Reading view

என்னுடைய சிறுகதை ஆங்கிலத்தில்

 என்னுடைய "மாடிப்படிகள்" சிறுகதை பேராசிரியர் ப. மங்களம் அவர்களால் நேர்த்தியாக ஆங்கிலமாக்கப்பட்டு Literary and Cultural Disability Studies: A Primer எனும் தொகைநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் என்னுடைய புனைவெழுத்து குறித்த அலசலும் மங்களம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவருக்கு என் நன்றியும் அன்பும்.







  •  

நான் தொலைத்தேன்


இன்னும் விடியாத

கருங்குமென்ற

இருட்டு.

வைகாசி விசாக நாளில்

கோடாகத் துலங்கத் தொடங்கி

தாமிரபரணி

மெலிந்து

குறுக்குத்துறை படித்துறையில் ஓடிக்கொண்டிருந்தாள்.

தங்கச்சிப் பாப்பாவுக்கு

என்னைக் காவலிருக்க வைத்துவிட்டு

பாலுக்கும் காலை டிபனுக்கும்

சில்லறைக் காசுகளை

எனது டிரவுசர் பையில் நிரப்பி

பத்திரமென்று சொல்லி

அம்மா குளிக்கப் போனாள்.

வெள்ளென விடியத் தொடங்க

அவள் இட்ட கட்டளையை

மீறி

கரையில் துணிவிரித்து

படுக்கவைக்கப்பட்டிருந்த

தங்கையை விட்டுவிட்டு

ஆற்றுக்குள் இறங்கித் திளைத்து

டிரவுசரில் உள்ள காசுகளை எல்லாம்

தொலைத்தேன்.

நல்ல நாளன்று பிச்சையெடுக்க

விட்டு விட்டாயே

அம்மா திட்டியபடி

ஆத்திரம் தீர

என்னை வழியெங்கும்

அழ அழ

திருவிழாக் கூட்டத்தினூடாக

வீட்டுக்கு அழைத்துவந்தாள்.

ஆற்றின் அலாதி அழகைப் பார்த்து

என்னை மறந்து

கடமையை மறந்து

அன்று காசுகளைத் தொலைத்தேன்

மந்திராலய பிராகாரத்தின் ஏகாந்த அழகில் லயித்து

என் குட்டிமகளை ஒருநாள் தொலைக்க இருந்தேன்

ஆர்ப்பரித்து மடிந்து பாதங்களில் வந்து விளையாடிய

கடல் அலைகளில் திளைத்து

வீட்டின் சாவியை இன்று தொலைத்தேன்

நடுவே நண்பர்களை

காதலியை மனைவியை தொலைத்து விட்டேன்.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

  •  

ஒரு பழைய நாவல்

ய. மஹாலிங்க சாஸ்திரி எழுதிய நாமொன்று நினைக்க (1950) என்ற நாவல் இணையத்தில் கிடைக்கிறது.

மிஸ்டர் வேதாந்தம் பாணி நாவல். பணக்காரக் குடும்பத்து வாரிசு ராமநாதன். அவன் உயிர் நண்பன் சீதாராமன் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். ராமநாதனின் அப்பாதான் அவனையும் படிக்க வைக்கிறார். ராமநாதனின் மாமாவுக்கு இது பிடிக்கவில்லை. தன் மகளை ராமநாதனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். பல ஜோடிகள், கடைசியில் எல்லாருக்கும் திருமணம் ஆகிறது.

இந்த நாவலைப் படிக்கும்போதுதான் கல்கி, தேவன், லக்ஷ்மி போன்றவர்களின் அருமை புரிகிறது. கட்டுக்கோப்பாக ஒரு தொடர்கதை எழுதுவது கஷ்டம்தான். அதை சாதித்ததால்தான் அன்று இவர்கள் பிரபலமாக இருந்திருக்கிறார்கள். சாஸ்திரியும் முயன்றிருக்கிறார்தான், ஆனால் அவர்கள் தரத்தை எட்ட முடியவில்லை.

இந்தப் பதிவை எழுத நாவலின் ஒரு பாராதான் தூண்டுகோல். ராமநாதனின் மாமா சிவராமன் தன் மகள் செல்லத்தை ராமநாதனுக்கு மணம் முடிக்க விழைகிறார். ஆனால் ராமநாதனுக்கு உஷா மீது காதல். உஷா யார்? அதே சிவராமன் மாமாவின் வைப்பாட்டி மகள், தாசிக்கு பிறந்தவள். இது சிவராமனுக்கு தெரிய வரும்போது அவர் ராமநாதனுக்கு அறிவுரை சொல்கிறார் – நீ உஷாவை மணந்து கொள்ள விரும்புகிறாயே, வீட்டில் டிபன் சரியில்லை என்றால் கிளப்புக்கு போகலாம், ஆனால் வீடு என்று ஒன்று இருக்க வேண்டும், எனக்கு முறையாகப் பிறந்த பெண் செல்லத்தையே மணந்துகொள், செல்லம் வேண்டாமென்றால் வேறு “நல்ல குலப்பெண்ணாக” மணந்து கொள் என்கிறார்! விழுமியங்கள் எத்தனை மாறி இருக்கின்றன!

சாஸ்திரி எழுதிய டூவா சேர்த்தியா என்ற எளிய கதை புன்னகை வர வைக்கிறது.  ஒப்பந்தக் கல்யாணம் (1945) என்ற சிறுகதையும் இணையத்தில் கிடைக்கிறது.

சாஸ்திரி சமஸ்கிருத அறிஞர். தி.ஜா. இவர் போன்ற திறமைசாலி அபூர்வம் என்கிறாராம்.

முப்பது நாற்பதுகளுக்கான வணிக எழுத்து என்று மதிப்பிடுகிறேன். இந்த நாவலே கூட கலைமகளில் நாற்பதுகளில் தொடர்கதையாக வந்ததுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

விட்டோரியோ ஸ்டோராரோ : ஒளியின் ஞானம்.

உலகப் புகழ்பெற்ற சினிமா ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோ தனது திரையுலக அனுபவத்தையும் ஒளி பற்றிய ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான உரை. ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை ஈடுபாடுகள், காட்சிகளை உருவாக்குவதில் வெளிப்படும் உன்னத கலையாற்றல் பற்றி விவரிக்கிறார்.

இளம் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி.

இதில் ஸ்டோராரோ இருளுக்கும் ஒளிக்குமான தொடர்பை, உணர்ச்சிகளுக்கும் வண்ணங்களுக்குமான தொடர்பை மிக அழகாக விவரிக்கிறார். பிளேட்டோவின் ஞானம் மற்றும் காரவாஜியோ ஒவியங்களிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைச்  சொல்கிறார். அவரது புகழ்பெற்ற திரைப்படங்களான தி கன்ஃபார்மிஸ்ட் தி லாஸ்ட் எம்பரர், ரெட்ஸ் அபோகாலிப்ஸ் நவ் படங்களின் ஒளிப்பதிவு குறித்தும் சிறப்பாக விவரிக்கிறார்.

  •  

266. BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 14

ரஷ்யா. இன்றைய உலகின் மிகப்பெரிய நாடு. உடையாமல் சோவியத் ஒன்றியமாக இருந்தபோது இன்னும் மிகப்பெரிய நாடு. உலக வரைபடத்தை நீளவாக்கில் வைத்து 24 துண்டுகளாக வெட்டினால், ஒவ்வொரு துண்டையும் கடக்க சூரியன் ஒருமணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஆங்கிலத்தில் Time zone என்று பெயர். இந்தியாவைச் சூரியன் கடந்துபோக 2 மணிநேரத்திற்கு மேலாகும். ரஷ்யாவைக் கடக்க 11 மணிநேரமாகும்! அதாவது ரஷ்யாவின் கீழைக் கடைசி குடிமகன் இரவு தூங்கப் போனால், மேலைக் கடைசி குடிமகன் காலையில் அப்போதுதான் கண்விழிப்பான். ஆசியா ஐரோப்பா என இரு கண்டங்களில் பரவிய பெரிய நாடு. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து கஜகஸ்தான் நாட்டு எல்லைவரை செங்குத்தாக நீளும் உரல் (Ural) என்ற மலைத்தொடர் உண்டு. அதுதான் இவ்விரு கண்டங்களுக்கான வரப்பு. மேற்கே ஐரோப்பிய ரஷ்யா, கிழக்கே ஆசிய ரஷ்யா. சிந்து நதிக்கு அப்பால் உள்ளதெல்லாம் இந்தியா எனவும், சிரியாவுக்குத் தெற்கே இருப்பதெல்லாம் பாலஸ்தீனம் எனவும் அன்றைய உலகம் பெயரிட்டது போல, ரஷ்யா என்றால் பொதுவாக ஐரோப்பிய ரஷ்யா தான். ஆசிய ரஷ்யாவிற்குத் தனியே ஒரு குணமுண்டு, அதற்குச் சைபீரியா என்றொரு பெயருண்டு.

ஐரோப்பிய மாஸ்கோ நகரில் இருந்து, ஆசிய பசிபிக் கடற்கரை நகரான விளாடிவாஸ்டாக் வரை இரயிலால் இணைக்க அன்றைய ஜார் மன்னர்கள் ஓர் இரயில்பாதை திட்டம் கொண்டுவந்தார்கள். 9289 கிமீ. 8 time zones. அதாவது சூரியன் கடக்கவே 8 மணிநேரமாகும். மனிதன் இரயிலில் கடக்க இன்றைக்கு 8 நாட்களாகும். 26 ஆண்டுகள் கட்டினார்கள். கட்டி முடித்தபின் ரஷ்யப்புரட்சி வந்தது. உலகப்போரும் ஜார் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தன. பெரும்பாலும் சைபீரியாவின் குறுக்கே செல்வதால் Trans-Siberian railway என்று பெயர். இன்றுவரை மிகநீளமான இரயில்தடம் இதுதான். ஒரே இரயிலில் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய, உலகின் மூன்றாவது நீண்ட பயணமும் இதுதான். ஒருகாலத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் முதல் விளாடிவாஸ்டாக் வரை ஓடிய இரயில் பயணம்தான் உலகின் மிக நீண்டது. மாஸ்கோ முதல் வடகொரியா தலைநகர் பியொங்யாங் வரை ஓடும் இரயில்தான் இரண்டாவது இடம். இவை இரண்டும் Trans-Siberian railway வழியேதான் போகின்றன. உலகில் மிக நீண்ட தூரம் போகும் இரயில்கள் எல்லாமே Trans-Siberian railway ஒட்டியவை.

Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து மங்கோலியா நாடு முழுவதும் ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Mongolian என்று பெயர். Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து சீனாவின் ஊடே ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Manchurian என்று பெயர். எனவேதான் உலகப்பயணிகளின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிறது Trans-Siberian railway! பயணிகள் கவனத்திற்கு, கன்னியாகுமரி முதல் திப்ருஹர் வரை ஓடும் விவேக் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட இரயில் பயணம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway
ஆசிரியர்: Emma Fick
வெளியீடு: Harper Design
பக்கங்கள்: 236
—————————————————————————————————————————————————————————————————————————
நானும் ஓர் உலகப்பயணி என்பதால் Trans-Siberian railway பயணம் பற்றி புத்தகங்கள் தேடினேன். BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway. ஆசிரியர் Emma Fick. பீஜிங் முதல் மாஸ்கோ வரை Trans-Mongolianல் 26 நாட்கள் ஆசிரியர் பயணித்த கதைதான் இப்புத்தகம். பயணம் என்ற பெயரில் இன்று யூடியூபில் காணொளிகளாக வெறும் குப்பைகள். யூடியூப்பில் கம்போடியா / உஸ்பெகிஸ்தான் நாடுகளை விளக்கும் விதத்தில் நான் குப்பைகளை எளிதில் கண்டுபிடித்துவிடுவேன். இப்புத்தகம் அமைக்கப்பட்ட விதத்தில் ஈர்க்கப்பட்டு எடுத்துவந்து விட்டேன். பயணத்தின் போது, டைரியில் குறிப்புகள் எடுப்பது போல, முழுக்க முழுக்க கையால் வரையப்பட்ட படங்களாலும், கையால் எழுதி விளக்குவது போலவும் எழுதப்பட்ட புத்தகம் இது. சில பக்கங்கள் படிக்கவே தேவையில்லை, பக்கத்தில் உள்ள படங்களைப் பார்த்தாலே போதும். படங்களே பெரும்பாலான பயணத்தின் கதையைச் சொல்கின்றன.


(www.amazon.com)

நிறைய குறிப்புகள் எடுத்திருக்கிறேன். சீன எல்லையில் தண்டவாள அகலம் மாறும்போது, இரயிலையே தூக்கி சக்கரங்களை மாற்றும் விசித்திரம் படித்தேன். பழைய பாஸ்போர்ட்டில் விசா இருந்தால் அனுமதிக்காத உலகின் மிகமிக சில நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்குள் ஆசிரியர் அனுமதிக்கப்படாமல், மீண்டும் மங்கோலியா திரும்பி புது பாஸ்போர்ட்டில் விசா வாங்கி பயணித்த கதையை மறக்கமாட்டேன். பெண்கள்தான் செயற்கரியன செய்து சமகாலத்தில் என்னை வியப்பூட்டுகிறார்கள். இதே தளத்தில் மோனிஷா ராஜேஷ், பமீலா வாட்சன், Emma Fick. நீங்களும் படியுங்கள். கலாச்சாரக் காவலர்கள் பண்பாட்டை அழித்தொழித்து தடயங்களை மாற்றி வைக்கும்முன் முதலில் இந்தியாவைச் சுற்றுங்கள், கூடவே உலகையும் சுற்றுங்கள். முதலில் கூரை ஏறி கோழி பிடியுங்கள், பிறகு வானம் ஏறி வைகுண்டம் போகலாம்!

அனுபந்தம்:
—————-
இரயில் பயணங்கள் பற்றி அடுத்து எழுத எந்தப் புத்தகம் வாய்ப்பு தருமென தெரியவில்லை. அதுவரை எனது சுயபெருமைகள் கேளுங்கள்:

  1. இந்தியாவை 7 நாட்கள் எங்கும் தங்காமல் இரவில் இரயிலில் பயணித்து, பகலில் ஊர்சுற்றி இருக்கிறேன். இரண்டு முறைகள்.
  2. தாய்லாந்து நாட்டின் ஒருகிளை தவிர மற்ற எல்லாவற்றிலும் இரயிலேயே பயணித்து 9 நாட்கள் சுற்றி இருக்கிறேன்.
  3. வியட்நாம் நாட்டை வடக்கில் இருந்து தெற்காக மொத்தமாக இரயிலேயே பயணித்து 11 நாட்கள் சுற்றியிருக்கிறேன்.
  4. இந்தோனேசியாவின் ஜாவா தீவைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.
  5. உஸ்பெகிஸ்தான் நாடும் இரயில் பயணம் தான்.
  6. உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு இரயிலேயே 18 மணிநேரம் எல்லை கடந்திருக்கிறேன்.
  7. தைவான் நாட்டைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.

    இந்தியாவையும் ரஷ்யாவையும் சேர்த்து அடுத்து இரயிலில் பயணிக்க இப்போது எனது குறிப்புகளில் 9 நாடுகள் உள! வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

  •  

என் சாக்லேட் புராணம்

என் சிறு வயது முதல் அப்பா துபாயில் வசித்து வருகிறர். ஒவ்வொரு ஆண்டும் அவர் விடுமுறைக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன். இது என் திருமணம் வரை தொடர்ந்தது. ஒன்றரை வருடங்கள் கூட அப்பாவைப் பார்க்காமலிருந்த காலமும் உண்டு. என்னால் தாள முடியாத ஏக்கம் அது. அப்பா துபாயிலிருந்து வந்துவிட்டால் போதும். நான் இளவரசி ஆகிவிடுவேன். என் நாள்கள் சொர்க்கமாகிவிடும். ஒரு வருடத்திற்கான சாக்லேட்டை ஓரிரு மாதத்தில் சாப்பிட்டு முடிப்பேன். அப்பாவின் அருகாமை தந்த மகிழ்ச்சியோடு பின்னிப் பிணைந்ததுதான் சாக்லேட்டும் பொம்மையும். திருமணம் முடிந்து, அப்பா அருகில் இருப்பேன் என்ற எண்ணமும், சம்மதம் சொன்னதற்குக் காரணம். சாக்லேட்டும் பொம்மைகளும் எப்போதும் எந்த வயதிலும் என் மனத்திற்கு நெருக்கமாகவே இருக்கும்.

என்னைத் தெரிந்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் தெரியும். இனிப்பு என்றால் எனக்கு, டார்க் லிண்ட் சாக்லேட் மட்டும் தான். வேறு எந்தச் சுவையும் பிடிக்காது. பெரிய ஸைஸ், சின்ன சைஸ் எதுவாக இருந்தாலும் சில மணி நேரங்கள் போதும். முடித்து விடுவேன்.

இரண்டு நாள்களுக்கு முன், ஆன்லைனில் ஆர்டர் செய்யத் தேடிய போது, லிண்ட் பெரிய ஸைஸ் மட்டும் இருந்தது. வேண்டாம் சின்னதாக வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். கண்ணில் அதைவிட பாதி விலையிலும் பாதி அளவிலும் இருந்த ஒரு சாக்கோட்டை ஆர்டர் செய்தேன். அந்த டப்பாவிற்குள் இரண்டு சாக்லேட் உருண்டைகள் இருந்தன. லிண்டை மனம் நிரம்ப சாப்பிட்டு முடித்தவளுக்கு, இந்த இரண்டு உருண்டைகள் எம்மாத்திரம். ஏமாற்றமாக இருந்தது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாயில் போட்டேன். இனிப்புச் சுவை, கசப்புக்குக் கீழ் மிதமான அளவில் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தேன். நாக்கில் முதலில் கசப்பு பட்டது, அது நாக்கின் சுவை மொட்டுகளில் முழுதாக பரவுவதற்குள், கொஞ்சம் இனிப்பும் சேர்ந்து கொண்டது. ஒன்றைச் சாப்பிட்டு முடிக்கவே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். மனம் நிறைந்தது. இன்னொரு சாக்லேட்டை சாப்பிட அவசியம இல்லாமல் போனது. நேற்று சாரா எனக்காக லிண்ட் வாங்கி வந்தாள். சிறு துண்டை எடுத்து வாயிலிட்டேன். அதீத இனிப்பாக இருந்தது. சாராவிடமே கொடுத்துவிட்டேன். இனி லிண்ட் சாப்பிடுவேனா என்று சந்தேகம் தான்.

The post என் சாக்லேட் புராணம் appeared first on Naseema Razak.

  •  

சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்

Pa Raghavan

தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், “இனி சொல்ல ஒன்றுமில்லை” என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.

முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.

வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.

முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் மட்டுமே இலக்கியங்கள் என்றிருந்த நிலையை எப்படி பாரதி எளிய வடிவில் இலகுவாக மக்களை நோக்கித் திருப்பினானோ அது போல தேவர்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டுமே இருந்த வேதங்களை கடந்து மக்களுக்காக, அவர்களின் அன்றாடங்களுக்காக உருவான மந்திரங்களைக் கொண்டது அதர்வண வேதம்.

திரிவேதங்கள் என்று சொல்லி முதல் மூன்று போதுமென ஒரு கூட்டம் முயன்றும் அதர்வணத்தை மக்களிடமிருந்து அவர்களால் பிரிக்க முடியாமல் போகவே வேறு வழியின்று சதுர்வேதங்களாக்கினர் என்றொரு கருத்துமுண்டு.
மன்னர்களுக்கான யாகங்கள், வழிபாடுகள் பற்றிய முதல் மூன்று வேதங்களால் மக்களுக்கென்ன பயன்? மாறாக அதர்வணத்தில் அனைத்தும் மக்களுக்கே!

வாழ்வியல் சடங்குகளுக்கான மந்திரங்கள்
நோய்கள் நீங்கும் மந்திரங்கள்
வளமும் பசுமையும் பெற வேண்டிய மந்திரங்கள்
தினசரி வாழ்வின் பயன்படும் வழிபாட்டு முறைகள்
இவை அனைத்தும் நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவை.

அதுவும் மட்டும் இல்லாமல், ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறை கூட அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகவே சொல்லப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த நம்பிக்கைகளுக்கு பழக்கங்களுக்கெதிராக நிகழ்ந்த கலகமாகவே அதர்வண வேதம் பார்க்கப்படுகிறது.
இன்னொரு விசயம், மற்ற வேதங்களைப் போல் பல நூறு ரிஷிகளால் அல்லாமல் பெரும்பாலும் ஒரே நபரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே அதர்வன் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அடுத்து இதில் அதிகம் பங்களித்தவர் அங்கீரச மகரிஷி.

இது போன்ற தகவல்களெல்லாம் கடவுளைத் தேடி “சாத்தானின் கடவுளுக்காக” பயனித்திருக்கையில் பாராவுக்கு கிடைத்திருக்கும். மேலும் உண்மையில் வேத வரிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கும் நடைமுறையிலிருப்பதற்குமான வேறுபாட்டின் அழுத்தமே அவரை சலத்தை எழுத வைத்திருக்கும் என அவதானிக்கிறேன் அது பிழையாகவும் இருக்கலாம்.

ஆதி, அந்தம் அறியாத அதர்வனைக் குறித்து பாரா உண்டாக்கியிருக்கும் சித்திரம் பிடித்திருந்தது. குறிப்பாக அவனது உயரம், எப்போதும் மூடியிருக்கும் ஒற்றைக்கண், மௌனத்தை ஆயுதமாக கையாலும் லாவகம். புரிந்துக் கொள்ளாதவர்களிடம் எதற்காக பேசிக் கொண்டு!

சாரன் – அது நாம்தான், கிட்டத்தட்ட வாசகனை பாத்திரமாக களமிறக்கியிருக்கிறார். ஏதுமறியாது ராஜனின் ஆணைக்கினங்க சர்சுதி கரையோரமாக மாறிமாறி ஒவ்வொரிடமும் கதைக் கேட்டு நடப்பது சாட்சாத் நாமேதான்.

கதிரவன் ரத்தினவேல்

(உனக்கு எப்படி Naruto பற்றி இவ்வளவெ தெரிந்திருக்கிறது என்ற கேள்விக்கு நான் அங்கே இருந்தேனே என்று அத்தொடரின் முக்கிய காட்சியில் பார்வையாளர் இடத்தில் வெகுஜனத்தில் ஒருவனை போட்டோஷாப் மூலம் அமர்த்தியிருக்கும் மீம் ஒன்று அனிமி வட்டத்தில் பிரபலமானது. அதனை சலத்திற்கும் பொருத்தலாம். நானும் நூறு நாளும் அந்த ஆத்தோரமாதாங்க நடந்துட்டுருந்தேன், என்னை பாக்கலையா நீங்க!?)

குத்சன் – சூத்திர முனி – மூட முனியென்பதே பொருந்தும். கர்ணனைப் போல் வாழ்வில் அனைத்து இடங்களிலும் தவறிழைத்து வஞ்சிக்கப்படுபவனாகத்தான் தெரிந்தான். உணர்ச்சியை மட்டும் வென்றிருந்தால் எங்கோ சென்றிருப்பான். சாரன் இவன் குறித்து அதர்வனிடம் சொல்லும் ஓரிடம் வரும். “அவனுக்கு மட்டும் நீ கற்பித்திருந்தால் உன் சொல் ஒன்று கூட இவ்வுலகில் மறையாதபடிக்கு செய்திருப்பானவன்”

மாறி மாறி நேசிக்கும் வேண்டப்பட்ட விரோதிகள். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடையேதான் எவ்வளவு தூரம்.

ஆரியவர்த்தம் ஓரளவு கங்கைக்கரையில் அமைந்து விட்ட காலகட்டம். ஆரியர்களுக்கும் பூர்வகுடிகளுக்கும் ஒப்பந்தம் ஏதுமில்லா அமைதிக்காலம். அப்போது ஒரு தேசத்தில் இருந்து தனது ராஜனின் ஆணைக்கினங்க ஒரு மகரிஷியைக் கொல்வதற்காக செல்லும் சாரனிடமிருந்து கதை துவங்குகிறது. அவன் நோக்கம் நிறைவேறுவதுடன் கதை நிறைவுறுகிறது என்று மட்டும் சொன்னால் அதைவிட பித்தலாட்டம் வேறேதுமில்லை. ஆனால் அதுதான் கதைச்சுருக்கம்.

செல்லும் சாரன் யார்,
கொல்லப்பட வேண்டிய ரிஷி யார்,
ஏன் கொல்லப்பட வேண்டும்?
எதற்கு இவனுக்கு இந்த பணி வந்து சேர்கிறது?
வழியில் இவன் காண்பவர்கள்,
அவ்வனுபவங்கள்,
அக்காலகட்டத்தில் தேசத்தில் மக்களின் நிலை,
அவர்களது வாழ்க்கை முறை,
வழிபாடுகள்,
வர்ணமுறை,
யுத்தம்,
மாயம்,
பைசாசங்கள்,
தேவதைகள்,
தெய்வங்கள்,
கந்தர்வன்,
அனைத்திற்கும் மேலாக கூடவே வரும் சர்சுதி.

இதெல்லாம் கூட சரி, நான் முற்றிலும் எதிர்பாராதது காலப்பயணம். Time traveler’s wife எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதை நினைவூட்டும்படி ஓரிடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததை நான் எப்படி அறிந்திருப்பேன்?

சரி, ஆனால் நான் தான் இன்னும் பிறக்கவேயில்லையே? பிறக்காதவர் எப்படி அவ்வபோது அதர்வணுடன் இருந்தீர்கள்?

இறந்த பின்னும் எப்படி என்னுடன் அதர்வண் இருக்கப் போகிறானோ அப்படி!

குத்சன் பாத்திரம் தனி, அவனது வாழ்க்கையை, உணர்ச்சிகளை பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். எப்போதும் முதலில் அவன் பக்கமே நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் நியாயம் வேறு தர்மம் வேறு என்பது பின்னால்தான் புரியும்.

ரிதமென்றால் என்ன என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரிந்தும் புரியாமலே வந்துக் கொண்டிருக்கையில் அந்த யானைக் கொலையையொட்டிய மறுபிறப்பில் அனைத்தும் தெளிந்து விடும். எதை மாற்ற முடியாததோ அதுவே ரிதம்.

பல மாயாஜாலக் காட்சிகள் குத்சனையோட்டியே நிகழ்கின்றன. வாசிப்பில் சில நேரம் கற்பனைக்கு சவால்விடும் காட்சிகள் நிகழும். விஷ்ணுபுரத்தில் இறுதியில் நிகழும் ஊழிக்கூத்தினைப் போல. அஹிர்புத்தன்யன் என்றொரு தெய்வத்தை எங்குக் கண்டடைந்தாரோ! ஆனால் போகிறபோக்கில் சொல்லியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் தேடினேன்.

மாபெரும் சமுத்திரத்திலிருந்து நீரினையே உடலாகக் கொண்டு சர்ப்பமாக அஹிர்புத்தன்யன் எழுவதாகக் கண்ட கற்பனையை சாமான்யன் கண்டிருந்தால் கோவில் கட்டக் கிளம்பியிருப்பான். சர்சுதியோடு இணைக்கும்படியான தெய்வத்தைக் கொண்டுவந்ததெல்லாம் தரமான செய்கை. நீரே தெய்வமாகி!

ஆனால் நான் எதிர்பார்த்திருந்தது மக்களின் வாழ்வியல்கள் பேசும் அதிக அத்தியாயங்களை! ஊருக்கு வெளியே ஆசிரமமென்று போனதால் எனக்கு ஏமாற்றமே! என்ன செய்வது? ஜனத்திரள் இல்லாமல் சாகசங்கள் இராது, அதை எதிர்பார்க்காமல் வாசிப்பது எனக்கு சிரமமே!

இத்தனை நூறு பக்கங்களையும் வாசிக்க வைப்பதற்கான பாராட்டு, கதையைக் காட்டிலும் எழுத்து நடைக்கே சென்றடைய வேண்டும். இத்தனை எளிமையாக இல்லாவிட்டால் இவ்வளவு பக்கங்கள் வாசிக்க இயலாது.

முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரிகளை நான் மிகவும் இரசித்தேன்.

நான் சாரன், நான் அதர்வன், நான் குத்சன்

இவ்வரிகள் வருகையில் இனம்புரியாத உவகைக்குள்ளாவேன். அதை மட்டும் மனதிற்குள் base voice ல் சொல்லிக் கொள்வேன்.

சலம் ஒரு தொடக்கம்தான். பாரா தொட்டிருக்கும் களத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினால் பற்பல சர்ச்சைகளையும் ஏன் கலவரங்களையுமே காண நேரிடலாம்.

சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.

அக்கால கட்டத்தைய மக்களது வாழ்வியல் குறித்து பல தகவல்கள் பேசப்பட்டுள்ளன. நான் அவற்றைக் குறிப்பெடுத்து வைக்காததால் விரிவாக பேச முடியவில்லை. வேறு யாரேனும் பேசக்கூடும் என்று நம்புகிறேன். குறிப்பாக என்னென்ன வகையான உணவுகள்! அதிதியாக சாரன் தங்கியிருக்கையில் கவனிப்பாக பரிமாறப்படும் உணவுகளை மட்டும் குறித்து வைத்து கற்பனை செய்துப் பார்த்தேன்.
புதினத்திற்கு புதிய களம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல் வாசித்தால் புது அனுபவம் கிட்டும்.

சலம் – நாவல் வாங்க இங்கே செல்க.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

கொடிரோஸ் – கிரிசாந்:

ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும்  தொகுக்கப்பட்டுள்ளன.  ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய குறுநாவல்.

ஈழத்தில் இருந்து போரை மையப்படுத்தாது, உணர்வை மையப்படுத்தும் மற்றுமொரு நூல்.  சுகந்தன் என்னும் பதினோரு சிறுவனின் பார்வையில் நகரும் நாவல்

பதினைந்தாவது வயதில் சுகந்தனின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதலுடன் தன்னை நிறைவு செய்து கொள்கிறது. கொடிரோஸ் யார்? சுகந்தனின் அம்மா.

காதல், காமம், வன்முறை, உயிர்கள் பலி,  அதிர்ச்சித் திருப்பம் என்று எதுவுமேயில்லாத சுகந்தனின் Mundane

வாழ்க்கையில், நாவலின் இறுதிப்பகுதியைத் தவிர்த்து,  அப்பாவிடம் உடலெல்லாம் புண்ணாகும்படி அடி வாங்குதல், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளுதல்,  உடன் பயிலும் ஆண்பெண் நண்பர் காண, தேங்காய் பொறுக்குதல், மிக்சர் விற்றல்,  அப்பாவின் பிணைக்கடனுக்கு அம்மாவை தூஷணம் பேசியவனைக் கற்பனையில் கத்தியல் குத்துதல் போன்றவையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்.

இழப்பு நிச்சயம் என்று தெரியும் போது பிடிப்பு அதிகமாதல் இயல்பு.  அது நாவலில் நன்கு வந்திருக்கிறது.  கிரிசாந்தின் மொழி புனைவுக்கு ஏதுவாகக் குழைந்து விரைகிறது.  யாழ்ப்பாணக்குடும்ப வாழ்வியல் அதற்கான மொழியுடன் அழகாகப் பதிவாகி இருக்கிறது.  எல்லாவற்றையும் விட முக்கியமாக புலிகள் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை விட்டு நகர்ந்து உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளாக, வேல்விழி, தில்லை இவர்களைத் தொடர்ந்து கிரிசாந்தும் அந்த வரிசையில் இணைகிறார்.

பிரதிக்கு:

ஆக்காட்டி 33 6 52 53 75 84

முதல்பதிப்பு ஏப்ரல் 2025

விலை 1000 இலங்கை ரூபாய்கள்.

  •  

தமயந்தி

தமயந்தி எழுதிய அனல்மின்மனங்கள் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. எஸ்தர் சிறுகதையை திருப்பிப் போட்ட மாதிரி இருக்கும். கிழவியை என்ன செய்வது என்ற அதே கருதான். மகனுக்கும் வேண்டாம், மகளுக்கும் வேண்டாம். கடைசியில் மகன் அவளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய்விடுகிறான். குரூரம் எத்தனை சிறப்பாக வந்திருக்கிறது? குறும்படமாகவும் வந்ததாம். (கழுவேற்றம்) இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணமே அந்தச் சிறுகதைதான். இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா?

அவரது சிறுகதைகள் பல விகடனில் எழுதப்பட்டிருக்கின்றன. என் கண்ணில் அவர் முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறவில்லை, ஆனால் அவர் இலக்கியம்தான் படைக்க முயல்கிறார்.

பிரபஞ்சன் “தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறாராம்.

அவரது சில சிறுகதைகள் சிறுகதைகள் தளத்தில் கிடைக்கின்றன. அவற்றில் அலர் நல்ல சிறுகதை, அம்பையை சில விதங்களில் நினைவுபடுத்தியது. ஜோதி பேசுவதைப் படிக்கும்போது சும்மா பூந்து விளாசும்மா என்று தோன்ற வைத்தது. பொதுவாகவே அவரது கதைகளில் கொஞ்சம் தைரியமான பெண்ணின், அடங்கிப் போகாத பெண்ணின் சித்தரிப்பு வரும்போது பிடிக்கிறது. உதாரணமாக காற்றில் பரவும் கதைகள் படிக்கலாம் ரகம்தான், ஆனால் நாயகியின் சித்தரிப்பு பிடித்திருந்தது. நூலிழை இறகுகள் கதையில் காட்டப்படும் ஆண்-பெண் ஈர்ப்பு, கைகூடாமல் போவது எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரு கனவும் பாதி ஃபலூடாவும் இளமைக்கால ஏக்கங்களை நன்றாக விவரிக்கிறது. ஆனால் இவற்றில் ஏதோ நல்ல கூறுகள் இருக்கின்றனவே தவிர படித்தே ஆக வேண்டியவை என்று வகைப்படுத்தமாட்டேன்.

ஆனால் நான் படித்த இலுப்பைப்பூ ரகசியம், ஜன்னல், வாக்குமூலம், யானைக்கனவு, முள்வீடு, தனிமையின் வாசனை, கோட்டை காவல் நிலையம், தேனும் ஒரு கொயர் கோல நோட்டும், பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும், பீஃப் பிரியாணி, மாஹித் ஹிப்சன், 36 பெருமாள்புரம் எல்லாவற்றையும் சுமார் என்றுதான் தரப்படுத்துகிறேன்.

தமயந்தி இலக்கியம்தான் படைக்க முயல்கிறார், ஆனால் அனல்மின்மனங்கள் சிறுகதை மட்டும்தான் என் கண்ணில் தவறவிடக் கூடாத சிறுகதை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

ஓர் இரவு


அகங்கை கொண்டு மூணுபிடி

புறங்கை கொண்டு மூணுபிடி

அருணாசலத்தாச்சி பாடத் தொடங்க

காவேரிப் பெரியம்மாவின் மடியில்

உறங்கிக்கொண்டிருந்த நான் திடுமென்று விழித்தேன்.

கண் திறந்துபார்த்தால்

கண் அவிந்துபோய்விடுமென்று

சொல்லித்தான்

அம்மா அங்கே அழைத்துவந்து படுக்க வைத்திருந்தாள்.

அப்பாவோ இரவுப்பணிக்குப் போயிருந்தார்.

மார்புக்குக் குறுக்காக

சேலை ஒன்றை மட்டுமே சுற்றி

கூடத்தில் அலையும்

எங்கள் வளவு வீடுகளைச் சேர்ந்த

அத்தைகள்.

அம்மா பின்கட்டிலிருந்து

குளித்த தலையுடன்

பாவாடையை மேலேற்றிக் கட்டிக்கொண்டு

நுழைந்தாள்.

சில்வர் பாத்திரத்தில்

வெள்ளைக் கொழுக்கட்டைகள்

குழு குழுவாக அமர்ந்திருந்த பெண்களால்

உருவங்களாகத் தட்டி உருட்டி

அடுக்கப்பட்டன.

நோஞ்சலான

கிழவிகள்

கிழவர்கள்

கை கால்

மண்டையோடு

பாடை

அகல் விளக்கு

எனக்குத் தெரிந்த உருவங்கள்

தெரியாத உருவங்களும்

கொழுக்கட்டைகளாக

அவரவர் சட்டிகளில் விழுந்துகொண்டிருந்தன.

சூடன், சாம்பிராணி

புகையில்

பளீர் குழல் விளக்கு வெளிச்சத்தில்

ஆவிகளாய்

என் அம்மாவும்

அத்தைகளும்

மறைந்து இருந்து

உருக்கள்

மாறித் தோன்றிய

அந்த ஔவையார் நோன்பு

நடுநிசியை

நிஜம்தானென்று

இன்று ருசுப்படுத்த

அருணாசலத்தாச்சி இல்லை

அம்மாவோ போய்விட்டாள்

தெய்வானை அத்தையையோ

அம்மாகுட்டி அத்தையையோ

இனி தேடிப் போகவும் இயலாது

எனக்கோ கண்கள் கூர்மையாகிக் கொண்டே வருகின்றன.

  •  

கல் ஆந்தை



மகா கருணை

மகா அமைதி

மகா பரிவு

பங்களா வீட்டின் மேல்மாடத்தில்

புத்தராய் மாறி வெறிக்கும்

கல் ஆந்தை.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

  •  

நான்ஸி


ஒருகை குறைய

துரியோத்தின் இளம் மனைவி நான்ஸி

முதல்முறையாக அவன் நண்பர்களுடன்

ரம்மி ஆட அமர்கிறாள்

இதுவரை கேட்காத உற்சாகச் சிரிப்பொலிகளை

மூன்று மாதங்களில் இடிக்கப்படவுள்ள

பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு

கேட்கத் தொடங்குகிறது.

ராஜா ராணி அதிகம் சேர்ந்தாலும் தரித்திரம்தான்

திவாகர் உதடு பிதுக்குகிறான்.

ஜோக்கர் இருப்பவன் இல்லாதவன்

இரண்டு பேர் முகத்திலும் வித்தியாசமே காணமுடிவதில்லை

நள்ளிரவிலும் புழக்கமற்ற பால்கனிகளில் தங்கியிருக்கும்

புறாக்களின் முனகல் நிற்பதில்லை

சலிக்கிறான் துரியோத்.

ஒழுங்கா அடுக்கத் தெரியாதவனும்

நான்காவது ரவுண்டிலேயே ரம்மியில் ஜெயிக்கிறான்

ரம்மியைப் பொறுத்தவரை உள்ளேயும்

வெளியேயும்

ஜோக்கர்கள் கண்ணுக்குப் புலப்படாமல்

கைமாறுகிறார்கள்

சீட்டுகளை நெஞ்சோடு மறைத்து

சிரத்தையோடு விளையாடுபவனும்

ஜெயிக்கிறான்

எல்லாரும் பார்க்க

சீட்டுகளை முறையற்று விரித்து விளையாடுபவனும்

ஜெயிக்கிறான்

பரஸ்பர நிதி ஆலோசகன் தர்மராஜின் ஆரூடம்.

ஜோக்கராகவே இருந்தாலும்

தேவையில்லாத நேரத்தில்

கூடுதலாக ஏறக்கூடாது

ராஜாவும் ராணியும் அமைச்சரும்

படம்கொண்ட பாம்புகள்

ஜோக்கரோ சீட்டின் எல்லையைத் தாண்டி நெளிபவன்

புறாக்கள் தங்கத் தொடங்கும் கட்டிடங்களில்

பூனைகள் விபரீதமான

காரியங்களைச் செய்யத் தொடங்குகின்றன

சமையலறைகளுக்குள்

கடிபட்ட தலைகளை

பட்டுவாடா செய்துவிடுகின்றன.

டிக் என்று சொல்லி

யாரும் எதிர்பாராத வேளையில்

உபரிச் சீட்டை இறக்கி

ஆட்டத்தைப் பெருமிதத்துடன்

முடித்தாள்

நான்ஸி.

சபாஷ் என்று நான்ஸி தொடையில்

தட்டுகிறான்

அருகில் விளையாடிக்கொண்டிருந்த

அம்பலவாண தேசிகன்.

அஸ்தினாபுரம் என்ற பெயர் கொண்ட

அந்தப் பழைய குடியிருப்பு வீடு

இன்னொரு நிசப்தத்தை விழுங்கியது.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

  •  

மிஷிமாவின் சௌந்தர்ய கிளிகள்

ராஜஸ்தானின் பளீர் வெயில், நடுமுற்றத்தில் பட்டு ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட ஜோத்பூரின் தங்கும் விடுதி அது. வெளிநாட்டு ஓரினப் பாலுறவாளர்கள் தேடித் தங்கும் அந்த விடுதியின் உணவுக்கூட மூலை அலமாரியில்தான், யாரோ விட்டுச்சென்ற, யூகியோ மிஷிமாவின் ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவலைப் பார்த்தேன். சாமுராய்களின் உடல் வலிமை, வீரம், ஆண்தன்மை மீது குழந்தைப் பருவத்திலிருந்தே கதாநாயகனுக்கு கவர்ச்சி தொடங்கி அதுதொடர்பிலான குழப்பம், பயம், இரட்டைத் தன்மை, அதை மறைப்பதற்கான பாவனை எல்லாம் அலைக்கழிக்க, ஒரு யுவதியின் காதலையும் வலியுடன் கடக்கும் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தேன். ஊர்திரும்பிக் கொண்டிருந்த ரயில், சூரிய காந்தி வயல்களினூடாக கர்நாடக மாநிலத்தில் எங்கோ ஒரு பிரதேசத்தில் விரைந்துகொண்டிருந்தது. மிஷிமா கொடுத்த பெருமூச்சுடன், மழைக்காக மூடியிருந்த ஜன்னலைத் திறந்து வெளியை வெறித்தபோது சரட்டென்று கிளிகள் சூரியகாந்தி வயல்களிலிருந்து கூட்டமாக மேலே பறந்தன. சிறுவன் மிஷிமா அதுவரை அணிந்திருந்த முகமூடியை வலியுடன் உரித்து அகற்றியபோது உண்டான அழகு….பச்சைப்பசேல் வயலில் விருட்டென்று எழுந்து பறந்த கொக்கின் வெள்ளையில் மயங்கிய ராமகிருஷ்ண பரமஹம்சர்…குற்றாலம் பிரதான அருவியை, தேவியின் விரிகூந்தலாகப் பார்த்து நெஞ்சில் அறைந்துகொண்ட லா.ச.ராமாமிர்தம் பார்த்த அழகு.

  •  

உடைந்த பாலம்


கழிமுகம் கடல்

நீர் மணல் கரை

முயங்கிக் கலையும்

சம வெளி

எல்லாம் ஓயும்

படகு பாய் கொடி

தூண்டில் சூரியன் வலை

கைவிடப்பட்ட பொம்மைகள்

செருப்புகள் மதுக்குப்பிகள்

எல்லாம் ஓயும்

என்று ஆற்றுவித்து

கால்களை

உக்கிரமற்றுத் தழுவி

அமைதியாகத் திரும்பிச் செல்லும்

சின்னச்சிறிய சீரலைகள்.

களுக் களுக்கென தளும்பி

நீர் சொல்லும் ஒன்று எனக்கு

கேட்கத் தொடங்குகிறது.

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் காலத்தில்

எதையும் யாரையும்

இனி இணைப்பதில்லையென்று முடிவெடுத்து

ஏகாந்தத்தின் கழிமுகம் மீது

நின்றுகொண்டிருக்கும்

உடைந்த

பாலத்துக்கோ

களுக் களுக்கென நீர் சொல்லும்

அந்த ஒன்று

அப்போதே கேட்டுவிட்டது.


யுத்தத்துக்கும் சமாதானத்துக்குமிடையே

துள்ளி எழப்போகிற மீன்

கிடைக்கும்

தருணத்துக்கு சற்று முன்னால்.

நிசப்தத்தை

அலகில் நிறைத்தபடி

நீர்வெள்ளி சுடரும் பரப்பில்

மேயும்

கொக்குகளுக்கு கருநாரைகளுக்கு

ஏற்கெனவே சேதி சொல்லப்பட்டு விட்டது.

அருகிலேயே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்

கடலின் ஆழத்தை

கேலிசெய்து

திளைத்துக் குளிக்கும்

காகங்களுக்கு குருவிகளுக்கு

எனக்கு முன்னால் கேட்டுவிட்டது

களுக் களுக்கென நீர் சொல்லும்

அந்த ஒன்று.

(அகழ் இணைய இதழ்)

  •  

கருப்பு



நேயக் கலவி

மயக்கத்தில்

குழந்தையிடம் பேசும் அதர்க்க மொழியில்

கொஞ்சி

தொட்டுத் தொட்டு நீ அகற்றிய

என்

உள்ளாடையின்

நிறம்

துயரக் கருப்பானது

தற்செயல்தானா

கோகிலமே!


உன் இருள் கேசம்

அந்தக் கேசத்தின் மையெடுத்துத் தீட்டிய

உன் புருவம்

திலகமிட்ட நெடிய நெற்றி

கூர்ந்த பிச்சிப்பூ மூக்கு

ஆராதித்து

உன் இடைக்கு முன்னால் மண்டியிட்டேன்

அரவப்படம்

உன்

அல்குல் என வர்ணித்து

முத்தத்தால்

உரித்த உன் உள்ளாடையும்

அதே துயரக் கருப்பானது

தற்செயல்தானா?

மரகதமே!


இப்போதும் அலமாரியில்

கையில் தட்டுப்பட்டு

அணியும்போதெல்லாம்

யாரை

எதை

எப்பொழுதைப் பழிக்க

அந்தக் கருப்பு உள்ளாடையின்

உட்புறத்தை மாற்றி அணிகிறேன்

ஞாபகமென்னும்

ஆலகால நஞ்சே!

(நன்றி : அகழ் இணைய இதழ்)

  •  

ஒருநாள் - நகுலன் (எழுத்து இதழ் - 1959)

  


ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர், உலகறியாத னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி, உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர், சாஸ்திரி சிவநாத பாபு, பிரதாப சந்திர முஜும்தார், வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி, நித்தியானந்தஸ்வாமி, வைத்தியரானசசாதரபண்டிதர், கோடீச்வரரானயதுநாதமல்லீக்ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர்இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள். அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரைஅவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி, அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள். அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை. நினைத்துக்கொண்டுஇருந்தாற்போல் நிஷ்டை கலைவது வரையில் காத்திருப்பார்கள்.  நிஷ்டை நீடித்தால்-சில சமயம் நிஷ்டை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கலையாமல் இருந்தது உண்டு - கலைவது வரைக் காத்திருக்கவோ அல்லது மீண்டும் வருவதாகவோ தோதாபுரியிடம் சொல்லிவிட்டுப் போவார்கள்.

 

இந்த தோதாபுரி-மகான் தோதாபுரியிடமிருந்து வேறுபட்டவர். இவரும் பரமஹம்ஸர் கூட்டத்தைச் சார்ந்தவர். தக்ஷிணேச்வரத்தில் சேட் கோவிந்தஜியின் பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்து வந்தார். அவர் மனைவி ஒருபிள்ளையை - நவீனன், வயதுபதினாறு - வைத்துவிட்டு இறந்துவிட்டாள். தோதாபுரிக்குத் தன் மனைவி மீது அத்யந்த பிரேமைஏனென்றால் கல்யாணமாவதற்கு முன் அவர் கோலாகல புருஷராக இருந்து தீராத காசநோயைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் தன் மனைவியின் தீவிர தெய்வபக்தியையும் தேவநிஷ்டைகளையும் பார்த்து மனம் மாறிவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் மனைவி தன் மகன் நவீனனைப் பார்த்துக் கொள்வது அவர் கடமை என்று சொல்லிவிட்டு உயிர்நீத்தாள். அதற்குப் பிறகு தோதாபுரி தன் மகன் மீது அதிகமாக வாஞ்சையைக் காட்டாது, ஆனால் அவனைக் கண்ணை இமைகாப்பது போல் காத்துவந்தார். அவர் மனைவி இறந்தபொழுது நவீனனுக்கு வயது பத்து இருக்கும். பரமஹம்ஸர் அவனுக்குப் பதிமூன்று வயதாகும்போது அவனைப் பார்த்துவிட்டு பையன் முகத்தில் வீசிய பிரம்மதேஜஸைக் கண்டு, அவனைத் தன் தேவிபூஜை காரியத்துக்கு மலர்பறித்தல், மாலைசூட்டல், துதிபாடல் உபயோகப் படுத்திக் கொண்டு வந்தார். இது தோதாபுரிக்குத் தெரியாது. நவீனன் ஒருநாள் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வராமலிருக்கவே தோட்டி குஞ்சன் மூலம் அவன் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று நவீனன் கெளரங்கஸ்வாமியிடம் பரமஹம்ஸர் செத்துவிட்டாரா என்று கேட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அவன் அதற்கு முன்னர் பரமஹம்ஸர் நிஷ்டையில் வீழ்வதைக் கண்டதில்லை. தோதாபுரி இரண்டுபட்ட மனதுடன் மகனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

 

அன்று வீட்டிற்கு வந்ததும் அவர் மனம் நிலையில் இல்லை. அவர் போன  அன்று ஆசிரமத்தில் யதுநாதமல்லிக்கும் மதுரபாபுவும் சாதுஜனங்களைவிட்டு வேறாகமெதுவாகப் பேசிக் கொண்டும், பரமஹம்ஸரை அடிக்கடி பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். உபயஜீவியான தோதாபுரிக்கு அது ஆச்சரியமாக இருந்ததுஅவருக்கு மல்லிக்கும் மதுராபாவுவும் கொழுத்த பணக்காரர்கள் என்பது தெரியும். ஆனால் அவர்கள் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்துபோகும் விவரம் அவருக்குப் புரியவில்லை. ஊர் ஜனங்கள் பரமஹம்ஸர் மூலமாகத் தன் பணத்தை மல்லிக் இன்னும் அதிகமாக்க விரும்புகிறானென்றும், ஆனால் அந்தப் பைத்தியக்காரச்சாமி அதற்குச் சம்மதிக்கவில்லை என்று பேசி வந்ததும் அவருக்குத் தெரியும். எனினும் ஒருதடவை சென்றுவந்த தோதாபுரிக்கு அடிக்கடி ஆசிரமத்துக்குப் போகாமல் இருக்கமுடியவில்லை. இதன் பொருட்டு அவர் வெள்ளிக்கிழமைதோறும் காலை ஒருமணிக்கு முன் கடைக்கு வந்துவிட்டு இரவு எட்டுமணிக்குப் பரமஹம்ஸர் ஆசிரமத்திற்குப் போவதற்குச் சேட் கோவிந்தஜியிடம் அனுமதி வாங்கி இருந்தார். ஆசிரமத்தில் வந்த பிறகு ராமகிருஷ்ணரைப் பற்றிய அபிப்பிராயம் மேலோங்கி வந்தது. எந்தச் சமயத்தில் யார் அங்கு வருவார் என்பது நிச்சயமில்லை. சேட் கோவிந்தஜி சபையில் யாராவது பெரிய மனிதர் வந்தால் - அவிநாத சட்டர்ஜியோ, ராம பண்டித முக்கர்ஜியோ- அவர்களுக்கு விசேஷ மரியாதை நடக்கும். அவர்களை உபசரிக்கும் கடமையெல்லாம் சேட், தோதாபுரிக்கு விட்டுவிடுவார். தோதாபுரிக்கு அதைச் செய்வதில் பரம சந்தோஷம்.

 

அதைப் போலவே ஆசிரமத்தில் இவர் வந்திருக்கும் சமயத்தில் யாராவது பெரிய மனிதன் வந்தால் - சந்திரஸேனரோ, சசாதரபண்டிதரோ - பரமஹம்ஸர் இவரைப் பார்த்துச் சிரிப்பார். உடனே தோதபுரியும் அவர்களைக் கவனித்துக் கொள்வார். இது ஒரு மாமூலாகிவிட்டது. அங்கு வருபவர்களெல்லாம் இதைக் குறித்துத் தோதாபுரியைப் பரிகசித்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

 

தோதாபுரி பார்ப்பதற்கு நெட்டையாக, நன்றாக உணங்கிய கருவாடு நிறத்தை உடையவராக இருந்தார். தலை முழுவதும் ரோமம் வளர்த்துக் கொண்டு உச்சியில் மாத்திரம் ஒரு சிறுகடுகத்தனை குடுமி வைத்திருந்தார். மெல்லிய அழுக்கடைந்த மல்லைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு மேலே ஒரு அங்கவஸ்திரம் மாத்திரம் அணிந்து கொண்டிருப்பார். அவர் மடியில் ஒரு வெள்ளிப்பொடி டப்பி எப்பொழுதும் முளைத்திருக்கும். அவர் மனம் உணர்ச்சிப் பெருக்கு அடையும் பொழுதெல்லாம் அவர் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சுவார். இதைக்குறித்தும் ஆசிரமவாசிகள் அவரைப் பரிகசிப்பார்கள். ஆனால் தோதாபுரி கொஞ்ச நாட்கள் பரமஹம்ஸர், ஒரு திருஷ்டாந்தக் கதையில் எவ்வாறு தான் மூக்குப்பொடி போட்டுக்கொள்வதை, ஒரு திருஷ்டாந்தமாக உபயோகித்தார் என்று போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இப்பொழுது தோதாபுரி ஆசிரமத்திற்கு வரத் தொடங்கி மூன்று வருடங்களாகி விட்டனஇந்த மூன்று வருடங்களும் அவர் மனதில் ஒரு உருத்தெரியாத ஆனால் கலவரப்படுத்தும் எண்ணம் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து  தன்னை விடுவித்துக் கொள்ளமுடியவில்லை என்பதை அவரால் கூட நம்பமுடியவில்லை. இதைப் பற்றி நினைக்கையில் அவருக்கு ஒருதடவை பரமஹம்ஸர் தன் தாஸர்களிடை அவரால்(தோதாபுரியால்) பரமஹம்ஸரிடம் மூன்று வருஷம் நெருங்கிப்பழகிய பின்னும் ஒருமுறையாவது பொடிபோடுவதை நீக்க முடியவில்லை என்று சொன்னது ஞாபகம் வந்தது. நவீனனிடம் மாலை ஆசிரமத்தில் இருந்த அவன் ஸ்கூலில் இப்பொழுது இறுதி வகுப்புப் படித்துத் தேறிவிட்டான். திரும்பி வருகையில் தனக்குத் தினம் ஒரு அணாவுக்குப் பொடி வாங்கி வரச் சொல்வார். நவீனனும் ராமகிருஷ்ணர் கூறியபடி அவன் நல்ல பிள்ளை - அதை ஒழுங்காய்ச் செய்து வந்தான். அந்த நவீனன் இப்பொழுது படிப்பை முடித்துவிட்டான். அப்பொழுது கல்கத்தாவில் புதியதாக சர்வகலாசாலையைத் தொடங்கியிருந்தார்கள். தோதாபுரிக்குத் தன் மனைவி சொன்னது மாத்திரமல்லாமல் அவர் பொருட்டும் மேல்படிப்புக்குச் சென்று பெரிய பதவியில் வரவேண்டுமென்று ஆசை,இதற்கு அவர் ஆசிரமத்தில் முதல் தடவை வந்தபோதே அவருக்குத் தெரியாமலேயே ஆயத்தமாக இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அது அவருக்குக் கூட இப்பொழுதுதான் தெளிந்த மனதின் மேல்பரப்பில் சிந்தனை உருவாகத் திரண்டு வந்தது. ஏனென்றால் முதல் முறை அவர் ஆசிரமத்திற்கு வந்த அன்று, நிஷ்டையிலிருந்த பரமஹம்ஸரின் நினைவே அவருக்கு இல்லை. அவர்      ள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தவர்கள் மல்லிக்கும் மதுரபாபுவும்தான். பரமஹம்ஸரை நன்றாகப் பார்க்காமல் வந்ததைக் குறித்துக் கலவரப்பட்டார். ஆனால் அன்று ஆரம்பித்தது இன்று தன் மனதில் உருப்பெற்று கையும் காலும் பெற்றுவிட்டது என்று நினைத்ததும் அவருக்கு மீண்டும் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. எனினும் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு புறப்பட்டார். முதல் நாளே இன்றைக்கு அவர் சேட்டிடம் லீவ் வாங்கியிருந்தார்.

 

நல்ல உச்சிவேளை, வெயில் எரித்துக் கொண்டிருந்தது. போவதற்கு முன் தன் மன உளைச்சலை நிறுத்த ஒரு சிட்டிகை நல்ல பொடியை உறிஞ்சிவிட்டு, தன் தலையை அங்கவஸ்திரத்தால் மூடிக்கொண்டு, போதமில்லாமல் என்று சொல்லும்படியாக நடந்தார். நடந்து செல்லும் பொழுதே தான் செல்லும் காரியத்தைப் பற்றி நினைக்கக் கூடாது என்று நினைத்தும், அதைப் பற்றி நினைக்காமலிருந்தும் மீண்டும் அதைக் குறித்துத் தாவ, அவஸ்தைப் பட்டுக் கொண்டே நடந்த வேகத்தில், அவர் ஆசிரமத்தை விட்டு நாலு அடி தாண்டிய பின்னர், உணர்வு மீண்டும் தன்னைப் பின்னிழுக்க ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.

அவர் நினைத்தபடி ஆசிரமத்தில் ஒருவருமில்லை. ராமகிருஷ்ணர் மாத்திரம் இருந்தார். ஹிருதயன் கூட இல்லை. அவர் நிஷ்டையில் இல்லை என்பதை அறிந்ததும் அவருக்கு ஒரு நிம்மதி. பிறகு தன் மேல் துண்டால் முகத்தை விசிறிக் கொண்டுவிட்டு. ஆசிரமத்தில் உள்ள கிணற்றை நோக்கிச் சென்றார். இவையெல்லாவற்றையும் அவர் வேண்டுமென்றே மெதுவாகச் செய்தார்.

 

பிறகு, பரமஹம்ஸரிடம் வந்து அவரை வணங்கிட பின்னர்வாளா  உட்கார்ந்திருந்தார்இதைப் பார்த்த பரமஹம்ஸர் சிரித்த வண்ணம்

"என்ன தோதா, இன்று கடை இல்லையா?'' என்றுகேட்டார்.

இருக்கு''

 

''எஜமானருக்கு உடம்பு சரியாக இல்லையா?''

"அவரும் சௌக்கியம்தான்."

 

"நவீனனைத் தேடிக் கொண்டு வந்தாயா? அவன் இப்போது சிறு பிள்ளை இல்லை என்றாலும், அவனைத் தேடிக் கொண்டு வருவாயாஎன் மூளை துருப்பிடித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்தக் காலத்திலேயே அண்ணா சொன்னதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் கல்கத்தா சென்று சர்வகலாசாலையில் சேர்ந்திருந்தால் இந்த மாதிரி கேள்வி கேட்டிருக்கமாட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார். இதைக் கேட்ட தோதாபுரி உள்ளம் மேலும் கலவரமடைந்தது.

 

இருந்தாலும் முகத்தில் ஒரு பிடிவாதத்தின் சாயைபடர, வெள்ளிடப்பியிலிருந்து ஒரு சிட்டிகைப் பொடியைப் போட்டுக் கொண்டு விட்டு மெள்ளப் பேசத் தொடங்கினார்.

 

நவீனன் விஷயமாக வந்தேன்.''

 

நவீனன் நல்ல பிள்ளை.”

 

"என்னுடன் நீங்கள் ராய்மஹாசயர் வீட்டிற்கு வரவேண்டும்."

 

 "எனக்குஅவரைத்தெரியாதே."

 

''உங்களுக்குத் தெரிய வேண்டாம் எனக்குத் தெரியும். அவர் மதுரபாபுவின் சிநேகிதர்.'

''ஏன்இன்னும் நவீனனுக்கு வயதாகவில்லையே" என்று சொல்லி பரமஹம்ஸர் சிரித்தார்.

"அதற்கில்லை, ராய் மஹாசயர் கோடீஸ்வரர். ஆனால் அவருக்குப் புத்திர பாக்கியம் கிடையாது நவீனனைப் பற்றிக்கூட அவர் என்னிடம் கடைக்கு வருகையில் பராபரியாக விசாரிப்பார். நவீனன் மேல்படிப்புக்குப் போகவேண்டுமென்று முன்னுக்கு வரவேண்டுமென்று எனக்கு ஆசை. என்னுடைய நிலையில் அவனுக்கு இந்த உதவி செய்யமுடியாது. அதனால்தான் அவரிடம் சென்று இதற்காகப் பொருள் உதவியையும் அவருடைய ஆதரவையும் கோரவேண்டும். நவீனன் காரியத்தை  அவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.''

"ஆனால்?''

க்ஷமிக்க வேண்டும்நான் சொல்லி முடித்து விடுகிறேன். நவீனன் பெரியவனாகி  பெரிய பதவியில் அமர்ந்து சிஷ்யனாக இங்கே வர நானே அவனை உபசரித்து எதிர்கொண்டு அழைக்க வேண்டுமென்று எனக்கு ஒரு ஆசை."

 

"ஆனால் நான் என்ன செய்யமுடியும்?"

 

"நீங்கள் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லவேண்டாம். என்னுடன் வந்து உட்கார்ந்தால் போதும்" என்று சொல்லிவிட்டு தோதாபுரி ஒரு ஆர்வத்துடனும், ஆவலே உருவாகவும் அவர் முகத்தைப் பார்த்தார்.

 

பரமஹம்ஸர் அவரை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. கொடியில் போட்டிருந்த தன் ஒற்றை மேல் துண்டைக் கையில் பிடித்துக் கொண்டு அவருடன் வெளியே இறங்க ஆயத்தமானவர், திரும்பித் தோதாபுரியிடம் உங்கள் வெள்ளி டப்பியில் போதிய பொடி இருக்கிறதா" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வேறு நினைவில் மூழ்கியிருந்த தோதாபுரியிடமிருந்து "இருக்கிறதே" என்ற பதில் வந்தது. இதன்பின் அவர்கள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு நாலு தெரு தாண்டி ராய்மஹாசயர் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பொழுது ராய்மஹாசாயர் தன் வீட்டு வாசலில் விசிறியால் தனக்குத்தானே விசிறிக்கொண்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தார். அவருக்குத் தோதாபுரியைத் தெரிந்ததும் அவரை வரவேற்காமல் நின்று கொண்டிருந்தார்.

 

தோதாபுரியே வலிந்து அவரைக் கும்பிட்டு அவரிடம் சென்றார். அவராகவே வலிந்துசற்று எட்டி நின்று கடுமையாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த பரமஹம்ஸரைச் சுட்டிக் காட்ட ராய் மஹாசயர் அவர்கள் இருவரையும் உள்ளே வரச் சொல்லி தான் முன்னே போனார்.

 

உள்ளே சென்றதும் கூடத்தில் சார்த்தி வைத்திருந்த இரு பலகைகளில் ஒன்றைத் தரையில் வைத்து, அதில் பரமஹம்ஸரை அமரும்படி தோதாபுரி வேண்டிக்கொண்டார்பரமஹம்ஸர் அவ்வாறே செய்தார். அவர் தன் மேல் துண்டை இப்பொழுது மடியில் வைத்துக்கொண்டார். தோதாபுரி பேச ஆரம்பித்தார்.

''நீங்கள் சில நாட்கள் முன் கேட்ட குங்குமப்பூ கடையில் வந்திருக்கிறது."

 

என்ன கதையாக இருக்கிறது, தோதாபுரி! இதைச் சொல்லவா இந்தப் பட்டை உரிக்கும் வெயிலில் இந்தக் கிழவனையும் அழைத்துக் கொண்டு வந்தாய்.''

 

தோதாபுரிக்குக் கலவரம் கூடியது. திரும்பிப் பார்த்தார். பரமஹம்ஸர் சுவரில் சாய்த்த பலகையைப் போல அரையாக மூடிய கண்களுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவருக்கு நிம்மதியாக இருந்தது. மேலும் தன்னைத் தைரியப்படுத்திக் கொள்ள ஒரு சிட்டிகைப் பொடியை உறிஞ்சி விட்டுச் சற்றுத் தயங்கிவிட்டு, க்ஷமிக்கணும் இதற்காக நேற்றுக் கடைக்குக் கல்கத்தாவிலிருந்த ரோஜாமணி அம்மையார் ஆள்விட்டிருந்தார்கள்."

 

இதுகாறும் அசட்டையாக இருந்த ராய்மஹாசயர் எழுந்து உட்கார்ந்தார். தாசிரோஜாமணியுடன்தன் மனைவி இறந்த பிறகு அவர் நிரந்தரமான தொடர்பு வைத்திருந்தும், அவள் தேவைகளை இவர் கணக்கில் எழுதிக் கடையிலிருந்து அனுப்புவதும் தோதாபுரிக்குத் தெரியும்.

 

"???" இவ்வாறு ராய்மஹாசயர் அவர் பேச்சைத் தொடர எதிர்பார்த்தார்.

 

"குங்குமப்பூ இப்பொழுதுதான் வந்திருக்கிறது என்று தகவல் கிடைத்தது. நான் இன்று லீவ் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நவீனன் மூலம் உங்களிடமே கொடுத்தனுப்பலாம் என்றுதான் நினைத்தேன். இன்று சேட்டும் கடையைச் சீக்கிரமாக அடைத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இருந்தாலும் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."

 

ரோஜாமணியின் பெயரைக் கேட்டதால் சந்தோஷமடைந்திருந்த ராய்மஹாசயர் "நவீனன் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. அவன் யார்? கடைவேலைக்காரனா?"

 

"இல்லை அவனுக்கு உங்கள் அனுக்கிரகம் வேண்டும்.''

 

ராய்மஹாசயர் பரமஹம்ஸரைப் பார்த்துக்கொண்டேஎன்னுடைய அனுக்கிரகமாஎன்றார். பரமஹம்ஸர் இன்னும் அதே நிலையில் வீற்றிருந்தார்.

நல்லபையன்என் ஒரே புத்திரன், ஆசிரமத்தில் புண்ணிய கைங்கரியம் செய்கிறான்பள்ளிப்படிப்பை முடித்துவிட்டான். அவன் மேலே படிக்க வேண்டுமென்றும் பெரிய பதவியில் அமரவேண்டும் என்றும் என் ஆசை. இந்த சிந்தனை உதித்தவுடன் உடனே இங்குவந்தேன்.''

இப்பொழுது ராய்மஹாசயர் தோதாபுரியைத் தனியே வேறு அறைக்கு வருமாறு அழைத்துச் சென்றார். தோதாபுரியும் மூன்று வருஷத்திற்கு முன் தன் உள்ளத்தில் எற்பட்ட அதே ஒரு உருத்தெரியாத உணர்ச்சியுடன் அவரைப்  பின் தொடர்ந்தார். கூடத்தில் பரமஹம்ஸர் பலகையைப் போல் உட்கார்ந்திருந்தார்.

 

"தோதாபுரிநான் உனக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நாம் இருவரும் மனைவியை இழந்தவர்கள்இருவரும் நிறைய லோகானுபவம் நிறைந்தவர்கள்நான் பரமஹம்ஸர் ஆசிரமம் பக்கமே போவதில்லை என்பது உனக்கு தெரியும். நீயும் மூன்று வருஷங்களாக அங்கு போய் பழகிக் கொண்டிருந்தவன்இன்று அவரையும் அழைத்துக் கொண்டு என்னிடமும் வந்திருக்கிறாய்."

இதைக் கேட்டுக் கொண்டேயிருந்த தோதாபுரி மேலே அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தால், அவரைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சிவிட்டு, தன்மூக்கைத் துடைத்துக்கொண்டு அவரைத் தொடரச் சொன்னார்.

"நான் அங்கு வராவிட்டாலும் எனக்கும் பரமஹம்ஸரைத் தெரியும். மல்லிக் முதலியவர்கள் ஏன் அவரைச் சுற்றி வருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. எனக்கு வம்பு பேசுவதில் வெறுப்புஆனால் ஒன்றுநான் அதிகமாகப் படித்ததில்லை. பரமஹம்ஸரும் படிக்கப் பிடிவாதமாக மறுத்தவர் என்பது உனக்குத் தெரியும். ஆனால் எங்கள் நிலையென்ன, உண்மையான ஞானம் பதவியெல்லாம் வேண்டுமென்றால் அதற்கு மேல்படிப்பு வேண்டாம். என்ன, நான் சொல்வதைக் கேட்கிறாயா?''

வரும் அழுகையை அடக்கிக் கொள்வதாலும், வரம்புமீறிய உணர்ச்சியால் கட்டுண்டபோதும் மக்கள் பெறும் ஒரு உணர்ச்சியால், தோதாபுரி தன் வாய் வலித்ததால், வாய்பேச முடியாமல் தலையை அசைத்தார். மீண்டும் அவர் உள்ளத்தின் உருத்தெரியாத வெளியில் தன் மனைவியின் உருவமும், கூடத்தில் நிர்விசாரமாக  உட்கார்ந்திருந்த பரமஹம்ஸர் உருவமும் வீட்டிலிருந்த களங்கமற்ற நவீனன் உருவமும் ஒருசேர மின்னிப் பாய்ந்தன.

 

''எனக்குத்தெரியும்நீ உலகம் தெரிந்தவன். எனக்கு நவீனன் என்ற பெயர் பிடித்திருக்கிறதுஎனக்கும் அவனுக்கு உதவிபுரிந்து அவனை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. ஆனால் அவனை நான் படிப்பினால் வீணாக்க விரும்பவில்லைஅவனுக்குக் காரியத்திறமையையும், பொருள் சேகரிப்பு முறையையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் - நீ சம்மதித்தால்."

மோர் மீது திரண்டு வரும் வெண்ணெயைப் போல் தன் உள்ளத்தில் மிதந்து தன் மென்னியைப் பிடிக்க உயர்ந்து எழும்பி வரும் ஒரு பயத்தினால் தோதாபுரி மீண்டும் தலையை அசைத்தார்.

 

'பரமஹம்ஸரைப் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் பெண்களைப் பற்றிச் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் தோதாபுரி, விந்துவை ஒரு பொழுதும் விரயமாக்கக் கூடாது என்று அந்தப் பேயனே வந்து சொன்னாலும் நம்மால் முடியுமா, தோதாபுரி? ரோஜாமணியைப் பற்றி நான் பராபரியாகப் பல கேள்விப்படுகிறேன். நானும் சட்டவரம்புக்குட்பட்டவன் தான். என் மனதைச் சாந்திப்படுத்த ஒருவன் இருந்தால் இந்த அவஸ்தையில்லை. உன்னிடம் நான் சொன்னது பொய், எனக்கு நவீனனைத் தெரியும்அவன் மிகவும் நல்ல பையன் என்றும், பிரம்மதேஜஸ் உடையவன் என்றும் என்னிடம் மதுரபாபு சொல்லியிருக்கிறான். நவீனன் ரோஜாமணி வீட்டில் அவள் வீட்டுக் காரியத்தைக் கவனித்துக் கொண்டு என்னுடைய ஆளாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடுதலை பெறமுடியும். அவனைப்பற்றி நீ ஒன்றுக்குமே கவலைப்பட வேண்டாம். தோதாபுரி, அவன் காரியத்தை என்னிடத்தில் விட்டுவிடு. என்ன சொல்கிறாய்?''

தோதாபுரி உருத்தெரியாத தனது உள்ள வெளியிலிருந்து எழுந்த சூறைக்காற்றைப் போன்ற கோபத்தை அடக்க வெகுவாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு அவரிடம் "நாளை வருகிறேன்" என்று எழநன்றாக யோசித்து முடிவுக்கு வாஎன்று சொல்லிக்கொண்டே அவரும் அவனைப் பின்தொடர, இருவரும் கூடத்திற்கு வந்ததும், அதுகாறும் வீற்றிருந்த பரமஹம்ஸர் எழுந்திருந்ததும் ஒரே சமயத்தில் நடந்தது.

 

இருவரும் பரமஹம்ஸரும் தோதாபுரியும் மௌனமாக நடந்து, ஆசிரமத்திற்கு வந்ததும் விடை பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்ற தோதாபுரியைப் பார்த்து பரமஹம்ஸர், "தோதாபுரி, நீ ஒன்றும் சொல்லவேண்டாம். இந்த மூன்று வருஷங்களில் நீ என்னிடம் கற்றுக்கொண்டதைவிட, கற்றுக் கொள்ளத் தவறியதைராய்மஹாசயர் உனக்கு மூன்று மணி நேரத்தில் கற்றுக் கொடுத்திருப்பார்நாம் இருவரும் அவரை வணங்குவோம். இப்பொழுது நான் உன்னுடன் வந்ததின் தாத்பரியம் உனக்குப் புரிந்திருக்கும்" என்று சொல்லிப் பரமஹம்ஸர் அவருக்கு விடைகொடுத்தனுப்பினார்.

 

அடுத்த நாள் காலையில் தக்ஷிணேசுவரத்தின் காளி கோயிலில் நவீனன் அர்ச்சகனாகிவிட்டான் என்ற செய்தியைக் கேட்ட ராய்மஹாசயர் ஆச்சரியப்பட்டாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை.

 

- "எழுத்து" - 1959 

  •  

அசோகமித்திரன் இருந்த வீதி

 


அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட் செங்கலை எடுத்து, முன் சக்கரத்தில் போட்டு ஆட்டோவை நிறுத்துவதற்காக நானும் குப்பை ஆட்டோவுக்குப் பின்னால் குப்பைக்காரருடன் ஓட, தெருவின் முனையில் முன்சக்கரம் இடதுபக்கமாக திரும்பி, அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் ஏற்றத்தில் வேகம் தடைபட்டு நின்றது வண்டி. அதற்குள் தெரு முழுவதும் பரபரப்பாகிச் சிறுவனின் அப்பா ஓடிவந்து அவன் முதுகில் ரெண்டு மொத்து போட்டு அழைத்துச் சென்றார். முட்டைக் கண்ணாடி போட்டிருந்த குண்டுச் சிறுவனோ தனக்கு இந்த தண்டனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல சாவகசமாகப் போனான். சார் எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை. அவன்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டானே என்று சொல்லி, அவரையும் அப்போதுதான் சம்பவ இடத்துக்குள் நுழைந்து, அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம் அம்மாவையும் ஆறுதல்படுத்தினேன். அசோகமித்திரன் வழக்கமாக நின்றுகொண்டிருக்கும் பால்கனியைப் பார்த்தபடி வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினேன். அசோகமித்திரன் விஷமத்துடன் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

  •  

எனது பூனைகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

 


நான் அறிவேன்

அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை

வரையறுக்கப்பட்ட வருத்தங்களை

நான் அறிவேன்.

 

ஆனால்

நான் அவர்களைக் கவனிக்கிறேன்

அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன்.

அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை

நான் விரும்புகிறேன்

அதுவே ரொம்ப.

 

அவர்கள் புகார் சொல்கின்றனர்

ஆனால் கவலைப்படுவதில்லை.

அவர்களின் மிடுக்கு நடை 

ஆச்சரியகரமான கண்ணியம்.

மனிதர்களால்

சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில்

எளிமையாக

அவர்கள் உறங்குகின்றனர்.

 

நமது கண்களை விட

பூனைகளின் கண்கள் 

அபரிதமிதமான அழகு கொண்டவை.

அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில்

உறங்கமுடியும்

எந்தத் தயக்கமும்

குற்றவுணர்வும் இன்றி.

 

நான் சோர்வாக உணரும்போதெல்லாம்

எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர

வேறெதுவும் செய்வதில்லை.

எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.

 

நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன்

அவர்களே எனது ஆசிரியர்கள்.

(சுஜாவுக்கு)

  •  

றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் 'சட்டை வண்ண யானைகள்'


நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது.

றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது.

றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும்.

எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையின் பாறைத்தன்மையைக் கொண்ட ஒரு அனாமதேயனாக ‘நான்’ ஆகிவிடக்கூடிய உத்தேசம், ஆசுவாசத்தை றாம் சந்தோஷின் கவிதைகள் அளிக்கின்றன.

‘உன் துயருக்கும் ஒரு பலன் உண்டா கவியே

நாலு கவிதை கிடைக்கும் ப்ரோ’

இப்படித் துணுக்குத் தன்மையையும் பாவித்தபடி தீவிரத்தின் ஊஞ்சலுக்கும் அடுத்து தாவும் தன்மையையும் சமீபத்தில் சாதித்துள்ளவர் றாம்.

எதைக் கற்றும் எந்த லாபமும் இல்லை

எதைப் பயின்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை

எதன் பொருட்டும் நீ பலியாவதை

நான் விரும்புவதில்லை என்று

அந்தக் கண்ணாடி முன் ஒருதரம் சொன்னேன்

அது அழுதது; நான் சிரித்தேன்.

அந்த முயற்சியில் பெரிதளவு வெற்றியையும் சில தோல்விகளையும் பெரிதளவு இசைமையையும் சின்னச் சின்ன அபசுரத்தையும் கொண்டது ‘சட்டை வண்ண யானைகள்’.

பிறப்பு இனிமையானது அல்ல. பிறப்பு குணமானதும் அல்ல. பிறப்பின் அருவருப்பை அதோடு தோய்ந்த அழகை, பிறப்பின் பயங்கரத்தை அதோடு ஒட்டிக்கொண்டுள்ள புது விழிப்பை, பிறப்பின் நசநசப்பை அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பை, பிறப்பின் ரண ஓலத்தை அதோடு பிரிக்கவியலாத அநாதி துக்கத்தைத் தொட்டுத் தொட்டுச் செல்வதால் றாம் சந்தோஷ் இக்கவிதைகள் வழியாக எனக்கு நெருக்கமாகிறார். பிறப்பு அத்தனை எளிதானதுமல்ல.

நண்பனுமில்லாத நண்பியுமில்லாத காதலனுமில்லாத காதலியுமில்லாத செல்லக்குட்டிகளாக இவர் தனது கவிதைகளைப் பராமரிக்கிறார். அவர்களை யார் என்று கேட்டால் ‘என் இதயம், என் பருவம், என் குழந்தைமை, என் தாய், என் தந்தை, என் அசகோதரன், மட்டுமில்லாது என் விரோதியின் அசல் வார்ப்பென்பேன் ’ என்று சமத்காரத்துடன் கூறும்போது உள்ளேயும் வெளியேயும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்பை உணர்கிறோம்.

நவீன கவிதைகள், பார்த்தலாக, வெறும் பராக்காகப் பண்ணி பண்ணி தினுசு தினுசாக வனையப்படும் வஸ்துக்களாகத் தோற்றமெடுத்துவிட்ட நிலையில் றாம் சந்தோஷின் உள்ளும் புறமுமான விழிப்பு கவிதைச் செயல்பாட்டாளனான எனக்குப் புத்துணர்வை ஊட்டுகிறது.

தமிழில் வேடிக்கை என்ற சொல் இரண்டு வித்தியாசமான அர்த்தங்களில் செயல்படுகிறது. அதன் ஒரு பொருள் பார்த்தலை மட்டுமே குறிக்கிறது. நிகழ்த்திக் காட்டுவதையும் வேடிக்கை என்ற சொல் குறிக்கிறது. 



றாம் சந்தோஷின் கவிதைகளை நான் விழிப்பை உள்ளேயும் வெளியேயும் கொண்டு நிகழ்த்தும் செயல்பூர்வமான வேடிக்கை என்று சொல்வேன். தமிழில் நகுலன், கலாப்ரியா, ரமேஷ் – பிரேம், பச்சோந்தி எனக் காட்சியே கலகமாக மாறும் தீவிர வேடிக்கைக்கு ஒரு மரபு உண்டு. அந்த மரபில் மிகக் காத்திரமாக இணைந்திருப்பவர் றாம் சந்தோஷ். 

தமிழ் பக்திக் கவிதைகளின் நவீன தொடர்ச்சியாகவும் அந்த மரபின் ஒரு பகுதியான வைதீகத்தின் முதுகில் பிரம்பால் சாத்தியதுபோலச் சுளீர் தன்மை கொண்ட பதிலாக ‘மாயோன் அபிமான சர்ச்சை என்னும் மால் திரு கலகம்’ கவிதை வரிசையைச் சொல்லலாம். தமிழின் அபூர்வமான நீள் கவிதைகளில் ஒன்றாக அது திகழும்.

மைத்துனன் நம்பி

சூதனா சற்று சும்மா இரு

கோத்திரம் கேட்காதே; குலம் பொருளறியேன்

முதுகில் சாற்றிய சாதியின் வடுவுண்டு

நீ பாத்திரம் என வொன்றை நீட்டினால்

நான் இடுவேன் பத்து; போதுமா? தள்ளு.

சாலவும் தூரமிருந்து நான் வந்தேன்;

எனத் தொடங்கும் கவிதை வரிசை றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் தமிழறிஞர் பின்னணியையும், மொழி லாகவத்தையும் உணர்த்துவது. பேச்சுவழக்கை இயல்பாகத் தொனிக்க விடுதல், சமத்கார மொழி, அழுத்தமான கேலியுடன் தெலுங்கு, மலையாள விளிப்புகளையும் கவிதைக்குள் இணைத்துவிடுகிறார். இசைத்தன்மை கொண்ட கவிதைகளில் ஞானக்கூத்தனின் தாக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

தன்னுடனேயே விளையாடும் ஒரு சிறுவனுடைய தனி மொழி, தன் செல்லம், தன் பாவனை, தன் உரையாடலாக, ஆராட்டி, சீராட்டி, சீண்டி, பிணங்கும் அந்தரங்கமான கவிதைமொழியை தன் கவிதைகளுக்குத் தேர்ந்துள்ளார். மெனக்கெடல் தொனிக்காத ஆத்மாநாமின் அந்தரங்க உரையாடல் தன்மை றாம் சந்தோஷிடம் வேறு தீவிரத்துடன் இறங்கியுள்ளது. ஆத்மாநாமின் ‘என் ரோஜா பதியன்கள்’, ’மறுபரிசீலனை’, ‘நாளை நமதே’, ‘நன்றி நவிலல்’ கவிதைகளின் தொனி றாம் சந்தோஷில் புதுக்கப்பட்டுள்ளது.

சட்டை வண்ண யானைகள் தொகுப்பின் துவக்கத்திலுள்ள ‘பரஸ்பரம்’ கவிதையிலேயே முகத்துக்கும் முகமூடிக்கும், ஆளுக்கும் பிம்பத்துக்குமான உரையாடல், பரஸ்பரப் பரிமாற்றம் துவங்கிவிடுகிறது. புது வருடத்தை, புது அனுபவத்தைக் கொண்டாட திறக்காத சிப்பிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் திறக்கப்படாத சொற்கள் காத்திருக்கின்றன.

குளிரும் வெயிலும் அருகருகே மாறி உட்காருமளவுக்குத் திகழ்கிறது.

அப்போது கவியின் எதிர்கால மூப்பை முகத்தில் கொண்ட மந்தி. அதன் கரத்திலோ கவிதை உரைப்பவனின் கடந்த காலப் புண்கள். அது என்னைவிடவும் அழகு. அது என்னைவிடவும் சமத்து என்று கோதிவிட்டு யாருமில்லையா உனக்கு மந்தி என்று கேட்கும்போது அந்தரங்க குரல் பிரமாண்டமான பாறைகளை உண்டாக்கி, அவற்றுக்குள் மோதி பெரும் எதிரொலியாக, அசரீரியாக, ஓலமாகத் தொனிக்கிறது. தனிமை தனது கூழாங்கல்லை உருட்டி உருட்டிப் பாறையாக்கும் சம்பவம் இந்தக் கவிதையில் நிகழ்கிறது.

யாருமில்லையா உனக்கு மந்தி

உன் மந்தை எங்கே

அது என்னைப் போலவே

என்னோடு பேசாமல் பார்க்கிறது.

கவி தனது துக்கத்தைத் திராட்சைக் கொத்தாக அந்தக் குரங்குக்கு அளித்துவிட்டான். அது பதிலுக்கு மகிழ்ச்சி என்னும் ரசமாய் மாற்றித் தருகிறது. அந்த மந்தி யார்? அண்மையிலேயே இருந்துகொண்டு அனாமதேயமாக நமக்குத் தொனித்துக் கொண்டிருக்கும் நம்மையும் உள்கொண்ட இயற்கை என்று றாம் சந்தோஷிடம் ஒரு பதில் உள்ளது.

றாம் சந்தோஷ், நல்ல கவிதைகளையும் அந்தரங்கக் குறிப்புகளோ எனத் தொனிக்கும் ஊதாரியாய் அலையும் விவரணைகளுக்கு நடுவில் வைத்துள்ளதால், வாசிப்பவன் கவிதையைத் தனியே உருவிக்கொள்ள வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது.‘வெள்ளி பார்த்தல்’ கவிதை அதற்கு ஒரு பருக்கை உதாரணம்.

‘நாங்கள் தொடர்ந்தோம்’ என்ற இடத்தில்தான் எனக்கு வெள்ளி பார்த்தல் கவிதை தொடங்குகிறது. போகும் போது இடதுகாலையும் வரும்போது வலதுகாலையும் நனைக்கும் ஏரியைப் போலவே ஓர் அல்லாத நிஜத்தில் படர்கிறதாம் குளிர்ச்சி. உண்மையின் குளிர்ச்சியில் அகம் விரிந்து உயர்ந்து குருவியாகச் சுயம் பறக்கிறது.

விண்மீன்களின் சேய்மையை உணராமல் இருக்க, பாவனை மின்மினிகள் தீண்டித் தீண்டிச் செல்கின்றனவாம். நிலைத்த மெய்மையாக, றாம் சந்தோஷ், வானத்து விண்மீன்களைச் சுட்டுகிறார் போல. மனிதனின் உயரத்திலேயே தீண்டும் அநித்தியமான நட்சத்திரங்களான மின்மினிகளைக் கவிதைகள் என்று கொள்வோமா?

இந்தக் கவிதையில் புதிய வஸ்துகள் எதுவும் இல்லை. வெள்ளி, வண்ணத்துப்பூச்சி, மலர், நிலா, நெல்லிக்கனி என எல்லாமே பழைய வஸ்துகள். ஆனால், அத்தனை வஸ்துவும் நித்தியத்தின் சுடரில் ஒளிர்கின்றன.

(நன்றி: திணைகள் இணைய இதழ்)

  •