Reading view

ஜெர்மனி ஹாலே ப்ராங்க நிறுவனத்தில் தமிழ் ஆவணங்கள் ஆய்வு

 

 

தமிழ் மரபு அறக்கட்டளை – மரபுக் காணொளி வெளியீடு –

ஜெர்மனி ஹாலே நகரத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய கிளையினரின் மரபு பயணம்:
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஜெர்மனி கிளையினர் கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்க கல்வி நிறுவனம் கல்வி நிறுவனத்திற்கு மார்ச் 28, 2025 அன்று ஒரு மரபுப் பயணம் மேற்கொண்டனர். தமிழ்நாட்டிற்கு வெளியே முதன்முதலாக ஒரு கல்வி நிறுவனத்தில் தமிழ்ப் பாடமாக கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் நடத்தப்பட்டது என்பது இதன் சிறப்பு. இக்கல்வி நிறுவனத்தில் பராமரிக்கப்படும் ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமையான தமிழ் ஆவணங்கள், குறிப்பாக; பாதிரிமார்கள் பனை ஓலைகளில் எழுதிய நூல்கள், சமய பாடல்கள், அறிக்கைகள், செய்திகள், காகித ஆவணங்கள் ஆகியவற்றையும் நேரில் கண்டு ஆய்வுகள் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்

ஜெர்மனி ஹாலே நகரத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய கிளையினரின் மரபு பயணம்:
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஜெர்மனி கிளையினர் கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்க கல்வி நிறுவனம் (Franckesche Stiftungen – https://www.francke-halle.de/de/) கல்வி நிறுவனத்திற்கு மார்ச் 28, 2025 அன்று ஒரு மரபுப் பயணம் மேற்கொண்டனர். தமிழ்நாட்டிற்கு வெளியே முதன்முதலாக ஒரு கல்வி நிறுவனத்தில் தமிழ் பாடமாக கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் நடத்தப்பட்டது என்பது இதன் சிறப்பு. இக்கல்வி நிறுவனத்தில் பராமரிக்கப்படும் ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமையான தமிழ் ஆவணங்கள், குறிப்பாக; பாதிரிமார்கள் பனை ஓலைகளில் எழுதிய நூல்கள், சமய பாடல்கள், அறிக்கைகள், செய்திகள், காகித ஆவணங்கள் ஆகியவற்றையும் நேரில் கண்டு ஆய்வுகள் மேற்கொண்டனர். மறுநாள் மார்ச் 29, 2025 அன்று ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்திற்கும் இப்பயணம் தொடர்ந்தது.

400 ஆண்டுக்கால ஜெர்மானிய தமிழ்நாடு தொடர்புகள் ஆவணங்கள்:
1700 காலகட்டம் முதல் தரங்கம்பாடிக்கும் பின்னர் தஞ்சாவூர் கடலூர் மெட்ராஸ் எனப் பல பகுதிகளுக்கும் வந்த லூதரன் மிஷனரிகள் உருவாக்கிய கையெழுத்து ஆவணங்கள் பிரமிக்க வைப்பவை. மிகத் துல்லியமாகத் தமிழ்நாட்டுத் தாவரங்கள் பற்றியும் அமைந்துள்ள அவர்களது ஆவணக் குறிப்புகள் இன்றைக்கும் நமக்குச் சிறந்த ஆவணங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக; ஜெர்மனி ஹாலே ப்ராங்க நிறுவனத்தின் ஆவண பாதுகாப்பதிலிருந்து தரங்கம்பாடிக்கு வந்து பின்னர் மெட்ராஸ் மிஷனரியை உருவாக்கிய பாதிரியார் பெஞ்சமின் சூல்ட்ஷே அவர்களது 1732ஆம் ஆண்டு தெலுங்கு ஆங்கிலம் தமிழ் லத்தின் அகரமுதலி – கையெழுத்துப் பிரதி பார்வையிடப்பட்டது.

திருக்குறளுக்கான முதல் மொழிபெயர்ப்பு லத்தின் மொழியில் 1730-ம் ஆண்டு இத்தாலியரான வீரமாமுனிவர் அவர்களால் உருவாக்கப்பட்டு வெளிவந்தது. அதன் பின்னர் ஆங்கிலத்தில் பிரெஞ்சு மொழியில் ஜெர்மன் மொழியில் எனப் பல முயற்சிகள் நடைபெற்றன. ஆயினும் அவை ஒவ்வொன்றும் அறத்துப்பால் பொருட்பால் அல்லது சில செய்யுட்கள் என்ற வகையில் அமைந்தவை. திருக்குறளுக்கான முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஜெர்மனியின் டாக்டர் கார் கிரவுல் அவர்களால் படைக்கப்பட்டது. இது நடந்தது 1856 ஆம் ஆண்டு. ஜெர்மனியின் லைப்சிக் மிஷன் லூத்தரன் அமைப்பின் தலைவராக இருந்தவர் அவர். இந்த அரிய ஆவணங்களையும் உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுப் பயணம் தொடர்பான செய்தி ஜெர்மனி ஹாலே நகரில் உள்ள Francke Foundations வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஜெர்மனி ஹாலே ப்ராங்க நிறுவனத்தில் தமிழ் ஆவணங்கள் ஆய்வு
https://www.youtube.com/watch?v=Sp8AIaxnQzg

https://www.francke-halle.de/en/news/news-detail/visit-of-the-tamil-heritage-foundation-international-in-the-francke-foundations

  •  

பிரித்தானிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள்

பிரித்தானிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் வழங்கப்பட்டன. இங்கு நூலகத்திற்கு வருவோர் இந்த சிறந்த ஆய்வு நூல்களை வாசித்து பயன்பெறலாம். பிரித்தானிய நூலகம் சார்பாக ஆசியவியல் துறையில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பேற்று இருக்கும் திருமதி ஆரணி இந்த நூல்களைப் பெற்றுக் கொண்டார்.

  •  

வேள்விக்குடி செப்பேடுகள்

பாண்டியர்களது ஆவணமாகிய வேள்விக்குடி செப்பேடுகள் பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

10 செப்பேடுகள் 27.5 x 8 அளவிலான மெல்லிய செப்பு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வளையத்தின் மேல் எந்த முத்திரையும் இல்லை.
செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன.

வரிகள் 1- 30 வரை மற்றும் 142 -150 வரை கிரந்த எழுத்துருவிலும், வரிகள் 31 லிருந்து 141 வரை 151ல் இருந்து 155 வரை வட்டெடுத்து தமிழ் எழுத்துருவிலும் அமைந்துள்ளன.

தமிழ் பகுதிகளில் வருகின்ற சமஸ்கிருத எழுத்துக்கள் கிரந்தத்தில் உள்ளன.

செப்பேடுகள் ஒவ்வொன்றும் கிரந்த எழுத்துகளால் வரிசை எண் போடப்பட்டுள்ளன.

சமஸ்கிருத பகுதி சிவபெருமானை புகழ்ந்து பாண்டியர்கள் பரம்பரையை புகழ்ந்து கூறும் புராணக் கதையிலிருந்து தொடங்குகிறது.

தமிழ் பகுதி இந்தச் செப்பேடு குறிப்பிடும் நன்கொடையைக் குறிப்பிடுகிறது.
பாண்டிய மன்னன் பல்யாகக்குடுமி பெருவழுதி ”வேள்விக்குடி” என்ற கிராமத்தை நற்கூரன், அதாவது கொற்கை கிராமத்தின் தலைவன் வேத வேள்விகள் செய்வித்தமைக்காக வழங்கிய நிலக் கொடையைப் பற்றி கூறுகிறது.

இந்தச் செப்பேடு மேலும் எவ்வாறு அவனது (பாண்டியன்) எதிரிகள் இந்த நிலப் பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்தார்கள் என்ற வரலாற்றுச் செய்தியை கூறுகிறது. பல போர்களுக்குப் பிறகு பாண்டியர்கள் வம்சத்தில் பிறந்த பராந்தக நெடுஞ்செழியன்  போரில் வெற்றி கண்டு கைப்பற்றி இப்பகுதியில் தனது ஆட்சியை நிலை நிறுத்தினான்.

-சுபா
11.3.2025

  •  

குடியம் – மரபுப் பயணம்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் குடியம் குகைகள், பூண்டி தொல்லியல் அகழாய்வு அருங்காட்சியகம், அத்திரம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு டிசம்பர் 22, 2024 ஞாயிறு அன்று ஒரு நாள் மரபுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்பயணத்தில் கொற்றலை ஆற்றுப்படுகையில் கற்கருவிகளைப் பார்த்தல், குடியம் குகைப்பகுதிகளில் தொல்மனிதகுல வாழ்விடங்களைப் பார்வையிடலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒரு நாள் பயணத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் வாழ்விடப் பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகின்ற அத்திரம்பாக்கம் பகுதியில் பேலியோலித்திக் கால கற்கருவிகளைக் காணும் வாய்ப்பும் வரலாற்று ஆர்வலர்களுக்குக் கிடைத்தது.

 

குடியம் குகைகள் – அத்திரம்பாக்கம் கற்கருவிகள்

— முனைவர் க. சுபாஷிணி

வரலாற்றை நாம் தொல்லியல், கல்வெட்டியல், அகழாய்வுகள் இலக்கியம் போன்றவற்றை அலசி ஆராய்வதன் வழி கண்டு கொண்டிருந்த காலம் இருந்தது. அதன் மற்றொரு புதிய சேர்க்கையாக இந்த அறிவியல் ஆய்வில் இணைந்திருப்பது மரபணுவியல் ஆய்வுகள் துறை. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளாக மரபியல் ஆய்வுத்துறை என்பது மெல்ல மெல்ல வளர்ச்சி கண்ட ஒரு துறையாக வளர்ந்தது என்பது உண்மை.

ஆயினும் கூட கடந்த 30 ஆண்டுகளில் இந்த மரபணு ஆய்வியல் துறை கண்டிருக்கின்ற வளர்ச்சி அசாத்தியமானது. வரலாற்றை அறிந்து கொள்ள தொல்லியல் துறையும் இலக்கியத் துறையும் கடினமாகப் போராடிக் கொண்டிருக்கின்ற காலத்தில் மரபணு அறிவியல் துறை என்பது மிகத் துல்லியமாக, புதிய வெளிச்சங்களை வரலாற்றுத் துறையில் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது.

தொல் இனங்களின் இடப்பெயர்வுகளையும் அவை பல்வேறு காலகட்டங்களில் மேற்கொண்ட நகர்வுகள், அதன்வழி ஏற்பட்ட மரபணுவியல் மாற்றங்கள், தனித்துவத்துடன் கூடிய மனித இனங்கள், அவற்றின் தடயங்களும் அவற்றின் மறைவு என்பன பற்றிய பல்வேறு ஆய்வுத் தகவல்களைக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக ஒரு நூல் வெளியிடப்பட்டது. சமகால இத்துறை சார்ந்த ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்ற முடிவுகளை மையமாகக் கொண்டு எளிய தமிழில் பொதுமக்களும்
அறிந்து கொள்ளக் கூடிய வகையில் “தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்” என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டில் தொல்மனிதர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக ஆய்வாளர்களால் அடையாளப் படுத்தப்பட்டுள்ள ஒரு பகுதி தமிழ்நாடு – ஆந்திரா எல்லைக்கு அருகே உள்ள குடியம் குகைகளும் அத்திரம்பாக்கம் பகுதியும் அப்பகுதியில் ஓடுகின்ற கொற்றலை ஆற்றுப் பகுதியுமாகும். 1863ஆம் ஆண்டில் அத்திரம்பாக்கம் குடியம் குகைப்பகுதிகளுக்குக் களப்பணி மேற்கொண்டிருந்த புவியியல் அறிஞரான Robert Bruce Foote அவர்களால் இப்பகுதி தொல்லியல் களமாக அடையாளப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதியில்
அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் 2002ஆம் ஆண்டில் ஆய்வாளர் டாக்டர் சாந்தி பப்பு அவர்களது ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னர்தான் இப்பகுதி உலகளவில் தொல் மனிதகுலம் வாழ்ந்த ஒரு பகுதியாக வெளிச்சம் பெற்றது.

டாக்டர் சாந்தி பப்பு அவர்களது ஆய்வுகள் இப்பகுதியில் பெருங்கற்கால சான்றுகளை அடையாளப்படுத்தின. ஏறக்குறைய 1.7 மில்லியன் ஆண்டுகள் காலவாக்கில் இப்பகுதியில் வசித்திருக்கக் கூடிய மனிதகுலத்தின் (ஹோமோ எரெக்டஸ் வகை மனிதகுலமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் முடிவு) வாழ்விடத்தில் அவை உருவாக்கிய கற்கருவிகள் பல இங்கு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. கையில் இறுகப் பற்றிக் கொண்டு விலங்குகளைக் கிழிக்க உதவும் வகையிலான கூர்மையான நுனிப்பகுதியைக் கொண்ட அச்சுவேலியன் (Acheulean tools) வகை கற்கருவிகளும் விலங்குகள், மரப்பட்டைகள் ஆகியவற்றை உரித்து எடுக்கும் ப்ளேட் வகை கற்கருவிகளும் இப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

இன்றைக்கும் கூட அத்திரம்பாக்கம் மண்மேட்டுப் பகுதிகளிலும் கொற்றலை ஆற்றிலும் இவ்வகை கற்கருவிகளைக் காணமுடிகின்றது. இப்பகுதிகளில் டாக்டர் சாந்தி பப்பு அவர்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் இப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள பூண்டி அகழ்வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வைப்பகம்
மேலும் பல தொல்லியல் சான்றுகளையும் பாதுகாக்கும் அருங்காட்சியகமாகவும் திகழ்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் மரபணுவியல் ஆய்வுகள் ஆய்வாளர்களால் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்ற ஆய்வுத் துறையாகக் கருதப்படுகின்றன. தொல்மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களைத் தொடர்ந்து தேடி ஆராய்வதும் மரபணுவியல் ஆய்வுகளைப் பலகோணங்களில் நிகழ்த்துவதும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பழமையையும் தொன்மையையும் கண்டறிய மிகவும் அவசியமான ஓர் ஆய்வுத் துறையாகின்றது.

அவ்வகையில் இந்தப் பூண்டி அருங்காட்சியகத்தின் தற்போதைய நிலை இக்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் அமையாமல் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றே. இந்த அகழ்வைப்பகம் அமைந்துள்ள கட்டடத்தைப் புணரமைத்து அங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரும்பொருள்களுக்கான தகவல்கள் முறையாக மேம்படுத்தப்பட வேண்டும்.

கடந்த நூற்றாண்டுகளின் உலகளாவிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் இங்கு இணைக்கப்பட வேண்டியதும் தேவையாகின்றது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மனிதகுல தொன்மையின் சுவடுகள் உலகளாவிய கவனம் பெற இது அவசியமாகும்!

  •  

சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு கருத்தரங்கம்

1924 – 2024 சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்!

இடம்: பச்சையப்பன் கல்லூரி, சென்னை
நாள்: 23′ ஆகத்து 2024

ஆலடி எழில்வாணன்

1924, சிந்துவெளி நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைத்தார் சர் ஜான் மார்ஷல். அதனை நினைவுபடுத்தும் விதமாக 2024ஆம் ஆண்டு சிந்துவெளி நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடுகிறது. தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக, அன்றைய நாளின் சிறப்புகளின் தொகுப்புரையாக, எனக்குப் பேச வாய்ப்பளித்த தோழியார் முனைவர் சுபாஷிணி அவர்களுக்கு நன்றி. பச்சையப்பன் கல்லூரியின் திருவள்ளுவர் மன்றம் நிறைந்திருந்தது மனதுக்கும் நிறைவாக அமைந்தது.

தலைமையுரையாற்றிய முனைவர் க.சுபாஷிணி, ஆளுமைகளுக்கு வழிவிட்டு அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தார். இவ்விழாவில் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுடனான தனது நேர்காணலை முனைவர். க. சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக, “சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்” என்ற நூலாக வெளியிட்டு மகிழ்ந்தார்.

  1. திரு. ஆர்.பாலகிருஷ்ணன் இஆப
  2. முனைவர் பக்தவத்சல பாரதி
  3. முனைவர் ப. பாண்டியராஜா
  4. திரு. ஐயன் கார்த்திகேயன்
  5. பேராசிரியர். அரசு செல்லையா
  6. முனைவர் சுந்தர் கணேசன்

மேற்குறிப்பிட்ட புகழ்மிக்க ஆளுமைகளிடையே பேசும் பெரும் வாய்ப்பு கிடைத்த பெருமிதம் எனக்கு, அதிலும் நான் போற்றிப் பின்பற்றும் ஆசான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்பு பேசும்போது ஒரு மாணவனைப் போன்ற பரவசநிலை. வாருங்கள் முக்கிய ஆளுமைகள் என்ன பேசினார்கள் என ஆராயலாம்.

முனைவர் ப. பாண்டியஜா :
முதல் பேச்சாளராக மூத்த ஆளுமை மற்றும் சங்க இலக்கிய ஆர்வலர் முனைவர் ப. பாண்டியராஜா, சங்க இலக்கியம் ஒரு ‘நகைப்பெட்டி’, அதன் சாவியை திரு.ஆர்.பாலகிருஷ்ணன் போன்றோர் சரியாகக் கையாள்கின்றனர் என எடுத்துரைத்தார். தமிழ் மாணவர்கள் பிற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும், அது போல பிற துறை மாணவர்கள் தமிழை உரிமையோடு அணுக வேண்டும் என்ற முக்கியக் கருத்தை அவர் பேசியபோது மாணவர்கள் கைதட்டி அதனை வரவேற்றது, அது நம்பிக்கை ஒலி என உணர வைத்தது. முனைவர் ப. பாண்டியராஜா, அவர்களின் சங்கம்பீடியா என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி, “செயலே அழகு” என நிரூபித்தார். சங்க இலக்கியத்தை உங்கள் விருப்பப்படி வாசிக்க sangampedia.net இணைய தளத்தைப் பார்க்கவும்.

திரு.ஆர்.பாலகிருஷ்ணன் :
தனது விருப்ப நடிகர் படத்தை முதல்நாள் முதல் காட்சியில் காண்பது போல், நான் போற்றிப் பின்பற்றும் ஆளுமை, இந்நிகழ்ச்சியின் நாயகன், ஆசான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் நேர் எதிரே நானும் முதல் வரிசையில் அமர்ந்து, அவரின் அறுபது நிமிட உரையைக் குறிப்பெடுத்தபடியே லயித்தேன். அருகில் இருந்த அண்ணன் ஒளிவண்ணன், “எப்படிங்க! இந்த மாதிரி…” எனக் கேட்க “certain things in life are unconditional” என்றேன். ஒரு கைதேர்ந்த பேராசிரியருக்கு எப்படி மாணவர்கள் கட்டுப்படுவார்களோ, அதுபோன்றே அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டனர். “தகவல் விடுபட்டு விடுமோ?” என மாணவர்கள் தொடர்ந்து கைதட்டாமல் நிதானித்தது புதிது.

சிந்துவெளியில் சங்க இலக்கியத்தின் தொடர்பைப் பறந்து பறந்து பரப்ப வேண்டும் என மாணவர்களிடம் எடுத்துரைத்தார். Find new paths in old existing paths என வழிகாட்டினார். தான் கலந்துகொண்ட 1984 IAS பயிற்சியின்போது, தனக்கு சிந்துவெளி வழிகாட்டியான திரு.ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி நாகரிகத்தின் அறிமுகத்தை எடுத்துரைத்த நாளும், 2007ஆம் ஆண்டு IAS பயிற்சியாளர்களுக்கு மிசூரியில் (Missourie) தான் பேசிய நாளையும் நினைவுகூர்ந்து, அந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே தேதி என்ற ஆச்சரியத் தகவலைப் பகிர்ந்தார். “ஐராவதம் மகாதேவன் – ஆர்.பாலகிருஷ்ணன்” உறவின் ஆழம் ஓர் அழகான நெகிழ்ச்சி. 1924ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியப் பண்பாடு எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என மாணவர்களுக்குப் பாடமாகப் போதித்தார். சர் ஜான் மார்ஷல் ஏன் கொண்டாடப்படவில்லை? உண்மையைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும், கடந்த காலத்தைக் காப்பாற்ற வேண்டும் எனத் தரவுகளுடன் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் பேசியது அருமையாக இருந்தது.

சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த நடனமங்கை சிலையை, நடனம் மற்றும் நளினத்தின் அடையாளமாகப் பார்க்காமல், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல உரிமைக்குக் குரல் கொடுத்தவர், போராளியாக இருந்திருக்க வேண்டும் என ஆர்.பாலகிருஷ்ணன் பேசுகையில், “இதற்காகத் தானே நிகழ்ச்சிக்கு வந்தாய் எழில்வாணன்” எனச் சிலிர்த்துச் சிரித்தேன். மேலும், சங்க இலக்கியத்தில் கடல் பற்றிய குறிப்பு, trade wind, சங்க இலக்கியம் master key, சங்க இலக்கியம் ஒரு மழைக்காடு, காசுமாலை வரலாறு என அடுக்கிக்கொண்டே போனார். சிந்துவெளி hardware என்றால் சங்க இலக்கியம் software என அவர் சொல்கையில், இதைவிட எளிமையாக எப்படிப் புரியவைக்க முடியும் என உணர்ந்தேன்.

நிறைவாக, “விநாயகர் – முருகன்” இவர்களுக்கு வடக்கிலும், தெற்கிலும் உள்ள வேறுபாடு, ராவணனுக்குக் கோவில்கள் வடநாட்டில் தான் அதிகம் உள்ளன, தூரம் – இடைவெளி (distance – gap) வேறுபாடு எல்லாம் எடுத்துரைத்து, “இவ்வளவு தரவுகளை ஒரு மேடைப்பேச்சில் பேசமுடியுமா?” என ஆச்சரியப்பட வைத்தார் ஆசான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன். “தான் பலமேடைகளில் குறிப்பிடும் வெறுப்புணர்வு அற்ற பொறுப்புணர்வு வேண்டும்” எனப் பேச்சை முடிக்கையில் கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது. நான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் பேச்சினைக் கவனமாகக் குறிப்பெடுத்தேன், மொத்தம் 29 எண்கள்; எண்ணங்களோ எண்ணிலடங்கா!

முனைவர் பக்தவத்சல பாரதி :
90களில், 35ஆவது ஓவரில் சதமடித்து அவுட்டான சச்சின், மட்டையை உயர்த்தியபடியே வெளியேறும் போது, அடுத்த 15 ஓவர் என்ன ஆகும் எனப் பரபரப்பாக ரசிகர்கள் அலசுவார்கள். யாரும் எதிர்பார்க்காத டிராவிட் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவிப்பதைப் போல மேடையேறினார் முனைவர் பக்தவத்சல பாரதி. மாணவர்கள், பேராசிரியர், மேடை ஆளுமைகள் என அனைவரின் கவனத்தையும் அனுபவம், நிதானம் வழியாக ஈர்த்தார். திரு.ஆர்.பாலகிருஷ்ணனை நூற்றாண்டின் ஆய்வாளர் எனப் புகழாரம் சூட்டினார். முதுமையிலும் முழுமையாகக் கடமையாற்ற வேண்டும் என்பது முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களிடம் நான் கற்ற பாடம்.

தனது பேச்சில் . . .
சிந்துவெளி = கீழடி + சங்க இலக்கியம்
கீழடி = சிந்துவெளி + சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் = சிந்துவெளி + கீழடி
என அனைவரும் ஏற்கும்படி இந்தப் புதிய கணக்கை அவர் எடுத்துரைத்தபோது முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களின் அனுபவத்தை வணங்கத் தோன்றியது. உலகில் 10,500க்கும் அதிகமான இனங்கள் உண்டு. சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாடு மற்றும் இயற்கை தேர்வு (Charles Darwin evolution theory and natural selection) என அவர் பேசிய பேச்சு, அவர் ஒரு கைதேர்ந்த ஆய்வாளர் என்பதை உணர்த்தியது. இன்று வடநாட்டில் புனைவுகளால் கட்டமைக்கப்படும் இல்லாத சரசுவதி நாகரிகத்தின் இடர்ப்பாடுகளை அம்பலப்படுத்தினார். இதனைப் பல ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் ‘The Vedic People’, ‘Early Indians’ நூல்களின் தரவுகளுடன் பேசும்போது வியக்காதவர் வெகு சிலரே.

நேரத்தைக் கவனத்தில் கொண்டு விரைவாகச் சில தகவல்களைப் பகிர்ந்தார். 160 நாடுகளில் தமிழ்ச் சமூகம், இறுதியாக வந்தவர்கள் ஆரியர்கள், அரப்பாவில் மலைகள் இல்லை- அது கரிசல் காடு, ஆப்கானிஸ்தான் வழியாக ரிக்வேதம் 17ஆம் நூற்றாண்டில் வேரூன்றியது, சரசுவதி vs சிந்து, Alpine Aryans – Nordic Aryans, இடம் பெயரும்போது பிடிமண் எடுத்துச் செல்வது எனத் தகவல்களை மழையெனப் பொழிந்தார் முனைவர் பக்தவத்சல பாரதி.

முதுமையைப் பொருட்படுத்தாது வியர்த்தபடியே 45 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை என் போன்ற ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளித்தது. முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களுக்கு எனது “வியப்புரை” நூலை வழங்கினேன். இப்படிப்பட்ட நூல்கள் அவசியம் என அவர் என்னை வாழ்த்தியபோது ஏற்பட்ட உணர்வு புதிது.

கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவருந்தும்போதும் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் – முனைவர் பக்தவத்சல பாரதி எனப் பலரும் பேச, உணவிலும் கருத்து பரிமாறப்பட்டது.

ஓர் ஆழமான தலைப்பில் கருத்தரங்கம், ஆறு ஆளுமைகள் பேச இருக்கிறார்கள், அதுவும் காலை முதல் மாலை வரை, மாணவர்கள் கலந்து கொள்வார்களா, அதிலும் மதிய அமர்வு எப்படி இருக்கும் என்ற பல ஐயப்பாடுகள் இயல்பாக எனக்கும் எழுந்தன. ஆனால், சொல்லி வைத்தது போலச் சரியாக 1:30 மணிக்கு மாணவர்களும், மொழி ஆளுமைகளும் அரங்கத்தில் அமர்ந்ததைப் பார்க்கையில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கைகுலுக்கின.

முனைவர் அரசு செல்லையா :
நாற்பது ஆண்டுகளாக அமெரிக்கா மேரிலேண்டில் வாழும் சூழலியல் ஆர்வலர் முனைவர் அரசு செல்லையா, தனது பேச்சில் கருத்தரங்கத்தின் புதிய வாசலைத் திறந்தார். உலகளாவிய பல தரவுகளைக் கருத்தரங்கின் தலைப்போடு அழகாகக் கோர்த்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு இதுபோன்ற அடர்த்தியான தலைப்பில் சுவாரசியமாகப் பேசுவதே சவால். இதனைத் தனது அனுபவத்தால் அணுகி, கூட்டத்தை அமைதியாக அமரவைத்தார் முனைவர் அரசு செல்லையா.

நான் பெரியாரியவாதி எனத் தலைநிமிர்ந்து பேச்சை ஆரம்பித்தபோது, “அட! இது நம்ம ஆளு” என நெருக்கமானார் முனைவர் அரசு செல்லையா. உலக உருண்டையின் சிறப்பைப் பல அரிய தகவல்களோடு எடுத்துரைத்தார். பல இலட்ச ஆண்டுகள் பூமியை ஆட்கொண்ட டைனோசரே இன்று இல்லை, அப்படியிருக்க மனிதன் எம்மாத்திரம்? என்ற நம் நிலையாமையை “Human Vulnerability” என மேற்கோளிட்டார். நான் விரும்பி வாசித்த Charles Darwin, Yuval Noah Harari எழுத்தாளர்களைக் குறிப்பிட்டது சிறப்பு. பூமியில் இதுவரை ஐந்து முறை பேரழிவுகள் (Mass Extinction) நிகழ்ந்துள்ளன, நாம் ஆறாவது பேரழிவைச் சந்திக்க உள்ளோம் என அவர் தரவுகளுடன் பேசியபோது, அச்சமும், அவசியமும் ஆட்கொண்டது. இப்படி இருக்கையில் மனித இனம், நிலம், மதம், மொழி வேறுபாடுகள் எல்லாம் எம்மாத்திரம் எனப் புரியவைத்தார். பெரியாரின் பெண் உரிமை கொள்கையை, ஒபாமா பெண் அதிகாரத்தின் அவசியத்தை அழகாக இணைத்தார். இறுதியில் “India Belongs To India” என்ற அம்பேத்கர் சொல்லாடலையும், “செல்வத்தின் பயனே ஈதல்” என்ற சங்க இலக்கிய வரியையும் மாநாட்டின் நோக்கத்துடன் சேர்த்தது முனைவர் அரசு செல்லையா பேச்சின் சிறப்பு.

ஐயன் கார்த்திகேயன் :
தமிழ்நாடு அரசின் தரவுகள் உண்மை சரிபார்க்கும் அமைப்பின் (TN Fact Check Unit) இயக்குநரை இம்மாநாட்டிற்குச் சிறப்புரையாற்ற அழைத்திருந்தது புதியதாகத் தோன்றியது. அகழாய்வு மற்றும் வரலாற்றுத் தகவல்களைத் திட்டமிட்டே திரித்துப் பரவும் கூட்டம் பெருகுவதை உதாரணங்களோடு வெளிப்படுத்தினார். இன்று சமூக ஊடகத்தில் பரப்பப்படும் கட்டுரைகள், குறிப்புகள், மீம்கள் மற்றும் சில காணொளிகள் எல்லாம் மக்களைத் திசைதிருப்ப, உண்மையை மறைக்கக் கையாளப்படும் யுக்திகள். இது இன்றைய தகவல் தொழில்நுட்பக் காலத்தில் மட்டுமல்ல, பல காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனப் புரிய வைத்தார்.

Uniformity vs Equalityயில் புதைந்துள்ள அரசியல் ஆபத்து, Myth leads to fascism சிந்திக்க வேண்டியதன் முக்கியத்துவம் போன்ற கருத்துகளை மாநாட்டின் தலைப்போடு பொருத்திப் பேசினார். ஐயன் கார்த்திகேயன் பேச்சின் சிறப்பாக அமைந்தது, “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” என்ற தலைப்பில் எண்ணற்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் உலவுவதை மேற்கோளிட்டு, நம்மைப் பழமைவாத சிந்தனைக்கு மடைமாற்ற ஒரு தீய சக்தி துணை போகிறதைத் தனது அலுவல் அனுபவத்துடன் இணைத்து பேச்சை நிறைவு செய்தார்.

முனைவர் சுந்தர் கணேசன் :
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (RMRL Chennai) இயக்குநர், இனிய நண்பர் சுந்தர் கணேசன் அம்மாநாட்டின் தலைப்பிற்கே மகுடம் சூட்டும் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நூல்களான ‘Journey Of A Civlization : Indus to Vaigai” மற்றும் “ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை” உருவாக்கம் மற்றும் கட்டமைப்பைப் பற்றிச் சிறப்பாகப் பேசினார்.

RMRL என்பது ஒரு ஆராய்ச்சி நிறுவனம், அதிலிருந்து வெளியான முதல் நூல் “Journey Of A Civlization : Indus to Vaigai” என்பது குறித்து விவரமாகப் பேசினார். உலகத் தரத்துடன் வரவேண்டும் என்ற முனைப்பு, நூலின் ஒவ்வொரு பகுதியிலும் கவனம் செலுத்தியது, ஒவ்வொரு செயலுக்கும் முடிவுக்கும் பின்னால் உள்ள காரணங்கள் என அடுக்கினார். புதிய வாசகர், இளம் வாசகர், முதியோர், அறிஞர், ஆய்வாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் எனப் பலதரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கம் இந்நூலின் வெற்றிக்கு ஓர் காரணம். குறிப்பாக, படங்களுக்காகச் செலுத்திய உழைப்பு, செலவு எல்லாம் ஆச்சரியத் தகவல். அதிலும் ஆங்கிலத்திலிருந்து அதே எண்ணத்தோடு தமிழில் இயற்றியதைக்கூறி சாதனையாளர் பெருமிதத்துடன் பேச்சை நிறைவு செய்தார் நண்பர் சுந்தர் கணேசன்.

திரு.ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய “Journey Of A Civlization : Indus to Vaigai” மற்றும் “ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை” ஆகிய இரண்டு நூல்கள் எனது வாசிப்பின் மகுடத்தில் உள்ள வைரக் கற்கள் என்றால் மிகையாகாது. எனது வாசிப்பு, எனது சிந்தனை மற்றும் செயலை மாற்றிய இந்த நூல்கள் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் பாதையில் பயணிக்க வைத்தது. “வியப்புரை” எனும் நூலை எழுதவும் வைத்தது. அப்படிப்பட்ட நூலைப் பற்றிய பேச்சு எனக்கு நெருக்கமாகப்பட்டது.

மேற்குறிப்பிட்ட ஆறு ஆளுமைகளின் பேச்சுகளை இணைத்துப் பேசும் தொகுப்புரை கடமையை எந்த நம்பிக்கையில் தோழி முனைவர் சுபாஷிணி எனக்களித்தார் என ஆராய்வதைவிட, கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்பே எனக்கு முக்கியமாகப் பட்டது. மேலும், இது எனது ஆசான் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இருக்கும் அவையில் பேசும் முதல் வாய்ப்பு. காலை முதல் அனைவரின் பேச்சின் முக்கிய அம்சங்களைக் குறிப்பெடுத்தேன், குறிப்பே ஐந்து பக்கங்கள். நான் பேசுவதற்காக ஏழு பக்கக் குறிப்புகளை உள்ளடக்கிப் பேசினேன். இடை இடையே கிடைத்த கைதட்டல்களும், ஆமோதிக்கும் தலையாட்டல்களும், வெளியே செல்லாத கால்களும் பேச்சைக் கவனிக்கிறார்கள் என உணர்த்தின. பேசி முடித்ததும் தோழி சுபாஷிணியின் கட்டைவிரல் உயர, ஆர்வமாகக் கவனித்த திரு.ஆர்.பாலகிருஷ்ணன் முகமலர்ச்சி, சுந்தர் கணேசன் கையசைப்பு, பின்னால் அமர்ந்து ரசித்த எனது மாணவத் தோழன் ஸ்டீபன் ராஜ் முகத்தில் பெருமிதம் இவையனைத்தும் தந்த உணர்வு என்றும் நிலைக்கும்.

1924 – 2024 சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தின் பேச்சுகளை நூலாக மடைமாற்றும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பட வேண்டும். அதற்கு இந்தக் கட்டுரை ஆரம்ப உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன். இது போன்ற நிகழ்ச்சியின் வெற்றியை ஆவணப்படுத்தினால் அது வரலாற்றில் நிலைக்கும். எனது முழுப் பங்களிப்பையும் நவில உறுதியளிக்கிறேன்.

1924, சிந்துசமவெளியை உலகிற்கு அறிவித்த ஜான் மார்ஷல் அவர்களின் உன்னதச் செயலைப் பாராட்டி தமிழ்நாட்டில் நூற்றாண்டைக் கொண்டாடுவார்கள் எனக் கற்பனை செய்திருக்க மாட்டார், இது தான் தமிழர்களுக்கே உரித்தான தனித்துவம். 1924 – 2024, சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் போல மாநிலம் முழுக்க நடத்தவேண்டும். வரும் மாதங்களில் நமது ஐன்ஸ்டீன் கல்லூரியில் இதுபோன்றதொரு நிகழ்ச்சி நடத்தப்படும்.

பெருமிதத்துடன்,

ஆலடி எழில்வாணன்
செயலாளர், ஐன்ஸ்டீன் கல்லூரி, திருநெல்வேலி.


1924 – 2024 சிந்துவெளி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
காணொளிகள் தொகுப்பு:
https://www.youtube.com/playlist?list=PLdag7q0k9BNmlnGajtc86s4ZZ9wHruAH_

சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு கருத்தரங்கம்
தொடக்க விழா
https://www.youtube.com/watch?v=cLbG7tq4wGs

சிந்துவெளி நூற்றாண்டு சிறப்புரை:
சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்
சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.
https://www.youtube.com/watch?v=H97FN_qSVmI

சிந்துவெளி நூற்றாண்டு ஆய்வுரை – 1:
சரஸ்வதி நாகரிகம்: புனைவுகளை அறிதல்
முனைவர் பக்தவத்சல பாரதி
https://www.youtube.com/watch?v=8UB-k8sYw6w

சிந்துவெளி நூற்றாண்டு ஆய்வுரை – 2
சூழலியல் பேரிடர்: தமிழர் வந்த வழிகளில் கண்ட தீர்வுகள்
பேராசிரியர் அரசு செல்லையா,
நுண்ணுயிரியல் துறை, மேரிலாந்து பல்கலைக்கழகம், அமெரிக்கா.
https://youtu.be/4SC0-2GbnxU

சிந்துவெளி நூற்றாண்டு ஆய்வுரை – 3
பொய்ச் செய்திகளும் வெறுப்புப் பதிவுகளும்
திருமிகு. ஐயன் கார்த்திகேயன்,
இலக்கு இயக்குநர், தகவல் சரிபார்ப்பகம், தமிழ்நாடு அரசு
https://youtu.be/ld4eAKYStGA

சிந்துவெளி நூற்றாண்டு ஆய்வுரை – 4
ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை நூலின் உருவாக்கம்
முனைவர் சுந்தர் கணேசன்,
இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தரமணி, சென்னை.
https://youtu.be/sXpNlzfYB3E

சிந்துவெளி நூற்றாண்டு நிகழ்ச்சி தொகுப்புரை மற்றும் கலந்துரையாடல்:
திருமிகு. ஆலடி எழில்வாணன்,
சமூக ஆர்வலர்கள் கருத்துரை வழங்கல்.
செயலாளர், ஐன்ஸ்டீன் கல்லூரி, திருநெல்வேலி.
எழில்வாணன்
https://youtu.be/hFeA3JQ3otU



  •  

மட்டக்களப்பில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு- 2024

உலகத் தமிழ்க் கலை இலக்கிய மாநாடு,
மட்டக்களப்பு – இலங்கை
2-3, ஆகஸ்ட் 2024

உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டக்களப்பில் ஆகஸ்ட் 2 – 3 ஆகிய நாட்களில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து இந்த உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாட்டினை நடத்தியது.

இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக, கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர். விழாவில் மட்டக்களப்பில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு தொடர்பான மலர் வெளியிடப்பட்டதுடன் மட்டக்களப்பு ஆய்வு நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாட்டைக் குறிக்கும் வகையில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் முத்திரையொன்றும் இதன்போது வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.


 

 

ஆய்வாளர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக மாநாடுகள் அமைகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு 2024 வரலாற்றுச் சிறப்பிடம் பெறத்தக்க ஒரு நிகழ்வாக நடந்து முடிந்திருக்கின்றது.

இந்த மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற ஆர்வம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரு செந்தில் தொண்டமான் அவர்களுக்கு எழுந்ததும், அதன் தொடர்பாக அவரது ஜூலை இரண்டாம் வாரத்தில் ஜெர்மனிக்கான வருகையின் போது என்னுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இது மேலும் உறுதி பெற்றது. மிகக் குறுகிய காலமே இருக்கின்றதே.. எப்படிச் செய்து முடிப்பது… என்று பல ஐயங்கள் இருந்தாலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதனை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதி, இந்த மாநாட்டை இன்று வெற்றிகரமாக முடித்து இருக்கின்றது.

இந்த மாநாட்டின் தலைவராக என்னை நியமித்து அதிகாரப்பூர்வக் கடிதமும் வழங்கிய போது எப்படி இதனைச் சாத்தியப்படுத்த முடியும் என்ற யோசனை எழுந்தது.

மட்டக்களப்பின் ஆய்வாளர்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் தமிழுக்கும் வரலாற்றுக்கும் சமூகவியல் ஆய்வுகளுக்கும் பங்காற்றிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையும் இதில் இணைக்க வேண்டும் என்று எண்ணம் எழுந்த போது மட்டக்களப்பு ஆய்வாளர்களைப் பட்டியலிட்டு பொருத்தமான பெயர்களை வழங்க பேராசிரியர் மௌனகுரு அவர்களது உதவியை நாடினேன்.

அதுமட்டுமின்றி எனது ஜனவரி மாத மட்டக்களப்பு பயணத்தின் போது பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் கலாநிதி குணபாலசிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்ட போது இந்த நிகழ்ச்சிக்கான பல்வேறு அமர்வுகளுக்குப் பொருத்தமான ஆய்வாளர்களின் பட்டியல்களை அவர் பெரும் முயற்சி மேற்கொண்டு தொகுத்து எனக்கு வழங்கினார். பெயர்களை வழங்கியதோடு மட்டுமின்றி இந்தக் கருத்தரங்கு வெற்றிகரமான ஒரு கருத்தரங்காக உருவாக வேண்டும் என்று தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தொலைபேசி தொடர்பிலிருந்து எனக்கு இலங்கை தொடர்பான ஆய்வாளர்களை ஒருங்கிணைப்பதிலும் தொடர்பு கொள்வதிலும் மிகப்பெரிய அளவில் உதவிகளைச் செய்தவர் பேராசிரியர் குணபாலசிங்கம் அவர்கள். அவரது ஈடுபாடும் உழைப்பும் நான் இந்த மாநாட்டை விரைந்து ஏற்பாடு செய்வதற்குப் பெரும் உதவியாக அமைந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவினர் குறிப்பாக, செயலாளர் முனைவர் தேமொழி, பேராசிரியர் பாப்பா, பேராசிரியர் இறைவாணி, திருவாளர்கள் நாணா, கிருஷ்ணகுமார் ஆகியோர் பல்வேறு பணிகளைப் பொறுப்பில் எடுத்துக்கொண்டு இந்த மாநாட்டைச் சிறப்புடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக உழைத்தனர். திரு கீர்த்திவர்மன், முனைவர் சிவ. இளங்கோ, திரு ஒளிவண்ணன் போன்றோர் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் உதவியது.

மாநாட்டின் அமர்வுகள் மட்டுமின்றி இலங்கையின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பலரையும் சிறப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் தனது விருப்பத்தைத் தெரிவித்த போது தமிழ் மொழி வரலாறு சமூகவியல் எனப் பல்வேறு வகையில் தொண்டாற்றிய பெருந்தகைகளுக்குச் சிறப்பு செய்யும் பொருட்டு அவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்தோம். அவர்களது பணியும் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய தொண்டையும் ஆவணப்படுத்தும் வகையில் மாநாட்டு மலரில் அவர்களது பங்களிப்பைப் பற்றிய குறிப்புகளையும் இணைத்து மாநாட்டு மலரைத் தயாரித்தோம்.

இந்த மாநாட்டின் முக்கிய அங்கமாக மட்டக்களப்பு பற்றிய ஒரு வரலாற்று ஆய்வு நூலையும் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக இதனை மெருகேற்றினோம்.

இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆளுநர் தனது முயற்சியின் வழியாக இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியாக உருவாக்கும் வகையில் மாநாட்டைச் சிறப்பித்து அஞ்சல் தலை ஒன்றை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

இந்த மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியாக திருவள்ளுவர் சிலை ஒன்றை நிறுவி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒற்றை பாலமாக இருக்கும் திருக்குறளுக்குச் சிறப்பு சேர்த்தோம்.

இந்தப் பெருமைமிகு நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் மாணவர்கள் ஊர்வலமாக வந்தது மட்டக்களப்பு நகரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஓவியர் குல ராஜா அவர்களது ஓவியத்தைக் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு கண்காட்சி இந்த நிகழ்ச்சியில் இணைந்தது.

மாநாட்டின் கருத்தரங்க அமர்வுகளைச் சிறந்த முறையில் நிகழ்த்தும் வகையில் இறுதி நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இரண்டாம் நாள் அனைத்து அமர்வுகளையும் பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்துவதற்குச் சம்மதம் தெரிவித்து அதற்கான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு நல்கி உதவியதை இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து பல ஆய்வாளர்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மிகுந்த ஆர்வத்துடன் பல ஆய்வாளர்களும் வந்திருந்தார்கள். குறுகிய கால ஏற்பாடாக இருந்த போதிலும் கிழக்கு மாகாண அரசின் அலுவலர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்துக் கொண்ட பொறுப்பை இரவு பகலாக உழைத்து இந்த மாநாடு சிறக்க வேண்டும் என்று தங்கள் உழைப்பை வழங்கியிருந்தனர். குறிப்பாக, திருமிகு சுஜாதா அவர்கள், திருமிகு சிவலிங்கம் அவர்கள், திருமிகு நவநீதன் அவர்கள், திருமிகு பாபு அவர்கள் ஆகியோரது உதவியும் பங்களிப்பும் இந்த மாநாட்டை நல்ல முறையில் நடத்த உதவியது.

மாநாட்டு முதல் நாள் தொடக்கம் மட்டக்களப்பு நகர் விழாக்கோலம் கொண்டிருந்தது. பொது மக்களிடையே இது மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது என்பதை அவர்கள் ஆர்வத்தோடு சாலையின் ஓரத்தில் நின்று நிகழ்ச்சிகளைக் கவனித்ததையும் இணைந்து கொண்டதையும் அமர்வுகளில் நேரில் வந்து பங்கெடுத்துக் கொண்டதையும் பார்த்தபோது உணர முடிந்தது.

ஒரு மாபெரும் தமிழ் கலை இலக்கிய மாநாட்டினை இலங்கையில் நடத்தி முடித்து இருக்கின்றோம். இது ஒரு முறை மட்டுமே நடக்கின்ற ஒரு நிகழ்வாக அல்லாமல் ஆண்டுதோறும் இலங்கை வாழ் மக்களையும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக அமைவதற்கான அனைத்து முயற்சிகளையும் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம்.

ஒரு மாநாடு அல்லது கருத்தரங்கம் அல்லது ஒரு நிகழ்ச்சி என்பது ஏற்பாடு செய்யப்படும்போது அதில் குறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவது இயல்பு. இந்த மாநாட்டில் ஏற்பட்ட சிற்சில அத்தகைய குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து அடுத்த ஆண்டில் மேலும் சிறப்பாக இம்மாநாட்டினை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இந்த மாநாட்டிற்குப் பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் இருக்கின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் 1500 நூல்களை மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு வழங்கி இருக்கின்றோம் என்பது இந்த மாநாட்டை ஒட்டி நாம் நிகழ்த்தியிருக்கும் ஒரு சாதனை. இது மட்டக்களப்பு வாழ் பொது மக்களின் நலனுக்கு உதவும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

மட்டக்களப்பு நகரிலிருந்து புறப்பட்டு வரும்போது பிரிய மனமில்லாமல் அனைவரும் புறப்பட்டோம்.

இந்த மாநாடு இதில் பங்கேற்ற நம் ஒவ்வொருவர் மனதிலும் பசுமையாக நிலை கொண்டிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ் மொழி வரலாறு பண்பாடு கலை ஆகிய துறைகளில் சிறந்த முறையில் அவற்றை முன்னெடுக்கும் முயற்சிகளில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அடுத்த தலைமுறை நலன் பெற நம்மால் ஆன அனைத்துச் செயல்களையும் செய்வோம். வரலாற்றை ஆவணப்படுத்துவோம்.

தமிழால் ஒன்றிணைவோம்!

முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு  அமைப்பு
10.8.2024


 

 

“கருத்தரங்கம்”  தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் புதிது அல்ல. 2006 ல்  கொரியாவிலிருந்து என்று நான் மின்தமிழ் எனும் கூகுள் மடலாடற்குழுவைத் தொடங்கினேனோ அன்றிலிருந்து தமிழ் மரபு அறக்கட்டளை கருத்துகளின் அரங்கமாகவே செயல்படத்துவங்கியது. உதாரணமாக கொரியத் தமிழ் தொடர்புகள் பற்றிய விவாதக் களமாக மின்தமிழ் திகழ்ந்தது. எத்தனையோ ஆய்வுப்பொருட்கள் அங்குண்டு. தேடினால் கிடைக்கும். செம்மொழி மாநாடு பற்றி நான் எழுதிய பதிவுகளும் அதற்கான எதிர்வினையும் ஒரு நூலாக விரைவில் வரப்போகிறது. நீங்களும் தேடித்தொகுத்து நூல்களைக் கொண்டு வரலாம்.

கருத்தரங்கம் எனும் பொதுப்புரிதலுள்ள அமர்வுகளையும் தமஅ நடத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தமிழன் சோர்ந்துவிடக்கூடாது என ஆரம்பிக்கப்பட்டதுதான் “திசைக்கூடல்” எனும் மெய்நிகர் நிகழ்ச்சிகள். இதில் ஆளுமைகளின் தனிப்பட்ட பேச்சுக்கள் என்றில்லாமல், ஒரு நாள், இரு நாள் கருத்தரங்கங்களும் வெவ்வேறு தலைப்புகளில் நடைபெற்றுள்ளன. அப்படி சமீபத்தில் (ஏப்ரல் 20 & 21, 2024) நடைபெற்ற கருத்தரங்கம்தான், “மட்டக்களப்பு: வரலாறு, சமூகம், பண்பாடு”. பேரா.மௌனகுரு அவர்களின் பங்கேற்புடன் நடந்த இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை த.ம.அ ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.

இதையடுத்து வருவதுதான் ஆகஸ்டு 2-3, 2024 நடைபெற்று முடிந்துள்ள “உலகத்தமிழ் கலை இலக்கிய மாநாடு”.  இது மெய்நிகராக அமையாமல் மெய்யாகவே நடந்த மாநாடு. இவ்விரு மாநாடுகளுக்கும் உறுதுணையாக நின்றவர், கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் அவர்கள். இதுவரை நடந்திராத அளவில் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து நடத்திக் காட்டியிருக்கிறார் ஆளுநர். இவ்விரு மாநாடுகளையுமே தமிழ் மரபு அறக்கட்டளை தலைமையேற்று நடத்த வேண்டுமென்ற அவரின் வேண்டுகோளை ஏற்று இரவு பகல் பார்க்காமல், கண்ணுறக்கம் பாராமல் செயல்பட்டவர் த.ம.அ வின் தலைவர் டாக்டர் சுபாஷிணி கனகசுந்தரம் அவர்கள். இதில் அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்படுத்திய பலரில் குறிப்பிடத் தக்கவர்கள் டாக்டர் பாப்பா, டாக்டர் இறைவாணி, டாக்டர் கௌதம சன்னா, டாக்டர் ஒளிவண்ணன், சிலம்பர். கிருஷ், எழுத்தோவியர் நாணா போன்றோர்.

இதுவரை நடந்துள்ள தமிழ் மாநாடுகள் போலவே ஊர்வலம், கலைகளின் வெளிப்பாடு எனக் கல்விசார் கருத்தரங்கமாக கிழக்கு பல்கலைக் கழகத்தில் இம்மாநாடு நடைபெற்றது. சுபாவின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கல்விசார் பேராளர்கள் ஆளுநரால் கௌரவிக்கப்பட்டனர்.
1.  பேராசிரியர் சி.மௌனகுரு & பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
மேனாள் பீடாதிபதி, கலைகலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம் (மட்டக்களப்பு)
2.  பேராசிரியர் சி.பத்மநாதன்,
பொறுப்பு வேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (கொழும்பு)
3.  தகைசால் பேராசிரியர்கள் அ.சண்முகதாஸ் & ச.மனோன்மணி
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (திருகோணமலை )
4.  திருமிகு சா. திரிவேணி சங்கமம்,
மொழிபெயர்ப்பாளர், காரைத்தீவு (அம்பாறை)
5.  பேராசிரியர் முனைவர் பரமு. புஷ்பரட்ணம்
மேனாள் தொல்லியல் மற்றும் வரலாற்றுத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் (யாழ்ப்பாணம்)
6.  திருமிகு ஈஸ்வரராஜா குலராஜா,
ஓவியர் (மட்டக்களப்பு)
7.  முனைவர் தம்மிக்க ஜயசிங்க,
முதுநிலை விரிவுரையாளர், சிங்களத்துறை, றுகுணு பல்கலைக்கழகம் (மாத்தறை).
8.  திருமிகு சுப்பையா ராஜசேகரன்,
ஆவணப் பாதுகாப்பகம் (நுவரெலியா)
9.  பேராசிரியர் த.ஜெயசிங்கம்,
மேனாள் துணைவேந்தர், தகைசால் பேராசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகம் (மட்டக்களப்பு)
10.  முனைவர் சா.தில்லைநாதன்,
ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர், (மட்டக்களப்பு)
11.  பேராசிரியர் ஏ.எஸ். சந்திர போஸ்,
மேனாள் பீடாதிபதி. இலங்கை திறந்தபல்கலைக்கழகம் (நுவரெலியா)
12.  முனைவர் இராசையா மகேஸ்வரன்
கல்விசார் பிரதம நூலகர், பேராதனைப் பல்கலைக்கழகம் (கண்டி).
13.  திருமிகு. தம்பிராசா தவக்குமார்,
சமூக சேவையாளர், காரைத்தீவு (அம்பாறை)
14.  முனைவர் பக்தவச்சல பாரதி,
மேனாள் இயக்குநர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, இந்தியா
15.  முனைவர் க.சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை, பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி).
ஒரு மாநாட்டிற்கு ஓர் அரசு தபால்தலை வெளியிடுகிறது என்றால் அது எத்தகைய சிறப்பு மிக்கதாய் இருக்க வேண்டும்? மொத்தத்தில் இம்மாநாடு த.ம.அ வின் மகுடத்தில் இன்னுமோர் மணி.

முனைவர் நா. கண்ணன்
துணைத்தலைவர், இணைத் தோற்றுநர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு  அமைப்பு


 

 

தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக முனைவர் சுபாஷிணி அவர்கள் தலைமையில் இலங்கை சென்ற குழு, அங்கு ஆக்கப்பூர்வமான சில பணிகளைச் செய்து திரும்பியது. அவற்றை மக்கள் மத்தியில் பகிர்வது அவசியமானதுதான். அவை;
1) இலங்கையின் முக்கியமான நெடுஞ்சாலையின் சந்திப்பில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கிடையே திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியை நடத்தியது தமிழ் மரபு அறக்கட்டளை. முனைவர் சுபாஷிணி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை அலங்கரிக்க, திருவள்ளுவர் யார் என்ற நூலை எழுதிப் புகழ் பெற்ற வழக்கறிஞர் கௌதம் சன்னா அவர்கள் தலைமையேற்க, கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் அவர்கள், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்த நிகழ்வானது, கலந்து கொண்ட இலங்கை மக்கள் பலராலும் பாராட்டப்பட்ட நிகழ்வாய்த் திகழ்ந்தது.

2) தமிழ் மரபு அறக்கட்டளைக் குழு நிறுவனர் சுபாஷிணி, அங்குக் கட்டப்பட்டு வரும் புதிய நூலகத்திற்காக இங்கிருந்து கொண்டு சென்ற 1000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆளுநர் வசம் குழுவினருடன் இணைந்து ஒப்படைத்தார் (நான் எழுதி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட , “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற 3 புத்தகங்களும் இத்துடன் சேர்க்கப்பட்டன.) மட்டக்களப்பில் உள்ள நூலகம், புதிய நூலகத்திற்கு மாறவிருக்கிறது. ஆளுநர் கேட்டுக் கொண்டபடி, நாங்கள் பழைய நூலகத்தையும், புதிதாகக் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் புதிய நூலகத்தையும் பார்வையிட்டோம். அதன் படங்களைப் பகிர்ந்துள்ளேன். புதிய நூலகம் மிக அழகிய கட்டடக்கலை அமைப்புடன் மிகப் பெரிதாக ஓர் அரண்மனைபோல் தோற்றமளிக்கிறது. எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில் கடற்கரை ஓரமாகக் கட்டப் பட்டு வருகிறது. அங்குச் சென்ற குழு பார்வையிட்டு மகிழ்ந்தது.

3) கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தில் மாணவர் மத்தியில் பல்வேறு ஆக்கப் பூர்வமான தலைப்பில் உரையாற்றினர் குழுவினர். சிலம்பாட்டம் பற்றிய சொற்பொழிவு, மாணவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, வெகுவாகக் கவர்ந்தது.

4) அறிஞர்கள் பலருக்கு அவர்கள் ஆற்றிய பணியைப் பாராட்டி விருதுகள் வழங்கியமையும் ஒரு கடமையுணர்ச்சியாய் மிளிர்ந்தது. கிழக்கு மாகாண ஆளுநரும், பல்கலைக் கழகத் துணை வேந்தரும் விருதுகள் வழங்கி பாராட்டி வாழ்த்தினர். தம்மை வருத்தி தம் ஆற்றலை வெளியுலகிற்குப் பயன்படுமாறு தந்து கொண்டிருப்பவர்களைப் பாராட்டுதல் என்பது ஒரு சரித்திர நிகழ்வு தானே. அப்படித்தான் அமைந்திருந்தது அன்று.

5) இத்தகைய பணிகளை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பும் போது, அறக்கட்டளை நிறுவனர் சுபாஷிணி, ஒரு யோசனையைத் தெரிவித்தார். அந்தப் பேருந்தில் ஓர் உரையாடலை அமைக்கலாம் என்பதுதான் அந்தப் பயனுள்ள யோசனை. வந்திருந்த குழுவினரில் பலர் நல்ல இலக்கிய வாதிகள். அதாவது தற்கால இலக்கியத் திறனாய்வு, விமர்சனம், கதை, கவிதை என்ற துறைகளில் வல்லுநர்கள். தங்கள் உரையாடலைத் தொடங்கினர். சுறுசுறுப்பான திறனாய்வும் விமர்சனமும், விறு விறு வென்று உச்சத்தில் ஏறிக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமான சூழலில் அனைவரும் திளைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் ஒரு தொல்லியல் ஆய்வாளர். அவரால் அந்த உரையாடலில் கலந்து கொள்ள முடியவில்லை. ரசிக்கத்தான் முடிந்தது. காரணம், பழைய கற்காலம், புதிய கற்காலம், கீழடி, போன்ற அகழாய்வுகள், சோழன்,பாண்டியன், பல்லவன், என்றால் அவர் மனநிலை சும்மா எகிறும். ஆனால் அப்போது இந்த உரையாடலை அவர் மனநிலை படுத்துக் கொண்டு ரசித்தது.

குழுவிலுள்ள நாணா என்ற கேமரா நிபுணர் நாராயணன் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று செயல் புரிந்து, அழகிய புகைப் படங்கள் எடுத்து அசத்தினார். அவர் எடுக்கும் படங்களை ஒரு தொழில்நுட்பக் கலை எனலாம். மறு நாள் கொழும்பிலிருந்து சென்னைத் திரும்பினோம்.

முனைவர் ஆ. பத்மாவதி
தொல்லியல் ஆய்வாளர்
ஆகஸ்ட் 21, 2024

  •  

தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூல், பதிப்பகம் பரிசு

தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூல், பதிப்பகம் பரிசு

தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்
தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூல், பதிப்பகம் பரிசு

“”நூலாசிரியர் பாராட்டுச் சான்றிதழ் – 2022″”
நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் 2022 ஆம் ஆண்டு சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பெற்ற ராஜராஜனின் கொடை என்ற நூலை எழுதிய
க. சுபாஷிணி அவர்களுக்கு ரூ.30,000/- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ்நாடு அரசால் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுகிறது.

“பதிப்பகத்தார் பாராட்டுச் சான்றிதழ் – 2022″”
நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் 2022 ஆம் ஆண்டு சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பெற்ற ராஜராஜனின் கொடை என்ற நூலைப் பதிப்பித்த
தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பாளருக்கு ரூ.10,000/- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ்நாடு அரசால் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுகிறது.

இராஜராஜனின் கொடை நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த வரலாற்று நூலுக்கான பரிசு, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்திற்குச் சிறந்த வரலாற்றுப் பதிப்பக பரிசு சான்றிதழ்களை ஜூலை 11, 2024 அன்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் வழங்கினார்.


  •  

பேராசிரியர் பாண்டியராஜா அவர்களுக்கு சங்கச்செம்மல் விருது

சங்கத் தமிழ்ப் பாடல்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதைத் தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் அயராது உழைத்து சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குத் தொடரடைவுகளையும், அருஞ்சொற் களஞ்சியத்தையும், கட்டுரைகளையும், நூல்களையும் உருவாக்கி தமிழ் மக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உதவும் வகையில்  வழங்கியுள்ளார்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பேராசிரியர் பாண்டியராஜா அவர்களது சங்கத்தமிழ்ப் படைப்புகளை இணையம் வழி பாதுகாக்கும் ஒரு திட்டமாக “சங்கம்பீடியா” தளத்தை உருவாக்கியுள்ளதோடு தமிழுக்குப் பெரும் பங்காற்றி இருக்கும் பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுக்கு  ஜனவரி 22, 2024 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில்  “சங்கச்செம்மல்” விருது வழங்கி மதிப்பு செய்ததில் பெருமிதம் அடைகிறோம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு  அமைப்பு  குழுவினர்

முப்பெரும் விழா
நாள்/தேதி: திங்கட்கிழமை, 22.1.2024
நேரம்: மாலை 5:30
இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம்,
புத்தகத் திறனாய்வு அரங்கம்
~~~~~~~

  1. சங்கம்பீடியா வலைப்பக்கம் வெளியிடு
  2. 3 சங்கத் தமிழன் நூல்கள் வெளியீடு
  • பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் 1
  • பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் 2
  • நக்கீரர் நடைப்பயணம்

3. பேராசிரியர் பாண்டியராஜா அவர்களுக்குச் சங்கச்செம்மல் விருது வழங்குதல்.

சங்கத்தமிழை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் தன் முயற்சியை இரவு பகலாக உழைத்து தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கிய பேராசிரியர் பாண்டியராஜா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு “சங்கச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்தோம்.
இந்தச் சிறப்பு வாய்ந்த விருதினை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் வழங்க அவரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா அவர்கள் நூல்களை வெளியிட்டு சிறப்புரை வழங்க அவர்களோடு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் அவர்கள் வாழ்த்துரை வழங்க..
நேற்றைய நிகழ்ச்சி மனநிறைவளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது.

நிகழ்ச்சியின் காணொளிகள்

முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு “சங்கச் செம்மல்”
விருது வழங்கும் விழா [22 ஜனவரி 2024] 10 நிமிடம்
https://youtu.be/Q0jB3hvtvII
~~~~~~~~~
முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு “சங்கச் செம்மல்”
விருது வழங்கும் விழா: முழுநீள விழாக் காணொளி
https://youtu.be/Qpxy0VvOm2s
~~~~~~~~~~~
“சங்கம்பீடியா” வலைப்பக்கம் திறப்பு விழா
திரு ஆர் பாலகிருஷ்ணன் இஆப அவர்களின் வாழ்த்துரை
https://youtu.be/-zUxwM745ZM
~~~~~~~~
“சங்கம்பீடியா” வலைப்பக்கம் திறப்பு விழா
அறிமுகவுரை முனைவர் தேமொழி
https://youtu.be/tFyubv0MeeE
~~~~~~~
ஊடக செய்தியில் விருதுவிழா செய்தி . . .
22 01 2024 MONDAY
TAMIL HERITAGE FOUNDATION INTERNATIONAL
PLACE CHENNAI KOTTURPURAM LIBRARY
https://www.youtube.com/watch?v=H63qH0Rl3Rg
~~~~~~~~

சில புகைப்படங்கள்


  •  

“திணை” இதழ் 33 [ஜூலை — 2023] காலாண்டிதழ் வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் —“திணை” இதழ் 33 [ஜூலை — 2023] காலாண்டிதழ் வெளியீடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“திணை”.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.

காலாண்டிதழ் வரிசையில் இந்த 33 ஆவது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
“திணை” இதழ் 33 [ஜூலை — 2023]

ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : முனைவர் தேமொழி
இணை பொறுப்பாசிரியர் : குமரன் சுப்ரமணியன்

வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


உள்ளடக்கம்

தலையங்கம்
— முனைவர் க. சுபாஷிணி 5
மலையும் தமிழும்! — சங்க இலக்கியக் கருத்தியல்கள்
— ஆர்.பாலகிருஷ்ணன் 9
அன்பின் ஐந்திணை – குறிஞ்சி
— முனைவர் தேமொழி 34
தமிழ் அழகியல்: நூல் திறனாய்வு
— முனைவர் க. சுபாஷிணி 52
யாழ்ப்பாணத்தவர் வாழ்வியலில் மாட்டுவண்டில்: திறனாய்வு
— முனைவர் மு. இறைவாணி 59
ரிக்வேத சமூகம் – ஒரு பார்வை: நூல் திறனாய்வு
— முனைவர் க. சுபாஷிணி 68
தமிழகத்தில் பௌத்தம்: நூல் திறனாய்வு
— முனைவர் ஜம்புலிங்கம் 83
அண்மையில் வெளியான அயலகத் தொல்லியல் செய்திகள்
— முனைவர் க. சுபாஷிணி 88
வடமொழியில் திராவிடச் சொற்கள்
— முனைவர் ஒளவை அருள் 93
இலக்கியச் சிந்தனை
— குமரன் சுப்ரமணியன் 100
சிந்தனையாளர் வே. ஆனைமுத்து
— முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி 102
இலங்கை பயணக் குறிப்புகள்
— முனைவர் மு. பாமா 107
யானைகள் நமது காடுகளின் காவலர்கள்
— பேரா. முனைவர். நா.கண்ணன் 130
கர்னூலில் காணப்படும் பாறை ஓவியங்கள்
— முனைவர் மு. பாமா 137
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
— ஏப்ரல் 1, 2023 — ஜூன் 30, 2023 நிகழ்வுகள் 142


தலையங்கம்

— முனைவர் க. சுபாஷிணி

வணக்கம்.

நமது உலகம் வரலாற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த கால நிகழ்வுகளின் புரிதல் நிகழ்காலத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டங்களை நமக்கு வழங்குகிறது. வரலாற்றைப் படிப்பதும், தெரிந்து கொள்வதும், நாம் வாழும் சூழலையும், சமூகங்கள் தொடர்பான பார்வையையும், இவ்வுலகில் நடந்த மாற்றங்களையும். வளர்ச்சியையும் மேம்பாடுகளையும்  புரிந்து கொள்ள மனிதக்குலத்திற்குத் தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் உலக நாடுகளின் ஏதோ ஓர் இடத்தில் வரலாற்றின் பண்டைய சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவை மனிதக் குலத்தின் நம்பிக்கைச் சார்ந்த கருத்துகளை மையப்படுத்தியதாகவோ, ஈமக்கிரியைச் சார்ந்த சின்னங்களாகவோ, போர் வெற்றியை வெளிப்படுத்துவதாகவோ, இயற்கை பேரழிவை வெளிப்படுத்துவதாகவோ என பல கோணங்களில் அமைகின்றது.

வரலாற்று ஆய்வுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது அகழாய்வுகள் எனலாம். அகழாய்வுகள் புதிய  கண்டுபிடிப்புகளை ஆய்வுலகத்திற்கு வழங்குவதன் வழி வரலாற்றின் விடுபட்ட புள்ளிகளைக் கண்டுபிடிக்க வரலாற்றாய்வாளர்களுக்கு உதவுகின்றன. மரபணு ஆய்வுகள் என்பது கடந்த சில பத்தாண்டுகளில் உலகளாவிய அளவில்  பெரும் வளர்ச்சி கண்டுவரும் ஓர் ஆய்வாகத் திகழ்கின்றது. மனித இனம் என்பது ஹோமோ சேப்பியன்கள் மட்டுமல்ல … மாறாக ஹோமோ இரெக்டஸ், நியாண்டெர்தால், ஹைடெல்பெர்கென்சிஸ், ஸ்டைம்ஹைம்னிஸ் இன்னும் பல என விரிவாகிக் கொண்டே வருகின்றது. புதிய மனித இனங்களும் இந்த உலகில் வாழ்ந்து மறைந்து போயிருக்கின்றன என்பதையும் மரபணு ஆய்வுகள் ஆச்சரியப்படும் வகையில் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

வரலாற்று ஆய்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை வழங்க வேண்டும், முறையாக ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒரு உலகளாவிய நிறுவனமாகத் திகழ்கிறது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. அந்த வகையில், இவ்வாண்டு மரபணு ஆய்வுகள் தொடர்பான கண்டுபிடிப்புக்களை ஆய்வு மாணவர்கள், பொதுமக்கள் என் பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்போடு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மதுரையில் ஓர் ஆய்வுக் கருத்தரங்கை இவ்வாண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் வெற்றி பொதுமக்களுக்கு வரலாற்றை முறையாக அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளது என்பதை  வெளிப்படும் வகையில் அமைந்தது. அதன் அடிப்படையில் வருகின்ற காலங்களில் மேலும் விரிவாக இத்தகைய கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்து நிகழ்த்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஆர்வத்துடன் உள்ளோம் என்பதால்  இணைந்து செயல்பட ஆர்வம் உள்ள அமைப்புகளோ கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ தமிழ் மரபு அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பாடுகளை விரிவாக்கும் வகையில் இவ்வாண்டு மதுரைக் கிளை உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் சார்ந்த செயல்பாடுகள், மதுரை மற்றும் அதன் அருகாமை பகுதிகளில் வரலாற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் இக்குழுவின் செயல்பாடுகள் அமையும்.

தமிழ்நாட்டிற்கு வெளியே இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை ஒன்று 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகள் முடங்கிக்கிடந்த நிலையில் அதனை மீண்டும் செயல்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கப்பட்டன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.

ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கப்பட்ட ‘அகம் புறம்’ கண்காட்சி மே மாதம் 7ஆம் தேதி நிறைவு பெற்றது. உலகளாவிய அளவில்  தமிழின் சங்ககாலப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு வகையில் வரலாற்று ஆர்வலர்களுக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் பல செயல்பாடுகளையும்  நிகழ்ச்சிகளையும்  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.   தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுக்கும்  வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுங்கள். உங்களை அன்புடன்  வரவேற்கின்றது  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

தமிழால் இணைவோம்!

அன்புடன்

முனைவர் க சுபாஷினி

தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

  •  

பல்கலைக்கழக மாணவர்களுக்கான பரிந்துரை பட்டியலில் த.ம.அ

பல்கலைக்கழக மாணவர்களுக்கான பரிந்துரை பட்டியலில் முதலிடம் பெற்ற தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வலைப் பக்கங்கள்

ஒரு பல்கலைக்கழகத்துக்கு இணையான அத்தனை தரவுகள் நமது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வலைப் பக்கத்தில் உள்ளன. ஆய்வுப் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் பொது மக்களும் இவற்றை தங்கள் அறிவுத் தேடலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்துமே இலவசமாக வழங்கியிருக்கின்றோம். ஏறக்குறைய 20 ஆண்டுக்கால உழைப்பு.

தரமான நமது வலைப்பக்கம் கல்வியாளர்களையும் பேராசிரியர்களையும் மாணவர்களையும் சென்றடைய அவற்றைப் பல்கலைக்கழக பட்டியலில் முதலிடத்தில் வைத்து நமக்கு அங்கீகாரமும் பெருமையும் வழங்கிய தமிழக அரசின் கல்வித் துறைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

 

// தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பாப்பாவின் பதிவு.
இன்று எங்கள் கல்லூரியில் பாடத்திட்டங்களுக்கான குழுக்கூட்டம் (Academic board) நடந்தது. இப்பொழுது தமிழ்நாடு அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் (சமச்சீர்க் கல்வி) என்பதைப் போல அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பதை இந்த வருடத்திலிருந்து நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. பாடத்திட்டத்தில் யாருக்கு எந்தப் பாடத்தைக் கொடுப்பது இப்படி எல்லாம் நிறைய குழப்பங்கள் – எதையுமே துவங்கும் பொழுது சில குழப்பங்கள் இருக்கத்தானே செய்யும் அதைப்போல. நாங்கள் குறிப்பாக நான் இன்று தான் அந்தப் பாடத்திட்டத்தைப் பார்த்தேன். என் பக்கத்தில் இறைவாணியும் இருந்தார். ஒவ்வொரு பாடத்திற்கும் முடிவில் பார்வை நூல்கள், பாட , இணையதள முகவரிகள் நிறைய கொடுக்கப்பட்டிருந்தன. பெரும்பான்மையான பாடங்களின் முடிவில் கொடுக்கப்பட்டிருந்த இணையதள முகவரியில் முதலில் இருந்தது நமது Thf இணையதளம்தான். எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியும் சந்தேகமும். நம்முடையது தானா என்று வேகமாக அந்த இணையதள முகவரியைக் கூகுளில் பார்த்தோம். நம்முடைய இணையதள முகவரிதான். இருவருக்கும் அந்த நேரத்தில் மிகுதியான மகிழ்ச்சி. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதள முகவரி என்பதில் இன்னும் சந்தோஷமாக இருந்தது.//

 

 

  •