Reading view

அழியாத அன்பு


ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் – அந்தக்
கரவொலிகளைக் கண்ட இசைக் கலைஞர் கையில் முகம் புதைத்துக்
கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார். ஏன்?
முதுகுத் தண்டு சிலிர்த்தது.
விடிகாலைப் பனியில் கிணற்றடி ஈரத்தில் கால் வைத்த மாதிரி,
கடைவாயில் பாலொழுக புன்னகைக்கும் குழந்தையின் சிரிப்பைக் கண்ட
கணம்போல, விடைபெற்றுப் போகிற தருணத்தில் சற்றும் எதிர்பாராமல்
கன்னத்தில் பதிந்த காதலியின் முத்தம் போல, சிலிர்ப்பில் நனைந்து மனம்
இளகியது.
எல்லாம் அந்த சிம்பொனி செய்த வேலை. உள்ளம் சிலிர்த்து விம்ம
சிம்பொனி முடிந்த நொடி கூட்டம் எழுந்து நின்றது. அரங்கம் அதிர கரவொலி
எழுப்பியது. அதை ஏற்றுக்கொள்ள இசையமைப்பாளர், பார்வையாளர்களை
நோக்கித் திரும்பவில்லை. அவரது நண்பர்கள் மேடைக்கு ஓடி வந்தார்கள்.
அவரை அரங்கை நோக்கித் திருப்பினார்கள். அப்போதும் ரசிகர்கள் தொடர்ந்து
கைதட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால்- அந்தக் கரவொலிகளைக் கண்ட
இசைக் கலைஞர் கையில் முகம் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி
அழுதார். ஏன்?
அத்தனை ஆயிரம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த அந்த இசையையோ,
அந்தக் கைதட்டல்களையோ அவரால் கேட்க முடியாது. அவர் காதுகள்
கேட்கும் திறனை இழந்து சில வருடங்கள் ஆகிவிட்டன.
ஓர் இசைக்கலைஞன் செவித் திறனை இழப்பது எத்தனை பெரிய துயரம்!
அதிலும் உலகம் முழுக்கக் கொண்டாடும் தனது இசைக்கோலத்தை, தான்
மட்டும் கேட்க முடியாது போவது எத்தனை பெரிய கொடுமை!
அந்த இசைக் கலைஞன் பீத்தோவன்.
பீத்தோவனின் துயரம் கேட்கும் திறனை இழந்தது மட்டுமல்ல, அவர்
வாழ்வில் இழந்தது அநேகம். தன் மகன் ஆறு வயதில் கச்சேரி செய்து

இன்னொரு மொசார்ட் ஆக வேண்டும் என்ற வெறியில் அடித்து வளர்த்த
அப்பாவிடம் இழந்தது சுதந்திரம். பதினேழு வயதில் அம்மாவைப் பறி
கொடுத்தபோது இழந்தது அரவணைப்பு. அம்மா போனபின் குடிகாரராய்
மாறிய அப்பாவினால் இழந்தது குடும்ப மானம். தம்பி மகனைத் தன் மகனாக
வளர்க்க முற்பட்டபோது நீதிமன்ற வழக்குகளில் இழந்தது பணம்.
மாணவியாய் வந்து காதலியாய் மாறிய பெண்ணிடம் இழந்தது மனம்.

“இவள் ஜோசபின். என் இரண்டாவது மகள்” என்று தன் மகளை நோக்கிக்
கை காட்டினார் அன்னா. அவர் ஹங்கேரி தேசத்துப் பிரபு ஒருவரின்
மனைவி. “நேற்று உங்கள் கச்சேரிக்கு வந்திருந்தேன். என்ன நுட்பம்! என்ன
ஏற்ற இறக்கம்! உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் உருவம் பெற்று வந்ததைப்போல
இருந்தது”
அந்தப் பாராட்டின் ஒவ்வொரு வார்த்தைகளும் பீத்தோவனைக்
கிளர்ச்சியுறச் செய்தன. மிகையில்லாத,தேர்ந்தெடுத்த வார்த்தைகள். அதன்
பின் உண்மை. பேசும்போது ஒலிக்கும் ஓர் உறுதி. உள்ளத்தில் உண்மை ஒளி
உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்.
ஒளியைப் போலத்தான் இருந்தாள் அவள். அப்படி ஓர் அழகு. கண்ணுக்குள்
ஒரு கடல். இதழில் எப்போதும் ஒரு முறுவல். வாலிபம் அவள் மீது
வசந்தத்தை வாரி இறைத்திருந்தது. செல்வம் அந்த மேனிக்கு மெருகு
பூசியிருந்தது.
“இவளுக்கு நீங்கள் இசை சொல்லிக் கொடுக்க முடியுமா?” அன்னாதான்
கேட்டார்.
“தாராளமாக. ஆனால் ஹங்கேரிக்கு வருவதென்றால் கஷ்டம். இங்கே
நிறைய வேலைகள் இருக்கின்றன”
“நீங்கள் அங்கு வர வேண்டியதில்லை. நாங்கள் இங்கு வியன்னாவிற்கு
வந்து விட்டோம். இங்கேயே இரண்டு வருடங்கள் தங்கலாம்
என்றிருக்கிறோம்”.

பாடங்கள் துவங்கின. பீத்தோவனின் நுட்பங்கள் ஜோசபினுக்கு
பிரமிப்பூட்டின. ஆனால், அவை எளிதில் பிடிபடவில்லை. பீத்தோவன்
பியானோவில் வாசிக்க… அவள் அந்த ஸ்வரத்தை வாங்கி வயலினில்
வாசிக்க முற்பட்டாள். முடியவில்லை. “எழுதிக் கொள்!” என்றார் பீத்தோவன்.
எங்கேயோ தேடி ஒரு பென்சிலை எடுத்து வந்தாள். அருகருகே அமர்ந்து
பியானோவில் விரல்களை ஓட விட்டார்கள். ஸ்பரிசமும் பருவமும்,
இசையும் இளமையும் இணைந்து அங்கே ஒரு ரசாயனத்தைச் செய்தன.
அமிலம் போன்ற வீரியமும் ஐஸ்கட்டியைப் போன்ற குளிர்ச்சியும் கொண்ட
அதன் பெயர் காதல்.
காதல் கற்பனைப் பெட்டகத்தின் கதவுகளைத் தகர்த்தெறிந்தன. இசைக்
கோர்வைகள் இதயத்தில் பீறிட்டெழுந்தன.அதில் அவள் கரைகிறாள் எனத்
தெரிந்த போது அவளை அசத்த இன்னும் இன்னும் புதுப் புதுச்
சங்கீதங்களைப் புனைந்தார் பீத்தோவன்.
பால் பொழியும் ஒரு பௌர்ணமி இரவு. மரங்கள் குடை விரித்திருந்த
சாலையில் இருவரும் நடக்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல இடைவெளி
குறைந்தது. விரல்கள் பின்னிக் கொண்டன. “இப்படியே உங்களோடு
நடந்துகொண்டே இருக்க வேண்டும்” என்றாள் ஜோசபின். “நீ கூட
வருவதானால் உலகின் விளிம்பு வரை நடக்கலாம்” என்றார் பீத்தோவன்.
மனதில் மோக ராகங்கள் மோதிப் புரண்டன. இழுத்து இறுக்கி இதழில்
முத்திரையிட்டார் பீத்தோவன். கண்கள் செருக அவளும் அதை ஏற்றுக்
கிறங்கினாள். அத்தனைக்கும் சாட்சியாக உச்சத்தில் சந்திரன். அந்த இரவில்
உருவானதுதான் பீத்தோவனின் பிரபலமான மூன்லைட் சோனடோ.

அவளை நன்றாகத் தயார் செய்திருக்கிறீர்கள், நன்றி” என்றார் அன்னா.
அவரோடு அவரது கணவரும் – அந்த ஹங்கேரியப் பிரபு- வந்திருந்தார்.
“நேற்று அவளுக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளைக்கு அவள் ஓர் இசைக்
கோர்வை வாசித்துக் காட்டினாள். கிறங்கிப் போய்விட்டார் அவர்” அன்னா
தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

மாப்பிள்ளை? நான் சரியாகத்தான் காதில் வாங்கிக் கொண்டேனா?
குழப்பத்துடன் ஜோசபினின் கண்களைப் பார்த்தார் பீத்தோவன். அந்தக்
கடலில் சலனம் இல்லை.
“ஜோசபினுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. மாப்பிள்ளை பேரும்
ஜோசப். எங்கள் தேசத்தில் இன்னொரு பிரபுக்கள் குடும்பத்துப் பையன்”
பீத்தோவனுக்குச் செவிட்டில் அறைந்ததைப் போலிருந்தது.

வசந்தத்திற்குப் பின் வருகிற இலையுதிர் காலத்தில் எல்லாவற்றையும்
இழந்துவிடும் விருட்சங்களைப்போல ஜோசபின் திருமணத்திற்குப் பின்
பீத்தோவன் ஏதுமற்றவனாகத் தன்னை உணர்ந்தார். அவளோடு பேசிய
வார்த்தைகள் எல்லாம் கல்வெட்டுக்களைப்போல இதயத்தில் இறுகிக்
கிடந்தன.
“ஜோசபின், கொஞ்ச நாளாகவே எனக்கு காது மந்தமாகி வருகிறது.
இப்படியே போனால் நாம் எப்படிப் பேசிக்கொள்ளப் போகிறோம் எனக்
கவலையாக இருக்கிறது”
“இதயம் பேசுவதைக் கேட்கக் காதுகள் எதற்கு? நாம் இசையாலே பேசிக்
கொள்வோம்” என ஜோசபின் சுட்டிக் காட்டிய பியானோ இப்போது கை
கொட்டிச் சிரித்தது. அவளுக்காகப் புனைந்த இசைக்கோலங்கள் இப்போது
அர்த்தமிழந்து போலியாகப் புன்னகைத்தன.
‘என் தேவதையே! என்னின் எல்லாமானவளே! நீ கொடுத்த
பென்சிலில்தான் எழுதுகிறேன். தியாகங்கள் இல்லாமல் நம் காதல் வாழுமா?
நீ முழுவதுமாக என்னுடையவள் இல்லை. நான் முழுவதுமாக
உன்னுடையவன் இல்லை. அதை உன்னால் மாற்ற முடியுமா? காதல்
எல்லாவற்றையும் கேட்கிறது. எனக்காக உன்னையும், உனக்காக என்னையும்
கேட்கிறது. நீ சுலபமாக அதை மறந்து விட்டாய். ஆனால், நான் வாழ
வேண்டும். உனக்காகவும், எனக்காகவும். நான் விரைவில் உன்னைச்
சந்திப்பேன். கடந்த சில நாட்களாக நான் என்னை எப்படி உணர்கிறேன்
என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நம் இதயங்கள் எப்போதும்
நெருக்கமாகவே இருந்திருந்தால் எனக்கு இந்த எண்ணங்கள் எழுந்திராது.
உன்னிடம் சொல்ல என் இதயம் முழுதும் ஏராளமான எண்ணங்கள். சில
சமயங்களில் மொழி என்பது ஒன்றுமேயில்லை எனத் தோன்றுகிறது.

எப்போதும் என் காதலியாகவே இரு. எனக்கு எல்லாமுமாக இரு. நான்
உனக்கு இருப்பதைப் போல. மற்றவை கடவுள் விருப்பம்.

-எப்போதும் உன் – லுட்விக் பீத்தோவன்’
‘படுக்கையில் படுத்திருக்கும் இப்போதும் என் எண்ணங்கள், அழியாத
அன்பே, உன்னை நோக்கிப் பாய்கின்றன. அவ்வப்போது மகிழ்ச்சி. ஆனால்
எப்போதும் துயரம். விதி நமக்குப் பதில் சொல்லட்டும் எனக்
காத்திருக்கிறேன். வாழ்ந்தால் முழுவதுமாக உன்னுடன் வாழ்வேன்,
இல்லையெனில் இல்லை. ஆம், நான் முடிவு செய்துவிட்டேன். ஒரு நாள்
முழுவதுமாக உன்னிடம் வந்து சேரும் வரை, சற்று தூரத்திலிருந்தே
உன்னைச் சுற்றிக் கொண்டிருப்பேன்

– என்றும் உன், என்றும் என், என்றும் நம் லுட்விக்’
ஜோசபினைப் பிரிந்த பின் 25 வருடங்கள் திருமணமே செய்துகொள்ளாமல்
வாழ்ந்தார் பீத்தோவன். அவர் இறந்த பின்பு அவர் ஏதாவது உயில் எழுதி
வைத்திருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ள அவரது அலமாரிகளைக்
குடைந்தபோது அகப்பட்ட கடிதங்கள் இவை. பென்சிலால் பீத்தோவனின்
கிறுக்கலான கையெழுத்தில் பத்துப் பக்கங்களுக்கு நீளும் கடிதங்கள்
கிடைத்தன. சில பக்கங்களில் வெறும் குறிப்புக்களைப்போல முற்றுப் பெறாத
வாக்கியங்கள் காணப்பட்டன. ஒரு பக்கத்தில் குறுக்கே கோடிட்டு
அடிக்கப்பட்டிருந்தது.
‘அழியாத அன்பிற்கு’ என அழைக்கப்பட்ட முகவரி இல்லாத, அஞ்சலில்
அனுப்பப்படாத அந்தக் கடிதங்கள் யாருக்கு எழுதப்பட்டவை என்பது பெரும்
புதிராகவே இருந்தது. ஆனால் அந்தக் காகிதங்களில் இருந்த வாட்டர்
மார்க்கைக் கொண்டு அவை எப்போது எழுதப்பட்டிருக்கலாம் என்பதைக்
கண்டுபிடித்தார்கள். அந்தக் கால கட்டத்தில் பீத்தோவன் எங்கு வாழ்ந்தார்
என்பதை வைத்துப் பார்க்கும்போது இவை ஜோசபினுக்கு எழுதியதாக
இருக்கும் என வரலாற்றாசிரியர்கள் முடிவு செய்தனர்.
தன் உள்ளத்து உணர்ச்சிகளைக் காதலியிடம் சொல்ல நினைத்த
பீத்தோவன், ஏனோ சொல்லாமல் தயங்கி மருகியதற்குச் சாட்சியமாகத்
திகழும் இந்தக் கடிதங்கள் இப்போதும் பெர்லின் அரசு நூலகத்தில்
இருக்கின்றன.

ஜோசபினைப் பிரிந்த பிறகு சிலகாலம் குடியிலும், விலைமாதர்களிடமும்
வாழ்க்கையைக் கழித்தார் பீத்தோவன். அப்போது தொற்றிக் கொண்ட
பால்வினை நோய், அவர் பின்னாளில் கேட்கும் திறனை முற்றிலுமாக
இழக்கக் காரணமாயிற்று.

The post அழியாத அன்பு appeared first on Maalan.

  •  

நிவேதிதையா காரணம்?

“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி எழுதிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் பொய்யாகவோ மிகையாகவோ ஒன்றை எழுதுவதும், படிப்பதுவும், பரப்புவதுவும் அதை நம்புவதும் நம் கலாசாரத்தின் ஓர் அம்சமாகவே ஆகி விட்டது .

“பாரத சுதந்திரம் ,அடிமைத்தனத்தை  நீக்குதல்,பெண்மையை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல், ஜாதி வேறுபாடுகளைத் தகர்த்தல், தீண்டாமை நோயைக் களைதல், ஒற்றுமையை வளர்த்தல், மூடநம்பிக்கைகளை வேரறுத்தல், தேசபக்தியை தெய்வபக்திக்கு ஒப்பாக்குதல், அச்சம் தவிர்த்தல் முதலிய சக்தி மிகு சிந்தனைகளை நிவேதியையிடமிருந்து பாரதியார் பெற்றார். பாரதியார் பாடல்களில் உள்ள கருத்துக்கள்,உணர்வுகள், அனைத்திற்கும் நிவேதிதை அளித்த ஊக்கமே மூலம்” என்று சகோதரி நிவேதிதையைப் பற்றிய நூல் ஒன்று கூறுகிறது (நிவேதிதை நூற்றைம்பது-யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா-ராமகிருஷ்ணா மிஷின் வெளியீடு)

இது எவ்வளவு தூரம் உணமை?

பாரதி நிவேதிதாவைச் சந்தித்தது 1905 ஆம் ஆண்டு காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த போது என மேலே குறிப்பிட்ட நூல்  கூறுகிறது. ஆனால் நிவேதிதாவின் வரலாற்றை விவரிக்கும் ஆங்கில நூல் (Sister Nivedita -Pravrajika Atmaprana) பாரதி 1906 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற போது நிவேதிதையைச் சந்தித்ததாகக் கூறுகிறது : “When Subrahmanya Bharathi came to attend Calcutta Congress in 1906 he went to meet Nivedita”. (இந்த நூல் சகோதரி நிவேதிதையின் வாழ்க்கை பற்றிய மெய்யான (authentic) நூல் என மதிக்கப்படுகிறது. இதை எழுதிய ஆத்மபிராணா ராமகிருஷ்ணா மடத்துத் துறவி. பாரதிய வித்யா பவனைத் தோற்றுவித்த கே.எம்.முன்ஷியின் மகள்)

1905ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. முன்பே கூறியபடி அதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அவர் பத்திரிகையாளராகக் கூடப் பங்கேற்றிருக்க சாத்தியம் இல்லை. ஏனெனில் அவர் அப்போது சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதில் அந்தக் கூட்டம் பற்றி ஏதும் எழுதியிருக்கவில்லை

மாறாக 1906ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற்றார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 1906ஆண்டு காலகட்டத்தில் நிவேதிதை கல்கத்தாவில் வசித்து வந்தார். காசியிலிருந்து கல்கத்தா 420 மைல். பயணங்கள் எளிதாக இல்லாத அந்த நாள்களில் பாரதி அவ்வளவு தொலைவு பயணம் செய்து நிவேதிதையைச் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. எனவே, சில நூல்கள் குறிப்பிடுவது போல, கல்கத்தாவின் ஒரு பகுதியான டம் டம் நகரில் இருந்த ஆனந்த மோகன் போஸ் என்பவரது இல்லத்தில்தான் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்.    .

1906 டிசம்பர் 26, 27 தேதிகளில் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதை ஒட்டிய நாள்களில்தான் நிவேதிதையுடனான சந்திப்பு நிகழந்திருக்கக் கூடும் .

நிவேதிதா  அறிவுரை கூறித்தான் பாரதி பெண் கல்வி, ஆண் பெண் சமத்துவம், பெண் விடுதலை போன்ற கருத்துக்களில் நாட்டம் கொண்டார் என்பதற்கு ஆதாரமில்லை. பாரதி நிவேதிதாவைச் சந்தித்தது 1906 டிசம்பர் இறுதியில். ஆனால் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி இதழில். “விக்டோரியா சகரவர்த்தினியின் சரித்திரத்திலிருந்து நமது நாட்டு மாதர்களறியத்த்தக்க சில விஷயங்கள்” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் அவர் கூறுவது; “விக்டோரியா மகாராணியின் பெருமைக்கு முதல் காரணம் அவரது கல்வித் திறமையே. கல்வித் திறமையில்லாதவர்கள் உலகினைப் புகழோடு ஆட்சிபுரிய மாட்டுவார்களா? ஐயோ! கல்வியில்லாதவர்கள் நேரே மண் சுமக்கக்கூட முடியாதவர்களாயிற்றே!

விலங்கோடு மக்க ளனையர்  இலங்குநூல்

கற்றோ டேனை யவர்

இந்தக் குறள் தற்காலத்து ஆசாரத் திருத்தக்காரரகளில் ஒருவரால் இயற்றப்பட்டதனறு. தெய்வப் புலமை திருவள்ளுவ நாயனாரால் இயற்றப்பட்டது.படிப்பில்லாதவர்களையும் படித்தவர்களையும் ஒப்பிட்டு நோக்கினால் மிருகங்களையும் மனிதர்களையும் ஒப்பிடுவது போலுமென்கிறார்.வள்ளுவர். கல்வியற்றோர் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் வண்டியிழுக்கத்தான் பயன்படுவார்கள் என்பது திருவள்ளுவருடைய கருத்து”

(சக்ரவர்த்தினி ஆகஸ்ட் 1905)

1905 அக்டோபர் சக்ரவர்த்தினி இதழில் ஓர் பஞ்சாபி மாது என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை பெண்கல்வி பற்றி தெளிவாக மட்டுமல்ல, சுவையாகவும் பேசுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தக் கட்டுரையில் அந்தப் பெண்மணியின் பெயர் கடைசிவரை சொல்லப்படவே இல்லை! அதற்கு ஒரு காரணமும் உண்டு. அயல்நாட்டில் படித்துவிட்டு சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க வந்திருக்கும் ஒருவரின் மனைவியைப் பற்றிய கட்டுரை அது. அவரின் பெயரைக் குறிப்பிடாததற்குக் காரணம் பற்றி பாரதி இப்படி எழுதுகிறார்: “இவரது உண்மையான பெயரைப் பிரசுரிப்பதற்கு நாம் இவரிடம் அனுமதி கேட்கச் சாவகாசமில்லாது போயின்மை குறித்து விசனமுறுகிறோம், ஆதலால் இவருக்கு பரதர் என்று புனைப்பெயர் கொடுக்கிறோம்” (இதுவல்லவா இதழியல் அறம்!)

இப்படிச் சொல்லிவிட்டு,, “மேற்படி பரதருடைய பத்தினியாரைப் பற்றியே நாம் இவ்விஷயமெழுதத் தொடங்கினோம்” என்று தொடரும் பாரதி, “சென்னை மாகாணத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் தனது தாயாரையும் சகோதரிகளையும், மனைவியரையும் பெண்களையும் கல்வி பெறுவதற்குத் தகுதியில்லாத அடிமைகளாகக் கருதுகிறார்கள் .இக்காரணத்தினாலேயே சென்னை மனிதர்கள் உருவத்திலும் அறிவிலும் மனோதைரியத்திலும் சரீர திடத்திலும் பின்னடைந்தவர்களாக இருக்கின்றனர் என்று  இம்மாது ஒரு முறை சொல்லினாராம். தனது கணவரைப் பார்க்க வரும் சினேகிதர்களிடமெல்லாம் அவரவர் வீட்டு மாதர்களின் கல்வியறிவைப் பற்றியே இவர் பேராவலுடன் விசாரணை புரிவார்:”

(சக்ரவர்த்தினி அக்டோபர் 1905)

வாழும் உதாரணங்கள் காட்டி எழுதியதோடு பாரதி நின்றுவிடவில்லை செல்வச் செழிப்பும், அதிகாரத்தை அணுக வாய்ப்பும் கொண்ட, சென்னை நகரத்துப் பெண்களிடம் சென்னையில் பெண்களுக்கான ஒரு பள்ளி தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறார். எட்வர்ட் அரசருடைய மகனும் பட்டத்து இளவரசருமான வேல்ஸ் இளவரசர் தன் மனைவியுடன் 1905ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பம்பாய் வந்திறங்கிய போது அங்கு அவர்களுக்கு ஆடம்பரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைப் போல அவர்கள் செல்லவிருந்த கல்கத்தாவிலும், சென்னையிலும் வரவேற்பளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதைக் குறித்து 24.10.1905 சுதேசமித்திரனில்  பாரதி எழுதுகிறார்:

“சென்னை நகரத்திலும் வேல்ஸ் இளவரசருக்குச் செய்யும் பல உபசாரங்களுடன் இளவரசியாருக்கும் இந் நகரத்து மாதர்கள் பலர் கூடி பம்பாயில் நடந்ததைப் போல உபசரணைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவென்று கேள்விப்படுகிறோம். மாதர்கள் ஒருங்கூடித் தாமகவே ஒர் பொது நன்மை பற்றிய காரியத்தை ஏற்று நடத்துவது பெருமைக்குரிய விஷயமே என்றாலும் இவ்விஷயத்தில் மிகுதியான பணத்தை வீண் செலவு செய்வது தகுதியாக மாட்டாது.

ஸர்.வி.பாஷ்யமய்யங்காரின் மனைவியார் முதலிய மாது சிரோன்மணிகள் இவ்விஷயத்தில் முற்பட்டு முயற்சி புரிவார்களென்று எண்ணுகிறோமாதலால், அவர்கள் இளவரசியார் வரவின் அறிகுறியாக ஹிந்து மாதர் ஹைஸ்கூல் ஒன்று ஸ்தாபனம் செய்யுமாறு பிரயத்தனிக்கும்படி பிரார்த்தனை புரிகிறோம்”

(சுதேசமித்திரன்  24.10.1905)

பெண் கல்வி விஷயத்தில் மட்டுமல்ல, ‘பெண்களை மதித்தல், ஆண்மையை ஓங்குவித்தல் ’ஒற்றுமையை வளர்த்தல்’ போன்ற விஷயங்களிலும் நிவேதிதாவைச் சந்திக்கும் முன்னரே சுயமான பார்வை கொண்டிருந்தார் என்பதற்கு சக்ரவர்த்தினி இதழில் நவம்பர் 1905ல் அவர் எழுதத் தொடங்கிய துளசிபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையே சான்று. அது மொழிபெயர்ப்பு என்ற போதிலும் அது சொல்லுக்கு சொல் வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட மொழிபெயர்ப்பல்ல. அது  பாரதியின் கருத்துக்களும் வெளிப்படும் மொழியாக்கம். அதே போல ‘ஜாதி வேற்றுமைகளைத் தகர்த்தல். தீண்டாமை நோயைக் களைதல்’ போன்ற எண்ணங்களின் தீவிரமான வெளிப்பாடு 1904ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன் ஹிண்டுவில் எழுதிய ஆங்கிலக் கடிதம் (காண்க தொடரின் முந்தைய கட்டுரைகள்)

நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன்பே பாரதி பெண்கல்வி,பெண்கள் முன்னேற்றம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வழக்களுக்கு எதிரான எண்ணங்கள், மதங்களுக்கிடையே ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு போன்ற எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் இவை. எனவே நிவேதிதாவால்தான் பாரதி இத்தகைய சிந்தனைகளைப் பெற்றார் என்பதும் அவரே மூலம் என்பதும் மிகையான கூற்று. ஒருவரை உயர்த்திப் பேச மற்றவரைத் தாழ்த்துவது இங்கு எப்போதும் உள்ள வாடிக்கைதான்.

அப்படியானால் நிவேதிதா பாரதியிடம் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தவில்லையா?

அப்படிச் சொல்வதற்கு இல்லை. அவர் பாரதியிடம் ஏற்கனவே இருந்த கனலை தூண்டவும் அது பெரு நெருப்பாக வளரவும் அவர்களிடையே 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சந்திப்பு காரணமாக அமைந்தது.

இந்த சந்திப்பு குறித்து ஆராய வேண்டிய கேள்விகள், 1) காங்கிரஸ் மாநாட்டுக்குக் கல்கத்தா சென்ற பாரதி, காங்கிரஸ் தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்காமல், நிவேதிதாவைச் சந்தித்ததின் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?2. ‘எனக்கு ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று நிவேதிதாவைக் குறிப்பிடும் பாரதி ஏன் திலகரை, விபின் சந்திர பாலரைப் பற்றி, விரிவாக எழுதியது போல் எழுதவில்லை?

முதல் கேள்விக்கு என்னுடைய ஊகமான பதில், காங்கிரஸ் ஒருவித நிதானமான அணுகுமுறையைக் கொண்டிருந்த காலகட்டத்தில் நிவேதிதா போர்க்குணம் கொண்டவராக விளங்கினார் என அவரைப் பற்றிய செய்திகள் மூலம் அறிய முடிகிறது (அவை குறித்து இதே தொடரில் விரிவாக முன்னம் எழுதியிருக்கிறேன்) அந்தப் போர்க்குணம்தான் தாகூர் அவரிடம் இருந்து விலகி இருந்ததற்குக்  காரணம் (“She had power and she exerted that power with full force on the lives of others. When it was not possible to agree with her it was impossible to work with her” -Rabindranath Tagore) ஆனால் அதே போர்க்குணம்தான் பாரதியை நிவேதிதாவை நோக்கி பாரதியை ஈர்த்திருக்க வேண்டும்.

எத்தனையோ தலைவர்களைப் பற்றி, ஆப்கானிஸ்தானத்து அமீர் உட்பட அயலகப் பிரமுகர்களைப் பற்றி, போற்றுதலுக்குரிய பெண்மணிகளான அகல்யா பாய், சரளாதேவி (தாகூரின் சகோதரி) -ஏன் விக்டோரியா மகாராணி பற்றிக் கூட –  குறித்தெல்லாம் எழுதிய பாரதி நிவேதிதா பற்றி அதிகம் எழுதவில்லை. நிவேதிதா 1911ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானார். அதாவது நிவேதிதா பாரதி சந்திப்பு நிகழ்ந்ததற்குப் பின் சுமார் ஐந்தாண்டு காலம் வாழ்ந்திருந்தார். அவர் பாரதியின் ஆங்கில இதழான பாலபாரதாவிற்கு எப்போதாவது எழுதியதாக நிவேதிதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் பாரதி நிவேதிதா பற்றி அதிகம் எழுதவில்லை என்பதுதான் பெரிய ஆச்சரியம்.

நிவேதிதா பற்றி பாரதி எழுதியதாக எனக்குக் கிடைப்பவை. நான்கு சிறிய குறிப்புகள்தான்

1.1906ஆம் ஆண்டு நவம்பர் 24 தேதியிட்ட இந்தியா இதழில் நிவேதிதா உடல் நலிவுற்றிருந்த போது நலம் பெற வேண்டும் என எழுதிய குறிப்பு (அதன் பின் நிவேதிதா நலம் பெற்று பணிகளுக்குத் திரும்பிவிட்டார் இது பாரதி -நிவேதிதா சந்திப்பு நிகழும் முன்னர் எழுதியது)

2.1907 ஆம் ஆண்டு பாலபாரதா என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக, அதன் நவம்பர் இதழில் ஆங்கிலத்தில் எழுதிய தலையங்கத்தில் “Open your eyes, men of India, open your eyes to the facts of life!” எனத் தொடங்கும் நிவேதிதாவின் மேற்கோளைக் குறிப்பிட்டிருப்பது.

3. ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய்’ எனத் தொடங்கும் நிவேதிதா தேவி துதி. அது எப்போது எழுதப்பட்டது எனத் தெரியவில்லை அது பாரதியாரின் வாழ்நாளில் எங்கும் வெளியானதாகத் தெரியவில்லை. அவர் மறைவுக்குப் பின் 1937 ஆம் ஆண்டு வெளியான சுயசரிதையும் பிறபாடல்களும் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது

4. 1908ஆம் ஆண்டு பாரதியே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பான ஸ்வதேச கீதங்களில் காணப்படும் சமர்ப்பணக் குறிப்பு: “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணங்களில் இச் சிறு நூலை சமர்ப்பிக்கிறேன் -ஆசிரியன்” என்கிறது அந்தக் குறிப்பு. அதில் நிவேதிதாவின் பெயர் நேரிடையாக இடம் பெறவில்லை.

இந்தக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு, “சகோதரி பாரதியின் கையைப் பிடித்திழுத்து வெளியே இழுத்து வந்தார்.அங்கே விரிந்து படர்ந்திருந்த ஓர் ஆலமரத்தின் அருகே சென்று, “இதோ பார் பாரத மாதா!” என்றார். இளைஞர் பாரதி வியப்புடன் அவர் காட்டிய திசையில் பார்த்தார். அங்கே அவர் கண்டது என்ன! பாரதமாதாவே தேவியாக வானாளவிய நின்றதை அகக் கண்கள் திறக்கப்பெற்ற பாரதியார் தரிசித்தார்.மெய் சிலிர்த்தது, நா தழுதழுத்தது அப்படியே அந்தத் தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டார்” என்று நாடகீயமாக நிவேதிதை நூற்றைம்பது என்ற நூலில் எழுதியிருக்கிறார்கள்.  கிருஷ்ணனுடைய விஸ்வரூபத்தை உவமையாகச் சொன்னதை ஜோடனைகள் செய்து உணர்ச்சிமயமான நாடகமாக ஆக்கிவிட்டார்கள். இந்த சம்பவம் குறித்து நிவேதிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை!

“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என பாரதி சொல்லியதுதான் எத்தனை உண்மையான வார்த்தை!

The post நிவேதிதையா காரணம்? appeared first on Maalan.

  •  

தகப்பனைப் போல ஒரு முன்னோடி

மாலன்

காற்று வேகமாக வீசும்போது கதவுகள் படீரெனெ திறந்து கொள்வதைப் போல பத்திரிகைப் பணி பாரதியின் மனக் கதவுகளைத் திறந்தது. அவரது பார்வை விரிந்தது.

அவர் பத்திரிகைத் தொழிலுக்கு வந்திருக்கவில்லையென்றால் அதிக பட்சமாக அவரது காலத்தில் வாழ்ந்திருந்த பல சிறந்த தமிழறிஞர்களைப் போல ஓரு தமிழ் அறிஞராக சிறப்பெய்தியிருக்கக் கூடும்.  அவரது காலத்தில் உ.வே.சாமிநாதய்யர், இரண்டு ராகவய்யங்கார்கள், ம.கோபாலகிருஷ்ணன், நாவலர் சோமசுந்தர பாரதி, அரசஞ்சண்முகனார் எனப் பல தமிழறிஞர்கள் வாழ்ந்தார்கள்  அவர்கள் எல்லோரும் செவ்வியல் தமிழுக்கும், இலக்கணத்திற்கும் பங்களித்தார்கள். பத்திரிகைத் தொழிலுக்கு வரும் முன்  பாரதி எழுதிய  கடினமான நடையைக் கொண்ட, இலக்கண சுத்தமான, கவிதைகளைப் பார்க்கும்போது அப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது.

ஆனால்  பாரதியை அவரைச் சுற்றிப் பேரெழுட்சியுடன் மலர்ந்து கொண்டிருந்த நவீன உலகை நோக்கிச் செலுத்தியது அவர் இணைந்து கொண்ட பத்திரிகைத் தொழில்.

அதற்கு சாட்சியாக இருப்பது அவர் ஹிண்டுவிற்கு ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கடிதம். சென்னைக்கு வந்த சில நாள்களிலேயே அவர் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். 1904ஆம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி வரை அவர் மதுரையில் சேதுபதி பள்ளியில் பணியில் இருந்திருக்கிறார். அதன் பின் அவர் நவம்பர் மத்தியில் சென்னையில் சுதேசமித்ரனில் சேர்ந்திருக்கலாம். அந்தக் கடிதம் 1904ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிண்டுவில் வெளியாகியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சுதேசமித்ரனில் அவரது படைப்புகள் ஏதும் வெளியாகும் முன்னரே (அதற்கு 10 மாதங்கள் ஆயிற்று) சென்னை வந்த சில நாள்களிலேயே இந்தக் கடிதம் ஹிண்டுவில் பிரசுரமாகி இருக்கிறது. அந்தக் கடிதம் வெறும் கடிதமல்ல. அது கனல் மணக்கும் பூ.

அதைக் கனல் மணக்கும் பூ எனச் சொல்லக் காரணம் அதில் வெளிப்படும் பாரதியின் அறச்சீற்றம். அந்தக் கடிதத்தில் பாரதி எழுதுகிறார்: “அரசியல் விடுதலை என்பது நான் இந்த நாட்டைச் சார்ந்தவன் என்ற தேசிய உணர்வு இல்லாமல் ஏற்படாது. எங்கே ஜாதி அமைப்பு இருக்கிறதோ அங்கு தேசிய உணர்வு ஏற்படாது.இந்த ஜாதி அமைப்பு என்பது விசித்திரமானது. பறையர் ஒருவர் அறக் கொடைகள் அளிக்கும் வள்ளலாக இருந்தாலும் அவரை ஒரு பிராமணத் தரகனை விடத் தாழ்ந்தவராகவே அது நடத்தும். இங்கிலாந்தில் உரிய தகுதிகள் கொண்ட செருப்புத் தைக்கும் இளைஞன் அந்த நாட்டின் பிரதமராக ஆவதற்கு அங்கு எந்தத் தடையும் எவரிடமிருந்து எழாது ஆனால் சமஸ்கிருத இலக்கியங்களில் இணையற்ற ஞானமும், உயர்ந்த ஒழுக்கமும் பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் இந்து மடம் ஒன்றின் பீடாதிபதியாக வர முடியும் என இந்தியாவில் எவராவது நம்பினால் அவர் தேசத் துரோகியாகக் கருதப்படுவார் சூத்திரனே வர முடியாது என்னும் போது பஞ்சமரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏன் மக்கள் விரும்பியே குருடர்களாக இருக்கிறார்கள்? தேசிய காங்கிரசில் மிகச் சிறந்த தொண்டர்கள் இருக்கிறார்கள், அந்தன் லட்சியங்கள் உயர்ந்தன என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் குழந்தைப் பருவத்திலேயே விதவையாகிவிட்ட ஒரு பெண் என்றென்றும் துயரத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும் என எண்ணும் கல் நெஞ்சம் கொண்ட ஒருவர் தலைமைப் பீடத்திலிருந்து மக்களை எழுட்சியுறச் செய்ய முடியும் என எவரேனும் நம்புவார்களா?” என்று அந்தக் கடிதத்தில் பொரிந்து தள்ளும் பாரதி “சமூக சீர்திருத்தம் இல்லாமல் அரசியல் சீர்த்திருத்தம் என்பது ஒரு கனவு. பொய். ஏனெனில் சமூக அடிமைகள் அரசியல் சுதந்திரம் என்ன என்பதை ஒருபோதும் அறிந்து கொள்ள இயலாது.” என்று கடிதத்தை முடிக்கிறார்.  

இந்த சீற்றத்தின் ஊற்றுக் கண் ஜி.சுப்ரமணிய ஐயர். ஜி.சுப்ரமணிய ஐயரைப் பற்றித் தமிழ் நாட்டில் அதிகம் பேசுவாரில்லை. மறக்கப்படுவதற்காகவே பிறக்கிறவன் பத்திரிகையாளன் என்பதற்கான மற்றொரு நிரூபணம் அவர். அவரைப் பற்றிப் பேசுகிற ஒரு சிலரும் அவர் ஹிண்டு சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரியர், நிறுவனர் என்றோ, மிதவாதி என்றோ ஓரிரு வரிகளில் சுருக்கி விடுவார்கள்.

இவையெல்லாம் உண்மைதான். ஆனால் முழுமையான உண்மைகள் அல்ல. ஜி. சுப்ரமணிய ஐயர் பலவிதங்களில் முன்னோடி. அரசியல் மேடைகளில் தமிழில் பேச வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். மதப் பிரசாரகர்கள் ஊர் ஊராய்ப் போய் பரப்புரை செய்வதைப் போல அரசியல் ஆர்வலர்களும் தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் எனச் சொல்லி அதைத் தொடங்கியவரும் அவர்தான். ஊராட்சி நகராட்சி அமைப்புகளில் பங்கு பெற வேண்டும் என்பதைத் தமிழில் கேள்வி பதில் வடிவத்தில் விளக்கிக் கையேடு வெளியிட்டவரும் அவர்தான்.இவற்றின் நீட்சி அல்லது இன்னொரு வடிவம்தான்  அவரது பத்திரிகைகள்.

அவரது மற்றொரு முகம், அதிகம் அறியப்படாத முகம், அவர் ஒரு சமூக சீர்த்த ஆர்வலர் என்பது. இந்து மதத்தில் இருந்த தீண்டாமை, குழந்தைத் திருமணம் போன்ற வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தவர். அதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட  இந்து ஆசார சீர்திருத்த சபையின் நிறுவனவர்களில் ஒருவர். மேலே குறிப்பிட்டுள்ள கடிதத்தை பாரதி ‘இந்து ஆசார சபையின் உறுப்பினர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கையெழுத்திட்டிருக்கிறார்

ஜி.சுப்பரமணிய ஐயர் பேச்சளவில் நிறுத்திக் கொண்டவர் அல்ல. தன் வாழ்க்கையிலும் மேற்கொண்டு காட்டியவர். அவரது மூத்த மகள் சிவப்பிரியை 13 வயதில் விதவையானபோது அவருக்கு மறுமணம் செய்து வைத்தவர். அதன் காரணமாக ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டவர். அதைப் பொருட்படுத்தாமல் அவர் அந்தத் திருமணத்தை 1889ஆம் ஆண்டு பம்பாயில் முதல் காங்கிரஸ் மாநாடு கூடிய போது நடத்தினார். வேறு ஒரு சமயம், திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் மரணம் நேர்ந்த போது இறந்தவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்து அந்தணர்களும் உறவினர்களும் புறக்கணித்தனர். காரணம் இறந்தவர் இளம் வயதில் விதவையான தன் குழந்தைக்கு மறுமணம் செய்து வைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஜி.சுப்ரமணிய ஐயர், அந்த வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் பேச்சு நடத்தி வேறு சில புரோகிதர்களை ஏற்பாடு செய்து அந்தச் சடங்குகள் நடைபெறச் செய்தார்.

இந்து மத சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக  அவர் கொடுத்த விலை மிகப் பெரிது. அந்த விலை  அவர் தன் உழைப்பையும் செல்வத்தையும் கொண்டு உருவாக்கிய ஹிண்டு நாளிதழ்.

இந்து ஆசார சீர்திருத்த சபையைப் போல சுப்ரமணிய ஐயர் சம்பந்தப்பட்டிருந்த இன்னொரு அமைப்பு திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம். அதைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள்தான் ஹிண்டு பத்திரிகையைத் தொடங்கியவர்கள். ஜி.சுப்ரமணிய ஐயர், எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி.கேசவராவ், என்.சுப்பாராவ் பந்துலு  ஆகிய ‘திருவல்லிக்கேணி அறுவர்’தான் 1878ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று, முதன் முறையாக வெள்ளையர் அல்லாத ஒரு இந்தியர் (முத்துசாமி ஐயர்) உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பிற்கு பதில் கூற ஹிண்டுவைத் தொடங்கினர். அப்போது ஜி.சுப்ரமணிய ஐயருக்கு 23 வயது. இவர்களில் ஜி.சுப்ரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார் ஆகியோர் ஆசிரியர்கள். மற்ற நால்வரும் சட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் படிப்பு முடிந்ததும் வக்கீல் தொழிலை கவனிக்கப் போய் விட்டனர். ஜி.சுப்ரமணிய ஐயர், வீரராகவாச்சாரியர் இருவர் மட்டுமே பத்திரிகையை நடத்த வேண்டிய நிலை. சுப்ரமணிய ஐயர் ஆசிரியர் பொறுப்பை கவனிப்பது என்றும், வீரராகவாச்சாரியர் நிர்வாக இயக்குநராக பத்திரிகையின் விற்பனை, நிதி விஷயங்களைக் கவனிப்பது என வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வரப்பத்திரிகையாகத் தொடங்கிப் பின் வாரம் மும்முறையாக வளர்ந்து, 1887ஆம் ஆண்டு சென்னையில் முத்ன்முறையாக காங்கிரஸ் மாநாடு நடந்த பின் 1889ஆம் ஆண்டு மாலை நாளிதழாக மலர்ந்தது. பிரச்சினை ஜி.சுப்ரமணிய ஐயரின் எழுத்தின் மூலம் நுழைந்தது.

ஜி.சுப்ரமணிய ஐயர் பிரிட்டீஷ அரசின் செயல்கள், அதிகாரிகளின் அத்து மீறல், இவற்றோடு தீண்டாமை, குழந்தைத் திருமணம் ஆகியவற்றை விமர்சித்து எழுதி வந்தார். அவரை மிதவாதி, மென்மையானவர் என்று விமர்சிப்பவர்கள் அவரது எழுத்துக்களை வாசித்துவிட்டுத்தான் பேசுகிறார்களா என்று நான் எண்ணுவது உண்டு. காரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுபவர் அவர். சுதேசமித்திரனில் அவர் எழுதிய தலையங்கத்திலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன்:

மதுரையில் வெங்கோபாச்சாரியார் என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். ஒரு நாள் காலையில் மாணவர்கள் பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வழக்கமான பிரார்த்தனை பாடல்களுக்குப் பின் வந்தேமாதரம் பாடலைப் பாடினர். ஆத்திரம் அடைந்த வெங்கோபாச்சாரியார் ஒன்றரை மணி நேரம் மாணவர்களை பெஞ்ச்சின் மேல் நிற்க வைத்து, மிரட்டி, இதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர் யார் எனக் கண்டுபிடித்து விட்டார். அந்த நான்கு பேரையும் பிரம்பால் விளாசிவிட்டார். அவர்களில் ஒருவருக்கு மணிக்கட்டு பிசகிவிட்டது. சுப்ரமணிய ஐயர் சுதேசமித்திரனில் செய்தியும் வெளியிட்டுத் தலையங்கமும் எழுதினார். அதில் ஒரு வரி: “ ஹிந்துப் பிள்ளைகள் ஹிந்துக்களே நடத்தும் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதன் முக்கிய பலன் தேசாபிமானம் என்கிற உத்தமோத்தமான நல்லுணர்ச்சியைக் கற்பது. அப்படி ஹிந்துப் பிள்ளைகள் தேசாபிமானம் கற்பதால் வெங்கோபாச்சாரிக்குக் கோபம் உண்டாகுமானால் இவரைவிடக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவின குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் ஒருவன் பிரின்சிபலாக இருக்கலாமே?”

குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் என்பது உருவ கேலியாக இருந்தாலும், அந்த சொற்றொடர் இல்லாமலே இந்தக் கண்டனத்தை எழுதியிருக்கலாம் என்றாலும் அது அவரது சீற்றத்தைக் காட்டுகிறது. இந்தச் சீற்றம், அரைக்கணம் இதை பாரதி எழுதியிருப்பாரோ என்ற மயக்கத்தைத் தந்தாலும் இதை எழுதியது பாரதி இல்லை. ஐயர்தான். ஏனெனில் இந்தத் தலையங்கம் வெளியானது 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி. அப்போது பாரதி இந்தியா பத்திரிகைக்குப் போய்விட்டார். அதுமட்டுமல்ல, அவர் இந்தத் தலையங்கத்தை வரவேற்று களி கூத்தாட இந்தியா பத்திரிகையின் 13.10 1906 ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார்

சுப்ரமணியத்தின் ஆங்கில நடையும் இதுபோலக் காரமானதுதான்.அதிலும் குறிப்பாக நம் கலாசாரத்தில் இருந்த குறைகளைப் பற்றி எழுதும் போது. உதாரணத்திற்கு ஓரிடத்தில் சுப்ரமணியம் எழுதுகிறார்: (நம்) “கலாசாரத்தின் தொன்மை எவ்வளவு போற்றுதலுக்குரியதாக இருந்தாலும் அது நடைமுறையில் பழமையானதாகவும் பயனற்றதாகவும் ஆகிவிட்டது” (“a civilisation which however venerable its antiquity is for practical purposes more or less antiquated and useless)

சமரசம் செய்து கொள்ளாத சுப்ரமணியத்தின் எழுத்துக்கள் பார்டனர்ஷிப்பில் விரிசலை ஏற்படுத்தின அவர் முன்வைக்கும் கடுமையான வாதங்கள் பத்திரிகையின் விற்பனையை பாதிப்பதாக வீரராகவச்சாரியர் கருதினார். ஏற்கனவே அரசுக்கு எதிராக எழுதப்பட்ட தலையங்கங்கள் காரணமாக பத்திரிகை பல வழக்குகளை சந்தித்துக் கொண்டிருந்ததால் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியிருந்தது

விரிசல் பிளவானவது அவர் தீண்டாமை பற்றி எழுதிய ஒரு கூர்மையான  விமர்சனத்தால்.

தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டவர்களின் தாழ்ந்த நிலை குறித்தூ எழுதும் போது “ இழிவானதாகவும், விநோதமாகவும் உள்ள இந்து சமூக அமைப்பு (தாழ்த்தப்பட்டவர்களுக்கு)  எந்த வித மேம்பாட்டையும் அனுமதிக்கும் என்று எந்த நம்பிக்கையும் இல்லை.நம் மதத்தின் மீது நாம் கொண்டிருக்கும் எத்தகைய மதிப்பும்  இந்த ஏழை மக்களுக்கு விடுதலை கொண்டுவராது (“notorious and the peculiarities of The Hindu social system are such that from this system no hope whatever of their amelioration can be entertained… no amount of admiration for our religion will bring social salvation to these poor people.”)

.ஜி.சுப்ரமணிய ஐயர் தீண்டாமைக்கு எதிரான தன் குரலை, எழுத்துக்களை மட்டுப்படுத்திக் கொள்ள இணங்கவில்லை. பார்ட்னர்ஷிப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் பார்டனர்கள் கருதினர். பிர்பல வழக்கறிஞர் நார்ட்டன் முன் ஹிண்டுவை விட்டு சுப்ரமணியம் விலகி விடவேண்டும் என்றும் வீரராகவாச்சாரியாரே ஆசிரியர் பொறுப்பை கவனிப்பார் என்றும்  முடிவாயிற்று. தன் உழைப்பாலும் எழுத்தாலும் அறிவுக் கூர்மையாலும் வளர்த்த பத்திரிகை சாம்ராஜயத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பியமைக்காக இழந்து ஜி.சுப்ரமணிய ஐயர் வெளியேறினார். மிச்சமிருக்கும் சுதேசமித்திரன் மூலம் தன் பணியையும் லட்சியங்களையும் தொடர்ந்தார்.

இது எவ்வளவு உன்னதமான செயல்! சுப்ரமண்ய சிவா இதைப்பற்றி இப்படி எழுதினார்; “தேசாபிமானமும்  பாஷாபிமானமும் இன்னவையென்று எவரும் உணராத அக்காலத்தில் அதாவது ‘சுதேசமித்திரன்’ ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ப்ரஹ்மஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் தாம் நடத்திக் கொண்டிருந்த ‘ஹிந்து’ என்ற ஆங்கில பத்திரிகையை விட்டுவிட்டுச் சாதாரண ஜனங்களுக்குள் அறிவைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்ப் பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் வியக்கத்தக்கது.” (ஞானபாநு – 1916- ஆகஸ்ட்)

பாரதி சுப்ரமணிய ஐயரை எப்படிப் பார்த்தார்? : “இராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதியவிழிப்பிற்கு ஆதி கர்த்தாக்களாக விளங்கினர்.” (சுதேசமித்திரன் 1918 மே- 31- ) என்று எழுதினார் பாரதி. அவர் சுப்பிரமணிய ஐயரை வள்ளலாருக்கு நிகராக வைக்கக் காரணம் சுப்ரமணிய ஐயரிடமிருந்த சமூக சீர்திருத்த கருத்துக்கள்தான்

22 வயதில் சமூகம் பற்றி பாரதி  பெற்ற விழிப்புணர்வின் ஆதிகர்த்தாவும் அவர்தான். திலகர் வழியை சுப்ரமண்யம் ஏற்கும் முன்   அவருக்கும் பாரதிக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. அதன் காரணமாக பாரதி அவரை விமர்சித்ததும் உண்டு. ஆனால் கருத்து ரீதியான வேறுபாடுகள் தகப்பனுக்கும் மகனுக்குமிடையே ஏற்படுகிற முரண்பாடுகள் போல.

ஆம் தகப்பன்தான். பாரதிக்கு 33 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் சுப்ரமணிய ஐயர் தனது 49ஆம் வயதில்  22 வயது பாரதியைக் கண்டெடுத்து இதழியலுக்குக் கொண்டு வந்தவர். அது பாரதிக்கு மறு பிறப்பு.

தமிழுக்கும்தான்

கலைமகள் ஜூலை 2024

The post தகப்பனைப் போல ஒரு முன்னோடி appeared first on Maalan.

  •  

ஆழமும் தெளிவும் அமைந்த நதி

பொதுமக்களிடையே நன்கு அறிமுகமான, ஆனால் பாரமர்களால் குறைவாக வாசிக்கப்பட்ட, வாசித்தவர்களாலும் குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்ட நூல் பகவத் கீதை. அதனை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகக் கேள்விப்பட்டதைக் கொண்டு பேசுகிறவர்கள் அதனை, விவிலியம், குரான், குருகிரந்த சாகிப் போன்ற நூல்களைப் போலக் கருதி அது இந்து மதத்திற்கானது என்பார்கள். வேறு சிலர் ‘கீதை போர் புரியத் தூண்டும் நூல்’ என்பார்கள். சிலர் இதை ஒழுக்கத்திற்கான வழிகாட்டி என்பார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாவற்றிற்கும் இடமளிக்கும் நூல் என்பதுதான்.ஆனால் அதற்கும் அப்பாற்பட்ட பரிணாமங்கள் அதற்கு உண்டு. வெற்றிக்கும் அமைதிக்கும் வழிகாட்டும் நூல் அது.

காந்தி, பாரதி, காஞ்சிப்பெரியவர் போன்றவர்கள் கூட பகவத்கீதையை வெவ்வேறு கோணங்களில் பார்த்தார்கள். “மூன்று காரணங்களால் கீதை இணையற்ற நூலாக விளங்குகிறது. முதலாவதாக அது உபதேசிக்கப்பட்ட சந்தர்ப்பம். இரண்டாவதாக அந்த உபதேசத்தைப் பெற்ற நபரின் தகுதி. மூன்றாவதாக தனிநபர் முயற்சிக்குக் கீதை கொடுக்கும் முக்கியத்துவம். ஆகிய இக்காரணங்களால் கீதை தன்னிகரற்று விளங்குகிறது…பகவத் கீதையின் விசேஷம் என்னவென்றால் இதை உபதேசிப்பதற்கு பகவான் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்ததும் போர் செய்ய மறுத்து எந்த நிமிஷத்திலும் தலை போய்விடக்கூடிய அபாயத்தில் இருந்தவனுக்கு இது உபதேசிக்கப்பட்டதுதான். ஆன்மீக ஞானத்திற்கு மனிதன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது” என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

காந்தி தன் வாழ்வில், அரசியல், சமூகம், மதம் என்ற மூன்று முனைகளில் போராடினார். அந்தப் போராட்டங்களில் நெருக்கடிகளையும், ஏமாற்றங்களையும், மன அழுத்தங்களையும் எதிர்கொண்டார். “ என்னை சந்தேகங்கள் அச்சுறுத்தியபோது, ஏமாற்றங்களை எதிர்கொண்ட போது, எந்த வழியும் புலப்படாமல் இருளில் ஆழ்ந்தபோது நான் பகவத் கீதையை நோக்கி ஓடுவேன், அதில் உள்ள ஏதேனும் ஒரு பாடல் எனக்கு ஆறுதல் அளிக்கும், உடனே பெரும் துயரத்திற்கு இடையேயும் நான் புன்னகைப்பேன் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார் காந்தி.( I confess to you that, when doubts haunt me, when disappointments stare me in the face, and when I see not one ray of light on the horizon, I run to the Bhagavad Gita and find a verse to comfort me, and I immediately begin to smile in the midst of overwhelming sorrow.” -Gita -the mother, M.K.Gandhi)  

காந்திக்கு முன்னதாகவே இந்தக் கருத்தைச் சொன்னவர் பாரதியார்.       “மனிதன் சகல துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்த நூலின் (பகவத் கீதையின்) முதற்கருத்து” என்று எழுதுகிறார் பாரதியார்.

துக்கங்களுக்குக் காரணம் என்னவென்று தெரிந்தால் அதிலிருந்து விடுபடும் வழியையும் கண்டு கொள்ள முடியும். துக்கங்களுக்குக் காரணம், நாம், நம் செயல்கள் அல்லது நம் அமைப்பு, அல்லது நம் குடும்பத்தினர் போன்றவர் மீது வைக்கும் பற்று, அதைக் குறித்து ஏற்படும் சந்தேகம், அந்த சந்தேகத்தால் ஏற்படும் பயம், அதை அடுத்து ஏற்படும் கலக்கம், அதனால் ஏற்படும் மனச் சோர்வு, இவைதான் நமது துக்கங்களுக்கான காரணங்களாகின்றன. பகவத் கீதை பற்றி எழுதும் போது பாரதி எழுதுகிறார்: “எல்லாவிதமான பற்றுக்களையும் களைந்துவிட்டு, மனச்சோர்வுக்கும் கவலைக்கும்,கலக்கத்திற்கும், பயத்திற்கும், இவை அனைத்திலும் கொடியாதாகிய ஐயத்திற்கும் இடம் கொடாதிரு. ‘ஐயமுற்றான் அழிவான்’

எல்லாவிதமான பற்றுக்களையும் களைதல் -நிஷ்காம்ய கர்மா- இதுதான் கர்மயோகத்தின் சாரம். துயரத்தில் தொடங்கி மோட்சத்தில் முடிகிற பதினெட்டு யோகங்களைக் கொண்டது என்றாலும் கர்மயோகம்தான் பகவத்கீதையின் இதயம். கர்மா என்ற சமஸ்கிருதச் சொல் தமிழில் கடமை என்ற பொருளில் இப்போது வழங்கப்படுகிறது. பாரதியார் அதனைச் செயல் என்று அர்த்தப்படுத்துகிறார். சில காலம் முன்புவரைகூட அது செயல் என்ற பொருளில்தான் வழங்கப்பட்டு வந்தது. காமராஜருக்கு கர்ம வீரர் என்று ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. அதாவது செயல் வீரர்.

கடமைக்கும் செயலுக்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. அதனை வார்த்தைகளால் விளக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால் நாம் எல்லா நேரமும் கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்ல முடியாது. ஆனால் எல்லா நேரமும் ஏதோ ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறோம். (சும்மா இருப்பதைப் பற்றிய திரை நகைச்சுவைக் காட்சியை நினைத்துப் பாருங்கள்!) இதை பாரதியார் “ எவனும் ஒரு கணப் பொழுதேனும் செய்கை இன்றி இருப்பதில்லை” என்கிறார்.ஏன் இருப்பதில்லை? ஏன் இருப்பதில்லை என்றால் இருக்க முடியாது. செய்கை என்பது மனித இயல்பு. நம்முடைய இயல்பான குணங்கள் நம்மைச் செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. அறிந்து கொள்ளும் ஆர்வம் என்பது (curiosity) என்பது மனித இயல்புகளில் ஒன்று. எல்லா மனிதருக்கும் அது உண்டு. ஆனால் எல்லோருக்கும் அது ஒன்று போல, ஒரே அளவில் இருப்பதில்லை. அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளவன் நிலவில் என்ன இருக்கிறது என்று ஆராய ஆர்வம் கொள்கிறான். ஆர்வம் குறைவாக இருப்பவன் வழியில் உள்ள கிணற்றை எட்டிப்பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறான். படைத்தல் என்பது மனித சுபாவம். ஒரு குழந்தை கூட எதையோ வரையப் பார்க்கிறது. படைப்பார்வம் அதிகம் இருப்பவன் ஓவியனாகவோ கவிஞனாகவோ, ஏதோ ஒன்றைப் படைப்பவனாகிறான். அது அவனுக்கு வருமானமோ புகழோ தராத போதிலும் அதை அவன் கைவிடுவதில்லை. படைப்பார்வம் குறைவாக இருப்பவன் ‘பொழுது போகாமல்’ எதையோ கிறுக்கிப் பார்த்து நிறைவு கொள்கிறான். செய்கை என்பது மனித சுபாவம். அதானல்தான் இப்போதெல்லாம் பணிக்கு ஒருவரைத் தேர்வு செய்யும் போது நேர்காணலுக்கு வந்தவரின் சான்றிதழ்களை மட்டும் பார்ப்பதில்லை. அவரது இயல்பான ஆர்வம் (aptitude) எந்தளவு இருக்கிறது என்றும் கணிக்கிறார்கள்.

பாரதி இதை மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்: “ எவனும் ஒரு கணப் பொழுதேனும் செய்கை இன்றி இருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன”

செய்கை மனித இயல்பு என்றால் அதை எப்படிப் பற்றில்லாமல் செய்வது? “இயற்கையின் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதல் அடைகிறார்கள்” என்கிறார் பாரதியார். இந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டுவிட்டால் பற்றை விட்டுவிடலாம். அதிலிருந்து எப்படி விடுபடுவது? எல்லாச் செயல்களும் இறைவனின் செயல்கள், அதை இறைவனுக்காகச் செய்கிறோம், இறைவனுக்கே இதை அர்ப்பணிக்கிறோம் என்ற ஞானம் வந்து விட்டால் அது எனது என்ற எண்ணம் நீங்கிவிடும். அப்போது ஆசை அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள் நீங்கிவிடும். “எல்லாச் செயல்களையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று,மனக்காய்ச்சல் தீர்ந்தவனாய் (போர்) செய்யக் கடவாய்” என்று கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்கிறார் (பாரதியார் மொழிபெயர்ப்பு)

இதுதான் பகவத் கீதையின் சாரம். இதை அறிந்து கொண்டதால்தான் காந்திக்கு அவ்வளவு பெரிய போராட்டத்தை தலைமையேற்று நடத்தவும் அதில் எதிர்கொண்ட நெருக்கடிக்களை எதிர்கொள்ளவும் முடிந்தது.

நான் மூன்று முறை பகவத் கீதையை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றிருக்கிறேன். 19-20 வயது இருக்கும் போது முதலில் படித்தேன். ஒன்றும் புரியவில்லை. ஸ்திதப் பிரக்ஞன் என்ற சொல்மட்டும் பிடித்திருந்தது. அதை என புனைப்பெயர்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாமா என்னுமளவிற்குப் பிடித்திருந்தது. இருபது வருடம் கழித்து மறுபடியும் படித்தேன்.இந்த முறை பல கேள்விகளும் எதிர்வாதங்களும் மனதில் எழுந்தன.

சேவாலயா முரளி எழுதியிருப்பது போன்ற ஒரு நூல் எனக்கு அன்றே கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! ஒருவேளை வாழ்வின் போக்கே கூட மாறியிருக்கலாம், பளிங்கு போன்ற ஆற்றின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கும் கூழாங்கற்களைத் துல்லியமாகப் பார்க்க முடிவது போல, முரளியின் பகவத் கீதையால் கடினமான விஷயங்களை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. அத்தனை தெளிவு. வாசித்தலும் புரிந்து கொள்ளுதலும் மிக எளிது. இது பாமரனின் பகவத் கீதை அல்ல. என் போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்ட கீதை.

சில இடங்களை அனுபவத்தால் விளக்குகிறார். சில இடங்களைக் கதைபோல் சொல்லி சுவாரஸ்யம் கூட்டுகிறார். சில இடங்களில் நகைச்சுவைக்கும் குறை வைக்கவில்லை.

கீதையில் வரும் சொல்களில் ஒன்று ஸ்வதர்மம். ஒவ்வொருக்கும் ஓர் இயல்பு உண்டு என்பதைக் குறிக்கும் சொல். அதற்கு என்னென்னவோ விளக்கங்கள் கொடுத்து குழப்பி வைத்திருக்கிறார்கள். முரளி அதை எளிமையாக விளக்குகிறார் அவரது அனுபவத்திலிருந்து பிறக்கிறது அந்த விளக்கம்:

“சேவாலயா பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு career counselling செய்ய சில வல்லுநர்களை அழைத்துப் பேச வைக்கிறோம். அவர்கள் மானவர்களிடம், “நீங்கள் இன்ஜினியர், டாக்டர், வக்கீல் அல்லது ஆசிரியர் ஆகலாம். அல்லது அரசு வேலைக்குச் செல்லலாம். இப்படிப் பலவகையான துறைகள் இருக்கின்றன.நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போவதில்லை. இன்னும் ஒருபடி மேலே போய்,ஒவ்வொரு மாணவனது விருப்பம் என்ன என்ரு அறிந்து கொள்வதோடு நிறுத்திவிடாமல் உளவியல் முறைப்படி ஆய்வு செய்து அந்த மாணவனது இயல்பு, natural tendency என்ன என்றும் அதற்கேற்ற துறைகள் எவையெவை என்றும் சொல்வார்கள். இந்த natural tendencyதான் பகவத்கீதையில் சுதர்மம்”

இந்த natural tendency என்பது எப்படி வருகிறது? நூலைப் படியுங்கள். தெரிந்து கொள்வீர்கள்.

இளைஞனாக இருந்து படித்த போது கீதை எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன் அல்லவா, அப்படி எனக்குக் குழப்பம் தந்த வரிகளிலே ஒன்று இது: “செய்கையில் செயலின்மையையும், செயலின்மையில் செய்கையையும் எவன் காண்கிறானோ அவனே மனிதரில் அறிவுடையோன், அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்தில் இருப்பான்” என்கிறது கீதை (பாரதியார் மொழிபெயர்ப்பு)

அது எப்படி செய்கையில் செயலின்மையைக் காண்பது என்பது எனக்கு அன்றிருந்த குழப்பம். இந்த நூலில் முரளி அதை அருமையாக விளக்குகிறார். பூமி ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மேலே படியுங்கள். “திருவிழாவில் சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றக் கூடிய ராட்டினத்தில் அமர்கின்றோம். அதில் சுற்றிவிட்டு வந்து தலைசுற்றுகிறது  என்கிறோம். ..1000 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கக்கூடிய ராட்டினம்தான் நாம் அமர்ந்து கொண்டிருக்கும் பூமி. ஆனால் அந்த வேகத்தை  அந்த சுழற்சியை நாம் உணர்வதே இல்லை.  சற்று கற்பனை செய்து பார்ப்போம். காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்கிறோம். ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அலுவலகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு எட்டுமுதல் பத்துமணி நேரம் வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்ப வேண்டும் என்றால் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் வீட்டிற்குச் செல்ல முடியாது. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீடு பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தள்ளிச் சென்றுவிடும்.  மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பூமியில் 10 மணி நேரத்தில் காலையில் இருந்த இடத்திலிருந்து பூமி பத்தாயிரம் கிலோ மீட்டர் நகர்ந்திருக்கும்.  நாம் வீட்டிற்குத் திரும்பியே போக முடியாது. கற்பனையே பயங்கரமாக இல்லையா?

பூமி ஒரே சீரான வேகத்தில் ஒரே திசையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது பூமியில் இருக்கும் ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான தொலைவும் மாற்றமடைவதே இல்லை. தன்னைத்தானே சுற்றி வருதல்; சூரியனையும் சுற்றி வருதல்; விரிவடைந்து கொண்டே செல்லும் பிரபஞ்சத்தில் சூரியனை விடாமல் பின் தொடர்தல் என முப்பரிமாணங்களிலும் மிக வேகமாக இயங்கி வரும் பூமி அசையாமல் நிலைத்திருப்பது போல நமக்குக் காட்சியளிக்கிறது. இதைப் போலவே மகத்தான காரியங்களைச் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது போல இருக்கமுடியுமா?மிகப் பெரிய செயல்களில்  செயலின்மையைப் பார்க்க முடியுமா? இதைப் பார்க்கத் தெரிந்தவந்தான் ஞானி” என்று விளக்குகிறார் முரளி

இப்படிப்பட்ட ஒரு ஞானிதான் முரளி. அவரது செயலுக்கு கண்ணெதிரே சாட்சியா நிற்கிறது சேவாலயா. அதன் பயணத்தை, அதன் வளர்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பிரமிக்க வைக்கும் பயணம். ஆனால் முரளி அன்று- 42 ஆண்டுகளுக்கு முன் -பார்த்தது போல அப்படியே இருக்கிறார். அதே எளிமை. அதே இனிய சுபாவம் ‘இவ்வளவு செய்திருக்கிறோம்’ என்று துளிக்கூட கர்வமில்லாத தன்னடக்கம். முதிர்ச்சி.

அப்படிப்பட்ட ஞானியிடமிருந்து வந்திருக்கிறது இந்த நூல். எனக்கு என் இளமையில் கிடைக்காத ஒரு வாய்ப்பு இன்று உங்களுக்குக் கிட்டியிருக்கிறது. வாசித்துப் பயன் பெறுங்கள்.     

பாமரனின் பகவத்கீதை நூலுக்கு எழுதிய முன்னுரை

The post ஆழமும் தெளிவும் அமைந்த நதி appeared first on Maalan.

  •  

பாரதியை மீட்டெடுத்த விவேகானந்தர்

நாம் நம் வாழ்நாளில் ஒருமுறை கூட நேரில் சந்தித்திராத ஒருவர் நம் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பாரதியின் வாழ்க்கை.

பாரதியும் விவேகானந்தரும் வாழ்வில் ஒருமுறை கூட நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. விவேகானந்தர் பாரதிக்கு 19 ஆண்டுகள் மூத்தவர். விவேகானந்தர் மறைந்த போது (1903 ஜூலை) பாரதி காசியில் இருந்திருக்க வேண்டும். அல்லது அந்த சமயத்தில்தான் எட்டையபுரத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும். விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய 1893 செப்டம்பரில் பாரதிக்கு வயது 11. அப்போது அவர் எட்டையபுரத்தில்தான் இருந்தார். ஆனால் விவேகானந்தரின் அந்தப் புகழ் பெற்ற உரை பற்றி இந்தியப் பத்திரிகைகளில் உடனே செய்தி வெளியாகவில்லை. ஹிண்டு நாளிதழ், பாஸ்டனில் வெளியான ஒரு மாலைப் பத்திரிகையை மேற்கோள் காட்டி, 1893 நவம்பர் 17அன்றுதான், விவேகானந்தர் உரையாற்றிய இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், செய்தி வெளியிட்டது.(வங்காளத்திலிருந்து வெளியான ஸ்டேட்ஸ்மேன் அதற்கும் பின்னர் டிசம்பரில்தான் செய்தி வெளியிட்டது!) எட்டையபுரத்திலிருந்த பாரதி இந்தச் செய்தியை வாசித்திருக்க வாய்ப்பில்லை. வாசித்திருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அப்போது அவர் வயது 11தான்.

ஆனால் பாரதியை நாத்திகத்திலிருந்து மீட்டெடுத்தது, 22 வயதில் அவருக்கு அறிமுகமான விவேகானந்தரது கருத்துக்கள்தான். அவற்றை அவருக்கு அறிமுகப்படுத்தியவர்கள் விவேகானந்தர் மீது பற்றுக் கொண்ட சில நண்பர்கள். குறிப்பாக மண்டயம் குடும்பத்தினர்.

வடநாட்டிலேயே தங்கி விட விருப்பம் கொண்ட பாரதி, எட்டையபுர மன்னரின் அழைப்பின் பேரில் எட்டையபுரம் திரும்பினார்.ஆனால் மன்னருடன் பிணக்கு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறினார். இனி என்ன செய்வது என்ற கேள்வி எதிர் நிற்க வேலை தேடத் தொடங்கியவருக்கு மாதம் பதினேழரை ரூபாய் சம்பளத்தில் மதுரை சேதுபதி பள்ளியில் ‘தமிழ்ப் பண்டிட்’ வேலை கிடைத்தது. அது தற்காலிக வேலை. 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலைக்குச் சேர்ந்தவர் நவம்பர் 10ஆம் தேதிவரைதான் அங்கு வேலையில் இருந்தார்.

தமிழாசிரியராகப் பணியாற்ற வந்த அவருக்கு, மதுரையில் அப்போது   இயங்கி வந்த ‘மதுரை மாணவர் செந்தமிழ்ச்  சங்கம்’ என்ற அமைப்பு அறிமுகமாயிற்று. அவர் பணிக்கு வருவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் (5 மே 1901) அது தொடங்கப்பட்டிருந்தது. அதன் நிறுவனர் மா.கோ என்று அழைக்கப்பட்ட புலவர் மா.கோபாலகிருஷ்ண ஐயர். சிகாகோ உரைக்குப் பின் விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது அவரை பாம்பனில் இராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியோடு சேர்ந்து வரவேற்றவர்.

மா.கோ.வின் நட்பு பாரதிக்கு விவேகானந்தர் என்ற சாளரத்தைத் திறந்து விட்டது. அதற்கு முன் பாரதி விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்திருக்கலாம்.ஆனால் அவரது கருத்துக்களைப் பற்றிய விரிவான தரிசனம் அவருக்கு அந்த நட்பின் விளைவாகத்தான் சாத்தியமாயிற்று. அதன் விளைவாக நாத்திக எண்ணங்கள் சூழ்ந்திருந்த மனதில் மெல்ல மெல்ல ஒளி புகலாயிற்று விவேகானந்தரின் கருத்துக்களின் சாரம் இவைதான்: “சணடையிடாதே, உதவு” (Help, not fight)“ சிதைக்காதே, ஜீரணித்துக் கொள்”“ (Assimilation, not destruction)  “விலகாதே, அமைதியும் நல்லிணக்கமும் கொள்” (Harmony and Peace not dissention)  (இவை விவேகானந்தரே சொல்லியவை) இந்த மூன்றையும் பாரதியின் பல படைப்புகளில் பார்க்கலாம் (ஓர்: உதாரணம்: ‘பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே”).

மா.கோ.வின் மற்றொரு நண்பர் சுதேசமித்ரன், ஹிண்டு நாளிதழ்களின் ஆசிரியரான ஜி.சுப்ரமணிய ஐயர். அவரும் விவேகானந்தர் மீது பெரு மதிப்புக் கொண்டவர். விவேகானந்தர் சிகாகோவிலிருந்து திரும்பிய பின் 1894 ஆம் ஆண்டு சென்னையில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் விவேகானந்தரின் சிகாகோ உரையை பாராட்டிப் பேசியவர் ஜி.சுப்ரமணிய ஐயர். மேடையில் விவேகானந்தருக்கு அருகில் அமர்ந்திருந்திருந்து உரையாடும் வாய்ப்பும் பெற்றவர்.அதன் பின் தனது ஹிண்டு நாளிதழில் விவேகானந்தர் பற்றி தலையங்கமும் எழுதினார். பரவலாக வரவேற்கப்பட்ட தலையங்கம் அது. விவேகானந்தருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான (விவேகானந்தர் இவரது இல்லத்தில் தங்கியிருக்கிறார்) பேராசிரியர் கே.சுந்தரராம ஐயர் இந்தத் தலையங்கம் பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார். (காண்க: K. Sundarama Iyer, Reminiscences of Swami Vivekananda, by His Eastern and Western Admirers, pp. 79-80, Advaita Ashrama, Calcutta) 1894-95ஆம் ஆண்டுகளில் விவேகானந்தர் பற்றி ஹிண்டு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தது (ப்ரூக்லின் ஸ்டாண்டர்ட் பத்திரிகைச் செய்தியின் மறு பிரசுரம் (23பிப்ரவரி), பாஸ்டன் ஈவ்னிங் செய்தி (28 ஜூன்) டெட்ராய்ட் ஈவ்னிங் நியூஸ் வெளியிட்ட செய்தி (27 ஆகஸ்ட்), இண்டர் ஓஷன் செய்தி (14 நவம்பர், இவையன்றி பிர்ட்டீஷ் இதழ்களான சண்டே டைமஸ், பால் மால் கெசட், எக்கோ இண்டியா, ஆகியவை விவேகானந்தரின் இங்கிலாந்துப் பயணம் குறித்து எழுதியவை, கும்பகோணத்திலும் பெங்களூரிலும் நடந்த பாராட்டுக் கூட்டம் பற்றிய செய்தி (27 ஆகஸ்ட்) கல்கத்தாவில் நடந்த பாராட்டுக் கூட்டம் பற்றிய செய்தி (13 செப்டம்பர்) சென்னைக் கூட்டத்தில் விவேகானந்தர் ஆற்றிய பதிலுரை (12, 15 நவம்பர்) என்று அது குறித்து  ஒரு நீண்ட பட்டியல் இட முடியும். ஜி.சுப்ரமணிய ஐயர் விவேகானந்தர் மீது கொண்டிருந்த பற்றின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அவர் இந்து ஆசார சீர்திருத்த சபை என்ற அமைப்பில் 1897ஆம் ஆண்டு எழுப்பிய கேள்வி. அந்தக் கேள்வி இதுதான்: “விவேகானந்தரை ஏன் சங்கராச்சாரியாராக நியமிக்கக்கக் கூடாது?” என்று கேட்டதாக இந்தியன் சோஷியல் ரிஃபார்ம் கூறுகிறது (G.Subramania Iyer in 1897 had, wistfully perhaps, asked The Madras Hindu Social Reform Association,” Cannot the reformers install Swami Vivekananda or some spiritual hero like him into a reform Sankarachari as there was a second Pope for some time in Europe!” Indian Social Reform, IV 363)

காசி வாசத்தின் காரணமாக பாரதிக்குப் பலமொழிகள் பரிச்சயமாகி இருந்தன. ஆனால் தமிழ் இலக்கணத்தில் அவர் பெரிய பயிற்சி கொண்டிருக்கவில்லை.அதுவும் தவிர முதல் முதலில் வேலைக்குச் செல்லும் 22 வயது இளைஞனுக்கு முதல் சில மாதங்களில் ஏற்படும் குழப்பங்களும் மெலிதான பதற்றங்களும் அவருக்கு இருந்திருக்கலாம். அவை பற்றி  அவர் மா.கோவிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.

விவேகானந்தாரின் விசுவாசியான மா.கோ. இவற்றை விவேகானந்தரின் இன்னொரு அன்பரும்,தனது நண்பருமான ஜி.சுப்ரமணிய ஐயரிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஹிண்டுவில் வெளியிட்டதைப் போல சுதேசமித்திரனிலும் அயல்நாட்டுச் செய்திகளை வெளியிடக் கருதியிருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் மொழிகள் பல அறிந்த பாரதியை சுதேசமித்திரனுக்கு அழைத்துக் கொண்டார். 1904ஆம் ஆண்டு இறுதியில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். முதல் ஓராண்டுக்கு அவருக்குப் பெரிதும் மொழிபெயர்ப்புப் பணிகளே கொடுக்கப்பட்டன.

ஜி.சுப்ரமணிய ஐயர் தனது பத்திரிகைகளுக்கு அப்பால் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம், சென்னை இந்து ஆசார சீர்த்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த அமைப்பின் கூட்டங்களுக்கு பாரதியும் சென்றிருக்கக் கூடும். அங்கு அவருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்கக் கூடிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் மண்டயம் குடும்பம்.

மண்டயம் என்பது இன்று மாண்டியா என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் மைசூருக்கு 45 கீ.மீ. தொலைவில், உள்ள சிறுநகரம். அங்கு வசித்த, ராமானுஜர் மரபில் வந்த தென்கலை வைணவக் குடும்பங்களில் ஒன்று, புகழ் வாய்ந்த மண்டயம் குடும்பம். அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். தனித்தனியாகப் பார்த்தாலும் ஒவ்வொருவரும் அவரவர் துறைகளில் சிறப்பானவர்கள்.

முதலில் சுல்தான்களிடமும் பின் அவர்களிடமிருந்து பிரிட்டீஷாரிடமும் பறிபோன மைசூர் அரசை உடையார்கள் மீட்க உதவியவர் திருமலாராவ். மைசூர் அரசில் முதன்மை அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதால் பிரதான் திருமலாராவ் என்றழைக்கப்பட்டவர். அவரது மகன் கிருஷ்ணமாச்சாரியார் நவீன கன்னட மொழிக்கு இலக்கணம் இயற்றிய மொழி அறிஞர். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். யோகி பார்த்தசாரதி என்றழைக்கப்பட்ட அவரது மகன், வழக்கறிஞர், யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர், வேதாந்த அறிஞர். காலப்போக்கில் மறைந்து போன சமஸ்கிருதச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சர் கோலி ஹர்மன், சர் ஆடம் பிட்டில்ஸ்டோன் என்ற ஆங்கிலேய நீதிபதிகளுக்கு சமஸ்கிருதம் கற்பித்தவர். காந்தி, திலகர் ஆகியோரது நண்பர். அவர் இந்தி பயிற்றுவிக்க ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய போது அதன் முதல் ஆசிரியாராகச் சேர்ந்தவர் காந்தியின் மகன்

அவரது சகோதரி பெருந்தேவியின் மகன்தான் அளசிங்கப் பெருமாள். விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான எல்லா முயற்சிகளையும் -இருமுறை நிதி திரட்டுவது. ஒருமுறை குடும்ப நகைகளை விற்று அமெரிக்காவிற்குப் பணம் அனுப்புவது உள்பட- எல்லா முயற்சிகளையும் செய்தவர். “இதெல்லாம் உங்களால்தான் சாத்தியம் ஆயிற்று” என்று விவேகானந்தர் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். அளசிங்கரைப் பற்றி தனியாக ஒரு நூலே எழுதலாம்.

அளசிங்கரின் தங்கை சிங்கம்மாவின் கணவர் நரசிம்மய்யங்கார், கோதாவரியில் அணைகட்டியவர் என்பதால் அந்தப் பகுதி மக்களால் கோதாவரி சாமி என்றழைக்கப்பட்டவர். சிங்கம்மாவின் மகன் எம்.பி.டி ஆச்சாரியாவின் வாழ்க்கை சாகசங்கள் நிறைந்த ஒரு வீரனின் வாழ்க்கை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு விதை ஊன்றியவர் அவர்.

அளசிங்கரின் தாய் பெருந்தேவியின் உடன் பிறந்த சகோதரி வேடம்மாவின் மகன்கள்தான் மண்டயம் திருமலாச்சாரியார், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோர். இவர்கள்தான் இந்தியா பத்திரிகையைத் தொடங்கியவர்கள். அவர்களது உறவினர்களான அளசிங்கப் பெருமாளும், எம்.பி.டி ஆச்சார்யாவும் அதற்குத் துணை நின்றார்கள். எம்.பி.டி.ஆச்சாரியா சில காலம் அதன் பதிப்பாளராக இருந்தார். இந்தியா இதழ் முதலில் சில காலம் அளசிங்கப் பெருமாள் நடத்தி வந்த பிரம்மவாதின் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வந்தது.

இவர்கள் அனைவருமே விவேகானந்தரின் சீடர்கள். அவர்களது இன்னொரு ஆதர்சம் திலகர். 1898ல் சிறையிலிருந்து விடுதலையான சில நாட்களுக்குப் பின் சென்னை வந்த திலகர் மண்டயம் குடும்பத்தினருடன்தான் தங்கியிருந்தார்.தன்னுடைய நூல் ஒன்று வரைவு நிலையில் இருந்த போது அதை அளசிங்கரிடம் கொடுத்துக் கருத்துக் கேட்குமளவிற்கு திலகருக்கு அந்தக் குடும்பத்தோடு நெருக்கம் இருந்தது.

1893ல் விவேகாநந்தர் சிகாகோவில் ஆற்றிய உரை படித்த இந்தியர்களிடையே ஒருவித விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அவர்களிடையே இந்தியா இந்துமதம் குறித்தபெருமித உணர்வு துளிர்த்ததிருந்தது. அந்தச் சூழ்நிலையில் திலகர், இந்துக்களை ஒருங்கிணைப்பது என்ற நோக்குடன் விநாயகர் ஊர்வலம் (1893) சிவாஜி ஊர்வலம் (1895) நடவடிக்கைகளைத் தொடங்கி ஒரு பெருந்தலைவராக உருவாகிக் கொண்டிருந்தார். 1901 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த போது அவர் விவேகானந்தரை சந்தித்தார். (விவேகானந்தர் சிகாகோ செல்லும் முன் இந்தியா முழுக்க யாத்திரை மேற்கொண்டிருந்த காலத்தில் புனேயில் திலகரது இல்லத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு சந்நியாசி என்று மட்டும் கூறிக் கொண்டு சில நாள்கள் தங்கியிருந்திருக்கிறார்) கல்கத்தாவில் நடந்த அந்த சந்திப்புக்குப் பின் திலகர் சுதேசி என்ற கருத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருந்தார்.

விவேகானந்தராலும் திலகரினாலும் பாரதியின் நண்பர்களான மண்டயம் குடும்பத்தினரும், வ.உ.சியும் ஈர்க்கப்பட்டதைப் போலவே பாரதியும் திலகரின் பால் ஈர்க்கப்பட்டார். திலகர் தனது கருத்துக்களை தனது பத்திரிகைகள் மூலம் பரப்பி வந்தார். அவரது தலையங்கங்கள் காரணமாக பிரிட்டீஷ் அரசால் கைது செய்யப்பட்டு ஓராண்டு தண்டனையும் பெற்றார். அந்த சிறைவாசத்திலிருந்து விடுதலை அடைந்த போதுதான் சென்னை வந்து மண்டயம் குடும்பத்தினரோடு தங்கியிருந்தார்.

1905ல் கர்சன் அறிவித்த வங்கப் பிரிவினை திலகரின் அரசியலை வேகம் பெறச் செய்யதது. அந்தப் பிரிவினை குறித்து கொதித்தெழுந்த பாரதி கர்சனை எதிர்த்த வங்க இளைஞர்களைப் பாராட்ட சென்னை  கடற்கரையில் 1905ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டம் நடத்தி அதில் வங்கமே வாழிய என்ற கவிதையையும் பாடினார். அது அதற்கு மறுநாள் சுதேசமித்திரனில் வெளியாயிற்று. அதுதான் சுதேசமித்திரனில் வெளியான பாரதியின் முதல் படைப்பு.

திலகரின் கருத்துக்களைத் தமிழரிடம் பரப்ப ஒரு பத்திரிகை வேண்டும் என்று பாரதி நினைத்தார். அந்த எண்ணத்தை நிறைவேற்ற மண்டயம் சகோதரர்கள் முன் வந்தார்கள். அவரை ஆசிரியராகக் கொண்டு 1906 ஆம் ஆண்டு மே 9 அன்று இந்தியா வார இதழாக சென்னையில் மலர்ந்தது.  திருமலாச்சாரியார் இந்தியா இதழை பாரதியின் பொருட்டே தொடங்கியதாக பாரதியுடன் சுதேசமித்திரன் இதழில் துணையாசிரியராக இருந்தவரும் , தேசியத்தலைவர்கள் பலருடைய வரலாற்றை எழுதியவருமான எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் ‘சுப்பிரமணிய பாரதியார்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்

இலக்கியவாதியாகத் தொடங்கிய பாரதி அரசியலில் அடியெடுத்து வைத்தது இந்தியா இதழ் மூலம்தான். இந்தியாவும், அதையடுத்து வந்த மண்டயம் சகோதரர்களின் இதழ்களும் பாரதி வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது.

அது அடுத்து வரும் இதழ்களில்

கலைமகள் ஜூன் 2024

The post பாரதியை மீட்டெடுத்த விவேகானந்தர் appeared first on Maalan.

  •  

மாலன் எழுதிய 55 சிறுகதைகள் -‍ ‍ஓர் அறிமுகம்

இருநூறு ரூபாய்க்குச் சிறுகதைப் புத்தகம் வெளியிடுகிற ஆசிரியர் என்றால் உலகம் அறிந்தவராகத் தானே இருக்கவேண்டும்! அவருக்கு அறிமுகம் எதற்கு என்ற கேள்வி எழலாம். என்ன செய்வது, என்னைப் போன்ற பிறவிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள், புத்தகம் வாங்கி ஓராண்டு ஆகியும் படிக்க எடுக்காமல் இருக்கும்  அதி‍சுறுசுறுப்பானவர்கள் (அல்லது சோம்பேறிகள் ?)- அவர்களுக்கு அறிமுகம் வேண்டியது தானே!

தமிழ்ச் சிறுகதை உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான தி. ஜானகிராமன், மாலனின் ‘வித்வான்’ என்ற கதையைப் படித்துவிட்டு, “சிறுகதையின் அடிவானத்தை எவ்வளவு தொலைவிற்கு ஒரு தேர்ந்த கலைஞன் தள்ள முடியும்” என்று வியந்திருக்கிறார். பிரபஞ்சனோ, ஒரு படி மேலே போய், “எழுத்துக்கு ஒரு விளைவு உண்டு; அது சக்தி பொருந்திய பட்ச‌த்தில், இந்தக் கதைகள், தமிழ் இலக்கிய உலகில் சாஸ்வதம் பெறும்” என்று நம்பிக்கை கொள்கிறார்.

இப்படி ஜாம்பவான்கள் இருவர் ‘பில்டப்’ கொடுக்கும்போது அந்த நூல் சாதரணமான ஒன்றாகவோ, எளிதில் புறக்கணிக்கத்தக்க ஒன்றாகவோ இருக்க முடியாதல்லவா? அதனால் தான் இந்த அறிமுகம்.

(மால‌ன் சிறுக‌தைக‌ள்: முத‌ல் ப‌திப்பு அக்டோப‌ர் 2011, க‌விதா ப‌ப்ளிகேஷ‌ன், ப‌க்க‌ம் 416, விலை ரூ.200)

தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை உடையவர். தமிழகத்தின் முன்னணி ஏடுகளான ‘குமுதம்’, ‘தினமணி’, ‘குங்குமம்’ ஆகிய மூன்றிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர்.’இந்தியா டுடே’ தமிழில் தனது பதிப்பைக் கொண்டுவர விரும்பியபோது அதன் முதல் ஆசிரியராக இருந்து, வடிவமைத்து வெற்றிகரமாக உலவவிட்ட படைப்புச் சிற்பியானவர். ‘சாவி’ யிடம் பயின்று, பல ‘திசைக’ளிலும் சென்று வந்தவர். ‘சன் டிவி’ யின் புதிய செய்திப் பிரிவான ‘சன் நியூஸ்’ இவர் பெற்ற பிள்ளை தான். இப்போது ‘புதிய தலைமுறையை’ உருவாக்கி விட்டிருக்கிறார்.

சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ மூலம் தனது இலக்கியப் பிரவேசத்தைத் துவக்கியவர். ஆக, பழைய தலைமுறையின் ‘மணிக்கொடி’ யிலிருந்து, ‘புதிய தலைமுறை’ வரை சுடர்விட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர் இவர் என்பதால் கொஞ்சம் கவனத்துடன் இவரைப் படிக்க வேண்டியது அவசியமே.

மொத்தம் 55 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எல்லாமே பல்வேறு இதழ்களில் ஏற்கெனவே வெளிவந்தவை. இன்றைக்கு சுமார் 50 வயது உடையவர்கள் இவற்றில் ஒன்றையாவது படிக்காமல் இருந்திருக்க நியாயமில்லை. எனவே ஒரு சில கதைகளை மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.

(1) புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்று புதுமைப்பித்தன் எழுதிய கதையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மாலனோ, கடவுளுக்குப் பதிலாகப் புதுமைப்பித்தனைப் பிடித்துக் கொண்டு வருகிறார். கந்தசாமிப் பிள்ளைக்குப் பதில் தானே வருகிறார். கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் சந்தித்த அதே ‘பிராட்வேயும் எஸ்பிளனேடும் கூடுகிற சந்தியில் தான் இவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். புதுமைப்பித்தனின் முதல் வாக்கியமே, “மெட்றாஸ் ரொம்பத்தான் மாறிப் போச்சு!” என்பது தான்.

ஒரு நதி மாதிரி போக்குவரத்து நகர்ந்து கொண்டிருந்தது. நகரை நகர்த்திப் போகும் நதி. எளிதில் கடந்து விட முடியாத நதி.

நதியின் வேகம் தணிந்த ஒரு வினாடிப் பிளவில் எதிர்கரை நோக்கி நடக்கத் தலைப்பட்டோம். ஏறத்தாழ நடுச்சாலைக்கு வந்த போது, பாம்பை மிதித்தது போல புதுமைப்பித்தன் எகிறித் துள்ளினார். துள்ளிப் பின்வாங்கினார். அவரை உரசினாற்போல் ஒரு ஆட்டோ நெளிந்து விரைந்தது. “ரொம்பத்தான் மாறிப் போச்சு!” என்றார் மறுபடியும்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் காப்பி அருந்திய அதே ஓட்டலில் இவர்களும் காப்பி அருந்துகிறார்கள். வெளியில் வரும்போது கல்லூரி வாசலில் உருட்டுக் கட்டைகளுடன் ஒரு முரட்டுப் படை, புதிய தலைமுறை இளைஞர்களை துவைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாரும் வேடிக்கை பார்க்கிறார்கள். ‘ஏன் இப்படி’ என்று மாலனுக்குப் புரியவில்லை. அதனால் புதுமைப்பித்தனுக்குப் புரியவைக்கவும் முடியவில்லை. “இப்போதெல்லாம் இப்படித்தான் திடீர் திடீர் என்று ஏதாவது நடந்து விடுகிறது” என்று குற்ற உணர்ச்சியுடன் கூறுகிறார்.   

லிஃப்ட் இல்லாததால் மூன்று மாடியும் மூச்சு வாங்கியபடி ஏறி, மாலனின் வீட்டை அடைகிறார்கள். எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் உள்ள நப்பாசை, புதுமைப்பித்தனையும் கேட்கவைக்கிறது: “உம் மனைவி என்னைப் படித்திருக்கிறாளா?” என்கிறார். இவருக்குத் தெரியவில்லை. (மனைவிக்குத் தெரிந்த வற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் கணவனை எங்காவது பார்த்ததுண்டா?)

தமிழின் பாரம்பரிய ஆடையான‌ ‘நைட்டி’யிலிருந்து தன்னை மாற்றிக்கொண்டு காப்பியுடன் வருகிறார் மனைவி. சர்க்கரை போடலாமா என்கிறார். “சர்க்கரை போட்டால் தான் காப்பி. இல்லையென்றால் அதற்குப் பெயர் கஷாயம்” என்று ஜோக்கடிகிறார் பித்தன். (சர்க்கரை போட்ட பின்னும் கஷாயமாயிருக்கும் காப்பி தான் பொதுவாக விருந்தினர்களுக்குத் தரப்படும் என்பது பித்தனுக்குத் தெரியாது போலும்). மனைவியோ, “இந்த வயதிலேயே இவர் சர்க்கரை போட்டுக் கொள்வதில்லை. சுகர்” என்று தேவையில்லாமல் நெகட்டிவ் பாயிண்ட்டை எடுத்து விடுகிறார். (மனைவிகளின் சுதந்திரம்!)

இப்படிப் போகிறது கதை. கால வித்தியாசம் வாழ்க்கை முறைகளில் எவ்வளவு முரண்பாடுகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்பதை மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளின் மூலம் நமக்கும் பித்தனுக்கும் காட்டுகிறார் ஆசிரியர். கடைசியில் பித்தன் திரும்பிச் செல்லும் நாள் வருகிறது. ஒரு ‘பன்ச்லைன்’ வேண்டுமல்லவா? நாம் மாறியிருக்கிறோம், ஆனால் வளர்ந்திருக்கிறோமா?” என்ற  சிந்தனைக்குரிய கேள்வியோடு மறைகிறார். (அவரது எக்ஸ்ரே இன்னமும் மாலனிடம் தான் இருக்கிறது).

(இந்தக் கேள்விக்கு உங்க‌ளிடம் விடை இருந்தால் உடனே எழுதுங்கள்).

(3) நடுவர்கள்

அமெரிக்காவுக்குப் படிக்கப் போய் அங்கேயே வேலையும் கிடைத்து, ஒரு இந்தியப் பெண்ணையே மணந்துகொண்டு குழந்தை பெற்று….பின் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் வேலை போய், கையிருப்பும் கரைந்து, தாய்நாட்டிற்குத் திரும்பிவரவும் சுயம் இடம் கொடுக்காமல் மனைவி குழந்தைகளைச் சுட்டுத் தள்ளுகிற இளைஞன் பற்றிய கதை. நடுத்தர வர்க்கம். சுஜாதாவின்  பார்வையிலிருந்து   கொஞ்சம் வித்தியாசமானது.

“மிடில் கிளாசை செலுத்தும் சக்தி சுயந‌லம் தான். தன்னைப் பாதிக்காத எந்த விஷயத்தைக் குறித்தும் அபிப்பிராயங்களைக் கூட அவர்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். செல்ஃப் சென்டிரிக் பீபுள்” என்ற விமர்சனம் ஒருவேளை நம்மை (உங்களை)ப் பற்றியது தானோ?

(4) தப்புக் கணக்கு

இந்தத் தொகுப்பின் ‘மாஸ்டர்பீஸ்’ இது தான். நமது கல்வி முறையின் அடிப்படைக் கோளாறு எங்கிருந்து தொடங்குகிறது என்று ஆறரை பக்கச் சிறுகதையின் மூலம் அழகாகக் காட்டுகிறார் மாலன். எல் கே ஜி, யு கே ஜி குழந்தைகள் உங்க‌ள் வீட்டில் இருந்தால் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை. பள்ளி ஆசிரியர்கள், குறிப்பாக சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் தலைமை ஆசிரியைகள் கட்டாயம் படிக்கவேண்டும். (இன்னும் திருமணம் செய்யாமல் மென்பொருளில் உழன்றுகொண்டிருக்கும் புதிய தலைமுறையும் படிக்கலாம்).

(6) இதெல்லாம் யாருடைய தப்பு?

தமிழாசிரியரின் மகள். பி.எஸ்.சி.க்கு விண்ணப்பிக்கிறாள். பி.ஏ.(தமிழ்) தரட்டுமா என்கிறார்கள்.’பளிச்சென்று மூஞ்சியில் அறைந்த மாதிரி முகம் கூம்புகிறது’ இவளுக்கு.  தமிழ் படிக்கிறாயா என்ற அப்பாவிடம் ‘அந்தத் தப்பை நான் பண்ண மாட்டேன்’ என்கிறாள்.

“தமிழ் படிக்கிறதுல என்னம்மா தப்பு?”

“அப்பா, கனவை வேடிக்கை பார்க்கலாம். ஆனா அதிலேயே வாழ்க்கை நடத்த முடியுமா?”

முடியாது என்பது புரியும் போது கையில் எம்.ஏ., எம்.ஃபில் சர்ட்டிபிகேட்டுகள் சேர்ந்து விடுகின்றன. தமிழை விரும்பிப் படித்து ஆறு வருடமாக வேலை கிடைக்காமல்….அமைச்சரைப் போய்ப் பார்த்தால் ‘நீ தமிழ் படித்தது எங்க தப்பா’ என்கிறார். தமிழால் உருவான அரசாங்க‌த்தைச் சேர்ந்த அமைச்சர்.

இன்னமும் நம்மவர்களில் பலர் இதே  தப்பைச் செய்து கொண்டு தானே இருக்கிறோம்!

(10) மா

ஒரு சின்ன மேற்கோள் போதும் இந்தக் கதையின் வல்லமையைக் காட்ட:

“பொம்மனாட்டிக் குழந்தைன்னா பூவுக்கு ஆசைப்படலாமா. பூவுக்கு ஆசைப்பட்டா முள்ளுக்குப் பயப்படலாமோ? தோட்டம்னா, முள்ளுந்தான், பூவுந்தான். கறையானும் புத்துவைக்கும். அணிப்பிள்ளையும் ரகளை பண்ணும். மாமிசத்தைக் காக்கா கொண்டுவந்து போட்டுப் போகும். தேனி தேனைக் கொண்டுவந்து வைக்கும்…போ, ஆயின்ட்மெண்ட் இருந்தா எடுத்துண்டு வா..”

(12) முக‌ங்க‌ள்

க‌ணையாழியில் வ‌ந்த‌ க‌தை. க‌தையில் ஒரு க‌விதை வ‌ருகிற‌து:

உன‌க்கோ முக‌ங்க‌ள் ப‌ல‌ நூறு.

என‌க்கும் தான்.

என்னுடைய‌ ஏதோ ஒரு முக‌த்தை

உன்னுடைய‌
ஏதோ ஒரு முக‌ம் பார்க்க‌
வீழ்ந்தாய்;
ம‌ய‌ங்கி அத‌னில்.

ராஜி

எழுந்திரு.
இதோ பார், என் விஸ்வ‌ரூப‌ம்.

உனக்கு ஞானக் கண்ணிருந்தால்,
பலநூறு
முகங்களுடன் கூடிய என்னைப் பார்,
இதோ.

சற்றே நீண்ட கதை. ஆழமான கருத்துள்ளது.

(14) கதவைத் திறக்கும் வெளிச்சம்

“தனிச்சுப் போயிடறதுக்காக காவியைக் கட்டிண்டு கிளம்பக் கூடாது. இந்தத் தேசத்திலே காவியைக் கட்டிண்டவா எல்லாம், எல்லாத்தையும் உதறிட்டுக் கிளம்பினவா இல்லை. எல்லாத்தையும் இழுத்து அணைச்சிக்கிரதுக்குக் கிளம்பினவாதான். நமக்குக் குடும்பத்தோடு மட்டும் இல்லை, அதற்கு மேலும் இத்தனை சம்பந்தம் உண்டு, உறவு உண்டுன்னு புரிஞ்சுண்டு இருக்கிறவாதான். நீங்க இங்கிலீஷ்லே சொல்றேளே, யூனிவர்சல் லவ், அதோட‌ நிறந்தான் காவி. நீங்க கேள்விப்பட்டிருக்கேளோ என்னவோ, எங்களுடைய ஆதிகுரு  எட்டு வயசிலே சன்னியாசம் வாங்கிண்டவர். அவர் கிளம்பறச்சே முதலை மாதிரி அவா அம்மா பிடிச்சிண்டா. அப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நான் இனிமே ஒரு அகத்துக் குழந்தை இல்லை. எல்லா அகத்துக்கும் குழந்தை. எல்லா அகமும் நமக்குச் சொந்தம்..’ எல்லா வீடும் நம்மோடதாயிடுத்துன்னா, நாம எதிலேயிருந்து அன்னியமாறது, எப்படி அநாதையாவோம், ம் ? சொல்லுங்கோ…”


பேசிக்கொண்டே குழந்தைகளுக்குக் கொடுப்பது மாதிரி கல்கண்டு எடுத்துக் கொடுத்தார் சுவாமிகள்.

(சாவியில் வந்த கதையாம்).
****

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாக் கதைகளிலும் உள்ளர்த்தம் இருக்கிறது. உணர்ச்சி யிருக்கிறது. நேர்மறையான நோக்கம் இருக்கிறது. நம்மைவிட இளையவர்கள் முன்னேற வேண்டுமே என்ற ஆதங்கம் இருக்கிறது. இதுவரை படிக்காதவர்கள் உடனே படிக்கலாம்.

கடந்த தலைமுறையின் அனுபவங்களை  55 சிறந்த கதைகளின் வடிவில் புதிய தலைமுறைக்குத்  தந்திருக்கும் மாலனை  ‘ஓம், நமோ நாராயணாய என்று வாழ்த்துகிறேன்.

https://chellappatamildiary.blogspot.com/2013/05/55.html?sc=1716951923761#c4006132842109235757

(c) Y.Chellappa
email: [email protected]

The post மாலன் எழுதிய 55 சிறுகதைகள் -‍ ‍ஓர் அறிமுகம் appeared first on Maalan.

  •  

குழலி

நான் கட்டுப் பெட்டி அல்ல. நிச்சயம் கட்டுப்பெட்டி அல்ல. என் அம்மாவோடும், அத்தையோடும் ஏன் என் தங்கையோடும்தான்.ஒப்பிடும் போது நான் முற்போக்கானவள்தான். அதற்காக அவன் விரும்புவது போல நான் முழங்கால் தெரிய ஸ்கர்ட் அணிந்து கொள்ள வேண்டுமா என்ன?

“எப்பவும் சூடிதாரிலேயே இருக்கிறாயே, நாளைக்காவது ஸ்கர்ட் அணிந்து வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று வாட்ஸப்பில் செய்தி அனுப்பியிருந்தான். நேரில் சொல்லத் தயக்கமாக இருக்கும் விஷயங்களை வாட்ஸப்பில் செய்தியாக அனுப்பிவிடலாம். ஆண்களுக்கு அது ஒரு வசதி. அவர்கள் போடுகிற இதயக் குறியீடுகளின் நோக்கம் அவர்களுக்குத் தெரியும். எங்களுக்கும் தெரியும். என்றாலும் தெரியாதது போல எல்லோரும் பாவனை செய்து கொண்டிருக்கிறோம்.

எனக்கு அவனிடம் பிடித்ததே அவனிடம் பாவனைகள் குறைவு என்பதுதான். ஆங்கிலத்தில் “Wearing the heart on the sleeve” என்று சொல்வார்களே அதைப் போல இதயத்தை தோளில் சூடியவன். கைதட்டலுக்காகப் பேசுகிறவன் அல்ல. நினைத்ததை மென்று முழுங்காமல், பூசி மெழுகாமல், வெளிப்படையாகப் பேசுவான். அதனால் அவன் பேஸ்புக்கில் நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டுமிருக்கிறான். அதைப் படிக்கும் போதெல்லாம் எனக்குப் பாவமாக இருக்கும்.

ஆனால் அவனுக்கு என்னிடம் ஒரு மென்மையான தயக்கம் உண்டு. தயக்கமா அல்லது மிரட்சியா? நான் கவிஞர் என்று தெரிய வந்த போது தலைக்கு மேல் கை உய்ர்த்தி ஒரு கும்பிடு போட்டான்.

“எதற்குக் கும்பிடு?”

“எழுத்துலகில் கவிஞர்கள் தனிப் பிரகிருதிகள்”

“பிரகிருதி என்றால்?”

“Poets are a different species among writers. பொற்கொல்லர்கள் நமக்குத் தெரியும். அது போல் சிலர் சொற்கொல்லர்கள். சிலர் சந்தப் பிரியர்கள்.சிலர் சத்தப் பிரியர்கள். சிலர் தீவட்டி ஏந்தியவர்கள். அது எரிப்பதற்காகவும் இருக்கலாம். சுடர் ஏற்றவும் இருக்கலாம். சிலர் வணிகர்கள் சிலர் காதலர்கள். தங்களைத் தாங்களே காதலிப்பவர்கள்.”

“சிலர் சமூக விரோதிகள் என்று சொல்லாதவரை சந்தோஷம்”

“சொல்லியிருப்பேன். ஆனால் நீ கவிதை எழுதுபவள் என்று   சொன்னதால் அதைத் தவிர்த்துவிட்டேன்”

இந்த செல்ல இடக்குதான் என்னை அவனிடம் ஈர்த்ததோ? இல்லை அவனது நாற்காலியா? உயரமான இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவனும் நல்ல உயரம்தான்.சந்தன நிறம்.மீசை வேறு வைத்திருந்தான். இல்லை ஈர்த்தது அவனது கண்ணியமா? முப்பத்தி ஐந்து வயதில் தனியாக வாழும் பெண் என்றால் அவள் ‘அவைலபிள்’, அழைத்தால் வந்துவிடுவாள் என ஜாடைமாடையாகவும் நேரடியாகவும் பேசுகிற ஆண்களுக்கு நடுவில் அவன் கண்ணியமானவன்தான். தனியாக இருக்க நேர்ந்த சந்தர்ப்பங்களில் கூட கையைப் பற்றிக் கொள்ள முனைந்ததில்லை.

எனக்கும்  என் மனதை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் ஏதோ ஒரு தயக்கம். காரணம் தெரியவில்லை. காதலுக்குக் காரணங்கள் இல்லை. காரணங்களும் தேவை இல்லை. ஆனால் இது காதலா?

அதை அவனும் இன்னும் வாய் திறந்து சொல்லவில்லை. வாய் திறந்து சொல்லவில்லை என்றாலும் எனக்குத் தெரியும். அவனுக்கும் என் மீது ஈர்ப்புண்டு. சில மாதங்களாக அதன் சமிக்ஞைகள் தெரிகிறது.முப்பத்திஐந்து  வயதுப் பெண்ணால் புரிந்து கொள்ளக் கூட சமிக்ஞைகள். ஆனாலும் அவன் வாய் திறக்கவில்லை. அந்த மென்மையான தயக்கம் அல்லது மிரட்சி அல்லது கண்ணியம் அல்லது எல்லாமும் சேர்ந்து அவனைக் கட்டிப் போட்டிருக்க வேண்டும்.

அவன் நாளைக்கு ஏதோ முக்கியமான சொல்லப் போவதாகச் சொல்லியிருக்கிறான், முக்கியமான விஷயம்? என்னவாக இருக்கும்?

நான் அந்த வாட்ஸப்பைத் திறந்து செய்தியை மீண்டும் பார்த்தேன்: “எப்பவும் சூடிதாரிலேயே இருக்கிறாயே, நாளைக்காவது ஸ்கர்ட் அணிந்து வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”

நான் அவனை போனில் அழைத்தேன்

“நாளைக்கு என்ன?”

“நாளைக்கு பிப்ரவரி 20. உன் பிறந்தநாள்”

“ ஆமாம். ஆனால் அதற்கென்ன?”

“ உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்”

முக்கியமான விஷயம்! காதலைச் சொல்லப் போகிறானோ?

“என்ன விஷயம்?”

“அதை நாளைக்குச் சொல்கிறேன்”

“இன்னிக்கு சொல்லக் கூடாதா?”

“ம்ஹூம், நாளைக்குத்தான்”

“இருக்கட்டும் இருக்கட்டும். அது சரி, ஏன் ஸ்கர்ட்?”

“சும்மாதான். பெரிய இடத்திற்குப் போகப் போறோம். டிரெண்டியா, மார்டனா இருக்கட்டும்தான்”

பெரிய இடமா? அவனுடைய அப்பா அம்மாகிட்ட அழைச்சுக்கிட்டுப் போகப்போறானா?

நான் ஸ்கர்ட் அணிந்து கொள்ளவில்லை. அது எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் நானாகத்தான் இருப்பேன். ஆனால் சுடிதாரும் அணிந்து கொள்ளவில்லை. ஜீன்சும், ரத்த சிவப்பில் ஒரு டாப்ஸும் போட்டுக் கொண்டேன். கிழித்து விட்டுக் கொள்ளப்படாத வெளிர் நீல ஜீன்ஸ். இறுக்கமாக இருந்தது. கழற்றிவிட்டு புடவையைச் சுற்றிக் கொள்ளலாமா என்று நினைத்தேன். இடுப்புத் தெரியும் வேண்டாம். அந்த ரத்தச் சிவப்பு டாப்ஸ்க்கு லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் என்னிடம் லிப்ஸ்டிக் இல்லை. நான் பயன்படுத்துவதில்லை. தலையை தளர ஒதுக்கி விட்டுக் கொண்டேன். காதோரம் தெரிய ஆரம்பித்திருந்த ஒன்றிரண்டு வெள்ளி முடிகளை உள்ளே தள்ளி மறைத்தேன். பொட்டு வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்து பின் கைவிட்டேன் எனக்குப் பிடித்த பெர்ஃப்யூமை குறுக்கும் நெடுக்குமாகச் சீறவிட்டேன்.கிளிப்பச்சையில் வெள்ளைக் குறும் பூக்கள் போட்ட, சின்னச் சின்ன கண்ணாடிகள் பதித்த துணியால் ஆன பவநகர் கைப்பையை எடுத்துக் கொண்டேன். பொருத்தமாக இல்லைதான். ஆனால் அதற்குள் அந்த அயல்நாட்டு சாக்லேட்டை மறைத்து எடுத்துப் போக முடியும்.

அவன் சூட் அணிந்து வந்திருந்தான். டை கட்டியிருக்கவில்லை.சற்றுத் தளர்வான வெள்ளைச் சட்டை அணிந்திருந்தான். தளர்வான சட்டையும் கோட்டும் அவன் வயதைக் கூட்டிக் காட்டியது. ஆனால் காதுக்குப் பின் வெள்ளியிழைகள் ஓடும் 35 வயதுக்காரிக்கு அது பரவாயில்லை

அவன் சொன்ன பெரிய இடம் ஊரை விட்டுச் சற்றுத் தள்ளியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல். அதன் மொட்டை மாடியை உணவகமாக மாற்றியிருந்தார்கள். செயற்கைப் பூக்களைக் கொண்டு வளைவுகள் அமைத்திருந்தார்கள். அவற்றில் ஆங்காங்கே ஆழ்ந்த ஊதாப் பூக்கள் தென்பட்டாலும் இளஞ்சிவப்பும் வெள்ளையும்தான் அதிகம் இருந்தன. தூரத்தில் கடல் தெரிந்தது.காற்று வந்து தலையைச் சிலுப்பியது. ஈரத்தலையை விரித்துப் போட்ட இளம் பெண் மாதிரி வானில் இருள் பரவிக் கிடந்தது. நட்சத்திரங்கள் மினுங்கத் தொடங்கின.

இடம் எனக்குப் பிடித்திருந்தது. இனம் புரியாத ஓர் உல்லாசம் மனதில் புரண்டது. ‘இடம் ரொம்பவும் ரொமாண்டிக்காக இருக்கிறது’ என்றேன்

அவன் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தான். கண், கன்னத்து சதை எல்லாம் சேர்ந்து சிரித்தது. ஆளை அடித்துப் போடும் மென் சிரிப்பு.

உணவகத்தில் அதிகம் பேர் இல்லை. இன்னொரு ஓரத்தில் ஓர் இளம் தம்பதி இரு குழந்தைகளோடு அமர்ந்திருந்தார்கள். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க குழந்தைகள் மேசை மீதிருந்த முள்கரண்டியையும் கத்தியையும் எடுத்துச் ‘சண்டை’ போட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் குழந்தைகளை நோக்கிக் கை அசைத்தான். அவை சண்டையை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தன. அவை திரும்பிப் பார்ப்பதைக் கண்ட அந்தத் தம்பதிகளும் திரும்பிப் பார்த்தனர்.

நோ! இது எனக்கான தருணம். எனக்கே எனக்கான தருணம். வேறு யாருக்கும் இடமில்லை. அவன் கவனத்தைத் திருப்ப கைப்பையிலிருந்து சாக்லேட்டை எடுத்து நீட்டினேன்.  

அதன் மேல் இருந்த இளம் சிவப்பு ரிப்பனைப் பிரித்து, அதன் மேலுறையை உரித்துக் கொண்டே “உனக்குதானே பிறந்தநாள்! எனக்கு சாக்லேட்டா?” என்றான்.

“ஜப்பானில் ஒரு வழக்கம் உண்டு. காதலர் தினத்தன்று பெண்கள் அவர்களது இணைக்கு சாக்லேட் கொடுப்பார்கள்.”

இணை என்ற வார்த்தைக்குப் புன்னகைத்தான். “ம்”

“ஒரு மாதம் கழித்து, மார்ச் 14 அன்று ஆண்கள் தங்கள் காதலிக்கு ஒரு ரிட்டன் கிஃப்ட் கொடுக்க வேண்டும்”

“இன்று வேலண்டைன்ஸ் டேயா?”

“எனக்கு என்னமோ அப்படித்தான் தோன்றுகிறது!”

சாக்லேட்டின் ஒரு முனையை உடைத்து என் உதட்டில் வைத்தான். நான் தடுக்கவில்லை

“சாக்லேட்கள் உன்னை மாதிரி. வெளியே கெட்டி. உள்ளே மென்மை. இனிமையும் கூட”

“எப்போது சமூக விரோதியாக மாறினாய்?”

“நானா? சமூக விரோதியா?”

“கவிதை சொல்கிறாயே!”

அவன் தலையை அண்ணாந்து கொண்டு கடகடவென்று சிரித்தான். அதுவும் அழகாகத்தான் இருந்தது. நான் அவன் கைகளை எடுத்து என் விரல்களைக் கோர்த்துக் கொண்டேன்.

“ஏதோ சொல்லணும்னியே!”

““ம். சொல்றேன் சொல்றேன். சொல்லணும்னுதான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.ஊருக்குள்ள எந்த ரெஸ்டாரண்டிலும் பிரைவசி கிடையாது”

அவன் தன் கோட்டை விலக்கி உள் பையிலிருந்து நீளமாக எதையோ எடுத்தான். என்ன கொடுக்கப் போகிறான்? ரோஜாப்பூவா?

இல்லை. அது ஒரு புல்லாங்குழல்.

“ உனக்கு என் எளிய பரிசு. வாழ்வில் இனிமை என்றும் ஒலிக்கட்டும்”

நான் குழலை எடுத்துப் பார்த்தேன்.  காட்டில் தன்னிஷ்டத்திற்கு நெடு நெடுவென்று உயர்ந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு இளம் பச்சை மூங்கிலை வெட்டி எடுத்திருப்பார்கள். அதன் உள்ளே குடைந்து ‘சுத்தம்’ செய்திருப்பார்கள். கூழாங்கற்களிடையே ஓடும் ஆற்றுத் தண்ணீரில் போட்டு மென்மையாக்கியிருப்பார்கள். சூட்டுக் கோலால் துளைகள் இட்டிருப்பார்கள். அதன் பின்தான் அது இனிமையாகப் பேசும். அதுவரைக்கும் அது முள் சுமந்துதான் நிற்கும். நான் குழலைக் கையில் எடுத்துப் பார்த்தேன். வெளிப்புறம் முரடாக கடினமாக இருந்தது. அந்தச் சாக்லேட் போல. என்னைப் போல.

“இரண்டு வாரத்திற்கு முன் அசாம் போயிருந்தேன். குவஹாத்தி இல்லை. ஜோர்ஹட்.” அவன் பேச ஆரம்பித்தான்

“ஆபீஸ் இன்ஸ்பெக்க்ஷன். நகரின் விளிம்போரம் ஒரு ரிசார்ட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.இறங்கி சிறிது தூரம் நடந்தால் காடு ஆரம்பிக்கிறது. இரவு, சாப்பிட்டு உட்காந்திருந்தேன். திடீரென்று காதில் தேன் பாய்ந்தது. எங்கிருந்தோ வந்த அந்தப் புல்லாங்குழல் இசை என்னுடன் பேச ஆரம்பித்தது. இனிமை. குழலை வாசிக்கிறானா? உயிரை உருக்கி ஊற்றுகிறானா? எனக்கு உன் ஞாபகம் வந்தது. ஏன் என்று கேட்காதே. உள்ளே இனிமை நிறைந்த அந்த முரட்டுப் புல்லாங்குழல் ஏதோ சொல்ல முனைகிறது. ஆனால் உன்னைப் போல் தயங்குகிறது.

இசை வந்த திசை நோக்கி நடந்தேன். விடுதி சமையல்காரரும் துணைக்கு வந்தார். காட்டின் விளிம்பில் ஒரு குடிசை. அதன் முன்னால் அமர்ந்து அவன் வாசித்துக் கொண்டிருந்தான். எலும்பும் தோலுமாக இருந்தான். தலை பரட்டை. முகத்தில் முள் மண்டிக் கிடந்தது. மரம் வெட்டுகிறானோ, மண் வெட்டுகிறானோ தெரியவில்லை, இடுப்பு வேட்டியில் ஏகப்பட்ட அழுக்கு. என்னைப் பார்த்ததும் வாசிப்பதை நிறுத்தினான். குழலை எடுத்து இடுப்புக் கச்சையில் செருகிக் கொண்டான்.

நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவன் சிரிக்கவில்லை. இசை அறுந்து போன கோபமாய் இருக்கும். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவி எழுந்து வணங்கினாள் அவன் தாயாக இருக்கும்.

 நான் “சாப்ட்டீர்களா?” என்று கேட்டேன்.

இல்லை என்று அந்தப் பெண்மணி தலை அசைத்தாள். நான் இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அவன் மறுத்தான். அந்தப் பெண்மணி வாங்கிக் கொண்டாள்

“வாசி!” என்றேன். அவன் மெளனமாய் தலை குனிந்து கொண்டான். அவன் தாய் அவர்கள் மொழியில் ‘வாசிப்பா’ என்றாள். அவன் முறைத்தான்

“இந்தக் குழலை எனக்குக் கொடுக்கிறாயா?” என்று கேட்டேன் அவன் இடுப்புக் கச்சையை கையால் இறுக்க பொத்திக் கொண்டான். நான் பறித்துக் கொள்வேன் என்று நினைத்தானோ என்னவோ? நான் ஐந்நூறு ரூபாய் எடுத்து நீட்டினேன். அவன் தலையை வேகமாக அசைத்து மறுத்தான்.

நான் இன்னொமொரு ஐநூறு ரூபாய் எடுத்து ஆயிரம் ரூபாயாக நீட்டினேன். அந்த அம்மாளின் கண்கள் விரிந்தன/ சமையல்காரர் கை நீட்டி மறித்தார். “வேணாம் சார். இது அதிகம் நாளைக்கு சந்தையில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். நான் பார்த்து வாங்கிக் கொடுக்கிறேன்” என்றார்

“இல்லை எனக்கு இதுதான் வேண்டும்!” என்றேன். சமையல்காரர் என்னை ஒருகணம் பார்த்தார். பின் அந்தப் பெண்மணியிடம் போய்ப் பேசினார். அந்தப் பெண்மணி அவனிடம் போய் ஏதோ சொன்னாள். அவன் அவளை நிராகரித்து மறுபடியும் தலையை ஆட்டினான். அவள் கையிலிருந்த பணத்தைக் காட்டி ஏதோ சொன்னாள். மன்றாடுவது போல் தெரிந்தது. அவன் இடுப்பிலிருந்து குழலை உருவி வெறுப்புடன் தரையில் எறிந்தான். அவள் எடுத்து வந்து பணிவாய் என்னிடம் நீட்டினாள். இந்தக் குழலை உனக்காகத்தான் வாங்கினேன்.” என்று குழலை எடுத்து நீட்டினான்

“ வாங்கினாயா?”

“ம்”

“வாங்கினாயா?” என்றேன் மறுபடியும்

“ஆமாம் உனக்காகத்தான் வாங்கினேன். உன்னைப் போன்ற குழல்”

வாங்கினாயா, இல்லை நீ பறித்துக் கொண்டாய். மனசு மளுக் என்று முறிந்தது

“என்னை எதனாலும் வாங்க முடியாது!” என்றேன். சொல்லும் போதே என் குரல் உடைந்தது.

*

The post குழலி appeared first on Maalan.

  •  

நாத்திகராய் பாரதி

“உலகத்தில் வாலிப பருவத்தில் ஒருவன் எவ்வாறு பழகினானோ அப்படியே வயோதிக பருவம் வரையில் நடக்கிறான் என்பது உண்மை. ஐந்தில் வராதது ஐம்பதில் வராது என்பது திண்ணம்”  என்று ஒரு கட்டுரையைத் தொடங்குகிறார் பாரதி. (இந்திய குருவும் ஆங்கில குருவும்- விஜயா 25 பிப்ரவரி 1910)

இவ்வளவு உறுதியாக பாரதியார் சொல்லும் விஷயம் அவருக்கும் பொருந்தும். அதனால்தான் அவரது இளமைப் பருவம், அதில் அவர் பெற்ற கல்வி, அடைந்த அனுபவங்கள், அவரை பாதித்த சிந்தனைகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது பதின்ம வயது வாழ்க்கை, குறிப்பாக 16 முதல் 20  வயது வரையிலான (1898-1902) வாழ்க்கை பற்றி ஆதாரப்பூர்வமான செய்திகள் இதுவரை நமக்குக் கிட்டவில்லை.

நானறிந்த வரையில் பாரதியின் மனைவி செல்லம்மா எழுதியுள்ள பாரதியார் சரித்திரத்தில் இந்தக் காலகட்டம் பற்றி சில செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் முரண்பாடுகளும் இருக்கின்றன. “பாரதியார் 1902ஆம் வருஷம் காசியிலிருந்து ஊருக்குத் திரும்பினார்” என்று ஓரிடத்தில் எழுதும் செல்லம்மா, “காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டிற்கு அழைத்து வந்தவர் எட்டையபுரம் மகாராஜாதான். அந்த சமயத்தில் தில்லி தர்பாருக்குச் சென்றிருந்த மகாராஜா திரும்புங்காலையில் காசியில் சிவமடத்தில் இறங்கினார். அங்கே பாரதியாரைச் சந்தித்து தம்முடன் எட்டையபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார்” என்றும் எழுதுகிறார்.

பிரிட்டீஷ் ஆட்சியில் மூன்று முறை தில்லியில் தர்பார் நடந்தது.(1877, 1903, 1911) இதில் 1877 ஆண்டின் போது பாரதி பிறந்திருக்கவில்லை. 1911 ஆண்டு புதுச்சேரியில் இருந்தார். இங்கிலாந்தில் புதிதாக அரசரோ அரசியோ அரியணை ஏறும் போது அவர்கள் தங்களது காலனி நாடுகளுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படி ஏழாம் எட்வர்ட் அரசரானபோது அவர் தில்லிக்கு வருவதற்கு 1903ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்தார். பெரிய வெளியில் கூடாரங்கள் எழுந்தன. பிரத்தியேகமாக ஒரு ரயில் பாதை போடப்பட்டது. கப்பலில் பம்பாய் வரும் அரசர் அங்கிருந்து ரயில் மூலம் தில்லி வருவதாக ஏற்பாடு. அதே நேரம் கல்கத்தாவிலிருந்து கர்சன் வருவார், மேற்கிலிருந்து வரும் அரசரும் கிழக்கிலிருந்து வரும் வைஸ்ராயும் தில்லியில் சந்திப்பார்கள் எனத் திட்டம். மற்ற காவலர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் விதமான சீருடை அணிந்த சிறப்புக் காவல் படை உருவாக்கப்பட்டது. மின்சார கொண்டு வரப்பட்டு மின் விளக்குகள் நிறுவப்பட்டன. ஒருதபால் நிலையமும் நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது. 1903 ஜனவரி ஒன்றாம் தேதி, புத்தாண்டு அன்று, நாடெங்கிலிருந்தும் சமஸ்தான அரசர்கள் அவர்களிடமிருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்து தர்பாருக்கு வந்தனர். சிலர் யானை மீது தங்க அம்பாரியில் வந்தனர். அவர்களது யானைகளைக் கட்டவும் அவற்றுக்குத் தீனிபோடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்தனை கோலாகலம். ஆனால் அரசர்தான் வரவில்லை! ஏழாம் எட்வர்ட் தான் வராமல் தன் தம்பியை அந்த தர்பாருக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் இதெல்லாம் நடந்தது 1903ல். 1902ல் அல்ல. அதனால் எட்டையபுரம் மகாராஜா தில்லி தர்பாரிலிருந்து திரும்பிச் செல்லும் போது காசிக்கு வந்திருக்க  இருக்க முடியாது. அல்லது பாரதி எட்டையபுரம் திரும்பியது 1902ஆக இருக்க முடியாது.

வருடக் கணக்கு முன் பின்னாக இருந்தாலும் செல்லம்மாவின் நூலை வரிகளுக்கு இடையில் வாசித்தால் சில செய்திகள் புலனாகின்றன. பாரதி சில காலம் நாஸ்திகராகவும் இருந்தார் என்பது அவற்றில் ஒன்று. “காளைப் பருவமானதாலும், பண்படாத சுதந்திர வீறுபடைத்த மனமாகையாலும் அவருக்கு நாஸ்திக வாதத்தில் பற்றுண்டாயிற்று” என்று எழுதுகிறார் செல்லம்மா.

பாரதியா? கணபதி, முருகன், சிவன், பராசக்தி,சரஸ்வதி, லக்ஷ்மி, காளி, மாரியம்மன், கண்ணன் என்ற இந்து தெய்வங்கள் மட்டுமன்றி, ஏசு, அல்லா என்று எல்லா தெய்வங்கள் மீதும் கவிதைகள் எழுதிய பாரதியா நாஸ்திகராக இருந்தார்? ‘தமிழா, பயப்படாதே, தெய்வத்தை நம்பு!” என்று எழுதியா நாஸ்திகராக இருந்தார்? வேத, உபநிஷத்களிடம் மனதைப் பறி கொடுத்து வேத ரிஷிகளின் கவிதை என ரிக் வேதப் பாடல்களையும், பகவத்கீதையையும் மொழிபெயர்த்த பாரதியா நாஸ்திகராக இருந்தார்?

ஆம். அவரது பதின்ம வயதில் அவர் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார். “அப்போது அவருக்கு ஷெல்லி, பைரன் என்ற ஆங்கிலக் கவிகளின் நூல்களை வாசிப்பதில் பிரியம் அதிகம்” என்று செல்லம்மா கூறுகிறார்.காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பிய பின் பாரதி ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார் என்றும் குறிப்பிடுகிறார் செல்லம்மா.

எட்டையபுரத்திலிருந்தும் பாரதி வெளியேற எட்டையபுரம் மன்னரை விமர்சித்து திருநெல்வேலியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சர்வஜனமித்திரன் என்ற இதழில் பாரதி எழுதியதுதான் காரணம் என்று பாரதியின் சகோதரர் சி.விஸ்வநாதன் தெரிவித்ததாக ஓரு குறிப்பு உண்டு. அதனை ஷெல்லிதாஸ் என்ற பெயரில் எழுதியதாக ராஜம் கிருஷ்ணன் தனது பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த நூல் கற்பனை வகையைச் சார்ந்தது என்று பிரேமா நந்தக் குமார் போன்றவர்கள் கருதுகிறார்கள். பாரதியின் அந்தப் படைப்பும் கிடைக்கவில்லை.

ஆனால் ஷெல்லிதாஸ் என்ற பெயரில் பாரதி எழுதிய வேறு ஒரு படைப்பை நாம் இன்றும் வாசிக்க முடியும். அது ‘துளசிபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’. பாரதியே ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி பத்திரிகையில் 1905 நவம்பர் தொடங்கி, 1906 ஜூலை வரை, இதழுக்கு இரண்டு பக்கங்கள் வீதம், இடைவெளி விட்டு விட்டு, ஐந்து மாதங்கள் வெளியான கதை. அது ஒரு மொழியாக்கக் கதை. அதை ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரைச் சூடி பாரதி எழுதினார்.

காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பிய பாரதி அங்கு ஷெல்லியின் பெயரால் ஷெல்லியன் கில்ட் (Shelleyan Guild என்ற ஓர் அமைப்பையும் தொடங்கியதை பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவரான ஆக்கூர் அனந்தாச்சாரியார் குறிப்பிடுகிறார்: “ஷெல்லி, கீட்ஸ் இவ்விரு கவிவாணர் மீதுதான் அவர் அளவற்ற மதிப்பு வைத்திருந்தார். தமது ஊரில் ஒரு சங்கம் ஏற்படுத்தி, அச்சங்கத்தில் ஷெல்லியின் நூல்களைப் படித்துக் காண்பித்து, அனுபவிக்கும்படி செய்து வந்தார்” (கவிச்சக்ரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் -ஆக்கூர் அனந்தாச்சாரி)

சுதந்திர வீறு கொண்ட மனம் வாய்த்த பாரதி, தன்னை எந்த மனிதருக்கும் தாஸன் என்று சொல்லிக் கொண்டதில்லை, ஷெல்லியைத் தவிர. சக்தி தாஸன், காளிதாசன் என்ற பெயர்களில் அவர் எழுதியதுண்டு. ஆனால் அவை இறைவியின் பெயர்கள். மனிதர்களில் அவர் தன்னை தாஸனாக அறிவித்துக் கொண்டது ஷெல்லி ஒருவருக்குத்தான்.

யார் இந்த ஷெல்லி? ஏன் அவர் மீது அவ்வளவு ஈர்ப்பு?

இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம் சசக்ஸ். அந்த மாநிலத்தில் ஒரு பிரபு வீட்டுப் பிள்ளையாகப் பிறந்தவர் ஷெல்லி. அவரது தந்தை பிரிட்டீஷ் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. ஷெல்லி பிறந்தது 1792 ஆகஸ்ட்டில்.

அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1789ல் நடந்த பிரஞ்சுப் புரட்சி ஐரோப்பாவையே உலுக்கியிருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது பிரஞ்சுப் புரடசியின் லட்சியமும், முழக்கமும் ஆகும். மன்னர் என்பவர் தெய்வத்தின் பிரதிநிதி, எனவே அரசாட்சி என்பது தெய்வீக உரிமை என்ற கருத்து ஒருகாலத்தில் இங்கிலாந்தில் நிலவி வந்தது (Sovereignty என்ற சொல்லை அதனால்தான் தமிழில் இறையாண்மை என்று மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள்) ஆனால் குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்று மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றம் வேண்டும் என்று 1688ல் நடந்த கிளர்ச்சியின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டதும் அந்தக் காலகட்டத்தில்தான்.

பிரபு வீட்டுப் பிள்ளையானாலும் மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள், சுதந்திரம், சமத்துவம் என்ற கருத்துக்கள் காதில் விழுந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் ஷெல்லி வளர்ந்தார். அந்தக் கருத்துக்களின் தாக்கம்தான் அவரைக் கவிஞனாக்கியது. எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் ஷெல்லி. அவரை பிரஞ்சுப் புரடசியின் குழந்தை என அவரது கவிதைகளின் விமர்சகரான எட்மண்ட்ஸ் எழுதுகிறார்.

அரசன் தெய்வத்தின் பிரதிநிதி அல்ல என்ற புள்ளியில் தொடங்கிய ஷெல்லியின் சிந்தனை இறைவனுக்கு எதிராகவும் நீண்டது. அவர் தனது பதினேழாவது வயதில், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் படிக்கும் போது நாத்திகத்தின் தேவை (The Necessity of Atheism) என்ற நூலை எழுதினார். அது பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கல்வி நிலையங்களில் கெடுபிடி நிலவிய காலம். அதனால் ஜெர்மியா ஸ்டக்லி என்ற புனை பெயரில் எழுதினார். அவர் கையெழுத்திட்டு நண்பர்களுக்கு அனுப்பி வைத்த நூலின் பிரதிகளை, நண்பர் ஒருவர்  மதகுருக்களுக்கு அனுப்ப, அந்த மதகுரு பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்ப, ஷெல்லி பிடிபட்டார். பல்கலைக்கழக துணைவேந்தரும் அதிகாரிகளும் ‘இதை எழுதியது நானல்ல’ என்று மறுத்துவிடு உன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்’ என்று சொன்னார்கள்.  ஆனால் ஷெல்லி, “உங்கள் மதம் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் பொய் சொல்வது அற்பத்தனமான, கோழைத்தனமான காரியம் என்று நானறிந்த கொள்கைகள் சொல்கின்றன. நான் பெருமை கொள்ளத் தக்கதாக இந்த நூலை நான் எழுதவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அதற்காக அதைப் புறக்கணிக்கச் சொன்னால் அது என்னால் முடியாது” என்று மறுத்துவிட்டார். விளைவு பல்கலைக்கழகத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதை அவமானமாகக் கருதிய அவரது தந்தை,  உன் போக்கை நீ மாற்றிக் கொள்ளாதவரை உன்னை என் மகனாக நான் ஏற்க மாட்டேன் என்று ஷெல்லிக்கு கடிதம் எழுதினார். தந்தையின் நிபந்தனைகள் எதையும் ஏற்கமறுத்த ஷெல்லி வீட்டை விட்டு வெளியேறினார்.  பெரும் பணக்கார வீட்டில் பிறந்த ஷெல்லி வாழ்க்கையில் பெரும்பகுதி மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்தார்.

ஷெல்லியின் வாழ்க்கை, மன்னர்களைப் பற்றிய அவரது எள்ளல் (A King, a heartless beast, pageant, a name – ஒரு மன்னன், இதயமற்ற மிருகம், அலங்கார அணிவகுப்பு, வெறும் பெயர்) அதிகார எதிர்ப்பு, சமத்துவத்திற்கான வேட்கை, ஏழைகள் மீதான ஷெல்லியின் பரிவு (I am the friend of the unfriended poor- நான் நண்பர்களற்ற ஏழைகளின் நண்பன்)) மதகுருக்களுக்கு எதிரான உணர்வாகத் தோன்றி விரிந்த நாத்திகம் இவையெல்லாம் பதின்ம வயது பாரதியை வசீகரித்திருக்க வேண்டும். எட்டையபுர அரசரை முட்டாள் என வர்ணித்ததால்தான் அரசர் சினமடைந்தார் எனச் சொல்கிறார்கள். “The fool whom the courtiers nickname monarch, whilst a slave even to the basest appetites” – அரசப் பிரதிநிதிகளால் அரசன் என்றழைக்கப்படும் முட்டாள், கீழான வேட்கைகளுக்கு அடிமை என்பது ஷெல்லியின் வரிகள்.

நாத்திகத்தைத் தவிர ஷெல்லியின் கருத்துக்களின் தாக்கத்தைப் பல படைப்புகளில் காணலாம். அரசரையும், அரசவையையும் ஏளனம் செய்வது (சின்னச் சங்கரன் கதை) மதகுருக்கள், அமைப்புக்கள் மீதான விமர்சனம் (சங்கரன் நாயர் விஷயம் தொடர்பாக சங்கராச்சாரியார் பற்றி இந்து நாளிதழுக்கு எழுதிய கடிதம்) ஏழைகள் மீது பரிவு (மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?) சமத்துவத்திற்கான வேட்கை (ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்) அதிகார எதிர்ப்பு (பல பாடல்கள்/கட்டுரைகள்) எனச் சில உதாரணங்களைக் கூறலாம்.

நேரடியான உதாரணம் காந்தாமணியின் தொடக்க வரிகள்:” வெயிலொளி எந்தப் பொருள் மீது பட்டாலும், அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிறான். எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன” என்று காந்தாமணி என்ற கதையைத் தொடங்குகிறார் பாரதி.

இதில் கவனிக்க வேண்டிய ஓர் செய்தி உண்டு. காந்தாமணி பாரதி மறைவதற்கு ஈராண்டுகளுக்கு முன், செப்டம்பர் 1919ல் எழுதப்பட்ட கதை. 1905ல் ஷெல்லிதாசன் என்ற பெயரில் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கி 1921 அமரராகும் வரை ஷெல்லி பாரதி மீது தாக்கம் செலுத்தி வந்திருக்கிறார் என்பதற்கான வலுவான சான்று இது.

இன்னொரு சான்றும் உண்டு. தனது மரணத்திற்குச் சில மாதங்கள் முன்பு, 1921 பிப்ரவரி மாதம் பாரதி மகாமகம் என்று ஒரு கட்டுரை எழுதினார். அதில் எழுதுகிறார்: “ இந்திரனை தேவ தேவ என்ப. மற்ற மனிதருக்கு வானவர் எப்படியோ, அப்படி வானவருக்கு அவன் என்பது குறிப்பு. வடமொழியில் வால்மீகி காளிதாசர்களையும், தமிழில் கம்பனையும் புகழேந்தியையும் இங்கிலீஷில் ஷெல்லியையும் கவிகளின் கவி என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள்”

ஷெல்லியைப் பற்றி அப்படிச் சொல்பவர், நமது கவிகளின் கவியான பாரதி!    

கலைமகள் -மே 2024  

The post நாத்திகராய் பாரதி appeared first on Maalan.

  •  

பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள்

பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள்

மாலன்

பாரதியைக் குறித்துப் பல ஆய்வுகள் வந்திருக்கின்றன. இன்று பாரதி இயல் என்பது ஓர் துறையாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது. என்றாலும் கூட, விளக்கின் கீழ் படிந்து கிடக்கும் நிழல் போல, அவரது காசி வாழ்க்கை பற்றிய செய்திகள் நமக்கு இதுவரை அதிகம் கிடைக்கவில்லை.

காசியில் அவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என்பது குறித்து நமக்கு ஆவணப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் அவர் அங்கு நான்கு வருடங்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. அப்படி அவை குறிப்பிடுவதற்குக்கான அடிப்படை பாரதியின் தந்தையின் மறைவுக்குப் பின், அவரது அத்தையின் அழைப்பின் பேரில், அவர் காசி சென்றார் என்ற செய்தி மாத்திரமே.

அவரது தந்தை 1898 ஜூனில் மறைந்தார் என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்புக் குறிப்பிடுகிறது. ஆனால் அதே நூலில், பாரதியாரின் சுதேச கீதங்கள் என்ற நூலின் முதற்பதிப்பில், நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய ‘ஸ்ரீ சி.சுப்ரமணிய பாரதியார்  சரித்திரச் சுருக்கம்’ என்ற கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது. அதில் “தந்தையார் இறந்த பிறகு தனக்கு ஆதரவும் துணையும் இல்லாமல் தன் தந்தையுடன் பிறந்த அத்தையார் அழைக்க 1901ஆம் வருஷம் காசிக்குப் போனார். அங்கே ஒரே வருஷம் இருந்தார்” என்று சோமசுந்தர பாரதி எழுதுகிறார். (பக் 1074)

“பாரதியார் 1902 ஆம் வருஷம் காசியிலிருந்து ஊருக்குத் திரும்பினார்” என்று செல்லமாள் பாரதி அவரது ‘பாரதியார் சரித்திரம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார் (பக்கம் 32) ஆனால் அவரது நூலிலும் பாரதி எந்த ஆண்டு காசிக்குச் சென்றார் என்ற தகவல் இல்லை.

பலர் குறிப்பிட்டுச் சிலாகிக்கும்  ‘பாரதி சின்னப் பயல்’ வெண்பாக்கள் இரண்டும் 1897,1898 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பு  யூகிக்கிறது. இளசை ஒருபா வொரு பஃது  என்ற பிரபந்தம், “1898ல் இயற்றப்பட்டது என்று பாரதியாரின் இளவல் சி.விஸ்வநாத ஐயர் அவர்களும் உறுதி செய்தார்” என்றும் அந்த நூல் குறிப்பிடுகிறது. அப்படியானால் 1898ல் பாரதி எட்டையபுரத்தில் இருந்திருக்க வேண்டும்.

இந்தத் தகவல்கள் நம்முள் சில கேள்விகளை எழுப்புகின்றன. அவை: பாரதி காசிக்குச் சென்றது எந்த ஆண்டு? பாரதி தனது தந்தை மறைந்த சில மாதங்களிலேயே, அதாவது 1898லேயே, காசிக்குச் சென்றாரா? அல்லது 1901லா? அவர் அங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தார்? நான்காண்டுகளா? ஓராண்டா? ஒருவேளை அவர் தந்தை இறந்த பின்னும் சில காலம் எட்டையபுரத்தில் ‘ஆதரவும் துணையுமின்றி’ வாழ்ந்தாரா? அப்படியாயின் அவரது அந்த நாட்கள் எப்படி இருந்தன? ஏதாவது எழுதினாரா? துணையின்றி துன்பத்தில் இருந்த ஒரு கவிஞன் எழுதாமல் இருந்திருக்கும் வாய்ப்புக்கள் குறைவு. அப்படி எழுதியிருந்தால் அவை எதைப் பற்றியதாக இருந்திருக்கும்?

அவரது தந்தை இறந்த போது அவருக்கு வயது 16. பாரதி நிலை குலைந்து போனார். வறுமை சூழ்ந்தது. அந்தச் சிறுவனுக்கு பயப்படாதே என ஆறுதல் சொல்லி வழிகாட்ட யாருமில்லை. மனது குழம்பிக் கிடந்தது. உள்ளத்தில் வலிமை இல்லாததால் உடலும் நைந்தது. கற்ற கல்வியும் கை கொடுக்கவில்லை. நான் ஏன் பிறந்தேன் என்ற விரக்தியில் ஆழ்ந்தார் என்பதை அவரது சுயசரிதை சொல்கிறது.

தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது

தரணி மீதினில் அஞ்சேல் என்பார் இலர்

சிந்தையில் தெளிவில்லை உடலினில்

திறனுமில்லை உள்ளத்தில் இல்லையால்

மந்தர் பால் பொருள் போக்கிப் பயின்றதால்

மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை

எந்த மார்க்கமும் தோன்றில என் செய்வேன்

ஏன் பிற்ந்தேன் இத் துயர் நாட்டிலே?

என்று தந்தை இறந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகும்  வடுவாக மாறாத அந்த வலியைப் பதிவு செய்கிறார் பாரதி.

பாரதியாரையும் அவரது தங்கையையும் அவரது அத்தை குப்பமாள் எட்டையபுரத்திற்கு வந்து காசிக்கு அழைத்துப் போனதாக ராஜம் கிருஷ்ணன் தனது பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற நூலில் விவரிக்கிறார்.  “ஆதரவற்ற பாரதியாரை அத்தை குப்பம்மாள் காசிக்கு வரும்படி அழைத்தார், அழைப்பிற்கிணங்கி பாரதியாரும் காசிக்குச் சென்றார்” என்று எழுதுகிறார் செல்லம்மாள் “அத்தையார் அழைக்க” பாரதி காசிக்குச் சென்றார் என்றுதான் சோமசுந்தர பாரதியாரும் எழுதுகிறார். அத்தை எட்டையபுரம் வந்து அழைத்துச் சென்றாரா? அல்லது பாரதியே தனியே காசிக்குப் பயணப்பட்டாரா?

பாரதியின் இளமைக் கால வாழ்க்கை பற்றிய குறிப்புகளை, அவரே எழுதிய சில பாடல்களில் காணமுடியும் ஆனால் அவை மிகச் சில. குறிப்பிட்டுச் சொல்வதானால் அவை, அவரது மூன்று சீட்டுக் கவிகள், கனவு என்ற அவரது கவிதை ஆகியன.  சீட்டுக் கவிகளில் ஒன்று கல்வி கற்க நிதி ஆதரவு கேட்டு, அவர் தந்தை இருந்த காலத்திலேயே, 1897ல் எட்டையபுர அரசருக்கு எழுதியது. மற்றவை புதுச்சேரியிலிருந்து வெளியேறி தமிழகம் திரும்பிய பின் எழுதியவை.(1919 என்று கருதப்படுகிறது)  

கனவு என்ற கவிதை, அவர் வாழ்நாளிலேயே, அவர் புதுச்சேரியிலிருந்த போது, 1911ஆம் ஆண்டில், தனது 29ஆம் வயதில், அவரே பதிப்பித்தது, அவர் வாழ்நாளில் அரசால் தடை செய்யப்பட்டஅது, அவர் மறைவுக்குப் பின் ‘சுயசரிதை’ என்று தலைப்பிட்டுப் பிரசுரிக்கப்பட்டது.  பாரதி அறுபத்தாறு என்னும் கவிதையை அவரது தன் வரலாறு கூறும் கவிதையாக தொகுப்புகளில் காணப்படுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அது அவர் புதுச்சேரியில் சந்தித்த சில சித்தர்கள், துறவிகள் பற்றியது. இவை எதுவும் அவரது காசி வாழ்க்கை பற்றிக் கூறுவதில்லை.

பாரதி காசியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்கள் நம்மிடம் இல்லை என்ற போதிலும். எந்த ஒரு படைப்பாளிக்கும் அவரது படைப்பே வாழ்க்கையை விட முதன்மையானது என்பதால் அது அளிக்கும் ஆதாரங்கள் பரிசீலிக்கத் தகுந்தவை. பாரதியின் படைப்புக்களில் காசியின் தாக்கம் என்ன?

காசியில்தான் அவர் ஆடை அணியும் பாணி மாறியது. சிகை போய் தலைப்பாகை தலையில் ஏறியது. அவரது மொழிப் புலமை விரிவு கண்டது. அவரது பார்வை விசாலமாயிற்று. மொழி மதம் ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கான விதைகள் மனதில் தூவப்பட்டன. தேசிய எண்ணங்கள் அவர் உள்ளத்தில் ஒளியேற்றத் தொடங்கின.

ஒரு சிற்றூரில், மரபான நம்பிக்கைகளில் பற்றுக் கொண்ட ஓர் அந்தணக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட ஓரு சிறுவனை,  கண்மூடித்தனமான மத ஆசாரங்களை ஏற்க மறுக்கும், முற்போக்கான, நவீன இளைஞனாக மாற்றியது காசி. தனிமனிதத் தாக்குதல் அல்லது புகழ்ச்சி, ஆகியன பாடு பொருள்களாக அமைந்த வெண்பா, பிரபந்தம், சீட்டுக்கவி என்று யாப்பமைந்த செய்யுள்களை எழுதி வந்த புலவனை சொல்புதிதாய் பொருள் புதிதாய் அமைந்த ஜோதி மிகு கவிதைகளை எழுதிய மகாகவியாக மாற்ற அடித்தளம் அமைத்தது அவரது காசி வாழ்க்கை. அந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தவை புத்தகங்கள்.

எட்டையபுரத்தில் இருந்த போதே, அதாவது அவரது 10,12 வயதிலேயே பாரதிக்கு புத்தக வாசிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது, தோழர்கள் இன்றி புத்தகக் கூட்டங்களே அவருக்கு அப்போது தோழர்களாய் இருந்தன. ’தூண்டு நூற்கணத்தோடு தனியனாய் தோழமை பிறிதின்றி வருந்தினேன்’ என்கிறார் பாரதி.

காசியில் இருந்த போது பாரதேந்து ஹரீஷ்சந்திரா என்ற இந்திக் கவிஞரின் கவிதைகள் பாரதிக்கு நூல்கள் மூலமாகத்தான் அறிமுகமாகியிருக்க வேண்டும். பாரதி காசிக்குச் செல்வதற்கு முன்பே, 1885ல் ஹரீஷ் சந்திரர் காலமாகிவிட்டார். ஆனால் ஹரிஷ் சந்திரர் அந்த காலகட்டத்தில் அங்கு பிரபலமாகத் திகழ்ந்த கவிஞர், பத்திரிகையாசிரியர், நாடகாசிரியர். இன்றும் அவரை நவீன இந்தி இலக்கியத்தின் தந்தை எனக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள் (Diana Dimitrova (2004). Western tradition and naturalistic Hindi theatre) செய்தி அறிக்கைகள், ஆசிரியருக்குக் கடிதங்கள், நூல்கள், மொழிபெயர்ப்புகள் என்ற நவீன காலத்து வடிவங்களைப் பயன்படுத்தி பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக மக்களிடம் கருத்துக்களை உருவாக்க முயன்றவர் என்பதால் அவரை யுகக் கவி (யுக் சாரண்) என்று வர்ணிக்கிறார்கள். அவர் கவி வசன சுதா, ஹரிஷ்சந்திரா பத்திரிக்கா, பால போதினி என்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார். இவற்றில் ஒன்று பெண்களுக்கான பத்திரிகை என்று அவரது வாழ்வையும் படைப்புகளையும் விரிவாக ஆராய்ந்த பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் வசுதா டால்மியா கூறுகிறார் (The nationalization of Hindu traditions : Bharatendu Harischandra and nineteenth-century Banaras.)

அவர் நாட்டின் வறுமை, அடிமைத்தனம், ஆளுவோரின் சுரண்டல், அவர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள்,  மத்திய வர்கத்தின் மெத்தனம் இவற்றைப் பற்றி எழுதியவர். வைணவ மரபைப் பின்பற்றும் பழமையில் ஊறிய குடும்பத்தைச் சார்ந்தவர் என்ற போதும் இந்து மதத்தில் இருந்த சில அர்த்தமற்ற சடங்குகள், ஆசாரங்கள் போன்றவற்றை விமர்சித்து இந்து மதத்தில் சீர்திருத்தங்களை விழைந்தவர். ஆனால் பக்தி இயக்கத்தை ஆதரித்தார். அவர் எழுத்தில் அங்கதம் உண்டு. காதல் கவிதைகள் கொண்ட பல தொகுதிகளை எழுதியவர்  எனக் குறிப்புகள் சொல்கின்றன.

காசியிலிருந்து திரும்பிய பின் பாரதி எழுதிய படைப்புகளில் இந்த எல்லா அம்சங்களும் இருப்பதைக் காணமுடியும்.  

ஹரீஷ்சந்திரரின் எண்ணங்கள் பாரதியின் கவிதைகளிலும் எழுத்துக்களிலும் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.

விவித்⁴ கலா ஶிக்ஷா அமித், ஜ்ஞான் அநேக் ப்ரகார்.

ஸப்³ தே³ஸன் ஸே லை கர்ஹூ, பா⁴ஷா மாஹி ப்ரசார்

என்பது ஹரிஷ்சந்திரரின் கவிதை வரி. இதன் பொருள்: அறிவு பல வகைப்பட்டது; அது எல்லா நாடுகளிலிருந்தும் பெறப்பட வேண்டும். அவை தாய் மொழியில் பரப்பப்பட வேண்டும்.

இவை சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் (தமிழ்த் தாய்) பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் (தமிழ்) என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டுகின்றன.

நிஜ் பா⁴ஷா உந்நதி அஹை, ஸப்³ உந்நதி கோ மூல் .

பி³ன் நிஜ் பா⁴ஷா-ஜ்ஞான் கே, மிடத் ன ஹிய் கோ ஸூல்

என்பது ஹரீஷ்சந்திரரின் வரி.

இதற்கு ‘எல்லா வளர்ச்சிக்கும் மூலம் தாய்மொழி, தாய்மொழிதான் மனப்புண்ணை ஆற்றக் கூடியது’ என்று பொருள்.

தேசியக் கல்வி என்ற கட்டுரையில் பாரதி எழுதுகிறார்: ““தாய்மொழிக் கல்வியே தரமான கல்வி. இத்தேசத்து ஜனங்களின் கல்வி வித்து சத்தாக இருக்க வேண்டுமேயானால் மக்கள் தங்கள் தாய்மொழியிலே கல்வி தானம் பெற வேண்டும். அதுவே சகல வளர்ச்சியின் விஸ்பரூபத்திற்கும் வேராகும்”.

 அதே கட்டுரையில் பாரதி எழுதுகிறார்: “அ…………………………………………………………….ன்”

மேலே காட்டிய குறியின் பொருள் யாது? தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாவ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பதுபொருள்…பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; “ஸ்லேட்””பென்சில்” என்று சொல்லக் கூடாது.”

தமிழருக்கு என்ற இன்னொரு கட்டுரையில், “ தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்” என்கிறார்.

ஹரிஷ் சந்திரருக்கும் பாரதிக்கும் உள்ள இந்த ஒற்றுமைகள் தற்செயலானவைகளாகக் கூட இருக்கலாம். வங்க மறுமலர்ச்சியின் காரணமாக அன்று நாட்டில் எழுட்சியுற்று வந்த தேசிய உணர்வின் வெளிப்பாடாக, காலத்தின் குரலாகக் கூட, இருக்கலாம். 

ஹரீஷ்சந்திரர், பாரதி இருவரின் படைப்புகளில் காணப்படும் அங்கதச் சுவையை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்திற்காக ஆராய்ந்தவரும் தற்போது சிங்கப்பூரில் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்து வரும் ஆசிரியருமான முனைவர் மணிவண்ணன், என்னுடனான தனி உரையாடலில், “ஹரிச்சந்திரர் பாரதியிடம் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது. பாரதியார் ஹரிச்சந்திரர் பற்றி அறிந்திருக்க இயலும் . ஆனால் பாரதியின் படைப்பில் அதற்கான எவ்வித சான்றும் இல்லை” என்கிறார். ஆனால் பாரதியின் வாழ்க்கையை ஓரு புதினத்திற்கு உண்டான நடையில் “பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி” என்ற நூலை எழுதியுள்ள எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பாரதி தனது காசி வாழ்க்கையில் ஹரீஷ்சந்திரர் பால் ஈர்க்கப்பட்டதாக எழுதியிருக்கிறார்.

எது உண்மை? இதுவரை அதிகம் வெளிச்சம் பெறாத பாரதி வாழ்வின் நிழலான இன்னொரு பகுதி இது.   

The post பாரதி வாழ்வின் இருண்ட பக்கங்கள் appeared first on Maalan.

  •  

கதவைத் திற, காற்று வரட்டும்

பாடப் புத்தகங்கள் சொல்லாத பல வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இந்தியா சுதந்திரம் பெற்று மிகச் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் முதல் பிரதமருக்கும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவருக்கும் இடையே முரண்பாடுகள் முற்றி, ‘இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று குடியரசுத் தலைவர் சொல்கிற அளவிற்குச் சென்றது என்பதும் ஒன்று. இன்னொரு புறம், அதே கால கட்டத்தில், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், ‘பிரதமரிடம் நேர்மை இருக்கிறது ஆனால் துணிவு இல்லை’ எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது இன்னொரு நிகழ்வு.

இங்கு குறிப்பிடப்படும் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேட்கர். குறிப்பிடப்படும் சட்டம், ஹிந்து கோட் பில் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் ஹிந்து சட்ட முன்வடிவு. இந்துக்களின் பாரம்பரிய சொத்துக்களின் மீதான உரிமை, திருமணம், மணவிலக்கு, தத்தெடுத்தல் போன்றவற்றில் பெரும் திருத்தங்களை முன் மொழிந்தது இந்தச் சட்ட முன்வடிவு.

துல்லியமாகச் சொல்வதானால் இந்த முன்வடிவு குறித்து ராஜேந்திர பிரசாத்திற்கும் நேருவிற்குமிடையேயான மோதல், ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே, இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே, தொடங்கி விட்டது. இந்த சட்ட முன்வடிவு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அவையின் முன் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வைக்கப்பட்டது. அதை முன் மொழிந்தவர் நேரு. அப்போது சுதந்திரமடைந்து ஓராண்டு கூட ஆகியிருக்கவில்லை. அந்த சமயத்தில் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவராக இருந்த, ராஜேந்திர பிரசாத். இது குறித்த விவாதங்களின் போது அவையைத் தானே தலைமையேற்று நடத்துவது என்பதில் உறுதியாக இருந்தார். சட்டம் நிறைவேறவில்லை. மாறாக அது செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. நேரு ஏமாற்றமடைந்தார்

அதன்பின் நேரு ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக விரும்பவில்லை. மாறாக ராஜாஜியை குடியரசுத் தலைவராக்க விரும்பினார். அதற்காக நேரு உண்மையை மறைத்து அதற்கு மாறாகவும் செயல்பட்டார்.1949ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, நேரு ராஜேந்திர பிரசாத்திற்கு எழுதிய கடிதத்தில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்துத் தான் படேலிடம் பேசிவிட்டதாகவும், ராஜாஜியை வேட்பாளராகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். ராஜேந்திர பிரசாத் இதற்குக் கடுமையான மறுமொழி அளித்து அதன் நகலை படேலுக்கும் அனுப்பினார். இதைச் சற்றும் எதிர்பாராத நேரு திகைத்துப் போனார். உடனடியாக பிரசாத்திற்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் நான் எழுதியதற்கும் படேலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பற்றி படேலுக்கு எதுவும் தெரியாது” என்று அதில் கூறினார்.

அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த 489 இடங்களுக்கு நடைபெற்ற 1952 தேர்தலில், காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலங்களிலும் காங்கிரசே வெற்றி பெற்றது. அதையடுத்து நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேந்திர பிரசாத் நிறுத்தப்பட்டார். ராஜாஜியை கட்சி ஏற்கவில்லை பிரசாத் மிகச் சுலபமாக வென்றார். நேருவிற்கு இரண்டாம் முறையாக ஏமாற்றம் அந்தத் தேர்தலில் 65 எம்.பிக்களும், 479 எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மீண்டும் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரசாத் நிற்பதற்கு முட்டுக்கட்டை போட முயன்றார் நேரு.அந்தத் தேர்தலில் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணனை ஜனாதிபதியாக்க முனைந்தார், ஆனால் மெளலானா ஆசாத் போன்றவர்கள் அந்த யோசனையை ஆதரிக்கவில்லை. கட்சியும் அதை ஏற்கவில்லை. ஏமாற்றமடைந்த ராதாகிருஷ்ணன், தன் ராஜினாமாவை சமர்ப்பித்தார். அந்தத் தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் மீண்டும், ஜனாதிபதியானார். நேருவிற்கு மீண்டும் ஏமாற்றம். ராதாகிருஷ்ணனை மறுபடியும் துணை ஜனாதிபதியாக்கி அவர் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

ராஜேந்திர பிரசாத்திற்கும் நேருவிற்கும் ஏற்பட்ட மோதல்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் அம்பேட்கருக்கும் நேருவிற்கும் இடையே முரண் ஏற்பட்டு, அவர் அமைச்சரவையிலிருந்து வெளியேறித் தனிக்கட்சி காணும் நிலையும் இந்தச் சட்ட முன்வடிவால் ஏற்பட்டது. ராஜேந்திரப் பிரசாத்தைப் போலன்றி அம்பேத்கரும் நேருவும் கருத்தியல் ரீதியாகப் பெரிதும் முரண்பட்டவர்கள் அல்ல.நவீனமான, முற்போக்கான, இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குக் கருத்தொற்றுமை இருந்தது. ஆனால் அவர்கள் முரண்பட்டுப் பிரிவதும் நடந்தது.

அரசமைப்புச் சட்ட அவையின் செலக்ட் கமிட்டிக்கு சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டதல்லவா, அந்தக் குழுவின் தலைவராக அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேட்கர் நியமிக்கப்பட்டார். அவர் அதில் பல திருத்தங்களை முன்மொழிந்திருந்தார். பலதார மணத்திற்குத் தடை, பாரம்பரியச் சொத்தில் மகனுக்கு உள்ளதைப் போன்றே விதவையான அவன் மனைவிக்கும் உரிமை, கலப்புத் திருமணம், மணவிலக்கு போன்ற திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன.

மசோதா கடும் எதிர்ப்பிற்குள்ளாயிற்று. இந்தத் திருத்தங்களை எதிர்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் நாடாளுமன்றத்திற்கு முன் கூடி, அடையாள பூர்வ எதிர்ப்பாக நேரு அணிவதைப் போன்ற காந்திக் குல்லாய் அணிந்து சென்று, அதை எரித்தனர். காங்கிரசின் பெண் தலைவர்களும் கூட இதை ஆதரிக்கவில்லை. இந்த மசோதாவைத் திரும்பப் பெறவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சரோஜினி நாயுடு அறிவித்தார். அரை மனதான மசோதா, இதனால் பிரயோசனமில்லை என்றார் சுசேதா கிருபளானி. ராஜேந்திரப் பிரசாத், “ புதிய கருத்தியல்கள், புதிய எண்ணங்கள், இந்துச் சட்டத்திற்கு அன்னியமானவை மட்டுமல்ல, அவை ஒவ்வொரு குடும்பத்தையும் சீர் குலைத்துவிடும். நான் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன், இந்தச் சட்டம் குறித்து கட்சியின் காரியக்கமிட்டியிலோ, பொதுக்குழுவிலோ விவாதிக்கப்படவில்லை. இது போன்ற பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் முன் அவற்றை மக்கள் முன் வைத்து அவர்களின் ஆணையைப் பெற வேண்டும். அடுத்த சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. இதை தேர்தல் அறிக்கையில் வைத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பின் பரிசீலிக்கலாம்” என்று கடுமையான கடிதம் ஒன்றை 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி எழுதினார்.

சட்டம் நிறைவேறுவதற்கான சூழல் இல்லை என்பதாலும் தேர்தல் வெற்றியை அது பாதிக்கக் கூடும் என்று கருதிய நேரு சட்டம் நிறைவேறுவதைத் தள்ளிப் போட்டார்.

அதில் அம்பேட்கர் கடும் கோபமடைந்தார். அவர் தான் எழுதிய அரசமைப்புச் சட்டங்களுக்கு நிகரானவை இந்தச் சீர்திருத்தங்கள் என்று கருதினார். அவற்றைச் சட்டமாக நிறைவேற்றிக் கொடுப்பது நேருவின் கடமை, பொறுப்பு என்று எண்ணினார். “இதில் நான் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், இதை நிறைவேற்ற என் சக்திக்குட்பட்டது அனைத்தையும் செய்வேன்” என்று 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேரு கடிதம் மூலம் அவருக்கு உறுதி அளித்திருந்ததால் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அதில் நேரு போதிய அக்கறை காட்டவில்லை என்பது அவருக்கு சினமூட்டியது. இது, ”நகைப்பிற்குரியது,கோழைத்தனமானது, அவமானப்படுத்துவது” என்று சாடிய அவர், “சாணிக் குவியலின் மேல் மாளிகை எழுப்ப முடியாது!” என்று சொல்லி, 1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் சொன்னது: “பிரதமர் நேர்மையானவர். ஆனால் போதுமான துணிவு இல்லாதவர்”.

நேருவின் துணிவை கேள்வி கேட்ட இன்னொருவர், நிர்மல் குமார் சட்டர்ஜி. ஹிந்து மகாசபையின் தலைவர்களில் ஒருவர் (இவர் மகன் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று) நிர்மல் குமார் சட்டர்ஜி கேட்டார், “பொது சிவில் சட்டம் இயற்றலாம் என அரசமைப்புச் சட்டத்தில் கூறியிருக்கிறதே, அப்படியிருக்க ஏன் இந்து மதத்தை மட்டும் குறி வைத்து இந்தச் சட்டம்? இந்த அரசுக்கு முஸ்லீம் சமூகச் சட்டங்களைத் தொடத் துணிவுண்டா?”

நேருவின் துணிவின்மையையோ, அல்லது பலவீனங்களையோ அல்லது அவரே படலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது போல, ‘நான் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன், நம் எம்.பிகளே என்னுடன் இல்லை” என்ற ஆற்றாமையையோ மட்டும் ஹிந்து சட்ட முன்வடிவு வெளிப்படுத்தியதாக நான் கருதவில்லை. அரசியல் நெருக்கடி காரணங்களாலோ அவரது- இன்னும் சொல்லப்போனால் நம் மதிப்பிற்குரிய பல தலைவர்களின் -இரட்டை நிலையை அது வெளிப்படுத்தியது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அரசமைப்புச் சட்ட அவை 1948ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியே “இந்தியா முழுவதுமுள்ள குடிமக்களுக்காக பொது சிவில் சட்டம் இயற்ற அரசு முயற்சிக்கும்” என்ற அரசமைப்புச் சட்டத்தின் 35ஆவது பிரிவை  நிறைவேற்றி விட்டது. அது நேரு அரசிற்கு பொது சிவில் சட்டம் இயற்றும் வாய்ப்பைக் கொடுத்தது. எனினும் எல்லா மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் இயற்றும் முயற்சியில் அவர் இறங்கவில்லை. மாறாக  அதன் பின்னும் 1951 வரையிலும் இந்துக்களுக்கான சட்டத்தில் மட்டும். திருத்தங்கள் செய்வதில் தீவிரமாக இருந்தார்

அரசமைப்புச் சட்ட அவையில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது பேசிய முஸ்லீம் உறுப்பினர்கள், முஸ்லீம் தனிச் சட்டம் (Muslim Personal Law) நாடு முழுக்க ஒரே சீராக இருக்கிறதென்றும், நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அதைச் செயலற்றதாக்க முடியாதென்றும் பேசினார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய அம்பேட்கர், 1935 வரை வடமேற்கு எல்லை மாகாணத்தில் முஸ்லீம் தனிச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்துச் சட்டமே நடைமுறையில் இருந்தது என்றும், அங்கு மட்டுமல்ல, மத்திய மாகாணம், ஐக்கிய மாகாணம், மும்பை மாகாணம் ஆகிய மாகாணங்களிலும் வாரிசுரிமை விஷயத்தில் 1935வரை இந்துச் சட்டமே பின்பற்றப்பட்டதென்றும் ஷரியத் சட்டம் அல்ல என்றும் சுட்டிக் காட்டினார். வடக்கு மலபாரில் அமலில் உள்ள மருமக்கள்தாயம் என்ற சட்டம் இந்துக்கள் முஸ்லீம்கள் எல்லோருக்குமானது என்றும் அங்கு முஸ்லீம்கள் மருமக்கள்தாயத்தையே பின்பற்றி வருவதாக கருணாகர மேனன் குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டினார். எனவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்ற கூற்று ஏற்கத்தக்கதல்ல என்றும் சொன்னார். அதை விட அவர் சொன்ன இன்னொரு கருத்து முக்கியமானது. “ ஒருவேளை, அவர்கள் மதம் எதுவாக இருப்பினும், எல்லாக் குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு சிவில் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்திற்குத் தேவைப்படுமெனில், இந்துச் சட்டத்தின் சில பகுதிகள் அதில் சேர்க்கப்படும். அதற்குக் காரணம் அவை இந்துச் சட்டம் என்பதால் அல்ல, அவை மிகப் பொருத்தமானவை என்பதால்” என்றார் அம்பேட்கர்.

இது 1948 நவம்பர் 23ஆம் தேதி.

ஆனால் அதே அம்பேட்கர், அதே அவையில், பத்து நாட்களுக்குப் பிறகு. அதாவது 1948ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி, பேசுகிற போது,”முஸ்லீம் சமூகம் கிளர்ந்தெழும் வகையில் எந்த ஓர் அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாது. அப்படிச் செய்தால் அது ஓர் பைத்தியக்கார அரசாங்கமாகத்தான் இருக்கும்.” என்றார்.

ஹிந்துச் சட்டமுன்படிவு நிறைவேற்றப்பட்டால் அதற்கு நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன்,என்று சொன்ன ராஜேந்திர பிரசாத், 1956-57ல், அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை நான்காகப் பிரித்து நான்கு சட்டங்களாக நாடாளுமன்றம் இயற்றிய போது அதற்கு ஒப்புதல் அளித்தார்

**

ண்மையில் போபாலில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது பிரதமர் மோதி எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே சீரான சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசியிருப்பதால் இப்போது அது குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. அந்த விவாதத்தில் முன்பு, இந்து சட்ட முன்வடிவு விவாதத்தில் கேட்ட அதே வாதங்கள் மீண்டும் ஒலிப்பதைக் கேட்ட போது ஞாபகத்தில் எழுந்த வரலாற்றை மேலே நினைவு கூர்ந்திருக்கிறேன். அதே வாதங்கள், அதே குரல்கள், ஆனால் பாத்திரங்கள்தான் வேறு. ஹிந்து சட்ட முன்வடிவு விவாதத்தில், மதம் மனிதர்களுடைய தனிப்பட்ட விஷயம், அதில் அரசு தலையிடக் கூடாது, பல நூறாண்டு காலமாகப் பின்பற்றப்படும் வழக்கங்களை மாற்றக் கூடாது, இது சட்டமாக இயற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்ற வாதங்கள் இந்து அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டன. அதே வாதங்கள் இப்போது முஸ்லீம் அமைப்புகளால் வைக்கப்படுகின்றன.

வாதங்கள் எதுவாக இருப்பினும் ஒரேசீரான சிவில் சட்டம் நிறைவேற்றப்படுமானால் அது வரவேற்கத் தக்கது. ராஜேந்திர பிரசாத் சொன்னதைப் போல இது மக்கள் முன்னால் தேர்தல் அறிக்கையில் வைத்து அவர்களது ஆணை பெறப்பட்டுள்ளது.பாஜக 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தனது தேர்தல் அறிக்கையில் இதை முன்வைத்துள்ளது. எனவே அது இதை நிறைவேற்றக் கடமைப்பட்டது.

இதன் பின்னுள்ள அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இது பாலின சமத்துவத்திற்கு வழிகோலும் என்ற ஒரு காரணமே இதை வரவேற்க எனக்குப் போதுமானது.

அனேகமாக மதங்கள் எல்லாமும் பெண்களை உயர்வாகப் பேசுகின்றன, ஆனால்  குழந்தை மணம், சதி, பலதார மணம், விதவைகளை அலங்கோலப்படுத்தல், வரதடசிணை, பாரம்பரியச் சொத்தில் பெண்களுக்கு உரிமை மறுப்பு,, முத்தலாக், மணவிலக்கு மறுப்பு, பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்று பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் யாவும் மதங்களின் பெயரால் நடத்தப்பட்டன என்பதும் வரலாறு.  

இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. என்னுடைய தில்லி நண்பர் சொன்னது இது:

பர்வீனுக்கு இரண்டு சகோதரிகள். உடன் பிறந்த சகோதரர் யாரும் இல்லை. அவரது பெற்றோர் பெற்றெடுத்தது மூன்று மகள்களை மட்டுமே. உயில் ஏதும் எழுதி வைக்காமல், அவரது தந்தை இறந்து போனார்.பணத் தேவைகளுக்காகப் பர்வீன் தனது பூர்வீக வீட்டை விற்க ஆனால்  முடியவில்லை. காரணம், அவர் அந்தப் பூர்வீக வீட்டை, அவர் ஆண் வாரிசு இல்லாததால்,  அவரது தந்தையின் சகோதரர்களின் சம்மதம் இல்லாமல் விற்கமுடியாது எனச் இஸ்லாமியச்  சட்டம் கூறுகிறதாம். “அவர் ஆணாகவோ அல்லது வேறு மதத்திலோ பிறந்திருந்தால் அவருக்கு இந்தப் பிரசினை இருந்திருக்காதல்லவா? அவர் எந்த மதத்தில் என்னவாகப் பிறக்க வேண்டும் என்பதை அவரா தீர்மானித்தார்?” என்று நண்பர் கேட்டார். என்னிடம் பதில் இல்லை.

இன்னொரு சம்பவம்: ‘வீட்டை விட்டு வெளியே போ, உனக்கு சொத்தெல்லாம் தரமுடியாது’ எனச் சகோதரர் சொன்னபோது, மேரிக்குத் திகைப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் கணவனை இழந்திருந்த அவர் தனது மகள் அருந்ததி, மகன் லலித் ஆகியோருடன் ஊட்டியிலிருந்த அவரது பூர்விக வீட்டிலிருந்து வெளியேறினார். அப்போது அவர் ஒரு சட்டப் புரடசிக்கு வித்திடப் போகிறோம் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.

கோட்டயத்தில் உள்ள தங்கள் குடும்பத்தின் பூர்வீகச் சொத்தில் தனக்குப் பங்குதர வேண்டும் என அவர் கோரினார். சட்டப்படி கொடுக்க வேண்டியது ஏதும் இல்லை என்றார் அவர் சகோதரர். அவர் சொன்னது சட்டப்படி சரிதான். 1911ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திருவாங்கூர் கிறிஸ்துவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் உயிலெழுதி வைக்காமல் இறந்து போனால், அவரது சொத்து முழுவதும் மகனுக்குரியது. பெண்களுக்கு சீதனம் கொடுத்து விட்டால் அவர்களுக்கு உரிமை கிடையாது. சீதனம் ரூ 5000க்கு மேல் இருக்கக் கூடாது

இந்தச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் மேரி.1986ஆம் ஆண்டு நீதிபதி பகவதி தலைமையிலான அமர்வு திருவாங்கூர் கிறிஸ்துவ வாரிசுரிமைச் சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது.அப்போதும் கூட ஆணும் பெண்ணும் சமம் என அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு சொல்கிறதே, அந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்தியாவுடன் இணைந்த பின்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற தொழில்நுட்பக் காரணத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு அது அளிக்கப்பட்ட முந்தைய காலங்களுக்கும் பொருந்தும் எனச் சொல்லிற்று. அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் இருந்த இந்த அம்சத்தைச் செயலற்றுப் போகும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பி.ஜே. குரியன் ஒரு மசோதா கொண்டு வந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. பின்னர் இதே விஷயத்தை முன்னிறுத்தி கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை. அதை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அங்கு அது தள்ளுபடியானது.

இந்த மேரி ராய்தான் அருந்ததிராயின் தாய். அவரது சட்டப் போராட்டத்தின் காரணமாக கேரள கிறிஸ்துவப் பெண்களுக்கு இருந்த ஒரு தடை தகர்ந்தது.

சாதிகளின் அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்பதில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ அதே நியாயம், மதங்களின் அடிப்படையிலும், பாலினங்களின் அடிப்படையிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதிலும் உண்டு. எல்லாம் சரி, ஆனால் சீரான பொது சிவில் சட்டம் வந்துவிட்டால் மட்டும், மறுநாளே பாலின சமத்துவம் ஏற்பட்டுவிடுமா எனக் கேட்டால், சட்டம் மட்டும் சமூகத்தைத் திருத்திவிட முடியாது என்பதுதான் பதில். ஆனால் சட்டம் நீதி கோர வழி வகுக்கும். அதுவுமில்லையேல் அந்த வாய்ப்புக் கூட இராது.     

19 Sep, 2023

The post கதவைத் திற, காற்று வரட்டும் appeared first on Maalan.

  •