அத்தியாயம் 35
சேவல் கூவும் சத்தம் கேட்டும் தன்னவளை விட்டு விலக மனமில்லாமல் அணைத்துக்கொண்டே படுத்திருந்தான். இருவரின் கண்களும் தூக்கத்திற்கு கெஞ்சியது சில நொடிகள் முன்னே கூடல் முடிந்து அவன் மார்பில் படுத்திருந்தவள் உறக்கத்தை தழுவியிருந்தாள்.
நதியாவை விட்டு பிரிய மனமில்லாமல் அவளின் தூக்கம் கலையாமல் தலையணையில் படுக்க வைத்துவிட்டு கீழே கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்கச் சென்றான். அவனது முதுகில் தண்ணீர் படவும் அவள் நகம் பட்ட இடமெல்லாம் எரிந்தது.
“இராட்சசி எப்படி கீறி விட்டிருக்கா பாரு” என்று காதல் மனைவியை வசைப்பாடிக்கொண்டு குளித்து வெளியே வந்த போது நதியா மீன்குஞ்சு போல இதழ் பிளந்து உறங்குவதை கண்டு மென்நகை புரிந்தவன் வேஷ்டியை கட்டிக்கொண்டு கதவு திறந்து வெளியே போனவன் அதிர்ச்சியில் கண்ணை விரித்தான்.
ராயன் காரில் சாய்ந்து நின்றான். மாட்டுப் பண்ணையிலிருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பான் போலும் பால்கறந்து முடித்து கேனில் நிரப்பி வைத்திருந்தனர். கோவிந்தன் கணக்கு நோட்டில் பால் அளவுகளை எழுதிக்கொண்டிருந்தான்.
“என்ன அதுக்குள்ள எழுந்துட்ட ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டு டயர்ட்ல தூங்கியிருப்பனு நினைச்சு உனக்கு உதவி பண்ண வந்தேன்டா” என்று கொட்டாவி விட்டு தலைக்கு மேல் கையை தூக்கினான் ராயன்.
“என் மேல உனக்கு இத்தனை பாசமாடா மச்சான்” என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டான் பாலாஜி.
“என்னடா பண்ணறது தங்கச்சியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன் தங்கச்சி சந்தோசமா இருக்கணும்ல அதுக்காகத்தான்” என்றான் உதட்டு மடிப்பு சிரிப்புடன்.
“டேய் நீ இருக்கியே” என்று அவன் தோளில் போலியாக அடித்தான் பாலாஜி. பால்காரர்கள் வரவும் அவர்களுக்கு பாலை சப்ளை செய்து விட்டு ராயன் பக்கம் வந்தவன் “வாடா டீ குடிச்சிட்டு போகலாம்” என ராயனின் கையை பிடித்தான்.
“உன் கையால டீ குடிச்சு ரொம்ப நாள் ஆச்சு வரேன்டா” என்று நண்பனுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
குளித்து விட்டு வெளியே வந்த நதியாவோ ராயனை கண்டதும் “அண்ணா எப்போ வந்தீங்க?” என்று ராயனின் கையை பிடித்துக்கொண்டாள்.
“இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்மா நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு அழைப்பு சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன்டா இரண்டு பேரும் நேரமே வந்துடணும் இந்த முறை மாவிளக்கு மட்டும்தான் குழந்தை பிறந்ததும் கிடா வெட்டிக்கலாம்” என்றவனிடம்
“நான் நம்ம வீட்டுக்கு வந்தா அம்மா முகத்தை தூக்கி வச்சிப்பாங்க அண்ணா நான் கோவிலுக்கு மட்டும் வரேன்”
“நீ இந்த முறை வரும்போது அம்மா உங்களை வரவேற்பாங்க பாரேன்” என்று தங்கையை சமாதானம் செய்ய பார்த்தான்.
“அது நடக்காது அண்ணா இருங்க காபி போட்டு கொண்டு வரேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டாள்.
காபியுடன் வந்த நதியாவை கண்ணெடுக்காமல் பார்த்தான் ராயன்.
“என்ன அண்ணா அப்படி பார்க்குறீங்க என்னடா இவ சமையல்கட்டு பக்கம் கூட போனதில்லை எப்படி காபி போடுறானா எல்லாம் உங்க மாப்பிள்ளை சொல்லிக்கொடுத்தாரு அண்ணா” என்றாள் பாலாஜியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.
காபியை வாங்கி குடித்த ராயனோ “காபி சூப்பர் பாப்பா” என்றவனோ “டேய் மச்சான் நீ போடுற காபியை விட என் தங்கச்சி பிரமாதமா காபி போட்டிருக்கா” என்று கண்ணைச்சிமிட்டி சிரித்தான்.
அவனோ “உன் தங்கச்சிக்கு காபி போட சொல்லிக்கொடுக்கறதுக்குள்ள நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்” என்றான் சலிப்பாக.
“அண்ணா சாப்பிட்டுத்தான் போகணும்” என்றாள் பிடிவாதமாக.
“இல்லம்மா முல்லையை ஹாஸ்பிட்டல் செக்கப் அழைச்சிட்டு போகணும் நான் கிளம்புறேன் மாப்பிள்ளை திருவிழாவுக்கு நேரமே வந்துடு” என்று பாலாஜியின் தோளை தட்டிவிட்டு “பாப்பா போய்ட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டான்.
தீபாவிற்கு வாமிட் அதிகம் இல்லை. அமுதாவிற்கு காய்கறிகள் நறுக்கிக்கொடுத்துவிடுவாள். பணக்காரி என்று திமிர்தனம் அவளை விட்டு காணாமல் போயிருந்தது. தோட்ட வேலைக்காரர்களிடம் சுள்லென்று விழுவதில்லை. கண்ணன் தன் மனைவியா இவள் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறிவிட்டாள் தீபா.
கோமளமோ பிறக்க போகும் பேரன் சிவப்பாக பிறக்கவேண்டுமென இரவில் தீபாவுக்கு பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்தார்.
“என்னம்மா உங்க மருமகளுக்கு மட்டும் ஸ்பெஷலா பாலுல குங்குமப் பூ போட்டு கொடுக்குறீங்க எனக்கு இல்லையா?” என்றவனிடம்
“பையன் உன்னை போல கருப்பா பொறந்துட்டா அதான் குங்குமப்பூ கலந்து கொடுக்குறேன் என் பேரன் சிவப்பா பிறக்கட்டும்னு” என பெரும்மூச்சு விட்டார்.
“ஏன்மா பொண்ணு பொறந்தா ஏத்துக்க மாட்டீங்களா! எனக்கு பொண்ணு மேலதான் பிரியம்” என்றவனை
“வாயை பினாயில் போட்டு கழுவுடா அறிவுக்கெட்டவனே! உனக்கு பையன் பிறப்பான் ராயனுக்கு பொண்ணு பிறக்கும் நான் சொல்றது சத்தியவாக்கு மகனே” என்றார் அழுத்தமாக வார்த்தைகளுடன்.
தையல்நாயகியும் அழகம்மையும் சிரித்துக்கொண்டனர்.
“என்னங்கடி ரெண்டு பேரும் சிரிக்குறீங்க நான் சொல்றதுதான் நடக்கும்” என்றார் தெனாவெட்டாக.
அழகம்மையோ “புள்ளைபேரும் மழைபேரும் மகாதேவனுக்கு கூட தெரியாதாம் அண்ணி” என்றார் ராகமாக.
“பார்க்கலாம்டி” என்று முந்தானையை உதறிவிட்டுச் சென்றார்.
தென்னரசுவோ ஆர்கானிக் தோட்டத்தை பெரிதளவில் உருவாக்கி விட்டான். காய்கறிகள் வெளியூர்களுக்கு சப்ளை பண்ண திட்டம் போட்டிருந்தான். ஆர்டர்களும் குவிந்து விட்டது. பிஸினஸ்மேன் ஆகிவிட்டான் தென்னரசு.
பூங்கொடி மறுபடியும் கர்ப்பம் தரித்து விட்டாள்.
நீலகண்டனும் அழகம்மையும் மகளை பார்த்துவிட்டு “நீ வேணா நம்ம வீட்டுல வந்து இரேன்டி” என்றார் அழகம்மை.
“அத்தை இருக்காங்க பார்த்துப்பாங்க. அரசிக்கிட்டயும் தியா நல்லா ஒட்டிக்கிட்டாமா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் சந்தோசமாக இருக்கேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
முல்லைக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கியது.
முல்லையால் வயிற்றை தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை.
“கோமளம் அண்ணி சொன்னது போலவே பொண்ணாத்தான் இருக்கும் போலங்க” என்றார் அழகம்மை நீலகண்டனிடம்.
“என்ன குழந்தையா இருந்தா என்னடி நல்ல விதமா தாயும் பிள்ளையும் வந்தா போதும்” என்று அங்கலாய்த்தார் நீலகண்டன்.
“நீங்க சொல்றது சரிதான்ங்க” என பெரும்மூச்சு விட்டார் அழகம்மை.
“அழகு பூங்கொடி ஏழுமாசத்துலதான் நம்ம வீட்டுக்கு வந்தா ஆனா முல்லை கரு உண்டானது முதல் இப்ப வரை உன்கூடவே வச்சு பார்த்துக்கிற உன் மனசு தங்கம்டி நீ பொண்டாட்டியா கிடைக்க நான் தவன் பண்ணியிருக்கணும்டி” என்று அழகம்மையின் கையை பிடித்துக்கொண்டார் நீலகண்டன்.
“எனக்கு எல்லாம் தெரியும்ங்க” என்றதும் ஒரு நிமிசம் ஆடிப்போனார் நீலகண்டன்.
“என்ன அப்படி பார்க்குறீங்க நம்ம அமுதாவோட வீட்டுக்காரன் குழந்தை உருவானதும் வியாபாரத்துக்கு போனவரு திரும்பி வரவேயில்லையாம்ங்க அவனெல்லாம் மனுசனாங்க அமுதாவை பார்க்கும்போது பாவமாய் இருக்கு… நம்ம முல்லைக்கு அப்பா இல்லைங்கற வருத்தம் வரவே கூடாது அதான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டேன் உங்களையும் அப்பானு கூப்பிட அனுமதி கொடுத்தேன்” என்றார் நெகிழ்ச்சியாக.
“ஆமாடி அமுதாவை பாதியில விட்டுப்போனவன் மனுசன் கிடையாது” என்றவருக்கு மனதில் பாரம் ஏறியது.
“அப்பா இடுப்பு வலிக்குது மச்சானை வரச்சொல்லுங்க” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு நடக்க முடியாமல் வந்தாள் முல்லை.
“இன்னும் நாள் இருக்கு முல்லை இது பொய் வலி கசாயம் வச்சு தரேன் குடி வலி நின்னுடும்” என்று அவளின் கையை பிடித்து நீலகண்டன் பக்கத்தில் உட்கார வைத்து “புள்ளையை பார்த்துக்கோங்க” என்று ஜாடை காண்பித்துச் சென்றார்.
“அப்பா அமுதா அம்மாவை விட அழகு அம்மா என்னை ரெண்டு மடங்கு பார்த்துக்குறாங்கப்பா இவங்க கிட்ட உண்மையை மறைக்கிறோம்னு குற்ற உணர்வா இருக்கு” என்றாள் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு.
“சில உண்மைகளை இரகசியமா வச்சிருக்கறதுல தப்பில்லடா கொஞ்ச நாள் முன்னாடி உண்மை தெரிஞ்ச உனக்கே இவ்ளோ கஷ்டம்னா என்னைய நினைச்சி பாரு கண்ணு நானெல்லாம் பாவம் செய்த மனுசன் எனக்கெல்லாம் நரகம்தான் கிடைக்கும்டா” என்றவரின் குரலில் அத்தனை வலி இருந்தது.
“நீங்க வேணும்னு எதையும் பண்ணலையேப்பா விடுங்க” அழகம்மையின் தலை தெரிந்ததும் இருவரும் அமைதியாகி விட்டனர்.
“இந்த கசாயத்தை குடிமா” என்று முல்லையிடம் கசாயத்தை கொடுத்தார். கசாயத்தை குடித்ததும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு வலி குறைந்திருந்து.
தையல்நாயகியோ இரவு ராயன் சாப்பிடும் நேரம் “ராயா திருவிழாவுக்கு நம்ம நதியா பாப்பாவுக்கு அழைப்பு சொல்லிட்டதானே?” என்றபடியே தோசையை தட்டில் வைத்தார்.
கோமளமோ “அவளுக்கு அழைப்பு சொல்லலைனு யார் அழுதாங்க அன்னிக்கு சும்மா அழுது கரைஞ்சு நகையை ஆட்டைய போட்டுட்டு போய்ட்டா இப்ப திருவிழாவுக்கு வந்தானா சும்மாவா போகப்போறா இல்ல நீங்கதான் அவளுக்கு சீர் கொடுக்காம அனுப்ப போறீங்களா!” என்றார் இழுவையாக.
“ஒத்த தங்கச்சியை வச்சிருக்கோம் அவளுக்கு நியாயமா சேர வேண்டியதை கொடுத்துடணும் இல்லனா அண்ணனுங்களுக்குத்தான் தோஷம் வருமாம் பெரியம்மா… நம்ம வீட்டு மருமகளுங்க ரெண்டு பேரும் மாசமா இருக்காங்க பிறக்க போற குழந்தைகளும் தோஷத்துல பிறக்கணுமா?” என சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவியவன் கோமளத்தின் பக்கம் வந்து உட்கார்ந்தான்.
“நான் இதை யோசிக்காம போயிட்டேன் ராயா அவளுக்கு கொடுக்க வேண்டிய பங்கை திருவிழா முடிஞ்சு போற அன்னிக்கு கொடுத்திறலாம் நம்ம பேரன்களுக்கு தோஷம் வரவேணாம்” என்றார் அச்சத்துடனே.
கோமளம் தன் மகன் வயிற்று பேரப்பிள்ளைக்குதான் மரியாதை கிடைக்கணும் பின் வரும் சந்ததியர் தன் பேரனை வழி தொடரணும்னு என்று சுயநலமாக ஆசைப்பட்டாரே தவிர மொத்த குடும்பத்துக்கு சாபம் வந்துவிடுமென்று அவர் யோசிக்கவில்லை.
“நீங்க சொன்னா அப்பீல் இல்லை பெரியம்மா நதியா பாப்பாவுக்கு என்ன என்ன கொடுக்கணும்னு நானே முடிவு எடுக்கட்டுமா இல்ல நீங்க முடிவு பண்ணி வச்சிருக்கீங்களா?” என்றான் கோமளத்தின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
“நீ உன் தங்கச்சிக்கு என்ன கொடுக்கணும்னு முடிவு பண்ணி வச்சிருப்பியே என்கிட்ட சும்மா ஒப்புக்குத்தான் கேட்ப உன் மனசுக்கு என்ன படுதோ அதை பண்ணிடு” எழுந்து சாப்பிடச் சென்றார் கோமளம்.
ராயன் சாப்பிட்டு நீலகண்டன் வீட்டு கேட்டை திறந்து உள்ளே போக முல்லையோ வயிற்றை பிடித்துக்கொண்டு போர்ட்டிக்கோவில் நடந்துக் கொண்டிருந்தாள்.
“என்ன புள்ள வாக்கிங்கா?”
“ஆமா நார்மல் டெலிவரி ஆகணும்னா நடக்கணும்னு டாக்டர் சொன்னது மறந்துட்டீங்களா மச்சான்” என்று நடக்கும் போது பேசமுடியாமல் மூச்சு வாங்கினாள்.
“புள்ள நின்னு பேசு” அவளது கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தான்.
“நான் நடக்கணும் விடுங்க மச்சான்” என்று சிணுங்கியவளின் கையை விட்டு “போடி” என்று முகத்தை உர்ரென்று வைத்தான்.
“அச்சோ மச்சானுக்கு ரொம்பதான் கோபம் வருது” என்று அவனது மீசையை பிடித்து இழுத்து யாரும் இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்துவிட்டு ராயனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் “இதுக்குதானே என்னை உட்கார வச்சீங்க மச்சான்” அவனது தோளில் சாய்ந்தாள்.
அவள் எங்கே தடுமாறி விழுந்துவிடுவாளோ என்று அச்சத்தில் அவளை தன் கை வளைவில் நிறுத்தி வைத்து “உன் அறைக்குள் வந்தாவே அழகு அத்தை ராயா வெளிய வானு மிரட்டுறாங்க என் பொண்டாட்டிக்கிட்ட ஒரு முத்தம் கூட வாங்க முடியலை” என்றான் வருத்தமாக.
“நமக்குள்ள ஏதாவது கசமுசா நடந்து எனக்கு ஆபத்து வந்துடும்னு பயப்படுறாங்க அழகு அம்மா” என்றாள் முல்லை நமட்டுச் சிரிப்புடன்.
“ஏன் டி எனக்கு என் பொண்டாட்டி மேல அக்கறை இல்லையா பார்த்து நடந்துக்க மாட்டேனா மாமியார்னாவே கொடுமைக்காரவங்களா இருக்காங்க நம்ம அறையில உன்கூட வந்து படுத்துக்குறாங்க நான் சோபாவுல படுத்துக்குறேன் என் மேல நம்பிக்கை இல்லையாடி” என்று பொருமினான் ராயன்.
“ஆமாடா நான் கொடுமைக்காரி தான்” என்று இடுப்பில் கையை வைத்து நின்றார் ராயன் முன்னே.
“அ.அத்தை நா.நான் சும்மா விளையாடினேன்” என்று மழுப்பினான்.
“சரி சரி மாசமா இருக்கற புள்ள ரொம்ப நேரம் முழிச்சிருக்க கூடாது போய் நீ படு முல்லை” என்றார் அதிகாரமாக.
“என் பொண்டாட்டியை என்னை விட்டு துரத்துறதுலயே குறியா இருக்காங்கப்பா” என்று சடைத்துக் கொண்டான்.
முல்லையோ “நான் தூங்கப்போறேன் மச்சான்” என்று அறைக்குள் சென்றாள்.
ராயனும் முல்லையின் பின்னே செல்ல “டேய் டேய் நில்லுடா நானும் வரேன்” என்று மருமகனின் பின்னால் சென்றார் அழகு.
“மாமா எல்லாம் என்னை மாப்பிள்ளைனு மரியாதை கொடுத்து பேசுறாங்க நீ என்னடானா மருமகனை வாடா போடா ராயானு பேசுற அத்தை” என்று அழகம்மையை முறைத்தான்.
“நான் தூக்கி வளர்த்த பையன் நீ! உன்னை வாங்க போங்கனு கூப்பிடணுமா நான் முல்லை அறைக்குள்ள போகாம நீ போகக்கூடாது சோபாவுல உங்க மாமா கூட உட்கார்ந்து டிவி பாரு நான் அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு வந்துடறேன்” என்று ராயனுக்கு கட்டளை போட்டுச் சென்றார்.
நீலகண்டனோ “மாப்பிள்ளை நீங்க உள்ள போங்க உங்க அத்தை வந்து கேட்டா உனக்கு தூக்கம் வருதுனு போய்ட்டனு சொல்லிடறேன்” என்று கண்ணைச் சிமிட்டினார்.
“தேங்க்ஸ் மாமா” என்று அடுத்த நொடி முல்லையின் அறைக்குள் இருந்தான்.
“அச்சோ மச்சான் அழகு அம்மா வரதுக்குள்ள நீங்க ஏன் வந்தீங்க திட்டப்போறாங்க முதல் நாள் உங்களை தெரியாம உள்ளே விட்டு எனக்கு அடுத்தநாள் இடுப்பு வலி வந்துடுச்சுல அதான் உங்களை உள்ள விட பயப்படுறாங்க ஆனா எனக்கு உங்க மேல சாய்ஞ்சு படுத்துக்கணும்னு இருக்கு” என்றாள் முகத்தை அப்பாவி பெண் போல வைத்து.
“அவ்ளோதானே புள்ள என் நெஞ்சுல தான் நீ தூங்கப்போற ஒரு நிமிசம் இரு வரேன்” என்று ஹாலுக்குச் சென்றவன் “மாமா அத்தையை உள்ளே வரவிடாம பார்த்துக்கோங்க என் பொண்டாட்டி கூட தனியா இருக்கணும் எனக்கு உதவி பண்ணுவீங்களா?”
“நீ போ மாப்பிள்ளை உங்கத்தை கிடக்குறா ஆனா பார்த்து இருக்கணும் முல்லைக்கு நிறைமாசம் கவனம்பா” என்று அழுத்தி கூறவும்
“என் மேல நம்பிக்கை இல்லையா மாமா?”
“உன் மேல நம்பிக்கை இல்லாமலா போயா உங்கத்தை வர்றதுக்குள்ள” என்றார் சமையல்கட்டை பார்த்துக்கொண்டே.
ராயனோ முல்லையின் அறைக்குள் வந்து கதவை அடைத்து ஒரு எட்டில் கட்டிலில் ஏறி அமர்ந்து முல்லையை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.
முல்லையோ நெஞ்சில் சாய்ந்ததும் “மச்சான் பிரசவத்துல வலிக்குமாமே எனக்கு பயமா இருக்கு” என்றாள் அவனது நெஞ்சில் சுருள் முடியை விரலால் சுருட்டிக்கொண்டே.
“வலியில்லாம புள்ள பிறக்காதுடி அந்த நேரம் என்னை நினைச்சுக்கோ உனக்கு வலியே வராது புள்ள” என்றான் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து.
“மச்சான் பிரசவ அறைக்குள்ள நீங்க வந்துடுங்களேன் நீங்க பக்கம் இருந்தா எனக்கு வலி இருக்காதுல” என்றவளின் முகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது.
“கண்டிப்பா நான் உன்கூட இருக்கேன் புள்ள தூங்கு” என்று மனைவியின் தலையை வருடிக்கொடுக்க உறங்கிவிட்டாள் முல்லை.
அழகம்மையோ சமையல்கட்டை சுத்தம் செய்து விட்டு பூங்கொடிக்கு போன் போட்டார்.
“என்னம்மா இந்த நேரம் போன் போட்டிருக்க என் ஞாபகம் எல்லாம் இருக்கா?” என்று கிண்டலாக பேசினாள் பூங்கொடி.
“என்னடி இப்படி கேட்டுபுட்ட மாசமா இருக்காளே புள்ள எப்படி இருக்கானு ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசலாம்னு போன் போட்டேன் பொசுக்குனு உன் ஞாபகம் எப்படி வந்துச்சுனு கேட்ப இதுதான் பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லுனு சொல்லுவாங்க” என்றார் புலம்பலாக.
“ம்மா நான் சும்மா ஏதோ சொன்னேன்மா உன்கிட்ட வம்பிழுக்கலாம்னு என்னை கவனிக்க குமுதா அத்தை அரசி உங்க மருமகன் எல்லாரும் இருக்காங்க எனக்கு என்ன கவலை நான் ராணி போல இருக்கேன்” என்றாள் சந்தோசமாக.
“நீ பேசறதை வச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன்டி நேரம் நேரத்துக்கு சாப்பிடு குமுதா அம்மா இருக்காங்கனு தியாவை அவங்க கிட்ட கொடுத்துட்டு தூங்காதே அப்படியே வீட்டுக்குள்ள சின்ன சின்ன வேலையெல்லாம் பார்த்துக்கிட்டே இருடி” என்றார் மகள் மேல் உள்ள அக்கறையில்.
“சரிமா நான் பார்த்துக்குறேன் முல்லையை கவனிச்சிக்கோங்க” என்று போனை வைக்கபோனவளை “ஒரு நிமிசம் இருடி நான் இன்னும் பேசி முடிக்கலை” என்றவரோ “திருவிழாவுக்கு நேரமே வந்துடு நேர்ல வந்து அழைப்பு சொல்லலைனு நினைக்காதே” என்றவுடன்
“அட அப்பா நேத்து மதியம் வீட்டுக்கு திருவிழாவுக்கு நேரமே வந்துடணும்னு அழைப்பு சொல்லிட்டு போனாரு. ராயன் மாமா போன் போட்டு கண்டிப்பா திருவிழாவுக்கு குடும்பத்தோட வரணும்னு சொல்லியிருக்காருமா நான் திருவிழாவுக்கு வராம இருப்பேனா?”
“வாடி வாடி எல்லாம் குடும்பமா சந்தோசமா இந்த திருவிழாவை கொண்டாடுவோம்” என்று மனநிறைவுடன் போனை வைத்தார் அழகு.
ஹாலுக்குச் சென்ற அழகுவோ முல்லை அறைக்கதவு மூடியிருப்பதை கண்டு “இவன் வேலையை காட்டிட்டான் பாரு… டேய் ராயா கதவை திற” என்று சத்தம் போட்டு கதவின் பக்கம் போனவரின் கையை பிடித்துக்கொண்ட நீலகண்டனோ “புருசன் பொண்டாட்டி அறைக்கதவை தட்டுறியே உனக்கு இங்கிதம் இருக்காடி” என்று சண்டைக்கு வந்தார் நீலகண்டன்.
“அட நீங்க வேற முதல் நாள் முல்லை அறைக்குள் ராயன் போய்ட்டு வந்ததுனால அடுத்தநாள் முல்லைக்கு இடுப்பு வலி வந்துடுச்சு இவன் முரட்டு ஆளு அந்த பொண்ணு தாங்கணும்ல உங்களை யாரு அவனை உள்ளே விடச்சொன்னது” என்று நீலகண்டனை முறைத்தார் அழகு.
“அட விடுமா ராயன் பார்த்துப்பான் வா நாம தூங்கலாம்” என்று மனைவியின் கையை பிடித்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டார்.
பாலாஜியோ வேக வேமாக மாடுகளுக்கு தீவனம் காட்டி முடித்து வீட்டுக்குள் சென்றான். நதியாவோ குளித்து விட்டு நைட்டியில் பவுடர் அடித்துக்கொண்டிருந்தவளை கண்டவனோ “நைட்டுக்கு ரெடியாகிட்ட போல சும்மா கும்முனு இருக்கடி உருண்டை” என்று அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.
“உருண்டைனு கூப்பிடாதீங்க மாமா” என்றாள் அவனை முறைத்து.
“அப்படித்தான் கூப்பிடுவேன் உருண்டை” என்று அவளது நைட்டியின் பட்டன்களை விடுவித்தான்.
“அச்சோ இப்ப கொஞ்ச நேரம் பேசலாம்”
“என்னத்த பேசறது வாயும் கையும்தான் பேசணும் வாடி” என்று நதியாவை தூக்கி கட்டிலில் போட்டு லைட்டை அணைத்தவன் நதியாவையும் அணைத்தான் பாலாஜி.
“கொஞ்சம் கூட பொறுமை இல்லையா மாமா நேத்து நைட் கடிச்சு வச்சி சிவந்து போச்சு” என்று காயப்பட்ட இடத்தை காண்பித்தாள்.
“நீயும்தான் கடிச்சிருக்க இங்க பாருடி காலையில உன் அண்ணன் என் கழுத்தை உத்து உத்து பார்க்குறான் எனக்கு வெட்கம் வந்து சட்டை காலரை இழுத்து விட்டுக்கிட்டேன்” என்றவனோ அவளை பேச விடாது இதழில் மூழ்கினான்.
கொஞ்ச நேரத்தில் நைட்டியும் அவனது லுங்கியும் ஒரு ஓரமாய் கிடந்தது. அவனது இதழ்களும் கைகளும் அவளது மேனியில் நாட்டியம் ஆடிக்கொண்டே இருந்தது. “இன்னிக்கு இப்படி” என்று அவளது காதில் ஏதோ இரகசியம் பேச “அய்யே சீ போடா நான் மாட்டேன்” என்றவளை “ஏய் ஏய் நதி ப்ளீஸ்டி” என்று அவன் கேட்டதை வாங்கிக்கொண்டே விட்டான். பெண்மையை மலர வைத்தான்.