம்.

சோழர்கள் (புத்தகம் 1) நூலில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, ஆதித்த கரிகாலன் ஒரு சதி மூலம் கொல்லப்பட்டான் என்று சொல்கிறார். ஆனால் அக்கொலைக் குற்றவாளிகள் மதுராந்தகனாகிய உத்தம சோழன் ஆட்சியில் தண்டிக்கப்படவில்லை, ராஜராஜன் அரியணை ஏறிய பின்பே தண்டனை வழங்கப்பட்டது என்று உடையார்குடி கல்வெட்டு உணர்த்துவதாகப் புரிந்து கொள்கிறார். அதையும் மதுராந்தகனுக்கு நாடாளும் ஆசை இருந்ததையும் இணைத்து, அவனே அந்தக் கொலைச் சதிகாரன் என்கிறார் சாஸ்திரி.

பிற்காலச் சோழர் சரித்திரம் (பகுதி I) நூலில் டி.வி. சதாசிவ பண்டாரத்தார், சோழத்தின் பிராமண உயர் அதிகாரர்களே ஏன் தம் இளவரசனையே வஞ்சமாகக் கொன்றனர் என வியக்கிறார். ஆனால் உத்தம சோழன் சதி செய்து கொன்றிருக்கலாம் என்ற கூற்றை மறுக்கிறார். அப்படி இருந்தால் ஆதித்தனின் தம்பியான அருண்மொழி வர்மன் எப்படி உத்தமனை அரச பதவி ஏற்க அனுமதித்திருப்பான், எப்படி அவன் மீது பேரன்புடன் இருந்திருப்பான், குடிகளின் ஆதரவு எப்படி உத்தம சோழனுக்குக் கிடைத்திருக்கும் எனக் கேள்விகள் எழுப்புகிறார் (உத்தம சோழன் நல்லாட்சி புரிந்தமைக்குச் சான்றுகள் உண்டு). எனவே இது அதிகாரிகள் சதி மட்டுமே என்கிறார். உடையார்குடி கல்வெட்டை ராஜராஜ சோழ‌ன் காலத்தில்தான் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர் என்பதாகவே பண்டாரத்தாரும் புரிந்து கொண்டாலும் வழக்கின் விசாரணை முடியவும் தண்டனை அறிவிக்கவும் தாமதம் ஆகியிருக்கலாம் என நல்லவிதமாகவே புரிந்து கொள்கிறார்.

கே.கே. பிள்ளையும் பண்டாரத்தார் போல கொலை செய்தது பிராமணர்கள் என்பதைச் சுட்டி அரசாங்க அதிகாரிகள் ஏன் அரசிளங்குமாரனைக் கொன்றனர் என வியக்கிறார். சோழர் வரலாறு (2ம் பாகம்) நூலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அரியணை ஏறும் நிமித்தம் மதுராந்தகனே சூழ்ச்சி செய்து ஆதித்தனைக் கொன்று விட்டான் என்கிறார். தென்னாட்டுப் போர்க்களங்கள் நூலில் கா. அப்பாத்துரை எதிரிகள் சிலரால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டான் எனப் பொதுவாகச் சொல்லி முடித்துக் கொள்கிறார்.

‘ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கு ஒரு மறு ஆய்வு’ என்ற கட்டுரையிலும் ‘முதலாம் இராசராச சோழன்’ நூலிலும் க.த. திருநாவுக்கரசு கிட்டத்தட்ட சதாசிவ பண்டாரத்தார் சொல்லும் கருத்தையே வழிமொழிகிறார். கூடுதலாக, மதுராந்தகன் மீது குற்றமில்லை என்று மக்களுக்கு உறுதிபடச் சொல்லவே அருண்மொழி அவனை அரியணை ஏறச் செய்தான் என்றும் அவன் குற்றமற்றவன் என மக்களும் ஏற்றதாலேயே உத்தம சோழன் என்ற பெயர் பெற்றான் என்றும் சேர்த்துக் கொள்கிறார். குற்றவாளிகள் பிராமணர்கள் என்பதால்தான் அவர்களுக்கு ராஜராஜன் மரண தண்டனை விதிக்கவில்லை என்கிறார். இந்த‌க் கட்டுரை தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்ட அருண்மொழி ஆய்வுத் தொகுதி (பதிப்பாசிரியர்: நடன. காசிநாதன்) மற்றும் சோழர் சமுதாயம் (பதிப்பாசிரியர்: முனைவர் சீ. வசந்தி) ஆகிய இரு நூல்களிலும் இடம் பெற்றது இதன் ஏற்புக்குச் சான்று.

‘A Note on the accession of Rajaraja Chola’ என்ற கட்டுரையில் ஆர்.வி. ஸ்ரீநிவாசன் என்பவர் ஒருபடி மேலே போய் அருண்மொழி வர்மன் அரச பதவிக்கு வர வேண்டி தன் சொந்தச் சகோதரனான ஆதித்த கரிகாலனை குந்தவை, வந்தியத்தேவன் துணை கொண்டு கொன்றிருக்கலாம் என்கிறார். ராஜராஜன் தர்மம் என்றெல்லாம் சொன்னாலும் தன் தவறை மறைக்கவே மதுராந்தகனுக்கு அரச பதவியை விட்டுக் கொடுத்தான் என்பது அவர் ஊகம். ராஜராஜனைத் தப்புவிக்க‌ வேண்டுமென்றே உத்தமனைக் குற்றவாளி ஆக்குகிறார் என்று நீலகண்ட சாஸ்திரியையும் சாடுகிறார். இவ்வாதங்களில் தர்க்கம் இருந்தாலும் இக்கட்டுரையின் நோக்கம் அதிர்ச்சி மதிப்பீடு என்றே எனக்குப் படுகிறது.

‘ஆதித்த கரிகாலன் கொலையும் கருணையும்’ கட்டுரையில் துரை இளமுருகு, இந்தக் கொலை மதுராந்தகன், அருண்மொழி வர்மன் இருவரின் கூட்டுச் சதிதான் என்கிறார். சந்தேகம் வராமல் இருக்க மதுராந்தகனை அரசனாக்கினான் ராஜராஜன் என்கிறார்.

‘பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும்’ என்ற‌ கட்டுரையில் நடன. காசிநாதன் சத்ரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே காலகாலமாக இருக்கும் பொறாமை மற்றும் பகையே ஆதித்த கரிகாலன் கொலைக்குக் காரணம் என்கிறார். அதற்குப் பழி தீர்க்கவே ராஜராஜன் தான் ஆட்சிக்கு வந்ததும் காந்தளூர்ச்சாலை மீது படையெடுத்துப் போய் அங்கே பிராமணர்களின் கடிகையை அழித்தான் என்கிறார்.

காலந்தோறும் பிராமணியம் (பாகம் ஒன்று) நூலில் அருணன் சுந்தர சோழர் போல் அவரது மைந்தன் ஆதித்த கரிகாலனும் பிராமணிய மதமல்லாது, சமண, பௌத்த மதங்களை ஆதரித்து வந்திருக்கலாம் என்றும் அதனால் சினமுற்ற சில‌ சோழ உயர் அதிகாரிகளான பிராமணர்கள் அவனைக் கொன்றிருக்கலாம் என ஊகம் சொல்கிறார்.

இப்படி வரலாற்றில் கைதேர்ந்த பலரும் பல ஆதாரங்கள், தர்க்கங்களின் அடிப்படையில் ஆதித்தன் கொலையில் ப‌ற்பல கருதுகோள்களை முன்வைத்திருக்கின்றனர். இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லது இவற்றில் சிலவற்றின் கலவையாகவோ உண்மை இருக்கலாம்.

நான் இந்த ஒவ்வொன்றில் இருந்தும் உண்மைக்கு மிக அருகில் இருப்பதாகத் தோன்றிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ என்ற ஆயிரம் பக்க நாவலை எழுதினேன். புனைவெனினும் உண்மைக்கு அருகில் இருந்தால் மட்டுமே மதிப்பு - எதிர்கால நூற்றாண்டின் விஞ்ஞானக் கதை என்றாலும் சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலத்தின் ஆதி கொலை வழக்காக இருந்தாலும் சரி!

***

(தீராநதி - ஃபிப்ரவரி 2023 இதழில் வெளியானது)

  •  

மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை

காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான‌ ஒரு செயல்!

காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்?

வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது.

ஆணின் காதல் என்பது அவனது இதர‌ வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாமிடத்திலுள்ள ஒருவன் எப்படிப் பொன் பதக்கத்தை விரும்ப முடியாதோ, அதே போல் முதலிடத்தில் வந்த‌ ஒருவன் ஒருபோதும் வெள்ளிப் பதக்கத்தைக் கனவு கண்டு விட‌ முடியாது. அப்படி நடந்தால் அது ஒரு பிறழ்வு.

இன்னும் சொன்னால் ஆண்களின் காதல் என்பது பெண்களுடனான போராட்டம் மட்டும் அல்ல‌, சக ஆண்களுடனான போரும்தான். அவனது காதலுக்கு ஆண்களுமே எதிரிகளே.

ஆண் தான் காதலிக்க ஒரு பக்கம் ஆக மென்மையான கவிதைகளைப் புனைய வேண்டி இருக்கிறது; மறுபுறம் ஆகக் கொடூரமான வழிகளில் குருதி சிந்தவும் வேண்டி உள்ளது. பெண்கள் மீது உடல்ரீதியான‌ வன்முறைகளை, பாலியல் குற்றங்களை இழைக்கும் அதே ஆண்தான் மறுபுறம் உயிருருகக் காதலிக்கவும் அதன்நிமித்தம் துயருறவும் செய்கிறான்.

அப்படி நாமறிந்த‌ சில‌ ஆண்களுக்குப் பின் இருக்கும் அரிதான‌ காதலைப் பார்ப்போம்.

(இலக்கியமோ திரைப்படமோ மக்களின் வாழ்விலிருந்து பாதிப்பை எடுத்துக் கொண்டு திரும்ப மக்களின் வாழ்விலேயே செல்வாக்கு செலுத்துகிறது. எனவே நிஜமாக வாழ்ந்த‌ காதலர்களுடன் மனிதக் கற்பனையில் உதித்த காதலர்களும் இப்பட்டியலில் உண்டு.)

*

(1)

மஜ்னுவின் காதலிலிருந்தே ஆரம்பிக்கலாம். அவன் ஏழாம் நூற்றாண்டு அரபுப் பழங்குடி. காஸ் இபின் அல்-முலவ்வா என்பதே அவனது அசல்ப் பெயர். பள்ளிப் பருவத்திலேயே உடன் படித்த‌ லைலா அல்-ஆமிரியா என்பாளைக் காதலிக்க ஆரம்பித்தான். பித்தேறி அவளது அழகை வர்ணித்துக் கவிதைகள் எழுதினான். அவளை ஈர்க்க‌ அவற்றைத் தெரு முனைகளில் நின்றுக் கூவி வாசித்தான். அவனை எல்லோரும் மஜ்னு(ன்) என அழைக்க ஆரம்பித்தனர். அரபியில் அதற்குப் ‘பைத்தியம்’ என்று பொருள். அவள் விழுந்தாள்.

ஆனால் அவளது பெற்றோருக்கு பைத்தியம் என்றழைக்கப்படும் அவனுக்கு அவளை மணம் முடித்துத் தர விருப்பமில்லை. அவர்களைப் பிரித்து அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வைத்தனர். மனம் உடைந்த மஜ்னு பாலைவனத்துள் புகுந்தான். மிருகங்களுடன் வாழத் தொடங்கினான். அங்கும் மணலில் குச்சி வைத்து லைலா பற்றிக் கவிதைகள் எழுதினான். இதைக் கண்டு சகியாத அவன் தந்தை அவனது காதல் பித்தினை ஒழிக்க காபா என்ற புனிதத் தலத்துக்கு அழைத்துச் சென்ற போது லைலாவின் மீதான காதல் இன்னும் நூறு மடங்கு பெருக வேண்டும் என இறையிடம் வேண்டிக் கொண்டான் மஜ்னு.

மறுபக்கம் லைலா கணவனை நெருங்க விடவே இல்லை. நிராகரிப்பின் வலியிலேயே அவன் செத்துப் போனான். அதன் பிறகு லைலாவைச் சந்திக்கப் பல‌ வாய்ப்பிருந்தும் மஜ்னு பாலைவன வாசத்தை விடுத்து அவளை வந்து சந்திக்கவே இல்லை. (கதையின் ஒரு வடிவில் லைலா அவனைத் தேடிப் போய்ச் சந்திந்த போதும் கூட‌ அவன் அவளைத் தொடவே இல்லை என்று இருக்கிறது.) லைலா அந்தத் துக்கத்திலேயே உளம் வெதும்பி நோய் கண்டு இறந்தாள். செய்தி அறிந்து பாலைவனத்தை விடுத்து நகருள் நுழைந்த மஜ்னு அவளைப் புதைத்த சமாதியின் அருகிலேயே படுத்து அழுதே உயிர் விட்டான்.

மரணத்தில்தான் மஜ்னுவும் லைலாவும் சேர்ந்தார்கள். இருவரும் இறுதி வரை தொட்டுக் கொள்ளவே இல்லை. எது மஜ்னுவை அப்படிப் பிடிவாதமாக‌ இருக்க வைத்தது? ஆன்மீகக் காரணங்கள் சொல்கிறார்க‌ள். காதலின் மிகப் பரிசுத்தமான வடிவம் அது என்கிறார்கள்.

ஆனால் அது ஆணுக்கான பிரத்யேகத் திமிரின் துயர் என்றே எனக்குத் தோன்றுகிறது.

*

(2)

அடுத்தது ரோமியோவும் ஜூலியட்டும். இது ஷேக்ஸ்பியரின் நாடகம். மான்டேக் மற்றும் கேப்புலெட் என்ற இரண்டு இத்தாலிய‌ அதிகாரக் குடும்பங்களுக்குள் பல காலமாக‌, பல முறை ரத்தம் சிந்திய ஜென்மப் பகை. ரோமியோ மான்டேக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஜூலியட் கேப்புலட் குடும்பத்தில் ஒருத்தி. ஒரு முறை ரோமியோ உள்ளிட்ட மாண்டேக் குடும்ப இளைஞர்கள் சிலர் கேப்புலெட் குடும்பத்தில் ஒரு விருந்து நடப்பதை அறிந்து அதற்குள் ஊடுருவுகின்றனர். அங்கு அவர்கள் நுழைவதன் நோக்கமே ரோமியோ தான் காதலிக்கும் ரோஸ்லின் என்ற பெண்ணைச் சந்திப்பதே. மறுபக்கம் விருந்து நடப்பதே ஜூலியட்டுக்கு மணம் முடிக்க‌ அவள் தந்தை மாப்பிள்ளை பார்த்திருப்பதன் நிமித்தமே.

ஆனால் அந்த விருந்தில் விபத்தாக‌ ரோமியோவும் ஜூலியட்டும் சந்தித்துக் கொள்ள, முதற் பார்வையிலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அதற்குள் மான்டேக் இளைஞர்கள் கண்டறியப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அன்று இரவே மாளிகையின் உப்பரிகை வழி ஜூலியட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்து காதலைச் சொல்கிறான் ரோமியோ. மறுநாள் இருவரும் ரகசிய மணம் செய்து கொள்கிறார்கள்.

ரோமியோ அன்றிரவு அவளைத் திறக்கிறான். இனித்த உடலுடன் ஜூலியட் வீட்டுக்குத் திரும்புகிறாள். மறுநாள் நடக்கவிருந்த ஜூலியட்டின் திருமணம் அவளது சகோதரனை ரோமியோ ஒரு தெருக் கைகலப்பில் கொன்றதால் ஒரு நாள் தள்ளிப் போடப்படுகிறது.

ஜூலியட் கல்யாணத்திலிருந்து தப்பிக்க அவளுக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த பாதிரியார் ஒரு யோசனை சொல்கிறார். அவர் அவளுக்கு மயக்கமூட்டும் ஒரு மருந்தை அளிப்பார். அவள் இறந்தது போல் நடிக்க வேண்டும். சமாதி செய்த‌தும் ரோமியோ வந்து அவளை மீட்டு இருவரும் சேர்வது. திட்டப்படி அவள் இறந்தது போல் நாடகமாட சமாதி செய்யப்படுகிறாள். ஆனால் அவளை மீட்க ரோமியோ வர வேண்டும் என்று பாதிரியார் அனுப்பிய தகவல் ப்ளேக் தொற்று காரணமாகப் போய்ச் சேரவில்லை. மாறாக, அவள் இறந்த செய்தி அவனைச் சேர்கிறது. அவள் சமாதிக்கு வருகிறான் ரோமியோ. அங்கே அழுது கொண்டிருந்த ஜூலியட்டின் மாப்பிள்ளையைக் கொன்று, தானும் விடமருந்தி உயிர் விடுகிறான். பாதிரியார் வந்து ஜூலியட்டை மீட்க, மயக்கம் தெளிந்து எழுந்தவ‌ள் விஷயமறிந்து சமாதியை விட்டு வர‌ மறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். அங்கு வந்த இரு பகையாளிக் குடும்பங்களும் அத்துயரின் மேல் சமாதானம் கொள்கின்றன.

மிகச் சுலபமாக, மிகச் சுபமாக முடிந்திருக்க வேண்டிய எளிய காதல் கதை. ஆனால் ஆண்களுக்கு மத்தியிலான பகையே ரோமியோவின் காதலைக் கொன்றது. ஆண் தன் காதலை நிலை நாட்ட தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அஃதில்லை என்றாகும் போது அவன் தன்னைத் தானே மாய்க்கவும் தயங்குவதில்லை.

*

(3)

கிரேக்க புராணத்தில் ஒரு காதல் கதை இருக்கிறது. பாரிஸ் - ஹெலன். பாரிஸ் ட்ராய் நகரில் வாழ்ந்த இளவரசன். ஹெலன் ஸ்பார்டா நகரில் வாழ்ந்த மெனெலௌஸ் என்ற அரசனின் மனைவி. பாரிஸ் ஒரு முறை ஸ்பார்டா நகருக்கு விருந்தாளியாக வந்த போது ஹெலன் அழகில் அவள் மீது மோகம் கொள்கிறான். அப்படிப் பிறனில் விழையுமளவு நிகரற்ற உயரழகு வாய்த்தவள்தான் ஹெலன். அவளுக்கும் பாரிஸின் மேல் காதல் உண்டாகிறது. பாரிஸ் ஹெலனை ட்ராய்க்குத் தூக்கிச் செல்கிறான். மெனெலௌஸ் சினமுற்று, தன் சகோதரன் உதவியுடன் ஆயிரம் கப்பல்களில் படைகளுடன் போய் ட்ராய் நகர் மீது போர் தொடுக்கிறான். (ஹெலனை “the face that launched a thousand ships” என்றுதான் வரலாறு வர்ணிக்கிறது.) ஆனால் ட்ராய் வலுவான கோட்டை என்பதால் பல்லாண்டு தாக்குப் பிடிக்கிறது. பாரிஸ் ஹெலனை ஒப்படைக்க மறுத்து விடுகிறான்.

இறுதியில் பிரம்மாண்ட மரக் குதிரையில் பரிசுப் பொருட்களை அனுப்பிச் சமாதானம் செய்வதாக மெனெலௌஸ் அனுப்பியதை நம்பி கோட்டைக் கதவுகள் திறக்கப்பட, மரக் குதிரை உள்ளே நுழைகிறது. அதில் ஒளிந்திருந்த வீரர்கள் இரவில் வெளியே வந்து ட்ராய் நகரைத் தாக்கத் தொடங்குகிறார்கள், கோட்டைக் கதவுகளைத் திறந்து விடுகிறார்கள். சில நாட்களிலேயே ட்ராய் வீழ்கிறது. பாரிஸ் கொல்லப்படுகிறான். ஹெலன் மறுபடி மெனெலௌஸ் மனைவியாகி ஸ்பார்டா நகருக்குத் திரும்புகிறாள். பெண் மீதான‌ காதலின் நிமித்தம் ஒரு போர் நடந்து ஒருவன் செத்து ஒரு நகரம் அழிக்கப்படுகிறது.

ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸி காவியங்களில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. நம் ராமாயணத்தை இதனுடன் இணை வைக்கலாம். இங்கும் சீதையின் பொருட்டே ராமன் இலங்கை மீது போர் தொடுத்து அழிக்கிறான்; ராவணனை வேரறுக்கிறான்.

இதில் பாரிஸ், மெனெலௌஸ் ஆகிய இரண்டு ஆண்களில் யாரேனும் ஒருவர் போய்த் தொலைகிறது என ஹெலனை விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

ஆணுக்குக் காதல் என்பது தன் பலத்துக்கும் அதிகாரத்துக்கும் கிடைக்கும் அங்கீகாரம்.  ஆக, அதன் பரிசான‌ காதலியை மற்றொருவன் அபகரித்துச் செல்வது என்பது அவனது தன்முனைப்புக்கு விடுக்கப்படும் சவால். அதனால்தான் இப்படி முட்டாள்தனமான லாப நஷ்டக் கணக்கு கொண்ட யுத்தங்களை அவன் வரலாறெங்கும் நிகழ்த்தி இருக்கிறான். அரசன் என்றால் போர் நிகழும். சாதாரணன் அவனளவில் இதே போல் போராடுகிறான்.

ஆண் மரித்தே போனாலும் காதலை மீட்கவே முனைவான். அவனது பிறவிச் சாபம் அது.

(4)

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்ரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி. அப்போது நாட்டை ஆண்டிருந்த‌ இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகளான‌ அமராவதி மீது அவனுக்குக் காதல். அம்பிகாபதியும் நல்ல கவி. அதனால் இயல்பாகவே அமராவதிக்கு அவன் மீது காதல் வந்தது. சொற்களும் வெட்கமுறும் வண்ணம் அமராவதியின் அழகை அம்பிகாபதி பாடல்களாக வடித்துக் கொண்டே இருந்தான். அரசனுக்கு இது தொடர்பாக சந்தேகம் எழ, அவன் கம்பரையும் அவரது மைந்தனையும் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்தான். அங்கே அமராவ‌தியின் பேரெழில் கண்டு நிலை தடுமாறிய அம்பிகாபதி அவளை வர்ணித்து ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். குலோத்துங்கன் கடும் கோபம் கொள்ள, சூழலைச் சமாளிக்க கம்பர் அப்பாடலை சரஸ்வதி தேவி மீது பாடி முடித்தார்.

அன்றைக்கு அம்பிகாபதியின் தலை தப்பித்தாலும் தும்மலும் காதலும் அப்படி அடக்கி வைத்து விட முடியுமா என்ன! ஒரு நாள் விஷயம் வெளியே வந்தது. சினத்தின் உச்சத்தில் மன்னன் அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதித்தான். கம்பர் கண்ணீருடன் கருணை கோரி நின்றார். ஒட்டக்கூத்தர் ஆலோசனைப்படி அம்பிகாபதி காதல் கலவாத பக்திப் பாடல் நூறு பாடிக் காட்டினால் அவனை மன்னித்து விடுவதாக அறிவித்தான் மன்னன்.

அம்பிகாபதியின் திறனுக்கு அச்சவால் பிள்ளை விளையாட்டு. மறுநாள் அவை கூடியது. அமராவதி ஒரு திரைக்குப் பின் அமர்ந்து நடப்பதைக் கவனித்திருந்தாள். அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். அமராவதி ஒவ்வொரு பாடலாக எண்ணிக் கொண்டே இருந்தாள். நூறு பாடல் பாடி முடித்ததும் அவள் உற்சாகமாக திரையை விலக்கி அம்பிகாபதி முன் வந்து நின்றாள். அவளது ந‌ல்வனப்பைக் கண்டு வெறியேறிய‌ அம்பிகாபதி உடனே ஒரு காதல் பா இசைத்தான். அவ்வளவுதான் ஒட்டக்கூத்தர் அவன் தோற்றதாக அறிவித்தார்.

ஏனெனில் அம்பிகாபதி பாடிய முதற்பா கடவுள் வாழ்த்து. அது பாடல் கணக்கில் வராது. எனவே அவன் அது வரை 99 பக்திப் பாடல்கள் மட்டுமே பாடியிருந்தான். இதை அறியாத அமராவதி அவன் முன்பு தோன்றி, அவனது கவனத்தைச் சிதற வைத்து தொடர்ச்சியை அறுத்து விட்டாள். சோழக் கோ அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றினான். கம்பர் மனமுடைந்து நாட்டை விட்டு வெளியேறினார். சிறிது காலத்தில் அமராவதியும் துயரில் உழன்றே செத்துப் போனாள். காதலர்கள் வழமை போல் மரணத்தில் சேர்ந்தனர்.

பெண்ணின் அவசரத்துக்கும் சேர்த்து ஆணே காதலில் தண்டனையை அனுபவிப்பதை இதில் கவனிக்கலாம். அவனது போராட்டம் உலகோடு மட்டுமல்ல, காதலியோடும்தான்.

*

(5)

16ம் நூற்றாண்டில் அம்பிகாபதி - அமராவதி கதைக்கு நேர் எதிரான ஒரு கதை உண்டு. அன்றைய முகலாய சாம்ராஜ்யத்தில் அக்பர் அரசனாக, (பிற்பாடு ஜெஹாங்கீர் எனப் புகழ் பெற்ற) சலீம் இளவரசனாக இருந்தார்கள். லாஹூரைச் சேர்ந்த புத்திசாலிப் பெண் ஷர்ஃப்-உன்-நிசா அக்பரின் அரசவையில் இடம் பெற்றிருந்தாள். அவளுக்கு இன்னொரு பெயர் அனார்கலி. அப்போது அலுவல் நிமித்தம் தேச இளவரசனுடனும் பழக வேண்டிய சூழல் அமைந்த‌ போது சலீமுக்கும் அனார்கலிக்கும் காதல் முகிழ்த்தது. மனதைக் கடந்து உடலுக்கும் விரைவிலேயே தாவியது. விஷயம் பேரரசன் அக்பர் காதுகளுக்குச் சென்றது.

அக்பரின் எச்சரிக்கைகள் ஏதும் சலீமின் காதில் விழவில்லை. எல்லாம் காதல் ப‌டுத்தும் பாடு. சலீம் தன்னைப் புராதன‌ அரேபியத்தின் மஹா காதலனான மஜ்னு என்றே கருதிக் கொண்டான். அனார்கலியின் மீது காதலை அளவின்றிப் பொழிந்தான். அக்பருக்கு வேறு வழி இல்லை. சலீம் இல்லாத‌ சமயம் அக்பரின் ஆணைப்படி அனார்கலியைச் சுற்றி நால் புறமும் நெருக்கமான சுவர் எழுப்பி காற்றுப் புகாம‌ல் மூடினார்கள். உயிருடன் சமாதி.

விஷயமறிந்து சலீம் அங்கே வந்து சேர்வதற்குள் அவள் செத்துப் போனாள். அதற்கு சலீம் எப்படி எதிர்வினை ஆற்றினான் என்பது பற்றி வரலாற்றில் குறிப்புகள் இல்லை. ஆனால் அதன் பிறகு அனார்கலி சமாதி இருந்த இடத்தில் ஒரு நினைவு மாளிகை எழுப்பினான். அது இன்றும் லாஹூரில் காற்றுடன் மௌனக் காதல் கதைக‌ள் சொல்லியபடி நிற்கிறது.

அதன் பிறகு சலீம் பேரரசனாகி நன்கு நாடாண்டான். புகழ் பெற்ற அரசி நூர் ஜஹான் உள்ளிட்ட பலரை மணம் செய்து கொண்டான். ஆனால் அவை யாவும் புற வரலாறுதாம். அகத்தில் ஒரு பெண்ணின் மரணத்துக்குத் தன் காதல் காரணமாகி விட்டதை எண்ணி ஆயுள் முழுக்கக் குற்றவுணர்வுடனே வாழ்ந்து மடிந்திருப்பான். கற்பனைக்கெட்டாத சர்வாதிகாரம் கொண்ட தன் தகப்பனை ரகசியமாக வெறுத்திருப்பான். அவளற்ற வெறுமையில் திணறியிருப்பான். யோசித்துப் பார்த்தால் இதிலுமே ஆண்தான் பலி.

அனார்கலியின் கல்லறை மீது ‘மஜ்னு சலீம் அக்பர்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள‌ வரி:

“என் காதலியின் முகத்தை இன்னொரு முறை நான் கரத்தில் ஏந்த முடிந்தால்
கடவுளுக்கு நான் செத்து உயிர்த்தெழும் வரை நன்றியுடைவனாயிருப்பேன்.”

செத்தவளுக்கு ஒரு நாள் வேதனையோடு போனது. இருப்பவனுக்குத் தினமும் ரணம்.

*

(6)

இதே போல் இன்னொரு துன்பியல் கதை ஆன்டணியும் க்ளியோபாட்ராவும். இதையும் ஷேக்ஸ்பியர் நாடகமாக்கி இருக்கிறார் என்றாலும் இது உண்மையில் நடந்த வரலாறு. க்ளியோபாட்ராவுக்கு ஏராளம் கணவர்கள் காதலர்கள் உண்டு என்றாலும் மனித குலம் ஆன்டணியை மட்டுமே அவளது காதலன் என்று நினைவில் கொள்ளக் காரணம் உண்டு.

க்ளியோபாட்ரா கிறிஸ்து பிறப்பதற்கு ஐம்பதாண்டுகள் முன் எகிப்தில் வாழ்ந்த பேரரசி. அன்றைய தேதியில் உலகப் பேரழகி. “The nose of Cleopatra: if it had been shorter, the whole face of the earth would have changed” என்று 17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு தத்துவ ஞானி ப்ளைஸ் பேஸ்கல் அவளது மூக்கு குறித்து எழுதினார். ஆண்கள் அவளை அடையத் துடித்தனர்.

தன் தந்தை மறைவுக்குப் பின் தனது சகோதரர்கள் இருவரையும் மணம் செய்து நாட்டை ஆட்சி செய்தவள். அதே சமயத்தில் ரோம் மன்னன் ஜூலியஸ் சீஸருடன் காதல் உறவில் இருந்து குழந்தை பெற்றவள். சீஸர் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட‌ பின் அவரிடம் தளபதிகளாக இருந்த மார்க் ஆன்டணியும் மார்கஸ் ஏமிலியுஸ் லெபிடஸும்  சீஸரின் வளர்ப்பு மகனான ஆக்டேவியன் சீஸரும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டனர். ரோம் ராஜ்யத்தின் கீழிருந்த எகிப்தைக் கவனிக்கும் பொறுக்கு ஆன்டணிக்கு வந்தது. அவர் அங்கிருந்த ஏழாம் க்ளியோபாட்ராவையும் சேர்த்தே கவனித்துக் கொண்டான்.

ஆன்டணிக்கு க்ளியோபாட்ரா தன் போர்ப் படைகளின் ஆதரவை நல்கினாள். பதிலுக்கு அவளுக்குத் தொந்தரவாக அவளது சகோதரி ஒருத்தியைக் கொன்றழித்தான் ஆன்டணி. இருவரும் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரவு பகல் பாராது, புறச் சூழல் பற்றிய கவலைகள் இல்லாது காதல் பறவைகளாகத் திரிந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன.

இடையே ஆன்டணிக்கும் ஆக்டேவியனுக்கும் உரசல்கள் எழுந்தன. அதைச் சரி செய்ய ஆக்டேவியனின் தங்கையை ஆண்டனி மணந்தான். அதே சமயம் க்ளியோபாட்ராவின் உறவும் தொடர, அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தது ஆக்டேவியனுடனான பகையை அதிகரித்தது. அதன் உச்சமாக ஆன்டணி க்ளியோபாட்ராவை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டு ஆக்டேவியனின் தங்கையுடனான திருமணம் உறவை முறித்து அவளைத் திருப்பி அனுப்பினான். கடுப்பான ஆக்டேவியஸ், ஆன்டணியை ரோமின் துரோகி என அறிவித்து க்ளியோபாட்ரா மீது போர் தொடுத்தான். யுத்தத்தில் தோல்வியுற்ற ஆன்டணியும் க்ளியோபாட்ராவும் எகிப்துக்குத் தப்பித்து ஓடினார்கள்.

ஆக்டேவியன் எகித்துக்கும் அவர்களைத் தேடி வந்தான். அங்கே இருவரும் வெவ்வேறு இடங்களில் ஒளிந்திருந்தார்கள். க்ளியோபாட்ரா தற்கொலை செய்து இறந்ததாக வந்த தவறான செய்தியை நம்பிய‌ ஆன்டணி வாளின் மீது பாய்ந்து தானும் சாக‌ முயன்றான். உயிர் போய்க் கொண்டிருக்கையில் க்ளியோபாட்ரா உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டான் ஆன்டணி. அவனது நண்பர்கள் அவனை க்ளியோபாட்ரா ஒளிந்திருந்த இடத்துக்குத் தூக்கிச் செல்ல, அவளது மடியில் கிடந்து உயிர் துறந்தான் ஆன்டணி.

ஆக்டேவியினால் அவமானப்படுத்தப்படுவோம் என்று அஞ்சிய க்ளியோபாட்ரா ஒரு கொடிய விடமுடைய நாகத்தைத் மார்பில் கொத்த விட்டு இறந்தாள் எனகிறார்கள். அவள் ஆக்டேவியனையும் மயக்க முயன்று தோற்றதாலேயே இறந்தாள் என்று ஒரு வடிவமும் உண்டு. ஆன்டணி - க்ளியோபாட்ரா ஆகிய இரண்டு பெருந்தடைகளும் நீங்கியதால் ரோம் சாம்ராஜ்யத்தின் எதிர்ப்பற்ற ஒற்றை அரசனானன் ஆக்டேவியன்.

க்ளியோபாட்ராவின் காதலர்களில் ஆன்டணி ஏன் தனித்துவமானவன்? அவன் மட்டுமே அவளுக்காக உயிரை விட்டான். ஆண் போரில் தோற்று நாட்டை விட்டோடிய போதும் கலங்காதவன். ஆனால் காதலி செத்ததாகச் செய்தி கேட்ட கணம் வாழ்வு வெறுத்தான்.

ஆண்கள் காதலின் பொருட்டு உணர்ச்சி வசப்படும் தருணங்களும் இவ்வாறு உண்டு.

*

(7)

1997ல் வெளியான திரைப்படமான Titanic ஆண் காதலின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. தியாகம். 1912ல் டைட்டானிக் என்ற பிரம்மாண்ட சொகுசுக் கப்பலில் ரோஸ் என்ற பெண்ணும், அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் பெரும்பணக்காரனான கேல்டனும், அவளது தாயும் கிளம்புகின்றனர். அத்திருமணம் தங்களைக் கடனிலிருந்து மீட்கும் என்பது அந்த அம்மாளின் நம்பிக்கை. ரோஸுக்கு அதில் விருப்பமில்லை. அதே கப்பலில் ஜேக் என்ற இளைஞனும் சூதாட்டத்தில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் ஜெயித்து நுழைகிறான். ரோஸ் விரக்தியில் கப்பலிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போகும் போது ஜேக் காப்பாற்றுகிறான். அவர்களுக்குள் நட்பும், சீக்கரம் காதலும் உண்டாகிறது.

ஜேக் ரோஸை நிர்வாணமாக வரைகிறான். அவளுடன் கலவி கொள்கிறான். அப்போது கப்பல் பெரிய பனிப்பாளத்தில் மோதிச் சேதமுறுகிறது. கேல்டன் ரோஸில் நிர்வாண ஓவியத்தைப் பார்த்து சினத்தில் ஜேக்கைக் கப்பலில் ஓர் அறையில் விலங்கிட்டு சிறை செய்கிறான். கடல் நீர் புக‌, கப்பல் மூழ்க ஆரம்பிக்கிறது. அதில் ஆபத்து காலப் படகுகள் அதிகமில்லை என்பதால் பெண்களும், குழந்தைகளும், சில‌ பணக்காரர்களும் இருக்கும் சொற்ப படகுகளில் கடலில் இறக்கப்படுகிறார்கள். ரோஸ் படகேறப் போகும் தாயையும் கேல்டனையும் விட்டு விலகி ஜேக்கைத் தேடிப் போகிறாள். அவனை விடுவிக்கிறாள்.

ஜேக்கும் ரோஸும் பெரும் சிரமத்திடையே தப்பிக்க முனைகையில் கப்பல் இரண்டாக உடைந்து மொத்தமும் மூழ்குகிறது. ஜேக் ரோஸை ஒரு மரப் பலகை மீது ஏற்றுகிறான். அவனும் உடன் ஏற இடமில்லை என்பதால் உறையும் குளிருடைய கடல் நீரில் அவன் அவளைப் பற்றியபடி மிதந்து இறந்து கடலுக்குள் போகிறான். உயிர் காக்கும் படகு ஒன்று வெகுநேரம் கழித்து வந்து ரோஸை மீட்கிறது. ரோஸ் இறுதி வரை திருமணம் செய்யாமல் ஜேக்கின் மனைவி என்ற அடையாளத்துடனேயே வாழ்ந்து முடிக்கிறாள்.

இது மேலே பார்த்த சலீம் அனார்கலி கதைக்குத் தலைகீழானது. இங்கே காதலி தன் காதலனை நினைத்தபடி ஆயுள் முழுக்கத் தனித்தே வாழ்ந்து மரிக்கிறாள். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் வேறொன்று. ஆண் பலவான். எப்படிக் கப்பல் மூழ்குகையில் உயிர் பிழைக்க பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அப்படி இருக்கும் ஒரு மரப் பலகையில் காதலன் ஏறாமல் காதலிக்கு விட்டுத் தருவதே அறமும் காதலும். அப்படித்தான் ஒரு காதலன் நடந்து கொள்ள முடியும். தன் உயிரைக் கொடுத்தேனும் காதலியின் உயிரைக் காக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஆனால் பரவலாக ஏற்கப்பட்ட விதி. அவனுக்கும் ஒரு பலகை இருந்திருக்கலாம் என்று நமக்குத் தோன்றுமே ஒழிய, அவளுக்கு பதில் அவன் மரப் பலகையில் ஏறிப் பிழைத்திருக்கலாம் என்று தோன்ற‌வே செய்யாது. அப்படித்தான் மனித இனம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

ஆண் காதலில் தியாகம் செய்யச் சித்தமாக இருக்க வேண்டும், தன் உயிரையும் கூட.

*

(8)

1956ல் தி. ஜானகிராமனால் எழுதப்பட்ட மோக முள் நாவல் மற்றுமொரு கோணத்தைத் தருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தஞ்சையில் நிகழும் கதை. பாபு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் மிக்க, இருபது வயதைத் தொடும் பிராமண இளைஞன். யமுனா அவளை விட பத்து வயது அதிகம் கொண்ட மராட்டியப் பூர்வீகம் கொண்டவள்.

பால்யத்திலிருந்தே யமுனாவுடன் பழகி வரும் பாபுவுக்கு வயது வரும் போது அவளது அழகு மனதில் மோகத்தை எரியச் செய்கிறது. விபத்தாக பக்கத்து வீட்டுக் கிழவனின் இளம் மனைவியுடன் கூடி விடுகிறான். அது தான் யமுனா மீதான காதலை அவனுக்கு உணர்த்துகிறது. அவள் கடவுள் போல் தோன்றுகிறாள். அவளுக்கு துரோகம் செய்து விட்டதாகத் தோன்றுகிறது. அவளிடம் எல்லாவற்றையும் சொல்கிறாள். சமூகத்தைக் காட்டி இது பொருந்தாக் காதல் என்று சொல்லி நிராகரித்து ஊரை விட்டுப் போகிறாள்.

அந்தத் துயரிலிருந்து வெளிவரும் உத்தேசத்தில் வெறியுடன் கர்நாடக‌ இசை கற்கத் தொடங்கி அதில் முன்னேற்றம் காண்கிறான். எட்டாண்டுகள் கழித்து யமுனாவைச் சென்னையில் சந்திக்கிறான். வறுமை அவள் இளமையைக் குலைத்து விட்டிருந்தது. அப்போதும் யமுனா திருமணம் செய்து கொள்ளவே இல்லை. பாபுவுக்குத் தன்னைத் தருகிறாள். கலவி முடிந்ததும் பாபுவிடம் “எல்லாம் இதற்குத்தானா?” என்று கேட்கிறாள். பாபுவிடம் அதற்குப் பதில் இல்லை. “இதற்குத்தான்” என்று அவளே பதில் சொல்கிறாள்.

அதன் பிறகும் அவர்கள் சேர்ந்து வாழ்வதில்லை. அவ்வளவுதான் அவர்களின் உறவு. பாபு இனி அவன் வழியைப் பார்த்துக் கொண்டு ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதில் கவனித்தால் ஆண் இந்தக் காதலில் தன் காதல் அல்லது காமம் சார்ந்து எந்த முடிவையும் எடுப்பதே இல்லை என்பது விளங்கும். பெண்ணே வழி நடத்துகிறாள். கிழவரின் இளம் மனைவியுடன் பாபு கூட நேர்ந்ததும் அவளது முடிவுதான். இறுதியில் யமுனாவுடன் புணர நேர்ந்ததும் அவளது முடிவே. பாபு இதில் வெறும் உடல் மட்டுமே. தொடர்ந்து காமத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அலைவது மட்டுமே அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. காதலோ காமமோ முடிவுகளைப் பெண்களே எடுக்கிறார்கள்.

யமுனா பாபுவுக்குத் தன் உடலை ஒப்புவிக்கும் இடத்தில் நிகழும் உரையாடல் இது:

“எனக்கு நீதான் வேணும்.”

“சரி எடுத்துக்கோ…”

“அன்னிக்கி நான் கேட்டேனே?”

“அப்ப எனக்கு மனசு இடங்கொடுக்கவில்லை. இப்ப உயிரில்லாமல் கிடக்கும் போது போனால் போறது என்று தோன்றுகிறது.”

“உயிரில்லா பொருளையா என்னிடம் கொடுக்கிறாய்?”

“நீ உயிர் கொடேன்.”

போனால் போகிறது என்றுதான் யமுனா சம்மதிக்கிறாள். அதில் காமம் பெறும் சுயநலம் இருக்கிறது. அதற்காக மற்றவரிடம் போகாமல் பாபுவைத் தேர்ந்தெடுப்பதில் அவளது காதல் துலங்கத்தான் செய்கிறது. ஆனால் பாபு இதில் வெறும் பகடைக்காய்தானே!

காதலில் ஆயுள் முழுக்க பெண்களால் அலைக்கழிக்கப்படுவதே ஆண்களின் விதி.

*

(9)

2018ம் ஆண்டு வெளியான 96 படத்தை இதன் இன்னோர் உதாரணமாகக் கொள்ளலாம்.

பள்ளிக் காலத்தில் ராமும் ஜானுவும் சொல்லிக் கொள்ளாமலே காதலிக்கிறார்கள். சூழல் அவர்களைப் பிரிக்கிறது. கல்லூரிக் காலத்தில் ஜானுவைத் தேடி வரும் ராம் ஒரு சிறிய குழப்பத்தில் ஜானுவுக்குத் தன் மீது விருப்பமில்லை என்று எண்ணிக் கொள்கிறான். அவளைத் தொந்தரவு செய்யாமல் விலகுகிறான். ரகசியமாக அவள் திருமணத்துக்குச் சென்று காண‌ முடியாமல் ஓடி வருகிறான். பிற்பாடு இருபதாண்டுகள் கழித்து பள்ளி ரீயூனியனில் ராமும் ஜானுவும் சந்திக்கிறார்கள். ராம் மாறவே இல்லை. அவன் காதலும்.

ஜானு திருமணமாகிக் குழந்தை பெற்றவள். காமத்தின் சாயை சிறிதுமின்றி அவ்விரவை அவர்கள் ஒன்றாகக் கழிக்கிறார்கள். ராம் திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமின்றி, இன்னும் கன்னித்தன்மை இழக்காது இருக்கிறான் என்பதை ஜானு புரிந்து கொள்கிறாள். குற்ற உணர்வில் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறாள். அழுது விடை பெறுகிறாள். ராம் திருமணம் செய்யப் போவதில்லை. ஜானுவுடனான தன் பள்ளிக்கால நினைவுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தது போலவே அந்த ஓர் இரவையும் இனி அவன் ஞாபகங்களில் ஏந்தி நின்று மகிழ்ச்சி கொள்ளப் போகிறான்.

இதில் கவனிக்க வேண்டியது ராம் ஏன் அப்படித் திருமணம் செய்யாமல் இருக்கிறான் என்பதே. ஜானுவின் காதலும் குறைத்து மதிப்பிட முடியாது. அவனுக்கு இணையாக அவளும் அவனை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அவன் மட்டுமே அந்த முடிவெடுக்கிறான். காரணம் ஆண் என்ற திமிர்தான். அவனால் முடியும். அவன் சமூகத்துக்காக ஒரு சமரசத்துக்குள் புக வேண்டியதில்லை. இரட்டை வாழ்க்கை வாழும் கட்டாயம் இல்லை. அதனால் அவன் தன் காதலைப் பற்றிக் கொண்டு வாழ்கிறான்.

ஆண் என்ற அகங்காரம் காதலில் மட்டுமல்ல, காதல் பிரிவிலும் தூக்கலாகவே இருக்கும். பெண் அதை உள்ளுக்குள் புதைத்து வளைந்து கொடுக்க‌, ஆண் பிடிவாதமாய் நிற்பான். அதன் வழி தனக்குத் தானே வதை தருவான். அதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை.

*

(10)

2022ல் வெளியான லவ் டுடே படத்தில் காதலில் பெண்களே முடிவெடுக்கும் இடத்தில் இருப்பதை, ஆண் அதைச் செயல்படுத்தும் இடத்தில் மட்டுமே இருப்பதைச் சுட்டும் ஒரு நல்ல சமகால உதாரணத்தைக் காணலாம். அதில் பிரதானக் காதலர்கள் உத்தமனும் நிகிதாவும் என்றாலும் நான் இங்கே குறிப்பது மாமாக் குட்டி நிகிதா ஜோடியைப் பற்றி.

மாமக்குட்டி நிகிதாவின் முன்னாள் காதலன். அவனிடமிருந்து அவள் விலகி வந்து வெகு நாளாகிற்று. இப்போது அவள் காதலிப்பது உத்தமனை. ஆனால் உத்தமனுடன் பிணக்கு உண்டாகும் போது அவள் மனம் இயல்பாகவே மாமாக் குட்டியைத் தேடுகிறது. அவனை சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரை இரவில் காரில் லாங் ட்ரைவ் போய் வரலாமா எனக் கேட்கிறாள். அவனுக்கு நிச்சயம் சந்திப்பைத் தாண்டி அதில் வேறு எதிர்பார்ப்பு இருந்திருக்கும். எனவே உடனே சம்மதித்து அழைத்துப் போகின்றான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி ஏதும் நடப்பதில்லை. அது வெறும் சைவப் பயணம். அவள் தன் மனக் கிலேசத்தைச் சரி செய்து கொண்டு திரும்புகிறாள். அவன் ஏமாற்றம் அடைந்திருக்க‌ வேண்டும். அல்லது தன்னை நீங்கிப் போன காதலி இன்னும் தன்னிடம் இளைப்பாறல் தேடுகிறாள் என்பதையே தனக்கான அங்கீகாரமாகக் கூட கருதிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இந்நாள் காதலன் மட்டுமல்ல, முன்னாள் காதலன் கூட காதலியின் கையில் பாவைதான். அவள் நினைப்பு மிக எளிதில் நிறைவேறும், அந்த இடத்தில்தான் இயற்கை ஆணையும் பெண்ணையும் வைத்திருக்கிறது என்பதைத்தான்.

*

காதலிக்க ஆண், பெண் இருவரும் அவசியம். ஆனால் இரண்டும் வெவ்வேறு. சொல்லப் போனால் இரண்டும் நேரெதிர். காமத்தின் பொருட்டே ஆண் காதல் என்பது பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி பல சிடுக்கான விஷயங்களை அடக்கியது.

காதலிக்கும் ஆண் உண்மையில் சிறகுகள் கட்டப்பட்ட பட்சி போன்றவன். அக்காதல் தீரும் வரை அல்லது அவன் சாகும் வரை பறக்க இயலாத சாபம் அவனைப் பீடிக்கும்.

ஆணுக்குக் காதல் என்பது வெற்றி. அதற்காகப் போர் எடுப்பான். அவனுக்குக் காதல் என்பது மானம். அதற்காக உயிரைக் கொடுப்பான். இப்படிச் சொல்கையில் ஒரு காதல் உறவில் அவனே ஆதிக்கம் செலுத்துபவன் போன்றதொரு தோற்றம் எழுந்தாலும் அது உண்மையில்லை. அது எல்லாம் வெளியே. காதலுக்குள் நடப்பது வேறு கதை. அவன் தொடர்ந்து தன் காதலியுடன் போராடுகிறான். அவளால் அலைக்கழிப்படுகிறான்.

காதலுக்காக‌ அவன் தியாகங்கள் செய்வான். காமத்தின் பொருட்டே ஆணின் காதல் என்று சொல்லப்படுவதைக் கூட உடைத்து காதலின் நிமித்தம் புலனை அடக்குவான். காதலில் அவனது எதிரிகள் பட்டியல் நீளமானது. காதலியின் குடும்பம் தொடங்கி சக ஆண்கள், பெற்றோர், உற்றார், சமூகம், அந்தக் காதலி வரை சகலரும் விரோதிகளே!

ஒட்டுமொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஆண்களின் அத்தனை கீழ்மை நிறைந்த அயோக்கியத்தனங்களையும் தாண்டி காதலிக்கும் ஆண்களின் மீது ஒருவிதமான‌ பரிவுதான் உண்டாகிறது. ஏனெனில் அவனுக்கு காதல் என்பது காதல் மட்டுமல்ல.

மஜ்னு முதல் மாமாக் குட்டி வரை காதலன்கள் யாவரும் பரிதாபத்துக்குரியோரே!

***

(மெட்ராஸ் பேப்பர் ஃபிப்ரவரி 8, 2023 காதலர் தின சிறப்பிதழில் வெளியானது)

  •  

ஓர் அழகியைக் கொண்டாடுவது எப்படி?

பெண் என்கிற‌வள் ஆணுக்குச் சமமான உயிர்த்திரள்; வெறும் நுகர்வுப் பண்டம் அல்ல. அவள் திறமையை அங்கீகரித்து, வாய்ப்புகளை உறுதி செய்து, ஆளுமையை மதிக்கும் அதே சமயம் அவளது அழகினைக் கொண்டாடவும் தவறக்கூடாது. அழகு ஒருத்தியிடம் அதீதமாகக் கொட்டிக் கிடக்கையில் அது ஆராதனைக்கு உரியது. குறிப்பாக நடிகைகள், மாடலிங் செய்வோர் தம் அழகு ரசிக்கப்படவும், பரப்பப்படவுமே மிக‌ விரும்புகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் திறமை என முன்வைப்பது பெரும்பாலும் அழகைத்தான்.

மலை உள்ளிட்ட இயற்கைக் கொடைகளோடும் இசை போன்ற‌ கலைச் சரக்குகளோடும் இணை வைத்துக் கொண்டாடத்தக்கது பெண்ணழகு. பலர் அதை ரகசியமாகவும் சிலர் பகிரங்கமாகவும் செய்கிறார்கள். ரசிக்கப்படுவதால் வெட்கப்படலாம்; ரசிப்பதற்கே கூட‌ வெட்கப்படுவதா! எப்படியோ பெண் ரசிப்புத் தொழில் சிற‌ப்பாகவே நடந்து வருகிறது.

அழகென்றால் அன்னை தெரசா, பிடித்தவரே பேரழகு என்கிற உணர்ச்சிவசங்களைக் கடந்து பார்த்தால் அழகு என்பது ஒருவர‌து புறத் தோற்றம் மற்றும் உடல் மொழியினால் ஈர்க்கப்படுவதே. புறத்தோற்றம் என்பதில் ஒருவரது முகம், உடல் வடிவு எல்லாம் சேர்ந்து கொள்ளும். உடல் மொழியில் அசைவுகள, நகர்வுகள், குரலினிமையைச் சேர்க்கலாம்.

அழகு (Beauty) என்றால் என்ன என்று யோசிக்கிறேன். அது காட்சியால் மகிழ்வூட்டுவது. காட்சியால் மட்டுமே. மலரின் தோற்றத்தை ரசிப்பது மட்டுமே அழகில் சேர்த்தி. அதன் தோற்றம் கொண்டே அது எவ்வளவு மென்மையாக இருக்கும், எவ்வளவு வாசனையாக இருக்கும் எனக் கற்பனை செல்வது இயல்பு. அதுவும் நீட்டிக்கப்பட்ட ஓர் அழகே. அந்த‌ மானசீக அழகு வரைதான் கோடு. பூவைப் பறிப்பதோ, ஸ்பரிசிப்பதோ, கசக்குவதோ அழகை ரசிப்பதில் வராது. போலவே பெண் அழகை ரசித்தல் என வரும் போது அங்கே பாலியல் கிளர்ச்சிக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை. அதாவது காமத்தின் கண்ணாடி அணிந்து அழகை ரசிக்கலாகாது. மானுடவியல்படி இயல்பாகவே ஆழ்மனதில் செழித்த பெண்டிர் மீதே ஆண் மனம் லயிக்கும் என்றாலும் அதற்கு விதிவிலக்குகளும் ஏராளம்.

தோற்றத்தில் உள்ள‌ சீர்மை (Symmetry) ஒன்றை அழகாகத் தெரிய‌ச் செய்யும் முக்கியக் காரணி. அதை அளவுகோல் வைத்துக் கறாராக‌ அளக்கும் கேத்திர கணிதம் என்பதாக எடுக்காமல் கண்களுக்கு இனிமையாகத் தெரியும் முப்பரிமாண‌ வடிவக் கச்சிதம் எனப் புரிந்து கொள்ளலாம். முதல் பார்வையிலேயே மனம் அளந்து தீர்மானிக்கும் விசித்திரம்!

பிறந்த பசுஞ்சிசு எவரும் சொல்லித் தராமலேயே முலையுறிஞ்சத் தொடங்குவது போல் நமக்கு பெண்களை ரசிக்கும் நுட்பம் மரபணுக்களிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றாலும் புட்டிப்பால் கட்டம் ஒன்று வருவது போல் கொஞ்சம் முறையாகக் கற்கலாம்.

பெண் ரசனை என்பது வாழ்க்கைச் சுழற்சி (Life Cycle). இதில் மூன்று கட்டங்கள் உண்டு. முதல் கட்டம் ரசிக்க ஒருவரைத் தேர்ந்தெடுத்தல். இரண்டாவது கட்டம் அவரை ரசித்தல். மூன்றாவது கட்டம் அவரை விலகுதல். ஒவ்வொன்றையும் எப்படிச் செயல்படுத்துவது?

*

தேர்ந்தெடுத்தல்

முதற்கோணல் முற்றிலும் கோணலாகும் அபாயத்தால் தேர்ந்தெடுத்தல் ஒரு முக்கியக் கட்டம். அதற்கு கண்களையும் மனதையும் முன்முடிவு இல்லாமல் திறந்து வைத்திருக்க வேண்டும் - கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் மீனின் வருகைக்குக் காத்திருப்பது போல.

அது ஒரு திரைப்படத்தின் நாயகியாக இருக்கலாம். நெடுந்தொடர் துணை நடிகையாக இருக்கலாம். ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் மாடலாக இருக்கலாம். அல்லது ஒரு நாளிதழ் விளம்பரத்தின் உறைவை மீறி உயிர்த்திருக்கின்ற‌ முகமாக இருக்கலாம்.

எனக்கு அப்படித்தான் பதின்மத் தொடக்கத்தில் பெப்ஸி விளம்பரம் ஒன்றில் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். அன்று அவர் உலக அழகி பட்டம் பெற்றிருக்க‌வில்லை; சினிமா நடிகை கூட‌ இல்லை; அவரது பெயர் கூடத் தெரியாது. ஆனால் அப்போதே அவர் நிகரற்ற அழகி எனப் பதிந்து போனது. அதிலிருந்து சுமார் பதின்மூன்று ஆண்டு அவரே உலகின் உச்சப் பேர‌ழகி என என் மனதில் சம்மணமிட்டிருந்தார். அது ஒரு திறப்புக்கான‌ கணம்!

ஆம். இப்படி அத்தனை பேரையும் சலித்தெடுபதில் உங்கள் இலக்கு இன்றைய தேதியில் உங்களைப் பொறுத்த வரை உலகின் உச்சமான‌ பேரழகி யார் என்பதைக் கண்டறிவதே.

முன்பெல்லாம் இதன் பொருட்டு சினிமா பார்க்க வேண்டும், சீரியல் பார்க்க வேண்டும், ஃபேஷன் ஷோக்கள் பார்க்க வேண்டும், தினசரிகளையும் சஞ்சிகைகளையும் பார்க்க வேண்டும். பணம், நேரம் இரண்டு செலவும் அதிகம். இன்றைய அழுத்தம் மிக்க அவசர வாழ்வில் அது பலருக்கும் சாத்தியமில்லை. உலகைச் சுற்றாமல் அம்மையப்பனைச் சுற்றி வந்து ஞானப் பழம் பெற்ற பிள்ளையார் மாதிரி இருந்த இடத்திலேயே இவர்கள் அனைவரையும் தரிசிக்க ஒரு மார்க்கம் இருக்கிறது. இன்ஸ்டாக்ராம்! மொத்த உலகமும் ஒரு கிராமம் என்ற சித்தாந்தம் இந்த இன்ஸ்டா கிராமம் வழிதான் உண்மையாகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கப்போர்களை விடவும் எவ்வளவோ அமைதியான, அழகான‌ உலகம் இன்ஸ்டாக்ராம். செயல்பாட்டில் இறங்க மாட்டீர்கள், வேடிக்கை பார்ப்பதே இல‌க்கு என்றால் இன்ஸ்டாக்ராமே கனகச்சிதம். ஒரே விஷயம் ஆண்களை (குறிப்பாக எழுத்தாளர்களை) பின்தொடராமல் கணக்கைச் சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது நூறு முதல் அதிகபட்சம் ஆயிரம் பேர் வரை பின்தொடரலாம். அதற்கு மேல் போனால் பழைய பிஎஸ்என்எல் டெலிஃபோன் டைரக்டரி மாதிரி ஆகி விடும். தவிர, யோசித்தால் அவ்வளவு அழகிகள்தாம் ஒருவர் ரசனைக்குச் சாத்தியம்!

அந்த ஆயிரம் பேரில் யார் உங்களுக்கான அழகி எனக் கண்டறிய ப்ரக்ஞைப்பூர்வப் பாடங்கள் ஏதுமில்லை. பூ மலர்வது போல் அது தானாகவே நிகழ வேண்டும். தீபிகா படுகோனை Aankhon Mein Teri பாடலில் முதலில் பார்க்கையில்அது நிகழ்ந்தது எனக்கு.

உத்தேச அளவுகோல் ஒன்றுண்டு. அவ‌ர் உங்களுக்கு எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகாகத் தெரிய வேண்டும். இன்னொரு முக்கிய விஷயம் புகைப்படங்கள் தாண்டி அசைபடத்திலும் ஈர்க்க வேண்டும். சிலர் புகைப்படங்களில் சிறப்பாக இருப்பார்கள். ஆனால் அசைபடம் (உதாரணமாகச் சிரிப்பு, முக பாவம்) பார்த்தால் ஒருவித‌ விலக்கம் தோன்றி விடும். அப்போது ‘இவர்தான் நம் உச்ச அழகியா?’ என்ற இருத்தலியல் சிக்கல் எழும். மறுபடி முதலிலிருந்த தேர்வைத் தொடங்க வேண்டும் - அதைத் தவிர்க்கத்தான்.

நீங்கள் அவரைத்தான் இன்னும் சில காலத்துக்கு உயிரைக் கொடுத்துக் கொண்டாடப் போகிறீர்க‌ள் என்பதால் அதற்குரிய பூரணத் தகுதிகளுடன் அவர் இருப்பது முக்கியம்.

பல ஆண்டுகளுக்கு முந்தைய படங்களில் அவர் அழகாக இல்லை, ஒப்பனை இல்லாமல் சிறப்பாக‌ இல்லை என்பதை எல்லாம் தாரளமாக‌ மன்னிக்கலாம். காரணம் நீங்கள் கால இயந்திரத்தில் ஏறி பழைய காலத்துக்கும் போகப் போவதில்லை. அவரை மணம் செய்து தூங்கி எழுந்தவுடன் எப்படி இருக்கிறார் எனக் காணும் வாய்ப்பும் இல்லை. இன்றைய தேதியில் செறிவான ஒப்பனையில் எப்படி இருக்கிறார் என்ற கணக்கே போதுமானது.

எது கூடாது என்பதற்குச் சில விதிகள் இருக்கின்றன. ஒன்று ஊரே கொண்டாடுகிறது என்பதாலேயே அவரை உங்களுக்குப் பிடித்தமானவர் என்று நம்ப‌த் தொடங்கலாகாது. குஷ்புவும், ஜோதிகாவும், அனுஷ்காவும், நயன்தாராவும் எனக்கு அப்படித்தான் ஆகாது. (இலக்கியம், சினிமா என்ற மற்ற ரசனைகளுக்கும் கூட‌ இது பொருந்தும்.) இன்னொன்று யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதால் தனித்துவமாக இருக்கட்டும் என ஒருவரை நமக்குப் பிடித்ததாகச் சொல்லிக் கொள்வது. இதுவும் சங்கடம் தரும். முழுமையாகப் பிடிக்காத விஷயத்தைப் பிடித்ததாகப் பாசாங்கு செய்வது சுயவதையிலேயே முடியும்.

அழகை ரசிப்பது மன மகிழ்ச்சிக்கான விஷயம். அதை ந‌ம் தன்முனைப்புடன் குழப்பிக் கொள்ளாதீர். சொல்லப் போனால் இது அதற்கு நேர்மாறான விவகாரம். சரணடைதல்!

*

ரசித்தல்

ஒப்பீட்டளவில் இது எளிது. கரும்பு தின்னக் கூலி போல். ஏற்கெனவே விட்ட இன்ஸ்டாவில் இருந்தே தொடங்குவோம். ஓர் அடையாளத்துக்கு நாம் பின்பற்றும் உலகப் பேரழகி ஒரு நடிகை என வைத்துக் கொள்வோம். முதலில் அந்நடிகையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கைப் பின்தொடர வேண்டும். அடுத்து ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் அவரது ரசிகர் மன்றக் கணக்குக‌ள். அப்புறம் அவரது பிஆர் நிறுவனக் கணக்கு. பிறகு அவரது இயக்குநர், உடன் நடிக்கும் கலைஞர்கள், புகைப்படம் எடுப்பவர், ஒப்பனை செய்பவர், அவரை விளம்பரத் தூதராகக் கொண்டிருக்கும் நிறுவனம், தனிப்பட்ட தோழிகள் என பின்தொடரலை விஸ்தரிக்க வேண்டும். (நான் அப்படித்தான் என் ப்ரியமான நடிகை - கிசுகிசு - தொடர்பான சுமார் நூறு கணக்குகளை இன்ஸ்டாக்ராமில் தொடர்கிறேன்.)

இது போக நடிகையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் கணக்குகளையும் பின்தொடர வேண்டும். இதெல்லாம் எதற்கு? காரணம் நடிகை தன் அதிகாரப்பூர்வக் கணக்கில் தேர்ந்தெடுத்து சில படங்கள் மட்டுமே பகிர்வார். ஆனால் மற்றவர்களோ கூடுதல் படங்களையும் செய்திகளையும் பகிர்வார்கள். அதிலும் ரசிகர் பக்கங்களில் எடிட் செய்யப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட‌ படங்கள், வீடியோக்கள் வெளியிடுவர்.

இது ஒரு மாதிரி ஊர் கூடித் தேர் இழுக்கும் வேலைதான். டாரன்ட் தளம் போல் இதிலும் நீங்கள் பெற்றதை நீங்கள் திரும்பிச் சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்பதே முக்கியம். அதாவது நீங்களும் உங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் கணக்குகளின் வழியே உங்களுக்குப் பிடித்த அவரது நிழற்படங்களை, அசைபடங்களைப் பரப்ப வேண்டும்.

இதில் முக்கிய விஷயம் பரப்புதல் என்பது வெறுமனே படம் பகிர்தலாக இருக்கக்கூடாது. அதை ஒரு ப்ரொக்ராமில் பிறந்த‌ பாட் கூடச் செய்யும். ஆனால் நாம் ரத்தமும் சதையும் கனவும் உணர்வும் நிரம்பிய மனிதர்கள். எனவே அதில் அவரது கண்கள், உதடுகள் என உடற்பாகங்களின் சிறப்பைத் தனித்தனியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாக அவர் எப்பேர்ப்பட்ட அழகி என்பதாகவோ வெளிப்பட வேண்டும். அவரே உலகின் முதன்மை அழகி என்பது அதன் சாரமாக இருக்க வேண்டும். ஆண்கள் அவள் காலடியில் என்பதும் இயற்கை அவள் முன் தோற்கிறது என்பதையும் சொல்ல வேண்டும். இதிலும் ஆபாசம் ஏதும் கலக்காத கவனம் காக்கப்பட வேண்டும். அவள் நம் சொற்களில் தேவதையாகவே மற்றவர் மனதில் எழ வேண்டும். எந்த ஆபாசமும் கலவாத பரிசுத்தம் கமழ வேண்டும்.

அவர் நடித்த சினிமாக்கள் எல்லாம் பார்த்திருக்க வேண்டும். நன்றாக இருந்தால் மூன்று முறை, சுமாராக இருந்தால் இரு முறை, மோசமாக இருந்தால் ஒரு முறை பார்க்கலாம். இது குறைந்தபட்சத் தேவை. அதிகபட்சத்துக்குக் கணக்குகள் இல்லை. அவரது படம்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் பார்க்கத் தயாராக வேண்டும். அவர் பேட்டிகள் அல்லது கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் டிவியிலோ, யூட்யூப் சேனல்களிலோ வந்தால் தவறாமல் பார்க்க வேண்டும். அதில் அவர் தப்பித் தவறி ஏதாவது தத்துவம் போல் பஞ்ச் லைன் சொல்லி விட்டால் அதை முடிந்த அளவு பரப்புரை செய்ய வேண்டும். (அழகியல் (Aesthetics) என்பதே தத்துவத்தின் ஓர் உட்பிரிவுதான் என்பதை மறந்து விடக்கூடாது.)

நீங்கள் கேட்கலாம். அழகை ரசிப்பது என்றால் அவர் படங்கள் மட்டும் போதாதா? எதற்கு அவர் குறித்த செய்திகள்? போதாது என்பதே நேரடியான பதில். காரணம் புகைப்படம் பார்க்கும் போது நீங்கள் நுகர்வோர். அதை விரும்பும் போது நீங்கள் ரசிகர். அது பற்றி மேலும் தகவல் தேடும் போதுதான் அடியார். அவர் பற்றி அவரை விடவும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் எழாமல் ஆராதனை சாத்தியம் இல்லை. அதுதான் பூரண சரணாகதி. கொண்டாடுதலின் உச்சம். ஆகவே, அவர் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சதா அது பற்றிய தேடுதல் உள்ளுக்குள் ஓட வேண்டும்.

உதாரணமாக நடிகை நடித்து வெளியான படங்களின் பெயர்கள், வெளியான ஆண்டு, அதில் அவர் பாத்திரத்தின் பெயர், அது எந்த ஓடிடியில் கிடைக்கிறது போன்ற தகவல்கள் எப்போதும் விரல் நுனியில் இருக்க வேண்டும். அப்புறம் அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், நடிப்பதாக வதந்தி வரும் படங்கள் பற்றிக் கூட‌ அறிந்திருக்க வேண்டும். அவர் தோன்றும் விளம்பரங்கள் எவை எனத் தெரிந்திருக்க வேண்டும். அந்த‌ ப்ராண்ட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் - அது பவுடரோ, க்ரீமோ, சட்டையோ, தங்கமோ!

அவர் வென்ற விருதுகள், நாமினேட் செய்யப்பட்டு தவற விட்ட விருதுகள் பற்றித் தெரிய வேண்டும். அவரது படம் அட்டையில் போட்டு வந்த இதழ்கள், அவரது நேர்காணல் வந்த சஞ்சிகைகள் சேகரிக்க வேண்டும். அவர் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அறிந்திருக்க வேண்டும். உதா: பிறந்த நாள், பெற்றோர் பெயர், பூர்வீகம், பள்ளி, கல்லூரி, இனம், மதம், காதல், முறிவு, மணம், பிடித்த விஷயங்கள், அளித்த / பெற்ற பரிசுகள், பயன்படுத்தும் பொருட்கள், போய் வந்த‌ சுற்றுலாத் தலங்கள், உடம்பில் குத்தியிருக்கும் டாட்டூக்கள் …

இதில் பிறந்த நாள் என்ற விஷயம் முக்கியமானது. அன்று சிறப்பாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பது விதி. உதாரணமாக அவரது நூறு நிழற்படங்களைச் சேகரித்துப் பகிர்வது, அவர் தோன்றும் அத்தனை திரைப்படப் பாடல்களையும் தொகுத்து யூட்யூபில் ப்ளேலிஸ்ட் போடுவது, அவரது பிறந்த நாளுக்கு அவரது படம் போட்ட கேக் வெட்டுவது என்று இப்படி மற்ற நாட்களை விடப் பிரத்யேகமாக ஏதாவது மெனக்கெட்டுச் செய்ய வேண்டும். இல்லையென்றால் பிறந்த நாளுக்கு என்ன மதிப்பு! அது ஒரு திருவிழா.

அவரை மிகப் பிடித்து விட்ட பின் அடுத்த கட்டத்தில் இதில் உங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏதேனும் காரியத்தில் இறங்க வேண்டும். தினம் அவரைப் பற்றிச் செய்வது போல் ஏதாவது வேலை வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக அவரது புகைப்படம் ஒன்றைத் தினம் போட்டு அதற்குப் பொருத்தமான கவிதை சொல்லலாம் (சொந்தச் சரக்கோ கடன் பெற்றோ), அவரது புகைப்படத்தை இனிப்புப் பண்டத்துடன், ல்லது புள்ளினத்துடன், அல்லது புத்தக அட்டையுடன் ஒப்பிட்டு தொடர் வெளியிடலாம்.

இதில் எல்லாவற்றையும் விட‌ மிக மிக மிக முக்கியமான விஷயம். இதெல்லாம் அந்த நடிகைக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தெரிந்த பின் இது எல்லாமே அவரை ஈர்க்கத்தான் செய்யப்படுகிறது என்றாகி விடும். அதில் இயல்பு இராது. கடவுள் மீதான பக்தி ஏன் அத்தனை உயர்வாகப் பார்க்கப் படுகிறது என்றால் அது பிரதிபலன் எதிர்பாராதது. ஒரு நடிகை மீதான‌ ஆராதனையும் அந்த உயரத்தில் நிகழ‌ வேண்டும்.

*

விலகுதல்

ஒர் அழகியை விலகுதல் என்பது மனம் நிறைய வலியுடன் மேற்கொள்ளப்படும் செயல். ஆனால் எல்லா அழகிகளுமே Expiry Date உடன்தான் வருவார்கள் என்பதே இயற்கையின் விதி - சில ஆண்டு முதல் பல வருடம் வரை எனக் கால நீளத்தில் வேறுபாடு இருக்கலாம்.

ஏன் விலக‌ல்? ஓர் அழகியை நாம் ரசிப்பது அவளது அழகிற்காகவே. ஆக‌வே எப்போது அவள் அழகு குறைந்தவளாகத் தோன்ற ஆரம்பிக்கிறாளோ அப்போது விலகல் மெல்ல ஆரம்பிக்கிறது. ஓர் அழகி எப்போது நமக்கு அழகு குறைந்தவளாகத் தோன்றுவாள்?

நானறிந்த வரை இரு காரணங்களால்: 1) திருமணத்திற்குப் பின்போ பிரசவத்துக்குப் பிறகோ வயதாவதாலோ முக மாற்று அறுவை சிகிச்சையாலோ தோற்றப் பொலிவில் சரிவு உண்டாகும் போது. 2) அவரை விடவும் பேரழகியாக ஒருவர் தெரிய ஆரம்பிக்கும் போது. ஓர் உறையில் ஒரு வாள்தான் இருக்க முடியும். ஒரு சமயம் ஒருத்திதான் நமக்கு உலகப் பேரழகியாக இருக்க முடியும். அனு ஸிதாராவை அப்படித்தான் நீங்கினேன்.

மனதின் ரசனை இடும் கட்டளையை ஏற்று வலி மீறி விலகுவதைத் தவிர வழியில்லை. முந்தைய நம் கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த விலகல் கேலிக்குள்ளாகக் கூடும். ஆனால் நாம் நம் மனசாட்சிக்கே விசுவாசமாக இருக்க வேண்டும். இன்றைய மாற்றம் முந்தைய சிலாகிப்புகளை ரத்து செய்து விடாது. அது அன்றைய நிஜம்; இது இன்றைய உண்மை! இதில் குற்றவுணர்வு கொள்ள ஏதுமில்லை. ரசித்தலின் ஒரு பகுதியே இதுவும்.

*

இப்படியாக ஓர் அழகியை ரசிப்பதை ஒரு காவியம் எழுதுவது போல் கலாப்பூர்வமாகச் செதுக்க வேண்டும். ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போல் அது அளிக்கும் மகிழ்ச்சி அலாதியானது. அதன் பொருட்டு கொஞ்சம் கூடுதல் நேரம் அழிந்துபட்டால்தான் என்ன!

***

(மெட்ராஸ் பேப்பர் நவம்பர் 2, 2022 அன்றைய இதழில் வெளியானது)

  •  

'ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு' வாங்குவது எப்படி?

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
சி.சரவணகார்த்திகேயன்
கிழக்கு பதிப்பகம்
நாவல் | 912  பக்கங்கள் | ரூ.1000 

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 95000 45609
 
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: 94459 01234 / 94459 79797 / 044 - 4959 5818
  •  

தலைவி: சில குறிப்புகள்

 (Last updated on August 29, 2024)

ப்ரியங்கா மோகன்

வெளியான திரைப்படங்கள்:

1) Ondh Kathe Hella (கன்னடம்) as அதிதி - மார்ச் 8, 2019 - ZEE5

2) Nani's Gang Leader (தெலுங்கு) as ப்ரியா - செப்டெம்பர் 13, 2019 - Prime Video / Hotstar (Tamil)

3) Sreekaram (தெலுங்கு) as சைத்ரா - மார்ச் 11, 2021 - JioCinema / YouTube (Kannada) / YouTube (Malayalam)

4) டாக்டர் (தமிழ்) as பத்மினி / மினி - அக்டோபர் 9, 2021 - Netflix / SunNxt

5) எதற்கும் துணிந்தவன் (தமிழ்) as ஆதினி - மார்ச் 10, 2022 - Netflix

6) டான் (தமிழ்) as அங்கயற்கண்ணி - மே 13, 2022 - Netflix

7)  டிக் டாக் (தமிழ்) as கீர்த்தனா - டிசம்பர் 29, 2023

8) கேப்டன் மில்லர் (தமிழ்) as வேல்மதி - ஜனவரி 12, 2024

9) Saripodhaa Sanivaaram (தெலுங்கு) as சாருலதா - ஆகஸ்ட் 29, 2024

உறுதி செய்யப்பட்ட திரைப்படங்கள்:

1) Brother (தமிழ்) - ஜெயம் ரவி படம்; எம். ராஜேஷ் இயக்கம் - Link

2) OG (தெலுங்கு) - பவன் கல்யாண் படம்; சுஜீத் இயக்கம் - Link

3) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? (தமிழ்) - தனுஷ் இயக்கம்

நெடுநாளாகக் கிடப்பிலுள்ள‌ திரைப்படங்கள்:

1) Mayan (English) -  Link

உறுதி செய்யப்படாத திரைப்படங்கள்
:

NA

பெயர் அடிபட்டு, பின் இடம் பெறாத‌ திரைப்படங்கள்:

1) ஜெயிலர் (தமிழ்) - ரஜினி படம்; நெல்சன் இயக்கம்

2) Leo (தமிழ்) - விஜய் படம்; லோகேஷ் கனகராஜ் இயக்கம் 

3) வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 - Link

4) Guntur Kaaram (தெலுங்கு) - மகேஷ் பாபு படம்; த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கம்

5) Ravanasura (தெலுங்கு) - ரவி தேஜா படம்

6) தனுஷ் - பாண்டிராஜ் படம் (தமிழ்) - கைவிடப்பட்டது

7) Thalaivar 170 (தமிழ்) - ரஜினி படம்; சிபி சக்ரவர்த்தி இயக்கம் - கைவிடப்பட்டது

8) LGM - Dhoni Entertainment தயாரிக்கும் முதல் படம். நாயகன் ஹரீஷ் கல்யாண்; இயக்கம் ரமேஷ் தமிழ்மணி.

9) நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், அநிருத் இசையில் கவின் நடிக்கும் படம் - Link - கைவிடப்பட்டது

10) சிவபாலன் இயக்கும் கவினின் அடுத்த படம் - Link - கைவிடப்பட்டது

11) Love - பிரபாஸ் நாயகன், இயக்கம் ஹானு ராகவபுடி

நடித்த‌ விளம்பரங்கள்:

1) மீனா நடித்த துணிக்கடை / நகைக்கடை விளம்பரம் ஒன்று

2) Manam Clothing (2018) - https://www.youtube.com/watch?v=3OeBgldoTl0

3) AVR Awarna Mahal Jewellers (2022) - https://www.youtube.com/watch?v=iSLUYoFvUnw

4) Lacto Calamine (2022) - https://www.youtube.com/watch?v=zQvjJ63CYFw

5) Otto Shirts (2022) - https://www.youtube.com/watch?v=sexHq6J35ds, https://www.youtube.com/watch?v=2ruUPcIIQ8o

6) Yardley London (2022) - https://www.youtube.com/watch?v=dPpj-dKUNs4

7) Udhaya Krishna Ghee (2023) - https://www.instagram.com/p/CwtxigipVcy/ 

வென்ற‌ விருதுகள்:

1) JFW (Just For Women) Movie Awards 2022 - Best Debutante (for Doctor) - March 18, 2022 - Link

2) The Galatta Crown 2022 - Best Debut Actress (for Doctor) - May 9, 2022 - Link

3) Behindwoods Gold Medals 2022 - Best Debut Actress (for Doctor) - May 23, 2022 - Link

4) SIIMA Awards 2022 - Best Female Debut Tamil (for Doctor) - September 11, 2022 - Link

5) அவள் விருதுகள் 2021 ‍- யூத் ஸ்டார் (for all films) - November 18, 2022 - Link

Nominated விருதுகள்:

1) SIIMA Awards 2021 - Best Female Debut Telugu 2019 (for Nani's Gang Leader) - Link

100 கோடி வசூலித்த படங்கள்:

1) தமிழ் - டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் 

2) தெலுங்கு - NIL

3) கன்னடம் - NIL

Dubbing Artiste:

1) எதற்கும் துணிந்தவன் - அக்ஷயா ப்ரபா (Link)

2) மற்ற படங்கள் - சொந்தக் குரல்

இதழ் நேர்காணல்கள்

1) The Hindu (August 27, 2019) - Link

2) She India (March 2022) - Link

தனிப்பட்ட தகவல்கள்:

1) பிறந்த நாள் - நவம்பர் 20, 1994 (சில இடங்களில் 1995 என்றும் இருக்கிறது)

2) தந்தை - அருள்மோகன் - தமிழர்

3) தாய் - பெயர் தெரியவில்லை - கன்னடிகா

4) வளர்ந்த‌ ஊர் - பெங்களூர்

5) பிறந்த ஊர், பள்ளி படித்தது, தற்போது வசிப்பது - சென்னை

6) மதம் - இந்து (சாதி தெரியும்; குறிப்பிடவில்லை)

7) கல்லூரி - PES Institute of Technology (PESIT), பெங்களூர் / பயோடெக்னாலஜி

8) திருமணம் - இன்னும் ஆகவில்லை (காதலில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை)

9) மச்சம் - மூக்கின் நுனியில் ஒன்று. வலது கண்ணின் வெண்பரப்பில் ஒன்று.

லைஃப் ஸ்டைல்:

1) 2022ல் சென்ற சுற்றுலாத் தலங்கள்: துபாய், லண்டன் (இரு முறை), பாரிஸ், ஊட்டி 

2) டாட்டூ - இடது கழுத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று பட்டாம்பூச்சிகள்

3) கடிகாரம் - Casio Vintage Collection Rose Gold Digital Unisex Watch (Model: B640WC-5ADF - D128) - Link 

4) ஸ்பீக்கர் - சூர்யா பரிசளித்த Marshall Acton II Bluetooth Speaker (Brown) - Link

அவர் இடம் பெற்ற இதழ்களின் அட்டைப்படங்கள்:

<To be updated>

அவர் கலந்து கொண்ட நிகழ்வுகள்:

1) முக்தா சில்க்ஸ், தி.நகர் (ஏப்ரல் 5, 2023)

சமூக வலைதளங்கள்:

1) Instagram - https://www.instagram.com/priyankaamohanofficial

2) Twitter - https://twitter.com/priyankaamohan

3) Facebook - Not Present

4) YouTube - Not Present

5) Website - Not Present

6) Tiktok - https://www.tiktok.com/@priyankaamohanofficial?lang=en (To be confirmed)

7) LinkedIn - Not Present 

புகைப்படங்கள்:

1) https://moviegalleri.net/tag/priyanka-arul-mohan-actress

2) https://www.ragalahari.com/stars/profile/96726/priyanka-arul-mohan.aspx

3) https://www.behindwoods.com/tamil-actress/priyanka-mohan/priyanka-mohan-photos-pictures-stills-12.html 

4) https://www.99images.com/celebrities/priyanka-arul-mohan

5) https://www.indiaglitz.com/telugu-actress-priyanka-arul-mohan-photos-8788

6) https://www.filmibeat.com/photos/priyanka-arul-mohan-71496.html

7) https://www.flickr.com/photos/tags/Priyankamohan/

8) Unofficial Facebook - https://www.facebook.com/PriyankaArulMohan7/ 

முக்கியப் பக்கங்கள்:

1) Wikipedia - https://en.wikipedia.org/wiki/Priyanka_Arul_Mohan

2) IMDb - https://www.imdb.com/name/nm10484501/

3) BookMyShow - https://in.bookmyshow.com/person/priyanka-arul-mohan/1095858

4) https://allwikibiography.in/priyanka-arul-mohan/

5) https://www.filmytoday.com/celebs/39678/profile/

6) https://www.filmibeat.com/celebs/priyanka-arul-mohan.html 

7) https://www.nowrunning.com/celebrity/88375/priyanka-arul-mohan/ 

8) PRO நிறுவனம் - The Route 

என் பங்களிப்புகள்:

1) #TheMostBeautifulTamilGirl சீரிஸ் - Link 

2) அவர் பற்றிய கட்டுரை - http://www.writercsk.com/2021/11/blog-post.html

3) அவர் பற்றிய குறிப்புகள் - http://www.writercsk.com/2022/09/blog-post_11.html

4) அவர் இடம் பெற்ற‌ புத்தக அட்டை - Link

5) அவரது வீடியோ தொகுப்பு - https://www.youtube.com/playlist?list=PLbo_N-q2fcC_QjcEPNzVO1ye13IkNRSkK

***

  •  

வானும் மண்ணும்

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போது "சங்கடம் தவிர்க்கிறேன்" என்றேன். ஆனால் அது கள்ள மௌனமாகத் தொனிக்கும் சங்கடமும் இருப்பதாக மறுயோசனையில் தோன்றிய‌தால் இக்குறிப்பினை எழுதப் புகுந்தேன். தவிர, என் நோக்கைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவு இருவரும் இருக்க மாட்டர் என்பதால் சங்கடத்துக்கும் இடமில்லை என்றே தோன்றுகிறது.

முதலில் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் பற்றிய என் ஒட்டுமொத்த மதிப்பீடு சுருக்கமாக:

எனக்கு இந்தப் பிறழ்வெழுத்து அல்லது Transgressive Writing பற்றி சர்வதேசிய அறிமுகம் ஏதும் கிடையாது. நான் அதை 'மீறல் எழுத்து' என்று வரையறை செய்வேன். வழமையான சமூக விழுமிய‌ங்களை உடைத்து வேறொன்றை முன்வைக்கும் எழுத்து. அதற்கு அதிர்ச்சி மதிப்பீடு உண்டு, ஆனால் அது நோக்கம் கிடையாது. பேசாப் பொருளைப் பேசத் துணிதல். பொதுவாக அது பாலியலாகவே இருக்கும். தமிழில் இதற்கு முன்னோடிகள் ஜி.நாகராஜன் மற்றும் தஞ்சை பிரகாஷ். சாரு அதிலேயே non-liner எழுத்தை முன்வைத்தார். அவர் தன் புனைவுகளில் பேசிய பாலியலின் அரசியல் தனித்துவமான ஒன்று. அவ்வகையில்தான் ராஸ லீலா அவரது முக்கியமான படைப்பு. இதே திசையிலான‌ ஸீரோ டிகிரி, தேகம், காமரூபக் கதைகள் அவற்றை சுமாரான நாவல்கள் என்றே மதிப்பிடுவேன். எக்ஸைல் (முதல் வடிவம்), எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. நேனோ தொகுப்பில் சில நல்ல சிறுகதைகள் உண்டு. இந்த மீறல் எழுத்தில் அவருக்குப் பின் லக்‌ஷ்மி சரவண குமார், கணேசகுமாரன், அராத்து என அவரது பாதிப்பு கொண்ட எழுத்தாளர்கள் சிலர் உண்டு.

அபுனைவில் அவரது கட்டுரைகள் பெரும்பாலும் வெகுஜனப் பத்திரிக்கைகளின் பத்தி எழுத்து வகைமையைச் சார்ந்தவை. பூச்சுகளற்ற நேரடி உரையாடல் தொனியைக் கொண்ட நடை, நிறைய‌ மெனக்கிடல்களற்ற சுவாரஸ்யமான உள்ளடக்கம் ஆகியன இவற்றின் சாரம். அதில் அவர் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். உதாரணம் கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகளும். அது வெகுஜன எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையே நிற்கும் ஒரு விஷயம். அவரது பெரும்பான்மையான வாசகர்கள் அவரது பத்தி எழுத்துக்கள் வழியே தொடங்கி இருப்பார்கள். அவர் சர்வதேச எழுத்தாளர்களையும், சினிமாக்களையும், இசையையும் அறிமுகம் செய்து எழுதிய நூல்கள் எதையும் நான் வாசித்தவன் அல்லன் - அந்த விஷயங்களில் ஆர்வம் இல்லாதவன் என்பதால்.

இது வரை சொன்னவை ஒரு வாசகனாக. நான் ஓர் எழுத்தாளன் என்ற அடிப்படையிலும் அவருடன் அணுக்கம் உண்டு. என் ஆரம்ப கால உரைநடையில் இருவரின் வலுவான தாக்கம் இருந்தது - ஒருவர் சுஜாதா; இன்னொருவர் சாரு. சகா - சில குறிப்புகள் என்ற தொடரை என் வலைதளத்தில் எழுத அவரது காமரூபக் கதைகளே உந்துதல். அதன் நிமித்தம் அக்கதை இடம்பெற்ற என் 'மியாவ்' சிறுகதைத் தொகுப்பை அவருக்கே சமர்ப்பணம் செய்தேன். என் முதல் சிறுகதைத் தொகுதி 'இறுதி இரவு' வந்த போது அவர் தின மலருக்கு அளித்த நேர்காணலில் அதைச் சிபாரிசு செய்திருந்தார். மீறல் எழுத்தை முன்வைத்தவர், பாலியலின் அரசியலைப் பேசியவர் என்ற அடிப்படையில் 'பரத்தை கூற்று' என்ற‌ என் முதல் கவிதை நூலை அவரைக் கொண்டு வெளியிட்டேன். அவரது தூண்டுதலில் தான் என் முதல் மொழிபெயர்ப்பைச் செய்தேன் (பால் ஸக்கரியாவின் நேர்காணல் ஒன்று). அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து கடிதங்கள் எழுதி அவரது தளத்தில் விவாதித்திருக்கிறேன். இதெல்லாம் பத்து, பதினைந்து ஆண்டுகள் முன். அப்படிப் பல வகையில் என் அன்பிற்கும் நன்றிக்கும் உரியவர் சாரு.

ஆனால் ஒட்டுமொத்தமாக யோசித்தால் அவருக்கு எதிர்முனையில் நின்று பேசும் முரண் சூழலே பெரும்பாலும் வாய்த்திருக்கிறது. இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம் எனப் பல தளங்ளிலும் அவரது கருத்துக்கள் பலவற்றோடு ஒத்துப் போக என்னால் முடிந்ததில்லை. அவற்றில் சில உணர்ச்சிவசப்பட்ட‌, தடாலடிக் கருத்துக்கள் என்றும் கருதி வந்திருக்கிறேன். அதை அவ்வப்போது கேலியாகவும் சீரியஸாகவும் பதிவு செய்திருக்கிறேன். அதற்காக அவர் என்னுடன் பிணக்குக் கொண்டதுண்டு. நான் தனிப்பட்ட காழ்ப்பில் எழுதுகிறேன் என்று ஓரிரு முறை பிழைபடப் புரிந்து கொண்டதும் உண்டு. பிறகு சரியாகி இருக்கிறது. இன்று நல்ல சினேகத்தில்தான் இருக்கிறோம்.

ஆக, என் வாசிப்பு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், அல்லாதவைகளை ஒதுக்கிப் பார்த்தாலும் சாரு நிவேதிதாவின் இலக்கியப் பங்களிப்பு தமிழ்ச் சூழலில் மதிக்கத்தக்கதே. ஏறத்தாழ நாற்பதாண்டுகளாகத் தொடர்ந்து இடைவெளியின்றி எழுதி வரும் சாரு நிவேதிதாவுக்கு ஓர் இலக்கிய விருது தரக்கூடாது என்று சொல்ல முடியாது. தமிழில் சாஹித்ய அகாதமி வாங்கிய எத்தனையோ பேரை விட சாரு நிவேதிதா அவ்விருதுக்கு நிச்சயம் தகுதி பெற்றவரே. ஆனால் விஷ்ணுபுரம் விருது என்று வரும் போதுதான் ஒரு நெருடல் வருகிறது. இதன் பொருள் விஷ்ணுபுரம் விருது சாஹித்ய அகாதமியை விட உசத்தி என்பதோ சாரு அதற்குத் தகுதியற்றவர் என்பதோ அல்ல. பிறகு?

சொல்கிறேன்.

*

விஷ்ணுபுரம் விருது என் புரிதலில் முழுக்க முழுக்க ஜெயமோகனின் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது - purely at his discretion. அங்கே ஒரு நடுவர் குழு இருக்கிறது என்பது போலோ பலரின் கருத்து கோரப்பட்டு இறுதி முடிவு collaborative-ஆக‌ எடுக்கப்படுகிறது என்பதோ போலோ எங்கும் முன்வைக்கப் பட்டதில்லை. அதிகபட்சம் ஆரம்பத்தில் யாருக்குக் கொடுக்கலாம் என்ற ஒரு rough survey முக்கிய உள்வட்டத்தில் இருக்கலாம், பிறகு இறுதி முடிவை ஜெயமோகன் எடுத்த பின் மறுபடி முக்கிய அங்கத்தினரிடம் மேலோட்டமாக pulse பார்க்கும் நோக்கில் கருத்து கேட்கப்படலாம். இதுதான் விஷ்ணுபுரம் விருது பற்றிய என் பிம்பம். ஜெயமோகன் மிகப் பரந்துபட்ட வாசிப்பு உடையவர் என்பதால் இந்தச் சர்வாதிகாரம் பற்றி எனக்கு விமர்சனம் இல்லை. இன்னொரு வகையில் நடுவர் குழு ஒன்று வைத்து சாஹித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகள் செய்யும் அக்கப்போர்களைப் பார்க்கும் போது இது பிடித்தும் இருக்கிறது.

ஆனால் இம்முறை சாருவைத் தேர்ந்தெடுத்ததில் ஜெயமோகனின் அந்தத் தனிப்பட்ட ரசனை கறாராகக் கடைபிடிக்கப் பட்டிருக்கிறதா என்பதே இம்முறை எழுந்திருக்கும் விமர்சனங்களின் மையப்புள்ளி. விருது பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் குறிப்பில் இருக்கும் இந்த வரி உண்மையாகவே என்னவென எனக்குப் புரியவில்லை: "தன் வரலாற்றையும் தன்னையும் புனைந்து புனைந்து அழித்துக்கொள்ளும் இவ்வகை எழுத்து தமிழுக்கு அனைத்துவகையிலும் புதியது."

ஜெயமோகன் சாருவைப் பற்றி முன்பு என்ன எழுதி இருக்கிறார்? கீழே இருப்பது 2008ல் ஜெயமோகன் ஒரு வாசகர் கடிதத்துக்கு எழுதிய பதிலில் இருந்து (https://www.jeyamohan.in/230):

சாருநிவேதிதா ஒரு சுவாரஸியமான பத்தி எழுத்தாளர் [காலம்னிஸ்ட்] மட்டுமே. பத்தி எழுத்தாளர்கள் எப்போதும் பெருவாரியான வாசகர்களின் பொதுவான ரசனைக்காக எழுதும் திறன் கொண்டவர்கள். அவர்களுடைய மனஅரிப்புகளையும், பாசாங்குகளையும் நோக்கிப் பேசுபவர்கள். பத்தி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் வருவதே அவர்கள் உண்மைகளை அஞ்சாமல் சொல்லும்போது மட்டும்தான். குல்தீப் நய்யார் என் முன்னுதாரணம். ஆனால் சாரு நிவேதிதா நேர்ப்பேச்சில் கூட தொண்ணூறு சதவீதம் பொய்தான் பேசுவார் என இருபது வருடங்களாக அவரை அறிந்த நான் கண்டிருக்கிறேன். உண்மையில் விதவிதமான பாசாங்குகள் வழியாக சென்றபடியே இருக்கும் அவரால் உண்மையை அவரே நினைத்தால் கூட பேச முடியாது.

சாரு நிவேதிதா அடிப்படையில் கற்பனையோ நுண்ணோக்கும் திறனோ இல்லாத மிக மேலோட்டமான எழுத்தாளர். அவரிடமிருக்கும் கற்பனை என்பது தன்னைப்பற்றி அவர் சொல்லும் அபத்தமான பொய்களில் மட்டுமே. அதேசமயம் ஒருபோதும் அவரை முற்றாக புறக்கணிக்க இயலாது. அதற்குக் காரணம் அவரது மொழி சார் நுண்ணுணர்வு. அவரது நடை ஒரு குறிப்பிட்ட வகையில் தமிழில் சுஜாதாவின் நடைக்குப்பின் முக்கியமான ஒன்று. ஆழத்தை அது அடைய இயலாது, ஆனால் மேல்தளத்தில் சுழிப்புகளும், பாய்ச்சல்களுமாக பலவிதமான தோற்றங்களைக் காட்டுகிறது. இது ஒரு முக்கியமான பின் நவீனத்துவ இயல்பு.

சாரு நிவேதிதாவின் இலக்கிய ரசனை, வாசிப்பு, இசை ரசனை,திரை ரசனை எல்லாவற்றின் மேலும் எனக்கு ஆழமான அவநம்பிக்கை உண்டு. அதற்குக் காரணம் காலம்தோறும் அவர் எழுதிவரும் கட்டுரைகளேதான். இலக்கியத்தின் அடிப்படைகளான பேரிலக்கியங்களில் வாசிப்போ, எளிய அறிமுகமோ இருப்பதை அவர் வெளிப்படுத்தியதில்லை. அவர் வாசிக்கும் படைப்புகள் பெரும்பாலும் ‘பரபரப்பு’ நூல்கள். அவற்றில்கூட அவர் நுண்மைகளைத் தொடுவதேயில்லை. பெருவெட்டாகச் சொல்லப்பட்ட விஷயங்கள், அதுவும் நேரடியான வன்முறை மற்றும் காமச் சித்தரிப்புகளும் மிகையுணர்ச்சிகளும் மட்டுமே , அவர் கண்களுக்குப் படுகின்றன.அவ்வளவுதான் அவரது எல்லையே.

கோட்பாடு சார்ந்து அவர் எதுசொன்னாலும் அது பிழையான செவிவழிப்புரிதலாகவே இருக்கும். சென்ற காலங்களில் பின் நவீனத்துவம், அமைப்பியல் பற்றி அவர் சொன்னவற்றை நினைத்து பிற்பாடு நானே படிக்க ஆரம்பித்தபோது வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து எந்த சீரிய வாசகரும் அவரை ஓர் எல்லைக்குமேல் பொருட்படுத்துவதில்லை. மேலோட்டமான வாசகர்கள் சில காலம்வரை அவரது சரளமான எழுத்து நடையையும், நக்கல்களையும் ரசிப்பார்கள்.

சாரு நிவேதிதா எழுதும் வடிவம் அவர் தெரிவு செய்து கொண்ட பின்நவீனத்துவ வடிவம் அல்ல. அவரால் முடிந்ததே அதுதான். கற்பனை இல்லாத எழுத்தாளர் என்ற வகையில் அவர் கண்டது கேட்டது ஆகியவற்றை மட்டுமே அவரால் எழுத முடியும். அதுவும் ‘அப்படியே’. பெயர்களைக்கூட மூலப்பெயருக்கு நெருக்கமாக அமைத்து கிசுகிசுத்தன்மையை உருவாக்குவது அவரது வழக்கம். உண்மையான வாழ்க்கையை எழுதும்போது அதில் ஒருமையை, மையத்தை கொண்டுவருவது கஷ்டம்– காரணம் வாழ்க்கைக்கு அப்படி ஒரு ஒருமையும் மையமும் இல்லை. ஆகவேதான் சாரு நிவேதிதாவின் ஆக்கங்கள் சிதறுண்டிருக்கின்றன.

பின்நவீனத்துவ வடிவங்களில் மூலநூல்களை மறு ஆக்கம்செய்தல், போலிசெய்தல், எழுதுவதைப் பற்றிய எழுத்து, தனக்குள் செயல்பட்டு தன்னை கழித்துக் கொள்ளுதல், எல்லா தரப்பையும் ஒலிக்க வைத்து மாபெரும் விவாதத்தன்மையை உருவாக்குதல், தர்க்க ஒழுங்கை மொழியின் அராஜகம் மூலம் மீறி உன்னதத்தை [sublime] தொடுதல், வரலாற்றுக்குச் சமானமான புனைவுவரலாற்றை உருவாக்குதல் போன்ற முக்கியச் சாத்தியங்கள் எதையும் சாரு நிவேதிதா தொடக்கூட முடியாது. ஏன் அவர் அவற்றை வாசித்துக்கூட உள்வாங்கிக் கொள்ள முடியாது. இன்றுவரை அதற்கான தடையத்தை அவர் வெளிப்படுத்தியதில்லை

அதேசமயம் உண்மையான வாழ்க்கையை எழுதியிருக்கிறார் என்ற மதிப்பு அவற்றுக்கு உண்டா என்றால் அதுவும் இல்லை. காரணம் நடுநிலைமையில் நின்று தன் வாழ்க்கைச்சூழலை எழுதுவதும், தன்னையே விமரிசனக் கண்ணோட்டத்துடன் நோக்குவதும் எளிதல்ல. சாதாரணமாக நாம் நம் வாழ்க்கையைப்பற்றி பேசும்போதுகூட நம் விருப்பக் கற்பனைகள், நமது காழ்ப்புகள், தன்னிரக்கங்கள், தற்பெருமைகள் ஆகியவை நமது சித்தரிப்பில் கலந்து வரும். அதை வெல்வது பெரும் கலைத்திறனோ, அழுத்தமான நேர்மையோ உள்ளவர்களுக்கே சாத்தியம். சாரு நிவேதிதாவின் நாவல்கள் அவரது மனமாச்சரியங்களின், பாவனைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே. சாரு நிவேதிதா எழுதுவது பெரும்பாலும் அவரது காழ்ப்புகளால் திரிக்கப்பட்ட கிசிகிசுக்களை.

ஸீரோ டிகிரி அவரால் எழுதப்படச் சாத்தியமான இலக்கியம். அதன் நடையில் உள்ள கிண்டலும் விளையாட்டுகளும் பல்வேறு வகையான கிசுகிசுக்களும் கலந்து அதை ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கமாக மாற்றுகின்றன. தமிழ்ச் சூழலுக்கு அது ஒரு முக்கியமான ஆக்கம் என்று எண்ணுகிறேன். ஆனால் அவ்வளவுதான் அவர். அவரது நடையின் சரளம் நீண்டகாலம் எழுதுவதனால் மட்டுமே வருவது. அவர் தமிழின் பிரபல ஊடகங்களின் மொழிச்செயல்பாட்டை மிக ஊன்றிக் கவனித்து வருகிறார். அவற்றின் மீது ஆழமான அங்கத நோக்கு அவருக்கு உள்ளது. எழுதும்போது மொழி சார்ந்த நுண்ணுணர்வு விழித்திருப்பதன் சாத்தியங்களை ஸீரோ டிகிரியிலும், ராஸலீலாவின் முதல் பகுதியிலும் காணலாம்.
 

இந்தக் கடுமையான விமர்சனத்தை ஜெயமோகன் எழுதி பதினான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதில் அவர் அந்தத் தருணத்தில் கொண்டிருந்த உணர்ச்சிகரத்தை benefit of doubt-ல் கழித்து விட்டுப் பார்த்தாலும் சாருவின் எழுத்துக்கள் மீது ஜெயமோகன் கொண்டிருந்த அபிப்பிராயம் துலங்குகிறது. இடைப்பட்ட காலத்தில் சாருவும் ஜெயமோகனும் நட்பாகி இலக்கிய மேடைக‌ள் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகளும் உண்டுதான். ஆனால் அதனால் எல்லாம் இலக்கிய மதிப்பீடு மாறி விடாது என்ற எளிய விஷயத்தை நான் மட்டுமல்ல ஜெயமோகனும் சாருவும் கூட ஒப்புக் கொள்வர்.

ஆக, ஜெயமோகன் அந்த எதிர்மறை விமர்சனப் புள்ளியிருந்து தன் தனிப்பட்ட ரசனை சார்ந்து வழங்கும் ஓர் ஆண்டு விருதுக்கு சாருவின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் தலைகீழ் மாற்றம் நிகழ இவ்விரண்டில் ஏதாவது ஒன்று இடைப்பட்ட காலத்தில் நட‌ந்திருக்க வேண்டும்: 1) ஜெயமோகனின் இலக்கிய விமர்சனப் பார்வை மாறி இருக்கலாம். 2) ஜெயமோகன் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வது போல் சாரு நிவேதிதா ஏதாவது இலக்கிய பிரதிகளை எழுதி இருக்கலாம். ஆனால் இந்த இரண்டுமே நடந்தது போல் தெரியவில்லை. இடைப்பட்ட காலகட்டத்தில் சாரு எழுதிய எந்த நூல்கள் குறித்தும் ஜெயமோகன் பாராட்டி எழுதவில்லை என்பதைக் கொண்டே இதைச் சொல்கிறேன்.

ஆனால் ஜெயமோகன் வரும் நாட்களில் இந்த விமர்சனங்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்து விடுமளவு சாருவின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி சாருவே அயர்ந்து போகுமளவு விரிவாகத் தன் கருத்துக்களைப் பல தொடர் கட்டுரைகள் வாயலாக‌ முன்வைத்து விட முடியும். அவர் அதற்கான வாதத் திறன்கள் மிக்கவரே. அல்லது விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களும் கூட செய்யலாம்.

இப்போதே "என் தனிப்பட்ட எதிர்மறை கருத்து தாண்டி நாம் எல்லோரும் சாருவை முழுமையாக வாசித்து மறுபடி மதிப்பிட உண்டாக்கித் தரப்பட்டிருக்கும் வாய்ப்பு" என்ற ரீதியில் பதிவுகள் வருகின்றன. ஆனால் இதே சலுகையை யுவபுரஸ்கார் பெற்ற‌ காளிமுத்துவுக்கு ஏன் தரவில்லை, சாஹித்ய அகாதமி பெற்ற‌ இன்குலாபுக்கோ, டி. செல்வராஜுக்கு, மேலாண்மை பொன்னுச்சாமிக்கு, மு.மேத்தாவுக்கு, ஜி. திலகவதிக்கு, ஈரோடு தமிழன்பனுக்கு,  வைரமுத்துவுக்கு, சிற்பி பாலசுப்ரமணியமுக்கு ஏன் அவர்கள் தரவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

ஜெயமோகன் ஏற்காத ஓர் எழுத்து முறைக்கும் விஷ்ணுபுரம் விருதில் இடமுண்டு என்பதற்கான‌ முக்கியமான சமிக்ஞை இது என்று ஒரு கோணம் சொல்கிறார்கள். ஜெயமோகனை விடுங்கள், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினரே கூட (ஓரிருவர் தவிர) சாருவைப் பற்றி எழுதி நான் பார்த்ததில்லை. எனில் யாரது ஏற்பின் அடிப்படையில் விருது? பரந்த தமிழ் வாசகர்களா? எனவே ஜெயமோகன் ஏற்காத எழுத்து, ஆனால் வாசகர்கள் ஏற்கிறார்கள் என்பதை ஒரு tenet ஆகக் கொண்டால், எல்லையின்றிப் பல பேரிடம் விருது சென்று நிற்கும் ஆபத்து இருக்கிறது. அதை எல்லாம் சிந்தித்து இம்மாதிரி ஸ்டேட்மெண்ட்களை விடுக்க வேண்டும். விருதை முன்பு வாங்கியோர் சங்கடப்படக்கூடாது; எதிர்காலத்தில் நல்ல எழுத்தாளர்கள் விருதை ஏற்கத் தயங்கக்கூடாது என்பது முக்கியமான கோடு.

*

என் புரிதல் இதில் இன்னொரு விஷயம் சாத்தியம் இருக்கிறது. ஜெயமோகனின் மன இளகல். இதை ஜெயமோகன் பல்டி அடித்து விட்டார், சுயநலத்துக்காகச் சமரசம் செய்து விட்டார், லாப நஷ்டக் கணக்கு பார்த்து விருது கொடுக்கிறார் என்ற இளக்காரமான‌ தொனியில் நான் சொல்லவில்லை.

நான் முன்வைப்பது முழுக்க அகவயமான ஒரு கோணம். ஓர் உளவியல் தர்க்கம். ஒருவர் நிறுவனமயமாகும் போது எல்லோரையும் உள்ளடக்கிய மனநிலை அவசியம். தனி மனிதன் குறுக்கலிலேயே கம்பீரமாக‌ வாழ்ந்து முடிக்கலாம். ஆனால் நிறுவனத்துக்கு விரிவதுதான் இயல்பு. விஷ்ணுபுரம், தமிழ் விக்கி என ஜெயமோகன் முன்னெடுக்கும் நிறுவனங்கள் எல்லாமே பல நூறு வாசகர்களின், வாசகர்களையும் தாண்டிய வெகுமக்களின் பங்கேற்பையும் ஆதரவையும் கோருபவை. அதற்குத் தீனி போட அவர் அடிப்படையில் முரண்படும் சில விஷயங்களைக் கூட அணைத்து உள்ளே இழுக்க வேண்டி இருக்கும். அப்படியான ஒன்று இது என்றே தோன்றுகிறது. சச்சின் டெண்டுல்கர் ஒரு மேட்சில் சுமாராக விளையாடினாலே போதும், வேறு ஒருவர் அவரை விட நன்றாக விளையாடி இருந்தாலும், இந்தியா ஜெயிக்கவில்லை என்றாலுமே கூட சச்சினுக்கு மேன் ஆஃப் த மேட்ச் கொடுப்பார்கள். அது ஒரு மனநிலை. அப்படித்தான் இதுவும் எனத் தோன்றுகிறது.

பாப் டயலனுக்கு நொபேல் பரிசு அளிக்கப்பட்டதைக் கூட இதனோடு ஒப்பிடத் தோன்றுகிறது.

இன்னொன்றையும் கவனித்திருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயமோகன் இலக்கிய விமர்சனங்களில் கடுமை காட்டுவதில்லை. அதை அவரே சில இடங்களில் பதிவு செய்தும் இருக்கிறார். மற்றவர்களை விடுங்கள், என் கன்னித்தீவு நாவலுக்கு எழுதப்பட்ட விமர்சனத்தில் கூட அதை உணர்கிறேன். சமீபத்தில் வந்த யுவபுரஸ்கார் சர்ச்சையில் கூட விருது பெற்ற நூலை எதிர்மறையாக விமர்சித்தாலும் காளிமுத்து எதிர்காலத்தில் நல்ல கவிதைகள் எழுதச் சாத்தியமுண்டு என்பதை பல முறை மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார். ஸ்ரீதர் சுப்ரமணியன் ஜெயமோகன் நூல்களை வாசிக்காததில் பெருமை கொள்கிறேன் என்று அசட்டுத்தனமாகச் சொல்லியதற்கும் கூட அவரை அரவணைத்தே செல்கிறார். பழைய ஜெயமோகன் என்றால் சமயம் பார்த்துக் கிழித்துத் தொங்க விட்டிருப்பார். நேற்று கேஆர்எஸ் பற்றிய பதிவின் கடைசிப் பத்தியில் கூட அவரது அணுகுமுறையில் ஒரு மென்தன்மை இருப்பதைக் காண முடிகிறது. முன்பு கலைஞர், பெரியார், திமுக, திராவிட இயக்கம் போன்றவற்றை விமர்சிப்பதில் காட்டிய வேகம் இன்று இல்லை. அவர்களின் ஆக்கப்பூர்வமான பகுதிகளைப் பேசுகிறார். இது நான் சமீப காலமாகவே கவனித்து வரும் மாற்றம்.

இன்று அவர் கடுமையாக விமர்சித்து எழுதும் விஷயங்கள் எல்லாம் பொதுவான ஒரு திரள் பற்றியே; தனி மனிதர்கள் அல்லது அமைப்புகளை நேரடியாகத் தாக்கும் விஷயங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன என்பதே என் அவதானிப்பு. ஆக, நிச்சயமாக ஜெயமோகன் பழைய கடுமையுடன் இல்லை. இதையும் இந்த விருது அறிவிப்புடன் இணைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

இன்னும் சில கோணங்களும் இருக்கின்றன. அறுபது வயதைத் தொடுகையில், எல்லோரையும் அரவணைத்துத்தான் போவோமே என்று உண்டாகும் கனிவாக இருக்கலாம். அல்லது வெண்முரசு போல் அறத்தை முன்வைக்கும் ஒரு பெரும் படைப்பை எழுதிய பின்பு மனம் கொள்ளும் மௌனமாக‌ இருக்கலாம். இவை எல்லாம் கடந்த காலத்தின் கறார் மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளச் செய்பவை.

இதை ஜெயமோகன் அறிந்தே ப்ரக்ஞைப்பூர்வமாகச் செய்தால் நாம் விமர்சிக்க ஏதுமில்லை. இதே திசையில் அடுத்த ஆண்டுகளில் வண்ணநிலவன், பெருமாள்முருகன், மனுஷ்ய புத்திரன், எஸ்.ரா. போன்றோர் விஷ்ணுபுரம் விருது வாங்கும் வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் ரமணிச்சந்திரன், ராஜேஷ் குமார், வைரமுத்து என்று போக மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். 

ஆக, எப்படியாகினும் ஒரு தீவிர இலக்கியவாதிக்கே விஷ்ணுபுரம் விருது கொடுத்திருக்கிறார்கள் என்ற வகையில் இந்த அறிவிப்பில் அதிர்ச்சி உண்டே ஒழிய, வருத்தம் ஒன்றுமில்லை.

(என் தனிப்பட்ட விருப்பம் யுவன் சந்திரசேகருக்கு விரைவில் இவ்விருது அளிக்கப்பட வேண்டும்.)

***

  •  

ஜெயமோகன் எனும் ஞானபீடம்

ஃபேஸ்புக் தீவிர விஷயங்களைப் பேச‌ உகந்த இடமில்லை. ஆனால் தீவிரங்களை எளிய போர்வையில் எழுதிப் பார்க்கலாம். அப்படிச் சில தினம் முன் நான் எழுதிய குறிப்பு இது:

"தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்" என்ற பிரயோகம் சமகாலச் சூழலில் இரு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது: 1) ஜெயமோகனைக் குறிக்க 2) ஜெயமோகனைச் சீண்ட.”

பகடியாகவோ புகழுரையாகவோ தெரிந்தாலும் கவனமான ப்ரக்ஞையுடன் எழுதியதே!

என் கால் நூற்றாண்டு வாசிப்பின் சிற்றெல்லைக்குள் நின்றபடி பேசும் போது தமிழில் உருவான நவீன எழுத்தாளர்களுள் ஜெயமோகனே முதன்மையானவராக‌த் தெரிகிறார். என் போல் இங்கே பலர் உணர்ந்திருந்தாலும் இலக்கிய‌ முன்னோடிகளைக் குறைத்துப் பேசலாகாது என்ற தயக்கத்திலும் அவருக்கு வயதேறட்டும் என்றெண்ணியும் அமைதி காக்கலாம். நரையும் திரையுமே அங்கீகார அளவுகோல் என்பதுதானே நம் பண்பாடு!

ஒட்டுமொத்த நவீனத் தமிழிலக்கியப் பரப்பிற்குமாக‌ இந்த இடத்தை ஜெயமோகனுக்கு அளிப்பதில் சிலருக்குத் தயக்கமிருந்தாலும் இன்று வாழ்கின்ற‌ தமிழ் எழுத்தாளர்களுள் அவரே முதன்மை ஸ்தானம் என்பதை எவரும் மானசீகமானவேனும் ஒப்புக் கொள்வர். (ஆனால் அதை வெளியே சொல்வதற்கு பழ‌ம்பகை, அரசியல் சார்பு முதல் தன்முனைப்பு வரை பல‌விதமான மனத்தடைகள் இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.)

ஜெயமோகன் மீது எனக்கு விமர்சனங்களோ, கருத்து முரண்களோ அறவே இல்லையா? அதெப்படி இல்லாமல் போகும்! எவரோடும் எவரும் பூரணமாக ஒத்துப்போக முடியாது. அப்படிப் போனால் அதில் ஒருவரது இருப்பு அர்த்தமற்றதாகும். எனக்கும் இருக்கிறது. ஆனால் நான் ஜெயமோகனின் நேர்மையை சந்தேகிக்கவில்லை. அவரது நோக்கங்கள் நல்லவை என்பதாகவே நம்புகிறேன். அவர் சங்கி இல்லை. (அவர் இந்துத்துவ ஃபாசிஸ்ட் என 700 பக்கங்களில் எழுதப்பட்ட தொகைநூலை வாசித்த பிறகும் இதுவே என் புரிதல்.)

ஜெயமோகன் தமிழிலக்கிய உலகில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு. Phenomenon எனலாம். எழுத்தாளர்களுக்கு மத்தியில் தோன்றிய ஒரு தபஸ்வி என்றுதான் வர்ணிக்க முடிகிறது.

ஜெயமோகன் ஒட்டுமொத்தமாக லட்சம் பக்கங்கள் எழுதியிருக்கிறார் என்றறிகிறேன். அளவின் (volume) அடிப்படையில் பார்த்தால் அவருக்கு தமிழில் முன்மாதிரியே இல்லை. (இந்திய அளவிலும் இருக்கிறார்களா!) அளவு மட்டும் என்றால் எவரையேனும் கைகாட்டி விட முடியும். ஆனால் அந்த அளவோடு, வேகமும், தரமும் ஒன்று கூடி நிற்கும் அற்புதம் அவரிடத்தே நிகழ்கிறது என்பதுதான் வியப்பு. அந்த வகையில் அவரை வேறொரு துறை சாதனையாளரோடு மட்டுமே ஒப்பிட்டுப் பேச‌ முடிகிறது. ‘இசை ஞானி’ இளையராஜா!

*

ஜெயமோகன் அடுத்த வருட ஏப்ரலில் அறுபது அகவையை நிறைவு செய்கிறார். நடந்து கொண்டிருப்பது அவரது மணி விழா ஆண்டு. 1987ம் ஆண்டு கொல்லிப்பாவை இதழில் வெளியான ‘கைதி’ கவிதையை அவரது தொடக்கமாகக் கொண்டால் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். மிக நீண்ட காலச் செயல்பாடு. மிகச் செறிவான பங்களிப்பும். அதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைத் தொகுத்துக் கொள்ள முயலலாம்.

ஜெயமோகனின் தமிழ் இலக்கியப் பங்களிப்புகளை மூன்றாகப் பகுத்துக் கொள்கிறேன்: ஒன்று அவரது நேரடியான எழுத்துப் பங்களிப்பு. அடுத்து அவர் புதிய‌ படைப்பாளிகளின் எழுத்தில் செலுத்தும் தாக்கம். கடைசியாக அவர் முன்னெடுக்கும் இலக்கிய இயக்கம்.

முதல் பங்களிப்பை மேலும் மூன்றாகப் பிரிக்கலாம். ஒன்று அவரது புனைவாக்கங்கள். அடுத்து அவரது இலக்கிய மதிப்பீடுகள், மூன்றாவது அவர் நிகழ்த்தும் உரையாடல்கள்.

அவர‌து புனைவுலகு மிக மிகப் பிரம்மாண்டமானது. அவரது மிக முக்கிய ஆக்கங்களை மட்டும் பட்டியலிட்டாலே விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, கொற்றவை, வெள்ளை யானை, வெண்முரசு நாவல் வரிசை, பல‌ சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் என நீண்டு கொண்டே செல்கிறது. ஜெயமோகனைப் பற்றி அவரது கடும் விமர்சகர்கள் அல்லது எதிர்தரப்பினர் கூட எப்போதும் சொல்லும் கருத்து இது: “மற்ற விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும் புனைவில் அவரது உயரத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.”

அவரது புனைவுலகின் தனித்துவம் அளவு மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம். அவர் இந்து மதம் உள்ளிட்ட‌ இந்திய மெய்யியல் மரபையும், நித்ய சைதன்ய யதி முதலான அவரது குருமரபு ஞானத்தையுமே தன் எழுத்துக்களில் பிரதானமாக முன்வைக்கிறார். இன்றைய‌ உலகின் சிக்கல்களில் அவற்றைப் பொருத்தி விளையாடுகிறார். அந்த‌ வகையில் அவர் தமிழில் ஓர் அசலான பின்நவீனத்துவப் படைப்பாளி. அவரது அறிவியல் புனைவுகளில் கூட இந்தக் கூறைக் காணலாம். (இளையராஜா மேற்கத்திய மெட்டு ஒன்றை இசைக்கும் போதும் அதில் ஒரு தமிழக‌ நாட்டுப்புறத்தன்மை வந்து விடுவது போல்). என் வாசிப்பில் இதற்கு தமிழ் இலக்கியத்தில் முன்னோடிகள் எவரும் இல்லை. அவர்கள் பெரும்பாலும் நவீன விஷயங்களையே எழுதினர்; மேற்கத்திய விஷயங்களே அவர்களுக்கு உந்துதல். ந‌ம் மண்ணின் புராதனச் சிந்தனைகளைப் பிற்போக்குத்தனமாகப் பார்த்தனர்; அதே சமயம் மேற்கின் பழையவைகளை அணைக்கத் தயங்கவில்லை. அந்த இடைவெளியைத்தான் ஜெயமோகன் நிரப்பினார். கீழை மரபின் ஒளியில் கண்டடைந்த தரிசனங்களை தனது கதைகளில் முன்வைத்தார். (“இந்திய / தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறுவரையறை செய்தவர்” என அவரை அவரே ஒரு நேர்காணலில் விவரிக்கிறார்.)

எழுத்தில் இரண்டாவது பங்களிப்பு அவரது இலக்கிய விமர்சனங்கள். 1990ல் ரப்பர் நாவல் வெளியீட்டு விழாவில் “தமிழில் நாவல்களே இல்லை” என்ற வெடிகுண்டை வீசியது முதல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக‌த் தொடர்ச்சியாகத் தமிழில் ரசனைசார் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வருகிறார். அதன் பின்னிருக்கும் உழைப்பும் அக்கறையும் அளப்பரியது. அதன் உச்சம் இலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற‌ நூற்தொகுதி. புதிய வாசகர்களுக்கு மட்டுமில்லாமல் தேர்ந்த வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமே அது நவீனத் தமிழ் இலக்கியத்துக்கான ஒரு தெளிந்த‌ வரைபடம் மாதிரி செயல்படுகிறது.

ஒருகாலத்தில் சுஜாதா மேலோட்டமாகச் செய்து வந்த புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தல் என்ற‌ விஷயத்தை ஜெயமோகன் தீவிரமாகவும் துல்லியமாக‌வும் செய்கிறார். இன்று தமிழில் வெளியாகும் எந்த நல்ல எழுத்தும் அவர் பார்வைக்குத் தப்புவதில்லை. பல அவர் அறிமுகம் செய்த பின்பே வெளியே பரவலாகத் தெரியத் தொடங்குகின்றன. அதே சமயம் தகுதிக்கு மீறி புகழப்படும் எழுத்துக்களைக் கறாரான இடத்தைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. அதனால் விரோதிகள் உருவாகிறார்கள் என்கிற போதும்.

அவரது மூன்றாவது எழுத்துப் பங்களிப்பு இலக்கியம், கலை, வரலாறு, சமூகம், அரசியல், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம் எனப் பல விஷயங்களில் அவர் நடத்தும் விவாதங்கள். அதன் மூலம் பேசப்படாத‌ விஷயங்களில் பரவலான‌ உரையாடலை உண்டாக்குகிறார். காந்தியை மறுஆய்வு செய்தது போலமைந்த‌ இன்றைய காந்தி நூல் சிறந்த‌ உதாரணம். இன்னொரு கோணத்தில் அது தமிழ் சூழலுக்கே பெரும் திறப்பாக, ஒருவிதத் தூண்டலாக அமைகிறது. (இன்றைய காந்தி இல்லையெனில் என் ஆப்பிளுக்கு முன் நாவல் இல்லை.)

எழுத்து தாண்டிய வடிவங்களிலும் அவர் இதைச் செயல்படுத்துகிறார். ஊட்டி இலக்கிய முகாம்களைச் சொல்லலாம். திருக்குறள், குறுந்தொகை, பகவத் கீதை, வியாசர், சங்கரர், ஓஷோ, டால்ஸ்டாய் பற்றிய அவரது விரிந்த‌ உரைகளையும் இவ்வகையில் சேர்க்கலாம். இது ஒரு பண்டைய குருகுல மாதிரி. அந்த அடிப்படையில்தான் ‘ஆசான்’ எனப்படுகிறார்; குரு பூர்ணிமாவுக்கு மரியாதை செய்கிறார்கள்; ஆசிரியர் தினத்தில் வாழ்த்துகின்றனர்.

இந்த மூன்று நேரடி எழுத்துப் பங்களிப்புகளுக்கு அடுத்து அவரது பங்களிப்பு அவருக்கு அடுத்து எழுத வந்த படைப்பாளிகளின் படைப்புகளில் அவரது செல்வாக்கு. இதற்கு முன் சுஜாதாதான் அப்படி வெகுஜன எழுத்தாளர்களிடம் அதீதமாக‌த் தாக்கம் செலுத்தினார், வைரமுத்து வெகுஜனக் கவிஞர்களிடம் பெரும்பாதிப்பை நிகழ்த்தினார். ஆனால் தீவிர இலக்கியத்தில் அப்படியான பாதிப்பு நிகழ்ந்தது மிக அரிதுதான். சுந்தர ராமசாமியை ஆதர்சமாகக் கருதியோர் ஏராளம் - ஆனால் ஓரளவேனும் அவரது பாதிப்பு கொண்டவர் ஜெயமோகன் மட்டுமே. எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரனுக்குச் சிலர் அப்படி உருவானார்கள். ஜெயமோகன் பாதிப்பு கொண்ட‌ எழுத்தாளர்கள் என 20 பேரையாவது சுட்ட முடியும். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டப் பிரதான அங்கத்தினரில் கணிசமானோரிடையே அவரது வலுவான தாக்கம் உண்டு. நேரடியாகப் பிரதி செய்தல் என்பதை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் தனக்கான படைப்புலகின் தனித்துவத்துடன் ஜெயமோகனின் செல்வாக்கையும் கொண்டுள்ளவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இறுதி விஷயம் அவர் ஓர் இலக்கிய இயக்கமாகவே செயல்படுவது. விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைத்தான் சொல்கிறேன். ஆண்டுதோறும் தமிழின் முக்கியமான‌ படைப்பாளிக்கு விஷ்ணுபுரம் விருது அதன் முக்கியப் பங்களிப்பு. சில சமயம் அந்த விருது பெற்றவர்கள் அதற்கடுத்த ஆண்டுகளில் சாஹித்ய அகாதமி விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆக, அது இலக்கிய உலகில் சரியான ஆளுமைகளுக்கு அங்கீகாரம் போய்ச் சேரும் ஒருவித அழுத்தத்தை உண்டாக்குகிறது. எனக்குத் தெரிந்து தொடங்கிப் பத்தாண்டுகள் ஆகியும் பொருட்படுத்தத்தக்க சர்ச்சைகள் ஏதுமில்லாத விருது இது ஒன்றுதான். விருது நிகழ்வில் விருது பெறுபவருக்கு மட்டுமல்லாது அப்போதைய கவனிக்கத்தக்க எழுத்தாளர்களுக்கு வாசக உரையாடல் அரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. சாஹித்ய‌ அகாதமி மாதிரி அரசின் சார்பிலோ பாரதிய ஞானபீடம் மாதிரி பெரும் செல்வப் பின்னணி கொண்ட அமைப்போ செய்ய வேண்டிய வேலைகளைத் தனி ஒருவராய்த் தன் எழுத்தின் மூலம் திரட்டிய கூட்டத்தைக் கொண்டு செய்து வருகிறார். அதன் இன்னுமொரு பங்களிப்பு பல நிகழ்ச்சிகள் மூலம் செறிந்த வாசகர் திரளை உருவாக்கியது. ஓர் உணர்ச்சிவசப்பட்ட கணத்தில் யோசித்தால் இப்பங்களிப்பை இலக்கியப் புரட்சி எனச் சொல்லி விடலாம்!

இதெல்லாம் நினைவூட்டிக் கொள்வது போகிற போக்கிலோ, விதந்தோதும் நோக்கிலோ அவர் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் எனச் சொல்வதாகப் புரிந்து கொள்ளப்படலாகா என்பதற்காகவே. அதை நிறுவிய பின்பே என் உளக்கிடக்கையை முன்வைக்க இயலும்.

ஜெயமோகனுக்கு ஞானபீட விருது வழங்கப்பட வேண்டும் என்பதே அந்த‌ வேட்கை. ஏன்?

*

ஞானபீடம் இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருது. சுருங்கச் சொன்னால் உலகத்துக்கு இலக்கிய நொபேல் என்றால் இந்தியாவுக்கு ஞானபீடம். 11 லட்சம் ரூபாய் ரொக்கமும் வாக்தேவியின் வெண்கலச் சிற்பம் தாங்கிய‌ கேடயமும் பரிசாக‌ வழங்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாம் அட்டவணையில் குறிப்படப்படும் 22 மொழிகள் மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 23 மொழிகளுக்கும் சேர்த்து ஒவ்வோர் ஆண்டும் ஒரே விருது. (சில ஆண்டுகள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாலும் ஒரே மொழிதான்.)

இதை எழுதிக் கொண்டிருக்கும் கணம் வரையிலும் மொத்தம் 60 இந்திய எழுத்தாளர்கள் ஞானபீடம் பெற்றிருக்கிறார்கள். முதல் விருது 1965ல் ஜி. சங்கரா குறுப்புக்கு; சமீப விருது 2019ல் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு. இருவரும் மலையாளம்.  அதிகபட்சமாக இந்தி மொழிக்கு 11 முறை கிடைத்திருக்கிறது. அடுத்தபடியாக கன்னடம் 8 முறை, வங்காளம், மலையாளத்துக்கு தலா 6 முறை கிட்டியிருக்கிறது. தமிழுக்கு இரண்டு முறை. குஜராத்தி, மராத்தி, ஒரியா, உருது, தெலுங்கு எல்லாம் நம்மை விட அதிக‌ விருதுகள் பெற்றுள்ளன‌.

தமிழில் வாங்கியவர்கள் அகிலனும் ஜெயகாந்தனும். சாதாரண வெகுஜன எழுத்தாளர் அகிலனுக்குக் கிடைத்தது ஓர் அவலம்தான். ஒருவர் கேட்கலாம்: யாருக்குக் கிடைத்தால் என்ன? தமிழுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்பது நல்லதுதானே என. அப்படி இல்லை. இரு சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று அதன் அரியதன்மை. வழங்கப்படும் மொழிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், சராசரியாகக் கால் நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் ஒரு மொழிக்கு வாய்ப்பு வரும். அதனால் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளுமைகட்கு அதைக் கிடைக்கச் செய்வதே நியாயம். அடுத்த சிக்கல் இந்திய அளவில் தமிழுக்குக் கிடைக்கும் அடையாளம். நான் ஓரு மொழியின் சிறந்த படைப்புக்களைப் படிக்கலாம் எனத் தீர்மானித்தால் அம்மொழியில் யார் ஞானபீடம் வாங்கியிருக்கிறார்கள் என்கிற அளவுகோலை இயல்பாகவே கைகொள்வேன். அகிலனுக்கு விருது தரும் போது அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுப் பிற மொழிக்குச் செல்லும் சாத்தியம் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆக, மற்ற மொழிக்காரர்களுக்கு தமிழ் இலக்கியத்தின் முகமாக, அதன் ஆகச் சிறந்த உயரமாக அகிலனே பதிவார். அவரைப் படித்த பின் தமிழின் இலக்கியச் செழுமை மீதான அபிப்பிராயம் கடுமையாகச் சரியும். அதனால் சரியான ஆளுமைக்கு ஞானபீட விருது போக வைப்பதில் தமிழக இலக்கியவாதிகள், கல்விப்புலம் சார்ந்தோர், ஊடகங்கள், தேர்ந்த வாசகர்கள், மாநில அரசு என எல்லோருக்கும் கடமையிருக்கிறது.

1975ல் அகிலன் 2002ல் ஜெயகாந்தன். ஆக, கணக்குப்படி மிக விரைவில் தமிழுக்கு விருது உண்டு. கி.ராஜநாராயணன் இருந்த வரை அவரது பெயர் பேசப்பட்டது; இன்று இந்திரா பார்த்தசாரதியைச் சொல்கிறார்கள். என் வாசிப்பில் அரசியல் பகடி நாவல்கள், உறவுச் சிக்கல் எழுத்துக்கள், பன்முக‌ நாடகங்கள் என விரியும் படைப்புலகின் அடிப்படையில் நிச்சயம் அவர் சிறந்த எழுத்தாளரே. ஆனால் நெடிய‌ சுழற்சியில் நம் மொழிக்கு வாய்ப்பு வருகிறது. உள்ளதில் சிறந்ததை முன்வைப்பதே அறிவார்ந்த செயல்; நேர்மையானதும். அதுவே தமிழுக்கும் ஜெயமோகனுக்கும் செய்யும் நியாயமாக இருக்கும். ஆக, அவரைத் தமிழ்ச் சமூகம் ஒரு குரலாக முன்வைக்க வேண்டும். (தமிழில் இருவருக்குக் கொடுப்பது என வாய்ப்பு வருகிறதெனில் ஜெயமோகனுக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கும் தரலாம்.)

*

ஜெயமோகனுக்கு இதில் ஆர்வம் இருக்கிறதா என வினா எழலாம். இந்த ஐயத்தின் பின் உள்ள‌ காரணம் புரிகிறது. ஐந்தாண்டுகள் முன் இன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஜெயமோகன் ஏற்க மறுத்தார். அதற்கான காரணம் வேறு. அளித்தது பாஜக அரசு என்பதால், அவர் மீது ஏற்கெனவே இந்துத்துவ ஆதரவாளர் என்ற அவதூறு பரவலாக இருப்பதால், அவர்கள் ஆளும் சமயத்தில் தரப்படும் விருதை ஏற்பதால் அவரது கருத்துக்களின் நேர்மை  சந்தேகத்துக்கு இடமாவதை விரும்பாமல்தான் தவிர்த்தார்.

ஞானபீட விருதில் அப்பிரச்சனை இல்லை. இது அரசு வழங்குவது அல்ல; Bharatiya Jnanpith என்கிற தனியார் அமைப்பு வழங்குகிறது. அதை நிர்வகிப்பது சாஹு ஜெயின் என்கிற வியாபாரக் குடும்பம் (ஆனால் விருதுகளில் அவர்களின் தலையீடு இல்லை). The Times of India நாளேட்டை நடத்துபவர்களும் இவர்களே. மிஸ் இந்தியா, ஃபிலிம்ஃபேர் விருதுகள், எகனாமிக் டைம்ஸ் விருதுகள் இவர்கள் வழங்குவதே! ஆக அலர் அச்சம் இங்கு இல்லை.

ஆனால் ஜெயமோகனுக்கு ஞானபீடத்தின் சில தேர்வுகள் மீது அதிருப்தி உண்டு. இந்திரா கோஸ்வாமி (ஒரியா), ஓஎன்வி குறுப்பு (மலையாளம்) இருவருக்கும் தரப்பட்டது குறித்து அவருக்குக் கசப்பு இருக்கிறது. தமிழில் அகிலனுக்குத் தரப்பட்டதற்கு வெட்கிப் பல‌ பிற மொழி நேர்காணல்களில் பொதுமன்னிப்பு கேட்டிருக்கிறார். பைரப்பா (கன்னடம்), பஷீர் (மலையாளம்), சுனீல் கங்கோபாத்யாய (வங்காளம்) ஆகியோர் புறக்கணிக்கப்பட்டது குறித்த வருத்தம் உண்டு. தமிழில் அசோகமித்திரனும், கி. ராஜநாராயணனும் மறையும் முன்பே தமிழ் கல்விப்புலச் சூழலின் அரசியலைச் சுட்டி அவர்களுக்குக் கிடைக்காது என்றார். அதுவே நடந்தது. கலைஞரும், வைரமுத்துவும் இவ்விருதுக்கு முயற்சிப்பதை எதிர்த்தார். 2011ல் எழுதிய கடிதத்தில் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: “நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.” இந்தச் சூழலைத்தான் நாம் உடைக்க வேண்டும். அப்பணியை அவரிலிருந்தே தொடங்கலாம்!

இன்னொரு சிக்கல் அவரது இன்றைய உயரம். உதாரணமாக இன்று அவருக்கு சாஹித்ய அகாதமி வழங்கினால் அது ஒரு நகைச்சுவையாகவே இருக்கும். ஏற்க மாட்டார். அவர் விஷ்ணுபுரமும், பின் தொடரும் நிழலின் குரலும் எழுதிய தொன்னூறுகளின் இறுதியில் அவருக்கு சாஹித்ய அகாதமி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் வேறு மாதிரியான உயரங்களுக்குப் போய் வெகுகாலமாகிறது. அவரே சமீப ஆண்டுகளில் பல இடங்களில் குறிப்பது போல் உலக அளவிலேயே ஐந்தாறு எழுத்தாளர்கள்தான் தனக்கு இணையாக எழுதுவதாகக் கருதுகிறார். ஆக, உள்ளூர அவரது இலக்கு இலக்கியத்துக்கான‌ நொபேல் பரிசாகவே இருக்கும். இந்தியாவுக்குள் நிகழும் விருது அரசியல் அக்கப்போர்க‌ள் அங்கே இல்லாம‌ல் இருக்கலாம் (அல்லது புறந்தள்ளுமளவு குறைவாக இருக்கலாம்) எனும் போது அது நியாயமான எண்ணமே. அது நிகழட்டும். அதற்கு முன் கைக்கருகே உள்ள‌ இதுவும் நிறைவேறட்டும் என்பதே என் எண்ணம். அதற்கான படிக்கல்லாகவும் இது அமையலாம். (மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்குப் போகும் முன் மிஸ் இந்தியா போட்டியில் வெல்வது போல்.)

ஆக, ஒருவேளை ஜெயமோகனுக்கு ஞானபீடத்தில் விருப்பமில்லை என்றாலும் கூட‌ தமிழ் இலக்கியத்தின் நீண்டகால நலனுக்காக அவர் இதை ஏற்றாக‌ வேண்டும். (அருணாச்சலம் படத்தில் ரஜினி சமூக நலனை முன்னிட்டும் தவறானவர் வெல்லக்கூடாது என்பதாலும் தனக்கு ஆர்வமற்ற‌ பணத்தை அடைய, செலவு செய்யும் போட்டியில் இறங்குவது போல்.)

நாளை ஞானபீடம் போல் ஜெயமோகனே தன் சார்பில் தேசிய அளவிலான வெண்முரசு விருது ஒன்றை உண்டாக்கி அளிக்க ஆரம்பிக்க இது ஒரு திறப்பாகவும் அமையக்கூடும்.

*

ஞானபீட விருது யாருக்கு வழங்கப்படுகிறது? மிகச் சுருக்கமாகவே விவரிக்கிறார்கள்: “the most outstanding writer”. அதாவது மிகச் சிறந்த எழுத்தாளர். அன்றைய தேதியில் அதன் தேர்வுக் குழுவின் கருத்துப்படி இந்தியாவின் சிறந்த எழுத்தாளர் என்று கொள்ளலாம். ஒவ்வொரு மொழிக்கும் சிபாரிசுக் குழு வைத்து அவர்கள் முன்வைக்கும் எழுத்தாளரை அதே போன்று மற்ற மொழிக்காரர்கள் சிபாரிசு செய்யும் எழுத்தாளர்களோடு ஒப்பிட்டு இறுதியாக ஒருவரைத் தீர்மானிக்கிறார்கள். என் கணிப்பு தமிழின் குழு ஜெயமோகனை ஒருமனதாக முன்மொழிந்து விட்டால் பிறகு பிற‌ மொழி எழுத்தாளர்களுடான ஒப்பீட்டில் அவர் எளிதில் வென்று விடுவார். அந்த ஒரு கோட்டைத்தான் கடக்க வேண்டி இருக்கிறது.

ஜெயகாந்தன் ஞானபீடத்துக்கு உரித்தானவரே. தமிழுக்கு ஞானபீடத்துக்குத் தகுதியான மற்ற எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும். அவர்களுக்குப் பெற்றுத் தர தமிழ்ச் சமூகம் தவறி விட்டது. இப்போது ஜெயமோகனுக்காவது அதைச் செய்வோம். இன்னொரு விஷயம் இளம் வயதில் ஞானபீட விருதைப் பெற்றவர் அமிதவ் கோஷ் (63). ஜெயமோகனுக்கு இன்று வழங்கப்பட்டால் அச்சாதனையை முறித்துத் தனதாக்குவார்.

ஜெயமோகன் தன் படைப்பாயுளின் சரிபாதியில் இருக்கிறார். என் கணிப்பும் விருப்பும் அவர் இன்னும் 35 ஆண்டுகளேனும் எழுதுவார் என்பதே. ஆக, குறைந்தபட்சம் இதுவரை நிகழ்த்திய சாதனைகள் அப்படியே இரண்டு மடங்காகும். அது ஓர் இந்திய எழுத்தாளன் எண்ணிப் பார்க்கவே முடியாத பெருஞ்சாதனையாக இருக்கும். அதற்கான அடையாள‌ வரவேற்பாக ஞானபீடம் அமைய வேண்டும். அவரது வட்டம் இதற்கான‌ முயற்சிகளை சரியாக‌ முன்னெடுக்க, மொத்தத் தமிழ்ச் சமூகமும் இணைந்து கொள்ள வேண்டும்.

இதை எப்படிச் செய்வது என ஜெயமோகனுக்கு நன்கு தெரியும். கி.ரா.வுக்கு ஞானபீடம் அளிக்கப்பட வேண்டும் என 2017ல் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். சார்ந்தோர் அதை அப்படியே இன்று கி.ராவுக்கு பதிலாக ஆசானுக்கு முன்னெடுத்தாலே போதும். இது ஓர் ஆறு மாத ப்ராஜெக்ட் என்றுதான் தோன்றுகிறது. எடுத்தால் மணி விழாவோடு ஞானபீடத்துக்கான பாராட்டு விழாவையும் சேர்த்தே நடத்தி விடலாம். செலவு மிச்சம்.

ஞானபீட விருதில் உள்ள‌ வாக்தேவி என்பது சரஸ்வதியின் ஜைன ரூபம். தமிழ் இலக்கிய‌ பிரம்மா, சரஸ்வதியை ஏந்தி மந்தகாசம் சிந்தி நிற்கும் காட்சியைக் காண வேண்டாமா?

தமிழ் எழுத்துலகிலும் பெருங்கொண்டாட்டமும் பெருங்கலவரமும் நடந்து நாளாகிறது!

***

(2022 ஜெயமோகன் மணி விழா மலருக்காக‌ செப்டெம்பர் 2021-ல் எழுதியது)

  •  

நட்சத்திரமும் பட்டாம்பூச்சிகளும்

"ப்ரியங்கா மோகன் அவ்வளவு ஒண்ணும் அழகா இல்லையே?"
 
"டாக்டர் பாரு."
 
(டாக்டர் படம் பார்த்த பின்)
 
"ப்ரியங்கா மோகன் அவ்வளவு ஒண்ணும் அழகா இல்லையே?"
 
"டாக்டர் பாரு."
 
*
 
'ஒரு நிமிடத்தில் ப்ரியங்கா மோகனை விரும்பத் தொடங்குவது எப்படி?' என்றுதான் இந்தக் கட்டுரைக்கு முதலில் தலைப்பிட்டேன். ஆனால் ரொம்ப சுயமுன்னேற்றத்தனமாக இருந்தது என்பதாலும், கவித்துவம் ஒரு சிட்டிகை குறைகிறது என்பதாலும் மாற்றினேன். ஆனால் இலக்கு அதேதான் - ஒரு டஜன் வீடியோக்கள் வழி அவரை எல்லோருக்கும் பிடித்துப் போகச் செய்வது!

ப்ரியங்கா மோகனை முதன் முதலாக அக்டோபர் 10ம் தேதிதான் பார்த்தேன். டாக்டர் வெளியான‌ இரண்டாம் நாள் மாலை சுமார் 7:15 மணிக்கு பிவிஆர் வேகா சிட்டி அரங்கில். So Baby பாடலில் டாக்டர் வருண் முதன்முதலாக பத்மினியை பார்க்கும் போதுதான் ரைட்டர் சிஎஸ்கேவும் முதன் முதலாக ப்ரியங்காவைப் பார்க்கிறான். முகத்தில் ஒளியும் நிழலும் விளையாட்டு நிகழ்த்தும் காவியச் சாயை நிரம்பிய‌ நடனக் காட்சி! "தீக்குச்சி கிழித்த மின்னல்... / முகிலின் வெடிமருந்து பிளந்த இமைக்கணம்..." என்ற பிரமிள் வரிகளைத்தான் அந்தக் கணத்தை விவரிக்கத் துணைக்கழைக்க வேண்டியிருக்கிறது!

படம் முடிந்தவுடன் போட்ட முதல் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்: "கோட்டை எல்லாம் அழிங்கடா. முதல்ல இருந்து போடனும். The name is ப்ரியங்கா அருள்மோகன்." அங்கேதான் எல்லாம் தொடங்கியது. வெறும் நாற்பது நாட்களில் இத்தனை பிடித்துப் போவது ஆச்சரியம்தான். இத்தனைக்கும் அனு ஸிதாராவை ஏற்கெனவே உபாசனை செய்து கொண்டிருந்த சூழல். எனக்கு வெவ்வேறு காலகட்டத்தில் உலகின் உச்ச அழகிகளாகத் தோன்றியோர் எனப் பார்த்தால் நால்வரைச் சொல்ல முடிகிறது: ஐஸ்வர்யா ராய் (1994 - 2007), தீபிகா படுகோன் (2008 - 2018), அனு ஸிதாரா (2019 - ). இப்போது ப்ரியங்கா மோகன் (2021 - ).

ப்ரியங்கா மோகனிடம் பல நடிகைகளின் சாயல் இருக்கிறது. எனக்குத் தோன்றியவர்கள்: 1) ரெஜினா கஸாண்ட்ரா 2) அஞ்சலி 3) சுனைனா 4) கீர்த்தி சுரேஷ் 5) மஹிமா நம்பியார் 6) ப்ரியா பவானிசங்கர் 7) இந்துஜா ரவிச்சந்திரன் 8) அனுஷ்கா 9) ஸ்ரீதிவ்யா 10) மஞ்சிமா மோகன் 11) அப்புறம் last but not the least  -அனு ஸிதாரா. (சொல்லப் போனால் ப்ரியங்கா மோகன் என்பதே அனு ஸிதாராவின் அம்சம்தான். இந்த விதந்தோதல்கள் யாவும் மறைமுகமாக அவருக்கே போய்ச் சேருகிறது! விஷ்ணுவை மட்டுமே வணங்கும் விசுவாச வைணவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் இஷ்டமானவனாக இருப்பதில்லையா!)

இத்தனை ரசித்ததில் கண்டறிந்தது ப்ரியங்கா மோகனுக்கு மூக்கின் நுனியில் ஒரு ரகசிய மச்சம் இருக்கிறது. முதல் பார்வைக்கும், மறுபார்வைக்கும், வெறும் பார்வைக்கும் சிக்காமல் குறிப்பிட்ட பாகையில் தலை சாய்க்கையில் மட்டுமே இயற்கை அருளால் சாத்தியமாகும் திவ்யதரிசனம்!

அவருடையது ஒரு முதிர்ந்த‌ சிறுமியின் உடல்மொழி. பதின்மத்தில் நமக்கெல்லாம் கற்பனையில் ஒரு காதலி இருந்திருப்பாளே, அப்பெண் நம் மனதிலிருந்து உயிர் பெற்றெழுந்து வந்து நம் முன் நின்றால், அதுதான் ப்ரியங்கா மோகன். சற்று முன் மலர்ந்த பூவில், விடியலின் சிறுபனித் துளிகள் சில படர்ந்தது போல அத்தனை புதியதான, பரிசுத்தமான முகம்! எவ்வளவு பார்த்தாலும் தீராத, திகட்டாத வதனம்!

இதற்கான என் நன்றியுணர்வின் காரணமான சிறுஎதிர்வினைதான் ஃபேஸ்புக்கில் தினம் போடும் #TheMostBeautifulGirl தொடர். இன்று பலரும் அதில் பங்கேற்கிறார்கள். அது அழகைக் கொண்டாடும் ஒரு திருவிழா. ஊர் கூடித் தேரிழுத்தல். தேரில் இருப்பது ப்ரியங்கா மோகன். தேர் தமிழ்ப் புத்தகங்கள்!


அவர் கழுத்தின் பக்கவாட்டுக்கும் காதுக்கும் இடையேயான பிரதேசத்தில் மூன்று பட்டாம்பூச்சிகளை டாட்டூ குத்தியிருக்கிறார். அவர் இதுகாறும் படங்களில் ஏற்ற பாத்திரங்களில் எல்லாம் அப்படியான ஒரு சிறகடிப்புத்தனம் இருக்கிறது. தனித்துவமான நட்சத்திரமான அவரை அந்த அழகிய டாட்டூவுடன் காணும் போது வண்ணத்துப் பூச்சிகளின் மூன்று குணங்கள் நினைவு வருகின்றன - அழகு, நளினம், மென்மை. பல பண்டைய கலாசாரங்களிலும் வண்ணத்துப் பூச்சி என்பது ஆன்மாவின் குறியீடு. அவரது கோடிக்கணக்கான விசுவாச ரசிகர்களின் ஆன்மா அவரிடத்தே பறப்பதாகவும் கருதலாம்.

ப்ரியங்கா மோகன் இன்று 27 வயது பூர்த்தி செய்கிறார். அன்னை கன்னடம், தகப்பன் தமிழ். எங்களூர் பெங்களூரில் பொறியியல் படித்திருக்கிறார். அவரது அழகின் தகுதிக்கேற்ற உயரத்தை, புகழை இன்னும் அடையவில்லை என்றே சொல்வேன். சமூக வலைதளங்களில் அவர் மிகக் குறைச்சலாகப் புழங்குவதும், ஃபோட்டோஷூட்கள் அதிகம் நிகழ்த்தாததும்தான் காரணம் எனத் தோன்றுகிறது.

விரைந்து அவற்றை நிவர்த்தி செய்து வெல்ல‌ வாழ்த்துக்கள். அழகும் வளமும் பல்கிப் பெருகட்டும்!

https://www.instagram.com/priyankaamohanofficial

https://twitter.com/priyankaamohan

*

நானறிந்த வரை ப்ரியங்காவின் முதல் ஒளி ஊடக அறிமுகம் சென்னையில் இருக்கும் MANAM என்ற ஜவுளிக் கடையின் தொலைக்காட்சி விளம்பரம்தான். செப்டெம்பர் 2018ல் வெளியாகி இருக்கிறது. அதிலேயே பிரமாதமாக இருக்கிறார்! அதில் வரும் வசனம் ஒன்று: "கல்யாணப் பொண்ணு ராணி மாதிரி இருக்க வேணாம்?" (இதில் முன்னாள் பாரதி கண்ணம்மா ரோஷினியும் ஓரமாக வருகிறார்.)

ப்ரியங்கா மோகன் நடித்த முதல் படம் Ondh Kathe Hellaவில் (கன்னடம்) மார்ச் 2019ல் வெளியானது. கிரிஷ் ஜி என்ற புதியவர் இயக்கியது. அமானுஷ்யப் படம். சின்ன பட்ஜெட். எல்லோருமே புதுமுகங்கள். ப்ரியங்காவுக்கு எந்தத் தனித்துவமும் இல்லாத பாத்திரம். அழகு, முகபாவம் என எதற்கும் வாய்ப்பற்ற படம். மொத்தமாகவே இரண்டு காஸ்ட்யூம்க‌ள். சொந்தக் குரலும் இல்லை. ஆவியை அண்ணாவென விளித்துக் கெஞ்சும் இறுதிக் காட்சியின் ஒரு துளி தவிர படத்தில் வேறெங்கும் ப்ரியங்கா மோகனின் ஆளுமை வெளிப்படவில்லை. அவரே மறக்க விரும்பும் படமாக இது இருக்கலாம். நாமும் மறப்போம்.

ப்ரியங்காவின் இரண்டாவது படமாகவும் தெலுங்கில் முதல் படமாகவும் அமைந்தது Nani's Gang Leader. 2019 செப்டெம்பரில் வெளியானது. யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் எடுத்தது. நானி நாயகன். பெரும்பாலும் சுவாரஸ்யமான படமே. பழிவாங்கும் கதை. டாக்டர் போன்ற கதைச் சூழல்தான். எனவே இதிலும் அழகு டாலாகவே ப்ரியங்கா வருகிறார். இதிலும் மக்கு போல் காட்டுகிறார்கள். ஒரு காட்சியில் வீடியோ கட்டுப்பாட்டு அறையில் நானியிடம் டாடி - மம்மி எனச் சொல்லி ஒரு முகபாவம் காட்டுவார் - இணையற்ற கலாப்பூர்வ உச்சம்! அதே போல் நானியிடம் சட்டை பொத்தானை நெகிழ்த்தச் சொல்லும் காட்சியில் அவர் பார்க்கும் வசீகரப் பார்வை, அடடா! 

இந்தப் படத்திற்கு இசை அநிருத். Ninnu Chuse Anandamlo என்ற ரொமான்ஸ் montage பாடல் இது.

அடுத்தது Hoyna Hoyna பாடல். அன்பிற்கான montage என்றாலும் இதிலும் ரொமான்ஸ் உண்டு.

கடைசியாக‌ Ra Ra என்கிற எழுச்சிப் பாடல். (இதில் குறைந்த நேரமே ப்ரியங்கா வருவார்.)

ப்ரியங்கா நடிப்பில் வெளியான மூன்றாவது படம் Sreekaram (தெலுங்கு). மார்ச் 2021ல் வெளியானது. கிஷோர் பி என்ற புதியவர் இயக்கி இருக்கிறார். நாயகன் சர்வானந்த் (எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தவர்). பசுமை விகடன் பாணி விவசாயக் கதை. சுமாரான படம். ப்ரியங்கா நடித்ததில் இதில்தான் screen time அதிகம். அதனாலேயே கொண்டாட்டத்துக்கு உரியதாகிறது. வழமை போலவே மெழுகு பொம்மை! மிகச் சிறிய பருக்களும் அழகூட்டவே செய்கின்றன. மற்ற படங்கள் போல் இதில் அவர் அழகான முட்டாள் அல்ல. ஆனால் அதை விடக் கொடுமையாக ப்ரியங்கா சர்வானந்தைக் காதலிக்கக் கோரி பின்னால் நச்சரித்துக் கொண்டு சுற்றுவதுதான். படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

இதில் வரும் ரொமான்ஸ் பாடல் Bhalegundi Baalaa. ஒரு முரட்டுக் குழந்தையின் புன்னகை மாதிரி அழகு!

Hey Abbayi என்பது இதில் வரும் stalking பாடல். ப்ரியங்காவை அதீத உற்சாகத்துடன் காட்டிய பாடல்.

இப்படத்தின் எழுச்சிப் பாடல் இது (Title Track). இடையிடையே சில காட்சிகளில் மட்டும் வருவார்.

அடுத்தது சென்ற மாதத்தில் டாக்டர் வெளியானது. சிவகார்த்திகேயன் நாயகன். நெல்சன் திலீப்குமார் இயக்கம். டார்க் ஹ்யூமர் வகை குற்றவியல் கதை. ப்ரியங்கா மோகனை மிக ரசிக்க முடிந்த படம். (ஆனால் அவசியமின்றி அவரது பாத்திரம் முட்டாள் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.) ப்ரியங்கா மோகனின் தனித்துவம் டாக்டர் படத்தை நான்காம் முறை பார்க்கும் போதும் முதல் முறை பார்த்தது போன்ற அதே பரவசத்தையும் புல்லரிப்பையும் ஏற்படுதிய‌துதான். அவரது இருப்பால் ஒரு Fairy Tale-ஐ லாஜிக் பார்க்காமல் ரசிப்பது போல் டாக்டர் படத்துடன் நம்மால் ஒன்ற முடிகிறது.

இப்படத்தின் So Baby பாடல் அழகை அணு அணுவாய் ஆராதிக்கும் கலாரசனை! தமிழ் சினிமாவில் இத்தனை அழகான கதாநாயகி அறிமுகப் பாடல் வேறேதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அழகாய் இருப்பதாகச் சொன்னதும் பொதுவாக‌ இளித்து அந்தப் புகழ்ச்சியை சற்றே மங்கச் செய்வதே பெண்டிர் வழக்கு. ஆனால் இப்பாடலில் சிவகார்த்திகேயன் "But you look beautiful" என்றதும் "Thank you" என்று சொல்லி விட்டு அரைக் கணம் இடைவெளி விட்டு மெல்லத் தலையசைக்கிறார் ப்ரியங்கா மோகன். உடனே அப்புகழ்ச்சி போதாமல் போன குற்ற உணர்வில் நம் மனம் துணுக்குறுகிறது.

அடுத்து பெரிய ஹிட் அடித்த செல்லம்மா பாடல்.  எனக்குப் பாடல் பெரிய உவப்பில்லை என்றாலும் அழகு டாலுக்காகப் பார்க்கலாம். குழந்தைமையும் குமரித்தன்மையும் பிணையும் சூட்சமப் புள்ளி.

அடுத்து டாக்டர் படப் பாடல் வெளியீட்டு நிகழ்வில் இதே செல்லம்மா பாடலின் வீடியோவை முதல் முறை பார்க்கும் போது ப்ரியங்காவின் முகபாவங்கள். எனக்கு அசல் பாடலின் வீடியோவை விடவும் இதுவே மிகப் பிடித்தது. இதில் புன்னகை செய்வது போல் பாவனை செய்து விட்டு அதை முழுக்க நிறைவேற்றாமல் ஏமாற்றுவார் - லேசாக இதழ்கள் விரிப்பது போல் வந்து போக்குக் காட்டி விட்டு மலராத ஒரு சன்னப் பூவின் கள்ளத்தனக் கவித்துவம் போல! (மொபைல் எனில் portrait-ல் பார்க்கவும்.)

நெஞ்சமே நெஞ்சமே பாடல் படத்தில் குழந்தையைத் தேடும் montage பாடலாக வருகிறது. (ஆனால் வரிகளைக் கொண்டு பார்க்கும் போது அது பிரிவுத் துயர் அல்லது காதல் தோல்விப் பாடல்தான். அனேகமாக சிவகார்த்திகேயனை ப்ரியங்கா மறுத்த பின் வரும் பாடலாக இருந்திருக்கக்கூடும்.) இதன் சிறப்பு அழுகையிலும் அழகாக இருப்பது எப்படி என்று பாடம் நடத்தியிருப்பார் ப்ரியங்கா!

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் வேண்டாம் என ப்ரியங்கா மோகன் மறுத்துப் பேசும் காட்சிகள். அவரது உச்சப் பங்களிப்பு என அதையே சொல்லத் தோன்றுகிறது. அதன் ஒரு பகுதி வீடியோ மட்டும் இதில். (ப்ரியங்கா மோகன் இப்படிச் சொன்னால் இறந்த‌ ஒருவன் உயிரோடு எழுந்து வரக்கூடும்.)

இந்தத் தருணத்தில் பிகே வர்மா, கீர்த்தன் பூஜாரி, மிரொஸ்லா கூபா ப்ரோஸெக், ஜெ யுவராஜ், விஜய் கார்த்திக் கண்ணன், கேஎம் பாஸ்கரன், ஆர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி - ஒளிப்பதிவாளர்கள் கண்கள் வழியேதான் நாம் ப்ரியங்கா மோகனின் பேரழகை ரசித்துக் கொண்டிருக்கிறோம். 

*

அடுத்து ப்ரியங்கா மோகன் நடிப்பில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படம் (இயக்கம் சிபி சக்ரவர்த்தி), சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் (இயக்கம் பாண்டிராஜ்) ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அடுத்து விஜய், அஜீத், ஷங்கர், மணி ரத்னம் என மேலேறுவார் என்பதில் ஐயமில்லை.

அது போக டிக்டாக் என்றொரு பழைய படத்தைத் தூசு தட்டுகிறார்கள் போலிருக்கிறது. மதன குமார் என்பவர் இயக்கம். (அதில் ப்ரியங்கா சற்றே தாராளமாக நடித்திருப்பதாகவும் இப்போது டாக்டர் தந்த வெளிச்சத்தால் அதை வெளியிட முயற்சிப்பதாகவும் ப்ரியங்கா தடுக்கப் போராடுவதாகவும் கிசுகிசு. ஆனால் ட்ரெய்லரை வைத்துப் பார்த்தால் ப்ரியங்கா ஏதும் ஆபாசமாக நடித்திருப்பது போல் எனக்குத் தெரியவில்லை; இன்னொரு நடிகைதான் அவ்வாறு வருகிறார். இவர்கள் சும்மா ஊகத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, எனக்கு ஒன்று புரியவில்லை. என்ன மாதிரி நடித்தாலும் நமது மெழுகு டாலை ஒருவர் தவறாகவே பார்க்க முடியாது. அப்படி இருக்க எந்தப் படம் வந்தால் என்ன!)

அவரது அப்பா அருள்மோகனுக்கும் நமக்குப் பெயர் தெரியாத அம்மாவுக்கும் அன்பு. அதிதியாக‌, ப்ரியாவாக‌, சைத்ராவாக, பத்மினியாக இன்னும் நூறு பாத்திரங்களாக இவ்வையத்தை உய்விக்க வாழ்த்துக்கள்! பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கட்டும். வானை முட்டி நட்சத்திரம் தொடட்டும்.

***

  •  

நாவும் காலும்

CSK Diet - http://www.writercsk.com/2020/10/csk-diet.html

டயட்: சில சிந்தனைகள் - http://www.writercsk.com/2021/04/csk.html

எடை பார்த்தல் - http://www.writercsk.com/2021/09/blog-post.html

ஓராண்டின் முடிவில் - http://www.writercsk.com/2021/09/blog-post_18.html 

1) நான் தினசரி நடைப்பயிற்சி தொடங்கி 13 மாதங்களாகிறது. CSK டயட்டில் இறங்கி கிட்டத்தட்ட‌ 10 மாதங்களாகிறது. என்னுடன் நடைப்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாட்டிலும் இறங்கிய நண்பர்களும், வேடிக்கை பார்க்கும் அன்பர்களும் அவ்வப்போது கேட்கும் கேள்வி எவ்வளவு எடை குறைந்தது என்பது. இடையே ஒரு முறை இது குறித்து எழுதினேன் என்றாலும் இப்போது மறுபடி புதுப்பிக்கிறேன்.

2) அதற்கு முன் சில விஷயங்களைச் சொல்கிறேன். எந்த ஒரு வேலையின் முடிவுகளையும் அளக்க இரண்டு விதமான அளவீடுகள் (Metrics) உண்டு. உள்ளீட்டு அளவீடுகள் (Input Metrics) மற்றும் வெளிப்பாட்டு அளவீடுகள் (Output Metrics). நாம் செய்யும் வேலைகளை அளப்பது உள்ளீட்டு அளவீடுகள்; அதன் முடிவுகளை அளப்பது வெளிப்பாட்டு அளவீடுகள். அதாவது நாம் எடுக்கும் முயற்சிகளை மட்டும் அளந்தால் போதாது, அதற்கான பலன்களையும் அளக்க வேண்டும். அதனால் வெளிப்பாட்டு அளவீடுகளும் உள்ளீட்டு அளவீடுகள் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. உதாரணமாக இதில் எத்தனை நாள் தொடர்ச்சியாக 10,000 அடிகள் நடந்தேன் என்பதும், எத்தனை நாள் Cheat இல்லாமல் டயட்டில் இருக்க முடிந்தது என்பதும் உள்ளீட்டு அளவீடுகள். எத்தனை கிலோ எடை குறைந்தது, எத்தனை செண்டிமீட்டர் இடுப்புச் சுற்றளவு குறைந்தது என்பவை வெளிப்பாட்டு அளவீடுகள். (சிலர் ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறதா, கொலஸ்ட்ரால் சரியாக இருக்கிறதா, ரத்தம் அழுத்தம் சரியாக இருக்கிறதா போன்றவற்றையும் அளக்க விரும்பலாம்.)

3) இவை உள்ளீட்டு அளவீடுகள்: இன்றைய தேதிக்கு, நான் தொடர்ச்சியாக இடைவெளியே இன்றி 405 நாட்கள் தலா 10,000 அடிகள் நடந்திருக்கிறேன். கடந்த 293 நாட்களில் 42 நாட்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கைவிட்டிருக்கிறேன், மீதி 251 நாள் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறேன்.

4) வெளிப்பாட்டு அளவீடுகள்: சுமார் 15 கிலோ எடை குறைந்திருக்கிறது; சுமார் 17 செண்டிமீட்டர் இடுப்பளவு குறைந்திருக்கிறது. ரத்தச் சோதனைகள் இப்போதைக்கு நான் தீவிரமாகக் கணக்கிடும் அவசியம் ஏற்படவில்லை. (ஆனால் சமீப‌ச் சோதனைகளின்படி யாவும் கட்டுக்குள் இருக்கின்றன.) நான் கவனிக்கும் இன்னுமொரு விஷயம் உடற்சோர்வு, மூட்டு வலி, வயிற்றுப் பிரச்சனைகள் முதலான பக்க விளைவுகளேதும் இத்தொடர் நடை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் வருகிறதா என்பது (தவறான உத்திகளால் முதலுக்கே மோசமாகி விடக்கூடாது என்பதற்காக‌). அப்படி ஏதும் இல்லை.

5) இப்போது நான் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்திருக்கிறேன். பார்ப்போம்.

  •  

ஓராண்டின் முடிவில்...

#OKK (ஒரு கோடி காலடிகள்) #day365

சென்ற விநாயக சதுர்த்தியில் தீர்மானித்து ஆகஸ்ட் 24, 2020 அன்று தொடங்கியது. ஒரு நாளும் தவறாமல் தொடர்ந்து முழு ஓராண்டு தினம் 10,000 காலடிகள் நடந்திருக்கிறேன்.

சென்ற ஆண்டு இப்படி நான் ஒழுக்கம் பேணுவேன் என எவரும் சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன். ஏனெனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பல முறை ஜிம், யோகா, க்ளப் எனக் காசை வியர்வையாக்க முயன்று விரயமாக்கியிருக்கிறேன். சும்மா பூங்காவில் அல்லது நெரிசலற்ற சாலைகளில் கூடப் போகலாம். பெங்களூர் என்பதால் இரண்டுக்குமே பஞ்சமில்லை. ஆனால் காசு கட்டியதற்காகவேனும் விடாது போவேன் என்ற நப்பாசை. ஆனால் நடந்தது என்னவென்றால் அதிகபட்சம் ஒரு மாதம் போவேன், அப்புறம் சோம்பல் புகுந்து விடும், அல்லது ஏதேனும் காரணம் சிக்கி விடும். அதை முடித்த பின் என ஒரு நாள் குறிப்பேன். அந்நாள் வரவே வராது. அந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் போது எனக்கே இதில் பெருமிதம்தான். 🙂

இந்த ஓராண்டுத் தொடர்ச்சியைக் குலைக்க ஏராளம் சந்தர்ப்பங்கள் வந்தன. பயணம் அதில் முதலாவது, தொற்றுச்சூழல் இரண்டாவது, உடல் நலம் மூன்றாவது. சென்னை, கோவை, ஈரோடு, மைசூர், கொல்லிமலை என வெளியூர் செல்ல நேர்ந்த போதும் நடைக்கென ஒன்றரை மணி நேரம் பிடிவாதமாய் ஒதுக்கினேன். இரு கோவிட் அலைகளுக்கு மத்தியில்தான் இந்த ஓராண்டு கடந்தது. பிடிஎம், கோரமங்களா பகுதிகளின் பல பூங்காங்கள், அகரா ஏரி, ஆட்கள் அதிகமற்ற சாலைகள் தொடங்கி அபார்ட்மெண்ட் பார்க்கிங், மொட்டை மாடி, ஒரு கட்டத்தில் வீட்டுக்குள்ளேயே கூட நடந்தேன். சிறிய உடல் நலப் பிரச்சனைகள் வந்த போதும் நடையை நிறுத்தவில்லை (calculated risk).

முதல் ஓரிரு மாதம் காலை, மாலை என 5000 அடி பிரித்து நடந்தேன், பின் ஒன்றாக்கினேன். 100 நாள் கடந்ததும் பத்து லட்சம் காலடிகள் என்ற இலக்கை ஒரு கோடி காலடிகள் என மாற்றினேன். முதல் 300 நாட்கள் வேகம் பற்றிக் கவலைப்படவில்லை, 10,000 அடிகள்  மிக இயல்பாகத் தொடர்ந்து நடக்க உடலைப் பழக்கப்படுத்துவதே நோக்கமாக இருந்தது, அப்போதெல்லாம் சராசரியாக 90 நிமிடங்கள் பிடிக்கும். பிறகு வேக நடை, ஜாகிங் என மாற்றினேன். இன்று 62 நிமிடங்களில் கூட 10,000 அடிகளைத் தொட முடிகிறது. 60 நிமிடங்களில் முடிக்க முயற்சிப்பது அடுத்த படி.

இந்த சேலஞ்சில் தொடர்ச்சியாய் என்னுடன் பங்கேற்ற நண்பர்கள் Ulaganathan Narayanan மற்றும் Sowmya Ragavan-க்கு அன்பும் பாராட்டும். ஆரம்பத்தில் ஜெயமோகன் உரைகளும், பின் இளையராஜா பாடல்களும் கேட்டு நடந்தேன். இப்போது பெரும்பாலும் ஏதும் கேட்பதில்லை.

இன்று ஒரு மணி நேர தினசரி நடை என்பது என் வாழ்முறையின் (lifestyle) ஒரு பகுதியாகி விட்டது என்றே நம்புகிறேன். இதனால் எடை குறைந்ததா, எனில் எவ்வளவு, நான் எப்படி உணர்கிறேன் என்பதற்குள் எல்லாம் நான் போகவில்லை. (உணவுக் கட்டுப்பாட்டிலும் இருப்பதால் நடையின் விளைவுகள் எவை எனத் துல்லியமாகச் சொல்ல முடியாது.) ஆனால் தினசரி நடை மிக நல்லது எனத் தெரியும். சென்ற தலைமுறையின் 40கள்தாம் இன்றைய தலைமுறையின் 30கள் என்பது என் கருதுகோள். ஆக, இப்போது முப்பதுகளில் நுழைந்து விட்டவர்கள் - எடை அதிகமோ இல்லையோ, நோய்கள் உண்டோ இல்லையோ - இதைச் செய்ய ஆரம்பிக்கலாம். ஏனெனில் இது எதிர்கால நோய்களைக் கையாளவோ, ஒத்திப் போடவோ, தவிர்க்கவோ உடலைத் தயார் செய்வதுதான். க்ளீஷேதான் என்றாலும் திருமூலர் வாக்கை விட இவ்விடத்தில் பொருத்தம் வேறில்லை எனத் தோன்றுகிறது:

"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே"
  •  

எடை பார்த்தல்


உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று இருப்பவர்கள் அவ்வப்போது எடை பார்த்துக் கொள்வது என்ன முன்னேற்றம் எனப் புரிந்து கொள்ளவும், அதன் வழி மேலும் ஊக்குவிப்பு பெறவும், மாற்றங்கள் செய்யவும் உதவும். ஆனால் இதற்கும் சில விதிகளை வைத்துக் கொள்வது நல்லது. அது நம் மனநிலையை, செயல்களைப் பாதிக்க வல்லது என்பதால் அந்த எடை எண்ணின் துல்லியம் முக்கியமல்லவா!

1) முதலில் சொந்தமாய் ஒரு எடை பார்க்கும் இயந்திரம் வாங்கிக் கொள்வது நல்லது. உலகில் எல்லா இயந்திரங்களும் மிகச் சிறிய அளவிலேனும் பிழை கொண்டவையே. ஒரே இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது அப்பிழை எல்லா முறையும் இருக்கும். அதை ignore செய்து விடலாம். என்வரையில் ஒரு வீட்டில் இது ஓர் அவசியமான investment. இன்று தெர்மாமீட்டர், ஆக்ஸிமீட்டர் எல்லாம் நடுத்தர வர்க்க வீடுகளில் சகஜமாகி விட்டன. இதுவும் ஒரு வீட்டில் மாற்றி மாற்றி யாரோ ஒருவருக்கேனும் எப்போதும் பயன்பட்டுக் கொண்டே இருக்கும். அமேஸானில் இன்று ரூ.500 முதல் எடை இயந்திரங்கள் கிடைக்கின்றன. ரூ.1000க்கு நல்லதாக ஒன்று வாங்கலாம். வாங்க முடியாதோர் அல்லது விரும்பாதோர் எப்போதும் ஒரே இயந்திரத்தில் எடை பார்க்க பக்கத்து வீட்டில் / கடையில் / மருத்துவமனையில் ஓர் இயந்திரத்தை ஏற்பாடு செய்யலாம் (ஆனால் கீழே உள்ள 3வது பாயிண்ட் இந்த முறையில் சாத்தியமில்லை.)

2) தினம் தினம் எடையைப் பார்ப்பது ஓர் ஆர்வக்கோளாறுத்தனம். தினமும் இரவு புணர்ந்து விட்டு மறுநாள் காலை ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட் வாங்கி வந்து பரிசோதிப்பது போன்றது. What's the point? அதீதமான தகவல் என்பது சுமை. அது குழப்பங்களையும் அளிக்கும். தினசரி ஏற்றத்தாழ்வுகள் (fluctuations) இருக்கவே செய்யும் உடல் எடையில் - அத்தனை complex architecture கொண்டது மனித உடல். சும்மா லாரி எடை போல் அல்ல. என் தனிப்பட்ட அனுபவம் வாரம் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் குறிப்பிட்ட ஒரே நாளில் என வைத்துக் கொள்ளலாம் (ஃபோனில் ரிமைண்டர் வைக்கலாம்). உதாரணமாய் நான் திங்கட்கிழமைகளில் பார்ப்பேன். அப்போது கடந்த தினங்களின் பழக்க வழக்கங்கள் என்ன, அதன் விளைவாய் எடையில் என்ன மாற்றம் என ஒப்பிடுவதற்கும் இம்முறை வசதி. (பொதுவாய் ஒரு புதிய உடற்பயிற்சி அல்லது உணவுப் பழக்கத்தின் மாற்றம் உடல் எடையில் பிரதிபலிக்கத் தொடங்க குறைந்தது 3 நாட்கள் எடுக்கும் என்பது என் தனிப்பட்ட அனுபவம்.)

3) துல்லியமாய் எப்படி எடை பார்ப்பது? நம்மில் நிறையப் பேர் வாட்ச், பர்ஸ், ஃபோன், வாகனச் சாவி, பெல்ட் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு எடை பார்ப்பதைச் செய்வோம். உடைகளின் எடை வித்தியாசம்? ஜீன்ஸ் பேண்ட்டும் ட்ராக்ஸ் பேண்ட்டும் ஒரே மாதிரி எடையா? உடலில் உள்ள உணவுகளின், கழிவுகளின் எடை? வயிறு முட்டச் சாப்பிட்டுப் பார்ப்பதும் கடும் பசியில் இருக்கையில் பார்ப்பதும் ஒன்றா என்ன? ஆக, நான் 'தூய உடல் எடை' (Pure Body Weight) என்று ஒரு விஷயம் யோசித்திருக்கிறேன். காலையில் எழுந்து சுத்தமாய் மல ஜலம் கழித்து, பல் துலக்கி, குளிக்காமல், பச்சைத் தண்ணீரும் பல்லில் படாமல், கதவடைத்து உட்தாழிட்டு, பூரண நிர்வணமாய் (தாலிக் கொடி கூடக் கூடாது; அரைஞாண் கொடி பரவாயில்லை) எடை இயந்திரத்தின் மீதேறி நின்று பார்ப்பது.

4) எடை இயந்திரம் ஒரே சமயத்தில் கூட வெவ்வேறு எடை காட்டுகின்றதே? ஆம். எல்லா இயந்திரங்களிலும் margin of error இருக்கத்தான் செய்யும். After all it's a machine. ஆனால் அதன் துல்லியத்தை முடிந்த அளவுக்குக் கூட்டலாம். அ) எடை இயந்திரத்தை ஆன் செய்தவுடன் முதல் முறை காட்டும் எடையை நிராகரித்து விடுங்கள். அது பொதுவாய்ப் பல இயந்திரங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ தவறாகவே இருக்கிறது. ஆ) நல்ல சம தளத்தில், காற்று வேகமாக வீசாத இடத்தில் எடை இயந்திரத்தை வைத்துத்தான் எடை பார்க்க வேண்டும். பௌதீக விதிகள் எடையைப் பாதிக்கும் என்பதால். எப்போதும் அதே இடத்தில் வைத்துப் பார்க்கலாம். இ) அவசரப்படாமல் இயந்திரத்தின் மீதேறி நின்று பத்து விநாடி ராணுவ வீரன் போல் நிதானமாக நேரே பார்த்து விட்டு பின் மெல்லக் குனிந்து எடை பார்க்க வேண்டும். அப்போதுதான் இயந்திரம் stabilise ஆகி எடையைக் காட்டும். ஈ) மூன்று முறை எடை எடுங்கள். அதன் சராசரியைக் கணக்கிட்டு உங்கள் அசல் எடை எனக் கொள்ளுங்கள்.

5) கடைசியாக அப்படிப் பார்க்கும் எடையைத் தேதி போட்டுக் குறித்து வையுங்கள். Trend எப்படி என்பதைத் திரும்பிப் பார்க்க உதவும். எதில் அதிகம் எடை குறைந்தது, அதிகரித்தது போன்ற விவரங்களுடன் கோர்த்துப் பார்த்தால் எதைச் செய்யலாம் / கூடாது என்ற புரிதல் வரும். இந்த retrospective செய்தல் மிக முக்கியமானது.
  •  

நித்ய தண்டனை

வைரமுத்து இல்லையென்றால் நான் எழுத்தாளன் ஆகியிருக்கவே மாட்டேன். என் வருகையை உலகிற்கு அறிவித்தவர் வைரமுத்து. அந்த நன்றியும் மரியாதையும் எப்போதும் அவர்மீது எனக்கு உண்டு. இறுதி வரையிலும் இருக்கும். ஆனால் அதன் நிமித்தம் அவர் இலக்கிய இடத்தை உயர்த்தியோ, அவரது பாலியல் அத்துமீறல்களை ஆதரித்தோ ஒருபோதும் பேச மாட்டேன்.

எழுத்தில் வைரமுத்துவின் இடம் என்ன? வைரமுத்து மிகச் சிறந்த திரைப் பாடலாசிரியர். இந்திய அளவில் கூட இதுவரை உருவான சினிமா பாடலாசிரியர்களுள் முதன்மையானவராக இருக்கலாம், ஆனால் எனக்கு பன்மொழிப் பாண்டித்யம் இல்லாததால் அதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தமிழ் சினிமா அளவில் எடுத்தால் ஆகச் சிறந்த பாடலாசிரியர் அவரே - கண்ணதாசனும், வாலியும் அவருக்குப் பின்தான். வெகுஜனங்களை வாசகர்களாகக் கொண்ட புதுக்கவிதையை எடுத்துக் கொண்டாலும் அவரே தமிழில் முதன்மையானவர். தமிழில் பரப்பியப் புதுக்கவிதை எழுதிய அனேகம் பேரை வாசித்திருக்கிறேன் (குறைந்தது ஒரு நூலேனும்) என்ற தகுதியில் இதை உறுதியாகச் சொல்வேன். போலவே 'வில்லோடு வா நிலவே' குறிப்பிடத்தகுந்த வெகுஜன நாவல். இதைத் தாண்டி நவீன இலக்கியத்தில் வைரமுத்துவுக்கு எந்த இடமும் இல்லை. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒரு வித‌ டாகுமெண்டரி மட்டுமே. 'கருவாச்சி காவியம்', 'மூன்றாம் உலகப் போர்' நான் முழுக்க‌ முடிக்க‌வில்லை என்றாலும் வாசித்த வரை அவை பற்றியும் அப்படியான அபிப்பிராயமே கொண்டிருக்கிறேன். இம்மூன்றிலுமே பண்பாட்டுப் பதிவுகள், இனவரைவியல் குறிப்புகள் முதலியவை ஏராளம் உண்டுதான். அதைத்தாண்டி தரிசனம் கொண்ட பேரிலக்கியப் பிரதியாக‌ இவை உயரவில்லை. அவ்வளவு ஏன், சுவாரஸ்யமான வெகுஜனப் படைப்பாகக் கூட நிற்கவில்லை என்றே சொல்வேன். குமுதம் இதழில் வைரமுத்து எழுதிய தொடர் சிறுகதைகள் எதையும் நான் வாசிக்கவில்லை. 'தமிழராற்றுப்படை' மொழி மூத்தோர் குறித்து வெகுஜனத்தின் மனதில் பதிய வைக்கும் வலுவான‌ முயற்சி என்ற அளவில் முக்கியமானது. இதுவே என்வரையில் வைரமுத்துவின் இலக்கிய இடம்.

தனி மனிதராக வைரமுத்து குறித்துப் பல மனத்தாங்கல்கள் எனக்குண்டு. முதலில் அவரது அரசியல் நிலைப்பாடு. காற்றுள்ள பக்கம் சாய்வதில் தயக்கம் இல்லாதவர். கலைஞரைக் கொண்டாடிய அதே வாயால் நிர்மலா சீதாராமனையும் தருண் விஜய்யையும் புகழ்வார். தன்னை விழாக்களுக்கு அழைப்போரிடம் தன் புத்தகங்களை வாங்க வற்புறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. படுக்கையிலிருந்த ஜெயகாந்தனிடம் தன் கதைகளைப் பாராட்டி எழுதிக் கொண்டு கையொப்பம் வாங்கினார் என்றும் குற்றச்சாட்டு இருக்கிறது. சாஹித்ய அகாதமி, ஞான பீடம் முதல் நொபேல் பரிசு வரை வாங்க லாபி செய்கிறார் என்றும் செய்திகள் இருக்கின்றன‌. சுயசாதிப் பற்றுதல் கொண்டவர் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. சில விஷயங்களில் உளறலாகக் கருத்துப் பகிர்ந்திருக்கிறார். அவர் பாடல்களில், கவிதைகளில், கதைகளில், கட்டுரைகளில், உரைகளில், ட்வீட்களில் பிற்போக்கான கருத்துக்கள் உண்டு. இளையராஜாவுடனான பிணக்கு விஷயத்திலும் பாசாங்கான ஒரு நிலைப்பாடு எடுத்து மக்களிடம் நல்லவர் எனப் பெயரெடுக்க முனைகிறார் என்றே புரிந்து கொள்கிறேன்.

இவை எல்லாம் தாண்டி மீடூ பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள். முகம் காட்டியும் காட்டாமலும் பலர் வெளிப்படுத்திய பத்துக்கும் மேற்பட்ட மீடூ குற்றச்சாட்டுக்கள். நடுவுநிலை மாறா தர்க்கத்தில் யோசித்துப் பார்த்தால் இந்தக் குற்றச்சாட்டுகளில் சிலவற்றிலேனும் உண்மை இருக்கும் என்றே நம்புகிறேன். சினிமா உலகிலும் அவர் பற்றி அப்படியான பேச்சுக்களே நிலவுகின்றன. அத்தனை பேரும் சேர்ந்து கொண்டு ஒரே குரலில் பொய் சொல்கிறார்கள் என நான் நம்பவில்லை. தவிர, அவர் அதை எதிர்கொண்ட முறையிலேயே ஓர் அபாண்டக் குற்றச்சாட்டிற்கான அறச்சீற்றம் இல்லை. (இது பார்ப்பனச் சதி என்று சொல்வதை எல்லாமும் தப்பித்தலாகவே பார்க்கிறேன். அப்படிப் பார்ப்பனர்கள் சேர்ந்து பழி தீர்க்குமளவு வைரமுத்து அத்தனை ஸ்திரமான திராவிடரும் அல்ல! ஆனால் அவர் மீது தீவிர இலக்கியவாதிகள் உள்ளிட்ட பலருக்கும் ஏராளப் பொறாமை உண்டு என அறிவேன்.)

பல்லாண்டுகளாக அவர் எப்படி தைரியமாக அதைச் செய்தார்? அவரது முயற்சிக்கு சிலரேனும் லாபம் கருதியோ பயந்து கொண்டோ இணங்கியதால் பெற்ற உற்சாகமாகவே இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் அவர் செய்தது குற்றமே. தன் செல்வாக்கை, தன் புகழை, தன் மரியாதையை முதலீடாக வைத்து பெண்களிடம் காமம் பெற முயற்சிப்பது என்பது சினிமா துறையில் அவரைப் பயன்படுத்தும் இயக்குநர் / இசையமைப்பாளர் / தயாரிப்பாளர் / நடிகர் மற்றும் அவரது வரிகளைக் கைதட்டிக் கொண்டாடும் ரசிகன் இருதரப்புக்குமே செய்த துரோகமே. வாய்ப்பும், பாராட்டும் வழங்கப்பட்டது அதைக் கொண்டு பெண்களைச் சுரண்ட அல்ல. அது அவர் மீதான மரியாதையைக் குறைக்கிறது.

அதற்கான தண்டனை என்ன என்பதில்தான் நான் சற்றே மாறுபடுகிறேன். நியாயமாக என்ன நடக்க வேண்டும்? சட்டப்பூர்வமாக இதை எடுத்துப் போய் நீதிமன்றத்தில் அவருக்குத் தண்டனை பெற்றுத் தரலாம். அப்படி நடந்தால் அது எல்லோராலும் முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டியதே. ஆனால் மீடூ குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மைக்கு ஆதாரம் இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. (சிசிடிவி ஆதாரங்கள் கொண்டு நடந்த 'தெஹல்கா' தருண் தேஜ்பால் வழக்கிலேயே அவர் குற்றமற்றவர் என விடுதலையாகி விட்டார்.) இன்னொரு விதமான தண்டனை அவர் செயலுக்காக அவரைத் தவிர்க்க உத்தேசிக்கும் படைப்பாளிகளும் ரசிகர்களும் அதைச் செய்யலாம் (அதாவது எந்த வெளி அழுத்தங்களும் இல்லாமல், தாமாகவே செய்வதைச் சொல்கிறேன்). உதாரணமாக ரஹ்மான் தான் இசையமைக்கும் படங்களில் தொடர்ச்சியாய் வைரமுத்துவைத் தவிர்ப்பதைச் சொல்லலாம்.

மாறாக‌, அவர் ஒவ்வொரு முறை ஏதேனும் அங்கீகாரம் பெறும் போதும் அல்லது அவரது படைப்பு ஏதேனும் ஒன்று வெளியாகும் போதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சொல்லிக் கொண்டே இருப்பதில் என்ன தர்க்கம் இருக்க முடியும்? எனில் நாம் என்ன சொல்கிறோம்? ஆயுள் முழுக்க வைரமுத்து வீட்டிலேயே முடங்கி விட வேண்டும். அமைப்புகளும் ரசிகர்களும் அவர் பங்களிப்பை இனிமேல் ஒருபோதும் பேசவே கூடாது என்றா? அவர் சினிமாவில் வாய்ப்புப் பெறவே கூடாது என்றா?

வைரமுத்துவுக்கு ஓஎன்வி இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அந்த விருதின் இடம் பற்றி எனக்குத் தெரியாது. அதனால் வைரமுத்துவின் பங்களிப்புகளுக்கு அது பொருந்துமா என என்னால் சொல்ல முடியவில்லை. (அடூர் கோபாலகிருஷ்ணன் நடுவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதால் வைரமுத்துவின் சினிமா பங்களிப்புகளும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.) அப்படியே நமக்கு விருதுக்கான‌ அவரது தகுதி குறித்த கேள்விகள் இருந்தாலும் அது தனியான விவாதம். ஆனால் பிரச்சனை அவரது இலக்கிய ஸ்தானம் பற்றியது அல்ல; ஒழுக்கத்தை முன்வைத்து அவர் விருதுகளிலிருந்து நிராகரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுவதுதான்.

மலையாள நடிகைகளில் முற்போக்காளராகக் கருதப்படும் பார்வதி திருவோத்து இதை ஆர‌ம்பித்து வைத்திருக்கிறார். பலரும் இதைத் தொடர்வார்கள். அவர்களின் கருத்தை அறிய விழைகிறேன்.

கொலை / கொள்ளை / ஊழல் / கலவரம் / வல்லுறவுக் குற்றவாளிகள் கூட சில பல‌ ஆண்டுகளில் விடுதலை அடையலாம், ஆனால் மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர் இறுதி வரை இறந்த ஒருவர் போலவே இருந்து விட்டுப் போய் விட வேண்டும் என்பதுதான் அவர்கள் கருத்தா? இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றிருக்கிறது: மற்ற குற்றங்கள் யாவும் பல்லாண்டு விசாரணைக்குப் பிறகே உரிய தண்டனை தரப்பட்டு, அதற்கும் மேற்முறையீட்டு வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. கொடூரக் குற்றங்களுக்கே அப்படி எனும் போது, நிரூபிக்கப்படாத Name & Shame வகைக் குற்றச்சாட்டுகளுக்கு நாம் இப்படி ஒரு நிரந்தர ஒதுக்குதல் தண்டனையைத் தர உத்தேசிக்கிறோம் என்பது முரணல்லவா!

கவனியுங்கள், வைரமுத்து குற்றம் செய்யவில்லை என நான் வாதிடவில்லை; வைரமுத்து ஏற்கனவே தண்டனை பெற்று விட்டாரே என்று கூட நான் கேட்கவில்லை. ஒவ்வொரு முறையும் வேறு யாராவது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போதோ, வைரமுத்துவுக்கு அங்கீகாரம் கிட்டும் போதோ மீடூ பிரச்சனையை முன்னெடுப்போர் எதிர்பார்ப்பதுதான் என்ன என்று புரிந்து கொள்ள முனைகிறேன்.

எல்லாக் குற்றங்களும் ஒன்றல்ல. அந்தந்தக் குற்றத்தின் உயரத்திற்கேற்பவே தண்டனை கிட்டும். எல்லாவற்றுக்கும் மரண தண்டனையோ ஆயுள் தண்டனையோ சாத்தியமில்லை. தேசத்தின் முன்னாள் பிரதமரையும் இன்னும் சிலரையும் குண்டு வெடித்துச் சாகடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களையே பல்லாண்டு தண்டனை அனுபவித்து விட்டார்கள் என விடுதலை செய்யக் கோருகிறோம் நாம். பெண்ணைக் கூட்டு பாலியல் வல்லுறவு செய்த பதின்மனை சுயதொழில் செய்ய அனுமதித்து விடுதலை செய்கிறோம். சாதி ஆணவக் கொலை செய்தவர்கள் குறைந்த தண்டனை பெற்று எளிதில் விடுதலையாகிறார்கள். சுதந்திர தினத்துக்கும், காந்தி ஜெயந்திக்கும் கொடூரக் குற்றங்கள் செய்த‌ எத்தனையோ சிறைவாசிகளை தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுவிக்கிறோம். எனில் மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மட்டும் ஆயுள் முழுக்க அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறோம்?

*

  •  

தடுப்பூசி அனுபவங்கள்

நண்பர்கள் சிலர் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டதைப் பற்றி தனிப் பேச்சில் விசாரிக்கிறார்கள் என்பதால் பொதுவாய் என் அனுபவத்தை, புரிதல்களை எழுதி விடலாம் என நினைக்கிறேன்.

என் அம்மாவிலிருந்து தொடங்கலாம். மார்ச் துவக்கத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்திய‌ அரசு தடுப்பூசி போடத் துவங்கினார்கள். எனக்கு அந்த மாதம் முழுக்க அம்மாவுக்குத் தடுப்பூசி போடுவதில் தயக்கங்கள் இருந்தன - இத்தனைக்கும் அவருக்கு எந்த வயோதிக‌ உபாதைகளும் இல்லை. நான் கவலைப்பட்டது தடுப்பூசியின் திறன் குறித்து அல்ல‌; தடுப்பூசியின் உடனடி பக்க விளைவுகள் பற்றியும் அல்ல‌; சில ஆண்டுகள் கழித்து ஏதேனும் பெரிய விளைவுகள் நேருமா என்ற கேள்வியே. அதற்கு அப்போதும் பதில் இல்லை, இப்போதும் இல்லை.

இடையில் எங்கள் அடுக்ககத்தில் இருக்கும் முதியோர் அனைவரும் போட்டுக் கொண்டார்கள், ஊரில் என் மாமனார், மாமியாரும் போட்டு விட்டார்கள். இது அம்மாவுக்கு ஒரு peer pressure உண்டாக்கி தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி என்னிடம் கேட்க ஆரம்பித்தார். அதற்கு மேல் நான் தயங்கவில்லை. மறுநாளே நான் அழைத்துப் போய் பெங்களூர் ஓல்ட் ஏர்போர்ட் ரோட் மனிப்பால் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அப்போது கோவிஷீல்டா கோவேக்ஸினா என்ற குழப்பமும் எனக்கு இருந்தது. மனிப்பாலில் அப்போது இரண்டுமே போட்டார்கள். ஆனால் கோவேக்ஸின் போட வேண்டுமெனில் மருத்துவர் பரிந்துரைக் கடிதம் வேண்டும். நான் அங்கே இருந்தவரிடம் ஏன் அப்படி எனக் கேட்டு நச்சரிக்க, அவர் ஒரு கட்டத்தில் "இரண்டுக்கும் வேறுபாடு ஏதுமில்லை, கோவேக்ஸின் கையிருப்பு குறைவாய் இருக்கிறது, அதனால் அதற்கு இப்படிக் கட்டுப்பாடு விதிக்கிறோம், உங்களுக்கு கோவேக்ஸின்தான் வேண்டுமெனில் போட்டுக் கொள்ளலாம்" என்றார். நான் விசாரித்த வரை சுற்றம் நட்பில் எல்லோருமே கோவிஷீல்ட்தான் போட்டிருந்தனர். அதனால் ஒருவேளை பக்க விளைவுகள் ஏதும் இருந்தாலும் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் (like in software, bigger user base means better support) என அதையே தேர்ந்தேன். அது மார்ச் இறுதி.

அப்போது 4 முதல் 6 வாரம் இடைவெளி சொல்லியிருந்தார்கள் கோவிஷீல்ட் இரண்டாம் டோஸுக்கு. இதற்கிடையில்தான் ஏப்ரல் மத்தியில் நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதற்கு மறுநாள் இறந்தது தமிழகத்தின் தடுப்பூசி போடும் பயணத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. எங்கள் நண்பர் வட்டத்திலுமே கூட அது பற்றிய கவலைகள் வெளிப்படுத்தப்பட்டன.

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஜனவரி மத்தி முதல் ஏப்ரல் மூன்றாம் வாரம் வரை முன்களப் பணியாளர்களும், தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களும் மட்டுமே (வேறு வழியின்றி) தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். மற்றவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது உண்மையில் மிக மிக மந்தமாகவே நடந்தது. அம்மாவுக்கு முதல் டோஸ் போடும் போது கூட அந்த மருத்துவமனையின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் பெருங்கூட்டம் இருந்ததெனச் சொல்ல முடியாது. இங்கே தடுப்பூசிகள் குறுகிய கால எக்ஸ்பயரியோடு வருகின்றன என்பதையும் ஒரு குப்பியை உடைத்தால் பத்து பேருக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் போட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வகையில் தாய்ப்பால் மாதிரிதான் தடுப்பூசியும். அதனாலேயே தடுப்பூசிகள் வீணாகின. தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ததற்கு இதையே நியாயப்படுத்தலாக அரசு சொல்லக்கூடும் (அதாவது எப்படியும் மக்கள் போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை, வீணாவதை விட ஏற்றுமதி செய்வது நல்லது என). ஆனால் மக்கள் அப்படி ஆர்வம் காட்டவில்லை என்றதுமே நிலைமை உணர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு அப்போதே திறந்து விட்டிருந்தால் வீணாவதும் குறைந்திருக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் அவசியம் வந்திருக்காது.

மே துவக்கத்திலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதாக‌ மத்திய அரசு அறிவித்தது. அதே சமயத்தில்தான் கோவிட் இரண்டாம் அலை இந்தியாவில் துவங்கியது. அதனால் மக்கள் தடுப்பூசி மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். இந்த இரண்டு காரணங்களாலும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு அப்போது ஆரம்பித்தது. அதே சமயம்தான் (பழைய 4 - 6 வாரக் கணக்குப்படி) என் அம்மாவுக்கு இரண்டாம் டோஸ் போடும் காலம் வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. மே 1க்கு மேல் எப்படியும் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு நிற்கும் கூட்டம் பன்மடங்காகும் என்பதால் சரியாக மார்ச் இறுதி நாளில் Co-WIN தளத்தில் அவருக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்லாட் புக் செய்தேன். ஆனாலும் ஏதோ மனதில் பட, அங்கே கிளம்பும் போது தொலைபேசி விசாரிக்க, வராதீர்கள், ஸ்டாக் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நான் உடனே பெங்களூரில் தடுப்பூசி போடும் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையாகத் தொலைபேசி விசாரிக்கத் தொடங்கினேன். ஒரு மணி நேரம் முயற்சிக்குப் பின் ஒரு மருத்துவனையில் வரச் சொன்னார்கள். ஒன்றரை மணி நேரம்தான் போடுவோம் என்றார்கள். அவசரமாய்க் கிளம்பிப் போனால், அங்கே ஏற்கனவே நீண்ட வரிசை சாலை வரை நின்றது. நின்று டோக்கன் வாங்கியதில் என் அம்மாவுக்குத்தான் கடைசி. ஒரு வழியாய்ப் போட்டு என் அம்மா முழுக்கேடயம் பெற்றவரானார்! சேஷாத்ரிபுரம் ப்ளூ ப்ளிஸ் மருத்துவமனை அது. (இரண்டு முறையும் அவருக்குக் கை வலி தவிர‌ பக்கவிளைவுகள் ஏதுமில்லை.)

மே 1 முதல் Co-WIN தளத்தில் எனக்கும் மனைவிக்கும் ஸ்லாட் புக் செய்ய முயன்றோம். முடியவே இல்லை. கோவேக்ஸின், கோவிஷீல்ட் தேர்வுகளை விடுத்து, தனியார், அரசு மருத்துவமனை எதுவானாலும் சரி, அருகிலா தூரமா என்பதும் கவலை இல்லை என்ற மனநிலைக்குச் சில தினங்களிலேயே வந்து விட்டோம். பிறகு ஊர் வாரியாக‌, வயது வாரியாக இருந்த‌ டெலக்ராம் அலர்ட் குழுவில் சேர்ந்து பார்க்கத் துவங்கினோம். அது ஓரளவு உதவியது. ஆனால் அது கால்கிணறுதான். அலர்ட் வரும். அப்போது ஏற்கனவே லாகின் செய்திருக்க வேண்டும் (அந்த ஓடிபி லாகின் பத்து நிமிடங்களுக்குத்தான் செல்லும்.) கண் முன்னால் ஸ்லாட்கள் காட்டும். புக் செய்ய முயன்றால் இல்லை என்று சொல்லும். அல்லது கேப்ட்சா தவறாகி விடும். மே-1லிருந்து தொடர்ச்சியாய் இரண்டு வாரம் தினம் குறைந்தது 50 முறை கோவின் தளத்தில் முயன்றேன். நடைப்பயிற்சியின் போது முயல்வேன். அலுவலக வேலையில் சிறிய இடைவெளி கிடைத்தாலும் முயல்வேன். அத்தனை தோல்விகள். ஐஆர்சிடிசியில் ரயில் முன்பதிவு செய்வதை விட, ரஜினி படத்துக்கு முதல் காட்சி சென்னையில் முன்பதிவு செய்வதை விட பன்மடங்கு சிரமம். ஒரு கட்டத்தில் ஓசூரில், தர்மபுரியில், கிருஷ்ணகிரியில், சேலத்தில், ஈரோட்டில், கோவையில் அல்லது சென்னையில் கிடைத்தாலும் பயணித்துப் போட்டுக் கொள்ளலாமா என யோசிக்கத் துவங்கினோம். போடுகிறார்களா என்பதும் தெளிவில்லை, அதன் நடைமுறை மற்றும் அறச் சிக்கல்கள் குறித்தும் தயக்கங்கள் இருந்தன.

ஏராளப் பிரயத்தனங்களுக்குப் பின் மே 14 அன்று இருவருக்கும் பெங்களூர் இந்திரா நகரில் இருக்கும் சிவி ராமன் அரசு மருத்துவமனையில் ஸ்லாட் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டால் ஏப்ரல் 12 அன்று பற்றாக்குறை காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை நிறுத்துவதாகக் கர்நாடக அரசு அறிவித்தது. அதனால் ஸ்லாட்டுக்கு முந்தைய நாளே அதே சிவி ராமன் மருத்துவமனைக்குப் போனோம். 200 பேருக்குக் குறையாமல் வரிசை. எல்லோரும் அப்பாயிண்ட்மெண்ட் வைத்திருப்பவர்கள். நாங்க விசாரித்ததில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லையெனால் கிளம்பி விடச் சொன்னார்கள். அங்கிருந்து ஓல்ட் ஏர்போர்ட் ரோட் மனிப்பால், கோரமங்களா அப்போலோ க்ரேடில் இரண்டு மருத்துவமனைகளுக்கும் சென்றோம். அதே பதில். அடுத்து அலுவலக‌ நண்பர் ஒருவர் சொல்லி முந்தைய நாள் ரூபேனா அக்ரஹாரா ஆரம்ப சுகாதார மையத்தில் போட்டதாகக் கேள்வியுற்று அங்கே போனோம். அதே பதில். அன்று இரவு எங்கள் ஸ்லாட் கேன்சல் ஆனது எனக் குறுஞ்செய்தி பெற்றோம். ஆனாலும் இறுதி முயற்சியாக அன்று மறுபடி சிவி ராமன் ஜிஹெச் போய் ஊசி போட அப்பாயிண்ட் இருக்கிறது என நம்பிக்கையின்றிக் காட்டினோம். கேன்சல் எஸ்எம்எஸ் வந்திருக்குமே எனச் சொல்லித் திருப்பி அனுப்பினார்கள். அது அப்படித்தான் முடியும் என உள்ளூர‌த் தெரியும்தான். ஆனாலும் எங்கள் பக்கமிருந்து எந்தச் சுணக்கமும் இன்றி முயன்றோம் என்ற குறைந்தபட்ச நிம்மதி வேண்டும் என்பதால்தான் அவ்வளவு போராடினோம்.

அன்றைய நாளிலேயே (டெலக்ராம் அலர்ட் இன்றி) ரேண்டமாக Co-WIN தளத்தில் பார்த்த போது மைசூர் அப்பலோவில் மறுதினத்துக்கு ஸ்லாட் காட்டியது. யோசிக்காமல் புக் செய்து விட்டேன். எங்களுக்கு வாய்த்ததும் கோவிஷீல்ட்தான். (இப்போதும் Co-WIN தளத்தில் காட்டப்படுவதில் பெரும்பான்மை கோவிஷீல்ட்தான்.) அங்கே போய் இல்லை எனக் கை விரித்தால் என்கிற பயமும் அச்சுறுத்தியது. மிகுந்த யோசனை மற்றும் தயக்கத்துக்குப் பின் போய் விடத் தீர்மானித்தோம். மருத்துவமனை தவிர எங்கும் இறங்கக்கூடாது என முடிவு செய்து இரு வேளைக்கு உணவைக் கட்டி எடுத்துக் கொண்டோம். மறுநாள் சனிக்கிழமை விடுமுறை. அதிகாலையிலேயே காரில் கிளம்பி மைசூர் போனோம். மாவட்ட‌ எல்லையில் சோதனைச் சாவடியில் போலீஸ் விசாரித்தது. தடுப்பூசிப் போடப் போகிறோம் என்றதும் விட்டு விட்டார்கள். மருத்துவமனையிலிருந்து அரை கிமீ தள்ளி ஓர் இடத்தை எடுத்து அங்கே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசி போடுகிறார்கள். நெரிசல் ஏற்படுத்தாமல் சமூக இடைவெளியுடன் அங்கே புழங்க முடிந்தது. ஊசி போட்டு அரை மணி அமர்ந்து விட்டு (யாரும் அமர்வதில்லை, யாரும் கட்டாயப்படுத்துவதும் இல்லை) கிளம்பி வரும் வழியில் கோடை மழை செல்லமாய் ஆசீர்வதித்தது.

300 கிமீ, 7 மணி நேரம் காரோட்டிப் போய்ப் போடுமளவு என்ன அவசரம் எனக் கேட்கலாம். சுற்றிச் சூழந்த தொற்று மற்றும் மரணச் செய்திகள் அப்படி desparate-ஆகத் தேட வைத்தது என்பேன். கர்நாடகத்தில் அரசு மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை நிறுத்தியதும் முக்கியக் காரணம் (இவ்வாரம் மீண்டும் திறந்திருக்கிறார்கள்). சில விஷயங்கள் எனக்கு முன்பே தெரியும். 1) Co-WIN தளத்தில் அப்பாயிண்ட் கிடைப்ப‌து மிக அரிது. 2) கிடைத்தாலும் திடீரென ஸ்லாட் கேன்சல் செய்ததாக குறுஞ்செய்தி வரலாம். 3) அப்படி ஆகாவிடிலும் நேரில் போகும் போது ஸ்டாக் இல்லை என்று சொல்லலாம். இப்ப‌டி அத்தனை சாத்தியக்கூறுகள் இருந்தும் தொடர்ந்து முயன்றதற்குக் காரணம் முன்பு சொன்னதேதான். வெளிக்காரணிகள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். நாம் ஒழுக்கமாக முயற்சிக்க வேண்டும். வந்தால் மலை, போனால் மயிர்.

எங்கள் இருவருக்குமே சில தினங்கள் ஊசி போட்ட இடத்திலும் அந்தக் கையிலும் வலி இருந்தது. ஊசி போட்ட மறுநாள் எனக்கு மட்டும் மெல்லிய காய்ச்சல் இருந்தது (99.5 டிகிரி ஃபார‌ன்ஹீட் வரை). அதுவும் என் தினசரிகளைப் பாதிக்கவில்லை, தெர்மாமீட்டரில் காட்டியதுதான். ஊசி போட்டு இக்கணத்தோடு முழுதாகப் பத்து நாட்கள் முடிந்தது. வேறு ஏதும் பக்க விளைவுகள் இதுவரை இல்லை.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள். மருத்துவர் குறிப்பாக உங்களுக்குக் கூடாது என்று சொல்லியிருந்தால் ஒழிய, உங்களுக்கு ஊசி தொடர்பான அலர்ஜிகள் ஏதும் இல்லை எனில் எல்லோரும் போட்டுக் கொள்ளலாம் என்பதே என் புரிதல். சமீபத்திய பேட்டியில் உலக சுகாதார மையத்தின் திட்டங்களின் துணைத் தலைவரான‌ மருத்துவர் சௌம்யா சுவாமிநாதன் கர்ப்பிணிகள் கூட கோவிஷீல்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அதனால் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு கார்டியாலஜிஸ்ட் மற்றும் என் வழக்கமான மருத்துவரிடம் கேட்டு விட்டேன். என்னுடன் படித்து தற்போது மருத்துவராக இருக்கும் இருவரிடம், என் மனைவிக்குத் தெரிந்த இரண்டு மருத்துவர்களிடமும், சமூக ஊடகங்களில் பழக்கமுள்ள‌ இரு மருத்துவர்களிடமும் கேட்டு விட்டேன். எல்லோரும் ஒரு குரலில் சொல்வது இதுதான்: தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. Go for it!

ோசமான பக்க விளைவு கேஸ்கள் பற்றிக் கேட்கலாம். அது உண்மைதான். ஆனால் எண்ணிக்கை கவனியுங்கள். லட்சங்களில் ஒன்று. நீங்கள் பேருந்தில் பயணிக்கும் போதும், சாலையில் நடக்கும் போதும் கூட அதே அளவு (அல்லது அதை விடவும் அதிகமான அளவில்) விபத்தை எதிர்கொள்ளும் சாத்தியமுண்டு. ஆனால் நாம் பயணத்தைத் தவிர்ப்பதில்லை. அது மாதிரிதான். போடாவிட்டால் வரும் ஆபத்துக்களோடு ஒப்பிட்டுத்தான் போட வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

Efficacy பற்றியெல்லாம் படித்து விட்டு இன்ன தடுப்பூசிதான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். பலர் ஸ்புட்னிக் வரும் எனக் காத்திருக்கிறார்கள். சிலர் ஃபைஸர் வரும் என எதிர்பார்க்கிறார்கள். மருத்துவர் சென் பாலன் கேலி செய்திருந்தது போல் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் போது தூக்கி எறியப்படும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்து பிழைத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, என்ன கலர், என்ன ப்ராண்ட் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு வாய்ப்பு வரும் போது போட்டுக் கொள்ளுங்கள். வாய்ப்பைப் பெறக் கூடுதலாக‌ முயற்சி செய்யுங்கள்.

ஊசி போடப் போய் அங்கே மருத்துவமனைச்சூழலில் கோவிட் வந்து விட்டால்? என்பது என் நண்பர்களிடம் நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. இது முட்டாள்தனமானது என்பதே என் பதில். இது ஒரு போலியான‌ deadlock நிலை. போட்டால்தான் தடுக்க முடியும், போடப் போனாலே வந்தால் என யோசிக்க முடியாது. We need to take chances safely. என்னைப் போல் பல‌ மருத்துவமனைகளுக்கு அலையச் சொல்லவில்லை. ஆனால் ஒன்றில் ஸ்லாட் கிடைக்கும் வாய்ப்பிருந்தால் தகுந்த பாதுகாப்புடன் போய்ப் போட்டுத் திரும்பலாம். வீட்டிலேயே இருப்பதால் எனக்கு வராது என்பது பூரண உண்மையல்ல. இன்னொரு கவலை ரத்தம் உறைவது என்ற பக்கவிளைவு பற்றியது. உங்கள் உடலில் ரத்தம் உறையும் வாய்ப்பு இருந்தால் தடுப்பூசியை விட கோவிட் வந்தால் அது நிகழும் வாய்ப்பு பன்மடங்கு அதிகம். அதனால் எப்படிக் கணக்குப் பார்த்தாலும் தடுப்பூசி போடுவது லாபம்தான்.

இப்போதும் Co-WIN தளத்தில் நண்பர்களுக்காகப் பார்த்துச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். நான் சொன்ன டெலக்ராம் குழுவில் பெங்களூர் 18+ முதல் டோஸில் மட்டும் சுமார் 26,000 பேர் இருக்கிறார்கள். இன்னும் இது பற்றியெல்லாம் தெரியாமல் இருப்பவர்கள் பன்மடங்கு. எனில் பெருநகரங்களில் நிலவும் தடுப்பூசிக்கான‌ போட்டியை யோசித்துக் கொள்ளுங்கள். அந்த அடிப்படையில் என் உத்தேசக் கணக்குப்படி நம் நாட்டின் 80% மக்கட்தொகைக்கு தடுப்பூசி போட்டு முடிக்க ஒரு வருடமானது ஆகும். அதற்குள் இன்னுமோர் கோவிட் அலையும் வந்து போகலாம். அதையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறேன்.

முதல் டோஸ் போட்டு சில வாரங்களிலேயே கொஞ்சமாய் கோவிட் எதிர்ப்பு சக்தி வந்து விடுகிறது என்கிறார்கள். இரண்டாம் டோஸ் போட்டு நான்கு வாரங்களுக்குப் பின் எதிர்பார்க்கும் எதிர்ப்பு சக்தி வந்து விடும். அதன் பிறகு கோவிட் வராதா எனக் கேட்டால் அப்படி இல்லை. வரும் வாய்ப்பு குறைவு, வந்தாலும் உயிர் ஆபத்து குறைவு. கவனியுங்கள் பூஜ்யம் ஆகாது. வாய்ப்பு ஒப்பீட்டளவில் வெகுவாய்க் குறைந்து விடும். அதற்காகத்தான் இத்தனை எத்தனங்களும். எப்படிப் பார்த்தாலும் நல்ல டீல்தான்.

என் அனுபவம் சிலருக்கேனும் உந்துதல் ஏற்படுத்தலாம் என்பதால்தான் இதை இவ்வளவு விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போது அரசு கோவிஷீல்ட் டோஸ்களுக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்கள் என மாற்றி இருக்கிறது. ஆகஸ்ட் வாக்கில் நாங்கள் போட வேண்டிய‌ இரண்டாம் டோஸுக்காக காத்திருக்கிறோம். அப்போது தடுப்பூசி கையிருப்பு நிலை இன்னும் மேம்பட்டிருக்கும் என நம்புகிறேன். குறைந்தது மைசூர் சமஸ்தானம் வரை சாரட் வண்டியை விரட்ட‌ வேண்டி இராது.

*

  •  

CSK டயட்: சில சிந்தனைகள்

1) கடந்த ஆண்டு விநாயக சதுர்த்தியன்று ஒரு சின்ன அசம்பாவிதத்துக்குப் பின் உடல் எடை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்வில் நூறாவது முறையாய் மீண்டும் எழுந்தது. முதலில் நடைப் பயிற்சி மட்டும் மேற்கொண்டேன் - உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளவில்லை. அப்போது மிகக் குறைவான பலனே இருந்தது: ஆகஸ்ட் 2020 இறுதி முதல் டிசம்பர் 2020 மத்தி வரை 113 நாட்களில் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டதில் 4 கிலோ எடை குறைந்தது. பிறகுதான் அதோடு உணவுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தேன். ஒப்பீட்டளவில் துரித முன்னேற்றம்: டிசம்பர் 2020 மத்தி முதல் ஏப்ரல் 2021 துவக்கம் வரை 112 நாட்களில் நடையோடு டயட்டும் இருந்ததில் 7 கிலோவுக்கு மேல் எடை குறைந்தது. ஆக, மொத்தமாய்ப் பார்த்தால் ஏழரை மாதங்களில் 11 கிலோ எடை குறைந்திருக்கிறது.

2) என்னிடம் எடை எவ்வளவு குறைந்தது என விசாரித்த அனைவரும் அடுத்துச் சொன்னது அந்த உணவு முறையைப் பின்பற்றினால் இன்னும் வேகமாகக் குறையும், இந்த டயட்டை எடுத்தால் இன்னும் சீக்கிரம் குறைக்கலாம் என்கிற யோசனைகளே. ஆம், மிகச் சரி. எனது டயட் முறையைக் காட்டிலும் வீரியமான எடை குறைப்பு உணவு முறைகள் பல உண்டுதான். ஆனால் நான் அவற்றைத் தெரிந்தே நிராகரிக்கிறேன். ஏன்? அதற்கு ஒரு பூர்வகதை உண்டு. 2007 முதல் நடை, ஜிம், யோகா, நான்கைந்து வித டயட்கள் எனப் பல‌ முறைகளைப் பின்பற்றி நானே மேற்சொன்னதை விடவும் வேகமாக எடை குறைத்திருக்கிறேன். (உதாரணமாய் 2016ல் ஐந்து மாதங்களில் 13 கிலோ குறைத்தேன்.) பிறகு என்ன பிரச்சனை? அதையே தொடர்ந்திருக்கலாமே! முடியாது. அந்த எல்லா முறைகளிலும் இருக்கும் பெரும் சிக்கல் அவற்றை நிறுத்தினால் (தற்காலிகமாக என்றாலும்) உடனே எடை அதிகரிக்கும். வேகமாய்க் குறைந்தது, வேகமாய்க் கூடுவதுதானே இயற்கையின் நியதி! இன்னொரு சிக்கல் அந்த முறைகளைத் தொடர்ந்து பின்பற்றவே முடியாது. அதைச் செய்ய நீங்கள் ஒரு துறவியாக இருக்க வேண்டும்.

3) என் உடலையே பரிசோதனைச் சாலையாக்கி சுமார் பதினான்காண்டுகள் பல வித உத்திகளைப் பின்பற்றிப் பலன்களைக் கவனித்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்: பலன் மிக மெல்லக் கிடைத்தாலும் தொடர்ந்து விடாமல் பின்பற்றத் தகுதியான உணவு முறையாக இருக்க வேண்டும். 'தொடர்ந்து' என்றால் அவசியப்பட்டால் ஆயுள் முழுவதும் கூட சங்கடமின்றிப் பின்பற்ற முடிந்த ஓர் உணவு முறை. Sustainable Diet! அதற்கு மிக முக்கியமாய் அந்த உணவு முறையில் நாம் எதையோ தியாகம் செய்கிறோம் என்ற எண்ணம் வராத மாதிரி அமைய வேண்டும். அதற்குத் தான் வாரம் ஒரு வேளை மட்டும் Cheat Meal எடுக்கத் தீர்மானித்தேன் (அதாவது 20:1 என்ற விகிதத்தில்). அந்த ஒரு வேளை மட்டும் எல்லாப் பாவங்களும் செய்யலாம். என் நோக்கமே மாதம் ஒரு கிலோ குறைப்பது மட்டுமே. அதாவது வாரம் கால் கிலோ. அவ்வளவேதான். Slow and Steady! (அப்படிப் பார்த்தால் ஏழரை மாதங்களில் 11 கிலோ என்ற எனக்குக் கிட்டிய பலனே கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம்.) அப்படி மெதுவாய்க் குறைப்பது இடையில் சில தினங்கள் டயட்டை விடுத்தாலும் உடனே எடை அதிகரிக்காது.

5) உண்மையில் இது ஒரு Reversal Process. எப்படி எடையை அதிகரித்தீர்களோ (தவறான உணவுகள், வியர்வையற்ற தினசரிகள்) அதற்கு நேரெதிர் வழியில் போய் எடையைக் குறைப்பது. அதனால்தான் பிரபலமான, பெரும்பாலான‌ சுருக்குவழிகள் போலன்றி இது நடந்தேற‌ அதிக காலமெடுக்கும். ஆக, ஷாஹித் அப்ஃரிடி மாதிரி அதிரடி ஆட்டம் வேண்டுவோருக்கு இந்த டயட் உகந்ததில்லை. ராகுல் ட்ராவிட் மாதிரி நின்று நிதானமாய் நிலைத்து ஆட விரும்புவோருக்கு உரியது. Perseverance is the key.

4) என் தனிப்பட்ட‌ புரிதலில் டயட் என்பது தற்காலிக சிகிச்சை அல்ல; அது ஒரு வாழ்வியல் மாற்றம் (Lifestyle Change). இப்போது 100 நாள் டயட் என்பதை 1000 நாள் என நீட்டித்திருக்கிறேன். இன்னொரு எளிய‌ வழி ஒவ்வோர் ஆண்டும் மூன்று முறை 100 நாள் டயட்டைப் பின்பற்றுவது: ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒன்று, மே முதல் ஆகஸ்ட் வரை அடுத்தது, கடைசியாய் செப்டெம்பர் முதல் டிசம்பர் வரை. அதாவது ஒவ்வொரு 120+ நாட்களிலும் குறைந்தது 100 நாட்கள் இப்படி டயட்டில் இருக்க வேண்டும்.

6) என் வரையில் இந்த டயட்டின் Flexibilityதான் இதன் பலம். ஏதோ ஒன்றைத் தின்ன வேண்டும் என‌ ஆசைப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளலாம். பிறகு மீண்டும் விரதம். விட்டுப் பிடிக்கும் உத்தி. எதற்காக‌ எதை விட்டுக் கொடுப்பது என்கிற பேரத்தில் கொஞ்சம் நாட்களில் ஒரு தெளிவு கிடைத்து விடும். உங்களுக்கு நிஜமாகவே பிடித்த பண்டத்திற்காக‌ மட்டுமே Cheat Meal எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தானாய் வரும். எனக்கு ஓரளவுக்கு வந்து விட்டது. சும்மா போகிற போக்கில் ஒரு முறுக்கைக் கடிப்போம் என்கிற சமரசமெல்லாம் அந்த மனநிலைக்கு வந்த பின் நடக்காது.

7) டயட் மட்டும் போதாதா, நடைப்பயிற்சியும் வேண்டுமா? அல்லது நடைப்பயிற்சி மட்டும் போதாதா டயட்டும் தேவையா? என்பன நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகள். போதாது என்பதே எளிய பதில். இரண்டுமே தேவை. அப்போதுதான் முடிவுகள் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும் என்பதே என் அனுபவம். நான் வல்லுநர்களிடம் கேட்டவையும், நேரடியாய் உணர்ந்தவையும் உடல் எடைக் குறைப்பில் (அல்லது அதிகரிப்பில்) சுமார் 70% பங்கு உணவுக்கு, மீதிதான் உடற்பயிற்சிக்கு. ஆக, ஒன்றை மட்டும் வைத்து எடை குறைக்க முடியாது. அதனால் உணவுப் பழக்கம் தொடர்பான ஒழுக்கம், தினம் விடாத நடைப்பயிற்சி (தொடர்ச்சியாய் ஒன்றரை மணி நேரம்) இரண்டுமே இந்த முறைக்கு அத்தியாவசியம். சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் இதுவே உவப்பானது.

8) CSK டயட் விவரங்களுக்கு: http://www.writercsk.com/2020/10/csk-diet.html. இந்த டயட்டில் கலோரி கணக்குப் பார்க்க வேண்டியதில்லை; கொழுப்பா, மாவா, புரதமா என அளக்க வேண்டியதும் இல்லை. நல்லதை எடுத்து, அல்லதைத் தள்ளுவது மட்டுமே தாத்பர்யம். (சரி, இதை எவ்வளவு துல்லியமாகப் பின்பற்றுகிறேன்? சுமார் 80%. குறிப்பாக நேரத்துக்குச் சாப்பிடுவது, தூக்க நெறிகள், வாழை தவிர்ப்பது முதலியவை சரிவரப் பின்பற்றுவதில்லை. ஆனாலும் 100% முயன்றால்தான் 80% ஆவது நடக்கும்.)

9) கொஞ்சம் ஊன்றி கவனித்தால் இந்த டயட் என்னவெனப் பிடிபட்டு விடும். நம்முடைய‌ முந்தைய தலைமுறையின் உணவு முறைதான் இது. அவர்கள் எத்தனை முறை ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டார்கள்? அதிகபட்சம் மாதம் ஒரு முறை. எத்தனை நாள் மாமிசம் உண்டார்கள்? உத்தேசமாய் வாரம் ஒரு முறை. ஏகதேசமாய் அதையொட்டித்தான் நான் இந்த உணவு முறையை conceive செய்தேன். ரொம்பப் பழைய முறைக்குப் போகிறேன் என்று நியாண்டர்தால் அரைக்குரங்கின் பேலியோவுக்கும் போகாமல், இன்றைய நவீன பீட்ஸா - பர்கருக்கும் போகாமல் something in between!

10) எச்சரிக்கை: உடற்கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் முறையாக மருத்துவர் அறிவுரையை நாடுவதே நல்லது. சாதாரண உடல் நலத்தில் உள்ளோர், உடல் எடைடைக் குறைக்க மட்டும் இம்முறை.

*

  •