Reading view

குரு நித்யா எனக்கு யார்?

குரு நித்யா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். இது அவர் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். அவருடைய பின்புலம், அவருடைய ஆளுமைத்திறன், அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆகியவற்றைப் பற்றிய காணொளி. சற்று உணர்ச்சிபூர்வமானது.

  •  

மருத்துவர் ஜீவா : பசுமை விருதுகள் 2025

மக்கள் மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தையும் இந்தியாவின் மிகச்சிறந்த முன்னுதராண களச்செயல்கள் எனலாம். மக்களையும் மருத்துவர்களையும் ஒன்றிணைத்து அவர் உருவாக்கிய கூட்டுறவு மருத்துவமனைகள் தேசிய அளவிலான முன்மாதிரி. மருத்துவம், சூழலியல், வரலாறு, சமூக அரசியல், கல்வி, இலக்கியம் என பரந்துபட்ட களத்தில் மருத்துவர் ஜீவா செயலாற்றினார். காந்தியம் மற்றும் பொதுவுடைமைக் கருத்துகளின் ஒத்திசைவுச் சித்தாந்தமென தன் வாழ்வை வாழ்ந்துகாட்டியவர். போதை மீட்பு மருத்துவமனை மூலமாக பலநூறுக் குடும்பங்களைச் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிய பெருமனிதர் ஈரோடு வெ. ஜீவானந்தம்.

ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, மருத்துவர் ஜீவா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அவர் விட்டுச்சென்ற செயற்கனவுகளை சிறுகச்சிறுக நிறைவேற்றுவதே இம்முயற்சியின் நோக்கம். அதன் நீட்சியாக, தங்கள் பங்களிப்பால் சமூகத்திற்குத் தொண்டாற்றும் ஆளுமைகளுக்கு வருடந்தோறும் ‘பசுமை விருதுகள்’ அளிக்கப்படுகின்றன. வருடந்தோறும் ஜீவா நினைவேந்தல் நிகழ்வில் இவ்விருதளிப்பும் நிகழ்கிறது.

இதுவரையில் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர் சமஸ், இளம் சூழலியலாளர் விஷ்ணுப்ரியா, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வறிஞரான அய்யா அ.கா.பெருமாள் அவர்களுக்கும், திருநங்கைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வுநலனுக்காகச் செயலாற்றும் தோழமை சுதா அவர்களுக்கும் சுற்றுச்சூழல் களசெயல்பாட்டாளர் தியடோர் பாஸ்கரன் கிணறு புனரமைப்புப் பணியாளர் மதுமஞ்சரி ஆகியோருக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் நீட்சியாக இந்த ஆண்டு இரு ஆளுமைகளுக்கு மருத்துவர் ஜீவா : பசுமை விருதுகள் 2025   பகிர்ந்து  வழங்கப்பட உள்ளது.

 

பேரா.முனைவர்.க.பழனித்துரை

பல்கலைக்கழக சுவர்களைக் கடந்து சமூகம் சார்ந்து சமூகத்துடன் செயல்படும் களச் செயல்பாட்டாளர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பணியாற்றி காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு வந்து காந்திய நிறுவனங்களுடன் இணைந்து 34 ஆண்டு காலம் பணி செய்து இன்றும் களத்தில் நிற்பவர்.

இவரின் ஒருங்கிணைந்த பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பொறுப்புகளிலும் தடம் பதித்தவர்.தற்போது பணி ஓய்வுக்கு பிறகு பாண்டிசேரியில் ஆரோவில் லின் அரவிந்தர் சமூகம்   நடத்திவரும் ஊரக வளர்ச்சி செயல்பாட்டகத்திற்கு கௌரவ இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

 

தேஜாஶ்ரீ இங்வாலே ~

1988 ஆம் வருடம் பிறந்த இவர் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டவர். சிறு வயது முதலே கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டவரான தேஜாஶ்ரீ ஐந்தாண்டு  கல்லூரி படிப்பாக ஓவியத்தை தேர்வு செய்து படித்து  முடித்தார்.

இந்தியா முழுவதும் இருக்கிற மிக முக்கியமான இசை சார்ந்த ஆசிரியர்களை சென்று சந்தித்து அந்தந்த பிராந்திய இசைக்கான நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறார்.

தான் சந்திக்கும் பழங்குடி மக்களின் தனித்த இசையையும், அவர்களின் இசைக் கருவிகளையும் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வருகிறார்.

இதன் வாயிலாக அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய பாடல்களையும், இசைக் கருவிகளையும் மீளுருவாக்கம் செய்யும் பணியை தொடங்க இருக்கிறார்.

சொற்களையும், தத்துவங்களையும் தாண்டி தொடர்ச்சியாக களத்தில் நின்று சமூகம் சார்ந்தும், கலை சார்ந்தும் தீவிரமாக இயங்கி வரும் மூத்த மனமும், இளைய மனமுமான க.பழனிதுரை ஐயா மற்றும் தேஜாஶ்ரீ இங்வாலே இருவரும் இவ்விருதைப் பகிர்வதென்பது மகிழ்ச்சியாகவும் , நம்பிக்கையாகவும் இருக்கிறது.

மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மா, டாக்டர் எஸ்.எஸ்.மீனாட்சி சுந்தரம் IAS அவர்கள் , அக்னி தங்கவேலு ஐயா ஆகியோரின் முன்னிருப்பில்   வருகிற மார்ச் 2ம் தேதி காந்திகிராம பல்கலைக்கழக வளாக ஊழியரகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கிறது. விருதுத்தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாயும் விருது சான்றிதழும் விருதாளர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.

எளிய மக்களின் வாழ்வுமீள்கைக்கான எத்தனையோ செயலசைவுகளின் முதற்துவக்கமாக அமைந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் இறையிருப்பை வணங்கி மனதிலேந்துவோம். அவரது வாழ்நாள் கடந்து நம்மிடம் எஞ்சிய செயற்கனவுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். தோழமைகள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அன்புகூர்ந்து அழைக்கிறோம்.

 

நன்றியுடன்,

மருத்துவர் ஜீவா அறக்கட்டளை

  •  

பெண் எழுத்தாளர்களும் ஒழுக்கவாதமும்

வை மு கோதைநாயகி

அன்புள்ள ஜெ,

தமிழிலும் வேற்று மொழிகளிலும் சென்ற காலங்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடு பல வகைகளில் இருந்துள்ளது. ஆனால் ஒன்று குறிப்பாக வந்துகொண்டே இருக்குறது. எல்லா மொழிகளிலும் சில பெண் எழுத்தாளர்கள் அந்தந்த காலகட்டத்தின் ஒழுக்கக்காப்பாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து இல்லையென்றாலும் மிகப்பரவலாக வாசிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.

அவர்கள் நல்லுபதேசம் செய்கிறார்கள். குடிக்காதே என்கிறார்கள். அடிமை முறையை எதிர், பெண்களை ஒழுங்காக நடத்து, குழந்தைகளை அடிக்காதே என்றெல்லாம் கூறுகிறார்கள். அக்காத்தனமாகவும் அம்மாத்தனமாகவும் மாறி மாறி கொஞ்சியும் அதட்டியும் பேசுகிறார்கள்

குமுதினி

இவர்களில் சிலர் மரபுவாதிகள். சிலர் இலட்சியவாதிகள். பலர் நடைமுறைவாதிகள். மரபுவாதிகளாவது ஒரு மதிப்பீட்டின் பின்புலத்திலிருந்து பேசுகிறார்கள். நடைமுறைவாதிகள் சொல்வதெல்லாம் நடைமுறை சார்ந்து மட்டுமே. அத்தகைய அறிவுரைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுகிறது. எழுத்தாளர் அவ்வாறு அறிவுறுத்தத் தகுதி உள்ளவரா?

ஆனால் அத்தகைய அறிவுரை எழுத்துக்கு ஒரு இலட்சியத்தன்மை உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. “இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது,” என்று சிவசங்கரியைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.

என் கேள்வி, ஒரு சூழலில் ஒரு வகையான எழுத்தாளராவது இப்படி ஓர் ஒழுக்கக்காப்பாளராக (moralist), அறிவுறுத்துபவராக இருக்க வேண்டும் என்று ஏதாவது தேவை இருக்கிறதா? சூழலுக்கு இவர்களது பங்களிப்பு என்ன?

அன்புடன்,

சுசித்ரா

மூவாலூர் ராமாமிருதத்தம்மையார்

அன்புள்ள சுசித்ரா,

இந்தக்கோணத்தில் நான் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் சொன்னபிறகு இது ஒரு சுவாரசியமான பார்வை என நினைக்கிறேன்.

இந்த விவாதத்தில் நாம் செய்யக்கூடுவது பொதுமைப்படுத்தலை விட தனித்தனியாக நூலாசிரியர்களைக் கருத்தில்கொண்டு அவர்களின் எழுத்தையும், தனியாளுமைகளையும் பரிசீலனை செய்வதுதான். ஏனென்றால் எழுத்தாளர்கள், அதாவது பொருட்படுத்தத் தக்க எழுத்தாளர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைப்பட்டவர்கள். அவர்களின் இயல்புகள் நாட்டுக்கும், பண்பாட்டுக்கும் ஏற்ப பெரிய மாறுதல்களையும் கொண்டுள்ளன.

எனக்கு நன்கு தெரிந்த ஓர் ஆளுமையை எடுத்துக் கொள்கிறேன். கவிஞர் மலையாளக் கவிஞர் பாலாமணி அம்மா கடுமையான ஒழுக்கவாதத்தை முன்வைத்தவர், அதை வலியுறுத்தும் கவிதைகளையும் எழுதியவர். குறிப்பாக பெண்களின் பாலியல் விழைவு அல்லது வெளிப்பாட்டை அவர் தீவிரமாக எதிர்த்தார்.பெண்கள் பாலியல் கவற்சி அற்ற தோற்றத்துடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தினார். அவர் மகள் மாதவிக்குட்டி என்னும் கமலாதாஸ் பெண்களின் பாலியல் விடுதலையை முதன்மைப்படுத்தி எழுதிய படைப்பாளி.

கிருபை சத்தியநாதன்

ஆனால் பாலாமணி அம்மா காந்தியவாதி. சமூகசீர்திருத்தவாதி. களமிறங்கிப் போராடியவர். பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும், சிறைசெல்லவேண்டும் என வாதிட்டவர். இடதுசாரி இயக்கங்களில் பெண்கள் ஈடுபட்டு சிறைசெல்வதைக்கூட ஆதரித்தவர். மாறாக கமலாதாஸ் முழுமையாகவே அரசியலற்றவர். சொல்லப்போனால் சமூகநோக்கங்களோ, பொதுப்பார்வையோ அற்ற தூய சுயமைய நோக்கு வெளிப்படும் அகவுலகை உருவாக்கியவர்.

கமலா தாஸின் சமகாலத்தவரான சுகதகுமாரி பாலுணர்வு வெளிப்பாடற்ற நோக்கு கொண்டவர், ஒழுக்கமதிப்பீடுகளின் பிரச்சாரகர் என்றும் சொல்லலாம். ஆனால் அவர் ஒரு மாபெரும் சூழியல் போராளி. பெண்ணுரிமைக்காக வாழ்நாள் முழுக்க களம் நின்று போராடியவர், அதற்கான அமைப்புகளை உருவாக்கியவர்.

தமிழிலும் வை.மு.கோதைநாயகி அம்மாள்குமுதினி , கிருபா சத்தியநாதன், மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார் போன்ற தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களில் கடும் ஒழுக்கவாதிகளாகத் திகழ்ந்தவர்கள் கூடவே சமூகப்பணி, அரசியல்போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்தவிழைந்தவர்களாகவும், தாங்களும் ஈடுபட்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம். அவர்களின் எழுத்துக்களிலேயே உபதேச அம்சம் மிகுதி.

அசலாம்பிகை

இந்த பொருள் விரிவாக விவாதிக்கவேண்டிய ஒன்று. இந்தியச் சூழலில் பெண்கள் பொதுவெளிக்கு வந்து பேசவும் எழுதவும் முற்பட்டது 1900 ங்களின் தொடக்கத்தில்தான். ஆனால் அந்தத் தலைமுறைப் பெண்கள்தான் அரசியல் சமூகக் களங்களில் நேரடியாக ஈடுபட்டுப் பணியாற்றியவர்கள். அடிப்படையில் அவர்கள் இலட்சியவாதிகள். பெண்களில் அடுத்தடுத்த தலைமுறையினரின் இலட்சியவாத நோக்கம் குறைவுபடுவதையும் ,அவர்கள் நேரடியான களச்செயல்பாடுகளில் ஈடுபடுவது இல்லாமலாவதையும், அவர்கள் தங்களையே மையமாக்கி யோசிப்பதையும் காண்கிறோம்.

அப்படியென்றால் அந்த தொடக்ககால ஒழுக்க அக்கறையின் பின்னணி என்ன? பெண்கள் இல்லங்களுக்குள் இருந்து வெளிவந்து சமூகவெளியில் செயல்படத் தொடங்கிய அக்காலகட்டத்தில் மெய்யாகவே இது பெரும் பிரச்சினையாக இருந்திருக்கவேண்டும். அப்பெண்கள் மேல் ஒழுக்கம் சார்ந்த தாக்குதல்களை அக்காலத்துக் கட்டுப்பெட்டிகள் நடத்தியிருக்கலாம். ஆகவே தாங்களும், தங்களைப்போல வீட்டைவிட்டு வெளிவந்து செயல்படும் பெண்கள் அனைவருமே, கடுமையான ஒழுக்கவாதிகள் என்பதை நிறுவவேண்டிய தேவை அப்பெண் முன்னோடிகளுக்கு இருந்திருக்கலாம்.

ராஜம் கிருஷ்ணன்

கூடவே, நடைமுறையில் கல்வி,தொழில், சமூகப்பணி, அரசியல் என பெண்களுக்கு உருவாகிவந்த அந்த தொடக்ககால பொதுவெளியை பாலியல் சுரண்டலுக்காகப் பயன்படுத்தும் ஆண்களும் அன்று இருந்திருக்கலாம் . அதற்கு அடிமைப்பட்ட பெண்களும் இருந்திருக்கலாம். இந்தியாவின் பல தொடக்ககால தன்வரலாற்றுப் பதிவுகளில் அந்த சான்றுகள் உள்ளன. ஆகவே பெண்களை நோக்கி தொடர்ச்சியான எச்சரிக்கையை அவர்கள் எழுதவேண்டியிருந்தது.

லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி போன்ற அடுத்தகாலப் பெண் எழுத்தாளர்கள் வேலைக்குச்செல்லும் பெண்கள் எப்படி ஒழுக்கத்தை தங்கள் கவசமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை பல கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் மெய்யாகவே வேலைக்குப் போகும் பெண்களுக்கு அது பெரும் அறைகூவலாக இருந்திருக்கிறது. எண்பதுகளில்கூட ஆனந்தவிகடன், குமுதம் ‘ஜோக்கு’களில் கணிசமானவை டைப்பிஸ்ட், நர்ஸ் போன்ற வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதை முன்வைப்பவையாகவே இருந்தன. (இதைப்பற்றி நான் விகடனுக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதியிருக்கிறேன்)

இன்றும்கூட பொதுவெளிக்கு வரும் பெண் கொஞ்சம் ‘விட்டுக்கொடுப்பவள்’ என்னும் எண்ணம் ஏராளமான முதிர்ச்சியற்ற இந்திய ஆண்களிடம் இருக்கிறது. பெண் அடையவேண்டிய ‘பாலியல் விடுதலை’யை திரும்பத் திரும்ப அந்த ஆண்கள் ஏதோ புரட்சி போல முன்வைக்கிறார்கள், ஆனால் அது அப்பெண்களைப் பாலியல்ரீதியாக சுரண்டுவதற்கான ஒரு முன்முயற்சி மட்டுமே.

சிவசங்கரி

இன்னொரு கோணமும் யோசிக்கத் தக்கது. 1900ங்களில் தமிழிலும் மலையாளத்திலும் (பொதுவாக இந்தியாவெங்கும்) எழுதவந்த பெண்கள் பெரும்பாலும் உயர், உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்த முதல்தலைமுறையினர். அவர்கள் கல்விபயின்ற கிறிஸ்தவக் கல்விநிறுவனங்களும் சரி, அன்று உருவாகிவந்திருந்த தேசியக் கல்வி இயக்கத்தின் கல்விநிறுவனங்களும் சரி ஒழுக்கநெறிகளை கடுமையாக வலியுறுத்தியவை. அந்தச் செல்வாக்கு இந்தப் பெண் எழுத்தாளர்களிடம் இருந்திருக்கலாம்.

அந்தக் கல்விநிறுவனங்களில் நகர்ப்புற, படித்த பெண்களிடமே பொதுநாகரீகம், ஒழுக்கநெறிகள் ஆகியவை ஓங்கியுள்ளன என்றும், கிராமப்புறப் படிக்காத பெண்கள் பொதுநாகரீகம் அறியாதவர்கள் என்றும், அவர்கள் பலசமயம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் அடிமைகள் என்பதனால் பாலியல் ஒழுக்கத்திற்கான சுதந்திரம் இல்லாதவர்கள் என்றும், அவர்களுக்கு படித்த பெண்கள் இவற்றைக் கற்பிக்கவேண்டும் என்றும், அது கற்றவர்களின் கடமை என்றும் திரும்பத்திரும்ப கற்பிக்கப்பட்டது. அது பெருமளவும் அன்றைய நடைமுறை உண்மையும்கூட.

லட்சுமி

கிருபா சத்தியநாதன் அசலாம்பிகை போன்றவர்களிடம் இப்பார்வையைக் காணலாம். ஹெப்சிபா ஜேசுதாசன் இதே பார்வையை பிற்காலத்திலும் கொண்டிருந்தார். இதன் உச்சகட்ட வெளிப்பாடு மீனாட்சிசுந்தரத்தம்மாள் . இந்த அம்மையாரின் எழுத்து நேரடியான பிரச்சாரம் மட்டுமே. அது இரண்டு கோணங்கள் கொண்டது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான சீற்றம், பெண்கள் ஒழுக்கமாகவும் சுதந்திரமாகவும் நாகரீகமாகவும் இருக்கவேண்டியதன் தேவை. அதாவது ஆங்கிலம் படித்து, நவநாகரீக உலகுக்குள் சென்றாலொழிய கிராமிய வாழ்வில் அது இயல்வதும் அல்ல என்கிறார். அன்றைய சூழலில் இந்த இரண்டு பட்டைகள் கொண்டதாகவே பெண்விடுதலை இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

பெண்கள் ஈடுபட்ட அன்றைய அரசியலியக்கங்கள் காந்திய இயக்கம், திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் ஆகிய மூன்றுமே பெண்களின் ஒழுக்கத்தை வலுவாகவே பிரச்சாரம் செய்தவை என்பதை நாம் கருத்தில்கொள்ளவேண்டும். அந்த இயக்கங்களைச் சார்ந்தே இங்கே தொடக்ககாலப் பெண்ணுரிமைநோக்கு உருவானது, அதை முன்வைக்கும் படைப்பாளிகளும் உருவானார்கள்.

 

நீலாம்பிகை

இதைத் தவிர உண்மையிலேயே பழமைவாதத் தரப்பைச் சேர்ந்த ஏராளமான படைப்பாளிகளும் இருந்தார்கள். அன்றைய சூழலில் எழுத்துக்கு வந்த படித்த உயர்குடிப்பெண்களில் பலர் ஆசாரமான, பழமைவாத நோக்கு கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக, வி. விசாலாட்சி அம்மாள் ,வி.சரஸ்வதி அம்மாள் போன்றவர்கள் வி. கிருஷ்ணசாமி ஐயரின் குடும்பத்துப் பெண்கள். பழமைவாதியான அவர் தன் பெண்களுக்கு குழந்தைமணம் செய்து வைத்தவர். அத்தகைய பின்னணிகொண்ட பெண்கள் பழமைவாத நோக்கை வலியுறுத்தியதில் வியப்பில்லை.

இப்படிச் சொல்லலாம். ஒரு முன்னோக்கிய நகர்வு உருவாகும்போது மறுபக்கம் அதற்கான எதிர்விசைகளும் செயல்படுகின்றன. ஒன்று, அந்த முன்னகர்வை எச்சரிக்கையுடன் கட்டுப்படுத்தும் விவேகத்தின் விசை. இன்னொன்று, பின்னிழுக்கும் பழமையின் விசை. இரண்டுமே நீங்கள் கேட்ட வகையான எழுத்துக்கான காரணங்கள்.

ஹெப்சிபா ஜேசுதாசன்

இதெல்லாம் பெண்களின் எழுத்தை, தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வதற்கான நம் முயற்சியின் ஒரு பகுதி மட்டுமே. நாம் அவர்களின் காலகட்டம், சூழல் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்தமாக அவர்களின் படைப்புகளைப் பார்ப்பதற்கான பயிற்சிகள் இவை. இதை முன்னிட்டு அவர்களைப் பற்றிப் பேசுவது நிறைவளிக்கிறது

ஜெ

 

  •  

ஏர்னஸ்ட் கோர்டான்

சயாம் மரண ரயில்பாதையில் போர்க்கைதிகளாக இருந்தவர்களில் ஒருவர்.ராணுவ அதிகாரி. பின்னர் மதப்பணியாளரானார். கோர்டானின் மரணரயில்பாதை நினைவுகள் நூல்வடிவாயின. பின்னர் அதையொட்டி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது.

ஏர்னஸ்ட் கோர்டான்

ஏர்னஸ்ட் கோர்டான்
ஏர்னஸ்ட் கோர்டான் – தமிழ் விக்கி
  •  

காட்டை கற்றல்- கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் லோகமாதேவியின் வழிகாட்டுதலில்தாவரங்களின் மேல் உள்ள காதல்பல மடங்கு கூடிவிட்டதுஅவர்களுக்கு இந்தத் துறையின் மேல் உள்ள passion வியக்க வைக்கிறதுபாடம் எடுக்கும் போது மட்டுமல்லாமல்சாப்பிடும் போதும் சரிஅவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அது வெளிப்படுகிறது.

வனம், வகுப்பு- கடிதம்

I really appreciate the idea of Ayurveda classes. Ayurveda is not just a medical methodology. It has a complete world vision, which is entirely different from Western medicine.

Ayurveda, a letter

  •  

புதுவை வெண்முரசு கூடுகை 79

அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.

புதுவை வெண்முரசுக் கூடுகையின் 79வது அமர்வு 28.02.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் நண்பர் திருமாவளவன் உரையாற்றுவார்

நிகழ்விடம் :

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி

# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

பேசு பகுதி:

வெண்முரசு நூல்  – 9. 

வெய்யோன்

பகுதி 3 சிறைப்பெருந்தாழ்

(அத்தியாயம் 13 – 23).

 

  •  

இன்னொரு கனவு – ஓர் ஆங்கிலப் பதிப்பகம்

Manasa Publications Website

சில நாட்களுக்கு முன் சைதன்யாவுடன் வழக்கமான உணவுமேஜை இலக்கிய விவாதம். சைதன்யாவுக்கு ஒரு பிரியமான கொள்கை – நம்பிக்கை உண்டு. Pet theory என்று சொல்லப்படுவன இளம் அறிவுஜீவிகளின் ஊக்கவிசைகளும்கூட.

’ஐரோப்பிய இலக்கியத்தில் 18 -19 ஆம் நூற்றாண்டின் பெண் இலக்கிய மேதைகள் பலர் அன்றைய ஆண்நோக்கு கொண்ட விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டு, பட்டியல்களில் தவிர்க்கப்பட்டு, காலப்போக்கில் மறைந்தனர்’ என்பது சைதன்யாவின் தரப்பு.

இந்த நிராகரிப்பு ஒரு சிக்கலான முறையில் நிகழ்கிறது. பெண்களின் சிறப்பியல்பு என ஒன்று ஆண் அறிவுஜீவிகளால் வகுக்கப்படுகிறது. அது வெளிப்படும் படைப்புகளை எழுதிய பெண்கள் மட்டும் கொண்டாடப்படுகிறார்கள். எஞ்சியோர் வெவ்வேறு முத்திரைகள் குத்தப்பட்டு ’பரிவுடன்’ நிராகரிக்கப்படுகிறார்கள்.

அந்த எதிர்பார்ப்பு காலத்துக்கேற்ப மாறுபடுகிறது. நூறாண்டுகளுக்கு முன்புவரை பெண்களின் எழுத்தில்  ‘கள்ளமற்ற இளமை’யின் வெளிப்பாடு இருந்தால் அது கலை என கொண்டாடப்பட்டது. அதன்பின் ’பெண்ணியச் சீற்றம்’ இருந்தால் பாராட்டப்பட்டது. இன்று ‘பெண்களின் தனி உலகம்’ எழுதப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மானுடம் தழுவிய நோக்கை முன்வைத்த பெண் படைப்பாளிகள், தத்துவப் பார்வையும், கவித்துவமும், மெய்யியல் தரிசனமும் கொண்ட பெண் எழுத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை. பெண் படைப்பாளிகள் முன்வைக்கும் இலட்சியவாதம் பலசமயம் மிகையானதும் பெண்களுக்கே உரிய பரிவு என்னும் பலவீனம் கொண்டதுமான பார்வையாக கருதப்படுகின்றது. பெண்கள் உருவாக்கும் உணர்ச்சிகரம் மெல்லுணர்ச்சியாக மதிப்பிடப்படுகிறது.

நான் மதிக்கும் சில பெண் படைப்பாளிகள் உண்டு. மேரி கொரெல்லி, ஃபானி பர்னி, ஜார்ஜ் எலியட், இசக் டெனிஸன், எடித் வார்ட்டன். அனேகமாக அவர்களைப் பற்றி தமிழில் நான் மட்டுமே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். இங்குள்ள பல பெண் அறிவுஜீவிகளுக்கு அவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன்.உலக அளவிலேயே கூட அவர்களை மதித்து எழுதிய நவீன விமர்சகர்கள் மிகமிகக் குறைவு. அண்மையில் அமெரிக்க இலக்கியச் சூழலில் செயல்படுபவர்களிடம் பேசும்போது அவர்களும் அப்பெயர்களில் பலவற்றை அறிந்ததே இல்லை என்பதையே காண்கிறேன்.

ஆனால் சைதன்யா தொடர்ச்சியாக முன்வைத்துவரும் பெண் படைப்பாளிகள் மற்றும் தத்துவஞானிகளின் பட்டியலில் பலரும் நான் கேள்விகூடப்படாதவர்கள். நீலி இதழில்  பெண்படைப்பாளிகள் பற்றி சைதன்யா எழுதிவரும் தொடரில் உள்ள பல ஆசிரியர்களில் பெயர்கள் தமிழில் ஒருமுறைகூட எழுதப்பட்டவையோ பேசப்பட்டவையோ அல்ல . ( நீலி இணைய இதழ்)

சைதன்யா பேச்சின் போக்கில் தமிழிலும் தென்னிந்திய மொழிகளிலுமுள்ள பெண்களின் எழுத்துக்களை இந்திய அளவில் அறிமுகம் செய்யும்பொருட்டு ஓர் ஆங்கிலப்பதிப்பகம் தொடங்கும் எண்ணத்தை சொன்னாள். பெண்களின் எழுத்துக்களை முன்வைப்பது முதன்மை நோக்கம். பெண்களைப் பற்றிய, பெண்கள் சார்பான நூல்கள் அடுத்தபடியாக. தொடர்ந்து விரிவான அளவுகோலுடன் பண்பாடு, கலை, இலக்கிய நூல்கள்.

சைதன்யாவுடன் அவளுடைய தோழி கிருபாலட்சுமியும் இணைந்துகொண்டார். ஓரளவு முதலீட்டுடன் ஒரு தீவிரமான பெரிய பதிப்பகம்தான். பதிப்பகத்துக்கு கிருபாலட்சுமியின் மகளும் 9 மாதம் அகவை கொண்டவருமான மானஸாவின் பெயர் சூட்டப்பட்டது.

மானஸாதேவி வெண்முரசின் தொடக்கத்தில் வரும் அன்னை. நாகர்களின் அன்னை தெய்வம், இந்தியத் தொன்மத்திலுள்ள பேரன்னைகளில் ஒருவர். அரவரசியின் பெயர் பதிவு செய்யப்பட்டு இணையப்பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. வெளிவரவிருக்கும் நூல்களுக்கான பணிகள் நான்கு மாதங்களுக்கும் மேலாக நிகழ்கின்றன. சென்னையை மையமாக்கி செயல்படவிருக்கும் இந்த ஆங்கிலப்பதிப்பகத்திற்கு அங்கே ஓர் அலுவலகம் மட்டும் இன்னும் அமையவில்லை – இடம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் அப்பார்ட்மெண்ட் தேவையாகிறது.

மானஸா பதிப்பகம் சார்பில் சைதன்யாவும் கிருபாவும் பெங்களூர், கோழிக்கோடு இலக்கியவிழாக்களில் அழைப்புபெற்று பங்கெடுத்து விரிவான அறிமுகவலை ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆங்கிலத்தில் நூல்களை கொண்டுசென்று சேர்க்க அவை அவசியமானவை. அவர்களின் இணையப்பக்கத்திலேயே தொடர்ச்சியான இலக்கிய கருத்துருவாக்கமும் நிகழுமென்று தெரிகிறது. (Blog)

ஆங்கிலத்தில் எழுதப்படும் நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களும் ஏராளமாகத் தேவைப்படுகின்றனர்.

மானஸா பதிப்பகம் சார்பில் நாவல்போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பெண்களால் எழுதப்படும் நாவல்களுக்காக. ஏதேனும் கல்விநிறுவனங்களில் கல்விபயில்பவர்களுக்கான போட்டி ஒன்று. பொதுவாக எழுதும் பெண்களுக்காக இன்னொருபோட்டி. (Manasa Lit Prize)

வழக்கம்போல நம் நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்குமென நம்புகிறேன். (தொடர்புக்கு [email protected])

எலிசபெத் ஆன்ஸ்கம் – சைதன்யா
ஹன்னா அரென்ட் – சைதன்யா
வேர்கள் – சைதன்யா
அனைத்திலும் உறையும் பேரமைதி: சைதன்யா
  •  

ஏ.என். கிருஷ்ணவேணி

ஏ.என். கிருஷ்ணவேணி  ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர், பேராசிரியர். இலக்கிய அழகியல் சார்ந்த கல்வித்துறை நூல்களை எழுதினார். ‘சைவசித்தாந்தம் ஓர் அறிமுக நூல்’ குறிப்பிடத்தகுந்த படைப்பு.

ஏ.என். கிருஷ்ணவேணி

ஏ.என். கிருஷ்ணவேணி
ஏ.என். கிருஷ்ணவேணி – தமிழ் விக்கி
  •  

கோட்டை – ஒரு வாசிப்பு

வணக்கம் ஜெ.

நான் வாசு. ஆம்ஸ்டர்டாமில் வசிக்கிறேன். இன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் புனைவு களியாட்டு கதைகளில் ஒன்றானகோட்டைபற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அதையொட்டி என் வாசக அனுபவத்தை பற்றி எழுதிய சிறு குறிப்பு

இந்திய மரபில் காமம் என்ற சொல் ஐம்புலன்களின் விழைவுகளை மொத்தமாக சுட்டுகிறது. உயிர்கள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆதி விசை. நாவின் சுவையும் காமமே. மூங்கிலை நக்கும் காளை கன்று ( பலத்த இந்திரியம் மழலையில் நாவே என்ற அணைஞ்சியின் கூற்று). பசுவிடம் பால் பருக ஓடும் கன்று, சாந்தாவின் மூன்று வயது மகன் இருவருமே எதிர்கால நாணப்பன் ஆக இருப்பவர்கள் தான். தாயின் அணுக்கதில் இருந்து பிரிக்கப்பட கசப்பால் இளமையில் பெண் உடலை வென்று கசப்பை களைய முயல்பவர்கள். காமத்தை புனிதப்படுத்தாமல் அதன் உள்ளுறையும் வன்முறை பற்றி  பேசும் கதை. அதே சமயம் அந்த ஆதி விசையை புரிந்து அதே கடக்க முயல் பவர்களுக்கு மீட்பாகவும் அமைகிறது(குருசாமியில்லா அதுவாமசார தந்த்ரா மார்கம்). கதை முடிவில்  கதை சொல்லி சிறுவன் ஆணாக மாறும் தருணம் சுட்ட படுவது அழகு.

வாசு

கோட்டை ஜெயமோகன்

ஆனையில்லா வாங்க

  •  

சங்கரரை அறிதல்- கடிதங்கள்

ஜெ,

சங்கரதரிசனம் கட்டுரைகள் மிகுந்த வாசிப்புத்தன்மை கொண்டவையாக இருந்தன. ஒரே உரையில் வரலாற்றுப்பின்புலம், தத்துவப் பங்களிப்பு எல்லாமே சொல்லப்பட்டு விட்டது. சங்கரர் பற்றிய ஓர் அறிமுகத்தை அளிப்பதற்கு இந்த உரை அளவுக்கு முக்கியமான இன்னொரு வழி இன்று இன்று இல்லை. உரை என்பதனால் ஒரே ஓட்டமாக வாசித்துச்செல்ல முடிந்தது. நல்ல உதாரணங்கள், கதைகள் என அழகாகச் சென்றது. இதை கீதையை அறிதல் போல ஒரு நூலாக ஆக்கலாம். பலருக்கும் பயன்படும்.

ஶ்ரீராம் அருண்

அன்புள்ள ஜெ

சங்கரதரிசனம் உரை செறிவாகவும் அழகான ஓட்டத்துடனும் இருந்தது. கீதையை அறிதல் போல மிகுந்த சுவாரசியத்துடன் வாசிக்கத்தக்க நூலாக ஆக்கலாம். நான் முக்கால் மணி நேரத்தில் ஆறு பகுதிகளையும் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுச் சித்திரம் இத்தனை அற்புதமாக உருவாகி வருவதை கண்டு வியப்பு அடைந்தேன். அண்மையில் ஒரு நூல் இத்தனை மன எழுச்சியை உருவாக்கியதில்லை. சங்கரரின் பங்களிப்பு என்ன என்பதை தத்துவம், வரலாறு, அழகியல் என்னும் மூன்று நிலைகளிலும் சொல்லும் உரை. ஆனால் மிக எச்சரிக்கையாக புராணங்களைத் தவிர்த்து, மிகைப்படுத்தல்களை தவிர்த்து, கத்திமுனையில் சென்றிருக்கிறீர்கள். முற்றிலும் பகுத்தறிவுடன் அமைந்த பார்வை. Reason தான் அடிப்படையாக இருந்தது மொத்த உரையிலும். சங்கரர் பற்றிய புராணங்களை மட்டுமே கேட்டு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்த உரை புதிய காற்றுபோல இருந்தது.

சங்கர் கிருஷ்ணசாமி

  •  

தாவரங்கள் – கடிதம்

திருமதிலோகமாதேவியின் தாவரங்கள் மீதான ஈடுப்பட்டைச் சொல்லவிளக்கஎன்னிடம் அத்தனை வார்த்தைகள் இல்லைதாவரவியலுக்கென்று தன்னை முழுக்க தந்தவர்இன்று எங்களுக்கும் அதை அள்ளித் தந்தார்வீட்டிற்குள்ளிருந்து எழுத்தின் மூலம் மட்டும் கண்ட பேராளுமைகளை நேரில் கண்டு உறவாட  வாய்த்த்மைக்கு மீண்டும் நன்றி.

தாவரங்கள், கடிதம்

 

The video about the classes you are conducting at Unified Wisdom is very useful (you wrongly pronounced it as “United Wisdom” in some places). The way you are introducing the teachers and the subject is very precise

The classes, a Letter

 

  •  

தினம் தினம் புரட்சி

ஒவ்வொரு நாளும் முகநூல் நோக்கி கொதித்துக் கொந்தளிக்கும் அன்றாடப்புரட்சியாளர்கள் உண்மையில் எத்தகையவர்கள்? அத்தனை தீவிரமான உணர்வெழுச்சிகள் உண்மையில் இங்கே உள்ளனவா என்ன? ஏன் அந்தப் பாவனை நமக்குத் தேவையாகிறது?

  •  

ஆண்மகன்

தினமும் வீட்டுக்கு வந்து குப்பையை எடுத்துச் செல்வார் ஒருவர். பெயர் கணேசன். ஒல்லியான சிரித்த முகம். கடுமையான குடியாளர். மாலை மயங்கினால் அதி உற்சாகமாக இருப்பார். நேருக்குநேர் பார்த்தால் ஓங்கி ஒரு சல்யூட் அடித்துவிட்டு சிரித்துக்கொண்டே பின்னால் வருவார். அப்போது ஆங்கிலம் மட்டுமே பேசப்படும். ஃபிகேசன் என்று சேர்த்துக்கொண்டால் எச்சொல்லும் ஆங்கிலமாகிவிடுமென அறிந்தவர்.

வழக்கமாக வாசலில் ஏழரை மணிக்கே வந்து நின்று ‘அம்மா வேஸ்ட்!, வேஸ்ட் அம்மா!’ என்று கூச்சலிடுவார். ‘அம்மா உன்னை கணேசு கூப்பிடுறார்’ என்று சொல்லி அருண்மொழியிடம் கடும் வசவைப் பெற்றான் அஜிதன் ஒருமுறை. குப்பைகளைச் சேகரித்து மாநகராட்சி குப்பை போடுமிடத்தில் கொண்டு போடுவது தொழில். மாதம் வீட்டுக்கு நூறு ரூபாய். எண்பது வீடுகள் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தன.

இதுபோகக் குப்பையில் கொஞ்சம் மதிப்புமிக்க பொருட்கள் இருந்தாகவேண்டும். ‘சும்மா குப்பையக் கொண்டாந்து போட்டா நமக்குக் கட்டுமா?’ என்று சத்தம் போடுவார். அதுதான் அன்றாடக் கைச்செலவுக்கு. கூடவே நண்பர்களுக்கும் வாங்கிக்கொடுக்க வேண்டியிருப்பதனால் செலவு அதிகம் ‘அவனுகளுக்கு ஸ்திரம் தொளிலு இல்லல்லா?’ பழைய டிவியை போட்டோம். ‘இத சைக்கிளிலே வச்சுக் கொண்டுபோகமுடியாதுல்லா. வெள்ளம் குடிக்க அஞ்சு ரூபா குடுங்க’ என்று வாங்கிக்கொண்டார்.

வாசலில் மணியோசையுடன் நின்றார் கணேசு. அருண்மொழி அலுவலகம் போய்விட்டிருந்தமையால் நான் சென்று “என்ன கணேசு?” என்றேன்.

“சார் சம்பளம்?” என்றார்.

நான் துணுக்குற்று “அம்மா இருக்கிறப்ப வாறதுதானே?” என்றேன்.

“மறந்துட்டேன் சார்.நீங்க குடுங்க… நூறுரூவாதானே”

நான் “எங்கிட்ட ஏது அவ்ளவு பணம் கணேசு. இருபத்தஞ்சுரூபாதான் இருக்கு” என்றேன்.

கணேசு நம்பாமல் பார்த்தார்.

“சத்தியமா… அவ்ளவுதான் குடுத்திட்டுப் போனா… எனக்கு வேற கூரியர் அனுப்பவேண்டிய செலவு இருக்கு.”

கணேசு முகத்தில் புன்னகை விரிந்தது. “ஓக்கே சார்” என்று அடுத்த வீட்டுக்குச் சென்றார். அவரது சிரிப்பு அர்த்தம் நிறைந்ததாக இருந்தது என்று பட்டதனால் நான் ஒல்லியான பின்பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

திரும்பி வரும்வழியில் என்னைக் கண்டு சைக்கிளை நிறுத்திவிட்டு “வீட்டில ஒற்றைக்கா சார்?” என்றார்.

“ஆமா” என்றேன்.

“வெளிய போகமுடியல்ல இல்லியா?”

நான் அதற்கும் “ஆமா” என்றேன்.

“ஒரு கணக்கில செரியாக்கும் உள்ள காசோ பணமோ நேராக் கொண்டுவந்து பொண்ணாப்பிறந்தவளுக்க கையிலே குடுத்துட்டோம்ணு சொன்னா வீட்டில ஒரு அடுக்கும் சிட்டையும் இருக்கும். அவளுக பாத்து வல்லதும் குடுத்தா நம்ம சிலவிலெயும் ஒரு இது இருக்கும். அல்லாமப்பின்ன நம்ம கையிலே ரூவா இருந்தா அப்பப்ப எல்லாம் மண்ணாப்போவும்” என்றார் கணேசு.

“உண்மைதான்” என்றேன்.

“அஞ்ஞூறு ரூவாண்ணா இண்ணைக்கு பெரிய ரூவா. ஆனா நிண்ணுகுடிச்சா ரெண்டு ஏப்பத்துக்கு வராது இல்லியா? காசில்லாதப்ப பலசெலவுகள். காசு கையில வந்தாச்சுண்ணு சென்னா பின்ன ஒற்ற ஒரு செலவாக்கும்” என்றார்.

நான் அதற்கும் பலவீனமாகப் புன்னகை புரிந்து “பின்னே?” என்றேன்.

“பகலிலே குடிச்சா பின்ன சோலி முடிஞ்சுது. நான் செத்தாலும் காலம்பற பதினொண்ணு மணிக்குள்ள கையால தொட மாட்டேன். ஆனா நமக்கு அதுவரை நல்ல சோலி கிடக்கு. ஆனா சார் இப்டி வீட்டிலெ சும்மா இருந்தா மத்தவன் இருக்க விடமாட்டானே… வா வாண்ணுல்லா விளிப்பான்?”

நான் பீதியுடன் “ஆரு?” என்றேன்.

“மத்தவன், சொடலமாடன்… உங்கள விளிச்சா என்ன செய்விய?”

நான் வீட்டுக்குள் அச்சத்துடன் பார்த்தேன். சுடலை சஞ்சாரமா வீட்டுக்குள்?

கணேசே சிரித்தபடி “என்ன செய்விய? பச்ச வெள்ளம் சவைச்சுக் குடிச்சிட்டு இருக்க வேண்டியதுதான். அதில்லா பப்படம் எண்ணுகது மாதிரி ரூவாய எண்ணிக் குடுத்திட்டுப் போயிருக்கு அம்மா… செரி போவட்டும் வையும்பம் அம்மை வந்தபிறவு எப்டி, படியறுமா?”

நான் “குடுப்பாள்” என்றேன்.

“அங்க விட்டிரப்பிடாது சார். சண்டையப் போட்டு வேங்கிப்பிடணும்.. குடிக்காதவனுக்கு ஆயிரம் சந்தோசம் குடிக்கிறவனுக்குக் குடிதான் சந்தோசம். என்ன சொல்றியோ?”

ஒருமாதிரி நிலமை எனக்குப் புரியவந்தது. “கணேசு நான் குடிக்கமாட்டேன்” என்றேன்.

“செரி சார் நமக்குள்ள என்ன?”

“இல்ல சத்தியமா குடிக்கிறதில்ல”

“செரிசார்… லெகரி ஆம்புளைங்களுக்குள்ளதாக்கும். அதில தெற்றில்லே கேட்டேளா? ஆனா ஒண்ணு, உள்ள வேங்கி வச்சுக் குடிச்சா குடி மண்ணா வெளங்கும்… சொல்லுகேன்னு தெற்றா நினைக்கப்பிடாது. இப்பம் திற்பரப்பு அருவியப் பாத்தா என்னா ஒரு கோலாகலம், ஏது? நூறடி இந்தால வந்தா ஆனைக்கயம் சும்மாக் கெட்டிக்கிடக்கு. அருவியப்பாக்கல்லா பாண்டி நாட்டிலே இருந்து கெட்டும் கெட்டி வாறானுக. ஆனைக்கயத்தில எருமை குண்டி களுவுது… என்ன சொல்லுகேண்ணா சொடலைன்னா அவன் எளகணும். மத்த பிராமணனுகளுக்க சாமி மாதிரி தேனத்திலே இருந்தா போறாது. சாடினாலாக்கும் குருதைக்கு வெலை… இப்பம் சார் கள்ளன் கன்னம் வைக்குதது மாதிரி குடிக்குதிய. தெற்றுண்ணு சொல்ல வரேல்ல. கௌரவமுள்ள காரியமாக்கும். ஆனா நான் என்ன சொல்லுகேண்ணாக்க தீயிண்ணா அது நாலெடத்திலே பற்றிப்பிடிச்சு கேறி எரியணுமில்லியா? சும்மா நிண்ணா அத பிளாஸ்டிக்கு தாளுண்ணு நெனைச்சு பீயள்ள எடுத்துப்போடுவானுக… அதாக்கும்.”

நான் அயர்ந்து “செரி…” என்று உள்ளே செல்லப் போனேன்.

“இப்பம் நமக்கு சில போலீஸு தொந்தரவுகள் உண்டு கேட்டேளா? பதினஞ்சுநாள் டேசன்ல கையெளுத்துப் போட்டுக் குடுக்கணுமிண்ணாக்கும் ஏட்டு சொல்லுகாரு. நம்ம கோனாருதான். செரி போட்டும், நல்லாளு, அன்பா சொல்லுகாரு. அதுகொண்டு நான் காலம்பற வந்தேண்ணு இருக்காது. காசவேங்கி நாளைக்கு வச்சிருங்க. குடும்பப்பொம்பிளையள மாதிரி சார் இப்ப குடும்ப ஆம்புளையில்லா? சோலிக்குப் போக்கு இல்லேன்னு சொன்னாவ.”

“ஆமா”

”நல்லதாக்கும். சோலி என்ன மயிருக்கு? அம்மைக்கு சோலி இருக்குல்லா? செரி பைசாவ வேங்கி வைங்க. ஓக்கே?”

“நான் ஓக்கே” என்றேன்.

“நல்ல காரியமாக்கும் சார். உள்ள பைசாவ குடுத்திட்டு அண்ணண்ணைக்குள்ள சிலவுக்கு வேங்கினா வீணாப்போவாது. காலம்பற உறங்கி எந்திருக்கும்பம் மனசில ஆவலாதி இருக்காது. உள்ள சோறு சிந்தாம செதறாம பிள்ளையளுக்க வயித்துக்குள்ள போவும்” என்றார்.

நான் “அப்ப கணேசும் அந்தமாதிரி செய்தா என்ன?” என்றேன்.

“சீ, சார் என்ன சொல்லுது? பொட்டைகள அப்டி ஏத்தி விட்டா பின்ன அவளுக்களுக்க காலுநக்கி குடிக்கணும் சார். பொட்டைகள வைக்கிற எடத்தில வச்சா ஆம்புள ஆம்புளயா இருப்பான். நாமள்லாம் ரைட்டுராயலு தாட்டுபூட்டு சிங்கப்பூருசார். என்னாண்ணு கேட்டாள்னா ஏரியாவ கலக்கிடுவேன்ல… நாளைக்கு சாம்ராஜை கூட்டிட்டுவாறேன், கேட்டுப்பாருங்க. ஒருமாதிரி மசக்கின கெளங்குமாதிரி இருக்கதுக்கு கணேசனைக் கிட்டாது… வரட்டா. பைசாவ வேங்கி வைங்க.”

(Apr 20, 2014 முதற்பிரசுரம், மறுபிரசுரம்)

  •  

என்.கே.மகாலிங்கம்

இலக்கிய மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், சிற்றிதழாளர். இலங்கையில் பிறந்து கனடாவில் வசிக்கிறார் மு.தளையசிங்கத்தின் இளவலாக, அவருடைய பார்வைகளை முன்னெடுப்பவராக மகாலிங்கம் செயல்பட்டு வருகிறார். மகாலிங்கம் செய்துள்ள உலகச்சிறுகதை மொழியாக்கங்களும் நாவல் மொழியாக்கங்களும் தமிழுக்கு புதிய இலக்கிய உலகங்களைக் காட்டியவை.

என்.கே.மகாலிங்கம்

என்.கே.மகாலிங்கம்
என்.கே.மகாலிங்கம் – தமிழ் விக்கி
  •  

மாடன்மோட்சம், மூன்று விருதுகள்!

மாடன்மோட்சம் ஓர் அனுபவம்

மாடனின் திசைவெற்றி

மாடன்மோட்சம் என் கதையின் நாடகவடிவம். இந்த நாடகம் கேரள பயில்முறை நாடகப் போட்டியில் சிறந்த நாடக ஆக்கம்,  சிறந்த நாடக இயக்கம் சிறந்த நடிப்பு ஆகியவற்றுக்கான மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறது. மாநில அளவில் தேர்வுசெய்யப்பட்ட நாடகங்களில் இறுதிப்போட்டிக்கு வந்த ஆறுநாடகங்களில் இருந்து இந்த தெரிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றுவிருதுகளையும் ஒரே நாடகம் பெறுவது மிக அரிதான ஒரு வெற்றி.

இந்த நாடகம் உருவான விதமும் கவனிக்கத்தக்கது. புகழ்பெற்ற ஓர் இலக்கிய படைப்பே நாடகத்துக்குத் தேர்வுசெய்யப்படுகிறது. பிறகு அது இன்னொரு தேர்ந்த நாடக ஆசிரியரால் நாடகமாக ஆக்கப்படுகிறது. இன்னொரு இயக்குநரால் இயக்கப்படுகிறது. ஒரு நாடகம் பார்க்க இரண்டாயிரம் பேர் ஏன் கூடுகிறார்கள் என்றால் அவை அரிதான காட்சி – கருத்து அனுபவங்கள் என்பதனால்தான்.

ஜெ

 

ராஜ்மோகன் நீலேஸ்வரம்- நாடக ஆசிரியர்

அன்புள்ள ஜெ,

இரண்டு நாள் முன்பு ஈரோடு கிருஷ்ணன் அழைத்து நாளை மதியம் ஈரோட்டில் கிளம்பி மாலை திருச்சூரில் மாடன் மோட்சம் நாடகம் பார்த்துவிட்டு நள்ளிரவே ஈரோடு திரும்பாலாம் என்கிற திட்டத்தை அவர் சொன்னபோது எனக்கு ஒரு படைப்புறப்பாட்டில் பங்கு கொள்வதான உணர்வே முதலில் எழுந்தது. பொதுவாக கிருஷ்ணன் சார் திட்டத்தை முன்வைக்கும் விதமும் அப்படித்தானிருக்கும், எந்தெந்த திசையிலிருந்து யார்யார் படைத்துணை வரக்கூடும், நமக்கு தேவையான அவரிடம் இருக்கும் படைக்கலம் என்ன, அவர் வராவிட்டால் இரண்டாம் மூன்றாம் கட்ட மாற்றுத் திட்டங்கள் என ஒரு வரைவாக அவர் மனதில் இருக்கும். இதுபோன்ற திட்டங்களை கூட தவிர்க்கலாம் ஆனால் அதன் உள்ளுறையாக அமைத்திருக்கும் ஒய் நாட்? என்ற கேள்வியை மறுதலிப்பது கடினம். எனவே ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனும் சிபியும் நானும் செல்வதாகவும் கோவையில்சிண்டன்விக்ரம் வந்து படைத்துணையாக இணைந்துகொள்வார் என்றும் வகுக்கப்பட்டது.

திருச்சூர் சங்கீத மற்றும் நாடக அகாடெமி வளாகத்தில் நாடகம் துவங்கும் நேரம் மாலை ஏழு. நாங்கள் நாலரை மணிக்கெல்லாம் திருச்சூர் சென்றடையும் நிலைமை இருந்தது, அந்த இடைவெளியைபயன்படுத்தும் பொருட்டு  திருச்சூரின் சில வாய்ப்புகளை விவாதித்துக் கொண்டே சென்றோம். கலைக்கூடம் செல்வதா, சினேகதீரம் கடற்கரை செல்வதா, வடக்குநாதன் கோயிலை சுற்றி அமைந்த பூங்காவில் நடைபயில்வதா அல்லது பழமையான தேவாலயம் (திருச்சூரில் அமைந்துள்ள நல்ல தேவாலயங்கள் குறித்து சென்றமுறை சொல்லியிருந்தீர்கள்செல்வதா என அலசினோம். மாடன் மோட்சத்தின் நாடக வடிவை எழுதிய ராஜ்மோகன் நீலேஸ்வரத்துடன் கிருஷ்ணன் தொடர்பில் இருந்தார். அவர் அகாடெமி வளாகத்தில் இருப்பதாக சொன்னதால் முதலில் அவரை சந்திக்க அகாடெமிக்குள் சென்றோம். வளாகத்தின் உள்ளே கலைத்தன்மையின் தேஜஸ் பொருந்திய முகங்கள் தென்பட்டுக்ககொண்டே இருந்தன. ஒரு முகத்தில் தென்படும் பொலிவும் அறிவுத்தன்மையுமே அவரை கலைஞனாக காட்டிக் கொடுத்துவிடும் என்று விக்ரம் ஒரு கொள்கையை முன்வைத்தார். அக்கொள்கை தவறாக ஆவதற்கான உதாரணங்களை சுட்டிக்காட்டி கிருஷ்ணன் அதை நிராகரித்தார். கொஞ்ச நேரத்தில் தேனீர் விடுதியில் கிருஷ்ணனும் நீலேஸ்வரமும் முகத்தைக் கொண்டே ஒருவரையொருவர் எடைபோட்டு கண்டு கொண்டனர். நீலேஸ்வரம் மிகுந்த உவகையுடன் எங்களை அங்கிருப்பவர்களிடம் அறிமுகப்படுத்தினார். கோவை விக்ரம் அண்ணனை நாங்கள் அனைவரிடமும் மெய்க்களம் நடிகராகவே அறிமுகப்படுத்தினோம். அறிமுகங்கள் முடியும்போது அவர்ஒரு பாடு நாடகங்கள் நடித்தநடிகராக வளர்ந்துவிட்டிருந்தார், அவருக்கும் முகத்தில் ஏற்புடன் அதற்கான தேஜஸ் வந்திருந்தது.

சிறந்த நடிகர்:  பிரமோத் வெளியநாடு சிறந்த இயக்குநர்: ஜோப் மடத்தில்

ஏழு மணி நிகழ்வுக்கு ஐந்து மணி முதலே அகாடெமி வளாகம் அத்தனை உயிர்ப்புடன் இருந்தது எங்களுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. திருச்சூர் கலாச்சார மையமாக இருப்பது பற்றி கிருஷ்ணன் கேள்வி எழுப்ப நீலேஸ்வரம் விளக்கினார். இந்த அகாடெமி வளாகத்தில் இசையும் நாடக நிகழ்வுகளும் தொடர்ச்சியாக உண்டு, அருகில்தான் சாகித்ய அகாடெமி வளாகம், அதுபோக கலாமண்டலத்தில் இருந்து அடிக்கடி வருபவர்களும் உண்டு, எனவே கலா நிகழ்வுகளுக்கும் அதனுடன் உரையாடும் சுற்றமும் இங்கு எப்போதும் உயிர்ப்புடன் இருப்பதாகவே சொன்னார். நிகழ்வு நடக்கும் திறந்தவெளி மைதானத்திற்கு செல்லும் வழியில் வழக்கமாக நாடகங்கள் நடத்தப்படும் உள்ளரங்கம் ஒன்று இருந்தது. அங்கு அதிகபட்சம் ஐநூறு பேர் வரை நாடகம் பார்க்கலாம். நம் நாடகத்திற்கு இந்த அரங்கம் எல்லாம் காணாது என்றார் நீலேஸ்வரம். புகழ்பெற்ற நாடகங்கள் உள்ளரங்கில் நடத்தப்படுவதாக இருந்தால் இரண்டு மூன்று காட்சிகளாக அடுத்தடுத்த நாளில் நடத்தப்படுவதும் உண்டு என்றார். நாங்கள் எதையும் முழுதாக நம்பிவிடாமல்தீர விசாரிப்பதே மெய்என்ற கொள்கைப்படி கவனமாக இருந்தோம்

ஐந்தே முக்கால் மணிக்கெல்லாம் சிறிய பரபரப்புடன் சட்டென ஒரு வரிசை உருவானது. எதற்கென தெரியாவிட்டாலும் வரிசை என ஒன்று இருந்தால் அதில் நிற்கவேண்டியது தான் என நாங்களும் சென்று நின்றோம். அறிவுஜீவித் தன்மைக்கான விதவிதமான தோற்றங்களை பார்த்தபடி நின்றிருந்தோம். தாடியும் மீசையும் திருத்தப்பட்டு தலைமுடி பின்னால் முடிச்சிடப்பட்டவை. திருத்தப்படாமல் காற்றில் நீண்டு அலையும் தாடிகள், விரித்து பரந்திட்ட சுருள் முடிகள், உள்ளங்கி மட்டும் அணிந்து தோளில் சிறுபையுடன் நின்றிருந்த மினிமலிஸ்டுகள். ஊருக்கு சென்றவுடன் தாடியும் முடியும் வளர்த்தி இரண்டு பைகள் வாங்கி சீக்கிரம் கலைஞனாக ஆக வேண்டும் என சிபி ஆவேசப்பட்டான். வரிசை நீண்டு கொண்டே இருந்ததில் எங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் தலையெண்ண முடியவில்லை. சிபி தள்ளி சென்று வரிசையின் விஸ்தாரத்தை படம் பிடிக்க முயன்றான். ஆனால் வரிசை எங்கள் பார்வை வெளியை தாண்டி நீண்டு வளைந்திருந்தது. இனி ட்ரோன் கேமிராதான் வேண்டும். கூட்ட எண்ணிக்கையை மதிப்பிடும் உணர்வெல்லாம் எங்களிடம் மட்டும்தான் இருந்தது. அமைப்பாளர்கள், இயக்குனர் எல்லாம் அவரவர் உரையாடலில் இருந்தனர். விஷ்ணுபுரம் விழாவில் இப்போதெல்லாம் அரங்கு நிறையும் உறுதிப்பாடு இருந்தாலும் ஒருமுறை எண்ணிக்கையை மதிப்பாடாமல் இருக்கமுடிவதில்லை, சில பஞ்சகால வழக்கங்கள் அத்தனை எளிதில் மறைவதில்லை.

நாடக இயக்குனர், எழுத்தாளர் எல்லாம் இயல்பாக வரிசையில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். கலைஞர்கள் போக நாடகம் பார்ப்பதற்கெனவே வந்திருந்த பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தனர். குழந்தைகள், பாட்டிகள், குடும்ப பெண்கள், அலுவலகம் முடித்த கையுடன் வந்தவர்கள். அனைவரும் இயல்பான மகிழ்ச்சியுடன் இருப்பதையும், சந்தடிகள் இல்லாமல் வரிசை பேணுவதையும் கண்ட பின்பு ஐயங்களை கடந்து கேரளத்தின் அறிவார்ந்த முகத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. வாழ்வில் ஒரு வருடமேனும் கலாச்சார மையமாக அமைந்த சிறுநகர் ஒன்றில் குடிபெயர்ந்து வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. திருச்சூர் அதற்கு பலவகையிலும் உகந்த நகரமாகத் தோன்றியது.

திறந்தவெளி அரங்கிற்கான கதவு திறக்கப்பட்டு உள்ளே சென்றோம். நாங்கள் எதிர்நோக்கிய மேடைக்கான இடத்தில் கல்பாதைகளும், அதைச்சுற்றி புல் மண்டியது போலும் இருந்தது. நடுவில் ஒரு பீடமும் பின்னணியில் பனையோலைகள் நிறுத்தப்பட்டிருக்க, அதன் பின்பக்கம் இருந்த கருப்பு திரையும் சுற்றி உயரத்தில் இருந்த ஒளி விளக்குகளைக் கொண்டே அவ்விடம்தான் மேடை என்பதை ஒருவாறு யூகித்து அருகில் சென்று தரையில் அமர்ந்து கொண்டோம். இருபதடி தள்ளி பின்னிரையில் நாற்காலிகள்.மேடையை மையமாகக் கொண்டு ஒரு விசிறிபோல் அரைவட்ட வடிவில் பார்வையாளர் வெளி அமைந்திருந்தது. நாடகம் துவங்கும் முன் மேடையை பார்த்து அமர்ந்திருந்த நேரத்திலேயே நாடக அனுபவம் தொடங்கிவிட்டது. மேடை என்பது அங்கு நிகழப்போவதற்கான சாத்தியங்களை உள்ளடக்கியது. கதகளியில் திரைநோட்டம் அவ்வாறான அனுபவத்தை அளிக்கும். இங்கு மேடைக்கு பின் நிறுத்தப்பட்டிருந்த பனை ஓலைகளும் மாடன் வந்து வீற்றிருக்கப் போகும் காலியான பீடமும் அந்த எதிர்பார்ப்பை அளித்தது.

கொஞ்ச நேரத்தில் புலர்காலையின் பறவையொலிகள் கேட்கத் துவங்கின. இருட்டில் மாடன் வந்து அமர, அவரின் தலைக்கு மேல் பின்பக்கத்திலிருந்து ஒரு விளக்கு சூரியனின் பொற்கதிர்களை வீசி ஒளியூட்டியதில் மாடன் வீற்றிருந்த பனங்காட்டில், பக்கவாட்டில் அமைந்திருந்த சிறுவர்கள் விளையாடும் குளத்தில், அவ்வழகிய கிராமத்தில் பொழுது புலர்ந்தது. நாங்கள் புற உலகின் அந்தி சாய்விலிருந்து நாடக மேடையின் விடியலுக்குள் சென்றோம்.

நாங்கள் மாடன் ஒளிபெறுவதையே பார்த்துக் கொண்டிருக்க இந்தப்பக்கம் இரண்டு சிறுவர்கள் குளத்தில் விளையாடும் சத்தம் கேட்டது. அப்போதுதான் அந்த கல்பாதைகள் இடையே ஒரு குளம் இருப்பதே எங்களுக்கு உறைத்தது. இருநாடன்பையன்கள் உடல் வழுவழுக்க மெய்யாகவே நீரில் தள்ளியும் பிடித்தும் விளையாண்டனர். பின்னால் ஒருவர் மீன்பிடி கூடையுடன் கிளம்பி வந்து மீன்களுக்காக கவனத்துடன் தேடிக் கொண்டிருந்தார். முண்டு அணிந்த ஒரு அம்மாள் வந்து பையன்களை அதட்டிவிட்டுப் போக, மீன் பிடிப்பவர் சந்தோஷ கூச்சலுடன் பிடிபட்ட வல்லிய மீன் ஒன்றை தூக்கிக் காட்டினார். அது அவரின் கையில் இருந்தபடி துள்ளியது. மாடன் இவற்றை பார்த்தபடி நிறைவுடன் அமர்ந்திருக்க, பொழுது சாயும் நேரத்தில் ஒரு நடுவயதுக்காரர் பையன்களிடம் விளையாடினது போதும், இருட்டிய பின் மாடனின் பனங்காட்டில் இருந்தால் மாடன் அடித்துவிடும் என்று பயம்காட்டி விட்டு போனார். பையன்களில் ஒருவன்மாடன குறிச்சு எங்களுக்கு ஒன்னும் பேடியில்லாஎன்று எகிறினான். ஆனால் அவனே கொஞ்ச நேரத்தில் நைஸாக கிளம்பிவிட மீதமிருந்த பையனுக்கு பீதி தொற்றிக் கொண்டது. பொறுமையிழந்து மாடனே அவனை ஆற்றுப்படுத்த எத்தனிக்க அதற்குள் அதைக் செவிகொள்ளாமல் அவன் ஓடிவிட்டான். பின்னால்  மாடன் எழுந்து வந்து போக வேணாம், பேடிக்க வேணாம் மக்களே என ததும்பினார். நிங்கள் கிடந்து களிப்பதை நோக்கிக் கொண்டு இருப்பது தானே எனக்கு சந்தோஷம் என்றார். இந்த அப்பன்மார்களும் அம்மைமார்களும் தன்னைப் பற்றி வேண்டாத கதைகளை எல்லாம் கிளப்பிவிட்டு பயத்தை உண்டாக்குவதாக முறையிட்டார். ‘ஞான் ஒரு காவல் தெய்வமானு, காவல் தன்னே எண்ட பணி, பேடிப்பிக்குகது அல்லாஎன குழைந்தார். அங்கு தொடங்கி நாடகம் முடியும் வரை மாடனின் உணர்வுநிலைகளில் எல்லாம் மொத்த திரளும் உடன் பயணித்தது.

ஒரேசமயம் சீண்டலும் பிணைப்பும் அதட்டலும் குழைவும் கொண்டதுமான மாடனுக்கும் பூசாரிக்குமான உறவு அத்தனை உள்ளடுக்குகளுடன் கதையில் சொல்லப்பட்டிருக்கும். நாடகத்திலும் அது அவ்வாறே வெளிப்பட்டது. இந்த கூறுகெட்ட வெவரம் தெரியாத தெய்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வேன் என பூசாரி புலம்பும் இடங்கள், உலக நடப்புகளை வேதக்கார கடவுளை விவரிக்கும் இடங்கள் எல்லாம் உச்சக்கட்ட அங்கதம். ஒரு கட்டத்தில் பூசாரி கடுப்பாகி இனி மாடன் தன் வித்தைகளை இறக்கினால் தான் ஜீவிதம், வித்துக்களை வீசியெரிய வேண்டும் என்பார். பலகாலமாக கொடை பெறாத மாடன் ஒருமாதிரி அசமஞ்சமாக இருக்கபட்டியெங்கில் கடிக்கணும், தெய்வமெங்கில் உபத்திரவிக்கணும்என அறிவுறுத்தினார். துளித்துளியாக பூசாரியின் ஆவேசத்திலிருந்து மாடன் தன் ஆவேசத்தைப் பெற்றுக் கொண்டது. அதன்பிறகே திங்கு திங்கென்று குதித்து அங்குமிங்கும் நடைபோட்டு ஆவேச கூச்சலிட்டது. கூப்பாடுகள், ஆவேச உணர்ச்சிகள், வெறியாட்டுகள் எல்லாம் தெய்வத்திலிருந்து மனிதனில் இறங்குவதா அல்லது இங்கிருந்து அங்கு செல்வதா என ஒருகணம் தோன்ற எப்போதும் அது பூசகனிலிருந்து தெய்வத்துக்கு செல்வதாகவேத் தோன்றியது.

கதையிலிருந்து நாடகத்தில் மேலெழுந்த சில தருணங்களும் உண்டு. மாடன் படுக்க வைக்கப்பட்டதும் பலகாலம் கழித்து முதன்முறையாக ஆகாயத்தை பார்ப்பார். அவர் இத்தனை காலமும் கிடைமட்டமாக மண்ணில் ஊன்றிய பிரஜைகளின் வாழ்வை மட்டுமே பார்த்துப் பழகியவர். ஆகாயத்தைப் பார்த்ததும் அதுவரை ஆலோசித்த திட்டங்களை மறந்து துள்ளி குதித்து ஓட ஆரம்பித்து விட்டார். இத்தனை நட்சத்திரங்களின் ஆச்சர்யத்தை அவரால் தாளவே முடியவில்லை. ஓடிப்போய் பனை மரத்தில் ஏறி ஆகாயத்தை இன்னும் அருகில் பார்க்க முயன்றார். மாடனின் துள்ளலைப் பார்த்து பூசாரியும் அவருடன் இணைந்து வானத்தை அவருக்கு காட்டித் தந்தார். மாடன் ஒவ்வோர் நட்சத்திரமும் ஒரு தெய்வமா என்று வினவ பூசாரிஆ முப்பத்தி முக்கோடி உண்டுஎன்றார். ஒரு காலி இடத்தை சுட்டிக்காட்டி மாடன் ஒத்துழைத்தால் தெய்வமாகி அங்கொரு நட்சத்திரமாய் இடப்பிடித்து விடலாம் என்றார். அதன்பின் பூசாரி ஒருகணம் ஏதோ நினைத்தவராய் விசும்பி இத்தனை தெய்வங்கள் இருந்தாலும் எனக்கான தெய்வம் அதில் ஒன்றுகூட இல்லை என விசும்பினார். மாடன் அவரை சமாதானப்படுத்திஞான் உண்டடா உனக்கு, ஞான் ஆகாசத்தின் தெய்வம் அல்லா, உனக்க தெய்வம் மண்ணிண்ட தெய்வாமானுஎன்று சொல்லும் இடத்தில் மண்ணில் நிகழ சாத்தியமான ஓர் அற்புத உறவை நேரில் கண்டோம்.

மாடன் சாய்க்கப்பட்ட பின்பு அங்கு இந்துத்துவ பஜனை கோஷ்டிக்கும் கிறிஸ்துவ பஜனை கோஷ்டிக்குமான காட்சி அதகளமானது.ரார் ர ரார் ர ரார் ர.. என்று மெல்லிய மீட்டலாக இந்து தரப்பில் துவங்கும் ஓசை எதிரிலிருந்து லால்லா லால்லா என சற்று வேகத்துடன் எதிர்வினையை பெறும். ஒரு கட்டத்தில் ஒரு தரப்பின் எதிர்வினைகளை பிற தரப்பின் எதிர் வினைகளை விட மேலும் ஆவேசமாக, மேலும் மோசமாகிக் கொண்டே சென்று மனிதத்தன்மையற்ற விகாரத்தை அடைந்துவிடும். வசனங்கள் அற்று மனித உடல் வெளிப்பாடுகளின் அபத்தத்தைக் கொண்டே தொடர்புறுத்துவதாய் இக்காட்சி அமைந்திருந்தது.

நாடகம் முடிவதற்குள் மாடன் நமக்கு மிகவும் அணுக்கமாகிவிட்டிருந்தார், அருகில் சென்று மீசையை ஒருமுறை இழுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றும் அளவுக்கு. பூசாரியிடம் பேசுகையில் மாடன் தன் கட்டுகளை இழந்து வெளிப்பட்டார் என்றால் பீடத்தில் அமையும் போது சிலைத்த முகத்திலேயே அந்தந்த தருணத்திற்கான உணர்ச்சியை வெளிப்படுத்தினார். இறுதிக் காட்சியில் மாடனுக்கு பின்னால் புதிதாகக் கட்டப்பட்ட கோவிலின் பொற்சுவர்கள் உயர, அச்சுவர்கள் சிறையாக காட்சியளித்தன. எங்கிருந்தோ கிளம்பிய மூன்று வேட்டுகள் வானில் வெடித்து ஒளிப்பூக்களாய் சிதறி புதிதாக கட்டப்பட்ட கோயிலின் குடமுழுக்கு நடந்தேறியது. காருண்யமிக்க அருள்மிகு மாடன் தம்புரான் மந்திரத்தால் கட்டப்பட்ட தன் பீடத்தில் முடிவிலா காலத்தை நோக்கி பீதியுடன் அமர்ந்திருந்தார்.

நாடகம் முடிந்து கூட்டத்தில் வெளிவரும் சில நிமிடங்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. மதிப்பிடும் மனம் செயல்படாமல் புதியதொரு கலைவடிவை ஒன்றரை மணிநேரம் உள்வாங்க முடிந்ததன் ஆச்சர்யத்தை அப்போதுதான் உணர்ந்தேன். பின்னர் கதையுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சாரமான எதையும் மாற்றிவிடவில்லை என்பதும் மகிழ்ச்சியாக இருந்ததுதிருச்சூர் திரள் கலைந்து செல்லும் போதும் ஒழுங்கை விடாப்பிடியாக கடைப்பிடித்தது. கலைஞர்களை கண்டு வாழ்த்து சொல்லும் வரிசையில் பெருங்கூட்டம் இருந்தது. நாங்கள் நீலேஸ்வரத்தை மட்டும் தேடிப்பிடித்து விடைபெற்று கிளம்பினோம்.

வெய்யோனில் இந்திரபிரஸ்தத்தின் கால்கோள் விழவின் போது ஓர் அங்கத நாடகம் நிகழும். அதில் நாடக மேடையின் பல்வேறு சாத்தியங்கள் வெளிப்பட்டிருக்கும். அடைமழை, மின்னல் வெட்டுகள், அலைகளில் அசைந்தாடி வரும் படகு, காண்டவ வன எரிப்பு என விரிவாக எல்லாம் மேடையிலேயே நிகழ்ந்து அதற்கான பின்னணி வேலைப்பாடுகளும் குறிப்புணர்த்தப்பட்டிருக்கும். வாசிக்கையில் அவற்றை காட்சிப்படுத்தி மனம் ஏற்றுக் கொண்டாலும் அரங்கு நாடகங்கள் வலுவாக இல்லாத தற்காலத்தில், இவ்வாறான நாடகங்களை நாம் காண்பது சாத்தியமேயில்லை என்றே நினைத்திருந்தேன். இதைச் சொல்லும் போது இங்கு நான் முதன்மைப்படுத்துவது பிரம்மாண்ட அரங்கு நிறையும் காட்சிகளையோ, அதற்கான ஏற்பாடுகளையோ அல்ல. அவ்வாறு சில அரங்கு நிறையும் காட்சிகள் இந்நாடகத்திலும் இருந்தன. ஆனால் அவை எவ்வகையிலும் முதன்மையானதாகவோ வியப்பையோ அளிக்கவில்லை. மாறாக எளிய அன்றாட பொருட்களின், பார்வை கோணங்களின் சாமர்த்தியமான பயன்பாடும், ஒளி ஒலி மாற்றங்களின் பயன்பாடும் வியப்பையும் ஆழ்ந்து செல்லும் உணர்வையும் அளித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக சாரமான கதையும் அதை உள்வாங்கிய நாடகக் குழுவும். விஷ்ணுபுரம் விழாவில் மெய்க்களம் நாடகங்களை அடுத்து மாடனம் மோட்சம் நாடகத்தின் வழி இன்று மேடையின் சாத்தியங்களை மெய்யென உணர்கிறேன். நாடக இயக்குனர் பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் வேறொரு ஊரில் இந்நாடகம் அரங்கேரலாம் என்றார். வாய்ப்பிருக்கும் தமிழ் வாசகர்கள், நண்பர்கள் நிச்சயம் காணலாம். அதுவொரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும்.

டி..பாரி

திசைகளின் நடுவே தொகுப்பு

  •  

What is the use of science to philosophy?

I am reading the news about the botany class and the Ayurveda class. I feel that it is necessary for a common man to understand these fields. They are useful in daily life. But will they help a thinker?

What is the use of science to philosophy?

 

What is the use of science to philosophy?இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்Leonard Woolleyமற்றும்Jaquetta Hawkesபற்றிய தகவல்களை இணையத்தில் வாசித்தேன். வர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றிகள் பல.

மானுடவரலாறு, கடிதம்

  •  

இலட்சியவாதிகள் இன்று எங்கே?

காந்திகளிடமிருந்து ஒரு விருது

அன்புள்ள ஜெ,

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் கையால் நீங்கள் விருது பெறும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு இணையச் சூழலில் அடிக்கடி காதில் விழும் சொற்றொடர் ஒன்று உண்டு. அந்தக்காலத்தில் மாபெரும் தியாகவாழ்க்கை வாழ்ந்த ஆளுமைகள் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது இல்லை, இனிமேல் வரவே போவதில்லை, வாய்ப்பே இல்லை என்றெல்லாம் எழுதுகிறார்கள். இலட்சியவாதமே இல்லை என்று சொல்வது ஒரு பெரிய வழக்கமாகவே உள்ளது. ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக ஓர் இலட்சியவாத உலகையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று இருக்கிறார்களா?

ராஜி சாம்பசிவம்

அன்புள்ள ராஜி,

இந்தப் பேச்சை முன்வைப்பவர்கள் எவர் என்பதே முக்கியம். அவர்கள் உண்மையில் இலட்சியவாதத்தை பார்ப்பவர்கள் அல்ல. இருட்டை மட்டும் பார்ப்பவர்கள். இருட்டை முன்வைக்கவே அவர்கள் இலட்சியவாதத்தை இழந்தவர்களாகவும், அதை எண்ணி ஏங்குபவர்களாகவும் பாவனை செய்கிறார்கள்.

அவர்கள் ஏன் இருட்டையே பார்க்கிறார்கள். இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்களிடமுள்ள உளச்சோர்வு, சலிப்பு. இரண்டு, அவர்கள் தங்களுடைய சொந்த இருட்டை நியாயயப்படுத்த முயல்கிறார்கள். ‘இப்பல்லாம் யார் சார் யோக்கியன்’ என்பவனே உண்மையான அயோக்கியன். அவனுக்கு தன் அயோக்கியத்தனம் ஒன்றும் அரிதானதல்ல, எல்லாரும்தான் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்று நிறுவவேண்டியுள்ளது.

இலட்சியவாதம் என்பது ஓர் இயல்பான மனநிலை. எப்படி தன்னலமும், தீமைநாட்டமும் இயல்பாக மானுடரிடம் உள்ளதோ அதைப்போல இதுவும் உள்ளது. சிலரிடம் தன்னலமும் தீமைநாட்டமும் ஓங்கியிருக்கும், சிலரிடம் இலட்சியவாதமும் தியாகநோக்கும் ஓங்கியிருக்கும். அவர்கள் அதில்தான் இன்பத்தையும் நிறைவையும் கண்டடைய முடியும். அவர்களால் அப்படித்தான் இருக்கமுடியும். இரு சாராரும் என்றுமிருப்பார்கள், இரு தரப்பினிடையே போராட்டமும் என்றுமிருக்கும்.

தன்னலம் ஓங்கி இலட்சியவாதம் பின்னடைவு கொள்ளும் காலங்கள் உண்டு. இலட்சியவாதம் ஓங்கி தன்னலம் பின்னடைவு கொள்ளும் காலங்களும் உண்டு. காந்தியைப்போல ஒருவர் முன்னெழுந்து வந்து ஓர் அரசியல் – மெய்யியல் பேரியக்கத்தை முன்னெடுக்கையில் ஒட்டுமொத்தமாகவே இலட்சியவாதம் மேலோங்கியிருக்கும். ஆனால் அப்போதும் தன்னலமும் தீமையும் சற்றுக் குறைவான விசையுடன் இருந்துகொண்டேதான் இருக்கும். அதேபோல தன்னல யுகத்திலும் சற்றுக் குறைவான வீச்சுடன் இலட்சியவாதம் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆனால் மானுட வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அல்லது ஒட்டுமொத்தமாக நம் சமூகச்சூழலைப் பார்த்தால் மானுடனின் உயர்விழுமியங்களும் இலட்சியவாதமுமே ஓங்கியிருக்கின்றன என்பதைத்தான் காணமுடிகிறது. மெய்யாகவே அறங்கள் அற்றுப்போன ஒரு காலகட்டத்தில் நாம் சில நாட்கள்கூட வாழமுடியாது. ஒவ்வொரு கணமும் நாம் சகமனிதனின் அறவுணர்வை நம்பியே வாழ்கிறோம். ஒட்டுமொத்தமாகச் சமூகம் கொண்டுள்ள நீதியுணர்வை நம்பியே நாம் உயிருடனிருக்கிறோம்.

மானுடம் ஒவ்வொரு தலைமுறைக்கும் தன் அறவுணர்ச்சியை மேம்படுத்திக்கொண்டுதான் வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்விலுள்ள நீதி, சுதந்திரம், நிகர்நிலை ஆகியவை செழுமைப்பட்டுக் கொண்டேதான் வருகின்றன. அதுதான் தன்னலம், தீமை ஆகியவற்றின்மேல் அறமும், இலட்சியவாதமும் அடைந்துகொண்டே இருக்கும் வெற்றிக்கான சான்று. மேலும் மேலும் முன்னகரும் கனவையே நாம் இலட்சியவாதமாகக் கொண்டிருக்கிறோம். இன்றைய சூழல்மேல் நமக்குள்ள மனக்குறையும் ஒவ்வாமையும்கூட மேலும் சிறந்த ஒன்றைநோக்கிச் செல்லும் விழைவின் விளைவே. அதுவும் இலட்சியவாதம்தான்.

எனில் இன்றைய சூழலில் இலட்சியவாதிகள் எங்கே? இன்று அவர்கள் ஏன் நம் கண்ணுக்குப்படவில்லை? இதைத்தான் எளிய உள்ளங்கள் அவ்வப்போது கேட்கின்றன.

அவர்கள் நம்மைச்சூழ்ந்து இன்றும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். பொதுநீதிக்காகப் போராடுபவர்கள், மக்கள் பணியாளர்கள், கொடையாளர்கள், தியாகிகள் எத்தனைபேர். கொஞ்சம் கவனித்தால் ஒவ்வொருநாளும் அவர்களைக் காணமுடியும். நாம் நமது அன்றாட வாழ்க்கையில் மூழ்கியிருப்பதனால் அவர்களை அறிவதில்லை. நம் அச்சங்களால் அவர்களை அறிந்தாலும் கண்களை மூடிக்கொள்கிறோம்.

சேவை மட்டுமல்ல தன்னலமே அற்று முழு அர்ப்பணிப்புடன் செய்யப்படும் அறிவுப்பணியும் இலட்சியவாதமே. கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன், பேரகராதியைத் தயாரித்த எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் இன்று உள்ளனரா? ஆம், நம்மைச்சுற்றி இன்றும் அத்தகைய அருஞ்செயல்கள் நடத்துகொண்டேதான் உள்ளன.

எனில் என்ன வேறுபாடு? சென்ற தலைமுறையினர் அறவோரை, தியாகிகளை, அறிவுத்தளத்தில் அருஞ்செயல் புரிந்தோரை மதித்தனர், அவர்களைத் தேடிச்சென்று அறிந்துகொண்டனர், அவர்களைப் போற்றினர். ஆகவே அவர்கள் அக்காலகட்டத்தின் முதன்மை ஆளுமைகளாகத் திகழ்ந்தனர். முன்னுதாரணங்களாக கருதப்பட்டனர்.

மாறாக நாம் இன்று அரசியல்வாதிகளால் தங்கள் அதிகார நோக்குடன் உருவாக்கப்படும் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஆளுமைகளை மட்டுமே அறிந்திருக்கிறோம். அவர்களே சாதனையாளர்கள் என்றும் அவர்களே நம்மை காப்பாற்றியவர்கள் என்றும் நம்புகிறோம். உண்மையான பணியாளர்கள் செய்த சாதனைகளின் விளைவை எல்லாம் அதிகாரம் உருவாக்கும் பிம்பங்கள் மேல் ஏற்றுகிறோம்.

சமகாலத்தில் நாம் செல்வமும் அதிகாரமும் கொண்டவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கும் பிம்பங்களையே மதிக்கிறோம். ஏனென்றால் இன்றைய ஊடகங்கள் முழுமையாகவே அரசியல்வாதிகள், செல்வந்தர்களின் கைகளில் உள்ளன.

இன்று ஏன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அறியப்படுவதில்லை? நம் கண்முன் தானே மாபெரும் மக்கள் பணியாளரான வி.ஜீவானந்தம் வாழ்ந்து மறைந்தார், வாழ்ந்தபோதும் மறைந்தபோதும் நாம் அவரை ஏன் அறிந்திருக்கவில்லை? கிருஷ்ணம்மாளிடமிருந்து நான் விருதுபெற்ற அந்நிகழ்விலேயே சிவராஜ், அன்புராஜ் என மக்கள்பணியாளர்கள் குறைந்தது இருபதுபேர் அரங்கு நிறைந்திருந்தனர். கிருஷ்ணம்மாளின் மகன் பூமிகுமாரும் மகள் சத்யாவும் கூட முற்றிலும் தனிவாழ்க்கையே அற்ற மாபெரும் மக்கள்பணியாளர்களே.

நேற்று வையாபுரிப்பிள்ளையும் தூரனும் இருந்தார்கள் என்றால் இன்று குடவாயில் பாலசுப்ரமணியனும் அ.கா.பெருமாளும் இருக்கிறார்கள். அத்தகைய அர்ப்பணிப்புள்ள அருஞ்செயலாளர் பலர் உள்ளனர். நாம் அவர்களைப் பற்றி அறிதலில்லாமல் இருக்கிறோம். பிரச்சினை இருப்பது நம்மிடமேநாம் அவர்களை அறியவில்லை, மதிக்கவில்லை என்பதனால் அவர்கள் சிறியவர்கள் ஆகிவிடுவதில்லை. நம் அறியாமை அவர்களை இல்லாதவர்களும் ஆக்கிவிடுவதில்லை.

அடிப்படையான பிரச்சினை ஒன்றே. சமகால அரசியல். அது அதிகாரவெறி கொண்டது. அதன்பின் ஒரு தரப்பை இன்னொரு தரப்பு கடித்துக்கிழித்துக் குதறுவது. சாதி, மதம், இனம், மொழி, வட்டாரம் என நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிடுவது. நாம் நம்மையறியாமலேயே அந்த வெறியில் கலந்து ஏதேனும் ஒரு பக்கத்தை சார்ந்துவிடுகிறோம். நம் பக்கத்து வெற்றுவேட்டுக்களை ஏற்கவும் நம்மை ஏற்காத எவரையும் வெறுத்து இழித்துரைக்கவும் பழக்கப்படுத்தப்படுகிறோம்.

இந்தச் சமகால அதிகார அரசியலென்பது ஒரு வகை ரேபீஸ். நாம் ஒருவரை ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் நோயுற்ற கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நம்மை மனநோயாளிகளாக்கி அதிகாரம் நோக்கிச் செல்லும் கூட்டம் நாம் என்ன சிந்திக்கவேண்டும் என சொல்கிறதோ அதை மட்டுமே சிந்திக்கிறோம். ஆகவே நமக்கு மெய்யான இலட்சியவாதிகள் தெரிவதில்லை. அந்த குருட்டுத்தனத்துடன் அவர்கள் இல்லவே இல்லை என சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

நாம் இலட்சியவாதம் மேல் உண்மையான ஆர்வம்கொண்டவர்கள் என்றால் இலட்சியவாதிகளை நாமே தேடிச்சென்று அறிவோம். அவர்களையே நம் காலகட்டத்தின் முகங்கள் என முன்வைப்போம். அது மட்டுமே நாம் செய்யக்கூடுவது.

ஜெ

  •  

எஸ்.ஏ.பி.

இதழாளர், எழுத்தாளர். குமுதம் பல்சுவை வார இதழை நிறுவி ஆசிரியராக இருந்து நடத்தியவர். எஸ்.ஏ.பி. என்னும் பெயரில் நாவல்களை எழுதினார்எஸ்.ஏ.பி. அண்ணாமலை தமிழ் இதழியலில் முற்றிலும் பொழுதுபோக்கு அணுகுமுறை மட்டுமே கொண்ட இதழியலை அறிமுகம் செய்தவராக அறியப்படுகிறார். அவருடைய குமுதம் இதழ் அரசியல், சமூகவியல் நோக்கங்கள் ஏதுமற்று வணிகநோக்கு மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் நவீன இலக்கிய ரசனை கொண்டவராக இருந்த எஸ்.ஏ.பி.அண்ணாமலை அசோகமித்திரன், ஜெயந்தன் போன்ற பல எழுத்தாளர்களை பொதுவாசிப்புத் தளத்தில் அறிமுகம் செய்தார்.

எஸ்.ஏ.பி.அண்ணாமலை

எஸ்.ஏ.பி.அண்ணாமலை
எஸ்.ஏ.பி.அண்ணாமலை – தமிழ் விக்கி
  •  

சொல்லாழி, குகை, ஆட்டக்கலாட்டா – கடிதம்

குகை- ஜெயமோகன்

அன்புள்ள ஜெ,

சதீஷ் மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.

இந்தச் சந்திப்பின் முன்னரும் , பின்னரும் எழுதிய சிறு குறிப்பு. குகை கதைக்கு நன்றி, அதன் பின் நேற்று காதுகள் மீண்டும் வாசித்தேன், நல்ல அனுபவமாக இருந்தது.

மனக்குகை ஓவியம் 

சென்ற முறை இந்திராநகர் Atta Galatta வில் நடந்த கதை வாசிப்புக் கூடுகையைப் பற்றி முக்கால் எழுதியது இருக்கிறது. கூடுகை இரண்டு குறுநாவல்கள் பற்றியது 1) கிளி சொன்ன கதை 2) தீ அறியும்.  கூடுகைக்குப் பின், எவ்வளவு மனங்கள் உண்டோ அவ்வளவு பார்வைகள் உண்டு என்று மட்டுமே சொல்ல முடியும். எனக்கும் வாசிப்பில் சில திறப்புகள் கிடைத்தன. கேட்டல் இனிது. அதற்குள் நாளை அடுத்த கூடுகை வந்துவிட்டது

Atta Galatta இடத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். இந்த புத்தகக் கடையில் ஒரு மேஜையை கலந்துரையாட நமக்கென்று ஒதுக்குகிறார்கள். புத்தகத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். உள்ளேயே காபி டீயெல்லாம் கிடைக்கிறது. எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறார்கள். உட்கார்ந்து பேச மிக அழகான இடம். வசதியான இருக்கைகள், சிலபேர் லேப்டாப் , டேப்லட் போன்றவைகளை மேஜையில் வைத்துப் பேசினார்கள்.

இந்த முறை குகை என்ற குறுநாவல்இந்தக் கதை கடந்த சில நாள்களில் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

எப்போதாவது மெட்ரோ ரயிலில் அலுவலகம் செல்வதுண்டு. இது பெரும்பாலும் பறக்கும் ரயில். ஆனால் இது பாதாளத்தில் முதலில் செல்லும் ஒரு இடம் இருக்கிறது. அதுவரை பரந்து விரிந்து, கண் பார்க்கும் வரை தெரிந்த உலகம், ஒரு கணத்தில் குகைக்குள் செல்லும் போது இல்லாமல் ஆகும்.எல்லோருக்குள்ளும் ஒரு சிறு துணுக்குறல் ஒரு நொடியாவது நிகழும் என்றே நினைக்கிறன். வெளியே  பார்க்க ஒன்றும் இல்லை. விமானம் டேக் ஆப் ஆகிப் பறக்கும் அந்த நொடி போல் , எந்த குகையும் மனதை எதோ செய்கிறது.

ஒருவர் நாட்கணக்காய் நீண்டபடியே செல்லும் ஒரு நீண்ட குகைக்குள் பயணம் செய்ய வேண்டும் என்றால் எப்படி இருக்கும். இந்தப் பயணத்தின் சக மனிதர்களையும் இவரே கற்பனை செய்கிறார் என்றால்? எப்போதாவது தேவைக்கு மட்டும் குகையை விட்டு வெளியில் வந்து செல்ல வேண்டும் என்றால் ? இதற்க்கு மேல் இந்த குகையுமே இவர் கற்பனை என்றால் ?

பல வருடங்களுக்கு முன் , நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் , ஊரில் இருக்கும் நாட்களில் நூலகத்திற்குச் செல்வது வழக்கம். பெரும்பாலும் நானும் நூலகரும் மட்டுமே இருப்போம். நாளில் முதல் வேலையாய் யாரும் நூலகம் செல்ல மாட்டார்கள். அப்போது மூன்றாவதாய் உடன் சேர்ந்த ஒருவரைத்தான் இங்கு சொல்ல வேண்டும். அப்போது இவர் பன்னிரண்டு படித்து முடித்த பையன். இவருடைய அப்பா நூலகரின் நெருங்கிய நண்பர். ஏனென்றால் அவரும் நூலகர் , வேறு ஒரு ஊரில், ஆனால் இருப்பது இங்கே. ஊரில் உரக்கடை வேறு வைத்து நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராமல் தற்கொலை செய்துகொண்டார். கடன் பிரச்சனை என்று நூலகர் சொன்னார்.குடும்பம் சிக்கலில் விடப்பட்டது. இந்த நிலையில் தான் பையனை நூலகத்தில் பார்த்தேன். ஒரு நாள் அவர் பெயரை கார்த்திக் M.B.B.S , M.D , F.R.C.S   என்று எழுதி கையெழுத்துப் போட்டிருந்தான். இரண்டு மூன்று பக்கங்கள் பின் தள்ளிப் பதிவேட்டைப் பார்த்தேன். எல்லா நாட்களும் அப்படியே எழுதப் பட்டிருந்தது. நான் அதை பார்ப்பதை அவன் பார்த்துவிட்டான். வேறு யாரும் இல்லை. இருக்கும் ஒரு மேஜையில் எதிரே அமர்ந்தேன். ‘எப்படின்னாலும் டாக்டர் ஆயிரணும் னா… ‘ என்று என்னிடம் சொன்னான் . பன்னிரண்டாவதில் தோற்று விட்டான் என்று சொன்னார்கள். ‘ ஒரு ரெண்டு தடவை மதுரை மெடிக்கல் காலேஜ் நானே போய்ப்  பார்த்தேன்செக்யூரிட்டி உள்ள விடமாட்டாங்கான்உள்ள போயிட்டா சீட்டு வாங்கிருவேன்உங்களுக்கு யாரும் தெரியுமான்னா.. ‘ என்று தொடர்ந்து கேட்டான். ‘இல்லப்பா..ஆனா அதுக்கு என்ட்ரன்ஸ் எல்லாம் இருக்குல்ல..’ என்றேன். ‘உள்ள போயிட்டா அப்புறம் தெரியாம படிச்சி வெளிய வந்துறலாம்னா..உங்களுக்கு ஆள் யாரும் தெரியுமா..உள்ள மட்டும் போயிட்டா போதும்என்று மீண்டும் சொன்னான்.  எனக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை. பையன் நல்ல சிவப்பு, அழகாக இருப்பான். இஸ்திரி போட்ட முழு சட்டை , கைகளை இரண்டே மடிப்பு மடித்து விட்டிருப்பான். பின் கை கட்டி யோசித்த வண்ணம் நடப்பான். ‘விசாரிச்சு பாக்கேன்என்றேன். மீண்டும் ஓரிரு வாரங்களில் மதுரை மருத்துவக் கல்லூரி செல்வதாகச் சொன்னான். கிடைக்கும் வரை விடப்போவதில்லை என்றான். நூலகர் வீட்டில் அம்மா சொல் கேட்பதில்லை என்று சொன்னார். அப்பா மறைந்த பின் புத்தி பேதலித்து விட்டது என்று கூறினார்.   

அந்த உலகம் நமக்கு பிடிபடுவதே இல்லை. எப்போதும் மனநிலை பிறழ்ந்தவர்களை கூர்ந்து பார்க்கிறேன். ஊருக்கு வண்டியில் போகும்போதும் , வரும்போதும் தன்னந்தனியாய் , பல கீலோமீட்டர்களுக்கு ஒன்றும் இல்லாத , தலைபிளக்கும் வெய்யிலில் . கையில் ஒரு துணிப்பையுடன் , அழுக்கு உடுப்புகளுடன் , சடைக்கற்றை தொங்க தனியே நடக்கும் ஒருவரையாவது பார்க்கிறேன். அவர் மனதில் என்ன ஓடும் என்பது எனக்கு எப்போதும் பெரிய கேள்வியாய் உள்ளது

நான் சைக்கிளில் செல்லும் போது ஓரிடத்தில் ஒரு பஸ் ஸ்டாப்பில் வசிக்கும் மனிதரை தினமும் பார்க்கிறேன். நீளமான உட்காரும் நாற்காலிகளுக்குப் பின் நாலைந்து பிளாஸ்டிக் பிக் ஷாப்பர் பைகள். துணிகள் மற்றும் நாம் குப்பை என்று சொல்பவை, பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை. சில தினங்களில் நாற்காலியில் கைவைத்து கீழே அமர்ந்திருப்பார். பக்கத்தில் உள்ள அடுத்த நிறுத்தத்தில் மட்டுமே நாற்காலியில் அமர்வார். எப்போதும் படுப்பதில்லை. இவரைப் போல் ஊரில் ஒருவர் சென்ற முறை ஒரு நாலைந்து பிக் ஷாப்பர் வைத்து ஒரு மூடிய கடைமுன் வாழ்ந்துகொண்டிருந்தார். இம்முறை சென்றபோது கடை திறந்து விட்டது. அன்று நான் டீ குடிக்கும் கடையில் எதிரே டீ குடித்துக் கொண்டிருந்தார். வாழ்வை இப்போது இரண்டு பைகளில் சுருக்கி விட்டார். எங்கும் இப்போது இரண்டு பைகளுடன் காண்கிறேன். என்ன நினைக்கிறார் என்று அறிய பேசிப் பார்க்க வேண்டும் என்று தோன்றும், எதோ உள்ளிருந்து அணை போடுகிறது. கொஞ்சம் பார்த்தால் தப்பில்லை, ஆனால் ரொம்பப் பார்த்தால் சிக்கலாகலாம். அன்று ஒருவர் பள்ளிக்கட்டடத்தின் முன்னிருந்த மிகப் பெரிய போர்டை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார். நானும் அவர் பின் நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அவர் பார்த்துக்கொண்டிருத்த பலகையில் மாணவர்களின் படங்கள் , 2024 நடந்த போட்டியில் பள்ளி வென்றது பற்றி  எழுதப் பட்டிருக்கிறது. இவர் கையில் இருப்பது ஒரு இருபது ரூபாய் நோட்டு. இரண்டு கை விரித்து நோட்டை கண் கீழே பிடித்திருக்கிறார். மடக்கிய இடது உள்ளங்கையில் ஒரு இரண்டு ரூபாய் நாணயம். ஒரு முறை அண்ணாந்து போர்டைப் பார்ப்பார். கண் கீழே வந்து நோட்டைப் பார்ப்பார். பின் கையை விரித்து நாணயத்தைப் பார்ப்பார். இதை ஒரு பத்து முறையாவது நான் பின்னால் இருந்து பார்க்க செய்துகொண்டிருந்தார். எனக்கு எதுவும் பிடிபடவில்லை. ஒரு கணத்தில் 2024-ல் உள்ள 20-தை , கையில் உள்ள 20 ரூபாய் தாளையும், உள்ளங்கையில் இருக்கும் நாணயத்தின் இரண்டையும் பார்த்து மனதில் ஒரு புரிதலை  வரைகிறார் என நினைத்தேன். ஒரு சிலர் எங்கள் இருவரையும் பார்த்துச் செல்வதைப் பார்த்து டீ கடைக்குள் நுழைந்தேன். தினமும் ஒரு ஒரு நம்பரும் கண்டறிவது இவ்வளவு பரவசமாகுமா, இல்லை துன்பமா? ஒரு ஒரு சொல்லும் இப்படித்தானா?  . My Stroke of Insight – Jill Bottle Taylor எழுதிய ஒரு புத்தகம். ஒரு நாள் மூளை ஸ்ட்ரோக்கில் அவர் நினைவாற்றல் அழிகிறது. அந்தக் கணத்தில் அவரே மருத்துவமனைக்கு போன் செய்து , முதலுதவி வரவழைத்து மருத்துவமனையில் சேர வேண்டும். ஆனால் அவருக்கு நம்பர் என்றால் என்ன என்பது அழிந்து போகிறது. அவற்றை படமாய் நினைத்து எவ்வாறோ தப்பிப் பிழைக்கிறார் என்பது ஞாபகம் வந்தது. எனக்கு இப்போது இவர் என்ன நினைக்கிறார் என்பது கேள்வியாய் நின்றது

ஆனால் குகை நாவலில் வருவது ஒரு மனம் பிறழ்ந்தவரின் சித்தரிப்பில் வரும் கதை. அதுவே இதை சிறப்பாக்குகிறது. அவர் மன ஓட்டம் படிக்கும் நமக்கு வெளிப்படுகிறது. முதல் முறை படிக்கும்போது அவர் சொல்லும் கதை மிகவும் அழுத்தமாக நம்மை அவர் பக்கம் இழுக்கிறது. அவரது பிறழ்வு , அங்கங்கே கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஆனால் மேலோட்டமாய் படித்தால் கதை கச்சிதமாய் இருக்கும். எங்கும் சந்தேகம் எழுவதில்லை. மீண்டும் ஒருமுறை படிக்கும் போது, ஒரு துணுக்குறல் ஏற்படுகிறது

அவரிடம் அம்மா மட்டும் கொஞ்சம் பேசுவார். மனைவி உள்பட வேறு யாரும் பேசுவதில்லை. புது வீட்டில் பெரிய அறை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். அம்மா தூக்க மாத்திரை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். சிலசமயம் மாத்திரையை வாயில் மட்டும் வைத்து உள்ளே சென்று துப்பிவிடுகிறார். சிலமுறை கையில் வாங்கி அப்புறம் தின்பதாகச் சொல்லி அறை உள்ளே சென்று விடுகிறார்.

அவர் நூலகத்தில் படித்த கலைக்களஞ்சியங்களையும், ஆங்கிலேயர் பற்றிய தரவுகளையும் வைத்து தன் வசிக்கும் வீட்டின் கீழே  (வடமாநிலம் என நினைக்கிறேன்) ஒரு குகையை அவரே கண்டுபிடுக்கிறார். இங்குதான் கதை பாய்ச்சல் போடுகிறது. வீட்டைத் தோண்டி குகையை கண்டறிவதும் , படிப்படியாக தினமும் உள்ளே நுழைந்து ஒன்றோடொன்று இணைக்கும் பல குகைகளை கண்டுபிடிப்பதும், பின்னர் வரைபடத்துடன் அது ஊரையே இணைக்கின்றதென்பதும் வெகு அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. என்ன பாறை , ஏன் இங்கு இப்படி பாறை, எப்படி அவர் அந்த தொடர் சங்கிலியை கண்டு பிடுக்கிறார் என்பதெல்லாம் மிக நுணுக்கமாய் வருகிறது.

அவருக்கு இப்போது நகரின் கீழ் குகை வழியாக மேலே தெரியும் எந்த இடத்திற்கும் செல்ல முடியும். மேலே பேசுபவர்களின் குரல் கேட்கிறது. அப்பா நினைவு வருகிறது. ஓரிடத்தில் தினமும் அப்பாவிற்குப் பிடித்த ஆர். டி .பர்மன் பாடல்கள் கேட்கிறார். ஆங்கிலேயர்களைப் பார்க்கிறார். கடந்து செல்கிறார்கள். பார்த்தவுடன்குட் மார்னிங், சார்என்கிறார். அவர்கள் வழிக்கு வராதே என்கிறார்கள், இவரும் போவதில்லை. இந்தப் பெரிய ரகசியத்தை அம்மாவிடம் முதலில் ஒரு முறை  சொல்ல நினைத்து சொல்லாமல் , பின்னர் சொல்கிறார். இந்த இடம் அழகானது. இவர் எப்படி வீட்டின் கீழே சுரங்கம் இருக்கிறது, ஊரையே இணைக்கிறது, ஏன் வெள்ளைக்காரன் இதைக்  கட்டினான் என்று விளக்கிச் சொல்கிறார்.   மேலும் இப்போது ஊரில் அணு குண்டு விழுந்தால்  தான் மட்டும் தப்பித்து விடுவேன் என்று சொல்கிறார். குண்டு வெடித்து சில நாள் கழித்து வெளிவருவேன் என்கிறார். இவ்வளவுக்கும் அம்மா அவருக்கு சோறு போட்டு குழம்பும் ரசமும் ஊற்றிய வண்ணம், குழம்பும் ரசமும் சாப்பாடும்  மட்டுமே பதில் பேசுகிறார்.  தன்னை வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் தான் ஜூனியர் டாக்டரிடம் மிரட்டி தான் உடலுறவு கொண்டதை அதே இடத்தில்  குகையின் கீழே இருந்து  கேட்டதாக சொல்கிறார்

யாருக்கும் தெரியாமல் கீழே இருந்து பூமியை பிளந்து கொண்டு மேலே தோன்றவேண்டும் என நினைக்கிறார். அவரே நினைத்து அவர் தோன்றும் இடம் இருவர் இருக்கும் ஒரு படுக்கையறை. பார்த்த அவரை துரத்துகிறார்கள், குகையும் வழி காட்டாமல் மூடி விடுகிறது.

இந்தக் கதையைப் படித்ததும் நினைவுக்கு வருவது, Beautiful Mind திரைப்படம். இதுவும் உள்ளிருந்து சொல்லப்படுவது.நீங்களும் ஹாலுசினேஷன் உள்ளேயே இருந்திருப்பீர்கள், ஆனால் எது உண்மை, எது மாயத்தோற்றம் என்பது நடந்தபின் தான் தெரியும்.

எம்.வி.வி யின் காதுகள் இதை நெருங்கிய படைப்பு. இந்தக் கதையின் மகாலிங்கம் அவரே என்று அவர் சொல்லியிருக்கிறார். 20 வருடம் காதில் ஒலிக்கும் கெட்ட வார்த்தைகளுடன் வாழ்ந்திருக்கிறார். எப்படியோ வெளியே வந்து இந்தக் கதையையும் எழுதியிருக்கிறார்.

பின்சேர்க்கை

கூட்டத்திற்குப் பின் எழுதியது

நான் செல்லும் போது தேவதேவன் சார் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தார். யுவ புரஸ்கார் பரிசு பெட்ரா லோகேஷ் ரகுராமன் இருந்தார். ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்கள் பலர் இருந்தனர். மிகத் துடிப்பான நிகழ்வு. நான் படிக்கத்  தவற விட்டது, கடைசியில் நடந்தது பொருந்தாக் காமம் என்பதையே என நினைத்தேன். பலர் பல்வேறுவிதமாய் படித்திருந்தனர். ஸ்வேதா சொல்லிய மேற்கோள் இந்த தான் கதையின் மிகச் சிறந்த சுருக்கம் என நினைத்தேன்: “ஒரு ஓவியன் சிறையில் அடைந்திருந்தாலும், அவனுக்கு உரிய வானத்தை அவனே வரைந்து , பறந்து வெளியேறுவான்

முத்து,

பெங்களூர் 

https://muthuvishwanathan.blogspot.com/2025/02/blog-post.html

  •  

கோவையின் சிற்பியின் இந்தியப் பயணம்

சே.ப.நரசிம்மலு நாயுடு

ஆரியர் திவ்வியதேச யாத்திரையின் சரித்திரம்

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு தன்னுடைய ‘திவ்வியதேச யாத்திரை சரித்திரம்’ நூலின் (அடையாளம் பதிப்பகம்) நூன்முகத்தில் “திவ்யஸ்தல யாத்திரை மாந்தர்க்கு சித்த சுத்தி முதலியன தப்பாது விளைவிப்பதோர் ஞானசாதனமாகும் என்பது யுக்தி அனுபவமாக சித்தமாக இனிது அறியப்படுதலின் அது சுருதிமொழி மாத்திரையாய் வருவதொன்றன்று….” என்று கடுந்தமிழ்நடையில் ஆரம்பித்தாலும் நல்லவேளையாக இந்தநடையை நூலில் கொண்டுவராமல் பெரும்பாலும் பேச்சுநடையிலேயே எழுதியிருக்கிறார். தென்னாட்டு, வடநாட்டு மக்களில் யார் சுத்தமானவர்கள் என்று ஒப்புநோக்கி கடைசியில் இவ்வாறு தீர்ப்பளிக்கிறார். “தென்தேசத்தாரின் பாத்திரங்களின் அழுக்கும் பிரயாகை ஜனங்களின் வஸ்திரங்களின் அழுக்கும் சமம் என்றும், தென்தேசத்தாரின் வஸ்திரசுத்தியும் பிரயாகை தேசத்தாரின் பாத்திரசுத்தியும் சமமென்றும் சொல்லலாம்”. பயணஇலக்கியத்தின் முன்னோடி நூலான இது பதிப்பு கண்டது 1889 ஆம் வருடம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

1886 ல், கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள கோயம்புத்தூரின் பிரதிநிதியாகக் கலந்துகொள்வதோடு குடும்பத்தோடு திவ்யதேச யாத்திரை செய்யவும் முடிவு செய்து 1886 டிசம்பர் 5ஆம் தேதி கோயம்புத்தூரிலிருந்து புகைவண்டியில் கிளம்பி ஆற்காடு, ரேணிகுண்டா, ரெய்ச்சூர், மன்மார், சோக்பூர், ஜபல்பூர் வழியாக அலகாபாத்தை அடைகிறார். வழியில் காசி,பிரயாகை முதலிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகள் தொல்லை தாங்காமல், தன்னுடைய தூரவீசிணியை (பைனாகுலர்) இழந்த வருத்தத்தோடு, சென்னையில் முன்னர் வசித்த, பல மொழிகளும் பேசத்தெரிந்த ரங்காராவ் என்ற பிராமணரை பணம் கொடுத்து உதவியாளராக அமர்த்திக்கொள்கிறார். அலகாபாத்து, காசி, கயா முதலிய எல்லா இடங்களிலும் ’ஆயிரம் தேள் கொட்டுவதுபோன்ற’ குளிரில், புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்தும், பிரார்த்தனைகள் பல செய்தும், பித்ருக்களுக்கு திவசம் கொடுத்தும் வந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்வதோடு அந்தந்த இடங்களின் பூர்வசரித்திரம் மற்றும் தற்கால நிலைமை குறித்து விளக்கியும் செல்கிறார். பின்னர் கயாவில் தன் குடும்பத்தை ஒரு பிராமணர் வசம் ஒப்புவித்துவிட்டு, தான்மட்டும் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று மீள்கிறார். அன்றைக்கிருந்த குறைந்த பிரயாணவசதிகளைக் கொண்டுபார்த்தால் இது ஒரு சாகசப்பயணமேதான்.

பிரயாகையில் ‘எக்கா’ எனப்படும் ஒற்றைக்குதிரைவண்டிதான் முக்கியமான போக்குவரத்து சாதனம். இரண்டுபேர் இடுக்குப்பிடித்தாற்போல பயணம் செய்யலாம். ‘தென்தேசத்து ஒற்றை மாடு, இரட்டை மாட்டு வண்டி போல் செய்துகொண்டு சுகப்படத்தெரியாமலிருப்பதுவன்றியில், கபிலை ஏற்றமிறைக்கும் மாடுகளை பின்போகப் பழக்கிவைக்காமல் ஒவ்வொரு இரைப்புக்கும் அவிழ்த்துக்கொண்டுபோய்க் கட்டி காலத்தை வீணாக்குகிறார்கள். இது விஷயத்தில் யாம் இரண்டொரு முறை சொல்லிக்கொடுத்தும் அவர்கள் அனுசரிக்கப் பிரியம்கொள்வதாய்த் தோன்றவில்லை’ என்கிறார்.

பிரயாகையில் நாயுடுவுக்கு ஒரு விந்தையான அனுபவம் நேர்கிறது. அவருடன் அழைத்துச் சென்ற ராமாராவின் சகோதரி மகளுக்கு பேய் பிடித்துவிடுகிறது. அதாவது சிலநாட்களுக்கு முன் கங்கையில் குளிக்கச் சென்று, எல்லோரும்பார்க்க ஆற்றோடுபோய்விட்ட அவள்கணவன், இரவில் கனவில் வந்து ‘வா, போய்விடலாம்!’ என்று அழைக்கும் நேரம் அவளுக்கு உடலை முறுக்கிக்கொண்டு பேய் பிடித்தாற்போல ஆகிவிடுகிறது. அன்றும் அப்படியே நேர, தாங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று அந்தப்பெண்ணின் தாயார் முறையிட, தன்னுடன் அழைத்துச் சென்ற மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காதபோது, சிறிது வேப்பிலையை முகத்திற்குநேரே வீசி, தனக்குத்தெரிந்த மந்திரங்களைச் சொல்கிறார். அந்தப் பெண் நலமடைகிறாள். இதேபோன்ற அனுபவம் அவருக்கு காசியிலும் நேர்கிறது.

காசியில் நாயுடு தங்கியிருக்கும் பிராமணரின் வீட்டில் வேலைசெய்து கொண்டிருக்கும் வேணுபாய் என்கிற மராட்டிய பிராமணப்பெண்ணுக்கும் இதே போன்ற ஒரு நிலை ஏற்படுகிறது. இவள் தன்னுடைய அண்ணன், தம்பி மனைவியரின் கொடுமை தாங்காமல் காசிக்கு ஓடிவந்த இளம்விதவை. இதுபோன்ற பலரையும் தொடர்ந்து காண்கிறார். காசியின் மூன்று கஷ்டங்கள் ராண்டி, சாண்டி(மாடுகள்), படீல் என்கிறார் நாயுடு. ராண்டி என்றால் விதவைகள். வீட்டில் குடும்பத்தாரின் கொடுமை தாளாத இளம்விதவைகள் காசியில் கங்காஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டால் அடுத்தஜென்மத்திலாவது தீர்க்கசுமங்கலிகளாக இருக்கலாம் என்கிற நம்பிக்கையில் ஊரைவிட்டுக் கிளம்பி வந்துவிடுகிறார்கள். இவர்களை ஆரம்பத்தில் பிதுர், சிரார்த்த காரியங்களுக்கு வேலைக்கு வைத்துக்கொள்ளும் பண்டாக்கள் அவர்கள் பருவமடைந்த பிறகு விபசாரத்தில் ஈடுபடுத்திவிடுவதோடு, ராணிபோல இருக்கும் தம் மனைவிமார்களுக்கு வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொள்கிறார்கள். ’காசி மகாபுண்ணிய க்ஷேத்ரமாகையால் விபசாரத்தை தோஷமாகப் பாராட்டக்கூடாது என்கிறார்கள் சிலர். என்ன நியாயமோ தெரியவில்லை?’ என்கிறார் நாயுடு. இளம்விதவைகள் படும் பாடுகளை வங்கஇலக்கியத்தின் மூலம் அறிந்த நமக்கு இவர்களில் எத்தனைபேர் அந்தந்த வீட்டாராலேயே கொண்டுவந்து விடப்பட்டர்களோ என்ற கேள்வி எழாமலில்லை. காசியின் இன்னொரு துயரமாக நாயுடு குறிப்பிடுவது கழிவறை வசதியின்மை. அடுக்கடுக்கான மாடி வீடுகள். ஆனால் ஒரு வீட்டிலும் தனிப்பட்ட கழிப்பறை என்று கிடையாது. ஒரு தளத்தை மட்டும் அதற்கென்று ஒதுக்கி விடுகிறார்கள். சுத்தம் செய்வதும் கிடையாது.

பிரயாகையில், காசியிலும் நாயுடு பார்க்கச்சென்ற கலாசாலைகளில் இவரை உரையாற்றச் சொல்ல இவரும் தயக்கத்தோடு ஆழ்வார்கள், நாயன்மார்கள் பெருமையைக்கூறி ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். இதேபோல கல்கத்தா காங்கிரஸில் ஒரு கலந்துரையாடலுக்கு தலைவராக இருக்க வாய்ப்புக் கிடைக்கிறது. பெயரளவில் கேள்விப்பட்டிருந்த அத்தனை தேசியத்தலைவர்களையும் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. ’கல்கத்தா நகரமண்டபத்தைப் போல ஒரு அழகான கட்டிடத்தை இந்து தேசத்திலேயே கண்டதில்லை. வந்து கூடியிருந்த மூவாயிரம் ஜனங்களில் எத்தனைவிதமான தொப்பிக்காரர்கள், உடுப்புக்காரர்கள், பாஷைக்காரர்கள், மீசைக்காரர்கள்? அத்தனை பேரும் ‘தேசாபிமானம்’ என்னும் பொதுவிஷயத்திற்காக ஆயிரக்கணக்கான மைலைக் கடந்து வந்து கூடியிருந்த அழகை வருணிக்க அந்தக் கம்பநாட்டார் பிறந்து வந்தாலன்றி என்னால் முடியாது’ என்கிறார் நாயுடு. அங்கு ஹூக்ளி நதியில் நண்பர்களோடு சிறு கப்பலில் பயணம் செய்து வந்து ஒரு ஆங்கிலேயபாணி நடன நிகழ்ச்சிக்குச் செல்லுகிறார். அங்கு வங்காள பாபுக்கள் இசைத்த மேற்கத்திய இசையை கேட்டுக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த ஷியாமாராவ் விட்டல் என்கிற பம்பாய் ஹை கோர்ட் வக்கீல் நாயுடுவின் கையைப்பிடித்துக்கொண்டு ’இந்த கீதம் கோயம்புத்தூர் ராகவய்யர் கீதத்தைவிட சுகமாக இருக்கிறதா என்ன?’ என்று கேட்க, நம்மூர்க்காரர் பெயர் எங்கெல்லாம் பரவியிருக்கிறது என்று ஆனந்தப்படுகிறார் நாயுடு.

லாகிரிவஸ்துகள் மற்றும் பெண்களின் மீதான வடநாட்டு மக்களின் மிதமிஞ்சிய மோகம், தேங்காய் பருமனுள்ள கொய்யாப்பழங்கள் மற்றும் பிற கனிகள், முஸ்லீம் படையெடுப்புகளினால் ஏற்பட்ட சிதிலங்கள், சமண பௌத்தத் தலங்கள், விவசாயச் செய்திகள், ஆங்காங்கு தாம் கண்ட தொழில்துறை முன்னேற்றங்கள், ரயில் பயணத்தில் இந்திய மக்களைப் பற்றி தவறாகப்பேசிய வெள்ளையருடன் விவாதத்தில் ஈடுபட்டது, சென்னை பீப்பிள்’ஸ் பார்க் தீ விபத்து, ‘பாஞ்ச் ரூபியா ஆவ்’ என்று அழைக்கும் வெள்ளைக்கார வேசிகள் என்று பல செய்திகளைப் பதிவுசெய்கிறார் நாயுடு. அவருக்கு வரும் கடிதங்களும், தந்திகளும் மொத்தமாக ஒருவர் மூலம் சேகரிக்கப்பட்டு அவரிடம் வந்து சேர்வதாக ஏற்பாடு.  அவருடைய முக்கிய உறவினர் இறந்த செய்தியே அவருக்கு தாமதமாகத்தான் வந்து சேர்கிறது. இன்றைக்கு அரைமணிநேரம் ‘ஃபோன் சிக்னல்’ இல்லாவிட்டால் ஏற்படும் நம்முடைய பரிதவிப்பின் பின்னணியில் இதைப் புரிந்துகொள்ளலாம். பாட்னா, அயோத்தி, கான்பூர், லக்னோ, மும்பை, டெல்லி, ஆஜ்மீர், உஜ்ஜயினி, ஆந்திரா, கர்நாடகா என்று கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் விரிந்த ஒரு பயணத்திற்குப்பிறகு 1887 பிப்ரவரி 25 ஆம் தேதி கோயம்புத்தூர் வந்து சேர்கிறார் நாயுடு.

அலகாபாத் திரிவேணிசங்கமத்தில் கோயம்புத்தூர் வாசிகளுக்காக நாயுடுவின் பிரார்த்தனை – ’ஓ! கோயம்புத்தூர் மகாஜனங்களே! அடியேம் உங்களுடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரரென்று மதித்து தேசாபிமானத் தொழிலைச் செய்ய கலீகட்டணத்திற்கு அனுப்பினீர்கள். நாமும் அதற்கிசைந்து வருகையில் இந்தப் புண்ணிய ஷேத்திரத்தை தரிசிக்க இடமாயிற்று. ஆகவே உங்களையும் எமது பெரிய உபகாரிகளாக மதித்து உங்களுக்கு பூரண சுகவாழ்வைப் பிரசாதிக்கும்படி இந்தப் புண்ணியஷேத்திரத்தில் பரமாத்வாவைத் தியானிக்கிறோம். அவரும் அப்படியே பிரசாதித்தருள்வாராக. ஓ! கோயம்புத்தூரே, உனக்கு மங்களமுண்டாவதாக! ஓம் தத் சத், ஹரி ஓம்!’

தனக்கு இந்த வாய்ப்பளித்த கோயம்புத்தூருக்கு நாயுடு திரும்பிச் செய்தவை ஈடுசெய்யமுடியாதவை. ஊர் திரும்பியதும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்துகொண்டு தாம் இந்தியா முழுதும் கண்ட தொழிற்சாலைகளைப் பற்றிப் பேசி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டியது, போத்தனூர் சர்க்கரை ஆலை, பீளமேடு ஜின்னிங் மில்லுகள் போன்றவற்றை அமைக்க முக்கியக் காரணியாக இருந்து தொழிற்புரட்சியைத் தொடங்கி வைத்தது, சிறுவாணியிலிருந்து கோயம்புத்தூருக்கு குடிநீரைக் கொண்டுவந்தது என்று நிறைய. இதற்கான விதைகளெல்லாம் அவர் மனதில் அந்த நெடிய யாத்திரையிலேயே விழுந்துவிட்டிருந்தன.

கிருஷ்ணன் சங்கரன்

***

  •