சிம்ஃபொனி ஒரு அறிமுக பார்வை
சிம்ஃபொனி என்றால் என்ன
மேற்கத்திய செவ்விசை மரபில் உருவான கருவிகளின் சேர்ந்திசை வடிவம் சிம்ஃபொனி . 17ம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்த இவ்வடிவம், மேற்கிசையின் மணிமகுடமான இசைவடிவம் என்று சொல்லத்தக்கது. மேற்கிசையுலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களின் கனவு இசைவடிவமாக, அவர்களின் உச்சபட்ச கலையாற்றலின் வெளிப்பாடாக அமைந்த, அமைந்துவரும் இசைவடிவம் சிம்ஃபொனி.
மேற்கிசையில் இது ஒன்றுதான் இசைவடிவமா
இல்லை. மேற்கில் பல்வேறு இசைவடிவங்கள் உருவாகி வழங்கி வந்திருக்கின்றன. குறிப்பாக பின்வரும் இசைவடிவங்களைச் சொல்லலாம்.
சொனாடா – நமது கீர்த்தனை போல துவக்கம், நடுப்பகுதி, முடிவு என்ற கட்டுமானத்தில் அமைக்கப்படும் இவ்விசை வடிவம், வடிவ நேர்த்தியை மைய நோக்கமாகக் கொள்வது. ஏதாவது ஒரு கருவியை மையமாகக் கொண்டு பெரும்பாலும் இசையமைக்கபடும்.
கான்சார்டோ – இவ்வடிவத்தில் ஒரு தனிக்கருவி இசைஞர் இசைக்க அதற்கு பின்னணியாக ஒரு குழுவிசை செயல்படும். இந்த இரண்டின் முரணே (soloist vs orchestra) இவ்வடிவின் மையவிசை.
ஆபரா – இது ஒரு இசைநாடக வடிவம். இயலிசைப் பாடல்களோடு நாடகமாக நடிகர்கள் பாடி நடித்து அரங்கேறுவது.
ஆரட்டோரியோ – இதுவும் இசைநாடக வடிவம். ஆனால் பக்தி சார்ந்த நாடகங்கள். பெரும்பாலும் மேற்கில் கிருத்தவம் சார்ந்த பக்தி கதைகள் இசைநாடகமாக வழங்கப்படும்.
சுயீட் – இது ஒரு தொகுப்பு வடிவம். நடனத்திற்கு உகந்த இசைபாடல்களைத் தொகுப்பாகக் கொண்ட இசைவடிவம்.
பிறகு சிம்ஃபொனிக்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்பு
மேற்குறிப்பிட்ட மேற்கிசையின் முக்கிய இசைவடிவங்கள் அனைத்தின் கூறுகளையும் ஒரு வகையில் உள்ளடக்கியது என்று சிம்ஃபொனியைச் சொல்லலாம்.
சிம்ஃபொனி ஒரு தொகுப்பிசை வடிவம். பொதுவாக இத்தொகுப்பில் நான்கு இசைபாடல்கள் இடம்பெறும். அதன் முதல் பாடல் சொனாடா வகையைச் சார்ந்தது. மூன்றாவது பாடல் சுயீட் இசையைப் போன்ற நடன அல்லது மகிழ்விசை பாணியிலானது. கான்சார்ட்டோவைப் போல சில நேரங்களில் தனித்த கருவியிசை ஒலிக்கவும், பல நேரங்களில் சேர்ந்திசையாகவும் ஒலிக்கவும் வல்லது. மொழியின் துணையோடு உணர்வு பெருக்கும், நாடகீயத்தன்மையோடும் விளங்கும் ஆபரா, ஓரட்டோரியோ வடிவங்களில் வெளிப்படும் பிரம்மாண்டத்தையும், காவிய உணர்வையும் மொழியின் துணையின்றி கருவிகளின் சேர்ந்திசையின் வாயிலாகவே வழங்கவல்லது சிம்ஃபொனி.
எனவே ஒரு வகையில் மேற்கிசையின் அனைத்து வடிவங்களின் கூறுகளைக் தன்னகத்தே கொண்ட வடிவம் இது. சுமார் 400-500 ஆண்டுகளான மேற்கிசையின் பரிணாம வளர்ச்சியின் பலன்களை தனக்குரியதாக்கிக் கொண்ட வடிவம் சிம்ஃபொனி. மேலும் நூற்றுக்கணக்கில் இசைக்கருவிகளும், மொழியோ காட்சியோ என எதன் தேவையின்றியும், கற்பனைக்கான முழு சுதந்திரத்தை இசையமைப்பாளர்களுக்கு வழங்கியும், இசையமைப்பாளரை அதன் மூலம் மகத்தான இசையை மையநாயகனாக்கும் வடிவம் சிம்ஃபொனி.
இவ்வடிவத்தை யார் கண்டுபிடித்தார்கள்
எல்லாக் கலைவடிவங்களையும் போலவே சிம்ஃபொனியும் நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சியைத் தாண்டியே அதன் முழுவடிவை அடைகிறது.
17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆபரா போன்ற இசைநாடகங்கள் மேடைகளில் நிக்ழத்தும்போது, நாடகமேடையின் திரைவிலக இசைக்கப்படும் சிறிய கருவியிசைப்பாடல் sinfonia என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு ஒரு சிறிய திரைவிலக்கத்திற்கான(curtain raiser music) இசையாக துவங்கிய இவ்வடிவத்தின் பயணம் ஓரிரு நூற்றாண்டுகளில் அதன் முழு வடிவத்தை வந்தடைகிறது.
இசை தனது ஆரம்பகாலம் தொட்டே பிறகலைகளை முக்கியமாக இயலை அதாவது மொழியின் துணை கொண்டே இயங்கி இருக்கிறது. மொழியின் துணை கொண்டே உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
மத்திய காலங்களில் மேற்கிசை பல்வேறு இசைக்கருவிகளின் தயாரிப்பிலும், பயன்பாட்டிலும் வளர்ச்சி அடைகிறது. இது மொழியின் துணையில்லாமல் இயங்கக்கூடிய கருவியிசையை உருவாக்குகிறது. இந்த முனைப்பு அக்காலத்தில் தூயஇசை (pure music – ஏனெனில் எதனையும் சாராது தனித்தியங்கும் இசை) என்றழைக்கப்பட்டது.
இவ்வாறு கருவியிசை வளரத்துவங்கிய போது அதற்கென வடிவங்கள் தேவைப்படுகின்றன. முன்னர் வார்த்தைகள், நாடகங்களின் மூலம் வழங்கப்பட்ட உணர்வை இசை மட்டும் தனியாக வழங்க வேண்டி உள்ளது. இது இசைக்கு முன் தோன்றும் சவாலாகிறது. இதற்கெனவே சொனாடா, கான்சார்ட்டோ உள்ளிட்ட வடிவங்கள் தோன்றுகின்றன.
அதேவேளையில் ஆபரா, ஓரட்டோரியோ போன்ற இயலிசை வடிவங்கள் பெருமளவில் மக்களைக் கவர்ந்த பிரம்மாண்டமான இசைவடிவங்களாகத் திகழ்கின்றன. அவற்றிற்கு இணையாக மக்களைக் கவரக்கூடிய கருவியிசைக்கென ஒரு மையவடிவம் தேவைப்பட, இறுதியில் அவ்விடத்தை சிம்ஃபொனி பூர்த்தி செய்கிறது.
இவ்வடிவத்தை வளர்த்த கலைஞர்கள் யார்?
இவ்வடிவத்தை வளர்த்தெடுத்த பெருமை Joseph Haydnஐ(1732-1809 AD) சாரும். அவரே தன்காலத்தில் sinfonia என்ற பெயரில் சிறு துகளாக வழங்கப்பட்ட இசைக்கு ஒரு வரைவினைக் கொடுக்கிறார். தான் இயற்றிய நூற்றுக்கணக்கான சிம்பொனிகளின் மூலம் அக்குழந்தையை இளமைப் பருவத்திற்கு கரையேற்றுகிறார். எனவே சிம்ஃபொனியின் தந்தை என்றழைக்கப்படுகிறார். பின்னர் மொசார்ட் இயற்றிய சிம்பொனிகள் இவ்வடிவத்தை அடுத்த தளத்திற்கு, அதனை தவிர்க்க முடியாத வடிவமாக மாற்றுகின்றன. ஹைடன் வடிவத்தைக் கொடுத்தால், இசைமொழியின் கவிஞனான மொசார்ட் இவ்வடிவத்திற்கென ஒரு அழகியலை உருவாக்குகிறார்.
அதன்பிறகு இவ்வடிவத்தின் பிதாமகர் என்று சொல்லத்தக்க பீதோவனின் வருகை (1770-1827) இவ்வடிவத்தை மேற்கிசையின் மையவடிவாக மாற்றியமைக்கிறது. பீதோவனே சிம்ஃபொனியின் முழுபலத்தை அறிந்து அதனை பிரம்மாண்டமான இசைவடிவமாக, பிரபஞ்சத்தன்மை (universality) கொண்ட இசைவடிவமாக வளர்த்தெடுக்கிறார். நூற்றுக்கணக்கில் ஆனால் சிறுகதைகளாக இயற்றப்பட்ட ஹைடன் காலத்திலிருந்து, ஒற்றை இலக்கத்தில் ஆனால் நாவல் போன்ற விரிவும், காவியத்தன்மையும் கொண்ட வடிவமாக சிம்ஃபொனி உருமாறிவிடுகிறது. பாடல்கள் நீண்டதாகி விடுகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கருவியிசைக் கலைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பீத்தோவனின் ஒன்பது சிம்ஃபொனிகளை, இவ்வடிவத்தின் பெரும்காப்பியங்கள் எனலாம்.
அவரது காலக்கட்டதிலிருந்து இன்று வரை சிம்ஃபொனியே மேற்கின் முடிசூடா இசைவடிவமாக கோலோச்சியிருக்கிறது. 18ம் நூற்றாண்டின் ஹைடன் காலம் துவங்கி 20ம் நூற்றாண்டின் இசையமைப்பாளர்களான ஷாஷ்டகோவிச், ஸ்டரவின்ஸ்கி, மாஹ்லர் வரையில் மேற்கிசையின் அனைத்து அற்புதமான இசைஞர்களும் இவ்வடிவத்தை பிரதானமாக கையாண்டுள்ளனர். ஐரோப்பாவின் நாடுகள் துவங்கி, ருஶ்யா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளை கண்டங்களை பண்பாடுகளைச் சார்ந்தோர் இவ்வடிவத்தில் இசையமைத்துள்ளனர்.
இவ்வடிவத்தின் அமைப்பும் இயல்பும் என்ன
எந்த கலைவடிவத்தினைப் போலவே இப்படித்தான் அமைய வேண்டும் என்று யாராலும் ஆணையிட முடியாது என்றாலும், ஒரு பொதுவான சிம்ஃபொனி வடிவம் எவ்வாறு அமைகிறது என்று காண்போம்.
இத்தொகுப்பிசையில் பொதுவாக நான்கு பாடல்கள் இடம்பெறும்.
முதல் பாடல் : விறுவிறுப்பான தாளகதியில் அமைந்த சொனாடா வடிவப் பாடல்
இப்பாடல் துவக்கப்பகுதி, இடைப்பகுதி, மீள்பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலில் துவக்கப்பகுதியில் இரண்டு வெவ்வேறு இசைத்தொடர்கள் (themes) அறிமுகப்படுத்தப்படும். அவை இடைப்பகுதியில் பல்வேறு விதமாக உருமாற்றமும், வளர்ச்சியும், தீவிரத்தையும், உச்சத்தையும் அடையும். பிறகு மீள்பகுதியில் அத்தொடர்கள் மீண்டும் அழைத்துவரப்பட்டு பாடல் நிறைவை நோக்கி நகரும். இவ்வாறு முதல்பாடல் வடிவ ஒழுங்கையும், விறுவிறுப்பான தன்மையும், தீவிரமான உணர்வனுபவத்தையும் தரவல்லது.
இரண்டாம் பாடல்: நிதானமான தாளகதியில் அமைந்த மெல்லிசை
இப்பாடல் மெல்லிசை பாணியில் (lyrical quality) ஆற்றொழுக்கோடு அமைவது. இது முதல், முரண், மீள் என்ற மூன்று பகுதிகளால் அமைவது. முதல் பகுதிக்கு முரணாக இரண்டாம் பகுதி அமைந்து அல்லது முதல் பகுதியில் ஒலித்ததன் வெவ்வேறு முகங்களாக இரண்டாம் பகுதி அமையும். பிறகு முதல்பகுதிக்கு வந்து பாடல் நிறைவுறும்.
மூன்றாம் பாடல்: நடனகதியில் அமைந்த மகிழ்விசை
இப்பாடல் மேற்கிசையின் நடனத்திற்கான இசைபாடல்கள் வழியில் வந்தது. பலநேரங்களில் மூவசை தாளக்கட்டில் (triple metre) அமைவது. நடனத்திற்கானதாகவோ அல்லது மெல்லிய கேளிக்கை வகையினதாகவோ அமைவது. இதுவும் மூன்று பகுதிகளால் அமைவது. முதல் பகுதி மூவசைத்தாளக்கட்டில் அமையும் சிறிய நடன இசையான minuet. நடுப்பகுதி அதே தாளக்கட்டில் ஆனால் மூன்று கருவிகள் மட்டும் ஒலிக்கும் trio. பின்னர் மீண்டும் minuet.
நான்காம் பாடல்: வேகமான தாளகதியில் நிறைவை அளிக்கும் சொனாடா
இதுவும் நாம் துவக்கத்தில் பார்த்த சொனாடவின் வடிவப்பாடல். ஆனால் நம்மை நிறைவை நோக்கி நகர்த்திச் செல்லும் பாடல். பொதுவாக வேகமான தாளகதியில், அபரிதமான சேர்ந்திசையில் அமைக்கப்பட்டு ஒரு வெள்ளப்பெருக்காக இசையினை நிறைவு செய்யும்வண்ணம் அமைக்கப்பெறுவது.
இவ்வாறு பார்க்கும் போதே தன்னளவில் எவ்வளவு ஓர்மையைக் கொண்ட வடிவம் சிம்ஃபொனி என்பது புலனாகிறது. முதலில் ஒரு விறுவிறுப்பான இசை, பிறகு அதனை ஆற்றுப்படுத்தும் மெல்லிசை, பிறகு அந்த மெல்லிசை மனநிலையிலிருந்து மாற்ற ஒரு மகிழ்விசை, அந்த மனநிலையிலிருந்து மேலும் பிரவாகமான நிறைவிசை. இவ்வாறு தன்னளவில் ஒரு சமனையும், ஓர்மையையும் கொண்டு மக்களை தனது சுழலுக்குள் பலவகையான உணர்வனுபவங்களுக்குள் சிக்கவைத்து, மகிழ்வித்து, சோகத்திலாழ்த்தி, கொந்தளிக்க வைத்து, சிந்திக்கச்செய்து, மெய்மறக்க செய்யும் இசையே இதன் இயல்பு.
சிம்ஃபொனியின் கருவியிசை எவ்வாறு அமைகிறது:
சிம்ஃபொனி என்ற உடனே நினைவுக்கு வருவது ஒரு விசாலமான இசையரங்கில் இசைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட இசைக்குழுதான். இது எவ்வாறு அமைகிறது என்று பார்க்கலாம்.
சிம்ஃபொனிக்இசைக்குழுவில் பிரதானமாக தந்தி, குழல், கொம்பு, தாளம் என நால்வகைக் கருவிகுழுக்கள் இடம்பெறுகின்றன.
தந்திப் பகுதி
குரலிசை அல்லாத இசையாக இயங்கும் சிம்ஃபொனி, மனிதக்குரலுக்கு மாற்றாக வழங்குவது தந்திக்கருவியான வயலினையே. ஏனெனில் இசைக்கருவிகளில் வயலின் மனிதக்குரலைப் போல ஒலிக்கக்கூடியது. அதனால் ஒரு சுவரத்தை நீட்டித்தும் அல்லது சுருக்கியும், சன்னமாகவும் உரக்கவும், தனியாகவும் சேர்ந்திசையாகவும் ஒலிக்க முடியும். எனவே சிம்ஃபொனி இசையிலும் இசைக்குழுக்களிலும் முதலிடத்தை வகிப்பது வயலின் கருவிகளே. மனிதக்குரலின் அடர்த்தி soprano, alto, tenor, bass என நால் வகைப்பட்டதைப் போலவே வயலின், வயோலா, செல்லோ, டபுள்பாஸ் என்ற நால்வகை வயலின் கருவிகள் குரலடர்த்தியைக் கொண்டமைபவை. எனவே ஒரு சிம்ஃபொனி இசைக்குழுவின் முதல் வரிசையில் இந்நால்வகை வயலின்கள் இடம்பெறுகின்றன. வயலின்களின் எண்ணிக்கையே இசைக்குழுவின் மொத்த எண்ணிக்கையில் பெரும்பகுதி. 60-80 வயலின்கள் சிம்ஃபொனி இசைக்குழுவில் இடம்பெறுகின்றன.
குழல் பகுதி
வயலினுக்கு பின்னால் குழல்பகுதி. இக்கருவிகள் மரத்தினால் (ஒருகாலத்தில்) செய்யப்பட்டதாலும் ஊதுகாற்றைக் கொண்டு இசைப்பதாலும் இப்பகுதி woodwinds என்றழைக்கப்படுகின்றது. இப்பகுதியில் பல்வேறு நயத்தில் (timbre) அமையும் குழல் கருவிகளான flute, oboe, bassoon, clarinet இடம்பெறுகின்றன. Flute மனித குரலைப் போல ஒலிக்கக்கூடியது, Oboe ஆழ்குரலைக் கொண்டது, Clarinet வெளிச்சமான குரலைக்கொண்டது, bassoon மரஒலியைக் கொண்டது. இப்பகுதியில் இடம்பெறும் கருவிகளின் மொத்த எண்ணிக்கை இருபதுக்குள் வரும்.
கொம்புப்பகுதி
குழலுக்குப் பின் அமையும் கொம்புப்பகுதி உலோகத்தால் முக்கியமாக பித்தளையால் அமைக்கப்படுவதால் brass section என்றழைக்கப்படுகிறது. எனவே ஆரவாரமான குரலைக் கொண்டது. எனவே பின்வரிசையில் இடம் பிடிப்பது. இசையின் ஆரவாரமான பகுதிகள் அல்லது அரைகூவலான தனித்தபகுதிகளில் இவை இடம்பிடிப்பவை. இருப்பதிலேயே ஆரவாரமான trumpet, பரவசமாக ஒலிக்கும் horn, ஆழ் ஒலியை வழங்கும் trombone, tuba போன்ற கருவிகளை உள்ளடக்கியது இப்பகுதி.
தாளப்பகுதி
இசைக்குழுவின் கடைசிப்பகுதியில் தாளக்கருவிகளான் Drums, Cymbals போன்றவை இப்பகுதியில் இடம்பிடிக்கின்றன. இருப்பதிலேயே அதிகஒலியை எழுப்பக்கூடியவை ஆதலால் கடைசிவரிசையில் இடம்பிடிக்கின்றன்.
இவைபோக தனது தொகுப்பிற்குத் தேவையான பிரத்யேகமான வெவ்வேறு கருவிகளையும் இசையமைபாளர்கள் பயன்படுத்தலாம்.
சிம்பொனியை ஒரு குறிப்பிட்டவகையில்தான் இசையமைக்க வேண்டுமா
ஒரு நாவலை ஆயிரம் பக்கங்களுக்கு அல்லது, மிகநீண்ட கதை ஒன்றை மையமாக்கொண்டுதான் எழுத வேண்டுமா என்பதைப் போன்ற கேள்வி இது. இப்படித்தான் எழுத வேண்டும், இதை மட்டும்தான் எழுத வேண்டும் என்று எவ்வாறு நாவலைச் சுருக்க முடியாதோ அதைப் போலவே இப்படி இருந்தால் தான் சிம்ஃபொனி என்று சொல்ல முடியாது. அதில் இத்தனை மணித்துளிகள் ஒலிக்க வேண்டும், இன்னின்ன கருவிகள்தான் இருக்க வேண்டும், நான்கு பாடல்கள் இருக்க வேண்டும் என்று யாரால் கட்டுப்படுத்த முடியும்?
இருபது நிமிடங்களுக்குள் ஒலிக்கும் சிம்ஃபொனிகள் உள்ளன, பீதோவனால் பாடகர்கள் கோரஸாக பாடும் சிம்ஃபொனி அமைக்கப்பட்டது, மின்னணு கருவிகளில் சிம்ஃபொனி அமைக்கப்பட்டுள்ளது, கிராமிய மக்களிசை ஏன் குழந்தைப்பாடல்கள் சிம்ஃபொனியாக அமைக்கப்பட்டுள்ளன.
சிம்ஃபொனி என்பது கருவிகள் சேர்ந்திசையாக ஒலிக்கும் ஒரு நெடுவடிவம் அவ்வளவே. அது எவ்வாறு அமைவது என்பது முற்றிலும் இசைக்கலைஞரின் கற்பனை சார்ந்தது.
சிம்ஃபொனியில் ஒரு இசைக்கலைஞருக்கான சவால்கள் என்ன?
மிகப்பெரிய கருவிக்குழுவிற்கு இசையமைத்தல்
சிம்ஃபொனி போன்ற மிகப்பெரிய இசைக்குழுவிற்கு இசையமைத்தல் பெரிய சவால்கள் நிறைந்தது. இதற்கு ஒவ்வொரு கருவியின் நயம், அடர்த்தி, சுவர அளவீடுகள் தெரிந்திருக்க வேண்டும். இவற்றை சேர்ந்திசைக்கும் போது ஒத்திசைவின்றி ஒலிக்காமல் இருக்க வேண்டும். அதே வேளையில் கும்பலாக ஒரே குரலாக ஒலிக்காமலும் இருக்கவேண்டும். சேர்ந்தே இசைத்தாலும் அதில் அந்தந்தக்கருவிகளின் தனித்தன்மைகள் வெளிப்பட வேண்டும். கேட்பவருக்கும் சுவாரசியம் வேண்டும், இசைப்பவருக்கும் சுவாரசியம் வேண்டும். எந்ததந்த பகுதிகளுக்கு எக்கருவிகள் பயன்படுத்தினால் அவை தனித்துவமடையும் என்ற கற்பனை வேண்டும். அவற்றின் பயன்பாட்டில் புதுமை இருக்க வேண்டும். புதுமை என்ற பெயரில் அர்த்தமற்றதாகவும் ஆகிவிடக்கூடாது. இவ்வாறான கண்ணோட்டங்களில் கருவியிசையைக் கையாள்வது இசையமைப்பாளருக்கு சவால் நிறைந்தது.
ஓர்மை
ஏற்கனவே நாம் பார்த்ததைப் போல ஒரு பாடல் தொகுப்பாக இருந்தாலும், நூற்றுக்கணக்கில் கருவிகள் இடம்பெற்றாலும் ஒரு சிம்ஃபொனி தொகுப்பு தன்னளவில் ஒரு சமனையும், ஓர்மையையும் கொள்ள வேண்டும். இதுவே அதனைப் புரிந்துகொள்ள, பற்றிக்கொள்ள ரசிகர்களுக்கு உதவுவது. இந்த ஒர்மை எதனாலும் அமையலாம்.
உதாரணமாக பீதோவனின் புகழ்பெற்ற ஐந்தாம் சிம்ஃபொனி அடிப்படையில் இரு சுவரத்தால் அமைந்த சிறிய கருப்பொருளால் (small musical idea-motif) அமைந்தது. “விதி கதவைத் தட்டுவது போன்றது” என்ற உருவகத்தால் இன்று அறியப்படும் அக்கருப்பொருள் அந்த சிம்ஃபொனியின் பிற பாடல்களிலும் இடம்பெறுகிறது. பீதோவனின் மூன்றாம் சிம்ஃபொனி அவர்காலத்தின் நாயகனான நெப்போலியனை ஆதர்சமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. எனவே நாயகத்தன்மையை மையச்சரடாகக் கொண்டது. மாஹ்லரின் முதல் சிம்ஃபொனி சிறு வயது முதற்கொண்டு அவரது வாழ்வின் பாதிப்பில் கிட்டத்தட்ட ஒரு சுயசரிதையின் ஒலியாக வெளிப்படுவது. துவாரக் அமெரிக்கா வந்தபோது ஆப்பிரிக்க-அமெரிக்கரின் இசையே இனி வருங்கால இசை என்ற அவரது முடிவில் அவரது new world symphony அதன் வெளிப்பாடாக அமைக்கப்பட்டது.
எனவே ஒரு சிம்ஃபொனி தனது ஓர்மையை பல்வேறு விதமாக சாதிக்கலாம். அது தத்துவத்தை பேசலாம், அரசியல் பேசலாம், நகைச்சுவையை வழங்கலாம், இசையின் கருப்பொருளை எடுத்துக்கொள்ளலாம், கருவிசேர்ப்பின் புதுமையை மட்டும் கணக்கில் கொண்டு அமையலாம். எதுவாக இருப்பினும் இத்தகைய பிரம்மாண்டமான வடிவத்தை தொகுக்க ஒரு மையச்சரடு உதவுகிறது.
பன்மை
மிகநீண்ட அதுவும் கருவிசை வடிவமாக அமையும் இவ்வடிவம் தன்னை சுவாரசியமாகவும், சொல்ல வருவதை அது தத்துவமாகவமோ, வாழ்வனுபவமாகவோ எதுவாக இருப்பினும் ரசனைக்குட்பட்டதாகவும் வழங்க வேண்டிய சவாலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. (கேட்பவரின் கஶ்ட்ங்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைகொள்ளாத சிம்ஃபொனிகள் ஏராளம் என்பது வேறு கதை)
இசைமொழி
சிம்பொனிக்கான இசைமொழி harmony, counterpoint உள்ளிட்ட மேற்கிசையின் நுட்பங்கள் சார்ந்தது. இவை சுமார் 400 ஆண்டுகள் வளர்ச்சி அடைந்து வந்திருப்பவை. எனவே இந்த நுட்பங்கள் எவ்வளவு சிக்கலாக காலப்போக்கில் உருமாறியிருக்கும் என ஊகிக்கலாம். ஒரு உதாரணத்திற்கு மூன்று சுவரங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஆரம்பித்த ஹார்மனியில் இன்று பன்னிரெண்டு சுவரங்களும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படுகிறது. கருவிகளின் ஒலிப்பு முறையிலும் ஒவ்வொரு கருவிக்கும் சிக்கலான நுட்பங்கள் வளர்தெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் நுட்பமே கலையின் மையமாக மாறும் போது அதன் ரசிப்புத்தன்மையில் குறைபாடும் ரசிகர்களின் விலக்கமும் இயல்பாகவே நேருகிறது. மொசார்ட், பீதோவன், பிரஹாம்ஸ் காலகட்டத்தின் கேட்டவுடனேயே நம்மை தன்னுள் வாரிச் சுருட்டிக்கொள்ளும் இசையாக இன்றைய 20ம்,21ம் நூற்றாண்டு சிம்ஃபொனி இல்லை. அதே வேளையில் முற்றாகவும் மதிப்பற்றது என்று ஒதுக்கவும் முடியாது. இந்த விசயத்தில் மேற்கிசை ஒரு குறுக்குச்சாலையில் நின்று கொண்டிருக்கிறது.
மரபும் புதுமையும்
நாம் ஏற்கனவே கண்டதைப் போல சிம்ஃபொனிக்கென்று ஒரு பொதுவடிவமும், கருவிஅமைப்பும், அழகியலும், மொழியும் உள்ளது. மேலும் இவ்வடிவம் நானூறு ஆண்டுகளாக மேற்கில் புழக்கத்தில் இருக்கும் வடிவம். பல்லாயிரக்கணக்கான சிம்ஃபொனிகள் பல்வேறு கலைஞர்களால் இயற்றப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் இதற்கு ஒரு நீண்ட மரபும் வழங்குகிறது. புதிதாக சிம்ஃபொனியை அமைப்பவர்களுக்கு இந்த மரபுகளை ஒட்டியும் விலகியும், இந்த அழகியல்களுக்குள்ளும் புறமும், நுட்பங்களில் சிக்கியும் சிக்காமலும், புதுமையான அணுகுமுறைகளை வழங்குவது, அது பரவலான ரசனைக்கு தோதாவது, அதனை அங்கிருக்கும் விமர்சகர்கள் அணுகுவது என இவையனைத்தும் பல்வேறு சவால்கள் நிறைந்தது.
அதேவேளையில் மேற்கின் செவ்விசையில் இன்று ஒரு மந்தகாலம்தான் நிலவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இசை வரலாற்றின் போக்குகளில் ஒரு இசைவகைமைக்கோ வடிவத்திற்கோ புத்துயிர் வழங்குபவர்கள் முற்றிலும் மாற்று திசையிலிருந்து, பார்வையிலிருந்து, பண்பாடுகளிலிருந்து வருபவர்களே. ஒரே கண்ணோட்டத்திலோ, குழுவாக இயங்கும் எந்த இசைவடிவமும் நாளடைவில் தேக்கத்தை எதிர்கொள்ளக்கூடியதே. புதிய கண்ணோட்டங்களும் வரவுகளுமே தேக்கத்திலிருக்கும் இசைவகைமைகளுக்கு புத்துயிர் அளிக்ககூடியது என்பதையே இசைவரலாறு திரும்பதிரும்பக் காண்பிக்கின்றது. அத்தகைய புதியவரவுகளை மேற்கிசை அவ்வப்போது தடுமாறினாலும் பெருமளவில் வரவேற்கவே செய்திருக்கிறது என்பதையும் வரலாறு காண்பிக்கின்றது.
(அடுத்த பகுதியில் சில தேர்ந்தெடுத்த சிம்ஃபொனி பாடல்களைக் காணலாம்)