Reading view

புத்தகங்களை வகைப்படுத்திப் பொதிகட்டி வெளியேற்றுதல். - 1. மலாயா இடப்பெயர்வு.


வாசித்தலும், புத்தகச் சேகரிப்பும் தொடங்கும் காலத்தில் நல்லாத்தன் இருக்கும்.  ஆனால், அதில் வெள்ளை யானை வளர்பிலும் மேலதிகமான சுமையும், வலியும் உள்ளது. பிற்காலத்தில் எமது புத்தகச் சேகரத்திற்கு என்னவாகும் என்ற கவலை மனஅழுத்தம் தரும் ஒன்றகும். 

''பெற்ற பிள்ளைகளகளாவது தங்கள் கால்களில் நிற்பதற்கு பழகிக் கொள்வார்கள் - அவர்களுக்குக் கிடைத்த கல்வியின் மூலம்  தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள், ஆனால் நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களுக்கு என்னவாகும் என்ற கவலை என்னைச் சிலகாலம் வாட்டியது என்னவோ உண்மைதான், ஆனால் நான் இப்ப அதையிட்டு நான் கவலையடைவதை விட்டு ஒரு detachment & unlearning மனநிலைக்கு வந்துவி்ட்டேன்'' 

என்ற சச்சியின் சொற்கள் என் காதுகளில் இன்னமும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன என்றே சொல்லலாம். 

கொரோனா பொருந்தொற்றுக் காலத்தில் நான் இலங்கை திரும்பியிருந்த நிலையில் சச்சி நோய்த் தொற்றினால் மரணமடைய, அவரது பெறுமதிமிகு நூற்சேகரம்  யானை வாயில் சிக்கிய கரும்பாகிய செய்தியும் நூல்சேகரிப்பாளராக என்னை  இன்றும் வருத்திக்கொண்டிருக்கிறது.

வாசிப்புவெறிகொண்ட ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வகை நூல்களைத் தேடும் அல்லது வாங்கும் வேளையில் சில பிறவகை நூல்களையும் பின்னர் வாசிக்கலாம், பின்னர் கிடைக்காமலே போய்விடுமோ  என்ற அச்சத்தில் வாங்கி வைத்துக்கொள்ளும் ஒருவகை நோயின் தாக்கமும் ஏற்படுவதுண்டு. அதுவும் ஆய்வுப் பெறுமதியான நூல்கள் என்றால் அவற்றை வாங்காது விட்டுச் செல்வதென்பது முடியாத செயல். அவ்வாறாக நூற் சேகரத்தில் இணைந்த சில நூல்கள் வாசிக்கப்படாமலே தேங்கிக்கொள்ளும். 

சீ. ரா. ரங்கநாதனின் நூலக விதிகளின் சாரமாக ஒருநூல் தனக்குரிய வாசகனை அடைதலைத் தடுக்கும் ஒருவன், உண்மையில்  வாசகனாகவே இருக்கமுடியாதென்பது என் முடிபு. 

அந்தவகையில் தமிழர்களின் மலாயா இடப்பெயர்வை ஆவணப்படுத்தியிருக்கும் சில நூல்களைப் பொதிகட்டி வெளியேற்ற விரும்புகிறேன். ஏன் பொதிகட்டுதல் என்றால் - இதிலுள்ள 6 நூல்களை ஆறு வெவ்வேறான நபர்களுக்குக் கொடுப்பதால் எவருமே ஒரு முழுமையான வாசிப்பினை அடையமுடியாது, ஆகவேதான் பொதிகட்டல், ஒருவராவது முழுமையடையட்டும். 

இலங்கைத் தமிழர்களுக்கும், தனது மேற்படிப்பு ஆய்வுத் தலைப்பாக  ''மலாயா இடப்பெயர்வை''க்  கொண்டிருக்கும் ஆய்வு மாணவருக்கு (இலவசமாகவும்) முன்னுரிமை. நூல்கள் யாவும் யாழ்ப்பாணத்தில் உள்ளன.

அரிய நூல்களை விலை கொடுத்து வாங்க விரும்புகிறவர்களையும் வரவேற்கிறேன். 

சும்மா வெறுமனே ''மலாயா இடப்பெயர்வு'' தமது விருப்பிற்குரியதென்று கூறி இந்நூல்களைப் பெற்றுக்கொள்ள நான் இடம்தரமாட்டேன். இன்றைய திகதிக்கு முன்னராக அவர்களின் ''மலாயா இடப்பெயர்வு'' விருப்பிற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணம் ஒன்றினைக் காட்டுவது அவசியம். அது ஒரு சிறு கட்டுரையாகவோ அல்லது விருப்பமாகவோ ஏற்கனவே வெளிப்படுதிய அறிவிப்பு ஒன்றாக காட்டக்கூடியவாறு இருக்கவேண்டும். 

ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் இன்றி இவற்றைத் தருவது எனக்கு உடன்பாடானது அல்ல. (பெற்ற மகளைத் தக்க ஒருவனு்கு மணமுடித்துக் கொடுத்தலிலும் பார்க்க கவனமாக இருக்கவேண்டும்) 

யாழ் குடாநாட்டின் பலபகுதிகளிலிருந்தும் குறித்த தொகையானவர்கள் மலாயாவிற்குப் பெயர்ந்திருந்தபோதிலும் அவர்களைப் பற்றிய ஆய்வென்பது, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் முழுமையாக நடைபெறவில்லையென்பது என் அவதானிப்பு. 

80களில் உலகின் பல பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் மூன்றாம் தலைமுறைக்குப் பின்னரானவர்களைப் புரிந்துகொள்வதற்கு எமக்கு ஒரு வழிகாட்டியாக மலாயாவில் தங்கிவிட்ட அரியவகைத் தமிழர்களின் வாழ்க்கைப்பதிவுகள் அவசியம் என்பதாக நான் உணர்கிறேன். 

பொதியிலுள்ள நூல்கள் 

  1. "The Hundred Years of Ceylonese in Malaysia and Singapore"  - by Dr.S.Durai Raja Singam
  2. "The Legacy of the Pioneers - 125 years of Jaffna Tamils in Malaysia - by T.Selvaratnam & S.Apputhurai
  3. "The Legacy of the Pioneers - 125 years of Jaffna Tamils in Malaysia Volume II - by T.Selvaratnam & S.Apputhurai
  4. Glorious Malaya by S. Muthuthamby Pillai edited by Prof A. Veeramani. 
  5. மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை - ஜானகிராமன் மாணிக்கம்
  6. மலாயாக் குடிப்பெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் - சமாதிலிங்கம் சத்தியசீலன்
  7. (மலாயாவின் தோற்றம் -  பழனியப்ப செட்டியார்) நூல் உள்ளது, தேடி எடுக்கவேண்டும் 






  •  

ஆய்வடங்கல் - சொல்லின் பொருள் அறிந்து...

 

ஆய்வடங்கல்  என்றால் குறிப்பிட்ட பொருளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை வரிசைப்படுத்தித் தரும் பட்டியல் அல்லது குறிப்பிட்ட ஒரு ஆசிரியரின் படைப்புகள் பற்றிய அனைத்துப் பதிவுகளையும் தொகுத்துத் தரும் பட்டியல் என்று கூறலாம். 

தமிழில்,  மிகவும் அறியப்பட்ட ஆய்வடங்கல்கள்,

  • 1. கம்பன் ஆய்வடங்கல்
  • 2. மு. வ. ஆய்வடங்கல்
  • 3. அகிலன் ஆய்வடங்கல்
  • 4. தமிழ் அகராதியியல் ஆய்வடங்கல்
  • 5. ஜெயகாந்தன் ஆய்வடங்கல்

மு. வ. ஆய்வடங்கல் தொகுத்துத் தந்த பேராசிரியர் சு. வேங்கடராமன் அவர்கள் தந்துள்ள விரிவான விளக்கம் வருமாறு 

''ஆய்வடங்கல் - குறிப்பு விளக்கத்தொகை நூல் (Annotated Bibliography) என்பது ஒரு படைப்பு பற்றியோ, படைப்பாளர் பற்றியோ அமையும். இந்த நூல் இந்த நூற்றாண்டின் தமிழில் சாதனைகள் பல புரிந்து ஒல்லும் வகையெல்லாம் தமிழ் வளர்த்த சான்றோர் மு. வ. அவர்களின் படைப்புகளையும் அவற்றைப் பற்றிய பிறர் ஆய்வுகளையும் முறையாகத் தொகுத்துத் தரும் குறிப்பு விளக்கத்தொகை நூல்.''

இதில் பேராசிரியர் சு. வே ''Annotated Bibliography'' என்ற ஆங்கிலப் பொருளையும் தந்துள்ளதைக் காணலாம். 

ஆய்வடங்கல் ஒரு கருவிநூல் அல்லது நோக்குநூல். 

குறித்த பொருளில் அல்லது குறித்த ஆசிரியர் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரின் நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் அனைத்துத் தகவல்களைத் தருகிற வேலையை ஆய்வடங்கல் செய்கிறது. அது நூற்றொகை அல்லது ஆய்வுத் தொகுதி அல்லது ஆய்வுச் சுருக்கம் என்ற வகைநூல்களில் இருந்து வேறுபட்டது. ஆய்வடங்கலானது நோக்குநூல் வரிசையில்  நூற்றொகையையும் தாண்டிய கனதியானதும் வேலைச்சுமை கூடியதும் ஆகும். 

ஆய்வுச் சுருக்கம் - 

குறித்த கருத்தரங்குகளில் / மாநாடுகளில்  படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கத்தினைத் தருகிற நூல் - இது பெரும்பாலும் குறித்த கருத்தரங்கம் ஆல்லது மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் வெளியிடப்படும் வழிகாட்டி நூல். குறித்த தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையின் முன்னோட்டத்தினைச் சுருக்கமாகத்  தரும் நூல். 

ஆய்வுத் தொகுதி - 

குறித்த கருத்தரங்குகளில் / மாநாடுகளில் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெற்ற முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். இது பெரும்பாலும் குறித்த கருத்தரங்குகள்  / மாநாடுகள் நடைபெற்று சில காலம் சென்றபின்னர், பொதுவாக வரிசையில் அடுத்த எண்ணில் வரும் கருத்தரங்கில் / மாநாட்டில் வெளியிடப்படும். இது சிலவேளைகளில் ஓராண்டிற்கும் மேற்பட்ட கால இடைவெளிக்குப் பின்னரும் வெளியிடப்படலாம்.  

இந்நிலையில் 2023-2025 ஆண்டுகால இடைவெளியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான, தலைப்பில் ''ஆய்வடங்கல்'' என்ற சொல் காணப்படுகின்றதும் என் பார்வைக்குக் கிடைத்ததுமான 3 நூல்களைப் பற்றிய பதிவுகளைப் பார்ப்போம். 

  1. 2023 - யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல் : தேர்ந்த நூல் விபரப்பட்டியல்
  2. 2024 -  ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு 2024 - ஆய்வடங்கல்
  3. 2025 - மூன்றாவது சர்வதேச இந்துமாநாடு - ஆய்வடங்கல்(Conference Proceedings)

இதில் முதலாவது நூல் ஓய்வுபெற்ற நூலகர் திரு. க. சௌந்தரராஜன் அவர்களால் தொகுக்கப்பட்டு வடக்கு மாகாணம் கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. ''தேர்ந்த நூல் விபரப்பட்டியல்'' என்ற சொல்லாடல் உணர்த்துவது யாதெனில் தொகுப்பாளர் தனக்குப் பார்வைக்குக் கிடைத்த பதிவுகளையே தந்துள்ளார் என்பதும், இதில் விடுபடல்கள் இருப்பின் அதற்குத் தொகுப்பாளர் பொறுப்பல்ல என்பதையும் அச்சொல்லாடல் மறைமுகமாகச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். நூல், சிறுநூல், சஞ்சிகைக் கட்டுரை, சிறப்பு மலர்க் கட்டுரை, பத்திரிகைக் கட்டுரை, தகவல், பிரசுரம், நூலின் பகுதி என்று நானாவித வளங்களில் இருந்து தொகுத்து இந்நூலினை உருவாக்கியுள்ளார். இந்நூலில் சில இடங்களில் தொகுப்புத் தவறுகள்  உள்ளன, எனினும் தொகுப்பளரின் முயற்சிக்கு பெரும் பாராட்டினைத் தெரிவிப்பது எம் கடமை. 

ஆய்வடங்கல் என்ற சொற்பதம் தந்திருக்கவேண்டிய கனதி நூலின் உள்ளடக்க விபரங்களில் இல்லை. ''Annotated'' வகைமையில் கட்டயம் காணப்படவேண்டிய குறிப்பிட்ட ஆக்கத்தின் மேலதிக விபரங்கள் நூலில் தரப்படவில்லை. தலைப்பில் நூற்றொகை என்ற பதம் கொடுத்திருக்கலாம். 

அடுத்த இரு நூல்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வு மாநாடுகளில் வெளியிடப்பட்டவை.  

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் முழுமையான நிலையில் மாநாடு நடைபெறும் நாளிலேயே தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு ''ஆய்வுத் தொகுதி'' என்ற பெயர்கூட கொடுப்பதற்குக்கூட உண்மையான சில ஆய்வாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இடமுண்டு. காரணம் இவை யாவும் அரங்கில் வாசிக்கப்பட முன்னரே அதாவது ஆய்வாளர்கள் சபையில் அசலப்படாத நிலையில் உள்ளவை. சில கட்டுரையாளர்கள் அரங்கிற்கு வரவும் இல்லை, வாசிக்கவும் இல்லை. 

இவ்வாறு அரங்கேறி வாசிக்கப்படாமலும், அலசப்படாமலும் தொகுதிகளில்  கட்டுரைகள் இடம்பெறுவது மலின முனைவர்களுக்கும் கல்லாநிதிகளுக்கும் வேண்டுமானால் உவப்பாகவிருக்கலாம், ஆனால் ஆய்வுச் சூழல் மாசடையும் ஒரு நிகழ்வாகவே இதனைக் கொள்வதற்கும் இடமுண்டு என்பதை மறுக்கமுடியாது.  இங்கும் ஆய்வடங்கல் என்ற சொற்பதம் தேவையற்றது. 

அடுத்து இம்மாதம் யாழ் பல்கலையில் நடைபெற்ற மூன்றாவது  சர்வதேச இந்து மாநாடு - 2025. இதில் ''ஆய்வடங்கல் Conference Proceedings'' என்ற இருமொழித் தலைப்பு தரப்பட்டுள்ளது. உண்மையில் இது குறித்த மாநாட்டிற்கென ஆய்வாளர்களால் அனுப்பப்ட்ட ஆய்வுச் சுருக்கங்களின் தொகுப்பு. இதற்கு ஆய்வுச் சுருக்கம் என்பதே போதுமானதாகும். 

ஆய்வடங்கல் என்ற சொல்லின் பொருள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கும், இந்துக் கற்கைகள் பீடத்திற்கும் இடையிலேயே மாறுபடுகிறது. தமிழ்த்துறை - ஆய்வுத் தொகுதி என்ற பொருளில் பயன்படுத்துகிறது, இந்துக் கற்கைகள் பீடம் ஆய்வுச் சுருக்கம் என்று வெளியிடவேண்டியதற்கு ஆய்வடங்கல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

அடிப்படைக் காரணம் இருதுறைகளுமே அறியப்பட்ட ஆய்வடங்கல் எதையும் பார்க்கவில்லை, அறிந்திருக்கவில்லையென்பதே.  

 



  •  

சு. வி. யின் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு : நினைவலைகள் - கலாநிதி பொன். பூலோகசிங்கம்

   மலை ஒன்றினை முழுமையாகக் காணவேண்டுமாயின், தொலைதூரத்திலே போய் நின்று பார்க்கவேண்டும்; வரலாற்று நிகழ்ச்சியை மதிப்பிடக் காலம் செல்லவேண்டும் என்பர் சான்றோர். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு  யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு சனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை செவ்வனே கோலாகலமாக நடந்து, பத்தாம் தேதி விருந்துபசார விழா இனவெறியின் விஷமத்தனத்தினால் அவதியுற்று முடிவடைந்தது. முப்பத்தொரு ஆண்டுகள் முடிவடைந்து முப்பத்திரண்டாம் ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது.  நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் சூத்திரதாரி பேராசிரியர் சுப்பிரமண்யம் வித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ஆம் தேதி கொழும்பிலே மறைந்தார். அவர் பூதவுடல் மறைந்து புகழுடல் எய்திப் பதினாறாண்டுகள் நிறைவேறிவிட்டன. இப்போது அம்மாநாடு பற்றியும் அந்தப் ‘பார்த்த சாரதி’ பற்றியும் நின்று நிதானித்துச் சிந்திப்பது உண்மை வரலாற்றிற்கு உகந்தது என்பதை இக்கால இடைவெளியில் உதிர்க்கப்பட்ட துணுக்குகளை அறிந்தவர்-கேட்டவர் ஏற்றுக்கொள்வர். 

    1980ஆம் ஆண்டிலே தமிழிலும் 2005இலே ஆங்கிலத்திலும் வெளியான இருநூல்களை வாசித்தபோது, விளம்பரத்திற்காக இப்படியெல்லாம் எழுதுகிறார்களே என்று வேதனைப்பட்டேன். அந்நூற் கருத்துகளை விமர்சிக்க எமக்கான தகுதியென்ன பார்க்குப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலே ஆற்றிய பேராசிரியர் வித்தியானந்தன் நினைவுப் பேருரையிலே,

“அரசும் அரசின் அடிவருடிகளான தமிழர்கள் சிலரும் மாநாட்டைக் குழப்புவதற்கு இயலுமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தனர். வித்தியானந்தனுடைய நன்மாணவர்களாக அதுகாலம் வரையிற் கருதப்பட்ட சிலர், சுயநலம் கருதி அரசுடன் சேர்ந்துகொண்டனர். தமிழ்த் துறை பூலோகசிங்கம், வரலாற்றுத் துறை பத்மநாதன் முதலிய வெகுமான்களே வித்தியானந்தனுக்குப் பக்கபலமாக நின்றனர்’’ 

என்று கூறியுள்ள கருத்தினை முன்வைக்கிறோம். (நினைவுப் பேருரை: பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக் கோலம், கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு, திசம்பர், 1989, பக். 20) 

பேராசிரியர் வேலுப்பிள்ளையின் கருத்துகளை மறைப்பதற்குச் சில தாசர்களால் எடுக்கப்பெற்றிருக்கும் முயற்சிகளை உண்மை விரும்பிகள் நிதானித்து நோக்குதல் அவசியமாகும்.

முகாமைக்குழுவின் உறுப்பினராக 1972ஆம் ஆண்டு ‘சாந்தம்’ பொதுக்கூட்டத்திலிருந்து சரஸ்வதி மண்டபம், கொழும்பு இந்துக் கல்லூரி, சட்டத்தரணி அம்பலவாணரின் அல்பிரட் பிளேஸ் வாசஸ்தலக் கூட்டங்கள்வரை இரு வருடம் இடைவிடாது பங்குபற்றியதோடு, கல்வி ஆய்வுக் குழுவுக்கு நியமிக்கப்பெற்ற மூன்று செயலாளருள் ஒருவராகச் செயலாற்றி, மாநாட்டின் நினைவு மலரின் ஆசிரியராக, அதனை வெளிக்கொணர்ந்தவன் பூலோகசிங்கம் என்ற உண்மையை அறிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். எனவே நான்காவது மாநாடு பற்றியும் அதனைச் சிறப்பாக நடாத்தி வெற்றி ஈட்டிய தலைவர் பற்றியும் கூற எமக்குத் தகைமையுண்டு என்பதை யாரும் மறுத்தலரிது.

1960 ஜூலை மாதம் நடைபெற்ற ஐந்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலே பண்டாரநாயகாவின் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இனவெறி அலைகள் அசுரவேகத்தோடு மோதத் தொடங்கின. பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டன. வடக்கிலும் கிழக்கிலும் ஒத்துழையாமை இயக்கத்தினைத் தமிழரசுக் கட்சியினர் முன்னின்று நடத்தினார்கள். அதனால் கோபமுற்ற அரசு தமிழரசுத் தலைவர்களையும் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் பனாகொடையிலே தடுப்புக்காவலிலே வைக்க, தமிழ்ப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்த தமிழருக்கு எதிராகச் சிங்கள இராணுவமும் காவற்படையினரும் கர்ண கொடூரமான செயல்களிலே ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடதுசாரி முன்னணி அரசை 1963இலே மகாசன ஐக்கிய முன்னணி, லங்கா சமசமாசக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன அமைத்துக் கொண்டபோதும் தமிழருக்கு விமோசனம் கிடைக்கவில்லை. இடதுசாரிகள் மீது மத்தியதர வர்க்கத் தமிழர் வைத்திருந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது. ஏனெனில், அதுவரைகாலம் தமிழினத்தின் சார்பாக அவர்கள் கூறிவந்த கோட்பாடுகள் பதவிக்காகத் தூக்கியெறியப்பட்டன. சிங்கள தேசியவாதத்திற்கு இடதுசாரிகள் உறுதுணையாயினர். 1964 கடைசியிலே ஒரு வாக்கினாலே கூட்டாட்சி பாராளுமன்றத்திலே முறியடிக்கப்பட்டது.

1965 மார்ச்சு மாதத்திலே நடைபெற்ற ஆறாவது பாராளுமன்றத் தேர்தலிலே டட்லி சேனநாயகா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று தேசிய அரசினை அமைத்தது. டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை, தமிழ் உபயோகமொழி மசோதா என்பன நம்பிக்கை அளித்தன. எம். திருச்செல்வம் தேசிய அரசின் அமைச்சர்களில் ஒருவராகித் தமிழரசுக் கட்சியின் ஆதரவுக்குச் சாட்சியானார். ஆயினும் எதிரணியில் இருந்த முதலாளிகளுடனும் தொழிலாளர் வர்க்கக்கட்சிகளுடனும் பௌத்தத்துறவிகளுடனும் தேசியஅரசுப் போட்டி போட முடியவில்லை; தேசிய ஒற்றுமை எதனையும் அவர்கள் விரும்பவில்லை.

இக்காலகட்டத்திற் புலமைப் பரிசில் பெற்று மேற்படிப்புக்காக ஒக்ஸ்போடு பல்கலைக்கழகத்திலே இருந்த காலை (1963 செப்தம்பர் முதல் 1965 அக்தோபர் வரை) அங்கு எம் ஆய்வுக்குப் பொறுப்பாக விளங்கிய பேராசிரியர் தொமஸ் பறோ புதுதில்லியில் 1964 சனவரியின் ஆரம்பத்திற் கலந்துகொண்ட 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் சனவரி ஏழாம்தேதி உத்தியோகப்பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினைத் தோற்றுவித்தனர். அக்குழுக் கூட்டத்திலே கலந்து கொண்டவர்களிலே பேராசிரியர் தனிநாயக அடிகளார், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம் என்போர் ஈழநாட்டினராவர்.

பேராசிரியர் தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகித்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே ‘தமிழ் கல்ச்சர்’ எனும் சஞ்சிகை மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரமாண்டமான முறையிலே முதல் மாநாட்டினைக் கோலாலம்பூரிலே 1966 ஏப்பிரல் 16-23 தேதிகளில் நடாத்தத் திட்டமிட்டுப் பெரியதொரு அணியினைத் திரட்டிச் செயற்படுத்தினார்.

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் இலங்கையிலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராகப் பணிபுரிந்தது கல்விப் பீடத்திலேயாம்; தமிழ்த் துறையிலே அவர் சேவை எதிர்பார்க்கப்படவில்லை. தமிழ்த்துறையார் அலுவல்களிலே அவர் கை போடவில்லை, ஓரளவுக்கு ஒதுங்கியே இருந்தார் என்றே கூறிவிடலாம். மேலும், அவர் யாழ்ப்பாண மறைமாவட்டத்தினைச் சேராதவராகத் தூத்துக்குடி மறைமாவட்டத்தினராக மறைக்கல்வி பயின்ற காலம் முதலாகப் பேராதனையிற் பணிபுரிந்த காலமும் இருந்தமையும் கவனிக்கத்தக்கது.

இக்காரணங்களாலே அடிகளார் யாழ்ப்பாண வட்டத்தினை விட்டு விட்டுக் கொழும்பு வட்டத்திலே அதிகமாக ஊடாடினார். கே.சி.தங்கராசா, வி. கணபதிப்பிள்ளை, கே. செல்வநாதன் போன்றவர்கள் அவருடைய வட்டத்திலே சிறப்பிடம் பெற்றிருந்தனர். இதனால் கோலாலம்பூர் மாநாட்டிற்குப் பிரதிநிதிகளையும் பார்வையாளரையும் தெரியும் பொறுப்பும், இலவசப் பயணச்சீட்டுக்கு உரியவராகத் தெரியும் பொறுப்பும் கே.சி. தங்கராசா குழுவிடம் விடப்பட்டிருந்தது. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஓய்வு எடுத்ததை அடுத்து, 1965இலே வி. செல்வநாயகம் பேராசிரியர் பதவியினைப் பெற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைத்தலைவராக விளங்கினார்.

கோலாலம்பூர் மாநாட்டுக்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர் டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா. அவர் அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. பேராசிரியர் செல்வநாயகம் கட்டுரை சமர்ப்பித்தபோதும் கோலாலம்பூர் மாநாட்டிற்குச் செல்லவில்லை. கோலாலம்பூர் மாநாட்டிற்குச் சுமார் ஐம்பது இலங்கைப் பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள். இவர்களிலே சரிபாதிக்குமேல் பார்வையாளர்கள்; மாநாட்டிற்கு எவ்விதமான ஆய்வுகளையும் சமர்ப்பிக்காதவர்கள். இது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கே.சி. தங்கராசா நெறிப்படுத்தலிலே அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளை எவ்வாறு இயங்கத் தொடங்கியிருந்தது என்பதற்கு ஒரு முன்னறிவித்தல்.

1967ஆம் ஆண்டு சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுத் தமிழ் நாட்டிலே அரசாங்கம் அமைத்தது. எம். பக்தவச்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே தி.மு.க. இரண்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3- 10ஆம் தேதிகளிற் சென்னையிலே நடந்தது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொருளாளர் ஏ. சுப்பையா சென்னை மாநாட்டின் ஆய்வுக்களத்திற்குச் சூத்திரதாரியாக விளங்கினார். ஆயினும் அதேகாலத்திலே ‘பூம்புகார்’ பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது. சென்னையிலே ஆய்வரங்குகளா? ஜனரஞ்சகமான அரங்குகளா? சிறந்தோங்கி நின்றன என்று அறுதியிட்டுக் கூறுவது அரிது. ஆயினும் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை நிறுவியமைக்கான காரணங்களும் லட்சியங்களும் சென்னையிலே பட்டுப்போயின என்று கருதிய ஆய்வாளர் தொகை குறிப்பிடத்தக்கது.

தமிழ் உணர்வலைகளிலே முன்னுக்கு வந்த தி.மு.க. அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; விரும்பியதாகவும் தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கான இலங்கையர் தேர்வுகள் சகலவற்றிற்கும் பொறுப்பாக இருந்த கே.சி. தங்கராசா குழு கோலாலம்பூருக்கு இயங்கிய மாதிரியே செயற்பட்டது. ஒரே வித்தியாசம் சென்னைக்குப் பார்வையாளர் தொகை அதிகரிக்கப்பட்டிருந்தது! சென்னைத் தமிழ்விழாவை எதிர்பார்த்து அவர்கள் செயற்பட்டனர்!

டட்லி சேனநாயகாவின் தேசிய அரசு முன்வைத்த மாவட்ட சபை மசோதா, அவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஆர். ஜி. சேனநாயாக்காவின் இனவாத முக்கியத்துவத்திற்கு முன் எடுபட முடியவில்லை. 1968 சனவரியில் சென்னை மாநாட்டிற்குச் சென்ற அமைச்சர் திருச்செல்வம் நவம்பரிலே தேசிய அரசை விட்டு நீங்கியதை அடுத்துத் தமிழரசுக் கட்சி தன் ஆதரவை நிறுத்திக்கொண்டது.

1970ஆம் ஆண்டு மேமாதம் நடைபெற்ற ஏழாவது பாராளுமன்றத் தேர்தலிற் சிறிமா பண்டார நாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி மாபெரும் வெற்றி ஈட்டியது. கே.சி. தங்கராசா இடதுசாரிகளின் நண்பராக இருந்தபோதும் தேசிய அரசின் காலத்திற் காகிதக் கூட்டுத்தாபனத் தலைவராக நியமிக்கப் பெற்றவர். ஐக்கிய முன்னணி 1970இலே மீண்டபோது அவர் சேவை தொடர்ந்தது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் முகாமைத்துவமும் கே.சி. தங்கராசா பொறுப்பிலேயே இருந்தது. இக்காலத்திலே அவரும் தனிநாயக அடிகளாரும் இணைச் செயலாளராக இயங்கியதாகத் தெரிகிறது.

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரீசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டுக்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. ஐரோப்பிய அமெரிக்க திராவிடவியலாளரும் மேற்கிலே தங்கியிருந்த தமிழர் உட்பட்ட திராவிட மொழிகள் பேசியவர்களும் கலந்து கொள்ளக்கூடிய அரங்காக அது அமைந்தது. பாரீஸ் மாநாட்டிற்கு இலங்கைக் கிளை பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ்.எம். கமாலுதீன் எனும் மூவரையும் பிரதிநிதிகளாக அனுப்பிவைத்தது. பாரீஸ்மாநாட்டிற்கு முன்னும் பின்னும் தமிழபிமானிகளிடையே மட்டுமன்றித் தமிழறிஞரிடையேயும் ஈழத்துக்கிளையின் நிர்வாகத்தினர் பற்றியும் அவர்கள் பாரீஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தமுறை பற்றியும் அதிருப்தி ஏற்பட்டது.

அக்காலத்தில் பம்பலப்பிட்டி கிளென் அபர் பிளேஸில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்காக ஒரு வீட்டினை எடுத்து நடத்தினார்கள். அங்கு வெளிநாட்டு அறிஞர்களுக்கு விடுதி வசதிகள், ஆவணநிலையம், வெளியீட்டகம், தொலைபேசி வசதிகள், பகுதிநேர வேலையாள் கொண்ட செயலகம் எல்லாம் இருந்தன என்று கே.சி. தங்கராசா பின்பு 1973 அக்தோபரிலே எங்களுக்குக் கடிதம் மூலம் அறியத்தந்திருந்தார். அதற்கு முன்பு அவ்வசதிகள் பற்றி யாருக்குத் தெரியுமோ தெரியவில்லை! கிளென் அபர் பிளேஸ் வீட்டிலே தான், பாரீஸ் போய் மீண்ட கைலாசபதியும் கமாலுதீனும் 1971 பெப்ருவரி முற்பகுதியில் ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற் காட்சி ஒன்றினை ஒழுங்குபண்ணியிருந்தார்கள். அதன் சார்பாகத் தேர்ந்த நூற்பட்டியல் ஒன்றும் வெளியிடப்பெற்றிருந்தது. அப்பட்டியலிற் கண்ட தவறுகளை எடுத்துக் காட்டித் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் அன்று துண்டுப் பிரசுரம் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

1972இலே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நான்காவது மாநாடு இலங்கையில் நடைபெறவேண்டியிருந்தது. சோஷலிசம் கதைத்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஐக்கிய முன்னணி அரசு 1970இலே தோன்றியபோது மீண்டும் தழைத்தது. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராக உயர்ந்தார். அவருடைய ஆலோசகர் வட்டத்திலே இ.மு.எ.ச. முக்கிய இடம் வகித்தது. இந்தக் கட்டத்திலே கே.சி. தங்கராசா குழுவினர் அரச ஆசிகளோடு வலம்வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவுகட்டிவிட்டனர். ஆனால் அத்திட்டம் தடம்புரண்டு போயிற்று.

1972இலே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள ‘சாந்தம்’ மனையிலே கூடுவதற்கு முன்பே இரு கட்சிகள் உருவாகிவிட்டன. ஆளுங்கட்சி கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்கஇருந்த முகாமைக்குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே நன்கு புலனாயின. இதனால் ஆளுங்கட்சி எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும் பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டுவந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றதும் அன்று முதல் தொடர்ந்து பல மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே சிலாகித்துப் பேசப்பட்டன.

தமிழ்உணர்ச்சிக்கு முன்பு சலசலப்பு எடுபடவில்லை. இலங்கை அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு முகாமைச்சபை உருவாகியது. 1966ஆம் ஆண்டு முதலாகத் தமிழ் ஆய்வுகளோடு தொடர்பில்லாத முகாமைத்துவம் தன் இருப்பிலே வைத்திருந்த மன்றத்திற்கு முதன் முதலாகத் தேர்தல் மூலம் புதிய முகாமைக் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எதேச்சதிகாரத்தினை எதிர்க்க ஒற்றுமை இருந்தபோதும், புதிய முகாமைச்சபை கருத்து வேறுபாடுகளினால் ஒன்றிணைந்து நிற்கமுடியவில்லை. அரசுடன் ஒத்தூதிய இடதுசாரிகளை அநுமதிக்க இடம்வைக்கக்கூடாது என்று துணிந்தவர்களுக்கு அரசாங்கத்தின் ஏனைய அடிவருடிகளை அப்போது கவனிக்கும் யோசனை இருக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகள்!

டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா 1966இலே கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர். அங்கு அவர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராக நியமனம் பெற்றவர். தம்பையா கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினருக்கும் வேண்டியவர். ஆயினும் அவரை முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்தபோது யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர் அரசாங்கத்திற்குச் சார்பாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று 1973 அக்தோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக் குழுக் கூட்டங்களிலே வற்புறுத்திப் பலருடைய கோபத்திற்கும் ஆளாயினார். அவரைத் தலைமைப் பதவியினைத் துறக்கும்படி முகத்திற்கு முன்னே கேட்கும்படி ஆயிற்று. அவரும் 1973 செப்தம்பரிலே தலைமையைத் துறந்தார். அவர் நன்கொடையாகத் தாம் மன்றத்திற்கு வழங்கிய பணத்தையும் திருப்பித் தரும்படி கேட்டுக் கூசவைத்தார். அவருக்கு சிறிமா அரசு வெளிநாட்டுத் தானிகர் பதவி அளித்துக் கௌரவித்தது. 

கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் 24.6.84 இல் எடுக்கப்பெற்ற பேராசிரியர் வித்தியானந்தன் மணிவிழாவின்போது ‘துணை வேந்தர் வித்தி’ எனவொரு நூல் வெளியிடப்பெற்றிருந்தது. அதனுள் முன்னாள் நீதியரசர் தம்பையா ‘அன்புடன் வழங்கிய’ அணிந்துரை ஒன்று இடம்பெற்றிருந்தது. யாரைப் பற்றிய நூலுக்கு, யாரிடம் இருந்து அணிந்துரை பெறுவது என்ற விவஸ்தையே இல்லையா! அந்த அணிந்துரையிலே நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. போதாதற்கு நீதியரசரே அங்கு எழுந்தருளியிருந்தார்! அவருடைய கைங்கரியத்தினை மேடையிலே கூறவைத்துவிட்டார் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர். அவர் தலைமையுரையிலே, நீதியரசர் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குச் செய்த அரும்பெரும் பணிகளை உண்மை தெரியாது எடுத்துரைத்து எம்மை நிலைதடுமாற வைத்துவிட்டார். நீதியரசர் அன்று அளித்த அநாதரவான காட்சி எம் மனக்கண் முன்னே இன்றும் நிற்கிறது.

தங்கராசா தன்னாதிக்கம் பறிபோன கோபத்திலே எவ்வளவு குந்தகம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்து பார்த்தவர். கிளென் அபர் பிளேஸ் வீட்டிலோ, மிலாகிரியா அவெனியூ ‘சாந்தம்’ மனையிலோ புதியமுகாமைக் குழு சந்தித்துச் செயலாற்றமுடியவில்லை. சரஸ்வதி மண்டபத்திலும், கொழும்பு இந்துக் கல்லூரியிலும், கடைசியிலே கொள்ளுப்பிட்டி அல்பிரட் பிளேஸ் சட்டத்தரணி அம்பலவாணர் இல்லத்திலும் மாறிமாறிக் கூடவேண்டியிருந்தது. தனிநாயக அடிகளார் தன்னோடு நீண்ட காலமாக இணைந்து பழகியவருக்கு எதிராக இயங்கக்கூடாமல் மாநாடு ஆரம்பமாகும்வரை ஒதுங்கியே நின்றார். வர்த்தகப் பிரமுகர் கே.செல்வநாதனும் இதே காரணத்தினாலேயே ஒதுங்கிக் கொண்டார்.

தங்கராசாவின் கடைசி அஸ்திரம் மாநாட்டினை ஆகஸ்டுக்குத் தள்ளிப்போட வேண்டும் என்பதாகும். இவ்விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு முகாமைக்குழு உறுப்பினருக்கும் 1973 அக்தோபர் 29ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்திலே, தாம் முன்வைத்த கருத்தினை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளையிலிருந்து தாமும் வேறு சிலரும் வெளியேறப் போவதாகவும் எச்சரித்திருந்தார். அக்காலத்திற் கொழும்புக்கு வந்திருந்த பேராசிரியர் பிலியோசா மாநாட்டினை ஆகஸ்டிலே வைக்கும்படி முகாமைக்குழுவிடம் கேட்டமைக்கும் யார் காரணமாயிருந்தார் என்று அன்று தெரியாதவர்கள் இருக்கவில்லை.

இவ்வுண்மைகளை எல்லாம் மறைக்க முற்படுபவர், அவற்றைத் தெரிந்தவர்கள், அநுபவித்தவர்கள் சிலர் இன்றும் உயிர்வாழ்வதை மறந்துவிட்டனர். தம்பையாவும் தங்கராசாவும் யாழ்ப்பாண மாநாட்டினைக் காணமுடியாமல் ஒதுங்கிவிட்டடமை வருத்தத்திற்குரியது. தனிநாயக அடிகளார் யாழ்ப்பாண மாநாட்டிலே அவர்களுக்கு நன்றி கூறினார்.

யாழ்ப்பாண மாநாட்டினை முன்னெடுத்துச் செல்வதை அதிகம் பாதித்த மற்றொருவர் டாக்டர் எஸ். ஆனந்தராசா. அமைப்புக்குழுச் செயலாளரில் ஒருவரான டாக்டர் ஆனந்தராசா முகாமைக்குழுவின் கருத்துகளுக்கு மாறாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கிவிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்துமோதல்களால் டாக்டர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக்கிளையின் முகாமைத்துவத்திலிருந்து வெளியேறினார். சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திராவும் முகாமைக் குழுவோடு ஒத்துப்போகமுடியாமற் சிறிது காலத்திற்குள் அமைப்புச் செயலாளர் பதவியைத் துறந்தார். 

யாழ்ப்பாணத்திலே மாநாடு வைக்கவேண்டும் என்பதே முகாமைக்குழுவின் பெரும்பான்மையோர் கருத்தாகும். இக்கருத்திற்கு ஆதரவு தரமுடியாதவர்கள் ஒருவர்பின் ஒருவராகக் கழன்று விட்டனர். இன்று பின்னோக்கிப் பார்க்கையில், இவர்தான் அக்கருத்தை முன்வைத்தார், இல்லை அவர்தான் என்று கூறுவது வீண் விளம்பரம். முகாமைக்குழுவுக்கு ஆரம்பத்தில் அப்பிரச்சினையே இருக்கவில்லை.

பேராசிரியர் வித்தியானந்தன் 5.10.1973இலே முகாமைக்குழுவின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மாநாடு நடத்துவதற்கு அவகாசம் மூன்று மாதம் கூட இல்லை. பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவரை, வி.எஸ்.ரி.யும் யாமும் அழைத்துக் கொண்டு சென்றோம். தலைவர் தனியனாகவே அமைச்சரைச் சந்தித்தார். அமைச்சர் மூன்று அம்சங்களை அவற்றை ஏற்றுக்கொண்டால் மாநாடு வைப்பதற்குச் சகல வசதிகளும் செய்து தருவதாகக் கூறினார். அவ்வம்சங்கள்:

  • மாநாடு கொழும்பிலே நடக்கவேண்டும்; மாநாட்டை பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்திலே எவ்விதமான சலாருமின்றி நடாத்த அமைச்சர் உறுதி தந்தார்; 
  • பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்; 
  • அமைச்சர் செல்லையா குமாரசூரியர் மாநாட்டில் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் ஹோட்டல் வசதிகளும் உணவு வசதிகளும்கூட முன்வைக்கப்பட்டன.

தலைவர் முதல் அம்சத்தினையே மறுத்துவிட்டார். அதனால் ஏனைய அம்சங்கள் பற்றிய பேச்சுக்கே இடமில்லாமற் போய் விட்டது. அமைச்சர் பொறுமையிழந்து ‘அபேபலமு’ (நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்) என்று சூள்விட்டார். அரசு ஆதரவு தராமல் இருப்பதோடு குந்தகமும் செய்யப்போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். இதனால் அசுர வேகத்திலே எல்லா ஒழுங்குகளும் நடந்தன. கடைசி நேரம் மட்டும் நடக்குமா இல்லையா என்ற தயக்கம். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மாநாட்டுக்கு வரவிருந்த பிரதிநிதிகளுக்கு ஆதரவு தரவில்லை; வந்தவர்கள் திருப்பிவிடப் பெற்றனர். ஆனால் தலைவர் மனதிலே தயக்கம் எதுவும் இருக்கவில்லை. மாநாட்டிற்கு அரசாதரவு இனத்துவேஷத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டதென்ற கருத்து உலகிலே பரவியபோது, அதனை விரும்பாத அரசு மாநாடு ஆரம்பிப்பதற்கு முத்தினங்களுக்கு முன்பே ‘விசா’ வழங்கியது. 

யாழ்ப்பாணம் தமிழ் இனத்தின் மானத்தைக் காப்பாற்றியது. தலைவர் தலைமையுரையிலே, மாநாடு யாழ்ப்பாணத்திலே நடக்க வேண்டியதற்கான காரணங்களையும், அதன் தகுதியையும் எடுத்துக்காட்டினார். அதனை யாழ் மக்கள் உறுதிப்படுத்தினார்கள். தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகளை எல்லாம் அலங்கரித்த ஆர்வம் மிக்க மக்கள் அவர்கள்.

தமிழ்மக்களின் பெருமிதத்தினைக்கண்ட இனவெறி கொண்ட கூட்டம் ஆத்திரம் அடைந்தது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10ஆம் தேதி, பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்திலே ‘பஞ்சாப் படுகொலை’ நடத்திக் காட்டினர். பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் சனவரி 10ஆம் தேதி நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுமிடத்து,

“தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச்சென்றது 1974 சனவரி பத்தாம் தேதிச் சோகம். அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்.”

என்பர். (S.J.V.Chelvanayagam and the Crisis of Sri Lankan Nationalism. 1947 -1977, 1944, p. 126).

நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நடாத்த உருவெடுத்த அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளையின் முகாமைக்குழுவிலே 1972இலே உறுப்பினனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற காலம் முதலாகப் பேராசிரியர் வித்தியானந்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு முன்பு மாணவனாக இருந்த காலை (1957 - 1961) அவ்வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பினைப் பெற்ற அவருடைய ‘நன் மாணாக்கர்’ கட்டுரை சமர்ப்பிக்கவோ பார்வையாளராகக் கலந்துகொள்ளவோ இல்லை. சி. தில்லைநாதன் மட்டும் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். மாணாக்கர் மாநாட்டிலிருந்து ஒதுங்கிக்கொண்டதை பேராசிரியர் வித்தியானந்தன் முகாமைக்குழுவுக்குச் சமர்ப்பித்த அறிக்கையிலே பெயர் சுட்டி விரிவாகக் காட்டியிருந்தார். ஆயினும் பின்பு நூலாக வெளியிட்ட போது பெயர்களைச் சுட்டுவது தவிர்க்கப்பட்டது. அவர் மனதிலே அவர்களுடைய செயல் பெரும் கசப்பினை ஏற்படுத்தியிருந்தது. இதனாலேதான் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அந்நிகழ்ச்சியை அவருடைய பேருரையிலே விதந்து கூறியிருந்தார்.

திடீரென அவருடைய முடிவு 1989 சனவரி 21இலே வந்தது. யாழ்ப்பாண வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத்தொடங்கினார். யாழ்ப்பாணத்திலே மாபெரும் மாநாட்டினைக் கோலாகலமான விழாவாக நடாத்தித் தமிழ்ச் சமூகத்தின் பெருமதிப்பினைப் பெற்றிருந்த வித்தியானந்தன் தமக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த அலங்கோலத்தினை எதிர்பார்க்கவே இல்லை. மனைவியை இழந்து பிள்ளைகளைப் பிரிந்து அவமானத்தினாற் குன்றிப்போனார். அக்கடைசி நாட்கள் இன்றும் கண்முன்னே தோன்றுகின்றன. அந்த ஆதங்கத்தினை அவருடைய இரங்கல் கூட்டங்களிலே கொழும்பிலே பேசியும் பத்திரிகைகளில் இரங்கல் கட்டுரைகள் அப்போது எழுதியும் ஆற்றமுயன்றோம். அவர் மறைவினை நினைத்து நினைத்து வருந்தும் சந்தர்ப்பம் 1991 சனவரியில் எமக்கு ஏற்பட்டது.


(பொ. பூலோகசிங்கம் அவர்களின் பிறந்தநாள் இன்று - ஏப்ரல் 1, 1936)


  •  

தமிழ்ப் பாதுகாப்புக் கேடயங்களை நாமேதான் செய்தாகவேண்டும்

ஈழத்தின் தமிழ்ப் புலமைத்துவச் செயற்பாடுகள் - வரலாறு, பாத்தியதை

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழர் தாயகம், தமிழ் எழுத்து தொடர்பிலான ஈழத்தின் புலமைத்துவச் செயற்பாடுகள் என்பது பல வகைகளில் பலரால் காலாதிகாலமாகச் செய்யப்பட்டுவருகின்றன. இப்புலமைத்துவச் செயற்பாடுகளின் உச்சமென்பது கடந்தகாலத்தில் வரலாறு விட்டுச் சென்ற தடயங்களைத் தேடித் தொகுத்து ஆவணப்படுத்தி எதிர்காலத்தில் ஆராய்ச்சிக்கு உதவி செய்யும் ஆய்வு மூலங்களாத் தருதலாகும். புலமைத் தளத்தில் ஈழத்தவர்களின் தொகுத்து ஆவணப்படுத்தல் முயற்சி என்பது சைமன் காசிச் செட்டி அவர்களின் ‘தமிழ் புளூராக்’ (Tamil Plutarch) மூலம் தொடங்கிய உயரிய இத்தமிழ்த் தொண்டு இன்றுவரை அறுபடாது தொடர்ந்துவரும் ஒரு பாரம்பரியமாகும். அறிவுசார் புலமைத்துவத் தளத்தில் ஈழத்தவர்களின் இப்பங்களிப்புகள் மிகவும் காத்திரமான முன்முயற்சிகளாகவும், காலங்கடந்தும் ஆய்வுவெளிகளைத் திறந்துவைக்கும் ஆவணங்களாகவும் உள்ளன.

சைமன் காசிச் செட்டியின் தொடர்ச்சியாக ஆணல்ட் சதாசிவம் பிள்ளை பாவலர் சரித்திர தீபகம்(1886) தந்தார், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் தமிழ்ப் புலவர் சரித்திரம்(1916) படைத்தார், வித்துவசிரோமணி  சி. கணேசையர் அவர்களால் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939) நூலும், ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்(1967) - மு. கணபதிப்பிள்ளை அவர்களாலும்  தொகுத்துத் தரப்பட்டது. இவையாவுமே தமிழ்ப் படைப்பாளிகளின் வரலாறுகளினூடாகத் தமிழிலக்கிய வரலாற்றினைக் கூறும் ஆவணங்களாகும். 

தொல்காப்பியம், கலித்தொகை போன்ற தொல்தமிழ் எழுத்துகளைப் பல்வேறு ஓலைச் சுவடிப் பிரதிகளை அலைந்து திரிந்து தேடியெடுத்து ஒப்பிட்டுப் பார்த்து, பாடவேறுபாடுகளைத் தன் ஆராய்ச்சித்திறனால் கண்டறிந்து களைந்து, அச்சுவாகனமேற்றித் தெளிவான பதிப்புகளாகத் தந்த தமிழ்ப் பதிப்புலக முன்னோடி சி. வை. தாமோதரனார் செய்தபணி அறிவுசார் ஆவணப்படுத்தலே.

தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதானகோசம்(1902) தந்த ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, அதுவரை காலமும் வெளிவந்த தமிழ் அகராதிகளில் காணப்படாது விடுபட்ட சொற்களைத் தொகுத்து அச்சொற்களுக்கான இலக்கிய ஆதாரங்களையும் இணைத்துத் தமிழ்ச் சொல்லகராதி(1904) தந்த வைமன் கதிரைவேற்பிள்ளை, முதன்முதலாக தமிழ்ச் சொற்பிறப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு ‘தமிழ்மொழி ஒப்பியல் அகராதி’(1938) எனும் பெயரில் தமிழ்ச்சொற்களின் வேர்களைக் கண்டறிந்து தந்த ‘சொற்கலைப் புலவர்’ சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோரும் தொகுத்தலினூடாக ஆவணப்படுத்தலையே செய்துள்ளனர்.

‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’(1904) என்ற தமிழர்களின் வரலாற்று ஆங்கில நூலைத் தந்த வி. கனகசபைப் பிள்ளை அவர்களால் தமிழர் தொல்வரலாறும், ஆங்கிலத்தில் ஆனந்தக் குமாரசாமி அவர்களால் எழுதப்பட்ட ‘சிவ நடனம்’(1918) போன்ற நூல்களின் மூலமும் அக்காலத்தில் வெளிவந்த பல முன்னணி ஆய்விதழ்களில் அவரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளால் தமிழர் சமூக வாழ்வியல் வரலாறும், விபுலானந்த அடிகளால் எழுதப்பட்ட ‘யாழ் நூல்’ என்ற தமிழிசை ஆராய்ச்சி நூலால் தமிழர்களின் கலைவரலாறும் ஆவணப்படுத்தப்பட்டன. 

தமிழியல் ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா முதன்மையானவர். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அவரது அகராதிகள் தமிழ் அகராதித் துறையில் அவருக்குத் தனித்துவமான இடத்தை பெற்றுத் தந்தன. இதுவும் அடிப்படையில் தொகுத்து ஆவணப்படுத்தல் வகையினவே.  

ஈழத்தவர்களின் முதலாவது புலப்பெயர்வான மலாயா இடப்பெயர்வை மலாயா மான்மியம்(1930) எனும் பெயரில் ச. முத்துத்தம்பி பிள்ளை அவர்களும், அதன் தொடர்ச்சியாக ‘மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் வாழ்ந்த இலங்கையர்களின் நூறு ஆண்டுகள்’ என்ற வரலாற்று ஆங்கில நூலை மலேசியாவில் வாழ்ந்த இலங்கையரான எஸ். துரைராஜசிங்கம் அவர்களும் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

கலாயோகி ஆனந்த குமாரசாமியின் எழுத்துக்களையெல்லாம் முதன்முதல் தேடித் தொகுத்துப் பட்டியலாக்கம் செய்து ஆவணப்படுத்தியவரும் மலேசிய எஸ். துரைராஜசிங்கம் அவர்களே.  

சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகள், கவிதைகள், சொற்பொழிவுகள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பவற்றின் தொகுப்பாவணங்களாக விபுலானந்தத் தேன், விபுலானந்த வெள்ளம், விபுலானந்த செல்வம், விபுலானந்த ஆய்வு, விபுலானந்தர் கவிதைகள், விபுலானந்தக் கவிமலர், விபுலானந்த அமுதம், விபுலானந்தச் சொல்வளம், விபுலானந்த அடிகள் என்னும் நூல்கள் மட்டக்களப்பு அருள் செல்வநாயகம் அவர்களால் பதிப்பிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு அகராதி(1997) - எஸ். ஆறுமுகம், மேன்மக்கள் சரித்திரம்(1930) - சு. இரத்தினசாமி ஐயர், உத்தியோகர் லக்ஷணக் கும்மி(1936) போன்ற தொகுப்பு ஆவண நூல்களும் ஈழத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழ் ஆராய்ச்சிக்குத் துணைபுரியும் நோக்குநூல்களையும், ஆதார நூல்களையும், ஆராய்ச்சிக் களங்களையும் உருவாக்கிய ஈழத்தறிஞர்களின் ஆவணப்படுத்தல் முயற்சிகள் யாவும் அடிப்படையில் தமிழின் இருப்பை வளப்படுத்தும், வலுப்படுத்தும் அறிவுசார் ஆய்வுச் செயல்களாகும். 

இவை யாவற்றுக்கும் மேலான சிகரமாகத் தமிழ்மொழியின் ஆராய்ச்சித் தலைமைப்பீடமெனக் கருதக்கூடிய சிந்தனைச் செயலணியை உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என உருவாக்கித் தந்தவர் எங்கள் தனிநாயக அடிகளாவார். 1951ஆம் ஆண்டில் அடிகளார் முதன்முதலாக வெளிப்படுத்திய எண்ணக்கரு 1964 ஆண்டில் செயல்வடிவம் பெற்றது. 1952-1964 இடைப்பட்ட காலத்தில் அடிகளாரால் நடாத்தப்பட்ட தமிழ்க் கல்ச்சர் ஆய்விதழ் மூலம் அடிகளார் பெற்றுக்கொண்ட உலகளாவிய ஆராய்ச்சியாளர்களின் தொடர்பு இதனைச் சாத்தியப்படுத்தியது. 

கடந்த ஐநூறு ஆண்டுகள் காலப்பரப்பில் முறையான தமிழரசு இல்லாது, அதிகாரம் இல்லாது, சாதாரண மக்களால் காப்பாற்றப்பட்டு, இன்றைய கணிணி யுகத்திலும் தமிழ்மொழி உயிர்ப்புடன் தொடர்கிறது. தமிழ்மொழி தொடர்பில் உருவான மிகச் சிறந்த சிந்தனையாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தையும் அதன் உலகளாவிய ஆராய்ச்சி மாநாடுகளையும் கொள்ளலாம். பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும், ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்களையும் ஒரே குடையின்கீழ் குறித்த கால இடைவெளியில் நடாத்தப்படும் மாநாடுகளில் நேரடியாகச் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான களமாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை உருவாக்கியதென்பது தமிழ் மொழிக்குக் கிடைத்த பெரும் நற்பேறு. 

உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளைப் பார்த்து மற்றைய பல இந்திய மொழிகளிலும் உலக மாநாடுகள் நடாத்தப்படும் மரபு தொடங்கியமை, அடிகளார் வெளிப்படுத்தியது மிகச் சிறந்த உன்னத சிந்தனை என்பதை உறுதிப்படுத்தும் பெரும் சான்று.

செல்வராஜா அவர்களின் தொகுப்பு - ஆவணக் கேடயம்

இவ்வாறான ஒரு பெரும் சிந்தனைச் செயல்வடிவின் தொடர்நிகழ்வாக நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் நடாத்தப்படும் என்று பாரிஸ் மாநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான சர்ச்சைகள், செய்திகள், இறுதிநாள் அவலங்கள், விசாரணை அறிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, மாநாட்டின் பின்னரான சூழ்நிலை போன்றவற்றின் தொடர்பில் அச்சு ஊடகத்தில் வெளியானவற்றை தன்னுடைய தளாராத தேடலின்மூலம் ஒரே இடமாகத் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் ஈழத்து ஆவணப்படுத்தல் முன்னோடியான நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்கள். பகீரதப் பிரயத்தனமான இம்மாபெரும் வேலையை அவரைத் தவிர வேறெவராலும் சிந்தித்துக்கூடப் பார்க்கமுடியாதென்பது என் கணிப்பு. 

என். செல்வராஜா அவர்களின் ‘‘நினைவுகளே எங்கள் கேடயம்’’ என்ற இத்தொகுப்பு நூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, எதிர்காலத்தில் தமிழ் ஆய்வு செய்யமுற்படும் ஒரு ஆராய்ச்சி மாணவனுக்கு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான வரலாற்றினை அறிந்துகொள்ளமுடியும். அம்மாணவனின் சிந்திக்கும், அலசும் ஆற்றலிற்கேற்ப புதியதொரு மீள்வாசிப்பினையும் கண்டடையலாம். 

எந்தவொரு நிறுவனத்தின் நிதி ஆதரவுமின்றித் தனியொருவராக ஈழத்துத் தமிழ் நூல்களை நூல்தேட்டம் தொகுப்பு வரிசைகளாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படுத்திவரும் என். செல்வராஜா அவர்களை நாம் வாழும் காலத்து சைமன் காசிச்செட்டியாகவோ அல்லது சி. வை. தாமோதரனாராகவோதான் நான் உணர்கிறேன் என்பது மிகைப்படுத்தல் அல்ல உளப்பூர்வமான வெளிப்பாடு.

‘‘நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அதன் ஆய்வுகளுக்காக வரலாற்றில் இடம்பெறுவதைவிட ஈழத்தமிழினத்தின் எழுச்சிக்கு வித்திட்ட ஒரு நிகழ்வாகவே வரலாற்றில் இடம்பெற்றுள்ளதை நான் பார்க்கின்றேன்.’’ 

என்று தொகுப்பாசிரியர் என். செல்வராஜா அவர்கள் நூலின் சரவைப் பிரதியுடன் அனுப்பிவைத்த வழிகாட்டற் குறிப்பு உணர்தும் திசைவழியே நானும் செல்கிறேன்.

தனிநாயக அடிகளாரின் சிந்தனையும், தமிழ் கல்ச்சர் ஆய்விதழும்

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுப் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் கராணங்களைக் கண்டறிவதற்கு நாம் சில ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்துச் செல்லவேண்டும். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தோற்றம் எதன் தொடர்ச்சி என்பதை அறியவேண்டும்? எந்த அடிப்படை எண்ணக்கருலிருந்து ஏற்பட்டதென்பதனை அறியவேண்டும்? இதற்கு நாம் 1951ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற நான்காம் தமிழ்விழாவிலே தனிநாயக அடிகளார் ஆற்றிய உரையைப் பார்க்கவேண்டும்,

“இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்குமின். Discovery of India என்றும், History of Indian Literature என்றும் பலபடப் புனைந்து வெளிவரும் ஏடுகளை விரித்துப் பார்மின். மாக்ஸ் முல்லர் (Max Müller), வின்றானிட்ஸ்(Winternitz, M.) போன்றவர்  முதலாகப்  பலரும், வடமொழி  இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். அவ்விந்திய இலக்கியங்களின் வரலாற்றிலே, தமிழ் இலக்கியத்தைப்பற்றியோ, திராவிட நாகரிகத்தைப்பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப்பேனும், ஒரு கருத்தேனும், காணக்கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என அவர் மொழிவனவெல்லாம், திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிட மொழிகள், இவற்றையே அடிப்படையாகக் கொண்டவை. ஆயினும், பல்லாண்டுகளாக, நடுவுநிலை கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஓழித்தும் நூல்கள் யாத்தமையின், இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதும், மக்கள் மனத்தில் ஐயம் விளைப்பதாக இருக்கின்றது. அங்ஙனம் எடுத்துக் கூறுதற்கும், பெரிதும் மனத்துணிவு வேண்டற்பாலதாயிற்று. தமிழராகிய நாமும், நமது இந்திய மொழிகளிலேனும், நம் தமிழைப் பற்றிய உண்மைகளை இதுகாறும் கூறினோம் அல்லேம். 

“மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால்

பொய்போ லும்மே பொய்போ லும்மே.” 

“பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே மெய்போ லும்மே.” 

ஆதலின், உலகம் நம்மை உணராமலும், நாமே நம்மையுணராமலும், பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழர்  எனக்கொண்டு, இங்கு உயிர்வாழ்ந்து வந்துள்ளோம். இன்று இத்தமிழ்க் கோயிலில் நிகழும் தமிழ் விழா, உலகில் தமிழ் நாட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் பெருமையையும் நிலை நாட்டும் புதியதோர் இயக்கத்தை உண்டாக்க வல்லதாயின், அது தமிழ் மக்களுக்கே பெருமை தருதலால், நாம் அனைவரும் நமக்கே நன்மை பல பயக்கும் நற்றொண்டைச் செய்தோமாவோம்.’’ 

- தமிழ்த்தூது திருத்திய மூன்றாம் பதிப்பு (1961) பக்கம் 28, 29

  தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் பெருமையையும் நிலைநாட்டுவற்காகப் புதியதோர் இயக்கம் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும், தமிழ்மொழியைக் காக்கும் ஒரு செயலாக நம் தமிழைப் பற்றிய உண்மைகளை் நாமே பிறமொழிகளில் எடுத்துக்கூறவும் வேண்டுமென்பதையும் அடிகளார் உணர்ந்தது மட்டுமல்லாமல் அதனைச் செயற்படுத்தவும் முனைந்தார். ஆங்கிலத்தில் தமிழ் கல்ச்சர் (Tamil Culture) என்ற ஆய்விதழை வெளியிடத் தொடங்கினார், இது தமிழ்மொழியைப் பாதுகாக்கும் ஒரு காவற்செயல். உலகத்தின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் தமிழ் தொடர்பிலான உண்மைகளை வெளியிடுவதன் மூலம் தமிழியல் உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள ஆய்வாளர்களைச் சென்றடைய வைத்தார். 1950 இற்குப் பிற்பட்ட உடனடி இருபதாண்டுகளில் மேலைத்தேய நாடுகளில் அதிகளவு ஆய்வாளர்கள் தமிழ்மொழியின்பால் ஈர்க்கப்பட்டமைக்கு அடிகளார் மேற்கொண்ட உலகப் பயணங்களும், அடிகளார் தமிழ்த் தூதுவராகச் செயற்பட்டமையுமே காரணமாகும்.

தனிமனிதனாகத் தமிழ்மொழி காக்கும் அவரது செயலிற்கு வேண்டிய அறிவுத் திறனும் மொழித்திறனும் அடிகளாரிடத்தே இருந்தாலும், அதனைச் செயல்வடிவமாக்கும் வேளையில் அதற்கு வேண்டிய நிதி வளமும் ஆளணி வளமும் அவருக்குத் தேவைப்பட்டன. 

இந்தியாவின் தென்பகுதிக்கான பிராந்திய மேலாளராக வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆ. சுப்பையா அவர்கள் வள்ளலாகவும், அடிகளாரின் வலதுகரமாகவும் செயற்பட்டு உதவினார். இவரது வீட்டு முகவரியே தொடக்கத்தில் தனிநாயக அடிகளாரின் சென்னைத் தொடர்பு முகவரியாகவும், பின்னர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முகவரியாக, அலுவலகமாக 1981 ஆம் ஆண்டுவரை இயங்கியுள்ளது. 

இந்தியாவிலிருந்து தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், வ. ஐ. சுப்பிரமணியம், இரா. பி. சேதுப்பிள்ளை, ஆ.சிதம்பரநாத செட்டியார், கா. கா. பிள்ளை, பம்பாய் பி. ஜோசப், பூனே சுனித் குமார் சட்டர்ஜி, தூத்துக்குடி பவுல் நாடார் போன்ற சான்றோர்கள் அடிகளாரின் தமிழ் கல்ச்சர் ஆய்விதழின் வளர்ச்சிக்குப் பக்கபலமாகத் துணைநின்று பங்களித்தனர்.

Jean Filliozat, Arno Lehmann, Kamil Zvelebil, John Ralston Marr, Herbert Arthur Popley, Leopold S. J. Bazou, Henry J. Heras, M. Andronov, V. A. Makarenko, Murray Barnson Emeneau, Jr. Edgar. C. Knowlton போன்ற ஐயோப்பிய, ஸ்கன்டிநேவிய, ரஸ்ய மற்றும் அமெரிக்க ஆய்வளர்களும் தங்கள் ஆய்வுகளைத் தமிழ் கல்ச்சர் ஆய்விதழினூடாக வெளியிட்டு அடிகளாரின் சிந்தனைக்கு வலுச்சேர்த்தனர்.

இந்த வகையில் இலங்கையின் சி. அரசரட்ணம், பண்டிதர் கா. பொ. ரத்தினம், எச். டபிள்யூ. தம்பையா, ஆ. சதாசிவம், ஏ. ஜே. வில்சன், சு. வித்தியானந்தன், வை. கா. சிவப்பிரகாசம், சா. ஜெ. குணசேகரம், தாவீது அடிகளார், பீ. பி. ஜெ. ஹேவவாசம் போன்றோர் தொடர்ந்து பங்களித்திருந்தனர்.

தமிழ் கல்ச்சர் ஆய்விதழின் தொடர்ச்சியே உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்துதல் தொடர்பில் சென்னையிலுள்ள தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகத்தினூடாக தமிழ்நாட்டு அரசுடன் அடிகளார் மேற்கொண்ட உரையாடல் முயற்சிகள் 1962ம் ஆண்டில் மாநாட்டினை நடத்துவதற்கான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லவில்லை. தொடர்ந்து 1964ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாநாட்டினை நடாத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. அடிகளாரின் இம்முயற்சிகளுக்குச் சென்னைத் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம் தொடர்ச்சியாகத் துணைநின்றது எனினும் தமிழ்நாட்டில் மாநாடு நடாத்தும் சூழ்நிலை எட்டப்பெறவில்லை. 

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை மலேசியாவில் நடாத்துதல் என்பது அடிகளாரினால் மட்டும் முன்முடிவோடு தீர்மானிக்கப்பட்ட ஒன்றல்ல, அவரது பெருவிருப்பென்பது தமிழ்நாடுதான். உலகத் தமிழாராய்சி மாநாடு நடாத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமான அச்சாணியாக தமிழ்நாடு இருக்குமென்பது அடிகளார் எண்ணமாக இருந்தாலும், இம்மாநாட்டினை தமிழ்நாட்டில் நடாத்த என்று 1961 முதல் 1964 வரையான நான்காண்டுகள் அடிகளார் அலைந்துதிரிந்து எடுத்த முயற்சிகள் பலன்தரவில்லை. தமிழ்நாட்டில் அதற்கான சூழ்நிலை கூடிவராத நிலையிலேயே முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடாத்தவேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது. 

இரண்டாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுப் பழமையுடைய தமிழ்மொழியின் உண்மைகளை, தனிநாயக அடிகளாரின் சிந்தனையில் உதித்த  தமிழ் கல்ச்சர் ஆய்விதழினூடாக வெளியிடத் தொடங்கிய தனிமனித முயற்சி, அதன் அடுத்த கட்டமாக நிறுவனமயப்படுத்தப்பட வேண்டிய பக்குவத்தினை அடைகிறது. ஆய்விதழில் பங்களித்த ஆய்வாளர்கள் பலரும், அவர்களைப் பிரதிநிதிப்படுத்திய ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், போன்ற நிறுவனங்களும், தமிழ்நாடு அரசு நிறுவனங்களும் அடிகளாருக்குத் துணைநின்ற காலச்சூழ்நிலையான 1964ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்சி மன்றம் தொடங்கப்பட்டது. முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டில் மலேசியாவில் இடம்பெறுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதற்குத் துணைநிற்கும் நிலையில் சில நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தேசியக் கிளைகள் ஏற்படுத்தப்பட்டன.  

ஆங்கிலத்தில் தமிழ் கல்ச்சர் ஆய்விதழ் வெளியிடப்பட்டதைப் போன்றே, தமிழாராய்சி மாநாடுகளும் ஆங்கிலத்திலே நடைபெறத் தொடங்கின. இதன் அடிப்படைக் காரணம், உலகிற்குத் தமிழைக் கொண்டுசெல்லதலே, உள்ளூரில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுதல் அல்ல. அதேபோன்று அடிகளாரின் ஆய்விதழின் வெளியீட்டிற்குக் கடந்த பன்னிரு ஆண்டுகளாகப் பங்களித்துத் துணைநின்றவர்களே உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிர்வாகக் குழுவிலும், தேசியக் கிளைகளிலும் பங்கெடுப்பதென்பதுமான நிலை காணப்பட்டது. முதற்கட்டப் பயணத்தில் துணைவந்தோர் இரண்டாம்கட்டத்திலும் உடன் பயணிப்பதென்பது இயல்பானதே.  

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான பரப்புரைக்காக தனிநாயகம் அடிகளார் இலங்கை வந்தபோது, கொழும்பிலுள்ள கறுவாக்காடு (cinnamon garden) பகுதியில் வாழ்ந்துவந்த   நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா அவர்களின் வீட்டிலேயே ஆலோசனைக் கூட்டத்தினைக் கூட்டி ஆலோசித்துள்ளார். இலங்கை இருதேசங்களின் கூட்டு என்பதைச் சட்டரீதியாகப் பிரித்துக்காட்டும் ஒல்லாந்தர் காலத்துத் தேசவழமைச் சட்டம் தொடர்பில், தமிழ் கல்ச்சர் ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளுதல் அவசியம். 

11. 11. 1965 அன்று  பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பில் விளக்கம் தரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளை தனிநாயக அடிகளாரினால் தோற்றுவிக்கப்பட்டது. 

இலங்கைக்கிளையும் நான்காவது தமிழாராய்சி மாநாடும்

இலங்கைக்கிளையின் தலைவராக நீதிபதி எச். டபிள்யூ. தம்பையாவும் உறுப்பினர்களாக பே,ரா. வி. செல்வநாயகம், கலாநிதி ஆ. சதாசிவம், பேரா. ஏ. டபிள்யூ. மயில்வாகனம், கலாநிதி ஏ. ஜே. வில்சன், பேரா. க. குலரத்தினம், திரு. கே. சி. தங்கராஜா, திரு. ச. அம்பிகைபாகன், திரு. கே. செல்வநாதன் போன்றோரும்   பொறுப்பேற்றனர். 

1970 களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஶ்ரீமாவோ  அரசாங்கத்துடன் நெருக்கமானவர்களாக இருந்த நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா,  கே. சி. தங்கராஜா போன்றவர்களின் ஓரிரு பிரமுகர்த்தனச்  செயல்களும், ஶ்ரீமாவோ அரசின் தமிழ் தொடர்பான விடயங்களுக்குப் ஆலோசனைப் பொறுப்பாக இருந்த செல்லையா குமாரசூரியர் அவர்களின் செல்லப்பிள்ளையான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாக உறுப்பினர்களின் சமிக்கைகளும் ஶ்ரீமாவோ அரசாங்கத்தை தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நாடத்திடவைக்கலாமே என்ற நிலைப்பாட்டினை எடுப்பதற்குத் துணைபுரிந்துள்ளன. இவ்விரு தரப்பினரதும் அரச ஆதரவு மனப்பாங்கு, ஶ்ரீமாவோ அரச இயந்திரம் தமிழர்களுக்கும் யாழ்ப்பாண மாநாட்டிற்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுப்பதற்குக் காரணமாகும். 

ஶ்ரீமாவோ அரசும் மூன்று நிபந்தனைகளுடன், மாநாட்டிற்கான செலவுகளை ஏற்றும், கொழும்பில் அக்காலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்த பண்டாரநாயக்கா நினைவு மண்டபத்தினைக் கட்டணமின்றித் தருவதற்கும்  முன்வந்தது. இதன் மறைநிரலில் இலங்கையின் வடபகுதி தமிழரின் மரபுரீதியான தாயகம் என்பதை நீர்த்துப்போக வைக்கவும், இலங்கை முழுவதற்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதுமான அரச சூழ்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்ட தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் புதிய தலைவராகப் பெறுப்பேற்றிருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் முற்றிலுமாக மறுத்துவிட்டார்.  

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது சிங்கள எழுத்தாளர்களையும் இணைத்து இயங்கிய அமைப்பு அல்ல, அமைப்பின் பெயர் அவ்வாறு இருந்தாலும் அது முழுமையாகத் தமிழர்களால் நிரப்பப்பட்ட அமைப்பாகவே இருந்தது. க. ககைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோரின் முழுமையான நிர்வாக வழிகாட்டலில் இயங்கிய அமைப்பு என்றும் கூறலாம். தமிழ் இனவுணர்வு இல்லாத இச்சிறுகுழாத்தினர் தங்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாகவும் சிங்கள பௌத்த அரசிடமிருந்து தனிப்பட்ட ரீதியில் நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் காழ்ப்புணர்வுடன் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு எதிரான கருத்துகளை அரச பத்திரிகைகளினூடாகப் பரப்பினர். மாநாட்டின் இறுதிநாள் அவலத்தில் தமிழர்கள் தந்திரமாகக் கொல்லப்பட்ட பின்னரும் இடதுசாரி ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட ‘‘மல்லிகை’’ போன்ற இதழ்களில் மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் நிர்வாகக்குறைகளால் இடம்பெற்றதெனவும் இன்ன பிற அற்ப காரணங்களையும் பெரிதுபடுத்திய எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவிலே நடைபெற்றபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இடதுசாரி இதழ் வசந்தம் 1966 மார்ச் 10 அன்று வெளியான மலர் 1 - இதழ் 7 இல் ‘ஆங்கிலத்தில் தமிழ் ஆராய்ச்சி!’ என்று ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. 

‘‘தமிழ் ஆராய்ச்சி! எங்கே, ஈழத் தமிழகத்திலா? இல்லை. சங்கம் வளர்த்த தமிழ் நாட்டிலா? இல்லை. மலேசியாவில், ஆங்கிலேயர் ஆதிக்க நாட்டில்.’’ 

என்று குற்றம் கூறிய அதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கக் குழாத்தினரேதான் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஶ்ரீமாவோ அரசு விரும்பிவாறு கொழும்பில் நடாத்தவேண்டும் என்று போர்க்கொடி பிடித்தவர்கள். எட்டு ஆண்டு கால இடைவெளியில் தமிழ் இடதுசாரிகளது இரட்டைவேடம் அம்பலப்பட்டது. 

சிங்களமொழி தோற்றம் பெறுவற்கு முன்பிருந்தே தமிழ் மண்ணாக அறியப்பட்டிருந்த ஈழத்தினைச் ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று சனாதனி பாரதி வெளிப்படுத்தியதன் உள்நோக்கமும், யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தாமல் சிங்கள மண்ணான கொழும்பிற்றான் நடத்த வேணும் என்று அடம்பிடித்த மார்க்சிய லேபிள்வாதிகளான க. கைலாசபதி கா. சிவத்தம்பி போன்றோரின் கள்ளமும் ஒன்றுதான், இலங்கைத் தீவில் தமிழருக்கு மரபுரீதியான நிலப்பரப்பு - தாயகமண் உரிமைகோரல் எதுவும் இல்லையென்பதைக் கூறும் இருவேறு வடிவங்கள்.

‘‘தமிழ் ஆராய்ச்சியை எந்த மொழியில் செய்யப் போகிறார்கள்? தமிழிலா? இல்லை; ஆங்கிலத்தில். இதற்கு எத்தனையோ சமாதானங்கள் கூறப்படுகின்றன. அவை எல்லாமே நகைப்புக்குரியன. ஒரு மொழியைப் பற்றிய ஆராய்ச்சி இன்னொரு மொழியில் நடாத்தப்படுவது, உலகில் இதுவே முதலாவதாயிருக்கலாம்.’’

என்று அதே ஆசிரியர் தலையங்கத்தில் விசனம் தெரிவித்த வசந்தம் இதழ், ஏன் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோர் இங்கிலாந்து சென்று, ஆங்கிலமொழியில் தமிழாய்வு செய்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றனர், தமிழ் நாட்டில், தமிழ் மொழியில் ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கலாமே? என்று கேட்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

எதேச்சதிகாரத் துணையுடன் பெரும்பான்மை அரசினால் அல்லது மக்களால் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து ஏவப்படும் அடக்குமுறை அட்டூழியங்களில் இருந்து சிறுபான்மையினரைக் காப்பாற்றும் ஒரு கேடயமாகவும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மற்றும் அவர்களின் நலனிற்குத் துணைபுரியும் ஒரு சித்தாந்தமாக மார்க்சியம் உலகெங்கும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது.

தமிழ் மக்களின் மொழி உரிமையை மறுத்து சிங்களம் மட்டும் சட்டத்தினைக் கொண்டுவந்தமை, காலிமுகத் திடலில் தமிழ்மொழி உரிமைக்காக அமைதி வழியில் போராடிய தமிழர்களைச் சிங்களக் காடையரையும் காவற்துறையையும் கொண்டு தாக்கி விரட்டியிருந்ததமை போன்ற காரணங்களால் சிங்கள அரசிற்குத் தமிழ்மொழி தொடர்பிலான உலக மாநாட்டினைக் கொழும்பிற்றான் நடாத்தவேண்டும் என்று கேட்பதற்கான அல்லது கட்டளையிடுவதற்கான தார்மீக உரிமை இருக்கவில்லை. இவ்வாறான எதேச்சதிகார சிங்கள அரசிற்குத் துணைநின்று, சிறுபான்மையினரான தமிழர்களின் மொழி உரிமையையும் தாயக உரிமையையும் ஒருசேர மறுத்துத் தங்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காகச் செயலாற்றியவரான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களை மார்க்சியர்களாகக் கூறிக்கொள்வதே அருவருப்பான செயலாகும். 

இந்நூலில் 92ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘Jaffna International Tamil Research Conference of 1974’ என்ற தலைப்பிலான கட்டுரையில் கட்டுரையாசிரியர்  சச்சி ஶ்ரீகாந்தா அவர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோரை sycophants என்ற மிகப் பொருத்தமான சொல்லின் மூலம் சுட்டியிருப்பது ஒரு நேர்மையான செயலே.

‘சு. வி. யின் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு:  நினைவலைகள்’ என்ற நுட்பமான தலைப்பில் எழுதப்பட்டுள்ள கலாநிதி  பொன். பூலோகசிங்கம் அவர்களின் கட்டுரையும் மிகத் தெளிவாக நடந்தவற்றைக் கூறும் மிக முக்கிய ஆவணமாகும். கலாநிதி பொன். பூலோகசிங்கம் அவர்கள் மாநாட்டுக்குழுவில் கல்விக்குழுவின் செயலாளர்களில் ஒருவராகக் கடமையாற்றியவர், இலங்கையில் பல்கலைக்கழகப் புலமையாளர்களில் அறிவியல்ரீதியில் ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்களில் முதன்மையானவர். இலங்கைக் கிளையின் உள்ளக அமர்வுகளில் கலந்துகொண்டவர் என்ற ரீதியில் அவரது கட்டுரையின் மூலமே என் ஐயங்கள் பல தெளிவு பெற்றன.

யாழ். மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொடர்பில்

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் இந்நூலில் நான்கு வெவ்வேறு நபர்கள் தயாரித்த பட்டியலும் வெவ்வேறு எண்ணிக்கைகளும் காணப்படுகிறது. 

  1. திரு. சச்சி ஶ்ரீகாந்தா அவர்களது கட்டுரையில் காணப்படும் தகவல் ஆங்கிலத்தில் 71 கட்டுரைகள் + தமிழில் 40 கட்டுரைகள் = 111 (பக். 94)
  2. மாநாட்டு மலர்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் என்ற கட்டுரையில் முதலாம் ஆய்வுத் தொகுதியில் 30 தமிழ்க் கட்டுரைகள்(பக். 96-100). நினைவு மலரில் 44 கட்டுரைகள்
  3. 118 Articles presented by 97 Participants - Source : Index of Articles from the Conference Seminars of Tamil Studies of legitimate IATR - Compiled by Viruba Kumaresan(பக். 101)
  4. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு : அறிக்கை - பேராசிரியர் சு. வித்தியானந்தன் - 115 ஆய்வுக் கட்டுரைகள் (பக். 107)

இவ்வாறு நான்கு வெவ்வேறான எண்ணிக்கை என்பது குழப்பத்திற்குரியதே, அதனைத் தீர்த்து வைக்கும் கடமையும் எனதாகிறது. 

யாழ்ப்பாண மாநாடு மற்றைய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி  மாநாடுகளுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டது, மாநாடு அமைதியாக மனநிறைவுடன் முடிவடையவில்லை. மற்றைய எல்லா மாநாடுகளுக்கும் அரசு ஒன்றின் ஆதரவும் நிதி நல்கையும் கிடைத்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு, உள்ளூர் அரச அதிகாரிகள், அரச அடிவருடிகள் போன்றோரின் எதேச்சதிகார எதிர்ப்பிற்கு மத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கான செலவு மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது, ஆதலினால் போதிய கையிருப்பு இருந்தது என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாது. 

1977 ஆண்டில் ஆய்வுத் தொகுதியின் முதலாம் பகுதி 30 தமிழ்க் கட்டுரைகளுடன் வெளிவருகிறது. 1980 செப்டம்பரில் ஆய்வுத் தொகுதியின் இரண்டாம் பகுதி 23 ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவருகிறது. மாநாடு அவலத்தில் முடிந்த காரணத்தினாலும் தொடர்ந்த அரச நெருக்கடிகளினாலும், பேராசிரியர் சு. வித்தியானந்தன் சந்தித்த அவலங்களாலும் மாநாட்டு மீதமுள்ள கட்டுரைகளை ஆய்வுத் தொகுதிகளாகத் தொகுப்பதிலும் வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. மாநாடு நடைபெற்றுப் பல ஆண்டுகளுக்குப் பின் ஆய்வுத் தொகுதியின் வெளியீட்டிற்கான நிதியை யாரிடம் கேட்பது, பேராசிரியர் சு. வித்தியானந்தன் கையறு நிலையடைகிறார். 

முதலிரு தொகுதிகளையும் அச்சிட்டுத் தந்த சுண்ணாகம் திருமகள் அழுத்தகத்தில் மீதமுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பாதி அச்சிடப்பட்ட நிலையில் தேக்கமடைகின்றன. திருமகள் அழுத்தகம் வேறொரு உரிமையாளரின் கைக்கு மாறுகிறது. அச்சிடப்பட்ட தாள்கள் சாக்கு மூட்டைகளில் தேடுவாரற்றுக் கிடந்து சிதிலமடைகின்றன. 

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் முதலாமிரண்டாம் ஆய்வுத் தொகுதிகளில் குறிப்பிட்டுள்ளபடி 115 ஆய்வுக் கட்டுரைகள் என்பதே  சரியான எண்ணிக்கையாகும், இதில் வெளியிடப்பட்டவை போக 115 - (30 + 23) = 62 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை. இரண்டு றோணியோத் தொகுப்புகளைத் தங்கள் ஆசிரியர் நீண்ட நாட்களாக வைத்திருந்தார் என்று பேராசிரியர் சு. வித்தியானந்தனின் மாணவர்கள் தகவல் தெரிவித்தாலும், அவை இன்றுவரை கிடைத்தில. அவரது நூற்சேகரம் எங்கு கைவிடப்பட்டது அல்லது சென்றடைந்தது என்ற தகவலைச் சொல்லுவதற்கு ஒருவரும் எனக்குக் கிடைக்கவில்லை. 

சச்சி ஶ்ரீகாந்தா அவர்களது கணக்கின்படி 111 ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்புகளையும், கட்டுரையாசிரியர்களின் பெயர்களையும் அவர் 1981ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதான நூலகத்திலிருந்த கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டுத் தொகுத்துள்ளதை https://sangam.org/2011/08/Professor_Sivathamby.php?uid=4425 என்ற இணைய முகவரியில் காணப்படும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சச்சி ஶ்ரீகாந்தா தமிழ்த்துறை மாணவரல்லர், விஞ்ஞானத்துறைப் பட்டதாரி தமிழ் இனத்தின் வரலாற்றுப் பக்கங்களில் விடுபட்டவற்றை அவர் தேடித் தொகுத்துள்ளமை பாராட்டுக்குரியதே.

பேராதனைப் பல்கலைக்கழகமும் அதன் பிரதான நூலகமும் இன்னமும் உள்ளன. 1981 - 2023 இடைப்பட்ட இக்காலத்தில் பேராதனைப் பல்கலையின் தமிழ்த்துறையில் எத்தனையோ விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும், நூலகர்களும் பணியாற்றியுள்ளனர், ஓய்வுபெற்றும் உள்ளனர். இவர்களில் ஒருவரேனும் வரலாற்றில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாநாட்டின் மீதமுள்ள வெளியிடப்படாத ஆய்வுக் கட்டுரைகளைப் பார்வையிட்டு எழுதியுள்ளதாகவோ, தேடித் தொகுத்து வெளியிட முற்பட்டதாகவோ தகவல்களில்லை. இன உணர்வும் நூலக உணர்வும் இல்லாதவர்களாக, விமானச்சீட்டுக் கொடுத்தால் பறந்து பறந்துசென்று போலி மாநாடுகளில் கட்டுரை வழங்கிக் கலந்துகொள்வதால் என்னதான் பெருமையோ. என்ன ஒரு அவலம்! 

நான் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வுத் தொகுதிகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் சேகரம் செய்யத் தொடங்கிய 2010 ஆண்டில் சென்னையில் என் கைக்கு முதன்முதலாகக் கிடைத்த ஆய்வுத் தொகுதியென்பது, 1980 செப்டம்பரில்  பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஆய்வுத் தொகுதியின் இரண்டாம் தொகுதியே. நண்பர் கி. அ. சச்சிதானந்தம் அவர்கள் தன் சேகரத்திலிருந்த அத்தொகுதியை எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். சில மாதங்களின் பின்னர் முதற் தொகுதியின் உள்ளடக்க விவரப் பக்கத்தினை நண்பரொருவர் மின்-அஞ்சலில் அனுப்பிவைத்திருந்தார். 

இவற்றைக்கொண்டு எனது தரவுதளத்தில் 53 ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பு, ஆய்வாளர், கட்டுரை வகைப்பாடு, பக்கம் போன்ற விபரங்களை உள்ளீடு செய்தபின் மீதமுள்ள 62 கட்டுரைகளை உள்ளடக்கிய மூன்றாம் தொகுதியைத் தேட முற்பட்டேன். இரண்டு ஆண்டுகளின் பின்னர் மூன்றாவது தொகுதியென்று ஒன்று பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்படவில்லை என்ற ஆணித்தரமான செய்தி கிடைக்கப்பெற்றேன். இதற்கிடையில் வேறுவழிகளில் ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகளையாவது தேடலாமெனத் தொடங்கியபோது, லண்டன் முரசு இதழில் வெளியான கட்டுரைத் தலைப்புகளையும், தமிழ்நேசன் இணையதளத்தில் காணப்பட்ட கட்டுரைத் தலைப்புகளையும், சச்சி ஶ்ரீகாந்தா அவர்களின் பட்டியலில் காணப்பட்ட கட்டுரைத் தலைப்புகளையும் சேர்த்து வைத்துத் தொகுப்பினைச் செய்திருந்தேன். இதன் காரணமாகவே எண்ணிக்கை 118 என எட்டப்பட்டது.  பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் முடிவே இறுதியானது. அவர் எந்த 115 கட்டுரைகளைத் தெரிவுசெய்து வைத்திருந்தார் என்ற பட்டியல் கிடைக்கும்வேளையில் அதனையே நானும் கடைப்பிடிப்பேன். 

சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காவேதவி ஆலயத்தின் சொத்தாக மாறிய நாட்களில், அச்சக நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்த என்று சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் அவரது தனிப்பட்ட உதவியாளரான திரு. கா. சிவபாலன் அவர்கள் திருமகள் அழுத்தகத்திற்கு அனுப்பட்டார். தமிழின் நல்லூழாக அங்குள்ள சாக்கு மூட்டைகளில் தேடுவாரற்றிருந்த மீதமுள்ள கட்டுரைகள் அதுவரையில் அச்சிடப்பட்டிருந்த தாள்களைக் கண்டெடுத்த சிவபாலன் அவர்கள் அதனைப் பாதுகாத்து வைத்திருந்து, தனது சொந்த செலவில் 15 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுதியை ‘Papers Presented at the Fourth international Conference Seminar of Tamil Studies’ என்ற பெயரில் 2008ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

இந்நூலிற்கு அன்றைய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், வருகைதரு தகைசால் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் முன்னீடுகளைக் கொடுத்துள்ளார்கள். பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தனதுரையில் 115 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டிருந்ததாகச் சொல்கிறார். அவர் ஆராய்ச்சியாளராகத் தன் கடமைகளைச் சரிவரச் செய்யாதிருந்துள்ளார் என்பதைச்  சுட்டும் ஆதாரங்கள் அவருரையில் காணப்படுகின்றன. 

சென்னையைச் சேர்ந்த என். முருகேசமுதலியார் அவர்கள் எழுதிய ‘A Critique of Nhat-cintanai : Thought and Style of a Modern Tamil Saint’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை ஏற்கனவே பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட இரண்டாவது தொகுதியில் இடம்பெற்றுவிட்டது.  இக்கட்டுரை மீண்டும் திரு. கா. சிவபாலன் அவர்களின் தொகுப்பில் அரைகுறையாக இடம்பெறுகிறது. இதனைத் தவிர்திருக்கவேண்டிய தமிழ்க் கடமை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுடையதே, சரவைப் பிரதியைப் பார்வையிட்டவர், தவறுகளைத் திருத்துவதற்கு முற்படவில்லை. திரு. கா. சிவபாலன் அவர்கள் தவவாழ்க்கை வாழ்ந்த ஆன்மிகவாதி, ஆராய்ச்சியாளரல்லர். அவருக்குத் தொடர்பில்லாத ஆனால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தமிழ்ப் புலமைஎழுச்சியால் ஈர்க்கப்பட்டவர். பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தமிழ் எழுச்சிக்குத் தலைவணங்கியே இப்பதிப்பினைச் செய்துள்ளார். நூல் அவருக்குப் படையல் செய்யப்பட்டுள்ளது.

திரு கா. சிவபாலனுடன் முறையாக உரையாடியிருப்பின், அதுவரையில் பதிப்பிக்கப்படாத மீதமுள்ள மற்றைய 47 கட்டுரைகள் தொடர்பிலான தகவல்களையாவது பெற்றிருக்கலாம், இலங்கைக் கிளையுடன் தொடர்பு ஏற்படுத்தி மீதமுள்ள கட்டுரைகளைப் பதிப்பிக்கும் சூழலை உருவாக்கியிருக்கலாம். இதனைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஏனோ தவிர்த்துள்ளார்.  

இவ்விரு காரணங்களாலுமே மேற்கூறியவாறு நான் சொல்வதற்குத் தள்ளப்பட்டேன். பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் மாணவர்கள் என்ற கோதாவில் பலர் தமிழ்த்துறைப் பணிகளைப் பெற்றுள்ளனர், மேடைகளில் அவரது மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைவதாகவும் பூரிப்படைகின்றனர். ஆனால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் காட்டும் ஈழத்தமிழர் சால்புக்கோலத்திற்குப் பெருமை சேர்ப்பவர்களாக உயர்வடையாமல், நடிகர்களாகவே தேங்கிவிடுகின்றனர். 

இரா. ஜனார்த்தனன் எனும் மாயமான்

தமிழர்கள், சிங்கள புத்த அரசின் எதேச்சதிகார ஒடுக்குமுறைக்குள் இலங்கை பிரித்தானியிரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரான சிறிதும் பெரிதுமாக இனவழிப்பு நிகழ்வுகள், சிங்கள பௌத்த அரசின் துணையோடு இடம்பெற்றுக்கொண்டுதான் இருந்துள்ளன. 1956 ஜூன் 11 ஆம் நாள் தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்ற கல்லோயா தமிழினவழிப்பு என்று 1974 ஆண்டிற்கு முன்னரே சில நிகழ்வுகள் இடம்பெற்று தமிழர்கள் தாக்குதலுக்குள்ளாயினர், உயிர்ப்பலியெடுக்கப்பட்டனர். தமிழர்கள் தங்கள் உரிமைவேண்டி மேற்கொண்ட அறப்போரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை, எனினும் நாளுக்குநாள் தமிழர்கள் மத்தியில் எழுச்சியென்பது ஆழ்மனத்தில் ஏற்பட்டுவிட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவோ பொறுப்பு வகிக்காதவரும், ஆளும் கட்சி எதிர்க்கட்சி எதிலும் முக்கிய பொறுப்பு வகிக்காத ஒருவரான திரு. இரா. ஜனார்த்தனன் யாழ்ப்பணத்திற்கு வந்துதான் இங்குள்ள தமிழர்கள் எழுச்சியடையவேண்டும் என்ற நிலை இருக்கவில்லை. அவரை உலகத் தமிழாராய்ச்சி மன்றமோ அல்லது இலங்கைக்கிளையோ யாழ்ப்பாண மாநாட்டிற்கென அழைக்கவில்லை. அவர் அதற்கு முன்னர் இருதடவை இலங்கை வந்திருந்தபோதும் அரசியற் கூட்டங்களில் கலந்துகொண்டு சிங்கள புத்த தேசியத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழ்ர்களுக்கு ஆதரவாகவும் அரசியல் பேசினார் என்ற வரலாறுப் பதிவுகளையும் காணக்கிடைக்கவில்லை.

இப்படியான ஒருவரை உருப்பெருக்கி மிகவும் உச்சக்கட்டமான வேண்டாதவராகச் சித்தரித்து வதந்திகள் பரப்பட்டுள்ளன என்றே நான் எண்ணுகிறேன். 

  • குறிப்பாக எனக்கு விசா தந்துவுடக்கூடாது என்ற தாக்கீது வேறு. (பக்.180)
  • மறுநாள் விமானத்தில் கொழும்பு பயணம்.(பக். 182)
  • ஒரு கிறிஸ்தவ மதகுருவின் உடையில் மாறுவேடம் பூண்டு ஜனார்தனன் கொழும்பு சென்றடைய இந்தியத் தூதரகம் மூலம் பாதுகாப்பாக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். - சரவணன் (பக்.146)

இரா. ஜனார்த்தனம் தொடர்பான செய்திகளில் எந்த அளவிற்கு உண்மை இருந்துள்ளது என்பது எனக்குச் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. யாழ்ப்பாணத்தில் கலவரம் நடைபெற்ற மறுநாள் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்றுள்ளதையும், என். சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவர் பாதுகாப்பாகச் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவரை அழைத்துவந்தவர்கள் யாரென்பதும் அவர்களது நோக்கம் என்னவென்பதும் வெளிச்சமாகின்றன. 

இரா. ஜனார்த்தனம் அவர்களை கைது செய்வதாக இலங்கை அரசின் காவல் துறை மாநாட்டின் இறுதிநாளான 10.01.1974 அன்று மாலை காட்டிய தீவிரப் போக்கினை மறுநாள் காட்டவில்லை-தேடவில்லை, கைதுசெய்யவில்லை என்பதிலிருந்து திட்டமிடப்பட்ட ஒரு நாடகத்தில் இலங்கை அரசும் ஒரு பாத்திரமேற்றிருந்துள்ளது என்றும் கூறலாம். நிச்சயமாக ஈழத் தமிழர்களின் நன்மைக்காக இரா. ஜனார்த்தனம் அழைத்துவரப்படவில்லை என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன். 

1974 பெப்ரவரி மல்லிகையில் டொமினிக் ஜீவா கூறிய ‘சில வந்தான் வரத்தான்கள் செய்துவிட்டுப் போன நாச விளைவுகளும்’ மற்றும் 1974 ஏப்ரல்-ஜூன் களனி இதழில் வாமனன் என்ற புனைபெயரில் க. கைலாசபதி எழுதிய ‘இந்தியாவிலிருந்து ஜனார்த்தனம் போன்ற கழிவுகளை’ என்பதிலுள்ளவாறான தனிமனிதச் செயல்களாக இல்லாமல் ஏதோ ஒரு திட்டமிடப்பட்ட மறைநிரலில் மூன்றாம் சக்தி ஒன்றின் அரசியல் நன்மைக்காக அழைத்துவரப்பட்ட மாயாமான் அவரென்பதாகவே நான் கணிக்கிறேன். ஈழத்தமிழர்கள் இவ்வாறு பல மாயமான்களைச் சந்தித்துள்ளனர் என்பதும் என் தெளிவு. 

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வை. கோபால்சாமி அவர்கள் வெளியேற்றப்பட்டதனால் பல இளைஞர்கள் தீக்குளித்து இறந்துபோனார்கள், வை.கோ ஆதரவாளர்களான இராயபுரம் ஏழுமலை போன்றவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.  வை. கோபால்சாமி பிரிந்து சென்றமைக்கு அந்நாட்களில் கலைஞர் கருணாநிதியால் கூறப்பட்ட காரணம் என்னவென்பதையும், இன்று அதே வை.கோ என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் நேர்மையாக மீள்வாசிப்புச் செய்தால், இந்த மாயாமான்களின் உற்பத்தி ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற உருவாக்கப்பட்டவர்களல்லர் என்பதை அறிந்துகொள்ளமுடியும். 

முடிவுரை

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற சீரிய சிந்தனையின் தந்தை - தனிநாயக அடிகளார் ஈழத்தைச் சேர்ந்தவர். தமிழ்மொழி தொடர்பில் உலகளாவிய முதலாவது அமைப்பு உலகத் தமிழாராய்ச்சி மன்றம், தமிழ்மொழியைக் காக்கும் வலுவான கேடயமும் அதுதான். உலகளவில் தமிழியலை நிலைநிறுத்தி அறிவுத் தளத்தில் செயற்பட்ட மன்றத்தினைத் தங்களது அரசியற் தேவைகளுக்குப் பயன்படும் ஒரு அமைப்பாகவே தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிடர்கள் கடந்தகாலத்தில் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் விருப்பத்தின் காரணமாக 2010ஆம் ஆண்டில் உண்மையான உலகத் தமிழாராய்ச்சி மன்றம்(legitimate IATR) இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. அவர்களது திராவிட மாடல் என்ற செயல்வடிவினால் மிகவும் உச்ச அளவில் பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்றால் அது உலகத் தமிழாராய்ச்சி மன்றமே. 

இந்நிலையில் தனிநாயக அடிகளாரின் தொலைநோக்குப் பற்றுள்ளம் என்னவென்பதை எதிர்காலத் தமிழ் ஆய்வுலகம் அறியும் முகமாக 11.11.1965 அன்று தனிநாய அடிகளார் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியை ஞாபகமூட்டலாத் தருகிறேன்.  

‘‘மகாநாட்டை ஒட்டி சில தமிழ் நூல்கள் மொழி பெயர்க்கப்படும். திருக்குறள் மொழிபெயர்ப்புக்களை சீனத்திலும் மலாய் மொழியிலும் வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இங்கு சிங்களத்திலும் நல்ல முறையில் வெளி யிடப்பட்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி. தமிழ் மொழி பல நாடுகளில் பேசப்படுகிறது. அதனால் பிரிட்டிஷ் நல்லுறவு நாடுகள் இலக்கிய மாநாட்டிலும் தமிழ் இலக்கியம் இடம்பெற்றுள்ளது. 

வாழ்விலே பண்பாட்டுக்கு முதலிடம் கொடுத்தவர் தமிழர். அதனாலேதான், 

பண்புடையார் பட்டுண்டு உலகம் அஃதின்றேல் 

மண்புக்கு மாய்வது மன் 

என்ற கொள்கையைத் தழுவி நின்றனர். மனிதனைப் பண்புடையவனாக மட்டும் காண விரும்பவில்லை தமிழர். முழுமைபெற்ற மனிதனாக, சான்றோனாக காணவிரும்பினார்கள் தமிழர்கள். இத்தகைய மனிதர்களும் வாழ்ந்தார்களா என்று இன்றைய சூழ்நிலையில் எண்ணத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டை நாம் மட்டும் வைத்திருந்தால் போதாது. உணர்ந்து பெருமைப்பட்டால் மட்டும் போதாது. அது உலகுக்கு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உலகப்பண்பாடு செழிப்படையும் இப்படியான ஒரு பண்பாட்டை உலகம் இழப்பதைப் போன்றதொரு பேரிழப்பு வேறு இருக்க முடியாது. இவற்றைச் செய்ய இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் கவுன்சிலும், பிரெஞ்சு நாட்டுக்கு அலையன்ஸ் பிரான்சேஸ்,செர்மானிய நாட்டுக்கு ஜேர்மனிய இன்ஸ்ரிரியூட் ஒப் கல்ச்சர் போன்ற நிறுவனங்களும் உலகின் பல பாகங்களிலும் அரசாங்க உதவியோடு உண்டு, அப்படியே வேறு நாடுகளுக்கும். ஆனால் நமக்கு ஓர் அரசில்லாத குறையால் இந்தப் பணியை நாமே மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்யத்தவறினால் பெரிய தவறைச் செய்தவர்களாவோம். நாமே நமக்குத் துணையாக வேண்டும். இந்த அடிப்படையில் தான் மலாயா உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெறும் ’’

- ஆ.தேவராசன் : புதிய கண்ணோட்டத்தில் தமிழாராச்சி, ஈழநாடு (21.11.1965) பக்கம் 3.

உன்னத சிந்தனையொன்றை நூறு ஆண்டுகளாவது அதன் கண்ணியம் கெடாது தமிழர்களால் காப்பாற்றமுடியாது என்பதைப் பாறைசாற்றும் ஒன்றாக உண்மையான உலகத் தமிழாராய்ச்சி மன்றம்(Legitimate IATR) இல்லாதொழிக்கப்பட்ட நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறுகிறது. 

UNESCO அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி அமைப்பான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் இல்லாதுபோதல் தமிழ்மொழிக்கு நல்லதல்லவே.

தங்கள் சைவ அடையாளத்தினைத் தக்கவைக்க ‘‘ஓம்’’ என்ற சொற்பயன்பாட்டினைப் போத்துக்கேயர் காலத்தில் ஈழத்தமிழர்கள் கைக்கொண்டதுபோல், நூலியலாளர் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களின் இந்நூலினூடாகப் புரிதலடைந்து உலகத் தமிழாராய்சி மன்றத்தினை அதன் வீரியம் கெடாமல் எவ்வாறாயினும் மீட்டெடுப்பார்களெனில் பெருமகிழ்ச்சியடைவேன்.  

எந்த ஒரு நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காமலும், எந்தவொரு நாட்டின் நிதி நல்கையில் தங்கியிராமலும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினைத் தன்னிறைவுடன் செயற்படச் செய்யும் விதைக் காசினைச் சேகரித்துக்கொடுக்கும் வல்லமை இன்று உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர்களிடம் உள்ளது. தமிழைப் பாதுகாக்கும் கேடயங்களை நாமேதான் செய்தாகவேண்டும். தனிநாயக அடிகளாரால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் முதற்கேடயம்.

திரு. சச்சி ஶ்ரீகாந்தா, திரு கா. சிவபாலன் ஆகிய இரு ஈழத்தவர்களின் வரிசையில் தனிநாயகம் அடிகளாரின் உலகத் தமிழாரய்ச்சி மன்றத்தின் மாண்பினைக் காப்பாற்றியவர்களில் ஒருவராக நூலியலாளர் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களையும் இனிமேல் இணைத்துக் கூறலாம். பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகளில் இருப்பவர்கள் செய்வேண்டிய கடமையைச் செய்துகொண்டிருக்கும் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களின் தமிழ்த்தொண்டு தொடர என் வாழ்த்துகள். 

- விருபா குமரேசன்

[email protected] / [email protected]

+919840254333 whatsApp

  •  

இலக்கியச் சந்திப்புகள் - பேட்டி : தமிழ்த்திரு. தனிநாயக அடிகள் (தீபம் இதழ் 1968 )

     நாள் : 1968.01.10      பேட்டி கண்டவர் : கோவிந்தன் 

    இலங்கையிலே ஒரு சின்னஞ்சிறு தீவிலே பிறந்த தனிநாயகம் அவர்கள் கல்வி, கேள்விகளில் திறம்பட விளங்கிப் பட்டங்கள் பல பெற்று உலக பந்தங்களையும் சொந்தங்களையும் துறந்து அடிகளாக ஆனார்கள். பந்தத்தையும் பாசத்தையும் துறந்த தனிநாயகம் ஒரு தமிழ் நாயகம் ஆவார். தமிழைத் துறக்காத இந்தத் தனிநாயகம் இலங்கை, அண்ணாமலை நகர், இலண்டன் போன்ற இடங்களில் படித்து எம். ஏ., டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். இலங்கையிலே பிறந்த இவர் இன்று மலேயாவிலே தமிழ் மணம் பரப்பி வருகிறார். அகில உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டில் முக்கியப் பொறுப் பேற்றுத் தமிழ் மொழியின் பெருமையை உலகமெலாம் பரவச் செய்யும் இவரைத் தமிழத்திரு தனிநாயக அடிகள் என்று நமக்கு அழைக்கத் தோன்றுகிறது. முழுக்கையுள்ள நீண்ட வெள்ளை அங்கியும், ஒளி வீசும் கண்களும், சாந்தமான முகத் தோற்றமும், இனிய தமிழும், சரளமான ஆங்கிலமும் பேசுகின்ற தனிநாயகம் தமிழ் பேசும் மக்களின் இதயங்களிலே நிற்கிறார் என்று கூறினால் மிகையாகாது.

    உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிச் சென்னைக்கு வந்திருந்த தனிநாயகம் அவர்களிடம் 'தீபத்'திற்கு பேட்டி வேண்டி இரண்டு மூன்று முறை கேட்டபோது. "நேரமில்லை; பார்க்கலாம்" என்று கூறிவந்தார்கள். 10-1-68 ந்தேதி காலையிலே பேட்டி பற்றிக் கேட்டபோது, ''நாளையே விமானம் மூலம் புறப்படுகிறேன்'' என்றார். 11-1-68 இரவு சென்னை முதலமைச்சர் அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது விருந்தினர்கள் தங்கியிருந்த புதிய சட்டமன்ற விடுதிக்குச் சென்றபோது, தனிநாயகம் அவர்களைக் கண்டோம். மீண்டும் பேட்டி பற்றிக் கேட்டபோது "முதலமைச்சர் விருந்துக்குக் கட்டாயமாக இருக்க நேரிட்டுவிட்டது. நாளை விமான மூலம் புறப்படுகிறேன். பேட்டிக்கு இப்போது நீங்கள் உடனே தயாரா?" என்று அடிகள் இணங்கினார். விருந்தினர்கள் அன்று இரவே விருந்து முடிந்ததும் சுற்றுலாப் புறப்படுவதற்கும், தங்களுடைய நாடுகளுக்குத் திரும்பச் செல்லுவதற்கும் பெட்டி படுக்கைகளைக் கட்டிக் கொண்டு புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். கார்களிலும் பஸ்களிலும் விருந்தினர்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டுமிருந்த பரபரப்பான சூழ்நிலை. விருந்தினர் மாளிகையின் முன் வராந்தா ஒரு ரயில் நிலையம், அல்லது விமான நிலையத்தைப் போலப் பரபரப்பாக இருந்தது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் தீபத்தின் பேட்டிக்குச் சரி என்று கூறித் தன்னுடைய 271-ம் நம்பர் அறைக்கு அழைத்துச்சென்றார் அடிகள். மாடிப்படி யில் ஏறும்போதே சில கேள்விகள் கேட்க அவர் பதில் சொன்னார். அறைக்குச் சென்றோம். உபசாரத்திற்குப் பிறகு பேட்டி தொடங்கியது.

தமிழ் மொழி பற்றித் தங்களுடைய கருத்தென்ன?    

எளிதில் எல்லோரும் கற்றுக்கொள்ள ஏற்றதாகவும், ஓசை நயமும், இனிமையும் நிறைந்த ஒரு மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. ஏனெனில் வேற்றுமை உருபுகள் ஒருமைக்கும் பன்மைக்கும் பயன்படுத்துவதற்கு உரியனவாக அதாவது மிகவும் எளிமையாகவும் இனிதாகவும் உள்ளன. லத்தீன், வடமொழி ஆகிய மொழிகளில் கூட இதுபோல் இல்லை என்று கூறலாம். அடிச் சொற்கள் வேறு வேறு பொருள்களைக் குறிப்பது இம்மொழிக்குள்ள தனிச் சிறப்பாகும் கிழமை - உரிமை; கிழவன் - உரிமை பெற்றவன்; ஞாயிற் றுக்கிழமை - ஞாயிற்றுக்கு உரிய நாள் போன்றவைகளைக் காணவேண்டும். கடந்த 25 நூற் றாண்டுகளாக, இலக்கண, இலக்கியத்திலிருந்து சொற்களைப் பெருக்கிக் கொண்டு இம் மொழி வளர்கிறது. அவைகளை நன்கு அறிந்து வருவதற்கு இன்பத்தைத் தரும் டாக்டராக நல்லூர் ஞானப் பிரகாசம் தத்துவ ரீதியிலே நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். தமிழ்ச் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. கருத்து இருக்கிறது. சிறப்பாக வாய்மை, உண்மை, பொய்மை போன்ற சொற்களின் கருத்துக்களை ஆராயும்போது தனி இன்பத்தைத் தரும். இம்மாதிரியான புதுச் சொற்கள் வருவதற்கும் இம்மொழியில் இடம் இருக்கிறது என்பது ஒரு தனிப் பெருமையாகும். புகையிலை நம் நாட்டிற்கு முதல் முதல் வந்தபோது இலையை அறிந்த மக்கள், புகைப்பதற்கு உபயோகமாக இருக்கின்ற காரணத்தால் புகை + இலை என்று சேர்த்துப் புகையிலை என்று மிகவும் எளிதாகவும், இயற்கையாகவும் ஒரு புதிய சொல்லை உண்டாக்கிவிட்டார்கள். வள்ளிக் கிழங்கை அறிந்தவர்கள் மரத்தைப் போன்றும், வள்ளியைப் போன்றும் விளங்கும் பெரிய செடியிலிருந்து வருகின்ற கிழங்கை அதாவது வள்ளிக்கிழங்கைப் போன்ற ஒரு கிழங்கை ‘மர' என்ற இரண்டு எழுத்துள்ள ஒரு சிறிய சொல்லைப் போட்டு மரவள்ளிக் கிழங்கு என்ற ஒரு புதிய சொல்லை மிகவும் எளிதாக, இயல்பாக, இனிமையாக ஏற்படுத்தித் தந்தார்கள். புதிய சொற்கள் தமிழ் மொழியில் இதுபோன்ற முறையில் வருவதே மொழிக்கு வலிவைக் காட்டுவதாகும். அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர். பரிமேலழகர் போன்றவர்களுடைய விளக்கங்களிலேயிருந்து இந்த இருபதாம் நூற்றாண்டின் கருத்துக்களை விளக்க ஏற்ற சொற்களைக் கண்டு வருகிறேன். "நீர்கால யாத்திரை" என்ற சொல் இன்றைய (Irrigation) நீர்ப்பாசனம் என்பதற்கும் பொருந்தும். திண்ணகம் என்ற சொல்லை உலோகம் (Metal) என்ற பொருளில் அடியார்க்கு நல்லார் பயன்படுத்தியுள்ளார். எனவே திண்ணகம், விண்ணகம், மண்ணகம் என்ற சொற்கள் வெவ்வேறு பொருள்கள் தருவது கண்டு இன்புறுகின்றோம்.

தமிழ் மொழியில் விஞ்ஞானம் விரைவில் போதிக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?

தமிழ் மொழியில் விஞ்ஞானத்தைப் போதிக்க முடியும். ஆனால் அதற்குக் கொஞ்ச நாள் ஆகும். முன்னேற்பாடாக விஞ்ஞான நூல்கள் வளர வேண்டும். விஞ்ஞானத்தில் அகில உலக ரீதியில் பபன்படுத்தும் சொற்களை (International Technology) அப்படியே பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானம் பயில ஆங்கில மொழி அவசியம் அறிந்திருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு விஞ்ஞான நூல்களைத் தந்த பிற மொழிகளை அறிவதே விஞ்ஞானத்தை அறிய வசதியாகும். மேல் ஆராய்ச்சி செய்வதற்கு ரஷ்ய, ஜெர்மன், ஆங்கில, பிரெஞ்சு மொழிகள் அறிந்திருக்க வேண்டும். இந்த மொழிகளை அறிந்தால் முதல் தரமான விஞ்ஞான அறிவு வளரும். ஆங்கில நாட்டாரும் ரஷ்ய மொழிகளைக் கற்று வருகிறார்கள். ரஷ்ய நாட்டாரும் ஜப்பான், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று வருகிறார்கள் ஆகவே படு அவசரம் காட்டாமல் நிதானமாகச் சென்றால் தமிழில் விஞ்ஞானத்தைப் போதிக்கலாம்.

மலேசியாவில் நடந்த தமிழ் மாநாட்டிற்கும் சென்னை மாநகரத்தில் நடந்த தமிழ் மாநாட்டிற் கும் உள்ள தனிச் சிறப்புக்கள், ஒற்றுமைகள், வேற்றுமைகள் எவை என்று கூற முடியுமா?    

 கோலாலம்பூரில் நடந்த மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டார்கள். மலேயாவில் இருந்த அரசியல் சூழ்நிலை காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பல அறிஞர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு அதிகமாகவே அம்மாநாட்டிற்காக நாங்கள் பாடுபட்டோம். முதல் மாநாடு என்ற முறையில் அம்மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இனி நடக்கப் போகும் மாநாடு களுக்கெல்லாம் இம்மாநாடே வழிகாட்டியாகும். முதல் மாநாட்டில் ஏற்பட்ட அநுபவங்கள் இரண்டாவது மாநாட்டை நடத்த மிகவும் உதவி செய்தன.

இங்கு நடந்த இரண்டாவது உலக மாநாட்டினுடைய சிறப்பிற்கு ஆரம்ப வேலைகளை மிகவும் வெற்றிகரமாகத் திருவாளர்கள் ஆ. சுப்பையாவும், கமில் ஸ்வலபிலும் செய்தார்கள். தமிழ் நாட்டினுடைய தலைநகரத்தில் வந்து மாநாட்டை நடத்தும்படி முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் முதல் மாநாட்டின்போது கோலாலும்பூரில் கேட்டுக் கொண்டது இந்த மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பாகும். நாற்பத்திரண்டு நாடுகளைச் சேர்ந்த சுமார் 450 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பெருமை செய்தார்கள். இவர்களில் பலர் உலகக் கண்ணோட்டத்தோடு புதிய கருத்துக்களையும், ஆராய்ச்சிகளையும் மன்றத்திலே வழங்கினார்கள். சென்னை யிலே நடந்த மாநாட்டிற்குப் பலரும் பல விருப்பங்களில் வந்தார்கள். மலேயா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்கள், தமிழகத்தைக் காண வேண்டும்; தமிழகத்து மக்களோடு உறவாட வேண்டும். என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு வந்தனர். வேற்றுநாட்டார் தமிழ் மண்ணில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற தனி விருப்புடன் வந்தார்கள். திருவாளர்கள் ஆ. சுப்பையாவும், கமிலும், மற்றவர்களும் பல நாடுகளுக்கும், நேரில் சென்று அறிஞர்களைச் சென்னையில் நடந்த மாநாட்டிற்கு அழைத்தார்கள். நேரில் அழைத்த காரணத்தால் பேராளர்கள் பெருவாரியாக வந்தனர். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகச் சென்னை மக்கள் இந்த மகா நாட்டை மிகவும் சிறப்பாக நடத்தினர். விருந்தோம்பலில், தலைசிறந்த தமிழர்கள் தங்கள் பண்பாட்டிற்கு இணங்க மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களுக்குச் சிறந்த சிறந்த உணவு விருந்தையும், கலைவிருந்தையும் சிறப்பான முறையில் அளித்ததாக மகாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு அறிஞர்கள் திரும்பத் திரும்பச் சொல்லியதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். அதற்காக நானும் நன்றி பாராட்டக் கடமையுள்ளவனாகிறேன்.

பாரீஸ் மாநகரத்தில் நடைபெற இருக்கும் அடுத்த உலகத் தமிழ் மாநாடு பற்றிய விவரங்களையும், கருத்துக்களையும் கூற இயலுமா?    

1970-ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாவது வாரம், மூன்றாவது உலகத்தமிழ்மாநாடு பாரீஸில் நடைபெற இருக்கிறது. நண்பர் பிலி யோசா விடுத்த அழைப்பை நிர்வாகசபை ஏற்றுக் கொண்டு, இன்றுமுதல் அதற்கான செயல்முறைகளில் ஈடுபடுகிறது. 150 முதல் 200 அறிஞர்கள் வரை மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேயா, சிலோன் போன்ற நாடுகளிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் அறிஞர்கள் வந்து இந்த மகா நாட்டிலும் கலந்து கொள்ளுவார்கள். இங்கும் கருத்துக்களும், ஆராய்ச்சி முடிவுகளும் அறிஞர் களுக்குள் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளப்படும்.

தமிழ் இலக்கியங்கள் பற்றிய தங்கள் கருத் தென்ன? தங்களுக்குப் பிடித்தமான தமிழ் இலக் கியம் எது?

சங்ககால இலக்கியங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சங்க இலக்கியங்களில் நான் அதிகம் ஈடுபாடு கொள்ளுகிறேன். இருந்தாலும் அதற்காக மற்ற இலக்கியங்களை நான் ஒதுக்கித் தள்ளிவிடுவதில்லை. சிலப்பதிகாரம் சிறந்த வியப்பிற்குரிய ஒரு காவியமாக எனக்குத் தோன்றுகிறது. கிறித்துவ மதத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ள எனக்கு ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழில் செய்த பக்தி 'இலக்கியங்களும் இன்பத்தைத் தருகின்றன. கம்பனுடைய அரிய காவியத்தையும், இடைக்காலத்தில் தோன்றிய மற்ற இலக்கியங்களையும் நான் படிப்பதுண்டு. நவீன இலக்கியங்களில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை. ஆராய்ச்சிக்காகவும், பாடம் நடத்துவதற்காகவும் நவீன இலக்கியங்களையும் படிப்பதுண்டு.

தமிழ் நாவல், சிறுகதை ஆகியவை பற்றித் தங்களுடைய கருத்து என்ன?

சிறுகதைகளை நான் படிப்பதில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நாவல்கள் படித்ததாக ஞாபகம். இப்போது நாவல்களும் படிப்பதில்லை. ஆனால் இத்துறை மிகவும் வளர்ந்துள்ளதாகவும், மக்கள் சிறுகதை, நாவல்களை அதிகம் படிப்பதாகவும் கூறப்படுகிறது. இவை உரை நடையின் வளர்ச்சியாகும். வேதநாயகம் பிள்ளை, திரு. வி. க. போன்றவர்கள்தான் தமிழ் உரைநடை வளத்தை வளர்த்தவர்கள். வரலாற்று நாவல், சமூக நாவல், சிறுகதை முதலியன உரைநடையின் உச்சகட்டத்தில் விளைந்த விளைவாகும்.

நீங்கள் ஆங்கிலத்தில் அதிகம் எழுதுகிறீர்களா அல்லது தமிழ்மொழியில் அதிகம் எழுதுகிறீர்களா?

நான் அதிகமாக ஆங்கிலத்தில்தான் எழுதுகிறேன். இதனுடைய நோக்கம் என்னவென்றால் தமிழ் அறியாத பலரும், தமிழ்க் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளட்டும் என்பதேயாகும்.

பாட்டு இலக்கியம் பற்றித் தங்கள் கருத்தென்ன? பாட்டு இலக்கியம் இந்த நூற்றாண்டில் எடுபடாது என்று கூறுகிறார்களே! இது உண்மையா?

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பாரதி பாட்டு இலக்கியத்தின் மூலம்தான் சுதந்திரப் பள்ளைப் பாடி மக்களை விடுதலைக்குப் பாடுபடும்படி செய்தான். பாட்டு இலக்கியம் தமிழ்மொழியோடு பிறந்த ஒரு பேறாகும். இந்தப் பாட்டு இலக்கியத்தின் விரிவே இன்றைய உரைநடையாகும். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வெவ்வேறு துறைகளாகும். இரண்டும் இணைந்துதான் செல்லும். வேறுபடாது. வேறுபடமுடியாது.

உலகத் தமிழ் மாநாட்டின் நோக்கம் என்ன? 

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அல்லது கருத்தரங்கு என்று கூறவேண்டும்.

பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்திடல் வேண்டும், இறவாத புகழுடைய நூல்கள் தமிழ்மொழியில் இயற்றிடல் வேண்டும், திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்' என்று பாடிய பாரதியின் கருத்தே இந்த மன்றத்தின் (Motto) நோக்கமாகும்.

தமிழ்ப் பத்திரிகைகள் பற்றித் தங்களுடைய கருத்தென்ன?

மக்களுடைய வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளில் பத்திரிகைகளும் ஒன்றாகிப்போய்விட்டது. உரைநடை இலக்கியத்திற்குப் புத்துயிர் ஊட்டியது பத்திரிகைகளே. எல்லா நாட்டிலும் பத்திரிகைத் தொழில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மலேயா, இலங்கை, தமிழ் நாடு ஆகிய பகுதிகளில் தின, வார, மாத இதழ்கள் தமிழ்மொழியில் நன்கு நடைபெறுகின்றன. இவை மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கின்றன.

தமிழ்மொழியைப் போல, உலகில் வேறு எந்த மொழியாவது இத்தகைய மாநாடுகளை நடத்தி இருக்கின்றனவா?    

சீன மொழிக்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இத்தகைய கருத்தரங்கங்கள் நடந்து இருக்கின்றன. ஆங்கில மொழிக்கு ஒரு சங்கமே அமைந்து, இத்தகைய செயல்களைச் செய்கின்றது. ஆனால் தமிழ்மொழிக்கு, அகில உலக ரீதியில் ஒரு பெருவிழாவாக நடந்ததைப்போல சீன மொழிக்கோ, ஆங்கிலத்திற்கோ, பிரெஞ்சுக்கோ நடந்ததா? என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறவேண்டும். சென்னையில் நடந்த விழா, உலகளாவியதோர் தனிப்பெரும் சிறப் பைப் பெற்றுவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை.

தீபம் இதழ், அதன் ஆசிரியர் பற்றித் தங்கள் கருத்தென்ன ?

தீபம், ஒரு நல்ல தமிழ் மாத இலக்கிய இதழ் என்று கேள்விப்பட்டேன். இலங்கையிலும், மலேயாவிலும், தமிழ்நாட்டிலும் இந்த இதழும், இதன் ஆசிரியர் நா.பார்த்தசாரதியும் நன்கு அறிமுகமாகியுள்ளதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழை நன்கு கற்ற புலவரான தீபம் ஆசிரியர் நவீன இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு நாவல்கள், சிறுகதைகள் படைப்பதும், ஒரு மாதப் பத்திரிகையை நடத்துவதும் புதுமையான ஒன்றாகும். பொதுவாகத் தமிழ்ப் புலமை பெற்றவர்கள் நவீன இலக்கியத்தில் ஈடுபட மாட்டார்கள். நவீன இலக்கியத்தில் ஈடுபட்டவர்கள், பழைய தமிழ் இலக்கியத்தை விரும்பமாட்டார்கள். இரண்டிலும் ஈடுபாடு உள்ள இவர் பத்திரிகை நடத்துவதை எல்லோரும் விசுவாசமாக ஆதரிக்க வேண்டும்.

உலகத் தமிழ் மாநாடு பிரசுரிக்கப்படாத பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடி எடுத்துப் பிரசுரிக்க வழியும் வகையும் செய்யுமா? அதற்கான ஏற்பாடுகள் எனன?    

பொது அறிவு, உணர்வு, கருத்துப் பரிமாறுதல் ஆராய்ச்சி ஆகியவைகளும், பாரதி கூறிய தமிழ் வளர்ச்சிக் கருத்துமே இந்த மன்றத்தின் நோக்கமாகும்.

பிரசுரிக்கப்படாத இலக்கியச் செல்வங்களைத் தேடி எடுத்துப் பிரசுரிக்கவேண்டிய வேலைகளை அரசாங்கமும், இலக்கியச் சங்கங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். அகில உலக ரீதியில் இதற்கான பண உதவிகளைப் பெற முயலலாம்.

தமிழ்மொழியில் பிரசுரிக்கப்படும் நூல்களைப் பற்றியும் அவைகளின் தரத்தைப்பற்றியும் தங்கள் கருத்தென்ன?

பல தரமான நூல்கள் தமிழ்நாட்டில் பிரசுரம் செய்யப்படுகின்றன. பிரசுர வேலையில் பல பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர். பலரும் வெளியிட்ட நூல்கள் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை என்று வெளிநாட்டார் பலரும் வருத்தப்படுகிறார்கள். ஹிக்கின்பாதம்ஸ் போன்ற ஒரு பொதுவிற்பனை நிலையத்தில் எல்லா வெளியீட்டகங்களும், வெளியிட்ட நூல்கள் கிடைக்கும்படி வகை செய்யவேண்டும். பிரசுரகர்த்தாக்களுக்குக் கடிதம் எழுதினால் பதிலும் வருவதில்லை என்று குறை கூறப்படுகிறது. தமிழ் நாட்டினுடைய வரைபடம் வேண்டும் என்று நான்கு நாட்களாக அலைந்தேன். கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும் என்றும் எவராலும் சொல்ல முடிய வில்லை. இத்தகைய குறைகள் நீங்க அரசாங்கமும், வெளியீட்டகங்களும், தமிழ்ச் சங்கங்களும் முயன்று வெளிநாட்டாருக்குத் தமிழ்நாட்டில் வெளியிடப்படும் நூல்கள் கிடைக்க வழி செய்தால் மிகவும் விசுவாசமாக இருப்பேன். 

நன்றி! 

வணக்கம்.

[பேட்டி முடிந்ததும் ஏதாவது அன்பளிப்பாகத் தருவதற்கு அவர் தேடினார். உடன் எதுவும் அகப்படவில்லை. ஆனால் அவருடைய அன்பு மனத்தைத்தான் தேடிக் கொடுப்பதற்கு முன்பே நான் அன்பளிப்பாகப் பெற்றுவிட்டேனே!]








  •  

தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும்


 
1. தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி மரபார்ந்த அகரவரிசை.

தொல்காப்பியத்தில் கூறப்படும் “எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃதென்ப” என்ற சூத்திரத்தில் தமிழ் எழுத்துகள் எவை என்பது கூறப்பட்டுள்ளது. “அ” தொடக்கம் “ஔ” வரையான உயிர் எழுத்துகள் 12ம், “க்” தொடக்கம் “ன்” வரையிலான மெய் எழுத்துகள் 18ம் தான் முதன்மை எழுத்துகள், அதாவது முதலில் தோன்றிய எழுத்துகள். மெய்யெழுத்துகளுடன் உயிரெழுத்துகள் சேர்வதால் தோன்றும் 216 உயிர்மெய்யெழுத்துகள், மற்றும் நுண்ணொலியான “ஃ” ஆய்தம் எனும் சார்பெழுத்து என்று மொத்தம் 217 சார்பெழுத்துகள் வரிவடிவமுடையவை. தமிழ் எழுத்துகளின், சார்பெழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படையில் எழுத்துகளுக்கு முதன்மை இடமும், அவற்றைத் தொடர்ந்து சார்பெழுத்துகளுக்கு இடமும் கொடுத்து இயல்பாகவே வரிசைப்படுத்திவிடமுடியும். ஆய்தவெழுத்தினை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியம் கூறாவிடினும், 
ஆவி யகரமுத லாறிரண்டா மாய்தமிடை
மேவுங் ககரமுதன் மெய்களா - மூவாறுங்
கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு

என நேமிநாதம் சுட்டும் வழிகாட்டலின்படி ஆய்தவெழுத்தை உயிரெழுத்திற்கும், மெய்யெழுத்திற்கும் இடையில் வைக்கவேண்டும் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.தமிழ் லெக்சிகன் ஆய்த எழுத்தைப் பதின்மூன்றாவது எழுத்தெனப் பதிவுசெய்துள்ளது. 

இவ்வாறு தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று தமிழ் எழுத்துகளின் அகரவரிசை அமையும், இதுவே தமிழின் முறையான, மரபார்ந்த தமிழகரவரிசையாகும்[T]

தமிழில் அகராதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நூல்களில்  அகரவரிசை என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தமைக்கான பதிவுகளைக் காணமுடியவில்லை. அதாவது ஒவ்வொரு சொல்லையும் அதன் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்து அகரவரிசைப்படுத்தி உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் எதையும் காணக்கூடியதாக இல்லை. ஔவையாரின் ஆத்திசூடி என்ற நீதிநூலில் நீதிவாசகங்கள் முதல் எழுத்து அடிப்படையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவணசித்தரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவிலான, ஒருசொற் பல்பொருள் விளக்கமாக அமைந்த அகராதிநிகண்டிலும் முதல் எழுத்து அடிப்படையிலான அகரவரிசையில் சூத்திரங்கள் தரப்பட்டுள்ளன. 

2. சதுரகராதியில் தவறான அகரவரிசை அறிமுகமாதல்.

1732இல் முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி, வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார்(Constanzo Beschi) என்ற மேனாட்டவரால் ஓலைச்சுவடியில் உருவாக்கப்பட்டது. 1819இல் சதுரகராதியின் ஒரு பகுதி அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன் பின் 1824இல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. சதுரகராதியில் தலைச்சொற்களை வரிசைப்படுத்தக் கைக்கொள்ளப்பட்டிருக்கும் அகரவரிசை என்பது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்று காணப்படுகிறது, மேலும் ஆய்தவெழுத்தானது உயிர்மெய் எழுத்துகளுள் ககர மெய்க்கும் ஙகர மெய்க்கும் இடையிலும் வருமாறும் உள்ளதானதொரு அகரவரிசையாகும். நாம் இதனை “மேனாட்டவர் தமிழகரவரிசை[W] என்று அழைக்கலாம்.  

இம்மேனாட்டவர் தமிழகரவரிசையானது முற்றிலுமாக தமிழ் எழுத்துகள், சார்பெழுத்துகள் உருவான தன்மைக்கு எதிரானது. “க்” என்ற எழுத்தில் இருந்து தோன்றிய “க” முதல் “கௌ” வரையிலான சார்பெழுத்துகளைக் கொண்டிருக்கும் சொற்களை முன்னராகவும், “க்” என்ற முதன்மை எழுத்தைக் கொண்டிருக்கும் சொற்களைப் பிற்பகுதியிலும் அடுக்கி வரிசைப்படுத்துவது தவறான முறையல்லவா? 

அன்றைய திண்ணைப் பள்ளிக்கூட கல்விமுறையில், தமிழில் சொல்வளத்தினை கற்றுக்கொள்வதற்கு இன்றியமையாத அடிப்படை ஆதாரநூல்களாக இருந்தவை, செய்யுள் வடிவிலான நிகண்டுகளே. நிகண்டுகளைப் பயன்படுத்தி வந்த தமிழர்களுக்குச் சொற்களின் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்துச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அடுக்கித்தந்த அகராதிகள் பெருவிருப்பாகின. வீரமாமுனிவர் அருளிச் செய்த சதுரகராதி என்று அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. ஒலியொழுங்கில் சொற்களைப் பாக்களில் அடுக்கி மனனம் செய்யும் முறையில் இருந்து விலகி, தேவையேற்படுமிடங்களில் உசாவுதலுக்குப் பயன்தரும் நோக்குநூல்களாக அகராதிகளைப் பயன்படுத்தும் முறை தொடங்கியது எனலாம்.

3. தவறான அகரவரிசையைத் தமிழறிஞர்களும் பயன்படுத்துதல்.

  தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம் வழிப்படுத்திய மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தாமல், வீரமாமுனிவர் அறிமுகப்படுத்திய மேனாட்டவர் தமிழகரவரிசையிலேயே தமிழ் அகராதிகள் உருவாக்கப்பட்டுவந்தன. ஆரம்பத்தில் முக்கியமான பல தமிழ் அகராதிகளை மேனாட்டவர்களே உருவாக்கிய காரணத்தினாலும், அவர்களைத் தொடர்ந்து தமிழில் அகராதிகளை உருவாக்க முற்பட்ட பல தமிழர்களும் எந்தவித ஆராய்வுமின்றி மேனாட்டவர் தமிழகரவரிசையினைத் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில், சொல்லடைவுகளில் பயன்படுத்தியுள்ளனர். 1679இல் புரேயன்சாவினால் உருவாக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி முதல் 1966இல் வெளியான மே.வீ.வேணுகோபாலபிள்ளையின் இளைஞர் தமிழ் அகராதி வரையிலாகப் பல அகராதிகளையும், சொல்லடைவுகளையும் பார்வையிட்டதில் இதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. 


மேலே தரப்பட்ட அட்டவணையை உற்றுநோக்கினால், தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் என்று போற்றப்படுகிற பலரும் தவறான அகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளதைக் காணமுடியும். இலக்கணக்கொத்து, இலக்கணச்சுருக்கம், இலக்கணவிளக்கச் சூறாவளி, இலக்கண வினாவிடை ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியவரும், இலக்கணவழு இல்லாமல் பிழையற்ற பதிப்பை செய்தவர் என்று அறியப்படுபவருமாகிய ஆறுமுகநாவலரும் மேனாட்டவர் தமிழகரவரிசையினையே பயன்படுத்தியுள்ளார் என்பதையும் காணலாம். மேலும், தமிழியல்சார்  சிந்தனைத் துளிகள் என்று பெயரிடப்பட்ட, பேராசிரியர் சு.சுசீந்திரராஜா அவர்களால் எழுதப்பட்ட மொழியியல் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் தொகுதியில்(2011) நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்(பக்.157)என்ற தலைப்பிலமைந்த ஆய்வுக் கட்டுரையில், 
"உண்மையிலே, நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம் யாது? நாம், பொதுவாக, ஆய்தம் தமிழ் எழுத்துக்களில் ஒன்று என்றே கருதுகின்றோம். ஆனால், முதற்கண், ஆய்தம் முதல் எழுத்துக்களில் ஒன்றன்று என்பதனை நினைவுபடுத்திக் கொள்தல் வேண்டும். எனவே, அதனை முதல் எழுத்துகளோடு கலப்பது, சேர்ப்பது பொருத்தமன்று. அது, எழுத்தோரன்ன சார்பெழுத்து. அதனை, உயிர் என்றோ மெய்யென்றோ மயங்குவதற்கு இடமளித்தல் ஆகாது. அது, உயிருமன்று, மெய்யுமன்று, செயற்பாட்டில் உயிரிலும் மெய்யிலுமிருந்து வேறுபடுவது. அது, சொல்லில்வரும் குறுகிய சூழலை வரையறுத்துக் கூறலாம். அது குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வருவதாகும். எழுத்து வரிசையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவற்றிற்குப் பின்னர் வரவேண்டிய எழுத்தாகும். இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம். நாவலர் பெருமான் தம் இலக்கணச் சுருக்கத்தில்"எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம். அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து..." என வரிசைப்படுத்தியதை நினைவு கூர்க. 

என்றவாறு கூறும் பேராசிரியர் “இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம்.” என்பதற்குச் சான்றுகளைத் தரவில்லை. ஆய்தவெழுத்தினை கடைசியாக வைக்கவேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் பேராசிரியர், நடைமுறையில் (பக்.197) இதனைக் கைக்கொள்ளவில்லை. பேராசிரியர் பல்வேறு கட்டுரைகளில் சொற்களை வரிசைப்படுத்திக் கூறுகிறார், ஆனால் எந்தவொரு இடத்திலும் மேற்கூறியவாறு ஆய்தவெழுத்தினை, உயிர்மெய்யெழுத்தின் பின்னர் வரும் நிலையில் வைத்துச் சொற்களை வரிசைப்படுத்தவில்லை. ஆறுமுகநாவலர் மீதான பற்றின் காரணமாக, ஆறுமுகநாவலரின் இலக்கணச்சுருக்க வாசகங்களை நியாயப்படுத்துவதற்காக வலிந்து எழுதப்பட்ட ஒன்றாக  இதனைக் கருதலாம், கட்டுரையில் இடம்பெறும் பெருமான் என்ற சொல்லாடல் இதனை வெளிப்படுத்துகிறது. 

தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழறிஞர்கள் பலர் ஆராய்வின்றித் தவறான அகரவரிசை முறைகளைக் கைக்கொண்ட காரணத்தினாலேயே, மேனாட்டவர் தமிழ் மொழியின் அகரவரிசையைத் தீர்மானிக்க முற்பட்டுள்ளனர்.

4. மரபார்ந்த அகரவரிசையைப் பின்பற்றிய இரு முன்னோடிகள்.

தமிழகத்தில் உ.வே.சாமிநாதையரும், யாழ்ப்பாணத்தில் கு.கதிரைவேற்பிள்ளையும் (வைமன் கதிரைவேற்பிள்ளை) மாத்திரமே மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளனர். வைமன்  கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்த அகராதியின் முன்னுரையில் தமிழ் மரபார்ந்த அகரவரிசையை தொடர்பில் தெளிவுகளைத் தந்துள்ளார். வைமன் கதிரைவேற்பிள்ளையின் அகராதித்தொகுப்பில் வேலை செய்த சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர் அவர்களும் தமது இலக்கியச் சொல்லகராதியில்(1914) மரபார்ந்த தமிழகரவரிசையப் பயன்படுத்தியுள்ளார். 1970இல் வெளியான குமாரசாமிப்புலவர் வரலாறு என்னும் நூலின் 65ம் பக்கத்தில் காணப்படும் "இடைக்காலச் சிறப்பும் அகராதி வேலையும்" என்ற உபதலைப்பில் அமைந்த பகுதியில் குமாரசாமிப்புலவரின் மகனான கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள, 
"...புலவர் நீதிபதியோடு கூடி வேலை செய்ததன் பலனாகப் பழந்தமிழிலக்கிய விலக்கணங்களையும், நிகண்டுகளையுந் துருவித் துருவி ஆராய்ந்து பிழைபட வழங்குஞ் சொற்களின் உண்மை உருவத்தை நிச்சயம் பண்ணும் நுட்பவறிவைப் பெற்றார். மேலும் அவர் நவீன முறையைப் பின்பற்றி அகராதி தொகுக்கும் முறையையும் அறிந்தனர். இவ்வனுபவங்கள் யாவும் அவர் தமது இலக்கியச் சொல்லகராதி இயற்றுவதற்குப் பேருதவியாகவிருந்தன..." 

என்ற வாசகங்களினூடாக மரபார்ந்த தமிழகரவரிசை முறையில் அகராதி உருவாக்கும் முறையை வைமன் கதிரைவேற்பிள்ளையவர்களிடமிருந்து அறிந்துகொண்டுள்ளார் என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம்.

5. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் லெக்சிகனில் மரபார்ந்த அகரவரிசை.

1840களில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷன் நிறுவன ரீதியாகத் தமிழ் அகராதிகளைத் தொகுத்ததைப் போன்று, 1913இல் சென்னைப் பல்கலைக்கழகமும் பேரகராதி ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கி 1936இல் அதனை நிறைவு செய்தது. “தமிழ் லெக்சிகன்” என்ற பெயருடன் வெளியிடப்பட்ட இவ்வகராதியானது, அதற்கு முன்னர் வெளிவந்த தமிழ் அகராதிகளைவிட அதிக எண்ணிக்கையிலான சொற்களுக்குப் பொருள் தருவதாகவும், நுணுக்கமான அகராதியியல் உத்திகள் பலவற்றையும் முன்னர் வெளியான அகராதிகளில் இருந்து பெற்று இணைத்துக் கொண்டதாகவும் அமைந்தது. 

ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையில் பல தமிழறிஞர்கள் தமிழ் லெக்சிகன் உருவாக்கத்தில் பங்குபற்றினர். வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி(1862), ஜி.யு.போப்பின் அனைத்தும் அடங்கிய தமிழ்-ஆங்கில அகராதி(1905) ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழ் லெக்சிகன் உருவாக்கப்பட்டதாகப் பலர் கூறினாலும், அதன் அகரவரிசைப்படுத்தல் என்பது மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலைக் கொண்டதாகவே அமைந்தது. அதாவது தமிழ் லெக்சிகனானது, முன்னர் உருவாக்கப்பட்ட பல தமிழ் அகராதிகளில் காணப்பட்ட மேனாட்டவர் தமிழகரவரிசையினைக் கைக்கொள்ளாது, மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளது. ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையிலான அறிஞர் குழுவின் ஆராய்வு காரணமாகவே பதினெட்டிற்கும் அதிகமான தமிழ் அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட தவறான மேனாட்டவர் தமிழகரவரிசை கைவிடப்பட்டு, இரண்டு அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த அகரவரிசையினைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஜே.எஸ்.சாண்டிலர் அவர்கள் சில பக்கங்களுடன் தமிழ் லெக்சிகனின் முன்மாதிரிகளை அச்சிட்டு Oxford University, Cambridge University போன்ற மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிடமும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் போன்ற பல தமிழ்ச் சங்கத்துத் தமிழ் அறிஞர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்பட்டுள்ளார்.

6. தமிழ் லெக்சிகன் முன்னுரையில் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கவனக்குறைவு.

1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அகரவரிசைப்படுத்தல் முறைகள் புழக்கத்தில் இருந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளவில்லை. மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசைப்படுத்தல் ஏன் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் தரவில்லை. இதற்குக் காரணம் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தன்னளவில் ஒரு சிறு தமிழ் அகராதியையேனும் உருவாக்காதவர், அகராதியியல் உத்திகள் எதையும் அறிமுகப்படுத்தியவருமல்லர். 

1926இல் தமிழ் லெக்சிகன் திட்டத்தில் இணைவதற்கு முன்னர், 1922இல் அவர் பதிப்பித்த மனோன்மணியம் பதிப்பின் இறுதியில் தரப்பட்ட பின்னிணைப்பு IIஇல் உள்ள அரும்பதவிளக்கத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியவர், பின்னர் 1938இல் புறத்திருட்டு பதிப்பிலும், 1943இல் திருமுருகாற்றுப்படை பதிப்பிலும் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, தன்னளவில் ஆரம்பத்தில் அகரவரிசைப்படுத்தலில் தவறான ஒரு முறையை அவர் கையாண்டிருப்பதை உணர்ந்த காரணத்தினாலேதான், பின்னர் மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுக்கு மாறியுள்ளார்.

ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்று அறியப்பட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்ட ஒரு தேர்விற்கு/கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் மிகப்பொருத்தமான விடையாகாதென்பதை உணர்ந்தவராகவே இருந்திருக்கவேண்டும். பலவித விடைகள் கிடைக்கின்றன அல்லது பலவித முறைகள் இருக்கின்றன என்பது தெளிவின்மையின் அடையாளம். இதனைக்கூறும் "ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை" என்ற பழமொழியும் தமிழர்களிடம் புழக்கத்தில் உள்ளது. அவ்வாறு ஒரே ஒரு விடையை அறியமுடியாதவிடத்து, அவ்விடயம் தொடர்பில் துறைபோகிய பல்வேறு தரப்பினருடன் தர்க்கரீதியில் உரையாடல் செய்யப்படுமிடத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுடன் ஒரு தனித்துவமான விடையைக் கண்டறிந்திருக்கலாம். எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசையை அறிவியல் ரீதியாக விளக்கங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கவேண்டிய பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்தவர், ஏனோ அவர் அதனைச் செய்யவில்லை. 

முறையான தமிழ் அகரவரிசை என்பது தரப்பாடு செய்யப்படாத காரணத்தினால் 1936இற்குப் பின்னரும் பல தமிழ் அகராதிகள் மேனாட்டவர் தமிழகரவரிசையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் அறிந்தவரையில் 30 தமிழ் அகராதிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம்.  

7. தமிழ் அகரவரிசை எது சரியென்பதை தமிழக, ஈழ அறிஞர்கள்தானே தீர்மானிக்க வேண்டும். 

மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியான அகரவரிசையென்பதாக 1968இல் வெளியான A Dravidian etymological dictionary என்ற அகராதியின் முன்னுரையில் அந்நூலின் ஆசிரியர்களான T. Burrowவும் M.B. Emeneauவும்,
It is to be noted that we have seen no reason to follow the Tamil Lexicon’s idiosyncratic non-alphabetic ordering of kk before k followed by vowel, and the like: our order is strictly alphabetic.

என்று கூறியுள்ளார்கள். அதாவது தமிழ்மொழியின் அகரவரிசை எது சரியானது என்பதைக் கூறுபவர்களாக மேனாட்டவர்கள் உள்ளார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத மேனாட்டவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட இக்கூற்றுக்கு இன்றையவரையில் எந்தவொரு தமிழறிஞரும் பதில் தரவில்லையென்பதும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது செயற்பட்டுவரும் தமிழ் லெக்சிகன் திருத்தப்பதிப்புக் குழுவும் பதில்தராது வாய்மூடிமௌனியாக இருப்பதும் கவலைதரும் விடயமாகும்.

8. பேசாப்பொருளாக தமிழ் அகரவரிசை.

உண்மையில் தமிழ் அகரவரிசை எது சரியென்பது பேசாப்பொருளாகவே உள்ளது. 2000ஆம் ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்களின் Col-porul - A History of Tamil Dictionaries என்ற 908 பக்கங்களைக் கொண்ட நூலிலும் தமிழில் மரபார்ந்த அகரவரிசை, மேனாட்டவர் அகரவரிசை, மிகத் தவறான அகரவரிசை என்று ஒன்றிற்கு மேற்பட்ட அகரவரிசை முறைகள் புழக்கத்தில் உள்ளதென்பது பேசப்படவில்லை. தமிழ் அகராதிகளின் வரலாற்றைக்கூறும் நூலில், அகராதியியலின் அடிப்படையான அகரவரிசையைப் பற்றிப் பேசப்படவில்லையென்பது - கவனக்குறைவு என்று எளிமையாகக் கடந்துசெல்லக்கூடிய விடயமல்ல. 1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடக்கம் 2000இல் தமிழ் அகராதிகளின் வரலாற்றை எழுதிய கிரகரி ஜேம்ஸ் வரையில் பலரும் தமிழ் அகரவரிசை தொடர்பில் எழுதாமல், ஆராயாமல் இருப்பது வியப்பைத் தருவதாக உள்ளது. 

மேனாட்டவர் தமிழ் அகராதித்துறையில் செய்துள்ள பணிகளைப் புறந்தள்ளி விடமுடியாது, ஆனால் அவற்றைத் தமிழ் என்ற வீட்டின் புறத்தோற்றத்தைப் பல வித நிறங்களால் அழகுபடுத்திக்கொள்வதைப் போன்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மொழியின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளி மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியானது என்ற வாதத்தை வைப்பது, தமிழ் என்ற வீட்டின் அத்திவாரத்தில் சிதைவை ஏற்படுத்துவதாக அமையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் இதனை அனுமதிக்கமுடியாது. 

தற்செயலாகவோ, திட்டமிட்ட ஒரு மறைநிரலிலோ, அறியாமை  காரணமாகவோ பல்வேறு இடங்களில்/பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளிய செயல்கள் கடந்தகாலங்களில் நிகழ்ந்துள்ளதையும், தற்போதும் நிகழ்ந்து வருவதையும் நாம் காணலாம்.

மேனாட்டவர் தங்கள் தன்னிச்சையான எண்ணப்படி தொல்காப்பிய, வீராசோழியம்,  நன்னூல் வழிப்படுத்திய "மொழிமுதல் எழுத்துகள்" என்பதைக்  கவனத்தில் கொள்ளாது தமிழ் மொழியில் முதல் எழுத்தாக வராது என்று கூறப்பட்ட எழுத்துகளில் தொடங்கும் சொற்களையும் இணைத்து வரிசைப்படுத்தினர். எடுத்துக்காட்டாக ட, ர, ல வரிசையில் தொடங்கும் சொற்களை ரொட்லர், வின்ஸ்லோ போன்றவர்களின் அகராதிகளில் காணலாம். நா.கதிரவேற்பிள்ளை தனது தமிழ்ப் பேரகராதியில்(1899) மொழிமுதல் வராத, “வ்” என்ற மெய்யெழுத்தில் தொடங்கும் பதினான்கு சொற்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

இணையமாநாடுகளை நடத்திவரும் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழக அரசினால் 1999ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “தமிழ்99” (தமிழக அரசாணை - G.O.Ms.No.17 - dated: 13 June 1999) என்ற கணினித் தமிழ்த் தட்டச்சு முறையும் தமிழ் எழுத்துகளின் சிறப்பைச் சிதைக்கும் ஒன்றாகும். இதில் அகரமேறிய உயிர்மெய்யெழுத்துகளுடன் மீண்டும் உயிரெழுத்துகள் சேர்வதன்மூலம் உயிர்மெய்யெழுத்துகள் தோற்றம் பெறுகின்றனவாகக் காட்டப்படுகின்றன.இங்கு வரிசைப்படுத்தல் இல்லையெனினும் தமிழ் எழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படைக் கட்டமைப்புத் திரிக்கப்படுகிறது.

இன்றைய கணினி யுகத்தில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழ் அகரவரிசையினைச் சிதைப்பதாகவுள்ளன. தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia - https://ta.wikipedia.org), Microsoft போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களிலும், ஈழத்தில் இயங்கிவரும் நூலகம் நிறுவனமும் (http://noolaham.org) புதியதொரு தமிழ் அகரவரிசையினைக் கைக்கொள்பவர்களாக உள்ளார்கள். இவர்கள் மேனாட்டவர் தமிழகரவரிசையில் மேலதிகமாக வடமொழி “ஜ” எழுத்து வரிசையில் தொடங்கும் சொற்களை சகர வரிசைக்கும் ஞகர வரிசைக்கும் இடையில் வைத்து வரிசைப்படுத்தும் ஒரு கலப்பு அகரவரிசைப்படுத்தலைப் பயன்படுத்துகிறார்கள்.

2017இல் இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளூடாக் & தமிழ் நூல் விபரப்பட்டியல் என்ற மொழிபெயர்பு நூலின் முன்னுரையில் அகரவரிசை தொடர்பில் பதிப்பாசிரியர் க.இரகுபரன் தந்திருப்பதைப் பார்க்கலாம், 
சைமன் காசிச்செட்டி தாம் ஆங்கிலத்தில் எழுதிய சரித்திரத்தில் புலவர் வரிசையை ஆங்கில நெடுங்கணக்குக்கு அமைவாக நிரற்படுத்தி விபரங்களைத் தொகுத்தளித்தார். இத்தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதே ஒழுங்கிலேயே புலவர் வரிசை அமைகிறது. ஆனால், தமிழ் நெடுங்கணக்கின் வரிசை, ஆங்கில நெடுங்கணக்கின் வரிசையிலிருந்து வேறுபட்டது. யாரேனும் ஒரு புலவர் பற்றி அறிய விழைபவர்கள் தமிழ் நெடுங்கணக்கின்படி தேட முற்படின், அந்த ஒழுங்கு இதில் இல்லாததால் இடர்ப்படக்கூடும். ஆதலால், பொருளடக்கத்தில் புலவர் பெயர்களை முதலில் ஆங்கில எழுத்திலும் அடுத்து தமிழ் எழுத்திலுமாகத் தந்துள்ளோம். புலவர்கள் பற்றி அறிய முற்படுபவர்கள் ஆங்கில நெடுங்கணக்கின்படி புலவர் விபரங்களைத் தேடிப் படிப்பார்களாக.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகம் யாருக்கானது என்றால் உறுதியாகத் தமிழர்களுக்கானது அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கானது என்று கூறலாம். தமிழர்களுக்கான தமிழ்ப் புத்தகத்தில் ஆங்கில அகரவரிசையில் ஏன் வரிசைப்படுத்தவேண்டும்? தமிழ்ப்பதிப்பு என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் க.இரகுபரன் அவர்கள் உரிய முறையில் அணுகவில்லையென்பதை  வெளிப்படுத்துவதாக இப்புத்தகம் அமைகிறது. இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள அட்டவணையில் முதலாவதாகவுள்ள புரேயன்சாவின் தமிழ்-போர்த்துகீசிய அகராதியில் போர்த்துக்கீசிய அகரவரிசையில்[P] தமிழ்ச்சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகராதியானது போர்த்துக்கீசியர்களை இலக்கு வைத்து அவர்களுக்காக உருவாக்கப்பட்டதென்பதால் அங்கு போர்த்துக்கீசிய அகரவரிசை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க, 
தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே
 

"மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்" என்று சேர்ந்துவரும் சொற்றொடர் எதனை உணர்த்துகிறதென்பதைப் புரிந்துகொள்வது நல்லது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் அஃது பல இடங்களில்  பொருள் பொருந்தாது விலகிப் போகும் தன்மை ஏற்படலாம், எனவே சற்று மேம்பட்டு, வருமொழியான தமிழிற்குரிய நடையையும், மரபையும் உள்ளடக்கிய தன்மையுடன் அமைத்திருத்தல் வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழியின் மரபில் அகரவரிசைப்படுத்தலும் அமைத்திருக்கவேண்டும், 196 தமிழ்ப் புலவர்களின் பெயர்களை தமிழ் அகரவரிசையில் தந்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர் திருவேணி சங்கமம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்ததை, பதிப்பாசிரியர் க.இரகுபரன் அவர்கள் அதர்ப்படயாக்கத் தவறியுள்ளார். 

9. மரபார்ந்த அகரவரிசைக்கு மாற்றப்பட வலியுறுத்துகிறோம். 

இவ்வாறு தனிநபர்-பாமரர் தொடக்கம் அறியப்பட்ட ஆய்வாளர், கல்வி நிறுவனம், அரசு நிறுவனம், வெளிநாட்டு அமைப்புகள் என்று பல்வேறு மட்டங்களில் தமிழ் அகரவரிசை மீறல்கள் நடைபெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. இவையாவும் எதிர்காலத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பாதிப்பவைகளாக அமையலாம். தமிழ் மொழியின் சிறப்பென்பது தொல்காப்பிய வழிகாட்டலின்படியான முதன்மை முப்பது எழுத்துகளில் இருந்து தொடங்குவதாக நாம் எண்ணுகிறோம். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ள பனம்பாரனாரின் “மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” எனும் தொடர் இதனை வெளிப்படுத்தப்படுவதாகக் கொள்ளலாம். செம்மொழியான தமிழ்மொழியில் தவறான அகரவரிசைப்படுத்தல் முறைகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது, தமிழ் மொழியின் சிறப்பைக் குறைக்குமொரு செயலாகும். எனவே கடந்தகாலத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையில் உருவாக்கப்பட்ட நோக்குநூல்களை மீளவும் பதிப்பிக்குமிடங்களில் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்துவதாகவும், கணினி சார்ந்த குறியேற்றங்கள், தமிழ் இணையத்தளங்கள் யாவற்றிலும் மரபார்ந்த தமிழகரவரிசை பயன்படுத்தப்படும்  மரபு உருவாக்கப்படவேண்டும்.

தமிழ் அகரவரிசை எது மிகச்சரியானது என்பதை துறைசார் வல்லுநர்களின் துணையுடன் ஆராய்ந்து கண்டறிந்து, அதனைத் தரப்பாடாக அறிவித்து அரசாணை ஒன்றைத் தமிழ் அரசுகள் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையினையும் இத்தால் முன்வைத்து எமது கட்டுரையை நிறைவுசெய்கிறோம். 

  •  

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)



மீள்பதிப்பின் முன்னுரை

‘‘திருட்டாந்த சங்கிரகம்” என்ற தமிழ்த் தலைப்புடனும் ‘‘A Collection of Proverbs in Tamil  with Their Translation In English” என்ற ஆங்கிலத் தலைப்புடனும் பேர்சிவல் பாதிரியாரால், 1843இல், யாழ்ப்பாணத்தில், அமெரிக்கன் மிஷன் வெளியீடாகத் தமிழ்ப் பழமொழிகள் அச்சில் கொண்டுவரப்பட்டது. திருட்டாந்த சங்கிரகம் என்பதைச் சுருக்கமான எடுத்துக்காட்டு என்று பொருள் கொள்ளலாம்.  அதுவரை காலமும் வாய்மொழி இலக்கியமாக தமிழ் மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பழமொழிக்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டு, முதல்முறையாக அச்சுவாகனமேறி நூல்வடிவம் பெற்றுள்ளது.

பேர்சிவல் பாதிரியார் தனது மறைதிருப்பணியை 1826ம் ஆண்டில் (Findlay, George G, Holdsworth William West,  1924, The history of the Wesleyan Methodist Missionary Society) திருகோணமலையில் தொடங்கியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் 1826இல் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு வந்துள்ளதாகத் தனது முன்னுரையில்(1874) குறிப்பிடுகிறார். யாழ்ப்பாண அமெரிக்கன் மிஷனரியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த பேர்சிவல் பாதிரியார், அமெரிக்கன் மிஷனறியைச் சேர்ந்த ஜோசப் நைற் (Joseph Knight) அவர்களால் தொடங்கப்பட்டு, லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) அவர்களால் ஈழத்துத் தமிழ்ப் பண்டிதர்கள் துணையுடன் நிறைவு செய்யப்பட்ட A manual dictionary of the Tamil language என்ற கையகராதித்(மானிப்பாய் அகராதி/யாழ்ப்பாண அகராதி) தொகுப்பிலும் பங்குபற்றியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் ஈழத்திற்கு வந்து பத்தாண்டுகளிற்குள்  தமிழ் மொழியில் நிறைந்த அறிவைப் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே அவரால் கையகராதித் தொகுப்புப் பணியிலும், திருட்டாந்த சங்கிரகம் மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடமுடிந்துள்ளது. 

1830-1832 இடைப்பட்ட காலத்தில் கல்கத்தாவில் பணியாற்றிய மூவாண்டு காலம் தவிர்த்து, 1826-1851 வரையில் அவர் ஈழத்தியிலேயே நிலைகொண்டிருந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படக் காரணமானவர் பேர்சிவல் பாதிரியார். இக்கல்லூரிகள் தொடர்பான ஆவணங்களில் இவர் பற்றிய குறிப்புகள் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன. 1842இல் யாழ்ப்பாணத்தில் கையகராதி வெளியிடப்பட்டது. அம்முயற்சியில் பேர்சிவலின் பங்களிப்பைப் பற்றிய பதிவுகள் American Board of Commissioners for Foreign Missions மூவாண்டுக் குறிப்பு ஆவணங்களில் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலை (இன்றைய யாழ்.போதனா வைத்தியசாலை) தோன்றுவதற்குக் காரணமான ஆபத்துதவிகள் சங்கத்தின் (Frind-in-need Society) தோற்றம் தொடர்பில் உதயதாரகைப் பத்திரிகைச் செய்தியிலும் பேர்சிவல் குறிப்பிடப்படுகிறார். John H Martyn அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட Notes on Jaffna என்ற நூலிலும் பேர்சிவல் பற்றிய செய்திகள் உள்ளன. இவை யாவும் பீற்றர் பேர்சிவல் 1826-1851 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 25 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தில் பேர்சிவல் பாதிரியார் மேற்கொண்ட கல்விப்பணிகளைப் பற்றி  ஜெ.இராதாகிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
“கல்வி மதப்பிரச்சாரத்திற்கு அப்பாற்பட்டது, உயர்வானது எனப் பெர்சிவல் கருதினார். இதனால் தமது சபையினருடன் ஏற்பட்ட உராய்வில் 1851இல் அச்சபையுடனான உறவை முறித்துக்கொண்டு இலண்டன் சென்றுவிட்டார். எனினும் இவர் யாழ்ப்பாணத்தில் செய்த கல்விப்பணி தலைமுறை கடந்தும் பயன்தந்தது. 19ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ்ச் சமூகத்தை இலக்கிய நிலையாலும், சமூக நிலையாலும் மேம்படுத்தியது. விடுதலைக்குப் பிந்தைய சுதந்திர இலங்கையில்(1948) சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் பெரும்பான்மையான சிங்களவர்களைவிட விரிவான கல்வியறிவும், பல்வேறு அரசு உயர்பதவிகளில் இருக்கவும் செய்தது. இந்நிலைப்பாட்டிற்கு, மேற்படி கிருத்துவ நிறுவனங்களின் பங்களிப்பும் டாக்டர் பெர்சிவலின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”  (பக்கம் - 152)  
“மதம் பரப்புவதற்காக வந்து, இந்திய-தமிழ் இலக்கியங்களில், பண்பாட்டில் தங்களைத் தொலைத்த பல்வேறு ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கும் டாக்டர் பீட்டர் பெர்சிவல், பல நிலைகளில் தமிழியலில் தனது இருப்பை ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். அவற்றில் அறிந்தோ அறியாமலோ அவர் செய்த நன்மைகளில் குறிப்பிடத்தக்கது, ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தமிழக வருகைக்குக் காரணமாக இருந்தமை. அவர்களிருவரின் ஆரம்பகால ஆளுமை உருவாக்கத்தில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈழ அறிஞர்களின் மீதான மதிப்பு தமிழகத்தில் இவர் மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டது. 
பிற்காலத்தில் மேற்படி இருவரின் பதிப்புப் பணிகளுக்கும், ஆறுமுகநாவலரின் சமயப்பரப்புரைக்கும் பெர்சிவலே ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளார்.”
(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு. பக்கம் - 159, 160) 

பேர்சிவல் பாதிரியாரின் கல்விப்பணிகளால் நிரந்தர நன்மைகளைப் பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தவர்களாவர். நாம் அவரது வழியில் தமிழியலுக்கு பணியாற்றவேண்டிய பாத்தியதையுள்ளவர்களாக இருக்கிறோம்.

1854 தொடக்கம் 1882இல் இறக்கும் வரை பீற்றர் பேர்சிவல் தமிழ்நாட்டில் நிரந்தரமாகவே  வாழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர் இவரே. மாநிலக்கல்லூரியின் கீழைத்தேய மொழியியல் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அன்றைய சென்னை மாகாண பொதுக்கல்வித்துறையின் ஆலோசகராகப் பணியாற்றுகையில்  பொதுக்கல்வித்துறைக்கு பாடத்திட்டங்கள், வரைபடங்கள் தயாரித்துள்ளார். சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகளையும் உருவாக்கியவர். சதுரகராதி 1860ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோது ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.  தினவர்த்தமானியின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவ்வாறு பல்வேறு நிலைகளில் அவர் புரிந்த பணிகளைப் பற்றிய ஆவணப் பதிவுகள் உள்ளன. 

திருட்டாந்த சங்கிரகம் தொகுத்தல் பணியை பீற்றர் பேர்சிவல் ஈழத்தில் வாழ்ந்தபோதே நிறைவேற்றினார். இதில் காணப்படும் பழமொழிகளில் பெரும்பான்மையானவை ஈழத்தில் வழக்கில் இருந்தவை என்று எடுத்துக்கொள்ளலாம். 1870 பழமொழிகளுடன் வெளியிடப்பட்டஇந்த முதற் பதிப்பானது அதன் பின்னர் மீளவும் அதேவடிவில் அச்சில் கொண்டுவரப்படவில்லை. 

1851இல் ஈழத்தில் இருந்து இலண்டன் திரும்பிய பேர்சிவல் பாதிரியார் 1854இல் தமிழகம் சென்று தனது மறைதிருப்பணியைத் தொடர்ந்துள்ளார். சென்னையில் 1855இல் ஆரம்பிக்கப்பட்ட தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர்ப்பணி, மறைதிருப்பணி என்பனவற்றோடு பழமொழிகளைத் திரட்டும் வேலையை மீண்டும் தொடர்ந்துள்ளார். தினவர்த்தமானி பத்திரிகை அறிவிப்பினூடாக பொதுமக்களிடம் இருந்து பழமொழிகளைப் பெற்றுக்கொண்டார்.

‘‘Tamil Proverbs with their English Translation” என்ற ஆங்கிலத் தலைப்புடன்  தமிழ்ப் பழமொழித் தொகுப்பு பேர்சிவல் பாதிரியாரால் தினவர்த்தமானி வெளியீடாக 1874இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 6156 பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. 1843 பதிப்பிற்கும் 1874 பதிப்பிற்கும் இடையிலான வேறுபாடுகள் இதுவரையில் எந்தவொரு ஆய்வாளராலும் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. 

பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த குறைபாடுகள், விடுபடல்கள் பற்றிய தகவல்களை அவர் முன்னுரையில் (1874) சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கில விளக்கம் சிலவிடங்களில் மூலத்தின் உண்மைக்கருக்களிற்கு மிகவும் நெருங்கி வரவில்லையென்பதை அவர் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். பழமொழிகளைப் போன்றே தோற்றம் தரும் நீதிவாசகங்கள், உவமைகள், திருக்குறளின் பகுதிகள், விடுகதைகள், வழக்காறுகள் இன்னபிறவற்றையும் அவர் பழமொழிகளாகக் கருதித் தொகுப்பில் இணைத்துள்ளார். 1850களில் நிலவிய அறிவார்ந்த நிலையை(intellectual level) எண்ணிப் பார்க்கும்போது, இதனை ஒரு குறையாக இன்று நாம் சொல்லமுடியாது, இவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்திப் பாதுகாத்தமைக்கு பேர்சிவல் பாதிரியாருக்கு நாம் நன்றி கூறவேண்டும். 

பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்தம் ஐரோப்பியர் தமிழ்ப்பணி (2003, சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) என்ற நூலில் பீற்றர் பேர்சிவல் கூறியவற்றின் நீட்சியாக அமையும் மேலதிக விளக்கங்களைத் தந்துள்ளார். சி.இளங்கோவின் பழமொழித் தொகுப்புகள் 1842-2000 என்ற நூலும்(2003, பல்கலைப் பதிப்பகம்), ஜெ.இராதாகிருஷ்ணனின் டாக்டர் பீட்டர் பெர்சிவல் என்ற தலைப்பிலான கட்டுரையும்(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு) எமது கவனிப்பிற்குரியவை. இம்மூன்று ஆய்வாளர்களும் கூறியவற்றை மீளவும் கூறுவதைத் தவிர்த்து அவர்கள் மூவராலும் பேசப்படாதனவற்றையும் அவர்களுடைய தவறுகளையுமே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

‘‘Almost immediatly after my arrival in this country in 1826...”  என்று பேர்சிவல் பாதிரியார் 1874இல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறுவதை, பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரமும்(2003, பக்கம் 88), சி.இளங்கோவும்(2003, பக்கம் 31) மேற்கோள் காட்டியுள்ளனர். அம்மேற்கோள் தொடரை ‘‘பேர்சிவல் பாதிரியார் 1826இல் சென்னை வந்தடைந்தார்.” என இருவரும் பொருள் கொள்கிறார்கள். ஆனால் பீற்றர் பேர்சிவல் ‘‘this country” எனக் குறிப்பது இலங்கையையே ஆகும். 1874இல், பிரிட்டிஷ் இந்தியாவின் பாகமாகவே இலங்கையும் கருதப்பட்டது. இதனை உணராதவர்களாய் இவர்கள் தவறாகப் பொருள்கொண்டனர். 

மேலும், பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003) அவர்கள் 1843இல் வெளியான முதற்பதிப்பைப் பார்வையிடவில்லை என்றே நாம் கருதுகிறோம், 1874இல் வெளியான இரண்டாவது பதிப்பைத்தான் அவர் பார்வையிட்டுள்ளார். ஏனெனில் 1874 பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் குறிப்பிடும் விடயங்களையே அச்சொட்டாக மீளவும் குறிப்பிடுகிறார். 1843 பதிப்பில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் 1870, ஆனால் இரண்டாம் பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் ‘‘nearly nineteen hundred”  என்றே குறிப்பிடுகிறார், இதனைப்  பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003, பக். 88) ‘‘... அவர் 1900 பழமொழிகளைத் திரட்டி...” என்று கூறுகிறார்.

அடுத்ததாக மேற்கூறிய மூவரும் பேர்சிவல் பாதிரியார் அவர்கள் தமிழ்ப் பழமொழிகளை அகரவரிசையில்(நெடுங்கணக்கு) தந்துள்ளார் என்று மட்டுமே சொல்கிறார்கள், ஆனால் அகரவரிசையின் தன்மையை இவர்கள் நுணுகிக் கவனிக்கவில்லை. 1843இல் வெளியான பதிப்பில் பழமொழிகளின் முதல் எழுத்து மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க பின்னிணைப்பு - 2C, 2D), 1874இல் வெளியான இரண்டாம் பதிப்பில் பழமொழியின் முதற்சொல்லின் அனைத்து எழுத்துகளும் கவனத்திற்கொள்ளப்பட்டு அகரவரிசைப்படுத்த முயன்றுள்ளார் (பார்க்க பின்னிணைப்பு - 3C, 3D).  ஆனாலும் பல இடங்களில் வரிசைப்படுத்தலில் தவறுகள் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக உள்ளது. 

மேனாட்டவர்களாற் தொகுக்கப்பட்ட தமிழ்ப் பழமொழித்தொகுப்புகள் மூன்றை ஒப்பிட்டு, அவற்றின் பரிணாமவளர்ச்சியைக் காட்டும் அட்டவணை ஒன்றை ஆய்வாளர் சி.இளங்கோ தனது நூலின் 50ஆம் பக்கத்தில் தந்துள்ளார். இதில் பேர்சிவல் பாதிரியாரின் 1843பதிப்பில் இருமுறை வந்த பழமொழிகள் எதுவும் இல்லை என்பதாக அவரது அட்டவணை சொல்கிறது. ஆனால் உண்மையில் பேர்சிவல் பாதிரியார்  ‘‘ஏதாகுதல் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.(325, 409)”, ‘‘குருடனுக்கு வேண்டியது கண்.(676, 713)” ஆகிய இரண்டு பழமொழிகளைத் தனது 1843பதிப்பில் இரு இடங்களில் இணைத்துள்ளார். ஆய்வாளர் சி.இளங்கோ அவர்களினால் இதனைக் கண்டுபிடிக்கமுடியாமற் போனமைக்குக் காரணம் அவர் அகரவரிசைப்படுத்தலை நுணுகி ஆராயாது விட்டமையே. இவ்விரு பழமொழிகளும் அருகருகாக வரிசைப்படுத்தப்படாமல் வெவ்வேறு பக்கங்களில் இடம்பெற்றமையினால் சி.இளங்கோவின் பறவைப் பார்வைக்கு அகப்படவில்லை.  

மேலும் பேர்சிவல் பாதிரியார் பயன்படுத்திய அகரவரிசை என்பது, முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதியில் காணப்படும், வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார் என்ற மேனாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழகரவரிசை. இது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்றவாறு உள்ள ஒரு வரிசைப்படுத்தல். இது தமிழ் மொழியின் மரபான அகரவரிசையல்ல, எனவே பேர்சிவல் பாதிரியாரால் 1843இல் யாழ்ப்பாணத்திலும், 1874இல் சென்னையிலும் வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டையும் ஒன்றிணைத்து, மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுடன் (பார்க்க - தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும். பக்கம் XXIX) நாம் இப்பதிப்பினை உருவாக்கியுள்ளோம்.  

இவ்விடத்தில் பேர்சிவல் பாதிரியார் தொகுத்துப் பதிப்பித்தவற்றை, பிறிதானதொரு அகரவரிசைப்படுத்தலுடன் மீளவும் பதிப்பித்தல் மரபுமீறல் ஆகாதோ என்றும், ஏன் இரண்டு பதிப்புகளையும் ஒன்றிணைக்கவேண்டும் எனும் கேள்வியும் சிலருக்குத் தோன்றலாம். 

இதற்கான விடை - நோக்குநூல்கள் பல வகைப்படும். அகராதிகள், ஆய்வடங்கல்கள், கலைக்களஞ்சியங்கள், நூற்றொகைகள், தொகுப்புகள் ஆகியன நோக்குநூல்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்நோக்குநூல்களில் தரவுகள் பொருண்மையின் அடிப்படையில், காலவரிசையில், எண்வரிசையில் அல்லது அகரவரிசையில் அடுக்கப்படும். ஏன் இவ்வாறு அடுக்கப்படுகின்றன என்பதற்குக் காரணம், நோக்குநூல்களில் அடுத்தடுத்துக் காணப்படும் தரவுகள் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. 

நோக்குநூலான பழமொழித் தொகுப்பில், பழமொழிகளை அகரவரிசையில் அமைத்துத் தந்துள்ளார் பேர்சிவல் பாதிரியார். இது பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பட்டதன்று. நூலில் அடுத்தடுத்துக் காணப்படும் பழமொழிகளும் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. இவற்றை மரபார்ந்த தமிழகரவரிசையில் அடுக்கித் தருவதில் எந்தவித பொருள் இழப்பும் ஏற்படப்போவதில்லை.

ஒருவரால் சேகரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட தரவுகள் வேறொருவரால் பிறிதொரு ஒழுங்கில் வரிசைப்படுத்தியமைக்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பிக்கப்பட்டபோது,  ஓலைச்சுவடியில் தொகுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து முன்னேற்றங்கண்டு இன்று அச்சில் கிடைக்கும் நிலைக்கு வந்துள்ளது. அச்சில் வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் தங்களுடைய தமிழ் அறிவின் துணைகொண்டு சதுரகராதியின் அச்சுப்பதிப்பில்  மேம்படுத்தலைச் செய்துள்ளார்கள். இதனைத் தமிழ் லெக்சிகன் முன்னுரையில் (1936) எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள்
‘‘In these editions, the several meanings of a word are arranged in alphabetical order; but the manuscripts do not support this arrangement.” (பக்கம் XXXVII) 

என்று பதிவு செய்துள்ளார். தமிழ் அகராதிக்கலை(1965) என்னும் நூலில் பேராசிரியர் சுந்தரசண்முகனார்
‘‘ஆசிரியரால் ஒரு சொல்லுக்குரிய பொருள்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் பதிப்பாசிரியர்கள் அகரவரிசைப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.” (பக்கம் 379) 

என்று பதிவு செய்துள்ளார்.சதுரகராதியின் ஓலைச்சுவடிப் பதிப்பு, அச்சுப் பதிப்பு ஆகியவற்றில் இருந்து தாரம், வரி என்ற இரண்டு சொற்களையும் அவற்றிற்கான பொருள்விளக்கச் சொற்களையும் எடுத்துக்காட்டாக எஸ்.வையாபுரிப்பிள்ளை, சுந்தரசண்முகனார் ஆகிய இருவரும் தந்துள்ளார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் தமிழியல் ஆய்விதழின் 45வது இதழில் (June 1994) தமிழ் அகராதிகளின் அகர வரிசையும் அமைப்பும் - முதல் மூன்று ஒரு மொழி அகராதிகள் என்ற தலைப்பில் முத்துசண்முகன் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில்
‘‘இதனால் அடிகளார் தொகுத்த அகராதியின் உண்மை வடிவினைக் காண இயலாமற்போயிற்று” 

என்று ஆதங்கப்படுகிறார். இவ்வாறு ஆதங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை, ஏனெனில் குறைபாடுகள் உள்ள ஒரு பதிப்பைவிட முன்னேற்றமான தவறில்லாத பதிப்பே பெரும்பயன்தரும் ஒன்றாகுமல்லவா.

மேற்கூறப்பட்டவாறு சதுரகராதி அச்சுப் பதிப்பில் பின்பற்றப்பட்டதைப் போன்று இப்பதிப்பில் நாம் மரபார்ந்த தமிழ் அகரவரிசையில் பழமொழிகளை வரிசைப்படுத்தியுள்ளோம். இது எந்தவிதத்திலும் மரபு மீறல் ஆகாது. அகரவரிசைப்படுத்தலில் பேர்சிவல் பாதிரியாரின் முதற் பதிப்பைவிட இரண்டாம் பதிப்பு முன்னேற்றமுடையது, அதுபோன்று இப்பதிப்பு 1874 பதிப்பைவிட முன்னேற்றமுடையது.

பேர்சிவல் பாதிரியாரின் பதிப்புகளில் பழமொழி ஒவ்வொன்றிற்கும்  வழங்கப்பட்ட எண்ணும், அப்பழமொழி எந்தப் பக்கத்தில் இடம்பெற்றதென்பதும், பதிப்பாண்டும் இப்பதிப்பில் பகர அடைப்பினுள் தரப்பட்டுள்ளது. பேர்சிவல் பாதிரியாரின் பதிப்பு உண்மை வடிவினைக் காண விரும்புவோர், பகர அடைப்பினுள் குறிப்பிடப்படும் எண்களின் அடிப்படையில் பழமொழிகளை வரிசையாக அடுக்குவதன்மூலம் கண்டடையலாம். 1843பதிப்பில் இருமுறை இடம்பெற்ற பழமொழிகள் இரண்டு. 1333, 1536 ஆகிய இரு எண்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை, 637 என்ற எண் இரண்டுமுறை இடம்பெற்றுள்ளது, இவ்வகையில் 1843 பதிப்பில் இடம்பெற்ற பழமொழிகள் 1870 ஆகும். 

அடுத்து,  இரண்டு பதிப்புகளையும் ஏன் ஒன்றிணைத்தோம் என்பதற்கான விளக்கம். ஈழமும் தமிழகமும் கடலாற் பிரிக்கப்பட்டிருக்கும் இரு தமிழ் நிலங்கள். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு வழக்காறுகளும், உச்சரிப்புகளும் காணப்படுகின்றன. பேர்சிவல் பாதிரியாரின் 1843 பதிப்பானது யாழ்ப்பாணத்துப் பதிப்பாகவும், 1874 பதிப்பானது தமிழகத்துப் பதிப்பாகவும், அந்நிலங்களின் முதற்பதிப்புகளாகவும் இருப்பதனால் இரு பதிப்புகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது 150 ஆண்டுகளுக்கு முன்னர் இரு தமிழ்நிலங்களிலும் நிலவிய வழக்காறுகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிரவும் முதற்பதிப்பில் தரப்பட்டிருந்த 1870 பழமொழிகளில் இருந்து 1765 பழமொழிகளுக்கு இரண்டாம் பதிப்பில் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பினைச் செய்துள்ளார் பேர்சிவல் பாதிரியார், இதனால் இருவேறுவிதமான மொழிபெயர்ப்பையும் ஓரிடமாகப் பார்க்கலாம். 

இப்புதிய பதிப்பை உருவாக்கத் தொடங்கிய காலத்தில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்ற 90 விழுக்காடு பழமொழிகளுக்குப் பேர்சிவல் பாதிரியார் ஏன் மீண்டும் புதிய மொழிபெயர்ப்புகளைச் செய்தார் என்ற விடயம் எமக்குக் குழப்பம் தருவதாகவே இருந்தது. இந்நிலையில் பேர்சிவல் பாதிரியார் தொடர்பில் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பதாக அறிந்து அவரைச் சென்னையில் சந்தித்து உரையாடினோம். பேர்சிவல் பாதிரியார் சேகரித்த தமிழ்ப் பழமொழிகளை ஓலைச்சுவடியில் பதிந்து வைத்திருந்ததாகவும், அவ்வோலைச் சுவடியை மதுரை இறையியல் கல்லூரியின் ஆவணக்காப்பகத்தில் இன்றும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர்மூலம் அறிந்துகொண்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்து இலண்டன் சென்று தமிழகம் திரும்பிய பேர்சிவல் பாதிரியாரிடம் 1843இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட திருட்டாந்த சங்கிரகம் புத்தக வடிவில் இருந்திருக்கவில்லைப் போலும், தமிழ் ஓலைச் சுவடியையே பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். இதனாற்றான் அவரால் 1874பதிப்பு முன்னுரையில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்றிருந்த பழமொழிகளின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லமுடியவில்லை, புதிய ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு இடமுள்ளது.  

பேர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே தந்துள்ளார், ஆனால் சென்னைப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புடன் மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தருகிறார். 1874 பதிப்பில் உள்ள 6156 பழமொழிகளில் இருந்து 412 பழமொழிகளுக்கு மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தந்துள்ளார், இதில் 232 பழமொழிகள் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் உள்ளவை. ஈழத்தில் அவர் முதன்முதலாக இறைபணி தொடங்கிய இடம் திருகோணமலை என்பது 1072ஆம் இலக்கப் பழமொழிக்குத் தரும் கூடுதல் விளக்கத்தில் உள்ளது.
பேர்சிவல் பாதிரியாரினால் 1874இல் வெளியிடப்பட்ட பதிப்பு இதுவரையில் 6 தடவைகள் இந்தியாவில் மீளவும் அச்சில் கொண்டுவரப்பட்டுள்ள விபரத்தைக் கீழே தரப்பட்ட அட்டவணை மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. 1877  Tamil Proverbs with their English Translation. Higginbotham and Co, Madras.
2. 1996 Tamil Proverbs with their English Translation.(AES First Reprint) Asian Educational Services, New Delhi.
3. 2001 Tamil Proverbs with their English Translation.(AES Second Reprint) Asian Educational Services, New Delhi.
4. 2002 Tamil Proverbs with their English Translation.(AES Third Reprint) Asian Educational Services, New Delhi.
5. 2010 தமிழ்ப் பழமொழிகள் வசந்தா பதிப்பகம், சென்னை.
6. (2019) Tamil Proverbs with their English Translation. The Asian Publications,Royapettah, Chennai.

மேற்காட்டப்பட்டுள்ள பதிப்புகளில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் காணப்பட்ட வடிவத்திலான பழமொழிகள் இடம்பெறவில்லை. ஓர் எடுத்துக்காட்டினை மட்டும் பதச்சோறாக இங்கு குறிப்பிடுவோம்,

சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.
Though one carries a thousand conchs to Benares, his sin sticks to him. 
[1874 Edition - Number:3057 / Page:287]
சங்காயிரங்கொண்டு வங்காளம்போனாலுந் தன்பாவந் தன்னோடே.
Though one freights his vessel with a thousand Chanks and sails to Bengal his own crimes will accompany him.
[1843 Edition - Number:827 / Page:116]

இது நேரடிப்பொருள் தரும் ஒரு பழமொழி. யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள ‘வங்காளம்’ என்பது சென்னைப் பதிப்பில் ‘காசி’என்பதாக மாறுகிறது. ‘வங்காளம்’ ஏன் ‘காசி’யாக மாறியதென்பதற்குப் பின்னால் சுவைமிகு சமூக வரலாறு ஒன்று உள்ளது.

உதயதாரகைப் பத்திரிகையில் 1841ம் ஆண்டு வெளியான புதினச் செய்திகளைக் கொண்டு இதனை விளக்கலாம். 

1841ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி வெளியான உதயதாரகையில்
“காரதீவிலிருந்து கற்பிட்டிக்குப் போகவெண்ணின பயணக்காரர் மூன்றுபேரும் தவால்காரனுந் தோணி ஏறிப்போகையிலே காற்று எதிர்த்தடிக்க அந்த நாலுபேர்களுந் தொணியைப் பலனாகப் பிடித்திருந்தும் காற்றில் தோணி உலைவுகொண்டு அங்குமிங்கும் போகத் திரை எழும்பத் தவாற்காரன் கைவிட்டமிழ்ந்திறந்தான்.” 

என்ற புதினச் செய்தி பிரசுரமாகியுள்ளது.  அன்றைய நாட்களில் நீண்ட தூரப் பயணம் என்பது கடற்பயணம் ஆகும் என்பதை இச்செய்தியின் மூலம் நாம் ஊகிக்கலாம். இலங்கையின் கிழக்குக்கரைக் காரைதீவில் இருந்து மேற்குக்கரைக் கற்பிட்டிக்குச் செல்வதற்கான பிரயாண வழியென்பதே கடல் மார்க்கமாகவே இருந்துள்ளபோது, இந்தியாவில் உள்ள காசிக்குப் போவதென்பதும் கடற்பயணமாகவே இருந்திருக்கும். காசிக்கு அண்மித்ததான கப்பல் வழியென்பது வங்காள தேசத்தினூடகவே அமையும்.
“பருத்தித்துறைக்கு அருகான வல்லுவட்டித்துறையிற் செய்யப்பட்டும், சங்கேற்றிக்கொண்டு வங்காளத்திற்கு முதற் பயணம் போனதும், (௨௱௫௰) தொன் (Ton) பாரங்கொண்டதுமான படவொன்று சிறிதுநாட்களுக்குமுன் அடித்த புசலினாற் சென்னபட்டணத்திற் செதப்பட்டுப்போயிற்று.” 

ஈழத்தில் இருந்து வங்காளத்திற்கு கப்பல் மூலம் சங்கு வாணிபம் செய்யப்படுகிற ஒரு நிலையும் இருந்துள்ளதை 1841ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி உதயதாரகையில் வெளியான இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இவ்விரு செய்திகளினூடாக யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள மேற்குறித்த பழமொழியில் ‘வங்காளம்’ என்ற சொல் இடம்பெற்றது இயல்பானதென அறிந்துகொள்ளலாம். 

முதலிரு பதிப்புகளிலும் இடம்பெற்றவாறே பழமொழிகள் இப்பதிப்பிலும் இடம்பெறுகின்றன, அதாவது முதலிரு பதிப்புகளிலும் காணப்படுகிற தவறுகள் எதையும் திருத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. இதனை நாம் ஒரு ஆவணப் பதிப்பாகவே செய்துள்ளோம், ஆய்வுப் பதிப்பல்ல. 

பேர்சிவல் பாதிரியார் பழமொழிகளைத் தொகுத்தது வெளியிட்டது போன்று, ஈழத்தவர்கள் சிலரும் பிற்காலத்தில் பழமொழி நூல்களை வெளியிட்டுள்ளார்கள் என்ற செய்தியை சி.இளங்கோ தனது நூலில் பதிவு செய்துள்ளார். அவ்வாறு குறிப்பிடப்படும் வெளியீடுகள் பின்வருமாறு, 
  1. 1914 - பழமொழிப் போதனை - சி.ஆர்.சாஸ்திரி (பாடல் வடிவில்)
  2. 1916 - பழமொழித் தீபிகை - நாவலர் அச்சுக்கூடம் - பருத்தித்துறை வே.ஆ.சிதம்பரப்பிள்ளை (160 பழமொழிகளுக்கு விளக்கம்)
  3. 1932 - விவசாயம் பற்றிய பழமொழிகள் - சபாரத்தினசிங்கம்
தமிழில் வெளியான மிக முக்கியமான சில அகராதிகளின் தொகுப்பு முயற்சிகளிலும், பதிப்பு முயற்சிகளிலும் தோன்றாத்துணையாக உடன் நின்றவர் பேர்சிவல் பாதிரியார். ஆயினும் அவர் வெளியிட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டும் அவரது சுயமுயற்சியின் அறுவடை. எனவே அவரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பழமொழித் தொகுப்புகளை இணைத்து மீளவும் வெளியிடும் நல்வாய்ப்பினைப் பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகிறோம். 

இம்முன்னுரையில் தொகுப்பியல், அகராதியியல் நோக்கில் எமது கருத்துக்கள் சிலவற்றைக் கூறியுள்ளோம். இம் மீள்பதிப்பு முயற்சியில் எம்முடன் இணைந்து பணியாற்றிய நண்பர் அ.சிவஞானசீலன் பழமொழிகள் தொடர்பில் நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி வழங்கியுள்ளார்கள். இத்தொகுப்புப் பணியில் உதவிய நண்பர் முத்தையா வெள்ளையன் அவர்களுக்கும், ஆங்கிலப் பகுதியைச் செவ்வை பார்த்து உதவிய ஹாட்லிக் கல்லூரியின் ஆங்கில ஆசிரியரான ச. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பக்க வடிவமைப்பில் உதவிய கலைச்செல்வன், சிறீனிராஜ், சடகோபன் ஆகியோருக்கும், பேர்சிவல் பாதிரியார் கோட்டோவியத்தினை வரைந்து தந்த சௌந்தருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

விருபா குமரேசன்
13.11.2018

  •  

விஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....

புதிய சொல் : 04 - 2016 Oct-Dec
1. விஞ்ஞானமும் அகராதியும் – பதிப்புகள்
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தினால் நடத்தப்படும் இளங்கதிர் ஆய்விதழின் பத்தாவது ஆண்டுமலரில் ( 14.04.1958 ) பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரை முதன்முதலாக இடம்பெற்றது. இம்மலரின் ஆசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். அம்மலரின் 145 – 154 பக்கங்களில் இவ்வாராய்ச்சிக் கட்டுரை இடம்பெற்றபோது, அது 27 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் காணப்பட்டது. இதனையே நாம் முதலாவது பதிப்பாக எடுத்துக்கொள்கிறோம். 

ஏப்ரல் 1962 இல், செ.கணேசலிங்கன் அவர்களின் பாரதி புத்தகசாலை வெளியீடு – 1 என்ற அடையாளத்துடனும், சென்னையில் பாரி நிலையத்தின் விற்பனை உரிமையுடனும் சென்னையில் பதிப்பிக்கப்பட்ட ஈழத்து வாழ்வும் வளமும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் பதினோராவது கட்டுரையாக 106 - 116 பக்கங்களில் விஞ்ஞானமும் அகராதியும் இடம்பெற்றது. இந்நூலிற்கான கட்டுரைகளைத் தொகுத்தவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் என்பதை நூலின் முன்னுரை பெருமையாகச் சுட்டுகிறது. இந்நூலில் இக்கட்டுரையானது 26 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் உள்ளது. இதனை இக்கட்டுரையின் இரண்டாம் பதிப்பாகச் சொல்லலாம். 

புதிய சொல்லின் மூன்றாவது இதழ் வரை ( 2016 ஜூலை – செப்டம்பர் ) பத்துத் தடவைகளுக்கு மேல் இவ்விரண்டாம் பதிப்புக் கட்டுரையே பல்வேறு இடங்களில் இடம் பெறுகிறது.

2. இரண்டு பதிப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன ? 

இளங்கதிரில் வெளியான பதிப்பின்படி, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் 19வது பந்தியில் உள்ள நான்கு வரிகளூடாக நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் தமிழ் அகராதிப்பணியினையும், அதனைத்தொடர்ந்து வரும் 20, 21 ஆகிய இரு பந்திகளிலுள்ள முப்பத்தொரு வரிகளுடாக கு.கதிரவேல்பிள்ளை அவர்களின் அகராதிப்பணியினையும் எழுதியிருந்தார். 


ஈழத்து வாழ்வும் வளமும் நூலில் மேலே படத்தில் நிறமிட்டுக் காட்டப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டு குறித்த 19 வது, 20வது பந்திகள் இணைக்கப்படுவதன் மூலம் கு.கதிரவேல்பிள்ளை அவர்களும், அவரது அகராதிப்பணியும் மறைக்கப்படுகிறது, நா.கதிரைவேற்பிள்ளை வட்டுக்கோட்டைச் செமினரியின் மாணாக்கராக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்து அகராதி உருவாக்கியவராகக் காட்டப்படுகிறார். 

3. 54 ஆண்டுகளாகத் தொடரும் பதிப்பு வேறுபாடு

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் ஈழத்து வாழ்வும் வளமும் நூல் வடிவம் பெற்றுள்ளது. தொடர்ந்து குமரன் புத்தக இல்லதினால் 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் மீள்பதிப்பும் செய்யப்பட்டுள்ளது. மீள் பதிப்புகளுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மீள் பதிப்புக்கான முன்னுரைகளையும் எழுதியுள்ளார். 2016 பதிப்பில் ஈழநாட்டில் விஞ்ஞானமும் அகராதியும் என்ற புதிய  தலைப்புடன்,  உப தலைப்புகளுடன், படங்களுடன் வெளியாகியுள்ளது. 

இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் தமிழ்ப் பேராசிரியர் பலரை உருவாக்கியவராகவும், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் தோற்றுவித்த புலமைப் பாரம்பரியமே அவரின் மிகப் பெரிய சாதனையாகவும் பேசப்படும் நிலையில், பேராசிரியர் அவர்களின் மாணவர்களான வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை, பூலோகசிங்கம், தில்லைநாதன், சண்முகதாஸ், தனஞ்சயராசசிங்கம் போன்ற எவருடைய பார்வைக்கும் பதிப்பு வேறுபாடு தென்படவில்லையென்பதும், திருத்தப்படவில்லையென்பதும் வியப்பானதாகவே உள்ளது. 

புதிய சொல்லில் எழுதப்பட்ட அறிமுகத்தில் சொல்லப்பட்டது போல் “ இவரிடமிருந்த புறவயமாக விடயங்களை அலசி ஆராய்கின்ற பண்பு இவர் மாணவர்களிடமும் தொடர்ந்தது ” என்பதும், பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் குறிப்பிடும் “ பல்கலைக்கழக ஆசிரியர் என்ற முறையிலே பரந்த நோக்கினையும் உரத்த சிந்தனையையும் அவர் என்றும் தூண்டுபவராக விளங்கினார். பாடங்களைக் கற்பிப்பதோடும் விளக்குவதோடும் நின்றுவிடாது புதிய வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைதேடத் தூண்டுபவராகவும், புதிய கருத்து வெளியீடுகளின் பால் மாணவரை ஆற்றுப் படுத்துபவராகவும் திகழ்ந்தார்” என்பதும் மீள் உரையாடலுக்கு உட்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. 

ஈழத்து வாழ்வும் வளமும் ( 2001 பதிப்பு ) நூலில் இக்கட்டுரையினை 2006 இல் நான் முதன் முதலாகப் படித்து முடித்தவுடன், என் மனதில் தோன்றிய கேள்வி அகராதி தந்த ஈழத்தவர்களான வைமன் கதிரைவேற்பிள்ளையும், நா.சி.கந்தையா அவர்களும் ஏன் இடம் பெறவில்லை என்பதே, தொடர் தேடலில் கிடைத்தவைகள்தாம் இக்கட்டுரையினை எழுத உதவியவை.

4. பாடத்திட்டத்தில் விஞ்ஞானமும் அகராதியும்

2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தரம் 12 இற்கான இரண்டாம் தவணைக்குரிய கட்டுரைப் பகுதியில் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இதனை பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவ குழுவில் பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், திரு து.இராஜேந்திரம், கலாநிதி எஸ்.யோகராஜா, கலாநிதி வ.மகேஸ்வரன், திரு கே.இரகுபரன், திரு மொஹமட் ரமீஸ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பேராசிரியர் சி.தில்லைநாதனும், பேராசிரியர் அ.சண்முகதாஸும் பேராசிரியரின் புலமைப் பாரம்பரிய மாணவர்கள். 

இதன் தொடர் நிகழ்வாக க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வழிகாட்டி நூல்களிலும், கைநூல்களிலும் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் இரண்டாம் பதிப்பே இடம்பெற்றுள்ளது. இவ்வழிகாட்டி நூல்களின் ஆசிரியர்களின் அவசரமும், தமிழ்ப் புலமையின் தெளிவு வெளிப்படும் இடமாகவும் இது அமைகிறது.
எண் தலைப்பு ஆசிரியர் ஆண்டு
1. க.பொ.த உயர் தரம் தமிழ் தரம் – 12 புலவர் இளங்கோ 2009
2. கட்டுரை மலர் தரம் 12 – 13 கவிஞர் த.துரைசிங்கம் 2010
3. கட்டுரைத் தொகுப்பு தரம் 12 – 13 கவிஞர் த.துரைசிங்கம் 2010
4. க.பொ.த உயர்தரம் உரைநடைக்கோவை கட்டுரைகளும் வினாவிடைகளும் த.அஜந்தகுமார் 2011

பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவக் குழுவில் உள்ளவர்கள் கட்டுரையைப் பரிந்துரைக்கும்போது அதன் போதாமைகளை அறியவில்லை, ஆராயவில்லை ஏன் என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக ஈழத்தவர்களின் அகராதி முயற்சிகள் பற்றி இதனைவிட வேறு இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் இல்லையா என்பதும் உரையாடப்படவேண்டும். 

58 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதை இற்றைப்படுத்தாமல் இன்றைய தலைமுறை மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தின் ஊடாக கொடுப்பதன் மூலம் கடந்த 58 ஆண்டுகளில் ஈழத்தின் தமிழ் அகராதித் துறை எந்த இடத்தில் / எந்த நிலையில் உள்ளது தொடர்பிலான ஆய்வுகள் / கட்டுரைகள் இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்லும் ஒன்று எனவும் எடுத்துக்கொள்ள இடமுள்ளது. இற்றைப்படுத்தப்படாத இக்கட்டுரையின் மூலம் ஞானப்பிரகாசரின் வேர்ச்சொல் அகராதிச் சேகரங்களின் துணையுடன் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 களில் வெளியிட்ட தாவீது அடிகளாரும், தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து அகராதிகளை வெளியிட்டவருமான ந. சி. கந்தையா பிள்ளை அவர்களும்  இன்றைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படாமலே விடப்பட்டுள்ளார்கள். 


5. விஞ்ஞானமும் அகராதியும் - முதற் பதிப்பை அலசுதல்...

இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்பதை 25வது பந்தியில் கட்டுரையாளரே சொல்கிறார். இளங்கதிர் என்ற ஆய்விதழில் இது வெளியாகி உள்ளது, குறித்த இதழின் ஆசிரியர் கட்டுரையாளரின் மாணவர்  ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். இது உண்மையில் 1950 களில் நிலவிய அறிவுத்தள மட்டத்தில், அவசர கோலத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. பல தவறுகளும், போதாமைகளும், விடுபடல்களும் இதன்கண் உள்ளன. தவிரவும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் பெருவிருப்பிற்குரிய நாடகவியல், சாசனவியல், நாட்டாரியல் என்ற எல்லைக்கு வெளியே அமைந்த கட்டுரை. தனது விருப்பிற்குரிய பகுதியில் பேசப்படும் நிலையில் சிறப்பாகப் பணியாற்றிய பேராசிரியர், தமிழ் அகராதியியல் என்ற துறையில் போதிய கவனமும், ஆழமான அறிவும் கொண்டிருக்கவில்லை என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. 

தமிழ் அகராதியியலின் அறிவியல் கூறுகள் எதையும் பேராசிரியர் இக்கட்டுரையில் கூறவில்லை. தலைச் சொற்களை ( Head Words ) அடுக்கும் முறை, பொருள் விளக்கச் சொற்களை அடுக்கும் முறை, தமிழில் எத்தனை வகைகளில் சொற்களை அடுக்கும் முறைகள் உள்ளன, ஈழத்தில் எழுந்த அகராதிகள் அல்லது ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகளில் எந்த முறையில் சொற்களை அடுக்கியிருந்தார்கள், இது எந்த வகையில் தமிழகத்தில் எழுந்த அகராதிகளில் காணப்பட்ட சொற்களை அடுக்கும் முறையில் இருந்து வேறுபட்டிருந்தது, சொற்களை அடுக்குவதற்கு எது சிறந்த முறை, ஐரோப்பியர்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில் எந்த அடுக்குமுறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள், அவை தமிழ் எழுத்துக் கட்டமைப்பின் தன்மைக்கு ஏற்றனவா போன்ற அலசல்கள் எதுவும் இதில் இல்லை. 

உண்மையில் கடந்த காலத்தில் ஈழத்தில் எழுந்த அகராதிகள் \ ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அகராதிகலைக்கூறுகள் பலவுண்டு. அவற்றையெல்லாம் அறிவியல் ரீதியில் எடுத்துக்கூறாமலும் அலசாமலும், அகராதித்துறையில் ஈழநாடே தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியாய் நின்றது என்று எழுதுவது பலவீனமான ஒன்றாகவே நான் கருகிறேன். 

தவிரவும் கட்டுரையில் குறிப்பிடப்படும் பல மூல அகராதிகளை, புத்தகங்களை நேரடியாகப் பேராசிரியர் பார்வையிடவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

  • 5வது பந்தியில் சாமுவேல் பிஷ் கிறீன் ( Dr Samuel Fish Green ) என்பதாகக் குறிப்பிடுகிறார். Dr Samuel Fisk Green என்பதைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு பெயரை, அதுவும் மீன் என்ற தமிழ்ச்சொல்லிற்கு நிகரான ஆங்கிலப் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். ஒரே ஒருமுறையாவது ஏதாவது ஒரு புத்தகத்தில் டாக்டர் கிறீன் அவர்களின் ஆங்கிலப் பெயரைப் பார்வையிட்டிருந்தால் இது நிகழ்ந்திருக்காது. ( இன்றும்,  பேராசிரியரின் இக்கட்டுரையை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஈழத்து அகராதி தொடர்பில் கட்டுரைகள் எழுதும் சிலர்  Dr Samuel Fish Green என்றே எழுதிவருகிறார்கள்.
    Book about Samuel Fisk Green 
  • 10வது பந்தியில் ஞானச் சகோதரர் பிலிப்பு 1905 ம் ஆண்டு அளவை நூலொன்றை வெளியிட்டனர். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.
  • 10வது பந்தியின் இறுதியில் சின்னத்தம்பி என்பார் நில அளவை சாத்திரத்தைப் பழைய இலக்கண முறைப்படி சூத்திரங்களால் யாத்து ஒரு நூலை வெளியிட்டனர். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.
  • 13வது பந்தியில் பண்டிதர் சந்திரசேகரம் என்பார் ஒரு கையகராதியை ஆக்கினார். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை. அட்டையில் உள்ள A Manual Dictionary of the Tamil language என்பதையோ உட்புறத்தில் தமிழில் குறிப்பிடப்படும் பெயரகராதி என்பதையோ குறிப்பிடவில்லை. 
  • 14வது பந்தியில் உள்ள அவர் அதனை வரிசைப்படுத்தி நூல் ஆக்கினார் அது 1842ம் ஆண்டு வண எம்.வின்சிலோவால் வெளியிடப்பட்டது. - இதிலும் குறித்த நூலின் தலைப்பான English and Tamil Dictionary : contains all the more important words in Dr Webster's dictionary of the English Language என்பதைத் தரவில்லை.
  • 15வது பந்தியில் குறிப்பிடும் தமிழ்-ஆங்கில அகராதியின் தலைப்பான A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil என்பது தரப்படவில்லை.
  • 19வது பந்தியில் நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் ஓர் அகராதியை 1905ம் ஆண்டு வெளியிட்டனர். - இதிலும் குறித்த அகராதியின் தலைப்பைத் தரவில்லை, இவ்வகராதியையும் பேராசிரியர் பார்வையிடவில்லை என்றே நினைக்க இடமுண்டு. தவிரவும் சதாவதானியின் தமிழ்ப்பேரகராதியானது 1899 இல் வெளியாகியுள்ளது, ஆனால் பேராசிரியர் 1905 என்பதாகக் குறிப்பிடுகிறார். அகராதியின் தலைப்பையும் தராது, வெளியான ஆண்டும் சரியாகக் குறிப்பிடாமல், ஆனால் அது பிழையில்லாது தூயதாய் வெளிவந்தது என்ற சான்றிதழை எங்ஙனம் வழங்கிடமுடியும் ?
    தமிழ்ப்பேரகராதி
  • 24வது பந்தியின் பிற்பகுதியில் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இதுகாறும் தமிழ் அகராதி ஆக்குவோர் கைக்கொள்ளாத முறையில் ஓர் தமிழ்-ஆங்கில அகராதியை ஆக்க முயன்றார். -  இங்கும் குறித்த அகராதியின் தலைப்புத் தரப்படவில்லை, மேலும் An Etymological and Comparative Lexicon of the Tamil Language என்ற தலைப்புடைய இவ்வகராதியின் 6 பகுதிகள் முறையே 1938, 1940, 1941, 1943, 1944, 1946 ஆகிய ஆண்டுகளில், சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பேராசிரியர் சில பாகங்களை 1935 ம் ஆண்டு அச்சிட்டும் வெளியாக்கினார் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.
    An Etymological and Comparative Lexicon of the Tamil Language
  • 23வது பந்தியில் நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் ஆங்கில ஆங்கில தமிழ் அகராதியின் பதிப்பு ஆண்டு 1911 என்று தவறாகக் கொடுத்துள்ளார், உண்மையில் அவ்வகராதி 1907 இல் வெளியாகியுள்ளது. 
இதுகாறும் பேராசிரியர் குறிப்பிடாதுவிட்ட அகராதித் தலைப்புகளையும், வெளியான ஆண்டு விபரங்களில் உள்ள மாறுதல்களையும்  நோக்கினோம். 

15, 16வது பந்திகள் வண எம்.வின்சிலோ அவர்களால் வெளியிடப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதி பற்றியது. அதில் “இதுகாறும் வெளிவந்த அகராதிகளில் வெளிவராத பல முறைகள் அங்குள்ளன” என்பதாக மட்டுமே கூறியுள்ளார். அவை என்ன என்பதைப் பற்றிய விளக்கம் இல்லை.
16வது பந்தியினூடாக 

  1. ”நூலாசிரியர், புலவர், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்கள், தேவர் ஆகியோரின் பெயர் முதலியவையும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன” , 
  2. ”தமிழரின் சமயம், சாத்திரம், பழக்கவழக்கம் ஆகியன பற்றியுள்ள செய்திகளையும் அறிந்துகொள்ளலாம்” 
என்று கூறிவிட்டு, 17வது பந்தியில் “ஆகவே கிறிஸ்து சமயத்தைப் பரப்புவதற்கு ஒரு கருவி நூலாக எழுந்தபோதும் ஈற்றில் யாவருக்கும் பயன்படும் ஒரு பெருநூலாக அது முடிந்தது என்றவாறு கூறுகிறார். இதில் எவ்வளவு இரு துருவ வேறுபாடு ? கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கான கருவி நூலென்று குறிப்பிட்டுக் குற்றம் சாட்டும்போது, அதற்கான ஆதார உள்ளடக்கப் பதிவுகளைக் எடுத்துக் கூறவேண்டாமா ? 


C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி

வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். இதில் அ தொடக்கம் அனோர் வரையிலான 7967 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இது வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள்  உயிருடன் இருக்கும் காலத்தில் வெளியானதாகும். 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியான வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதியில் வைமன் கதிரைவேற்பிள்ளையவர்கள் எழுதிய முன்னுரையின்படி அவர் இதனை 6 தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டிருந்துள்ளதாக அறியமுடிகிறது. அவரது மறைவிற்குப் பின்னர் அகராதித் தொகுப்புச் சேகரங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திடம், வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களின் மகன் க.பாலசிங்கம் அவர்களாற் கொடுக்கப்பட்டு, அன்றைய காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பிலிருந்த தமிழ் வித்துவான்களின் துணையுடன் 1910, 1912, 1923 ஆகிய ஆண்டுகளில் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி என்ற பெயரிலேயே மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கம் இதனை வெளியிட்டிருந்த காரணத்தினால், இது பலராலும் தமிழ்ச்சங்க அகராதி என்று அழைக்கப்பட்டுள்ளது. ( தகவலுக்காக -  1998 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் மூன்று பாகங்களும் மீள் அச்சுச் செய்யப்பட்டபோதும், தொடர்ந்தும் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்ற பெயரிலேதான் வெளியிடப்பட்டுள்ளது. )
தமிழ்ச் சொல்லகராதி மீள் அச்சு 1998
விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் 20, 21 வது பந்திகளூடாக வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்களின் அகராதி பற்றிய விபரிப்புகள் உள்ளன. ஆனால் பல தவறுகளும் விடுபடல்களும் உள்ளதாகவே அதுவும் உள்ளது. 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட அகராதி பற்றிய செய்தி இல்லை. அது சங்க அகராதி என்ற பெயரோடு வெளிவந்தது என்று தவறான தகவலையே பதிவு செய்கிறார். தவிரவும் 1910 இல் முதற் பாகமும், 1923 இல் மற்றைய இரண்டு பாகங்களும் வெளிவந்தனவென்று, பதிப்பு ஆண்டையும் தவறாகவே குறிப்பிடுகிறார். இதனால் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையவர்கள் குறித்த அகராதியைப் பார்வையிடவில்லை என்ற ஒரு தோற்றப்படாடு ஏற்பட்டாலும், 1904 இல் வைமன் கதிரவேற்பிள்ளையவர்கள் தனது முன்னுரையிற் குறிப்பிட்ட அதே வாசகங்களை உள்ளடக்கி “மிகச் சிறந்த தமிழ் அகராதி எதுவும் தற்பவமாகவோ, தற்சமமாகவோ சங்கத மொழியிலுள்ள சொற்களை உள்ளடக்கவேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். இக்குறைபாட்டைத் தவிர அவர் அகராதி ஏனைய வகையிற் சிறந்து விளங்கிற்று“ என்றும் குறிப்பிடுவதனூடாக அவர் குறித்த அகராதியைப் பார்வையிட்டுள்ளார் என்ற முடிவிற்கும் வர இடமுள்ளது. தவிரவும் ஈழத்துக் குழூஉ இறையனாராக அறிவியலும் அகரமுதலியும் என்ற தலைப்பிலான கட்டுரையெனில் இக்குறைபாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும், ஆனால் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் இவ்வாறான குறைபாடு கூறுவது முரண்நகையாகும். ( விஞ்ஞானம் என்பது தமிழ்ச்சொல்லல்ல. | ஈழத்துக் குழுஉ இறையனார் என்பது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் புனைபெயர், தனித்தமிழ் எண்ணக்கருவில் அமைந்த பெயர். )

வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதி ( முதலாம் பாகம் ) என்ற பெயரில், 1904 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு அகராதி வெளிவந்ததென்பதை மறைத்து, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பெருமை சேர்க்குமாறு செயற்படவேண்டிய காரணம் என்னவென்றும் ஆராயவேண்டிய ஒன்றாகும். 

26வது பந்தியில் காணப்படும் “தமிழ் நாட்டில் நிகண்டுகள் எழுந்தன” என்ற வாசகமானது, ஈழநாட்டில் எழுந்த நிகண்டுகளான, 
  1. 1876 சிந்தாமணி நிகண்டு - வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை,
  2. 1889 நேர்ச்சொல் நிகண்டு - புலோலி சதாசிவம்பிள்ளை
ஆகியவற்றை பேராசிரியர் அறிந்திருக்கவில்லை, அதாவது ஈழத்தில் நிகண்டுகள் தோன்றியுள்ளவென அறிந்திருக்கவில்லை என்பதனாலேயே அவர் மேற்கண்டவாறு எழுதியுள்ளார். 

6. ஈழத்தில் அகராதித்துறையின் இன்றைய நிலை

இலங்கைத் தீவில் பேசப்படும் மற்றொரு மொழியான சிங்கள மொழியின் அகராதித்துறை எவ்வாறு தோற்றம் பெற்றது, இன்று எவ்வாறு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை http://www.dictionary.gov.lk/index.php?option=com_content&view=article&id=2&Itemid=104&lang=ta இணைப்பினூடாகத் தமிழில் பார்வையிட முடிகிறது. 1845 இல் ஆரம்பிக்கப்பட்ட றோயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக்கிளையில் இருந்து இன்றைய சிங்கள அகராதி அலுவலகம், அதன் படிமுறை வளர்ச்சி, அண்மைக்கால அவர்களது அகராதி வெளியீடுகள் வரை அறிந்துகொள்ள முடிகிறது. 

இதே நிலையில் தமிழில் அகராதித்துறைக்காக எந்தவொரு நிறுவனமும் தோற்றம் பெற்றதாகவோ செயற்பட்டதாகவோ தகவல்களில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் அகராதியியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு களம் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ் மொழியியல் அறிஞர்கள், பேராசிரியப் பெருந்தகைகள் என்று ஒரு சிலரைக்குறிப்பிட முடியும். ஆனால் lexicography என்ற அகராதியியல் துறையில் துறைபோகிய தொடர் செயற்பாட்டாளர், அறிஞர் என்று பெயர் குறிப்பிடும்படி எவரும் இல்லை என்ற உண்மையை கசப்புடன் ஒத்துக்கொள்ளும் நிலைதான் உள்ளது. ஈழத்தில் கடந்த காலங்களில் கோலோச்சிச் சாதனை படைத்த கல்வித்துறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் அகராதித்துறையை கவனத்தில் கொள்ளாதுவிட்டது கவலைக்குரிய விடயமே. 2005 இல் வெளியான ஈழத்துத் தமிழ் சிறப்புச் சொற்கள் என்ற அகராதியைத் தந்த பேராசிரியர் சுபதினி ரமேஷ் அவர்கள் நீங்கலாக இன்றளவும் ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் யாவும் கல்வித்துறைக்கு வெளியில் உள்ளவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 

நானறிந்தவரையில் 200 இற்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு நூல் ஈழத்து வாழ்வும் வளமும். இன்றும் அதன் தேவை இருக்கிற காரணத்தினாற்றான் நான்காவது பதிப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. ஈழத்தின் அகராதி முயற்சிகள் தொடர்பில் கட்டுரை வரையும் எவருமே இக்கட்டுரையை மேற்கோள் காட்டத்தவறுவதில்லை. ஆனால் யாருமே இக்கட்டுரையின் போதாமைகளை, தவறுகளைப் பொதுவெளியில் சுட்டி எழுதவில்லை. 
பாடத்திட்டத்தில் கட்டுரை இணைக்கப்பட்ட காரணத்தினால் இலங்கை முழுவதும் உள்ள தமிழாசிரியர்கள், குறிப்பாக தரம் 12-13 இற்குப் பாடம் சொல்லித்தரும் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையைக் கற்பிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனை ஆசிரியர்கள் கட்டுரையின் குறைபாடுகளைத் தெரிந்துகொண்டார்கள் ? பொதுவெளியில் அல்லது தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்கள் ? என்பதும் அறியமுடியவில்லை. 

மேலும் இக்கட்டுரையினைப் பாடத்திட்டத்திற் பரிந்துரைத்த பெருந்தகை யாரென்பதைத் தெரிந்து கொள்வதற்காக தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவை மின்-அஞ்சலில் 2016 ஜனவரியில் தொடர்புகொண்டபோதும், இன்றுவரை பதில் இல்லை. 

இந்நிலையில் புதிய சொல் மீள் உரையாடல்களுக்குக் களம் அமைத்துள்ளதை நான் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறாக கடந்த காலங்களில் வரையப்பட்ட பல விடயங்கள் மீள் உரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையின் மீள் உரையாடல் என்ற நிலையில் இருந்து ஈழத்தின் அகராதித்துறைச் செயற்பாடுகள், பதிவுகள் நோக்கிய மீள் உரையாடலாக மாற்றப்படுமாயின் சிறப்பானதாக அமையும் என்ற என் பெருவிருப்பையும் இத்தால் பதிவு செய்கிறேன். 

எங்கடை புறெபசர் என்ற அன்பிழையினைவிட எங்கள் மொழி, அறிவியல்பூர்வமான அணுகுமுறை என்பது ஆழமனது, அகலமானது. எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார் என்ற வீண் தற்பெருமைகளைத் தவிர்த்து களநிலையறிந்து, யதார்த்த உண்மைகளுடன் உரையாடுவதே, தொடர்வதே சிறப்பானதாகும். 

- விருபா குமரேசன் ( [email protected] )

  •  

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன ?

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன என்பதில் தனக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக முகநூல் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் உட்பெட்டியூடாகத் தெரிவித்திருந்தார்.

அவரது குழப்பத்திற்கான காரணம் தமிழ் விக்கிப்பீடியாவில் https://ta.wikipedia.org/s/18sq இணையமுகவரியில் காணப்படும்  // அகங்காரம் முதல் வைராக்கியம் வரையான ஏறத்தாழ 1465 வட சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.... //  என்ற வசனத் தொடரின் மூலம் 1465 சொற்கள், அதே நேரம் விருபா தளத்தில் உள்ள // ...வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் தலைச்சொற்களாக 1461 சொற்களும்... // பதிவின்படி 1461 சொற்களும், இதை மேலும் குழப்பமாக்கும் நிலையில் விருபா தளத்தில் http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையில் 82 வது பக்கத்தைப் பார்த்தால் 1464 சொற்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆக இதில் எந்த எண்ணிக்கை சரியானது என்பதே !



விருபா தளத்தில் 1461, 1464 என்ற இரண்டு எண்ணிக்கைகளைத் தந்துள்ளவன் என்ற வகையில் நான் இதற்குப் பதில் தரவேண்டியவனானேன்.



தமிழ் விக்கியில் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் மின்-அகராதி வடிவில் இல்லை. கட்டுரையைத் தொடங்கிய, தொகுத்த, புதுப்பித்த, மேம்படுத்திய தவிக்கியர்கள் குறித்த அகராதியில் எத்தனை சொற்கள் உள்ளன என்பதைப் பக்கம் பக்கமாக எண்ணியே அறிந்திருப்பார்கள் அல்லது அச்சில் வெளியான ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரையில் இருந்து குறித்த எண்ணிக்கையைப் பெற்றிருப்பார்கள். அங்கு எண்ணிம நிலையில் தலைச்சொற்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான பொறிமுறை இல்லை. 

விருபாவில், நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் காணப்படும் ஒவ்வொரு சொற்களையும் எண்ணிமத் தரவுதள முறையில் பதிவு செய்துள்ளோம். அவ்வாறு பதிவு செய்யும் போது எவ்வாறு 1641, 1644 என்ற இரண்டு எண்ணிக்கைகள் கிடைக்கும் என்பதை அலசினோம். 

விடை கிடைத்தது. 

உண்மையில் இவ்வாறான இரண்டு எண்ணிக்கைகள் வருவதற்கான அடிப்படைக் காரணம் 1938 இல் குறித்த அகராதியைத் தொகுத்த நீலாவதி அம்மையார் அவர்களின் வரிசைப்படுத்தல் முறையில் உள்ள சிறு வழு ஆகும்.

1. சிருட்டி

அக்குறித்த அகராதியின் 14வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/SourceImage/STD_0014.jpg ) சிருட்டி என்ற சொல்லானது இரண்டு இடங்களில் தலைச்சொல்லாகக் காணப்படுகிறது.  14 பக்கத்தில் 4வது சொல்லாகவும்,  18வது சொல்லாகவும் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளது. 

2. தயை

அக்குறித்த அகராதியில் 15வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=15 ) தயை என்ற சொல் 47வது சொல்லாகவும், 16வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=16 )  6வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது. 

3. விகிதம்

அக்குறித்த அகராதியில் 23வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=23 ) விகிதம் என்ற சொல் 68வது சொல்லாகவும், 24வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=24 )  52வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது. 

எனவே விருபா தளத்தில் நாம் குறிப்பட்ட இரண்டு எண்ணிக்கையிலும் தவறு இல்லை. 
1641 சொற்கள்,  1644 தடவைகள் தலைச்சொற்களாக இடம் பெற்றுள்ளன என்பதே சரியானதாகும்.  

விருபா தளத்தின் பின்னணியில் இயங்கும் தரவுதளத்தில் பின்வரும் படிமுறைகளினூடாக, எண்ணிம நிரலாக்க ஆணைகளைக்கொண்டு இதனைப் பெற்றுள்ளோம். ஒவ்வொரு பக்கமாக இருந்து எண்ணிக் கூட்டிக் காண்பது அல்ல. தரவுதளம் என்பதன் பலமே இதுதான். 

1. சொற்குவியல் தரவுதளத்தை அணுகுதல்
2. அகராதிகளைப் பட்டியலிடுதல்
3. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்னும் அகராதியைத் தெரிவு செய்தல்
4. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் தலைச்சொற்கள் பட்டியலிற்குச் செல்தல்
5. தலைச் சொற்களாக எத்தனை சொற்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுதல் >> 1464
6. ஒரு தடவைக்கு மேல் வரும் தலைச்சொற்கள் எத்தனை என்பதைக் கணக்கிடுதல் >> 3
7. 5 இல் கிடைத்த தொகையில் இருந்து 6 இல் கிடைத்த தொகையைக் கழித்தல் >> 1461

இப்படிமுறைகளினூடாகவே  "நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்"  அகராதியில் 1461 தலைச்சொற்கள் உள்ளன என்பதைப் கண்டறிந்து பதிவு செய்துள்ளோம். 

விருபா தளத்தில் http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையின்,

பக்கம் 38 இல் 678வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 04 : 01
பக்கம் 39 இல் 692வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 18 : 01

பக்கம் 45 இல் 796வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 15 : 47 : 01
பக்கம் 46 இல் 822வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 16 : 06 : 01

பக்கம் 77 இல் 1380வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 23 : 68 : 01
பக்கம் 81 இல் 1444வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 24 : 52 : 01

மேலதிகமாக,

வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதி. வடசொற் கலப்பின்றிப் பேச / எழுத / கற்பிக்க உதவிடும் நிலையில், தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலையடிகளின் மகளாரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவருமான, திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களால் இயற்றப்பட்ட வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் என்னும் அகராதியானது தலைச்சொற்களாக வடசொற்களையும், பொருள் விளக்கச் சொற்களாகத் தமிழ்ச் சொற்களையும் கொண்டிருக்கும் நிலையில் செய்யப்பட்டுள்ளது. 

ஒரு சொல் வட சொல்லா ?   இல்லை தம்ழச் சொல்லா ? என்பதில் பலருக்கும் மயக்கம் உள்ளது. அது இவ்வகராதியை உருவாக்கிய திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களுக்கும் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடே உச்சி, ஏனம், குணம், சமயம், நயம், பதி, பரம்பரை, பூசை ஆகிய 8 சொற்கள் தலைச்சொல், பொருள்விளக்கச் சொல் ஆகிய இரண்டு நிலைகளிலும் இடம் பெற்றுள்ளன. 

இறுதியாக, 

இவ்விடயத்தில் எனது விளக்கத்தினைக் கேட்ட நண்பருக்கு,  வட சொல் அகரவரிசைச் சுருக்கம் என்னும் இச்சிறு அகராதியை, மின்-அகராதியாக மாற்றியதன் மகிழ்வை அந்த நண்பர் எனக்குத் தந்துள்ளார் என்பதை இத்தால் பதிவு செய்கிறேன். அந் நல்லாருக்கு என் நன்றிகள். 

  •  

எஸ்.ராமகிருஷ்ணன் பார்வைக்கு.....


\\..... அது போலவே யாராவது இந்த ஆண்டு வெளியான முக்கியமான புத்தகங்கள் எவை, அதை வெளியிட்ட பதிப்பகங்கள் யார், கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்று தொகுத்து வலையேற்றம் செய்யலாம்..... \\

என்றவாறு எழுதியுள்ளீர்கள். அதுவும் நீங்கள் முக்கியமான புத்தகங்களைப் பற்றித்தான் கேட்கிறீர்கள். இந்த முக்கியமான புத்தகங்களை எவ்வாறு தீர்மானிப்பது என்பது பற்றிய ஒரு பொதுவான, அனைவராலும் ஏற்றுக்கொண்ட, நடுநிலையான ஒரு அளவுகோல் இல்லை என்றே நான் கருதுகிறேன். பிற சக எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தை அதன் உள்ளடக்கம் சார்ந்து நேர்மையாக அளவிடும் மனப்பாங்கு இங்கு இல்லை என்பதற்கு நீங்களே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களால் ஆயிரம் பக்க அபத்தம் என்று சுட்டப்பட்டப்பட்ட புத்தகம் இன்று உயர் விருதைப் பெற்றுள்ளது, புத்தகக் கண்காட்சியில் தினமும் குறைந்தது 200 வாசகர்களாவது வாங்கிச் செல்கிறார்கள். ஆக ஒருவருக்கு அபத்தமாகத் தெரிந்த ஒரு புத்தகம் இன்னொரு இடத்தில் முக்கியமானதாகிறது. 

உங்களைப் போன்று ஊடகங்களின் பக்கங்களை அடைத்துக்கொண்டிருக்கும் பலரும் ஏதோ ஒரு குழாம் மனப்பாங்கை, அளவுகோலை வைத்துக்கொண்டு மற்றவர்களை முடக்கும் செயலை மறைமுகமாகச் செய்யும் நிலையே இங்கு உள்ளது. உங்களுடைய அகராதியில் முக்கியமான என்பது கூட உள்ளடக்கம், கருத்தியல் சார்ந்ததாக அல்லாமல் அதற்குரியவர் உங்களுக்கு எந்த அளவுக்கு முதுகு சொறிந்து விடுவார், உங்களைப் பிரபலப்படுத்துவார் என்றதில்தான் தங்கியுள்ளது என்பதை நானறிவேன். உங்கள் இணையத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய தமிழ் இணையங்கள், வலைப்பதிவுகள் எவை என்ற பட்டியலை வைத்து இதனை உறுதிப்படுத்தலாம். \\ இணையத்தின் தன்மையை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எனவேதான் அவருடைய நீண்டகால இணைய அனுபவம் சச்சரவுகளின்றி நேர்கோட்டில் பயணிக்கிறது \\ என்று உங்களை விதந்து ஆராதிக்கும் ஒருவர் புகழ்ச்சியாக எழுதலாம். ஆனால் அதில் உணைமையில்லை என்பது வாசகர் கலந்துரையாடல் என்றதில் நீங்கள் எழுதிய மேற்குறித்த வரிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நீங்கள் இணையத்தை முற்றாகத் தேடி அலசிப் பார்த்து எழுதுவதில்லை, உங்களை நெருக்கமாகச் சுற்றியுள்ள ஒரு சிலரின் தரவுகளை வைத்துக்கொண்டே எழுதுகிறீர்கள். இதனைத் தான் நீங்கள் நீண்ட காலமாகச் செய்து வருகிறீர்கள்.  

விருபா - தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு இணையத்தில் ஒரு புத்தகம் சென்னைப் புத்தகக் காட்சியில் எந்தெந்த அரங்குகளில் கிடைக்கும் என்பதைக் காட்டும் நுட்பத்தைக் கொண்டுள்ளோம்.  எடுத்துக்காட்டாக http://www.viruba.com/final.aspx?id=VB0000641 என்ற இணைய முகவரியில் அக்குறித்த புத்தகம் கிடைக்கும் அரங்குகளைக்  குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு விருபா இணையத்திற்கு தரப்பட்ட புத்தகங்களை மட்டுமே நாம் காட்டுகிறோம். நாம் இவ்வாறு செய்வதைப் பல பதிப்பாளர்கள் அறிவர், ஆனால் அவர்கள் புத்தகங்களைத் தராத நிலையில் நாம் ஒன்றும் செய்ய முடியாதென்பதுதான் உண்மை நிலை. 

அடுத்து, நாம் முக்கியமான என்ற ஒரு அளவுகோலை வைத்திருக்கவில்லை. பதிப்பகத்தினால் பதிப்பிக்கப்பட்டாலும் அல்லது புத்தகத் தயாரிப்பு நிறுவனத்தினால் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டாலும் இரண்டுமே இன்று புத்தகங்கள் என்ற பொதுச் சொல்லினாலேயே அழைக்கப்படுகின்றன. இரண்டையும் வேறுபடுத்தும் பொறுப்பு எங்களுடையதல்ல. எனவே நாம் முக்கியமானது என்ற அளவுகோலை விடுத்து அனைத்தையும் நீங்கள் குறிப்பிட்டபடி கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்பதை தொகுத்துக் காட்டும் செயலைச் செய்கிறோம். இதற்காகவே கண்காட்சியில் அரங்கு எண் - 139 இல் பங்குகொண்டுள்ளோம். 

சோணம் கட்டப்பட்ட மாடுகளைப் போல் உங்கள் பார்வையைக் கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் பாருங்கள், குறிப்பாக தமிழ் இணையங்கள் பற்றிய பார்வையைக் குறுகலாக்காமல் அனைத்தையும் பாருங்கள், கருத்தியல் ரீதியில் நல்லதை எழுதுங்கள். உங்களுக்கு முதுகு சொறியக் காத்திருப்பவர்களை முன் நிறுத்தி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளாதீர்கள். 



  •  

பதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் ?


புத்தகங்கள் என்றால் தேடல்தான். அந்தப் புத்தகத்தை எளிதாகத் தேடுவதற்கு வழி செய்வதுதான் எங்கள் இணையதளம். ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரைமணிநேரம்தான் செலவிடமுடியும் என்ற நிலையில் இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு எளிதில் புத்தகங்களை வாங்கிச் செல்லலாம். புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்துகொள்ளலாம். - ஆர்.எஸ்.சண்முகம் ( செயலாளர் 2008  - http://www.bapasi.com/ )

எல்லாருக்கும் வானத்தில் ஏறி வைகுண்டம் போவதற்கு ஆசைதான் ஆனால்.....

  •  

தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2008

தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2008 ஆம் ஆண்டிற்கான,( 2008.01.01 முதல் 2008.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 31 வகைப்பாடுகளில், 29 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக திருவள்ளுவர் தின நிகழ்வில் (15.01.2010 ) வழங்கப்படவுள்ளது.

வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் புத்தகப் பிரிவில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை. பொறியியல், தொழில்நுட்பவியல், வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.

1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை
புத்தகம் : கப்பலுக்கொரு காவியம்
எழுத்தாளர் : வாய்மைநாதன் ( மு.இராமநாதன் )
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை
புத்தகம் : உனக்கும் எனக்குமான சொல்
எழுத்தாளர் : அழகிய பெரியவன் (சி.அரவிந்தன் )
பதிப்பகம் : ஆழி

3.புத்தகப் பிரிவு : புதினம்
புத்தகம் : நெருப்புக்கு ஏது உறக்கம்
எழுத்தாளர் : எஸ்ஸார்சி (எஸ்.ராமச்சந்திரன் )
பதிப்பகம் : அலமேலு பதிப்பகம்

4.புத்தகப் பிரிவு : சிறுகதை
புத்தகம் : எட்டாயிரம் தலைமுறை
எழுத்தாளர் : தமிழ்மகன் ( பா.வெங்கடேசன் )
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )
புத்தகம் : வைக்கம்
எழுத்தாளர் : அ.அய்யாசாமி
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்

6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்
புத்தகம் : மரப்பாச்சி
எழுத்தாளர் : புதுவைத் தமிழ்நெஞ்சன் ( அசோகன் )
பதிப்பகம் : தமிழ்மொழிப் பதிப்பகம்

7.புத்தகப் பிரிவு : திறனாய்வு
புத்தகம் : வள்ளலாரும் பெரியாரும்
எழுத்தாளர் : மருத்துவர் ஜெய ராமமூர்த்தி
பதிப்பகம் : தனஜோதி பதிப்பகம்

8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
புத்தகம் : நச்சினார்க்கினியர் உரைநெறி
எழுத்தாளர் : ச.குருசாமி
பதிப்பகம் : ராணி பதிப்பகம்

9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
புத்தகம் : தென்னகத்தின் எழுச்சி
எழுத்தாளர் : அ.அய்யாசாமி
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்

10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)
புத்தகம் : சங்கத் தமிழிசை
எழுத்தாளர் : த.கனகசபை
பதிப்பகம் : பொன்னி வெளியீடு

11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
புத்தகம் : தமிழ் நிகண்டுகள்
எழுத்தாளர் : சா.வே.சுப்பிரமணியன்
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்

12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்
புத்தகம் : அடேங்கப்பா ஐரோப்பா
எழுத்தாளர் : வேங்கடம் ( திருவேங்கடம் )
பதிப்பகம் : விகடன் பிரசுரம்

13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
புத்தகம் : சமூகவிஞ்ஞானி கலைவாணர்
எழுத்தாளர் : அன்புக்கொடி நல்லதம்பி
பதிப்பகம் : மலர் பதிப்பகம்

14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
புத்தகம் : தகடூர் வரலாறும் பண்பாடும்
எழுத்தாளர் : இரா.ராமகிருட்டிணன்
பதிப்பகம் : ராமையா பதிப்பகம்

15.புத்தகப் பிரிவு : கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்
புத்தகம் : இயற்கை அற்புதங்கள்
எழுத்தாளர் : வாண்டுமாமா ( வி.கே.மூர்த்தி )
பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம்

16.புத்தகப் பிரிவு : மானிடவியல் ( சமூகவியல், புவியில், நிலவியல் )
புத்தகம் : இலக்கிய மனித உரிமைக்கோட்பாடுகள்
எழுத்தாளர் : ஆர்.ஜெகதீசன்
பதிப்பகம் : தாமரை பப்ளிக்கஷன்ஸ்

17.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்
புத்தகம் : மக்களவைக் கூட்டத்தை தமிழகத்தில் நடத்துக
எழுத்தாளர்கள் : ரா.பாலகிருஷ்ணன்
பதிப்பகம் : கே.பி.கே நினைவு அரசியல்சார் இதழியல் அரங்கம்

18.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
புத்தகம் : தொழில் முனைவோர் கையேடு
எழுத்தாளர் : எஸ்.எஸ்.மூர்த்தி
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்

19.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்
புத்தகம் : வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே
எழுத்தாளர் : தமிழ்நாகை ( கோ.அன்பழகன் )
பதிப்பகம் : தமிழ் முனை பதிப்பகம்

20.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
புத்தகம் : சித்த மருத்துவத்தில் வேர், மரம், செடி, கொடி, இலைகளும் அதன் மருத்துவப் பயன்களும்
எழுத்தாளர் : க.சிவநேசன்
பதிப்பகம் : அருள் பதிப்பகம்

21.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்
புத்தகம் : திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்
எழுத்தாளர் : ப.சுந்தர்
பதிப்பகம் : கபிலன் பதிப்பகம்

22.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்
புத்தகம் : கல்விச் சமூகவியல்
எழுத்தாளர் : மா.கருணாநிதி ( இலங்கை )
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்

23.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்
புத்தகம் : வாழை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள்
எழுத்தாளர்கள் : இரா.தங்கவேலு, எம்.எம்.முஸ்தபா
பதிப்பகம் : இரா.புவனராஜி வெளியீடு

24.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்
புத்தகம் : காற்று மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு
எழுத்தாளர் : ஆர்.வி.ஜெபா ராஜசேகரன்
பதிப்பகம் : ஈடன் பதிப்பகம்

25.புத்தகப் பிரிவு : கணிணியியல்
புத்தகம் : எளிய தமிழில் எக்ஸெல்
எழுத்தாளர் : ம.லெனின்
பதிப்பகம் : சிக்ஸ்த் ஸென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்

26.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
புத்தகம் : படகர் அறுவடைத் திருநாள்
எழுத்தாளர் : இரா.கு.ஆல்துரை
பதிப்பகம் : நெலிக்கோலு வெளியீட்டகம்

27.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு
புத்தகம் : ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு
எழுத்தாளர் : இரா.பாவேந்தன்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்

28.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்
புத்தகம் : திருக்குறள்-வ.உ.சிதம்பரனார் உரை
எழுத்தாளர் : இரா.குமரவேலன்
பதிப்பகம் : பாரி நிலையம்

29.புத்தகப் பிரிவு : விளையாட்டு
புத்தகம் : அறிந்துகொள்ளுங்கள் - கால்பந்து
எழுத்தாளர் : பூ.மாரி
பதிப்பகம் : ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்
  •  

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2010


33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது.

பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம்.

http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx

  •  

ச.வே.சு - 81


அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் 81-ஆம் அகவை பிறந்தநாள் வெளியீடாக சென்னை மணிவாசகர் பதிப்பகம், ச.வே.சு அவர்கள் பதிப்பித்த 81 புத்தகங்களை வெளியிடவுள்ளது.

02.01.2010 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் இப்புதிய புத்தகங்களை வெளியிடுகிறார்.

தொல்காப்பிய வரிசை
நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல், இளம்பூரணர், நச்சினார்க்கினியர்

சங்க இலக்கிய வரிசை
திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

சிலப்பதிகார வரிசை
மங்கலவாழத்துப்பாடல், மனையறம்படுத்தகாதை, அரங்கேற்றுகாதை, அந்திமாலை சிறப்பு செய்காதை, இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடுகாதை, கானல்வரி, வேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை, நாடுகாண் காதை, காடுகாண் காதை, வேட்டுவவரி, புறம்சேரி இறுத்த காதை, ஊர்காண் காதை, அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை, அழல்படு காதை, கட்டுரை காதை, காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப்படைக் காதை, நடுகல் காதை, வாழ்த்துக் காதை, வரம்தரு காதை, புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம், தெளிவுரை.

  •  

தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009

தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009
புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....

புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....

தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.

புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.

வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.

புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.

பொருளடக்கம்
தனி மனிதப் பதிப்புகள்
  • ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி
  • சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்
  • தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்
  • வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்
  • தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்
  • வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்
  • வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்
  • மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்
  • தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்
  • உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்
  • பொதுக் கட்டுரைகள்
  • பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்
  • ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்
  • சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி
  • மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு
  • தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா
  • ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி
  • தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு
  • 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்
  • இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்
  • நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா
  • நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்
  • தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா
  • காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்
  • நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்
  • மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்
  • கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்
  • பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்
  • வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )
  • கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்
  • கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்
  • பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி
  • தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்
  • தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்
  • கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்
  • நிறுவனம் சார்ந்த பதிப்புகள்
  • எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்
  • பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி
  • தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்
  • சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி


    • தற்போது விற்பனையில்....

      விலை : ரூ 95.00
      பக்கங்கள் : 320
      வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18

      தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924
      e-mail : [email protected]

      •  

      நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009

      நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009
      நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்படும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 12வது வருடமாக நடைபெறவுள்ளது. 2009 - ஜூலை 3 முதல் - ஜூலை 12 வரையில் தினமும் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு புதிய பக்கத்தை விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.

      நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009
      •  

      'மஹாகவி'யின் ''பொருள் நூறு''

      மஹாகவி - து.உருத்திரமூர்த்தி ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் கவிதை நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

      இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத் தருகின்றன.



      பாயிரம்
      1981 - புத்தர் பெயர் சொல்லும் புல்லர்களின் கொலை வெறியால் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சிலே இட்ட நெருப்பானது.

      கொடூரம் இழைக்கப்பட்ட சில மாதங்களில் தமிழ் நூல்களைத் தேடியும், ஈழத்துப் படைப்பாளிகளின் கையெழுத்துப் பிரதிகளைச் சுமந்தும் ஒரு யாத்திரிகர் தமிழகம் வந்தார். சோகம் எழுதிய அவருடைய முகத்தில் உறுதியின் ரேகைகளை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமல்ல, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆர். பத்மநாப அய்யர்.

      தட்டுத் தடுமாறி வானம்பாடி இதழை நான் நடத்தி வந்த காலம். நூல்களை அச்சிட்டுத் தரும் வசதி இல்லாததால், சில கவிதைகளையும், ஒரு சிறு நூலின் கையெழுத்துப் பிரதியையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

      ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வானம்பாடி வெளிவந்தது. எம்.ஏ.நுஃ மான், அ.யேசுராசா, சேரன் ஆகியோர் தொகுத்துத் தந்த 22 கவிஞர்களின் 35 கவிதைகளை வெளியிட்டு நிறைவு கொண்டேன். சேரன், அ.யேசுராசா இருவரும் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகளும் வெளிவந்தன.
      அப்போது பத்மநாப அய்யர் வழியாகக் கிடைத்த நூலின் கையெழுத்துப் பிரதி பல ஆண்டுகளாக என் நினைவிலும் என் புத்தகக் குவியல்களிலும் மறைந்து கிடந்தது. எஸ்.பொ.வின் தூண்டுதலால் நான் தேடிச் சலித்த அப்பிரதி இப்பொழுது என் கையில் கிடைக்கவும், என் பேரன்புக்குப் பாத்திரமான எஸ்.பொ.வுடன் அது குறித்துக் கதைக்கவும் காலம் வாய்த்தது. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எஸ்.பொ. விரும்பினார். இதுவரை வெளிச்சம் காணாத மஹாகவியின் ‘பொருள் நூறு’ மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீட்டக உதவியாலும், எஸ்.பொ. வின் தீவிர ஆர்வத்தாலும் இதோ உங்கள் கைகளில்.சிற்பி பாலசுப்பிரமணியம்

      மஹாகவி (1927 - 1971) வாழ்ந்த காலத்தில் தமது படைப்புகள் அனைத்தையும் அச்சு வடிவில் காணாமலே மறைந்தார்.

      வள்ளி (1955), குறும்பா (1966), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1966), கண்மணியாள் கதை (1968), கோடை (1970) ஆகிய சில நூல்களே அவர் காலத்தில் அச்சு வடிவம் கண்டன. அதனால் அவர் மறைவுக்குப் பின் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப் பெற்று மேலும் சில கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.

      படைப்பில் முழுமை கண்ட மஹாகவியின் எழுத்துக்கள் முழுமையாக நமக்கு எட்டவில்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு சிறு முயற்சியாகப் ‘பொருள் நூறு’ வெளியிடப்படுவது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.

      தமிழ்க் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவர் மஹாகவி.

      தமிழகத்துக் கவிதையில் மரபு வடிவங்கள் புயலில் விழுந்த பனங்காடு போல் சாய்ந்து கிடந்த ஒரு தருணத்தில் ஈழத்தில் அகவலும், கட்டளைக் கலித்துறையும், வெண்பாவும் புத்துயிர் தரித்து உலாவியமைக்கு மஹாகவியும், முருகையனும், நீலாவணனும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியதே காரணம்.

      சங்கத் தமிழ்க் கவிதையின் இயல்பான நீரோட்ட நடையை மஹாகவி தம் வசப்படுத்திக் கொண்டார். பாரதி கவிதையின் எளிமை கலந்த தெளிவை அதனுடன் கலந்தார். அலை அலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாகக் கவிதையை மிதக்க விட்டார். அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும்படி செய்தார். வானத்தையும், பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தை கனக்கக் கனக்க முன்வைக்காமல், சாளரத் திரையினூடே தெரியும் நந்தவனம் போல், மெல்லிய காற்றில் அதிரும் வீணைத்தந்திபோல் தத்துவங்களை உணர வைத்தார்.

      இதனால் போலும் சண்முகம் சிவலிங்கம், ‘பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால் அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி’ என மதிப்பிடுகிறார்.

      எனினும் ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்ற தம் நூலில் மஹாகவியின் தனித்துவங்களை மெச்சுகிற வேகத்திலேயே கவிஞர் மு.பொன்னம்பலம் பாரதியின் யதார்த்தப் பார்வை மஹாகவியிடம் இருந்தாலும் ஆத்மார்த்தமும் ஆழமும் குறைவு என விமர்சிக்கின்றார்.

      நீலாவணனோடு ஒப்பிட்டு இக்கருத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.

      இதனால் மஹாகவியின் மேதைமை, வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும், அவற்றின் அடிமணல் பிதிர்ந்தோடும் அசைவுகளிலிருந்தும் உய்த்துரைக்கும் பார்வைப் பாங்கானது. நாம் தேடுகிற ஒன்றை யல்ல, அவர் தருகின்ற ஒன்றை வைத்தே அவரை அளப்பது சரியாக இருக்கும்.

      கவிதை, காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் காவிய உலகம் பன்முகத் தன்மை கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் விம்மும் உயிர்த் துடிப்பின் தடயங்கள்.

      சாலை ஓரத்துச் சிறுபுல் பாதை இடையிலோர் பசுமையாய் முளைக்கிறது. வேதனைகளை விழுங்கிக் கொண்டு வளர்கிற புல்

      சோதனைகளை வெல்லும் குறியீடாகிறது மஹாகவி கவிதையில்...
      ‘‘ ஆழப் புதைந்த அறம்போல்
      முளைத்தெழுந்தாள்
      வாழி அவளுக்கென் வாழ்த்து
      ’’
      என்று கனிவுறப் பேசுவார் மஹாகவி

      அவருடைய அகலிகை கற்பனை வளம் செறிந்தது. அவள் சாபத்தால் கல்லாகவில்லையாம். தீண்டியவன் யார் எனத் தெரிந்ததும்,
      ‘‘ பார்த்ததே பார்த்த பாங்கில்
      பாவை கல்லாகி விட்டாள்
      ’’
      எனப் பெண் பாலவளிடம் பெருங்கருணை காட்டுவார்,

      சடங்கு, கல்லழகி, கந்தப்ப சபதம், கலட்டி என்ற காவிய வரிசையில் வரும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் தனிச்சிறப்புடையது.

      ‘தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியைபு பெற்ற நவீன காவிய வடிவம் ஒன்றின் மூல கர்த்தா மஹாகவியே’ என எம்.ஏ.நுஃமான் வியப்புறப் பாராட்டுவார். பிறந்தமை முதல் இறந்தமை வரையிலான ஒரு வாழ்க்கையைச் சொல்லும் கவிஞர் உயிர் வாழ்வு மரணத்தால் ஓயாத தொடரோட்டம் என்பார்.

      ‘‘ அன்று பிறந்து
      இன்று இறப்பதுள்
      ஆயதன்று நம் மானிட வாழ்வு காண்
      அப்பனே மகனாகி
      வளர்ந்து
      உயிர் ஓய்தல் அற்று
      உயர்வு ஒன்றினை
      நாடலே உண்மை....
      ’’
      என்பதை வாழ்வின் சாரமாக்குவார்.

      கவிதை நாடகம் என்ற பா நாடகம் தாய்த் தமிழக இலக்கியத்துள் வெற்றி ஈட்டாத ஒரு இலக்கிய வகை. அது மட்டுமல்ல இவை படிப்பு நாடகங்களாய்த் தேய்ந்தன; நடிப்பு நாடகமாய் அரங்கேறவில்லை. (இன்றைய இராமானுசம், மங்கை நாடகங்கள் புதியவை.) ஆனால் ‘திருவிழா,’ ‘கோலம்,’ ‘பொய்மை,’ ‘வாணியும் வறுமையும்’, ‘சேனாதிபதி’, ‘முற்றிற்று’, ‘புதியதொரு வீடு’, ‘கோடை’ என அணி வகுக்கும்.

      மஹாகவியின் நாடகங்களில் நெகிழ்ந்த யாப்பு உரையாடல்களுக்கு உகந்த கருவியாய் ஒளிர்கிறது. இவற்றுள் ‘கோடை,’ ‘புதியதொரு வீடு’ நாடகங்கள் பன்முறை மேடை ஏறியவை.

      மானுட வாழ்வின் சலனங்களை நாடகப்படுத்தி, நவீன தமிழ்க் கவிதை நாடகக் கலைக்கு முன்னோடியாக மஹாகவி திகழ்கிறார். பாத்திரங்களிடையே சிக்கலும், முரண்பாடும் அமையப் படைத்த நாடகங்களின் கவிதைப் படுத்தலில் வெகு லாகவமாக மொழி கையாளப்படுவது மஹாகவியின் தனித்தன்மை.

      ‘கண்மணியாள் காதை’ வில்லுப்பாட்டாகவும், ‘மாநிலத்துப் பெருவாழ்வு’ தமிழிசைக் குறுங் காவிய மாகவும் மஹாகவியால் வழங்கப்பட்டுள்ளன.

      ஆங்கிலத்தில் வழங்கும் ( Limerick ) லிமெரிக் வடிவத்தைப் பின்பற்றி, அசல் தமிழ்க் கவிதைகளைக் ‘குறும்பா’ எனத் தந்த அதிசயத் திறன்

      மஹாகவியின் வெற்றிக்கொடி. எஸ்.பொ. எழுதுகிறார்;

      ‘‘நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலை சிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக்கவிதைத் தொகையைத் தந்ததின் மூலம் தமிழ்க் கவி வக்ஷூத்தைச் செழுமைப்படுத்துகிறார்.’’

      நகைச்சுவை ததும்பிப் பெருகும் குறும்பாக்களில் ஆழ்ந்த சிந்தனை நயமும் நிரம்பிக் கிடக்கிறது.
      ‘‘ வல்லரசின் செய்கையினைக் கண்டு
      வல்லரசு வீசியது குண்டு
      நல்லபடி நம் மனிதர்
      நச்சரிப்புத் தீர்ந்து விடத்
      தொல்லுலகை ஆள்கிறது நண்டு
      ’’
      இக் கவிதை வெகு கவலையோடு மனிதனை மனிதன் அழிக்கும் போரின் விளைவைப் பேசும்.

      எல்லாச் சந்தங்களும் கைகட்டிச் சேவகம் செய்யும் மஹாகவியின் வர்ணமயமான சொற்கள் மெல்லடி வைத்து எப்படியெல்லாம் ஆனந்த நர்த்தனம் புரிகிறது என்பதைப் பாருங்கள்.
      ‘‘ சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
      சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்...
      வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்
      வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்.
      ’’
      உணர்வெனும் பெரும்பதத்துக்கு ஊஞ்சல் கட்டி அழைத்துப் போகும் உன்னதம் மஹாகவியின் கவிதைக் கலை.

      புதிய புதிய பரிசோதனைகளைக் கவிதைகளில் செய்து பார்த்த மஹாகவியின் இன்னுமொரு கலை முயற்சி ‘பொருள் நூறு’. திட்டமிட்டு உருவாக்கியது போல் தோன்றினாலும் அகர வரிசையில் சட்டென்று நினைவில் தட்டிய பொருள்களைக் குறித்த நூறு கவிதைகள் இந்நூலில்.

      அகப்பை முதல் வெறுந்தகரம் வரையிலான பொருள்கள் நமக்கு அறிமுகமானவையே. அவற்றின் வெளிப்பாடாக வந்துள்ள கவிதைகளிலோ
      எதிர்பாராத பொறிகள் ஒளிந்திருக்கின்றன.‘அம்பு’ என்றொரு
      கவிதை:

      ‘‘ அம்பு வில் நம் மூதாதையர் கருவி
      ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்
      போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்
      போயினான்.
      எய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்
      காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது
      வீரவான் விழுந்தனன்.... விலாவில்
      ஓர் எலும்பின்றி ஒடித்தது குண்டே
      ’’

      காலத்துக் கேற்ற கருவியைக் கையாளாமல், பழமை பழமை என்று பாவனை பேசுவதன் விளைவை வெகு நுண்மையாகச் சொல்கிறது கவிதை.

      கொஞ்சம் நின்று யோசிக்க வைக்கிறார் கவிஞர்.

      கவிதை ஒன்று பொருள் நூறு என்று அனுபவப்படும் நேர்த்தி ஒவ்வொரு கவிதையிலும் இழையோடுகிறது. வெறும் வர்ணனைச் சேர்க்கையோ, சொற்குவியலோ இடம் பெறாமல் ‘மர்மத்தில் எறிவேல்’ போல் பாய்கிறது கவிதை. குறியீடுகள் அர்த்தப் பன்மையோடு பொருள்கள் ஏந்தி நிற்கின்றன. சுவரில் அடிக்கப்படும் ஆணி ஒரு கவிதைக்குப் பொருளாகிறது. ஆணி இங்கே அதிகார வர்க்கத்தின் கைக்கருவியாகிறது. அடிமையும் ஆகிறது.

      ‘‘ அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே
      ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே
      அடுத்தவர் கைப்பட் டமைந்ததுன் உருவம்
      ஆதலால்
      விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி
      இருபுறம் கூர் எடுத் தின்னா
      புரிவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே.
      ’’

      அடிமைப் படுத்தப்பட்ட சமூகம் ஆற்றல் மிக்கது. இரும்பு மேனியும் உண்டு அதற்கு. ஆயினும் அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட நிலையில் அடி வாங்கத்தான் முடியும். இரண்டு பக்கமும் கூர்மை கொண்டிருந்தால் அடிப்பவன் கையைக் கிழிக்கலாமே. இருக்கிற நிலையின்
      சித்திரிப்பிலேயே இருக்கவேண்டிய நிலையைக் குறித்தும் குறிப்பாகப் பேசுகிறது கவிதை.

      இயந்திரத் தொழில் நுட்ப உலகம் நுண்ணுணர்வுக் கலைகளைக் கொன்று தொலைக்கும் அபாயம் கவிஞரை வாட்டுகிறது. ஆயினும் புதியவை புயலெனப் புகுவதைத் தடுக்க நம்மால் இயலாது. இந்த முரண்பாட்டிற் பூத்த கவலையை ‘ஏவுகணை’ சுட்டி நிற்கிறது.

      ‘‘ அறையினின் றொரு விசை அழுத்தவும் சுரங்க
      உறையின் நீங்கி உலகு வலம் வந்து
      சைகையிற் பொருளை உணர்ந்து சரிவரச்
      செய்கையிற் காட்டும் தீவிர வலி எம்
      கைகளில்
      தேவீ, கலையின் தெய்வமே நீ இக்
      காவியம் முடிகிற வரை எம்
      சாவினைச் சற்றே தள்ளிவைத் தருள்வையே.
      ’’
      ரயில் சக்கரங்களில் அறைபடப் போகும் தும்பைப் பூவுக்காகக் கலங்கும் மனநிலையை ‘ஏவுகணை’ ஏந்தி நிற்கிறது.

      ஒரு ஊடகத்தில் தேர்ச்சி பெற்றவனின் கலைத்திறன் மற்றொரு ஊடகத்தில் சிறப்பது அபூர்வம். இதை விளக்கும் மேலை நாட்டுக் கதை ஒன்று உண்டு. வெண்கலத்தில் மட்டுமே சிற்பம் செய்யத் தெரிந்தவன் தன் அன்னை இறந்த துயரத்தை ஒரு சிற்பமாய் வடித்தான். தாயின் கல்லறையில் வைத்தான். மற்றொரு சமயம் அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. இதனைச் சிற்பமாய் வடிக்கத் துடித்தான். எங்கும் ஒரு துளி வெண்கலமும் கிட்டவில்லை. அதனால் கல்லறையில் இருந்த துயரச் சிற்பத்தை உடைத்து உருக்கி ஆனந்தச் சிற்பம் படைக்கத் தொடங்கினான். ‘கவிதை’ என்ற கவிதை இந்த உண்மையைப் பேசுகிறது. கவிதை எழுத ஓர் கதைஞன் முற்படுகிறான். இரவு முழுவதும் எழுதிப் பார்த்தான்.

      ‘‘ மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்
      ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்
      கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்
      ஈற்றிலே இரண்டொரு நாவல்
      தீட்டிப் பார்த்தான் மனையாள் தேற்றி நின்றாளே
      ’’

      கதைஞனின் தோல்வி கவிதையின் வெற்றியாகிவிடுகிற அற்புதத்தைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது.

      வாழ்வின் முரண்களைப் பகடி செய்து பார்த்தவர் மஹாகவி. ‘கார்’ என்ற கவிதையில் கால் நடையாகச் சென்றபோது கணபதிப்பிள்ளை நிற்க வைத்துப் பேசி அனுப்பியதையும், திருட்டுப் பணத்தில் கார் வாங்கி அதில் சென்றபோது ‘இருந்துண்டு போ’ என்று மதிப்புத் தந்ததையும் வாழ்வியல் முரண்களாகக் காட்டுவார்.

      ‘சுமை தாங்கி’ வழிப் போக்கர்கள் தலைச் சுமை வைக்க வழியில் வைத்த கல். அழகுபடுத்திய ஆலயத்துள்ளும் ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது.

      அது எதற்காக என்று கேட்டு விடையும் பகர்கிறார்:

      ‘‘ வழியெலாம் கற்கள் வைத்தார் தமது
      சுமையினை இறக்கிச் சும்மா நிற்க
      பெரிய
      பழியெலாம் சுமக்கப் பாவியர் கூடி
      வாயிலும் வளைவுமாய் வளர்ந்த
      கோயிலிலும் கல் குடியிருத் தினரே
      ’’
      இரண்டும் சுமைதாங்கிகள் தானாம். ஒன்று வழிச்சுமை சுமக்கவாம்; இன்னொன்று பழிச் சுமை சுமக்கவாம். வேடிக்கையுறக் கண்டு நகைக்கத் தூண்டுகிறார் மஹாகவி.

      மனிதனின் தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும் தோலுரித்துக் காட்டக் கவிஞருக்கு சங்கரப் பிள்ளையின் தராசு கிடைத்துவிடுகிறது. பிள்ளை அசகாய சூரர். அவர் தராசில் கடைச் சாமான்களை நிறுத்துக் கொடுப்பதில் நிகரற்றவர்.
      ‘‘ எங்களூர்க் கடையில் ஓர் தொங்கும் தராசில்
      சங்கரப் பிள்ளையர் சாமான் நிறுப்பார்
      அதிலே,
      ஆனையை அவர் ஒரு தட்டில் ஏற்றிப்
      பூனையை மற்றதில் போட்டுக் கொடுப்பார்
      எச்சிறிது எப்பெரிதினுக்கும்
      ஒப்பு’ என இவர்படி ஓர் உண்மை விளக்குமே.
      ’’
      வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நோகாமல் கேலிக் கணைகள் தொடுக்கிற அழகு மஹாகவி படைப்புகளின் தனிச் சிறப்பு.

      மெல்லிய புன்னகைக் கீற்றை வாசகர் உதடுகளில் ஒரு தீபம் போல் ஏற்றி வைக்கின்றன ‘பொருள் நூறு’ கவிதைகள். புத்தகமும், புகை போக்கியும், பூசு மாவும், பூட்டும், விளக்கும் விளக்குமாறும் என அவர் எடுத்தாளாத பொருளே இல்லை.

      அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியையும், கலம்பகம் பார்த்தொரு கலம்பக்கத்தையும் போலி செய்த காலத்தைக் கடிந்த பாரதியைப் போல
      மஹாகவியும் பேசுவார்:
      ‘‘ இன்னவை தாம் கவி எழுத
      ஏற்ற பொருள் என்று பிறர்
      சொன்னவற்றை நீர் திருப்பிச்
      சொல்லாதீர்..
      ’’

      தம் கவிப்பயணத் தொடக்க நாட்களிலேயே இப்படிப் பேசியவர்.
      சமகால நடப்புகளை எழுத்தில் ஏற்ற வேண்டுமென்பதில் தீவிரம் கொண்டவர். கவிதை நடப்பியலின் சுவடுகளைப் பதிப்பிக்காவிடில் பயனில்லை என்ற கருத்துக்கொண்டவர்.
      ‘‘ இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
      இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
      இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்
      இன்றைய காலத் திக்கட்டுக்கள்
      ’’
      அனைத்தும் கவிதையில் சங்கமம் கொள்ள ஆசைப்பட்டவர் மஹாகவி.

      ஐன்ஸ்டீன் படைத்த கால விசைக் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பயணம் போனால் தூரத்தை மட்டுமல்ல காலத்தையும் கடக்கலாம். இந்த விஞ்ஞான உண்மையினூடும் மஹாகவியின் மந்திரக் கவிதை பயணம் போகிறது. எத்தனை எளிதாக இதனை அவர் சாதிக்கிறார் என்பதற்கு ‘காலத்தேர்’ காட்டாகிறது.
      ‘‘ ‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன்
      நன்று, நன்று!
      என்று தன்
      காலத் தேரினைக் கடுவிசைப் படுத்திச்
      சென்றவன் மீண்டனன். சிரித்தான்
      இன்று போனவன் நேற்று வந்தனனே
      ’’

      மஹாகவியின் படைப்புகள் ஒவ்வொன்றும் இந்த மாயத்தைச் செய்கின்றன. காலத்தை முந்திக் கொண்டு வந்து கைகொட்டிப் பாடுகின்றன. மரபில் விந்தைகள் புரிந்து வியப்பூட்டுகின்றன.

      நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும்,
      பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.

      மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் அடங்கிய பெருந்தொகுதிகள் வெளி வந்தாக வேண்டும். அத்தொகுதிகள் புதிய தமிழ்க் கவிதையின் போக்கைச் செழுமைப்படுத்துவதில் சாரமான பங்கு வகிக்கும் என்பது உறுதி.

      இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்துக்குப் பார தூரமான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் மஹாகவியைப் பூரணமாய் நுகர்வதற்கு ஒரு சாளரத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

      மஹாகவியின் ‘பொருள் நூறு’ அச்சு வடிவம் காணும் இந்த நேரத்தில் கவனமாகக் கையெழுத்துப் பிரதியை என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகள் முன் ஒப்படைத்த அன்பு நண்பர் ஆர். பத்மநாப அய்யர் அவர்களுக்குப் பெருநன்றி பாராட்டுகின்றேன்.

      இத்தனை காலத்துக்குப் பிறகு இந்நூலை நான் கண்டெடுக்கவும், அதனைத் தமிழுலகுக்கு வழங்கவும் தூண்டுகோலாய்த் திகழும் இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்.

      ஈழத் தமிழ் இலக்கிய சேவைக்குத் தம்மை முழுதாக ஒப்படைத்திருக்கும் மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் பொன். அநுரவுக்கும், பொன். இந்ரவுக்கும் என் அன்பைப் புலப்படுத்துகின்றேன். - சிற்பி பாலசுப்பிரமணியம்

      முன்னீடு

      ஏ.ஜே. கனகரட்னா மூலம் எனக்கு அறிமுகமான பல இளம் கவிஞர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பா.சத்தியசீலன். அவர், மஹாகவிமீது மிகுந்த குருபக்தி செலுத்தி வளர்ந்தவர். ஒரு சமயம் கொழும்பில் என்னைச் சந்தித்த பொழுது, மஹாகவி இந்த நூற்றாண்டின் ஈழத்துத்தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சில படைப்புகளை முழுமைப்படுத்தியுள்ளார் என்று கூறினார். அரசு வெளியீடுகளுடன் நான் பிணைந்திருந்த காலம் அது. மஹாகவியின் அண்மைக்காலப் படைப்புகளை அரசு வெளியீடு சார்பாகப் பிரசுரிக்கும் சாத்தியக் கூறுகளை அறிவதற்காக அவரை அவர் அறையிலே சந்தித்தேன். குறும்பா, பொருள்நூறு ஆகிய இரண்டு தொகைகளையும் வாசித்துப் பார்க்குமாறு கையளித்தார். அவர் அந்நூல்களைக் கையளித்த சில நாள்களிலேயே நீர்கொழும்பில் தமிழ் விழா ஒன்று நடைபெறலாயிற்று.

      இந்தத் தமிழ் விழாவிலே மரபினைத் தகர்க்கும் ஒரு நடவடிக்கையினை மஹாகவி வனைந்தார். மூத்த கவிஞருமான அவரையே தலைவராகக் கொண்டு கவியரங்கத்தினை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆயினும், யாழ்ப்பாணம்-தேவன், இரசிகமணி கனகசெந்திநாதன் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தலைமை தாங்கும் கவிஞர், பாடவரும் கவிஞைர நான்கு கவிதை வரிகளிலே அறிமுகப்படுத்தும் பழைமையைத் தகர்க்கும் காலம் வந்திருக்கிறது. கவிதை முடிந்ததும், கவிஞர்களுக்கும் சுவைஞர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நகைச்சுவையுடன் கவிதையின் பொருளை கூறுதல் விரும்பத்தக்கது. எஸ்.பொ. இதனை அற்புதமாகச் செய்வார். எனவே, இன்றைய கவியரங்கத்தில் நானும் ஒரு கவிஞனாகக் கலந்து கொள்கிறேன். ஆனால் கவியரங்கத்திற்கு எஸ்.பொ.வே தலைமைத் தாங்குதல் வேண்டும்’ என்று விடாப்பிடியாக மஹாகவி நின்று கொண்டார்.

      அவருடைய பிரேரிப்பிலிருந்த தமிழ் சுவைப்புச் சௌகரியங்களை உணர்ந்த இரசிகமணியும், யாழ்ப்பாணம்-தேவனும், ஏனைய கவிஞர்களும் ஆதரவளிக்கவே, கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்க நேர்ந்தது.

      நீர்கொழும்புக் கவியரங்கு தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அமைந்தது. மஹாகவியின் குறும்பாக்கள் சில அங்குதான் முதன்முதலில் தமிழ்ச் சுவைப்புக்கு அரங்கேறின. க்ரியா கராதியில், குறும்பா பெ. (இலங்) ஐந்தடி கொண்ட நகைச்சுவைப்பாங்கான செய்யுள் வடிவம், Limerick என்று பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அநர்த்தம் க்ரியாவின் தமிழ் கராதியில் புகுந்து கொள்வதற்கு நுஃமான் காரணராய் இருந்திருக்கலாம். இலங்கைச் சொற்கள் பலவற்றின் அர்த்தங்கள் இவரால் அநர்த்தங்களாக்கப் பட்டிருப்பது எதிர்காலத்தில் திருத்தப்படவேண்டும். ஒரு சந்தர்ப்பத்திலே க்ரியா இராமகிருஷ்ணனுடன் உரையாடிய பொழுது இதனை நேரிலே சொன்னேன். குறும்பா என்பது இலங்கையில் வழங்கிய சொல் அல்ல. ஆங்கிலத்தில் பயிற்சியிலிருந்த நையாண்டி சார்ந்த கவிதை வடிவம் ஒன்றினைத் தமிழுக்கு கொண்டு வர நினைத்து, அதற்கு இலக்கண விதிகள் அமைத்த முன்னோடிதான் மஹாகவி. அஃது அவர் தந்த தமிழ்ச் சொல்! இருபதாம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த படைப்பிலக்கியவாதிகளுள் படைத்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான புதுச் சொற்களை இணக்கிய தலைமைப் பெருமையை மஹாகவியும் நானும் பங்கிட்டுக்கொள்ளுதல் மிகவும் நியாயமானது. குறும்பாவுக்கான இலக்கணம் ஒன்று விரிவாக எழுதப்படுதல் வேண்டுமென்ற அக்கறையினால், அதன் வடிவம் குறித்தும், இலக்கணம் குறித்தும் இருவரும் பல நாள்கள் பேசியிருக்கிறோம். அதன் பின்னர்தான் அதற்கான என் இலக்கணம் எழுதப்பட்டது. இந்த உண்மைகளை உள் வாங்காமல், 'தமிழிலே குறும்பா படைப்பு மஹாகவியின் முயற்சிக்கு முந்தியது’ என என் நண்பன் சில்லையூர் செல்வராஜன் வழக்குரைக்கப் புகுந்தமை, முற்போக்கு எழுத்து வட்டத்தினரின் இலக்கியச் செமியாக் குணங்களின் அடையாளந்தான். என்னைப் போலவே மஹாகவியும் கைலாசபதி கோஷ்டியினரின் திட்டமிட்ட இருட்டடிப்புக்கு உட்படுத்தப்பட்டார் என்பது இரகசியமல்ல. பசுபதியின் கவிதா ஆற்றலைக் குடைந்து கண்டெடுத்து அறிவித்த கைலாசபதி, கவிதை உலகில் மஹாகவி நிகழ்த்திக் கொண்டிருந்த மாற்றறங்களையும், அதனால் மதர்த்த செழுமைகளைப் பற்றியும் பேசவில்லை. காரணம் மிக எளிது. மஹாகவியின் படைப்பு ஓர்மம் கைலாசபதிக்கு 'ஐயா’ போடும் நிலைக்கு என்றும் தாழ்ந்ததில்லை! ஆனாலும், இலக்கியப் போரிலே மஹாகவி ஒரு சத்தியாக்கிரகியாகச் செயற்பட்டார். நீதிகளை அறுக்க என் வழி உருத்திரா தாண்டவம்!

      குறும்பாவை அழகிய முறையிலே புதுமையாகப் பிரசுரித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டோம்.சித்திரங்கள் சிலவற்றை புதியவர் ஒருவைரக் கொண்டு வைரதல் வேண்டுமென்றும் விரும்பினார். என் மாணவனான 'சௌ’வைக் கொழும்புக்கு வரவழைத்தேன். இருவரும் குறும்பா வாசித்தோம். சித்திரங்கள் பற்றிய கற்பனையை விவாதித்தோம். மாதிரிக்கான சித்திரங்கள் சில வைரயப்பட்டன. அவற்றைப் பார்த்த மஹாகவி மகிழ்ந்தார். மஹாகவியின் குறும்பா என்னும் அந்நூல் கவிதைத் துறையில் மட்டுமல்ல, ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையிலும் புதுசு சாதித்தது.

      'வரலாற்றில் வாழ்தல்’ என்னும் என் சுயசரிதையிலே மஹாகவி பற்றிப் பரந்துபடக் குறிப்பிட்டுள்ளேன். பொருத்தம் கருதி சில பகுதிகளை மட்டும் மீளப் பிரசித்தஞ் செய்கின்றேன். 'பாரதி தமிழ்க் கவிதைக்குப் புதிய திசையும் வீறும் அருளினான். அதன் தாக்கத்தினை உரிய முறையிலே உள்வாங்கி, சரியான திசையிலும் வகையிலும் முன்னெடுக்கும் தலைமைக் கவிஞராய் மஹாகவி திமிர்த்தார். இவருடைய இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி. அளவெட்டிக் கிராமத்திலிருந்து, ஒத்த சமூக குடும்பப் பின்னணியில் அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், து. உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் எழுத்துலகப் பிரவேசஞ் செய்தார்கள். மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளிலே தமது ஆளுமையைப் பதித்தார்கள். அவர்களுள் மஹாகவி கவிதையைத் தமது தொழிலாகப் பயின்று தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தி, கவிதையின் அக்கறைகளையும் சாத்தியங்களையும் அகலித்தார். சாதாரண யாழ்ப்பாணத்து இளைஞனாய் 'கிளாக்கர்’ சேவையிற் சேர்ந்து, தனது ஆற்றலாலும் திறமையாலும் சிவில் சேர்விஸ் உத்தியோகத்தராய் உயர்ந்தார். புதிய பணியின் அலைச்சல்களினால், தமது நூல்களைப் பிரசுரிக்கும் அக்கறைகளுக்கு வாய்தா கொடுத்தும் வாழ்ந்தார். இந்நிலையில் மகாகவி மரணத்தை ஏற்றார்.’

      அரசு வெளியீடு செயலிழக்க நேரிட்டது. அதன் அதிபர் இளம்பிறை ரஹ்மான் நிர்ப்பந்தமாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என் இலக்கிய ருத்ராதாண்டவத்தை முறியடிக்க, முற்போக்கு இலக்கிய கோஷ்டியினர் தமது அரசியல் செல்வாக்கினைப் பிரயோகித்து ரஹ்மானை நாடுகடத்தி வைத்தார்கள் என்கிற என் ஐமிச்சம் இன்னமும் நிலுவையில் உண்டு.

      என் வாழ்க்கையும் திசை மாறியது. நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே நான் மேற்கொண்ட புலப்பெயர்வுகளினால், என் தமிழ் இலக்கிய ஊழியத்தை மறக்கவுந் துறக்கவும் நேர்ந்து. பணத்தேடலுக்கான உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்று, சென்னையிலே மித்ர வெளியீட்டினை நிறுவி, என் வாழ்க்கையை இலக்கிய ஊழியமாக்கிக் கொண்டேன். மஹாகவியின் தமிழ் ஊழியத்தினால் ஈழத்தின் கவிதை பிரவாகம் கண்டது என்கிற வாத்ஸல்யத்துடன் வாழும் எனக்கு மஹாகவி பற்றிய நினைவுகள் அடிக்கடி எழும்.

      குறும்பாவும், பொருள் நூறும் பிரசுரத்திற்காக என்னிடம் கையளிக்கப்பட்ட வடிவம் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வெளிர் நீலத்தாளில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கவிதையே இடம்பெறும் வகையில் தட்டச்சில் வடித்து, நூலாக வடிவமைத்துத் தந்தார். இரண்டினதும் பிரசு உரிமை இளம்பிறை ரஹ்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது. பொருள் நூறிலே இடம் பெற்ற கவிதைகள் சில மஹாகவி உயிர்வாழ்ந்த காலத்திலேயே அவ்வப்போது இளம்பிறை மாசிகையில் பிரசுரமாகியிருந்தன. 'குறும்பாவிலும் பார்க்க அழகிய முறையிலே பொருள் நூறு பிரசுரமாகும்’ என வருக்கு வாக்கும் கொடுத்தேன். அவசர கதியில் ரஹ்மான் கொழும்பிலிருந்து புறப்பட்டதினால், மஹாகவி என்னிடம் ளித்திருந்த மூலப்பிரதி தொலைந்து போனது.

      கால்நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தது. இந்நிலையில், 22-04-06 இல், பொள்ளாச்சி இலக்கியக் கழகம் நடாத்திய விழாவிலே உரையாற்றுமாறு நண்பர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்னை அழைத்திருந்தார். நீர்கொழும்பைப் போலவே தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அஃது மைந்தது.

      நண்பர் வீட்டில் இரவு விருந்துண்டு, உரையாடிக் கொண்டிருந்தோம். சந்தர்ப்பவசமாக மஹாகவியின் கவிதை ஊழியம் பற்றியும் பேச்சுத் திரும்பியது. 'அவருடைய பொருள் நூறு கையெழுத்துப் பிரதி என்னிடம் இருப்பதாக ஒரு ஞாபகம். தேடிப் பார்க்க வேண்டும்’ என்றார். அதனை நான் தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைச் சொன்னேன். 'பழைய காகிதக் காட்டுக்குள் சிக்கியுள்ளது. ஆனாலும் தேடித் தருகிறேன்’ எனக் கவிஞர் சிற்பி அபயமளித்தார்.

      அவருடன் தொலைபேசியிலே தொடர்புகொள்ளும் பொழுது 'பொருள் நூறு' குறித்தும் ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளுதல் என் வழக்கமாகியது. ஓராண்டும் ஓடி முடிந்தது. சென்ற ஆண்டில் நத்தார் பண்டிகையின்போது, 'மஹாகவின் கவிதைக் கட்டுக் கிடைத்துவிட்டது’ என்கிற தேனார் செய்தியை என் செவிகளிலே கவிஞர் சிற்பி பாய்ச்சினார்.

      கால்நூற்றாண்டுக்கும் மேலாக 'பொருள் நூறு’ தொகையைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ச் சுவைப்புக்கு வைத்த வள்ளலாகவே பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரணியம் தோன்றுகின்றார். கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகத் தமிழ் வளர்த்தவர். புதுக்கவிதை எழுச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வானம்பாடிகளின் கவிதை ஊழியத்திலே முக்கிய பங்கு வகித்தவர். அவருடைய இலக்கியப் புலமையை இந்திய சாகித்ய அக்கடமி இரண்டு தடவைகள் சங்கை செய்துள்ளது. கல்வியாளராயும் கவிஞராயும் வாழ்பவர். ஈழத் தமிழர் களின் கவிதா ஆற்றில் மதித்து, அதன் பரம்பலுக்கு உதவுகின்றார். இத்தகைய ஒருவர் மஹாகவியின் இந்நூலுக்கும் பாயிரம் வழங்க முற்றிலும் தகைமையர். 'பொருள் நூறு’ தொகையின் சுவையின் ஊடாக மட்டுமன்றி, மஹாகவியின் கவிதா ஆற்றலின் ஊடாகப் பயணிக்கச் சகாயஞ் செய்யும் வகையில் பாயிரம் தந்துள்ளார். வருக்கு ஈழத் தமிழ் இலக்கிய முனைப்புகளின் முயற்சிகளின் சார்பாக என் நன்றி.

      பாரதியாரின் கவிதா ஆற்றலைப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் ங்கீகரிக்கத் தயங்கிய காலத்திலே, தனைப் போற்றிப் பரப்ப முந்தி நின்றார் பண்டிதர் மயில்வாகனனார். அவர் விபுலாநந்த அடிகளாகி, சிலப்பதிகாரத்தின் நுட்பங்களையும், அதன் பேறாக யாழ்நூலையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மீட்டெடுத் தந்தார். அவரே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மகிமை பெற்றவர். அவரைத் தொடர்ந்து பேராசிரியரான கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழுக்கு நாடக அந்தஸ்து அளித்தார். பேராசிரியர் சதாசிவம் ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் வெளியிட்டார். இலங்கை சாகித்திய மண்டலத்தைத் தமிழிலே கலைப்பூங்கா என்னும் தமிழ்ச் சஞ்சீவியை வெளியிடத் தூண்டினார். பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு மாநிலம் போற்றிய நாட்டுக் கூத்துகளுக்குப் புதிய சுவைஞர்களைச் சம்பாதித்துக் கொடுத்தார். இத்தகைய பாரம்பரியம் உள்ள இலங்கைப் பல்கழகங்களின் தமிழ்த் துறைகளுக்கு கைலாபதி-சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்த பின்னர் நேர்ந்த அவலக் கதிக்குக் காரணம் என்ன? கல்லறைத் தத்துவங்களிலே நீள்துயில் பயில்கின்றதா? முற்போக்கு என்பது வெறும் தற்பற்றாகச் சுருங்கிவிட்டதா? புத்தாயிரத்திலே தமிழ்க் கவிதை முயற்சிகளுக்கு மஹாகவியின் தமிழ் ஊழியம் உண்மையிலே ஒரு சுவிசேமாகும். அந்த சுவிசேத்தினை ( மஹாகவியின் முழுமையான கவிதைத் தொகுப்பு ) வெளியிட்டுத் தமிழ்த்துறைகள் தமக்குக் கௌரவம் சேர்க்கத் தவறியது ஏன்? அத்தகைய நூலை வெளியிட சாகித்திய மண்டலத்தினைத் தூண்டாதது ஏன்? மஹாகவியின் கவிதா ஆற்றலைக் கண்டுகொள்ளாத ஒரு போக்கினைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் என்ன? நீயுமா நுஃமான்? தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எஸ்.பொ வின் படைப்பாற்றலுக்கு வசைபாடும் 'திருவிழா’க்களிலே 'மினக்கடாமல்’, மஹாகவியால் தமது கவிதைவளத்தைப் பெருக்கியவன் என்கிற உரிமையுடன் இந்த ஆக்கப் பணிக்கு வழிகோலியிருக்கலாம் அல்லவா? புதிய ஆற்றல்களை பாராட்டவும் முன்னெடுக்கவும் ஆர்வம் இல்லாத ஒரு மலட்டுத்தன்மை எவ்வாறு தமிழ் துறைகளைப் பீடித்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டியதும், தவறுகள் நேர்செய்யப்படுதலும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

      மஹாகவியின் கவிதைகள் முழுமையாக அடங்கிய ஈழத் தமிழ்க் கவிதைச் சுவிதேதினை வெளியிடுவதில் மித்ர என்றும் தன் பங்களிப்பினைச் செய்யும் என்பதை அறிவிப்பதில் மனநிறைவு டைகின்றேன்.

      இறுதியாக, பத்மநாப ஐயருக்கு நன்றி கூறாது விடின் என் முன்னீடு முழுமையடையாது. இவர் ஈழத்துத் தமிழ் எழுத்துக்களை உலகமெலாம் பரப்புவதையே தமது வாழ்க்கையாக்கி வாழும் இனியர். அவருடைய அக்கறையினால் மட்டுமே, மஹாகவியின் இந்தத் தொகை அச்சுவாகனம் ஏறுகின்றது. உலகத் தமிழ்ச் சுவைப்பின் சார்பில் இவருக்கு நன்றி. 'குறும்பா’ விலும் பார்க்க அழகிய முறையில் 'பொருள் நூறு’ அச்சாகும் என நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த வாக்கினை நிறைவேற்றும் வகையில் இதனை வடிவமைத்துத் தந்துள்ள திருமதி சைலஜா இந்ரவுக்கு என் நன்றி. - எஸ்.பொ


      128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு மித்ர வெளியீடாக வந்துள்ளது.
      இதன் விலை ரூ 100.00

      •  

      மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்

      1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது

      'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள்.

      காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
      \\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.

      தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.

      அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\

      2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்

      பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.
      - வைகறை

      'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
      - கோவி.லெனின்

      25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...

      பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.

      “உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
      என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.

      “சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
      என்று வ.ரா சொன்போது

      பாரதி கேட்டார்.

      “இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”

      இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.


      “இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.

      இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?

      3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி

      அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....

      தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....

      .... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.

      இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...

      இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.

      மேலதிக தகவல்களுக்கு..

      வைகறை
      சாளரம்
      2/1758, சாரதி நகர்
      என்ஃபீல்டு அவன்யூ,
      மடிப்பாக்கம்,
      சென்னை - 600091

      •  

      மறை பொருள் வாசிப்பு

      ஆங்கிலத்தில் Knowing Inner Text,Reading Sub Text என்று கூறப்படுகின்றவற்றை நாம் பொதுவாக தமிழில் மறை பொருள் வாசிப்பு என்று கூறலாம் என்பது என் கருத்து. ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தன் எழுத்துக்களால் நேரடியாக கூறுகின்ற விடயங்களைவிட, எழுதாமல் விட்ட அல்லது எழுதிய எழுத்துக்களுக்குள் இடையில் மறைத்து வைத்த எழுத்துக்களைத் தெரிந்து கொள்வதுதான் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக, உன்னத வாசிப்பாகக் கருதப்படுகிறது. எழுத்தாளர்கள் பலரும் இவ்வாறு தாம் எழுதுவதையும், தன் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகன், அதனை உரியவாறு புரிந்துகொள்வான் என்பதையும் பெருமையுடன் கூறுவதும் உண்டு.

      இவ்வறே தான் நவீன ஓவியங்களும். நேரடியான எழில் மிகு ஓவியங்களைவிட கோடுகள், கிறுக்கல்கள் மிகுந்த நவீன ஓவியங்கள் நேரடியாக எதையும் கூறாமல், மறை பொருளிலேயே அதன் வெளிப்படுகளைத் தருகின்றன.

      எழுத்துக்கள், கவிதைகள், ஓவியங்கள் போலவே படங்களும் சில வேளைகளில் சொல்லாத சேதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக அமையலாம்.

      இவ்வாறு அண்மையில் என் கண்ணில் பட்ட ஒரு மாத இதழின் அட்டைப்படத்தில் மறைபொருள் பல உள்ளதை என்னால் உணர முடிந்தது.

      ( படத்தை அழுத்துவதன் மூலம் மிகப் பெரிய படத்தை நீங்கள் பார்வையிடமுடியும்.)

      இவ் இதழின் அட்டைப் படத்தில் காணப்படும் வாசகங்கள், இதழின் தலைப்பு, இதழின் பெருமை, புகைப்படம் ஆகிய விடயங்களைக் கொண்டு வாசகர்கள் உணரக்கூடிய மறை பொருள் யாவை.

      மிகச் சிறந்ததும், மிகச் சரியானதுமான மறைபொருளை உணர்த்தும் வாசகருக்கு, விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள, 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பட்டியலில் இருந்து அவர் விரும்பும் புத்தகங்கள் இரண்டினை வழங்கவுள்ளோம்.

      •  

      தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2007

      தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2007 ஆம் ஆண்டிற்கான,( 2007.01.01 முதல் 2007.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.

      அறிவிக்கப்பட்டுள்ள 31 வகைப்பாடுகளில், 26 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக திருவள்ளுவர் தினத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

      இரு வகைப்பாடுகளில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை. மூன்று வகைப்பாடுகளில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை. வகைப்பாடு 17 இல் மானிடவியல், நிலவியல் எனத் துறை வேறுபட்டுள்ளமையும், நடுவருள் இருவர் இரு நூல்களுக்கும் முதற் பரிசு மதிப்பெண் கொடுத்துள்ளமையும் கருத்தில் கொள்ளபட்டு, பரிசுகள் பகிர்ந்தளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே பதிப்பகம் தென்திசை பதிப்பகம் பதிப்பித்த மூன்று புத்தகங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது.

      1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை
      புத்தகம் : திருத்தொண்டர் காப்பியம்
      எழுத்தாளர் : சூ.இன்னாசி
      பதிப்பகம் : காவ்யா பதிப்பகம்

      2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை
      புத்தகம் : கனவைப் போலொரு மரணம்
      எழுத்தாளர் : அ.வெண்ணிலா
      பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்

      3.புத்தகப் பிரிவு : புதினம்
      புத்தகம் : நதியின் மடியில்
      எழுத்தாளர் : ப.ஜீவகாருண்யன்
      பதிப்பகம் : அருள் புத்தக நிலையம் - கடலூர்

      4.புத்தகப் பிரிவு : சிறுகதை
      புத்தகம் : ஆலமர இடையழகு
      எழுத்தாளர் : எழில்வரதன்
      பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்

      5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )
      புத்தகம் : அக்கினிக் குஞ்சு
      எழுத்தாளர் : முனைவர் மா.பா.குருசாமி
      பதிப்பகம் : காந்திய இலக்கியச் சங்கம் - மதுரை

      6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்
      புத்தகம் : மருது சகோதரர்கள்
      எழுத்தாளர் : சு.குப்புசாமி
      பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்

      7.புத்தகப் பிரிவு : திறனாய்வு
      புத்தகம் : சிலம்பில் பாத்திரங்கள் பங்கும், பண்பும்
      எழுத்தாளர் : முனைவர் கா.மீனாட்சி சுந்தரம்
      பதிப்பகம் : ருக்மணி-இராமநாதன் அறக்கட்டளை - காரைக்குடி

      8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
      புத்தகம் : வ.ஐ.சுப்பிரமணியம் கட்டுரைகள் ( இரண்டு தொகுதிகள் )
      எழுத்தாளர் : வ.ஐ.சுப்பிரமணியம்
      பதிப்பகம் : அடையாளம் - திருச்சி

      9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
      புத்தகம் : அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்
      எழுத்தாளர் : மு.சுப்பிரமணி
      பதிப்பகம் : சீதை பதிப்பகம்

      10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)
      புத்தகம் : உலக சினிமா வரலாறு ; மௌனயுகம்
      எழுத்தாளர் : அஜயன் பாலா
      பதிப்பகம் : தென்திசைப் பதிப்பகம்

      11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
      புத்தகம் : நடுநாட்டுச் சொல்லகராதி
      எழுத்தாளர் : கண்மணி குணசேகரன்
      பதிப்பகம் : தமிழினி

      12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்
      புத்தகம் : கலை வரலாற்றுப் பயணங்கள்
      எழுத்தாளர் : மு.ஸ்ரீனிவாசன்
      பதிப்பகம் : சேகர் பதிப்பகம்

      13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
      புத்தகம் : தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்
      எழுத்தாளர் : அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
      பதிப்பகம் : அனிதா பதிப்பகம் - திருப்பூர்

      14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
      புத்தகம் : புதுச்சேரி மாநிலம் - வரலாறும் பண்பாடும்
      எழுத்தாளர் : முனைவர் சு.தில்லைவனம்
      பதிப்பகம் : சிவசக்திப் பதிப்பகம் - புதுச்சேரி

      15.புத்தகப் பிரிவு : கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்
      புத்தகம் : பெரும்புகழ் எறும்புகள்
      எழுத்தாளர் : முனைவர் மலையமான்
      பதிப்பகம் : அன்புப் பதிப்பகம் - சென்னை

      16.புத்தகப் பிரிவு : பொறியியல், தொழில்நுட்பம்
      புத்தகம் : மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும்
      எழுத்தாளர் : உலோ.செந்தமிழ்க்கோவை
      பதிப்பகம் : பாவை பப்ளிக்கேஷன்ஸ்

      17.(அ)புத்தகப் பிரிவு : மானிடவியல் ( சமூகவியல், புவியில், நிலவியல் )
      புத்தகம் : பண்பாடு ; வேரும் விழுதும்
      எழுத்தாளர் : சு.இராசரத்தினம்
      பதிப்பகம் : தமிழ் ஹெரிடேஜ் அசோசியேஷன் - கனடா

      17.(ஆ)புத்தகப் பிரிவு : நிலவியல் ( மானிடவியல், சமூகவியல், புவியில் )
      புத்தகம் : பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்
      எழுத்தாளர்கள் : முனைவர் ஜி.மணிமாறன், கே.ரேணுகா
      பதிப்பகம் : ரேணுகா பதிப்பகம் - திருநெல்வேலி

      18.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்
      புத்தகம் : இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்
      எழுத்தாளர்கள் : டாக்டர் ஜி.பாலன், டாக்டர் டி.தட்சிணாமூர்த்தி
      பதிப்பகம் : வானதி பதிப்பகம்

      19.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
      நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.

      20.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்
      புத்தகம் : மாற்று மருத்துவங்கள் பகுதி 1, 2, 3, 4
      எழுத்தாளர் : டாக்டர் இரா.மாணிக்கவாசகம்
      பதிப்பகம் : அன்னை அபிராமி அருள் - சென்னை

      21.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
      புத்தகம் : உயிர்காக்கும் சித்த மருத்துவம்
      எழுத்தாளர் : டாக்டர் கே.ஏ.சிதம்பரகாங்கேயன்
      பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

      22.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்
      புத்தகம் : மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும்
      எழுத்தாளர் : முனைவர் க.விநாயகம்
      பதிப்பகம் : ஸ்ரீ அன்னை நூலகம் - திண்டிவனம்

      23.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்
      புத்தகம் : கற்பித்தலில் புதிய அணுகுமுறை ( வரலாறு )
      எழுத்தாளர்கள் : முனைவர் சு.வசந்தி, முனைவர் பி.இரத்தினசபாபதி
      பதிப்பகம் : வனிதா பதிப்பகம் - சென்னை

      24.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்
      புத்தகம் : ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும்
      எழுத்தாளர்கள் : முனைவர் வெ.சுந்தரராஜ், முனைவர் சாமுவேல் பால்ராஜ்
      பதிப்பகம் : மெர்க்குரிசன் பப்ளிக்கேஷன்ஸ் - சென்னை

      25.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்
      புத்தகம் : தமிழகச் சுற்றுச் சூழல்
      எழுத்தாளர் : இரா.பசுமைக்குமார்
      பதிப்பகம் : தாமரை பப்ளிக்கேஷன்ஸ்

      26.புத்தகப் பிரிவு : கணிணியியல்
      ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.

      27.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
      புத்தகம் : தமிழர் கலை இலக்கிய மரபுகள்
      எழுத்தாளர் : முனைவர் ஆறு.இராமநாதன்
      பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்

      28.புத்தகப் பிரிவு : வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம்
      ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.


      29.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு
      நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.

      30.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்
      புத்தகம் : திராவிட இயக்க வரலாறு
      எழுத்தாளர் : கே.ஜி.இராதா மணாளன்
      பதிப்பகம் : பாரி நிலையம்

      31.புத்தகப் பிரிவு : விளையாட்டு
      ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.

      பரிசு பெறும் எழுத்தாளர்களுக்கும், பதிப்பகங்களுக்கும் விருபா தளத்தின் வாழ்த்துக்கள்.
      •