Reading view

இந்திய ரயில்வே : ஒடிஷா விபத்து

170 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட துறை. இந்தியாவில் மக்களுக்கு அறிமுகமான முதல் அறிவியியல் கண்டுபிடிப்பு. பெரும்பான்மையான இந்தியர்கள் மின் விளக்கைப் பார்ப்பதற்கு முன்பே இரயில் வண்டியைப் பார்த்தவர்கள்.

இந்த 170 ஆண்டுகால தொடர்ச்சியில் அதே வயதுள்ள மற்றத் துறைகள் 10 மடங்கு மாற்றம் அடைந்திருக்கும் என்றால் ரயில்வே 3 மடங்கு அடைந்திருந்தாலே அதிகம்.

இப்பவும் பிரிட்டிஷார் அமைத்த ரயில் பாலங்களின் மீது நமது அதிவேக நவீன ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நாம் ரயில்களில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அது ஓடும் தண்டவாளங்களை இணைக்கும் போல்ட், நட்டுகளின் ஆவரேஜ் வயது 70 ஆண்டுகள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஹார்ட்வேரை விடலாம்! சாஃப்ட்வேரை பார்ப்போம். இந்திய ரயில்வேயின் signal complexity, ஏர்பஸ் A380 fly by wire technology யில் கூட இருக்காது. தொடர்ச்சியான trial & error மூலம் உருவான சிஸ்டம் அது. Muscle memory போல தன்னியல்பாக சிக்னல்மேன் களின் கைகளும், டிராக் லைன்மேன்களின் அனுபவமும், ரயில் ஓட்டுநர்களின் பயிற்சியும் ஒத்திசைவாக செய்யும் மேஜிக் அது. எந்தவொரு பொறியியல் வல்லுநர்களுக்கும் அவை பெரிய புதிராகவே இருக்கும்.

சொல்லப் போனால் படித்தவர்களுக்கு எளிதில் புரியக்கூடாது என்பதற்காகவே அதை அப்படியே வைத்திருந்ததாக நண்பரின் அப்பா (ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்) சொல்லி கேட்டிருக்கிறேன்.

ரயில்வே பணிகள் தலைமுறை தலைமுறையாக வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. டிராக் லைன்மேன் தனது மகன்களை 12 வயதில் இருந்தே உடன் அழைத்துச் சென்று பயிற்சி தருவார்கள். எனவே அவர்கள் இறந்தால் வேறு வழியே இன்றி அந்தப் பையனுக்கு அதே வேலை கிடைக்கும். தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திராகாரர்களும், வட இந்தியாவில் பீஹாரிகளும் இதில் ஆதிக்கம்.

வாக்கி டாக்கி, வயர்லெஸ் எல்லாம் வரும் முன்னரே அவர் அபாரமான தகவல் தொழில்நுட்ப முறையை கொண்டிருந்தனர்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.

ஒரு ஊர் ரயில்நிலையத்தை ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கிறது. அந்த ஊரில் நிறுத்தம் இல்லை. ஆனாலும், அங்கே ரயில்வே கேட் போட்டு சாலையை மூடியாக வேண்டும் அல்லவா? அதற்கு ரயில் 20 கிமீ தொலைவில் வரும்போதே, அதற்கு முன் இருந்த ரயில்வே கேட்கீப்பர் ரயில் கடந்து விட்டது என சிக்னல் மாற்றுவார். அந்த சிக்னல் மாறியவுடன், இந்த சிக்னல் லாக் ஆகி விடும். உடனே இந்த கேட்கீப்பர் கேட்டை மூடுவார். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு 6 அடி விட்டமுள்ள பிரம்பு வளையத்தை கையில் வைத்துக் காத்திருப்பார். ரயில் வேகமாக ஸ்டேஷனை கிராஸ் பண்ணும்போது, ரயில் ஓட்டுநர் கையில் அவர் கையில் இருக்கும் ஒரு வளையத்தை ப்ளாட்பாரத்தில் வீசிவிட்டு, லாவகமாக மாஸ்டர் பிடித்திருக்கும் வளையத்துக்குள் கையை கோர்த்து வாங்கிக் கொள்வார். இது ஒரு நொடிக்குள் நடக்கும் செயல். ஒருவேளை அந்த வளையத்தை வாங்க முடியவில்லை என்றால் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தி வாங்கி ஆகணும். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகவே நான் தினமும் ஸ்டேஷனுக்கு போய் நிற்பேன். (அப்படியே நானும் ரிங் வீச பழகிக் கொண்டேன் என்பது வேற கதை).
சரி! அப்படி என்ன அந்த வளையத்தில் இருக்கும்?
அதன் ஒரு புறத்தில் சின்னதாக ஒரு பிரம்பு பெட்டி கட்டப்பட்டிருக்கும். அதற்கு உள்ளே ஒரு இரும்புச் சாவி.
அதைக் கொண்டு போய் ரயில்வே கேட் லாக் லே பொருத்தினால்தான் கேட் திறக்க முடியும். அதன் பிறகுதான் வழக்கமான சாலைப் போக்குவரத்து. .
எனக்கு பிரமிப்பாக இருந்த அந்த விஷயம் உங்களுக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம்!

நம் கண் முன்னரே இப்படியான manual operations தான் எனில், நமக்கு பின் என்னென்ன நடந்ததோ! லைன்மேன், கேட் கீப்பர்கள் குடித்து விட்டு மயங்கியதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மணி நேரம் ஆங்காங்கே நின்று இருந்த காலமெல்லாம் உண்டு.

பழைய கதை இருக்கட்டும். இப்பொது என்ன நடக்கிறது? இத்தனை காலம் ஆகியும் இன்னமும் 60% மனிதர்களைச் சார்ந்துதான் இத்தனை ஆயிரம் ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன.

பாரம்பரிய வேலை தரும் வழக்கத்தை நிறுத்தி, தேர்வு வைத்து ஆள் நியமனங்களை தொடங்கி விட்டோம். அதன் சாதகங்கங்கள் ஒரு புறம் இருந்தாலும் மரபு வழி தொடர்ச்சி அற்று விட்டது. அதே தண்டவாளம், அதே சிக்னல், அதே பாலம், அதே வழி! ஆனால் அதற்கெல்லாம் பழக்கமில்லாத ஊழியர்கள்.

நான் சொன்னது எல்லாம் 35 ஆண்டுகள் முந்தைய நிலை. ஒடிசாவில் மூன்று ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று ஏறி நின்ற அந்தக் கோரக் காட்சிகளைக் காணும் போது அதிலிருந்து ஒன்றும் பெரிய அளவில் ரயில்வே சிக்னல் முறைகள் முன்னேறவில்லை என்பது தெரிகிறது.

ஒரே நாளில், ஒரே ஆண்டில் சரி செய்து நவீனமாக்கி விட முடியாத இராட்சச இயந்திரம் இது. ஆனால், தொடர் முயற்சியாக அதைச் செய்யாமல் போனது பெரும் குற்றம்.

எப்போதோ ஒரு முறை பெரும் விபத்து நேர்ந்தாலே அதிர்ச்சி அடைகிறோம். நியாயத்துக்கு இந்த சிஸ்டம் ஒவ்வொரு நாளும் விபத்து இல்லாமல் ஓடுவதற்குதான் நாம் அதிர்ச்சி அடைய வேண்டும்.

ஆட்சியாளர்களுக்காவது பழியை சுமக்க நேரு இருக்கிறார். மக்களுக்கு விதியை தவிர வேறென்ன இருக்கு?

  •  

கோகுல்ராஜ் கொலைவழக்கு

இந்த நாட்டின் அத்தனை சீர்கேடுகளுக்கும் தாமதமாக கிடைக்கும் நீதிதான் காரணம் என்பது எனது நம்பிக்கை.

ஆனால் இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதி கிடைத்து அது உறுதி செய்யப்பட முழுமையாக 8 ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கில் எனக்கு அந்தக் குறை இல்லை.

நீதிமன்றம் எப்படி செயல்பட வேண்டும், நீதிபதிகள் எப்படி சாய்வுத் தன்மை இன்றி உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வழக்கை இனி நாம் கொள்ளலாம்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் பண பலமோ, சாதி பலமோ இல்லாத ஒருவன். கொலையாளிகளோ சொந்தமாக சாதிக் கட்சியே நடத்தும் செல்வாக்கு கொண்டவர்கள்.

சாதித் திமிரில் நடந்த கொலை இது. அந்தக் கணத்துக்கு முன் வரை கொலையாளிகளுக்கு இவர்கள் யார் என்றே தெரியாது. வட இந்தியாவில் பொறுக்கிகள் பொது இடத்தில் செய்யும் moral policing போல இவர்கள் செய்யப் போய்தான் அந்தக் காதல் ஜோடியில் பெண் தங்களது சாதி என்பதைக் கண்டறிந்தனர். காதலன் ஒடுக்கப்பட்டப் பிரிவு என்பதை அறிந்தவுடன் அவர்களது ரத்த அணுக்களில் இருந்த அத்தனை செல்களும் கொழுப்பாக மாறி சிந்தனையை மழுங்கடித்து ஒரு கொடூர கொலையை நிகழ்த்தி உள்ளனர்.

ஒரு 22 வயசு பையனை கழுத்தை வெட்டித் துண்டாக்கிய அந்தக் கணத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதைச் செய்தவர்கள் தனது சாதிப் பெருமையை தாங்கள்தான் காப்பாற்றினோம் எனும் பெருமிதத்துடன் காவல்நிலையம் செல்லவில்லை. மாறாக, அந்தக் கோழைகள் உடலையும், தலையையும் கொண்டு போய் பல கி.மீ தொலைவில் உள்ள ரயில்வே டிராக்கில் போட்டு ரயில் வந்து மோதும்வரை இருந்து பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

இப்போது பொதுப் பார்வையில் அது தற்கொலை. காவல்துறைக்கு ஐயம் வந்தாலும் தடயமும், சாட்சியமும் கிடைக்காதே எனும் திமிர்.

அப்போதுதான் தமிழ்நாட்டின் கூட்டு மனசாட்சி கொதித்தெழுந்ததைப் பார்த்தோம்.

இது ஆணவக் கொலைதான் என்று அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என அத்தனைப் பேர்களும் நடத்திய போராட்டங்களினால்தான் இந்தக் கொலை வழக்கு கவனம் பெற்றது.

பெரும்பான்மைச் சாதிய சக்திகள் இந்த வழக்கு விசாரணையில் செய்த குறுக்கீடுகள், தந்த அழுத்தங்களால் கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தடுமாறியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்பது சட்டம் அறிந்த யாவருக்கும் அப்போது தெரிந்திருந்தது.

அதை உணர்ந்த நீதிமன்றம் தனது பிடியை இறுக்கத் தொடங்கியது. ஒரு புகார் மனுவின் பேரில் அதுவரையில் உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை, மதுரை வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்.

இதற்கிடையே நடந்த விசாரணை அதிகாரி டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியாவின் தற்கொலை காவல்துறைக்கும் பெரும் அழுத்தத்தை தந்த காரணத்தால் வழக்கு மேலும் துல்லியமாக விசாரிக்கப்பட்டது.

அரசு தரப்பில் வாதாட நீதிமன்றமே நியமித்த மூத்த வழக்கறிஞர் மோகன் அறிவியியல் பூர்வமாக ஆதாரங்களைத் திரட்டி குற்றத்தை எந்தவித ஐயமும் இன்றி நிரூபித்தார்.

ரயில் மோதி தலை துண்டாவதற்கும், அரிவாளால் வெட்டப்பட்டு துண்டாவதற்குமான வேறுபாட்டை அறிவியியலின் அத்தனை சாத்தியங்களைக் கொண்டும் அரசு தரப்பு நிலைநாட்டியது.

கொலையாளிகள் உள்ளே வந்த சிசி டிவி பதிவு, அவர்கள் அந்த நேரத்தில் பேசிய செல்போன் ஆதாரங்கள் என அத்தனைப் புள்ளிகளும் ஒரே இடத்தில் சேர்ந்தன.

வழக்கு தீர்ப்பானது. முக்கிய சாட்சியான அவன் காதலியே பிறழ்சாட்சி ஆன போதும்,

குற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

இத்துடன் இது முடியவில்லை.

வழக்கின் முடிவு எதிர்மறையாக போகும் என எதிர்பார்த்திராத எதிர்தரப்பின் ‘பெரும் சக்திகள்’ ஒன்று சேர்ந்தன. குற்றவாளி அவர்கள் சாதியில் செல்வாக்கு பெற்ற இளைஞன். எப்போதும் நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் தனது சாதியையும் தலையிலேயே தூக்கித் திரிந்த தலைவன். எனவே அவனை மட்டுமாவது இந்த வழக்கில் இருந்து விடுவிக்க பெரிய திட்டம் தீட்டப்பட்டது. நித்தமும் தொலைகாட்சியில் பேட்டிகளை தரும் அளவிலான பெரும் சக்திகள் அதற்கான முயற்சிகளை எடுத்தனர்.

ஆனால், எதற்கும் அசராத சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் சம்பவ இடத்துக்கு தாங்களே நேரில் வந்து வழக்கின் உண்மைத் தன்மையை உறுதி செய்து இன்று கொலையாளிகளுக்கு வாழ்நாள் முழுவதுமான ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளனர்.

எத்தனை கோடி பணத்தாலும், அதிகாரத்தாலும், அரசியல் செல்வாக்காலும் கூட வளைத்து விட முடியாத நமது நீதிமன்றத்தை எண்ணி நாம் பெருமை கொள்ளலாம்.

நீதிமன்றங்கள் மட்டுந்தான் எளிய மக்களின் நம்பிக்கை.

அதுதான் நமது அசோகச் சக்கரத்தின் அச்சாணி.

கோகுல்ராஜ் கழுத்தை நோக்கி அரிவாள் வந்த அந்தக் கணத்துக்கும், இறுதித் தீர்ப்பு வந்த இந்தக் கணத்துக்குமான கால இடைவெளியில் தடம் புரளாமல் சென்றதுதான் தர்மத்தின் பாதை.

வாய்மையே வென்றது.

  •  

தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் எதிர்காலம்

உலகப் போர்களுக்குப் பிறகு சாம்ராஜ்யங்கள் சரிந்து பல புதிய நாடுகள் உருவாகின. இனம், மொழி, மதம் என பல அடிப்படைகளில் நாடுகள் பிரிந்தன. போருக்குப் பிறகான வறுமை, வேலைவாய்ப்பின்மை, பசி கொடுமை எனும் சூழலில் உலக மானுடர்கள் எல்லோருக்கும் எல்லாமும் என வர்க்கபேதங்களைச் சமன் படுத்த கம்யூனிஸ சித்தாந்தத்தின் அடிப்படையில் முதல் நாடாக ரஷ்யா உருவானது.

ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவில் தென்கோடி மெட்ராஸ் பிரசிடென்சி எனும் மாகாணத்தில் அரசுப் பணியிடங்கள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் என அதிகாரத்தின் அத்தனை மட்டங்களிலும் குறிப்பிட்ட ஒரே சாதியினரின் ஆதிக்கத்தால் பல லட்சம் மக்கள் தகுதி இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் அடிமைப்பட்டிருந்தனர். சாதியின் பேரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து சமத்துவம் காண உருவாக்கப்பட்ட புதிய அமைப்புதான் நீதிக்கட்சி.

ஏற்கனவே தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி என மொழிவழியாகவும், இஸ்லாமியர், கிருத்துவர், பவுத்த, சமணர்கள் என மதவழியாகவும் பிரிந்திருந்தது போக, அவர்களை மேலும் வைசியன், சூத்திரன், பஞ்சமன் என சாதிப் பிரிவுகளாகவும் பிரித்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது ஆரியம்.

மக்களை ஏழை, பணக்காரன் எனும் வர்க்கபேதம் இன்றி சமன் படுத்த கம்யூனிசம் உருவானதைப் போல, பிறப்பினால் ஏற்றத் தாழ்வு ஏதுமில்லை, யாவரும் இங்கு சமமே! யாவருக்கும் இங்கே சமவாய்ப்பு தேவை எனும் மானுட விடுதலைக்காக உருவானதுதான் திராவிடம்.

இந்த திராவிடத்தை அடிப்படையாக கொண்டுதான் பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் இட ஒதுக்கீட்டு அரசாணையை (first communal G.O) பெற்றுத் தந்தது நீதிக்கட்சி.

இதுதான் 1920 முதல் 2022 வரை 102 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த தமிழ்நாட்டை திராவிட அரசியல் கருத்தியலும் கோட்பாடும் ஆதிக்கம் செய்து வருவதின் தொடக்கப் புள்ளி.

அதுவரையில் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர், காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் பிராமணர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளதாகவும், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு சுதந்திரத்தின் பலன்கள் சென்று சேரவில்லை என்றும் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திராவிடர் கழகம் தொடங்கினார்.

எளிய மக்கள் மீதான சாதிய, சமூக அடக்குமுறை கட்டுமானங்கள் அனைத்துமே அவர்களின் கடவுள் நம்பிக்கையின் மூலமாகதான் நிலை கொண்டுள்ளது என நம்பிய ஈ.வெ.ரா கடவுள் மறுப்பை தனது திராவிடர் கழகத்தின் முக்கியப் பிரச்சாரமாக மேற்கொண்டார்.

தனது 94 வயது வரை அவர் மேற்கொண்ட ஓயாத பிரச்சாரங்களும், பயணங்களும் தமிழ்நாட்டுக்கு தந்த தனித்துவமான கருத்துப் புதையல்களும் தமிழ் இனத்துக்கே விழிப்புணர்வு உண்டாக்கியது.

எனவேதான் தமிழ்மக்கள் அவரை தங்களது ஞானத் தந்தையாக ஏற்று தந்தைப் பெரியார் என அழைக்கத் தொடங்கினர்.

தாழ்த்தப்பட்டச் சமூகத்தினர் நடக்க அனுமதி மறுக்கப்பட்ட வீதிகளில் பெரியார் தனியே நடந்தார். தமிழ்நாட்டில் அனைத்து வீதிகளும் பொது வீதிகள் ஆகின.

ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட கோவில்களுக்குள் ஆலயப் பிரவேசம் போராட்டம் நடத்தினர். அனைத்துச் சாதியினருக்கும் கோவில் கதவுகள் திறந்தன.

மனிதர்களுக்கு சாதி அடையாளம் ஓர் அவமானம் என பெரியார் சொன்னார். முதலில் தனது பெயருக்குப் பின்னொட்டாக இருந்த சாதிப் பெயரை அவர் துறந்தார். தமிழர்கள் அவரைப் பின்பற்றி அதுவரையில் தங்கள் கவுரவமாகக் கருதி வந்த சாதிப் பெயர் பின்னொட்டுகளை தாமாக நீக்கிக் கொண்டனர். இன்றளவும் இந்தியாவில் பிராமணர்கள் உட்பட யாருமே தங்களது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைச் சேர்க்காத ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இடஒதுக்கீடு, பெண் விடுதலை, தமிழ்மொழி எழுத்து சீர்திருத்தம் என அவர் தொட்ட இடங்களில் எல்லாம் முற்போக்குச் சிந்தனைகளை பேசி, பேசியே மக்களிடையே வளர்த்தெடுத்தார்.

அந்தச் சிந்தனைகளுக்கு எல்லாம் செயல்வடிவமும், சட்ட உரிமையும் ஏற்படுத்திக் கொடுக்க தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாக பேரறிஞர் அண்ணா வந்தார்.

அதுவரையில் தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் இருந்த திராவிடக் கருத்தாளர்களை ஒன்றிணைத்து அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார் அண்ணா. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அசைக்க முடியாத சக்தி என தங்களைக் கருதிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி திமுக ஆட்சியை உருவாக்கினார்.

தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் சட்டவடிவம் தந்தார் அறிஞர் அண்ணா.

மெட்ராஸ் மாநிலமாக அதுவரையில் இருந்த நமது மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என போராடி மாற்றினார்.

மதச் சடங்குகள் அற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட உரிமையை அளித்தார்.

ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே மாபெரும் சாதனைச் செய்த மகத்தான தலைவரான அண்ணா மறைந்தபோது உதித்தெழுந்த திராவிடச் சூரியன் கலைஞர் கருணாநிதி.

கலைஞர் முதல்வராக இருந்த போது தொட்டதெல்லாம் சமூகச் சீர்திருத்தங்களாகவே இருந்தது. அதுவரையில் மனிதனை உட்காரவைத்து மனிதர்கள் இழுத்து வந்த கைரிக்ஷா ஒழிக்கப்பட்டது. இது சிறிய விஷயம்தான். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் யாருக்குமே தவறாக தோன்றாத இந்த கைரிக்ஷா வழக்கம் மனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கு என ஒரு திராவிடத் தலைவனுக்குதானே தோன்றியது! அதுதான் தந்தைப் பெரியார் போட்டுத் தந்த அடித்தளம்.

1989 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என சட்டம் இயற்றினார் முதல்வர் கலைஞர். அதுவரையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெண்களுக்கு சொத்துரிமை வழக்கப்படவில்லை. 32 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஒன்றிய அரசு இந்த சமத்துவ சீர்திருத்தத்தைச் செய்கிறது என்றால் சமூகத்தில் பெண்ணுரிமையில் திராவிடம் எவ்வளவு ஆண்டுகள் முன்னே சென்று நாட்டை வழிநடத்துகிறது என்பதை உணரலாம்.

கலைஞருக்குப் பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா என திராவிடத்தின் நீர்த்த வடிவமாக வந்தாலும் தந்தைப் பெரியாரின் அடிப்படைக் கருத்தியலில் இருந்து விலகாமல் தமிழ்நாடு பார்த்துக் கொண்டது.

இன்று திராவிடத்தின் புதிய சக்தியாக திராவிடம் 2.0 என சொல்லத் தக்க வகையில் ஆரியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் மாபெரும் சக்தியாக தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாகி உள்ளார்.

அவர் ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் அவர் இட்ட அரசாணைகள் எல்லாமே சமூகத்தின் மிக ஒடுக்கப்பட்ட பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கை,நம்பிகள் என அனைவருக்கும் புதிய அங்கீகாரத்தையும் உரிமைகளையும் தருகிறது.

பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம், உயர்கல்விக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி முதல் மருத்துவம் வரை எந்த படிப்பு படித்தாலும் இலவசக் கட்டணம் என அடுத்தத் தலைமுறைகளுக்கான முதலீட்டை கல்வியில் செய்கிறது திராவிடம்.

தமிழர் அனைவருக்கும் சம வாய்ப்பு எனும் உயரிய நோக்கத்தை தனது குறிக்கோளாக அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

விரைவில் இவைகளையும் மற்ற மாநிலங்கள் பின் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் திராவிடத்தின் எதிர்காலம் என்ன?

ஓரிரு செயல்திட்டங்களின் அடிப்படையில் தோன்றும் இயக்கங்கள் அந்தத் திட்டங்கள் நிறைவேறியவுடன் அதன் தேவை தீர்ந்து விடும். உலகளவில் பல எடுத்துக் காட்டுகளை நாம் காணலாம்.

ஆனால், சாதி ஒழிப்பு, மதநல்லிணக்கம், பெண்ணுரிமை, மொழிப் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி, மாநில சுயாட்சி என மானுட சமத்துவத்தை தனது லட்சியமாகக் கொண்டிருக்கும் திராவிடத்தின் தேவை தமிழ்நாட்டுக்கு என்றுமே தேவை.

திராவிடக் கொள்கையை தமிழர்கள் உள்ளங்களில் இருந்து அழிக்க முனைவோர்கள் அறுபது ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் செய்திட்ட சாதனைகளை, பெற்றுத் தந்த உரிமைகளை, உயர்த்திக் காட்டிய வாழ்க்கைத் தரத்தை மக்கள் மனங்களில் இருந்து அகற்றி ஆக வேண்டும்.

இது சாத்தியமா?

“தமிழ்நாடு எனும் பெயர் இந்த மாநிலத்துக்கு உள்ளவரை, சுயமரியாதைத் திருமணங்கள் இங்கே நடைபெறும்வரை, பிற மொழிகளுக்கு இடமளிக்காமல் இருமொழிக் கொள்கையே இங்கே தொடரும்வரை இந்த அண்ணாதுரைதான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்றார் அண்ணா.

அதை மேலும் கூடுதலாக்கி,
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கும்வரை, அனைவருக்கும் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி கிடைக்கும்வரை, இஸ்லாமியர், அருந்ததியர் என கல்வியில் புறக்கணிக்கப்பட்டப் பிரிவினருக்கும், இருளர், குறவர் போன்ற சமூகத்தில் ஒதுக்கப்பட்டப் பிரிவினருக்கும் முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் கிடைக்கும்வரை, சமூகநலனுடன் கூடிய முன்னேற்றமே சமமான முன்னேற்றம் என்பதை தமிழ் மக்கள் ஏற்கும்வரை இங்கே திராவிடத்தின் ஆட்சிதான் நடக்கும்.

திராவிடத்தின் எதிர்காலம் என்பது இனி வடக்கு நோக்கிப் பயணித்து இந்திய மக்கள் அனைவரையும் சனாதனச் சிந்தனைகளில் இருந்து வெளியேற்றி சம உரிமைச் சமூகமாக மாற்றும் செயல்திட்டமாகதான் இருக்கும்.

எதிர்காலத்தில் சாதி, மத வெறுப்புகள் அகன்று, அறிவியியல் வழி வளர்ச்சி கண்டு, சமூக, பொருளாதாரச் சமத்துவ நாடாக இந்தியா உருவாகுமேயானால், அதன் முதல் புள்ளி தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசுகளின் வெற்றிகளில் இருந்தே தொடங்கியிருக்கும்.

-எஸ்கேபி. கருணா.

-குமுதம் இதழ் குழுமத்தின் இணைய இதழுக்காக எழுதிய கட்டுரை

  •  

ராயல் சல்யூட்

பாரதி மணி என்றொரு சுவாரஸ்யமான தமிழர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் எனும் செய்தியை பெரும்பான்மைத் தமிழர்கள் அறியாமலேயே இந்தக் காலத்தேர் உருண்டு போகிறது. ஒருவேளை தமிழ்த் திரைப்படங்களில் முதலமைச்சராக (பாபா) வருவாரே! அவர்தான் என்றால் கூடுதலாக மேலும் சிலர் அறியக் கூடும். நான் சந்தித்துப் பழகிய வெகு சில பன்முகத் திறமையாளர்களுள் பாரதி மணி ஒருவர். இசை, இலக்கியம், சமையல், பயணம், மனிதர்கள் என எதைக் குறித்தும் அவருடன் நாளெல்லாம் பேசலாம். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எழுத்தாளராக உருவெடுத்து இவை அனைத்தையும் எழுத்தில் பதிவும் செய்து விட்டுப் போனதில் அவரது வாழ்வு சாகா வரம் பெற்று விட்டது. காலம், பாரதி மணிக்கு அமைத்துக் கொடுத்த சந்தர்ப்பங்கள் நம்ப முடியாத காவியத் தன்மை வாய்ந்தது.

தென் கோடி குமரியில் இருந்து தனது 21 வயதில் டெல்லிக்கு சென்றவர் தனது பணி ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பியிராவிட்டால் அவைகள் ஒன்று கூட பதிவாகி இருந்திருக்காது. அவரது பணி நிமித்தம் அறிமுகம் ஆகும் பிர்லாவுக்கு முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துப் போக பிர்லா ஹவுஸில் சேர்மனின் அலுவல் தொடர்பாளராக இணைகிறார். அந்த இடத்தில் இருந்து அவர் பார்த்த உலகம் அதிகார மையத்தின் அதிசய பக்கங்கள். எடுத்தவுடன் அதில் இணைந்து விடும் அவருடைய அனுபவத் தொகுப்புகள் நிச்சயம் சிண்டிரல்லா தேவதைக் கதைகளுகு ஒப்பானவை.

டெல்லியில் மறைந்து வாழ்ந்த வங்கதேசத் தந்தை முஜீபுர் ரஹ்மான் மகள் ஷேக் ஹசினா குடும்பத்துக்கு டாக்காவில் இருந்து ஹீல்சா மீன் வாங்கி வருமளவு நெருக்கமான நண்பராக இருந்து உள்ளார். பின்னாளில் வங்கதேச அதிபர் ஆன ஷேக் ஹசினா பாரதி மணியை மோனி தாதா என்றே அழைப்பாராம்!

ஒரு நாடக விழாவின் இறுதியில் நண்பர் ஒரு பெண்ணை அழைத்து வந்து, இந்தப் பெண் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவி. இவருக்கு ஏதோ விசா பிரச்சனையாம்! கொஞ்சம் உதவி செய்ய முடியுமா என கேட்டவுடன் அப்பெண்ணை உடன் அழைத்துச் சென்று மூன்றாண்டு விசா நீட்டிப்பு செய்து தருகிறார். அந்தப் பெண் பின்னாளில் மியான்மரின் பிரதமர் ஆன நோபல் பரிசு பெற்ற ஆங் கான் சுகி.

எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் இந்திராவின் தனிச்செயலாளர் அறையில் அமர்ந்திருக்கிறார். செயலாளரை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதாகத் திட்டம். பிரதமர் ஒரு கோப்பில் கையொப்பம் இட்டவுடனே தான் வர முடியும் என சொல்ல, என்ன பெரிய கையெழுத்து! நான் போடுகிறேன் பார் என ஒரு பேப்பரில் பிரதமரின் கையெழுத்தை அச்சு அசல் அப்படியே போட, பின்னால் இருந்து அந்தப் பேப்பரை பிடுங்கிப் பார்க்கிறார் இந்திரா. அட! அப்படியே என்னோட கையெழுத்தைப் போலவே இருக்கே! இனிமே நான் வெளியூர் போனால் மணி இடமே கையெழுத்தை வாங்கிடுங்க என்கிறார் சிரித்துக் கொண்டே! அப்படியே செக் புக்கையும் தரச் சொல்லுங்க இந்திராஜி என்கிறார் இவர்.

திரைப்படங்களுக்கான தேசிய தேர்வுக் குழுவுடன் இருக்க நேர்கிறது. அந்த ஆண்டின் சிறந்த படமாக ஒரு வங்காளிப் படத்தை தேர்வு செய்ததை அறிகிறார். ஆனால், அதே ஆண்டில் வெளிவந்து விருதுப் போட்டியில் கலந்து கொண்ட செம்மீன் எனும் மலையாளத் திரைப்படம் அதைக் காட்டிலும் சிறந்தது என்பதை பாரதி மணி அறிவார். தேர்வுக் குழுத் தலைவர் ஒரு வங்காளி. அவரிடம் பேசிப் பயனில்லை. வெளியே வந்து தனது ப்ரஸ் பீரோவின் தலைவரான தனது நண்பரை அழைக்கிறார்.

அவருக்கு மட்டும் செம்மீன் படத்தையும், அந்த வங்காளப் படத்தையும் தனிப்பட்டக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்து பார்க்க வைக்கிறார். பிறகு நடந்தது ஒரு மேஜிக். தேர்வுக் குழுவின் செயல்பாடுகள் விமர்சிக்கப் படுகின்றன. மீண்டும் திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன. விந்திய மலைக்கு தெற்கே உள்ள மொழி திரைப்படங்களில் முதன்முதலாக மலையாளத் திரைப்படமான செம்மீன் திரைப்படத்துக்கு அந்த ஆண்டின் தேசிய விருது கிடைக்கிறது. இத்தனைக்கும் பாரதி மணிக்கு செம்மீன் படக்குழுவில் அதுவரையில் யாரையும் தெரியாது.

ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தின் அருகே எப்போதும் தங்குவதற்கென சொந்தமான சொகுசு அறை, தில்லியில் பணிக்கு வரும் தமிழர்கள் யார் மரணம் என்றாலும் பாரதி மணி முன் நின்று அடக்கம் முதல், இறப்புச் சான்றிதழ் வரையில் செய்து தந்த தொண்டுகள், அடிமைப் பெண் படபிடிப்புக்கு லொகேஷன் பார்க்க வந்த எம்.ஜி.ஆருக்கு உடன் இருந்து உதவியது, எப்போது சிவாஜி கணேசன் தில்லிக்கு வந்தாலும் அவருக்கான ஸ்காட்ச் விஸ்கியுடன் அவர் ஊர் திரும்பும் வரை உடன் இருந்து கவனிப்பது, குருதத், தேவ் ஆனந்த் முதல் ஹேமமாலினி வரையிலான பாலிவுட் பிரபலங்களுடனான நட்பு என பாரதி மணியின் அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையுமே அவர் தனது புள்ளிகள் கோடுகள் கோலங்கள் தொகுப்பில் பதிவு செய்திருந்தாலும், அதில் பதிவாகாத பல சுவாரஸ்யமான விஷயங்களை தனிப் பேச்சில் எனக்குச் சொன்னது நான் பெற்ற பேறு. எனக்கும் அவருக்குமான உரையாடல்கள் எழுத்தாளர்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகள் என பரந்துபட்ட வீச்சு கொண்டது. அவரே ஒரு நாடகக் கலைஞர் என்பதால் இறுதியாக அவருக்குப் பிடித்தமான சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்” நாடகத்தை நடத்திட விரும்பினார். அதுவும் பார்வையாளர்கள் யாரும் இன்றி. அவருக்காக அவரால் நடத்தப்படும் ஒரு நாடகம். நானும், நண்பர் பவா செல்லதுரையும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தோம்.

அந்த நாளில், தனது குழுவுடன் மேடையேறி தில்லியில் அவரது நண்பர் பூரணம் விஸ்வநாதன் நடித்த அந்தப் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார். எதிரே பார்வையாளர்கள் இடத்தில் நாங்கள் வெகு சில நண்பர்கள் மட்டும் கைத்தட்டி ரசித்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

பாரதி மணி ஓரு தனித்த ஆளுமை. வலது கையில் பைப், இடது கையில் ஸ்காட்ச் விஸ்கியுடன் அமர்ந்து கொண்டு அவர் பேசும் அந்த மாயக் கணத்தில் அவர் எதிரே ஜவஹர்லால் நேரு, ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், மொரார்ஜி, இந்திரா, ராஜீவ், ராஜ்கபூர், எம்ஜிஆர், சிவாஜி, ஷப்தர் ஆஸ்மி, பிர்லா, அம்பானி என ஆளுமைகள் வந்து அமர்ந்து விட்டுச் செல்வார்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்று நாயகர்கள் அத்தனைப் பேருடனும் பேசிப் பழகிய ஓர் அற்புதமான மனிதருடன் நாமும் பழகி உள்ளோம் எனும் அந்த உணர்வெழுச்சிக்கு ஈடில்லை.

போய் வாருங்கள் மணி சார். உங்கள் வாழ்வனுபவங்கள் உயிர்ப்புடனே இங்கிருக்கும்.

-எஸ்கேபி. கருணா

  •  

நாகரீக சிவில் சமூகம்

நாகரீக சிவில் சமூகத்தில் மரண தண்டனை கூடவே கூடாது!
முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.
ஒரே ஒரு சந்தேகம்தான்.
அப்படியானல் கொடும் குற்ற செயல்கள் புரியும் குற்றவாளிகளை என்ன செய்வது?
மன்னிப்போம்! மறப்போம்! அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவோம் என்று மகாத்மா சொன்னதைப்
போல செய்து விடலாமா?
அத்தனைப் பெருந்தன்மையும், ஞானமும் இருக்கும் நாட்டில் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்குமே வேலையிருக்காதே?
மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கும் பலரும் அதற்கு மாற்றாக சொல்வது என்ன?
மரண தண்டனை தரும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கு தூக்கு தண்டனையைத் தவிர்த்து அதற்கு பதிலாக ஆயுள் தண்டனை அளிக்கலாம் என்பதுதானே!
மரண தண்டனையை ஒழித்துவிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முன்னேறிய நாடுகளும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் வாதம்.
ஆனால் அதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது! அங்கெல்லாம் ஆயுள் தண்டனை என்றால், குற்றவாளிகள் சாகும்வரை சிறையிலிருந்து வெளியில் வர முடியாது என்று அர்த்தம்.
மாறாக இங்கே என்ன நடக்கிறது?
தாங்கள்தான் இந்தக் கொலைகளை திட்டமிட்டு செய்தோம் என்று நீதிமன்றத்தில் சரணடையும் கூலிப் படையினர்கூட, வழக்கின் இறுதியில் ஆயுள் தண்டனையே பெறுகின்றனர். அதுவும், சிறையில் இருக்கும் காலத்தில் தங்களின் நன்னடைத்தைக்காக (!) தண்டனைக் குறைப்பும் பெறுகிறார்கள். அதிகபட்சம், ஆறு அல்லது ஏழு வருடங்களில் விடுதலையாகி வெளியில் வந்து, மீண்டும் கூலிக்கு படுகொலைகள் செய்கிறார்கள்.
அப்படியான, அர்த்தமற்ற ஆயுள் தண்டனையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை!
“மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனை இருக்க முடியுமென்றால், அது இப்படி சாகும்வரை சிறையிலிருப்பதைப் போன்று இருக்க வேண்டும்”.
அதுமட்டுமல்ல! அந்த நாடுகளில், ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளுக்கென தனி சிறைச் சாலைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட அந்த சிறைகள் பொதுவாக அடர்ந்த காட்டுக்குள்ளோ அல்லது தனித் தீவிலோ அமைக்கப் பட்டிருக்கும். அங்கு அடைக்கப் பட்டிருக்கும் கைதிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. மீறினால், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கில்கூட அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவார்கள்.
இனி உயிருடன் இந்த சிறையை விட்டு நாம் வெளியில் செல்ல முடியாது என்ற சிந்தனையே அவர்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவர்களை கொன்று கொண்டிருக்கும்.
அந்த சிறைகளில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் மனநிலைப் பிழன்ற நிலைகளில் இருக்கிறார்கள் என்கிறது அங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிலரின் ஆதாரப்பூர்வ ஆவணங்கள். அந்தக் கைதிகளில் யாரை அழைத்து மரணதண்டனை தருகிறேன்! ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டால், உங்களின் கால்களில் விழுந்து தன்னைக் கொன்றுவிடுமாறு கெஞ்சுவார்களாம்!
அந்த நாட்டு மனித உரிமை போராளிகளும் இத்தகைய சிறைச்சாலைகளை எதிர்ப்பதில்லை. அப்படிப்பட்ட சிறைச்சாலைகள் நமது நாட்டிலும் அமைக்கப்படும் பட்சத்தில், மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையளிக்கலாம் என்பது என் கருத்து.
சிங்கப்பூரை பாருங்கள்! மலேசியாவைப் பாருங்கள்! மற்ற முன்னேறிய பல நாடுகளைப் பாருங்கள்! அங்கெல்லாம் எப்படி ஊழல் அற்ற மக்கள் நல அரசுகள் இருக்கின்றன என்று கூச்சலிடுபவர்கள், அந்த நாடுகளில் நடைமுறையில் இருக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்!
நாகரீக சிவில் சமூகம் என்பது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குறிக்கக் கூடிய வார்த்தையாகும்.
இங்கு, வெறும் ஆறாயிரம் ரூபாய்க்காக கொலை செய்யும் ஆட்கள் இருக்கிறார்கள். மதத்தின் பேரில், சாதியின் பேரில், மொழியின் பேரில், கட்சியின் பேரில், ஏன் கடவுளின் பேரில்கூட கொலைகள் செய்ய இங்கு ஆட்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றனர்.
வேறு நாட்டிலிருந்து நமது நாட்டுக்குள் வந்து, எந்த ஒரு அதிகார மையத்தின் மீதும் தாக்குதல் நடத்தாமல், இரயில் நிலையத்திலும், தெருக்களிலும் நடந்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களின் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திட்ட தீவிரவாதிகள், பிடிபட்டாலும் கூட, அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து, ஒரு நாகரீக சிவில் சமூகம் பராமரிக்க வேண்டுமா?
பின்னாளில் யாராவது நமது நாட்டு விமானத்தையோ, கப்பலையோ கடத்தி பணயமாக வைத்துக் கொண்டு, இவனை விடுவிக்கக் கேட்டால், பத்திரமாக அனுப்பி வைக்கவும் வேண்டுமா?
ஒரு வீட்டில் ஓட்டுநர் வேலைக்கு ஒருவன் சேர்கிறான். பின் ஒரு நாளில், தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொண்டு, பள்ளிக்கு செல்லும் அந்த வீட்டுக் குழந்தைகளை கடத்துகிறான். அந்த சின்னஞ் சிறிய மொட்டை அவளது தம்பியின் கண்முன்னே கற்பழித்து, பின் அவர்கள் இருவரையும் கொலை செய்து அங்கிருக்கும் கால்வாயில் வீசி எறிந்து விடுகிறான்.
இந்த குற்றவாளிகளை சட்டம் தனது கருணைக் கண் கொண்டு பார்த்து, மரண தண்டனையைத் தவிர்த்து, அவர்களின் மனித உரிமைகளையும் மதித்து, அவர்களுக்கு சிறையில் முட்டை, கோழிக் குழம்பு கொடுத்து, முதல் வகுப்பில் வைத்து பராமரிக்க வேண்டுமெனில், இந்த நாகரீக சிவில் சமூகம் நாசமாகப் போகட்டும்!
வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் ப்ரகாஷ்ராஜ், கமலிடம் பேசும் வசனம் ஒன்று!
“என் மகள் என்பதற்காக சொல்லவில்லை! இப்படி ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு, குற்றவாளிகள் எங்கோ சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்லிக் கொண்டு கதறி அழும்படியான காட்சி ஒன்று வரும்.
நமது நாகரீக சிவில் சமூகத்தின் மனசாட்சியின் குரல் அதுதான்!
சென்ற வாரத்தில் ஒரு நாள், ஆளும் கட்சியின் மாணவர் அணி செயலாளர் ஒருவரை கூலிப் படை கும்பல் வெட்டிக் கொலை செய்தது. திட்டமிட்டு செய்யப்பட்ட அந்த கொலையின்போது, உடன் இருந்த அவரது பதிமூன்று வயது மகனையும், ஒன்பது வயது மகளையும் சேர்த்து, பெரும் வன்மத்துடன் அந்த அரிவாள்கள் வெட்டியுள்ளன!
வாங்கிய காசுக்கு இலவச இணைப்பாக அந்த பிஞ்சு குழந்தைகளையும் அரிவாள்களால் வெட்டிக் கொலை செய்யத் துணிந்த குற்றவாளிகள் இருப்பதுதான் இந்த நாகரீக சிவில் சமூகம்.
ஆண்டவரே! இவர்களை மன்னியும். இவர் தாம் செய்வது என்ன என்று அறியாமல் செய்கின்றனர்! இவர்களையும் இரட்சித்து ஏற்றுக் கொள்ளுங்கள்! என்று சொல்ல பாதிக்கப்பட்ட எந்த ஒரு குடும்பத்திலும் ஒரு இயேசு பெருமான் இருக்க வாய்ப்பில்லாத நாகரீக சிவில் சமூகம் இது!
அடுத்து தூக்குக்காக, கொட்டடியில் காத்திருக்கும் பட்டியலின் நீளம் பெரிது.
அப்ஸல் குரு, முருகன், சாந்தன், பேரறிவாளன் என்றுத் துவங்கி பச்சிளம் குழந்தைகளை கடத்தி,கற்பழித்து கொலை செய்தவர்கள்,உணர்ச்சி வேகத்தில் சுற்றுலாப் பேருந்துக்கு தீயிட்டு, உயிருடன் கல்லூரி மாணவிகளை எரித்தவர்கள் என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!
பொதுவாகவே நமது நீதி வழங்கல் முறையில் பல குறைகளும் இருக்கின்றன. குறிப்பாக குற்ற செயல்களுக்கு மிகத் தாமதமாக வழங்கப் படும் நீதியினை சொல்லலாம்!
எனவே சில நேரங்களில் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவும், அப்பாவிகள் தண்டனை பெறவும் இங்கே வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆகவே.. இந்தக் குறைபாடுகளுக்காக, நானும் மரண தண்டனையை எதிர்க்கிறேன்.
ஆனால், கொடிய குற்றங்களுக்காக ஆயுள்தண்டனை பெற்றவர்களை, அவர்களின் ஆயுள் முழுக்க, கடும் பாதுகாப்பான சிறையில் அடைத்து வைக்கும் தண்டனையைத் தர முடியுமென்றால் மட்டுமே!

  •  

பேரம்

அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் அலுவலகத்தில், அட்வகேட் வெங்கடேஸ்வரனைப் பார்க்க, அவரது அறை முன் எப்படியும் பத்து பேருக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தனர். அதே அலுவலகத்தில் பங்குதாரர்களாக இருக்கும் இன்னும் பிற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு முன்னர் வெறும் காலி நாற்காலிகள் மட்டும். இத்தனைக்கும், வெங்கடேஸ்வரன் ஐம்பது வயதை கடந்து விட்டிருப்பினும், அங்கு இருப்பதில் அவர்தான் ஜூனியர்! ஆனால், அந்த அலுவலகத்தின் உயிர் நாடி!

பரபரப்பான அந்த நேரத்தில் அங்கு தோளில் ஒரு மடிக்கணினிப் பையுடன் ஒரு இளைஞன் அங்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டவுடன், வெங்கடேஸ்வரனின் தனி உதவியாளர் உள்ளே சென்று, அனுமதி கேட்டு வெளியில் வந்து, உடனே அவனை உள்ளே செல்ல சொன்னார். வெங்கடேஸ்வரனும் அவனுக்காகவே காத்திருந்தது போல, எழுந்து நின்று ஆர்வத்துடன் அவனை வரவேற்க, அவனோ கண்டுபிடுச்சாச்சு! என்றபடி, அமைதியாக ஒரு காகிதத்தை பையிலிருந்து எடுத்து அவரிடம் தந்தான்.

வெங்கடேஸ்வரன், அந்தக் கவரைப் பிரிக்கத் துவங்க, அந்தப் பெண் தற்போது தங்கியிருக்கும் இடத்தின் விலாசம் இது! என்று பெருமையுடன் சொன்னான். இவ்வளவு சீக்கிரம் எப்படி கண்டு பிடிச்சே? என்று இவர் கேட்க, அதெல்லாம் தொழில் இரகசியம் சார்! என்னைப் போன்ற ஒரு பெரிய டிடெக்ட்டிவிற்கு இதெல்லாம் சும்மா ஜுஜுபி மேட்டர்! வேணும்னா சொல்லுங்க! இன்னும் ஒரு வாரம் ஃபாலோ செய்தால், அவளுடைய மொத்த அந்தரங்க விஷயங்களையும் கொண்டு வந்துடலாம் என்றான். வெங்கடேஸ்வரன் அதெல்லாம் வேண்டாம்பா! என்றார் மிக அவசரமாக.

அன்று, வெங்கடேஸ்வரன், தன்னுடைய வேலைகளை வெகு சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினார். தனது டிரைவரை கண்களினாலேயே, விலகச் சொல்லி விட்டு, அவரே தனியாக காரை ஓட்டத் துவங்கினார். பாரி முனை அலுவலகத்தில் இருந்து, தனது காரை வழக்கமாக வீட்டுக்குச் செல்லும் தி.நகருக்கு செலுத்தாமல், நேராக அண்ணா நகருக்கு ஓட்டிச் சென்றார். கையிலிருக்கும் விலாசத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டு, சாந்தி காலனியில் 12 ஆவது தெருவினை சென்றடைந்தார். அந்தத் தெருவை இரு முறை காரை ஓட்டிய படி கடந்து சென்று, அவரின் தேடலான அந்தப் புது வெள்ளை நிற அபார்ட்மெண்டையும் கண்டு பிடித்தார்.

பெரும்பாலும், நிறைய பேர் இன்னமும் குடி வந்திராத அந்த அபார்ட்மெண்ட்டின் லிஃடில் ஏறி நான்காவது மாடிப் பொத்தானை அழுத்த, அவர் தேடி வந்த 16A கதவு, நேராக தென்பட்டது. அவருடைய திறமையையும், அதிகாரத்தையும் எண்ணி, பெருமிதப் புன்னகையோடு, அழைப்பு மணியை அழுத்தினார். கதவைத் திறந்தது சாட்சாத் கல்பனாதான்.

வெளிர் மஞ்சளுக்கும், பச்சைக்கும் நடுவேயான நிறத்தில் சேலையும், கரும் பச்சை நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். அவள் கையில்லாத ஜாக்கெட் அணிவதை வெங்கடேஸ்வரன் அப்போதுதான் பார்க்கிறார். குளித்து லேசாக அள்ளி வாரப் பட்டிருந்த ஈரத் தலை, ஸ்டிக்கர் பொட்டு என அப்போதுதான் பிளந்த இளநீரின் வழுக்கைப் போல ஃப்ரெஷ் ஆக நின்று கொண்டிருந்தாள். அவரை அங்கே அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க வில்லை.

இங்கேதான் இருக்கிறாயா? எனக் கேட்டபடி அவர் உள்ளே நுழைந்து சாவதானமாக அங்கிருந்த ஒரு புது மெத்தை நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவள் என்ன சொல்வது என்று தெரியாமல், மெல்ல தலையாட்டி விட்டு, சுவற்றோரமாக சாய்ந்து நின்று கொண்டாள். பக்கத்து அறையொன்றிலிருந்து வந்த வெளிச்சம் அவள் மீது பட, அவளின் நிழல் பக்கவாட்டுச் சுவற்றில் பட்டு, ஒரு அப்ஸரஸின் சில் அவுட் ஓவியம் போல தோற்றமளித்தது.

என்னுடைய கேள்வி ஒன்றுக்கான பதில் உன்னிடம் இருக்கிறது என்பதையாவது நீ நினைவில் வைத்திருக்கிறாயா? என்று கேட்டார். அவள் மெல்ல தலையசைத்தாள். நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா? என்றார். அதற்கும் ஒரு தலையசைப்பு. பிறகு என்ன? என்னுடன் வர சம்மதம் சொல்ல வேண்டியதுதானே? எதற்காக என்னிடமிருந்து ஓடி, ஒளிய வேண்டும் என்றார் சற்றுக் கடுமையாக.

முதன் முறையாக அவள் வாயைத் திறந்து பேசினாள். உங்கள் கண்களைப் பார்த்து எதுவும் சொல்ல பயமாக இருக்கிறது!

எதற்காக பயப்பட வேண்டும்? உனக்காக நான் தரும் ஆஃபர் போதவில்லையா? இல்லை! இதற்கு மேலும் வேண்டும் என்று உன் அம்மா எதிர்பார்க்கிறாளா? உன் அம்மாதானே அவள்? அல்லது சித்தியா? என்றார்.

கல்பனா, பதில் பேசாமல் மீண்டும் அமைதியாக நின்றிருந்தாள்.

என்னதான் வேண்டும் உனக்கு? அதையாவது சொல்லி விடு! நான் சும்மாவேனும் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்ளாமல் இருந்திருப்பேனே? ஏமாற்றங்களையெல்லாம் தாங்கிக் கொள்ளக் கூடிய வயது இல்லை எனக்கு, என்று உனக்குத் தெரியும்தானே?

நான், பெரிய சிட்டியில் வாழ ஆசைப் பட்டுதான், ஆந்திராவிலிருக்கும் எனது கிராமத்திலிருந்து சென்னைக்கே வந்தேன். நீங்கள் மீண்டும் கிராமத்திற்கே அழைக்கிறீர்களே? என்றுதான் யோசிக்கிறேன்.

வெங்கடேஸ்வரனுக்கு சிரிப்பு வந்து விட்டது. என்னது? நீலாங்கரை கிராமமா? அங்கே வீடு கட்டி வசிக்க எத்தனைப் பெரிய பணக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள் தெரியுமா? ஒரு ஏக்கரில் அத்தனை பெரிய பங்களா கட்டி வைத்துக் கொண்டு உன்னை வா! வா! என்று அழைக்கிறேன். அதைப் போய் நீ கிராமம் என்கிறாயே?

மீண்டும் மவுனமாக இருந்தாள்.

சரி! உனக்கென ஒரு காரை கொடுத்து விடுகிறேன். வாரத்திற்கு சில முறை, ஏன் தினமும் கூட நீ சிட்டிக்குள் சென்று சினிமா, ஷாப்பிங் என்று சென்று வா! ஏன் என்று ஒரு வார்த்தை உன்னைக் கேட்க மாட்டேன். இது போதுமா? என்றார்.

இல்லை! என்று அவள் இழுக்க, வெங்கடேஸ்வரன் எழுந்து கொண்டார். அவரின் அருகே சென்று, அவள் முகத்தினைக் கையால் திருப்பி, வேறு யாரேனும் என்னுடன் போட்டியில் இருக்கானா? என்று கேட்டார். இந்த நேரடித் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல், நிலை குலைந்து போனாள் கல்பனா.

சொல்லு! வேறு யாரேனும் என்னை விட நல்ல ஆஃபர் தந்திருக்கிறார்களா? என்றார். வெங்கடேஸ்வரன் ஒரு நவீன உலகின் அனைத்து சாகசங்களையும் கற்றுத் தேர்ந்த ஒரு வெற்றிகரமான மனிதர். தகுந்த விலை கொடுத்தால், எதையுமே விலை பேசி வாங்கி விட முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். அவரை மீறி, அவருக்குப் பிடித்தமான ஒரு பொருள் கை நழுவிப் போகிறது என்பதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சார்! அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னோட மத்த தேவைகளையும் பார்த்துதான் நான் எதையும் யோசிக்க முடியும். நீங்க எனக்குத் தருவதாக சொல்லியிருப்பதைக் கேட்டால், வேறு எந்தப் பெண்ணாக இருந்தாலும் இந்நேரத்திற்கு உங்களுடன் வந்திருப்பாள். சந்தேகமில்லை! நானும் கூட இப்போதே உங்களுடன் வருவதற்குதான் ஆசைப்படுகிறேன்.

பிறகு என்ன? இப்போதே வா! போகலாம்!

அதற்கில்லை! ஒரே ஒரு பிரச்சனைதான்! ராதிகா அங்கிருக்கும் போது நான் எப்படி அங்கு வரமுடியும் என்று கொஞ்சமேனும் யோசித்துப் பார்த்தீர்களா? அது ஒன்றுதான் இப்போது எனக்குப் பிரச்சனை! அவள் அங்கு இல்லை என்று சொல்லுங்கள்! நான் இப்போதே உங்களுடன் உங்கள் வீட்டுக்கு வந்து விடுகிறேன்.

வெங்கடேஸ்வரன் மவுனமாகி விட்டார். இந்தக் கோணத்தை அவர் யோசித்திருக்க வில்லை! தான் விரும்பியதை உடனே அடைய நினைக்கும் பரபரப்பு, இந்த முக்கிய விஷயத்தை அவரால் யோசிக்க இயலாமல் செய்து விட்டிருந்தது. தலையைக் குனிந்த படி சற்று நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார். பிறகு, எழுந்து கல்பனாவின் அருகில் சென்றவர், நீ சொல்வது சரிதான்! ராதிகாவை அனுப்பி விடுகிறேன் என்றார்.

எப்போது?

இன்று இரவே! இன்று இரவே அவளை அனுப்பி விடுகிறேன்!

அப்படியென்றால், நாளைக் காலையிலேயே நீங்கள் வந்து என்னை அழைத்துச் செல்லலாம்!இப்போது, கல்பனாவின் முகத்தில் பரவசம் கூடி, புன்னகையொன்று பெரிதாக தங்கியிருந்தது.

வெங்கடேஸ்வரன் வேறெதுவும் சொல்லவில்லை! அவரின் குறிக்கோளை அடைவதற்கான தடை எதுவென்று இப்போது அவருக்குத் துல்லியமாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. கதவுக்கருகில் சென்றவர், திரும்பி கல்பனாவைப் பார்த்து, நாளைக்குத் தயாராக இரு! வருகிறேன்! எனச் சொல்லி விட்டு வெளியேறினார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் வெங்கடேஸ்வரன் இதையே யோசித்தபடி சென்றார். எதையும் சுற்றி வளைத்துச் செய்வது அவருக்குப் பிடிக்காத ஒன்று. மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப் படாமல், எப்போதுமே நேரடியாக தனது விருப்பத்தை எதிரில் இருப்பவர்களுக்குச் சொல்லி விடுவது அவரின் வழக்கம். இப்போதும், அப்படித்தான் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டார்.

அவர் காரின் குயிங்க் என்ற சின்ன ஹாரன் சத்தம் கேட்டவுடனே, அந்த விசாலமான கதவு திறந்து கொண்டது. காரை போர்ட்டிகோவிலேயே நிறுத்தி விட்டு, வீட்டினுள் நுழைந்தார். ஹாலிலேயே சமையல் வாசனை அவருக்கு எட்டி விட்டது. உணவின் ருசி தெரிந்த கலைஞன் அவர். வாசனையை முகர்ந்த உடனே, முகம் சுளித்துக் கொண்டார். சே! வழக்கம் போல உருளைக் கிழங்குப் பொரியலைத் தீய்த்து விட்டாள் எனக் கருவிக் கொண்டே, மாடிக்குச் சென்றார்.

இரவு உடையினை அணிந்து கொண்டு, ஒரு கிரிஸ்டல் குவளையில், சில ஐஸ் துண்டுகளின் மீது கொஞ்சம் ஸ்காட்ச் விஸ்கியை ஊற்றிக் கொண்டார். மெல்ல அருந்தி கொண்டே, எப்படி ஆரம்பிப்பது என ஒரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டார். மது அவருக்குள் இறங்கி மெல்ல அவரின் தயக்கங்களைத் தளர்த்த, ஒரு முடிவுக்கு வந்ததைப் போல வெளியில் வந்து, தனது மனைவியின் அறைக்குள் சென்றார்.

அங்கே, அவருடைய மனைவி கட்டிலில் அமர்ந்திருக்க, அவருடைய மாமியார் அருகில் அமர்ந்து ஏதோ பக்திப் பாடல்களை மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தார். இவரைக் கண்டவுடன், மாமியார் சட்டென எழுந்து அறையின் ஓரத்திற்குச் செல்ல, இவர் தனது மனைவியின் அருகில் சென்று, அவருடைய காதருகே விஷயத்தை மெல்லச் சொல்லத் துவங்கினார்.

அவளுக்கு சற்று நேரம் ஒன்றும் விளங்க வில்லை! விஷயம் புரிபட ஆரம்பித்தவுடன், அவள் உடல் திடீரென தூக்கிப் போட, கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள். தனது அம்மாவை நோக்கி வேகமாகச் சென்று, அவளைக் கட்டிக் கொண்டு, அம்மா! கல்பனா ஒத்துக் கொண்டாளாம்! இவரே நேரில் போய் அழைத்தவுடன் மறுபடியும் நம்ம வீட்டுக்கு சமைக்க வருவதாக ஒப்புக் கொண்டாளாம்! என்று உற்சாகமாகக் கத்தினாள்.

பிறகு, வெங்கடேஸ்வரனைப் பார்த்து, அப்புறம் என்ன! இன்னும் ஏன் மசமசவென இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? நீங்களே கீழேப் போய், அந்த ராதிகாவை சம்பள பாக்கியை செட்டில் பண்ணிட்டு, சமையல் வேலையை விட்டு அனுப்பிடுங்க.

குறிப்பு: ஆங்கிலத்தில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை எழுத்தாளர் ஓ ஹென்றி! சமீபத்தில் அவருடைய சில கதைகளை மீள் வாசிப்பு செய்து கொண்டிருக்கும் போது, சில குறிப்பிட்டக் கதைகளை தமிழில் எழுதிப் பார்த்தால் என்ன? என்றுத் தோன்றியது.

இது மொழிபெயர்ப்பல்ல! ஓ ஹென்றியின் ஏதாவது ஒரு கதையின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை என்னுடைய நடையில் தமிழில் எழுதிப் பார்த்துள்ளேன். இது ‘Girl’ என்ற ஓ ஹென்றியின் கதை! பல நீக்கல்கள், சேர்த்தல்கள் இருக்கும்! ஒரு எழுத்துப் பயிற்சிக்காக நான் செய்து வரும் முயற்சி இது!

  •  

தாமிரா

சில ஆண்டுகளுக்கு முன் எனது ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ புத்தகத்துக்கு ஒரு நூல் விமர்சனக் கூட்டம் நெல்லை ஜானகிராம் ஹோட்டலில் நடைபெற்றது.

பவாவும், ஷைலஜாவும் (பதிப்பாளர் எனும் முறையில்) ஒருங்கிணைத்த நிகழ்வு என்பதால் அவர்கள் நட்பின்பாற்பட்டு நெல்லையின் பெருமைமிகு எழுத்தாளர்கள் அனைவருமே வந்து, மேடையையும், பார்வையாளர் வரிசையையும் நிரப்பி இருந்தனர்.

நிகழ்ச்சியை விடுங்க. அது வேற சப்ஜக்ட். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் அருகில் வந்தவரை, பவா எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கருணா.. இவர்தான் தாமிரா. எழுத்தாளர், இயக்குநர். எனது நண்பர்.

நீங்கதான் எஸ்கேபி கருணா சாரா? வண்ணதாசன் அண்ணாச்சி பேசியதை கேட்டேன். அண்ணாச்சி கிட்டே இவ்ளோ பாராட்டு வாங்குறது பெரிய விஷயம்தான் என்றார் தாமிரா.

அடுத்த பத்து நிமிடங்களிலேயே இறுக்கமான நட்பு அது.

நாளைக்கு நீங்க எல்லோரும் மதிய சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வந்துரணும் பார்த்துக்கோங்க என சொல்லிட்டு பதில் எதிர்பாராமல் புறப்பட்டு போயிட்டார்.

பவாவின் உலகப் புகழ் பெற்ற நேர மேலாண்மையால் மறுநாள் பகல் 11 மணிக்குப் போக வேண்டிய நாங்கள் மதியம் 2 மணிக்கு தாமிராவின் வீட்டுக்குச் சென்றோம். நெல்லையை விட்டு தள்ளி ஒரு கிராமத்தில் இருந்தது வீடு.

போகும்போதே செம பசி. வெளியே அமர்ந்து காய் வெட்டிகிட்டு இருந்த தாமிரா, வந்துட்டீங்களா? என்றபடி உள்ளே எட்டிப் பார்த்து ஏம்மா? உலையை வை என்றவுடன் திக்கென ஆயிடுச்சு.

என்னங்க? இப்போதான் உலையேவா? பசிக்குதுங்க என்றான் இளங்கோ.

அட இருங்க சார். அதென்ன 10 நிமிஷ வேலை. அப்பாவும் வந்துரட்டும்.

அப்பா வந்தார். சைக்கிளோ, டி.வி.எஸ்.50யோ, நடந்தோ.. அது நினைவில்லை. ஆனால் அவரோட கம்பீரத்தைப் பார்த்தால், அவர் தேரில் வந்து இறங்கினார் என்றிருந்தால் நீங்கள் நம்பியிருப்பீர்கள்.

எங்களுக்கு தாமிராவை விட அவரோட அப்பாவை மிகப் பிடித்துப் போயிட்டார். பவாவும், அவரும் அதே கணத்தில் நெருங்கிய நண்பர்கள் ஆகிட்டாங்க. சக விவசாயியாக, சக குடியானவனாக, சக கோழி வளர்ப்பவர்களாக, சக மானாவாரி பயிர் காதலர்களாக.. அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ள ஏராள விஷயங்கள் இருந்தன.

முட்டிவரை ஏற்றிக் கட்டிய லுங்கி, ஒரு முண்டா பனியன், உடலெங்கும் வெள்ளை முடி, உழைத்தக் கரங்கள், உறுதியான உடல் என சற்றேறக்குறைய பம்பாய் படத்தில் செங்கல் சூளை வைக்கும் ராஜா கிருஷ்ணமூர்த்தியை நினைவு படுத்தினார்.

மணி 3:30 போல இலை போட்டார்கள். நாங்கள் தரையில் அமர்ந்து கொள்ள, தாமிராவே பரிமாறினார்.

சுட சுட நெய் சோறு.

பாய் வீடு என்பதால் பிரியாணியை மனசு எதிர்பார்த்து இருந்தது.

பிரியாணி இல்லையா? இளங்கோ கேட்டே விட்டான். அவன் மனசுலே எதுவும் தங்காது.

நீங்க இதை சாப்பிட்டுப் பாருங்க. அப்புறம் சொல்லுங்க என்றார் சற்றே தள்ளி சாய்வு நாற்காலியில் அமர்ந்து விசிறிக் கொண்டிருந்த தாமிராவின் அப்பா.

நெய் சோற்றின் மீது, சூடான ஆட்டுக்கறி குழம்பை ஊற்றினார்கள். அதை பிசைந்து வாயில் வைத்த கணம் ஆண்டு, தேதி, நேரம் அனைத்தையும் கடந்து ஒரு ருசியாக வாழ்நாளெல்லாம் நினைவில் உறைந்து இருக்கும்.

நாங்கள் அள்ளி அள்ளி சாப்பிட்ட வேகத்தையும், ஆவேசத்தையும் கண்ட தாமிராவின் வீட்டுப் பெண்கள் இது மட்டுந்தான் உங்களுக்கு., வேற கறி, கூட்டு எதுவும் இல்லை என சிரித்தனர்.

அது எதுக்கு? பிரியாணியை விட ருசியான சாப்பாட்டை இப்பதான் நான் சாப்பிடுறேன் என்றேன்.

எல்லாம் முடிந்து புறப்படும்போது, புது விவசாயி பவாவுக்கு, மூத்த விவசாயி ஒரு பூசணிக்காயை தந்தார்.

பின்னாளில், சில நிகழ்ச்சிகளில் தாமிராவை சந்தித்த போதெல்லாம்,

ஊர்லே அப்பா எப்படி இருக்கார்?

அந்த நெய் சோறு, கறிக்குழம்பு மறுபடியும்கிடைக்குமா?

இந்த இரண்டு கேள்விகளைதான் கேட்பேன்.

அப்பாவை பார்க்கணும்னா நீங்க தின்னவேலி போகணும்.

நெய்சோறுன்னா இப்பவே வீட்டுக்கு வந்தா கூட போதும். இங்கதான் இருக்காங்க என்பார்.

இப்போது தாமிரா நம்முடன் இல்லை.

மிகச் சிறந்த வாசகர், எழுத்தாளர், படைப்பாளி., எல்லாவற்றையும் விட அற்புதமான முற்போக்குச் சிந்தனையாளர். இந்தக் காலக்கட்டத்தில் சமூகத்தில் மிகவும் அரிதான, மிக மிக தேவையான ஒன்றான, சுயசிந்தனையாளரை வெகு விரைவில் தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது.

தாமிராவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் அந்த வீட்டுக்குச் செல்ல இருக்கிறது. நண்பர்கள் பலரையும் உடனிருக்க முடியாமல் வெகு தொலைவில் தள்ளி வைத்திருக்கிறது காலம்.

தாமிராவின் அப்பா இப்போதும் நெல்லை கிராமத்து வீட்டில்தான் உள்ளாராம்!

தனது பிள்ளையின் உடலைக் காண்பதை விட ஒரு தகப்பனுக்கு வேறென்ன பெரிய வேதனை இருக்க முடியும்?

வாழ்நாளெல்லாம் கடும் சோதனைகளைக் கடந்து வந்த விவசாயி அவர். இந்தச் சோதனையும் கடந்து வரும் வலிமையை எல்லாம் வல்ல இறை அவருக்கு அருளட்டும்.

தாமிரா, இனி நம் நினைவுகளில் வாழ்வார்.

-எஸ்கேபி. கருணா

  •  

புகழஞ்சலி

ஈரோடு டாக்டர் ஜீவா நேற்று முன்தினம் மறைந்து விட்டார். இந்தச் செய்தி அளித்த மனச்சோர்வு கடுமையானது.

ஜெயமோகனின் ‘அறம்’ புத்தக வெளியீட்டுக்கு அவர்தான் தலைமை. ஈரோட்டில் நடைபெற்ற அந்த விழாவில் நான் அந்தத் தொகுப்பில் உள்ள ‘வணங்கான்’ கதையைப் பற்றி பேசினேன். நிறைவுரையாக ஜெயமோகன் பேசிய அற்புதமான உரையைக் கேட்டு கிறங்கிப் போய் வெளியே நின்றிருந்தபோது, எனது தோளைத் தட்டி, நீங்க மிகச் சிறப்பாக பேசினீங்க கருணா. உங்க பேஒச்சில் உண்மை இருந்தது என்றார் டாக்டர் ஜீவா.

தாமதமாகச் சென்றதால் அவரோட தலைமையுரையை நான் கேட்டிருக்கவில்லை. எனவே, பேச ஏதுமின்றி, ரொம்ப நன்றி டாக்டர். இந்த விழாவை கூட வெளியில் நல்ல ஏ.சி ஹாலில் வைத்திருந்திருக்கலாம். நிறைய விஐபிங்க வந்திருந்தாங்க என்றேன்.

உடனே அவர் பதறிப்போய், எதுக்கு? எதுக்கு? பேசப் போறோம். கேட்கப் போறோம். மகாத்மாவோட நினைவுகளோட வீட்டுக்குப் போகணும்.. அவ்வளவுதானே! அதுக்கு ஏன் ஏ.சி ஹால் செலவெல்லாம்? இந்த பள்ளிக்கூட டியூப்லைட், ஃபேனே ஆடம்பரம்தான் என்றார் அந்தப் பரிபூரண காந்தியவாதி.

அந்தக் கணத்திலேயே எனக்கு ஓர் ஆசானாக எனது மனதில் வந்து அமர்ந்து கொண்ட டாக்டர் ஜீவா நேற்றுவரை எனக்கும், நண்பர் பவா செல்லதுரைக்கும் ஒரு ஞானத்தந்தை ஆக இருந்தார் என்பதுதான் உண்மை.

புற்றுநோய் மருத்துவத்தில் மிகச் சிறந்த நிபுணர். ஆனால், தனியார் மருத்துவமனை தொடங்கி லட்சங்களை சம்பாதிக்க வில்லை. மாறாக, தமிழகத்திலேயே முதன்முறையாக கோ ஆப்ரேட்டிவ் முறையில் ஈரோட்டில் மருத்துவமனை தொடங்கினார். நூறு செல்வந்தர்களை அணுகி ஆளுக்கு 2 லட்சம் மட்டும் பெற்று தொடங்கப்பட்ட மருத்துவமனை அது. புற்றுநோய் வாய்ப்பட்ட எளியவர்களுக்கு மிகக்குறைந்த அல்லது இலவசமாக சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.

அவரது வாழ்நாள் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். ஏழை மக்களுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அவர்களிடம் இருக்கும் பணத்தின் அளவுக்கு அல்லாமல், அவர்களுடைய நோய் தீவிரத்தின் அடிப்படையில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

அதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு கூட்டுறவு முறை மருத்துவமனை பலதாக பெருகி வியாபித்து மக்களுக்கு உதவியது.

பாண்டிச்சேரியில் மிகச் சிறப்பான வசதிகளுடன் தொடங்கப்பட்ட ஒரு மருத்துவமனையை என்னையும் Board Member ஆக சேர்ந்து பொறுப்பேற்று நடத்தக் கேட்டு ஒருநாள் டாக்டர் ஜீவாவும், பாண்டி மாஸ் ஹோட்டல் அதிபர் எம்.ஏ.சுப்ரமணியமும் என்னை சந்தித்தனர். அத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்க நான் மனதளவில் தயாராக இல்லாதக் காரணத்தால் அது நடக்கவில்லை. ஆனால், அப்போதுதான் இப்படிப்பட்ட மேன்மையான மனிதர்களை அறிந்து கொண்டேன்.

காந்தி, பெரியார், அம்பேத்கர் எனும் வரிசையில் ஈரோடு டாக்டர் ஜீவானந்தத்தையும் நான் மாமனிதர் என்பேன்.

முதல் மூவரும் தத்தமது தனிச் சிந்தனையாலும், உழைப்பாலும் மாமனிதர்கள் ஆனவர்கள்.

எங்கள் ஜீவா சார், இறுதிவரை மனிதனாக வாழ்ந்த காரணத்தாலேயே மாமனிதராக ஆனார்.

அவருக்கு எனது புகழ் அஞ்சலிகள்.

-எஸ்கேபி. கருணா

  •  

கருப்பு கருணா

கருணாவை போய் பார்த்தேன்.

குளிர்ப்பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக அவரது அருகில் இருக்கும் செங்கொடி இம்முறை அவரது மேலே போர்த்தப்பட்டிருந்தது. அதே களையான முகம். வாயில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை மட்டுமே அந்நியமாக இருந்தது. சிறிது நேரம் உற்றுப் பார்த்தேன். போன கூட்டத்துக்கு நீங்க வரலையே! ஊரில் இல்லையா கருணா என கேட்டுவிடுவார் போலிருந்தது. சட்டென விலகி வந்து விட்டேன்.

நான் பள்ளியில் படித்த காலத்தில் பவா செல்லதுரையும், கருணாவும் தான் எனது ஆதர்சங்கள். எங்க சீனியர்கள் எல்லாம் பாயும் புலி ரஜினி மன்றம், காக்கிச் சட்டை கமல் மன்றம் என பிரிந்து மாய்ந்து கொண்டிருந்த வேலையில், இவர்கள் இருவரும் தத்தமது தோள்களில் ஜோல்னா பை. கைகளில் புத்தகங்களுடன் சைக்கிளில் வலம் வருவார்கள்.

எனக்கு வாசிப்பு முகிழ்ந்து கைகூடி வந்தக் காலம்! நான் படிக்கத் தவற விட்டக் கதைகளை, புத்தகங்களை நாடி இவர்களிடம் செல்வேன்.

கருணாவை நான் நெருக்கமாகப் பார்த்தது, எனது அண்ணன் கு.பிச்சாண்டி முதன் முறையாகத் தேர்தலில் நின்ற 1989 ம் ஆண்டில்தான்! அப்போது எங்கள் ரைஸ்மில் வளாகம் முழுவதும் பவா, கருணாவிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஒரு புறம் பெரிய பேனர்கள் வரையப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருபுறம் இரவெல்லாம் வீதி நாடகங்களுக்கான ஒத்திகைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

நடுஇரவில் சென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எங்கள் நகரச் செயலாளர் அண்ணன் டி.என். பாபு அவர்களுக்குப் பெரிய கேனில் டீ வாங்கிக் கொண்டு வந்து தருவார். ஏறக்குறைய 40 நாட்கள் இரவெல்லாம் ஒரு கிராமம் விடாமல் சென்று வீதி நாடகங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு நடத்திய கருணாவை நான் பார்த்திருக்கிறேன்.

பிறகு, பல டீக்கடை விவாதங்களில் சந்தித்திருக்கிறேன்.

புத்தாண்டு கலை, இரவுகளில் விடிய விடிய உடன் இருந்திருக்கிறேன்.

த.மு.எ.ச கூட்டங்களை பின் வரிசையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். பிறகு முன்வரிசைக்கு அழைத்து வரப்பட்டு அமர வைக்கப் பட்டிருக்கிறேன். ஏதோ ஒரு நாளில், இதே பவா, கருணாவால் மேடைக்கும் அழைக்கப்பட்டு பேச வைக்கப் பட்டிருக்கிறேன். நிறைவாக, திருவண்ணாமலையில் நடந்த தமுஎச மாநில மாநாட்டுக்கு வரவேற்புக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பானதொரு மாநாடு நடைபெற பணியாற்றி இருக்கிறேன்.

கருணாவை வேறெங்கெல்லாம் பார்த்துள்ளேன் என நினைத்துப் பார்க்கிறேன்!

கார்மேல் பள்ளி மரத்தடி கூட்டம், டேனிஷ் மிஷன் பள்ளி மேடை, சாரோன் சர்ச் வாசல் என பல இடங்கள் இருந்தாலும், சட்டென எனக்கு நினைவுக்கு வருவது அண்ணா சிலை அடியிலும், பெரியார் சிலை அடியிலும் நடைபெறும் போராட்டக் களங்கள்தான்..

நான் அந்த வழியே கடந்து செல்லும் போதெல்லாம், செங்கொடி, பேனர்களுடன் கருணா ஆவேசமாக முழங்கிக் கொண்டிருந்த அந்தக் காட்சி மட்டுமே எனது நினைவில் படிமமாக படிந்துள்ளதை இப்போது உணர்கிறேன்.

திருவண்ணாமலை நகரில் இலக்கியத் தளத்துக்கு பவா செல்லதுரை என்றால், போராட்டக் களத்துக்குக் கருப்பு கருணாதான்.

எத்தனை எத்தனை போராட்டங்கள்!

அண்ணாமலையார் கோவிலை தொல்லியியல் துறையிடம் இருந்து மீட்டெடுத்தப் போராட்டம்.

பவழக் குன்று மலையை நித்தியானந்தாவிடம் இருந்து காப்பாற்றிய போராட்டம்.,

பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து, ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தை எதிர்த்து, கலைஞர் கைதை எதிர்த்து, சமூகநீதி பறிப்பை எதிர்த்து என தார் சாலைகளில் நான் பார்த்த கருணாதான் இனிமேல் எனக்கு நிரந்தர நினைவுச் சித்திரம் என இப்போது தோன்றுகிறது.

இதெல்லாம் எங்கள் ஊரில் அனைவருக்கும் தெரிந்ததுதான். யாருக்கும் தெரியாத ஒரு விஷயம், நான் எஸ்கேபி கருணாவாக ஆனது இந்தக் கருப்பு கருணாவால்தான் என்பது.

அப்போதெல்லாம் நான் பவா வீட்டுக்குச் செல்லும் போது, இரண்டு கருணா வந்து போவதால், எந்தக் கருணா வந்து போனார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல, அனைவருக்கும் குழப்பம் வரும். எனவே, ஜீனியர் கருணாவான எனக்கு அந்த வீட்டில் எஸ்கேபி கருணா என பெயரிடப் பட்டது.

பின்னாளில் ஃபேஸ்புக் வந்தவுடன், இந்தக் கருணா “கருப்பு கருணா” ஆனார். அப்போது நான் அடப்பாவி மனுஷா! நீங்க கருப்பா இருப்பது இப்போதுதான் தெரிய வந்தததா? அப்பவே இந்தப் பேரை வச்சுட்டு இருந்திருந்தால், நான் வெறும் கருணாவாவே இருந்திருப்பேனே என வேடிக்கையாக கேட்டேன். அவரது அந்த பளீர் அடையாளச் சிரிப்புடன், நீங்க எப்பவுமே வெறும் கருணாவா இருக்கக் கூடாதுன்னுதான் இப்படி ஆனது என்றார்.

கருணாவிடம் எனக்கு மிகப் பிடித்த தனித்தன்மை ஒன்று உண்டு. அது தனக்குப் பிறகான தொடர்ச்சியை முனைந்து உருவாக்கும் தலைமைப் பண்பு அது. தமுஎசவின் அரசியல், கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஒரு பெரிய இளைஞர் கூட்டத்தையே உருவாக்கிச் சென்றுள்ளார்.

தமுஎச நிகழ்ச்சிகளுக்கு அழைப்பை தருவதற்காக என்னிடம் பலமுறை வெவ்வேறு புதியவர்கள் வருவார்கள். அவர்கள் வந்து போன பிறகு, என்னை போனில் அழைத்து என்ன கருணா! இன்விடேஷன் வந்துருச்சா? அந்த சிகப்பு டி ஷர்ட் பையனை கவனிச்சீங்களா? புதுப் பையன்.. துடிப்பா இருக்கான். முறையாக வளர்த்து விட்டால் நம்மையே மிஞ்சிடுவான் என சந்தோஷமா சிரித்தபடி சொல்வார். அந்த உற்சாகம் அதைக் கேட்கும் எனக்கும் தொற்றிக் கொள்ளும்.

அந்தக் கருணா,இப்போது தனது குடும்பத்துக்கு என்ன செய்து சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அவரது மகனைப் பார்த்துள்ளேன். இளஞ்சிரிப்போடு எப்போதும் துடிப்பாக ஓடியாடி வலம் வரும் இளைஞன். கருணாவின் மனைவி எனது பள்ளித் தோழி. துணிச்சலான பெண். அந்தக் குடும்பத்தை இதுநாள் வரையில் தனித்துத் தாங்கிய தூண்.

தனது இளமைக்காலம் தொட்டு இறக்கும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும், அதன் கலை, இலக்கியப் பிரிவான த.மு.எ.சவுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த பல போராளிகளின் பட்டியலில் கருணாவின் பெயர் இன்று இணைந்துள்ளது.

எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் தனக்காகப் போராடிய இந்த மனிதனை நமது திருவண்ணாமலை நகரம் மறந்து விடக் கூடாதே என எனக்குப் பதைப்பாக உள்ளது.

மற்றபடி, பலகோடி சாமானிய மனிதர்கள் வாழும் இந்த நாட்டில், சாமானியர்களுக்கான ஒரு பெருவாழ்வை வாழ்ந்து விட்டுச் சென்றுள்ளார் நண்பர் கருணா.

இனி, அவரது குடும்பத்தின் ஏற்றங்களுக்கான பொறுப்பு, பவா, ஷைலஜா போன்ற அவரது பால்ய நண்பர்களுடையது., அவருடன் காலத்தைக் கழித்த அவரது இயக்கத் தோழர்களுடையது., அவர் உருவாக்கிய த.மு.எ.ச இளைஞர்களுடையது., அவர் பாடுபட்டு வளர்த்தெடுத்த அவருடைய கட்சியுடையது., அவர் ஓடோடி சென்று உதவிய மனிதர்களுடையது., அவர் அரணாக நின்று பாதுகாத்த இந்த நகரத்துடையது., உங்களுடையது., என்னுடையது.

இன்று மாலை நான் சென்று பார்த்தபோது, கருணாவின் தலைமாட்டில் சின்ன விளக்கு கூட இல்லை. எல்லாவிதமான சடங்குகளையும் முழுமையாக மறுதலித்து கருணாவின் வாழ்க்கைக்கு அர்த்தம் கூட்டியிருக்கிறார் அவரது மனைவி. உடல் அடக்கம் கூட இல்லையாம்! முழுமையாக அவரது உடலை அரசு மருத்துவக் கல்லுரிக்கு தானம் அளிக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

தான் பேசிய பேச்சுகளுக்கும், வாழ்ந்த வாழ்க்கைக்கும் எவ்வித இடைவெளியும் இன்றி எத்தனைப் பேரால் இங்கே வாழ்ந்து விட முடியும்? நண்பர் கருணாவுக்கு இதைச் சாத்தியப் படுத்தியுள்ளது அவரது குடும்பம்.

போய் வாருங்கள் கருணா., உங்கள் மரபின் தொடர்ச்சியாக ஒரு குரலாவது இங்கே எந்நாளும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

-எஸ்கேபி. கருணா

  •  

பவா எனும் பெருங்கனவுக்காரன்

ஒரு நாள் பவா வீட்டுத் தெருமுனையில் பவாவுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு மூன்றுச் சக்கர வண்டியில் காய்கறிகளை வைத்துக் கொண்டு ஒரு அம்மா விற்றுக் கொண்டு வந்தார்.

கருணா! அந்தக்கா பேரு கஸ்தூரி. காய்கறி விற்கிறாங்களே! அவர்களிடம் எடை மிஷின் இருக்கான்னு பாருங்க என்றார்.

அந்த வண்டி அருகில் கடக்கும்போது பார்த்தேன். இல்லை.

எப்படி பவா?

கேட்கிறவங்களுக்கு அப்படியே கையில் அள்ளித் தருவாங்க. போதும்! என வாங்குறவங்க சொல்லும்வரை அள்ளிப் போட்டுகிட்டே இருப்பாங்க.

என்ன பவா சொல்றீங்க? நம்மாளுங்க போதும்னு சொல்லவே மாட்டாங்களே!

அதான் இந்த அக்காவின் சாதனை. தன்னோட நேர்மையால் தனது வாடிக்கையாளர்களையும் நேர்மையா மாத்தி வச்சிருக்கு என்றார்.

இது நம்பவே முடியாத நிஜம் பவா என்றேன்.

இந்த அக்காவுக்கு நான் ஒரு வீடு கட்டித் தரப் போறேன்.

அசந்து போய் நின்ற எனக்கு, மேலுமொரு அதிர்ச்சியைத் தந்தார்.

தனக்குப் பிரியமானவர்களுக்கு சொந்த வீடு இல்லையெனில், பவா அவர்களை ஊக்கப்படுத்தி வீடு கட்ட வைப்பார். கட்ட இயலாத நண்பர்களுக்கு தானே வீடு கட்டியும் தருவார்.

அவரது நண்பர் கவிஞர் ஃபீனிக்ஸ் ஓர் ஆட்டோ ஓட்டுநர். ரெண்டு பெண்களை வச்சுகிட்டு ஒண்டுக் குடித்தனத்தில் கஷ்டப்படாதேடா என அவரை அழைத்து தனது நிலத்திலேயே அவருக்குச் சொந்தமாக ஒரு மனை கொடுத்து, தானே ஒரு வீடும் கட்டித் தந்துள்ளார். அந்த வீட்டில் வாழ வாய்ப்பில்லாமல் ஃபீனிக்ஸ் அகால மரணமடைந்த போதும், அவரது மனைவி, மகளுக்கு இப்போது பவா கட்டித் தந்த வீடுதான் அடைக்கலம் என்பது அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் எனக்கு மன நிறைவை தரும்.

வீடு கட்டித் தர பவா தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளே கதைகளாக்கும் அளவுக்கு சுவாரஸ்யமானவை. தனது சொந்த நிலத்தில் ரோட்டை ஒட்டியவாறு ஒரு மனையை ஒதுக்குவார். அந்த மனையை அவர்கள் பேருக்கே பதிவும் செய்து விடுவார். பிறகு, அவரே உட்கார்ந்து அளவில் கச்சிதமாக ஒரு வீட்டு ப்ளான் வரைவார். ஒரு நூலகத்துக்கான கூடம், ஓரு படுக்கை அறை, ஒரு சமையலறை மற்றும் உணவறை. அதை கருங்கல் கட்டிடமாக வடிமைத்து, தனது நிலத்தின் இன்னொரு பகுதியில் இருந்து பாறைகளை உடைத்து அதற்கான கருங்கற்களைச் சேகரிப்பார். முதலில் கடக்கால்.

பிறகு, அவரிடம் பணம் சேரும்போதெல்லாம் அந்தக் கட்டிடம் வரி வரியாக மெல்ல எழும்பும். திடீரென ஒரு நாள் மேல் தளம் போடும் அளவுக்கு அந்தக் கட்டிடம் வந்து நிற்கும். அந்தக் கட்டத்தில் தனது நண்பர்களை அணுகுவார். ஒருத்தர் சிமெண்ட் மூட்டைகள், ஒருத்தர் கம்பி, ஒருத்தர் கான்கிரீட் செலவு என பகிர்ந்து கொள்ள, ஒரு நாள் கான்கிரீட் தளம் போடப்படும். அந்த நாள் அப்படியாக நல்ல நாள் ஆகி விடும்.

ரெண்டு பேர் வேலை செய்தாலே கோழி அடிச்சு குழம்பு வைக்கும் பவாவுக்கு கான்கிரீட் போட 15 பேர் வரும்போது சொல்லவா வேண்டும்! அன்று மதியம் அனைவருக்கும் கறிச்சோறு கட்டாயம் உண்டு.

கடைசியாக ஃபினிஷிங் ஸ்டேஜ் எனப்படும் கட்டத்தின் நிறைவின் போதுதான் என்னிடம் வருவார். கல்லூரியில் கட்டிடங்கள் கட்டியது போது மீதமிருக்கும் ஸ்விட்ச் பாக்ஸ் முதல் எலக்ட்டிகல் பைப், டைல்ஸ், கிரானைட் கல் வரை எனக்குப் பயன்படாதவைகளைத் தேர்ந்தெடுப்பார். பிறகு அவைகளைக் கொண்டு சென்று தானே இருக்கும் பொருட்களுக்கு ஏற்ப தரை, சுவர்களை வடிவமைத்து வீட்டை நிறைவு செய்வார்.

அப்படி தனக்கு அவ்வப்போது வந்து காரோட்டும் டிரைவர் ரமேஷுக்கு ஒரு வீடு கட்டி முடித்துள்ளார். அதை நேற்று என்னைத் திறந்து வைக்கச் சொன்னார். தோழர் எஸ்.ஏ.பி தலைமையற்க, இயக்குநர் மிஷ்கின், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், ஷைலஜா முன்னிலையில் நிறைந்த மனதுடன் அந்த வீட்டைத் திறந்து வைத்தேன்.

அந்த வீடு கட்டப்படும் போதே பல முறைப் பார்த்திருக்கிறேன். இதற்கு முன்பு பவா கட்டித் தந்த ஃபீனிக்ஸ் வீட்டுக்கு பக்கத்து வீடு. கட்டிட வேலையின் போது, காய்கறி வண்டி கஸ்தூரி அக்கா சித்தாளாக வேலை செய்ததை கவனித்தேன்.

வீட்டுத் திறப்பு விழா முடிந்து புறப்படும்போது அந்த வீட்டு பக்கத்து மனையைக் காட்டி, இந்த இடத்தில்தான் கஸ்தூரி அக்காவுக்கு வீடு கட்டப் போறோம் கருணா என்றார். நிச்சயம் கட்டுவார். அப்போது புது வீட்டுக்காரன் ரமேஷ் அந்த வீடு கட்ட பெரியாள் வேலை செய்வான்.

பவா தொடங்கி வைத்திருப்பது ஒரு மானுடப் பேரன்பின் சங்கிலி. நன்றி உணர்வுள்ளோர் அதில் ஒரு கண்ணியையும் அறுந்து போக விட மாட்டார்கள்.

பாவா காண்பதெல்லாம் எப்போதுமே பெருங்கனவுதான். அவரது நம்பிக்கையும், நல்லெண்ணமும் எப்படியோ அந்தக் கனவுகளை நினைவாக்கி விடுகின்றன.

நண்பர் பவாவின் பேச்சில், எழுத்தில், கதை சொல்லலில் எப்போதுமே தவறாமல் தட்டுப்படும் பெயர் என்னுடையது என்பதில் எனக்குப் பெருமை உண்டு.

அண்மையில் படித்த ஒரு கவிதை..
“அவன் தோளில்
ஏற்றிச் சுமந்து செல்லும்
மகளையும் சேர்த்ததுதான்
அவனது உயரம்”.
என்று ஒரு தகப்பனைச் சொல்லும்.

அதைப் போலத்தான் எங்கள் உயரத்துக்கு எங்கள் பவா.

– எஸ்கேபி. கருணா

  •