Reading view

சீமுர்க் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

  வருமானவரித்துறையிலிருந்து மின்னஞ்சலில் ஒரு நோட்டீஸ் வந்திருந்த நாளில் பெப்டிக் அல்சரால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன்.  அதிகப்படியான தொகையை ரீஃபண்டாகக் கோரியிருப்பதை சரிபார்க்கச் சொல்ல வந்த நோட்டீஸ்.  இவை இரண்டும் போதாதென்று, பதிமூன்றாம் நூற்றாண்டு ஈராக்கைச் சேர்ந்த, மதரஸாவில் அரிஸ்டாட்டிலைப் போதிப்பவரும், மஜ்லிசில் வழக்குகளைத் தீர்த்து வைப்பவருமான கஸ்வினி ஓராண்டுக்கும் மேலாக அனுபவித்து வந்த ‘எழுத்தாளர்களின் முடக்கத்’திலிருந்து அவரை விடுவிக்கும் பொறுப்பையும் எனக்கு நானே ஏற்றிருந்தேன்.  

நான் என் நண்பர்களைப் போல அல்ல.  கல்லூரியில் சேரும் வயதை எட்டிய மகன்களின், மகள்களின் தந்தைகளாகவும்,  ஒவ்வொரு சந்திப்பின் போதும் நிலம், பரஸ்பர நிதி, தங்கம், பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடுகள் செய்திருக்கிறார்கள் என்பதை விவாதிப்பவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  என் நண்பர்களின் மனைவிகளைச் சந்திப்பதை நான் முற்றிலும் தவிர்த்தே வந்தேன்.  அவர்களது அலுவலகங்களில் உடன் பணிபுரியும் விவாகரத்துப் பெற்ற பெண்களின் விவரங்களைச் சொல்லி திருமணத்திற்குப் பேசலாமா எனக் கேட்பார்கள்.  திருமணத்தைத் தவிர்ப்பதற்கு எனக்குப் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. வாழ்வைக் குறித்த எனது பார்வைகளே போதுமானவையாக இருந்தன.  

பதினேழாம் நூற்றாண்டு மெய்யியலாளரான தியோடர் ராவுல் ஹஸ்க்கின் முக்கியமான கூற்று ஒன்றை திருமணத்தைப் பற்றி என்னுடைய நண்பர்கள் பேசும் போது நினைத்துக் கொள்வேன்.

’பரிநிர்வாணத்தை அடைந்தவர்களாலும் கூட வாழ்வின் சலிப்பிலிருந்து தப்ப முடியாது’.   அவர்களுக்கே இந்த நிலை என்றால் குடும்பம் நடத்துகின்றவர்களின் நிலையைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இப்போது கஸ்வீனீயின் கதைக்கு வருவோம்.   

மத்தியகாலத்தில் ஓர் இரவில் கஸ்வீனீ நட்சத்திரங்களுக்குக் கீழே நின்றிருந்தார்.  முன்பைப் போல அவை அவருக்கு வியப்பளிப்பவையாக இல்லை.  தெருவிளக்குகளில் எண்ணையை ஊற்றி பந்தத்தால் நெருப்பு வைத்துப் போகிறான் வசிட் நகரத்தின் விளக்கேற்றி.  இந்த நகரத்தில் எல்லோரும் அவரை கரீப் (அந்நியர்) என்றே கருதுகிறார்கள்.  அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் அல்ல.  அவரது ஊர் ஈரானிலிருக்கும் கஸ்வின்.  செங்கிஸ்கானின் படைகள் நாற்பதாயிரம் பேரைக் கொன்று அந்நகரைக் கைப்பற்றுவதற்கு முன்பே அவர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.   முய்ன் அல்-தின் ஹசன்வாய்ஹ் அவர்களிடம் கல்வி கற்றுப் பெற்ற இஜாசா (கல்வி கற்பிக்கும் அனுமதி) கையில் இருந்தது.  

முய்ன் அல்-தின்னைப் பற்றி ஒன்றைச் சொல்கிறேன்.  பல்வேறு விதமான கட்டுப்பாடுகளின் வழியாக உடலின் தேவையை ஒடுக்கியவர் மட்டுமல்ல அவரால் ஜின்னுகளோடு நேரடியாகப் பேச முடியும்.  

கஸ்வினியின் காலத்தைப் புரிந்து கொள்ள மேலும் ஒன்றைச் சொல்கிறேன்.  காஷ்மீரின் உயர்ந்த மலைகளில் ஜின்னுகளை வாங்கும் விற்கும் சந்தை ஒன்று இருப்பதாகவும், அங்கே சென்றால் பேரம் பேசும் குரல்களை மட்டுமே கேட்க முடியுமே அல்லாமல் யாரையும் பார்க்க முடியாது என்பதை நம்பியவர்கள். யானைகளைச் சுமந்து செல்லும் பறவைகளும், பெண்களை கர்ப்பமடையச் செய்யும் சீனக் கற்களும், தரைதட்டி நிற்கும் கப்பலில் இருப்பவர்களை சிறை பிடித்துச் செல்லும் நாய்த் தலையும் மனித உடலும் உடையவர்கள் வசிக்கும் தீவுகளும் இருப்பதாகவும் சொல்லப்படுவதை நம்மைப் போல மறுக்க மாட்டார்கள்.  இவை போன்ற எல்லாவற்றையும் நாம் திரைப்படங்களில், நாடகத் தொடர்களில் பார்த்து விடுகிறோம்.  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில அகராதியில் ‘ஃபான்டஸி’ எனும் சொல்லிற்கான பொருளை ஒருமுறை வாசித்து விடுங்கள்.  இது போன்ற கற்பனைகளை நாம் நம்பிக்கையிலிருந்து சற்றே இடம் மாற்றி திரைகளில் வைத்திருக்கிறோம்.

மாடியில் நின்றிருந்த கஸ்வீனீ தூரத்தில் டைக்ரிஸ் ஆற்றில் விளக்குகள் ஏற்றி நகரும் படகுகளைப் பார்த்தார்.   விளக்குகள் மட்டுமே நகர்ந்தன.  படகுகள் கண்ணுக்குத் தெரியவில்லை.  ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும் அவை படகுகளில் ஒளிரும் விளக்குகள் என்று.  

மாலை நேரங்களில் அடிவானத்தின் பொய்யான எல்லைக் கோடுகளைக் கண்டு நிற்பது, குளியல் அறையில் நீர்த்தொட்டியில் தன் முகம் கண்டு நிற்பது, உடை அணியும் முன் கண்ணாடியில் மார்பில் நரைத்திருக்கும் முடியில் விரல்களை ஓட்டிப் பார்ப்பது,  வழக்குகளைத் தீர்த்து விட்டு வீடு திரும்பும் போது எதிரே வரும் நபர்கள் வைக்கும் சலாமிற்கு பதில் சொல்லாமல் வருவதென்று அவரிடம் இல்லாத வழக்கங்கள் புதிதாகச் சேர்ந்திருந்தன.  

எப்போதிலிருந்து அவருக்கு இந்த விநோத வழக்கம் வந்ததென்று சொல்கிறேன்.  ஒருநாள் தாடிக்கு சாயம் பூசும் பணியாள் ஹிந்துஸ்தானத்திலிருந்து தருவிக்கப்படும் அவுரியோடு வேறு சில தாவரங்களின் இலைகளைச் சேர்த்து அரைத்த சாந்தை ஒரு கிண்ணத்தில் ஏந்தியிருந்தான்.   கஸ்வினியின் கையில் இஸ் அல்-தின் பின் அல்-அதீரால் தொகுக்கப்பட்ட மங்கோலியப் படையெடுப்பில் இறந்தவர்களுடைய விவரங்களின் தொகுப்பேடு இருந்தது.  பணியாள் சாந்தைக் குழைக்கும் வரை அதைத்தான் அவர் புரட்டிக் கொண்டிருந்தார்.    

மொசூலில் இருக்கும் அல்-அதீரின் மாளிகையில்தான் அவர் அப்படியொரு பதிவேட்டை முதன்முதலாகப் பார்த்தார்.  லாகூர், சாமர்கண்ட், மெர்வ், நிஷாபூர், மொசூல், பாக்தாத், விளாதிமிர் என மங்கோலியர்கள் சூறையாடாத நகரங்கள் இஸ்லாமிய நிலத்திலும் அதற்கு அப்பாலும் இல்லை என்று சொல்லுமளவிற்கு பருவகாலம் விடைபெறுவதைப் போல அவர்களது வெற்றி தடுக்கப்பட முடியாததாக இருந்தது.

மொசூலும், பாக்தாத்தும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.  ஜார்ஜ் புஷ்சின் அமெரிக்கப் படைகளால் மங்கோலியப் படையெடுப்பிற்கு ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகள் கழித்து ஆக்கிரமிக்கப்பட்டவை.  ஆனால் மங்கோலியப் படைகள் போல அமெரிக்கப் படைகள் பெண்களை வன்புணர்வு செய்வதில் ஈடுபடவில்லை.  அது ஒன்றுதான்  பெரிய வேறுபாடு.  

போரைப் பற்றி அதுவும் இப்போது இரஷ்யாவும், யுக்ரைனும் போரிடும் சமயத்தில் ஒன்றைச் சொல்கிறேன், வரலாறு முழுக்க ஆண்களுக்கு போர் வாளின் வடிவத்தில் அல்லது துப்பாக்கியின் வடிவத்தில் தெரிந்தால், பெண்களுக்கு அது அன்றும் இன்றும் ஆண்குறிகளின் வடிவத்தில் மட்டுமே தெரியும்.  பாக்தாத்தின் தெருக்களில் வெட்டி வீழ்த்தப்பட்ட உடல்களின் நடுவே, பெண்கள் மங்கோலியர்களால் வன்புணர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் கதறுவதைக் கேட்டு மங்கோலியக் குதிரைகளின் குறிகளும் விரைத்திருக்குமென்று நினைக்கிறேன்.  இன்பமும் சித்ரவதையும் இணைவதைப் பற்றி என்னால் அதிகமாக விளக்க முடியாததின் காரணத்தை நீங்கள் இக்கதையின் இரண்டாம் பத்தியை கவனமாக வாசித்தவராக இருந்தால் எளிதாக யூகிக்கலாம்.

மையைப் பூசுவதற்கு முன்பு பணியாள் சொன்னான், ‘ஐயா, அந்தப் புத்தகத்தை அப்பாலே வையுங்கள்.  மை அதன் மீது கொட்டிவிடப் போகிறது.   இல்லை என்றால் பின்னொரு நாளில் இந்தப் புத்தகத்தைப் புரட்டும் போது கரும்புள்ளிகள் எப்படி தோன்றினவென்று இரவு முழுக்க நீங்கள் யோசிப்பீர்கள்’.

’எதன் மீதும் நம்முடைய தொடர்பு முதலில் அதன் பெயரில் இருந்துதான் தொடங்குகிறது இல்லையா?’

’இல்லை ஐயா, மன்னிக்கவும் நாம் என்னவென்றே தெரியாமல்தான் சரியான இடத்தைக் கண்டுபிடித்து முலைப்பாலை அருந்தினோம்.  அப்போது நாம் பெயரற்றவர்களாகவும், நாம் அருந்துவதின் பெயரையும் அறியாதவர்களாகவே இருந்தோம்’.

மை காயும் வரை அவன் சொன்னதை யோசித்தார் கஸ்வீனீ.  அவுரியை நாம் அல்-நிலியு என்கிறோம், சமஸ்கிருதத்தில் நீலி என்று சொல்கிறார்கள்.  இன்னும் அவருக்குத் தெரியாத மொழியில் எத்தனை பெயர்களால் அது அழைக்கப்படும் என்றும் யோசித்தார்.  குளியல் தொட்டியில் அமிழ்ந்திருந்த போது ஒரு பதிவேட்டில் வெறும் பெயர்களாக எஞ்சியிருப்பவர்களின் பரிதாபமான வாழ்வை நினைத்தார்.

கல்விமானும், வழக்குத் தீர்ப்பவருமான கஸ்வீனீயைக் காட்டிலும் பணியாள் சரியாகச் சிந்திப்பதாக நீங்கள் கருதிவிடக் கூடாது.   கஸ்வினிலிருந்து இடம்பெயர்ந்த பிறகு, மொசூலில் அவர் கல்வியைத் தொடர்ந்த காலகட்டத்தைப் பற்றிச் சொன்னால் நீங்கள் அவரைக் குறைவாக மதிப்பிட மாட்டீர்கள்.

பாக்தாத்தின் புகழ்பெற்ற நிசாமியா மதரஸாவில் போதித்தவரான கமால் அல்-தீன் குரானிலும், ஹதீத்திலும் தேர்ந்தவர் மட்டுமல்ல, தர்க்கம், இயற்பியல், மீஇயற்பியல், யுக்லிடின் ஜியோமிதி, தாலமியின் வானியல், அரபு இலக்கணம், கவிதை, வரலாறு இவற்றைத் தானாகவே கற்றவர்.   அது போக கிறித்தவர்களின் காஸ்பெல்களில், யூதர்களின் டோராவிலும் சந்தேகங்களைத் தீர்ப்பவராகவும் இருந்தார்.

கமால் அல்-தீனின் கணித அறிவைச் சோதிக்கும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்தது.  இரண்டாம் ஃப்ரெட்ரிக் டாமஸ்கஸ் சுல்தானாக இருந்த நாஸிர் அல்-தீனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  கணிதத்தின் அடிப்படையில் வட்டத்தை எவ்வாறு சதுரமாக்குவது என்று அதில் கேட்டிருந்தார்.  டாமஸ்கஸில் இருந்து சிரியாவின் கல்வியாளர்களிடம் அந்தக் கேள்வி வந்தது.  அவர்களால் வட்டத்தைச் சதுரமாக்கும்  கணிதக் கோட்பாட்டை எழுத முடியவில்லை.  அந்தக் கடிதம் சிரியாவிலிருந்து, மொசூலில் இருந்த கமால் அல்-தீனின் கைகளை அடைந்தது. அவர் அளித்த கணித விளக்கத்தைக் கண்டு டாமஸ்கஸில் சுல்தான் கண் விரிந்தார்.  

 

வாசனைத் திரவியம் பூசிய ஆடையை அணிந்து மாடிக்கு வந்த கஸ்வீனீ டைக்ரிஸ் ஆற்றில் தெரிந்த நகரும் ஒளிப்புள்ளிகள் முற்றிலும் பார்வையிலிருந்து மறைந்த பின்பு, கீழே இறங்குவதற்காகத் திரும்பினார்.

’ஐயா, ஐயா இங்கே பாருங்கள்’

கையில் பொதி ஒன்றை வைத்திருந்த காஸிம், அதைத் தொட்டுக் காட்டி, அவரிடம் அதனை ஒப்படைக்கும்படி நகரத் தலைமை நீதிபதி அவனை அனுப்பியதாகச் சொன்னான்.  அந்தப் பொதியில் இருந்தவை வேறு ஒன்றுமல்ல, புத்தகங்கள்.  கூடவே நீதிபதி ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

’நீங்கள் கேட்டபடி இபின்- சினாவின் அனைத்து நூல்களையும் அபாஹ்ரீயின் ஹிதாயத் அல்-ஹிக்மாவையும் (மெய்யியலுக்கான வழிகாட்டி), அல்-காஸிலியின் கிமியே சாதத்தும் (மகிழ்ச்சியின் இரசவாதம்), அல்-பெருனி மொழிபெயர்த்த ‘பதஞ்சலி யோக சூத்திர’த்தையும் அனுப்பியிருக்கிறேன்.  என்னிடம் இருப்பவை மிகத் தெளிவாகவும், அழகாகவும் எழுத்துக்களைத் தீட்டக் கூடிய, அதிகக் கூலி வாங்கும் சித்திரவேலை எழுத்துக்காரர்களால் நகலெடுக்கப்பட்டவை.  ஆகவே வாசித்து முடித்ததும், மறக்காமல் திருப்பிக் கொடுத்து விடவும்’

அந்தக் கடிதத்தின் பின்பகுதியில் அவர் இவ்வாறு எழுதிக் கையொப்பமிட்டார் ;

’என்னிடமிருந்து பெறப்பட்டவை திரும்ப ஒப்படைக்கப்படும் போது’.  காஸிமின் கையில் கடிதத்தையும், இரண்டு நாணயங்களையும் திணித்து அவனுக்கு விடைகொடுத்தார்.

புத்தகங்களைப் பார்க்கையில் அவர் மலைப்பாக உணர்ந்தார்.  அவருடைய காலம் எவ்வளவு குறுகியதென்று அவருக்கு காட்டும் வண்ணம் கையில் வந்திருக்கும் புத்தகங்கள்.  மனித மூளையின் கொள்ளளவை இபின்-சினாவைக் கொண்டே அளவிட முடியும்.  எதைத்தான் அவர் எழுதாமல் விட்டிருக்கிறார்.  உளவியல், அரசியல், ஒழுக்கவியல், அன்பு, மருத்துவம் என அவர் மனதிலிருந்து வழிந்த புத்தகங்களில் நிறைந்திருப்பவை கஸ்வீனீயைத் திகைப்படையச் செய்தன.  அவர் எழுத முனைந்திருக்கும் நூலின் முதல் பகுதியை சில வாரங்களுக்கு முன்புதான் தொடங்கியிருந்தார்.  விண்ணுலகைப் பற்றிய பகுதி பாதியில் நிற்கிறது.  மேலும் அதைத் தொடரவே அவர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களோடு இவற்றையும் நீதிபதியிடம் கோரிப் பெற்றிருந்தார்.

இரவுத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக நீதிபதி அவருக்குக் கொடுத்திருந்த புத்தகங்களை பத்திரமாக, அவருடைய பேரக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்தார்.  தொழுகை முடிந்து வீடு திரும்பியதும் இபின்-சினாவின் நூல் ஒன்றை அவர் வாசிக்கத் துவங்கினார்.  அலுவலகம் முடிந்து வழியிலேயே இரவு உணவை சாப்பிட்டுவிட்டு என்னுடைய வீட்டிற்குத் திரும்பி உறக்கம் வரும் வரையிலும் அவரைப் போலத்தான் நானும் புத்தகங்கள் வாசிப்பேன்.

அவர் எழுதி வந்த நூலின் பெயர் ‘அஜாயிப் அல்-முக்லுகட் வா கராயிப் அல்-மவ்ஜூதாத்’ (வியப்பிற்கு உரியவையும், அரிதானவையும்).  கற்பனையிலிருந்து அதை அவர் எழுதவில்லை.  அவர் கேட்டவை, சேகரித்தவை, வாசித்தவை, அவருடைய இடப்பெயர்வில், பயணங்களில் பார்த்தவற்றையே எழுதினார்.  

முதல் பகுதி : விண்ணுலகின் அங்கங்களான கோள்களின் சுழற்சி, நட்சத்திரங்கள், இராசி மண்டலங்கள், சூரிய சந்திர வலம், வால்நட்சத்திரங்கள்

இரண்டாம் பகுதி : குவாஃப் மலையால் சூழப்பட்டிருக்கும் இந்த நிலத்தில் வசிக்கும் விநோத மனிதர்கள், மருத்துவத் தாவரங்கள், உயிரினங்கள், தீவுகளை விவரிப்பவை.  

மூன்றாவது பகுதி : நிலத்தினடியே இருக்கும் உலோகங்கள், அவற்றின் பயன்கள்

அந்த இரவிலிருந்துதான் கஸ்வீனீ ‘எழுத்தாளர்களின் முடக்கத்திற்கு’ ஆளானார்.  

 

 

மேஷ இராசியில் படையெடுத்தால் வெற்றி நிச்சயமென்று ஹுலேகுவிற்கு (செங்கிஸ்கானின் பேரன்) அறிவுறுத்தியவர்கள் இஸ்லாமிய சோதிடர்கள்தான்.  பதிமூன்று நாட்கள் பாக்தாத்தை முற்றுகையிட்டு அந்த நகரத்தை அவனுடைய படைகளால் முடிந்த அளவு சிதைத்தான்.  அந்த நகரத்திலிருந்த முப்பது நூலகங்களில் நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட நூல்களை மங்கோலியர்கள் தீயிட்டுக் கொழுத்தினார், டைக்ரிஸ் ஆற்றில் தூக்கி எறிந்தனர்.  

பாக்தாத்தைத் தொடர்ந்து வசிட் நகரத்தையும் அவர்கள் முற்றுகையிட்டார்கள்.  இரண்டாம் முறையாக அவர் போரின் கொடுமைகளில் இருந்து தப்பினார்.  சில நாட்கள் நகரத்திற்கு வெளியே தங்கியிருந்து அங்கு திரும்பியதும் வேகவேமாக அவருடைய புத்தகத்தை எழுத முனைந்தார்.  கவனக் குறைவாக வாசிக்கும் வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.  கஸ்வீனீ இளைஞனாக இருந்த போது செங்கிஸ்கானுக்குத் தப்பினார், நடுவயதைக் கடக்கும் போது அவனுடைய பேரனிடமிருந்து தப்பினார்.  அவர் வாழ்ந்த நகரங்கள் மட்டுமே மாறியிருந்தன.  

இபின்-சினாவின் நூல்களைத் தொட்ட அந்த நாளில் இருந்து அவரால் எழுத முடியாமல் போனது. அப்பாசித்துகள், உம்மாயித்துகள், சுல்தான்களின் ஆளுகைக்கு உட்பட்டும், பாரசீகப் பேரரசின் கிழக்கு எல்லை வரையிலும் பரவியிருக்கும் பிலாத் இஸ்லாமில் (இஸ்லாமிய நிலங்கள்) மதரஸாக்கள் பெருகி நூல்களுக்கான தேவை மிகுந்திருக்கிறது.  காகிதம் தயாரிப்பவர்கள், படியெடுப்பவர்கள், விளக்கம் சொல்பவர்கள், மைக்கூடுகள், எழுதுகோல்களை விற்பவர்களும் விற்பனையை மனதில் கொண்டு மதரஸாக்களைச் சுற்றிக் குடியேறினர்.  அதிகாரிகளும், வியாபாரிகளும், சுல்தான்களும் கூட அதிகளவில் நூல்களில் ஆர்வம் செலுத்தினர்.  

கஸ்வீனீ யோசித்தார்;

இறைக் கோட்பாடுகளை விளக்குபவர்கள், இலக்கணங்களைக் கற்றவர்கள், மருத்துவர்கள், மெய்யியலாளர்கள், கவிஞர்கள், வியாபாரிகள், நாடோடிக் கதை சொல்லிகள், சோதிடர்கள், சூஃபி ஞானிகள், வானியலாளர்கள், கணித மேதைகள் இவர்கள் எல்லாவற்றையும் கற்களைப் போல உறுதியாக விளக்கிய பிறகு, நான் சந்தேகம் அடையவும், தெளிவைப் பெறவும் என்ன இருக்கிறது. உலகின் மர்மம் இன்னும் நீங்காதிருப்பதைப் போலவும் அதை அவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் போலவும் புதிதாக எழுத வரும் ஒவ்வொரு எழுத்தாளரும் கருதிக் கொள்கிறார்.  நான் செய்ய நினைத்திருக்கும் பணியின் மதிப்பும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.  இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து யாருடைய மேசையிலாவது அது அமர்ந்திருக்குமா? அல்லது இன்னொரு போர் வந்து எல்லா நூல்களையும் எரித்தும், ஆறுகளிலும் வீசிவிடுமா?

கலங்கிய குட்டையைப் போல என் மனம் மாறாது ஜிப்ரயீல் காப்பாராக.  

 

ஒவ்வொரு நாளும் இந்த சந்தேகம் எழுகையில்தான் அவர் கண்ணாடியின் முன்னும், குளியல் தொட்டியில் தன் முகம் கண்டும் உறைபவராகவும், எதிரே வருபவர்கள் வைக்கும் சலாமிற்கு பதில் சலாம் வைக்காமல் வருபவராகவும் மாறினார்.

இந்தக் கேள்வி எனக்கே இருக்கிறது.  

 

 

ஜுவாதானோ புரூனோவின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது, தான் உண்மையென்று நம்பும் ஒரு கருதுகோளுக்காக ஒரு மனிதர் தீயிட்டுக் கொளுத்தப்படவும் தயாராக இருப்பாரா? என்று ஒரு கேள்வி தோன்றியது.  நிலம், பெண், செல்வம் இவைகளுக்காக போரிட்டு இறப்பவர்களை என்னால் எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் உண்மைக்காகவும், அறிவுக்காகவும் உயிரை விடுபவர்கள் தீர்க்க முடியாத புதிர்தான்.  இவை இரண்டும் உயிரைவிட மேலானவையா? கண்ணுக்கே தெரியாத அணுக்களைப் பற்றிய அவருடைய கோட்பாடுகளுக்காக கிறித்தவர்களால் எரிக்கப்பட்டவர் அவர்.   அவரைக் கொன்றவர்கள், ஆயிரத்து அறநூறு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கருத்துகளுக்காகத்தான் ஒரு பகல்வேளையில் இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டார் என யோசித்திருந்தால் அவரைக் கொல்வதற்கு முயன்றிருப்பார்களா?. (கணிதக் குறிகளில் கூட்டல் குறியிலிருந்து மட்டுமே மனிதர்களைத் தண்டிப்பதற்கான சிலுவையின் அமைப்பை உருவாக்க முடியும்.  வேறு எந்தக் கணிதக் குறிகளின் வடிவத்திலும் மனிதர்களைக் கொல்லும் அமைப்பை அமைக்க முடியாது). தொடர் கேள்விகளால் குழம்பிப் போய், எரியும் குழல்விளக்கை அணைக்காமல் வெளிச்சத்திலேயே தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் வாகனக் கடல், மனிதக் கடல் இரண்டையும் கடந்து என்னுடைய பட்டயக் கணக்காளர் நண்பனைச் சந்தித்தேன்.  அவன் வருமான வரி அறிக்கையை திருத்திப் பதிவேற்றினான்.  பின்பு குடல்நோய்களுக்கான மருத்துவரையும் பார்த்தேன்.  சில மருந்துகளைப் பரிந்துரைத்து, உணவகங்களில் சாப்பிடுவதை குறைக்கும்படி சொன்னார்.  கிளினிக்கில் டோக்கன் கொடுக்கும் பெண் கனகாம்பரம் சூடியிருந்தாள்.  தமிழ்நாட்டில் இப்போது இந்த வழக்கம் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது.  கனகாம்பரச் செடிகளை வீடுகளில் வளர்ப்பவர்களும் கிடையாது.   மீண்டும் வாகனக் கடல், மனிதக் கடல் இரண்டையும் கடந்து வீடு வந்தேன்.

என்னுடைய வீடு அமைதியாக இருந்தது.  எப்படிப்பட்ட அமைதி என்றால் ஒரு பொருளைப் போல அதைக் கையில் எடுத்து வேண்டுகிற இடத்தில் வைத்து விடுகிற அளவிற்கு.  மின்விளக்குகளைப் போட்டேன்.  வரவேற்பறை, உணவருந்தும் மேசை, துணிகள் வைக்கும் வார்ட்ரோப்பின் கீழடுக்கு, படுக்கை என எங்கேயும் புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.  எனது வீட்டின் அமைதி வாசிப்பினால் உருவாகும் அமைதியினால் ஆனது.  சில நேரங்களில் வசீகரமாக இருக்கும்.  மீதி நேரங்களில் கதவைத் திறந்ததும், ஒற்றைத் தலைவலி அதிகமாகும் போது கண்ணுக்கு அருகே தெரியும் வெள்ளிப் புழுக்களைப் போல புத்தங்களிலிருந்து வழியும் சொற்கள் குழப்பமாக நெளியும்.

 

கஸ்வீனீயின் முடக்கத்தையும், என்னுடைய வீட்டின் நிலைமையையும் சற்றே தள்ளி வைத்துவிட்டு நாம் அறிவின் கேள்விக்கு வருவோம்.   கதையை விட்டு வெளியே ஒரு சில வரிகளை வாசிக்குமளவிற்கான பொறுமையுடையவர் நீங்கள் என்பதை இவ்வளவு தூரம் நீங்கள் இக்கதையை வாசித்ததிலிருந்து நம்புகிறேன்.  பெரும்பாலும் நள்ளிரவில், அதிலும் குறிப்பாக என் அண்டை வீட்டிலிருக்கும் ஒரு பெண்மணி பாத்திரங்களை கழுவி முடித்ததும் (சில நாட்களில் இரவு பதினோரு மணிக்குக் கூட அவள் வீட்டிலிருந்து குக்கர் அல்லது மிக்சி சத்தம் கேட்கும்.  எனினும் நான் அவளைப் பார்த்ததேயில்லை), காத்திருந்ததைப் போல எழும் அமைதியில் எதையாவது என்னுடைய மனம் சிந்திக்கும்.  நான் சிந்தனையின் கட்டுப்பாட்டில் இருப்பேன்.  

எனது இரவும் கூட.

லூயி கரோல், இவ்வாறு இரவில் படுக்கையில் படுத்தவாறு சிந்திப்பவர்கள் எளிமையாக குறிப்புகளைப் பதிவு செய்ய ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்.  தவற விடக் கூடாதென நான் கருதுபவற்றை சிரமம் கருதாது எனது செல்பேசியில் இருக்கும் குரல் பதிவு செயலில் பதிவு செய்வேன்.  அதிலிருந்த ஒரு குரல் பதிவில் இருந்துதான், அறிவை நான் எவ்வாறு பார்க்கிறேன் எனச் சொல்லப் போகிறேன். வெறும் இரண்டே வரிகள்.

ஃபிரான்ஸிஸ் பேகன் சொன்னார்;

’அறிவே அதிகாரம்’.

என்னைப் பொறுத்தவரையில் ‘அறிவு, நினைவுகள் சொல்லும் ஒரு கதை’.  

நீங்கள் இதை விளக்கச் சொன்னால் என்னால் முடியாது.  அதற்கான விளக்கத்தைப் பதிவு செய்வதற்குள்ளாக, ஃபிரானிஸிஸ் பேகனோடு ஓர் உரையாடலை நிகழ்த்தி விட்ட மகிழ்ச்சியில் உறங்கி விட்டேன்.

தலைமுடி உதிர்வதைப் போல நாட்கள் நகர்ந்தன.   கஸ்வினியை விடுவிக்கும் எண்ணம் எனக்கு எழவில்லை.  ஏறக்குறைய வாசிப்பதையும் நிறுத்திவிட்டேன். எவ்வளவு வீணான வாழ்க்கை வாழ்கிறேன் என்று நினைத்தேன்.  மத்திம வயதில் ஏதோவொரு தருணத்தில் இனியும் வாழ்வைப் புதிதாகத் தொடங்க முடியாது என்கிற கட்டத்தை அடைகிறோம்.  அன்றிலிருந்து நமக்கு முன்பு பிறந்தவர்களின் மீதும், பின்பு பிறக்கப் போகின்றவர்களின் மீதும் எரிச்சல் உண்டாகத் துவங்குகிறது.   கஸ்வீனீயைப் போலவே நானும் கண்ணாடியின் முன் உறைபவனாக மாறியிருந்தேன்.  உலகின் கண்ணாடிகளில் சற்று நேரம் தெரியும் வெற்றுப் பிம்பமே அது. பல நாட்களுக்கு (அல்லது எட்டு நூற்றாண்டுகளாக?) வெறுமனே அலுவலகம் சென்று வரும் ஒரு ஹுமானய்டைப் போலவே இருந்தேன்.  ஒரு சில நாட்களில் சித்திர எழுத்து வேலையை நானாகவே பயில முயன்றேன்.  அதற்கெனவே தயாரிக்கப்படும் காகிதங்கள், பேனாக்கள், மைக்கூடு, பிரஷ்கள், வர்ணங்கள் என தேவைப்படும் அனைத்தையும் வாங்கினேன்.  ஓரளவு பயின்ற பிறகு நூற்றி அறுபத்தைந்து ஜிஎஸ்எம் காகிதத்தில் சீமுர்க் பறவையை வரைய முனைந்தேன்.  மெச்சத்தக்க அளவிற்கு இல்லை என்றாலும், மோசமானதாக வரைந்திருக்கவில்லை.  சீமூர்க் தலையை உயர்த்தி நின்றது.

என்று அந்தக் கனவை கண்டேன் என்பது என் நினைவில் இல்லை.

கஸ்வீனீ வசிட் நகரின் கடைத்தெருவில் நின்றிருந்தார்.  அவருடைய தாடி நன்கு வெளுத்திருந்தது.  அடிமைகளை, தானியங்களை, பழங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே மாதுளம் பழம் விற்கும் கடைக்கு வந்தார் (பேரம் பேசுகிறவர்கள், சிறுசிறு சண்டையில் ஈடுபடுபவர்களின் சத்தத்தால் சந்தை களைகட்டியிருப்பது கஸ்வினிக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம்).  

‘கஸ்வீனீ ஐயா ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்?’

        ‘ஓ வாசிம் நலமா? அது வேறு ஒன்றுமில்லை.  களைப்பு. கூடையில் இருப்பவை எங்கேயிருந்து தருவிக்கப்பட்டவை?’

      ’அது கிடக்கட்டும் நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.  உங்கள் முகத்தில் இவ்வளவு சோர்வை நான் ஒருநாளும் கண்டதில்லையே’

(யாராவது அப்படிக் கேட்கமாட்டார்களா எனக் காத்திருந்தவரைப் போல), இபின்-சினாவின் புத்தகத்தைத் தொட்ட நாளில் இருந்து தனக்கு ஏற்பட்ட முடக்கத்தையும், அதனால் எழுந்த சோர்வையும் அவனிடம் விளக்கினார்.

‘ஐயா, விதைகளை விழுங்கிய ஞானி ஒருவரின் கதையைச் சொல்கிறேன். உங்களின் மனதிற்கு அது ஆறுதலாக இருக்கலாம்’.

 

அவன் சொன்ன கதை:

 

எந்த ஒட்டகத்தாலும் அதன் முதுகில் அமர்ந்து பயணிப்பவர்களின் பெயரைத் தெரிந்துகொள்ள முடியாது. தன்னையும் ஒட்டகத்தைப் போலவே கருதிக் கொள்ளும் ஞானியொருவர், அவரும் தனக்குப் பெயர் வைத்துக் கொள்ளவில்லை, அவருக்குப் பெற்றோர் வைத்த பெயரையும்

வெளியே சொன்னதில்லை.  தான் ஓர் ஒட்டகமென்றும், இந்த உலகுதான் அவர் முதுகில் அமர்ந்திருக்கும் பயணி என்றும் சொல்வார். ஒரு நெடும்பயணத்தின் இடையே தன்னையும் அறியாமல் அந்த ஞானி ஒட்டகத்தின் மீது அமர்ந்த வண்ணமே தூங்கிவிட்டார்.  அந்த ஒட்டகம் பகலென்றும் இரவென்றும் குளிரென்றும் கோடையென்றும் பாராமல் நடந்து நடந்து எல்லாப் பருவகாலங்களையும் கடந்து சோர்ந்து போய் ஓர் ஆழமான குளத்தின் அருகே நின்றது. தன் முதுகில் அமர்ந்திருப்பவரைக் கவனத்தில் கொள்ளாமல், குளத்தருகே சென்று தண்ணீர் அருந்துவதற்காக முன்னங்கால்களை மடித்துக் குனியவும், அந்த ஞானி குளத்திலே விழுந்து விட்டார். குளத்திலே விழுந்து தூக்கம் தெளிந்த ஞானி தான் எப்படி குளத்திலே விழுந்தோமென்று தெரியாமல் அவசர அவசரமாக நீந்தி குளத்திலிருந்து வெளியேறினார்.  தான் நீரில் மூழ்கியதைப் போலவே இந்த உலகும் ஒரு நாள் நீரில் மூழ்குமென்று சிந்தித்த அந்த ஞானி, எப்படியாவது இந்த உலகைக் காப்பதென்று முடிவு செய்தார்.  தான் நீந்தி வெளியே வந்ததைப் போலவே இந்த உலகும் மூழ்கிய பின்னும் வெளியே வரும் என்று நம்பினார். அப்படித் திரும்ப வரும் உலகில் தாவரங்கள் எங்கேயிருந்து முளைக்கும் என்று யோசித்தார்.  வயிறுமுட்ட நீரைக் குடித்த ஒட்டகத்தில் மீண்டும் ஏறி எட்டுத் திசைகளுக்கும் சென்று கண்ணிற்குத் தென்படும் தாவரங்களின் விதைகளைச் சேகரித்தார்.  நாம் தற்போது தனித்தனியாகப் பெயரிட்டு அழைப்பதைப் போல அல்லாமல், அவர் விதைகளை இன்னதென்று அழைக்காமல் ஒவ்வொன்றையும் சேகரித்தார். சேகரித்த விதைகளை சிறுசிறு துளைகளிட்டு அவர் உடலெங்கும் சேமித்தார்.  அவரிடம் பை கூடக் கிடையாது.  ஆடைகளும் இல்லை.  மேலே ஒரு தாடி, கீழே ஒரு தாடி.  அவருடைய உடலில் இடமில்லாது போனதும், ஒட்டகத்தின் உடலில் அதன் தடித்த தோலினடியே சேமிக்க ஆரம்பித்தார்.   அவர் எதிர்பார்த்ததைப் போல உலகே மூழ்குமளவிற்கு மழை பெய்யவும், மீதமிருக்கும் விதைகளை தனது வயிற்றிலும், ஒட்டகத்தின் வயிற்றிலும் நிரப்பிய பின் அமைதியாக ஒரு பாறையின் மேல் அமர்ந்தார்.  நீர் உயர, ஒட்டகம் நீந்தி வெளியே வர முனைந்தது. ஆனால் அதனால் காற்றைச் சுவாசிக்கும் அளவிற்கு நீருக்கு வெளியே தலைநீட்ட முடியவில்லை. ஒட்டகம் இறப்பதற்கு முன்பாகவே அவரும் இறந்தார்.  பறவைகள் மட்டுமே தப்பின. அவற்றிலும் பல தொடர்ந்து பறக்க முடியாமல் சோர்ந்து இறந்தன. வெள்ளம் வடிந்து, எஞ்சியிருந்த பறவைகளுக்கு சேறும் சகதியுமாகக் காட்சியளித்த நிலம் தெரிந்தது.  கூடவே உடல் வெடித்து இறந்து போயிருந்த ஒட்டகமும் ஞானியும் தெரிந்தார்கள். அவர்களது உடலில் சேகரித்து வைத்திருந்த விதைகள் ஒவ்வொன்றாக முளைக்கத் துவங்கின. நெடுங்காலத்திற்கு பறவைகள் கனிகளைத் தின்று விதைகளை நிலமெங்கும் விழச் செய்து காடுகளை முளைக்க வைத்தன. இங்கே முளைத்திருக்கும் செடிகளும், மரங்களும் கூட அவருடைய வயிற்றிலிருந்தோ அல்லது ஒட்டகத்தின் வயிற்றிலிருந்தோ முளைத்த விதையின் சந்ததிகளாக இருக்கலாம்.

 

கதையைச் சொல்லி முடித்ததும் கஸ்வீனீ கேட்டார் (என் நினைவு சரியாக இருக்குமானால் அவர் முகத்தில் சோர்வு அகன்றிருந்தது)

’இந்தக் கதை உனக்கு யார் சொன்னது? எங்கு கிடைத்தது?’.

’கடைத்தெருவில், வியாபாரம் இல்லாத நேரங்களில் நாங்கள் சொல்லிக் கொள்ளும் கதைகளில் ஒன்றே இது’.

’ஐயா, ஒருவேளை இந்தக் கதையை நீங்கள் எழுதி யாராவது படியெடுத்தால் பிழை எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.  விதைகளை விழுங்கிய ஞானியின் கதை என்பதற்குப் பதிலாக விரைகளைத் தின்ற ஞானி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டு விடப் போகிறார்கள்.  என்னதான் இந்த இரண்டிலிருந்தே உலகம் பெருகியிருந்தாலும் பொருள் மாறிவிடுமல்லவா’.

 

அவனிடமிருந்து அவசரமாக விடைபெற்று வீடு நோக்கி நடந்தார்.  வீடு திரும்பி இபின்-சினாவின் நூல்களை வாசிக்கத் துவங்கினார்.   அவருடைய புத்தகம் எழுதி முடிக்கப்படும் வரை அவர் ஒருநாளும் சோர்வாகவும், பொருளற்றும் உணரவில்லை.  

 

 

 

அண்டை வீட்டுப் பெண் மிக்ஸி அரைக்கும் சத்தம் கேட்டு நான் கனவிலிருந்து கண் திறந்தேன்.   ஒருவழியாக கஸ்வீனீயின் முடக்கத்தை தீர்ப்பதற்கான யோசனை கிடைக்கவும், மத்தியகாலத்தில் ஓர் இரவில் எனத் தொடங்கி பாதியில் நிறுத்தியிருந்த கதையை எழுதி முடித்தேன்.  

 

இதை அசட்டுத்தனமாகக் கூட நீங்கள் கருதலாம், எனக்கென்னவோ தோன்றுகிறது, நான் வரைந்திருந்த சீமூர்க் பறவைதான் நான் கண்ட கனவை தன் அலகில் கவ்விக் கொண்டு எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து, வசிட் நகரில் ஒரு கடைக்காரனுக்கும், கஸ்வீனீக்குமான உரையாடலாக மாற்றியிருக்குமென்று.

***

– பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

The post சீமுர்க் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ் appeared first on வனம்.

  •  

மனிதனுக்கு சாத்தியமாகிற ஞானப்பரிணாம உளவியல்

Psychology of Man’s possible evolution

 

உளவியலை பற்றி பேசவேண்டும். ஆனால், நான் சொல்லும் உளவியல், நீங்கள் இந்த பெயரில் அறிந்து வைத்திருப்பதற்கு முற்றிலும் வேறுபட்டது என்பதை முன்னதாகவே எச்சரித்து விடுகிறேன்.

தொடங்குவதற்கு முன்னால், கிட்டதட்ட வரலாற்றில் இப்போதுள்ள அளவிற்கு உளவியலானது இவ்வளவு கீழ்நிலையில் இருந்ததில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். உளவியல், அதன் தொடக்க கால தொடர்பு அறுந்து, அதன் அர்த்தங்களை இழந்துவிட்டது. இதனால், உளவியல் என்பது என்ன? அவை கற்றுணர்த்துவது என்ன? என்பதை வரையறை செய்யக்கூட முடியாத நிலை இப்போதுள்ளது.

உளவியல் சில சமயங்களில் “புதுமையான அறிவியல்” என்றழைக்கப்படுகிறது. இது தவறு. உளவியல் மிகத்தொன்மையான அறிவியல். துரதிர்ஷ்டவசமாக, அதன் மிக முக்கியமான அம்சங்களில் அது ஒரு மறக்கப்பட்ட அறிவியல்.

உளவியலை எவ்வாறு நாம் வரையறுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள, நவீன காலம் தவிர்த்து உளவியல் எவ்வாறாக இருந்து வந்துள்ளது என்பதை அவசியம் உணர வேண்டும். உளவியல் எப்போதும் அதன் அசலான பெயரில் இருந்ததில்லை. ஒன்று அல்லது பல காரணத்திற்காக உளவியல் எப்போதுமே தவறான அல்லது இரகசிய போக்குடனே இருந்து வந்துள்ளது. அதாவது, மதம், அரசியல் அல்லது ஒழுக்க நன்னெறி சார்ந்த வெவ்வேறு அடையாளங்களோடு, எளிதில் அடையாளம் காணமுடியாதபடி பயன்படுத்தப்பட்டது.

 

பல்லாயிரம் வருடங்களாக உளவியல், தத்துவத்தின் கீழ் இருந்தது. இந்தியாவில் அனைத்து விதமான யோகங்களின் சாரம் உளவியல் தான். அவை ஆறு தத்துவ தரிசனங்களாக விவரிக்கப்படுகிறது. சூஃபி போதனைகளும் உளவியல் ரீதியானைவை தான். ஒருவிதத்தில் ஓரளவிற்கு மதம் சார்ந்ததாகவும் ஓரளவு மீபொருண்மையானதாகவும் கருதப்படுகிறது. ஐரோப்பாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலகட்டங்களில் கூட, உளவியல் தொடர்பான பல படைப்புகள் தத்துவம் என்று குறிப்பிடப்படுகின்றன.  தத்துவத்தின் உட்பிரிவுகளான தர்க்கம், அறம், அறிதிறன், அழகியல், மனித மனத்தின் அல்லது புலன்களின் செயல்பாடுகளை குறித்தபோதிலும், உளவியல் தத்துவங்களை விட தாழ்ந்ததாகவும் மற்றும்  மனித இயல்பிற்கு அதிக முக்கியத்துவமில்லாத பக்கங்களோடு, கீழான நிலைகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.

 

தத்துவம் என்ற பெயரில் அதன் இருப்புக்கு இணையாக, மதத்தோடு நீண்ட காலமாக இணைப்பிலுள்ளது. இதனால், மதமும் உளவியலும் ஒரே மாதிரியானவை அல்லது மதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பின் உண்மைநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்று அர்த்தமில்லை. ஆனால், நாமறிந்த ஒவ்வொரு மதமும் நிச்சயமாக உளவியல் போதனைகளாகவும் பல பயிற்சிகளுடன் இணைக்கப்பட்டதாகவே வளர்ந்திருக்கிறது. எனவே மதத்தின் ஆய்வுகள் பெரும்பாலும்  உளவியல் ஆய்வுகளை அதனுள் உள்ளடக்கம் கொண்டவையாக இருக்கின்றன.

 

பல்வேறு நாடுகளின் மரபுவழி மத இலக்கியங்களில் உளவியல் பற்றிய சிறந்த படைப்புகளும் உள்ளன. தொடக்ககால கிருத்தவத்தில் “ஃபிலோகாலியா” என்ற பொதுப் பெயரில் வெவ்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களின் தொகுப்புகள் இருந்தன. கிழக்கு தேவாலயத்தில், குறிப்பாக துறவிகளின் பயன்பாட்டிற்காக, நம் காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

உளவியல், தத்துவம் மற்றும் மதத்துடன் இணைக்கப்பட்ட காலத்தில், அது கலை வடிவத்திலும் இருந்தன. கவிதை, நாடகம், சிற்பம், நடனம், கட்டிடக்கலை கூட உளவியல் அறிவைப் பரப்புவதற்கான வழிமுறையாக இருந்தன. உதாரணமாக, கோதிக் கதீட்ரல்கள்(Gothic Cathedrals) உளவியல் தொடர்பில் அதன் முக்கிய பொருளில் இருந்தன.

தத்துவத்திற்கு முந்தைய பழங்காலங்களில், இப்போது நாம் அறிந்திருக்கும் மதமும் கலையும் தனி வடிவம் பெற்றிருந்தது, உளவியல், எகிப்து மற்றும் பண்டைய கிரேக்கத்தின் மர்மங்களும் அதன் புதிர் சார்ந்த வடிவமாக இருந்தன.

 

பின்னர், மர்மங்கள் மறைந்த காலத்திற்கு பின், உளவியல் என்பது குறியீட்டு போதனைகளின் வடிவத்தில் இருந்தது. அவற்றில் சில மதங்களுடன் இணைக்கப்பட்டன. சில இணைக்கப்படாதவைகளான, ஜோதிடம், ரசவாதம், மாந்திரீகம் மற்றும் நவீனமான மேசன்ரி, அக்கல்ட், ப்ரம்மஞானம் போன்ற துறைகளோடு உளவியல் இணைப்பிலிருந்தது.

 

இங்கு அவசியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில், இவ்வாறு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இருக்கும் உளவியல் அமைப்பை, அதன் கோட்பாடுகளை இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம்.

 

  1. முதலாவதாக, மனிதனின் உத்தேசிப்பில் அல்லது தன் கற்பனையால் மனிதனை கண்டுக்கொள்ளும் உளவியல் அமைப்பு. அதாவது, விஞ்ஞான உளவியல்.

 

  1. இரண்டாவது, மனிதன் என்னவாக இருக்கிறானோ, எவ்வாறாக பார்க்கப்படுகிறானோ அந்தப்பார்வையில் அல்லாமல், மனிதன் என்னவாக “ஆக” முடியும் என்கிற பார்வையில் அறிய முற்படும் அமைப்பாகும். அதாவது, அவனால்  சாத்தியப்படும் உளபரிணாமத்தின் பார்வையில் ஆக முடிகிற உளவியல்.

 

யதார்த்தத்தில் மேற்சொன்ன இரண்டாவது அமைப்பே அசலானவை. இதுவே பழைமையானதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறக்கப்பட்ட உளவியலின் தொடக்கத்தை விளக்கவும் முடியும்.

 

“மனிதனின் கற்றுணர்தலை” தன்னால் சாத்தியப்படும் உளப்பரிணாமத்தின் பார்வையில் புரிந்துகொள்ளும்போது தான் உளவியல் என்றால் என்ன? எனும் கேள்விக்கான பதிலை புரிந்துகொள்ள முடியும். உளவியல் என்பது மனிதனுக்கு சாத்தியமான உளப்பரிணாமத்தின் கொள்கைகளும், விதிகளும், உண்மைகளுமாகும்.

இங்கு, இந்த விரிவுரையில், மேற்சொன்ன கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பேசுவேன். நம்முடைய முதல் கேள்வியென்னவென்றால், “மனிதனின் உளப்பரிணாமம்” என்றால் என்ன? இரண்டாவது, அதற்கென சிறப்பு நிலைகள் அவசியமா?

 

மனிதனின் மூலத்தை பற்றியும் அவனது முந்தைய பரிணாமத்தை பற்றியும் உள்ள நவீன பார்வைகளை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், நமக்கு மனிதனின் மூலத்தை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. இதை முதலில் நாம் உணர வேண்டும். மனிதனின் பௌதீகமான அல்லது மனரீதியிலான மெய்யான பரிணாமச் சான்று  என எதுவுமில்லை.

 

இதற்கு மாறாக, மனிதகுலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதாவது, பத்து அல்லது பதிணைந்தாரயிரம் ஆண்டுகளாக, “ஒரு உயர்ந்த வகையான மனிதனின் குறியீடுகளை நாம் கண்டுகொள்ள முடிகிறது. அவற்றின் இருப்பை பழங்கால சிலைகளின்,  நினைவுச்சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் நிலை நாட்டமுடிகிறது. அவற்றை இப்போதுள்ள மனிதனால் பின்பற்றவோ, திரும்ப செய்யவோ முடியாது.

நமது அடிப்படை கருத்து என்னவென்றால், நாமறிந்த மனிதன் என்பவன் முழுமையடைந்த இருப்பை கொண்டவன்( a completed being) அல்ல. இயற்கை அவனை ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை வளர்க்கிறது. அதன் பின் அவனை விட்டு விலகிவிடுகிறது. பிறகு தன் சொந்த முயற்சியால் வளரலாம், அல்லது அவன் எப்படி பிறந்தானோ அது போலவே வாழலாம், இறக்கலாம். மேலும் வளர்ச்சிக்கான திறனையும் இழக்கலாம்.

 

இந்த விஷயத்தை பொருத்தவரை மனிதனின் உளபரிணாமம் என்பது குறிப்பிட்ட சில உள்ளார்ந்த அம்சங்கள் மற்றும் குணங்களின் அடிப்படையில் இன்னும் விருத்தியடையாமல் இருக்கிறது, அது தண்ணியல்பாகவும் வளராது என்று அர்த்தப்படுகிறது.

 

அனுபவமும் அவதானிப்பும் எதை காட்டுகிறது என்றால், இவ்வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்றாகிறது. அதாவது, மனிதன் தன்னளவிலான கடும் முயற்சியினாலும், ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிநிலையை எட்டியவரின் உதவியினாலும், குறைந்தபட்சமாக இது சம்மந்தமான முறை சார்ந்த அறிவாவது கொண்டிருக்க வேண்டும்.

ஆக, முயற்சியில்லாமல் இவ்வுள பரிணாமம் என்பது சாத்தியமில்லை. பிறகு, எட்டியவரின் உதவியின்றியும் இது சாத்தியமில்லை.

 

இவ்வளர்ச்சி பாதையில் மனிதனானவன் “வேறுபட்ட இருப்பில்”(different being) ஆக வேண்டும். அதே சமயம் நாம் எந்த நோக்கத்தில், எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா மனிதராலும், இந்த வகையான வளர்ச்சி நிலையை பெறவோ வேறுபட்ட இருப்பாக ஆகவோ முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இது தனிப்பட்ட ஒரு மனிதனின் விசாரமாவதால் ஒட்டுமொத்த மனித குலத்தின் உளபரிணாமத்திற்கு அரிதான ஒன்றாகிறது. இதை சொல்லும் போது விசித்திரமாக தோன்றலாம். உண்மையில் மேலும் மேலும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது.

 

இதனை தொடர்ந்து நமக்கு இயல்பாக பல கேள்விகள் எழலாம்.

 

வேறுபட்ட இருப்பு நிலை என்றால் என்ன?

 

இப்பரிணாம வளர்ச்சியின் வழியில் மனிதன் ஒரு வேறுபட்ட இருப்பாக ஆவது என்றால் என்ன?

 

என்ன விதமான உள்ளார்ந்த அம்சங்களை, குணங்களை மனிதன் வளர்த்துக் கொள்ள முடியும்? இதனை எப்படி செய்ய முடியும்?

 

ஏன் எல்லா மனிதராலும் வளரவோ, வேறுபட்ட இருப்பை நோக்கி தன்னால் ஆகவோ முடியாது?

இது என்ன அநீதி?

 

இந்த கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் கூற முயற்சிக்கிறேன். முதலில் கடைசி கேள்வியிலிருந்து தொடங்குகிறேன்.

 

ஏன் எல்லா மனிதராலும் வளரவோ, வேறுபட்ட இருப்பை நோக்கி தன்னால் ஆகவோ முடியாது?

 

பதில் மிக சுலபமானது. ஏனெனில், அவர்களுக்கு அது தேவைப்படவில்லை.

ஏனென்றால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது மற்றும் அதைப் பற்றிய நீண்டகால ஆயத்தமில்லாமல் அதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது.

 

இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு மனிதன் வேறுபட்ட இருப்பாக மாற, அவன் அதை மிக நீண்ட காலமாக விரும்ப வேண்டும். புற சூழ்நிலையின் அதிருப்தி காரணமாக எளிதில் கடந்துவிடும் மந்தமான ஆசைகள் போதுமான தூண்டுதலை உருவாக்காது.

 

மனிதனின் இப்பரிணாமமானது அவன் எதை பெறப் போகிறான்; அதற்காக அவன் என்ன  கொடுக்க வேண்டும் என்பது பற்றிய அவனது புரிதலை பொறுத்தது.

 

ஒரு மனிதனுக்கு இவ்வுளப்பரிமாணம் தேவையில்லையெனில், அதற்கு அவசியமான எந்த முயற்சியும் செய்யவில்லையெனில், அவன் ஒருபோதும் வளர்ச்சியடையப் போவதில்லை. ஆக, இதில் எந்த அநீதியும் இல்லை. மனிதன் தான் வேண்டாததை ஏன் பெற வேண்டும்? தான் என்னவாக இருக்கிறானோ அதில் திருப்தியடைந்த மனிதனை வேறுபட்ட இருப்பிற்கு கட்டாயப்படுத்துவது தான் அநீதியாகும்.

 

இப்போது வேறுபட்ட இருப்பின் பொருள் என்ன என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த கேள்வியை குறித்து உள்ள தரவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டால், மனிதன் தான் வேறுபட்ட இருப்பாக மாறும்பட்சத்தில் இப்போதிருந்திராத பல புது குணங்களையும், ஆற்றலையும் பெறுகிறான் என்ற கூற்றை காணமுடியும். இது மனிதனுக்கு  உள்ளார்ந்த வளர்ச்சியொன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் அமைப்புகளில் காணக்கிடைக்கும் பொதுவான தரவுகளாகும்.

 

ஆனால், இவை போதுமானதல்ல. இந்த புதுவிதமான ஆற்றல் குறித்த மிக விரிவான விளக்கங்களும் அவை எப்படி தோன்றுகின்றன, எங்கிருந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு எந்த வகையிலும் உதவாது.

நாமறிந்த சாதாரண கோட்பாடுகள் தவறவிட்ட இணைப்பு ஒன்றுண்டு.  அதாவது, மனிதனுக்கு தெரியாத மற்றும் தன்வசமில்லாத எந்தவொரு புது அதிகாரத்தையும் அல்லது ஆற்றலையும் பெறுவதற்கு முன்னதாகவே தனக்கு அது பற்றி தெரிந்ததாகவும், அது தன் வசமுள்ளதாகவும், அதனை உபயோகபடுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்று நினைப்பது தான்.

இதுவே தவறவிட்ட இணைப்பும், மிக முக்கியமான புள்ளியுமாகும்.

பரிணாமத்தின் வழியில், முன்னர் விளக்கியது போல, கடும் முயற்சியினாலும், உதவியினாலும் ஏற்கனவே தன் வசமிருப்பதாக எண்ணும் தன்மைகளை மனிதன்  அதனை பெற வேண்டும். ஆனால், அவன் இது பற்றி தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.

மனிதன் ஏற்கனவே தன்வசமிருப்பதாக கற்பனை செய்கிற, புதிய மற்றும் எதிர்பாராததுமான சக்தியையும், அதிகாரத்தையும் பெற முடிவதை  என்னவென்று தெளிவாக புரிந்து கொள்ள, மனிதன் அவனைப்பற்றிய பொதுவான அறிவிலிருந்து தொடங்க வேண்டும்.

இங்கு நாம் ஒரு முக்கியமான உண்மையை நோக்கி வருகிறோம்.

மனிதன், அவனுக்கு தன்னை தெரியாது. அவனுடைய வரம்புகள் என்ன என்பது பற்றி அவனுக்கு தெரியாது. அவனுடைய சாத்தியங்கள் பற்றி தெரியாது. உண்மையில், அவனுக்கு எந்த அளவிற்கு தன்னை தெரியாது என்பதும் அவனுக்கு தெரியாது.

மனிதன் எத்தனையோ இயந்திரங்களை கண்டுபிடித்திருக்கிறான். அதில் ஒரு சிக்கலான இயந்திரத்தை பயன்படுத்த, அதை கட்டுப்படுத்த சில காலம் மிக கவனமாக அதை ப்பற்றி தெரிந்துகொள்ளாமல் அந்த இயந்திரத்தை கட்டுப்படுத்தவோ, பயன்படுத்தவோ முடியாது என்பதையும் மனிதன் அறிவான். ஆனால், இந்த அறிவை அவன் தனக்கு பயன்படுத்துவதில்லை. ஏனெனில், மனிதன் கண்டுபிடித்த எந்த இயந்திரத்தையும் விட அவனே மிகவும் சிக்கலான இயந்திரமாவான்.

 

அவன் தன்னைப்பற்றி எல்லாவிதமான தவறான முடிவுகளை அபிப்பிராயங்களை கொண்டுள்ளான். முதலில் உண்மையிலேயே அவன் ஒரு இயந்திரம் என்பதை உணரவில்லை.

 

மனிதன் ஒரு இயந்திரம் என்று சொல்வதற்கான பொருள் என்ன?

 

அதாவது, தனக்குள்ளும் புறமும் சுதந்திரமான செயல்பாடு என எதுவும் அவனுக்கில்லை. புறநிலையின் தாக்கங்களால் இயக்கத்திற்கு கொண்டுவரப்படும் ஒரு இயந்திரம் அவன். அவனுடைய சிறு சிறு அசைவுகளும், செயல்களும், வார்த்தைகளும், கருத்துக்களும், உணர்ச்சிகளும், மனநிலையும் என எல்லாமும் புறநிலையின் தாக்கங்களாலேயே உருவாக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், கடந்தகால அனுபவங்களின் குறிப்பிட்ட சில நினைவுகளை தன்னளவில் கொண்டுள்ள, குறிப்பிட்ட ஆற்றல் இருப்பைக் கொண்டுள்ள மனிதன் போல் செயல்படும் ஒரு தானியங்கி.

 

இதிலிருந்து மனிதனால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், இதை அவன் உணர்வதில்லை. மேலும், எதையும் செய்யக்கூடிய திறன் இருப்பதாக தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான். இப்படி சொல்லிக்கொள்வது தான் முதல் தவறாகும்.

 

மனிதனால் எதுவும் செய்ய முடியாது. அதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தும் அவன் செய்வதால் தான்  நடக்கிறது என்று மனிதன் நினைக்கிறான். ஆனால், மழை, குளிர் எப்படி நிகழ்கிறதோ அதுபோலத் தான் நிகழ்கிறது.

ஆங்கில மொழியில் மனிதனின் தனிப்பட்ட செயல்கள் தொடர்புடைய வாய்மொழி வடிவங்கள் இல்லை. இருப்பினும், மனிதன் சிந்திக்கிறான், படிக்கிறான், மனிதன் எழுதுகிறான் நேசிக்கிறான், வெறுக்கிறான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், அவை தானாக நிகழ்கின்றன.

மனிதனால் தன் சொந்த சித்தத்தில், சிந்திக்கவோ, பேசவோ, அசையவோ கூட முடியாது. பொம்மலாட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இழுக்கப்படுவது போல இங்கும் அங்கும் இழுக்கப்படுகிறான். அவன் இதை புரிந்துக்கொள்வானெனில், தன்னைப்பற்றி மேலதிகமாக கற்றுக்கொள்ளலாம். அதனூடாக, அவனுக்காக அனைத்தும் மாறத்தொடங்கலாம். இதை அவன் உணர்ந்துகொள்ளவோ, தன்னுடைய மொத்தமான இயந்திரத்தனத்தின் உண்மையை புரிந்துகொள்ளவோ முடியவில்லை எனில், இந்த உண்மையை ஏற்க விரும்பவில்லை எனில், அவனால் தன்னைப்பற்றி எதுவும் கற்றுக்கொள்ளவோ தெரிந்துகொள்ளவோ முடியாது. எதுவும் அவனுக்காக மாறப்போவதில்லை.

 

மனிதன் ஒரு இயந்திரம். ஒரு விசித்திரமான இயந்திரம். தான் ஒரு இயந்திரம் என்பதை சரியான சூழ்நிலையில், சரியாக கையாளுகிற முறையில் அறிந்து கொள்ள முடியும். இதை முழுமையாக உணர்ந்துவிட்டால், தான் இயந்திரமாக இருப்பதை முடிவிற்கு கொண்டு வரலாம்.

 

முதலில், மனிதன் என்பவன் ஒன்றல்ல. அவன் “பல”வாக இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவனிடம் நிரந்தரமான அல்லது மாற்றமுடியாத “நான்” என்ற ஒன்று இல்லை. ஒவ்வொரு கணமும் வெவ்வேறாக இருக்கிறான். ஒரு கணத்தில் ஒருவனாகவும், மற்றொரு கணத்தில் இன்னொன்றாகவும், மூன்றாவதில் மூன்றாக, கிட்டதட்ட முடிவேயில்லாமல் வெவ்வேறானவனாக இருக்கிறான்.

இந்த ஓர்மை அல்லது “அவன் ஒருவன் தான்” எனும் மாயை முதலில் அவன் ஓர் உடலாக இருப்பதாலும், பிறகு அவனது பெயராலும், மூன்றாவதாக புகுத்தப்பட்ட இயந்திரத்தனமான பழக்க வழக்கங்களினாலும், பிறகு கல்வியினால் பெறும் போலச் செய்தலினாலும் இம்மாயை உருவாகிறது. மேலும், ஒரேமாதிரியான உடல் உணர்ச்சிகளை கொண்டிருப்பது, ஒரே பெயரை கேட்பதும், அதேபோல முன்பிருந்த பழக்கங்களும், மனப்போக்கும் தன்னை கவனிக்கும்போது மாறாமல் இருப்பதனால், தான் “ஒன்றாக” எப்போதும் மாறாமல் இருப்பதாக நம்புகிறான்.

உண்மையில், மனிதனுக்கு “ஓர்மை” இல்லை. கட்டுப்படுத்தும் நிரந்தர “நான்” என்றவொன்று இல்லை.

 

ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு உணர்ச்சியும், ஒவ்வொரு ஆசையும், ஒவ்வொரு விருப்பும், வெறுப்பும் தனித்தனியே ஒருவொரு ‘நான்’. இந்த “நான்”கள் எந்த வகையிலும் ஒன்றோடொன்று இணைந்தவைகளாக இல்லை. ஒருங்கிணைவதும் இல்லை. அவை ஒவ்வொன்றும் புறசூழ்நிலையின் மாற்றங்களை பொறுத்திருக்கிறது.

 

அவற்றில் சில “நான்”கள் இயந்திரத்தனமாக சில “நான்”களை பின் தொடர்கின்றன. மேலும் சில “நான்”கள்  மற்ற “நான்” களால் தோன்றுகின்றன. ஆக, மொத்தமாக ஒரு ஒழுங்கோ, அமைப்போ இதில் இல்லை.

சில “நான்”கள் ஒரு குழுவாக இயல்பாகவே இணைந்தவைகளாக இருக்கின்றன. இதைப் பற்றி பின்னர் பேசுவோம். இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், ஒரு குழுவாக இணைகிற “நான்” களெல்லாம் தற்செயலான தொடர்புகளின் மூலமாகவும், தற்செயல் நினைவுகளின் மூலமாகவும் அல்லது கற்பனையான ஒற்றுமைகளின் மூலமாக மட்டுமே இணைகின்றன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இந்த “நான்”கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்தில் நமது மூளையின், மனதின் அல்லது அறிவுத்திறனின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே குறிக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் மொத்தமான பிரதிநிதித்துவதாய் ஆகிறது.

 

ஒரு மனிதன் ‘நான்’ என்று சொல்லும் போது மொத்தமான ‘தன்னை’ சொல்வதாக அர்த்தப்படுத்துகிறது. ஆனால், உண்மையில் அவன் இப்படியே அர்த்தப்படுத்தி நினைத்தால் கூட அது கடந்து விடும் எண்ணம், கடந்துவிடும் மனநிலை, கடந்துவிடும் ஆசை மட்டுமே. ஒருமணி நேரத்தில்  தான் இது தான் என்று சொன்னதையே முற்றிலும் மறந்துவிடுவான். அதே முடிவில், எதிர்க்கருத்தை, எதிர்பார்வையை வெளிப்படுத்துவான்.

மிக மோசமான விஷயம் என்னவென்றால், மனிதன் தன்னை நினைவு வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான சமயங்களில், தானாக வெளிப்பட்ட கடைசி “நானை”யே “தான்” என நம்புகிறான். அதாவது, அடுத்த நான் வெளிப்படும் வரை, கடைசி “நான்” நீட்டிக்கும் வரை. ஒவ்வொரு சமயத்தில் வெளிப்படும் “நானை” தான் என நம்புகிறான். சில சமயங்களில் முந்தைய நானிற்கும் பிந்தைய நானிற்கும் தொடர்பில்லாத போது முந்தையதின் விருப்பங்களை பிந்தைய “நான்” முந்தையதின் கருத்தை அல்லது விருப்பத்தை வெளிப்படுத்தாது.****

 

இப்போது இரண்டு கேள்விகளின் பக்கம் வருவோம்.

வளர்ச்சி என்றால் என்ன? மனிதன் வேறுபட்ட இருப்பில் ஆக முடிவது என்றால் என்ன? அல்லது என்ன விதமான மாற்றம் மனிதனில் சாத்தியமாகும்? மற்றும் எப்படி, எப்போது இந்த மாற்றம் தொடங்கும்?

தற்போது தன்வசமில்லாத, ஆனால் தன்னிடம் இருப்பதாக மனிதன் எண்ணும் சக்தியாலும், திறனாலும் மாறத்தொடங்கும் என்று ஏற்கனவே சொல்லபட்டது.

அப்படியென்றால், சக்திகளையும் திறன்களையும் பெறுவதற்கு முன், தன்னிடம் இருப்பதாக எண்ணும் சக்திகளுக்கான திறன்களுக்கான பண்புகளை மனிதன் தன்னில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொருள்.

வளர்ச்சியானது தன்னை பொய்ப்பிப்பதின் அல்லது தன்னை ஏமாற்றிக் கொள்வதின் அடிப்படையில் துவங்குவதில்லை. மனிதன்  தன்னிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது தெரிய வேண்டும். ஏற்கனவே விளக்கியது போல எந்த சிறப்பம்சமும், பண்புகளும் தன்வசமில்லை என்பதை அவன் உணர வேண்டும். அதாவது, தன்னிடம் இருப்பதாக எண்ணும் தனித்தன்மை, ஓர்மை, நிரந்தர “நான்” மற்றும் இன்னும் கூடுதலாக பிரக்ஞையும், சொந்த சித்தமும்.

இது மனிதனுக்கு அவசியம் தெரிய வேண்டும், ஏனெனில் தன்னிடம் சிறப்பம்சங்கள் வசமிருப்பதாக அவன் நம்பும் வரை, அதனை பெறுவதற்கு சரியான முயற்சியை, உழைப்பை செலுத்த மாட்டான். எப்படியென்றால், தன்னிடம் ஏற்கனவே இருப்பதாக ஒரு மனிதன் எண்ணிவிட்டால், ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கவோ, அதற்காக பெரிய விலை கொடுக்கவோ மாட்டான். அது போல.

இந்த தன்மைகளில் மிக முக்கியமானதும், மிகவும் தவறாக வழிநடத்துவதானது “பிரக்ஞை”(consciousness) என்பதாகும். பிரக்ஞை என்பதின் அர்த்தம் குறித்த  மனிதனது புரிதல் மாறும் போது தான் அவனில் மாற்றம் தொடங்கும்.

பிரக்ஞை என்றால் என்ன?

பெரும்பாலான சமயம், சாதாரண மொழியில் பிரக்ஞை என்பது சிந்தனைத்திறனுக்கு இணையாக மன செயல்பாடுகள் என்ற அர்த்தத்தில் உபயோகபடுத்தப்படுகிறது.

உண்மையில் பிரக்ஞை என்பது குறிபிட்ட வகையான மனிதனின் “விழிப்புணர்வு”, மன செயல்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டது. அதாவது, தன்னைப்பற்றிய விழிப்புணர்வு, தான் யார், எங்கிருக்கிறான் என்ற விழிப்புணர்வு, மேலும் தனக்கு என்ன தெரியும், தனக்கு என்ன தெரியாது என்ற விழிப்புணர்வு, இன்னும் பல.

ஒரு மனிதன் கொடுக்கப்பட்ட தருணத்தில் பிரக்ஞையோடு இருக்கிறானா இல்லையா என்பதை அவன் மட்டும் தான் அறிய முடியும். இது நீண்ட காலத்திற்கு முன்பே ஐரோப்பிய உளவியலின் ஒரு குறிப்பிட்ட சிந்தனையில் நிரூபிக்கப்பட்டது, அதாவது, தன்னோடு தொடர்புடைய குறிப்பிட்ட சில விஷயங்களை மனிதன் தன்னால் மட்டும் தெரிந்து கொள்ள முடியும்.

பிரக்ஞை குறித்த கேள்வியோடு பார்க்கும்போது, அதன் அர்த்தமாவது ஒரு மனிதன் தான் ஒரு தருணத்தில் தன் பிரக்ஞை இருக்கிறதா இல்லையா என்பதை அவன் மட்டும் தான் அறிய முடியும். அப்படியென்றால், மனிதனுடைய பிரக்ஞையின் இருப்பையும் இல்லாமையையும் புறவயமான செயல்பாடுகளின் அவதானிப்புகளை கொண்டு நிரூபிக்க முடியாது.

இந்த உண்மையை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால், இதனுடைய முக்கியத்துவம் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை. ஏனென்றால்,  பிரக்ஞையை மனதின் செயல்பாடுகளாக, மனதின் செயற்தொடர்ச்சியாக இணைத்தே எப்போதும் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன், தான் பிரக்ஞையில் இல்லை என்பது வரையுள்ள தருணத்தின்  இந்த புரிந்துணர்வை உணர்கிறான் எனில், அதன் பிறகு இந்த உணர்வை மறந்துவிடுவான் அல்லது பிறகு இந்த உணர்வை ஞாபகப்படுத்துவான். இதற்கு பெயர் பிரக்ஞை அல்ல. இது ஒரு உறுதியான புரிந்துணர்வின் ஞாபகம் மட்டுமே.

இப்போது அனைத்து நவீன உளவியல் சிந்தனைப்பள்ளிகளும் தவறவிட்ட மற்றுமொரு உண்மையின் பக்கம் இங்கே உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

அதாவது, மனிதனின் “பிரக்ஞை” அதன் பொருள் என்னவாகினும், அது எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. பிரக்ஞை இருந்தாலும் இல்லாவிட்டாலும். பிரக்ஞையையின் உச்ச தருணங்கள் நினைவுகளை தோற்றுவிக்கின்றன. மற்ற தருணங்களை மனிதன் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் விட மனிதனின் பிரக்ஞையானது தொடர்ச்சியான விழிப்புநிலை கொண்டது எனும் மாயையை உருவாக்குகிறது.

 

சில நவீன உளவியல் பள்ளிகள் பிரக்ஞையை முற்றிலுமாக மறுக்கின்றன. அத்தகைய சொல்லாடலின் அவசியத்தையும் மறுக்கின்றன. ஆனால் இது வெறுமென தவறான புரிதலின் தான்தோன்றித்தனமாகும்.

மற்ற சிந்தனைப்பள்ளிகளில் பிரக்ஞை என்ற பெயரில் அழைப்பார்கள் எனில், பிரக்ஞையின் நிலைகள் குறித்து பேசுவார்கள் எனில், அவற்றை எண்ணங்கள், உணர்வுகள், திடீர் உந்துதலாக, உணர்ச்சிநிலைகள் அர்த்தப்படுகின்றன. இவையெல்லாம் மனசெயல்பாடுகளுடன் பிரக்ஞையையை கலக்கும் தவறை அடிப்படையாகக் கொண்டது. அது பற்றி பிறகு பேசுவோம்.

உண்மையில், நவீன சிந்தனைக்கு பெரும்பாலான விஷயத்தில் இன்னும் இந்த பழைய முறையையே கையாளுகின்றன, அதாவது, பிரக்ஞைகளுக்கென தனி நிலைகள் இல்லை என.

உண்மை என்னவெனில், பிரக்ஞை புலப்படக் கூடிய, அவதானிக்க முடிகிற அளவில் தான் உள்ளது. நிச்சயமாக புலப்படுகிற, ஒருவர் தன்னை கவனிக்கிற முடிகிற ஒன்று தான்.

 

முதலாவது, அதற்கான கால அளவு: எவ்வளவு நேரம் பிரக்ஞையோடு இருந்தார் என்பதற்கான கால அளவு.

 

இரண்டவது, தோன்றுதலின் நிகழ்வு என்னிக்கை: எத்தனை முறை ஒருவர் பிரஞையோடு இருக்க முடிந்தது.

 

மூன்றாவது, அதன் எல்லையும், ஊடுருவலும்:  ஒருவன் என்ன அல்லது எதைப்பற்றிய பிரக்ஞையில் இருந்தான். இது மனிதனின் வளர்ச்சியோடு மிகவும் மாறுபடுகிற ஒன்று.

 

மேற்சொன்னதில் முதல் இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டால், பிரக்ஞையின் சாத்தியமான பரிணாமத்தின் கருத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 

மிக முக்கிய உண்மையுள்ள இந்த கருத்து பழைய உளவியல் பள்ளிகள் நன்கு தெரிந்தே வைத்திருந்தன. உதாரணமாக, பிலோகாலியா(Philokalia) போன்ற உளவியல் பள்ளி. ஆனால், ஐரோப்பிய தத்துவமும், கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாக உள்ள உளவியலும் இதனை முற்றிலுமாக தவறவிட்டிருக்ருகிறது.

 

பிரக்ஞையை பிரத்யேக முயற்சியின் மூலம், பிரத்யேக கற்றலின் மூலம்  தொடர்ச்சியானதாகவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பது உண்மை.

 

பிரக்ஞையை எப்படி பயில முடியும் என்பதை நான் விளக்க முயற்சிக்கிறேன்.

 

ஒரு கை கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்கள் கவனிக்க முயற்சித்து, ‘நான் மீரான்’ ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்ற எண்ணத்தில் கவனம் செலுத்துங்கள். வேறெதைப்பற்றியும் எண்ணாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். வெறுமென கைகடிகாரத்தை ஓட்டத்தையும், உங்களையும் கவனியுங்கள். உங்கள் பெயர், உங்கள் இருப்பு மற்றும் நீங்கள் இருக்கும் இடம் ஆகியவற்றை கவனியுங்கள். மற்ற எண்ணங்களை சற்று ஒதுக்கி வையுங்கள்.

 

நீங்கள் இந்த சோதனையில் விடாப்பிடியாக இருப்பீர்களானால், இதை இரண்டு நிமிடங்களுக்கு செய்ய முடியும். இதுவே நீங்கள் பிரக்ஞையுடன் இருக்க அதிகபட்ச வரம்பு. இதே சோதனையை மீண்டும் நீங்கள் முயற்சித்தால் முதல்முறை செய்ததை விட கடினமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

ஒரு மனிதன் தன் இயல்பு நிலையில் பெரும் முயற்சியுடன் “தன்னிலை” பற்றி இரண்டு நிமிடத்திற்கும் குறைவாகவே பிரக்ஞையில் இருக்க முடியும் என்பதை இச்சோதனை காட்டுகிறது.

 

இச்சோதனையை சரியாக செய்யும்பட்சத்தில் “மனிதன் தன்னைப்பற்றிய பிரஞையில் இல்லை.” என்ற முக்கிய முடிவிற்கு ஒருவர் வருவார்.

 

தான் பிரக்ஞையில் இருப்பதான மாயையை நினைவுகளும், எண்ணங்களின் செயல்பாடுகளும் உருவாக்குகின்றன.

 

உதாரணத்திற்கு, ஒரு மனிதர் திரையரங்கிற்கு செல்கிறார். அது அவருக்கு பழக்கமானது எனில், அவர் அங்கு இருக்கும் போது குறிப்பிட்ட ஒரு  பிரக்ஜையோடு இருப்பதில்லை. இருப்பினும், அவர் அங்கு நடக்கும் விஷயங்களை பார்க்க முடியும், அவதானிக்க முடியும், அல்லது அங்கு நடக்கும் நிகழ்ச்சியை விரும்பி கண்டுகளிக்கவோ, விரும்பாமலோ இருக்க முடியும. மேலும், அங்கு சந்தித்த மக்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும், இன்னும் பல.

 

அவர் வீடு திரும்பிய பிறகு, தான்  திரையரங்கில் இருந்ததை நினைவுபடுத்தி பார்க்கிறார். நிச்சயமாக, தான் பிரக்ஞையோடு  இருந்ததாக நினைக்கிறார். ஆக, அவருடைய பிரக்ஞை குறித்து எந்த சந்தேகமும் இருக்கவில்லை. இன்னும் அவர் உண்மையாக, சிந்தித்து, அவதானித்து செயலாற்ற முடியும் போது அவரது பிரஞை முற்றிலுமாக இல்லாமலிருக்கும் என்பதை அவர் உணர்வதில்லை.

 

பொது விளக்கத்தில், மனிதனுக்கு சாத்தியமாகும் பிரக்ஞை நிலைகள் நான்கு. அவையாவன, உறக்க நிலை(sleep), விழிப்பு நிலை(waking state), சுய-பிரக்ஞை நிலை(self-consciousness), புறப்பிரஞை நிலை(Objective Consciousness) ஆகும்.

 

ஆனால், இந்த நான்கு பிரஞை நிலைகளும் அவனுக்கு சாத்தியமாயினும் உண்மையில் மனிதன் இரண்டு நிலைகளில் மட்டுமே வாழ்கிறான். வாழ்க்கையில் அவனது ஒரு பகுதி உறக்கத்தில் கடந்து விடுகிறது, மற்றொரு பகுதியை விழிப்பு நிலை என்றழைக்கலாம். இருந்தாலும், யதார்த்தத்தில் அவனது விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் சிறிதளவிலான வித்தியாசம் தான் உள்ளது.

 

சாதாரண வாழ்க்கையில், மனிதனுக்கு objective consciousness பற்றி ஒன்றும் தெரியாது, மற்றும் இந்த பாதையில் எந்தவொரு பயிற்சியோ சோதனைகளோ சாத்தியமில்லை.

 

மூன்றாவது நிலையான, சுயப்பிரக்ஞை நிலை. இது தன்வசம் உள்ளதாக நம்புகிறான். மனிதன் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். இருப்பினும், உண்மையில் மிக அரிதான தருணங்களில் மட்டும் தான் அவனால் பிரக்ஞையோடு இருக்க முடியும். இருந்த போதிலும் அவனால் அதை இனங்காண முடியாது. ஏனெனில், அதன் அர்த்தமென்ன என்பது பற்றி அவனுக்கு தெரியாது.

 

பிரக்ஞையின் சில துண்டு அனுபவங்கள் விதிவிலக்கான சில தருணங்களில் வரும். உச்சமான உணர்ச்சி வசப்படும் நிலைகளில், ஆபத்தான தருணங்களில், புதிய அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளில் அல்லது சில சமயம் சாதாரணமான தருணங்களில் குறிப்பிட்டு எந்த நிகழ்வும் நடக்காத போது வரும்.

 

ஆனால், அவனது சாதாரண நிலையில் மனிதனுக்கு அதன் மீது எந்த அதிகாரமும் இல்லை.

 

 

வழக்கமான நினைவு அல்லது நினைவின் தருணங்களை பொருத்தவரை, உண்மையில் நாம் பிரக்ஞையிலிருந்த தருணங்களை மட்டுமே நினைவாகக் கொள்கிறோம். இவ்வாறு இருப்பதை நாம் உணர்வதில்லை.

 

நினைவு என்றால் என்ன, நாம் கொண்டுள்ள வெவ்வேறு வகையான நினைவுகள் பற்றியும் பிறகு விளக்குகிறேன்.

 

இப்போது உங்கள் கவனத்தை, உங்கள் நினைவு பற்றி உங்கள் சொந்த அவதானிப்பின் பக்கம் திருப்ப விரும்புகிறேன்.

 

அப்போது உங்கள் விஷயங்களை நீங்கள் வெவ்வேறு விதங்களில்  நினைவில் கொண்டுள்ளீர்கள் என்பதை கவணிப்பீர்கள்.

 

சிலவற்றை நீங்கள் தெளிவாக நினைவில் வைத்திருப்பீர்கள், சில மிக தெளிவில்லாத மங்கலான நினைவாக இருக்கும். சில உங்கள் நினைவிலேயே இருக்காது. அவை நடந்தது என்பது மட்டும் தெரியும்.

 

உண்மையில் எவ்வளவு குறைவாக நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரும் போது வியப்படைவீர்கள். ஏனெனில், நீங்கள் பிரக்ஞையோடு இருந்த தருணங்கள் மட்டும் ஞாபகத்தில் இருப்பதால் இது இவ்வாறு நடக்கிறது.

 

ஆக, மூன்றாவது நிலை பற்றி சொல்லும் போது, மனிதனுக்கு அவ்வப்போது நிகழ்கிற சுயப்பிரஞையின் தருணங்கள், அதனோடு வரும் சூழ்நிலைகளின் தெளிவான நினைவுகளை விட்டு செல்கிறது என்று சொல்லலாம். ஆனால், அவனுக்கு அதன் மீது எந்த ஆதிக்கமும் இல்லை.

 

புறசூழ்நிலையின் கட்டுப்பாடாலும், உணர்ச்சி நிலைகளின் நினைவுகளாலும் தானாக வந்து தானாக செல்கிறது.

 

ஒரு கேள்வியெழுகிறது. அதாவது இந்த சன நேர பிரக்ஞை தருணங்களின் மீது அதிகாரத்தை பெறுவது சாத்தியமா? அதாவது, அடிக்கடி தூண்டுவதும் அல்லது அதை நீட்டிக்க செய்வதும் அல்லது நிரந்தரமாக்குவதற்கான அதிகாரத்தை பெறுவது சாத்தியமா?

 

இன்னொரு வார்த்தையில் சொன்னால் பிரக்ஞையிலேயே இருப்பதற்கு சாத்தியமா?

 

இது முக்கியமான புள்ளியாகும்.  இந்த புள்ளியையே கோட்பாட்டினளவில் கூட விதிவிலக்கின்றி நவீன உளவியல் பள்ளிகளால் முற்றிலுமாக தவறவிடப்பட்ட புள்ளியாகும். இதனை நம் பயில்தலின் தொடக்கத்திலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

 

சரியான முறைகளின் மூலமும், சரியான உழைப்பின் மூலமும், அவை உணர்த்தும் அனைத்தையும் கொண்டு மனிதனால் தன் பிரக்ஞையின் மீதான அதிகாரத்தை பெற முடியும். பிரக்ஞையில் இருக்கவும் முடியும். தற்போதைய நிலையில் அவை எதை உணர்த்தும் என்பதை நாம் கற்பனை கூட செய்யவில்லை.

 

இம்முக்கியமான கருத்தை புரிந்து கொண்ட பிறகே உளவியலைப் பற்றி தீவிரமாக பயில்வதற்கு சாத்தியமாகும்.

 

இப்பயில்தலை நம் பிரக்ஞை நிலைக்கான தடைகள் பற்றிய விசாரணையிலிருந்து தொடங்க வேண்டும். ஏனெனில், குறைந்தபட்சமாக சில தடைகளை நீக்குவதன் மூலமாக மட்டுமே நம் பிரக்ஞை வளரத்தொடங்கும்.

 

பின்வரும் உரைகளில் இந்த தடைகள் பற்றி பேசுவேன். மிகப்பெரும் தடையாக இருப்பது நம்மை பற்றியுள்ள நம் அறியாமையும், நமக்கு நம்மைப் பற்றி குறிப்பிட்ட எல்லைவரை ஓரளவிற்காவது தெரியும் என்பதும், நாம் நம்மை குறித்து உறுதியாக இருக்க முடிகிறதும் ஆகும்.  உண்மையில் நம்மைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது மற்றும் சிறு விஷயங்களில் கூட நாம் நம்மை  குறித்து உறுதியாக இருக்க முடிவதில்லை.

இப்போது நாம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது உளவியல் என்பது “தன்னைப் பயிலுதல்”(self-study) என்பதாகும். இது உளவியலின் இரண்டாவது வரையறை.

 

ஒருவர் விண்ணியலைப் பயில்வது போல, ஒருவர் உலவியலைப் பயில முடியாது. அதாவது, தண்ணிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பயில முடியாது.

 

அதே சமயம், ஒரு புதிய மற்றும் சிக்கலான இயந்திரத்தை பயில்வது போல் “தன்னை பயில வேண்டும்.

 

இந்த இயந்திரத்தின் பாகங்கள்  தெரிந்திருக்க வேண்டும், அதன் மைய செயலப்பாடுகளையும், சரியாக இயங்குவதின் நிலைகள் குறித்தும், தவறாக இயங்கும் காரணத்தையும், இன்னும் தனித்துவமான மொழிபயன்பாடுகளின் துணையில்லாமல் விளக்க முடியாத பல விஷயங்களும் இந்த இயந்திரத்தை பயில்வதற்கு அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

 

மனித இயந்திரமானது ஏழு விதமான வெவ்வேறு செயல்பாடுகளை கொண்டது.

 

  1. சிந்தனை செயல்பாடு(Thinking function).
  2. உணர்ச்சி செயல்பாடு(emotional function).
  3. உந்துணர்வு செயல்பாடு( instinct function)(உடலின் அனைத்து உள்ளார்ந்த செயல்பாடுகளும்).
  4. நகர்வு செயல்பாடு(moving function)(அனைத்து புறச்செயல்பாடுகள், அசைதல், நகர்தல், இன்னும் பல).  
  5. பாலுணர்வு செயல்பாடு(Sex Function)(ஆண், பெண்ணுடைய அனைத்து வெளிப்பாடுகளும்).

 

இந்த ஐந்தைத் தவிர இன்னும் இரண்டு செயல்பாடுகள் உள்ளன. இந்த செயல்பாட்டிற்கு சாதாரண மொழியில் சொற்கள் இல்லை. அது உயர்நிலை பிரக்ஞையில் மட்டும் தோன்றக்கூடிய தாகும்.

 

ஒன்று, உயர்நிலை உணர்ச்சி செயல்பாடு. இது சுயப்பிரக்ஞை(self-consciousness) நிலையில் தோன்றக்கூடியது.

மற்றொன்று உயர் மன செயல்பாடு. இது  புறப்பிரக்ஞை(Objective Consciousness) நிலையில் தோன்றக்கூடியது.

 

இந்த நிலை பிரக்ஞையில் நாம் இல்லாததால் இதன் செயல்பாடுகளை பயிலவோ, சோதனை செய்யவோ முடியாது, மற்றும் இதை எவர் அடைந்துள்ளாரோ, எவர் அனுபவித்துள்ளாரோ அவரிடமிருந்து நேரடியற்ற முறையில் மட்டுமே அது பற்றி கற்றுக்கொள்ள முடியும். வெவ்வேறு நாடுகளின் மதங்களில் தொடக்க கால தத்துவ இலக்கியத்தில் பிரக்ஞையின் உயர்நிலைகளுக்கும் உயர் செயல்பாடுகளுக்கும் பல குறிப்புகள் உள்ளன.

 

இக்குறிப்புகளை புரிந்து கொள்வதில் கூடுதல் சிக்கலுள்ளது. இந்த குறிப்புகளில் பிரக்ஞையின் உயர்நிலைகளை பிரித்தறிவதில் குறைபாடுகள் உள்ளன.

 

சமாதி நிலை அல்லது ஆனந்த நிலை அல்லது உள்ளார்ந்த ஒளிர்வு நிலை அல்லது சமகால எழுத்துக்களில் பிரபஞ்சப் பிரக்ஞை(cosmic consciousness) என்றழைக்கப்படும் நிலைகள் மேற்சொன்ன இரண்டு நிலைகளில் ஒன்று அல்லது மற்றொன்றை குறிக்கிறது. சில சமயம் சுயப் பிரக்ஞையின் அனுபவத்தை குறிக்கிறது. சில சமயம் புறப்பிரக்ஞையை குறிக்கிறது.

 

இடைநிலையான சுயப் பிரக்ஞையை விட புறப்பிரக்ஞை நிலை பற்றி முடிவு செய்கிற தரவுகள் அதிகமுள்ளன. இது விசித்திரமாக தோன்றலாம். இருப்பினும், முந்தையது வந்த பிறகு தான் பிந்தியது வரும்.

 

தன்னைப்பயில்தலை முதல் நான்கு செயல்பாடுகளான சிந்தனை(Thinking), உணர்ச்சி(Emotional), உந்துணர்வு(Instintive), நகர்வு(Moving) செயல்பாடுகளிலிருந்து தொடங்க வேண்டும்.

 

பாலுணர்வு செயல்பாடுகளை பின்னதாகத் தான் பயில முடியும். மேற்சொல்லப்பட்ட நான்கு செயல்பாடுகளை போதுமான அளவு புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் தான் முடியும். சில நவீன கோட்பாடுகளுக்கு மாறாக, பாலின செயல்பாடுகளை உண்மையில் பின்னறிய வேண்டியதாகவே உள்ளது. அதாவது, முதல் நான்கு செயல்பாடுகள் முன்னதாக முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு அவற்றால் நெறிப்படும் போது பிற்காலத்தில் தோன்றுவதாகும்.

 

அதே சமயம், பாலுணர்வு செயல்பாடுகளில் ஒழுங்கின்மையோ, வழக்கத்திற்கு மாறான தீவிர சிக்கல்களிருந்தால், சுய-விருத்தியை, ஏன் தன்னைப்பயில்தலையும் சாத்தியப்படாமல் ஆக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, இப்போது நான்கு முக்கிய செயல்பாடுகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சிந்தனை செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு ஒரு தெளிவிருப்பதாகவே எடுத்துக்கொள்கிறேன். இங்கே அனைத்து செயல்பாடுகளும் இங்கே சேர்க்கப்படுகின்றன: மனப்பதிவுகளை உணர்தல், கருத்துக்கள் மற்றும் சித்தரிப்பின் உருவாக்கம், காரண காரிய அறிவு, ஒப்பிடுதல், ஏற்பது, புறக்கணிப்பது, சொற்கள், பேச்சு, கற்பனையின் உருவாக்கம் இன்னும் பல.

 

இரண்டாவது செயல்பாடு/உணர்ச்சிகள்: மகிழ்ச்சி, துன்பம், பயம், வியப்பு, இன்னும் பல. உணர்ச்சிகள் எண்ணங்களிலிருந்து எந்த வகையில் வேறுபட்டது என்பது குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தாலும், இது குறித்த உங்கள் அனைத்து கோணங்களையும் சரிபார்த்துக் கொள்ள உங்களுக்கு இந்த அறிவுரையை நான் வழங்கத்தான் வேண்டும்.

 

சாதாரணமான நம் பேச்சுக்களிலும் சிந்தனையிலும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கலக்கிறோம். ஆனால், “தன்னை பயில்வதற்கான” தொடக்கத்திற்கு எது எது எதனோடு தொடர்புடையது  என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.

இவ்விரண்டு செயல்பாடுகளை தொடர்ந்து அடுத்ததான உந்துணர்வு மற்றும் நகர்வு செயல்பாடுகள். இதை புரிந்து கொள்வது நீண்ட காலம் பிடிக்கும். ஏனெனில், எந்தவொரு உளவியல் அமைப்பிலும் இந்த செயல்பாடுகளை சரியான விதத்தில் விளக்கப்படவோ, பிரிக்கவோ இல்லை.

இந்த “உந்துணர்வு” என்னும் சொல், பொதுவாக தவறான அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் எந்த அர்த்தமுமில்லாமல்  உபயோகத்திலுள்ளது. குறிப்பாக,  உந்துணர்வை பொதுவாக புறவயமான செயல்பாடுகளாக சொல்லப்படுகிறது.  உண்மையில், அவை, சில சமயம் உணர்ச்சி செயல்பாடுகளாகவும், நகர்வு செயல்படுகளாகவும் உள்ளது.

 

மனிதனின் உந்துணர்வு செயல்பாடுகள் அதனுள்ளாகவே நான்கு வெவ்வேறு பிரிவுகளாக உள்ளன.

 

முதலாவது அனைத்து உள்ளார்ந்த இயக்கம், அனைத்து உடல் சார்ந்த செரிமானம், உணவு உட்கொள்ளல், சுவாசம், இரத்த ஓட்டம், அனைத்து உள்ளுறுப்புகளின் இயக்கம், புது செல்களின் உருவாக்கம், கழிவு நீக்கம், சுரப்பிகளின் இயக்கம் இன்னும் பல.

இரண்டாவது, ஐம்புலன்களின் உணர்வுகளான  பார்த்தல்,கேட்டல்,முகர்தல்,சுவைத்தல், தொடுதல்,மற்றும் சுமை உணர்வு, வெப்ப உணர்வு, வறட்சி அல்லது குளிர் உணர்வு, இன்னும் பல. மகிழ்ச்சியான அல்லது வெறுப்பூட்டுகின்ற அணைத்து சாதாரண உணர்வுகளும்.

 

மூன்றாவது, அனைத்து உடல் சார்ந்த உணர்சிகள், அதாவது, அனைத்து உடல் சார் உணர்வுகள் ஒன்று மகிழ்ச்சியாகவோ, வெறுப்பாகவோ இருக்கும். அணைத்து விதமான வலிகள், பிடிக்காத சுவை, பிடிக்காத மனம்,மற்றும் மகிழ்வூட்டுகிற உடல் சார்ந்த உணர்வுகளான பிடிக்கின்ற சுவை, மனம் இன்னும் பல.

 

நான்காவது, தன்னியல்பான செய்கைகள், இன்னும் சிக்கலான, சிரிப்பு, கொட்டாவி, மற்றும் அனைத்து விதமான உடல் சார்ந்த நினைவுகளான, சுவை, மனம், வலி,முதலியவை உண்மையில் உள்ளார்ந்த தன்னியல்பு செய்கைகள்.

நகர்வு செயல்பாடுகள், அணைத்து வெளிப்புற இயக்கங்களான, பேசுதல் நடத்தல், உண்ணுதல் மற்றும் அது சார்ந்த நினைவுகள். கீழே விழும் பொருளை எந்த யோசனையுமின்றி பிடிப்பது போன்றவை சராசரி மொழி பயன்பாட்டில் உந்துணர்வு செயல்பாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவை நகர்வு செயல்பாடுகள் சார்ந்தவையாகும்

நகர்வு செயல்பாடுகளுக்கும் உந்துணர்வு செயல்பாடுகளுக்குமான வேறுபாடுகள் மிகத்தெளிவாகவும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. அதாவது, அணைத்து உந்துணர்வு செயல்பாடுகளும் விதிவிலக்கின்றி இயல்பானதும், அதனை உபயோகப்படுத்த அல்லது கற்றுக்கொள்வதற்கு எந்த அவசியம்மும் இல்லை என்பதையும்

இன்னொரு புறம், எந்த நகர்வு செயல்பாடுகளும் இயல்பானது அல்ல. அதை ஒரு குழந்தை நடக்கப்பழகுவதை போல அல்லது ஒருவர் எழுத, வரைய பழகுவதைப் போல அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் நினைவிற் கொள்ள வேண்டும்.

இந்த சாதாரண நகர்வு செயல்பாடுகள் தவிர சில விசித்திரமான நகர்வு செயல்பாடுகளும் உள்ளன. அவை மைந்த இயந்திரத்தின் உபயோகமற்ற வேலைகளை குறிக்கின்றன. மேலும், இயற்கையின் அல்லது இயல்பின் நோக்கமும் அல்ல. ஆனால், மனிதனின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. மற்றும் பெருமளவிலான அவனது ஆற்றலை உபயோகிக்கிறது. அதாவது, கனவுகளின் உருவாக்கம், கற்பனை, பகற்கனவு, தனக்குத்தானே பேசுதல், பேச வேண்டும் என்பதற்காகவே பேசுவது மற்றும் கட்டுக்கு உட்படாத, கட்டுப்படுத்த முடியாத  அனைத்து பொதுவான வெளிப்பாடுகளும் இதில் அடங்கும். இந்நான்கு செயல்பாடுகளான, சிந்தனை, உணர்ச்சி, உந்துணர்வு, மற்றும் நகர்வு செயல்பாடுகளின் அணைத்து வெளிப்பாடுகளையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நம்மில் அவதானிக்க வேண்டும். இவ்வகையான சுய-அவதானிப்பு என்பது, அதாவது, பிரக்ஞையின் நிலைகளை, அதன் பலவிதமான செயல்பாடுகளை சரியான முறையில் கையாளும் போது, அவை “தன்னை பயில்தலின்” அடிப்படையாக அமைகிறது. இதுவே, உளவியலின் தொடக்கமாகும்.

 

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது செயல்பாடுகளை அவதானிக்கும் போது, அதே நேரத்தில் செயல்பாடுகளோடு தொடர்புடைய பிரக்ஞை நிலைகளையும் அவதானிப்பது உபயோகமாக இருக்கும்.

முதலில் மூன்று பிரக்ஞை நிலைகளான உறக்கம், விழிப்பு நிலை மற்றும் சுயப்பிரக்ஞை நிலைகளை எடுத்துகொள்வோம். பிறகு, நான்கு செயல்பாடுகளான சிந்தனை, உணர்ச்சி, உந்துணர்வு, நகர்வு செயல்பாடுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வோம்.

நான்கு செய்லபடுகளில் எல்லாமும் உறக்க நிலையில் தாமாக வெளிப்பட்டு விடுகின்றன. ஆனால்,அவற்றின் வெளிப்பாடுகள் ஒழுங்கில்லாத அல்லது நம்பத்தகுதியில்லாததாகவும் இருக்கும். அவற்றை நாம் எந்த வகையிலும், வழியிலும் உபயோகிக்க இயலாது. அவை தாமாக தோன்றி தாமாக மறையும்.

 

விழிப்பு நிலை பிரக்ஞையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நமக்கு தக்கவாறு அவை நமக்கு உதவும். பல பிரமைகளை உருவாக்கக்கூடியதாக இருப்பினும் அதன் முடிவுகள், அவதானிப்புகளை ஒப்பிட்டு சரிபார்த்து, நேர்படுத்த முடியும். நம் சாதாரண நிலைகளில் நம்மிடம் எதுவுமேயில்லை. ஆக, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாம் இந்த “நிலை”யில் கண்டுகொண்ட தவறான அவதானிப்புகள், தவறான கோட்பாடுகள், தவறான முடிவுகளின் அளவை அறிந்திருக்கும் பட்சத்தில் நம்மை நாம் நம்புவதை முற்றிலும் நிறுத்தி விட வேண்டும். ஆனால், மனிதன் அவனுடைய அவதானிப்புகள் அவனைப்பற்றிய கோட்பாடுகள் எத்தனை ஏமாற்றுதனமானது என்பதை அவன் உணர்வதில்லை. மேலும், தொடர்ந்து அதனை நம்புபவனாகவும் இருக்கிறான். இந்த ஒன்று தான் மூன்றாம் நிலை பிரக்ஞையான சுய-பிரக்ஞை நிலை அனுபவத்தின் தொடர்போடு தாமாக வெளிப்படும் செயல்பாடுகளை, அதன் அரிதான தருணங்களை அவதானிப்பதிலிருந்து மனிதனை தடுக்கிறது.

இவை எல்லாம் எதை சொல்கிறது என்றால், நான்கு செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மூன்று பிரக்ஞை நிலைகளில் ஒவ்வொன்றிலும் வெளிப்படுகிறது என்பதாகும். ஆனால், பிரக்ஞை நிலைகளோடு தொடர்புறும் நான்கு செயல்பாடுகளின் வேறுபாட்டை கருதுவதற்கு முன், மனிதனின் பிரக்ஞையும், மனிதனின் செயல்பாடுகளும் வேறுபட்ட நிகழ்வு, இயல்பும் வேறுபட்டது, வேறுபட்ட காரணங்களை சார்ந்தது மற்றும் ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று இருக்கும் என்பதை அவசியமாக புரிந்து கொள்ள வேண்டும். “பிரக்ஞை இல்லாமல் செயல்பாடுகளும் இருக்கும். செயல்பாடுகள் இல்லாமல் பிரக்ஞையும் இருக்கும்.”  

***

(தொடரும்..)

ஹபீப் ஹாதி. A. Y.

The post மனிதனுக்கு சாத்தியமாகிற ஞானப்பரிணாம உளவியல் appeared first on வனம்.

  •  

ரம்போ – ப.தெய்வீகன்

(1)

தலைநகர் கன்பராவில் பெருமைக்குரிய சாவுகளின் நினைவாக வீற்றிருந்த ஆஸ்திரேலிய போர் நினைவுப் பேராலயம், அதி முக்கிய கௌரவிப்பு நிகழ்வொன்றுக்காக தயாரகிக்கொண்டிருந்தது. காலை வெயில் விழுந்து நினைவாலயத்தின் முன்கோபுர நிழல் பரந்த பச்சைப்புல்வெளியில் சரிந்திருந்தது. நாயை எதிர்பார்த்தபடி நானும் பேர்கஸனும் காத்திருந்தோம்.

ஈராக்கில் சித்திக் என்ற குறுநகரில் காலை நேர ரோந்துப் பணியின்போது வெடித்த கண்ணியில் படுகாயமடைந்தவன் பேர்கஸன். சிதறிய காலோடு இரத்தச் சகதியில் கிடந்தவனை, சக இராணுவத்தினர் இழுத்தெடுத்து, உயிர் கொடுத்ததோடு, நாடு திரும்பியவன். ஆறு ஆண்டுகளாக அன்பான அயலவன். சக்கர நாற்காலியையும் என்னையும் தவிர, நெருக்கமான உறவுகள் என்று அவனுக்கு யாரும் இல்லை.

சித்திரக்கற்களால் மடக்கி மடக்கிக் வேயப்பட்ட பென்னாம்பரிய அந்த நினைவுப் பேராலயத்தை பூமரக்கிளைகள் தழுவியபடி சரிந்திருந்தன. கிளைகளில் ஆங்காங்கே குமிழ்களாய் வெளித்தள்ளிய பொன்நிற மலர்கள், வெயில் கரைந்து உறைந்ததுபோல காட்சியளித்தன. நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் வெள்ளை வண்ண பிளாஸ்திக் கதிரைகளை நிரம்பியிருந்தனர்.

பாண்ட் வாத்திய ஓசை நினைவாலயத்தின் பின்பக்கமாகக் கேட்டவுடன், அரங்கிலிருந்தவர்கள் நிமிர்ந்து இருந்துகொண்டார்கள். சத்தம் ஆரோகணித்துச் சென்றது. நீல வண்ணச்சீருடையில் வாத்தியக்குழுவினர் அணிவகுத்தபடி மேடையை நோக்கி நகர்ந்துவருவது ரம்யமாகத் தெரிந்தது. வாத்தியக்காரர்களுக்குப் பின்னால், சாம்பல் வண்ண சீருடைகளில் இலட்சினை பொருத்திய படைத் தளபதிகள் ஊர்ந்து வந்தார்கள். அவர்களது நடையில் இராணுவ இறுக்கமும் பெருமையும் தெரிந்தது.

எல்லோரும் எழுந்து நின்று மதிப்பளித்தார்கள். பேர்கஸன் சக்கர நாற்காலிக்குள்ளிருந்து விழிகள் விரியப் பேரார்வத்துடன் எட்டிப்பார்த்தான். இறுதியாகக் கண்டுகொண்டோம்.

கழுத்தைத் தவிர மேனியெங்கும் கருமை படர்ந்த கொழுத்த நாய். அணிவகுப்பின் மத்தியில் இராணுவ வீரன் ஒருவனுக்கு அருகில் மிக நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தது. தன்னைச் சூழக் கேட்டபடியிருக்கும் சத்தங்களுக்கு மிகவும் பழக்கமானதைப் போன்ற ஒத்திசைவான தோரணை அதன் மாபிள் கண்களில் தெரிந்தது. அவ்வப்போது கூட்டத்தை நிமிர்ந்து பார்த்தது. நடையில் கம்பீரத்தைக் காண்பித்தது.

பாண்ட் வாத்திய ஒலிகள் ஓய்ந்து, போர் வீரர்களை நினைவு கூரும் உரைகள் நிறைவடைந்தன. கௌரவிப்பு நேரம் ஆரம்பமானது. வெளிநாடுகளில் சென்று நேச நாட்டுப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட ஆஸ்திரேலிய வீரர்களின் பெருஞ்சாதனைளை தளபதி ஒருவர் பேசத்தொடங்கினார். சாதனைகள் நிகழ்த்தியவர்களின் பெயர்களை அவர் அரங்கதிரக்குறிப்பிட்டார். பின்னர், அந்தப் பெயர்களை அழைத்தபோது, இறுக்கம் குலையாத சீருடைகளுடன் வரிசையில் வந்த சேனாபதிகள் தங்களுக்குரிய இலட்சினைகளை வாங்குவதற்கு மார்பு புடைக்க நிமிர்ந்து நின்றார்கள். பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்துத்தினார்கள். மேடையின் ஓரத்தில் குந்தியிருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த எங்களது நாய், இப்போது தனக்கான நேரம் வந்துவிட்டதைப்போல முன்னாலிருந்த கூட்டத்தைப் பெருமையோடு பார்த்தது.

பல வண்ண இலச்சினைகள் தாங்கிய புதிய தளபதியொருவர் மேடையின் வலதுபுறமிருந்த ஒலிவாங்கித் தண்டின் முன்னால் வந்து நின்றார். கௌரவம் பெறவுள்ள பெருமதிப்புக்குரிய நாயின் சாதனைகளை வரிசைப்படுத்தினார். போர் நெடி கொண்ட மூன்று நாடுகளில் பணியாற்றியபோது, தன்னாற்றலால் கண்டுபிடித்த கண்ணிவெடிகள் என்ற நீண்ட கணக்கொன்றைச் சொன்னார். எதிரி நாட்டுக் கிளர்ச்சியாளர்களைக் கண்டுபிடிப்பதற்கு அந்த நாய் செய்த உதவிகளை கந்தக மணம் பறக்க விவரித்தார். விமான நிலையங்களில் அது முகர்ந்தறிந்த வெடிகுண்டுப் பொதிகள், போதைப்பொருள் பொட்டலங்கள் என்று அத்தனை சாதனைகளையும் மந்திரம்போலச் சொல்லிச்சென்றார். கரவொலி சூழ்ந்த மேடையின் நாயகனாய் அந்த நாய் நாணத்தோடு வாலைக் குழைத்தது. மாபிள் கண்கள் விரியச் சிரித்துக் குனிந்தது.

“தீர்மானித்துவிட்டேன். எனது நாயின் பெயர் ரம்போ” – உச்ச மகிழ்வில் என் காதருகில் வந்து சொன்னான் பேர்கஸன்.

தடித்த கருநீலத்துணியால் போர்த்திக் கழுத்தில் கறுப்புப்பட்டியணிந்து, மேடையின் மத்திக்கு அழைத்துவரப்பட்ட ரம்போ, அதற்கு முன்னர் அங்கு வந்த சகல படைத்தளபதிகளையும்போல மிடுக்கோடு நிமிர்ந்து நின்றது. ரம்போவுக்காக எல்லோரும் எழுந்து நின்று சிறப்பாகக் கரவொலி எழுப்பினர். அரங்கில் சத்தங்கள் பெருகப் பெருக ரம்போவின் கண்களில் பெருமகிழ்ச்சியின் அலைகள் திரண்டு தெரிந்தன. ரம்போவுக்கான பதக்கங்களை ஆஸ்திரேலியாவின் மூத்த படைத்தளபதிகளில் ஒருவர் முழந்தாளில் இருந்து அணிவித்தார். பதக்கங்களை சூடிக்கொண்ட ரம்போவிலும் இப்போது இராணுவ மிடுக்கொன்று தெரிந்தது.

(2)

போர் நிலங்களில் பணிபுரிந்த பெருமைக்குரிய நாய்களை, அவை ஓய்வுபெற்ற பின்னர் வீட்டுப்பிராணிகளாகத் தருவதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்திருப்பதாக அறியக் கிடைத்தவுடன், அவ்வாறான அவ்வாறான நாயொன்றைத் தான் வாங்கப்போவதாக பேர்கஸன் என்னிடம் கூறியிருந்தான். ஆரம்பத்தில் அவனது விருப்பம் எனக்குள் மென்மையான ஆச்சரியத்தைத் தந்தது. தனிமையின் பேரழுத்தங்களினால் அவன் பீடிக்கப்பட்டு விட்டானா என்று யோசித்தேன். ஆனால், அவனுக்குள்ளிருந்த விருப்பம் வேறு பலதாயிருந்தது.

மூன்று மாங்களின் பிறகு நானும் பேர்கஸனும் கன்பராவிலுள்ள சிறப்பு விலங்குகள் காப்பகத்துக்குச் சென்றபோது ரம்போ சற்றுக்கொழுத்திருந்தது. கண்களில் பழைய மிடுக்குக் குறைந்து கனிவு தெரிந்தது. ரம்போவை அழைத்துச்செல்வதற்கான ஆவணங்களை அதிகாரி கார்லோஸிடம் பெற்றுக் கையெழுத்திட்டுக்கொடுத்தான் பேர்கஸன்.

போர் நிகழ்ந்த இடங்களில் பணி செய்து திரும்பிய களைப்பிலிருந்து ரம்போ முழுதாக மீளவில்லை என்று கூறி அதற்கான மாத்திரைகள் அடங்கிய குப்பியை கார்லோஸ் தந்தான். சிவப்புக் குப்பியிலுள்ள குளிசைகள் தீர்ந்த பிறகு, மெல்பேர்னில் எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற மருந்தக விவரங்களையும் அவர் குறித்துக் கொடுத்தான்.

“இன்றிலிருந்து இன்னொரு ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய படைவீரரும் உன் வீட்டில் வசிக்கப்போகிறார். அவரைக் கவனமாகப்பார்த்துக்கொள்” கார்லோஸ் சொன்னான்.

கார்லோஸின் குரலில் தெரிந்த கரிசனை எனக்குப்புரிந்தது. பேர்கஸனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்த கார்லோஸ், தனது பாதிச் சிரிப்பை எனக்கும் தந்தான்.

இறுதியில் ரம்போவை எங்களது காரின் பின் ஆசனத்தில் ஏற்றியபோது, அது காருக்கு மிகப்பழக்கமான பயணிபோல ஏறிக்கொண்டது. பின்ஆசனத்தில் அங்குமிங்குமாக தனது கொழுத்த உடலைப்புரட்டி விளையாடியது. முன் ஆசனத்தில் கால்களை வைத்து எழுந்து நின்று, தனது தலையைச்சரித்துவைத்து கண்ணாடி வழியாக வெளியே பார்த்தது. காரின் வாசனை அதற்கு மிகவும் பிடித்திருந்தது.

கன்பராவிலிருந்து மெல்பேர்ன் வரும்வரைக்கும், பேர்கஸன் நெடு வீதியையும் வாகனம் ஓட்டிய என்னையும் பார்த்ததைவிட, பின் ஆசனத்திலிருந்த ரம்போவைக் கவனித்ததுதான் அதிகம். நீண்ட சொந்தமொன்று தனக்குள் மீண்டது போன்ற நிறைவு அவன் மேனியெங்கும் பிரவாகித்து வழிந்தது.

(3)

எங்கள் வீட்டுக்கு அருகில் பாம்பு மலை என்ற விவசாய நிலங்களுடன் கூடிய பெருங்குன்று ஒன்றிருந்தது. அதன் அடிவாரத்தைச் சூழவும் சணல் வயல்கள் நிறைந்திருக்கும். அறுவடை முடிந்த பிறகு, அடிக்கட்டைகள் நிறைந்த பெரு நிலப்பரப்பு மஞ்சள் கடல்போலக் காட்சியளிக்கும்.

மாலை வேளைகளில் நாங்கள் ரம்போவை அழைத்துக்கொண்டு அந்த வயல் வெளிகளில் உலாவிவரலாமென்று பேர்கஸனும் நானும் புதிய ஒழுங்குமுறையொன்றைத் தீர்மானித்துக்கொண்டோம். மாத்திரைகளின் தூக்கத்தினால் நடுப்பகல் வரைக்கும் சோம்பல் வழிந்தபடி வீட்டின் ஒவ்வொரு மூலையாக குட்டி நித்திரையடிக்கும் ரம்போ, மாலையானதும் சுறுசுறுப்பாகும்.

பாம்பு மலைக்கு மிக அண்மையில் நீளமான நதியொன்று பரந்திருக்கும். பளபளக்கும் நீல நிறத்தில் பள்ளத்தில் தெரியும் அந்த நதி ரம்போவுக்கு மிகவும் பிடிக்கும். பெரு வெளிகளையும் நதியையும் கண்டவுடன் தன்னை அறியாமல் தனியாக ஓடத்தொடங்கும். தாவித் தாவி தரையை முகர்ந்து பார்க்கும். சில இடங்களில் கால்களால் நிலத்தைக் கிளறும். திடீரென்று சில இடங்களில் நிறுத்தி யோசிப்பதுபோல முகத்தைச் சரிக்கும். மீண்டும் வேகமாக ஓடும். ரம்போவின் சகல உடல்மொழிகளும் சாதாரண நாய்களைவிட மிகவும் வித்தியாசமானவையாகவே தெரிந்தன. அது என்ன சொல்ல வருகிறது என்பதைக் கலைத்து கலைத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது எமக்குப் பெரும் சவாலாக இருந்தது.

இதற்கிடையில் என்னுடைய அம்மாவின் தோழி ஒருத்தி வீட்டுக்கு வந்து சென்ற புண்ணியத்தில், ரம்போ ஈராக்கில் கண்ணிவெடியகற்றும் வேலையில் ஈடுபட்டது என்ற தகவல், அடுத்த தெருவிலிருந்த ஹாலிப் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. ஒரு நாள் வேலை முடிந்து வரும்போது ஹாலிப் தனது மகனோடு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான்.

ஹாலிப்பும் அவனது குடும்பமும் நான்கு வருடக் கடும்போராட்டத்துக்குப் பிறகு, ஈராக்கிலிருந்து வெளியேறி படகு வழியாக ஆஸ்திரேலியா வந்தவர்கள். அவர்களின் குடும்பத்தில் இருவர் உட்பட உறவினர்கள் பதினொரு பேர் ஈராக் போரில் இறந்துவிட்டார்கள். எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள பூங்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்திருந்த போதுதான் ஹாலிப்பினை முதன்முதலாகக் கண்டேன். பிறகு, அவ்வப்போது மாலையில் நான் பட்மின்டன் விளையாடப் போகும்போது தனது மகனோடு அங்கு வருவான். போர் தனது குடும்பத்தை தின்று சிதைத்த கதைகளைச் சொன்னான். அவனது இரண்டாவது மகளும் மனைவியின் தங்கையும் தனியாக இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தபோது, கண்ணிவெடியில் சிக்கிப் பலியான சம்பவத்தை ஒருநாள் கூறினான். போரின் சத்தங்கள் அடங்காத அவனது கண்களைப் பார்த்தேன். தனது மகளின் உடலின் எந்தப் பாகமும் எஞ்சவில்லை என்று என் கைகளில் தன் கைவைத்துச் சொன்னபோது, அவனது கைகளில் நான் உணர்ந்த நடுக்கம், எனது ஒவ்வொரு நரம்பிலும் பரவியோடியது.

“ஹலோ ஹாலிப் வாருங்கள் வாருங்கள்….”

ஹாலிப்பும் அவனது மகனும் ரம்போவைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தார்கள். பேர்கஸன் வீட்டுக்குத் தங்களை அழைத்துப்போகும்படி கேட்டார்கள்.

அவர்கள் வந்திருந்த மாலை நேரம் ரம்போ எங்களுடன் பாம்பு மலைப்பக்கமாக வழக்கம்போல நடைபோவதற்கு மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தது. ஹாலிப்பையும் மகனையும் கண்டவுடன் அதன் கண்களைவிட வால்தான் வேகமாகப் பேசியது. ரம்போவைக் கண்டதும் அதன் கண்களைப் பார்க்கும் ஏக்கத்துடன் ஹாலிப் தலையை அங்கும் இங்குமாகச் சரித்தான். தன் நாட்டைக் கண்டுவந்த தேசாந்திரியிடம் கதை கேட்கும் ஆர்வத்தோடு அவன் ரம்போவை அள்ளியணைப்பதற்கு அவசரப்பட்டான். ரம்போவுடன் ஒரு பிணைப்பு உருவாகியதுபோல அவனது முகத்தில் பல மின்னல் கொடிகள் தோன்றி மறைந்தன.

இந்தக்காட்சியை பேர்கஸன் தனது சக்கர நாற்காலியிலிருந்து கொண்டு கனிவோடு கண்டு களித்தான். ரம்போ தனது வீட்டுக்கு வந்த நாளிலிருந்து பேர்கஸின் முகத்திலும் பெரும் மலர்ச்சி தெரிந்தது.

“நாங்கள் ரம்போவுடன் வெளியே போகும் நேரம்தான், ஹாலிப் நீங்களும் வாங்களேன்”

ஹாலிப் மிகுந்த மகிழ்ச்சியோடு இணைந்துகொண்டான். ஹாலிப்பைவிட அவனது மகனோடுதான் ரம்போ நெருக்கமானது. ரம்போ முதலில் அவனது கால்களை முகர்ந்தது. அவன் குனிந்திருந்து ரம்போவின் தலையை வருடிவிட்டான். அவனது பிஞ்சு விரல்களின் ஸ்பரிஸம் ரம்போவுக்கு புதிதாயிருந்தது. கூச்சத்தில் அவனது கால்களை நக்கியது. பிறகு வழக்கம்போல சணல் வயல்களுக்குள் வேகமாக ஒடியது. வரம்புகளின் மீது துள்ளியெழுந்து புற்தரைகளில் விழுந்து, முடிகளை உதறியது. ஹாலிப்பின் மகன் ரம்போவின் சேட்டைகளைப் பார்த்துச் சிரித்தவாறே அதனைக் கலைத்துச் சென்றான்.

“இந்த நாட்டின் அடையாளம் கங்காரு. பண்ணைக்காரர்கள் என்றால் குதிரை. மாடு, ஆடு என்று எத்தனையோ வீட்டுப் பிராணிகள் உள்ளன. நாய் என்றாலும்கூட எத்தனையோ அழகான – பெறுமதியான – வீட்டுநாய்கள் வளர்ப்பதற்கு இங்கே இருக்கின்றன. போர் நிலத்து நாயை நீங்கள் வாங்கியிருப்பது புதிராக இருக்கிறது”

பேர்கஸனைப் பார்த்து ஹாலிப் கேட்டான்.

“நாங்கள் எல்லோரும் போரின் பிடியிலிருந்து அதிஷ்டத்தினால் தப்பிவந்தவர்கள் இல்லையா? மீண்டும் அந்தப் போரின் அடையாளமொன்றை வீட்டுக்குள் கொண்டுவந்து வைத்திருப்பது, எங்களது கெட்ட நினைவுகளை பாதுகாப்பதற்கு நாங்களே ஒரு பிரிட்ஜ் வாங்குவது போல் இல்லையா”

ஹாலிப் தனது சந்தேகங்களை சரை சரையாக கொட்டினான்.

“உண்மைதான் ஹாலிப். போர் முனையில் ஏதோவாரு ஒளி காத்திருப்பதாக எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இந்தநாட்டில் வந்திருந்து பார்க்கும்போதுதான் புரிகிறது, போர் என்பது உலகின் மிகப்பெரிய அவநம்பிக்கை. அதன் மீது நாம் வைத்திருந்த எதிர்பார்ப்புதான் உலகின் மிகப்பெரிய பொய். படையிலிருக்கும் யாருக்கும் அது புரியாது. அதுதான் போர் எமக்குத் தருகின்று போதை. அந்த அவநம்பிக்கையிலிருந்து மீண்டவர்கள் எல்லோரிலும் நான் என்னைப் பார்க்கிறேன். ரம்போ என்னைப்போன்ற எனக்கான அடையாளம்”

பேர்கஸனின் பதிலால் ஹாலிப்பின் முகம் ஆச்சரியமாய் மாறத்தொடங்கியது.

“உனது நாட்டினைக் கடைசியாகப் பார்த்து வந்த ஒரு நாயைக் காணவேண்டும் என்ற பேரார்வத்தோடு எப்படி ஓடிவந்தாயோ, அதுபோலத்தான்; இந்தப்போரை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் ஒருத்தனை – பழியுணர்ச்சியற்ற ஒருவனை – எத்தனை யுகத்துக்கும் போரை நிராகரிக்கும் ஒருத்தனை – பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எஞ்சிக்கிடக்கிறது. போருக்குள்ளிருந்து தப்பியோடி வந்தவர்கள்தான் போரிற்கான நிராகரிப்பை மீண்டும் மீண்டும் அழுத்தமாக உணரவேண்டும். இதோ பார்… எனது ரம்போவை…இது போருக்கு ஒட்டுமொத்தமான எதிரி. யார் புதைத்துச் சென்றாலும் கண்ணிவெடியைக் கண்டுபிடித்துக் கிளறச் சொல்லும். யார் வெடிகுண்டோடு நின்றாலும் முகர்ந்துபிடித்து செயலிழக்கச் சொல்லும். ரம்போ போரின் தூய எதிரி. எனக்கு இந்த நாய்கள் மீது பல ஆண்டுகளாக ஏற்பட்ட ஈர்ப்பும் நேசமும் எத்தகையது என்பதை இந்த நாய்களிடம் சொல்லக்கூட என்னால் முடியவில்லை என்பது ஒன்றுதான் எனக்குள்ள கவலையே தவிர, ரம்போ எனக்குக் கிடைத்திருப்பது, எனக்குள்ளிருக்கின்ற குற்ற உணர்வை கொஞ்சமாவது தணிக்கிறது ஹாலிப்”

பேர்கஸன் சொல்லிமுடிக்கவும், நாங்கள் பாம்பு மலைக்கு மிக அருகாமையில் வந்துவிட்டிருந்தோம். மேற்குச் சூரியன் தன் செங்கரங்களால் நதி நீரில் கோலம்போடத் தொடங்கியிருந்த நேரம். ரம்போ வழக்கம்போல நதியின் ஓரங்களை முகர்ந்தபடி ஓடிக்கொண்டிருந்தது. வயல்களுக்கு நீர் இறைப்பதற்காகக் கட்டிய வரிசையான வாய்க்கால் கற்களில் ஒன்றின் மீதிருந்து ஒன்றுக்குப் பாய்ந்து பாய்ந்து, நீரில் தன் முகம் பார்த்தது. தன் காதுகளின் அருகில் கட்டளைகள் கேட்காத வித்தியாசத்தை அவ்வப்போது உணர்ந்துகொள்வதும் திரும்பிப் பார்ப்பதுமாகப் பதகளித்தது. ரம்போவிற்கு எங்களுடனான நடைபயணம் தினமும் புதிதாக இருந்தது.

ஹாலிப்பின் மகன் “ரம்போ…..ரம்போ…..” – என்று கத்தியபடி அதனைத் தன் பிஞ்சுக்கால்களால் துரத்திக்கொண்டிருந்தான்.

(4)

நான்கு மாதங்களில் ரம்போ பேர்கஸன் போல என்னுடனும் மிகவும் நெருக்கமாகிட்டான். காலையில் எழுந்தவுடன் மாத்திரை, அதன் பிறகு அவனுக்காக கட்டப்பட்ட அலுமீனியக் கூட்டுக்குள் மீண்டும் நுழைந்திருந்து நீண்ட நித்திரை. அன்றாட ஆகாரங்களில் குறைச்சலில்லை. வதக்கிய கோழி மற்றும் முயல் இறைச்சி போன்றவற்றை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை பேர்கஸன் முறையாகச் சமைத்துப் பரிமாறினான். மதியத்திற்குப் பிறகு இன்னொரு மாத்திரை. மாலையில் நான் வேலைவிட்டு வந்தபிறகுதான், ரம்போவின் அன்றைய நாளே உற்சாகமாக ஆரம்பமாகும்.

ரம்போவுக்கு ஒரே மாதிரியான கால அட்டவணைக்குள் தன்னைப் பொருத்திக்கொள்வதற்கும் அதற்குரிய கட்டளைகளை பேர்கஸினிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் பிடித்திருந்தது. அதனை அது நிதானம் தவறாமல் பின்பற்றியது. நித்திரையற்ற நேரங்களில் ரம்போ அதிக சத்தத்தை விரும்பியது. பாம்புமலைப் பக்கம் கூட்டிச்செல்கின்றபோதெல்லாம், வெட்டவெளியில் வீசுகின்ற காற்றுச் சத்தம்கூட ரம்போவுக்குள் ஏதோவொரு வழமை உணர்வை ஏற்படுத்தியது. ரம்போவை நோக்கி தொடர்ச்சியாக அதன் பெயரை நான் அழைத்தாலோ, பெரிய சத்தத்தில் கூவினாலோ அது ஏக மகிழ்ச்சியில் தன் உடலை உதறியபடி புற்தரையில் புரண்டு எழும்பும். உடல்மொழிகளின் ஊடாக தனக்குத் தேவையானதை எனக்குக் குறிப்புணர்த்துவதில் ரம்போவுக்கு பெரும் திருப்தியிருந்தது.

ஆனால், அன்று இரவு –

கூட்டுக்குள்ளிருந்த ரம்போ பெரிய சத்தத்தில் குரைக்கத் தொடங்கியபோது நானும் அம்மாவும் அதிர்ந்துபோனாம். படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து நேரத்தைப் பார்த்தபோது இரவு ஒரு மணியாகியிருந்தது. ரம்போவை அடைத்துவைத்த அலுமீனியக் கூட்டுப்பக்கமாகக் கேட்ட பெரும் ஊளைச் சத்தம் எங்கள் இருவருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தியது. ரம்போ இதுவரைக்கும் எழுப்பியிராத பெரும் சத்தம் அது. ரம்போவின் சத்தம்தான் என்று நம்புவதற்கே எனக்குப் பெரும் குழப்பமாகவிருந்தது. ரம்போவின் கூட்டுக்குள் ஏதூவது நுழைந்துவிட்டதால், அச்சத்தில் குரைக்கிறதா என்று முதலில் நினைத்தேன். பின் தாழ்வார வெளிச்சத்தைப் போட்டபோது, பேர்கஸனும் எழுந்து தனது சக்கரநாற்காலியுடன் கூட்டுப்பக்கமாக வந்துவிட்டான். எங்கள் வீட்டின் பின் வீட்டிலிருப்பவர்களும் பக்கத்து வீட்டார்களும் ஏற்கனவே ரம்போவின் சத்தத்திற்கு எழுந்துவிட்டார்கள் என்பது புரிந்தது. ரம்போ விடாது குரைத்துக்கொண்டிருந்தது.

“பசிபோல இருக்குது, குசினியில கோழி எலும்புகள் கொஞ்சம் கறியோட கிடக்குது. கூட்டுக்குள்ள வச்சுவிடு”

அரை நித்திரையில் அம்மா ஆலோசனை சொன்னார்.

அலுமீனியக் கூட்டுக்கு அருகில் சென்ற எனக்கு, ரம்போவின் இரண்டு கண்களும் மினுங்கும் குருதிக்கோளங்களாக அச்சமூட்டின. ரம்போவை நான் பார்த்தபோது தனதுடலில் தணல் விழுந்ததுபோலக் குரைத்தது. அந்தக்கூட்டின் அலுமீனியத் தடிகளைத் தனது கூரான பற்களால் கடித்தபடி என்னை மிரட்டியது. நான் கூட்டுக்கு அருகில் செல்லச் செல்ல அதன் குரைப்பொலி முன்பைவிட அதிகரித்தது. என்னையும் பேர்கஸனையும் கர்ஜனையோடு பார்த்தது. என்னைவிட பேர்கஸன் அதிகம் பயந்திருந்தான். பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த குழந்தையொன்றின் நீண்ட அழுகையொலி, ரம்போவின் குரைப்புக்கு மேல் கேட்டது. ரம்போ தனது கூட்டுக்குள் அங்குமிங்குமாக நடந்து தனது உடலைப்புரட்டிக் குரைத்துக்கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடக்கூடும் என்ற பெரும் பீதி என் தலையைப் பிரித்தது.

“ஏன் இன்னும் குலைக்குது? சாப்பாடு வச்சனியே”

அம்மாவின் கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியாமல், எனது நா தடுமாறியது.

“நேற்றுத்தான் ரம்போவுக்கான மாத்திரை முழுவதுமாகத் தீர்ந்திருந்தது. அதனைக் கார்லோஸிடம் அழைத்துச் சொன்னபோது, “நான்குமாதங்களாகிவிட்டன, இனிமேல் மாத்திரைகளை முற்றாகத் தவிர்க்கலாம்” என்று அவன் சொல்லியிருந்தான். ஆனால், மாத்திரை உட்கொள்ளாத முதல்நாளே ரம்போவுக்குள் இவ்வாறு பெரும் மாற்றங்கள் வெடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை”

பேர்கஸன் பரிதாபமாகச் சொன்னான்.

அடுத்த தெருவிலுள்ள வீடுகளிலும் வெளிச்சங்கள் தெரியத்தொடங்கின. யாராவது பொலீஸிடம் சொல்வதற்கு முன்னர், நாங்களே அழைத்து முறைப்பாடு செய்யலாமா என்று அம்மாவும் நானும் யோசித்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில், அம்மா சாமியறையில் வைரவர் படத்துக்கு முன்னால் தீபத்தை ஏற்றிவைத்து “காக்க காக்க கனவேல் காக்க” – என்று நடுங்கும் குரலில் கந்த சஷ்டிக் கவசத்தை முணுமுணுக்கத் தொடங்கினார். இன்னும் சற்றுப் பொறுக்கலாம், ரம்போ களைத்துப் படுத்துவிடுவான் என்று வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நான் நடந்துகொண்டிருந்தேன். எனக்கு கால்களின் வழியாக பயக்குளிர் ஏறிக்கொண்டிருந்தது.

“நாய் கூட்டுக்குள்ள கொஞ்சத் திருநீறு போடுவமே தம்பி…வைரவர் வாகனம் சொன்னது கேக்கும்…..”

எனது முகத்தில் தெரிந்த பதில் ரேகைகளைப் புரிந்துகொண்டு, அம்மா திரும்பவும் சாமியறைக்குள் போய்விட்டார்.

மூன்று மணி நேரப் பொறுமையின் பின்னர், காலை நேரக் குருவிச் சத்தங்களும் வாகன ஒலிகளும் கேட்கத்தொடங்கின. ரம்போவின் குரைப்பொலி அடங்கியது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அலுமீனியக்கூட்டுக்குள் சிறிய அனுங்கல் ஒலி கேட்டுக்கொண்டேயிருந்தது. பின்னர் தூங்கிவிட்டது.

நாயின் சத்தம் அடங்கும்வரைக்கும் காத்திருந்தவர் போல அம்மா தொடங்கினார்.

“தேவையில்லாத கோதாரி வேலை தம்பி இது. ஊர் பேர் தெரியாத நாய வீட்டுக்குள்ள கொண்டுவந்து வச்சுக்கொண்டு பெரிய தலையிடியப்பா. நாளைக்கே ரெண்டுபேருமா போய் அவங்களிட்டத் திருப்பிக் குடுத்துப்போட்டு வாங்கோ….”

தூக்கம் கலைந்த சினம் அம்மாவை உலைத்தது. தனது காலை நேர வேலைகளுக்கு ஒத்திசைவாக ரம்போவை வைது தீர்த்தார்.

(5)

பெருங்குற்ற உணர்ச்சியில் உடைந்துகிடந்த பேர்கஸனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவன் இரண்டாம் தடவையும் போரினால் காயமடைந்ததைப்போல மிகவும் உடைந்து போயிருந்தான்.

வேலைக்கு அழைத்து லீவு சொன்னேன். கன்பரா அரச அலுவலகங்கள் ஒன்பதுமணிக்குத்தான் திறக்கும். காத்திருந்து கார்லோஸிற்கு அழைப்பெடுத்தேன்.

“போர் நிலங்களில் பணிபுரிந்த நாய்கள் சத்தங்களுக்குப் பழக்கப்பட்டவை அவற்றின் காதுகளில் ஏதாவதொரு சத்தம் விழுந்து கொண்டேயிருக்கவேண்டும். எந்த ஒலிகளுமில்லாத இரவுகள் இந்த வகை நாய்களுக்கு மிகுந்த ஒவ்வாமை மிக்கவை. அதற்காகத்தான் இவற்றுக்கு மாத்திரைகள் கொடுத்து, வீட்டு விலங்குகளாக மாற்றி, உங்களுக்குத் தருகிறோம். ஆனால், இவ்வளவு மாதங்களுக்குப் பிறகும் ரம்போ உங்களுக்குச் சிக்கல் கொடுக்கிறது என்றால், நீங்கள் திரும்பவும் மூன்று நேர மாத்திரைகளை கொடுக்கத் தொடங்குங்கள். நாயினால் ஆபத்து தொடரும் என்று நீங்கள் கருதினால், மீண்டும் கன்பராவுக்குக் கொண்டுவாருங்கள்”

கார்லோஸ் இது குறித்து முன்பே சொல்லியிருந்தபோதும், அதன் நீண்ட விளைவுகள் இவ்வளவு பயங்கரமானவை என்று பேர்கஸனோ நானோ உணர்ந்திருக்கவில்லை.

ரம்போவுக்கான மாத்திரையை வாங்குவதற்கு வெளியே போய்வந்தபோது, அம்மா வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். முன்வீட்டு மஸிடோனியன்காரனும் பக்கத்துவீட்டு ஆஸ்திரேலியனும் நான் இல்லாத நேரத்தில் பேர்கஸினிடம் வந்து ரம்போ பற்றிய முறைப்பாட்டினை கடுமையாகச் சொல்லியிருக்கிறார்கள். அம்மா ஆங்கிலத்தில் தனக்கு விளங்கியதை கோர்த்து வைத்து எனக்குச்சொன்னார். புதிதாக வாங்கிய நாய் என்றும் திருப்பிக்கொடுக்கப்போவதாகவும் அவர்களிடம் உறுதியளித்து பேர்கஸன் அவர்களை மன்றாடி அனுப்பிவைத்திருக்கிறான்.

வீடு திரும்பிய என்னிடம், “அவகாசமே வேண்டாம், நாயைக் கன்பராவுக்குத் அனுப்பிவிடுவோம்” என்று பேர்கஸன் குரல் தழுதழுக்கச் சொன்னான். மாற்று மார்க்கமோ மாத்திரை மார்க்கமோ வேண்டாம் என்பதில் பேர்கஸன் உறுதியாயிருந்தான். தான் வெறுக்கும் போரின் சிறுபொறியொன்றை தானே மூட்டிவிட்டதைப்போல அச்சம் அவனது விழிகளில் விம்மியது.

காலை தூக்கத்திலிருந்து எழுந்து, கூட்டுக்குள்ளிருந்து எங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரம்போவைப் பார்த்தேன். எதுவுமே நடக்காததுபோல வாலைக்குழைத்தது. சிறு ஒலிகளை எழுப்பி அலுமீனியத் தடிகளின் வழியாக செல்லம் கொஞ்சியது. எனக்குக் கூட்டைத் திறப்பதற்கு அச்சமாக இருந்தது. முதல் நாளிரவு சுற்றுவட்டாரமும் பட்டபாடுகள் இன்னமும் நினைவில் அகலவில்லை.

வேலைக்குப் போகாத எனது காரினை வீட்டின் முன் கராஜில் கண்டுகொண்ட ஹாலிப், மதியமளவில் ஐந்தாறு நண்பர்களுடன் வந்தான். ரம்போவின் முன்னிரவு அட்டகாசங்கள் அடுத்த தெருவுக்கும் எட்டிவிட்டதா என்ற ஆச்சரியத்தோடு அவனை வரவேற்றேன். ஹாலீப்போடு வந்தவர்கள் பேர்கஸன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஈராக்கியர்கள். தங்களது நாட்டில் வேலை செய்துவிட்டு வந்திருக்கும் ரம்போவைப் பார்க்கவேண்டும் என்று வந்திருப்பதாக ஹாலிப் கூறியபோது எனக்கு நெஞ்சுக்குள் குளிர் குழாயொன்று வெடித்தது போலிருந்துது.

ஹாலிப்பிடம் முதல்நாளிரவு நடந்தவற்றைச் சொன்னேன். அதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்கினேன். நான் கூறிக்கொண்டிருக்கும்போதே, அவன் வந்தபோதிருந்த பூரிப்பு முகத்திலிருந்து மறைந்தது. தனது நிலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சக அகதி மீதான கவலையும் பரிவும் அவனுக்கு ரம்போ மீது எழுந்ததை உணரமுடிந்தது. கண்கள் கலங்கினான். அவன் ரம்போவில் அதிகம் உரிமைகொள்வது எனக்குப் புதுமையாயிருந்தது.

“உங்களுக்கு இது புதிததாக இருக்கலாம். இந்தப் பிரச்சினை என்னுடைய மகளுக்கும் பல காலமாக இருந்தது. அவள் பிறந்ததிலிருந்தே யுத்தச் சத்தங்களைக் கேட்டுக் கேட்டு, சதைகளைவிட சத்தங்களால் வளர்ந்தாள். இங்கு வந்த பிறகு, நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இது மனச்சிதைவு என்று கண்டுபிடிப்பதற்கே மருத்துவர்களுக்குப் பலகாலமானது நண்பனே. எத்தனையோ மாத்திரைகள், எத்தனையோ தடவைகள் வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொள்ளப்பட்ட தூக்கச் சோதனைகள் என்று சில மாதங்களுக்கு முன்னர்தான், சத்தங்கள் இல்லாமல் எனது மகள் தூங்குகிறாள்”

அவன் சொல்லி முடிக்கும்போது எனக்கு கண்கள் இருண்டன. முதல் நாளிரவு அலுமீனியக் கூட்டுக்குள் தெரிந்த நெருப்புக்கோளங்கள் போன்ற ரம்போவின் விழிகள், மூளையின் எல்லா நரம்புகளிலும் மின்னுவது போலிருந்தது.

(6)

கன்பராவிலிருந்து மெல்பேர்னுக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், விலங்குகள் காப்பு அமையத்திலிருந்து நான்கு விசேட அதிகாரிகள் பச்சை வண்ண வாகனத்தில் பேர்கஸன் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் உத்தரவின்படி நாங்கள் ரம்போவின் கூட்டினை இரண்டு நாட்களாகத் திறக்கவில்லை. மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து குவளையில் வைத்து, கூட்டுக்குள் தள்ளிவிட்டிருந்தோம்.

ரம்போவைத் திரும்பக்கொடுக்கப் போகிறோம் என்ற தகவலறிந்து ஹாலிப் காலையிலேயே தனது முழுக்குடும்பத்துடன் பேர்கஸன் வீட்டுக்கு வந்திருந்தான். அவனது நண்பர்களும் கூடவே வந்திருந்தார்கள். பேர்கஸன் வீட்டிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த விலங்குகள் காப்பு மையத்தின் வாகனத்தைக் கண்டு, அப்பகுதியால் நடை சென்ற பலர், வந்து புதினம் கேட்டார்கள். ஹாலிப்பின் நண்பர்கள் வாசலில் நின்று விளக்கம் சொன்னார்கள். அவர்கள் ஆச்சரியமாக, ‘நாங்கள் செய்வது சரிதான்’ என்ற முகக்குறிகளோடு தலையாட்டிச் சென்றார்கள்.

பேர்கஸன் வீட்டின் பின்பக்கமாக தங்களது தடித்த கம்பிக்கூட்டோடு சென்ற அதிகாரிகள், ரம்போவினைப் பாதுகாப்பாக தங்களிடம் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் வாகனத்தில் கொண்டுவந்து ஏற்றினார்கள். ஹாலிப்பின் நண்பர்கள் அப்போதுதான் ரம்போவைப் பார்த்தார்கள். அவர்கள் தங்களை அறியாமலேயே “ரம்போ….ரம்போ…” – என்று அழைத்தார்கள். ரம்போ அவர்களின் சத்தங்களினால் மிகுந்த பரவசமடைந்தது. அந்தக்கூட்டத்தில் என்னையும் பேர்கஸனையும் தேடியது. என்னைக் கண்டவுடன் வேகமாக வாலை ஆட்டியபடி தடித்த கம்பிக்கூட்டுக்குள் உடலைப்புரட்டி செல்லம் பொழிந்தது.

எப்போதும் எழுப்புகின்ற விநோத ஒலிகளினால் சமிக்ஞை தந்தது. என் விழிகள் கண்ணீரால் நிரம்பியது. ரம்போ மங்கலாகவே தெரிந்தான்.வெளியில் வரவிரும்பாத பேர்கஸன் வீட்டின் முன்னறையில் சக்கர நாற்காலியிலிருந்து அழுத சத்தம் வெளியிலும் கேட்டது.

வாகனம் புறப்படத்தயாரானது. ஹாலிப் என் தோள் மீது கைபோட்டு அருகில் வந்து நின்றான். பெரும் கூட்டத்ததையும் சத்தங்களையும் சீருடை அணிந்த அதிகாரிகளையும் கண்ட ரம்போ மிகுந்த மகிழ்ச்சியில் கூட்டுக்குள் துள்ளிக்குதித்தது. கேட்டால் எதையும் செய்யத்தயார் என்பதுபோல அங்குமிங்குமாய் உடலை வளைத்தது.

மெது மெதுவாக ஊர்ந்துகொண்டு எங்கள் தெருவினால் ஓடத்தொடங்கிய வாகனத்தின் பின்னால், ஹாலிப்பின் மகன் “பாய்….பாய் ரம்போ….” என்றபடி ஓடி ஓடி வழியனுப்பினான்.

 

முற்றும்

***

1

The post ரம்போ – ப.தெய்வீகன் appeared first on வனம்.

  •  

கடவுளை மன்னித்தல் – க்ளாரிஸ் லிஸ்பெக்டர்

[க்ளாரிஸ் லிஸ்பெக்டர் (1920-1977) பிரேசிலைச் சேர்ந்த எழுத்தாளர். ஜியோவானி பொண்டியாராவின் ஆங்கில மொழிபெயர்ப்பு வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. செய்தித்தாளில் வாராவாரம் க்ரோனிக்கிள்ஸ் என அவர் எழுதிய குறிப்புகள், நினைவோடைகள், கதைகள், கட்டுரைகள் என பலதரப்பட்ட எழுத்துகளின் தொகுப்பில் இடம்பெற்ற ஒன்று Forgiving God. இதைக் கதையாகவோ, நினைவுக் குறிப்பாகவோ வாசிக்கலாம்.]

 

 

   கோப்பகாபனா நிழற் சாலையில் கட்டடங்களை, கடலை, நடைபாதையிலிருக்கும் மக்களைப் பார்த்தபடி குறிப்பாக எதையும் என்றில்லாமல் எதையோ யோசித்தபடி உலாவிக்கொண்டிருந்தேன். என் கவனம் சிதறியிருக்கவில்லை, இலகுவாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் இன்னும் உணர்ந்திருக்கவில்லை. மிக அரிதான ஒரு நிலையில் இருந்தேன்: சுதந்திரமாக. எல்லாவற்றையும் ஓய்வான மனநிலையில் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எல்லாவற்றையும் காண்கிறேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். என் சுதந்திரம் சுதந்திரத்தை இழக்காமலேயே இன்னும் காத்திரமானது. முதலாளி தன் பொருட்களைப் பார்ப்பது போலல்ல, நான் கண்ட எதுவும் என்னுடையதல்ல, நான் அவற்றை என்னுடையதாக்கிக்கொள்ள விழையவுமில்லை. ஆனால் நான் பார்த்தவற்றால் மிக திருப்தியடைந்ததாக உணர்ந்தேன்.

நான் அதுவரை அறிந்திராத ஒரு உணர்வை அப்போதுதான் உணர்ந்தேன். வெறும் பாசத்தினால், பூமியாகவும் உலகமாகவும் இருக்கும் கடவுளின் தாயாக உணர்ந்தேன். வெறும் பாசத்தினால், துளியும் அகங்காரமோ பெருமையோ இல்லை, துளியும் மேன்மையுணர்வோ சமத்துவமோ இல்லை, நான் மொத்த இருப்பின் தாயாகிவிட்டேன். இவையெல்லாம் நான் உண்மையிலேயே உணர்வது, ஒரு போலி உணர்வெழுச்சி இல்லை, எனும்போது கடவுள் என்னால் நேசிக்கப்பட தன்னை அளிப்பார், எந்த பெருமையும் சிறுமையும் இல்லாமல், எந்த சமரசங்களும் தேவைப்படாமல், என்று எனக்குத் தெரியும். நான் அவரை நேசிக்க எடுத்துக்கொள்ளும் நெருக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வார். இந்த உணர்வு எனக்குப் புதிது, ஆனால் எனக்கு அதில் சந்தேகங்கள் இல்லை, அதற்கு முன் எனக்கு இந்த உணர்வு தோன்றவில்லை என்றால், அது தோன்றியிருக்க முடியாது என்பதால்தான். நான் கடவுள் என்றழைப்பதை ஆழ்ந்த அமைதியான அன்புடன், மரியாதையும், பயத்துடன், பணிவுடன் நேசிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவரை தாயைப் போல் நேசிப்பது குறித்து எனக்கு யாரும் சொல்லியிருக்கவில்லை. இந்த தாய்ப்பாசம் கடவுளைக் குறைத்துவிடவில்லை, அவரை இன்னும் மேன்மையானவர் ஆக்கியது, உலகத்தின் தாயாக இருப்பது என் அன்புக்கு சுதந்திரம் அளித்தது.

அப்போதுதான் நான் ஒரு செத்த எலியை மிதித்தேன். உயிரோடிருப்பதன் பயங்கரத்தில் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன; ஒரு நொடியில் பயத்தாலும் பதட்டத்தாலும் சிதறிப்போனேன், என்னுள் துளைத்தெழும் அலறலை அடக்கப் போராடினேன். என்னைச் சுற்றியுள்ள யாரையும் கவனிக்காமல், கிட்டத்தட்ட ஓடிச்சென்று ஒரு விளக்குக் கம்பத்தில் சாய்ந்து நின்றேன். கண்களை இறுகமூடி இதற்கு மேல் எதையும் பார்க்க மறுத்தேன். ஆனால் அந்த செத்த எலி காட்சி என் மனதில் பதிந்துவிட்டிருந்தது: பெரிய வாலுடன் ஒரு செம்பழுப்பு நிற எலி, அதன் நகங்கள் நசுங்கியிருந்தன, அமைதியாக செத்துப்போய் கிடந்தது, செம்பழுப்பாக. எனது அடக்கமுடியாத எலிப் பயம்.

தலையிலிருந்து கால் வரை நடுங்க, எப்படியோ நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன். முழுக்க குழப்பமும் பயமும் நிறைந்திருக்க தொடர்ந்து நடந்தேன். என் முகபாவம் குழந்தைத்தனமாக இருந்தது, என் ஆச்சரியம் அப்படிப்பட்டது. இரண்டு உண்மைகளுக்கு இடையிலான தொடர்பை அறுக்க முயன்றேன்: நான் சில கணங்கள் முன் உணர்ந்ததும், இந்த எலியும். ஆனால் பயனில்லை. காலத்தால் சமீபத்திருந்ததாலாவது அவை தொடர்பு கொண்டிருந்தன. தர்க்கங்களிலின்றி அவை தொடர்புகொண்டிருந்தன. ஒரு எலிக்கும் எனக்கும் ஒத்திசைவு இருக்கலாம் என்பதை யோசித்து மருண்டேன். என்னில் அருவருப்பு நிரம்பி வழிந்தது: திடீரென்று தோன்றிய அன்பிடம் என்னால் என்னை ஒப்புக்கொடுக்க முடியவில்லையா? கடவுள் என்ன சொல்ல முயல்கிறார்? எல்லாவற்றிலும் ரத்தம் உள்ளது என்று நினைவூட்டப்பட வேண்டிய ஆள் இல்லை நான்! அந்த ரத்தத்தை கண்டுகொள்ளாமல் செல்பவள் அல்ல, அதை ஒப்புக்கொள்பவள், நேசிப்பவள். ரத்தத்தை மறக்க அனுமதிக்காதபடி என்னுள் நிறைய ரத்தம் இருக்கிறது. ஆன்மீகம், லௌகீகம் போன்ற சொற்களுக்கு என்னைப் பொருத்த வரை எந்த பொருளும் இல்லை. அப்படி ஒரு எலியால் என்னை பயங்கரமாக எதிர்கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதுவும் நான் மறைவுகளின்றி எளிதாய் பாதிக்கப்படும் நிலையில் இருந்த ஒரு கணத்தில்! என்னை சிறு வயதில் இருந்து துரத்தி வரும் பயங்கரத்தை நீங்கள் யோசித்திருக்க வேண்டும்; இந்த எலிகள் என்னை ஏற்கனவே கேலி செய்திருக்கின்றன, துன்புறுத்தியிருக்கின்றன. பழங்காலங்களில் இருந்து இந்த எலிகள் என்னை வெறுப்புடன் பொறுமையின்று தின்று வருகின்றன! எனவே, இது இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமா? நான் எதையும் கேட்காமல், எதையும் வேண்டாமல், தூய அப்பாவித்தனமான அன்புடன் நேசித்தபடி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்க, கடவுள் தன் எலியால் என்னை எதிர்கொள்கிறார். கடவுளின் கொடூரம் என்னை காயப்படுத்தியது, ஆங்காரமூட்டியது. கடவுள் ஒரு கொடூரன். கனத்த இதயத்துடன் நடந்தேன். நான் சிறுவயதில் அனுபவித்த ஏமாற்றங்களைப் போல இந்த ஏமாற்றமும் ஆற்றுப்படுத்த முடியாததாக இருந்தது. குழந்தைமையின் அநீதிகளிலிருந்து தப்பிக்க முடியாமல் சீக்கிரமே வளர்ந்துவிட்ட குழந்தை நான். நான் தொடர்ந்து நடந்தபடி மறக்க முயன்றேன். என் மனம் முழுக்க பழிவாங்கல்தான் இருந்தது. ஆனால் எல்லாம்வல்ல இறைவனை நான் என்ன பழிவாங்கிவிட முடியும், என்னை நசுக்க ஒரு எலியை நசுக்க வேண்டியிருக்கும் கடவுளை? சாவுள்ள ஒரு மனிதனாக என்னிடமிருந்ததெல்லாம் என் பாதுகாப்பின்மைதான். பழிவாங்கும் வெறியில் என்னால் அவரை எதிர்கொள்ளவும் முடியவில்லை. அவர் எங்கு ஒளிந்திருப்பார், அவரை எங்கே காண்பது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஏதாவதொன்றை வெறுப்புடன் பார்த்தால், நான் அவரைக் கண்டுகொள்வேனா? அந்த எலியில்?… அந்த சாளரத்தில்?… அந்த சாலையோரக் கற்களில்? என்னைப் பொறுத்தவரை, அவர் இனிமேல் இல்லை! என்னுள், அவரைக் காணவில்லை!

அப்போதுதான் எனக்கு பலவீனர்களின் பழிவாங்கல் நினைவு வந்தது: இதுதானா அது? சரிதான், நான் என் மௌனத்தைக் களைந்து எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன். ஒருவரின் நம்பிக்கையைப் பெற்று பின் அவரது ரகசியங்களை வெளிப்படுத்துவது கண்ணியமற்ற செயல் என்று தெரியும், ஆனால் நான் பேசப் போகிறேன். எதையும் சொல்லாதே, அன்பிற்காக, எதையும் சொல்லாதே! அவரது வெட்ககரமான ரகசியங்களை உனக்குள்ளே வைத்துக்கொள்! – ஆனால் நான் பேசுவதென்று முடிவெடுத்துவிட்டேன்… எனக்கு நடந்ததை விளக்கப் போகிறேன். இந்த முறை நான் அமைதியாயிருக்க மாட்டேன், அவர் எனக்குச் செய்ததை வெளிக்காட்டுவேன். அவரது பெயரைக் கெடுப்பேன்.

யாருக்குத் தெரியும்… ஒருவேளை உலகமும் ஒரு எலிதானோ, நான் தயாராக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன்… நான் பலமானவள் என்றெண்ணியதால், நான் அன்பை ஒரு கணிதக் கணக்காக்கிவிட்டேன். கணக்கு தவறாகிவிட்டது. புள்ளி புள்ளியாக புரிந்ததை அடுக்குவதை, முட்டாள்தனமாக, நேசித்தல் என்று நம்பினேன். தவறான புரிதல்களை சேர்ப்பதன் வழியாகவே ஒருவர் அன்பை அடைய முடியுமென்பதை காணத் தவறிவிட்டேன். பாசத்தை உணர்ந்ததால், அன்பு எளிதென்று நினைத்துவிட்டேன். சிரத்தையான அன்பின் மேல் எனக்கு விழைவு தோன்றவில்லை, சிரத்தை என்பது தவறான புரிதலை ஒரு சடங்காக்கி, அதை காணிக்கையாக்கும் என்பதை புரிந்துகொள்ள தவறிவிட்டேன். ஆனால் முரண்டு பிடிப்பது என் சுபாவம், எப்போதும் சண்டை போடத் தயாராக இருப்பேன். எப்போதும் என் வழியில் போகத்தான் முயல்வேன், நான் இன்னும் விட்டுக்கொடுக்க கற்கவில்லை. மனதின் ஆழத்தில் எனக்கு நான் எதை நேசிக்கத் தேர்ந்தெடுக்கிறேனோ அதைத்தான் நேசிக்க வேண்டும், நேசிக்கவென்று இருப்பதை நேசிக்க வேண்டாம். ஏனெனில் நான் இன்னும் நானில்லை, எனது தண்டனை இன்னும் தானாக இல்லாத ஒரு உலகத்தை நேசிப்பது. நான் எளிதில் காயப்பட்டுவிடுவேன். நான் அடம்பிடிப்பவள் என்பதால், இந்த விசயங்களை எனக்கு நேரடியாகச் சொல்லவேண்டுமோ. நான் எனக்கு சொந்தமானவற்றை விட்டுக்கொடுக்க மாட்டேன், அதனால்தான் ஒரு நகைமுரணோடு அந்த எலி எனக்கே வேண்டுமா என கேட்கப்பட்டது போல. ஒரு செத்த எலியை என் கையில் எடுக்க முடிந்தால்தான் என்னால் எல்லாவற்றின் தாயாக முடியும். சாவான சாவில் சாகாமல் என்னால் அந்த செத்த எலியை எடுக்கவும் முடியாது. எனவே தான் அறியாத, காணாதவற்றைக் கண்மூடித்தனமாக போற்றும் ‘எனது ஆவி கடவுளை பெருக்கிக் காட்டுவதாக’ எனும் பிரார்த்தனையை மனதில் கொள்கிறேன். என்னை தூரமாக்கி வைக்கும் சம்பிரதாயங்களைக் கைக்கொள்கிறேன், ஏனெனில் சம்பிரதாயங்கள் என் எளிமையைக் காயப்படுத்தவில்லை என் பெருமையை காயப்படுத்துகின்றன. பிறந்ததில் நான் கொள்ளும் பெருமையே உலகோடு என்னை நெருக்கமாக உணரச் செய்கிறது – என் இதயத்திலிருந்து வெளியே கேட்காத அலறல்களை உண்டாக்கும் இந்த உலகோடு. நான் இருப்பதைப் போலவே எலியும் இருக்கிறது, ஆனால் என்னாலோ எலியாலோ எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள முடியாதோ, தூரம் எங்களை சமமாக ஆக்குகின்றது. ஒரு எலியின் மரணத்தைக் கோரும் என் இயல்பை நான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எந்த குற்றங்களும் புரியவில்லை என்பதாலேயே என்னை நான் மிக மென்மையானவளாக கருதிக்கொள்கிறேன். அவற்றை அடக்கிக் கொள்வதால், என் அன்பை அப்பாவித்தனமானதாக கருதுகிறேன். முதலில் எனதிந்த கட்டுக்கடங்காத ஆன்மாவை பீதியின்றி பார்க்க முடிந்தால்தான் என்னால் அந்த எலியையும் எதிர்கொள்ளமுடியுமோ. எல்லாவற்றிலும் எனது சுயம் கொஞ்சமாக இருக்கும் இந்த பழக்கத்தை உலகிடம் பகிர வேண்டுமோ. எனது சொந்த இயல்பின் பரிமாணங்களையே நேசிக்க முடியாவிட்டால் நான் எப்படி உலகின் பிரம்மாண்டத்தை நேசிப்பேன்? நான் தீயவள் என்பதால் கடவுள் நல்லவர் என்று கற்பனை செய்யும் வரை, நான் எதையுமே நேசிக்க மாட்டேன்: அது வெறுமனே என்னை குற்றஞ்சாட்டிக்கொள்ளும் வழி. என்னை முழுதாக ஆராயாமல், நான் என் எதிர்மறையை நேசிக்கத் தேர்ந்தெடுத்துவிட்டேன், அதை கடவுள் என்றும் அழைக்கிறேன். என்னோடு வாழப் பழகிக்கொள்ளாத நான், எனக்கு எந்தத் துன்பங்களும் அளிக்காதே என்று உலகைக் கேட்கிறேன். என்னை எனக்கு சமர்ப்பிப்பதில் மட்டுமே வெற்றி பெற்ற நான், (நான் என்னைவிட மிக மிக பிடிவாதக்காரி), எனக்கு என்னைவிட வன்முறை குறைவான பூமியை வழங்கிக்கொள்ள முடியுமென நம்பினேன்.

நான் என்னை நேசிக்கவில்லை என்பதால் மட்டும் கடவுளை நேசிக்கும்வரை, நான் வெறும் தாயக்கட்டைதான், என் பெருவாழ்க்கையெனும் ஆட்டம் ஆடப்படாது. நான் கடவுளை உருவாக்கிக்கொண்டே இருக்கும்வரை, கடவுள் இருக்க மாட்டார்.

***

-வயலட்

The post கடவுளை மன்னித்தல் – க்ளாரிஸ் லிஸ்பெக்டர் appeared first on வனம்.

  •  

தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் வந்தேன் – மார்க்வெஸ்

ஒரு வசந்தகால மழைநாளின் பிற்பகலில் பார்சிலோனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மரியா லூ செர்வாண்டேவின் வாடகைக்கார் மோனக்ராஸ் பாலைவனத்தில் பழுதடைந்தது. அழகும் அறிவும் நிறைந்த இருபத்திஏழு வயது மெக்சிகப் பெண்ணாகிய அவள் சில வருடங்களுக்கு முன்பு கேளிக்கை அரங்க கலைஞராகச் சற்றுப் புகழும் பெற்றிருந்தாள். ஜரகோசாவில் சில உறவினர்களைச் சந்தித்துவிட்டு, அன்று மாலையில் அவள் தனது கணவனைச் சந்திக்க இருந்தாள். அவன் ஒரு காபரே மாயவித்தைக்காரன். புயலுக்கு நடுவே அவளைக்கடந்து சென்ற கார்களையும் ட்ரக்குகளையும் நிறுத்த ஒருமணிநேரமாக சைகைகள் காட்டி பரிதவித்துக்கொண்டிருந்தாள். இறுதியில் ஒரு பழையபேருந்தின் ஓட்டுநர் அவள்மீது இரக்கம் கொண்டான். ஆனால் தான் நெடுந்தூரம் செல்லப்போவதில்லை எனவும் அவன் எச்சரித்தான்.

“அதனால் பரவாயில்லை. ஒரு தொலைபேசியைக் கண்டடைந்தால் போதும் எனக்கு,” என்றாள் மரியா.  

அது உண்மைதான். ஏழு மணிக்கு முன்பாகத் தன்னால் வீட்டிற்கு வரமுடியாது என்பதைக் கணவனிடம் தெரிவிக்க மட்டுமே அது அவளுக்குத் தேவைப்பட்டது. அந்த ஏப்ரலில் ஒரு மாணவி போல மேலங்கியும் பீச் ஷூவும் அணிந்திருந்த அவள் சின்னாபின்னமடைந்த சிறு பறவை போல் தோற்றமளித்தாள். அந்த எதிர்பாரா இடரினால் அதீத பதட்டமடைந்திருந்த அவள் கார் சாவியைக் கையில் எடுக்க மறந்திருந்தாள். ராணுவத்தின் கண்டிப்பான பாவனையுடன் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் இவளுக்கு ஒரு துண்டையும் போர்வையையும் கொடுத்து தன் இருக்கையில் இடம் அளித்தாள். சிதறியிருந்த மழைத்துளிகளைத் துடைத்து விட்டு அங்கே அமர்ந்த மரியா போர்வையைப் போர்த்திக்கொண்டு சிகரெட்டைப் பற்றவைக்க முயன்றாள். ஆனால் அவளது தீப்பெட்டி ஈரமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த அந்தப்பெண் இவளுக்கு நெருப்பை அளித்துவிட்டு இவளிடம் இன்னமும் நனையாமல் இருந்த சிகரெட்டுகளில் ஒன்றைக் கேட்டாள். புகைத்தபடியே தன் துயரத்தைக் கொட்ட எண்ணிய மரியா மழைச்சத்தத்தையும் பேருந்தின் இரைச்சலையும் மீறத் தன்குரலை உயர்த்தினாள். ஆனால் உதட்டின் மேல் ஆள்காட்டி விரலை வைத்து மரியாவை இடைமறித்தாள் அப்பெண்.

’’அவர்களெல்லாம் உறங்குகிறார்கள்’’ எனக் கிசுகிசுத்தாள். அவளது தோள்பட்டையின் பின்புறம் மரியா எட்டிப்பார்த்தபோது, அறுதியிட முடியாத வயதுகளில் பல்வேறு ஸ்திதிகளில் பேருந்து முழுக்க பல பெண்கள்அவளைப் போலவே போர்வையைப் போர்த்தியபடி உறங்குவதைக் காண முடிந்தது. அவர்களது அமைதி அவளையும் தொற்றிக்கொள்ளத் தன் இருக்கையில் சுருண்டுகொண்டு மழையின் சத்தத்தில் மூழ்கிப்போனாள் மரியா. அவள் எழுந்த போது இருட்டியிருந்தது; கடுங்குளிர்ச்சியான தூறலாக புயல் உருமாறியிருந்தது. தான் எவ்வளவு நேரம் தூங்கினோம், இவ்வுலகின் எந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது குறித்தெல்லாம் அவளுக்கு எதுவும் புரியவில்லை. அருகில் அமர்ந்திருந்த பெண் மிகுந்த விழிப்புடன் காணப்பட்டாள்.

நாம் எங்கு இருக்கிறோம்?’ என மரியா வினவ

வந்து விட்டோம்,’ எனப் பதிலளித்தாள் அப்பெண். மிகப்பெரிய ஓர் இருண்ட கட்டடத்தின் கல்பாவிய முற்றத்திற்குள் பேருந்து நுழைந்தது, பிரம்மாண்ட மரங்களடங்கிய ஒரு வனத்திற்குள் இருக்கும் பழைய கன்னியர்மடம் போல அக்கட்டிடம் காட்சியளித்தது. அப்பெண்கள் பேருந்தில் அசைவின்றி அமர்ந்திருப்பது முற்றத்திலிருந்த மங்கிய வெளிச்சத்தினூடாகத் தெரிந்தது. ஒரு மழலையர் பள்ளியின் குழந்தைகளுக்கான கட்டளைகள் போன்ற தொனியுடன் அந்தக் கண்டிப்பான பெண் அவர்களைப் பேருந்தில் இருந்து இறங்கும்படி பணித்தார். அவர்கள் அனைவரும் மூதாட்டிகள். சோம்பல்மிகுந்த அவர்களது அசைவுகளை அந்த முற்றத்தின் அரைவெளிச்சத்தில் காணும்போது, கனவில் வரும் உருவங்கள் போல் தோன்றினர். பேருந்திலிருந்து இறுதியாக இறங்கிய மரியா அவர்களைக் கன்னியாஸ்திரிகள் என எண்ணிக் கொண்டாள். பேருந்தின் கதவருகே வந்த சீருடை அணிந்த சில பெண்கள் அவர்களை இறக்கிபோர்வையைத் தலைமேல் ஏற்றிவிட்டு ரே வரிசையாக நிறுத்திய போது மரியாவிற்கு எதுவும் புரியவில்லை. ஒத்திசைவும் கண்டிப்புமான கைதட்டல் ஓசையினால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். தன்னுடன் இருக்கையைப்பகிர்ந்து கொண்ட பெண்ணிடம் போர்வையைத் தந்துவிட்டு விடை பெற மரியா எத்தனித்த போது, முற்றத்தைக்கடக்கும்வரை அதை உபயோகப்படுத்திவிட்டு அங்கே உள்ள பொருட்கள் வைப்பு அலுவலகத்தில் அதைத் தந்து விடும்படி அவள் அறிவுறுத்தினாள்.

’’அங்கே தொலைபேசி இருக்கிறதா?’’ என மரியா வினவினாள்.

’’ஆமாம், அவர்கள் அதன் இடத்தை உனக்குக்காட்டுவார்கள்,’’ என அவள் பதிலளித்தாள்.

அவள் இன்னொரு சிகரெட் கேட்டபோது நனைந்திருந்த தன் முழுப்பெட்டியையும் மரியா அவளிடம் தந்தாள். ‘’போகிற வழியில் உலர்ந்து விடும் என்றாள். படியில் நின்றபடி, ‘நலம் பெறுக’ என உரக்கக்கத்திய அப்பெண் வேறெதையும் தொடர்ந்து பேச இயலாதபடி பேருந்து கிளம்பிச்சென்றிருந்தது.

கட்டிடத்தின் கதவைநோக்கி மரியா ஓடத்துவங்கியபோது சப்தமான கரவோசை மூலம் ஒரு தாதி அவளை நிறுத்த முயன்று பின் ‘’நில் என்று சொன்னேன்’’ எனக்கண்டிப்புடன் கத்தினாள். போர்வைக்குள்ளிருந்து நிமிர்ந்துபார்த்த போது, மிகக் கண்டிப்பான இரு விழிகளையும்,தப்பிக்கவே முடியாதபடி வரிசையை நோக்கிச் சுட்டுகிற ஒருவிரலையும் கண்டாள். அதற்கு அடிபணிந்தாள். கட்டிடத்தை அடைந்தவுடன் குழுவிலிருந்து பிரிந்த அவள் அங்கிருந்த பணியாளரிடம் தொலைபேசி எங்கே என வினவினாள். தோளில் லேசாகத் தட்டி அவளை வரிசைக்குத் திருப்பிய ஒரு தாதி இனிமையான குரலில்,

‘’இங்கே அழகி, தொலைபேசிக்கு இவ்வழியாகச் செல்லவேண்டும்’’ என்றாள்.

இருண்ட தாழ்வாரத்தினுள் மற்ற பெண்களுடன் சேர்ந்து நடந்தாள் மரியா. ஒரு பொதுப் படுக்கையறைக்கு எல்லோரும் வந்து சேர்ந்ததும் இவர்களிடமிருந்த போர்வைகளைப் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவருக்குமான படுக்கையை நிர்ணயித்தனர் தாதிகள். மனிதாபிமானம் கொண்ட மேலதிகாரியாய் இருக்கக்கூடும் என மரியாவிற்குத் தோன்றிய ஒரு ஒரு தாதி வரிசையாக ஒவ்வொரு பெண்ணிடமும் வந்து தனது பட்டியலிலிருக்கும் பெயரோடு அவர்களது சட்டையில் குத்தப்பட்டிருந்த அட்டையில் இருக்கும் பெயர்களை ஒப்பிட்டுச் சரிபார்த்தாள். மரியாவிடம் வந்தபோது அவளிடம் அடையாள அட்டை இல்லை என்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தாள்.

தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் இங்கு வந்தேன்’’, என்றாள் மரியா.

தனது கார் நெடுஞ்சாலையில் பழுதடைந்த விஷயத்தை மிக அவசரமாக விவரித்தாள். கேளிக்கை நிகழ்வுகளின் மாயவித்தைக்காரனாகிய தன் கணவன் அன்றைய நள்ளிரவிற்கு முன் செல்ல வேண்டிய மூன்று நிகழ்வுகளுக்காக பார்சிலோனாவில் தனக்குக் காத்திருப்பதாகவும், தன்னால் சமயத்திற்குச் சென்று அவனுடன் இணைய முடியாதென்பதைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறினாள். அப்போது கிட்டத்தட்ட ஏழுமணி ஆகியிருந்தது. அவள் இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்ப வேண்டும் என்றும் இவளுக்குத் தாமதமாவதால் அவன் அனைத்தையும் ரத்து செய்து விடுவானோ எனஅஞ்சுவதாகவும் தெரிவித்தாள். அவள் கூறுவதை தாதி கவனமாகக் கேட்பது போல் தோன்றியது.

’’உன் பெயர் என்ன?’’ என வினவினாள்.

ஆசுவாசமைடந்த மரியா தன் பெயரைத் தெரிவித்தாள். ஆனால் பலமுறை பட்டியலைச் சரிபார்த்தும் அவளால் அதனைக் கண்டறிய முடியவில்லை. துணுக்குற்ற அவள் இன்னொரு தாதியிடம் வினவ அவள் பதிலேதும் கூறாமல் தோள்களைக் குலுக்கினாள்.

ஆனால் நான் தொலைபேசியை பயன்படுத்த மட்டும்தான் இங்கு வந்தேன் என்றாள் மரியா.

’’கண்டிப்பாக இனியவளே,எனக் கூறிய மேற்பார்வையாளர் நம்பமுடியாத அளவு அப்பட்டமான இனிமை கொண்ட குரலில் ‘’நீ நலமாக இருக்கிறாய் என்றால் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் இப்போது வேண்டாம், நாளை’’ என்றபடி அவளைப்படுக்கைக்கு அழைத்துச் சென்றாள்.

பேருந்தில் இருந்த பெண்கள் அனைவரும் ஏன் ஒரு நீர்த்தொட்டியின் அடிப்பகுதியில் இருப்பதுபோல் நடந்தார்கள் என்பதன் காரணம் அப்போது தான் மரியாவிற்குப் புரிந்தது. அவர்கள் அனைவருக்கும் மயக்கமருந்து அளிக்கப்பட்டிருந்தது, தடிமனா கற்சுவரும் இறுகிய படிகளும் கொண்ட அக்கட்டிடம் உண்மையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவமனை. திகைத்த அவள் படுக்கையறையிலிருந்து தப்பியோட முயல, முன்கதவை அடையும் முன்பாகவே பெருத்த உருவம் கொண்ட ஒரு தாதி தன் பெரிய கையினால் அவளைத் தாக்கி தரையில் தள்ளி நகரமுடியாமல் இறுக்கிக் கொண்டாள். அச்சத்தில் செயலற்றுப்போன மரியா பக்கவாட்டிலூடாக அவளைப் பார்த்தாள்.

’’கடவுளின் பொருட்டு கருணை கொள்ளுங்கள். இறந்துபோன என் அம்மாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் இங்கே தொலைபேசியைப் பயன்படுத்தத்தான் வந்தேன்.’’

ஆனால் எந்தவிதமான கெஞ்சல்களும் சீருடை அணிந்த அந்த வெறிபிடித்தவளை அசைக்கப் போவதில்லை என்பதை அவளது முகத்தைக் கண்டவுடனேயே மரியா புரிந்து கொண்டாள். தனது அதீதமான வலிமைக்காகவே ஹெர்குலினா என அழைக்கப்படுபவள் அவள்.கட்டுப்பாடிழந்த நோயாளிகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த அவளது பனிக்கரடிக் கைகள் தவறுதலாகக் கொலை செய்வதற்குப் பெயர் போனவை. இருவர் அவளால் கொல்லப்பட்டபோது முதல் சம்பவம் விபத்தென நிறுவப்பட்டது. இரண்டாவது சம்பவம் அவ்வாறு நிறுவப்படுவதற்கான தெளிவான தரவுகளைக் கொண்டிராததால் அடுத்த முறை தீவிரமான விசாரணைக்குள்ளாக்கப்படுவாள் என எச்சரித்து விடுவிக்கப்பட்டாள். ஸ்பெயின் முழுவதிலுமுள்ள பல்வேறு மனநல மருத்துவமனைகளின் சந்தேகத்திற்கிடமான விபத்துகளின் வரலாற்றில் இந்தப் பாரம்பரிய மேல்தட்டுக் குடும்பத்தின் கருப்பு ஆடிற்குப் பங்குண்டு என்கிற ஒப்புக்கொள்ளப்பட்ட கதை நிலவி வந்தது.

அந்த முதல் இரவில் மரியாவைத் தூங்க வைக்கும்பொருட்டு அவர்கள் அவளுக்கு ஊசியிட வேண்டியிருந்தது. அதிகாலைக்கு முன்பு, சிகரெட் பிடிக்க வேண்டுமென்கிற ஏக்கம் அவளுள் எழுந்த போது அவளது மணிக்கட்டும் கணுக்காலும் படுக்கையின் உலோகக் கம்பியுடன் பிணைக்கப்பட்டிருந்தன. அவள் கத்தியபோதும் ஒருவரும் வரவில்லை. பார்சிலோனாவில் அவளது கணவன் அவளைப்பற்றி எந்த விவரமும் கண்டறிய இயலாமல் இருந்தபோது தனது துயரத்தில் மூழ்கி உணர்வற்றுப்போயிருந்த அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

நினைவு திரும்பியபோது எவ்வளவு நேரம் கடந்திருந்ததென்பதை அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது உலகம் அன்பின் உறைவிடம் போலக் காட்சியளித்தது. தட்டைப்பாத நடையும் ஆற்றுப்படுத்தும் புன்னகையும் கொண்ட முக்கியஸ்தராகிய ஒரு நபர் தன் கரத்தின் திறம்மிக்க இரு அசைவுகளால், உயிருடன் எஞ்சியிருப்பது குறித்த அவளது மகிழ்ச்சியை மீட்டுக்கொணர்ந்தார். அவர்தான் அந்த மருத்துவமனையின் இயக்குநர்

அவரிடம் எதுவும் பேசுவதற்கு முன்பாக, அவருக்கு வணக்கம் கூறுவதற்கும் கூட முன்பாக மரியா அவரிடம் சிகரெட்கேட்டாள். ஒன்றைப் பற்றவைத்து, அத்துடன் கிட்டத்தட்ட நிரம்பியிருந்த ஒரு முழுப் பெட்டியையும் கொடுத்தார். மரியாவினால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை

உன் இதயத்தில் இருப்பதனைத்தையும் நீ அழுது தீர்க்கவேண்டிய நேரம் இது. கண்ணீர் தான் ஆகச்சிறந்த மருந்துஎன மிக மென்மையான குரலில் கூறினார் மருத்துவர்

எந்த வெட்கமுமின்றி மரியா தன்னை அவரிடம் முழுமையாக இறக்கிவைத்தாள். புணர்தலுக்குப் பிறகான வெறுமையான பொழுதுகளில் தன் விளையாட்டுத்தனமான காதலர்கள் எவரிடமும் அவளால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை. அவளுக்குச் செவிமடுத்தபடியே தன் விரல்களால் அவளது கூந்தலைக் கோதியும், அவள் சீராக சுவாசிக்க ஏதுவாக அவளது தலையணையைச் சரி செய்தும், அவளது பிரச்சினைகளின் இழைகளினூடாகத் தன் ஞானத்தால் வழிநடத்தியும் அவள் ஒருபோதும் நினைத்திடாத இனிமையுடன் அவர் நடந்து கொண்டார். கூடப்படுப்பதை ஒரு பரிசாக எதிர்பாராமல் இதயபூர்வமாக அவளுக்கு ஒரு ஆண் செவிமடுத்துப் புரிந்துகொள்கிற அதிசயம் அவள் வாழ்விலேயே முதன்முறையாக அப்போதுதான் நடந்தேறியது. நீண்ட ஒரு மணி நேரத்தின் இறுதியில் தன் ஆன்மாவின் ஆழம் வரை வெளிப்படுத்திய பின் அவள் தன் கணவனுடன் தொலைபேச அனுமதி கோரினாள்

தன் பதவியின் அத்தனை கம்பீரத்துடனும் எழுந்து நின்றார் மருத்துவர். “இப்போது வேண்டாம் இளவரசியே“, என்றபடி இதுவரை ஒருபோதும் அவள் உணர்ந்திராத மென்மையுடன் அவளது கன்னத்தைத் தட்டினார். “நேரம் வருகையில் எல்லாமும் நடக்கும்என்றுவிட்டு கதவினருகே சென்றவர், பாதிரியார் போல் ஆசீர்வதித்து தன்னை நம்பும்படி கூறியபின் எப்போதைக்குமாக அவளிடமிருந்து மறைந்துபோனார்

அதே நாளின் பிற்பகலில் ஒரு வரிசை எண் அளிக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய அவளது இருப்பிடம் மற்றும் அடையாளம் பற்றிய சில மேம்போக்கான குறிப்புகளுடன் அந்த மன நல மையத்தில் மரியா அனுமதிக்கப்பட்டாள். அவ்விவரத்தின் பக்கவாட்டில் மருத்துவர் தன் கையாலையே அவள் குறித்த தனது மதிப்பீட்டினைக் குறித்திருந்தார்: கலக்கமடைந்திருக்கிறார்.

மரியா கணித்தது போலவே, அவளது கணவன் ஹார்டாமாவட்டத்திலுள்ள தங்களது நடுத்தர அடுக்கத்திலிருந்து தனது மூன்று நிகழ்ச்சிகளுக்காக அரை மணி நேரம் தாமதமாகக் கிளம்பியிருந்தான். பிரச்சனைகள் எதுவுமற்று, அன்புடன் அவர்கள் இணைந்திருந்த அந்த இரண்டாண்டு வாழ்வில் அவள் தாமதித்திருப்பது இதுதான் முதல் முறை. அந்த வார இறுதியில் ஒட்டுமொத்த மாகாணத்தையும் மூழ்கடித்த கடும் மழைதான் அதற்குக் காரணமாயிருக்கும் என அவன் ஊகித்தான். வெளியே கிளம்பும் முன்பாகத் தன்பயணம் பற்றிய விவரங்களை ஒரு காகிதத்தில் குறித்து கதவில் செருகினான்.

குழந்தைகளனைவரும் கங்காரு உடையணிந்திருந்த முதல் நிகழ்ச்சியில் அவன் தனது மிகச்சிறந்த மாயமீன் ஜாலத்தைக் காட்சிப்படுத்தாமல் தவிர்த்தான். அவளது உதவியின்றி அவனால் அதனைச் செய்ய இயலவில்லை. அவனது இரண்டாவது நிகழ்ச்சி சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு தொண்ணூற்று மூன்று வயது மூதாட்டியின் வீட்டில் இருந்தது. கடந்த தனது முப்பது பிறந்தநாள்களையும் முப்பது வெவ்வேறு மாயவித்தைக்காரர்களுடன் கொண்டாடியது குறித்துப் பெருமிதப்பட்டாள் அவள். மரியாவின் இன்மையினால் அதீதமாய்ச் சங்கடமடைந்திருந்த அவனால் மிகச்சிறிய மாயாஜாலங்களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை. ரம்லாஸ் தெருவின் ஒரு காஃபி க்ளப்பில் தினசரி இரவு அவன் நிகழ்த்துகிற ஜாலங்களின் இன்றைய நிகழ்வாக சில பிரெஞ்சு சுற்றுலாவாசிகளுக்கு சில சுவாரஸ்யமற்ற ஜாலங்களை நிகழ்த்திக்காட்டினான். மாயாஜாலங்களில் நம்பிக்கை இல்லாத அவர்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிற்குப் பிறகும் வீட்டிற்கு அவன் தொலைபேசியை அழுத்திக் காத்திருந்தபோது பதிலளிக்க மரியா இல்லாமல் ஏமாறநேர்ந்தது. இறுதியாக அழைத்த பிறகு, அவளுக்கு ஏதோ ஆகிவிட்டதென்கிற கவலையை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை

பொது நிகழ்வுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வாகனத்தில் பாஸியோ தி கிரேஸியா சாலையில் பனைமரங்களுக்கூடாகச் செல்கையில் வசந்தத்தின் பேரழகைக்கண்ட போதுதான் மரியா இல்லாமல் இவ்வுலகம் எப்படியிருக்கும் என்னும் அச்சம் நிறைந்த எண்ணம் அவனை அதிரச்செய்தது. அவன் எழுதிய குறிப்பு இன்னமும் கதவிலேயே செருகியிருப்பதைக் கண்டதும் அவனது இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. மிகுந்த கவலையடைந்த அவன் பூனைக்கு உணவிடவும் மறந்தான்

ஒருபோதும் அவனது உண்மையான பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை இப்போது இதை எழுதும்போதுதான் உணர்கிறேன்; பார்சிலோனாவில் நாங்கள் அனைவரும் அவனது தொழில்சார்ந்த பெயரைத்தான் அறிந்திருந்தோம். மாயவித்தைக்காரன் ஸாடர்னோ. விநோதமான குணநலம் கொண்ட அவன் சமூகத்தொடர்பிலும் பின்தங்கியிருந்தான்; ஆனால் அவனிடம் இல்லாதிருந்த விவேகமும் வசீகரமும் மரியாவிடம் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. மனைவியைக்காணோமென நள்ளிரவுக்குப்பின் தொலைபேசுவது பற்றியெல்லாம்  ஒருவன் எண்ணவே முடியாத மாபெரும் புதிர்களடங்கிய இச்சமூகத்தினுள் அவள்தான் அவன் கரங்களைப் பற்றி வழிநடத்தியிருந்தாள். எனவே வீட்டிற்கு வந்தவுடன் ஜரகோசாவிற்குத் தொலைபேசியதோடு அவன் நிறுத்திக்கொண்டான்மரியா பிற்பகலிலேயே விடைபெற்றுவிட்டாள் என எந்த அதிர்ச்சியுமற்ற ,உறக்கத்திலாழ்ந்த ஒரு முதியவளின் குரல் மட்டும் பதிலாகக்கிட்டியது. அதிகாலையில் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே அவன் உறங்கியிருந்தான். ரத்தம்படிந்த கந்தலான திருமண உடையில் மரியா இருப்பது போன்ற ஒரு குழப்பமான கனவினைக் கண்டவுடனே, இம்முறை மரியா இப்பெரிய உலகத்தை அவளின்றி அவன் எதிர்கொள்ளும்படியாகத் தனித்து விட்டுவிட்டு எப்போதைக்குமாகப் பிரிந்துசென்றுவிட்டாள் என்கிற உறுதியான அச்சத்துடன்தான் எழுந்தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவன் உள்ளிட்ட மூன்று ஆண்களை அவள் கைவிட்டிருந்தாள். அவர்கள் சந்தித்து ஆறு மாதத்திற்குப் பிறகு, அன்ஜூர் மண்டலத்தில் ஒருவேலைக்காரியின் அறையில் மிருகத்தனமான புணர்ச்சிகளின் வேதனையில் இன்பம் துய்த்த காலத்தில் மெக்சிகோ நகரில் அவனைக் கைவிட்டாள். விவரிக்க முடியாதபடி தீவிரமாய்ப் புணர்ந்த ஓர் இரவுக்குப் பின்பான காலையில் மரியா அங்கிருந்து நீங்கியிருந்தாள். தனது முந்தை திருமண மோதிரங்கள் உள்ளிட்ட அவளது அனைத்து உடைமைகளையும் விட்டு விட்டுச் சென்றிருந்தஅவள், அந்த ஆக்ரோஷமான புணர்தலின் சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி தனக்கில்லையென எழுதிய ஒரு கடிதத்தையும் அவற்றுடன் விட்டிருந்தாள். சட்டப்படியான வயது வரம்பை எட்டும் முன்பே அவள் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டஉயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழனாகிய முதல் கணவனிடம்தான் அவள் சென்றிருப்பாள் என ஸாடர்னோ நினைத்தான். (காதலற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சென்றிருந்தாள்.) ஆனால் இல்லை, அவள் தன் பெற்றோரிடம் சென்றிருந்தாள். எந்தவிலை கொடுத்தேனும், எவ்வித நிபந்தனைகளுமின்றி, நிறைவேற்றுமளவிற்கு அவனே இன்னும் தயாராகாத வாக்குறுதிகளையும்கூட அளித்து தன்னுடன் வரும்படி வேண்டினான். ஆனால் தகர்க்கவே இயலாத உறுதியுடன் அவள் பதிலளித்தாள். “தற்காலிகமானவை, நீண்ட காலத்தியவை என காதலில் இரு வகை உண்டுஎனத் தொடங்கியவள்,நம்முடையது தற்காலிகமானதுஎனக் கருணையின்றி முடித்தாள். அவளதுஉறுதி அவனைத் தோல்வியை ஒப்புக்கொள்ளும்படி செய்தது. ஆனால் மிகுந்த பிரயாசையுடன் அவளை அவன் மறந்த ஓராண்டிற்குப் பிறகு கல்லறைத் திருநாளின் அதிகாலையில் தனது அனாதையான அறைக்குத் திரும்பியபோது வரவேற்பறையின் நீளிருக்கையில் ஒரு மணப்பெண்ணைப் போல முழு வெள்ளை கவுனும் ஆரஞ்சுப்பூக்களாலான கிரீடமும் அணிந்தபடி மரியா படுத்திருந்தாள்.

மரியா அவனிடம் உண்மையைக் கூறினாள். அவளுடன் திருமணம் நிச்சயமாகியிருந்த, மனைவியை இழந்து குழந்தைகளுமின்றி வாழ்ந்துவந்த செல்வந்தன் கத்தோலிக்க தேவாலயத்தில் இவளை மேடையிலேயே அலங்காரங்களுடன் காத்திருக்க வைத்துவிட்டு காணாமல் போயிருந்தான். எப்படியாயினும் வரவேற்பினை நடத்திவிடலாம் என அவளது பெற்றோர் எடுத்த முடிவிற்கு அவளும் உடன்பட்டாள். மரியாச்சி பாடல் குழுவினருடன் பாடி ஆடிய அவள் பின்னரே நிலைமையை உணர்ந்தாள்.வருத்தத்திலும் பச்சாதாபத்திலும் ஸாடர்னோவைத் தேடி நள்ளிரவில் கிளம்பினாள்.

அவன் வீட்டில் இல்லை. ஆனால் வழக்கமாக முற்றத்தில் அவர்கள் மறைத்து வைக்கிற பூந்தொட்டிக்குக் கீழிருந்து சாவியை எடுத்துக்கொண்டாள். எவ்வித நிபந்தனைகளுமின்றித் தன்னை ஒப்புக்கொடுப்பது இப்போது அவளது முறையாக இருந்தது. “இம்முறை எவ்வளவு காலம்?” என அவன் வினவியபோது வினிஸியஸ் டி மொரேஸின் வரியினால் அதற்குப் பதிலளித்தாள்: ”ஒரு காதலால் எவ்வளவு காலத்திற்கு நீடிக்க முடிகிறதோ அவ்வளவு காலத்திற்கு அது நித்தியமானது.” இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும் அது நித்தியமாய் இருந்தது.

ரியா பக்குவமடைவது போல் தோன்றியது. நடிகையாவது குறித்த தனது கனவுகளைத் துறந்த அவள், வேலையிலும் படுக்கையிலும் தன்னை அவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டாள். கடந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் ஒரு மாயவித்தைக்காரனின் நிகழ்விற்கு பெர்பினன் சென்று திரும்பும் வழியில் பார்சிலோனாவிற்கும் முதல்முறையாகச் சென்றிருந்தனர். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் ஹார்டாவின் கேடலோனியன் பகுதியில் ஒரு அடுக்ககத்தை வாங்கி கடந்த எட்டு மாதங்களாக இங்கே வசித்து வருகின்றனர். அது சந்தடி நிறைந்த இடமாக இருந்தது, வேலையாள் யாரும் இல்லை, என்றாலும் ஐந்து குழந்தைகள் வசிக்கும் அளவிற்கான இடம் தாராளமாக இருந்தது. கடந்த வார இறுதியில் ஒரு வாடகைக் கார் அமர்த்தி ஜரகோசாவில் இருக்கும் உறவினர்களைச் சந்திக்க அவள் கிளம்பும்வரை அங்கே மகிழ்ச்சியைத் தவிர வேறெதையும் யாராலும் கற்பனை செய்திருக்க முடியாது. திங்கள் இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்றிருந்தாள் அவள், அந்த வியாழனின் விடியற்காலை வரை அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

அதற்கடுத்து வந்த திங்களில் மரியா வாடகைக்கு எடுத்துச் சென்றிருந்த காரின் காப்பீட்டு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. “அவளைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது” எனக்கூறிய ஸாடர்னோ, அவளை ஜரகோசாபகுதியில் தேடும்படி தெரிவித்தான். ஒருவாரத்திற்குப் பின்னர் வீட்டிற்கு வந்த ஒரு காவல் அதிகாரி மரியா விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொள்ளாயிரம் கிலோமீட்டர் தொலைவில் க்யாடிஸ் என்கிற இடத்திற்குச் செல்லும் பாதையில் கார் சிதிலமடைந்து கிடந்ததாகக் கூறினார். கார் திருட்டுப் பற்றி அவளுக்கு வேறெதுவும் தெரியுமா என அறிய விரும்புவதாக அவர் கேட்டார். பூனைக்கு உணவளித்துக் கொண்டிருந்த ஸாடர்னோ நிமிர்ந்துகூடப் பாராமல், தன் மனைவி தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அவள் எங்கே சென்றிருக்கிறாள் என்பதோ யாருடன் சென்றிருக்கிறாள் என்பதோ தனக்குக் கிஞ்சித்தும் தெரியாதென்பதால் காவல் அதிகாரி இங்கே நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் கூறினான்.  அதீதமாக வெளிப்பட்ட அவனது உறுதி அவரைச் சங்கடத்திற்குள்ளாக்கவே, தன் கேள்விகளுக்காக மன்னிப்புக் கோரிக் கொண்டார். இந்த வழக்கு முடிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

மரியா மீண்டும் தன்னைப் பிரிந்து செல்லக்கூடும் என்னும் ஐயம் ஸாடர்னோவைக் கடக்யூஸ் குறித்து சிந்திக்கச் செய்தது. படகுச் சவாரிக்காக ஈஸ்டரின்போது ரோஸா ரெகஸ் அவர்களை அங்கே அழைத்திருந்தார். ஃப்ரான்காயிஸத்தின்*(Francoism) அந்திமத்தில், மாரிடிம் விடுதியின் காஷ்ஸ் டிவைன்*(gauche divine) மதுக்கூடத்தில் இருந்த ஆறுபேருக்கான தேனிரும்பு மேஜைகளில் ஒன்றைச் சுற்றி நாங்கள் இருபதுபேர் நெருக்கியடித்து நின்றிருந்தோம். மரியா அன்றைய நாளின் தனது இரண்டாவது சிகரெட் பெட்டியைக் காலி செய்து முடித்தபோது அவளது தீப்பெட்டியும் தீர்ந்து போயிருந்தது. ரோமானிய கைச்சங்கிலி அணிந்திருந்த மென்ரோமங்கள் கொண்ட ஒரு மெலிந்த கை அந்தக்கூச்சல் மிகுந்த கும்பலுக்கிடையே நீண்டு அவளுக்கு நெருப்பளித்தது. நிமிர்ந்து பாராமல் நன்றி கூறினாள் மரியா, ஆனால் மாயவித்தைக்காரனான ஸாடர்னோ அவனை நிமிர்ந்து பார்த்திருந்தான் – நன்கு சவரம் செய்த, மெலிந்த இளைஞனாகிய அவன் அதீதமாய் வெளிறியிருந்தான், கரிய குடுமி அவனது இடுப்புவரை தொங்கியது. வசந்தகாலப் பருவக்காற்றின் ஆக்ரோசத்தைச் சமாளிக்க அந்த மதுக்கூடத்தின் ஜன்னல் பலகைகள் திணறிக்கொண்டிருக்க அவன் பருத்தியாலான மலிவான அங்கியும் எளிமையான செருப்பும் அணிந்திருந்தான்.

அடுத்ததாக அவர்கள் இலையுதிர்க்காலத்தின் பிற்பகுதியில்  பார்சிலோனா கடற்கரையில் ஓர் உணவுக்கூடத்தில்தான் சந்தித்துக்கொண்டனர். அப்போதும் அவன் அதே போன்ற ஒரு எளிமையான ஆடையையே அணிந்திருந்தான், ஆனால் குடுமிக்குப் பதிலாக நீண்ட தாடியைக் கொண்டிருந்தான். பழைய நண்பர்கள் என்பது போல அவர்களுக்கு முகமன் கூறிய அவன் மரியாவை முத்தமிட்ட போது அவள் பதிலுக்கு முத்தமிட்ட விதம் அவர்கள் நீண்டகாலமாக ரகசியமாகச் சந்தித்துவரக்கூடும் என்னும் சந்தேகத்தை ஸாடர்னோவில் விதைத்தது. சில நாட்களுக்குப் பிறகு அவர்களது வீட்டின் குறிப்பேட்டில் ஒரு புதிய பெயரையும் அலைபேசி எண்ணையும் மரியா எழுதியிருப்பதைக் கவனித்தான். இரக்கமற்ற பொறாமை அவை யாருடையவை என்பதை அவனுக்குத் தெளிவாக்கிது. இவர்கள் வாழ்வின் இடையில் நுழைந்திருந்தவனின் வாழ்க்கைமுறை அதனை நிரூபணம் செய்தது: இருபத்தி இரண்டு வயதாகிய அவன் ஒரு செல்வந்தனின் ஒரே மகன். நவீன அங்காடிகளுக்கு ஜன்னல் அலங்காரம் செய்து தருபவனாகிய அவன் இருபால் புணர்ச்சியில் விருப்பமுடையவன் என அறியப்பட்டிருந்தான். அதோடு, மணமாகிய பெண்களை ஆற்றுப்படுத்துவதைத் தொழிலாகச் செய்கிறவன் என்னும் விதமாகவும் பெயர் பெற்றிருந்தான். ஆனால் மரியா வீட்டிற்குத் திரும்பி வராத தினம் வரை ஸாடர்னோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அதன்பிறகு தினமும் காலை ஆறுமணியிலிருந்து மறுநாள் அதிகாலை வரை முதலில் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறையும் பின்னர் தொலைபேசிக்கு அருகில் செல்லும்போதெல்லாமும் அந்த எண்ணிற்கு அழைக்கத் தொடங்கினான். யாரும் அதற்குப்பதிலளிக்கவில்லை என்னும் நிஜம் ஸாடர்னோவின் இழப்பினை ஆழமாக்கியது.

நான்காம் நாள் அந்த வீட்டினைச் சுத்தம் செய்ய வந்திருந்த ஒரு அண்டலூசியப் பெண் தொலைபேசிக்குப் பதிலளித்தாள். ”அவர் வெளியே சென்றிருக்கிறார்,” என அவள் பொதுப்படையாகக் கூறியது அவனை மேலும் பைத்தியமாக்கியது. செனோரிடா மரியா என்பவள் அங்கு எப்போதேனும் வந்தாளா எனக் கேட்காமல் ஸாடர்னோவால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“மரியா என யாரும் இங்கே வசிக்கவில்லை” என்ற அவள். “அவர் மணமாகாதவர், என்றாள்.

”அதை அறிவேன்,” என்ற ஸாடர்னோ, “அவள் அங்கே வசிக்கவில்லை. ஆனால் அவ்வப்போது வருகிறாள்தானே?” என்றான்.

அப்பெண்மணி எரிச்சலுற்றாள்.

“முதலில் நீ யாரென்று சொல்” என்றாள்.

ஸாடர்னோ அழைப்பைத் துண்டித்துவிட்டான். இனி இது குறித்து சந்தேகம் கொள்ளத்தேவையில்லை, அதுதான் தகிக்கின்ற உண்மை என்பதற்கான இன்னுமொரு உறுதிப்படுத்தலாக அப்பெண்மணியின் மறுப்பு அவனுக்குத் தோன்றியது. அவன் நிலைகுலைந்தான். அடுத்தடுத்த நாட்களில், பார்சிலோனாவில் அவனுக்குத் தெரிந்த அனைவருக்கும் அகரவரிசைப்படி தொலைபேசத் தொடங்கினான். யாராலும் அவனுக்கு எதையும் சொல்லமுடியவில்லை, ஒவ்வொரு அழைப்பும் அவனது துயரத்தைக் கடுமையாக்கிக்கொண்டே சென்றது. ஏனென்றால், அவனது பொறாமையின் வெறித்தனம் வருத்தமற்ற இரவு ஆந்தைகளான காஷ்ஸ் டிவைன் குழுவினருள் பிரபலமாகியிருந்ததால் இவனது அழைப்பிற்கு அவனை மேலும் துயருக்குள்ளாகும்படியான பதில்களையே அவர்கள் நல்கினர். அதன்பிறகுதான் அந்த அழகான,மனம்பிறழ்ந்த, ஊடுருவ இயலாத நகருக்குள் தான் எவ்வளவு தனித்திருக்கிறோம் என்பதையும் ஒருபோதும் அவன் அங்கே மகிழ்ச்சியாக இருக்க முடியாதென்பதையும் உணர்ந்துகொண்டான். மறுநாள் காலை பூனைக்கு உணவளித்தபிறகு இறப்பிலிருந்து மீண்டு வரும்படியாகத் தன் இதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டவன், மரியாவை மறந்துவிட உறுதிபூண்டான்.

இரண்டு மாதங்களுக்குப் பின்பும் கூட மரியாவினால் மனநலமருத்துவமனையின் வாழ்க்கைக்குத் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியவில்லை. சிறைச்சாலையின் கரடுமுரடான மேஜையோடு பிணைக்கப்பட்டிருந்த தட்டையான தட்டில் வழங்கப்பட்ட அளவு உணவை உண்பதன் வாயிலாகவும், இருளான மத்திம கால சாப்பாட்டுக்கூடத்தின் முகப்பில் இருக்கும் தளபதி ஃப்ரான்சிஸ்கோ ஃப்ரான்கோவின் புகைப்படத்தை உற்றுநோக்கியபடியுமே அவள் உயிர்த்திருந்தாள். அதிகாலை, காலை, மாலை என ஒவ்வொரு நாளின் பெரும்பாலான நேரத்தையும் எடுத்துக்கொண்ட  காலமுறைப் பிரார்த்தனைகளுக்கு ஆரம்பத்தில் அவள் உடன்பட மறுத்தாள். புத்துணர்வுக்கான பகுதியில் பந்து விளையாடவும், மிகத்தீவிரமாக உழைத்து சக பெண்கள் உருவாக்கிய செயற்கை மலர்களை உருவாக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளவும் மறுத்தாள். ஆனால் மூன்றாவது வாரத்திற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவள் அப்பெண் துறவிகளின் வாழ்வுடன் இயைந்துகொண்டாள். அதனாலென்ன, அவர்களில் எல்லாருமே அப்படித்தான் துவக்கத்தில் இருந்தார்கள் எனவும் கால ஓட்டத்தில் மற்றவர்களுடன் இணைந்துகொண்டார்கள் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

ஆரம்ப நாட்களில், சிகரெட் இல்லாத பிரச்சனை தங்கத்தின் விலைக்கு அதை விற்ற தாதியினால் தீர்க்கப்பட்டது. ஆனால் மரியாவிடமிருந்த சிறிய தொகை தீர்ந்தபிறகு அப்பிரச்சனை அவளை மீண்டும் சித்திரவதை செய்யத்தொடங்கியது. ஆனால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்னும் பரிதவிப்பு தொலைபேச வேண்டும் என்னும் பரிதவிப்பிற்கிணையாக அவளை ஆக்கிரமிக்கத் துவங்கியதால், உடனிருக்கும் பெண்கள் குப்பையிலிருந்து எடுத்த சிகரெட் துண்டுகளுடன் செய்தித்தாள்களைக் கொண்டு உருவாக்கிய சிகரெட்டுகளில் ஆறுதல் அடைந்தாள். செயற்கை மலர்களை உருவாக்கியதன் மூலம் அவள் சம்பாதித்த குறைந்த அளவு பெடாஸ்கள் தற்காலிகமாக அவளது தேவையைத் தீர்த்தன.

ஆனால் இரவின் தனிமைதான் எல்லாவற்றையும் விடக் கொடூரமாய் இருந்தது. அவளைப்போலவே,  பெரும்பாலான பிற பெண்களும் வேறெதுவும் செய்யத் தைரியமின்றி அந்த அரையிருளில் விழித்துக்கிடந்தனர், ஏனென்றால் சங்கிலியும் பூட்டும் கொண்டு பாதுகாக்கப்பட்டிருந்த அதன் கனமான கதவினருகே காவல் காத்த இரவுச் செவிலியும் விழித்துக்கொண்டிருந்தாள். என்றாலும், துயரம் தாங்க இயலாத ஓர் இரவில் பக்கத்துப் படுக்கையில் இருக்கும் பெண்ணிற்குக் கேட்கும் அளவு சத்தத்தில்,

“நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?’ என வினவினாள் மரியா.

அருகிலிருந்தவளின் சூன்யமான குரல், “நரகத்தின் குழியில்” எனத் தெளிவாகப் பதிலளித்தது.

”இதொரு புதர்சூழ்ந்த தரிசுக்காடு எனக் கூறுகிறார்கள்,” எனப் படுக்கையறை முழுதும் எதிரொலிக்கும் குரலில் கூறியது இன்னொரு குரல். “அது உண்மையாகத்தான் இருக்கும். கோடைக்கால பௌர்ணமி இரவில் கடற்கரையோரம் நாய்கள் குரைப்பதை நம்மால் கேட்க முடியும்.”

பூட்டினோடு பிணைக்கப்பட்டிருந்த சங்கிலி ஒரு கப்பலின் நங்கூரம் போல ஒலியெழுப்ப கதவு திறந்தது. சட்டெனக் கவிழ்ந்த அமைதிக்கு நடுவே உயிர்த்திருந்த ஒரே ஒரு ஜீவன் போல் தோன்றிய இரக்கமற்ற பாதுகாவலர் படுக்கையறையின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைக்கு நடக்கத் தொடங்கினாள். மரியா பயத்தில் உறைந்து போனாள் – அதற்கான காரணத்தை அவள் மட்டுமே அறிவாள்.

மரியா இந்த மனநல மையத்திற்கு வந்துசேர்ந்த முதல்வாரம் தொட்டே, இரவுத்தாதி, பாதுகாவலர் அறையில் தன்னுடன் படுக்குமாறு அவளிடம் நேரடியாகவே வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தாள். உயிரற்ற, தொழில்முறையிலான தொனியில் துவங்கிய அவள் அந்தக் காதலுக்குப் பதிலாக சிகரெட்டுகளும் மிட்டாய்களும் அவளுக்கு எதுவேண்டுமாயினும் கிடைக்கும் என்றாள். “உன்னிடம் எல்லாமும் இருக்கும். நீதான் ராணியாக இருப்பாய்.” என்றாள் லேசான நடுக்கத்துடன். ஆனால் மரியா அதற்கு உடன்படாதபோது அவள் தனது வழிமுறைகளை மாற்றிக்கொண்டாள்: அவளது தலையணைக்கடியில், ஆடைகளின் பாக்கெட்டுகளில், எதிர்பார்த்திராத இடங்களில் சிறிய காதல் குறிப்புகளை வைத்தாள்.  கல்லைக்கூடக் கசிய வைக்கும் விதமான இதயம் நொறுங்கும் அவசரச் செய்திகளை அவை சுமந்திருந்தன. படுக்கையறையின் இன்றைய நிகழ்விற்கு ஒரு மாதம் முன்பாக அவள் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகியதுபோல் தோன்றியிருந்தது.

உடன்வசிப்பவர்கள் அனைவரும் உறங்கிவிட்டார்கள் எனத் தோன்றியவுடன், மரியாவின் படுக்கையை நோக்கிவந்த தாதி அருவருக்கத்தக்க பல மென் வார்த்தைகளை அவளது செவியில் கூறியதோடு மரியாவின் முகத்திலும் பயத்தில் நடுங்கிய கழுத்திலும் விறைத்திருந்த கைகளிலும் சோர்வுற்றிருந்த கால்களிலும் முத்தமிடத்தொடங்கினாள். மரியா அசைவின்றி இருந்தது பயத்தினால் அல்ல, ஒப்புதலால் என்பதாகப் புரிந்துகொண்ட அவள் மேலும் முன்னேறினாள். அப்போதுதான் மரியா அவளைத் தன் புறங்கையால் தாக்கி அடுத்த படுக்கையில் சென்று மோதி வீழும்படி தள்ளினாள். கலவரமடைந்த அறைவாசிகள் உண்டாக்கிய கூச்சலின் நடுவே ஆங்காரத்துடன் நின்றாள் தாதி.

”தேவடியா நாயே,” எனக்கத்திய தாதி, “என் மேல் நீ பித்தாகும்வரை இந்த நரகத்தின் குழியில் நாம் சீழ்பிடித்துக் கிடப்போம்” என்றாள்.

ஜூன் மாத முதல் ஞாயிறின் காலைப்பொழுதில் அவசர நடவடிக்கைகளைக் கோரும்விதம் முன்னறிவிப்பின்றி கோடை பிறந்திருந்தது. பிரார்த்தனையின் போது புழுக்கம் தாளாத கைதிகள் தங்களது கம்பளி ஆடைகளைக் களைந்து வீசத்தொடங்கினர். பார்வையற்ற கோழிகள் போல நிர்வாணமான நோயாளிகளை செவிலியர் மேலும் கீழும் துரத்தி ஓடுவதைச் சற்று வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் மரியா. குழப்பத்தின் நடுவே அவர்களது கொடூரமான அடியிலிருந்து தன்னைக்காத்துக்கொள்ள முயன்ற அவள் எப்படியோ ஒரு ஆளற்ற அலுவலக அறைக்கு வந்து சேர்ந்திருந்தாள். அங்கே தன்னை எடுக்கும்படி கெஞ்சியபடி இடைவிடாமல் ஒரு தொலைபேசி அலறிக்கொண்டிருந்தது.   யோசனையின்றி மரியா அதனை எடுத்துப் பேசியபோது ஒரு தொலைதூரக்குரல் புன்னகையுடன் தொலைபேசி நிறுவனத்தின் நேர அறிவிப்பினைப் பிரதி செய்ய முயன்று கொண்டிருந்தது:

“தற்போது நேரம் நாற்பத்தி ஐந்து மணிகள், தொண்ணூற்று இரண்டு நிமிடங்கள், மற்றும் நூற்று ஏழு விநாடிகள்.”

குழப்பத்துடன் ”முட்டாள்” என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே கிளம்பியபோதுதான் தான் எப்படியொரு வாய்ப்பை நழுவவிட இருக்கிறோம் என்பதை மரியா உணர்ந்தாள். தன் வீட்டின் எண்தானா என்பதைக்கூட உறுதி செய்ய இயலாத வேகத்துடன் அந்த ஆறு இலக்க எண்ணை மிகுந்த பதட்டத்துடன் டயல் செய்தாள். இதயம் படபடக்க அவள் காத்திருந்தபோது பழக்கமான அந்தத் துன்பமிகு ஓசை ஒருமுறை, இருமுறை, மும்முறை என ஒலித்து இறுதியில் தான் இல்லாத வீட்டில் வசிக்கும் தான் மிகவும் நேசிக்கும் அந்த மனிதனின் குரலைக் கேட்டாள்.

“ஹலோ?”

தன் குரல்வளையில் முடிச்சிட்ட கண்ணீர் கரையும்வரை அவள் காத்திருக்கவேண்டியிருந்தது.

“செல்லமே, அன்பே” என்றபடி பெருமூச்சுவிட்டாள்.

இப்போது கண்ணீர் அவளை முந்திக்கொண்டது. தொலைபேசியின் மறுமுனையில் சற்றுநேர பயங்கரமான அமைதிக்குப்பின், பொறாமையில் எரிகின்ற ஒரு குரல்,

“தேவடியா” எனும் வார்த்தையைத் துப்பிவிட்டு தொலைபேசியை ஓங்கி அறைந்தது.

அன்றிரவு ஆத்திரம் தலைக்கேறிய மரியா உணவகத்திலிருந்த தலைமைத் தளபதியின் சித்திரத்தைக் கிழித்து தன் சக்தியனைத்தையும் உபயோகித்து தோட்டத்தின் புறமிருந்த கறைபடிந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து  வெளியே வீசினாள். பின் ரத்தம் சூழ தரையில் விழுந்தாள். அதற்குப் பின்பும் கூட அவளைக்கட்டுப்படுத்த முயன்று தோல்வியுற்ற செவிலியரின் அடிகளை எதிர்க்கும் அளவிற்கு அவளிடம் ஆத்திரம் மிச்சமிருந்தது. ஆனால் வாசலருகே கைகட்டியபடி நின்று இவளை முறைத்துப்பார்த்த ஹெர்குலினாவைக் கண்டவுடன் மரியா அமைதியடைந்தாள். என்றபோதிலும், ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் நோயாளிகளுக்கான அறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவள்மீது குளிர்ந்த நீரைப் பாய்ச்சி அடங்கவைத்து அவளது காலில் டர்பண்டைன் ஊசி ஏற்றினர். அதனால் கால் வீங்கி நடக்கமுடியாது போனதும் இந்த நரகத்தில் இருந்து தப்பிக்க தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அவளுக்குப் புரிந்தது. அடுத்த வாரம் மற்ற நோயாளிகளுடன் படுக்க அனுமதிக்கப்பட்ட பிறகு அவள் பூனைப்பாதத்தில் நடந்து இரவுத்தாதியின் அறைக்கதவைத் தட்டினாள்.

தன் கணவனுக்கு தாதி தகவல் அனுப்ப வேண்டும் என்பதுதான் மரியா துவக்கத்திலேயே வைத்த கோரிக்கையாய் இருந்தது. யாருக்கும் தெரியக்கூடாது என்னும் நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக்கொண்ட செவிலி, தன்னையறியாமல் ஆட்காட்டி விரலை உயர்த்தி, “எப்போதேனும் அவர்கள் இதனை அறிய நேர்ந்தால் அதன்பின் நீ உயிர்த்திருக்க முடியாது.” என்றாள்.

அதற்கு அடுத்த சனிக்கிழமை மரியாவின் மறுவருகையைக் கொண்டாடுவதற்காகவே அலங்கரித்த தனது சர்க்கஸ் வாகனத்தில் மாயவித்தைக்காரனாகிய ஸாடர்னோ மனநலம் குன்றிய பெண்களுக்கான மருத்துவமனைக்கு வருகை புரிந்தான். ஒரு போர்க்கப்பல போல் ஒழுங்கும் தூய்மையும் கொண்டிருந்த தன் அலுவலக அறைக்கு அவனை நேரடியாகச் சென்று வரவேற்ற இயக்குநர் அவனது மனைவியின் நிலை குறித்த அறிக்கையினை அன்புடன் பகிர்ந்துகொண்டார். அவள் எங்கிருந்து எப்போது எப்படி வந்தாள் என்பது யாருக்கும் தெரியாதென்றும் அவளைப்பற்றிய அதிகாரபூர்வமான விவரமே அவர் அவளைச் சந்தித்தபிறகு கூறிய விஷயங்களைக்கொண்டுதான் பதிவிடப்பட்டதென்றும் கூறினார். அதே தினத்தில் துவங்கிய இதுசார்ந்த விசாரணை ஒன்றும் முடிவேயின்றிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார் இயக்குநர். ஆனால் ஸாடர்னோவிற்குத் தன் மனைவியின் இருப்பிடம் குறித்து எப்படித் தெரிந்தது என்பதுதான் அவரை யோசனையிலாழ்த்தியிருந்தது. ஸாடர்னோ தாதியைக்காட்டிக்கொடுக்கவில்லை.

“காப்பீட்டு நிறுவனத்தினர் சொன்னார்கள்,” என்றான்.

திருப்தியுடன் தலையாட்டிய இயக்குநர், “எல்லாவற்றையும் கண்டறிய இந்தக் காப்பீட்டு நிறுவனத்தினரால் எப்படி முடிகிறதெனத் தெரியவில்லை” என்றார். ரசனையான தன் மேஜையின் மீது கிடந்த கோப்பினை ஒருமுறை பார்வையிட்ட அவர், “ஆனால் அவள் இப்போது மிகுந்த சிக்கலில் இருக்கிறாள் என்பது மட்டும் உறுதி,” என்றார்.

தன் மனைவியின் நலனின் பொருட்டு அவர் கூறக்கூடிய நடத்தை விதிகளைக் கேள்வியின்றி ஏற்பானாயின், மாயவித்தைக்காரன் ஸாடர்னோ அவளைத் தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் பார்வையிட தன்னால் அனுமதி நல்க முடியும் என அவர் உறுதியளித்தார். அடிக்கடியும் ஆபத்தானதாகவும் சமீபமாக அவளுக்கு வரத்துவங்கியிருக்கும் வலிப்பு நோய் மீண்டும் வராதபடிக்கு அவன் நடந்துகொள்ள வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியம் என்றார்.

“ஆச்சரியமாக இருக்கிறது,” என்றான் ஸாடர்னோ. மரியா சற்று முன்கோபிதான் என்றாலும் அவள் மிகுந்த நிதானமானவளும் கூட.”

கற்றரிந்தோரின் பாவனையை வெளிப்படுத்திய மருத்துவர், “பல காலமாக மறைந்திருக்கக்கூடிய சில குணங்கள் என்றேனும் ஒருநாள் திடீரென வெளிப்படுவதுண்டு. ஆனால் அவள் இங்கு வர நேர்ந்தது நல்லதாய்ப் போயிற்று. ஏனென்றால் கடும் நடவடிக்கை தேவைப்படுகிற இதுபோன்ற நோயாளிகளுக்கெனப் பெயர் பெற்றது இம்மருத்துவமனை.” அதன்பிறகு, தொலைபேசி மீது மரியாவிற்கு இருக்கக்கூடிய விநோதமான வெறிகுறித்தும் எச்சரித்தார்.

“அவளை மகிழ்ச்சிப் படுத்துங்கள்” என்றார்.

“கவலைப்படாதீர்கள் டாக்டர்,” என உற்சாகமாகக் கூறிய ஸாடர்னோ, “அதில் நான் தேர்ச்சிபெற்றவன்.” என்றான்.

ஒரு சிறைக்கூடமும் பாவ மன்னிப்புச்சாலையும் சேர்ந்தாற்போலிருந்த பார்வையாளர் அறை முன்பு மடத்தின் வரவேற்பறையாக இருந்தது. அவர்கள் இருவரும் எதிர்பார்த்திருக்கக்கூடிய குதூகலம் பொங்கும் ஒன்றாக இருந்திருக்கவில்லை ஸாடர்னோவின் வருகை. இரண்டு நாற்காலிகளும் ஒரு பூக்களற்ற ஜாடியும் கொண்டிருந்த மேஜைக்கருகே அறையின் நடுவில் மரியா நின்றிருந்தாள். பரிதாபத்திற்குரிய ஸ்ட்ராபெரி நிற ஆடையும் தர்மமாகக் கிடைத்த நைந்துபோன சப்பாத்துகளுமாக நின்ற அவள் கிளம்புவதற்குத் தயாராய் இருக்கிறாள் என்பது பார்த்தாலே தெரிந்தது. ஒரு மூலையில் அவர்கள் கண்களில் பட்டும்படாமல் ஹெர்குலினா கைகட்டி நின்றிருந்தாள். தன் கணவன் உள்ளே நுழைந்தபோது மரியா அசையவில்லை, சிதறிய கண்ணாடித்துண்டுகளால் உண்டான தழும்புகளைக் கொண்டிருந்த அவளது முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அடையாளபூர்வமாக அவர்கள் முத்தமிட்டுக்கொண்டனர்.

“உனக்கு எப்படி இருக்கிறது?” என அவன் வினவினான்.

“இறுதியாக நீ இங்கே வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி அன்பே. நான் செத்துக்கொண்டிருந்தேன்.” என்றாள்.

அமர்ந்து பேசுவதற்கு அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. கண்ணீர் பெருகப்பெருக, அங்கே அவள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் செவிலிகளின் மிருகத்தனம் குறித்தும் நாய்களுக்கும் தகாத உணவு குறித்தும் பயத்தினால் கண்களை மூடமுடியாமல் கிடந்த நீண்ட இரவுகள் குறித்தும் கூறினாள்.

“எத்தனை நாட்களாக நான் இங்கே இருக்கிறேன், மாதங்களா வருடங்களா என்றும்கூடத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் முந்தையதை விட மோசமானதாக இருந்தது.” என்றவள் உள்ளார்ந்து ஆழமாகப் பெருமூச்சுவிட்டபடி , “முன்புபோல் என்னால் இனி ஒருபோதும் இருக்கவே முடியாதெனத் தோன்றுகிறது” என்றாள்.

அவள் முகத்தில் சமீபமாகத் தோன்றியிருந்த தழும்புகளைத் தடவியபடியே, “அதெல்லாம் இப்போது முடிந்துவிட்டது.” என்றான் ஸாடர்னோ. “நான் எல்லா சனிக்கிழமையும் வருவேன். இயக்குநர் அனுமதித்தால் இடைநாட்களிலும்கூட வருவேன். எல்லாம் சரியாகிவிடுவதை நீயே பார்ப்பாய்.”

அச்சம் நிறைந்த கண்களால் அவனை வெறித்தாள் அவள். ஸாடர்னோ தன் நிகழ்த்துகலையின் வசீகரத்தைப் பயன்படுத்த முயன்றான். எல்லா மிகப்பெரிய பொய்களுக்கும் உரித்தான விளையாட்டுத்தனத்துடன் மருத்துவரின் பரிந்துரையை இனிய விதத்தில் கூறினான். ”அதாவது, நீ முழுதாகக் குணமாவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.” மரியா உண்மையைப் புரிந்துகொண்டாள்.

“தயவுசெய்து கண்ணே, எனக்குப் பைத்தியமென நீயும் நம்புவதாக மட்டும் கூறிவிடாதே.”

“உனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது பார்,” என்றபடி சிரிக்க முயன்றான் அவன். “ஆனால், நீ இன்னும் சிலகாலம் இங்கே தங்கினால் அது நிஜமாகவே எல்லோருக்கும் பயன் தருவதாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் என்பதைக் கூறவேண்டியதில்லை.”

“ஆனால் தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் இங்கே வந்தேன் என்பதை முன்பே உன்னிடம் கூறினேனே,” என்றாள் மரியா.

அச்சம்தரும் அவளது இந்தப்பித்திற்கு எப்படி எதிர்வினையாற்றுவதென அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஹெர்குலினாவை நோக்கினான். அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட அவள் தன் கையிலிருக்கும் கடிகாரத்தைச் சுட்டி, சந்திப்பை முடித்துக்கொள்ளும் நேரமாகிவிட்டதெனத் தெரிவித்தாள். இடையீட்டை உணர்ந்து மரியா திரும்பிப் பார்த்தபோது ஹெர்குலினா உடனடித்தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கணவனின் கழுத்தைக் கட்டிக்கொண்ட அவள் நிஜமாகவே பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணைப்போலக் கத்தத் தொடங்கினாள். எவ்வளவு அன்பாக முடியுமோ அவ்வளவு அன்பாக அவளை விடுவித்தவன் பின்னாலிருந்து குதித்து வந்த ஹெர்குலினாவின் கருணையில் அவளை ஒப்படைத்தான். மரியா செயலாற்றச் சிறிதும் வாய்ப்பளிக்காத ஹெர்குலினா, இடது கையால் அவளைத் தரையோடு அழுத்தி மறுகையால் அவளது தொண்டையைச் சுற்றி இறுக்கியபடி, மாயவித்தைக்காரனாகியஸாடர்னோவை நோக்கி,

“போ,” எனக் கத்தினாள்.

அச்சத்தில் ஓட்டமெடுத்தான் ஸாடர்னோ.

அவளைச் சந்தித்து வந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டபிறகு அடுத்த சனிக்கிழமை அவன் தனது பூனையுடன் மருத்துவமனைக்கு வந்தான். தன்னைப்போலவே அதற்கும் உடை அணிவித்திருந்தான்: சிவப்பும் மஞ்சளும் கலந்த இறுக்கமான கால்சராய், மேஜிக் நிபுணனின் தொப்பி, பறப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டது போன்ற ஒரு கம்பளம். சர்க்கஸ் வாகனத்தை மருத்துவமனை வளாகத்தினுள் செலுத்திய அவன் அங்கே கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் நீண்ட அற்புதமான தந்திரங்களைக் காட்சிப்படுத்தினான். மையத்தில் குடியிருந்த நோயாளிகள் அனைவரும் தொடர்பற்ற கூச்சல்களுடனும் ஒழுங்கற்ற கரவோசைகளுடனும் பால்கனியில் நின்றபடி அதனை ரசித்து மகிழ்ந்தனர். மரியாவைத்தவிர அனைவரும் அங்கிருந்தனர்- தன் கணவனைச் சென்று சந்திக்க மட்டுமின்றி, அவனது நிகழ்ச்சியைப் பார்க்கவும் அவள் மறுத்துவிட்டாள். ஸாடர்னோ மிக ஆழமாகக் காயமடைந்தான்.

“இது ஒரு எதிர்பார்க்கக்கூடிய எதிர்வினைதான். சீக்கிரம் மாறிவிடும்.” என ஆறுதல் கூறினார் இயக்குநர்.

ஆனால் ஒருபோதும் அது மாறவில்லை. மரியாவைப் பார்ப்பதற்கு எல்லாவகையிலும் முயன்று தோற்றபிறகு, தன்னிடமிருந்து ஒரு கடிதத்தையேனும் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பரிதவித்தான், ஆனால் பலனில்லை. முயற்சிகளைக் கைவிட்ட ஸாடர்னோ, அலுவலகத்தில் அவளுக்கு சிகரெட்டுகளை மட்டும் தொடர்ந்து அளித்து வந்தான் – அவை நிஜமாகவே அவளைச் சென்றடைந்தனவா என்பதைக்கூட அவன் உறுதிசெய்துகொள்ளவில்லை. ஆனால் உண்மை அவனை ஒருநாள் தோற்கடித்தது.

மீண்டும் திருமணம் செய்துகொண்ட அவன் தன் நாட்டிற்கே சென்றுவிட்டான் என்பதன்றி அவனைப் பற்றி யாரும் எதுவும் அறிந்திருக்கவில்லை. பார்சிலோனாவை விட்டு நீங்கும் முன்பாக, பாதிப்பட்டினியாகக் கிடந்த பூனையை ஒரு தோழியிடம் கொடுத்தான், மரியாவிற்கு சிகரெட்டுகள் அனுப்புவதற்கும் அவள் உறுதி அளித்தாள். ஆனால் அவளும் காணாமலாகிவிட்டாள். ஆனால் மழிக்கப்பட்ட தலையும், ஏதோ கீழைத்தேய அமைப்பின் ஆரஞ்சு ஆடையும், கர்ப்பமான வயிறுமாக இருந்த அவளைப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்ட் இங்லெஸ் கடையில் கண்டதாக ரோஸா ரெகஸ் தெரிவித்தார். தன்னால் முடிந்தபோதெல்லாம் மரியாவிற்கு சிகரெட்டுகள் எடுத்துச் சென்றதாகவும் எதிர்பாராமல் உண்டான சில பிரச்சனைகளைத் தீர்த்துவைத்ததாகவும் அவள் தெரிவித்தாள். ஆனால் பின்பு ஒரு நாள் அங்கே சென்றபோது, அந்த சபிக்கப்பட்ட காலத்தின் மோசமான நினைவுச்சின்னம் போல நின்றிருந்த அம்மருத்துவமனையின்இடிக்கப்பட்ட சிதைவுகளை மட்டுமே அங்கே கண்டிருக்கிறாள். ஆனால் கடைசியாகச் சந்தித்தபோது, சற்றுத் தெளிவாகவும் பருமனாகவும் காட்சியளித்த மரியா அவ்வுறைவிடத்தின் அமைதியில் திருப்தி கொண்டிருந்தாள். பூனைக்கு உணவளிப்பதற்காக ஸாடர்னோ தந்த பணம் முழுவதும் காலியாகி இருந்ததால் அந்தப் பூனையையும் அவள் அன்றுதான் மரியாவிடம் அளித்திருந்தாள்.

***

 

குறிப்பு:-

Francoism: ஸ்பெயின் சர்வாதிகாரி ஃப்ரான்கோ வின் கோட்பாடுகளும் விதிமுறைகளும்
Gauche divine: புதிதாக உதயமாகியிருந்த இடதுசாரி சிந்தனை அமைப்பு.

தமிழில் இல. சுபத்ரா.

The post தொலைபேசியைப் பயன்படுத்த மட்டும்தான் நான் வந்தேன் – மார்க்வெஸ் appeared first on வனம்.

  •  

நீண்டகால மௌனத்தின் நீண்ட நாவுகள்

நீண்டகால மௌனத்தின் நீண்ட நாவுகள் அபி கவிதைகளுடன் எளிய தரிசனம் – கண்டராதித்தன்

 

  கவிதை விஷயத்தின் ஒருமை, முழுமை எனும் வடிவத்தெளிவுகள் கவிதையின் அந்தகாரத்தில் காணாமல் போய்விடலாம். இன்னொன்று ; எந்த விஷயமும் மனசில் இல்லாமல்,அடிப்படைக் கவித்துவ உணர்ச்சியின் வேகச்சுழற்சியில்,; அந்த வேளையில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிக்கொண்டு கவிதை வெளியே வந்துவிடலாம்.முயற்சி, திட்டம், தீர்மானம் இல்லாமலும், அப்படி இருந்தால் அவைகளைத் தப்பியும் பிறந்துவிடும் ஒன்றை நேர்வது என்னாமல் எப்படிச் சொல்வது? மற்றபடி கவிதையின் எழுத்து வடிவாக்கத்தில் பிரக்ஞை மட்டத்தில் கவிஞனின் அடித்தல் திருத்தல் கூட்டல் குறைத்தல் நிகழ்கின்றன. இவை கவிஞனின் உழைப்பு அல்ல. பிறந்த கன்றை ரொம்ப நேரம் நக்கிக்கொண்டிருக்கும் பசு அவன்.

அபி

கவிஞர்கள் தத்துவ ஞானிகளுடனும், நாவலாசிரியர்களுடனும், சிறுகதையாசிரியர்களுடனும் தங்களை நெருக்கமாக உணர்திருப்பர். அந்த வகையில் ஹபிபுல்லா என்ற இயற்பெயர் கொண்ட அபி லா.ச.ரா மற்றும் மௌனி ஆகியோரை தன் அகநோக்கின் முன்னோடியாக இனம் காண்கிறார். இந்த இடத்திலிருந்து நாம் அபியின் கவிதையை அதன் பொருண்மையை, தீவிரத்தை, மொழியின் லகுவான மற்றும் தீவிரத்தன்மையான படிமத்தை பொருத்திப்பார்த்து தொடங்கலாம்.

    1967 ல் தன் முதல் கவிதையை எழுதத் தொடங்கிய அபி,1974 ஆண்டு மீராவின் அன்னம் பதிப்பகம் மூலம் தன் முதல் கவிதைத் தொகுப்பை கொண்டுவருகிறார். தற்போது அடையாளம் பதிப்பகம் அபியின் மொத்த கவிதைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

அபி தன்தொடக்கால கவிதைகளிலிருந்தே தமிழ் நவீன கவிதை இருந்த வடிவத்திலிருந்து மெல்ல விலகி முழுக்க முழுக்க அகவொளி தரிசனம் கூடிய மொழியுடனும், வரிகள் கலைந்தும் காலத்தையும் பொழுதுகளையும  சிந்தனையையும் மயக்க நிலையில் இருக்குமாறு எழுதி வருகிறார்.

பெரும்பாலான கவிதைகள் ஆழ்மனச்சிந்தையில் சென்று வாசிக்கும்படி இருப்பதும், நேரடியாக புலப்படாத அனுபவப்பங்கீடும் அவரது கவிதைகளின் மிகு சிறப்பெனக் கூறலாம்,

மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது

இருந்த இடத்தலேயே

முடிவின்மையின் சேமிப்புக்கு

ஒரு புள்ளியைப் பிரித்துக்கொடுக்கிறது

– என்ற வரியிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு கவிதையை வாசிக்கும்போது அந்த முழுநாளையும் ஒரு கௌரவமானதாக மாற்றும் தன்மை ஒருசில கவிஞர்களுக்கே உரித்தானது.அபி அந்த வரிசையில் வருபவர். தனது கவிதைகளின் மூலம் பொழுதை மிதக்கும் தண்ணீர்ப் பந்தைப்போல மாற்றித்தருபவராகவும் உள்ளார். “என்ற ஒன்று”, “மௌனத்தின் நாவுகள்”, அந்தரநடை, மற்றும் சில கவிதைகள், மாலைவரிசைக் கவிதைகள் என இருநூறுக்கும் குறைவான கவிதைகள் அடங்கியது அபியின் கவிதையுலகம்.

         சமகாலத்தை நேரடியாகப் பிரதிபலிக்காத மொழிநடையில், அபியின் படிம உத்திகள் கவிதையின் மைய அச்சிலிருந்து விலகிய பாவத்தில் அனுபவ விளைவுகளை ஏற்படுத்கிறது. உதாரணத்திற்கு மௌனத்தின் நாவுகள் என்ற தொகுப்பில் உள்ள “உள்பகை” என்ற கவிதையின் ஒருபகுதியை வாசிக்கலாம்.

இருட்டை மீறிச் சீறும்

விரலின் வெறிப்பில்

வெளிக்கோடுகள் மூட்டுவிட,

உள்ளிருக்கும் அலறல் எல்லாம்

அகண்டத்தில் தூசாய்ப் பரவும்; நான்

லேசாகிப் பறந்து

மௌனத்தில் விழிகளில்

பூவிழுவேன்; வேண்டாம், நீட்டாதே!

        –

  அபி தனது கவிதை உத்திகளை எளிமையாகத்தோன்றும் படிமத்திற்கும், நான் என்ற ஒருவனின் அகக்குரலுக்கும் அவனது அக உலகத்திற்குள்ளும் போக வர உள்ள வழியாக வைத்துக்கொண்டுள்ளார்.அதுவே பிசிறில்லாத அக, புறச்சித்திரங்களை வழங்குகிற கவிதைகளாகிறது.

இதனாலேயே அபியின் கவிதைகள் பொதுப்புத்தியில் ஏற்கனவே கவிதை குறித்து இருக்கின்ற மதிப்பீடுகளிலும்     குறியீட்டிலிருந்தும்,அதன் மனநிலைகளில் இருந்தும் விலகி நிற்கிறது.

   எழுத்து காலகட்டத்திற்கு முன்பாகவே நவீன கவிதை   உருவாவிட்டது. ஆனால் நவீன கவிதை தமிழில் உருவாவனதிலிருந்தே கவிதையின் உள்ளீடு, கருத்தியல், வடிவம் போன்றவை குறித்து தர்க்க ரீதியில் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

அழகியல் மற்றும் அகம் சார்ந்த கவிதைகளை மட்டும் விரும்புகிறவர்கள் ஒரு பிரிவாகவும் அதன் அரசிலயற்ற தன்மையை விமர்சனம் செய்கின்றவர்கள் ஒரு பிரிவாகவும் எப்போதும் உள்ளனர். நூற்றாண்டு காணவிருக்கும் தமிழ் நவீன கவிதை வடிவத்தில் இக்குரல்கள் அடங்கிவிடாது என்பதே உண்மை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு விதமான கருத்தியலுக்கும் ஏற்ற இறக்கங்கள் வந்துபோவதை நாம் காண்கிறோம்.

அபியின் கவியுலகம் அகம் சார்ந்த பாடுபொருட்களுடன் கூடுதலான அரூபத் தன்மையைத் தன்னகத்தே கொண்டதாகவும் உள்ளது. எளிதில் வாசிக்க முடிகிற நடையில் இருக்கிற அவரது கவிதைகள் எளிதில் அனுபவத்தைத் தருவதாக இருப்பதில்லை. அயர்ச்சி தராத அந்த மொழிப் பிரயோகத்தை கணக்கில் கொண்டால் அக்கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு தரிசனத்தைத் தருவதாகவும்  உள்ளது.

       ஒரு வசதிக்காக அபியின் மாலை வரிசைக்கவிதைகளை இங்கு எடுத்துக்கொள்ளலாம். இக்கவிதைகள் நாம் அன்றாடம் காணும் மாலைகள் அல்ல, இவற்றை வாசிக்கும்போது நாம் பிரத்யேகமான வாகனத்தில் அமர்ந்து அமைதியாக பயணிக்கும் உணர்வு மேலிடுவதை உணரமுடியும். மொத்தமாக இக்கவிதைகளை வாசிக்கும்போது இரண்டு விதமான உணர்வுகளும் வந்துபோகின்றன.

  அது மிக ஆத்மார்த்தமான மொழியும்,அதன் எளிமையும் பிரமிப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அதே சமயம் கவிதை வடிவத்தின் ஒழுங்கின்மை மீது லேசான விலகல் வந்துபோவதையும் தவிர்க்க முடியவில்லை.

                      மாலை – எது

தூசி படிந்த புளிய மர வரிசையை

வைதுகொண்டே

மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்

தோப்புகளுக்குள்

இரைச்சலைக் கிளறி

எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்

மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்

இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்

ததும்புகிறது

என்வலி

பொழுது நிரம்புகிறது

ஒரு இடுக்குவிடாமல்

00   000     00

தூசிபடிந்த இரைச்சலுக்கடியில்

சாத்வீக கனத்துடன்

இது எது

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்

இடறாத என் பாதங்களினடியில்

இது எது

என் சாரங்களின் திரட்சியுடன்

வலியுடன்

அலங்கரித்த விநோதங்களை

அகற்றிவிட்டு

எளிய பிரமைகளின் வழியே

என்னைச் செலுத்தும்

இது எது?

இக்கவிதை கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் நிகழ்வதாகவும் ஒழுங்கற்ற வடிவம் கொண்டதாகவும் உள்ளது. மேற்பூச்சாக இத்தன்மை கொண்டது எனலாமே ஒழிய அபியின் கவிதையைப் பொருத்தவரை இது சாதாரணமாக நிகழ்வதுதான்.

  தற்செயலாக அபியின் இக்கவிதைகளை பல்லவர்கால கோவில் உள்ள பனமலைப்பேட்டை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்து வாசித்தது ஞாபகத்திற்கு வருகிறது. எதிரில் ஒரே ஒரு பாறை  மலை அளவிற்கு நின்றிருந்தது. பின்புறத்தில் மிகப்பெரிய பனமலை ஏரி நீர் பாயும் பசுமையான வயல்வெளிகள், பக்கவாட்டில் சிதிலமான சாலை என அற்புதமான மனவெழுச்சியைத் தருகிற இடத்தில் இக்கவிதையை வாசிக்க நேர்ந்தது.

இக்கவிதையை வாசிக்கும்போது நம்முள் எழும் பேருணர்ச்சி

இருண்டு நெருங்கி வளைக்கும்

மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்

இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்

ததும்புகிறது

என்வலி

பொழுது நிரம்புகிறது

ஒரு இடுக்குவிடாமல்

  என்கிறபோது தீவிரமும், சாந்தமும், அமைதியும் ஒருங்கே நிகழ்கிறது. இப்போது ஆச்சரியமளிக்கிற ஒரு பெருவெளி, திரண்டதுக்கம், மகிழ்ச்சி, பெரும் பாறை தரிசனம் என பலதரப்பட்ட பேருணர்ச்சிகளுடன் நம் மனம் நிரம்பி வழிகிறது, அது அந்தியாகவே இருக்கும்போது இன்னும் கூடுதல் அழகியலைத் தருகிறது. அபியின் தன் கவிதைகளின் வழியாக நம்மை பூமியிலிருந்து பிரபஞ்ச வெளிக்கு அழைத்துச்செல்லும் ஊஞ்சலாட்டத்தை நிகழ்த்திக் காட்டுகிறார்.

       நாளின் இரண்டு பொழுதுகளுக்குச் சற்று  கூடுதலானஅழகுண்டு, இந்த மத்தியானமும், மாலையும் ஒரு நாளின் பல்வேறு பிரமாண்டங்களைக் கற்றுக்கொடுப்பவை அந்த இரண்டு பொழுதுகளின் அமைதியின் மீது மனித குலத்தின் ஆன்மாவை உணர முடியும்.

மாலை – பயில

உருவினில் மறைந்து

உருவிழந்த

மாலையைப்

பயின்று கொண்டிருப்பேன்

மணல் பிசைந்து

மாலையின் துடிப்பைக் கணிப்பேன்

பயில-

அரவமற்ற

என் மூலைகளினுள்

உறிஞ்சப்படுவேன்

சிடுக்கான இக்கவிதை மனதை மேலோட்டமாக வைத்துக்கொள்வதிலிருந்து விலகி இந்த மாலையைப் பார்ப்பதாகவும், விலகிய மனோபாவத்தில் பார்ப்பதாகவும், பின்னர் அதை உணர்ந்தும் பயின்றும் தன்னுள் தன்னை கரைத்துக்கொண்டதாகவும் உள்ளது.

        குழப்பமான, நிராதரவான, மகிழ்ச்சியற்ற, துயர் மிகுந்த காலத்தில் அபியின் கவிதைகளை  படிப்பது மனோதிடத்தை சோதிப்பதாகவே இருக்கும். வெகுஜனக் கவிதைகளிலும், சிறுபத்திரிக்கை கவிதைகளிலும் இருந்து தனித்த பென்சில் கோடு போன்ற ஒரு பாதையில் விலகிச் செல்லும் கவிதைகள் இவை.

  ஒரு பாமரத்தனமான  கவிதை வாசகனாகவே எப்போதும் அபியின் கவிதைகளை வாசிக்க முற்படவேண்டும். இதற்கு முன்  நம் வாசிப்பில் இருந்த கவிதைகளை இவை சற்று தள்ளி வைக்க முற்படும் அல்லது நாம் அபியின் கவிதைகளிடமிருந்து தள்ளி நின்று பார்த்துச் செல்லவே அக்கவிதைகள் கோரும். தெளிவற்ற மனநிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள  இசை, வாசிப்பு மற்றும் பயணம் என பல்வேறு விடுபடுதல்களை நோக்கி நாம் நகர முற்படுவோம். சிலருக்கு வாசிப்பும் எழுத்தும் குழப்பத்தை விடுவிக்கும். அபியின் கவிதையுலகு மனிதன் எப்போதும் கண்டிராத ஒரு மர்ம பிரதேசத்திற்குள் கைவிளக்கோடு நுழைவது போன்றது. அவை  தனித்துவமான எளிமையையும்,அரூபத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளவை, அபியின் கவிதைகளில் அதிராத இசைத்துணுக்குள் உண்டு,தத்துவ ஞானிக்கு இடமுண்டு, மனப்பிசகு கொண்ட மனிதனுக்கு இடமுண்டு இவற்றைக்கொண்டு பாலம் பாலமான வரிகள் இல்லாமல் மிகச்சாதாரணமாக மையத்தை விட்டு விலகிய தொனியில் நம் கைப்பிடித்துக் கரைசேர்ப்பார்.

”என் சொந்த சோதனைச்சாலைக்கு” என்ற கவிதையில் உள்ள சில வரிகளைப் பார்த்தால்

யுக முகடுகளுக்கே சென்று

அங்கிருந்து

நிமிஷநுரைகளோடு

நேரங்கள் சரிவதைப்

பார்த்துக்கொண்டிருப்பேன்

மௌனத்தின் பூமியைப்

பெருமூச்சுகளால் கீறி

துக்க விதைகளை இட்டு

உயிர் நிரம்பிய தாகங்களை ஊற்றிக்

கவிதைகளை வளர்ப்பேன்

மனித நெஞ்சினுள்

சந்தை கூடி நெரியும்

அந்த நிழல்களை

நினைத்துக்கொண்டிருப்பேன்

அங்கே அந்த இதயத்தில்

ஊமைகளின் தர்க்க மேடையை

ஒரு ஞானமின்னலால்

நொறுக்கிவிட்டு

அந்த இடத்தில்

னவுகளின் சொர்கத்தை அமைப்பேன் என்கிறார்.

இக்கவிதைமுழுவதும் தொடர்ச்சியான தனித்தனி அடுக்குகளாகவே சென்று கொண்டிருக்கிறது.

நமது இளம்பருவத்தில் நமக்கு ஏற்படும் தத்துவ சந்தேகங்களை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம், அவ்வாறு கேட்டுத் தெரிந்தது போக மீதமிருக்கிற சந்தேகங்களை அனுபவத்தில் பெற்றுக்கொள்வோம், மேலும் மீதமிருப்பதை வாசிப்பனுவத்தில் தெரிந்துகொள்வோம் என்றாலும் மேலும் மீதமிருக்கும் தத்துவக் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் முடிவில்லாத நிறைவடையாத மனதோடு தேடல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.அதுபோல இக்கவிதையில்

என் இதயத்திற்குள்

சீற்றத்தோடு எரிகின்ற நெருப்பை

அணைத்துவிட்டு

சிந்தனையோடு எரிகின்ற

சுடர்களை ஏற்றிவைப்பேன் என்கிறபோது வாழ்வென்பது அணையாத தீபமும்,தொடர் சோதனைக் கூடமுமாக உள்ளதைக் காணலாம்.

வியர்த்தம்

வெளியேற வழிதேடி

அலைவதிலும்

விளையுமொரு வட்டம்

நம் முயற்சிகளின்

உள் ஆவி

கெஞ்சி கூடவே வந்து

வியர்த் விளிம்புவரை

புலம்பிப்பார்த்து

முணுமுணுத்து

பிந்தங்கிப்

புள்ளியாய் மறையும்.

அபியின் கவிதைகளை வாசிக்கும்போது அதன் தீவிரத்தன்மை உடனடியாக வாசக மனதைத் திறப்பதில்லை, மாறாக அக்கவிதைகளில் இருந்து ஒருவித மன விலக்கம் ஏற்படுகிறது. தீராத தேடலுடன் அவற்றை மறுபடி வாசிக்கும் போது புதியதொரு நெருக்கத்தையும் தருகிறது. கூர்மையான எளிய சொற்கள், விலகலான மொழி அமைப்பு, கலைத்துப்போடும் கவிதையடுக்கு, தத்துவம், கேள்வி, ஞானம் என பலவிதமான மனமலர்ச்சிகளை உருவாக்குபவை அவரது கவிதைகள். நள்ளிரவில் ஆளற்ற பிரதேசத்தில் பெய்த மழையின் சப்தத்திற்குக்கொப்பானவை, அந்த ஓசைக்கும் அதன் குளிர்ச்சிக்கும் நம்மை ஒப்புக்கொடுத்தால் நம் அஞ்ஞானச் சூடுதணிவதை உணரலாம்.

 

***

– கண்டராதித்தன்

The post நீண்டகால மௌனத்தின் நீண்ட நாவுகள் appeared first on வனம்.

  •  

நாற்று விட்ட அடையாளம் – மு.குலசேகரன்

(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்)

சுந்தரம் கொல்லையை அடைந்ததும் கட்டிலில் சாய்ந்தார். வீட்டிலிருந்து தெருக்கள், ஆறு, கானாற்றைத் தாண்டி வெயிலில் வந்தது அலுப்பாயிருந்தது. எண்ணற்ற முறை அவற்றைக் கடந்திருக்கிறார். தொய்ந்த கயிற்றுக் கட்டில் அவரை உள் வாங்கிக்கொண்டு தொட்டிலைப்போல் ஆடியது. அப்படியே கிடக்க வேண்டுமெனத் தோன்றியது. ஒருக்களித்துப் படுத்து எதிரிலுள்ள தேசிய நெடுஞ்சாலையை வேடிக்கைப் பார்த்தார். அது சுவாரசியமான நாடகக் காட்சியைப்போன்றது. நாலு வழிகளையும் வாகனங்கள் அடைத்துச் சென்றன. ஒன்றையொன்று முந்த முயன்றன. சாலை கறுத்த கம்பளம்போலிருந்தது. அதற்குக் கீழ் விவசாய நிலங்களிருப்பதை நம்ப முடியாது. அவருக்குத் தன் கொல்லையின் சுவடு சிறிதும் தெரியவில்லை. முன்பு நெல் விதைத்து நாற்று வளர்ந்த வயல்போலத் தோன்றவில்லை. அங்கு நீர் கட்டிய தடயம் கொஞ்சமுமில்லை. கொல்லைக்கு முன்னாலுள்ள சாலை தனக்குச் சொந்தமென கற்பனை செய்தார். அங்கு போய் நிற்க முடியாது. வாகனங்கள் அடையாளம் தெரியாமல் அழித்துவிடும்.

காவலாள் பெரிய முருகன் பின்னால் வந்து நின்றார். அதை சுந்தரம் திரும்பிப் பார்க்காமலே உணர்ந்தார். பெரிய முருகன் தயங்கிய குரலில் “தபால்காரு வந்து போனாருண்ணா. அத உங் கிட்டதா தரணுமாம். வரச் சொன்னாரு” என்றார். சுந்தரம் எழுந்து உட்கார்ந்தார். பெரிய முருகன் தலை சொறிந்தபடி நின்றிருந்தார். பதிவுத் தபாலில் நாலு வழிச் சாலைக்கு இழந்த நிலத்துக்கு நஷ்டஈடு கிடைக்கப்போகிறது. காசோலையாகவே வந்துவிட்டிருக்குமென எண்ணினார். தூரத்து கொல்லைக்காரர் கோபாலும் முன்பே சொல்லியிருந்தார். அப்போது அவர்களிருவரும் ஆற்றில் நடந்துகொண்டிருந்தார்கள். “உனக்கென்னப்பா, நெலம் எடுத்ததுக்கு பணம் வரப்போவுதாம். உங் கொல்லைக்கி நல்ல வெல போட்டிருக்குதாம். சந்தையில விக்கறத விடக் கூடவாம்” என்றார் கோபால். அவர் குரலில் காய்ந்த ஆற்று வெக்கை கலந்தாற்போலிருந்தது. “எனத எடுத்துகிட்டு ஏதோ தரப் போறாங்க. அதப் போயி ரொம்பப் பெரிசுன்ற?” என்றார் சுந்தரம் மணலில் நடப்பதால் மூச்சிரைக்க. ஆறு முடிகையில் கோபால் தன் கொல்லைக்குப் பேசாமலேப் பிரிந்தார். பணம் கிடைத்தால் ஓருவருக்கும் சொல்லக் கூடாதென சுந்தரம் உறுதி செய்துகொண்டார். நிலம் பறிக்கப்பட்டு நெடுங் காலமாகி விட்டிருந்தது. அதற்கான இழப்பீடு கிடைக்காதெனவே எண்ணியிருந்தார். கொல்லையை இழந்த துக்கமும் ஏறக்குறைய மறந்திருந்தது.

சுந்தரம் பக்கத்து ஊர் தபால் நிலையத்தை அடைந்தார். அஞ்சல் அலுவலர் வீட்டுத் திண்ணையில் அலுவலகம் திறந்திருந்தது. இருக்கையில் ஒரு தகரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. சுந்தரம் தெருவில் காத்திருந்தார். கொல்லைக்கு வரும் பெண்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். தெருவில் சென்ற கூலி ஏரோட்டும் கிருஷ்ணன் “இதோ வருவாரு. வீ்ட்டுக்குள்ள சாப்பிடப் போயிருப்பாரு” என்று சொல்லிவிட்டுப் போனார். வீட்டினுள் கைக்குழந்தை அழும் சப்தம் கேட்டது. அலுவலர் வாயைத் துடைத்தபடி வெளியில் வந்தார். “இங்கதாயிருந்தது…” என்று தகரப் பெட்டியிலும் மேசையிலும் எரவாண இடுக்கிலும் தேடினார். சற்று நேரத்தில் தபால்காரர் சைக்கிளில் வந்தார். “அது இங்கிருக்குது” என்று தகரப் பெட்டியின் அடியிலிருந்து கடிதத்தை எடுத்து நீட்டினார். அட்டையிலும் தாளிலும் ஒப்புதல் வாங்கிக்கொண்டார். சுந்தரம் வழக்கம்போல் ஆங்கிலத்தில் சேர்த்தெழுதிக் கையெழுத்திட்டார். அஞ்சல் அலுவலர் புன்னகையுடன் பார்த்தார். அங்கேயே கடிதத்தை பிரிக்கலாமென சுந்தரம் யோசித்தார். பிறகு எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

சுந்தரம் மீண்டும் கொல்லைக் கயிற்றுக் கட்டிலில் வந்து அமர்ந்தார். கடித உறையை கவனமாகப் பிரித்தார். எதிர்பார்ப்பில் கைகள் நடுங்கின. உள்ளே காசோலையில்லை. பல பக்க வழக்கமான பட்டியலுமில்லை. அவர் பெயரும் நில எண்ணும் இழப்பீட்டுத் தொகையும் மட்டுமிருந்தன. பழைய உணவு விடுதிக் கட்டடத்துக்கான இழப்பீடு கணிசமாகப் போட்டிருந்தது. காலி நிலத்துக்கு சொற்ப விலை. இரண்டையும் சேர்த்தால் பெருந்தொகையாகத் தோன்றியது. அவர் இதுவரை பார்த்திராதது. ஒரு கரும்பு வெட்டுக்கு கிடைப்பதைவிட பல மடங்கு. அதைக் கொடுப்பதற்கான நாளும் இடமும் கடிதத்தில் தனியாகக் குறிப்பிட்டிருந்தன. அடுத்த மாத முதலாம் சனியும், நாலு வழி நெடுஞ்சாலையின் ஊர் பேருந்து நிறுத்தமும். அவருடைய கண்களில் அதற்கேற்ற செலவுப் பட்டியல் நீண்டது. முதலில் சில்லறைக் கடன்களை அடைத்தாக வேண்டும். தனக்கு இரு ஜோடி கதர் வேட்டி, சட்டை வாங்க வேண்டும். கதரிலேயே உள்ளாடைகள், கொல்லைக்குப் போட்டு வர கதர் தோள் துண்டு. வெளியூருக்குப் போக கதரில்லாமல் பாப்லினில் சட்டை ஒன்று கூட எடுக்கலாம். பொன்னம்மாவைக் கூட்டிப்போய் பட்டுச் சேலை வாங்கித் தரலாம். அந்த இழப்பீடு இலவசம் போலிருந்தது. நிலத்தை பிடுங்கிக்கொண்டு உரிய விலை தர மாட்டார்களென முதலில் நினைத்திருந்தார்.

சுந்தரம் அவசரமாக வீடு திரும்பினார். பெரிய முருகனிடம் கூட சொல்லிக்கொள்ளவில்லை. வீட்டில் நஷ்ட ஈடு கிடைக்கப்போவதை தன்பாட்டில் சொல்லிக்கொண்டிருந்தார். மனைவி பொன்னம்மா நம்பவில்லை. அவர் கடிதத்தில் அச்சிட்டிருந்ததைக் காட்டினார். அவள் எண்களை மட்டும் உற்றுப் பார்த்துவிட்டு தலையாட்டினாள். “என் மூக்குத்தி ரொம்பப் பழசாயிடுச்சு. வேற வாங்கணும். எவ்வள நகைங்க கொல்லைக்கு தந்திருப்பேன்” என்றாள். தகவலறிந்ததும் மூத்த மகன் கார்த்தி தலை நகரிலிருந்து மூலைக் கடை தொலைபேசியில் கூப்பிட்டான். பொன்னம்மா சென்று பேசினாள். “எவ்வள பணம்?” என்றான். அவள் குரலைத் தாழ்த்தி சொன்னாள். “எனக்கு எல்லாம் வேணும். புதுக் கடைக்கு முன் பணம் கட்டணும். அதுவே பத்தாது” என்றான். இரண்டாவது மகன் மோகன் வீட்டுக்கு வந்திருக்கையில் பொன்னம்மா சொன்னாள். அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தேங்காய் வெட்டைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். அதை அற்பத் தொகையென்று நினைத்திருப்பான்.

முன்பு பல அறிவிப்புக் கடிதங்கள் வந்திருந்தன. அவற்றை சுந்தரம் வீட்டின் பல இடங்களில் போட்டு வைத்திருந்தார். தொலைக்காட்சி மரப் பெட்டி அடியில், அலமாரியில், இரும்புப் பெட்டியில், சாய்வான சாமிப் படங்களின் பின்னால். ஒவ்வொன்றையும் தேடி எடுக்கத் தொடங்கினார். பொடியான ஆங்கில எழுத்துகள் மேலும் மங்கியிருந்தன. சிலவற்றை பூச்சிகள் அரித்திருந்தன. அவர் மீண்டும் முடிந்தளவு படித்துப் பார்த்தார். நெடுங்காலம் முன்னால் வந்த முதல் அறிவிப்புக் கடிதம் கிடைத்தது. அப்போது அவர் அதை நம்பியிருக்கவில்லை. பிறகுதான் எங்கிருந்தோ நாலுவழிச் சாலைக்கான வேலைகள் துவங்கப்பட்டன. பழைய சாலையின் நீள அகலங்களைக் கணக்கிட்டார்கள். இரும்புச் சங்கிலிகளாலும், அளவுப் பட்டைகளாலும் இருபுறங்களிலுமுள்ள நிலங்களை பல முறை அளந்தார்கள். பிறகு மஞ்சள் நிற அடையாளக் கற்களை நட்டார்கள். நீண்ட நாட்களாக அவை அப்படியே கிடந்தன. வயல்கள் நடுவிலும் நாற்றுகளிலும் கண்ணில்பட்டு உறுத்தின. சில விவசாயிகள் பிடுங்கியும் கூட எறிந்திருந்தார்கள். சிலர் மண்ணில் புதைத்தும்விட்டார்கள். சாலைக்கான வேலைகள் அங்கங்கு நடந்துதான்கொண்டிருந்தன. சாலை சந்திப்பு, தூரத்து நகரம், முந்தின ஊர், பக்கத்து ஊர் எல்லாவற்றையும் தாண்டி வந்தன.

கடைசியாக ஒரு மதிய வேளையில் கண்ணுக்கெட்டிய தொலைவில் புல்டோசர் இயந்திரம் தென்பட்டது. கானல் நீர் நடுவில் கப்பலைப்போலிருந்தது. சுந்தரம் முன்பு பார்த்திருந்த அதே இயந்திரம். அது விடாமல் பிடிவாதமாக இயங்கிக்கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக இடித்தும் தள்ளியும் நிரவியும் கொண்டிருந்தது. அதிலிருந்து கொடூரமான ஓசைகள் எழுந்தன. அவர் திரும்பி கயிற்றுக் கட்டிலில் படுத்தார். இறங்கப் போர்த்தியிருந்தாலும் சப்தம் காதில் விழுந்தது. தலைக்குள் மோதி எதிரொலித்தது. மதியத்தின் குட்டித் தூக்கம் பிடிக்காமல் புரண்டார். மீண்டும் எழுந்து சாலை மேட்டிலேறிப் பார்த்தார். தூரத்தில் புல்டோசர் சிறிதாகத் தெரிந்தது. ஒரு கணமும் ஓயவில்லை. அவரை மெல்ல நெருங்கி வந்துகொண்டிருந்தது. வீட்டுக்கு சாப்பிடவும் போகாமல் நின்றிருந்தார். பெரிய முருகன் பின்னால் வந்து கூப்பிட்டார். சுந்தரத்துக்கு கேட்கவில்லை. தொடர்ந்து சாலை வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார். பெரிய முருகன் முன்பே இயந்திரத்துக்குப் பக்கத்தில் போய் பார்த்துவிட்டு வந்திருந்தார். அவருக்கு வெறும் வேடிக்கைகள் பிடிப்பதில்லை. நீண்ட நேரம் வேலை செய்து பழக்கம். அவருக்கு நாலு வழிச் சாலை வருவதும் வராததும் ஒன்று. திரும்பி தென்னை செடிகளுக்கு  தண்ணீர் கட்ட உள்ளே புகுந்தார்.

சுந்தரம் நீண்ட நாட்கள் கழித்துதான் கொல்லையில் சாலை போடுவார்களென நினைத்திருந்தார். அப்போதுதான் புல்டோசர் வரும். அது வராமலும் போகும் என்று நம்பினார். ஆட்சி மாற்றம், நீதி மன்றத் தடை, வேறு வழியை தேர்ந்தெடுப்பது போன்ற அதிசயங்கள் நிகழும். அல்லது சாலைத் திட்டம் ஒரேயடியாகக் கைவிடப்படலாம். மற்றொரு வெப்ப பிற்பகலில் சாலை மேட்டில் புல்டோசர் ஏறியது. அவர் மேல் மோதிவிடுமென பயமாயிருந்தது. மேலே உட்கார்ந்திருந்த ஓட்டுநர் பழைய ஆள்தான். அருகில் இயந்திரம் பூதாகரமாகத் தோன்றியது. அதற்கு அழுத்தமான மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்தது. அங்கங்கே வண்ணம் உதிர்ந்து உள்ளே கறுப்பு இரும்பு தெரிந்தது. மேலே கனத்த தகடும் உறுப்புகளும் காயம்பட்டவைபோல் நசுங்கியிருந்தன. பெரும் கட்டடங்களையும் குடிசைகளையும் சரித்து மிகவும் களைத்துக் காணப்பட்டது. முன் துதிக்கை நுனி நீண்ட உபயோகத்தால் தேய்ந்து மெருகேறியதுபோல் பளபளத்தது. புல்டோசர் நெருங்குகையில் அது மேலும் பெரிதானது. இரும்புக் கை நீண்டு வளர்ந்தது. நூற்றாண்டுகளுக்கு முன் அழிந்த ஓர் உயிரினம் போலிருந்தது. அதன் பிரம்மாண்ட பின் சக்கரங்களின் பற்கள் தரையில் ஆழத்தடம் பதித்தன. முன் சக்கரங்கள் பொருத்தமில்லாமல் சூம்பியிருந்தன. இயந்திரம் முழு மூச்சாக இயங்குகையில் அவை அந்தரத்தில் மேலெழுந்தன. பின்புற இரும்புத் தட்டால் ஒரு முழு கட்டடத்தையும் அள்ளிவிடலாம். புல்டோசரின் தலையும் வாலும் ஒன்றுபோல் நீட்டியிருந்தன. மண்ணுளிப் பாம்புபோல் இருபக்கமும் நகர்ந்தது. கரம் லாகவமாக இயங்குவது வினோதக் காட்சி. பல பேர்களின் கடும் வேலையை தனியாக செய்தது. சிறுவர்கள் குதூகலத்துடன் கத்தியபடி அதைப் பின்தொடர்ந்தார்கள். பெரியவர்களுக்கும் பார்த்துக்கொண்டிருக்கலாம் போலிருந்தது. அவர்களுக்கு அழிவற்றதாகத் தோன்றிய கட்டடங்கள் சுலபமாக வீழ்வதைக் காணும் ஆசை. பிள்ளைகளைப் பயம்காட்டி விரட்ட முயன்றார்கள். “இத சின்ன பசங்க பாக்கறது தப்பு. வீணா கெட்டுப் போவீங்க. ஒழுங்கா வீட்டுக்குப் போயி படிங்க.”

சுந்தரத்தின் கொல்லையில் உணவு விடுதி பாழடைந்திருந்தது. சுவர்கள் இற்று சிதைந்திருந்தன. கூரை பாதிக்கு மேல் பிய்ந்திருந்தது. தீயில் கருகியது போல் கட்டடம் முழுவதும் புகை படிந்திருந்தது. இறுதி மூச்சைவிட தயாராயிருந்தது. ஊரில் இதை விட உறுதியான கான்க்ரீட் வீடுகளிருந்தன. ஆனால் சிறியவை. பெரும்பாலும் குடிசைகள்தான் நிறைந்திருந்தன. அவற்றின் மென்மையான மரணத்தில் சுவாரசியமில்லை. அனைவரும் பழைய உணவு விடுதியின் வீழ்ச்சியைப் பார்க்க ஆவலுடன் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நின்று சுந்தரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் நிலத்தில் புல்டோசர் நுழைய அனுமதி தேவையில்லை. ஏற்கெனவே அரசாங்கத்தால் ஒரு பகுதி சட்டபூர்வமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். புல்டோசர் கண்ணெதிரில் வேகமாக நகர்ந்து வந்தது. பலமுறை கனவிலும் நனவிலும் கண்டதுதான். நீண்ட காலமாக வளர்ந்திருந்த உயிர் வேலியில் புகுந்தது. செறிந்த நொச்சி, ஊமத்தை, உண்ணி, கருவேலம் புதர்கள் நசுங்கின. அவற்றின் முட்கள் சிதைந்தன. உறுதியான ஓணான் கொடிகள் அறுந்தன. சுற்றி தாவர மணம் எழுந்தது. புல்டோசர் பழைய உணவு விடுதி எதிரில் நின்றது. தூரத்திலிருந்த கீழ் நிலை அதிகாரி ஒரு தரம் கோப்பைப் பார்த்துத் தலையாட்டினார். புல்டோசர் அடிபணிந்தது.

அதன் இரும்புக் கை நீண்டு கட்டடத்தைத் தொட்டது. உடனே சுற்றுச் சுவர் யானையைப்போல் கீழே சரிந்தது. மேற் கூரை ஒரு கணம் அந்தரத்தில் நின்றது. பின் குப்புற விழுந்தது. உத்திரங்களும் ஓலைகளும் ஒன்றாகக் கலந்தன. சுவர்கள் பல துண்டுகளாக உடைந்தன. பின்புற சுவர் மட்டும் விடுபட்டு தனித்து நின்றது. அதை நோக்கி புல்டோசர் நகர்ந்தது. கீழே செங்கற்களும் ஓலைகளும் மூங்கில்களும் மிதிபட்டன. புல்டோசரின் கரம் பட்டதும் பின் சுவரும் தகர்ந்தது. பிறகு விடுதிக்குப் பக்கத்திலிருந்த சிறிய வட்டக் குடில்கள் மூட்டைப் பூச்சிகளைபோல் நசுக்கப்பட்டன. புல்டோசர் மீண்டும் துவங்கிய இடத்துக்கு வந்தது. மறுபடியும் நகர்ந்து விடுதியை முழுமையாக அழித்தது. இடிபாடுகளை ஓரமாக ஒதுக்கியது. மேடும் பள்ளமுமான தரையை சமமாக்கியது. அங்கு கட்டடம் நின்றிருந்ததற்கான சிறிய தடயமுமில்லை. புல்டோசர் திருப்தியுடன் நிலத்தின் பக்கம் திரும்பியது. அடையாளக் கற்கள் நட்ட இடத்துக்குள் மண்ணையும் வரப்புகளையும் பயிரையும் ஒன்றாகத் தள்ளியது. சுந்தரம் கடைசியாக எள் பயிரிட்டிருந்தார். செடிகள் முளைத்து இயந்திர சக்கரங்களை எதிர்க்கும் என்று எண்ணியிருந்தார். எள்ளின் சிறிய பூக்கள் மலர்ந்து காய்கள் அரும்பியிருந்தன. இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யலாம். இயந்திரத்துக்கு முன்னால் எல்லாம் ஒன்றுதான். வேரடி மண்ணோடு செடிகள் அகற்றப்பட்டன. சுற்று நேரத்தில் எள் பயிரிட்ட இடம் மறைந்தது. எங்கும் மண்ணாக மாறியது.

அந்தப் பகுதி நீண்ட நாட்களாக மாற்றமில்லாமல் கிடந்தது. மீண்டும் குறுகிய காலப் பயிராக காய்கறித் தோட்டம் போடலாம் என்று சுந்தரம் யோசித்தார். தன் நிலத்தில் கீரையை நட்டு அறுவடை செய்திருந்தார் கோபால். மற்றொரு கொல்லைக்காரர் பயிரிடுவதற்குத் தயாராக ஏரோட்டியிருந்தார். இன்னொரு கொல்லைக்காரர் துணிந்து நிலக்கடலை விதைத்திருந்தார். வாகனங்கள் பழைய இரு வழிச் சாலையில் நெரிசலாக போய் வந்துகொண்டிருந்தன. சுற்றிலும் இடங்கள் வெட்டவெளியாயிருந்தன. நிழலுக்கு ஒதுங்கவும் மரமில்லை. ஊர்கள் தம் புராதன அடையாளங்களை இழந்திருந்தன. பேருந்து நிறுத்தங்கள் ஒன்றுபோலிருந்தன. பழைய ஞாபகத்தில் சில ஓட்டுநர்கள் நிறுத்தங்களை தவற விட்டார்கள். அவர்களுக்குப் பயணிகள் இடங்களைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். அப்போதும் சாலைத் திட்டம் கைவிடப்படும் என்று சுந்தரம் எண்ணினார்.

மீண்டும் சாலை வேலைகள் தொடங்கின. புல்டோசர் மறுபடியும் வலம் வந்தது. கைப்பற்றிய நிலம் மேலும் சமப்படுத்தப்பட்டது. மேலே செம்மண்ணும் கற்களும் கொட்டி உறுதியாக்கப்பட்டது. இப்போது யார் கொல்லை என்று கூற முடியாது. அனைத்து அடையாளங்களும் அழிந்துவிட்டன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காலி நிலம். சிறு செடி, கொடிகளும் முளைக்கவில்லை. தார்ச்சாலை வரும் அறிகுறிகளில்லை. அங்கு பழுதான வாகனங்கள் முதலில் ஒதுங்கின. பிறகு வரிசையாக நின்று ஓய்வெடுத்தன. “காலியாக் கெடக்கற நெலத்தப் பாக்கறதுக்கு சுடுகாடு மாதிரியிருக்குது” என்று பெரிய முருகனிடம் அலுத்துக்கொண்டார் சுந்தரம். பெரிய முருகனும் ஏக்கப் பெருமூச்சுவிட்டார்.

கடைசியாக நாலு வழிச் சாலை வந்தது. “ஆளில்லாத ரயில்வே கேட்டுக்குப் பக்கத்துல தார் போடறாங்க” என்று தொட்டியில் தண்ணீர் பருக வந்த மாடுகளுடனிருந்த கலாசி தங்கவேலு சொன்னார். “திரும்பவும் ரவுண்டானாவில, பாலத்துல வேல நடக்குதுண்ணா” என்றார் கூலியாள் காக்கா முருகன். “வேத்தூருலேயிருந்து வந்தவங்க ராத்திரி பகலா பேய் மாதிரி வேல செய்றாங்க. அவங்க மனுசங்களேயில்ல.” கிருஷ்ணன் வியந்தார். தார்ச்சாலை திடீரென எதிர்திசையில் போடப்பட்டது. இடைப்பட்ட இடம் மண் சாலையாயிருந்தது. சுந்தரத்தின் கொல்லைக்கு முன்னால் தார் போடும் பிரம்மாண்ட கறுத்த இயந்திரம் நின்றது. லாரிகள் வரிசையாக ஜல்லி, தார் கலவைகளுடன் வந்தன. இயந்திரத்தில் கொட்டின. அது கனத்த விரிப்பைப்போல் கீழே தாரைப் பரப்பியது. பின்னால் ரோடுரோலர் அழுத்தியது. கொஞ்ச நேரத்தில் மாயாஜாலம்போல் சாலை உருவானது. வெயிலில் கறுப்பு பளிங்கு போல் மின்னியது. மேலே சிறு தூசியும் ஒட்டாது.

சுந்தரத்தின் நிலத்தில் தார்ச்சாலை நீண்டு சென்றது. சற்று தூரத்தில் மண் சாலை. தொலைவில் மீண்டும் தார்ச்சாலை. அவருக்கு மிகவும் குழப்பமாயிருந்தது. அங்கங்கே துண்டு துண்டாக தார்ச் சாலை. அவற்றை அப்படியே கைவிட்டுச் சென்றார்கள். சில நாட்கள் கழித்து மீண்டும் இயந்திரம் வந்தது. விடுபட்ட பகுதிகளில் தார் போட்டது. மறுபடியும் அதே காட்சி. கடைசியில் ஒருபக்கம் அகன்ற தார்ச்சாலை காலியாக நீண்டது. மறுபக்கத்தில் பழைய சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் நெரிசலுடன் சென்றன. அதிலும் அவசரமாக தார் போடும் வேலை நடந்தது. தங்க நாற்கரச் சாலை எங்கோ தொடங்கி வைக்கப்பட்டதை சுந்தரம் தொலைக்காட்சியில் பார்த்து ஆச்சரியப்பட்டார். நாட்டுக்கு அர்ப்பணித்து நாடாளுபவர் பெருமிதத்தோடு “இதன் மூலம் நாடு பெரும் வளர்ச்சியடையும்” என்றார். எதிரிலிருந்தவர்கள் பலமாகக் கைதட்டினார்கள்.

அனைத்து அறிவிப்புக் கடிதங்களையும் சுந்தரம் தேடி வைத்திருந்தார். அவை தேவைப்படலாமென்று பையில் எடுத்துப் போட்டுக்கொண்டார். அவர் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து தயாராகியிருந்தார். முன்கூட்டி சமையல் செய்ய வேண்டியிருப்பதில் பொன்னம்மா சலித்தாள். “இவ்வள சீக்கிரம் யாரும் வர மாட்டாங்க. போயிக் காத்திருக்கதுக்கு அவசரம்” என்றாள். அவர் சாப்பிட்டதும் கிளம்பினார். ஒரு கையில் அறிவிப்புக் கடிதங்கள் வைத்திருந்த பெரிய பை. மற்றொரு கையில் பணம் எடுத்து வர மஞ்சள் பை. அது நகரில் எப்போதோ துணி எடுத்ததின் ஞாபகச் சின்னமாக எஞ்சியிருந்தது. அவர் வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்தார். பின்னால் முதுகில் பொன்னம்மாவின் பார்வையை உணர்ந்தார். அவள் நிறையப் பணம் கிடைக்க வேண்டுமென விரும்புவாள். அதனால் கடன்கள் கொடுத்ததுபோக தனக்கும் மிஞ்சும் என்று நினைப்பாள். ஞாபகார்த்தமாக சிறிய நகையாவது வாங்க ஆசைப்படுவாள். அவருக்குக் கால்கள் மிகவும் வலியெடுத்தன. நீண்ட காலம் வீட்டுக்கும் கொல்லைக்கும் நடந்த பழைய நோவு தோன்றியிருந்தது. இம்முறை கொல்லையை அடைய வழக்கத்தைவிட நீண்ட நேரமானது.

கொல்லையில் பெரிய முருகனைக் காணவில்லை. எங்காவது தென்னை மரத்தடியில் மறைந்திருப்பார். அவர் கட்டிலில் உட்காரவுமில்லை. தொடர்ந்து நடந்தார். நாலு வழி நெடுஞ்சாலை மேலும் உயர்ந்திருந்தது. குன்றில் ஏறுவது போலிருந்தது. காலி மாட்டு வண்டிகள் கூட ஏறியிறங்க முடியாது. பக்கச் சாலை போடப்படவில்லை. நாலு வழிகளிலும் வாகனங்கள் போய் வந்துகொண்டிருந்தன. எதிர்காலத்தில் மேலும் பல வழிகள் தேவைப்படும். கருங்கல் போன்ற சாலை சப்தத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. அவர் சாலையிலிருந்து மண் பாதையில் சென்றார். தனியாக நடப்பதை உணர்ந்தார். வேறு பாதசாரிகள் இல்லை. அவரை வாகனங்கள் உரசுவதுபோல் ஓடின. ஆடைகள் கிழிந்துவிடும்போல் பறந்தன. அவ்வப்போது கனத்த சரக்கு லாரிகள் ஊர்ந்தன. நிறைய சக்கரங்களுடன் ஒரு லாரி நீண்ட சிறகு போன்ற பொருளை சுமந்து சென்றது. அவரைக் கடக்க நெடுநேரமானது. ஊருக்கு எதிரில் சிலர் நின்றிருந்தார்கள். அவர்கள் அந்தப் பெரிய லாரியை திரும்பியும் பார்க்கவில்லை.

சுந்தரத்துக்கு எதிரில் கால்நடையாக ஒருவன் வந்துகொண்டிருந்தான். தூரத்தில் சாதாரண ஆள் போலிருந்தான். அவரை வேகமாக நெருங்கியும்விட்டான். செம்பட்டைத் தலை, திரிகளாகத் தொங்கும் தாடி, இடுப்பில் சிறிய துண்டு கட்டியிருப்பது தெரிந்தது. தலையில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் மகுடம்போல் அசையாது வீற்றிருந்தது. நேராகப் பார்த்து, கைகளை வீசி விரைந்து கொண்டிருந்தான். ஒரு வீட்டருகில் நின்றிருந்த பெண் ஓடோடி சாலைக்கு வந்து கும்பிட்டாள். அவன் திரும்பிப் பாராமல் சென்றான். அவன் கை, வைத்திருந்த இரு வாழைப்பழங்களை பின்னால் எறிந்தது. அவள் பரவசத்துடன் எடுத்துக்கொண்டாள். சுந்தரம் திரும்பிப் பார்த்தார். சித்தன் தன்பாட்டில் தொலைவில் நடந்துகொண்டிருந்தான்.

சுந்தரம் இழப்பீடு வழங்கும் இடத்தை அடைந்தார். எதிர்ப்புறம் சிலர் கூடியிருந்தார்கள். சாலையைக் கடக்க முடியாது என்றுபட்டது. வாகனங்கள் தொடர்ந்து போய் வந்துகொண்டிருந்தன. சிறிய மகன் மோகனை வற்புறுத்தி துணைக்குக் கூப்பிட்டு வந்திருக்கலாம். பேருந்து நிறுத்தத்திலிருந்த இளைஞன் கையைப் பிடித்து கிடைத்த இடைவெளியில் மறுபக்கம் அழைத்துச் சென்றான். அவன் பெயர் ஞாபகம் வரவில்லை. கொல்லையில் கூலி வேலை செய்த ஒருவரின் மகனாயிருக்கலாம். பேருந்து நிறுத்தத்தையொட்டி பலர் கூட்டமாக நின்றிருந்தார்கள். பேச்சுக் குரல்கள் இரைச்சலாகக் கேட்டன. இரு அரசு ஊழியர்கள் பேருந்து நிறுத்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். தப்பும் தவறுமாக பெயர்களைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இழப்பீட்டுக் கணக்கு தெரிந்திருக்கவில்லை. அவற்றைப் பெறுகிறவர்கள் மிகவும் ஆத்திரத்திலிருந்தார்கள். ஊழியர்களை அடிக்கத் தயாராயிருந்தார்கள். அவர்களுக்கு சிறிதும் திருப்தியில்லை. “எனது நூறு சென்ட்டு நெலம். கூடவே அம்பது தென்ன மரங்க போச்சு. ஆனா மரங்கள விட நெலத்து வெலை கம்மியாயிருக்குது எப்பிடி?” என்றார் ஒருவர். குமாஸ்தா நிதானமாக “அப்பிடியா, எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. போட்டிருக்கத தர்றோம்” என்றார். இன்னொருவர் “இதெல்லாம் எங் கொல்லைக்கு ஒரு மதிப்பா?” என்று கத்தினார். வேறொருவர் காசோலையை ஊழியர்களின் மேல் திருப்பி எறிந்தார். “எனக்கு இந்தப் பணம் வேணாம். இனாமா கொல்லயக் கொடுத்ததா வச்சுக்குங்க.” கலவரம் வெடிக்கும் சூழல் நிலவியது. சுந்தரம் தன் முறைக்குக் காத்திருந்தார். திட்டமிட்டு கடைநிலை ஊழியர்கள் அனுப்பப்பட்டிருக்கலாமெனத் தோன்றியது. வெறும் காசோலைகளை வழங்க அவர்கள் போதும்.

அப்போது ஒருவர் அவசரமாக பேருந்திலிருந்து இறங்கினார். அவரை சுந்தரத்துக்கு நன்கு தெரியும். சாலைக்கு நிலம் இழந்தவர்கள் சங்கத் தலைவர். நீண்ட நாட்களுக்கு முன்பே நாலு வழிச் சாலையை எதிர்த்து கையெழுத்துகள் வாங்கியவர். அனைவர் சார்பிலும் உரிய இழப்பீடு கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர். அவரிடம் பிரச்சினைகளை தெரிவித்தார்கள். “இப்ப வாங்கிக்குங்க. பின்னால வட்டியோட கூடுதல் வெலை கேட்கலாம். நிச்சயமா கெடைக்கும்” என்றார். அவர் குரல் உறுதியோடிருந்தது. “அதெப்படிங்க?” என்றார் ஒருவர். இன்னொருவர் “எல்லாரும் செத்த பின்னாலதா கெடைக்குமா?” என்றார். “சும்மா சொல்றாரு” என்றது ஒரு குரல். அனைவரும் அவரை சூழ்ந்தார்கள். தன் பெயரை ஊழியர் கூப்பிட்டதும் சுந்தரம் அருகில் சென்றார். கடைசியாக வந்த கடிதத்தை எடுத்துத் தந்தார். அவரிடம் கையெழுத்தைப் பெற்றார்கள். கத்தைக் காகிதங்களும் காசோலையும் தரப்பட்டன. சுந்தரம் காசோலையைப் பார்த்தார். ஏற்கெனவே கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொகைதான். அது கடைசியில் கிடைத்துவிட்டதை நம்ப முடியவில்லை. “இதுவே வழக்காடியதால வந்தது. அதனாலாதா இவ்வள நாளு. இல்லைன்னா இன்னும் குறைவாயிருக்கும்” என்றார் குமாஸ்தா.

சுந்தரம் காசோலையை சங்கத் தலைவரிடம் பதிவு செய்த பிறகு கடிதப் பையிலேயே வைத்துக்கொண்டார். தலைவர் “இது ரொம்பக் கொஞ்சந்தான். இன்னும் கேட்டுப் பாக்கலாம். பத்திரமா போய் வாங்க” என்றார். பலர் குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் சூழ வந்திருந்தார்கள். சுந்தரம் தனியாக நடந்தார். இழப்பீடு வாங்கியதில் பரவசமாயிருந்தது. இவ்வளவு பெருந்தொகையை வாழ்நாளில் அடைந்ததில்லை. மீண்டும் காசோலையை எடுத்துப் பார்த்தார். அதை மகன்களும் மனைவியும் அற்பமென சொல்லியிருந்தார்கள். “அவருக்குப் புத்தி பேதலிச்சுடுச்சு. ஒண்ணுமில்லாதது பெரிசாத் தெரியுது. வெளில தெரிஞ்சா அவமானம்” என்று பொன்னம்மா கடைசியாகத் திட்டியிருந்தாள். அது சொற்பத் தொகையானாலும் சொந்த மண்ணை இழந்ததால் கிடைத்தது. இதுவரை கொல்லையில் விவசாயம் செய்து பெற்றதை விடப் பெரியது. அந்த இழப்பீடு தன் அந்திமக் காலத்தில் வந்ததில் மேலும் மதிப்புள்ளது. தனக்கு மட்டும் உரிமையானது என்று நினைத்தார். தான் விரும்பியபடி செலவழிக்கலாம். அவர் சாலையில் நடந்தவாறு அடிக்கடி காசோலையை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் வாகனங்கள் வேகமாக போய்க்கொண்டிருந்தன.  

**

-மு.குலசேகரன்

 

 

The post நாற்று விட்ட அடையாளம் – மு.குலசேகரன் appeared first on வனம்.

  •  

பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்

தமிழில் : பெரு விஷ்ணுகுமார்

 

 

ஐரிஷ் கவிஞரான பேட்ரிக் கவனாஹ், ஐரிஸின் மாகாணமான உல்ஸ்டரில்உள்ள வடக்கு மாவட்டமான கவுண்டி மோனகனின் கிராமப்புறப்பகுதியைச் சேர்ந்தவராவார். 12 வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறியகாவனாஹ், தனது எழுத்து வாழ்க்கையைஐரிஷ் இலக்கியமறுமலர்ச்சியின் இறுதி ஆண்டுகளில் தொடங்கி கவிதை, புனைகதை, சுயசரிதை மற்றும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். ஐரிஷ்-ன்மூத்த கவியான வில்லியம் பட்லர் ஈட்ஸ்க்குப் பின்னே, ஐரிஸ் கவிதைப்போக்கினை மடைமாற்றியவர்களில் பேட்ரிக் கவனாஹ்குறிப்பிடத்தகுந்தவர். மரபை மீறுதல், எளிமையான வாழ்வினைகவிதைப்படுத்துதல் போன்றவை இவரது கவிதைகளுக்கேயானசிறப்பம்சங்களாகும். மேற்க்கண்ட இந்த கவிதைகள் யாவும் பெங்குவின்வெளியீடான “collected Poems of Patrick Kavanagh” edited by Antoinette Quinn என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும்.  

***

1. சமூக மனசாட்சியற்ற

 

அவர் ஒரு சமூக மனசாட்சியற்ற அகங்காரவாதி,

யாரும் அவருக்கு ஆதரவு தராதபோதும் நான் அவரை விரும்பினேன்,

அவர்தான் எனக்கு நேர்மையானவர் என்று தோன்றியது,

அவர் தான் யாராக இருக்க விரும்பாவிட்டாலும்,

அவரே எனது மீட்பர்

 

தனது எளிய ஆத்மாவுக்கு அஞ்சிக்கிடக்கும்

இந்த கும்பல்களுக்கு எதிராக

ஒரேவிதமான மனிதனை வைத்து இயக்கும் பொதுமக்களின்

மூர்க்கத்தனமான கண்களை கண்டுகொண்டவர் அவர்  

உண்மையில் அவர் பொதுசேவை என்று எதுவும் செய்யவில்லை,

அவர் அவராக வாழ்ந்தார்

 

அவரது உற்சாகம் தீவிரங்களுக்கு எதிரானது,

எப்போதும் ஊர்வலம் போக விரும்பும்

அந்த ஆபத்தான மனிதர்களோ

கொலைசெய்யவோ அல்லது வழிபடவோ

யாரையாவது தேடிக்கொண்டிருக்கிறார்கள்

எனவேதான் இறுதிவரை அவர் இயக்குநர் பதவிக்கோ அல்லது

மாநில ஓய்வூதியத்திற்கோ ஒருபோதும் தகுதி பெறவில்லை.

***

2. ஏப்ரல் மாதத்தில் ஈரமான சாயுங்காலம்

 

ஈரமான மரங்களில் பறவைகள் பாடின

வை சொல்வதைக் கேட்டு இப்போது நூறு ஆண்டுகள் ஆகின்றன

மேலும் நான் இறந்துவிட்டேன், இப்போது வேறு யாரோ ஒருவர்

வைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனாலும் அவரின் மனச்சோர்வையும் சேர்த்து பதிவுசெய்ததில்

நான் மகிழ்ச்சிடைகிறேன்

 

***

3. றியாமை

 

நான் மட்டுமே நேசித்த ஒன்றை

பெரிய கோட்டையின்கீழ் தொங்கிக்கொண்டிருக்கும்

முக்கோண மலையைப் பார்த்து அவர்கள் சிரித்தார்கள்

அந்த சிறிய பண்ணையில்

வெள்ளை முள்வேலிகளால் கட்டுண்டவன் என்றும்

எனக்கு உலகமே தெரியாதென்றும் கூறினர்

ஆனால் நான் அறிவேன்

வாழ்க்கையில் அன்பின் வாசலானது எல்லா இடங்களிலும்

ஒரேமாதிரிதான் ன்று.

 

நான் நேசித்ததைப் பற்றி வெட்கப்படுகிறேன்

என்னிடமிருந்து அவளை தூக்கியெறிந்த நான்

அவளை ஒரு படுகுழியாக பாவித்தேன்,

அப்போதுகூட அவள் ஊதா நிறத்தில் என்னைக் கண்டு சிரித்தாள்

 

இப்போது நான் மீண்டும் அவளது முட்கள்கொண்ட கரங்களில்தான்

கிடக்கிறேன்

இந்தியக் கோடைக்காலைப் பொழுதில்

பனியானது

வெளுத் உருளைக்கிழங்குத் தண்டுகளில்மீது படுகிறது.

என்ன வயதாகிறது எனக்கு ?

 

நான் அறியேன்

எனக்கு என்ன வயதென்று,

ஆனால் மரணமடையும் வயதில்லை எனக்கு;

பெண்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது

நகரங்கள் பற்றியும்கூட,

மேலும் இந்த வெள்ளை முள்வேலிகளுக்கு வெளியே

நான் செல்லாத வரை

என்னால் இறக்கவும் முடியாது

***

4. ஒரு ஆலைக்கான இரங்கற்பா

 

அவர்கள் தண்ணீர் சக்கரத்தை எடுத்துச் சென்றனர்,

ந்த சோள ஆலையின் அனைத்து இரும்புக் குப்பைகளையும்;

உள்ளே சென்றுபார்க்கும் பார்வையாளர்கள் யாருமின்றி

தண்ணீர் இப்போது அருவியாக ஓடுகிறது

ஒரு சாதாரண காட்சி அனுபவமென.

.

குளிர்ந்த ஈரமான வெளுப்பான ஒரு குளிர்கால தினம்

நடப்பவை அனைத்தும் மனதில் உயிர்ப்புடன் இருக்க:

வாசலில் அலட்சியமாகக் கிடக்கும் ஒரு மனிதனை நோக்கி

இருண்ட நீர் பாய்ந்த புல்வெளிகளோ

ஒரு நித்தியத்தின் கதையைப் பேசுகின்றன

.

பொதிகூட்டப்பட்ட அந்த சிதிலங்கள் யாவும்

பழுதடைந்த, அந்த பழைய ஆலையின் நிலத்தை

எப்போதோ கைவிட்டுவிட்டன.

தனுள்ளே கொம்புகளற்ற விலங்குகளும், அதன் பின்னால்

ஒளிந்துகொண்டிருக்கும் உள்ளூரில் நிறமூட்டப்பட்ட பேய்களும்கூட,

அந்த வெறுமையான சுவர்களில் இருந்து

இப்போது அகன்றுவிட்ட.

மறுகால் மட்டும் இன்னமும் அதன் நீர்வீழ்ச்சிகளை வளைத்து

அந்த வடிதேக்கத்தில் வீழ்த்துகிறது

இந்த பழைய காட்டுத்தனமான வீரமற்ற நிலையை

இவ்வாறு குறிப்பிட்டதுடன்,

நாங்களும் விடைபெறுகிறோம்

தற்காலிக விதிகளின் மேலான விஷயங்களுக்காக.

***

 

The post பேட்ரிக் கவனாஹ் கவிதைகள் appeared first on வனம்.

  •  

ஶ்ரீநேசன் கவிதைகள்

வழி

ஒருவன் ஒருவனிடம் வழிகேட்டான்
அது ஒருவனுக்கும் தெரியாத வழி
ஆயினும்
தெரிந்த வழியைக் கூறி அனுப்பினான்
சரியாகப் போய் சேர்ந்துவிட்டான்.

 

கல்லல்

இந்த மலைக்கு உடலெல்லாம் கண்கள் உண்டு
இமைக்காத கண்கள்
மூடாத கண்கள்
விழிக்காத தியானக் கண்கள்
மலையைப் பார்க்கும் கண்களெல்லாமும் மலையுடையதுதான்
அது தன் கண்களைத்
தன் கண்களால் பார்த்துக்கொண்டேயிருக்கின்றது
உண்மையில் பார்ப்பதை அதனிடம்தான் கற்றுக்கொண்டேன்
மலைக்கு ஜீவராசிகளைப் போன்று வாயொன்றும் இல்லைதான்
அதுதன் ரகசியங்களைத் தவிர்த்துவிட்டு
நம் அனைவரது மெளனத்தையும்
மூச்சு விடாமல் பேசிக்கொண்டேயிருக்கின்றது
கேட்போர் குறித்த கவலையேதும் இல்லாமல்
பேசுவதையும் இப்போது
அதனிடம்தான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
மலைக்கு ஏராளமாய் காதுகளும் உண்டு
மானுட அபத்தங்களிலிருந்து சற்றே விலகியிருந்து
இயற்கை வெளிப்படுத்தும்
ஒவ்வொரு வார்த்தையையும்
ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டிருக்கிறது
தன் சிறுசிறு முணுமுணுப்பையும் தவறவிடாது
கேட்பதையும் அதனிடமே கற்றுக்கொள்ளவேண்டி
அனுதினமும் சென்று அனுதினமும் கொண்டு வருகிறேன்.

 

திங்களைப் போற்றுதும்

பூமியின் எல்லா கணத்திலும்
நிலவு உதித்துக்கொண்டேயிருக்கின்றது
இந்த அதிசயத்தைக் கண்டுணர்ந்தவன்
வானின் எல்லா இடத்திலும்
நின்று பார்த்துத் தெளிந்தவனாயிருக்க வேண்டும்.

முழுநிலா உற்சாகமாக உதிக்கிறது
வெளியூரில் பணியாற்றி
ஒரு நாள் விடுப்பில் வரும் தந்தை
விளக்குவைக்கிற நேரத்தில் வீட்டுக்குள் நுழைவது மாதிரி
இப்போது நாமெல்லோருமே நமக்குத் தெரியாமலேயே அதன் குழந்தையாகிவிடுகிறோம்.

 

திரை

பிணைத்து வைத்திருந்த இளமை எங்களிடம் விடை பெற்றிருந்தது
இப்போது எம்மிடையே குடியேறிய முதுமையின்
விருந்தினர் நாங்கள்
எனக்கு வெளியிலிருந்து
உறக்கமில்லாமல் எனது மனையாள் புரண்டு கொண்டிருக்கிறாள்
அங்கிருந்து சிணுங்கும்
ஒரு காலம் எங்கள் அன்பைப் பெருக்கிக் கொண்டிருந்த
கொலுசொலி
இப்போது அவளது உபாதைகளை முணுமுணுத்துக் கிடக்க
இரவுகள் மிக நீண்டிருக்கின்றன
விடியலுக்கே வாய்ப்பில்லை என்பதுபோல் .

 

மீட்பு

மனைவிக்கும் என் அம்மாவுக்கும் மனப்பிணக்கு
அதனாலான கடும்வாதத்தில் என் தலை உருண்டுவிட்டது
உருண்ட தலையை மீட்டுக்கொண்டு திரும்ப
எனக்கு இரண்டு நாட்கள் ஆயிற்று
பாதுகாப்புக்குப் பிரார்த்தித்தேன்
“நான் என் உத்தமத்திலே நடப்பேன்
என்னை மீட்டுக்கொண்டு என் மேல் இரக்கமாயிரும்”.

 

-ஸ்ரீநேசன்

The post ஶ்ரீநேசன் கவிதைகள் appeared first on வனம்.

  •  

கிஷ்ணா – சுஷில் குமார்

​​​​​கிஷ்ணா

“எட்டி, என்ன? வேலையா இருக்கேன், திரும்ப கூப்டவா?”

“இரிங்கப்பா, என்னால முடியல.. ஒங்க பிள்ளய வந்து கூட்டிட்டுப் போங்க. சொன்னோடி ஒன்னும் கேக்க மாட்டுக்கா.”

“இப்போ என்ன.. வந்து ஒரு மணிக்கூர் கூட ஆகல!”

“இடுப்ப விட்டு எறங்க மாட்டுக்கா. ஒரே அடம்.. என்ன வேணும்னு கேட்டா, கிஷ்ணா கிஷ்ணான்னு ஒரே அழுக..”

“அது செரி. அவ்ளோதானா? அது நம்ம கதையோட எஃபக்டாக்கும்?”

“ஒங்க வேலதானா? அப்போ நீங்களே வந்து ஒங்க மகள சமானப் படுத்துங்கோ.”

“அப்பா, அப்பா, கிஷ்ணா, கிஷ்ணா” என அலறல் சத்தம்.

“இரிட்டி, இந்தா ஒங்கப்பாட்ட பேசு.. இந்தா.. இந்தா..”

“மக்ளே, என்ன வேணும் பிள்ளக்கி? அழாமச் சொல்லு பாப்பம்.. குட் கேள் லா?”

“கிஷ்ணா வாணும்.. கிஷ்ணா வாணும்…”

“செரி மக்ளே.. அப்பா சாய்ந்தரம் வந்து கிஷ்ணா கத சொல்லுகேன் செரியா? நீ குட் கேளா அழாம இருப்பியா?”

“பேட் கேள்.. பேட் கேள்…”

“நோ, நோ… செல்லக்குட்டி குட் கேளாக்கும்.. தெரியுமா?அப்பா சாய்ந்தரம் வந்து ஒரு சர்ப்ரைஸ் தருவேனே..”

அழுகை அடங்கியது.

“அம்மா, அப்பா சப்பீஸ் சொல்லுகா… சப்பீஸ்.. சப்பீஸ்…”

இன்னும் இருபது நிமிடங்களில் ஆண்டறிக்கை சமர்ப்பித்து முடித்தால் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நல்லதொரு தேநீருக்குச் செல்லலாம் என நினைத்தேன். பத்து நிமிடங்களில் மறுபடியும் அழைப்பு.

“எட்டி, கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம இரியேன். நா முக்கியமான மீட்டிங்க்கு போப்போறேன். வந்து கூப்டுறேன்..”

“டேய், என்னன்னு கேளுங்க.. ஒரு நிமிசம்…”

“சட்டுன்னு சொல்லு, என்ன?”

“உங்க ஆஃபீஸ் பக்கத்துல நெறைய மயில் உண்டும்லா?ஒரு மயிலிறகு எடுத்துட்டு வாங்கலாம்டே.. ப்ளீஸ்…”

“மயிரு.. வைட்டி ஃபோன.. நேரங்காலம் தெரியாம கொஞ்சிட்ருக்கா..”

குளுகுளு அறைக்குள் சிறு புழுக்கம்.

“பாரதி, ரிப்போர்ட்லாம் ஓகே தான். ஆனா, ஒன்னு நீங்க யோசிக்கணும்…”

“சொல்லுங்க சார்..”

“லிசன்.. உலகம் எங்கயோ போய்ட்ருக்கு…. சரி, அப்பிடி வேணாம்…. வேற மாதிரி வரேன்… இப்போ ஒரு டிரெயின்ல போறோம்னு வைங்க…”

‘சரித்தான், ஆரம்பிச்சுட்டான்டா. எவ்ளோ ட்ரெயின் ஓடுது. இவன…’

“யெஸ் சார்.”

“பொறப்பட்ட ஸ்பீட்லயே போய்ட்டே இருக்காம்னு வைங்க. ஹவ் வில் யு ஃபீல்?” என்று கேட்டபடி என் முகத்தைப் பார்த்து உடனடியாக பதில் வேண்டும் என்பதைப் போல சைகை செய்தார்.

“புரியுது சார்..”

“சொல்லுங்க பாரதி. உங்களுக்கு அந்த ட்ரெயின் ஜர்னி எப்பிடி இருக்கும்? போரடிக்காதா? கடுப்பாக மாட்டீங்களா?யு ஹேவ் நோ டைம் டூ ஸ்டேண்ட் அண்ட் ஸ்டேர், இல்லையா? ”

“கண்டிப்பா சார்.”

“அப்பிடின்னா உங்க மனசுல என்ன தோணும்?”

‘உன் மண்டைல என்ன தோணுமோ அதுதான்டா எனக்கும் தோணும். ஏதோ வானத்துலந்து வந்து குதிச்ச மாதில்லா சீன் போடுகான்.’

“லிஸன், ரொம்ப ஈஸி…  உலகத்துல எல்லாவனும் இப்போ எப்பிடி யோசிக்றானுங்க.. அப்பிடி யோசிங்க..பதில் கெடைக்கும்.”

“சரி தான் சார். ஏந்தான் இப்பிடி உருட்டுகானோன்னு யோசிப்பேன்..”

“எக்ஸாக்ட்லி.. யு ஆர் மை பாய்… அப்பிடின்னா, உலகம் போற வேகத்துக்கு ஈடு குடுக்கணும்னா நம்ம இங்க என்ன யோசிக்கணும்? நீங்களே சொல்லுங்க பாப்போம்…”

‘உலகம் நல்லா இருக்கணும்னா ஒன்ன மாதிரி ஆளுங்கள நிக்க வச்சி சுடணும். சரிதான!’

சட்டென அலைபேசி அலற அமைதிப்படுத்தினேன். அடுத்த நொடியே மீண்டும் அலறல். தொடர்ந்து ஐந்து முறை. கொஞ்சம் பொறுமையிழந்தவராய், “நீங்க கால் எடுக்கணும்னா எடுத்துட்டு வாங்களேன் பாரதி. நா வெயிட் பண்றேன்.. இட்ஸ் ஆல்ரைட்..” என்றார்.

“நோ சார். வைஃப் தான். அப்றமா பேசிக்றேன்..”

“ஹே, இல்ல மேன்.. வைஃப்னா கண்டிப்பா பேசிடணும். வைஃப் தானே உலகமே நமக்கு. பேசிட்டு வாங்கோ…நாம கொஞ்சம் டீப்பா பேச வேண்டியிருக்கு.. முடிச்சிட்டு வாங்கோ…”

“ஓகே சார். ஜஸ்ட் டூ மினிட்ஸ்..”

“ஒனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதா? பாஸ் கூட மீட்டிங்க்ல இருக்கேன். அவரு நக்கலா போய் பேசிட்டு வாங்கோன்னு சொல்லுகாரு…”

எதிர்ப்புறம் சிணுங்கல்.

“என்ன இப்போ?”

“எனக்குக் கழியாம இருக்குன்னு தான கூப்டேன். இவள இடுப்புல வச்சிட்டே எப்பிடி கறி வைக்கது? தொட்டில்ல போட்டாலும் கெடக்க மாட்டுக்கா. கிஷ்ணா, கிஷ்ணான்னு… நானும் ஃபோன்ல வீடியோ போட்டுக் குடுத்தாச்சு. அதத் தூக்கி எறிஞ்சு இன்னா க்ராக் விழுந்துட்டு..”

“ஆமா, ஒனக்கு ஃபோன் வாங்கித் தரதுக்கே நா தனி வேலைக்குப் போணும்… இதோட அஞ்சு ஃபோன் ஆச்சுல்லா? செரி, விடு.. இப்ப என்ன? ஒறங்கிட்டாளா?”

“மடிலயே கெடக்கா. ஒறங்கல. நீங்க அவட்ட சொல்லுங்க..”

“மக்ளே, பிள்ள கொஞ்ச நேரம் ஒறங்கு. அப்பா ரெண்டு சர்ப்ரைஸ் கொண்டு வருவேன், செரியா?”

“அப்பா… கிஷ்ணா, கிஷ்ணா…”

“செரி, கிஷ்ணா கத அம்மைட்ட சொல்லச் சொல்லுகேன் செரியா?”

“அம்மா, கிஷ்ணா, கிஷ்ணா…”

“எட்டி, கிருஷ்ணன் கதை ஏதும் சொல்லு. பிள்ள தூங்கிருவா.. நா லஞ்ச்ல கூப்டுகேன். ஒரு ஒன் அவர் கூப்டாத. வலிக்கின்னா பெயின்கில்லர் போட வேண்டியதான?”

பதிலின்றி துண்டிப்பதில் அவளுக்கு என்னதான் கிடைக்குமோ! எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது நான்தான். எல்லாவற்றிற்கும் தீர்வு குடுக்க வேண்டியதும் நான்தான். என்ன நியாயம் இது?

“ஸோ, சொல்லுங்க பாரதி… ட்ரெயின்ல என்ன எதிர்பாப்பீங்க?”

‘டேய், நீ இன்னும் அதே ட்ரெயின்லதான் இருக்கியா? ஒனக்கெல்லாம் ஏன்டா வீட்லருந்து கால் வர மாட்டுக்கு?ஆமா, சனியன் தொலஞ்சு போட்டும்னு இருக்கும் போல அந்தம்மா. நீ எதுக்கெடுத்தாலும் உலகம் எங்க போகுதுன்னு தூக்கிட்டு வந்துருவேல்லா.. சை.. அண்ணன் படிச்சுப் படிச்சு சொன்னான், மீன் யாவாரத்த எக்ஸ்பேண்ட் பண்ணுவம்லன்னு… கொழுப்பெடுத்துப் போயி ஊர விட்டு வந்தம்லா.. எனக்குத் தேவதாம்…’

“சார், உங்க பாய்ண்ட் புரியுது. நாம இன்னும் வேகமா ஓடணும்னு சொல்ல வறீங்க..”

“குட்.. ஆனா, அது மட்டுமில்ல..”

“எஸ் சார்.. எஸ்..”

“வேற என்ன செய்யணும்? யோசிங்க… நான் என்ன நினைக்கிறேன்னு சரியா சொல்லுங்க பாக்கலாம்.”

‘நீ என்னடா யோசிக்கப் போற? எப்பிடி செலவக் கொறைக்கலாம், எவன வெளிய அனுப்பலாம்னு தான் யோசிப்ப. மண்டையன்.’

முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு யோசிப்பதைப் போல நடிப்பது பழகிய விசயம் தான்.

“சார். செலவு கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. என்ன பண்ணலாம்னு யோசிக்கணும்.”

“அதேதான்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க.”

“நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?”

“நான் சொல்றேன். ஆனா, இத எப்பிடி ஹேண்டில் பண்றதுன்னு நீங்க தான் யோசிக்கணும்.”

“நிச்சயமா சார்.. சொல்லுங்க.”

நீண்ட கலந்துரையாடலிற்குப் பிறகு நினைத்தபடியே அந்த முடிவில் வந்து நின்றார். என் அலைபேசியில் மீண்டும் பல அழைப்புகள் வந்திருந்தன.

“சரி, அப்போ அப்பிடியே பண்ணலாம். எவன தூக்கலாம்னு ஒரு லிஸ்ட்ட போடுங்க.. ஒரு மெமோ குடுப்போம். அடுத்த மாசம் ரிலீவ் பண்ணி விடுவோம்.. இவனுக பண்ற வேலைய இப்போ AI-லயே பண்ணிரலாமே. உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குல்லா? இன்னும் அதே ஓல்ட் சிஸ்டத்தவச்சிக்கிட்டு ஓட்ட முடியாது, ரைட்? அப்றம் எதுக்கு இவனுக, என்ன?”

“எக்ஸாக்ட்லி சார்..”

‘நீ மட்டும்தான் சொல்லுவியா மேன்.. எக்ஸாக்ட்லி… எக்ஸாக்ட்லி… உலகம் போற போக்குல…’

யாரை எப்படி அனுப்புவது என்று முடிவெடுப்பது ஒரு கொடுமையான காரியம். எல்லாரும் நானே பார்த்துப் பார்த்து வேலைக்கு எடுத்தவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உச்சமாக இருக்கும். ஒட்டு மொத்தத்தில் நல்லவொரு அணி. இதைக் கலைத்துப் போட்டு ஒரு ஆட்டம் ஆட வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு போராட்டம்தான்.

“எப்பா, உங்களுக்கு கொஞ்ச நேரம் வந்துட்டுப் போக முடியுமா?”

“எதுக்கு இப்போ?”

“கொஞ்சம் வந்துட்டுப் போங்களேன்.. அழுகைய நிறுத்த மாட்டுக்கா..”

“என்னது? இன்னுமா ஒறங்கல அவ?”

“ஆமா, தொட்டில ஆட்டி ஆட்டி கை வீங்கிட்டு எனக்கு.. பாத்ரூம் போகக்கூட விடமாட்டுக்கா.. எனக்கு அழுகையா வருகு.. நா என்ன பண்ண?”

‘நா என்ன பண்ண! நானுந்தான் இங்க ஒரு மண்டையன்ட்ட மாட்டிக்கிட்டு முழிக்கேன். அவனும், அவன் முழியும். நல்லா அவிச்ச பனம்பழம் மாதிரி..’

“நா ஒன்ன கத சொல்லச் சொன்னம்லா?”

“கதல்லாம் சொல்லிட்டேன். அதுக்கப் பொறவு தான் இன்னும் அழுகா.. என்ன கேக்கான்னே புரிய மாட்டுக்கு..”

‘நீ என்ன லட்சணத்தில் கதை சொன்னியோ! என்ட்ட மட்டும் நல்லா ஒரண்டய இழுக்கேல்லா.. பிள்ளயச் சமாளிக்கக் கழியாதா? கேட்டா, டக்குன்னு கண்ணுலந்து கொட்டிரும்.. நான் எங்க போய்க் கொட்ட?’

“அவட்ட குடு ஃபோன.”

“அம்மு, என்ன வேணும் பிள்ளக்கி.. நா ஒன்ன ஒறங்கச் சொன்னம்லா? பிள்ளக்கி சர்ப்ரைஸ் வேணுமா, வேண்டாமா?”

“சப்பீஸ் வேண்டா.. உக்கம் வாணும்.. உக்கம் வாணும்…”

“என்னம்மா? அழாமச் சொல்லு பாப்போம்.”

“அப்பா உக்கம் வாணும். உக்கம் வாணும். அம்மா தர மாட்டுக்கா.”

“செரிம்மா, அப்பா அம்மைட்ட சொல்லுகேன். அம்மாட்ட குடு..”

“சொல்லுங்கோ..”

“எட்டி, என்ன கத சொன்ன நீ?”

“கிருஷ்ணா கத தான்.”

“அது செரி, என்ன கத?”

“கிருஷ்ணா வாலு பண்ணி யசோதாட்ட வாயத் தொறந்து காட்டுவாம்லா. அந்தக் கத… ஏன் கேக்கியோ?”

“செரி, பிள்ளைட்ட குடு..”

“அப்பா, அப்பா, உக்கம் வாணும்..”

“செரி மக்ளே, அப்பா வரும்போ வாங்கிட்டு வாரேன் செரியா? இப்போ குட் கேளா மம்மம் சாப்டுட்டு ஒறங்கணும், என்னா?”

“அம்மா, அப்பா உக்கம் வாங்கி தருவாளே…”

சந்திப்பு முடிந்து கிளம்பும்போது சொன்னார். “ஸோ பாரதி. உங்களால இதெல்லாம் ஈஸியா பண்ண முடியும்னு எனக்குத் தெரியும். இந்த உலகத்துக்கேத்த ஆளு நீங்க தான்.. கீப் இட் அப்..”

மாலை வீட்டிற்குள் நுழைந்த போது கமந்து படுத்து முனகிக் கொண்டிருந்தாள் அம்மு.

“எட்டி, என்னா? எப்பிடியிருக்கு இப்போ? பிள்ள எப்போ ஒறங்குனா?”

“ம்‌ம்‌ம், எம்மா… எம்மா…” வலியில் முனகினாள்.

“செரி, செரி, நீ கொஞ்சம் ஒறங்கு.”

சட்டென விழித்தவள், “மயிலிறகு கொண்டு வந்தேளா?” என்று கேட்டாள்.

“ஆமா, இப்ப இருக்க நெலமைல நாம் போயி மயிலிறகு பொறுக்கிட்டுக் கெடக்கேன்.”

“எப்பா, நாஞ் சொன்னம்லா எடுத்துட்டு வாங்கன்னு. பிள்ளக்கி கிருஷ்ணன் வேசம் போட்டு ஃபோட்டோ எடுக்கலாம்னு நெனச்சேன். அவ வேற கிஷ்ணா கிஷ்ணான்னு அழுதுட்டே இருந்தால்லா..”

“வேசம் தான? போட்டு விடு.. மயிலிறகு இல்லாட்டி இப்ப என்ன கொறஞ்சிரப் போது?”

“ஆமா, ஒங்களுக்குத் தேவையான விசயம்னா எல்லாம் செய்வியோ. ஒலகத்துல இல்லாத்ததையா கேட்டுட்டேன்? ஒவ்வொருத்தரும் பொண்டாட்டி கேட்டா என்னல்லாம் செய்யா! இது நாம்லா கேட்டேன். அதுக்கு மதிப்பு கெடயாது. நான்னா எளக்காரம் தான! ஒங்ககிட்ட நா கேட்ருக்கவே கூடாது..”

“ஆரம்பிக்காத..”

“ஆமா, நீங்க போய் உங்க வேலயப் பாருங்க. இப்போ எந்திச்சி கத்துவா..”

“கத்துனா நா பாத்துக்குறேன். நீ ஒன்னும் கெடந்து பொலம்பாண்டாம். வேண்டா வெறுப்பா பிள்ளயப் பெத்துட்டு…”

“என்னது? என்ன சொன்னியோ?”

“ஒரு மயிரும் இல்ல, போய்ப் படு, போ…”

“இந்த வார்த்தயெல்லாம் சொல்லக் கூடாது பாத்துக்கோங்கோ..”

“போட்டி போ, போய்ப் படுன்னேன்.”

தொட்டில் மெல்ல அசைந்தது. சிறுசோடு அம்முவும் சிணுங்கிக்கொண்டே கிடந்தாள். தொட்டிலை மெல்ல ஆட்டிக்கொண்டே மின்னஞ்சல்களைப் பார்த்தேன். சிறுசோடு அம்முவும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

“அப்பா, அப்பா..” தூக்கத்தில் பேசுவது என்னைப் போலவே சிறுசுக்கும் ஒட்டிக் கொண்டது. புன்னகைத்தபடி, “ஒன்னுல்லம்மா, ஒறங்கு பிள்ள..” என்றேன்.

குரல் கேட்டதும் சட்டென புரண்டு படுத்தவள் கண் திறந்து, “அப்பா உக்கம், உக்கம்,” என்றாள்.

“செரிம்மா, பிள்ள ஒறங்கு. அப்பா வாங்கிட்டு வரேன், செரியா?”

மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள். குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுசு மீண்டும் தொடங்கினாள்.

“எப்பா, எப்பா, சட்டுன்னு குளிச்சிட்டு வாங்களேன். இவ அடங்க மாட்டுக்கா.. தொண்ட என்னத்துக்கு ஆகும்? காலைலேந்து கத்திக் கத்தி, ஒடம்புல ஒன்னும் கெடயாது..”

“இன்னா வாரேன். இரி..”

“அப்பா வருவா, போட்டும்மா, போட்டும்.. வாவோ, வாவாவோ..”

“அப்பா, உக்கம் வாணும், உக்கம் வாணும், அப்பா, அப்பா”

“நிம்மதியா குளிக்கக் கூட விட மாட்டியோ, செர எழவா இருக்கு…”

“பிள்ளய என்ன வார்த்தடே சொல்லுகீங்க?”

“எம்மா தாயே, நாம் பிள்ளயச் சொல்லலம்மா, ஆள விடு..”

“அப்போ, என்ன தான் சொன்னீங்க?”

“ரைட்டு.. இப்ப என்ன, ஒங் கால்ல விழணுமா, கொண்டா பிள்ளய மொதல்ல. ஒரு பிள்ளய சமானப்படுத்தத் தெரில, வாயி மட்டும்…”

“ஆமா, ஒங்கள விடக் கொறவு தான்..”

“அப்பா, உக்கம் வாணும்…”

“வாம்மா, செல்லக்குட்டில்லா.. அழாத..”

“உக்கம் வாணும்…”

“செரி, செரி, பிள்ளக்கி அப்பா கிஷ்ணா கத சொல்லவா?”

“உக்கம் வாணும்.. உக்கம் வாணும்..”

“அப்பா சர்ப்ரைஸ் சொன்னேம்லா.. பாப்போமா?” கேட்டதும் அழுகையை நிறுத்தினாள்.

“அப்பா சப்பீஸ், சப்பீஸ்..”

“குட் கேள்.. நீ அம்மைட்ட இரி. அப்பா, பேக்ல இருந்து எடுத்துட்டு வாரேன்..”

முறைத்தபடி வாங்கித் தன் மடியில் இருத்தினாள்.

“பிள்ளைக்கி நேரியல் உடுத்து விடு. கிருஷ்ணா வேசம் போடுவோம்.”  மடிக்கணினி பையைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். உற்றுப் பார்த்தபடி வேசத்திற்கான பொருட்களை எடுத்து வைத்தாள்.

“இங்க என்ன பார்வ? ஓங்குடும்பத்துக்கு ஒரு சொத்து எழுதி வச்சிருக்கேன் வேணுமா?”

மீண்டும் முறைத்தாள்.

“இங்கப் பாரு, பிள்ளக்கி சர்ப்ரைஸ்…” என்றபடி புத்தகத்தைத் திறந்து அந்த மயிலிறகை எடுத்தேன்.

“ஹாஹாஹா.. அப்பா, கிஷ்ணா, கிஷ்ணா” என்று சிரித்தாள்.

“பிள்ள தான் கிஷ்ணா, செரியா, கிஷ்ணாக்கு டிரெஸ் போடுங்க அம்மா, வாங்க, வாங்க..”

நேரியல் உடுத்து நேர்ந்து விட்டிருந்த நீண்ட கூந்தலை வாரியிழுத்துக் கட்டி, கண்மையிட்டு, சந்தனம் தீற்றிக் கோடிழுத்த போது அந்தக் குட்டிக் கிருஷ்ணா அழகாகச் சிரித்தான். ‘அடுத்து மகன் பிறந்தா நல்லாத்தான் இருக்குமோ!’

“அய்யா, சூப்பர், கிஷ்ணா ரெடி.. கண்ணாடில போய்ப் பாரு..”

தத்தித் தத்திச் சென்று அலமாரியின் கண்ணாடி முன் நின்று எட்டி எட்டிப் பார்த்து நின்றாள். பிள்ளையைப் பார்த்து ரசித்த அம்முவின் முகம் அவ்வளவு அழகு. ‘கோவமெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் என்ன!’

“அப்பிடியே உங்க அம்மா மாதிரியே இருக்கியே கிஷ்ணா,” என்றபடி அம்முவைப் பார்த்துக் கண்ணடித்தேன். கண்ணாடி முன் நின்று வாயை ஆவெனத் திறந்து பார்த்தாள் சிறுசு. திரும்பி முகத்தைச் சுறுக்கியபடி என்னைப் பார்த்தாள். மீண்டும் கண்ணாடியைப் பார்த்து வாயைத் திறந்து உற்று நோக்கினாள். அவ்வளவுதான். ஓவென ஒரு கத்தல்.

“அப்பா, அப்பா… உக்கம் வாணும், உக்கம் வாணும்.”

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கிருஷ்ணா தரையில் விழுந்து புரள ஆரம்பித்தான்.

“பிள்ளய எடுக்காம என்னத்தப் பாத்துட்டு நிக்கட்டி?”

“ஏன், நீங்க எடுங்க…” என்று சொல்லிச் சிரித்தபடி அடுக்களைக்குள் ஓடினாள்.

“எட்டி, எட்டி, எங்க….” என்றபடி பிள்ளையைத் தூக்கினேன்.

“அப்பா, உக்கம் வாணும்…” அடுக்களையில் அடுப்பைப் பற்ற வைக்கும் சத்தம்.

“எட்டி, இவள வந்து பிடி…”

“இரிங்கப்பா, இன்னா வாரேன்… கொஞ்ச நேரம் பாத்தா ஒன்னும் ஆகாது..”

மீண்டும் கிருஷ்ணா கதை சொல்ல ஆரம்பித்தேன். சற்று நேரம் கேட்பாள். மீண்டும் ‘உக்கம், உக்கம்’ என்பாள். இரண்டு மூன்று கதைகள் முடிந்தன. அதற்கு மேல் சொந்தக் கதையைத் தான் சொல்ல வேண்டும்.

“இந்தாப் பாரு பிள்ளைக்கி உக்கம்….” என்று சிரித்தபடி வந்து நின்றாள் அம்மு. கையில் ஒரு சிறு சம்படம். பிள்ளை மலைத்தபடி உற்றுப்பார்க்க, அருகே அமர்ந்து அந்த சம்படத்தைத் திறந்து காட்டினாள். அழகாக ஜொலித்த ஒரு சிறு உலக உருண்டை . கிருஷ்ணாவின் முகம் அப்படி மலர்ந்தது.

‘அட! நம்ம மர மண்டைக்கு இது தோணவே இல்லயே!’

“ஹாஹாஹாஹா… உக்கம்.. உக்கம்… ”

நான் அம்முவை ஆச்சரியமாகப் பார்த்தேன். கில்லாடி தான். ஒரு குட்டி மிட்டாய் உலக உருண்டை. எப்படிச் செய்திருப்பாள்!

“அப்பா, உக்கம்.. உக்கம்…”

“ஆமாக்குட்டி, சூப்பர்லா… கிஷ்ணாக்கு உக்கம்…”

“அப்பா, ஆ… ஆ..” என்று வாயைத் திறந்தான் கிருஷ்ணா. ஒருநொடி யோசித்தபடி நின்றேன். அம்மு அந்தக் குட்டி உலகத்தை எடுத்து சிறுசின் வாய்க்குள் வைத்தாள். அவள் சட்டென ஓடிச் சென்று அலமாரியின் கண்ணாடி முன் நின்று வாய் திறந்து பார்த்தாள். என்னவொரு கண்கள். என்னவொரு முகம். ‘அடுத்ததும் மகளே தான்டா.’

சற்று நேரம் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தவள்,“அவ்வா… அவ்வா” என்று திறந்த வாய் மூடியபடி ஓடி வந்தாள். வாயோரம் வண்ண வண்ண மீசைகள் வழிந்துகொண்டிருந்தன. சில நொடிகள் தான். மீண்டும் ஓவெனக் கதறல். மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, தன் சிறு வாயைத் திறந்து காட்டினாள் சிறுசு.

“அப்பா, உக்கம் காணும்… உக்கம் காணும்…”

‘கரையாத ஒரு உலகத்தை எப்படிச் செய்ய!’

***

– சுஷில் குமார்

The post கிஷ்ணா – சுஷில் குமார் appeared first on வனம்.

  •