ஹாஜியார் (சிறுகதை) – ஆசிப் மீரான்
“எவ்வளவு திமிரு பாத்தியா? இன்னமும் வரலையே அந்தப் பய” சொல்லி விட்டு சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து ஹாஜியார் உலாவத் தொடங்கினார். அடிக்கிற வெயிலுக்குக் கொஞ்சமும் சளைக்காமல், கோபம் முகத்தில் வெப்பமாக வெளிப்பட்டது. வீட்டின் கொல்லைப் புறம் இருந்த தென்னை மர நிழலில் புட்டுவம் ஒன்று கிடந்தது.
பக்கத்திலேயே கிண்ணம் ஒன்றில் தண்ணீர். அதற்குப் பக்கத்தில் செம்பில் தண்ணீர். எல்லாம் தயாராக இருக்கிறது. வர வேண்டிய பயலைத்தான் காணோம்.
“எலா, உன் மொவனப் போயிப் பாத்துட்டு வரச் சொன்னியாலா?” வீட்டின் சமையலறை நோக்கி இரைந்தார் ஹாஜியார்.
“அவன் அப்பமே போயிட்டானே?” உள்ளிருந்து வந்த குரலில் கொஞ்சம் கலக்கம் தெரிந்தது.
‘எங்க போயித் தொலஞ்சான்? இன்னைக்கு ஜும்-ஆ* இருக்குன்னு மெனக்கெட்டு சொல்லி அனுப்பியிருக்கேன். பெரிய மவராசான்னு நெனப்பு மைராண்டிக்கு” ஹாஜியாருக்குக் கோபம் தலைக்கேறத் தொடங்கியிருந்தது.
அகமது ஹாஜியார் ஹஜ்ஜுக்குப் போய் விட்டு வந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டது. ஹஜ்ஜுக்குப் போனவர்களுக்குப் பொறுமையும், சாந்தியும் மனசளவில் வந்து விடுமென்று சொல்வதைப் பொய்யாக்கியே தீருவது என்று சபதமெடுத்தது போலக் கோபம் வரும் ஹாஜியாருக்கு. ஹஜ்ஜூக்குப் போவதற்கு முன்னாலேயே அவரது கோபம் ஊர் முழுக்கத் தெரிந்த விசயமாகத்தான் இருந்தது. அவர் ஹஜ்ஜுக்குப் போவதாகத் தீர்மானம் செய்தவுடனேயே ஊரில் உள்ளவர்களுக்குப் பெரிய நிம்மதி.. வீட்டில் உள்ளவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்.. அகமது ஹாஜியாரின் மனைவி பாத்துமாயி (ஃபாத்திமா பீவி) அல்லாஹ்வையே நேரில் கண்ட மாதிரி ஆனந்தம் கொண்டாள்.
ஏற்கெனவே மெலிந்து போயிருக்கும் பாத்தும்மாம்மா கையில் “தஸ்பீஹை’க்* கீழே வைக்கவேயில்லை. க·பா*வைப் பார்த்தவர்களுக்குக் கல்மனமும் கரைந்து போகுமென்று தனது உம்மா சொன்னதை மனசுக்குள் கொண்டு வந்து மகிழ்ந்து போனாள். போதாக்குறைக்கு ஹாஜியார் பொண்டாட்டி என்று புதிய பதவியும் கிடைக்கும் என்ற நினைப்பு வேறு அவ்வப்போது உற்சாகம் தந்து கொண்டிருந்தது.
அகமது மீராசாகிப் அவ்வளவு சீக்கிரம் ஹஜ்ஜுக்குக் கிளம்புகிறவர் அல்லர்.
“அதுக்குக் காலம் கெடக்குது. இப்பத்தான பொட்டப் புள்ளயக் கர சேத்திருக்கேன். ரெண்டு மூணு வருஷமாவது போவட்டும். அதுக்குள்ள மழ கிழ வந்து தோட்டத்துல தேங்கா வெளஞ்சு, தேங்காய்க்கு வெலயும் கிடச்சுதுன்னா இன்ஷா அல்லாஹ் போவத்தான செய்யணும்?” என்று ‘ஜமா-அத்தார்’*களிடம் சொல்லித் திரிந்து கொண்டிருந்தவர்தான் அவர்.
“இன்ஷா அல்லாஹ், ஊருக்குள்ள இருக்குற பெரிய மனுசரு நீங்க, உங்களுக்கு அல்லா வாய்ப்பு தராமயா போவான்?” என்று அவருக்கு முன்னால் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், “இந்தாளு ஹஜ்ஜுக்குப் போன மாதிரிதான்” என்று அவர் இல்லாத போது சொன்னதில் நியாயம் இருப்பதாகவே பட்டது.
பின்னே, மழை பெய்யணும்,அதுவும் தோட்டத்தில்தேங்காய் நன்றாகவிளையும்படி பெய்யவேண்டும் அதுவும் நன்றாகவிளைந்த தேங்காய்க்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்க வேண்டும் என்று அவர் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த கோரிக்கைகள் குறைந்தது பத்து வருசத்துக்குள்ளாவது சாத்தியப்படுமென்று எவரும் நினைக்கவில்லை. ஆனால், அப்படிப் பேசிக்கொண்டிருந்தவரை அதிரடியாக இந்த வருசமே ஹஜ்ஜுக்குப் புறப்படப் போகிறேன் என்று சொல்ல வைத்தது நிச்சயமாக இறை சக்திதான் என்று பள்ளிவாசல் தெருவாசிகள் முழுமனதோடு நம்பினார்கள்..
இறைவன் தான் நேராக வராமல் போனாலும் பிற உருவங்களில் தனது செயலை நிகழ்த்துவான் என்பது உண்மையானால் இறைவன் அகமது மீராசாகிப்பை ஹஜ்ஜுக்கு அனுப்புவதற்காக வந்தது மேலத்தெரு சலீம்
மூசா உருவத்தில். சலீம் மூசாவும், அகமது மீராசாகிப்பும் ஒரே வயதினர்தான். ஒரு காலத்தில் நான்காம் வகுப்பு வரை ஒன்றாய் படித்தவர்களும் கூட.. ஆனால் அகமது தனது தகப்பானாருடன் கொழும்பு போய் கொஞ்சம் காசு சேர்த்து ஊருக்கு வரும்போது அந்தப் பணத்தில் தோட்டம் வாங்கிப் போட்டார். கொழும்புக்குப் போய் வந்ததில் கொஞ்சம் பட்டண வாசனை சேர்ந்ததாலோ என்னவோ தகிடுதத்தம் செய்வது அவருக்கு இலகுவாகக் கைவந்தது.
வந்த கொஞ்ச நாளில் ஊர் நிலவரத்தை ஊன்றிக் கவனித்து எங்கே எதிலே காசைப் போடலாம் என்று பார்த்துப் பார்த்து முதலீடு செய்து காசைச் சிரத்தையாகச் சேர்த்து வைத்தார். ஒரு பக்கம் தொழில் என்ற பெயரில் கருப்பட்டி மொத்த வியாபாரம்,வாழை மண்டி என்று ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து வந்தார். பணம் கிடைக்குமென்றால் எதுவும் தவறில்லை என்று உளப்பூர்வமாக நம்பியதால் வட்டிக்குப் பணம் கொடுக்கவும் தயங்கவில்லை அவர். விரைவிலேயே வட்டிப் பணம் போல பணம்காய்ச்சி மரம் உலகத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதும் மற்ற துறைகளைக் கொஞ்சம் ஓரம் கட்டி விட்டு அதிலேயே முழுநேரமும் ஈடுபடத் தொடங்கி விட்டார்.
சலீம் மூசாவும் அகமது மீராசாகிப்பும் நெருக்கமாக இல்லாமல் போனாலும் முகம் பார்த்தால் சிரிப்பவர்களாகத்தான் இருந்து கொண்டிருந்தார்கள் பள்ளிவாசல் பராமரிப்புப் பற்றிய ஜமா-அத் கூட்டம் நடக்கும் வரை.
அகமது வெளியில் ‘அப்படி இப்படி’ இருந்தாலும் பள்ளிவாசலில் பாங்கு* சத்தம் கேட்டால் இருந்ததை இருந்த இடத்தில் போட்டு விட்டு ‘தொழுதுட்டு வந்து பாக்கலாம்’னு சொல்லிட்டு கிளம்பி விடுவார். கையில் காசும் இருப்பதால் அவருக்கு ஜமா-அத்தில் முக்கியத்துவம் இருந்தது. ஜமா-அத் தலைவர் கூட்டத்தைத் துவங்கி விட்டு பள்ளிவாசல் பராமரிப்புக்கு என்ன செய்யலாம் என்று கேள்வியை முன்வைத்தார். கொஞ்ச நேர
அமைதிக்குப் பின் அவரே,”அகமது காக்கா, நெனச்சா நீங்களே எல்லாம் செய்யலாம்தானே?” என்றார்.
அறுபத்து மூன்று வயதாகும் நாகூர் கனி, அகமது மீராசாகிப்பை காக்கா என்று அழைப்பதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் பணம்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..
“கனி காக்கா, வயசுல மூத்தவருங்குறதால நான் உங்கள ஒண்ணும் சொல்லல. என்னப் பாத்தா என்ன இளிச்சவாயன்னு ஒட்டியா வச்சிருக்கு?இங்க இருக்குறவங்க எல்லாம் வேற எதுக்கு இருக்காங்களாம்?”
“அவங்கவங்க அவங்களால முடிஞ்சதைச் செய்வாங்க அகமது” பள்ளிவாசல் இமாம்* குரலில் குழைவை வரவழைத்துக் கொண்டு சொன்னார். அகமது மீராசாகிப்பை காக்கா என்று அழைக்காத வெகு சிலரில் அவரும் ஒருவர். இமாம் என்பதால் அகமது மீராசாகிப்பும் அதைப் பெரிதுபடுத்துவதில்லை.
“அவங்களால முடிஞ்சதுன்னா எவ்வளவு?பத்தா, பதினஞ்சா?” அகமது சாகிப்பின் குரலில் ஏளனம். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது அங்கே.
“என்னலெப்பை, யாரும் பேசாம இருக்காங்க?” அகமது சாகிப்பே கேள்வி மூலம் அமைதியைக் கலைத்தார்.
“பள்ளிவாசல் கிணத்துல தண்ணி குறஞ்சு போச்சுதுல்லா. தண்ணியெடுத்து “ஒளு”*ச் செய்ய கஷ்டமா இருக்கு.பம்பு ஒண்ணு வச்சுட்டா சுளுவாப் போயிடும். கூட்டிக் கழிச்சு ரெண்டாயிரம் செலவாவும்னு சுப்பையா ஆசாரி சொல்லிட்டுப் போனாரு” நாகூர் கனி இழுத்தார்.
“சுப்பையா ஆசாரி கிட்டயா கேட்டியோ? வெளங்குன மாதிரிதான். அவன் மவுத்*தானா அடக்கம் பண்ணுறதுக்கே ஐநூறு செலவாவும்பானே?” அகமது சாகிப் சொல்ல பெரிய நகைச்சுவை கேட்டது மாதிரி எல்லாரும் சிரித்து வைத்தார்கள்.
“காக்கா நெனச்சா… கொஞ்சம் பேசி முடிச்சுப் போடலாம்” நாகூர் கனி சொல்ல, “ஆமா அகமது, பள்ளிவாசல் காரியம். கொஞ்சம் பாத்து செஞ்சுப் போடுங்க” இமாம் பின்பாட்டுப் பாடினார்.
“ரெண்டாயிரம் ரூவா நானேவா குடுக்கணும்? நூறு நூத்தம்பதுன்னா பரவாயில்ல. போனாபோவுது. பள்ளிவாசல் காரியம்னு வேற சொல்லுதியோ.. இரநூறு ரூவா தரேன்.ஜமா-அத்துல மிச்சத்தை வசூல பண்ணிக்கிடுங்க. எனக்கு வேற சோலி கிடக்குது. இன்ஷா அல்லா*, பொறவு பாப்போம்.வரட்டுமா?” சொல்லிக் கொண்டே எழுந்தார்.
“காக்கா, நீங்க இப்படிச் சொல்லக்கூடாது.. நீங்களே தரலன்னா யாரு தரப் போறா?” நாகூர் கனி கெஞ்சலாகக் கேட்டார்.
“என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க எல்லாம் இருக்கீங்கதான? உங்க பங்குக்கு ஏதாவது செய்யுங்க”
“வச்சுக்கிட்டா நாங்க வஞ்சகம் பண்ணுதோம்?” சொல்லி முடித்ததும்தான் நாகூர் கனிக்குச் சொன்னதன் பொருள் புரிந்தது.
“அப்போ, நான் வச்சுக்கிட்டே வஞ்சகம் பண்ணுதேன்னு சொல்லுதியளா?”
“இல்ல காக்கா..நான் அப்படிச் சொல்லலை”
“ஊர் கூட்டம்னு சொல்லிக் கூப்பிட்டுட்டு இப்படி என்னை இப்படி அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளா நெனச்சுக்கிட்டு இருந்திங்க? ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காது உங்களுக்கு. போய் வேற வேலயப் பாருங்க. ஒரு பைசா கூட என் கிட்ட எதிர்பாக்காதீங்க” சொல்லி விட்டு எழுந்தார் அகமது சாகிப்
“காக்கா, இப்படிக் கோவிச்சுக்கிட்டுப் போவாதீங்க. தெரியாம சொல்லிட்டேன்” நாகூர் கனியின் குரல் மெதுவாக வந்தது.
“ஆள விடுங்க” சொல்லிக் கொண்டே அகமது சாகிப் பள்ளிவாசல் தாழ்வாரத்தை விட்டு வெளியில் நடக்க எத்தனிக்கும்போது “அவர் போனா போவட்டும் விடுங்க. ரெண்டாயிரம் ரூவாதானே? நான் தாரேன்” என்றது ஒரு குரல். எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். சலீம் மூசாதான்.
“என்ன பாக்க்குறீங்க? என் கிட்ட ஏது பணம்னுதான பாக்குறீங்க? ஹஜ்ஜு*க்குப் போறதுக்காகக் கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன். இந்த வருசம் இல்லன்னா இன்ஷா அல்லாஹ்,அடுத்த வருசம் போயிட்டுப் போறேன். அவனோட பள்ளிக்கு இங்க செலவழிச்சா என்ன, அங்க செலவழிச்சா என்ன?”
இதைக் கேட்டதும் அகமது மீராசாகிப்பிற்குக் கெட்ட கோபம் வந்து விட்டது. ஒரு வெறும் பயல் இரண்டாயிரம் கொடுக்கிறான். அதுவும் இல்லாமல் எனக்கு முன்னால் ஹஜ்ஜுக்குப் போகப் போவதாக வேறு சொல்கிறான் என்ற நினைப்பில் பெரும் கோபம் வந்து விட்டது. அந்த நினைப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஹஜ்ஜூக்குப் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார். பணம் நிறைய இருந்ததால் அந்த வருடமே ஹஜ்ஜை நிறைவேற்றி ‘ஹாஜியாராகவும்” ஆகி விட்டார்.
ஏற்கெனவே பணமும் இருந்து, இப்போது ஹாஜியாராகவும் ஆகி விட்டதால் ஊருக்குள் ‘ஹாஜியாருக்கு’ தனிமரியாதை. மக்காவைப் பார்த்து வந்ததாலோ என்னவோ கொஞ்ச காலம் அகமது மீராசாகிப் புதுமனிதனாக உலாவரத் தொடங்கினார். பக்தி முழுமையாக ஆட்கொண்டது போல வியாபாரத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டு பள்ளிவாசல் பக்கம் அதிகம் போகத் துவங்கினார். அவரது ஆன்மீக ஈடுபாடு கண்டு வெள்ளிக்கிழமைகளில் ‘குத்பா’*வை அவரே செய்யத் துவங்கினார். ”ஹாஜியாராக’த் தனக்குக் கிடைத்த மரியாதையில் அவருக்கும் ஒரு ஈர்ப்பு வந்து விட்டது. ஆனால், கொஞ்ச காலத்திலேயே இந்த மரியாதை சலிக்கத் துவங்கி விட்டது அகமது சாகிப்புக்கு. என்னதான் ஹாஜியார் என்ற முறையில் மரியாதை கிடைத்தாலும் ஜமா-அத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை விட சலீம் மூசாவுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற கடுப்பு இருந்து கொண்டேதான் இருந்தது ஹாஜியாருக்கு.
“இந்த எளவெடுத்தவன் வருவானாமா இல்லியாமா? உன் மொவன் அவன விட வெளங்காதவனா இருக்கான். அவனப் பாக்கப் போனவன இன்னும் காணல” ஹாஜியார் உறுமத் துவங்கினார்.
“கொஞ்சம் பொறுங்களேன். இப்பம் வந்துடுவான்” பாத்துமா சொன்னதுஅவருக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
“‘வெள்ளிக்கிழமை ‘கொத்துபா’வுக்குப் போவணும். சீக்கிரம் வந்து முடிவெட்டிட்டுப் போ’ன்னு நேத்து இஷா* நேரத்துல அந்தக் கிறுக்கன் கிட்ட சொல்லியிருந்தேன். ‘வெள்ளனே வந்துடுவேன் காக்கா’ன்னு சொல்லிட்டுப் போனான். இன்னும் அந்த வெளங்காத மூதிக்கு விடியலியாக்கும்?” ஹாஜியார் சொல்லி முடிக்கவும் “சலாமலைக்கும் காக்கா” என்ற குரலோடு உள்ளே நுழைந்தார் அக்பர்.
“சலாத்துக்கு ஒரு குறச்சலும் இல்ல. எப்ப வரச் சொன்னா எப்பலே வரே? நாங்க சோலியப் பாக்காம நீ எப்ப வருவேன்னு காத்துக்கிட்டு கிடக்கணுமாக்கும்?” ஹாஜியார் உரக்கப் பேசி தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
தான் சலாம் சொன்னதுக்குப் பதில் கூட ஹாஜியார் சொல்லவில்லை என்பதால் ஹாஜியார் கோபமாக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார் அக்பர்.
“கோவப்படாதிய காக்கா, மேலத்தெருல சலாம் காக்காவோட பொண்ணுக்கு மொட்டை போடச் சொல்லியிருந்தாங்க. சின்னப் புள்ள பாருங்க. மொட்ட போட நேரமாப் போச்சு. இல்லனா உங்களக் காக்க வப்பனா காக்கா.. வந்து உக்காருங்க..ஒரு நிமிசத்துல முடிச்சிடுவோம்” சொல்லிக் கொண்டே கையிலிருந்த பையை பக்கத்திலிருந்த புட்டுவத்தில் வைத்தார் அக்பர்.
அக்பரை ஹாஜியார் ஒருமையில் அழைத்தாலும் அக்பருக்கு அறுபத்தைந்து வயதுக்கு மேலாகிறது. ஊருக்குள் வீடு தேடிச் சென்று ஆண்களுக்குச் சவரம் செய்யும் வேலை அவருக்கு. பார்வை முன்பு போல இல்லை என்பதால் கண்ணாடி போட்டிருக்கிறாரே தவிர கையில் நடுக்கம் இல்லாமல் கத்தி பிடிக்கத் தெரிந்தவர். வீட்டிலேயே சவரம் செய்து கொள்ளலாம் என்பதாலும், கடையில் கொடுப்பதை விடக் குறைச்சலாகக் கொடுத்தால் போதும் என்பதாலும், அதைக் கூட தவணை முறையாகக் கொடுத்தால் போதும் என்பதாலும் அக்பரிடம் தலையைக் கொடுக்க ஆட்கள் தயாராகவே இருந்தார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் அக்பர் தன் குடுமபத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்
“பாத்து வெட்டு. அவசரமில்லாம நிதானமா வெட்டு. கேட்டியா? போன தடவ கரப்பான் பூச்சி தலயக் கரம்புன மாதிரி வெட்டிட்டு போயிட்ட”
‘அப்படில்லாம் இல்ல காக்கா. நம்ம ஒழுங்காத்தான் வெட்டுவோம். நீங்கதான் அவசரத்துல இருந்தீங்கோ”
“ஆமா. அப்புறம் உன்ன மாதிரி வேல சோலி இல்லாதவங்களா நாங்க? சீக்கிரம் சோலியப் பாரு. ஜுமாக்குப் போவணும்”
“சரிதான் காக்கா” சொல்லிக் கொண்டே தனது வேலையில் மூழ்கினார் அக்பர். நாற்பதாண்டுகளாகக் கையில் புழங்கிய கத்தரிக்கோல் அவர் கைகளின் இயக்கத்திற்கு இசைந்து கொடுத்தது. பத்து நிமிடத்துக்குப் பிறகு அவரது கைகளின் இயக்கம் ஓய்ந்த போது ஹாஜியாரின் முடியில் தேவையில்லாத பகுதிகள் நீக்கப்பட்டு ஒரு ஒழுங்கிற்குள் வந்திருந்தது.
அக்பர் செம்பு நீரில் தனது ஆயுதங்களைக் கழுவி பையில் வைத்திருந்த துணியில் அவற்றைத் துடைத்து அதற்குள்ளிருந்த அழுக்குத் தோல் பையில் அவற்றை அடுக்கி வைத்தார்.
“பாத்துமாம்மா. செம்பை உள்ள எடுத்து வச்சிருங்கோ” உள் நோக்கிக் குரல் விடுத்த அக்பர், “சரி ஹாஜியார். அப்ப நான் கெளம்புறேன்” என்று புறப்பட ஆயத்தமானார்..
“கொஞ்சம் இரு., கை நகத்தைக் கொஞ்சம் வெட்டிட்டுட்டுப் போ”
“ஹாஜியார், தப்பா நெனக்காதீங்கோ. கொஞ்சம் வேலயிருக்கு. ஊட்டுக்கு மொவனும் மருமவளும் வந்திருக்காங்கோ. நான் போயி கறி ஏதாவது வாங்கிக் குடுத்துட்டுத்தான் ஜும்மாவுக்கு வரணும். நாளைக்கு வந்து வெட்டி வுடுறேன் ஹாஜியார்”
“என்னது நாளைக்கா? என் சவுரியத்துக்கு நீ வெட்டுவியா உன் சவுரியத்துக்கு நான் வெட்டணுமால பிச்சக்காரப் பயலே, கொஞ்சம் உட்டா உன் வூட்டுக்கு வந்து வெட்டணும்னு சொல்லுவ போலிருக்கே” ஹாஜியார் குரலில் இப்போது அனல் பறந்தது. பக்கத்திலிருந்த புட்டுவத்தை எட்டி உதைத்தார் ஹாஜியார். அதில் இருந்த கிண்ணம் தெறித்து சென்று விழுந்தது. அக்பர் நடுங்கிப் போனார். ஹாஜியாரின் கோபம் பழக்கமானதுதான் என்றாலும் இம்முறை அவரது கோபம் வழமைக்கும் அதிகமாக இருந்தது போலத்தோன்றியது.
“சரி ஹாஜியார்.. சத்தம் போடாதீங்கோ.. அதயும் செஞ்சுட்டே போறேன்” அக்பர் மீண்டும் தனது பையைத் திறந்து ஹாஜியாருக்கு நகம் வெட்டி திருத்தி விடை பெறுவதற்கு அரை மணி நேரமானது. வேண்டுமென்றே நகம் வெட்டுவதற்கு இடையில் ஹாஜியார் வீட்டிற்குள் ஏதோ அவசர காரியம் போல எழுந்து போய் வந்ததை அக்பரால் பெரிதுபடுத்த முடியவில்லை. அவரது தயவும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்ற யதார்த்தத்தை அவர் புரிந்து வைத்திருந்தார்.
அக்பர் வேலை முடித்து வீட்டிற்குப் போய் தனது பையை வைத்து விட்டு கடைக்குப் போய் சாமான்களையும் வாங்கிக் கொடுத்துக் குளித்து ஜும்-ஆவுக்குக் கிளம்புவதற்குள் ஹாஜியார் ‘குத்பா’வைத் துவங்கி விட்டார்.
“..ஆகவே அல்லாஹ்வின் நல்லடியார்களே!! நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நம் இறைவன் நமக்குள்ளே எந்தப் பேதமையையும் உருவாக்கவில்லை. குலத்தாலோ, பிறப்பாலோ, தொழிலாலோ ஒரு மனிதனை விட இன்னொரு மனிதன் உயர்வானவனில்லை. எல்லா மனிதர்களையும் இறைவன் ஒருபோலத்தான் படைத்திருக்கிறான் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நல்லடியார்களே!! கூலி வேலை செய்பவனாக இருந்தாலும் அவனையும் உங்கள் சகோதராக எண்ணிப் பாருங்கள் என்றுதான் இறைவன் நமக்குச் சொல்லியிருக்கிறான்” ஒலி பெருக்கி வழியாக ஹாஜியாரின் பிரசங்கம் தெரு முனை வரையிலும் கேட்டது.
தொழுவதற்காகப் பள்ளிக்குள் அப்போதுதான் நுழைந்து கொண்டிருந்த அக்பர் கண்ணுக்குள் தெறித்து விழுந்த கிண்ணமும், ‘பிச்சக்காரப் பயலே’வும் நிழலாடியது. அவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.
******************************************************
* ஜும்-ஆ தொழுகை -வெள்ளிக்கிழமை மதியத் தொழுகை
* தஸ்பீஹ் – ஜெபமாலை
*க·பா – மக்காவில் இருக்கும் இறை இல்லம்
* ஒளுச் செய்வது – தொழுகைக்கு முன்னர் உடலை நீரால் சுத்தம் செய்வது
*மவுத் – மரணம்
*ஹஜ்ஜுப் பயணம் – இஸ்லாமியர்கள் மக்காவிற்கு மேற்கொள்ளும் புனிதப் பயணம்
*இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்
*குத்பா – வெள்ளிக்கிழமை மதிய தொழுகைக்கு முன்னால் நடத்தப்படும் சொற்பொழிவு
**
மாலனின் ‘திசைகள்’ மின்னிதழில் பிரசுரமானது, வட்டி கொடுக்காமல்!
**
நன்றி : ஆசிப் மீரான் | https://www.facebook.com/asifmeeran