சுத்தம் அறியா மேற்குலகு
குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன். ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது. Katherina Ashenburg எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது. கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர். சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர். பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது. பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம் ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள். இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும் குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா. அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் ! ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா. உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன. அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள். குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது. சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய், சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது. குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட் கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று தமிழறிஞர்கள் விளக்க வேண்டும். லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம். இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.
ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது. துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் ! பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள் மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள் உலகின் மற்றொரு மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும். அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும் தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன் “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“ என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !
தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது. சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.
விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது. பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது. அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள். இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.
கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும் முக்கியமான திரவமாயிற்று.
சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன. அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று. இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர் ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம். இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில், விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது. கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட, குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,
இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான் முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.
இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை. பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.
புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன். இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !
ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing by Katherina Ashenburg.
நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்