Reading view

போண்டு

வெள்ளிக்கிழமை காலை இப்படிக் கலவரமாக விடியும் என்று செல்வி நினைத்திருக்கவில்லை. ஆறு மணிக்கெல்லாம் சுடரிடம் இருந்து அழைப்பு வந்தது. எட்டு மணிவாக்கில் ஒருவர் நாய்க்குட்டி கொண்டு வருவார் என்றும்  ‘வாங்கி வைத்துக்கொள்’ என்றும் கட்டளையாகச் சொன்னாள். ‘அதெல்லாம் என்னால முடியாது’ என்று  வேகமாகச் சொல்லியும் சுடர் கேட்கவில்லை.

‘சொல்லி வெச்ச குட்டி இப்பத்தான் கெடச்சிருக்குதும்மா. வேண்டாம்னா அப்பறம் இதுமாதிரி எப்பக் கெடைக்குமோ தெரியாது. பெரிய கஷ்டமில்லம்மா. என்ன செய்யணும்னு நாஞ் சொல்றன்’ என்றாள் சுடர்.

‘உங்கொப்பனும் இல்லாத நேரத்துல இந்தக் கருமாந்தரத்த எதுக்குக் கொண்டாரச் சொன்ன?’

‘கருமாந்தரம் அதுஇதுன்னு பேசாதம்மா. மொதல்லயே சொல்லி வெச்சிருந்ததுதான். குட்டி வந்திருக்குதுன்னு ராத்திரித்தான் சொன்னாங்க. நீ தூங்கியிருப்பன்னுதான் எழுப்பல. இது அடிக்கடி கெடைக்காது, ரேர் குட்டின்னு அப்பவே பணங்கூட அனுப்பீட்டம்மா. கெடைக்கறப்ப வாங்கிக்கோணும். நீ ஒன்னும் பண்ண வேண்டாம். வாங்கிக் கூண்டுக்குள்ள உட்டுட்டுப் பால் மட்டும் ஊத்தி ஊத்தி வெய்யி போதும்.’

‘உங்கப்பனுக்குச் சொன்னயா?’

‘சொல்லீட்டம்மா. அவரு உனக்குத்தான் பயப்படறாரு. நீயே உங்கம்மாகிட்டச் சொல்லுங்கறாரு. அவரு வர்ற வரைக்கும் பாத்துக்கிட்டாப் போதும்.’

‘மகாராசா ஒருமாசம் வனவாசம் போயிருக்கறாரு. அப்பறமில்ல வருவாரு. ரண்டு பேரும் சேந்துக்கிட்டு என்னய ஏன்டி இமுசு பண்றீங்க. ஊட்டுக்குள்ளயெல்லாம் உட மாட்டம் பாத்துக்க.’

அம்மா இறங்கி வருவது தெரிந்ததும் சுடர் உற்சாகமாகி ‘அதெல்லாம் வேண்டாம். வெளியிலயே இருக்கட்டும். செரி, எனக்குக் கெளம்போணும்’ என்று சொல்லித் துண்டித்துவிட்டாள்.

ஒருமாதப் பணியிடைப் பயிற்சிக்காக முருகேசு கிளம்பிப் போய் இரண்டு நாள்தான் ஆகிறது. தேர்வு முடிந்து சுடர் வீட்டுக்கு வரக் கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆகும். ஒற்றை குழந்தை என்று சிறுவயது முதலே செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவு இது. அங்கிருந்து கொண்டு கட்டளை போடுகிறாள். கோபமும் குழப்பமும் சேரக் குமுறலுடன் எதுவும் செய்ய இயலாமல் அப்படியே உட்காந்தார். இதில் அப்பனும் பிள்ளையும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். எப்போதும் அப்படித்தான். தனிமையில் நிற்பது தான்தான் என்று தோன்றவும் அவரை அறியாமல் அழுகை வந்தது. பிடிக்காதவற்றை எல்லாம் பிள்ளைக்காகப் பொறுக்கவும் சகிக்கவும் வேண்டியிருக்கிறது. காலையில் எழுந்ததும் அழ வேண்டியிருக்கிறதே என்று நினைக்க அழுகை கூடியது. 

‘நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும்’ என்பது செல்வியின் ஆழ்ந்த நம்பிக்கை. சிறுவயதிலிருந்தே நாயைக் கண்டால் பிடிக்காது. குழந்தையாக இருந்தபோது பிரியத்தோடு தொத்துக்கால் போட்டு ஏறிய நாயைக் கண்டு ஏற்பட்ட பயம் போகவேயில்லை என்று அவர் அம்மா சொல்வதுண்டு. அதுதானோ என்னவோ நாயைப் பார்த்தால் தன்னையறியாமல் உடல் சிலிர்த்துக் கொள்ளும். எந்த நேரமும் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக்கொண்டு திரியும் அருவருப்பான ஜீவன் இது என்று மனதில் தோன்றும்.

நாய்க்கு மூக்கு எதற்கு இருக்கிறது? பூப்போல மூச்சுவிட வேண்டாமா? ங்கெஸ் ங்கெஸ் என்று உடலே அசையும்படி வாயால் மூச்சு வாங்கிக்கொண்டு நிற்கிறது. இதைப் போய் எப்படித்தான் கட்டித் தழுவுகிறார்களோ என்றிருக்கும். முருகேசுவுக்கு அப்படியில்லை. மனைவி இல்லாமல் வாழ்ந்துவிடலாம், நாய் இல்லாமல் வாழ முடியாது என்று நினைப்பவர். கிராமத்தில் ஆடுகளும் பட்டி நாய்களும் எனத் திரிந்தவர். அரசு வேலை கிடைத்து நகரத்துக்குக் குடிவந்த பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. சுடர் பிறந்து ஐந்து வயதான போது அவளைத் தூண்டிவிட்டு நாய் வளர்ப்புக்குச் செல்வியைச் சம்மதிக்கச் செய்துவிட்டார். அப்போதும் ‘வீட்டுக்குள் விடமாட்டேன்’ என்று நிபந்தனை போட்டுத்தான் செல்வி ஒத்துக்கொண்டார்.

மூவாயிரம் சதுர அடி மனையில் பாதிகூட வீடு இல்லை. சுற்றிலும் இடமிருந்தது. தோட்டம் போட்டிருந்தார்கள். முன்பகுதியில் நாய்க்கூண்டு ஒன்றைக் கட்டி அதிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அந்த நாய்க்குப் பீம் என்று சுடர் பெயரிட்டாள். பதின்மூன்று வருசம் உடனிருந்து ஆறுமாதத்திற்கு முன்தான் உயிர்விட்டது. அதன் இறப்புக்குச் சுடர் வர மறுத்துவிட்டாள். அது ஓடித் திரியும் காட்சியே மனதில் இருக்கட்டும், ஓய்ந்து கிடக்கும் உடலை என்னால் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டாள். அதன் தாக்கத்திலிருந்து மகளைத் தேற்ற ‘இன்னொரு நாய்க்குட்டி எடுத்துக்கலாம்மா’ என்று முருகேசு உறுதி கொடுத்திருந்தார். இருவரும் இந்த இனம், அந்த இனம் என்று பேசி இப்போது புதிதாக ஒன்று வரப் போகிறது.

பதின்மூன்று வருசம் வீட்டில் வாழ்ந்தாலும் பீமோடு செல்விக்கு எந்த நெருக்கமும் இல்லை. உணவு கொடுப்பது, கூண்டைச் சுத்தம் செய்வது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, காலையில் நடைக்குக் கூட்டிப் போவது என எல்லா வேலையையும் முருகேசுவே செய்தார். சுடருக்கு அதுதான் விளையாட்டுத் தோழன். அதற்கான வேலைகளிலும் சிறுசிறு உதவி செய்வாள். பத்து வயதுக்குப் பிறகு அப்பா வெளியில் போயிருக்கும் போது அவளே முழுமையாகக் கவனித்துக் கொள்ளும் அளவுக்குப் பழகிவிட்டாள். குழந்தையிலிருந்து பழகியதால் சுடர் மேல் பீமுக்கு அப்படிப் பாசம். அவள் என்ன செய்தாலும் பீம் பொறுத்துக் கொள்வான். தூரத்திலிருந்து செல்வி திட்டுவதோடு சரி.

‘ஏம்மா…அவனத் திட்டற? பிரியமாப் பேசும்மா’ என்று சுடர் சொல்வாள்.

‘நாய்கிட்டக் கொஞ்சறதெல்லாம் எனக்கு வராது’ என்பதுதான் செல்வியின் பதில்.

நாயைப் பற்றிப் புகார் சொல்லும்போதோ திட்டும்போதோ செல்வியின் வாயை அடைக்க ஒருமந்திரம் வைத்திருந்தார் முருகேசு.

‘சுடரோடு வெளையாட இன்னொரு கொழந்த பெத்துக்கலாம்னு சொன்னன். நீ எங்க கேட்ட? ஒன்னே போதும். அத ஒழுங்கா வளத்து ஆளாக்குவம்ன. இப்ப ஓரியா அவ எப்படி வெளையாடுவா? இப்பனாலும் இன்னொன்னுக்குச் செரின்னு சொல்லு. நாய ஆருக்காச்சும் குடுத்தர்றன்’ என்று சிரித்தபடி சொல்வார்.

அது விளையாட்டுக்கு இல்லை என்று செல்விக்குத் தெரியும். ஒருகுழந்தையோடு நிறுத்தியதில் இருவீட்டாருக்கும் வருத்தம்தான். முருகேசு தன் வருத்தத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் ‘ஓரியாவா கொழந்தய வளப்பாங்கன்னு அம்மா கேக்குது செல்வி’, ‘என்னருந்தாலும் வாரிசுன்னு ஒருபையன் வேண்டாமான்னு ஊர்ல கேக்கறாங்க செல்வி’ என்று யார் மீதாவது போட்டுச் சொல்வார். யார் எப்படிச் சொன்னபோதும் ஒருகுழந்தை போதும் என்பதிலிருந்து செல்வி பின்வாங்கவில்லை. இரண்டு குழந்தைகள் இருந்திருந்தால் இப்படி ஒருமனை வாங்கி வீடு கட்டியிருக்க முடியாது. சுடரை நினைத்த பள்ளியில் படிக்க வைத்திருக்க முடியாது. முருகேசு அரசு ஊழியர் என்றாலும் ஒருகுழந்தையை வளர்க்கத்தான் ஊதியம் போதுமானது என்னும் தெளிவு திருமணமான புதிதிலேயே செல்விக்கு வந்துவிட்டது அவளுக்கே ஆச்சரியம்தான்.

பீம் இருந்த போதே படிப்புக்கெனச் சுடர் வெளியூர் போய்விட்டாள். பீம் இறந்ததும் இனி நாய்த்தொல்லை இல்லை என்று செல்வி நம்பியிருந்தாள். அப்பனும் மகளும் சேர்ந்து இப்படித் திட்டம் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது முருகேசு என்ன சமாதானம் சொல்வார்? மகளுடன் விளயாட இன்னொரு குழந்தை கேட்பாரா? இருவரும் இல்லாத சமயத்தில் வரப்போகும் நாய்க்குட்டியை நினைத்து வேலையே ஓடவில்லை. அதைக் கையில் எப்படி வாங்குவது, என்ன வைப்பது, கத்தினால் என்ன செய்வது என்பதை எல்லாம் நினைக்க நினைக்கப் பதற்றமாக இருந்தது.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வெளியே போய்ச் சுற்றுச்சுவர் கதவைத் திறந்தார். இடப்பக்க நாய்க்கூண்டுக்குப் பார்வை திரும்பியது. பீமை அருகில் விடவில்லை என்றாலும் வீட்டுக்கு வெளியே எப்போதும் ஓராள் நடமாடும் உணர்வு இருக்கும். அவன் போன பிறகு தான் மட்டும் தனியாக இருக்கையில் ஒரு வெறுமை சூழும். அது பீம் இல்லாததால்தானோ என்று தோன்றியது. தனியாக இருக்கும்போது அந்தக் கதவைத் திறக்கவே தோன்றாது. திறக்க வேண்டிய தேவையும் இல்லை. கதவைத் திறக்காமலே சிலநாள் கழிந்துவிடும். ஓராளுக்கு என்ன பெரிதாகச் செய்ய?

கதவைத் திறந்து வாசலைப் பார்த்தார். இரண்டு நாட்களாகக் கூட்டாமல் இலைகளும் பூக்களுமாய் நிறைந்திருந்தது. தெருவோரக் கொன்றையில் இருந்து பூக்கள் பறந்து வந்து வாசலை நிறைத்திருந்தன. மஞ்சளைக் கரைத்துப் பூக்களின் வடிவில் தெளித்து விட்டது போலிருந்தது. அப்படியே இருக்கட்டும் என்று தோன்றியது. நாய்க்குட்டி கொண்டு வருகிறவன் வாசலைப் பார்த்துவிட்டு ஆளில்லை என்று திரும்பிப் போய்விட்டால்? விளக்கமாற்றை எடுத்துக் கூட்ட ஆரம்பித்தார். லேசாக நீர் தெளித்துச் சிறுகோலமும் போட்ட பிறகு எதையோ சாதித்த மாதிரி இருந்தது.

இஞ்சி தட்டிப் போட்டு மணம் கமழத் தேநீர் போட்டுத் தனக்குப் பிடித்தமான கோப்பையில் எடுத்துக்கொண்டு வந்து முற்றத்து நாற்காலியில் உட்கார்ந்தார். அதில் எப்போதும் முருகேசுதான் உட்கார்வார். மிகச்சிறு முற்றம். ஒருநாற்காலிதான் போட முடியும். யாராவது வந்தால் அவர் எழுந்து உள்ளே வந்துவிடுவார். அந்த நாற்காலியில் அமர்ந்ததும் ஏதோ பலம் வந்த மாதிரி தோன்றியது.  குட்டிநாய் தானே, என்ன செய்துவிடும், பார்த்துக் கொள்ளலாம் என்று மனம் சொன்னது. ஒவ்வொரு மிடறு தேநீர் உறிஞ்சும் போதும் பார்வை வாசலுக்குப் போய் மீண்டது. பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் சத்தம் கேட்டது. முருங்கையில் வந்தமர்ந்த கிளிகள் வறண்ட காய்களைக் கொத்திக்கொண்டு கத்தின. குப்பை வண்டியின் மணியோசை தொலைவில் கேட்டது.

அப்படியே சற்று நேரம் இருந்தவர் ஆழ்ந்த பெருமூச்சோடு எழுந்து உள்ளே சென்றார். உணவுக்கு என்ன இருக்கிறதென்று கண்ணை மூடி யோசித்தார். கொஞ்சம் பழங்கள் இருந்தன. தோசை மாவு இருந்தது. பழைய குழம்புகளும் சட்னிகளும் இருப்பதும் நினைவு வந்தது. ரொம்பவும் பழையதாகிப் போனவற்றை வெளியே கொட்டிவிட வேண்டும். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றார். குட்டிநாய் வர போகிறது, நாய்க்கூண்டு எப்படி இருக்கிறதோ என்று நினைவோடியது. பீம் இறந்த பிறகு அதை முருகேசு கழுவி விட்டது ஞாபகம் வந்தது. அதற்கப்புறம் எப்போதாவது கூட்டியிருப்பாரா என்று தெரியவில்லை. காலை நடைக்குக் கிளம்பும்போது அப்படியே நின்று கூண்டை ஏக்கமாகப் பார்ப்பார். தலையைக் குனிந்தபடி போய்விடுவார். மகளுக்குப் பிறகு அந்த நாயைத்தான் மகனாக நினைத்தாரோ என்னவோ.

விளக்கமாற்றை எடுத்துக்கொண்டு கூண்டுக்குப் போனார் செல்வி. சுற்றுச்சுவரின் இருபக்க மூலைகளையும் இணைத்து அட்டை வேய்ந்த கூரை. ஒருபுறம் அதே அட்டையால் அடைப்பு. அதில் ஒரு சதுரம் வெட்டி வெளிச்சத்திற்கு ஜன்னல். முன்பக்கம் முழுக்கத் திறப்புதான். உள்ளே வேறெதுவும் இல்லை. பீம் படுக்கவென்று கால்மிதி போன்ற எதையோ வாங்கி விரித்திருந்தார்கள். அதை வெளியே கொண்டு வந்து தட்டிப் போடும்போது பார்த்ததுதான். காரை போட்டிருந்த தரையில் சங்கிலி கட்டுவதற்காகப் பதித்திருந்த இருவளையங்கள் இருந்தன. சங்கிலியைக் காணோம். தோட்டத்தில் தான் பீமைப் புதைப்பதாக முருகேசு சொன்னார். செல்விக்கு அது பயமாக இருந்தது. அதைச் சொன்னதும் ‘சரி’ என்று சொல்லி ஒருஆளைக் கூட்டி வந்து வண்டி முன்பக்கத்தில் வைத்து எடுத்துச் சென்றார். புதைத்த இடத்தில் பீமுக்குரிய பொருள்களையும் போட்டுப் புதைத்திருப்பார்.

கூண்டுக்குள் தொங்கிய ஒட்டடைகளை அடித்துச் சுத்தமாக்கினார். தரையைக் கழுவிவிட்டார். முன்பக்கம் திறந்திருக்கிறதே நாய்க்குட்டி எப்படி உள்ளே நிற்கும் என்று சந்தேகம் வந்தது. இந்தப் பக்கத்திலும் பாதியளவு அடைத்திருக்கலாம். குட்டிநாயைக் கட்டிப் போட முடியாது. எவ்வளவு பெரிதாக இருக்குமோ தெரியவில்லை. பால்தான் கொடுக்கச் சொல்லியிருக்கிறாள். அப்படியானால் பூங்குட்டிதான். தோட்டத்தில் பழைய பலகைகள் கிடப்பது நினைவு வந்தது. வீடு கட்டும்போது சில இடங்களில் அட்டாலிக்குப் பலகைதான் வைத்திருந்தார்கள். பிறகு அதை மாற்றிவிட்டுத் தளம் அமைத்தபோது பலகைகளைச் சுவரோரம் சாத்தினார்கள். அவ்வப்போது கரையானைத் தட்டிப் பாதுகாத்திருந்த பலகைகள் இப்போது உதவுகின்றன. தூக்க முடியாமல் தடுமாறி ஒன்றைக் கொண்டு வந்து கூண்டின் முன்பக்கம் நீளவாக்கில் வைத்தார். ஓராள் உள்ளே புகும்படி சந்து இருந்தது. கூரியரில் ஏதோ வாங்கியபோது வந்து சேர்ந்த மரப்பெட்டி கிடந்தது. அதை அந்த இடத்தில் வைத்ததும் சரியாகப் பொருந்தியது.

எல்லாம் போதுமா என்று ஒருமுறை பார்த்தார். அது படுத்துக்கொள்ள ஏதாவது போட வேண்டும். வீட்டுக்குள் போய் எதற்காவது ஆகும் என்று கட்டைப்பை ஒன்றிற்குள் போட்டு வைத்திருந்த நூல்புடவைகளை எடுத்தார். சாயம் மங்கிய ஒன்றை இரண்டு துண்டாகக் கிழித்தார். நான்காக மடித்து வைத்துப் பார்த்தார். மெத்தென்றிருந்தது. வெறுந்தரையில் விட்டாலும் ஒன்றுக்குப் போகும். புடவையைப் போட்டால் அதை நனைத்துவிடும். எடுத்துத் துவைக்க வேண்டும். பிறந்த குழந்தைக்குச் செய்வது போல ஏராளம் வேலைகள் இருக்கும் போல. புடவையை விரித்துவிடலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. சுடருக்குப் பேசிக் கேட்கவும் சங்கடம். அவள் இன்னும் கூடுதல் வேலைகளைச் சொல்லக் கூடும்.

கூண்டுக்குள் ஓரிடத்தில் துணியை விரித்து அதன் மேல் கூடை எதையாவது போட்டு இரவில் மூடிவிடலாம். ஒரே இடத்தில் படுத்திருக்கும். இன்னொரு புடவையையும் எடுத்துக் கிழித்து வைத்தார். மாற்றி மாற்றிப் போடலாம். துணி அலசுவதற்காக வாங்கி இப்போது தோட்டத்துக் குப்பை அள்ளப் பயன்படும் நெகிழி அன்னக்கூடை நினைவுக்கு வந்தது. பின்னால் போய்க் கூடையை எடுத்துத் தட்டித் துடைத்துக் கொண்டு வந்து கூண்டுக்கு முன்னால் வைத்தார். இந்த நாய்க்கு எத்தனை வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று சலிப்பாக இருந்தது. மணியைப் பார்த்தார். எட்டே கால் ஆகியிருந்தது. நாய்க்குட்டியைக் கொண்டு வருபவனை இன்னும் காணவில்லையே.

கதவைத் திறந்துகொண்டு போய் வாசலில் நின்று பார்த்தார். கிளம்பிச் செல்லும் சிலர் பேச நேரமில்லாததால் சிறுசிரிப்பைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். குழந்தைகளை அவசரமாகப் பள்ளிப் பேருந்துக்குக் கூட்டிச் செல்வோர் நேரம் இது. தெருவுக்குள்ளிருந்து வெளியேறுவோர் மட்டுமே இருந்தனர். உள்நுழைவோரைக் காணவில்லை. சுடரை அழைத்துக் கேட்கலாமா என்றிருந்தது. நாயை ஆவலாக எதிர்பார்க்கிற மாதிரி ஆகும். வந்தால் நல்லது. வராவிட்டால் ரொம்ப நல்லது. வீட்டுக்குத் திரும்பிப் பழங்களை அரிந்து மிளகுத்தூளைத் தூவி எடுத்துக்கொண்டு முற்றத்து நாற்காலியில் உட்கார்ந்தார். நன்றாகச் சாய்ந்து வயிற்றை ஒட்டிப் பழத்தட்டை வைத்து ஒவ்வொன்றாக எடுத்துத் தின்றார். ஆடும் நாற்காலியாக இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி ஓய்வாக உண்பது ஆனந்தமாக இருந்தது.

பாதித் தட்டு காலியாவதற்குள் வாசலிலிருந்து ‘மேடம் மேடம்’ என்று அழைப்பு கேட்டது. தட்டை அப்படியே வைத்துவிட்டுப் போய்க் கதவைத் திறந்தார். கல்லூரி மாணவன் போலத் தெரிந்த பையன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்கூட்டரில் வந்திருந்தான். அதன் முன்பகுதியில் இருந்த ஒயர்ப்பைக்குள் இருந்து நாய்க்குட்டியை ஒருகையில் தூக்கி வந்து ‘இந்தாங்க மேடம்’ என்று நீட்டினான். அவன் கையில் பெரும்புழு ஒன்று முன்னும் பின்னும் நெளிந்தது. அருவருப்பில் கண்கூசச் சிலிர்த்துப் பின்வாங்கினார். ‘புடிங்க மேடம்’ என்றான் அவன். தடுமாறிக் கதவை நன்றாகத் திறந்து ‘அந்தக் கூண்டுக்குள்ள உட்ரு’ என்று சொன்னார். கால்களை உதைத்து நெளியும் குட்டியையே பார்த்துச் சிரித்து ‘இன்னமே இதுதான் உன்னூடு. பாத்துப் பத்தரமா இருந்துக்க’ என்று சந்தோசமாகச் சொன்னான். சட்டென்று தலைக்கு மேலே தூக்கி அதன் நெற்றியில் பச்சென்று முத்தம் கொடுத்தான்.  ‘ச்சீய்’ என்று உதட்டைச் சுழித்துத் திரும்பிக் கொண்டார் செல்வி.

‘மொட்டுக்குட்டிப் பயலே, அம்மாவப் பாக்க முடியாது போ. இவுங்கதான் இன்னமே உனக்கு அம்மா. பாத்துப் பதனமா இருந்துக்க. செல்லப்பயலே, செவந்த பயலே, கண்ணுப்பயலே, கருவாய்ப் பயலே…’

குட்டியை முகத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு அப்படிக் கொஞ்சியபடி கூண்டை நோக்கி நடந்தான் அந்தப்பையன். கடித்துத் தின்றுவிடுவானோ என்றிருந்தது. தூக்கத்தில் லயித்திருந்த குட்டி முருகிக்கொண்டு அவன் காதுக்குள் பேசுவது போல முனகியது. தடுப்பை எட்டிக் கூண்டுக்குள் விட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் அதையே பார்த்து நின்றான். பிறகு ‘டாட்டாடா தம்பிச்செல்லம், முத்துக்குட்டி… வரட்டுமா?’ என்று விடைபெற்றுத் திரும்பியவன் செல்வியைப் பார்த்து ‘இப்பத்தாங்கம்மா தாய்கிட்ட நல்லாப் பால் குடிச்சிருக்குது. ரண்டுமணி நேரம் தூங்கும். அப்பறமாப் பால் குடுங்க. தங்கமான குட்டிம்மா… நல்லாப் பாத்துக்கங்க’ என்று சொல்லிக்கொண்டே வண்டியை நோக்கிச் சென்றான்.

அவன் குட்டியைத் தூக்கியதும் முத்தம் கொடுத்ததும் அதனிடம் பேசியதும் வியப்பாக இருந்தன. அவன் வண்டி நின்ற இடம் வெறுமையாய்த் தெரிந்தது. முருகேசும் சுடரும் நாயிடம் பேசுவார்கள். எப்படி, என்ன பேசுவார்கள் என்பதைச் சரியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டோமோ? அவன் சட்டென்று கிளம்பிவிட்டான். இன்னும் சிலவற்றைக் கேட்டிருக்கலாம் என்று பட்டது. அவன் குரலிலும் சிரிப்பிலும் பெருகிய அன்பில் குட்டி நன்றாக நனைந்திருக்கும். இன்னும் இரண்டு வார்த்தை அவனைப் பேசவிட்டுக் கேட்டிருக்கலாம்.  பராமரிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை. நாய்க்கூண்டு இருப்பதால் ஏற்கனவே நாய் வளர்த்த அனுபவம் இருக்கும் என்று நினைத்திருப்பான். செல்பேசி எண்ணையாவது வாங்கியிருக்கலாம். அவன் போன வழியையே பார்த்துக் கொண்டு சற்றே நின்றிருந்துவிட்டுப் பிறகு கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தார்.

நாய்க்குட்டியிடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. கூண்டுக்கு அருகே போய் மெல்ல எட்டிப் பார்த்தார். வெறுந்தரையில் ஊர்வது போல உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தது. லேசான பழுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். நீட்டியிருந்த வாய்ப்பகுதி அடர்கறுப்பு. மூடியிருந்த கண் தலைக்கு மேலே ஒட்ட வைத்தது போலிருந்தது. தொங்கிய காது மடல்களை முகத்திற்குப் போர்வையாகப் போர்த்தியிருந்தது. மெலிந்த உடம்புதான். தாய் நிறையக் குட்டிகள் போட்டிருக்குமோ? பால் போதாமல் இருந்திருக்கும். உடலில் தலை மட்டும் பெருத்திருந்தது. வெளியிலிருந்து பார்க்க லேசாகச் சிவந்த போண்டாவைப் போலத் தெரிந்தது. ‘போண்டாத் தலையன்’ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டார்.

தரையோடு ஒட்டியிருந்த வாய் ஏதோ முனகியது. உடல் மெல்ல அசைந்தது. கழுவிக் கொஞ்ச நேரமே ஆன  வெறுந்தரை சில்லென்று இருக்கும். அதுதான் அசைந்து நெளிகிறது. முற்றத்தில் வைத்திருந்த புடவைக் கிழிசல் ஒன்றை எடுத்து வந்தார். வழியைத் தடுத்திருந்த பெட்டியை  நகர்த்தி ஒருபுறத்தில் துணியை விரித்தார். குட்டியைத் தூக்கித் துணிமேல் வைக்க வேண்டும். கை நீளவில்லை. அந்தப் பையன் நடுவில் பிடித்துத் தூக்கிக்கொண்டு வந்தான். நெஞ்சோடு ஒட்டிய கையை வற்புறுத்திப் பிரித்துக் குட்டியைச் சட்டென்று தூக்கித் துணி மேல் எறிவது போலப் போட்டார். பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டது போலிருந்தது.

தடுப்பை வைத்துவிட்டு எட்டிப் பார்த்தார்.  துணிச்சூட்டை அனுபவித்துக் குட்டி படுத்திருந்தது. தன்கையை நீட்டி ஒருமுறை பார்த்தார். முதன்முதலாக நாய்க்குட்டியைத் தொட்டுத் தூக்கிய கை. ஒருநொடியில் தூக்கிப் போட்டுவிட்டாலும் குட்டியின் தொடுதல் நன்றாக வெந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் போலத்தான் இருந்தது. சுவரோரம் இருந்த குழாயைத் திறந்து கைகளைக் கழுவினார். சோப்புப் போட்டுக் கழுவினால் நல்லது. மிருகத்தைத் தொட்டுவிட்டு அப்படியே வைத்திருக்க முடியாது. வெளியில் இருந்த குளியலறைக்குச் சென்று சோப்புப் போட்டு நன்றாகக் கழுவினார்.

மீதமிருந்த பழத்தை உண்ணும்போதும் மதிய உணவுக்குக் கொஞ்சம் சோறு மட்டும் வைத்தால் போதுமென்று ஏற்பாடு செய்த போதும் பாத்திரங்களைத் துலக்கிய போதும் நாய்க்குட்டியே நினைவில் இருந்தது. பீமுக்கு வைத்திருந்த பாத்திரங்கள் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் எங்கே போய்ப் போட்டார் என்று தெரியவில்லை. இன்னொரு நாய்க்குட்டி வாங்க எண்ணமிருந்தால் அதையெல்லாம் அப்படியே வைத்திருந்திருக்கலாம். வீட்டிலிருந்த தட்டுக்களை எல்லாம் பொறுக்கி நோட்டம் விட்டுக் குழிவாகவும் விளிம்பு வெடித்துமிருந்த இரண்டை எடுத்தார். கழித்துக்கட்ட மனமில்லாமல் வைத்துக் கொண்டிருக்கும் ஏனங்கள். இப்போதைக்கு இவை போதும்.

அந்தப் பையன் சொன்னது போல இரண்டு மணி நேரம் ஆனதும் மெல்லப் போய்க் கூண்டுக்குள் பார்த்தார். துணிமேல் குட்டியைக் காணோம். கூண்டின் இன்னொரு மூலைக்கு நகர்ந்து போய் வாயைக் குவித்து ஊட்ட முயன்று கொண்டிருந்தது. பசி எடுத்துவிட்டது போல என்று உடனே வீட்டுக்குள் ஓடித் தட்டையும் பாலையும் கொண்டு வந்து ஊற்றி வைத்தார். ‘த்தா… வா… வந்து குடி’ என்று சொல்லிப் பார்த்தார். கண்களை நன்றாக விழித்திருந்தது. அண்ணாந்து மேலே பார்க்காமல் தரையிலேயே தவழ்ந்து தாய்முலையைத் தேடியது.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு குட்டியைத் தூக்கி அதன் வாயைத் தட்டுப் பாலில் வைத்தார். வாயில் பால் சுவை தெரிந்ததும் சுறுசுறுப்பாகி வெறும்வாயைச் சப்பியது. வீச்வீச்சென்று கத்தவும் தொடங்கியது. தாய்முலையில் பாலூட்டிப் பழக்கம், இன்னும் தனியாகக் குடித்ததில்லை போல. குழந்தைக்குப் பால் கொடுக்கும் பாட்டில் வாங்கி வைத்திருக்கலாமோ? அதற்கு இன்னும் நேரமாகும். அப்படிக் கொடுத்துப் பழகினால் அதை மாற்ற நாளாகும். அதன் கழுத்தைப் பிடித்துப் பாலில் வாய் படுவது போல வைத்தார். நாக்கை நீட்டிச் சப்பியது. நக்கிக் குடிக்கத் தெரியவில்லை. லேசாக அழுத்தினார். மூக்குவரை பாலில் புதைந்து செருமியது. அடடா… புரையேறிவிடுமே என்று துணியால் வாயைத் துடைத்தார். குழந்தைக்குப் பழக்கும் கைப்பக்குவம் வந்திருந்தது. மூக்கு அழுந்தாமல் வாய் மட்டும் பாலின் மேல்மட்டத்தில் படும்படி வைத்துப் பிடித்தார். சப்புவது மாதிரியும் நக்குவது மாதிரியும் நாக்கை நீட்டிக் குடிக்கத் தொடங்கியது. அப்படியே கொஞ்ச நேரம் பிடித்ததும் தட்டில் இருந்த பால் முழுதும் காலியாகிவிட்டது. மெல்ல உடலைத் தூக்கி நின்று மண்டது.

‘உள்ள போனதும் வெளிய வருதா உனக்கு?’ என்று சிரித்தார்.

உள்ளேயே விட்டுவிட்டுக் குளியலறைக்குப் போய்க் கைகளைக் கழுவினார். வெளியே வந்தபோது பெருமிதச் சிரிப்பு கட்டுப்படுத்த முடியாமல் வந்தது. தன் வாழ்வில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்திவிட்ட மாதிரி இருந்தது. சுடரை அழைத்துப் பேச வேண்டும் என்றிருந்தது. இந்நேரம் வகுப்பில் இருக்கக்கூடும். உணவு நேரத்தில் அழைக்கலாம். குட்டியை இன்னொரு முறை பார்க்கலாம் என்று கூண்டுக்குப் போனார். துணியைச் சுருணையாக உருட்டி அதன் மேல் படுத்துக்கொண்டிருந்தது. கண்கள் விழித்திருக்க வாசலைப் பார்த்தது. செல்வியின் அசைவு தெரிந்ததும் உருமலோடு மென்மையாக ‘லொள்’ என்றது.

‘பாலுக் குடிச்ச கொழுப்புல என்னயவே பாத்து ஒலைக்கிறயாடா?’ என்று சிரித்தபடி கேட்டார்.

செல்வியின் குரல் பழக்கமானது போல உடல் முருக லேசாக அண்ணாந்து பார்த்தது.

‘எங்கொரலு அதுக்குள்ள உனக்குத் தெரிஞ்சிருச்சாடா செல்லக்குட்டி?’ என்று கேட்டார்.

அந்தப் பையன் பேசியது போலவே பேசினால் குட்டிக்குப் புரியும் என்று நினைத்தார்.

‘சரி சரி… தூங்குடா முத்துக்குட்டி’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனார்.

உடல் பரவசம் கொண்டு துள்ளியது. மணியைப் பார்த்துக்கொண்டே ஏதேதோ வேலைகள் செய்தார். இரண்டாம் முறை குட்டியைப் பால் குடிக்கச் செய்தார். இப்போது நன்றாகவே குடித்த மாதிரி தெரிந்தது. தூக்கி வயிற்றைப் பார்த்தார். ஒட்டித்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் வைக்கலாம் என்று ஊற்றினார். ஆனால் குடிக்கவில்லை. வாயை அழுத்தினால் இருபுறமும் ஆட்டி வேண்டாம் என்று சொல்வதாகப் பட்டது. ‘நல்ல அறிவாளிதான்’ என்று பாராட்டிச் செல்லமாகத் தலையில் தட்டினார். செல்பேசி அழைப்பது கேட்டு ஓடிவந்து எடுத்தார். சுடர்தான்.

‘என்னடி இப்பிடி மாட்டி உட்டுட்டு ரண்டு பேரும் போயிட்டீங்க?’ என்று எடுத்ததும் கேட்டார்.

அம்மாவின் பேச்சில் குற்றம் சாட்டும் தொனி இருந்தாலும் அது பொய் என்பதையும் குரலில் சந்தோசம் கொப்பளிப்பதையும் சுடர் தெரிந்துகொண்டாள். அம்மாவைப் பேசவிட்டுக் கேட்டாள். அந்தப் பையன் வந்ததிலிருந்து தொடங்கி ஒவ்வொன்றாக விரிவாகச் சொன்னார்.

‘ஒடம்பெல்லாம் ஒருபுடிக்குள்ள அடங்கீரும். தலதான் போண்டாவாட்டம் பெருத்து நிக்குது’ என்றார்.

‘இதுக்குத் தலை அவ்வளவு பெருசா இருக்காதே’ என்றாள் சுடர்.

‘நீ கண்டயா? நான் பாத்துட்டுத்தான சொல்றன். போண்டாத் தலையந்தான்’ என்றார் செல்லமாகக் கோபித்துக்கொள்ளும் குரலில்.

‘செரி, போண்டான்னே பேரு வெச்சரலாமா?’ என்றாள் சுடர்.

‘அதுக்குன்னு போண்டான்னா பேரு வெப்ப? கேக்க நல்லா இருக்க வேண்டாமா? பீமு மாதிரி எதுனா வெய்யி’ என்றார் செல்வி.

‘பீமு மாதிரியா? போண்டா… போடா… போண்… போடு… போண்டு… போண்டு… செரிம்மா போண்டுன்னு வெச்சரலாம். போண்டான்னு தெரியாது. வித்தியாசமா இருக்கும்’ என்றாள் சுடர்.

அவள் குரலில் நல்ல பெயர் கிடைத்துவிட்ட குதூகலம் ஒலித்தது. ‘போண்டு போண்டு’ என்று செல்வி சொல்லிப் பார்த்தார். நன்றாகத்தான் இருந்தது. எந்தப் பெயரையும் ஐந்தாறு முறை சொல்லி அழைத்துவிட்டால் நாக்குக்குப் பழகிவிடும்.

‘நல்லாத்தான்டி இருக்குது’ என்றார் செல்வி.

‘செரி. அதயே வெச்சுக்கலாம். போண்டு போண்டுன்னு சொல்லிக் கூப்புடு. அப்பத்தாம்மா பழக்கமாகும்’ என்று சொன்ன சுடர் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று வைத்துவிட்டாள்.

பேசியை வைத்ததும் நாய்க்கூண்டுக்கு ஓடி ‘டேய் போண்டு… போண்டு’ என்று அழைத்துப் பார்த்தார். அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். ‘கொழந்ததான். பால் குடிக்கறது, மல்லறது, தூங்கறது இதுதான் வேல’ என்று அவனைக் கோபிப்பது போலத் திட்டிக்கொண்டு வந்து சாப்பிட்டார். உறங்கி எழுந்து மணியைப் பார்த்ததும் பதற்றமானார். நான்கு பத்து. இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போண்டுவுக்குப் பால் கொடுக்க வேண்டுமே. இப்படியா மறந்து போவது? பாலைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடினார்.

கூண்டுக்குள் இரண்டு இடத்தில் ஆய் இருந்து வைத்துவிட்டுத் துணிமேல் உடலை நீட்டி வாசல் பக்கம் பார்த்துப் போண்டு படுத்திருந்தான். செல்வியின் அரவம் கேட்டதும் எழுந்து தலையை நிமிர்த்திக் கத்தினான். இந்தக் கத்தல் கெஞ்சுவது போலிருந்தது. பசி பொறுக்க மாட்டாமல் பாலுக்குக் கெஞ்சுகிறானோ? ரொம்ப நேரம் தூங்கியிருக்கக் கூடாது. அடைப்பை எடுத்ததும் வெளியே ஓடி வந்தான். உள்ளிருந்து தட்டை எடுத்து வந்து பாலை ஊற்றி வெளியிலேயே வைத்துக் குடிக்க வைத்தார். இது மூன்றாவது முறை. நாக்கை நீட்டி நக்கிக் குடிப்பதில் தேர்ச்சி வந்திருந்தது. கழுத்தை லேசாகப் பிடித்திருந்தாலே போதும். விட்டுவிட்டால் அண்ணாந்து கத்துகிறான். ஓரிரு நாளில் பால் தட்டைப் பார்த்து அவனே குடித்துக்கொள்வான் என்றிருந்தது.

குடித்ததும் வெளியிலேயே விட்டார். போண்டு மெல்லச் செடிகளுக்குள் நடந்தான். உள்ளே போய்த் துண்டை எடுத்து வந்து மூக்கை மூடிக் கட்டிக்கொண்டு போண்டு போயிருந்த ஆயின் மேல் மண்ணைத் தூவிக் காயவிட்டு அள்ளினார். செடிக் கழிவுகளுக்கென வெட்டியிருந்த சிறுகுழியில் அதைப் போட்டார். கோப்பையில் தண்ணீர் எடுத்துப் போய் அந்த இடங்களைத் துடைத்தது போலக் கழுவினார். கழிப்பறையில் இருக்கும் பழைய பிரஷை இதைக் கழுவவென வைத்துக்கொள்ளலாம். அங்கே வைக்கப் புதிதாக வாங்கிக் கொள்ளலாம். இன்னும் ஒருமாதத்திற்கேனும் உள்ளேயே மல்லுவதையும் ஆய் போவதையும் தடுக்க முடியாது. அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும். அதற்குள் முருகேசு வந்துவிடுவார்.

பிறந்த குழந்தையைக் கவனித்துக் கொள்வது போலத்தான் இவனையும் பார்க்க வேண்டும் போல. செடிகளுக்கு இடையிலிருந்து வீச்வீச்சென்று சத்தம் வந்தது. இந்தக் கத்தல் வேறுமாதிரி. ஆபத்தில் சிக்கிக்கொண்ட குரல். செடிகளை விலக்கி  உள்ளே போனால் செம்பருத்தியின் இருகிளைகளுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறான். காயம் பட்டிருக்குமோ என்று மெல்ல விடுவித்து மேலே தூக்கிப் பார்த்தார். ஏதுமில்லை. வீட்டுக்கும் சுற்றுச்சுவர் கதவுக்கும் இடையில் நடைபாவாடை விரித்தது போலப் போட்டிருந்த நீளக் காரையின் மேல் விட்டார். ‘இங்கயே வெளையாடு. செடிக்குள்ள போனயின்னா சிக்கிக்குவ பாத்துக்க’ என்றார். அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடும்படி சுடர் சொன்னது ஞாபகம் வந்தது. ‘போண்டு… டேய் போண்டு… போண்டுப் பயலே’ என்று தொடர்ந்து அழைத்தார்.

பக்கத்து வீட்டு மல்லிகா அவர்கள் வீட்டுச் சுவரை ஒட்டி வந்து நின்று ‘என்னக்கா  புதுநாயா?’ என்று கேட்டாள். சுவருக்கு மேல் மல்லிகாவின் தலை மட்டும் தெரிந்தது.

‘ஆமா மல்லிகா. இன்னக்கித்தான் கொண்டாந்து குடுத்தாங்க. ரண்டு பேருமே இல்லயா, எனக்குத்தான் இமுசா இருக்குது’ என்று சிரிப்புடன் சொன்னார்.

குட்டியைத் தூக்கி மல்லிகாவுக்குக் காட்டினார்.

‘ஒடம்பு நல்லா நெடிக்கமா வருமாட்டந் தெரீது. இப்பிடி நாயி நல்லா வேட்ட புடிக்கும்’ என்றாள் மல்லிகா.

‘அப்படியா சொல்ற? உனக்கு நாய்வ கூடப் பழக்கமிருக்குது. நாய்னாவே எனக்கு ஆவாது. இப்பப் பாரு இதோட அல்லாடிக்கிட்டுக் கெடக்கறன்’ என்றார்.

‘பிள்ளையும் வெளியூரு போயிட்டா. அண்ணனும் வேலைக்கிப் போயிருவாரு. அப்பறம் என்ன, உங்களுக்குத் தொணையா இருக்கட்டுமே. நாம திங்கற சோத்துல ரண்டு வாயி போட்டாப் போவுது’ என்று மல்லிகா சொன்னாள்.

‘அட நீ வேற. நாய்க்கின்னு என்னென்னமோ வாங்கிப் போடுவாங்க. செலவக் கேப்பன்னு எங்கிட்டச் சொல்ல மாட்டாங்க.’

‘அப்படித்தான் போடட்டுமே. என்ன செலவாயிருது? ஊட்டுல இன்னொரு ஆளிருந்தாப் போட மாட்டமா?’

மல்லிகாவுக்கு இரண்டு குழந்தைகள். தனக்கு ஒன்றே ஒன்று என்பதைத்தான் மறைமுகமாகச் சுட்டுகிறாளோ என்று எண்ணிச் செல்வி முகம் சுருங்கினார். மல்லிகா அதை உணரவில்லை.

‘என்னுது ரண்டும் இன்னம் அஞ்சாறு வெருசத்துல ஒன்னொன்னா வெளியூருக்குப் படிக்கப் போயிருங்க. அப்பறந்தான் நானும் ஒருநாய் வாங்கோணும். ஊர்ல எப்பவும் ரண்டு நாயி இருக்கும். இவருகிட்ட இப்பக் கேட்டாப் பிள்ளைவள ஒழுங்காப் பாருன்னு பேசறாரு. என்னமோ ஒழுங்காப் பாக்காத மாதிரி.’

போண்டுவின் மேல் கண் வைத்தபடி மல்லிகாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. லேசாக இருட்டு பரவ ஆரம்பித்துவிட்டது. போண்டுவைக் கூண்டுக்குள் விட்டுவிட்டுப் போய் விளக்கைப் போட்டார். இருளில் போண்டு பயந்துகொள்வானோ என்றிருந்தது. பால்காரரிடம் கூடுதலாகக் கால்படி சேர்த்து வாங்கினார். காலையிலும் வேண்டும் என்று சொன்னார். இந்தப் போண்டுவுக்குத் தினமும் அரைப்படி பால் வேண்டும். மனம் பணக்கணக்குப் போட்டது. இந்தக் கணக்கு எதற்கு என்றும் தோன்றியது.

போண்டுவுக்குப் பால் வைத்தார். முருகேசுவும் சுடரும் பேசினார்கள். இருவரையும் திட்டுவது போலவே பேசினார். அவர்கள் கெஞ்சுவது போலப் பேசிப் பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்கள். நடந்த எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னார். அடிக்கடி  ‘போண்டு போண்டு’ என்றார். அந்தப் பெயர் முருகேசுவுக்கும் பிடித்திருந்தது. நாய்க்குட்டியைப் படம் எடுத்து அனுப்பச் சொன்னார்கள். படம் எடுத்துவிடலாம், அதை எப்படி அனுப்புவது என்று தெரியாது. யாராவது அனுப்பினால் பார்க்க முடியும். சுடரிடம் கேட்டு நன்றாகத் தெரிந்திருக்கலாம். நாளைக்குச் சுடருக்கு விடுமுறைதான். அவளிடம் கேட்டால் அங்கிருந்தே சொல்லித் தருவாள்.

எப்போதும் ஓரிரு நிமிடத்தில் முடிந்துவிடும் பேசியுரையாடல் இன்று கால்மணி நேரத்திற்கும் மேல் நீண்டது. இருவரிடமும் பேசிவிட்டுப் பார்த்தால் நேரம் கடந்திருந்தது. வழக்கமாகப் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர் முடிந்திருக்கும். சரி, நாளைக்குப் பார்த்தாலும் கதை தெரிந்துவிடும் என்று சமாதானப்படுத்திக் கொண்டு அடுத்ததைப் பார்க்க உட்கார்ந்தார். இடையில் தோசை ஊற்றிச் சாப்பிட்டார். பத்துமணிக்குப் பால் கொண்டு போய்ப் போண்டுவுக்கு வைத்தார். தலை மேல் மென்மையாகக் கையை வைத்துக்கொண்டார். அவன்பாட்டுக்கு நக்கிக் குடித்தான். கைப்பிடி சோற்றை மிக்சியில் அடித்துப் பாலோடு கலந்து வைத்தால் அவனுக்குப் பசி கட்டும். அடிக்கடி பால் ஊற்ற வேண்டியிருக்காது. திடவுணவு செரிக்கும் அளவு நாளாகியிருக்குமா? நாளைக்கு இதையெல்லாம் சுடரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.

பத்துமணிக்கெல்லாம் படுத்துவிடுவது வழக்கம். அரைமணி நேரம் கூடிவிட்டது. படுத்ததும் வந்துவிடும் தூக்கம் இன்று எங்கோ ஒளிந்துகொண்டது. புரண்டு புரண்டு படுத்தார். எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வெளியே போய் விளக்கைப் போட்டுப் போண்டுவைப் பார்த்தார். புடவைக்குள் சுருண்டிருந்தவன் அரவம் கேட்டு எழுந்தான். ‘தூங்கு தூங்கு’ என்று சொல்லிவிட்டு வந்தவர் விளக்கு எரியட்டும் என்று அப்படியே விட்டார். வந்து படுத்தவர் எந்நேரம் தூங்கினார் என்று தெரியவில்லை. நள்ளிரவில் திடுமென விழிப்பு வந்தது. இருளில் தடுமாறி எழுந்தார். வரவேற்பறை விடிவிளக்கு வெளிச்சம் பனிபோலப் படர்ந்திருந்தது. போண்டுவுக்கு இப்போது கொஞ்சம் பால் வைக்க வேண்டும். கழிப்பறை போய்விட்டு வந்து தண்ணீர் குடித்தார். வெளியில் இடிச்சத்தம் கேட்பது போலிருந்தது.

பாலோடு வெளியே வந்தவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஈசானி மூலையில் மின்னல் கொடி ஒன்று ஓடியது தெருவிளக்கு வெளிச்சத்திலும் தெரிந்தது. வானம் கருகும்மென இருண்டு கிடந்தது. குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியிருந்தது. மழை வருவதற்கான அறிகுறிகள் எல்லாம் இருந்தன. பாலைக் குடித்ததும் போண்டுவைத் தூக்கிச் செடியோரம் விட்டார். அவன் கால்களை அகட்டி மண்டான். செம்பருத்தி மொக்குப் போன்ற நாக்கை நீட்டி வாயைத் துடைத்துக்கொண்டான். ‘புத்திசாலிதான்’ என்றவர் சட்டென்று அவனைத் தூக்கிக்கொண்டார்.

‘போண்டுப்பயலே, மழ வந்தாப் பயந்துக்குவியா? இடி இடிச்சா அழுவியா? அத்தன பயமா உனக்கு? பயப்படாத நானிருக்கறன்’ என்று கொஞ்சிப் பேசிக்கொண்டே வீட்டுக்குள் போய்ச் சோபா மேல் அவனை விட்டுவிட்டுக் கதவைத் தாழிட்டார்.

The post போண்டு first appeared on கனலி.

  •  

சீனிச்சேவு

ரே ஆகாதது எனச் சொன்னாலும், அந்த வடக்குப் பார்த்த வீட்டில் இருந்து வெளியேற அம்மாவிற்கு மனசே இல்லையென்பது முருகனுக்குத் தெரியும். வேலிப் படலைத் தாண்டுகிற வாடைக் காற்று வீட்டிற்கு அடைகொடுத்திருத்திருந்த மரக் கதவின் இடுக்குகள் வழியாக உள்நுழைகையில், அரிசிச் சாக்கைப் போர்த்திக் கொண்டு, அப்பாவின் நெஞ்சில் கால்போட்டுத் தூங்கிய காட்சி மறுபடி அவனது நினைவில் எழுந்தது. அப்பாவின் உடல்சூட்டை அவனது உடல் இன்னமுமே ஞாபகம் வைத்திருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்த அதேவேளையில், வெகுசீக்கிரமே அந்த உடற்சூட்டில் இருந்து தன்னை அவர் விலக்கி வைத்ததற்கான காரணத்தை அறியவும் துடித்தான்.

தூரத்தில் இப்போது அதேமாதிரிச் சுருண்டு தூங்கும் தங்கைகளைப் பார்த்த போது, அவனுக்குள் துக்கம் நுரைப் பாலெனப் பொங்கியது. அதிலும் மூத்தவளை எப்படிக் கரை சேர்க்கப் போகிறேனோ எனத் தந்தையின் இடத்தில் தன்னை வைத்து யோசித்தான். மூத்தவள் லட்சுமிக்கு ஏழே வயதாகியிருந்த போதிலும், தலைமுடி எல்லாம் செம்பட்டை பாவி, நரைப்பிற்கும் கருமைக்கும் நடுவாந்திர நிலையில், கடுங்காப்பியைத் தலையில் ஊற்றிய கணக்காய், முதிய பெண்ணொருத்திக்கு இருப்பதைப் போலவே ஆகிவிட்டது. அப்படித் தலையில் சிக்குப் பிடித்து அலைகிற பைத்தியக்காரி ஒருத்தியையுமே சந்தையில் கண்டிருக்கிறான் முருகன். பள்ளிக்கூடத்தில் உடன்படிக்கிற பிள்ளைகள் ஏகடியம் பேசுகிறார்கள் எனச் சொல்லிப் போகவே மறுத்து விட்டாள் லட்சுமி.

அப்பா இருந்தபோது பக்கத்து ஊர் மருத்துவமனைக்கு அவளைச் சுமந்து கொண்டு போய்க் காட்டினார். முருகனுமே அப்போது உடன் போயிருந்தான். “லட்சத்தில ஒருத்தருக்கு வர்ற குறைபாடு இது. யாராலயும் இதை குணப்படுத்த முடியாது. நல்லா படிச்சு சம்பாதிச்சா வெளிநாட்டில விக்கற விலைகூடின சவுரிமுடி வாங்கி மாட்டிக்கலாம். அதனால பள்ளிக்கூடத்துக்கு போகணும். என்ன பாப்பா? டாக்டர் தாத்தா சொல்றதை கேட்டுக்கிட்டீயா?” என்றார் அங்கிருந்த முதியவர். மாட்டேன் என மாட்டைப் போலத் தலையை அசைத்தாள் லட்சுமி.

வெறும்கையோடு அனுப்பக்கூடாது என்பதால், ”இதை தவறாம சாப்பிட்டா முடி கருகருன்னு வந்திரும் என்ன?” எனச் சொல்லி நான்கைந்து நிறத்திலிருந்த சத்து மாத்திரைகளை மட்டும் கைநிறைய அள்ளிக் கொடுத்துத் திருப்பி அனுப்பினார். அழுகிற குழந்தைக்குக் கையில் ஒட்டிவிடப்படுகிற சவ்வு மிட்டாய் அதுவென்பதை மூன்றுபேருமே அறிந்திருந்தனர்.

அங்கிருந்த கடையொன்றில் போய், அப்பா மூன்று சீனிச்சேவு பொட்டலங்களை வாங்கி வந்தார். பின்னர் சைக்கிளில் அவளை முன்னே அமர வைத்து, முருகன் பின்னே தொற்றி ஏறிக் கொள்ள எதிர்க்காற்றைக் கிழித்துத் தள்ளாடியபடியே மிதித்துக் கொண்டு ஏரிக்கரையோரமாக வந்து நிறுத்தினார். “பாப்பா முடி இல்லாட்டி என்ன? மனுஷங்க வாழ்றதுக்குத்தான் பொறந்திருக்கோம். எந்த எதிர்காத்தையும் எதுத்து வாழக் கத்துக்கணும். அப்பா இருக்கறவரைக்கும் நீ வெறும் லட்சுமி இல்லை. மஹாலட்சுமி” என்றார் அப்பா.

பாப்பாவைச் சமாதானப்படுத்தத்தான் அப்பா அவ்வாறு சொல்கிறார் என முருகன் முதலில் நினைத்தான். ஆனால் அப்பா தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு அதைச் சொன்னதைப் போல உணர்ந்தான். அதுவரை மூஞ்சியைத் தூக்கிவைத்திருந்த பாப்பா, அப்பா சொன்னதைக் கேட்டு மலர்ந்து சிரித்தாள். இரண்டுபேரும் எந்தக் கவலையும் இல்லாமல், வீட்டில் இருக்கிற மற்ற இருவரைப் பற்றிக்கூட யோசிக்காமல், ஏரிக்கரையில் அமர்ந்து சீனிச் சேவை ஒன்றொன்றாய் எடுத்துத் தின்னத் துவங்கினார்கள். ஒவ்வொரு கடிக்கும் ஒவ்வொரு மாத்திரையாகத் தூக்கி ஏரிக்குள் எறிந்து இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிற காட்சியை முருகன் விநோதமாகப் பார்த்தான்.

அதிலிருந்த கெளுத்தி மீன்கள் அம்மாத்திரைகளை எடுக்கப் போட்டி போடுகிற காட்சியை நுணுக்கமாகப் பார்த்தபடியே இருந்தான் முருகன். வீட்டிற்கு வந்தவுடன் இடுப்பில் சின்னவளைச் சுமந்து கொண்டிருந்த அம்மாதான் ஒருபாடு அழுது தீர்த்தாள். “இந்த மனுஷனை வச்சுக்கிட்டு என்னதான் பண்ண போறேனோ? அறிவிருக்கிற எந்த மனுஷனாவது டாக்டரு தந்த மாத்திரையை ஏரிக்குள்ள வீசுவானா? இவளை கட்டிக் கொடுக்க நாந்தான் படாதபாடு படவேண்டி இருக்குமே? பெரிய துரையானே என் வாழ்க்கையில விடிவே இல்லையா?” எனத் துவங்கினாள்.

மிதமான சாராய போதையில் அவள் அழுவதைச் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. அப்பாவின் குலதெய்வம் பெரிய துரையான் என்றால் அம்மாவிற்கு, மாமனார் முறைமாதிரி. ஒண்டிக்கொள்ள உறவு என எதுவுமே இல்லாத அம்மா, அப்பா குறித்த மனச் சங்கடங்களை அந்தத் திசை நோக்கியே எப்போதும் ஒப்புவிப்பாள். கண்ணிருக்கிற சாமியான பெரிய துரையானைத்தான் அவள் பெரிதும் நம்பினாள். ஆனால் அந்தக் கோவிலில் வைத்துத்தான் அப்பாவிற்குமே சாவு நேர்ந்தது.

பெரியதுரையான் கெடாவெட்டில் சாராயம் குடித்து விட்டு, பக்கத்திலுள்ள கிணற்றில் விழுந்த பூனையைக் காப்பாற்ற முயன்று, குப்புற விழுந்து தலைக் கல்லில் மோதிச் செத்தார் அப்பா. அவரது உடலைத் தூக்குவதற்காகப் போன போது, “ச்சீய் நீயெல்லாம் ஒரு மனுஷனா? உனக்கெல்லாம் கண்ணே இல்லையா? ஏழை பாழைகளோட நிக்காத நீயெல்லாம் சாமின்னு எதுக்கு இருக்கணும்? இதுக்கு நீயெல்லாம் பீயை திங்கலாம்” எனச் சொல்லிவிட்டுக் காறியுமிழ்ந்த அம்மா, இனி வாழ்நாளில் அந்தக் கோவிலின் படியைக்கூட மிதிக்க மாட்டேன் எனச் சபதம் போட்டுத் திரும்பினாள். பிள்ளைகளிடமுமே அங்கே வைத்தே சத்தியமும் வாங்கினாள். ஒருதடவை அதைமீறி முருகன் அங்கே கெடா வெட்டிற்குப் போய்விட்டுப் பின்னர் மனம்கேட்காமல் கைநனைக்காமலேயே திரும்பி வந்து, அதைப் பற்றி வெளியே சொல்லாமல் கமுக்கமாக இருந்து கொண்டான்.

அப்பாவின் சாவு காரியத்திற்கு வந்த சொந்தங்கள் அவர்களது குல முறைப்படி, அரிசி பருப்பு காய்கறிகளைத் தானமாகக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அடுத்த ஒருமாதத்திற்கு இருப்பு வரலாம் எனக் கணக்குப் போட்டான் முருகன். அப்பாவின் பழைய சட்டையையும் கைலியையும் எடுத்து அணிந்து கிளம்பிய அவனை வாசலில் அமர்ந்து பாத்திரம் தோய்த்துக் கொண்டிருந்த அம்மா நிமிர்ந்து பார்த்தாள். சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவரைப் போலவே அவன் துள்ளி ஏறியமர்ந்ததையுமே பாதி தோய்த்த ஈயக்கரிப் பாத்திரத்தைக் கையிலேந்தியபடி கவனித்தாள். “மொளைச்சு மூணு எலை விடறதுக்குள்ளயே என்னை மாதிரி பாவனை பண்ண ஆரம்பிச்சிட்டான். ஒடம்பாலையும் மனசாலையும் வயசை மீறி நிக்கறவனை கொஞ்சம் கண்டிஷனாதான் வச்சிக்கணும்” என அவளது புருஷன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அரைக்கைச் சட்டையையே பெரிதாக இருக்கிறது என்பதால் சுருட்டி விட்டிருந்தான். ஆனாலும் ஓரளவிற்கு அவனுக்குப் பொருந்திப் போயிருந்தது அச்சாயம் போன சட்டை.

பள்ளி வாத்தியாரின் முன்நின்ற முருகன், “சார் படிச்சா நல்லா வரலாம்ணு எனக்கு நல்லா தெரியுது? ஆனா முடியாட்டி என்ன பண்றது? படிக்காதவங்க எல்லாம் முன்னேறலீயா என்ன? அதனால வேலைக்கு போகலாம்ணு முடிவு பண்ணிட்டேன். என் மேல அக்கறை கொண்டவரு நீங்க. அதான் சொல்லிட்டு போகலாம்ணு வந்தேன்” என்றான். தன்முன் இவ்வளவு தீர்மானமாக நிற்கிற அந்தப் பதினைந்து வயதுச் சிறுவனை ஆதரவோடு பார்த்த வாத்தியார், “படிப்புங்கறதே இந்த வாழ்க்கையை வாழக் கத்துக்கிறதுதான். வாழ்றதுக்குத்தான் எல்லாமும். பொருளீட்டறதுக்கு முன்னாடி எந்த ஞாய தர்மத்துக்கும் இடமே இல்லைதான். பொருளில்லாதவங்களுக்கு இந்த பூமி இல்லைங்கறதை ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தர் சொல்லிவச்சிட்டு போயிட்டார். அதுக்காக பொருள் மட்டுமே வாழ்க்கையும் இல்லை பார்த்துக்கோ. அது உனக்கு ஒருநாள் புரியவும் செய்யும். என்னைக்காச்சும் தோணறப்ப வந்து பாரு” என்றார்.

பிறகு என்ன நினைத்தாரோ, உள்ளே போய் பையிலிருந்து காசை எடுத்துக் கொண்டு வந்து, அவன் மறுத்தபோதும் விடாமல் வற்புறுத்திப் பையில் திணித்தார். முதல் சம்பாத்தியமே பிச்சையைப் போல அமைந்துவிட்டதே என மனதிற்குள் முருகன் குமைந்தாலும், அவரது ஆதரவான செய்கையை நினைத்துத் தன்னைச் சமாதானமும் செய்து கொண்டான். ஏரிக்கரையில் போய்நின்று ஒவ்வொரு நோட்டாய் உருவி வீசலாமா? என்றுகூட நினைத்தான்.

அம்மாவிடம் அவன் அனுமதியெல்லாம் கேட்கவில்லை. “இங்க பொழைக்க எந்த வழியும் இல்லை. விருதுநகருக்கு போயிடலாம். சித்தப்பா அங்க இருக்காருல்ல. அவர் வீடுபிடிச்சு விடறேன்னு சொல்லி இருக்கார். நான் வேலைக்கு போறேன். நீ பாப்பாக்களை பார்த்துக்கோ” என்றான். “அவரை போலவே இவனும் சொல்பேச்சு கேட்காம கோட்டி பிடிச்சு திரியறானே” எனச் சொல்லித் துவங்கிய அம்மா, வெகுதீர்மானமாய் நிற்கிற அவனைப் பார்த்துவிட்டு, அழுகையை அடக்கிச் சரியென்பதைப் போலத் தலையை அசைத்தாள். தன் முடிவிற்குக் கட்டுப்பட்ட விதத்தில் அவள் தலையாட்டிய காட்சி முருகனிற்குள் உத்வேகத்தைக் கிளர்த்தியது. அவ்வுணர்வைக் கொண்டே மிச்சப் பயணத்தையும் கடந்து விடலாம் எனவும் நம்பிக்கை கொண்டான்.

அப்படித்தான் அதுவரை அவர்கள் இருந்த ஊரைவிட்டுக் கிளம்பலாம் என முடிவு செய்தார்கள். தங்கைகளை எழுப்பி கடுங்காப்பிப் போட்டுக் கொடுத்தாள் அம்மா. வழக்கமாக எதையாவது தொணதொணவெனப் பேசிக் கொண்டே இருக்கிறவள், அன்றைக்கு ஒருசொல்கூட உதிர்க்கவில்லை என்பதையும் உணர்ந்தான். எல்லோரும் கிளம்பி வாசலுக்கு வந்து நின்ற போது, அம்மா தெற்கே திரும்பி பெரியதுரையான் இருக்கிற திசையையே பார்த்துக் கொண்டு கொஞ்சநேரம் நின்றாள். அவள் மனதிற்குள் வேண்டுகிறாளோ? ஆனால் அவளது முகக்குறி கொண்டு எதனையுமே கணிக்க முடியவில்லை அவனால். அதன்பிறகு அம்மா கணிக்கவே முடியாதவளாகவும் மாறிப் போய்விட்டாள்.

பிறகு முருகனை நோக்கித் திரும்பிய அவள் போகலாம் என்பதைப் போலச் சிறு அசைவைக் காட்டினாள். சைக்கிளின் பின்னே மூட்டை முடிச்சுக்களைக் கட்டியிருந்தான். கூடவே நடந்து வந்த ஒரு ஆடு, ஒரு நாய், மற்றும் அந்த நால்வரோடு ஒரு நடைபயணம் துவங்கியது. அவர்களுக்கு எதிரே ஒற்றையடிச் செம்மண்பாதை விரிந்து கிடந்தது. அப்போது வாகை மரத்தில் அமர்ந்திருந்த தனித்த செம்போத்தொன்று கூவி மழையறிவிப்பு செய்தது. அந்தக் கூவலைக் கேட்ட அம்மா கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பாப்பாக்களுமே அச்செய்கையைப் போலச் செய்தார்கள்.

ஏரிக்கரையோரமாக அன்றைக்கு அப்பாவோடு அமர்ந்திருந்த இடத்திற்குப் பக்கமாய் வந்த போது முருகன்தான் அந்தக் காட்சியைப் பார்த்தான் முதலில். கருவேல மரமொன்றினடியில் குத்தவைத்து அமர்ந்திருந்தான் அந்தப் பையன். லட்சுமியை விட ஒரு அங்குலம் உயரமாக இருப்பான். முகத்தைக் கோணி வைத்துக் கொண்டு அழுகிறவனைப் போல அமர்ந்திருந்தான். அம்மா அவனைக் கவனிக்கவில்லை என்பதையும் நோட்டமிட்டான். அவனைக் கடந்து நடந்த போது, திரும்பிப் பார்த்தான். எழுந்து நின்ற அந்தப் பையன் பின்னாலேயே நடந்து வந்தான்.

குறுகுறுப்பு ஒண்ணுக்கு வருவதைப் போல முட்டவே, சிறிதுநேரம் கழித்து மறுபடி திரும்பிப் பார்த்தான் முருகன். காலில் முள்தைத்திருப்பதாலோ என்னவோ, நொண்டியபடியே வந்த அந்தப் பையன், அம்மாவைப் பின்புறமாக வந்து கட்டிப் பிடித்துக் கொண்டவுடன், அவள் திரும்பிப் பார்த்து, “யார் சாமி நீயி? எங்கருந்து வர்ற? என்னாச்சு உனக்கு?” எனப் பதறினாள்.

அவன் அம்மாவின் பின்புறத்தில் முகம் பதித்து விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான். எரிச்சல் முட்டவே முருகன், சைக்கிளை நிறுத்தி விட்டு ஒருகையால், அவனது சட்டையைப் பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயலுகையில், “எதுக்கு சின்ன புள்ளைகிட்ட இவ்வளவு வன்முறையா நடந்துக்கிற?” என்றாள். அவள் அப்படி எதிர்த்துச் சொன்னது முருகனுக்கு எரிச்சல் மூட்டியது.

அவனைப் பிரித்தெடுத்து முன்பக்கம் கொண்டு வந்த அம்மா, “ஏன் சாமி? எங்கருந்து வர்ற? அம்மாளை தொலைச்சிட்டீயா? வேற எங்காச்சும் தேடிப் பாரு. நானில்லை உன் அம்மா” என்றாள். அவன் அதையெல்லாம் புரிந்துகொள்ளாத தன்மையுடன் முகத்தை வைத்துக் கொண்டு நின்றான். முகத்தைக் கோணிக்கொண்டு இருப்பதுதான் பிறவி இயல்போ? அவனுக்குப் பிறவியிலேயே பேச்சே வரவில்லையோ? என நினைத்தான் முருகன். அம்மா மேலும் முன்னோக்கி எட்டுவைத்து நடக்கையில், மறுபடி வந்து அவளது சேலையைப் பற்றிக் கொண்டான்.

அம்மா தன் பார்வையை அந்தத் தொலைவானம் வரைக்கும் வீசினாள். அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லையங்கே. அவள் புரிந்து கொண்டதைப் போலவொரு பாவனையை முகத்தில் கொண்டு வந்தாள். பிறகு சேலைத் தலைப்பால் அவனது முகத்தை, கன்ணிலிருந்த இளமஞ்சள் நிறப் பீளையை, அவன் வாயில் வழிந்த கோழையை அழுத்தித் துடைத்துவிட்டு, கையால் அவனது கலைந்து கிடந்த தலைமுடியைச் சரிசெய்தாள்.

பிறகு யாரை நோக்கியோ சொல்வதைப் போல, “தரித்திரத்தை சுமந்துகிட்டுதான் நாங்க போறோம். வழித்துணையா உன்னை யாரோ அனுப்பி வச்சிட்டாங்க போல. நீயும் வா சாமி. நாலு உசிர்களுக்கு சமைக்கிறேன். நீ ஐஞ்சாவதா இருந்துட்டு போ” என்றாள். அந்தக் கணத்தில் முருகனுக்கு உள்ளுக்குள் உலை கொதித்தது. அம்மா ஒரு வார்த்தையைப் பூமியின் பாதத்தில் வைத்துவிட்டால், அதைப் பின்னால் எடுத்துக் கொள்ளவே மாட்டாள், கைதவறிச் செய்தால்கூட என்பது முருகனுக்குத் தெரியும். தன்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி அந்த முடிவை எடுத்தாள்? என்கிற கேள்வி அவனுக்குள் முளைவிட்டது. உடனடியாக மறுக்க வேண்டுமென எண்ணம் உதித்த போதும், அதை வெளிப்படுத்த முடியவில்லை அவனால்.

அக்கேள்வியை உள்ளத்துள் தேக்கி அவளை உற்றுப் பார்த்த போது, “அய்யோ பாவம், வாயில்லா ஜீவன். இவனும் இந்த நாயும் ஆட்டுக்குட்டியும் ஒண்ணுதான். இனிமே இவனுமே உங்க உடன் பிறப்புதான். என் வார்த்தையை யாரும் மீறமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. சொத்தா இங்க இருக்கு? கிடைக்கிற சோத்தில நாலு பருக்கை இவனுக்கும் கெடைச்சிட்டு போகட்டுமே?” எனச் சொல்லிவிட்டு, பெரியதுரையான் இருக்கிற பக்கமாய்த் திரும்பி நின்று பார்த்தாள்.

அந்தக் கணத்தில் முருகன் பெயரறியாத அந்தச் சிறுவனை அடியாழத்தில் இருந்து வெறுத்தான். தன்னிடம் அனுமதி கேட்காமல் அதை அவள் செய்திருக்கக்கூடாது, அப்புறம் தன்னிடத்திற்கு என்ன மரியாதை? என்பதைக் கடைசிவரை உள்ளுக்குள் வைத்து உழற்றிக் கொண்டே இருந்தான். மேற்கொண்டு தடத்தைப் பார்த்து நடக்கையில், “உன் பேரு என்ன சாமி?” என்றாள் அம்மா. அவன் ஒன்றுமே தெரியாதவனைப் போல விழிக்கையில், “பேரு என்ன பெரிய பேரு? பேர் வச்சா போதுமா? சோறு போடணுமே? இனிமே உன்பேரு விக்னேஷூ. என் மூத்தவனுக்கு இதைத்தான் வைக்க நெனைச்சேன். அப்ப முடியலை. இப்ப வச்சிட்டேன்” எனச் சொல்லிவிட்டு ஒரு குழந்தையைப் போலச் சிரித்தாள். அவளோடு சேர்ந்து கொண்டு பாப்பாக்கள் இருவருமே சிரித்தபடி அவனை ஒரு பொம்மையைப் போலக் கவ்விக் கொண்டார்கள். எப்படிப் பெருந்துக்கத்தை உடனடியாக மறந்தார்கள்? தள்ளி நின்று அம்மூவரையுமே பார்த்தான் முருகன். விக்னேஷூமே கோணப் பயலாய் கோழை வழியச் சிரித்தான்.

அந்தக் கணத்தில் அந்நால்வரிடம் இருந்தும் மனதார விலகினான் முருகன். அதற்குப் பிறகு அவன் பொறுப்புணர்வு என்பதை மட்டும், இடுப்பில் எப்போதும் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிற சூரிக் கத்தியைப் போலச் சொருகிக் கொண்டான். புதிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்த பிறகு, முருகன் நினைத்த மாதிரி எல்லாம் வாழ்க்கை அத்தனை எளிதாக இருக்கவில்லை. பட்டுத் துணியைத் தெருவில் விரித்து அதன்மீது நடக்கச் செய்யும் அதுவென்பதைப் போலக் கற்பனையில்தான் இருந்தான். மாறாக அது அவனை வாழைக் கறைபடிந்த வேட்டியை, படிகாரம் போட்டுக் குளத்து மேட்டுக் கல்லில் ஓங்கியறைந்து வெளுப்பதைப் போலக் கசக்கிப் பிழியத் துவங்கியது.

சித்தப்பாவின் சிபாரிசின் பேரில் சந்தையில் பழமண்டியொன்றில் எடுபிடி வேலை கிடைத்தது. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் தேனியில் இருந்து லோடு வந்துவிடும் என்பதால், எந்நேரமும் எங்கேயும் நகராமல் அந்த மண்டியின் பழம் அழுகிக் கசங்கிய மணத்திற்குள்தான் படுத்துக் கிடக்க வேண்டும். வாழைக்கறை பட்டு நமநமவென அரிக்கும் உடலை வறக்வறக்கெனச் சொறிந்தபடி படுத்துக் கிடக்கும் முருகன், முகத்தில் லாரியின் மஞ்சள் விளக்கொளி பட்டதும் படக்கென விழித்துக் கொள்வான்.

சாலையில் படுத்துக்கிடக்கிற லோடுமேன்கள் அந்த ஒளி முகத்தில் பட்டதும் துடித்துக் கொண்டு எழுந்து லாரியை நோக்கி ஓடுவதையும் முதல்நாள் பார்த்தான். வாழ்க்கை அதன் போக்கில் எல்லோருக்குமே புதிய பழக்கம் ஒன்றைக் கற்றுக் கொடுத்துவிடுகிறதோ? அந்தச் சமயத்தில் அப்பா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என ஒரு நினைப்பு வந்த போது, அதை விடாமல் நாயைக் கல்லாலடித்து விரட்டுவதைப் போலத் துரத்தியடித்தான். தனியாகவே அந்த ஒளியைத் துரத்திப் போய்விட முடியும் என்கிற வைராக்கியமுமே பிறந்தது அவனுக்கு.

“இந்த வேலை அந்த வேலைன்னு இல்லை. முதல்ல ஒரு வேலையில உக்கார குண்டி பழகணும். அப்படி உக்காந்து பழகிட்டா அப்புறம் எங்க போனாலும் பிழைச்சிக்கலாம். அதனால ஒழுங்கு மரியாதையா மனச அலையவிடாம இங்கேயே இரு” எனச் சொல்லித்தான் சித்தப்பா அங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டார். பல்லைக் கடித்துக் கொண்டு அதன்பேரிலேயே அந்த வேலையில் இருந்தான் முருகன். ஆனால் வாழ்க்கை இரண்டு வருடங்களாக அந்த மண்டிக்குள்ளேயே, தின்று கொழுத்த பெருத்த எலியொன்றைப் போலச் சுருட்டிப் பதுக்கி வைத்துக் கொண்டது.

வீட்டிற்கும் அவனுக்குமான போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பித்ததும் அக்காலத்தில்தான். ஆரம்பத்தில் அந்தக் கோணை முகத்தானைக் கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் பிரயத்தனப்பட்டான் முருகன். அப்பா செய்வதைப் போலவே வீட்டிற்குள் நுழைந்ததும் கைகால் கழுவி விட்டு, பையில் இருக்கும் பணத்தை எடுத்து அம்மாவின் பார்வை படுகிறபடி ஒரு இடத்தில் வைத்தபிறகு வெளியே போய்க் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொள்வான்.

தூரத்தில் இருந்து அங்கே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பான். அங்கே அம்மா அந்த மூவரோடு கரைந்து அமிழ்ந்து கிடப்பதைப் பார்க்கப் பார்க்க வெறியாக இருக்கும் முருகனுக்கு. அப்போதெல்லாம் மூத்தவளும் இளையவளுமே கூட முருகனை நெருங்கி வர புதுசாய் அச்சப்பட்டார்கள். அந்த நால்வரும் தன்னைத் தவிர்த்துவிட்டு தனியாய் புத்தம் புதுவாழ்வொன்றைத் துவங்கி விட்டதாகவும் நினைத்தான் முருகன். அம்மாவுமே குறைந்த சொற்களோடுதான் அவனோடு புழங்கிக் கொண்டு இருந்தாள். இதைப் பற்றியெல்லாம் தன்சக லோடுமேன் ஒருத்தனிடம் சொன்ன போது, “வெளிச்சத்தை நோக்கி நீதாம்லே நெருங்கி போகணும். ஒருநாள்ள சாகிற விட்டில் பூச்சிக்குக்கூட இந்த உண்மை தெரிஞ்சிருக்கு. மனுஷனுக்குப் புரியலையா? விலகி விலகி போயிட்டு இருட்டா இருக்குன்னு புலம்புனீன்னா எப்படி?” என்றான்.

ஆனால் முருகனால் அந்தப் புதிய உருப்படியுடன் நெருங்கிப் போகவே முடியவில்லை. எந்நேரமும் முகத்தைக் கோணி இளித்தபடி நடக்கும் அந்த உயிர் அவனது தன்னிருப்பைக் குலைத்தபடியே இருந்தது. அதெப்படி ரேஷனரிசிச் சோற்றைப் போல வெந்து சாகிற தன்னிடம் அனுமதி கேட்காமல் அம்மா அதைச் செய்தாள் என்று அப்போதுமே நினைத்தான். இந்த மாதிரி எண்ணங்களை எல்லாம் விரட்டக் கொஞ்சமாய்ச் சாராயம் குடிக்கவும் பழகிக் கொண்டான். உடலில் ஒட்டியிருக்கிற பழமண்டி மணம் எனச் சொல்லிக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையும் பிறந்தது.

வீட்டிற்குப் போவதற்கு முன்பு சந்தையின் மூத்திரச் சந்திற்குப் பக்கத்தில் இருக்கிற கொய்யா மரத்தில் இருந்து கொழுந்து இலைகளை மென்றுவிட்டுப் போவான். தவிர, தூரத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கிற அவனை நெஞ்சோடு ஆரத் தழுவி உச்சந்தலையில் அம்மா முத்தம் கொடுக்கப் போகிறாளா? இல்லை, தங்கைகள்தான் மடியில் புரண்டு விளையாடப் போகிறார்களா? என்கிற விட்டேற்றித்தனமும் இணைந்துகொண்டது அவனிடம்.

அப்படியொரு நாள் கொஞ்சம் கூடுதலாகக் கண் சிவந்து கிடக்கிற மாதிரித் தோரணையில் வீட்டிற்கு அரைக்கிலோ ஆட்டுக்கறியை எடுத்துக் கொண்டு போனான். அவன் போய் அமர்ந்த தோதை ஓரக் கண்ணால் அம்மாவுமே பார்த்தாள். வட்டிலில் நாலைந்து கறித் துண்டுகளை பார்த்ததுமே முருகனுக்குள் கோபம் கொப்பளித்தது. வட்டிலை மண் தரையில் வீசியெறிந்த அவன் எதிரே நின்றிருந்த அம்மாவை பார்த்து, “கொஞ்சமாச்சும் கருணை இருக்கா உனக்கு? உழைச்சு களைச்சு வர்றவனுக்கு நாலு துண்டுதானா? இருக்கற கஷ்டத்தில எதுக்கு ரோட்டில போற நாயை எல்லாம் நடுவீட்டில வச்சு பொங்கிப் போட்டு சாவடிக்கிற. நாய் நாலு பருக்கையா தின்னுது? அது கறியும் சோறும்ல கேட்குது” என்றான். சொன்னபிறகே அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்பதும் உறைத்தது.

இடுப்பில் சேலையைச் சொருகிக் கொண்டு அவனை நோக்கி அம்மா நடந்துவந்த போது, சின்னப் பையனைப் போல அவனுக்குள் நடுக்கம் வந்தது. அடிக்கப் போகிறாளோ? அவனது கண்ணைப் பார்த்து, “எம்புருஷன் என்னோட படுத்துக் கிடந்த பவிசுக்காக என்னன்னாலும் பேசுவான். நானும் பொறுமையா கேட்டுக்குவேன். உசுர் வாழ என்ட்ட பாலைக் குடிச்சிட்டு படுத்துக் கிடந்த பயல் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டீயா? மரியாதையா பேசு இல்லாட்டி நாக்கை இழுத்து வச்சு அறுத்திருவேன். உன் காசும் வேண்டாம் மயிரும் வேண்டாம். நான் கல்லுடைச்சாவது எம்புள்ளைகளை காப்பாத்திக்குவேன்.” என்றாள் தீர்மானமாய்.

அப்போது தூரத்தில் தங்கைகளோடு அந்த நாயும் வாயைக் கோணிக் கொண்டு சிரித்தபடி நின்று அக்காட்சியைப் பார்த்தது. தங்கைகளின் முகத்தில் கலவரம் தெரிந்தது. அந்த நாய்க்கு அங்கே என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை. ஆங்காரம் பெருக்கெடுத்துப் பக்கத்தில் இருக்கிற கட்டையை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி அடிக்கப் பாய்ந்தான் முருகன். அப்போது அவனுக்கு எதிரே அரிவாள்மனையைக் கையில் ஏந்தி நின்ற அம்மா, “அவம் மேல கைபட்டிச்சு உன் சங்கை அறுத்திருவேன் பார்த்துக்கோ. ஞாயத்துக்கு முன்னாடி பெத்த பிள்ளையாவது மசிராவது?” என்றாள். அவனது போதையெல்லாம் அந்தக் கணத்தில் அக்னி வெயிலைக் கண்ட குட்டை நீரைப் போல வற்றியடங்கி, அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். உடனடியாகவே சுருக்கெனப் பதிலுக்கு ஏதாவது அம்மாவை நோக்கிப் பேசவேண்டுமென எழுந்த உணர்வை அடக்கிக் கொண்டான் முருகன்.

எவனோ ஒருத்தனுக்காகச் சொந்தப் பிள்ளையை அப்படிச் சொல்வாளா? என்கிற கேள்வி அவனுள் ஓடியது. அந்தப் பயல் இல்லாத நாடகம் போட்டு அவர்களிடம் பரிதாபத்தை வென்றுவிட்டான் என்றும் தோன்றியது. ஒன்றும் பேசாமல் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு சைக்கிளைத் தள்ளியபடிச் சந்தைக்குக் கிளம்பினான் முருகன். மூவரில் யாராவது தன்னை வீட்டிற்கு அழைப்பார்கள் என அந்த நேரத்திலும் எதிர்பார்த்தான். ஆனால் யாரும் அழைக்கவில்லை, அம்மாவின் சொல்தான் அங்கே இறுதியாயிற்றே?

அம்மா சொன்ன மாதிரியே கல்லுடைக்கிற வேலைக்குக் கிளம்பிப் போனாள். அவளிடம் போய் நின்று பேசமுயற்சித்த போது, “நாய் நரி பறவைன்னு எல்லா உசுருமே தான் சோத்துக்கு தானேதானே உழைக்குது? நான் மட்டும் என்ன செறப்பு? இனியாச்சும் எவர் கையையும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கிறேன். உனக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சுன்னா அந்த மூணு உசிர்களுக்கும் சேர்த்து செய்யு. என்னை என் வழியில விட்டிரு. ஒரு அம்மாவா கடைசியா இதைத்தான் உண்ட்ட கேட்கிறேன்” என்று அவள் சொன்ன போது அவளது கண்கள் கலங்கி இருந்ததை முருகன் பார்த்தான். ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்த போது, தூரத்தில் மூன்று பேரும் அமர்ந்து எதையோ பேசிக் கொண்டு இருந்தார்கள். தங்கைகளை மட்டும் தனியாக எப்படி அழைப்பது? என்கிற யோசனையில் எதுவுமே கொடுக்காமல் வெளியேறினான் முருகன்.

அதற்குப் பிறகு வீட்டிற்குப் போவதைச் சுத்தமாகக் குறைத்துக் கொண்டான். அம்மா இல்லாத நேரங்களில் மட்டும் போய் சாமி படத்திற்கு அடியில் பணத்தை வைத்துவிட்டு வருவான். அந்தப் பணம் எடுக்கப்படாமலேயே குவிந்து சேர்ந்து கொண்டிருப்பதையும் பார்த்தான். ஆனால் தன் கடமையில் இருந்து வழுவிவிடாத செயலைத் தவறாமல் மேற்கொண்டான். அப்போது அப்பாவைத் தன்னுள் இருத்தி நினைத்தும் கொண்டான்.

அம்மாவென்கிற அங்குசம் மனதளவில் இல்லாமல் போனபிறகு அவனுக்குள் தினவெடுக்கத் துவங்கி விட்டது. சந்தையில் தினவிற்கான அத்தனை வாய்ப்புகளும் காய்கறி மூட்டைகளைப் போலவே குவிந்தும் கிடக்கின்றனதானே? அம்மாவால் விளைந்த வெறுப்பு அவனுள் வெம்பின பழத்தின் புழுக்க மணத்தைப் போலப் பெருகி நிறைந்தது. எந்தச் சமாதானத்தினாலும் அதைத் துடைத்தழித்து ஈடுகட்ட முடியவில்லை.

எங்காகிலும் உள்ளுக்குள் திரளும் அவ்வெறுப்பை இறக்கி வைக்க அவனையறியாமல் துடித்தான். எதிரே தட்டுப்படுகிற உயிர்களின் மீது அதை இறக்கி வைக்கத் துவங்கினான். யாரையுமே மனதளவில்கூட அடித்திராத அவன், காரணமே இல்லாமல் சந்தையில் கேட்பாரில்லாமல் திரியும் ஆட்களை மட்டுமல்ல, மாடுகளைக்கூட அடித்துத் துன்புறுத்தத் துவங்கினான். அப்படிச் செய்கையில் உள்ளுக்குள் இருக்கிற வெறியடங்கி மனம் சமாதானம் அடைவதாகவும் தோன்றியது அவனுக்கு. ரத்த ருசி கண்டவுடன் பிறகு அதுவே பழக்கமாகவும் ஆகிவிட்டது.

அம்மா பற்றிக் கொள்ளச் சொன்ன அதைவிடுத்து குடி, சோக்கு, சீட்டு என மற்ற மூன்றைச் சேர்ந்து கொண்டான். இதைப் பற்றியெல்லாம் தயங்கிச் சொன்ன அவனுடைய சித்தப்பாவிடம், “ஆட்டமெல்லாம் கழுத்துக்குக் கத்தி வர்ற வரைக்கும்தான்” என்று அம்மா சொன்னது அவன் காதிற்குமே வந்து சேர்ந்தது.

ஆள் ஓங்குதாங்காக இருந்ததாலும், சண்டைக்குண்டான கைப்பழக்கம் வந்துவிட்டதாலும், சந்தையில் மற்ற வியாபாரிகள் தங்களுக்குள் நடக்கிற சில்லரைச் சண்டைகளுக்காக அவனைப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினர். அவன் சந்தையில் யாரைப் பார்த்தாலும் கையை ஓங்கிக் கொண்டு, நாக்கைத் துருத்துகிறவனாக மட்டுமே அறியப்படத் துவங்கினான். இதன் காரணமாகவே கையில் காசுபணமும் புரளத் துவங்கியது. அது கூட்டாய் வருகையில் கண்ணடியும் சேர்த்துத்தானே வரும்? “ஏசு நாதர் மாதிரி கல்லடிகூட வாங்கிடலாம்ப்பா. ஆனா ஊர் மக்களோட கண்ணடி மட்டும் வாங்கிரக் கூடாது. அது நின்னு கொல்லுற சனியன்” என்றார் மூத்த வெங்காய வியாபாரி ஒருத்தர்.

”இன்னைக்கு மீசை மொளைச்சவன் அதிகாரம் பண்றதை நாம பாத்துக்கிட்டு இருக்கணுமா? நாம என்ன பொண்டுக பயல்களா? நாம செஞ்சோம்ணா சந்தையில தேவையில்லாத பிளவு வந்துடும். வெளியூர் ஆட்களை வச்சு காதும் காதும் வச்ச மாதிரி சீக்கிரமே செஞ்சி விட்டிரலாம்” எனச் சந்தையில் அவனுக்கு எதிரான ஆட்களும் சேரத் துவங்கினர்.

அந்தக் கூடுகை குறித்த செய்தி முருகனின் காதுகளையுமே வந்தடைந்தது. “பார்றா. அவனுக செய்றதுக்கு நாம என்ன ராமசாமி தியேட்டர் சந்தில நின்னு காசுக்காக வாவாவான்னு காலை விரிச்சுக்கிட்டு கூப்பிடறவளா? வரட்டும். ஆட்டை அறுக்கிற மாதிரி கழுத்தை அறுத்து சந்தை வாசல்ல எலுமிச்சம்பழம் கருப்புக் கயிறு கட்டி தொங்க விடறேனா இல்லையான்னு பாரு” என்று மார்தட்டினான். சந்தை அவனுக்குப் பகலில் இருப்பதைப் போல இரவிலுமே பரபரப்பாகவே இருந்தது அப்போதெல்லாம்.

இடையில் நாலைந்து தடவை மட்டுமே வீட்டிற்குப் போய்விட்டு வந்தான். மூத்தவளைப் பார்த்து, கேரளாவில் இருந்து ஒருத்தர் கொண்டுவந்து தந்த தலைக்குத் தேய்க்கிற எண்ணெயைக் கொடுத்த போது, “தேய்க்கிறேண்ணே. ஆனா தம்பி வந்த பெறகு முடியெல்லாம் ஒரு விஷயமான்னு தோண ஆரம்பிச்சிருச்சு. அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்திருச்சுண்ணே” என்றாள் பெரிய மனுஷி மாதிரி. “ஆமா தொம்பி” என எதுவோ சொல்லத் துவங்கிப் பின் வாயை அடக்கிக் கொண்டான். அதெல்லாம் புரியாத மாதிரி மற்ற இருவரும் தூரத்தில் அமர்ந்திருந்தனர்.

அந்தக் கோணப்பயல் மட்டும் குறுகுறுவென முருகனையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் உடனடியாகவே வீட்டில் இருந்து வெளியேறினான். எதிரே அம்மா நடந்து வந்த போது அவனும் நடையைத் தளர்த்தினான். “ஒரு உசுரை வளர்க்குறது அதுக நல்லா வாழ்றதுக்குத்தான்” எனச் சொல்லிவிட்டு அம்மா வீட்டை நோக்கிப் போனாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் எனக் கொஞ்ச நேரம் நின்று பார்த்தான் முருகன்.

வருஷநாடு போய் நல்லதாய் இரண்டரை அடிக்கு ஒரு அருவாளை அடித்துக் கொண்டு வந்து, அதுவே துணையெனப் படுக்கத் துவங்கினான் முருகன். அம்மா சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதேசமயம் முன்வைத்த காலை பின்வைக்க முடியாது என்பதையும் உணர்ந்தான். எந்த நேரமும் அவனைச் சுற்றி ஆட்கள் இருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டான். அப்போது, “ஒருத்தன் கூட்டம் சேர்க்கிறான்னா, தனிச்சு நிக்கிற மனசை விட்டுட்டான்னு அர்த்தம்” என்றார் ஒருத்தர், அவன் காதுபடவே.

அவரை ஓங்கி அறையலாம் எனத் தோன்றிய கணத்தில், கூடவே வேண்டாமென்கிற எண்ணமும் வந்தது முருகனுக்கு. ஆனாலும் ஆட்கள் உடனில்லாமல் இருப்பது நல்லதல்ல என்கிற முடிவிற்கே வந்து சேர்ந்தான். பொதுவாய் இதுமாதிரி ரௌடி வாழ்வில், வீரியத்தைவிட காரியம்தான் பெரிசு என்பதை அனுபவத்தில் கற்றும் கொண்டிருந்தான். உண்மையில் முகத்தில் நைச்சியத்தைத் தேக்கி நடிகன்மார்கள் மாதிரியும் இருக்கத் தெரிந்திருக்க வேண்டும் இந்தத் தொழிலில்.

உள்முகம் வெளுத்துவிடுமோ என்கிற கவலையை உதறி, முகத்தில் அச்சத்தைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி சந்தையில் வளைய வந்தான் முருகன். சந்தையில் கால்வைத்த போது இருந்ததைப் போல, விடக்கூடாது இந்த வாழ்வை என்கிற வைராக்கியத்தைத் தனக்குள் திரட்டிக் கொள்ளப் போராடினான்.

எவ்வளவு கவனமாக அலைந்தாலும், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தபோது, பழக்கமான குடும்பப் பெண்ணொருத்தியைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போகையில் நிதானம் தவறிவிட்டான் முருகன். வெளியூரில் இருந்து வந்த மூவர் கொண்ட குழு அவனைச் சுற்றுப் போட்டது. பளபளக்கிற அரிவாள்களைக் கண்டதும் அந்தப் பெண், “சாமி சாமி என்னை விட்டிருங்க. படுத்தா நாலு காசு கெடைக்கும்ணு வந்த தேவிடியா நானு” என்றாள்.

உயிரென்றதும் சடக்கென அவள் மாறிய விதம்தான் முதலில் அவன் முகத்தில் அறைந்தது. அடுத்ததாய் அவனுக்குள் இருந்த நாய் விழித்துக் கொள்ளவே எழுந்து ஓடத் துவங்கினான். பின்னாலேயே அவர்கள் அவனை விரட்டிக் கொண்டு ஓடினார்கள். சந்தையின் வெளி விளிம்பில் ஓடியவனுக்குள் மேற்கொண்டு எங்கே ஓடுவது? என்கிற கேள்வி எழுந்தது.

மாடு நுகத்தடியைப் போட்டதும் பழக்குவிக்கப்பட்ட தன் தடத்தை நோக்கி நடைபோடுவதைப் போல வீடு இருக்கும் திசை நோக்கி வெறிகொண்டு ஓடத் துவங்கினான். முருகனின் ஓட்டத்திற்கு வந்தவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதலில் ஒருத்தன் தவங்கிப் போய் நின்று கொண்டான். அடுத்ததாக இன்னொருத்தனும். கடைசியாக இருந்தவன் முருகனை விட வீச்சுடையவன் என்பதால் விடாமல் விரட்டிக் கொண்டு ஓடினான்.

அந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் பொருளீட்ட முடியாது என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. வீட்டை நெருங்கின சமயத்தில் கால்தடுமாறி பெருஞ்சப்தமெழுப்பி விழுந்தான் முருகன். நெஞ்சில் காற்று கட்டிக் கொண்டு பேரிளைப்பு வந்தது. மல்லாக்கப் படுத்த அவனை நெருங்கி அரிவாளோடு நின்றான் அவன். வெட்டுவது குறித்துத் திட்டமிடுகிற தருணத்தில் அவனது காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட உருவத்தைக் குனிந்து பார்த்தான்.

முருகனுமே பார்த்தான் அக்காட்சியை. கோணப் பயல் அவனது காலைக் கட்டிக் கொண்டு ஏங்கியேங்கி அழுதான். முகத்தைக் கோணி வாயினோரம் கோழை சுனையைப் போல வழிய, உள்ளத்தை உருக்குகிற மாதிரி அழுதான். அரிவாளோடு நின்றவன் அவனையே கூர்மையாக உற்றுப் பார்த்தான். இடையில் கையெடுத்துக் கும்பிட்டுக் காட்டிக் கோணப் பயல், மீண்டும் அவனது காலைப் பிடித்து அழுதான். கருணை என இத்துணூண்டாவது மனதில் இருக்கிற எந்த மனுஷனையும் கலங்கடித்து விடுகிற காட்சியாக இருந்தது அது.

வெட்ட வந்தவன் என்ன நினைத்தானோ, திரும்பித் தான் வந்த திசையில் ஓடத் துவங்கினான். அமர்ந்த நிலையிலேயே முருகன் சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு எழுந்து நின்றும் வேறு யாராவது இருக்கிறார்களா? என நோட்டமிட்டான். இளைப்படங்கி தனது முழங்காலைக் கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்து கோணப்பயலையே குறுகுறுவெனப் பார்த்தான்.

வழிந்த கோழையைச் சட்டையைக் கொண்டு துடைத்துவிட்டு, கண்களில் மிச்சமிருக்கிற நீர்பொங்க மலர்ந்து சிரித்தான் அவன். சற்றுமுன்னரான பெருந்துயரத்தைச் சட்டென எப்படிக் கடந்தான்? அப்போது தனக்குப் பின்னே அம்மாவின் நிழலாடிய காட்சியும் தெரிந்தது. அம்மா தன்னைக் கவனிக்கிறாள் என்பதை உள்ளூர உணர்ந்த பிறகு சுருக்கென அதைச் சத்தமாகச் சொன்னான் முருகன்.

“ஆனாலும் நல்லா நடிக்கிறடா நீயி”.

முருகனுக்குச் சீனிச்சேவு திங்க வேண்டும் போலவிருந்தது அப்போது.

The post சீனிச்சேவு first appeared on கனலி.

  •  

சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்

”நான் மாஸ்டர் சுரேந்திர வர்மாவோட சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.” என மாயா தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி சொன்னாள்.

சென்னையின் பரபரப்புகள் பாதிக்காத ஆழ்வார்பேட்டையின் டி.டி.கே சாலையில் மேலும் ஆழ்ந்த அமைதியுடன் நாடக ஆர்வலர்கள் மட்டுமே அறிந்திருந்த அந்தச் சபாவின் பெரிய காலியான அரங்கை எதிர் நோக்கியிருந்த சூர்யா அவளைப் பார்க்காமலேயே சோர்வாக “அந்த நாடகத்த அப்படியே போடலாமே. இன்னைக்கும் பெரிய மாற்றம் தேவைப்படாது” என்றான். அவர்கள் இருவரின் குரல்களும் அரங்கை மோதித்தெறித்து எதிரொலித்தது.

“இல்ல. எனக்கு அப்படித்தோணல. இருபத்தி மூனு வயசுல அதை நடிச்சப்ப பரவசமாவும் புரட்சிகரமானதாவும் இருந்துச்சு. இப்போ முப்பத்திரண்டு வயசுல அப்படித் தோணலடா”

“ம்”

“கத ஞாபகம் இருக்கா உனக்கு”

கையை நீட்டி சோம்பல் முறித்தபடி,“ஓ! இருக்கே. ஆண்மையில்லாத அரசன். கன்னிமையோடு இருக்கும் அரசி சீலவதி. வேற அரசனோட இரவைக் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்வாங்க. அந்த நிகழ்வுல கலந்துக்கிட்டு அவளோட ஒரு இரவைக் கழிக்கும் காதலன்.” அவள் முகத்தைப் பார்த்து “நீயும் வினோத்தும் நடிச்சீங்க அதுல” ஏதோ கசப்பை உணர்ந்தவனாக மேலும் இடைவெளி விட்டு ”ஆனா நாடகம் எதிர்பார்த்த அளவுக்கு போகலயே. அதுவும் நினைவிருக்கு” என்றான்.

“நாடகம் சரியாப் போறத பத்தியெல்லாம் என்னைக்கு நாம யோசிச்சிருக்கோம்” என மாயா அவன் சொல்வதைப் பொருட்படுத்தாத தொனியில் சொன்னாள்.

“சுரேந்திர வர்மா சார் கிட்ட பெர்மிஷன் வாங்கனும். தமிழ்ல மொழிபெயர்ப்பு வந்திருக்கு பதிப்பகத்துகிட்டயும் அனுமதி வாங்கனும்” என்றான்.

“நான் சொல்றத மொதல்ல காதக் குடுத்து கேளு. அந்த ப்ளேயை நான் அப்படியே போடப்போறதில்ல. அது முடியற இடத்திலிருந்து இன்னொரு நாடகத்த எழுதிருக்கேன். அதத்தான் போடனும்னு சொல்றேன்”

“ஓ! அதான் முடிவு பண்ணிட்டியே”

“நான் என்ன எழுதிருக்கேன்னு கேக்கனும்னு தோணல இல்ல”

”அது கிரேட் ப்ளே. அப்படியே எடுக்கலாம். இன்னும் ரெலவன்ஸ் இருக்கு”

அவனை நோக்கி இருக்கையை முழுமையாகத் திருப்பி நேராக உட்கார்ந்து அவன் கண்களைப் பார்த்தவாறு “உனக்கு நான் சொல்றது புரியலன்னு நினைக்கிறேன். சுரேந்திர வர்மா எடுத்தது பெண்ணியச் சாயலோட இருக்கு. இன்னைக்கு இன்னும் அதே பிரச்சனை இங்க இல்ல.” என்று கூறி சற்று நிறுத்தினாள். அடுத்து அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று புரிந்தவன் போல் சூர்யா உடலைத் தளர்த்தினான்.

 ”கட்டுக்கடங்காத சுதந்திரம். குற்றவுணர்ச்சியில்லாததன்மை.” கலைந்து கலைந்து பேசினாள். சற்று நிமிர்ந்து உட்கார்ந்து ”நாம சுதந்திரம்னு நினைச்ச எதுவும் அத்தனை மகிழ்ச்சிகரமானதா இல்லயோன்னு தோணுது.” என்றாள்.

“எனக்கு ஒட்டுமொத்தமாவே இந்த ப்ளே மேல இண்ட்ரஸ்ட் இல்ல. மார்டன் தியேட்டர்ஸ்ல இந்தமாதிரி பழைய புராணங்கள நாடகமா நிகழ்த்தறத பத்தி வினோத் விமர்சனம் செய்யறதக் கேட்டிருக்கேன். எனக்கும் கூட அவன் கருத்துல ஒரு சாய்வு உண்டு. புராணம். இதிகாசம். புல்ஷிட்” என முகத்தைச் சுழித்தான்.

மாயா எரிச்சல் அடைவது தெரிந்தது. அதை அடக்கியவளாக “நீ காதாப்பாத்திரங்கள பற்றி மட்டும் யோசிக்கற. நான் அது வழியா வர்ற கேள்விகள பாக்கறேன். அது காலத்துக்கும் மாறாது. பதில் வேணும்னா ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறும்”

“நான் அதப்பத்தி மட்டும் சொல்லல.”

“தெரியும். ஆனாலும் கூட இரு.”

அவன் தன் கனத்த சுருள் மண்டையை உதறியவனாக ” நீ சொன்னா அந்த செண்ட் தாமஸ் மெளண்ட்ல இருந்து கூட தலைகீழா குதிப்பேன் மாயா. சரி சொல்லு. எங்க இருந்து ஆரம்பிக்கப் போற?” என்றான்.

புருவத்தை உயர்த்திக் கோணலாகச் சிரித்தபடி மேலும் நிமிர்ந்து உட்கார்ந்து,”மேடை அமைப்புல இருந்தே ஆரம்பிக்கனும். மேடை அரங்கத்த இரண்டா பிரிக்கனும். ஒரு பாதி, குறிப்பா இடது பக்கம் எனக்குத் தண்மையை அளிக்கக்கூடிய ஒரு காட்சியமைப்பை உருவாக்கனும். அடர்ந்த நீலமும், வெள்ளையும் பிரதானமா இருக்கனும். வலது பக்கம் இருக்க வேண்டியது ஒரு பிரம்மாண்டமான படுக்கை. கதகதப்பும், ஏகாந்தமும் தெரியும்படியான சிவப்பு ஒளி கொடுக்கனும். சிவப்பு நிறத்தோட பல வேரியண்ட்ஸ்ல..” என்று சொல்லிவிட்டு முன்னால் திரும்பி மேடையை வெறித்துப் பார்த்தாள்.

”சிவன்-சக்தி மாதிரி கற்பனை பண்றியா?”

“ரொம்ப மண்டைய அலைய விடாத. ஒரே ஆளுக்குள்ளயே இந்த ரெண்டு தன்மையும் இருக்கு. அதோட உறவாட்டம் தான் இங்க எல்லாமும்னு தோணும் எனக்கு.” என்றாள். “நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்” என சற்று நக்கலாகச் சொன்னாள்.

“போடி. பின்ன நான் நடிக்க மாட்டேன் பாத்துக்க”

“நீ தான் பிரதோஷனா நடிக்கனும்” என்று இயல்பாகச் சொன்னாள்.

அவன் அதிர்ச்சி அடைந்ததை மறைக்க முயல்பவனாக “இது ஏற்கனவே இருக்கற ஒரு நாடகத்தோட தொடர்ச்சினா முதல்ல அந்த நாடகத்துல என்ன நடந்ததுன்னு சொல்லனும் இல்ல?”

“மறந்துட்டேன் பாரேன். நரேட்டர் கட்டாயமா வேணும். நரேந்திரனுக்கு கால் பண்ணிடு. நான் பிரகாஷ் சார், பாலா கிட்ட பேசிடறேன்”

*

 நாள்: செப்டம்பர் 7, 2021. மாலை 6.30-7.30

 நாடகம்: சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்

இடம்: ஆழ்வார்பேட்டை ட்ரீம் நாடக சபா.

பாத்திரங்கள்: அரசன்: ஒக்காக் (பிரகாஷ்ராஜ்), தலைமைச்சேடி: மகத்தரிக்கா (பாலா), அரசி சீலவதி (மாயா), காதலன் பிரதோஷன் (சூர்யா)

இசைக்கருவிகள்: ஹார்மோனியம், சிதார், மிருதங்கம்

கட்டியங்காரன் நரேந்திரன் திறக்கப்படாத மேடைக்கு முன் வருகிறான். அவன் வெண்பட்டு ஜிப்பாவும் கணுக்கால் தெரியுமளவு வெள்ளை கால்சட்டையும் அணிந்திருக்கிறான். பொன்பட்டு நிறத்தில் இடப்பக்கத் தோளில் தொங்கும் சால்வை மறுபக்கம் வலக்கையில் தொங்குகிறது. தங்கநிற வேலைப்பாடு நிறைந்த காலணி மேடையின் கறுப்பான தரையில் மின்னுகிறது. வைரக் கடுக்கன் ஜ்வாலிப்பாக அவன் அசைவுகளில் மின்னி மறைகிறது. கைகளில் பெரிய கங்கணங்களும், க்ரிம்சன் சிவப்புக்கல் பதித்த மோதிரம் ஒரு கையிலும், டீல் பச்சைக்கல் பதித்த மோதிரம் மறு கையிலும் மின்னப் பொலிந்து எழுந்தவன் போல முகம் நிறையப் புன்னகையுடன் உள்ளே வருகிறான். கைகளை அரங்கை நோக்கி விரித்து…

”அரங்கில் குழுமியிருக்கும் நாடக ரசிகர்களுக்கு வணக்கம். இது மாயா எழுதிய நாடகம். இந்தி நாடக ஆசிரியர், வாத்தியார் சுரேந்திர வர்மாவின் ”சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக்” அதாவது“சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை” என்ற புகழ்பெற்ற நாடகத்தை அறிந்திருப்போம். அதிலிருந்து அடுத்த கட்ட நகர்வான ”சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்” நாடகம் இப்போது, இங்கே நிகழவிருக்கிறது.

முதல் கதையின் எளிய சுருக்கம் இதோ உங்களுக்காக…

மாலவத்தின் அரசர் ஒக்காக் திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் அரசி  சீலவதியை கருவுறச் செய்ய இயலாமல் இருந்தார். அரசி கருவுறுவதற்காக கடமைப்பாவையாகி நியோக முறைப்படி மூன்று முறை பிற ஆணுடன் கூடியிருக்கலாம் என்றும், அந்த ஆணை அவளே தேர்ந்தெடுக்கலாம் என்றும் முடிவுசெய்யப்பட்டது. தன் இணையை அரசி தேர்ந்தெடுக்கும் அந்த நிகழ்வுக்கு எதிர்பாராமல் வந்த அவள் காதலன் பிரதோஷனுக்கு அவள் மாலை அணிவிக்கிறாள். அவனுடனான முதல் இரவில் முதல் முறையாக ஒரு ஆணுடன் முழுமையாகக் கூடியிருப்பதன் இன்பத்தை அவள் அறிகிறாள். அது கொடுக்கும் எழுச்சி இந்த உலகையே வேறொன்றாக அவளுக்குக் காட்டுகிறது. ஒக்காக் இந்த இன்பத்தைத் தனக்கு ஐந்து வருடமாக மறைத்து வைத்திருப்பது துரோகம் என்று அவள் கருதுகிறாள். ஒக்காக்கிடம் மட்டுமல்ல ராஜகுரு, முதல் மந்திரி என யாவரிடமும் அவள் தான் அனுபவித்த அந்த இன்பத்தின் உச்சியிலிருந்து உரையாடுகிறாள். மீதமிருக்கு இரு வாய்ப்பையும் பயன்படுத்தி தன் வாழ்நாளில் தான் அனுபவிக்கச் சாத்தியமான இரு இரவுகளையும் அடைய விரும்புவதாகச் சொல்கிறாள். ஒரு பெண்ணுக்குச் சமூக இடம், பௌதீக வசதி, உணர்ச்சி நிறைவு, உடல் சுகம் என பல்வகை காரணங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் தேவை உள்ளதாக ஒக்காக்கிடம் சீலவதி சொல்வதோடு நாடகம் முடிகிறது. அடுத்த வாரத்திற்கான நிகழ்வுக்கான தண்டோரா சத்தத்துடன் கூடிய அறிவிப்போடு சுரேந்திர வர்மாவின் நாடகம் முடிகிறது. மாயாவின் நாடகம் இரண்டாவது இரவைப் பற்றியது.”

கட்டியங்காரன் மேடையின் மறைவுப்பகுதிக்கு சென்றுவிடுகிறான்.

(மேடை முழுவதும் திறக்கப்படுகிறது. உள்ளே வலது இடது எனப் பிரிக்கப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிறத் திரைகள் போடப்பட்டுள்ளன. வலப்பக்கம் இருக்கும் வெள்ளைத்திரை மட்டும் திறக்கப்படுகிறது. முழு நிலவு மேலெழுந்துள்ளது. வெண்மையும் அடர் நீலமும் கலந்த ஒளி வலப்பக்க மேடையை நிறைத்துள்ளது. அரசர் ஒக்காக் வெண்பட்டு ஆடையையும், தென் நாட்டின் முத்துக்களையும் அணிந்திருக்கிறார். தலைமைச் சேடியான மகத்தரிக்கா அடர் நீல நிறத்தில் சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டியிருக்கிறாள். அவள் காலில் கறுப்பு நிறக்கயிறும், காதிலும், கழுத்திலும், கைகளிலும் வெள்ளியாலான தடித்த வளைய ஆபரணங்கள் அணிந்திருக்கிறாள்.)

காட்சி 1

(கட்டியங்காரன் குரல்: அரசரான ஒக்காக் அமர்ந்திருக்கிறார். அரங்கில் பணிப்பெண்ணான மகத்தரிக்கா மதுக்கோப்பைகளைத் துடைத்தபடி அவர் அருகில் நின்று கொண்டிருக்கிறாள்.)

மகத்தரிக்கா: அரசே அகிபீனா கொண்டு வரட்டுமா? தூங்குவது நல்லது.

ஒக்காக்: வேண்டாம். நான் பழகிவிட்டேன் மகத்தரிக்கா. மதுகூட தேவைப்படாது. நான் விழித்திருக்க விரும்புகிறேன். உலகின் எத்தனை கோடி உயிர்கள் இந்த இரவு உடலின்பத்தில் மூழ்கி திழைத்துக் கொண்டிருக்கும் இல்லயா?

ம: ம்…

ஒ: இன்று உன் அருகாமை கூட எனக்கு அவசியமில்லை. நீ நிஜமாகவே வீட்டுக்குப் போகலாம். உன் கணவன் ஊரில் இருக்கிறான் தானே. எனக்காக உங்கள் இனிய இரவை நீங்கள் பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம்.

ம: (சிரிக்கிறாள்…)நீங்கள் சங்கோஜப்படவில்லையானால் ஒன்று சொல்லட்டுமா.

ஒ: அழகே மகத்தரிக்கா! நாம் சங்கோஜப்பட்டுக்கொள்ள இனி என்ன இருக்கிறது. என் அனைத்துப் பலவீனங்களையும் அறிந்தவள் நீ. என்ன வேண்டுமானாலும் சொல்.

ம: இன்று நான் வீட்டுக்கு விலக்காயிருக்கிறேன். எனக்கு இரண்டாவது நாள்.

ஒ: (வாய்விட்டு சிரிக்கிறார்…) மகத்தரிக்கா.. இந்த மாதிரி நேரத்தில் தானே உன் கணவனின் அரவணைப்பு தேவை? நீ வீட்டுக்குச் சென்று ஓய்வெடு.

ம: அரவணைப்பா. அவர் என் அருகே கூட வரமாட்டார். ஆயிரம் வேலைகள் அவருக்கு. நான் சூதப்பெண் என்பதால் இந்த நாட்களிலும் வேலை இருந்தால் செல்லத்தான் வேண்டும். அவர் இரவு படுக்கைக்கு அழைக்க முடியாத எரிச்சலில் வேறு இருப்பார். அவரையும் குற்றம் சொல்வதிற்கில்லை. கடும் உடலுழைப்பு செய்யக் கூடியவர். நான் இங்கேயே இருக்கிறேன்.

ஒ: சீலவதிக்கு இரண்டு நாட்கள் தான் மாதவிலக்கு ஆகும். முதல் நாள் துடிதுடித்துப் போவாள். முதல் முறை அவளை அப்படி பார்த்தபோது நான் பதற்றமடைந்துவிட்டேன் மகத்தரிக்கா. அவள் அருகிலேயே இருப்பேன். இந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு மாதமும் அவளை விட நானே அவளுக்கு தேதியை நினைவூட்டுவேன். (இடைவெளி)

ம: அரசே! ஒன்று சொல்லட்டுமா

ஒ: நீ என் பாங்கியாகிவிட்டாய் இந்த இரவுகளின் வழி. தயங்காமல் சொல் மகத்தரிக்கா.

ம: (புன்னகைத்துக்கொண்டே…)

அரசே… நீங்கள் எல்லாப் பெண்களும் கனவுகளில் விரும்பும் சிறந்த காதலர். கணவனாக்கிக் கொள்ள ஒவ்வொரு பெண்ணும் விரும்பக்கூடியவர்.

ஒ: இந்த இரவில் அவளுக்கு ஒரு கணம் கூட என் நினைவு வர வாய்ப்பில்லை என்பதையே சென்றமுறை அவள் உறவு முடிந்து வந்து பேசிய பேச்சில் உணர்ந்தேன். அந்த அளவுக்கு இந்த உடல் பந்தம் பெரிய பிணைப்பை உருவாக்குமா மகத்தரிக்காக? நான் வாழத் தகுதியற்றவன் போல உணர்கிறேன். இந்த ஆறு நாட்களில் ஒவ்வொரு நாளும் நான் தற்கொலை செய்வதைப் பற்றியே யோசித்தேன். இயற்கைக்கு முரண் எனில் பல கோடி விந்துகளில் என்னை ஏன் என் அன்னை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? நான் பிறந்திருக்க வேண்டாம் மகத்தரிக்கா.

மது வேண்டும். எடுத்து வருகிறாயா?

ம: எடுத்து வருகிறேன் அரசே! (மகத்தரிக்கா கோப்பைகளைத் துடைத்து மதுவையும், பழங்களையும் எடுத்து வைக்கிறாள். முதல் கோப்பையை ஊற்றியதுமே உடனடியாகக் காலி செய்துவிட்டு அவளைப் பார்க்கிறான் ஒக்காக்.)

ஒ: சொல். நான் பிறந்திருக்கவேண்டாமே?

ம: எனக்குச் சரியாகத் தெரியவில்லை. எந்தக் காரணகாரியமும் இன்றி ஒரு நிகழ்வு நிகழ்வதில்லை என அன்னை நம்புவாள். அதையே நான் என் வாழ்க்கைக்கும் எடுத்துக் கொண்டேன்.

உடல் என்பது கணவன் – மனைவி உறவில் ஆரம்பக்காலப் பிணைப்பை எளிதில் உருவாக்கக்கூடியது என்பது மறுப்பதற்கில்லை. இளமையின் கனவுகள் அதனால் நிறைந்தவை. உடலின் மாற்றங்கள், வனப்புகள் என நம் கண் முன் அவை நீண்டு கொண்டிருக்கையில் அவை புறந்தள்ளமுடியாதது தான். இளவயதில் புறமாகவே ஒருவர் நம்மை ஈர்க்கிறார் முதலில். ஆனால்… அதன்பின் வாழ்வு அதை மட்டும் சார்ந்ததல்ல.

ஒ: மகத்தரிக்கா. உடல் உறவு இல்லாமல் ஒருவர் இன்னொருவருடன் இணக்கமாக வாழ்ந்துவிட இயலும் என்கிறாயா?

ம: சிந்தித்துப் பாருங்கள் அப்படி எத்தனை உறவுகள் நம்மிடம் உள்ளன. அன்னை, ஆசிரியர், நண்பர்கள், பிள்ளைகள் இன்னும் எத்தனையோ.

ஒ: ஆனாலும் மகத்தரிக்கா… குடும்பம் என்ற அமைப்பின் அடித்தளமாக உடலுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும் தானே இருக்கின்றனர்.

ம: உண்மைதான். நீங்கள் பெரும்பான்மை பற்றிப் பேசுகிறீர்கள். வரலாற்று நெடுகிலும் சிறுபான்மைச் சமூகம் ஒன்று பிறந்து வாழ்ந்து, மடிந்து கொண்டுதான் இருக்கிறது. யாருடைய பொருட்படுத்தலுக்கும் ஆளாகாமல். சமூக ஏற்பும் மறுப்பும் அரசியல், சட்டம், பொருளாதாரம் எனப் பல காரணிகளால் முடிவு செய்யப்படுகின்றன. நாளையே அவை மாறலாம். ஆனால் உயிர்-இயல் அதைக் கடந்தது.

ஒ: இயற்கைக்கு முரண் என நீ நினைக்கவில்லையா?

ம: இயற்கை பேரன்னையின் வடிவம் என்று என் அன்னை சொல்வாள். வலுத்தது வாழும் என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமாக இந்த வரலாற்று வீரர்கள் முதிர்ச்சியின்றிப் பிதற்றிக் கொண்டது என்று சொல்வாள். அவர்களே அங்ஙனம் வீர வசனம் பேசி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாய்ந்து போவதைக் கால நெடுகிலும் பார்த்த பேரன்னைகளின் சாட்சியாய் அவள் சொன்ன வரி அது. போரில் மாண்டு போகிறவர்களைக் குறிப்பிட்டு இயற்கைக்கு எந்த ஆற்றலை அழிக்க வேண்டும் என்பது தெரியும் என்பாள். கனிவும், கருணையும் இல்லாதவைகளே அழிகின்றன அரசே!

ஒ: (கண் கலங்குகிறான்.) இந்தப் பொழுதில் நான் என் தந்தையிடம் பேரன்பு வைத்திருந்த ஆணிலியை நினைத்துக் கொள்கிறேன். நான் சீலவதியைக் காதலிக்கிறேன் மகத்தரிக்கா. (மேலும் ஒரு கோப்பை மதுவை அவனே விரைவாக ஊற்றி அருந்துகிறான்.)

ம: அதற்கிணையாகவே பெண்ணிலிகளும் உண்டு அரசே! நீங்கள் செய்ய வேண்டியது அரசியைக் கனிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே. அவள் அந்தச் சக்தி பீடத்திலிருந்து தணிந்து வரும்வரை அவளுக்காக நீங்கள் இந்தக் காலகட்டத்தின் எந்த மதிப்பீடுகளும் இன்றி காத்திருக்க வேண்டும். அவள் அங்கிருந்து இறங்கி வந்து விரிந்த கரத்துடன் உங்களை சிறுமகவாக்கி அன்னையாக ஆகலாம். இல்லையெனில் அவளே சுருங்கிக் குழைந்து உங்கள் கைகளில் சிறுமகவாக ஆகலாம்.

இந்த இரண்டும் நிகழவில்லையெனினும் நீங்கள் இந்த வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் அரசே! உங்கள் மக்களுக்காக, இந்த நாட்டுக்காக உங்கள் கடனை முடிந்து நிறைவெய்த வேண்டும். பாண்டு மகாராஜாவுக்குக் கிடைத்த மாத்ரி போல உங்களுக்கு ஒருவள் கிடைப்பதன் பொருட்டு நீங்கள் காத்திருக்கலாம்.

ஒ: (கைகளால் முகத்தைப் பொத்தி அழுகிறார். மீண்டும் ஒரு கோப்பை மதுவை எடுத்துச் சிந்தியவண்ணம் பாதியை மட்டும் குடிக்கிறார்.) அவையெல்லாம் காவியத்தில் மட்டுமே நிகழக்கூடியது. பொய்கள். மகாவியாசரை நான் வெறுக்கிறேன்.

ம: கதைகள் விண்ணிலிருந்து மட்டும் முளைவிடுவதில்லை அரசே. அவை பெரும்பாலும் மண்ணுக்குரியதே.

ஒ: (அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறான்) இந்த ஆறு நாட்கள் ஒவ்வொரு இரவும் நான் உறக்கமில்லாமல் தவித்தேன் மகத்தரிக்கா. கடந்து போன ஒரு இரவில் அவள் பிறனுடன் கொண்ட உறவை நினைத்தும், வரவிருந்த இந்த இரவை நினைத்தும் நான் வாழாவிருந்தேன்.

ம: அரசே! முன்னைய இரவை விட நீங்கள் பதற்றம் தணிந்திருக்கிறீர்கள். முன்பு மணல் கடிகாரத்தைத் துளித்துளியாக எண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். எந்தத் துன்பமும் அப்படித்தான். மெல்ல நம்மை இலகுவாக்கி அதை நம் வாழ்வோடு பிணைத்து ஏற்றுக் கொள்ளச் செய்யும். நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் உங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வை.

ஒ: (புன்னகைத்து அவள் கண்களைக் கனிவுடன் நோக்குகிறார்) தனித்திருக்கும் இந்த அல்லி இன்று என்னை உளம் விரியச் செய்கிறது மகத்தரிக்கா. நானே இன்று அந்த சக்கரவாகப் பறவைக்குத் தாமரைத்தண்டின் சாற்றை அளிக்கிறேன்.

ம: (புன்னகைக்கிறாள்) அது நித்தமும் உணவளிக்கும் அரசியை உங்களில் இன்று கண்டு கொள்ளலாம்.

ஒ: (எழுந்து மாடத்தின் முனியில் நின்று குளத்தை நோக்கி கைகளை விரிக்கிறார். குளத்தின் முனையிலிருந்த மரத்தில் சக்கரவாகப் பறவை வந்து தனியே அமர்கிறது. அவர் தாமரைத்தண்டின் சாற்றைக் கைகளில் ஏந்தியதும் அவர் தோள்களில் வந்து அது அமர்கிறது.)

(மென்மையாக) இந்த இரவு யாவருக்கும் இனிமையாகுக!

(ஹார்மோனியம்…)

(திரை மூடப்படுகிறது)

காட்சி 2

கட்டியங்காரன்: அரசி சீலவதியும், இந்த இரவில் அவளுடன் உறவு கொள்ள அவள் தேர்ந்தெடுத்த காதலன் பிரதோஷனும் மஞ்சத்தில் இருக்கிறார்கள்.

(இடப்பக்கத் திரை மூடப்பட்டு வலப்பக்கத் திரை திறக்கப்படுகிறது. இளஞ்சிவப்பும் அடர் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒளியூட்டப்பட்ட அரங்கு. சீலவதி பிரதோஷனின் மார்பில் சாய்ந்திருக்கிறாள். அடர் ரத்தச் சிவப்பு நிற வெல்வெட் போர்வையை இருவரும் போர்த்தியிருக்கிறார்கள்)

சீலவதி: பிரதோஷ்ஷ்…

பிரதோஷன்: ம்…

சீ: மகிழ்ச்சியாக இருக்கிறாயா?

பி: ஓ…

சீ: (அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள்.) ஆறு நாட்கள் முழு நிலவு தேயும் ஒவ்வொரு இரவையும் கடத்த நான் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா?

பி: (உத்தரத்தைப் பார்த்துக் கொண்டே எதையோ யோசித்தபடி)ம்.

சீ: (அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி…) உனக்கு அவ்வாறு இல்லயா? வேறு பெண்கள் நிறைய இருக்கிறார்களா? ஏன் பேசவே மாட்டேன் என்கிறாய்.

பி: எல்லாப்பெண்களுக்கும் ஒரே கேள்வி. (புன்னகைத்தவாறு எழுந்து அமர்கிறான்)

சீ: எல்லாப்பெண்களும் நானும் ஒன்று இல்லை (சிணுங்கியவாறு சொல்கிறாள்)

பி: ஐந்து வருடங்களுக்கு முன் என்னை நீ இக்கேள்வியைக் கேட்டிருந்தால் இதை விட உணர்ச்சிகரமாகப் பல இனமொழிகளைச் சொல்லியிருப்பேன் சீல். நீ திருமணமாகிச் சென்ற இரவு ஒவ்வொரு மணித்துளியையும் கடத்தச் சிரமப்பட்டேன். அதன் பின் மெல்ல அதிலிருந்து விலகவே வணிகத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டேன். மறுக்கப்பட்டவர்களே உலகின் அனைத்து இன்பங்களையும் தேடி அடைவார்கள். செல்வத்தைத்தவிர எனக்கு எந்த ஒன்றும் பெரிதாக இல்லை. அனைத்தையும் அது அளித்தது. எந்தப் பெண்களையும் நான் விலைக்கு வாங்கிக் கொள்ளவில்லை. ஓரிரவுக்கே அழகிகளை என்னால் தேவைப்படும்போதெல்லாம் தேடிக் கொள்ள முடிந்தது. கடல் கடந்து சென்ற எத்தனை இடங்கள். எத்தனை அழகிகள். பெரும்பாலும் மறந்துவிட்டன.

சீ: (முகம் மிகவும் ஏமாற்றமும் ஏக்கமும் கோபமும் கொள்கிறது. அதை மறைக்க முயற்சித்துக் கொண்டே அவள் ஒரு சிவப்பு நிறச் சால்வையை எடுத்து உடலில் சுற்றிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தவாறு கேட்கிறாள்) பின் ஏன் இங்கு வந்தீர்களாம்? ஒரு பொய்யாவது சொல்லியிருக்கலாம் (சலித்துக் கொள்கிறாள்)

பி: (அவன் அவளைப் பார்க்கிறான்) அந்த எல்லாப் பெண்களிலும் உன்னைத்தான் தேடினேன் சீல். அதனால் தான் ஐந்து வருடங்களுக்குப் பின்னும் இந்த செய்தி கேள்விப்பட்டதும் உன்னைச் சந்திக்க வந்தேன். ஆனால்…

சீ: என்ன ஆனால்?

பி: இன்று இந்த அறையில் உன் இந்தத் தாபப் பார்வையில் நான் என்னை இதே போல நோக்கி அறிவழிந்து கண்ணீர் விட்ட வேறுசில பெண்களின் முகத்தையும் காண்கிறேன்.

சீ: (சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனை அந்நியன் போல் பார்க்கிறாள்.) பிரதோஷ்! உண்மையாகவா?

பி: இந்த ஐந்து வருடத்தில் என்னை நீ நினைத்ததுண்டா?

சீ: ஆரம்பத்தில் எப்போதாவது. பின்னர் ஒவ்வொரு இரவிலும் அவரின் குளிர்ந்த தேகத்தை அணுகி அனலாக்கி வெறுமையோடு திரும்பி வரும்தோறும் நீ என்னிடம் கெஞ்சி மன்றாடியதை நினைத்து அழுதிருக்கிறேன்.

பி: (சிரிக்கிறான்) அரசர் இயல்பாக இருந்திருந்தால்?

சீ: (கோபமாக) தெரியவில்லை. வணிகர்களுக்கே உரிய குறுக்குப்புத்தி.

பி: சீலவதி. உன்னைக் கடக்கவே முடியாது என்று நினைத்தேன். ஆனால் இன்று உணர்கிறேன். நீ என்பது எனக்கு ஒரு நிமித்தம் மட்டுமே. எத்தனை காதல்களை உதாசீனப்படுத்தியிருக்கிறேன்? அதுவும் இது தான். (அரங்கத்தை வெறிக்கிறான்..)

சீ: உன்னுடைய கணக்குகளையும் அறிவையும் கழற்றிவைத்து விட்டு இந்த ஒரு இரவாவது என்னுடன் முழுப்பைத்தியமாக இருக்கக்கூடாதா?

பி: முதிர்வில்லா காதலில் அது சாத்தியம் தான் சீல். ஆனால் நான் சென்றபின் இதை மிகவும் கனப்படுத்தி நீ உன் வாழ்க்கையைத் தொலைத்து விடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். மேலும் நான் முழு வணிகன். வணிகன் நல்ல காதலனாக உண்மையில் இருக்க முடியாது. நடிக்க வேண்டுமானால் முடியும். என்னால் உணர்வு மேலான இடத்தில் அதைச் செய்ய இயலவில்லை. அப்படிச் செய்வது இந்தப் பாதையிலிருந்து பிய்த்துச் சென்று என்னைப் பைத்தியமாக்கிவிடும். அதை விரும்புகிறாயா?

சீ: இல்லை. அப்படி இல்லை. உங்களுக்கு என்மேல் காதல் இல்லை. அவ்வளவுதான். அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.

பி: (அவன் மிகவும் சோர்வாக) அது நீ கற்பனை செய்து கொள்வது. உன் தாழ்வுணர்ச்சியிலிருந்து வருவது.

சீ: சீ! நீயும் ஒரு ஆண்மகனா? எது தாழ்வுணர்ச்சி சொல்? உன் விஷத்தைக் கக்கிவிடு

பி: (எதையோ உணர்ந்தவனாக.) இது இப்படித்தான் முடியும் என்பதை அறிந்திருந்தேன்.

சீ: (ஏளனமாக) அனுபவசாலி இல்லயா?

பி: இப்போது என்னைத் தாக்க ஆரம்பித்துவிட்டாய். அனுபவசாலி என்பதை இரு இரவுகளில் அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன். இல்லையெனில் மூன்றாவது இரவில் வேறொருவனுடன் உறவு கொண்டு ஒப்பிட்டுப்பார்.

சீ: (தலையில் அடித்துக் கொள்கிறாள்) சீ! சீ! என்னை அருவருப்பாக உணர்கிறேன்

பி: இதற்குமேல் இங்கிருக்க வேண்டாம் என நினைக்கிறேன். அது இருவருக்குமே நல்லது. நான் செல்கிறேன் (எழுந்து உடைகளை மாற்ற ஆரம்பிக்கிறான்)

சீ: (எழுந்து மேலும் இறுக்கமாகச் சால்வையைச் சுற்றிக் கொண்டு பதற்றத்துடன் பிரதோஷனின் கால்களைப் பாய்ந்து பற்றி..) வேண்டாம். செல்ல வேண்டாம். இன்னும் சூரியனின் முதல் கிரணம் நம்மை வந்து தொடவில்லை. செல்லாதீர்கள் (கதறி அழுகிறாள்.)

பி: என்னைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்காதே.

சீ: என்னை விட்டுப்போகாதே. (அவள் மேலும் இறுக்கமாகப் பற்றி அழுகிறாள். பிரதோஷன் உறைந்து போய் நின்று முகத்தில் பரிதவிப்பையும், பதற்றத்தையும் கடந்து மெல்ல ஏளனத்தைக் கொண்டு வருகிறான். அவன் அவளை உதறி அவ்வாறே கிளம்பிச் செல்வதைக் கையறு நிலையுடன் சீலவதி துடித்தபடி பார்க்கிறாள். அவன் சென்றபின் அந்த அரங்கம் அதிரும்படி கதறி அழுகிறாள். பலதரப்பட்ட சிவப்பு விளக்குகள் அதிர்வுடன் அவள் மேல் பாய்ச்சி ஒளியூட்டப்படுகிறது. வலுவிழந்து அவள் படுக்கையில் சரிகிறாள்)

(மிருதங்கம், சிதார், ஹார்மோனியம்)

(திரை மூடப்படுகிறது.)

காட்சி 3

கட்டியங்காரன்: தண்மையின் வலப்பக்கத் திரை திறக்கப்படுகிறது. அரசர் ஒக்காக் அமர்ந்திருக்க மகத்தரிக்கா நிற்கிறாள்.

மகத்தரிக்கா: அரசே! பிரதோஷன் வெளியே சென்றுவிட்டார்.

ஒக்காக்: அதற்குள்ளாகவா? இன்னும் சூரியனின் முதல் கிரணம் தொடவில்லையே. இன்னும் இரு நாளிகைப் பொழுதுகள் இருக்கிறதே. எத்தனை நீண்ட காலம்.

ம: (புன்னகைக்கிறாள்)

ஒ: நான் சென்று இப்போது அரசியைச் சந்திக்கலாமா?

ம: இல்லை. வேண்டாம். அவர்களாகவே இங்கே வருவார்கள்.

(ஒக்காக் கலவையான எண்ணத்துடன் இருக்கையில் சாய்ந்தவாறு அமர்கிறான்.

இப்போது வெம்மையின் திரையும் திறக்கப்படுகிறது. இரண்டு அரங்கும் ஒன்றை ஒன்று தொடும் புள்ளி நாடக மேடையின் மையத்தில் ஒளி நிரம்பியதாக உள்ளது.

கட்டியங்காரன் குரல் மட்டும்: “சூரியனின் முதல் கிரணம் வந்து மண்ணைத் தொடுகிறது. பிரதோஷனுடனான முதல் இரவிற்குப் பின் குளிக்க மறுத்து அறையில் நிரம்பியிருக்கும் மதன வாசனையில் திழைக்கவிருப்பதாகச் சொன்னவளுக்கு அறையின் அந்த வாசனை அருவருப்பைக் கொடுத்தது இப்போது. அதை உடலில் வெளிப்படுத்தியவளாகச் சிவப்பு நிற ஆடையை எடுத்து உடலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு எழுந்து அமர்கிறாள். தலைமைச்சேடியான மகத்தரிக்கா அவளை நோக்கி மெல்லச் செல்கிறாள்.

ம: அரசி. குளிப்பதற்கு ஏற்பாடு செய்யட்டுமா?

சீ: (தீர்க்கமாக)ஆம். உடனடியாக. விரிவான தலைக்குளியல் செய்யவிருக்கிறேன். அந்தப்புரத்தின் என் அணுக்கமான அனைத்துப் பெண்களையும் அழைப்பாயாக.

ம: ஆகட்டும் அரசி.

சீ: மகத்தரிக்கா. இந்தக் கட்டிலில் புரண்டு அழுத இரண்டு நாளிகைப் பொழுதுகளும் உன் சொற்களையே நினைவுகூர்ந்தேன்.

ம: எதை அரசி (அவள் புன்னகைத்தாள்)

சீ: உன் புன்னகையிலேயே அதை நீ உணர்ந்தது தெரிகிறது. நடிக்காதே. உன் சூதப்புத்தி நானே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறதல்லவா?

ம: (பணிவாக. தலையைத் தாழ்த்திக் கொண்டு) இல்லை அரசி.

சீ: (பெருமூச்சுடன்) இனி அவமானப்பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது. நீ இந்த ஆறு நாட்களாக கூறிக் கொண்டிருந்தாயே, ”நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்படுமளவு அப்படி ஒன்றும் இது பெரிய விஷயமில்லை” என. அதை உணர்ந்தேன். போதுமா.

ம: (சிரிக்கிறாள்) வாழ்வில் முதிர்ச்சியின் கணங்கள் அவ்வாறு தான் “இவ்வளவுதானா” தருணங்களின் தொகையே அவை. அதை அறியாமல் சென்று கொண்டே இருப்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். எல்லாவற்றிலும். நன்று. நீங்கள் விரைவில் உணர்ந்து கொண்டீர்கள்.

சீ: மகத்தரிக்கா… (அவள் கைகளைப் பற்றிக் கொண்டு) உன்னை ஒன்று கேட்கலாமா? உண்மையை மட்டும் சொல்ல வேண்டும்.

ம: கேளுங்கள் அரசி

சீ: எனக்கே தெரியும். இருந்தாலும் கேட்கிறேன். நான் அழகாக இருக்கிறேனா?

ம: அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்?

சீ: சொல்லடி

ம: நீங்கள் பேரழகி

சீ: அந்த வணிகக் கீழ்மகன் என்னை உதறிச் செல்லும்போது என்மீதே எனக்கு அருவருப்பாக இருந்தது மகத்தரிக்கா.

ம: புரிகிறது அரசி. காதல் இல்லாத இடத்தில் உறவு கொள்வதில் வரும் அருவருப்பு அது. நல்லது.

சீ: (முகத்தைப் பொத்தி அழுகிறாள்) எனக்கு மட்டும் ஏன் இப்படி. எல்லாம் சரியாக இருந்திருக்கக் கூடாதா? சாதாரணமாக இருந்திருக்கக் கூடாதா?

(அரங்கு முழுவதும் இருட்டாகிறது. சீலவதியின் முகத்திற்கு மட்டும் வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. அரங்கை மாயா வெறித்துப் பார்க்கிறாள்.)

மகத்தரிக்கா… மாலவத்தின் எல்லையில் இருக்கும் மிக எளிய கிராமம் இந்த்ரி. ஓர் ஏழைக் குடும்பத்தில் ஆறு சகோதரிகளுடன் ஏழாவது பெண் மகவாகப் பிறந்தேன். சிறுவயதிலிருந்தே தந்தையின் அரவணைப்பை அறிந்ததில்லை. முழு வயிறு நிரம்பி நான் தூங்கியதாக ஒரு நாளும் நினைவில் இல்லை எனக்கு. அக்காக்களின் திருமணங்கள், அவர்களின் பாடுகளையும் பார்த்திருக்கிறேன். என் முதல் காதலும் முதல் தித்திப்புமானவன் இந்த பிரதோஷன். அது முறிந்தபோதும் ராணியாக இந்த வாழ்வில் நிறைவு காணவே விழைந்தேன். மிகுந்த கவனத்துடன் என் கன்னிமையைப் பாதுகாத்து அரசனுக்காக எடுத்து வந்து ஏமாற்றம் அடைந்திருந்தேன். பிரதோஷனுக்காக அதை மீண்டும் அளிக்க இந்தப் பிரபஞ்சம் எனக்கு வழிவிட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். எல்லாம் மீண்டு விட்டதாக நினைத்தேன். ஆனால் அவன் வெறுமையை ஏற்றி விட்டு இன்று செல்லும்போது மனம் பதறுகிறது. நான் வேறொன்றை எதிர்பார்த்தேன். என் ஆசை நாயகனாக எப்போதும் அவன் இருப்பான் என. அவனுக்கு எல்லாப் பெண்களும் நானும் ஒன்று என அவன் உணர்ந்ததை அருகிருந்து பார்த்தபோது நொடிந்துவிட்டேன் மகத்தரிக்கா. ஏன் இப்படி நடக்க வேண்டும். ஏன் எனக்கு எதுவும் எப்போதுமே சரியாக நடக்க வில்லை. இந்த ஒரு முறையும் கூட.

(வெளிச்சம் மாத்தரிக்கவின் மேலும் பாய்ச்சப்படுகிறது…)

ம: அரசி… நாம் சரி என்று நினைக்கும் எல்லாமும் எப்போதும் சரியாக இருப்பதில்லை. நமக்கு நடப்பதைத் தவிரப் பிற சாத்தியங்கள் கற்பனையானவை. அதில் நமக்கு எவ்விதத்திலும் கட்டுப்பாடும் கிடையாது. கண் முன் நடப்பவற்றைக் கொண்டு மட்டுமே நம்மால் ஏதாவது முடிவுக்கு வர இயலும்.

ஒருவேளை நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்த யாவும் நடந்திருந்தால் கூட நீங்கள் முழுமையாக மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. அப்போதும் இதே உணர்வையே தான் அடைந்திருப்பீர்களோ என்னவோ.

சீ: (அரசி அவளை நிமிர்ந்து பார்க்கிறாள்..) எல்லாமும் இத்தனை விரைவாகத் தெரிந்து கொண்டிருக்கத்தேவையில்லை. இன்னும் சற்று.. (செல்லமாக அவளைக் கட்டிக் கொள்கிறாள்.)

ம: இதுவே தாமதம் தான். (கண் சிமிட்டுகிறாள்)

சீ: போடி

ம: அரசரைச் சந்திக்க விரும்புகிறீர்களா?

சீ: (எதையோ உணர்ந்தவளாக அவள் தோளிலிருந்து பிரிந்து) இந்த இரு நாளிகைப் பொழுதும் அவரையும் அவர் அரவணைப்பையும் தான் முதலில் நினைவுகூர்ந்தேன் மகத்தரிக்கா. சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின் உலகம் வேறாக இருக்கிறது. அங்கு அவரைத் தவிர என்னால் வேறு யாரையும் சிந்திக்க முடியாத அளவு இந்த ஐந்து வருடமும் அவரே நிரம்பியிருக்கிறார்.

மகத்தரிக்கா எனக்கு மட்டும் ஏன்? உள்ளமும் உடலும் ஒருங்கிணைந்த ஒருவன் கிடைத்திருக்கக்கூடாதா?

ம: (உணர்ச்சிகள் இல்லாமல்) அதுதான் நடக்கவில்லையே. நடந்திருந்தால் இத்தனை உளநாடகங்களை நீங்கள் நடித்துப் பார்த்திருக்க முடியாது. யாருக்கும் கிடைக்காத அனுபவம்.

சீ: ம்.

ம: அரசரும் இதே கேள்வியைத் தான் கேட்டார். நீங்கள் இருவரும் சேர்ந்து அதற்கான விடையைக் கண்டுபிடிக்கலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடி முழுகப்போவதில்லை.

சீ: குடி! ம்.

ம: அரசரைப் பார்க்க விழைகிறீர்களா?

சீ: ம். (எழுந்து நிற்கிறாள்..)

ம: இதோ அமர்ந்திருக்கிறார். உங்கள் வசை மொழிகளைக் கேட்பதற்கென்றே. சென்ற முறையைப் போலவே. ஆனால் இம்முறை குற்றவுணர்வுடன்.

(அரங்கம் முழுவதும் வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. சீலவதி வெம்மையான இடத்திலிருந்து நடுவிலிருக்கும் ஒளி நிரம்பிய பகுதியைக் கடந்து மெல்ல தண்மையான பகுதியை அடைகிறாள். உடன் சிதார் இசை மென்மையாக இசைக்கப்படுகிறது.)

ஒக்காக்: (எதுவும் பேசாமல் மெளனமாக எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்கிறான். மெல்ல அவன் சீலவதியின் கண்களைச் சந்திக்கிறான். அவனையறியாமல் தவிப்பு வெளிப்பட்டு கண்கள் நிறைகிறது. சீலவதி அவன் மடியில் குழந்தையைப் போல ஓடிச் சென்று சுருங்கிக் கொள்கிறாள். அடக்கி வைத்திருந்தவன் போல அவள் மேல் படிந்து அவனும் கதறி அழுகிறான்)

ஒ: ஓ சீலவதி! என் நினைவு உனக்கு இன்னும் உள்ளதா?

சீ: ம்.

ஒ: உனக்குத் தவறிழைத்துவிட்டேன் இல்லயா?

சீ: (முனகலான குரலில்.) தெரியவில்லை.

ஒ: ஆம். தவறிழைத்துவிட்டேன்.

சீ: இல்லை. அப்படியில்லை.

ஒ: நான் மட்டும் உனக்கு இந்த வாழ்க்கைக்குப் போதும் என்று நினைக்கிறாயா? நீ முழுமையடைவாயா?

சீ: (நிமிர்ந்து அமர்கிறாள்)நான் குழம்பியிருக்கிறேன் அரசே. முழுமையடைவதைப் பற்றி என்னால் இப்போது எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் அதற்கு இன்னொருவர் தேவையில்லை என்பதை மட்டும் நம்புகிறேன். உங்கள் அருகமைவில் மட்டுமே என்னால் மகிழ்ச்சியாக எந்தப் பாவனையும் இல்லாமல் இருக்க முடிகிறது. என்னிடமிருக்கும் அனைத்து வெப்பத்தையும் இந்த வாழ்க்கையில் உங்களுக்குக் கொடுக்க சித்தமாயிருக்கிறேன். உங்களிலிருந்து தண்மையின் இனிமைகளைப் பகிர விழைகிறேன். ஒன்றுக்கும் மேற்பட்ட உடலைப் புணர்வது பற்றிய சிந்தனை ஆன்மாவைக் கத்தியால் பிளந்து கூறுபோடுவதைப் போல் இருக்கிறது. நான் என் ஆன்மாவைக் கண்ணுக்குத்தெரியாத துண்டங்களாக ஆக்க விரும்பவில்லை. உடல்களைத் தேடிச் செல்லும் அந்தப்பாதையின் இறுதியை என்னால் இன்று தரிசிக்க முடிந்தது ஒக்காக். நான் உங்களுடன் உங்கள் காதலில் இந்த அணைப்பிற்குள்ளேயே இருக்க விரும்புகிறேன்.

ஒ: சீலவதி! (இறுக்கமாக அணைத்துக் கொள்கிறான்.)

(திரை மூடப்படுகிறது. முன்னால் தண்டோராக்காரன் வருகிறான். தண்டோராச் சத்தம் முழக்கப்படுகிறது.)

“மல்ல நாட்டின் குடிமக்கள் யாவருக்கும் தெரியப்படுத்தும் செய்தி என்னவென்றால் அரசருக்கும் அரசிக்கும் புதல்வனாக நம் அரசரின் தமையன் ஓரியின் புதல்வன் சிபி தத்தெடுக்கப்பட்டு பட்டத்து இளவரசராக முடிசூடும் விழா வரும் வெள்ளியன்று நடக்கவிருக்கிறது. நாட்டு மக்கள் விழாவுக்குக் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்புச் செய்யுமாறு அரசர் ஒக்காக்கும், அரசி சீலவதியும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்”

(தண்டோரா சத்தத்துடன் திரையில் இருள் கவிகிறது)

***

The post சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின் first appeared on கனலி.

  •  

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.

ஒரு வார காலக் கடும் பனிப்புயலுக்குப் பிறகான ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மினுமினுவென்றும் கொஞ்சம் சொதசொதவென்றும் இருந்தது. நான் பிரெஞ்சு இலக்கியப் பேராசிரியராய் இருந்த பெண்கள் கல்லூரியை ஒட்டிய சிறிய மலைநகரத்தில், வழக்கமான பின்மதிய வேளை உலாத்தலின்போது, ஒரு வீட்டின் சாரல்தடுப்புப் பலகையில் வரிசையாய்த் தொங்கிய பனிக்கூரிகள்[1] என் கவனத்தை ஈர்க்க, நின்றேன். அவற்றுக்குப் பின்னாலிருந்த வெள்ளைப் பலகையில் அவற்றின் கூரிய நிழல்கள் தெள்ளந்தெளிவாய்த் தெரிந்தன. எனவே பனிக்கூரிகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் நிழலும் பார்க்கக்கூடியதாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. மேற்கூரை வெளிப்பக்கம் அதிக தூரம் நீட்டிக்கொண்டிருப்பதால் இருக்கலாம் அல்லது நான் பார்க்கும் கோணம் தவறாக இருக்கலாம் அல்லது சரியான பனிக்கூரிலிருந்து விழும் சரியான துளியை நான் பார்க்காது தவறவிட்டிருக்கலாம். கண்கட்டு வித்தை போல, கூர்முனைகளில் நீர்த்துளிகள் மாறி மாறிச் சொட்டுவதில் காணப்பட்ட லயம், என்னை ஏமாற்றிப் பரிகசிப்பதுபோல் தோன்றியது. அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மேற்கூரை முனைகளில் தொங்கும் பனிக்கூரிகளைப் பார்வையிடும் ஆர்வம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கொண்டு கெல்லி சாலையில், சரியாக, சில வருடங்களுக்கு முன்பு டி. குடியிருந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்தது. நான் பணிபுரியும் அதே பெண்கள் கல்லூரியில் பயிற்றுநராக அவன் பணியாற்றிய காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தான்.

அந்த வீட்டை ஒட்டியிருந்த கார் நிறுத்தத்தின் கூரை முகப்பில் நீலவண்ண நிழற்பின்னணியில் தெள்ளந்தெளிவான பனிப்படிகக் கூம்புகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, என் தேடலுக்கான பரிசாக ஒரு காட்சி கிட்டியது. ஆச்சர்யக்குறியின் அடிப்புள்ளி அதன் இடத்திலிருந்து சற்றுக் கீழே சறுக்கியது போல் – இளகிச் சொட்டும் துளியை முந்தும் நோக்கோடு அவசரகதியில் ஓடியது போல் – இருந்தது. அந்த இரட்டை மினுமினுப்பு மகிழ்ச்சி அளித்தது என்றாலும் முழுமையான திருப்தி ஏற்படவில்லை. மாறாக, ஒளி மற்றும் நிழல் சார்ந்த என் தேடலுக்கான பசியைக் கூடுதலாகத் தூண்டிவிட்டது. என் ஒட்டுமொத்த இருப்பும் உலகக் கிண்ணத்துக்குள் உருளும் ஒற்றை விழிப்பந்தாக என்னை மாற்றிவிட்டதைப் போன்ற உணர்வுநிலையில் நான் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தேன்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்புற வளைவில் தகதகக்கும் கதிரொளியின் வைரப் பிரதிபலிப்பைக் கண்ணுற்றேன். இளகும் பனி காரணமாக, அனைத்துப் பொருட்களிலும் தெள்ளிய சித்திரத் தோற்றம் தென்பட்டது. ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்திருந்த பனித் தோரணங்களிலிருந்து உருகிய நீர், சரிவான தெருவில் சிற்றோடை போல் ஓடி மெதுவாக அடுத்தத் தெருவுக்குத் திரும்பியது. கட்டிடங்களுக்கு இடையில் எப்போதும் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திராத குறுகிய நடைபாதைகள் இப்போது செங்காவி மற்றும் அடர்சிவப்பு வண்ணப் பொக்கிஷங்களைத் திறந்துகாட்டிக்கொண்டிருந்தன. வரிவரியாய் இருந்த பள்ளங்களில் பனி படர்ந்து அலங்கரித்திருந்த குப்பைத்தொட்டியையும், அதன் மூடியின் மையத்தில் தொடங்கி விளிம்பு வரை பரவியிருந்த உறைபனியின் அலைவரிகளையும் முதன்முறையாகப் பார்த்தேன். கடந்த வெள்ளிக்கிழமை பனி அகற்றும் வாகனத்தின் உலோகத் தடுப்பால் ஒதுக்கிவைக்கப்பட்ட பனிக்குவியல்கள், சாலையோரங்களில் வரிசைகட்டி நிற்கும் இளம் பெங்குவின்களைப் போன்று தோற்றமளித்தன.

மேட்டில் ஏறி, இறக்கத்தில் இறங்கி, மெதுவாய் மங்கிக்கொண்டிருக்கும் தொடுவானம் நோக்கி நேராக என நான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தேன். என் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த விஷயங்களின் தொடர்நிகழ்வு, இறுதியில் என்னை, வழக்கமாக நான் உணவருந்தும் இடத்தை விட்டு வெகு தொலைவில் அழைத்துச் சென்றிருந்தது. எனவே ஊர் எல்லையிலிருந்த, இதுவரை நான் உணவருந்தியிராத ஒரு உணவகத்தில் இரவுணவை முடிக்க முடிவு செய்தேன். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது எந்த ஆரவாரமும் இன்றி இருள் கவியத் தொடங்கியிருந்தது.

ஈரப்பனித்தரையின் மீது விழுந்திருந்த வாகனத் தரிப்பிட மானி[2]யின்  மெலிந்து நீண்ட நிழல், விநோதமாய் ஒளிரும் சிவப்பு வண்ணத்தோடு, ஒல்லிப் பிசாசைப் போலத் தோன்றியது. நடைபாதை மீது ஒளிர்ந்துகொண்டிருந்த உணவகத்தின் அடையாள விளக்கின் சிவப்பு நிற ஒளி தெறித்துதான் அந்தத் தோற்றம் எனப் புரிந்தது. அதே போன்றதொரு விநோத நிழலை நீல நிற ஒளியில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அதே இடத்திலேயே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டி. போலியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி இறங்கினான். ஆல்பனியிலிருந்து பாஸ்டன் செல்வதாகவும் போகும் வழியில், தான் முன்பு குடியிருந்த அந்த ஊருக்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

ஒருவருக்கு ஒரு ஊரில் வலியும் வேதனையும் தரக்கூடிய, துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்து, பிறகு அவர் அந்த ஊரை விட்டுப் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அவர் அந்த ஊருக்கு வரும்போது அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேதனை தருவதாக இருக்கும். பழைய நினைவுகள் அவரை வாட்டி வதைக்கும். ஆனால் தங்களது மீள்வருகையின் போது எதுவுமே நடக்காதது போல், எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அங்கு வளைய வருபவர்களைப் பார்க்கும்போது எனக்கு வலியும் வேதனையும் உண்டாவதோடு தனிப்பட்ட முறையிலும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படும். இதை என் வாழ்க்கையில் பல தடவை கண்டிருக்கிறேன்.   

அவன் என்னை உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். சற்று முன்பு நான் போன அதே உணவகம். மேம்போக்கான நல விசாரிப்புக்குப் பிறகு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் கடுமையான மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைப்பதற்காக, அவன் சம்பந்தா சம்பந்தமின்றி சொன்னான், “சிந்தியா வேய்னின் இதயத்தில் பிரச்சனை இருக்குமென்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அவள் போன வாரம் இறந்துவிட்டதாக என்னுடைய வழக்கறிஞர் சொன்னார்.”

2

அவன் இப்போதும் இளமையோடும், அதே திமிரோடும் அதே கபடத்தோடும் காணப்பட்டான். சிந்தியாவின் தங்கை சிபிலுடன் அவனுக்கு இருந்த மிக மோசமான உறவையோ, சிந்தியா என்னை அழைத்து பாஸ்டனுக்குச் சென்று டி.யைச் சந்தித்துப் பேசுமாறு என்னிடம் மன்றாடியதோ, சிபிலை அவன் சந்திப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும், எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் அவனைக் கல்லூரியை விட்டே துரத்தவேண்டும் என்று சொன்னதோ, எதுவுமே அறியாத, அழகும் மென்மையும் கொண்ட அதே மனைவியோடும் அவன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருந்தான். மிகையுணர்வுக்கு ஆளான சிபிலின் வெறித்தனமான பேச்சின் பரிமாணம் அவன் மனைவியை ஒரு அடங்காப்பிடாரியாக சித்தரித்திருந்தது. நான் அவனை உடனடியாகவே மடக்கிவிட்டேன். அவனோ, எங்களைக் கவலைப்படவேண்டாம் என்றும், சிபிலை விட்டு தான் போய்விட முடிவு செய்துவிட்டதாகவும், கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியோடு ஆல்பனிக்குச் சென்று அவனுடைய அப்பாவின் பண்ணையில் வேலைபார்த்துப் பிழைத்துக் கொள்ள இருப்பதாகவும் சொன்னான். சிக்கலான பிரச்சனையாக உருமாறி வருடக்கணக்காக இழுபறியாக இருக்கக்கூடும் என்று அச்சுறுத்திய அந்த விஷயம், எங்களுடைய தொடர்ச்சியான இரகசியக் கலந்துரையாடலால் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மறுநாள் பிரெஞ்சு இலக்கியத்துக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய வகுப்பறையில் நான் என்னுடைய உயர்மேஜையில் அமர்ந்திருந்தேன். சிபில் உயர் குதிகாலணி அணிந்து கையில் பெட்டியுடன் வகுப்பறைக்கு வந்தாள். மற்ற மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருக்கும் மூலையில் பெட்டியை வைத்தாள். தனது மெலிந்த தோளில் ஒரு பக்கமாகத் தொங்கவிட்டிருந்த ரோம அங்கியை அவிழ்த்து மடித்து பெட்டிக்குள் வைத்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று மாணவிகளோடு சேர்ந்து என்னிடம் வந்து தேர்வு முடிவுகளை நான் எப்போது அவர்களுக்கு அனுப்புவேன் என்று கேட்டாள். எல்லா விடைத்தாள்களையும் வாசித்துத் திருத்த, ஒரு வார காலம் எடுக்கும் என்று சொன்னேன். டி. எடுத்திருந்த முடிவைப் பற்றி அவளிடம் ஏற்கனவே சொல்லியிருப்பானா என்று நான் சந்தேகப்பட்டதும் கூட நினைவுக்கு வந்தது. கடமை தவறாத என்னுடைய இந்தச் சின்னஞ்சிறு மாணவியை எண்ணி எனக்குப் பெரும் வருத்தமும் கவலையும் உண்டாயின. தேர்வு நடைபெற்ற இரண்டரை மணி நேரமும் நான் மீண்டும் மீண்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளைப் போன்று இறுக்கமாக அணிந்திருந்த சாம்பல் வண்ண ஆடை, அலையலையாக சுருட்டிவிடப்பட்ட கருங்கூந்தல், அப்போது பிரபலமாக இருந்த, சல்லாத்துணி மறைப்புடன் கூடிய, சிறிய, பூப்போட்டத் தொப்பி, அதற்குக் கீழே நவீன பாணி ஓவியம் போன்று தோல்நோயால் உண்டான தழும்புகளோடு கூடிய முகம், தோல்நோய் சிகிச்சைக்கான செயற்கை விளக்கொளியால் கருத்த தேகம் என அழகைக் குலைக்கும் அனைத்து அம்சங்களும் அவளிடம் காணப்பட்டன. எனவே செக்கச் செவேலென்று வெடித்துக்கிடக்கும் உதடுகளுக்கிடையில் வெளிறிக் காணப்பட்ட ஈறும் பற்களும், கருத்த இமைகளுக்குக் கீழே தென்பட்ட நீர்த்த மை நிற நீல விழிகளும் மட்டுமே அவளுடைய அழகை எடுத்துக்காட்டக் கூடியனவாக இருந்தன.

அடுத்த நாள், கன்னாபின்னாவென்று இருந்த நோட்டுப்புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்கிவைத்து, குளறுபடியான கையெழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். எப்படியோ தவறுதலாக வரிசை மாறி முன்னால் வந்துவிட்ட வாலேவ்ஸ்கி மற்றும் வேய்ன் இருவரின் நோட்டுப்புத்தங்களையும் கையிலெடுத்தேன். முதலாவது வெளிப்பகட்டு காட்டும் மிகத் தெளிவான கையெழுத்துடன் அழகாக இருந்தது. ஆனால் சிபிலுடையது எப்போதும் போல ஏகப்பட்டக் கிறுக்கல்களோடு பற்பல சாத்தான்களின் பிடியில் அகப்பட்டது போல கொடுமையாக இருந்தது. அவள் முதலில் வெளிறிய கடினமான பென்சிலால் எழுத ஆரம்பித்திருந்தாள். அழுத்தி அழுத்தி எழுதியதில் தாள் முழுவதும் கருப்பு நிறமானதோடு பின்பக்கமும் அச்சு படிந்திருந்தது. நல்லவேளையாக, கொஞ்ச நேரத்திலேயே பென்சிலின் கூர் உடைந்துபோனது போலும். அடுத்து அவள் அழுத்தமாகவும் மொத்தமாகவும் எழுதக்கூடிய, கிட்டத்தட்ட கரிக்கட்டை போன்ற பென்சிலால் எழுதியிருந்தாள். அவ்வப்போது அதன் மழுங்கிய முனையை வாயில் வைத்து வைத்து எழுதிய காரணத்தால் காகிதத்தில் உதட்டுச்சாயக் கறையும் சேர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்ததை விடவும் அவளுடைய விடைத்தாள் மிக மோசமாக, அடிக்கோடுகள், வரிசை மாற்றுகள், தேவையில்லாத அடிக்குறிப்புகள் என அவநம்பிக்கையின் அனைத்துக் குறியீடுகளையும் பயன்படுத்தி, அவளால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் சரியாகச் செய்துமுடிக்க முயற்சி செய்ததைப் போன்று இருந்தது. அடுத்து அவள் மேரி வாலெவ்ஸ்கியின் மைப்பேனாவை இரவல் வாங்கி பிரஞ்சும் ஆங்கிலமும் கலந்து இவ்வாறு எழுதியிருந்தாள்: ‘இந்தப் பரிட்சை முடிந்ததும் என் வாழ்க்கையும் முடிந்துவிடும். விடைபெறுகிறேன், பெண்களே! மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களுக்கு, தேர்வில் ‘டி’ வாங்குவதை விடவும் மரணம் சிறந்ததல்ல, ஆனால் டி. இல்லாத வாழ்க்கையை விடவும் மரணம் சிறந்தது என்று நான் சொன்னதாக என் அக்காவிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.’

நான் உடனடியாக சிந்தியாவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது, எல்லாம் முடிந்துவிட்டதாக – காலை எட்டு மணிக்கே எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னாள். நான் அங்கு வரும்போது சிபில் எழுதியிருந்த குறிப்பை எடுத்துவரச் சொன்னாள். வழியும் கண்ணீரோடு குறிப்பை வாசித்த அவள், பிரெஞ்சு இலக்கியத் தேர்வோடு, சிபில் தன்னைத் தொடர்புபடுத்தி எழுதியிருந்த ஒப்புமை வரிகளில் இருந்த புத்திசாலித்தனத்தை வியந்தாள். சிபிலின் நோட்டுப் புத்தகத்தைக் கீழே வைக்காமலேயே இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பினாள். சோடா நீரோடு கண்ணீரும் சேர்ந்து தெறிக்க, மீண்டும் அந்தத் தற்கொலைக் குறிப்பை வாசிக்கலானாள். அப்போது அதிலிருந்த இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். சிபில் ‘பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்த பிரெஞ்சு வார்த்தைக்கு ‘வேசி’ என்ற பொருளும் இருப்பதால், மாணவிகள் தவறுதலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்த நேரிடும் என்று அமெரிக்க அகராதிகளில் ‘பெண்’ என்றே அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டேன். சுவாரசியமற்ற அந்த அற்ப விஷயங்கள் சிந்தியாவை துக்கத்தின் அடியாழத்திலிருந்து பெரும் திணறலோடு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சற்றே இலகுவாக்கின. பிறகு தொய்ந்துபோன அந்த நோட்டுப் புத்தகத்தை, சொர்க்கத்திற்குச் செல்வதற்கான கடவுச்சீட்டு போல கையில் இறுக்கமாகப் பிடித்தவாறு, மாடியில் இருந்த சிறிய குளிர்ச்சியான படுக்கையறைக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த இரண்டு காலி மாத்திரைப் புட்டிகளையும், ஆதி முதல் அந்தம் வரை டி. அறிந்திருந்த அழகிய இளம் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, கீழே கவிழ்ந்து கிடந்த படுக்கையையும் ஒரு  போலீஸ்காரரிடம் அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பான அயர்லாந்துக்காரரிடம் காட்டுவது போல் என்னிடம் காட்டினாள்.  

3

சிந்தியாவின் தங்கை இறந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, சிந்தியாவை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். அந்தச் சமயம் நான் பொது நூலகத்தில் துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அவளும் அப்போது அங்கு குடிபெயர்ந்திருந்தாள். ஏதோ ஒரு விநோதக் காரணத்துக்காக (கலையுணர்வு காரணமாக இருக்கலாம் என்பது என்னுடைய தெளிவற்ற யூகம்) குளிர்நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத மக்கள் வசிக்கும் ‘குளிர்ந்த நீர் குடியிருப்புகள்’ என்று சொல்லப்படுகிற, நகரத்தின் குறுகிய தெருக்களின் கீழ்த்தளக் குடியிருப்புகளுள் ஒன்றில் அவள் தங்கியிருந்தாள்.

வெறுப்பூட்டும் அவளுடைய நடவடிக்கைகளோ, மற்ற ஆண்களின் கண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் அவளது தோற்றமோ என்னைத் துளியும் ஈர்க்கவில்லை. அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் பெரிய நீலநிறக் கண்கள். அவளுடைய அடர்ந்த கரிய புருவங்களுக்கு இடைப்பட்டப் பகுதியும் மூக்குத்துவாரத்தின் இருபக்கப் புடைப்புகளும் எப்போதும் மினுமினுவென்று காணப்பட்டன. அவளுடைய தோல் சொரசொரவென்று ஆண்களுடையதைப் போன்று இருந்தது. வண்ணமீன் தொட்டியைப் பார்ப்பது போன்று குறுகுறுவென்று அவள் நம்மைப் பார்க்கும்போது அந்த ஓவியக்கூடத்தின் துல்லியமான விளக்கொளியில் அவளுடைய முப்பத்திரண்டு வயது முதிர் முகத்தின் குழிகளைக் காணமுடியும். அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் பெரும் விருப்பம். ஆனால் அதில் அவ்வளவு நேர்த்தி இருக்காது. அசிரத்தை காரணமாக அவளுடைய பெரிய முன்பற்களில் உதட்டுச்சாயத்தின் சிவப்புக் கறை படிந்திருக்கும்.

அவள் வசீகரமான அடர்நிறத்தில் இருந்தாள். மோசம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஓரளவு நன்றாகவும் விதவிதமாகக் கலந்துகட்டியும் உடுத்தினாள். நல்ல உடல்வாகு என்று சொல்லும்படியும் இருந்தாள். ஆனால் யாவற்றிலும் ஏனோதானோவென்ற ஒரு அலட்சியம் இருந்தது. அவளுடைய மெத்தனத்தை நான் அரசியலில் இடதுசாரிக் கோட்பாடுகளோடும், கலையில் மேம்பட்ட கொச்சைத்தன்மையோடும் மறைமுகமாகத் தொடர்புபடுத்தினேன். எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய சுருள் கேசத்தை நடுவகிடு எடுத்து ஓரளவு படியவைத்து பின்னால் சிறு கொண்டையாக உயர்த்தி முடிந்திருக்காவிட்டால், பார்ப்பதற்கு பரட்டையாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். அவள் பளீரென்ற நிறத்தில் விரல் நகங்களில் நகப்பூச்சு பூசியிருந்தாள். ஆனால் நகங்கள் மிக மோசமாகக் கடிக்கப்பட்டிருந்ததோடு தூய்மையாகவும் இல்லை.

மிகவும் அமைதியான சுபாவமுடைய, திடீரென்று சிரிக்க ஆரம்பித்திருந்த ஒரு இளம் புகைப்படக் கலைஞனும், தெருவில் சிறிய அச்சுக்கூடம் வைத்திருந்த, வயது மூத்த இரண்டு சகோதரர்களும் அவளுடைய காதலர்களாக இருந்திருக்கின்றனர். கண்ணாடிக்குக் கீழே படியவைக்கப்பட்டிருக்கும் பொருளின் அறிவியல் துல்லியத்துடன், வெளிறிய முழங்கால்களுக்குக் கீழே மெல்லிய நைலான் காலுறையின் ஊடே காணப்படும் கரடுமுரடான கருப்பு முடிகளைப் பயமும் பதற்றமுமாக இரகசியப் பார்வை பார்க்கும்போது அல்லது அவளுடைய ஒவ்வொரு அசைவின்போதும், அவள் பூசியிருக்கும் மட்டமான வாசனைத் திரவியங்கள் மற்றும் களிம்புகளோடு, குளிக்காத அவள் உடலிலிருந்து வீசும் மோசமான வாடையை நுகர நேரும்போது, அவளுடைய காதலர்களின் ரசனையை எண்ணி எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அவளுடைய அப்பா, அவர்களுக்கென்று இருந்த ஓரளவு சொத்தில் பெரும்பகுதியை சூதாடித் தொலைத்தவர். அவளுடைய அம்மாவின் முதல் கணவர் ஸ்லாவ்[3] வம்சாவளியைச் சேர்ந்தவர். மற்றபடி சிந்தியா வேய்ன் ஒரு நல்ல மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். இன்னும் பின்னோக்கி ஆய்ந்தால் ஏதேனும் தீவாந்தரத்தின் அரசர் அல்லது கணியர் வம்சத்தைச் சார்ந்தவளாக இருக்கலாம் என்பது என் யூகம். புதிய உலகத்தில், அற்புதமான இலையுதிர் மரங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பில் காலூன்றிய அவளது வம்சத்தின் ஆரம்ப கட்டத்தில் தூய திருச்சபைகளை நிறைத்தனர் விவசாய பக்தர்கள். அவர்களைத் தொடர்ந்து வியாபாரத்தில் கைதேர்ந்த வியாபாரிகளும், கல்வியிற் சிறந்தவர்களும் உருவாயினர். லெக்சிங்டன் நீராவிப்படகில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரும், சிந்தியாவின் சுழல்மேஜைக்கு அடிக்கடி வருகை தருபவருமான டாக்டர் ஜோனாத்தன் வேய்ன் (1780-1839) அவர்களுள் ஒருவர்.

நான் எப்போதும் மரபியல் வரிசையைத் தலைகீழாகப் பார்க்கவே முனைவேன். இங்கு வேய்ன் பரம்பரையை ஆராயும் வாய்ப்பு கிடைத்தபோது கடைசி வாரிசான சிந்தியா மட்டுமே கவனத்துக்கு உரியவளாக இருந்தாள். அதாவது, அவளுடைய கலைத்திறன், அற்புதமான, அழகான ஆனால் அவ்வளவாக விலைபோகாத, அவளுடைய நண்பர்களின் நண்பர்கள் எப்போதாவது வாங்கும் ஓவியங்கள், முக்கியமாக அவளுடைய வரவேற்பறையை அலங்கரித்த அற்புதமான மற்றும் கவித்துவமான ஓவியங்கள் அவளுடைய இறப்புக்குப் பிறகு என்னவாகும் எங்கே போகும் என்று தெரிந்துகொள்ள பெரிதும் விரும்பினேன். மிக நுணுக்கமாகத் தீட்டப்பட்டிருந்த உலோகப் பொருட்களின் ஓவியங்களுள் எனக்கு மிகவும் பிடித்தது, வாகன முகப்புக் கண்ணாடியின் ஒரு பக்கம் ஏடு போல் படிந்திருக்கும் உறைபனியும், கற்பனையான வாகனக் கூரையிலிருந்து வடிந்தோடும் நீர்த்துளிகளும், தெளிவான மறுபக்கத்தின் வழியாக நீலச்சுவாலை போல் ஒளிரும் வானமும் பச்சையும் வெள்ளையுமான தேவதாரு மரங்களும் தீட்டப்பட்டிருந்த, ‘வாகன முகப்புக் கண்ணாடி வழியே’ என்ற ஓவியம்.  

4

சிபிலின் காதலை சிந்தியாவும் நானும் சேர்ந்து முறியடித்துவிட்டது தற்போது சிபிலுக்குத் தெரிந்துவிட்டதாகவும் அதனால் சிபில் தன்மீது கோபமாக இருப்பதாகவும் சிந்தியாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொல்வழக்கப்படி சிபிலின் ஆன்ம சாந்திக்கான சில பரிகாரங்களை (சிபிலுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு) அவள் செய்யத் தொடங்கினாள். சிபிலின் கல்லறையை குறைந்த வெளிச்சத்தில் படம்பிடித்து அந்தப் புகைப்படங்களை டி.யின் அலுவலக முகவரிக்கு ஒழுங்கற்ற கால இடைவெளியில் அவ்வப்போது அனுப்பிவைத்தாள். சிபிலின் தலைமயிரைப் போன்றே இருக்கும் தன்னுடைய தலைமயிர்க் கற்றையை நறுக்கி அதைத் தபாலில் அவனுக்கு அனுப்பினாள். அக்டோபர் 23-ம் தேதி, நண்பகல் வேளையில், இளஞ்சிவப்பும் பழுப்புமான வனாந்திரத்தின் சாலையோர விடுதியொன்றில் டி.யும் சிபிலும் தங்கியிருந்த நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக நியூ இங்கிலாந்து மாகாணத்தின் வரைபடத்தில் அவ்விடத்தை குறுக்குவெட்டுக் கோடுகளால் குறிப்பிட்டு அந்தப் படத்தை அவனுக்கு அனுப்பினாள். பாடம் செய்யப்பட்ட ஸ்கங்க்கை[4]  இரண்டு முறை அனுப்பினாள்.

எதையும் தெள்ளந்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசத் தெரியாமல் வளவளவென்று உரையாடக்கூடியவளான அவளால், தனக்குள் வியாபித்திருக்கும் விநோதமான ஆன்ம ஒளிவளையத்தைப் பற்றி முழுமையாக விவரிக்க இயலவில்லை. உண்மையில் அது தனிப்பட்ட வகையில் அவளுக்கு மட்டும் நேரும் புதிய விஷயமல்ல. பொதுவாகவே, ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அந்த ஆன்மா, அமைதியான ஆவியுலகில் ஏற்கனவே இறந்துபோனவர்களின் ஆன்மாவோடு போய் சேர்ந்துகொண்டு, அவ்வப்போது தனக்குப் பிடித்தவர்களைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கும். இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இயல்பான அந்த நுண்பொருள் கோட்பாட்டியலுக்குள் சிந்தியா சில விநோதமான நடைமுறைக் கூறுகளைப் புகுத்தினாள். 

அநாதையாய்த் திரியும் பூனைக்குட்டியை பள்ளிச்சிறுமி ஒருத்தி தூக்கி, கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொஞ்சி, தன்னோடு எடுத்துச் சென்று, ஏதாவதொரு புறநகர்ப் பகுதியில் உள்ள புதரில் பத்திரமாக விட, அதை அந்த வழியாகச் செல்லும் யாரோ ஒருவர் எடுத்து, அன்போடு தடவிக்கொடுப்பதைப் போலவோ அல்லது இளகிய மனம் படைத்தப் பெண்மணி யாராவது, தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுசெல்வதைப் போலவோ, தன் விதியை இறந்துபோன நட்புகளின் ஆன்மாக்களே வழிநடத்துகிறார்கள் என அவள் உறுதியாக நம்பினாள்.

சில மணிநேரம் அல்லது தொடர்ந்து பல நாட்கள், சில சமயம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் மாதக் கணக்காகவோ, வருடக் கணக்காகவோ சிந்தியாவுக்கு ஏற்படும் எதுவும், இறந்துபோன நட்பு அல்லது உறவின் பழக்க வழக்கம் மற்றும் மனநிலை சார்ந்தது என்பது சிந்தியாவின் எண்ணம். அந்த நிகழ்வு ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அளவுக்கு அசாதாரணமாக இருக்கும் அல்லது ஒருவரது வழக்கமான நாளில் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்து, நாளடைவில் ஒளிவளையம் மங்கி மறைய, அற்ப விஷயமாக மாறிவிடக்கூடிய, சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். விளைவு நல்லதோ, கெட்டதோ, ஆனால் மூல ஆன்மா எதுவென்று கட்டாயம் அடையாளங்காண முடியும். ஒரு மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வதைப் போன்றது அது என்றாள் சிந்தியா.

எல்லாராலும் எல்லா ஆன்மாக்களையும் அடையாளங்காண இயலாது என்பதால் அவளால் அவளைத் தொடர்பு கொள்ளும் சரியான ஆன்மாவைக் கண்டறிவது சாத்தியமில்லை என வாதிட்டு அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். கையொப்பம் இடப்படாத கடிதங்களையும் கிறிஸ்மஸ் பரிசுகளையும் யார் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ‘வழக்கமான நாள்’ என்று சிந்தியா குறிப்பிடுவது பலவீனமான ஆன்ம ஒளிவளையங்களின் கலவையாக இருக்கலாம் அல்லது காவல் தேவதையின் வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கலாம். கடவுளைப் பற்றி என்ன சொல்வது? சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியை மண்ணில் வெறுக்கும் மக்கள், சொர்க்கத்திலும் அதே போன்ற ஒருவரை எதிர்பார்ப்பார்களா? மேலும் போர்கள் பற்றி? எவ்வளவு பயங்கரமான விஷயம்! இறந்த போர்வீரர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்களா? தள்ளாடும் வயோதிகர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கைப்பற்ற ஆவிக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்குமா?

ஆனால் சிந்தியா பொதுவிதிகளுக்கும் தர்க்க எல்லைகளுக்கும் அப்பாற்பட்டிருந்தாள். ‘தளபுள’ என்று கொதிக்கும் சூப்பைப் பார்த்தால் “ஐயோ, அது பால் (Paul)” என்பாள். அறக்கொடை நிறுவனத்தின் லாட்டரியில் அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட, நல்ல தரமான வாக்யூம் க்ளீனர் கிடைத்தால், “அன்புக்குரிய பெட்டி பிரவுன் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன்” என்பாள். 

என்னுடைய பிரெஞ்சு மூளையை அதிகம் எரிச்சலடைய வைத்தது எதுவென்றால் பெட்டி பிரவுனும் பாலும் உயிரோடு வாழ்ந்த காலத்துக்கே அவள் மானசீகமாகச் சென்றுவிடுவதுதான். நல்ல எண்ணத்துடன் அவர்கள் தனக்கு விதவிதமான, விநோதமான, ஏற்றுக்கொள்ள இயலாத பரிசுப்பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்கள் என்றும் மூன்று டாலர் காசோலையுடன் கூடிய பழைய பர்ஸை தெருவில் கண்டெடுத்து, அதை உரியவரிடம் (இங்குதான் நடக்க இயலாத, முதிய பெண்மணி பெட்டி பிரவுன் வருகிறார்) சேர்ப்பித்ததில் ஆரம்பித்து, தன்னுடைய முன்னாள் காதலன் (இங்குதான் பால் வருகிறான்) அவனுடைய வீட்டையும் குடும்பத்தையும் தத்ரூபமான ஓவியங்களாய்த் தீட்டுவதற்கான நியாயமான தொகைக்கு பதில் அடிமட்டத் தொகை பேசி அவமானப்படுத்தியது வரை சொல்வாள். இவை எல்லாமே சிந்தியா குழந்தையாய் இருந்தபோது, எடுத்ததெற்கெல்லாம் அறிவுரை கூறி அவளைப் பாடாய்ப்படுத்திய திருமதி பேஜ் என்னும் நல்ல மனம் படைத்த முதிய பெண்மணியின் மரணத்துக்குப் பிறகே ஆரம்பித்தன. 

சிபிலின் குணாதிசயங்கள், வானவில்லின் விளிம்பைப் போல தெளிவற்றவை என்றாள் அவள். சிபிலை நான் கொஞ்சமாவது புரிந்து வைத்திருந்தால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சிந்தியாவின் வாழ்வில் சின்னச் சின்ன நிகழ்வுகளாக, அவ்வப்போது அவளைச் சூழ்ந்துகொள்ளும் அந்த ஒளிவளையத்தில் சிபிலின் ஆன்மா இருப்பதை என்னால் எளிதில் உணர்ந்துகொண்டிருக்க முடியும் என்றாள்.

சிந்தியாவின் அம்மா இறந்ததிலிருந்தே, அவளும் சிபிலும் தங்களுடைய பாஸ்டன் வீட்டை விட்டுவிட்டு, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட விரும்பினார்கள். நியூயார்க்கில் சிந்தியாவின் ஓவியங்களுக்கு நல்ல விலையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்களுடைய பழைய வீடு தன் மென்கரங்களால் அவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டது. சிபில் தன் மரணத்துக்குப் பிறகு, அந்த வீட்டை சுற்றுப்புறத்திலிருந்து தனிமைப்படுத்தினாள். வீடு என்ற உணர்விலிருந்து அது சிதைந்து அழியத் தொடங்கியது. குறுகிய தெருவின் எதிர்ப்பக்கம் சாரங்களால் சூழப்பட்டு, இரைச்சலுடன், எரிச்சலூட்டும் ஒரு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே வருடம் வசந்த காலத்தில் அந்தப் பகுதியில் பிரசித்தமான இரண்டு நெட்டிலிங்க மரங்கள் பட்டுப்போய் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு போல நின்றன. அறுபது வயதில் ஓய்வு பெற்ற, கால் நூற்றாண்டு காலத்தை நத்தைகள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்த திரு. லீவர் அவர்களின் காலைநேர நடைக்குப் பழகிய, ஏப்ரல் மாத மழையில் நனைந்து வித்தியாசமான கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், அழகிய செஞ்சாந்து நிற நடைபாதைக் கற்கள் பணியாட்களால் பெயர்த்தெடுத்து அகற்றப்பட்டன. முதியவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இறப்புக்குப் பிறகு, உயிரோடு இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் ஆதரவும் இடையூறும் சில வேளைகளில் வேடிக்கையாக இருக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிந்தியா ஒரு தடவை, போர்லாக் என்ற கிறுக்குத்தனமான நூலகரோடு நட்பாக இருந்தாள். அவர் ‘hither’ என்ற வார்த்தையில் உள்ள இரண்டாவது h-க்கு பதிலாக i என்பது போல் விநோதமான எழுத்துப்பிழைகளோடு அச்சாகியிருந்த பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே, தூசு படிந்த தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தைக் கழித்தார். சிந்தியாவுக்கு மாறாக, தெளிவற்ற யூகங்களால் உண்டாகும் புளகாங்கித உணர்வால் அவர் ஈர்க்கப்படவில்லை. அவர் தேடியவையெல்லாம் திட்டமிட்டதைப் போல் தோன்றும் தற்செயல்கள் மற்றும் இடைவெளிகளைப் போல் தோற்றமளிக்கும் பிளவுகள் போன்ற முரண்விநோதங்களை மட்டுமே. ஒழுங்கற்ற அல்லது இலக்கண விதிகளுக்கு மாற்றாக இணைக்கப்பட்ட வார்த்தைகள், சிலேடைகள், மாற்றெழுத்துப் புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள் இன்ன பிறவற்றில் விடாப்பிடியான ஆர்வக்கோளாறுடன் இருந்த சிந்தியா, அந்த பரிதாபத்துக்குரிய கிறுக்கு நூலகருக்கு உதவுவதற்காகக் கொடுத்த உதாரணங்களை, நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தபோது, சுத்தப் பைத்தியக்காரத்தனமாகவே எனக்குத் தோன்றியது.

நூலகர் இறந்துபோன மூன்றாம் நாள், அவள் ஒரு சஞ்சிகையை வாசித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அழியாக் கவிதையொன்றின்[5]  (மற்ற அப்பாவி வாசகர்களைப் போலவே அவளும் அதை உண்மையிலேயே கனவில் இயற்றப்பட்டக் கவிதையென நம்பினாள்) வரிகளைக் கண்ணுற்றதாகவும், அதிலிருந்த ‘Alph’ என்னும் வார்த்தை, Anna Livia Plurabelle (மற்றொரு கற்பனைக் கனவிற்குள் ஓடும் அல்லது அதைச் சுற்றிக்கொண்டு ஓடும் மற்றொரு புனித நதியின் பெயர்) என்பதன் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு தீர்க்கதரிசனம் காட்டுவதாகவும் அதில் கூடுதலாக இருக்கும் h என்ற எழுத்து, திரு.போர்லாக்கை வசியம் செய்திருந்த அந்த வார்த்தைக்கு வழிகாட்டும் அறிகுறி போல இருப்பதாகவும் அவள் சொன்னாள்.

எனக்கு சரியாக நினைவில்லை, ஏதோ ஒரு புதினமோ, சிறுகதையோ (யாரோ ஒரு சமகால எழுத்தாளருடையதுதான் என்று நினைக்கிறேன்), அதன் ஆசிரியரே அறியாத, கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை சிந்தியா முறைப்படுத்தினாள். அவளுடைய பொருள்விளக்கப்படி, அது அவருக்கு, இறந்துபோன தாயாரிடமிருந்து வந்திருந்த செய்தி.

5

துரதிர்ஷ்டவசமாக, சிந்தியா இந்த சாதுர்யமிக்கக் கற்பனைகளில் திருப்தியுறாமல் ஆவியுலகக் கோட்பாட்டின் மீது முட்டாள்தனமான வேட்கையைக் கொண்டிருந்தாள். கட்டணம் பெற்றுக்கொண்டு ஆவியுலகோடு தொடர்பு கொள்பவர்களின் அமர்வுகளுக்கு நான் அவளோடு செல்ல மறுத்தேன். மற்ற ஆதாரங்களின் மூலம் இதுபோன்ற விஷயங்களை அவர்களை விடவும் சற்றுக் கூடுதலாகவே நான் அறிந்திருந்தேன். எனினும், சிந்தியாவும், அச்சுக்கூடத்தைச் சேர்ந்த, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத முக அமைப்புக் கொண்ட, அவளுடைய இரு நண்பர்களும் நடத்தும் கேலிக்கூத்துகளில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.

அவர்கள் பொறுமைசாலிகளாகவும், கண்ணியமாகவும், வயதில் மூத்தவர்களாகவும் அதே சமயம், சற்றே அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சினாலும் நாகரிகமான நடத்தையினாலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சிறிய கனமில்லாத மேஜையைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். மேஜையில் எங்கள் விரல்நுனி பட்டதுமே அது கிடுகிடுவென அதிர்ந்து நடுங்கத் தொடங்கும். தங்களைப் பற்றி ஆர்வத்துடன் மளமளவென்று சொல்ல முன்வந்த பற்பல ஆவிகளோடு நான் உரையாடினேன். இருப்பினும், நான் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டுவிட்டால் அவ்வளவுதான், அவை மேற்கொண்டு தங்களை வெளிப்படுத்த மறுத்துவிடும். ஆஸ்கார் வைல்ட் வந்து, வேகமாகவும் தப்பும் தவறுமாகவும் பிரெஞ்சுமொழியில், வழக்கமான ஆங்கிலவாத வார்த்தைகளோடு, எதற்காகவோ சிந்தியாவின் இறந்துபோன பெற்றோரைக் குற்றம் சாட்டினார். சுருக்கெழுத்தில் அதை ‘கருத்துத்திருட்டு’[6] எனக் குறிப்பிட்டேன். குறுக்கே புகுந்த ஒரு ஆவி, ஜான் மோர் என்ற பெயருடைய தானும், வில் என்ற தன் சகோதரனும் சுரங்கத் தொழிலாளிகள் என்றும் 1883-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலராடோவில் ‘க்ரெஸ்டட் பியூட்டி’ என்ற இடத்தில் ஏற்பட்ட சுரங்கச் சரிவில் மாண்டதாகவும், நாங்கள் கேட்காமலேயே முன்வந்து தகவல் சொன்னது. இந்த விளையாட்டில் அனுபவசாலியான ஃப்ரடரிக் மையர்ஸ் நான் ஓரளவு எழுதியிருந்த கவிதையை வேகவேகமாக ஒப்பித்தான். (சிந்தியா இயற்றும் சிறு பாடல்களைப் போன்று விசித்திரமான ஒற்றுமை இருந்தது)

என்ன இது? சாதுர்யமான கண்கட்டு வித்தையா?

அல்லது குறைபாடுள்ள ஆனால் மெய்யான ஒளிக்கீற்றா?

எது இந்த ஆபத்தான வழக்கத்தை உடைத்து

துன்புறுத்தும் கனவைக் கலைக்கக்கூடும்?

இறுதியாக, பயங்கரமான உறுமலுடன், மேஜை தடதடக்க, லியோ டால்ஸ்டாய் எங்கள் குழுவிற்கு வருகை புரிந்தார். அது அவர்தானா என்று மண்ணுலகில் அவரது தினசரி வாழ்வின் தனித்துவ அம்சங்களால் அவரை உறுதிப்படுத்தச் சொன்னபோது, ரஷ்யாவின் மரக் கட்டுமான வகைகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதோ (பலகையில் உருவங்கள் – மனிதன், குதிரை, சேவல், மனிதன், குதிரை, சேவல்) எழுத்தால் எளிதில் எழுத இயலாத, புரிந்துகொள்ளக் கடினமான, சரிபார்ப்பு சாத்தியமில்லாத சில சிக்கலான விவரணைகளைத் தந்தார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் பங்கேற்றேன். எல்லாமே முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தபோதும், அவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ரசிக்கவும், சிந்தியாவின் இத்தகு கொடுமையான வீட்டுக் கொண்டாட்டங்களின்போது தரப்படும் மதுவை அருந்தவும்தான் (போட்ஜியும் புட்ஜியும் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவர்கள்) நான் அவற்றில் கலந்துகொண்டேன் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அவளுடைய வீட்டின் வரவேற்பறை எப்போதும் அழுக்காக, கழுவப்படாத பழைய, வண்ணக்கலவைத் தட்டைப் போல இருந்தது. எனவே அவள், அவளுடைய வீட்டை அடுத்த, திரு.வீலரின் வசதியான வீட்டில், அவளுக்கே உரிய மையவிலக்கு மனோபாவத்துடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். 

பண்பற்ற, நாகரிகமற்ற, சுகாதாரமற்ற, கேவலத்திலும் கேவலமான வழக்கமாக, விருந்தினர்கள் அப்போதுதான் அவிழ்த்த, உடற்சூடு இன்னும் குறையாத அவர்களது மேல் கோட்டுகள், அமைதியான, வழுக்கைத் தலையரான பாப் வீலரால், அவரது தூய்மையான, அந்தரங்கமான படுக்கையறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரும் அவர் மனைவியும் படுக்கும் படுக்கையின்மீது குவித்துவைக்கப்பட்டன. மேலும் விருந்தினர்களுக்கான மதுபானங்களைக் கோப்பைகளில் அவர் ஊற்றிக் கொடுக்க, இளம் புகைப்படக் கலைஞன் அவற்றைப் பரிமாற, சிந்தியாவும், திருமதி வீலரும் ரொட்டிகளைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

தாமதமாக வருபவர்கள், ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கு இடையிலான நீலச்சாம்பல்நிறக் கூடத்தில் தேவையில்லாமல் கூடிக் கூச்சலிடும் ஒரு கூட்டத்தையே பார்ப்பார்கள். சிந்தியா வழக்கமாக அழைப்பு விடுக்கும் பெண்மணிகள் அனைவருமே, திருமணமானவர்களோ, இல்லையோ, ஆனால் அலைபாயும் நாற்பதுகளில் இருந்தார்கள். ஒருவேளை, அங்கு இருப்பவர்களிலேயே தான்தான் இளையவளாக இருக்கவேண்டும் என்று சிந்தியா விரும்பியிருக்கலாம். சிலர் அவர்களுடைய வீட்டிலிருந்தே டாக்சிகளின் மூலம் வரவழைக்கப்படுவார்கள். வரும்போது முழுமையான ஒப்பனையுடனும் அழகான தோற்றத்துடனும் காணப்படும் அவர்கள், நிகழ்ச்சியின் முடிவில் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். 

வார இறுதிக் கொண்டாட்டங்களில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் சிநேகபாவம் மிக்க குடிகாரர்கள், தங்கள் அனுபவத்தால், உடனடியாகவும், மிகத் துல்லியமாகவும் போதையின் பொதுப்பகுவெண்ணைக் கண்டறிந்து, அதன் அடுத்தக் கட்டத்துக்கு முன்பு அனைவரும் ஒருவருக்கொருவர் பூரண விசுவாசத்தோடு ஒன்றிணைந்து கூட்டாக இறங்குவது, என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

இணக்கமாகப் பேசிய பெண்மணிகளின் பேச்சில் தெனாவெட்டும், இறுக்கமான ஆண்களிடத்தில் சூலுற்றப் பெண்மையின் நாணமும் தென்பட்டன. வந்திருந்தவர்களுள் சிலர் ஏதாவது ஒரு வகையில் கலையோடு தொடர்புடையவர்களாக இருந்தனர். எனினும் எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் இல்லை, மலர்க்கீரீடம் அணிந்த தலைகள் இல்லை, முக்கியமாக, குழலூதும் பெண்கள் இல்லை.

ஒன்றிரண்டு இளைஞர்களோடு, வெளிறிய தரைவிரிப்பின் மீது கரையொதுங்கிய கடற்கன்னியைப் போன்ற தோரணையோடும், வார்னிஷ் பூசியது போல பளபளவென்று, வியர்வை பூத்த முகத்தோடும் அமர்ந்திருக்கும் சிந்தியா, ஏதேனும் ஒரு கட்டத்தில் பருப்புகள் அடங்கிய தட்டை ஒரு கையில் கவனமாக ஏந்தியவாறே ஊர்ந்து சென்று, மறு கையால் வெண்சாம்பல் நிற சோபாவில் உற்சாகமும் துடிப்புமான இரண்டு பெண்மணிகளுக்கு நடுவில் வசதியாக அமர்ந்திருக்கும் காக்கரன் அல்லது கார்க்கரன் எனப்படுகிற கலைப்பொருள் விற்பனையாளரின் திடகாத்திரமான காலில் பட்டென்று தட்டுவாள். அடுத்த கட்டத்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் வரம்பு கடந்து பெரும் களேபரமாக வெடிக்கும். கார்க்கரன் அல்லது காரன்ஸ்கி, சிந்தியாவை அல்லது அந்தப் பக்கமாகப் போகும் வேறு ஏதாவதொரு பெண்ணை தோளைப் பற்றி, அறையின் மூலைக்கு அழைத்துச் சென்று, பல் இளித்தபடி, ஆபாசமான நகைச்சுவைகளையோ, அந்தரங்கமான கிசுகிசுக்களையோ சொல்வான். அவளும் தலையாட்டிச் சிரித்தபடி அங்கிருந்து அகன்று செல்வாள். அதற்குப் பிறகு அங்கு பால்பேதமற்ற நெருக்கங்களும், கோமாளித்தனமான சமரசங்களும் சுழன்றடிக்கும். ஒருத்தியின் கணவனை (அவன் அறையின் நட்ட நடுவில் நின்றுகொண்டிருப்பான்) இன்னொருத்தியின் கொழுத்த கை வளைத்திருக்கும் அல்லது யாரோ யாரிடமோ செல்லக் கோபம் காட்டுவார்கள் அல்லது யாரோ யாரையோ விளையாட்டாய்த் துரத்துவார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் பாப் வீலர் அமைதியான அரைப் புன்னகையோடு, நாற்காலிகளுக்குக் கீழே காளான் முளைத்ததுபோல் ஆங்காங்கே, விருந்தினர்கள் குடித்துவிட்டு வைத்திருக்கும் காலி மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டிருப்பார்.

அதுபோன்றதொரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சிந்தியாவுக்கு, சாதாரணமாக, ஆனால் நல்ல மாதிரியாக ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய விருந்தினர்கள் சிலரைப் பற்றி அதில் விளையாட்டாய்க் கேலி செய்திருந்தேன். மேலும் அவளுடைய விஸ்கியைத் தொடாததற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன். பிரெஞ்சுக்காரனாகிய எனக்கு தானியத்தை விடவும் திராட்சையே பெரும் விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, பொது நூலகத்தின் படிக்கட்டில் அவளைச் சந்தித்தேன். மேகமூட்டத்துடன் லேசான தூறலும் இருந்தபோது, கக்கத்தில் இரண்டு புத்தகங்களை இடுக்கிக்கொண்டு, அவளுடைய அம்பர் வண்ணக் குடையை விரிக்கப் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு நொடி அந்த இரண்டு  புத்தகங்களையும் நான் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஆசுவாசம் அளித்தேன். ஒன்று ராபர்ட் டேல் ஒவன் எழுதிய ‘இன்னொரு உலகின் எல்லையில் காலடித்தடங்கள், மற்றொன்று ‘ஆவியுலகும் கிறிஸ்தவமும்’ போல் ஏதோ ஒன்று.

என் தரப்பிலிருந்து எந்தத் தூண்டுதலும் இல்லாமல், திடீரென்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன், வக்கிரமான, விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவள் பாட்டுக்கு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். நான் ஒரு போலி பகட்டுக்காரன் என்றும் நயவஞ்சகன் என்றும் வெளித்தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் கொண்டே மனிதர்களை எடைபோடுகிறேன் என்றும், அந்த கார்க்கரன் இரண்டு வெவ்வேறு தருணங்களில் இருவேறு கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு பேரைக் (தற்செயல் ஒற்றுமையாக இருவரது பெயருமே கார்க்கரன்) காப்பாற்றியவன் என்றும், கூச்சலும் கும்மாளமுமாய் இருந்த ஜோன் வின்டருக்கு பார்வைக் குறைபாடுள்ள சிறிய பெண் குழந்தை இருப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் அவள் முற்றிலும் பார்வை இழந்துவிடுவாள் என்றும் நான் அன்று காரணமின்றி அவமானப்படுத்திய பச்சை உடையணிந்து, மார்பில் கரும்புள்ளிகளைக் கொண்டிருந்த பெண்மணி, 1932-ஆம் ஆண்டு தேசிய அளவில் அதிக விற்பனையான புதினத்தை எழுதியவள் என்றும் சொன்னாள்.

என்னவொரு விநோதமான சிந்தியா! யாரை அவள் அதிகம் நேசிக்கிறாளோ, யார் மீது மரியாதை வைத்திருக்கிறாளோ, அவர்களிடம் அவள் மிகக் கடுமையாக நடந்துகொள்வாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு தருணத்தில் இருவருக்கும் இடையில் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது அவசியம். ஏற்கனவே அவளுடைய ஆர்வக்கோளாறான ஒளிவளையங்களைப் பற்றியும் மற்ற முட்டாள்தனங்களைப் பற்றியும் ஓரளவு நான் அறிந்திருந்ததால் அதன் பிறகு அவளைப் பார்ப்பதை முற்றிலும் கைவிட்டேன்.

6

சிந்தியா இறந்துவிட்ட தகவலை டி. என்னிடம் தெரிவித்த அன்று இரவு பதினொரு மணிக்குப் பிறகு நான் வசித்த, இரண்டுதளக் குடியிருப்புக்குத் திரும்பினேன். ஒரு தளத்தில் நானும் மற்றொரு தளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியரின் விதவை மனைவியும் குடியிருந்தோம். தாழ்வாரத்தை அடைந்ததும், தனிமைப் பயம் பீடிக்க, அடுத்தடுத்து இருந்த இரண்டு ஜன்னல்களின் ஊடாக இரண்டு வகையான இருட்டைக் கண்டேன். ஒன்று இல்லாமையின் இருண்மை. மற்றொன்று தூக்கத்தின் இருள். 

முதலாவது இருட்டைப் போக்க என்னால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் இரண்டாவது குறித்து எதுவும் செய்ய இயலவில்லை. என்னுடைய படுக்கை எனக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரவில்லை. அதன் சுருள்வில் அதிர்வுகள் என்னை மேலும் நடுக்கமுறச் செய்தன. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களுள் மூழ்க முனைந்தேன். முட்டாள்தனமாக என் கவனமெல்லாம் பாடல் வரிகளின் முதல் எழுத்துகளைக் கொண்டு அவை உருவாக்கும் சங்கேத வார்த்தைகள் என்னென்ன என்ற தேடலில் ஈடுபட்டது.

70-ஆம் பாவில் FATE, 120-ஆம் பாவில் ATOM, இருமுறை 88 & 131-ஆம் பாக்களில் TAFT[7] என்ற வார்த்தைகளும் என் கண்களுக்கு அகப்பட்டன. என் அறையிலிருந்த பொருட்களின் தன்மையில் ஏதேனும் மாறுதல் தென்படுகிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டேன். திடீரென்று அங்கே ஒரு வெடிகுண்டு விழுந்தால் கூட, சூதாட்டக்காரனின் ஆர்வக்களிப்பை விடவும் அதிகமாகவே அதை நான் எதிர்கொள்வேன் (அது எவ்வளவு பெரிய நிம்மதி) என்றும் அதே சமயம், என் அறையின் அலமாரிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய புட்டி, துளி அங்குலம் நகர்ந்தால் கூட என் இதயம் வெடித்துச் சிதறிவிடும் என்றும் நினைக்கும்போது எனக்கே வேடிக்கையாக இருந்தது.

எங்கிருந்து வருகிறது என்று அறியவியலாத நுட்பமான ஒலி கூட பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில், யாரோ வேண்டுமென்றே பின்னணியில் உருவாக்கியதைப் போன்று சந்தேகத்துக்கிடமான வகையில், அறையின் அமைதி மிக அடர்த்தியாக இருந்தது. போக்குவரத்து சந்தடிகள் ஓய்ந்துபோயிருந்தன. பெர்கின்ஸ் தெருவில் ஏதேனும் கனரக வாகனம் செல்லும் சத்தத்துக்கான என் பிரார்த்தனையும் பயனின்றிப் போயிற்று. மேல்தளத்தில் வசிக்கும் பெண்மணி வழக்கமாய், பெரிய குதிகால் காலணியை அணிந்துகொண்டு டொக் டொக் என்று நடக்கும்போது அந்தச் சத்தம் என்னை எரிச்சலடையச் செய்யும். (அவள் குள்ளமாய் குண்டாய் எப்போதும் சோகம் இழையோடும் முகத்துடன் பார்ப்பதற்கு, பதப்படுத்தப்பட்ட சீமைப் பெருச்சாளியைப் போன்று காணப்படுவாள்) ஆனால் இன்று, கழிவறைக்குச் செல்லும் பொருட்டு இப்போதும் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் அவளை ஆசீர்வதித்திருப்பேன். விளக்கைப் போட்டும் அணைத்தும், தொண்டையைச் செருமியும், எனக்கு நானே பல முறை சத்தமெழுப்பிக் கொண்டேன். தொலைதூர வாகனம் ஒன்றில் மனக்கண்ணால் ஏறிப்  பயணிக்கத் தொடங்கினேன். ஆனால், கண்கள் சொக்கும் முன்பே அதிலிருந்து இறங்க நேர்ந்துவிட்டது. திடீரென்று ஏதோ காகிதம் கசங்கும் சத்தம் (இறுக்கமான இரவுப்பூவொன்று மலர்வதைப் போன்று கசங்கிய தாள் விரிவதாக கற்பனை செய்தேன்) குப்பைக் கூடையிலிருந்து கேட்டது. என்னுடைய படுக்கையை ஒட்டிய மேஜையில் சின்னதாக டிக் என்ற சத்தமும் கேட்டது. சிந்தியாவின் ஆவி, தன்னுடைய மட்டமான விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தோன்றியது. நான் சிந்தியாவை எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்.

1848-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹைட்ஸ்வில் என்னும் உட்கிராமத்தில் தட்டுதல் மூலம் இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் தொடங்கி, கேம்ப்ரிட்ஜ்ஜின் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற கோரமான தோற்றப்பாடுகள் வரை நவநாகரிக யுகத்தின் ஆவி மற்றும் அமானுஷ்யம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதுக்குள் மதிப்பாய்வு செய்தேன். கணுக்கால் எலும்புகளையும் இன்ன பிற மூட்டுகளையும் பயன்படுத்தி ஆவிகளோடு தொடர்பு கொண்ட (பஃபல்லோ பல்கலைக்கழக அறிஞர்களின் கூற்றுப்படி) ஃபாக்ஸ் சகோதரிகள்; பண்டைய பெரு நாட்டில் ஏற்பட்டது போலவே எப்வர்த் அல்லது டெட்வர்த்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உண்டான ஒரே மாதிரியான மர்மமான மனநோய்[8]; புனிதமான இசையொலிக்கு ரோஜாக்கள் வீழும், அக்கார்டியன் இசைக்கருவிகள் மிதக்கும் விக்டோரியா காலத்து வெறியாட்டங்கள்; எக்டோபிளாசத்துக்கு[9]  பதிலாக ஈரமான பாலாடை வடிகட்டும் சல்லாத்துணியைப் பயன்படுத்தும் தொழில்முறை மோசடிப் பேர்வழிகள்; ஆவியுலக ஊடகப் பெண்மணி ஒருவரின் மதிப்புக்குரிய கணவரும், சோதனைக்கு உட்படுத்தியபோது, தான் அழுக்கான உள்ளாடை அணிந்திருந்ததைக் காரணமாய்க் கூறி சோதனைக்கு உடன்பட மறுத்தவருமான திரு.டங்கன்; பாஸ்டனில் ஒரு ஓய்வுநேரப் பிரார்த்தனையின்போது, வெற்றுக்கால்களும் துளையிடப்படாத காதுமடல்களுமாய் கண்முன் நின்ற வெள்ளை உருவத்தை, திரைச்சீலை இடப்பட்ட மூலையில் சற்று முன்பு தான் பார்த்தபோது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, கருப்பு உடையும் இறுக்கமான பாதணிகளும், தோடுகளும் அணிந்திருந்த பணிப்பெண் மிஸ் குக்தான் என்பதை நம்ப மறுத்த அப்பாவி இயற்கை ஆர்வலர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்; யூசாப்பியா[10]  என்ற பெரிய, பருத்த உருவம் கொண்ட, சகிக்கவியலாத, வீச்சம் அடிக்கும் முதிய பெண்மணியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தபோதும் கூட, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட, குள்ளமாகவும், நோஞ்சானாகவும், ஆனால் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருந்த இரண்டு புலனாய்வாளர்கள்; குளியல் அங்கி அணிந்திருந்த நிலையில், கண்ணை மூடிக்கொண்டு, இடப்பக்கக் காலுறையைத் தடவிக்கொண்டே தொடைவரை செல்லுமாறு இளம்பெண் மார்கரியின் இனிமையான குரல் வழியே அவரை வழிநடத்திய ஆவி மூலம் அதைச் செய்து, கதகதப்பான தொடை மீது கொழகொழப்பான குளிர்ச்சியான, சமைக்கப்படாத பச்சை ஈரலைத் தொட்ட உணர்வடைந்த, அவமானத்துக்கு ஆளான, ஆவியுலக நம்பிக்கையற்ற மாயவித்தைக்காரர் என வரிசையாக நினைவுகூர்ந்தேன்.

7

உடலற்ற என் இருப்புக்கான சாத்தியத்தை மறுக்கவும் தோற்கடிக்கவும் என் சதைப்பிண்டத்திடம்[11], அதன் குற்றங்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன். ஐயோ! இந்த உச்சாடனங்களே சிந்தியாவின் அமானுஷ்யத்தன்மையின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்தன. விடியற்காலையில் மீண்டும் பழைய அமைதி திரும்பி, நான் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, ஜன்னல் வழியாக செம்பழுப்பு நிறக் காலைக் கதிரொளி, சிந்தியாவால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த என் கனவை ஊடுருவித் துளைத்தது. 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பகல் வெளிச்சம் என்னும் பாதுகாப்பான கோட்டைக்குள் இருக்கும்போது, இன்னும் கொஞ்ச நேரம் கனவு நீடித்திருக்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பிரகாசமான, மிகத் துல்லியமான ஓவியங்களை வரையக்கூடிய சிந்தியா இப்போது அவளே உருவற்றவளாக, தெளிவற்றவளாக இருக்கிறாள். படுக்கையில் படுத்தபடி, வெளியிலிருந்து வரும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, நான் கண்ட கனவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

மனிதர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்து, பின்னோக்கி ஓடவிட்டால் கீச் கீச் என்று சத்தம் கேட்பது போல, ஒருவேளை இந்த சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சத்தத்தை ஒலிப்பதிவு செய்து பின்னோக்கி ஓடவிட்டால், மனிதர்களின் பேச்சு போல, வார்த்தைகளை வெளிப்படுத்துமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? நான் என்னுடைய கனவை மறுபடி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினேன். முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், குறுக்குவாக்கில், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என பல பரிமாணங்களில், சிந்தியாவைப் போன்ற ஏதாவது ஒன்று, விநோதமாக, விசித்திரமாகத் தென்படுகிறதா என்று கடும் பிரயத்தனத்தோடு அதற்குள் தேடினேன்.        

என்னால் கொஞ்சம்தான் ஆராய முடிந்தது. மஞ்சள் நிறத்தில் மேகமூட்டம் போல் சூழ்ந்து என்னை எதையும் யோசிக்கவிடாமல் செய்தது. எல்லாமே தெளிவற்று மங்க ஆரம்பித்தன. சிந்தியாவுடைய கத்துக்குட்டித்தனமான வார்த்தை விளையாட்டுகள், பசப்பும் பாசாங்குமான ஏமாற்றுவித்தைகள், ஆன்மீக வெறியாட்டங்கள் என நினைவடுக்கில் வந்த யாவும் ஏதோ மர்மமான பொருளைத் தருவதுபோல் தோன்றின. எல்லாமே மஞ்சளாகி, மங்கி, மாயமாகித் தொலைந்து போயின.

பின்குறிப்பு – மூலக்கதையான ஆங்கிலத்தில் கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை வரிசைப்படுத்தும்போது ‘பனிக்கூரிகள் சிந்தியாவால், தரிப்பிட மானி என்னால் – சிபில்!’ என்பதாக இருந்தது அது.


[1] பனிக்கூரிகள் (icicles) – கூரையின் மேற்பரப்பிலிருந்து உருகிச் சொட்டும் நீர்த்தாரைகள் உறைந்த நிலையில் ஒன்றிணைந்து, கூரான கத்திகளைப் போன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.

[2] வாகனத் தரிப்பிட மானி – Car parking meter

[3] ஸ்லாவ் மக்கள் – மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களுடைய மொழி ஸ்லாவோனிக் மொழி.

[4] ஸ்கங்க் (skunk) – தமிழில் முடைவளிமா எனப்படும் கருப்பு வெள்ளை நிற விலங்கு. ஆபத்து நேரத்தில் எதிரியின் மீது அது பீச்சும் திரவத்தின் முடை நாற்றம் கடுமையாக, சகிக்கமுடியாததாக இருக்கும்.

[5] அழியாக் கவிதை – கனவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘குப்ளா கான்’ (அல்லது கனவுக்காட்சி) என்ற கவிதையை எழுதியவர் கவிஞர் சாம்வேல் டெய்லர் கோல்ரிட்ஜ். 1797-ஆம் ஆண்டு ஒருநாள் இரவு தூங்கும்போது (அபின் போதையில் இருக்கும்போது என்றும் சொல்லப்படுகிறது) கவிஞருக்கு இக்கவிதை வரிகள் தோன்றியதாகவும் மறுநாள் அவ்வரிகளை நினைவிற்கொண்டுவந்து கவிதையை இயற்றிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து ஊரான போர்லாக்கிலிருந்து எதிர்பாராமல் வந்த ஒருவரால் எழுத்து தடைபட்டு பிறகு வரிகள் நினைவுக்கு வராமல் கவிதை முற்றுப்பெற இயலாமலேயே போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் விறுவிறுப்பானப் படைப்பாற்றலுக்கு இடையூறு தருபவர்களை ‘போர்லாக்கின் ஆள்’ அல்லது ‘போர்லாக்’ என்று அங்கதமாகக் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.

[6] கருத்துத்திருட்டு – ஆஸ்கார் வைல்ட் எழுதி 1890-ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ‘The Picture of Dorian Gray’. சிபில் வேய்ன் என்ற கதாபாத்திரம் அதில் இடம்பெற்றுள்ளது.

[7] வில்லியம் ஹோவார்ட் டஃப்ட் – ஐக்கிய அமெரிக்காவின் 27-வது குடியரசுத் தலைவராக 1909 முதல் 1913 வரை பதவி வகித்தார். பின்னாளில் 1921-1930 வரை ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதியாக இருந்தார். இரண்டு பதவிகளையும் வகித்த ஒரே ஆளுமை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

[8] 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னமெரிக்காவை (கொலம்பஸால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய அமெரிக்கா) இன்கா பழங்குடிப் பேரரசு ஆட்சி புரிந்தது. இன்கா மக்கள் அனைவருக்கும் பொதுவான, காரணம் புலப்படாத மனநோய் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இன்கா மக்களை மட்டுமன்றி அரச குடும்பத்தையும் இந்நோய் பீடித்ததாகத் தெரிகிறது. தாவரங்களும் தாதுக்களும் அதற்கான சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

[9] எக்டோபிளாசம் – அமானுஷ்யக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிசுபிசுப்பான, அருவருப்பான, மர்மமானப் பொருளைக் குறிக்கும்.

[10] யூசாப்பியா பல்லாடினோ – பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஆவியுலகத் தொடர்பாளர். அவரது அமானுஷ்ய நிகழ்வுகள் யாவும் ஏமாற்றுவித்தைகளே என்று நிரூபிக்க முயன்ற பல மாயவித்தைக்காரர்களும் தந்திரவாதிகளும், இறுதியில் யூசாப்பியா ஒரு புத்திசாலி தந்திரி என்ற முடிவுக்கு வந்தனர். 

[11] தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன், மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். – பரிசுத்த வேதாகமம், கலாத்தியர் அதிகாரம் 6.8

மூல ஆசிரியர் குறிப்பு:

விளாதிமிர் நபகோவ் (1899-1977)

ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், மற்றும் பூச்சியியல் வல்லுநர். முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய இவரது ஆய்வுக் குறிப்புகளும் உலகளாவிய வண்ணத்துப்பூச்சிகள் சேகரிப்பும் இன்றும் விஞ்ஞானிகளால் வியப்புடன் பார்க்கப்படுகின்றன. இவர் தன் எழுத்து மூலம் கிடைத்த வருவாயை வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார்.

1919-ஆம் ஆண்டு அவரது குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றது. நபகோவ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்லாவிக் மற்றும் ரோமானிய இலக்கியங்களில் பட்டம் பெற்றார். அதன்பின் குடும்பம் பெர்லினில் குடியேறியது. ஒரு பதிப்பகத்தாரின் வேண்டுகோளின்படி ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் கதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புதான் இவருடைய முதல் படைப்பு.

இவரது ‘லோலிடா’ நாவல் மிகப் பிரசித்தமானது. ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை அளித்துள்ளார். விளாதிமிர் சிரின் என்பது இவரது புனைபெயர். 

1951-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘வேய்ன் சகோதரிகள்’ கதையை New Yorker பத்திரிகை வெளியிட மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டது. நபகோவ் அதன் எடிட்டருக்கு அக்கதையின் கட்டமைப்பைப் பற்றியும் மறையெழுத்துப் புதிர் பற்றியும் விளக்கி எழுதினார். கடைசி பத்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு கதையின் முடிச்சை அவிழ்ப்பது, ‘இலக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு The Hudson Review பத்திரிகையில்தான் முதன் முதலாக இக்கதை வெளியானது. 1961-ஆம் ஆண்டு நபகோவும் அவர் மனைவியும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியூ நகருக்குச் சென்று தங்கினர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அங்கேயே எழுத்திலும் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியிலும் கழித்த நபகோவ், தனது 78-வது வயதில் நுரையீரல் பாதிப்பால் இறந்தார்.

The post வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ் first appeared on கனலி.

  •  

பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை

(லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து)

உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு. இறுக்கமான விதிமுறைகள் இல்லாததும், மிகச் சுலபமாக வாடகைத் தாய்கள் கிடைக்கும் சூழல் இங்கிருப்பதும் முக்கியமான காரணம். உலகம் முழுக்க ஒரு வருடத்தில் பத்து இலட்சம் செயற்கை கருத்தரித்தல்கள் நடக்கின்றன. அதில் 2.5 இலட்சம் அதாவது 25 சதவீதம் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான செயற்கை கருத்தரித்தல் மையங்கள் இந்தியாவில் திறக்கப்பட்டிருக்கின்றன- Dr. சிவபாலன் இளங்கோவன் (உயிர்மை, ஆகஸ்ட் 2022)

ழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் எழுதியுள்ள முதல் நாவல் ‘காயாம்பூ.’ இந்நாவல், குழந்தையின்மையால் ஒரு பெண் எதிர்கொள்ளும் கடும் அகப்புற நெருக்கடிகளையும் இதன் காரணமாகத் தினந்தோறும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களின் வணிகத் தந்திரங்களையும் மிகத் தீவிரமாகப் பேசியிருக்கிறது. இந்தப் பொருண்மையில் எழுதப்பட்ட முக்கியமான நாவலாகக் காயாம்பூவைக் கருதலாம். இந்நாவலுக்கு முன்பு, குழந்தையின்மையின் துயரத்தையும் அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்கள் மேற்கொண்ட சடங்கையும் பேசிய நாவல் ‘மாதொருபாகன்.’ இந்நாவல்மீது உருவாக்கப்பட்ட சர்ச்சைதான் லாவண்யா காயாம்பூவை எழுதக் காரணமாக இருந்திருக்கிறது. ‘மாதொருபாகன்’ சிவபெருமானுக்கான குறியீடு; ‘காயாம்பூ’ திருமாலுக்கான குறியீடு. இரண்டு நாவல்களையும் தொடர்ச்சியாக வைத்து வாசிக்கும்போதுதான், சமூகத்தில் குழந்தையின்மை என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு பெரிய அழுத்தங்களையும் மன உளைச்சலையும் உருவாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

1

‘குழந்தை’ என்ற உயிரின்மீது உருவாக்கப்பட்டுள்ள தொன்ம மதிப்பீடுகள் அதிக அளவில் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. குழந்தை இல்லாத பெண்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கு நியாயமான ஒரு காரணத்தையும் கூறமுடியாது. சங்கச் சமூகத்தில் தலைவிக்குக் குழந்தை இல்லாதபோது தலைவன் மறுமணம் செய்திருக்கிறான். இவளுக்குப் ‘பின்முறை வதுவை’ என்று பெயர். இவளை வாசலில் நின்று வரவேற்க வேண்டும் எனத் தலைவிக்கு ஆணை பிறப்பித்திருக்கிறது அக இலக்கணம். குழந்தை இல்லாத பெண்கள் திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தச் சங்கச் சமூகம் அனுமதி மறுத்திருக்கிறது. நற்காரியங்களில் இவர்கள் ஈடுபடக்கூடாது என்ற மூடநம்பிக்கை எப்போது உருவாகியிருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. ‘எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருப்பினும் குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும் புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே’ (புறம்.188) என்று பாண்டியன் அறிவுடை நம்பி என்ற மன்னனே பாடிச் சென்றிருக்கிறான். நெட்டிமையார் பாடலில் (புறம்.9) இடம்பெற்றுள்ள ‘தென்புல வாழ்நர்க் க‌ருங்கட னிறுக்கும் / பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்’ வரிகளும் குழந்தைப் பேற்றின் சிறப்பைச் சொல்கின்றன. அதாவது பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், பிணி உள்ளவர், இறந்த முன்னோருக்கு நீர்க்கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என்று போர் முரசறைகின்றனர்.

அகநானூற்றில் 86, 136 ஆகிய இரு பாடல்களும் சங்க காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றன. இந்தப் பாடல்களில் இடம்பெற்றுள்ள இரு தகவல்கள் முக்கியமானவை. ஒன்று, தாலி கட்டிக்கொள்ளும் வழக்கம் அன்று இல்லை. இரண்டு, நான்கு பெண்கள்தாம் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர். ஐயரும் தாலியும் அன்றைய திருமணத்தில் இல்லை. மனமொத்துத் தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்ந்தனர். பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், திருமணம் நடத்திவைத்த அந்த நான்கு பெண்களும் பிள்ளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதனை, ‘புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று / வால் இழை மகளிர் நால்வர் கூடிக் / கற்பினின் வழாஅ நற்பல உதவிப் / பெற்றோற் பெட்கும் பிணையை யாகென’ (அகம். 86) என்ற நல்லாவூர்க்கிழார் பாடலால் அறியலாம். பிள்ளைபெற்ற மகளிர் நால்வர் கூடிச் செய்வதுதான் மரபு என்று பழைய உரை குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் இப்பாடலுக்கு உரை எழுதியவர்கள் ‘புதல்வர்’ என்ற சொல்லுக்கு ‘ஆண் குழந்தை’ என்றே பொருள் எழுதியிருக்கின்றனர்.

சங்க இலக்கியப் பாடல்களில் குழந்தைப்பேறு குறித்த பெருமிதங்கள் இடம் பெற்றிருந்தாலும் போரில் வீரமரணம் அடைந்த தம் மகன்களை நினைத்து, ‘ஈன்ற ஞான்றினும் பெரிதே’ என உவந்த தாயையும் ‘வாடுமுலை ஊறிச் சுரந்த’ தாயையுமே அதிகம் பேசினர். இவர்களுடன், ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்று பாடிய பொன்முடியாரையும் தமிழ்ச்சமூகம் உச்சிமுகர்ந்தது. இவர்களையெல்லாம்விட குழந்தைப்பேற்றின் மகத்துவத்தைத் திருவள்ளுவர்தான் அதிக அளவில் ஊதிப் பெரிதாக்கிவிட்டார் என்று தோன்றுகிறது. ‘மக்கட்பேறு’ என்றொரு தனி அதிகாரத்தையே படைத்துக் குழந்தைப்பேற்றின்மீது அளவுகடந்த உன்னதங்களை அடுக்கி விட்டார். ‘நல்ல பிள்ளைகளைப் பெறுவதைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு ஏதுமில்லை’ என்று முதல் குறளிலேயே தன் சாட்டையைச் சுழற்றிவிட்டார் வள்ளுவர். இதனைக் கடைசி குறள்வரை கடைப்பிடித்தார். ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ!’ என்று எழுதி பெண்களைச் சஷ்டி விரதம், சோமவார விரதம் என இருக்க வைத்தார். அடுத்தடுத்து உரை எழுதியவர்களும் வள்ளுவரின் பாடல்களுக்கு மேலும் மெருகூட்டினார்கள். குழந்தைப்பேறு வாய்க்காத ஒருவர், மக்கட்பேறு’ அதிகாரத்தை வாசித்து முடிக்கும்போது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாவார். அந்த அளவுக்கு வள்ளுவரின் எழுத்தாணி வேலை பார்த்திருக்கிறது. மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட ஆதி காவியங்களில் அடுத்த அரச வாரிசுகளை உருவாக்குவதில் என்னென்ன தந்திரங்களையும் மந்திரங்களையும் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே குழந்தைப்பேறு என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாரிசு உருவாக்க ஏற்பாடாகப் பார்க்கப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சி செய்தவர்களும் இந்தத் தன்மை மாறாமல் பார்த்துக் கொண்டனர். இலக்கியங்களும் இதனைப் பதிவு செய்தன. ‘பிள்ளைத்தமிழ்’ என்ற புதிய இலக்கிய வகைமையே தமிழில் உருவாகிவிட்டது. இன்று இலக்கியங்களும் வரலாற்றுக்கான ஆவணங்களாகப் பயன்படுகின்றன. எனவே, குழந்தைப்பேற்றின்மீது ஏற்றப்பட்ட தொன்ம மதிப்பீடுகளின் மூலத்தைக் கண்டறிவது மிகவும் அரிது என்றே கருதுகிறேன்.

நவீன இலக்கியங்கள்தாம் அன்பு, பாசம், கருணை, உறவு உள்ளிட்ட சொற்களுக்குப் பின்னே மறைந்துகொண்டிருக்கும் மிகையான மதிப்பீடுகளை விசாரணைக்கு உட்படுத்துகின்றன. அதுபோல குழந்தைப்பேற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் உன்னதங்களையும் தொடர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதன்மீது விரிசலை உருவாக்க வேண்டும். பெற்றோர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு எந்தப் பிள்ளையும் இப்போது உத்தரவாதம் கொடுப்பதில்லை. இந்தச் சூழலிலும் குழந்தைப்பேறு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், மணமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வாரிசு உருவாக்கத்தைவிடத் தங்களது பாலினத் தன்மையை நிரூபித்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியே இன்று பெரிதாக இருக்கிறது. குழந்தை பிறந்து இறந்துவிட்ட இணையருக்கு, அடுத்த குழந்தை பிறக்கவில்லை என்றாலும் இச்சமூகம் அவர்களைப் பெரும் நெருக்கடிக்கு உட்படுத்துவதில்லை என்பது நிதர்சனம். அதனால் வாரிசு என்பதைக் கடந்து, தங்களது ஆண் / பெண் தன்மையை இச்சமூகத்திற்கு நிரூபிக்கவே ஒவ்வொருவரும் குழந்தை பெற்றுக் கொள்வதில் தன்முனைப்புக் காட்டுகின்றனர் என்று கருதவும் இடமிருக்கிறது. குழந்தை என்பது ஒவ்வொருவரது பெருமிதங்களின் அடையாளமாகக் காலந்தோறும் பார்க்கப்படுகிறது. அந்தப் பெருமிதங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களை நோக்கி ஓடுகின்றனர். குழந்தைப் பெற்றுக்கொள்ளுதலை ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகக் கருதாதவரை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது.

2

‘காயாம்பூ’ நாவலின் கதைநாயகி நந்தினி; இவள் கணவன் துரை. இவர்களுக்குக் குழந்தை இல்லை. சமூக அழுத்தங்களின் காரணமாக நந்தினியும் துரையும் வெவ்வேறு கருத்தரித்தல் மையங்களில் தங்கள் உடல்களைச் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். நந்தினிக்கு மாதவிடாய் நிற்கும்வரை இந்தச் சோதனை முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தத் திட்டத்தைக் கை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வரும்போதெல்லாம் யாரோ ஒருவர் நந்தினியின் குறையைச் சுட்டிக் காட்டுகின்றனர். சக மனிதர்கள் கருணையே இல்லாமல் தொடர்ந்து அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரிடமுமே குறைபாடு இருப்பதால்தான் நாவலால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது. நந்தினியிடம் மட்டும் பிரச்சினை இருந்திருந்தால் தனிப்பட்ட தாக்குதல், மறுமணம் என நாவலுக்கு வேறொரு முகம்தான் கிடைத்திருக்கும். அவ்வகையில் நாவல் பால் சமநிலையைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது தொடர் பரிசோதனைகளின் மூலமாகக் கருத்தரித்தல் மையங்களின் வியாபாரத் தந்திரங்களையும் மனித உடல்களின்மீது நிகழ்த்தப்படும் மருத்துவ வன்முறைகளையும் புனைவு வெளிச்சப்படுத்தியிருக்கிறது. இதனை நாவலின் முக்கிய நோக்கமாகக் கருதலாம்.

திருமணத்திற்குப் பிறகான பெண்களின் மனநிலை மாற்றத்தை இந்தப் புனைவில் லாவண்யா நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார். பெருந்தன்மையும் சக மனிதர்கள்மீது கருணையும் கொண்ட பெண்கள், தங்களுக்கென்று ஒரு குடும்பம் உருவாகும்போது எப்படித் தங்களைச் சுயநலம் மிக்கவர்களாகத் தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் நாவல் உரையாடலுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சுயநலத்திற்குப் பின்னாலும் குழந்தைகள்தாம் இருக்கிறார்கள் என்பதைத் தேன்மொழி, அலமேலு ஆகிய கதாபாத்திரங்களின் வழியாக நிறுவியிருக்கிறார். இது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “உலகில் நடக்கும் மாபெரும் அநியாயங்களுக்குப் பின்னால் இயங்கும் மனித சுயநலத்தின் நீட்சிக்கு குழந்தைப்பேறு ஒரு முக்கியமான காரணம் என்பேன். குழந்தைகள் உள்ள பெற்றோர் தனது வாரிசுகளை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கும் இடத்தில் மனிதம் சரியத் தொடங்குகிறது. அதுவே எல்லாச் சுயநலங்களுக்கு அடிப்படை வித்தாகிறது” (வாசகசாலை இணைய இதழ்) என்று பதில் அளித்திருக்கிறார் லாவண்யா. இதனை நாவலின் மற்றொரு கூறாக வாசிக்கலாம். ஆக, இவ்விரண்டு விஷயங்களை முதன்மைப்படுத்தி நாவல் உரையாடுகிறது.

குழந்தையின்மையினால் நந்தினி எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத்தான் நாவல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அந்த நெருக்கடி எப்படி உருவாகிறது என்ற கேள்விக்கு நாவல் கவனம் கொடுக்கவில்லை. ஏனெனில், இந்தக் கேள்வி பெரும் ஆய்வுக்குரியது. ஆனால் அந்த நெருக்கடி எப்படி மருத்துவத்தில் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கி விட்டிருக்கிறது என்பதில் நாவல் கவனத்தைக் குவித்திருக்கிறது. ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்கள் இன்று பெருநகரங்களைக் கடந்து சிறிய நகரங்கள்வரை தங்கள் வணிகத்தை நீட்டித்திருக்கின்றன. இதற்கென ஒரு பெரும் சந்தை உருவாகியிருக்கிறது. இந்தச் சந்தையைக் கட்டமைத்ததில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஊடகங்களும் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்கள் அளிக்கும் விளம்பரங்களினூடாகப் பெரும் வணிகத்தை ஈட்டுகின்றன. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இத்தகைய கருத்தரித்தல் மையங்கள் அளிக்கும் போலியான வாக்குறுதிகள் குழந்தையின்மையைச் சரிசெய்து கொள்வதற்கான பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால் அங்கே என்ன நடக்கிறது; அந்த மையங்கள் எப்படிச் செயல்படுகின்றன? என்பதையெல்லாம் வெகுசன மக்கள் அறிந்துகொள்ள அத்தகைய மையங்கள் வாய்ப்புகளை வழங்குவதில்லை. இந்த நாவல் அதனை ஒட்டுமொத்தமாக விளக்கிக் காட்டியிருக்கிறது.

மூன்று வகையான (1. In Utero Insemination 2. In Vitro Insemination 3. Surrogacy) சிகிச்சைகள் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களில் செய்யப்படுகின்றன. இதில் முதலிரண்டு வகைகள் குறித்து இந்நாவலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மூன்றாவது வகை, வாடகைத்தாய் முறை. இவ்வகையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அதிக பொருட்செலவாகும். பெரும் பணக்காரர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சை முறையாக இதனைக் கருதலாம். இந்நாவல் உண்மைக்கு மிக அணுக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால் இந்தச் சிகிச்சைமுறைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவக் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளார் லாவண்யா. இது தொடர்பான மேலதிக விவரங்களை இணையம் வழியாக அறிந்துகொள்ள இக்கலைச் சொற்கள் உதவும். இப்படி எழுதப்பட்டிருப்பதால் இதனை மருத்துவம் சார்ந்த புனைவாகச் சுருக்க வேண்டியதில்லை. குழந்தையின்மை என்பதைக் காரணம் காட்டி ஒரு பெண்ணின் உடல்மீதும் அவளது அந்தரங்கத்தின்மீதும் நிகழ்த்தப்படும் வன்முறையைத்தான் நாவல் பிரதானமாகப் பேசியிருக்கிறது. குழந்தைப்பேறில்லாத ஒட்டுமொத்தப் பெண்களின் பிரதிநிதியாக இந்நாவலின் நந்தினி இருக்கிறாள். அவர்களது ஒட்டுமொத்த வலியையும் இவள் தாங்கிக்கொள்கிறாள்; முடியாத தருணங்களில் கோபமாகவும் அழுகையாகவும் தன் இயலாமையை வெளிப்படுத்துகிறாள். அவளால் அவ்வளவுதான் செய்ய முடிகிறது.

லாவண்யா, இப்பிரதியை உருவாக்குவதற்கு நிறையப் பின்னணி வேலைகளைச் செய்திருக்கிறார். துரை சண்டிகரில் ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிகிறான். நந்தினியும் திருமணத்திற்குப் பிறகு சண்டிகர் சென்றுவிடுகிறாள். அங்கேயே ஒரு கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றுகிறாள். நந்தினி சொந்த நிலத்தைவிட்டு இடம் பெயர்ந்ததால், நாவலின் எல்லை விரிவடைந்திருக்கிறது. இல்லையெனில் மாமியார் – மருமகளுக்கு இடையிலான மோதலாக நாவல் சுருங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுக்கவே குழந்தையின்மை பிரச்சினை தீவிரத்துடன் அணுகப்படுவதையும் நாவல் இதன்மூலமாகச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் ‘செயற்கை கருத்தரித்தல்’ கூடாரங்கள் சண்டிகரைவிடத் தமிழகத்தில்தான் அதிகளவில் இயங்குகின்றன என்ற தரவையும் நாவல் அளிக்கிறது. குழந்தையின்மைப் பிரச்சினையால் நந்தினி அடையும் துயரங்களை மட்டுப்படுத்தவும் பிரதியை வாசிப்பவர்களின் மனக்கொந்தளிப்பை மடைமாற்றவும் இடையிடையே ஜெயந்தி – குமார் இணையரின் வாழ்க்கையும் நாவலில் சொல்லப்படுகிறது. மன வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தையைப் பெற்றுக்கொண்டு ஜெயந்தி படும் துயரங்கள் நந்தினியின் பிரச்சினையைக் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றன.

ஹரி என்றொரு கதாபாத்திரத்தையும் லாவண்யா உருவாக்கியுள்ளார். ஹரியைக் காயாம்பூ நிறத்தவனின் குறியீடாக வைத்தும் வாசிக்கலாம். இவன் நந்தினியைக் காதலித்தவன். இந்த விஷயம் நந்தினிக்குக் காலங்கடந்தே தெரிய வருகிறது. முன்பின் தெரியாத ஆண்களின் உயிரணுக்களைக் கொடையாகப் பெறுவதைவிட, தன்னைக் காதலித்த ஹரியின் உயிரணுவையே பெற்றுத் தன் கருமுட்டையில் செலுத்துகிறாள் நந்தினி. இதுவும் தோல்வியில் முடிகிறது. காயாம்பூ நிறத்தவன் கடைசிவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். கடவுளரின்மீதும் பிரதி கடுமையான இடையீட்டைச் செய்திருக்கிறது. இதெல்லாம் பிரதிக்குள் ஊடிழையாகத் தொடர்ந்து வருகின்றன. “அகிலம் ஆளும் அவளுக்கு, அந்தத் தொட்டிலோ இந்த வளையலோ கட்டினால்தான் என் நிலம தெரியுமா?” என்று ஸ்ரீரங்கம் தாயார் சன்னிதியில் நின்றுகொண்டு நந்தினி கேட்கிறாள். இது ரங்கநாயகி தாயாருக்கும் கேட்டிருக்கும்தானே! நந்தினியும் துரையும் போகாத கோயில் இல்லை; வணங்காத தெய்வங்கள் இல்லை. குழந்தைப்பேற்றிற்காக இச்சமூகம் உருவாக்கி வைத்துள்ள எல்லாச் சடங்குகளையும் தன்னை வருத்திக்கொண்டு செய்கிறாள் நந்தினி. இதில், வாழைப்பழத்தை நன்றாக மென்று, குழந்தைவரம் கேட்டு வந்திருக்கும் பெண்களின் வாயில் ஊட்டிவிடும் குப்பனூர் சாமியின் சடங்கும் அடக்கம். எல்லாச் சடங்குகளின் முடிவும் சுழியம். ஒருவேளை நந்தினிக்குக் குழந்தை பிறந்திருந்தால், அவளது வாழ்நாள் முழுக்க நேர்த்திக்கடன் மட்டும்தான் செலுத்திக்கொண்டிருக்க அவளுக்கு நேரம் இருந்திருக்கும். அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை; அவ்வகையில் ஆறுதல்.

‘செயற்கை கருத்தரிப்பு’ மையங்களில் செய்யப்படும் சிகிச்சை முறைகள் முழுக்க முழுக்க இயற்கைக்கு எதிரானவை; இயற்கையின்மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள். காந்தாரியின் வயிற்றிலிருந்து உதிர்ந்து விழுந்த சதைப்பிண்டத்தை, வியாசர் நூறு பாகங்களாகப் பிரித்து நெய் நிரப்பப்பட்ட பானைகளில் ஒவ்வொரு துண்டமாகப் போட்டு நூறு குழந்தைகளாக உருவாக்கித் தந்தார் என்பது மகாபாரதக் கதை. வியாசர் அன்று செய்ததைத்தான் மருத்துவர்களும் இன்று செய்கின்றனர். உயிரணு ஏற்றப்பட்ட கருமுட்டைகளைக் குப்பிகளில் அடைத்துக் குழந்தைகளை உருவாக்கித் தருகின்றனர். ஆனால், இந்த மையங்களில் சிகிச்சை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் விவரிக்க முடியாதவை. சிலவற்றை மட்டுமே லாவண்யா இந்நாவலில் பதிவு செய்துள்ளார். பூப்புச் சடங்கின்போது அப்பாவின் வேட்டியைச் சிறிதுநேரம் போர்த்திக் கொண்டிருக்க கூசிப்போன நந்தினிதான், பிறப்புறுப்பில் செய்யப்படும் HSG சோதனைக்காக ஆடவரின் முன்பு தன் மொத்த ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாகப் படுத்துக் கிடக்கிறாள். சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்கள், உடலாலும் மனதாலும் கடுமையான தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். அவர்களது அந்தரங்கம் சிகிச்சை என்ற பெயரில் பொதுமையாக்கப்படுகிறது. ‘கருவுறுதலுக்கான நமது சிகிச்சை முறைகள் பெண்ணின் மனவுளைச்சலைக் கவனம் கொள்ளாதது மட்டுமல்ல, இன்னும் அதை மோசமாக்கும் வகையில்தான் அமைந்திருக்கின்றன’ என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.

குழந்தையின்மையை ஒரு பெருங்குறையாகவும் தெய்வக் குற்றமாகவும் பார்க்கும்வரை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது. அதேநேரத்தில் அவர்களிடம் காட்டப்படும் அதீத அக்கறையும்கூட அந்தக் குறையை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும். மேலும், இந்தப் பிரச்சினை உள்ளவர்கள்மீது வீசுவதற்காகவே பல வசைச்சொற்களை இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அப்படியொரு வசைச்சொல்லைத் துரையும் எதிர்கொள்கிறான். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாகக் களையப்பட வேண்டும். நாவல் இதுபோன்ற எந்தத் தீர்வையும் முன்மொழியவில்லை. ஆனால் வாசிக்கும் ஒவ்வொருவரது மனதிலும் சில அசைவுகளை இப்பிரதி உருவாக்கும். இந்நாவல் குழந்தைப்பேறு பிரச்சினையினால் பாதிக்கப்படும் ஆண் / பெண் இருவரையுமே பொருட்படுத்தியுள்ளது. ஆனால் இப்பிரச்சினையினால் ஓர் ஆணைவிடப் பெண்ணே அதிகமும் பாதிக்கப்படுகிறாள். பெண் மட்டும்தான் குழந்தைப்பேறு பிரச்சினைக்குக் காரணமாக இருக்கமுடியும் என்று நீண்ட காலம் நம்பப்பட்டு வந்தது. அதிலிருந்து பெண்களை விடுவித்த பெருமை நவீன மருத்துவத்தையே சாரும். ஆனால் அதே மருத்துவம்தான் பெண்களை இப்படியும் சுரண்டுகிறது.

The post பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை first appeared on கனலி.

  •  

ஓவியக் கவிஞன்

நினைப்பில் நானொரு ஓவியன்
முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?
நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்
என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??
முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்…
அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்…
தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்…
அன்றி, ஒரு தவளைக்கு என் தலையைப் பொருத்திப் பார்த்திருப்பேன்…
சொந்த மூக்கை இன்னுங்கூட பெரிதுபடுத்தி இருப்பேன்…
பருவம் பூத்த போது எனக்குச் சொன்ன
பாலியல் கதையில் வரும் நீ….ள ஆண் குறியைப் போல
எனக்கும் ஒன்றைச் சமைத்து அதைத் தோளில் போட்டுக் கொண்டு
சாவகாசமாய் நடந்திருப்பேன் –
அச்சமயம் மென் காற்று தீண்டச் சொகுசாகும்
என் குதத்தின் பாவனையை ஓவியத்தில் கொண்டுவரப் பார்ப்பேன்.
கோபம் முட்டும் போது அதேகுறியை அறுத்தெறிவது போலவும்
ஓர் ஓவியம்…

நான் காகம் நிறைய வரைவேன்…
எனக்குப் பிடித்த தவிட்டுக் குருவிகளையும்…
மிகவும் நைஸான கறுப்புத் தோளை எனக்குப் போர்த்திக் கொள்வேன்…
யானையைச் சின்னதாக்கிக் கொள்வேன் குட்டி பப்பி சைஸில்
பிறகு பன்றியை நேசிக்கும் மனிதர்களைப் படைப்பேன்….
என் அம்மாவைப் பெருச்சாளி
தின்பது போல் வரைந்திருப்பேன்…

அது யாராக இருக்கக்கூடும் என்று ஊகித்திருப்பேன்…
நானும் என்னை அன்னை ஆண்டாளும்
கைகோர்த்து ஆடும் நான் கண்ட கனவினைத்
தாளில் வார்த்து சட்டகம் போடுவேன்…
அதில், என் தோளிலும் அவள் தோளிலுமாய்
அமர்ந்திருக்கும் ரெண்டு பச்சைக் கிளிகளின்
வதனப் பச்சையை இஷ்டத்துடனே
இருவர் முகங்களிலும் அப்பிக் கொள்வோம்…
மறவாமல் ரெண்டு பேர் மார்பிலும் தலா ஒரு மாலை சுமப்போம்;
யாருக்காக..?
நான் மரத்தில் காய்த்துத் தொங்கும் குழந்தைகள் செய்வேன்…
கை, கால்கள் பூட்டி நடக்கும் மரம், செடி, கொடி, பழம் பண்ணுவேன்..
ஆலிஸை எனக்குப் பிடிக்கும்,
அரூபமாகி ஒரு குறிக்குள் புகுவேன்….
அங்கே போன பின் ஒரு தோற் கரும்பு உண்டு பண்ணி
அவளுக்கு உச்சமேற்றுவேன்…
என் வாய்க்குள் பிறன் கரும்பின் இனிப்பு புதைவது போல்
ஒன்று வரைந்து ரகசியமாய் வைத்துக் கொள்வேன்…
பிறகு நாலு கால், கைகள் வேண்டும் எனக்கு…
பிறகு நான் நாமமோ எதுவோ தரித்துக் கடவுளாகுவேன்…
யாருக்கு நான் வரந் தருவது.. என்ன தருவது…. என்பதைத்
தீவிரமாய் யோசித்து நேரம் போக்கும் கடவுள்தான் நான்
என்பது நான் வரைய நினைக்கும்
ஒரு கேலிப்படத்தின் உள்ளடக்கம்.
எனக்கு அரசு தந்த சைக்கிளையும்,
நான் சம்பாதித்து வாங்கிய வெஸ்பாவையும்
ஒரே சமயத்தில் ஓட்டுவது போல் வரைந்து

ரெண்டுக்கும் என் லட்டு என்று பெயரிடுவேன்…
மூக்கின் நடுச்சரத்தில் நண்டொன்றைப்
புல்லாக்கு போல் மாட்டிக் கொண்டு
ஒரு புஸ்டி உடல் கட்டையும் ஒரு நோஞ்சான் தேகத்தையும்
கற்பனை செய்வேன் அது கலீஜாய் இருக்குமா??
எனக்கொரு மீனின் ரவுண்டு கண் இருந்தால்,
எனக்குக் கைச்சட்டையில் செதில் இருந்தால்,
எனக்கொரு கழுதைக் குறி இருந்தால்,
எனக்கொரு முந்தைய வாலிருந்தால்
எனக்கு முற்றும் போது அழுத்தவென ஒரு பருவ முலை
தேவையின் போது மட்டும் முளைத்தால்…
நான் நட்சத்திரம் பார்த்து வந்தால்…
பீ வண்டாகி அதை உருட்டிக் கொண்டு போய்
பத்திரமாய் சேமித்துவிட்டுத் திரும்பினால்…
பிடிக்காதவரை ஓவியத்திலாவது நாலு சாத்து சாத்தி, மிதித்தால்
மேலும் எதுவும் காணாது மறைந்த
என் பாட்டிக்கோர் உயிர் தருவேன் நான்.
அன்றி, அவள் இழந்த பருவக் கணவனை மீட்டுத் தருவேன்.
அக்கணவனைக் கொன்று போட்ட அவன் பங்காளிமார்களை
மிகுத்திரு பாட்டியார் வதம் செய்வது போல் வரைவேன்.
சாராயத்தில் அவருக்குக் கலந்து கொடுத்த
விஷம் வாய்க்குள் போகும் போது
அஃதொரு தேளாகி, எனினும் சமத்தாகி,
சிரித்து எதுவும் பண்ணாமல்
அவர் மறு வாயின் வழியே நோகாமல் பிரசவிப்பது போல்
ஒரு புராணம் பண்ணுவேன்…
எருமை பலி தந்து – பன்றியைக் குத்திப் போட்டுக்

கூந்தல் அலைய அலையப் பம்பை உடுக்கை அடிக்க
ஆடி ஆடி ஓய்ந்து ஓய்ந்து, அவர்களை வணங்குவேன்…
எதுவும் பேசாத என் அம்மாவை கொற்றவை ஆக்குவேன்.
எங்கள் பால்யத்தில் வருசமெல்லாம் நாசியிலேறி தவிக்கச் செய்த
பொதுக்கழிப்பறையின் மல வாசத்தை அள்ளி
அதிகாரிகள் முகத்தில் பூசுவேன் தீரா வன்மம் கொண்டு.
பிறகு நான் தரிப்பேன் வள்ளலார் போலொரு வெள்ளுடை.
பிறகு நான் தரிப்பேன் ஒரு சமணனைப் போல் ஒரு நிர்வாணம்…
பிறகோ நான்: ஜோதியில் எரிவேன்…
கடலினில் ஆழ்வேன்…
கைலி கட்டி, கையில் வீணையுடன், தாடி வைத்துச்
சட்டையில்லாமல் ஒரு புதுச்சாமியார் நான்…
அப்போது வரும் அமைச்சன் என் காலில் விழுவதைக் கண்டு
நாசமாய்ப் போவாய் என்று நிஜ வாக்கு சொல்லுவேன்…
பிறகாவேன் ஒரு சிட்டுக் குருவி
பிறகாவேன் ஒரு சந்தனக் காக்கை
பிறகாவேன் ஒரு தைல மரம்
பிறகாவேன் ஒரு மனத்தக்காளிக் கொத்து
பிறகாவேன் நாவல் தனிப்பழம்
பிறகாவேன் ஆற்றின் அடிமணல் நைஸ்….
மற்றும் பிறகும் ஆவேன்
நானொரு ஈறிலியாய்…

(ஓவியர் நடேஷ் முத்துசாமிக்கு)

The post ஓவியக் கவிஞன் first appeared on கனலி.

  •  

வீடு – நான்கு கவிதைகள்

ழை நின்றுவிட்டது
குழந்தைகள்
பள்ளிக்குச் சென்றுவிட்டனர்
பெரியவர்கள்
வேலைக்கு கிளம்பி விட்டனர்

தளர்ந்து ஆடுகின்றன
குளிருக்கு விரிந்து
தாழிடமுடியாத உள்ளறைக் கதவுகள்

உலகம் அடுக்கிவைத்த
பொறுப்புகளின் இடுக்கிலிருந்து
இலகுவாகி வெளிவருகிறது
இல்லம்

தினம் தினம் வெளிச்சுவற்றை
முட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சியே
எங்கிருக்கிறாய் நீ?

இதோ பூக்கிறது
என் வீடு

2

தனியாக இருப்பவன் கையில்
ஒரு மலரைக் கொடுத்தது போல
எனக்கு அந்த அறை
கொடுக்கப்பட்டிருந்தது

நான் அதை
கையில் வைத்து
சுழற்றிக் கொண்டிருந்தேன்

அதற்கொரு பிரத்தியேக
வாசமிருந்தது
குறிப்பிட முடியாத
வண்ணமிருந்தது

அங்கு
மெல்லிய காற்றிற்கு
ஒரு ஃபேன் இருந்தது
அதன்
இதழ்களில் ஒளி தவழ
ஒரு ஜன்னல் இருந்தது

நட்டநடுவே ஒருவன்
உட்கார்ந்திருப்பது போல்
கூரிருள் கொஞ்சம் இருந்தது
மலருக்குள் மலர் வைத்த ரகசியம்
அதனுள் இருந்தது

3

ஆக்டோபஸ் வானம்

நிறம் மாற்றி
நிறம் மாற்றி
யாரை நடிக்கிறார்
வானம் ?

என்னைத்தான்
என் வீட்டிற்குள் புகுந்துவிடத்தான்
இத்தனை நாடகம்

நான் திறந்துவைத்த வாசல்களை
மேலும் திறந்துவைத்தேன்
ஏதுமறியாததுபோல் வெளியே சென்று
தாமதமாகத் திரும்பிவந்தேன்

என்னைப்போல் இப்போது
வீட்டில் உறங்குகிறார்
Mr.வானம்

மெல்ல வீட்டைப்பூட்டி
சாவியைச் சுழற்றினேன்

இரு உலகே
நாளை வருவது
உனது புதிய வானம்

4

வீட்டிற்குள் இருந்த
வானைத் திறந்தது
மரபீரோ கண்ணாடியில்
ஜன்னல்

இப்போது
வீட்டிற்குள் இருந்து
வீட்டிற்குள் பாய்கிறது
ஒளி

வானை
ஒளியை
பொலிவுறச்செய்ய
நான் வெறும்
கண்ணாடியைத் துடைத்தேன்

அதில் அப்போது
பறந்து மறைந்த
பறவை இன்னும்
வீட்டிற்குள்தான் இருக்கிறது.

The post வீடு – நான்கு கவிதைகள் first appeared on கனலி.

  •  

நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின்

நிலைய அதிகாரிகளைச்1 சபிக்காதவர்கள் யாராவது உண்டா? அவர்களோடு சர்ச்சையில் ஈடுபடாதவர்கள் எவராவது உண்டா? ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று, அவர்களுடைய அராஜக நடவடிக்கை, திமிர், அலட்சியப்போக்கு போன்றவற்றைப் பற்றி, ஒன்றுக்கும் உதவாத புகார்களைப் பதிவு செய்வதற்காக, அவர்களிடமே புகார்ப் புத்தகத்தைக் கோராதவர்கள் யாராவது உண்டா? பழங்காலத்து நீதிமன்றக் காரியதரிசிகளைப்போல அல்லது குறைந்தபட்சம் முரோம் காட்டின் கொள்ளையர்களைப்போல அவர்களை மனிதகுலத்தின் சாபக்கேடு எனக் கருதாதவர்கள் யார்?

சரி, நாம் இப்போது நியாயத்தின் பக்கம் நின்று பார்ப்போம். நம்மை அந்த நிலைய அதிகாரியின் இடத்தில் பொருத்தி, இன்னும் சற்றுப் பரிவோடு அவர் நிலையைப் பரிசீலிப்போம்.

நிலைய அதிகாரி என்பவர் யார்? சமூகத்தின் கடைக்கோடி வகுப்பைச் சேர்ந்த ஒரு உண்மைத் தியாகி. உடல்ரீதியான தாக்குதல்களிலிருந்து அவரைத் தற்காக்க உதவும் கேடயம்தான் அந்த அதிகாரப் பதவி. ஆனால் எல்லா நேரமும் அது உதவும் என்றும் சொல்லிவிட முடியாது. (வாசகர்களின் மனசாட்சிக்கு இந்த இடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்).

அந்தச் சர்வாதிகாரியின், ஆம், இளவரசர் வாஸம்ஸ்கி2 அவர்களை அப்படித்தான் வேடிக்கையாகக் குறிப்பிடுவார், அந்தச் சர்வாதிகாரியின் பணிதான் என்ன? கப்பலின் கீழ்த்தளத்தில் அடைபட்டுக் காலமெல்லாம் துடுப்பு வலிக்கும் வாழ்நாள் அடிமையைப் போன்றவன் அல்லவா அவன்? அவனுக்கு இரவும் பகலும் ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது.

அலுத்துக் களைத்துவரும் பயணிகள் தங்கள் பயணத்தின் ஒட்டுமொத்த சலிப்பையும் நிலைய அதிகாரியின் மீதுதான் இறக்குவர். சாதகமற்ற வானிலையாகட்டும், மோசமான சாலையாகட்டும், சொல்பேச்சை மதியாத வண்டியோட்டியாகட்டும், சண்டித்தனம் பண்ணும் குதிரையாகட்டும் – எதுவாக இருந்தாலும் பழி என்னவோ நிலைய அதிகாரியின் மேல்தான். நிலைய அதிகாரியின் எளிய வீட்டிற்குள் நுழைந்த கணமே பயணியின் கண்களுக்கு நிலைய அதிகாரியைப் பார்த்தால் எதிரி போலவே தோன்றும்.  எதிர்பாராத விருந்தாளியாய் வந்திருக்கும் பயணிக்கு மாற்றுக் குதிரையைக் கொடுத்து எவ்வளவு விரைவாக அவரை அங்கிருந்து அனுப்பிவைக்கிறாரோ அவ்வளவு பாக்கியசாலி அந்த நிலைய அதிகாரி. கைவசம் மாற்றுக் குதிரைகள் இல்லையென்றால்… கடவுளே! என்ன மாதிரியான வசவுகளும், மிரட்டல்களும் அவர் மீது சரமாரியாகப் பாயும்!

அடைமழை, ஆலங்கட்டி மழையென எதையும் பாராமல் அவரைக் குதிரை லாயத்துக்கு ஓடவைப்பார்கள். எந்நேரமும் சிடுசிடுப்பும் ஆத்திரமுமாக ஏவிக் கொண்டிருக்கும் பயணிகளிடமிருந்து சற்றே விடுபடும் பொருட்டு, நடுங்கவைக்கும் உறைபனிக் குளிரிலும், பனிப்புயல் வீசும் தருணங்களிலும்கூட வீட்டின் முன்பக்கத் தாழ்வாரத்தில் சற்றுநேரம் நின்று ஆசுவாசம் பெற்றுத் திரும்புவார் பரிதாபத்துக்குரிய அந்த நிலைய அதிகாரி.

ஒரு ராணுவ ஜெனரல் வருகிறார். நிலைய அதிகாரி பயந்து நடுங்கியபடி அவர் வசமிருந்த கடைசி இரண்டு குதிரைகளை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அவற்றுள் ஒன்று அஞ்சல் அலுவலருக்கானது. ஜெனரலோ, ஒரு நன்றிகூட சொல்லாமல் குதிரைகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார். ஐந்து நிமிடங்கள் கழித்து வாசலில் அழைப்பு மணி! அஞ்சல் அலுவலர் அஞ்சல் குதிரைகளைப் பெறுவதற்கான ஆணையை மேஜைமீது விசிறியடிக்கிறார். நடந்தவற்றை மனத்தராசில் நிறுத்திப் பார்த்தால் நிலைய அதிகாரியின் மீது ஆத்திரம் வருவதற்குப் பதிலாக கழிவிரக்கம்தான் உண்டாகும். இன்னும் கொஞ்சம் சொல்கிறேன், கேளுங்கள்.

இருபதுவருட காலம் ரஷ்யாவிற்குள் குறுக்கும் நெடுக்குமாகக் கிட்டத்தட்ட எல்லா திக்குகளிலும் பயணம் செய்திருக்கிறேன். நிலையங்கள் இருக்கும் எல்லா சாலைகளையும் கிட்டத்தட்ட அறிவேன். பல தலைமுறைகளைச் சார்ந்த வண்டியோட்டிகளோடு எனக்குப் பரிச்சயம் உண்டு. நிலைய அதிகாரிகளைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமில்லாதவர்கள் வெகு சிலரே. வியாபார நிமித்தமாகத் தொடர்பில் இல்லாதவர்கள் சிலர். பயணத்தின்போது நான் குறிப்பெடுத்து வைத்திருக்கும், என்னுடைய கவனத்தைக் கவர்ந்த சுவாரசியமான விஷயங்களைக் கூடிய விரைவிலேயே பிரசுரமாக்குவேன் என்று நம்புகிறேன்.   

இப்போதைக்கு நான் சொல்வது ஒன்றுதான், பொதுமக்களின் பார்வைக்கு, நிலைய அதிகாரிகளின்மீது தவறான வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. அவப்பெயருக்கு ஆளான அந்த அலுவலர்கள் உண்மையில் அமைதியான சுபாவத்தினர், உதவும் இயல்பினர், சமுதாய ஒப்புரவு மிக்கவர்கள், பணிவு காட்டுவதில் தேர்ந்தவர்கள், பணத்துக்கு அதிகம் ஆசைப்படாதவர்கள். அவர்களுடனான (பயணிக்கும் பெரும்பாலான கனவான்கள் காரணமே இல்லாமல் வெறுக்கக்கூடிய) உரையாடல்கள் சுவாரசியமாகவும் தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை, அரசு அலுவல் நிமித்தம் பயணிக்கும் ஆறாம் வகுப்பு3 அலுவலர்களின் உரையாடல்களை விடவும் இவர்களுடனான உரையாடல்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவ்வளவையும் நான் சொன்ன காரணத்தால் எனக்கு மதிப்புக்குரிய நிலைய அதிகாரிகளுள் பலர் நண்பர்கள் என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். இருப்பினும், அவர்களுள் ஒருவரைப் பற்றிய நினைவுகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. சூழ்நிலை ஒருமுறை எங்களை ஒன்று சேர்த்தது. என்னுடைய அன்பான வாசகர்களுக்கு நான் இப்போது அவரைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்.

1816-ஆம் ஆண்டு மே மாதம் நான் அந்த மாகாணத்தின் வழியே பயணம் செய்ய நேர்ந்தது. இப்போது அந்தச் சாலை இல்லை. முற்றிலும் சிதைந்துவிட்டது. அப்போது நான் கீழ்மட்டப் பதவியில் இருந்தேன். நிலையங்களுக்குச் சென்று இரண்டு குதிரைகளைக் கட்டணம் செலுத்திப்பெற வேண்டும். உயர்பதவியில் இல்லாத காரணத்தால் நிலைய அதிகாரிகள் மத்தியில் எனக்குப் போதிய வரவேற்போ கவனிப்போ கிடைக்காது. அதனால் எனக்கு உரிமையானது என்று என் மனதுக்குத் தோன்றுவதை வலிந்து எடுத்துக்கொள்வதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். ஒருமுறை ஒரு நிலைய அதிகாரி, எனக்கென்று தயார் செய்யப்பட்டக் குதிரைகளை, அப்போது வந்த உயர் அதிகாரிக்குத் தந்துவிட்டார். இளமைத்துடிப்பும் உணர்வுவேகமும் கொண்டிருந்த நான் அவரது கயமையையும் கோழைத்தனத்தையும் கண்டு ஆத்திரம் கொண்டேன். அதெல்லாம் பழைய கதை. கவர்னருடைய விருந்தில் கலந்துகொள்ளும்போது பரிமாறுபவன் வரிசைக்கிரமமாகப் பரிமாறாமல் எனக்குப் பிரத்தியேகமான கவனிப்பை வழங்குவதை இயல்பாய் நான் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்தவை. இப்போதெல்லாம் முன்னிறுத்தப்படுவதும் பின்தள்ளப்படுவதும் அதனதன் இயல்பிலேயே நடப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

‘பதவிக்கு மரியாதை’ என்ற பொதுவிதிக்குப் பதிலாக ‘மனதுக்கு மரியாதை’ போன்ற மாற்று விதி ஏதேனும் புழக்கத்துக்கு வருமானால் நம்முடைய நிலைமை என்னாகும்? என்னென்ன பிரச்சினைகள் எழும்? விருந்தின்போது பணியாட்கள் யாருக்கு முன்னுரிமை தருவார்கள்?

இப்போது நான் சொல்லவந்த கதைக்கு வருவோம். 

அன்று வெயில் மிகக் கடுமையாக இருந்தது. அடுத்த நிலையம் சுமார் இரண்டு மைல் தூரத்திலிருந்தபோது மழை தூறத் தொடங்கியது. சற்று நேரத்தில் கன மழையாக அடித்துப் பெய்தது. நான் முழுக்க நனைந்துவிட்டேன். நிலையத்துக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய உடைகளை மாற்றினேன். அடுத்து, கொஞ்சம் தேநீர் கேட்டேன்.

“ஏ, தூன்யா! தேநீர்ப் பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு கொஞ்சம் க்ரீம் எடுத்துக்கொண்டு வா” நிலைய அதிகாரி உரத்தக் குரலில் கத்தினார்.

தடுப்புக்குப் பின்னாலிருந்து வெளியே வந்த சுமார் பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுமி வீட்டின் முன்பக்கம் ஓடினாள். அவளுடைய அழகு என்னை மிரளவைத்தது.

“உங்கள் மகளா?” நான் நிலைய அதிகாரியிடம் கேட்டேன்.

“ஆமாம், என் மகள்தான். கெட்டிக்காரி, சமர்த்து, இறந்துபோன அவளுடைய அம்மாவைப் போலவே” அவர் பெருமிதம் தொணிக்கச் சொன்னார்.

பிறகு அவர் என்னுடைய பயண அனுமதிச்சீட்டைப் பதிவு செய்யத் தொடங்கினார். நான் அவருடைய அந்த எளிய இல்லத்தில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஓவியங்கள் ‘வழிதவறிய மைந்தன்’ கதையைப் பிரதிபலித்தன.

முதல் ஓவியத்தில் அமைதியிழந்த இளைஞன், தளர்வாடையும் இரவுக் குல்லாயும் அணிந்திருந்த முதிய தந்தையிடமிருந்து ஆசியையும் பை நிறைய செல்வத்தையும் அவசரமாகப் பெற்றுக்கொண்டு விடைபெறும் காட்சி. இரண்டாவது ஓவியம் அவனுடைய கீழ்த்தரமான வாழ்க்கையை விதவிதமான வண்ணங்களில் சித்தரித்தது. போலியான நண்பர்களும் கூச்சநாச்சமற்றப் பெண்களும் சூழ்ந்திருக்க, அவன் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தான். மூன்றாவது ஓவியத்தில் மிகவும் நொடித்துப்போன நிலையில் கந்தலும் முக்கோண மூலைத் தொப்பியும் அணிந்திருந்த அந்த இளைஞன் பன்றிகளை மேய்த்துக்கொண்டு, அவற்றின் உணவைப் பகிர்ந்துண்ணும் காட்சி. அவனுடைய முகத்தில் ஆழ்ந்த துயரும் தவறை உணர்ந்ததால் உண்டான கழிவிரக்கமும் வெளிப்பட்டன. கடைசி ஓவியம், அவன் தந்தையைத் தேடிவரும் காட்சியைக் குறித்தது. அதே தளர்வாடையுடனும் அதே இரவுக் குல்லாயுடனும் காட்சியளிக்கும் அந்த நல்ல மனிதர், மகனை எதிர்கொண்டு அழைக்க ஓடுகிறார். ஊதாரி மைந்தன் அவரெதிரில் மண்டியிட்டிருக்கிறான். தொலைவில் சமையற்காரர் விருந்து ஏற்பாட்டிற்காகக் கொழுத்த கன்றைக் கொல்கிறார். மூத்த மகன் எல்லோருடைய திடீர் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று பணியாட்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு ஓவியத்தின் அடியிலும் பொருத்தமான ஜெர்மானிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றையும் அவற்றோடு அன்று நான் அவ்வீட்டில் கண்ட பால்சம் பூத்தொட்டிகள், புள்ளிபோட்ட திரைச்சீலை, படுக்கை என என்னைச் சுற்றிலும் இருந்தவற்றை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அடுத்து நான் அந்த நிலைய அதிகாரியைப் பார்த்தேன். உற்சாகமும் உறுதியும் வாய்ந்த, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அம்மனிதரின் மேலங்கியில் மங்கிப்போன ரிப்பன்களோடு கூடிய மூன்று பதக்கங்கள் காட்சியளித்தன.

என்னுடைய பழைய வண்டியோட்டியின் கணக்கைக் கிட்டத்தட்ட சரிபார்த்து முடிக்கும்போது தூன்யா தேநீர்க் குவளையோடு வந்தாள். மதர்ப்புடன் காணப்பட்ட அந்தச் சின்னஞ்சிறு பெண் தன்னைப் பற்றிய என் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விழைவதுபோல் என்னை ஏறிட்டாள். பிறகு தன் விழிகளைத் தழைத்துக்கொண்டாள். நான் அவளிடம் பேசத் தொடங்கினேன். எல்லாம் தெரிந்த பெரிய மனுஷிபோலத் துளியும் தயக்கமின்றி என் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள். நான் அவளுடைய அப்பாவுக்கு ஒரு கோப்பையில் மதுவை நிரப்பிக் கொடுத்தேன். பிறகு அவளுக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்துவிட்டு நானும் எனக்கு எடுத்துக் கொண்டேன். பிறகு நாங்கள் மூவரும் ஏற்கனவே பழக்கமானவர்களைப்போலச் சரளமான உரையாடலில் ஈடுபட்டோம்.

குதிரைகள் ஏற்கனவே தயாராகிவிட்டன. ஆனாலும் நிலைய அதிகாரியையும் அவருடைய மகளையும் விட்டுப்பிரிய எனக்கு மனமே வரவில்லை. ஒரு வழியாக அவர்களிடம் விடைபெற்றேன். தந்தை என்னுடைய பயணம் இனிதாக அமைய வாழ்த்தினார். மகள் வண்டிவரை வந்து வழியனுப்பினாள். தாழ்வாரத்தைக் கடக்கும்போது நின்று, அவளை முத்தமிட அனுமதி கேட்டேன். தூன்யா சம்மதித்தாள். அதன் பிறகு எத்தனையோ அற்புதமான முத்தத் தருணங்களை என்னால் கணக்கிட இயலும் எனினும் நினைவில் நீண்டகாலம் நிலைத்திருக்கும் அதைப்போன்ற மிக இனிமையான ஒன்றை இதுவரை நான் பெற்றதில்லை.

வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையில் மறுபடியும் சூழ்நிலை என்னை அதே சாலை வழியே அதே இடத்துக்குக் கொண்டு சென்றது. முன்பிருந்த நிலைய அதிகாரியின் மகளை மீண்டும் சந்திக்கப்போகும் நினைவு மகிழ்ச்சியை அளித்தது. “ஆனால்… அதே நிலைய அதிகாரி இப்போதும் அங்கேயே இருப்பாரா? இல்லையேல், பணிமாற்றம் பெற்றிருக்கலாம். தூன்யாவுக்கும் திருமணமாகியிருக்கலாம்” பல சிந்தனைகள் எழுந்தன. இருவரில் ஒருவர் இறந்துபோயிருக்கலாம் என்ற எண்ணம்கூட இடையிடையே மின்னல் போல் வெட்டியது.

நான் குறிப்பிட்ட அந்த நிலையத்தை முன்கணிப்போடும் வருத்தத்தோடும் நெருங்கினேன். அந்தச் சிறிய நிலையத்துக்கு முன்னால் குதிரைகள் நிறுத்தப்பட்டன. அறைக்குள் நுழைந்தவுடனேயே ஊதாரி மைந்தன் ஓவியங்களை அடையாளம் கண்டுகொண்டேன். மேஜையும் படுக்கையும் அதே இடத்தில் இருந்தன. ஆனால் ஜன்னல் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பால்சம் பூந்தொட்டிகளைக் காணவில்லை. மேலும் அந்த இடம் முழுவதும் அழுக்கடைந்தும் சிதிலமடைந்தும் காணப்பட்டது. நிலைய அதிகாரி தன்னுடைய ரோம அங்கிக்குள் புதைந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். என்னுடைய வருகைச் சத்தம் அவரை எழுப்பிவிட்டது. அவர் எழுந்து உட்கார்ந்தார். நிச்சயமாக அவர் சிமியோன் விரின்4தான். ஆனால் எவ்வளவு வயதானவராகக் காட்சியளிக்கிறார்!

என்னுடைய பயண அனுமதிச்சீட்டைப் பதிவு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது நான் அவரைப் பார்த்தேன். நரைத்தத் தலைமயிர், நீண்ட காலமாகச் சவரம் செய்யப்படாத முகம், அதிலிருந்த அளவுக்கு அதிகமான சுருக்கங்கள், கூன் விழுந்த முதுகு எனக் காட்சியளித்த அவரைப் பார்த்தபோது திடமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த ஒருவரை மூன்று நான்கு வருட கால இடைவெளி அதற்குள் இவ்வளவு பலவீனமான முதியவராக எப்படி மாற்றியது என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. .

“உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? நாம் ஏற்கனவே பழக்கமானவர்கள்” என்றேன்.

“இருக்கலாம், இது ஒரு நெடுஞ்சாலை. இங்கே பல பயணிகள் வருவார்கள், போவார்கள்” என்றார் அவர் சுரத்தில்லாமல்.

“உங்கள் மகள் தூன்யா நன்றாக இருக்கிறாளா?” நான் தொடர்ந்தேன்.

முதியவர் வெறுப்புடன் முகத்தைச் சுழித்தார். பிறகு “கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார்.

“அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதோ?” நான் கேட்டேன்.

நான் கேட்டது காதில் விழாததுபோல் அவர் என்னுடைய பயண அனுமதிச் சீட்டைப் பார்வையிட்டு அதிலிருக்கும் விவரங்களை மெல்லிய குரலில் வாசித்தார். அவரைக் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, குடிக்க ஏதாவது வேண்டுமென்று கேட்டேன். தூன்யாவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் என்னைத் தூண்டியது. ஒருவேளை மதுவருந்தும் நேரத்தில் அவர் தன்னுடைய இறுக்கத்தைத் தளர்த்தி என்னோடு பழையபடி உரையாடுவார் என்று நம்பினேன். நான் கணித்தது தவறாகவில்லை. நான் அவரிடம் மதுக்கோப்பையை கையளித்தபோது அவர் மறுக்கவில்லை. மது அவருடைய துயரார்ந்த மௌனத்தைக் கலைப்பதை நான் அவதானித்தேன். இரண்டாவது கோப்பையின்போது அவர் பேச ஆரம்பித்தார். அவருக்கு என்னை ஞாபகம் வந்துவிட்டது அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. அப்போது அவர் சொன்ன கதை ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அதே சமயம் என்னை ஆழமாகப் பாதிப்பதாகவும் இருந்தது.

“அப்படியென்றால் உங்களுக்கு என் மகள் தூன்யாவைத் தெரியும்?” அவர் ஆரம்பித்தார். “ஆனால் தூன்யாவை யாருக்குதான் தெரியாது? ஆ… தூன்யா, தூன்யா! எப்படிப்பட்டப் பெண் அவள்! இந்த வழியாகப் போகும் எல்லோருமே  அவளைப் பாராட்டுவார்கள். அவளைப்பற்றித் தவறாக ஒருவரும் ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. பெண்கள் அவளுக்குக் கைக்குட்டை, கம்மல் என ஒன்று மாற்றி ஒன்று பரிசாகத் தந்துகொண்டே இருப்பார்கள். கனவான்கள் பகலுணவுக்கோ இரவுணவுக்கோ நிறுத்துவதுபோல் வேண்டுமென்றே இங்கே நிறுத்துவார்கள். அவளை அப்போதுதான் நீண்டநேரம் பார்த்து ரசிக்க முடியும் என்பதுதான் உண்மை. கடுங்கோபத்தில் இருப்பவர்கூட அவள் முன்னால் அமைதியாகி என்னிடம் அன்பாகப் பேசுவார். நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர்களோ, விரைவஞ்சல் ஊழியர்களும் வழக்காடுமன்றத் தகவற்தூதர்களும் தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் அவளிடம் அரைமணிநேரம் கூட நின்று பேசுவார்கள்.

இந்த வீட்டை நேர்த்தியாகப் பராமரித்தவள் அவள்தான். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கைப் பேணுவாள். எல்லாப் பொருட்களையும் தயாராக வைத்திருப்பாள். எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக்கொண்டாள். ஆனால் நான்? கிழட்டு முட்டாள் மாதிரி, அவளை அன்பாகப் பார்த்துக்கொண்டேனே தவிர, அந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. நான் என் மகளை நேசிக்கவில்லையா? நான் அவளுக்குச் செல்லம் கொடுக்கவில்லையா? மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரவில்லையா? ஆனால்… முடியாது, யாராலும் கெடுவினையிலிருந்து தப்ப முடியாது. என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதிலிருந்து நழுவ முடியாது.”

அவர் கடந்துபோன துயரத்தை என்னிடம் விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலைப்பொழுது. நிலைய அதிகாரி புதிய பதிவேட்டைத்  தயார் செய்துகொண்டிருந்தார். மகள் தடுப்புக்குப் பின்னால் அமர்ந்து ஏதோ தைத்துக்கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாசலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. மென்கம்பளிக் குல்லாயும் ராணுவச் சீருடையும் அணிந்து கழுத்துக்குட்டை சுற்றிய ஒருவன் உள்ளே நுழைந்தான். குதிரைகள் வேண்டுமென்று கேட்டான்.  அப்போது குதிரைகள் எதுவுமே நிலையத்தில் இல்லை. எல்லாக் குதிரைகளும் வெளியில் போயிருந்தன. அதைச் சொன்னவுடனேயே அவனுடைய குரலோடு சேர்ந்து சாட்டையும் உயர்ந்தது. இம்மாதிரியான சூழல்களுக்குப் பழக்கப்பட்டுப்போன தூன்யா சட்டென்று தடுப்புக்குப் பின்னாலிருந்து ஓடிவந்து, பயணியைப் பார்த்துக் கனிவோடு ‘உண்பதற்கும் குடிப்பதற்கும் ஏதாவது கொண்டுவரவா?’ என்று கேட்டாள். தூன்யாவின் வருகை வழக்கமான மாற்றத்தை உண்டாக்கியது. பயணியின் கோபம் குறைந்தது. அவன் குதிரைகள் வரும்வரை காத்திருக்கச் சம்மதித்ததோடு இரவுணவையும் கோரினான். நனைந்திருந்த குல்லாயையும், இராணுவ உடையையும், கழுத்துக்குட்டையையும் களைந்த பிறகு, அந்த இளம் வீரன் உயரமாகவும், மெலிந்த உடல்வாகுடனும் கன்னங்கரு மீசையுடனும் காட்சியளித்தான். அவன் நிலைய அதிகாரியுடனும் அவர் மகளுடனும் இயல்பாகவும் இனிமையாகவும் உரையாடத் தொடங்கினான். இரவுணவு பரிமாறப்பட்டது. அதற்கிடையில் குதிரைகள் வந்துவிட்டன. நிலைய அதிகாரியின் உத்தரவின் பேரில் பயணியின் கிபிட்காவில்5 குதிரைகளுக்குச் சேணம் பூட்டப்பட்டன. தீவனம் வைக்கப்படாமலேயே அவை தங்களுடைய அடுத்தப் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தப்பட்டன. குதிரைகள் தயாராக இருப்பதை அறிவிப்பதற்காக, நிலைய அதிகாரி அறைக்குள் நுழைந்தபோது அவ்விளைஞன் கிட்டத்தட்ட சுயநினைவு இல்லாமல் விசிப்பலகைமேல் கிடப்பதைக் கண்டார். அவன் சுகவீனமாக இருந்தான். தலைவலிப்பதாகச் சொன்னான். இந்த நிலையில் அவனுடைய பயணத்தைத் தொடர்வது சாத்தியமில்லை என்றானது. இப்போது என்ன செய்வது? நிலைய அதிகாரி தன்னுடைய படுக்கையில் அவனைப் படுக்க வைத்தார். நோயாளி மறுநாள் காலைக்குள் குணமாகவில்லை என்றால் அடுத்த ஊரில் உள்ள மருத்துவரை அழைக்க முடிவு செய்தார்.

மறுநாள் இளைஞனின் நிலைமை இன்னும் மோசமானது. அவனுடைய வேலையாள் மருத்துவரை அழைக்கச் சென்றான். வினிகரில் தோய்த்த கைக்குட்டையை இளைஞனின் தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டுவிட்டு, தையல் வேலை செய்தபடி தூன்யா அவன் பக்கத்திலேயே இருந்தாள். நிலைய அதிகாரி பார்த்தபோது அவன் மூச்சுவிடத் திணறினான். மிகவும் கஷ்டப்பட்டு சில வார்த்தைகளை உச்சரித்தான். ஆனால் இரண்டுமுறை காஃபி குடித்தான். முணகியபடி இரவுணவு கோரினான். தூன்யா அவனை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. அவன் தொடர்ச்சியாகக் குடிப்பதற்கு ஏதாவது கேட்டுக்கொண்டே இருந்தான். தூன்யா தானே எலுமிச்சைகளைப் பிழிந்து சாறு தயாரித்துக் குவளை நிறைய அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

நோயாளி அவ்வப்போது கொஞ்சம் பழச்சாறு அருந்தி உதடுகளைச் சற்றே ஈரப்படுத்திக்கொள்வான். பிறகு தூன்யாவிடம் குவளையைத் திருப்பிக் கொடுக்கும்போதெல்லாம் தன் நன்றியைத் தெரிவிப்பதுபோல் அவளுடைய கையை அழுத்திப் பிடிப்பான். மருத்துவர் இரவுணவு சமயத்தில் வந்தார். அவர் நோயாளியின் நாடியைப் பரிசோதித்துவிட்டு அவனுடன் ஜெர்மன் மொழியில் உரையாடினார். பிறகு நிலைய அதிகாரியிடம் ரஷ்ய மொழியில், ‘நோயாளியின் தற்போதைய தேவை ஓய்வு மட்டுமே. இரண்டுநாள் ஓய்வுக்குப் பிறகு அவர் பயணத்தைத் தொடரலாம்’ என்றார். ராணுவ வீரன் மருத்துவரின் வருகைக்கான கட்டணமாக இருபத்தைந்து ரூபிள் கொடுத்துவிட்டு, இரவுணவையும் அவர் தங்களோடு சேர்ந்து உண்ணுமாறு அழைப்பு விடுத்தான். மருத்துவர் சம்மதித்தார். இருவரும் அருமையான இரவுணவை உண்டுமுடித்தனர். ஒயின் குடித்தனர். பிறகு முழு திருப்தியோடு ஒருவருக்கொருவர் விடைகொடுத்தனர்.

மற்றுமொருநாள் போனது. ராணுவ வீரன் முழுவதுமாகக் குணமடைந்துவிட்டான். அவன் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டான். நிலைய அதிகாரியிடமும் தூன்யாவிடமும் மாறி மாறி தொடர்ச்சியாகக் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருந்தான். ஏதேதோ பாடல்களைச் சீட்டியடித்தான். வந்துபோகும் பிற பயணிகளோடு அளவளாவினான். அவர்களுடைய வருகைப் பதிவை பதிவேட்டில் பதிந்தான். எந்த அளவுக்கு நிலைய அதிகாரியின் மனதைக் கவர்ந்திருந்தான் என்றால் மூன்றாம்நாள் அவன் புறப்படும்போது இப்படியொரு அற்புதமான விருந்தாளியை வழியனுப்ப மனமில்லாமல் அவர் வருந்தினார். 

அன்று ஞாயிற்றுக்கிழமை. தூன்யா ஞாயிறு பூசைக்குத் தேவாலயம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். ராணுவ வீரனின் கிபிட்காவும் தயாராகிவிட்டது. அவன் நிலைய அதிகாரியிடம் அவருடைய உபசரிப்புக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி கூறினான். தூன்யாவிடம் விடைபெற்றுக்கொண்டதோடு, அவள் விரும்பினால், ஊரின் எல்லையில் உள்ள தேவாலயம் வரையிலும் தன்னோடு வரலாம் என்றும் அழைப்பு விடுத்தான். தூன்யா தயங்கினாள்.

“நீ எதற்காகப் பயப்படுகிறாய், தூன்யா? மேன்மைக்குரிய இவர் ஒன்றும் ஓநாய் அல்லவே. உன்னைத் தின்றுவிடமாட்டார். தேவாலயம் வரையிலும் அவரோடு சென்றுவா, மகளே” நிலைய அதிகாரி மகளிடம் சொன்னார்.

தூன்யா கிபிட்காவில் ஏறி ராணுவ வீரனின் அருகில் அமர்ந்துகொண்டாள். பணியாள் படக்கென்று குதித்தெழுந்து வண்டியோட்டிக்கு அடுத்தாற்போல் அமர்ந்துகொண்டான். வண்டியோட்டி விசில் அடித்ததும் குதிரைகள் பெரும் பாய்ச்சலுடன் புறப்பட்டன.

பரிதாபத்துக்குரிய அந்த நிலைய அதிகாரிக்குத் தான் எந்த நம்பிக்கையில் தன் மகளை முன்பின் அறிந்திராத ராணுவ வீரனோடு செல்ல அனுமதித்தோம் என்பது புரியவே இல்லை. எது அவர் கண்ணைக் கட்டிவிட்டது? எது அவரை யோசிக்கவிடாமல் தடுத்தது? அரைமணி நேரம் கழிவதே பெரும்பாடானது. நேரம் செல்லச் செல்ல அவர் உள்ளத்தில் அமைதியின்மையும் அலைக்கழிப்பும் உண்டாயின. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க இயலாமல் உள்ளுக்குள் உண்டான உறுத்தல் காரணமாக மகளைத்தேடி அவரே தேவாலயத்துக்குப் புறப்பட்டார். ஆலயத்தை வந்தடைந்தபோது, ஏற்கனவே பூசை முடிந்து மக்கள் கலைந்துவிட்டிருந்தனர். தூன்யாவை ஆலயத்தின் முகப்பிலும் வளாகத்திலும் தேடினார். எங்கும் காணவில்லை. ஆலயத்தின் உள்ளே பதற்றத்தோடு ஓடினார். பாதிரியார் திருப்பலிபீடத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார். உதவியாளர் மெழுகுத்திரிகளை அணைத்துக்கொண்டிருந்தார். இரண்டு முதிய பெண்மணிகள் ஒரு மூலையில் இன்னமும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தூன்யா அங்கு இல்லை.

தளர்ந்துபோயிருந்த அத்தந்தை பெரும் பிரயத்தனத்துடன் தன் சக்தியை ஒன்றுதிரட்டி, அந்த உதவியாளரிடம், தன் மகள் தூன்யா பூசைக்கு வந்திருந்தாளா என்று கேட்டார். உதவியாளர் அவள் வரவில்லை என்று சொன்னார். என்ன செய்வதென்று புரியாத நிலைய அதிகாரி நடைபிணமாகத் திரும்பினார். அவருக்கு ஒரே ஒரு நம்பிக்கை எஞ்சி இருந்தது. தூன்யா இளவயதுப் பெண்களுக்கே உரிய துடுக்குத்தனத்தோடு அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அடுத்த ஊரில் இருக்கும் அவளுடைய ஞானத்தாயைப் பார்க்கச் சென்றிருக்கலாம் என்னும் எண்ணம்தான் அது.

உள்ளுக்குள் வதைக்கும் வேதனையோடும் குழப்பத்தோடும் மகளை எந்தக் குதிரை வண்டியில் வழியனுப்பி வைத்தாரோ அந்தக் குதிரைவண்டி திரும்பி வருவதற்காகக் காத்திருந்தார். வண்டி வரவில்லை. மாறாக, தூன்யாவும் ராணுவ வீரனும் இருந்த அந்த வண்டி அடுத்த ஊரைக் கடந்து சென்றுவிட்டது என்ற பயங்கரச் செய்திதான் வந்தது. அன்று மாலை அவர் தனியாகவும் மிதமிஞ்சிய போதையோடும் விடப்பட்டார். அந்த முதிய தந்தையால் தன்மகள் தன்னை விட்டுச் சென்றுவிட்ட துயரத்தைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. வீட்டுக்குள் நுழைந்த கணமே தன் படுக்கையில், முந்தைய தினம் அந்த ஏமாற்றுக்கார இளைஞன் படுத்திருந்த அதே படுக்கையில் விழுந்தார். நடந்தவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்தபோது, அவன் நோய்வாய்ப்பட்டதாகச் சொன்னது எல்லாமே நாடகம் என்ற முடிவுக்கு வந்தார்.

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலைய அதிகாரி, அடுத்த ஊருக்கு அனுப்பப்பட்டார். அவர் திரும்பிவரும்வரை அவருடைய இடத்தில் வேறொருவர் நியமிக்கப்பட்டார். ராணுவவீரனைப் பரிசோதித்த அதே மருத்துவர்தான் நிலைய அதிகாரியையும் பரிசோதித்தார். ராணுவவீரனைத் தான் பரிசோதித்தபோது அவனுக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும் ஏதோ கெட்ட எண்ணத்துடன்தான் அவன் அப்படி நடிக்கிறான் என்பதையும் தான் சந்தேகித்ததாகவும், அவனுடைய சாட்டை அடிக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்ததாகவும் மருத்துவர் உறுதியாகச் சொன்னார். அந்த ஜெர்மானிய மருத்துவர் உண்மையைத்தான் சொல்கிறாரா அல்லது தன்னுடைய கூர்மதியைப் பறைசாற்ற விரும்பி அவ்வாறு சொல்கிறாரா என்பது தெரியவில்லை என்றாலும் அவரது கூற்று, அந்தக் கையாலாகாதத் தந்தையை எந்த விதத்திலும் ஆற்றுப்படுத்தவில்லை. ஓரளவு உடல்நிலை தேறியதும், அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் இரண்டு மாத விடுப்பு பெற்றுக்கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல், மகளைத்தேடி தானே புறப்பட்டார் தந்தை. பதிவு செய்யப்பட்டிருந்த அனுமதிச் சீட்டைக்கொண்டு கேப்டன் மின்ஸ்கி6 ஸ்மோலன்ஸ்கிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றிருப்பதை அறிந்துகொண்டார். தூன்யா தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே செல்வதாகத் தெரிந்தபோதிலும் வழி நெடுக அழுதுகொண்டே சென்றதாக அவர் பயணித்த வண்டியின் வண்டியோட்டி சொன்னார்.

“முடியுமானால்… தொலைந்துபோன என் ஆட்டுக்குட்டியைக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கொண்டுவருவேன்” நிலைய அதிகாரி நினைத்துக்கொண்டார்.

அதே நினைவோடு அவர் பீட்டர்ஸ்பர்க்கை அடைந்தார். இஸ்மைலோவ்ஸ்கி பட்டாளத்தின்7 ஓய்வுபெற்ற கடைநிலை வீரரும் நிலைய அதிகாரியின் பழைய நண்பருமான ஒருவரின் குடியிருப்பில் தங்கித் தன் தேடுதலைத் தொடங்கினார். கேப்டன் மின்ஸ்கி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்தான் இருக்கிறான் என்பதையும் டிம்யூத் ஹோட்டலில் தங்கியிருக்கிறான் என்பதையும் விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டார். அவனைச் சந்திக்க முடிவு செய்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே புறப்பட்டு கேப்டன் மின்ஸ்கியின் குடியிருப்புக்குச் சென்றார். நுழைவுக்கூடத்தில் நின்றபடி, மேன்மைக்குரியவரைக் காண்பதற்காக ஒரு முதிய ராணுவவீரன் வந்திருப்பதாகச் சொல் என்று அங்கிருந்த ராணுவ சேவகனிடம் அறிவித்தார். பூட்ஸ்களைத் துடைத்துக் கொண்டிருந்த அவன், தங்கள் எஜமானர் இன்னமும் உறங்கிக்கொண்டிருப்பதாகவும் காலை பதினொரு மணிக்கு முன்னால் யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் கூறினான். நிலைய அதிகாரி திரும்பிச் சென்றுவிட்டு, சேவகன் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் வந்தார். இரவுநேரத்துத் தளர்வாடையும் சிவப்புநிறக் குல்லாயும் அணிந்திருந்த மின்ஸ்கி தானே வெளியில் வந்தான்.

“உங்களுக்கு என்ன வேண்டும், நண்பரே?” அவன் கேட்டான்.

முதிய தந்தையின் இதயம் துடித்தது. கண்ணீர் பெருகியது. நடுங்கும் குரலில் அவர் சொன்னார், “மேன்மைக்குரியவரே! தாங்கள் எனக்கொரு பேருதவி செய்ய வேண்டும்…”

மின்ஸ்கி அவரை உற்றுப் பார்த்தான். சற்றுக் குழம்பியவனாய், அவரைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டான்.

“மேன்மைக்குரியவரே! போனது போய்விட்டது. என் மகள் தூன்யாவையாவது என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவளை உங்களுடைய விளையாட்டுப் பொம்மையாக ஆக்கிவிட்டீர்கள். மிச்சமிருக்கும் வாழ்க்கையையும் அழித்து அவளை நாசமாக்கிவிடாதீர்கள்”

“நடந்து முடிந்த எதையும் மாற்ற முடியாது” அவன் கிட்டத்தட்ட குழம்பிய நிலையிலிருந்தான். “உங்கள் முன்னால் நான் குற்றவாளியாக நிற்கிறேன். உங்களிடம் மன்னிப்புக் கோரவும் தயாராக இருக்கிறேன். ஆனால் தூன்யாவை விட்டுவிடுவேன் என்று மட்டும் நினைக்காதீர்கள். அவள் மகிழ்ச்சியாக இருப்பாள், நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் எதற்காக அவளை மீளப் பெற நினைக்கிறீர்கள்? அவள் என்னை நேசிக்கிறாள். இனி அவளால் அவளுடைய முந்தைய வாழ்க்கையை வாழ முடியாது. நடந்தவற்றை முற்றிலும் மறந்துவிட அவளாலும் முடியாது. உங்களாலும் முடியாது.”

அவன் எதையோ அவருடைய சட்டைக்கை மடிப்பினுள் திணித்துத் தள்ளியபடி, அறைக் கதவைத் திறந்தான். என்ன ஏது என்று புரிந்துகொள்வதற்குள்ளாகவே தெருவில் நின்றிருக்கக் கண்டார். அதிர்ச்சியில் உறைந்தவராய் வெகுநேரம் அவர் அப்படியே அங்கேயே நின்றிருந்தார். பிறகுதான் தன்னுடைய சட்டைக்கை மடிப்பில் ஏதோ தாள்சுருள் இருப்பதைக் கவனித்தார். வெளியில் எடுத்துப் பார்த்தபோது ஐந்தும் பத்துமாய்ப் பல ரூபிள் தாள்கள் சுருட்டிவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மீண்டும் அவர் கண்களில் கண்ணீர் தளும்பியது. இம்முறை கொந்தளிக்கும் ஆத்திரத்தின் கண்ணீர்! அவர் பணத்தாள்களைக் கசக்கிப் பந்தாக்கி தரையில் வீசியெறிந்தார். பூட்ஸ் கால்களால் அதை ஆத்திரம் தீரும்வரை மிதித்தார். பிறகு அங்கிருந்து விலகி நடந்தார்.

சற்று தூரம் சென்றதும் என்ன நினைத்தாரோ, நின்றார். மீண்டும் அந்த இடத்துக்குத் திரும்பினார். ஆனால் பணச்சுருள் அங்கே இல்லை. நன்கு உடையணிந்த வாலிபன் ஒருவன் அவர் திரும்பிவருவதைப் பார்த்து, அவசரமாக அங்கிருந்த நான்கு சக்கரக் குதிரைவண்டியில் தாவி ஏறி, வண்டியோட்டியிடம், “சீக்கிரம் போ” என்று கத்தினான்.

நிலைய அதிகாரி அவனைப் பின்தொடரவில்லை. அவர் தன்னுடைய ஊருக்கே திரும்பிவிட முடிவுசெய்தார். ஆனால் போவதற்கு முன்பு ஒரு முறையாவது தூன்யாவைப் பார்த்துவிட விரும்பினார். அதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின்ஸ்கியின் குடியிருப்புக்குச் சென்றார். தங்கள் தலைவர் யாரையும் பார்க்க மாட்டார் என்று சொன்ன சேவகன் அவரைப் பலவந்தமாய், நுழைவுக்கூடத்துக்கு வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு, கதவை அறைந்து மூடினான். நெடுநேரம் கதவுக்கு வெளியே காத்திருந்துவிட்டு, பிறகு அங்கிருந்து வெளியேறினார் நிலைய அதிகாரி.

அன்றையதினம் மாலை அவர் தூய அடைக்கல அன்னை ஆலயத்தின் பூசை முடிந்து லிட்டெனியா சாலைவழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு அழகான நான்கு சக்கரக் குதிரைவண்டி வேகமாக அவரைக் கடந்துபோனது. அது மின்ஸ்கியின் வண்டி என்பதை உடனடியாக நிலைய அதிகாரி அடையாளம் கண்டுகொண்டார். அந்த வண்டி அங்கிருந்த மூன்றுமாடிக் கட்டடத்தின் முன்னால் அதன் வாசலை ஒட்டி நின்றது. கேப்டன் மின்ஸ்கி படிக்கட்டில் ஓட்டமாக ஏறி ஓடினார். நிலைய அதிகாரியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் உதயமாகி மகிழ்ச்சி பரவியது. அவர் வண்டியோட்டியை அணுகி, “இது யாருடைய வண்டி, நண்பரே? மின்ஸ்கியுடையதுதானே?” என்றார்.

“அவருடையதேதான். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றான் அவன்.

“உங்கள் முதலாளி அவருடைய தூன்யாவுக்கு ஒரு கடிதம் தரச்சொல்லி என்னிடம் கொடுத்திருந்தார். ஆனால் தூன்யாவின் முகவரியை நான் தவறவிட்டுவிட்டேன்.” என்றார்.

“அவள் இங்கேதான் இரண்டாவது தளத்தில் குடியிருக்கிறாள். ஆனால் நீங்கள் உங்கள் கடிதத்தோடு தாமதமாக வந்துவிட்டீர்கள். இப்போது அவரே அவளுடன்தான் இருக்கிறார்.”

“அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை” நிலைய அதிகாரி படபடக்கும் இதயத்தோடு பதில் சொன்னார். “உங்களுடைய தகவலுக்கு நன்றி. என்னுடைய பணியை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று நான் அறிவேன்” அவர் சொல்லிக்கொண்டே படிகளில் ஏறினார்.

கதவு தாழிடப்பட்டிருந்தது. அவர் அழைப்புமணியை அழுத்தினார். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் வலி நிறைந்ததாக இருந்தது. ஒரு வழியாகச் சாவி திருகப்படும் சத்தத்தைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது. இளவயதுப் பணிப்பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

“அவ்தோட்யா செமியோனோவ்னா8 இங்குதானே வசிக்கிறார்?” அவர் கேட்டார்.

“ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்?” அவள் கேட்டாள்.

நிலைய அதிகாரி பதில் எதுவும் சொல்லாமல் அறைக்குள் நுழைந்தார்.

“நீங்கள் உள்ளேபோக முடியாது. நீங்கள் உள்ளேபோக முடியாது” பணிப்பெண் அவர் பின்னாலேயே கத்திக்கொண்டு வந்தாள், “அவ்தோட்யா செமியோனோவ்யா இப்போது ஒரு விருந்தினரோடு இருக்கிறார்.”

அவளுடைய கத்தலைப் பொருட்படுத்தாமல் நிலைய அதிகாரி நேராக உள்ளே சென்றார். முதலிரண்டு அறைகளும் இருட்டாக இருந்தன. மூன்றாவது அறையில் விளக்கு எரிந்தது. திறந்திருந்த அந்த அறைக்கதவின் முன்வந்து நின்றார். அறைகலன்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்த அவ்வறையில் மின்ஸ்கி ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தான். மிகவும் நளினமாக நவநாகரிக உடையணிந்திருந்த தூன்யா, சேணத்தின்மீது அமர்ந்திருப்பவளைப் போல் நாற்காலியின் கைப்பிடிமீது அமர்ந்திருந்தாள். மின்ஸ்கியை மிகுந்த கனிவோடு பார்த்தபடி, அவனுடைய கன்னங்கரிய சுருள்முடிக் கற்றையைத் தன் அழகிய விரல்களால் சுருட்டிக்கொண்டிருந்தாள்.

பாவம் அந்த நிலைய அதிகாரி! தன் மகளை இதுவரை இவ்வளவு அழகாகப் பார்த்ததே இல்லை. தன்னுடைய விருப்பத்துக்கு மாறாய் அவள் அழகை உள்ளுக்குள் வியந்தார்.

“யார் அங்கே?” நிமிர்ந்து பார்க்காமலேயே அவள் கேட்டாள்.

அவர் அமைதியாக இருந்தார். பதில் ஏதும் வராமல் போகவே, அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவ்வளவுதான். அலறியபடி மயங்கிக் கீழே விழுந்தாள். அதிர்ச்சியோடு அவளை அவசரமாகத் தூக்கச் சென்ற மின்ஸ்கியின் பார்வையில் அறை வாசலில் நின்றிருந்த முதியவர் தென்பட்டார். அவன் தூன்யாவை அப்படியே விட்டுவிட்டு, ஆவேசத்துடன் அவரைநோக்கி வந்தான்.

“உங்களுக்கு என்னதான் வேண்டும்?” பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான். “எதை அபகரிப்பதற்காக திருடனைப்போல என் பின்னாலேயே சுற்றுகிறீர்கள்? அல்லது என்னைக் கொல்ல நினைக்கிறீர்களா? இங்கிருந்து போய்த் தொலையுங்கள்” வலிமை மிகுந்த கரத்தால் அவருடைய கழுத்துப்பட்டியை முரட்டுத்தனமாகப் பிடித்திழுத்து படிக்கட்டில் கீழே தள்ளினான்.

முதிய தந்தை தங்குமிடத்துக்குத் திரும்பினார். மின்ஸ்கியின் மீது புகார் மனு அளிக்கும்படி அவருடைய நண்பர் அறிவுறுத்தினார். ஆனால் நிலைய அதிகாரி மறுத்துவிட்டதோடு, இனி இந்த விஷயத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை என்றும் கூறினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் பீட்டர்ஸ்பர்க்கை விட்டுப் புறப்பட்டு ஊருக்குத் திரும்பிச்சென்று தனது வழக்கமான நிலையப் பணிகளில் ஈடுபடலானார்.

அவர் கதையின் முடிவுக்கு வந்தார். “இது மூன்றாவது வருடம். தூன்யா இல்லாமல், அவளைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் மூன்றாவது வருடம் இது. அவள் உயிரோடு இருக்கிறாளா, இல்லையா என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. பயணிகளாக வரும் பொறுக்கிப்பயல்கள் மயக்கி வசப்படுத்தி, கொஞ்சநாள் அனுபவித்துவிட்டு பிறகு நிர்க்கதியாக விட்டுவிடும் பெண்களுள் அவள் முதல் பெண் கிடையாது. கடைசிப் பெண்ணும் கிடையாது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர்களைப்போல ஏராளமான முட்டாள் பெண்பிள்ளைகள் உண்டு. இன்றைக்கு சாட்டினும் வெல்வெட்டும் உடுத்தியிருப்பார்கள். நாளை சாராயக்கடைகளின் தெருக்களில் மோசமான குடிகாரத் தறுதலைகளோடு திரிந்துகொண்டிருப்பார்கள். தூன்யாவும் அவர்களுள் ஒருத்தியாகக் கெட்டுச் சீரழிந்துவிடுவாளோ என்று நினைக்கும்போது, எனக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும் பரவாயில்லை, அவள் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே செத்துப்போய்விடவேண்டும் என்று விரும்புகிறேன்.”

நிலைய அதிகாரியான என் நண்பர் சொன்ன கதை இதுதான். கதையின் நடுநடுவே பல தடவை கசியும் கண்களை மேலங்கியின் நுனியால் நாசுக்காகத் துடைத்தபடி சொன்னார். கதையைச் சொல்லும்போது கூடவே உள்ளேபோன ஐந்து கோப்பை மதுவும் துக்கத்தை அதிகமாகத் தூண்டிவிட்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் கதை என்னுடைய மனதின் அடியாழத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அவரிடமிருந்து விடைபெற்று வந்த பிறகும் வெகுகாலம் நிலைய அதிகாரியின் நினைவு என் மனதை விட்டு அகலவில்லை. அதைப் போலவே அந்தப் பாவப்பட்ட பெண் தூன்யாவையும் வெகுகாலம் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்தச் சிறிய ஊரின் வழியாக என் பயணம் அமைந்தது. சட்டென்று எனக்கு என் பழைய நண்பரின் நினைவு வந்தது. அவர் நிர்வகித்துவந்த நிலையம் இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன். ‘அந்த முதிய நிலைய அதிகாரி இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என்ற என் கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் கிடைக்கவில்லை. நானே நேரில் சென்று விசாரித்து அறிந்துகொள்ளலாம் என்று முடிவுசெய்து பக்கத்து ஊரில் குதிரைகளை இரவல்பெற்று அவருடைய ஊருக்குக் கிளம்பினேன்.

அது ஒரு இலையுதிர்காலம். சாம்பல்நிற மேகங்கள் வானை மூடியிருந்தன. அறுவடை முடிந்த வயல்களினூடாகக் குளிர்க்காற்று வீசியது. உதிர்ந்த சிவப்பு மற்றும் மஞ்சள் இலைகள் காற்றோடு கலந்திருந்தன. நான் அந்தச் சிற்றூரை அடைந்தபோது மாலை நேரமாகிவிட்டது.

நான் நேராக நிலையத்துக்குச் சென்றேன். தாழ்வாரத்தில், முன்பொரு நாள் தூன்யா என்னை முத்தமிட்ட அந்த இடத்தில் ஒரு பருத்தப் பெண்மணியைச் சந்தித்தேன். என்னுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், நிலைய அதிகாரி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும் இப்போது அந்த வீடு தேறல் வடிப்பகமாக இருப்பதாகவும், தான் தேறல் வடிப்பவரின் மனைவி என்றும் சொன்னார். தேவையில்லாமல் ஏழு ரூபிள்களைச் செலவு செய்துவிட்டோமே, இங்கு வந்தது உபயோகமில்லாமல் போயிற்றே என்று என்னை நானே நொந்துகொண்டேன்.

“எதனால் அவர் இறந்துபோனார்?” நான் அப்பெண்மணியிடம் கேட்டேன்.

“குடிதான். வேறென்ன? பாவப்பட்ட தகப்பன்!” அவர் சொன்னார்.

“அவருடைய கல்லறை எங்குள்ளது?”

“ஊருக்கு வெளியே.. அவருடைய மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில்”

“யாராவது எனக்கு அந்த இடத்தைக் காட்ட முடியுமா?”

“தாராளமாக. ஏ, வான்கா! பூனையோடு விளையாடியது போதும். இதோ, இந்தப் பெரிய மனிதரை கல்லறைத் தோட்டத்துக்கு அழைத்துச்சென்று, நிலைய அதிகாரியுடைய கல்லறை இருக்குமிடத்தைக் காட்டிவிட்டு வா!”

அப்பெண்மணியின் அழைப்பைக் கேட்டு, கந்தலாடையோடு செம்பட்டைத் தலைமயிரும் மாறுகண்ணுமாய் இருந்த சிறுவன் ஓடிவந்து கல்லறைத் தோட்டம் இருக்கும் திசையில் எனக்கு முன்னால் நடக்கத் தொடங்கினான்.

“இறந்துபோனவரை உனக்குத் தெரியுமா?” போகும் வழியில் அச்சிறுவனைக் கேட்டேன்.

“எனக்குத் தெரியுமாவா? அவர்தான் எனக்கு ஊதுகுழாய் செய்வதற்குச் சொல்லிக்கொடுத்தார். சாராயக்கடையிலிருந்து அவர் வெளியில் வரும்போது நாங்கள் எல்லோரும் அவர் பின்னால் ஓடிச்சென்று, “தாத்தா… தாத்தா… கொஞ்சம் பருப்பு கொடுங்க” என்று கேட்போம். அவரும் நாங்கள் கொறிப்பதற்குக் கொஞ்சம் பருப்புகளை அள்ளிக் கொடுத்துவிட்டுப் போவார். அவர் எப்போதும் எங்களோடு விளையாடுவார்.”

“இந்த வழியாகப் போகும் பயணிகள் யாராவது அவரைப் பற்றிக் கேட்கிறார்களா?”

“இப்போதெல்லாம் குறைவான பேர்தான் இந்த வழியாகப் போகிறார்கள். வரிவிதிப்பவர் எப்போதாவது இந்தப் பக்கமாகப் போவார். ஆனால் இறந்துபோனவர்களைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படமாட்டார். போன கோடைக்காலத்தில் இந்தப் பக்கமாகப்போன ஒரு சீமாட்டி பழைய நிலைய அதிகாரியைப் பற்றி விசாரித்தாள். பிறகு அவருடைய கல்லறைக்குப் போனாள்.”

“அவள் எப்படி இருந்தாள்?” நான் ஆர்வத்தோடு கேட்டேன்.

“மிகவும் அழகாக இருந்தாள். ஆறு குதிரைகள் பூட்டிய கூண்டுவண்டியில் வந்திருந்தாள். அவளோடு மூன்று குழந்தைகளும், ஒரு தாதியும் வந்திருந்தார்கள். கூடவே ஒரு சிறிய கருப்பு நாயும் இருந்தது. நிலைய அதிகாரி இறந்துவிட்டார் என்று சொன்னதுமே அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். பிறகு அந்தக் குழந்தைகளிடம், ‘இங்கேயே அமைதியாக உட்கார்ந்திருங்க. நான் கல்லறைக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்று சொன்னாள். நான் வழிகாட்டுகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவள், ‘எனக்கு வழி தெரியும்’ என்று சொல்லிவிட்டு, எனக்கு ஐந்து கோபெக் கொடுத்தாள். எவ்வளவு நல்ல சீமாட்டி!”

நாங்கள் கல்லறைத் தோட்டத்தை அடைந்தோம். திறந்தவெளியாக குறைந்தபட்ச மறைப்புமின்றி இருந்த அந்த இடத்தில் ஆங்காங்கே மரச்சிலுவைகள் நடப்பட்டிருந்தன. நிழலுக்கு அங்கே ஒரு மரம் கூட இல்லை. என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட மோசமான கல்லறைத் தோட்டத்தை நான் பார்த்ததே கிடையாது.

“இதுதான் நிலைய அதிகாரியின் கல்லறை” குவித்துவைக்கப்பட்டிருந்த மணல்மேட்டின் மீது தாவிக் குதித்தபடி சொன்னான் சிறுவன். மணல்மேட்டில் கருப்பு நிறத்தில் செப்பு உருவம் பொறிக்கப்பட்டிருந்த சிலுவை நடப்பட்டிருந்தது.

“இங்கேதான் அந்த சீமாட்டி வந்தாளா?” நான் கேட்டேன்.

“ஆமாம். நான் தூரத்திலிருந்து பார்த்தேன். அவள் இங்கேதான் இந்த மணல்மேட்டின் மீது படுத்துக்கிடந்தாள். ரொம்ப நேரம் அப்படியே கிடந்தாள். பிறகு அவள் ஊருக்குள் போய் பாதிரியாரை வரச்சொன்னாள். அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டாள். எனக்கு ஐந்து கோபெக்கும் கொடுத்துவிட்டுப் போனாள். எவ்வளவு நல்ல சீமாட்டி!” வான்கா சொன்னான்.

நானும் அவனுக்கு ஐந்து கோபெக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன். என் பயணத்தைக் குறித்தோ, ஏழு ரூபிள் செலவானதைக் குறித்தோ இப்போது என்னிடம் எந்த வருத்தமும் இல்லை.

1 நிலைய அதிகாரி (Station master or Postmaster) – 19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நெடுந்தொலைவு
பயணத்துக்கு குதிரை வண்டிகள் பயன்பாட்டில் இருந்தன. ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும்
பயணிகள் அந்த ஊரின் நிலையத்தில் பதிவு செய்த பிறகே பயணத்தைத் தொடரவேண்டும்.
பயணிகளுக்கு முறையான பயண அனுமதிச்சீட்டு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதும், அதை
பதிவேட்டில் பதிவு செய்வதும், தேவைப்படுபவர்களுக்கு முக்கியமாக அரசு அதிகாரிகளுக்கு மாற்றுக்
குதிரைகளை ஏற்பாடு செய்வதும், பயணித்துக் களைத்தக் குதிரைகளுக்கு ஓய்வும் தீவனமும் அளித்து
அடுத்தப் பயணத்துக்குத் தயாராக வைத்திருப்பதும் நிலைய அதிகாரியின் பொறுப்பு. நிலைய அதிகாரி
24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்பதால் நிலையமே அவருடைய வீடாக இருக்கும்.


2 இளவரசர் வாஸம்ஸ்கி (1792-1878) – ரஷ்யாவின் பண்டைய ரூரிக் அரசவம்சத்தைச் சேர்ந்த
இளவரசரும், அற்புதமான கவிஞரும் ஆவார்.

3 ரஷ்யாவின் அரசு அலுவலர்கள் 14 வகுப்புகளாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். பதினான்காவது
வகுப்புதான் கடைநிலை வகுப்பு.


4 சிமியோன் விரின் – கதையின் நாயகனான நிலைய அதிகாரியின் பெயர்.


5 கிபிட்கா – ரஷ்யாவில் குதிரைகள் இழுக்கும் கூண்டு வண்டியின் பெயர்


6 கேப்டன் மின்ஸ்கி – ராணுவ வீரனின் பெயர்


7 இஸ்மைலோவ்ஸ்கி பட்டாளம் – ரஷ்யப் பேரரசின் காலாட்படையைச் சேர்ந்த முதல்நிலை
பாதுகாப்புப் படைப்பிரிவின் ஒரு பகுதி.


8 அவ்தோட்யா செமியோனோவ்னா – தூன்யாவின் இயற்பெயர்.

*********

அலெக்ஸாண்டர் புஷ்கின் (1799 – 1837)

ரஷ்ய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமையான இவர் சிறந்த கவிஞர், நாடகாசிரியர் மற்றும் நாவலாசிரியர். அலெக்ஸாண்டர் புஷ்கின் நவீன ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடி என்று பெருமையோடு குறிப்பிடப்படுகிறார். உரைநடைக் கவிதை, வர்ணனைக் கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர். இவரது தனித்துவமான எழுத்தோட்டமும் யதார்த்தமான கண்ணோட்டமும் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கின. சொந்தப் பகை காரணமாக, பிரெஞ்சு ராணுவ அதிகாரியான ஜார்ஜஸ் டியாந்தஸ் உடன் இவரே ஏற்பாடு செய்த ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கிச் சண்டையில் படுகாயமுற்று தனது 37-வது வயதிலேயே இறந்தார்.

புஷ்கினின் ‘நிலைய அதிகாரி’ சிறுகதை திரைப்படமாகவும் நாடகமாகவும் பலமுறை மறுவாக்கம் பெற்றுள்ளது.

 

The post நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின் first appeared on கனலி.

  •  

சல்பாஸ்

முருகேசன் தன்னுடைய சகா சொன்னபடி காதை, மூப்பு யானையின் தும்பிக்கையைப் போலவிருந்த, தென்னை மரத்தின் கறுத்த தண்டில் அழுத்தி வைத்து, உள்ளுக்குள் ஓடுகிற சத்தத்தைக் கேட்டான். “ஏயெப்பா கரெண்ட் அடிக்கிற மாதிரி விசுக்குன்னு கேட்குதே? சொய்ங்க்னு ஏதோ காந்த சக்தி உள்ளுக்குள்ள இழுக்குது. சல்பாஸ் மாத்திரைக்கு அம்புட்டு பவரோ?” என்றான் வியந்தபடி. தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளைக் கொல்வதற்கு வைக்கப்படும் அந்த மாத்திரையின் வீரியத்தைப் பற்றித்தான் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். அது காலம்காலமாக அங்கே இருக்கிறதுதான். ஆனாலும் அன்றைக்குச் செவலைபட்டியின் முக்கியப் பேசுபொருளாக அது ஆகியிருந்தது.

வானை முட்டுகிறளவிற்கு வளர்த்தியாய் பல தலைமுறைகள் கண்ட மரமென்றாலும், சுண்டுவிரல் நகக்கண்ணிற்கும் சிறியதான அளவிலிருக்கிற இத்துனூண்டு காண்டாமிருக வண்டு உள்ளுக்குள் குடிபுகுந்து விட்டால் போட்டுத் தள்ளிவிடும். ஆற அமர உள்ளுக்குள் குடியிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து மரத்தின் அடிவேரையே தின்று சாய்த்து விடும். ”தம்மாத்துண்டு வண்டுதான். ஆனாலும் சனியன் உள்ளார புகுந்திருச்சுன்னா கோட்டையையே சாய்ச்சுரும்” எனச் சொல்லி அளவைக் காட்டிலும் வீரியமே முக்கியம் என்பதை உணர்த்துவார்கள். மச்சு வீட்டுக்காரச் சுப்பையாவின் பேரிலேயே குடைவையும் உடைவையும் குறித்த அந்த ஆராய்ச்சி நடந்தது.

சிவனருந்திய ஆலகால விஷத்தைத் தின்றவனைக் கூடக் காப்பாற்றி விடலாம். ஆனால் அந்த மாத்திரை தின்றவனை அந்தச் சிவனே வந்தாலும் காப்பாற்ற ஏலாது என்பது ஊருக்கே தெரியும். அதனால்தான் பொம்பளையாட்கள் மூக்கைக் கசக்கிக் கொண்டு போய் நின்றால், மருந்துக் கடைக்காரர்கள் தரமுடியாதெனத் துரத்தி விடுவார்கள். ஆனால் சுப்பையாவிற்கு அது எப்படிக் கிடைத்திருக்கும் என்கிற சிறுபிள்ளைத்தனமான பேச்சும் அங்கே நிலவியது. “ஏப்பா படிச்சவருன்னாலும் அவருமே சம்சாரிதானப்பா? ஒருகாலத்தில நிலபுலன்னு வாழ்ந்த குடும்பம்தானே? சம்சாரி போயி நின்னு கேட்டா மருந்துக்கடைக்காரன் இல்லைன்னு சொல்ல முடியுமா? அவரு வீட்டிலயே நாலு தலைமுறை கண்ட மரமெல்லாம் நிக்குதேப்பா” என்றார் சம்சாரியான ஆவுடையப்பன்.

வெளியூர் வேலைக்குப் போன ஆட்களைக்கூட வரச் சொல்லி விட்டார்கள். மச்சுவீட்டின் கடைசிக் குட்டியை நன்றாக வழியனுப்பி விடவேண்டும் என்கிற பரிதவிப்பு ஊர்த்தலைவருக்கு இருந்தது. முதலில் விஷயம் அவருக்குத்தான் தெரியவந்தது. மச்சுவீட்டின் கடைசியாய் மிச்சமிருக்கிற ஏழரை ஏக்கரா கரிசல் பூமியில் சுப்பையா குப்புற விழுந்து கிடப்பதாகச் செய்தி கிடைத்ததும் ஓட்டமும் நடையுமாய்ப் போனவர் அவர்தான்.

“போயி ஒடம்பை தொடறேன். தீக்கங்கை தொட்டாப்பில சூடு. கையை படக்குன்னு பின்னாடி இழுத்துட்டேன் என்னையறியாமலேயே. சத்தம் போட்டு பருத்தி காட்டில இருந்து ஆட்கள் ஓடி வந்து என்னோட சேர்ந்து தூக்கறாங்க. தூக்க முடியலை. உச்சி சூரியன் மாதிரி உடம்பில இருந்து சூடு எங்க கையில இறங்குது. தின்னது அந்த மாத்திரைச் சனியந்தான்னு முடிவே பண்ணிட்டேன். இடையில பொத்துன்னு சூடுதாங்காம கீழே வேற போட்டுட்டோம். மண்ணில விழுந்து அவரு புரண்டதை பார்க்கையில மனசே அத்துப் போச்சு” எனப் பார்க்க வந்தவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஊர்த்தலைவர்.

மருந்தடித்த உடம்பு என்பதால் சீக்கிரம் தூக்கிக் காடு சேர்த்துவிட வேண்டும் எனப் பேசிக் கொண்டார்கள். “போலீஸ்காரங்களுக்கு தகவல் தெரிவிக்கணுமா? நாளைப் பின்னே சிக்கல் வந்துறக் கூடாதுல்ல?” என்றார், பலதையும் புகையிலையைப் போல வாயில் வைத்து நமுட்டிக் கொண்டிருக்கிற பழக்கமுடைய நமச்சிவாயம். “அதெல்லாம் வேண்டாம்பா. வெகுபாடுபட்டு தூக்கி வளர்த்த செல்ல குட்டி. அதோட ஒடம்பை கூறு போட்டா நல்லா இருக்குமா? எனக்கும் மருமவன் முறைதானே? நாளைப் பின்னே என்ன வந்தாலும் நான் பார்த்துக்குறேன். சாகுற வயசா இது? அப்படியென்ன மனத்தாங்கல் அவனுக்கு?” என வெட்டவெளியை வெறித்துப் பார்த்துச் சொன்னார் ஊர்த்தலைவர்.

மச்சுவீட்டுச் சுப்பையாவைப் பூப்பல்லக்கில் வைத்து ராஜமரியாதையுடன் சுடுகாட்டிற்குக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. மச்சுவீட்டின் வாசலை அடைத்த மாதிரி ஓலைப்பந்தல் போட்டார்கள் உடனடியாகவே. அண்டா கணக்காய் இருந்த லோட்டாவில் கடுங்காப்பியும் பைநிறையக் காராச்சேவும் முனியாண்டி கடையில் இருந்து குட்டியானையில் வந்திறங்கியது. அந்த மோட்டார் வண்டிக்குக் குட்டியானை என ரசனையாகப் பெயர்வைத்தவன் எவனோ என்கிற பேச்சுமே ஓடியது. சுப்பையா இருந்திருந்தால், படித்தவர் என்பதால் அதற்கு மிகச் சிறந்த விளக்கம் சொல்லியிருப்பார், அப்படி ஒவ்வொன்றைப் பற்றியுமே கருத்தாகப் பேசக்கூடிய ஆள்தான் என்றுமே ஒருத்தர் சொன்னார். காராச்சேவை மென்று, கடுங்காப்பியை ஊதி உறிஞ்சிக் குடித்தபடி ஒருமுழுவாழ்வை அசைபோட்டது ஊர்.

சுப்பையாவின் கொள்ளுத்தாத்தா நவரத்தினம்தான் அந்த ஊருக்கு முதன்முதலாய் வழிநடையாய் வந்து சேர்ந்தவர். அதுநடந்து நூறு வருஷங்களுக்கு மேலே இருக்கலாம் என்பார்கள். அவர் கிளம்பி வந்த கதையை ஆயிரம் தடவையாவது அவர் வாழ்ந்த காலத்தில் சொல்லி இருப்பார். பிறகு அவருடைய தலைமுறையும் அந்தக் கதையைச் சொல்லிக் கொண்டே இருந்தது. வயது முதிர்ந்த ஊர்ப் பூவரச மரத்தைக் கேட்டால்கூட மென்மையாய்த் தலையாட்டிச் சொல்லி விடும் அந்தக் கதையை. ஏனெனில் அதுவே அந்த ஊரின் பெரும்பாலான பேருக்குப் பூர்வீகக் கதையாகவும் இருந்தது. அந்தக் கதையும் காலமும் மறுபடி அந்தவூரைப் போர்த்திய நிலவொளியைப் போலப் பரவி மீள நிகழ்ந்தது.

நவரத்தினத்திற்கு தான் வாழ்ந்தவூரில் ஏதோ மனச்சடைவு. தன்னுடைய பொண்டாட்டி பிச்சையம்மாளை  அழைத்துக் கொண்டு, கையில் இருக்கிற சொர்ணத்தைப் பத்திரம் பண்ணிக் கிளம்பத் தீர்மானித்து விட்டார். வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் குறித்த அச்சமும் அப்போது ஊருக்குள் நிலவியது. அதுமட்டுமா காரணம்? அவருக்குமே வழித்துணைக்கென ஆட்கள் தேவைப்பட்டார்கள் அப்போது. அவரது மனம் கூட்டாய் அக்காரியத்தைச் செய்ய விரும்பியது. வழியில் தலைச்சுமையை இறக்கி வைக்க ஒரு தாங்குகல்லைத் தேடுவதைப் போலப் பரபரப்பாக இருந்தது மனம்.

அவருடைய வீட்டிற்கு வெளியே குடிசைபோட்டுத் தங்கியிருந்த குடியானவன் முத்துராசாவை நோக்கிப் போனார். அவனுக்குக் கடந்த ஐப்பசியில்தான் கல்யாணம் முடிந்து இருந்தது. புதுப் பொண்டாட்டியோடு படுத்துக் கிடக்கிறவனை எழுப்பலாமா? என்கிற யோசனையும் வந்தது நவரத்தினத்திற்கு. குடிசையின் வாசலில் சற்றுநேரம் அமைதியாய் நின்றார் நவரத்தினம். ஆனால் அசைவைக் கண்ட சாரைப் பாம்பைப் போல உள்ளிருந்து, “சாமி என்ன வேணும்? ஏதும் அவசரமா?” எனக் குரல் வந்துவிட்டது. அவனது கூருணர்வு குறித்து அந்த நேரத்திலும் மெச்சிக்கொண்டார் நவரத்தினம்.

அவனுடைய பொண்டாட்டி பேச்சியுமே கண்ணைக் கசக்கிக் கொண்டு தவழ்ந்த முந்தானையைச் சரிசெய்தபடி வெளியே வந்து நின்றாள். அவள் உடையைச் சரிசெய்யும் பொருட்டு பார்வையைத் தூரத்தில் சிறிதுநேரம் தளர்த்தி பின்னர் அதைமீட்டு, “வேற ஊருக்கு போயிடலாம்ணு கெளம்பிட்டோம். நீங்களும் கூட வர்றீங்களா?” எனக் கேட்டார் நவரத்தினம். மொத்தமாய்க் கேட்டதுதான் என்றாலும், கேள்வி அவளது மடியிலேயே விழுந்தது. நிறைந்த பௌர்ணமி ஒளியில் அவளுடைய கண்கள் மினுக்கின. அவள் தயக்கமே இல்லாத குரலில், “சொந்த மண்ணை விட்டு எதை நம்பி கிளம்பி வர்றது சாமி?” என்றாள். முத்துராசா அவளை முடிவெடுக்கவிட்டு ஒதுங்கி நின்றதை நவரத்தினம் உணர்ந்து கொண்டார்.

“பறவைக்கு புழுபூச்சி தானியம் கெடக்குற எல்லா மண்ணும் சொந்த மண்தான் தாயீ. ஆயுசுக்கும் உங்களைக் கைவிடமாட்டேன். ஒங்களுக்கு மட்டுமில்லை. இனிமே வரப் போற உங்க தலைமுறைக்கும் சேர்த்து நல்லது கெட்டதுக்கு தாய்மாமன் சீரை தந்திடறேன். வார்த்தையை நம்பி கெளம்பி வாங்க” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவெனத் தனது வீட்டை நோக்கிப் போனார். திரும்ப வருகையில் பிச்சையம்மாளுமே உடன் பின்னால் நடந்து வந்தாள்.

அதற்குள் அவ்விருவரும் மனதளவில் கிளம்பத் தயாராக நின்றனர். அந்த நிலவொளியைச் சாட்சியாக வைத்துக் கொடு என்பதைப் போலத் தலையை அசைத்தார் நவரத்தினம். தன்னுடைய சுருக்குப் பையிலிருந்து வெள்ளிக் காசொன்றை எடுத்து அவளிடம் கொடுக்க முயன்றாள் பிச்சையம்மாள். அப்போது அவளது கையைப் பிடித்துக் கொண்டு நவரத்தினம், “எம் பேரே ரத்தினம்தான். ரத்தினமெல்லாம் நிறைஞ்சு கொட்டிக் கிடந்தாலும் இந்தப் பூமிக்கு ராசாங்கறது சொர்ணம்தான். இந்தப் பூமியே மஞ்சள் பூத்து நிறை சுமங்கலியா ஜொலிக்குது இல்லையா? அதனால சொர்ணத்தை மட்டும் கொடு. இது என் கட்டளை” என்றார் பூமியதிர்கிற மாதிரியான சத்தத்துடன். அவர் அப்போது யானைமேல் வீற்றிருக்கிற அய்யனாரைப் போலவே பிறரது கண்களுக்குத் தெரிந்தார்.

தன்னுடைய பையில் இருந்து மின்னுகிற மஞ்சள் சொர்ணத்தை எடுத்து அவளது கையில் கொடுத்தாள் பிச்சையம்மாள். அதன்பிறகு அவள் வாழ்நாள் முழுவதும் சொர்ணத்தை அக்குடும்பத்தின் கைகளுக்குக் கடத்தியபடியே இருந்தாள். சொர்ணத்தையும் அதற்கு நிகரான சொல்லையும் வழித்துணையாக வரித்து, அந்நால்வரும் நிலவொளியை ஊடுருவி தானியங்கள் சிதறிக்கிடக்கிற மண்ணைத் தேடிக் கிளம்பினார்கள்.

வந்துசேர்ந்த செவலைப்பட்டியில் சொர்ணத்தைப் பண்டமாக்கி இருபது ஏக்கர் கரிசல் பூமியை வாங்கிச் சீர்திருத்தினார்கள் எல்லோரும் சேர்ந்து. சிதறிக் கிடக்கிற தானியங்களைப் பொறுக்கவந்த வலசை போகிற பறவைகள்தான் என்ற போதிலும், அப்பூமி அள்ள அள்ளக் குறையாத தானியங்களை அவர்களது குதிருக்குள் பண்டமாற்றாய்ச் சேர்த்து நிறைத்தது. “கொழுத்தவனுக்கு கொள்ளு. எளைச்சவனுக்கு எள்ளு” எனச் சொல்லி முதன்முதலில் எள்தான் விதைத்தார் நவரத்தினம். ஆனால் கொழுத்துப் போகிற அளவிற்குத்தான் அப்புறம் அவர்களுக்கு விளைச்சல் இருந்தது.

அவர்களது வைராக்கியத்தைக் கண்டு ஊரே வியந்தது. “வேற வழியே இல்லைன்னு அதோட காலைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டு பாடுபடறவன் சொல்பேச்சைத்தான் நிலம் நல்லா கேக்குதுப்பா” எனப் பேசிக் கொண்டார்கள். நவரத்தினத்திற்கு ஆணிரண்டு மகவு ஒன்றென மூன்று குழந்தைகள். போட்டியாய்ப் பேச்சியுமே அதேமாதிரி மூன்று குழந்தைகளைப் பெற்றுப் போட்டாள். கூலிக்குப் பேசிக் கூட்டிக் கொண்டு வந்தவர்கள்தான் என்ற போதிலும் முத்துராசா குடும்பத்தை உறவைப் போலக் கருதி, எந்த விலக்கமும் காட்டவில்லை நவரத்தினம். அதனால் பேச்சியின் குதிருமே மனதாரக் குளிர்ந்தது.

சொன்னசொல் மீறாமல் பேச்சியின் குழந்தைகளுக்குக் காதுகுத்தில் துவங்கி கல்யாணம் வரை அத்தனைக்கும் தவறாமல் செய்வதெற்கென ஒரு முறையையும் வகுத்து வைத்திருந்தார் நவரத்தினம். பனை ஓலைப்பட்டி நிறையக் கருப்பட்டியைக் குவித்து அதன் உச்சியில் மினுக்குகிற சொர்ணத்தை வைத்துக் கிழக்குப் பார்த்து நின்று கையளிப்பது. அப்படியான முறையை அந்தவூரும் முதன்முறையாக அதிசயம் போலக் கண்டது.

வெவ்வேறு மாதிரி அதைக் குறித்துப் பேசிக் கொண்டார்கள். “அந்தக் காலத்தில ராசாக்கமார் இப்டீத்தான் தன் குடியானவங்களுக்கு தருவாங்களாம். ஆயிரம் சாமி இருந்தாலும், சொன்ன சொல்லை காப்பாத்துறவந்தான் இந்தப் பூமிக்குச் சாமி. அந்தவகையில நவரத்தினம் தான் பேருக்குத் தகுந்தாப்பில நடந்துக்கிறாரு” எனச் சொல்கிறவரிடம், “அவரு இருக்கறவரைக்கும் நடக்கும்யா. சொல்லை விட்டவன் போய்ச் சேர்ந்த அன்னைக்கு அந்தச் சொல்லுமே செத்து போயிரும் கேட்டீயா? அதுதான் ஒலக வழக்கம்” என்பார் இன்னொருத்தர்.

எல்லோருமே நவரத்தினம் சாவதற்காக அல்லாமல், அந்தச் சொல் எதிர்காலத்தில் என்னவாக மாறப் போகிறது என்பதைக் காணக் காத்திருந்தார்கள். பிள்ளைகள் நிலத்தில் பருவம் பார்க்கத் துவங்கிய காலத்தில் நவரத்தினம் நடமாடமுடியாமல் சுணக்கமானார். முத்துராசாவுமே வீட்டிற்குள்தான் ஒண்டிக் கிடந்தார். அதற்கு முன்னே பேச்சி ஊருக்குள் புதிதாய்த் தட்டுப்பட்ட காலரா நோய் தாக்கிச் செத்துப் போயிருந்தாள்.

நவரத்தினத்திற்கு இழுத்துக் கொண்டு படுக்கையில் படுத்துக் கிடந்தபோது, ஊர்க்காரர்களின் அறிவுரைப் படி இன்னொரு பக்கம் படுக்கையில் கிடந்த முத்துராசாவைத்தான் அழைத்துக் கொண்டு வந்து பாலூற்ற வைத்தார்கள். கைகள் நடுங்க முத்துராசா கடைசிப் பாலை அவரது வாயில் விட்டார். இறுதியாய் அவரது கரத்தைப் பற்றிக் கொள்ள முத்துராசா முயன்ற போது அதனுள் ஒரு சொர்ண நாணயத்தைக் கண்டார். நவரத்தினம் செத்த அடுத்த வாரத்திலேயே முத்துராசாவையும் காடு வாவென அழைத்துக் கொண்டது.

“ரெண்டு பேருமே வைராக்கியமானவங்க. ஆண்டான் அடிமை மாதிரியா நடந்துக்கிட்டாங்க? கூட பொறந்த பொறப்பு கணக்கா நடந்துக்கிட்டாங்களே? அடுத்தடுத்து நிறைவா போய் சேர்ந்திட்டாங்க பாரு” எனப் பேசிய ஊர், அந்த முறைகுறித்துக் காணத் துடித்தது. முத்துராசாவின் குடும்பத்திற்குமே பிள்ளை குட்டிகள், பேரன்கள் எனவுயிர்ச் சங்கிலி வளர்ந்திருந்தது தனியே. நவரத்தினத்தின் மூத்த மகன் சிவனேசன் ஊருக்கே அறிவிக்கிற மாதிரி, முத்துராசாவின் மகன் வயிற்றுப் பேத்திக்கு அந்த முறையைச் செய்தார்.

அவர் ஊரின் அரசல்புரசலான பேச்சுக்களை அறிவார். தன்னுடைய தந்தையை மீறித்தாண்டி சிவனேசன், இரண்டு பனையோலைப் பெட்டிகள் நிறையக் கருப்பட்டியும் சொர்ணமும் எனப் புதிய முறையைத் துவக்கி வைத்தார். “சொல் போட்டா சொல்தான் விளையும்ப்பா” என்றது ஊர் அதைப் பார்த்து. சிவனேசன்தான் அந்தவூரில் முதன்முறையாக மச்சு வீடு கட்டினார். அதன் பேரிலேயே அக்குடும்பம் மச்சுவீட்டுக் குடும்பமென அழைப்படலாயிற்று.

அந்த வீட்டிலிருந்த தானியங்களை நிறைத்து வைக்கிற குதிரைக் காணவே ஜனங்கள் முண்டியடித்தார்கள். “அடேயப்பா முத்துன யானை ஒண்ணு அதுக்குள்ளாற ஒளிஞ்சுக்கலாம். அப்படி ஒரு குதிரு. ராசாக்கமரு குதிரு. வத்தாத சீவநதி” என அதைப் பார்த்த ஜனம் வியந்தது. சிவனேசனின் கூடப் பிறந்த இளையவன் பருவங்களைப் பார்ப்பதற்கு முன்னமே ஜன்னி கண்டு சீக்கிரமே செத்துப் போனான். தங்கையை அசலூர்க்காரச் சம்பந்தத்திற்குத் திருமணம் செய்து வைத்தார். அவளுடைய திருமணம் ஊரே வியக்கிற மாதிரி ஐந்து நாட்கள் நடந்தது. அந்த ஐந்து நாளுமே ஒரு வீட்டில்கூடச் சமைக்கக்கூடாது எனத் தலையாரியை விட்டுத் தமுக்கடிக்க வைத்தார்கள். அப்படியும் யாராவது மனம் கோணி விடுபட்டு விடக்கூடாது என்பதால், ஊர்க் கோவிலின் முன்நின்று துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பொதுக் கும்பிடு போட்டார் சிவனேசன்.

”ஆயிரம்தான் பணம் வந்தாலும் மனுசண்ட்ட அந்த பண்பு கொறையல பாத்தீயா? மனசாரக் கொடுக்கணும்னு நினைக்கறவனோட கை எப்பவுமே தணிஞ்சுதான் போகும்” என்றார் அப்போது ஊர்த் தலைக்கட்டாக இருந்த ராசவேலு. அந்த ஐந்து நாட்களுமே பந்தல் போட்டுப் பந்தி விரித்து ஊருக்கே சோறு பொங்கிப் போட்டார்கள். வடக்கே இருந்து சமையல்காரர்களை அழைத்துவந்து, அதுவரை அந்த ஊர் பார்த்தேயிராத விதம்விதமான இனிப்புகளைச் சுட்டு இலையில் பரப்பினார்கள்.

இறுதியாய் நாக்கிற்கு எந்தக் குறையும் வைத்து விடக்கூடாது என்பதற்காக, மங்கலநாண் ஏறி பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகு, நூறு கெடாக்களை வெட்டிக் கறிவிருந்தும் போட்டார்கள். அப்படியொரு திருமணம் நடந்தது அந்த ஊரில் அதுவே கடைசி. அந்தத் திருமணம் குறித்த கதைகள் வழிவழியாய்ச் செவிகளுக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருந்தன.

ஊருக்கே ஓடியோடிச் செய்கிற மனசிருந்தாலும் சிவனேசனுக்குப் பிறந்தது ஒற்றைப் பிள்ளைதான். அதைப் பெற்றதுமே அவருடைய மனைவிக்கு மேலுக்கு முடியாமல் போய்விட்டது. மேலும் குழந்தைகளுக்காக வேறு கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்திய போதும் விடாப்பிடியாக மறுத்து விட்டார் சிவனேசன். ஆனால் அந்தப் பக்கம் முத்துராசாவின் குடும்பம் வாகை மரத்தைப் போலத் தலைவிரித்துப் பெருகி வளர்ந்தது. எங்கெங்கு காணினும் பிள்ளைகள் பல்கிப் பெருகினர்.

சிவனேசனுக்குப் பிறந்த சீனிவாசன் தன்னுடைய தந்தையைப் போலவே கொடுத்து உதவுகிற உள்ளம் படைத்தவனே. ஆனால் அவனுக்குக் குடும்பத்துச் சொத்தான உழைப்பு ஈடேறவில்லை. சிவனேசனின் மனைவி காமாட்சி நல்லமாதிரியாக இருக்கையிலேயே, முடித்துவைத்துவிட வேண்டுமென சீனிவாசனுக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைத்தார்கள்.

அசலூர்க்காரியான அந்த வந்தவளுக்குமே புருஷனை உருட்டி மிரட்டி வேலை வாங்கத் தெரியவில்லை. அந்தப் பருவத்தில் அவர்களது நிலத்தில் பருத்தி குழிக்கு நான்கு மூட்டைகள் மட்டுமே வந்தது. அந்தக் கணக்கைக் கேட்டதும் சிவனேசனால் தாள முடியவில்லை. எழுந்து உடல் சொல்வதைமீறி ஏர் பிடிக்கலாம் என உள்ளம் எண்ணியது. பதினொரு மூட்டைகள் எடுக்கிற நிலத்தில் வெறும் நான்கு மூட்டைகளா? எனத் திகைத்துப் போனார். அந்த மச்சு வீட்டின் எதிர்காலம் எதுவென அவருக்கு நன்றாகப் புரிந்து போனது.

ஆனால் மகனோடு அப்போது பேச்சுவார்த்தையைக் குறைத்துமிருந்தார். மனைவி இருந்திருந்தாலாவது அவள் வழியாகப் புத்தி புகட்டியிருக்கலாம். அவளுமே சீனிவாசன் குறித்த கவலையினாலே சீக்கிரம் போய்ச் சேர்ந்தாள். புழுங்கின அரிசியைப் போலத் தனக்குள் குமைந்து ஆள் குற்றுயிரும் குலையுயிருமாக மாறிப் போனார். “மீனாட்சி கல்யாணத்துக்கு வந்து நின்ன கள்ளழகர் மகசாரா கணக்கா இருந்தவரோட நிலைமையை பார்த்தீயா? தர்மம் தலைகாக்கும்ணு எல்லாம் சும்மா சொல்லி வச்சதுப்பா. அதுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை” என்றனர் அவருடைய சேக்காளிகள்.

தனக்கு முடிவு நெருங்கி விட்டதை சிவனேசன் உணர்ந்தார். மச்சு வீட்டின் மாடியில் வாடைக் காற்றுக்கு இதமாய்க் கம்பளியைப் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்த அவர், கீழே நடந்து போன சீனிவாசனை நோக்கி முடியாமல் குரல் கொடுத்தார். நிமிர்ந்து பார்த்த சீனிவாசன் துடித்துக் கொண்டு மாடிப் படிகளேறி ஓடினார். அங்கே சீனிவாசனை நிறுத்திவைத்து இறுதியாய், “இங்க பாரு. உன் ஏழு ஜென்மத்துக்கும் உக்காந்து சாப்பிடற அளவுக்கு சேர்த்து வச்சிட்டேன். ஆனா ஒண்ணு உக்காந்து நொறுக்கி தின்னா குன்றா இருந்தாலுமே சீக்கிரமே காணாம போயிடும். அதை மனசில வச்சிக்கோ. என்னைக்குமே எங்கப்பாரு சொன்ன சொல்லை மட்டும் காப்பாத்தி குடுத்திடு. உனக்குப் புண்ணியமா போகும். ஒரு தகப்பனா உண்ட்ட நான் கேட்கிற கடைசி யாசகமாகூட இதை எடுத்துக்கோ” என்றார்.

அப்பாவின் மறைவிற்குப் பிறகு சீனிவாசனுமே அந்தச் சொல்லை மீறவில்லை. ஆரம்பத்தில் எதிர்த்த தன் மனைவியிடம், “என்னைக்கூட வகுந்து போட்டிரு. ஆனா அந்த முறையில மட்டும் கையை வச்சீன்னா, உன்னைக் கொன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்” எனத் தெளிவாகச் சொல்லி விட்டார். பாரியாளின் நெருக்கடி காரணமாக, அவருடைய காலத்தில்தான் நேரில் போய்ச் செய்வது என்பது மாறி, முத்துராசாவின் குடும்பம் மச்சு வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும் முறை என மாறியது.

காதுகுத்து, சடங்கு, கல்யாணம் எனப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு மச்சு வீட்டின் வாசலில் வந்து நின்று மிருதங்கம் வாசிப்பார்கள். அந்த இசையினூடே வீட்டின் மேல்மாடியில் இருந்து சீனிவாசன் கையில் ஒரு பனையோலைப் பெட்டியுடன் இறங்கி வருவார். அதுவொரு தெய்வ வாக்குச் சொல்லும் சடங்கைப் போலவே நிகழ்ந்தது. ஏற்கனவே மனதளவில் மேனாமினுக்கியான சீனிவாசனுக்குமே மரியாதை கிடைக்கிற அந்தச் சடங்கு பிடித்திருக்கவும் செய்தது. பனையோலைப் பெட்டியைப் போலவே சொர்ணத்தின் அளவும் சுருங்கிக் கொண்டே வந்தது.

கொடுப்பதற்கான மனம் சுருங்கவில்லை சீனிவாசனிடம். மாறாகத் தன்னிடம் இருப்பதைப் பெருக்குவதற்கான உழைப்பு அவரிடமிருந்து விடுபட்டுப் போயிருந்தது. அவருக்குமே ஒத்தை பிள்ளைதான் பிறந்தது. “மூத்த ராசா ஊர்ல இருந்து கெளம்பறப்பயே ஏதாச்சும் சாபத்தை வாங்கிக் கட்டிக்கிட்டு வந்திட்டாரான்னு தெரியலையே?” என அவர் காதுபடவே பேசினார்கள். இரண்டாவதாக வைப்பாட்டி ஒருத்தியை வைத்தும் பார்த்தார். ஒன்றுமே அதற்கெடுத்து பேரவில்லை அவரது வட்டிலில். அப்பா தந்துவிட்டுச் சென்ற குதிருமே கொஞ்சம் கொஞ்சமாய் இளைக்கத் துவங்கியது.

சீனிவாசனின் பையன் ரத்தினம் தலையெடுத்த காலத்தில் பாதிச் சொத்துக்கள் எங்கே போனதெனத் தெரியாமலேயே, எள்ச் செடிமீது படிந்திருந்த பங்குனிப் பனித் துளிபோலக் காணாமல் போயிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் மனதிலிருந்து மச்சு வீடு குறித்த கதைகளும் மறையத் துவங்கின. மச்சு வீட்டின் பழம்கதைகளைத் தெரிந்தவர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்த பிறகு, அடுத்து வந்த தலைமுறைக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லாமல் போனது. பனையோலைப் பெட்டிச் சடங்கெல்லாம் அந்தவிரு வகையறாக்களுக்கு மத்தியில் காதுவைத்த மாதிரி நடக்கிற சிறு சடங்காகச் சுருங்கி விட்டது. அவர்களுமே கொட்டடிக்கிற காரியத்தை எல்லாம் நிறுத்திவிட்டு, கல்யாணம் காய்ச்சி என வந்தால் பத்திரிகையைக் கொண்டு போய் நீட்டுவார்கள். பனையோலைப் பெட்டி இருக்கிறதோ இல்லையோ, ஆனால் தவறாமல் சொர்ணத்தைத் தந்துவிடுவார்கள்.

அள்ள அள்ளக் குறையாமல் இருந்த குதிர் காசநோய் பீடித்தவனின் உடலைப் போல மேலும் சுருங்கவும் துவங்கியது. ரத்னத்திற்குப் பிறந்த பையன்தான் சுப்பையா. அவனுக்கு அடுத்து மகளொன்று பிறந்து கடுங்காய்ச்சல் கண்டு ஏழுவயதிலேயே இறந்து விட்டாள். சுப்பையாவிற்கு அவனுடைய கொள்ளுத்தாத்தா நவரத்தினத்தின் முகச்சாடை. அந்தக் காலத்தில் தான் சிறுபையனாக இருக்கையில் அவனுடைய தாத்தாவை பார்த்திருந்த முதியவர் ஒருத்தரே அதைக் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள். அந்த வகையில் அந்த வம்சத்துத் தொடர்ச்சியை நினைத்து மெச்சிக் கொண்டார் ரத்தினம்.

ரத்தினம் இருப்பதை வைத்து முட்டி மோதிப் பார்த்தார். அவரால் பெருக்க முடியவில்லை, ஆனாலும் கூடுமான வரை பெருங்காயத்தைக் கொண்டு போய் ஆற்றில் கரைக்காமல் பார்த்துக் கொண்டார். ரத்தினத்தின் மனைவியுமே கடுமையான உழைப்பாளிதான் என்ற போதிலும், போட்ட உழைப்பிற்கான பலன் கைக்கு வராமல் தட்டிப் போனது கண்டு புழுங்கியே கிடந்தனர், கோடையிடி கண்டு வெம்பிய மாங்காயைப் போல. இருப்பதை யாருக்கும் தெரியாமல் விற்று, சுப்பையாவை சென்னைக்குப் படிக்க அனுப்பினார்கள். அவனுமே நன்றாகத்தான் படித்து முடித்து ஊர் திரும்பினான்.

பக்கத்து நகரத்தில் தொழில் துவங்குகிறான் எனச் சொல்லிச் சில சொத்துக்களை அவன்பேரில் விற்கவும் செய்தார்கள். அவனுக்குமே ஒன்றும் துலங்கி வரவில்லை. அவன் தன்னுடைய தாத்தாவை போலவே மேனாமினுக்கியாக இருந்ததை ஊரில் சிலர் அடையாளம் காணவும் செய்தார்கள். ஆனால் குணமென்று வருகையில் தங்கப்புள்ளை எனச் சான்றிதழும் தருவார்கள்.  அவனுக்கு பெண் தரலாம் என வண்டியில் வந்து இறங்குகிறவர்களிடம், “பையன் செம்பு கலக்காத அசல் தங்கம். ஆனா பாருங்க உங்க பிள்ளைத்தான் உழைச்சு அவனை காப்பாத்தணும்” என ஊர்க்காரர்கள் சொல்வதுமே நடந்தது.

அதன்காரணமாகவே அவனுக்கு நடக்கவிருந்த திருமணங்கள் தட்டிப் போய்க் கொண்டுமிருந்தன. அந்தக் கவலையிலேயே ரத்தினமும் அவர் பொண்டாட்டியும் சீக்கிரமே சர்க்கரை முற்றிச் செத்துப் போனார்கள். வரிசையான சாவுகள் தந்த மனவழுத்தத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனான் சுப்பையா. பொழுதிற்கும் மச்சு வீட்டில் தனியாக மேலே அமர்ந்திருப்பான். கீழே போகிறவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துக் கையில் ஏதாவது காசைக் கொடுத்து விடுவான்.

“அப்படியே உங்க தலைமுறையோட ஈகை கொணம் உங்களுக்கும் வந்திருச்சு சாமி” என அவர்கள் புகழ்வதைக் காதுகுளிரக் கேட்டுத் திருப்தியடைந்து கொள்வான். முத்துராசாவின் வழிவழி வேர்களைச் சேர்ந்தவர்கள் வரும்போதெல்லாம் தன்னுடைய தாத்தாக்கள் குறித்த கதைகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொள்வான். அக்காலக் கதைகளைக் கேட்கையில் அவனுக்குப் புல்லரித்து அடங்கும். சொத்துக்களை விற்று தன் செலவு போக, மற்றவர்களுக்குக் கொடுத்து, தம்பழைய சடங்கை பேணி என உள்ளுக்குள் ஒரு வாழ்க்கை வாழ்ந்ததில் அவனுக்குமே நாற்பத்தைந்து வயதாகி விட்டது. மச்சு வீட்டின் சுவர்களில் சில இடங்களில் காரையும் பெயர்ந்திருந்தது.

முதல் தலைமுறையின் பெண்வழி உறவினர்கள் வந்து மிச்சமிருக்கிற சொத்துக்களைப் பிரித்துக் கொண்டும் போனார்கள். மச்சு வீட்டைக் குறித்துப் பேச்சு வார்த்தை நடந்த போது இப்போது இருக்கிற ஊர்த்தலைவர்தான், “இங்க பாருங்க. அது வெறும் மச்சு வீடு மட்டுமில்லை. அது இந்த ஊரோட அடையாளம். ஒரு சொல்லோட அடையாளம். அப்புறம் அவன் இருக்கறதுக்குன்னு ஒரு எடம் வேணும் இல்லையா? தயவு செஞ்சு அதுமேல மட்டும் கையை வைக்காதீங்க. நீங்களும் இப்ப நல்லாத்தானே இருக்கீங்க. கோர்ட்டு கேஸூன்னு அலையறது ஒரு பெரிய குடும்பத்துக்கு அழகா?” எனத் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதன்பேரிலேயே அந்த வகையினர் அந்த மச்சு வீட்டையும் சுப்பையாவையும் தனியாய் விட்டு விட்டுக் கிளம்பிப் போனார்கள். சுப்பையாவின் மீது உண்மையான அன்பிருப்பவர்கள் மட்டும் அந்த இருண்ட வீட்டினுள் படியேறிப் போய்ப் பார்த்து விட்டு வருவார்கள். மற்றபடி அவனே பொங்கியுண்டு தனியாக ஒரு வாழ்க்கையை நகர்த்தினான். அவனுடைய முந்தையை தலைமுறை குறித்த கதைகளை மட்டும் கதகதப்பாய் வைத்துக் கொண்டு, மழையில் ஒடுங்கிய பறவையையொத்த நினைவுகளைச் சிறகுகளைப் போல ஆட்டி மச்சுவீட்டின் உச்சியில் தனித்து அமர்ந்திருந்தான்.

அப்படி அமர்ந்திருந்த ஒருநாள் வாசலில் யாரோ வந்து நிற்கிற சத்தம் கேட்டது. மேலிருந்து குனிந்து கீழே பார்த்த போது தாம்பூலத் தட்டோடு நாலைந்துபேர் நிற்கிற காட்சி தெரிந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான் சுப்பையா. முகத்தைக் கழுவித் துடைத்து, நெற்றியில் விபூதியைச் சாற்றிச் சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கிப் போனான். முத்துராசா வம்சாவழியினரில் ஒருத்தர் தன்னுடைய பேத்திக்கு காதுகுத்து வைத்திருப்பதாக பத்திரிகை கொண்டு வந்திருந்தார்.

அவர்களைத் தாழ்வாரத்தில் நிற்கச் சொல்லி விட்டு வீட்டிற்குள் போய் ஒன்றரை ஆள் உயரத்திற்கு நின்ற பழைய மரப்பீரோவைத் திறந்து துழாவினான். துணிகளை எல்லாம் எடுத்துத் தரையில் போட்டுத் தேடிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாய்ப் பரணில் இருந்த பழைய பெட்டி ஒன்றை இறக்கி, பூட்டை உடைத்துத் திறந்து தரையில் கவிழ்த்துப் பார்த்தான். அதில் கடைசியாய் ஒரு சொர்ணக் காசு மட்டுமே மஞ்சள் துணியில் சுற்றிய நிலையில் மிஞ்சியிருந்தது. எந்தத் தாத்தா? என்ன வேண்டுதலுக்காக? அதை அங்கே வைத்து இருப்பார் என்கிற யோசனையும் அப்போது அவனுக்குள் எழுந்தது.

அழுக்குப் படிந்திருந்தாலும் சொர்ணத்தின் மஞ்சள் முகம் மின்னத் தவறவில்லை. இருந்தும் அதை நன்றாக மல்லுவேட்டித் துணி கொண்டு துடைத்தான். வீட்டில் இருந்த சில்வர் தட்டில் நாலைந்து பழங்களை அடுக்கி அதன் மீது அந்தச் சொர்ணத்தை வைத்துக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தான். வந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைத்த மகிழ்ச்சி உண்டானது. அக்கூட்டத்தில் ஒருத்தர் அதைக்கண்டு வியப்பான முகக்குறியைக்கூடக் காட்டினார். அப்போது கிளம்புவதற்கு முன்பு வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாத மாட்டைப் போல நின்ற பெண்ணொருத்தி சுப்பையாவை நோக்கிச் சிறுபிள்ளை மாதிரி வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி,

“அண்ணே இன்னும் ரெண்டு மாசத்தில இந்தா இந்த வயித்தில பொறக்கிற பிள்ளைக்குச் செய்முறை வேணும்ணு வந்து நிப்பேன். தங்கச்சி மனசு குளிர கொடுக்கணும் அன்னைக்கு” என்றாள் விளையாட்டுக் காட்டும் குரலில்.

அந்தக் கணத்தில்தான் சுப்பையா சல்பாஸ் மாத்திரை தின்னத் தீர்மானித்தான்.

The post சல்பாஸ் first appeared on கனலி.

  •  

நுண்கதைகள்

      அம்மாவின் வயிற்றுக்குள்

அச்சத்தில் மீண்டும் தன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த அந்தப் பூனைக்குட்டி வேகமாக ஓடிச்சென்று தன் அம்மாவின் வயிற்றை ஒட்டி கண்களை இருக்க மூடி படுத்துக்கொண்டது. என்ன நடந்தாலும் அம்மாவின் வயிற்றுக்குள் போகும் வரை கண்களைத் திறக்கவே கூடாது என்று முடிவெடுத்தது. யாரோ அதைத் தூக்குவதையும் எங்கேயோ போவதையும் அதனால் உணர முடிந்தாலும், அது கண்களை மட்டும் திறக்கவேயில்லை. தான் தான் அம்மாவின் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தது. தன்னைப் பிரிந்து தன் உடன் பிறந்தவர்கள் கவலைப்படுவார்களா, தன்னால் மட்டும் தனியாக அம்மாவின் வயிற்றுக்குள் எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் யோசித்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அதற்கு வழக்கமான சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை. புதுவிதமான மெல்லிய சப்தம், புதுவிதமான வாசனை. கண்களை திறக்கலாமென முடிவெடுத்து மெல்ல கண்களைத்திறந்தது. நிறைய மரங்கள், செடிகள் கொடிகள் பூச்சிகள் என இருந்தன. அம்மாவின் வயிற்றுக்குள்ளும் ஒரு உலகம் இருக்கிறது போல என நினைத்துக்கொண்டது. மெல்ல அடியெடுத்து வைத்து நடந்தபோது அதற்கு பழக்கமான வாசனை அதை ஈரத்தது.மெல்ல அதை நோக்கிச் சென்றபோது அங்கே அதன் உடன்பிறந்த குட்டிகள் உறங்கிக்கொண்டிருந்தன. ஒருவேளை தான் அம்மாவின் வயிற்றுக்குள் போவதைப் பார்த்து வந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டது. இன்னும் சற்று தூரத்திலிருந்து ஒரு குரல். அது அம்மாவின் குரல். ‘மியாவ்’ என்று கத்திக்கொண்டே குட்டிகளை நோக்கி நடந்து வந்தது. குட்டிக்கு ஒரே ஆச்சர்யம். அம்மா தன் வயிற்றுக்குள்ளேயே எப்படி வந்ததென்று.

       மூர்த்தி

“டேய்… மூர்த்தி…” என்ற செண்பகத்தின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து அந்த ஆடு. செண்பகம், இறந்த போன தன் மகனின் நினைவாக அந்த ஆட்டுக்குட்டிக்கு மூர்த்தி என்று பெயர் சூட்டினாள். அதனாலேயே மற்ற ஆடுகளைக் கட்டிலும் அதற்குத் தனி கவனிப்பு இருந்தது. மூர்த்தி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டான். கடன்காரர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க அவன் மனைவி தன் குழந்தைகளுடன் பிழைக்க நகரத்திற்குச் சென்றுவிட்டாள். இப்போது கடன்காரர்களைச் செண்பகம் தான் சமாளித்து வருகிறாள். அவர்களுக்குச் செண்பகத்திடம் இருக்கும் ஆடுகளின் மீதுதான் கண். கடனுக்கு ஆடுகளைத் தந்துவிடும்படி அவளை நச்சரித்தனர். அவளுடைய அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற அந்த ஆடுகள் மட்டுமே அவளிடம் இருந்தன. ஐந்து ஆடுகள். அதுமட்டும் தான் இப்போது அவள் உறவுகள். அது மூர்த்தி எப்போது அவள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டுமென்று நினைத்தாள். செண்பகத்தால் ஒரு கட்டத்திற்குக் கடன்காரர்களைச் சமாளிக்க முடியவில்லை. ஆடுகளை அவர்களிடம் கொடுத்துவிட முடிவெடுத்தாள். அவர்கள் வண்டி எடுத்துக்கொண்டு வந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். மூர்த்தி அவர்களைக் கண்டு மிரண்டது. தப்பித்து ஓடியது. ஓடும்போது சாலையில் வந்துகொண்டிருந்த வண்டியில் அடிப்பட்டுத் துடிதுடித்து இறந்தது. செண்பகம் அடித்துக்கொண்டு அழுதாள். “மூர்த்தி ரோசக்காரன். ரெண்டாவது வாட்டியும் மானத்தக் காப்பாத்திக்க செத்துட்டான்” என்று ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

       தனித்திருத்தல்

அவர் தன் மனைவியிடம் மகனை போனில் அழைக்கச் சொன்னார். அவள் மறுத்தாள். இன்னும் சொஞ்சம் நேரமாகட்டும் என்றாள். அவன் வந்தால் தங்களைத் தனியாக இருக்க விடமாட்டான் என்று சொன்னாள். அவர் சிரித்தார். இவ்வளவு காலம் நாம் தனியாகத்தானே இருந்தோம் என்றார். அவள் அதைப் பற்றி யோசித்தாள். இருந்தாலும் இப்போதும் தனியாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்றாள். மேலும் நிறையப் பேச வேண்டுமென்றும் பழைய நினைவு கூட்டில் யாரோ கல்லெறிந்தது போல் ஒரே சமயத்தில் அனைத்தும் ரீங்கரித்துகொண்டு வருவதாகச் சொன்னாள். அவர் பெருமூச்சுவிட்டார். மீண்டும் மகனை அழைக்கச் சொன்னார். அவள் அதைக் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. எதாவது வேண்டுமா, சமைக்கட்டுமா என்றாள். அவர் தனக்குப் பசிக்கவில்லையென்றார். வெளியே மீன் விற்கும் சத்தம் கேட்க, மீன் வாங்கட்டுமா என்றாள். உனக்கு வேணும்னா வாங்கு என்றார். அவள் வெளியே சென்று மீன் வாங்கினாள். உள்ளே வந்து அதைச் சமையற்கட்டில் வைத்துவிட்டு மீண்டும் அவர் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். சமைக்கலயா? என்றார். உங்களுக்குப் பசிக்கும்போது சொல்லுங்க. வறுத்துத் தரேன் என்றாள். நேரமாகுது பையனைக் கூப்பிடு என்றார். அவள் வேண்டா வெறுப்பாக எழுந்து சென்று போனை கையில் எடுத்து மகனை அழைத்தாள். அழைப்பின் இறுதியிலேயே அவன் போனை எடுத்து “சொல்லுமா” என்றான். “அப்பா போயிட்டாருடா” என்றாள்.

       வேடன்

கானகத்தின் நடுவே மரத்தின் உச்சியில் யார் கண்ணுக்கும் தென்படாதவாறு உட்கார்ந்திருந்தான் அந்த வேடன். அருகிலிருந்த கிராமங்கள் முழுக்க புலி குறித்த அச்சம் பரவியிருந்தது. ஊருக்குள் நுழைந்து ஆட்களை அடித்துக் கொன்று குவித்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வெளியே வரவே அஞ்சினர். கூட்டமாகக் கூடி மேளம் கொட்டி விரட்டிவிட்டாலும் அது மீண்டும் மீண்டும் அதே வேலையாக இருந்தது. வேடன் புலியைக் கண்டுபிடித்திருந்தான். அவன் பார்வை அசைவற்று புலியை மட்டுமே துளைத்துக்கொண்டிருந்தது. ஆனால், புலியோ வேறு ஒன்றை நோக்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு சிறிய குடில். அதன் அருகில் ஒரு சிறு பதின் வயதுப் பெண். அவள் கணவனிடம் அழுதுகொண்டிருந்தாள். சற்று முன் அவளுடன் விளையாடிக்கொண்டிருந்த மான்குட்டி தனக்கு வேண்டுமென வேண்டினாள். அவள் கணவன் சிறிதும் யோசிக்காமல் அந்த மான் சென்ற திசையை நோக்கி ஓடினான். நீண்ட நேரம் கழித்தும் அவன் திரும்பி வரவேயில்லை. அவள் தன் மைத்துனனை அழைத்தாள். அவனைப் போகச் சொல்லி நிர்ப்பந்தித்தாள். அவன் வேண்டா வெறுப்பாக அதே திசையில் ஓடினான். இந்தப் பதின்பருவச் சிறுவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என வேடன் குழம்பினான். அவன் கவனம் முழுக்க புலியின் மீது இருந்தாலும் இதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அப்போது எதிர்பாராத ஒரு தருணத்தில் மறைவிலிருந்து ஒருவர் வெளியே வந்தார். அவருடைய முகம் வேடனுக்கு நன்றாகத் தெரிந்தது. அதில் அமைதியாகவும் அன்பொழுகவும் இருந்தது. அதே நேரம் புலி தன் தாக்குதலுக்குத் தயாரானது. வேடன் எச்சரிக்கையானான். அவன் கைகள் வேகமாக இயங்கின. அவன் அம்புகள் புலியின் மீது பாயத் தயாராகின. கீழே நின்றுகொண்டிருந்தவரும் புலியைப் பார்த்துவிட்டார். அவர் புலி அந்தப் பெண் மீது பாய்ந்துவிடாமல் தற்காத்து நின்றார். அவரைக் கண்டு புலி ஒரு கணம் தயங்கியது போல் வேடனுக்குத் தோன்றியது. வேடன் அம்பை எய்தினான். ஒருநொடி. அங்கே என்ன நடந்ததென்றே வேடனுக்குப் புரியவில்லை. புலி, அந்தப் பெண், அந்த மனிதர் என யாருமே அங்கே இல்லை. நீண்ட நேரம் கழித்து அந்த இரண்டு இளைஞர்களும் ஊருக்குள் வந்து அந்தப் பெண்ணைத் தேடினார். அந்தப் பெண்ணை விட்டுச் சென்ற அந்த இருவர் மீதும் வேடனும் கோபம் கோபமாக வந்தது. வேடன் தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டான்.

The post நுண்கதைகள் first appeared on கனலி.

  •