Reading view

பச்சைப் பலகையே! பச்சைப் பலகையே!

 





பெசண்ட் நகர்- 9 கி.மீ

என்று போட்டிருந்தது.


ஒன்பது கிலோ மீட்டர்

ஒன்பதே கிலோ மீட்டர்

எவ்வளவு அழகான 9 !


பஸ்ஸில் போகலாம்

பைக்கில் போகலாம்


ஆட்டோவில் போகலாம்

வாடகைக் காரில் போகலாம்


ஒரு கார் வாங்கி

அதில் கூடப் போகலாம்


அம்புக் குறி காட்டும் வழியில்

எவ்வளவு மெதுவாக நடந்தாலும்

அந்திக்குள் அடைந்து விடலாம்


ஆனாலும்

அந்த ஊரை


நீ  இப்படி

கூவிக் கூவிக் நிறைக்காதே!


காதுக்குள் முழக்காதே!


  •  

இசை கவிதைகள்

 



எதையும் மறந்துவிடவில்லை அல்லவா? 


புறப்பட்டுப்

போகப் போகிறது

மே ஃப்ளவர்


*


ஒரே ஒரு சின்னச் சிக்கல்


இல்லாமல் இருக்கப்

பழகிக்கொள்ள வேண்டும் நீ


அதில்

சிக்கல் என்னவெனில்


நீ

இருப்பது


*


வெஞ்சரம்


நஞ்சில் புரட்டிய அம்பால்

இதயத்தின் ஆழத்தைக் குடைவது

வெகு எளிது

உனக்கு


‘நீ’ யிலிருந்து ‘ நீங்களு’க்காய்

ஒரு நொடிப் பொழுதின் சாகசம்


*


பார்க்கப் பார்க்க


உன் ஈரக்கூந்தலை

அடித்து உதறியதில்

தெறித்த திவலைகளென

வெளி முழுக்கச்

சிவந்து நிற்கிறது

மே ஃப்ளவர்


ஜுன்

வந்து கொண்டிருக்கிறது


*


நன்றி அகழ்!


https://akazhonline.com/?p=10173



  •  

எப்படி எழுந்தனவோ


கவி தன் கவிதையைக் குறித்து தானே பேசுவதில் சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன. அந்தப் பேச்சில் இயல்பாக எழுந்து வரும் தற்பெருமை ஒரு  சிக்கல். தன் கவிதை குறித்து தானே பேச முனைகையில் எழுகிற சலிப்பு ஒரு சிக்கல்.  கவிக்கும் தன் கவிதையின் நதி மூலம் குறித்து  தோராயமாக அன்றி   துல்லியமாகத்  தெரிந்து விடாது என்பது இன்னொரு சிக்கல். பேசிப் பேசி கண் முன்னே தன் கவிதையின் அழகுகள் கரைந்து செல்வதை  அவன் சற்றும் விரும்புவதில்லை என்பது முக்கியமான சிக்கல். விளக்க முடியாத ஒன்று கவிதைக்குள் இருப்பதைப் போன்றே விளக்கக் கூடாத ஒன்றும் கவிதைக்குள் இருக்கிறது. ஆனாலும் கவிகள் கால காலமாக கவிதையைக் குறித்து பேசி வந்திருக்கிறார்கள். அதற்கு இலக்கணங்கள் வகுத்திருக்கிறார்கள். கவிதை அந்த இலக்கணங்களை உடைக்கையில் அதற்கு புதிய இலக்கணங்களை படைத்திருக்கிறார்கள்.தனது முழுத்தொகுப்பிற்கான முன்னுரையில் சுகுமாரன் எழுதியிருக்கும் ஒரு வரி “கவிதையாக்கம் குறித்துக் கொண்டிருந்த கொள்கைகளையும் பிடிவாதங்களையும் கவிதையே காலாவதி ஆக்குவதை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”.  இந்த உற்சாகம்தான் கவியையும் கவிதையையும் வாழ வைக்கிறது. 

கவிதையை விளக்க முடியாது என்கிற உறுதியும்,அதை விளக்கிப் பார்க்கும் முயற்சியும் ஒரு சேரவே நடந்து வந்திருக்கிறது என்று சொல்லலாம். கவி  கவிதையை விரட்டுவதும், கவிதை கவியிலிருந்து  நழுவி விழுவதும் காண அழகான காட்சிகள். நானும் சில அழகான தடுமாற்றங்களை காட்ட முயல்கிறேன். ஒட்டு மொத்தமாக என் கவிதைகள் எப்படி எழுந்து வந்திருக்கக் கூடும் என்பதையும், சில குறிப்பிட்ட கவிதைகள்   எழுந்து வந்த சூழல் குறித்தும் பேசிப்பார்க்க முயல்கிறேன். அந்தக் குறிப்பிட்ட சில கவிதைகள் என்னளவில் சாகசமானவை, எனக்கே ஆச்சர்யமானவை, ஆகவே அவற்றைப் பேசுவது கவிதையியலுக்கு  உதவக் கூடும் .

கவிதை என்பது எனக்கு முற்றிலும் புதிதான ஒன்றாக இருக்கவில்லை. அது வீட்டில் புழக்கத்தில் இருந்த சொல்தான். அப்பா கவிஞர். அப்படி கற்பனை செய்து கொள்வதில் பெருவிருப்பம் உடையவர். நாடகக் கலைஞரும் கூட. கதை, திரைக்கதை, வசனம்,  டைரக்‌ஷன் பாடல்கள் என எல்லாமும் அவரே. நாடகம் முடிந்து மைக் செட் பாக்கிக்கு வாட்சை  கழற்றிக் குடுப்பவரும் அவரே. இசையமைக்க வாத்தியங்கள் அவசியம் என்பதால் துரதிர்ஷ்டவசமாக அவரால் இசையமைக்க முடியாமல் போய்விட்டது. ஆக,  இது பரம்பரை வியாதி. நான் இரண்டாம் தலைமுறை பைத்தியம். 

பலரையும் போல வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் ரகுமான் என்று துவங்கிய பயணம்தான் என்னுடையதும். வைரமுத்துவின் கையொப்பம் பெறுவதற்கான  நீண்ட வரிசையில் நானும் நின்றிருக்கிறேன். இடது சாரி இயக்கங்களின் தொடர்பால் வாசிப்பு அறிவுமதி, தணிகைச் செல்வன், இன்குலாப்,இளவேனில் என்றி திசைதிரும்பியது.  எங்கள் ஊரில் பாரதி இலக்கியப் பேரவை என்கிற அமைப்பை நிறுவி இயங்கி வந்தோம். இன்றும் நவீன இலக்கியப் புலத்தில் தொடர்ந்து இயங்கி வருகிற  இளஞ்சேரல், பொன். இளவேனில் ஆகியோரோடு வேறு சில நண்பர்களும் சேர்ந்து அந்த அமைப்பைக் கட்டினோம். விடிய விடிய இலக்கியம் பேசினோம். கற்றலின் தீராத வேட்கையில் திளைத்தோம். விவாதங்கள், சச்சரவுகள் என இலக்கியம் தவிர அந்தப் பருவத்தில் எங்களுக்கு இன்னொன்று இருக்கவில்லை. பொள்ளாச்சியில் இருந்து இயங்கி வரும் ‘புன்னகை ‘இதழில் எங்கள் படைப்புகள் வெளியாகத் துவங்கின. 2002 ல் பாரதி இலக்கியப் பேரவை வெளியீடாகத்தான் என் முதல் கவிதைத் தொகுப்பு” காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி” வெளியானது. இன்று அந்தத் தொகுப்பில் வாசிக்க ‘கவிதைகள்’ என்று ஏதுமில்லை. மெல்ல நவீனக் கவிதைகள் நோக்கி வாசிப்பு நகர்ந்தது.

நவீனக் கவிதைகள் ஒரு வித ஏமாற்று வேலை என்கிற எண்ணமே முதலில் இருந்தது. சுகுமாரன்,மனுஷ்யபுத்திரன் இருவரையும் வாசிக்கையில் நவீனக் கவிதையின் அழகியல்கள் குறித்த ஒரு புரிதல் உருவானது. இவை வாழ்வின் அசலான குரல்கள் என்று நம்பத் துவங்கினேன். இன்று என் கவிதைக்குள் கூடி வந்திருக்கிற எளிமைக்கு இந்த இருவருமே காரணம். நான் முதன்முதலாக ஒரு இலக்கியவாதிக்கு எழுதிய கடிதம் என்பது சுகுமாரனுக்கு எழுதியதே.அவர் அனுப்பிய பதிலில் தெளிவை வலியுறுத்தியிருந்தார். ”எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக் கொள்ளும் சூத்திரமாவது” தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்”  என்பதே. ஒருவேளை இது உங்களுக்கும் உதவக்கூடும்”

இன்று நான் பொருட்படுத்தும் என்னுடைய முதல் கவிதை ஞாநியின் ‘தீம்தரிகிட’  இதழில் வெளியானது. தொடர்ந்து வெவ்வேறு இதழ்களிலும் கவிதைகள் வெளியாகத் துவங்கின. கணக்கிற்கு முதல் தொகுப்பான “ காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி” க்கும் இரண்டாம் தொகுப்பான “ உறுமீன்களற்றநதி” க்கும் இடையிலான ஆறு ஆண்டு கால இடைவெளியில் அதிதீவிர கவிதை வாசகனாக இருந்தேன். பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும்  வாசித்துக் கொண்டிருந்த இளைஞனாக இருந்தேன். கவிதை தவிர வேறு லட்சியம் இல்லை என்பது போலான பெருங் காதற்பருவம் அது. இளமையின் கொந்தளிப்பான  பருவத்தை முழுக்கவே  கவிதைக்கு எழுதி வைத்துவிட்டது குறித்து இப்போது கொஞ்சம் வருத்தமிருக்கிறது. 

மனுஷ்யபுத்திரன் ஒரு நிகழ்வில் இவ்வளவு நெடிய பாரம்பரியம் மிக்க ஒரு மொழியில் யாராவது ஒரு கவி தன்னை சுயம்பு என்று கூறிக் கொண்டால் அது அகந்தை அன்றி வேறல்ல என்பது போலப் பேசினார். ஆம்,இன்றைய கவி மூவாயிரம் வருடத்து கவி மரபின் மேல் அமர்ந்திருக்கிறான். பெருஞ் செல்வந்தன் அவன். கபிலரும், ஒளவையும்  கம்பனும் வள்ளுவனும்  தோன்றிய வழியில் தோன்றியிருக்கும் குலக்கொடி அவன். ஆகவே அவன் எழுத்தில்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த மூதாதைளின் பாதிப்பு இருக்கவே செய்யும். அதை அவன் அறிந்து கொள்ளலாம். அறியாமலும் இருக்கலாம். அந்த வகையில் எனக்கும் என் கவிதை ஆசிரியர்களென ஒரு பட்டியல் உண்டு. சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், ஆத்மாநாம், மு.சுயம்புலிங்கம், ஷங்கர்ராம சுப்பிரமணியன் ஆகியோரை அப்படிச் சொல்லலாம். சிலர் என் கவிதைகளின்  பகடி மொழி ஞானக்கூத்தனிலிருந்து வருவதாக எழுதியிருக்கிறார்கள். அது ஷங்கரிடமிருந்து வந்திருக்கலாம் என்பதே என் கணிப்பு. கவிதைக்குள் விளையாட்டு என்பது ஒரு ஆபத்தான ஆட்டம். ஷங்கர் சீக்கிரமே அந்த ஆட்டத்திலிருந்து வெளியேறி விட்டதால் அவரின் விளையாட்டு இங்கு அதிகமாக கவனம் பெறவில்லை என்று நினைக்கிறேன். ஆத்மாநாமின் உலகம் முதலில் வாசிக்கையில் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. ‘ரோஜாக்களுக்கு நாம் ஊற்றும் நீரை விட நாம்தான் முக்கியம்’ என்பதை அறிய இந்த மூடனுக்கு  கொஞ்சம் காலம் ஆனது. கவிதை சொற்சிலம்பத்துக்கு வெளியே இருக்கும் ஒன்று என்பதை என்னிடம் உறுதிபடச் சொன்னவை மு.சுயம்புலிங்கத்தின் கவிதைகள். இந்த நேரத்தில் ஆத்மாநாமின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை சுயம்புலிங்கம்  கவிதைத் தொகுப்பின்  எந்தப் பக்கத்தில் வேண்டுமானலும் யோசிக்காமல் சேர்த்து விடலாம்.

நன்றி நவிலல்

இந்த செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்த கைக்குட்டையைப் போல்
எத்தனை பேர்
பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்த சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு.

இது போல யாரேனும் ஒரு வாசகன் எங்கள் அருவருயுமே கூட ஒற்றை நூலால் கோர்த்துக் காட்ட முடியும் .

நூறு கவிதைகளுக்கு மத்தியில் ஒரு கவிதை தனி தெரிய வேண்டுமெனில் அது புதிதாக இருக்க வேண்டும் என்பது ஒரு எளியவிதி. என் கவிதைகளை புதிதாக ஆக்கியதில்  பகடிக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டுதான். பகடி என் கவிதைகளுக்கு புதிதாகவும் என் துயரங்களுக்கு மருந்தாகவும் இருந்தது. நான் எழுத வருகையில் இங்கு ஒப்பாரிச் சத்தம் கூடுதலாக இருந்தது. எனக்கும்  ஒப்பாரி வைக்கும்படிதான் வாழ்வு இருந்தது. ஆனால் நான் அந்தக் கூட்டத்தில் கலக்க விரும்பவில்லை. பகடி, என்னுடைய துன்பத்தை வேறு யாரோ ஒருவருடைய துன்பமாக மாற்றிவிடுகிறது என்று நினைக்கிறேன். வாசகனும் இதை உணர்ந்திருக்கக் கூடும். வேறு யாரோ ஒருவருடையது என்றாலும் அது துன்பம் தான்.  ஆனால் தலைமேல் அமர்ந்து மூளையைக் குதறும் கொடியதாக இல்லை. என் கவிதைகள் குறித்து எழுதுகையில் “ கண்ணீரை விட கனமானதொரு  சிரிப்பு” என்கிற வரியொன்றை விஷால் ராஜா எழுதினான். என் பகடி ஜென்மம் அப்போது நிறைவு பெற்று விட்டது. 

ஒரு கட்டத்தில் பகடி என் கவிதைகளின் முக்கியமான கூறாக இருந்த போதிலும் நான்  வெறுமனே அதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ‘பகடிக்கவி’  என்கிற லேபிளை சுமக்க வேண்டியிருந்தது. எதைப்  புதிது என்று நினைத்தேனோ அது ஒரு கட்டத்தில் தமிழ்க் கவிதையின்  பொது போக்குகளில் ஒன்று போல மாறி விட்டது. பகடியின் கவனம் ஈர்க்கும் தன்மையால் அவைப் பெருகத் துவங்கின.

ஒரு கட்டத்தில் என் கவிதையிலிருந்து பகடி வெளியேறத் துவங்கியது.இன்று என் கவிதைகளில் அது அரிதாகவே தலை காட்டுகிறது என்று நினைக்கிறேன்.  ‘போதுமான அளவு விளையாடிவிட்டோம் ஆகவே போதும்..”என்று தோன்றி விட்டதா?  என்னுள்ளிருந்த  சிறுவனுக்கு நரை திரண்டு விட்டதா?  சிறுவனின் கண்களுக்குச் சிக்காத வாழ்வின் வேறு சில அழகுகளைக் காணச் சென்று விட்டதா என் கவிதை? இந்தக் கேள்விகளை ஆராய்ந்து தெளிவான பதில்களைப் பெற நான் முயன்றதில்லை.விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.  

வெகு காலமாக என் டேபிளில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூலொன்று படிக்கப் படாமல் அப்படியே கிடந்தது. அந்தப் புத்தகத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்பது போல ஒதுக்கி வைத்திருந்தேன். ஆனால் ஒரு சலிப்பான மதியத்தில் அந்த நூலை எடுத்து புரட்டிப் பார்த்தேன். என் பிந்தைய காலத்து கவிதைகளில் அவர் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் வழியாக ஆன்மீகம் என்கிற சொல்லின் அசலான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.  என் இன்றைய கவிதைகளில் அந்தி ஒரு தெய்வம் போல் வருகிறது என்று தோன்றுகிறது. தன் முதல் தொகுப்பில் கடவுளின் பிறப்புறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்ச வேண்டும் என்று கொந்தளித்த கோபாவேச இளைஞன், தற்போது  இந்த உலகில் மலர்கள் இருப்பதால் கடவுளும் இருந்து  விட்டுப் போகட்டும் என்கிற சமரசத்திற்கு  வந்திருக்கிறான்.

கடவுள் இருக்கிறாரா?

ஒவ்வொரு புலரியிலும்
சிரத்தையொடு மலர் கொய்து 
கடவுள்களை அலங்கரிக்கிறாள் ஒரு வனிதை

அவளுக்கு
கனவுகள் இல்லை

கண்ணீர் இல்லை

பயமும்
பக்தியும் கூட இல்லை.

இந்த உலகில்
மலர்கள் இருக்கின்றன
என்பது தவிர 
அவளுக்கு 
வேறொன்றுமில்லை

கவிதையில் தொட்டதெல்லாம் துலங்க வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. கவிதையில் மட்டுமல்ல எல்லாக்  கலைகளுக்குமே இது பொருந்தும். அவ்வளவு பூரிப்போடு “இன்று கச்சேரி களை கட்டி விட்டது”  என்கிறான் ஒரு இசைக் கலைஞன். எனில் களை கட்டாத கச்சேரிகள் உண்டு என்பது அர்த்தம்.  அதே பாடகன், அதே வாத்தியங்கள், அதே அரங்கம் ஆனால் எல்லா நாட்களிலும் கச்சேரி களை கட்டிவிடுவதில்லை. கச்சேரி களை கட்ட என்ன வேண்டுமென்று துல்லியமாகத் தெரிவதுமில்லை.  தெரிந்து விட்டால்  ஒவ்வொரு  கச்சேரியையும் களைகட்டி நின்று விடாதா?

நான் கடந்த வாரம் கூட ஒரு தோல்வி கவிதை எழுதினேன். அந்தக் கவிதையில் உணர்வுப் பெருக்கிற்கு ஒன்றும் குறைச்சலில்லை.  ஒரு பள்ளிச்சிறுமி பேருந்து நிறுத்தத்தில்  நிற்காத பேருந்தின் பின்னால் உயிரைத் தூக்கிக் கொண்டு அசுர வேகத்தில் ஒடும் காட்சி ஒன்று டி.வி யில் திரும்பத்  திரும்ப காட்டப்பட்டது. பார்த்த மாத்திரத்தில் கண்ணில் நீர் கோர்த்து விட்டது. நீர் கோர்த்து விட்டால் அது கவிதையாவதற்கான தகுதி உடையதுதானே? ஆகவே அதை கவிதையாக எழுதினேன். ஒழுங்காக வரவில்லை. நீ அழுதால் நானும் அழ வேண்டும் என்கிற கட்டாயமில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டது கவிதை. 

என்னுடைய சில கவிதைகள் மீது எனக்கு பிரத்யேகமான வாஞ்சை உண்டு. அவற்றில் சீராட்டிக் கொஞ்ச என்னளவில் ஏதோ ஒன்று இருக்கிறது.மிக அரிதாக  தமிழ் கவிதைக்குள் இடம் பெற்ற சண்டைக் காட்சி என்று இந்தக் கவிதையை சொல்லலாம். வெறும் சண்டையாக இல்லாமல் கவிதையாகவும் இருக்கிற சண்டைக் காட்சி இது என்பது என் நம்பிக்கை. ஆனால் பா.வெங்கடேசனைத் தவிர இந்தக் கவிதையைக் குறிப்பிட்டு யாரும் என்னிடம் பேசியதில்லை. கவிதையின் நதி மூலம் சுவையானது.ஆனால் அது வாசகனுக்குத் தேவையில்லை. தவிர நதிமூலம் சுவையாக இருந்தால் கவிதையும் சுவையாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை அல்லவா? ஆகவே  நாம் கவிதையை  மட்டும் பார்ப்போம்…

சுபம்

அவன் இங்கு வந்ததே
அந்த வெள்ளிக் கிழமைக்காகத்தான்
அதன் முலையழுந்த அணைக்கத்தான்

புதன் வரை பொறுத்து விட்டான்
அதற்கு மேல் ஆகவில்லை
இந்த வியாழன் ஓர் இடைஞ்சல் 
ஒரு வாய்க்காலை தாண்டிக் குதிப்பதைப் போலே
அதைக் கடந்து விடத் துடித்தான்
தன்னை ஒருவன் தாண்டிப் போவதைப் பொறாது
வியாழன் வாய் பிளந்து கத்தியது.
வண்டி நிறைய ஆட்களை அனுப்பியது

காதலின் கனலி
சில மண்டைகளை உடைத்துப் போட்டான்
சில கால்களை முறித்துப் போட்டான்
சில தலைகளை திருப்பி வைத்தான்

கடைசியில்
ஒரு தந்திரன்
புதனின் கழுத்தில் கத்தியை வைத்துப் பிடித்துக் கொண்டான்
காலம் ஸ்தம்பித்து விட்டது
வேறு வழியற்ற காதலன்
“வெள்ளி வேண்டும்...
வெள்ளி வேண்டும்..” என்று
அவன் காலில் விழுந்து கதறினான்

வெற்றி தந்த களிப்பில்
அவன் அண்ணாந்து சிரிக்க
கண் பிழைத்த அக்கணத்தில்
அவன் கால்களைப் பற்றியிழுத்து
ஓங்கித் தரையில் அடித்தான்

ஓடினான்...
வேகமெடுத்து ஓடினான்...

புதனில்  அழுந்தக் காலூன்றி 
ஒரே ஒரு தாவு ... 

துப்பாக்கி ரவைகளுக்கும்
கையெறி குண்டுகளுக்கும் தப்பி
வெள்ளியின் நிலத்தில் 
விழுந்து உருண்டான்

சினிமா சண்டை வந்தது போலவே சினிமாப் பாடல்கள் இடம் பெறும் கவிதைகளும் உண்டு. நித்ய ஸ்ரீ, சஞ்சய் சுப்பிரமணியன் போன்ற செவ்வியல் இசைக் கலைஞர்கள் என் கவிதைக்குள் வருவது போன்றே,  கானா பாடகனும், குத்துப் பாடகனும் இடம் பெற்றிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு. ஒரு கவிதை குத்துப் பாட்டை அனுபூதி நிலைக்கு அருகில் ஏற்றி  வைப்பது..


குத்துபாட்டின் அனுபூதி நிலை

இந்த வீட்டின் ஜன்னல்களை மூடினேன்
கதவுகளைச் சாத்தினேன்.
மறவாமல் இவ்வுலகை
வெளியே தள்ளித் தாழிட்டேன்.

இசை துவங்கியது

பேழையிலிருந்து வெளிப்பட்ட 
குரலுருவும் நானும்
கை கோர்த்து ஆடத் துவங்கினோம்.

ஆட்டம்...
குதியாட்டம்... 
பேயாட்டம்,,, 

“மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா .. “

தலை வழி பீறிட்டு
விண் முட்டி அடிக்குதொரு நீருற்று

“தட தடன்னு நடக்குறா..
மட மடன்னு சிரிக்குறா...
வெட வெடன்னு இருக்குறா...
கொட கொடன்னு கொடயிறா...
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா.”

ஆயிரம் கரங்கள் கூடி
ஆனந்தக் கொட்டடிக்க
அதிரும் நானொரு 
களி கொண்ட பேரிகை

“பஞ்சு மிட்டாய் இடுப்பழகி
ஓலக் கொட்டாய் உடுப்பழகி
ப்பெப்பர் முட்ட்டாய் பல்லழகி
க்கொட்டாப் பாக்கு கண்ணழகி
ராங்கீ… மனச வாங்கீ...”

எனதுடலா..... இது 
எனதுடலா..!

இப்படி பூரிப்பில் துடி துடிக்கும்
இது என்ன
எனதுடலா!
எனதுடலா!

எனதுளமா இது
எனதுளமா!

ஈனக்கவலைகள் எரியும் நெருப்பில்
ஜொலிப்பது என்ன
எனதுளமா!
எனதுளமா!

இவ்வளவு துள்ளிக் குதிக்கும் படியாக  அன்றைக்கு அப்படி என்ன ஆனந்தம் என்பது இப்போது நினைவில் இல்லை. அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை என்பது ஒரு  காரணமாக இருக்கலாம். துரதிர்ஷடவசமாக இந்தக் குத்துப்பாடல் என் கவிதைக்குள் புகழ் அடைந்த அளவில் கூட பொதுவில் புகழடையவில்லை.  குத்துப் பாடல்களைப் போற்றி தனியே ஒரு கட்டுரையும் எழுதியுள்ளேன். ஆனால் அதைக் கவிதைக்குள் வைப்பதற்கு ஒரு முரட்டுத்தனம் வேண்டும். அப்போது அது இருந்திருக்கிறது. கூடவே ஒரு எச்சரிக்கை உணர்வும் இருந்திருப்பதை உணர முடிகிறது. பாடலின்  பரவத்தை விளக்கும் வரிகளை  எல்லாம்  குத்துப்பாடல்களின் “ local language “ க்கு  நேரெதிராக  செழுந்தமிழில் எழுதியுள்ளேன். ஒரு வித சமநிலையாக்கத்திற்கு முயன்றிருக்கிறேன். 

‘நன்னூல், ஒரு நூலின் குற்றங்களாக பத்துக் குற்றங்களை முன் வைக்கிறது. அதில் “கூறியது கூறல்”, “மிகைப் படக் கூறல் “ போன்றவை இங்கு பேசப் பட்ட அளவு “குன்றக் கூறல்” பேசப்படவில்லை. ‘மிகை’ எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றம்தான் ‘குறை’யும். எவ்வளவு குறைவாகச் சொல்ல  முடியுமோ அவ்வளவு குறைவாக சொன்னால் போதும் என்பது நவீனக் கவிதையின் அழகியல்களில் ஒன்றல்லவா? ஆகவே நாம் “ குறை” என்பதைப் போதுமான அளவு கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். எதுவொன்றையும் அழுத்தும் போது அங்கு பொய் நுழைந்து விடுகிறது என்பது போல தன் கட்டுரை ஒன்றில் ஷங்கர் எழுதியிருப்பார். ஆனால் சொல்ல வேண்டியதைச் சொல்லியாக வேண்டும்.  அழுத்த வேண்டியதை தேவையான அளவு அழுத்தியாகத்தான் வேண்டும். என் சமீபத்திய கவிதை ஒன்றில் “குன்றக் கூறல்” எனும் குறை இருப்பதாக தோன்றியது. தாளம் தொடர்பான அக்கவிதையை இசை விற்பன்னர் ஒருவரிடம் விளக்கிப் படித்தேன். “நீ சொல்லும் போது நன்றாக உள்ளது. ஆனால் அது இந்தக் கவிதையில் வரவில்லை என்று நினைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். இசை விற்பன்னருக்கே விளங்காத இசை நுணுக்கமா?  எனில் அந்தக் கவிதையில் ஏதோ சிக்கல் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. கொஞ்ச காலம் எடுத்து அந்தக் கவிதையைத் திருத்தினேன். திருத்திய பிரதி எனக்கும் அவருக்கும் திருபதியாக இருந்தது.  

அங்கு

கொட்டு கொட்டென்று
கொட்டித் தீர்த்த இசை

சட்டென
நின்று விட்டது

நிசப்தமும் 
முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும்
ஒன்றல்ல

வாத்தியக்காரன்
வாத்தியத்திலிருந்து
கையைத் தூக்கிவிட்ட பிறகு
உருவாகும் தாளமே!

நீ
அங்கென்னைக் கூட்டிச் செல்!

இந்தக் கவிதையின் முதல் ஏழு வரிகள் முதல் வரைவில் இருக்கவில்லை. 

நான்  சில கவிதைகளை  நண்பர்களுக்கு அனுப்பிக்  கருத்துக் கேட்பதும்  உண்டு. அந்தப் பட்டியல் காலத்தில் மாறி வந்துள்ளது. சுகுமாரன், இளங்கோ கிருஷ்ணன், சாம்ராஜ், ஏ.வி மணிகண்டன் , ஷங்கர் ராம சுப்பிரமணியன், விஷால் ராஜா, மிஷ்கின் ஆகியோர் சில அழகான திருத்தங்களால் என் கவிதையை செழுமை செய்துள்ளார்கள். சமீபத்தில் ஒரு கவிதையை மிஷ்கினுக்கும், மணிகண்டனுக்கும் அனுப்பினேன். இருவருக்குமே அந்தக் கவிதை பிடித்திருந்தது. ஆனால் இருவருமே  சொல்லி வைத்தாற் போல ஒரு வரியை வேண்டாம் என்று  சொன்னார்கள். அவர்கள் இருவரும் படித்த மாத்திரத்தில்  பளிச்சென்று நீக்கி  விட்ட அந்த வரி,  கவிதையின் பெயரால் விருதுகள் வாங்கி அடுக்கி வைத்திருக்கிற எனக்கு விளங்காத அந்த வரி, அதை அடிக்கடி எண்ணி நான் வியப்பதுண்டு. அது குறித்து வருந்துவதும், மகிழ்வதும் உண்டு.


ஆத்மாநாமின் புதிய கவிதை

ஒரு ரோஜா நாற்று வாங்கி வந்தேன்

வீட்டில்
அதற்கு எந்த இடம் பிடித்திருந்ததோ
அந்த இடத்தில் நட்டு வைத்தேன்.

ஒளி தந்தேன்
நீர் தந்தேன்

இவை தவிர
ரோஜாக்கள் பூக்க
எது முக்கியம் என்று
ஆத்மாநாம் சொன்னாரோ
அதை
அள்ளி அள்ளிக் கொடுத்தேன்.

கொடுத்துக் கொண்டே இருந்தேன்

வருத்தம் தோய்ந்த முகத்துடன்
ஒரு நாள் அவர் வந்திருந்தார்

“இன்னும் ரோஜாக்கள் பூக்கவில்லையா? “
“மணம் வர மலர் அவசியமில்லை என்று தோன்றுகிறது” என்றேன்.
புன்னகைத்தபடியே சென்று விட்டார்.

இந்தக் கவிதையில் நீக்கபட்ட பகுதி….
“அவருக்குக்
கேட்க வேறொன்றும்
இருக்கவில்லை

இது கடைசி வரிக்கு முந்தைய பத்தியாக இருந்தது.

உரைநடைக்குப் பக்கத்தில்  எழுதும் கவிதைகளில் கூட அதில் ஒரு வித இசைத்தன்மைக்கு  முயல்கிறேன். கவிதையிலிருந்து இசையை அறவே ஒழித்துக் கட்டி விட முடியாது என்று நம்புகிறேன். ஆங்கிலச் சொற்களை சமயங்களில் உபயோகிப்பதுண்டு. சில கவிதைகளின் தலைப்பே ஆங்கிலத்தில் உண்டு. ஒரு நேர்காணலின் போது இரா.பூபாலன் சொன்னார்...” நைஸ் என்கிற தலைப்பு கச்சிதமாகப்  பொருந்தியது போல “ நத்திங் ஸ்பெஷல்” என்கிற தலைப்பு பொருந்தவில்லை”.   ஒரு வேளை இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் கவிதையை ஸ்டைலாக்கவோ, புதியது போன்ற பாவனையைத் தோற்றுவிக்கவோ அப்படி செய்வதில்லை.  சமயங்களில் பொருந்துவதில்லை என்று நினைக்கிறேன்.

கவிதையை ஒரு ஆசிர்வாதம் போலத்தான் உணர்கிறேன். கவிதையும் நானும் மெல்ல மெல்ல நெருங்கிச் செல்வதில்லை. மாறாக அது ஒரு மின்னல் வெட்டுப் போலத்தான் தோன்றி மறைகிறது. என்னைக் கடந்து செல்லும் ஒரு கவிதை அதற்கு முந்தைய கணம் வரை எங்கிருந்தது என்பதை எண்ணி நான்  ஆச்சர்யப்படுவதுண்டு.

இவ்வளவு காலமும் இடி பாடுகளுக்கிடையேதான் வேலை செய்து வந்திருக்கிறேன். இடிபாடுகள் தான் வேலை செய்ய வைக்கின்றன என்கிற கருத்தும் உண்டு.தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாக  கவிதைகள் எழுதுவது கவிஞர்களின் பொது வழக்கம்தான். என் கவிதைகள் ஒரு கட்டம் வரை ஓயாமல் கண்ணீரைக் கொஞ்சிக் கொண்டிருந்தன. இப்போதும் இடிபாடுகளிலிருந்து  மீண்டுவிட வில்லை. ஆனால் அவை அனுமதிக்கும்   சின்ன ஆசுவாசங்களின் பொழுது புலரிக்கதிரும், அந்திப் பொன்னும் என் சொற்களை ஊடுருவி விடுகின்றன. 

என் முதல் கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘ உறுமீன்களற்ற நதி” என்பது ஒளவையின்  சொல் வழி விளைந்தது. “ஆட்டுதி அமுதே “, “வெந்துயர் முறுவல்”  போன்ற சொற்கட்டுகள்  கம்பன் வழங்கியவை. தொடித்தலை விழுத்தண்டினாரும், கணியன் பூங்குன்றனாரும் என்  கவிதைக்குள் வந்து அதைப்  பொலியச் செய்கிறார்கள்.பழந்தமிழ் இலக்கியங்கள் என்பவை பெரும் சக்தி. அவை என் கவிதையை வலுவூட்டுகின்றன. 

ஒரு எழுத்தாளனுக்கு  நினைவு எவ்வளவு முக்கியமோ  மறதியும் அவ்வளவு  முக்கியம். அவன் பலவற்றை துல்லியமாக நினைவு வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதை விட ஆயிரங்களை அவன் தொலைத்து மறக்க வேண்டியுள்ளது.  நான் ஒரு மலரை எழுதுகையில் என் எவ்வளவுகள் மறைந்து போகின்றன! ஒரு வயலின் துணுக்கின் முன் என் எத்தனையெத்தனைகள் மறந்து போகின்றன! மகத்தான மறதியே உன்னை அணைத்துக் கொள்கிறேன். உனக்கு நன்றி சொல்கிறேன். 

வாழ்வு அர்த்தமற்றிருக்கிறது. அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமற்றவைகளால் எதிர்கொள்வது அபத்தமா என்ன?  என் அர்த்தமற்ற பொருட்களே! அர்த்தமற்ற இச்சைகளே! அர்த்தமற்ற ஒழுக்கங்களே! அர்த்தமற்ற கொள்கைகளே! அர்த்தமற்ற வங்கிக் கணக்குகளே! அர்த்தமற்ற காதல்களே!   உங்களுக்கு  என் அன்பு. அர்த்தமின்மையின் அர்த்தச் செறிவே நீ வாழிய வாழிய வாழியவே!!

- நன்றி; விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், உயிர்மை

  •  

மூன்று கவிதைகள்




முதல் கனி 



அந்தக் குழந்தை

உலகிற்குப் புதுசு


மூடிய காருக்குள்ளிருந்து

கண்ணாடி வழியே

வெளியே பார்த்தபடி வருகிறது


சிக்னல் நிறுத்தத்தில்  ஒரு சிறுவன்

காக்கி நிஜாரில் மேலாடையின்றி

வியாபாரி போல் வந்தவன்


அவன் தன்

அழுக்குக் கையால்

கூடைக் கொய்யாக்களில்

ஒன்றினை எடுத்து

குழந்தைக்குக்  காட்டுகிறான்


காட்டிய  கணத்திலேயே

ஊட்டியும் விட்டுவிட்டான்


எட்டினால் தட்டிவிடும்

தூரத்தில்தான் இருக்கிறார்

அதன் அப்பா


ஆனாலும்

அதற்குள்

அவ்வளவு தூரங்கள்

அவரால்

ஓடிவரக் கூடவில்லை.


*


ண்டேன்



சற்றே பெரிய ஊடல் போல


அவள்

சிரி...

சிரி...

சிரி.. 

எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்


அவன் 

துளியும் அசைந்துவிடாது 

நின்று கொண்டிருந்தான்


அவள்

கன்னச் சதைகளை 

இழுத்து இழுத்து விட்டாள்

இறுக்கத்துள் கை நுழைத்து

உதடுகளைப்  பிரித்து வைத்தாள்


கடைசிவரை சிரிக்கவில்லை கல்


அங்கே சிரித்துக் கொண்டிருந்த

இன்னொன்றை

நான் கண்டு சிரித்தேன்.


*


னைவியின் முதல் கவிதை



"பாயுது பாயுது நீரு

பல எண்ணங்கள் போலே- வருது

தண்ணீரு..."


என்று முதல் அடி எடுத்தவள்

ஏனோ  கொஞ்ச நேரம்

அங்கேயே நின்று விட்டாள்


ஏரியைக் காட்டிலும்

ஆழத்துள் பாய்ந்தவள் சிந்தையில்

சட்டென்றொரு  தீப்பொறி


‘தண்ணீரை ' அடித்து விட்டு

 'கண்ணீரை' அங்கு இட்டு நிரப்பினாள்


கண்ணீர் வந்தவுடன்

கவிதை வந்துவிட்டது

என்பதில்

அவளுக்கு அவ்வளவு உறுதி


ஆட்டவோ

அசைக்கவோ முடியாத உறுதி


  •  

ஒளித்தொழித்தல்




ன் காதலைக் கையள்ளித் தெளித்தால்

பல யோசனை தூரங்களுக்கு

பச்சைப் பசேல்கள்

காற்றாடி நிற்கும்


அதைத்தான்…


அன்பே….!

அதைத்தான்

நீ

ஒளித்து வைக்கச் சொல்கிறாய்


  •  

மூன்று கவிதைகள்




றுமணம் கொண்ட விசாலமான படுக்கை


நட்சத்திர விடுதியின்

விசாலமான அறையைத்

திறந்து காட்டிய  பணியாள் 

"நன்றி!"  என்று

சொல்லிவிட்டு நகர்கிறான்.


நான்

உடைந்து அழுகிறேன்


*


சப்பின் குஷன்


நான் மீண்டும்

கசப்பிற்குத் திரும்பினேன்.


மகனைப் போருக்கு அனுப்பி விட்ட தாய் போல

அது வாசலிலேயே நின்று கொண்டிருந்தது


கசப்பு 

ஒரு செளகர்யம்

ஆதுரம்


மேலும் அது எனக்கு
நன்கு பரிச்சயமானது

அதில்
பரபரப்பில்லை.
பதற்றமில்லை

சாகசங்களில் வெறி மூண்ட 
வேட்டையாள் ஒருவன்
துப்பாக்கியை இறக்கி வைத்து விட்டு
இப்போது
புளியமரத்தடியொன்றில்
தலை சாய்த்துக் கிடக்கிறான்

கசப்பில்
கசப்பைத் தவிர 
வேறு ஒன்றுமேயில்லை

முக்கியமாக
இனிப்பில் இருக்கிற
"உள்ளே என்ன இருக்கிறதோ?" 
என்கிற
வெடிகுண்டில்லை

*

ல்லாவற்றிற்கும் நன்றி!

காதலர்
வெடித்துச் சினக்கின்றனர்.

கண்ணீர் வடிக்கின்றனர்.

பிரிவே உத்தமம்  என்று 
உறுதி பூண்கின்றனர்

"எல்லாவற்றிற்கும் நன்றி!" 
என்றவர்கள்
பரஸ்பரம் செய்தி அனுப்பிக் கொள்கையில்
"எதுவுமே இன்னும் முடியவில்லை" என்று
எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு குரல்...

அது யாருடைய குரல்

  •  

ஆசை ஆசையாய்

 




வெண்கலத்தில்

இரும்பில்

மரத்தில்

பளிங்கில்,  பனியில்


நின்ற கோலம்

அமர்ந்த கோலம்

கிடந்த கோலம் என

கோலா கோலங்களில்


ஷாப்பிங் மாலில்

ஹோட்டல் முகப்பில்

பெட்டாலியன் விடுதியில்


முழு உருவில்

தனித்தலையில்

இரு விழியில்


பேருந்தில்

காரில்

ஆட்டோவில்


கருப்பில்

வெளுப்பில்

வண்ண வண்ணங்களில்


மிகப் பெரிதாக

சின்னஞ்சிறியதாக

சுமாராக


என


ஆசை ஆசையாய்

சிதறிக் கிடக்கும்

அவ்வளவு 

புத்தர்கள்




  •  

டி.வி யில் நடக்கும் போர்




டி.வி யில் நடக்கும் போர் என்பது

காணக் கிடைக்காத வாணவேடிக்கை

கண் கொள்ளாப் பிரகாஷம்


திரைகள் எரியும்

அதிரடி சண்டைக் காட்சிகள்

நிஜத்தில் நிகழ்வது

புத்தம் புது பரவசம்


டொம்…

டொம்…

எனும் இனிய சங்கீதங்கள்


ஐ.பி. எல் ஆட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.


அதனாலென்ன ஜாலியானவர்களே!



நாம்

சேனலை மாற்றுவோம்.


அங்கு 

ஐ.பி. எல்-  லைக் காட்டிலும்  ஜாலி

ஒரு குழந்தை துடிதுடித்துச் சாகிற ஜாலி


டி.வி யில் நடக்கும் போரில் திளைக்க

கோழி இறைச்சியை துணை கொள்ளும்

ரசிகப்  பெருமக்காள்..!

எதற்கும் ஒரு முறை

பரிசோதித்துக் கொள்ளுங்கள்...

“கோழி இறைச்சி தானே அது?”


  •  

நான் அதில் சிற்றெறும்பு

 




நான்

ஒரு எறும்பாய்ப் போய் விடுவதில் தீவிரம் கொண்டிருக்கிறேன்


எறும்பெனில் எறும்பினும் எறும்பாக


அவள் கழுத்தை

ஊர்ந்து தீர்க்கையில்

காலம் முடிந்திடும்  அளவு

எறும்பாக


அவ்வளவு எறும்பாக


  •  

ஆங்கிலத்தை இவர்கள் அறிவில்லா முண்டமெனக் கருதிவிட்டார்கள்



“தூங்காதே தம்பி…தூங்காதே..” என்பது

காலாவதியாகிவிட்ட ஒரு அறிவுரை


இன்றோ

“தூங்குங்கள்…! தூங்குங்கள்..! என்று

கை கூப்பி வேண்டுகிறது மருத்துவம்


அவர்கள் இருவருமே

தேக ஆரோக்கியத்தில்

கவனம் கொண்டவர்கள்

ஆகவே

சரியாக பத்துமணிக்கு

“good night” சொல்லிக் கொள்வார்கள்.


அரைமணி நேரம்  கழித்து

அடுத்த “ good night “


“ good night ..!”


“ good  night…!”


“Good  night” க்கு தானொரு 

“good night” தானா என்பதில்

கொடூரமான குழப்பங்கள் தோன்றிவிட்டன


அது புரட்டிய அத்தனை அகராதிகளும்

ஆலோசித்த அவ்வளவு அறிஞர்களும்

“good night “  என்றால் " good night" தான்

என்று சொல்லி

அதை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்


இரும்புக் கதவில் 

தலையை முட்டிக் கொண்டு

அது இரத்தம் பெருக்கிய பொழுதில்

அவர்கள் 13 வது “ good night” 

சொல்லிக் கொண்டார்கள்.


சிற்றஞ்சிறுகாலை என்கிற

“ good morning “ - ல்

“ ok.. good night ..“ என்றவர்கள்

அலுத்துக் கொண்ட போது

ஆங்கிலத்திற்கு வெறி மூண்டுவிட்டது

இரண்டு பொடணியிலும்

பொளோர் பொளோரென

நான்கு போடு போட்டது…


“எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை  உண்டல்லவா? “


  •  

மோகினியாட்டம்



லுவலகத்தில்

ஒரு சிறு பதவி உயர்வு.

சால்வை அணிவிக்கிறார்கள்


கொஞ்சம் பணமுடை

கோல்டு லோன் கடையில்

மணிக்கணக்காக 

காத்திருக்க வேண்டியுள்ளது


அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல்

போய் விட்டது

ஆம்புலன்ஸைப் பிடிக்க ஓடுகிறேன்


அடுத்த மாதம்

ஒரு கருத்தரங்கம்

பழைய நூல்களைப் புரட்ட

அடிக்கடி நூலகம் செல்ல வேண்டியுள்ளது.


ஊரில் ஒரு பொதுப் பிரச்சனை

முன்னணியில் நிற்பதால்

கொலை மிரட்டல்கள் வருகின்றன


அக்பர் யாரென்றே அறியாத

ஒரு இளைஞன்

என் போனை

அக்பர் காலத்தது என்று 

அறிவித்து விட்டான்


நேற்று

புதுச்செடியில் முதல் பூ


வீட்டுப் பூனை ஈன்றிருக்கிறது

ஒரே மியாவ்…மியாவ்… மியாவ்..


இவை எல்லாமே

உன் 'ஹேண்ட் பேக்'குள்

நடக்கின்றன.


  •  

கவி

 




பெரிய மருத்துவமனையின் 

சின்ன அறைக்குள்

ஒரே படுக்கையில்

உடலில் குழல்கள் செருகப்பட்டு

வாரக் கணக்கில் கிடந்தாள் அம்மா.


கொஞ்சம் தேறியதும்

வராண்டாவில் 

மெல்ல மெல்ல நடந்தாள்


குறுக்கும் மறுக்குமாக

நடந்து கொண்டிருந்தவள்

பால்கனியை கை காட்டினாள்


பூரண வெளி முன் நின்று

"அப்பா... மொத மொதல்ல உன்னப் பார்த்த மாதிரி இருக்கு..." என்றாள்


இருவரில் 

நான்தான் கவி


விருதுகள் வாங்கி

அடுக்கி வைத்திருக்கும் கவி


  •  

பளீர்




ளி  விளக்குகளால் சுற்றப்பட்ட

உயர்ந்த  கம்பத்திற்குக்  கீழே

பளீரென ஒரு தள்ளுவண்டி


அதில் 

பளீரென விரிக்கப்பட்டிருக்கும்

சிவப்பிற்கு மேலே

பளீரென

சில பச்சைப் பழங்கள்


கடந்து செல்லும் 

ஒவ்வொருவரையும் 

பளீராக்கியபடி




“மோரிஸ்… மோரிஸ் … ‘என்று

அந்தத் தாத்தா

வேறெதையோ விற்றுக் கொண்டிருக்கிறார்.


  •  

ஒளியினும் ஒளியிலிருந்து இருளினும் இருளுக்கு

 



மூக்குத்தி அணைந்துவிட்ட

இருளில்


இப்படிக் கால்களுக்குள்

முகம் புதைத்துத் தேம்புவது


தம்பீ...  இது நீயா?


நானா? 


நுந்தையா?


எந்தையா?


நுந்தையின் நுந்தையோ?


எந்தையின் எந்தையோ?


எந்த இடம் இது?


எந்த யுகம் இது?


  •  

கம்பனின் " ஐயோ"


ழகை


வியந்து


வியந்து


வியந்து


வியந்து


 

வியந்து தீராத தருணத்தில் 


"ஐயோ...!  " என்று


அலறி வைத்தான் கம்பன்.


தொடக் கூடாத சொல்லை

தொட்டு வைத்தான் பாவி.


அச்சொல்

ஒரு சாபமென விழுந்தது

கவிக்குலத்தின் மீது.


இன்று வரை


அது


வியந்து


வியந்து


வியந்து


வியந்து


போகிறது...


போகிறது...


"ஐயோ" வென்று போகிறது




  •  

இரண்டு குள்ளங்கள்

 




குள்ளமாக இருப்பதால்

திருமணம் ஆகாத


குள்ளமாக இருப்பதால்

தற்கொலைக்கு முயன்ற


குள்ளமாக இருப்பதால்

குழந்தையாகவே காட்சி தருகிற

துப்புரப் பணியாளர் ஒருத்தி

தேநீர் இடைவேளையின் போது

அசந்தர்பமாக 

என் அறைக்குள் நுழைந்து விட்டாள்


விடாப்பிடியாக பிடித்து

அவளை எதிரே அமர வைத்தேன்.


என் குள்ளத்திலிருந்து

கொஞ்சம் நேநீரை எடுத்து

அவள் குள்ளத்துள் ஊற்றினேன்


தேநீரில் வாய்வைத்து

தேநீரை விட  இனிய ஒன்றை

அருந்திக் கொண்டிருக்கின்றன

இரண்டு குள்ளங்கள்


வெறும் தேநீர்க்கே 

நிரம்ப முடிந்த 

இரண்டு குள்ளங்கள்


  •  

தீக்குள் வைத்த விரல்கள்






“விலை மதிப்பற்றது”

என்கிற குறிப்போடு

போட்டோவில் 

ஒரு பொருளை அனுப்பிருந்தாய்


அதனோடே சேர்ந்து

வந்து விட்டது

உன் சுண்டு விரல்


பிறகு

அது 

ஒரு சின்ன விலைக்குள் அடங்கிவிட்டது


“ஆகச் சிறந்த கவிதை”  என்று

 ஒன்றை

அது போன்றே அனுப்பி வைத்தாய்

இன்னும் 

நான் அதை வாசிக்கவில்லை.


மகத்தான ஒன்று

மகத்தான இன்னொன்றை

குறிப்பிட்டுக் காட்டுவதில் 

என்னவோ 

சிக்கல் இருக்குதடி?


சில விரல்கள்

நிலவைச் சுட்ட  உகந்தவையல்ல

பிறகு

மொத்த நிலவும்

காணாமல் போய்விடுகிறது.


  •  

முதன்முதலில்

 




 

னக்கு முன்பும்

இந்த உலகில்

எனக்கு

ஓராயிரங்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன.


ஆனாலும் பார்,


முதன் முறை

இப்போதுதான் ஒன்று

மறுக்கப்படும் முகத்துடன்

உன் முன்னே

நின்று கொண்டிருக்கிறேன்.


  •  

பிறப்பதற்கு முன்

 



ள்ளி முடித்து

கல்லூரிக்குள் நுழையும்

ஒரு குழந்தை 

தொங்கிய முகத்துடன்  சொன்னாள்..


"மனசு சரியில்ல சார்..'


தெய்வமே...


அவள் இன்னும்

பிறக்கக்  கூட இல்லையே


அதற்குள்

அவளுக்கு ஒரு மனம் பிறந்து


அதற்குள்

அது சரியில்லாமலும்

ஆகிவிட்டதா?


  •  

டாஸ்மாக்கில் இரு மச்சிகள்

 



"இந்தா மச்சி..."


 சின்ன சில்வர் தட்டை நீட்டினான்.


இன்றுதான் பிறந்து

இன்றே 

மச்சிகளாகிவிட்ட  

யாரோ இருவர்

ஒரு மிளகாய் பஜ்ஜியை

இரண்டாகப் பகிர்ந்து கொள்கிற காட்சி...


ஆஹா...!


இப்படித்தான்


வையகம்

இப்படித்தான் தழைக்க வேண்டும்


  •