Reading view

என் சாக்லேட் புராணம்

என் சிறு வயது முதல் அப்பா துபாயில் வசித்து வருகிறர். ஒவ்வொரு ஆண்டும் அவர் விடுமுறைக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன். இது என் திருமணம் வரை தொடர்ந்தது. ஒன்றரை வருடங்கள் கூட அப்பாவைப் பார்க்காமலிருந்த காலமும் உண்டு. என்னால் தாள முடியாத ஏக்கம் அது. அப்பா துபாயிலிருந்து வந்துவிட்டால் போதும். நான் இளவரசி ஆகிவிடுவேன். என் நாள்கள் சொர்க்கமாகிவிடும். ஒரு வருடத்திற்கான சாக்லேட்டை ஓரிரு மாதத்தில் சாப்பிட்டு முடிப்பேன். அப்பாவின் அருகாமை தந்த மகிழ்ச்சியோடு பின்னிப் பிணைந்ததுதான் சாக்லேட்டும் பொம்மையும். திருமணம் முடிந்து, அப்பா அருகில் இருப்பேன் என்ற எண்ணமும், சம்மதம் சொன்னதற்குக் காரணம். சாக்லேட்டும் பொம்மைகளும் எப்போதும் எந்த வயதிலும் என் மனத்திற்கு நெருக்கமாகவே இருக்கும்.

என்னைத் தெரிந்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் தெரியும். இனிப்பு என்றால் எனக்கு, டார்க் லிண்ட் சாக்லேட் மட்டும் தான். வேறு எந்தச் சுவையும் பிடிக்காது. பெரிய ஸைஸ், சின்ன சைஸ் எதுவாக இருந்தாலும் சில மணி நேரங்கள் போதும். முடித்து விடுவேன்.

இரண்டு நாள்களுக்கு முன், ஆன்லைனில் ஆர்டர் செய்யத் தேடிய போது, லிண்ட் பெரிய ஸைஸ் மட்டும் இருந்தது. வேண்டாம் சின்னதாக வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். கண்ணில் அதைவிட பாதி விலையிலும் பாதி அளவிலும் இருந்த ஒரு சாக்கோட்டை ஆர்டர் செய்தேன். அந்த டப்பாவிற்குள் இரண்டு சாக்லேட் உருண்டைகள் இருந்தன. லிண்டை மனம் நிரம்ப சாப்பிட்டு முடித்தவளுக்கு, இந்த இரண்டு உருண்டைகள் எம்மாத்திரம். ஏமாற்றமாக இருந்தது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாயில் போட்டேன். இனிப்புச் சுவை, கசப்புக்குக் கீழ் மிதமான அளவில் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தேன். நாக்கில் முதலில் கசப்பு பட்டது, அது நாக்கின் சுவை மொட்டுகளில் முழுதாக பரவுவதற்குள், கொஞ்சம் இனிப்பும் சேர்ந்து கொண்டது. ஒன்றைச் சாப்பிட்டு முடிக்கவே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். மனம் நிறைந்தது. இன்னொரு சாக்லேட்டை சாப்பிட அவசியம இல்லாமல் போனது. நேற்று சாரா எனக்காக லிண்ட் வாங்கி வந்தாள். சிறு துண்டை எடுத்து வாயிலிட்டேன். அதீத இனிப்பாக இருந்தது. சாராவிடமே கொடுத்துவிட்டேன். இனி லிண்ட் சாப்பிடுவேனா என்று சந்தேகம் தான்.

The post என் சாக்லேட் புராணம் appeared first on Naseema Razak.

  •  

மெட்ராஸ் பேப்பரும் நானும்

நாளை, ஜூன் 1, மெட்ராஸ் பேப்பரின் நான்காம் ஆண்டு விழா. இது மெட்ராஸ் பேப்பருக்கு மட்டுமில்லை, அதனுடன் பயணம் செய்து வந்த, வருகின்ற ஒவ்வொரு மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளருக்கும் முக்கியமான நாள். என் மனத்துக்கு மிக நெருக்கமான நாள்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த எனது ப்ரைனோ கிட் நிறுவனம் கோவிட்டுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வந்து கொண்டிருந்தது. அதற்கு முன் வரை அவ்வப்போது கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி இருக்கிறேன். கவிதைகள் கூட வந்ததுண்டு. இரண்டு குறுநாவலும் முடித்திருந்தேன். எல்லாமுமாக இருந்த ப்ரைனோ கிட் ஒரு கட்டத்தில், இல்லை என்றானது. சரியான நேரத்தில் ஜீரோ டிகிரி காயத்ரி பா.ராவின் வகுப்புகளைப் பற்றிச் சொன்னார்.

2021 ஆம் ஆண்டு வகுப்பில் சேர்ந்தேன். கோவிட் நேரத்தில் பலர் வகுப்பெடுத்தார்கள். ஆனால் அது குறிப்பிட்ட நாள்கள் அல்லது மணிநேரங்கள் மட்டுமே இருக்கும். அதற்குப் பின் அதற்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாகிவிடும். ஆனால் பா ராவின் வகுப்புகள் அப்படி முடியவில்லை. வீட்டுப்பாடம் தந்தார். எனக்கு மட்டுமில்லை, அனைவருக்கும். எப்போது எழுத உட்கார்ந்தாலும் , எந்தச் சந்தேகம் வந்தாலும், கேட்கும் தூரத்தில் இருந்தார். பொறுமையாகச் சந்தேகங்களைச் சரி செய்தார். எழுத்தில் ஆர்வம் கூடியது. இன்னொரு தொழில் ஆரம்பிக்கும் இலக்கிலிருந்து ஒரு வருடம் என்னை விடுவித்துக் கொண்டு முழு நேரமும் மனத்தை எழுத்தில் உரு போட ஆரம்பித்தேன். நாவல் வகுப்பு முடிந்த சமையம், ஜீரோ டிகிரியின் போட்டி அறிவிப்பு வந்தது. நாவல் எழுத முயற்சி செய்யலாம் என்று யோசித்து பா ராவிடம் சொன்னேன். அவர் ஒரு கெடு கொடுத்தார். அவர் சொன்ன நாளுக்கு முன் நாவலை முடித்து அவருக்கு அனுப்பினால், அதை அவர் படிப்பார் என்பது தான் ஒப்பந்தம். ஜீரோ டிகிரிக்காக எழுத ஆரம்பித்தேன் என்றாலும், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பா ரா சொன்ன தேதியில் நாவலை முடித்தேன். அவருக்கு அனுப்பினேன். ஒரு மாதம் இடைவெளியில் இன்னொரு வேலை கொடுத்தார். அதையும் முடித்தேன். இரண்டு புத்தகங்கள் வெளிவந்தன.

மாணவர்கள் யார் தயாராக இருந்தாலும் இந்த மாயாஜாலம் நடக்கும். அது அவருக்கு கை வந்த கலை என்பது மருதன், முகில், சொக்கன் போன்றோரைப் பற்றிக் கேட்கும் போது புரிந்து கொண்டேன்.

நான் சொல்லவந்தது மெட்ராஸ் பேப்பரைப் பற்றி. வகுப்புகள் முடிந்து எழுத ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே மெட்ராஸ் பேப்பரை ஒரு பயிற்சித் தளமாக ஆரம்பித்தார். அவரிடம் வந்து சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களில் இருபத்தைந்து பேர் அன்று முதல் இன்று வரை எழுதி வருகிறோம். நான், பத்மா, ஸாஃபர், பிரபு பாலா, ராஜஶ்ரீ போன்றோர் முதல் இதழிலிருந்து எழுதி வருகிறோம். இதழ் ஆரம்பித்து சில நாள்களில் உதவி ஆசிரியராக என்னை மாற்றினார். கண்டிப்பான, கறாரான ஆசிரியர் தான் அதில் கிஞ்சித்தேனும் சந்தேகம் வேண்டாம். ஆனால் வேறு யாரும் செய்யாத விஷயத்தைத் தன் மாணவர்களுக்காகத் தொடர்ந்து செய்து வருகிறார். இன்று வரை எழுத்தில் என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு வழி நடத்தி வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன் மெட்ராஸ் பேப்பரில் கத்து குட்டியாக எழுத ஆரம்பித்த பலர் இன்று பல புத்தகங்களை வெளியிட்டு கவனம் பெறும் எழுத்தாளர்களாக வளர்ந்து வருகிறார்கள்.

மெட்ராஸ் பேப்பர் இந்த மூன்று ஆண்டுகளில் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் வளர்ந்து நிற்கிறது. இனியும் வளரும். இதற்கு வாசகர்களாகிய நீங்கள் தரும் ஆதரவு முக்கியம். மெட்ராஸ் பேப்பரில் நானும் ஒரு சின்ன அங்கமாக இருப்பதும் என் அடையாளமாகிவிட்டது என்பது நிறைவே. நாளை மாலை ஆறு மணிக்கு கூகிள் மீட்டில் சந்திக்கலாம்.

The post மெட்ராஸ் பேப்பரும் நானும் appeared first on Naseema Razak.

  •  

கொழுகொழு வாசகர்களுக்கு…

வாழ்க்கையில் சிலவற்றை முழுதாக வெளிப்படுத்த முடியாது. உணர மட்டுமே முடியும் என்பது என் எண்ணம். அதில் காதலும் ஒன்று. அதை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்று நான் முடிவெடுத்தது எல்லாம் பரீட்சார்த்தமான முயற்சி அன்றி வேறெதுவும் இல்லை. கொழுகொழுவை எனது வாட்ஸப் சேனலில் தொடர்ந்து முப்பத்தைந்து நாள்கள் எழுதினேன்.  முடிவடைந்து பத்து நாள்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம், ஏழரை மணி ஆனால் ஒரு வெறுமை சூழ்ந்து கொள்கிறது. அது கொழுகொழு முடிந்துவிட்டதால் மட்டும் வரவில்லை. நீங்கள் வாசித்துவிட்டு அனுப்பிய ஒவ்வொரு மின்னஞ்சலும் தந்த உற்சாகம், சட்டென்று சோப்பின் குமிழி போல் மறைந்ததும் காரணம். ஒன்றை ஆரம்பிக்கத் தான் மனம் ஆயிரம் சப்பைக்கட்டு சொல்லும்.ஆரம்பித்து செயலில் இறங்கிவிட்டால் அது பழக்கமாகிவிடும். பழக்கத்தை நிறுத்துவது அத்தனை  லேசுப்பட்ட காரியமில்லை. ஆகையால், ஏழரை மணிக்கு விரைவில் ஒரு வழி செய்துவிடுவேன். உங்களுடன் தொடர்பில் இருக்க இவ்வழி பிடித்து இருக்கிறது. இது எனக்கும் எனது எழுத்துக்கும் அவசியம்.

கொழுகொழுவுடன் பயணம் செய்த அனைவருக்கும் ஒரு நற்செய்தி. கொழுகொழுவை தட்டிச் சரி செய்துக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை செய்து, முற்றுப்பெறப் போகும் பணி அல்ல இது. ஆனால் முதல் சுற்றை முடித்துவிட்டேன்.  முழுமையாகச் சரி பார்த்துவிட்டால், அப்படியே பதிப்பகத்தாருக்கு அனுப்பிவிடவேண்டும். கொழுகொழு புத்தகமாக  வந்துவிடும். ஆனால், எப்போது வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்.

The post கொழுகொழு வாசகர்களுக்கு… appeared first on Naseema Razak.

  •  

நன்றி நிக்கோலஸ்

எழுத உட்காருவதற்கு முன் சில புல்லட் பாய்ண்ட்களை நோட்டில் எழுதிக் கொள்வேன். கதையோ, கட்டுரையோ எதுவாக இருந்தாலும் இது தான் ஆரம்பம். அதற்குப் பிறகு டைப் செய்ய ஆரம்பிப்பேன். டைப் செய்யும் போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். வேர்ட் எல்லாம் சரி வராது  என்று தேடிக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது, சிம்பிள் டெக்ஸ்ட் சரியாக இருக்கும் என்று பா ரா சொன்னார். இரண்டு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறேன். திடீரென்று ஒரு நாள் iA writer என்று ஒன்றை அனுப்பினார். எழுதும் போதே எழுதும் வரிகளில் மட்டும் கவனம் இருக்க அது மிகவும் சௌகரியமாக இருந்தது. நீண்ட வாக்கியங்கள் வந்து விழுந்தால், அதை அப்போதே காலி செய்யும் கலை கை வந்தது. சிம்பிள் டெக்ஸ்ட் எல்லாம் மறந்தே போனது. ஆனால் எல்லாம் ஒரு வாரத்திற்கு மட்டுமே.  வாங்கிவிடலாம் என்றால் ஓர் எண்ணெய்க் கிணறு விலை சொன்னான். வேறு வழியின்றி மீண்டும் சிம்பிள் டெக்ஸ்ட் பக்கம் வந்தேன். சில தினங்களுக்கு முன் பா ராவின் இணையத்தளத்தில் uFocus பற்றி எழுதி இருந்தார். காத்திருந்ததற்குப் பலன் கிடைத்தது. கரும் பலகையில் நான் டைப் செய்வது மட்டும் வரும். எந்தக் கவனச் சிதறலும் வர வாய்ப்பே இல்லை. இது போதாது என்று டைப் ரைட்டர் சத்தத்தையும் வைத்துக் கொள்ளலாம். நிம்மதியாக எழுதக் குறைந்தபட்ச சொகுசு கூட இல்லையென்றால் எப்படி. சிறப்பாக இருக்கும் அனைத்தும் எளிமையாக இருக்கும் என்பது சரியே.
டக்..டக்..டிகிடி..டக்..டகடகடக..டப்..டப்..டக்…என்று கேட்டுக் கொண்டே டைப் செய்துக் கொண்டிருக்கிறேன். இதை உருவாக்கிய நிகோலஸ்க்கும் இதைப் பற்றி அறிமுகம் செய்த பாராவுக்கும் நன்றி.

The post நன்றி நிக்கோலஸ் appeared first on Naseema Razak.

  •  

தோற்றாலும் விடமாட்டேன் – கமலா முரளி மதிப்புரை

மெட்ராஸ் பேப்பர் இதழின் உதவி ஆசிரியர், நஸீமா ரஸாக், தமிழ்நாட்டில் திருக்கோவிலூரில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வருகிறார். மௌலா, துபாய் விசா பகுதி 1 மற்றும் பகுதி 2, தளிர், மராம்பு, என்னைத் தேடி, பொன் விளைந்த பூமி உள்ளிட்ட பதினொரு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்து தமிழ் திசையில் இவரது கட்டுரைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நஸீமா ரஸாக் அவர்களது ”தோற்றாலும் விடமாட்டேன்” கட்டுரைத் தொகுப்பு நாற்பது கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தோல்விகள் எத்துனை வந்தாலும், மனந்தளராது, விடா முயற்சியுடன் தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்த உலக அளவிலான நாற்பது சாதனையாளர்களைப் பற்றிய நூல்.

சாதனையாளர்களைப் பற்றிய தகவல்களை அள்ளித் தரும் தகவல் திரட்டு அல்ல இந்த நூல்.
ஒரு சாதனையாளர் எந்த ஆண்டு பிறந்தார், எங்கு எப்போது படித்தார் அல்லது அவருக்குக் கிடைத்த அங்கிகாரங்களின் பட்டியல் போன்ற புள்ளி விவரங்களால் பக்கங்கள் நிரப்பப்படவில்லை.

அதே சமயத்தில், ஒவ்வொருவருடைய வாழ்வின் முக்கியத் தருணங்களை, உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அவர்கள் எதிர் கொண்ட சவால்கள், அவர்களது வேதனைகள், திடமான உறுதியுடன் , விடாமுயற்சியுடன், தோற்றாலும் விடமாட்டேன் என்ற தீர்மானத்துடன் அவர்கள் செயல்பட்டதை மிகச் சிறப்பாக வெளிக் கொணர்ந்து உள்ளார்.
கட்டுரைகளின் நீளம் பற்றிக் குறிப்பிட வேண்டும்.ஆசிரியர் எடுத்துக் கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக ஒரு நூலே எழுதலாம். இருப்பினும், அவர்களது வாழ்வின் முக்கியத் தருணங்களையும் குறிப்பிட்டு, அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் சொல்லி, தோல்வி மனப்பானமையை அறவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நூலின் அடிப்படைக் கருத்தை ஆழமாக வலியுறுத்தி… இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவை அனைத்தையும் சிறிய கட்டுரைகள் வாயிலாகத் தந்துள்ளார்.
தொய்வில்லாமல் , சுவாரசியத்துடன் படிக்க இந்த “சுருங்கச் சொல்லும்” உத்தி உதவுகிறது என்றால் மிகை ஆகாது.
அத்தியாயங்களின் தலைப்புகள் சாதனையாளர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. ஓரிரு அத்தியாயங்களுக்கு மட்டுமே சாதனையாளரின் பெயரே தலைப்பாக உள்ளது.

சாதனையாளரின் கோணத்தில், சாதனையாளரே பேசுவது போல் (First Person Narrative) அமைந்திருப்பது மிகச் சிறப்பு. சிறப்பானதொரு கதை சொல்லும் உத்தி அல்லவா ! வாசகரை, சாதனையாளருடன் பொருந்தி இருக்க வைக்கிறது இந்த உத்தி!

பத்து பெண் சாதனையாளர்கள் மற்றும் முப்பது ஆண் சாதனையாளர்கள் பற்றி நூல் விவரிக்கிறது.
அறிவியல் ( இயற்பியல், கணிதவியல்), கால்பந்து, இணைய வர்த்தகம், வணிகம், தொழில் நிறுவன முனைவர்கள், கிரிக்கெட், கார்ட்டூன் – அனிமேஷன், குத்துச்சண்டை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர் ( புதினம், குழந்தை எழுத்தாளர், மர்மக் கதை, கவிஞர் ) இசை, நடனம், நடிப்பு, கணினித் துறை, உணவுத் தொழில், அரசியல், கூடைப்பந்து, சிறு மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள், ஓட்டப் பந்தயம், பால் உற்பத்திப் பொருள், உடற்கலை வல்லுநர், மலையேற்ற வீரர், கதை சொல்லி, ஊக்கமூட்டும் சொற்பொழிவாளர்…. எத்துணை துறைகள் !
எந்தத் துறையாக இருந்தாலும், நிராகரிப்பு, தோல்வி, துரோகம் முதலியவற்றைக் கடந்து, துணிவுடன், தொடர்ந்து முயற்சிப்போருக்கு வெற்றி நிச்சயம் எனக் கட்டியம் கூறுகிறது இந்நூல்.

என்னைக் கவர்ந்த தலைப்புகள் : கருந்துளையின் காதலன், கோழி அரசன், துணை வந்த செயற்கைக் கால், மரண தண்டனை.

ஒரு சில கட்டுரைகள் பற்றி:

கூடைப் பந்துத் தலைவன் : இக்கட்டுரை ”ஹிஸ் ஏர்னெஸ்” என அறியப் படும் மைக்கேல் ஜோர்டான் பற்றியது.

// தோல்விகளை மட்டுமே அதிகமாக சந்தித்தவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் முதல் பெயர் என்னுடையதாகத் தான் இருக்கும்.// எனத் தொடங்குகிறது ஜோர்டனின் அத்தியாயம்.
பள்ளியில் மிக அருமையாக விளையாடினாலும், குழுவில் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில், அவரது உயரம் குறைவு! அந்த நிராகரிப்பையும் தோல்வியையும் சீரணித்து ஜூனியர் மாணவர் குழுவில் இணைந்தார். உயரத்தை அதிகரிக்க உணவு பயிற்சி என முயற்சி செய்தார். வாய்ப்பு கிடைத்து விளையாடத் துவங்கும் நேரம் காலில் அடி. அதனால், சரியான பருவத்தில் பல வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் விளையாடத் துவங்கிய போதும் சரியான கட்டங்களில் புள்ளிகளை எடுக்காமல், ஒன்பதாயிரம் முறை சிறப்பாக ஆடத் தவறி உள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் தோல்வி, அவமானங்கள், குற்ற உணர்வு. ஆனால், கூடைப்பந்து விளையாட்டில் முக்கிய இடத்தை அடைந்தார். விளம்பரங்கள், நிர்வாகம் என பல களங்களைக் கண்டார். நிராகரிப்புகளையும் வலிகளையும் பயிற்சிக்கு உரமாக மாற்றியதால் வெற்றி சாத்தியமாகியது.

முதுகில் ‘ஏழு’ இலக்கமிட்ட ஜெர்ஸியைப் பார்த்தாலே வெறி கொள்ளும் ரசிகர் கூட்டம் உலகம் முழுதும் ! கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றியது ”ரியல் மேட்ரிட்” கட்டுரை.
பெற்றோர்களால் ஒரு பந்தைக் கூட வாங்கித் தர முடியாத நிலை. பிற மாணவர்கள் ரொனால்டோவின் வறுமையைப் பரிகசித்தனர். இங்கேயே இருந்தால் மீன்காரனாகத் தான் ஆக வேண்டும். நகரத்துக்குச் சென்று கால்பந்து பயின்றால் குடும்பமே உயரும் என தந்தை சொல்ல, நகரம் நோக்கிச் சென்றார்.
ஆனால், பதினைந்து வயதில் ரொனால்டோவுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பின் மீண்டும் களத்தில் ரொனால்டோ!
மேன்செஸ்டர் அணியை எதிர்த்து விளையாடிய ரொனல்டோவை அந்த அமைப்பே நூற்றியெழு மில்லியன் டாலர் கொடுத்து ஓப்பந்தம் செய்தது. பிரபலமான ஏழாம் எண் ஜெர்ஸியை அவருக்குக் கொடுத்த போது சக வீரர்கள் விரும்பவில்லை.

பல தோல்விகள், மூட்டு வலி, ஆட வேண்டிய மைதானத்திலேயே பார்வையாளனாக இருந்த சூழல் என பல வலிகளைத் தாங்கித் தான் வெற்றி பெற்றுள்ளார் ரொனால்டோ.
கால்களை இழந்தும் தம் துறையில் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டிய ’மயூரி’ சுதா மற்றும் மலையேற்ற வீராங்கனை அருணிமா பற்றிய கட்டுரைகள் சிறப்பு.
பஜ்ஜி வியாபாரமும் செய்து இருக்கிறார், ஜவுளி வியாபாரமும் செய்து இருக்கிறார் திருபாய் அம்பானி. அடிபட்டு, அசிங்கப்பட்டு வாழ்வில் உயர்ந்தார்.
தலித் பெண்மணி கல்பனா சரோஜ், பாப் இசைக் கலைஞர் லேடி காகா மற்றும் பேச்சாளர் நிக் வுஜிசிக் கதைகள் நம்மை எழுச்சியுறச் செய்யும்.
//வெற்றி அழகானது. ஆனால், தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை//

சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும் தவறுகளையும் கண்டறிந்து, திருத்திக் கொண்டு அவர்கள் மேலே ஏறி உச்சம் தொட்ட விதத்தை இந்நூல் விவரிக்கிறது.
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

கமலா முரளி

The post தோற்றாலும் விடமாட்டேன் – கமலா முரளி மதிப்புரை appeared first on Naseema Razak.

  •  

சக்ஸஸ் ஃபார்முலா – போஜன் மதிப்புரை

மொத்தம் 30 தலைப்புகளும் 109 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் ஒரு மோட்டிவேஷன் வகை சார்ந்த புத்தகம் என்று சொல்லலாம். இதில் சொல்லப்பட்டு இருக்கும் உள்ளடக்கம் என்ன என்பதை பார்ப்போம் .

எப்படி பிளான் பண்ண வேண்டும் : புத்தகத்தின் முதல் தலைப்பு இது தான் எந்த ஒரு செயலை செய்யும் முன் எப்படி திட்டம் இட வேண்டும் அந்த திட்டம் தோற்கும் போது அதை எப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்பதை 10 வழிமுறைகள் உடன் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

எண்ணங்கள் சீரானால் பழங்கங்கள் செம்மையாகும் : புத்தகத்தின் இரண்டாவது தலைப்பு இது பொதுவாக ஒரு பிரச்சனை ஏற்படும் போது அதற்கு எப்படி தீர்வு வரும் என்பதை யோசிக்கிறோம் அதற்கு ஆசிரியர் ஜர்னலிங் என்ற முறையை சொல்லி 10 வழி முறைகளையும் சொல்லி இருக்கிறார்.

நீங்களும் சி.இ.ஓ . ஆகலாம் புத்தகத்தின் நான்காவது தலைப்பு இது உண்மையில் எனக்கு இந்த தலைப்பு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது, ஒரு பிரச்சனை நமக்கு வருகிறது என்றால் அதை மற்றவர்கள் மீது பழி சொல்லாமல் அதை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று 10 வழி முறைகள் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

ஏன் எதற்கு என்ற கேள்வி கேளுங்கள் : பொதுவாக சில சமயங்களில் தெளிவு இல்லாத போதும் தெரிந்த மாதிரி கேள்வி கேக்காமல் கடந்து செல்வோம் அப்படி செய்ய கூடாது என் சொல்கிறார் ஆசிரியர். அது மட்டும் இல்லமல் கேள்வி கேக்க சில வழி முறையை பற்றியும் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை வரவேற்க்க தோல்வி அவசியம் : புத்தகத்தின் 11 தலைப்பு இது பொதுவாக தோல்வி ஒரு அவமான செயலாகவே பார்க்கப்படுகிறது தோல்வி அடைந்து விட்டால் அன்று நாள் ஒரு இருண்ட நாளாகவே பார்க்கிறோம் நான் பள்ளி படிக்கும் பொது 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளை சொல்லலாம். அன்று தேர்வில் தோல்வி அல்லது நினைத்த மதிப்பெண்ணை அடைய முடியாமல் போகும் மாணவர்களின் தவிப்பு சொல்ல முடியத ஒன்று. ஆனால் ஆசிரியர் சொல்லி இருப்பது தோல்வி என்பது இன்னொரு முயற்சி தான் தவிர அது அவமான அல்ல என்பதை சொல்லி இருக்கிறார்.

வேண்டாம் என்று சொல்லி பழகுங்கள் : உண்மையில் 13 தலைப்பாக வரும் இந்த விஷயம் எல்லாருக்கும் நடக்கும் ஒரு விஷயம் தான் பொதுவாக ஒரு வேலை அல்லது அளவுக்கு மீறிய வேலை கொடுக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு மன உள்ளச்சளுக்கு ஆளாகிறோம். இந்த புத்தகத்தில் ஆசிரியர் சொல்லும் விஷயம் சில விஷயங்களுக்கு நோ இல்லை என்று சொல்லி பழக வேண்டும் என்கிறார்.

முன்னேற்றத்தை தடுக்கும் காலம் தாழ்த்துதல்: புத்தகத்தின் 17 தலைப்பு இது பொதுவாக ஒரு செயல் செய்யும் போது யோசித்து செய்வது என்பது வேறு ஆனால் அதை காலம் தாழ்தி செய்வது ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.அப்படி காலம் தாழ்த்துவதால் என்ன சிக்கல் வரும் அதை எப்படி சரி செய்வது என சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை ஈர்க்க வேண்டும் துரத்த கூடாது : புத்தகத்தில் 21 தலைப்பு இது வெற்றி என்றால் என்ன அது பயணமா அல்லது முடிவா அல்லது இலக்கா என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.இதை படிக்கும் போது வெற்றி பற்றி ஓரளவு புரிதல் வரும்.

செயல்களை ரகசியம் ஆக்குவோம் : இந்த தலைப்பு யாருக்கு பொருத்தி போகுதோ இல்லையோ கண்டிப்பாக எனக்கு பொருந்தும் ஒரு விஷயம் உண்மையில் நம் செயல் திட்டத்தை ரகசியமாக செய்யாமல் எல்லாருக்கும் அறிவித்து விட்டு செய்து பிறகு அதில் ஏமாற்றம் அடைகிறோம்.உண்மையில் இதை மாற்ற என்ன வழி என்பதை சொல்லியும் இருக்கிறார்.

28 தலைப்பு நேரமும் பொன்னும் ஒன்றல்ல : நேர நிர்வாகம் என்று சொல்ல படுவது உலகில் உள்ள அனைவருக்கு 24 நேரம் தான் ஆனால் சில பேர் அதில் வெற்றி பெற்றவர்களாக இருக்க காரணம் நேர திட்டமிடல் இதை பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியின் முதல் படி : புத்தகத்தின் கடைசி தலைப்பு இது தான் ஒருவர் வாழ்வில் வெற்றி பேர் வேண்டும் என்றால் பிறர் என்ன சொல்வார்களோ என்று நினைக்காமல் அல்லது பிறர் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேணும் . அதற்கு தடையாக எது இருக்கிறதோ அதற்கு நோ சொல்ல பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
மிகவும் சிறிய புத்தகம் என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய புத்தகம் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவுக்கு தகவல் இருக்கிறது.

Boje Bhojan

The post சக்ஸஸ் ஃபார்முலா – போஜன் மதிப்புரை appeared first on Naseema Razak.

  •  

வேண்டாம் என்று சொல்லிப் பழகுங்கள்! – சக்ஸஸ் ஃபார்முலா – 13

வரும் ஞாயிற்றுக்கிழமை நானும் சச்சுவும் படத்துக்குப் போக வேண்டும், ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும், ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று பல திட்டங்களைப் போட்டு வைத்திருந்தோம்…

நீண்ட நாள்களுக்குப் பின் இந்த ஏற்பாடு என்பதால் இருவரும் ஆர்வமாகக் காத்திருந்தோம். சனிக்கிழமை இரவு ஆன்லைனில் படத்துக்கு டிக்கெட் புக் செய்து விட்டோம். ஞாயிறு வந்தது. சச்சுவுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

“சொல்லுங்க சார். அப்படியா சார்.. உம்… ஓகே” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார். அவர் முகம் வாடி இருந்தது.

“என்ன ஆச்சு சச்சு??”

“மேனேஜர்தான் கால் பண்ணார் நஸீ. அவசரமா ஏதோ வேலையாம். கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னார்.”

“நீ என்ன சொன்ன?”

“முடியாதுன்னு சொல்ல முடியுமா? சரின்னு சொல்லிட்டேன்.”

“அதைத் தவிர்த்து இருக்க முடியாதா? ரொம்ப நாள் கழித்து ப்ளான் பண்ணோமே… இன்னைக்கு லீவுதானே?”

எதையும் காதில் வாங்காமல் லேப்டாப் எடுத்தார். வேலையை ஆரம்பித்தார். மூன்று மணி நேரம் கழிந்தது. வேலையும் முடிந்தது. ஆனால், பல நாள் திட்டத்தை மேனேஜர் சொத்தப்பிவிட்டார் என்று சச்சுவுக்குக் கோபமும் எரிச்சலும் வந்தது.

சச்சு மட்டுமல்ல, நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். ‘வேண்டாம்’, ‘இல்லை’, ‘முடியாது’ என்று நமக்குச் சொல்லத் தெரிவது இல்லை. இதனால் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறோம் என்பதை உணர்வதும் இல்லை.

‘இல்லை’ என்று சொன்னால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? தவறாக நினைத்துவிட்டால்? மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டால் என்று பல குழப்பங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன.

https://tinyurl.com/SuccesssFormula

வெற்றியாளர்களாக ஆக வேண்டுமென்றால், ‘என்னால் முடியும்’ என்று சொல்வது எவ்வெளவு முக்கியமோ, அதைப் போல் ‘முடியாது’ என்று சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கான பத்துச் சுலபமான வழிகள்.

1. உங்களுடைய நிலைமையை மற்றவர்கள் புரிந்து கொள்வதைவிட, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, என்னால் மூன்று ப்ராஜெக்டில் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியும்.

2. உங்கள் திட்டங்களை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவில் யாராவது புதிதாக ஒரு வேலையை உங்கள் மேல் திணித்தால் ‘இல்லை’ என்று சொல்ல மனத்தைத் தயார்ப்படுத்த வேண்டும்.

3. ‘இல்லை’ என்று சொல்ல வேண்டும் என்றால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று காரசாரமாகவும் இருக்க வேண்டியதில்லை.

“இப்போது என் கையில் மூன்று ப்ராஜெக்ட்கள் இருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் சொல்லும் வேலையை என்னால் செய்ய இயலாது .நீங்கள் காத்திருக்க முடியுமா?” என்று கேட்கலாம். இங்கு ‘இல்லை’ என்றுதான் சொல்கிறோம், ஆனால் கேட்பவர் நம் நிலைமையைப் புரிந்து கொள்ளும் விதத்தில் தெளிவாகச் சொல்கிறோம்.

4. அதிகமாக விளக்கங்களைத் தர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ‘இல்லை’ என்று சொல்வதற்குச் சங்கடப்படுகிறீர்கள் என்கிற பிம்பத்தைக் கொடுக்காது. தெளிவற்றவர்களாகவே உங்களைக் காட்டும்.

5. ‘முடியாது’ என்று சொல்ல வேண்டும், அதே நேரத்தில் உதவ வேண்டும் என்றால், மாற்று யோசனையை அல்லது வேறு நபரிடம் அவர்களை அனுப்பலாம்.

6. ‘முடியாது’, ‘வேண்டாம்’ என்று சொன்னால் மற்றவர்கள் புண்படுவார்கள் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்று உங்கள் மேல் நல்ல அபிப்ராயத்தை உண்டு பண்ணும். புரிந்து கொள்ளாதவர்களை அப்போதைக்கு விட்டுவிட வேண்டும். அவர்கள் தெளிவாக அவகாசம் கொடுங்கள்.

7. ‘இல்லை’ என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. அப்படிச் செய்வதால் உங்களை நீங்களே தவறானவர்களாகக் காட்டுகிறீர்கள் என்று அர்த்தமாகிவிடும். ஆனால், பலர் இதைப் புரிந்து கொள்ளாமல் ஏமாந்துவிடுகிறார்கள். ‘இல்லை’, ‘முடியாது’ என்று சொல்வதைவிட, ‘இப்போது முடியாது. உங்கள் புரிதலுக்கு நன்றி’ என்று சொல்வது சாலச் சிறந்தது.

8. நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னதற்குப் பின் இருக்கும் உங்கள் மனநிலையைக் கூர்ந்து கவனியுங்கள். சொல்லும் போது கடினமாக இருந்தாலும், அதற்குப் பின் லேசாக இருப்பதை உணர்வீர்கள்.

9. சின்ன சின்ன சந்தர்ப்பங்களில் இல்லை என்று சொல்லும் சூழல் அமைந்தால், சொல்லிவிடுங்கள். பெரிய குழப்பமான சூழ்நிலைகளில் அந்தப் பழக்கம் கை கொடுக்கும்.

10. ‘இல்லை’ என்று சொல்வதாலோ, ‘முடியாது’ என்று விலகுவதாலோ நீங்கள் மோசமானவர்கள் என்று அர்த்தம் இல்லை என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும்.

சச்சு கதைக்கு மீண்டும் வரலாம். அவர் செய்திருக்க வேண்டிய விஷயம், மானேஜரிடம், “சார், இப்போது வேலையாக வெளியே கிளம்புகிறேன். நாளை அலுவலகம் வந்தவுடன் முதல் வேளையாக நீங்கள் சொல்லும் வேலையை ஆரம்பித்துவிடுகிறேன்.”

அப்படிச் செய்திருந்தால் மேனேஜருக்கும் அவர் எல்லை என்ன என்று புரிந்திருக்கும்.
அன்றைய பொழுதைத் திட்டமிட்டபடி கொண்டாடியும் இருக்கலாம். மறு நாள் வேலையையும் நிம்மதியாகக் கவனமாகச் செய்திருக்க முடியும்.

The post வேண்டாம் என்று சொல்லிப் பழகுங்கள்! – சக்ஸஸ் ஃபார்முலா – 13 appeared first on Naseema Razak.

  •  

வெற்றியை வரவேற்க, தோல்வி அவசியம்

வெற்றி பெற்றவர்கள் கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் யாரும் வெறும் தோல்வியை அல்ல, படு தோல்விகளைச் சந்தித்திருப்பார்கள். இப்போது சட்டென்று எனக்கு ஜாக் மா கதைதான் ஞாபகம் வருகிறது. அலிபாபா ஆன்லைன் ஷாப்பிங் பலருக்குத் தெரியும். அமேசான் என்கிற பெரிய சாம்ராஜ்யத்திற்கு நிகரா அலிபாபாவைச் சொல்லலாம். அதை ஆரம்பித்தவர் ஜாக் மா.

பள்ளிக்குச் சென்றது முதல் ஜாக் மாவிற்குப் பரிசாகக் கிடைத்தது தோல்விகள் மட்டும்தான். ஆரம்பப் பள்ளியில் இரண்டு முறை தோற்றார். உயர்நிலைப் பள்ளியில் மூன்று முறை. கல்லூரியில் சேருவதற்காக எழுதிய நுழைவுத் தேர்வில் மூன்று முறை. காவல் துறையில் வேலை கிடைக்கவில்லை. தேர்வாகவில்லை. சரி, கே.ஃப்.சியில் எப்படியாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற கணக்கெல்லாம் கனவாகக் கலைந்து போனது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குப் பத்து முறை விண்ணப்பித்துத் தோற்றுப் போனார். இந்தப் பட்டியல் இதோடு முடியவில்லை. ஜாக் மா சோர்வடைந்தது உண்மை. ஆனால், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை, முயற்சி செய்யாமல் இருக்கவில்லை. அவரது விடா முயற்சியும் நம்பிக்கையும் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. சீன மொழி பெயர்ப்பாளராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

“அதற்குப் பின்னர் அவர் சீனா திரும்பி, ஆரம்பித்த முதல் ஆன்லைன் வர்த்தகத்தில் கூட்டாளியாகச் சீன அரசு நிறுவனம் இணைந்தது. சில மாதங்களில் அந்த நிறுவனத்தை அரசு கையில் கொடுத்துவிட்டு ஜாக் மா வெளியேறினார். தோல்வியும் துரோகங்களும் அவரை விரட்டிக் கொண்டே இருந்தன. மீண்டும் வேலை தேடும் படலம். அரசு வேலை. அமெரிக்கா பயணம். அதற்குப் பின்னர் ஆரம்பித்ததுதான் உலகம் அறிந்த அலிபாபா ஆன் லைன் ஷாப்பிங் இணையம்.

“ஜாக் மாவை விட, அதிகமாகத் தோற்றுப் போகும் சந்தர்ப்பங்கள் நமக்கு அமையலாம். அதற்கு வெற்றி அற்ற வாழ்க்கையை வாழ்வோம் என்று அர்த்தமில்லை. தோல்விகளைக் கையாள்வது லேசுபட்ட காரியம் அல்ல. எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருப்பது போல் தோல்வியை எதிர் கொள்ளச் சில வழிகள் இருக்கின்றன.

1. தோல்விகள் என்றால் அவமானம் என்கிற எண்ணத்தைக் களைய வேண்டும். தோற்கிறீர்கள் என்றால் முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது வாய் வார்த்தைகளாக, எண்ணங்களாக மட்டும் இல்லாமல் செயலில் ஈடுபட்டு இருக்கிறீர்கள்.

2. நாம் அனைவரும் எப்பொழுதும் சரியான தேர்வைச் செய்வோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. தவறான முடிவுகளும் தேவையில்லாத வேலைகளும் குறுக்கிடும். அது சகஜம். சிறிதும் யோசிக்காமல் யூ டர்ன் போட்டு விடுங்கள்.

3. தோல்வி வந்தவுடன், உலகம் இருண்டுவிடும் என்று பயப்படுகிறோம். அது மூடி இருக்கும் கதவுகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4. தோல்வியைப் படிப்பினையாகப் பாருங்கள். தோல்வியைப் போல் சிறந்த ஆசான் வேறு எதுவும் இல்லை. அந்த ஆசானைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

5. தோல்வி மூலம் கிடைத்த அனுபவம் உங்கள் அடுத்த நகர்வுகளைச் சரி செய்யும் . திறமை மூலம் வெற்றி அடைந்தவர்களைவிட, தோல்வியை வரவேற்று கற்றுக் கொண்டவர்கள்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

6. தோல்வி ஒரு முறை அல்ல எத்தனை முறை வந்தாலும், அடுத்து என்ன என்று யோசிக்க மனத்தைப் பழகுங்கள்.

7. தோல்விக்கு அடிநாதமாக இருக்கும் காரணங்களை ஆராயுங்கள். நோக்கங்களைச் சரி செய்து கொள்ள அது உதவும்.

8. எத்தனை முறை விழுகிறோம் என்பது தோல்வி அல்ல. ஜாக் மாவின் வாழ்க்கையில் ஒரு முறையும் தோல்வியைச் சந்திக்காமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை. அவரது விடா முயற்சியை நாம் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

9. சமூகத்திற்குப் பயந்து, மற்றவர்களின் வசைக்குப் பயந்து எல்லாம் நாம் தோல்வியைப் புறக்கணிக்க வேண்டாம். அப்படிச் செய்தால் நான்கு நாள்களுக்கு மற்றவர்கள் வாய்க்கு அவலாக இருப்போம். ஆனால், தோல்வியை ஏற்று முன்னேறும் போது சரித்திரம் படைக்கும் சக்தி கிடைத்துவிடும்.

10. இறுதியாக ஒன்றை மனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாத மனத்திற்கு வெற்றியைக் கொண்டாடத் தெரியாது.

ஜாக் மா மட்டும் அல்ல, வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியை விடத் தோல்விகளே நிறைந்திருக்கின்றன. தோல்வியைச் சரியாக ஏற்றுக் கொள்ளுங்கள், கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்.

The post வெற்றியை வரவேற்க, தோல்வி அவசியம் appeared first on Naseema Razak.

  •  

வித்தைத் தெரிந்தால் வெல்லலாம்!

வாழ்க்கைச் சம்பவங்களாலும் தொகுப்புகளாலும் ஆனது. இது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனா, நாம் எப்படி ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற தெளிவு எத்தனை பேருக்கு இருக்கிறது? அது தெரிந்திருந்தால் வெற்றி சுலபமாகிவிடும். வெற்றி ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் சூட்சுமம் அனைவருக்கும் ஒன்றே.”

அதற்கு ஒரு சின்ன சூத்திரத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். சுலபமாகத் தெரியும் பல விஷயங்கள் சுலபமானதாக இருக்காது. இந்தச் சூத்திரமும் அப்படியே.
E (Event- சம்பவங்கள்) + R (Response-கையாளும் திறன்) = O (outcome- விளைவு).

பார்க்க 1+1 = 2 போலத் தெரியும், ஆனால் இதைப் புரிந்து கொள்ளச் சிறிது மெனக்கெடல் வேண்டும்.
சம்பவங்கள் என்பது வெறும் சம்பவங்கள் அல்ல. அது எண்ணமாகக்கூட இருக்கலாம். ஒரு விஷயம் நடக்கிறது, உதாரணத்திற்குப் போக்குவரத்து நெரிசலில் நீங்கள் மாட்டிக் கொள்கிறீர்கள். உங்கள் வண்டி அங்குலம் அங்குலமாக நகர்கிறது. அது தினமும் நடக்கும் காட்சிதான். ஆனால் அனுதினம் அந்த நிகழ்வு உங்களை எரிச்சல் அடையச் செய்கிறது. இதுதான் ரெஸ்பான்ஸ்.

சம்பவமும் ரெஸ்பான்ஸும் சேர்ந்து விளைவை ஏற்படுத்துகிறது. எரிச்சல் அடைந்த நீங்கள் அலுவலகம் செல்கிறீர்கள். சின்னச் சின்ன விஷயமும் பூதாகரமாகத் தெரிகிறது. கோபம் வருகிறது. சுலபமான வேலையும் உங்கள் கைகளில் சின்னாபின்னமாகிறது. நீங்கள் சமநிலைக்கு வரும் வரை இது தொடரும்.

நம் ஒவ்வொருவரிடமும் ஒரு பாங்கு (Pattern) இருக்கிறது. ஒரு விஷயம் நடக்கிறது என்றால் அதை ஒரே மாதிரி எதிர்கொள்வோம். தெரிந்து எல்லாம் இல்லை. பழக்கத்தால் வந்தவை. அது மனதின் ஆழத்தில் பதிந்து போயிருக்கும் . உதாரணத்திற்கு, இக்கட்டான சூழலில் சுற்றி இருப்பவர்கள் மேல் கோபம் கொள்வது.

சம்பவங்களோ நிகழ்வுகளோ நம் கையில் இல்லை. ஆனால், அதை எப்படிக் கையாள்கிறோம் என்பது நம் கையில் மட்டும்தான் இருக்கிறது. அதைப் பொறுத்துத்தான் விளைவுகள் மாறுபடும்.

இதை எப்படிச் சரிசெய்யலாம் என்று பார்த்துவிடலாம்.

1. என்ன நடந்தாலும், ஒரு சின்ன இடைவெளிவிட்டுக் கையாள வேண்டும். முக்கியமாக எதிர்வினையாற்ற வேண்டும் என்றால் சில நொடிகள் பாஸ் பண்ணிவிடுங்கள். நான் என்ன ரோபோவா என்று நினைக்க வேண்டாம். இதெல்லாம் பழக்கத்தால் வசப்படும். வசப்பட்டால் நல்லது.

2. சூழலைப் புரிந்துகொள்ளுங்கள். அதன் வேர் வரை சென்று அலச மனம் தயாராக இருக்க வேண்டும்.

3. ஒவ்வொரு முறையும் நான் இப்படித்தான் எதிர்வினை செய்கிறேன் என்று முதலில் நமக்குள் ஒரு புரிதல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தெளிவு கிடைக்கும். அலுவலகத்தில் நடக்கும் சில கசப்புகளை வீடு வரை கொண்டு வந்து வீட்டாரிடம் எரிச்சலைக் காட்டுகிறோம் என்று முதலில் நமக்கு உரைக்க வேண்டும்.

4. வரும் கோபத்தை அல்லது எரிச்சலை, அல்லது ஏதோ ஒரு தேவையற்ற பழக்கத்தை மடைமாற்ற வேறு என்ன செய்யலாம் என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

5. இனி நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வேன் என்கிற முடிவு மாத இறுதியில் கடன் வாங்காமல் இருக்க உதவும்.

6. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மற்றவர் மேல் பழி சுமத்துவது உதவாது என்கிற புரிதல் வர வேண்டும். உங்களுக்கு எது நடந்திருந்தாலும் அதற்கான முழுப் பொறுப்பு நீங்கள் மட்டுமே.

7. உங்களுக்குக் கிடைக்கப் போகும் விளைவுகளை முன்பே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம்
எப்படிச் செயலில் ஈடுபட வேண்டும் என்கிற தெளிவு கிடைக்கும். உதாரணத்திற்கு உங்கள் நண்பரிடம் எதையோ புரிய வைக்க ஆரம்பிக்கும் பேச்சு, போகிறபோக்கில் வாதத்தில் முடிகிறது. நோக்கம் அது அல்ல. இருந்தாலும் எதற்காகப் பேச ஆரம்பித்தோம் என்று மறக்கும் அளவிற்கு உணர்ச்சி, விளைவுகளை மாற்றிவிடுகிறது.

8. எந்தச் சூழலுக்கு எப்படி நாம் ரியாக்ட் செய்யப் போகிறோம் என்பது ஒவ்வொரு முறையும் தெரிந்து இருக்க வேண்டும். முக்கியமாகச் சவாலான சூழல்களை நீங்கள் எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்கிற விழிப்புணர்வு முக்கியம்.

9. கோபம், துயரம், வெறுப்பு, சோகம் எல்லாம் வந்து போகும் விருந்தாளிகள். அவர்கள் போகும் வரை கொஞ்சம் ஆறவிடுங்கள். அப்பொழுதுதான் சரியான வழியை மனம் கண்டுபிடிக்கும். பலனும் நிறைவு தரும்.

10. மனதை விழிப்புணர்வோடு வைக்க மேலே இருக்கும் வழிகளைப் பின்பற்றினால் தெளிவு வசப்படும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்!

சூழல்களின் மேல் எதைச் சுமத்தினாலும், வாழ்க்கையின் சுமையை நீங்கள் மட்டும்தான் சுமக்க வேண்டும். அதனால் சரியான செயல்களைச் செய்து சூழலை வென்று முடியுங்கள்!

The post வித்தைத் தெரிந்தால் வெல்லலாம்! appeared first on Naseema Razak.

  •  

Wu Wei: சொல்லிக் கொடுக்கும் பாடம்

பண்டைய சீனாவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், தாவோயிச தத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் லாவோ ட்சூ (Lao Tzu) என்பவரால் Wu Wei என்கிற கருத்து முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘Wu’ என்றால் ‘இல்லை’ என்றும், ‘Wei’ என்றால் ‘செயல்’ என்றும் பொருள். ஆனால் இதன் ஆழமான பொருள் ‘செயலின்மை’ அல்ல, ‘செயலற்ற செயல்பாடு’ என்று பொருள்.

அதாவது ஒரு செயலைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை. மாறாக இயற்கையான ஓட்டத்துடன் இணைந்து செயல்படுவது என்று அர்த்தம். அதற்குச் சரியான உதாரணம் நதி. நதியைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். அது பாயும்போது, தனது பாதையில் வரும் பாறைகளை நேரடியாக எதிர்க்காது. சுற்றி ஓடும். ஆனால், இறுதியில் தன் இலக்கை அடையும். இது நதியின் குணமாக இருந்தாலும் நாமும் அதைப் பின்பற்றினால் இலக்கை சுலபமாக அடைய முடியும்.
”சூழல்களைப் புரிந்து கொண்டு நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அது தான் wu weiயின் அடிநாதம். மாடுபோல் உழைப்பவர்கள் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்கிறார்களா? இல்லாமல் போவதற்கு முக்கியக் காரணம் எதுவாக இருக்கும் என்று யோசித்து இருக்கிறீர்களா? உழைப்பு, தியாகம் இவற்றையெல்லாம் தாண்டி ஒன்று இருக்கிறது. அது இல்லையெனில் வெற்றி கிடையாது. அது தான் wu-wei. இதை, இந்தத் துறையில் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றில்லை. எங்கும் எதிலும் பயன்படுத்தி இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும்.

”கட்டாயப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் பயனற்றுப் போகும். ஊர் சொல்கிறது, சமூகம் எதிர்பார்க்கிறது என்று நாம் செய்ய ஆரம்பிக்கும் எதுவாக இருந்தாலும் அது wu- weiயை எதிர்த்துப் போகும் போக்கு. அதாவது இயற்கைக்கு எதிரானது. உயிரைக் கொடுத்து நீங்கள் உழைத்தாலும் அது வீழ்ச்சியிலும் மன அழுத்தத்திலும்தான் முடியும் என்பது கசக்கும் உண்மை.”

லாவோ ட்சூ சொன்ன wu weiயைப் பத்துப் படிகளில் கற்றுக் கொள்ளலாம்.

1. ஒரு நாளை ஆரம்பிக்கும் போதே விழிப்போடு இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது செய்யும் செயலில் மனம் ஆழ்ந்து இருக்க வேண்டும். ஒரு தேநீரைக் குடிப்பதாகக்கூட இருக்கட்டும் . முடிந்தளவு செய்யும் செயலில் கவனம் வேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும், செயல் திறன் அதிகரிக்கும்.

2. தினமும் முப்பது நிமிடம் வேறு எந்த வேலையையும் செய்யாமல் இயற்கையாக இருக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள். கடற்கரை. பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு இல்லை என்றால் சூரிய உதயம் அல்லது அஸ்தமனத்தையாவது வீட்டிலிருந்து பார்த்து மகிழுங்கள். காலை அல்லது மாலை வெயில் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் முக்கியம்.

3. ஒரு நேரத்தில் ஒரு வேலை என்று மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு படி அதிகமான அழுத்தம் யார் கொடுத்தாலும் மறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

4. எதிலும் அவசரம் இருக்கக் கூடாது. ஒரு செயலைச் செய்யும் போது அது செய்து முடிவதற்கான நேரம் என்று ஒன்று இருக்கும். அதை மதிக்க வேண்டும். இன்று ஆரம்பித்து நாளையே முடிய வேண்டும் என்கிற அவசரம் இருந்தால் அது வீணாகப் போகும்.

5. உடல் ஆரோக்கியமும் மன நிம்மதியும் இன்றி எந்தச் செயலையும் நீண்ட நாள்களுக்குச் செய்ய இயலாது என்று புரிந்து கொள்ளுங்கள்.

6. எல்லா நேரத்திலும் நாம் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பது சாத்தியமில்லை. அதனால் நம்முள் வரும் உணர்வு மாறுபாடுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முன் முடிவுகளைக் கைவிட்டுவிட்டு எண்ணங்களைக் கவனியுங்கள். இது உங்கள் புரிதலை மேம்பட்டதாக்கும்.

7. மாற்றங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம். இது இயற்கையின் நியதி. அதனால் மாற்றம் எங்கு வந்தாலும் அதைப் புரிந்து கொண்டு புதிய வழிகளைக் கண்டறியுங்கள்.

8. எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு எந்த வேலை செய்தாலும் அது மன அழுத்தத்தைக் கொடுக்கும். இலக்கை தேர்வு செய்து வேலை செய்தால் போதுமானது. எதிர்பார்ப்பு தேவையற்ற விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

9. எந்தச் செயலையும் திட்டத்தையும் பெரிதாகப் பார்க்காமல் சிறிய சிறிய படிகளாகப் பிரித்து வேலை செய்ய ஆரம்பிப்பது உங்கள் செயல் திறனை அதிகரிக்கும்.

10. சின்ன சின்ன மகிழ்ச்சியை அங்கீகரியுங்கள். அதற்காக இன்னொருவர் வருவார் என்று எதிர்பார்க்க வேண்டாம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசியுங்கள். நதி போல் உங்கள் செயல்கள் எதனாலும் தடைப்படாமல் ஓட நீங்கள் wu weiயைப் பிடித்துக் கொள்வது அவசியம்.

Wu Wei என்பது வெறும் தத்துவம் மட்டுமல்ல. இது நவீன உலகின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஒரு வழிகாட்டி. இயற்கையுடன் இணைந்து, இயல்பாக வாழ்வதன் மூலம் நாம் மேலும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைய முடியும்.

The post Wu Wei: சொல்லிக் கொடுக்கும் பாடம் appeared first on Naseema Razak.

  •  

ரமலான் மாதத்தில் கிடைத்த முத்தம்.

பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் இருந்தேன். அந்தக் கடையில் என்னையும் இன்னொரு பெண்ணையும் தவிர்த்து வேறு வாடிக்கையாளர்கள் இல்லை. அந்தப் பெண்மணி விக்ஸ் டப்பாவை கையில் வைத்து, கடைப் பயனிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். கடைப் பையன் மலையாளி. அவனுக்கு அவர் கேட்பது புரியவில்லை. அவருக்கு அவன் பேசுவது புரியவில்லை.

அந்தம்மா வங்காள மொழியில் பேசிக் கொண்டிருந்தார் என்று மட்டும் எனக்குத் தெரிந்தது. சரியாகப் புரியாவிட்டாலும், விக்ஸ் டப்பாவை என் கையில் வாங்கினேன். மூக்கை உறிஞ்சுவது போல், தொண்டை வலிப்பது போல் சைகை செய்தேன். “ஓ…சொர்தி?” என்று சொல்லிக் கொண்டு அதை எடுத்த இடத்தில் வைத்தார்.

முதலில் தனது கழுத்தைத் தொட்டு ஏதோ சொன்னார். பிறகு முதுகு, இடுப்பு என்று எங்கெல்லாம் வலிக்கிறதோ அங்கெல்லாம் அவர் கை தானாகச் சென்றது. வங்காளமும் உடைந்த ஹிந்தியையும் சைகையையும் சேர்த்து என்னிடம் பேசினார். டைகர் பாம் எடுத்துக் கொடுத்தேன்.
“இது கொஞ்சம் எரியும் ஆனால் வலி குறையும்” என்றேன். அவருக்கு நான் சொன்னது புரிந்தது.”அச்சா..அச்சா….எரியும் மருந்து சீக்கிரம் குணமாக்கும் “ என்றார். பக்கத்தில் இருக்கும் ஓர் அரபி வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறார். காலை பத்து மணிக்கு வேலை ஆரம்பித்தால் இரவு எட்டு மணிக்குத் தான் அறைக்கு வர முடியும். இவர் பாஷை அரபிகளுக்குப் புரியவில்லை. இவருக்கும் அப்படியே. உடல் வலியும் இயலாமையும் அவர் கண்களில் தெரிந்தன.
சரி கிளம்பலாம் என்று பில் போடும் போது, பக்கத்தில் ஏதாவது மருந்துக் கடை இருக்கிறதா? என்று பார்த்தேன். ஒரு மாத்திரை வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது. ஆனால் வழியில்லை. பக்கத்தில் பெரிய கேக் கடை இருந்தது.

நோன்பு துறக்கும் நேரம் என்பதால், சுடச்சுட மட்டன் சமோசா, கட்லெட், பஜ்ஜி, பக்கோடா அது, இது என்று ஏகப்பட்ட நொறுக்குத் தீனி இருந்தது. அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். முதலில் வேண்டாம் என்று மறுத்தார். “என் ரூம்ல நாலு பேர் இருக்கோம்..வேண்டாம் மா” என்று அன்பாக என் கைகளைப் பிடித்தார். நான்கு பேருக்கு வேண்டியவற்றை வாங்கி அவரிடம் கொடுத்தேன். இருவரும் வெளியே வந்தோம். என் காரை நோக்கி நான் செல்ல வேண்டும். பஸ் ஸாட்டாப்பிற்கு அவர் போக வேண்டும்.

“உங்க பேர் என்ன?” என்று கேட்டார். “நஸீமா” என்றேன். அவர் கண்கள் சட்டென்று பிரகாசமாயின. “என் மூத்த மகள் பெயர் நஸீமா”. ஒரு நிமிடம் என்னை வாஞ்சையோடு பார்த்து விட்டு கட்டி அணைத்துக் கொண்டு என் நெற்றியில் முத்தம் கொடுத்தார். இதெல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. அவர் பஸ் ஸ்டாப்பை நோக்கிச் சென்றார். நான் அங்கேயே நின்றேன். என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார். அவ்வப்போது அவர் கைகள் கண்களைத் துடைத்துக் கொண்டது.

அவர் பெயர் நூர். நூர் என்றால் ஒளி. அவர் வாழ்க்கையில் சீக்கிரம் நூர் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

The post ரமலான் மாதத்தில் கிடைத்த முத்தம். appeared first on Naseema Razak.

  •  

‘கமன்’

 ஜப்பானின் ஹைக்கூ கவிதைகள் பிரபலமானது போல் நம்மிடையே கமன்’ பிரபலமாகவில்லை. இது ஜப்பானியக் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு தத்துவம். வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு முழுமையான அணுகுமுறை என்றும் சொல்லலாம்.

எதிர்பாராத ஒன்று நடக்காமல் இருப்பதில்லை. ஏதோ ஓர் இழப்பு, ஒரு துரோகம், தோல்வி என்று அவ்வப்போது நம்மை உண்டு இல்லை என்று செய்துவிடுவது வாழ்க்கையின் இயல்பு.

அப்படி ஒன்று நடக்காமல் தடுக்க நம் யாராலும் முடியாது. ஆனால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்கிற முடிவும் தேர்வும் நம்முடையது. பொறுமையாக அந்த விஷயத்தை எதிர்கொள்வது, காத்திருப்பது என்று கமனைச் சுருக்கிக் கொள்ள இயலாது.

நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, சூழ்நிலைகளை அமைதியாக எதிர்கொள்ளும் திறனைக் கமன் கற்றுத் தருகிறது. தற்காலிக இன்பதுன்பங்களைத் துறந்து நீண்டகால இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் ஒரு மனநிலையை ’ கமன்’ தரும்.

நம் மனம் கவலைகளைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் இயல்புடையது. அந்த இயல்பிலிருந்து விடுவித்துக் கொள்ள கமன் அவசியம். அது மட்டுமல்ல, கமன் கற்றுத்தரும் முக்கியப் பாடம் பொறுமையே வெற்றியின் திறவுகோல். ஆனால், இன்றைய விரைவான உலகில், பொறுமையுடன் செயல்படுவது கடினமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையான,நிலையான வெற்றிக்கு இது அவசியம்.

கமனைக் கற்றுக் கொள்ள மனத் திடம் இருந்தால் போதும்இந்த 10 வழிகள் பலனளிக்கும்.

1. முதல் படி நமது சிந்தனை முறையை மாற்றுவது. தோல்விகளைத் தாண்ட முடியாத சுவர்களாகப் பார்க்காமல்நமது பாதையில் வரும் தற்காலிகத் தடைகளாகப் பார்க்க வேண்டும்.

2. ஏமாற்றத்தை உணரலாம்ஆனால் அதிலேயே மூழ்கிவிடக் கூடாது. சச்சுவின் சூழலில் அடுத்த வேலைகளுக்கு விண்ணப்பித்து நல்ல வேலை வரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். அதுதான் கமன்.

3. எரிச்சல்கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள் எழும்போதுஆழ்ந்த மூச்சு எடுத்துஎதிர்வினையாற்றுவதற்கு முன் சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. உணர்வுகளை அடக்குவது அல்ல கமனின் நோக்கம். மாறாகஅவற்றைப் புரிந்துகொண்டுஅமைதியாகக் கையாள்வதே கமன்’ கலை. ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வதுஅமைதி தரும் இசையைக் கேட்பது போன்றவை பயன் தரும்.

5. நீண்டகால வெற்றிக்குக் கட்டுப்பாடும் கவனமும் மிகவும் அவசியம். நாம் தெளிவான இலக்குகளை நிர்ணயித்துஅவற்றைச் சிறியசாதிக்கக்கூடிய படிகளாகப் பிரித்துமுன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும்.

6. தோல்விகளைப் பார்த்துச் சோர்ந்துவிட வேண்டாம். மீண்டும் ஆரம்பிக்க மனத்தைத் தயாராக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய துவக்கம்தான். எத்தனை முறை தோற்றாலும் ஆரம்பிக்க ஆயத்தமாக இருங்கள்.

7. பெரிய புத்திசாலியாகஉழைப்பாளியாக இருப்பது பெரிதல்லஅவனிடம் பதற்றம் இருந்தால் மற்றவை அனைத்தும் தண்ணீரில் கரைந்த உப்பாகிவிடும். பதற்றத்தைக் குறைக்கச் செயலில் முழுக் கவனமும் பொறுமையும் தேவை.

8. இன்றைய சிறு துன்பங்கள் நாளைய பெரிய மகிழ்ச்சிக்கான விதைகள். இந்தப் புரிதலுடன் முன்னேறும்போதுஎந்தச் சவாலையும் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். இதுவே கமனின் ஆழமான பாடம், ’துன்பத்தில் அர்த்தம் காண்பது,அதன் மூலம் வலிமை பெறுவது.

9. பெரிய பிரச்சினைகளைப் பார்த்துப் புலம்புவதோ அல்லது மனம் தளர்வதோ தீர்வாகாது. மாறாகநாம் எந்தெந்த வழிகளில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிவதே அறிவுடைமை. நம்மால் முடிந்த சிறு மாற்றங்கள்கூடகாலப்போக்கில் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும்.

10. கமன் என்பது தனிமையில் போராடுவது அல்ல. உதவி கேட்பதும்நமது தேவைகளை வெளிப்படுத்துவதும் பலவீனத்தின் அடையாளம் அல்ல. மாறாகமன ஆரோக்கியத்திற்கு இவை மிகவும் அவசியம்.

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். அதில் வரும் சவால்களை எதிர்கொள்ள கமன் நமக்கு ஒரு வலிமையான கருவியாக அமைகிறது. பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்படுவோம்.

The post ‘கமன்’ appeared first on Naseema Razak.

  •  

ஷோஷின்

நம்மில் பலர் நான் சொல்லப் போகும் கதையைக் கேட்டிருப்பீர்கள். இருந்தாலும் இங்கு அதை ஞாபகப் படுத்துவது சரியாக இருக்கும். ஒரு கோப்பையில் பாதி அளவு காபி இருக்கிறது. ஆனால் எனக்குத் தர்ப்பூசணி ஜூஸ் குடிக்க வேண்டும். அதே கோப்பையைத்தான் உபயோகிக்க வேண்டும். அப்படியென்றால், மீதி இருக்கும் காபியைக் குடித்து கோப்பையைக் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆறிவிட்ட காபியில் சுவை ஒன்றும் இருக்காது என்று கொட்டிவிட்டு, அதைச் சுத்தம் செய்ய வேண்டும்.

இதை எதையும் செய்யாமல் பாதி காபி இருந்த கோப்பையில் மேலும் ஒரு கோப்பை அளவு தர்ப்பூசணி ஜூஸை ஊற்றினால் என்ன ஆகும்? அது குடிப்பதற்கு லாயக்கற்றுப் போகும். நம்மில் பலர் பழைய ஏதோ ஒன்றின் மிச்சத்தை வைத்துக் கொண்டுதான் புதிய விஷயங்களை, செயல்களை அணுகுகிறோம்.

ஒன்று, என் வயதுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம். அல்லது எனக்குத் தெரியாத விஷயமா என்கிற அகம்பாவம். இவை புதிதாக எதையும் வாழ்க்கையில் கற்க விடாது. இந்தப் போக்கில் தனி மனிதர்கள் மட்டுமல்ல, பெரிய பெரிய நிறுவனங்களும் வீழ்ந்து போயுள்ளன. உதாரணத்திற்கு நோக்கியா, மொட்டரோலா என்று பட்டியல் நீளும்.

அதற்குச் சுலபமான தீர்வு ‘ஷோஷின்.’ ஜென் தரும் ‘ஷோஷின்’ விதியைப் பின்பற்றினால் வாழ்க்கையில் சுவாரசியம்கூடும். ‘ஷோஷின்’ என்பது ’புது மாணவரின் மனநிலை’ அல்லது ’ஆரம்ப மனம்’ என்று பொருள். இது வெறும் அறியாமை அல்ல, மாறாக, எல்லாவற்றையும் புதிதாக, ஆர்வத்துடன், திறந்த மனதுடன் அணுகும் ஒரு மேம்பட்ட மனநிலை என்கிறார்கள் ஜென்வாசிகள். இதனால் புதிதாகக் கற்க மனம் எப்போதும் தயாராக இருக்கும்.

ஔவை பாட்டி ஷோஷின் விதியை ஒரு பாடலில் சொல்லி வைத்திருக்கிறார். அதன் பொருள்,
’கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு.சும்மா நான் நிறைய கற்றவனா, நீ நிறைய கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள்.’

மாணவ மனநிலையில் இருக்கும் போது நமக்குள் ஓர் ஆர்வம் பிறக்கும். அதை விட்டுவிட்டு, என் அனுபவத்தில் சொல்கிறேன், இப்படிச் செய்தால் அப்படித்தான் நடக்கும் என்று முன் முடிவு செய்வதைத் தவிர்க வேண்டும். புதிதாக யோசனை செய்து சிறப்பான வழிகளைக் கண்டறிய ‘ஷோஷின்’ உதவும்.

அவ்வளவுதானே என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்ளாமல், ‘ஷோஷினைச் செயலில் கொண்டு வாருங்கள். அதற்குப் பத்து வழிகள்:

1. எல்லாம் தெரிந்திருந்தாலும் , புதிதாக என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்கிற ஆர்வம் எப்போதும் இருக்க வேண்டும்.

2. உடன் இருக்கும் அலுவலக நண்பர்களோ, குடும்பத்தாரோ எதையாவது சொன்னால், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கிற கணக்கில் பேசாமல் திறந்த மனத்துடன் கேட்கப் பழகுங்கள்.

3. எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் , முன் அனுபவத்தை வைத்துக் கொண்டு புதிய பார்வையைக் கொண்டு ஆரம்பியுங்கள்.

4. தெரிந்த விஷயத்துக்கு எதற்குப் புது வழி? தவறாகி விட்டால் ? எதற்கு வம்பு என்று இல்லாமல் தோல்வியை சகஜமாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

5. உங்களைச் சுற்றி உள்ள மக்களிடம் ஆர்வம் தரும் விஷயங்களைப் பேசுங்கள்.

6. தேவையற்ற கற்ற பழைய விஷயங்களை நிர்தாட்சண்யமின்றி உங்கள் மனத்திலிருந்து தூக்கி எறியுங்கள்.

7. காலத்துக்கு ஏற்றார் போல், உங்கள் எண்ணங்களை மேம்படுத்தப் புதிய புதிய விஷயங்களைக் கற்கத் தயாராகுங்கள்.

8. லாடம் கட்டிய குதிரை போல் செல்லாமல், காதுகளையும் கண்களையும் திறந்து வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் சுவாரசியம் கூடும்.

9. குழந்தையைப் போல் எந்த விஷயத்திலும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று தேடுங்கள்.
10. எப்போதும் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டே இருங்கள்.

எதையும் ஒரு நாள் செய்தால் பலனில்லை, சோஷினும் அப்படித்தான். அது வாழ்க்கை முறை. சோஷினைத் தொடர்ந்து செய்யும் போது மனம் தானாகப் புதிய வாய்ப்புகளை, வழிகளைக் கண்டறியும்.

The post ஷோஷின் appeared first on Naseema Razak.

  •  

பொன் விளைந்த பூமி, வாசிப்பு – ராஜா ஹஸன்

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நஸீமா ரஸாக், துபாய் தேசம் உருவானதைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்.
இன்று உலகின் சொர்க்க புரியாகத் திகழும் துபாய் அந்த நிலையை எவ்வாறு அடைந்தது எண்ணைய் வளம் மிகவும் குன்றிய ஒரு நாடு .பிற அரபு தேசங்களை விட முன்னணியில் சொல்லப்போனால் உலகிலேயே முன்னேறிய நாடுகளில் துபாய் நகரம் இடம் பெற்ற விதம் குறித்த சரித்திர பூர்வ தகவல்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

மணல் சூழ்ந்த அரேபிய நிலம் அதிலிருந்து நாடுகள் ,யூத, கிறிஸ்தவ மதங்களைத் தொடர்ந்து இஸ்லாம் பரவிய விதம் என பண்டைய வரலாற்றிலிருந்து துவங்கும் நூலாசிரியர் படிப்படியாக 1800களில் அந்த தேசங்களின் நில அமைப்பு வாழ்க்கை என்று எழுதிச் செல்கிறார்.
1800களில் கிழக்கிந்திய கம்பெனியினர் பம்பாயிலிருந்து பாஸ்லாவிற்கு செல்லும் கடல் வழியாக நிலப்பரப்பை கைப்பற்றுகின்றனர். அவர்களுக்கும் கடற்கொள்ளையர்களுடன் நடந்த போரில் குவாசிம்கள் தோற்கடிக்கப்படுகின்றனர்.

வளைகுடாவில் பிரிட்டிஷ் படையினரின் வருகை ஒரு பாசிட்டிவான வளர்ச்சி. துபாய் ஒரு புதிய வெளிப்புற சக்தியுடன் ஆக்கபூர்வமான உறவில் இணைகிறது.
வளைகுடா பாதுகாப்பு பகுதிகளான பஹ்ரைன் மற்றும் கத்தாரையும் சேர்த்து அமீரகம் இருக்கும் என்று பிரிட்டிஷார் எதிர்பார்க்கையில் ஐக்கிய அரபு கரையோரத்தில் இருக்கும் ஐந்து மிகச் சிறிய ஷேக் ராஜ்ஜியங்கள் ஒன்றாக அபுதாபி, துபாய் ,பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு பிரதேசங்களாக செயல்பட துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

1968 ல் தனது தனித்தன்மையை இழந்து விடுவோம் என பஹ்ரைன் நாடு நினைத்ததால் இணைப்பு சாத்தியப்படவில்லை..
பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பஹ்ரைன் ,கத்தார் அமீரகத்தில் இணைய விரும்பாததால் ஏனைய ஏழு நாடுகள் ஒன்று சேர்ந்து 1971 டிசம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிறந்தது.

அபுதாபியின் ஷேக் தலைமை ஏற்க அனைத்து ராஜ்யங்களும் இணைந்த கவுன்சில் ஒன்றுகூடி முடிவுகளை எடுத்த விதம் விவரிக்கப்பட்டுள்ளது.
வியாபாரம் ஒன்று மட்டுமே பொருளாதார ரீதியில் தமது நாட்டை மேம்படுத்தும் என்ற எண்ணிய துபாயின் மன்னர் ஷேக் மஹ்தூம் முடிவால் துபாயில் அரேபியர்கள், பாரசீகர்கள், இந்தியர்கள் ,மற்றும் பலூச்சிகள் என வெவ்வேறு நிலத்து மக்கள் ஒன்று கூடி வாழ ஆரம்பித்தார்கள்.
துபாயில் இலவச துறைமுகம் ஒரு பக்கம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பாக இருந்தது.
ஷேக் ராஷீத் அவர்களின் மேற்பார்வையில் அடுத்தடுத்த வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்கள்.

மன்னர் மனதில் துபாயை முக்கிய கேந்திரமாக மாற்றுவதற்கான அனைத்து பரிமாணங்களையும் யோசிக்க ஆரம்பிக்கிறார் .
1940களில் ஷார்ஜாவில் மட்டும் ஒரு சிறிய விமான நிலையம் இருந்த நிலையில் கப்பல் போக்குவரத்து தவிர விமான போக்குவரத்து அரிதான காலகட்டத்தில் தமக்கென்று சொந்தமாக விமான நிலையம் வேண்டும் என்று துபாயில் விமான நிலைய பணிகளை 1950 களில் ஆரம்பிக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் விமான நிறுவனங்கள் துபாயில் தரையிறங்க மறுத்தன .அந்த அளவுக்கு பயணிகள் இருக்கைகள் நிரம்பாது என்ற காரணத்தை அவர்கள் முன்னெடுத்தனர் ஷேக் அவர்கள் இருக்கைகள் அனைத்தையும் தாமே வாங்கிக் கொள்வதாக அறிவித்து அதற்கான முயற்சிகளை செய்ததில் விமான நிறுவனங்கள் சம்மதித்து துபாயில் தரையிறங்க ஆரம்பித்ததை வாசிக்கையில் வியப்புக்கு உள்ளாகிறோம்.
அடுத்த கட்டமாக வணிகத் தேவைக்காக சொந்தமாக வங்கியை நிறுவிய வரலாறுகள்..
மற்ற அரபு நாடுகளை விட துபாயில் எண்ணெய் வளம் குறைவு.

1970களில் பிரம்ம பிரயத்தன முயற்சிகளுக்குப் பிறகு குறைவான எண்ணெய் எடுக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் ஒரு அதிசய பொருள். அது எவ்விதம் கிடைத்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வரும். அவ்வகையில் துபாயின் பொருளாதாரம் சிறிது சிறிதாக மேம்பட ஆரம்பித்தது..
அடுத்த கட்டமாக நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி.

துபாயையும் அபுதாபியையும் இணைக்கும் வகையில் நீண்ட சாலை போடப்பட்டது. துபாயின் ஆட்சியாளர் பெயர் அபுதாபி சாலைக்கும் அபுதாபியை ஆள்பவரின் பெயர் துபாய் சாலைக்கும் வைக்கப்பட்டது வரலாறு.
ஆங்காங்கே இருந்த சிற்றோடையின் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன.
சரக்கு வாகனங்கள் துறைமுகத்தை விரைவில் சென்றடைவதற்காக தனியாக வசதிகள் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை விமான நிலைய ரன்வேயின் கீழே அகலமான சாலைகளும் சுரங்கப் பாதைகளும் அமைக்கிறார்கள்.

மக்கள் தொகை அதிகரிக்கையில் குடிநீருக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.
துபாய் நகருக்கு தெற்கே 15 மைல் தொலைவில் அல் அவீர் என்ற இடத்தில் ஒரு நன்னீர் நீர் நிலையை கண்டுபிடிக்கின்றனர். நிலத்தடி நீர் குழாய்கள் மூலம் துபாய் நகருக்கு கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறாக ஒவ்வொன்றாக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்த அதே நேரத்தில், வரி, சிகப்பு நாடாத்தனம் போன்றவைகளில் வணிகர்களை சிக்க வைக்காமல் வரியில்லா துறைமுகம், ஏர்போர்ட் என்ற வசதிகள் 85 களில் பெருக ஆரம்பிக்கின்றன .
அந்த காலகட்டத்தில் துபாயில் நல்ல நட்சத்திர விடுதி கிடையாது. உடனடியாக விடுதிகள் கட்டப்படுகின்றன..
அவ்வாறே துபாய்க்கு என்று பிரத்தியேகமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் துவக்கப்படுகின்றன .இன்று உலகின் நம்பர் ஒன் விமான நிறுவனமாக எமிரேட்ஸ் உள்ளது.

அனைத்து பொருளாதரங்களும் உள்கட்டமைப்பிலேயே முதலீடு செய்யப்படுகின்றன .துபாயின் வெற்று கடற்கரையான ஜெபல் அலி என்னும் இடத்தில் மெகா துறைமுகம் கட்டும் திட்டத்தை முன்னெடுக்கிறார்கள்..
துபாய் இன்று மிடில் ஈஸ்ட் வர்த்தகத்தின் நம்பர் ஒன் நகரம் .
மிகப்பெரிய துறைமுகம் மற்றும் விமான நிலையம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு கம்பெனிகளின் இருப்பு ஷேக் ராஷீத்தின் தொலைநோக்கு பார்வையும் அவரின் கனவுகளும் இன்றைய துபாய்க்கு மிகப்பெரிய பலம்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய மால்கள் உணவகங்கள் கட்டப்படுகின்றன.. இவை குறித்து நஸீமா ரசாக் விரிவாக எழுதியுள்ளார் அதைப்போல் துபாயின் ரியல் எஸ்டேட் எவ்விதம் செயல்படுகிறது.. அமெரிக்காவின் லாஸ் வேகாசிற்கு அடுத்தபடியாக இன்று உலகப் பட்டியலில் துபாய் ரியல் எஸ்டேட்டில் முன்னணியில் அறியப்படுகிறது..
புர்ஜ் கலீஃபா என்னும் உலகின் உயரமான கட்டிடம் கட்டப்படும் பொழுது எழுந்த நெகட்டிவ் விமர்சனங்கள் ..
‘இது ஒரு வெள்ளை யானை ப்ராஜெக்ட் ..சரிவராது’ என்று பேசப்பட்ட நிலையில் அது எவ்வாறு முழுமை அடைந்தது என்பதை இரண்டு அத்தியாயங்களில் விரிவாக காண்கிறோம்..

“அந்தச் செல்லத்தை தூக்கி வாங்கப்பா” என்று படத்தில் சொல்வது போல் திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் துபாய்க்கு அழைத்து வரப்படுகிறார்கள். அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த ஆர்கிடெக்டுகள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் கூட்டு முயற்சியே வானாளாவிய கட்டிடம்.
துபாயை ஆண்ட ஷேக்குகளின் சந்ததியில் ஷேக் முகமது குறித்த அத்தியாயத்தில் அவர் எந்த அளவுக்கு மக்களுடன் இணைந்து பணியாற்றி, வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் அவருடைய நிர்வாகத் திறமை குறித்த தகவல்கள் யாவும் வியப்பூட்டுகின்றன.
ஆசிரியர் சொல்வது போல ‘எல்லாம் இருக்கும் பல தேசங்கள் ஆட்சியாளர் சரியாக அமையாததால் அழிவை சந்திக்கின்றன. உதாரணமாக சிரியா, இலங்கை ஈரான் என சொல்லலாம். ஆனால் எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் ஒன்றும் இல்லாமல் உயரத்தை தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்பதில் சந்தேகமில்லை.
பழைய சங்கதிகளை சொல்வதுடன் இல்லாமல் இந்த நூலில் சமீபத்திய அசுரன் ,அரக்கன் ,கோவிட் நோய் தொற்று காலத்தில் துபாய் மீண்டெழுந்த கதையை மிகவும் அருமையாக நமக்கு சொல்கிறார்.

சுற்றுலா பயணிகளையே வருமானமாக கொண்ட ஒரு தேசம் பெருந்தொற்றின் காரணமாக முடக்கப்படும் போது சந்திக்கும் நஷ்டம். பொருளாதார சிரமங்களிலிருந்து வெளிவந்த தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன.
எமிரேட்ஸ் விமான நிறுவனம் பில்லியன் டாலர்களில் நஷ்டத்தை சந்தித்த பொழுது அரசு தலையிட்டு அந்த நஷ்டத்தை ஈடு செய்து மீண்டும் லாப நோக்கில் செயல்பட வைத்ததெல்லாம் மிகப்பெரிய முன்னெடுப்பு…

ஷேக் முகமது அவர்களின் மகனார் ஷேக் ஹம்தன் இன்றைய பட்டத்து இளவரசர்.. துபாய் எக்ஸ்போ கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்தியதன் மூலம் அவருடைய நிர்வாகத் திறமை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி பரிமளிக்க செய்கின்றன.
பாலைவனத்தின் மீன்பிடி கிராமம் துபாய் என்கிற மணல்பிரதேசம் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாக உருமாறிய வரலாற்றை ஆசிரியர் நஸீமா ரஸாக் தெளிவான தரவுகளுடன், சுவாரசியமான எழுத்து நடையில் அபாரமாக விளக்கியுள்ளார்.
வரலாற்று ஆர்வம் மிக்கவர்கள் மட்டுமல்லாது அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்த ‘பொன் விளைந்த பூமி’.

நன்றி ராஜா ஹஸன்.

 

புத்தகம் வாங்க

http://tinyurl.com/Pon-Vilaindha-Bhoomi

The post பொன் விளைந்த பூமி, வாசிப்பு – ராஜா ஹஸன் appeared first on Naseema Razak.

  •  

தங்கப் பதக்கம்

பல வருடங்களுக்குப் பின் இதை மீண்டும் கையில் எடுத்தேன். கிரெசண்ட் கல்லூரியில் எம்.சி.ஏ முடிக்கும் இறுதி ஆண்டு சிறந்த ப்ரோஜெக்ட்காக முதல் இடம் கிடைத்தது.

அதற்கு விழா வைத்துத் தங்கப் பதக்கம் கொடுத்தார்கள். முதல் ரேங் எடுக்கும் மாணவி அல்ல நான். ஆனால் முயற்சிகளுக்கு என்றும் முற்றுப் புள்ளி வைத்ததில்லை.

ஐந்தாவது செமெஸ்டரில் ஐ.டி.சி பேப்பரில் அரியர் வந்துவிட்டது. அதுவரை நோ ஹிஸ்ட்ரி ஆப் அரியர்ஸ் என்ற சிறப்புக்குக் கீழ் என் பெயரும் இருந்து வந்தது. அரியரால் பல சிறந்த நிறுவனங்களின் ப்ளேஸ்மெண்டை தவற விட்டேன்.

ஒவ்வொரு நாளும் என் ஆசிரியர் ஆன்ஜலினா என்னை அழைத்து சமாதானப் படுத்துவார். என்னை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நாலா பக்கமும் நண்பர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். எதுவும் என்னை லேசாக்கவில்லை.

ஒவ்வொரு இரவும் துபாயிலிருக்கும் அப்பாவிடம் இருந்து போன் வரும். அப்பா குரலைக் கேட்டவுடன் வெடித்து அழுது விடுவேன். காரணம் “எதற்கு அவளை மேலும் மேலும் படிக்க வைக்கிறாய்?” என்ற இரைச்சலுக்கு நடுவில் தான் அவர் என்னை படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவரை நான் ஏமாற்றிவிட்டேன் என்ற எண்ணம் என்னை உண்டு இல்லை என்றாக்கியது.

என் ஆசிரியர் எனக்காக ரீ வேலுவேஷனுக்கு விண்ணப்பித்தார். இரண்டு மாதம் எதையோ பறிகொடுத்தது போல் கல்லூரிக்குச் சென்று வந்தேன். இன்று நினைத்தால் ஒரு அரியருக்கா இத்தனை அலம்பல் செய்து இருக்கிறேன் என்று சிரித்துக் கொள்கிறேன். அன்று அது மிகப் பெரிய விஷயம்.

எதிர்பார்க்காத நேரத்தில் ரீ வேலுவேஷன் மதிப்பெண் வந்தது. எண்பத்தைந்து சதவீதம் எடுத்து பாஸ் செய்து இருந்தேன். இரண்டு மாதமாகப் பட்ட வலி எல்லாம் பறந்து போனது.

இறுதி செமெஸ்ட்டர் ப்ராஜெக்ட் வந்தது. ஆறு மாதம் அலுவலகம் சென்று செய்ய வேண்டும். கூட்டு வேலை இல்லை. தனியாகச் செய்தேன். அந்த ப்ரோஜெக்ட்டுக்காக கிடைத்தது தான் அந்தப் பதக்கம்.

அன்றிலிருந்து இன்று வரை நண்பர்களிடம் முக்கியமாக உறவுக்காரர்களிடம் அப்பா பேசும் போது இந்தப் பதக்கத்தைப் பற்றி மறப்பதே இல்லை.

“இன்னும் இதையே சொல்லிட்டு இருக்கீங்க, எனக்கு ஒரு மாதிரி இருக்கு பா “என்று பல வருடங்களாகச் சொல்லி வருகிறேன். அதை அவர் கேட்டது இல்லை. அவர் அப்படிச் சொல்லும் இடங்களிலிருந்து நான் நழுவி விடுவது வழக்கம்.

பதக்கம் என் வெற்றிக்கான அடையாளம் இல்லை. அது என் அப்பாவின் வெற்றி.

The post தங்கப் பதக்கம் appeared first on Naseema Razak.

  •  

பொன் விளைந்த பூமி

சதுப்புநிலமாக இருந்த இடம், காய்ந்து, வெடித்து, பல மாற்றங்களுக்குப் பிறகு பரந்த பாலைவனமானது. நாடோடிகள் முதலில் கூடாரம் அமைத்துப் பார்த்தார்கள். ஆனால் வாழ முடியாமல் பின்பு வேறு இடம் தேடிச் சென்றுவிட்டார்கள். இந்தப் பாலைவனத்தின் முதல் தலைமுறை மைந்தர்களாக வந்தவர்கள் பனியாஸ் மக்கள். இன்றும் துபாயை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் பனியாஸ் பழங்குடி இனத்தவர்கள்.

மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ வளர்ந்து நின்றது எப்படி? அரபு மண்ணில் எங்கு கால் வைத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை. ஏதேதோ அரசியல், அக்கப்போர்கள், உள்நாட்டுப் போர்கள். துபாய் மட்டும் எப்படி எப்போதும் சொர்க்கபுரியாகவே இருக்கிறது?

வெற்றியல்ல முக்கியம். அந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள சூட்சுமங்களை அலசி ஆராய நினைத்தேன். விளைவு, மண்ணின் கதையாக ஆரம்பித்த இந்த வரலாறு ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் கதையாகிப் போனது.

வரும் சென்னைப் புத்தகக்காட்சியையொட்டி வெளியீடு காண இருக்கிறது “பொன் விளைந்த பூமி”

The post பொன் விளைந்த பூமி appeared first on Naseema Razak.

  •  

இயன் ஃப்ளெமிங்

சிலருக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்றால் இடம் மாற்றம் தேவை. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது சொகுசாகத் தெரியும். ஆனால் அவர்களுக்கு அது தேவையாக இருக்கும். முக்கியமாகப் படைப்புச் சார்ந்த வேலைகளில் இருப்பவர்களிடம் இந்த குணத்தை பார்க்கலாம். மாடமாளிகை இல்லை என்றாலும் ஒரு மாற்றம், ஒரு தனிமை. ஆனால் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் ஃப்ளெமிங் தன் இலக்குக்காக ஜமாய்க்கா என்ற நகரில் ஒரு மாளிகையைக் கட்டினார். நானோ நீங்களோ அதே இலக்குக்குப் பின் சென்றால் அதற்காக ஒரு அறை கட்டுவோமா என்பது சந்தேகம்..ஆனால் ஃப்ளெமிங் அதிர்ஷ்டசாலி.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் கடற்படையின் முக்கிய அதிகாரியாக இருந்த இயன் ஃப்ளெமிங் போர் ஆபரேஷன் பலவற்றில் வேலை செய்துள்ளார். அதில் ஒன்று கோல்டன் ஐ. தான் ஆசையாகக் கட்டிய மாளிகைக்கும் கோல்டன் ஐ என்று பெயர் வைத்தார்.

வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில வருடங்களுக்கு முன் அவருக்கு நாவல் எழுத வேண்டும் என்ற உந்துதல் வந்தது. ஜனவரி மாதம் ஜமாய்க்காவில் இருக்கும் கோல்டன் ஐ க்குச் சென்று இரண்டு மாதங்கள் தங்கினார். போரில் களைத்து இருந்தவர் ஓய்வு எடுத்திருக்க வேண்டும். ஃப்ளெமிங் ஓய்வும் எடுத்து எழுதவும் ஆரம்பித்தார். இரண்டு மாதத்திற்குள் நாவல் முடிந்தது. அதுதான் இன்றும் நாம் கொண்டாடும் விறுவிறுப்பான ஜேம்ஸ்பாண்ட் 007 ஏஜண்ட் கதை. 1953-ஆம் ஆண்டு முதல் நாவல் தி கேஸினோ ராயல் வெளிவந்தது. பல ஆயிரம் பிரதிகளும் விற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பிப்ரவரி மாதங்கள் அவர் எழுத்துக்கான மாதங்களாக மாறின.

அவரது வாழ்நாளின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளில் பதினான்கு நாவல்கள் வெளிவந்தன. எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ். ஒவ்வொரு நாவலிலும் சுவாரஸ்யம், காதல், துப்புரவு என்று வாசகனுக்குக் குறைவில்லாமல் இருந்தது. ஆயிரம் அல்ல அவர் இருக்கும் போதே பல நூறு மில்லியன் பிரதிகள் வி̀ற்றுத் தீர்ந்தன. 1953-ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்தவர் 1964- ஆம் ஆண்டு வரை எழுதினார். அவர் மறைவுக்குப் பின்னும் இரண்டு நாவல்கள் வெளிவந்தன.

அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அவருடைய ஜேம்ஸ்பாண்ட் சக்கை போடு போடுகிறது. அவர் அதை எப்படிச் சாத்தியப்படுத்தினார் என்றால் செய்யும் வேலையில் ஒழுக்கம் இருந்தது.

கோல்டன் ஐ சென்ற இயன் ஃப்ளெமிங் பன்னிரண்டு வருடம் எழுதுவதில் ஒரே மாதிரியான ஒழுங்கைக் கடைப்பிடித்தார். அவர் காலை எழுந்தவுடன் நீச்சல் செல்வது வழக்கம். சாவகாசமாக மனைவி ஆன் சமைத்துக் கொடுக்கும் முட்டை மற்றும் பிரெட் டோஸ்ட்டை ரசித்து சாப்ப்பிட்டுவிட்டு, நாளிதழ் படிப்பார். அதற்குப் பின் எழுத்து அறை. ஒன்பதரைக்கு உள்ளே சென்றால் பன்னிரண்டரைக்குத் தான் வெளியே வருவார். தன் டைப்ரைட்டரை எடுத்து மேஜையில் வைத்துத் தொடர்ந்து எழுதுவார். எழுதும் போது சரிபார்த்துக் கொள்வது, வாக்கியங்களைச் சரி செய்வது, பிழை திருத்துவது என்று எதுவும் அப்பொழுது இருக்காது. மூன்று மணிநேரத்திற்கு மடை திறந்து வரும் நதி போல் வார்த்தைகள் அவர் விரல்களிலிருந்து வந்து கொண்டிருந்தன. அது நிற்க வேண்டும் என்றால் பன்னிரண்டரை ஆக வேண்டும்.

அறையை விட்டு வெளியே வந்துவிட்டால் எழுத்தாளர் இயன் ஃப்ளெமிங் காணாமல் போய்விடுவார். அப்பொழுது அவர் கண்களுக்கு மனைவி ஆன் மட்டும் தான் தெரிவார். மதியம் உணவு, மீண்டும் கடலில் சன் பாத். பின்பு சின்ன உறக்கம். மாலை ஆறு மணிக்கு மீண்டும் எழுதத் தொடங்குவார். அதிகம் இல்லை. ஒரு மணிநேரம் மாத்திரமே. அவர் கணக்கு ஒரு நாளில் இரண்டாயிரம் வார்த்தைகள் எழுதியாக வேண்டும். இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த அட்டவணை. அதுவரை கோல்டன் ஐ வாசம். நாவலும் முடிந்துவிடும். இறுதியாக எழுதியவற்றைச் சரிபார்க்கும் வேலை. எல்லாம் முடித்துவிட்ட பின் மனைவி ஆன் படிப்பார், பின்பு பதிப்பாளர் கையில் ஜேம்ஸ்பாண்ட் சென்றுவிடுவார். பதினான்கு நாவலை எழுதும் பொழுதும் எந்த மாற்றமும் இல்லாமல் இதே ஒழுங்குடன் வேலை செய்துள்ளார். சின்ன இலக்கோ பெரியா இலட்சியமோ அதில் வெற்றி பெறத் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஃப்ளெமிங் வெற்றியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

கோல்டன் ஐ மாளிகை இன்று ரிஸார்ட்டாக மாறியுள்ளது. அவர் எழுத உபயோகித்த அறை, மேஜை அப்படியே தான் இருக்கிறது. ஜமாய்க்கா போகும் யாரும் அவர் அறையில் தங்கிவிட்டு வரலாம். முடிந்தால் இரண்டு வார்த்தையும் அங்கு உட்கார்ந்து எழுதலாம்.

The post இயன் ஃப்ளெமிங் appeared first on Naseema Razak.

  •