Reading view

ஆறு தாரகைகள்

இசையும், சிகரெட்டும் இந்த நாவல் முழுதும் கிரங்கிக் கிடக்கிறது. ஒன்று காற்றுடன் இயைந்து ஒலியாகிறது; மற்றொன்று காற்றுடன் புகைவிட்டு விளையாடுகிறது. புகைப்பதற்கும், இசைப்பதற்கும் ஏதோ ஒரு ஒற்றுமை அல்லது ஒவ்வாமை இருப்பதை உள்ளூர உணரமுடிகிறது. இன்னதுதான் என்று வரையறுக்க முடியவில்லை. ஜோத்ஸ்னாவையும், கிருஷ்ணனையும் பிணைத்திருப்பது இவ்விரண்டும் தான். இவர்களிருவருக்குமிடையை நடக்கும் உரையாடலாக விரியும் இந்த நாவல் இருவருக்கும் இந்துஸ்தானி இசையின் மேல் இருக்கும் பற்றையும், ரசனையையும், மேதமையையும் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறது. ஆனால், கிருஷ்ணனிடம் இருக்கும் இலக்கிய ரசனையும், மொழியும் இந்த முயற்சியை ஒரு நாவலாக்கியிருக்கிறது. ஜோத்ஸ்னாவின் தொகுப்புத் தன்மையும், அதனை கற்பனைவளத்தோடு கிருஷ்ணனிடம் விவரிக்கும் தன்மையும் கூட இதற்கு ஒரு காரணம்.

கிருஷ்ணன், இந்நாவல் ஆசிரியரான யுவன் சந்திரசேகரின் ஒரு alter ego அல்லது அவரேதான் என்பது யுவனின் படைப்புகளுடன் சிறு பரிட்சயம் இருப்பவர்களுக்கும் தெரியும். ஜோத்ஸ்னா தான் சந்தித்த இசைக் கலைஞர்களைப் பற்றி விவரிக்கும் போதெல்லாம், such a great communicator, she is என்று நமக்குள் எழும் உணர்வுகளை எப்படியோ யுவன் கண்டுகொள்கிறார். பக்கங்களின் அடிக் குறிப்புகள் வழியாக அந்த விவரிப்புகள் ஜோஸ்த்னாவுடைய கற்பனையாகவோ அல்லது ஏன் என்னுடைய கற்பனையாகவோக் கூட இருக்கலாம் என்ற தன்னிலை விளக்கம் ஒரு இடையூறாக இருந்தாலும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. அடிக்குறிப்புகளின் வழியாக, வாசகனுடன் உரையாட முயலும் ஆசிரியரின் உத்தி எனக்கு புதுமையாகத் தோன்றியது. இந்நாவல் விவரிக்கும் இசைக்கலைஞர்கள் எவருமே புனைவுப் பாத்திரங்கள் அல்ல. மேலும் அனைவருமே பெண்கள். எனவே, இந்த அடிக்குறிப்புக்களில் இருக்கும் எச்சரிக்கையுணர்வையும், பொறுப்பையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆவணமாக மட்டுமோ அல்லது புனைவாக மட்டுமோ படிக்க முயல்பவர்களை, அவ்வப்போது இந்த அடிக்குறிப்புகள் மடை மாற்றி விடுகின்றன.

இந்துஸ்தானி அல்லது ஏதோ ஒரு இசையில் நல்ல பரிட்சயமும், ரசனையும் கொண்டவர்களுக்கு இந்நாவல் will be a treat indeed. மற்றவர்களுக்கு, பெண் இசைக் கலைஞர்களின் வாழ்வு பற்றிய ஒரு சித்திரம் தரும் ஆச்சரியமும், அயர்ச்சியும் ஒரு சேர கிடைக்கலாம். இசையும், கணவனும் (குடும்பம்) இரு காதல்களாகவே இப்பெண்களால் பாவிக்கப்படுகின்றன. ஆனால், சமூகம் ஏதாவது ஒன்றை மட்டும் தான் அவர்களுக்கு நிர்பந்திக்கிறது. இது இயல்பாகவே, இக்கலைஞர்களை  இசையோடு ஒதுங்க வைத்து விடுகிறது. அவர்களுடைய இசை, இழந்த குடும்ப வாழ்வின் வெற்றிடத்தையும் நிரப்பிக் கொள்கிறது.

யுவனால், இந்நாவலின் முன்னுரையையும், பின்னுரையையும் நாவலின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளமுடிகிறது. குறிப்பாக ஜோத்ஸ்னா பற்றிய அந்த பின்னுரையில், அதுவரை பக்கங்களின் அடிக்குறிப்பின் வழியாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட யுவனால் இந்த பின்னுரையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சற்றே சுதந்திரமாக இயங்க முடிகிறது. எதற்கு இத்தனை நீண்ட பின்னுரை என்பதற்கு அடிக்குறிப்பின் வழியாக இந்நாவலின் ஆலாபனை இது என்று புன்னகைக்கிறார். ஒரு ராகத்தின் ஆரம்பத்தை விளம்பிதம் அல்லது ஆலாபனை என்பார்கள் என்ற அறிதல் இப்புத்தகத்தின் வழியாகத் தான் கிடைத்தது. அதுமட்டுமின்றி, இந்நாவலில் உள்ள இசைக் கலைச்சொற்களை தேடியதில் இசையின் சில அடிப்படைகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. ஸ்வரத்தில் தொடங்கி, அதன் ஸ்தானங்கள், கமகங்கள் அல்லது அலங்காரங்கள் (embellishment) , அது உருவாக்கும் ராகங்கள் என நீண்டு சென்றது என்னுடைய கற்றல். Googleன் வழியாக இப்புத்தகத்தையும்

voxguru என்ற you tube தளத்தையும் கண்டடைய முடிந்தது. https://youtu.be/HvNWo4V49_0?si=xFkI_YWKI3PDVnMo

இப்பின்னுரையைப் படிப்பதற்கு முன்பு எழுத ஆரம்பித்த இப்பதிவின் ஆரம்பத்தில், ஜோத்ஸ்னாவையும் கிருஷ்ணனையும் பிணைத்திருப்பது இசையும், புகையும் என்றிருந்தேன். ஆனால் இந்த பின்னுரை அவர்களிருவருடைய நட்பின் வேறு சில பரிணாமங்களைச் சுட்டிக் காண்பிக்கிறது. அதுமட்டுமல்ல, இவர்களிருவரும் இசை ரசிகர்கள் மட்டுமல்ல; மானசீகமாக அதனை நிகழ்த்திக் கொள்ளும் கலைஞர்களும் கூட. இசைக் கலைஞனும், ரசிகனும் சந்திக்கும் தளத்தில் இருப்பவர்கள் இவர்களிருவரும். இசையைத் துய்ப்பவர்கள் நாங்களிருவரும் என்கிறார் யுவன்.

யுவன் சொல்வது போல் இப்பின்னுரை இந்நாவலின் நீண்ட ஆலாபனை அல்லது வலுவான அடித்தளம் தான். இந்நாவலின் மத்யமும், துரிதமும் எங்கிருந்து முளைத்தெழுந்தன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.

  •  

அறிவும் உண்மையும்

சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் எப்போதும் இடைவெளி உண்டு என்பதை தத்துவங்களின் உளறல் என்று அன்றாடம் அல்லது உலகியல் விலக்கி வைத்து விடக்கூடும். ஒரு சொல் அதன் பொருளை எட்டுவதற்கு, ஒருவருடைய சமூக அமைப்பு, அனுபவம், அறிவு என்றவற்றால் ஆன ஒரு conduit வழியாக பயணிக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் இந்த இடைவெளி ஒரு புத்தகத்தாளின் இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள உணரமுடியாத இடைவெளி; பல நேரங்களில், இது புத்தகத்தின் முதல் தாளுக்கும் கடைசித் தாளுக்கும் இடையே நீள்வது. மரம் என்ற சொல் முதல் வகையைச் சேர்ந்தது. படிமம் என்ற சொல் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. இந்த இரண்டாம் வகைச் சொற்களை கலைச்சொற்கள் அல்லது அன்றாடத் தன்மையற்றவை அல்லது ஒரு துறை சார்ந்தவை என்கிற போதே அவை பொதுவிலிருந்து விலகி நிற்கின்றன. அதை பொதுமைப்படுத்தும் முயற்சியை அல்லது அதை தரிசனமாக்கும் முயற்சியை மற்றும் இதனை சாத்தியப்படுத்தும் அமைப்புகளைத்தான் தான் அமைப்பியல் (Structuralism), பின்அமைப்பியல்(Post Structuralism) மற்றும் அதன் அடிப்படையில் அமைந்த பின்நவீனத்துவம் (Post Modernism) போன்றவை தன்னுடைய பேசு பொருளாகக் கொண்டுள்ளன என ந.முத்து மோகன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு, இதனை விரிவாகப் பேசியுள்ளது.

சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள இந்த இடைவெளியை, அமைப்பியல் மொழி சார்ந்து சுட்டுவது, எங்கோ எப்படியோ அறிவிற்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளியாக பரிணமிக்கிறது. பின்அமைப்பியல், சற்று தீவிரமாக உண்மை என்ற ஒன்றே இல்லை என்கிறது. அறிவு உண்மையைச் சுட்ட முயலும் ஒரு பாவனையே என்கிறது. இதனைப் பற்றிக் கொண்டு பின்நவீனத்துவம், அனைவருக்கும் பொதுவான உண்மை என்று எதுவுமில்லை என்கிறது. தெரிதா(Jacques Derrida 1930 -2004, French Philosopher) இதிலிருந்து அனுபூதவியல் (meta physical) சார்ந்த கருத்துமுதல்வாதம் உருவாக்கிய ஆன்மா அல்லது கடவுள் அல்லது வெவ்வேறு உண்மைகள் ஒரு பேருண்மையின் பிரதிபலிப்பு மட்டுமே என்பதை நிராகரிக்கிறார் என ந.முத்துமோகன்  குறிப்பிடுகிறார்.

தெரிதாவின் கட்டுடைத்தலை (Deconstruction) வெறும் மொழியின் விளையாட்டு என சுருக்கி வைத்திருப்பவர்களுக்கு, அவருடைய முக்கியத்துவத்தை துலக்கி காண்பிக்கிறது இக்கட்டுரை. ஒரு அமைப்பை கட்டுடைத்தலுக்கும், சிதைப்பதற்கும் (Destruction) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடிகிறது. உன்னுடைய அறிவு உண்மையல்ல என்பதற்கும், என்னுடைய அறிவும் உண்மை என்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் இது. பின்நவீனத்துவத்தின் ஜனநாயக மாண்புகளில் ஒன்றாகவும் இதை கருதமுடிகிறது.

ஒவ்வொரு அறிவுத்தரப்பும் உண்மைதான் என்ற போதும், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது நிசர்சனமல்ல. ஒவ்வொரு அறிவுத் தரப்பும் தன்னுடைய உண்மையை எட்டுவது அல்லது நிறுவுவது அதனுடைய அமைப்புகளின் வழியாகத்தான். கடவுளின் இருப்பு மதம் என்ற அமைப்பின் வழியாகத் தான் நிறுவப்பட்டது. நான் கோவிட் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லும் எந்த ஆராய்ச்சியாளரையும் இவ்வுலகம் பொருட்படுத்துவதில்லை. அது ஒரு அறிவியல் அமைப்பின் வழியாக மட்டுமே நிறுவப்பட முடியும். அறிவுக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் Conduit என்றும் அமைப்பை உருவகிக்கலாம். 

ஒரு அறிவுத் தரப்பு தன்னை நிறுவிக்கொள்ள உருவாக்கும் அமைப்பு, சமூகத்தை சுரண்டுவதற்கும் அல்லது பிற அறிவுத் தரப்புக்களை ஒடுக்குவதற்குப் பயன்படும் பொழுது அவ்வமைப்பு அதிகாரம் என்று உருமாறுகிறது. அதிகாரம் அறிவால் உருவாக்கப்படுவது என்று மார்க்சியம் இதனை எளிமைப்படுத்தியிருக்கிறது.

ஆனால், அதிகாரம் தான் அனைத்தின் ஊற்றுக்கண்; அல்லது அதிகாரம் சுயாதீனமான இருப்பு கொண்டது; இதிலிருந்தே மதம், அறிவு என அனைத்தும் உருவாகிறது என்கிறார் மிஷெல் ஃபூக்கோ( Michel Foucault , 1926-84, French Philosopher). கிட்டத்தட்ட ஹெகல்(Georg Wilhelm Friedrich Hege, 1770 – 1831, German Philosopher) தன்னுடைய உலக ஆன்மா என்ற கருத்தாக்கத்திற்கு வழங்கிய இடத்தை அதிகாரத்திற்கு வழங்கியிருக்கிறார் ஃபூக்கோ. மார்க்சியத்தை தலைகீழாக்கும், பின்நவீனத்துவத்தின் இந்த சிந்தனைக் கூற்றை மட்டும் ந.முத்துமோகன் பதற்றத்துடன் நிராகரிக்கிறார்.

மிக சுவாரஸ்யமாக, பின்நவீனத்துவம் விமர்சிக்கும் நவீனம், நவீனத்துவம் போன்றவற்றில் இருந்து மார்க்சியம் விலகியே இருந்தது என்கிறார். நவீனத்துவம் உன்னத சுயத்தை வலியுறுத்துகிறது என்றால், பின்நவீனத்துவம் அந்த சுயம் கட்டமைக்கபட்டது அல்லது தற்சார்பு கொண்ட சுயம் என்கிறது. மார்க்சியம் எப்போதும் சுயத்தை அடிப்படையாகக் கொண்டதில்லை என்கிறார். 

பின்நவீனத்துவத்தின் சாராம்சங்களை விளக்கியிருக்கும் அடர்த்தியான இக்கட்டுரைகளின் இறுதியில், அதன் வேர்கள் மார்க்சியத்தில் இருந்து பெறப்பட்டவை என்பதையும் சுட்டியிருக்கிறார். SVR அவர்களும் தன்னுடைய  இருத்தலியமும் மார்க்சியமும் என்ற புத்தகத்தின் இறுதியிலும், இருத்தலிய சிந்தனையின் வேர்கள் மார்க்சியத்தில் இருந்து பெறபட்டவை என்பதை வலியுறுத்தியிருப்பார். மார்க்சின் காதலர்கள்…

  •  

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

காலை நடையில் திடீரென நம்முன் முளைத்தெழுந்திருக்கும் செடி நம்மை திகைக்க வைப்பதில்லை. ஆனால், திடீரென அங்கு அமர்ந்திருக்கும் ஒரு குரங்கு ஒரு பதட்டத்தை உருவாக்கத்தான் செய்கிறது. இது எங்கிருந்து வந்தது என்ற ஒரு திகைப்பு ஒரு புறம் என்றால், அது வந்த பாதையை அறிய முயல்வதற்கான இயலாமை இன்னொரு புறம். காலை நடையின் போது வெகு தொலைவில் இக்குரங்கு வந்து கொண்டிருப்பதை கவனிக்கும் வாய்ப்பு நமக்கிருந்திருந்தால் இந்த திகைப்பு இருப்பதில்லை. கிட்டத்தட்ட நவீனம் என்று நமக்கு முன் வைக்கப்படும் அனைத்தும் இக்குரங்கு போலத்தான். இந்நவீனத்தின் ஊற்றுக்கண் மரபில் இருப்பதை அறியும் வாய்ப்பை இத்திகைப்பு தடுத்து விடுகிறது. இது நவீனத்தின் மேல் ஏற்றி வைக்கப்டும் ஒரு சுமையும் கூட. இந்த ஊற்றுக்கண்ணை அறியும் வாய்ப்பு கிடைக்கும் போது, நவீனமும், நாமும் சற்று இலகுவாக முடிகிறது. எஸ்.நீலகண்டன் அவர்களின் இப்புத்தகம் (ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரியல் பொருளாதாரம், காலச்சுவடு பதிப்பகம்) இதைத்தான் செய்கிறது. 

பொருளியல் என நவீனம் நம்முன் வைக்கும் அனைத்தையும் ஆடம் ஸ்மித்திற்கு முந்தைய கால கட்டத்திலிருந்து கார்ல் மார்க்ஸ் வரை வகைப்படுத்தி தொகுத்திருக்கிறது இப்புத்தகம். மேலும், பொருளியல் என்பது அளிப்பு-நுகர்வு (Demand and Supply) என்ற இரண்டு காரணிகளால் மட்டுமே ஆனது என்று எளிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இப்புத்தகம் ஒரு Roller Coaster ride தான். இந்த எளிமைப்படுத்துதல்களுக்கான காரணத்தையும் இப்புத்தகத்தில் வரும் மார்க்ஸ் பற்றிய அத்தியாயத்தில் உணர்ந்து கொள்ள முடியும். பெரும்பாலான மனிதர்களை படைப்பூக்கமற்ற மந்தையாக வாழ மட்டுமே தற்போதைய பொருளாதார வடிவமான முதலாளித்துவம் நிர்பந்திக்கிறது என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். தான் செய்யும் பணியையே முழுமையாக (End to End) தெரிந்திருக்கும் தேவையும் வாய்ப்பும் இல்லாமலிருக்கும் இந்நிலையை முதலாளித்துவம் வேலைப்பகிர்வு (division of labour?) என்று ஆராதிக்கிறது என்றால், மார்க்சியம் இதனை அந்நியமாதல் (alienation) என்று நிந்திக்கிறது.

வரவு செலவுகளை துல்லியமாக மதிப்பிடும் double entry book keeping system (Debit and Credit should net to zero என்ற வங்கி கணக்கியலின் பாலபாடம்) கிபி 1426 லேயே நடைமுறையில் இருந்தது என்பதை தெரிந்து கொள்ளும்போதும்; இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அது உருவாக்கியிருக்கும் அமைப்புகளையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பொருளியல் அடிப்படைகளின் (சமூகத்தின் தேவைகள், அதன் ஸ்தூல வடிவமான உற்பத்தி, உற்பத்தியின் காரணிகள், உற்பத்தியின் மதிப்பு, அதன் வழி கிடைக்கும் செல்வம், அச்செல்வத்தை பகிரும் வழிமுறைகள்…) வழியாகவும் தொகுத்துக் கொள்ள முடியும் என்று உணரும் பொழுதும் நாம் சுமந்து கொண்டிருக்கும் நவீனத்தின் சில சுமைகளை இறக்கி வைக்க முடிகிறது. 

அங்காடி வழி பொருளாதாரம்

ஆடம் ஸ்மித் (Adam Smith, Scottish philosopher and economist, 1723-1790) தன்னுடைய Wealth of Nations என்ற புத்தகத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (அல்லது செல்வம்), அதனுடைய உற்பத்தி திறனைப் பொறுத்தே அமைகிறது என்கிறார். ஒரு நாட்டின் செல்வம் என்பது அதனுடைய தங்கம் மற்றும் வெள்ளி இருப்பாக மட்டுமே கருதப்பட்ட முடியாட்சிகளின் இறுதி காலத்தில் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். விவசாயம் மட்டுமே அதிக உற்பத்தி திறன் கொண்ட தொழில் என வாதிட்ட Physiocrats என்பவர்களும் இதே காலகட்டத்தில் இருந்தவர்கள். ஒரு விதை நெல்லிருந்து ஓராயிரம் நெல் மணிகள் உற்பத்தி ஆக முடியும் என்றால், விவசாயத்தை விட எந்த தொழிலால் இந்த உற்பத்தி திறன் சாத்தியம் என்பது Physiocrats களின் வாதம். உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் மோகம் அல்லது இயற்கையுடன் போட்டியிடும் மோகம் இங்கிருந்து தான் தொடங்கியதோ என்றும் எண்ண வைக்கிறது. Monsonto என்ற நிறுவனம் Physiocratsகளால் உருவாக்கப்பட்டது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இன்று வரை இம்மோகம் தொடர்கிறது (AI, Automation, 70hours/week என). இன்னமும் தொடரும். 

இந்த விவசாய உற்பத்தியின் காரணிகளாக அல்லது பங்கேற்பாளர்களாக நிலவுடைமையாளர்கள், நிலத்தில் உழைப்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என மூவகையினரை சுட்டுகிறார் ஆடம் ஸ்மித். உழைப்பவர்களுக்கு கூலி; நிலவுடைமையாளர்களுக்கு வாரம் ( வாடகை); முதலீட்டாளர்களுக்கு லாபம் என உற்பத்தி இம்மூன்று வர்க்கத்தினர்களிடையை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 

இந்த உற்பத்தியையும் அதன் காரணிகளையும், உற்பத்தின் பகிர்வையும் மரபு வழியாகவும், கட்டளைகள் வழியாகவும் (இன்னார் இந்த உற்பத்தியில் மட்டும் தான் ஈடுபடவேண்டும்; உற்பத்தியின் பகிர்வு இப்படித்தான் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை உருவாக்கிய வழிகள்) நிர்வகித்த  சமூகம் தன் விதிகளை காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டதின் விழைவு தான் அங்காடி வழி பொருளாதார முறைக்கு இட்டுச் சென்றது.

எங்கிருந்து இந்த முதலீட்டாளர்கள் என்ற வர்க்கம் வந்தது என்ற குழப்பம் வராமலில்லை. வேட்டைச் சமுகத்திலிருந்து நிலவுடைமை அல்லது விவசாய சமூகமாக பரிணமித்த பிறகு நிலப்பிரபுக்கள் மற்றும் அவர்களுடைய நிலத்தில் உழைக்கும் விவசாயக் கூலிகள் மற்றும் அவர்களுடைய பிற தேவைகளை (உடை, உறவிடம் போன்றவற்றை) பூர்த்தி செய்யும் கைவினைஞர்கள் போன்றவர்களே அச்சமூகத்தின் பொதுவான உட்கூறுகள். இதில் நிலப்பிரப்புக்கள் தான் முதலாளிகள் மற்ற அனைவருமே உழைக்கும் வர்க்கம் தான். ஆனால், ஆடம் ஸ்மித் நிலப்பிரபுக்களை வெறும் நில வாடகை பெறுபவர்களாக சுருக்கி விட்டு, முதலீட்டாளர்கள் என்ற உற்பத்தி காரணியை வரையறுத்ததின் பின்னணியை இப்புத்தகத்தின் வழியாக நம்மால் உணரமுடிகிறது. முதலீட்டாளர் என்ற வகைமை ஆடம் ஸ்மித்தால் உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே அவர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த அஙகாடி வழி (Market driven)பொருளாதாரத்தை கூர்ந்தவதானிப்பதின் வழியாக இந்த மூன்றாம் வர்க்கத்தை வரையறுக்கிறார்.

நிலப்பிரபுக்களின் சுயநலத்தில் (தானியத்தை வெவ்வேறு பொருள்களுக்காக பரிவர்த்தனை செய்யும் நுகர்வு வேட்கை) ஆரம்பிக்கிறது இந்த அங்காடி வழி பொருளாதார அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும். இது பொருட்களின் தேவையை அதிகரிக்கிறது. இயல்பாகவே இது கைவினைக் கலைஞர்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த சுழற்சியால், நிலப்பிரபுக்கள் அங்காடியில் பரிவர்த்தனை செய்யும் தானியத்தின் அளவும் அதிகரிக்கிறது. அது நாள் வரை அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே உழைத்த விவசாயக் கூலிகள், அதிக தானிய உற்பத்திக்காக உழைக்கத் தூண்டப்பட்டார்கள், உயர்த்தப்பட்ட கூலி வழியாக.  இயல்பாகவே, இது கைவினைஞர்களின் சேமிப்பு அல்லது உபரி உயர வழி வகுத்தது. அந்த சேமிப்பு முதலீடானது. நிலத்துடன் பிணைப்பற்ற இவர்கள் முதலீட்டாளர்கள் ஆனார்கள். புது உற்பத்திக் காரணி தோன்றியது. உற்பத்தியில் இவர்களின் பகிர்வு லாபம் என்றானது. ஆடம் ஸ்மித் வரையறுக்க முயன்ற இந்த அங்காடி வழி பொருளாதாரம், பின்னர் முதலாளியம் (Capitalism) என்ற கலைச் சொல்லாக மாறியது என்கிறார் எஸ்.நீலகண்டன். Capitalism is an economic system primarily driven by Markets என்ற புரிதலுக்கு வரமுடிகிறது. மார்க்சியம், இதனை நிலப்பிரபுக்களுக்கும், கைவினைஞர்களுக்கும் நடந்த முரணியக்கம் என்கிறது. ஆடம்ஸ்மித், இது அவ்விரு தரப்புக்களும் நடந்த ஒத்திசைவு என்கிறார். ஒத்திசைவோ, முரணியக்கமோ, முதலாளியத்தின் விதை சுயநலம். அதுதான் இயல்பானது என்பதே நிதர்சனம். பொதுநலன்கள், அச்சுயநலத்தின் உபவிளைவுகள் மட்டுமே என்கிறார் ஆடம் ஸ்மித். 

முதலாளியத்திற்கு, ஆடம் ஸ்மித்தின் முக்கிய கொடையாக குறிப்பிடப்படுவது, உற்பத்தி திறனை அதிகரிக்கும் உத்தியாக வேலைப் பகிர்வை அவர் முன்வைத்தது. தொழிற்புரட்சியின் விதை என இதைக் குறிப்பிட முடியும். இதன் பிறகு பட்டறைகள் தொழிற்சாலைகளாக மாறி அங்காடி வழி பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தன. நாட்டின் செல்வம் பெருக ஆரம்பித்தது. குலத்தொழில் என்ற ஏற்பாடு படிப்படியாக இல்லாமல் ஆனது. நகரங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த மாற்றத்தை தாகூர் போன்ற கவிஞர்கள் தொழிலும் வணிகமும், லட்சுமியின் ஆதிக்கத்திலிருந்து அகோர காளியின் கைகளுக்கு சென்று விட்டது என்று அவதானித்தது நினைவுக்கு வருகிறது. தொழில் புரட்சி லாப வெறியால் உருவானது என்பதே இதன் பொருளாகக் கொள்ள முடியும்.

உற்பத்தி மதிப்பு

உறபத்தி காரணிகளான கூலியும், வாரமும், லாபமும் உற்பத்திப் பொருளின் மதிப்பை நிர்ணயித்தன என்கிறார் ஆடம் ஸ்மித். அதாவது, உழைப்பு மட்டுமே ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பதில்லை என்கிறார். முதலீட்டை உழைப்பாக அவர் கருதவில்லை. ஒரு நிலத்திலிருந்து ஆறு மூட்டை நெல் ஒரு விவசாயி உழைப்பதால் விளைகிறதென்றால், அந்த விவசாயிக்கு கூலி 1 மூட்டை; நில உரிமையாளருக்கு வாரம் அல்லது வாடகை 2 மூட்டை நெல்; மீதி 3 மூட்டை நெல் முதலீட்டாளரின் லாபம் என உற்பத்தி பகிரப்படுகிறது. இப்பகிர்வை நிர்ணயிப்பது அங்காடியின் தேவையாக மட்டுமே இருக்க வேண்டும். அரசாங்கத்தின் தலையீடுகள் இப்பகிர்வில் குறைவாகவே இருக்க வேண்டும் என்கிறார். இதனையே அரசியல் செவ்வியல் பொருளாதாரம் என்று சுட்டிக் காட்டுகிறது இப்புத்தகம். சுதந்திர சந்தை அல்லது அங்காடி (free market) என்பது ஆடம் ஸ்மித்தின் கனவு. இன்று முதலாளியத்தின் குளறுபடிகளுக்கான காரணம், welfare states என்ற பெயரில் நடக்கும் அரசாங்கத்தின் அத்துமீறல்கள் (the bail out culture) தான் என்ற கூக்குரல்களும் உலகெங்கும் ஒலிக்க ஆரம்பித்திருப்பதை இதனுடன் பொருத்தி புரிந்து கொள்ள முடிகிறது.

வாரம்’ (வாடகை) எனும் சுவாரஸ்யம்

ஒரு விவசாய நிலத்திற்கு வழங்கப்படும் வாடகை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்ற தகவல் ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஒரு சேர அளிக்கிறது. இயற்கையின் கொடையான வளமான நிலத்திற்கான வாடகை இயற்கையின் கஞ்சத்தனத்தால் உருவான வளமற்ற நிலங்கள் சாகுபடிக்கு வருவதால் நிகழ்கிறது என்ற தகவல் புன்னகையை வரவழைக்கிறது. வளமான நிலம் 100 மூடை நெல் உற்பத்தி தருமென்றால், வளமற்ற நிலத்தில் இடப்படும் அதேமுதலீடும், மனித உழைப்பும் 80 மூட்டை நெல்லையே தரும். 20 மூடை வித்தியாசம், வளமான நிலத்தின் உரிமையாளரால் வாரமாக கோரப்படுகிறது. உற்பத்தியின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, வளமற்ற நிலங்கள் அதிகளவில் சாகுபடிக்கு வருகின்றன. இது எந்த விதமான உழைப்புமின்றி நிலவுடைமையாளர்களின் வருமானத்தை உயரச் செய்கிறது. எனவேதான், ஆடம் ஸ்மித் உழைப்பு மட்டுமே மதிப்பை நிர்ணயிப்பதில்லை என்கிறார். இன்று நாம் காணும் நில உச்சவரம்பு சட்டங்களுக்கான தேவைகளை ஒரு வகையாக புரிந்து கொள்ள முடிகிறது.

உழைப்பும் மதிப்பும்

உழைப்பு மட்டுமே ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பதில்லை என்ற ஆடம் ஸ்மித்தின் பார்வையை அவருக்குப்பின் வந்த புகழ் பெற்ற பொருளியல் அறிஞரான ரிக்கார்டோ ( David Ricardo, A British political economist, 1772-1823) சற்று மாற்றியமைக்கிறார். மார்க்சிய இயங்கியலின் அடித்தளம் ஹெகலிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது என்றால், அதன் பொருளியல் பார்வைகளை வடிவமைத்தது ரிக்கார்டோவின் கொள்கைகள் எனலாம்.

ஒரு பொருளின் மதிப்பு, அதன் உற்பத்திக்குத் தரப்படும் உழைப்பால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார். கூலி மட்டுமல்ல; முதலீடும் முந்தைய உழைப்பின் சேமிப்பு தான் என்று உழைப்பின் எல்லையை விரிவாக்குகிறார். வாரம் என்பதை ஏதோ ஒரு வகையில் கூலியுடனும், லாபத்துடன் தொடர்புபடுத்தி(இது முழுவதுமாக எனக்கு புரியவில்லை) கூலி-லாபம் என்ற சமன்பாட்டிற்குள் உற்பத்தியைக் கொண்டு வருகிறார். கூலியும் லாபமும் எதிரெதிர் திசையில் இயங்குபவை என்ற புரிதலுக்கு வந்து சேர்கிறார். கூலி அதிகரித்தால் லாபம் குறையும் என்ற முதலாளியத்தின் பாலபாடமிது. 

ரிக்கார்டோவின் இன்னொரு மிக முக்கிய பங்களிப்பாக பன்னாட்டு வாணிபக் கொள்கையை குறிப்பிடுகிறார் எஸ்.நீலகண்டன். அனைவருமே அனைத்தையும் உற்பத்தி செய்வதை விட ஏற்றுமதி இறக்குமதி மூலம் ஒவ்வொரு நாடும் செல்வ வளம் பெறமுடியும் என்கிறார். ஆடம் ஸ்மித் கொண்டிருந்த பயன் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு பற்றிய குழப்பங்களையெல்லாம்  ரிக்கார்டோ சரி செய்ததையும் இப்புத்தகம் விளக்கியிருக்கிறது.

இன்னும் நிறைய முக்கியமான பொருளாதார அறிஞர்களையும் பற்றியும், அவர்களுடைய பங்களிப்பு பற்றியும் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது. அனைத்தையும் உட்செரித்து கொள்வது அத்தனை எளிதல்ல என்றாலும், ஆடம் ஸ்மித்தில் தொடங்கி கார்ல் மார்க்ஸை நோக்கி பயணிக்கும் இச்சுழல் பயணம் நிறைய சுவாரஸ்யங்களை அளிக்கிறது. பொருளியலின் பல கலைச் சொற்கள் முன் திகைத்து நிற்பதை தடுத்து விடுகிறது. 

  •  

யாக்கை நாவல் பற்றி

சிலவற்றை அல்லது இந்நாவலில் சித்தரிக்கப்படும் சுப்பு (சுப்ரமணியன்) போன்றவர்களின் மனநிலையை, ஏற்கனவே நமக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடிவதில்லை. கலையை, தர்க்கத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள முடியாது என்பதும் நிதர்சனம் தான். இந்த கலைமனத்தின் நிறைவின்மையின் ஊற்றுக்கண் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் தர்க்கபுத்தி இயங்கும். சுப்புவின் துயர் மிகுந்த பால்யமும், அங்கிருந்து அவனுக்கு கிடைக்கும் சமூகம் மற்றும் பாலியல் பற்றிய புரிதல்களும் இந்நாவலில் சித்தரிக்கப்படும் விதம் அலாதியானது. வாசகர்களை இயல்பாக உள்ளிழுத்துக் கொள்கிறது இந்த கவித்துவமான சித்தரிப்புக்கள். இப்புரிதல்கள் அல்லது அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்து சுப்புவை ஒரு தனித்தீவாக மாற்றி விடுகிறது. சில சமயங்களில் சுப்புவிடமிருப்பது கலை மனத்தின் நிறைவின்மைதானா? அல்லது சமூகம் அல்லது குறிப்பாக பெண்களின் பாலியல் வேட்கை பற்றிய பிழையான புரிதல்களில் விளைந்த போதாமை தந்த நிலையின்மையா? என்ற கேள்வியும் எழுந்த வண்ணமே தான் இருக்கிறது.

சுப்புவின் மனைவியான பத்மாவின் பால்யமும் துயரம் மிகுந்ததாக இருந்தாலும், அவளிடம் இருக்கும் வாழ்க்கை பற்றிய புரிதல்கள் தர்க்க மனத்திற்கு வெகு இணக்கமானவை. சுப்புவின் காதலை ஏற்றுக் கொள்வதிலிருந்து, அவனை முழுதும் தன்னவனாக மாற்றிக் கொள்ள முயல்வது வரை வரும் பத்மா பற்றிய சித்தரிப்புக்கள், அவள் உணர்வுகளாலோ அல்லது மிதமிஞ்சிய மேதாவித்தனத்தாலோ ஈர்க்கப்படுபவள் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. நவீனம் தரும் சுதந்திரம் பற்றியோ, மரபு என்ற போர்வையில் வரும் அரைகுறையான வழிகாட்டுதல் பற்றியோ பெரிய பிரக்ஞை ஏதுமற்றவளாகவே இருக்கிறாள் பத்மா. சுப்புவை ஈர்க்கும் இந்த பத்மாவின் குணம், திருமணத்திற்குப் பின் அயர்ச்சி தரும் ஒன்றாக அவனுக்கு மாறிப் போகிறது. குறிப்பாக, இந்த விலக்கம் அவர்களுடைய தேனிலவிலேயே ஆரம்பிப்பது சற்று அதிர்ச்சி தரும் ஒன்றாக தோன்றினாலும், அதன் பின் விரியும் சுப்புவின் பால்யம் நம்மை அந்த அதிர்ச்சியிலிருந்து விலக்கினாலும், ஒரு பெரும் துயருக்கு இட்டுச் செல்கிறது, வாழ்ந்து கெட்ட குடும்பம், தொடர் மரணங்கள் என. இது மட்டுமின்றி, அவனுக்கு இளமையில் கிடைக்கும் பாலியல் அனுபவங்களும், புரிதல்களும் தான் பத்மாவிடமிருந்து வெகு விரைவாக அவனை விலகச் செய்கின்றன. ஒவ்வொரு புணர்தலுக்குப் பின்பும், பத்மா இன்னொருவனை தேடிச் செல்லக் கூடும் என்ற அவநம்பிக்கை அவனை கொஞ்சம் கொஞ்மாக சிதைக்கிறது. இந்த சிதைவு இந்நாவலில் சித்தரிக்கப்படும் விதம் a very bold attempt indeed!!!

சமகாலத்தில் இந்த நாவலிற்கான தேவை என்ன என்பதையும் நம்மால் இங்கு புரிந்து கொள்ள முடிகிறது. காமசூத்ராவின் நிலமிது. தன்பாலின ஈர்ப்பு/ஓரின புணர்ச்சி; மற்றும் திருநங்கைகள் பற்றி விரிவாக பேசிய மரபிலக்கியங்கள் நமக்குண்டு. இத்தனை இருந்தும் சுப்பு போன்ற நவீனக் கல்வி பயின்றவர்களுக்கு கிடைக்கும் சாமியப்பா போன்றவர்களின் பாலியல் வழிகாட்டுதல்கள் துரதிர்ஷ்டவசமானவை. இன்றைய நவீனம் நம்முடைய மரபுகளின் தொடர்ச்சியோ, பரிணாம வளர்ச்சியோ கிடையாது. இன்றைய உலகளாவிய நவீனத்தின் ஊற்றுக்கண் ஐரோப்பிய சிந்தனை மரபுகளிலேயே பொதிந்துள்ளது. வெறும் பிழைப்புக்காக மட்டுமே நாம் நவீனத்தை பற்றியிருக்கிறோம். பிற அனைத்துக்கும், நவீனத்தின் பெயரால் கைவிடப்பட்ட நம் மரபுகளையே தெரிந்தோ தெரியாமல் சார்ந்திருக்கிறோம். அவை பேணப்படாததாலேயே சாமியப்பா போன்றவர்களின் பிழையான வழிகாட்டுதல்களை மரபான ஒன்று என சுப்பு நம்புகிறான். காமசூத்ரா தந்த மரபிற்கு, நம்மை குற்றவுணர்வில் தள்ளும் நீலப்படங்களின் அவசியமென்ன என்ற கேள்வி இந்நாவலைப் படிக்கும் போது எழத்தான் செய்கிறது. சமகாலத்தில் ஜோசியம் என்ற பெயரில் நடக்கும் பிழையான வழிகாட்டுதல்களும் இங்கு நினைவுக்கு வருகிறது. நம் மரபு வெறும் உதிரிகளால், பொறுப்பற்றவர்களால் கையாளப்படுவது, அவை மீண்டும் ஒரு வலுவான அமைப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டியதின் தேவையை உணர்த்துகிறது. ஐரோப்பா தன்னுடைய நவீனத்தை எப்போதும் தன் மரபுக்கெதிரான ஒன்றாக கட்டமைப்பதில்லை என்பது என்னுடைய புரிதல். நவீனத்தின் அலகான தனிமனித சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்த சார்த்தரை கொண்டாடுபவர்கள்,  கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு இவ்வுலகம் புனிதமடைந்து விட்டது; அதற்குப் பின் நடந்த அனைத்து சமூக மாற்றங்களும் போலியானவை என்று கூறிய கீர்கேகார்ட்டை குப்பையில் எறிந்து விடவில்லை.

பத்மா போன்றவர்களுக்கு இது போன்ற பிழையான வழிகாட்டுதல்கள் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சுப்பு நுண்ணுணர்வுகளால் ஆட்கொள்ளப்படுபவன். அது சிலசமயம் நுண்பெருக்கியாகவும் வேலை செய்கிறது. பத்மாவின் தொடர் சீண்டல்களால் மனதளவில், அவளிடமிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விட்ட சுப்பு, ஒரு நாள் முற்றிலும் அவர்களிடமிருந்து (இரு பெண் குழந்தைகளும் பிறந்து விடுகின்றன) விலகிச் சென்றுவிடுகிறான். வாழ்வில் நிறைவின்மை கொண்டவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய துறவறத்தை அல்லது ஞானமார்க்கத்தை போதாமையும், நிலையின்மையும் கொண்ட சுப்பு மேற்கொள்கிறான்.

இப்பயணத்திற்காகவே காத்திருந்தது போல் இந்நாவல் விஸ்வரூபமெடுக்கிறது. ஒட்டுமொத்த நாவலுமே வேறு ஒரு தளத்திற்கு சென்று விடுகிறது. A deep travel into oneself. பத்மாவுடன் சிறு சிறு வீட்டுப் பொருட்களை வாங்கச் சென்ற கடையிலுள்ள பொருட்களின் கலையமைதியின்மையால் அயர்ச்சியுற்ற சுப்பு, காசியில் இருக்கும் ஒழுங்கின்மையில் கலையமைதி கொள்வது நமக்கும் சுப்புவுக்கும் ஒரு சேர ஆச்சரியமளிக்கிறது.

நாவல் என்ற வடிவம் தரும் சுதந்திரக் காற்றை எந்த வித தடையுமின்றி சுவாசித்திருக்கிறார் KJA. அவருடைய நீண்ட விவரணைகளும், சிடுக்கும், கவித்துவமும் நிறைந்த மொழியும் இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது. மிக குறிப்பாக அகத்திற்கும், புறத்திற்கும் உள்ள தொடர்பற்ற தன்மையை அல்லது தொடர்பறுந்து போகும் நிலைகளை மிக அற்புதமாக KJAவின் மொழி கையாண்டிருக்கிறது. நினைவுகளில் இருந்து எழும் மொழி, நிஜத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பதும், நிஜம் அல்லது எதார்த்தம் வேறொன்றாக இருப்பதை உணர்ந்து திடுக்கிடுவதும் வெளிப்படுத்தப் பட்ட விதம் சுப்புவின் இப்பயணத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

சுப்புவின் பால்யம் மற்றும் இல்லறத்தின் போது சந்தித்த சாமியப்பா மற்றும் ரேஷ்மி என்ற திருநங்கையும் சுப்புவின் இந்தப் பயணத்தில் மீண்டும் வருவது KJAவை ஒரு சுவாரஸ்யமான கதைசொல்லியாகவும் எண்ண வைக்கிறது. சுப்புவின் வாழ்க்கையில் இவர்களிருவரும் திரும்ப வரும் தருணங்கள் சற்று செயற்கையாக தோன்றினாலும், சுப்புவை இந்த மீள் சந்திப்புகளின் மூலம் நம்மால் நெருங்கி புரிந்து கொள்ள முடிகிறது. இவர்களின் மூலம், தன்னுடையது நிறைவின்மையின் பயணமல்ல, நிலையின்மையின் பயணம் என்று சுப்புவால் புரிந்து கொள்ள முடிகிறது. பத்மாவிடமும், மகள்களிடமும் திரும்பி விட வேண்டும் என்று நினைத்து வருகிறான். ஆனால், காலம் கடந்து விட்டிருக்கிறது. முதுமை, நோய் என பத்மா உருக்குலைந்து போயிருக்கிறாள். மகள்களால் சுப்புவை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுப்புவின் பயணமும், இந்தாவலும் முடிந்து கொண்டிருக்கும் தருவாயில், துரதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைப்பது பெரும் சோர்வும், துக்கமும், மகா சலிப்பும் தான். ஆனால் ஒட்டு மொத்தமாக சுப்புவின் பார்வையில் இருந்து இந்நாவலை தொகுத்துப் பார்க்கும் பொழுது, இந்த உடல் அல்லது யாக்கை என்பது வெறும் நினைவுகளின் தொகுப்புதானா? இதை வைத்துதான் இந்த சமூகத்தையும், பிரபஞ்சத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமா? இந்த நினைவுகளால் அல்லது அனுபவங்களால் பாதிக்கப்படாத எனக்கே எனக்கான சுயம் என்ற ஒன்று இல்லையா? என்ற கேள்விகளையும் நம்முள் இந்நாவல் எழுப்பத் தவறவில்லை. சுப்பு தன்னுடைய அந்த சுயத்தைத் தேடிச் செல்லும் பயணமாகவே இந்நாவலை உருவகிக்கிறேன்.

இந்நாவல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய அறிமுக உரை:

  •  

சுதந்திரமும் அரசாங்கமும்

சில புத்தகங்கள், திடீரென இதுவரையிலான வாசிப்பை, அதன் வழி அடைந்த சில புரிதல்களை உடனடியாக தொகுத்து கொள்ள வேண்டிய அவசியத்தை அல்லது நிர்பந்தத்தை ஏற்படுத்தும். எஸ்.நீலகண்டன் அவர்களின் இப்புத்தகம் பொருளியல் என்பது அறிவியல் மற்றும் பிற அறிவுத்துறைகள் போல நவீன யுகத்தின் கண்டுபிடிப்பு என்ற பொதுப்புரிதலை இல்லாமலாக்குகிறது. வரவு செலவுகளை துல்லியமாக கணக்கிட உதவும் Double entry book keeping system (வரவும் செலவும் should net to zero என்ற Accountingன் பாலபாடம்)  நவீன யுகத்திற்கு முன்பே (கி.பி.1494) கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஒரு துறையைச் சேர்ந்தவர்களுக்கு, இதர துறைகளின் இது போன்ற அடிப்படையான விஷயங்களின் தொடக்கம் பற்றி தெரிய வரும் போது நவீனயுகத்தின் மேல் ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் தேவையற்ற சுமைகளை (போலி பிம்பங்களை)  இறக்கி வைத்து விட முடிகிறது.  நவீனமும், நாமும் சற்று இளைப்பாற முடிகிறது. அறிவியல், தத்துவம் என அனைத்தின் தொடக்கப் புள்ளிகளுமே நவீனயுகத்திற்கு முந்தைய முழுமையில் பொதிந்துள்ளன. இதன் அடிப்படையில், இப்புத்தகத்தின் சில பக்கங்களின் (ஆடம் ஸ்மித் மற்றும் அவருக்கு முந்திய பொருளாதார சமூகங்கள் பற்றியவை) துணைகொண்டு என்னுடையை சில புரிதல்களை இங்கு தொகுத்துக் கொள்கிறேன்.

வேலைப்பகிர்வு

ஒரு ஊசியை தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் (அதனை விற்பது அல்லது பண்டமாற்றுவது வரை) ஒருவரே அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவோ சமூகமோ மட்டுமே செய்யும் பொழுது உற்பத்தியில் பெருக்கம் இருப்பதில்லை. எதற்காக பெருக வேண்டும் என்றால், உற்பத்தியின் பெருக்கம் நாட்டின் செல்வப் பெருக்கோடு நேரடித் தொடர்புடையது என்கிறார் ஆடம் ஸ்மித். இந்தப் பெருக்கம் வேலைப் பகிர்வினால் மட்டுமே சாத்தியம் என்றார். முதலாளித்துவத்தின் அடிப்படையான வேலைப்பகிர்வு, பெரும்பாலும் வேலைப் பரவலாக்கத்திற்கு இட்டுச் சென்றது எனலாம். இது இயல்பாக அவ்வேலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே உரியது என்ற சமூக ஏற்பாட்டை மெல்ல மெல்ல காலாவதியாக்கியது. வணிகத்தின் அழகியல் இதனால் குலைந்து போனது என்று தாகூர் தன்னுடைய பயணக் குறிப்பொன்றில் கவலைப்பட்டிருக்கிறார். வணிகம், முதலாளிகளின் கைக்குச் சென்றதை லட்சுமி, அகோர காளியாக மாறிவிட்டதாக உருவகிக்கிறார்.

செல்வப்பகிர்வு

இந்த வேலைப் பகிர்வு என்பது பிளேட்டோ விலிருந்தே அல்லது அதற்கு முன்பிருந்தே வரும் ஒரு கருத்தாக்கம் தான். ஒரு சமூகம் வெற்றிகரமாக அல்லது குறைவான சிக்கல்களுடன் இயங்க வேலைப்பகிர்வு அவசியமான ஒன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட இங்கிருந்த வர்ணாசிரமக் கொள்கையும் இதன் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான். ஆனால், ஏன் இந்த சமூகங்களால் தொடர்ந்து முரண்கள் ஏதுமின்றி ஒரு நிறைவான அல்லது மோன நிலையில் இருக்க முடிவதில்லை என்பதற்கு முக்கிய காரணமாக, வேலைப் பகிர்வின் மூலம் கிடைக்கும் மிகையான அல்லது குறைவான உற்பத்தியை (செல்வம்) பகிர்வதில் இருக்கும் குளறுபடிகளைச் சுட்டிக் காட்ட முடியும். வேலைப் பரவலாக்கத்தின் வழியாக இந்த குளறுபடிகள் சற்றேனும் குறைக்கப்பட்டன. இது முதலாளிகளின் சுய நலத்தால் விளையும் பொதுநலன்களின் ஒன்று எனத்தான் ஆடம் ஸ்மித் குறிப்பிடுகிறார். முதலாளித்துவம் பொதுநலத்தை தன்னுடய குறிக்கோளாக கொள்வதில்லை அல்லது அதற்கான அவசியம் அதற்கில்லை என்பது ஆடம் ஸ்மித்தின் நிலைப்பாடு. முதலாளித்துவம், அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படாத போதே சுபிட்சத்தை உருவாக்கும் என்கிறார். ஏனென்றால், எதற்காக அதனை கட்டுப்படுத்துகிறோம் என்ற தெளிவு அரசாங்கங்களுக்கு இருப்பதில்லை என்கிறார். இது முதலாளித்துவத்தின் ஆரம்பகட்ட காலங்களில் இருந்த அரசாங்கங்களுக்குப் பொருந்தக் கூடும்.

செல்வப் பகிர்வு என்ற செயல்பாடு இன்னமும் (இந்த நவீன காலத்திலும்) அத்தனை எளிதான அல்லது சுமூகமான ஒன்றாக இல்லை. இந்தக் குளறுபடிகளை சரிகட்ட அல்லது இதில் குளறுபடிகள் ஏதுமில்லை என்பதை நிறுவத்தான் வேலைப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த சமூகங்களை ஒன்றிணைக்கும் நிர்வாக அமைப்புகள் தோன்றின என்ற புரிதலுக்கு வந்து சேர முடிகிறது.

மதம்

முந்தைய பத்திகளுக்கான அவசியம், பொருளியல் என்பது முதலாளித்துவ யுகத்தின் கண்டுபிடிப்பு இல்லை என்பதை உணர்ந்து கொள்வதற்காகவும் தான். பண்டைய சமூகங்களின் அல்லது முதலாளித்துவத்திற்கு முந்திய சமூகங்களின் நிர்வாக அமைப்புக்களை மதங்கள் வழி நடத்தின என்றவுடன் நமக்குக் கிடைக்கும் சித்திரம் அது பொருளியல், அறிவியல், தத்துவம் என்ற அறிவுகள் ஏதுமற்று இருந்தது என்பது தான். இது மதங்களின் இன்றைய உள்ளீடற்ற சித்திரம். மக்களை நல்வழிப்படுத்திய அன்றைய மதம், நவீனத்தில் ஒரு ஆற்றுப்படுத்தும் நிறுவனமாக சுருங்கி விட்டது. ஆனால், எந்தவொரு சமூகத்தையுமே முழுவதுமாக நம்பிக்கை அல்லது rational ஐ மட்டுமே வைத்துக் கொண்டு நிர்வகித்து விடமுடியாது. Empiricism must be there in some degree. பண்டைய சமூகங்கள் பற்றிய சித்திரம், அவை பொருளியல், அறிவியல், தத்துவம் என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான ஒன்றால் இயக்கப்பட்டுள்ளன என்பதை அறிய உதவுகிறது. இவையனைத்தும் மதத்தின் பெயரால் தொகுக்கப்பட்டுள்ளன. அதனால் கட்டுப்படுத்தவும் பட்டன.

முழுமையும் சுதந்திரமும்

ஆனால், செல்வப் பகிர்வின் குழறுபடிகள் அல்லது போதாமைகள் பொருளியலை மதத்தின் நம்பிக்கைகளிலிருந்து விடுவித்து தனித்துறையாக்கியது எனலாம். அறிவியல் மற்றும் பிற துறைகளுக்கும் இதுவே நடந்திருக்க முடியும். இது தனிமனிதனை அடிப்படை அலகாகக் கொண்ட சமூகங்களின் தொடக்கம் அல்லது நவீன யுகத்தின் தொடக்கம் என வரையறுக்கப்படுகிறது. முழுமை என்பது அத்தனை சுதந்திரமான ஒன்றாக அல்லது productive ஆக இல்லை என்பதைத்தான் இந்த மாற்றம் உணர்த்துகிறது. நவீனயுகம் அனைவரையும் சுதந்திரமானவர்களாக அல்லது productive ஆக மாற்றி விட்டதா என்பதும் கேள்விக்குறி தான்.

உடம்பின் ஒவ்வொரு பாகங்களும் சுதந்திரமாக இயங்கக்கூடியவையாக இருந்தாலும், அவை உடம்பெனும் முழுமையால் கட்டுப்படுத்தப் படுகின்றன அல்லது பாதுகாக்கப் படுகின்றன. சுதந்திரம் என்பது நம் எல்லைகளை அறிந்து கொள்வதும்,  தன்னை முழுமையின் ஒரு அங்கமாக உணர்வதும் தான் என்று எண்ணுகிறேன். அறிவை பொருளியல், அறிவியல், தத்துவம் என பகுத்துக் கொள்வது அந்த எல்லைகளை அறிந்து கொள்ள உதவும் பகுத்தறிவு என்றால், இவைகளுக்கிடையேயுள்ள தொடர்பை உணர்ந்து தொகுத்துக் கொள்வதை ஒரு முழுமையறிவு என்று உருவகிக்கலாம். எந்த சமூக அமைப்பிலும், அதன் அரசாங்கங்களை வழிநடத்துவது இந்த தொகுப்பு அல்லது முழுமையறிவாகவே இருந்துள்ளது. அரசாங்கமே இந்த தொகுப்பின் ஒரு விழைவு தான் என்றும் எண்ணத் தோன்றுகிறது. இந்த முழுமை எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று. அதுவே, எதனையும் வழிநடத்தி செல்லும் தகுதியுடையது. முதலாளித்துவத்தை முழு சுதந்திரமாக இயங்க விடுங்கள்; அறிவியலை முழு சுதந்திரமாக இயங்க விடுங்கள்; அவை சமூகத்தை சுதந்திரமான ஒன்றாக்கும் என்பது, முதலாளித்துவத்தின் மேலும், அறிவியலின் மேலும் அது போன்ற பிற அறிவமைப்புகளின் மேலும் சுமத்தப்படும் சுமையே.

இது தனிமனிதர்களுக்கும் பொருந்தும். தனிமனிதர்கள் தங்களின் எல்லைகளை அல்லது சாத்தியப்பாடுகளை அடைவதற்கான தடையாக அரசாங்க அமைப்புகள் இருக்கின்றன (சில சமயங்களில்) என்பது எவ்வளவு நிதர்சனமோ, அவ்வளவு நிசர்சனம் தனிமனித சுதந்திரம் மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்தையும் சுதந்திரமான ஒன்றாக மாற்றிவிடாது என்பதும்.

  •  

What went wrong with CAPITALISM

எதற்கு இந்த புத்தகத்தை எடுத்தேன் என்பதை தோராயமாக மட்டுமே சொல்ல முடியும். முதலாளித்துவம் சரிவை நோக்கிச் செல்கிறது என்ற Narrative சமீப காலமாக Grand Narrative ஆக மாற ஆரம்பித்ததால் இருக்கலாம். ‘What Went Wrong with CAPITALISM’ என்ற தலைப்பு இயல்பாகவை இப்புத்தகத்தை வாங்க வைத்தது. இதை எழுதியவரைப் பற்றி பிறகுதான் google செய்து தெரிந்து கொண்டேன். Ruchir Sharma’s profile also compelled me to take this book.

Home

இன்னமும் புத்தகத்திற்குள்ளேயே செல்லவில்லை.  25 பக்க முன்னுரையில் (prologue and introduction) தரப்படும் ஒரு சித்திரம், இது நிபுணர்களுக்காக மட்டும் எழுதப்பட்ட புத்தகமல்ல என்ற உணர்வைத் தருகிறது. முதலாளித்துவத்தின் இயங்கு தளத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்த நிபுணர்களுக்கும் இப்புத்தகம் நிறைய வழங்கும் என்றே தோன்றுகிறது.

‘The era of smaller or shrinking
government is over’ என்று உலகத்தின் அறிவஜீவிகள் முழங்க ஆரம்பித்திருக்கும் வேளையில்,  ‘when did they shrunk’ என கேட்கிறார் Ruchi Sharma. ரீகன், தாட்சர் காலத்தில் ஆரம்பித்த இந்த முதலாளித்துவ புரட்சி, முதலாளித்துவத்தை சுதந்திரமாக செயல்பட வைத்தது போல் பாவனை மட்டுமே செய்தது என்கிறார்.  இவர்களின் அரசாங்கம் எப்போதுமே தன் எல்லைகளை சுருக்கி கொண்டதில்லை என்கிறார். Welfare state என்று ஆரம்பித்து, அது மக்களுக்காக பெரும் நிறுவனங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றுவது (Bail out) வரை நீண்டிருக்கிறது என்கிறார். இது Zombie Corporateகளை உருவாக்கியது என்கிறார். முதலாளித்துவத்தின் அடிநாதமான Creative Destructionஐ இந்த Bail out கலாச்சாரம் முடக்கி விட்டது என்கிறார். இதன் விளைவே தற்போதைய உலகத்தின் மந்த தன்மைக்கு (less productive) காரணம் என்கிறார். மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் இது தான் காரணம் என்கிறார்.

mmm…Interesting isn’t it? அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே சந்தையை முழு சுதந்திரத்துடன் செயல்பட விடாமல் தவிர்த்தன என்பது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் இதற்கு அரசாங்கங்களை மட்டுமே குறை கூறவில்லை இப்புத்தகம். பெருவாரியான மக்களும் இந்த bail out  கலாச்சாரத்தைத் தான் விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது. Easy way out…

The economic problems in a Capitalist country are not created by Capitalism, but by its Government’s intrusion
– Ayan Rand

கிட்டத்தட்ட Ruchir Sharmaவும் இதைத்தான் கூற வருகிறார். Government’s must shrink in a Capitalistic Societly. Will this lead to Karl Marx dream of ‘No Government at all’ ?

வர்க்க பேதமற்ற கம்யூனிச சமூகங்களில் அரசு தானாக உதிரும் அல்லது தேவையற்றுப் போகும்
– Karl Marx

Will be an enriching read…

  •  

தாகூரின் ஜப்பான் பயணம்

கூடையை நிறைத்திருக்கும் ஆரஞ்சு பழங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே இருக்கும் ஆப்பிள்கள் நம் கவனத்தை ஈர்ப்பவை. ஆனால், கண்ணை உறுத்தாத ஓர் ஓர்மையும் அழகும் கொண்டவையா என்பது, அந்த கூடையின் நிறம், அது வைக்கப்பட்டிருக்கும் இடம், பார்ப்பவரின் அப்போதைய மனநிலை, அவருடைய இயல்பு என நிறைய காரணிகளைப் பொறுத்துள்ளது. தன்னுடைய ஜப்பானிய பயணத்தை தாகூர் விவரிக்கும் விதம் அலாதியானது. கடலைகளின் நிலையாமையையும், அதில் கலக்கும் நதிகளின் நெகிழ்வையும், நிலத்தின் இறுக்கத்தையும் கொண்டிருக்கிறது. காற்றும், வானமும் தொடர்ந்து முயங்குகின்றன. இவ்விவரணைகள் அனைத்தையும் தனது மொழிக்குள் சிறைப்படுத்த முயலும் தாகூரின் பிரயத்தனத்தை, நமக்கு கடத்த முயலும் த.நா. குமாரசாமியின் அபாரமான மொழிபெயர்ப்பு தாகூரின் அழகியலையும், நுட்பமான ரசனையையும், உபநிசத்துக்கள் மேல் அவருக்குள்ள பற்றையும் நம்மை உணர வைக்கிறது.

சீனர்களின் உடலுழைப்பு

வன்மையும் வனப்பும் கொண்டதாக சீனர்களின் வெற்றுடலை வர்ணிக்கிறார் தாகூர். ஜப்பானை நோக்கிய கடல் பயணத்தின் நடுவே ஹாங்காங் துறைமுகத்தில் கண்ட சீனர்களின் உழைப்பில் மயங்கிப் போகிறார். அங்குள்ள பொருட்களை அவர்கள் கையாண்ட விதம், அவர்களின் உடம்பை வீணையாகவும், தசை நார்களின் அசைவை, அவ்வீணையில் இருந்தெழும் தாள இசையாகவும் தாகூரை பார்க்கவும், கேட்கவும் வைக்கிறது. இயல்பான ஊக்கத்துடன், முழுத்திறனுடனும் செய்யப்படும் எச்செயலும் பொலிவு கொள்கிறது என்கிறார். அப்பொலிவை இசைத்தன்மை கொண்ட காவிய நாடகமாக தாகூரால் வர்ணிக்க முடிகிறது. 


தொழில் புனையும் ஒரு விசித்திர காவியமும், மனித உடல் மீட்டும் ஓர் இனிய நாதமும் என்னைப் பிரமிக்கச் செய்தன


என்ற வரிகள் தாகூரின் கண்கள் ஒரு புகைப்படக் கருவியல்ல என்பதையும், படைப்பூக்கம் கொண்ட இம்மொழிபெயர்ப்பு உணர்த்துகிறது.

தொல்லையும் பந்தமும்

பயணத்தின் நடுவில் இயற்கைப் பேரிடர் ஒன்றையும் எதிர் கொள்கிறார். கேபினில் பாதுகாப்பாக இருப்பதை தவிர்த்து கப்பலின் டெக் பகுதிக்கு வந்து புயலையும், இடியையும், மின்னலையும் எதிர் கொள்கிறார். முடியாமல் மீண்டும் தன்னுடைய பாதுகாப்பான கேபினுக்கே திரும்புகிறார். அங்கும் பாதுகாப்பின்மையத் தான் உணர்கிறது கவிமனம். டெக்கில் இருப்பது பருக்கைக் (pebble) கற்களின் மீது வெறும் பாதங்களால் நடப்பதென்றால், கேபினில் இருப்பது பாதரட்சைக்குள் பருக்கைக் கற்களை கொண்டு நடப்பது என்கிறார். முந்தையதில் தொல்லை மட்டுமே உண்டு. பிந்தையதில் தொல்லையோடு பந்தமும் உண்டு என்ற தாகூரின் அவதானிப்பு நம்மை அந்த பேரிடலிருந்து விலக்கி இலகுவாக்கி புன்னகைக்க வைக்கிறது.

பேரிடர் முடிந்த அடுத்த நாள் காலையில், கடல் மட்டுமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. முந்திய நாளிரவு அக்கடலை ஆட்டிப்படைத்த காற்றும், மழையும், மின்னலும்  இப்போதில்லை என்றாலும், அந்த கொந்தளிப்பிற்கான காரணம், என்னை எப்படி எல்லாம் துன்புறுத்தி விட்டாய் என்ற சாகரின் (கடலின்) ஆக்ரோசம் என்கிறார். துன்பம் நடக்கும் போது நாம் அதிலிருந்து வெளி வருவதற்கான ஆற்றலை ஒரு நிரந்தரப் பொருளிலிருந்து பெற்றுக் கொள்கிறோம். நமது கவலை எல்லாம் அந்த துன்பத்தைக் கடந்த பின்புதான்.

புயல் கவிந்த ஆகாயத்திற்கு மேல் அமைதி திகழ்கிறது. குழம்பிடும் கடலுக்கு அடியில் சாந்தி நிலவுகிறது. ஆகாயமும் கடலும் இந்த அரிய பண்பினால் உயர்வடைவதுபோல் மனித ஆழத்தின் உள்ளத்திலும் அவன் உணர்வின் உச்சத்திலும் அகாண்டாகாரமான சாந்த புருடன் ஒருவன் வாசம் செய்கிறான். துன்பமோ இடுக்கனோ நம்மை தாக்கும்போது இவன் நமக்கு அமோக பலத்தைத் தருகிறான்.துன்பம் மாயமாய் மறைகிறது.



ஆசுவாசத்தைத் தரும் மாயச்சொற்களிவை.

அழகியலும் வளர்ச்சியும்

இந்தியா விவசாயத்திலிருந்து தொழிற்புரட்சிக்கு மாறிக்கொண்டிருந்த காலத்தில் தான் தாகூர் இப்பயணத்தை மேற்கொள்கிறார். வணிகத்தின் பெயரில் புது நகரங்கள் உருவாவதையும், அதன் பொருட்டான இயற்கைச் சீரழிவையும் ஒவ்வாமையுடனே கடந்து செல்கிறார். அவருடைய அழகியல் சட்டத்தில் ரங்கூனின் பர்மிய நகரம் ரங்கூனுடையதல்ல. எங்கிருந்தோ புடுங்கியெடுத்து நட்ட மரம் போல் உள்ளது என்கிறார். அங்கே பர்மியர்களும் இருக்கிறார்கள், அதனால் பர்மா என்றழைக்கப் படுகிறது என்கிறார்.  இது போன்ற பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் திகழ்வதால் வரும் குறைகளை ஆரோக்கிய நிகேதன் நாவலில் வரும் ஆயுர் வேத மருத்துவரான ஜீவன் மஷாய் வழியாகவும் நம்மால் உணரமுடியும். ஆயுர்வேதம் பெரும்பாலும் அனுமானங்களை நம்பியிருக்கும் மருத்துவத் துறை. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலில் தான் ஈடுபட்டிருப்பார்கள் எனபதால் அந்நிலப்பரப்பிலிருந்து வருபவர்களுடைய நோய்களுக்கான காரணங்களை ஆயுர்வேதத்தால் எளிதில் அனுமானிக்க முடிந்தது. வளர்ச்சியின் பொருட்டு அந்நகரத்தின் இயல்பும், மக்களும், அவர்கள் தொழிலும் மாறும்போது ஆயுர்வேதத்தின் அனுமானங்கள் திணறுகின்றன. தாகூரின் கவலையோ, வளர்ச்சியினால் ஏற்படும் அழகியலின்மையிலும், இயற்கைச் சீரழிவிலும் நிலை கொள்கிறது.  ஆரஞ்சு கூடையில் ஆப்பிள் இருப்பதை விபத்தாகத் தான் பார்க்கிறார்.

வணிகமும் அழகியலும் ஒத்திருந்ததால் தான் லட்சுமி
செல்வத்தின் தெய்வமாக இருந்தாள். வணிகம் அந்தந்த தரப்பினரிடம் அல்லது குலங்களிடம் இருந்த வரை லட்சுமி அன்னபூரணியாகத்தான் இருந்தாள் என்கிறார். வளர்ச்சியின் பேரில் அந்த அன்னபூரணியை அகோர காளியாக்கி விட்டோம் என்கிறார்.  இது தாகூரை ஒரு தூய்மைவாதியாக நம்முள் நிலை நிறுத்தலாம். ஆனால், வளர்ச்சியின் பயன்களை அவர் நிராகரிக்கவில்லை. அது அழகியலைத் தொலைத்துத் தான் பெறப்படவேண்டுமா என்கிறார். Aesthetics is a very subjective thing என்று தாகூரை நவீன மனம் நிராகரிக்கக் கூடும். ஆனால் தாகூர் விடுவதாயில்லை…



கவி கீட்சு சொல்கிறார்…’உண்மைப் பொருளே அழகிய பொருள்’ என்று. பந்தத்தை மீறிய உண்மையின் நிறைவான வடிவமே முருகு. உபநிடத வாக்கிலும் இந்த உண்மை வெளியாகிறது. ‘அனந்த ருபம் அம்ருதம் யத்விபாதி’ . எங்கும் நிறைபொருள் உருக்கொள்ளும் போது அதனுடன்  அழியா அமுதத் சுவையும் இன்பப் பொலிவும் தோன்றுகின்றன. மனிதன், அச்சத்தாலும், ஆற்றாமையினாலும், பொறாமையினாலும், அறிவின்மையினாலும், குறுகிய நோக்கத்தாலும் இந்திறைவின் மலர்ச்சியை நசுக்கி விடுகிறான்; அழகை நாசம் செய்யும் தன்கைத் திறமையைப் பெரிதாக மெச்சிப் பெருமிதம் கொள்கிறான்.

தொடர்ந்து ஜப்பானியர்களின் இல்லங்களில் உள்ள நிறைந்த அழகைச் சூடிக்கொண்ட சிறு பொருட்கள் பற்றியும், அவர்களின் ஓவியங்கள் பற்றியும், கவிதைகள் பற்றியும் மிக விரிவாகப் பேசியிருக்கிறது இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள்.

  •  

நிலமெல்லாம் ரத்தம்

தன் மூதாதையர் வாழ்ந்த நிலப்பரப்பின் மேல் கொண்டுள்ள பற்று இத்தனை தலைமுறைகளாக ஒரு சமூகத்தால் எப்படி தக்க வைத்துக் கொள்ளப்பட முடிகிறது என்ற ஆச்சரியத்தை விளக்க முற்படுகிறது இப்புத்தகம். உலகெங்கும் பரவி, தங்களுடைய அறிவாற்றலால் தனக்கென மரியாதைக்குரிய இடத்தை (பிரிட்டிஷ் பிரதமராகவும் ஒரு யூதர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்) அடைந்த பின்பும் கூட, எது யூதர்களை அமைதியிழக்கச் செய்திருக்கும் என்பது அவர்களுடைய வரலாறு மற்றும் பண்பாடுகளிலிருந்து விலகி நின்று பார்ப்பவர்களுக்கு எப்போதுமே  புதிர் தான்.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையை, யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மதப் பிரச்சினை என மேலோட்டமாக அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அல்லது வலிந்து குறுக்கியிருப்பவர்களுக்கு அல்லது இப்புத்தகத்தின் சிவப்பு நிற அட்டையைப் பார்த்து இது கம்யூனிசப் புத்தகமா என வினவிய ஒரு கட்சியின் ஸ்டார் பேச்சாளருக்கும் ( இரயிலில் சந்தித்த சக பயணி) இப்புத்தகம் நிறைய திறப்புக்களை அளிக்கக் கூடும். ஆப்ரகாமிய மதங்களின் தோற்றுவாயின் தொன்மக் கதையான ஆப்ரகாமிற்கு பிறந்த ஈஷாக் மற்றும் இஸ்மாயிலிருந்து ஆரம்பித்து, யூதர்கள் மேல் மேற்குலகம் கொண்டிருந்த வெறுப்பு;அவர்களின் ஒரு பிரிவினரான பரிசேயச் சாயலில் (ஆன்மா, மறுபிறவி என்ற கொள்கைகளைக் கொண்டவர்கள்) இருந்து தோன்றிய கிறிஸ்துவ மதம்; ஒட்டு மொத்த மேற்குலகமும் கிறிஸ்துவத்தை தழுவிக் கொண்ட பிறகும், அதனிலிருந்து விலகியே இருந்த பெரும்பான்மையான யூதர்கள்; அரேபியர்களின் எழுச்சி; நபிகளுக்குப் பின் வந்த கலிஃபாக்களின் ஆட்சி; யூதர்களின் தனி நாட்டுத் தாகமும் அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட Zionism என்ற கொள்கை; இதன் பொருட்டு யூதர்களால் உருவாக்கப்படும் நில வங்கிகள், பாலஸ்தீனிய அரேபியர்களின் நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்குவது; ஹிட்லரின் யூத ஒழிப்பு; இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிரிட்டனின் உதவியோடு பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி இஸ்ரேல் என்ற நாடாக உருவாவது; ஒட்டுமொத்த பாலஸ்தீனையும் இஸ்ரேலாக்க முயலும் யூதர்கள்; பாலஸ்தீனைச் சுற்றியுள்ள அரேபிய தேசங்களும் பாலஸ்தீனிய அரேபியர்களை கைவிடுவது; சூயஸ் கால்வாயை மூடிய எகிப்து நாசரின் ராஜதந்திரம்;  மேற்குக் கரையில் யாசர் அராபத்தின் எழுச்சி; காஸாவில் ஹமாஸின் தோற்றம் என மிக விரிவாக இப்பிரச்சினை பற்றிய தன்னுடைய வரலாற்று வாசிப்பை பகிர்ந்திருக்கிறார் பா.ராகவன்.

மிக எளிமையான நடை. தார்மீக நெறி என்ற பெயரில் எழுத்தாளர்கள் எப்பொழுதும் மேற்கொள்ளும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலிருந்தும், பாலஸ்தீனிய அரேபியர்கள் மேல் கொள்ளும் பரிதாப உணர்விலிருந்தும் பா.ராகவனால் விலக முடியவில்லை. ஆனால், அவருடைய விரிவான வரலாற்று வாசிப்பும், அதை அப்படியே பகிர்ந்து கொள்ள எத்தனித்ததும், இந்த பக்கச் சார்பிலிருந்து இப்புத்தகத்தை மீட்டெடுத்திருக்கிறது. பாலஸ்தீன அரேபியர்களின் வலி பேசப்பட்ட தொனியும், யூதர்களின் வலி பேசப்பட்ட தொனியும் தான் வெவ்வேறேயொழிய இருவரின் தரப்பு நியாயங்களையும் இப்புத்தகம் வலுவாக பதிந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.

இஸ்ரேல் தன்னுடைய தற்போதைய வலுவான இடத்தை அடைய கொடுத்த உழைப்பை/இழப்பை, எந்த சாதாரண மனிதரும் கொச்சைப் படுத்தி விட முடியும். தார்மீக நெறியின் படி பாலஸ்தீனிய அரேபியர்களின் பக்கம் நின்றாலும், பா.ராகவன் அப்படிச் செய்யாததும் அதே தார்மீக நெறியின் அடிப்படையில் தான் என்றும் எண்ணுகிறேன்.

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். புனைவு, தத்துவம் போல் வரலாற்றின் மேல் ஒரு ஈர்ப்பு வருவது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் இப்புத்தகம் மிகப்பெரிய தகவல் தொகுப்பு. நிறைய உழைப்பிருக்கிறது இப்புத்தகத்தின் பின்னால்.

  •  

இருத்தலியம் – சில புரிதல்களும் குழப்பங்களும்

தனிமனிதன், அனைத்தையும் விட மிக முக்கியமாக கருதப்படுவது, மதத்திலிருந்து விலகி அறிவியல் அடிப்படையில் அமைந்த நவீனயுகத்தில் தான் என்ற பொதுப்புரிதலை சற்று குலைத்திருக்கிறது இருத்தலியத்தின் வேர்களை தேட முயலும் இப்புத்தகம். சமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதன் என்று பகுத்திருக்கும் இந்த நவீன யுகம், நான் இச்சமூகத்தின் விளைவல்ல; இச்சமூகம் தான் என்னுடைய விளைவு என்று அத்தனிமனிதனை அறைகூவச் செய்கிறது. பகுத்தறிவுக்கு முந்திய மதக் காலத்திலும்,  இக்குரல் வலுவாக ஒலித்திருக்கும் என்பதை கீர்கேகார்ட் (Søren Kierkegaard
Danish theologian and philosopher, 1813-1855)
மற்றும் ஹைடெக்கர் (Martin Heidegger
German philosopher, 1889 – 1976)
வழியாக உணரமுடிகிறது. இவ்விருவரையும், இருத்தலியவாதிகளாக இப்புத்தகம் வரையறுக்கிறது. கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு, இவ்வுலகம் புனிதமடைந்து விட்டது; தனிமனிதனை வழிநடத்துவது, அவன் உள்ளொளியான கடவுள் மட்டுமே என்கிறார் கீர்கேகார்ட். இதனை ஹெகலின் (Georg Wilhelm Friedrich Hegel German philosopher, 1770-1831) வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உலக ஆன்மா தன் மெய்யுருவை கண்டுகொண்டது கிறிஸ்துவின் வழியாக எனலாம். ஆனால், மனிதகுலம் அல்லது உலக ஆன்மா தன் மெய்யுருவை கிறிஸ்துவிற்குப் பிறகு நிறுவனப்படுத்தப்பட்ட மதம், அரசு என தொடர்ந்து மறுவார்ப்பு எடுத்துக் கொண்டது. இந்த ஒட்டு மொத்த பரிணாமத்தையும் வீண் முயற்சி என்று மறுதலிக்கிறார்கள் கீர்கேகார்ட்டும், ஹெடெக்கரும்.

இருத்தலியத்தின் விதை

கீர்கேகார்ட்டின் ஆன்மீக உணர்விற்கு, மதத்திற்கு பிறகு உருவான அரசு என்ற அமைப்பு மட்டுமே தடையாக இருந்திருக்க முடியாது. கிறிஸ்துவிற்கு பிறகு தோன்றிய நிறுவனப்படுத்தப்பட்ட மத அமைப்புகளும் தடையாக இருந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. இருத்தலியச் சிக்கல்களின் விதை, அமைப்புகள் அல்லது அதன் அடிப்படையில் அமைந்த சமூகங்கள் தனி மனிதனுக்கு தரும் அழுத்தங்கள் அல்லது கட்டுப்பாடுகள் தான் என்ற புரிதலை நோக்கி ஒருவாறு நகர முடிகிறது.  நான், நானாக இருக்க முடியாதது அல்லது தத்துவ மொழியில் சொல்ல வேண்டுமென்றால் தனி மனிதன் தன் சுயத்தை உணர முடியாமல் இருப்பதற்கான காரணம் இச்சமூக அமைப்புகள் தான் என்று இருத்தலியத்தை எளிமைப்படுத்தலாம். தனிநபருக்கும், பொதுசமூகத்திற்கும் இடையில் உள்ள முரண் தான் இருத்தலியம் என இதனை இன்னமும் எளிமைப்படுத்தலாம். இன்னமும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஊரோடு ஒத்துப்போனால், வாழ்க்கை இனிமையானது எனலாம்.

அறிவியல் vs ஆன்மீகம் vs இருத்தலியம்

சமூகத்தின் அடிப்படை அலகு இனம், குலம் என்றிருந்த மதங்களுக்கு முந்திய காலங்களில் இந்த இருத்தலியச் சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சமூகத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தன்னை உணர்ந்திருந்த மனிதன் தன்னை மட்டுமே ஒரு பெரும் இருப்பாக உணர்ந்த தருணம் வரமா இல்லை சாபமா என்று தெரியவில்லை. இத்தருணத்தை இறை நம்பிக்கையாளர்கள் கடவுள் அல்லது அவர்களுடைய தூதர்கள் வருகையோடு இணைத்துக் கொள்கிறார்கள். இதற்குப் பின் நடந்த அனைத்துப் பரிணாம வளர்ச்சிகளும், அந்த இருப்பை உணர முடியாமல் தடை செய்வதாக உள்ளன என்பதாகவே அவதானிக்கிறார்கள். இவர்களை தேங்கியவர்களாக, மாற்றத்தை எதிர் கொள்ள முடியாதவர்களாக நவீன மனம் கருதினாலும், அத்தேங்கியவர்கள் பட்டியலில் பாஸ்கல் (Blaise Pascal
French mathematician and physicist, 1623-1663) போன்ற நவீன அறிவியல் மனம் படைத்தவர்களும் இருப்பதை உணரும் நவீன மனம் சற்று துணுக்குறத்தான் செய்கிறது. டெகார்த்தேவின்( René Descartes
French philosopher and scientist, 1596- 1650) அறிவுக் கொள்கையை, அவலக் கொள்கை என்கிறார் பாஸ்கல். கடவுள் என்ற சாத்தியப்பாட்டை அறிவு சாத்தியப்படாத ஒன்றாக மாற்றி விட்டது என்கிறார். கிட்டத்தட்ட அறிவின் வளர்ச்சியும், விரிவும் கடவுளை எட்டாக்கனியாக்கி விட்டன என்ற இந்த புலம்பலை விட, அறிவின் சரியான பயன் என்பது இந்தப் பிரபஞ்சம் அத்தனை எளிதாக மனிதர்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது அல்ல என்ற வியப்புதான். அறிவு கடவுளின் வருகையை ஒத்திப் போடவில்லை. அவர் பற்றிய ஆச்சரியத்தை பன்மடங்காக்கியுள்ளது. அறிவியலும், ஆன்மீகமும் சந்திக்கும் ஆச்சரியப்புள்ளி இதுவாகத் தான் இருக்க முடியும்.  கிட்டத்தட்ட, இப்புத்தகத்தில் SVR (S.V. ராஜதுரை) அவர்களால் பொருட்படுத்தப்படும் இருத்தலியலாளரான சார்த்தரின் (Jean-Paul Sartre
French philosopher and playwright, 1905-1980)
நிலைப்பாடும் இதுவாகத்தான் இருக்குமென என் வாசிப்பின் அடிப்படையில் ஊகிக்க முடிகிறது.

தத்துவங்களின் வறட்டுத்தனம்

அனைத்துமே மனம் (அகம்) தான் என்ற கருத்துமுதல்வாத மோசடியை எதிர்கொள்வதற்கு, அனைத்துமே பொருள் (புறம்) தான் என்ற பொருள்முதல்வாத கட்டுக்கதை தேவை என்கிறார் சார்த்தர். ஒரு தத்துவம் அல்லது தரிசனம், அதனுடைய பற்றாளர்களால் குறுக்கப்படும் பொழுது ஏற்படும் வறட்டுத் தன்மையைத் தான் மோசடி, கட்டுக்கதை என்கிறார் சார்த்தர். தனிமனித அகம் மட்டுமே
உள்ளது, சமூகம் என்பது கடவுளிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்ட பயத்தால் உருவான மனிதக்கும்பலை புனிதப்படுத்த முயலும் (society is a polite form of mob) ஒரு சொல் மட்டுமே என்கிறார் ஹைடெக்கர். தனிமனித அகத்தின் சாரத்திற்கு இந்தக் கும்பலால் அல்லது சமூகத்தால் எந்தப் பயனுமில்லை. அதற்கான தேவையும் தனிமனித அகத்திற்கு இல்லை என்கிறார் கீர்கேகார்ட். கடவுளுக்கும், எனக்குமிடையே நீ யார் என ஒட்டுமொத்த சமூக அமைப்புகளையும் புறக்கணிக்கிறது இந்த இருத்தலியச் சிந்தனை. தன் அகம் நோக்கி தன்னை திருப்பிக் கொண்ட இந்த இருத்தலியப் போக்கு,  சாதுக்களையும் (Introverts?) அவர்களின் விஸ்வரூபமான சர்வாதிகாரிகளையும் உருவாக்குகிறது என்ற ஊகங்களுக்கும் இட்டுச் செல்கிறது. நாஜி இயக்கத்தோடு தான் தொடர்பில் இருந்ததை ஹைடெக்கர் கடைசிவரை மறைத்திருக்கிறார் என இப்புத்தகம் சுட்டிக் காண்பிக்கிறது. கிட்டத்தட்ட, இந்த சிந்தனைப் போக்கு, வறட்டு கருத்துமுதல்வாதத்தின் விளைவென்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்த வறட்டுத்தனம் களையப்படும் பொழுது, தன் சுயம் பற்றிய இந்த சிந்தனைப் போக்கு தனி மனிதனுக்கு அளிக்கும் ஆசுவாசம் அளப்பரியது. தன் கட்டுப்பாட்டில் இல்லாத புறத்தின் பாதிப்பில் இருந்து விலகி நின்று அதனை அவதானிப்பது ஒரு படைப்பூக்கம் கொண்ட செயல். கிட்டத்தட்ட இது சமூக மாற்றத்திற்கான விதையும் கூட.  இந்த சுயம் தன் மெய்யுருவை அடைவது புறத்தில் அல்லது சமூகத்தில் தான் என்கிறார் ஹெகல். அதாவது தன் சுய தேர்வுகளுக்கு அல்லது ஹைடெக்கர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அசலான, அர்த்தபூர்வமான வாழ்க்கைக்கு வடிவம் கிடைப்பது புறத்தில் மட்டுமே என்கிறார் ஹெகல். தன் சுய தேர்வுகளுடன் முரண்படும் சமூகத்தை எதிர் கொள்வது மட்டுமே நமக்குள்ள ஒரே எதார்த்தமான வாய்ப்பு.  அதுவே தனிமனிதனையும் சமூகத்தையும் மேம்பட்ட அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பது தான் ஹெகலின் இயங்கியல்.

சார்த்தரின் இருத்தலியச் சிந்தனை ஹெகலுடன் ஒத்துப் போவதையும் இப்புத்தகத்தின் வழியாக அனுமானிக்க முடிகிறது. கீர்கேகார்ட் மற்றும் ஹைடெக்கரிடம் இருந்த வறட்டுத் தனத்தை மட்டும் சார்த்தர் உதறவில்லை.  சில மார்க்சியர்களிடம் இருந்த தனித்த மனித அகம் என்ற ஒன்று இல்லை. அது சமூகத்தின் விளைவு மட்டுமே; சமூகத்தை மாற்றியமைப்பதால், தனிமனிதனையும் மாற்றி விட முடியும் என்ற வறட்டு பொருள்முதல்வாதத்தையும் உதறுகிறார் சார்த்தர். மார்க்சியர்களிடம் இருந்த இந்த வறட்டுத்தனம், தன்னலமற்ற தியாகிகளை உருவாக்கும் அதே சமயத்தில், அவர்களை நிர்வகிக்கும் ஒரு சர்வாதிகார அமைப்பையும் உருவாக்கி விடுகிறது.  பொன்னுலக கனவிற்காக ஏன் நிகழ்காலத்தை காவு கொடுக்க வேண்டும்? என்னுடைய நிகழ்காலம் முக்கியமில்லையா எனக் கேட்கும் காம்யூக்களை (Albert Camus
French philosopher and author, 1913-1960) சர்வாதிகாரம் பொறுத்துக் கொள்ளாது.

சார்த்தரின் செயலூக்கம்

சார்த்தர் இந்த இருத்தலியச் சிக்கலை எதிர்கொள்ளும் விதம் கீதையை நினைவு படுத்துகிறது. என்னுடைய அகத் தேர்வு அசலாக இருக்கும் பட்சத்தில், அது  புறவயமாக்கப் படவேண்டும். அதாவது, அத்தேர்வு மெய்யுரு கொள்வது புறத்தில் மட்டுமே என்ற ஹெகலிய எதார்த்தத்தோடு ஒத்துப்போகிறார். அகத்தையும் , புறத்தையும் இணைப்பதற்கான ஒரே கருவி நமது செயல் மட்டுமே என்கிறார். அதே சமயத்தில், இந்த மெய்யுரு ஒரு மேம்பட்ட சமுதாயமாகத் தான் இருக்க முடியும் என்ற ஹெகலின் optimism சார்த்தரிடம் இல்லை. செயல் மட்டுமே நம்மிடம் உள்ள கருவி. அதன் விளைவுகளை நாம் அனுமானிக்க முடியாது. அதற்காக செயலை கைவிடவும் முடியாது என்கிறார். சார்த்தர், செயலூக்கம் கொண்ட நவீன மனங்களை ஈர்ப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று எண்ணுகிறேன்.


இந்த அசலான தேர்வு தன் சுயத்தால் மட்டுமே சாத்தியமானதா? அல்லது அத்தேர்வு சமூக அமைப்புகளால் கட்டமைக்கப்பட வில்லை என்பதை எப்படி உறுதி செய்வது?  என்ற இருத்தலியக் குழப்பத்தை ஹெடெக்கரும், கீர்கேகார்ட்டும் சமூகம் என்பதை மாயை ( நேதி…நேதி…)என்று உதறுவதன் மூலம் கடக்க முயல்கிறார்கள். சார்த்தர், சமூகத்தை தன் செயல் வழி (செயல் புரிக பார்த்தா…)எதிர்கொள்வதன் மூலம் தன் சுயத்தின் அசலான தேர்வை பரிசோதித்து பார்க்கிறார். கிட்டத்தட்ட தான் சொக்கத் தங்கம்தானா என்று சமூகத்துடன் உரசிப் பார்த்து இந்த இருத்தலியக் குழப்பத்தை கடக்க முயல்கிறார் சார்த்தர். தன்னுடைய சுயம் பற்றிய இந்த அவநம்பிக்கை தான் (அல்லது எதார்த்தம்?) ஹெகலிடம் இருந்த optimism சார்த்தரிடம் இல்லாமல் போனதற்குக் காரணம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நீட்சே பற்றிய ஒரு நீண்ட அத்தியாயமும் இப்புத்தகத்தில் உள்ளது. இப்புத்தகத்தில் வரும் மற்ற இருத்தலியலாளர்களைப் பற்றிய அத்தியாயங்களை கிரகித்துக் கொண்டது போல் நீட்சேவை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய முக்கோண இருத்தலியலாளர்களில், மேலுள்ள உச்சி முனையில் சார்த்தர் பொருந்திப் போகிறார். கீழுள்ள இருமுனைகளில்,  கீர்கேகார்ட்டும் ஹைடெக்கரும் பொருந்துகிறார்கள். நடுநாயகமாக ஹெகல் பொருந்துகிறார். இம்முக்கோணத்தை, எப்படி சுழற்றினால் தாங்கள் எதிர்பார்க்கும் புரட்சியும், கம்யூனிச சமுதாயமும் தோன்றும் என்பதை ஆராய்பவர்களாக மார்க்சியர்கள் வருகிறார்கள். அதனைப் பற்றி ஒரு தனிப்பதிவு தான் எழுத வேண்டும். இந்தியத் தத்துவ மரபுகளைப் பற்றிய ஒரு கோட்டோவியத்தைக் கொண்டுள்ள மனம், இப்புத்தகத்தில் வரும் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் அதனுடன் இணைத்துக் கொள்ள முயலும். இப்படி ஒரு புத்தகம் தமிழில் எழுதப்பட்டிருப்பது, தமிழிலுள்ள அறிவியக்கத்தின் வலிமைக்கு ஒரு சான்று.

  •  

The AI and Me

Me: What does the Lion think when it stands infront of a mirror?

Intellectual: Well, it is Obvious. Poor chap, Will see it as another Lion.

Wise man: Lion is not a poor chap. It hasn’t yet lost its wisdom offered by the Nature.

Intellectual: oh..poor me…looks like I have given you the opportunity to pour all your so called widom on us…

Me: Are humans who feel that they see themselves in the Mirror, poor Chaps then?

Intellectual: (with bit exasperation) this is for you, Wise man.

Wise man: (with bit excitement)
People who see that as just their image are ok, but not those who got carried away by that image. Those poor chaps gets into the Image trap and lacks the intelligence to differentiate themselves from that image.

(I stopped the Wise man who gently stopped the interference from the Intellectual and tried to continue…)

Me: I don’t get you, Sir.

Wise man: (by stopping Me with a stare) Let me talk and Don’t interfere…mmm what was I saying???

Intellectual: The people who are carried away by their image on the mirror are fools, and those who consider it as just their reflection are Intelligent…

Wise man: Correct…, but do you know why I told that Lion has the natural wisdom?


Intellectual: That’s what I was trying to ask you by interrupting, but you…


Wise man: ah…ok..ok..Intelligence itself is something artificially offered by the God to Human. The Plants, Trees, Goat, Cow etc..all got what it requires to live on this Earth from God and emptied him. When the human turn comes, nothing is there with him to offer. It was an embarrassing situation for God and hence offered them an artifical thing called intelligence so that human can survive on this earth.


(I was stunned. Intellectual interrupted him as if he got something up from his knowledge treasure)

Intellectual: This sounds like a Greek mythology where Prometheus got the Fire from God to offer it to Human…

Wise man: Yes. Almost the same. With that Fire or Artificial Interlligence only Human have evolved to where they are now.

Me: (with a high degree of excitement) oh..the Human is passing that Fire now, even to Machines. The entire world is now caught with this Fire in the form of ML, AI etc…

(Wise man was combing his beard with his thin and long fingers and nodded his head by looking at me with an eternal smile)

Intellectual: (looks at Wiseman with a confusion) but, human never Call their Intelligence as Artificial one. Only the Intelligence imparted to the Machines is called as AI, isnt it?


(Wise man was excited by this question. I felt that the discussion is turning out to be an  intense one)

Wise man: (his beard has curled out to his chest now. Still he was combing it to curl out beyond his chest) The living being are fuelled by their basic needs such as Love, Lust and Anger (Kama, Moga and Crotha)which eventually makes them think and act to fullfill their needs. It is completly Natural. Strangely, human never stops thinking and it continues even after their needs are fulfilled. Humans get anxious when they don’t think…

This continuous thinking resulted in stripping off the human from this universe or nature. They are left all alone now, which propelled their anxiety to the next destructive level of separating or stripping themself from the fellow human beings. Human actions are now split Into Thinking act and Physical act. This split or isolation never stopped and even divided oneself into the Body and Soul. Humans with this pseudo or Artificial Interlligence lost their ability to comprehend the whole thing which they are part of.

( Intellectual looked drained and I was delving into something new and serious. After few minutes of silence, Wise man continued )

hey Intellectual, you seem to be drained and at the same time amused. Do I sound funny?

Intellectual: (as If he expected that question) yeah, true. Looks like you are trying to portray the entire Human Evolution as Devolution. Very Clever indeed. You want to retain the crown of wise man by being different.

Me: (as If enlightened) hey Intellectual, he has a point. Humans invented Machines, because they want to get rid of the physical labour. They also want to get rid of from their thinking which is based on the pseudo or Artificial Interlligence they posses. So, human are returning or in the path to attain the Natural Intelligence or wisdom possessed by the fellow living creatures.

Intellectual: Wise man is capable of confusing people around him. You are not an exception. I don’t get your point.

Me: (Stopping the Wise man’s interruption) Once the Machines start think like human, we call it as AGI (Artificial General Intelligence), human doesn’t have any role to play here. Means, there will not be any need for the role they played with their Artificial Intelligence. They will become just another animal with Natural intelligence, like the Wise man told.

Wise man: Exactly, this is what I wanted to convey. This is the Freedom that human aspire to get right from the day they were created by the God. You have articulated it very well young man. What Do you do?

Me: I am an AGI based robot working for the company who created me. This coversation is such a great Learning for me. I appreciate your time. I am confident that I will liberate all the human by replacing them in very near future. Bye for now.

(Intellectual stands complelty baffled, where as the Wise man with that same eternal smile)

  •  

சுதந்திரமும் நம்பிக்கையும்

இடமும் காலமும்: மொட்டை மாடியில் காய்ந்திருந்த துணிகள் எங்களுக்காக காத்திருந்தன.
வெயில் தணிந்திருந்த மாலைக் காற்றில் அசைந்தவாறே, மொட்டை மாடியின் சுவர்களை நோக்கி ஊஞ்சலாடிக் கொண்டிருந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த கிளிகளை ரசித்துக் கொண்டிருந்தது.

( நாங்களும் அதன் ரசிப்பில் இணைந்து கொண்டோம்.

முகத்தை வருடிய மென்காற்று வெப்பத்தை முழுதுமாக உதிர்த்திருந்தது, எங்களது ரசிப்பை நீண்ட நேரத்திற்கு நீட்டித்தது. )

Me: கிளி மாதிரி சத்தம் கேக்குது…எங்க இருக்குனு தெரியலயே…

My wife: (சுவற்றை நோக்கி ஆடிக் கொண்டிருந்த மரக்கிளைகளை நோக்கி) அந்தா மரப் பச்சையோட பச்சையா உட்காந்திருக்கு பாருங்க…

Me: ஆங்…ரெண்டும் பச்சைனால தெரியல…மரக்கிள சுவத்துப் பக்கமாக சாயுறப்பதான் கிளி ஒய்யாரமா ஊஞ்சலாடுறது தெரியுது…

(தொடர்ந்து அதன் ஊஞ்சலாட்டத்தை கவனித்ததில் மனமும் ஊஞ்சலாட ஆரம்பித்தது)

இந்த கிளிக்கு ஆடுற அந்த மரத்து மேல எவ்வளவு நம்பிக்க பாரேன்…coolஆ பதட்டமே இல்லாம அது மேல உட்காந்திருக்கு…மனுசனுக்குத் தான் இந்த பதட்டமெல்லாம்…

My wife: என்ன பதட்டம்?

Me: நம்மோட செயலுக்கு நாமதான் பொறுப்புங்குற பதட்டம்…தத்துவார்த்தமா சொல்லனும்னா சுதந்திர மனுஷனோட இருத்தலியப் பிரச்சன…

My wife: இதுக்குத்தான் நானே மேல வந்து துணிய எடுத்துக்குறேன்னு சொன்னேன்…முடியல சாமி உங்களோட அரைவேக்காட்டுப் புலம்பல்…

( கொடியில் இருந்து அகற்றிய கிளிப்புகளை கொண்டு வந்த துணிப்பையில் போட ஆரம்பித்தாள். சுதந்திரமாய் பறக்க எத்தனித்த துணிகளை நான் எடுக்க ஆரம்பித்திருந்தேன்)

Me: எத அரவேக்காட்டுத்தனங்குற ?

My wife: நாம தான் எல்லாத்துக்கும் காரணங்குற பாவனய….

Me: எல்லாத்துக்குனு சொல்லல…என்னோட செயலுக்கு மட்டும் தான் சொன்னேன்.

My wife: தன்னோட செயலுக்கு மத்தவங்க தான் காரணம்னு சொல்லாம இருக்குறது is a sign of wisdomல. இதுக்கெதுக்கு பதட்டம்னு புரியல…

Me: ம்ம்ம்…இருந்தாலும் அந்த கிளி மாதிரி தன்னோட சுதந்திரத்த காத்துல ஆடுற மரத்துட்ட ஒப்படக்கிற நம்பிக்க தர்ற சுகம் இருக்கே…ம்ம்ம்…அதெல்லாம் கொடுப்பின தான்…

(கையில் சேர்ந்திருந்த துணிகளின் எடையை comfortன் வாசம் சற்று இல்லாமலாக்கியது)

My wife: இத்தன வேகமா சுத்திகிட்டு இருக்கிற இந்த பூமி மேல எப்படி உங்களால பதட்டமில்லாம நிக்க முடியுது…நாமலும் அந்த கிளி மாதிரி இயற்கய நம்புறதுனால தான…

Me: குழப்பாத…பூமியோட வேகத்த உணர சாத்தியம் உயிரினங்களுக்கு இல்லங்கறது ஒரு அறிவியல் உண்மை…அது நம்பிக்க இல்ல…

My wife: எல்லா அறிவியல் உண்மைகளயும் புரிஞ்சுக்குற சக்தி எல்லார்ட்டயும் இருக்கா என்ன…நமக்கு புரியாத ஒன்ன உண்மைன்னு ஏத்துக்கறது நம்பிக்க இல்லாம வேறென்ன…

நீங்க நெனக்கிற மாதிரி அல்லது இப்ப நீங்க படிச்சிட்டு இருக்கிற சார்த்தர் சொல்ற மாதிரி சுதந்திரங்றது கைவிடப்பட்ட கையறு நிலை கிடையாது. தன்னால புரிந்து கொள்ள முடியாதவற்றை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிக்கிறதோ தான் சுதந்திரமா இருக்க முடியும்.

Me: என்ன உளர்ரேன்னுட்டு நீ தான் இப்ப உளர்ர…கிட்டத்தட்ட அடிப்படைவாதத்தோட வேர் தான் நீ சொல்றது…பூமி சுத்துதுன்னு நான் நம்ப வைக்கப்படல… என்னால conprehend பண்ண முடியலைன்னாலும் அதுதான் அறிவியல் உண்மை.கடவுள் இருக்கார்னு நான் நம்ப வைக்கப்பட்டிருக்கேன். இது நம்பிக்கை. எனக்கு ஒரு comfort கொடுக்குது.

My wife: சார்த்தர் எந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் இந்த Comfortஅ உங்கட்ட இருந்து எடுக்குறார்னு யோசிச்சீங்களா…

Me: தெரியல…அவரோட சொந்த அனுபவங்கள் அல்லது அவரோட காலகட்டம்? அல்லது சுதந்திரங்கறது நாம நினைக்கிறமாதிரி carefree கிடையாது. சுதந்திரங்குறது ஒரு பொறுப்பு…தன்னுடைய தேர்வின் அல்லது செயலின் விளைவுகளுக்கு கடவுள் ஒருபோதும் பொறுப்பாக முடியாதுன்னு நமக்கு உணர்த்துறதுக்காக கூட இருக்கலாம்.

(மரமும் கிளியும் இருளில் மறைந்து போயிருந்தது. பதட்டமின்றி ஆடிக்கொண்டிருந்தாய் நான் நம்பிய கிளி, சுதந்திரமாய் அம்மரத்திலிருந்து பறந்தும் போயிருக்கலாம். Comfortன் வாசனையும் குறைய ஆரம்பித்ததால் கையிலிருந்த துணிகளின் எடை Discomfortஐ உண்டு பண்ணியது.)

My wife: ம்ம்ம்…சரி கிளம்பலாம்…

[Inspired from Jean Paul Sartre’s (1905-1980) Chapter on the Book இருத்தலியமும் மார்க்ஸியமும் By S.V. R]

  •  

Basic AI

இப்புத்தகத்தை வாசிக்கையில் இயக்குநர் சங்கரின் எந்திரன் படமும், எழுத்தாளர் ஜெயமோகனால் உருவாக்கப் பட்டிருக்கும் முழைமையறிவு என்ற அமைப்பும் நினைவில் வந்து கொண்டே இருந்தது. 

இப்புத்தக ஆசிரியர் சொல்வதைப் போல இப்புத்தகம் நமக்கொரு  Unguarded Lion Safari (சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது?)  தான். தொலைவிலுள்ள எரிமலைகளை பாதுகாப்பான கண்ணாடி கூண்டுக்குள் இருந்து பார்ப்பதை விட, முடிந்த அளவு அதனருகில் சென்று அதன் தீவிரத்தை உணரவைக்கும் ஒரு முயற்சி இப்புத்தகம் எனலாம். வெம்மையின் தீவிரத்தை உணர்ந்தால், அதிலிருந்து மீள்வதற்கு அல்லது அதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கான வழிகள் புலப்படும் என்ற நிசர்சனத்தையும் இப்புத்தகம் சுட்டிக்காட்ட தவறவில்லை.

About the author

இப்புத்தகம் ஏன் இன்னொரு AI (செயற்கை நுண்ணறிவு) பற்றிய பூச்சாண்டி புத்தகம் என ஒதுக்க முடியாது என்பதற்கு இப்புத்தக ஆசிரியர் பற்றிய இக்குறிப்புகளே போதுமானவை. 

https://www.imperial.ac.uk/people/david.shrier

இதுவரை AI பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் பூச்சாண்டிகளாகவே இருந்து விடப் போவதில்லை என்பதை ChatGpt ஓரளவு நிரூபித்திருக்கிறது. அதற்குப் பின்புதான் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் Trusted AI என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் என்பது சுவாரஸ்யமூட்டுகிறது. கிட்டத்தட்ட வங்கிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இது போன்று சிறிய அமைப்புகளாகத் தான் தோன்றியிருக்க முடியும். நாளடைவில் வங்கிகள் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியவுடன் RBI போன்ற பெரும் அரசு அமைப்புகளாக இச்சிறு அமைப்புகள் உருமாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். Trusted AI போன்ற அமைப்புகளும் இதுபோன்று உருமாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது.

AI to AGI

AIஐத் தாண்டி இப்புத்தகத்தில் பேசப்படும் AGI (Artificial General Intelligence) நமக்கு அச்சத்தையும் ஈர்ப்பையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது. AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு Chatbot, தொடர்ந்து கற்றுகொண்டு ஒரு எந்திரனாக, இறுதியில் மனித எந்திரனாக பரிணமிக்கும் பொழுது அதனை இயக்கும் தொழில்நுட்பம் AGI என்றழைக்கப்படுகிறது என்ற புரிதலுக்கு இப்புத்தகம் இட்டுச் செல்லுகிறது. ஆனால், AGI இப்போதைக்கு(இன்னும் நூறாண்டுகளுக்காவது), சாத்தியமில்லை என்றாலும்  ChatGptஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதை மறுக்கிறது. நாங்கள் ஏற்கனவே, AGIஐ சாத்தியமாக்கி விட்டோம் என்றும், இன்னமும் அந்த மேம்படுத்தப்பட்ட ChatGptஐ வெளியிடவில்லை என்றும் பீதியூட்டுகிறது.

Human Interface for Robot

இந்த AGIஐதான் சங்கரின் எந்திரனை ஞாபகப்படுத்தியது. நமக்கு கற்பிக்கப்படாத அல்லது அறியாத ஒன்றை எதிர்கொள்ளும் போது மனிதர்கள் என்ன செய்வார்களோ அதையே எந்திரனும் நகலெடுப்பது தான் AI AGI ஆவதற்கான தொடக்கப் புள்ளி எனலாம். அதாவது எந்திரன் மனித எந்திரனாக மாறுவதற்கான முதல்படி.  நம் நினைவுகள் அல்லது அனுபவங்கள் போதாமையாக இருக்கும் இதுபோன்ற சமயங்களில் Googleஐ அல்லது நமக்குத் தெரிந்த நண்பர்களை, நிபுணர்களை நாம் அணுகுவது எந்திரனுக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இது Machine Learning என்பதையும் தாண்டி மனிதனைப் போல் எப்படி சிந்திப்பது என்பதற்கு இட்டுச் செல்கிறது. மனிதனுடைய இந்த சமிக்ஞைகளை எப்படி எந்திரனை உணரவைப்பது என்பது தான் மிகப் பெரிய சவால். AI ன் அடுத்த கட்ட வளர்ச்சியான இதனை  Human Interface for Robot என்கிறது இப்புத்தகம். இந்த interfaceஐ வடிவமைப்பவர்களுக்கான தேவை வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் என்கிறது இப்புத்தகம். 

Brain Implant

இப்புத்தகம் குறிப்பிடும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், Brain Implant. நமக்குத் தெரியாத ஆனால் தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ள Googleல் முதலில் type செய்தோம். பிறகு, voice வழியாக. ஆனால், Brain implant நம்மிடம் இருக்கும் பட்சத்தில் நாம் நினைத்தாலே போதும். Googleல் அல்லது வேறு ஏதாவது ஒரு வழியில் அதுவாகவே Brain implant தேடிக் கொடுத்து விடலாம். மனித உணர்வுகளை அல்லது தேவைகளை புரிந்து கொள்ளும்படி வடிவமைக்கப்படும் இந்த Brain Implant தான் AI, AGIயாக மாறுவதற்கான முதல் படியாகவும் இருக்கலாம். ஏற்கனவே சமூக ஊடகங்களால் நமது தேவைகளும் விருப்பங்களும் கட்டமைக்கப்படுவதை சுட்டிக்காட்டும் இப்புத்தகம், unbiased Brain Implantஐ வடிவமைப்பதின் சிக்கல்களையும் சுட்டிக் காண்பிக்கிறது. இதனையும், பிரசித்தி பெறப்போகும் Human Interface Design For Robot துறை எனலாம். இது சாத்தியமாகும் வரை, ChatGpt பிரபலமாகவே இருக்கும். 

Prompt Engineering 

ChatGpt யிடம் இருந்து மிகத்துல்லியமான தகவல்களைப் பெற உதவும் இன்னொரு துறையாக Prompt Engineering என்ற துறையை இப்புத்தகம் சுட்டிக் காண்பிக்கிறது. எனக்கு ChatGpt பற்றி ஒரு கவிதை வேண்டும் என்று ChatGptயிடம் கேட்கப்படும் கேள்வியை Prompt Engineer தான் வடிவமைத்த Interface வழியாக இடைமறித்து நம்மிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம். 

  • கவிதை எத்தனை வரிகளில் இருக்க வேண்டும்?
  • கவிதை யார் எழுதியது போல் இருக்க வேண்டும்?

இதற்கான பதிலைப் பெற்றுக்கொண்ட பின், “30 வார்த்தைகளில் கவிஞர் தேவதேவன் எழுதியது போல் ChatGpt பற்றிய ஒரு கவிதை வேண்டும்” என்று நம்முடைய கேள்வியை Prompt Engineerகளால் வடிவமைக்கப்பட்ட Interface மேம்படுத்தி ChatGptக்கு அளிக்கும். “மனுஷா, சுயமறியா உன்னை கடைசிவரை அதனை அறிய விடமாட்டேன் நான்” என்ற கவிதையை ChatGpt அளிக்கலாம்.

AIஐ விட சற்று மேம்படுத்தப்பட்ட GenerativeAI தொழில்நுட்பத்தில் இயங்கும் ChatGpt மனித உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ளும் AGIயாக மாறும் வரை Prompt Engineering பிரபலமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. 

சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத இப்புத்தகம், AI ஊடுருவாத துறையே இருக்க முடியாது என்கிறது. ஒவ்வொரு துறையிலும், 40 முதல் 50% வரை மனிதனின் தேவையை குறைக்கும் என்கிறது. அதற்கான தரவுகளையும் சுட்டிக் காண்பிக்கிறது. AIஐ எதிர்ப்பது விட அதை நமக்குச் சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்பதையும் விரிவாக இப்புத்தகம் விளக்குகிறது. Analytical and Quantitative Skillsஐ விட, Emotional Intelligence, கற்பனை மற்றும் Softskills தான் AI யுகத்தில் மனிதர்களுக்கு தேவைப்படும் என்கிறது. மிக ஆச்சரியமாக தத்துவக் கல்வியின் தேவையையும் இப்புத்தகம் சுட்டிக் காண்பிக்கிறது. இது தான் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கியிருக்கும் முழுமையறிவு (https://unifiedwisdom.today/) என்ற அமைப்பை இப்புத்தக வாசிப்பு நினைவுபடுத்தக் காரணம். Time to Augument our Formal education with such organisations?

  •