நீளும் பிரார்த்தனைகள்
நூல்: இதோ நம் தாய்
ஆசிரியர்: வயலட்
பதிப்பகம்: சால்ட்
விலை:125/-
**********************
புத்தரின் சொற்களைத் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து, தம்ம பிடகத்தை கட்டமைத்த ஆனந்தரின் கதையிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றை துக்கத்தின் காரணிகளாகக் கண்டறிந்து, அவற்றிலிருந்து விடுபடுதலையே வீடு பேறென வகுத்த புத்தரின் உடற் பிணி குறித்து கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒருவராக அவர் அறிமுகம் ஆகிறார். நிகரற்ற நினைவாற்றல், அர்ப்பணிப்புணர்வு, கருணை என நற்குணங்களால் நிரம்பியிருந்தும் பரிநிர்வாண நிலையை அடைய முடியாது தவித்த ஆனந்தரின் தவிப்பு அன்பினால் விளைந்தது. அதே அன்புதான் ஆனந்தியையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.
ஆனந்தி, யசோதா, கௌதமி என சித்தார்த்தரின் வாழ்வில் தொடர்புடைய பெயர்களே சமகாலத்தில் நிகழும் கதையிலும் புழங்குகின்றன. மரபான கதை சொல்லலாக இல்லாமல் ஆனந்தியின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் நூலில் கடைபரப்பப் படுகிறது. மாற்றுப் பாலினத்தவரின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வான தருணங்கள், நொய்மையான தருணங்கள் என கலவையாகக் காட்சிகள் விரிகின்றன.
சித்தார்த்தரின் வாழ்வில் முக்கியப் பாத்திரம் வகித்த அவரது சிற்றன்னை கௌதமியின் பெயரைக் கொண்டவர்தான் ஆனந்தியின் தாய். இளம்பருவத்தில் கல்வியும், தோழமையும் மறுக்கப்பட்டதால் காயப்பட்ட கௌதமி, தனக்குப் பெண் குழந்தையே வேண்டாம் என்று நினைக்கிறார். அவர் விருப்பிற்கு ஏற்ப பிறந்த மகனே பின்னால் தன்னை ஒரு பெண்ணாக முன்வைக்கும்போது, அவ்வுறவு விருப்பும் வெறுப்பும் கலந்த கலவையாகிறது. பொதுவாகவே அம்மா மகன் உறவைப் போன்றதல்ல அம்மா மகள் உறவு. அது பெரும்பாலும் சேர்ந்திருக்கையில் வெறுப்பும், இழந்தபின் அன்புமாக விரிவடையும் வினோதமான ரசாயனம். அதிலும் மாற்றுப் பாலின அடையாளத்தை முன் வைக்கும் மகளோடு கௌதமி கொண்டிருக்கக்கூடிய உறவு மிகவும் நுட்பமான சிடுக்குகள் நிறைந்தது.
தாயுடன் மட்டுமல்லாது, துணையாக வரும் யசோதா, தோழர்களான யாஸ்மின், கவின்,சிவா என அனைவருடனுமே ஆனந்தி கொள்ளும் உறவின் சிடுக்குகளே கதையின் பேசுபொருள் எனலாம். எல்லா சிடுக்குகளும் சேர்ந்து ஆனந்தியின் மீது சுமத்தும் தனிமை மனச்சோர்வாக மாறுகிறது. மனச்சோர்வென்பது உற்சாகக் குறைவு, எதிலும் நாட்டமின்மை, குற்றவுணர்வைத் தூண்டுதல் என பல்முனைத் தாக்குதலை நம் மீது நடத்தக் கூடியது. அதே கோணங்களிலேயே கதை விரிகிறது.
நாவலில் எல்லா சம்பவங்களும் விரிவாக உரையாடலுடன் முன் வைக்கப்படுவதற்கு மாறாக, தீற்றல்களாக அங்கங்கு சிந்திச் செல்லும் முறை மிக லாகவமாகக் கைவந்திருக்கிறது வயலட்டிற்கு. கதையல்லாத கதை சொல்லல், நிகழ்காலத்திற்கு பின்னணியாக வரும் கடந்த கால விவரணைகள் என கரடுமுரடான பாதையில் மிக அனாயசமாக காற்றில் மிதப்பது போலச் செல்கிறது மொழிநடை. வயலட் நேரடிப் புனைவுகளையும் தொடர்ந்து எழுத வேண்டும்.
வில்லியம் ரைஸ் டேவிஸ், ஹெர்மன் ஓல்டன்பெர்க் , எரியும் நூலகத்தைக் கனவில் கண்டலறும் புத்த பிக்கு, கே.எஸ் என தொடரும் வரிசையில் ஆனந்தியும் தம்மபதத்தின் பிரதிக்குள் தொலைந்து போகிறாள். தம்மபதத்தின் தத்துவச் சுழல்களுக்குள் அமிழும் ஆனந்தியின் முன் கலங்கரை விளக்காகச் சுடர்வது சிறிய குருசடியில் கடல் பச்சை நிறச் சேலையில் ஒளிரும் மேரியின் முகம்தான். அந்த முகமே கௌதமியைப் புரிந்து கொள்ள ஆனந்திக்கு உதவுகிறது.
மனம் உருகிப் பிரார்த்தனை செய்ய முயற்சிக்கும் ஆனந்தியிடம் அவள் மனம் உன்னால் அது முடியாது என்று கெக்கலி கொட்டுவதை என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. என் தோழியர் சிலருக்கும் தெய்வ நம்பிக்கையென்பது மிக பலவீனமானதொரு சரடாகத் தொடர்வதால் பல சமயங்களில் கோவிலில் சுற்றியுள்ளோரின் பக்தி பாவத்தைக் கண்டு வியந்து, நாணியதை அவர்கள் விவரித்தது படிக்கையில் நினைவில் எழுந்தது.
வழக்கமான கதை, அதற்கொரு முடிவு என்றில்லாது ஆனந்தியின் நாட்குறிப்பை எட்டிப் பார்ப்பது போன்ற வாசிப்பனுபவத்தை தந்த நாவல் இது.
மனச் சோர்விலிருந்து மீண்டெழ உளவியலில் முன்வைக்கப்படும் வழிமுறைகள் செயல்படுவது என்பதுதான். சின்னச் சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுவது, முன்பு மனதிற்கு இன்பமளித்துக் கொண்டிருந்தவற்றை மீண்டும் கையிலெடுப்பது ஆகியவையே சிறிய அளவிலான மனச்சோர்விலிருந்து மீளும் வழிமுறைகள். எனவே ஆனந்தி யசோதாவிற்காக முன்வைத்த வேண்டுதலையே நானும் அவளுக்காக முன்வைக்கிறேன்.
அவள் மனதில் சொற்கள் தோன்றட்டும்.அவள் பாதை வெளிச்சம் அடையட்டும்.
