Reading view

இரு சகோதரர்கள்

 

[அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல்]

நேர்கண்டவர்: எஸ். குரு

படங்கள்: திரு. சுதாகர்

நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன்

நீங்கள் பதிப்பாளரானது எப்படி?

தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின.

முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு, அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து, என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா, காபி முக்காலணா, பீடா காலணா, ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது.

ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர், சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு, ஆறு மணியிலிருந்து, ஏழரை மணிவரை கவிராயரிடம் சென்று பாடம் கேட்பேன். எனக்கு நல்ல சாரீரம். நன்றாகப் பாடுவேன். நாடக வசனங்கள், பாடல் எல்லாம் நன்றாக மனப்பாடம் ஆனதும் ‘வள்ளித் திருமணம்’, ‘கோவலன்’, ‘பவளக்கொடி’ முதலிய நாடகங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்றேன். ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில் நாரதர் வேடம். ‘பவளக்கொடி’யில் பெண் வேடம் ஏற்றுப் பவளக்கொடியாகவே நடித்தேன்.

அப்புறம் காஞ்சிபுரம் சென்றேன். அங்கு ‘நியூ மாடல் லஞ்ச் ஹோம்’ என்ற ஹோட்டலில் வேலை. தினம் பத்தே முக்காலணா சம்பளம். என்னை ஆட்டுக்கல்லில் மாவரைக்க உட்கார்த்தி வைத்தார்கள். தினசரி நாற்பது படி புழுங்கலரிசி, பதினேழு படி உளுந்து இட்லிக்கு அரைத்துக் கொடுப்பேன். நாடகங்களிலும் நடிப்பேன்.

‘நவயுகம்’ பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த டி. எஸ். சொக்கலிங்கத்திடம் அண்ணா அ. கி. ஜெயராமன் உதவியாளராகச் சேர்ந்தார். என்னையும் சென்னைக்கு வரவழைத்தார். 1942 என்று நினைக்கிறேன். அண்ணாவுடன் இருந்துகொண்டே நிறையப் புத்தகங்கள், சஞ்சிகைகள் படித்தேன். ‘ஆனந்த விகடன்’ அப்போது இரண்டு அணா விலை. ‘ஆனந்தபோதினி’, ‘அமிர்தபோதினி’, ‘கலைமகள்’ முதலிய பத்திரிகைகள் என் இலக்கியப் பசிக்கு விருந்தாயின.

திருநெல்வேலி முனிசிபல் சேர்மன் ப.ரா. ‘நவயுகப் பிரசுராலயம்’ என்று ஒரு பதிப்பகம் ஆரம்பித்தார்.

“ஹோட்டலில் சர்வராக இருந்துகொண்டு சிரமப்படாதே. என்னிடம் சேர்ந்து புத்தகங்கள் விற்றுக் கொடு. உனக்குத்தான் நல்ல சாரீரமாச்சே. பாடியே புத்தகங்கள் விற்றுவிடுவாய். கமிஷன் எடுத்துக்கொள்” என்றார் ப.ரா. அவரிடம் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு, திருவையாறு வந்தேன். தெருவோரம் கடை விரித்தேன். திருவையாறில் சங்கீதக் கச்சேரிகள் நடந்துகொண்டே இருக்கும். ஆனந்தமாகக் கர்நாடக சங்கீதம் கேட்டுக்கொண்டே புத்தகம் விற்றேன். நவயுகப் பிரசுராலயத்தினர் ஒரு ரூபாய், எட்டணாவுக்கெல்லாம் புத்தகம் போட்டிருந்தார்கள். ‘எல்லோரும் ஓர் குலம்’, ‘மைக்கேல் காலின்ஸ்’, ‘புதுமைப்பித்தன் கதைகள்’ முதலிய நவயுகப் பிரசுராலயப் புத்தகங்கள் நன்றாக விற்பனை ஆயின.

மாயவரம், கும்பகோணம், மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம் எல்லாம் சென்று புத்தகம் விற்றேன்.

1942-ன் இறுதியில் சென்னை திரும்பிவிட்டேன். பிறகு திருவல்லிக்கேணியில் ‘ஜோதி புக் ஸ்டால்’ ஆரம்பித்தேன். பைக்ராப்ட்ஸ் ரோடு, முரளி கேஃப் பக்கத்தில்தான் ‘ஜோதி புக் ஸ்டால்’ வைத்திருந்தேன். தினசரிகள், மாத இதழ்களும் விற்றேன். பம்பாய் பத்திரிகைகள் பூரா வரும். ‘எஸ்கோயர்’, ‘லைஃப்’, ‘ஸாடர்டே ஈவ்னிங் போஸ்ட்’, ‘டைம்’, ‘டெய்லி மிரர்’ போன்ற ஆங்கில இதழ்களும் விற்பனைக்கு வரும். எல்லா பிரபலஸ்தர்களும் என் கடைக்கு வருவார்கள்.

அ. கி. கோபாலன்

‘தினமணி’ ஏ. ஜி. வெங்கடாச்சாரி, நீதிபதி இஸ்மாயில் இருவரும் இரண்டு, மூன்று பஸ்களையும் தவறவிட்டுவிட்டு என் கடைக்கு முன்னாடி நின்றுகொண்டு மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்பார்கள். எஸ். எஸ். மாரிசாமி, புதுமைப்பித்தன், பெ. நா. அப்புசாமி, கி. வா. ஜகந்நாதன், ரா. பி. சேதுப்பிள்ளை, ம.பொ.சி.... எல்லாம் என் கடைக்கு வருவார்கள். பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் எனக்குப் பழக்கமானார்கள். அவர்கள் வீடுகளுக்கு எல்லாம் பேப்பர் போட்டேன். வாங்குகிற செய்தித்தாளுக்குப் பணம் தரும் வசதி பலருக்கு இல்லை. அந்த தேசபக்தர்களிடம் நான் காசு எதிர்பார்க்காமல் இலவசமாகவே பேப்பர் போட்டேன்.

அப்போது க.நா.சு. பாரகன் டாக்கீஸ் அருகில் குடியிருந்தார். புதுமைப்பித்தன் ராயப்பேட்டை ட்ராம் ஷெட் பக்கத்தில் - இப்போது அஜந்தா ஹோட்டல் இருக்குமிடம் அருகில் குடியிருந்தார்.

பி. எஸ். ராமையா, புரசைவாக்கத்தில் குடியிருந்தார். அங்கிருந்து வருவார். கு.ப.ரா., திருவல்லிக்கேணி சைடோஜி தெருவில் இருந்தார். கும்பகோணத்துக்காரரான கு.ப.ரா., சென்னையில் சுமார் பதினைந்து வருடங்கள் இருந்தார். கு.ப.ரா.வின் மனைவி அம்மணியம்மாள் விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர். அவருக்கு இருந்த கஷ்டத்திலும் விருந்தினர்களை நன்றாக உபசரித்து, தன் வீட்டில் சாப்பிடச் சொல்வார் கு.ப.ரா.

மாலை நான்கரை மணிக்கு இலக்கிய ஜாம்பவான்களின் கோஷ்டி ஒன்று பீச்சுக்குக் கிளம்பும். கு.ப.ரா., சிதம்பர சுப்ரமணியம், வ.ரா., புதுமைப்பித்தன், எஸ். எஸ். மாரிசாமி, காசி விஸ்வநாதன், என். ராமரத்தினம், க.நா.சு., ஏ. என். சிவராமன், ப. ரா., ஏ. கே. செட்டியார் (‘உலகம் சுற்றும் தமிழன்’ புத்தகம் எழுதியவர்), பி.ஸ்ரீ..... முதலியோர் அடங்கிய குழு அது.

என் பையன் கிருஷ்ணமூர்த்தியைப் பேப்பர் கடையில் உட்கார்த்தி வைத்துவிட்டு இவர்களது ‘இலக்கியக்’ கூட்டத்தில் கலந்துகொள்ள நான் பீச்சுக்குச் சென்றுவிடுவேன். பேசுவார்கள், பேசுவார்கள் அப்படிப் பேசுவார்கள். கேட்கக் கேட்க அலுக்காது. இரவு ஏழரை மணிக்கு பீச்சிலிருக்கும் ஒலிபெருக்கியில் ரேடியோ செய்தி முடியும். அப்போது எல்லோரும் வீட்டுக்குத் திரும்புவோம்.

நாமே ஒரு பதிப்பகம் ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி 1947 நள்ளிரவு 12 மணிக்கு நம் தேசம் சுதந்திரமடைந்தபோது, என் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.

பதிப்பகத்தின் பெயர் ‘தமிழ்ச்சுடர் நிலையம்’. புத்தகங்கள் பதிப்பிக்கும்போது கடன் வாங்கித்தான் பப்ளிஷ் செய்தேன். பேப்பர் வாங்குமிடத்தில் கடன். அச்சடிக்கும் அச்சகத்தில் கடன். அப்போது நம்பிக் கடன் கொடுப்பார்கள். பிராட்வேயில் இருக்கும் தாம்ஸன் பிரஸ்ஸில்தான் என் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன.

நோபல் பரிசு நாவல்கள் போடக் காரணமாயிருந்தவர் யார்?

மொழிபெயர்ப்பு நாவல்கள் நிறையப் போட்டேன். குறிப்பாக நோபல் பரிசு பெற்ற நாவல்கள். இதற்கெல்லாம் காரணமானவர் க.நா.சு. சிறந்த வெளிநாட்டு இலக்கியங்கள் பற்றி எனக்கு எடுத்துச் சொன்னவர் அவர்தான். இருவருமாகச் சேர்ந்து ஹிக்கின்பாதம்ஸ் செல்வோம். வருஷத்திற்கு மூன்று முறைதான் அங்கு நோபல் பரிசு நாவல்கள் பார்சலில் வரும். எங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வருவோம்.

‘ஒரு பக்கம் மொழிபெயர்த்துக் கொடுத்தால் ஒரு ரூபாய்’ என்று என்னிடம் பேசிக்கொண்டு க.நா.சு. மொழிபெயர்த்துக் கொடுத்தார். தினமணியில் வேலை பார்த்த வெ. சந்தானம், நா. ராமரத்தினம் ஆகியோரும் த. நா. குமாரசாமி, த. நா. சேனாபதி.... இவர்களும் எனக்கு மொழிபெயர்ப்புகள் எழுதிக் கொடுத்தார்கள்.

நார்வே நாட்டு நாவலான ‘நிலவளம்’, ‘அன்பு வழி’ (ஸ்வீடிஷ்), ‘தபால்காரன்’, ‘தாசியும், தபசியும்’ (பிரெஞ்சு), ‘அன்னை’, ‘ரோம் நகரப் பெண்’ (இத்தாலி), ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘அன்னை’ (ருஷ்யா), ‘சித்தார்த்தன்’ (ஜெர்மன்), ‘கடலும் கிழவனும்’, ‘திமிங்கில வேட்டை’, ‘அவமானச் சின்னம்’ (அமெரிக்கா).... போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களை நான் வெளியிட்டேன். ‘இறவாத புகழுடைய நூல்களும் நோபல் பரிசு நாவல்களும்’ என்று விளம்பரம் செய்வேன்.

நான் பதிப்பித்த புத்தகங்களை ‘ஆனந்த விகட’னில் விமர்சனம் செய்த கல்கி, ‘படிப்பதற்குச் சுவையான புத்தகங்கள். சுவாரஸ்யமாகப் படிக்கலாம். தலையணையாக வைத்துக்கொண்டும் தூங்கலாம். கனமான புத்தகங்கள்...’ என்று வேடிக்கையாக எழுதினார்.

பெரிய, பெரிய வால்யூம்களாகப் புத்தகம் இருக்கும். ஆனால் தூக்கிப் பார்த்தால் வெயிட் இருக்காது. ‘ஆன்டிக்’ பேப்பர், அல்லது ‘ஃபெதர் வெயிட்’ பேப்பர் என்று சொல்வார்கள். அந்த மெல்லிய தாளில் அச்சிட்டேன்.

நான் வெளியிட்ட நூல்களில் டாக்டர் பட்டாபி சீதாராமையா எழுதிய ‘காங்கிரஸ் மஹாசபை சரித்திரம்’ மிக முக்கியமானதாகும். மூன்று பகுதிகள் கொண்ட நூல் அது. மூன்று வால்யூம்களாக வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. ‘அன்னா கரீனா’ 800 பக்கங்கள். விலை ஏழு ரூபாய், எட்டணா. பரிசுப் பதிப்பு இரண்டு தனி வால்யூம்கள் ரூ.12. டால்ஸ்டாய் நூல்களில், ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘போரும் அமைதியும்’ வெளியிட்டிருக்கிறேன்.

புத்தகங்கள் ஆயிரம் பிரதிகள் விற்க ஐந்து வருடங்கள் ஆயின. அப்போது மொழிபெயர்ப்பு நூல்களில், சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், தாகூர் புத்தகங்கள் நன்றாக விற்றன.

நான் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிட்டபோது, ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ குப்புசாமி ஐயர் பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் வங்க நூல்களை (மொழிபெயர்ப்புகள்) வெளியிட்டார். வங்க நூல்களை த. நா. குமாரசுவாமியும், அ. கி. ஜெயராமனும் மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். நவயுகப் பிரசுராலயத்தினரும் சில மொழிபெயர்ப்புகளை வெளியிட்டனர். அவர்களுக்குக் க.நா.சு., புதுமைப்பித்தன், அ. கி. ஜெயராமன், ப.ரா., வ.ரா., பெ. நா. அப்புசாமி இவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். ‘சக்தி’ பிரசுராலயத்தைச் சேர்ந்த கோவிந்தன் டால்ஸ்டாய் புத்தகங்களையும் மகேஷ் குமார சர்மா மொழிபெயர்த்த பங்கிம் சந்திரர் நாவல்களையும் வெளியிட்டார். மாம்பாக்கம் குப்புசாமி ஐயர் என்பவர்தான் மகேஷ் குமார சர்மா என்ற பெயரில் வங்க நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘அஸ்வினி குமார தத்தரின் உபன்யாசங்கள்’ என்ற வங்க நூலை ‘பக்தி யோகம்’ என்ற பெயரில் குப்புசாமி ஐயர் மொழிபெயர்த்தார்.

என் புத்தகங்கள் பல ‘பைண்ட்’ செய்யப்படாமல் ஃபாரங்களாகப் பிரிண்ட் பண்ணிக் கிடக்கும். ஆர்டர் வந்ததும் ‘பைண்ட்’ செய்து விற்பேன். சில சமயம் சாப்பாட்டுக்கு இல்லாமல் கஷ்டப்பட்ட நேரங்களில், அச்சடித்து வைத்திருந்த ஃபாரங்களையே எடை போட்டு விற்றிருக்கிறேன்.

பெரிய, பெரிய பைகளில் புத்தகங்களை இட்டு நிரப்பிக்கொண்டு, வீடு வீடாக ஏறிச் சென்று விற்றேன். காலையில் அரை அணாவுக்கு ஒரு மலை வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ட்ராம் ஏறி ஆழ்வார்பேட்டைக்கு வந்துவிடுவேன். அந்தக் காலத்தில் ஆழ்வார்பேட்டையில் இருந்த வக்கீல்கள், வீட்டுப் பெண்மணிகள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்குவார்கள். கே. பாஷ்யம், சம்பத் ஐயங்கார், பதஞ்சலி சாஸ்த்ரி போன்ற பிரபல வக்கீல் வீடுகளில் மிகவும் விரும்பிப் புத்தகங்கள் வாங்குவார்கள். மூன்று மணிநேரத்தில் சுமார் ஆறு வக்கீல் வீடுகளில் நூறு ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுவிடுவேன்.

அ. கி. கோபாலன் குடும்பத்துடன்

அண்ணன் அ. கி. ஜெயராமனும் நானுமாகச் சேர்ந்து இதுவரை ஐந்நூறு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். என் பதிப்பகத்தின் பெயர் ‘தமிழ்ச்சுடர் நிலையம்’, அண்ணாவின் பதிப்பகத்தின் பெயர் ‘ஜோதி நிலையம்’.

மவுண்ட் ரோடில் ‘லிபரேட்டர்’ பத்திரிகை ஆபீசில் ‘லிபரேட்டர்’ ஆசிரியர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க வந்திருந்தார் பாரதிதாசன். அவரிடம் ‘அன்னா கரீனா’ முதலிய மொழிபெயர்ப்பு நூல்களைக் காட்டினேன். பாரதிதாசன் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘’பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டார் பாரதி. இப்படித்தான் தமிழை வளர்க்க வேண்டும்” என்று பாராட்டினார்.

பாரதிதாசன் பாடல்களை அந்த நாளில் அதிகமாகப் பிரச்சாரம் செய்தவர், கவிஞர் திருலோக சீதாராம். நோபல் பரிசு நாவல்களில், ‘சித்தார்த்த’னை மொழிபெயர்த்துக் கொடுத்தவர் அவர்தான்.

அறிஞர் அண்ணாவிடமும் என் புத்தகங்களைக் காட்டியிருக்கிறேன். “இந்தப் புத்தகங்களை எல்லாம் எப்படி விற்கிறீர்கள்? விற்பது கஷ்டமாயிற்றே!” என்றார் அண்ணா, “தெருத் தெருவாகச் சென்று விற்கிறேன். கடை கடையாகச் சென்று விற்கிறேன்” என்று அவரிடம் சொன்னேன்.

ராஜாஜி, காமராஜர் முதலியோரும் என் புத்தக வெளியீடுகளைப் பாராட்டியிருக்கிறார்கள்.

நீங்கள் ‘காதம்பரி’ மாத இதழை ஆரம்பித்தது எப்போது?

1948-ம் வருஷம், மார்ச் மாதம் முதல் இதழ் வந்தது.

ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு லட்சியத்துடன்தான் ஆரம்பிக்கப்படுகிறது. ‘காதம்பரி’யும் அதற்கு விதிவிலக்கல்ல.

வளரும் தமிழ் இலக்கியத்திற்கு நாங்களும் ஏதோ செய்ய வேண்டும் என்ற ஆர்வமே இந்த முயற்சியில் - சிரமமான முயற்சியில் இறங்கச் செய்தது.

‘காதம்பரி' என்ற வார்த்தைக்கு சரஸ்வதி, மலர், மது, மயில் என்ற அர்த்தமும் உண்டு. காதம்பரி நாம் வழிபடும் கலை அரசியாகவும், இலக்கிய மணம் கமழும் நறுமலராகவும், கலை இன்பம் பயக்கும் மதுவாகவும், சைத்திரிகனின் வர்ண ஜாலங்களை வீசும் தோகை மயிலாகவும் திகழ வேண்டும் என்பதே எமது கனவு.

‘காதம்பரி’ தமிழ்நாட்டின் வீடுதோறும் செல்ல வேண்டும், யாவரும் விரும்பிப் படிக்க வேண்டும். இதுதான் எங்கள் ஆசையாக இருந்தது.

‘காதம்பரி’ முதல் இதழை ‘அமரர் கு.ப.ரா. அவர்களின் நினைவுக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்று தலையங்கம் எழுதியிருந்தேன்.

ஒரு முழு நாவல், ஒரு கவிதை, ஒரு ஓரங்க நாடகம், இரண்டு தொடர் நாவல்கள், இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை என்று காதம்பரி சுவை மிகுந்ததாகி வெளிவந்தது. ‘காதம்பரி’யில் வரும் முழு நாவலுக்கு ‘ஒரு பவுன்’ பரிசு என்று விளம்பரம் செய்தேன். அப்போது ஒரு பவுன் விலை அறுபத்தியேழு ரூபாய்.

‘மாதம் ஒரு பவுன்: ‘காதம்பரி’யில் ஒவ்வொரு மாதமும் ஒரு முழு நாவல் வெளியிட்டு வருகிறோம். ஏற்றுக்கொள்ளுகிற நாவலுக்கு ஒரு பவுன் சன்மானம் வழங்குகிறோம். நாவல் ‘காதம்பரி’யில் 33 பக்கங்களுக்குக் குறையாமல், 50 பக்கங்களுக்குள் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்’ என்று விளம்பரம் செய்தேன்.

பவுன் பரிசுத் திட்டத்தில் முதன்முதலில் நாவல் எழுதிப் பரிசு வாங்கியவர் ஜெகசிற்பியன். “எனக்கு ஒரு பவுன் வேண்டாம். பத்து, பத்து ரூபாயாகக் கொடுத்துவிடுங்கள்” என்றார் ஜெக சிற்பியன்.

புதுமைப்பித்தனும் பல சந்தர்ப்பங்களில் பணமாக வாங்கிக்கொள்ளாமல், காபிப் பொடி வாங்கிக் கொடுங்கள், வெற்றிலை வாங்கிக் கொடுங்கள் என்பார்.

புதுமைப்பித்தனுக்கு நான் சரியாகப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டேன் என்று ‘சுபமங்களா’வில் ஒருதலைப்பட்சமாக எழுதியிருக்கிறார்கள். என்னையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம். நான் புதுமைப்பித்தனை மோசம் செய்யவில்லை. புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்த நாளிலிருந்து, அவர் காலமாகும்வரை அவரிடம் சகோதர பாசத்துடன் பழகி இருக்கிறேன். அவருக்கு 200 ரூபாய் வரை கொடுத்திருக்கிறேன்.

எஸ். எஸ். மாரிசாமியும் எழுதிக் கொடுத்ததற்குப் பணமாகக் கேட்காமல், பாம்பே மல் வேட்டி, பாட்டா செருப்பு வாங்கிக் கொடுங்கள் என்பார்.

‘காதம்பரி’ பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது. ‘காதம்பரி’ பழைய பேப்பர் கடைக்கு வந்ததே இல்லை. வாங்கிய எல்லோரும் அதைப் பத்திரப்படுத்திப் பாதுகாத்தார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.

‘காதம்பரி’ நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு சந்தர்ப்பத்தில் வெளியூர் ஏஜண்டுகள் மூன்று மாதங்கள், நான்கு மாதங்கள் சேர்ந்தாற்போல் பணம் அனுப்பவில்லை. சுமார் ஏழாயிரம் ரூபாய் வசூல் ஆகாமல் நின்றது. அதனால் ‘காதம்பரி’ இதழை நிறுத்த வேண்டி வந்தது. பனிரெண்டு, பதிமூன்று இதழ்களுக்கு அப்புறம் காதம்பரி நிறுத்தப்பட்டது. ‘மங்கள இதழ்’ என்று நாமகரணம் சூட்டிக் கடைசி இதழை அச்சடித்து நிறுத்தினேன். பணம் வசூல் ஆகாத காரணத்தினால் நிறுத்துகிறேன் என்று உண்மைக் காரணத்தைத் தெரிவித்திருந்தேன்.

நான் வாழ்க்கையில் நான்கு முறைகள்தான் அழுதிருக்கிறேன். மகாத்மா காந்தி, நேரு, புதுமைப்பித்தன் இறந்தபோது. அப்புறம் ‘காதம்பரி’ நின்றபோது.

இப்போதும், எண்பதைத் தாண்டிவிட்ட நிலையிலும், புத்தக வெளியீட்டை நீங்கள் நிறுத்தவில்லை அல்லவா?

இப்போது பக்தி இலக்கியங்கள் வெளியிட்டு வருகிறேன். நன்றாக விற்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நூல் ‘சம்ப்ரதாய ஹரிஹர குஹ பஜனாம்ருதம்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, உருது, பக்திப் பாடல்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறேன்.

இந்தியா முழுக்கக் காலாற நடந்து சென்று, அனைத்து மொழி பஜனைப் பாடல்களையும் ஒன்றாகத் தொகுத்தவர் மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் என்பவர்.

நான் பஜனைப் பாடல்களை நன்றாகப் பாடுவேன். எங்கள் கிராமமான மேலக்குமாரமங்கலத்தில் பத்து வயதிலிருந்தே நான் பஜனைக் கோஷ்டிகளில் பாடி வருகிறேன். ‘பாகவத சிரோன்மணி’, ‘பாகவத சூடாமணி’, ‘பாகவத ரத்தினம்’... போன்ற பட்டங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.

சரத் சந்திரர் எழுத்துக்கள் அனைத்தையும், - அவரது சுய சரித்திரம் உட்பட ஒரு வால்யூம் ஐநூறு பக்கங்கள் என்று பத்து வால்யூம்களாக வெளியிட ஆசை.

இப்போது இலக்கிய ருசியில்லாத பதிப்பாளர்கள் அதிகம். அவர்கள் மொழிபெயர்ப்புகளை ஆதரிப்பதில்லை. மொழிபெயர்ப்புகள் நிறைய வரவேண்டும். அப்போதுதான் இலக்கியம் வளரும்.

*

சரத் சந்திரர் நூல்களைத் தமிழில் தந்த அ.கி. ஜெயராமன்

நீங்கள் எழுத்துத் துறைக்கு வந்தது எப்படி?

நான் மேலக்குமாரமங்கலத்தில் 1911-ல் பிறந்தவன். சிதம்பரம், குற்றாலம் இங்கெல்லாம் என் பள்ளிப் படிப்பு நான் இன்டர்மீடியட் வரை படித்திருந்தேன். அப்பா இறந்த பிறகு வேலை தேடும் படலம்.

1936-ல் இருந்து எழுத்தையே முழு நேரத் தொழிலாகக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

நீங்கள் வங்காள மொழி கற்றுக்கொண்டது?

‘மணிக்கொடி’ ஆரம்பித்தபோது அந்த எழுத்தாளர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா, க.நா.சு., சிதம்பர சுப்ரமண்யம், கு.ப.ரா., எல்லோரும் என்னுடன் நன்றாகப் பழகினார்கள்.

கு.ப.ரா., திருவல்லிக்கேணி சைடோஜி தெருவில் குடியிருந்தார். அவருக்கு வங்க மொழி தெரியும். அவரிடமிருந்து ஆரம்பப் பாடங்களைக் கற்றுக்கொண்டேன். ராமைய்யர் என்பவர் திருச்சி நேஷனல் காலேஜில் பேராசிரியராக இருந்தார். அவரும் நான் வங்க மொழியில் தேர்ச்சி பெற உதவினார்.

எனக்கு ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகள் தெரியும். நான் ஹிந்தியில் வித்வான் கோர்ஸ் தேறியவன்.

சரத் சந்திரர் நூல்களை மொழிபெயர்த்தது பற்றிச் சொல்லுங்கள்?

சரத் சந்திரர் வங்கத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் தேவானந்தபூர் என்ற சிறிய கிராமத்தில் 1876-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தவர். தனது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கினார். எழுதியவர் யாரென்று குறிப்பிடப்படாமலே, சரத் சந்திரரின் ‘பரதீதி’ என்ற கதை ‘பாரதி’ என்ற பத்திரிகையில் தொடராக 1907-ல் வந்தது. அதை எழுதிவருபவர் தாகூராகத்தான் இருக்கவேண்டுமென்று வாசகர்கள் கருதினார்கள்.

அப்புறம் முப்பது ஆண்டுகளில் சரத் சந்திரர் ஏராளமாக எழுதிக் குவித்தார். 22 நாவல்கள், 7 சிறுகதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுதி, ஒரு நாடகம் ஆகியன சரத் சந்திரரின் படைப்புகள்.

சரத் சந்திரரின் ‘மதனி’ என்ற நாவலைத்தான் நான் முதன்முதலில் மொழிபெயர்த்தேன். அப்போது எனக்கு பெங்காலி தெரியாது. ஹிந்தியில் இருந்துதான் சரத் சந்திரரின் நூலை மொழிமாற்றம் செய்தேன்.

‘மணிக்கொடி’ பத்திரிகைக்காக சரத் சந்திரர் நாவல் கேட்டிருந்தார்கள். ஆனால் நான் மொழிபெயர்த்தது பிரசுரமாவதற்குள் ‘மணிக்கொடி’ நின்றுவிட்டது. 1936 என்று நினைக்கிறேன். பின்னர் ‘மணிக்கொடி’க்காரர்களே ‘மதனி’ நாவலைப் புத்தகமாக வெளியிட்டார்கள். மணிக்கொடிப் பத்திரிகை ஸைஸிலேயே அந்த நாவல் வெளியிடப்பட்டது.

‘மதனி’க்கு அப்புறம் நான் மொழிபெயர்த்த சரத் சந்திரர் நாவல் ‘தேவதாஸ்’.

சரத் சந்திரரின் 22 நாவல்களையும், சிறுகதைகள் அனைத்தையும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். சரத் சந்திரரின் நூல்கள், சிறுகதைகள் அனைத்தும் என் மொழிபெயர்ப்பில் 42 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. என்னைத் தவிர ஆர். ஷண்முகசுந்தரம், த. நா. குமாரஸ்வாமி, த. நா. சேனாபதி, எஸ். குருசாமி, சௌரிராஜன், கே. பி. ராஜகோபாலன், தினகரன், வி. எஸ். வெங்கடேசன், எம். வி. வெங்கட்ராமன்.... இவர்களும் சரத்தின் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

அ. கி. ஜயராமன்

150 பக்கம், 200 பக்கமிருக்கும் சரத் சந்திரரின் நாவல்கள் எல்லாம் தமிழில் ஆறு பதிப்புகள், ஏழு பதிப்புகள் வந்திருக்கின்றன. 500 பக்கங்களுக்கு மேல் உள்ளவை இரண்டு பதிப்புகள் வந்திருக்கின்றன. அவருடைய நாவல்களில் ஒன்றைப் படித்தால், இன்னொன்றையும் படிக்கத் தோன்றும்.

‘கிரஹதாகம்’, ‘சாவித்திரி’, ‘ஸ்ரீகாந்தன்’, ‘விப்ரதாஸ்’, ‘பாரதி’ இவை சரத் சந்திரரின் பெரிய நாவல்கள். ‘ஸ்ரீகாந்தன்’ என்ற நாவல் அவரது மாஸ்டர் பீஸ். இது சுயசரிதை போன்ற போக்கில் அமைந்தது. இதில் சுமார் 500 கதாபாத்திரங்களை சரத் உருவாக்கித் தந்திருக்கிறார்.

1941-ல் நான் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி சென்னையில் சிறையில் அடைக்கப்பட்டேன். மாணிக்கவாசகம், திருச்சி அருணாசலம் போன்றவர்கள் என்னோடு சிறையில் இருந்தார்கள். கம்யூனிஸ்டுகளும் கைதாகி இருந்தனர். மோகன் குமாரமங்கலம், பி. ராமமூர்த்தி...

சிறையில்கூட நான் சரத்தின் நாவலை மொழிபெயர்த்துக்கொண்டுதான் இருந்தேன். சென்னை சென்ட்ரல் ஜெயில்தான். அப்போது அதற்கு ‘பெனிடன்ட்ஷரி’ ஜெயில் என்று பெயர்,

இத்தனைக்கும் சரத் பெண்களை மிகவும் உயர்வாகச் சித்தரித்தவர். ‘நாரீர் மூலய’ -அதாவது ‘பெண்மையின் மகத்துவம்’ என்று ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார் சரத் சந்திரர். பொதுவாக அவர் நாவலில் வரும் பெண்கள் அனைவருமே உயர்ந்த பாத்திரங்கள்.

‘சேஷ பிரச்ன’ நாவலின் கதாநாயகி கமலா, ‘விப்ரதாஸி’ல் வந்தனா, ‘தேவதாஸி’ல் பார்வதி, சந்திரமுகி, ‘நபபிதானி’ல் உஷா, ‘சரித்ரஹீனி’ல் சாவித்ரி, ‘கிராம சமாஜ’த்தில் ரமா, ‘பரதீதி’யில் மாதவி, ‘ஸ்ரீகண்டனி’ல் ராஜலட்சுமி, அபயா, அன்னதா, ‘ஸ்வாமி’யில் சௌதாமினி, ‘கிருஹதாகத்’தில் அசலா, ‘பாமுனேர் மேயி’ நாவலில் சந்தியா போன்ற பெண் பாத்திரங்கள் மிக உயர்ந்த சிருஷ்டிகள். இத்தகைய பெண்களைப் படைத்து உலவவிட்ட சரத், ‘சரித்ரஹீனி’ல் ஏன் ஒரு கெட்டுப்போன பெண்ணைப் பற்றி எழுதினார் என்று அவரது நாவலையே கொளுத்தினார்கள்.

‘பதேர் தாபி’ என்று ஒரு நாவல். புரட்சிக்காரர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பல இந்தியப் புரட்சிக்காரர்களைப் பெயர் மாற்றம் செய்து கதாபாத்திரங்களாக வைத்திருக்கிறார். அன்றைய பெங்காலி அரசாங்கத்தால் இரண்டு முறை தடைசெய்யப்பட்ட நாவல். வ.வே.சு. ஐயரை, கிருஷ்ணய்யர் என்ற கதாபாத்திரமாக்கி இந்த நாவலில் வைத்திருக்கிறார் சரத். இதைத்தான் நான் ஜெயிலில் இருந்தபோது மொழிபெயர்த்தேன். சரத் சந்திரர் சிறந்த தேச பக்தர். சி. ஆர். தாஸுக்கு வலதுகையாக இருந்தவர்.

‘ஏழையின் சொர்க்கம்’ என்ற தலைப்பில் நான் சரத் சந்திரரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். ‘ஏழையின் சொர்க்கம்’ ஒரு அருமையான சிறுகதை. ஹரிஜனப் பெண் ஒருத்தி. மிகவும் ஏழை. பிராமணர்கள் தங்கள் பிணங்களை எரிப்பதைப் பார்த்துவிட்டு, சடலங்களை எரித்தால்தான் ஆன்மா சொர்க்கத்துக்குப் போகும் என்ற முடிவுக்கு வருகிறாள். தன் மகனிடம் சொல்கிறாள்: “நான் இறந்தால் என்னைப் புதைக்க வேண்டாம். எரித்து விடு.”

தாய் இறந்ததும், பிணத்தை எரிப்பதற்காக மகன் விறகு வாங்கப் பணத்திற்காக அலைகிறான். பணம் கிடைக்கவில்லை. அதனால் விறகு வாங்க முடியவில்லை. கடைசியில் பிணத்தைப் புதைத்துவிடுவது என்ற முடிவுக்கு வருகிறான். தன் மன சாந்திக்காகத் தாயாரின் முகத்தருகே மாத்திரம் கொஞ்சம் வைக்கோலைப் போட்டுக் கொளுத்தி, புகை மேலே செல்லும்போது, அதன் வழியாகத் தாயார் சொர்க்கத்திற்குச் செல்கிறாளா என்று பார்க்கிறான்.

மனதை உருக்கிவிடும் கதை.

த. நா. குமாரஸ்வாமி என்னிடம் சொன்னார்: “என்னைவிட சரத்தின் எழுத்துக்களை நீங்களே நன்றாக மொழிபெயர்க்கிறீர்கள். இனி நீங்களே அந்தப் பணியைச் செய்யுங்கள்.”

த. நா. குமாரஸ்வாமி மொழிபெயர்ப்பில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாக இருக்கும். த. நா. குமாரஸ்வாமி என்னைப் பாராட்டியது எனக்கு மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சரத் சந்திரரின் ‘கிருஹதாகம்’ என்ற நூலை நான் மொழிபெயர்த்து வெளியிட்டபோது அதை த. நா. குமாரஸ்வாமிக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.

சரத் சந்திரரின் ‘கிராம சமாஜம்’ என்ற நாடகமும் மிகவும் பிரசித்தமானது. இது சரத் சந்திரர் இருக்கும்போதே 108 நாட்கள் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டது.

நீங்கள் சரத் சந்திரரின் நூல்களைச் சுருக்கி மொழிபெயர்த்தீர்களா?

சரத் சந்திரரின் எழுத்தில் ஒரு சொல்லைக்கூட நான் எடுக்கவில்லை. அப்படியே மொழிபெயர்த்திருக்கிறேன். அவரது எழுத்து மிகவும் வன்மை வாய்ந்தது. ஒரு சொல்லை எடுத்தால்கூட ரசக்குறைவு ஏற்பட்டுவிடும்.

சரத் சந்திரரின் படைப்புகள் வங்க இலக்கியத்தை வளப்படுத்தியது போலவே தமிழ் இலக்கியம் செழுமையுறவும் பயன்பட வேண்டுமென்பதே என் மொழிபெயர்ப்பின் நோக்கம். மேலும் சரத் சந்திரர் படைத்த புதுமைப் பெண்களை, தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்பதும் என் ஆசை.

சரத் சந்திரர் தன் எழுத்துக்களை தேசவுடமையாக்கியிருந்தார்.

‘தேவதாஸ்’, ‘மாலையிட்ட மங்கை’, ‘எங்கள் வீட்டு மஹாலஷ்மி’ போன்ற திரைப்படங்கள் (தமிழ்) சரத் சந்திரரின் படைப்புக்களை வைத்து எடுக்கப்பட்டவை. வங்க மொழியில் சரத் சந்திரரின் படைப்புகள் அனைத்தும் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

டாக்டர் பட்டாபி சீதாராமையா எழுதிய ‘இந்திய தேசிய காங்கிரஸ் வரலாறு’, ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய ‘காந்தீய சோஷலிஸம்’, ரமேஷ் சந்திர தத்தரின் நூல்கள் சில, பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ இவைகளையும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.

சரத் சந்திரரின் நூற்றாண்டு விழாவின்போது நான் கௌரவிக்கப்பட்டேன். ‘சரித்ரஹீன்’ நாவலை நான் மொழிபெயர்த்தபோது ‘ராணி’ இதழ் ஆசிரியர் அ. மா. சாமி அதைத் தன் பத்திரிகையில் 42 வாரங்கள் வெளியிட்டார். சாண்டில்யன் ‘சுதேசமித்திரன்’ ஆசிரியராக இருந்தபோது என்னிடம் சரத் நாவல்களை மொழிபெயர்த்து வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

‘பாரத தேவி’, ‘தினமணி’, ‘நவயுகம்’, ‘சோஷலிஸ்ட்’ என்ற செய்தி இதழ்களின் உதவி ஆசிரியராக நான் பணியாற்றி இருக்கிறேன். ‘காதம்பரி’, ‘சினிமா’ என்ற பத்திரிகைகளை நடத்தியும் ஆசிரியராக இருந்து இருக்கிறேன்.

1942-ல் ‘ஜோதி நிலையம்’ என்ற பதிப்பகம் ஆரம்பித்தேன். 120 புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறேன்.

அ. கி. ஜயராமன் குடும்பத்துடன்

சரத் நூல்களை மொழிபெயர்க்க நீங்கள் எடுத்துக்கொண்ட கால அளவு?

சிறிய நாவல்களை ஒரு வாரம், இரு வாரங்களில் மொழிபெயர்த்துவிடுவேன். பெரிய நாவல்கள் மொழிபெயர்க்க இரண்டு மாதங்கள் வரை ஆகும்.

சரத் சந்திரருக்கு அப்புறம் என்னைக் கவர்ந்த நாவலாசிரியர் தாரா சங்கர் பானர்ஜி. தற்கால எழுத்தாளர்களில் எனக்கு விமல் மித்ராவைப் பிடிக்கும்.

வ.ரா.விடம் நீங்கள் உதவி ஆசிரியராக இருந்தீர்களாமே?

‘பாரத தேவி’ என்று ஒரு வாரப் பத்திரிகை. ‘ஆனந்த விகடன்’ சைஸில் இருக்கும். பம்பாய் முதலாளி ஒருவர் முதலீடு செய்தார். வ.ரா.தான் ஆசிரியர். நான், கு.ப.ரா., சி. சு. செல்லப்பா எல்லாம் வ.ரா.வின் தலைமையில் உதவியாசிரியர்களாகச் செயல்பட்டோம்.

அப்புறம் வ.ரா. ‘நவயுகம்’ பத்திரிகையின் ஆசிரியரானார். அப்போதும் நான் அவரிடம் உதவி ஆசிரியரராக வேலைக்கிருந்தேன். சொந்தமாகவும் நான் சுமார் 40 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.

***

(நன்றி: ‘புதிய பார்வை’, 1-15 ஜனவரி 1995;

சுந்தர ராமசாமி நினைவு நூலகம், நாகர்கோவில்)

  •  

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும்.

நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள்.

செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேலைக்காக வேறு ஊருக்குச் செல்லும்போது மல்லிகைப்பூ கொடி சிறியதாக இருந்தது. இப்போது பெரிதாகப் படர்ந்திருக்கிறது. சாயந்திர நேரம். மதினி காபி தயார் செய்துகொண்டிருக்கலாம். சங்கரன் அண்ணாச்சி ஹாலில் உள்ள ஊஞ்சலில்தான் மதியம் படுத்திருப்பார். சரியாக நாலு மணிக்கு அவருக்கு விழிப்பு வந்துவிடும் என்று மதினி சொல்லியிருக்கிறாள். நாலேகால் மணிக்கு அவருக்கு பில்டர் காபி வேண்டும். இப்போது அவர்கள் வீட்டிற்குள் நுழையலாம். முறுக்கு, அதிரசம் கொண்டுவந்து மதினி வைத்துவிடுவாள். சங்கரன் அண்ணாச்சி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியதை நினைத்தால் அலுப்பாக இருக்கிறது. இன்னொரு நாள் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எதிரே குடை பிடித்துக்கொண்டு சோமு பிள்ளை வந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது செருப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குடை. டிசைன் குடை அல்ல. நீளமான கருப்புக் குடை. வாக்கிங் ஸ்டிக்காக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

சோமு பிள்ளை, “எப்படா வந்தே. வேலை மாறியிருக்கியா. அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா. எவ்வளவு நாள் இருப்பே. உங்கப்பனை விசாரிச்சதா சொல்லு” என்றார்.

“எல்லோரும் நல்லா இருக்காங்க. இன்னும் ரெண்டு நாள் ஊர்ல இருப்பேன்” என்றேன்.

“உனக்குக் கல்யாணம் எப்போ” என்றார் சோமு பிள்ளை. அவர் எனக்கு என்ன முறை வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.

“இப்போ இல்லை. இப்பதானே வேலைக்குப் போயிருக்கேன்” என்றேன்.

அவர் “நல்லா இரு” என்று ஆசீர்வாதம் மாதிரி சொல்லிவிட்டுச் சென்றார். அவர் முழுக்கை சட்டை அணிவார். சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடியை அதற்கான கூட்டுடன் வைத்திருப்பார். அது புடைத்திருக்கும்.

இந்த நேரத்தில் வாசலிலோ சாலையிலோ ஆட்கள் இல்லை. மதிய மயக்கத்திலிருந்து விடுபட்டிருக்கமாட்டார்கள். என் ஆபீசர் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று, மூன்றரை மணிவரை மந்த நேரம், மூளை சுறுசுறுப்பாக இருக்காது என்று சொல்லுவார்.

மாகாளி பலசரக்குக் கடை பெரிதாக இருந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் இந்தக் கடை மூக்குப்பொடி கடையாக இருந்தது. T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி என்று பெரிய எழுத்தில் போர்டு இருக்கும். ஒரு வாட்டசாட்டமான வாலிபர் முறுக்கு மீசையுடன் உரலுக்கு முன் உட்கார்ந்து ஆட்டுக்கல்லைப் பிடித்துக்கொண்டு இருக்கும் பெரிய ஓவிய போர்டு மாட்டப்பட்டிருந்தது. மூக்குப்பொடி போட்டவர்கள் எங்கேதான் போனார்கள் என்று தெரியவில்லை. புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு மூக்குப்பொடி மேல் ஈடுபாடு ஏற்படவில்லை.

என் அத்தை மூக்குப்பொடி போடுவாள். “சுறுசுறுப்பா இருக்கு. மூளை வேலை செய்யுது. மூக்கடைப்பு உடனே விலகியிரும்” என்பாள் அத்தை. பக்கத்தில் சென்றால் மூக்குப்பொடி நெடி அடிக்கும். மூக்குத் துவாரங்களின் வெளிப்புறத்தில் மூக்குப்பொடி ஒட்டியிருக்கும். மூக்குப்பொடி போட்டுவிட்டு மூக்கை ஒரு சிறு கைக்குட்டை போன்ற துணியால் ராவிவிடுவாள். அந்தத் துணியில் மூக்குப்பொடி ஒட்டியிருக்கும். அவள் அருகிலேயே அந்தத் துணி கிடக்கும். கையைக் கழுவிவிட்டு சமையல் செய்வாளா என்பது தெரியவில்லை. மாமா ஒருதடவை சொன்னார். “உங்க அத்தை வைக்கிற வெண்டைக்காய் புளிக்குழம்புக்கு ஈடு இணை கிடையாது.” மூக்குப்பொடி சமையலுடன் கலந்தால் ருசியாக இருக்கும் போல.

என் நண்பன் சோணைமுத்து கணக்கு வாத்தியார் கிளாஸ்லே மூக்குப்பொடி போட்டுவிட்டு தும்முவோம் என்றான். நான் விளைவுகளை அறியாமல் ஒப்புக்கொண்டேன். ஒரு பொடி மட்டை வாங்கி வந்தோம். கணக்கு வாத்தியார் உற்சாகமாகக் கிளாஸை நடத்திக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வேறு யாருக்கும் புரிந்ததா என்றும் தெரியவில்லை. சோணைமுத்து, பொடி மட்டையைப் பிரித்தான். ஒரு சிட்டிகைப் பொடியை விரல்களில் எடுத்துக்கொண்டோம். மூக்கருகே கொண்டுசென்று மூச்சை இழுத்தேன். மண்டைக்குள் சுரீர் என்றது. பெருந்தும்மல் வந்தது. தொடர்ந்து தும்மல் வந்தது. எனக்கும் மேலே சத்தமாக, அடக்கமுடியாமல் சோணைமுத்து தும்மிக்கொண்டிருந்தான். பையன்களுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றுதானே வாத்தியார் நினைக்கவேண்டும். அப்படித்தான் முதலில் நினைத்திருப்பார். ஆனால் இரண்டு பையன்களுக்கு ஒரே நேரத்தில் ஜலதோஷத்தில் தும்மல் வரும் என்று எப்படி நம்புவார். எங்கள் இருவரையும் வரச்சொன்னார். தும்மிக்கொண்டே வந்தோம். எங்கள் முகத்தைப் பார்த்தவருக்கு விவரம் தெரிந்துவிட்டது. அதற்குள் கணக்கு வாத்தியார் மூன்று தும்மல்கள் போட்டுவிட்டார். அவரால் பேச முடியவில்லை. அவருக்கு மேலும் தும்மல் வந்தது. எங்களை அறை வாசலில் முட்டி போடச் சொன்னார். அவர் அறைக்கு வெளியே வந்து மூக்கைச் சிந்தி முகத்தைக் கழுவிவிட்டு அறைக்குள் நுழைந்து கணக்குக் கிளாஸ் எடுத்தார். ஹெட்மாஸ்டரிம் சொல்லி, எங்கள் அப்பாக்களை ஸ்கூலுக்கு வரச்சொல்லி கேவலப்படுத்திவிட்டார் வாத்தியார். நான் அப்பாவிடமும் அடி வாங்கினேன்.

பலர் கூட்டமாக மூக்குப்பொடி வாங்கிய கடையில் ஒரு காலத்தில் கூட்டமில்லாமல் போய்விட்டது. பலசரக்குக் கடை வந்துவிட்டது. மூக்குப்பொடிக் கடை வைத்திருந்தவர், செல்வாக்காக இருந்தவர், இப்படி வீழ்ச்சி அடைவோம் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.

பருத்திப்பால் கடை வைத்திருக்கும் ரங்கண்ணன் கடை திறக்க ஆயத்தமாக இருந்தார். ஒரு தள்ளுவண்டி. வண்டியின் கீழ்த்தளத்தில் அடுப்பு. தீ எரிந்துகொண்டிருக்கும். அடுப்பின் மேலே வெண்கலப் பானை. எவர்சில்வர் மூடி. ஒரு வாளித் தண்ணீர். கிளாஸ் கழுவ உபயோகப்படும். இன்னொரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் தனியாகத் தண்ணீர் இருக்கும். எவர்சில்வர் வாளித் தண்ணீர் அழுக்கான பிறகு தண்ணீர் மாற்றிக்கொள்வார். எனக்குப் பருத்திப்பால் என்ற பெயரைக் கேட்டாலே அருவருப்பாக இருக்கும். பருத்தியிலிருந்து பஞ்சை அல்லவா எடுப்பார்கள். அந்தப் பஞ்சிலிருந்து தயார் செய்யும் துணியை அல்லவா பலவகைகளில் பயன்படுத்துகிறோம். அந்தப் பருத்தியிலிருந்து தயார் செய்யும் பாலை எப்படிக் குடிப்பது. நினைத்தாலே எனக்குக் குமட்டியது. பிறகுதான் தெரிந்தது பருத்தி விதையை ஆட்டுரலில் ஆட்டி அரைத்து செய்யப்படுவது என்று. எனக்குப் பிடிக்கவில்லை. ஜலதோஷம் பிடிக்கும்போது நெஞ்சு கபத்திற்கு நல்லது என்று அப்பா பருத்திப்பால் குடிக்கச் சொல்வார். இனிப்பாக இருந்தது. ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை. சினிமா தியேட்டரில் போரடிக்கும் காட்சி வரும்போது குறைந்த விலை டிக்கெட் பகுதியிலிருந்து ‘பருத்திப்பால்’ என்று சத்தம் வரும். பருத்திப்பாலை போரடிக்கும் காட்சியுடன் இணைத்த புத்திசாலிகள் உள்ள ஊர் இது.

பெரியப்பா வீட்டை நெருங்கிவிட்டேன். வாசலில் பெரியம்மை நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் ஆச்சரியப்பட்டாள். அவள் முகம் எப்போதும் சிரிப்பு உள்ள முகம். “உள்ளே வா. எப்ப வந்தே. வீட்லே எல்லோரும் நல்லா இருக்காங்களா. பக்கத்துலே இருந்தாலும் நடந்து போகச் சள்ளையா இருக்கு. உடம்பு நோவுது. உங்க பெரியப்பாவுக்கு எப்பவும் நான் கூட இருக்கணும். இருந்த எடத்தை விட்டு அசைய மாட்டேங்குறார். ஈஸிசேருலே படுத்திருக்கிறவர் கையிலே இருந்த பேப்பர் கீழே விழுந்துச்சுன்னா எடுக்கறத்துக்கு என்னைக் கூவுவார். நான்தான் போய் எடுத்து அவர் கையிலே கொடுக்கணும். ஈஸிசேரை விட்டு எந்திருச்சு எடுத்துக்கிட்டாத்தான் என்னவாம். எடுக்கமாட்டார். பேனைப் போடறதுக்கும் ஆப் பண்றதுக்கும் கூட நான்தான் போகணும்.” என்றாள்.

பெரியப்பா பின்கட்டில் உள்ள தோட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இவ்வளவு பேசமாட்டாள். நான் உள்ளே நுழைந்தேன். பின்கட்டைப் பார்த்து, “யாரு வந்திருக்கா பாருங்க. ராசாக்கண்ணு வந்துருக்கு. ஊர்லேயிருந்து லீவு போட்டு வந்திருக்கும்போல. ஊர்லேயிருந்து முறுக்கு, காரசேவு, ஜிலேபி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கு” என்றாள்.

நான் உள்ளே நுழைந்த உடனேயே பலகாரப் பையை பெரியம்மையிடம் கொடுத்துவிட்டேன்.

நான் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். பின்கட்டிலிருந்து தலைப்பாக்கட்டுடன் பெரியப்பா வந்தார். “முருங்கை காய்ச்சுத் தொங்குது. நல்ல விளைச்சல் பூமி. காய்கறி, தக்காளி, மிளகாய் நல்லா வருது. எப்ப வந்தே” என்றார்.

நான், ஊருக்கு வந்த விவரம், வேலை பார்க்கும் இடம், தங்கியிருக்கிற இடம், வேலை நிலவரம் பற்றியெல்லாம் அவரிடம் சொன்னேன். பெரியம்மை உள்ளே காபி தயார் செய்துகொண்டிருந்தாள்.

ஒரு தட்டில் நான் கொண்டுவந்திருந்த காரச்சேவைப் பிரித்துக் கொஞ்சம் காரச்சேவை வைத்து, என் முன்னால் ஸ்டூலை இழுத்துப்போட்டு வைத்தாள். காபி டம்ளரையும் வைத்தாள். பெரியப்பாவிற்குத் தட்டில் நிறைய காரச்சேவு வைத்திருந்தாள். காபி டம்ளரும் பெரியதாக இருந்தது.

என் அப்பாவிற்கும் பெரியப்பாவிற்கும் சேர்ந்து ஐந்து ஏக்கர் நஞ்சை நிலம் இருந்தது. பூர்வீகச் சொத்து. பெரியப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். அப்பா கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால் நிலத்தின் பக்கம் செல்வதில்லை. அறுவடை முடிந்த பிறகு பெரியப்பா, நெல் அரைத்து எங்கள் பங்காக அரிசி மூட்டைகளை வீட்டில் இறக்கிவிடுவார். அப்பாவிற்குத் தன் பாகத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. ‘எல்லோருக்கும் வயதாகிக்கொண்டு வருகிறது. பெரியவர்கள் இருக்கும்போதே சில விஷயங்களை செட்டில் செய்துவிடவேண்டும்’ என்று அவர் நினைக்கிறார். பெரியவர்கள் காலத்துக்குப்பின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. எல்லாமே குழம்பிவிடும். வெளியூரில் இருக்கும் பெரியப்பா மகன்களுக்கும் எனக்குமே ஒத்துப்போவதில்லை. தங்கைக்குத் திருமணம் செய்யவேண்டும். பெரியப்பாவிடம் ஆனந்தபவன் அரியநாயகம் அண்ணாச்சி மூலம் அப்பா சொல்லிவிட்டார். பெரியப்பா பதில் சொல்லவில்லை. இருமியதாக அப்பாவிடம் அண்ணாச்சி சொன்னார். நான் சின்னப் பையன் இதிலெல்லாம் தலையிட முடியாது. பெரியப்பாவையும் பெரியம்மாவையும் பார்க்க வந்தேன்.

சம்பிரதாயமான விஷயங்களுக்குப் பிறகு, நான் பெரியப்பாவிடம், “பெரியப்பா நீங்க ஒரு பாட்டுப் பாடணும். கேக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு” என்றேன். பூனை ஒன்று பின்கட்டிலிருந்து உள்ளே வந்து எங்களைப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டது.

பெரியப்பா, “என்ன பாட்டுப் பாட” என்றார்.

பெரியம்மை சிரித்துக்கொண்டே, “நீங்க பாட்டுப் பாடி பலகாலம் ஆச்சு. ‘சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி’ பாடலைப் பாடுங்கள்” என்றாள். பெரியம்மையைப் பார்த்து ஒரு காலத்தில் இந்தப் பாடலை அவர் பாடியிருப்பார் போல.

பெரியம்மையைப் பெரியப்பா பார்த்தார். பெரியம்மை வெட்கப்பட்டாள். பெரியப்பா பாடினார். ‘சித்திரம் பேசுதடி... உன் சித்திரம் பேசுதடி. எந்தன் சிந்தை மயங்குதடி...’ என்று ஆரம்பித்தார். ‘பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி...’ என்ற இடத்திலும், ‘என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நான் அறிவேன்’ என்ற இடத்திலும் பெரியம்மை வெட்கப்பட்டாள். பெரியப்பாவும் சும்மா இருக்காமல் பெரியம்மையை நோக்கிக் கையை நீட்டி நீட்டிப் பாடினார். பாடி முடித்தார். பெரியம்மை கூச்சம் தாங்காமல், “காபி ஆறிவிட்டது. சுட வைச்சு கொண்டு வாரேன்” என்று பெரியப்பா குடிக்காமல் வைத்திருந்த காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் சென்றாள்.

பெரியப்பா ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்திருந்தார்.

பெரியப்பா என்னைப் பார்த்துச் சொன்னார். “தம்பி ராசாக்கண்ணு. நம்ம பூர்வீக நிலத்தை எங்க அப்பா இறந்தபின்னாலே நான்தான் உழுதுகிட்டு வாரேன். உங்க அப்பாவுக்கும் அதுலே பாதிப்பங்கு சட்டப்படி இருக்கு. அரியநாயகம் அண்ணாச்சி, உங்க அப்பா பாகம் பிரிக்க விருப்பப்படறதா சொல்றாரு. எனக்கு வேலை இல்லை. விவசாயம்தான் எனக்குத் தொழிலு. இவ்வளவு காலமும் நிலத்துலே உழைச்சுருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க. வேலை பாக்கிறாங்க. உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளைக் கரையேத்தணும். உங்க அப்பாவுக்கும் பெரிய அளவுலே வருமானம் இல்லை. நிலத்தை பாகம் பிரிச்சாலும் உங்கப்பாவாலே விவசாயம் பண்ண முடியாது. வேலைக்குப் போறாரு. வேற ஆள்ட்டே விவசாயத்துக்கு புதுசா குத்தகைக்கு விட்டா பல பிரச்சினைகள் வந்து சேரும். பக்கத்துலே என் பாகம் நிலம் இருக்கும். அதனாலே நான் ஒரு யோசனை சொல்றேன். அஞ்சு ஏக்கர் நிலத்துலே ஆளுக்குப் பாதின்னா இரண்டைரை ஏக்கர் நிலம் வருது. நான் உரிமையிலே கேக்கறேன். எனக்கு அறுபது பெர்சண்ட் நிலம், அதாவது அரை ஏக்கர் கூடுதலா மூணு ஏக்கர் வரும். உங்க அப்பாவுக்கு அரை ஏக்கர் குறைவா, இரண்டு ஏக்கர் வரும். இந்த இரண்டு ஏக்கரை வெளி ஆளுக்கு வித்தா என்ன விலை போகுமோ அந்த விலை கொடுத்து நான் வாங்கிக்கறேன். அதுக்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்றேன். அரை ஏக்கர் கூடுதலா எனக்கு விட்டுக்கொடுத்தது இந்த நிலத்துலே உழைச்ச மூத்தவர்ங்கிறதுனாலே கேக்கறேன். அவருக்கு அரை ஏக்கர் விட்டுத்தர சம்மதம் இல்லைன்னா ஆளுக்கு இரண்டரை ஏக்கர்னே பிரிச்சுக்குவோம். அதுக்குண்டான கிரையத் தொகையை நான் கொடுத்திர்றேன். எப்படி முடிவோ அதுக்கு ஏத்த மாதிரி வர்ற தை மாசம் பத்திரம் பதிஞ்சுக்குவோம். உங்க அப்பாகிட்டே கேட்டுச் சொல்லு.”

பெரியப்பாவிற்கு கண்கள் கலங்கிவிட்டன. பெரியம்மை சுடவைத்த காபியை வைத்துவிட்டு பெரியப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். “நீ என்ன சொல்றே” என்று பெரியம்மையைப் பார்த்துக் கேட்டார். “நான் என்ன சொல்றது. நீங்க சொன்னதுக்கு மேலே நான் சொல்றதுக்கு என்ன இருக்கு” என்றாள் தயங்கிக்கொண்டே.

“பெரியப்பா, இன்னொரு பாட்டு” என்றேன். “என்ன பாட்டு” என்றார். பெரியம்மை, “அமுதும் தேனும் எதற்கு” என்றாள். பெரியப்பா காபியை நிதானமாகக் குடித்தார்.

பெரியப்பா பாடினார். ‘அமுதும் தேனும் எதற்கு... நீ அருகினிலே இருக்கையிலே எனக்கு...’ என்று ஆரம்பித்து பெரியம்மையை நோக்கி மீண்டும் கையை நீட்டி நீட்டிப் பாடினார்.

‘நிலவின் நிழலோ உன் வதனம்... புது நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்...’ என்று பெரியப்பா பாடும்போது பெரியம்மை நிலைகொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு அழலானாள். பெரியப்பா பாடுவதை நிறுத்திவிட்டார்.


நான் அப்பாவிடம் பெரியப்பா நிலம் தொடர்பாகச் சொன்னதைக் கூறினேன். அப்பாவிற்குக் கண்கள் கலங்கிவிட்டன. அம்மா, “இரண்டு பேருக்கும் சம பங்குதானே. எதுக்கு அவருக்கு அரை ஏக்கர் கூடப் போகணும்” என்றாள். அப்பாவிற்குக் கோபம் வந்து அம்மாவைத் திட்டினார். “உனக்கு உலகம் தெரியாது. அவரு எனக்கு மூத்தவர். நல்லது கெட்டதுக்கு முன்னாலே நின்னவரு. எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தவரு. கரெக்டா கணக்குப் பாக்கக் கூடாது. அவருக்கு அரை ஏக்கர் விட்டுத்தரலாம். நான் ஒத்துக்கலைன்னா ஆளுக்கு இரண்டரை ஏக்கர் எடுத்துக்கலாம்னும் சொல்லியிருக்காரு. என்னைப் பெரியவர் சோதிக்கறாரா என்னன்னு எனக்குத் தெரியலை. டேய் ராசாக்கண்ணு இடையிலே வேற ஆள் வேணாம். நீயே சொல்லு. இரண்டு ஏக்கர் அப்பாவுக்குப் போதும்னு சொல்லியிரு.”

அடுத்த நாள் பெரியப்பா வயக்காட்டிற்குச் சென்றிருந்ததால் இந்தச் செய்தியை எடுத்துக்கொண்டு வயக்காட்டிற்குச் சென்றேன். கூழ் குடித்துக்கொண்டிருந்தார். அப்பா இரண்டு ஏக்கர் பாகம் பெற்றுக்கொண்டு அவரிடம் கிரையம் கொடுக்க விருப்பம் தெரிவித்திருப்பதாவும், தங்கச்சிக்கு தை மாசத்துலேருந்து மாப்பிள்ளை பாக்கப்போவதாகவும் சொன்னேன். பெரியப்பா சிரித்தார்.

“நான் யோசித்துப் பார்த்தேன். இந்த நிலந்தானே எனக்கு வருமானத்தைக் கொடுத்திருக்கு. கூட அரை ஏக்கர் நிலம் கேக்கறது நியாயமில்லை. அவருடைய பாகம் இரண்டரை ஏக்கருக்கும் நான் கிரயத்தொகை கொடுத்திர்றேன். நான் ஏற்கனவே சொன்னதை வைச்சு இரண்டு ஏக்கர் போதும்னு உங்க அப்பா பிடிவாதம் பிடிக்கவேண்டாம். நாளைக்கு உங்க அம்மையோட அப்பாவை வரச்சொல்லு. பத்திர எழுத்தரையும் வரச்சொல்றேன். உங்க அப்பா இரண்டரை ஏக்கர் பாக விடுதலை கொடுக்கற மாதிரியும் அதற்கான கிரயத் தொகை நான் கொடுக்கிற மாதிரியும் பேசி முடிச்சுக்குவோம்.”

பெரியப்பாவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. “நான் எனக்குக் கூட அரை ஏக்கர்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன்” என்றார்.

“என்ன பெரியப்பா. நீங்க மூத்தவரு. நல்லது கெட்டதுக்கு முன்னாலே நின்னு நடத்திக்கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு இல்லாததா” என்றேன்.

“தம்பி ராசாக்கண்ணு. நான் சொன்னதைச் சொல்லு. இதுலே தேவையில்லாம தாவா பண்ணிக்க வேணாம்.”

நான் வீட்டுக்குச் சென்று அப்பாவிடம் கூறினேன். “அப்பா இதுலே தேவையில்லாம யோசிக்காதீங்க. நாளைக்கிப் போவோம். பெரியப்பா விருப்பப்படி முடிச்சுக்குவோங்கிற வார்த்தையோட நின்னுக்குவோம். அவர்தான் தெரியாம சொல்லிட்டேங்கிறாரே.” அப்பா ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள் பழங்கள், ஸ்வீட்கள் சகிதம் பெரியப்பா வீட்டிற்குச் சென்றோம். அரை ஏக்கர் பற்றி இருவருமே பேசவில்லை. பத்திர எழுத்தர், நில விவரங்களையும் சம பாக விவரங்களையும் குறித்துக்கொண்டார். பத்திரத்தில் எழுதவுள்ள விஷயங்களைக் கூறினார். பெரியம்மையிடம் பெரியப்பா, “இப்ப உனக்கு திருப்திதானே” என்றார். பெரியம்மை ஆமோதிப்பதுபோல் சிரித்தாள்.

நான் ஊருக்கு வந்ததில் சுபமாக ஒரு வேலை முடிந்தது. தை மாசம் பத்திரப் பதிவு நடைபெற்றது. தை மாசமே தங்கைக்கு மாப்பிள்ளை அமைந்தது. பங்குனி மாசத்தில் திருமணம் நடக்க முடிவானது.

***

நன்றி: ‘உயிர்மை’, செப்டம்பர் 2023

  •  

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால், இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை.

1935க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக, இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி, அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல், ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பிளேட்டோ, ரூஸ்ஸோ, டால்ஸ்டாய் மற்றும் பங்கிம் சந்திரர், ரவீந்திரநாத தாகூர், பிரேம்சந்த், சரத் சந்திர சட்டர்ஜி, வி. ஸ. காண்டேகர் முதலியவர்களுடைய நூல்கள் தமிழில் மளமளவென்று லாபத்தைக் கருதாமல் மொழிபெயர்க்கப்பெற்றுத் தமிழ் இலக்கியத்துக்கு வலிமை தந்தன. 1950லும் அதற்குப் பின்னரும் சோவியத் அரசாங்க ஸ்தாபனமும், அமெரிக்க அரசாங்க ஸ்தாபனமும் ஏற்பட்டு, போட்டி போட்டுக் கொண்டு அதன் விளைவாக, மொழிபெயர்ப்பாளரின் ரசனையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்குப் பதிலாக, பணம் தரக்கூடிய நூல்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். இதுவே, நல்ல தரமான இயக்கம் என்று சொல்லும்படியான அளவுக்கு 1956க்குப்பின் சாகித்திய அகாதெமி, இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஏற்பட்டு, மொழிபெயர்ப்பில் செயல்படத் தொடங்கியது. அதுவரை இலக்கியத் துறையில் மொழிபெயர்ப்பு என்பதிலே நம்பிக்கையே வைக்காத பலரும், மொழிபெயர்ப்பாளரானார்கள். அவர்கள் செய்த மொழிபெயர்ப்புகளும் குப்பைக்கூளங்களாகத் தமிழ் வாசகர்கள்மேல் ஏற்றப்பட்டு மொழிபெயர்ப்பு என்றாலே இலக்கியத்தரமில்லாதுதான் இருக்கும் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படக் காரணமாகிவிட்டது.

மூல (Original) எழுத்துப்போல, நாவல், கவிதை, நாடகம், விமரிசனம் போன்ற துறைகள் போல இலக்கியத்தில் மொழிபெயர்ப்பும் ஓர் அவசியமான துறை. மொழிபெயர்ப்பு வேகம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில்தான் இலக்கிய வேகமும் ஒரு மொழியில் சுத்தமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக உலக இலக்கியச் சரித்திரத்தில் பல பகுதிகளைச் சொல்லலாம். குறிப்பாக ஆங்கில இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் காலத்தையும் இரண்டாவது எலிஸபெத் காலமான இந்தக் காலத்தையும் சொல்லலாம். 1945இல் தமிழ் இலக்கியம் ஓரளவுக்குத் தேக்கம் பெற்றது. அதன் விளைவாக 1950 முதல் சுமார் 1965 வரையில் மொழிபெயர்ப்பும் தேக்கமுற்றது. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் பிறநாட்டு அரசியல் ஸ்தாபனங்களும், இந்திய மத்திய அரசாங்க, மாகாண அரசாங்க ஸ்தாபனமும் மொழிபெயர்ப்புகளின் தரத்தைக் குறைக்கவே உபயோகப்பட்டன. இந்தக் காலஅளவில் வெளிவந்துள்ள தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் எஸ். மகராஜன் செய்த ஷேக்ஸ்பியர் ‘ஹாம்லெட்’ நாடகத்தையும், சித்தலிங்கய்யாவின் கரந்த் நாவல் மொழிபெயர்ப்பும் தவிர, வேறு ஒரு மொழிபெயர்ப்பு நூல்கூடத் தமிழில் இலக்கியத்தரமானதாக வெளிவரவில்லை என்றே சொல்லவேண்டும்.

ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்

ஓர் ஆண்டில் பத்திருபது நூல்களாவது உலக இலக்கிய வரிசையிலிருந்தும் ஒரு பத்திருபது நூல்கள் இந்தியப் பிறமொழிகளிலிருந்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. அப்படி ஓர் ஆண்டில் முப்பது நாற்பது இலக்கிய நூல்கள் பிறமொழிகளிலிருந்து வந்துகொண்டேயிருந்தால்தான், அதன் பாதிப்பினாலும் விளைவாலும் தமிழிலும் ஒரு பத்துப் பன்னிரண்டு நூல்கள் வெளிவர முடியும். அதில்லாமல் எங்களுக்கு முன்னேயே எங்கள் புதுக்கதைகளையும் பழங்கதைகளையும் பேசிக்கொண்டே பொழுதைப் போக்கி வருகிறோம். எங்களுக்குக் கல்கி போதும், சாண்டில்யன் போதும், அகிலன் போதும் - இதற்கெல்லாம் மேலே இலக்கியமா, அது எங்கே இருக்கிறது என்று நமக்குள்ளேயே சொறிந்து கொடுத்துக்கொண்டே இருந்துவிட்டால் இலக்கியம் தேங்காமல் என்ன செய்யும்?

மொழிபெயர்ப்புகள் படிக்கிற மனப்பான்மை வளர வேண்டும். தமிழர்களிடையே இந்த மனப்பான்மை வளரவில்லை. தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த இலக்கியப் பிராந்தியத்தையும் பற்றி நினைவேயில்லாதவர்களைப்பற்றி நாம் பண்டிதர்கள் என்று அபிப்பிராயம் கொண்டிருக்கிறோம். தமிழில் உள்ளது போதும், வேறு எதுவும் நமக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை என்கிற ஒரு மனப்பாங்கு நமக்குள்ளே பெருமளவிற்கு வளர்ந்து வந்திருப்பது கண்கூடு. டால்ஸ்டாய் நிறைய தமிழில் படிக்க வேண்டும், ஷெரிடனைப் படிக்க வேண்டும், அல்டேர்கேடுவைப் படிக்கவேண்டும், ஃபாக்னரைப் படிக்கவேண்டும் என்று எந்தவிதமான ஆர்வமும் காட்டாமல் மு.வ., மு. கருணாநிதி என்று சிந்தனைகளைத் தேக்கிவிடுகிற காரணமாகத்தான் தமிழில் மொழிபெயர்ப்புகள் அதிகமாகத் தோன்றவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

இதற்கிடையில் சிறிது சிறிதாக ரஷ்ய, அமெரிக்க அரசாங்கங்கள் மொழிபெயர்ப்புகள் வெளியிடும் பாணியைச் சுருக்கிக்கொண்டார்கள். 1960க்குப் பின் அவர்கள் நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை. சாகித்ய அகாதெமியும் ஆரம்பத் துரைத்தனமாகப் பல ஐரோப்பிய, இந்திய நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட்டு அவை வெற்றி பெறவில்லை என்று சொல்லி மேலே ஏற்றுக்கொண்ட மொழிபெயர்ப்புகளையும் நிதானமாகச் செய்யத் தொடங்கியது. புதிதாகத் தோன்றிய நேஷனல் புத்தக டிரஸ்ட் தாங்களே எழுதி வெளியிட்ட பல நிபுணர்களின் நூல்களைத் தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. இந்த நிபுணர்களின் முதல் நூல்களே சரிவர அமையவில்லை. உதாரணம் கோபால் சிங்கின் ‘குரு கோவிந்த சிங்’, பி. சாம்பமூர்த்தியின் ‘ஸ்ரீ தியாகராஜா’, திலீப் முகர்ஜியின் ‘சைதன்யா’ இவற்றைச் சொல்லலாம். நிபுணர்களைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை; அவர்களுக்கு ஜீவிய சரித்திரங்கள் எழுதிக் கைவரவில்லை. சைதன்யாவும், குரு கோவிந்த சிங்கும், தியாகராஜாவும் பிறவிக் கடல் நீந்திக் கரையேறப் பிறந்தவர்கள்; அவர்களைத் தங்கள் நூல்களிலேயே பல பக்கங்களில் பிறக்க வைக்கிறார்கள் இந்த நூல்களின் ஆசிரியர்கள்.

ஆதான் - பிரதான் என்று ஒரு திட்டத்தையும் மேற்கொண்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் நூல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கின்ற காரியத்தை அது மிகவும் தரமற்ற வகையில் செய்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பகவத் சரன் வர்மாதான் ஹிந்தியில் ஆலோசகர்; தமிழில் மீ. ப. சோமசுந்தரம் ஆலோசகர். அவர்களுடைய இலக்கியம் சுவர்களைத் தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டது. அவர்கள் பத்தாம்பசலி நூல்களை, இந்திய இலக்கியம் என்று ஆதான் - பிரதான் வரிசையில் வெளியிட்டு வருகிறார்கள். மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கப்படும் முறையும் பெயர்களும் தரமாக இல்லை என்று சொல்லவேண்டுவதேயில்லை. ஸ்தாபனத்துக்கோ, அதன் ஆலோசகர்களுக்கோ வேண்டியவர்களாக இருந்தால் போதும் - மொழிபெயர்க்கத் தகுதி வந்துவிடும் என்று அவர்கள் நினைக்கிற மாதிரி தெரிகிறது.

அரசாங்க அல்லது அரை அரசாங்க மொழிபெயர்ப்பு முறைகள் சிரிப்புக்கிடமாக இருக்கின்றனவே தவிர மொத்தத்தில் இலக்கியத்துக்கு இடமாக இல்லை. உதாரணமாக, சாகித்ய அகாதெமி தயவில் வங்க இலக்கிய வரலாறு’ என்று ஒரு மொழிபெயர்ப்பு தமிழில் வந்துள்ளது. இதில் ஒரு வாக்கியம் ‘கவி ரவீந்திரநாத தாகூரின் சகோதரியின் மகளை அவர் திருமணம் செய்துகொண்டார்; அவர் சகோதரரும் அவ்வாறே செய்தார்’ என்று இருக்கிறது. இந்த நூலை மொழிபெயர்த்தவர் பழைய இலக்கியக் குடியைச் சேர்ந்த பெரும்புலி - பல மொழிபெயர்ப்புக் கருத்தரங்குகள் நடத்தியவர் - ஆனால், அவை Southern Languages Books Trust சார்பில் நடந்தவை - ஆகவே, இலக்கியத்தரமானவை அல்ல என்று திடமாகச் சொல்லலாம். இந்த மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து, இந்த வாக்கியம் உண்மையில் சரியென்று சொன்னவர் புதுப்புலி பேராசிரியர், டாக்டர், இத்யாதி. இந்த மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா என்று அவர் பார்த்துக்கொள்வதற்காக அவர் சாகித்ய அகாதெமியிலிருந்து பெற்றுக்கொண்ட கூலி ஓர் ஆயிரம் ரூபாய். மொழிபெயர்ப்பாளருக்கு அதிகம் கிடைத்திருக்கும்.

தமிழில் அதே நேரத்தில் சற்றுத் தரமான முயற்சிகளும் நடைபெறாமல் இல்லை. ஆனால், அவை கண்ணுக்கெட்டாமல் பசியும் பரிதவிப்புமாக ஏதோ சிலரால் தங்கள் தங்களுக்கெட்டிய வகையில் செய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய, ஜப்பான் கவிதைகளில் சிலவற்றைச் சில இளங்கவிஞர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். சில சிறுகதைகள் வெளியிடப்பட்டுள்ளன. சில இலக்கியக் கட்டுரைகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ளன. இவையெல்லாம் தமிழில் இந்தக் காலகட்டத்திலும் மொழிபெயர்ப்புக் கலை இறந்துவிடவில்லை என்பதைக் காட்டவே போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியாகியுள்ளன. ஆனால், ஒட்டுமொத்தமான இலக்கியப் படைப்பு ஏற்படுத்தக்கூடிய அளவில் மொழிபெயர்ப்புகள் வந்துகொண்டிருக்கவில்லை என்பதுதான் விஷயம்.

தமிழ் இலக்கியத்தில் ஒரு புது வேகம் 1965க்குப்பின் ஏற்பட்டு ஒரு புதிய ஞானக்கூத்தன், ஷண்முக சுப்பையா, அம்பை, எஸ். ராமகிருஷ்ணன், கா. கந்தசாமி என்று பலரும் பலவிதங்களில் சிறப்பாக எழுதிவருகிறார்கள். இந்தத் தலைமுறைக்கு இரண்டொரு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் தேவை - சாமிநாதன் என்றவர் சில மொழிபெயர்ப்புகளை எழுதிச் சிறு பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார். எழுத்துகளில் மொழிபெயர்ப்புகளுக்குத் தமிழில் ஒரு வேகம் ஏற்படலாம் - ஏற்படவேண்டும். இந்த வேகம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது தமிழர்கள் மொழிபெயர்ப்புகளுக்குத் தரும் ஆதரவைப் பொறுத்தது.

***

சுடர், தில்லி தமிழ்ச் சங்க ஆண்டு மலர், 1972

[இக்கட்டுரை அழிசி வெளியீடாக வரவிருக்கும் க.நா.சு.வின் தொகுக்கப்படாத கட்டுரைகளின் தொகுப்பில் இடம்பெறுகிறது.]

  •  

புதுமையும் பித்தமும் - 6 | க. நா. சுப்ரமண்யம்

 

புதுமையும் பித்தமும் - 5 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் வகுத்துத் தந்த பாதையில் தமிழ்ச் சிறுகதை வெகுதூரம் அவருக்குப்பின் இந்த நாற்பது ஆண்டுகளில் வளம் பெற்று நடைபெற்று வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவில் அந்த வளத்தைச் சாத்தியமாக்கியவர் என்பதற்காகவேனும் புதுமைப்பித்தனுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள். புதுமைப்பித்தனை சிரத்தையாகப் படித்து அவர் கற்ற, செய்துகாட்டிய உண்மை ஒளி, சிந்தனை வேகம், சிந்தனைச் சுதந்திரம், கருத்து விஸ்தீரணம், உருவ அமைதி இவற்றைப் படித்து பிரக்ஞையில் போட்டுக்கொள்ளுவது இன்று எழுதுகிறவர்களுக்கும், இனி வரப்போகிற எழுத்தாளர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

அதேபோல அவர் காலத்தில் அவர் முன்னணியில் நின்றார் என்பதற்காக அவரை மட்டும் படித்துவிட்டால் போதுமானது என்று நினைப்பதும் தவறு. அவரே குறிப்பிட்டுக் காட்டிய அவர் காலத்திய, அவருக்கு முந்திய காலத்திய சிறுகதாசிரியர்களையும் தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்துக்கொள்ளுவது மிகவும் உபயோகமான விஷயமாக இருக்கும். வ.வே.சு. அய்யர், அ. மாதவையா, ராமாநுஜலு நாயுடு போன்றவர்கள் அவருக்கு முன் வந்தவர்கள். சமகாலத்தவர் என்று மௌனி, கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, த. நா. குமாரசாமி, பி. எஸ். ராமையா, கி. ரா. முதலியவர்களையும் தேடிப்பிடிக்கவேண்டிய அவசியம் உண்டு. இலக்கியத்தில் மரபு என்பது ஒரு முக்கியமான சரடு. அதைப் புரிந்துகொள்ளவும் அந்த மரபுச் சரட்டில் புதுமைப்பித்தனின் இடத்தை நிர்ணயித்துக்கொள்ளவும் அவர் சொல்லுகிற பல கதாசிரியர்களையும் படித்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிடுகிற ஐந்திணைப் பதிப்பகத்தார் சமீபகாலத்திய தமிழ்ச் சிறுகதை மரபை ஸ்தாபிக்க மிகவும் பெரிய அளவில் உதவுகிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அதேபோல, பல சிறுகதாசிரியர்களின் முழுப்படைப்புகளும் வெளிவரவேண்டிய அவசியம் இருக்கிறது. யாராவது பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்யவேண்டும். இலக்கியத்தில் எதுபற்றியும் அவசரப்படவேண்டிய அவசியமில்லை. ஆனால் சில விஷயங்கள் அதனதன் காலத்தில் நடைபெறவேண்டிய அவசியம் மட்டும் உண்டு.

சென்னை

1-6-87

***

‘புதுமைப்பித்தன் படைப்புகள் - 1 (சிறுகதைகள்)’ நூலுக்கு எழுதிய முன்னுரை, ஐந்திணைப் பதிப்பகம், 1987

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

  •  

புதுமையும் பித்தமும் - 5 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 4 | க. நா. சுப்ரமண்யம் 

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் காணப்படுகிற சிறப்பான இலக்கிய அம்சங்கள் என்னென்ன என்று கேட்டால் எல்லோரும் ஒரே மாதிரியான பதிலைச் சொல்லவேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு. ‘ஹியர் ஈஸ் காட்ஸ் பிளண்டி டூ சூஸ் ஃப்ரம்என்று ஷேக்ஸ்பியர் பற்றியும், ஹோமர் பற்றியும், டாண்டே பற்றியும், டால்ஸ்டாஸ் பற்றியும், மகாபாரதம் பற்றியும் சொல்லுவது போல புதுமைப்பித்தனைப் பற்றியும் சொல்ல முடிகிறது என்பது ஒரு தனிப்பட்ட விசேஷம். புதுமைப்பித்தன் எழுதத் தொடங்குவதற்கு ஒரு மாமாங்கத்திற்கு முன் இறந்துவிட்ட - அவரே போல அல்பாயுசில் இறந்துவிட்ட - சுப்ரமண்ய பாரதியாரிலும் ‘ஹியர் ஈஸ் காட்ஸ் பிளண்டிஎன்று சொல்ல இடம் இருக்கிறது என்று கவனிக்கிறோம். பாரதியாரில் மேலெழுந்தவாரியான சமுதாய அரசியல் சுதந்திர நிலைகள் தெரிகின்றன என்றால் புதுமைப்பித்தனில் இந்த ‘காட்ஸ் பிளண்டி’ சிருஷ்டிகர்த்தாவினால் உருமாற்றி அழகேற்றப்பட்டு ஆழமான தளத்தை மனித மனத்தின் ஆழத்தில் போய்க் கவ்விப் பிடிக்கின்றது என்று சொல்லவேண்டும். இருவரும் சிருஷ்டிகர்த்தாக்களாக இருந்தது மட்டுமன்றி சக்தி வாய்ந்த பத்திரிகைக்காரர்களாகவும் உருவெடுக்க சமுதாயத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதும் தெரிகிறது.

நல்ல இலக்கிய சிருஷ்டிகர்த்தா என்று சொல்லக்கூடிய அளவில் உலகில் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் ஒருசில அடிப்படையான அம்சங்கள் அவர்களிடம் தெளிவாக, ஆணித்தரமான அளவில் காணமுடிகிறது. அந்த மாதிரி அடிப்படையான அம்சம் என்று, ‘வாக்கினிலே உண்மையொளி’ என்று பாரதியார் தெளிந்து சொன்னதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த உண்மையொளி புதுமைப்பித்தன் படைப்புகள் எல்லாவற்றிலும், முக்கியமாக, அவர் சிறுகதைகளிலும், கவிதைகளிலும் வியாபித்து நிற்பது நன்றாகவே தெரிகிறது. வாழ்க்கையில், தினசரி நடைமுறையில், வெற்றி அவ்வளவாகப் பெறாதவர்தான். பொருளாதார ரீதியில் பிற்பட்டவர்தான். ஒரு மேதையின் குழந்தைத்தனத்துடன் பொறுப்பு எதுவும் இல்லாதது போல நடந்துகொள்ளக்கூடியவர்தான் - பேசக்கூடியவர்தான். எனினும், சிறுகதை, கவிதை என்று அவர் எழுத முன்வரும்போது அவர் எழுதுகிற ஒவ்வொரு வாக்கியத்திலும் ‘உண்மையொளிஎன்று வாசிப்பவன் தெரிந்துகொள்ளக்கூடிய அளவில் பிரகாசிப்பதைக் காண்கிறோம். மற்ற எல்லா அம்சங்களையும்விட புதுமைப்பித்தனில், கதைக்குப் பின் கதையில், கவிதைக்குப் பின் கவிதையில் உண்மையொளியைக் காணமுடிகிறது. இந்த உண்மையொளி என்று சொல்லக்கூடியது எல்லாச் சிருஷ்டிகர்த்தாக்களுக்கும் பொதுவானதுதான் என்றாலும் புதுமைப்பித்தனில் அவர் முத்திரையுடன் விசேஷமாகச் செயல்படுகிறது என்பதைக் காண்கிறோம்.

கலைக்கெல்லாம் பொதுவாகச் சொல்லவேண்டிய இரண்டாவது அம்சம் மனத்தில் பொறி தட்டி ஏதோ ஒரு தீபத்தை ஏற்றி வைக்கிற சக்தி, ஒரு அறிவார்த்தமான சிந்தனை இருப்பதும். அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விஷயம். இன்றுபோல புதுமைப்பித்தன் காலத்தில் (1930 - 1945 காலகட்டத்தில்) சிந்திக்கத் தெரிந்தவர்கள் அவ்வளவாக அருகிவிடவில்லை. தமிழ்நாட்டில் இன்று சிந்தனா சக்தி மிகவும் குறைவான அளவில் இருக்கிறது என்றாலும், சமுதாயம் உருப்பெற சரியானபடி செயல்பட, சிந்தனா சக்தி தேவையாக இருக்கிறது. அன்று இருந்த அளவு இன்று சிந்திக்கிறவர்கள் இல்லை. ஆனால், சிந்திக்க மறுப்பவர்களையும் சிந்திக்க வைக்கிற காரியத்தை அன்றும் புதுமைப்பித்தன் செய்தார்; இன்றும் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் செய்கின்றன. ஒரு தனிப்பட்ட மனிதனின், ஒரு இலக்கியக் கர்த்தாவின் சிந்தனை வேகத்தையும், அது செயல்படுவதையும் நாம் புதுமைப்பித்தன் கதைகளில் சுலபமாகவே பார்க்க முடிகிறது. சமுதாயச் சிந்தனை, அரசியல் சிந்தனை, முற்போக்குச் சிந்தனை, சனாதனச் சிந்தனை, விஞ்ஞானச் சிந்தனை, மெய்ஞ்ஞானச் சிந்தனை என்று குறுக்கி, சுருக்கித் தனிப்படுத்தப்பட்ட முறையில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாத வகையில், எல்லாமே புதுமைப்பித்தன் படைப்புகளில் காணக் கிடைக்கிறது என்பது அவரைப் படிப்பவர்களுக்கு நிதர்சனமாகத் தெரிகிறது. நீங்கள் பிரித்துத் தரம் கண்டு சொல்லக்கூடிய எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர் அவர். மற்ற நல்ல சிருஷ்டிகர்த்தாக்களைப்போல, பாரதியாரைப்போல, ஒரு கட்சியிலும் புதுமைப்பித்தன் அடங்கிவிடாதவர்.

இன்னொரு விசேஷம். ‘மணிக்கொடி’ கோஷ்டியினர் என்று சொல்லப்படுகிறவர்கள் அந்தக் காலத்து எழுத்தாளர்கள் சிலரேனும் சிந்தனைச் சுதந்திரத்தைப் பெருமளவிற்குப் படைத்திருந்தார்கள். அதைப்பற்றி அவர்கள் அதிகமாகப் பேசவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இந்தக் காலத்தில் சுதந்திரம் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது; சுதந்திரமும் சுதந்திரமாகச் செயல்படுவதில்லை. சிந்தனைச் சுதந்திரத்தைப் பாரதியாரில் கண்ட அளவுக்கும் அதிகமாகவே புதுமைப்பித்தனில் காணமுடிகிறது. புதுமைப்பித்தன் காலத்திய வேறு எந்த இலக்கியாசிரியர்களிடமும் சிந்தனைச் சுதந்திரம் இந்த வகையில் செயல்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சிந்தனைச் சுதந்திரத்தின் காரணமாகப் புதுமைப்பித்தனால் மற்றவர்கள் கையாள முடியாத விஷயங்களைத் தைரியமாகவும் லாகவமாகவும் கையாள முடிந்தது. கந்தசாமிப் பிள்ளையின் முன் தோன்றிய கடவுள் சிவசமயத்தின் பிரதிநிதியாகவே விளங்குகிறார் என்றாலும் புதுமைப்பித்தனே சொல்வதுபோல, கர்ப்பகிரஹத்தில் அடங்கி நிற்க மறுக்கிறார். அன்று இரவில் வருகிற பிட்டுக்கு மண் சுமந்த, வெள்ளத்துக்குக் கரை போடுகிறவனும், பிரம்படி பட்டவனும் சிவசமயத்தின் பிரதிநியாகவே இருந்தாலும் மனிதனாகவும், தெய்வமாகவும், அதற்கப்பாலும் தனித்தன்மை பெற்றுவிடுகிறான். இதேபோல பல சிரமசாத்தியமான காரியங்களைப் புதுமைப்பித்தன் தன் கதைகளில் எளிய முறையில் சாதித்துக்காட்டுகிறார். பரமண்டலத்திலே இருக்கும் பிதாவைச் செயற்கையாக நம்மில் ஒருசிலர் ஏற்றுக்கொண்டிருப்பது சமீபத்திய சரித்திர விசேஷம். இந்த அறிவு திருநெல்வேலிச் சீமையில் சற்று அதிகம். இருநூறு, முன்னூறு வருஷத்து மரபு என்றுகூடச் சொல்லலாம். கர்த்தரைப்பற்றி சிருஷ்டிகர்த்தாவாகப் புதுமைப்பித்தனால் சில விஷயங்களைச் சொல்ல முடிகிறது. சிவனாருக்கு அவ்வளவாக அடிமைப்படாதவர் என்றாலும் கிறிஸ்துவ தத்துவ அர்த்தம் புதுமைப்பித்தனில் பரோடி (Parody) ஆகத்தான், கேலி செய்வதற்குரிய பொருளாகத்தான் வருகிறது என்பது கவனிக்கவேண்டிய விஷயம். சமய சம்பந்தமானது இது என்றால் ‘சிற்பியின் நரக’த்தில் காவேரிப்பூம்பட்டினத்தின் பகைப்புலத்தை ஒரு ‘கம்ப்ளீட் அட்மாஸ்பியரை’ நாலைந்து வாக்கியங்களில் கொண்டுவந்துவிடுகிறார்! அதற்குச் சமதையான ஒரு இடம் தமிழிலக்கியத்தில், சமீபகாலத்தில் வேறு ஒருவர் எழுத்திலும் காணமுடியாது. அதேபோல, சென்னை என்கிற நகரத்தின் சிமண்ட் நாகரிகம் அத்துடன் மனித மன அவசங்களை ‘மகாமசான'த்திலும், ‘சுப்பையா பிள்ளையின் காதல்க'ளிலும் கொண்டுவந்துவிடுகிறார். சென்னை நகரத்து ஆட்சி இன்னும் பல கதைகளிலும் காணக்கிடைக்கிறது. பார்வை வேண்டுமானால் அடிமட்டத்தில் திருநெல்வேலிப் பார்வை என்று சொல்லலாம்.

இதேபோல, சிந்தனைச் சுதந்திரத்தின் எல்லைகளாக “எல்லாவற்றையும் அழிக்கிறாயே, உன்னையே அழித்துக்கொள்ள முடியுமா? என்று சிவனைக் கேட்கிற குழந்தையும், “என் உயிரைத்தானே கொண்டுபோக முடியும், என் உடலையும் கொண்டுபோக முடியுமா? என்று கேட்கிற கிழவியும், ‘வெள்ளைக் களிமண்ணால் ஆன பிள்ளையார் என்றால் வெள்ளைக்காரர்கள் ஆண்ட அந்தக் காலத்தில் மதிப்பு அதிகம்’ என்று எண்ணுகிற மனமும், ராமனின் ரெட்டைத்தனமான மதியைக் கண்டு மீண்டும் கல்லான அகலிகையும், பயங்கரக் கனவாக பக்தர்களின் குரலை, கலையைக் காணாத குருடாகக் கண்டாலும் சிலை தெய்வமாவதுதான் சரி என்கிற நினைப்பும், ‘அது வேறு உலகமய்யாஎன்று அம்மாளுவின் காரியங்கள் பொன்னகரத்தைச் சேர்ந்தவை என்று சொல்வதும் புதுமைப்பித்தனுக்குச் சாத்தியமாகிறது. கருத்துச் செறிந்த விஷயங்கள் என்று ஏதோ சொல்கிறார்களே, அதற்கு ஏதாவது அர்த்தம் உண்டு என்றால் அந்த அர்த்தத்தைப் புதுமைப்பித்தன் கதைகள் ஒவ்வொன்றிலும் காணமுடியும்.

சிந்தனைகளைச் சுதந்திரமாகச் சொல்லிவிடுவதுகூடச் சுலபமாக இருக்கலாம். ஆனால், சிந்தனைகளை நேருக்குநேர் பார்த்து, அவற்றை அவற்றின் எல்லைவரை தொடர்ந்து சென்று அவற்றிற்கு உருவம் தருவது என்பது மிகவும் சிரமமான காரியம். அந்தக் காரியத்தைப் புதுமைப்பித்தன் கடைசிவரை தடம் தவறாமல், செய்திருக்கிறார் - ‘கயிற்றர’வில், ‘சித்தி’யில், ‘செல்லம்மா’ளில், ‘நினைவுப் பாதை’யில், ‘காஞ்சனை'யில் - இன்னும் நீங்களும் நானும் உதாரணமாக எடுத்துச்சொல்லக்கூடிய பல கதைகளிலும் தீர்க்கமான சிந்தனைகளின் முடிவுகளுக்கு அவரால் உருவம் தர முடிந்திருக்கிறது. இந்த முடிவுகள் சில சமயம் சாதாரண நிலையில் முற்போக்காகவும், சில சமயங்களில் பழமைக்கும் பழமையாகவும் உருவெடுப்பது சிலருக்கு எரிச்சலூட்டும்தான். பாரதியாரை ஒருசிலர் புரட்சிக்காரர் மட்டுமே என்று சொல்லுகிற மாதிரி புதுமைப்பித்தனையும் இது மட்டுமே என்று பட்டம் கட்டி விலாசம் தெரிய, அலமாரியில் அடைத்து வைத்துவிட முயற்சி செய்து தோற்பவர்களுக்கு இதனால் கோபம் வருவது சகஜமே. ஆனால் இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்கள் எப்போதுமே ஒரு லேபிளுக்குள் அடங்கிவிட மறுப்பவர்கள். ஒரு கல்லூரி ஆய்வாளரின் சித்தாந்தங்களுக்குள் அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல. சொல்லச் சொல்ல, மேலும் சொல்லப் பாக்கியிருக்கிறது - மறுத்தும் சொல்லலாம், ஒட்டியும் சொல்லலாம் என்பதுதான் விசேஷம்; அவர் கையாண்ட விஷயங்களைப்பற்றிச் சொல்லக்கூடிய உண்மை.

கலைஞனாக, கருத்துகள் சுதந்திரம் என்பதெல்லாம் சரி. இலக்கியாசிரியனாக உருவம் என்பது அவர் கதைகளில் எப்படி அமைந்தது, எப்படிச் செயல்பட்டது என்று விசாரிப்பதும் அவசியமாகிறது. பல சிறப்பான உருவங்களை அவர் தன் கதைகளுக்கு என்று சிருஷ்டித்துக்கொண்டு கையாண்டு பார்த்திருக்கிறார். ‘செல்லம்மாள்’, ‘சித்தி’, ‘காஞ்சனை’, ‘சாப விமோசனம்’, ‘செவ்வாய் தோஷம்’, ‘கயிற்றரவு’, ‘வேதாளம் சொன்ன கதை’, ‘கட்டிலை விட்டிறங்காக் கதை’, ‘காலனும் கிழவியும்என்பது போல ஒரு முப்பது சிறுகதைகளுக்கும் அதிகமாகவே சொல்லி, அவற்றில் தவிர்க்க முடியாத உருவமும், கருத்தும் பரிபூரணமாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டலாம். அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், ‘பொன்னகரம்’, ‘துன்பக்கேணி’, ‘மகாமசானம்’, ‘மனித இயந்திரம்போன்ற பல கதைகளில் உருவ விஷய அமைதியை ஓரளவுக்குக் காணமுடிகிறது. நூறு கதைகளில் ஒரு அறுபதுக்கும் மேற்பட்டவற்றில் இப்படி உருவ விஷய அமைதி காணக் கிடைப்பது உலக இலக்கியச் சரித்திரத்திலேயே வெகு சிலருடைய எழுத்தில்தான் சாத்தியமாக இருக்கிறது.

தன் கதைகளில் புதுமையும் பித்தமும் இருப்பதாகப் புதுமைப்பித்தனே சொல்கிறார். புதுமை என்கிற அம்சம் தமிழுக்குச் சிறுகதைத்துறை புதிது என்பதுடன், அதன் ஆரம்ப காலத்தில் செயல்பட்டவர் என்பதனால், புதுமைப்பித்தனில் தூக்கி நிற்கிறது. இப்படி, புதுமையை சிருஷ்டி செய்வதில்கூட அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைக் காணமுடிகிறது. ‘பிரம்மராக்ஷஸ்’ என்கிற புதுமைப்பித்தன் கதையையும், இன்று எழுதுகிற சுஜாதாவுடைய விஞ்ஞானக் கதைகளில் ஒன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எது சிறுகதையாக வெற்றி பெற்றிருக்கிறது என்பதுடன் புதுமைப்பித்தன் கதையில் விஞ்ஞான சிந்தனை எப்படி அமைதி பெறுகிறது என்பதையும் காணமுடிகிறது. ‘ஞானக்குகைபோன்ற மரபு அறிவுக் கதைகளில் இந்த அமைதி கூடுமானதாக இருக்கிறது. ‘கபாடபுர’த்தில் உடல் இல்லாத தலை பேசுவதையும், பிரேதங்களாலான புணை கடலைப் கடப்பதும், நரபட்சிணிகளான சித்தர்கள் தங்களில் ஒருவனை மரச்சாறாகவே பண்ணிக் குடிப்பதையும் எவ்வளவு அனாயாசமாக, யதார்த்தமாகச் சொல்லுகிறார்! நவீனத்தின் பல அம்சங்கள் புதுமைப்பித்தன் கதைகளில் இடம்பெறுகின்றன என்பதில் ஆச்சரியமில்லை. அந்த 1930 - 1945 நவீனத்துவம் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் நவீனத்துவமாகவே காட்சியளிப்பதுதான் ஒருவிதத்தில் ஆச்சரியம். ஸம்ஸ்கிருதத்தில் ‘வக்ரோக்திஎன்று இலக்கியத்துக்கு ஆதாரமாக ஒரு தத்துவத்தை ஒரு சாரார் சொல்லுகிறார்கள். அதன் அம்சங்களாகப் புதுமையையும் பித்தத்தையும் சொல்லலாம். வேறு யாரும் செய்யாத காரியங்களை, சொல்லாத விஷயங்களைச் சொல்பவனையே இலக்கியாசிரியன் என்று சொல்லமுடியும்.

புதுமைப்பித்தன் என்கிற ஒரு முழுமையான ஆளுமை, பர்சனாலிட்டி, அவர் கதைகளைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிற மாதிரி இருக்கிறது. அவர் வாழ்க்கையில் பட்ட அன்றாட அவஸ்தைகள், அவை சிருஷ்டித்துத் தந்த ஒரு நம்பிக்கை வறட்சி - இந்த நம்பிக்கை வறட்சியைத்தான் அவர் தன் கதைகளில் அடிநாதமாகக் கண்டார் என்றாலும், அதை, அப்படியே, முழு உண்மை என்று நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது. ‘சில்பியின் நரகம்தொடங்கி ‘சித்தி’, ‘கயிற்றரவுவரையில் பல கதைகளில் நம்பிக்கை வறளவில்லை என்பதை நாம் காணமுடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, புதுமைப்பித்தன் என்ற கலைஞனின் உருவம், உயிர் வாழும் மனிதனின் உருவம், நம்பிக்கை தரும் சித்தாந்தங்களுடன் வாழும் மனிதனின் உருவம் என்று நமக்குத் தெரிகிறது. உடைந்து தெறித்துவிட்ட ஒரு நிலைக்கண்ணாடியின் சில்லிலும்கூட உலகம் பூராவுமே பிரதிபலிக்கப்படுவது போல, புதுமைப்பித்தனின் முழு உருவம் அவர் கதைகள் ஒவ்வொன்றிலும் தெரியவருகிறது. இந்த உருவத்தில் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தாலும் எல்லாமாகச் சேர்ந்துதான் புதுமைப்பித்தன் என்கிற உருவம். பாரதியின் பர்சனாலிட்டியைக் குறிப்பிடுவதற்கு வேகம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லலாம். அவர் எழுதியது எல்லாவற்றிலும் ஒரு தனியான, அவருக்கேயுரிய ஒரு வேகம் காணப்படுகிறது. அதேபோல, புதுமைப்பித்தனுடைய பர்சனாலிட்டியைக் குறிக்க ஒரு வார்த்தை வேண்டுமானால் தேடிப் பார்க்கலாம். ‘செல்லும் வழி இருட்டு, அடையும் இடம் இருட்டு’ என்று அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ‘இருட்டுஎன்கிற வார்த்தையை புதுமைப்பித்தனுடைய பர்சனாலிட்டியைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த இருட்டு வெறும் குருட்டு இருட்டு அல்ல. இந்த இருட்டில் உருவங்கள் பலவும் சிகரங்கள் பலவும் உள்ளத்துக்கு இன்பம் பயக்கும் லேண்ட்ஸ்கேப்ஸ் பலவும் புதுமைப்பித்தனின் வார்த்தைகள் என்கிற விளக்கினால், கருத்துக்கள் என்கிற நிர்மாணத்தினால் தெரிகின்றன. இந்த இருட்டிலும் பாதைகள் இருக்கின்றன. உயிர்த்துடிப்புள்ள மனிதர்கள் வந்து வந்து போகிறார்கள். இருட்டுதான். ஆனால், வாழ்வு, வாழ்க்கை இரண்டும் அற்றுவிடவில்லை. கலை அம்சம் நிறைந்த இருட்டு.

புதுமைப்பித்தனின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு வகையானவை. நகரவாசிகள், கிராமவாசிகள், திருநெல்வேலிச் சீமையை விட்டுவிட்டு வெகுகாலம் முந்தியே கிளம்பிச் சென்னைக்கு அடிமைப்பட மறுப்பவர்கள் என்று பலரையும் காணலாம். புதுமைப்பித்தனின் கதைகளில் ஆண்கள் உருவான அளவுக்குப் பெண்கள் உருவாகவில்லை. பெண்கள் வருகிறபோது அனேகமாக ஆண்களின் மனங்கள் மூலம்தான் வருகிறார்கள். ஆண்கள், பெண்கள், மூட்டைப்பூச்சி, முயல் உருவான அளவுக்கும் அதிகமாக ஒரு இலக்கிய முழுமையுடனும் அமைதியுடனும் தன் குழந்தைகளை உருவாக்கியிருக்கிறார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனின் குழந்தைகள் அவர் இருட்டு உலகத்தில் ‘பளிச்’சென்று தெரிகிற உருவங்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உயிர் தரக்கூடிய கதாசிரியரை நம்பிக்கை வறட்சி மட்டும் கொண்டவர் என்று எப்படிச் சொல்லுவது? மாறாக, உலகத்தின் எதிர்காலத்தில் மிகமிக நம்பிக்கைக் கொண்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்லவேண்டும். இன்று, நல்லெண்ணமும், நல்லெண்ணெயும்கூடக் கலப்படம் செய்யப்படுகின்றன என்றாலும் எதிலும் கலப்படமில்லாத காலம் ஒன்று வரும் என்கிற நம்பிக்கை அவர் எழுத்திலே இருப்பதைக் காணமுடிகிறது. இன்று இலக்கிய அறிவைப் பாரிச வாயுவும் பக்கவாதமும் பற்றிக்கொண்டிருந்தாலும் எதிர்காலத்தில் அவை நீங்கிவிடக்கூடும் என்கிற நம்பிக்கையும் அவர் எழுத்திலே தொனிப்பதை நாம் காணலாம்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

  •  

புதுமையும் பித்தமும் - 4 | க. நா. சுப்ரமண்யம்

 

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

சிறுகதை பற்றிப் பொதுவாக இந்த மூன்று கட்டுரைகளையும் தவிர தன் கதைகளைக் குறிப்பிட்டுப் புதுமைப்பித்தன், ‘என் கதைகளும் நானும்என்று ஒரு கட்டுரையும், ‘காஞ்சனை’ என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரையாகச் சில குறிப்புகளும் தந்திருக்கிறார். புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள மிகவும் உபயோகமான குறிப்புகள் இவை. அவற்றையும் பார்த்துவிட்டுப் புதுமைப்பித்தனின் கதைகளைப் படிப்பது பயன்தரக்கூடிய விஷயம்.

‘... என்னுடைய கதைகளைப் பொறுத்தவரை அமிதமான பாராட்டும் பரவசமும் ஒரு சார்; மற்றொரு புறம் பலத்த மனப்பூர்வமான கண்டனம். இந்த இரண்டும் என்னுடைய கதைகள் பெற்றுள்ள கவர்ச்சிகள்’ என்று சொல்லிவிட்டு மேலும் சொல்கிறார்:

‘என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்துகொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத்தன்மை வாய்ந்திருக்கிறது என்பதை இப்போது அறிகிறேன். பிறகு நான் எடுத்தாளும் விவகாரங்கள் பலர் வெறுப்பது; சிலர் விரும்புவது...

என் கதைகளில் எது நல்ல கதை? எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் நல்ல கதையாகத்தான் இருக்கிறது. இப்பொழுது படித்துப் பார்க்கும்போதும் எனக்கு வாசிக்கப் பரம சுகமாக இருக்கிறது ... ‘சில்பியின் நரகம்’... ‘நினைவுப் பாதை’... ‘நாசகாரக் கும்பல்’...

அச்சுப்பிழை பார்க்கிறவர்களை ஒதுக்கிவிட்டால் என் கதையின் முதல் வாசகன் நான்தான். அவ்வளவு ரசித்துப் படிப்பேன். வேகமாக எழுதிக்கொண்டு போவதனால், எழுதியதில் அங்கொன்றும் இங்கொன்றும்தான் என் ஞாபகத்தில் இருக்கும். கோவையாக எழுத்து ரூபத்தில் என் கதைகளை நான் அச்சில்தான் பார்த்துவருகிறேன்...

... பிரசுரிக்கும் நோக்கமே இல்லாமல் நான் எழுதிக் கிழித்துப்போட்ட கதைகள் எத்தனையோ! எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட யந்திரம் மாதிரி தானே ஒரு இடத்தில் வந்து நிற்கும். இது என் அனுபவம் ... என் கதைகளிலே ஏற்றத்தாழ்வு உண்டு. அவற்றிற்குக் காரணம் வார்ப்புப் பிசகு அல்ல; அதை எழுதத் தூண்டிய மன அவசத்தின் உத்வேகத்தைப் பொறுத்தது கதையின் கவர்ச்சியில் காணும் ஏற்றத்தாழ்வு.

நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை ... என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும், வெற்றி காணுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்துகொண்டே இருக்கும். அந்தக் கிடங்கிலிருந்து நான் எப்பொழுதும் எடுத்துக்கொள்ளுவேன்; கதை எழுதும் சிலர் இவற்றை விவரப்பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள்; நான் அப்படியல்ல. ஞாபகமறதிக்கு அரிய வசதி அளிப்பேன்; ... ஆனால் ஒன்று: எழுத்து ரூபத்தில் அமையும்வரை மனசில் உறுத்திக்கொண்டு கிடக்கும் நிலையில் இந்தக் கதைகள் யாவும் இவற்றைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை. எழுதி முடித்த பிறகு அவை சற்று ஏமாற்றத்தையே அளித்துவந்திருகின்றன. ஆனால் ஏமாற்றம் வெகுநேரம் நீடிப்பதில்லை.

என் கதைகளில் எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு அது பிறந்த விதத்தைச் சொல்லுவதென்றால் ரிஷிமூலம் நதிமூலம் காணுகிற மாதிரிதான். சில ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம்; சில குரோத புத்தியின் விளைவாகப் பிறந்திருக்கலாம்; வேறு சில அவை சுமக்கும் பொருளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு காரியம் கைகூடாதபோது எழுதப்பட்டிருக்கலாம்...

என் கதைகளின் தராதரத்தைப் பற்றி ‘எரிந்த கட்சி, எரியாத கட்சி’ ஆடுகிறார்கள். அதற்குக் காரணம், பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக் கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும், இலக்கியமென்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல் காதல் கத்திரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற, அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.

நீளமாகத் தலை கத்தரித்துவிட்டுக்கொண்டு, அடையாறு ஜிப்பா போட்டுக்கொண்டு, பங்கியடித்த மாதிரி கண்களை ஏறச்சொருக வைத்துக்கொண்டிருக்கும் படங்கள், அவை போன்ற கதைகள், நாசூக்கான கட்டம் வரை, அதாவது உடை குலையாத கட்டம் வரை எழுதிக்கொண்டிருப்பதே கலையல்ல; அவைகளே, ‘அப்புறம்’ என்ற நினைப்பைத் தட்டிவிட்டு ஆபாச வேட்கைகளைக் கிளப்புகின்றன. இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத் துடிதுடிப்பில்தான் இருக்கிறது ... என் கதைகளில் ஒவ்வொன்றும் ஒரு விவகாரத்தைப் பற்றியதாக இருக்கும். ஆனால், என் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி. ‘எதிர்மறையான குணங்கள். இலக்கியத்துக்கு வலுக் கொடுக்குமா?’ என்று கேட்கலாம். அது ஏற்பவர்களின் மனப்பக்குவத்தைப் பொறுத்ததேயொழிய எதிர்மறை பாவத்தின் ‘விஷ’த்தன்மையைப் பற்றியதல்ல.

ஒருவர் என்னுடைய புனைபெயரை வைத்துக்கொண்டு என் கதையை விமர்சனம் செய்தார். ‘பித்தமும் இடையிடையே புதுமையும் காணப்படும்’ என்றார். வாஸ்தவம்தான். ‘பித்தா பிறைசூடி பெருமானே’ என்ற உருவகத்தில் பொதிந்துள்ள உன்மத்த விகற்பங்களை அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள் கொண்டு, அவ்வளவும் நமக்கு உண்டு என ஒப்புக்கொள்ளுகிறேன்; அவரவர் மனசுக்கு உகந்த ரீதியில் இருப்பவைகளே புதுமை எனக் கொள்ளப்படுகின்றன. நான் பொருள் கொடுக்கும் பித்தம்தான் அதில் புதுமை. என் கதைகளின் புதுமை அதுதான்.’

இந்தக் கட்டுரையில் புதுமைப்பித்தன் எழுதுகிற முறை, எழுதியதில் எல்லாம் ஒரே தரத்ததாக அமையவேண்டும் என்கிற அவசியமில்லாமை, உள்ளடக்கத்தின் மூலம் எழுகின்ற சர்ச்சைகள் - எல்லாவற்றையும் பற்றிக் குறிப்பிட்டுப் பல முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் காலத்தில் மட்டும்தான் சில விஷயங்களை நேருக்குநேர் நோக்கக்கூடாது என்கிற நினைப்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. இன்றும் பல ரூபங்களில் அந்த நினைப்பு நம்மைத் தொடருகிறது. அதை எதிர்நோக்கிச் சமாளிக்கவேண்டிய பொறுப்பு இலக்கியாசிரியர்களுக்கு இன்றும் உண்டு. அதேபோல, ஒண்ணே முக்கால் கதைகளை எழுதிவிட்டு, ‘நானும் புதுமைப்பித்தனைப் போல சிறுகதைகள் எழுதியிருக்கிறேனே, அது ஏன் உங்கள் கண்ணில் படவில்லைஎன்று கேட்கிற இலக்கிய சாம்ராட்டுகள் எண்ணிக்கையில் இன்று அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கும் வலுவான பதில் இந்தக் கட்டுரையில் காணக் கிடைக்கிறது. இவையெல்லாம் புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்கிறபோது அத்துடன் சேர்த்துப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்.

காஞ்சனைஎன்கிற தொகுப்பின் முன்னுரையாக நாலு பக்கங்கள் ‘எச்சரிக்கை!என்று அவர் எழுதிய பகுதியிலும் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள் உண்டு. அதில் சில முக்கியமான பகுதிகளை இங்கு எடுத்துத் தருகிறேன்.

‘... இவை யாவும் கலை உத்தாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை.

... பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலை வளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நினைப்பில் பிறந்ததல்ல...

நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர்பெற்று மனிதத்தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சிகள் அபிவாதயே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கலையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு, அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்றுகொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு.

... திருப்பணியில் ஈடுபாடுடைய பக்தர்கள் பலருக்கு அவர்கள் ஆர்வத்துடன் செதுக்கி அடுக்கும் கல்லுக் குவியலுக்கு இடையில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் அவர்களுடைய இஷ்ட தெய்வத்தை (‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற கதையில்) நான் மெதுவாகப் பட்டணத்திற்குக் கூட்டிக் கொண்டு விட்டதில் பரம கோபம். நான் அகப்பட்டால் கழுவேற்றிப் புண்ணியம் சம்பாதித்துக்கொள்ள விரும்புவார்கள். என்னுடைய கந்தசாமிப் பிள்ளையுடன் ஊர் சுற்றுவதற்குத்தான் கடவுள் சம்மதிக்கிறார். இதற்கு நானா பழி?

பொதுவாக, என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்துகொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்; இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் கோபிக்கவைத்து முகம் சிவப்பதைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.’

தமிழில் சிறுகதை என்ற இலக்கியத்துறை வளருவதற்குப் புதுமைப்பித்தன் தெரிந்து, அதிசயமாகவே செயல்பட்டிருக்கிறார். ‘மணிக்கொடி’ காலத்தில் அந்தத் துறை வளம்பெற்று, தரம் பெற்று, உரம் பெற்று, உருவம் பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இந்த நான்கு விஷயங்களிலும் தெரிந்து செயல்பட்டவர் புதுமைப்பித்தன். ஆனால், அவர்களில் பலரையும்விட அதிகமான விஷயங்களை நேருக்கு நேர் பார்த்து எழுதும் தெம்பு அவருக்கு இருந்தது. பரப்பினாலும், ஆழத்தினாலும் அவர் கவனத்தைக் கவர்ந்த விஷயங்கள் இன்றும் வாசகர்களின் கவனத்தைக் கவருவதாக இருக்கின்றன; புதுமை நிறைந்தவையாக இருக்கின்றன. பிரச்சாரகராக அல்லாமல் ‘கலை உய்விக்க வந்தவன் அல்ல நான்' என்று அவரே சொன்னாலும் கலை உய்ய, இலக்கியம் ஓங்க வந்தவர்தான் அவர் என்பது நமக்கு நிதர்சனமாகத் தெரிகிறது.

புதுமைப்பித்தன் படைப்புகளில் புதுமை ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் நிறைந்துதான் இருக்கிறது. பித்தமும் நிறைந்தேதான் இருக்கிறது. இரண்டுக்கும் அப்பால் இன்றும் தெரிந்துகொள்ளக்கூடிய, படித்த மாத்திரத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இலக்கியத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கிறது. இந்த இலக்கியத் தன்மை பேராசிரியர்களோ, இலக்கண ஆசிரியர்களோ சொல்லுகிற அளவில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது அல்ல. இது இயற்கையாகவே புதுமைப்பித்தன் என்கிற சொ. விருத்தாசலத்தின் தனித்துவமாக அமைந்து இன்றும் அவரைப் படிக்க நம்மைத் தூண்டுகிறது. அவர் எழுத்துகளை மற்றவர் எழுத்துக்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில் பலரும் எழுதினார்கள். அப்படிச் சிறப்பாக எழுதியவர்களில் முன்னணியில் நின்றவர் என்று புதுமைப்பித்தனைக் காலமும் விமர்சகர்களும் கணிப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை.

என் சுய அனுபவம் ஒன்றையும் இங்கு, இந்த இடத்தில் சுட்டிக்காட்டலாம் என்று தோன்றுகிறது. 1954 - 55 இல் பம்பாயில் தங்கியிருந்தபோது ஒருநாள் மாலை ஒரு மராத்தி இலக்கிய அன்பருடன் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அந்த மராத்திய அன்பரும் எழுத்தாளர்தான். அவர் சிறுகதைகள் நிறைய எழுதியவர். அவற்றில் சிலவற்றை ஆங்கில மொழி பெயர்ப்பில் படித்துவிட்டு நன்றாக இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அவருக்கு வயது ஐம்பது இருக்கும். பேசிக்கொண்டிருந்தபோது புதுமைப்பித்தனைப் பற்றிச் சிறப்பாகச் சொன்னேன். அவர் எந்த மாதிரிக் கதைகள் எழுதியவர் என்று மராத்திக்காரர் கேட்டார். எனக்கு உடனடியாக எதுவும் பதில் சொல்லத் தெரியவில்லை. “புதுமைப்பித்தன் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டைச் சுருக்கிச் சொல்லுகிறேன் உதாரணமாக. நீங்கள் அதிலிருந்து அவர் எப்படிப்பட்ட கதாசிரியர் என்று யூகித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, ‘சாப விமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘விநாயக சதுர்த்தி’ என்ற மூன்று கதைகளையும் நினைவில் இருந்தபடி ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொன்னேன். மராத்தி நண்பருக்குப் புதுமைப்பித்தன் எப்படிப்பட்ட சிறுகதாசிரியர் என்பது ஓரள வுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவர் போன பின்னர், கூட இருந்த தமிழ் நண்பர் சொன்னார். “நீங்கள் சுருக்கிச் சொன்ன கதைகள் மூன்றையும் நானும் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லுகிற அளவில் அவை அப்படிச் சிறப்பாக அமைந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே” என்றார். “அப்படியா? அது உமது துரதிருஷ்டம்” என்றேன் நான். “புதுமைப்பித்தன் கதைகளில் இல்லாதது எதையாவது நான் சேர்த்துச் சொன்னேனா? என்று கேட்டேன். “இல்லை” என்று ஒப்புக்கொண்டார் நண்பர். “திருப்பிச் சொல்லும்போது தரம் கூடுகிற மாதிரி தோன்றுவதும் ஒரு இலக்கிய நயம்தானே? இப்படித்தான் மகாபாரதமும் ராமாயணமும்கூட உருப்பெற்றிருக்கின்றன” என்றேன். நண்பர் பதில் சொல்லவில்லை.

சிலருடைய நாவல்களோ, கதைகளோ திருப்பிச் சொல்லப்படும்போது ஒன்றும் இல்லாமல் வெங்காயம் உரித்த கதையாகப் போய்விடும். ஒருசில கதைகள் அவசரமாகச் சுருக்கிச் சொல்லப்பட்டபோதும், சரியாக வராத மொழிபெயர்ப்பிலும்கூட அற்புதமாக இருப்பதாகத் தோன்றும். இரண்டாவது ரகமான கதைகளில் ஒரு இலக்கியத் தெம்பு இருப்பதை நாம் காண்கிறோம். இதுமாதிரி எப்படிச் சொன்னாலும் இலக்கிய நயமும், விஷய கனமும் காட்டுகிற கதைகள் புதுமைப்பித்தனின் கதைகள் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படி உள்ளதனால்தான் செக்காவையும் மோப்பாஸானையும்கூட நம்மால் மட்டமான மொழிபெயர்ப்பிலும் புரிந்துகொண்டு ரசிக்க முடிகிறது.

இப்பொழுது, இந்த நாட்களில் சில சிறுகதாசிரியர்கள் தங்கள் கதைகள் சில இந்திய மொழிகளில் மட்டுமின்றி, பல ஐரோப்பிய மொழிகளிலும் வந்திருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். டாக்டர் பட்டத்தையும் சேர்த்துக் கையெழுத்துப் போடுகிற மாதிரி சிலர் இப்படித் தங்கள் கதைகள் பல மொழிகளில் வந்திருப்பதாக ‘லெட்டர் ஹெட்’டில்கூடக் குறித்துக்கொள்கிறார்கள். வீட்டு முன்வாசலில் பெயர்ப் பலகைகளில்கூடக் குறித்து வைத்திருக்கிறார்களோ என்னவோ! ஆனால், காலத்தால் முதல்வரான, நிஜமாகவே முதல்வரான புதுமைப்பித்தனின் கதைகள் சீராக, இலக்கிய அளவில் பொறுக்கியெடுக்கப்பட்டு, விமர்சன ரீதியில் அவற்றின் தரம் சுட்டிக்காட்டப்பட்டு, பிற அந்நிய மொழிகளில் இதுவரை வந்திருப்பதாகத் தெரியவில்லை. சில மொழிகளில் சில கதைகள் மட்டும் வந்திருக்கலாம்; அப்படி வந்திருக்கிற இடங்களில், புதுமைப்பித்தனைப் படிப்பவர்களுக்கு அவருடைய இலக்கிய மேதைமை தெரியாமல் போயிருக்காது. இன்னும் விமர்சனபூர்வமாக, இலக்கியத் திறனுடன் இதைச் செய்வது தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லுவது போல அமையும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இந்தக் காரியம் இன்னமும் வள்ளுவர், இளங்கோ, காரைக்கால் அம்மையார், ஆண்டாள், சைவ வைஷ்ணவ பக்திப் பாடலாசிரியர்கள் சிலர், சுப்ரமண்ய பாரதியார் இவர்களுக்குக்கூட விமர்சன அடிப்படையில் இலக்கியபூர்வமாகச் செய்யப்படவில்லை. அந்த வரிசையில் புதுமைப்பித்தன் கதைகளையும் கொண்டு தமிழின் பெருமைகளில் ஒன்றாக உலகுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய காலம் வரவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எப்போது வரும் என்ற கேள்விக்கு இப்ப சத்தியாகப் புதுமைப்பித்தன் வார்த்தைகளிலேயே, ‘காலத்தேவன் லோபியல்ல’ என்று பதில் சொல்லவேண்டியதுதான்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

  •  

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம்

இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும், சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள், சித்தாந்தங்கள் முதலியவற்றையும், அவருக்கிருந்த இலக்கிய நோக்கம், வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும்.

இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.

‘வாழ்வு, வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது, மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம், ஸ்திதி, மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று, சூத்திரம் ஒன்று என்று வற்புறுத்துவது ஆஸ்திகம். வாழ்வு நியதிக்குக் கட்டுப்படாதது. பிரபஞ்ச உற்பத்தியே அகஸ்மாத்தாக நிகழ்ந்த சம்பவம். இதில் நியதிக்கோ, ஒரு கட்டுக்கோப்புக்கோ இடம் உண்டு என நினைப்பது வெறும் சொப்பனாவஸ்தை என வற்புறுத்துவது நாஸ்திகம்.

இவ்விரண்டு விதமான மனநிலைகளுக்கும் பிறப்பிடம் மனித சித்தம். இதைச் சித்திரங்களாகத் தீட்டுவது இலக்கியம். மனிதனுக்கும் புறவுலகுக்கும் உள்ள தொடர்பை அல்லது தொடர்பின்மையை மனிதக் கண்கொண்டு பார்ப்பது இலக்கியம். மனிதன் உணர்ச்சிக்கு உட்பட்டவன். உணர்ச்சி உண்மையறியும் சாதனமாகவும், அதை மறைக்கும் திரையாகவும் அமைந்துள்ளது. இலக்கியம், மன அவசத்தில் தோன்றி, புறவுலகின் அடிமுடியை நாட முயலும் ஒரு பிரபஞ்சம். இது தேசந்தோறும் பாஷைக்கும் பண்புக்கும் தக்கபடி பல்வேறு ரூபங்களில் அமைந்துள்ளது. இதன் பொது விதிகளை, தன்மைகளை ஆராயும் நோக்கத்துடன் இக்கட்டுரைகள் எழுதப்பட்டன.’

இந்தச் சிறிய முன்னுரையை முழுவதும் இங்குத் தந்திருப்பதற்குக் காரணம் இதில் புதுமைப்பித்தனின் இலக்கியக் கொள்கைகளின் சில அடிப்படைகளைக் காண இயலுகிறது என்பதால்தான். இதை ஒரு முக்கியமான சித்தாந்த வெளிப்பாட்டு முயற்சியாகக் கருதவேண்டும். இலக்கியம், தத்துவம், உணர்ச்சி, வாழ்க்கை, மன அவசம் முதலியவற்றுக்கு உள்ள உறவுமுறைகளை ஓரளவுக்குத் தெளிவாகவே கூறியிருக்கிறார். வாழ்வு, வாழ்க்கை என்கிற பிரிவினையும் ஒரு முக்கியமான விஷயமாகக் கருதவேண்டும். இது பலருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை என்பது உண்மை. வேறு பல விஷயங்கள்கூட இதில் நேரடியாகச் சொல்லியும், சொல்லாமலும் தெளிவாக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்திகம், நாஸ்திகம், முற்போக்கு, சநாதனம் முதலிய வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத இருகூறான முரண்பாடான அம்சங்களை அவர் எழுத்துகளில் நாம் காணலாம். இவை முரண்பாடுகளால் எழுந்தவை அல்ல; வாழ்க்கை நியதியால் எழுந்தவை. இலக்கியத்தில் எல்லாவற்றிற்கும் இடமுண்டு என்பதையே புதுமைப்பித்தன் சொல்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தன் கதைகளைப்பற்றி ‘எரிந்த கட்சி எரியாத கட்சி ஆடுகிறார்கள்’ என்று அவர் வேறு ஒரு இடத்தில் கூறுவதையும் இங்குக் கவனிக்க வேண்டும். தன்னையும், தன் எழுத்தையும் மதித்தவர்களையும் மதியாதவர்களையும் அளவாக, சீராக மதிப்பிடும் தன்மையும் அவருக்குக் கைவந்திருந்தது என்று பல சமயங்களில் நேரில் கண்டவன் நான். அதற்கெல்லாம் ஆதாரத்தை இந்தக் கூற்றில் காணலாம் என்றே தோன்றுகிறது.

‘இலக்கியத்தின் உட்பிரிவுகள்’ என்கிற பிறிதொரு கட்டுரையில், ‘வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் ரசனையைச் சொல்லுவது இலக்கியம்’ என்று பிரிக்கிறார். ‘ஒரு நூல் இலக்கியமா அல்லவா என்பது அதன் அமைப்பைப் பொறுத்துத்தான் இருக்கிறது. ‘தட்சிணத்துச் சரித்திர வீரர்’ என்று மாதவையா ஒரு சரித்திரம் எழுதியிருக்கிறார். ஸ்ரீனிவாச ஐயங்காரும் ‘பல்லவ சரித்திரம்’ ஒன்றை எழுதியிருக்கிறார். இரண்டும் சரித்திரம்தான். முன்னது இலக்கியம்; பின்னது சரித்திரம் அல்ல, வெறும் பஞ்சாங்கம். சரித்திரத்தை இலக்கியத்தின் வாயிலாகத்தான் அறியமுடியும் ... இலக்கியத்திற்கு ஜீவநாடி அமைப்பு ... இலக்கியத்தின் அமைப்புத் தன்மை, அமைப்பு ரகஸியம் ஒன்றாக இருந்தாலும், அது பல வடிவத்தில் இருக்கும்.’

இலக்கியத்தின் உட்பிரிவுகளைக் கவி, வசனம் என்று பிரித்துக்கொண்டு, கவியில், காவியம், தனிப்பாடல் (Lyric), நாடகம் என்றும், வசனத்தில், வசன காவியம், வியாசம், சிறுகதை, நாவல், நாடகம் என்றும் பிரிவுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பிரிவுகளில் சிறுகதை பற்றிச் சொல்லுகிறபோது, ‘சிறுகதைகள் வாழ்க்கையின் சாளரங்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது’ என்று கூறுகிறார்.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வாழ்க்கை என்கிற பெருமாளிகையின் தனிப்பட்ட, வேறுவேறு சாளரங்களைத் திறந்து காட்டுகிற காட்சிகளாக நாம் காணமுடிகிறது. ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்என்கிற கதையில் ஒரு சாளரத்தின் மூலம் பார்க்கிறோம். ‘நினைவுப் பாதை'யில் இன்னொரு சாளரத்தின் மூலம் பார்க்கிறோம் ‘சாப விமோசன’த்தில் வேறு ஒரு சாளரம் திறந்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சற்று பழமையான, பழக்கத்திலுள்ள மாளிகைச் சாளரத்தைத் திறந்து ஒரு புதுக்காட்சியைக் காட்டுகிறது. இப்படியே ‘காஞ்சனை’, ‘செல்லம்மாள்’, ‘கயிற்றரவுஎல்லாம் வெவ்வேறு சாளரங்களாக, வெவ்வேறு தனிப்பட்ட விஷயங்களைத் திறந்து காட்ட புதுமைப்பித்தனுக்கு உபயோகப்பட்டிருக்கிறது.

‘சிறுகதை என்பது ஒரு சாளரம்’ என்கிற கருத்தைப் புதுமைப்பித்தன் சிறுகதை பற்றி எழுதிய மூன்று கட்டுரைகளிலும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். திறந்த சாளரத்தின் மூலம் எட்டிப் பார்ப்பதுபோலவே, முன்கூட்டியே திட்டமிட்ட அளவில், வாழ்க்கையில் ஒரு தனி சம்பவத்தை, தனிமனிதர்களின் குணாதிசயங்களை, ஒரு தனிப்பட்ட மனிதனின் உணர்ச்சிகளை, ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல்களை ஒரு விஷயத்தின் போக்கைக் காட்டுவது அவருக்குப் பெருமளவில் சாத்தியமாகவே இருந்திருக்கிறது. ‘சித்திஎன்கிற சிறுகதையில் ஒரு தனிமனிதனின் அனுபவங்களையும், உணர்ச்சிகளையும் ஒரே சரடாக எத்தனை துல்லியமாகக் காட்டியிருக்கிறார்! அதேபோல, ‘விநாயக சதுர்த்திஎன்கிற கதையிலும், ‘பொன்னகரம்என்பதிலும், ‘மகா மசானம்என்பதிலும், ‘செவ்வாய் தோஷம்என்பதிலும் இன்னும் வாசகர்களே சொல்லிக்கொள்ளக்கூடிய மற்றக் கதைகளிலும் அவரால் பல தனிப்பட்ட விஷயங்களை, அந்தந்தச் சாளரங்களைத் திறந்து, காட்ட முடிந்திருக்கிறது. இத்தனை வேறுபட்ட சாளரங்களை, எண்ணிக்கையிலும், காட்சி வேற்றுமையிலும் அதிகமான சாளரங்களைத் தமிழில் வேறு யாரும் திறந்து காட்டியதில்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். செக்காவிலும், மாப்போஸானிலும், ஓ ஹென்றியிலும் பலப்பல சாளரங்கள் திறந்து திறம்படக் காட்டப்படுகின்றன என்று சொல்லலாம். மற்றச் சிறுகதாசிரியர்கள் எல்லாம் வேறு அளவில் இலக்கிய மேதைகளாகச் செயல்பட்டிருந்தாலும் இத்தனை மாறுபட்ட கோணங்களை அதிகமாகக் காட்ட முயலவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெரிய, விஸ்தாரமான, உயரமான, ஏழடுக்கு மணிமாடத்தின் பல கூடங்களிலும், அறைகளிலும், தளங்களிலும் அமைந்துள்ள சாளரங்களைத் திறந்து திறந்து காட்டுவது போலக் காட்டியிருக்கிறார் புதுமைப்பித்தன்.

ஒரு ஆரம்பம், நடு, முடிவு என்ற வரிசையாக இல்லாமல், எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ, பூர்த்தியாகாமலே, ஆனால் சிந்தனையைத் தூண்டுகிற மாதிரி முடிவதனால்தான் சிறுகதை என்கிற நவீன இலக்கியத்துறையை மரபுவாதிகள் ஏற்க மறுக்கிறார்கள் என்று புதுமைப்பித்தன் அபிப்பிராயம் சொல்கிறார். ‘ஆனால் அகப்பொருள் துறைகளிலும் புறப்பொருள் துறைகளிலும் பல்வேறு மன அவசங்களைக் காட்டி ஒரு காட்சியை, ஒரு கதையைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதமான பாட்டுகளை நுகர்ந்தவர்கள்கூட இது புரியவில்லை என்று சொல்லும்போதுதான் விசித்திரமாக இருக்கிறது. சிறந்த சிறுகதைகளுக்கு இலக்கணமாக யாப்பில் எத்தனையோ உண்டு; வசனத்தில் தோன்றியுள்ள இன்றைய சிறுகதைகளைப் புரிந்துகொள்ளாதவர்கள் பழைய காவிய நுகர்ச்சியிலும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள்’ என்றும் புதுமைப்பித்தன் சொல்லிக்காட்டுகிறார். நவீன, ஐரோப்பியச் சிறுகதை இலக்கியப் பரிச்சயம் போலவே தமிழில் பழைய யாப்புக் கவிதைகளின் பயிற்சியும் புதுமைப்பித்தனுக்கு அவரது சிறுகதை முயற்சிகளில் கைகொடுத்திருக்கிறது. இந்த அளவுக்கு இரு துறைகளிலும் உரமான அஸ்திவாரம் அமைந்தவர்கள் என்று, தமிழில் சிறுகதை எழுதியவர்களில் வேறு யாரையும் சொல்லமுடியாது. புதுமைப்பித்தனின் சிறுகதை வார்ப்பும், அமைப்பும் இதனால் அமைதி கூடி வந்தன என்று சொல்லலாம். தமிழ் யாப்புக் கவிதைகளை அறியாத, ஆங்கிலம் மூலம் சிறுகதை இலக்கியப் பரிச்சயம் உள்ள மௌனியின் கதைகளில் நடையும், அமைப்பும், வார்ப்பும் சில சமயம் தமிழின் மரபுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததைப் புதுமைப்பித்தனே குறிப்பிட்டிருக்கிறார். புதுமைப்பித்தனின் நடையில், வார்ப்பில் தமிழ் மரபுக்கு ஒவ்வாதது - அதுவரை சொல்லப்படாத விஷயம் என்பதைத் தவிர - வேறில்லை. சொந்தக் கற்பனை மேதையினாலும், யாப்புக் கவிதைப் பரிச்சயத்தினாலும், உலக இலக்கியச் சிறுகதை அறிவினாலும் புதுமைப்பித்தனுக்குச் சிறுகதை எழுதும் கலை மிகவும் நேர்த்தியாகக் கைவந்திருந்தது. வேறு பலருக்கும் சொல்லமுடியாத தகுதி இது.

தமிழில் சிறுகதைகளின் சரித்திரத்தை அன்று இருந்தவரையில் சொல்ல முற்பட்ட புதுமைப்பித்தன் பின்வருமாறு சொல்லுகிறார்:

‘தமிழில் சிறுகதை என்பது சுமார் ஐம்பது வருஷத்து விவகாரந்தான். செல்வசேசவராய முதலியார் எழுதியுள்ள ‘அபிநவக் கதைகள்’ என்ற சிறு தொகுதியை ஆரம்பமாக வைத்துக்கொண்டு கவனித்தால், இன்று நம்முடைய சாதனை பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடியதுதான்.

சிறுகதைகள் பிறந்து வளர்ந்த காலத்தை மூன்று பகுதியாகப் பிரிக்கலாம். செல்வகேசவராய முதலியாரிலிருந்து வ.வே.சு ஐயர் காலம் வரை ஒரு பகுதி. இதை வெறும் சோதனைக்காலம் என்று சொல்லவேண்டும். குறிப்பிடத்தக்க கதைகள் எதுவும் கிடையாது என்று பொதுவாகச் சொல்லலாம். இக்காலத்தில் பிறநாட்டுக் கதைகள், வாய்மொழியாக உலாவி வந்தவைகள், எழுத்தில் அமைந்தன. அவற்றில் பெரும்பான்மையாக ஒரு கதையிருக்கும்; அவற்றில் நடமாடும் பாத்திரங்கள் உயிர் பெற்று இயங்காது. ஆசிரியர் அவற்றை இயக்குவதற்காக, சூத்திரக்கயிற்றைப் பிடித்து இழுப்பதுங்கூட நமக்குத் தெரியும்.

இதற்கடுத்தபடியாக வ.வே.சு. ஐயர் யுகம் என்று சொல்லவேண்டும். தமிழில் சிறுகதைக்கு உருவும் உயிரும் கொடுத்தவர் அவர்தான். ஒருவிதத்தில் இவரை ‘சிறுகதையின் பிதா’ என்று ஆங்கில மரபையொட்டிக் குறிப்பிடலாம் ... குளத்தங்கரை அரச மரத்தை யார்தான் மறக்கமுடியும்? அவருடைய கதைகளில் பாலையின் வெக்கை நம்மைப் பொசுக்கும். முகலாய அந்தப்புரத்து நந்தவனங்களின் வைபவம் நம்மைக் களிப்பூட்டும். கிரேக்க தேசத்துக் கடவுளர் நம்முடன் உறவாடுவர். பிரெஞ்சு போர்க்கள ரத்த பயங்கரம் நம்மை மிரட்டும். பிறநாட்டு மரபுகளையும் பெயர்களையும் நம்மால் ரசிக்க முடியாது என இன்றைய விமர்சகர்கள் சிலர் சொல்லிக்கொண்டிருப்பதற்குத் தகுந்த பதில் அவரது கதைகள். இவர் காலத்தில் மாதவையா, சுப்பிரமணிய பாரதியார், ராமாநுஜலு நாயுடு ஆகியோர்கள் கதைகள் எழுதிவந்தார்கள் .... (மாதவையா) அவர் பதிப்பித்த ‘பஞ்சாமிருதம்’ என்ற பத்திரிகையில் சில சிறந்த சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ‘மூன்றில் எது?’ என்று வெளிவந்தது இன்றும் ஞாபகமிருக்கிறது. டாக்டர் சிகிச்சை, நாட்டு வைத்தியம், கோயில் பிரசாதம் இம்மூன்றில் எது சாகக்கிடந்த குழந்தையைப் பிழைக்க வைத்தது என்பதுதான் கதையின் ஆதாரக் கேள்வி. ... கடைசியாக அவர் பதிப்பித்த இதழில் ‘கண்ணன் பெருந்தூது’ என்ற கதை பிரசுரிக்கப்பட்டுள்ளது - உருவ வார்ப்புக்குச் சிறந்த உதாரணமாக அதைத்தான் சொல்லவேண்டும். கதைப் பாத்திரங்களின் குண விஸ்தாரமும் கதையின் போக்கும் பிரமாதம். ... ஸ்ரீ ராமாநுஜலு நாயுடு கதை சொல்லுவதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த்தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும், பெண்மையைப் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திரமான அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞன் என்பதை நாம் மறந்துவிடுகிறோமா? அம்மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக 1930-ம் வருஷத்துக்குப் பின் உப்பு சத்தியாக்கிரகத்தின் இலக்கிய அலையாக ஒரு புதுவேகம் இலக்கியத்தில் ஏற்பட்டது. அதாவது எதையும் சிரிக்கச் சிரிக்க எழுதவேண்டும் என்று ஒரு பாணியை வகுத்து அந்தத் துறையில் சிலர் இறங்கித் திறமைகளைக் காட்ட முயன்றார்கள். இவர்களுள் பிரதானஸ்தர் கல்கி. இவர்களுக்குச் சிரிப்பு மூட்டக்கூடிய தன்மையில் எழுத வேண்டும் என்பதே பிரதான லட்சியம். ஹாஸ்யச் சுவை என்பது இயல்பாக அமையவேண்டிய விவகாரமாதலால், வலிந்து கட்டிக்கொண்டு சிரிக்க வைக்க முயலுவது ஃபோட்டோவுக்காக சிரித்த மாதிரியாகத்தான் அமையும். ... கல்கி பிராபல்யத்துக்கு வந்தது அவர் சிரிக்கச் சிரிக்க எழுதுவார் என்பதிலிருந்துதான். ஆனால் பிற்காலத்தில் அவர் சிறுகதைத் துறையில் இறங்கிய பொழுது அவரது எழுத்துகளில் மருந்துக்குக்கூட சிரிப்பு இல்லாமல் போனதற்குக் காரணம், ஹாஸ்யம் இவருக்கு இயல்பான குணம் அல்ல என்பதுதான். ஆனால் ஹாஸ்யமாக கதை எழுதக்கூடியவர்கள் தமிழில் உண்டு. அவர்களிருவர்: எஸ்.வி.வி.யும் கொனஷ்டையும். எஸ்.வி.வி.யைவிட கொனஷ்டையில் கலையம்சம் ரொம்பவும் நயமாக இருக்கும்; கதைப்பாணி புதிதாக இருக்கும். இந்த ஹாஸ்ய யுகத்தின் வேகம் ஒடுங்கும் நிலையில்தான் இன்னும் ஒரு பேரலை எழுந்தது. அதில்தான் சிறுகதை தமிழில் பூரண வடிவம் பெற்றது. இதைச் சிறப்பாக மணிக்கொடி யுகம் என்று சொல்லவேண்டும். இக்காலத்தில்தான் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி. எஸ். ராமையா, சிதம்பர சுப்பிரமணியன் முதலியவர்களும் நானும் கதைகள் எழுத ஆரம்பித்தோம். வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பித்தது. ‘பரமசிவன் வந்து வந்து வரங்கொடுத்துப் போவார், பதிவிரதைக்கின்னல் வரும் பழையபடி தீரும்’ என்றிருந்த நிலைமை மாறி நிலாவும் காதலும் கதாநாயகனுமாக சோபித்த சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர்நின்று நோக்க ஆரம்பித்தன.”

இந்தப் பகுதியை அவர் கட்டுரையிலிருந்து எடுத்து முழுவதும் சொல்வதற்குக் காரணமுண்டு. தமிழில் சிறுகதைகள் மேன்மையாக எழுதுவதற்கு அவருக்கு ஐரோப்பிய அமெரிக்கச் சிறுகதைச் சிகரங்கள் உதவியது போல அன்றுவரை தமிழில் வந்திருந்த கதைச் சிகரங்களும் உதவியிருக்கின்றன என்பது அவர் எழுதியிருப்பதிலிருந்து தெளிவாகவே தெரிகிறது. சிறுகதையில் மேதைமை காட்டிய புதுமைப்பித்தன் தனி ஒரு சிருஷ்டிகர்த்தாவாக மேதைமையினால் மட்டும் உருவானவர் அல்ல. இலக்கிய மரபும் ஓரளவுக்கு அவருக்கு உதவியிருக்கிறது என்பது அவர் வ.வே.சு. ஐயர், மாதவையா, ராமாநுஜலு நாயுடு முதலியவர்களைப் பற்றிக் கூறியதிலிருந்து நன்கு தெரியவருகிறது. அவர் காலத்திய சிறுகதைச் சாதனையை மதிப்பிடுபவராக அவர் இதே கட்டுரையில் கடைசியாக ஒரு பாரா எழுதினார். அது பின்வருமாறு அமைந்திருக்கிறது:

‘தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்தவர் ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் ‘மௌனி’ என்ற புனைபெயரில் எழுதிவருபவரைத்தான் குறிப்பிடவேண்டும். அவரைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். அவர் மொத்தத்தில் இதுவரை பத்துக் கதைகள்தான் எழுதியிருப்பார். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துகளையும் மடக்கிக் கொண்டுவரக்கூடியவர் அவர் ஒருவரே. தமிழிலே ‘நட்சத்திரக் குழந்தைகள்’, ‘சிவசைலம்', ‘எங்கிருந்தோ வந்தான்', ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள கதைகள் ஒப்புயர்வற்றவை.’ (முதல் கதை பி. எஸ். ராமையா எழுதியது. இரண்டாவது த. நா. குமாரசாமி, மூன்றவாது மௌனி. நாலாவது புதுமைப்பித்தனே எழுதியது.)

மௌனியைப் பற்றிப் புதுமைப்பித்தன் சொல்லுகிற சில வாக்கியங்கள் புதுமைப்பித்தனுக்கும் பொருந்தும் என்றும், இந்த வார்த்தைகளில் தன் லட்சியங்களையும் சேர்த்தே சொல்லுகிறார் என்றும் நாம் அனுமானிக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழ் மரபுக்கும், போக்குக்கும் புதிதாகவும், சிறப்பாகவும் வழி வகுப்பதும், கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று, வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களை மடக்கிக் கொண்டுவருவதும் புதுமைப்பித்தனும் செய்த காரியங்கள்தான். மௌனியைப் பற்றிச் சொல்லுகிறபோது, மௌனியைப் பற்றிச் சொல்லுகிற சாக்கில் தன்னைப் பற்றியும் சொல்லிக்கொள்கிறார் என்று நம்புவதில் தவறில்லை. அதற்கு அந்தக் காலத்தில் நாங்கள் எல்லோரும் விரும்பிப் பரவலாகப் படித்த ஆங்கில ‘ரொமாண்டிக்கவிதை மரபு உண்டு (ஜான் மில்டன், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த், டென்னிஸன்).

இன்றைய தமிழ் வாசகர்களில் பலர் புதுமைப்பித்தனையேகூடத் தேடிப் படிப்பவர்களாக அதிகம் பேர் இல்லை என்பது வருத்தப்படவேண்டிய விஷயம். அதையும்விட வருத்தப்படவேண்டிய விஷயம் அவர், தன் முன்னோடிகளாகவும், சகபாடிகளாகவும் கருதிய, மதிப்புக்குரியவர்களாக எண்ணிய கதாசிரியர்களையும், கதைகளையும் படிக்காமல் இருப்பதுதான். பாரிச வாயுவும் பக்கவாதமும் அன்று புதுமைப்பித்தன் சொன்னது போல இன்றும் தமிழ் இலக்கிய உலகத்தைப் பிடித்து ஆட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. நல்லெண்ணெயும், நல்லெண்ணமும்கூட இன்று கலப்படமாகவேதான் இருக்கின்றன என்று அவர் காலத்தில் சொன்னார். இன்று, நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டு பொருள்களோடு இன்னும் இருநூறு பொருள்களும் கலப்படமாகிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம் நாம். புதுமைப்பித்தனையும் படிக்காமலே பாராட்டுவதும், சர்வகலாசாலைகளில் பிஎச்.டி. போன்ற ஆய்வுப் பட்டங்களுக்கு அவரை விஷயமாக எடுத்துக்கொள்வதும் பெருமைப்படவேண்டிய விஷயங்கள் அல்ல. இது ஸ்டேட்டஸ் (ஸ்திதி) உயர்கிறது என்பதற்காகவும், ஸ்நாப் மதிப்பீடுக்காகவும், தன்னைப் பெரியவர்கள் என்று எண்ணுவார்கள் என்ற எண்ணத்தினாலும் சென்னையில் சங்கீதக் கச்சேரிகளுக்குக் கூட்டம் சேருவது போலத்தான் இதுவும். தலைமுறைக்குப் பின் தலைமுறை புதுமைப்பித்தனைத் தமிழர்கள் படித்து, அனுபவித்துப் பார்க்கவேண்டியதுதான் முக்கியமான விஷயம். இதில் இன்றுள்ள சில நல்ல வாசகர்களுக்கும், சில நல்ல விமர்சகர்களுக்கும் சந்தேகம் வருவதற்கேயில்லை.

சிறுகதைகள் எப்படி அமைய வேண்டும்என்பது பற்றியே போல, ‘சிறுகதைஎன்று ஒரு இரண்டாவது கட்டுரையையும் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். சிறுகதை பற்றி அவருடைய நிலைமையைத் தெளிவு செய்துகொள்ள அந்தக் கட்டுரையிலும் சில பகுதிகளைப் பார்க்கலாம்.

மற்ற இலக்கியப் பகுதிகள் போலவே சிறுகதைகளும் ‘மனித உள்ளத்தின் அடைய முடியாத ஆசைகளின் எதிரொலி’ என்று சொல்லிவிட்டு, ‘எதுதான் சிறுகதை? சிறுகதையின் எல்லை என்ன? சிறுகதைக்கு என்று தனிப்பட்ட ரூபம் ஒன்று உண்டா? இதற்கெல்லாம் சூத்திரங்கள் ஒன்றும் கிடையாது’ என்று பதிலளிக்கிறார். மேலும்,

‘சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு கதையாசிரியனும் எடுத்தாண்ட ரூபங்கள் எண்ணிறந்தன. இருக்கும் கதைகளை வைத்துத்தான் இவைதான் சிறுகதை என்று நிர்ணயிக்க வேண்டும்.

‘சிறுகதையின் ஜீவநாடி ஒன்று. அதில் எடுத்தாளப்படும் சம்பவம் அல்லது நிகழ்ச்சி தனிப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும். சிறுகதை வாழ்க்கையின் சாளரம். ... சிறுகதையில் ரூபம் கதை எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது...

...சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்று மூன்று பகுதிகள் உண்டு. சாதாரணமான கதைகளில் இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்துகொண்டே போகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்கச் சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது. கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது. இன்னும் வேறு ஒரு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்ற ஒன்று கிடையாது. அதாவது கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும் பொழுது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்துவிடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகிறது என்று சொன்னால் விசித்திர வாதமாகத் தோன்றும்; ஆனால் அதுதான் உண்மை ... கடவுள் வாழ்க்கையின் கடைசிப் பக்கத்தை எழுதிவிடவில்லை; அவரால் எழுதவும் சாத்தியப்படாத காரியம் ... கதைகளுக்கு சம்பவம் அவசியமா, இப்படிப்பட்ட விகற்பங்கள் இருக்கலாமா என்று பலர் கேட்கிறார்கள். கதைகள் அவரவருடைய சுவையையும் ரசனையையுந்தான் பொறுத்தது ... அவரவர்களுடைய அனுபவத்திற்கும் ரசனைக்கும் ஏற்றபடிதான் கதைகளைப் படிக்கமுடியும்.’

இதைத் தொடர்ந்து ராமையாவின் ‘பூச்சூட்டல்என்கிற கதையைப் புதுமைப்பித்தன் அலசிக் காட்டுகிறார். முடிவில், சிறுகதை என்பது, ‘அதாவது தற்கால விமர்சனத்தின்படி கருதப்படும் சிறுகதை தமிழ்நாட்டிற்குப் புதிய சரக்கு. மேல்நாட்டு இலக்கிய கர்த்தர்கள் ஒரு நூற்றாண்டு பழகிய கையால் எழுதும் கதைகளுக்கும் தற்பொழுது தோன்றியிருக்கும் ஸ்ரீ ந. பிச்சமூர்த்தி, ஸ்ரீ கு.ப.ரா. முதலான எழுத்தாளர்களின் கற்பனைகளுக்கும் ஏற்றத்தாழ்வைக் காணவே முடியாது’ என்று கட்டுரையை முடிக்கிறார். புதுமைப்பித்தன் கதைகளை மட்டும் படிப்பதாகப் பாவனை செய்துகொண்டு அவர் சமகாலத்திய மற்ற நல்ல சிறுகதாசிரியர்களைப் படிக்காமல் விட்டுவிடுகிற ‘பாரிச வாயு, பக்கவாத’ விமர்சகர்களும், வாசகர்களும் புதுமைப்பித்தனின் இந்தக் கூற்றை மனத்தில் கொள்ளவேண்டும்.

சிறுகதை பற்றிப் புதுமைப்பித்தன் எழுதியுள்ள மூன்றாவது கட்டுரையில் சிறுகதையின் அம்சங்களை இன்னும் சற்று ஆழமாகவே விவரிக்கிறார் புதுமைப்பித்தன். ரூபம் என்பது இரண்டாவது கட்டுரையில் இடம்பெற்றது போல மூன்றாவது கட்டுரையில் சிறுகதைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிற விஷயம் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

‘நான் படித்த பழைய கதைகளில் ‘கண்ணன் பெருந்தூது’ என்கிற கதை தமிழ் சிறுகதைகளின் இலட்சியம் என்றே கூறலாம். அதன் அமைப்பு வெகு அற்புதமாக விழுந்திருக்கிறது ... அய்யரவர்களின் சிறுகதைகள் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவை. அவர் தமது சிருஷ்டிகளில் மனிதனின் மேதையை, தெய்வீகத் துயரத்தை, வீரத்தை, காண்பிப்பதில் களித்தார். இலட்சியத்தை சிருஷ்டிப்பதில் இலயித்தது.

‘ஆனால் மனிதனின் சிறுமைகளை, தப்பிதங்களை, அதில் அவன் நாடும் வெற்றியை, இலக்கியமாகச் சிருஷ்டிப்பதற்கு, நல்ல கலைத்திறமையுடன் சிருஷ்டிப்பதற்கு, வெகுகாலம் சென்றது. தமிழிற்கே விமோசனம் கிடையாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வெள்ளி முளைத்தாற்போல் சில கதை எழுதுகிறவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துகள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை. புதிய விஷயங்களில் முதலில் வெறுப்பு ஏற்படுவது மனித, அதாவது சாதாரண மனித இயற்கை. இந்த எழுத்தாளர்களின் கற்பனைகளில் யாவையும் இடம்பெறுகின்றன ... இவர்களுக்குள் இரண்டு மூன்று பேர்களின் எழுத்துகள் சாகாத எழுத்துகள் என்று கூறலாம். ‘நட்சத்திரக் குழந்தை’யின் ஆசிரியரும், ‘கலைமக’ளில் வந்த ‘விஜயதசமி’ என்ற கதையின் ஆசிரியரும் தமிழ் நாட்டின் கற்பனைப் பொக்கிஷங்கள் என்று கூறவேண்டும். இருவருடைய கலையுணர்ச்சியும், சிருஷ்டித்திறனும் இவர்களை எழுத்தாளர்களின் விதிவிலக்காக்குகிறது. தமிழ்க் கதை வளரவேண்டுமானால் இவர்கள் சென்ற பாதையில் புதிய விஷயங்களை எழுதும் ஆற்றலுடையவர்கள் தோன்ற வேண்டும்.’

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

  •  

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம் 

சங்க காலம் என்று தீர்மானமாகாத ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டுவது போல, மணிக்கொடிக் காலம் என்று சமீப காலத்திய முப்பதுகளில் சில ஆண்டுகளைக் குறிப்பிடுவது பரவலாக வழக்கமாகிவிட்டது. ‘மணிக்கொடி’ என்கிற பத்திரிகையின் பெயர் அது ஏற்படுத்திய பாதிப்பினாலும், சந்தர்ப்ப விசேஷத்தினாலும் ஒரு குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தையாகிவிட்டது. இன்று திரும்பிப் பார்க்கும்போது அதை ஏற்றுக்கொள்வது அப்படியொன்றும் தவறில்லை என்றுதான் சொல்லவேண்டும். முப்பதுகளில் முழுக்க முழுக்கச் சிறுகதைப் பத்திரிகையாகப் பல நல்ல சிறுகதாசிரியர்களின் எழுத்துகளைத் தாங்கி ‘மணிக்கொடி’ என்கிற பத்திரிகை, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் விட்டு விட்டுச் செயல்பட்டது. ஒரு ஐந்தாறு ஆண்டுகள்தான். தமிழ் இலக்கியத்தில் ஒரு புது அலையை உருவாக்க அது போதுமானதாக இருந்தது. குறிப்பிட்ட ஒருசில சிறுகதாசிரியர்கள் அதில் எழுதினார்கள். அந்தக் காலத்தில் சிறுகதைகளையோ, நாவல்களையோ மற்றும் எந்த உரைநடை இலக்கியங்களையுமோ இலக்கியமாகக் கருதுவது பெரும்பாலாக வழக்கத்தில் வரவில்லை. அந்தக் காலத்தில் டாக்டர் பட்டங்களோ சாம்ராட் சக்ரவர்த்திப் பட்டங்களோ இருக்கவில்லை. சிலர் தொடர்ந்து மணிக்கொடியில் எழுதி விஷயம் தெரிந்த வாசகர்கள் சிலரிடையே பெரும்பெயர் பெற்றார்கள். இப்படி எழுதியவர்களில் ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், மௌனி, இவர்களுடன், ‘மணிக்கொடி’ ஆசிரியர்களான பி. எஸ். ராமையா, கி.ரா. இருவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, முன்னும், பின்னுமாக இன்னும் பலரும் எழுதினார்கள். சந்தர்ப்ப சமய விசேஷமாகவும், தமிழ் இலக்கியத்தில் உள்ள ஆர்வம் காரணமாகவும் இவர்கள் ‘மணிக்கொடி’யின் பக்கங்களில் ஒன்று சேர்ந்தார்களே தவிர மற்றபடி வாழ்க்கை நோக்கங்களிலோ, போக்குகளிலோ இவர்களிடம் ஒற்றுமை ஒன்றும் கிடையாது. எனினும், பொதுவாகச் சுதந்திரத் தாகம் (அவ்வளவாக அரசியலில் வெளிப்படாதது), இலக்கிய வேகம் (ஆங்கிலப் படிப்பினால் பெரும் அளவுக்குத் தூண்டிவிடப்பட்டது), லட்சிய நோக்கங்கள் (வாழ்க்கையே லட்சியங்களுடன் வாழப்பட வேண்டும், சில லட்சியங்கள் கைகூடியும் வரலாம்) என்றெல்லாம் இவர்களுக்கு ஒரு ஆதார ஸ்ருதி அமைந்தது. பொதுவாக வாழ்க்கையில் பொருளாதாரக் கஷ்டங்களை அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பதும் இவர்களைப் பற்றிச் சொல்லக்கூடிய அடிப்படை விஷயம். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பார்வைகளுடன், பலதிறப்பட்ட செயல்திறன்களுடன், வித்தியாசப்பட்ட மண்ணில் பிறந்து வளர்ந்து பெரியவர்களானவர்கள்; சென்னை நகரில் குடியேறியவர்கள். இந்தக் கோஷ்டியினரின் சராசரி வயது முப்பது முதல் நாற்பது வரையில் - அதாவது, அந்தக் காலத்தில்.

சிவனைத் தமிழ் செய்வதற்கு நாயன்மார்கள் போல, சிறுகதையைத் தமிழ் செய்வதற்குப் பிறந்தவர்கள் போல இவர்கள் தோன்றினார்கள். இவர்களுடைய பார்வை வீச்சு சிறுகதைகளுக்கு அப்பாலும் சென்றது என்றாலும், தங்கள் சிறுகதைகளையே மிகச் சிறப்பான சாதனைகளாகக் கருதியவர்கள் இவர்கள்.

தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் முதல் அலை நாவலில் தோன்றியது. 19ஆம் நூற்றாண்டில் வேதநாயகம் பிள்ளையும், ராஜம் அய்யரும், அ. மாதவையாவும் முதல் மூன்று தமிழ் நாவல்களைச் சிருஷ்டித்துத் தமிழுக்குப் புது உரம் தர முயன்றார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தமிழ் நாவல் ஓரளவுக்குத் தேக்கம் கண்டுவிட்டது. ஆனால் சுப்ரமண்ய பாரதி மூலம் கவிதையிலும், வ.வே.சு. ஐயர் மூலம் இலக்கிய விமர்சனத்திலும், சிறுகதையிலும் உரம் பெற்றது. பாரதியார் தந்த தமிழ் வேகமும், வ.வே.சு. ஐயர் தந்த ஊக்கமும்தான் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு ஆதாரமாக அமைந்தன என்று சொல்லவேண்டும். மரபுக் கவிதைகளிலும் ஜோதி ராமலிங்கம், கோபாலகிருஷ்ண பாரதியார் என்று தொடங்கிய மறுமலர்ச்சி சுப்ரமண்ய பாரதியில் உச்சக்கட்டத்தை எட்டியது. தமிழ் வசனத்திலும், கவிதையிலும், வசன கவிதையிலும் பாரதியாரின் புரட்சி மிக மிகச் சிறப்பானதாக, இன்றுவரை தாக்கமுள்ளதாகச் செயல்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் சுப்ரமண்ய பாரதியாருடன் ஒப்பிடக்கூடிய கவிகள் ஒருவரும் அவருக்குப் பின் தமிழில் தோன்றவில்லை. ஆனால், எழுத்துக்கு அவர் தந்த வேகம் இன்னும் தொடர்கிறது.

சுப்ரமண்ய பாரதியாரின் சமகாலத்தவராகிய வ. வே. சுப்ரமண்ய ஐயர் ஆரம்பக் காலத்திலிருந்தே இலக்கியச் சிந்தனைகளை வளர்த்து வந்தவர் என்றாலும் அரசியல் காரியங்களில் - அதுவும், முக்கியமாகப் புரட்சி வேலைகளில் - ஈடுபட்டிருந்ததால் அவரால் போதுமான அளவு ஆரம்பக் காலத்தில் இலக்கியச் சாதனை காட்ட இயலவில்லை. புதுவை வந்து பாரதியாரின் நேர்சந்தியும் ஏற்பட்ட பின், கட்டாய அரசியல் ஓய்வின் காரணமாகவும், இலக்கிய விமர்சனம், சிறுகதை என்கிற இரண்டு துறைகளிலும் ஈடுபாடும் சாதனையும் காட்டினார். மிகவும் சிறப்பான சாதனைகள் அவை. பாரதியாரும் மாதவையாவும் கதைகள் எழுதினார்கள். சிறுகதைகள் என்று உருவம் தெரிந்து எழுதவில்லை. வ.வே.சு. ஐயர், சிறுகதை என்று உருவம் தெரிந்து ஐரோப்பிய இலக்கியத்தில், முக்கியமாக ஃபிரெஞ்சு மொழி இலக்கியத்தில் தமக்கு இருந்த பரிச்சயத்தினால் தமிழில் சிறுகதைகளை உருவாக்கிக் காட்டினார். வ.வே.சு. ஐயரின் ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்கிற நூலில் உள்ள சிறுகதைகள் மணிக்கொடிக்காரர்களுக்கும், அவர்களுக்குப் பின்னர் வந்த தமிழ்ச் சிறுகதாசிரியர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தன. வ.வே.சு. ஐயர் ஏற்படுத்திய சிறுகதை அலை முப்பதுகளில் பலம் பெற்றது. இருபதாண்டுகளுக்குப் பிறகு, ஐம்பதுகளில்தான் அவரது விமர்சனப் போக்குத் தமிழர்களிடையே உரம் பெற்றது; பயன் தந்தது என்று சொல்லவேண்டும். முப்பதுகளில் சிறுகதைகள் எழுதியவர்கள் பலரும் - இதற்கு மௌனி ஒரு விதிவிலக்காக இருக்கலாம். அவர் பாரதியையோ, வ.வே.சு. ஐயரையோ தன் கதைகளை எழுதிய காலத்தில் படித்திருந்ததாகத் தெரியவில்லை - மற்ற எல்லோருமே வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்கிற கதையைத் தங்களுக்கு ஆதர்சமான சிறுகதையாகக் கருதினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதைக் கு.ப.ரா.வும் புதுமைப்பித்தனும் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறார்கள்.

தமிழில் சிறுகதை அலை முப்பதுகளில் தோன்றியதற்குப் பல காரணங்கள் கண்டு சொல்லலாம். சுதந்திரத் தாகம் இலக்கியத் துறைகளில் படிந்து சிறுகதையாக உருப்பெற்றது என்று புதுமைப்பித்தன் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியப் படிப்பு அதற்கு முந்திய இருபது முப்பது வருஷங்களில் தமிழர்களிடையே பரவி, தமிழர்களுக்கு இலக்கிய அளவில் பயன் தரத் தொடங்கியிருந்தது. தமிழ்நாட்டில் புதுவிதமான பத்திரிகைகள் தோன்றி பொழுதுபோக்குக்கும், அறிவு விருத்திக்கும் அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருந்தன. சில ஆசிரியர்கள் பொதுஜன விருப்பத்தைத் திருப்திப்படுத்துகிற அளவில் பல நல்ல, மற்றும் மட்டரகமான ஆங்கிலக் கதைகளைத் தமிழ்ப்படுத்தித் தந்துகொண்டிருந்தார்கள். முப்பது, முப்பத்தைந்து வயதை எட்டியிருந்த ஒருசில தமிழ் அன்பர்களுக்கு ஆங்கிலத்தில் உள்ளது போல பல இலக்கியத் துறைகளிலும் செயலாற்றித் தமிழுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்கிற ஆவல் பரவலாக ஏற்பட்டது. மரபுவழி வந்த தமிழ் இலக்கியங்கள் பொதுஜனத்தையோ, ஆங்கிலம் படித்து ஆங்கில, ஐரோப்பிய இலக்கியம் அறிந்தவர்களையோ எட்டவில்லை. பண்டைத் தமிழிலக்கியம் பண்டிதர்களின் சொத்தாகவே இருந்தது. இதோடெல்லாம் பாரதியாரும், வ.வே.சு. ஐயரும் தந்த வேகமும் சேர்ந்துகொண்டது. இதெல்லாம் காரணமாகவே ஆங்கிலம் மூலம் உலக இலக்கியம் படித்து, இலக்கிய ஆர்வத்தினால் தூண்டப்பட்டவர்களாக ‘ஒன்றுக்கும் உதவாதவர்களாகப் போய்விட்ட’ ஒரு கோஷ்டியினருக்கு இலக்கியம், இலக்கியச் சிருஷ்டி என்பது மன ஆறுதல் தருவதாக இருந்தது. குடும்பம், சுற்றத்தார், உறவினர்கள் எல்லோராலும் ‘ஒன்றுக்கும் உதவாதவர்களாக’க் கருதப்பட்டவர்கள்தான் பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், மௌனி முதலியவர்கள்.

இப்படிச் சொல்லுகிறபோது ஏதோ இதில் ஒரு கேலி தொனிக்கிற மாதிரித் தோன்றினாலும், உண்மையில் இருந்த நிலைமை இதுதான். 1900இல் பிறந்த பிச்சமூர்த்தி பி.ஏ. படித்து, பி.எல்’லும் பாஸ் செய்து சுதந்திரத் தாகம், லட்சிய வேகம், இலக்கிய மோகம் இவற்றினால் உந்தப்பட்டவராக, வக்கீலாகப் பொருளீட்ட முடியாதவரானார். கு. ப. ராஜகோபாலனும் பி.ஏ. படித்துவிட்டு, கொஞ்ச காலம் சொல்ப சம்பளத்தில் குமாஸ்தாவாக இருந்து, அந்த அடிமை வாழ்வு பிடிக்காமல், கண் உபத்திரவமும் சேரவே வேலையை உதறிவிட்டு, இலக்கியத்தை நம்பிப் பிழைக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தார். இருவரும் கும்பகோணத்துக்காரர்கள். கு.ப.ரா. சிறிது காலம் கஷ்டப்பட்டு நாற்பத்தியிரண்டாவது வயதில் இறந்துவிட்டார். இன்னொரு கும்பகோணத்துக்காரரான மௌனி (இயற்பெயர், கல்லூரிப் பெயர் எஸ். மணி) முந்திய இருவரும் செய்வதை நான் இவர்களையும் விட அதிகச் சிறப்புடன் செய்யமுடியும் என்று, அதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு எழுத ஆரம்பித்துப் பதினைந்து, இருபது சிறுகதைகள் மட்டும் எழுதிவிட்டு, மேலும் இலக்கிய உந்துதலோ பணம் தேடும் நோக்கமோ இல்லாததால் எழுதுவதை நிறுத்திவிட்டவர். மௌனியின் சூழ்நிலையிலும் ஏகப்பட்ட அதிருப்தி. அவரும் ‘ஒன்றுக்கும் உதவாத’ கோஷ்டியைச் சேர்ந்தவர்தான். ஒரு சகோதரர் ‘ஐ.ஏ.ஏ.எஸ்’ பரீட்சை கொடுத்து, தேறி, பெரிய உத்தியோகத்துக்குப் போய்விட்டார். இவரும் பரீட்சைக்குப் போனார்; தேறவில்லை, பி.ஏ. ஹானர்ஸ் என்று போனவருக்கு பி.ஏ. டிகிரிக்குத்தான், கணக்கில், சிபாரிசு கிடைத்தது. பலவிதமான, பணக்கார மைனர் மற்றும் மேஜர் நடவடிக்கைகளினாலும் அவருடைய தகப்பனாரின் நிர்தாட்சண்யமான திட்டுகளுக்கும் விரோதத்துக்கும் பாத்திரமானவர். காஃப்காவின் தகப்பனார் ‘கரப்பான்பூச்சி’ என்று அவரை ஆத்திரமாகத் திட்டுவாராம். மௌனியின் தகப்பனாரின் வசவுகள் கிராமியமாக, துடைத்துவிடக்கூடாதவையாக இருக்கும். எனக்குச் சிதம்பரத்தில் மில் வைத்திருந்த மௌனியின் தகப்பனார் சாமாவையரைத் தெரியும்.

இந்தக் கோஷ்டியுடன் அவர்களின் பின்புலம் தெரிந்தோ, தெரியாமலோ - தெரியாமல் என்றுதான் சொல்லவேண்டும் - வந்து சேர்ந்துகொண்டவர் புதுமைப்பித்தன் என்கிற சொ. விருத்தாசலம். திருநெல்வேலிக்காரர். மற்றவர்களைப் போலவே இவரும் பி.ஏ. படித்தவர்தான். ஆனால், பி.ஏ. டிகிரியை அவர் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. பரீட்சை தேறிய பின் தகப்பனாருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால் தேவையான ரூபாயைக் கொடுத்து டிகிரியை அவரால் வாங்க முடியாமல் போய்விட்டது என்று எண்ணுகிறேன். வீட்டில் இளைய தாயார். புதுசாகக் கல்யாணமான புது மனைவி. சொ.வி.க்கும், அவர் மனைவிக்கும் உள்ள நியாயமான ஆசைகள்கூடத் தகப்பனாரின் கூரையின் கீழ்ப் பூர்த்தியாகச் சந்தர்ப்பம் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் உத்தியோகம் தேடி முதலில் காரைக்குடிக்கும், பின்னர் சென்னைக்கும் அவர் மனைவி கமலாம்பாளுடன் வந்துவிட்டதாகத் தெரிகிறது. சற்றேறக்குறைய இருபதாண்டுகள் சென்னையில் வாழ்ந்தும் (வாழாமல் வாழ்ந்தும் என்று சொல்லலாமா?) திருநெல்வேலியின் பிடிப்பு அவரை விட்டு விலகிவிட்டதாகக் கடைசிவரையில் சொல்ல முடியாது. சிந்தனைகளிலும், பேச்சிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் புதுமைப்பித்தன் கடைசிவரை திருநெல்வேலிக்காரராகவேதான் இருந்தார் என்பது என் நினைப்பு. இந்த விஷயத்தில் அவர் மற்ற மூவரிலிருந்தும் சற்று வித்தியாசப்பட்டவர் என்று சொல்லலாமா? உதாரணமாக, கு. ப. ராஜகோபாலன் தன் கடைசிக்காலம் வரையில் கும்பகோணத்திலேயே இருந்தார் - சென்னை தற்காலிக வாசம் போக, மற்றக் காலமெல்லாம். என்றாலும் அவரிடம் கும்பகோணத்தின் பிடிப்பு சற்றுக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். வீட்டில் தெலுங்கு பேசுபவர். எப்பொழுதோ வந்து தமிழ்நாட்டில் குடியேறிவிட்ட தெலுங்குப் பரம்பரையில் வந்தவர். அதனாலேயே அவருக்கு ஒரு ‘காஸ்மாபாலிடன்’, கும்பகோணத்துக்கு அப்பாற்பட்ட பார்வையும் இருந்தது என்று சொல்லலாமா? இதெல்லாம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கவேண்டிய விஷயங்கள். தெரிந்துகொள்ள முடியுமானால் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள். இவையெல்லாம் பற்றி நமக்கு முன்னோடியான ஆராய்ச்சிப் புத்தகங்கள் கிடைப்பதில்லை.

பிச்சமூர்த்தியின் தகப்பனாரும் ஒரு நாடகக் கலைஞர். அதேபோல புதுமைப்பித்தனின் தகப்பனாரும் - அவரே சொல்லிக்கொண்டபடியும், சொ.வி.யே சில சமயம் கேலியாகச் சொன்னது போலவும் - ஒரு எழுத்தாளர்தான். தாசில்தாராக அவர் சர்க்கார் உத்தியோகம் பார்த்துக்கொண்டு குறும்பர், இருளர் என்கிற பின்தங்கிய மக்கள் பற்றி ஆராய்ந்து, அவர்கள் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றிப் பல தகவல்கள் சேர்த்து லண்டனில் ‘லூஸாக்’ கம்பெனி பிரசுரமாக மூன்று பாகங்களில் ஒரு நீளமான நூல் எழுதியிருக்கிறார். நன்றாகவே எழுதப்பட்ட நூல்; நான் அதைப் படித்துப் பார்த்திருக்கிறேன். எழுதுகிற போக்கும், அறிவும் ‘சொ.வி.’க்கு அவருடைய தகப்பனாரிடமிருந்து பிதுரார்ஜிதமாக வந்ததுதான் என்று சொல்வதில் எதுவும் தவறிருக்க முடியாது. பிதுரார்ஜிதமாக, மற்றத் தன் சம்பாத்யமான சொத்துக்களைத் தன் இந்தப் பிள்ளைக்குத் தரமாட்டேன் என்று கடைசிவரை சொல்லி, தான் இறந்த பிறகு அவருக்கு உரிய பகுதி கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார் தகப்பனார் என்று கேள்வி. அந்தச் சொத்து முன்னாலேயே கிடைத்திருந்தால், முன்னாலேயே செலவு செய்துவிட்டிருப்பார் சொ.வி. அவர் கடைசிக் காலத்தில், நாற்பது வயதில் சொத்து கிட்டியபோது அதைப் ‘பர்வதகுமாரி புரொடக்‌ஷன்ஸ்’ என்கிற அவருடைய சினிமா கம்பெனிக்குச் செலவிட்டார் என்றும் கேள்வி. நான் அச்சமயம் சிதம்பரத்தில் இருந்தேன். சொ.வி. உடன் இருந்து அதைப் பார்க்கவில்லை. நான் மீண்டும் அவரைச் சந்திப்பதற்குள் கிடைத்த பொருள் கரைந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.

எழுதும் திறம் அவருக்குப் பிதுரார்ஜிதமாக வந்தது என்று சொன்னாலும், அவருடைய இலக்கிய அறிவும் மேதைமையும் எப்படி ஏற்பட்டன என்பதை நிர்ணயிக்கப் போதுமான அளவில் அவர் இளம்பருவத்துத் தகவல்கள் கிடைக்கவில்லை. என்னென்ன நூல்கள் படித்தார் என்பதோ, எந்த மாதிரியான நண்பர்களைத் தேடிக்கொண்டு அவர் போனார் என்பதோ போதுமான அளவில் தெரியவில்லை. அவர் காலேஜ் லெக்சரர் ஒருவரைப் பற்றி அவர் பின்னால் ஜோக் அடிப்பதைக் கேட்டிருக்கிறேன். “பொன்னுசாமிப் பிள்ளையும் முஸ்ஸலோனி மாதிரி ஒரு டிக்டேடர்தான். முஸ்ஸலோனி இத்தாலிக்கு டிக்டேடர். பொன்னுசாமிப் பிள்ளை ஈஸ் ஏ டிக்டேட்டர் ஆப் நோட்ஸ்” என்று சொல்லுவார். இந்தப் பொன்னுசாமிப் பிள்ளையை நான் 1957, 58இல், நாகர்கோயிலில் சந்தித்திருக்கிறேன். அவர் மூலமாகத் தெரிந்துகொண்ட சில சிறு தகவல்களைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலாது.

1925 இலிருந்து 35 வரையில் தமிழ்நாட்டில் கல்லூரியில் ஆங்கிலம் படித்த மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லி, கீட்ஸ், டென்னிஸன், டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், ஜார்ஜ் எலியட், ஸர் வால்டர் ஸ்காட், ஹாஸ்லிட், லாம்ப், ஜான்ஸன், அடிஸன், ஸ்டீல், தாமஸ் ஹார்டி, ஜார்ஜ் மெரிடித், ஆர். எல். ஸ்டீவென்ஸன் போன்ற ஆசிரியர்கள் தெரியும். மற்றும் எட்கர் ஆலன் போ, நெத்தேனியல் ஹாதார்ன், வாஷிங்க்டன் இர்வின், எமெர்ஸன் முதலியவர்களையும் தெரியும். கல்லூரிக்கு அப்பால் படிப்பது ஜி. டபிள்யூ. எம். ரெய்னால்ட்ஸ், மிஸஸ். ஹென்றி வுட், மேரி கோர்ரலி போன்ற நாவலாசிரியர்கள். சொ.வி.யும் தன் கல்லூரி நாட்களில் இவைகளெல்லாம் படித்துத்தான் இருக்கவேண்டும். விக்டர் ஹீயூகோவும், கை. டி. மாப்பஸானும், ஆண்டன் செக்கோவும், டாஸ்தாவ்ஸ்க்யும், டர்கனீவும் ஆங்கிலக் கல்லூரிப் படிப்பில் வராதவர்கள். ஆனால், இவர்களையும் படிப்பில் ஆர்வமிருந்த அந்தக்கால மாணவ மாணவியர் படித்திருக்கக்கூடும். சொ.வி.யினுடைய இளவயது நண்பர்கள் யாராவது அவர் என்னென்ன படித்தார், தங்களுடன் என்னென்ன விஷயங்களைப்பற்றி விவாதித்தார் என்று எங்காவது எழுதி வைத்திருந்தால் உபயோகமாக இருக்கும். அப்படி எதுவும் குறிப்புகள் எழுதி வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல், இந்த மாதிரியான விஷயங்கள் பற்றித் தகவல் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

காரைக்குடியில் ‘ஊழியன்’ பத்திரிகையில் உழைத்து, பத்திரிகைத் தொழிலை சொ.வி, கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. பத்திரிகைத் தொழிலில் சிரமங்கள் பல உண்டு என்றாலும் ஓரளவுக்கு உலக நடப்பைச் சரிவர அறிந்துகொள்ள அது உதவுகிறது என்றுதான் சொல்லவேண்டும். பலதரப்பட்ட விஷயங்களையும் பற்றி சுப்ரமண்ய பாரதியார் பரவலாக எழுதியதற்குக் காரணம் அவர் பத்திரிகையாளராக இருந்ததுதான். இதேமாதிரி ஆரம்பக் காலப் பத்திரிகைத் தொழில் அனுபவம் சொ.வி.க்கும் உதவியிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் பிரபலமாகிக்கொண்டிருந்த பொழுதுபோக்குப் பத்திரிகையான ‘ஆனந்த விகட’னிலும் அவர் ஏதோ எழுதி வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. சிறுகதைகள் எழுதுவது என்பதும், அரசியல், நாட்டு நடப்பு விஷயங்கள் பற்றிக் குறிப்புகள் எழுதுவதுபோலப் பத்திரிகைகளில் இன்றியமையாத விஷயம். பல மோபாஸான் கதைகளைப் புதுமைப்பித்தன் தழுவி ‘ஊழிய’னில் எழுதி வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தழுவல் பழக்கம் அவரைக் கடைசிவரை விடவில்லை என்றும் சொல்லலாம். தழுவலை ஒரு இலக்கிய முறையாகவே, ஒரு வெற்றிகரமான பத்திரிகைக் கோஷ்டி அப்பொழுது கைக்கொண்டிருந்தது. (கல்கி, துமிலன், தேவன், றாலி). சொல்லியும், சொல்லாமலும், பல நல்ல கதைகளையும், மட்டமான கதைகளையும் தழுவல் செய்து தங்கள் பெயரில் போட்டுக்கொள்வது என்பது தமிழ்நாட்டில் ஒரு சாதாரணமான பழக்கமாக இருந்தது. ஒருசிலர் மூல ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னார்கள். பலர் மூல ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லாமலே, எல்லாம் தங்கள் சொந்தக் கற்பனையே போலப் பாசாங்கு பண்ணிப் புகழ் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். புதுமைப்பித்தன் பிற்காலத்தில் தழுவல்காரர்களையும், தழுவல் கட்சியையும் வன்மையாகக் கண்டித்தாலும்கூட அவசியம் நேர்ந்தபோது; தன் சொந்தக் கற்பனை ஓடாத சில சமயங்களில் சில கதைகளைப் பெயர் சொல்லாமலும்கூடத் தழுவி எழுதியதுண்டு. ஆனால், தழுவல்காரர்களின் கற்பனை வறட்சியைப் போலப் புதுமைப்பித்தனுக்குக் கற்பனை வறட்சி இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிற ஒரு காரியம். கதை சொல்லும் மேன்மையும், சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கைவந்திருப்பது போலத் தமிழில், இந்த ஒரு நூறாண்டில், வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாமே அவர் கற்பனைத் திறனுக்கும், கதை சொல்லும் மேன்மைக்கும் சான்றுகள். ஆகையினால், அவர் செய்த சில தழுவல்களைச் சுட்டிக்காட்டி அவரும், தழுவல்களால் மட்டும் பெயர்பெற்ற மற்றவர்களும் ஒன்றுதான் என்று சொல்லுகிற ஒரு கூட்டம் சமீபகாலத்தில் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இந்தக் கூச்சல், விமர்சனமல்ல. இதற்கு அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தழுவல் தவிர வேறு எந்தவிதமான எழுத்தும் இல்லாதவர்களையும், புதுமைப்பித்தனையும் சமமாகக் காட்டுவது ‘விஷமமான’ ஒரு முயற்சி.

ஆங்கில அறிவு தந்த இலக்கியப் பரிச்சயத்துடன் சொ. விருத்தாசலத்திற்குத் திருநெல்வேலிக்காரர் என்பதனால் (தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு, அதுவும் முக்கியமாகப் பிராம்மணர்களுக்கு, இல்லாத ஒரு தமிழ் மரபு அறிவு ஏற்பட்டிருந்தது என்பது தெரிகிறது. சொ.வி. விஷயத்தில் இது அதிகமாகச் சைவச் சார்பு பெற்றது என்பது வெளிப்படை. நான் அவரைச் சந்தித்த காலத்தில் அவர் சித்தர் பாடல்கள் - முக்கியமாகச் சிவவாக்கியர் - மற்றும் கம்பராமாயணம் - முக்கியமாக யுத்த காண்டம், - மற்றும் கலிங்கத்துப்பரணி, திருமந்திரம் என்று பேசிக்கொண்டிருப்பார். என்னைச் சில சமயங்களில் யுத்த காண்டத்திலுள்ள பாடல்களைப் படிக்கச் சொல்லுவார். எனக்கு அப்போதெல்லாம் தமிழில் அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது. சந்தி பிரித்து யுத்த காண்டத்துப் பாடல்களைப் படிக்க நான் சிரமப்படுவது கண்டு என்னைக் கேலி செய்வார். ஆனால், ஒருபோதும் சந்தி பிரித்துச் சொல்லித்தரமாட்டார். அதற்கு அவருக்குப் பொறுமை கிடையாது. நானாகச் சந்திப் புதிரை விடுவிக்கவில்லை என்றால், “போதும் படித்தது. மூடிவிடு புஸ்தகத்தை” என்பார்.

தமிழில் இருந்தது போலவே அவருக்கு, பேச்சிலும் எழுத்திலும், சமஸ்கிருத வார்த்தைகள் பிரயோக விஷயத்திலும் ஒரு சாதுரியம் இருந்தது கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதுவும் திருநெல்வேலிக்காரர்களின் தினசரி வாழ்க்கை மரபிலிருந்து வந்ததுதான் என்று எண்ணுகிறேன். தமிழில் எழுதுகிற வேகமோ, கல்வியறிவோ, போதுமானது இல்லாத காலத்தில் நான் ‘ஆட்சேபம்’ என்று எழுதுவதா, ‘ஆட்சேபனை’ என்று எழுதுவதா என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கின்ற பொழுது, இந்த மாதிரியெல்லாம் சந்தேகம் இல்லாதவராக அவர் இருந்தது எனக்கு அதிசயமாகவே தோன்றிற்று. இதே மாதிரியான ஒரு லாவகத்தை அவர் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்துவதிலும் காட்டியதாக அவருடைய சக பத்திரிகையாளர்கள் (‘தினசரி’, ‘தினமணி’) எனக்குச் சொன்னதுண்டு. சில சமயம் பெருமையாகவும் சொல்லுவார்கள். சில சமயம் சொ.வி.யைக் கேலி செய்கிற மாதிரியும் சொல்லுவார்கள்.

நான் அவரோடு பழகிய காலத்தில் அவர் படித்த நூல்கள் சில எனக்கு நினைவுக்கு வருகின்றன. நாவல், சிறுகதைகள் இவை பற்றி மட்டும் சொல்லுகிறேன். முதல் தடவை அவரை ‘மணிக்கொடி’ காரியாலயத்தில் சந்தித்தபோது என் கையிலிருந்த ‘அப்ஸல்யூட் அட் லார்ஜ்’ என்கிற காரல் சப்பக் நாவலைப் ‘படித்துவிட்டுத் திருப்பித் தருகிறேன்’ என்று வாங்கிப் போனார். அவரிடம் போன என் புஸ்தகங்கள் எதுவும் என்னிடம் திரும்பி வந்ததில்லை. அந்தக் காலத்தில் புஸ்தகங்களை, புதுசானாலும், பழசானாலும் அதிக விலை கொடுக்காமல் வாங்கமுடியும். என் தகப்பனார் தயவில் நான் ஒரே நூலை இரண்டு பிரதியாக வாங்குவதற்கும் சக்தி படைத்தவனாக இருந்தேன். கொடுத்த புஸ்தகங்களைத் திருப்பி வாங்கிக்கொள்ள வேண்டுமென்று அந்தக் காலத்தில் நான் அதிகமாகக் கவலைப்பட்டதில்லை. அதுவும் சொ.வி.க்குக் கொடுப்பதில் திருப்திதான்.

ஸ்டீபன் ஸ்வெய்க் (Stephen Zweig), அர்னால்ட் ஸ்வெய்க் (Arnold Zweig) இரண்டு ஜெர்மன் நாவல், சிறுகதை ஆசிரியர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் புதுமைப்பித்தன்தான். அதேபோல வில்லியம் ஸராயனின் [William Saroyan] ‘த டாரிங் எங் மேன் ஆன் த பிளையிங் டிரப்பீஸ்’ [The Daring Young Man on the Flying Trapeze] என்கிற கதைத்தொகுப்பு வெளிவந்ததும் அதை வாங்கிப் படித்துவிட்டு, என்னையும் வாங்கிப் படி என்று அவர் உற்சாகமூட்டியது எனக்கு நினைவிருக்கிறது. டி. எஃப். போவிஸ் [T. F. Powys] என்பவர் எழுதிய ‘பேபில்ஸ்’ [Fables] என்கிற சிறுகதைத் தொகுப்பும், ‘மிஸ்டர் வெஸ்டன்ஸ் குட் வைன்’ [Mr. Weston's Good Wine] என்ற நாவலும் அவர் விரும்பிப் படித்த நூல்கள் என்று சொல்லலாம். ‘மிஸ்டர் வெஸ்டன்ஸ் குட் வைன்’ என்ற நாவலின் தாக்கத்தில்தான் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ எழுதப்பட்டது. ஆனால், இரண்டிற்கும் அமைப்பிலும், நோக்கிலும், கருத்திலும் எவ்வளவு வித்தியாசம் என்று இரண்டையும் படித்துப் பார்த்திருப்பவர்களுக்குத் தெரியும். சிறுகதை, நாவல் என்கிற வித்தியாசத்துடன், புதுமைப்பித்தனின் மேதாவிலாசத்தினால் போவிஸின் கிறிஸ்துவக் கடவுள் தென்னாடுடைய சிவனே ஆகிவிடுகிறார்! ஒரு புதிய தத்துவ தரிசனமே உதயமாகிவிடுகிறது புதுமைப்பித்தனின் கதையில். புதுமைப்பித்தனின் மரபுசால் கைவண்ணத்தை இந்தக் கதையில் முழுமையாகக் காண்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. மரபோடு ஒட்டியே சில புதுமை, புரட்சிகளையும் செய்துகாட்டுகிறார் சொ.வி.. போவிஸின் நாவலில் கிறிஸ்துவ மரபிற்கு அப்பாற்பட்ட விஷயம் எதுவும் இல்லை.

போவிஸ் சகோதரர்களில் இன்னொருவரான லெவலின் போவிஸ் [Llewelyn Powys] என்பவர் எழுதிய ‘எபனி அண்ட் ஐவரி’ [Ebony and Ivory] என்கிற சிறுகதைத் தொகுப்பையும் விரும்பிப் படித்தார் சொ.வி. என்று எனக்குத் தெரியும். புதுமைப்பித்தனுடையதைப் போலவே கசப்புக் கலந்த ஒரு சிரிப்பு லெவலின் போவிஸினுடையது. அந்தத் தொகுப்பில் ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. அதைப் புதுமைப்பித்தனேகூட எழுதியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றும். புதுமைப்பித்தனின் ‘பாவ’த்தை தத்ரூபமாகக் காட்டுகிற கதை அது. ‘ஸ்பெரிக் லாஃப்டர்’ (Spheric Laughter) என்பது கதையின் தலைப்பு. ‘நக்ஷத்திரங்கள் சிரித்தன’ என்றும் மொழிபெயர்க்கலாம். புயலில் அகப்பட்டுக்கொண்டு, வீடு திரும்ப அவஸ்தைப்பட்ட ஒரு கிராமத்து அழகியை, தெருவோடு போகிற ஒரு வாலிபன் காப்பாற்றி ஜாக்கிரதையாக வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். முரட்டுக் கணவன் அந்தப் பெண்ணை, “அந்த வாலிபனுடன் ஏன் வந்தாய்?” என்று போட்டு அடிக்கிறான். இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வாலிபன், ‘இவள் இப்படிக் காரணமில்லாமலே சந்தேகத்தில் அடிபடுவாள் என்று தெரிந்திருந்தால் நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்திருக்கலாமே... நக்ஷத்திரங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன’ என்று மனம் வருந்துகிறான் என்று கதை. இதுபோலப் பல கதைகள், புதுமைப்பித்தனே எழுதியிருக்கக்கூடிய கதைகள் என்று சொல்லக்கூடியவை பல லெவனின் போவிஸின் ‘எபனி அண்ட் ஐவரி’ என்ற நூலில் காணக்கிடைக்கின்றன. இதுவும் பென்குயின் நூலாக வந்த தொகுப்புதான். ஒரு ஆசை அபூர்த்தி, விரக்தி, ஒரு சினிகல் [Cynical] நிர்தாட்சண்யம், தர்மம் என்று சொல்லப்படுவதின் லேசான மறுப்பு - இவை புதுமைப்பித்தனுக்கும், லெவனின் போவிஸிக்கும் பொதுவான விஷயங்கள். லெவனின் போவிஸினால் புதுமைப்பித்தன் பாதிக்கப்பட்டார் என்றுகூடச் சொல்ல முடியாது. ஏனென்றால், சுபாவமாகவே புதுமைப்பித்தனுக்கு உள்ள பார்வையின் ஒரு பகுதியை இந்த ஆங்கில ஆசிரியரும் கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். இருவரும் வேறு வேறு உலகங்களைப்பற்றி எழுதினார்கள்.

அண்டன் செக்காவ் [Anton Chekhov], எட்கர் ஆலன் போ [Edgar Allan Poe], கை. டி. மாப்பஸான் [Guy de Maupassant] மூவரையுமே புதுமைப்பித்தன் நன்றாகப் படித்திருந்தார். அம்ப்ரோஸ் பெய்ர்ஸ் [Ambrose Bierce], பிரேங் ஆர் ஸ்டாக்டன் [Frank R. Stockton], பிரெட் ஹார்டே [Bret Harte] முதலியவர்களின் சிறுகதைகளைப் படித்து அவை பற்றிப் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பேசியிருக்கிறோம். ‘கிரேட் ஷார்ட் ஸ்டோரிஸ் ஆப் த வோர்ல்டு’ [The Worlds Greatest Short Stories] என்கிற ஒரு நூலும் (இலண்டன்), அதேபோல, அமெரிக்கப் பதிப்பான ‘த வோர்ல்டு புக் ஆப் ஷார்ட் ஸ்டோரிஸ்’ [The World Book of Short Stories] என்பதில் இருபது பாகங்களில் ஒரு மூன்று பாகங்களும் எங்களுக்கு மூர் மார்க்கெட்டில் மலிவு விலையில் கிடைத்தன. அவற்றில் பல ஸ்பானிய, இத்தாலிய, ஜெர்மன், டர்க்கிஷ், அரபிக் கதைகளைப் படித்து விவாதித்ததும் நினைவிற்கு வருகிறது. இரண்டாவது நூலின் மற்றப் பாகங்களும் கிடைக்குமோ என்று தேடித் துருவிப் பார்த்ததும் ஞாபகமிருக்கிறது. ஸ்லோகப் [Sologub], ஸ்செட்ரின் [Shchedrin] என்கிற ரஷ்ய ஆசிரியர்களின் உருவகக் கதைகள் பல இரண்டு தொகுதிகளாகக் கிடைத்தன. இந்த மாதிரி ‘பேபில்ஸ்’ [Fables] எழுதவேண்டுமென்று சொ.வி. ஆசைப்பட்டதும் நினைவிருக்கிறது. ஆனால், அவர் எழுதவில்லை.

சொ.வி.க்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர்களில் தாமஸ் மான் [Thomas Mann] என்கிற ஜெர்மன் ஆசிரியரும் ஒருவர். ‘பட்டன்புரூக்ஸ்’ [Buddenbrooks], ‘மந்திர மலை’ [Magic Mountain] முதலிய நாவல்களுடன், ‘ஸ்டோரிஸ் ஆப் திரி டிகேட்ஸ்’ [Stories of Three Decades] என்ற சிறுகதைகளையும் பற்றிப் பல நாட்கள் பேசியது நினைவிருக்கிறது. பஜாஸ்ஸோ என்ற ஒரு கோமாளியின் கதை அவருக்கும் எனக்கும் மிகவும் பிடித்ததாக இருந்தது. ஒரு பிரதர் சிஸ்டர் இன்செஸ்ட் கதையையும் ரசித்தது நினைவிற்கு வருகிறது. ஃபிரான்ஸ் காஃப்காவின் [Franz Kafka] கதைகள் ஒரு தொகுப்பு வெளிவந்து கண்ணில் பட்டதும், மூர் மார்க்கெட் வி. ஸி. வெங்கடேசனிடம் இரண்டு பிரதிகள் வாங்கி ஒரு பிரதியைப் புதுமைப்பித்தனிடம் கொடுத்ததும் நினைவில் இருக்கிறது. காஃப்காவின் கதைகளைப் படித்தவுடன் பாராட்டியவர்களில் புதுமைப்பித்தனும் ஒருவர். அந்தக் காலத்தில், 39, 40இல் காஃப்காவின் பெயரோ, மேதமையோ பரவலாகத் தெரிந்திருக்கவில்லை. ஜேம்ஸ் ஜாய்ஸின் [James Joyce] ‘டப்ளினர்ஸ்’ (Dubliners), ‘ஏ போர்ட்ரெய்ட் ஆப் த ஆர்டிஸ்ட் அஸ் ஏ யங் மேன்’ [A Portrait of the Artist as a Young Man] என்கிற இரண்டு நூல்களையும் இரண்டு மூன்று தடவைகளாவது படித்திருப்பார் புதுமைப்பித்தன் என்று எண்ணுகிறேன். ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘உலிஸெஸ்’ [Ulysses] அப்போதுதான் சென்னையில் கிடைக்க ஆரம்பித்திருந்தது. மாடர்ன் லைப்ரரி ஜைன்ட் பதிப்பில் வாங்கிப் புதுமைப்பித்தன் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

ஹான்ஸ் பாலெடா [Hans Fallada] என்பவர் எழுதிய ‘லிட்டில் மேன் வாட் நௌ’ [Little Man, What Now?] என்கிற நாவலைச் சொ.வி. பிரமாதமாகப் புகழ்ந்து கேட்டிருக்கிறேன். நானும் படித்து மகிழ்ந்த புஸ்தகம்தான் அது. அதேபோல அதே ஆசிரியரின் ‘ஹூ ஒன்ஸ் ஈட்ஸ் அவுட் ஆப் த டின் பௌல்’ [Who Once Eats Out of the Tin Bowl] என்கிற நாவலையும், பல சிறுகதைகளையும் பாராட்டி புதுமைப்பித்தன் கூறியதுண்டு. இந்த ஆசிரியர் ஜெர்மானியர். அடால்ப் ஹிட்லரின் நாஜிக் கட்சியை ஆதரித்தவர் என்பதற்காகக் கெட்ட பெயர் பெற்றவர். 1945க்குப் பிறகு இவர் பெயரை யாரும் சொல்லுவதில்லை. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த கதாசிரியர். இவர் சிறுகதைகளில் ஒன்றைப் புதுமைப்பித்தன் தன் ‘உலகத்துச் சிறுகதைகள்’ தொகுப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இதேபோல நட் ஹம்ஸன் [Knut Hamsun] என்கிற நார்வீஜிய நாவல், சிறுகதாசிரியரையும் படித்திருந்தார் புதுமைப்பித்தன். இவரும் நாஜி ஆதரவாளராக இருந்தவர்தான்.

ஆங்கில இலக்கியாசிரியர்களின் சிறுகதைகளைத் தாங்கி வந்த ‘ஆர்கஸி’ (Argosy) என்கிற மாதாந்திரப் பத்திரிகையில் பல ஆங்கில ஆசிரியர்களை மாதாமாதம் படிப்பது என்பது வழக்கம். இந்த ‘ஆர்கஸி’ இலக்கியத்தர நிர்ணய அளவில் மணிக்கொடிக்காரர்களுக்குப் பொதுவாக மிகவும் உபயோகப்பட்ட பத்திரிகை. அதிகமாக ஆங்கிலப் பழக்கம் இல்லாத ராமையாகூட ‘ஆர்கஸி’ பத்திரிகையைத்தான் தன் சிறுகதைப் பத்திரிகையான ‘மணிக்கொடி'க்கு முன்மாதிரியாகச் சொல்லுவார். அடாஸ் ஹிக்ஸ்லே (Aldous Huxley), ஆர்னால்ட் பென்னட் (Arnold Bennett), ஹில்லைர் பெல்லாக் (Hilaire Belloc), ஈ.வி. லூகாஸ் (E. V. Lucas), ஏ. பி. ஹெர்பெர்ட் (A. P. Herbert), ஜேக்கப்ஸ் (W. W. Jacobs), ஏ. ஈ கப்பார்ட் (A. E. Coppard) போன்ற பல ஆசிரியர்களின் கதைகளைத் தனிக்கதைகளாகவும், தொகுப்புகளாகவும் படித்திருக்கிறோம். சொ.வி.க்கு பி. ஜி. வுட்ஹவுஸ் [P. G. Wodehouse], ஸ்டீபன் லீகாக் [Stephen Leacock] இருவரையும் அதிகம் பிடிக்காது. சூப்பர்பீஸியல் [Superficial] என்று அவர்களைப் பற்றி அவர் சொல்லுவார். மாறாக எட்கர் வாலஸ் [Edgar Wallace] நாவல்கள் பலவற்றை விரும்பிப் படித்திருக்கிறார். ஜே. பி. பிரிஸ்ட்லே [J. B. Priestley] என்பவர் எழுதிய நாவல்கள், நாடகங்களையும், காலம் பற்றி அவர் கருத்துகளையும் எடுத்துச் சொல்லுவார். 1937-38இல் வெளிவந்த லயனல் பிரிட்டன் [Lionel Britton] என்பவர் எழுதிய ‘லவ் அண்ட் ஹங்கர்’ [Hunger and Love] என்கிற பெரிய நாவலின் தலைப்பை மாத்திரம் பார்த்துவிட்டு தன் கதை ஒன்றிற்கு அந்தத் தலைப்பை மாற்றி அழகாக அமைத்து உபயோகித்துக்கொண்டார் - ‘கவந்தனும் காமமும்’ என்பது அவர் கதையின் தலைப்பு. மேரி ஷெல்லியின் [Mary Shelley] ‘பிராங்ஸ்டைன்’ [Frankenstein] அவருக்கு மிகவும் பிடித்த நூல். அதைச் சுருக்கி தமிழில் ‘பிரேத மனிதன்’ என்று எழுதியிருக்கிறார். பிரேம் ஸ்டோக்கர் [Bram Stoker] என்கிற அதிக இலக்கியத்தரமில்லாத ஆசிரியர் எழுதிய ‘ட்ராகுலா’ [Dracula] என்கிற திகில் நாவலைப் பல தடவைகள் படித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ‘ரத்தக் காட்டேரி’ என்கிற விஷயத்தைப்பற்றி புதுமைப்பித்தன் ஒரு நிபுணத்துவத்துடன் பேசுவார்! ‘செவ்வாய் தோஷம்’, ‘காஞ்சனை’ முதலிய கதைகளில் இந்த விஷயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். ‘ட்ராகுலா’ முதல் தடவையாக சினிமாப் படமாக சென்னைக்கு வந்தபோது பல தடவைகள் சொ.வி. போய்ப் பார்த்திருக்கிறார். மினர்வா தியேட்டரில் அது நடந்தபோது அவரும், நானும், கி.ரா.வும் போய்ப் பார்த்தோம். எனக்குப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால், சொ.வி. உற்சாகமாக, அதை நாலாவது தடவை பார்ப்பதாகச் சொன்னது நினைவிருக்கிறது! இதேபோல செரிடன் லிபானு [Sheridan Le Fanu] என்பவருடைய திகில் கதைகளையும், அவை அப்போது நூலாகச் சென்னையில் கிடைக்காததால் ‘ஆர்கஸி’ பத்திரிகைகளில் வந்ததைச் சேர்த்து வைத்திருந்தார். திகில் என்கிற அம்சமிருந்தாலும் பிரேம் ஸ்டோக்கரிலோ செரிடன் லிபானுவிலோ புதுமைப்பித்தனின் திகில் கதைகளில் கிடைக்கிற இலக்கிய அனுபவம் கிடைப்பதில்லை என்பதுதான் என் நினைப்பு. எட்கர் ஆலன் போவின் ‘பிட் அண்ட் த பெண்டுலம்’ [The Pit and the Pendulum], ‘லிஜியா’ [Ligeia], ‘த ஃபால் ஆப் த ஹவுஸ் ஆப் உஷர்’ [The Fall of the House of Usher], ‘காஸ்க் ஆப் த அம்மாண்டிலேடோ’ [The Cask of Amontillado] என்கிற கதைகளில் புதுமைப்பித்தனின் திகில் கதைகளில் கிடைக்கிற இலக்கிய அனுபவம் கிடைக்கிறது என்று சொல்லலாம். கடைசிக் கதையைப் புதுமைப்பித்தனே தனது ‘உலகத்துச் சிறுகதைக’ளில் மொழிபெயர்த்துச் சேர்த்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில், எனக்குத் தெரிந்து, புதுமைப்பித்தன் அந்தக் காலத்தில் படித்த நூல்கள் எல்லாம் அடங்கிவிட்டதாகச் சொல்ல முடியாது. இன்னும் பல ஆசிரியர்கள், நூல்கள் சொல்லலாம். ஆனால், அவசியமில்லை என்று எண்ணுகிறேன். அவருடைய படிப்பு அதன் அளவில் விஸ்தாரமானது. படித்ததைச் சொந்தமாக்கிக்கொள்ளும் சக்தியும் அவருக்கு அதிகமாக இருந்தது என்று சொல்லலாம்.

தன்னோடு சமகாலத்தில் எழுதிய தமிழ் ஆசிரியர்கள் சிலரது சிறுகதைகள் பற்றியும் அவர் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். முக்கியமாக ‘குளத்தங்கரை அரசமரம்’, ‘நக்ஷத்திரக் குழந்தைகள்', ‘சிவசைலம்', ‘எங்கிருந்தோ வந்தான்’ - இப்படிப் பலவற்றைச் சொல்லியிருக்கிறார். மௌனியைப் பற்றிக் கடைசிவரையில் திடமான நல்ல அபிப்பிராயம் இருந்தது என்பது பலருக்கும் தெரியும். அவர் அபிப்பிராயத்தை மதித்துத்தான் நானே மௌனியைத் தேடிப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன். பின்னர் எழுதத் தொடங்கியவர்களில் சிதம்பர ரகுநாதன், கு. அழகிரிசாமி இவர்கள் ‘பிரசண்ட விகட’னில் எழுதி வெளியிட்ட கதைகளை என்னிடம் தந்து, “படித்துப் பாரும் வேய்! - நம்ம பையன்கள்” என்று சொன்னார் என்பது நினைவில் இருக்கிறது. இது 1940-41இல் என்று எண்ணுகிறேன்.

என் சிறுகதைகளையும், அப்போது வெளிவந்திருந்த சில நாவல்களையும் பற்றியும், பொதுவாக என் எழுத்துக்களைப் பற்றியும் புதுமைப்பித்தன் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் கேட்டுக்கொண்டதில்லை. ‘முதற்சுடர்’, ‘ராகவன்’ என்கிற என் கதைகளைத் ‘தினமணி ஆண்டு மல’ரில் பிரசுரிக்கும்போது அவர் உற்சாகமாகப் பாராட்டினார் - அது வெறும் பதிப்பாசிரியர் தோரணையாகவும், மணிக்கொடி ‘முதல் அத்தியாய’ விவகாரமாகவும் இருக்கலாம். நான் எழுதிய சிறுகதைகளில் ‘வரவேற்பு’ என்பதும், ‘விதியும் மதிப்பும்’ என்பதும் தனக்குப் பிடித்திருந்ததாக என்னிடம் ஒருதரம் தானே சொன்னார். ‘தினமணி ஆண்டு மலர்’களில் நான் எழுதிய ‘இலக்கியச் சோலை’, ‘தமிழில் மறுமலர்ச்சி’ என்கிற ஆரம்ப விமர்சனக் கட்டுரைகளைப் பாராட்டியதுடன், “இதுமாதிரி நிறைய எழுதுங்களேன்” என்று சொன்னதும் ஞாபகம் இருக்கிறது. தாகூரைப்பற்றி நான் ஒரு நூல் எழுத ஒப்புக்கொண்டது பற்றி அவருக்குச் சம்மதமில்லை. அது வெளிவந்ததும் (Alliance) அதைத் தானே நேரடியாகக் கண்டனம் செய்யாமல் வேறு ஒரு பெயரில் மதிப்புரை எழுதினார். ‘ஆண்டாள்’ என்கிற பெயரில் ‘தினமணி ஆண்டு மல’ருக்கு எழுதிக் கொடுத்த கவிதையை மிகவும் பாராட்டியதாக நினைவிருக்கிறது. ‘அழகி’ என்கிற என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்ததும் ஒரு பிரதியில் ‘குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா? சிஷ்யனிடமிருந்து குருவுக்கா?’ என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். அந்தப் பகுதியைக் கிழத்தெறிந்துவிட்டு, “குரு - சிஷ்யன் என்றால் இருவரும் முட்டாள்கள் என்று அர்த்தம்” என்று வியாக்யானம் சொன்னது ஞாபகமிருக்கிறது.

சொ. விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன் இறந்து சற்றேறக்குறைய 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரோடு சமகாலத்தில் ஓரளவு ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொரு சிறுகதாசிரியரான கு. ப. ராஜகோபாலன் இறந்து நாற்பத்தி நாலு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த அரை நூற்றாண்டில் அவர்கள் தொடர்ந்து உயிர் வைத்துகொண்டு வாழ்ந்துகொண்டிருந்தால் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று யோசிக்கும்போது இலக்கியக் கர்த்தாக்கள், அதுவும், சொ.வி. போன்ற மேதைகள், கு.ப.ரா போன்ற இலக்கியத் திறன் உள்ளவர்கள் அதிக வயது இல்லாமல் இறந்துவிடுவதுதான் நல்லதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. ‘தெய்வத்துக்கு வேண்டியவர்கள் அல்பாயுசிலே போய்விடுவார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்கிறது. உலக நியாயம், ‘நீண்ட ஆயுள் - அதிர்ஷ்டம்' என்று இருக்கலாம். ஆனால், ‘உலக நியாயத்திற்கு அப்பால் தெய்வ நியாயம் என்று ஒன்று இருக்கிறதே’ என்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. பாரதியார்கூட முப்பத்தியொன்பது வயதில் காலமானதை ஒரு தெய்வ நியாயமாகத்தான் சொல்லவேண்டும். அதற்கு முன் ராஜமய்யர் தனது இருபத்தியாறாவது வயதிலேயே காலமானவர். இலக்கியத்தில், திறமைக்கும், மேதைமைக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தமே இல்லாமல்தான் இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுகொடுக்க முடிவதில்லை என்பதுடன் தமிழ்நாட்டின் சூழ்நிலை இலக்கியம், கலை என்கிற நினைப்புகள் இல்லாத, பண்பாடற்ற சூழ்நிலையாக இருக்கிறது என்பதனால், இவர்கள் இருந்து இன்னும் கஷ்டப்படாமல் போனது நல்லதுதானே என்று கேட்கத் தோன்றுகிறது. இப்படி நானும் போய்விட முடியவில்லையே என்ற ஏக்கமும் எனக்கு உண்டு. இது ஒரு ஹார்ட்லெஸ் ஸ்டேட்மென்ட் என்று தோன்றினாலும்கூடத் தமிழர்கள் எந்த விதத்தில் புதுமைப்பித்தன் போன்ற மேதைகளைப் படைக்கத் தகுதியுள்ளவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார்களா என்று கேட்பது நியாயமான கேள்வி என்றுதான் சொல்லவேண்டும்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

  •  

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெளிவருகிற புஸ்தகம் இது. அவர் எழுதிய கதைகளில் மிகச் சிறந்தவையெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன. தொண்ணூற்றுச் சொச்சம் கதைகளில் ஒரு முப்பதுக்கும் அதிகமாகவே சிறந்த கதைகளாகவும், இன்னும் 30 கதைகளுக்கு அதிகமாக நல்ல கதைகளாகவும், மற்றவை சாதாரண தரத்தில் அமைந்தவை என்றும் பொதுவாகச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் அடங்காமல் விட்டுப்போன புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் சில - ஒன்றிரண்டு இருக்கலாம். அதிகம் போனால் நாலைந்தும் இருக்கலாம் - அவை கிடைத்தால் அவற்றையும் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்வார்கள் பிரசுரகர்த்தாக்கள் என்று நாம் நம்பலாம்.

சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை புதுமைப்பித்தன். சில ஓரங்க நாடகங்கள், மற்றும் இலக்கியப் பொதுக்கட்டுரைகள், வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்ற புனைபெயரில் சில கவிதைகள், இவை தவிர பல மொழிபெயர்ப்புகள் (அனேகமாகச் சிறுகதைகள், ‘பிரேத மனிதன்’ என்கிற மேரி ஷெல்லியின் விஞ்ஞான நாவல், குப்ரினின் ‘யாமா’வில் ஒரு பகுதி. இவற்றை மொழிபெயர்த்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது என்பதனால் இவற்றையெல்லாம் ஆங்கில மொழி மூலம்தான் மொழிபெயர்த்தார்.) இவை தவிர ‘ஃபாஸிஸ்ட் ஜடாமுனி’ என்று முஸ்ஸாலோனி என்கிற இத்தாலிய சர்வாதிகாரியைப் பற்றி ஒரு ஜீவிய சரித்திரம், மற்றும் பல சந்தர்ப்பங்களில் பல அரசியல் கட்டுரைகள் (‘சூறாவளி’யில் இரண்டாவது உலகப்போர் வருமுன் வாராவாரம் ஐந்து மாதங்களுக்கு மேல் எழுதிய ‘அங்கே’ என்கிற ஐரோப்பிய அரசியல் அரங்கக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.) மற்றும் பல புது நூல்கள் பற்றித் ‘தினமணி’ மற்றும் சில பத்திரிகைகளில் அவ்வப்போது ஆணித்தரமான மதிப்புரைகள்! ‘ரசமட்டம்’ என்ற பெயரில் கல்கி கண்டனக் கட்டுரைகள், ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள் (‘உலக அரங்கு’ என்கிற பெயரில்), பல நண்பர்களுக்கு எழுதிய இலக்கியத்தரமான கடிதங்கள் முதலியவற்றை அவர் எழுதியிருக்கிறார்.

‘மேன் ஆப் லெட்டர்ஸ்’ என்று குறிப்பிடத்தக்க அளவில் அவர் பல துறைகளிலும் செயல்பட்டிருக்கிறார். கொஞ்ச காலம்தான் உயிர் வாழ்ந்தார். நாற்பத்தியிரண்டு வருஷங்களே உயிர் வாழ்ந்த அவர் இலக்கியத்தில் செயல்பட்ட காலம் பதினைந்தே ஆண்டுகள்தான் என்றாலும் அவர் எழுத்துகள் சாதனையிலும், விஸ்தீரணத்திலும், ஆழத்திலும் அதிகமானவைதான். உத்தியோக வாழ்க்கையில் பெரும்பகுதியும், தினசரிச் செய்திகளை மொழிபெயர்ப்பது, அதற்காக அந்த நாட்களில் பொதுவாகப் பலருக்கும் கிடைத்தது போல 30, 40 என்ற மாதச் சம்பளம், கிடைத்த தேதியில் பெறுவது - இதுதான் வாழ்க்கை முறையாக அவருக்கு அமைந்தது. காரைக்குடியில்
‘ஊழிய’னில் சில காலம் சேவைக்குப் பிறகு சென்னை வந்து டி. எஸ். சொக்கலிங்கம் கோஷ்டியில் சேர்ந்து பல ஆண்டுகள் ‘தினமணி’யிலும்
, சில ஆண்டுகள் ‘தினசரி’யிலும் பணி செய்தார். கடைசி நாலைந்து ஆண்டுகளில் செய்திப் பத்திரிகை வேலையிலிருந்து விடுதலை பெற்று ‘சோதனை’ என்று இலக்கியத்திற்கு ஒரு பத்திரிகை நடத்தவேண்டுமென்றும், சினிமாவில் சேர்ந்து சாதனைகள் புரியவேண்டுமென்றும் கனவுகள் கண்டார். ‘பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்’ என்று அவரே சினிமா எடுப்பதாக ஆரம்பித்து சரிப்பட்டு வராமல், எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த கடைசிப் படமான ‘ராஜமுக்தி’க்கு வசனம் எழுதினார். பத்திரிகை வேலையைவிட அதிலும் அதிகமாகப் பணம் வந்ததாகத் தெரியவில்லை.

‘ராஜமுக்தி’ படத்திற்காகப் புனா போய்விட்டுத் திரும்பித் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, உடல்நிலை ஏற்கெனவே மோசமானது மிகவும் கெட்டுவிட்டது. திருவனந்தபுரத்தில் அவர் கடைசி நாட்கள் ஆஸ்பத்திரியில் கழிந்தன. சிதம்பரம் என்ற ஒரு திருவனந்தபுரம் நண்பரும், சிதம்பர ரகுநாதனும் உடனிருந்து கடைசிவரை உதவியதாகத் தெரிகிறது. இடையில் ஜெமினி ஸ்டூடியோ வாசனுக்காக எழுதிய ‘ஒளவையார்’ சினிமா ஸ்கிரிப்ட் இலக்கியத்தரமாக அமைந்தும் ஏற்றுக்கொள்ளப்படாததைக் குறிப்பிட வேண்டும். சினிமாவில் அசாதாரணமானது, மேன்மையானது எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பது அன்றுமுதல் இன்றுவரை தொடருகிற ஒரு நிலைமை.

இப்படியெல்லாம் பார்க்கும்போது, தன் நாற்பத்தியிரண்டாவது வயதில், 1948இல் இறந்துவிட்ட சொ. விருத்தாசலம் என்பவர் - ஒல்லியான மனிதர், பற்களும், மார்பு எலும்புகளும் எண்ணிவிடக்கூடிய அளவில் வெளியில் தெரியும். குழந்தைப் பிள்ளைத்தனமாக, காரணமில்லாமலேகூட கடகடவென்று சிரிக்கும் சுபாவம் படைத்த இந்த மனிதர் - முழுவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆண்டுகள் கணக்கில் இல்லாவிட்டாலும், நிறைவில், சாதனைகளில், தெரிந்த நண்பர்கள் மனங்களில், அவரை வாசித்த வாசகர்கள் உள்ளங்களில், புரிந்துகொண்டவர்கள் நினைப்பில் பூரண வாழ்வு வாழ்ந்தவர் என்றே சொல்லவேண்டும். (புதுமைப்பித்தன் செய்த காரியங்களில் ஒன்றை மேலே சொன்ன பட்டியலில் குறிப்பிட விட்டுவிட்டேன். மூன்று ஆண்டுகள் பொறுப்பேற்று அவர் ‘தினமணி’யில் ஆண்டு மலர்கள் தயாரித்தார். வளரும் தமிழ் இலக்கியத்திற்கு வழிகாட்டிய மலர்கள் அவை. அவையும் புதுமைப்பித்தன் சாதனைகளில் குறிப்பிடப்படவேண்டியவை.)

நான் 1935 - 36இல் தமிழில் எழுதத் தொடங்கலாமா என்று தயங்கிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு எழுதத் தெம்பு கொடுத்தது புதுமைப்பித்தனும், அவர் கதைகளும்தான் என்று சொல்வது மிகையே ஆகாது. தமிழில் நான் முதன்முதல் படித்த சிறுகதை வத்தலகுண்டு எஸ். ராமையா என்பவர் ‘காந்தி’ பத்திரிகையில் எழுதிய ‘வார்ப்படம்’ என்ற கதை. அப்போது வத்தலகுண்டு என்கிற கிராமம் தமிழ்நாட்டில் இருப்பது எனக்குத் தெரியாது. ராமையா என்பதும் தெலுங்குப் பெயரோ என்று எனக்குச் சந்தேகம். அந்தக் கதையைப்போல என்னாலும் தமிழில் எழுத இயலும் என்று தோன்றியது. இரண்டாவது படித்த கதை புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’தான் என்று நினைக்கிறேன். ராமையாவின் ‘மணிக்கொடி’யில் 1935இல் வெளிவந்தது. அதைப்போன்ற கதை உலகத்துச் சிறுகதைகளிலேயே வெகுசிலதான் தேடினாலும் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றியது. நான் ராமையாவைத் தேடிக்கொண்டு போய் டக்கர்ஸ் லேனில் ‘மணிக்கொடி’ ஆபீஸில் அவரைச் சந்தித்தபோது அவர் ‘சிற்பியின் நரகம்சிறுகதை வந்திருந்த ‘மணிக்கொடிஇதழ் ஒன்றை எனக்குப் படிக்கத் தந்தார். கலையென்பது மத விஷயத்துக்கு ஆதாரமாக உபயோகப்பட வேண்டும் என்கிற மரபுக் கருத்தைக் கண்டித்தும், கண்டிக்காமலும், ஓரளவுக்கு இரண்டு சித்தாந்தங்களுமே சரி என்று சொல்லுகிற மாதிரியும் அமைந்திருந்தது கதை. மேலெழுந்தவாரியாகப் படிக்கும்போது மதத்துக்கு அனுசரணையாகக் கலை இருப்பது சரியல்ல என்று ஆசிரியர் சொல்வது போலவும் இருந்தது. இதை மறுத்து நான் ஒரு கதை எழுதவேண்டுமென்று எண்ணினேன். ஆனால் ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் (‘தெய்வ ஜனனம்’) 1942இல் எழுத முடிந்தது. அதில் புதுமைப்பித்தனிலிருந்த பூரணத்துவம் வரவில்லை; த்வனியும் வரவில்லை என்பது எனக்குத் தெரிகிறது.

முதல் முதலாக நான் புதுமைப்பித்தனைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. 1936இல் ஜனவரி மாதத்தில் ஒருநாள் கடைசி வாரம் என்று நினைக்கிறேன் - பல்லும் பவிஷுமாக, திருநெல்வேலி ஜிப்பா (?) - அது திருநெல்வேலி ஜிப்பாதானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இப்போது சிதம்பர ரகுநாதனும் அதேமாதிரி ஜிப்பா அணிவதை நான் பார்க்கிறேன் - கடகடவென்று கல்லை ஏதோ பித்தளைப் பாத்திரத்தில் உருட்டிவிட்டது போன்ற அடித்தொண்டையிலிருந்து வந்த ஒரு சிரிப்பு. “உங்கள் கதை ‘சிற்பியின் நரகம்’ நன்றாக இருக்கிறது” என்று நான் சொன்னவுடன், “அப்படித்தான் இருக்கும் ராசாவே! என் கதைகள் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்” என்று அகங்காரமில்லாத ஒரு நிச்சயத்துடன் அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. என் கையில் காரல் சப்பக் [Karel Capek] என்கிற ஸெக்கோஸ்லோவேக்கிய நாவலாசிரியர் எழுதிய நாவல் இருந்தது. ‘அப்சலூட் அட் லார்ஜ்’ [Absolute at Large] என்கிற நாவல் என்று எண்ணுகிறேன். ‘நான் படித்துப் பார்க்கிறேன்’ என்று என் அனுமதியைக் கேட்காமலே என் புஸ்தகத்தை எடுத்துக்கொண்டுவிட்ட அவருடைய நெருக்கமும் எனக்குப் பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு ஒரு நூறு தடவைகளாவது ‘சொ.வி’.யைச் சந்தித்திருப்பேன் என்று தோன்றுகிறது. சந்திப்புகள் குறுகிய கால அளவிலும், சில சந்திப்புகள் மணிக்கணக்கான நேரமும், சில நாட்கள் கணக்கிலும் இருக்கும். இடையில் ஒரு மூன்று மாதங்கள் 222, அங்கப்ப நாயக்கன் தெருவில் நானும், அவரும், கி.ரா.வும் ஒரே அறையில் வசித்தோம். வாசுதேவபுரத்தில் (திருவல்லிக்கேணி) அவர் குடியிருக்கும்போது இருபது, முப்பது நாட்கள் அவர் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டு சென்னையில் தங்கியிருந்திருக்கிறேன். நடுவில் ஒரு தடவை தஞ்சாவூரில் நான் இருக்கும்போது இரண்டு, மூன்று தினங்கள் என் மேலவீதி வீட்டில் அவர் வந்து தங்கியிருந்தார். அந்தச் சந்தர்ப்பம் அவர் திருவனந்தபுரம் போய்விட்டுச் சென்னை திரும்புகிற வழியில். சாப்பிடும்போது “பருப்பும், சாதமும் போதும்” என்று அவர் சொன்னது பற்றி என் மனைவி இன்னமும் ஆச்சரியப்பட்டுச் சொல்வதுண்டு. இடையில் ராமசாமி (மண்ணடித்) தெருவில், ராயப்பேட்டை ஹைரோடில் என்று அவர் குடியிருந்த பல வீடுகளிலும் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். புரசைவாக்கம் ஹைரோடில் 45, 46இல் ‘சந்திரோதயம்நடந்துகொண்டிருந்தபோது பழைய ‘மணிக்கொடிபகைப்புலத்தை மீண்டும் கொண்டுவர முடியுமா என்று பார்ப்பதற்காக, புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா, பெரிய கிட்டப்பா, கணேச சாஸ்திரி, ராமரத்னம் முதலியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்திற்குப் பிறகு பேசிக்கொண்டிருந்தது ஞாபகமிருக்கிறது. இந்த விருந்திற்கு ஆர்யாவும், கி.ரா.வும் வராதது ஒரு குறை என்று புதுமைப்பித்தன் சொன்னது நினைவிற்கு வருகிறது.

நான் கடைசியாக அவரைச் சந்தித்ததை நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்ள முயலுகிறேன். ‘சந்திரோதயம்பத்திரிகை நின்றுபோன பிறகு 1947இல் ராயப்பேட்டை ஹைரோடில் அவருடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது அவர் மனைவி கமலாம்பாள் ஊரிலில்லை. ஒய்.எம்.ஐ.ஏ. ரெஸ்டாரண்டில் (சமீப காலத்தில்தான் அது ராயப்பேட்டை ஹைரோடில் புதுக்கிளை திறந்திருந்தது என்று எண்ணுகிறேன்) காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தோம். தன் மனைவியை அழைத்துக்கொண்டு வர திருவனந்தபுரத்திற்கு அன்று மாலை கிளம்பப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் கமலாம்பாளே ஊரிலிருந்து வந்துவிடவே நான் அரைமணிநேரம் இருந்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு போய்விட்டேன். அதற்குப் பிறகு இரண்டு வருஷத்திற்குள் அவர் இறந்துவிட்டார். புனேயிலிருந்து உடல்நலம் மோசமாகி அவர் திரும்பியதும், திருவனந்தபுரம் போனதும், நண்பர்கள் பி. வி. லோகநாதனும், சிதம்பர ரகுநாதனும் சொல்லி, எழுதித் தெரிந்துகொண்டதுதான்.

1936 முதல் 1947 வரையில் பழக்கம். சற்று நெருங்கிய பழக்கம் என்றுதான் சொல்லவேண்டும். இலக்கிய நண்பர்கள் என்கிற அளவில் நெருங்கிப் பழகினோம் என்று சொல்லலாம். அப்போதைய தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தைவிட அதிக நெருக்கமானதாகத்தான் புதுமைப்பித்தனுடன் நான் பழக நேர்ந்தது. இந்த அளவிற்கு நெருக்கமான பழக்கம் எனக்கு 1942க்குப் பிறகு மௌனியுடனும் ஏற்பட்டது. எங்கள் பேச்சு அனேகமாக படித்த நூல்களையும், எழுதிய விஷயங்களைப் பற்றியும்தான் இருக்கும். சக எழுத்தாளர்களைப்பற்றி அதிகமாகப் பேச்சோ, வம்போ வளர்த்ததாக ஞாபகமில்லை. எங்களிடையே இலக்கிய உலக வம்பு மட்டும் போதுமான அளவு இருக்கும். 1937-38இலேயே மௌனியை, ‘சுவாரஸ்யமான மனிதர்; நீங்கள் சந்திக்க வேண்டும்’ என்று அவர் சொன்னது நினைவிருக்கிறது.

புஸ்தகங்கள் படிப்பதில் எங்கள் இருவருக்கும் ஆர்வம் அதிகம். ஆனால், புதுமைப்பித்தன் படிக்கிற முறையே அலாதியானது. நான் எந்தப் புஸ்தகத்தையும் வரிவிடாமல், ஒரே மூச்சில், ஆரம்ப முதல் இரவு எத்தனை நேரமானாலும் படித்து முடித்துவிட்டுத்தான் படுக்கப் போவேன். சொ.வி. எந்தப் புத்தகத்தையும் முழுதுமாகப் படித்ததாக எனக்கு நினைவில்லை. முதலில் கொஞ்சம், நடுவில் கொஞ்சம், கடைசியில் கொஞ்சம் என்று படித்துவிட்டு நூலின் விஷயத்தைப் பூரணமாகக் கிரஹித்துக்கொண்டுவிடுவார். எனக்கு எந்த நூலையும் முடிக்க நாலு மணிநேரமாவது ஆகும். அவர் ஒரு மணிநேரத்தில் படித்துவிடுவார். ஆனால் படித்த நூலைப்பற்றி அவர் என்னைவிடவும் அதிகமாக விஷயத்தைச் சொல்லுவார் என்பதை நான் கவனித்திருக்கிறேன். இந்தமாதிரிப் படித்துப் புரிந்துகொள்வதற்கும் ஒரு தனி லாவகம், பழக்கம் தேவை என்று எனக்குத் தோன்றும்.

புதுமைப்பித்தன் எழுதுவதும் கனவேகம்தான். இரண்டு மூன்று நீளக்கதைகள் எழுதும்போது நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். எழுத்து அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் படிப்பதற்குச் சிரமமாகத்தான் இருக்கும். அவர் எழுத்தில் நீளக்கோடு போட்டாரானால் ‘தஎன்று அர்த்தம். சின்னக்கோடு போட்டாரானால் ‘கஎன்று அர்த்தம். எழுதியதைத் திருப்பிப் படிக்கமாட்டார். ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘காஞ்சனை’, ‘அன்று இரவுபோன்ற கதைகளை ஒரு மணி, ஒன்றரை மணிநேரத்தில் அவர் எழுதி முடித்துவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். படித்துப் பார்க்கிறேன் என்று கேட்டால் தரமாட்டார். அவரும் திருப்பிப் படித்துப் பார்க்கமாட்டார். ஏதோ ஓர் இடத்தில், ‘என் கதையை முதலில் படிக்கும் வாசகன் நான்தான். அவசரமாக எழுதியதனால் எனக்கே அதில் பல விஷயங்கள் புதுமையாக இருக்கும்’ என்று அவர் எழுதியிருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் பலதும் புதுமையாகவும், உன்னதமான கலையாகவும் இருந்தது என்பதுதான் விசேஷம்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

  •  

நான் நாஸ்திகனாக இருந்தேன் | கி.ரா.

(படம்: நவசக்தி ஆண்டுமலர், டிச. 1944 - ஜன. 1945)

நான் சென்னைக்கு வந்ததும், நான் புகுந்த ஆசிரிய கோஷ்டியினர் சிறந்த லட்சியவாதிகள். டி.எஸ்.சி., வ.ரா., சிவராமன். கு. ஸ்ரீனிவாசன், பி. எஸ். ராமையா எல்லோரும் பாரதியாரின் சீர்திருத்தக் கனலில் மூழ்கி, அந்த கொள்கைகளின்படியே வாழ்க்கையை வகுத்துக்கொண்டவர்கள். குறிப்பாக வ. ரா. பாரதியாருக்காகவே வாழ்ந்தார் என்று சொல்லலாம். ஏனென்றால், அவர் எங்கு இருந்தாலும், வீட்டிலும், கடற்கரையிலும், காரியாலயத்திலும், எப்போதும் பாரதியாரைப்பற்றியே பேசுவார். அவருடைய கவிதையின் மேன்மையைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சாதாரணமான சம்பவங்களைப் பற்றியும் சலிப்பின்றிப் பேசிக்கொண்டேயிருப்பார்.

ஆகவே அந்தச் சூழ்நிலையின் வேகத்தினால் தாக்குண்ட நான் பாரதியாரைவிடச் சிறந்த கவி தமிழில் இல்லையென்றே எண்ணியிருந்தேன். அதனால் பாரதியாருக்கு முன் வாழ்ந்த கவிகளைப்பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்ததோடு, அறியவேண்டிய அவசியமே இல்லை என்ற அசட்டையுடன் இருந்தேன்.

சில சமயங்களில் ஆனந்த விகடனில் பி.ஸ்ரீ. அவர்கள் எழுதிவந்த கம்ப சித்திரத்தைப் படித்துப் பார்த்ததுண்டு. ஆனால் அப்போது எல்லாம் ‘என்ன இவ்வளவு கரடுமுரடான பாஷையில் கம்பர் பாடியிருக்கிறாரே, இதுவும் தமிழா? என்று எண்ணுவதுண்டு.

அந்த சமயத்தில்தான் புதுமைப்பித்தனின் உயரிய நட்பு எனக்குக் கிடைத்தது. சில ஆண்டுகள் அவருடன் கூட ஒரே வீட்டில் வசிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.

அப்போது எல்லாம் ஓய்வு கிடைத்தபோது இருவரும் தமிழ் இலக்கியத்தைப்பற்றி விவாதிப்போம்.

பொதுவாக வ.ரா.வின் கொள்கையை அவர் கண்டித்துப் பேசுவார். “பாரதியாருக்கு முன்னால் இருந்த கவிகளைப்பற்றி வ.ரா. ஒரே அடியாக கண்டித்துப் பேசுகிறார். ஆனால் கம்பன் ஒருவன் மட்டும் பிறக்கவில்லை என்றால் தமிழில் இலக்கியமே இல்லையென்று சொல்லவேண்டும்” என்று அடிக்கடி சொல்லுவார்.

அப்போதும் எனக்கு கம்பனிடத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. “ராமனை ஒரு அவதார புருஷனாக வைத்து கம்பன் பாடியிருக்கிறான். அதை ஒரு பக்தி இலக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். பக்தியில்லையென்றால் கம்பராமாயணத்துக்கு மதிப்பு ஏது? என்று நான் சொல்லுவேன்.

அதன் பிறகு அவர்: “கம்பன் வெறும் பக்திக் கவி மட்டும் இல்லை. உலகத்திலேயே மிகச் சிறந்த இலக்கிய மேதை. அவன் உண்மையான கவி. எந்த கொள்கையையும் தத்துவத்தையும் அவன் பிரசாரம் செய்யவில்லை.” என்று சொல்லி கம்பனுடைய தெய்வ வணக்கப் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்குவார். அவருடைய கருத்து, கம்பன் ஒரு தனி வழி வகுத்துக்கொண்ட தத்துவ ஞானி என்பதுதான்.

ஒரு சமயம் இருவரும் குடும்பமின்றி ஒரே அறையில் பலமாதங்கள் தங்கியிருந்தோம். அப்போது தினசரி இரவு வெகுநேரம் வரையில் கம்பராமாயண விளக்கம் நடைபெறும். முக்கியமான பாடல்களை எடுத்து விளக்குவதோடு நில்லாமல், ஒவ்வொரு காண்டமாக எனக்குப் படித்துக் காட்டுவார். அப்படி ராமாயணம் முழுவதும் இருமுறைகள் நான் அவரிடம் கேட்டிருக்கிறேன்.

அதன் பயனாக எனக்கு கம்பனிடம் ஓர் பக்தி ஏற்பட்டதோடல்லாமல் ‘பைத்தியமே’ ஏற்பட்டுவிட்டது! உடனேயே சொந்தமாக ஒரு புஸ்தகம் வாங்கி வைத்துக்கொண்டேன். ஒழிந்தபோது எல்லாம் சுயமாகப் படித்துச் சுவைக்கத் தொடங்கினேன்.

அவர் முதலில் எனக்குக் கற்றுக்கொடுத்தது சுயமாகக் கம்பனை எப்படிப் படிக்கவேண்டும் என்பதுதான். அதாவது செய்யுளை எளிதாகப் பதம் பிரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் பொருள் உடனே விளங்கிவிடும் என்று சொல்லுவார்.

அதைத் தவிர, கம்பனுடைய சிறப்புக் குணங்களை எடுத்து விளக்குவார். உதாரணமாக நாடகச் சுவை நிரம்பிய கட்டங்களை எடுத்துக் காட்டுவார். பிறகு சொற்களை எப்படி பிரயோகம் செய்திருக்கிறான், தேவை ஏற்படும்போது புதுப்புதுச் சொற்றொடர்களை எப்படி அனாயாசமாக சிருஷ்டி செய்கிறான் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லுவார்.

ஓர் கவிதையை ரசிப்பதற்கு முன்னர் அந்தக் கவியின் இதயத்தை உணரவேண்டும் என்று சொல்வார். அப்படியே கம்பனுடைய உள்ளச் செறிவையும், அவனுடைய நடையின் சிறப்பான தனி இயல்பையும் நான் அறியும்படி செய்தார்.

எல்லா விஷயங்களிலும் போலவே கம்பனுடைய விஷயத்திலும் அவருக்குச் சில தனியான கொள்கைகள் உண்டு. அதாவது கம்பன் முதலில் யுத்த காண்டத்தைப் பாடிய பிறகுதான் மற்றக் காண்டங்களைப் பாடினான் என்பது அவருடைய கருத்து. ஏனென்றால், அந்தக் காண்டத்தில் உள்ள சொல் வளமும், நாடகச் சுவையும் வேறு காண்டங்களில் இல்லை. ஆரம்பத்திலேயே இரணிய நாடகத்துடன் தொடங்கி, விஸ்தாரமான நிலைக்களத்தில் கதை செல்லுகிறது. ஒரு மாபெரும் போரை முன்வைத்து, வாழ்க்கையின் தத்துவங்களையெல்லாம் அள்ளிக் கொட்டியிருக்கிறான் கம்பன் என்பது அவருடைய கருத்து. இராவணன் என்ற ஒரு மாவீரனுடைய வீழ்ச்சியைக் காட்டும் அந்தக் காண்டத்தை அதற்கு உண்டான கௌரவத்தோடு, கண்ணியத்தோடு பாடியிருக்கிறான் கம்பன் என்று சொல்லுவார்.

கம்பனைத் தவிர, இன்னும் பல சில்லறைப் பிரபந்தங்களையும் நான் அறிந்தது புதுமைப்பித்தனுடைய நட்பினால்தான். ‘குற்றாலக் குறவஞ்சி’, ‘குற்றாலத்தலபுராணம்’, ‘கலிங்கத்துப் பரணி’ முதலிய பாடல்களைப் படித்துச் சொல்வார்.

செயங்கொண்டானிடம் அவருக்கு ஈடுபாடு அதிகம். “கம்பனுடைய காவியத்துக்கு முன் வழிகாட்டி செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணிதான்” என்று அடிக்கடி சொல்லுவார். அதில் உள்ள சில பாடல்களை எடுத்து கம்பனுடைய பாடல்கள் சிலவற்றுடன் ஒப்பிட்டுக் காட்டுவார்.

புதுமைப்பித்தனுடைய நட்பு எனக்குக் கிடைக்காமலிருந்திருந்தால் தமிழ் இலக்கியத்தின் வளத்தையும் மேன்மையையும் அறியாத நாத்திகனாகவே இருந்திருப்பேன் என்பதில் ஐயம் இல்லை. அந்த வகையில் அவர் எனக்கு ஆசிரியனாக இருந்து, வழிகாட்டியதை நான் மறக்கவே முடியாது.

பிற்காலத்திலும் நான் ஜெமினி ஸ்தாபனத்தில் ‘ஔவையார்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதியபோதும், சங்க இலக்கியப் பெருங்கடலுக்குள் நீந்திக் கரையேற உதவியவரும் புதுமைப்பித்தன்தான்.

மற்ற பண்டிதர்கள் பாடஞ் சொல்வதற்கும் புதுமைப்பித்தன் பாடஞ் சொல்வதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. சம்பிரதாயமாகப் பாடம் சொல்லுவோர் பெரும்பாலும் தங்களுடைய பாண்டித்யத்தைக் காட்டும் எண்ணத்துடனேயேதான் பாடம் சொல்லுவார்கள். அதனால் பாடம் கேட்போருக்கு ஓர் சிறுமை மனப்பான்மை ஏற்பட்டுவிடும். ஆனால் புதுமைப்பித்தனிடம் பாடம் கேட்கும்போது அந்த விதமான உணர்ச்சி ஏற்படவே இராது. பாடம் கேட்கிறவனும் நம்மைப் போன்ற அறிவு உடையவன்தான் என்று எண்ணி, சகஜமாக பாடல்களை எடுத்து விளக்கிக் காட்டுவார்.

புதுமைப்பித்தனும் ராஜாஜியும்

1936-ல் என்னுடைய உறவினரும் காந்திஜியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையின் ஆசிரியருமான ஆர். வி. சாஸ்திரி அவர்களின் இல்லத்தில் இலக்கிய ரசிகர்கள் கூடிப் பேசுவது வழக்கம். ராஜாஜி, கல்கி, டி.கே.சி. முதலிய அன்பர்கள் அங்கு கூடுவதுண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் நானும் அங்கு சென்று பொழுதுபோக்குவதுண்டு.

பொதுவாக தற்காலச் சிறுகதைகளைப் பற்றியும் குறிப்பாக ‘மணிக்கொடி’யில் வெளியாகும் சிறுகதைகளைப் பற்றியும் ராஜாஜி அவர்கள் விமர்சனம் செய்வார்.

அந்தச் சமயம் புதுமைப்பித்தன் மணிக்கொடியில், ‘பக்த குசேலா - நவீன மாடல்’ என்று ஒரு சிறு நாடகம் எழுதியிருந்தார். இந்தக் காலத்தில் கிருஷ்ண பக்தி உள்ள ஒரு பிராமணனுக்கு இருபத்தேழு குழந்தைகள் இருந்தால் அதன் விளைவு என்ன ஆகும் என்பதுதான் அந்த நாடகத்தின் மையக் கருத்து. அந்த விஷயத்தை வைத்துத் தற்காலப் பொருளாதார வாழ்க்கையை நையாண்டி செய்திருக்கிறார். அது உண்மையில் மிகவும் ரசமான நையாண்டி நாடகம்.

அதைப் படித்திருந்த ராஜாஜி நான் போயிருந்தபோது என்னிடம், “ஏன் ஸார், இந்த புதுமைப்பித்தன் என்கிறவர் சூனா-மானாக்காரரோ? என்று கேட்டார்.

நான், “இல்லையே ரொம்ப நல்லவர். நான் அழைத்துக்கொண்டு வருகிறேன். நீங்களே பாருங்கள்” என்று பதில் சொன்னேன்.

அதே போல அடுத்த வாரம் நானும் புதுமைப்பித்தனும் பி. எஸ். ராமையாவும் திரு. சாஸ்திரியின் இல்லத்துக்குச் சென்றோம். ராஜாஜி வந்தார். அறிமுகப் படலம் ஆயிற்று. பிறகு ராஜாஜி கேட்டார்.

“ஏன் ஸார், உங்க கதை படிச்சேன். ஆனால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்!”

புதுமைப்பித்தன் வழக்கம்போல் தன்னுடைய பெரிய பல்லைத் திறந்து காட்டிச் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்:

“எனக்கு யார் மேலும் கோபம் இல்லை. உண்மையை சொன்னேன். சில சமயம் உண்மை கசப்பாய் இருக்கிறது.”

“நான் உங்களுடைய கற்பனையை ரசிக்கிறேன். உங்களுக்கு நிறைய கற்பனை இருக்கிறது. ஆனால் அந்தக் கற்பனையை எல்லாம் பயன் ஏற்படும் வழியிலே செல்லணும். அதுதான் நல்லது.”

“எது பயன் உள்ள வழி?

“இப்போ, நாட்டிலே பெரிய நதி வெள்ளம் போல வருது. அதனாலே யாருக்கும் பயன் இல்லை. அதை ஒரு எஞ்ஜினீர் வந்து அணை கட்டித் தேக்கினால் பலன் உண்டு, அதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் செழிப்பும் வளமும் அடைகின்றன. அதைப்போல கற்பனா சக்தியையும் அணை போட்டுத் தேக்கிப் பாய்ச்சினால்தான் பலன் உண்டு.”

“உண்மை, ஆனால் மலை உச்சியிலிருந்து விழுந்து மண்ணையும் மரத்தையும் அடித்துக்கொண்டு கரைபுரண்டு வரும் காட்டாறு எவ்வளவு அழகாய் இருக்கிறது! அந்த அழகை நான் ரசிக்க விரும்புகிறேன். காட்டில் வாழும் கொடிய விலங்குகளான சிங்கம், புலிகளிடத்திலும் ஓர் தனி அழகு இருக்கிறது, அந்த அழகை எடுத்துக்காட்டுவது சரியில்லையா?

இப்படியே விவாதம் வெகுநேரம் நடந்தது. இருவரும் ஒத்துப்போகும் இடமேயில்லை. முடிவு ஏற்படாமலே விவாதம் ‘பேசித் தீர்க்கப்பட்டது’.

***

எழுத்து இதழ் 7, ஜூலை 1959 (புதுமைப்பித்தன் நினைவு ஏடு)

  •  

க.நா.சு.வின் நான்கு நூல்கள் முன்பதிவுத் திட்டம்

 


க.நா.சு.வின் நான்கு நூல்கள் முன்பதிவுத் திட்டம்

எமன்

(தொகுக்கப்படாத படைப்புகள்)

தொகுப்பாசிரியர்: விக்ரம்

விலை ரூ.250

சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்

('எழுத்து' இதழில் வெளியான தொடர்)

விலை ரூ.200

புதுமையும் பித்தமும்:

ஆளுமை - படைப்பு - விவாதம்

விலை ரூ.160

படித்திருக்கிறீர்களா?

(முதல் பாகம்)

விலை ரூ.170


இந்த நான்கு நூல்களின் மொத்த விலை ரூ.780. முன்பதிவுத் திட்டத்தில் ரூ.580 மட்டும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். 25% சலுகையுடன் அஞ்சல் செலவும் இலவசம். ஜனவரி 15, 2023 வரை முன்பதிவு செய்யலாம். 2023 ஜனவரி மாத இறுதிக்குள் நூல்கள் அனுப்பிவைக்கப்படும்.


முன்பதிவுக்கு:

A/c Holder: SRINIVASA GOPALAN

Bank: HDFC Bank

A/c No. 50100171907983

IFSC code: HDFC0000636

UPI: 7019426274@apl

GPay: 70194 26274

WhatsApp: 70194 26274


தொடர்புக்கு: 70194 26274


(பின்குறிப்பு: க.நா.சு.வின் தொகுக்கப்படாத கட்டுரைகளின் தொகுப்பும், நேர்காணல் தொகுப்பும் திட்டமிட்டதைவிட விரிவாகிவிட்டதால் அவற்றைக் கொண்டுவருவதில் சற்று தாமதம் ஆகிறது. ஓரிரு மாதங்களில் அவையும் வெளியாகும்.)

  •  

க.நா.சு.வின் புதிய நூல்கள்

க.நா.சு.வின் தொகுக்கப்படாத, மறுபதிப்பு காணாத படைப்புகள் அழிசி வெளியீடாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு ராணிதிலக் தொகுத்த ‘விசிறி’ சிறுகதைத் தொகுப்பும் ‘விமரிசனக்கலை’  கட்டுரைத் தொகுப்பும் வெளியாயின. அவற்றைத் தொடர்ந்து இன்னும் சில க.நா.சு. நூல்கள் வெளிவருகின்றன.


1. எமன்

சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் என இதுவரை தொகுக்கப்படாத பல்வகை படைப்புகளைத் தேடித் தொகுத்திருக்கிறார் 'காவிரி' இதழ் ஆசிரியர் விக்ரம். இந்நூலின் பின்னிணைப்பில் க.நா.சு.வின் அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.


2. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்

எழுத்து இதழில் க.நா.சு. எழுதிய தொடர் முதன்முறை நூலாகிறது. நிறைவுபெறாத இத்தொடரில் க.நா.சு. கட்டுரைகளுக்கு அப்போது வெளியான எதிர்வினைகளும் க.நா.சு. தேர்ந்தெடுத்த கதைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.


3. புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம்

புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. எழுதியவற்றின் தொகுப்பு. ஏற்கெனவே 2006ஆம் ஆண்டு வெளியான நூலின் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு. புதிய கட்டுரைகளுடன் பு.பி. - க.நா.சு. இருவரும் பங்குகொண்ட விவாதப் பதிவுகளையும் உள்ளடக்கியது.


4. இலக்கிய அரசியல்

இது தொகுக்கப்படாத கட்டுரைகளின் திரட்டு. முப்பதுகளிலிருந்து எண்பதுகள்வரை க.நா.சு. பல்வேறு இதழ்களில் எழுதியவை. ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் சிலவும் இந்நூலில் இடம்பெறுபவை. பல முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.


5. படித்திருக்கிறீர்களா? (பாகம் 1)

சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் எழுதிய கட்டுரைத் தொடரின் முதல் பாகம். இதன் மறுபதிப்பு வெளிவந்துவிட்டது. அடுத்த பாகமும் விரைவில் வெளியாகும்.


6. கு.ப.ரா. என்கிற முழுமை

கு.ப.ரா. பற்றி க.நா.சு. எழுதிய கட்டுரைகளின் திரட்டு இது. இந்நூல் மின்னூலாக மட்டும் வெளியாகிறது. வெவ்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

***

இவை தவிர, புத்தாண்டுக்கான திட்டத்தில் இருப்பவை:

துரை. லட்சுமிபதி தொகுத்திருக்கும் 'க.நா.சு. நேர்காணல்கள்' (‘சதங்கை’ இதழில் வெளியான நேர்காணல் இன்னும் கிடைக்கவில்லை. அதுவும் கிடைத்தால் தொகுப்பு முழுமையடையும்.)

'நினைவுகள்' என்ற தன்வரலாற்றுத் தொடர். (க.நா.சு.வின் கைப்பிரதிகளிலிருந்து எடுத்து ‘முன்றில்’ இதழில் வெளியிட்டவர் மா. அரங்கநாதன்.)

விஷால் ராஜா தொகுக்கும் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு.

(பின்குறிப்பு: இம்மாத இறுதியில் புதிய நூல்களுக்கான முன்பதிவுத் திட்டம் அறிவிக்கப்படும்)

  •  

'சியமந்தகம்' நூல் வாங்க


நண்பர்களுக்கு வணக்கம்.

ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம்.


Account Holder: SRINIVASA GOPALAN

Account Type: Savings

Bank: HDFC Bank

Branch: Vannarpettai, Tirunelveli

A/c No. 50100171907983

IFSC code: HDFC0000636

GPay: 7019426274

UPI: 7019426274@apl


மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.


தொடர்புக்கு: 70194 26274

மின்னஞ்சல்: [email protected]


சியமந்தகம் - ஓர் அறிமுகம்

  •  

சுரேஷ் பிரதீப் நூலுக்கு கொடிசியா விருது

கொடிசியா மற்றும் பபாசி இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2022 வரும் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோவை புத்தகத் திருவிழாவையொட்டி வழங்கப்படும் இளம் படைப்பாளர்களுக்கான இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புனைவு நூல் பிரிவில் இந்த ஆண்டுக்கான விருது எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2022ல் அழிசி வெளியிட்ட 'பொன்னுலகம்' சிறுகதைத் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. ஜூலை 22ஆம் தேதி புத்தகத் திருவிழா அரங்கில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

'பொன்னுலகம்' மின்னூல் வாங்க

Amazon Kindle (10% off)

https://cutt.ly/7JUU2f9

Google Play Books (10% off)

https://cutt.ly/nJU7Y1Z

'பொன்னுலகம்' அச்சுப் பிரதி வாங்க

Azhisi (17% off)

https://cutt.ly/TLhtDIC

CommonFolks (5% off)

https://cutt.ly/ALhtjrA

Panuval (5% off)

https://cutt.ly/MLhtnzE

Be4Books (5% off)

https://cutt.ly/GLhtcJC

DialForBooks

https://cutt.ly/zLhtELM

  •  

'திருச்சி ஜெயில்' பற்றி கலாரசிகன்

சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில், உங்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டி, பக்கத்துக்குப் பக்கம் குறித்து வைத்து, அதே நினைவில் நெகிழவைத்த புத்தகம் எது என்று யாராவது என்னைக் கேட்டால், தயக்கமே இல்லாமல் நான் குறிப்பிடும் புத்தகம் எல். எஸ். கரையாளர் எழுதிய 'திருச்சி ஜெயில்' என்பதாகத்தான் இருக்கும். 1941-இல் நவயுக பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டு, 80 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது அந்தப் புத்தகம்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிக்கூட நாள்களில் நிறைய கேள்விப்பட்ட பெயர் எல். சட்டநாத கரையாளர். சட்டம் படித்த அந்த செங்கோட்டைக்காரர், தனது 27-ஆவது வயதில் கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர். தனது 58-ஆவது வயதில் காலமான சட்டநாத கரையாளர், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.

காந்தியடிகள் மீது அவருக்கு இருந்தது மட்டற்ற பக்தி. 1940-ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் தனிநபர் சத்தியாகிரகம் செய்து சிறைதண்டனை பெற்றார். தென்காசி தாலுகா கமிட்டித் தலைவரான கரையாளர் சங்கரன்கோவிலில் சத்தியாகிரகம் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? சட்டப்பேரவை உறுப்பினராக டி. எஸ். சொக்கலிங்கம் (தினமணி முன்னாள் ஆசிரியர்) தென்காசியில் சத்தியாகிரகம் செய்யத் தீர்மானித்தார் என்பதுதான்.

'1940 டிஸம்பர் மாதம் 4-ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டேன். 1941, மே மாதம் 23-ஆம் தேதி விடுதலையடைந்தேன். இதற்கிடையே நான் கண்டதும் கேட்டதும், நான் அனுபவித்த சுகமும் கஷ்டமும்தான் இந்நூலாக வெளிவந்திருக்கிறது” - இந்தளவுதான் அவர் புத்தகத்துக்கு எழுதியிருக்கும் முன்னுரை.

அணிந்துரை தந்திருப்பது யார் தெரியுமா? சென்னை ராஜதானியின் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்த ப. சுப்பராயன்.

சிரிப்பும், சுவாரசியமுமாக சிறைச்சாலை அனுபவங்களைத் தேர்ந்த எழுத்தாளர் போல சட்டநாதகரையாளர் எழுதியிருப்பதை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியதில் வியப்பென்ன இருக்கிறது? அவருடன் வேலூர், திருச்சி சிறைகளில் கழித்த 245 தியாகிகள் குறித்த குறிப்பு அல்லது சம்பவம் இந்தச் சிறிய புத்தகத்தில் இருக்கிறது. ராஜாஜி, டி. எஸ். சொக்கலிங்கம், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே. சந்தானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அவருடன் சிறையில் இருந்த ஆளுமைகள் குறித்த பதிவுகளைப் படித்தால்தான் ருசிக்கும். சொல்லி விளக்கமுடியாது.

ஜாதி, மத பேதமின்றி, மொழி துவேஷமின்றி விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகள் உண்மையான சமத்துவ உணர்வுடன் இருந்தார்கள் என்பதை சட்டநாத கரையாளரின் ‘ஜெயில் டைரி’ படம்பிடித்துக் காட்டுகிறது. படிக்கத் தவறாதீர்கள் என்று நான் பரிந்துரைக்கும் புத்தகம் இது!

- கலாரசிகன்

(நன்றி: தினமணி, 10-07-2022)

'திருச்சி ஜெயில்' நூல் வாங்க

Azhisi ((12% off + Free Delivery)

https://cutt.ly/TLj1rnt

CommonFolks (5% off)

https://cutt.ly/nLj1yRT

Panuval (5% off)

https://cutt.ly/6Lj1it7

BooksPage

https://cutt.ly/TLj1pel

DialForBooks

https://cutt.ly/TLj1aA0

  •  

சிறப்புச் சலுகை

2021ஆம் ஆண்டு அழிசி வெளியிட்ட நூல்களையும் https://azhisi.myinstamojo.com/ என்ற இணையதளத்தின் வாயிலாக சிறப்புச் சலுகை விலையில் பெறலாம். (விலையில் அஞ்சல் செலவும் அடக்கம்.)

1. வெயில் பறந்தது - மதார் - ரூ. 80 (20% தள்ளுபடி)

2. நாரத ராமாயணம் - புதுமைப்பித்தன் - ரூ. 56 (10% தள்ளுபடி)

3. வாசிகள் - நாரணோ ஜெயராமன் - ரூ. 90 (18% தள்ளுபடி)

4. நான் கண்ட மகாத்மா - தி. சு. அவினாசிலிங்கம் - ரூ. 127 (25% தள்ளுபடி)

5. திருச்சி ஜெயில் - எல். எஸ். கரையாளர் - ரூ. 127 (25% தள்ளுபடி)

6. மேற்கண்ட ஐந்து நூல்களின் தொகுப்பு - ரூ. 360 (41% தள்ளுபடி) 

  •  

நான்கு நூல்கள் அச்சில்

நண்பர்களுக்கு வணக்கம்.

இரண்டு செய்திகள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.

அழிசி இதுவரை வெளியிட்ட மின்னூல்கள் எதுவும் இப்போது கிண்டிலில் கிடைக்காது. சில நாட்களுக்கு முன் அமேசானிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அருண் குமார் என்பவர் க. நா. சு. நூல்களின் பதிப்புரிமை தன்னிடம் உள்ளதாகப் புகார் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. புகார் கொடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை அளித்து, பதிப்புரிமை மீறலுக்காக அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அமேசான் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. க. நா. சு. படைப்புகள் 2004ஆம் ஆண்டிலேயே நாட்டுடைமையானவை என்பதை விளக்கியும் பயனில்லை. புகார் கொடுத்திருந்தவரை மின்னஞ்சலில் தொடர்புகொண்டபோதும் பதில் கிடைக்கவில்லை. மூன்று நாட்களில் கணக்கு முழுமையாக முடக்கப்பட்டு அனைத்து நூல்களும் அமேசான் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. எனவே 2017 முதல் வெளியிட்ட எல்லா நூல்களும் இப்போது விற்பனையில் இல்லை. இப்போதைக்கு மேற்கொண்டு மின்னூல் வெளியீட்டைத் தொடர இயலாது.

-

மின்னூல்களாக வெளியிட்டபோது சிறப்பான வரவேற்பைப் பெற்ற புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ நூல் விரைவில் அச்சில் வரவிருக்கிறது. காந்தியைப் பற்றி தி. சு. அவினாசிலிங்கம் அவர்கள் எழுதிய ‘நான் கண்ட மகாத்மா’, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற எல். எஸ். கரையாளரின் சிறையனுபவக் குறிப்புகள் அடங்கிய ‘திருச்சி ஜெயில்’ ஆகியவையும் அச்சில் வரவுள்ளன. இவை மூன்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபதிப்பு காண்பவை. இவற்றுடன் முதல் முறையாக நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் ‘வாசிகள்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

நாரத ராமாயணம் - நெடுங்கதை - புதுமைப்பித்தன் - 72 பக்கம் - ரூ. 60

வாசிகள் - சிறுகதைகள் - நாரணோ ஜெயராமன் - 120 பக்கம் - ரூ. 110

நான் கண்ட மகாத்மா - கட்டுரைகள் - தி. சு. அவினாசிலிங்கம் - 192 பக்கம் - ரூ. 170

திருச்சி ஜெயில் - கட்டுரைகள் - எல். எஸ். கரையாளர் - 192 பக்கம் - ரூ. 170

அக்டோபர் 20 வரை நூல்களை முன்பதிவு செய்யலாம். மாத இறுதிக்குள் பதிவு செய்த நூல்கள் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். தனித்தனி நூல்களாகவும் வாங்கலாம். அஞ்சல் செலவு எங்களுடையது.

நான்கு நூல்களும் சேர்த்து ரூ. 400/-

நாரத ராமாயணம், வாசிகள் இரண்டும் சேர்த்து ரூ. 150/-

நான் கண்ட மகாத்மா, திருச்சி ஜெயில் இரண்டும் சேர்த்து ரூ. 300/-

வாட்ஸப் மூலம் பதிவு செய்ய: 7019426274

சிறப்புச் சலுகையில் நூல்களைப் பெற https://azhisi.stores.instamojo.com/

அழிசி நூல்கள் அனைத்தும் Commonfolks இணையதளத்திலும் கிடைக்கும்.

https://www.commonfolks.in/books/azhisi-pathippagam

  •  

கிண்டிலில் எழுத்து


‘எழுத்து’ இதழ்களை அமேசான் கிண்டிலில் மின்னூலாகப் பதிவேற்றும் பணி இன்று அவ்விதழின் ஆசிரியர் சி. சு. செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில் ஆரம்பமாகிறது. இதற்காக இதழியலாளர் சு. அருண் பிரசாத் உதவியுடன் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. சுப்ரமணியன் அவர்களை அணுகி அனுமதி கோரியபோது, மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தார். இதழ்களைத் திரட்டவும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் அவர்தான்.  
'எழுத்து' 11 ஆண்டுகளைக் கடந்து 112 இதழ்கள் வெளியானது. இரட்டை இதழ்களாக வந்தவை 7. இதனால் இதழ் எண் 119 வரை செல்கிறது. முதல் இதழ் ஜனவரி 1959ல் வெளியானது. 12ஆம் ஆண்டின் முதல் ஏடாக ஜனவரி 1970ல் வெளியான இதழே கடைசி இதழாகவும் அமைந்தது.

ஆரம்ப இதழ்கள் சிலவும் இடையிடையே சில இதழ்களும் தவிர்த்து, 83 ஏடுகள் தமிழிணையம் (https://www.tamildigitallibrary.in/) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.  அந்தத் தளத்தில் விடுபட்டிருக்கும் இதழ்களில் பெரும்பாலானவற்றை திரு. சுப்ரமணியன் அவர்களே தனது சேகரிப்பிலிருந்து எடுத்து அனுப்பினார். பைண்ட் செய்யப்பட்ட தொகுப்பைப் பிரித்து பக்கம் பக்கமாக பொறுமையாக ஸ்கேன் செய்து அனுப்பிவைத்தார். 21 மற்றும் 22வது இதழ்கள் அவரிடமும் சேதமடைந்திருந்தன. பலரிடம் விசாரித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகத்திலிருந்து அந்த இதழ்களையும் பெற்றுத் தந்தார்.
விடுபடல் ஏதேனும் இருக்கிறதா என்று அறிய எல்லா இதழ்களையும் வரிசையாகப் பார்வையிட்டபோது தமிழிணையம் இணையதளத்திலிருந்து எடுத்துக்கொண்ட சில இதழ்களில் ஓரிரு பக்கங்கள் இல்லாமலிருப்பதும் சில பக்கங்களில் எழுத்து தெளிவில்லாமல் இருப்பதும் தெரிந்து, அவை சரிசெய்யப்பட்டன.
கணிசமான எண்ணிக்கையிலான இதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றி பேருதவி புரிந்திருக்கிறது தமிழிணையம் இணையதளம். இதழ்களில் விடுபட்டவற்றைப் பெறவும் சீர்செய்யவும் உதவியவை புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகமும் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும். இவற்றின் நிர்வாகிகளுக்கும் எல்லா வகையிலும் துணை நிற்கும் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. செ. சுப்ரமணியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
-
அச்சில் வெளியான இதழை மின்னூல் வடிவில் தரும்போது அதன் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அவை பற்றிய விளக்கங்கள் வருமாறு:
(1) அச்சில் பக்க அமைப்பு வசதிக்காக ஒரு படைப்பை வெவ்வேறு பக்கங்களில் பிரித்து அமைப்பது வழக்கம். மின்னூலாகத் தயாரிக்கும்போது ஒவ்வொரு படைப்பும் முடிவுற்ற பிறகே அடுத்த படைப்பு இடம்பெறும் வகையில் அமைக்கப்படும். (2) ஒரு படைப்பிற்குள் இடையில் கவிதையோ அறிவிப்போ விளம்பரமோ வேறு ஏதேனும் குறிப்போ இடம்பெற்றிருந்தால் அவையும் அந்தக் குறிப்பிட்ட படைப்பு நிறைவுற்ற பின், அதற்கு அடுத்த இடத்தில் வைக்கப்படும். (3) விளம்பரங்கள் பெரும்பாலும் எழுத்துரு வடிவுக்கு மாற்றப்படாது. இதழில் இடம்பெற்ற வடிவத்திலேயே சேர்க்கப்படும். (4) அச்சுப்பிழை போன்ற சிறிய பிழைத்திருந்தக் குறிப்பு ஏதேனும் இருந்தால், தேவையான திருந்தம் செய்யப்பட்டு அந்தக் குறிப்பு நீக்கப்படும்.
-
ஒவ்வொரு இதழும் 49 ரூபாய். அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு இதழும் 3 நாட்கள் இலவசமாகக் கிடைக்கும். வாசகர்கள் தங்கள் கருத்துகளை எழுதியும் இதழ்களின் சுட்டிகளைப் பகிர்ந்தும் துணை நிற்கவேண்டும்.
-
எழுத்து இதழ்த் தொகுப்பு 

  •  

இவைகள் நவரத்தினங்கள் | வ. ரா.

(கு. ப. ரா.வின் 'கனகாம்பரம் முதலிய கதைகள்' தொகுப்பின் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்ற முன்னுரை)

கலைஞர்கள் இருவர். அவர்களை நான் இரட்டையர்கள் என்று கூப்பிடுவேன். அந்த இரட்டையர்கள் ‘மணிக்கொடி’க் காரியாலயத்தில், 1934ஆம் வருஷம் துவக்கத்தில், எனக்குத் தரிசனம் தந்தார்கள். அன்று முதல் அவர்களிடம் எனக்கு அலாதியான பிரேமையும் மதிப்பும் ஏற்பட்டன. அவர்கள்தான் கு.ப.ராஜகோபாலன், பிச்சமூர்த்தி என்று சொல்லவும் வேண்டுமா? நண்பர் ராஜகோபாலன் மறைந்துபோனார். என்ன கொடுமை! எவ்வளவு பொறுக்க முடியாத துக்கம்! ஆனால் ராஜகோபாலன், பத்து வருஷங்களுக்குள், தமிழ் இலக்கியத்துக்குச் செய்துவந்த தொண்டைப் பற்றி நினைத்தால் அது என்னைப் பிரமிக்கும்படி செய்கிறது.

சாதாரணமாக ராஜகோபாலன் ‘பேசாமடந்தை’யைப் போல இருப்பார். தனது கஷ்ட நிஷ்டூரங்களை யாரிடத்தும் வெளிப்படையாகச் சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்ததே இல்லை. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதபடிக்கு, அவ்வளவு மௌனத்தோடு அவர் இருப்பார். ஹிந்து சமாஜத்தில் காலத்தின் கொடுமையால் குவிந்து கிடக்கும் ஊழல்களையும் நவீன காலத்தில் மனித வர்க்கத்தில் நிறைந்து நிற்கும் அசுரத்தன்மைகளையும் பற்றி நான் அடிக்கடி நீண்ட காலம் அவருடன் பேசுவதுண்டு. பேச்சு முடிந்ததும் அவர் நீண்டதொரு பெருமூச்சு விடுவதைத்தான் நான் கண்டிருக்கிறேன். நான் சொன்னதை எவ்வளவு வரையில் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதே எனக்குத் தெரியாது.

ஆனால் இப்பொழுது தெரிகிறது. அப்பொழுதே சிறிதளவு தெரிந்தது என்று சொல்லுவேன். பேச்சை அதிகமாக விரும்பாத ராஜகோபாலன் வெகுதுரிதமாக எழுதத் துவங்கினார். அவர் எத்தனையோ பத்திரிகைகளுக்கு எழுதியிருக்கிறார். அவைகள் யாவற்றையும் அப்பொழுது படிக்க, எனக்கு வசதி இல்லாமல் போய்விட்டது. சிறுகதைகளை நூல் வடிவமாக அல்லயன்ஸ் கம்பெனியார் ஆக்கிய பின்னர் அவைகளைப் படிக்கும் பாக்கியம் பெற்றேன். திடுக்கிட்டுப் போனேன். இவைகள் நவரத்தினங்கள் என்ற முடிவு, தானாகவே என் மனத்தில் வந்து பதிந்துவிட்டது.

ஒரே மூச்சிலே இந்தக் கதைகளைப் படித்தேன். கொஞ்சமாவது அலுப்புத் தட்டவேண்டுமே, இல்லை. ஒரு கதையைப் படிக்கத் துவங்கியதும், மனம் குதூகலமடையும். எடுப்பு அவ்வளவு பிரம்மானந்தமாக இருக்கும். முடியும்பொழுது, கதை முடிந்துவிட்டதே என்று மனம் சங்கடப்படும். கதைகள் மொத்தம் இருபத்தொன்று. அவைகளில் எதை உயர்த்தி, எதைத் தாழ்த்தி என்று சொல்லுவது? எல்லாம் முதல் தரமான வார்ப்பட வேலைகளாக அமைந்திருக்கின்றன. சொத்தை, சோடை இல்லாமல் எழுதக்கூடிய ராஜகோபாலன் கலை நிபுணன் என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளத்துடிப்பை இரண்டொரு சொற்களால், இரண்டொரு வாக்கியங்களால் சித்திரித்துக் காண்பிக்கக் கூடிய இணையில்லாத கலைஞன் ராஜகோபாலனைப் பற்றிச் சிறப்பாக இன்னதுதான் சொல்லுவது என்று எனக்குத் தெரியவில்லை. தமிழில் சிறுகதை எழுதியவர்களுள் ராஜகோபாலன்தான் தலைமை ஸ்தானம் வகிப்பார், நீண்ட காலம் வகிப்பார். இதுதான் என் மனத்தில் வெகு உறுதியாகத் தங்கி நிற்கிறது.

இந்தச் சிறுகதைகளுக்குள் ‘நூருன்னிஸா,’ ‘பண்ணைச் செங்கான்’, ‘தாய்’, ‘வீரம்மாளின் காளை’, ‘மின்னக்கலை’, ‘காதலே சாதல்’ - இவைகள் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டன. ராஜகோபாலன் எந்தப் போனாவால் இவைகளை எழுதினாரோ என்று ஆச்சரியப்பட்டேன். மிருதுவான பாஷையில், கம்பீரமான உணர்ச்சியை வளர்ப்பதில் ராஜகோபாலன் தனிப்பட்ட கலைஞன் என்று என்னையே நான் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

அல்லயன்ஸ் கம்பெனியின் சொந்தக்காரர் ஸ்ரீ குப்புஸ்வாமி ஐயர் நீண்டகாலம் வாழ்ந்து, ராஜகோபாலன் போன்ற மேதாவிகளின் நூல்களைத் தமிழ் நாட்டாருக்குப் பயன்படுமாறு அடிக்கடி வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

வ. ரா.

கிண்டிலில் வாங்க

  •  

படித்திருக்கிறீர்களா? - 1 | காஞ்சனை

 

இரண்டொரு வருஷங்களுக்கு முன் அயல்நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்திய பாஷை இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை. 

இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல், அவர் அவசரப்படாமல் நிதானமாக நின்று ஆர்வத்துடன் பல விஷயங்களை விசாரித்து அறிந்துகொள்ள முயன்றார். வசதியும் தகுதியும் உள்ளவராக இருந்தார் அவர்.

பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார். “பொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால், பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக்கூடாது; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக்கூடாது, இன்றைய இலக்கியத்தில் பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும். ஆனால், அதுவே புதுமைக்கு அனுசரணையாகவும் இருக்கவேண்டும். பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா?

“உண்டு” என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன் நான். பிறகு சொன்னேன். “ராமாயணக் கதை உங்களுக்குக்கூட ஓரளவு தெரிந்திருக்கும். விசுவாமித்திரருடன் அயோத்தியை விட்டுக் கிளம்பிய ராமன். மிதிலை போகும் வழியிலே ஒரு கல்லை மிதிக்கிறான். அக் கல், கௌதமனின் சாபம் பெற்ற அகல்யை. ராமன் பாத தூளியினால் அகல்யை சாப விமோசனம் அடைகிறாள். ராமனுக்குக் கல்யாணமாகிறது. அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடுகளுக்கு மத்தியிலே, ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் காட்டுக்குப் போகிறார்கள். ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனான். போர் புரிந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ராமன், உலக அபவாதத்துக்குப் பயந்து, சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்கிறான். பிறகு அயோத்தி திரும்பி முடிசூட்டிக்கொண்டான். ஒருநாள் ராமனும், சீதையும் கௌதமரின் ஆசிரமத்துக்குக் கிளம்பினார்கள். அங்கே கல்லாயிருந்து பெண்ணான அகல்யை, சீதையின் வாயைக் கிண்டுகிறாள். வனவாச அனுபவம், லங்கா வாசம் முதலியன பற்றிக் கேட்டறிந்துகொள்கிறாள் அகல்யை. கடைசியாகத் தன்னை ராமன் அக்கினிப் பரீட்சை செய்ததையும் சொன்னாள் சீதை. ‘உன்னையா? ராமனா? என்று கேட்ட அகல்யை மீண்டும் கல்லானாள் என்று எங்களுடைய இன்றையக் கதாசிரியர்களில் ஒருவர் கதை எழுதியிருக்கிறார். நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் இதில் இருக்கிறது” என்றேன்.

கதையை மனசில் வாங்கித் தெரிந்துகொள்ள அந்நிய நாட்டு இலக்கியாசிரியருக்குச் சிறிது நேரம் பிடித்தது. பிறகு அவர் சொன்னார்: “இந்தப் பிரச்சினையை மஹாகவி வால்மீகியே நியாயப்படித் தீர்த்துவைத்திருக்க வேண்டும். தன் மனைவிக்கு ஒரு நீதி, பிறன் பெண்டுக்கு ஒரு நீதி என்று லட்சிய புருஷனாகிய ராமனே நினைத்ததாக முடிவு ஏற்படும்படி அவர் விட்டது தவறுதான்.” பிறகு கேட்டார்: “அந்தக் கதையின் ஆசிரியர் பெயர் என்ன? என்று.

“புதுமைப்பித்தன் என்று புனைபெயர் வைத்துக்கொண்ட ஒருவர். அவர் இயற்பெயர் விருத்தாசலம்” என்றேன் நான். தொடர்ந்து சொன்னேன்: “இவ்வளவு தெளிவாக உங்களுக்குத் தெரிந்துவிட்ட விஷயம் எங்கள் பெரியவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் விளங்கிவிடுவதில்லை. ஆதி கவி அப்படி எழுதவில்லை; இந்தப் புதுமைப்பித்தன் யார், சுண்டைக்காய் என்று சண்டைக்கே வந்துவிடுகிறார்கள். ஆனால், அது என்னவானாலும் இன்றுள்ள சிருஷ்டிகர்த்தாக்கள் பழமை பற்றிக் கொண்டுள்ள நோக்கம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்றே எண்ணுகிறேன்”

புதுமைப்பித்தனின் கதைத் தொகுதிகளில் ஒன்றான காஞ்சனை என்கிற தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று மேலே கூறிய ‘சாப விமோசனம்’. அற்புதமான கதை; அற்புதமான உருவத்தில் விழுந்திருக்கிறது. இந்தத் தலைமுறையின் சிறந்த சிறுகதைகளில் அது ஒன்று என்பது என் அபிப்பிராயம். அது வெளிவந்ததிலிருந்து இன்று வரை அந்தக் கதையை மட்டும் நான் இருபது தடவையாவது படித்திருப்பேன். படிக்குந்தோறும் படிக்குந்தோறும் புதிது புதிதாக இன்பம் தரும் கதை அது. இப்படித் திரும்பத் திரும்பப் படிக்கக்கூடிய கதைகளும் நூல்களுமே நல்ல கதைகளும் நூல்களுமாகும் என்று சொல்வதில் தவறு என்ன?

புதுமைப்பித்தன் தமிழில் இருநூறுக்கும் அதிகமாகவே கதைகள் எழுதியிருக்கிறார்: எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தவை என்று சொல்ல முடியாது எனினும் ஒரு முப்பதுக்கு மேல் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு பத்தாவது காலத்தால் சாகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

‘காஞ்சனை’ என்கிற இந்தத் தொகுதியிலேயே இன்னொரு கதையைப் பார்க்கலாம். இது வேறு ஒரு தினுசான கதை.

“வீரபாண்டியன் பட்டணத்துச் சுப்பையா பிள்ளை, ஜீவனோபாயத்துக்காகச் சென்னையை முற்றுகையிட்டபோது சென்னைக்கு மின்சார ரயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலையமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற செமண்டு கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்” என்று தொடங்குகிறது கதை. பவழக்காரத் தெருவில், திருநெல்வேலிவாசிகளில் சுயஜாதி அபிமானத்தைக் கொண்டு வளர்ந்த தனலட்சுமி புரோவிஷன் ஸ்டோர்ஸ், பிற்காலத்தில் தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடையாக மாறியது. தேசவிழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கமும் பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரஹமும் சுப்பையாப் பிள்ளையின் வாழ்க்கையிலோ மனப்போக்கிலோ மாறுதல் எதுவும் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன் பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் சுப்பையா பிள்ளை. மின்சார ரயில் அவர் வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. அவர் தாம்பரத்தில் குடியேறினார். தினம் மின்சார ரயில் பயணம் அவசியமாயிற்று. .....விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம், பழையது, கையில் பழையது மூட்டை, பான் வெள்ளி வீபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டாம் சில்லரை" இவற்றுடன் பவளக்காரத் தெருவுக்கும் கிளம்புவார். இரவு கடை வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை” இவற்றுடன் பவழக்காரத் தெருவுக்குக் கிளம்புவார். “இரவு கடைசி வண்டியில் காலித்தூக்குச்சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லறை, பசி, கவலை—இவற்றுடன் தாம்பரத்துக்குத் திரும்புவார்”.

சுப்பையா பிள்ளையின் நிறைந்த இந்த வாழ்வில் இன்னொரு நிறைவு அனுபவமும் புகக் காத்திருந்தது. மாம்பலம் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு மின்சார ரயிலில் ஏறினாள் ஒரு பெண்மணி. சுப்பையா பிள்ளை உட்கார்ந்திருந்த ஆஸனத்துக்கு எதிர் ஆஸனத்தில் உட்கார்த்துகொண்டாள். “மாணவி, வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் லாங் செய்னுடன் ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் அலங்காரத்துக்காகத் தொங்கிற்று. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடவை. அதற்கு அமைவான ஜாகெட், செயற்கைச் சுருளுடன் கூடிய தலைமயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள். நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக்கொண்டார் சுப்பையா பிள்ளை. கண்களைக் கசக்கிக்கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க்கட்டையைத் தடவிக்கொடுத்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப் பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது... ‘பெத்துப் போட்டால் போதுமா? என்று தன் பெண்ணைப்பற்றி நினைத்தார்... ஷாக் அடித்தது போலப் பிள்ளையவர்கள் காலைப் பின்னுக்கு இழுத்தார். அவளது செருப்புக்காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பிள்ளையவர்கள் கால், உடல், சகலத்தையும் உள்ளுக்கிழுத்துத்கொண்டார்... அவர் மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன் பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை—மேளதாளக் குரவைகளுடன் வீட்டில் குடி புகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக்கோணிய உருவம். பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையும் தூக்கிச் சென்ற நாள் சங்கிலிகள். குத்துவிளக்கை அவித்து வைத்த குருட்டுக் காமம்...” எதிரில் இருந்த பெண் பார்க்கில் இறங்கிவிட்டாள். அதை அவர் கவனிக்கவேயில்லை.

இது ‘சுப்பையா பிள்ளையின் காதல்கள்’ என்னும் கதை.

கட்டு எதற்கும் அடங்காத கதாசிரியர் புதுமைப்பித்தன். இதுதான் முடியும், இது முடியாது என்பதில்லை அவருக்கு. எதையும் முயற்சி செய்து லாகவமாக உருவாக்கிவிடுவதில் சமர்த்தர். சித்த வைத்திய தீபிகையின் ஆசிரியரான கந்தசாமிப் பிள்ளையைத் தேடிக்கொண்டு கடவுளே வந்துவிட்டார், அவர் கதைகளில் ஒன்றில். பிராட்வே முனையில் ஹோட்டல் சுகாதாரம் பேசிக்கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு, நர வாகனத்தில் (ரிக்‌ஷாவில்தான்) வீடு போய்ச் சேருகிறார்கள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். கடவுளிடமே தன் பத்திரிகைக்கு ஜீவிய சந்தா வசூல் செய்துவிடப் பார்க்கிறார் கந்தசாமிப் பிள்ளை. “...யார் ஜீவியம்!” என்று கேட்கிறார் கடவுள். வீட்டிலே கந்தசாமிப் பிள்ளையின் பெண் குழந்தை அவர்களை வரவேற்கிறது. “எனக்கு என்னா கொண்டாந்தே? என்று கேட்டாள் குழந்தை. “என்னைக் கொண்டாந்தேன்” என்றார் பிள்ளை. “என்னப்பா! தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரிகடலையாவது கொண்டாரப் படாது? என்று சிணுங்கியது குழந்தை. “பொரிகடலை உடம்புக்காகாது, இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்று தன் பெண்ணுக்குக் கடவுளை அறிமுகப்படுத்திவைத்தார். குழந்தையின் பேரில் வைத்த கண்களை மாத்த கடவுளால் முடியவில்லை. கந்தசாமிப் பிள்ளைக்குச் சிறுத்தொண்டர் கதை ஞாபகம் வந்துவிட்டது. “சற்றுத் தயங்கினார்: ‘இப்பவெல்லாம் நான் சுத்த சைவன். மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால் தயிர்கூடச் சேர்த்துக் கொள்வதில்லை’ என்று சிரித்தார் கடவுள். ‘ஆசைக்கு என்று காலந்தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து’ என்றார் கந்தசாமிப் பிள்ளை... ‘வாடியம்மா கருவேப்பிலைக் கொளுந்தே!’ என்று கைகளை நீட்டினார் கடவுள். ஒரே குதியில் அவர் மடியில் ஏறிக்கொண்டது குழந்தை. ‘எம்பேரு கருகப்பிலைக் கொழுந்தில்லை; வள்ளி. அம்மா மாத்திரம் என்னைக் கறுப்பி, கறுப்பின்னு கூப்பிடுதா! நான் என்ன அப்படியா? என்று கேட்டது. அது பதிலை எதிர்பார்க்கவில்லை.” புதுமைப்பித்தனின் கதைகளில் வருகிற குழந்தைகள் அற்புதமான சிருஷ்டிகள். இன்றைய தமிழ் எழுத்திலே அந்தக் குழந்தைகளைப் போன்ற பூரணமான பாத்திரங்கள் வேறு இல்லை என்பது என் அபிப்பிராயம். அவை மறக்கமுடியாத சிருஷ்டிகள்.

‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்கிற கதை பூராவையுமே சொல்லிவிட வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவ்வளவு நல்ல இடங்கள் பல இருக்கின்றன அதில். ‘கடவுளிடமும் ஜீவிய சந்தா வாங்கிக்கொண்டுதான் அவரை விட்டார் கந்தசாமிப் பிள்ளை!’ என்று சொல்லி ஒருவாறாக முடித்துவிடுகிறேன்.

‘காஞ்சனை’ தொகுதியிலே முதல் கதையான ‘காஞ்சனை’யே வெகு நுட்பமான ஒரு விஷயத்தை அழகிய உருவத்தில் சொல்கிறது. பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தின் கதைப் பாணியில் செல்லுகிற ஒரு மூட்டைப்பூச்சி கதை இருக்கிறது இத்தொகுதியில்—‘கட்டிலைவிட்டிறங்காக் கதை’ என்று பெயர் அதற்கு. ‘மகாமசானம்’ என்று ஒரு கதை. அதில் தெரு ஓரத்திலே பிச்சைக்காரன் செத்துக்கொண்டு கிடக்கிறான். ஒரு குழந்தை மாம்பழத்தை மூக்கில் வைத்துத் தேய்த்துக்கொள்கிறது. ‘செல்லம்மாள்’ என்ற கதையில் செல்லம்மாள் இருபது பக்கங்களிலும் செத்துக் கிடக்கிறாள். அவள் புருஷன் கடைசிக் கிரியைகளைச் செய்யத் தன்னைத் தயார் செய்துகொள்கிறான்.

இந்தத் தொகுதியில் இல்லாத வேறு பல கதைகளையும் பற்றி இங்கு சொல்லவேண்டும் போல இருக்கிறது எனக்கு. சிற்பியின் நரகம், மனக்குகை ஓவியங்கள், ஞானக்குகை, கபாடபுரம்... இன்னும் பல விதவிதமான கதைகளை விதவிதமான உத்திகளைக் கையாண்டு எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன். அவர் கதைகளிலே இரண்டு விசேஷ அம்சங்கள் சொல்லலாம். (ஒன்று) அவர் அவசியம் என்று தேர்ந்தெடுத்துச் சொல்லும் விஷயங்கள் அவர் கையாண்ட விஷயங்கள் எல்லாமே புரட்சிகரமானவை என்று பொதுவாகச் சொல்லலாம். (இரண்டு) அதைச் சொல்ல அவர் கையாண்ட நடை. சில சமயம் அவர் நடை தடுமாறி விஷயத்தை எட்டாது போனதும் உண்டு. ஆனால், அவருடைய சிறந்த கதைகளில், சொல்லும் சிந்தனையும் சேர்ந்து அமைந்தன. திருநெல்வேலி பேச்சுத் தமிழை அவர் பல இடங்களில் கவிதையாவே கையாண்டிருக்கிறார்.

வருகிற நூற்றாண்டில் தமிழ்ச் சிறுகதைச் செல்வத்துக்கு நமக்குப் பலமான அஸ்திவாரம் போட்டுத் தந்துவிட்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்லவேண்டும்.

(க. நா. சு.வின் 'படித்திருக்கிறீர்களா?' நூலிலிருந்து)

  •