Reading view

விளிம்பின் மையத்தையும் சிதறடிப்பேன் – லீனா மணிமேகலை நேர்காணல்

விளிம்பின் மையத்தையும் சிதறடிப்பேன் – லீனா மணிமேகலை நேர்காணல்

நேர்காணல் ஒருங்கிணைப்பு : க. உமாமகேஸ்வரி

பாலக்காடு மாவட்டம் பாஞ்சஜன்யம் திரைப்படவிழாவுக்கு தன்னுடைய ‘காளி’ நிகழ்த்து ஆவணப் படத்தைத் திரையிட வந்திருந்த லீனா மணிமேகலையை பொற்றாமரை இதழுக்காக நேர்காணல் வேண்டி அணுகினோம். வினாக்களைத் தாருங்கள் மின்னஞ்சல்வழி விடையனுப்பித் தருகிறேன் என உடனே ஒத்துக்கொண்டார். மின்னஞ்சல் வழி லீனா மணிமேகலை தந்த நேர்காணல் இதோ.

  • இன்றைய தமிழ்க் கவிதைச்சூழல் பெண்களுக்கு புழங்கக் கூடியதாக உள்ளதா?

மொழி எனது எதிரி என்று ஒரு நூல் நீள நேர்காணலை விமர்சகர் சண்முகம் அவர்களுக்கு அளித்து அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. வரலாறு ஒரு நீலப்படம் என்று அறிவித்து, தமிழ் பெண்கவிதை குறித்த என் பெண்ணாடி கவிதைப்படத்தை முடித்திருப்பேன். மொழி ஒடுக்குபவன் கண்டுபிடித்த முதல் கருவி. இன்றல்ல வரலாறு நெடுகிலும் மொழி, பெண் மற்றும் பாலின சிறுபான்மையினரின் வெளிப்பாட்டை ஒடுக்கும் நிறுவனமாகத்தான் செயல்பட்டு வருகின்றது. சங்க காலப் பெண் கவிஞர்கள் என்பார்கள், ஆண்டாள் காரைக்கால் அம்மையார் என்பார்கள், புத்தகம் ஆய்வுக்கட்டுரைகள் புள்ளிவிவரம் என்று தூக்கிக் கொண்டு வருவார்கள் ஆனால் சமகாலத்தில் கவிதை எழுதும் பெண்ணை வேசி என்பார்கள். பெண் எழுதும் பிரதியை பெண்ணாகவே ‘வாசித்துக்’ தன் குறியை நீவி சுய இன்பம் காணும் தமிழ்ச் சமூகம் அடையவேண்டிய மன உயரம் இன்னும் சில நூற்றாண்டுகள் தூரம்.

இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் தமிழ் இலக்கிய வெளியில் முற்போக்கு சித்தாந்தப் பூச்சுற்றல்வாதிகள் பெருத்து, பெரியாரையும், அம்பேத்கரையும், மார்க்ஸையும் சாட்சிக்கு வைத்துக் கொண்டு எழுத வரும் பெண்ணைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார்கள். குடும்பம், அரசு, சாதி, மதம் என்று நிறுவனங்களை எதிர்த்துக் கொண்டு, அவை தரும் சமூகப் பாதுகாப்பையும் பணயம் வைத்து கலை இலக்கிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கும் பெண் நிராதரவாக உணரும் நிலைதான் நீடிக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேச புறப்படும் பெண்ணுக்கு சித்தாந்தவாதிகளின் அதிகாரத்திற்கும் எதிராக உண்மையைப் பேசும் நிலை ஏற்படும் போது தனிமைப் படுத்தப் படுகிறாள். பெண்ணுக்கென்று ஒரு தேசம் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண்ணுக்கென்று படைப்பு தேசமும் இல்லை.

  • கவிதைகள் எதிர் உரையாடல் தன்மையில் அமைவது ஒரு உத்தியா? அல்லது வேறு காரணங்கள் உண்டா?

பரத்தையருள் ராணி தொகுப்பிற்காக கவிஞர்கள் யவனிகா மற்றும் செல்மாவுடன் நடத்திய கலந்துரையாடலில் சொன்னதை மேற்கோள் காட்டினால் இதற்கு உகந்த பதிலாக இருக்கும். “வடிவம், உத்தி, அமைதி, இலக்கணம், வரையறை, மதிப்பீடுகள், என்றெல்லாம் சொல்லும் மரபு சார்ந்த பார்வையில் நான் தலையிட விரும்பவில்லை. அந்தப் பார்வை ஒரு இறுகிய வடிவத்தை நிலைநிறுத்த முயல்கிறது. இங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும் இந்நிலை தொடர்வதே அமைதிக்கு வழியெனவும் ஒரு பிரமையை வலியுறுத்துகிறது. எனக்கோ அமைதிக்கு மீறி கலகம் தேவைப்படுகிறது. ஏன் என்றால் அந்த அமைதி ஒடுக்கப்பட்டவர்களின் மெளனம். என் கவிதையின் நோக்கமே அந்த மெளனத்தைக் கலைப்பதும், எதிர் உரையாடலையும், கலகத்தையும் ஏற்படுத்துவதும்தான். மொழியை உச்சபட்சமாக விமர்சிப்பதற்குக் கவிதையே எனக்குகந்த ஊடகமாக இருக்கிறது. அதனால் என் மூச்சிருக்கும் வரை அதைச் செய்து கொண்டே இருப்பேன்.

  • லீனா ஒரு வகையில் கவிதை எழுதிப் பார்க்கிறார் எனக்கு அது கவிதையாக இல்லை‘ என்ற ஜெயமோகனின் கருத்துக்கு உங்களின் எதிர் வினை என்ன?

அவருடைய மற்றுமொரு கட்டுரையில் “Male Chauvenist Pig” என்று அவரை நான் ஒரு உரையாடலின் போது விளித்தேன் என்று குறிப்பிட்டிருப்பார். நண்பராகவும் எழுத்தாளராகவும் நான் அறிந்தவரையில் ஜெயமோகன் ஒரு மரபான கலாச்சார ஆண். கலாச்சார ஆண்கள் பெண்ணை, பெண்ணுடலை, பெண்ணின் படைப்புகளைக் குறித்து தீர்ப்பு சொல்லிக்கொண்டே இருப்பதுதான் தமக்கு வாய்த்த வாழ்வின் பெரும் வினையாக ஏற்றுக் கொண்டவர்கள். அத்தகைய அதிகார போதையிலிருந்தும், அது விளைவிக்கும் பெருந்தனிமையிலிருந்தும், பெண் மீதான பதற்றங்களிலிருந்தும், கலாச்சார கருத்துருவக் கற்பிதங்களிலிருந்தும் ஒருவரை விடுவிக்கும் முயற்சியே எனது கவிதை நடவடிக்கை. மொழியில் விடுதலையை விரும்பாதவர்களுக்கு என் கவிதைகள் புலப்படாததில் எனக்கெந்த ஆச்சர்யமும் இல்லை.

மற்றபடி விமர்சன மரபில் phallic criticism என்ற பதமுண்டு. தமிழ் விமர்சன மரபு அதற்கொரு விளக்க ஏடு. அதைக் குறித்து விலாவரியாக தரவுகளோடு பேசுவதற்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றை ஒழுங்கு செய்தால் விரிவாக உரையாடலாம்.

  • தங்கள் கவிதைகள் பெரும்பாலும் தன்னிலை சார்ந்தே வெளிப்படுகின்றன. எழுத்தும் தன்னிலையிலிருந்து புறப்படும் எழுத்துகளாகவே உள்ளன. பெண்ணியக் கவிதைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதுகிறீர்களா? அல்லது இயல்பாகவே வருகிறதா?

இதுவரை 500 கவிதைகள் எழுதியிருப்பேன். அவற்றில் அகக் கவிதைகளுக்கு நிகராக புறக் கவிதைகளும் அடக்கம். ஒடுக்கப்பட்ட பாலினத்தின் பிரதிகள் பொதுவாக தமிழ் இலக்கியம் தொட மறுக்கும் புள்ளிகளை அதீதப்படுத்துவதால் ஏற்படும் பதற்றம் வாசிப்பையும் அக வெளிப்பாடுகள் மீது குவிக்கிறது எனக் கருதுகிறேன். தன்னிலை தானாக உருவாவதில்லை. பண்பாட்டால் தைக்கப்படுகிறது. To be precise. I am writing to unwrite myself from culture that oppresses my ‘self’ with my ‘sex’.

  • லீனா மணிமேகலைக்கு திரையுலகிற்குச் செல்லும் எண்ணம் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?

காலஞ்சென்ற என் தந்தை தமிழ்ப் பேராசிரியர் இரகுபதி “இயக்குநர் பாரதிராஜாவின் படங்களில் கருத்துப்புலப்படுத்தம்” என்ற ஆய்வை மேற்கொண்டு முனைவர்ப் பட்டம் பெற்றார். அவருடைய மறைவிற்குப் பிறகு அப்பாவின் ஆய்வைப் புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்று எடுத்த முயற்சியில் பாரதிராஜாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதிர் பதின்ம வயதில் கிடைத்த சினிமா அனுபவம், நான் செய்து கொண்டிருந்த பொறியாளர் பணியை விட்டுவிட்டு கலைத்துறையைத் தேர்ந்தெடுக்கும் உத்வேகத்தை அளித்தது.

  • தமிழ் சினிமா நேற்றும் இன்றும் நச்சு ஆண்மைய சினிமாதான்’ என்ற கருத்துக்கொண்ட உங்களால் திரைத்துறையில் எப்படிப் பணிபுரிய முடிகிறது ?

தமிழ் இலக்கியம் small dick energy என்றால் தமிழ் சினிமா big dick energy. காற்று, நீர், நிலம் மாசுபட்டுக் கொண்டேயிருக்கும் சூழலில் நாம் வாழவில்லையா? அதுபோலத்தான் நச்சு ஆண்மைய படைப்புச் சூழலுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு சுயாதீன திரைக் கலைஞராக எனக்கென்று ஒரு படைப்புலகத்தை உருவாக்கியிருக்கிறேன். என் சினிமா சொன்ன கதைகளை, அணைத்துக் கொண்ட நிலங்களை, மக்களை, அவர்களின் பாடுகளை, தமிழ் சினிமாவில் எந்த விரைத்த ஆண்குறியும் இதுவரை சொன்னதில்லை. சொல்லப் போவதுமில்லை.

  • வெகுசன சினிமா தாண்டி ஆவண படங்கள் அல்லது குறும்படங்கள் போன்ற இடங்களில் இந்த ஆணாதிக்கம் இல்லையா?

ஆணாதிக்கம் இல்லாத இடம் எது? கரன்ஸி பாயாத பாலைவனம் என்பதால் அதிகாரத்தின் குவிப்பு இல்லை என சொல்லலாம். சுயாதீன சினிமா உதிரி நிலம். நான் விளிம்பில் நின்று இயங்குகிறேன். என் படைப்புகளால் விளிம்பின் மையத்தையும் வெடித்து சிதற வைக்க முயற்சி செய்கிறேன்.

  • மாடத்தி திரைப்படத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினைப் பற்றி நுட்பமாகப் பேசியிருப்பீர்கள். விளிம்பின் விளிம்பில் இருக்கும் மக்களின் வாழ்வியல் சிக்கலைக் கதைக்கருவாகக் கொண்ட திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

பார்க்கவும் தகாதவர்கள் என்று ஒரு மக்கள் தொகையை ஒதுக்கியும் ஒடுக்கியும் வைக்கும் சமூகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன். சாதி என்ற பேரிழிவை என் படைப்புகளால் கேள்விக்குட்படுத்திக் கொண்டே இருப்பது என் படைப்புச் செயல்பாடுகளின் முதன்மை நோக்கம். 2003-இல் வெளிவந்த மாத்தம்மா என்ற ஆவணப்படம் முதல் 2019-இல் வெளிவந்த மாடத்தி என்ற முழுநீளக் கதைப்படம் வரை அதைச் செவ்வனே செய்திருக்கிறேன். இன்னும் செய்வேன்.

  • இப்படத்தை இயக்கும் போது ஏதேனும் நடைமுறைச் சிக்கலை அல்லது கருத்தியல் சார்ந்த சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்ததா? அப்படி ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி கூற முடியுமா?

பாலியல் வன்முறையை எதிர்கொண்டு போராடிய குஜராத்தின் பில்கிஸ் பானு, சத்திஷ்கரின் சோனி சூரி, மணிப்பூரின் மனோரமா, ராஜஸ்தானின் பன்வாரி தேவி, மல்யுத்த வீராங்கனைகள் என்று எனது நீண்ட ஆவணப்படத் தயாரிப்பின் போது எனக்கு மிகப்பெரிய மனக்சோர்வு உண்டானது. நீதி, அரசு, நியாயம், தர்மம் என்று எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டது. உண்மையிலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படட பெண்ணுடலுக்கு நீதி என்பது சாத்தியமா? அப்படியே சட்டப்படி போராடி வெல்லும் நீதி போதுமானதா? நீதியென்றால் உண்மையில் என்ன? என்னோடு தங்கள் வாழ்க்கையைப் போராட்டங்களை அவ்வளவு தீர்க்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் பெண்களுக்கு என்னதான் நான் செய்து விட முடியும் என்பது போன்ற கேள்விகள் என்னை நிலைகுலைய வைத்து விட்டன. ஐந்து வருட உழைப்பை அப்படியே கைவிட்டு விட்டு மனம் குழம்பித் திரிந்தேன். மாடத்தியைக் கண்டடைந்ததும் அந்த கேள்விகளால்தான். நாட்டார் கதைகளும் அதன் ஆன்மச் சரடான Poetic Justice என்ற தர்க்கமும் என்னை ஆற்றுப்படுத்தியது. Nobodies do not have Gods; they are Gods என்ற பேருண்மை எனக்கு பற்றுக்கோலாகக் கிடைத்தது.

  • பெண் குறித்த கடவுள் புனைவுகளுக்குக் கொடுக்கப்படும் புனிதம் சமூக எதார்த்தத்தில் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பெண் மீதான உடல் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த சமூக ஆணிய பார்வை இன்னும் கெட்டிப்படுவதனை பார்க்க முடிகிறது. காளி ஆவணப்படத்தில் அதனை எதிர்கொண்டீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

காளி என் மூதாதை. என் அவ்வா. காளியை நான் தரித்ததால் தாக்குண்டவர்கள் பார்ப்பனிய குண்டர்கள். காளியிடமிருந்து தாங்கள் பிடுங்கிய சிகரெட்டை நான் பிடித்திருந்தது அவர்களை வெறி ஏற்றிவிட்டது. நமது மூதாதைகளை, நம்மை, நாம் நடக்கும் பாதையை பார்ப்பனிய அடிப்படைவாதத்திலிருந்து விடுவிக்க நான் உருவாக்கிய படம் காளி. பத்துக்கும் மேற்படட எஃப் ஐ ஆர் கள், கொலை மிரட்டல், ரேப் அச்சுறுத்தல், என் சமூக ஊடக வலைத்தளங்களில் அத்துமீறி நுழைந்து என் புகைப்படங்களை, எனது குடும்பத்தின் புகைப்படங்களை என் படக்குழுவின் ப்ரொஃபைல்களைத் தாக்கியது, ஊடகங்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி அவமதிப்பு செய்தது, அந்நிய நாட்டில் யாருமற்ற தனிமையில் இந்த வன்முறையையெல்லாம் தன்னந்தனியாகத் தாங்கியது, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சட்டரீதியாக மத்தியில் அரசை வென்றெடுத்தது என நான் போனது வெகு தூரம். இந்த அனுபவத்தால் நான் கற்றதும் உணர்ந்ததும் ஒரு கலைப்பிரதி என்ன சாதிக்கும் என்பதுதான். ஒற்றை இமேஜால் பாசிஸ்டுகளை எவ்வளவு அலற வைக்க முடியும் என்பதைக் கண்கூடாகப் பார்த்தபோது கலையின் ஆற்றல்தான் என்னை உறுதிப்படுத்தியது.

  • சித்தூர் போன்ற மூன்றாம் நிலை சிறு நகரத்தில் நடைபெறும் பன்னாட்டுத் திரைப்பட விழா குறித்த உங்களின் கருத்து. தமிழகத்தில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுகின்றனவா?

சித்தூரில் நடக்கும் பாஞ்சஜன்யம் பன்னாட்டுத் திரைப்பட விழாவைக் குறித்து எனக்கு எப்போதும் பெருமிதமுண்டு. இது முழுக்க முழுக்க திரை ஆர்வலர்களால், திரைப்படங்களால் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்குத் தேவையான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்பும் புரட்சிகர அரசியல் மனங்களால், மானுடத்தின் மேலுள்ள பற்றுள்ள நட்புள்ளங்களால் வழிநடத்தப்படும் விழா. சித்தூருக்கு வருவது எனது வீட்டிற்குத் திரும்புவது போன்றது. திரைப்பட ரசனை கேரளாவில் மேம்பட்டு இருப்பதும், மலையாள சினிமா உலக அரங்கில் பிரகாசிப்பதற்கும் இத்தகைய சிற்றூர்களில் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் திரைப்பட விழாக்கள்தாம் அடிப்படை. தமிழ்நாட்டில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்ப் படைப்பாளியாக இருந்தாலும் கேரளாவை எனது நிலமாக மலையாளிகளை எனது சொந்தங்களாக தான் நான் நேசிக்கிறேன். கனடாவில் இருந்தபோது நான் இழப்பாக உணர்ந்தது கேரள அன்பைத்தான்.

  • ஊடகத்துறையில் வெளிநாடுகளில் நீங்கள் பெற்ற கல்வி ஏற்படுத்திய புரிதல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

திரைப்படக்கலையைப் பொறுத்தவரை நானொரு தெருக் கலைஞி. தெரு தெருவாகச் சுற்றி எனது மக்களிடமிருந்து அவர்கள் சொன்ன கதைகளில் இருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம். கவிதையில் எனது மூதாதை ஒளவை என்றால் திரைப்படத்தில் எனது மூதாதை ஆகன்ஸ் வார்தா. திரைப்படப் பள்ளிக்குப் போவதற்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. திரைப்பட விழாக்களில் நான் கண்ட சர்வதேசப் படங்களும், சந்தித்த படைப்பாளிகளும்தாம் எனது ஆசிரியர்கள். ஆரம்பகட்டத்திலிருந்தே எனக்கு விருதுகளாக வழங்கப்படட fellowships திரைப்படக் கலையை அகடெமிக்காக கற்றுக்கொள்ள உதவின. ப்ரிட்டன் வழங்கிய Charles Wallace Art Award மற்றும் Common wealth Fellowship, ஐரோப்பிய யூனியன் வழங்கிய EU Fellowship, BAFTA Breakthrough Talent Selection வரிசையில் கனடா வழங்கிய Graduate Fellowship of Academic Distinction மூலம் எனது மாஸ்டர்ஸ் படிப்பை முடிக்க முடிந்தது. கறுப்பின அமெரிக்க கவிஞர் மாயோ ஏன்ஜெலோ, ஒரு குறிப்பிட்ட பூகோளப்பகுதிக்கு மட்டும் சொந்தமானவளாக உணராமல் பிரபஞ்சத்திற்கே சொந்தமாக உணர்வதுதான் விடுதலையுணர்வென்பார். என் திரைப்படங்கள், படைப்பாளியாகவும், மாணவியாகவும் நாற்பது நாடுகளுக்கு என்னை அழைத்துச் சென்றிருக்கின்றன. நான் சேர்த்த செல்வமெல்லாம் அறிவுச் செல்வம்தான்.

  • தமிழில் பால் புதுமையர் இலக்கியங்களுக்கான இடம் ?

தலித் இலக்கியம் போல, பெண்ணிலக்கியம் போல தமிழில் பாய்ச்சலை ஏற்படுத்திக்கொண்டிருப்பது பால் புதுமையரின் இலக்கியம். பெரியார் சொன்னது போல காட்டுமிராண்டி மொழியாகத் தேங்கிவிடாமல் தமிழை மேலும் மேலும் சமத்துவப்படுத்துவதும் புதுப்பிப்பதும் மேம்படுத்துவதும் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியம்தான். ‘உலகின் அழகிய முதல் பெண்’ தொகுப்பில் பைசெக்சுவலாக வெளிப்பட்டேன். ‘அந்தரக்கன்னி’ என்ற தமிழின் முதல் லெஸ்பியன் கவிதைத் தொகுதியை எழுதிப் பதிப்பித்தேன். என்னை தமிழ் குயர் படைப்பாளியாகத்தான் அடையாளம் காண்கிறேன். நாம் அடைய வேண்டிய தூரம் அதிகம். நடக்கும் அநீதிகளுக்கெல்லாம் அடிப்படை இருமை எதிர்வுகள்தாம். குயர் சித்தாந்தம் அதை உடைத்து புதிய பார்வைகளை உருவாக்கும்.

  • மூன்றாம் பாலினத்தாருக்கான இடத்தை மறுக்கும் வலதுசாரி சிந்தனைகளை ஒரு செயற்பாட்டாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாலினத்தில் மூன்றாம் என்ன முதலாம் என்ன? அதுவே வலதுசாரிப்பார்வை இல்லையா? பாலின சமத்துவமும் விடுதலையும் மனித நேயத்தால் மட்டுமே அடைய முடியும். சக மனிதரை நேசிக்க விடாமல் தடுக்கும் சாதி, மத, நிற, வர்க்க, பாலினப் பாகுபாடுகளை வைத்து பிழைப்பு நடத்தும் வலதுசாரிகளைக் களையெடுக்க வேண்டும். என் கலை அதைத் தொடர்ந்து செய்யும்.

  • மாற்றுப் பாலினத்தார் குறிப்பாகத் தன்பாலின ஈர்ப்பாளருக்கான குரல் உங்கள் கவிதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது. பேசாப்பொருளைப் பேசத் துணியும் உங்கள் பெயர் பெண் கவிஞர்களின் வரிசையில் பலநேரங்களில் முன்னெடுக்கப் படுவதில்லை. எதனால் என நினைக்கிறீர்கள்?

எனக்கு எந்த வரிசையிலும் இடம் வேண்டாம். தனித்த குரலென்றாலும் தனித்துவமான குரலாக நானிருப்பேன். என் படைப்புகளை வாசிப்பவர்கள், பின்பற்றுபவர்கள், அதில் இளைப்பாறுகிறவர்கள்தாம் என்னை இயக்குகிறார்கள். இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு.

  • கவிஞர், விமர்சகர், ஆவணப்பட இயக்குனர், திரைக்கலைஞர், பெண்ணியச் செயல்பாட்டாளர் என பல்துறைகளில் இயங்குகிற லீனா தனது தொடக்க கால ஆக்கங்களில் இருந்து கடந்து வந்த பாதைகளை குறித்து என்ன நினைக்கிறார்? லீனா மணிமேகலை தன் அடையாளமாக எதைக் கருதுகிறார்?

நான் மேற்கு தொடர்ச்சி மலை முகட்டில் வளர்ந்து நிற்கும் ஒரு காட்டு நெல்லிச்செடி. பெருமழையிலும், தீக்காற்றிலும், சளைக்காது காய்க்கும் ஆன்மா. பசித்த மனிதர்களோ, வரையாடுகளோ யார் என்னைத் தேடி வந்தாலும் கனி தருவேன். மற்றதெல்லாம் வெறும் லேபிள்கள்தாம்.

(நேர்காணல் வினாக்கள் : பொற்றாமரை ஆசிரியர் குழு)

  •  

மானுட பேரவலத்தைப் பேசும் அ.சங்கரியின் வருக்கெச் சக்கெ புதினம் -பேரா. சு. செல்வகுமாரன் 

வீட்டின் முன்பக்க அறையில் இருந்த
அப்பாவின் ஈசிச் செயர்
பின்பக்க அறையில் கிடந்தது

மானுட பேரவலத்தைப் பேசும்
அ.சங்கரியின் வருக்கெச் சக்கெ புதினம்

பேரா. சு. செல்வகுமாரன்,
மாநிலக்கல்லூரி
[email protected]

சமகாலத் தமிழ்ச்சூழலில் படைப்பிலக்கியமானது பெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றது. நாள்தோறும் விதவிதமான கருத்தாக்கங்களை, சிந்தனை முறைகளை, வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் புதிய படைப்பாக்கங்கள் கவிதை, கதை, புதினம் என வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் படைப்பாக்கத் தன்மையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பினும், இவற்றின் வரவு தமிழின் மொழி, இலக்கியம், பண்பாட்டுச்சூழலில் குறிப்பிடத்தக்கதான வளர்ச்சி நிலையினை உடையதாகவே பார்க்க முடிகிறது.

அந்த வகையில் அ.சங்காியால் எழுதப்பட்டுள்ள ‘வருக்கெச்சக்கெ’ புதினம் தமிழகத்தின் தென் எல்லையான குமரி மாவட்டத்தின் மேற்குப்புறம் சார்ந்த நிலவியல் சூழலில் ஒரு இந்து நாடார் சமூகக் குடும்பத்தின் வாழ்வியலை அறிமுகம் செய்வதின் வழி  தன் பயணித்தலின் வெற்றியைக் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

“பத்மா” எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு பேசப்படும் இந்தப் புதினத்தில் பத்மாவினுடைய தந்தையாகச் செல்லையாவும், தாயாக அன்னலட்சுமியும் விளங்குகின்றனர். பத்மாவின் சகோதரிகளாக ரோசாவும், ஷீலாவும், அண்ணனாக சிதம்பரமும், தங்கைகளாக மாலாவும், லலிதாவும் குடும்பம் சார்ந்த கதாப்பாத்திரங்களாக இயங்குகின்றனர். இத்தோடு முதன்மைப் பாத்திரமான பத்மாவின் உறவினர்கள், நண்பர்கள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் என கதையினை யதார்த்தமாக நகர்த்திச் செல்கின்ற பல துணைமைப் பாத்திரங்களோடும் புதினம் இயங்குகின்றது.

       இந்தப் புதினத்தைப் பொறுத்தமட்டில் வெறுமனே ஒரு புனைவாக்கம் என்று சொல்வதைவிட, வட்டார எழுத்துமுறை சார்ந்த அல்லது இனவரைவியல் எழுத்து முறை சார்ந்த அல்லது சுயகதை சொல்லல் முறை சார்ந்த ஒரு புதினம் என்று சொல்வதற்கான அடிப்படைப் பண்புகளை இது பெரிதும் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். மானுட வாழ்வில் ஒவ்வொருவரின் வாழ்வும் அல்லது அந்த ஒவ்வொருவரின் வாழ்வின் பின்னணியாக இயங்குகின்ற குடும்பமும் வேறுபட்ட சூழல்களால் கட்டமைவதனைக் காணலாம். அந்த வகையில் வருக்கெச் சக்கெ புதினத்தின் முதன்மைப் பாத்திரமான பத்மாவின் குடும்பப் பின்னணி அவளது தந்தை வழி தாத்தாவான பொன்னு பூ என்பவரால் இனம் காட்டப்படுகிறது. தனது தாத்தாவைப் பற்றிப் பத்மா சொல்கிற போது,

“பொன்னு பூ, அப்பாவோட அப்பா பெயர். அவர் அந்த ஊர் குட்டி ராஜா மாதிரி. இவரு தன்னோட பெரிய பொண்ணுக்குச் சம்மந்தம் பண்ணினது ஒரு பண்ணையார் என்கிறதுக்காக சாரட்டு வர, மேலெ வெளெயிலேருந்து கீழெ வெளெவர ஆறடி ரோடு வெட்ட அந்த சித்திரைத் திருநாள் மகாராஜா அனுமதி வாங்கி செஞ்சிருக்காரு.

பெரிய பொண்ணுக்கு சாரட்டுன்னா, இரண்டாவது பொண்ணுக்கு பிளசர் கார் வந்திருக்கு. மூணாவது பொண்ணு கலியாணத்துக்கு பிளசர் கார்களே அணிவகுத்திச்சாம். இப்படி மூணு பொண்ணுகளையும் மூணு பணக்கார மாப்பிள்ளைங்களுக்கு கட்டிக் குடுத்தவரு” (ப-5) 

என்பதாக அவரது வளமை பேசப்படுகிறது. இத்தகையதொரு பொருளாதாரப் பின்னணி இருந்திருந்தாலும் அவர் செய்த ஆடம்பரச் செலவுகள் அவரைப் பெரும் கடன்காரனாக்கிக் குடும்பம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. இச்சூழலில் பொன்னு பூ மனம் தளர்ந்து இறந்து போகிறார். அவரது அஸ்தியினை வணங்க தலைகுனிந்த அவரது மனைவியும் அஸ்தியிலே விழுந்து இறந்துபோகிறார். இந்நிலையிலிருந்து பத்மாவின் தந்தை செல்லையாவின் பயணம் புதிதாய்த் தொடங்குகிறது. என்றாலும் பத்மாவின் தந்தை செல்லையாவின் தொடக்ககாலம் வளமையானதாக இருந்திருந்ததால் கல்வி, வர்மம், சோதிடம், சிலம்பம் என்பவற்றோடு தமிழ், ஆங்கில மொழிப்புலமையும், நேர்மை நியாயத்தைத் தன்னகத்தே கொண்ட தனித்துவமான ஒருவராகவே புதினம் அவரைப் பெரிதும் இனம் காட்டுகின்றது.

ஆக பத்மாவின் பாரம்பரியமானது பொருளாதாரம், சமூகமதிப்பு என்பதான உயர் குடும்பத் தன்மையுடைய பின்னணியைக் கொண்டிருந்தாலும் முதல் தலைமுறையின் வாழ்வு தளர்ச்சியிலேயே முடிவுறுகிறது. அந்தக் கண்ணியில் இருந்து உருவாகும் செல்லையா, தான் விரும்பிய அன்னலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இருவரின் கூட்டு உழைப்பினாலும், குழந்தைகளின் ஒத்துழைப்பினாலும் தலை நிமிர்கிறது. எனினும் செல்லையா குறித்த பல பதிவுகள் அவரை ஒரு மகோன்னதமானவராய்த்தான் இனம் காட்டுகின்றன. அறவழி நடத்தல், பக்தி, தேசபக்தி, வாசிப்பு, பிறருக்கு வழிகாட்டுதல், துயரங்களை எதிர்கொண்டு விடுதலை நோக்கிப் பயணித்தல் என அவை புதினமெங்கும் நீட்சி அடைகின்றது. 

தனது நிலம் சார்ந்த கடும் உழைப்பு, வியாபாரங்கள், சிறந்த குணங்களெனப் பலவற்றாலும் உயர்ந்த செல்லையாவின் குடும்பவாழ்வும் பின்னாளில் சக மனிதர்களின் கெடுசெயல்களாலும், அன்றைய அரசு கொண்டுவந்த பட்டணம் கால்வாய்த் திட்டம் அவரது தோப்பின் வழியாக வந்ததன் விளைவாகவும் பேரிழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. தொடர்ந்து தனது முதல் இரண்டு பெண் மக்களின் திருமணத்தைச் சிறப்பாக நடத்திட அதனால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவும், திருமணத்திற்குப் பிறகு தனது மகன் கேளாதார் பேச்சைக் கேட்டு தனிக் குடும்பமாக மாறிக்கொள்வதாலும் குடும்பம் பொருளாதாரம், மன அமைதியின்மையினால் தளர்ச்சியுறுகிறது.

புதினம் பொது வாழ்வியல் சார்ந்து பேசினாலும் குறிப்பாகக் குமரி மாவட்ட இந்து நாடார் சமூகம் சார்ந்த வாழ்க்கை வட்டச் சடங்குகளையும், அவர்களின்  நிலம் சார்ந்த கடின உழைப்பையும், பனை உணவுசார் தொழில்நுட்பங்களையும் அதற்குப் பரிசாக, மண்சார் விளைச்சல்களை வாரி வழங்கும் இயற்கை அன்னையின் செயல்பாடுகளையும் புதினம் காட்சிப்படுத்துகிறது. வகை வகையான கிழங்குகள், காய்கறி வகைகள், மா,  பலா, வாழை எனப் பழவகைகள், செடி கொடிகள், மரங்கள், முயல், ஆடு, மாடு, கோழி என விலங்குகள்  பறவைகள் குறித்த சித்திரிப்புகள் மிகப் பிரமாண்டமாகப் புதினத்தில் எடுத்தாளப் பெற்றுள்ளது. காச்சில் கிழங்கின் விளைச்சலைப் பற்றிப் பதிவு செய்கிறபோது,

“அந்தக் காச்சில் கிழங்கு வள்ளியெல்லாம் பட்டுப் போயிருந்துச்சு அதெ மொதல்லெ பிச்சாக்கத்தியாலெ அறுத்து பெறகு மூடு இருக்கிற எடத்திலே நாலு பக்கமா பிக்காசியாலெ வெட்டி மண்ணெ கையாலே வாரி பக்காவாட்லெ போட்டான். பெறவு கொஞ்சம் கொஞ்சமா வெட்டுகத்தியாலே மண்ணெக் குத்தி வார வார பெரிய பண்ணிக் குட்டியாட்டும் அந்தக் கெழங்கு ஒண்ணரையடி ஆழமா பருத்து இருந்துச்சி. அவ்வளவு பெரிய கெழங்கப் பார்த்ததும் கொச்சப்பாவு அசந்து போய் இங்க வாங்க வந்து பாருங்கள் என்று ஆச்சரியத்தோடு கத்தினான். அப்பாவும் மகளும் ஓடிப்போய் பார்த்து அடேயெங்கப்ப எவ்வளவு பெரிசு? வாயெப் பெளந்தாள் பத்மா.

சின்னதா ஒரு கெழங்கு நட்டதா இவ்வளவு பெரிசா வளந்திருக்கு? என்று ஆச்சரியப்பட்டு நின்றாள்.” (பக் -187-188)

மேலும், முதலாளி, தொழிலாளிகளிடையே காணப்படும் வேறுபாடற்ற சமத்துவ நடைமுறைகளையும் பனையேறும் தொழில் செய்யும் பாலையா, தோட்ட வேலை செய்யும் கொச்சப்பாவு கதாபாத்திரங்கள் போன்ற நமக்கு புலப்படுத்துவனாக உள்ளன. இவை குமரி மாவட்டத்துக்கான தனித்தன்மையாகக் கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்தச் சமத்துவத்திற்கு அய்யா வைகுண்டசாமியின் செயல்பாடுகளின் தாக்கமும் ஒரு காரணமாகலாம்.

மேலும், ஈத்தவிளை அம்மாவி அதாவது அத்தை, அம்மும்மு அதாவது பாட்டி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களின் வழி உறவின் ஆழங்களும் ஆங்காங்கே இனங்காட்டப்பட்டுள்ளன. ஓரிடத்தில் பாட்டியைப் பற்றி குறிப்பிடுகிற போது,

“இந்த அம்மும்மெ கொணத்தெ அம்மாகிட்டப் பார்க்கலாம். இருக்கிறதெ வச்சு வாழுற கொணம், தன்னாலெ முடிஞ்சவரெ உழச்சு சந்தோஷமா, அன்பா அரவணச்சு குடும்பத்தெக் கொண்டு போறதுன்னு அடிக்கிக்கிட்டே போகலாம்.” (ப-218)

ரோசா அக்காவின் திருமணத்தில் மாப்பிள்ளையின் உயரம், நிறம் உள்ளிட்டவற்றின் மூலமாகவும், இன்ன பிற நிகழ்வுகளின் வாயிலாகவும் பெண் மனம் சார் உளவியலைப் பத்மாவின் மூலமாக அ.சங்கரி முன்னெடுத்தள்ளமையும் கவனத்திற்குரியது. ஒரு முறை  அடுத்த வீட்டில் வசித்து வந்த முண்டத்தா மூத்தம்மெ இறந்த போது பத்மாவோ அவளது சகோதரிகளோ மூத்தம்மையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. அது அந்தக் காலகட்டத்தின் சூழல். அதனைப் பத்மா மூலமாக உரையாடல் செய்யும் அ.சங்கரி,

“இரண்டு வீடுகளுக்கு நடுவே ஒரு சுவருதேன். அவுங்க தொழுவத்திலேருந்து கூப்பிட்டா கேட்கும் தூரம். நம்ம தொழுவத்திலே நிக்கிறவங்களெப் பார்க்கவும் முடியும். இப்படியாப்பட்ட நெருக்கமுள்ள மூத்தம்மே இப்ப இல்லெ. இனிமேலே பார்க்கவே முடியாது. இல்லக்கா. நமக்கு கடைசியா பார்க்கக்கூட முடியில்லெ. என்ன துர்பாக்கியம். ஒரே சுவருக்கப்புறம் போக முடியா சூழல்ல இருக்கிறோமே அக்கா. நம்ம மூத்தம்மெ இப்படி வேகமா போயிடுச்சேணு கண்ணீர் சிந்த அக்காவிட்டெ சொல்லி அழுதாள், பத்மா. ரோசா அவ ஆதங்கத்தெச் சொல்லத் தொடங்கினா.” (ப -270)

என்பதாக அந்தக் காலகட்டத்தில் பெண் சமூகத்தைப் பற்றிக்கிடந்த புற இருளினை, அவலத்தைப் புதினம் அடையாளப்படுத்துகின்றது

 இப்படியாக வெவ்வேறு தளத்திலிருந்து வேறுபட்ட பல விஷயங்கள் குறித்த உரையாடல் நிகழ்த்தப்பட்டாலும் அந்தக் குடும்பத்தில் பத்மாவின் தொடர் ஓட்டம் கல்வியில் தீவிரக் கவனம் செலுத்திப் பயணிப்பதாக இருக்கிறது. காதல், திருமணப் பேச்சுகள், குடும்பச் சிக்கல்கள், கல்வி நிறுவனங்களின் தொலைவு போன்ற எல்லா விதமான தடைகளையும் தாண்டி பத்தாம் வகுப்பினை முடித்து, பிரீ டிகிரியினையும் முடித்து மாநிலம் கடந்து திருவனந்தபுரம் சென்று முதுகலைத் தமிழ் பயின்றதோடு அங்கேயே முனைவர் பட்டம் வரையிலுமாக படித்துக் கல்லூரிப் பேராசிரியராக உயரும் நிலையினைக் காணமுடிகிறது. இது நாடார் சமூகப் பெண் ஒருவரின் தனித்த அல்லது ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் வளர்ச்சிக்குக் கல்வியின் அவசியம் அடையாளம் காட்டப்படுவதாக உள்ளது. குறிப்பாக இது பொதுவான மைய நீரோட்டங்களில் ஒன்றாகப் பார்க்கத்தக்கது. மேலும் பத்மாவின் அப்பாவும், ஊர் மக்களும் சாதி, மதம், காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பாளர்களாக விளங்கினாலும் கல்வியின் வழி உயர்நிலை அடைந்த பத்மாவால் தான் கற்ற கல்வி மற்றும் அணுகுமுறையால் இன்னொரு மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசனைக் காதலித்து அம்மா அப்பாவின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டதென்பதும் ஒரு பெண்ணின் பயணித்தலின் வெற்றியாகக் கொள்ளத்தக்கது. 

பல்வேறு விஷயங்களை இந்தப் புதினம் பேசியிருந்தாலும் மனைவி, மக்கள் என ஒரு ஆலமரமாய், ஒரு கூட்டுக் கிளியாக வாழ்ந்த செல்லையா குடும்பத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் முதல் மூன்று பெண்மக்கள் திருமணமாகி வெளியே சென்று விடுகிறார்கள். ஆண்மகனும் திருமணமாகித் தன் மனைவி மக்கள் எனத் தனிக் குடித்தனம் அமைத்துக் கொள்கிறான். அடுத்த திருமணத்தை எதிர்கொள்ள வேண்டிய பத்மா கல்வியையும் காதலையும் கைக்கொண்டபடி திருச்சி வயலூரில் வேலை பாா்த்தபடி தன் அறவழிப் பயணத்தை மேற்கொள்கிறாள். கடைசி மகள் லலிதாவின் திருமணம் பத்மாவின் தனித்த கவனிப்பு இருந்தாலும் “ஏழையாய்ப் பிறந்தாலும் இளையவராய்ப் பிறக்கக்கூடாது” என்பதற்கேற்ப சூழல்கள் அமைகிறது.

மீதமிருந்த சொத்துக்களில் முதன்மையானவை மருமகளின் தூண்டுதலாலும், செல்லையாவின் நேர்கொண்ட அறவழிப் பயணித்தலாலும் மகன் சிதம்பரத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.

“எல்லா சொத்துக்களையும் உயில் எழுதி வைத்துவிட்டு வந்து கையிலிருந்த பொம்மையைப் பறிகொடுத்த குழந்தை மாதிரி கண்ணில் நீர்நிறைந்து நின்றதை மனைவியும் மகளும் பார்த்தனர்.” (ப -377)

ஆக, வீட்டின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கைக்கொண்டு திரிந்த தந்தை, தாயின் அதிகாரம் பிடுங்கப்பட்டுக் காற்றில்லாத பலூனைப் போலச் சமூக மதிப்பற்ற மனிதர்களாக மாற்றப்படுகின்றனர். எத்தனை வேலைகள் இருந்தாலும் மகிழ்ச்சியால் பூ மரமாய் பூத்திருந்தவீடு வெறுமனே கட்டைச் சுவர்களாக மகிழ்வற்ற நிலையில் பொலிவிழந்து போகிறது. இந்தப் பேரவலத்தை நூலாசிரியா் அ.சங்கரி இனம் காட்டும் இடங்கள் முக்கியமானவையாகும்.

“வீட்டின் முன்பக்கம் இருந்த அப்பாவின் ஈசிச்செயர் பின்பக்க அறையில் கிடந்தது” (ப-367) 

இப்படியாக ஒடுக்கப்பட்டு அல்லது புறம்தள்ளப்பட்டு விளிம்புநிலைக்குள்ளான தந்தையின் அவஸ்தையைப் புதினம் முதன்மைப்படுத்திப் பேசியிருக்கிறது. இது பல வீடுகளில் இன்று நடப்பதாக இருந்தாலும் படைப்பு வழி அதிகம் பேசப்படாத ஒன்று என்ற நிலையிலும் இந்தப் புதினம் கவனத்திற்குரியதாகிறது. மேலும் தந்தையின் மீதான கரிசனம் மிக்க ஒரு படைப்பாகப் புதினம் காட்டப்பட்டாலும், தந்தை செல்லையாவும் இறந்து போக வீட்டில் கணவன் தன் பெயரில் உயில் எழுதி வைத்திருந்த 27 சென்ட் நிலத்தோடும் வீட்டோடும் அம்மா குடியிருக்க வேண்டிய அவலமும் உணர்த்தப்படுகிறது.

“மனித வாழ்வில் அடிமேல் அடி விழுந்தாலும் தாங்கிக் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தம். எதையும் எளிதாகக் கடந்து போனாலும் உள்ளுக்குள் ஏற்படும் காயங்கள் ஆழமானவை” (ப-374)

இங்குப் புதிது புதிதாய்ப் பரிணமிக்கும் புதிய தலைமுறைகளின் உருவாக்கத்தில் பல தாய் தந்தையர்கள் உணர்வுகளால் சாகடிக்கப்படுவதையும், கால ஓட்டத்தில் வாழ்வு ஒவ்வொருவரையும் அதன் விருப்பிற்கேற்பத் தூக்கி வீசுவதில் மனிதன் ஒன்றுமில்லாதவனாக ஆகிப்போவதையும் ஒருவித கழிவிரக்கத் தன்மையோடு அ.சங்கரி புதினத்தில் தன் எழுத்துக்களின் மூலம் பதிவு செய்திருக்கின்றார்.

  •  

சோலை சுந்தரப்பெருமாள் புதினத்தின் வழி கற்றல் குறைபாடுகளும் தீர்வுகளும் – மு.நளினி

சோலை சுந்தரப்பெருமாள் புதினத்தின் வழி கற்றல் குறைபாடுகளும் தீர்வுகளும்

முனைவர் மு.நளினி

இணைப்பேராசிரியர் &
தமிழ்த்துறைத் தலைவர்
எஸ்.ஐ.வி.இ.டி.கல்லூரி,
கௌரிவாக்கம், சென்னை-73
கைப்பேசி- 9940203960
மின்னஞ்சல்- [email protected]

மனிதநேயம் போற்றுதல், மனித உரிமைகளை மதித்தல்  போன்ற விழுமியப் பண்புகள் கற்றறிந்த சான்றோர்களிடையே முன்னெடுக்கப்படும் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களைச் சமுதாய  மைய நீரோட்டத்தில் இணைக்கும் சமூகச் செயல்பாடுகள் பரவலாக நிகழ்வதைக்  கண்ணுற முடிகிறது.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சாதிமதபேதத் தகர்ப்பு போன்ற கொள்கைகள் நடைமுறை வாழ்வில் மேலோங்கி வருவதையும்,  மேலோங்க வேண்டிய இலக்கினையும்  கவனமாக ஆவணப்படுத்தும் எழுத்தாளர்களிடையே சோலை சுந்தரப்பெருமாள் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார்.  தஞ்சைக் கீழ வெண்மணி கோர நிகழ்வை ஒடுக்கப்பட்டோர் நிலையிலிருந்து பதிவு செய்யும் செந்நெல்(1990) வேளாண் உற்பத்தித் தொழிலாளர்களின் வறிய, போராட்ட வாழ்க்கையை தப்பாட்டம்(2002), மரக்கால்(2007) போன்ற  புதினங்களில் பதிவு செய்துள்ளார்.

சோலையாருடைய எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பிற நூல்களும் வண்டல்  மண் சார்ந்த மக்களின் அகவாழ்வையும் புற வாழ்வையும் சித்திரிப்பனவாக அமைந்துள்ளன.

வண்டல் மண் படைப்பாளர்களின் கதைகளைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். ‘தஞ்சை  வட்டாரத்தை வண்டல்மண் வட்டாரம் எனக்கொண்டு இலக்கியங்கள் ஆக்கம் பெற வேண்டும் எனத் தோழர் சோலை சுந்தரப்பெருமாள் நினைத்தார். அதன்படி 1993 – இல் வெளியிட்ட ஓர் சிறுகதைத் தொகுப்பிற்கு வண்டல் சிறுகதை எனப் பெயரிட்டார். அதைத் தொடர்ந்து 1999- இல் தஞ்சை கதைக் களஞ்சியம் 2001- இல் தஞ்சை சிறுகதைகள் என இரண்டு தொகுப்புகளை வெளியிட்டார்.’ (தி. நடராஜன், நாட்டார் பாடல்களில் நிலம் சமூகம் – அரசியல், ஆம்பல் பதிப்பகம் மு.ப.2023:16).  

இச்செயல்பாடுகளினூடே மைய நீரோட்டத்தில் இணைய முற்படும் விளிம்பு நிலைமக்களில்  உடல் குறைபாடு, மனநலக் குறைபாடு உடைய மாந்தர்களின் எதார்த்த வாழ்க்கையையும் இலட்சிய வாழ்க்கையையும் புனைவாகப் படைத்து அளித்துள்ளார். அவ்வகையில் சோலையாரின்  ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ என்ற புதினம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் முதல் பதிப்பாக 1990 -இலும், நான்காம் பதிப்பாக 2015 -இலும் வெளிவந்துள்ளது.

இப்புதினத்தின்   தலைமைப்பாத்திரமான அப்புனு மனவளர்ச்சி குன்றியவனாகக்  காணப்படுகிறான். அப்புனுவின் குழந்தைப் பருவம் முதல் இளமைப்பருவம், வளரிளம்பருவம் வரையிலான நிகழ்வுகள் புதினத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் மூலம் அப்புனுவின் மன வளர்ச்சிக் குறைபாடுகள்  எதிர்கொள்ளப்படும் சூழல்களும் அவற்றுக்குக் காணப்படும் தீர்வுகளும் புதினத்தில் பல இடங்களிலும் சித்திரிக்கப்பட்டுள்ளன. பொதுவான உளவியல் அடிப்படையிலும் கல்விஉளவியல் அடிப்படையிலும், இச்சிக்கலைச் சமூகத்தினர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. இதனைக் குறிப்பாக உணர்த்தும் வகையில் பிற பாத்திரங்களும் படைத்துக்காட்டப்பட்டுள்ளன.  

ஆசிரியர் தேர்ந்தெடுத்த செவத்தி ஓர் உயிருள்ள படைப்பு. மனநிலை பாதிக்கப்பட்ட அப்புனுவின் வாழ்வில் அபூர்வ மலர்ச்சி தரும் செவத்தி என்ற பெண்ணின் கதை இது. அதே சமயம் அபூர்வ கனவுகளை வரித்துக் கொண்ட மருதாயி என்ற இன்னொரு பெண்ணின் கனவுகள் உடைந்து சிதறும் கதையும் இதுவே.

வாழ்வின் உயரங்களை எட்ட வேறுவழி இல்லாது உழைப்பை மட்டுமே நம்பி உயிர் வாழும் எளிய மக்களின் கதை இது. அவர்கள் நிலையில் வாழ்வின் உயரத்தில் நின்று வழிகாட்டுகின்ற மன அழுக்கற்ற ஓர் உயர்ந்த மனிதனின் (ராஜாமணியின்) கதையும் இதுவே.

பிள்ளைப் பாசத்திற்காகச் சாதியக் ‘கட்டுமானங்கள் தளர்வதை ஏற்றுக் கொள்ளும் சின்னசாமி ஒரு புறம். சாதிய, சொத்துடைமை அழுக்குகளில் பெற்றோரை. சகோதரனை, புறக்கணிக்கும் ஈரமற்ற சிவராமன் இன்னொருபுறம்.

இப்படி எதிர் எதிர் நிலைகளின் சந்திப்பை, மோதலை, வெற்றி தோல்விகளைச் சித்திரிப்பது உயிர் இலக்கியம் என்று ஏற்கிறார் புதுக்கோட்டை பாலா தன் மதிப்பீட்டில் (உ.ம.கு. பக்.4).

சோலை சுந்தரப்பெருமாள் அத்தகைய எதிர்நிலைகளின் சித்திரத்தைப் படைத்துக்காட்டுவதோடு இப்பாத்திரங்களுக்கிடையே ‘அப்புனு’ ஊடாடி உறவாடுவதையும் மறுதலிக்கப்படுவதையும் புனைந்து காட்டுகிறார்.

செல்லப் பெயரிட்டு வழங்குதல்

மயக்குறு மக்களைப் பெறுதலே மிகச்சிறந்த பேறாக, படைப்புப் பலபடைத்து….(188). என்ற புறப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பி பாடியுள்ளான்.

அப்புனுவுக்கு பெற்றோர் இயற்பெயராக ஏதேனும் வைத்திருக்கக்கூடும் ஆயினும் அப்பெயரால் அழைக்காமல் அவனைச் செல்லமாக அப்புனு என்று அழைத்ததே வீடுமுதல் பள்ளிவரை எல்லா இடங்களிலும் பதிவாகியுள்ளது. இதுவே இவன்மேல் பெற்றோர் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்துகிறது.

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை அடிப்படையில் அவர்கள் இன்னவகையான குறைபாடு உடையவர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது பெற்றோரின் முதல் கடமை. டிஸ்லெக்ஸியா, டிஸ்ப்ராக்ஸியா, டிஸ்கால்குலியா, டிஸ்கிராபியா, ஆடிட்டரி பிராசசிங் கோளாறு, காட்சி செயலாக்கக் கோளாறு, சொற்கள் அல்லாத கற்றல் கோளாறு, பேச்சின் அப்ராக்ஸியா என குறைபாடுகள் பற்றிக் கல்வி உளவியலாரும் மருத்துவரும் விளக்குகின்றனர்.

இவைபற்றிய தெளிவு அப்புனுவின் பெற்றோருக்கு இல்லையென்றாலும்  அவன்பால் கொண்ட நேசத்தால் எப்படியாவது அவனை முன்னேற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆசிரியர்களிடம் பாடம் கேட்கச் சேர்த்துவிடுகின்றனர்.

அறிவுமலர்ச்சிக்குப் பாலுணர்ச்சி நிறைவேற்றம் காரணமா?

‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ புதினத்தின்  அப்புனு மனவளர்ச்சி பெறாதவன். உடல் வளர்ச்சி பெற்றவன்.

“வாழ்வின் அபூர்வ க்ஷணங்களினால் செதுக்கப்பட்டு மனிதன் சீர்மை பெறுகிறான். சோலை சுந்தரப்பெருமாள் அத்தகைய தருணங்களை இந்தப் புதினத்தில் செதுக்கிக் காட்டுகிறார். மனவளர்ச்சி பெறாது உடல் வளர்ச்சி பெற்றுள்ள அப்புனுவின் வாழ்வில் செவத்தி நுழைவது அத்தகையதொரு அபூர்வ தருணம்.  அவனுடைய பாலுணர்ச்சிக்கு செவத்தி வடிகாலாகிறாள். இதன் மூலம் வளர்ச்சி குன்றிய அவனுடைய அறிவு மலர்ச்சி பெறுகிறது. அவன்  முழுமனிதன் ஆகிறான். பாலுணர்ச்சி ஆசை நிறைவேற்றத்தில் அப்புனு என்ற வளர்ந்த குழந்தை ஆரோக்கிய மனிதன் ஆகிறான் என்ற செய்தியில் அறிவியல் பலம் மட்டுமல்ல: கிராமத்தின் பாரம்பரிய நம்பிக்கையையும் காண்கிறோம். “

என்ற புதுக்கோட்டை பாலாவின் அணிந்துரைக் குறிப்பு பாலியல் சார்ந்த உளவியலின் சான்றாதாரங்களைக் கோருவதாக உள்ளது.

மருதாயி மஞ்சள்நீராட்டுவிழாவில் பாடல் ஒலித்தது.                  

‘மாங்குயிலே! பூங்குயிலே! சேதி ஒண்ணு கேளு…
உன்ன மாலையிடத் தேடி வரும்… (உ.ம.கு, பக்.75)

என்று ஒலி பெருக்கி ஒலிக்க அதற்கேற்ப அபிநயங்களுடன் ஆடிக்கொண்டு வந்த அப்புனு

‘யேய்! மருதைக்கு ‘கண்ணாலம் கண்ணாலம்’ என்று சொல்லியபடி மருதாயியை இழுத்துக் கொண்டு பந்தலுக்கு வந்தான்’. அப்புனுவுக்கு அகவாழ்க்கை சார்ந்த மகிழ்ச்சியான புரிதலும் அறிவும் உள்ளதை இந்நிகழ்வால் அறியலாம்.

அப்புனு தானே தன் தலையைச் சீவிக் கொள்வதும், சட்டையணிந்து கொள்வதும், பெண்களைக் கண்டால் வெட்கம் கொள்வதுங்கண்டு ‘தங்கத்தின் முகத்தில் பொலிவு கூடியது’ என்ற பதிவாலும் இக்கூற்றை உறுதிசெய்துகொள்ளலாம் (உ.ம.கு, பக்.114-115)

 மனநலம் குன்றியவருக்கும் பாலியல் வேட்கை இயல்பானது.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.
(தொல்.1169)

என்ற தொல்காப்பியர் கருத்தும் இங்கு எண்ணத்தக்கது.

அடிப்படை அறஉணர்வு வேண்டும்

மனித பலவீனங்களைத் தனக்குச் சாதகமாக்கி, உல்லாசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பிறவிகளை நினைத்து நூலாசிரியர் கொதிப்படையும் தன்மை நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. இவ்வகையில், இப்புதினத்தில் வரும் வாஞ்சியூரான் வேளாண் மக்களிடம் அதிக வட்டி வசூலிக்கும் கந்துவட்டிக்காரன். அடிப்படை அறஉணர்வு இல்லாதவன் அப்புனுவின் மருத்துவச்செலவுக்காக அவன் தந்தை சின்னச்சாமி வாஞ்சியூரானிடம் கடன்பெற்று மிகவும் அவமானப் படுத்தப்படுவதும் பின் தன் கடின உழைப்பால் பணத்தைத் திரும்பக் கொடுப்பதும் விளக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற துயரமான சூழல் இன்றைய நடைமுறையில் மாற்றுத்திரனாளி குழந்தைகளுக்கு இல்லை. மாற்றுத்திரனாளி குழந்தைகளுக்கு கல்வி, உடற்பயிற்ச்சி, மருத்துவ சிகிச்சை, தொழிற்பயிற்சி அளிப்பதோடு வேலைவாய்பிற்குரிய ஏற்பாடு என அனைத்தையும் உண்டு உரைவிட நிறுவனமாக National institute of empowerment of persons with multiple disabilities – முட்டுக்காடு, தமிழ்நாடு போன்ற நடுவணரசின் நிறுவனங்களும், தமிழ்நாடு அரசு மாற்றுத் திறமாளிகள் நல இயக்குநரகம், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம்,  மாநில அரசின் நிறுவனங்களும்  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் உயர்வையும் மேம்பாட்டையும் வழங்கி அவர்களை நன்மதிப்பிற்குரிய குடிமக்களாக்கி, சமுதாய மைய நீரோட்டத்தில் இணைக்கின்றன.

ஒற்றுமை உணர்வு வேண்டும்

 மேலும் சாதியுணர்வு மாறவேண்டும் என்ற சிந்தனையைச் சிவராமன் போன்ற சில கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். அப்புனுவின் அண்ணன் சிவராமனின்  வெறுப்புணர்வு, கோபம், அக்கறையின்மை போன்ற அணுகுமுறையால் மனவருத்தத்தை ஏற்படுத்துவதோடு, அடித்து துன்புறுத்தி உடல் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறான்.

பண்ணையாள் ஐயாவு வீட்டின் மஞ்சள் நீராட்டு விழாவிற்குச் சென்று விருந்துண்டு வந்ததால் அப்புனுவையும் தாயையும் சிவராமன் திட்டி அடித்து துன்புறுத்தும் காட்சி, சாதி உணர்வையும் ஏற்றதாழ்வு உணர்வையும் வெளிப்படுத்துகிறது, ஆனால் உடல் உழைப்பின் அருமைப்பாட்டை உணர்ந்த அப்புனுவின் பெற்றோர் ஐயாவு வீட்டாரை வேறாக எண்ணவில்லை.

பொதுவாக மாற்றுத்திறனாளிகளிடம் சாதி உணர்வு, சமூக ஏற்றத்தாழ்வு உணர்வு தலைதூக்குவதில்லை. இவ்வுணர்வு முற்றிலும் இல்லாத சூழல் எப்பொழுதும் நிலவவேண்டும். வேற்றுமை உணர்வை அறவே தவிர்க்கவேண்டும்.  இதற்காக தன்னார்வளர் அமைப்புகள் மிகவும் நேச ஈடுபாட்டுடன் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றனர். வழக்கமாக ஆண்டுதோறும் தாய்க்கரங்கள் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து நிகழ்ச்சிகளை நடத்திவருவதுபோல, 28-01-2024 அன்று பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் விழா நடைபெற உள்ளது. இதுபோல் பல தனியார் அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவுகின்றன.

 உலகளவில் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுவதன் மூலம் ஒன்றுபட்ட உணர்வை ஏற்படுத்தப்படுகின்றனர்.

வாழ்க்கையை வெறுத்தலோ, தற்கொலை முயற்சியோ தீர்வு ஆகா:

            அப்புனுவின் பெற்றோர் அவ்வப்பொழுது அப்புனுவின் பொருந்தாத செயல்பாடுகளால் மனம் வருந்துகின்றனர். சலிப்பும், வாழ்க்கைமீது வெறுப்பும் ஏற்படும் சூழல்கள் புதினத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றையும் மீறி அப்புனுவின் நல்வாழ்வு மீதான நன்னம்பிக்கைத் தருணங்களும் விளக்கப்பட்டுள்ளன.

“ஏடே! அப்புனு தோப்புக்குள்ளே போடா…

பாதையில் உக்காராதே…

போதுண்டா உன்னாலே நாங்க வாங்கிக் கட்டிக்கிறது… வார்த்தைகள் அலுத்துக் கொண்டன. இது தாய் தங்கத்தின் உரையாடல் சலிப்பான குரல். (உ.ம.கு, பக்.33)

குடும்பத்தில் யாருக்கும் இல்லாத குறை அப்புனுக்கு மட்டும் எப்படி வந்தது? இதைத்தான் விதி என்பார்களோ! எனக்கும் தங்கத்திற்கும் பிறகு இவனுக்கு யார் கைக் கொடுத்து உதவப் போகிறார்கள்?” மூத்தமகன் சிவராமன். அப்புனுவை அவ்வப்போது படுத்தும் கொடுமையின் நினைவு வந்துவிட்டால் சின்னசாமிக்குத் தன் உயிர் மீதே வெறுப்பு ஏற்பட்டு விடும்.  (உ.ம.கு, பக்.10)

என்ற வருணணைக்கு மாறாக நம்பிக்கையூட்டும் வகையில் பின்வரும் மனிதநேயக் காட்சியை அப்புனு ராஜாமணி உரையாடலின் மூலம் சோலையார் விளக்குகிறார்.

“அப்புனு சிலேட்டில் ‘அனா ஆவன்னர்’ என்ற இழுப்புடன் ராணாமணியின் முகத்தைப் பயத்துடன் பார்த்தான்.

“உலகத்துல எனக்கு வேற ஒரு சந்தோஷமும் இல்லப்பா.. என் கூட இருக்கிறதத் தவிர..” அவன் மனதுக்குள் விசித்தான்.  (உ.ம.கு, பக்.51)

சார்!…”

அப்புனுவை ராஜாமணி அனுதாபத்துடன் பார்த்தான். இதில் அக்கறையுடன் பார்த்தான் என்று வந்திருந்தாலும் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

அன்பு, பரிவு, பாசத்துடன் அணுகவேண்டும்

அப்புனுவின் உடல் வளர்த்தியில் குறை சொல்ல முடியாது. இருபத்தைந்து வயது இளங்காளை போலத் தான் வளர்ந்து கிடந்தான். மூளை மட்டும் மிட்டாய் சப்பி சாப்பிடும் குழந்தையின் கனவுகளோடு நின்று போய் இருந்தது. இப்படிபட்ட கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளிடம் பிற குழந்தைகளைக் காட்டிலும் மிகவும் கூடுதலான அன்பு, பரிவு, பாசத்துடன் பழகவேண்டியது மிகவும் இன்றியமையாதது.  இத்தகைய மயிலிறகால் வருடிக்கொடுப்பது போன்ற மென்மையான அணுகுமுறையால் அக்குழந்தைகள் மனதில் உள்ள அச்சம் நீங்கி, நம்பிக்கை உணர்வு வெளிப்படும்.

அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகள் பலன் நல்கா

            அப்புனுவின் மேல்கொண்ட பாசத்தால் எந்தவழியிலாவது குணமாக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு மத பிரார்த்தனைகள், ஜோதிடம் பார்த்தல், குறிகேட்டல் போன்ற முயற்சிகளால் எப்பயனும் விளைவதற்கு வாய்ப்பில்லை என்பதை அப்புனுவின் பெற்றோர் உணர்ந்தனர். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவதில் இச்செயல்பாடுகள் தேவையற்ற கால விரயத்தை ஏற்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வேண்டும் என்பதை சோலையார் மேல் நிகழ்சியால் பதிவுசெய்கிறார்.

உளற்சிகிச்சையில் துல்லிய சொற்பயன்பாடு தேவை

            அன்பு, பரிவு, பாச அணுகுமுறையோடு துல்லிய சொற்பயன்பாட்டு உரையாடலும் மிகவும் தேவை என்பதை பின்வரும் நிகழ்வுகளால் அறியலாம்.

மருந்து மட்டும் கொடுத்து அப்புனுவைக் குணமாக்கிட முடியாது. நாம  காட்டுகிற பாசம், பரிவு, கொடுக்கும் பயிற்சியாலதான் முன்னேற்றம் கிடைக்கும்… இதுல எங்காவது இடறினா பலன எதிர்பார்க்க முடியாது. முயற்சி செய்யுங்க. சராசரி மனுஷ வளர்ச்சிக்கு அவனா “வந்துட முடியும்…”

இப்படித்தான் அந்தப் பெரிய டாக்டர் பட்டவர்த்தனமாய்ச் சொன்னார். என்றாலும், அந்த மருத்துவமனையின் பயிற்சிகள் சின்னச்சாமிக்கு சின்னதாய் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கத்தான் செய்தது. இப்படியும் மருத்துவம் பார்க்கிறார்களா? என்று வியந்து போனான்.

“இந்த டாக்டர்களுக்குத்தான் எத்தனை பொறுமையும் கண்டிப்பும் தேவைப்படுகிறது. சொந்த தம்பியையே கவனிக்க முடியாத சிவராமன் எங்கே? சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கின்ற அந்த டாக்டர்கள்… அடேயப்பா…?” சின்னசாமியும் அவன் மனைவி தங்கமும், டாக்டர்கள் சொன்னதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் விழித்தார்கள்.

…அப்புனு! இது என்னா சொல்லு பார்க்கலாம்?” “சாக்லட்டு… சாக்லட்டு…” டாக்டர் கையை மேலே உயர்த்த உயர்த்த தாவித் தாவிக் கெஞ்சினான்.

“ஒனக்குதான். இந்தப் பெஞ்ச உன் தலையிலே தூக்கி வைப்பேன் அதோ அந்த ரூம்ல கொண்டு  போடனும். என்ன?”

அப்புனு ‘திரு திரு’ என விழித்தான்.

டாக்டரும் நர்சும் பெஞ்சைத் தூக்கி அவன் தலையில் வைத்தனர். கனமான மரபெஞ்சு அவன் தலைக்கு ஏறியது. அதன் கனத்தை அவன் உணரவில்லை; பயவுணர்வில் நடுங்கினான்.

“அப்புனு.. நான் சொல்றதக் கேட்பே இல்ல? தூக்கிக் கிட்டு போ… ம்…ம்…”

சாக்லெட்க்காக ஒரு கையை நீட்டித் தாவினான். ” இப்பத் தரமாட்டேன்… அந்த ரூம்ல கொண்டு போய் போட்டுட்டு வந்தாதான்..” என்று வழியைக் காட்டி விட்டு நின்று கொண்டார் டாக்டர்.

குறிப்பிட்ட அந்த அறைக்குள் போனவன் பெஞ்சைப் பொத்தென்று போட்டபின் பெஞ்சின் கால்கள் நொறுங்கின. பெஞ்சியின் கால்கள் ஒடிந்து போனதைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை. டாக்டரிடம் ஓடி வந்தான்.

…இந்தா… சாக்லெட்…”

“அய்ய்யா…”

குஷியாகக் குதித்து வாங்கிக் கொண்டான்.

‘பக்’கென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டார். “நல்ல பெஞ்ச உடைச்சிட்டே இல்லே…”. டாக்டர் முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார்.

அப்புனு ‘தேம்ப ஆரம்பித்து விட்டான். “…ஊகூம்… அழக்கூடாது மெதுவால்ல வைக்கனும்…” தட்டிக் கொடுத்தார் (உ.ம.கு, பக். 11-13).

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளிடம் ஆசிரியரானாலும் மருத்துவாரானாலும் பெற்றோரானாலும் உடன் பழகும் சிறார் ஆனாலும் இயல்பாக எல்லோரிடமும் பேசுவது போல்  இல்லாமல் சிறப்புக் கவனத்துடன் சொற்களைத் தெளிவாகப் பயன்படுத்தவேண்டும். ஒரு சொல்லுக்குப் பல பொருளும் பல பொருளுக்கு ஒரு சொல்லும் தமிழ் போன்ற தொன்மையான மொழிகளில் மிகுதியாகக் காணப்படும்.  

‘போடு’ என்ற தலைச்சொல்லுக்கு இருபத்தொன்பது வகையான பொருள் வழங்கப்படுவதை உரிய பொருத்தமான மேற்கோள்களுடன் க்ரியாவின் தற்கால தமிழகராதி (1992)பதிவு செய்துள்ளது. இத்தகைய விரிவான சூழற் பொருள் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்குப் புரிந்து கொள்வதில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எந்திரன் படத்தில் சிட்டி  ரோபோவிடம் டி. வி. யை போடு என்றவுடன் போட்டு உடைத்துவிடுவதைக் காணலாம்.  இதற்கு  தீர்வாக பெஞ்ச்சைக்  கொண்டு போய்  வை ?   டி. வி. யை இயக்கு?என்று தெளிவாகச் சுட்டலாம்.   

பாகுபாடின்றிக் குறையுடையோரையும் சமமாக நடத்துதல்

செவத்தியும் மறுதாயியும் அப்புனுவிடம் நேசமும் அக்கறையும் உடையவர்கள் செவத்தி அப்புனுவிடம் உள்ள குறைப்பாட்டைக் கருதாமல் இயல்பான எதிர் பாலினரிடம் செய்யும் குறும்புகளை அப்புனுவிடம் செய்கிறாள். அவ்வகையில் மரக்கட்டையைத் தூக்கி வரச்சொல்லும் காட்சி மேற்ச்சூட்டிய மருத்துவரின் சோதனையைப்  போல அவன் தெம்பைச் சோதிப்பதாக உள்ளது. மெல்ல மெல்ல கட்டை அப்புனுவின் தலைக்கு ஏறியது. ‘செயுச்சிட்ட செயுச்சிட்ட, என்று கையைத் தட்டிக் கொண்டு ஓடினாள் செவத்தி. அப்புனு செவத்தியின் மூலம் மனம் தெளிந்து வரும் நிலை, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களிடம்  அக்கறை காட்டினால்  அதுவே தீர்வாகி அவர்கள் குணமடைவர் எனும் நிலையும் புதினத்தில் வெளிப்படுகிறது.

அறிவே ஆற்றல்

மெல்ல மெல்ல  கற்கும் அப்புனுவை ராஜாமணி அனுதாபத்துடன் பார்த்தான் என்ற நிலையைக் காட்டிலும் மிக்க கவனத்துடன் அக்கறையுடன் ஆசிரியர் அணுகுவதே மிகவும் தேவையாகிறது.  சில பள்ளிக்கூடங்களில் கற்றல் திறன் அடிப்படையில் மாணவர்களைத் தனிதனியாகத் தரம்பிரித்துப்  பாடம் நடத்தும் நிலை மாறி, உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) என்ற புதிய தேசியக் கல்விக் கொள்கைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் செயல்பாடுகள் உரிய உள்ளக கட்டுமானங்களுடன் தரமான கற்பித்தல் பயிற்சியுடன் தகுதியுடைய ஆசிரியர் பணியமர்த்தல்களுடன் நடைபெற்றால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மேம்பாட்டை எய்த இயலும்.

ராஜா மணி போன்ற ஆசிரியர்கள் இருபத்தைந்து வயதாகும் அப்புனுவின் மன வயதைக் கொண்டே அப்புனுவுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஊனம், கற்றல் குறைபாடு ஆகிய காரணங்களை  முன் வைத்து குழந்தைகளிடம் காட்டும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும்.  கல்வி உளவியலில் இந்நிலையை, “மாணாக்கர்களைப் பற்றிய ஆசிரியர்க்கு அவர்கள் மீது தனிப்பட்ட செல்வாக்கு தருதல். அவர்களை நினைவில் வைத்திருந்து பெயர்கொண்டு அழைத்து, தன்னம்பிக்கையுடன் அவர்களை ஆசிரியர் அணுகலாம். உற்சாகமும் முகத்துக்கு முகம் நேர் தொடர்பும் கொண்டால், அவர்களை நன்னிலையில் உருவாக்கலாம். அறிவே ஆற்றல் என்பதை ஆசிரியர்கள் உணரவும் உணர்த்தவும் வேண்டும். மாணாக்கரின் மனங்களைப் பற்றிய அறிவு கல்விப்பயன்களை எய்தும் முறையில் கொண்டு செலுத்தத்தக்க ஆற்றலைத்   தருகின்றது.” எனும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் கல்வி உளவியல் கூறும் கருத்துப் புரிதலின் அடிப்படையில் சோலையார்  ராஜாமணி பாத்திரத்தை படைத்துள்ளார் எனலாம்.

பள்ளி வயது முதலே கற்றல் குறைபாடு கொண்டு அல்லல் படுபவர்கள் பலர்.  பெரும்பாலும் கற்றல் குறைபாட்டை மூளை வளர்ச்சிக் குறைபாடு என கற்பிப்போரும் குழந்தையைப் பெற்றவரும் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. மனப்பாடம் செய்து ஒப்பித்தல், நினைவாற்றல் திறனுடன் விளங்குதல் மட்டுமே சிறந்த கற்றலுக்குரிய தகுதியாகா. சிந்தனைத்திறனை வளர்த்துக்கொள்வதும் உரியநேரத்தில் உரிய வகையில் ஆற்றலுடன் செயல்படுதலும் கற்பித்தலில் அளிக்கப்படவேண்டிய மிக முக்கியமான பயிற்சிகள் ஆகும். இப்பயிற்சிகள் குறைபாடுடையவர்களுக்கேற்ப தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்படவேண்டியதும் மிகவும் இன்றியமையாதது. இவற்றோடு கட்டுரையில் குறிப்பிட்ட கற்பித்தல் செயல்பாடுகளுடன் அக்கறையுடன் கூடிய அணுகுமுறையாலும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களின் அறிவை மேம்படுத்தலாம். அவர்களின் வாழ்விலும் ஒளியூட்டலாம்.

சான்றாதரங்கள்

  1. சுப்பு ரெட்டியார் . ந. – கல்வி உளவியல் – எஸ். வாசன் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை-4 – 1961 
  2. சோலை சுந்தரப்பெருமாள்-  உறங்க மறந்த கும்பகர்ணர்கள், நான்காம் பதிப்பு : நவம்பர், 2015 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 600 098.
  3. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
  4. தி. நடராஜன் நாட்டார் பாடல்களில் நிலம் சமூகம் – அரசியல், ஆம்பல் பதிப்பகம் மு.ப.2023.

  •  

பறையின் பண்பாட்டு அடையாள அரசியல் – சங்க காலம் முதல் சமகாலம் வரை – கு. இரவிகுமார்

பறையின் பண்பாட்டு அடையாள அரசியல் – சங்க காலம் முதல் சமகாலம் வரை

கு. இரவிகுமார்

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை.
மேரிமாதா கலை & அறிவியல் கல்லூரி,
பெரியகுளம்

முன்னுரை

            பறையின் பண்பாட்டு அடையாள அரசியல் சங்க காலம் முதல் சமகாலம் வரை” எனும் இக்கட்டுரை வரலாறு (History) மற்றும் இனவரைவியல் (Ethnography) நோக்கில் பயணப்படவுள்ளது. இசை இரு வகைப்படும். ஒன்று கருவி இசை, மற்றொன்று குரல் இசை ஆகும். சங்க காலத்திலும் சமகாலத்திலும் இசைக் கருவிகளோடு தொடர்புடைய சமூகங்கள் எவை? இசைக் கருவிக்கும் இச்சமூகங்களுக்குமான தொடர்பு என்ன? இசைக்கருவியோடு தொடர்புடைய தொன்மக்கதைகள், புராணக்கதைகள், வரலாற்றுக் கதைகள் போன்ற சிறப்பு விழுமியங்கள் உள்ளதா? இசையின் சமூக மதிப்பு, இசைக் கருவிகளுக்கும், பாலினத்திற்கும், சாதிகளுக்கும் இடையிலான உறவுகள் என்ன? முரண்பாடுகள் என்ன? போன்ற ஏராளமான வினாக்களை முன்வைத்து அவ்வினாக்களுக்கு விடைதேடும் விதமாக இக்கட்டுரை பயணிக்கிறது.

ஆதிமனிதர்களின் தொழிலும் இசையும்

            வரலாறு என்பது மானுட சமுதாயத்தின் நீண்ட நெடிய வளர்ச்சிப் போக்கினை வடித்துத் தரும் ஆவணம். விலங்கினத்திலிருந்து பிரிந்து காடுகள் அழிக்கப்பட்டதாலும், பிற காரணங்களாலும், கால்களால் நடந்து கைகளால் செயல்படத் தொடங்கினர், ஆதிமனிதர்கள். இயற்கையின் கூறாகப் படைக்கப்பட்டிருந்ததாலும், குகையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள் இயற்கையின் சீற்றத்தைக் கண்டு அஞ்சினர். இச்சீற்றத்தைத் தணிக்கவும் இயற்கையின் பிற படைப்புகளின் மேல் ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கினர். மனித வரலாறு இதிலிருந்து தொடங்குகிறது. மனிதர்கள் வளர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டார்கள். இவ்வாறு தொடங்கிய ஆதிக் காலத்திலிருந்து விண்வெளிப் பயணம் மூலம் பேருலகத்தை, அண்டத்தை அளாவும் இன்றைய நாள்வரை மனிதர்கள் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளனர். 64 கலைகளையும் கற்று சோதனைகளையெல்லாம் சாதனைகளாக  மாற்றும் வல்லமை மனிதர்களால் மட்டுமே முடிந்தது. அதனாலேயே மனிதர்கள் இவ்வுலகில் எல்லாவற்றிலும் மய்யப் பொருளாகத் திகழ்கிறார்கள்.

            மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை உழைப்பு. உழைப்பே மனிதனைப் படைத்தது என்பார் ஏங்கெல்ஸ். கருவிகளின்றேல் உழைப்பும் இல்லை. எனவே தான் பெஞ்சமின் பிராங்களின் மனிதனைக் கருவிகள் படைக்கும் விலங்கு என்று குறிப்பிட்டார். சிக்கி முக்கிக் கல்லையும், வில்லம்பையும் கொண்டு கீழ்மட்டத்தில் மிக எளிமையான வாழ்க்கையைத் தொடங்கினான் மனிதன். இடைவிடாத உழைப்பினால் புறத்தேயுள்ள பொருள்களையும், இயற்கையையும் மாற்றியமைத்து விட்டான், நாகரீகத்தையும் படைத்து விட்டான். காட்டு வாழ்க்கையின் போது விலங்குகளை வெற்றி கொண்டு ஆள வில்லம்பு படைத்துக் கொண்டான். பின்னர் வேளாண்மையில் ஈடுபட்டபோது விதைகள், மரம், செடி, கொடிகள், தட்பவெப்பம், கோள்களின் இயக்கங்கள், இரவு பகல் ஆகியவற்றின் தன்மையைக் கண்டறிந்து தனக்குப் பணியாற்றிச் சில விலங்குகளையும் பழக்கப்படுத்திக் கொண்டனர். இயற்கையை எதிர்த்துப் போராடிப் பொருளுற்பத்தியில் ஈடுபட்ட போது ஐம்புலன்களையும் பயன்படுத்தி புலனறிவுப் பெற்றனர். “அன்றிலிருந்து இன்று வரையிலான மனித வரலாற்றுப் பணியின் விளைவாக உருவானதே ஐம்புல அறிவு” என்று கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் கூறியுள்ளார்.

            காடுகளில் செடிகளும், மரக்கிளைகளும் உராய்வதால் ஏற்படும் ஒலியும், காகம் கரைதலும், குயில் கூவுதலும், மயில் அகவுதலும், யானை பிளிறிதலும், சிங்கம் கர்ஜித்தலும், வண்டினம் முரலுதலும், ஓடைகளின் சலசலப்பும், மனிதர்களின் நகைத்தலும், அழுகையும் அக்கால மனிதருக்கு ஒலி வேறுபாட்டையும், இசை நுணுக்கங்களையும் கற்றுத் தந்தன. மேலும் வேட்டையாடும் காலத்தில் மனிதனுக்கு கோலும் தோலும் இசைக்கருவிகளாக மாறின. ‘வரலாற்றுப் பொருள் முதல் வாதமும் கலையும்’ எனும் கட்டுரையில் பிளக்கனோவ், மனிதன் உற்பத்தி செய்து உழைக்கும் போது எழும் ஒலிகளே பின்னர்க் கருவி ஒலிகளாகப் பரிணமித்தன என்கிறார்.

            இயற்கையைச் சார்ந்து இசை எழுந்தது என்பதற்குத் தமிழிசையே ஒரு சான்று. தொல்பழங்காலத்தில் தமிழ் நிலம் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பாகுபடுத்தப்பட்டது. தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையில் சூத்திரம் 20. இந்நிலப் பிரிவுகளுக்குத் தனித்தனியே தெய்வம், உணவு, மா, மரம், புல், பறை, செய்தி, யாழ் ஆகியன கருப்பொருளாக அமையும் என்று கூறுகிறது.

            மனிதர்கள் கருவிகளைப் படைக்கத் தொடங்கிய காலத்திலேயே கூட்டு வாழ்க்கையும் தொடங்கி விட்டது. இக்கூட்டு வாழ்க்கையே கருவிகளையும், மொழியையும் படைத்தது. கருவியும் மொழியும் ஒன்றோடொன்று இணைந்தும் இயைந்தும் வளர்ந்து வந்துள்ளன. கருவிமாற்றம் மொழி மாற்றத்தை உருவாக்கியது. இவ்விரண்டுக்கும் அடுத்தபடியாகக் கூட்டு வாழ்க்கை மாய மந்திரங்களைக் கொண்ட சடங்குகளை உருவாக்கியது. மனிதர் உழைப்புக் காலத்திலும், அவர்கள் வாழ்விலும், தாழ்விலும் முனகலும், நகையும், முணுமுணுத்தலும், அழுகையும் இயல்பான ஒலியை உண்டாக்கின. இவற்றோடு ஆடலும் பாடலும் கூத்தும் இசையும் தேவையாயின. ஆடலுக்கும் பாடலுக்கும் கூத்துக்கும் இசைக்கும் இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டன.

            தமிழில் இசைக்கருவிகள் நால்வகை: 1. தோற்கருவி 2. துளைக்கருவி 3. நரம்புக்கருவி 4. கஞ்சக்கருவி ஆகியன. தோற்கருவி எனப்படுபவை பறை, முரசு, தபேலா, மிருதங்கம், மேளம், துளைக்கருவி எனப்படுபவை புல்லாங்குழல், நாதஸ்வரம். இக்கருவிகளை காற்றுக்கருவி என்றும் அழைப்பர். நரம்புக்கருவி என்பது வீணை, யாழ். இக்கருவிகளை மிடற்றுக் கருவிகள் என்பர். கஞ்சக்கருவி என்பது உலோகத்தால் செய்யப்படுவதாகும். இதற்கு துணைக்கருவி என்று அழைப்பர்.

            சங்க காலத்தில் தோற்றம், வாழ்க்கை முறை, தொழில்முறை, இசை அறிவு போன்ற வரலாற்று நிகழ்வுகளை சமகாலத்தில் இனவரைவியல் பார்வையோடு பொருத்திப் பார்க்கும்போது ஏராளமான உடன்பாடுகள் மற்றும் முரண்பாடுகள் அறியமுடியும். 

இனவரைவியல் (Ethnography)

இனவரைவியல் என்பது கோட்பாடாக உருவாக்கப்படவில்லை. மாறாக ஆய்வு முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முறையைப் பண்பாட்டு மானிடவியலாளர் அல்லது அமெரிக்க மானிடவியலாளர் உருவாக்கியுள்ளனர். இவ்வாய்வு முறையோடு தொடர்புடைய மற்றொரு ஆய்வுமுறை உள்ளது. அவ்வாய்வு முறை இனக்குழு ஒப்பீட்டியல் (Ethnology) அல்லது இனவியல் எனக் குறிப்பிடப்படுகிறது. இனக்குழு ஒப்பீட்டியல் என்பது இரு இனக்குழுக்களின் பண்பாட்டு அம்சங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. வரலாற்று நிலையிலும் கிடைத்தள நிலையிலும் இவ்வொப்பீடு செய்யப்படலாம். ஆனால் இனவிரைவியல் (Ethnology)என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் அல்லது சாதியின் அல்லது இனத்தின் பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் சேகரித்து அவற்றின் பண்பாட்டு அர்த்தங்களைத் தெரிந்து வெளிப்படுத்தும் ஆய்வு முறையாகும். இவ்வாய்வு முறை வரலாற்றுப் பார்வையை அங்கீகரிக்காது. கிடைத்தளப் பார்வையை (Synchronic Approach) ஏற்றுக் கொள்ளும். ஆனால் இக்கட்டுரை, வரலாறு, இனவரைவியல், இனக்குழுவியல் இம்மூன்றையும் பகுத்து ஆராய்ந்து நகர்கிறது.

பறையின் பண்பாட்டு அரசியல்

            ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு வகையான நிகழ்கலை அடையாளம் உண்டு. ஒரு குறிப்பிட்ட நிகழ்கலை வடிவம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் அடையாளப்படுத்துவது மட்டுல்லாமல் அவை மற்றொரு சமூகத்தினரிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. பறையாட்டம் எனும் நிகழ்த்துக் கலையை இன்றைய சூழலில் தமிழகப் பகுதிகளில் உள்ள ஒரு சிலப் பகுதிகளில் அருந்ததியர் மற்றும் பறையர் ஆகிய இரு சமூகத்தினர்கள் தொழில் முறையாக இசைத்து வருகின்றனர். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பறையாட்டம் என்பது பறையர் சமூகத்தினருக்கே உரித்தான அடையாளம் என்று தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும், விரும்பியும் விரும்பாமலும் பேசப்பட்டு வருகின்றது. ஒரு வகையான உரையாடலும், கதையாடலும் நிகழ்ந்து வருகின்றது. இக்கதையாடல் அல்லது இவ்வுரையாடல் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் விமர்சனங்களைத் தொடுக்காமல் விமர்சனங்களுக்குத் தேவையான பதிலை பல்வேறு கருத்துக்களின் வாயிலாகவும், பல்வேறு அறிஞர்களின் கூற்றுகளின் வழியாகவும் விளக்கப்படுகிறது.

            இன்றைய சமூக அமைப்பில் பறையர்களின் நிலையை அறிந்து கொள்வதற்கும், உணர்;ந்து கொள்வதற்கும் அச்சமூகத்தினரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் உதவும் என்பதால் வரலாற்றுச் சான்றாவணங்களையும் மேற்கோள் காட்டி விளக்கத்தை வளர்த்துச் செல்கிறது. பறை இசைக்கருவி பறையர் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்ந்ததா? அல்லது திகழ்கிறதா? அல்லது பிற சமூகத்தினரால் இச்சமூகத்தின் பண்பாட்டில் வலிந்து திணிக்கப்பட்டதா? பறை என்பது இழிவுக் கருவியா? அல்லது இச்சமூகத்தினரின் சிறப்புப் பண்பாட்டு அடையாளமா? உலகமயமாக்கலின் (Globalisation) தாக்கத்தினால் பறையும், பறையாட்டமும் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்கிற இயல்பான வினாக்களும் விடை அளிக்கப்படுகிறது.

            பறையர் சமூக மக்கள் பெரும்பாலும் பறை இசைக் கருவியைத் தங்களுடைய அனைத்து சடங்குசார் சூழல்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் இடைநிலை சாதியினர் தங்களுடைய சடங்குசார் சூழல்களில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்களின் சாதியத் தன்மைக்கேற்றவாறும், அதிகாரத் தன்மையை வெளிப்படுத்தும் அம்சமாகவும், பறை இசைக்கருவியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். உயர்ந்த சாதியினர் என்று தங்களைத் தாங்களே கற்பிதம் செய்து கொள்ளும் சாதியினரான பிராமணர், இசைவேளாளர், செட்டியார், நாயக்கர் ஆகிய சாதியினர் பறை இசைக்கருவியைத் தங்களுடைய வாழ்வியல் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளில் பயன்படுத்துவதில்லை. இதற்கான காரணம் பறை என்பது ஆடு மற்றும் மாட்டுத் தோலால் செய்யப்படுவதாகும். அதனால் இக்கருவி இழிவானது எனக் கருதப்பட்டு மேற்குறிப்பிட்ட சமூகத்தினரால் பயன்படுத்துவதில்லை. மேலும் இக்கருவி அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து செய்யப்படுவதால் மற்ற சாதியினர் இக்கருவியைத் தாழ்வானதாகக் கருதுகின்றனர்.

            பறைக்கும் பிற சாதிகளுக்குமான முரண்பாடு பற்றிப் பார்க்கும்போது இசைவேளாளர் என்று சொல்லக்கூடிய சமூகத்தினரின் இசை முறைக்கும், பறையர் சமூகத்தினரின் இசை முறைக்கும் வேறுபாடு காணப்படுகிறது. அதாவது இசை வேளாளர் என்பவர்கள் நிறுவன சமயம் சார்ந்த கோயில்களில் இசைப்பவர்களாக உள்ளனர். இவர்களின் இசைக்கருவி தவில். இக்கருவியும் மாட்டுத் தோலால் தான் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் இசை முறை என்பது ரம்மியமாகவும், அதே நேரத்தில் உணர்ச்சிகளை மனதிற்குள் புதைத்துவிடும் விதமாகவும் இருக்கும். இதற்குக் காரணம் இவர்களின் சமூகத் தகுதியாகும். இசைக்கருவி மற்றும் இசையின் தகுதி, சிறப்பு ஆகியவை சாதியின் தகுதி, சிறப்பு ஆகியவற்றைப் பொருத்தவையாகவே அமைகின்றன. உயர்ந்த சமூகம் சார்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் (தமிழக அரசின் பார்வையில் இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்) இவர்களின் இசையும் உயர்ந்தோர்க்கானதாகக் கருதப்படுவதால் அத்தகையோரின் வாழ்வியல் அனுபவத்திற்கு ஏற்பவும், கருத்தியலுக்கு ஏற்பவும் இசை மென்மையாக்கப்படுகிறது. ஆனால் அதே தோலால் செய்யப்படும் பறையானது தாழ்த்தப்படுவர்களாகக் கருதப்படும் பறையர் சமூகத்தின் அடையாளமாக கற்பிதம் செய்யப்படுவதால் அவர்களுடைய இசை பிற தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரியது எனப் புனைவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுக்குடி மக்களுக்கான தவில் இசை, உணவை உள்முகமாக்கி அவர்களின் உடலைக் கட்டுப்படுத்துகிறது, அமைதிப்படுத்துகிறது. பறையர் சமூகத்தினர் உழைப்பில் நேரடியாகப் பங்கு பெறுபவர்கள். தொழில் வெளியில் இச்சமூகத்தினரை ஆதிக்க சாதியினரால் உழைப்பு நிலையிலும், உணர்வு நிலையிலும் ஒடுக்கப்படுவதால் கலைவெளியில் அவ்வொடுக்குதலில் இருந்து மீள்வதற்கான கூத்து, இசை வடிவங்களை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதாவது இச்சமூகத்தினருடைய பறை இசை ஒடுக்கப்பட்ட உணர்வுகளை மனதிலிருந்து வெளியே கொண்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் இன்றைய காலகட்டத்தை முன்வைத்து விளக்கப்பட்டதாகும். இனி பறை பற்றிய சங்க காலக் கருத்துக்கள் பின்வருமாறு,

சங்க காலத்தில் பறையும் சாதியும்

            சங்க காலத்தில் வாழ்ந்த மக்களை அவர்கள் வாழும் நிலங்களுக்கு ஏற்பப் பெயரிட்டு அழைத்து வந்தனர். அந்நிலவியல் தன்மைக்கு ஏற்பத் தொழில்முறைகளும் செய்து வந்தனர். அத்தொழில் முறைக்கு ஏற்ப குடிகள் உருவாயின. அக்குடிகளுள் ஒன்று பறையர் குடி ஆகும். இப்பறையர் குடியினர் சங்க காலத்தில் இசைத் தொழிலையும் செய்து வந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கிய பாடல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகிறது. சான்றாக,

          துடியன் பாணன் பறையன் கடம்பன்

இந்நான் கல்லது குடியும் இலவே”

                                                                                                        (புறநானூறு: 335)

மேற்குறிப்பிட்ட துடியன், பாணன், கடம்பன் ஆகிய குடிகள் சங்க கால கட்டத்தில் இசை தொடர்பான, பாடல்கள் தொடர்பான தொழில் முறைகளைச் செய்து வந்தமைக்கு ஏராளமான வரலாற்றுச் சான்றாதாரங்கள் உள்ளன. ஆனால் பறையர் குடியினர் தொடர்ச்சியாக இசைக்கருவி தொடர்பான தொழில்கள் செய்தமைக்கு வேறெந்தச் சான்றுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அறிஞர் குணா அவர்கள் எழுதியுள்ள “வள்ளுவப் பார்ப்பாரியம்” எனும் நூலில் பறை என்பதற்குப் புதியதொரு விளக்கத்தைத் தருகிறார். “ஆன்றடங்கிய ஞானத்தாலும் தவத்தாலும் மாபெரும் அறிஞர்களாயிருந்தவர்கள் அரசர்களுக்கு ஆசான்களாயிருந்து வழிகாட்டி வந்தனர். சாக்கையர், கணிகர், நிமித்தகர், பார்ப்பார் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த வள்ளுவர்களோ அரசர்க்கும் பிறருக்கும் கருமத் தலைவர்களாயிருந்து நாள் கோள் மீன் பார்த்து நல்லது கெட்டதைப் பற்றிச் சொல்லி வந்ததுடன் பிறப்பும் மணமும் இழவும் முதலான வாழ்வியல் நடப்புகளுக்குரிய சடங்குகளை நடத்தி வந்தனர். காலப்போக்கில் கணியன், நிமித்திகன், சாக்கையன், வள்ளுவன், பார்ப்பான், மறையோன் எனும் வெவ்வேறு பெயர்கள் மயங்கி ஒன்றாகி விட்டன. மேலும் தமிழ் நான்மறைக் கற்று ஓதி வேள்வி செய்து வந்த வேத முதல்வர்களையே ஆக்கியோர் என்றும் மறைகளை கற்பித்தவர்கள் என்றும் மறைகளைக் கற்றவர்கள் என்றும் பொருள்படும் பெயரே மறையோர் எனும் பெயராகும். மறையர் எனும் சொல் மயங்கி பறையர் என்றானது” என்று விளக்கம் அளிக்கிறார்.

            மேலும் ‘பறை’ எனும் சொல்லுக்கு குணா அவர்களின் கருத்தை தனது முனைவர் பட்ட ஆய்வில் பேராசிரியர் பு.சித்திரவேல் (தலைப்பு – தலித்துகளின் வாழ்க்கைப் பயணச் சடங்குகள் – செயல்பாட்டியல் கோட்பாட்டு அணுகுமுறை) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். “நிலக்கிழாருக்கு குத்தகைப் பணத்திற்குப் பதிலாக பறை என்ற முகத்தலளவையால் (மரக்கால்) நெல்லினை அளந்து கொடுத்ததால் ஏற்பட்ட பெயரே பறையர்” எனச் சுட்டியுள்ளார்.

            மேலும் “சங்க காலத்தில் பறை எனும் சொல் நெல் அளக்கும் கருவியைக் குறிக்கும் சொல்லாகும். வேளாண்மைத் தொழிலோடு தொடர்புடைய நெல் அளத்தல் தொழிலைச் சங்க காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்த ஒரு குடியினர் செய்து வந்துள்ளனர். அக்குடியினர் பறை எனும் முகத்தலளவையால் (மரக்கால்) நெல்லினை அளக்கும் தொழிலைச் செய்ததால் அக்குடியினர் பறையர் என அழைக்கப்பட்டனர்” (குணா – வள்ளுவப் பார்ப்பாரியம். பக்கம் எண். 110, 111)

            மேற்குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படையில் பறையர் சமூகம் சங்க காலத்திலிருந்து கி.பி.12ம் நூற்றாண்டு வரை மதிப்பு மிகுந்த சமூகமாக இருந்துள்ளது என்று கூறாவிட்டாலும் மதிப்பு குறைந்த சமூகமாக இல்லையென்பதை உணர முடிகிறது. கி.பி.12ம் நூற்றாண்டிற்குப் பிறகு பிற்காலச் சோழர்கள் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட நாயக்கர்கள் காலத்திலும் தான் பறையர் சமூகத்தினர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

            சாதியும், தீண்டாமையும் ஆதிகாலம் தொட்டே வருவது கிடையாது. அவ்வாறு சொல்வோமானால் நாம் சாதிக்கும், தீண்டாமைக்கும் தொன்மையையும், நியாயத்தையும் உருவாக்கி விடுகிறோம் என்று அர்த்தமாகி விடும். உண்மையில் சாதியும் தீண்டாமையும் வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தான் சாதிக்கேற்பத் தொழில் முறையும், தொழில் முறையில் இழிவுமுறையும் வலிந்து திணிக்கப்பட்டது.

“அம்பேத்கரும், அயோத்திதாசரும் இதனை மேலும் உறுதி செய்கின்றனர். தீண்டப்படாத சாதிகள் உருவாக்கப்பட்டு நிலம் உள்ளிட்ட அடையாளங்கள் ஆகியவை விரும்பிய தொழிலை மேற்கொள்ளும் சுதந்திரம் பறிக்கப்பட்ட இம்மக்கள் சுகாதாரமற்ற தொழிலை மட்டுமே சாதி இந்துக்களின் கட்டளைக்கேற்றவாறு செய்ய வைக்கப்பட்டனர். சாதிக்குள்ளே திருமணம், தொழில் பாகுபாடுகள், கல்வி மறுப்பு, ஊருக்கு வெளியே குடியிருப்பு ஆகியவை சாதிமுறை உண்டானதின் விளைவுகளேயாகும். பிணக்குழி தோண்டுதல், இறந்த விலங்குகளை அகற்றுதல் என்று இழி தொழில்கள் கட்டாயமாக்கப்பட்டன.

            செத்த மாட்டெடுத்தல் என்பதின் தொடர்ச்சி தான் மாட்டுத் தோலால் ஆன பறைமேளம் அடிப்பதும், தீண்டாமையும், இழிதொழில்களும இம்மக்கள் மீது சுமத்தப்பட்ட பின்னால் தீண்டாமையையும் இம்மக்கள் இழிவானவர்கள் எனும் கருத்தையும் பல்வேறு புராணங்கள், பாடல்கள், தொன்மக் கதைகள் முதலே உருவாகி வளர்பவை, இயல்பானவை என்று தொடர்ந்து பரப்பி வருகின்றனர், மத இந்துக்களும் சாதி இந்துக்களும். இதனால் ஆண்டாண்டு காலமாக நாம் அடிமையாகத் தான் இருந்து வருகின்றோம். நம்முடைய தொழில்கள் இழி தொழில்கள் தான் போலும் ஆகிய கருத்துக்களைப் பறையர் சமூகத்தினர் ஏற்கின்றனர். உளவியல்பூர்வமாக இம்மக்களை அடிமையாக்கும் உத்தி ஆகும்”. (பறையொலியால் பரவும் இழிவு – கொதிப்பு வெளியீடு) இவ் உளவியல் அடிப்படையில் தான் பறையர் சமூகத்தினர் இன்றைய கால கட்டத்தில் தங்களுடைய வாழ்வியல் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளிலும் பிற சமூகத்து சடங்கு முறைகளிலும் பறையை இசைத்து வருகின்றனர்.

பறையின் போராட்ட அரசியல்

            இன்றைய காலகட்டத்தில் உள்ள அடுக்குமுறைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும்  தொழில் முறைகளையும் ஏற்க மறுக்கிற பறையர் சமூகத்தினரில் ஒரு சாரார் இன்று பறை இசைக்கருவியை இசைக்கக்கூடாது எனும் கருத்தினை வலுவாகப் பரப்பி வருகின்றனர். “இதற்குச் சான்றாக 1985ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று காட்டுமன்னார்குடிக்கு அருகில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.பாண்டியன் என்பவர் (இவர் பி.ஏ. பட்டம் பெற்றவர்) “பறையடிக்கும் இழிதொழிலைச் செய்ய மாட்டோம்” என்று போராடியதற்காக் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் திரு.கக்கன் அவர்கள் பிறந்த மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டிக்குப் பக்கத்து ஊரான வஞ்சி நகரம் எனும் கிராமத்தில் கந்தன் என்பவர் சுத்தமான குடிநீர் வசதி, வீதியில் செருப்பணிந்து நடப்பதற்கான உரிமை, பறைமேளம் அடிக்க மறுப்பு என்பதற்காகப் போராடியதால் 1987ம் ஆண்டு சாதி இந்துக்களால் கொலை செய்யப்பட்டார். இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது பறை இசைக்கருவி இச்சமூகத்தில் இழிவுக்கருவியாகப் பார்க்கப்படுகின்றதே தவிர பண்பாட்டு அடையாளமாக பார்க்கப்படவில்லை” (நூல் – வஞ்சி நகர கந்தன் – ஸ்டாலின் ராஜாங்கம்). மேலும் ஒரு குறிப்பிட்ட தொழில் அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவ்வடையாளம் ஒட்டுமொத்த பறையர் சமூகத்தினருக்கும் உரித்தானது என்று கூறிவிட முடியாது. மேலும் ஒரு சிலப் பகுதிகளில் பறை அடித்தல் தொழிலைச் செய்வதால் மட்டும் பறைத் தொழில் பறையர் சமூகத்தினருக்கு முதன்மைத் தொழில் என்று கூறிவிட முடியாது.

            பறை என்பது ஆதிக் கருவி என்றும் அக்கருவி தமிழர்களின் கருவி என்றும், தமிழர்களுக்கே உரிய மகத்தான அடையாளம் என்று புளகாங்கிதம் அடையும் பிற சாதி இந்துக்கள் அல்லது பிற சமூகத்தினர்கள் அவர்களின் முதன்மைத் தொழில்களாக பறை இசைப்பதை வரவேற்கக்கூடியதாக உள்ளது. பறை இசைத்தலை அனைத்து தமிழ்ச் சாதியினரும் இசைக்க வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது போல், அனைத்து சாதியினரும் பறை இசைக்க வேண்டும் என்பதே சாலச் சிறந்ததாகும்.

            பறை என்பது போர்க்கருவி என்றும், போர்ப்பறை என்றும் ஆதிக்க சாதியினரை வீழ்த்தக்கூடிய ஆயுதக் கருவி என்றும் மார்தட்டிக் கொள்ளும் ஒரு சில பறையர் சமூகத்தினர் “சாப்பறையைப் போர்ப் பறையாக” மாற்ற வேண்டும் என்றக் கருத்தினை முன்னிறுத்தி வருகின்றனர். இக்கருத்து 1990களுக்குப் பின்னர் முன் வைக்கப்பட்ட கருத்தாகும். இக்கருத்து தமிழகத்தில் பின் நவீனத்துவ சிந்தனையில் முன்மொழியப்பட்டதாகும். அதாவது தீட்டு என்று சொல்லக்கூடிய ஒன்றை புனிதமானதாகக் கூறுவதும், புனிதம் என்று சொல்லக் கூடியதை தீட்டாக கட்டும் மடைமாற்றம் ஆகும். பின் நவீனத்துவ சிந்தனை முறை ஐரோப்பிய நாடுகளில் உருவானதாகும். இக்கருத்து தமிழ்ச் சூழலுக்குப் பயன்படுத்துவது தவறான ஒன்றாக எண்ணப்படுகிறது. சாப்பறையைப் போர்ப்பறையாக மாற்றுவதன் மூலம் பறையர் சமூகத்தில் பெருவாரியான மாற்றங்கள் நிகழ்வது கிடையாது. மாறாக சாப்பறையை போர்ப்பறையாக மாற்றப்படும் பொழுது பறையர் சமூகத்தினரை மீண்டும் பறை இசைக்கருவியை இசைக்க வைப்பதே நிகழும். மீண்டும் பறையர் சமூகத்தினரை அடிமையாக்க முயற்சிப்பதாகும். இது உளவியல் ரீதியாக திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இழிவு முறையாகும்.

உலகமயமாக்கல் சூழலில் பறை

            உலகமயமாக்கலின் தாக்கத்தினால் பறை இசைக்கருவி இன்று பறையர் சமூகத்தின் பண்பாட்டில் வலிந்து திணிக்கப்பட்ட சாதியத் தன்மையில் இருந்தும் சாதிய இறுக்கத்தில் இருந்தும் பறிக்கப்பட்டடு வேறொரு தன்மைக்கு குறிப்பாக சாதியற்ற தன்மைக்கு கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் அடிமை முறையும், அடிமைத் தொழிலும், சேவைத் தொழிலும் வலிந்து திணிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை நிலவும் சாதியத்தையும், தீட்டையும் போக்குகிறது. பொதுவெளிகளில் பறையைப் பல்வேறு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், செயற்பாட்டாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இக்கலை பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பயணப்படுகின்றன. இதனால் பறையின் ஆட்டங்கள், அடவுகள், உடைகள் மாற்றப்படுகின்றன. உலகமயமாக்க சூழலில் எந்தப் பொருளுக்கு கவர்ச்சித் தன்மை (ஈர்ப்பு) உள்ளதோ, அப்பொருளுக்குச் சந்தையில் மதிப்பு கூடுகிறது. எனவே இக்கலைக்கும் மதிப்பு உயர்கிறது. இதனால் இக்கலை இன்று ஓரளவிற்குச் சாதிய தாக்கம் இன்றி, சாதிய தீண்டாமை, தீட்டு இன்றி, ஒடுக்குமுறையின்றி மொழி, இனம், சாதி கடந்து பயணப்படுகிறது.

பறை பற்றிய தொன்மக் கதைகள்

கதை 1

            அந்தக் காலத்தில் இராஜா ஒருவர் ஒரு ஆளை அழைத்துப் பறை இசைத்துப் ‘பழம் உதிர பழம் உதிர’ என்று அடிக்கச் சொன்னார். அதாவது பழம் உதிர பழம் உதிர என்று கூறினால் அந்த ஊரில் உள்ள வயது முதிர்ந்தவர்கள் இறந்து போகட்டும் என்று அர்த்தமாகும். இவ்வாறு அந்தப் பணியாளரும் பறையடித்துக் கொண்டிருந்த போது சிறுவர்களும், இளைஞர்களும் இவரைக் கேலி செய்து இவரின் மேல் கற்களை எரிந்துள்ளனர். இதனால் அந்தப் பணியாள் அவர்களின் மேல் கோபப்பட்டு “பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, பழம் உதிர” என்று  ஆவேசமாக அடித்துள்ளார். அதன்பிறகு குழந்தைகளும், இளைஞர்களும், சிறுவர்களும், பெரியவர்களும் சாவினைச் சந்திக்க நேரிட்டதாம். இப்படி பறையடித்து அறிவிப்புச் செய்தவரின் வம்சாவழியினர் பறையர் என்ற பிரிவாயினர்.

கதை 2

அந்தக் காலத்தில் சிவன் நடனமாடும் போது இசைக்கருவிகள் இசைப்பதற்கு பலரும் முன்வந்துள்ளனர். ஆனால் சிவன் தன் கழுத்தில் உள்ள மாலையை எடுத்து மேலே எறிந்துள்ளார். இந்த மாலை யார் கழுத்தில் விழுகிறதோ அவர்கள் தான் இனிமேல் இசைக்கருவிகளை இசைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவ்வாறு சிவனும் எறிய அந்த மாலை பறையர் ஒருவரின் கழுத்தில் விழுந்துள்ளது. அன்றிலிருந்து பறை இசைக் கருவிகளை இசைப்பவர்கள் பறையர் என அழைக்கப்படுகின்றனர்.

கதை 3

            அந்தக் காலத்தில் பறையரும் பார்ப்பணரும் அண்ணன் தம்பியாக இருந்துள்ளனர். இதில் பறையர் அண்ணனாகவும், பார்;ப்பணர் தம்பியாகவும் இருந்துள்ளனர். இருவரும் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். மேலும் இருவரும் தினமும் கோயிலுக்குச் சென்று பூசை செய்து வந்துள்ளனர். ஒருநாள் அண்ணன் தம்பியை அழைத்து தம்பி இன்று நீ மட்டும் கோயிலுக்குச் சென்று சாமிக்கு பூசை செய்து விட்டு வா, நான் போகவில்லை என்று கூறியிருக்கிறார். இவ்வாறு இருவரும் மாறி மாறி கூறியுள்ளனர். பிறகு அவரவர் வேலையைச் செய்துள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர் அண்ணனைப் (பறையரை) பார்த்து, இன்று சாமிக்குப் பூசை செய்தாச்சா என்று கேட்க, அதற்கு அவர் என் தம்பி “பார்ப்பான்” என்று கூறியுள்ளார். அதிலிருந்து “பார்ப்பணர்” என்ற பிரிவினர் உருவாகியுள்ளனர். ஆனால் தம்பியாகிய பார்ப்பணர் பூசை செய்யவில்லை என்று தெரிந்ததும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. பின்பு இவர்களின் சொத்துக்கள் எல்லாம் பிரிக்கப்பட்டது. இறுதியில் பசுமாடுகளைப் பிரித்துள்ளனர். அப்போது பசுமாடுகள் ஆயிரக்கணக்கில் இருந்துள்ளன. அப்போது தம்பி அண்ணனைப் பார்த்து இம்மாடுகளையெல்லாம் எண்ணிப் பிரிப்பதற்கு இப்போது நேரமில்லை. எனவே நிற்கின்ற மாடுகள் எல்லாம் எனக்கு சொந்தம். படுத்திருக்கின்ற மாடுகள் எல்லாம் உனக்கு சொந்தம் என்று கூறியிருக்கிறார். அதற்கு அண்ணனும் சரி என்று கூறியிருக்கிறார். இதனால் தம்பியாகிய பார்ப்பணர் அன்றுமுதல் நின்றுள்ள மாட்டில் பாலைக் கநற்து தொழில் செய்தும், மீதியுள்ள பாலைச் சாமிக்குப் பூசைகள் செய்தும் பூசாரி ஆகியிருக்கிறார். ஆனால் அண்ணனாகிய பறையர் படுத்த மாட்டைச் சாப்பிட்டும், அதன் தோலை வைத்து பறை செய்தும் அன்று முதல் பறையடித்திருக்கிறார். அன்றிலிருந்து பறையர் என்கிற பிரிவினர் உருவாயினர்.

தொன்மக்கதையின் உளவியல் அரசியல்:

இம்மூன்று கதைகளையும் உற்றுநோக்கும் பொழுது பறை பற்றிய நுண்அரசியலை (Micro Politics) புரிந்து கொள்ள முடிகிறது. தொன்மம் என்றால் புனைவு எனப் பொருள்படும். புனைவு என்றால் பொய், கட்டுக்கதை அல்லது உண்மைக்குப் புறம்பானது என்பதே நிதர்சனம். இம்மூன்று கதைகளும் தெய்வத்தோடு தொடர்புபடுத்தியுள்ளனர்.

தெய்வத்தோடு ஒரு சமூகத்தினரையும் ஒரு கதையையும் சேர்த்துக் கூறும் போது அக்கதை பொது வெளியில் நம்பிக்கைக்கு உரியதாகவும், உண்மையின் சாட்சியாகவும் மாறும் என்கிற உளவியல் அடிப்படையில் இக்கதை பிணைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும். அதுபோல் ஒரு சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தின் பண்பாட்டில் அவதூறுகளையும், தீண்டாமைகளையும், புனைவுகளையும், தொன்மக் கதைகளையும் பரப்ப வேண்டும் என்பதே உளவியல் அரசியலாகும். கி.மு. கி.பி. என்று சொல்லப்படுகின்ற காலத்தில் இச்சமூகத்தினர்கள் பறை இசைக்கும் தொழிலை செய்தனர் என்றும், புராணத்தில் தெய்வங்கள் நடனமாட பறை இசைத்துள்ளனர் என்கிற கட்டுக்கதையை வலிந்து திணிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட கதைகள் ஏராளம். இதில் இம்மூன்று கதைகளும் கால்கள் இல்லாமல் நடமாடிக் கொண்டிருக்கின்றன. இக்கதையின் மூலம் இச்சமூகத்தினரின் மூளையை மழுங்கடிக்கப்பட்டு அல்லது மூளையைச் சலவை செய்து பறையர் என்றால் பறை இசைப்பவர்கள் என்கிற சொல்லாடலை உருவாக்கியுள்ளனர். இச்சொல்லாடலே பொது வெளியில் இன்றளவும் நிலவி வருகிறது. ஆனால் இச்சமூகத்திற்குப் பல்வேறு பெயர்கள் இன்றளவும் வழக்கில் இருந்து வருகின்றது. அவை ஆதிதிராவிடர, வள்ளுவன், சாம்பான், கணியன், சாக்கையர், தலையாரி என்பவையாகும். இதில் ஏராளமான உட்பிரிவுகள், கிளைகள், கூட்டங்கள், வகையறாக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவுரை:

            பறையின் பண்பாட்டு அடையாள அரசியல் சங்க காலம் முதல் சமகாலம் வரை எனும் இக்கட்டுரையில் மேற்குறிப்பிட்ட பல்வேறு வினாக்களுக்கும், விமர்சனத்திற்கும், கதையாடலுக்கும் விடையளிக்கும் விதமாகவும், பல்வேறு புனைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் இந்த சிறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் உள்ள பல்வேறு தரவுகள், கருத்துகள், கோட்பாடுகள், அறிஞர்களின் கருத்துகள், ஆய்வாளர்களின் ஆய்வுரைகள், ஒருசில நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட சான்றாதாரங்களின் அடிப்படையில் உற்று நோக்கும் போது இசையும், இசைக்கருவியும், நிகழ்த்துக்கலை வடிவங்களும் தமிழ்ச்சமூகத்தில் ஒவ்வொரு குடியினருக்கும் குறியீடாகவே இருந்துள்ளது. சாதியத்தின் எழுதப்படாத வரையறையின் அடிப்படையில் மேல், கீழ் என்ற பாகுபாட்டின் சனாதன பொதுப்புத்தியின் அணுகுமுறையில் பறையும், பறையாட்டமும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும் இவ்வாய்வு பல்வேறு பார்வையில் விவாதிக்கப்பட்டு விரிவாக்கப்படும்.

பார்வை நூல்கள் :

  1. பக்தவத்சல பாரதி                 –           பண்பாட்டு மானிடவியல்,

மணிவாசகர் பதிப்பகம்,

சென்னை – 600 018.

1999 – 2000

  • கே.ஏ.குணசேகரன்               –           நாட்டுப்புற இசைக்கருவிகள்

தன்னானே பதிப்பகம்,

புதுச்சேரி. 2004

  • குணா                                     –           வள்ளுவப் பார்ப்பாரியம்,

தமிழக ஆய்வரன்.

பெங்களுர்.

2006 

  • பொ.வேல்சாமி                     –           கோவில் நிலம் சாதி

காலச்சுவடு

2007

  • கே.ஏ.குணசேகரன்               –           தலித் கலை கலாச்சாரம்,

ராகாஸ் வெளியீடு,

சென்னை.

2006.

6. இரவிக்குமார், பூவிழியன், ஸ்டாலின், ராஜாங்கம், எக்ஸ்ரே மாணிக்கம்    –                                                                                               பறையொலியால் பரவும் இழிவு.

கொதிப்பு வெளியீடு.

சீர்காழி. 2007

  • மு.வளர்மதி                            –           பறை

அம்ருதா வெளியீடு.

சென்னை. 2008

  • கோ.கண்ணன்                      –           பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை

உணர்வும்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

சென்னை

  • இ.முத்தையா             –           தமிழர் பண்பாட்டு வெளியில் நிகழ்த்து கலைகளும்

உலக நோக்கும்

காவ்யா வெளியீடு. 2010

  1. அ.கா.பெருமாள், நா.இராமச்சந்திரன்       -தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள்,

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். 2001

  •  

நன்னூலை முன்வைத்து பொருள்கோள் ஓர் அறிமுகம்

நன்னூலை முன்வைத்து பொருள்கோள் ஓர் அறிமுகம்

சகுந்தலாமணி பா.

முனைவர்ப் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை மற்றும் ஆய்வுமையம்,
அரசுக் கல்லூரி சித்தூர்,பாலக்காடு
கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம்

ஆய்வுச் சுருக்கம்

பொருள்கொள்ளும் செயல்முறை முடிவற்ற ஒன்று. ஏனெனில் அர்த்தம் என்பது முடிவில்லாத ஒன்று. எந்த ஒரு விளக்கமும் எல்லா அர்த்தங்களையும் புலப்படுத்துவதில்லை ஒவ்வொரு விளக்கமும் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. ஒரு பனுவலில் புகுந்து வாசகன் தன்னை மறந்துவிடும் செயல்பாடுதான் பொருள்கோளியல். மேலும் பொருள்கோளியலின் அடிப்படை ஒரு பனுவலை வரலாற்றுப் பார்வையில் அணுகுவது ஆகும். தமிழ் இலக்கண நூலான நன்னூல் தானே கர்த்தாவாக இருந்து எவ்விதம் பொருள்கோளியல் முறைமைகளை எடுத்துரைக்கிறது என்றும், நன்னூல் இடைக்காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்டது எனினும் எல்லா காலகட்ட வாசகனுக்கும் பொருள் புலப்பாட்டிற்கு உதவுகிறது என்றும், ஆராய வேண்டி உள்ளது. ஒரு பனுவலைப் பழைய மரபிற்குள் வைத்து வாசிப்பதும், ஒரு பனுவலுக்கு பொருள் விளக்கம் தருவதும், அதை பகுத்து ஆராய்வதும் பொருள்கோளியல் துறையின் அடிப்படை ஆகும். பொருள்கோளியல்  துறையின் அடிப்படையில் நன்னூலை அணுகுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச்சொற்கள்

   நன்னூல், தொல்காப்பியம், பனுவல், பொருள்கோளியல்,

முன்னுரை

தமிழில் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தை சார்பு நூலாகக் கொண்டு பவணந்தி முனிவரால் நன்னூல் எழுதப்பட்டது.  நன்னூலில் எழுத்து, சொல் என இரண்டு அதிகாரங்களையும், 474 நூற்பாக்களும் இடம்பெறுகின்றன. இந்நூல் தொல்காப்பியத்தை எளிமையாகவும் தெளிவாகவும் கற்க உதவுகிறது. நன்னூல் இடைக்காலகட்ட சமூக, சமய,அரசியல் பொருளாதார நோக்கத்தோடு இலக்கணம் கூறுகின்றது. இத்தகைய சிறப்புடைய நன்னூலை பொருள்கோளியல் துறையின் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொருள்கோளியல்

பொருள்கோளியல் பனுவல்களின் அர்த்தத்தை நுட்பமாகப் புரிந்து கொள்வதற்கான பல நூற்றாண்டுகளாக வழங்கி வரும் ஒரு தத்துவ நோக்கு ஆகும். பொருள்கோளியல் துறை வரலாறு, தத்துவம், சமூகவியல் ஆகிய துறைகளிலும் புகுத்திப் பார்க்கப்படுகிறது. பொருள்கோளியல் துறை மேலைநாடுகளில் உரை வரைதல், சொல்லுக்கு விளக்கம் தருதல், நூற்பொருளைப் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள மொழிபுணர் இயல்பு என்னும் கருத்தைப் பொருள்கோள் என்று உரையாசிரியர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.இந்தச் சூழலில் மொழிபுணர் இயல்பை முழுமையான பொருள்கோள் முறையாகக் கருத முடியாது என்ற வாதத்தை முன்வைத்து தொல்காப்பியத்திலுள்ள சில பொருள்கோடல் முறைகளைத் தொகுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது,

“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடைய மாந்தர்க்கு அல்லது தெரியின்

நல்நயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே” [தொல்காப்பியம், மெய்,275]

என்னும் நூற்பாவிலேயே உன்மையான பொருள்கோள் முறைமைகள் காணப்படுவதாக க.பூரணச்சந்திரன் [ தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள் பொருள்கோள் ஓர் அறிமுகம் என்னும் நூலில் நிறுவியுள்ளார்.]

 பொருள்கோளியலின் தோற்றம்

        உலகில் முதன் முதலில் மெசப்பட்டோமியக் கலாச்சாரத்தில் தான் பல்வேறு வகையான உரைகள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கிரேக்க புராணக்கதைகளில் ஹெர்மிஸ் என்னும் கதாபாத்திரத்தைப் பற்றி அறிய முடிகிறது. அக்கதாபாத்திரம் கடவுளிடமிருந்து மனிதர்களுக்கு தூது செல்பவனாகவும், மொழியை கண்டுபிடித்தவனாகவும் கூறப்படுகிறது. ஹெர்மிஸ் கூறும் சொற்கள் ஈரடித்தன்மை கொண்டதாக இருந்தது. இச்சொற்களுக்குப் பொருள் என்ன என்று மக்கள் கேட்டனர். அதற்கு ஹெர்மிஸ் பொருள் விளக்கியதாகவும் தெரிகின்றது. ஹெர்மிஸ் என்னும் பெயரில் இருந்து பொருள்கோளியலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ஹெர்மியோடிக்ஸ் உருவாக்கப்பட்டது. இதனை மேலைநாடுகளில் அறிஞர்கள் (theory of textile interpretation and analysis) அதாவது ஒரு பனுவலுக்கு பொருள் விளக்கம் தருதல் அதைப் பகுத்து ஆராய்தல் பற்றிய கோட்பாடு என்று விளக்கம் தருகின்றனர். பொருள்கோளியல் துறை கடினமான மொழிகளை உடைய நூல்களை விளக்குகின்ற விதிகளை அல்லது முறைகளைக் கொண்டதாக இருக்கிறது. பொருள்கோளுக்கு அடிப்படையான உரை விளக்கம் பற்றி அணமையில் சிந்தித்த தமிழ் ஆய்வாளர்கள் சில கருத்துக்களைக் கூறியுள்ளனர்.பொருள்மாறுபடுவது அல்லது அர்த்தமாறுபடுவது அல்லது அர்த்த மயக்கம் தான் பொருள்கோள் துறையின் முக்கியமானது.பொருள் மாறுபாட்டிற்கு காரணம் ,

  • பாடவேறுபாடு
  • சொற்பிரிப்பு
  • கொண்டுகூட்டு
  • கலை மரபு
  • தொகைப்பெயர் விளக்கம்
  • ஒரு சொல்லுக்குப் பல பொருள்
  • நயம் கூறுதல்
  • விளங்கக் கூறுதல்
  • கதைகளைப் பொருத்துதல்

ஆகியவைகள் காரணமாக இருக்கின்றன. இலக்கண நூல்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதற்கும் ,உரைகள் தோன்றுவதற்கும் இக்கூறுகளே காரணமாக இருக்கின்றன.

பொருள்கோளியல் அணுகுமுறை

பொருள்கோளியல் அடிப்படையில் நன்னூல் உருவாக்கத்தின் காரணத்தன்மை, காலத்தன்மை, கலாச்சாரத்தன்மை ஆகியவற்றை ஆராய இயலும். இலக்கண நூல்களின் விதிவருமுறை, விதிவிலக்கு முறை ஆகிய கற்பித்தல் கோட்பாடுகளின் வழி நன்னூலுடன் பொருள்கோளியலை  பொருத்திப் பார்க்க இயலும்.

 பொருள்கோளியல் சுழற்சி

                     நூலைப் பெறுபவன்

குறி, குறியீடு, பனுவல்               ஆசிரியர்

பொருள்கோளியலை முக்கோண வடிவம் வாயிலாக விளக்கலாம். பொருள்கோளியல் ஒரு பனுவலை உருவாக்குவதிலும், அந்நூலினை விளக்குவதிலும் குறிப்பாகப் பனுவல்களின் மெய்மையான அர்த்தத்தை அணுகுவதிலும் அக்கறை காட்டுகின்றது.  நூல், அந்நூல் நூலின் ஆசிரியர், வாசகரின் மனநிலை ஆகியவை அந்நூலைப் பொருள் புரிந்து கொள்ள உதவுகின்றது.

“புரிந்துகொள்ளலும், விளக்கமும் இரு வேறு கோணங்கள் என்றாலும் ஒன்றினின்றும் மற்றது பிரிக்க முடியாத தொடர்பு கொண்டவை .புரிந்துகொள்ளல் என்பது நம் மனத்தின் நனவுப்பகுதி ,புறநனவிலிப் பகுதி ஆகியவற்றில் நிகழும் ஒரு செயல்முறை ஆனால் விளக்கம் என்பதில் ஒருவனின் வரலாறு,பண்பாடு,சமூகம்,மொழி ஆகிய காரணிகளை ஆராய வேண்டும் இம்மாதிரி ஒரு பனுவலின் குறிகளை விளக்குவதிலும் ,குறிப்பாகப் பனுவலின் மெய்யான அர்த்தம் என்பதை அணுகுவதிலும் பொருள்கோள் அக்கறை காட்டுகிறது.” க. பூரணச்சந்திரன் [ தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள் பொருள்கோள் ஓர் அறிமுகம் ,ப.4] பனுவலை வாசகன் முக்கோண சுழற்சியின் வாயிலாக பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பொருள்கோளியல் துறை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

 நன்னூலில் பொருள்கோளியல்

பொருள்கோளியல் துறைக்கும், நூல் உரை உருவாக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நன்னூல் உரைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது நுண்ணிய உரை வேண்டும் என்கின்றது. உள்நின்று அகன்ற உரை என்பதற்கு ஒருவரது மனத்தின் ஆழ்நிலையில் பல காலமாக தங்கி இருந்து பேச்சு வாயிலாக வெளிப்படுகின்ற விளக்கம் என்று பொருள் கொள்ளலாம். உரையானது வழிவழியே வாய் மொழியாக பரப்பப்பட்டது. பொருள்கோளியல் துறையும் வாய்மொழி, நம்பிக்கை இவற்றின் வழியாக தோன்றியது என்று மேலை நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்.

‘’தமிழ் மரபில் ஆசிரியர் தம் மாணவர்களுக்கு வாய்மொழியாக பழைய நூலுlக்கு உரையும் விளக்கமும் கூறி வந்தனர். இவ்வாறு ஒரு நூல் பல தலைமுறைகளைக் கடந்து வரும்போது ஒவ்வொரு பரம்பரைக்கும் உரிய கருத்துக்களையும் விளக்கத்தையும் சேர்த்துக் கொண்டு உருவாக்கப்படுகிறது. (உரையாசிரியர்கள், அரவிந்தன் மு. வை, பக்கம்:64 )

ஒரு நூலுக்கு உரை செய்தல், உரை விளக்குதல் என்பதைத் தாண்டி ஒரு பனுவலைப் புரிந்து கொள்வது  வயது, கால சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். பொருள்கோளியல் துறை பொருளை வாசகனின் மனநிலைக்கு ஏற்ப புரிந்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது.

பொருள்கோளியல் துறையில் எல்லா பனுவல்களும் சமமானவை என்றும், விவிலியம் போன்ற சமய நூல்களுக்கு தனி இடம் தர வேண்டாம் என்றும் கூறுவர். ஆனால் தமிழ் மரபில் சமய நூல்களுக்கு முக்கியத்துவம் தரும் வழக்கம் இருக்கிறது.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல் நூலாகும்”           (நன்னூல், பாயிரவியல்)

இலக்கண நூல்களுக்கு உரை காணுதல் என்பது அக்கால சமூக, சமய அரசியலுக்கு ஏற்ப உரை மாறுபட்டது. இலக்கண நூல்களுக்குப் பல உரைகள் தோன்றின. ஒவ்வொரு உரை ஆசிரியரும் சொல்லுக்கு உரை காணும் விதம் மாறுபடுகிறது.

நன்னூலில் பொருள்கோள்

பொருள்கோளியல் துறைக்கும் இலக்கண நூல்கள் குறிப்பிடும் பொருள்கோளுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஒரு செயலில் சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வதற்கு ஏற்ற வகையில் நேராகவோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறையை பொருள்கோள் என்று வழங்குவர்.நன்னூலார் பொருள்கோளை  எட்டு வகைப்படுத்துகிறார்.

“யாற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூண்

 தாப்பிசை அளைமறியாப்பு கொண்டு கூட்டு

 அடிமறி மாற்று எனப் பொருள்கோள் எட்டே’’ [நன்னூல், நூ .411]

  • ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  • மொழிமாற்றுப் பொருள்கோள்
  • நிரல்நிறைப் பொருள்கோள்
  • பூட்டுவில் பொருள்கோள்
  • தாப்பிசைப் பொருள்கோள்
  • ளைமறியாப்புப் பொருள்கோள்
  • கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  • அடிமறிமாற்றுப் பொருள்கோள்

ஆற்று நீர்ப் பொருள்கோள்

செய்யுளில் ஆற்று நீரோட்டம் போல சொற்கள் முன்னும் பின்னும் மாறாமல் நேரடியாக பொருள் கொள்ளும் முறை ஆற்று நீர்ப் பொருள்கோள் என்பர். அதனை நன்னூலார்,

“மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்

அற்று அற்று ஒழுகும் அஃதுயாற்றுப் புனலே” [நன்னூல், நூ.412]

எனக்கூறுகிறார்.

மொழிமாற்றுப் பொருள்கோள்

செய்யுளில் ஓர் அடிக்குள்ளே மொழிமாற்றி பொருள் கொள்வது மொழிமாற்றுப் பொருள்கோள் என்பர்.

நிரல்நிறைப்பொருள்கோள்

செயலில் சொற்கள் முறை பிறலாமல் வரிசையாக அமைந்து வருவது அது முறை நிரல் நிறைப் பொருள்கோள், எதிர்நிறைப் பொருள்கோள் என இருவகைப்படும்.

“பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்

வேறு நிரனிறீஇ முறையினும் எதிரினும்

நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே [நன்னூல், நூ,414]

நன்னூலார் பெயர் வினைகளாகிய சொல்லையும் அவற்றின் பொருளையும் பாடலில் இருக்கும் முறையில் அல்லாமல் பொருந்தும் வகையில் வரிசையாக நிறுத்தி முறையாக அல்லது எதிராகப் பொருள் கொள்வது என்று கூறுகிறார்.

கூட்டுவில் பொருள்கோள்

செய்யுளின் இறுதிச்சொல்லை முதற் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுவது கூட்டுவில் பொருள்கோள் என்பர்.

தாப்பிசைப் பொருள்கோள்

செய்யுளில் சொற்கள் முன்னும்  பின்னும் சென்று பொருள்கொள்ளும் முறையினை தாப்பிசைப் பொருள்கோள் என்பர்

ளைமறியாப்புப் பொருள்கோள்

செயலில் இறுதிச்சொல் அல்லது இறுதி அடி கீழ்மேலாய் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளும் முறை அளைமறியாப்புப் பொருள்கோள் என்பர்.

கொண்டுகூட்டுப் பொருள்கோள்

செய்யுளில் பல அடிகள் சிதறிக்lகிடக்கும் சொற்களை ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டி பொருள் கொள்ளும் முறை கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்பர்.

 அடிமறி மாற்றுப் பொருள்கோள்

அடிமறி மாற்றுப் பொருள்கோள் இரு வகைப்படும்.அவையாவன,

  1. ஏர்புழிக் கூட்டு அடிமாற்றுப் பொருள்கோள்

ஒரு செயலின் அடிகளைப் பொருளுக்கு ஏற்றவாறு எடுத்துக் கூட்டி பொருள் காண்பது.

  • பொருள் இசை மாறாஅடிமாற்றுப் பொருள்கோள்.

ஒரு செயுளின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் இசையும் மாறாமல் இருப்பது.

நன்னூலார் ஒரு பனுவலை எவ்வாறு வாசகன் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் துணைபுரியும் வகையில் பொருள்கோளை உருவாக்கி உள்ளார். பொருள்கோள் அடிப்படையில் வாசகர் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை வாசகனின் பொருள் புலப்பாட்டுத் தன்மையானது வாசகனின் வயது, காலம், சமூக பொருளாதாரச் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். பொருள்கோள் துறையும் ஒருபனுவலை சமூக, சமயப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப பொருள் கொள்ள வேண்டும் என்கிறது.

சமூக சமயச் சூழலுக்கேற்ப பொருள் கொள்ளல்.

தமிழ் மொழியில் சொற்களின் பொருள் புரிதலைப் பற்றி ஆராயும் பொழுதுபொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே எனக் கூறுவர். ஒரு சொல்லின் பொருள் இன்னொரு சொல்லால் அறியப்படுகிறது. அச்சொல்லின் பொருளை தேடிக்கொண்டே போனால் வரம்பில்லாமல் போகும். இதனை பொருள்கோளியல் துறையில் (Endless semiosis) என்பர். அதேபோன்று ஒரு நூலின் பொருளை அந்நூல் தோன்றிய சமூகத்தின், சமயத்தின் காலத்தின் அடிப்படையில் பொருள் புரிந்து கொள்ள முடியும்.

 ”நிறை உயிர் முயற்சியில் உள்வழி துரப்ப

 எழும் அணுத்திரள் உரம் கண்டம் உச்சி”                                      (நன்னூல்:19)

”மக்கள் தேவர் நரகர் உயர்திணை ”                                                                                                                                                    (நன்னூல்:132)

மேற்கூறிய நூற்பாக்கள் நன்னூல் தோன்றிய இடைக்காலக்கட்ட சமூகத்தை வெளிப்படுத்துகிறது தொல்காப்பியத்தில் திணை வகைப்பாடிடில்  இடம்பெறாத தேவர், நரகர் பற்றிய சிந்தனை இடைக்கால கட்டத்தில் தோன்றிய புராண இதிகாசங்களில் தேவர்,நரகர் பற்றிய கதைகளின் வழியாக இலக்கண நூல்களில் அவர்களை உட்படுத்த வேண்டிய தேவை எற்பட்டது.நன்னூல் தோன்றிய காலக்கட்டத்தின் விளைவாக சில இலக்கண கூறுகளைப் புதிதாக கூறுகின்றது.

அணு பற்றிய கொள்கை சமணர்களுடையது. ஒரு பொருள் அணுவின் செயற்கையால் உருவாகி விடுவதில்லை அதனோடு காலமும், ஆகாயமும் சென்று உருவாகிறது என்பது சமணர் கொள்கை. எழுத்துக்களின் தோற்றத்திற்கு கூறப்பட்டுள்ள சமணர் கொள்கையில் முக்கியமானது.’தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை’ என்பதாகும். சொற்களின் பொருள் புலப்பாடும் முடிவில்லாதது ஆகும். அது வாசகனின் மனநிலைக்கேற்ப மாறுபட்டு கொண்டே இருக்ககூடியது.

நன்னூலில் எதிர்நிலைச் சொற்கள்

மொழியில் எதிர்நிலை உறவு கொண்ட சொற்கள் பொருள்ப் புலப்பாட்டிற்கு உதவுகின்றன.உதாரணமாக நன்மை,தீமை தேவர்,நரகர் இம்மாதிரி சொற்களை பயன்படுத்தும் பொழுது அச்சொற்கள் எதிர்நிலைச் சொற்களையும் அதனோடு சேர்ந்து பொருள்ப் புலப்படுத்தும் வாசகரின் மனதில் ஒரு சொல்லின் எதிர்நிலை தன்மையும் எழுகிறது இம்மாதிரிச் சொற்கள் பொருளைப் புரிந்து கொள்ளவும் ஆழ்ந்து சிந்திக்கவும் உதவுகின்றது.

மக்கள் தேவர் நரகர் உயர்திணை

 மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை”       (நன்னூல்:132)

இந்நூற்பாவைப் போன்று நன்னூலில் உயர்திணை, அஃறிணை, உயிருள்ளது இல்லாதது, ஆண்பால், பெண்பால் ,இயல்பு வழக்கு, தகுதி வழக்கு, வழு, வழுஅமைதி போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன இது போன்ற சொற்கள் பொருள்கோளியல் துறை அடிப்படையில் ஒரு பனுவலை புரிந்து கொள்ள  உதவுகின்றன.

நன்னூலில் பொதுச்சொற்கள்

பொருள் அடக்குநிலைச் சொற்கள்  என்ற பொதுச் சொற்கள் பொருள்கோளியல் துறையில் முக்கிய இடம்பெறுகிறது.நன்னூலில். வழக்குச் சொற்கள், அசைச் சொற்கள், ஐம்பால், மூவகை இடம் போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன. ஒரு பனுவலில் அசைச் சொற்கள் இடம் பெறுமாயின் அச்சொற்கள் எவை? ஏன் வருகிறது? அதன் தேவை என்னவென்று அறிந்த ஒருவனால் மட்டுமே சரியான பொருள் புரிந்துகொள்ள இயலும். மொழியில் பொதுச்சொற்கள் பொருள்ப் புலப்பாட்டிற்கு உதவுகின்றன.

நன்னூலில் உரிச்சொற்கள்

உரிச்சொற்கள் ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாய் திகழும் சொற்கள். ஒரு சொல் பல பொருளுக்கு உரிமை உடையதாக இருக்கும். இது மொழியில் பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயரடையாகவோ, வரும். உரிச்சொற்களை நன்னூலார்,

“பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி

ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை

ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்” [நன்னூல், நூ,442]

அதாவது உரிச்சொற்கள் இசை,குறிப்பு ,பண்பு என்று பல்வேறு தன்மைகளைக் குறிப்பதாய் ஒரு குணம் தழுவியதாயும் பல குணம் தழுவியதாயும் பெயர் ,வினைகளை விட்டு நீங்காததாய் செய்யுளுக்கே உரித்தாய் வருவது உரிச்சொல். என்று கூறுகின்றது.

சான்றாக,

\கடிமனை – காவல்

கடிவாள் – கூர்மை

கடிமிளகு – கரிப்பு

கடிமலர் – சிறப்பு

இம்மாதிரியான சொற்கள் பொருள் புரிந்து கொள்வதில் இடர்பாடு ஏற்படுத்துகின்றன கடிமனை எனும் சொல்லில் கடி என்பது காவலை உணர்த்தும் என்பது அறிந்தவனால் மட்டுமே அச்சொல்லின் பொருளை உணர முடியும். ஆனால் பொருள்nகோளியல் துறையில் கடி என்ற சொல்லின் பொருளை அறியாத வாசகன் வேறொரு பொருள் கொள்ள முடியும். அதனால் பொருள்கோளியல் துறையில் உரிச்சொற்களுக்கு பொருள் கொள்வது வாசகனைப் பொருத்தது எனக்கூறுகின்றது,

நன்னூலில் ஒப்புருச்சொற்கள்

நன்னூலில் சொல் தொடர்பற்ற  பல பொருளைக் குறிக்கும்  சொற்களை ஒப்புருச் சொற்கள் என்பர்.

“மரமல் லெகின் மொழி இயல்பு அகரம்

மருவ வலிமெலி மிகலுமாகும்”       (நன்னூல்:12)

எகின் என்ற சொல்லுக்கு மரம், விலங்கு, அன்னம் என்னும் பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சொல்லின் பொருள் மாறுபட்டு கொண்டே இருக்கும். அப்பொருள் புலப்பாட்டிற்கு வாசகனின் சமூகம், அரசியல் சூழலே காரணமாக இருக்கின்றன. இம்மாதிரியான சொற்களை பொருள்கோளியல்  துறையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கின்றனர்.

முடிவுரை மொழியில் இலக்கணம் இலக்கியத்தை ஒரு வரைச்சட்டகத்துல் அடக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அவ்விலக்கணங்களை மேலை நாடுகளில் உள்ள பொருண்மையியல், பொருள்கோளியல் போன்ற பல கோட்பாடுகளில் பொருத்திப் பார்க்க இயலுகின்றது.அவ்வகையில் நன்னூல் பொருள்கோளியல் துறையின் பலக் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இலக்கண நூல் ஒரு மொழியை நெறிப்படுத்துவது மட்டுமல்லாமல் இலக்கணத்தை அது தோன்றிய சமூகம், அரசியல், பொருளியல் காரணங்களின் அடிப்படையில் ஆராய இயலுகின்றது. மீண்டும் மீண்டும் இலக்கண நூல்கள் தோன்றுவதற்கான காரணம் மொழியில் ஏற்படும்  மாற்றங்களாகும். அவகையில் நன்னூல் 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக சமய அரசியல் காரணங்களை பிரதிபலிக்கிறது. பொருள் கொள்ளும் செயல்முறை முடிவற்ற ஒன்று. ஏனெனில் அர்த்தம் முடிவில்லாத ஒன்று. எந்த ஒரு விளக்கமும் எல்லா அர்த்தங்களையும் தர இயலுவதில்லை. அது தற்காலிகமானதும் வாசகனை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது..பொருள்கோளியல் துறையில் நூலும் வாசகனின் மனநிலையுமே பொருள் புரிதலுக்கு உதவுகின்றன.

துணைநூற்பட்டியல்

1 அரவிந்தன், மு. வை, உரையாசிரியர்கள்  மாணிக்கவாசகர் பதிப்பகம்,சென்னை,2008.

2.சுப்பிரமணியன், சா.வே.,தொல்காப்பியம் மூலம்,தமிழ் இலக்கண நூல்கள் ,மெய்யப்பன் பதிப்பகம்,சிதம்பரம்,மு.ப.2007

3.தண்டபாணி தேசிகர். ச. நன்னூல் விருத்தியுரை, பாரிநிலையம் சென்னை, 1998. மூன்றாம் பதிப்பு.

4.பூர்ண சந்திரன், க தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள் பொருள்கோள் ஓர் அறிமுகம், அடையாளம் வெளியிடு, 2021 முதல் பதிப்பு.

5.. முனைவர்.பி.சி.ஜெகதாதமிழ்ச்செல்வன்,முனைவர்,க.தமிச்செல்வன் ,நன்னூல் சொல்லதிகாரம் மூலமும் உரையும்.

  •  

இகழ்தலும் வியத்தலும் இலமே – கு.பத்மநாபன்

இகழ்தலும் வியத்தலும் இலமே

கு.பத்மநாபன்

தர்மபுரி கல்லூரி மாண்பமை முதல்வர் பேராசிரியர் கோ கண்ணன் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடன் மணியன் பிள்ளை என்ற புத்தகம் குறித்து என்னிடம் பேசிய நினைவு. அது ஒரு மொழிபெயர்ப்பு என்பதோ, சுயசரிதை என்பதோ அப்போது என் மனதில் பதிவாகி இருக்கவில்லை.

புதிதாக ஒன்றை கேள்விப்படும் போது மனது தெரிந்த ஏதோ ஒரு நினைவோடு அதனைச் சேர்த்துத் தொகுத்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.

சங்குதேவன் என்ற திருடனைப் பற்றிய புதுமைப்பித்தனின் கதை காரணமாகவோ மணியன் பிள்ளை என்ற பெயர் காரணமாவோ திருடன் மணியன் பிள்ளை நூல் 1930களில் எழுதப்பட்ட ஒரு தமிழ் சுயசரிதை என்றும், அது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் பதிப்பிக்கப்பட்டு இருக்கும் என்றும் பதிந்து விட்டது. ஆனால் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய போதுதான் உண்மையில் அது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்றும், மாத்ருபூமி மலையாள இதழ் உதவி ஆசிரியர்  ஜி. இந்து கோபன் என்பவரால் எழுத்தாக்கம் செய்யப்பட்டு குளச்சல் மூ யூசுப் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு சுயசரிதை நூல் என்பதுடன் இந்த மொழிபெயர்ப்புக்காக திரு குளச்சல் மூ யூசுப் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரியவந்தன.

400 பக்கங்களுக்கு மேல் அமைந்த நீண்ட சுயசரிதை இது. வாசிக்கத் தொடங்கியவுடன் மணியன் பிள்ளையைத் திருடராகவே படைத்து, திருடனாகவே உலவ விட்டு, ஒரு திருடனாகவே இந்த உலகில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும் என கண்ணுக்குத் தெரியாத அந்த மாயக்கரம் விரும்பி விட்டது என்பது, தெரியத் தொடங்கி விடுகிறது.

கொல்லத்துக்கு அருகில் வாழத்துங்கல் என்ற சிற்றூரில் ஒரு பணக்காரக் குடும்பத்தின் கடைசி ஆண் வாரிசாக மணியன் பிள்ளை பிறக்கிறார்.  சகோதர உறவில் கைக்கு வந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மணியன் பிள்ளையின் அப்பா விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.

புத்தகம் இல்லை என்பதற்காகவே, முதல் ரேங்க் வரும் மணியன் வகுப்பில் பெஞ்சின் மீது ஏறி நிற்கும் நிலைமை ஏற்படுகிறது. தங்கமும் வெள்ளியும் இருக்கும் குடும்ப நகைப்பெட்டியை உறவினர்கள் வீட்டுக்குத் தலையில் தூக்கி வந்து மணியனும் அவனுடைய அக்காவும் வைக்கிறார்கள். குடும்ப நகைகள் போகட்டும், அவர்களுக்கு தலைச்சுமை கூலி கூட கிடைப்பதில்லை. நகரத்து ஹோட்டலில் எச்சில் இலையில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவன் மணியனின் சித்திரம் கண்ணுக்குத் தெரிகிறது.

அங்கிருந்து மெல்ல மெல்ல மணியனைக் குற்ற உலகம் தன் கையில் எடுத்துக் கொள்கிறது. விதியின் மாயக்கரங்களில் மணியன் பிள்ளை ஏறியும் இறங்கியும் ஆடும் ஆட்டம்தான் இந்த சுயசரிதை.  ஏணியில் ஏறியும், பாம்பில் இறங்கியும் அவன் ஆடும் பரமபத விளையாட்டில் அவனுக்கே ஆன அறம்/ பாவம் குறித்த விழுமியங்கள் தொடர்ந்து இருக்கவே செய்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நிகழ்வு உட்பட பல நிகழ்வுகள் மணியன் பிள்ளையின் உள்ளே இருக்கும் அறம் குறித்த பிரக்ஞை காரணமாக இறுதி வரை துயரத்துடன் நினைவு கூறப்படுகின்றன.

இது இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படித்தானே நடக்க முடியும், என்று மணியன்பிள்ளை கேட்பதாக முழு சுயசரிதையையும் தொகுத்துக்கொளள முடியும்.

மணியன் பிள்ளையாக, சலீம் பாட்ஷாவாக, பெந்தக்கோஸ்தெ கிறித்துவனாக மணியன் பிள்ளைக்குத்தான் எத்தனை முகங்கள்.

மைசூர் பகுதியில் குடியேறி நிலத்தை குத்தகைக்கு எடுத்துப் புகையிலை வியாபாரம் செய்து  மணியன் ஒரு பெரும் புள்ளியாக உருவாவது சுயசரிதையின் சுவாரசியமான பகுதி. அப்போது கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக புகழ்பெற்ற சோசியலிஸ்ட் ராமகிருஷ்ண ஹெகடே இருக்கிறார். ஆளும் காங்கிரஸ் சார்பில் மாநில முதல்வராக இருப்பவர் குண்டு ராவ். மணியன் பிள்ளையைத் தங்கள் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று இரண்டு கட்சிக்காரர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். குண்டு ராவையும் ஹெகடேவையும் மணியன் தனித்தனியே சந்திக்கிறார். வெற்றி பெற்றால் அமைச்சரவையில் கூட இடம்பெறும் வாய்ப்பு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அமையக்கூடும். ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கோயிலில் மணியன் பிரச்சாரம் தொடங்குகிறார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் தொடர்பான பணம் வெளியில் நிலுவையில் இருக்கிறது.

மெகருன்னிசா  என்பது மைசூரில் சலீம் பாட்ஷாவாகப் புகழுடன் வளர்ந்து வரும் மணியன்பிள்ளை என்ற மலையாளத் திருடனின் மனைவி பெயர்.

இன்னும் சில நாட்களில் தேர்தல் என்று விறுவிறுப்பாக எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஒரு நாள் ஏதோ ஞாபகமாக மணியன் தனியே நடந்து வந்து கொண்டிருக்கும்போதுதான் “நில்லு, ஓடாதே மணியன் பிள்ளெ” என்ற குரல் கேட்கிறது. அது அவரைத் தேடி வரும் கேரள போலீஸ்காரர்களின் குரல். ஒரு பழைய குற்றவாளி பழைய வழக்கிற்காகப் பிடிப்படுகிறான். அரசியல்வாதி சலீம் பாஷாவின் சாம்ராஜ்யம்  திடீரென்று அப்படியே சரிகிறது. உண்மையில் இது ஒரு திரைப்படக்காட்சி போலத்தான் இருக்கிறது. ஒரு சாதாரணத் திருடன்  கோடீஸ்வரனாகி அரசியலில் ஈடுபட்டு அமைச்சர் ஆவது எல்லாம் வணிக சினிமாக்களின் காட்சிகள் என்று இந்த சுயசரிதையைப் படிப்பதற்கு முன்பு வரை நினைத்திருந்தேன்.

இதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வந்து மர வியாபாரம் செய்யும் மணியன் பிள்ளையை, ஒரு தேநீர்க் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மணியன் பிள்ளையை, ஆட்டோ ஓட்டி பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மணியன் பிள்ளையை, ஒரு சிறந்த திருடன் என்பதற்கு வகை மாதிரி வடிவமாக  படைக்க வேண்டும் என்று ஊழ் நினைத்திருக்கிறது போலும்!

இந்த சுயசரிதை திருடர்கள், காவல் துறையில் இருப்பவர்கள், நீதிபதிகள் என்று சமூகத்தின் பல அடுக்குகளில் இருப்பவர்கள் குறித்த ஒரு வண்ணமயமான உலகைத் திறந்து காட்டுகிறது.

கோட்டும் சூட்டும் போட்டு பணக்கார மது விடுதிகளிலும், உணவகங்களிலும், முதல் வகுப்பு ரயில் பெட்டியிலும் மட்டுமே கை வைக்க விரும்பும் சுகா என்ற திருடன், மீனை மட்டுமே திருடும் ஒரு முஸ்லிம் திருடன், நாளை விடுதலை என்று தெரிந்தும் தப்பிச் செல்வதில் இருக்கும் சுவாரசியம் காரணமாகச் சிறையில் இருந்து தப்பித்து மறுபடியும் மறுபடியும் மாட்டிக்கொள்ளும் ஒருவன், தெருவோர விபச்சாரிகளிடம் சென்று ஆணுறுப்பு வீங்கி சீழ் பிடித்து வேதனைப்படும் ஒரு திருடன் என்று எத்தனை வகைத் திருடர்கள்!

அடுத்து பாலியல் தொழிலாளர்கள். பொன்னம்மாள் போன்ற குடிசையில் வாழும் சாதாரண விபச்சாரிகள், ஒரு போலீஸ்காரன் கன்னத்தில் ஓங்கி அறை வைக்கும் அளவு பலமும் தைரியமும் கொண்ட சந்திரிகா போன்ற விபச்சாரிகள், படப்பிடிப்பு இடைவெளியின் போது உயர்ந்த நட்சத்திர விடுதிகளுக்கு வந்து ஒரு மணி நேரம் இருந்து சம்பாதித்துப் போகும் துணை நடிகைகள்.

போலீஸ்காரரிடையேயும்தான் எத்தனை வகை. காவல்துறையினர் குறித்துப் பொதுவாக முன்வைக்கப்படும் கருப்பு வெள்ளைச் சித்திரத்தை இந்த சுயசரிதை கலைத்துப் போடுகிறது. திருடனின் காசில் கிடைத்தவரை சுருட்டிக் கொள்ளும் போலீஸ்காரர்கள், அதேசமயம் திருடனைத் திருத்தி வாழ வைக்க வேண்டும் என்பதற்காகக் கடைசிவரை பாடுபடும் காவல்துறை அதிகாரிகள்,  ஜெயிலில் கிடைக்கும் சப்பாத்திகளைத் தொப்பிக்கு அடியில் தலையில் மறைத்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வதால் சப்பாத்திப் பிள்ளை என்றே பெயர் வாங்கும் ஒரு போலீஸ்காரர், திருடனுடைய ஒரு கையில் விலங்கு மாட்டி அவனுடன் உட்கார்ந்து  ரயிலில் சீட்டு விளையாடும் போலீஸ்காரர், பேருந்தில் திருடனை  உட்கார்த்தி வைத்துவிட்டுக் கடைக்குச் செல்லும் போது பேருந்து புறப்பட்டு விட பேருந்தின் பின்னால் மூச்சிரைக்க ஓடிவரும் பரிதாபமான போலீஸ்காரர்கள்.

நீதிபதிகள் குறித்தும் நிறைய பதிவுகள் நூலில் உள்ளன. பொதுவாகவே கடுகடுப்பான, சனியன் சனியன் என்று திட்டிவிட்டுப் பேச ஆரம்பிக்கும் பெண் நீதிபதி,  மணியன் பிள்ளை தன் வழக்குக்காகத் தானே வாதிடும்போது அவனுடைய வாதத் திறமையில் மெய்மறந்து வியக்கும் நீதிபதிகள்

இப்படி இப் புனைவு வாசகனுக்கு இந்த நாவல் வழங்கும் அனுபவங்கள் பல.

சுயசரிதை என்று எழுத நினைத்து நாவல் என்று இங்கு எழுதி இருக்கிறேன். இதனை நான் அழிக்கப் போவதில்லை, திருத்தவும் போவதில்லை. காரணம், வாசிக்கும் போது பல நேரங்களில் இது ஒரு நாவல் என்று என்னுள் தோன்றிய எண்ணத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் நாவல் என்ற வார்த்தையை என் ஆழ் மன வெளிப்பாடாகவே நினைத்து அப்படியே விட்டு விடுகிறேன்.

ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அவன் குற்றம் செய்யாத போது நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கிடைத்த லாபத்தின் ஒரு சிறு பகுதி அவனுடைய அடிப்படை வாழ்க்கைத் தேவைக்காக அவனுக்கு வழங்கப்படலாம். இந்த அடிப்படையில் திருடன் மணியன் பிள்ளை நேர்மையான முறையில் சம்பாதித்த சொத்தில் இருந்து ஒரு நாலு லட்சம் ரூபாய் அவனுக்கு நீதிமன்றம் வாயிலாகக் கிடைக்கிறது. இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவது கர்நாடக உயர்நீதிமன்றம். இங்கும்கூட மணியனுக்கு எதிராகவே பகடை உருள்கிறது. இப்படி ஒரு திருடனுக்கு கிடைக்கும் பணம் அவனைப் போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தேவையற்ற சலுகையாகப் போய்விடும் என்று கர்நாடக அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து விடுகிறது. இப்போது மணியன் பிள்ளைக்குப் பணம் கிடைக்க வேண்டும் என்றால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்று வர வேண்டும். அடுத்த வேளைத் தேவைக்கு ஏதோ ஒரு வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்க வேண்டிய மணியன் பிள்ளை போன்றவர்களுக்கு அதெல்லாம் இயல்வதில்லை. ஏதோ ஒரு பழைய வழக்கில் சேர்க்கப்பட்டு மணியன் பிள்ளை கைது செய்யப்படும் நிலையில் இந்த சுயசரிதை முடிவடைகிறது.

“மொழிபெயர்ப்பு  தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்காக தொலைபேசியில் அழைத்த போது பிள்ளையின் செல்போன் செயல்படவில்லை. மலையாள ஆசிரியர் ஜி இந்து கோபனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மணியன்பிள்ளை பழைய வழக்கு ஒன்றின் காரணமாகத் தற்போது சிறையில் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன்” என்று மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மூ யூசுப் எழுதுகிறார்.

ஏப்ரல் 9, 2024 உகாதி (தெலுங்கு புத்தாண்டு) அன்று மாலைப் பொழுதில் இந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். இரவு நேரங்களில் தனியே இருந்து இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். தெருவில் தூரத்தில் கேட்கும் நாய் குரைக்கும் ஓசையும், எங்கோ செல்லும் வண்டிகளின் சத்தமும் ஒரு அமானுஷ்ய அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.

இந்த சுயசரிதையில் இடம் பெற்றுள்ள நாய்கள் குறித்து ஒரு சிறு குறிப்பு தனியே எழுத வேண்டும்.

போன வாரம் ஒரு நாள் குப்பத்தில் இறங்கி தனியே நடந்து வந்து கொண்டிருந்தேன். எங்களைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு ரயில்வே நிலையங்களில், பேருந்து நிலையங்களில், சாலைகளை கடக்கையில் வேறுபட்ட அனுபவங்கள்.

பகலிலும் மெல்லிய போதையில் எங்கள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் விளிம்பு நிலை மனிதர்கள். சிலர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் அவ்வப்போது அமைவதுண்டு.

குப்பம் ரயில் நிலைய நடைமேடைகளைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் மரப் படிக்கட்டுகளில் தனியே நடந்து வருகிறேன். கையைப் பிடித்துக் கொள்ளும் ஒருவர் சேலம் செல்ல வேண்டும் டிக்கெட் வாங்க காசு இல்லை என்கிறார். முதலாளி சம்பளம் கொடுக்கவில்லை என்றும், வேலையை விட்டுவிட்டு வந்து வட்டேன் என்றும் ஏதேதோ சொல்கிறார். பயணத்தில் இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கும் என் மனதில் இவர் ஒரு தமிழ்நாட்டு மணியின் பிள்ளையாக இருக்குமா என்ற எண்ணம்  எழாமல் இல்லை.

  •  

ஜெர்சி: துவங்குகிறது இரண்டாம் இன்னிங்ஸ் -ஜி.ஏ.கௌதம்

ஜெர்சி: துவங்குகிறது இரண்டாம் இன்னிங்ஸ்

-ஜி.ஏ.கௌதம்

எல்லாரும் எதிர்பார்த்துக்கோண்டிருந்த அந்த நாளின் மாலை வேலையில், தங்களுக்குள் சிரித்தபடியே பேசிக்கோண்டும் கலாய்த்துக்கொண்டும் மொத்த கிரிக்கெட் வீரர்களும் அலுவலகத்தின் வெளியில் காத்துக்கொண்டிருக்க, சுவற்றில் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு மேலே பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறான் அர்ஜீன்.

தலையை கீழறக்கி தரையைப் பார்த்தவன் இன்னும் யாரும் வரவில்லை என்பதை உணர்ந்தபடியே மூச்சிரைக்கிறான். விளையாட்டு வீரர்கள் சூழ்ந்திருந்த கூட்டத்தின் நடுவே காக்கிச்சட்டை அணிந்த ஒருவன் எல்லோரையும் கடந்து அறிவிப்புப் பலகையில் ரஞ்சி போட்டியின் ஹதராபாத் அணியில் தேர்வான விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை ஒட்டுகிறான்.

அங்கு நின்று கொண்டிருந்த மொத்தக் கூட்டமும் சர்க்கரையை சூழ்ந்துகொண்ட எறும்புகளைப்போல அந்த பட்டியலைச்சுற்றி ஆர்வமாக தங்கள் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும்  ‘ஓ’வென்று கத்திக்கொண்டு தனது சக நண்பர்களே கட்டியணைத்துக் கொள்கிறார்கள். உடன் வந்த சில நண்பர்கள் தேர்வான தனது தோழனை தோளில் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். சிலர் ’ச்ச’ என்றவாறு உதறிய கைகளுடன், முகத்தை தொங்க விட்டு தலையை ஆட்டிக்கொண்டே செல்கிறார்கள்.

இவை அனைத்தையும் தூரத்தில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருக்கிறான் அர்ஜுன். கூட்டம் மெல்ல கலையத்துவங்குகிறது. பட்டியலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன், தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அர்ஜுனை ஒருவித ஏளனமான பார்வையுடன் பார்த்தபடி செல்கிறான். அர்ஜூனுக்கு பதட்டம் இன்னும் கூடுகிறது. ஆர்வம் கூச்சலிட மெல்ல நடந்து வந்து கூட்டத்தின் நடுவில் பட்டியலில்  உள்ள பெயர்களை வாசிக்கத் தொடங்குகிறான்.

ஒவ்வொரு பெயராக விரல் நகர்த்திப் பார்க்க, அடுத்த வரிசையில் நம் பெயர் இருக்குமோ என்ற கண்களில் ஒரு வித பயமும், ஏக்கமும் கூடுகிறது. 15-வது பெயரை அடையும் பொது இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக உயர. சட்டென்று மேலே பார்த்தவன் 12 ஆவது பெயராக தேர்வானவர்கள் பட்டியலில் தனது பெயரை பார்க்கிறான். ஒரு புறம் நிம்மதி பெருமூச்சுடனும், மற்றொரு புறம் ஒரு வித தயக்கத்துடனும் நின்று கொண்டிருக்க, அவனது கடின உழைப்பை பார்த்த சக வீரர்கள் தோளில் தட்டியபடியே வாழ்த்துகிறார்கள். ஆனால், யாரையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்புகிறான்.

யாரையோ கொலை செய்யப் போவது போன்ற ஒருவித தீவிரமான முகத்துடன் அந்த கூட்டத்திலிருந்து விலகி வெளியே வந்தவன், தனது பைக்கை எடுத்துக் கொண்டு பதட்டத்துடனும் ஒருவித வேகத்துடனும் கிளம்புகிறான். கண்களில் நீர் தேங்க ஆரம்பிக்கிறது. முகம் ஒருவித அழுகை உணர்ச்சியை ஏந்திக்கொள்ளத் துவங்குகிறது. சிமிட்டிய கண்களுடன் அருகில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு வருகிறான்.

இரண்டாவது நடைமேடையில் நின்றுகொண்டிருக்கும் அர்ஜூன் யாருக்கோ காத்திருகிறான் போல என்று நினைக்கையில், எதிரில் இருக்கும் முதலாவது நடைமேடையிலிருந்து புறப்படும் ரயில், தன்னை கடக்க துவங்கிய பிறகு, உயிர் போகும் அளவுக்கு உரத்த குரலில் ‘ஓ’ என்று கத்தத்துவங்குகிறான். தனது காத்திருப்பின் அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்த பலனாக தனது குரலில், தனது அழுகையில் அதை தெரிவிக்கிறான். கண்களை துடைத்துக் கொண்டவன் இரு கரங்களையும் உயர்த்தியவாறு மீண்டும் ’ஓ’ வென்று கத்தி அந்த ரயிலின் ஓசையோடு தனது வெற்றிக்களிப்பை யாருக்கும் தெரியாதவாறு ஒளித்து வைத்தபடியே ரயிலோடு அனுப்பி விடுகிறான்.

கனவும் யதார்த்தமும் மோதிக்கொள்ளும் இடம் அது. கனவில் நம்மை இந்தியாவின் பிரதமாரகக்கூட நினைத்துப் பார்க்கலாம். அனால் நிஜத்தில்! தெருவைத்தாண்டினால் எத்தனை பேருக்கு நம்மைத்தெரியும்? இது தான் யதார்த்தம். ஆனால் அதற்கான ஒரு நிலைக்கு நீங்கள் செல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகாலம் உழைக்க வேண்டும், காத்திருக்க வேண்டும், எத்தனை அவமானங்களை, ஏமாற்றங்களை நீங்கள் சந்திக்க வேண்டும். அது போன்ற நினைவுகளின் குவியல் தான் இந்த ஜெர்ஸி.

தனக்குப்பிடித்த காவல்துறை அதிகாரி பணிக்காக படித்து, தன்னை தயார்படுத்தி, உடலினை உறுதி செய்து, இறுதியில் எட்டாயிரம் ரூபாய் தன் தகப்பனால் லஞ்சம் கொடுக்க முடியாமல் போனதால் காவல்துறை காலணிகளை கழற்றிவிட்டு விவசாய பூமியில் கால் ஊன்றியபோது தனது மனதில் ஏற்பட்ட வலியை ‘சாமி’ திரைப்படத்தில் ஆறுச்சாமிக்கு (விக்ரம்) தகப்பனாக வரும் சொக்கலிங்கம் (விஜயகுமார்) கதாப்பாத்திரம் விவரிக்கும்.

அது போல, தனக்கு மிகப்பிடித்த வேலை கிடைக்காமல் கிடைத்த ஏதோ ஒரு வேலையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்களின் நிலை என்பது கிட்டத்தட்ட மனதில் ஒரு பெண்ணை நினைத்துக்கொண்டு விருப்பமின்றி இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு இணையானது. அந்த வகையில் குடும்பத்திற்கென தன் ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு மாதமானால் வருமானம் வருகிறதே என ஏதோ ஒரு வேலைக்குச் செல்லும் நடுத்தர குடும்பங்களில் பிறந்தவர்களில் சற்றும் மாற்றம் இல்லாதது அர்ஜூனின் வாழ்க்கை.

இளமையின் துவக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டினை தன் லட்சியமாக கொண்டிருந்தவன், அதன் மூலம் கிடைக்கும் அரசாங்க வேலையால் தன் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ள வேண்டிய சூழல். கிட்டத்தட்ட தோனி சிக்கிக்கொண்டு மீண்டுவந்த இடம் அது. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அர்ஜூனுக்கு அமையப்பெறவில்லை என்பது தான் கொடுமை. காலம் வீசும் வலையில் தப்பித்த தோனிக்கு பதிலாக இயற்கை விழுங்கியது அர்ஜூனின் ஆசைகளை. “வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்?” என்று ஆதங்கப்படும் போது, “வேலையை விடு. கிரிக்கெட்டில் கவனம் செலுத்து” என்று சொல்லும் அளவுக்கு அர்ஜூன் குடும்பச் சூழல் இல்லை. தோனியைப்போல அவர் தனி நபராகவும் இல்லை. மனைவி, பிள்ளை என்ற குடும்பச் சுமைகள் வேறு.  

அதே சமயம் அரசு வேலையிலும் விழுகிறது அடி. உணவு ஆய்வாளருக்கான வேலை பறி போகிறது. ஆண்டுக்கணக்கில் அதை மீண்டும் பெற காத்திருக்கிறான். அதற்காக முழு ஈடுபாடும் காட்டாத அர்ஜூனை கடிந்துகொள்கிறாள் சாரா. விரைவில் வேலைக்கு போனால் குடும்பத்தின் நிலை மாறும் என்பது சாராவின் கணிப்பு. ஆனால், வழக்கு அனுமார் வாலைப்போல நீண்டு சென்றுகொண்டே இருக்கிறது.

நடுத்தர குடும்பத்தில் பிறக்கும் தங்கள் பிள்ளைகளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனவு காணும் பெற்றோர், யதார்தத்தில்  பிள்ளைகள் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத அளவுக்கு எப்படியெல்லாம் பெற்றோர்களை (குறிப்பாக அப்பா) கடன் சுமையும், நிதி நெருக்கடியும் வாழ்க்கைச்சூழலும், அவர்களை நசுக்குகிறது என்பதை அர்ஜூனின் கதாப்பாத்திரம் மூலம் வரைபடமாக்கியிருக்கிறது.

தனது பிறந்த நாளன்று இந்திய அணியின் ஜெர்ஸியை கேட்கும் மகனுக்கு வாங்கிக்கொடுக்க ஐநூறு ரூபாய் இல்லாமல் முடியாமல் தவிக்கிறான். அவனது பிறந்தநாள் முடிவதற்கு முன் நிச்சயம் வாங்கித்தருவதாக வாக்களிக்கிறான். உங்கள் பால்ய வயதில், நீங்கள் கேட்ட ஏதோ ஒரு பொம்மையை, “அடுத்த முறை வரும்போது கண்டிப்பா வாங்கித்தருகிறேன்” என சிரித்துக்கொண்டே செல்லம் கொஞ்சிய உங்கள் பெற்றோரை உங்களால் நினைவு கூற முடிந்தால், அவர்களுக்குள் இருக்கும் வலியையும் உங்களால் இப்போது உணர முடியும். எந்த தகப்பனும் தன் மகன் முன்னால் தோற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருப்பார். ஆனால் அவர்களைத்தான் இந்த சமூகம் தன் பிள்ளைகள் முன்னால் மண்டியிட வைக்கிறது.

எங்கு முயற்சி செய்தும் பணத்தை புரட்ட முடியவில்லை. மகனுக்கான பிறந்தநாள் முடியப்போகிறது. ஆசையாக காத்துக்கொண்டிருக்கும் மகனுக்காக, வேறு வழியின்றி மனைவி சாராவிடம் பணம் கேட்கிறான். இல்லை என பதில் வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல், அவள் வெளியே சென்றிருக்கும் சமயம் பார்த்து அவளது பையிலிருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் போதே சாரா பார்த்துவிடுகிறாள்.  “சொந்த வீட்டில் திருடுகிறாயே வெட்கமாக இல்லையா” என்ற அவளின் கேள்வியில் குறுகிப்போகிறான் அர்ஜூன்.  பறிக்கப்பட்ட அவனது வேலையை திரும்ப பெறுவதற்கான வழக்கை தொடர்ந்து நடத்துவதற்காகத்தான் இப்படி பணத்தை சேமித்துக்கொண்டிருப்பதாக சொல்லி அழுகிறாள். இதை பார்க்கும் மகனும் “இனி என்னை எல்லோரும் திருடனின் மகன் என்று அழைக்கப்போகிறார்கள்” என்று கூறி அப்பாவை வெறுக்கத்துவங்குகிறான். மன்னித்துவிடச்சொல்லி கேட்பதை தவிற வேறு வழியற்று தவிக்கிறான் அர்ஜூன்.

காலமும், சூழலும் மாற மனிதர்களின் வாழ்க்கைச்சூழலும் மாறுகிறது. அந்தந்த கால கட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவின் விளைவாகத்தான் அவர்களது வருங்காலம் அமையப்பெறுகிறது. அது போல, ‘நாம் தவறுதலாக இவனைத்தேர்ந்தெடுத்து விட்டோமோ’ என்று நினைக்கும் சூழலில் தவிக்கிறாள் சாரா. பணக்கார குடும்பப்பிண்ணனியில் வளர்ந்த சாரா, அர்ஜூன் மீதிருந்த அதீத அன்பின் காரணமாக அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி, தன் வாழ்க்கையை புதிதாக துவங்குகிறாள். ஆனால் அவளுக்கு தன் வாழ்க்கை இப்படியொரு நரகமாகும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. வேலையிழந்து போகும் கணவனால், தான் வேலைக்கு சென்று குடும்பத்தின் பாரத்தை தாங்கிக்கொள்ள வேண்டிய சூழல்.

கிரிக்கெட்டிலும் வெற்றி பெறவில்லை. வேலையும் இழந்தாயிற்று. இப்படிப்பட்ட சூழலை எதிர்நோக்கும் ஒற்றைப்பெண்மணியாக பலவீனமுற்று போகும் மனதில் அர்ஜூன் மீது ஆத்திரம் கொள்ளத்துவங்குகிறாள். “எல்லாம் என் நேரம். இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” என்று புலம்பும் அளவுக்கு அவளை வாழ்வின் மூலையில் நிறுத்துகிறது காலம்.

இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கை அவருக்கு எப்படியாவது வேலை பெற்றுக்கொடுத்து விடவேண்டும் என்று. எனவே கடுகு டப்பாவில் நம் அம்மாக்கள் ஒளித்து வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களைப்போல, வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்திற்காக தன் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து சேமித்து வைக்கிறாள். அதை புரிந்துகொள்ளாமல் திருட முற்படும் கணவனை யார் தான் சகித்துக்கொள்வார்கள். ஆனால் அவள் சகித்துக்கொள்கிறாள். பேசாமலிருந்தாலும் எத்தனை இன்னலிலும் அவனுடனிருக்கிறாள். இப்படியான எந்த சூழலிலும் உருக்குலையாத ஒரு உறவு தான் எத்தனை ஆண்டுகளானாலும் நீடிக்கிறது.

மனைவி ஏற்கனவே வெறுத்து விட, மகனும் ஒதுக்கத்துவங்கும் வேளையில் இனி இழக்க எதுவுமில்லை என்றான பின், மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவெடுக்கிறான் அர்ஜூன். ‘சத்யா’ திரைப்படத்தில் வரும் கமல்ஹாசனைப்போல ரௌத்திரம் பழகும் அதே அர்ஜூன், தனது முப்பதுகளில் நிதானமானமும் அமைதியும் சூழ கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் மீண்டும் காத்திருக்கத்துவங்குகிறான். நாட்கள் செல்கின்றன. ஒரு நாள் திறக்கிறது கதவு.  தான் மீண்டும் விளையாட நினைப்பதாக வாரியத்தில் இருப்பவர்களிடம் தெரிவிக்கிறான். கிரிக்கெட்டிலிருந்து ஒரு வீரன் வெளியேறும் வயதில் இப்போது ஒருவன் உள்ளே வர விரும்புவதை பார்த்து, கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் ஆச்சரியமுற்று போகிறார்கள். ஆனால் அவன் காத்திருப்பு வீண் போகவில்லை. ரஞ்சிக்கோப்பையில் விளையாட இடம் கிடைக்கிறது.

பத்தாண்டுகள் கழித்து நீண்ட காலத்திற்குப்பிறகு மட்டையை தொடும் ஒரு வீரனின் உணர்வும், கண்டம் தாண்டி பறக்கும் பறவை தான் விட்டுவந்த கூட்டை மீண்டும் அடையும் பறவைக்கு சமம். ஏனென்றால், காலம் மாறியிருக்கும். தன்னோடு விளையாடும் விளையாட்டு வீரர்களின் தலைமுறை மாறியிருக்கும். விளையாட்டின் விதிகள், நுட்பங்கள் மாறிருக்கும். காலம் மாற பிரத்யேகமான விதிகளும் மாறுகின்றன. கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் சச்சின், சேவாக் காலம் முதல் இப்போதிருக்கும் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் வரை அந்தந்த சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப மாறிய ‘ரவிச்சந்திரன் அஸ்வின்’ போல புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

கிரிக்கெட் போன்ற வணிகத்துவமான விளையாட்டில் வயது ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. தங்கள் இளமையின் துவக்கத்தில் தன்னோடு விளையாடிக்கொண்டிருந்த பலரும் கால மாற்றத்தில் காணாமல் போய்விடுவார்கள். அப்படியாக காலம் மாற அடுத்தடுத்த தலைமுறையினரிடம் அர்ஜூன் போட்டி போட வேண்டிய சூழலில் “டேய் அங்கிள்டா” என இளம் வீரர்கள் அவன் காது படவே பேசுகிறார்கள்.  ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் அவனது வயதை சக வீரர்கள் முன்னிலையில் கேலி செய்யும் பேச்சுக்களைக்கூட பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்கிறான்.  36 வயதில் இப்போது தேவையில்லாமல் அணியில் சேர்ந்து தொல்லை கொடுக்கிறான் என பயிற்சியாளார் நினைத்தாரோ என்னவோ பயிற்சியின் போது அர்ஜூன் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறான்.  ஆனால் அனைத்திற்கும் பொறுமையாக அர்ஜூன் காத்திருக்கிறான்.

வயது கூடியதால் உடலளவில் ஏற்படும் மாறுதல்களுடனும், ஆரோக்கிய குறைபாடுகளுடனும் தடுமாறுகிறான். அத்தோடு இணைந்து புறப்படுகிறது இன்னோர் பிரச்சனை ‘இதயக் கோளாரு’. ஆம். அர்ஜூன் விளையாடாமல் போனதற்கு இன்னோர் காரணமும் இருக்கிறது, அவன் உடற்தகுதி.

அவனது இதயம் பலவீனமாக இருப்பதாகவும் அதிக உடல் சிரத்தை அவனை குலைத்துவிடுமென்றும், இன்னும் மோசமானால் உயிரையே பறித்துவிடுமென்றும் அவனது இளமைக்காலத்திலேயே மருத்துவர் எச்சரித்திருக்கிறார். இருப்பினும், தன் உயிரை பணயம் வைத்து தனது நாற்பதாவது வயதில் மீண்டும் ரஞ்சிப்போட்டியில் களம் இறங்குகிறான் அர்ஜூன். தனது இருபதுகளின் நடுப்பகுதியில் இருந்த இளமைக்கான துடிப்பும் வீரமும் சற்றும் குறைச்சலின்றி அவரது மட்டை களத்தில் வெளிப்படுத்துகிறது. நன்றாக ரன்களை சேர்க்கிறார். பத்திரிக்கைகளில் அவன் பெயர் வெளிவருகிறது. இவன் எங்கே உருப்படப்போகிறான் என நினைத்த சாராவுக்கு அவன் மீது நம்பிக்கை பிறக்கிறது.

போட்டிக்கு இடையிடேயே மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறான். இருந்தாலும் அதிவேக ஓட்டம், நாள் முழுக்க நிற்கும் உடலின் அயர்ச்சி அவனை மிகவும் களைப்படையச்செய்கிறது. இனிமேலும் தொடர்ந்தால் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அணியை காக்க, தன் உயிரையே தியாகம் செய்கிறான். காலங்கள் கடக்கிறது. 2019ம் ஆண்டு அர்ஜூனின் வாழ்க்கை வரலாறு ‘ஜெர்சி’ என்ற புத்தகமாக வெளியாகிறது. அப்போது பேசும் கிரிக்கெட் வாரியத்தலைவர், அன்று அர்ஜூன் வெளிப்படுத்திய திறமையான ஆட்டத்தினால், அடுத்து இங்கிலாந்தில் நடைபெறவிருந்த தொடரின் இந்திய கிரிக்கெட் அணியில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்ததை குறிப்பிடுகிறார். அர்ஜுனின் பெயர் பொறித்த ஜெர்சியை வெளியிட்டு அவனுக்கு மரியாதை செய்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். சிறுவயதில் ஜெர்சி கேட்ட மகனிடம், அவனது தந்தையின் ஜெர்சியை அளிக்கிறது கிரிக்கெட் வாரியம்.

இப்படத்தை மேலும் நம்மோடு பொருந்திப்போவதற்கு துணை நிற்பவை இப்படத்திற்காக மிகச்சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்ட கதாப்பாத்திரங்கள். அவர்கள் தான் தேவ தூதர்களாக அர்ஜூனுடன் துணை நிற்கிறார்கள்.

  • அர்ஜூனுக்கு ஏற்கனவே நிறைய கடன் கொடுத்திருந்த கடையின் உரிமையாளர், அவன் மகனிடம் “உனக்கு ஜெர்ஸி இல்லை” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாமல், “உன் அளவிற்கான ஜெர்ஸி இன்னும் கடைக்கு வரவில்லை. அதனால் இப்போதைக்கு இதை வைத்துக்கொள்” என சச்சின் போஸ்டர் ஒன்றை சுருட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்துகிறார்.
  • எல்லோருக்கும் முன்னால் அர்ஜூனுக்கு ஆதரவளிப்பதாக காட்டிக்கொள்ளாமல், தனக்கு பிடிக்காதது போலவே நடத்தினாலும், வீரர்களை தேர்வு செய்யும் தேர்வு அதிகாரியிடம் அர்ஜூனின் முந்தைய சாதனைகளையும், நியூசிலாந்துடனான சிறப்பான ஆட்டத்தையும் குறிப்பிட்டு அவனுக்கு ரஞ்சிக்கோப்பையில் விளையாட அனுமதி பெற்றுத்தருகிறார் கர்நாடக கோச் ராமப்பா (சம்பத் ராஜ்).
  • இந்த தொடரில் விளையாடினால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என அர்ஜூனை விளையாட வரவழைத்து அதில் அவன் சிறப்பாக ஆடியதை வைத்து, கர்நாடக கோச்சின் கவனத்தை பெறவும், இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கும் வழிவகை செய்கிறார் அவனது முன்னால் கோச் மூர்த்தி (சத்யராஜ்).
  • அர்ஜூன் விளையாடுவதை அவனுக்கே தெரியாமல் புகைப்படம் பிடித்து, அதை நாளிதழில் கட்டுரையாக வெளியிடுகிறார் நிருபர் ரம்யா (சனுஷா).

இவர்களுடன்,  எந்த சூழலிலும் அர்ஜூனை விட்டு விலகாத அவன் நண்பர்கள் என அர்ஜூன் தன் வாழ்நாளில் அதிகம் சம்பாதித்திருந்தது இவர்களைத்தான்.

படத்தின் துவக்கம் முதல் இறுதி வரையிலும் படத்தை தாங்குவது நானி ஒருவர் மட்டுமே. மொத்தக்கதையும் அவரை சுற்றியே நடக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஏமாற்றத்தின் அறிகுறியையும், குற்ற உணர்வுகளையும் மட்டுமே சுமக்கும் கதாப்பாத்திரத்தை தொடர்ந்து பார்ப்பது என்பது சில சமயம் பார்வையாளர்களுக்குமே கூட ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது. இருந்தாலும், அப்படியேதும் நிகழாத வண்ணம் மிகச்சிறப்பாகவே கையாண்டிருக்கிறார் இயக்குநர். நவீன் நூலியின் படத்தொகுப்பில் 1986-ல் 26 வயதான அர்ஜுன் மற்றும் 1996-ல் 36 வயதான அர்ஜுன் ஆகிய இரண்டு காலவரிசைகளுக்கு இடையில் மாறுகிறது திரைக்கதை. விளையாட்டுப் போட்டியாகட்டும், குடும்பங்களுக்குள் சூழும் பிரச்சனைகளாகட்டும், நாயகனின் கண்ணீர், ஏமாற்றம், வெற்றி, பெருமிதம் என படத்தின் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு அனிரூத்தின் இசை மிகச்சரியாக பொருந்திப்போகிறது. குறிப்பாக ரயில்நிலையம் காட்சி.

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான திரைப்படம் என்பதால் நகம் கடிக்கும் விறுவிறுப்பான காட்சிகளை நீங்கள் எதிர்பார்த்தால், கொஞ்சம் ஏமாந்து தான் போவீர்கள். ஏனெனில் இது உறவுகளுக்கும், மனதிற்கும் இடையே நிகழும் போராட்டம். இத்திரைப்படத்தை இயக்கிய கௌதம் தின்னனூரிக்கு, இது இரண்டாவது திரைப்படம். இருந்தும் இத்திரைப்படத்திற்கு தேசிய விருதுக்கு கிடைத்தது மிகச்சரியானதொரு தேர்வு. அதனால் தான் ஆறாவது ஆண்டைக் கடந்தும் இத்திரைப்படம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

இத்திரைப்படத்தின் அடையாளமாக மாறிப்போன ரயில் காட்சி ஏதோ ஒரு வகையில் தன்னோடு தொடர்புபடுத்திக் கொள்வதாக அதிக அளவில் நண்பர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். வலி எல்லோருக்கும் பொதுவானது. அவன் அடைந்த அவமானங்கள், காத்திருப்புகள், ஏக்கங்கள், அவனது வலிகள். இதை நாமும் கடந்திருப்போம். பார்த்துக் கொண்டிருப்போம். பார்க்கப்போகிறோம்.

ஏதோ ஒரு தருணம் நம்முடைய நீண்ட நாள் காத்திருப்பு நிஜமாகி போகும்போது அதை இப்படியாக சிலர் கண்ணீரின் வழியே தெரிவிக்கிறார்கள். சிலர் தனது வெற்றியின் வழியே தெரிவிக்கிறார்கள். 

வெற்றியை விட ஆகச்சிறந்த பழி வாங்கல் ஏதுமில்லை.

சினிமா சினிமான்னு போனியே! எவ்ளோ சம்பாதிச்ச?, புடிச்ச வேலைன்னு போனியே! எவ்ளோ சேர்த்து வச்சிருக்க?, எப்போ கல்யாணம்?, கடனை எப்படி அடைப்ப?, குடும்பத்த எப்படி பாத்துக்கப்போற?, இனிமேல் என்ன பண்ன போற? இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் சூழல் இல்லாவிட்டாலும் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் அதற்கான பதிலை தேடி எடுத்துத்தருகிறது. வாழ்க்கை ஒன்றும் அத்தனை குரூரமானது இல்லை. நம்பிக்கையோடு போராடுபவர்களை அது அத்தனை எளிதில் கைவிடுவதில்லை.

உண்மையில் ரயில் நிலையத்தில் அழுதுகொண்டிருப்பது அர்ஜீன் மட்டும் அல்ல. வாழ்வின் பல தருணங்களில் ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, ஒரு சமயம் மனம் வெடித்து “எனக்கும் சரியான நேரம் வரும். நானும் ஜெயிப்பேன்” என்று கத்திக்கூட சொல்ல முடியாமல், அத்தனை அவமானங்களையும் தனக்குள் புதைத்துக்கொண்டு பொறுமையாக தனக்காக உதிக்கும் அந்த ஒரு நாளுக்காக நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்த, காத்துக்கொண்டிருக்கும் நீங்களும் நானும் தான்…

தொடர்புக்கு: [email protected]

  •  

அவளின் சிரிப்பு – க. மாரியப்பன்

மொழிபெயர்ப்புச் சிறுகதை : தெலுங்கிலிருந்து தமிழுக்கு

அவளின் சிரிப்பு

தெலுகு படைப்பு : ஶ்ரீசுதா மொதுகு
தமிழாக்கம் : க. மாரியப்பன்

                னால் முடிவுகள் எங்கே எடுக்கப்படுகின்றன? யார் முடிவு செய்கிறார்கள், எப்படி முடிவு செய்கிறார்கள்? அன்றைக்கு நீ அப்படி முடிவெடுத்து வராமலிருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது அல்லவா! எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டாய் பூர்ணா?

                ஹாஸ்பிட்டல் காரிடாரில் தூரமாக எறியப்பட்டதாகத் தெரிந்த மரமேசையை நோக்கி நடந்தேன்.

                                                                                —            —            —

                வாழ்க்கையின் சிறந்த தருணம் என்னவென்று தெரியுமா! உன்னவர்கள் என்று யாரை நீ நினைத்தாயோ அவர்கள் உன்னை விட்டுப் போனால் அப்பாடி என்று நிம்மதி பெருமூச்சுவிடுவது. அப்படி இருக்கும்போது சுதந்திரத்தை அனுபவிப்பவது நன்றாக இருக்கும். வேறு யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கை அதில் அடங்கியிருக்கிறதா? அவ்வளவு தொலைநோக்குப் பார்வை தேவைதானா? இன்னும் எனக்கு மட்டும் மிச்சிமிருக்கிற காலம் எவ்வளவு?

                சமையலைறையிலிருந்து டீ வாசனை மிதந்து வந்தது. அதற்கு முன்பு டீயோடு கலந்து பூர்ணாவின் வாசனையும் கலந்து வரும். வெறும் டீ வாசனை நன்றாக இருந்தது.

                பூர்ணா போய்ப் பத்துநாட்கள் ஆகின்றன. மனிதர்கள் விட்டுவிட்டுப் போய்விட்டால் உள்ளே ஏதாவது காலியாகுமா? வரும்போது உள்ளே மெல்ல மெல்ல உள்ளே நுழைகிறார்கள். வெளியேறும்போது உள்ளே அவர்கள் விட்டுச் சென்ற சூனியமே நிரம்பியிருக்கிறது நிஜமே, அவர்கள் நிரப்பியது எதாவது இருந்தால், உள்ளே எதற்கு இவ்வளவு சூனியம்! பூர்ணா வருவதற்குமுன் நன்றாகவே இருந்தது. சார்ந்து இருப்பதனாலேயே எல்லாம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன். என்னவொரு மகிழ்ச்சி துக்கமே!

                ராமம் கத்தினான். அவன் ஏதோ சொல்கிறான் இப்படிப்பட்ட யோசனைகளில் உள்ளபோது, சில சமயங்களில் ஒரு விஷயமாக இருக்கும். ஒருமுறை அவனின் கத்தல் எவ்வளவோ கட்டுக்கடங்காமல் இருப்பதால் அவனை எங்காவது விட்டுவிடவேண்டும் என்று தோன்றியது.

                ஒரு வாரம் புதிதாக ஏதோ சுதந்திரம் வந்ததுபோல் இருக்கிற நாட்கள் செல்லச்செல்ல வலது கை போய்விட்டதுபோல் தோன்றியது.

                என்ன குறை வச்சேன் பூர்ணாவுக்கு? உண்மையில் ஏதாவது செய்தேனா?

                எப்படிப் பார்த்தேன்? ஒரு சமையல்காரிதானே! ருசியாகச் சமைப்பது மட்டுமின்றி, நம் தேவை எப்பொழுது என்ன இருக்கிறதோ பார்த்து எல்லாம் ஏற்பாடு செய்து கொடுப்பவள், வெறும் சமையல்காரி ஆகிறாளா? கௌரமாகத்தான் நடத்தினேன் அல்லவா! எப்பொழுது பணம் கேட்டாலும் அதிகமாகவே கொடுத்தேன், ஒருமுறை கேட்காமலும்கூடக் கொடுத்தேன். அது சரி போதுமா? போதாது! கல்யாணத்துக்கு வாங்குற மாதிரி வாங்கணுமா, சினிமாவுக்கு, ஊர் சுற்றிவிட்டு வருதற்கா?

                கல்யாணத்துக்காகவா இதையெல்லாம் செய்தேன்? அவளுக்கு எதற்கு செய்யணும்? எப்பொழுதாவது கல்யாணமானது உண்டா? முழுச் சுதந்திரம் கொடுத்தேன் இல்லையா! எதற்காகக் கொடுத்தேன்? இதைக் காட்டிலும் செய்வதற்கு என்ன இருக்கிறது, என்ன வேண்டுமோ அவற்றைச் செய்தேன். அவளை நான் எதும் அபியூஸ் செய்தேனா? ‘’திட்டுவது அடிப்பது மட்டுமே அபியூஸா, வீட்டில் இன்னொரு மனுஷி இருக்கிறாள் என்ற பிடிப்பே இல்லாமல், தன்னுடன் வாழும் மனுஷியை உடன் வைத்துக் கொண்டு புறக்கணிப்பதைவிடப் பெரிய அபியூஸ் என்ன இருக்கிறது?” என்றாள் அவள். அது என்ன, அது எனக்கு நானே செய்துகொள்கிற செல்ப் அபியூஸ் அல்லவா! உண்மையில் அதெல்லாம் அவள் செய்து கொண்டதாலேயே. “ஆனால் அதற்கு முன்பு மட்டும் நீ மனுஷியாக எப்பொழுது பார்த்தாய்?” என்பதுபோல் கேள்வி கேட்பதுபோல் அவள் பார்க்கும் நேரடிப் பார்வை, பயத்தைத் தந்தது.

                அவளென்றால் சரி, ஆனால் பூர்ணா எதற்கு சென்றாள்?

                அவள் சென்றபொழுதுகூட இவ்வளவு வலிக்கவில்லை. பூர்ணா சென்றதுதான்…

                “போகிறேன்” என்று எவ்வளவு சிம்பிளா சொன்னாள்! எப்படி அப்படி உன்னால் போக முடிகிறது? ஆனால் அவளைத் தடுக்க எனக்கு என்ன அதிகாரமிருக்கிறது?

                “இன்றிலிருந்து பூர்ணா இங்கேயே இருப்பாள்” என்றாள் அவள் செல்வதற்குச் சில மாதங்களுக்கு முன்பு. அவளின் பேச்சுக்கு எப்பொழுதும் எதிர்த்தும் சொன்னதில்லை, தலையாட்டியதும் இல்லை. வழக்கமாகப் பஜாரில் எதிர்ப்படுகிற பத்து மனிதர்களில் ஒருவராகத் தெரிந்தாள் பூர்ணா. மறுபடியும் பார்க்கவேண்டும் என்று நினைக்கும்படியான சிறப்பு எதுவும் அவளிடம் தெரியவில்லை.

                ஒருசமயம் அவள் என்னைப் பொருட்படுத்தாமல் சென்று விட்டாள். உடல்நிலை சரியில்லாமல் திரும்பி வந்தாள். எங்கும் போக முடியாதா இல்லையென்றால் நான் எப்பொழுதும் அவளைக் கவனித்துக் கொள்வேன்  என்று நினைக்கிறாளோ என்று எனக்குத் தெரிவில்லை. அவளுக்கு எந்த மூலையிலோ ஒரு நேசம் இருந்தே ஆகவேண்டும்.

                ஏன் இருக்க வேண்டும்? நான் எப்பொழுதும் அவளை மறுக்கவில்லை. அதற்காக அவளை நெருங்க முயற்சித்ததும் இல்லை. அப்படிச் சென்றதற்கு எப்பொழுதாவது வருத்தப்பட்டு, பச்சதாபம் படுவாள் என்று நம்பினேன். விசித்திரமாகச் சிலநாட்கள் சுற்றிவிட்டு உன்னிடம் வருவது உன் அதிர்ஷ்டம் என்பதாக இருந்தது அவளின் நடத்தை. என்ன செய்தாலும் மன்னிக்கிற நேசம், இவ்வளவு விசாலமான இதயத்தின் பெருந்தன்மையைப் பார்த்துக்கூட எதையும் பொருட்படுத்தாமல் அவள் வருவதே என் அதிர்ஷ்டம் என்று எப்படி இப்படி நடந்து கொள்கிறாள். புரியவில்லை. அவளை சிறுமைப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும் எனக்கு நானே பாதாளத்தில் இருப்பதுபோல் எதற்குத் தெரிகிறதோ எனக்குத் தெரியாது. நீயே எனக்கு ஆதாரம் என்று எப்பொழுதும் என் தோளைப் பிடித்துக்கொண்டு அழுவது எதற்கு, கண்ணீரால் என் கால்களைக் கழுவுவது எதற்கு?

                எப்பொழுதோ ஒருமுறை “அனில், நீ எதற்கு என்னைப் பொறுத்துக் கொள்கிறாய்? என்ற பொழுது அவளின் கண்களில் அளவற்ற கருணை. அவள் நெஞ்சின்மேல்  தலை வைத்துக் கொண்டு அமைதியாகப் படுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் எதற்கு அப்படிச் சாய்ந்து கொள்ளவேண்டும்? ஒவ்வொரு முறையும் அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள், “நீ இப்படி இருக்காத, நீ எது நிஜமோ அப்படியே இரு” என்று. கோபம் தள்ளிக் கொண்டு வந்தது. எனக்குள் அவ்வளவு கபடம் இல்லையென்று தூக்கியெறியத் தோன்றியது.

                ‘’உனக்கு நான் என்ன குறை வைத்தேன்’’ என்று கேட்கத் தோன்றிய பொழுது, என்னால் என்ன கொடுக்க முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன். என் அறைக்குள் யாரையும் உள்ளே வராதபடி வெளியே வைத்திருக்கிறேன் அல்லவா! அப்புறம் அவர்கள் மட்டும் எத்தனை நாட்கள் இருப்பார்கள், அவளை வரவிட்டிருக்கிறேன். மூச்சுவிடமுடியவில்லையென்று சென்றுவிட்டாள். அது என் தப்பா? ஒரு மனுஷியை நேசிப்பது, ஆதரவளிப்பது, துணையாக இருப்பது, இவற்றையெல்லாம் நான் எப்படிச் செய்ய முடியுமோ அப்படியே செய்தேன். அவள் எதிர்பார்த்தபடி எப்படி இருக்க முடியும்? வெளியேறுவது அவளின் சுதந்திரம் அவ்வளவுதான். துவேஷம், காதல், வலி, பக்தி ஏதோ ஒன்று அவளைச் சூழ்ந்திருக்கிறதா எதற்கோ?

                பூர்ணா வந்ததும் நான் குறைவு என்ற பாவனையை என்னிலிருந்து நீக்கினாள். நானும் ஒரு மனிதன்தான் என்று உணர்ந்தேன். என்னவோ! மனிதர்கள் இரக்கமானவர்கள், அப்படியே மோசம் செய்பவர்களும் கூட. குடித்துவிட்டு லேட்டாக வந்தாலும் டேபிள்மேல் சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்று தயாராக இருக்கும். மனிதர்களே இருப்பதில்லை பேசுவதற்கு.

                இரண்டோ மூன்றோ டிரஸ்கள் இருந்தன பூர்ணாவிடம். மிகவும் தெரிவது சிவப்பு வண்ண டிரஸ். அவள் எப்பொழுதும் பூர்ணாவைப் பெரிதாக அதட்ட நினைத்தது கிடையாது. எப்பொழுதாவது “ஓ ராஜகுமாரி எங்கே சென்றாய்?” என்றாள்.

                அவள் சென்றுவிட்டாள், மீண்டும் வரமுடியாத தூரத்திற்கு. நான் கவலைப்பட்டேனா! அப்புறம் திரும்பமுடியாத தூரத்திற்குச் சென்றதற்குக் கவலைப்பட்டேன். சில நாட்களுக்கு முன்பு அவள் சொன்னாள் “நான் இல்லாவிட்டாலும் பூர்ணா இங்கேயே இருப்பாள். குறைந்தபட்சம் பூர்ணாவையாவது போகவிடாமல் பார்த்துக்கொள்” என்று. “சமையல்காரி, அவளைக்கூடச் செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமா!” என்றேன் கோபமாக. எதிர்த்து என்னைப் பார்த்தாள். ‘உன்னைக் கவனித்துக் கொண்டு துணையாக இருக்கும் மனுஷியைக் காட்டிலும் இப்பொழுது உனக்கு என்ன வேண்டும்? பூர்ணாவை இழந்துவிடாதே அணில்” என்றாள்.

                ‘இவ்வளவு காதலித்த நீயே சென்றுவிட்டாய், இனி பூர்ணா எதற்கு? நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்த நான் இவ்வளவு சூன்யமாவது எதற்கு.

                அப்பொழுது வந்தான் ராமம். அதென்னவோ அவன்கூட அவள் முன்பு எதுவும் கத்துவதில்லை. அவளுக்காகப் பக்தியோடு பிரார்த்தனை செய்தான் கொஞ்சநேரம். என் அருகில் வந்தபொழுது சிரிப்பு, நான் ஒருவனே என்பதுபோல் இருந்தது அவனின் பார்வை. பூர்ணாவோடு இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தது கிடையாது. இவனை விடப் பூர்ணாவே குணம்.

                வர வர பூர்ணாவின் மீது ஆதாரப்படுவது அதிகமாகியது. அவள் போனதும் பூர்ணாவும் சென்றுவிடுவாள் என்று நினைத்தேன். போகவில்லை, இருந்தாள். எனக்காக இருக்கிறாள் என்ற ஆனந்தமும் கூட, எனக்காக இல்லை போக்கிடம் இல்லாததால் இங்கே இருக்கிறாள் என்று தோன்றியது.

                ஓருவேளை எப்படித் தொடங்கியதோ அதிகாரம், விருப்பத்தோடு என்று நான் நினைத்துக் கொண்டேன். என்னைப் போன்ற ஒருவன் பரிதாபப்படுவது சாதாரண விசயமா! பூர்ணாவிற்கு மட்டும் விருப்பங்கள் இருக்காதா? அவற்றை முழுவதுமாகக் கொன்றுவிட்டு இருக்கிறாள். ஒரே வீட்டில் இருக்கிறோம். நினைப்பவர்கள் என்னமும் நினைத்துக் கொள்ளட்டும். அது தேவையற்றது. நான் கருணை காட்டினேன். அவள் கையைப் பிடித்துக் கொண்டு நிஜமாகவே என் விருப்பத்தைச் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து ஒருமாதிரி சிரித்தாள். உடல் அருவருக்கும்படியாக, உள்ளே பயத்தை உண்டாக்கினாள். அந்தச் சிரிப்பில் அலட்சியம், எதிர்ப்பு, நிசப்தம். ‘எதற்கு இப்படிச் சிரித்தாய்’ என்று கேட்கிற தைரியம், அவளைப் பிடித்திருக்கிற விருப்பம் நின்று விட்டது.

                பூர்ணா சென்றுவிட்டாள். ராமம் என்னைச் சுற்றி வருகிறான். அவனுக்கு இப்பொழுது சாப்பாடு போடுபவர்கள் யாரும் இல்லை. நான் வைத்தால் சாப்பிடுவதும் இல்லை. அவன் என்னைப் போலவே, இல்லையென்றால் வெளியே பூனை போல நடந்து கத்திக்கொண்டு சுற்றுகிறான். அவன் பூனைதான். பூனைக்கு விசுவாசம் இருக்கும் என்பார்கள். இவன் என்ன சாப்பிட கூட இல்லாமல் விசுவாசத்தைப் பிரகடனப்படுத்துகிறான்! ஒருவேளை அவனுக்குள் ஒரு நிஜமான மனிதன் இருந்திருக்கலாம். எனக்குள் பூனையின் கத்தல். நான் விசுவாசம் அற்றவனா?

                பூர்ணா எங்கே சென்று விட்டாள்? யார் இருக்கிறார் அவளுக்கு?

                பத்து நாட்கள் என்பது ஒன்பது மாதங்கள் ஆனது. ராமம்கூட நடுவில் அவளைப் போலவே சென்று வந்தான். அவனோடுகூட ஒரு சின்னப் பூனைக்குட்டி. அவனின் குட்டியோ என்னமோ, பொத்து பொத்தென்று இருந்தது. உண்மையில் ஆண் பூனைகள் அவற்றின் குட்டிகளை நினைவில் வைத்துக்கொள்ளுமா என்ற டவுட் வந்தது. அவைகளுக்குப் பால் ஊற்றுகிறேன். செலவு செய்கிறேன். ராமம் எங்கு சென்று வந்தாலும் என்னைவிட்டுப் போகாமல் இருக்கிறான். குட்டிப்பூனை என்னைச் சுற்றிச்சுற்றி வருகின்றது. கொஞ்சம் கர்வமாக உணர்ந்தேன். நான் அவற்றுக்கு உணவளிக்கிறேன் என்று.

                ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கதவைத் தட்டுகிற ஓசை. எதிரில் பூர்ணா, பெரிய வயிறோடு. பார்த்ததும் ஆவேசம் வந்தது. “இங்க எதுக்கு வந்த?” விக்கல் கேட்கிறது. இந்த ராத்திரியில் வந்தாள். குட்டிப்பூனை என் காலைச் சுற்றிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒதுங்கிக் கொண்டேன்.

                கோபமாக இருந்தது. நாளை காலையிலேயே சென்றுவிடு என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். எதற்கு கோபம். யாருடனோ சென்றாள். தனியாக வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்தாள். ச்சீ! வெட்கம் கெட்ட ஜென்மம். இப்படி நினைப்பதில் ஏதோ திருப்தி இருந்தாலும், எதற்கோ மிகவும் திருப்தியற்று இருந்தது.

                காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தபொழுது அதே டீ வாசனை. எத்தனையோ நாட்களாக மறந்துபோன டீ வாசனை. ராமத்தின் அலறல் சத்தம் பலமாகக் கேட்டது. இப்படிப்பட்டதை வீட்டில் வைத்திருந்தால் உலகம் என்ன நினைக்குமோ என்னவோ…! உலகத்தைப் பார்க்காமல் கையைப் பிடித்துக்கொள்வது பரவாயில்லையா அப்புறம்!

                இந்தக் கர்ப்பம் யாரால் வந்தது என்று கேட்கவேண்டுமென்று நினைத்தேன். பூர்ணாவின் முகத்தில் ஒளியின் பின்னால் காணப்படும் மெல்லிய இருள் தெரிந்ததுபோல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது இந்தப் பெண் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எங்கெங்கேயோ சுற்றி வழியில்லாமல் மறுபடியும் இங்கே வந்தாள். இவளை எதற்கு நான் பார்க்க வேண்டும்? கேள்விகள் அருகிலேயே நின்றுவிட்டன. பூர்ணா எங்கேயும் செல்லவில்லை. நான் ஊகித்ததுபோல எனக்கு எதிர்படுவது அதிகமாகியது.

                ராமம் குட்டிப்பூனையை விட்டுவிட்டு எங்கேயோ சென்று விட்டான். இரண்டு நாட்கள் தேடினேன். எதிர்பார்த்தேன். பூனைகள் செத்துப் போனால் அன்றி எஜமானின் அருகில் வராமல் இருப்பதில்லை’ என்றாள் பூர்ணா. ஆமாம் அவை பூனைகள். அதே மனிதர்கள் என்றால் அவசரம் ஏற்பட்டால் தவிர வர மாட்டார்கள். வார்த்தை தொண்டையிலேயே நின்று விட்டது. ஆனால் நான் யாருக்கு எஜமானன்? ஒருவருக்கு நான் வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு எஜமானன் ஆகிறேனா? கொடுக்க முடியாததையும் நிரப்ப முடியாதையும் பூர்ணா தந்துள்ளாள், ராமம் செய்த வேலையை மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் போக்கிடம் இல்லாமல் வந்தார்கள் என்று மனம் என்னை ஆட்டுவித்தது. ஆம், அந்த மனம்தான் எல்லாவற்றுக்கும் எஜமான்.

                பூர்ணா அடியெடுத்து வைத்ததால் வீடு வீடு மாதிரி இருந்தது. வெறுமையெல்லாம் எதனாலே நிரம்பியது. அந்தக் காற்றில் ஏதோ உயிர்ப்பு. ராமம் இல்லாத வெறுமை பெரிதாகத் தெரியவில்லை.

                                                                                —-           —-           —-

                “இந்தப் பாரத்தில் கையெழுத்துப் போடு”

                “எதுக்கு?”

                “ஆப்ரேஷனுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென்று”

                நான் எதற்கு செய்ய வேண்டும்? நான் யார் பூர்ணாவிற்கு? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்பது? அவள் பூர்ணாவைக் கொண்டு வந்து என்னிடம் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். கையெழுத்திட்டேன்.

                “பீ பாசிட்டிவ் ப்ளட் குரூப்ல பேசினோம். பொண்ணு ரொம்பப் பலவீனமா இருக்குறா, சின்ன வயசுன்னு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வெள்ளை ஆடையில் ஒளிர்கிற நர்ஸ்.

                அவ்வளவு சின்னவளா பூர்ணா! நாற்பது வயது நிரம்பியவளைப் பார்க்க மிகவும் சின்னவளா? அவ்வளவு சின்னவளா இருந்தா வயிறைத் தள்ளிக் கொண்டு எப்படி வந்தாள்! இப்பொழுதாவது கேட்கவேண்டும் இந்தக் குழந்தை யாருடையதென்று.

                அழுகை கேட்டது. புதிய அழுகை, உலகத்தை அறிமுகப்படுத்தும் அழுகை. வெள்ளை ஆடை அணிந்து கொண்டிருக்கிற நர்ஸ் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட குழந்தையை எடுத்துக் கொண்டு சிரித்தபடி கைகளில் வைத்துச் சொன்னாள் “பாப்பா பிறந்திருக்கு சார்! உங்களுக்கு வாழ்த்துக்கள்”

                பாப்பா கையை இறுக்க மூடி வைத்திருந்தது.

                தூரத்தில் எங்கேயோ ராமம் குட்டிப்பூனையை அழைத்து வந்து என்னை நோக்கிக் கத்துகிற கத்தல் கேட்கிறது. குட்டிப்பூனை கத்துகிற மெல்லிய கத்தல்.

                பாப்பா அழுகையை நிறுத்தியது. கைவிரல்களைச் சிறிதாக விரித்தது. கண்கள் சிமிட்டி  வெளிச்சத்தைப் பார்த்தது. மென்மையான உதடுகளின்மேல் உதயமாகிற ரகசிய பாஷையைப் பிரமிப்பாகப் பார்த்தேன். பரவசமான அவளின் சிரிப்பு. அவளின் சிரிப்பே அது. ஆமாம் அவளின் சிரிப்பே.

                “சார், இந்தப் பாரத்தில் தாய் தந்தை விவரங்களை நிரப்புங்கள்” என்றாள் நர்ஸ் வந்து.

                சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்தேன்.

                முடிவுகளை வெறும் காலம் மட்டும்தான் முடிவு செய்கின்றது.

  •  

பாணனும் பொறாட்டும் (பகுதி – 2) – அகமது கனி

பாணனும் பொறாட்டும் (பகுதி – 2)

மலையாளப் படைப்பு : ஜெயசீலன்
தமிழாக்கம் : அகமது கனி

குறவன் குறத்தி

வடக்கன் பாட்டுகளில் காணப்படுகிற குறவனும் குறத்தியும்தான் இந்த பொறாட்டுகளில் குறிப்பிடப்படும் குறவன் குறத்தி ஆவார்கள். கை பார்த்து குறி சொல்வதில் இவர்களுக்கு பிரத்தியேகமான திறமை இருக்கிறது. குறவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண வழக்கம்தான். இரண்டு மனைவிகளும் மேடைக்கு வருவார்கள். குறவருக்கு சித்தனர் என்கிற பேரும் உண்டு. பண்டைக் காலத்தில் சமண மதம் ஏற்றுகொண்ட ஆதி திராவிடர்கள்தான் குறவர்கள். கேள்விக்காரனுடைய கேள்விகள் மூலமாக குறவனுடைய மனைவிகளின் எண்ணம் வெளிப்படுகிறது. குறவனே சொல்லுகிறான்: எனக்கு இரண்டு மனைவிகள் இளங்குடியும் முதுகுடியும். இரண்டு மனைவிகளைக் கட்டினால் இவர்களை யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்விக்காரனுடைய கேள்விக்கு குறவனிடம் பதில் இருக்கிறது.

இருகுடி கெட்டியராளுகளெ ஞான்
ஓரோன்னாயிட்டும் செய்திடாம்
வேலர்க்கில்லே ரண்டாளச்சா
வள்ளியென்னும் தைவானயுமாயி
பரமசிவனில் பார்யமாராயி   
சிரசில் வச்சு நடந்நிட்டில்லே 
கங்காதேவிய சிரசிலிருத்தி                                                                 பார்வதிதேவியக்கூட நடத்தி
இந்திரனில்லே நாலாளச்சா
ஊர்வசி மேனக ரம்ப திலோத்தம
பதினாறாயிரமெட்டும் ஸ்த்ரீகளெ
கிருஷ்ணன் கெட்டிவலிச்சிட்டில்லே?

இதையெல்லாம் சொல்கிற குறவனுக்கு குறத்தி மேலே சந்தேகந்தான். அவர்கள் இருவருக்கும் இடையேயான தர்க்கத்தின் முடிவில் குறத்திக்கும் சொல்வதற்கு விசயம் இருக்கிறது.

உத்தமியாயிட்டாணும் பெண்ணும்                                                   
லோகத்தில் இல்லா நாணு                                                                 
கத்தி எறியுந்ந தீபமாணே                                                        
சத்தியமாமல்லோ

(மற்ற பொறாட்டுகளைப் போல இங்கேயும்) குறவனுக்கு பரிபூரணமான திருப்தி இல்லாவிட்டாலும் கடைசியில் அவர்கள் ஒன்றுசேர்கிறார்கள்.

கவரனும் கவரச்சியும்

பறைச்சி பெற்றெடுத்த பன்னிரு குலத்திலே ஞானியும் வாக்குரைப்பவருமான பாக்கனாரின் வழித்தோன்றல் என்று பெருமைப்பட்டுக்கொள்கிற — பாலக்காடு மாவட்டத்திலே மலவர்க்கக்கார் (மலையர்) என்ற பெயரில் இருக்கும் இவர்கள் — பணத்தாலும் சமூக அந்தஸ்த்தாலும் கீழ்த்தட்டில் வசிக்கும் மக்களாகிய கவரர்கள்.

பாலக்காட்டின் மலையோரப் பிரதேசங்களிலும் உள் பிரதேசங்களிலும் நிறைய கவர குடில்கள் உண்டு. கூட்டமாக வசிப்பதுதான் இவர்களது விருப்பம். காட்டுக்குப் போய் மூங்கில் வெட்டி அதை பிரித்து காயவைத்து, தட்டி, வட்டி, முறம், முதலியன முடைந்து விற்றுப் பிழைப்பதுதான் அவர்களது வாழ்வாதாரம். தென்னிந்தியாவிலுள்ள திராவிட மொழிகளின் கலவைதான் இவர்களின் பேச்சுவழக்கு.

கவரனின் வரவு கானம்…….

ராராரீ ராரிரோ ராரிரங்காளி
ரூராரீ ரூரிரோ ரூரிரங்காளி
என்னங்களெ மேதி என்னெ பிரிந்தோடி
எல்லியோயுட்டாத்து
ஐதாறு திங்களாத்து பணித்தரம்
மாறோடி ஓயிற்றுட்டாத்து
பெரியிச்சேரி கஞ்ஞிவய்க்கோடி
அக்கியொந்நுமில்லாடா

புன்னப்பாற வட்டயிலோப்பயம்
விதறுகடி ஓயிற்றுட்டாத்து
விதறுகடிந்தப்போ நானும் விளுந்தப்போ
 ஆளெக்கொல்லி வந்திற்றுட்டாத்து

ஆளெக்கொல்லி என்று சொல்லப்படுவது பணத்தைக் குறிப்பதாகும். மூங்கில் மரத்தை வெட்டும்போது அதனுள்ளிருந்து நாணயங்கள் உதிர்ந்து விழுந்தன. ”ஆளெக்கொல்லி”யாகிய (அப்)பணத்தைக் கண்டு நான் பயந்தோடி வந்தேன்.

ஆனால், வீட்டில் வந்து பார்க்கும்போது கஞ்சி காய்ச்ச ஒரு மணி அரிசி கூட இல்லை. பின்னர், கூப்பன்2 கடைக்குப் போய்ப் பார்த்த போது அங்கிருந்து கடன் கிடைக்கவில்லை.இனி என்ன செய்வதென்று அறியாமல் கவரன் கலங்குகிறான்.

கவரனுடைய இந்தக் கற்பனையிலிருந்து மனித வாழ்க்கையின் சில தத்துவங்கள் இருக்கின்றன என்று தோன்றுகிறது. கவரனும் கவரச்சியும் சேர்ந்து பரியாணம்பற்ற திருவிழா பார்க்கப்போனதும், யானை மிரண்டோடிய நேரத்தில் ஆள் கூட்டத்தில் அவர்கள் பிரிந்ததும், அப்புறம் கவரச்சியே கண்டுபிடிக்கிற சிரமத்திற்கிடையில்தான், கவரன் இங்கு வந்தடைந்ததும் சொல்லப்படுகிறது. கவரச்சியைப் பார்க்கும்போது உண்டாகிற சண்டைக்கு வித்தியாசம் இருக்கிறது. கவரன் கோபப்படும்போதும் கவரச்சி பக்குவமாக பேசுவதைப் பார்க்கலாம். கதைகளும் சிறுகதைகளுமாய் நேரம் நீண்டுபோகிற பொறாட்டுகளிதான் இது.

தொட்டியன் தொட்டிச்சி

அறுவடையோடு தொடர்புடைய பாலக்காட்டிற்கு வந்துசேர்கிற சில மக்கள் கூட்டங்கள் உண்டு. ஒரே நேரத்திலே வியாபாரமும் பிச்சையெடுப்பதும் இவர்களுடைய நோக்கமாக இருக்கும். சோப்பு,சீப்பு, கண்ணாடி, ரிப்பன் போன்றன எல்லாம் விற்று நடப்பார்கள். சில நேரங்களில் இவையெல்லாம் வேண்டாமென்று வைத்துவிட்டு பிச்சையெடுக்க இறங்குவார்கள். பச்சை குத்துவதும் கைரேகை சோதிடம் பார்ப்பதும் இவர்களின் பிழைப்பின் ஒரு பகுதி. சாதாரண மிதுனப்பொறாட்டில் இருக்கிற (தம்பதி) பிரிவும் கேள்விக்காரன் காண்பித்துக் கொடுப்பதும் இந்தப் பொறாட்டிலும் உண்டு. அதற்கு அப்புறம் உள்ள சண்டை மிக வித்தியாசமானதாக இருக்கும். கணவன் மனைவி பிணக்கும் அதன் பின்னரான வாக்குவாதங்களுக்கும் முடிவில் உலகத்தைப் பற்றி சிந்திப்பதும் தத்துவம் பேசுவதும் இந்தப் பொறாட்டுகளியை வேறு தளத்திற்கு கொண்டுசெல்லும். தொட்டிச்சி அரங்கத்திற்கு வருகிறாள். தொட்டியனும் உண்டு. தொட்டியனுடைய கேள்வி …. .

தொட்டியன்: ஊருக்குப் போகலாமா புள்ள
தொட்டிச்சி: நா வர்றதில்ல
தொட்டியன்: காரணமென்ன?
தொட்டிச்சி: சண்ட
தொட்டியன்: என்ன சண்ட?
தொட்டிச்சி: எங்கேள்விக்கு பதில் சொல்லு.
பூமிக்கு முன்னே பிறந்ததாரு?
தந்தையில்லாத புத்திரனாரு?
பாலகணபதியப்பெற்றதாரு?
சிறகில்லாத பட்சியெது?
வேரில்லாத மரமெது?
இதுக்கு உத்தரம் சொல்லியே தந்தால்
பத்தினி நான் உன்கூட வருவேன்.

தொட்டியன்: பூமிக்கு முன்னே பிறந்தது ஜாம்பவான்
தந்தையில்லாது பிறந்தது விஷ்ணுபகவான்
பாலகணபதி தன் மாதாவு பார்வதி
சிறகில்லா பட்சி ஆத்மாவுதானே
வேரில்லா மரம் ஆகாசந்தானே
இப்படியாக்குமது அதுக்கெல்லாம் உத்தரம்
பத்தினி எங்கூட வருவாயடி

தொட்டியனுடைய பதிலில் திருப்தியாகி அரங்கிலிலுள்ள சபையோர்களை வணங்கி தொட்டியனும் தொட்டிச்சியும் மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள்.

சக்கிலியன் – சக்கிலிச்சி

இது ஒரு நீண்ட பொறாட்டுகளி ஆகும். சக்கிலியர்கள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குடியேறியவர்களாவார்கள். இவர்கள் தமிழும் தெலுங்கும் பேசுவார்கள். செருப்பு தயாரிப்பது இவர்களது தொழில்.

தப்பட்டை என்கிற வாத்தியக் கருவி கொட்டுகிற வழக்கமும் உண்டு. மேலும் காளை இறைச்சியையும் எருமை இறைச்சியையும் இவர்கள் உண்ணுவார்கள். அதனாலே சக்கிலியனைப் பார்த்த கேள்விக்காரன், அயித்தம் (அசுத்தம் மற்றும் தீண்டாமை) இருக்கிறது என்று சொல்கிறான். அதனை எதிர்த்து சக்கிலியன் கேள்வி கேட்கிறான்.

சக்கிலியன் : எதனாலே அயித்தம்?
கேள்விக்காரன்: செத்த மாடு, புழுத்த மாடு தின்கிறதாலே அசுத்தம்.
சக்கிலியன் : அசுத்தமானது எங்கு இருக்கிறது சாமி?
கேள்விக்காரன்: மனசுக்குள்ளே இருக்கிறது.
சக்கிலியன் : மனசுக்குள்ளே இருக்கிற அயித்தம் எப்படி போகும் சாமி?
கேள்விக்காரன்: ஆற்றிலே போய் வீழணும்.
சக்கிலியன் : ஆற்றிலே முழுகியது தேகமா, மனசா சாமி?
கேள்விக்காரன்: தேகம்.
சக்கிலியன் : அப்போது தேகத்தில் இருக்கிற அயித்தம் எப்படிப் போகும் சாமி?.. அது போகாது சாமி? அது ஒரு நினைப்புதான்!

பிறகு, சக்கிலியனுடைய பாட்டிலும் மனிதனின் பிறப்பு முதல் அவனது வளர்ச்சியில் உண்டாகிற மாற்றங்களும் ஜாதி என்கிற பெயரில் உண்டாக்குகிற தப்புகளும் சொல்கிறான். ஆணும் பெண்ணும் அல்லாத மற்றொரு ஜாதி பூமியில் இல்லை என்கிற உண்மையைச் சொல்கிறான். சக்கிலியன் சக்கிலிச்சியுடைய விவாதம் வேதாந்தமாகவும் தத்துவமாகவும் இருக்கிறது.

மண்ணான் – மண்ணாத்தி

மண்ணானும் மண்ணாத்தியும் என்கிற பொறாட்டில் இருக்கிற தள்ள மண்ணாத்தி பொறாட்டு பற்றித்தான் சொல்கிறார்கள்.

தள்ள மண்ணாத்தியும் ஆசானும் அருள்வாக்குரைப்பவரும் அரங்கத்திற்கு வருகிறார்கள். பாலக்காட்டுக்காரர்களுக்கு பழக்கமான இந்த அருள்வாக்கு சொல்பவர்கள் ஈழுவர்களும் செறுமக்களும் ஆவார்கள். அருள்வாக்கு சொல்பவர்களை இங்கு தம்பாட்டி என்று சொல்வார்கள். தம்பாட்டி உடல்குலுக்கி அருள்வாக்கு உரைப்பார். கையில் வாளெடுத்து தம் தலையில் வெட்டப்போவார். இந்த சந்தர்ப்பத்தில் ஆசான் சொல்கிறார்: தம்பாட்டி கையினாலே தாங்கித்தான் வெட்டுவார்.

அப்போது அருள்வாக்குரைப்பவர் சொல்வார் – வேகமாய் வெட்டினால் என் மண்டை பிளந்துவிடாதா? மகனே, மனைவியும் நான்கு பிள்ளைகளும் உண்டு.. உனக்குத் தெரியாதா?

அருள்வாக்குரைப்பவரிடம் தங்கள் துன்ப துயரங்களும் போக்க வேண்டி கோரிக்கை வைக்கிறார்கள். கல்லையும் நெல்லையும் பிரித்துக் கொடுப்பதுபோல் வாழ்க்கையில் துன்ப துயரங்களை தீர்த்துக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

அப்போது, “நீங்கள் ஒரு கோழிக்குஞ்சை விடுங்கள்” என்று அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்.

கடைசியில், ”நான் இல்லாத நேரத்தில் – என் வீட்டில் பண்ட பாத்திரங்கள் திருடுபோயிருக்கின்றன. களவாடிக்கொண்டு போனது யாரென்று சொல்லுங்கள்” என்கிறார்கள். அதற்கு அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்: அது தெரிந்தால் நான் இங்கு எதற்கு வேசங்கட்டி உட்கார்ந்திருக்கேன்”.

அருள்வாக்குரைப்பவர், தன் கையில் உள்ள வாளை வீசி எறிகிறார். பகுத்தறிவான சிந்தனை மூடநம்பிக்கைக்கு எதிரான அடியாய் இங்கு மாறுகிறது. திறமையுள்ள ஆட்டக்காரர்கள் தம் மனோதர்மத்தை பயன்படுத்தை இந்த ஆட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்ற முடியும்.

(தொடரும்)

  •  

கடல் நீர் எப்படி உப்பு நீராயிற்று? : ஷாராஜ்

தைவான் நாட்டுப்புறக்கதை மொழிபெயர்ப்பு

கடல் நீர் எப்படி உப்பு நீராயிற்று?

ஷாராஜ்
(தமிழாக்கம்)

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நதிக்கரை ஓரமாக லின் ஃபுஹாய் என்னும் படகோட்டி வசித்து வந்தார். இக்கரையிலிருந்து அக்கரைக்கு பயணிகளைக் கடத்திவிடுகிற வேலையில் அவருக்கு சிறிய தொகை கட்டணமாகக் கிடைக்கும். அதை வைத்து வாழ்ந்து வந்தார்.

பயணம் தொடங்குவதற்கு முன்பு அவர் தனக்கு எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று சொல்வதில்லை. பயணம் முடிந்த பிறகு வாடிக்கையாளர்கள் எவ்வளவு கொடுத்தாலும் நன்றியோடு ஏற்றுக்கொள்வார். அது சிறிய தொகையாக இருந்தாலும் சரி; பெரிய தொகையாக இருந்தாலும் சரி. கட்டணம் தராமல் போய்விட்டாலும் கோபித்துக்கொள்ளவோ, வருத்தப்படவோ மாட்டார். பயணிகளை ஆற்றைக் கடத்திவிடுவதை சேவையாகக் கருதி மகிழ்ச்சியோடு செய்துவந்தார்.

ஒரு நாள் படகில் அமைதியாக அமர்ந்து வாடிக்கையாளர் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது தாவோ துறவி ஒருவர் வேகமாக வந்தார். படகில் தாவி ஏறி, படகோட்டியை அவசரப்படுத்தினார்.

“மிக முக்கியமான வேலை. என்னை விரைவாக அக்கரைக்குக் கொண்டு செல்!”

லின் ஃபுஹாய் வேகமாகத் துடுப்பு வலித்து அக்கரையை நோக்கி படகைச் செலுத்தினார்.

ஆனால், மறு கரையை நெருங்கவிருக்கும்போது துறவி பதற்றத்தோடு சொன்னார்: “அடக் கடவுளே! அவசரமாகக் கிளம்பி வந்ததால் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். தயவுசெய்து திரும்பவும் அக்கரைக்குக் கொண்டு செல்!”

படகோட்டி படகைத் திருப்பி மறு கரையை நோக்கிச் செலுத்தினார்.

கரையை நெருங்க இருந்த சமயம் துறவி, “நான் மறந்துவிட்ட அந்தப் பொருள் அவ்வளவு முக்கியமானது ஒன்றும் அல்ல. ஆகவே, மீண்டும் அக்கரைக்கே செல்ல விரும்புகிறேன். படகைத் திருப்பு” என்றார்.

படகோட்டி அப்போதும் மறுப்போ, குறையோ சொல்லாமல் மீண்டும் படகைத் திருப்பி அக்கரையை நோக்கிச் செலுத்தினார்.

அக்கரையை அடைய இருக்கும்போது துறவி சொன்னார்: “இப்போது யோசித்துப் பார்த்தால், இன்று நான் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை என்று புரிகிறது. அந்தக் காரியத்தைப் பிறகு வந்து பார்த்துக்கொள்கிறேன். படகைத் திருப்பி, ஏறிய இடத்திலேயே என்னை விட்டுவிடு.”

அப்போதும் எதுவும் சொல்லாமல், சிறு முகச்சுளிப்பு கூட காட்டாமல், படகோட்டி மீண்டும் படகைத் திருப்பி இக்கரையை நோக்கி வந்தார்.

இக்கரையை அடைய இருக்கும்போது துறவி சொன்னார்: “இவ்வளவு தூரம் வந்தாயிற்று. வந்த காரியத்தை இன்றே முடித்துவிட்டுச் செல்வதுதான் சரியாகப் படுகிறது. எனவே, மீண்டும் அக்கரைக்குப் படகைச் செலுத்து.”

துறவி மீண்டும் மீண்டும் இப்படியே இக்கரைக்கும் அக்கரைக்குமாக படகோட்டியை அலைக்கழித்துக்கொண்டிருந்தார். பல முறை அவர் இவ்வாறு செய்தும் படகோட்டி அதில் சலிப்படையவோ, கோபம் கொள்ளவோ இல்லை.  அவரது முகத்தில் எரிச்சல் அடைந்ததற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை.

முடிவில், படகு பயணம் தொடங்கிய இடத்திலேயே நிறுத்தப்பட்டது. கீழே இறங்கிய துறவி, படகோட்டிக்குக் கட்டணம் கொடுக்காமல், நன்றி கூட தெரிவிக்காமல், தனது வழியில் விரைந்து சென்றுவிட்டார்.

லின் ஃபுஹாய் அது பற்றியும் வருத்தப்படவில்லை. அவர் மீண்டும் தனது படகில் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தார்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அந்தத் துறவி திரும்பவும் வந்தார். படகோட்டியைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “நான் உன்னை பலத்த தொந்தரவுக்கு ஆட்படுத்திவிட்டேன். ஆனால, நீ நல்லிதயம் கொண்ட மனிதன். அதனால் எனது தொந்தரவுகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டாய்” என்றார்.

“பயணிகளை அக்கரைக்குக் கடத்திவிடுவது எனது கடமை. அதனால் உங்கள் செயல் எனக்கு எந்த விதத்திலும் தொல்லையாக இருக்கவில்லை.” படகோட்டி பணிவோடு சொன்னார்.

“நான் உனக்குக் கட்டணம் செலுத்தாமல் போய்விட்டேன். நன்றி கூட தெரிவிக்கவில்லை. அப்படியிருந்தும் நீ என்னை அழைத்து பணம் கேட்கவில்லை. அதில் உனக்கு வருத்தமோ, என் மீது கோபமோ இல்லையா?”

“இல்லை. பயணிகள் எனக்கு கட்டணம் கொடுத்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டாலும் அதற்காக வருந்துவதில்லை. ஒரு படகோட்டியாக எனது கடமையைச் செய்கிறேன்.”

“நீ மகத்தான மனிதன்!” பாராட்டிய துறவி, “நீ எனக்காகச் செய்த வேலைக்குக் கட்டணம் தர என்னிடம் பணம் இல்லை. ஆனால், உனது சேவையைப் பாராட்டும் வகையில் எனது எளிய அன்பளிப்பாக இந்த மாந்தரீகக் கல்லை வைத்துக்கொள்!” என்று ஒரு சிறிய மாவரைக்கும் கல்லைக் கொடுத்தார்.

அதைச் செயல்படுத்தும் விதத்தையும் கூறினார்.

அந்த மாந்தரீகக் கல், எதைக் கேட்டாலும் கொடுக்க கூடிய ஆற்றல் வாய்ந்தது. “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! 1-2-3-4-5!”  என்ற மந்திரத்தை உச்சரித்தால் அந்தக் கல் தானாகத் திரும்பி, மாவரைப்பது போல முன்னோக்கி சுழலத் தொடங்கும். அப்போது நாம் எதைக் கேட்கிறோமோ, அதை இடையறாது கொடுத்துக்கொண்டே இருக்கும். போதும் என்று ஆனதும், “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! கிழக்கு – மேற்கு, இடது – வலது” என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். உடனே அதன் சுழற்சியும், பொருள் வருவதும் நின்றுவிடும்.

லின் ஃபுஹாய் துறவிக்கு நன்றி தெரிவித்து மாந்தரீகக் கல்லைப் பெற்றுக்கொண்டார்.

அன்று மாலை வீடு திரும்பிய அவர், தனது குடிசையில் மங்கலான லாந்தர் வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு அந்த மாந்திரீகக் கல்லின் முன்பாக துறவி சொன்ன முதல் மந்திரத்தை உச்சாடனம் செய்தார். அந்தச் சிறிய அரைக்கும் கல் தானாகத் திரும்பி மாவரைப்பது போல சுழலத் தொடங்கியது.

“காலை முதல் நான் எதுவும் சாப்பிடவே இல்லை. மிகவும் பசியாக இருக்கிறது. எனக்கு வயிறு நிறையுமளவு அரிசி உணவு கொடு!”

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லில் இருந்து அரிசி உணவு வரத் தொடங்கியது. போதிய அளவு உணவு வந்ததும் இரண்டாவது மந்திரத்தை உச்சாடனம் செய்தார். உணவு வருவது நின்றுவிட்டது. உணவை வயிறார உண்டு மகிழ்ந்தார்.

இந்த வகையில் அவருக்கு அந்த மந்திரக் கல்லிடம் கேட்டதெல்லாம் கிடைத்தது. அதன் மூலம் விரைவிவ் பணக்காரராகவும் ஆனார்.

எனினும் தனது படகோட்டும் தொழிலைக் கைவிடவில்லை.  தொடர்ந்து மக்களுக்கு இலவசமாகப் படகோட்டி வந்தார். மந்திரக் கல் மூலமாகக் கிடைக்கும் செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு தானம் வழங்கவும் செய்தார்.

வருடங்கள் கழிந்தன. அவருக்கு வயோதிகம் ஆயிற்று. படகோட்டும் வேலையைச் செய்ய இயலவில்லை. எனவே, தக்க சம்பளம் கொடுத்து, வாங் என்னும் பெயருள்ள ஒருவனைப் படகோட்டியாக நியமித்தார்.

வாங் மந்த புத்திக்காரன். அவனுக்கு லின் ஃபுஹாய் போல பணக்காரராக ஆகவேண்டும் என்று ஆசை. அதனால் அவரிடமிருந்து மாந்தரீகக் கல்லைத் திருடிக்கொண்டு சென்றான்.

அந்தக் கல்லை வைத்து எப்படி பணக்காரனாக ஆவது என்று அவனுக்குத் தெரியவில்லை. படகில் வந்த பயணிகள் சிலர் இப்போது சந்தையில் உப்புக்கு அதிக விலை என்று பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. மந்திரக்கல் மூலம் உப்பு பெற்று, அதை விற்று பணக்காரனாக ஆகலாம் என எண்ணினான்.

படகில் அமர்ந்துகொண்டு மந்திரக் கல்லை எடுத்து, “அரைக்கும் கல்லே, அரைக்கும் கல்லே…! 1-2-3-4-5!”  என்ற மந்திரத்தை உச்சரித்தான்.

அந்தக் கல் திரும்பி, மாவரைப்பது போல சுழல ஆரம்பித்தது.

“எனக்கு உப்பைக் கொடு!” அதனிடம் கட்டளையிட்டான்.

மந்திரக் கல்லிலிருந்து தூய்மையான உப்புப் படிவங்கள் வெளி வரலாயிற்று.  படகு நிறையட்டும் என்று காத்திருந்தான். படகு உப்பால் நிரம்பியது.

மந்திரக் கல்லின் செயல்பாட்டை நிறுத்துவதற்கான மந்திரத்தைச் சொல்ல முயற்சித்தான். அவனுக்கு அப்போது அந்த மந்திரம் மறந்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் ஞாபகத்துக்கு வரவே இல்லை.

மந்திரக் கல்லிலிருந்து உப்பு கொட்டிக்கொண்டே இருந்தது.

“மந்திர கல்லே…! உப்பைக் கொட்டுவதை நிறுத்து! நிறுத்து!!” கூச்சலிட்டான்.

அது நிறுத்தவில்லை. உப்பை வாரி வாரிக் கொட்டிக்கொண்டே இருந்தது.

இதனால் எடை கூடி, படகு நதியில் மூழ்கலாயிற்று. அதோடு சேர்ந்து அந்தப் படகோட்டியும் நீருக்குள் மூழ்கினான்.

அப்போதும் மந்திரக்கல் இடைவிடாமல் மேலும் மேலும் உப்பைக் கொட்டிக்கொண்டே இருந்தது. அந்த உப்புக் குவியலுக்கு இடையே அகப்பட்டு படகோட்டி வாங் இறந்துவிட்டான்.

அதன் பிறகும் மந்திரக் கல் உப்பை வெளியிடுவதை நிறுத்தவில்லை. ஓயாமல் அதிலிருந்து வந்துகொண்டிருக்கிற உப்பினால் அந்த நதி நீர் உப்பு நீராக ஆயிற்று.

அந்த நதி கடலில் சென்று கலப்பதாலும், தொடர்ந்து அந்த நதியிலிருந்து உப்பு நீர் வந்துகொண்டிருப்பதாலும்தான் கடல் நீர் உப்பு நீராக ஆகிவிட்டது.

*******

  •